ஊர்ப்புதினம்

நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களை வரவேற்கத் தயார் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

1 week ago

New-Project-260.jpg?resize=750%2C375&ssl

நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களை வரவேற்கத் தயார் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் 

இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவில் இருக்கும் மக்கள் மீண்டும் தாயகம் திரும்பினால் அரசாங்கம் வரவேற்கத் தயாராகவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் நடைபெறும் நிகழ்வொன்றுக்காக தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதி அமைச்சர், அங்கு ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர், 

இலங்கை அரசு பொருளாதாரத்தில் சிக்கலான சூழலில் இருந்த போது இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ளது. 

மலையக தமிழர்களுக்கு இந்தியா சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

புதிய ஜனாதிபதி பதவியேற்றதும் இலங்கை வந்த இந்திய பிரதமர் பல்வேறு நிதி உதவிகள் உள்ளிட்ட உதவிகளை  தொடர்ந்து செய்து வருகிறார்.

தற்போது பொருளாதார சிக்கலில் இருந்து இலங்கை வேகமாக மீண்டு வருகிறது.

நாட்டில் இலஞ்சம் முழுவதும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு பிரதிநிதிகளின் செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டு வீண் விரையம் தவிர்க்கப்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களை போல் செயல்படுகின்றனர்.

இலங்கையில் இருந்த இரட்டை சட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கடந்த கால ஆட்சியாளர்கள் ரணில் விக்ரமசிங்க போன்றவர்கள்  தவறு செய்ததால் அவர்களை சிறையில் அடைக்கப்பட்டதன் பின் அனைவருக்கும் நீதி சமம் என்பதை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தற்போதய  ஒதுக்கீட்டில் வடமாகாணத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அங்கு ஏராளமான பணிகள் நடந்து வருகிறது, சர்வதேச விளையாட்டு மையம் யாழ்ப்பாணம் பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது.

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சனையை ஒதுக்கி வைத்து மீன்வளம் கடல் வளம் குறித்து அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மீன்வளத்தை பாதிக்கும் வகையிலான திட்டங்களை தடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியா – இலங்கை என இரு நாடுகளும் அரசியல் ரீதியாக ஒற்றுமையாக உள்ளது.

இரண்டு நாட்டு அரசும் மீனவர் பிரச்சனையை பேசி முடிக்க நடவடிக்கைகள் எடுக்க இருக்கிறோம்.

இந்திய இலங்கை மீனவர்கள் இடையேயான பிரச்சனை

சகோதரர்களுக்குள் இருக்கும் பிரச்சனை தான் உள்ளது. பேசி சுமுகமான முடிவை எட்ட முடியும்.

இலங்கை – இந்தியா என இருநாட்டு மக்கள் உறவுகாரர்கள். ஏன் மீனவர் பிரச்சனையை மட்டும்  வைத்து பகைமை உண்டாக்க வேண்டும்.

இலங்கை அனைத்து நாடுகளுடனும் நட்புடன் உள்ளது.

இலங்கையை சீனா ஆக்கிரமித்துள்ளதாக சொல்வது அனைத்தும் பொய்

சுயாதீனமான நாடாக இலங்கை உள்ளது. 

மற்ற அனைத்து நாடுகளும் முதலீடுகளும் உதவிகளையும் செய்வதை வைத்து அந்த நாடுகள் இலங்கையை ஆக்கிரமிப்பு செய்துள்ளது என சொல்லக்கூடாது.

இலங்கை அகதிகளுக்கு இந்திய மற்றும் தமிழக அரசு பெரு உதவிகள் செய்து வருகிறது.

இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவில் இருக்கும் மக்கள் மீண்டும் தாயகம் திரும்பினால் இலங்கை அரசாங்கம் வரவேற்கத் தயாராக உள்ளது.

இலங்கை மக்களின் கோரிக்கை குறித்து இரு நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

https://athavannews.com/2025/1451026

சுதேச மருத்துவப் பட்டதாரிகள் 304 பேருக்கு நியமனம் வழங்கப்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

1 week 1 day ago

சுதேச மருத்துவப் பட்டதாரிகளின் நியமனந்தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் கடுமையாக கேள்வி எழுப்பினார் ரவிகரன் எம்.பி; நவம்பரில் 304பேருக்கு நியமனம் வழங்கப்படுமென - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பதில்

Published By: Digital Desk 3

23 Oct, 2025 | 05:34 PM

image

பட்டப்படிப்பையும் உள்ளகப்பயிற்சியையும் முடித்து வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் சுதேச மருத்துவப் பட்டதாரிகளின் நியமனம் தொடர்பாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் மிகக் கடுமையான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்நிலையில் கடந்த 2009, 2010, 2011ஆகிய கல்வியாண்டுகளில் ஆயுர்வேத, சித்த மற்றும், யுனானி ஆகிய சுதேச மருத்துவத்துறைகளில் பட்டப்படிப்பை நிறைவுசெய்த பட்டதாரிகள் 304பேரை ஆரம்ப சுதேச மருத்துவ அலுவலர் பதவிக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 03ஆம் திகதி நியமனம் செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பதிலளித்துள்ளார். 

அதேவேளை தற்போது நாட்டிலுள்ள சுதேச வைத்தியசாலைக் கட்டமைப்பிலே அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவர் ஆளணியைவிடவும் அதிகமான அளவில், சுதேச பட்டதாரிகள் காணப்படுவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

பாராளுமன்றில் வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இவ்வாறு சுகாதார அமைச்சரிடம் மிகக் கடுமையாக கேள்வி எழுப்பியநிலையில் சுகாதார அமைச்சரால் மேற்கண்டவாறு பதிலளிக்கப்பட்டது. 

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே! 

மேலைத்தேய மருத்துவ சேவை வழங்கல் என்றாலும் சரி, சுதேச மருத்துவ சேவை வழங்கல் என்றாலும் சரி எமது வன்னி மாவட்டத்திற்கான மருத்துவ சேவை வழங்கலை, சமச்சீராக அணுகுங்கள் என்பதே எம் கோரிக்கை. 

சுதேச மருத்துவ துறையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு காணப்படவேண்டிய 14 சமூக நல மருத்துவர்களில் ஒருவர் மட்டுமே பணியாற்றுகிறார். 13 பணி வெற்றிடங்கள் உள்ளன. மாவட்டம் முழுதும் ஒரேயொரு சமூக நல மருத்துவரைக்கொண்டு எவ்வாறு வினைத்திறனான சேவை வழங்கலை மேற்கொள்ள முடியும்? இது எத்தகைய சமச்சீரற்ற நிலை! 

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான ஐந்து சித்த மருத்துவ சேவை வழங்கும் மருத்துவமனைகளிலும் உள்ள மொத்த அனுமதிக்கப்பட்ட ஆளணி 64. தற்போது இங்கு 40 பணி வெற்றிடங்கள் உள்ளன. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஊழியர் அணியுடனே முல்லைத்தீவு மாவட்ட சித்த மருத்துவ அலகுகள் பணிபுரிகின்றன! 

2025 இன் முதல் எட்டு மாதங்களிலும் சராசரியாக 1000 நோயாளிகளுக்கு மேல் மேற்படி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இன்னமும் அதிகமாக நோயாளிகளை உள்ளீர்த்து சேவை வழங்குவதில் உள்ள முதன்மையான மட்டுப்பாடு குறித்த மருத்துவமனைகளில் உள்ள ஆளணிப்பற்றாக்குறையே. 

சுகாதார அமைச்சர் அவர்களே! 

சுதேச மருத்துவத் துறையில் மருத்துவர் வெற்றிடங்களுடன் மருத்துவமனைச் சூழலுக்கு மிகவும் இன்றியமையாத சுகாதாரத் தொழிலாளர்கள், சுகாதார உதவியாளர்கள், சுகாதார தூய்மை பணியாளர்கள், மர்த்தனவியலாளர் உள்ளிட்ட ஊழியர் வெற்றிடங்களும் உள்ளன.  வடமாகாணம் முழுவதும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான பணி வெற்றிடங்கள் சித்த மருத்துவத்துறையில் உள்ளன. மருத்துவ சேவை வழங்கலின் தரத்தை அதிகரிப்பதற்கு, மேற்படி சேவை நிலையங்களில் உள்ள ஆளணி வெற்றிடங்களை நிரப்புதலும் இன்றியமையாதது. 

எனது முதலாவது கேள்வி! 

இதுவரை ஆயுர்வேத, சித்த, யுனானி பட்டக்கற்கை நெறிகளைக் கற்று, உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்து பணிநியமனங்களுக்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். தற்போது பல்கலைக்கழங்களில் மேற்படி கற்கைநெறிகளை மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கற்று வருகின்றனர். இவர்களும் தங்களுக்கு அரசு வேலைவாய்ப்பை தரும் என்றே நம்பி கற்கின்றார்கள். 

மேற்படியாக ஏழாயிரத்துக்கும் மேற்பட்டுள்ள இப்பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு நீங்கள் அளிக்கும் உறுதி மொழி என்ன? 

படியுங்கள்- அரசிடம் வேலை வாய்ப்பை கோரவேண்டாம் என்பதா? 

படித்து நீங்களாக தனியார் மருத்துவ சேவை நிலையங்களை நடாத்துங்கள் என்பதா? 

அல்லது ஒவ்வோர் ஆண்டும் இத்தனை எண்ணிக்கையிலான அரச பணி வெற்றிட வாய்ப்பு தான் வழங்கப்படும் என்பதா? ஏனெனில், இது தொடர்பில் ஒரு தெளிவான அறிவித்தலை அரசு இதுவரை அவர்களுக்கு வழங்கவில்லை என்றே எண்ணுகிறேன் - என்றார். 

இந்நிலையில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இதற்குப் பதிலளிக்கையில், 

கடந்த 2025.06.30ஆம் திகதிய நிலவரப்படி இலங்கையின் சுதேசமருத்துவசேவையில், குறிப்பாக ஆயுர்வேதம், யுனானி, சித்தம் மூன்று மருத்துவத்துறைகளுக்குமாக 2567 அனுமதிக்கப்பட்ட சுதேச மருத்துவர் ஆளணிகள் காணப்படுகின்றன. இருப்பினும் தற்போது 2065 சுதேசமருத்துவர்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் 502 சுதேசமருத்துவர்களின் வெற்றிடங்கள் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. 

இந்நிலையில் இலங்கை சுதேசமருத்துவசேவையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முகாமைத்துவசேவைகள் திணைக்களத்திற்கு அனுமதிகிடைத்துள்ளது. 

அந்தவகையில் தற்போது நாட்டில் காணப்படும் 502 சுதேச மருத்துவர் வெற்றிடங்களில், 304 ஆரம்ப சுதேச மருத்துவ அலுவலர் பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச்செய்வதற்கான அமச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அதற்கமைய ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 

குறிப்பாக இந்த 304 சுதேச மருத்துவர் பதவிவெற்றிடங்களும் 2009, 2010, 2011ஆகிய மூன்று கல்வியாண்டுகளில் பட்டப்படிப்பினை நிறைவுசெய்தவர்களைக்கொண்டே நிரப்புவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர்மாதம் 03ஆம்திகதி குறித்த 304 சுதேசமருத்துவ நியமனங்களையும் வழங்கவிருக்கின்றோம். 

இவ்வாறு 304பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டபின்னர் மிகுதியாகவுள்ள வெற்றிடங்களுக்கும் நியமனங்களை வழங்குவோம். 

மேலும் சுதேச மருத்துவத்தில், அதாவது ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம் ஆகிய மூன்று துறைகளிலும் 2021தொடக்கம் 2025ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் 1990பேர் பட்டப்படிப்பினை நிறைவுசெய்து வேலையை எதிர்பார்த்துள்ளனர். 

இதேவேளை குறித்த 2021 தொடக்கம் 2025வரையான காலப்பகுதியில் ஆயுர்வேதம், சித்த மற்றும் யுனானி ஆகிய மருத்துவ பட்டப்படிப்பிற்கென கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரச பல்கலைக்கழகங்களால் மொத்தம் 2,709மாணவர்கள் உள்ளீர்ப்புச் செய்யப்பட்டுள்ளனர். 

அந்தவகையில் நாட்டிலுள்ள எமது சுதேச வைத்தியசாலைக்கட்டமைப்பிற்குள் தற்போதுள்ள அனுமதிக்கப்பட்ட மருத்துவர் ஆளணியைவிட அதிகமான அளவில் சுதேச பட்டதாரிகள் காணப்படுகின்றனர். 

எனினும் தற்போதுள்ள சுதேசமருத்துவர் வெற்றிடங்கள் கணக்கீடுசெய்து அதற்கமையவே ஆட்சேர்புக்கள் செய்யப்படவிருக்கின்றன. பொது அட்டவணைக்கு அமையவே அந்த நியமனங்களை மேற்கொள்ளவுள்ளோம். 

அத்தோடு சுதேச மருத்துவத்துறையின் பணியாட்தொகுதிகளை நியமனஞ்செய்வதுதொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்கள் கோரிக்மைகளை முன்வைத்துள்ளார். குறித்த பணியாட்தொகுதிகளை நியமனஞ்செய்வதற்கும் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

நியமனங்களை மேற்கொள்வதற்கென விண்ணப்பங்களைக்கோருதல், உள்ளீர்த்தல் என்பதற்கு அப்பால் அவர்களுக்கு பயிற்சியளிக்கவேண்டிய தேவையுமுள்ளது. பயிற்சிக்காலம் முடிவுற்றபின்னர் முரண்படுகளின்றி அந்த நியமனங்களை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/228481

இஷாராவை போல ஈஸ்டர் தாக்குதல் கொலையாளிகளை தப்பிக்கவைத்த ஆனந்தன்!

1 week 1 day ago

பாதாள உலக தலைவர் கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி மற்றும், அவருக்கு உதவிய நபர்களிடம் இருந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் திடுக்கிடும் சம்பவமொன்று வெளியாகியுள்ளது.

இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச்சென்ற விடயம் குறித்து அண்மைய நாட்களில் கிளிநொச்சி யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு அவர் தங்கியிருந்த இடங்களை அடையாளம் காட்டியிருந்தார்.

இந்த பின்னணியில் அவரை இந்தியாவுக்கு கடத்த ஆனந்தன் என்ற நபர் உதவியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 

இந்நிலையில் ஆனந்தன் என்பவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலரை கடல் வழியாக தப்பிச் செல்ல உதவியதாக தெரியவந்துள்ளது.

இஷாராவை போல ஈஸ்டர் தாக்குதல் கொலையாளிகளை தப்பிக்கவைத்த ஆனந்தன்! | Jaffna Man Who Helped Easter Killers Escape

இது தொடடர்பில் தெரிய வருகையில், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை, யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு மீன்பிடி படகில் ஏற்றிச் சென்ற ஆனந்தன் என்ற பிரதான சந்தேக நபர், தொடர்பில் மேலும் பல தகவல் வெளியாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய பல சந்தேக நபர்களையும் கடல் வழியாக தப்பிச் செல்ல ஆனந்தன் என்பவரே ஏற்பாடு செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், உதயபுரம், மூன்றாம் பாதையில் வசிக்கும் 29 வயதான ஏ.பி. ஆனந்தன் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், நேற்று முன்தினம் இரவு கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இந்த சந்தேக நபருக்கு கிளிநொச்சியில் உள்ள சொந்தமான வீட்டில் இருந்து மைக்ரோ வகை துப்பாக்கியையும் கொழும்பு குற்றப்பிரிவு மீட்டுள்ளது. இந்நிலையில் சந்தேக நபர் திஹாரிய, ஒகொடபொலவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்தியாவுக்கு கடத்தும் வலையமைப்பு

பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பிற குற்றவாளிகளை படகு மூலம் இந்தியாவுக்கு கடத்தும் வலையமைப்பின் பின்னணியில் உள்ள மூளையாக ஆனந்தன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இஷாராவை போல ஈஸ்டர் தாக்குதல் கொலையாளிகளை தப்பிக்கவைத்த ஆனந்தன்! | Jaffna Man Who Helped Easter Killers Escape

ஆனந்தன் தனது தம்பிகள் இருவருடன் இணைந்து இந்த மோசடியை செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. கேரள கஞ்சா மோசடி தொடர்பாக அவரது தம்பிகள் இருவரும் தற்போது காவல்துறையின் தடுப்பு காவலில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் வழிகள் வழியாக மேற்கொள்ளப்படும் கேரள கஞ்சா வியாபாரத்திலும் இந்த சகோதரக் குழு ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்தக் குழுவின் தலையீட்டால் சமீப காலங்களில் பிரதான குற்றவாளிகள் மற்றும் பாதாள உலக துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் கடல் வழிகள் வழியாகத் தப்பிச் செல்ல இந்த நபர் உதவி செய்துள்ளதாகவும் கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

அவர் உதவி செய்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சந்தேக நபர்கள் யார் என்பதை மேலும் உறுதிப்படுத்தி வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://ibctamil.com/article/jaffna-man-who-helped-easter-killers-escape-1761202503

14 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் கொழும்பு காசல் வீதியில் சுகாதார அமைச்சுக்கு 16 மாடிக் கட்டிடம்

1 week 1 day ago

Published By: Digital Desk 3

23 Oct, 2025 | 03:04 PM

image

சுகாதார அமைச்சிக்கான புதிய 16 மாடி அலுவலக தொகுதியின்  கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவடையும், மேலும் குத்தகை அடிப்படையில் சுகாதார அமைச்சகத்தால் தற்போது இயங்கிவரும் அனைத்து அலுவலகங்களும் புதிய கட்டிடத்தின் முதல் கட்டத்தின் முதல் தளத்தில் நிறுவப்படும். 

கொழும்பில் உள்ள காசல் வீதியிலுள்ள மகளிர் போதனா வைத்தியசாலைக்கு அருகாமையில் கட்டப்பட்டு வரும் சுகாதார அமைச்சின் புதிய 16 மாடி அலுவலக வளாகத்தின் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்வதற்கான சிறப்பு ஆய்வு விஜயத்தின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

WhatsApp_Image_2025-10-23_at_1.53.38_PM.

தற்போது, சுகாதார அமைச்சின் கீழ் உள்ள பல அலுவலகங்கள் குத்தகை அடிப்படையில் ஒரு தனியார் கட்டிடத்தில் இயங்குகின்றன, மேலும் அந்த கட்டிடத்தின் குத்தகை காலத்தை வரும் ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டாம் என்றும், புதிய கட்டிடத்தின் கட்டுமானத்தை விரைவுபடுத்தவும், அந்த அலுவலகங்கள் அனைத்தையும் புதிய கட்டிடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த புதிய கட்டிட கட்டுமானப் பணிகள் நீண்ட காலமாக முடங்கிக் கிடந்தன. மேலும் அரசாங்க நிதியைப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

375,000 (முந்நூற்று எழுபத்தைந்தாயிரம்) சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை முடிப்பதற்கான தற்போதைய மதிப்பிடப்பட்ட செலவு சுமார் 14,000 மில்லியன் ரூபாய் ஆகும். இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கட்டுமானப் பணிகளுக்காக ரூ. 3,000 மில்லியன் ஒதுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது, மேலும் இந்த ஆண்டு இந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளுக்கும் தேவையான தளபாடங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கும் மேலும் ரூ. 1,500 மில்லியன் ஒதுக்க அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, நாட்டில் உள்ள ஒன்றரை இலட்சம் சுகாதார ஊழியர்களுக்கான சேவைகள் மற்றும் நாட்டில் உள்ள சுகாதாரத் துறை தொடர்பான அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் அமைந்துள்ள இந்த கட்டிடத்திலிருந்து விரைவில் நிறுவப்படும்.

தற்போது பல்வேறு இடங்களிலிருந்து சேவைகளை வழங்கி வரும் சுகாதார அலுவலகங்களை ஒரே கட்டிட வளாகத்திற்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பை இது வழங்கும், மேலும் வாடகை அடிப்படையில் பராமரிக்கப்படும் கட்டிடங்களுக்கு செலுத்தப்படும் பெரிய அளவிலான பணத்தையும், போக்குவரத்து மற்றும் பிற சேவைகளுக்கு செலவிடப்படும் பெரிய அளவிலான பணத்தையும் மிச்சப்படுத்தும்.

WhatsApp_Image_2025-10-23_at_1.53.39_PM_

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ, கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலையைக் கவனித்தார். கட்டுமானப் பணிகள் தொடர்பான சேவைகளை வழங்கும் ஒப்பந்த நிறுவனங்களான மத்திய பொறியியல் சேவைகள் நிறுவனம் மற்றும் மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகத்தின் அதிகாரிகளுடன் கட்டுமான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் நீண்ட கலந்துரையாடலை நடத்தினார். 

இந்த முழு கட்டிடத்தின் கட்டுமானத்தையும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டங்களைத் தயாரிக்குமாறு மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகத்திற்கு (CECB) அமைச்சர் தெரிவித்தார்.

இந்த கண்காணிப்பு விஐயம் மற்றும் மற்றும் கலந்துரையாடலில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், நிபுணர் வைத்தியர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர்கள் சாலிந்த பண்டார, சுனில் கலகம, ஜனக கித்சிறி குணவர்தன, துணை இயக்குநர் தினிப்பிராலய ஹேரத், மத்திய பொறியியல் சேவைகள் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் மத்திய பொறியியல் ஆலோசனை பணியகத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

WhatsApp_Image_2025-10-23_at_1.53.41_PM.

https://www.virakesari.lk/article/228459

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 பாடசாலை மாணவர்கள்!

1 week 1 day ago

Oct 23, 2025 - 02:06 PM -

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 பாடசாலை மாணவர்கள்!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். 

போதைப்பொருள் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரை அழித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். 

நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் கருத்துக்களைத் தெரிவித்தார். 

"தூக்கிலிடப்பட உள்ள 805 ஆண்கள் சிறையில் உள்ளனர். 

தூக்கிலிடப்பட உள்ள 21 பெண்களும் உள்ளனர். 

தூக்கிலிடப்பட உள்ள 805 பேரில் 5 பாடசாலை மாணவர்களும் அடங்கியுள்ளனர். 

தென் மாகாணம் தான் பாதாள உலக நடவடிக்கைகளில் முதலிடத்தில் உள்ளது. 

இவ்வளவு படித்த சமூகம் கூலிக்கு கொலை செய்யும் சமூகமாக எப்படி மாறியுள்ளது என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. 

எப்படி பாரிய அளவில் போதைப்பொருட்களை கொண்டு வந்து இந்த நாட்டை அழிக்கும் நிலைக்கு அவர்கள் கொண்டு வந்தார்கள். 

இதற்கெல்லாம் மூல காரணம் இந்த நாட்டில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள். அவர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும். 

ஏனென்றால் அவர்கள் ஒரு தேசத்தை அழிக்கிறார்கள். 

எனவே, பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். அது பாவம் அல்ல." என்றார்.

https://adaderanatamil.lk/news/cmh3640l70165qplpb1ahhitk

செம்மணி புதைகுழி: வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி பெற திட்டம்

1 week 1 day ago

செம்மணி புதைகுழி: வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி பெற திட்டம்

October 23, 2025 11:32 am

செம்மணி புதைகுழி: வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி பெற திட்டம்

”செம்மணி புதைகுழி விவகாரத்தில் சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெறப்படும். ஏனெனில் உண்மையை கண்டறிவதற்கு இது முக்கியம்.” – என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்டுவரும் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” செம்மணி புதைகுழி அகழ்வு நடவடிக்கைக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எமக்கு சில விடயங்களில் ஆய்வுக்கூட வசதி இல்லை. எமது நாட்டு பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படவேண்டும். எமக்கு உண்மையை கண்டறிவதுதான் முக்கியம். தொழில்நுட்ப உதவியும் தேவைப்படுகின்றது. எனவே, சர்வதேச தொழில்நுட்ப உதவி பெறப்படும்.” – என்றார்.

https://oruvan.com/chemmani-massacre-plan-to-seek-foreign-technical-assistance/

2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம்

1 week 1 day ago

2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம்

October 23, 2025 12:16 pm

2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம்

2026 முதல் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்ட கட்டமைப்பு அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்வி மறுசீரமைப்புக்கான பாராளுமன்ற உபகுழுவின் கூட்டம் நேற்று (22) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்த பிரமர், 2026 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்ட அமைப்பு நடைமுறைக்கு வரும் என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, முன்பள்ளி கல்விக்கான பாடத்திட்டக் கட்டமைப்பு ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சுமார் 19,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உத்தியோகபூர்வ பயிற்சித் திட்டம் 2025 நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாகாணத்திலும் இதற்கான ஆசிரியர் பயிற்சிகள் நடத்தப்படவுள்ளதுடன், புதிய பாடத்திட்ட கட்டமைப்பின்படி கற்பித்தல் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் குறிப்பிட்டார்.

மேலும் பிரதமர் வலியுறுத்தியதாவது, எந்தவொரு பாடசாலையும் மூடப்படாது என்பதுடன், பாடசாலைகளை ஒன்றிணைத்து மேம்படுத்துவது தற்போது அரசாங்கத்தின் கொள்கையாகும் எனவும் குறிப்பிட்டார். இது கல்வித் தரத்தை உயர்த்தவும், அனைத்து சிறுவர்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்கவும் நோக்கமாகக் கொண்டது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த பாராளுமன்ற உபகுழுக் கூட்டத்தில், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

571116063_1303803955122364_7672368209262571266226_1303804031789023_8479793903610571014712_1303804035122356_5773235622206

https://oruvan.com/single-curriculum-for-pre-schools-across-the-country-from-2026/

மணல்காட்டில் 300 ஏக்கர் காணியை அபகரிக்க முயற்சி; எதிர்ப்பு தெரிவித்த மக்களை மிரட்டிய சிங்களவர்கள்

1 week 1 day ago

மணல்காட்டில் 300 ஏக்கர் காணியை அபகரிக்க முயற்சி; எதிர்ப்பு தெரிவித்த மக்களை மிரட்டிய சிங்களவர்கள்

army-1-780x470.jpg

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்தில் முந்நூறு ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி மணல்காடு மக்களால் முறியடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

வாகனம் ஒன்றில் வந்த சிங்கள மொழி பேசுபவர்கள் தனியார் காணிகள் உட்பட அரச காணிகள் மற்றும் சமூக காடாக பிரகடனப்படுத்தப்பட்ட சவுக்கமரக்காடு உட்பட 300 ஏக்கர் காணியை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் அபகரிப்பதற்கு நில அளவை செய்வதற்கு முற்பட்டுள்ளனர்.

அங்கு காணி அளவீடு செய்வதனை அவதானித்த கிராம மக்கள் உடனடியாக அவ்விடத்திற்கு சென்று காணியை அளவீடு செய்ய விடாது தடுத்துள்ளனர்.

குறித்த சிங்கள மொழி பேசுபவர்கள் மக்களை மிரட்டும் தொனியில் செயற்பட்டுள்ள நிலையிலும் மக்களின் கடும் எதிர்ப்பினால் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

பின்னர் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு சென்று அங்கிருந்து மீண்டும் அளவீடு செய்யும் நோக்கில் மணல்காடு நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தயாராக நின்றதை அறிந்திருந்தவர்கள் செம்பியன்பற்று பிரதேசத்திலிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிராம மக்கள்,

தம்மில் பலருக்கு குடியிருக்கவே காணிகள் இல்லாத நிலை உள்ளதாகவும், இந்நிலையில் தனியர் நிறுவனம் ஒன்றிற்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரால் காணிகள் வழங்கப்பட்டமையை  எதிர்ப்பதாகவும் தெரிவித்ததுடன் ஒருபோதும் இவ்விடயத்தை அனுமதிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தனர்.

17611456310.png

17611456311.png

17611456312.png

17611456313.png

17611456314.png

https://akkinikkunchu.com/?p=345677

“இந்தியா- இலங்கை பாலம் சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுக்கும்” – மல்வத்து பீடாதிபதி எச்சரிக்கை

1 week 1 day ago

“இந்தியா- இலங்கை பாலம் சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுக்கும் – மல்வத்து பீடாதிபதி எச்சரிக்கை”

October 23, 2025

palk-strait-bridge-jpg.webp

இந்தியா மற்றும் இலங்கைக்கு  இடையிலானா  பாலம் அமைக்கப்பட்டால், சட்டவிரோத செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் உள்ளதாக மல்வத்து விஹாரையின் பீடாதிபதி திபட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை இடையே கடல் வழியாக போதைப்பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விமானப்படைத் தளபதிகாளான  ஏர் மார்ஷல், பந்து எதிரிசிங்க, மல்வத்தை மகா விஹாரைக்கு நேற்று சென்றிருந்தபோது பீடாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  நாட்டில் தற்போது அதிக எண்ணிக்கையிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருவதாகவும், இவை ஏதேனும் காரணத்திற்காக சமூகத்திற்குள் நுழைந்தால், பெரும் பேரழிவுக்கு  வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படும் அதேநேரம், அவற்றை இலங்கைக்குக் கொண்டுவருவதைக் கட்டுப்படுத்த அந்தந்த நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும் என மல்வத்து விஹாரையின் பீடாதிபதி மேலும்  வலியுறுத்தியுள்ளார்.

https://www.ilakku.org/india-sri-lanka-bridge-will-lead-to-illegal-activities/

வடக்கு, கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 500 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிப்பு !

1 week 1 day ago

வடக்கு, கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 500 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிப்பு !

By SRI

25-68c8e6da58bfd.jpg

2025 ஆம் ஆண்டில் இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 672 ஏக்கர் அரசாங்கக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

இன்று (23) பாராளுமன்றத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

விடுவிக்கப்பட்ட காணிகளில் 86.24 ஏக்கர் தனியார் காணிகளும், இராணுவப் பயன்பாட்டில் இருந்த 586 ஏக்கர் காணிகளும் அடங்குவதாக அவர் கூறினார்.

குறித்த காணிகள் தொடர்பான தகவல்கள், பாதுகாப்புச் சபை மற்றும் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு இந்த விடுவிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.

கிழக்கில் மட்டும் 34.58 ஏக்கர் அரசாங்கக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர கூறினார்.

https://www.battinews.com/2025/10/500.html

யாழ். குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம்

1 week 1 day ago

யாழ். குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம்

sachinthaOctober 23, 2025

23-2.jpg

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்கின்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நயினாதீவு மற்றும் நெடுந்தீவு போன்ற இரண்டு தீவுகளையும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் இணைக்கும் பிரதான சமுத்திர அணுகல் வழியாக குறிகட்டுவான் இறங்குதுறை பயன்படுத்தப்படுகின்றது. இவ் இறங்குதுறை மூலம் குறித்த தீவுகளுக்கு பயணம் செய்கின்ற பயணிகள் மற்றும் பண்டங்கள் போக்குவரத்து படகுச் சேவைகளுக்கான வசதிகள் வழங்கப்படுவதுடன், சமூக ரீதியாக, சமய ரீதியாக மற்றும் நிர்வாக ரீதியாக பரந்துபட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.தற்போது காணப்படுகின்ற இறங்குதுறையானது நீண்டகாலமாக பாரியளவிலான புனரமைப்புக்கள் மேற்கொள்ளப்படாமையால், பாரியளவிலான கட்டமைப்பு ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளது. போக்குவரத்து, யாத்திரிகர் பயணங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தியில் இறங்கு துறையின் முக்கியத்துவத்தை அடையாளங் கண்டு இடைநிலை வரவு செலவுத்திட்ட சட்டகத்தின் கீழ் குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்கின்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://www.thinakaran.lk/2025/10/23/breaking-news/159976/யாழ்-குறிகட்டுவான்-இறங்/

காங்கேசன்துறைமுக அபிவிருத்தியில் இந்தியாவின் நிபந்தனைகள் ஆராய்வு

1 week 1 day ago

காங்கேசன்துறைமுக அபிவிருத்தியில் இந்தியாவின் நிபந்தனைகள் ஆராய்வு

1743931966.jpg

காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திக்காக இந்திய அரசு வழங்கும் 62 மில்லியன் டொலர் மானியத்தை அரசாங்கம் இன்னும் இறுதி செய்யவில்லை. கடனிலிருந்து மானியமாக மாற்ற இந்திய அரசு முன்வைத்த நிபந்தனைகள் குறித்து இன்னும் பேச்சுகள் நடந்து வருவதாக துறைமுக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து துணை அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு இதுதொடர்பில் தெரிவிக் கையில்.
வடக்கு துறைமுகத்தின் மேம்பாட்டுக் காக இந்தியா 62 மில்லியன் டொல ருக்குமேல் வழங்கியிருந்தாலும், அந்தத்தொகை தற்போது கடனாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கடனை மானியமாக வழங்க இந்திய அரசு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. அந்த நிபந்தனைகள் இன்னும் கலந் துரையாடப்பட்டுவருகின்றன.


இந்தத் திட்டத்தைத் தொடரலாமா வேண்டாமா என்பது குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவை எடுக்க வில்லை. ஒரு துறைமுகம் நிறுவப்படும்போது, அதன் சமூகப்பொருளாதார தாக்கத்தை நாம் கவனிக்க வேண்டும்.
அது உறுதி செய்யப்பட்டவுடன், தேவையான பேச்சுகளைத் தொடங்கி அதற்கேற்ப முன்னேறுவோம் - என்றார்.

https://newuthayan.com/article/காங்கேசன்துறைமுக_அபிவிருத்தியில்_இந்தியாவின்_நிபந்தனைகள்_ஆராய்வு#google_vignette

நாடாளுமன்றத்தில் விசேட சோதனை!

1 week 1 day ago

Parliament-1.jpg?resize=750%2C375&ssl=1

நாடாளுமன்றத்தில் விசேட சோதனை!

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இதனை சபாநாயகர் இன்று (23) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அதன்படி, எதிர்வரும் நவம்பர் 4, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்களில் நாடாளுமன்றத்தில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வறைகள் மற்றும் ஆடை அலுமாரிகள் உட்பட முழு நாடாளுமன்ற கட்டிடமும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார்.

இதற்கிடையில், நவம்பர் 7 ஆம் திகதி நாடாளுமன்ற கட்டிடத்தின் உயர் பாதுகாப்பு பகுதிகளும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும்.

அன்றையதினம் பொது மக்கள் பார்வையிடும் பகுதி விருந்தினர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள் நிதி அமைச்சினால் வழங்கப்படுவதுடன், விசேட பாதுகாப்பு திட்டம் அமுலில் இருக்கும் அன்றையதினம் (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாரதிகளுடன் வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அன்று நாடாளுமன்ற வாகன நிறுத்துமிடம் மூடப்படும் என்பதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் வாகனங்கள் வாகன நிறுத்துமிடத்திற்கு அனுப்பப்படும் என்றும் சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.

இதேவேளை, அன்றைய தினம் விசேட போக்குவரத்துத் திட்டமும் செயல்படுத்தப்படும் என்று சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1450953

பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து பாதணிகள்

1 week 2 days ago

22 Oct, 2025 | 05:22 PM

image

(எம்.மனோசித்ரா)

2026 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற துறவு மாணவர்களுக்கான பாதணி வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய 2026 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற துறவு மாணவர்களுக்கான பாதணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர் சிட்டைகளை 2025 பாடசாலை தவணை முடிவடையும் போது பயனாளிகளுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த வவுச்சர்சிட்டைகள் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சால் நலன்புரிக் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள பரிசு வழங்கும் கைத்தொலைபேசி மென்பொருள் மூலம் ஸ்கான் செய்வதற்கு இயலுமாகும் வகையில் ஞசு குறியீட்டுடன் பாதுகாப்பாக அச்சிட்டு பயன்பெறுகின்ற மாணவர்களுக்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் கீழ்வரும் வகையில் மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாடளாவிய ரீதியில் மாணவர்களின் எண்ணிக்கை 250 இனை விடவும் குறைவான பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள் 644,000 பேர், 251-500 இடைப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையைக் கொண்ட தோட்டப் பாடசாலை மாணவர்கள் 53,093 பேர், விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்கின்ற 30 பாடசாலைகளில் மாணவர்கள் 2,300 பேர், பிரிவெனாக்களில் தெரிவு செய்யப்பட்ட துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்கள் 30,000 பேர் என இதற்காக மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். 

https://www.virakesari.lk/article/228397

யாழ்ப்பாணத்தை சென்றடைந்த சூரன்

1 week 2 days ago

யாழ்ப்பாணத்தை சென்றடைந்த சூரன்

adminOctober 22, 2025

IMG_0683.jpeg?fit=1170%2C658&ssl=1

பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து , சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் கடந்து இன்றைய தினம் புதன்கிழமை சூரன் என்ற  இளைஞன் யாழ்ப்பணத்தை சென்றடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட 28 வயதுடைய சூரன் என்ற இளைஞன் இலங்கையின் மகத்துவத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு பொறிமுறையாகவே இந்த துவிச்சக்கர வண்டி பயணத்தை முன்னெடுத்து யாழ்ப்பாணத்தை சென்றடைந்ததாக தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து தனது பயணம் குறித்து மேலும் தெரிவிக்கையில் –

“நான் பாரிஸில் இருந்து கடந்த செப்டம்பர் 01ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜார்ஜியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற பல நாடுகள் வழியாக சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் பயணித்து இன்று எனது பூர்வீக இடமான நல்லூரை வந்தடைத்தேன்.

யாழ்ப்பாணம் தனது பெற்றோரின் சொந்த ஊர் என்பதால் எனது பயணத்தின் இறுதி இலக்காக யாழ்ப்பாணத்தின் நல்லூர் கோயிலைத் தேர்ந்தெடுத்திருந்தேன்.

அத்துடன் இலங்கை ஒரு நாடு மட்டுமல்ல, என் பூர்வீகத்துடன் தொடர்புபட்ட உன்னத உணர்வு. எனது நோக்கம் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைவது மட்டுமல்லாமல்ல யாழ்ப்பாணத்தின் கலாசார முக்கியத்துவத்தை உலகிற்கு வெளிப்படுத்துவதும் ஆகும்.

மேலும் யாழ்ப்பாண தீபகற்பத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், பிராந்தியத்துடன் வலுவான உணர்வு மற்றும் கலாசார உறவுகளைப் பேணுகின்ற உலகளாவிய தமிழ் புலம்பெயர்ந்த சமூகத்தை ஊக்குவிப்பதற்கும் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை உருவாக்குவதுமாகும்.

நான் பாகிஸ்தானுக்கும் சென்று வர முயற்சித்தேன். ஆனால் அந்நாடு அனுமதி மறுத்திருந்தது. அதன்பின் இந்தியா சென்று நாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் காங்கேசன்துறையை வந்தடைந்து  எனது இறுதி நல்லூரை வந்தடைந்துள்ளேன்

இங்கு எனக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கப்பெற்றது. அத்துடன் நான் இந்த பயணத்தில் கரடுமுரடன சவால்களை எதிர்கொண்டாலும் அந்த நாடுகளின் அரசுகளும் மக்களும் எனக்கு மிகுந்த வரவேற்பையும் ஒத்துழைப்புகளையும்  தந்திருந்தனர். அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளை கூறுகின்றேன் என தெரிவித்திருந்தார்.

அதேநேரம் சுமார் 40 வருடங்களுகு முன்னர் பெற்றோர் பிரான்சில் குடியேறிய நிலையில் சூரன் சரளமாக தமிழில் தனது உணர்வுகளை பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

IMG_0682.jpeg?resize=800%2C450&ssl=1IMG_0686.jpeg?resize=800%2C450&ssl=1IMG_0681.jpeg?resize=800%2C450&ssl=1

https://globaltamilnews.net/2025/221853/

தவிசாளர்கள் - செயலாளர்கள் முரண்பாடு பெரும் தலையிடி ; அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் - வடக்கு ஆளுநர்

1 week 2 days ago

Published By: Digital Desk 1

22 Oct, 2025 | 03:53 PM

image

தவிசாளர்களுக்கும் செயலாளர்களுக்கும் இடையேயான முரண்பாட்டை  தீர்ப்பது பெரும் தலையிடியாக உள்ளதென தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் எல்லோரும் ஒன்றிணைந்தாலே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், செயலாளர்கள் ஆகியோருக்கான பயிற்சி வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (22) வடக்கு மாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை நாம் ஏற்படுத்தவேண்டும். எங்கள் சேவைகளை விரிவாக்குவதுடன் அவற்றையும் நாம் விரைவுபடுத்தவும் வேண்டும். 

தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள் சிலர் துணிவுடன் நடவடிக்கைகள் எடுக்கின்றீர்கள். அதைப் பாராட்டுகின்றேன். ஏனையோரும் அவ்வாறு செயற்படவேண்டும். தவிசாளர்களும் செயலாளர்களும் இணைந்து செயற்படவேண்டும். இருவரும் முரண்பட்டால் அதைத் தீர்ப்பதே எங்களுக்குப் பெரும் தலையிடியாக மாறிவிடும். தவிசாளர்களுக்கும் செயலாளர்களுக்கும் இடையிலான முரண்பாட்டால் பாதிக்கப்படப்போவது அந்தப் பகுதி மக்களே. அந்த மக்களுக்கு சேவை செய்வதற்கே எல்லோருக்கும் இருக்கின்றார்கள். அதை மனதிலிருத்தினாலே போதும். மக்களை அவர்களது சேவைகளை நிறைவேற்றுவதற்கு அலைக்கழிக்காதீர்கள். 

இதேநேரம், யாழ். மாநகரசபை எல்லைக்குள் உள்ள பெரு வணிக நிறுவனங்கள் குடிபுகு சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளாமல் இயங்குகின்றன. இதனால் அவர்கள் மாநகர சபைக்குச் செலுத்தும் வரியானது, பிரதேச சபையொன்றிலுள்ள குடியிருப்பாளர் செலுத்தும் வரியைவிடக் குறைவானது. இதைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது. அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டியது உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பு. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாக மாற்றங்களை ஏற்படுத்துவோம் என்றார் .

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், பிரதிப் பிரதம செயலாளர் - ஆளணியும் பயிற்சியும் செ.பிரணவநாதன், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

https://www.virakesari.lk/article/228385

பாரிய செலவினச் சுமையாக மாறியுள்ள இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்படும் - வலுசக்தி அமைச்சர்

1 week 2 days ago

22 Oct, 2025 | 04:49 PM

image

(எம்.ஆர்.எம் வசீம்,இராஜதுரை ஹஷான்)

வரிச்செலுத்தும் மக்களுக்கும், பொதுத் திறைச்சேரிக்கும், அரச வங்கிகளுக்கும் பாரிய செலவினச் சுமையாக மாறியுள்ள  இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்பட்டு, புதிதாக 6 நிறுவன கட்டமைப்புக்கள் உருவாக்கப்படும் என வலுசக்தி அமைச்சர்  குமார ஜயகொடி  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில்  ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி,  எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும்  பதிலளித்ததாவது,

வரிச்செலுத்தும் மக்களுக்கும், பொதுத் திறைச்சேரிக்கும், அரச வங்கிகளுக்கும் பாரிய செலவினச் சுமையாக மாறியுள்ள  இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது.

2025 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க  (திருத்த) மின்சார சபைச் சட்டத்தின்  பிரகாரம் , 2024 ஆம் ஆண்டின்  36 ஆம் இலக்க இலங்கை மின்சார சபை  சட்டத்தின்  முதலாவது உப பிரிவின் குறிப்பிடப்பட்டுள்ள மாதிரிக்கு அமைய,  17 ஆவது  உறுப்புரைக்கமைய,  இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்படும்.

புதிய மறுசீரமைப்பைத் தொடர்ந்து நேஷனல்  சிஸ்டம் ஒபரேட் (பிரைவெட்) லிமிடெட், நேஷனல் ட்ரான்ஸ்மிஷன்  நெட்வொர்க் சர்விஸ் (பிரைவெட்) லிமிடெட்,  எலெக்ட்ரிசிட்டி  ஜெனரேசன்  (பிரைவெட்) லிமிடெட்,   எலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபூசன்  (பிரைவெட்) லிமிடெட்,

எனெர்ஜி  வென்டேர்ஸ்   லங்கா (பிரைவெட்) லிமிடெட்,  சி.இ.பி எம்ப்லோயீஸ் (பிரைவெட்) லிமிடெட்,  என்ற அடிப்படையில் புதிதாக 6 நிறுவன கட்டமைப்புக்கள் உருவாக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/228394

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை நிறுத்தம்!

1 week 2 days ago

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை நிறுத்தம்!

சீரற்ற காலநிலை காரணமாக நாகை காங்கேசன்துறை மற்றும் நாகபட்டினத்துக்கிடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நவம்பர் மாதம் நிறுத்தப்படும் எனவும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழமை போல் சிவகங்கை கப்பல் இயக்கப்படும் என்றும் சுபம் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

சுபம் கப்பல் நிறுவனம் நாகை துறைமுகம் இலங்கையின் காங்கேசன்துறைக்கிடையே சிவகங்கை பயணிகள் கப்பலை இயக்கி வருகிறது. இந்தக் கப்பலில் கடந்த ஓராண்டில் 20,000க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர்.

நாளுக்கு நாள் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிற நிலையில் புதிய கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இதற்காக புதிய கப்பல் சீனாவில் இருந்து புறப்பட்டுள்ளது எனவும் அந்தக் கப்பல் நவம்பர் மாதம் இறுதிக்குள் நாகை துறைமுகத்திற்கு வரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

வடகிழக்குப் பருவமழை சில நாள்களில் தொடங்கவுள்ளதால், பருவநிலை மாற்றம் ஏற்படுவதுடன் இதனால், கடல் சீற்றம் மற்றும் சூரைக்காற்று காரணமாக கப்பல் இயக்குவதில் சிக்கல் உள்ளது எனவே நவம்பர் மாதம் முழுவதும் சிவகங்கை பயணிகள் கப்பல் இயக்கப்படாது என அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த 30 ஆண்டுகளின் காலநிலையினை அடிப்படையாகக் கொண்டு, நிகழாண்டு நவம்பர் மாதத்தை தவிர்த்து, டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழக்கம் போல் சிவகங்கை கப்பல் இயக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை நிறுத்தம்!

யாழில் மழையுடன் சேர்ந்து விழுந்த மீன்கள்!

1 week 2 days ago

21 Oct, 2025 | 07:48 PM

image

யாழில் பொழிந்த மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழில் மழை பொழிந்தது. இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் விழுந்தன. அந்த மீன்களை மக்கள் பிடிப்பதை அவதானிக்க முடிந்தது. 

கடந்த காலங்களிலும் இவ்வாறு மழையுடன் மீன்கள் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VID-20251021-WA0085_1_.jpg

VID-20251021-WA0085.jpg


யாழில் மழையுடன் சேர்ந்து விழுந்த மீன்கள்! | Virakesari.lk

ஒக்டோபரில் வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்!

1 week 2 days ago

22 Oct, 2025 | 12:13 PM

image

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 18 இலட்சத்து 28 ஆயிரத்து 985 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 404,752 ஆகும்.

அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 170,422 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 127,613 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 113,293 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 109,653 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 91,694 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 82,328 சுற்றுலாப் பயணிகளும், நெதர்லாந்திலிருந்து 54,437 சுற்றுலாப் பயணிகளும்  , அமெரிக்காவிலிருந்து 50,737 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, இவ்வாண்டின் ஒக்டோபர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 103,491 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

ஒக்டோபரில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 29,460 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. 

ஒக்டோபரில் வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்! | Virakesari.lk

Checked
Fri, 10/31/2025 - 23:27
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr