02 Sep, 2025 | 02:59 PM

காற்றாலை மற்றும் கனிம மணல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு நேற்றைய தினம் திங்கட்கிழமை (1) மன்னாருக்கு வருகை தந்து பொது அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடியபோதும் எங்களுடைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவர்கள் கரிசனை கொண்டதாக இல்லை. அவர்கள் ஏற்கனவே உள்ள பிரச்சினைகளை தீர்த்து இங்கே காற்றாலைகளை எவ்வாறு அமைக்கலாம் என்பது குறித்து அவர்களுடைய கருத்துக்களும் வாதங்களும் அமைந்திருந்தது என பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.
மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (2) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
காற்றாலை, கனிம மணல் விடயம் தொடர்பாக கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்து உரையாடியதன் நிமித்தம் ஒரு மாதகாலம் இடை நிறுத்தப்பட்ட செயற்றிட்டம் தொடர்பாக நிபுணர்கள் குழு மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டு, சிவில் அமைப்புக்கள் மற்றும் பொது மக்களை சந்தித்து, அது சம்பந்தமான உரையாடல் ஊடாக தீர்மானத்திற்கு வரலாம் என ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் மின்சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் துறை சார் திணைக்களங்கள் குழுவாக நியமிக்கப்பட்டு, நேற்று திங்கட்கிழமை (1) மாலை மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் பொது அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த கலந்துரையாடலில் ஏற்கனவே அமைக்கப்பட்ட 30 காற்றாலைகளின் பிரச்சினைகள் தொடர்பாகவும், இனி அமைக்கப்படவுள்ள காற்றாலைகளால் ஏற்படவுள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பது தொடர்பிலும் அவர்களுடைய வாதங்கள் அமைந்திருந்தது.
எங்களுடைய கோரிக்கையாக இருந்த மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலை, கனிம மணல் திட்டத்தை முற்றாக நிறுத்த வேண்டும் என்கிற விடயம் தொடர்பாக அவர்கள் அவதானம் செலுத்தியதாக இல்லை.
எங்களுடைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவர்கள் கரிசனை கொண்டதாக இல்லை. அவர்கள் ஏற்கனவே உள்ள பிரச்சினைகளை தீர்த்து இங்கே காற்றாலைகளை எவ்வாறு அமைக்கலாம் என்பது குறித்து அவர்களுடைய கருத்துக்களும் வாதங்களும் அமைந்திருந்தது.
எனினும், மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு இடமாற்றத்தை ஏற்படுத்தி மக்களின் வாழ்வாதார வாழ்வியல் இருப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய குறித்த இரு திட்டங்களையும் மன்னார் தீவில் இருந்து வெளியே எடுப்பது சம்பந்தமாக அவர்களுடைய பார்வை இருக்கவில்லை.
எனவே, இவர்களினால் பரிந்துரைக்கப்படுகிற அறிக்கை எவ்வாறு அமையப்போகிறது என்பது குறித்து எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. இவர்களின் அறிக்கையில் பிரகாரமே ஜனாதிபதி இறுதி முடிவுக்கு வருவார் என அவர்கள் கூறுகிறார்கள்.
ஜனாதிபதி காற்றாலை வேலைத்திட்டத்தை ஒரு மாதம் நிறுத்தியது கூட கண்துடைப்பு நாடகம் என நான் ஏற்கனவே ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் வைத்து ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தேன்.
அதே போல் நிபுணர் குழுவும் எங்களுடைய பிரச்சினைகளை மாத்திரமே பேசுகின்றதே தவிர எங்களுடைய கோரிக்கைகள், அடிப்படை உணர்வுகள் என்ன என்று அவர்கள் புரிந்துகொள்வதாக இல்லை.
அதில் உள்ள அதிகாரிகள் அத்தனை பேரும் ஏற்கனவே பல தடவைகள் மன்னாருக்கு வந்தவர்கள். பல கூட்டங்களில் அவர்களுடன் பங்குபற்றியுள்ளோம்.
அவர்களுக்கு எங்களுடைய பிரச்சினை என்ன என்று தெளிவாக தெரியும். இந்த நிலையில் இந்த நிபுணர் குழுவில் புதியவர்களை இணைக்காது அவர்களை மீண்டும் இக்குழுவில் இணைத்திருப்பது எமக்கு சாதகமான பதில் கிடைக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை.
மன்னார் மக்களின் கூட்டு கோரிக்கையாகிய காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வு ஆகிய இரு திட்டங்களும் மன்னார் தீவுப் பகுதியில் இருந்து வெளியே கொண்டுபோக வேண்டும் என்ற கோரிக்கை எவ்வாறான நிலைப்பாட்டில் போகப்போகிறது என்பது குறித்து எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
அரசு தனது நிறைவேற்று அதிகாரத்தையும் பெரும்பான்மை ஆதரவையும் பயன்படுத்தி இத்திட்டங்களை அமுல்படுத்துமோ என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
https://www.virakesari.lk/article/224022