ஊர்ப்புதினம்

கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல, தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் - ஐங்கரநேசன்

2 hours 40 minutes ago

31 Oct, 2025 | 06:35 PM

image

வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப்பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோன்று, வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகை செய்ய இயலுமெனினும் கார்த்திகை மாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும். கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரமல்ல; அது தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் ஒரு தேசியச் செயற்பாடும் ஆகும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் தீர்மானத்துக்கு அமைவாக 2014ஆம் ஆண்டு முதல் கார்த்திகை மாதம் வட மாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பூமி விரைந்து சூடேறி வருவதால் காலநிலையில் படுபாதகமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அதிவேகத்துடன் நீண்ட நேரம் நின்று தாக்கும் சூறாவளிகள், காலம் தப்பிக் கொட்டித் தீர்க்கும் அடைமழை, காடுகளில் தீ மூட்டும் கடும் வறட்சி, உயர்ந்து செல்லும் கடல் மட்டம், உயிரினங்களின் பேரழிவு என்று காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் தற்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம். இதனால், வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணமான கரியமிலவாயுவை உறிஞ்சி அகற்றுவதற்கு மரங்களின் நடுகையை ஒரு பேரியக்கமாக முன்னெடுக்கவேண்டிய கட்டாய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

மரநடுகையைப் பெருமளவில் மேற்கொள்வதற்கு கூடுதலான மழைவீழ்ச்சியைப் பெறும் கார்த்திகை மிகப் பொருத்தமான மாதமாகும். ஈழத்தமிழர்களின் வாழ்வியலிலும் கார்த்திகை மாதம் தனித்துவமான இன்னுமொரு சிறப்பினைக் கொண்டுள்ளது. இம்மாதத்திலேயே மண்ணுக்காக மரணித்த மறவர்களைக் கூட்டாக நினைவில் கொள்ளும் நாள் அடங்குகிறது. மரவழிபாட்டைத் தமது ஆதி வழிபாட்டு முறையாகக் கொண்ட தமிழர்கள், இறந்தவர்களின் நினைவாக மரங்களை நடுகைசெய்து, அவற்றை உயிருள்ள நினைவுச்சின்னங்களாகப் போற்றிய பண்பாட்டு மரபைக் கொண்டிருக்கின்றனர்.

தேசியம் என்பது வெறுமனே தட்டையான ஓர் அரசியல் சொல்லாடல் அல்ல. இது ஓர் இனத்தின் வாழ்புலம், மொழி, வரலாறு, பண்பாடு, மத நம்பிக்கைகள் ஆகிய கூறுகளின் திரட்சியான ஒரு வாழ்க்கை முறையாகும். 

அந்த வகையில், கார்த்திகை மாத மரநடுகை என்பது தமிழ்த் தேசிய நோக்கிலும் மிகவும் பொருத்தப்பாடான ஒன்றாகும். 

எனவே தமிழ் மக்கள் கார்த்திகை மரநடுகையை ஒரு சூழல்பேண் நடவடிக்கையாக மாத்திரமல்லாது உணர்வெழுச்சியுடன் கூடிய ஒரு தமிழ்த் தேசியச் செயற்பாடாகவும் கொண்டாட வேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/229190

இலஞ்சம் வாங்கிய திருகோணமலை குச்சவெளி பிரதேச தவிசாளர் கைது

5 hours 8 minutes ago

31 Oct, 2025 | 04:40 PM

image

திருகோணமலை, குச்சவெளி பிரதேச தவிசாளர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (31) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நிலாவெளி இக்பால் நகர் பகுதியில் வைத்து பெண் ஒருவரிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபா இலட்சம் பெற்றுக்கொண்ட போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

நிலாவெளியில் உள்ள காணியில் ஹோட்டல் ஒன்று அமைப்பதற்காக காணி உரிமையாளர் காணிக்கான அனுமதிப்பத்திரம் பெற முயற்சித்தபோது அனுமதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக்கூறி காணி உரிமையாளரான பெண்ணிடமிருந்து குச்சவெளி பிரதேச தவிசாளரான ஏ.முபாரக் இலஞ்சம் கோரியதாகவும் இரண்டு இலட்சத்தில் இருந்து பேரம்பேசப்பட்டதாகவும் இறுதியில் ஐந்து இலட்சத்திற்கு உடன்பட்டிருந்ததாகவும் தெரியவருகிறது.  

கைது செய்யப்பட்ட பின்னர் நிலாவெளி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. இதுவரை கைது செய்வதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் அங்கே பல நாட்களாக தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலஞ்சம் வாங்கிய திருகோணமலை குச்சவெளி பிரதேச தவிசாளர் கைது | Virakesari.lk

நெடுந்தீவு கடல் பகுதியில் 41 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

5 hours 18 minutes ago

31 Oct, 2025 | 04:47 PM

image

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல் பகுதியில் வியாழக்கிழமை (30) இரவு இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 185 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கியுடன்  இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு மற்றும் 'போதையில்லா நாடு - ஆரோக்கியமானபிரஜைகள் வாழ்க்கை' என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து விடுவிக்கும் தேசிய பணிக்கு பங்களிக்கும் கடற்படை, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனம், அந்த நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட ஒரு கடலோர ரோந்து கப்பலை ஈடுபடுத்தி, வியாழக்கிழமை (30) இரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள உள்ளூர் கடல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று பயணிப்பதைக் கவனித்து சோதனை செய்யப்பட்டது. அந்த நேரத்தில், அந்த டிங்கி படகில் ஆறு பைகளில்  85 பொதிகளில் பொதி செய்யப்பட்ட 185 கிலோ 600  கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற, இரண்டு சந்தேக நபர்களும் அந்த டிங்கி படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 25 மற்றும் 30 வயதுடைய யாழ்ப்பாணம் மண்டைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். மேலும், சந்தேக நபர்கள், கேரள கஞ்சா பொதிகள் மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு காவல் நிலையத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு 41 மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

 2025 ஆம் ஆண்டில் இதுவரை நடத்தப்பட்ட நடவடிக்கைகள் மூலம், 5267 கிலோகிராமை விட அதிகமான கேரள கஞ்சாவை கைப்பற்றி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு அனுப்ப கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

யாழ்.பல்கலை நூலகத்தில் இருந்து மகசீன்கள் மீட்பு ; சோதனை நடவடிக்கைக்கு பொலிஸ் முஸ்தீபு

5 hours 22 minutes ago

Published By: Digital Desk 3

31 Oct, 2025 | 11:42 AM

image

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் இருந்து துப்பாக்கி மகசீன்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தினுள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்ற அனுமதியை பெற பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது. 

யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரைக்குள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பிரதேச பத்திரிகை ஒன்றின் 2005ஆம் ஆண்டு வெளியான பத்திரிக்கை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் ,  இரண்டு துப்பாக்கி மகசீன்கள் மற்றும் வயர் துண்டு என்பவற்றை நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊழியர்கள் கண்டுள்ளனர். 

அது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு அறிவிக்கப்பட்டதை, அடுத்து, நிர்வாகத்தினர் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தனர். 

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பொலிஸ் விசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினரின் உதவியுடன் இரண்டு மகசீன்களையும் வயர் துண்டையும் மீட்டனர். 

இரண்டு மகசீன்களுக்குள்ளும் 59 துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதாகவும், மீட்கப்பட்ட வயர் துண்டு 05 நீளமுடையது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மீட்கப்பட்ட மகசீன் மற்றும் துப்பாக்கி ரவைகள் குறித்து நீதிமன்றுக்கு அறிவித்து, மன்றில் அறிவுறுத்தலுக்கு ஏற்பட அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

அதேவேளை பல்கலைக்கழக வளாகத்தினுள் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்பதால் , பல்கலைக்கழகத்தினுள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்ற அனுமதியை பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

https://www.virakesari.lk/article/229118

பாடசாலை மாணவர்களை சபரிமலை புனித யாத்திரைக்கு அனுப்பும் பெற்றோர்கள், குருசாமிகளின் கவனத்துக்கு...

5 hours 26 minutes ago

31 Oct, 2025 | 04:03 PM

image

தற்போது சபரிமலையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தியிருக்கும் இலங்கை அரசும் சிறுவர் விவகார அமைச்சும் சகல பாடசாலை அதிபர்களும் பிரயாணத்திற்கான விசா அனுமதி வழங்கும் இந்து கலாசார திணைக்களம், இந்திய தூதரக விசா பிரிவு என்பனவும் மிக கடுமையான கண்காணிப்பையும் நடைமுறைகளையும் சிறுவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படாத வகையில் எடுக்கவேண்டியது அவசியமாகும் என சர்வதேச இந்துமத பீடத்தின் தலைவர் சிவஸ்ரீ. பால ரவிசங்கர சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார். 

பாடசாலை கல்வியை மேற்கொள்ளும் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு விரத மாலை அணிவித்து, சபரிமலை யாத்திரைக்கு அழைத்துச் செல்லும்போது பெற்றோரும் குருசாமிகளும் கவனத்திற்கொள்ள வேண்டிய பிரதான விடயங்கள் அடங்கிய அறிக்கையினை வெளியிட்டுள்ள சிவஸ்ரீ. பால ரவிசங்கர சிவாச்சாரியார், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையிலிருந்து சபரிமலை புனித யாத்திரை  மேற்கொள்வது சாதாரணமான ஒரு பயணமாக மாற்றமடைந்து வரும் தற்கால சூழ்நிலையில், 16 வயதிற்குட்பட்ட பாடசாலை கல்வியை மேற்கொள்ளும் மாணவ சிறார்களுக்கு விரத மாலை அணிவித்து சபரிமலை யாத்திரைக்கு அழைத்துச் செல்ல முற்படும் பெற்றோர் குறிப்பாக அத்தகைய யாத்திரைக்கு பொறுப்பான குருசுவாமிகள் சில முக்கியமான விடயங்களை பரிசீலித்து அம்முடிவை மேற்கொள்வது அவசியமாகும்.

"மகரஜோதி" தரிசன பருவகால யாத்திரை என்பது நவம்பர், டிசம்பர், ஜனவரியை சார்ந்ததாக, கார்த்திகை, மார்கழி, தை மாதமென 60 தினங்களை கொண்ட விரதகால யாத்திரையாகும்.

இக்காலப்பகுதியிலேயே இலங்கையில் அரசாங்க பாடசாலைகளிலும் வருட இறுதிப்பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை என்பவை நடப்பது வழமை. இக்காலப்பகுதியில் விரதமாலை அணியும் நிலையில், மாணவர்களின் கல்வி, பரீட்சை சூழ்நிலைக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அதிக கவனத்தை செலுத்தவேண்டியது அவசியமாகும்.

அத்துடன் இன்றைய சூழ்நிலையில் ஒருவர் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள சுமார் இரண்டு லட்சம் ரூபாய் அளவில் முழுமையாக தேவைப்படும் நிலையில் 16 வயதிற்கு உட்பட்ட பாடசாலைக் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களின் உயர்கல்வி, தொழிற்கல்வி என ஏராளமான கல்விச் செலவுகளை எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

எதிர்கால சூழ்நிலைக்கு ஏற்ப மாணவ பருவ சிறார்களின் யாத்திரை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டியது அவசியமாகும். ஏனெனில், சாதாரண குடும்ப பொருளாதார சூழ்நிலையில் இருக்கும் நடுத்தர குடும்பத்தவர்கள் திட்டமிட்டு செயற்படவேண்டியது பிள்ளைகளின் எதிர்கால கல்விக்கு உறுதுணையாக அமையும்.

பொதுவாகவே 11 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு இந்து சமய சைவ சமய ரீதியாக தீர்த்த யாத்திரை என்பது சொல்லப்பட்டது அல்ல. ஆனால், பக்தி மார்க்கத்தில், தமது நேர்த்திக்கடன், பிரார்த்தனை என்று அனுப்புவோரும் இத்தகைய விடயங்களை கருத்திற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அப்படியே அனுப்பினாலும் ஒருமுறை யாத்திரை அனுப்பலாம். தொடர்ந்து மூன்று வருடங்கள், ஐந்து வருடங்கள் ஏன் தொடர்ந்தே செல்ல வேண்டும் என்ற மனநிலையும் பிடிவாதமும் முறையல்ல.

இவ்விடயத்தில் தற்போது சபரிமலை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தியிருக்கும் இலங்கை அரசும் சிறுவர் விவகார அமைச்சும் சகல பாடசாலை அதிபர்களுக்கும் பிரயாணத்திற்கான விசா அனுமதி வழங்கும் இந்து கலாச்சார திணைக்களம், இந்திய தூதரக விசா பிரிவு என்பன மிக கடுமையான கண்காணிப்பையும் நடைமுறைகளையும் சிறுவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படாத வகையில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டியது அவசியமாகும்.

நமது சமயத்தில் பெற்றோர் குழந்தைகளை நல்ல பிரஜைகளாக, சமய பற்றுள்ளவர்களாக, ஒழுக்க சீலர்களாக, சிறந்த கல்வியாளர்களாக உருவாக்கவே கூறுகிறது. அவர்கள் வெறுமனே சாமியார்களாகவோ, 18 வயதில் 18 வருடங்கள் சபரிமலைக்கு சென்ற துறவியாக மட்டுமே உருவாக காரணமாக அமைந்து அவர்களினதும் நமது சமூகத்தினதும் எதிர்காலத்தை பாழ்படுத்தி விடக்கூடாது என்பதே இதன் நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/229152

'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது

5 hours 38 minutes ago

'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது

Oct 31, 2025 - 03:20 PM -

'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது

'முழு நாடுமே ஒன்றாக' என்ற தேசிய செயற்திட்டத்தின் கீழ், பொலிஸார் நாடு முழுவதும் மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ், நேற்றைய தினம் 987 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இந்தச் சுற்றிவளைப்புகளின்போது, போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 371 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம், மொத்தமாக 971 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 பேருக்கு எதிராகத் தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. 

அத்துடன், கைது செய்யப்பட்ட நபர்களில் 10 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

https://adaderanatamil.lk/news/cmheoaqth01b3o29nqg3z56h8

இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கான விசேட அறிவிப்பு!

6 hours 7 minutes ago

New-Project-358.jpg?resize=750%2C375&ssl

இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கான விசேட அறிவிப்பு!

இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் தீவு நாட்டிற்கு வருவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெற வேண்டிய அவசியமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இது தொடர்பில் வியாழக்கிழமை (30) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒக்டோபர் 15 முதல் அமலுக்கு வந்த இந்தத் தேவையை மீளப் பெற்றுள்ளதாகக் கூறியது.

புதிய உத்தரவின்படி, அனைத்து ETA மற்றும் விசா வழங்கும் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை தற்போதுள்ள நடைமுறைகளின் கீழ் தொடர்ந்து செயல்படும். 

எனவே பயணிகள் அக்டோபர் 15 க்கு முன்பு இருந்த அதே செயல்முறையின் கீழ் விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1451655

இஷாரா செவ்வந்திக்கு உதவிய சட்டத்தரணிக்கும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு?

6 hours 23 minutes ago

31 Oct, 2025 | 03:36 PM

image

“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு துப்பாக்கியை மறைத்து வைக்க  ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலை வழங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பெண் சட்டத்தரணி தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு பின்னர் ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பிஸ்டல் ரக துப்பாக்கியை மறைத்து வைப்பதற்கு ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலை வழங்கியதாக கூறப்படும் பெண் சட்டத்தரணி கடவத்தை பிரதேசத்தில் வைத்து ஒக்டோபர் 28 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பெண் சட்டத்தரணி பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்டபுடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த பெண் சட்டத்தரணிக்கு எதிராக கம்பஹா நீதிமன்றில் 5 வழக்குகள்  காணப்படுவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த பெண் சட்டத்தரணி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகளுக்கு சார்பாக நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “குடு சலிந்து” என்பவர் மடகஸ்கரில் கைதுசெய்யப்பட்ட போது இந்த பெண் சட்டத்தரணி, அந்நாட்டுக்குச் சென்று குடு சலிந்துக்காக வாதிட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த பெண் சட்டத்தரணி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” என்பவருடன் வாட்ஸ்அப் ஊடாக தொடர்புகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த பெண் சட்டத்தரணி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த  “தருன்” என்பவர் உள்ளிட்ட பலருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/229148

வடக்கில் பொருளாதாரத் திறனை உருவாக்கும் நோக்கில் “வடக்கு முதலீட்டு மாநாடு 2026”

6 hours 39 minutes ago

Published By: Priyatharshan

31 Oct, 2025 | 03:52 PM

image

( வீ.பிரியதர்சன் )

வடக்கில் யாழ்ப்பாணத்தை முன்னிலைப்படுத்தி முதலீடு , தொழில் முனைவோர் மற்றும் பிராந்திய வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில் முகாமைத்துவக் கழகம் “ வடக்கு முதலீட்டு மாநாடு 2026 ஐ ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கையின் வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத் திறனை உருவாக்கி நிலையான முதலீடு புதுமையின் பிராந்திய நிலையமாக நிலைநிறுத்தும் நோக்குடனும் முயற்சியுடனும் முகாமைத்துவக் கழகம் “வடக்கு முதலீட்டு மாநாடு 2026” அண்மையில் சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

WhatsApp_Image_2025-10-30_at_15.18.08.jp

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் உள்ள திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் முகாமைத்துவக் கழகம் மற்றும் அதன் யாழ்ப்பாணக் கிளை இணைந்து வடக்கில் முதலீடு செய்யுங்கள் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கான நுழைவாயில் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்துள்ளன.

இந்த “ வடக்கு முதலீட்டு மாநாடு 2026 ” வடக்கு மாகாணத்தை போட்டித்திறனுள்ள முதலீட்டு மற்றும் வர்த்தக மையமாக மாற்றுவதற்கான ஒரு மூலோபய தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை முன்னுரிமைத் துறைகளில் உள்ள வணிக வாய்ப்புக்களுடன் இணைக்கும். இரு நாட்கள் இடம்பெறும் இந்த மாநாடு  அரசாங்கத் தலைவர்கள், தனியார் துறைநிர்வாகிகள், முதலீட்டாளர்கள், தூதர்கள், தொழில்முனைவோர், படைப்பாளிகள், புதுமையானவர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒரே மேடையில் இணைக்க உதவும்.

இந்த மாநாடு  பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது, இதில் முக்கிய உரைகள், துறைகளுக்கேற்ப குழு விவாதங்கள், திட்டக் கண்காட்சிகள், சந்திப்புகள், அமர்வுகள் மற்றும் முதலீட்டாளர்கள் சுற்றுப் பேச்சுகள் ஆகியன இடம்பெறும். 

பலதுறைகளில் முதலீடுகளை இந்த மாநாடு வெளிப்படுத்தக்கூடியதாக அமைகின்றது. குறிப்பாக வேளாண்மை மீன்பிடி, மற்றும் விலங்கு வேளாண்மை, பாரம்பரியம், சுற்றுலாத்துறை தொழில்கள், சுகாதாரம் சித்தமருத்துவம், கல்வி, தகவல்தொழில்நுட்பம், ஆகியவற்றை குறிப்பிடலாம். அத்துடன், இணைப்பு மதிப்பூட்டல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நிலைத்தன்மை, டிஜிட்டல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியனவும் இதில் அடங்கும். 

இதேவேளை, வடக்கிற்காக 3 புதிய தொழில்துறை மண்டலங்களை உருவாக்கும் இலங்கை முதலீட்டு சபைத் திட்டங்கள் மற்றும் சிறப்பு வரிச்சலுகைகள் அடங்கும். முகாமைத்துவக் கழகம் இந்த முயற்சியை ஒரு நிகழ்வாக அல்லாமல் நீடித்த முயற்சியாக்கும் வருடாந்த வடக்கு முதலீட்டு அமைப்பாக நடத்தப்படும். நிரந்தர வடக்கு முதலீட்டு அமைப்பு உருவாக்கப்படும். வடக்கு பிராந்திய முதலீட்டு வாய்ப்புக்களை வெளிப்படுத்தும் ஒரு டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும்.

இதன்போது உரையாற்றிய முகாமைத்துவக் கழகத்தின் யாழ்ப்பாணக்கிளையின் தலைவர் அநுராகவன், 

anu.jpg

Mr. Anu Rakavan, Chairperson, The Management Club, Jaffna

“ இலங்கையை உலகத்திற்கு எவ்வாறு மாற்றமுடியும். இதற்கு முன்னர் நாம் அதனை செய்துள்ளோமா ? ஆம் 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் மைதானங்களுக்குள் ஒரு இளம் அணி நுழைந்த போது, அது வலுவிழந்த அணியாக இருந்தது. அதற்கு பல தடைகள் காணப்பட்டன. ஆனால் நாம் அனைவரையும் தோற்கடித்து, சவால்களையும் எதிர்கொண்டு வென்றோம். இலங்கையை உலகெங்கிலும் உள்ள அனைத்து பின்தங்கிய அணிகளின் விருப்பமான அணியாக மாற்றினோம். அது எவ்வாறு நடந்தது. நல்லதொரு தலைவர் இருந்தமையாலா ? அல்லது எங்களிடம் நல்ல யுக்தி காணப்பட்டதாலா ? அல்லது எங்களிடம் அர்ப்பணிப்புள்ள அணியின் உறுப்பினர்கள் காணப்பட்டமையாலா? அதற்கு அப்பால் சிறந்ததொரு இணைவு காணப்பட்டமையே அதற்கான பதிலாகும். அதேபோல் இலங்கையை உலகிற்கு முன்மாதிரியாக காண்பிப்பதற்கு எம்மிடம் சிறந்த தலைமைத்துவம் உள்ளது. இந்த நாடு எவ்வாறு முன்னேற வேண்டும் என்பதற்கான உபாயத்துடன் பணியாற்றி வருகின்றோம். இருப்பினும் ஒவ்வொரு வீரர்களும் ஒவ்வொரு மாகாணங்களும் ஒவ்வொரு மாவட்டங்களும் ஒவ்வொரு பிரஜைகளும் இலங்கையை வெற்றியான நாடாக எவ்வாறு மாற்றுவது என்பது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும். இந்த மாநாட்டின் ஊடாக அனைத்து பிரஜைகளும் தேசிய உள்நாட்டு மொத்த உற்பத்தியில் பங்களிப்பதற்கு சம வாய்ப்பு கிடைக்கும் வகையில் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்ய முன்வர வேண்டும்” என்றார்.

இதன்போது உரையாற்றிய முகாமைத்துவக் கழகத்தின் திட்ட தலைவர் இந்திரா கே. ராஜபக்ஷ,

Screenshot_2025-10-31_153720.jpg

“இலங்கை முகாமைத்துவக் கழகம் மற்றும் எங்கள் கிளையான யாழ்ப்பாணக் கிளை இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு வெறுமனே மாநாடு மாத்திரமல்ல, இது ஒரு மாற்றத்திற்கான தருணமாகும் இலங்கையின் வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத் திறனை உருவாக்கி நிலையான முதலீடு, புதுமையின் பிராந்திய நிலையமாக நிலைநிறுத்தும் நோக்கும் முயற்சியும் கொண்ட தருணமே இது. கால் நூற்றாண்டுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட முகாமைத்துவக் கழகம் முகாமையாளர்களுக்கிடையில் சிறியதொரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது. வடக்கு மாகாணம் நீண்டகாலமாக ஏராளமான இயற்கை வளங்கள், படித்த இளைஞர்கள் துடிப்பான தொழில் முனைவோர் மனப்பான்மை ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்ட நிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பிராந்தியத்தில் உண்மையான ஆற்றல் மிக நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. அந்த இடைவெளியை குறைக்கவும் பார்வையை யதார்த்தமாகவும் சவால்களை வாய்ப்புக்களாக மாற்றுவதற்கு நாங்கள் ஒன்று கூடுகின்றோம்.” என்றார்.

WhatsApp_Image_2025-10-30_at_15.18.09.jp

 முதலீட்டு சபை, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, தேசிய ஏற்றுமதியாளர்கள் சபை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை, கைத்தொழில் அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, மாகாண அதிகாரிகள் உள்ளிட்ட அரச தனியார் வலையமைப்பால் அனுசரணை வழங்கப்படும் இந்தமாநாடு, முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் கல்வியியலாளர்கள் தொழில் முனைவோர்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

WhatsApp_Image_2025-10-30_at_15.18.07.jp

Left to Right:

1. Mr. Anu Rakavan, Chairperson, The Management Club, Jaffna

2. Professor A. Atputharaja, Vice Chancellor, University of Vauniya

3. Dr. Prasad Jayasuriya, Director - Tourism Planning, Development and Investor Relations, Sri Lanka

Tourism Development Authority

4. Mr. M. Piiratheepan, Government Agent – Jaffna

5. Mr. Indhra K Rajapaksa, Project Chair The Management Club (TMC)

6. Mr. Fayaz Saleem, Founder Emeritus -The Management Club (TMC)

7. Mr. Roger Talayaratna, President, The Management Club (TMC)

8. Mr. Damith Pallewatte, Managing Director / CEO- Hatton National Bank (HNB)

9. Ms. Renuka Weerakone, Director General- Board of Investment of Sri Lanka (BOI)

10. Mrs. Shanthi Bhagirathan, Vice President - Admin BOM and Project Co-Chair- The Management Club

11. Mr. Murali Prakash, Advisory BOM- The Management Club (TMC)

12 .Mr. Nasser Majeed, Advisory BOM- The Management Club (TMC)

13. Mr. Chandima Hulangamuwa, Vice President – Finance / BOM - The Management Club (TMC)

https://www.virakesari.lk/article/229154

யாழ்ப்பாணம் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் அமைவு குறித்ததான கள ஆய்வு

9 hours 29 minutes ago

யாழ்ப்பாணம் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் அமைவு குறித்ததான கள ஆய்வு

வெள்ளி, 31 அக்டோபர் 2025 04:30 AM

யாழ்ப்பாணம் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் அமைவு குறித்ததான கள ஆய்வு

யாழ்ப்பாணம் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் அமைவு குறித்ததான கள ஆய்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

மண்டைதீவு பகுதியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான யோசனைகள் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக முன் வைக்கப்பட்டு , மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு , பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு வந்தன. 

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மண்டைதீவில் மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டி , அதன் ஆரம்ப பணிகளை மேற்கொண்டார். 

அதனை அடுத்து , குறித்த பகுதி பாதுகாக்கப்பட்ட சதுப்பு நில பகுதி , வலசை பறவைகள் வந்து தங்குமிடம் எனவும் , மைதானம் அமையப்பட்டால் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு விடும் எனவே மைதானம் அமைக்கப்பட கூடாது என இயற்கை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர் 

அந்த நிலையில் நேற்றைய தினம் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர், யாழ். மாவட்ட மேலதிக செயலர் , வடமாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் , வேலணை பிரதேச செயலாளர் , தவிசாளர், இலங்கை துடுப்பாட்ட சபை இணைப்பாளர் ,கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள், கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர், நீர்வள சபை உத்தியோகத்தர்கள், கடற்படை உத்தியோகத்தர்கள், கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள்,  வனவளத்திணைக்கள பிராந்திய உத்தியோகத்தர், வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், நீர்ப்பாசன திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர், நகர அதிகார சபை உத்தியோகத்தர்கள், தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ் மாவட்ட கிரிக்கெட் சம்மேளனத்தினர்  உள்ளிட்டோர் மைதானம் அமைக்கப்படும் இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபட்டனர். 

https://jaffnazone.com/news/51780

யாழ் . மாநகர சபையின் சொத்துக்கு கள்ள உறுதி முடிக்கப்பட்டுள்ளது

9 hours 30 minutes ago

யாழ் . மாநகர சபையின் சொத்துக்கு கள்ள உறுதி முடிக்கப்பட்டுள்ளது

வெள்ளி, 31 அக்டோபர் 2025 05:05 AM

யாழ் . மாநகர சபையின் சொத்துக்கு கள்ள உறுதி முடிக்கப்பட்டுள்ளது

யாழ் மாநகர சபையின் ஆதனமொன்று கள்ள உறுதி  முடிக்கப்பட்டு மாநகர சபையினுடைய ஆதன வரி பதிவேடுகளில் கூட பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் ஆணையாளரும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவருமான சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாநகர சபையின் முன்னைய கட்டிடத்திற்கு கிழக்கு பக்கமாக இருந்த வாசலுக்கு எதிராக ஒரு பெரிய கட்டிடம் இருந்தது. அந்த கட்டிடமும் மாநகர சபையின் அலுவலகமாக இருந்தது. அது ஒரு கொள்வனவு செய்யப்பட்ட கட்டிடம். ஆனால் அண்மையில் அதனை தற்செயலாக பார்த்தபோது அது மாநகர சபையினுடைய சொத்து என்ற நிலையில் இல்லாமல் வேறு பலர் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலையில் இருந்தது. அதை ஆராய்ந்த பொழுது அந்த சொத்துக்கு கள்ள உறுதி முடிக்கப்பட்டு மாநகர சபையினுடைய ஆதன வரி பதிவேடுகளில் கூட பதிவு மாற்றம் செய்யப்பட்டதாக நம்பகரமாக தகவல்கள் கிடைத்திருக்கிறது.

அந்தக் கட்டடத்தின் மேல் பகுதியிலேயே தான் பொது நூலக ஸ்தாபகர் செல்லப்பா பொது நூலகத்தை ஆரம்பித்து வைத்தார். அதற்கு ஆதாரமாக யாழ் மாநகர சபையின் வெள்ளி விழா மலரை குறிப்பிடலாம். அந்த மலர் வெளியிடும் போது யாழ் மாநகர சபையில் கணக்காளராக நான் இருந்தேன்.

குறித்த காணி தனியாரின் காணியாக இருந்தது. யாழ் மாநகர சபை, நகர சபையாக இருந்த காலத்தில் அந்த கட்டிடம் தேவை கருதி கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. இந்த புத்தகத்திலே கொள்வனவு செய்த கட்டிடங்கள் என்று பட்டியலில் களஞ்சியசாலை வசதிக்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது சம்பந்தமாக கடந்த 23ஆம் திகதி மாநகர சபை ஆணையாளருக்கு ஒரு கடிதம் எழுதி இது தொடர்பிலான நடவடிக்கைக்கு வலியுறுத்தி இருக்கிறேன். இந்த விடயத்தை வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளேன்.

2006 ஆம் ஆண்டுக்குப் பின்னரே தான் இந்த இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அது பற்றை  வளர்ந்து மாநகர சபை சொத்தாகவே பார்க்கப்படவில்லை. தற்போது அங்கு தற்காலிக வியாபார நிலையம் ஒன்று இயங்குகிறது. அது குத்தகைக்கு கொடுத்திருக்க வாய்ப்பில்லை.

உடனடியாக அதனை மீளப்பெறுவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாநகர முதல்வருக்கும் கடிதத்தின் பிரதியை அனுப்பி இருக்கிறேன்.

குறித்த விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த மோசடிக்கு யார் யார்  சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற விடயம் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

மாநகர சபையின் சொத்தை மாநகர சபையின் பதிவேட்டிலேயே மாற்ற முடியும் என்று சொன்னால் எந்த அளவுக்கு நிலைமை இருக்கிறது.

உடனடியாக இந்த விடயத்தில் ஆணையாளர், ஆளுநருடன் கதைத்து புதிதாக உருவாக்கப்பட்ட பொலிஸாரின் விசேட பிரிவில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திலேயே இந்த விடயத்தை முறைப்பாட்டை செய்ய வேண்டும். இந்த மோசடிக்கு துணை போனவர்களை அம்பலப்படுத்த வேண்டும் - என்றார்.

https://jaffnazone.com/news/51784

பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

11 hours 8 minutes ago

பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

October 31, 2025 8:49 am

பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் லாட்விய எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 34 வயதுடையவர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

ஒக்டோபர் 27–28ஆம் திகதி இரவு சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முற்பட்ட இருவரை எல்லைக் காவலர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இருவரும் இலங்கை குடிமக்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

லாட்விய எல்லைக் காவலர்கள் மற்றையவரை தடுத்து வைத்து பெலாரஷ்யப் பகுதிக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடயவியல் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிரிழந்தவர் கிளிநொச்சி உருத்திரபுரத்தைச்சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர், ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

22-1.jpg11-1.jpg

https://oruvan.com/sri-lankan-found-dead-on-belarus-latvia-border/

கட்சிக்குள் இருந்தே முதலமைச்சர் வேட்பாளர்: தமிழரசுக் கட்சி திட்டவட்டம்…

11 hours 20 minutes ago

கட்சிக்குள் இருந்தே முதலமைச்சர் வேட்பாளர்: தமிழரசுக் கட்சி திட்டவட்டம்…

October 31, 2025

”மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியோடு தொடர்புடைய – கட்சிக்குப் பங்களிப்புச் செய்த பொருத்தமான யாவராவது ஒருவரைத்தான் எமது சார்பிலான முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்குவோம். எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளியில் இருந்து யாரையும் இறக்குமதி செய்ய மாட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வட மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” மாகாண சபைத் தேர்தல் தாமதிப்பது வருந்தத்தக்கது எனவும், மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் நாம் கோரியிருக்கின்றோம் எனவும் கூறினார்.

மாகாண சபைத் தேர்தல் விரைந்து நடக்க வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பு. இதில் முதலமைச்சர் வேட்பாளரைப் பொறுத்த வரையில் எங்களது கட்சியின் தெளிவான நிலைப்பாடு, கட்சிக்குள்ளே இருந்துதான் நாங்கள் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்வோம்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளியில் இருந்து யாரையும் இறக்குமதி செய்ய மாட்டோம்.
எனினும், எங்களுடைய கட்சியில் அங்கத்தவராக இருப்பவர்தான் கட்சி என்றும் எடுக்க மாட்டோம்.

யாழ்ப்பாணத்திலோ – வடக்கு மாகாணத்திலோ எங்களோடு இணங்கிச் செயற்பட்டுக் கட்சியோடு இருந்தவர்கள், கட்சிக்காக வேலை செய்தவர்கள், உழைத்தவர்கள் என அவர்களில் ஒருவரைத்தான் நாங்கள் முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்வோம்.” – எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் மேலும் குறிப்பிட்டார்.

https://www.ilakku.org/chief-ministerial-candidate-from-within-the-party-tamil-nadu-partys-manifesto/

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவிலுக்கு பிணை!

11 hours 28 minutes ago

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவிலுக்கு பிணை!

31 Oct, 2025 | 11:38 AM

image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை  பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (31) காலை உத்தரவிட்டுள்ளது. 

விளக்கமறியலில் வைக்கப்பட்ட நெவில் வன்னியாராச்சி கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நெவில் வன்னியாராச்சியை  50 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கு பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இந்த வழக்கு ஜனவரி 16 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நெவில் வன்னியாராச்சி சட்டவிரோத சொத்து சேர்ப்பு தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஒக்டோபர் 02 ஆம் திகதி முன்னிலையாகிய போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/229119

இந்தியா - இலங்கை மின்கட்டமைப்பு இணைப்பு : மெய்நிகர் கூட்டத்தில் முக்கியப் பேச்சுவார்த்தை

11 hours 30 minutes ago

இந்தியா - இலங்கை மின்கட்டமைப்பு இணைப்பு : மெய்நிகர் கூட்டத்தில் முக்கியப் பேச்சுவார்த்தை

31 Oct, 2025 | 11:01 AM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான மின்கட்டமைப்பு இணைப்புத் திட்டத்தை (Power Grid Interconnection) செயல்படுத்துவது தொடர்பான நடைமுறைகளை விவாதிப்பதற்காக, 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதியன்று ஒரு மெய்நிகர் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இந்தியக் குழுவிற்கு இந்திய அரசின் மின்சாரத் துறைச் செயலாளர் ஸ்ரீ பங்கஜ் அகர்வால் தலைமை தாங்கினார். இலங்கைக் குழுவிற்கு இலங்கை அரசின் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால தலைமை தாங்கினார்.

இருதரப்பு அதிகாரிகளும் மின்கட்டமைப்பு இணைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அம்சங்கள் குறித்து ஆலோசித்தனர்.

2025 ஜூன் 16 அன்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தின் போது, இருதரப்பினரும் இந்தியா-இலங்கை மின்கட்டமைப்பு இணைப்பிற்கான தொழில்நுட்ப அளவுருக்களை (Technical Parameters) உறுதிப்படுத்தியிருந்தனர்.

இந்த மின் பரிமாற்ற இணைப்பு இலங்கைக்குப் பல முக்கியமான நன்மைகளை வழங்கும், மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் இலங்கையால் இந்தியாவில் இருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்ய முடியும். உபரியாக இருக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை (Renewable Energy) ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கை அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும். ஏற்றுமதிகள் மற்றும் எரிசக்தி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்தவும், மின்கட்டமைப்பின் நிலைத்தன்மையை (Grid Stability) மேம்படுத்தவும், பிராந்திய மின் சந்தையில் ஒருங்கிணைக்கவும் புதிய வாய்ப்புகளை இந்தத் திட்டம் உருவாக்கும்.

இந்த முக்கியத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவது குறித்து இருதரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/229112#google_vignette

தெற்காசியாவின் அதிக செலவுமிக்க நாடாக இலங்கை தேர்வு - எத்தனையாவது இடம் தெரியுமா?

11 hours 34 minutes ago

தெற்காசியாவின் அதிக செலவுமிக்க நாடாக இலங்கை தேர்வு - எத்தனையாவது இடம் தெரியுமா?

31 October 2025

1761891697_4545041_hirunews.jpg

தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பின் இரண்டாவது மிக செலவுமிக்க நாடாக இலங்கை வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன்படி, தனி ஒரு நபரின் வாழ்க்கைச் செலவு வாடகையைத் தவிர்த்து 506 டொலர் அல்லது 153,899 ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

இது பயனர் உருவாக்கிய வாழ்க்கைச் செலவு புள்ளி விபர வலைத்தளமான Numbeo இன் தரவுகளை மையப்படுத்தித் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்க் நாடுகளில், மாலைதீவு ஒரு நபருக்கு மாதம் 840.4 அமெரிக்க டொலர் செலவுடன் மிகவும் விலையுயர்ந்த நாடாகக் கருதப்படுகிறது. 

Numbeo இணையதளத்தின்படி, கொழும்பு நகரில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு, வாடகை நீங்கலாக, சௌகரியமாக வாழ மாதாந்தம் ரூபா 570,997 செலவாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்தச் செலவில் குழந்தைப் பராமரிப்பு, மளிகைப் பொருட்கள், பொழுதுபோக்கு, உணவகச் செலவுகள், பாடசாலைக் கட்டணம், வீட்டுச் செலவுகள் மற்றும் வாகனச் செலவுகள் போன்றவை அடங்கும். 

அதிக வரிகள் மற்றும் விலையேற்றம் காரணமாக மக்கள் சுமையுடன் உள்ள நிலையில், மத்திய வங்கியின் 'வருடாந்த பொருளாதார ஆய்வு 2024' சில முக்கிய விடயங்களைக் குறிப்பிடுகிறது. 

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டியின் அடிப்படையில், சராசரி மாதாந்த குடும்ப நுகர்வுச் செலவு 2023 இல் ரூபா 103,383 ஆக இருந்தது, 2024 இல் 1.6 வீதமாக அதிகரித்து ரூபா 105,063 ஆக உயர்ந்துள்ளது. 

இருப்பினும், 2022 இல் (2021 உடன் ஒப்பிடுகையில்) பதிவான 74.9 வீத அதிகரிப்பு மற்றும் 2023 இல் (2022 உடன் ஒப்பிடுகையில்) பதிவான 16.5 வீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதைக் காட்டுகிறது. 

இத்தகைய சூழ்நிலைகளில், குடும்பங்கள் தங்கள் செலவுகளைச் சமாளிப்பதற்கு எதிர்மறையான சமாளிப்பு வழிகளை நாட வேண்டியுள்ளது. 

மத்திய வங்கியின் 2024 செப்டம்பர் 18 முதல் 2025 செப்டம்பர் 18 வரையிலான தரவுகளின்படி, பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒன்பது மரக்கறிகளின் ஒரு கிலோகிராம் சராசரி விலை ரூபா 225 இலிருந்து ரூபா 321.10 ஆக அதிகரித்துள்ளது, இது ஒட்டுமொத்தமாக 42.7 வீத உயர்வாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://hirunews.lk/tm/428276/sri-lanka-named-south-asias-most-expensive-country-do-you-know-how-many-places

யாழில். காவற்துறையினரின் விசேட நடவடிக்கை - மூன்று நாளில் 08 பேர் கைது!

11 hours 42 minutes ago

யாழில். காவற்துறையினரின் விசேட நடவடிக்கை - மூன்று நாளில் 08 பேர் கைது!

adminOctober 31, 2025

1002521395.jpg

யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று தினங்களில் 08 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண காவற்துறை  போதை தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட நடவடிக்கையின் போது கடந்த மூன்று தினங்களிலும் , ஐஸ் போதைப்பொருள்  , ஹெரோயின் , கஞ்சா கலந்த மாவா , போதை மாத்திரைகள் உள்ளிட்டவற்றுடன் , 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள 08 பேரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் , அவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

https://globaltamilnews.net/2025/222106/

2025 இல் இலங்கை சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனை விஞ்சியது!

11 hours 49 minutes ago

New-Project-350.jpg?resize=750%2C375&ssl

2025 இல் இலங்கை சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனை விஞ்சியது!

இலங்கை சுங்கத்துறையின் நேற்று மாலை (30) நிலவரப்படி, இந்த ஆண்டிற்கான வரி வருவாய் வசூலில் 2 டிரில்லியன் ரூபா (ரூ. 2,000 பில்லியன்) என்ற இலக்கைத் தாண்டியுள்ளது.

இலங்கை சுங்கத்துறை தற்சமயம் 2025 ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்திர வருவாய் இலக்கான ரூ. 2.115 டிரில்லியனை அடையும் பாதையில் உள்ளதாக அதன்படி பணிப்பாளர் ஜெனரல் சீவலி அருக்கோட குறிப்பிட்டார்.

இது நாட்டின் வரலாற்றில் ஒரு அரசுத் துறையால் இதுவரை வசூலிக்கப்பட்ட மிக உயர்ந்த வரி வருவாயாகும்.

மொத்த வருவாயில், மோட்டார் வாகன இறக்குமதியிலிருந்து ரூ. 630 பில்லியன் ஈட்டப்பட்டது.

இந்த ஆண்டு இறுதிக்குள் ஆண்டு இலக்கை சுமார் ரூ. 300 பில்லியன் தாண்டும் என்று இலங்கை சுங்கத்துறை நம்பிக்கை தெரிவித்தது.

https://athavannews.com/2025/1451624

இங்கிலாந்தில் உள்ள இலங்கை விசேட மருத்துவர்கள் நாடு திரும்ப வேண்டும் – சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்

11 hours 50 minutes ago

New-Project-351.jpg?resize=750%2C375&ssl

இங்கிலாந்தில் உள்ள இலங்கை விசேட மருத்துவர்கள் நாடு திரும்ப வேண்டும் – சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்.

ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்ற இலங்கை மருத்துவர்கள் இலங்கைக்குத் திரும்புவது குறித்து பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக் கொண்டுள்ளார். 

இது நாட்டில் உள்ள விசேட மருத்துவர்களின் பற்றாக்குறையை எடுத்துக்காட்டுகிறது.

அமைச்சர் ஜெயதிஸ்ஸ, சமீபத்தில் ஐக்கிய இராச்சியத்திற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்தக் கோரிக்கையை விடுத்ததாக சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கை உயர் ஸ்தானிகராலயம் இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை மருத்துவர்களுடன் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும், அந்த சந்திப்பின் போது தான் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

“இந்தக் கலந்துரையாடலின் போது, பல்வேறு காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறிய நமது விசேட மருத்துவர்களிடம், இலங்கைக்குத் திரும்புவது குறித்து பரிசீலிக்குமாறு நான் ஒரு சிறப்பு வேண்டுகோளை விடுத்தேன். தற்போது நமது சுகாதார சேவையில் சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை உள்ளது,” என்று அவர் கூறினார். 

அவர்கள் இலங்கையில் பணிக்குத் திரும்பினால், அவர்களின் முந்தைய அனைத்து சேவை சலுகைகளுடன் அதே பதவிகளில் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள் என்று தாம் உறுதியளித்ததாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ மேலும் கூறினார்.

https://athavannews.com/2025/1451627

நாளை முதல் இலவச பொலித்தீன் பைகளுக்கு தடை!

11 hours 54 minutes ago

New-Project-353.jpg?resize=750%2C375&ssl

நாளை முதல் இலவச பொலித்தீன் பைகளுக்கு தடை!

பொருட்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் பொலித்தீன் பைகளை இலவசமாக விநியோகிப்பது நாளை (நவம்பர் 1) முதல் தடைசெய்யப்படும் என்று நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) அறிவித்துள்ளது.

ஒக்டோபர் 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பில், நுகர்வோருக்கு வழங்கப்படும் பில்கள் விற்பனையாளர்கள் ஷொப்பிங் பைகள் விலையைக் குறிப்பிடுவதை CAA கட்டாயமாக்கியது.

அந்த வர்த்தமானியில், அடர்த்தி குறைந்த பொலித்தீன், அடர்த்தி குறைந்த நேர்த்தியான பொலித்தீன் ஆகியவற்றில் உற்பத்தி பொருட்களை இலவசமாக வழங்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலித்தீன் பைக்கான விலை வியாபார நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நுவர்வோருக்கு பொலித்தீன் பைகளை வழங்குவதை இடைநிறுத்தி இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1451637

Checked
Fri, 10/31/2025 - 17:25
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr