ஊர்ப்புதினம்

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு : நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா? -நாமல் கேள்வி

11 hours 26 minutes ago

Published By: DIGITAL DESK 2 24 APR, 2025 | 05:52 PM

image

(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னரா அரசாங்கம் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கிறது என்ற  சந்தேகம் காணப்படுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம். பொதுமக்கள் அச்சமில்லாமல் இருக்கலாம் என்று அரசாங்கம் குறிப்பிகிறது. ஆனால் பகிரங்கமாக தற்போது துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இந்த நான்கு மாத காலப்பகுதியில் மாத்திரம் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களால் மாத்திரம் 26 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. கடிதம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்த மஹிந்த ராஜபக்ஷவை அரசாங்கம் ஏன் இலக்காகக் கொண்டு செயற்படுகிறது.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி விட்டா அரசாங்கம் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கிறது. புதுக்கடை நீதிமன்றத்தில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக தேடப்படும் பெண் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

பாதாள குழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் தேசிய பாதுகாப்பை அலட்சியப்படுத்துகிறது. பாதாள குழுவினராக இருந்தாலும் அவர்களை கொலை செய்யும் உரிமை எவருக்கும் கிடையாது. சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/212848

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் ஒரே சட்டம்! -ஜனாதிபதி உறுதி

13 hours 38 minutes ago

anura-kumara-dissanayake.jpg?resize=750%

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் ஒரே சட்டம்! -ஜனாதிபதி உறுதி.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் சட்டம் ஒரேமுறையில் நடைமுறைப்படுத்தப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்

இரத்தினபுரியில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்  இதனைத் தெரிவித்தார். இதன்போது ” தீர்வை வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்  வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது எனவும்,  அதன்முதலாவது கூட்டு அறிக்கை விரைவில் வெளியாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 2025 ஆம் ஆண்டி அதிகளவான ஏற்றுமதி வருமானத்தினை பெறுவதற்கு தாம் எதிர்ப்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் சட்டம் ஒரேமுறையில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அனைவரும்  சட்டத்திற்கு மதிப்பளித்து  செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி  தாம்  செல்வந்தர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கமாட்டோம் எனவும்,  அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1429399

வட்டுக் கோட்டை பெண் மரணம்: 10 வருடங்களின் பின்னர் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிப்பு!

13 hours 45 minutes ago

lady.jpg?resize=711%2C375&ssl=1

வட்டுக் கோட்டை பெண் மரணம்: 10 வருடங்களின் பின்னர் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிப்பு!

கடந்த 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய பெண், கொழும்பில் கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 வருடங்களின் பின்னர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கு  மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு கொழும்பு செட்டியார் தெருவில் அமைந்துள்ள விடுதியில் பெண்ணொருவரை கொலை செய்து, அவரது உடலை பயணப் பைக்குள் அடைத்து, பின்னர் அதனை கொழும்பு பெஸ்டியன் வீதியில் உள்ள பேருந்து நிறுத்தமொன்றில் விட்டுச் சென்றிருந்த கொலைச் சம்பவம் தொடர்பான தீர்ப்பு இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.

வழக்கின் சந்தேக நபர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது. சுமார் 10 வருடங்களாக இடம்பெற்று வந்த குறித்த வழக்கின் இறுதி தீர்ப்பினை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இன்று அறிவித்தார்.

சந்தேக நபரான பேட்ரிக் கிருஷ்ணராஜாவிக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தது. நீண்ட விசாரணைக்குப் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே தீர்ப்பை அறிவித்து, குற்றச்சாட்டுகளில் பிரதிவாதி குற்றவாளி எனக் கண்டறிந்தார்.

தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜரான பிரதிவாதி, குற்றச்சாட்டுகளில் தான் நிரபராதி என்று குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர் மீது அரசாங்கத் தரப்பால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர் குறித்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, அதன்படி மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

…..

இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்ததுடன் பெண்ணின் சடலம் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டது.

யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய கார்த்திகா என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார். சடலமாக மீட்கப்பட்ட பெண் கடந்த 3 வருடங்களாக கொழும்பிலேயே வசித்து வந்திருந்தாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

செட்டியார் தெருவில் உள்ள தங்குமிடத்தில் வைத்தே கார்த்திகா கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் 3 அடி நீளம், 2 அடி அகலம் மற்றும் ஒரு அடி உயரமான கறுப்பு நிற பெட்டியொன்றை சிரமத்துக்கு மத்தியில் சந்தேக நபர் சுமந்துகொண்டு விடுதியில் இருந்து வெளியேறும் CCTV காட்சிகளும் வெளியிடப்பட்டிருந்தன.

சந்தேக நபர் பயணப் பெட்டியுடன் பஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்துக்கு சென்றமைக்கான ஆதாரங்களாக CCTV காட்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தன. குறித்த வழக்கின் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் சந்தேச நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

https://athavannews.com/2025/1429429

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாகப் பகிரப்படும் போலிச்செய்தி!

13 hours 52 minutes ago

malcolm-cardinal-ranjith.jpg?resize=600%

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாகப் பகிரப்படும் போலிச்செய்தி!

பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக, கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ள இந்நிலையில், “பேராயர் மல்கம் ரஞ்சித் அரசியலில் ஈடுபட்டதால், அவரை தமது எதிர்கால நடவடிக்கைகளில் புறக்கணிக்க வத்திக்கான் முடிவெடுத்துள்ளதாக” செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன.

சகோதர செய்தித்தளமொன்றில்  இச் செய்தி வெளியாகியுள்ளதாக, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும்  நிலையில், குறித்த இணையதளம் அவ்வாறான செய்தியை பிரசுரிக்கவில்லை என  factseeker உறுதிப்படுத்தியுள்ளதுடன், குறித்த இணையதளத்தின் லோகோவை பயன்படுத்தி போலியாக இவ்வாறான ஒரு செய்தி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், இது குறித்து இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஊடக பணிப்பாளர் பாதிரியார் ஜூட் கிருஷாந்திடம் FactSeeker வினவியத்தில், “சமூக வலைதளத்தில் பகிரப்படுகின்ற அந்த செய்தியில் எந்தவொரு உண்மையும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

அதேபோல், வத்திக்கானின் உத்தியோகபூர்வ இணையதளத்திலோ அல்லது வத்திக்கானுடன் நெருக்கமாக செயற்படும் ஊடகங்கள், நிறுவனங்களோ இவ்வாறான எந்தவொரு செய்தியையும் வெளியிட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1429445

யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவத்துவ பீடக்கற்கை நெறியின் தமிழ் மொழி மூல கற்பித்தலை மாற்றம் செய்யக் கூடாது - ஆறு.திருமுருகன் வேண்டுகோள்

15 hours 9 minutes ago

Published By: DIGITAL DESK 2 24 APR, 2025 | 05:11 PM

image

யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையை ஆங்கிலமொழி மூலமான  கற்றல் நடவடிக்கையை  மேற்கொள்வதற்கு திட்டமிடுவதாக அறிகிறோம். இது ஆபத்தானது. எமது சுதேசிய மருத்தவப் பாரம்பரியம் பேணிப்பாதுகாப்பதற்காக சித்தமருத்துவ பீட கற்கை நெறி தமிழ்மொழியில் தொடரவேண்டும். இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு  யாழ் பல்கலைக்கழக சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார். 

இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவபீடம் பல சான்றோர். பெருமக்களின் முயற்சியால்  ஆரம்பிக்கப்பட்டது. 

எமது பிரதேசப் பல்கலைக்கழகம் எமது பிரதேச சுதேசிய பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் பெரும் கடமையாகும். எமது சுதேசிய மருத்தவப் பாரம்பரியம் பேணிப்பாதுகாப்பதற்காக யாழ் பல்கலைக் கழக கல்விச் சமூகம் 70 களின் பிற்பகுதியில் எடுத்த முயற்சியின் விளைவாக சித்தமருத்துவத் துறை ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

ஆரம்பத்தில் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் அயராத முயற்சியால் சித்த மருத்தவ நுல்கள் ஏடுகள் சேகரிக்கப்பட்டு பாரம்பரிய வைத்தியர்களிடம் ஆலோசனை பெற்று பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு இத்துறை ஆரம்பிக்கப்பட்டது. 

இணுவில், வட்டுக்கோட்டை, சில்லாலை, ஏழாலை, பருத்தித்துறை, அளவெட்டி போன்ற ஊர்களில் இருந்து சித்த வைத்தியர்களின் நுல்கள், உதவிகள் பெறப்பட்டன. பல்கலைக் கழக நூலகர் முருகவேள், பதிவாளர் சிவராஜா போன்ற பெருமக்கள் சித்த மருத்துவத் துறைக்கான  வளர்ச்சியில் அருந்துணை செய்துள்ளனர்.

சித்த மருத்துவ பீடம் முற்றுமுழுதாக சுதேசிய வைத்தியப் பாரம்பரியத்தை சிறப்பாக வளர்த்தெடுத்துள்ளார்கள். மேலும் கைதடியிலுள்ள சித்தவைத்திய போதனா வைத்தியசாலையின் வளச்சிக்கும் பெரும்பங்காற்றி வருகின்றார்கள்.  பல நூறு சித்த மருத்துவர்களை தொடர்ந்து உருவாக்கியுள்ளார்கள். 

துறை சார் விரிவுரையாளர்கள் பட்டப்பின் படிப்புகளை மேற்கொண்டு இன்று நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக விளங்குகிறார்கள். 

சகல கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளும் தமிழ்மொழி மூலம் சிறப்பாக நடைபெறுகின்றது. நீண்ட காலமாக எடுத்த முயற்சியின் பயனாக சித்த மருத்துவத் துறை தனிப்பீடமாக உயர்வுபெற்றுள்ளது மேலும் சித்தமருத்துவபீடம் விஸ்தரிப்பதற்காக புதிய நிலம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 

இந் நிலையில் உயர்கல்வி அமைச்சு யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையை ஆங்கிலமொழி மூலமான  கற்றல் நடவடிக்கையை  மேற்கொள்வதற்கு திட்டமிடுவதாக  அறிகிறோம். இது ஆபத்தானது.

இது பாரம்பரிய சித்த மருத்துவத்துறையை  அருகிப்போகச் செய்யும் முயற்சியாகும். அகத்தியர் பதிணென் சித்தர்கள், திருமூலர், திருக்குறள், பரராஜசேகரம்  போன்ற மூல நுல்களை மொழி பெயர்ப்பதென்பது முடியாத விடயம். 

இதை அனைவரும் அறிவர். இந் நிலையில் சித்த மருத்துவத்தை ஆங்கில மொழியில் எவ்வாறு கற்பிக்கப் போகிறார்கள்? இவ் விடயம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மூதவை, பேரவை மற்றும் தூறைசார்ந்த அறிஞர்கள் விழிப்புடன் செயற்படவேண்டும். 

எக்காரணம் கொண்டும் தமிழ் மொழி மூல கற்பித்தலை மாற்றம் செய்யக் கூடாது. இதனைம் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவிற்கு  யாழ் பல்கலைக்கழக சமூகம் தெளிவுபடுத்த வேண்டும் என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/212837

இராணுவத்தினர் வசமுள்ள யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான காணியை விடுவித்துத் தாருங்கள் - பதில் பணிப்பாளர் யமுனானந்தா

15 hours 24 minutes ago

24 APR, 2025 | 04:46 PM

image

(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணம் கொட்டடி - மீனாட்சிபுரத்தில் உள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான காணியை விடுவித்துத் தருமாறு வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் சி.யமுனானந்தா தெரிவித்தார். 

இக்காணி தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

கொட்டடி - மீனாட்சிபுரம் பகுதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான 1.4 ஏக்கர் பரப்பளவுள்ள காணி  இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

2010ஆம் ஆண்டு தொடக்கம் இந்த காணியை விடுவித்து தரும்படி கோரிக்கை விடுத்துவருகிற  போதும் இன்று வரை காணி விடுவிக்கப்படவில்லை. 

இக்காணி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மேலதிக அபிவிருத்தி தேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்த காணியாகும். 

இந்த காணியில் பல வருடங்களாக இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதால் காணியை யாழ். போதனா வைத்தியசாலையின் தேவைக்காக பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. 

இக்காணியை உடனடியாக விடுவித்து தருவதற்கு வட மாகாண ஆளுநரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

யாழ். போதனா வைத்தியசாலையின் தேவைகள் அதிகரித்துவரும் தற்போதைய சூழ்நிலையில் இந்த காணி அவசியமானது எனவும் துரித நடவடிக்கை எடுத்து காணியை விடுவித்து,  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு கைகொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/212828

மக்களை அலைக்கழிக்கும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை! - ஆளுநர் நா.வேதநாயகன்

15 hours 27 minutes ago

Published By: DIGITAL DESK 2 24 APR, 2025 | 04:16 PM

image

ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மக்களை அலைக்கழிப்பதை, பழிவாங்குவதை நிறுத்தாவிடின் எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து தண்டனையை வழங்குவதைத்தவிர வேறுவழியில்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் எச்சரிக்கைவிடுத்தார். 

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான ஏப்ரல் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை இடம்பெற்றது. 

இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளுனர், 

தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றபோதும் இங்கு எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது மந்தமாக இருக்கின்றது. இதற்கும் அப்பால் சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்கள் தொடர்பில் மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. 

மக்களை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே பதவிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதனை மறந்து சில உள்ளூராட்சி மன்றங்கள் செயற்படுகின்றன. உள்ளூராட்சி மன்றங்கள் சிலவற்றின் செயலர்கள் இழைக்கின்ற தவறுகளால் ஒட்டுமொத்தமாக எல்லோருக்குமே பாதிப்பு ஏற்படுகின்றது. 

எமது நிர்வாகக் கட்டமைப்பிலிருக்கின்ற இவர்களின் தவறுகளுக்காக பாதிக்கப்பட்ட மக்களிடம் எனது மனவருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன்.  முன்னைய ஆட்சிக் காலங்களில் எமது மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு முன்வந்த பலர் பல்வேறு காரணங்களால் குறிப்பாக இலஞ்சம் கோரியமையால் திரும்பிச் சென்றனர். அவர்கள் இப்போதும் மீண்டும் வருகின்றனர். அவர்களுக்குரிய ஒழுங்குகளை நேரிய சிந்தனையுடன் அதிகாரிகள் செய்துகொடுக்கவேண்டும் என ஆளுனர் குறிப்பிட்டார்.

கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆளுநர் இதன் பின்னர் ஆராய்ந்தார். விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான 10 சதவீதக் கழிவு தொடர்பான விவகாரத்தில் ஒவ்வொரு சந்தையாக நடவடிக்கை எடுக்க தீர்மானித்திருப்பதாக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் குறிப்பிட்டார். 

அந்தச் சந்தையுடன் தொடர்புடைய விவசாய அமைப்புக்களை முதல் கட்டமாக சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்தார். வீதிகளில் குப்பைகள் போடும் செயற்பாடு தொடர்கின்ற நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு சி.சி.ரி.வி. கமெராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தினார்.

சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக உள்ளூராட்சிமன்றங்களின் செயலர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காண்பிக்கும் நிலைமை காணப்படுவதாக ஆளுநர் குறிப்பிட்டார். 

கடந்த காலங்களில் சட்டவிரோத கட்டுமானங்களை உள்ளூராட்சி மன்றங்கள் நேரடியாக இடித்தழிக்கக் கூடியதாக இருந்ததாகவும் தற்போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டினுள் உள்ளமையால் தம்மால் வழக்குத் தாக்கல் செய்யக் கூடியதே ஒரே வழி எனக் குறிப்பிட்டனர். 

இதன்போது தொடரப்பட்ட பல வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதாகவும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்கள் தெரிவித்தனர். குறிப்பாக யாழ். மாநகர சபையால் சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் யாழ். மாநகர சபையாலேயே வழக்கு மீளப் பெறப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன என ஆணையாளர் குறிப்பிட்டார். 

அவ்வாறு மீளப்பெறப்பட்ட வழக்குகள் தொடர்பில் தனித்தனியாக ஆராய்ந்து மீளவும் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதேபோல வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் சட்டவிரோதமானவையே. அதனை அகற்றுவதற்கான தொடர் நடவடிக்கை உள்ளூராட்சி மன்றங்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் அறிவுறுத்தினார். 

மேலும், இந்த விடயங்களில் உள்ளூராட்சி மன்றங்களால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என ஆளுநர் சுட்டிக்காட்டினார். மரம் நடுகையை ஒவ்வொரு உள்ளூராட்சிமன்றங்களும் ஊக்குவித்து செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தினார். 

இதனைத் தொடர்ந்து வடக்கின் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களும் கட்டட அனுமதி, ஆதனப் பெயர் மாற்றம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் அவற்றில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை என்பன தொடர்பில் ஆராயப்பட்டன. இவற்றுக்கான அனுமதி வழங்குவதில் உள்ள தாமதங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அவற்றைக் களைவதற்கு தொடர்புடைய திணைக்களங்களை எதிர்காலத்தில் அழைத்து ஆராயவும் தீர்மானிக்கப்பட்டது.

வவுனியா நகர சபை மாநகர சபையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதற்குரிய ஆளணிகள் வழங்குவது மற்றும் கட்டடங்கள் அமைப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது. 

மேலும், வீதிப் போக்குவரத்துத் தொடர்பில் கடந்த கூட்டத்தில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்த நிலையில் அது தொடர்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூராட்சிமன்றங்களின் செயலர்கள் தெரிவித்தனர். அதேபோல நகர அபிவிருத்தி அதிகார சபையுடனான விவகாரங்களிலும் முன்னேற்றம் உள்ளதாகவும் குறிப்பிட்டனர். 

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் மூத்த உதவிச் செயலாளர், ஒவ்வொரு மாவட்டங்களினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் பங்கேற்றனர்.

https://www.virakesari.lk/article/212824

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராயும் பொலிஸ் குழுவில் ஷானி அபயசேகரவா?நாமல் கடும் எதிர்ப்பு

15 hours 56 minutes ago

Published By: RAJEEBAN 24 APR, 2025 | 11:33 AM

image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் ஈடுபட்ட ஒருவரை - ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவரை, சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட ஒருவரை உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக நியமித்துள்ளமை முற்றிலும் பொருத்தமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக ஷானி அபயசேகரவை நியமித்த கடும் கேள்விகளை எழுப்புகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் ஈடுபட்ட ஒருவரை - ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவரை, சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட ஒருவரை இந்த குழுவின் முக்கிய பொறுப்பிற்கு நியமித்துள்ளமை முற்றிலும் பொருத்தமற்றது.

இது வெறுமனே நடைமுறை ரீதியாக தவறான நடவடிக்கை மாத்திரமல்ல, இது ஒவ்வொரு நெறிமுறை தரத்தையும் மீறுவதாகும், இது செயல்முறையின் நம்பகதன்மை மீது இருண்ட நிழலை போர்த்துகின்றது.

சட்டரீதியான முடிவுகள் நியாயமான விதத்தில் எடுக்கப்படுவது மாத்திரம் முக்கியமானதல்ல, நீதித்துறையின் மீது மக்களிற்கு நம்பிக்கை ஏற்படுதவற்கு அவ்வாறான முடிவுகள் வெளிப்படையானதாக நியாயமானதாக எடுக்கப்பட்டதாக மக்கள் உணர்வதும் அவசியம்.

மக்களின் நம்பிக்கை ஏற்கனவே மிகவும் பலவீனமான நிலையில் உள்ள சூழலில் இவ்வாறான தீர்மானங்கள் சந்தேகம் மற்றும் ஏமாற்றத்தை ஆழப்படுத்தும்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் இடம்பெற்ற தருணத்தில் ஷானி அபயசேகர சிஐடியின் இயக்குநராக பணியாற்றிக்கொண்டிருந்தார். இந்த தாக்குதல் குறித்த விசாரணைகளில் முக்கியமானவராக காணப்பட்டார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராயும் பொலிஸ் குழுவில் அவரையும் இணைத்திருப்பது, நியாயபூர்வமான கரிசனைகளை எழுப்புகின்றது, குறிப்பாக அறிக்கையில் அவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்போது.

ஷானி அபயசேகரவின் சமீபத்தைய அரசியல் அறிக்கைகள் இந்த விடயத்தை மேலும் குழப்பகரமானதாக்குகின்றது, அவரது பக்கச்சார்பினை தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

இந்த விசாரணையை மேற்பார்வை செய்யும் அதிகாரிக்கு அரசியல் தொடர்புகள் இருக்கும் சந்தர்ப்பத்தில் பொதுமக்களிற்கு எவ்வாறு நம்பிக்கை ஏற்படும்.

இது ஒரு கட்சி சார்ந்த விடயமல்ல, இது தார்மீக தெளிவு மற்றும் நிறுவன ஒருமைப்பாடு சார்ந்த விடயம். 

உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு வெளிப்படையான நம்பகமான நியாயமான செயல்முறை தேவை.

இதற்கு குறைவான எதுவும் பாதிக்கப்பட்டவர்களிற்கு மாத்திரமல்ல பொறுப்புக்கூறல் என்ற கருத்திற்கே அநீதி இழைப்பதாக அமையும் என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/212790

GjplPbgWwAAwzCl.png

இந்த ஆண்டு 26 பேர் சுட்டுக்கொலை!

18 hours 50 minutes ago

இந்த ஆண்டு 26 பேர் சுட்டுக்கொலை!

[Thursday 2025-04-24 05:00]

http://seithy.com/siteadmin/upload/gun-240425-seithy.jpg

இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று (22) வரையில் 112 நாட்களில், நாடு முழுவதும் 37 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 26பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த 37 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 23 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ள 14 சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://seithy.com/listAllNews.php?newsID=332400&category=TamilNews&language=tamil

வௌ்ளி, சனி மற்றும் சந்திரனை வெற்றுக்கண்களால் பார்க்கும் அரிய வாய்ப்பு !

21 hours ago

வௌ்ளி, சனி மற்றும் சந்திரனை வெற்றுக்கண்களால் பார்க்கும் அரிய வாய்ப்பு !

ShanaApril 24, 2025

1745472286-ms-smiley-face-alignment-ccd0de14f074438781bd1f1b896dcc25.jpg

வௌ்ளி, சனி மற்றும் சந்திரன் ஆகிய கோள்கள் பூமிக்கு மிக அருகில் தோன்றும் அரிய வாய்ப்பை நாளை (25) பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிய காட்சியை நாளை அதிகாலை கிழக்கு வானில் காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பிரிவின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜனக அடஸ்சூரிய, தெரிவித்தார்.

இலங்கையர்கள் இதை தங்கள் வெற்று கண்களால் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

"அதிகாலை 5.30 மணியளவில் கிழக்கு வானத்தைப் பார்க்கும்போது, இந்த மூன்று கோள்களும் மிக அருகில் தெரியும்.

இது ஒரு அரிய சந்தர்ப்பம். வெற்றுக் கண்களால் இவ்வளவு நெருக்கமாக அணுகுவதைக் காண்பதும் அரிது. கிழக்கு அடிவானம் தெளிவாக இருக்கும் இடத்தில் இது தெரியும்." என்றார்.

https://www.battinews.com/2025/04/blog-post_100.html

யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியம் கஜேந்திரகுமாருக்கு ஆதரவு

21 hours 13 minutes ago

யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியம் கஜேந்திரகுமாருக்கு ஆதரவு

adminApril 23, 2025

c28a8227-c1c7-49d4-834d-59eda52a9c97.jpe

தேசிய மக்கள் சக்தியின் பொறிக்குள் வீழாது காலச் சூழலுக்கு ஏற்ப தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகளுடன் ஒன்றிணைந்து  பயணிக்கும் நோக்கில் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய பேரவைக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியம் தலைவர் அப்துல் பரீக் ஆரீப் தெரிவித்துள்ளர்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் பேரவைக்கு ஆதரவு வழங்கும் அறிவிப்பை விடுத்திருந்த யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியம் அது தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை இன்றையதினம் புதன்கிழமை யாழ் ஊடக மையத்தில் மேற்கொண்டு இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

அகில இலங்கை தமிழ் காங்கிரசுடன் யாழ் முஸ்லிம் மக்களுக்கு நெருங்கிய தொடர்பும் நட்பும் இருந்துவருகின்றது. அதுமட்டுமல்லாது கொள்கையில் தடுமாறா நிலையுடன் பயணிக்கும் கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சி எமது மக்களின் நலன்களில் அதிக அக்கறையுடன் பயணித்து வருகின்றது. இவ்வாறான நிலையில் காலத்தின் சூழ்நிலைக்கேற்ப கொள்கையுடன் தமிழ் தேசிய பேரவை இருக்கின்றது.

அதனடிப்படையில் இம்முறை நடைபெறும் உள்ளூராட்சி தேர்தலில் எமது அமைப்பின் ஆதரவை தமிழ் தேசிய பேரவைக்கு வழங்குவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்த அவர் தமது முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு ஆதரவை வழங்கவேண்டும்  என தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பின் போது யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் M.S.ரஹீம் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2025/214635/

தையிட்டியில் அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டுமெனக் கூறுவது பகிரங்க கொலை அச்சுறுத்தல் - அருட்தந்தை மா.சத்திவேல்

1 day 10 hours ago

23 APR, 2025 | 09:34 PM

image

அரச பயங்கரவாதத்தால் எத்தனையோ பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கான நீதி கிட்ட எந்தவிதமான அறிகுறியும் தென்படாத நிலையில் தையிட்டியில் அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டும் எனக் கூறுவது பகிரங்க கொலை அச்சுறுத்தலாகவே கொள்ளல் வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை  தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"நாட்டில் இனி இனவாதமும் மதவாதமும் இல்லை" எனக் கூறும் தற்போதைய ஜனாதிபதி தையிட்டியில் பேரினவாத மேலாதிக்க மனப்பான்மையுடனும் ஆக்கிரமிப்பு சிந்தனையுடனும் சட்டத்துக்கு விரோதமாக மக்கள் காணிகளில் கட்டப்பட்டுள்ள கட்டட பிரச்சினையை பேரினவாத பிக்குகளின் கைகளில் ஒப்படைத்து பாதிக்கப்பட்ட மக்களை அவர்களின் காலடியில் விழவைப்பதற்கு நினைப்பதும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கடந்த இரண்டு வருட காலமாக போராடும் அரசியல் சக்திகளை அகற்றிட திட்டமிடுவதும் இனவாதமே, மதவாதமே. 

தையிட்டியில் எழுந்துள்ள மக்களின் பிரச்சினை பேரினவாத அரசியலில் ஆணிவேரினால் தோற்றுவிக்கப்பட்டதே. அதனை மூடி மறைத்து அரசியல் பேசும் தற்போதைய ஜனாதிபதி, பண்டாரநாயக்க, ஜெயவர்தன, சந்திரிகா, ராஜபக்ஷ வழியில் வந்த தமிழர்களுக்கு எதிரான அரசியல்வாதி என்பதில் மாற்றுக் கருத்தில்லை எனலாம்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் அண்மித்து கொண்டிருக்கையில் கண்டி தலதா மாளிகையில் வைக்கப்படுள்ள புனித தந்தத்தினை பௌத்த மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தி அரசியல் செய்யும் ஜனாதிபதி வடக்கில் தையிட்டியில் அரசியல் நீதிக்காக போராடுபவர்களை குறுகிய அரசியல் நோக்கமும் கொண்ட அரசியல்வாதிகள் என அடையாளப்படுத்தி குறிப்பாக தெற்கின் மக்களுக்கு அவர்களை இனவாதிகள், மதவாதிகள் என காட்ட நினைப்பது அரசியல் வஞ்சக நோக்கத்துடனாகும்.

தமிழர்களின் குரலாக கொழும்பு தலைநகரில் ஓங்கி குரல் கொடுத்த குமார் பொன்னம்பலம் அவர்கள் பட்டப்பகலில் கொழும்பு நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கான நீதி இன்னும் கிட்டவில்லை. அதே அரச பயங்கரவாதத்தால் எத்தனையோ பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கான நீதி கிட்டும் என்பதற்கான எந்த விதமான அறிகுறியும் தென்படாத நிலையில் தையிட்டியில் அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டும் எனக் கூறுவது பகிரங்க கொலை அச்சுறுத்தலாகவே கொள்ளல் வேண்டும்.

தையிட்டி சட்ட விரோத கட்டடத்துக்கு எதிராகவும் நில மீட்புக்காகவும் கடந்த இரண்டு வருட காலமாக போராடுபவர்களை கடந்த காலங்களில் பொலிஸார் அச்சுறுத்தி அடாவடித்தனம் புரிந்ததோடு, விசாரணை என பொலிஸ் நிலையங்களுக்கும் அழைத்ததுடன் நின்றுவிடாது நீதிமன்றத்திலும் நிறுத்தி போராட்டத்தை தொடருவதற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தினர். எனினும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கு எதிரான உச்சக்கட்ட தொனியாகவே ஜனாதிபதியின் கூற்று அமைந்துள்ளது.

இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய இனப்படுகொலையோடு தமிழர் தாயக அரசியல் அழிந்து ஒழிந்துவிட்டது என நினைக்கும் பேரினவாதிகளுக்கு வடக்கு மற்றும் கிழக்கில் பேரினவாதத்துக்கு எதிராக நடக்கும் அரசியல் போராட்டங்களும் நீண்ட நாட்களாக தொடரும் காணாமலாக்கப்பட்டோரின் போராட்டத்தை முழுமையாக அடக்கி ஒடுக்குவதற்கு தையிட்டி போராட்டத்தில் தெரியும் அரசியல் தலைமைத்துவத்தையும், அது நாடாளுமன்றத்தில் எழுப்பும் குரலையும் பயங்கரவாத குரலாக சித்திரிக்க எடுக்கும் முயற்சிக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நன்கு பாடம் புகட்ட வேண்டும்.

தமிழர்களின் அரசியலை அழிக்க பல்வேறு வடிவங்களில் இன அழிப்பை தொடர்ந்து இறுதியில் இனப்படுகொலை புரிந்தவர்கள் தொடர்ந்தும் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்க படை தளங்களை விரிவாக்கி பலப்படுத்தியவர்கள் இறுதியில் தமது ஆக்கிரமிப்பு நோக்கத்தினை நிறைவேற்ற படையினரின் பாதுகாப்போடு பௌத்த சிங்கள அடையாளங்களை விதைக்கத் தொடங்கிவிட்டனர்.

இது விடயங்களில் கடந்த காலங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அங்கீகாரம் அளித்து ஆதரித்த மக்கள் விடுதலை முன்னணியினர் தற்போது தேசிய மக்கள் சக்தி முகத்தோடு வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியலை அழித்திடும் அரசியலை வேகப்படுத்திட முகாம் அமைத்து அரசியல் யுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் தமது அரசியலுக்கு எதிரானவர்கள் என நினைப்பவர்களை அடக்குவதற்கு இனவாத சாயம் பூச முற்படுவதோடு இவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தையும் பாவிக்க தயங்க மாட்டார்கள். இதன் மூலம் தமிழர்களை அரசியல் நீக்கம் செய்வதே இவர்களது நோக்கம் எனலாம்.

நீண்ட கால இன அழிப்புக்கும், இறுதி இனப்படுகொலைக்கும், நில ஆக்கிரமிப்புக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்படுவதற்கும், பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்வதற்கும், பேரினவாத மதவாதிகள் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும் காரணமாக இருந்தவர்கள் தற்போது மேடை அமைத்து நீலிக்கண்ணீர் வடித்து எங்களுக்கு வாக்களித்தால் உங்களின் கண்ணீரை துடைப்போம் என்று கூறுவது மீண்டும் மீண்டும் தமிழர்களை அழிவுக்குள் தள்ளுவதற்கே.

எனவே எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முதலை கண்ணீர் வடிப்பவர்களையும், தனது கட்சிக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் அரசியல் துரோகம் செய்பவர்களையும், அற்ப சலுகைகளுக்காக மறைமுகமாக தமிழர்களின் தேசியத்துக்கு எதிராகவும் செயல்படும் அரசியல் துரோகிகளையும் அடையாளம் கண்டு துடைத்தெறிந்து தமிழர் நிலம் காக்கவும் தேசியம் காக்கவும் துணிச்சலோடு குரல் எழுப்புவோர்க்கு எமது வாக்கு பலத்தை வெளிப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். தேசத்தின் ஒற்றுமையே தேசியத்தின் வலிமை என்பதை நினைவில் கொள்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/212759

வலி.வடக்கில் விவசாயம் செய்ய இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலிகள் இடையூறாக இருக்கின்றன - வடக்கு ஆளுநர் 

1 day 10 hours ago

23 APR, 2025 | 02:26 PM

image

(எம்.நியூட்டன்)

விடுவிக்கப்பட்ட  இடங்களில் விவசாயம் செய்ய இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலிகள் இடையூறாக இருக்கின்றன. இவை தொடர்பாக ஆய்வுகள் செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவில் கடந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட காணிகளில் விவசாயச் செய்கையை விரைவுபடுத்துவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (22)  நடைபெற்றது. 

இந்த கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர் வேதநாயகன், கடந்த ஆண்டு ஆரம்பத்தில் மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கென காணிகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்தக் காணிகளில் மக்கள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பல இடர்ப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். இது தொடர்பாக விவசாயிகளால் எமக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, அவர்களுக்கான மின்சார வசதி இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பாதைகள் அமைக்கப்பட வேண்டும் என மின்சார சபையினர் கோருவதாகத் தெரிவித்தார். 

download__3_.jpg

பாதைகள் அமைப்பதற்கு சில இடங்களில் இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலிகள் இடையூறாக இருக்கின்றன. எனவே, இந்த விடயங்களைக் களைந்து விவசாயிகள் முழுமையாக விவசாயம் மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

வீதிகள் செப்பனிடுவதற்கு இடையூறாக உள்ள பாதுகாப்பு வேலிகளை அகற்றுவது தொடர்பில் உரிய இடங்களுக்கு இராணுவத்தினருடன் நேரில் சென்று பார்வையிடுவதற்கும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

அதற்கு அமைய, விரைவில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதி, வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான வீதிகள், பிரதேச சபையின் வீதிகள் என்பவற்றை உடனடியாக செப்பனிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளன என்று இதன்போது யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் குறிப்பிட்டார். 

மேலும், மின்சார இணைப்புக்கான கோரிக்கை கடிதத்தை முன்வைக்குமாறு மின்சார சபையினர் கேட்டுக்கொண்டனர். அதேவேளை பயனாளிகளின் மின்சார இணைப்புக் கட்டணத்தை வழங்குவதற்கும் யாழ். மாவட்டச் செயலர் இணக்கம் தெரிவித்தார். 

இதேவேளை, பயனாளிகள் விவசாயப் பணிகளில் ஈடுபடுவதற்காக காலையில் வந்து மாலையில் செல்ல வேண்டும் என்ற நிலைமை காணப்படுகிறது எனவும், அவர்கள் அங்கு கட்டுமானப் பணிகளில் ஈடுபட அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் இராணுவத்தினரிடம் முன்வைக்கப்பட்டது. அந்த மனிதாபிமானக் கோரிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடி பதிலளிப்பதாக இராணுவத்தினர் குறிப்பிட்டனர். 

மேலும், விவசாயக் கிணறுகளை புனரமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொடர் நடவடிக்கைகளை இராணுவத்தினருடனும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடனும் வலி. வடக்கு பிரதேச செயலர் தலைமையில் கலந்துரையாடுமாறு ஆளுநர் சபையில் பணிப்புரை விடுத்தார். 

இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், யாழ். மாவட்டச் செயலர், வலி.வடக்கு பிரதேச செயலர், வலி.வடக்கு பிரதேச சபைச் செயலரின் பிரதிநிதி, வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், வீதி அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர், இராணுவத்தினர் ஆகியோர் பங்கேற்றனர்.

https://www.virakesari.lk/article/212720

ஆயுதங்கள், இராணுவ சீருடையை ஒத்த ஆடைகளுடன் சந்தேகநபர் கைது!

1 day 11 hours ago

23 APR, 2025 | 03:09 PM

image

தம்பகல்ல பொலிஸ் பிரிவின் பஹலவத்த பகுதியில் வீடொன்றை பொலிஸார் சோதனையிட்டபோது, ஆயுதங்கள் மற்றும் இராணுவ சீருடையை ஒத்த ஆடைகளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பஹலவத்த, தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து கைக்குண்டு, 09 மிமீ வகை 05 வெடிமருந்துகள், 25 T56 வெடிமருந்துகள், 03 T56 வெடிமருந்துகள், 01 M16 வெடிமருந்துகள், 04 வெடிமருந்து பைகள், 03 பெல்ட் ஆர்டர்கள் மற்றும் இராணுவ சீருடையை ஒத்த ஆடைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/212719

விசேட தேவையுடைய நபர்களின் தேவைகள்; போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், விமான சேவைகள் தொடர்பான ஆலோசனை குழு ஆராய்வு

1 day 11 hours ago

23 APR, 2025 | 03:22 PM

image

விசேட தேவையுடைய நபர்களின் தேவைகள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுவின் போக்குவரத்துத் துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகளைப் பலப்படுத்துவதன் ஊடாக சாதகமான திசையை நோக்கி போக்குவரத்துத் துறையை வழிநடத்துவது தொடர்பான இரண்டாவது உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது.

இந்த உபகுழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் அண்மையில் கூட்டம் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதத் வசந்த த. சில்வா, பல்வேறு விசேட தேவையுடைய நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

விசேட தேவையுடைய நபர்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றுவதில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் குறித்து இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

விசேட தேவையுடைய சமூகத்தினருக்கு முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாமை அவர்கள் எதிர்கொள்ளும் ஒரு பாரியதொரு பிரச்சினையாக இருப்பது இங்கு அடையளம் காணப்பட்டது. 

பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் முறையான அணுகல் வசதிகள் இல்லாமை காரணமாக இயலாமை உடைய நபர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களில் பயணிக்கும் நிலை காணப்படுவதாகவும், இதற்காகப் பெருந்தொகைப் பணத்தைச் செலவிட வேண்டியிருப்பதாகவும் குழுவில் ஆஜராகியிருந்த பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

2006ஆம் ஆண்டு 01ஆம் இலக்க விசேட தேவையுடையவர்களுக்கான அணுகல் குறித்த ஒழுங்குவிதி பற்றிய வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக விசேட தேவையுடைய சமூகத்தினருக்கு உரிய வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டாலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் இந்த உத்தரவுகளைப் பின்பற்றுவதில்லை என்றும்  சுட்டிக்காட்டினர். 

அதன்படி, அந்தச் சட்டங்கள் நடைமுறையில் செயல்படுத்தப்படும்போது விசேட தேவையுடைய சமூகம் பெறும் நிவாரணம் குறித்தும் அவர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.

சில பேருந்து நடத்துனர்களின் செயல்களால் விசேட தேவையுடைய நபர்கள் மிகுந்த சிரமத்தை அனுபவிப்பதாக அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவிடம் சுட்டிக்காட்டினர். 

இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும், விசேட தேவையுடைய நபர்கள் தொடர்பான அணுகுமுறைகளை மேம்படுத்தவும் சட்டம் இயற்ற வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் ஆசனங்கள், சட்டரீதியாக விசேட தேவையுடைய நபர்களுக்கான ஆசனங்களை ஒதுக்க வேண்டியதன் அவசியம், பேருந்துகளில் நிபந்தனையின்றி விசேட தேவையுடைய நபர்களுக்கு இடமளிக்க வேண்டியதன் அவசியம், புகையிரத நிலையங்களில் விசேட தேவையுடைய நபர்களுக்கான  தகவல் தொடர்பு வசதியை எளிதாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவர்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 

செவிப்புலன் அற்ற சமூகத்தினருக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து வினவப்பட்டதுடன், அவர்களுக்கு அவற்றை மீண்டும் வழங்குவதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி, விசேட தேவையுடைய நபர்களின் பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளை இரண்டு வாரங்களுக்குள் எழுத்துமூலமாக இந்தக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், பெறப்பட்ட பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளைப் பரிசீலித்த பின்னர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் உபகுழுவின் தலைவர் தெரிவித்தார்.

WhatsApp_Image_2025-04-23_at_12.08.51__1

WhatsApp_Image_2025-04-23_at_12.08.52.jp

WhatsApp_Image_2025-04-23_at_12.08.53.jp

WhatsApp_Image_2025-04-23_at_12.08.53__1

WhatsApp_Image_2025-04-23_at_12.08.54.jp

WhatsApp_Image_2025-04-23_at_12.08.54__1

https://www.virakesari.lk/article/212716

வத்திக்கான் புறப்பட்டார் கர்தினால் மெல்கம் ரஞ்சித்!

1 day 18 hours ago

New-Project-284.jpg?resize=750%2C375&ssl

வத்திக்கான் புறப்பட்டார் கர்தினால் மெல்கம் ரஞ்சித்!

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் இன்று (23) காலை வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

ஏப்ரல் 26, சனிக்கிழமை நடைபெறும் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக, கார்டினல் ரஞ்சித் காலை 9.30 மணிக்கு கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ், ஐந்து வாரங்களாக இரட்டை நிமோனியாவுடன் போராடி வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு மாதத்திற்குள், திங்கட்கிழமை (21) தனது 88வது வயதில் பக்கவாதத்தால் காலமானார்.

பெரும் கூட்டத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படும் அவரது இறுதிச் சடங்கு, சனிக்கிழமை (ஏப்ரல் 26) காலை 10.00 மணிக்கு வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு முன்னால் உள்ள சதுக்கத்தில் நடைபெறும்.

https://athavannews.com/2025/1429246

கனடா செல்வதற்கு நிதி வசதி இல்லாத காரணத்தால் யாழ்ப்பாணத்தில் இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

1 day 19 hours ago

கனடா செல்வதற்கு நிதி வசதி இல்லாத காரணத்தால் இளைஞன் ஒருவர் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இவ்வாறு யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதி பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் கிரிஸ்டியன் (வயது 30) என்பவரே உயிரிழந்துள்ள இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கனடா செல்வதற்கு நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்தார். இருப்பினும் நிதி வசதி இல்லாத காரணத்தால் யாழ்ப்பாணம் – ஆரியகுளம் பகுதிக்கு அருகில் உள்ள காணியில், மரத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


https://nanban.ca/?p=111192

கட்டுநாயக்கவில் வர்த்தகர் மீது கொலை முயற்சி; நடந்தது என்ன?

1 day 21 hours ago

23 APR, 2025 | 11:17 AM

image

கட்டுநாயக்க, ஆண்டியம்பலம பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

கட்டுநாயக்க, ஆண்டியம்பலம பிரதேசத்திற்கு நேற்றைய தினம் காலை 10.00 மணியளவில் சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் சென்ற துப்பாக்கிதாரிகள் இருவர், வட்டிக்கு பணம் கோரும் போர்வையில் 33 வயதுடைய வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

வட்டிக்கு பணம் கோரி வந்த துப்பாக்கிதாரிகள் தொடர்பில் சந்தேகமடைந்த வர்த்தகர் அவர்களை வீட்டிற்குள் வைத்து கதவை மூடியுள்ளார்.

இதனை அறிந்துகொண்ட துப்பாக்கிதாரிகள் வர்த்தகரை சுட்டுக்கொல்ல முயன்றுள்ளனர்.

இதன்போது துப்பாக்கிதாரிகளிடம் இருந்த துப்பாக்கி செயலிழந்துள்ளது.

பின்னர் வர்த்தகரும் இரு துப்பாக்கிதாரிகளும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து, துப்பாக்கிதாரிகள் இருவரும் வர்த்தகரின் வீட்டிலிருந்து தப்பிச் செல்வதற்காக வீட்டின் மதிலிலிருந்து கீழே குதித்துள்ளனர்.

இதன்போது ஒரு துப்பாக்கிதாரி தப்பிச் சென்றுள்ள நிலையில் மற்றைய துப்பாக்கிதாரியின் கால் வீட்டின் மதிலில் மோதி காயமடைந்துள்ளது.

பின்னர் காயமடைந்த துப்பாக்கிதாரி தனது கையிலிருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொல்ல முயன்ற போது துப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த கட்டுநாயக்க பொலிஸார் காயமடைந்த துப்பாக்கிதாரியை கைது செய்துள்ளனர்.

அம்பாறை பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய துப்பாக்கிதாரியே கைது செய்யப்பட்டுள்ளார். 

பின்னர் காயமடைந்த துப்பாக்கிதாரி சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரியிடமிருந்து 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தப்பிச் சென்ற துப்பாக்கிதாரி நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

IMG-20250422-WA0046.jpg

IMG-20250422-WA0052.jpg

https://www.virakesari.lk/article/212706

ஈஸ்டர் தாக்குதலை தடுத்திருக்கலாம் என்கிறார் விஜயதாச ராஜபக்ஷ

1 day 21 hours ago

இலங்கையிலுள்ள தீவிரவாதிகளுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். உடனான நேரடி தொடர்பு குறித்தம் முதல் எச்சரிக்கையை பாராளுமன்றம் ஏன் புறக்கணித்தது என்பதை கண்டறிய முயற்சியினை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முன்னாள் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் டாக்டர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

“ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை சூத்திரதாரிகளையும் பெரும் சதித்திட்டங்களையும் பற்றிப் பேசுபவர்கள், அந்தக் கூறப்படும் தொடர்பு நவம்பர் 18, 2016 அன்று பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட்டதை மறந்து விட்டார்கள், அப்போது நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சராக இருந்த நான், அந்தத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தினேன்.

ஒரு காலத்தில் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக இருந்தவர், அப்போதைய இராணுவ புலனாய்வு இயக்குநரகத்தின் (DMI) தலைவருடன் நிலைமையை உறுதிப்படுத்திய பின்னர் அந்த அறிவிப்பை அம்பலப்படுத்தினேன்.

உடனடியாக விசாரணையைத் தொடங்குவதற்குப் பதிலாக, யஹாபாலன அரசாங்கம் என்னை குறிவைத்தது.

உண்மை என்னவென்றால், உயர்மட்ட யாகபாலனா தலைமை, குறிப்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, விசாரணையைத் தொடர தைரியம் இல்லை. ஏனெனில், அனைத்து முஸ்லிம் எம்.பிக்களும், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளைப் பொருட்படுத்தாமல், என்னை அமைச்சரவையில் இருந்து நீக்கக் கோரினர்.

நான்கு பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த 32 முஸ்லிம்கள் குழு ஐ.எஸ்.ஐ.எஸ்ஸில் இணைந்தது குறித்து பாராளுமன்றத்தில் அவர் வெளியிட்ட தகவல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சீனாவிடம் ஒப்படைப்பதை எதிர்த்த பின்னர், 2017 ஆகஸ்ட் மாத இறுதியில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதற்கு பங்களித்தது.

அத்துடன், தனக்கு எந்த எம்.பியின் ஆதரவும் கிடைக்கவில்லை. இருப்பினும், ஒரு கட்டத்தில், அரசியலமைப்பு சபையில் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய ஜான் செனவிரத்ன, வளர்ந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல் பூஜித் ஜெயசுந்தரவால் நிலைமையைக் கையாள முடியாத அளவுக்கு இருந்தது என்று அவருடன் ஒப்புக்கொண்டார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், ஏப்ரல் 2016இல் ஜெயசுந்தர ஐ.ஜி.பியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்ததாகக் கூறினார். ஆனால் பாராளுமன்றத்தில் அவர் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி அப்போதைய மாநில புலனாய்வு சேவை (SIS) இயக்குநர் (SIS) டிஐஜி நிலந்த ஜெயவர்தனவிடம் விளக்கம் கேட்டதாக ஜனாதிபதி வழக்கறிஞர் கூறினார்.

என் எச்சரிக்கைக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று SIS தலைவர் அறிவித்தபோது, தேசிய பாதுகாப்பு ஆணைய கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். வெளிப்படையாக ஜனாதிபதியும் பிரதமரும் SIS தலைவரின் கூற்றை ஏற்றுக்கொண்டனர்.

40க்கும் மேற்பட்ட ஈஸ்டர் ஞாயிறு வழக்குகள், அதிகாரத்தில் உள்ள பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்தால் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படலாம்.

P CoI நடவடிக்கைகளின் போது, சஹ்ரான் ஹாஷிமின் நடவடிக்கைகள், குறிப்பாக கிழக்கில், ஜூன் 2017 இல் காவல்துறை சட்டமா அதிபர் துறையின் ஆலோசனையை கோரியதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் 2017இல் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு வரை இந்த வடயம் ஒருபோதும் கவனிக்கப்படவில்லை.

நவம்பர் 2016இல் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டதிலிருந்து, ஊடக அறிக்கைகளை பொலிஸார் ஆராய்ந்திருந்தால், ISIS வெளிப்பாட்டை எதிர்த்தவர்களை எளிதில் அடையாளம் காண முடியும்.

அத்துடன், ஏழு தற்கொலை குண்டுதாரிகளில் இருவரின் தந்தை 2015 பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்தால் தேசிய பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கான சூழ்நிலைகளை விளக்க முடியுமா?

முன்னாள் ஏஜி டப்புல டி லிவேரா, பிசி, மே 24, 2021 அன்று ஓய்வு பெறுவதற்கு முன்னதாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை ஒரு பெரிய சதி என்று கூறிய பிறகு, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) உடன் ஒத்துழைக்க மறுத்ததற்கான காரணத்தையும் விளக்க வேண்டும்.

அவரது கூற்று முழு விசாரணையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால், காவல்துறை அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன்.

முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் தீவிரவாதத்திற்கு எதிரான பொதுவான நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டிருந்தால் ஈஸ்டர் ஞாயிறு படுகொலையைத் தவிர்த்திருக்கலாம்.

2019ஆம் ஆண்டு நடுப்பகுதியில், வனாத்தவில்லுவில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும், யகாபாலன அரசாங்கம் தீவிரவாத சக்திகளை தொடர்ந்து பாதுகாத்து வருவதாக ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

https://thinakkural.lk/article/317206

வட்டுவாகல் பாலத்திற்கு களவிஜயம் மேற்கொண்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க

1 day 21 hours ago

Published By: VISHNU

23 APR, 2025 | 03:45 AM

image

நீண்ட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்ட முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் 1000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

IMG_20250422_210634.jpg

இதன் ஆரம்ப வேலைகள் வருகின்ற ஜீன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இதற்கான முன்னாயத்த களவிஜயமாக இன்றையதினம் (22) பிற்பகல் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

IMG_20250422_210558.jpg

இதன்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் யொய்ஸ் குறுஸ் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் முதலானோர் என பலரும் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/212692

Checked
Fri, 04/25/2025 - 03:16
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr