நாட்டில் நாளாந்தம் 15 மார்பகப்புற்று நோயாளர்கள் பதிவு ; 3 பேர் உயிரிழப்பு - தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தகவல்
24 Sep, 2025 | 03:14 PM
![]()
(செ.சுபதர்ஷனி)
கடந்த 2022 ஆம் ஆண்டு மாத்திரம் நாடளாவிய ரீதியில் 19,457 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 28 சதவீதமானோர் மார்பகப்புற்று நோயாளர்களாவர். அந்தவகையில் நாளாந்தம் சுமார் 15 மார்பகப்புற்று நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதோடு துரதிஷ்டவசமாக நாளாந்தம் 3 பேர் மார்பகப்புற்றுநோயால் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அனுஷ்டிக்கப்பட உள்ள மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக புதன்கிழமை (24) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாரிய சுகாதார பிரச்சினையாக உள்ள மார்பகப்புற்று நோய் தொடர்பில் ஒக்டோபர் மாதம் முழுவதும் பரவலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மார்பகப்புற்றுநோய் தொடர்பில் வீன் அச்சம் கொள்ளத் தேவையில்லை நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து உரிய சிகிச்சைகளை பெறுவதன் மூலம் நோயை முழுமையாக குணப்படுத்தலாம். எனினும் நாட்டில் நோய் நிலைமையின் பிந்திய நிலையிலேயே மார்பக புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவது வருத்தத்துக்குரிய விடயமாக உள்ளது.
இறுதியாக கிடைக்கப்பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான சுகாதார தரவுகளுக்கமைய நாடளாவிய ரீதியில் 19,457 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 28 சதவீதமானோர் அதாவது 5477 பேர் பெண் மார்பகப்புற்று நோயாளர்கள் என தெரியவந்துள்ளது. நோயின் பிந்திய நிலையில் சிகிச்சையளிப்பது சிக்கலான விடயமாகும். இலங்கையில் வருடாந்தம் சுமார் 15,500 புற்றுநோயாளர்கள் மரணிக்கின்றனர். 2022 ஆம் ஆண்டு மாத்திரம் 15245 பேர் அவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் அவ்வாறு மரணித்தவர்களில் 798 பேர் மார்பகப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
நாடளாவிய ரீதியில் நாளாந்தம் 15 மார்பகப்புற்றுநோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதுடன், 3 பேர் மரணிப்பதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்நிலையில் மார்பகப்புற்றுநோய் தொடர்பில் தெளிவூட்டுவதற்காக ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி எவலொக்சிட்டி மாலில் விசேட கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் விசேட வைத்தியநிபுணர்களும் நோய் தொடர்பில் மேலதிக விழிப்புணர்வுகளை வழங்க உள்ளனர் என்றார்.
இது தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் ஹசரெலி பிரனாந்து தெரிவிக்கையில்,
உலக சுகாதார ஸ்தாபனத்தின் உலகளாவிய சுகாதார தரவுகளுக்கமைய 2022 ஆம் ஆண்டு உலக அளவில் 2.3 மில்லியன் பெண் மார்பகப்புற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 6 இலட்சத்து 70 ஆயிரம் மரணங்களும் சம்பவித்த உள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் வருடாந்தம் மார்பகப்புற்றுநோய் காரணமாக 8000 மரணங்கள் சம்பவிக்கின்றன. ஆகையால் அனைவரும் நோய் அவதானம் மற்றும் நோய் நிலையின் ஆரம்ப அறிகுறிகளை அறிந்து கொள்வது அவசியம்.
பொதுவாக அனைத்து பெண்களுக்கு மார்பகப்புற்றுநோய் ஏற்படக் கூடிய அவதானம் உள்ளது. எனினும் சில சமயங்களில் ஆண்களுக்கும் மார்பகப்புற்றுநோய் ஏற்படலாம். இது பாரதூரமான விடயமாகும். புற்றுநோய் கலங்கள் ஆண்களின் மார்பு பகுதியை நேரடியாக தாக்குவதால் உயிரிழப்பு ஏற்படக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளன. குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள். 12 வயதுக்கு முதல் பூப்பெய்தியவர்கள், பிள்ளை பெறாத தாய்மார், உடல் பருமனானவர்கள், புகைத்தல் மற்றும் மது அருந்துவோர் ஆகியோருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம் என்றார்.
நாட்டில் நாளாந்தம் 15 மார்பகப்புற்று நோயாளர்கள் பதிவு ; 3 பேர் உயிரிழப்பு - தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தகவல் | Virakesari.lk
