ஊர்ப்புதினம்

வவுனியாவில் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதி : வலுக்கட்டாயமாக கைது செய்த போக்குவரத்து பொலிஸார்

1 week 5 days ago

வவுனியாவில் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதி : பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்றிய போக்குவரத்து பொலிஸார்

13 APR, 2025 | 10:08 AM

image

வவுனியா, குருமண்காட்டு சந்தியில் வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியினை பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்ற முற்பட்டமையினால் அவ்விடத்தில் பதற்ற நிலமை காணப்பட்டது.

சனிக்கிழமை (12) இடம்பெற்ற இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வாகன சாரதி  ஒருவர் வர்த்தக நோக்கத்திற்காக குருமண்காடு சந்தியில் வாகனத்தினை நிறுத்தியுள்ளார். இதன்போது வாகனத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை இறக்குவதினால் சிறிது நேரம் கால அவகாசம் தருமாறு வாகன சாரதி கோரிய சமயத்தில் போக்குவரத்து பொலிஸார் வாகன திறப்பினை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது வாகனத்தினை நிறுத்த தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தினை நிறுத்தியமை என சிங்கள மொழியில் பொலிஸார் தண்டப்பத்திரம் வழங்கிய சமயத்தில் தமக்கு என்ன குற்றம் என தெளிவில்லை. எனவே, தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரியமையினால் வாகன சாரதி - போக்குவரத்து பொலிஸாருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி கடமைக்கு இடையூறு என தெரிவித்து குறித்த வாகன சாரதியினை முச்சக்கர வண்டியில் பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச்செல்ல முற்பட்ட சமயத்தில் அவ்விடத்தில் பதற்ற நிலமை ஏற்பட்டது.

எந்த தவறும் செய்யாது என்னை எவ்வாறு கைது செய்ய முடியும். மேலும் அவ்வாறு தவறு செய்தால் தண்டப்பத்திரம் தானே வழங்க வேண்டும் என வாகன சாரதி கூறி, முச்சக்கர வண்டியில் ஏற மறுப்பு தெரிவித்தமையடுத்து போக்குவரத்து பொலிஸார் குறித்த வாகன சாரதியின் தலையை பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்றி வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச் சென்றனர்.

வாகன சாரதி மீது வவுனியா போக்குவரத்து பொலிஸார் வழக்கு தாக்கல் மேற்கொண்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

IMG_1264.jpeg

https://www.virakesari.lk/article/211938

சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் மின்சார சபை கைச்சாத்து!

1 week 5 days ago

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%

சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் மின்சார சபை கைச்சாத்து!

சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் இலங்கை மின்சார சபை கைச்சாத்திட்டுள்ளது. சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையமானது சஹஸ்தனவி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றது.

இந்த சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்தின் உரிமமானது 25 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை மின்சார சபைக்கு பரிமாறப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டு இலங்கை மின்சார சபை இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. 350 மெகாவாட் திறனுடைய சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையமானது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையமாகும்.

இது திறந்த சுழற்சி செயற்பாட்டில் தேசிய மின்கட்டமைப்பிற்கு மின்சாரத்தை வழங்கும் எனவும்  இந்த மின் நிலையம், குறிப்பாக இரவு நேரங்களிலும் குறைந்த காற்றழுத்த நேரங்களிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்குத் தேவையான ஆதரவை வழங்கும் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் Regasified Liquefied Natural Gas (R-LNG) மூலம் இயக்கப்படுவதால், இது கோரிக்கையின் அடிப்படையில் மின்சாரத்தை வழங்கும் திறனை வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்தின் மின்உற்பத்தி செயற்பாடுகள், 2028 ஆம் ஆண்டு முதல் டீசலில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றமடைவதால், எரிபொருள் செலவுகளை 50 வீதம் குறைக்க முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இது சூரிய மற்றும் காற்றாலை உற்பத்தி திறனை விரிவுபடுத்தும் எனவும் நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1428381

பொலிஸ் காவலின் கீழான உயிரிழப்புக்கள் - சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் வலியுறுத்தல்

1 week 5 days ago

பொலிஸ் காவலின் கீழான உயிரிழப்புக்கள் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்துக்கு வழிகோலுகின்றன - சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் வலியுறுத்தல்

Published By: DIGITAL DESK 2 12 APR, 2025 | 12:21 PM

image

(நா.தனுஜா)

பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்கள் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்துவைத்தல் என்பவற்றுடன் நெருங்கிய தொடர்புடையவை எனவும், அவை தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரம் உருவாவதற்கு வழிவகுக்கிறது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி பொலிஸ் நிலையத்திலோ அல்லது சிறைச்சாலையிலோ இடம்பெறும் காவலின் கீழான உயிரிழப்புக்கள் தொடர்பில் சுயாதீன அதிகாரிகளால் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ்காவலின்கீழ் வைக்கப்பட்டிருந்த சத்சர நிமேஷ் என்ற இளைஞர் கடந்த 2 ஆம் திகதி உயிரிழந்த நிலையில், அவர் பொலிஸாரால் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவரது உடலில் கடுமையான காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளடங்கலாக மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுபற்றி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவிக்கையில்,

கடந்த 2 ஆம் திகதி பொலிஸ்காவலின் கீழ் பதிவான சத்சர நிமேஷின் உயிரிழப்பு, கடந்த பல ஆண்டுகளாகப் பதிவாகிவரும் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புச் சம்பவங்களின் பட்டியலில் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறது.

அதுமாத்திரமன்றி இச்சம்பவமானது இலங்கையின் பொலிஸ் நிலையங்களிலும், சிறைச்சாலைகளிலும் சந்தேகநபர்கள் மற்றும் கைதிகள் எத்தகைய மோசமான, மனிதாபிமானமற்ற நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையை மீண்டுமொரு முறை உணர்த்துகிறது.

இருப்பினும் உயரதிகாரத்தில் இருப்பவர்களால் இந்த உண்மையை உணரமுடியவில்லை அல்லது அவர்கள் உணர மறுக்கிறார்கள்.

பொலிஸ் நிலையத்திலோ அல்லது சிறைச்சாலையிலோ இடம்பெறும் பொலிஸ் காவலின் கீழான உயிரிழப்புக்கள் தொடர்பில் சுயாதீன அதிகாரிகளால் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

மாறாக அத்தகைய சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும்போது, சில மணித்தியாலங்களின் பின்னரோ அல்லது சில நாட்களின் பின்னரோ குறித்த சம்பவம் பற்றிய விசாரணைகளை குற்றப்புலனாய்வுப்பிரிவினரிடம் ஒப்படைப்பதால் எவ்வித பயனுமில்லை.

ஏனெனில் அவ்வேளையில் பெருமளவான ஆதாரங்கள் அழிக்கப்பட்டோ அல்லதுசாட்சியங்கள் சிதைக்கப்பட்டோ இருக்கக்கூடும். அதுமாத்திரமன்றி பொலிஸ்காவலின் கீழிருந்த பிறிதொரு நபர் அச்சம்பவத்தைப் பார்த்திருந்தாலும், அவர் தனது பாதுகாப்பு குறித்த அச்சத்தின் காரணமாக சாட்சியமளிக்க முன்வருவது மிகக்கடினமானதாகும்.

கடந்த பல ஆண்டுகளாக பெரும் எண்ணிக்கையானோர் பொலிஸ் மற்றும் சிறைச்சாலைக் காவலில் உயிரிழந்திருக்கின்றனர். இருப்பினும் அச்சம்பவங்கள் தொடர்பில் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் மிக அரிதாகும்.

மேலும் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்கள் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்துவைத்தல் என்பவற்றுடன் நெருங்கிய தொடர்புடையவை என்பதையும், அவை தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரம் உருவாவதற்கு வழிவகுக்கின்றன என்பதையும் பெரும்பாலானோர் புரிந்துகொள்வதில்லை எனக் கவலை வெளியிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/211872

மனிதப் படுகொலையாளியான ரணிலுக்கு இறுதிக்காலத்திலாவது தண்டனையளிப்போம் - அமைச்சர் பிமல் அறிவிப்பு

1 week 5 days ago

12 Apr, 2025 | 04:47 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 

தென்னாபிரிக்காவில் அமுல்படுத்தப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொறிமுறைக்கு அமைய பட்டலந்த சித்திரவதை முகாமின் பிரதான பொறுப்புதாரிக்கு நீதிமன்றத்தின் ஊடாக  தண்டனை பெற்றுக்கொடுப்போம். உலகில் உள்ள சிறந்த விசாரணை நிபுணர்களை அழைத்து மனித படுகொலையாளியான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவரது இறுதி காலத்திலாவது தண்டனை  வழங்குவோம் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பட்டலந்த அறிக்கையில் வரலாற்று சிறப்புமிக்க பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். அதற்கு அப்போதைய அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.

1983 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி தடை செய்யப்பட்டது.1987 ஆம் ஆண்டு வரை இந்த நாட்டில்  ஆயுத போராட்டம், மக்கள் போராட்டம் ஏதும்  காணப்படவில்லை. நான்கு ஆண்டுகாலமாக அடக்கு முறைகளும், படுகொலைகளும், அழிவுகளும் மாத்திரமே இருந்தது.

1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது யார் தீ வைத்தது. அப்போது எதிர்க்கட்சியாக செயற்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தான் நாடு தழுவிய ரீதியில் தீ வைத்தது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் முரண்பாடு காணப்பட்ட சந்தர்ப்பத்தில் சுதந்திர கட்சி  கலவரத்துக்கு மத்தியில் கொள்ளையடித்தது. இதற்கு பல சாட்சிகள் உள்ளன. இந்த சாபத்தினால் தான் சுதந்திர கட்சி இன்று அழிவடைந்துள்ளது.

இந்த நாட்டில் நல்லிணக்கம் என்ற விடயத்தை மறக்க முடியாது.பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி எதிர்க்கட்சிகள் ஏதும் பேசவில்லை. எவ்விதமான உரிய காரணிகளுமில்லாமல் தான் 1982 ஆம் ஆண்டு ஜே.ஆர். தேர்தலை பிற்போட்டார்.

1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கலவரத்தை உருவாக்கினார். இதனால் சுமார் 3 இலட்சம் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். இவர்கள் ஒருபோதும் நாட்டுக்கு வரமாட்டார்கள். மனித படுகொலைக்காகவே நாட்டை நாசம் செய்தார்கள்.

ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக்கு இந்த நாட்டில் வாழ்ந்த தமிழர்களும், மக்கள் விடுதலை முன்னணியும், கம்யூனிச கட்சியும் ஒருபோதும் அச்சுறுத்தல் விடுக்கவில்லை.ஜே.ஆர். ஜயவர்தன, ரணசிங்க, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகக ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தார்கள். அதன் விளைவாகவே போராட்டங்களும், கலவரங்களும் தோற்றம் பெற்றன.

மனித படுகொலையாளிகளுக்கு தண்டனையளிப்பதற்காக  மாத்திரம் பட்டலந்த விசாரணை அறிக்கையை கொண்டு வரவில்லை. நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவது  எமது பிரதான நோக்கமாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராகவே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

வடக்கில் நேர்ந்த அழிவு பற்றி பேசுவதில்லையா என்று வடக்கு மக்கள் கேள்வியெழுப்புகிறார்கள். எமது கட்சியில் உள்ள பெரும்பாலானவர்கள் நந்திகடல் வரை சென்று உயிர்தப்பியவர்கள். நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்கான  விசேட திட்டங்களை இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு முதல் பகுதியில் செயற்படுத்துவோம். புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம்.

தென்னாப்பிரிக்காவில் அமுல்படுத்தப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொறிமுறைக்கு அமைய பட்டலந்த சித்திரவதை முகாமின் பிரதான பொறுப்புதாரிக்கு நீதிமன்றத்தின் ஊடாக  தண்டனை பெற்றுக்கொடுப்போம்.

உலகில் உள்ள சிறந்த விசாரணை நிபுணர்களை அழைத்து மனித படுகொலையாளியான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவரது இறுதி காலத்திலாவது தண்டனை  வழங்குவோம் என்றார்.

மனிதப் படுகொலையாளியான ரணிலுக்கு இறுதிக்காலத்திலாவது தண்டனையளிப்போம் - அமைச்சர் பிமல் அறிவிப்பு | Virakesari.lk

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.9 சதவீதம் : ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வுகூறல்

1 week 5 days ago

12 Apr, 2025 | 10:57 AM

image

(நா.தனுஜா)

இலங்கையின் இவ்வாண்டு பொருளாதாரம் 3.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வுகூறியுள்ளது.

அதேவேளை அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருக்கும் தீர்வை வரிகள் தொடர்பில் கருத்துவெளியிட்டிருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான சிரேஷ்டபொருளியலாளர் லிலியா அலெக்சன்யன், அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருக்கும் தீர்வைகளுக்கு விலக்களிக்கப்படக்கூடும். அல்லது பேச்சுவார்த்தைகள் ஊடாக அவ்வரி அறவீட்டு வீதத்தைக் குறைத்துக்கொள்ளமுடியும். அதன்மூலம் சகலரும் குறைந்தளவிலான தாக்கங்களுக்கே முகங்கொடுக்கநேரும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று இலங்கையின் நிதியியல் மற்றும் நாணயக்கொள்கை முகாமைத்துவம் சிறப்பானதாகக் காணப்படுவதாகவும், அதனூடாக வெளியகக்கடன் பெறுமதி மற்றும் பணவீக்கம் என்பன குறைவடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டக்காஃபுமி கடொனோ, இந்த அடைவுகளுக்கு மத்தியிலும், இலங்கையின் மீட்சி இன்னமும் நலிவான நிலையிலேயே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தற்போது பெருமளவுக்குப் பெரும்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், நீண்டகால அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சிக்கு தற்போதைய கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து முன்னெடுப்பது அவசியமாகும். 

அதுமாத்திரமன்றி உலகளாவிய வர்த்தக அழுத்தங்கள் உள்ளிட்ட பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்கு பிராந்திய ஒத்துழைப்பை விரிவுபடுத்திக்கொள்வது இன்றியமையாததாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.9 சதவீதம் : ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வுகூறல் | Virakesari.lk

கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் - விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவாரென மனித உரிமை ஆணைக்குழுவிடம் பொலிஸார் உறுதி

1 week 5 days ago

12 APR, 2025 | 01:30 PM

image

கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜிடம் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உறுதியளித்துள்ளார்.

சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை  தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று சனிக்கிழமை (12) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ், கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொடர்புகொண்டு கேட்டபோது, இவ்விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பாடசாலையொன்றின் சிற்றூழியராக பணியாற்றும் இந்த நபர் விளையாட்டு ஒன்றின் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வருகிறார். இவரிடம் விளையாட்டுப் பயிற்சி பெற்றுவந்த சிறுவர்களில் 16 பேரை அவர் பாலியல்  துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த சிறுவர்கள் 10 - 13 வயதுக்குட்டவர்கள் என்றும் இவர்களை பயிற்றுவிப்பாளர் மலசலகூடத்துக்கு அழைத்துச் சென்று  துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் சிலரது நடத்தைகளில் மாற்றமும் கல்வியில் திடீர் பின்னடைவும் அவதானிக்கப்பட்ட நிலையில், சிறுவர்கள் இருவர் மூலமே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு சிறுவர்கள் உட்படுத்தப்பட்ட விடயம் வெளியே தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பாடசாலை நிர்வாகம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டதை தொடர்ந்து, பொலிஸாருக்கு இவ்விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு பெற்றோர் மற்றும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் வாக்குமூலத்தின் அடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சந்தேக நபரை இதுவரை கைது செய்யாத பொலிஸார் பாதிக்கப்பட்ட சிறுவர்களை குற்றவாளிகள் போல் நடத்துவதாக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

கடந்த புதன்கிழமை பாடசாலைக்குச் சென்ற பொலிஸார் சிறுவர்களை மாலை 4 மணி வரை அறை ஒன்றில் அடைத்து வைத்ததாகவும் அவர்களை பொலிஸ் வாகனத்தில் பொலிஸ் நிலையம் வரை கொண்டுசெல்ல முற்பட்டபோது  சிறுவர்கள் பயத்தில் அழுததாகவும் தெரிவிக்கப்பட்டது. 

மாலை நான்கு மணி வரை மதிய உணவின்றி சிறுவர்களை பொலிஸார் பாடசாலையின் அறையில் அடைத்து வைத்ததையடுத்து, பெற்றோர்கள் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளனர். 

“பிள்ளைகள் குற்றவாளிகள் அல்ல, அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், எனவே அவர்களின் மன நிலையை புரிந்துகொண்டு பொலிஸார் நடந்துகொள்ள வேண்டும்” என பொலிஸாருக்கு வலியுறுத்தியதோடு விசாரணைகளுக்காக  பிள்ளைகளை தாமே பொலிஸ் நிலையத்துக்கு  அழைத்து வருவதாகவும் பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்க முடியாது எனவும் பெற்றோர்கள் தெரிவித்த பின்னர் பொலிஸார் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் பெற்றோர்களின் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அத்தோடு, சிறுவர்களின் மன நிலை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து பெற்றோர் இந்த பிரச்சினையிலிருந்து தாமாக விலகிக்கொள்ளும் வகையில் பொலிஸாரின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/211887

ஜனாதிபதி அநுர வியட்நாம் விஜயம்

1 week 6 days ago

12 APR, 2025 | 08:51 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி திங்கட்கிழமை வியட்நாம் செல்கின்றார்.

'உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த நுண்ணறிவு' என்ற தொணிப்பொருளில் 2025 சர்வதேச வெசாக் தினம் இம்முறை கொண்டாடப்படுகின்றது. சுமார் 80 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்க உள்ளனர்.

ஹோ சி மின் நகரில் அமைந்துள்ள வியட்நாம் பௌத்த நிலையத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தினம் மற்றும் சர்வதேச அறிவியல் மாநாட்டில் சுமார் 1,000 சர்வதேச பிரதிநிதிகள் உட்பட 2,000 பேர் வரை பங்கேற்க உள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சில நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடனான சர்வதேச வெசாக் வைபவம் இலங்கையில் இடம்பெற்றபோது இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில் 2025 ஆம் ஆண்டு சர்வதேச வெசாக் தினத்தை மே மாதம் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் வியட்நாமில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துக்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/211853

வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் - பிரதமர்

1 week 6 days ago

Published By: VISHNU

12 APR, 2025 | 01:37 AM

image

மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். வடக்கு மண் பல பிரச்சினைகளையும் இரத்தத்தையும் கண்டுள்ளது. அவற்றை ஆற்றுப்படுத்துவதற்கான பொறுப்பு எமக்குள்ளது. அதற்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் வெளிப்படையான தன்மையுடன் மேற்கொள்வோம். வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார்.

காரைநகரில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற தேர்தல் பிராசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு பிரதமர் மேலும் உரையாற்றியதாவது,

காரைநகர் மண்ணிற்கு வருகை தந்தமையையிட்டு மகிழ்ச்சிடைகிறேன். இந்த மண் பல பண்பாட்டு கலாசாரங்களை கொண்டுள்ளது. இதனை முன்னெடுத்துச்செல்ல வேண்டும். அரசாங்கம் என்ற ரீதியில் அதற்கான பங்களிப்பை வழங்குவோம்.

1977 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் காரைத்தீவு மண்ணில் சுமார் 80 ஆயிரம் பேர் வாழ்ந்தார்கள். ஆனால் இன்று சுமார் 10500 பேர் மாத்திரமே வாழ்கிறார்கள். இந்த மண்ணில் பல திறமையானவர்களும் பண்டிதர்களும், கல்விமான்களும் தோற்றம் பெற்றார்கள். அவர்கள் பல்வேறு காரணங்களால் நாட்டை விட்டுச்சென்றுள்ளனர்.

இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவார்கள் என நாம் நம்புகிறோம். ஆதற்கான சூழலை நாம் ஏற்படுத்திக்கொடுப்போம். சரியான வசதிகளும் அபிவிருத்திகளையும் ஏற்படுத்திக்கொடுப்பதன் ஊடாக இப்பிரதேசத்தை மேம்படுத்த  முடியும். ஆகவே உரிமம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை நாம் வழங்குவோம்.

தென்பகுதியில் உள்ள மக்கள் இப்பகுதி மக்களை நேசிக்கிறார்கள். ஆனால் இந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகளை முகங்கொடுக்கிறார்கள். அதற்கு பல காரணங்கள் உள்ளன. கல்வி, சுகாதாரம்; மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய பல துறைகளில் பற்றாக்குறை உள்ளதை நான் அறிவேன். யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இந்த பிரச்சினைகள் இன்றும் தொடர்கிறது. இதற்கு நாங்கள் அரச நிர்வாக கட்டமைப்பின் ஊடாக தீர்வைப்பெற்றுக்கொடுப்போம்.

2024 ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுத்தனர். ஊழல் அற்ற அரசாங்கத்தை தெரிவு செய்தார்கள். அதைப்போன்று பாராளுமன்ற அதிகாரத்தை முழுமையாக எமக்களித்தார்கள். நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் நாட்டு மக்கள் இன, மத விடயங்களுக்கு அப்பாற்பட்டு திறமையான மற்றும் ஊழலற்;றவர்களை தெரிவு செய்ய வேண்டும். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.

பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்கு நாம் முன்னுரிமையளித்துள்ளோம். ஸ்திரமான நிலையில் இருந்து கொண்டு தான் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். அரச சேவையானது நாட்டு மக்களுக்கு வினைத்திறனதாக அமைய வேண்டும். அதற்கு சாதகமாக சூழலை ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம். அரசியல் தலையீடுகள் இல்லாமல் அரசசேவை தற்போது சுயாதீனமாக இடம்பெறுகிறது. மாகாணசபைத்தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு தேவையான முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

அரசாங்கம் என்ற ரீதியில் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு என்றும் முன்னுரிமையளிப்போம். இந்த மண் பல பிரச்சினைகளையும் இரத்தத்தையும்; கண்டுள்ளது. அதனை ஆற்றுப்படுவதற்கான பொறுப்பு எமக்குண்டு. அதற்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் வெளிப்படையான தன்மையுடன் மேற்கொள்வோம். வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/211850

சஜித்தை டெல்லிக்கு அழைத்த மோடி

1 week 6 days ago

12 APR, 2025 | 09:05 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர்  நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். இதன் போதே டெல்லி விஜயத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சுமார் 30 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இந்த சந்திப்பில், இந்த தருணத்தில் இலங்கைக்கு எத்தகைய உதவியை இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கின்றீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வினவியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சஜித் பிரேமதாச, கொவிட் பெரும் தொற்றின் போதும்,  அதன் பின்னரான பொருளாதார நெருக்கடியின் போதும் இந்திய உதவி கிடைத்திருக்காவிடின் இலங்கையால் இந்தளவு சீக்கிரம் மீண்டிருக்க முடியாது. எனவே, எதிர்வரும் நாட்களிலும் பொருளாதாரத்தில் இருந்து மீள்வதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.

ஆகவே, இலங்கைக்கு ஆதரவாக இந்தியாவின் தொடர் ஒத்துழைப்பு அவசியம் என கோரிக்கை விடுத்தார்.  இதன் பின்னர் டெல்லிக்கு விஜயம் செய்யுமாறு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்தார். சந்திப்பில் பங்கேற்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் விஜயத்திற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மோடி இதன்போது ஆலோசனை வழங்கினார். 

https://www.virakesari.lk/article/211855

'புத்தாண்டுப் பலகாரங்களுக்கான’ விலையானது, 2024 ஐ விட 2025 இல் 7% அதிகரித்துள்ளது

1 week 6 days ago

11 Apr, 2025 | 03:40 AM

image

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான பாரம்பரிய “பலகாரங்கள் அடங்கிய மேசையைத்” தயார் செய்வதற்கான செலவினம் 7% ஆல் அதிகரித்துள்ளதோடு இது 2019ஆம் ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகும். 

இது, வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கையின் முதன்மையான பொருளாதார தகவல் தளமான PublicFinance.lk ஆல் மேற்கொள்ளப்படும் வருடாந்த ‘புத்தாண்டு பலகார மேசையைத்’ தயார் செய்வதற்கான பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது.

WhatsApp_Image_2025-04-10_at_20.04.09_6e

2024 மார்ச் மாதம் முதல் 2025 மார்ச் மாதத்திற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மூலப்பொருட்களின் விலைகளில் 7% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை இப் பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது. இதற்கு முதன்மையாக, தேங்காய் விலை மற்றும் தேங்காய் எண்ணெய் விலைகள் முறையே 80% மற்றும் 40% ஆல் அதிகரித்தமையே காரணமாகும். ஏனைய பெரும்பாலான பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன அல்லது மாற்றமடையவில்லை.

2019 உடன் ஒப்பிடும்போது மூலப்பொருட்களின் விலையானது, 2024 ஆம் ஆண்டில் 2.2 மடங்கு அதிகரித்துள்ளதோடு 2025ஆம் ஆண்டில் 2.4 மடங்கு அதிகரித்துள்ளது.

செழுமை மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும் இலங்கையின் பாரம்பரிய இனிப்புகள் பல புத்தாண்டுக்கான தின்பண்டங்களில் இடம்பெறும். குடும்பங்களுக்கு இடையே இவற்றில் வித்தியாசங்கள் காணப்பட்டாலும், பாரம்பரிய புத்தாண்டு இனிப்புப் பண்டங்களில் பொதுவாக பாற்சோறு, கொக்கிஸ், வாழைப்பழம், அலுவா, பணியாரம், தொதல், பயத்தம் பணியாரம் மற்றும் பட்டர் கேக் ஆகியவை பெரும்பாலும்  இடம்பிடிக்கும்.

இந்தப் பகுப்பாய்வில் பிரபல யூடியூப் சேனலான “அப்பே அம்மா” சேனலில் உள்ள சமையல் குறிப்புகளின் அடிப்படையில், 4-5 நபர்களைக் கொண்ட குடும்பத்திற்குத் தேவையான அளவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமான மூலப்பொருட்கள் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளன. மின்சாரம், எரிவாயு மற்றும் மசாலாப் பொருட்களுக்கான செலவுகள் இதில் உள்ளடக்கப்படவில்லை. 2019 (ஏப்ரல் வாரம் 1), 2023 (ஏப்ரல் வாரம் 1), 2024 (மார்ச் வாரம் 3) மற்றும் 2025 (மார்ச் வாரம் 3) ஆகியவற்றுக்கான கொழும்பு மாவட்ட திறந்த சந்தையின் வாராந்த சராசரி சில்லறை விலைகள் உட்பட விலைகளுக்கான தரவு நேரடியாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்திலிருந்து பெறப்பட்டுள்ளது.

'புத்தாண்டுப் பலகாரங்களுக்கான’ விலையானது, 2024 ஐ விட 2025 இல் 7% அதிகரித்துள்ளது | Virakesari.lk

இலங்கையில் முதல் முறையாக ஆழ்கடலில் புத்தாண்டு கொண்டாட்டம்

1 week 6 days ago

11 Apr, 2025 | 12:37 PM

image

இலங்கையில் முதல் முறையாக திருகோணமலைக்கு கடற்படை தளத்தில் ஆழ்கடலில் சிங்கள - தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. 

இலங்கை கடற்படையின் சுழியோடி பிரிவினரின் ஒத்துழைப்புடன் கடற்படையின் மலிமா ஹொஸ்பிடாலிட்டி சர்வீசஸ் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.

சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும் இலங்கையின் அழகிய நீரின் ஆற்றலை எடுத்துக்காட்டும் வகையிலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்த நிகழ்வில் சுழியோடும் வீரர்கள் பாரம்பரிய கலாசார நிகழ்வுகளை நடத்தி, விளையாட்டுக்களில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. 

இலங்கையில் முதல் முறையாக ஆழ்கடலில் புத்தாண்டு கொண்டாட்டம் | Virakesari.lk

அதிவிரைவு டோரா படகின் துணையோடு கட்டைக்காடு கடற்பகுதி சுற்றிவளைப்பு - 6 பேர் கைது

1 week 6 days ago

11 Apr, 2025 | 11:27 AM

image

யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மற்றும் சுண்டிக்குளம் கடற்பகுதிகளில் ஒளி பாய்ச்சி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 பேர் 5 படகுகளுடன் வியாழக்கிழமை (10) காலை கைது செய்யப்பட்டனர்.

கடந்த புதன்கிழமை (09) இரவு தொடக்கம் வியாழக்கிழமை காலை வரை வடமராட்சி கிழக்கு உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, சுண்டிக்குளம் ஆகிய பகுதிகளும் அங்குள்ள கடற்பரப்பு பகுதிகளும் சமநேரத்தில் வெற்றிலைக்கேணி கடற்படையினரால் திடீரென சுற்றிவளைக்கப்பட்டன.

கட்டைக்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரையான கடல் பகுதிகளில் பல படகுகள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலுக்கமைய, குறித்த கடற்பரப்புக்கு கடற்படையின் படகுகள் அனுப்பப்பட்டு, காங்கேசன்துறையில் இருந்து அதிவிரைவு டோரா படகும் வரவழைக்கப்பட்டு, இக்கடற்பகுதி சுற்றிவளைக்கப்பட்டது.

இதன்போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 பேர் 5 படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ். நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதிவிரைவு டோரா படகின் துணையோடு கட்டைக்காடு கடற்பகுதி சுற்றிவளைப்பு - 6 பேர் கைது | Virakesari.lk

புலிபாய்ந்தகல்லில் சட்டவிரோத மீன்பிடி குடிசைகளை அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தல்; வாடியை அகற்றுமாறு பிரதேசசெயலர் அறிவிப்பு

1 week 6 days ago

11 Apr, 2025 | 06:32 PM

image

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள, புலிபாய்ந்த கல் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக மீனவ வாடிகளை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அனுமதிகள் எவற்றையும் பெறாது அத்துமீறி பெரும்பான்மை இனத்தவர்களால் அமைக்கப்பட்ட வாடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியநிலையில், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் மஞ்சுளாதேவி சதீசன் குறித்த பகுியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வாடிகளை அகற்றுமாறு குறித்தபகுதியில் வெள்ளிக்கிழமை (11) அறிவித்தலைக் காட்சிப்படுத்தியுள்ளார்.

IMG-20250411-WA0008.jpg

அத்தோடு அப்பகுதியில் அத்துமீறி வாடி அமைத்த சந்தேகநபராக இனங்காணப்பட்ட W.L.நிசாந்த என்னும் பெரும்பான்மை இனத்தவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கரைதுறைப்பற்றுபிரதேசசெயலாளர் தெரிவித்துள்ளார்.

IMG-20250411-WA0016.jpg

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழ் மீனவர்கள் பன்நெடுங்காலமாக மீன்பிடியில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்தகல் பகுதியை ஆக்கிரமித்து அங்கு வாடிஅமைப்பதற்கு பெரும்பான்மையின மீனவர்கள் தொடர்ந்து முனைப்புக்காட்டிவருகின்றனர்.

அந்தவகையில் கடந்தவருடமும் அத்துமீறி குறித்த பகுதியில் வாடிஅமைப்பதற்கு சில மீனவர்கள் முயற்சி மேற்கொண்டிருந்தனர். இந் நிலையில் அப்பகுதி மீனவர்கள் மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் இணைந்து குறித்த அத்துமீறல் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இத்தகைய சூழலில் மீளவும், கடந்த 02.04.2025அன்று குறித்த புலிபாய்ந்தகல் பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த சில பெரும்பான்மையின மீனவர்கள், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடமோ, கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணிப் பிரிவிடமோ எவ்வித அனுமதிகளையும் பெறாது அத்துமீறி வாடிகளை அமைத்திருந்தனர்.

அத்தோடு புலிபாய்ந்தகல் பகுதியில் பூர்வீகமாக மீன்பிடியில் ஈடுபடும் சில தமிழ் மீனவர்களின் வாடிகளை அடாவடித்தனமாக அகற்றியே இவ்வாறு தென்னிலங்கை பெரும்பான்மையின மீனவர்களால் வாடி அமைக்கப்பட்டுமிருந்தது.

அதேவேளை அப்பகுதியில் OFRP-A-5491 CHW என்னும் இலக்கமுடைய மீன்பிடிப் படகொன்றும் அனுமதி பெறப்படாமல் அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் கொக்குத்தொடுவாய் கடற்றொழிலாளர் சங்கத்தின் அழைப்பை ஏற்று கடந்த 04.04.2025அன்று அப்பகுதிக்குச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளைப் பார்வையிட்டதுடன், அப்பகுதியில் பெரும்பான்மையின தென்னிலங்கை மீனவர்களால் அத்துமீறி வாடி அமைக்கப்பட்டமைதொடர்பில் கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்ருக்கு தெரியப்படுத்தியதுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

அதேவேளை கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலரையும் உடனடியாக குறித்த இடத்திற்கு அழைத்து நிலமைகளைக் காண்பித்ததுடன் அவரிடமும் இதுதொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப் பணிப்பாளர் க. மோகனகுமாருடனும் தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்தி, அனுமதியின்றி கரையே நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுதொடர்பிலும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் குறித்த பகுதியில் அனுமதிகள் எவையும் பெறப்படாமல் அத்துமீறி அடாவடியாக தென்னிலங்கை மீனவர்களால் அமைக்கப்பட்டுள்ள வாடிகளை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு கரைதுறைப்பற்று பிரதேசசெயலக்காணிப் பிரிவால் அப்பகுதியில் துண்டுப்பிரசுரம் காட்சிப்படுத்தப்படுமென கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணி உத்தியோகத்தரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், கொக்குத்தொடுவாய் கிராம அலுவலரும் இது தொடர்பில் உரிய இடங்களுக்கு தாம் தெரியப்படுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம்  தெரிவித்திருந்தார்.

அத்தோடு அனுமதிபெறப்படாது கரையே நிறுத்திவைக்கப்பட்டுள்ள குறித்த படகுதொடர்பில் தம்மால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென  முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் க.மோகனகுமார் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 11.04.2025 இன்றையதினம் குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணி உத்தியோகத்தருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி கேட்டதுடன், உடனடியாக புலிபாய்ந்த கல் பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட வாடியை அகற்ற அப்பகுதியில் அறிவித்தல்களை காட்சிப்படுத்துமாறும் வலியுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து வன்னிமாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் திருமதி.மஞ்சுளாதேவி சதீசன், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர், கரைதுறைப்பற்று மேலதிக பிரதேசசெயலாளர், கொக்குத்தொடுவாய் வடக்கு கிராமஅலுவலர் ஜெயபாலகுணசேகரன் சுஜீனோ ஆகியோர் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டிருந்தனர்.

இந் நிலையில் குறித்த பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலவாடிகள் முழுமையாகவும், சிலவாடிகள் பகுதியளவிலும் அகற்றப்பட்டுக் காணப்பட்டிருந்தன.

இவ்வாறு குறித்த பகுதிக்கு களவிஜயம் மேற்கொண்டிருந்தவர்கள் அங்குள்ள நிலைமைகளை அவதானித்தனர்.

அதனைத் தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளரால் குறித்தபகுதியில் சட்டவிரோத மாக அமைக்கப்பட்டுள்ள வாடிகளை முழுமையாக அகற்றுமாறு அறிவித்தல்களும் அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டன.

கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரால் அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட குறித்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

" கொக்குத்தொடுவாய் வடக்கு கிராமஅலுவலர் பிரிவில் அமைந்துள்ள புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் காணப்படும் இக்காணியானது அரச காணியாகக் காணப்படுவதால் இப்பிரதேசத்தில் எமது அனுமதியின்றி வாடிகள் அமைத்தல் மற்றும் எவ்விதமான கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளவேண்டாம் என்பதனை தெரிவித்துக்கொள்வதுடன் மீறி வாடிகள், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டில் தங்கள்மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தங்களுக்கு தயவுடன் அறியத்தருகின்றேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் குறித்த பகுதிக்கு வருகைதந்த W.L.நிசாந்த என்பவர் தாமே அப்பகுதியில் வாடி அமைத்ததாகத் தெரிவித்தார்.

இந் நிலையில் அரச காணியில் அனுமதியின்றி எவ்வாறு வாடி அமைத்தீர்கள் என குறித்த நபரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும், பிரதேசசெயலாளர் ஆகியோர் கேள்வி எழுப்பியதுடன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் குறித்த நபரிடம் பெயர் விபரங்களைப் பெற்றதுடன் அவருக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

அத்தோடு குறித்த பகுதியில்  அனுமதியின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுக்குரிய சட்டநடவடிக்கையை விரைந்து மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் தொலைபேசியூடாக வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் அதற்குரிய சட்டநடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படுமென முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் நீரியல் வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலிபாய்ந்தகல்லில் சட்டவிரோத மீன்பிடி குடிசைகளை அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தல்; வாடியை அகற்றுமாறு பிரதேசசெயலர் அறிவிப்பு | Virakesari.lk

யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வழிபாட்டில் கலந்துகொண்டார் பிரதமர் ஹரிணி

1 week 6 days ago

11 Apr, 2025 | 04:16 PM

image

யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (11) காலை இடம்பெற்ற நிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய பகல் வேளையில் ஆலயத்துக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.  

பிரதமர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே ஆலய வழிபாட்டிலும் கலந்துகொண்டார். 

பிரதமரின் வருகையை முன்னிட்டு ஆலய வளாகத்துக்குள் விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் மற்றும் பிரதமர் பாதுகாப்பு பிரிவினர் அனைவரும் குவிக்கப்பட்டனர்.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் ஆலயத்துக்கு வருகை தந்த பக்தர்கள் சோதனையிடப்பட்டு கெடுபிடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்ததால் பக்தர்கள் விசனம் தெரிவித்ததையடுத்து ஆலய தர்மகர்த்தா முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

01__9_.jpg

01__6_.jpg

01__10_.jpg

01__5_.jpg

01__3_.jpg


யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வழிபாட்டில் கலந்துகொண்டார் பிரதமர் ஹரிணி | Virakesari.lk

மனித புதைகுழிகளை தோண்ட எந்த அரசாங்கமும் ஆதரவை வழங்கவில்லை; சதொச மனித புதைகுழி அகழ்வு சட்டமா அதிபரின் தலையீட்டால் பாதிக்கப்பட்டது

1 week 6 days ago

மனித புதைகுழிகளை தோண்டுவதற்கு இதுவரை இலங்கையின் எந்த அரசாங்கமும் 100 வீத ஆதரவை வழங்கவில்லை ; அரசாங்கங்களிடம் இதற்கான அரசியல் உறுதிப்பாடு இல்லை ; சதொச மனித புதைகுழி அகழ்வு சட்டமா அதிபரின் தலையீட்டால் பாதிக்கப்பட்டது - சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல்

Published By: RAJEEBAN 11 APR, 2025 | 05:26 PM

image

ரஜீவன்

மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளுக்கு இலங்கையில் எந்த அரசாங்கமும் இதுவரை நூறு வீத ஆதரவை வழங்கவில்லை என தெரிவித்துள்ள சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல், அரசாங்கங்களிடம் இது தொடர்பாக அரசியல் உறுதிப்பாடு இல்லை என தெரிவித்துள்ளார்.

கொழும்பில் காணாமல்போனோரை தேடியறியும்  குழுவினர் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனை அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது :

kokuthoduvai__human_remains.jpg

பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் என்பது  மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் மிகவும் பாரதூரமானது.

பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார்களும் குடும்பத்தவர்களும் பெரும் துயரத்தினை அனுபவிக்கின்றனர், நம்பிக்கையற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இறுதி முடிவொன்று இல்லாததால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த துயரத்தை அனுபவிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தங்கள் இறுதிநாட்கள் வரை பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார்களும் குடும்பத்தவர்களும் துயரத்தை அனுபவிக்கின்றனர்.

செம்மணி, வந்தாறுமூலை, மன்னார் சதொச, கொக்குத்தொடுவாய் என பல இடங்களில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

செம்மணியில் மீண்டும் சமீபத்தில் மாநகரசபையினர் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்தவேளை அதற்காக தோன்றியவேளை பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

செம்மணியில் புதிதாக மீட்கப்பட்ட மனித எச்சங்கள் குறித்து புதிய விசாரணைகள் இடம்பெற உள்ளன. எனினும் இதற்கான நிதி இன்னமும் ஒதுக்கப்படவில்லை.

மனித புதைகுழிகளை அரசாங்கம் உரிய முறையில் கையாளவில்லை. இந்த விடயத்தில் முற்றிலும் அரசியல்உறுதிப்பாடு அற்ற நிலையே நிலவுகின்றது. பொலிஸாரும் உரிய ஒத்துழைப்பை வழங்குவதில்லை.

அரசாங்கம் மனித புதைகுழிகளை தோண்டுவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வது அதற்கான ஆட்களை ஒதுக்கீடு செய்வது போன்றவற்றில் பிரச்சினைகள் உள்ளன.

மனித புதைகுழி அகழப்படும் விடயத்திற்கு  பல நிபுணர்கள் தேவை - ஒருங்கிணைத்து செயற்படவேண்டும், எங்கள் நாட்டை பொறுத்தவரை இது புதிய விடயம்.

kokuthoduvai_human_remains.jpg

ஆர்ஜென்டீனா, சிலி போன்ற நாடுகளில் இராணுவ ஆட்சிக்காலத்தில் பலர் கொல்லப்பட்டனர். ஆனால் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் மனித புதைகுழிகளை தோண்டும் விடயத்தில் மிகவும் நம்பகதன்மை மிக்க விதத்தில் செயற்பட்டனர். பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவித்தனர். மனித புதைகுழிகள் அகழப்படும்போது பொதுமக்கள் பார்க்ககூடிய நிலை கூட காணப்பட்டது.

ஆனால் எங்கள் நாட்டில் மனித புதைகுழிகளை தோண்டும்போது மக்களை ஊடகவியலாளர்களை அனுமதிப்பதில்லை.

மன்னார் சதொச மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகள் சட்டமா அதிபரின் தலையீட்டால் முடங்கின. இது அவருக்கு தொடர்பில்லாத விடயம். அங்கு அகழ்வுதான் இடம்பெற்றதே தவிர குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறவில்லை. ஆகவே அது அவருக்கு தொடர்பில்லாத விடயம். அவரின் தலையீட்டால் எதிர்மறையான பாதிப்பு ஏற்பட்டது.

சதொச மனித புதைகுழி அகழ்வின் போது சம்மந்தப்பட்ட தரப்புகள் சட்டமா அதிபரை உள்ளே கொண்டுவந்தன.

அரசாங்கம் மனித புதைகுழிகள் தோண்டப்படுவதை குழப்புவதற்கு பல வழிமுறைகளை கையாளும், நிதியை விலக்கிக்கொள்வதன் மூலம் அகழ்வை குழப்பும். அகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது  நிதி இல்லை என தெரிவிப்பார்கள்.

ருவாண்டா, சிலி போன்ற நாடுகளில் மனித புதைகுழிகளை தோண்டுவதற்கு அரசாங்கங்கள் நிதியை வழங்கின.

ஆனால் இங்கு அரசாங்கங்கள் வெளிநாடு நிதியை கூட தடுக்கின்றன, இதுதான் எங்களின் அனுபவம்.

அரசாங்கம் மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளை குழப்பும்போது பாதிக்கப்பட்ட மக்கள்  நம்பிக்கை இழக்கின்றார்கள். நாங்கள் மீண்டும் அவர்களிடம் செல்லும்போது என்ன பிரயோசனம் என கேட்கின்றார்கள், ஆனாலும்  ஒத்துழைப்பைவழங்குகின்றார்கள்.

மீட்கப்படும் மனித எச்சங்கள் எந்த காலத்தை என்பதை அறிவதற்காக ஆய்வுகூடங்களிற்கு அனுப்பவேண்டும், வெளிநாட்டு ஆய்வு கூடங்களிற்கே அவற்றை அனுப்பவேண்டும். ஆனால் அரசாங்கம் நிதி வழங்க மறுக்கின்றது.

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் உடல்கள் என கருதப்படும் 42 உடல்களை மீட்டுள்ளோம்.

செம்மணியில் 600க்கும் மேற்பட்ட உடல்கள் உள்ளதாக அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் இன்னமும் கருதுகின்றனர். கைதுசெய்யப்பட்ட 600 பேரின் பெயர் விபரங்கள் அவர்களிடம் உள்ளன. இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டனர் என அந்த பகுதி மக்கள் கருதுகின்றனர்.

இது மிகவும் கடினமான பணி ஆனால் எவ்வளவு தூரத்திற்கு இந்த அகழ்வு பணியை சிறப்பாக முன்னெடுக்கமுடியுமோ அவ்வளவு தூரம் முன்னெடுக்கின்றோம்.

மிகமிக முக்கியமான விடயம் என்னவென்றால்  அரசாங்கங்களிடம் இது தொடர்பில் அரசியல் உறுதிப்பாடு இல்லை என்பதே, எந்த அரசாங்கம் வந்தாலும்  அவர்கள் 100 வீத ஆதரவை வழங்க தயாரில்லை, சந்திரிகா அரசாங்கமாகயிருந்தாலும் சரி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமாகயிருந்தாலும் சரி.

https://www.virakesari.lk/article/211836

வெருகல் படுகொலையின் 21 ஆவது ஆண்டு நினைவு

1 week 6 days ago

வெருகல் படுகொலையின் 21 ஆவது ஆண்டு நினைவு

rep104April 11, 2025

ருத்திரன்

1744352863-WhatsApp%20Image%202025-04-11


வெருகல் படுகொலையின் 21 ஆவது ஆண்டு நினைவு நாள் ‘சிவப்பு சித்திரை’ வாகரை பிரதேசத்தின் கதிரவெளி மலைப் பூங்காவில் நேற்று வியாழக் கிழைமை மாலை(10) நினைவு கூறப்பட்டது.


நிகழ்வானது தமிழ் மொழி வாழ்த்து பாடலுடன் ஆரம்பிக்கப்பட்டு உயிர் நீத்தவர்களுக்கான மலர் அஞ்சலியுடன் மௌன வீர அஞ்சலி செலுத்தப்பட்டு பொதுச் சுடர் ஏற்றல் நிகழ்வு இடம்பெற்றது.


இம்முறை கடந்த 21 ஆண்டுகளுக்கு பின்பு முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் முதன் முதலாக நிகழ்வில் பங்கு கொண்டு பொதுச் சுடரினை ஏற்றி வைத்தார்.


வழமையாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நிகழ்வில் பங்கு கொள்வது வழக்கமாகும். அவர் தனிநபர் ஒருவரின் கடத்தல் விவகாரம் தொடர்பாக விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதன் காரணத்தால் அவருக்கு பதிலாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப தலைவர் ஜெயம் என்று அழைக்கப்படும் நா.திரவியம் கலந்துகொண்டு நிகழ்விற்கு தலைமை வகித்தார்.இதன்போது உயிர் நீத்தவர்களின் உறவுகள் தங்களது உறவுகளை நினைத்து ஈகைச் சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.


இதேவேளை தேர்தல் காலம் என்பதால் இம்முறை குறித்த நிகழ்வானது வழமை போன்று ஆரவாரம் இல்லாமல் அமைதியான முறையில் தேர்தல் சட்ட விதிகளுக்கு ஏற்ற வகையில் நடைமுறைகளை பின்பற்றி நினைவு கூறப்பட்டது.


2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட கிழக்கு பிளவின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உருவானது.

17443528635.png

இதன்போது வடக்குப் புலிகள் வன்னிப் புலிகள் என அழைக்கப்பட்டனர். இதனால் இரு சாராருக்குமிடையில் இதே நாள் கதிரவெளி மற்றும் வெருகல் எல்லைப் பிரதேசத்தில் இடம்பெற்ற திடிர் மோதல் காரணமாக வன்னி புலிகளின் தாக்குதல் காரணமாக சுமார் 179 கிழக்கைச் சேர்ந்த ஆண்,பெண் உள்ளிட்ட இரு பாலாரும் கொல்லப்பட்டிருந்தனர்.


இதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் இவ் நிகழ்வை நினைவு கூர்ந்து வருகின்றமை வழக்கமாகும்.
இவ் நிகழ்வில் கலந்து கொண்ட கருணா அம்மான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அன்று போராட்டத்தில் வீனான உயிரிழப்புக்களை தவீர்த்து இராஜ தந்திர ரீதியாக பேச்சுவார்த்தை ஊடாக எங்களுடைய உரிமைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கோடு அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தலைமையில் நான் உட்பட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தோம். ஒஸ்லோவிலே இறுதியாக நடந்த பேச்சுவார்த்தையிலே எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தது. சமஸ்டி முறையிலான தீர்வை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதன் அடிப்படையில் சமஸ்டி உடன் படிக்கையிலே கைச்சாத்திட்டதன் பிரகாரம் தவறாக புரிந்து கொண்ட தலைமைத்துவம் பிழையான கண்ணோட்டத்தில் பார்வையிட்டது. ஆகவே மீண்டும் ஒரு யுத்தத்தை தொடக்கி வைத்து உயிரிழப்பை ஏற்படுத்த விரும்பவில்லை.


வடக்கில் இருக்கும் போராளிகளோ கிழக்கில் இருக்கும் போராளிகளாயினும் சரி பெரும் தொகையான போராளிகளை நாங்கள் இழந்திருக்கின்றோம்
‘ஜெயசிக்குரு மற்றும் ஆனையிறவு’ சமர் ஆகிய சமர்களில் களமாடிய வீரர்களின் உயிர்களின் இழப்புக்களை சந்தித்திருக்கின்றோம்.
ஆகவே இந்த இழப்பை தவீர்க்க முற்பட்ட வேளையில்தான் எங்களுக்கிடையில் பிளவு என்பது ஏற்பட்டது. இதன்போது தலைவர் பிரபாகரனுக்கும் எனக்கும் கருத்து முரன்பாடு ஏற்பட்டது. அந்த யுத்தத்தில் இருந்து ஒதுங்கியிருந்தோம். எங்களது போராளிகளை நிராயுத பாணிகளாக யுத்தத்தில் ஈடுபடாது ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு வீடுகளுக்கு செல்லுமாறு பணித்திருந்தோம். அந்த வேளையிலேதான் வன்னியிலிருந்து வந்த புலிகள் கிட்டத்தட்ட 500 போராளிகளை சுட்டு கொலை செய்தார்கள். இது மதிப்புக்குரிய தேசிய தலைவருக்கு தெரிந்து நடந்ததா,தெரியாமல் நடந்ததா என்பது வேறு விடயம். இதனை நான் அறியேன்.
ஆனால் இங்கு நடந்த கொடுமைகளை நாங்கள் மறக்க முடியாது. தலைவரைக் காப்பாற்ற வன்னிக் களமுனைகளில் இருந்த தளபதிகள் பலர் சரணடைந்த பிற்பாடும் உயிருடன் எரியூட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இது போன்ற வேதனையான,கொடுமையான விடயங்கள் எல்லாம் நடந்தேறியது.

அதன் பிரகாரம் அரசியல் நீரோட்டத்தில் ஊக்கப்படுத்துக் கொண்டிருந்த வேளையிலே இராஜன் சத்தியமூர்த்தி அண்ணன் கிங்சிலி இராசநாயகம் அவர்கள் சுடப்பட்டனர். இவ்வாறு வகை, தொகையின்றி பொது மக்கள் நிராயுதபானிகள் மற்றும் போராளிகள் எல்லாம்; புலிகளால் கொள்ளப்பட்டனர். அன்று நாங்கள் விலகி இருந்தது என்பது நாங்கள் காட்டிக் கொடுப்பதற்கோ துரோகம் செய்வதற்கோ அல்ல மாறான ஆயுதங்களை கைவிட்டு ஒரு ஜனநாயக ரீதியாக போராட வேண்டும் என்றே ஆயுதங்களை கைவிட்டோம். ஆனால் அந்த காலத்திலே இருந்த ஊடகங்கள் அதனை திரிபுபடுத்தி கிழக்கு மாகானத்தில் உள்ள போராளிகள் அனைவரும் துரோகிகள் என்ற பட்டத்தைச் சூட்டி தேவையற்ற பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.


குறிப்பாக ஜ.பி.சி ஊடகவியலாளர் நிராஜ்டேவிட் என்பவர் சம்பவங்களை நேரடியாக கண்டது போன்று பல விடயங்களை திரிபுபடுத்தி இளைஞர்களுக்கு அவர் ஊட்டியிருந்தார். இன்று அதனை வன்மையாக கண்டிக்கின்றோம். இன்று பல போராளிகள் தளபதிகள் உலக நாடுகளில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் இதனை நிச்சயம் புரிந்திருப்பார்கள். கிழக்கு மாகாண போராளிகளாக யாராவது துரோகியாக இருந்திருந்தால் வன்னியிலே நடந்த போர்க்களத்தில் இருந்த இராணுவ முகாம்களில் நின்றிருப்பார்கள். ஆகவே ஒரு போராளியாவது அவ்வாறு செயற்பட்டிருந்தால் அவர்கள் அதனை நிருபிக்கட்டும் அதன் பிற்பாடு நாங்கள் இந்த கருத்தை வாபஸ் பெறுவோம். ஆனால் நிராயுத பானிகளாக இருந்த இளைஞர்களை புலிகள் துரத்தி துரத்தி கொலை செய்தனர். வேறு வழியில்லை அதனால் அவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினார்கள். தவீர்க்க முடியாத விடயம் அது. அவர்கள் வந்து சுடும் போது தலையை கொடுப்பதற்கு இங்குள்ள இளைஞர்கள் எல்லாம் முட்டாள்களும் அல்ல மடையர்களும் அல்ல. ஆகவே அன்று விடுதலைப் புலிகள் அரசியல் தலைமைகள் சரியாக புரிந்து கொண்டு செயற்பட்டிருந்தால் இன்ற அரசியலில் வெற்றி கண்டு உலகமே போற்றுகின்ற அளவிற்கு வடக்கு கிழக்கிலே பாரிய கட்டமைப்போடு இருந்திருக்கலாம். இவற்றையெல்லாம் வருங்கால இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று 21 வருடம் எனவே பிளவிற்கு பின்பு பிறந்த இளைஞனின் வயது 21 ஆகும். எனவே அவ்வாறன இளைஞர்களுக்கு வரலாறுகள் தெரியாது. ஆகவே திரிபுபடுத்துகின்ற வரலாறுகளை ஏற்றுக்கொள்ளாமல் வரலாறுகளை தெரிந்து கொண்டவர்கள் நாங்கள் உங்கள் மத்தியிலே இருக்கிறோம் எங்கள் பின்னால் அணிதிரண்டு எங்களுடைய மாவீரர்கள் குடும்பங்கள் போராளிகள் குடும்பங்களை உயர்த்துவதற்கும் அவர்களது தியாகங்களை கௌரவப்படுத்துவதற்கும் அனைத்து மக்களும் தோளோடு தோள் நிற்க வேண்டும் என்றார்.


எனவே ஒவ் வொரு வருடமும் இதனை செயற்படுத்தி வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.supeedsam.com/230624/

விடுதலைப் புலிகள் இராணுவத்துக்கு எதிராகவே செயற்பட்டார்கள் - தயாசிறி ஜயசேகர

1 week 6 days ago

தேசிய தலைவர் தொடர்பில் சிங்கள எம்.பி வெளியிட்ட பகிரங்க கருத்து

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை துரோகி என்றும், ரோஹண விஜயவீரவை வீரன் என்றும் குறிப்பிட முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் (Kurunegala) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (10.04.2025) இடம்பெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் “1994 ஆம் ஆண்டு பின்னர் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணி ஒத்துழைப்பு வழங்கியது.

பட்டலந்த விவகாரம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அரச தரப்பினர் சித்திரவதைக்காரர் என்று குற்றம்சாட்டுகின்றார்கள் ஆனால் 2015 ஆம் ஆண்டு அவருடன் இணைந்து அரசாங்கத்தை உருவாக்கினார்கள்.

தேசிய தலைவர் தொடர்பில் சிங்கள எம்.பி வெளியிட்ட பகிரங்க கருத்து | Mp Dayasiri Jayasekara Parliament Speech

1994 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி பட்டலந்த விவகாரம் மற்றும் விஜயவீர படுகொலை பற்றி பேசவில்லை. 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ஜசீரா ஊடகத்துக்கு பட்டலந்த விவகாரத்தை குறிப்பிடாமலிருந்தால் இன்று இந்த விடயத்தை எவரும் பேசியிருக்கமாட்டார்கள்.

மனித படுகொலைகள்

இரண்டு பக்கத்திலும் மனித படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. கட்சியை தடை செய்ததால் ஆயுதமேந்தியதாக மக்கள் விடுதலை முன்னணி கூறுவதனை ஏற்க முடியாது.

தேசிய தலைவர் தொடர்பில் சிங்கள எம்.பி வெளியிட்ட பகிரங்க கருத்து | Mp Dayasiri Jayasekara Parliament Speech

ஏனெனில் அக்காலப்பகுதியில் கம்யூனிசக் கட்சி, மாணவர் சங்கம் உட்பட பல கட்சிகள் தடை செய்யப்பட்டன. அவ்வாறாயின் அவர்களும் ஆயுதமேந்தியிருக்க வேண்டும் , 1971 ஆம் ஆண்டு ஆயுதமேந்தியதற்கான காரணம் என்ன? ஆகவே உண்மையை மூடிமறைக்க முயற்சிக்க வேண்டாம்.

1979 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை இரத்துச் செய்யப்பட்டது. 1980 ஆம் ஆண்டு தொழிற்சங்க போராட்டத்துக்கு எதிராக சோமபால சகோதரர் படுகொலை செய்யப்பட்டார். 

1980 ஜூலை கலவரம் தோற்றம் பெற்றது. இவ்வாறான பின்னணியில் தான் மக்கள் விடுதலை முன்னணி உட்பட அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டன. மக்கள் விடுதலை முன்னணி பொது மக்களையும் தமது கட்சி உறுப்பினர்களையும் படுகொலை செய்தது.

ரோஹண விஜயவீர

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை துரோகி என்றும், ரோஹண விஜயவீரவை வீரன் என்றும் குறிப்பிட முடியாது. 

தேசிய தலைவர் தொடர்பில் சிங்கள எம்.பி வெளியிட்ட பகிரங்க கருத்து | Mp Dayasiri Jayasekara Parliament Speech

1988 காலப்பகுதிகளிலும் அதன் பின்னரான காலப்பகுதிகளிலும் சுமார் 64 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.மறுபுறம் சொத்துக்களை அழித்தீர்கள். 

விடுதலைப் புலிகள் நூலகத்துக்கு தீ வைக்கவில்லை. அவர்கள் தமது மக்களுக்கு சிறந்த முறையில் கற்பித்தார்கள். விடுதலை புலிகள் பாடசாலை, பல்கலைக்கழகங்களை, தொழிற்சாலைகளை தீக்கிரையாக்கவில்லை.

இராணுவத்துக்கு எதிராகவே செயற்பட்டார்கள். ஆனால் மக்கள் விடுதலை முன்னணி பாடசாலை, பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்சாலைகளை தீ க்கிரையாக்கியது . ஆகவே கடந்த காலத்தை மறந்து விட்டு தூய்மையானவர்களை போல் பேசக்கூடாது” என்றார்.

https://ibctamil.com/article/mp-dayasiri-jayasekara-parliament-speech-1744361828#google_vignette

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

1 week 6 days ago

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

பாடசாலைகளுக்கான இந்த ஆண்டின் முதல் தவணையின் இரண்டாவது கட்டம் இன்று நிறைவடைகிறது.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் கடந்த முதலாம் திகதி ஆரம்பமான நிலையில் இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

முதல் தவணையின் மூன்றாவது கட்டம்

அதன்படி, மூன்றாவது கட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு | April 15 Public Holiday School Holiday Sri Lanka

இதேவேளை முதல் தவணையின் மூன்றாவது கட்டம் மே மாதம் 9ஆம் திகதி முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/april-15-public-holiday-school-holiday-sri-lanka-1744340752

TRCயில் பதிவு செய்யாத கடைகள் சுற்றிவளைப்பு : அபராதம், 3 வருட சிறைத்தண்டனை

1 week 6 days ago

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத தொலைபேசி கடைகளை கண்டறிய பொலிஸாருடன் இணைந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உரிமம் பெறாத கடைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

பொலிஸாரின் உதவியுடன் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யுமாறு தொலைபேசி விற்பனையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணையகத்தின் பணிப்பாளர் மேனகா பத்திரண தெரிவித்தார்.

அபராதம்

ஆண்டுதோறும் வழங்கப்படும் தொடர்புடைய உரிமத்தைப் பெறுவதற்கு 1,50,000 ரூபாய் செலவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

TRCயில் பதிவு செய்யாத கடைகள் சுற்றிவளைப்பு : அபராதம், 3 வருட சிறைத்தண்டனை | Trc Raids On Unregistered Phone Shops In Sl

எனினும் இனிமேல் இந்த உரிமம் இல்லாமல் ஒரு தொலைபேசி அல்லது தொலைபேசி கருவிகளை விற்பனை செய்தால், ஒரு லட்சம் ரூபாய்க்கு குறையாத ஒரு மில்லியன் ரூபாய்க்கு அதிகரிக்காமல் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

உரிமங்கள் இல்லாத கடைகள் குறித்து ஏற்கனவே பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத வணிகர்கள் இருந்தால், உடனடியாக உரிய உரிமத்தைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/trc-raids-on-unregistered-phone-shops-in-sl-1744338808

அனைத்து சோலார் உற்பத்தியாளர்களையும் துண்டிக்குமாறு இலங்கை அரசாங்கம் கண்டிப்பான உத்தரவு

1 week 6 days ago

மின்சார சபையின் அறிவிப்பால் அதிருப்தியில் பயனாளர்கள்

நாட்டில் உருவான மின்சார தட்டுப்பாட்டைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் இலங்கை மின்சார சபையுடன் இணைந்து சூரிய மின்கல திட்டத்தை (Solar Panel) நாடு முழுவதும் உருவாக்கி உள்ளது.

இதில் சூரிய மின்கல திட்டத்தை பயன்படுத்தும் பாவனையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மேலதிகமாக வரும் மின்சாரத்தை இலங்கை மின்சார சபைக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், ஏப்ரல் பண்டிகைக் காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்ய, ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 21வரை, அனைத்து சோலார் உற்பத்தியாளர்களையும் துண்டிக்குமாறு இலங்கை அரசாங்கம் கண்டிப்பான உத்தரவை வெளியிட்டுள்ளது.

அறிவிப்பானது பாரிய நெருக்கடிக்கு.. 

ஏப்ரல் புத்தாண்டுக் காலத்தில் நாட்டிற்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, மின்சார அமைப்பைப் பாதுகாக்கும் வகையில் இதை மேற்கொள்வதாக இலங்கை மின்சார சபை குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார சபையின் அறிவிப்பால் அதிருப்தியில் பயனாளர்கள் | Uninterrupted Power Supply During Festive Season

இந்நிலையில், இந்த திடீர் அறிவிப்பினால் சூரிய மின்கல திட்டத்தை வாழ்வாதாரமாகவும் வங்கிக் கடன் அடிப்படையில் திட்டத்தை மேற்கொள்பவர்களுக்கும் குறித்த அறிவிப்பானது பாரிய நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதுடன், அரசாங்கத்தின் திடீர் அறிவிப்பினால் பயனாளர்கள் தமது அதிருப்தியினையும் வெளியிட்டுள்ளனர்.

https://tamilwin.com/article/uninterrupted-power-supply-during-festive-season-1744362889#google_vignette

Checked
Fri, 04/25/2025 - 09:17
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr