ஊர்ப்புதினம்

80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் - சட்டத்தரணி பிரதிபா மஹானாமஹேவ

6 days 7 hours ago

நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் - சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ

25 Oct, 2025 | 04:22 PM

image

நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ தெரிவித்துள்ளார்.  

பிரஜா சக்தி அபிவிருத்தி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை முறையான சட்ட கட்டமைப்பின் கீழ் பதிவு செய்வது அவசியமாகும்.

அத்துடன், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகளும் சமூக அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும்.

பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை ஒதுக்கி வைப்பதால் அவர்கள் மேலும் பாதிக்கப்படுகின்றனர்.

இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு அடிப்படைப் பாலியல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி முறைமையை விரிவாக்குவது அவசியமாகும்.

95 சதவீதமான பாலியல் தொழிலாளர்கள் தற்போது ஆணுறை உள்ளிட்ட பாதுகாப்பான முறைகளைப் பயன்படுத்தி வருவதால் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்களும் கணிசமாக குறைவடையும் என சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/228647

யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது

6 days 8 hours ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், 'யாழ்தேவி' ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று (25) பிற்பகல் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த இந்த ரயில், பிற்பகல் 2.40 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தை அடைந்துள்ளது.

இதன்போது அவர் மது அருந்தியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் அவர் நீதிமன்றில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

யாழ்தேவி ரயிலுக்கு வேறொரு கட்டுப்பாட்டாளர் நியமிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கிப் புறப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmh66cbsr017cqplp06gyyxes

போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது ! - சுமந்திரன்

6 days 16 hours ago

போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது !

By SRI

image_1484585630-7e01e251c9.jpg

பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், அதனைக் காரணமாகக்கூறி பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கும், பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாடளாவிய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. அதன்படி பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுவரும் அதேவேளை, மறுபுறம் பாதாள உலகக்குழுவினர் என அடையாளப்படுத்தப்படும் பலர் பொதுவெளியில் கொல்லப்படும் சம்பவங்களும் அதிகரித்துவருகின்றன.

அதுமாத்திரமன்றி அரசாங்கம் பொதுவெளியில் நிகழும் இவ்வாறான படுகொலைகளை பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் கொல்லப்படுவதாகக்கூறி நியாயப்படுத்திவரும் போக்கு தொடர்பில் பலரும் கண்டனங்களை வெளிப்படுத்திவருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றிக் கருத்துரைத்த சுமந்திரன், பாதாள உலக்குழுக்கள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளைத் தாம் வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.

இருப்பினும் அதனைக் காரணமாகக்கூறி பொதுவெளியில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதற்கு அரசாங்கம் முற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும், மாறாக சட்டம், ஒழுங்கை உரியவாறு பேணவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இவ்வருடத்தில் இதுவரை சுமார் 50 க்கும் மேற்பட்ட இவ்வாறான கொலைச்சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும், இனிவருங்காலங்களில் இத்தகைய சட்டவிரோத படுகொலைகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சுமந்திரன் வலியுறுத்தினார்.

https://www.battinews.com/2025/10/blog-post_358.html

க.பொ.த உயர்த்தர மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

6 days 16 hours ago

க.பொ.த உயர்த்தர மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

25 Oct, 2025 | 10:51 AM

image

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்த்திற்கான பொது தகவல் தொழில்நுட்ப (GIT) தேர்வுக்கான அனுமதி அட்டைகள் அனைத்தும் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

அனைத்து அதிபர்களும் தங்கள் பாடசாலைக்குறிய அனுமதி அட்டைகளை அந்தந்த வலயக் கல்வித் உதவி கல்வி பணிப்பாளரிடமிருந்து  பெற்றுக்கொள்ளலாம்  என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் தபால் மூலம், அவர்களின் தனிப்பட்ட தபால் முகவரிகளுக்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளதாக  பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

பரீட்சாத்திகளின் பெயர்கள், பாடங்கள் தொடர்பாக ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியிருந்தால், அத்தகைய மாற்றங்களை உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் செய்யலாம் என்றும் ஆணையாளர் நாயகம் தெரவித்துள்ளார். 

அனைத்து திருத்தங்களும் அக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் செய்துக்கொள்ள வேண்டும் எனவும் பரீட்சாத்திகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 10ம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை, நாடு முழுவதும் உள்ள 2,362 தேர்வு நிலையங்களில் நடைபெறும்.

பொது தகவல் தொழில்நுட்ப ( GIT ) தேர்வு டிசம்பர் 6 ஆம் திகதி 1,665 தேர்வு நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/228615

“ஆனந்தன்” வழங்கிய தகவலுக்கமைய கஞ்சா கடத்தல்காரர் கைது!

6 days 16 hours ago

“ஆனந்தன்” வழங்கிய தகவலுக்கமைய கஞ்சா கடத்தல்காரர் கைது!

25 Oct, 2025 | 10:36 AM

image

நீண்ட நாட்களாக இந்தியாவிலிருந்து படகு மூலம் கஞ்சா கடத்தி வந்த கஞ்சா கடத்தல்காரர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்ட கஞ்சா கடத்தல்காரரிடமிருந்து 10 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு, இந்தியாவுக்கு தப்பிச் செல்ல படகு ஏற்பாடு செய்து கொடுத்து உதவியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள  “ஆனந்தன்” என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கஞ்சா கடத்தல்காரர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கைசதுசெய்யப்பட்ட கஞ்சா கடத்தல்காரர் படகு மூலம் கஞ்சா மாத்திரம் கடத்தி உள்ளாரா அல்லது பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல உதவி உள்ளரா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு பின்னர் ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இஷாரா செவ்வந்தி வழங்கிய தகவலுக்கமைய இந்தியாவுக்கு தப்பிச் செல்ல படகு ஏற்பாடு செய்து கொடுத்து உதவிய   “ஆனந்தன்” என்பவர் கைதுசெய்யப்பட்ட நிலையில்,  “ஆனந்தன்” வழங்கிய தகவலின் அடிப்படையில் கஞ்சா கடத்தல்காரர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/228620

தந்தை செல்வாவின் மூத்த மகள் கனடாவில் காலமானார் !

6 days 16 hours ago

தந்தை செல்வாவின் மூத்த மகள் கனடாவில் காலமானார் !

25 Oct, 2025 | 12:37 PM

image

தந்தை செல்வா என்று போற்றப்பட்டவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவருமான தந்தை செல்வாவின் (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) மூத்த மகள் சுசீலாவதி வில்சன் தனது 97 ஆவது வயதில் கனடாவில் இறைவனடி எய்தினார்.

அன்னார் இலங்கை அரசியல் பற்றிய விமர்சனத் துறையில்  போற்றப்பட்டவரும் கனடா நியூ பிரன்சுவிக் பல்கலைக்கழகத்தின் அரசியற்துறைப் பேராசிரியருமான அ.ஜெயரெத்தினம் வில்சனின் அன்புத் துணைவியாரும் கனேடியச் சட்டத்தரணி மல்லிகா, மைதிலி குமணன் ஆகியோரின் அன்புத் தாயாருமாவார். 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை (25 ஒக்டோபர் 2025) 11.00 மணி முதல் 2.00 மணி வரை Chapel Ridge - 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 நடைபெறுகிறது.

இந்நிலையில், தந்தை செல்வாவின் மூத்த மகள் சுசீலாவதி (சுசீலி) வில்சனின் மறைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

சுசீலாவதியின் மறைவு தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான தந்தை செல்வாவின் மூத்த மகள் சுசீலாவதி (சுசீலி) வில்சனின் மறைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றது.

சுசீலி , தனது தாயாருடன் இணைந்து, 1950கள் மற்றும் 60களில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரசார நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்கு ஆரம்ப காலத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கினார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சுசீலி பட்டப்படிப்பை முடித்தவர். அங்குதான் அவர் தனது கணவராகிய பேராசிரியர் அல்ஃபிரட் ஜெயரத்தினம் வில்சன் (Prof. A. J. Wilson) அவர்களைச் சந்தித்தார்.

பேராசிரியர் ஏ.ஜே. வில்சன், இலங்கையின் அரசியல் குறித்துப் பல நூல்களை எழுதிய புகழ் பெற்ற கல்விமானாக விளங்கியவர். பிற்காலத்தில் சுசீலி, ஐக்கிய இராச்சியத்தில் ஒரு தொழில்முறை நூலகராக (Professional Librarian) தகுதி பெற்று, தனது கணவரின் கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார்.

கனடாவில் குடியேறிய பின்னர், அவர் நியூ பிரன்சுவிக் பல்கலைக்கழகத்தில் (University of New Brunswick) நூலகராகப் பணியாற்றினார்.

சுசீலி வில்சன், கட்சிக்கும், குறிப்பாக தமிழ்மக்களின் மேம்பாட்டிற்கும் ஆற்றிய பங்களிப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த நன்றியுணர்வுடன் நினைவுகூருகிறது. அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது பிள்ளைகள் மல்லிகா, மைதிலி மற்றும் குமணனுக்கு கட்சி தனது ஆழ்ந்த அனுதாபங்கள் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

566555928_675387921941102_57109469540998

வடமாகாணத்தில் நாளை 13 மணி நேர மின் தடை!

6 days 16 hours ago

வடமாகாணத்தில் நாளை 13 மணி நேர மின் தடை!

1233058443.jpg

 வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களிலும் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை 26ம் திகதி மின்தடைப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

அதன்படி முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாண, கிளிநொச்சி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் 13 மணி நேரம் தொடர் மின் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார் 220kV மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைப்பதற்கான வேலைகளிற்காகவே நாளைய தினம்   ‘காலை 6.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை மின் துண்டிக்கப்படுவதால், யாழ்ப்பாண மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டம் முழுவதும் மின் விநியோகமானது துண்டிக்கப்படவுள்ளது.

வேலைகள் பூர்த்தியாகியவுடன் மின் இணைப்பானது உடனடியாக மீள வழங்கப்படும் என இலங்கை மின்சாரசபை  மேலும்  அறிவித்துள்ளது.  

https://newuthayan.com/article/வடமாகாணத்ததில்__நாளை_13_மணி_நேர_மின்_தடை!

இந்திய இராணுவத்தின் கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலையின் நினைவேந்தல்

6 days 16 hours ago

இந்திய இராணுவத்தின் கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலையின் நினைவேந்தல்

adminOctober 24, 2025

1001148206.jpg?fit=1170%2C878&ssl=1

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த பொது மக்கள் மீது இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் 38 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொக்குவில் இந்து கல்லூரி நுழைவாயிலில் முன்பாக இடம்பெற்றது.

நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தி அதனைத் தொடர்ந்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

1987 ஒக்டோபர் 11 ஆம் திகதி மற்றும் 12 ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படி பகுதிகளில் நடைபெற்ற படுகொலைகளை தொடர்ந்து கொக்குவில் இந்துக் கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த பொதுமக்கள் மீது இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், 26 பொதுமக்கள், படுகொலை செய்யப்பட்டனர்.

1001148203.jpg?resize=800%2C600&ssl=1

1001148200.jpg?resize=800%2C600&ssl=11001148206.jpg?resize=800%2C600&ssl=1

https://globaltamilnews.net/2025/221923/

உள்நாட்டு யுத்த காலத்தை விட தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- சாகர காரியவசம்!

6 days 17 hours ago

download-23.jpg?resize=294%2C171&ssl=1

உள்நாட்டு யுத்த காலத்தை விட தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- சாகர காரியவசம்!

தமிழீழ விடுதலை புலிகள் கூட அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளைக் கொலை செய்யவில்லை போர்க் காலத்தை விடவும் தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வெலிகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமானது படு பயங்கரமாகும் எனவும் தமக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த தவிசாளர் லசந்த விக்கிரமசேகர கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அது வழங்கப்படாத சூழ்நிலையிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நாட்டில் 30 வருடகாலம் போர் நிலவியது. இந்தக் காலப்பகுதியில் விடுதலை புலிகள் கூட இவ்வாறு அச்சமின்றி அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளை கொல்லவில்லை. ஆனால், இந்த அரசாங்க ஆட்சியின் கீழ் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கம் நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டு செல்வதற்காகப் பாதாளக் குழு என்ற போர்வையில் தமக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

மக்கள், நாய் பூனைகள்போல சுட்டுக்கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் பாதாளக் குழுக்களை ஒடுக்குகின்றோம் என்ற போர்வையில் அக்குழுக்கள் பலப்படுத்தப்படுகின்றனவா என்ற சந்தேகமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1451060

நாட்டில் குறைவடைந்து வரும் திருமணம், பிறப்பு வீதங்கள்!

6 days 17 hours ago

download-1-12.jpg?resize=275%2C183&ssl=1

நாட்டில் குறைவடைந்து வரும் திருமணம், பிறப்பு வீதங்கள்!

2024 ஆம் ஆண்டில் இலங்கையில் திருமணங்கள் மற்றும் பிறப்புக வீதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 1இலட்சத்து 39ஆயிரத்து 290 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8 சதவீத குறைவாகும் என தரவுகள் குறிப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த 2022 ஆம் ஆண்டு, பொருளாதார நெருக்கடியின் காலத்தில், நாடு முழுவதும் 1இலட்சத்து 71ஆயிரத்து 140 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

முன்னதாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிபர தரவுகளின்படி பிறப்புகளிலும் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2024 ஆம் ஆண்டில் 2 இலட்சத்து 20ஆயிரத்து 761 பிறப்புகள் பதிவாகியுள்ளன.

இது 2020 ஆம் ஆண்டில் பதிவான 3 இலட்சத்து ஆயிரத்து 706 பிறப்புகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாகும்.

https://athavannews.com/2025/1451063

ஆஸ்திரேலிய முதலீட்டாளரின் சொத்துக்களை மோசடி செய்த இருவர் கைது!

6 days 17 hours ago

Two-arrested-for-promising-1.jpg?resize=

ஆஸ்திரேலிய முதலீட்டாளரின் சொத்துக்களை மோசடி செய்த இருவர் கைது!

மன்னாரில், மோசடி, சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்த குற்றச்சாட்டுகளில் மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களை நேற்று (24) மாலை முருங்கன் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில்,குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

மன்னார், நானாட்டான், புதுக்குடியிருப்பு, ஓமந்தை மற்றும் ஆலம்பில் பகுதிகளில் பல வணிகங்களை ஆரம்பிக்க ஆஸ்திரேலிய முதலீட்டாளர் குறித்த நபர்களுக்கு நிதி வழங்கியிருந்தார்.

இந்த வணிக முயற்சிகளில் நான்கு வன்பொருள் கடைகள், இரண்டு பெரிய தன்னந்தோட்டம் , ஒரு பால் பண்ணை, ஒரு நெல் வயல் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடங்குவதுடன் இவற்றிற்காக சுமார் 180 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் தற்போது அது மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய சந்தேக நபர் ஒருவரும் அவரது மனைவியும் தற்போது தலைமறைவாகியுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட ஏனைய இரு சந்தேக நபர்களையும் முருங்கன் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நேற்று (24) மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

https://athavannews.com/2025/1451058

அரசாங்கத்திலும் ஒரு நாமல் இருக்கிறார் நாமல் ராஜபக்ஷ சாடல்

1 week ago

24 Oct, 2025 | 04:52 PM

image

(எம்.மனோசித்ரா)

மஹிந்த ஜயசிங்கவுக்கு கனவிலும் ராஜபக்ஷர்கள் தான் தோன்றுகின்றனர். அதனால் அதனால் தான் அவர் அதிகளவில் ராஜபக்ஷர்கள் குறித்து பேசுகின்றார். செவ்வந்தி தனது தொலைபேசியில் பதிவு செய்திருப்பது எந்த நாமலுடைய இலக்கம் என்பதை அதனை பரிசோதித்தவர்களே கூற வேண்டும். ஆனால் அரசாங்கத்திலும் நாமல் கருணாரத்ன என்ற ஒருவர் இருக்கின்றார் என்பதை நினைவுபடுத்துகின்றேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (24) பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மஹிந்த ஜயசிங்கவுக்கு கனவிலும் ராஜபக்ஷர்கள் தான் தோன்றுகின்றனர். அதனால் அதனால் தான் அவர் அதிகளவில் ராஜபக்ஷர்கள் குறித்து பேசுகின்றார். ஆனால் அரசாங்கத்திலும் நாமல் கருணாரத்ன என்ற ஒருவர் இருக்கின்றார் என்பதை நினைவுபடுத்துகின்றேன்.

எவ்வாறிருப்பினும் நாமல் எனக் கூறும் போது தமது அரசாங்கத்திலுள்ள நாமலை மறந்து அவர்களுக்கு எனது நினைவு வருகின்றமை மகிழ்ச்சிக்குரியது.

செவ்வந்தி தனது தொலைபேசியில் பதிவு செய்திருப்பது எந்த நாமலுடைய இலக்கம் என்பதை அதனை பரிசோதித்தவர்களே கூற வேண்டும்.

நாட்டு பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு நாட்டு தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் காணப்படுகிறது.

ஜனாதிபதி நடை பயிற்சியின் போது பாதுகாப்புடனேயே செல்கின்றார். அது சிறந்த விடயம். அதேபோன்று அவர் ஏனையோரது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெலிகம பிரதேசசபை தலைவர் எழுத்து மூலம் தனக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் இரு மாதங்களுக்கு முன்னரே கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

ஆனால் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு நபருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அவர் மீது முறைப்பாடுகள் உள்ளனவா, குற்றச்சாட்டுக்கள் உள்ளனவா என்பதை ஆராய முன்னர் முதலில் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் கூட இந்த காரணத்தை அடிப்படையாகக் கொண்டே மிகுந்த பாதுகாப்புடன் அழைத்து வரப்படுகின்றனர்.

அவ்வாறிருக்கையில் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியொருவருக்கு காணப்பட்ட உயிர் அச்சுறுத்தலை பொலிஸ் மா அதிபர் எவ்வாறு உதாசீனப்படுத்த முடியும்? ஏன் அவருக்கான பதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் போது கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவலும் இவ்வாறு தான் உதாசீனப்படுத்தப்பட்டது. தமக்கு தேவையற்றவர்களின் பாதுகாப்பை ஸ்திரமற்றதாக்குவதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

அந்த கோணத்தில் அவதானிக்கும் போது அரசாங்கத்தின் அனுசரனையுடன் திட்டமிட்ட குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறான கொலைகள் இடம்பெறும் போது அரசாங்கம் பதற்றமடைகிறது.

323 கொள்கலன்கள் தொடர்பில் முதலாவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடளித்த டான் பிரியசாத் கொல்லப்பட்ட போதும் அரசாங்கம் இவ்வாறு தான் செயற்பட்டது.

மரண விசாரணை அறிக்கை கிடைக்க முன்னரே, அமைச்சரொருவர் அவரது கொலை தொடர்பில் கருத்து வெளியிட்டார். அதேபோன்று தற்போது லசந்த கொலையை திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புபடுத்தி திசைதிருப்ப முயற்சிக்கின்றனர் என்றார்.

https://www.virakesari.lk/article/228587

@goshan_che அண்ணையின் கவனத்திற்கு!

புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கு அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி கடும் எதிர்ப்பு : 7ஆம் திகதிக்கு முன் தீர்மானத்தை மாற்றுமாறும் வலியுறுத்தல்

1 week ago

புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கு அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி கடும் எதிர்ப்பு : 7ஆம் திகதிக்கு முன் தீர்மானத்தை மாற்றுமாறும் வலியுறுத்தல்

24 Oct, 2025 | 04:49 PM

image

(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கமைய பாடசாலை நேரத்தை 30 நிமிடத்தால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி துறைசார்ந்தவர்களுடன் எந்தவொரு கலந்தாலோசனைகளையும் முன்னெடுக்காமல் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாக அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.  

வெள்ளிக்கிழமை (24) கொழும்பில் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்து குறித்த தொழிற்சங்கம் இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை நேரத்தை அதிகரிப்பது குறித்த தீர்மானத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால் அடுத்த தவணை ஆரம்பமானதும் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அகில இலங்கை ஒன்றிணைந்த ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வல பக்ஞ்ஞாசேகர தேரர், அதிபர், ஆசிரியர் உட்பட கல்வித்துறை சார்ந்தவர்களுடன் எவ்வித கலந்துரையாடல்களையும் முன்னெடுக்காமல் அரசாங்கம் தன்னிச்சையாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. தற்போது 1 - 1.30 மணியளவில் மாணவர்கள் சோர்வடைகின்றனர். அதிகாலை 3 மணிக்கு எழுந்து பல கிலோ மீற்றர் பயணம் செய்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும் இருக்கின்றனர்.

அவ்வாறெனில் அந்த மாணவர்களுக்கு அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்துக்கமைய அருகிலுள்ள பாடசாலையில் கல்வி கற்பதற்கான வசதிகளையாவது அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவ்வாறு எந்தவொரு முன்னாயத்தமும் திட்டமிடலும் இன்றி பாடசாலை நேரத்தில் 30 நிமிடத்தை அதிகரித்துள்ளமை நியாயமற்றது. 

எனவே இந்த தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும். பொருத்தமான மாற்றங்கள் தொடர்பில் துறைசார் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில், அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த புதிய முறையில் இடைவேளை இரு சந்தர்ப்பங்களில் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு இரு இடைவேளைகள் வழங்கப்பட்டால் மாணவர்களை வகுப்பறைகளிலிருந்து வெளியனுப்புவதற்கும், மீள அழைப்பதற்கும் கூட நேரம் போதாது. அவ்வாறிருக்கையில் இவ்வாறான ஒரு நடைமுறை சாத்தியமற்ற முறைமையை யோசனையை வழங்கியது யார்?

தேசிய கல்வி நிறுவனத்தின் எவ்வித தகுதியும் அற்ற குழுக்களாலேயே இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. கலைத்துறை பட்டதாரிகள் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான பாடப்பரப்புக்களை தயாரிக்கின்றனர். இவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் குழுக்களில் அங்கத்துவம் வகித்தவர்களாவர். அதனால் அவர்களுக்கு இவ்வாறான முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. 

நவம்பர் 7ஆம் திகதி பாடசாலைகளுக்கு தவணை விடுமுறை வழங்க முன்னர் இந்த தீர்மானத்தை அரசாங்கம் மாற்ற வேண்டும். அவ்வாறில்லையெனில் பாடசாலை ஆரம்பமானதன் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/228581

வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள் - விருதுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை

1 week ago

வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள் - விருதுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை

வெள்ளி, 24 அக்டோபர் 2025 06:14 AM

வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள் - விருதுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை

பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றோரின் தொழில்முயற்சிகளுக்கு தேசிய ரீதியிலான அங்கீகாரங்களை பெற்றுக்கொடுக்கும் முகமாக , “வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025”  எனும் விருது வழங்கும் நிகழ்வில் 16 பிரிவுகளில் 33 விருதுகள் வழங்கப்படவுள்ளன எனவும் , அதற்காக தொழில் முனைவோரை விண்ணப்பிக்குமாறும் , யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தினர் கோரியுள்ளனர் 

யாழ் . மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற , ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். 

மேலும் தெரிவிக்கையில், 

வடமாகாணத்தின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக வடமாகாணத்தின் சிறந்த தொழில்முனைவோர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் “வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025” (Northern Entrepreneur Awards – 2025) நிகழ்வானது தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை (National Enterprise Development Authority – NEDA)  மற்றும் யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின்  (Chamber of Commerce and Industries of Yarlpanam – CCIY) ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.

வட மாகாணத்தின் தொழில்முனைவோருடைய திறன்கள், அவர்களின் புத்தாக்கங்கள், தலைமைத்துவம் மற்றும் பொருளாதார பங்களிப்புக்கள் போன்றவற்றை பாராட்டுவதோடு தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளித்து, சிறந்த தொழில்முனைவோரை தேசிய மட்டத்தில் அடையாளம் காணப்படுவதை உறுதி செய்வதே இவ் விருதுகளின் பிரதான நோக்கமாகும்.  

குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றோரின் தொழில்முயற்சிகளுக்கு தேசிய ரீதியிலான அங்கீகாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு எமக்குரியது.

வடமாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025 இல் பெண் தொழில்முனைவோர், இளம் தொழில்முனைவோர், வேளாண்மை, உணவு சார் உற்பத்திகள், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, மீன்பிடி, கல்வி, ஏற்றுமதிகள், கட்டிட நிர்மாணம் மற்றும் உட்கட்டமைப்பு, கைவினை மற்றும் படைப்புத் துறை உள்ளிட்ட 16 பிரிவுகளில் மொத்தம் 33 விருதுகள் வழங்கப்படவுள்ளன.

வடமாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025 ற்கான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து எம்மிடம் உடனடியாக சமர்ப்பிக்குமாறுகேட்டுக்கொள்கின்றோம்.

அன்பான தொழில் முனைவோரே வடமாகாண தொழில்முனைவோர் விருதுகள் கிடைப்பதன் முலம் நீங்கள் பெறும் நன்மைகள்

1. அங்கீகாரமும் நம்பகத்தன்மையும் (Recognition & Credibility)

2. இலவச சந்தைப்படுத்தலும் (Free Publicity & Marketing)

3. வலுவான வலையமைப்பு (Stronger Networking)

4. ஊழியர்களின் மனதளவவிலான தன்னம்பிக்கை உயரும் (Employee Morale & Retention)

5. உங்கள் வியாபார வளர்ச்சியில் இன்னுமொர் அத்தியாயத்தின் வாயில் (Gateway to Business Growth)

6. உங்கள் தனிப்பட்ட மற்றும் வணிகக் குறி மதிப்பு அதிகரிப்பு  (Personal & Brand Equity)

விருதுகள் உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு  கொண்டு செல்ல உதவும்  படிக்கட்டுக்கள் .   விருதுகளுக்காக நீங்கள்  விண்ணப்பிக்கும் செயல்முறை தான் உங்கள் வியாபாரத்தை அல்லது சேவையை  நீங்களே  ஒருமுறை மதிப்பாய்வு செய்ய  கிடைக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும் என தெரிவித்துள்ளனர்.

https://jaffnazone.com/news/51566

யாழில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு சொத்து குவித்த எட்டு பேருக்கு எதிராக விசாரணை ஆரம்பம்

1 week ago

யாழில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு சொத்து குவித்த எட்டு பேருக்கு எதிராக விசாரணை ஆரம்பம்

வெள்ளி, 24 அக்டோபர் 2025 06:45 AM

யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் , போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் , மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் , அவர்களில் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் , மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்படவுள்ளன. 

வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகை பணத்தினை பெருக்கோடு யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுதல் , மீற்றர் வட்டிக்கு பணத்தினை வழங்கி , அதனை திரும்ப செலுத்த தவறுபவர்களை கடத்தி சென்று சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி  ,அவற்றை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுதல் , பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்தல் , போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகள் ஊடாக சொத்துக்களை சேர்ந்தவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் பொலிஸ் விசேட பிரிவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

அதன் அடிப்படையில் முதல் கட்டமாக யாழ்ப்பாணத்தில் எட்டு பேர் அடையாளம் காணப்பட்டு , அவர்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து குறித்த நபர்களிடம் வாக்கு மூலங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்ப்பவர்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் தமக்கு கிடைக்க பெற்று வருவதாகவும் , அது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுப்போம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

https://jaffnazone.com/news/51571

கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் ஆபாச காணொளிகள்!! விசாரணைக்கு அழைக்கப்படும் நடிகைகள்

1 week ago

கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் ஆபாச காணொளிகள்!! விசாரணைக்கு அழைக்கப்படும் நடிகைகள்

October 24, 2025 10:36 am

கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் ஆபாச காணொளிகள்!! விசாரணைக்கு அழைக்கப்படும் நடிகைகள்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மேவின் கையடக்க தொலைபேசி தரவுகளை பகுப்பாய்வு செய்ததில், ஐந்து பிரபல நடிகைகள் மற்றும் ‘மிஸ் இலங்கை’ கிரீடம் வென்ற ஒரு மாடல் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளன.

அதன்படி, அவர்கள் ஆறு பேருக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுத் துறை இந்த ஆறு பெண்களையும் அழைத்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே, மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, அவரது கையடக்க தொலைபேசிகளும் சிஐடியினரால் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

இதில், பிரபல நடிகை ஒருவர் தனது காதலனுடன் இருக்கும் ஆபாச காணொளி தொலைபேசியில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மற்ற ஐந்து நடிகைகளின் புகைப்படங்களும், ‘மிஸ் இலங்கை’ மாடலின் புகைப்படங்களும் அந்த கையடக்க தொலைபேசியில் காணப்பட்டன.

பெரும்பாலான புகைப்படங்கள் கெஹல்பத்தர பத்மேவுடன் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டவை என்று தெரிவிக்கப்படுகிறது.

https://oruvan.com/pornographic-videos-on-kehelbaddara-padmes-phone-actresses-summoned-for-questioning/

வெள்ளைக்கொடி விவகாரம்: சர்வதேச விசாரணை வேண்டும் – கோடீஸ்வரன்

1 week ago

வெள்ளைக்கொடி விவகாரம்: சர்வதேச விசாரணை வேண்டும் – கோடீஸ்வரன்

October 24, 2025 10:59 am

வெள்ளைக்கொடி விவகாரம்: சர்வதேச விசாரணை வேண்டும் – கோடீஸ்வரன்

இறுதிப்போரின்போது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உள்ளக பொறிமுறை ஊடாக நீதி கிட்டாது. எனவே, சர்வதேச விசாரணையே வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

” 2009 இறுதிப்போரின்போது வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த மக்கள், புலிகள் சவேந்திர சில்வாவின் அனுமதியுடன் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார்.

இதனோடு சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டியவர்களாக உள்ளனர்.

எனினும், போர் முடிவடைந்து பல வருடங்ககள் கடந்தும் தமிழ் மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. படுகொலை குறித்து கடந்த அரசாங்கமும் விசாரணை செய்யவில்லை, இந்த அரசாங்கமும் விசாரணை முன்னெடுக்கவில்லை. இதன்காரணமாகவே உள்நாட்டு பொறிமுறைமீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

உள்ளக பொறிமுறைமூலம் குற்றமிழைத்தவர்களை தண்டிக்க முடியாது. எனவேதான் சர்வதேச விசாரணையை கோரி நிற்கின்றோம்.” எனவும் க. கோடீஸ்வரன் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

https://oruvan.com/white-flag-issue-international-investigation-needed-billionaire/

போதைப்பொருள் பேரழிவை ஒழிக்க முழு நாடும் ஒன்றுபட வேண்டும் – ஜனாதிபதி

1 week ago

போதைப்பொருள் பேரழிவை ஒழிக்க முழு நாடும் ஒன்றுபட வேண்டும் – ஜனாதிபதி

October 24, 2025

அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து விவாதிக்க முடிந்தாலும், நாட்டிலிருந்து போதைப்பொருள் பேரழிவை  ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இனிமேலும் விவாதித்துக் கொண்டிருப்பதற்கு இடமில்லை. போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டத்திற்காக முழு நாடும் ஒன்றுபட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

‘போதைப்பொருள் பேரழிவை  வேரோடு ஒழிப்பதற்கான ” முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ குறித்து ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளிப்பதற்காக வியாழக்கிழமை (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது தேசிய பேரழிவாக மாறி இளைஞர் சமூகத்தைப் போன்றே பாடசாலை  மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து வரும்  போதைப் பொருள் வர்த்தகத்தை மையமாகக் கொண்டு அநேகமான குற்றங்கள் நடப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய  மட்டத்தில் அரசியல் தலைமைத்துவம், செயற்திறனாக முடிவெடுக்கும் பொறிமுறை மட்டுமன்றி பரந்த பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்தின்  ஊடாக போதைப்பொருள் அச்சுறுத்தலை  முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த தேசிய நோக்கத்தை அடைவதற்காக , ”முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’  முன்னெடுக்கப்படுவதோடு பரந்தளவிலான பிரச்சார செயல்முறையின் ஊடாக போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து சமூகத்தின் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பாரிய திட்டமொன்றாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பிரச்சார திட்டத்தை செயல்படுத்துவதில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களால் மேற்கொள்ளக் கூடிய பங்களிப்பு குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றக் கும்பல்களின் நிதி பலம் என்பன பொருளாதாரம், சமூகக் கட்டமைப்பு, அரச பொறிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சியைக் கூட  வீழ்ச்சியடையச் செய்து  நாட்டையும் சமூகத்தையும் அழித்து வருவதாகத் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் இந்த அச்சுறுத்தலுக்கு இனிமேலும் இடமளிப்பதில்லையென முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் அரசியல்  நிழலின் கீழ் சுதந்திரமாக வளர்ந்த இந்தக் குற்றங்கள், தற்போது நாட்டையும் சமூகத்தையும் கடுமையாக ஆக்கிரமித்துள்ளது என்பதையும், அதற்கு பொலிஸ், சுங்கம், மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் உள்ளிட்ட முக்கிய அரச நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

மீண்டும்  இவ்வாறான நிலைமை ஏற்படாதவாறு எதிர்கால சந்ததியினருக்காக  இந்த தேசிய பேரழிவைத் தோற்கடிப்பதற்கு  அனைவர்  மீதும் சுமத்தப்பட்டுள்ள மறுக்க முடியாத பொறுப்பை ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு  எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும்.

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, ஆகியோருடன் அரச மற்றும் தனியார் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொழுதுபோக்கு துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

https://www.ilakku.org/the-entire-country-must-unite-to-eradicate-the-drug-scourge/

கடந்த காலங்களை விட தற்போது கடற்படையினர் வினைத்திறனுடன் செயற்படுகின்றனர்

1 week ago

கடந்த காலங்களை விட தற்போது கடற்படையினர் வினைத்திறனுடன் செயற்படுகின்றனர்

adminOctober 24, 2025

கடந்த காலத்தை விட கடற்படையினர் அதிக வினைத்திறனுடன் செயற்படுகின்றனர். அவர்கள் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மிக கடுமையாக முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண மீனவர் சங்கங்களின் இணையத்தின் செயலாளர்முகமட் ஆலம் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்தில்  நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,

கடந்த கால அரசாங்கத்தை. விட தற்போதைய அரசாங்கம் இந்திய மீனவர்களை கைது செய்வதில் அதிக அக்கறை காட்டுகின்றது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். வட மாகாணத்தை பிரதிநிதிப்படுத்தும் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.  இந்த அரசாங்கத்தை கொண்டு வந்ததில் எங்களுக்கு ஒரு பங்கு உண்டு. எனவே கடற்தொழிலாளர்களின் நலன்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த அரசாங்கம் செயற்பட வேண்டும்.

பல்வேறு பகுதிகளில் இழுவை மீன்பிடி படகு தொழில் நடைபெறுகிறது. அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும். கடந்த காலத்தை விட இந்த அரசாங்கம் ஒரே நாளில் அதிக அளவு இந்திய மீனவர்களை கைது செய்தது. கடந்த மாதம் ஐந்து படகுகளில் 40 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் உண்மையில் வரவேற்கத்தக்க விடயம்.

கடல் எங்களுக்கு உரியது கச்சதீவும் எங்களுக்கு உரியது. இந்த இறையாண்மைக்கு உட்பட்ட நாட்டில் நாங்களும் ஒரு பங்காளி என்ற வகையில், நாங்கள் இந்த கோரிக்கையை விடுகின்றோம்.  இந்திய மீனவர்களின் கைது நடவடிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் கடல் சார் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடற்படையினரும் திறமையாக செயல்படுகின்றனர் அவர்கள் கடந்த கால அரசாங்கத்தை விட தற்பொழுது உள்ள அரசாங்கத்தில் மிகவும் வினை திறனுடன் செயல்படுகின்றனர் என மேலும் தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2025/221887/

இலங்கைக்கு பரிசாக வழங்கிய யானைகளை மீண்டும் திரும்பப் பெற தாய்லாந்து நடவடிக்கை!

1 week ago

New-Project-261.jpg?resize=750%2C375&ssl

இலங்கைக்கு பரிசாக வழங்கிய யானைகளை மீண்டும் திரும்பப் பெற தாய்லாந்து நடவடிக்கை!

தாய்லாந்து பரிசாக வழங்கிய இரண்டு யானைகளை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்காக தாய்லாந்து அரசாங்கம் இலங்கையுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. 

இலங்கையில் குறித்த யானைகள் மேசமாக பராமறிக்கப்படுவதாகவும், தவறாக நடத்தப்படுவதாகவும் வெளியான செய்திகளைத் தொடர்ந்து அவற்றை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வர தாய்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

தாய்லாந்து யானைகளான  Plai Pratu Pha மற்றும் Plai Srinarong ஆகியவற்றின் நலன் குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், தாய்லாந்தின் பிரதிப் பிரதமரும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருமான Suchart Chomklin வியாழக்கிழமை (23) தனது முகநூல் பக்கத்தில் அவசரமாக இலங்கைக்கு விமானத்தில் செல்ல திட்டமிட்டுள்ளதாக பதிவிட்டார்.

கடந்த ஆண்டு தாய் யானை மீட்புக் குழுவால் இந்த கவலைகள் முதலில் வெளிப்படுத்தப்பட்டன.

தாய்லாந்தால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட யானைகள், அதிகமாக வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டு, சரியான வாழ்க்கைத் தரங்கள் இல்லாமல் உள்ளன என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது. 

விலங்குகள் எல்லா நேரங்களிலும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்காக அவை உடனடியாக தாய்லாந்திற்குத் திரும்ப வேண்டும் என்று அந்தக் குழு வலியுறுத்தியது.

Thai elephants in Sri Lanka

இந்த நிலையில் இது தொடர்பான நேற்றைய முகநூல் பதிவில் தாய்லாந்தின் பிரதிப் பிரதமர், யானைகளின் நிலைமையினை பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மற்றும் பிற தாய்லாந்து அரசு நிறுவனங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இந்தப் பிரச்சினையைப் புறக்கணிக்கவில்லை என்றும் விளக்கினார்.

யானைகளை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுடனும் ஒருங்கிணைக்க இராஜதந்திர முயற்சிகளுக்கு ஒப்புதல் அளித்த பிரதமர் அனுடினுடன் இந்த விடயத்தைப் பற்றி விவாதித்ததாகவும் கூறினார்.

எனினும், இந்த செயல்முறைக்கு சிறிது நேரம் ஆகலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்களுடன் இணைந்து யானைகளின் உடல்நலம் குறித்து மதிப்பிடுவதற்காக இலங்கைக்கு செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யானைகளை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான இராஜதந்திர விவாதங்கள் தொடரும் வரை, உள்ளூர் பராமரிப்பாளர்கள் அவற்றுக்கு முறையான பராமரிப்பை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பிரதமர் Suchart Chomklin தெளிவுபடுத்தினார். 

https://athavannews.com/2025/1451029

Checked
Fri, 10/31/2025 - 23:27
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr