ஊர்ப்புதினம்

பல்தரப்பு “ பசுபிக் ஏஞ்சல் 25” பயிற்சி நடவடிக்கையை ஆரம்பிக்கும் அமெரிக்கா மற்றும் இலங்கை

1 week ago

Published By: Priyatharshan

08 Sep, 2025 | 05:17 PM

image

அமெரிக்காவும் மற்றும் இலங்கையும் பசுபிக் ஏஞ்சல் (Pac Angel) 25 பயிற்சி நடவடிக்கையை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இன்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்தன. 

இந்த பயிற்சி நடவடிக்கையை ஆரம்பிக்கும் நிமித்தம் இலங்கைக்கான அமெரிக்க பாதுகாப்பு தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் மெத்தியூ ஹவுஸ் இலங்கை விமானப்படையின் அதிகரிகளுடன் இணைந்துக் கொண்டார். 

பேரனர்த்த பதிலளிப்பு மற்றும் உயிர்காப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் நிமித்தம் செப்டெம்பர் 8 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை நடக்கும் இந்த 5-நாள் பல்தரப்பு நிகழ்வானது, சுமார் 90 அமெரிக்க மற்றும் 120 இலங்கை விமானப்படை வீரர்களை ஒன்றிணைப்பதுடன், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இந்தியா, ஜப்பான், மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களும் மற்றும் பார்வையாளர்களும் இதில் கலந்துகொள்கின்றனர். 

இந்த பயிற்சியானது, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை, மருத்துவ தயார்நிலை, வான் பாதுகாப்பு மற்றும் பொறியியல் ஒத்துழைப்பு என்பன தொடர்பில் கவனம் செலுத்துகிறது. 

அமெரிக்காவின் இரண்டு C-130J விமானங்கள் மற்றும் இலங்கையின் Bell-412, B-212 ஹெலிகப்டர்கள் மற்றும் கிங் எயார் 350 விமானம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெறும் இந்த Pac Angel 25 பயிற்சி நடவடிக்கையானது, நடப்பு உலக நெருக்கடிகளுக்கு அவசியமான விரைந்த மற்றும் உறுதியான பதிலளிப்பு செயற்பாடுகளுக்கான அணியமைப்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புகிறது.

இந்த பயிற்சி நடவடிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், பசுபிக் ஏஞ்சல் 25 இந்த ஆண்டில் இலங்கையில் நடத்தப்படும் மிகப்பெரிய பல்தரப்பு பயிற்சி நடவடிக்கையாகும் என்பதுடன், அவுஸ்திரேலியா, பங்காளதேஷ், இந்தியா, ஜப்பான், மாலைத்தீவு, இலங்கை மற்றும் அமெரிக்காவில் இருந்து இதில் கலந்துகொள்பவர்களை வரவேற்பதில் நாம் பெருமை கொள்கிறோம். பேரனர்த்த பதிலளிப்பு முதல் மனிதாபிமான நெருக்கடிகள் வரையான நடப்பு உலக சவால்களுக்கு தயாராவதன் நிமித்தம் எமது நாடுகள் எப்படி ஒன்றுபட்டு பணிபுரிகின்றன என்பதை இந்த பயிற்சி நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது.

இந்து-பசுபிக் பிராந்தியத்தின் பங்காண்மையாளர்கள் என்ற வகையில், நாம் பாதுகாப்பு மற்றும் திறந்த வர்த்தகத்தை பேணிப் பாதுகாப்பதுடன், எமது இந்த பிராந்தியம் தங்கியிருக்கும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதன் நிமித்தம் சவால்களுக்கு ஒன்றுசேர்ந்து முகம் கொடுப்பதற்கான எமது ஆற்றலை Pac Angel போன்ற பயிற்சி நடவடிக்கைகள் வலுப்படுத்துகின்றன, என்று தெரிவித்தார்.

இலங்கைக்கான அமெரிக்க பாதுகாப்பு தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் மெத்தியூ ஹவுஸ் இந்த பயிற்சி நடவடிக்கையின் நடைமுறை தாக்கத்தை சுட்டிக்காட்டி அதில் கலந்துகொள்பவர்களை அமெரிக்காவின் சார்பில் வரவேற்றார். “Pac Angel நடவடிக்கையானது ஒரு சாதாரண பயிற்சிக்கும் மேலானதாகும். இது நெருக்கடி நிலைமைகளுக்கான துரித மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பதிலளிப்பு செயற்பாடுகளை சாத்தியமாக்கும் எமது நண்பர்கள் மற்றும் பங்காண்மையாளர்களுடனான நடப்பு உலக ஒத்துழைப்பை உருவாக்குவது பற்றியதாகும்.

ஒன்றிணைந்து பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் நாம் நம்பிக்கையை வலுப்படுத்துகிறோம், அச்சுறுதல்களை தடுக்கிறோம், மற்றும் பேரனர்த்தங்கள் தாக்கும் போது எம்மால் விரைந்தும் மற்றும் பயனுறுதிமிக்க வகையிலும் பதிலளிக்க முடியும் என்பதையும் உறுதிபடுத்துறோம். நாம் இன்று ஒன்றிணைந்து கட்டமைக்கும் ஒவ்வொரு முயற்சியும் நாளைய பொதுவான பாதுகாப்புக்கான அடித்தளமொன்றாகும், என்று அவர் குறிப்பிட்டார்.   

பசுபிக் ஏஞ்சல் என்பது அமெரிக்க பசுபிக் விமானப்படைகளின் தலைமையிலும் அமெரிக்க இந்து-பசுபிக் கட்டளையகத்தின் (U.S. Indo-Pacific Command - USINDOPACOM) அனுசரணையிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மனிதாபிமான பதிலளிப்பு செயற்பாடுகள் தொடர்பான பயிற்சி நடவடிக்கையொன்றாகும். இந்த பயிற்சியானது தற்போது அதனது 18 ஆவது ஆண்டில் உள்ளது. 2008 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட பசுபிக் ஏஞ்சல் பயிற்சி நடவடிக்கையானது, கிரிபாஸ், நவூரு மற்றும் வனுவாட்டு ஆகியவற்றுக்கு முக்கியமான உதவிகளை வழங்கிய அதனது 2007 ஆம் ஆண்டு தொடக்க நடவடிக்கையின் வெற்றியின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அதிலிருந்து தமது பசுபிக் அயலவர்களுக்கான அமெரிக்காவின் நீடித்த உறுதிப்பாட்டை பிரதிபலித்து இந்து-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஈடுபாட்டின் இன்றியமையாத அம்சமொன்றாக Pac Angel உருவெடுத்துள்ளது. பசுபிக் ஏஞ்சல் பயிற்சி நடவடிக்கைகளானது அதை நடாத்தும் நாட்டு அரசாங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதுடன், பல மாதங்களுக்கு முன்பாகவிருந்தே அது திட்டமிடப்படுகிறது. இந்த நடவடிக்கைகளானது எந்தவொரு தற்போதைய நடப்பு உலக நெருக்கடிகளுக்குமான பதிலளிப்பு செயற்பாடாக அமையவில்லை. மாறாக இந்த பயிற்சியை நடத்தும் நாடுகள் தமது குடிமக்களுக்கு உதவுவதற்கும் மற்றும் இயற்கை பேரனர்த்தங்கள் மற்றும் ஏனைய சவால்களுக்கு ஆக்கப்பூர்வமாக பதிலளிப்பதற்கும் அவற்றின் ஆற்றல்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டவையாகும்.

Image_01__4_.jpeg

கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றுடன் அமெரிக்காவும் இலங்கையும் பசுபிக் ஏஞ்சல் 25 பயிற்சி நடவடிக்கையை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்தன. இலங்கை விமானப்படை அதிகாரிகள் மற்றும் பசுபிக் ஏஞ்சல் 25 பயிற்சி நடவடிக்கையின் ஏனைய பங்கேற்பாளர்களின் முன்னிலையில் இலங்கைக்கான அமெரிக்க பாதுகாப்பு தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் மெத்தியூ ஹவுஸ் உரையாற்றுவதை இங்கு காணலாம்.

Image_02__3_.jpeg

இலங்கை, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், ஜப்பான் மற்றும் மாலைத்தீவில் இருந்து இந்த பயிற்சியில் பங்கேற்பவர்கள் பசுபிக் ஏஞ்சல் 25 நடவடிக்கை ஆரம்பமாவதற்கு முன்னதாக எடுத்துக் கொண்ட புகைப்படம்.

https://www.virakesari.lk/article/224555

உள்நாட்டுப் பொறிமுறை மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை அடைய முடியும் : ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்

1 week ago

Published By: Vishnu

08 Sep, 2025 | 07:54 PM

image

இலங்கையின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதையும், சர்வதேச தலையீடுகளை நிராகரிப்பதாகவும்  உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை அடைய முடியும் என இலங்கை நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

வெளித் தலையீடுகள் அதன் உள்நாட்டு நீதி மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்குத் தடையாக இருக்கும் என்றும் இலங்கை மக்கள் ஒரு நியாயமான, சமமான மற்றும் வளமான சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறார்கள் என்றும், வெளிப்புற நடவடிக்கைகள் பிரிவினையை மட்டுமே ஏற்படுத்தும் என்றும் மேலும் தெரிவித்தார்.

60 ஆவது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை தொடர்பாக இலங்கை அரசு சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் கடந்த 11 மாதங்களில் அடைந்துள்ள முன்னேற்றங்கள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் ஊழல் ஒழிப்புக்கான உறுதிப்பாடுகள் குறித்து இந்த உரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

அதில்,

அரசியல் மற்றும் ஆட்சிமுறை மாற்றங்கள்

* 2024 செப்டம்பர் ஜனாதிபதித் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு (NPP) மக்கள் அமோக ஆதரவை வழங்கினர்.

* வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள மக்கள் ஒரு கட்சிக்கு இவ்வளவு ஆதரவு வழங்கியது இலங்கையின் வரலாற்றில் இதுவே முதல்முறை.

* பல்வேறு சமூகத்தினரையும், சாதனை படைத்த எண்ணிக்கையிலான பெண்களையும் உள்ளடக்கிய இலங்கையின் வரலாற்றிலேயே மிகச் சிறந்த நாடாளுமன்றம் இது. முதன்முறையாக, மலையக சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண் உறுப்பினர்களும், ஒரு கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

* பல ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. எந்தவித வன்முறைச் சம்பவங்களும், அரச வளங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட நிகழ்வுகளும் இல்லாமல் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற்றன.

பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்கள்

* அரசாங்கம் பொறுப்பேற்றபோது நாடு எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முன்னுரிமை அளித்து, சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்கள் மூலம் பொருளாதார சவால்கள் குறைக்கப்பட்டன.

* விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய துறைகளுக்கு சிறப்பு நிவாரணங்கள் வழங்கப்பட்டன.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கு வரலாற்றுபூர்வமான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

* வறுமையில் வாடுவோர், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்காக சமூக நலன்புரி நிதி அதிகரிக்கப்பட்டது.

* மீள்குடியேற்ற தேவைகளைப் பூர்த்தி செய்யவும், வீட்டுத் திட்டங்களை விரைவுபடுத்தவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும் ரூ. 1500 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள்

* பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்குப் பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உருவாக்குவதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த  சட்டமூலம் இந்த மாதமே வர்த்தமானியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் (OMP), இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் (ONUR) போன்ற உள்நாட்டு நல்லிணக்க பொறிமுறைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

* காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்த காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்கு (OMP) ரூ. 375 மில்லியன் மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* செம்மணி புதைகுழி உட்பட பல்வேறு புதைகுழிகள் குறித்து சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

* பொலிஸ் துறையின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டு, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் போன்ற பல நீண்டகால வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படுகின்றன.

* பெரும்பாலான தனியார் காணிகள் உரிமையாளர்களிடம் விடுவிக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பிற்கு அத்தியாவசியமான காணிகள் மட்டுமே அரசு கட்டுப்பாட்டில் வைக்கப்படும், அதற்கான உரிய இழப்பீடு வழங்கப்படும்.

* மோதல்களில் உயிரிழந்தோரை நினைவு கூரும் உரிமைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது, இதனால் இந்த ஆண்டு பல இடங்களில் நினைவு நிகழ்வுகள் சுதந்திரமாக நடத்தப்பட்டன.

* சிவில் சமூக அமைப்புகளுக்கு சுதந்திரமாக செயல்பட ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஊழல் ஒழிப்பு மற்றும் சீர்திருத்தங்கள்

* கடந்த சில மாதங்களில், ஊழல் ஒழிப்புக்கு வலுவான புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சமூக நிலை எதுவாக இருந்தாலும், அரசியல் தலையீடு இல்லாமல், குற்றச்சாட்டுகள் குறித்த சுதந்திரமான விசாரணைகள் மற்றும் வழக்குகள் தொடரப்பட்டு பல முக்கிய தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

* இந்த ஆண்டின் தொடக்கத்தில், புதிய அரசியல் கலாசாரம் மற்றும் நெறிமுறை சார்ந்த நல்லாட்சியை ஊக்குவிக்கும் நோக்கில் 'தூய இலங்கை' என்ற நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்டது.

* ஊழலற்ற இலங்கை ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்திற்கும், நலனுக்கும் இன்றியமையாதது என அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. 

அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்கள், பார்வையாளர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், அதன் முயற்சிகளைப் புரிந்து கொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் இலங்கை கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களைப் பயன்படுத்திக்கொண்டு, உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் அனைத்து இலங்கை மக்களின் உரிமைகளையும் மேம்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதையும், வெளிநாட்டுத் தலையீடுகளை நிராகரிப்பதையும், உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை அடைய முடியும் என இலங்கை நம்புகின்றது.

மேற்குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் விஜித்த ஹேரத் தனது உரையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/224569

யாழில் பலத்த காற்றுடன் கூடிய மழை! - 12 பேர் பாதிப்பு

1 week ago

08 Sep, 2025 | 06:21 PM

image

யாழ்ப்பாணத்தில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அதேபோல உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மேலும், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கும் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இதேவேளை திடீரென வீசிய புயல் காற்றினால் செல்வச் சந்நிதி ஆலயத் திருவிழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. இதனால் வியாபாரிகள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டனர்.

யாழில் பலத்த காற்றுடன் கூடிய மழை! - 12 பேர் பாதிப்பு | Virakesari.lk

யாழில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்

1 week ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

யாழ் மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

செய்தி குறிப்பொன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயின் பரம்பல் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் 937 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் பதிவு செய்யப்படவில்லை.

யாழ் மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது.

டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைக்கும் நோக்குடன் கடந்த செப்டெம்பர் 4ம் திகதி மாவட்ட டெங்கு கட்டுப்பாட்டுக்குழுக் கூட்டம் இடம் பெற்றது.

இதன் அடுத்த கட்டமாக பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச டெங்கு கட்டுப்பாட்டு குழுக் கூட்டங்களும் , கிராமசேவையாளர் தலைமையில் கிராம மட்ட டெங்கு கட்டுப்பாட்டு குழுக் கூட்டங்களும் எதிர்வரும் செப்டெம்பர் 08ம் திகதி முதல் 12ம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெறும்.

பொதுமக்கள் மத்தியில் டெங்கு கட்டுப்பாட்டு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நிறுவனங்களிலும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 14ம் திகதி சகல வணக்கத்தலங்களிலும் , 15ம் திகதி சகல அரச நிறுவனங்களிலும் , 16ம், 17ம் திகதிகளில் சகல பாடசாலைகளிலும் இந்த டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெறும்.

இதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 22ம் திகதி முதல் 24ம் திகதி வரையிலான மூன்று தினங்களும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக பிரகடனப்படுத்தப்படுகின்றன.

இந்த காலப்பகுதியில் சகல வீடுகளிலும், வேலைத்தலங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் வர்த்தக நிலையங்களிலும், பொது இடங்களிலும் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்கும் சிரமதானப்பணி ஏற்பாடு செய்யப்படவேண்டும்.

இக்காலப் பகுதியில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஏற்பாட்டில் மேற்பார்வைக்குழுக்கள் வீடுகளையும் , வேலைத்தலங்களையும் , கல்வி நிறுவனங்களையும் , வர்த்தக நிலையங்களையும் பார்வையிடுவர்.

இக்குழுக்களில் சுகாதார திணைக்கள, பிரதேச செயலக , உள்ளூராட்சி மன்ற மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பங்குபற்றுவர்

எனவே யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரிடமும் கோரிக்கை விடுப்பதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி ஆ. கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmfat3qgx009qqplpo0zf89ka

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் மனிதப் புதைகுழியா?;  உறுதிப்படுத்த வேண்டும் என்கிறது காணாமல் போனோர் அலுவலகம்

1 week ago

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் மனிதப் புதைகுழியா?;  உறுதிப்படுத்த வேண்டும் என்கிறது காணாமல் போனோர் அலுவலகம்

%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்களோ மனித எலும்புக்கூடுகளோ இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் தெரிவித்தார்.

சமகால நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் வட பிராந்தியத்தில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் போது மண்டைதீவு மனித புதைகுழி தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டுக்கமைய பொலிஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் மேற்படி பகுதிக்கு சென்றது

அந்தப் பகுதி சந்தேகத்துக்கிடமாக இருக்கின்றபடியால் அதனை துரிதமாக அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை 2019 ஆம் ஆண்டிலேயே நாம் விடுத்திருந்தோம். அந்த விடயம் பொருளாதார சிக்கல் கொரோனாவுக்கு பிறகு தற்போது தலை தூக்கி இருக்கிறது.

மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட இருக்கின்ற நிலையில் அந்த இடத்தில் அது திறக்கப்படுகிறதோ என்ற அச்ச சூழ்நிலை காரணமாக அந்த விவகாரம் மேற்கிளம்பியுள்ளது.

இந்த விடயப் பரப்புகளில் எங்கள் கரிசனை அதிகமாக இருக்கும். மைதானம் அமைக்கப்படுவதாக இருந்தால் சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்களோ மனித எலும்புக்கூடுகளோ இல்லை என்ற உறுதிப்பாடு இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

அதன் பின்னரே இந்த மைதானம் அமைக்கப்பட வேண்டும்.அந்தப் பகுதி அந்த இடத்தில் இருக்குமாக இருந்தால் சம்பந்தப்பட்ட வழக்கு வரும் போது காணாமல் போனோர் பற்றிய அலுவலம் அதனை முன்வைக்கும் – என்றார்.

https://akkinikkunchu.com/?p=340073

செம்மணி மனிதப்படுகொலை : புதிய தகவல்கள் வெளிப்படுத்துவேன் - சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி

1 week ago

Published By: Vishnu

08 Sep, 2025 | 03:05 AM

image

(நா.தனுஜா)

செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், நீதித்துறைக்கும் வெளிப்படுத்துமாறு தனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக அவ்வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகக் குறிப்பிட்டு கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம 10.07.2025 எனும் திகதியிடப்பட்ட கடிதமொன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைத்திருந்தர்ர. அவற்றின் பிரதிகள் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.

அக்கடிதத்தில் 7 ஆம் இராணுவக் காலாட்படைத் தலைமையகத்தில் படுகொலை செய்யப்பட்டு செம்மணி சோதனைச்சாவடிக்குக் கொண்டுவரப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமியினதும், அவரது குடும்பத்தினரினதும் சடலங்களை கப்டன் லலித் ஹேவாகேயின் ஆணைக்கு அமைவாகப் புதைத்ததைத் தவிர தனது கணவர் வேறெந்தக் குற்றத்தையும் புரியவில்லை எனவும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியமளிப்பதற்கு சோமரத்ன ராஜபக்ஷ தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து சோமரத்ன ராஜபக்ஷ மேலும் பல வெளிப்படுத்தல்களைச் செய்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஜுலை மாதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு பதிலும் கிட்டாததன் காரணமாக, சோமரத்ன ராஜபக்ஷ மீண்டும் தனது மனைவியின் ஊடாக கடந்த வாரம் ஜனாதிபதிக்கு மற்றுமொரு கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.

அக்கடிதத்தில் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை விவகாரத்தில் தனது வகிபாகம், தான் உள்ளடங்கலாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏனைய 5 இராணுவத்தினரும் திட்டமிட்டு சிக்கவைக்கப்பட்டமை, இவ்விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வகிபாகம் என்பன உள்ளடங்கலாக சோமரத்ன ராஜபக்ஷவினால் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திலும், முன்னைய வெளிப்படுத்தல்களிலும் குறிப்பிட்டிருந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், நீதித்துறைக்கும் வெளிப்படுத்துமாறு தனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக அவ்வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி 1996 ஆம் ஆண்டில் வடக்கில் இடம்பெற்ற செம்மணி மனிதப்படுகொலை, வடக்கில் சித்திரவதைக்கூடங்கள் நடாத்தப்பட்ட விதம், அவற்றுடன் தொடர்புடைய இராணுவ உயரதிகாரிகள் தொடக்கம் ஜனாதிபதி வரை அவற்றை செயற்படுத்திய சகல அதிகாரிகளினதும் பெயர் விபரங்கள் போன்றவற்றை இந்நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளக்கூடியவகையில் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவ்விவகாரம் தொடர்பில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும், சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளையும் சட்டத்தின்முன் நிறுத்துமாறும், பாதிக்கப்பட்ட யாழ் மக்களுக்கான நீதியை நிலைநாட்டுமாறும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/224486

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக தமிழ் நீதியரசர் நியமனம்!

1 week ago

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக தமிழ் நீதியரசர் நியமனம்!

1547663270.PNG

உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.துரைராஜா நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி முர்து பெர்னாண்டோ சேவையில் இருந்து ஓய்வுப்பெற்றதை தொடர்ந்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்துக்கு  இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.துரைராஜா 1988 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக பதவியேற்றார்.

அதனைத் தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு அரச தரப்பு சட்டத்தரணியாக இணைந்துக் கொண்டார். அதன்பின்னர் மேலதிக சொலிட்டர் ஜெனராலாக பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

2016 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியால் எஸ்.துரைராஜா ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டு அதே ஆண்டு மேன்முறையீட்டு நீதியரசராக நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/article/நீதிச்_சேவைகள்_ஆணைக்குழுவின்_உறுப்பினராக_தமிழ்_நீதியரசர்_நியமனம்!

பாதாளக் குழுக்களின் முன்னிலை தரப்பினரின் கைதால் ஒரு சில அரசியல்வாதிகள் கலக்கம் - வசந்த சமரசிங்க

1 week ago

Published By: Vishnu

08 Sep, 2025 | 02:51 AM

image

(இராஜதுரை ஹஷான்)

பாதாள குழுக்களின் முன்னிலை தரப்பினரை கைது செய்தவுடன் ஒருசில அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள்ளார்கள்.போதைப்பொருள் வியாபாரத்துக்கும்,அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புள்ளது என்பதை நாட்டு மக்கள் வெகுவிரைவில் உறுதியாக அறிந்துக்கொள்வார்கள் என வர்த்தகத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (7) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஊழல்வாதிகளுக்கு சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கும் போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் தற்போது ஒன்றிணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் நண்பர்கள் என்பதை நாட்டு மக்கள் இதனூடாக விளங்கிக் கொள்ள வேண்டும்.இவர்கள் ஆட்சியில் இருந்தால் அவர்களின் நண்பர்களான ஊழல்வாதிகள் அனைவரும் பாதுகாக்கப்படுவார்கள்.

ஊழல் மோசடியினால் தான் இந்த நாடு வங்குரோத்து நிலையடைந்தது. ஆகவே ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல்பழிவாங்கள் என்று எவ்வாறு குறிப்பிடுவது.

பாதாளக் குழுக்களின் முன்னிலை தரப்பினரை கைது செய்தவுடன் ஒருசில அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள்ளார்கள்.இதனையும் அரசியல் பழிவாங்கல் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடாமல் இருப்பது ஆச்சரியத்துக்குரியது.

போதைப்பொருள் வியாபாரத்துக்கும்,அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புள்ளது என்பதை நாட்டு மக்கள் வெகுவிரைவில் உறுதியாக அறிந்துக்கொள்வார்கள்.கடந்த அரசாங்கங்களின் அரச அனுசரணையில் பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்கள் பாதுகாக்கப்பட்டார்கள்.

பாதாளக் குழுக்களின் முன்னிலை தரப்பினர் கைது செய்யப்பட்டு அவர்களினால் வெளிப்படுத்தப்படும் விடயங்களால் ஜனாதிபதி கனவு காண்பவர்கள் தற்போது அச்சமடைந்துள்ளார்கள்.இவர்கள் தான் கடந்த காலங்களில் பாதாளக்குழுக்களை போசித்தார்கள்.அதன் விளைவையே நாடு இன்று எதிர்கொள்கிறது என்றார்.

https://www.virakesari.lk/article/224484

இன்று முதல் கடுமையாகும் போக்குவரத்து சட்டம்

1 week ago

இன்று முதல் கடுமையாகும் போக்குவரத்து சட்டம்

செய்திகள்

போக்குவரத்து சட்டம் இன்று (08) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்காக வாகனங்களை சோதனை செய்ய நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

போக்குவரத்திற்கு தகுதியற்ற வாகனங்கள் மற்றும் வண்ணங்கள் மாற்றப்பட்ட வாகனங்கள் குறித்தும் இதன்போது சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், வெவ்வேறு வண்ணங்களில் கூடுதல் விளக்குகளுடன் இயங்கும் வாகனங்கள், வாகனங்களின் முன், பின் மற்றும் இரு பகுதிகளின் சித்திர வடிவமைப்புகள் மற்றும் விளம்பரங்கள் பிரசுரித்தல் மற்றும் சட்டவிரோத மேலதிக உதிரி பாகங்கள் தொடர்பிலும் சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான் மற்றும் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் கொண்ட வாகனங்கள் தொடர்பாக இன்று முதல் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

https://www.samakalam.com/இன்று-முதல்-கடுமையாகும்/

ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் செல்வது தொடர்பில் தீர்மானம் எடுக்கவில்லை!

1 week ago

ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் செல்வது தொடர்பில் தீர்மானம் எடுக்கவில்லை!

adminSeptember 8, 2025

Ranil-Wickremasinghe.png?fit=1132%2C629&

ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் செல்வது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பாரானால், அது நாட்டுக்கு நல்லது என்றும் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்துக்கு செல்வதாக இருந்தால், சரியான நேரம், காலம் பார்த்து அறிவிப்பார்.

ஆனால், இதுதொடர்பில் எந்த கலந்துரையாடலும் தற்போதுவரை இடம்பெறவில்லை எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

https://globaltamilnews.net/2025/220197/

83 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது!

1 week ago

1617900960-passport-arrest.jpg?resize=65

83 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது!

கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையுமே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கணேமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு நடத்திய சோதனையைத் தொடர்ந்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஆண் சந்தேக நபர் வத்தளையைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்றும், பெண் சந்தேக நபர் கணேமுல்லயைச் சேர்ந்த 62 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2025/1446379

5 பில்லியன் டொலர்களை எட்டிய வெளிநாட்டு தொழிலாளர்களின் பண அனுப்புதல்

1 week ago

New-Project-96.jpg?resize=750%2C375&ssl=

5 பில்லியன் டொலர்களை எட்டிய வெளிநாட்டு தொழிலாளர்களின் பண அனுப்புதல்.

2025 ஆம் ஆண்டில் இலங்கையின் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பண அனுப்புதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது.

2025 ஆகஸ்ட் மாதம் மொத்த பணம் அனுப்புதல் US$680.8 மில்லியனாக இருந்தது.

இது 2024 ஆகஸ்ட்டில் US$577.5 மில்லியனிலிருந்து 19.3% அதிகமாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், மொத்த பணம் அனுப்புதல் US$5,116 மில்லியனை எட்டியது.

இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் US$4,288.2 மில்லியனாக இருந்தது.

https://athavannews.com/2025/1446366

மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் சர்வதேச அறிக்கை வெளியீடு

1 week 1 day ago

Published By: Vishnu

07 Sep, 2025 | 09:52 PM

image

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட அமைப்பினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

யாழ் ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்ற நிகழ்வில் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது.

இதன்போது நிமலராஜனின் உருவப் படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

யாழ் ஊடக அமையத்தின் தலைவர் குமாரசாமி செல்வக்குமாரால் குறித்த அறிக்கையின் முதல் பிரதி நிமலராஜனின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் குறித்த அறிக்கையின் பிரதிகள் கலந்துகொண்ட ஏனையோருக்கும் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், ஊடக துறை சார்ந்தவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என்போர் கலந்துகொண்டனர்.

576e4d4c-1aa8-4c0d-b3f6-2a86fb2e45d7.jpe

08a75510-7198-4504-8afe-179e309406af.jpe

93ef225c-0b2d-4db0-895e-79ea49363c08.jpe

08cb60e7-633c-4169-8955-6397e5624c2b.jpe

https://www.virakesari.lk/article/224481

யாழில் நூலகம் ஒன்றை திறந்த ரில்வின் சில்வா

1 week 1 day ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வாவால் யாழ்ப்பாணத்தில் இன்று நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று (07) பிற்பகல் யாழ் கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தலைமை காரியாலய வளாகத்தில் குறித்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன்போது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை அடங்கிய புத்தகம் ஒன்று யாழ் ஊடக அமையத்தால் குறித்த நூல் நிலையத்திற்கு வழங்கிவைக்கப்பட்டது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmf9w523x009eqplp48cd1nqe

மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கான எச்சரிக்கை

1 week 1 day ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஆபத்தான வகையில் மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நாளை முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரதியமைச்சர் வைத்தியர் பிரியந்த குணசேன தெரிவித்துள்ளார்.

பல்வேறு ஒலிகளுடன், பல வண்ணங்களில் நின்று நின்று ஔிரும் மின் விளக்குகளுடன் பயணிக்கும் வாகனங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தமது பேஸ்புக் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை எல்ல-வெல்லவாய வீதியின் 24வது மைல்கல் அருகே எதிரே வந்த சொகுசு ஜீப்பின் பின்புறத்தில் பேருந்து மோதி, வீதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு இரும்பு வேலியை உடைத்து சுமார் 1000 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

தங்காலை நகர சபையின் ஊழியர்களும் அவர்களது உறவினர்களும் பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

32 பேர் பயணித்த இந்த பேருந்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்களில் 13 பேர் இன்னும் பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

https://adaderanatamil.lk/news/cmf9etj1b0097qplp6ki6piq6

தம்பலகாமத்தில் பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் பலி!

1 week 1 day ago

07 Sep, 2025 | 01:51 PM

image

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்பொத்தானை, 09ம் கொலனி, சதாம் நகர் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற திருவிழா ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு சனிக்கிழமை (06) இடம் பெற்றுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்த குடும்பஸ்தர் அதே  பகுதியில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய  நபர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ஊர்வலத்தின் போது பட்டாசு கொளுத்திய நிலையில் ஒரு பட்டாசு வெடிக்காத நிலையில் உள்ளதை கண்டு அதனை காலால் தடவிய போது பட்டாசு வெடித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது. 

 உயிரிழந்தவரின் சடலம் தற்போது தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/224433

வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடக மோசடிகள் – பொலிஸார் எச்சரிக்கை

1 week 1 day ago

Published By: Digital Desk 1

07 Sep, 2025 | 03:33 PM

image

வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களினூடாக மோசடிகளில் ஈடுபடுவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதுள்ளனர்.

வங்கியின் சார்பாக பரிசுகளை வழங்குவதாக பொய்யாகக் கூறும் மோசடி செய்தியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தி பொதுமக்களை ஏமாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மோசடியின் பகுதி என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசடி தனிப்பட்ட தகவல்களைத் திருடவும், கையடக்கத் தொலைபேசியிலுள்ள மென்பொருளை சேதப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக தங்கள் அமைப்புக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழுவின் (SLCERT) தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

கையடக்க தொலைபேசிகள் மூலம் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்கள் இதுபோன்ற மோசடி செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/224449

கூட்டாட்சி அரசியல் முறைமை பற்றி இலங்கை அரசியல்வாதிகளுக்குத் தெளிவூட்டல் : சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை

1 week 1 day ago

கூட்டாட்சி அரசியல் முறைமை பற்றி இலங்கை அரசியல்வாதிகளுக்குத் தெளிவூட்டல் : சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை

07 Sep, 2025 | 11:11 AM

image

(நா.தனுஜா)

இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் 13 பேரை சுவிட்ஸர்லாந்துக்கு அழைத்துச்சென்று, அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி விளக்கமளிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கும் அந்நாட்டு அரசாங்கம், அரசியல் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு உத்தேசித்திருக்கும் இலங்கைக்கு இந்நகர்வு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுடன் இலங்கைக்கும் சுவிட்ஸர்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 70 வருடங்கள் நிறைவடைகின்றன. அதனை முன்னிட்டு இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் மேற்படி செயலமர்வை ஏற்பாடு செய்துள்ளது.

இம்மாதம் 14 - 21 ஆம் திகதி வரை சுவிட்ஸர்லாந்தில் நடைபெறவுள்ள இச்செயலமர்வில் பங்கேற்பதற்கு இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு அந்நாட்டின் வெளிவிவகாரங்களுக்கான கூட்டாட்சித் திணைக்களத்தின் சமாதானம் மற்றும் மனித உரிமைகள் பிரிவின் செயலாளரால்  அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து அக்கட்சிகளால் உறுதிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் கிராமிய அபிவிருத்தி, சமூகப்பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சரும் இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவருமான கலாநிதி உபாலி பன்னிலகே, தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலஃப்பர், பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்ததின் செயலாளர் சந்திம ஹெட்டியாராச்சி, பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளருமான கலாநிதி நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான நிலாந்தி கொட்டஹச்சி மற்றும் சமன்மலி குணசிங்க ஆகியோரும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவலவும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கமும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரளவும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனும், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் டபிள்யூ.ரி.சி.பத்மா மஞ்சுளவும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான கபிலன் சுந்தரமூர்த்தியும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

சுவிட்ஸர்லாந்தில் 8 நாட்கள் நடைபெறவுள்ள இச்செயலமர்வின்போது சுவிட்ஸர்லாந்தின் அரசியல் முறைமை மற்றும் இருதரப்பு உறவுகள், சுவிட்ஸர்லாந்தின் கூட்டாட்சி முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்ளல் ஆகிய தலைப்புக்களில் இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்படவிருப்பதுடன் முக்கிய கட்டமைப்புக்களுக்கான கள விஜயங்கள் மற்றும் உயர்மட்ட சந்திப்புக்கள் என்பனவும் இடம்பெறவுள்ளன.

இச்செயலமர்வானது சுவிட்ஸர்லாந்தின் அரசியல் முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும், ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்குமான வாய்ப்பை இலங்கை அரசியல்வாதிகளுக்கு வழங்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிரி வோல்ற், இலங்கை அரசியல் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு உத்தேசித்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் சுவிஸ் அரசியல் முறைமையின் முக்கிய கூறுகளை உள்வாங்குவதற்கும், பல்லின மற்றும் பன்மொழி சமூகங்களுக்கு மத்தியில் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவது குறித்து அறிந்துகொள்வதற்கும் இது உதவும் எனத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/224431

மேய்ச்சல் நிலத்தை பெற்றுத்தர துரித நடவடிக்கை வேண்டும்

1 week 1 day ago

மேய்ச்சல் நிலத்தை பெற்றுத்தர துரித நடவடிக்கை வேண்டும்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

தங்களின் போராட்டம் இரண்டு வருடங்கள் கடக்கவுள்ள போதிலும் தமக்கான தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை என மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நில பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் நேற்று (6) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளனர். 

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டத்தின் இரண்டு வருடம் எதிர்வரும் 15ஆம் திகதியுடன் பூர்த்தியடைகின்றது. 

எனினும் இந்த அறவழிப் போராட்டத்தில் அடைந்த நன்மைகள் குறைவு. மேய்ச்சல் தரைக்காக. ஒதுக்கப்பட்ட 3025 ஹெக்டயர் நிலப்பரப்பு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. பின்னர் 3000 ஏக்கர் தருவோம் என கூறப்பட்ட போதிலும் இன்னமும் அதற்கான எந்த பதிவும் இடம்பெறவில்லை. 

இந்த இரண்டு வருடத்திற்கான பூர்த்தியை முன்னிட்டு எங்களுடைய போராட்டம் அரசாங்கத்திற்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கும் என நினைக்கின்றோம் 

கால்நடைகளினால் நாங்கள் மட்டும் பயனடையவில்லை. அரசாங்கத்திற்கும் இதனால் வருமானம் வருகிறது. 

எனவே கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

https://adaderanatamil.lk/news/cmf96frfb0092qplpb12op5d2

விஜித ஹேரத் ஜெனிவாவுக்கு பயணமானார்

1 week 1 day ago

விஜித ஹேரத் ஜெனிவாவுக்கு பயணமானார்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) காலை 06.45 மணியளவில் ஜெனீவாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். 

நாளை (08) ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 வது அமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார். 

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார். 

இந்த விஜயத்தின் போது, ஜெனீவாவில் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் அமைச்சர் விஜித ஹேரத் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையேயான விசேட சந்திப்பொன்றும் இதன்போது நடைபெற உள்ளது. 

வோல்கர் டர்க்கின் இலங்கை விஜயத்திற்குப் பிறகும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கழித்தும் நடைபெறும் இந்த மாநாட்டில், மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக புதிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்களை முன்வைக்க முடியும். 

இந்த ஆண்டு மனித உரிமைகள் கூட்டத் தொடரில் அமைச்சர் விஜித ஹேரத்துடன், வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் பணிப்பாளர் நாயகம் தயானி மெண்டிஸும் பங்கேற்கவுள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmf98vnf100a2o29nty78ym4a

Checked
Mon, 09/15/2025 - 19:37
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr