ஊர்ப்புதினம்

நாட்டில் ஏற்பட்ட பேரிடரில் 20 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

1 week 3 days ago

Published By: Digital Desk 1

06 Dec, 2025 | 12:25 PM

image

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலையடுத்தான பேரிடரில் இதுவரையான காலப்பகுதியில் 586,464 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 2,082,195ஆக பதிவாகியுள்ளது.

பேரிடரில் சிக்கி இதுவரை 607 பேர் உயிரிழந்துள்ளதுடன், 214 பேர் காணாமல் போயுள்ளனர்.

அதேநேரம், 4,164 வீடுகள் முழுமையாகவும் 67, 505 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் 1,211 இடங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

43,715 குடும்பங்களை சேர்ந்த 152,537 பேர் இவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/232599

இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாட்டு பொறிமுறை அவசியம்; ஜனாதிபதி

1 week 3 days ago

இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாட்டு பொறிமுறை அவசியம் ; ஜனாதிபதி

06 Dec, 2025 | 05:26 PM

image

அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் சனிக்கிழமை (06) முற்பகல் நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

மாவட்டத்தின் நெடுஞ்சாலை கட்டமைப்பு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புகளை சீர்செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் அவசர திட்டங்களின் முன்னேற்றத்தை இதன்போது ஜனாதிபதி தனித்தனியாக மீளாய்வு செய்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

வீதிக் கட்டமைப்பு நிரந்தரமாக அமைக்கப்படும் வரை, அடுத்த 25 நாட்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, வீதிப் புனரமைப்புப் பணிகளை விரைவாக முடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மாவட்டத்தில் நீர் விநியோகத்தை 03 நாட்களுக்குள் முழுமையாக வழமைக்கு கொண்டுவருமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி,  அதுவரை மக்களின் நீர் தேவைகளை பவுசர்கள் மூலம் பூர்த்தி செய்யுமாறும், இந்த நடவடிக்கைகளில், வழக்கமான செயல்முறைக்கு அப்பால் சென்று, அவசரநிலையாகக் கருதி, முப்படையினரிடமிருந்து தொழில்நுட்ப உதவிகளைப் பெறுமாறும் அறிவுறுத்தினார்.

மேலும், வீடுகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்யும் பணிகளை பிரதேச செயலகங்களின் பங்களிப்புடன் மேற்கொள்ள அறிவுறுத்திய ஜனாதிபதி,  பாரிய சீரமைப்பு பணிகளை இரண்டாம் கட்டத்தில் மேற்கொள்ளும் அதே வேளை, டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் தற்காலிக பழுதுபார்ப்பு மூலம் மாவட்டத்தில் மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க வேண்டும். 

பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலங்களை அடையாளம் கண்டு அவற்றை பயிரிடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலங்களை விரைவாகக் கண்டறிந்து அவற்றுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும், நீர்ப்பாசனத் திணைக்களம், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

மேலும், பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியுமான விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் பயிரிடக்கூடிய விவசாய நிலங்களின் அளவை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள ரூ.150,000 இழப்பீட்டை உடனடியாக வழங்குமாறும்  அறிவுறுத்திய ஜனாதிபதி, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் மரக்கறி பயிர்ச் செய்கை குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை பெற்று, அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஹெக்டெயாருக்கு 200,000  ரூபா இழப்பீட்டை வழங்கவும், மரக்கறி பயிர்ச் செய்கைக்கு வழங்கப்படும் அதே இழப்பீட்டுத் தொகையை வாழை பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட சேதத்திற்கு வழங்கக்கூடிய வகையில் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறும் அறிவுறுத்தினார்.

கால்நடைத் துறைக்கு அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பண்ணைகளின் அளவு மற்றும் விலங்குகளின் எண்ணிக்கை குறித்த புதுப்பித்த தரவுகளைப் பேண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.

அழிக்கப்பட்ட கால்நடை பண்ணைகளை விரைவாக மீண்டும் தொடங்குவதற்கும், அவர்களின் வருமானத்தை மீட்டெடுப்பதற்கும், பால், கோழி, முட்டை உள்ளிட்ட நாட்டின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி விளக்கினார்.

மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை சீர்செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், வீதிகள் சேதமடைந்துள்ளதால் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ள புஸ்ஸெல்ல மற்றும் மீதலாவ பகுதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை, முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒருங்கிணைப்புடன் இன்று மாலைக்குள் எரிபொருள் விநியோகத்தை சீர்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது.

மேலும், கண்டி மாவட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்துவதற்கு பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் உள்ள கால இடைவெளியைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.

மாவட்டத்தில் சுகாதாரம், புகையிரதப் பாதைகள் மற்றும் தொடர்பாடல் வசதிகளை மீளமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் அந்த மக்கள் மீளக் குடியேறுதல் தொடர்பான நடவடிக்கைகளில் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் வகிபாகம் மற்றும் பணியாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மக்களை மீளக் குடியேற்றுவதற்காக அருகிலுள்ள அரச காணிகளை அடையாளம் கண்டு சமர்ப்பிக்குமாறும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி அந்தக் காணிகளை விடுவிப்பதற்குத் தேவையான தலையீடு செய்யப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மக்களை மிகவும் பாதுகாப்பாக மீளக் குடியேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், முற்றாக அழிக்கப்பட்ட மற்றும் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு அந்த நோக்கங்களுக்காக முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இந்த இழப்பீடுகளின் பகுதியளவு வழங்கப்படும் என்பதால், வழங்க முடியமான இழப்பீட்டுத் தொகைகள் அனைத்தையும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கி முடிக்க வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்திய ஜனாதிபதி, 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் சுமையாக இருக்கக் கூடாது என்றும் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டங்களை வெற்றிகரமாக்குவதற்கு அனைத்து அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் அவசியம் என்று தெரிவித்தார்.

கம்பளை பிரதேசத்தில் குப்பை அகற்றும் பிரச்சினை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், நீண்டகாலத் தீர்வாக மகாவலிக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்படும் வரை, மின்சார சபைக்குச் சொந்தமான காணிகளை தற்காலிகமாக வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். அனர்த்தம் காரணமாக அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

வெள்ளம், சூறாவளி, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்ளைத் தடுக்க முடியாவிட்டாலும், உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படும் சேதங்களைத் தடுக்க முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மத்திய மலைநாட்டைப் பற்றிய முறையான ஆய்வு நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டு வரும் மத்திய மலைநாட்டை மீட்டெடுக்க நீண்டகால வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதுபோன்ற பேரழிவுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க பிரதேச சபைகளின் அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்காலத்தில் அனுமதிக்கப்படாத நிர்மாணங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்றும், அத்தகைய இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்படாமல் இருப்பதை மின்சார சபை உறுதி செய்ய வேண்டும். 

அனர்த்தத்திற்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நீண்ட காலம் எடுக்கும் என்று சிலர் எதிர்பார்த்த போதிலும், மிகக் குறுகிய காலத்தில் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசாங்கத்தால் முடிந்துள்ளதாகவும், இன்னும் சிறிது காலம் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். இந்த நடவடிக்கைகளில் அரச அதிகாரிகள் மற்றும் முப்படையினரின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி விசேடமாக பாராட்டினார்.

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, சுகாதார பிரதி அமைச்சர் முதித ஹன்சக விஜேமுனி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் மனுவர்ண, தனுர திசாநாயக்க ரியாஸ் மொஹமட், மொஹமட் பஸ்மின், துஷாரி ஜயசிங்க உட்பட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பிரதம செயலாளர் ஜி.எச்.எம்.ஏ. பிரேமசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்சன சூரியப்பெரும உட்பட அமைச்சுகளின் செயலாளர்கள், கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மின்சார சபை, நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து துறை சார் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

1cb30082-cc11-41a3-a65b-79bf6ea8d329.jpg

0e50db7e-a736-4bf3-a5e4-4f7e4f7fbb25.jpg

c37656ea-86ee-4ce3-9460-92ff829ff51d.jpg

d9057922-0090-488c-8975-cab78c35e555__1_

b8d7face-e9c0-451e-8d16-f35ae63c7fda.jpg

13574bb9-98c8-477a-89e4-236bda89f0df.jpg

https://www.virakesari.lk/article/232623

நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும்

1 week 3 days ago

நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும்

written by admin December 6, 2025

3-3.jpeg?fit=1170%2C780&ssl=1

“வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்!” – ஆளுநர் நா.வேதநாயகன்.

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாப்பதில் இன்றியமையாத வழுக்கையாற்றை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்துள்ளார்.

‘பங்கேற்புச் செயல் ஆய்வின் ஊடாக நீர் பாதுகாப்பு’ (WASPAR) திட்டத்தின் கீழ், வழுக்கையாறு தொடர்பான ஆய்வின் முடிவுகளை நடைமுறைப்படுத்த இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

🌊 இயற்கையின் கோபம் அல்ல, நம் தவறு!

சுன்னாகத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகளுடனான விசேட கலந்தாய்வில் உரையாற்றிய ஆளுநர், காலநிலை மாற்றம் குறித்துக் கடுமையான கருத்துக்களைப் பகிர்ந்தார்:

“அண்மைக் கால அனர்த்தங்களை ‘இயற்கையின் கோபம்’ என்று கடந்து செல்வதை விட, ‘இயற்கையை நாம் கையாளத் தவறியதன் விளைவு’ என்று புரிந்து கொள்வதே சிறந்தது. மழைநீர் வழிந்தோட வேண்டிய பாதைகளை அடைத்துவிட்டு, வெள்ளம் வருகிறது என்று கவலைப்படுவது அர்த்தமற்றது.”

  • வழுக்கையாறு போன்ற இயற்கையான நீரோட்டப் பாதைகள் தூர்ந்து போனதும், ஆக்கிரமிக்கப்பட்டதும், பராமரிப்பின்றிக் கிடப்பதுமே இன்றைய பேரிடர்களுக்கு மூல காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

🗺️ வழுக்கையாற்றின் முக்கியத்துவம் என்ன?

யாழ். குடாநாட்டின் உயிர்நாடியாக வழுக்கையாறு திகழ்கிறது. மயிலிட்டித்துறையிலிருந்து அராலித்துறை வரை செல்லும் இந்த வடிகால்:

  1. நிலத்தடி நீரைச் செறிவூட்டுகிறது: முறையாகப் பராமரித்தால் மட்டுமே வலிகாமம் பகுதியின் கிணறுகளில் நீர் சுரக்கும்.

  2. உவர் நீர் ஊடுருவலைத் தடுக்கிறது: கடலின் உப்பு நீர் உட்புகுவதைக் கட்டுப்படுத்துகிறது.

  3. வெள்ளத் தடுப்பு: கனமழை காலங்களில் வலிகாமம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழாமல் இருக்க, இந்த ஆறு தடையின்றி ஓட வேண்டும்.

🛠️ அடுத்து வரும் நடவடிக்கைகள்:

  • உலக வங்கியின் நிதியுதவியுடன் அடுத்த ஆண்டு குளங்களைத் தூர்வாரும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

  • வழுக்கையாற்றுப் படுக்கையில் அமைந்துள்ள குளங்களும் இதில் தூர்வாரப்படும்.

🤝 மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆளுநரின் வேண்டுகோள்:

“யாழ்ப்பாணத்தின் குடிநீருக்கும் விவசாயத்துக்கும் நிலத்தடி நீரே ஆதாரம் என்பதை உணர்ந்து, எமது நீரின் அளவையும் தரத்தையும் பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பாகும்.”

“பொறியியலாளர்கள் திட்டங்களை வரைவார்கள், ஆனால் அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மக்கள் பிரதிநிதிகளாகிய நீங்கள்தான். வழுக்கையாற்றின் முக்கியத்துவத்தை உங்கள் பகுதி மக்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்,” என ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார்.

யாழ்ப்பாணத்தின் நீர் வளத்தைக் காக்க, இந்தத் திட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்!

3-2.jpeg?resize=800%2C533&ssl=1 3-5.jpeg?resize=800%2C533&ssl=1 3-7.jpeg?resize=800%2C533&ssl=13-1.jpeg?resize=800%2C533&ssl=1  3-6.jpeg?resize=800%2C533&ssl=1

 

https://globaltamilnews.net/2025/223694/

நிவாரணத்தில் ஊழலுக்கு இடமில்லை – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

1 week 3 days ago

நிவாரணத்தில் ஊழலுக்கு இடமில்லை – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

DilukshaDecember 6, 2025 11:54 am 0

நிவாரணத்தில் ஊழலுக்கு இடமில்லை – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா கொடுப்பனவில் எவ்வித ஊழலும் இடம்பெற இடமளிக்கப்படமாட்டாதென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த அறிக்கையின் படி, 25 மாவட்டங்களுக்குமான நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய யாழ் மாவட்டத்தில் 14,624 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கையின் பிரகாரம் 365.6 மில்லியன் ரூபா மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னைய சுற்றறிக்கையை விட மேலதிக விடயங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. முற்றிலும் சேதமடைந்த வீடுகள், பகுதி அளவில் சேதமடைந்த வீடுகள் மற்றும் வீடுகளுக்கு சேதங்கள் ஏற்படாவிட்டாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் ஆகியவற்றையும் இந்தக் கொடுப்பனவுக்கான தகுதிகளில் உள்ளடக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் ஆகியோரின் பரிந்துரை மற்றும் கையொப்பங்களைப் பெற்ற, தகுதியான பயனாளர்களுக்கு மாத்திரமே கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தல்கள் பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் 25,000 ரூபா பெறுவதற்குத் தகுதியான குடும்பங்களைத் தெரிவு செய்கின்றபோது, அவர்களது விபரங்களைக் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவற்றில் காட்சிப்படுத்துமாறு அறிவித்துள்ளோம்.

இந்தக் கொடுப்பனவுகளில் குளறுபடிகளோ, மோசடிகளோ அல்லது ஊழல்களோ இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லையென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

https://oruvan.com/there-is-no-room-for-corruption-in-relief-jaffna-district-government-agent/

தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்புகிறது !

1 week 3 days ago

தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்புகிறது !

06 Dec, 2025 | 02:03 PM

image

'டித்வா' புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது.

டித்வா புயலின் தாக்கத்தால் இலங்கையின் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்களுக்கு உடனடி உதவி அளிக்கும் நோக்கில் தமிழக அரசு இந்த நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது.

மருத்துவப் பொருட்கள், குடிநீர், உலர் உணவுப் பொருட்கள், தங்கும் கூடாரங்கள், போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய இந்த நிவாரணக் கப்பல், தமிழக அரசின் ஒருங்கிணைப்பில் இலங்கை நோக்கி அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையில் அங்குள்ள மக்களை ஆதரிக்கும் விதமாக, இரு நாடுகளின் நட்புறவையும் மனிதாபிமான உணர்வையும் வலுப்படுத்தும் இந்த உதவி நடவடிக்கை, பரவலாக பாராட்டப்படுகிறது.

இந்த பேரிடரில் உயிரிழந்தோருக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்திருந்தார். 

மேலும், இலங்கை மக்களின் துயரைத் துடைக்க தமிழக அரசு முழுமையான உதவிகளை மேற்கொள்ளும் என்றும், உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணங்களை அனுப்ப ஆணையிட்டார்.

அதனடிப்படையில், சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து இன்று சனிக்கிழமை ( 6) இலங்கை நோக்கி பெரிய அளவில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

சென்னையில் இருந்து அனுப்பும் கப்பலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கொடியசைத்து அனுப்பினார்.

புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் 950 தொன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. 

தமிழக அரசு, தேவையான அளவு கூடுதல் நிவாரண உதவிகளையும் வழங்க தயார் நிலையில் இருப்பதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/232604

மட்டக்களப்பிற்கு 10,000 கோடி நிதி ஒதுக்குமாறும் கோரிக்கை!

1 week 3 days ago

மட்டக்களப்பிற்கு 10,000 கோடி நிதி ஒதுக்குமாறும் கோரிக்கை!

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

"கடந்த காலங்களில் எந்தவொரு அரசாங்கமும் முன்னெடுக்காத செயற்திட்டங்களை இயற்கை அனர்த்தம் தொடர்பாக ஜனாதிபதி செயல்படுத்தியுள்ளார்; அதனை வாழ்த்துகிறோம். அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் வெள்ள அனர்த்தத்தைத் தவிர்ப்பதற்கான திட்டத்திற்கு 10,000 கோடி ரூபா நிதியை ஒதுக்க வேண்டும்," என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான இரா. துரைரெட்ணம் ஜனாதிபதியிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி காரியாலயத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

"இலங்கையின் புதிய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், கடந்த காலத்தில் எந்த அரசும் முன்னெடுக்காத, இயற்கை அனர்த்தம் தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை ஜனாதிபதி துரிதப்படுத்தியுள்ளார். 

அதேபோல, மட்டக்களப்பு மாவட்டத்திலும் இந்த இயற்கை அனர்த்தம் தொடர்பாக அரசாங்க அதிபர், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலகத்தோடு தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் சிறப்பானதொரு பணியை ஆற்றியதற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிதி ஒதுக்கப்படும் பட்சத்தில் பல வெள்ள அனர்த்தங்களைத் தவிர்க்க முடியும். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்கால வெள்ள அனர்த்தத்தைத் தவிர்ப்பதற்காகத் திட்டமிடப்பட்டு, கிட்டத்தட்ட 10,000 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டால், அரைவாசிக்கு மேற்பட்ட வெள்ள அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கான சூழல் உருவாகும். 

வெள்ளம் வடிந்தோடும் காலகட்டத்தில் சில கிராமங்கள் முழுமையாகத் தாழ்நிலைக்குச் செல்கின்றன. குறிப்பாக செங்கலடி, வெல்லாவெளி, வாகரை போன்ற பிரதேசங்களில் சில இடங்கள் இவ்வாறு உள்ளன. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தையடுத்து, சுமார் 25-26க்கும் மேற்பட்ட நாடுகள் வெள்ள அனர்த்த நிவாரணத்திற்காகத் தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்வதற்கு முன்வந்துள்ளன. 

இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, வெள்ள அனர்த்தத்தைத் தவிர்ப்பதற்கான திட்டங்களை வகுத்து, அதற்கான நிதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். 

கடந்த காலத்தில் சுனாமியின் போது விட்ட பிழையை நாம் மீண்டும் விடக்கூடாது. சுனாமிக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாலங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டன. அந்தப் பாலங்கள் அமைக்கப்பட்டதன் ஊடாகப் போக்குவரத்து மிகவும் இலகுவானது. ஆனால், இன்னும் மேலதிகமாகப் பல பாலங்களை அமைப்பதற்கு நாம் திட்டங்களை முன்வைத்திருந்தால், அவற்றையும் அமைத்திருக்க முடியும். 

ஆகவே, தயவுசெய்து எதிர்காலத்தில் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தக்கூடிய வகையில், வெளிநாடுகளுடன் கைகோர்த்து உதவிகளைப் பெற்று, மாவட்டத்தில் அனர்த்தங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக மாவட்ட ரீதியாக ஆராய்ந்து, நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் மூலம் சரியான திட்டங்களை முன்வைத்து, நிதியை ஒதுக்கீடு செய்வதன் மூலம் எதிர்கால வெள்ளத்தைத் தடுக்க முடியும். 

இயற்கை அனர்த்தம் நடக்கப்போவது பற்றிய செய்தி பலருக்கு முன்கூட்டியே தெரியும். புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் குறிப்பிட்ட வாரத்திற்கு முன்னரே சிலவற்றை நாம் தீர்மானிக்க முடியும். அந்த வகையில், பாராளுமன்றத்தில் இயற்கை அனர்த்தம் தொடர்பாகச் சரியாகப் பிரேரணைகளைச் சமர்ப்பித்து, அதற்குரிய நிர்வாகச் செயல்வடிவத்தை மேற்கொண்டிருந்தால் சில பாதிப்புகளைத் தவிர்த்திருக்க முடியும். 

அனர்த்தத்தின் போது, அதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களைக் குறித்து நாம் ஏனோதானோவென்று பேசுவது நாகரிகமான செயல் அல்ல. அனர்த்தத்தின் போது அதனை நிர்வகிப்பதற்கும், தடுப்பதற்கும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்படுவதன் ஊடாகத்தான் எதிர்கால அனர்த்தத்தைத் தடுக்க முடியும் என்பதை மக்கள் பிரதிநிதிகள் புரிந்து கொள்ள வேண்டும். 

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், சில விடயங்களில் முன்னேற்றகரமான செயற்பாடுகள் காணப்படுகின்றன. வீண்விரயமற்ற செயற்பாடுகளை நாம் கௌரவிக்கின்றோம். ஜனாதிபதி நேரடியாக எல்லா மாவட்டங்களுக்கும் கள விஜயம் மேற்கொண்டு செயற்படுவது ஒரு முன்னேற்றகரமான விடயமாகும். 

இந்த விடயங்களை அரசாங்க அதிபர் முதல் மாவட்ட திணைக்களத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வரை சரியாகப் புரிந்துகொண்டு, இந்த அனர்த்தத்திற்கு உதவி செய்வதற்காகப் போட்டி போட்டுக்கொண்டு வரும் வெளிநாடுகளின் உதவியை ஏன் பயன்படுத்த முடியாது? 

எனவே, சரியான திட்டங்களை வகுக்க வேண்டும். இங்கே ஆளும் தரப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள், அமைப்பாளர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் முதல் அரசாங்க அதிபர் மற்றும் திணைக்களத் தலைவர்கள் வரை சிறப்பான சேவையை மக்களுக்கு வழங்கியிருந்தார்கள். 

ஆகவே, எம்மால் ஏன் செய்ய முடியாது என்ற விடயத்தைக் கவனத்தில் கொண்டு, வெளிநாட்டுத் திட்டங்களைச் சரியாகப் பயன்படுத்தி, குறைந்தபட்சம் இயற்கை அனர்த்தத்தைத் தடுப்பதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கும், சரியான திட்டங்களை முன்வைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு நான் வினயமாகக் கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.


https://adaderanatamil.lk/news/cmitspwea02fro29nbsd8g1ox

யாழ். மாநகர சபையின் பாதீடு வெற்றி

1 week 3 days ago

யாழ். மாநகர சபையின் பாதீடு வெற்றி

adminDecember 5, 2025

Jaffna-municipal.jpeg?fit=1170%2C620&ssl

யாழ்ப்பாண மாநகர சபையின்  பாதீடு 2 வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசாவினால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சபையில் சமர்பிக்கப்பட்டது.

குறித்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 23 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் அளிக்கப்பட்டது.

குறிப்பாக தேசிய மக்கள் சக்தி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.

பாதீட்டுக்கு ஆதரவாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட சில கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர்.https://globaltamilnews.net/2025/223649/

இலங்கையில் இயற்கை பேரழிவை மீறிய போதை பொருள் கடத்தலும் வியாபாரமும்!

1 week 3 days ago

இலங்கையில் இயற்கை பேரழிவை மீறிய போதை பொருள் கடத்தலும் வியாபாரமும்!

adminDecember 6, 2025

Katpidi.jpeg?fit=1170%2C658&ssl=1

கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05.12.25) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போதே, 03 உர மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது, 63 கிலோ 718 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றும் 14 கிலோ 802 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட போதைப்பொருள் தொகை மேலதிக விசாரணைகளுக்காக காவவற்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த படகின் உரிமையாளர் கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை காவற்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் முன்னெடுத்து வருகிறது.

https://globaltamilnews.net/2025/223659/

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

1 week 3 days ago

Screenshot-2025-12-05-173047.jpg?resize=

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு, எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மூன்று மாதங்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

அதன்படி, இரண்டுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 50,000 ரூபாவும் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரம் உள்ள குடும்பத்திற்கு 25,000 ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள், சேதமடைந்த தமது வீட்டு உபகரணங்களை மீண்டும் கொள்வனவு செய்வதற்காக ரூபா 50,000 வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போது நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருக்க விரும்பினால், அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படும் எனவும், மாறாக, முகாம்களிலிருந்து வெளியேறி வாடகை வீடுகளில் வசிக்க விரும்புவோருக்கு, 6 மாத காலத்திற்கு மாதாந்தம் 25,000 ரூபாய் வாடகைக் கொடுப்பனவாக வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், அனர்த்தத்தினால் நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு 150,000 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1455365

இலங்கை: '2026 ஜனவரி வரை நிச்சயமற்ற சூழல் தொடரும்' – எச்சரிக்கும் புவியியல் நிபுணர்

1 week 4 days ago

05 Dec, 2025 | 05:37 PM

image

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மேலதிக 2 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டம்  மீதான விவாதம் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் (5) வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

அந்த வகையில் இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த 23 உறுப்பினர்கள் வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளை சேர்ந்த 21 உறுப்பினர்கள் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர். 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் இன்றைய சபை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. 

இந்நிலையில், வாக்கெடுப்பினைத் தொடர்ந்து, மேலதிக இரண்டு வாக்குகளால் வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

https://www.virakesari.lk/article/232546

டிசம்பர் 9 முதல் 11 வரை மழை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்

1 week 4 days ago

டிசம்பர் 9 முதல் 11 வரை மழை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்

Dec 5, 2025 - 03:49 PM

டிசம்பர் 9 முதல் 11 வரை மழை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் நிலவும் வடகீழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

இக்காலப்பகுதியில் காற்றின் வேகமும் அதிகரிக்கும் என அதன் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார். 

எனினும், இடைப் பருவப்பெயர்ச்சி வானிலையுடன் ஒப்பிடுகையில் வடகீழக்கு பருவப்பெயர்ச்சியின் போது இடியுடன் கூடிய மழை குறைவானதாகவே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.  

வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இந்த வடகீழக்கு பருவப்பெயர்ச்சி தீவிரமடைவதன் காரணமாக டிசம்பர் 9ஆம் திகதிக்குப் பின்னர் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என்பதோடு, எந்நேரத்திலும் இப்பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனவும் அதுல கருணாநாயக்க தெரிவித்தார். 

அத்துடன், இப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், 75 மி.மீ. அல்லது 100 மி.மீ. அளவிலான மழை பெய்யக்கூடும் எனவும் அவர் கூறினார். 

நாட்டின் ஏனைய மாகாணங்களில், குறிப்பாகத் தென்மேற்குப் பகுதியில் இக்காலப்பகுதியில் இடியுடன் கூடிய மழை இல்லாவிட்டாலும் மழை பெய்யக்கூடும் எனவும் அதுல கருணாநாயக்க குறிப்பிட்டார்.  

இதனிடையே, இலங்கைக்குத் தென்கிழக்குத் திசையில் வளிமண்டலத் தளம்பல் நிலை காணப்படுவதாகவும், ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை இந்நிலை நீடிக்கக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

நாட்டைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை உருவானமை வடகீழக்கு பருவப்பெயர்ச்சி தீவிரமடைவதற்குக் காரணமாக அமைந்துள்ளதெனக் குறிப்பிட்ட அதுல கருணாநாயக்க, வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள இந்தத் தளம்பல் நிலை இலங்கைக்குத் தொலைவில் தென்கிழக்குத் திசையில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். 

இதன் காரணமாக டிசம்பர் 9ஆம் திகதிக்குப் பின்னர் கடல் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்பதால், மீனவர்களும் கடற்பயணிகளும் எதிர்கால அறிவித்தல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmispqmzc02f1o29nffix7kpm

அனர்த்த நிவாரணங்களுக்காக நாடு பூராகவும் 504 மருத்துவக் குழுக்கள்

1 week 4 days ago

அனர்த்த நிவாரணங்களுக்காக நாடு பூராகவும் 504 மருத்துவக் குழுக்கள்

Dec 5, 2025 - 04:48 PM

அனர்த்த நிவாரணங்களுக்காக நாடு பூராகவும் 504 மருத்துவக் குழுக்கள்

நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. 

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் "சுரக்" அனர்த்த முகாமைத்துவம் மற்றும் பதிலளிப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பில் இந்த நிவாரணக் குழுக்கள் தற்போது நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. 

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1,041 பாதுகாப்பு நிலையங்களை மையமாக வைத்து இந்த மருத்துவக் குழுக்கள் தமது சேவைகளை வழங்கி வருவதாகச் சுகாதார அமைச்சின் வைத்திய சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகமும், அனர்த்த முகாமைத்துவ தேசிய இணைப்பாளருமான விசேட வைத்திய நிபுணர் சமித்தி சமரகோன் தெரிவித்தார். 

அத்துடன், ஏனைய அனைத்து உதவி நிறுவனங்களுடனும் இணைந்து செயற்படும் மருத்துவக் குழுக்கள், பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ள மக்களில் 98.3% ஆனோரைப் பரிசோதித்து முடித்துள்ளதாகவும், தேவைக்கேற்ப மருந்துகளை வழங்கி மேலதிக சிகிச்சை தேவைப்படுவோரை உரிய வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்குப் பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இது தவிர, குறிப்பிட்ட இடங்கள் அல்லது கிராமங்களுக்கு மேலும் மருத்துவக் குழுக்கள் தேவைப்படின், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் பதிலளிப்புப் பிரிவின் அவசர தொலைபேசி இலக்கமான 1926 இற்கு நாளின் 24 மணித்தியாலமும் அழைக்க முடியும் எனவும் விசேட வைத்திய நிபுணர் மேலும் சுட்டிக்காட்டினார்.

https://adaderanatamil.lk/news/cmisru1bi02f3o29nxhl3s41d

அனர்த்த எச்சரிக்கையில் தமிழ் மொழி புறக்கணிப்பு

1 week 4 days ago

தமிழும், சிங்களமும் அரசகரும மொழியாக இருக்கின்ற போதும், அனர்த்த முகாமைத்துவ குழுவின் முன்னெச்சரிக்கை அறிவித்தல்கள் சிங்களத்திலும் மற்றும் ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிடப்படுகின்றன. ஆனால் தமிழில் அவை வெளிவருவதில்லை என்று இலங்கை தமிழரசுக் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிமை இடம் பெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் இறுதி நாள் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.


Tamilmirror Online || அனர்த்த எச்சரிக்கையில் தமிழ் மொழி புறக்கணிப்பு

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்றுவரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை - இளங்குமரன்

1 week 4 days ago

05 Dec, 2025 | 05:28 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து  அரசியல் செய்து  பாராளுமன்றம் வந்தவர் இன்று வரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அனர்த்தத்தால் யாழ்ப்பாணத்துக்கு பாதிப்பில்லை என்று குறிப்பிட்டு அந்த மக்களையே தூற்றித் திரிகிறார். இதன் விளைவை அவர் வெகுவிரைவில் உணர்வார். பாதிக்கப்பட்ட மக்களிடம் செல்லாமல் புலம்பெயர் தேசத்தின் உறவுகளின் பணத்தில் கொழும்பில் தனி வீட்டில் சுகபோகமாக வாழ்ந்துக் கொண்டு  இவர் ஏனையவர்களின் மீது குற்றச்சாட்டுக்களை மாத்திரமே முன்வைக்கிறார். இது எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சி நிரலாகவும் இருக்கலாம் என  தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இளங்குமரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின்  பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு,  வர்த்தகம் மற்றும் உணவு  பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார  அபிவிருத்தி அமைச்சு ஆகிய  அமைச்சுகளுக்கான  நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டில் ஏற்பட்ட பேரிடரால்  உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அனர்த்தத்தால் வடக்கு மாகாணம் பாதிக்கப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்துள்ளன. அனர்த்த நிலைமைகளின் போது முப்படை வீரர்கள் இன, மத பேதமின்றி எதிர்க்கட்சி உறுப்பினர்களைக்கூட காப்பாற்றியுள்ளனர். பாதுகாப்பு தரப்பினருக்கு கௌரவமளிக்கிறோம்.

உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கோ  அல்லது  இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களையோ பார்க்க  யாழ்ப்பாணத்திற்கு வருகைத் தராது,  அந்த மக்களை கைவிட்டு கொழும்பில் புலம்பெயர் தேசத்தின் பணத்தில் அதிசொகுசு  மாடி வீட்டில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  ஒருவர்  வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.  அவர் புலம்பெயர் தேச உறவுகளுக்கே நன்றி தெரிவிக்க வேண்டும்.

சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து  அரசியல் செய்து  பாராளுமன்றம் வந்தவர் இன்றுவரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை. அப்படிப்பட்டவர் தான் தற்போது  யாழ்ப்பாணத்தில் எந்த பாதிப்பும் இல்லையென்று கூறுகின்றார். யாழ்ப்பாண மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு இப்போது அந்த மக்களைத்  தூற்றியும், கேவலப்படுத்தியும் திரிகின்றார். இது எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளோ, அவர்களின் நிகழ்ச்சி நிரல்களோ தெரியாது. இதன் பக்கவிளைவுகளை அவர் வெகுவிரைவில் உணருவார்.

எமது அமைச்சரையும் வாழ்த்த வேண்டும். அவர் மலையகத்தில் சேவை செய்ய வேண்டும். அங்கு அமைச்சர் இன்னும் உத்வேகத்தில் செயற்படுவார். சிலர் அரசியல் நோக்கத்திற்காக எமது அமைச்சரின் உடை தொடர்பில் கேலி செய்கின்றனர். ஆனால் அவர் ஒரு ஆடை கூட எடுக்காமலேயே   யாழ்ப்பாணத்திற்கு விரைந்து  வந்திருந்தார். புலம்பெயர்ந்தவர்கள் கூட  உதவினர்.

மக்களுக்கான  பணத்தை மக்களிடமே வழங்கி வருகின்றோம். ஆனால் சுகபோக வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அந்த  பாராளுமன்ற உறுப்பினராக   இருந்தால் தனது தனிப்பட்ட கணக்கிற்கே பணத்தை பெற்றிருப்பார். ஆனால் நாங்கள் அவ்வாறு செயற்படவில்லை என்றார்.

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்றுவரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை - இளங்குமரன் | Virakesari.lk

வளிமண்டலவியல் திணைக்களத்தினர் முன்னறிவிப்பு விடுத்தபோது தூங்கிக்கொண்டிருந்த அரசு, இப்போது திணைக்கள அதிகாரிகளை குற்றஞ்சாட்டுகிறது - சஜித்

1 week 4 days ago

05 Dec, 2025 | 05:21 PM

image

வளிமண்டலவியல் திணைக்களத்தினர் 15 நாட்களாக முன்னறிவிப்பு விடுத்துக்கொண்டிருந்தவேளை, தூங்கிக்கொண்டிருந்த அரசாங்கம், இப்போது வானிலை அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (5) விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

நாட்டில் ஏற்பட்ட சூறாவளி புயல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று சிலர் இப்போது குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால், இந்த முன்னறிவிப்பை உரிய தரப்பினர் நவம்பர் 11 முதல் வெளியிட்டு வந்தனர். 

வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் ஊடகங்கள் முன்வந்து, வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தென்கிழக்கு கடல் பகுதிகளில் கடல் சீற்றமும் பலத்த காற்றும் வீசுவதோடு, இலங்கையின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று தெரிவித்தனர். 

இது பின்னர் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறக்கூடும் என்று முழு நாட்டிற்கும் தெரிவித்து வந்தனர்.

ஊடகங்களுக்கு முன்வந்து இது குறித்து தெரியப்படுத்திய காலப்பிரிவில் நாட்டில்  மழை காணப்படவில்லை. வளிமண்டலவியல் திணைக்களம், இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதானிகள் மற்றும் கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதானிகள் ஊடக சந்திப்புகளை நடத்தி, இந்த புயல் அவதானம் தொடர்பில் மக்களை தெளிவூட்டி வந்தனர். 

நவம்பர் 11, நவம்பர் 12, நவம்பர் 14 மற்றும் நவம்பர் 17 ஆகிய திகதிகளில் குறித்த அதிகாரிகள் இது தொடர்பாக வெளிக்கொணர்ந்து முன்னறிப்புச் செய்துகொண்டே வந்தனர். வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் கூட நவம்பர் 21 மற்றும் நவம்பர் 22 ஆகிய திகதிகளில் இந்த விடயம் குறித்து நாட்டுக்கு அறிவித்தார். 

நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் மீண்டும் ஒருமுறை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் பணியைச் செய்து வந்தன. 

நவம்பர் 11 முதல் நவம்பர் 15 வரை இந்த மோசமான வானிலை நிலைமை தொடர்பிலான விடயங்கள் வெளிவந்தபோதும் கூட, இடர் முகாமைத்துவ நிலையத்தின் நடவடிக்கைகளின் செயலற்ற தன்மைக்கான காரணங்கள் யாது என கேள்வி எழுப்புகிறோம். 

தற்சமயம் வளிமண்டலவியல் திணைக்களத்தினரை நோக்கி விரல் நீட்டாமல் இடர் முகாமைத்துவ செயல்பாட்டில் காணப்படும் பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும். இந்த சூறாவளி புயலால் இந்த நாட்டு மக்கள் தங்கள் உயிர்களையும் சொத்துக்களையும் இழந்து, அனாதைகளாக விடப்பட்டுள்ளனர். 

நாட்டில் பல துறைகள் சீர்குலைந்து, மில்லியன்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கும் நேரத்தில், இந்த மோசமான வானிலை குறித்த விடயங்களைச் சரியாக முன்வைத்த அதிகாரிகள் மீது அச்சுறுத்தல்களை விடுக்காது, இந்தப் பேரழிவிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, தவறுகளைத் திருத்திக்கொள்வதே மிக உயர்ந்த கடமையாக அமையும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை அரசியலாக்க வேண்டாம். வெளித்தெரியும் விதமாக இந்த செயல்முறையை முன்னெடுக்க வேண்டும். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாகவும், விரைவான சேவைகளையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே, அவசரகால நிலையை பிரகடனப்படுத்துமாறு எதிர்க்கட்சி கோரியது. ஆனால் அரசாங்கம் ஊடகங்களை அடக்குவதற்கு முயற்சி செய்து வருகின்றது. இவ்வாறு ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்த நாம் இந்த அவசரகால நிலையை கோரவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தினர் முன்னறிவிப்பு விடுத்தபோது தூங்கிக்கொண்டிருந்த அரசு, இப்போது திணைக்கள அதிகாரிகளை குற்றஞ்சாட்டுகிறது - சஜித்  | Virakesari.lk

யாழ். சிறை விளக்கமறியல் கைதி கோமா நிலையில்! - உண்மை வெளிப்படவேண்டும் என சகோதரி கோரிக்கை

1 week 4 days ago

05 Dec, 2025 | 06:25 PM

image

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கு மேல் கோமா நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலான உண்மையை சிறைச்சாலை நிர்வாகம் வெளிப்படுத்த வேண்டும் என கைதியின் சகோதரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். 

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றைய தினம் (5) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், 

நாங்கள் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள். எனது அண்ணா சிவராமலிங்கம் தர்சன் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்கு செல்லாததால், புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கடந்த நவம்பர் மாதம் 6ஆம் திகதி கைது செய்யப்பட்டார். 

மறுநாள் 7ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 11 நாட்களுக்கு அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதனையடுத்து அவர் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டார், அந்நிலையில் மறுநாள் 8ஆம் திகதி எனக்கு யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “அண்ணா மாடியில் இருந்து தவறி விழுந்ததால், சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்தார். 

நான் அன்றைய தினம் மாலையே போதனா வைத்தியசாலைக்கு சென்றபோது, 30ஆம் இலக்க விடுதியில் அண்ணா அனுமதிக்கப்பட்டு கைவிலங்குடன் சிகிச்சை பெற்ற நிலையில் இருந்தார். 

தலையில் காயம் ஏற்பட்டு 4 தையல் போட்டுள்ளதாக கூறினார்கள். 

அண்ணாவிடம் என்ன நடந்தது என கேட்டபோது “எனக்கு அடிச்சு போட்டாங்க” என்று சொன்னார்.

அதற்கு மேல் பேச காவலுக்கு நின்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் விடாமல், என்னை அங்கிருந்து அனுப்பினார்.

மறுநாள் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அண்ணாவுடன் கதைத்தபோது, அவரின் கதைகள் மாறாட்டமாக இருந்தது. பின்னர் மதியம் தலையில் ஸ்கேன் செய்து பார்த்ததில் எல்லாம் சரி என கூறி மாலையே வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல வைத்தியசாலை நிர்வாகம் அனுமதித்தது. 

நான் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஊடாக அண்ணாவிற்கு பிணை விண்ணப்பம் செய்ய சட்டத்தரணி ஊடாக ஏற்பாடு செய்திருந்தேன். 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அண்ணாவிற்கு திடீரென வலிப்பு வந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று. 

நான் உடனே அப்பாவை யாழ்ப்பாணம் அனுப்பி விட்டு, முல்லைத்தீவு நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை கவனித்தேன். 

யாழ்ப்பாணத்துக்கு சென்ற அப்பா சிறைச்சாலை சென்று அண்ணாவை பற்றி கேட்டபோது, மாலை வரை அவரை சிறைச்சாலையில் காத்திருக்க வைத்தனர்.

பின்னர் அப்பா மாலை 6 மணிக்கு முல்லைத்தீவு பஸ் புறப்பட்டுவிடும் என சிறைச்சாலையில் இருந்து, அண்ணாவை பற்றிய எந்த தகவலும் இல்லாமல் வீடு திரும்பினார். 

மறுநாள் அதான். அண்ணா யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்து, வைத்தியசாலைக்கு சென்று பார்த்தோம்.

11ஆம் திகதியில் இருந்து கோமா நிலையில் அண்ணா இருக்கிறார். 7 நாட்களுக்கு மேல் அவசர சிகிச்சை பிரிவில் வைத்திருக்க முடியாது என கூறி விடுதிக்கு மாற்றியுள்ளனர். 

வைத்தியர்களிடம் கேட்டால், மூளையில் உள்ள சில கலங்கள் இறந்துவிட்டன. அவற்றுக்கு சத்திர சிகிச்சை செய்யவேண்டும். சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமாயின், நோயாளி சுயநினைவுடன் இருக்கவேண்டும். அண்ணாவிற்கு சுயநினைவு திரும்பிய பின்னரே அதனை செய்ய முடியும். 5 வீதமே அதற்கு வாய்ப்புள்ளது என கூறிவிட்டனர். 

அண்ணாவிற்கு என்ன நடந்தது என வைத்தியர்களிடம் கேட்டபோது, அதனை தாம் அனுமானிக்க முடியாது என கூறினார்கள். 

முல்லைத்தீவில் இருந்து தினமும் வந்து போவது சிரமம் என கூறியபோது, அண்ணாவை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றுங்கள் என வைத்தியர்கள் ஆலோசனை தருகின்றார்கள். 

உண்மையில் அண்ணாவிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் வைத்தியர்களும் கூறுவதாக இல்லை. சிறைச்சாலை நிர்வாகமும் கூறாமல் இருக்கிறார்கள். எமக்கு இது தொடர்பிலான உண்மையை கூறவேண்டும் என தெரிவித்தார். 

யாழ். சிறை விளக்கமறியல் கைதி கோமா நிலையில்! - உண்மை வெளிப்படவேண்டும் என சகோதரி கோரிக்கை | Virakesari.lk

விமான நிலையத்தில் குழந்தையை பிரசவித்த வெளிநாட்டு பெண்

1 week 4 days ago

05 Dec, 2025 | 01:42 PM

image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.

குறித்த பெண் 29 வயதான தான்சானிய நாட்டை சேர்ந்தவர் ஆவார்.

குறித்த பெண் இன்று வெள்ளிக்கிழமை (05) காலை டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்து, மலேசியா, கோலாலம்பூருக்கு புறப்படுவதற்காக விமான நிலைய போக்குவரத்து முனையத்தில் காத்திருந்தார்.

இதன்போது, பிரசவ வழி ஏற்பட்டதால் உடனடியாக விமான நிலைய மருத்துவ சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் உதவியுடன் அவர் ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

பின்னர் குறித்த பெண்ணும் குழந்தையும் மேலதிக சிகிச்சைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் வண்டி மூலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

விமான நிலையத்தில் குழந்தையை பிரசவித்த வெளிநாட்டு பெண் | Virakesari.lk

பேரிடரால் பாதிக்கப்பட்ட குதிரைகளுக்கு மருத்துவ முகாம்

1 week 4 days ago

5 Dec, 2025 | 02:01 PM

image

டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட குதிரைகளுக்கு நுவரெலியாவில் மருத்துவ முகாம் இன்று வெள்ளிக்கிழமை (05) நடத்தப்பட்டது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட குதிரைகளை நோய் நிலைமைகள் இருந்து பாதுகாக்க அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் கால்நடை தீவனம் வழங்குவதற்காக இந்த விசேட மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த திட்டத்தின் முதல் கட்டம் இன்றைய தினம் நுவரெலியா மாநகர சபையின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு மற்றும் பங்களிப்பு இலங்கை குதிரை சங்கத்தால் வழங்கப்பட்டது.

இந்த சேவைக்கு இலங்கை குதிரை சங்க உறுப்பினர்கள் மற்றும் விலங்கு பிரியர்கள் ஏராளமானோர் நிதி பங்களிப்புகளை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அத்துடன், பேரிடர் நிலைமை தணிந்து சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவுக்கு மீண்டும் வருகை தரும் வரை இந்த மருத்துவ சேவைகள் பல கட்டங்களாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நுவரெலியா நகர எல்லை முழுவதும் குதிரை சுற்றுப்பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் 150க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சத்தான விலங்கு உணவு மற்றும் மருந்துகள் 50 குதிரைவண்டி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

இவ்வாறு கையளிக்கப்பட்ட விலங்கு உணவு பத்து நாட்கள் முதல் இரண்டு வாரங்களுக்கு போதுமானது. எதிர்காலத்திலும் விலங்கு உணவு விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இயற்கை பேரழிவுகள் காரணமாக விலங்குகள் பாதிக்கப்பட்டால் பயன்படுத்த ஒரு அளவு மருந்து மற்றும் தடுப்பூசிகளும் குதிரைவண்டி சவாரி செய்பவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. 

இந்த மருத்துவ முகாம் மற்றும் விலங்கு உணவு விநியோக நிவாரண சேவையில் பயனடைந்த குதிரை உரிமையாளர்கள்,

நாடு முழுவதும் பேரிடர் காலத்தில் பல்வேறு நிவாரண சேவைகள் வழங்கப்பட்ட போதிலும், இலங்கை சுற்றுலாத் துறையின் மிகப்பெரிய பலமாக இருக்கும் குதிரை உரிமையாளர்களை நாடு மறந்துவிட்டது. இலங்கை குதிரை சங்கம் செய்த உதவிகளுக்குபெரிதும் பாராட்டுகிறோம்.

நாட்டில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற பேரிடர்களின் போது விலங்குகளைப் பராமரிப்பது எங்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது,

எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவளிக்க நாங்கள் செலவிடும் அதே அளவு பணத்தை இந்த விலங்குகளுக்காக செலவிட வேண்டியிருந்தது, மேலும் எங்கள் துக்கத்தை வெளிப்படுத்த யாரும் இல்லாமல் தவித்தோம்,

அப்போதுதான் எங்களுக்கு சில ஆதரவை வழங்குமாறு இலங்கை குதிரை சங்கத்திடம் உதவி கோரினோம்.

சுற்றுலாப் பயணிகள் மீண்டும் வந்து எங்கள் பொருளாதாரம் வலுவடையும் வரை அவர்கள் எங்களுக்கு அளித்த உதவிகளுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

அரசாங்கத்தால் உதவிகள் கிடைக்காமைக்கு மிகவும் வருத்தம் அடைகிறோம்.

அரசாங்கத்திடமிருந்து ஏதேனும் உதவி கிடைத்தால், எங்களால் முடிந்த அதிகபட்ச ஆற்றலைப் பயன்படுத்தி சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்த பாடுபடுவோம்.

WhatsApp_Image_2025-12-05_at_12.29.22_PMWhatsApp_Image_2025-12-05_at_12.29.26_PM

WhatsApp_Image_2025-12-05_at_12.29.25_PM

WhatsApp_Image_2025-12-05_at_12.29.23_PM


பேரிடரால் பாதிக்கப்பட்ட குதிரைகளுக்கு மருத்துவ முகாம் | Virakesari.lk

புலிபாய்ந்த கல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலரால் சட்டவிரோத செயற்பாடு

1 week 4 days ago

05 Dec, 2025 | 03:58 PM

image

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்த கல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலர் சட்டவிரோதமான முறையில் மீனவ வாடி அமைத்துள்ளதுடன், கடற்கரையில் சட்டவிரோதமாக படகுகளையும் நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரியதரப்பினரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய், புலிபாய்ஞ்ச கல்லில் சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் பெரும்பான்மையின மீனவர்கள் சிலர் அத்துமீறி சட்டவிரோதமான முறையில் வாடி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதுடன், சட்டவிரோதமான முறையில் கடற்கரையில் படகுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இவ்வாறு சட்டவிரோதமாக வாடி அமைக்கப்பட்டுள்ளமை மற்றும் படகுகள் கடற்கரையில் சட்டவிரோதமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த இடத்திற்கு நேரடியாகச் சென்று நிலமைகளை ஆராய்ந்தார்.

இதன்போது புலிபாய்ஞ்சகல்லில் சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள கடற்கரையை அண்டிய காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக பெரும்பான்மையின மீனவர்கள் சிலரால் மறைவான வகையில் வாடி அமைக்கப்பட்டிருப்பது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் கண்டறியமுடிந்துள்ளது.

அத்தோடு OFFRP-A-0742MLT, OFFRP-A-1000MLT, OFFRP-A-0974MLT ஆகிய முல்லைத்தீவு மாவட்டத்தின் பதிவிலக்கங்களைக்கொண்ட மூன்று படகுகளும், OFFRP-A-5017NBO, OFFRP-A-4478NBO ஆகிய நீர்கொழும்பு மாவட்டத்தின் பதிவிலக்கங்களையுடைய இரு படகுகளும், OFFRP-A-5491CHW, OFFRP-A-7209CHW ஆகிய சிலாபம் மாவட்டத்தின் பதிவிலக்கங்களைக் கொண்ட இருபடகுகளுமாக மொத்தம் ஏழு படகுகள் சட்டவிரோதமானவகையில் புலிபாஞ்சகல் கடற்கரையில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலரால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதையும் நாடாளுமன்ற உறுப்பினரால் இனங்காண முடிந்துள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணிஉத்தியோகத்தர் உள்ளிட்டவர்களுக்கு இந்த விடயங்களைத் தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த பகுதிக்கு அவர்களும் உடனடியாக வருகைதந்திருந்தனர். இந்நிலையில் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கமைய இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கெதிராக தம்மால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் ஆகியோரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருந்தனர்.

அதன் பிற்பாடு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரிடமும் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் அவரும் இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் அவர்களையும் நேரடியாகச் சந்தித்து இந்த சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் தெரியப்படுத்தியதுடன், இந்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியிருந்தார்.

அந்தவகையில் குறித்த புலிபாஞ்சகல் பகுதியென்பது சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியெனவும், அங்கு இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கமுடியாதெனவும் தெரிவித்த மாவட்ட செயலாளர், குறித்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக உரியவகையில் சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருந்தார்.

மேலும் குறித்த புலிபாஞ்சகல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் இதற்கு முன்னரும் பலதடவைகள் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலர் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த நிலையில் அச்செயற்பாடுகள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது தலையீட்டை அடுத்து, உரிய சட்டநடவடிக்கைகளூடாகத் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. இத்தகைய சூழலில் மீண்டும் குறித்த சுற்றுலாத்தலத்தில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலர் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1000762867__1_.jpg

1000762871.jpg

1000762867__1_.jpgபுலிபாய்ந்த கல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலரால் சட்டவிரோத செயற்பாடு | Virakesari.lk

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நிவாரணங்கள் அறிவிப்பு - ஜனாதிபதி

1 week 4 days ago

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நிவாரணங்கள் அறிவிப்பு

Dec 5, 2025 - 06:32 PM

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நிவாரணங்கள் அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார். 

இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு, எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மூன்று மாதங்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். 

அதன்படி, இரண்டுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 50,000 ரூபாவும் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரம் உள்ள குடும்பத்திற்கு 25,000 ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

அதேபோல், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள், சேதமடைந்த தமது வீட்டு உபகரணங்களை மீண்டும் கொள்வனவு செய்வதற்காக ரூபா 50,000 வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். 

தற்போது நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருக்க விரும்பினால், அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படும் எனவும், மாறாக, முகாம்களிலிருந்து வெளியேறி வாடகை வீடுகளில் வசிக்க விரும்புவோருக்கு, 6 மாத காலத்திற்கு மாதாந்தம் 25,000 ரூபாய் வாடகைக் கொடுப்பனவாக வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

மேலும், அனர்த்தத்தினால் நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு 150,000 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmisvkj4v02f9o29nwa4khtn2

Checked
Wed, 12/17/2025 - 01:57
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr