ஊர்ப்புதினம்

அம்பிட்டிய தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

1 week ago

அம்பிட்டிய தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

Dec 9, 2025 - 09:37 AM

அம்பிட்டிய தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (08) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. 

அத்துடன், அவரை இதுவரை ஏன் நீதிமன்றில் ஆஜர்படுத்தவில்லை என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார். 

கடந்த 2023-10-23 ஆம் திகதி ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியொன்றில், "வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்" என சுமணரத்ன தேரர் தெரிவித்திருந்தார். 

இவரது இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக, 2023-10-27 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க ரணஞ்சக என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டது. அதற்கமைய, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

இவ்வழக்கு தொடர்பான கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், குறித்த தேரரை கைது செய்யுமாறு கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. 

இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரான தேரர் நீதிமன்றில் ஆஜராகவில்லை. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதை வழக்கு தொடுநர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தார். 

இதனையடுத்து, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதவான், அவரை இதுவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்குக் கட்டளையிட்டார்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

https://adaderanatamil.lk/news/cmiy26w9e02jmo29n0ad10ot6

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

1 week ago

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

Dec 9, 2025 - 08:28 AM

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்குப் பலத்த மழை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

குறித்த அறிவிப்பு இன்று (09) காலை 7.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், இது நாளை (10) காலை 7.30 மணி வரை 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, மேற்படி பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

நாடளாவிய ரீதியில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைபெற்று வருவதுடன், இதன் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

பலத்த மழையுடன் ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmixzqwa702jlo29n6qp7k6z3

டித்வா புயலால் 81 000 ஆயிரம் வீடுகள் சேதம் 635 பேர் பலி, 192 பேரைக் காணவில்லை

1 week ago

டித்வா புயலால் 81 000 ஆயிரம் வீடுகள் சேதம் 635 பேர் பலி, 192 பேரைக் காணவில்லை

Published By: Vishnu

09 Dec, 2025 | 04:14 AM

image

(எம்.மனோசித்ரா)

தென்கீழ் பருவ பெயர்ச்சி காலநிலை வலுவடைந்து வருவதால் எதிவரும் தினங்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடி மழை பெய்யும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு மழைவீழ்ச்சி அதிகரிக்கும் பட்சத்தில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளை திறக்க வேண்டியேற்படும் என்பதால், தற்போது அவை சிறியளவில் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த வாரம் முழுவதும் நிலவிய சீரற்ற காலநிலையால் நேற்று திங்கட்கிழமை மாலை வரை 635 பேர் உயிரிழந்துள்ளதோடு, 192 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை 512 123 குடும்பங்களைச் சேர்ந்த 1, 766, 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5325 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 81 163 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. எனினும் தற்போது இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவடைந்து வருகிறது. அந்த வகையில் 22 218 குடும்பங்களைச் சேர்ந்த 69 861 பேர் 690 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ள.

காலநிலை 

நாடளாவிய ரீதியில் வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்ககப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை

பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கோந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிலாபத்திலிருந்து புந்தனம் மற்றும் காங்கோந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது.

கடல் நிலை

சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் காங்கோத்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓhளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலை வரை, காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை

 கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையிலிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கண்டியில் ஹதரலியத்த, யட்டிநுவர, உடுதும்பர, பஹஹேவாஹெட்ட, மெததும்பர, பஸ்பாகே கோரள, தெல்தோட்டை, பூஜாபிட்டிய, கங்கா இஹல கோரள, பன்வில, கங்வத்த கோரள, உடபலாத்த, ஹரிஸ்பத்துவ, குண்டசாலை, மினிப்பே, தொலுவ, தும்பனை, அக்குரனை, உடுநுவர மற்றும் பஹததும்பர பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தொடர்ந்தும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலையில் கேகாலை, கலிகமுவ, மாவனல்ல, புளத்கொஹூபிட்டிய, அரநாயக்க, ஹட்டியாந்தோட்டை, ரம்புக்கனை மற்றும் வரகாலப்பொல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், குருணாகலில் மாவத்தகம, மல்லவபிட்டி மற்றும் ரிதீகம பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், மாத்தளையில் நாவுல, வில்கமுவ, பல்லேபொல, அம்பன்கங்க கோரள, லக்கல பல்லேகம, உக்குவெல, ரத்தோட்டை, மாத்தளை மற்றும் யட்டவத்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/232830

முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களை குறைக்கும் நீர்ப்பாசனத் திணைக்களம்!

1 week ago

Published By: Digital Desk 1

09 Dec, 2025 | 10:38 AM

image

வானிலை முன்னறிவிப்புக்கு அமைய எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதால் நாட்டின் பல முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களை குறைத்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அனுராதபுரம் மாவட்டத்தில் நாச்சதுவ, ராஜாங்கனை, தெதுரு ஓயா, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் லுனுகம்வெஹெர, வெஹெரகல மற்றும் அம்பாறை மாவட்டத்தில் சேனநாயக்க சமுத்திரம் ஆகிய இடங்களில் நீர் மட்டத்தைக் குறைக்க தற்போது நீர்; திறந்து விடப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர், நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

தற்போது வெளியிடப்படும் நீரின் அளவு கீழ் பகுதிகளில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுவரை வெளியிடப்பட்டுள்ள முன்னறிவிப்புகளின்படி, எதிர்காலத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால்,இந்த நிலைமைகளைக் கண்காணிக்க நீர்ப்பாசனத் திணைக்கள அலுவலகங்கள் 24 மணித்தியாலமும் திறந்திருப்பதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, எதிர்கால நிலைமைகள் குறித்து விழிப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பருவமழை தற்போது தொடங்கியுள்ளதால், இது தொடர்பாக விழிப்புடன் இருப்பது முக்கியம் என்றும், தற்போதைய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, செயற்படவேண்டும் என்றும் நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர், நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/232841

கிளிநொச்சியில் பாலம் புனரமைப்பு பணியில் இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர்

1 week 1 day ago

கிளிநொச்சியில் பாலம் புனரமைப்பு பணியில் இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர்

Published By: Vishnu

08 Dec, 2025 | 07:46 PM

image

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் ஏ35 பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் புளியம்பொக்கனை பாலம் சேதமடைந்திருந்தது.

இதன் காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்து காணப்பட்டது. கடமைகளுக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்கள் தொடக்கம் பொது மக்கள் வரை இந்த பாதை ஊடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதனால் கடும் நெருக்கடிக்குள் உள்ளாகினர்.

எனவே இதனை கருத்தில் கொண்டு உடனடியாக பாலத்தை புனரமைத்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வரும் வகையில் இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவுக்கு பாலத்தை புனரமைக்கும் பொறுப்பை இலங்கை அரசு வழங்கியிருந்தது.

அதற்கமைவாக கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவினர் குறித்த பாலத்தை புனரமைக்கும் பணியினை ஞாயிற்றுக்கிழமை (07) முதல் தொடங்கியிருக்கின்றனர்.

597864547_1391461589006196_7834244766903

597873959_1531013011484387_4061768754509

597527793_1391461042339584_3290558956799

596570384_1391461312339557_8131735910189

596205671_1391461082339580_6755464077233

596416288_1391461655672856_4450613403028

595286736_1391461752339513_3724648749775

595546612_1391460962339592_6156366509040

595113616_1391461205672901_3739108459837

594671941_1391461479006207_7144293831330

593995004_1391461162339572_3037189238994

https://www.virakesari.lk/article/232816

400 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிப்பொருட்களுடன் சீன விமானம் நாட்டை வந்தடைந்தது

1 week 1 day ago

Published By: Vishnu

08 Dec, 2025 | 06:57 PM

image

(நா.தனுஜா)

பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சுமார் 400 மில்லியன் ரூபா பெறுமதிவாய்ந்த 84 தொன் மனிதாபிமான உதவி நிவாரணப்பொருட்களை ஏற்றிய சீன விமானம் திங்கட்கிழமை (8) நாட்டை வந்தடைந்தது.

'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கு சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், வணிக நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் உதவிகளை வழங்கிவருகின்றனர்.

அதற்கமைய பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவி முயற்சிகளுக்குப் பங்களிப்புச்செய்யும் வகையில் சீனா அரசாங்கம் ஏற்கனவே ஒரு மில்லியன் டொலர் நிதியுதவியையும், 10 மில்லியன் ஆர்.எம்.பி பெறுமதியான நிவாரணப்பொருட்களையும் வழங்கியுள்ளது.

அதுமாத்திரமன்றி சீன செஞ்சிலுவை சங்கத்தினால் இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு 100,000 டொலர் உடனடி நிதியுதவியும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் மேலும் சுமார் 400 மில்லியன் ரூபா பெறுமதிவாய்ந்த 84 தொன்களுக்கு மேற்பட்ட மனிதாபிமான உதவிப்பொருட்களுடன் ஷங்காய் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட போயிங் 747 கார்கோ விமானம் திங்கட்கிழமை (8) காலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தது.

மேற்படி மனிதாபிமான நிவாரணப்பொருட்களில் வெள்ளத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவக்கூடிய உயிர்காக்கும் ஜக்கெட்கள், கூடாரங்கள், போர்வைகள், மெத்தை விரிப்புக்கள் என்பன உள்ளடங்குகின்றன.

நாட்டை வந்தடைந்த இவ்விமானத்தை வரவேற்பதற்கு துறைமுகங்கள் மற்றும் விமானசேவைகள் அமைச்சர் அநுர கருணாதிலக, பாதுகாப்புப் பிரதியமைச்சர் அருண ஜயசேகர மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/232815

நாட்டு மக்கள் துன்பப்படுகிறார்கள் ; அவசரமாக பாராளுமன்றம் கூட வேண்டும் ; பிரதமரிடம் நாமல் கோரிக்கை!

1 week 1 day ago

08 Dec, 2025 | 12:26 PM

image

அவசரமாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ தனது X தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

நாட்டு மக்கள் துன்பப்படுகிறார்கள். கிராமங்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன.  வீடுகள் சேதமடைந்துள்ளன, குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன, குழந்தைகளுக்கு உணவோ சுத்தமான நீரோ இல்லை. பலர் தற்காலிக முகாம்களில் வாழ்கிறார்கள், சிலர் வெள்ள நீரில் நாளுக்கு நாள் நடந்து செல்கிறார்கள். மழை குறைந்த பின்னரும் வீடுகள் கிடைப்பது உறுதி இல்லை. 

இதனால் அவசரமாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் உத்தியோகபூர்வமாக கோரியுள்ளேன்.

25 மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நேரத்தில் நாம் கால தாமதம் செய்ய கூடாது. ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பான நிலைக்கு மாறும் வரை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வரை, அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து கண்காணிக்க வேண்டும். 

இது குறித்து விவாதிக்க பாராளுமன்றம் ஒவ்வொரு வாரமும் கூட வேண்டும் என நாமல் ராஜபக்ஷ தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். 

நாட்டு மக்கள் துன்பப்படுகிறார்கள் ; அவசரமாக பாராளுமன்றம் கூட வேண்டும் ; பிரதமரிடம் நாமல் கோரிக்கை! | Virakesari.lk

கலா ஓயா வெள்ளத்தில் பேருந்தில் சிக்கிய பல்கலைக்கழக மாணவர்கள் செய்த காரியம்

1 week 1 day ago

08 Dec, 2025 | 04:59 PM

image

டித்வா பேரிடரின்போது புத்தளம் ஏ–12 வீதியில் பெருக்கெடுத்த கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள், தமது மீட்பு நடவடிக்கைகளுக்குத் துரித நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் திங்கட்கிழமை (08) கடிதமொன்றைக் கையளித்தனர்.

ஆளுநர் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, பல்கலைக்கழக மாணவர்களின் உடல் மற்றும் உள நலம் குறித்து ஆளுநர் விசாரித்தறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, பேரிடரின்போது தாம் எதிர்கொண்ட சவாலான அனுபவங்களை மாணவர்கள் ஆளுநருடன் பகிர்ந்துகொண்டனர். இதன்போது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்களது சக பயணி ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் சடலமாக மீட்கப்பட்ட துயரச் சம்பவம் குறித்தும், அந்தத் தருணத்தில் அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடி நிலை குறித்தும் ஆளுநரிடம் விவரித்தனர்.

மேலும், மீட்புப் பணிகளுக்காக வருகை தந்த மூன்று கடற்படை வீரர்கள், வெள்ளம் சூழ்ந்த அந்த ஆபத்தான சூழலில் 24 மணி நேரத்துக்கும் மேலாகத் தம்முடன் தங்கியிருந்ததோடு, வெள்ளத்தில் வீழ்ந்த சிலரையும் உயிருடன் மீட்டனர் என்பதையும் மாணவர்கள் ஆளுநரிடம் நினைவுகூர்ந்தனர்.

இத்தகைய அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அந்தக் கடற்படை வீரர்களைச் சிறப்பிக்குமாறு ஜனாதிபதி அவர்களிடம் பரிந்துரைக்குமாறும் மாணவர்கள் ஆளுநரிடம் விசேட வேண்டுகோள் விடுத்தனர்.

மிகவும் ஆபத்தான சூழலில், எவ்வித தாமதமுமின்றி மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவிய அனைத்துத் தரப்பினருக்கும், விசேடமாக மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி வழிநடத்திய மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட மாணவர்கள், இந்த நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையிலான உத்தியோகபூர்வ கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தனர்.

மாணவர்களால் கையளிக்கப்பட்ட குறித்த கடிதத்தை, ஆளுநர் உடனடியாகவே ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அனுப்பி வைத்தார்.

கலா ஓயா வெள்ளத்தில் பேருந்தில் சிக்கிய பல்கலைக்கழக மாணவர்கள் செய்த காரியம் | Virakesari.lk

யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிடவுள்ள கடற்தொழிலாளர்கள்

1 week 1 day ago

08 Dec, 2025 | 05:03 PM

image

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் நாமே கடலில் இறங்கி போராடுவோம் என யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு தொடக்கம் நெடுந்தீவு வரையான மீனவ சங்க பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கிறிஸ்ணன் அகிலனை  திங்கட்கிழமை (08) நேரில் சந்தித்து, இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர். 

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் எமது கடல் வளங்கள் அழிக்கப்படுவதும் , எமது வலைகள் சேதமாக்கப்பட்டு, எமது வாழ்வாதாரத்தை அழிப்பதுடன், பொருளாதார ரீதியாகவும் எமக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். 

எனவே இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த உடனடியாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் நாமே கடலில் இறங்கி அவர்களுக்கு எதிராக போராடுவோம். 

இதன் முதல் கட்டமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில், நீரியல்வளத் திணைக்களத்தின் முன்னிருந்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்து மாவட்டச் செயலகம் வரை செல்லவுள்ளோம். அங்கு  மாவட்டச் செயலக வாயிலை மூடி எமது போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். அதொரு என தெரிவித்தனர். 

யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிடவுள்ள கடற்தொழிலாளர்கள் | Virakesari.lk

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்குக்கான போராட்டம்

1 week 1 day ago

08 Dec, 2025 | 05:11 PM

image

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு வேண்டுமெனக் கோரி போராட்டமொன்று இன்றையதினம் திங்கட்கிழமை (08)  முன்னெடுக்கப்பட்டது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் பழைய பூங்கா வளாகத்தில் அண்மையில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டப்பட்டது.

இந்நிலையில் பழைய பூங்காவுக்கு மத்தியில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைத்தல் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகள் என்ற பெயரில் நடைபெறும் சகல நடவடிக்கைகளுக்கும் எதிராக கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் அண்மையில் இடைக்கால தடைக் கட்டாணை ஒன்றை வழங்கியது.

இந்நிலையில் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு தேவை என்பதை வலியுறுத்தி விளையாட்டு துறைசார்ந்தவர்கள் பேரணியை முன்னெடுத்தனர்.

சென் போஸ்கோ ஆரம்ப பாடசாலை முன்பாக கூடிய போராட்டக்காரர்கள் அங்கிருந்து பேரணியாக பழைய பூங்கா பகுதிக்கு சென்று அப்பகுதியை பார்வையிட்டதுடன் இறுதியில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு சென்று ஜனாதிபதிக்கான மகஜரை மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் கையளித்தனர்.


யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்குக்கான போராட்டம் | Virakesari.lk

பெண் விமானியின் குற்றச்சாட்டு ; DNA பரிசோதனைக்கு கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன மறுப்பு!

1 week 1 day ago

08 Dec, 2025 | 05:04 PM

image

பெண் விமானியான செவ்வந்தி சேனாதிவீர என்பவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு இணங்க, DNA பரிசோதனையை மேற்கொள்ளுவதற்கு, இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன, மறுப்பு தெரிவித்துள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்துள்ளார். 

எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான் என கூறி பெண் ஒருவர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜரான பெண், “எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான். தந்தை உரிமையை நிலைநாட்டுவதற்கு DNA பரிசோதனை செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த வழக்கின் பிரதிவாதியான இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன 100,000 ரூபா பெறுமததியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜெருசா தம்பையா, குழந்தையின் தந்தை யார் என்பதைக் கண்டறிய DNA பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சாமிக்க கருணாரத்ன சார்பில் ஆஜரான சட்டத்தரணி அசேல ரேகவ, DNA பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது என்றும் நிரூபிக்க வேண்டிய சுமை முறைப்பாட்டாளரிடம் தான் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

சாமிக்க கருணாரத்ன  DNA பரிசோதனை கோரிக்கையை நிராகரிப்பதாகவும், குழந்தையின் தந்தை உரிமையை மறுப்பதாகவும் சட்டத்தரணி அசேல ரேகவ நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இதனை கருத்தில் கொண்ட நீதவான், வழக்கு விசாரணையை ஜனவரி 30 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

பெண் விமானியின் குற்றச்சாட்டு ; DNA பரிசோதனைக்கு கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன மறுப்பு! | Virakesari.lk

அனர்த்தத்தினால் மக்கள் மத்தியில் மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு!

1 week 1 day ago

அனர்த்தத்தினால் மக்கள் மத்தியில் மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு!

08 Dec, 2025 | 03:33 PM

image

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் மக்கள் மத்தியில் மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரித்துள்ளதாக இதய நோய் தொடர்பான வைத்திய நிபுணர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அனர்த்தத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான நிலைமைகள் காரணமாக மக்கள் மத்தியில் மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

இதனால் மக்கள் மத்தியில் மாரடைப்பு , ஏனைய இதய நோய்கள், மனநல பாதிப்புகள் உள்ளிட்டவை ஏற்படுவதற்கான ஆபத்து காணப்படுவதாக இதய நோய் தொடர்பான வைத்திய நிபுணர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/232773

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம்

1 week 1 day ago

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம்

Dec 8, 2025 - 03:52 PM

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம்

பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்குவதற்காக தேசிய அளவிலான குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார். 

இன்று (08) இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர இதனை தெரிவித்தார். 

வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் உதவிகள் மற்றும் உபகரணங்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சரியாகக் கிடைப்பதை இந்தக் குழு உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்தார். 

இந்தக் குழுவின் தலைவராக பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்தக் குழு இன்று (08) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmix059tv02iso29ndslfe5ct

நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்

1 week 1 day ago

Published By: Digital Desk 3

08 Dec, 2025 | 03:06 PM

image

நிவாரண பணிகளுக்கு  ஞாயிற்றுக்கிழமை (டிச.07) கொழும்புக்கு வருகை தந்த  அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம்  இன்று திங்கட்கிழமை (டிச.08) காலை நிவாரண பொருட்களுடன் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

நாடு முழுவதும் நிவார பணிகளுக்கு அமெரிக்காவிமான படையின் இரு Super Hercules  விமானங்கள் வருகை தந்துள்ளதுடன் இலங்கை விமான படையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/232771

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை மார்ச் மாதம்!

1 week 1 day ago

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை மார்ச் மாதம்!

08 Dec, 2025 | 01:15 PM

image

கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு பிரதான நீதவான் அசங்க பி பண்டாரகம இன்று திங்கட்கிழமை (08) உத்தரவிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதி நாடகம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில்  ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு எதிராக கருவாத்தோட்டம் பொலிஸாரால் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு கொழும்பு பிரதான நீதவான் அசங்க பி பண்டாரகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் ஏனைய சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். 

இதனையடுத்து, இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/232760

600க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் பாதிப்பு

1 week 1 day ago

600க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் பாதிப்பு

இலங்கையை சமீபத்தில் தாக்கிய திட்வா புயல் புத்தளம் மாவட்டத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகளை அழித்து, பல விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்க வைத்துள்ளதாக மீன்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மீன்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் புத்தளம் மாவட்ட மக்களுடன் உரையாடலை மேற்கொண்ட போது இவ் விடயம் தெரியவந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட இறால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் உதவும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

"சமீபத்திய பேரழிவால் பாதிக்கப்பட்ட எவரையும் நாங்கள் விட்டுவிட மாட்டோம்"என்று அவர் கூறினார்.

மேலும்,கடல் அரிப்பு இறால் வளர்ப்பையும் பாதித்துள்ளதாக  தெரிய வந்தது.கடல் அரிப்பை தடுக்க புத்தளம் கடற்கரையில் ஒரு சுவரைக் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளைஅரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/600க்கும்-மேற்பட்ட-இறால்-பண்ணைகள்-பாதிப்பு/175-369246

மண்சரிவு அனர்த்தங்கள்: கண்டி மாவட்டத்தில் 35 மாணவர்கள் – 10 ஆசிரியர்கள் மரணம்!

1 week 1 day ago

மண்சரிவு அனர்த்தங்கள்: கண்டி மாவட்டத்தில் 35 மாணவர்கள் – 10 ஆசிரியர்கள் மரணம்!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அழகக்கோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாத்தளை மாவட்டத்தில் ஒரு பாடசாலை மாணவர் உயிரிழந்துள்ளதாகவும், நுவரெலியா மாவட்டத்தின் தகவல்கள் தற்போது திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காணாமல் போன மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், கண்டி மாவட்டத்தில் 97,850 பாடசாலை மாணவர்கள் அனர்த்த நிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

இந்தநிலையில் மாத்தளை மாவட்டத்தில் 8,500 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரிய எண்ணிக்கையிலான மாணவர்கள் தற்போது இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும்போது, அவர்கள் அருகில் உள்ள பாடசாலைக்கு சென்று தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.samakalam.com/மண்சரிவு-அனர்த்தங்கள்-க/

🏆 மன்னார் மாணவர்களின் வரலாற்றுச் சாதனை!

1 week 1 day ago

🏆 மன்னார் மாணவர்களின் வரலாற்றுச் சாதனை!

adminDecember 8, 2025

WhatsApp-Image-2025-12-07-at-9.53.48-PM-

மன்னார் UCMAS மாணவர்கள் ஜோர்ஜியாவில் பட்டொளி வீசிப் பறந்தனர்!

ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 6) நடைபெற்ற UCMAS சர்வதேச மட்டப் போட்டியில், இலங்கையிலிருந்து கலந்துகொண்ட 58 மாணவர்கள் ஏராளமான வெற்றிக் கிண்ணங்களை நாட்டிற்குக் கொண்டு வந்துள்ளனர்!

இந்தச் சாதனைப் பட்டியலில், மன்னார் UCMAS பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் பங்கேற்று, இலங்கைப் பெயரையும், குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் பெருமையையும் உலக அரங்கில் நிலைநாட்டியுள்ளனர்.

🥇 வெற்றி வாகை சூடிய நட்சத்திரங்கள்

மன்னார் மாவட்டத்தின் சார்பில் வெற்றி கிண்ணங்களைப் பெற்ற மாணவர்களில், வின்சென்ட் செஷான் ஜெத்னியல் (மன். புனித சேவியர் ஆண்கள் தேசிய பாடசாலை) மற்றும் ராஜநாயகம் ரியானா (தோட்ட வெளி தமிழ்க் கலவன் பாடசாலை) ஆகியோர் 1st Runner Up வெற்றிக் கிண்ணங்களைப் பெற்றனர். வின்சென்ட் செகைனா தியோரா (மன்னார் டிலாஷால் ஆங்கிலப் பாடசாலை) 2nd Runner Up வெற்றிக் கிண்ணத்தையும், வின்சென்ட் செலமியா (மன்னார் டிலாசால் ஆங்கிலப் பாடசாலை) 3rd Runner Up வெற்றிக் கிண்ணத்தையும் பெற்று மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்கள்.

🌟 உலகக் கோப்பைப் போட்டியில் தலைமை!

அத்துடன், அங்கு நடைபெற்ற UCMAS World Cup போட்டிக்குரிய அணியின் தலைவராக மன்னார் யூசி மாஸ் பயிற்சி நிலைய மாணவன் வின்சென்ட் செஷான் ஜெத்னியல் தலைமை தாங்கி, வெள்ளிப் பதக்கத்தை (Silver Medal) இலங்கைக்குப் பெற்றுத் தந்துள்ளார். இது இலங்கைக்கும் மன்னார் மாவட்டத்துக்கும் கிடைத்த மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரமாகும்.

இச்சாதனை மாணவர்களுக்கு மன்னார் யூசி மாஸ் பயிற்சி நிலைய நிர்வாகி திரு. நடராஜா கேதீஸ்வரன் மற்றும் ஆசிரியை திருமதி. யசோதா கேதீஸ்வரன் ஆகியோரின் சிறந்த வழிகாட்டுதலே அடித்தளமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை படைத்த மாணவர்களுக்கும், வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

இவர்கள் நால்வரும் மன்னார் யூசி மாஸ் பயிற்சி நிலைய நிர்வாகி நடராஜா கேதீஸ்வரன் மற்றும் ஆசிரியர் யசோதா கேதீஸ்வரன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இப்போட்டியில் பங்கு பற்றி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2025/223804/

பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

1 week 1 day ago

FLOOD-2.jpg?resize=750%2C375&ssl=1

பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை அனுபவித்தால், தேசிய மனநல நிறுவனத்தின் 1926 என்ற துரித இலக்கத்தை அழைத்து தேவையான ஆலோசனைகளைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக ராகம மருத்துவ பீடத்தின் சிறுவர் மற்றும் இளம் பருவ மனநல மருத்துவ நிபுணரான பேராசிரியர் மியுரு சந்திரதாச கூறுகையில், இதுபோன்ற பேரழிவுக்குப் பிறகு, அது நம் மனதை நேரடியாகப் பாதிக்கக்கூடும், இதன் விளைவாக, மக்களிடையே மன அழுத்தம் பொதுவானது என்றார்.

நீங்கள் அத்தகைய அழுத்தத்தில் இருந்தால், முதலில் பிரச்சினையை அடையாளம் காண வேண்டும், பின்னர் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வை அடையாளம் காண வேண்டும்.

இந்த சூழ்நிலையால் யாராவது கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால், அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவரை சந்தித்து தேவையான ஆலோசனைகளைப் பெற வேண்டும்.

இந்தப் பேரிடர் காரணமாக சிறுவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளானால், முடிந்தவரை அவர்களின் வாழ்க்கையை இயல்பாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உதாரணமாக, அவர்கள் விளையாடுவதற்கான சூழலை உருவாக்குதல், நண்பர்களைச் சந்திக்க வாய்ப்புகளை வழங்குதல் போன்றவற்றைச் செய்யலாம்.

நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், எரிச்சல், தூக்கமின்மை, பசியின்மை மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளை நீங்கள் அனுபவிக்கலாம்.

நமது நாடு பல்வேறு சந்தர்ப்பங்களில் இயற்கை பேரழிவுகளையும், பல கடுமையான அனுபவங்களையும் எதிர்கொண்டுள்ளது.

தைரியம் மற்றும் விடாமுயற்சியே இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப உதவியது என்றும் அவர் மேலும் கூறினார்.

https://athavannews.com/2025/1455543

மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழப்பு- தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம்!

1 week 1 day ago

WhatsApp-Image-2025-12-07-at-18.18.53-1.

மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழப்பு- தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை வீதியை மறித்து சிலர் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாரின் தலையீட்டினால் குறித்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கடந்த 02ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்திருந்த நிலையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வந்த உறவினர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு தலைமையகத்திற்கு அருகில் உள்ள வங்கியின் கிளையொன்றுக்கு முன்பாகயிருந்த துவிச்சக்கர வண்டியொன்றினை திருடிய குற்றச்சாட்டின் கீழ் சின்னஉப்போடையினை சேர்ந்த 22வயது இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இவரிடம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டதுடன் இவர் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பிலான வாக்குமூலம் பெறுவதற்காக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உறவினர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல் நடாத்தியிருந்ததாகவும் இதன்காரணமாகவே இளைஞன் நோய்தாக்கத்தி;றகுள்ளானதாகவும் தெரிவித்து உறவினர்கள் வீதியை மறித்து போராட்டம் நடாத்தினார்கள்.

குறித்த இளைஞனின் மரண விசாரணை அறிக்கை கிடைக்கவில்லையெனவும் அது தொடர்பான அறிக்கைகிடைக்கப்பெற்றதும் விசாரணைகள் முழுமையாக முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தபோதிலும் அதனை பொருட்படுத்தாமல் வீதியை மறித்து உறவினர்கள் போராட்டம் நடாத்தியதுடன் போக்குவரத்திற்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தனது மகன் சைக்கிளை எடுத்துச்சென்றது தொடர்பில் தகவல் கிடைத்ததும் உறவினர்களினால் அதனை மீளகொண்டு ஒப்படைத்தபோதிலும் தனது மகனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து கைதுசெய்துள்ளதாகவும் தனது மகனை பொலிஸார் தாக்கியுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

எனினும் குறித்த இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில் இருந்ததாகவும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த இளைஞனின் உறவினர்கள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடாத்தியதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

அங்குவந்த பொலிஸார் வீதியில் நின்றவர்களை வீதிக்கு அருகில் அழைத்துச்சென்று அவர்களுடன் நிலைமையினை தெளிவுபடுத்தினர்.

இதன்போது சம்பவ இடத்திற்குவந்த மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எல்.லீலாரத்தன அங்குவந்து கலந்துரையாடி இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

தமது பிள்ளை வீட்டிலிருந்து பொலிஸ் நிலையம் வரும்போது நல்ல நிலையிலேயே இருந்ததாகவும் இது தொடர்பில் சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் உயிரிழந்தவரின் தாயார் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1455568

Checked
Wed, 12/17/2025 - 01:57
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr