(நா.தனுஜா)
உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளைக் கைவிடுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கூட்டாக வலியுறுத்தியிருக்கும் சர்வதேச சட்ட வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள், உள்ளகப் பொறிமுறையின் ஊடாக உண்மை மற்றும் நீதியை அடைந்துகொள்ளமுடியாது என பாதிக்கப்பட்ட தரப்பினரால் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு செவிசாய்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் நேர்மைத்தன்மை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்த உத்தேச ஆணைக்குழு தொடர்பான தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, சுவீடன், பின்லாந்து, அவுஸ்திரேலியா, நேபாளம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளை தளமாகக் கொண்டு இயங்கிவரும் மனித உரிமைகள் சட்ட வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் தமது கையெழுத்துடன் கூடிய கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் கலாநிதி ஷரிகா திரணகம, பிரிட்டன் பர்மிங்ஹாம் சட்டக் கல்லூரியின் சர்வதேச சட்ட மற்றும் மனித உரிமைகள் பிரிவின் தலைவர் பேராசிரியர் மொஹமட் ஷஹாபுதீன், பிரிட்டன் ஒக்ஸ்போர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஃபரா மிலர், லண்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிரன் க்ரெவல், பிரிட்டன் பாத் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஒலிவர் வோல்ற்றன், இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்களின் துறைசார் நிபுணர்களான கலாநிதி கேப்ரியேல் டியெட்ரிச், கலாநிதி ரோஹினி ஹென்ஸ்மன், கலாநிதி குர்மீற் கௌர், கலாநிதி சுஜாதா பட்டேல் உள்ளடங்கலாக 72 பேரின் பெயர்கள் இதில் உள்ளடங்குகின்றன.
அதன்படி, மேற்குறிப்பிட்ட சட்ட வல்லுநர்கள், துறைசார் நிபுணர்களின் கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு தற்போது இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் தொடர்பில் எமது தீவிர கரிசனையை வெளிப்படுத்துகின்றோம்.
இந்த உத்தேச ஆணைக்குழு தொடர்பில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி போரின் மிகையான தாக்கத்துக்குள்ளான வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட தரப்பினரும், சிவில் சமூக அமைப்புக்களும் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டிருக்கும் பின்னணியிலேயே நாம் எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துகின்றோம். குறிப்பாக, ஆணைக்குழுவுக்கு எதிரான நிலைப்பாடுகளை உள்ளடக்கி சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதி இடைக்கால செயலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தன. சுயாதீன ஆணைக்குழுக்கள் மீதான நம்பிக்கையின்மை, கடந்த காலங்களில் நிறுவப்பட்ட ஆணைக்குழுக்கள் நீதியை நிலைநாட்டுவதில் தோல்வி அடைந்துள்ளமை, தற்போதைய தலைமைத்துவத்தின் கடந்தகால செயற்பாடுகள், காணாமல்போனோர் பற்றி அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகிய கட்டமைப்புக்களின் தோல்வி, அரச மீறல்கள் தொடர்ந்து மறுதலிக்கப்படல் போன்ற விடயங்கள் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.
கடந்தகால மீறல்கள் தொடர்பான உண்மைகளை அறிந்துகொள்வதற்குத் தனிநபர்கள் கொண்டிருக்கும் உரிமையானது உடன்பாட்டு அடிப்படையிலான ஐ.நா அமைப்புக்கள், ஐ.நா விசேட அறிக்கையிடல்கள், பிராந்திய நீதிமன்றங்கள் மற்றும் சர்வதேச, உள்ளக நீதிமன்றங்கள் ஆகியவற்றின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
போரின் பின்னரான உண்மையைக் கண்டறியும் பொறிமுறையானது மிக ஆழமாகப் பிளவுபட்டிருக்கும் சமூகங்களை மீள் இணைப்பதற்கும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான தீர்வினை வழங்குவதற்கும் உதவக்கூடும். இருப்பினும் அப்பொறிமுறையானது நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதும், அனைவரையும் உள்ளடக்கியதும், பாதிக்கப்பட்ட தரப்பினரை வலுவூட்டக்கூடியதும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நோக்கி முன்னகர்த்திச்செல்லக்கூடியதுமான முறையில் அமையவேண்டியது மிக அவசியமாகும். அத்தோடு குறித்த நாடு உண்மையைக் கண்டறியும் பொறிமுறைக்குத் தயார் நிலையில் இருக்கவேண்டும்.
அதன்படி உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு முற்படும் அரசாங்கம் முதலில் கடந்தகால மீறல்கள் தொடர்பில் நியாயமான விசாரணையை முன்னெடுப்பதற்குத் தாம் கொண்டிருக்கும் அரசியல் ரீதியான தன்முனைப்பை வெளிக்காட்டவேண்டும். காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் ஊடாக பாதிக்கப்பட்டோர் சார்ந்த தமது அரசியல் ரீதியான தன்முனைப்பை வெளிக்காட்டுவதற்குரிய சந்தர்ப்பம் தற்போதைய அரசாங்கத்துக்கு இருந்தபோதிலும், அதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.
அடுத்ததாக உண்மையைக் கண்டறியும் பொறிமுறையானது பரந்துபட்ட அடிப்படையைக் கொண்டிருக்கவேண்டும். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக மனித உரிமை மீறல்கள், தொடர் கண்காணிப்பு, சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான ஒடுக்குமுறைகள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான அழுத்தங்கள், பொருளாதார நெருக்கடியின் பின்னர் மக்களின் பொருளாதார மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான உத்தரவாதத்தை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமை போன்ற விடயங்களுக்காகத் தற்போதைய அரசாங்கம் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் பின்னணியிலேயே உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பாதிக்கப்பட்டோரும், சாட்சியாளர்களும் உத்தேச பொறிமுறை மீது நம்பிக்கை கொண்டிருப்பதுடன், அதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு இணங்கவேண்டும். ஆனால் இலங்கையில் நிலைமாறுகால நீதி உறுதிப்படுத்தப்படவேண்டிய குற்றங்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர் இப்பொறிமுறையை வலுவாக எதிர்ப்பது, இப்பொறிமுறை ஸ்தாபிக்கப்படக்கூடாது என நாம் வலியுறுத்துவதற்கான காரணமாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் முற்றுமுழுதான உள்ளகப் பொறிமுறையின் ஊடாக உண்மை மற்றும் நீதியை அடைந்துகொள்ளமுடியாது எனவும், ஆகவே உள்ளக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் சர்வதேசத்தின் பங்கேற்பை உறுதிப்படுத்துவது அவசியம் எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு செவிசாய்க்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறையுடன் இணைந்து பணியாற்றுமாறும் அரசாங்கத்தைக் கோருகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
https://www.virakesari.lk/article/183814