ஊர்ப்புதினம்

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்!

2 weeks 1 day ago

Published By: DIGITAL DESK 3 10 APR, 2025 | 09:43 AM

image

தென்மேற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாழமுக்கம் அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்காள விரிகுடாவில் படிப்படியாக பலவீனமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கூறிய கடல் பகுதிகளில் தற்காலிகமாக மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், அதனுடன் பலத்த மழை மற்றும் கடல் கொந்தளிப்புடன் இருக்கும்.

இது தொடர்பாக திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளை கவனமாகக் கவனிக்குமாறு மீன்பிடி மற்றும் கடற்படை சமூகங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

489946667_980437487610066_39506809925438

https://www.virakesari.lk/article/211666

தமிழரசுக் கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும்; கஜேந்திகுமார்

2 weeks 1 day ago

தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியானது எம்.ஏ.சுமந்திரன் பொதுச்செயலாளராக வந்த பின்புதான் நிராகரிக்கப்பட்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் 19 தமிழ் உறுப்பினர்கள் உள்ள போதும் 10 உறுப்பினர்களைக்கொண்ட அறுதிப்பெரும்பாண்மை ஒருவருக்கும் இல்லை.

தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளை முன்னெடுத்த போதும் அது சாத்தியப்படவில்லை.

தமிழரசு பதில் தலைவர் சீ.வி.கே. சிவஞானத்துடன் பேசிய போது தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு குழு அமைப்பதாக சொல்லியிருந்தார்.

அதன் பின்பு எம்.ஏ.சுமந்திரன் பொதுச்செயலாளராக வந்த பின்பு குழு அமைக்கும் விடயம் தேவையில்லை என்று சொல்லப்பட்டுள்ளது.

தற்போது தமிழரசுக்கட்சி ஆட்சி செய்பவர்கள் தமிழ்த்தேசிய நீக்க அரசியலை கொண்டு செல்பவர்கள்.

சுதந்திரதினம் கொண்டாட எத்தனிப்பவர்களும் சிங்கள கட்சிகளுக்கு இங்கு வைத்து ஆதரவு வழங்குபவர்களும் தான் உள்ளனர்.

இந்தியப் பிரதமரை சந்திக்கும் போது நாங்கள் சமஸ்டியை வலியுறுத்தினோம், மற்றவர்கள் ஒற்றையாட்சி 13ஐ தான் வலியுறுத்தினார்கள்.

மக்களிடம் வாக்கு கேட்க வரும் போது சமஸ்டியை சொல்கிறார்கள், மக்கள் வழங்கும் ஆணையை தவறான வழியில் பயன்படுத்துகின்றனர்.

இந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கில் தோற்கடிக்கப்பட வேண்டும்” எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/316942

தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா? பலாலி வீதி திறப்பு குறித்து சுமந்திரன் கேள்வி

2 weeks 1 day ago

10 APR, 2025 | 11:04 AM

image

தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  கேள்வி எழுப்பியுள்ளார்?

யாழ் பலாலி வீதி திறந்துவிடப்பட்டுள்ளமை குறித்த தனது சமூக ஊடக பதிவில் இந்த கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

GoJLXbcacAAYSxK.jpg

கட்டுப்பாடுகளுடன் பலாலி வீதி திறக்கப்பட்டதை வரவேற்கின்றோம்.

ஆனால் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதாக வாக்குறுதியளித்தவர்கள் கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமா?

இந்த பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக சட்டபூர்வமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பகுதியில்லை.

மாலை ஆறு மணியிலிருந்து காலை 5 மணிவரை போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு எந்த சட்டம் உங்களிற்கு அனுமதிவழங்கியது.

ஏன் பாதசாரிகள் இந்த வீதியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை.

அதனை விட முக்கியமான கேள்வி?  தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா?

https://www.virakesari.lk/article/211683

காடுகளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் மக்களின் காணிகளை அபகரிப்பதையே நாம் எதிர்க்கின்றோம் - வடக்கு ஆளுநர்

2 weeks 1 day ago

10 APR, 2025 | 11:46 AM

image

காடுகளை அழிப்பது எங்கள் நோக்கமல்ல. காடுகளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் மக்களின் காணிகளை அபகரிப்பது மற்றும் அபிவிருத்திக்கு தடையாக இருப்பதையே எதிர்க்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். 

வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் வனவள, வனஜீவராசிகள் திணைக்களங்கள் என்பனவற்றால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் புதன்கிழமை (09) இடம்பெற்றது. 

சுற்றாடல்துறை பிரதி அமைச்சர் அன்ரன் ஜெயக்கொடி மற்றும் காணி, நீர்ப்பாசனத்துறை பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட இந்தக் கலந்துரையாடலில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் பாதுகாவலர்நாயகங்கள், காணி ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்களும் இதில் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் இ.சந்திரசேகரன், வன்னித் தேர்தல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், திலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

காணி, நீர்பாசனத்துறை பிரதி அமைச்சர், வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினை குறிப்பாக வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பனவற்றால் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவே கூட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து வனவளத் திணைக்கள பாதுகாப்பு நாயகம் வடக்கு மாகாணங்களில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் விவரித்தார். குறிப்பாக முன்னைய ஆட்சியில் இது தொடர்பில் விசேட செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் வவுனியா மாவட்டச் செயலர் தவிர்ந்த ஏனைய மாவட்டச் செயலர்கள் அதனை முழுமைப்படுத்தவில்லை என்றும் குற்றம் சுமத்தியிருந்தார். அத்துடன் வனவளத் திணைக்களம் வடக்கு மாகாணத்தில் முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகளை முழுமையாக நியாப்படுத்தியிருந்தார். 

அவரது கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் நிலைப்பாட்டை முன்வைத்தார். 

மிக நீண்ட காலப் போர் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்களது காணிகள் ஆள்நடமாட்டம் அற்ற நிலையில் அவையே காடுகளாக வளர்ந்துள்ளன என்றும் அவற்றை கூகுள் வரைபடம் மூலமே வனவளத் திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் என்பன தமக்குரியதாக அடையாளப்படுத்தி 2012ஆம் ஆண்டின் பின்னர் அரசிதழ் வெளியிட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார்.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் அரசிதழ் வெளியிட்டப்பட்டவை தொடர்பில் எந்தக் குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், போரின் பின்னர் கூகுள் வரைபடத்தை மாத்திரம் பயன்படுத்தி, கள அலுவலர்களுக்கும், பிரதேச செயலர், மாவட்டச் செயலர் ஆகியோருக்கும் தெரியாமலேயே அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அதுவே தற்போதுள்ள சகல பிரச்சினைகளுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது எனவும் தெளிவுபடுத்தினார். 

வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பன தமக்குரியதாக 2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளியிட்ட அரசிதழ்களில் குறிப்பிடப்படும் பகுதிக்குள் மக்கள் முன்னர் வாழ்ந்தமைக்கான கட்டடங்களின் எச்சங்கள், கிணறுகளின் எச்சங்கள், வயல்கள் செய்தமைக்கான அடையாளங்கள் என்பன இப்போதும் காணப்படுகின்றன என்றும் அவை மக்களின் வாழ்விட மற்றும் வாழ்வாதார நிலங்கள்தான் என்பனவற்றுக்கு இவை சிறந்த சான்று எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பன தான்தோன்றித்தனமாகச் செயற்படுவதால், மக்களின் வாழ்வாதாரம், குடியேற்றம் என்பன மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் வடக்கின் அபிவிருத்திச் செயற்பாடுகளும் திட்டமிட்ட ரீதியில் முடக்கப்படுவதற்கான அபாயம் காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார். 

இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் மிக நீண்ட காலமாக பேசப்பட்டு வந்தாலும் அதற்கு தீர்வு காணப்படாமல் இழுதடித்துச் செல்லப்படுகின்றது என விசனத்துடன் குறிப்பிட்ட ஆளுநர், மக்களின் காணிகளையும், அபிவிருத்திக்குத் தேவையான காணிகளையும் விடுவிப்பதே தீர்வாகும் என்பதையும் அதனை உடனடியாகச் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

ஆளுநரைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் இ.சந்திரசேகரன்,

ஆளுநர் குறிப்பிட்ட விடயங்கள் மிகச் சரியானது. இந்த விடயங்களால் வடக்கு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வனவளத் திணைக்களம் முன்வைத்த காலை எப்படி பின்வைப்பது என்று யோசிக்காமல் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் செயற்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 

பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பனவற்றுக்கு எதிராக மிகக் காட்டமான கருத்துக்களை முன்வைத்தார். வவுனியா மாவட்டத்துக்கு சிங்கள மாவட்டச் செயலர் இருக்கின்றார். அந்த மாவட்டத்துக்கு ஒருங்கிணைப்புக்குழுத் தலைவராக சிங்களவரான நான் இருக்கின்றேன்.

அப்படியிருக்கையிலேயே எனக்குத் தெரிந்து மடுகந்த குளத்தின் கீழ் வனவளத் திணைக்களம் ஆக்கிரமித்த காணிகளை விடுவிப்பதற்கு மறுக்கின்றது. அது மக்கள் வயல் செய்த காணிகள். சிங்களவர்களுக்கே இவ்வாறான நிலைமை என்றால் தமிழ் மக்களின் நிலைமை சொல்லத்தேவையில்லை. இந்த நாட்டில் போர் உருவாகுவதற்கு காணிப் பிரச்சினையும் பிரதான காரணம் என்பதை மறவாதீர்கள் என்று குறிப்பிட்டார். 

இதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலர்கள் ஒவ்வொருவரும் தமது மாவட்டத்தில் இந்த இரு திணைக்களங்களாலும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைப் பட்டியல்படுத்தினர். முன்னைய ஆட்சியில் விடுவிப்பதற்கு தங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் 10 சதவீதத்தையே விடுவிக்க இணங்கியமையும் சுட்டிக்காட்டிய அவர்கள் அது போதாது எனவும் குறிப்பிட்டனர்.

இதற்கு மேலதிகமாக, விடுவிக்க இணங்கியதைவிட பல காணிகளை புதிதாக காடுகளாக அரசிதழ் வெளியிடுவதற்கு வனவளத் திணைக்களம் கோரியிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இதனாலேயே முன்னைய ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் இணங்கிச் செல்ல முடியாத நிலைமை காணப்பட்டதாகவும் குறிப்பிட்டனர். 

வவுனியா மாவட்டச் செயலர், கடந்த ஆட்சிக் காலத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவராக இருந்தவரது அறிவுறுத்தலுக்கு அமைவாகவே தான் செயற்பட்டதாகக் குறிப்பிட்டார். இருப்பினும் வவுனியா மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் மக்கள் தினமும் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் பட்டியல்படுத்தியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதனும் மேலதிக விடயங்களைத் தெரியப்படுத்தினார். 

வடக்கில் மிகப்பெரும் பாரதூரமான விடயமாக வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பனவற்றின் செயற்பாடுகள் இருப்பதை ஏற்றுக்கொண்ட சுற்றாடல்துறை பிரதி அமைச்சர், இது தொடர்பில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகக் குறிப்பிட்டார்.

மேலும், ஜனாதிபதியின் செயலருடன் இது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலை நடத்துவது பொருத்தமாக இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது. அதேநேரம், ஆளுநர் ஜனாதிபதியின் பிரதிநிதி என்ற வகையில் ஜனாதிபதியுடன் சந்தித்து அவரின் கவனத்துக்கு கொண்டு செல்லலாம் எனவும் பிரதி அமைச்சர்கள் குறிப்பிட்டனர். 

மேலும், வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் மாவட்டச் செயலர்களால் தமது மாவட்டங்களில் விடுவிப்பதற்கு கோரிக்கை முன்வைத்த காணிகளை மீளவும் களப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்வதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/211675

யாழ் – கதிர்காமம் பாதயாத்திரைக்கான ஏற்பாடு ஆரம்பம்!

2 weeks 1 day ago

யாழ் – கதிர்காமம் பாதயாத்திரைக்கான ஏற்பாடு ஆரம்பம்!

April 10, 2025

( வி.ரி.சகாதேவராஜா)

இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம் கதிர்காமம் பாதயாத்திரை மே மாதம் 30 ஆம் தேதி ஆரம்பமாகிறது.

யாழ்.செல்வச்சந்நதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகும் ஜெயா வேல்சாமி தலைமையிலான மிக நீண்ட 59 நாள் பாதயாத்திரை யூலை மாதம் 26ஆம் திகதி கதிர்காமத்தை சென்றடையும்.

அதற்கான முன் ஏற்பாடு ஒழுங்கு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப் புனித பாதயாத்திரைக் குழுவில் பக்திபூர்வமான முறையில் பங்குபெறவிரும்பும் அடியவர்கள் ( 0763084791 ) குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளமுடியும் என் தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார்.

மகிமைகள் பொருந்திய இவ்வருட 2025 கதிர்காம ஆடிவேல் விழா உற்சவம் ஜூலை 26ம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு ஆகஸ்ட் 9ம் திகதி சனிக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.supeedsam.com/230585/

நாவற்குழியில் பாலியல் விடுதி; மூன்று பெண்கள் கைது

2 weeks 1 day ago

நாவற்குழியில் பாலியல் விடுதி; மூன்று பெண்கள் கைது

1196797719.jpg

யாழ்ப்பாணம் - நாவற்குழிப் பகுதியில் இயங்கிவந்த விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே, மேற்படி நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் 40, 42 மற்றும் 53 வயதுடையவர்கள் என்றும், விடுதியை நடத்திவந்த உரிமையாளர் 68 வயதுடையவர் என்றும் பொலிஸார் தமது விசாரணைகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 

https://newuthayan.com/article/நாவற்குழியில்_பாலியல்_விடுதி;_மூன்று_பெண்கள்_கைது

ரவீந்திரநாத் பிள்ளையான் கும்பலால் எப்படி கடத்தப்பட்டார்!

2 weeks 1 day ago

ரவீந்திரநாத் பிள்ளையான் கும்பலால் எப்படி கடத்தப்பட்டார்!

Vhg ஏப்ரல் 10, 2025

1000479432.jpg

துணைவேந்தர்  பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் அவர்கள்  மார்கழி  15, 2006 அன்று "Triploli Platoon-பிள்ளையான்" கூட்டு கும்பலால் கடத்தி காணாமலாக்கப்பட்டார் 

புரட்டாதி  20, 2006 முதல் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் பல்வேறு வழிகளில் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டார் 

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கிழக்கு பல்கலை கழக துணைவேந்தராக இருக்க முடியாது  என்கின்ற  தோரணையில்  அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டது 

தொலைபேசி வழியில் தொடங்கிய அச்சுறுத்தல்கள்  ஒரு கட்டத்தில்  கலைப் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி  பால சுகுமாரை கடத்திச் சென்று  பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத்  துணைவேந்தர் பதவியை ராஜினாமா செய்தால், கலாநிதி  பால சுகுமாரை விடுவிப்போம் என கட்டாயப்படுத்த்துமளவிற்கு எல்லை மீறியது 

இராணுவம் மற்றும் பொலிஸ் கண் முன்னே அவர்கள் வேடிக்கை பார்க்க இவை நடந்தேறின 

இவ்வாறான நெருக்கடிகளால் பாதுகாப்புமின்றி பணியாற்ற முடியாத சூழலில் துணைவேந்தர்  ஐப்பசி  1, 2006 அன்று இரவு மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்குப் இடம்பெயர்ந்தார்   

மறுநாள், பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் 30.10.2006 திகதியிட்டு   தனது ராஜினாமாவையும் சமர்ப்பித்தார்

ஆனால் அவரது ராஜினாமா கடிதத்தை  பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை 

மாறாக அவரை கொழும்பிலிருந்து பணியாற்றுமாறு  பணித்தது. துணைவேந்தர் ஒருவரின்  ராஜினாமாவை தங்களால் ஏற்று கொள்ள முடியாது என வாதிட்டது 

இந்த நெருக்கடிகள் குறித்து பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் பொலிஸ் யில் மேற்கொண்ட முறைப்பாடுகளும் தட்டி கழிக்கப்பட்டன 

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் அவர்களை பாதுகாக்க கோட்டாபய ராஜபக்சவின் தாளத்திற்கு ஆடிக்கொண்டிருந்த  மஹிந்த ராஜபக்சே ஆட்சியாளர்களும் முயற்சிக்க வில்லை 

மாறாக இராணுவ புலனாய்வாளர்களும் ஒட்டுக்குழுக்களும் தாங்கள் நினைத்ததை செய்ய கூடிய சுதந்திரத்தை வழங்கியிருந்தார்கள் 

இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பங்குபற்றிய Sri Lanka Association for the Advancement of Science யின் Conference யில் கொழும்பிற்கு இடம்பெயர்ந்த பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் பங்குபற்றினர் 

கொழும்பின்  உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்த Vidya Mawatha (பௌத்தலோக மாவத்தைக்கு அருகில்), கொழும்பு  7 இல் நடைபெற்ற இவ் Conference நடைபெற்றது

அன்று 8.30 மணிக்கு, பேராசிரியர் ரவீந்திரநாத் அவர்களை அவரது மகளின் தெஹிவளை அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து  Conference இற்கு பல்கலை கழக  காரில் சென்றிருந்தார் 

மதியம் 12.25 மணிக்கு, பேராசிரியர் ரவீந்திரநாத் தனது சாரதிக்கு தொலைபேசியில் பேசியிருந்தார் 

பழுதுபார்க்கும் பணி இன்னும் நடந்து கொண்டிருப்பதால், உடனடியாக வர முடியாமல் இருக்கின்றது என சாரதி துணைவேந்தருக்கு பதிலளித்திருக்கின்றார் 

இதை தொடர்ந்து துணைவேந்தர் தனது சாரதியை  மதியம் 2.00 மணிக்கு தன்னை அழைத்து செல்ல வருமாறு அறிவுறுத்தியிருக்கின்றார்.

இதற்கு பின் Conference மண்டபத்திலிருந்து மற்றுமொரு தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்க வெளியேறிய சில நிமிடங்களில் அவர் கடத்தப்பட்டார் என சொல்லப்படுகின்றது 

இவ்வாறு கடத்தப்பட்ட அவர் அங்கிருந்து  300 KM தொலைவில் இராணுவ முகாம்களுக்கு மத்தியிலிருந்த தீவுசேனை பிள்ளையான் முகாமிற்கு கொண்டு வரப்பட்டார் 

இருதநோயாளியான அவரை  தனக்குரிய மருந்துகளை கூட எடுக்க அனுமதிக்காமல் பங்கர் ஒன்றில் 3 நாட்கள் பிள்ளையான்  தடுத்து வைத்திருந்ததாக சொல்லப்படுகின்றது 

இலங்கை இராணுவத்தின் Triploli Platoon  பிள்ளையனோடு சேர்ந்து இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியிருந்தார்கள் 

கோத்தபாயா  ராஜபக்சே, மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, பிரிகேடியர் அமல் கருணாசேன உட்பட  புலனாய்வு கட்டமைப்பின் ஒத்துழைப்பு வழங்க  உயர் பாதுகாப்பு வலயத்தில் கடத்தப்பட்ட  துணைவேந்தரை எவ்வித தடையுமின்றி 300 KM தொலைவிற்கு Triploli Platoon-பிள்ளையான் கூட்டு கொண்டு சென்றது 

இந்த சம்பவத்தில் மேஜர்  பிரபாத் புலத்வத்தே மற்றும் கேணல் சாமி குணரத்தின  கீழ் இயங்கிய Triploli Platoon யின் தொடர்பை பிள்ளையான் கூட்டாளி அஸாத் மௌலானா உறுதி செய்கின்றார் 

அதே போல அக் காலப்பகுதியில்  பிள்ளையான் குழுவிற்கு பொறுப்பாகவிருந்து பிள்ளையானை மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே  வழிநடாத்தியதாக அஸாத் மௌலானா பதிவு செய்கின்றார் 

பேராசிரியர் ரவீந்திரநாத்தின் குடும்பத்தினர் அவரது விடுதலையைப் பெற மேற்கொண்ட   நடவடிக்கைகள் தோல்வியடையவும் இச் சம்பவத்தின் பின்னணியிலிருந்து மேற்படி இராணுவ தொடர்புகளே காரணமாக இருந்தது 

மஹிந்த ராஜபக்சே அவர்களை நேரில் சந்தித்து முறையிட்டார்கள். 

கோட்டாபய ராஜபக்சே அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.  கருணா -பிள்ளையான் குழுவுடன் நேரடியாகப் பேசினர்கள் 

மனித உரிமை கண்காணிப்பகம் , சர்வதேச மன்னிப்பு சபை , UN High Commissioner for Human Rights, புகழ்பெற்ற சர்வதேச கல்வியாளர்கள் உட்பட என சகல தரப்பிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டன 

ஆரம்பத்தில் துணைவேந்தரின் ராஜினாமாவை ஏற்று கொள்ள மறுத்த பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அவர் கடத்தப்பட்ட பின்னர்  19 தை 2007 யன்று அவர் இராஜினாமாவை ஏற்று கொண்ட போதும் அவரை காப்பாற்ற முடியவில்லை . 

பிள்ளையானை  பயன்படுத்தி  வடக்கு கிழக்கு பிரதேசவாதத்தை கூர்மைப்படுத்த இராணுவ புலனாய்வு கட்டமைப்புகள் மேற்கொண்ட முயற்சிகள் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் அவர்களை காணாமலாக்கியது 

இப்போது 18 ஆண்டுகளுக்கு பின்னர் இச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவரான  பிள்ளையான் கைது செய்யப்பட்டிருக்கின்றார் 

ஆனால் பிள்ளையானை இயக்கிய கோத்தபாயா ராஜபக்சே அடங்கலான புலனாய்வு வலையமைப்பை  விசாரணை வலயத்திற்குள் கொண்டு வந்தால் மட்டுமே   சம்பவத்தின் முழு பின்னணியையும்  கண்டறிந்து குற்றச்செயலை உறுதிப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு பெற்று கொள்ளலாம்.

https://www.battinatham.com/2025/04/blog-post_10.html

சி.ஐ.டி.யில் ஆஜரான கெஹெலிய!

2 weeks 1 day ago

New-Project-138.jpg?resize=750%2C375&ssl

சி.ஐ.டி.யில் ஆஜரான கெஹெலிய!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானார்.

தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலங்களைப் பதிவு செய்ய அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஆஜரானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல 07 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அதன் பிறகு அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

இரண்டு மூத்த அரச அதிகாரிகளின் உதவியுடன் போலி ஆவணங்களை உருவாக்கி 22,500 தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசி குப்பிகளை ஒரு மருந்து நிறுவனம் இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிஐடி விசாரணையைத் தொடங்கிய பின்னர், அவர் பல சுகாதார அமைச்சக அதிகாரிகளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், மேற்படி தரமற்ற மருந்தை இறக்குமதி செய்ததன் மூலம் ரூ.130 மில்லியன் நிதி மோசடி நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

https://athavannews.com/2025/1428016

யாழில் கடற்றொழில் அமைச்சரின் வருகைக்காகக் காத்திருந்த மீனவர்களுக்கு ஏமாற்றம்!

2 weeks 1 day ago

%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%

யாழில் கடற்றொழில் அமைச்சரின் வருகைக்காகக் காத்திருந்த மீனவர்களுக்கு ஏமாற்றம்!

யாழ், சுழிபுரத்திற்கு  கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ,வருகை தரவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், அவரது வருகைக்காக வெகுநேரம்  காத்திருந்த மீனவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று முன் தினம் சுழிபுரம் காட்டுப்புலம் மீனவர்களை காலை 10 மணியளவில் கடற்தொழிலாளர் மண்டபத்தில் ஒன்று கூடுமாறும், கடற்றொழில் அமைச்சர் உட்பட்ட குழு மூன்று வாகனங்களில் வருகை தரவுள்ளனர் எனவும், அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு பிரதேச கடற்றொழில் பரிசோதகர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சரின் வருகைக்காக  காலை 10 மணியிலிருந்து  பி.ப 2 மணி வரை மீனவர்கள் காத்திருந்துள்ள நிலையில் அவர்கள் வருகை தரப்போவதில்லை எனத் தகவல் கிடைத்துள்ளதாகவும், இதனையடுத்து மீனவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது அப்பகுதி மீனவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1428122

ரணில் ஜனாதிபதியாக இருந்திருந்தால் 44% அமெரிக்க வரியை ஒரே நாளில் நீக்கியிருப்பார் – ராஜித

2 weeks 1 day ago

New-Project-149.jpg?resize=750%2C375&ssl

ரணில் ஜனாதிபதியாக இருந்திருந்தால் 44% அமெரிக்க வரியை ஒரே நாளில் நீக்கியிருப்பார் – ராஜித

ரணில் விக்ரமசிங்க இன்னும் ஜனாதிபதியாக இருந்திருந்தால், இலங்கை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 44% வரியை ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் நீக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.

யூடியூப் அலைவரிசை ஒன்றுக்கு அளித்த செவ்வியின் போது பேசிய அவர், பில்லியனர் தொழிலதிபர் எலோன் மஸ்க்கின் ஆலோசனையின் பேரில் ட்ரம்ப் நிர்வாகத்தின் போது இந்த வரி விதிக்கப்பட்டதாகக் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பர்களில் எலோன் மஸ்க் ஒருவர் என்றும், அந்த வலுவான நட்பைப் பயன்படுத்தி இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்க பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இல்லாததால் இலங்கை அந்த வாய்ப்பை இழந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

ரணில் விக்ரமசிங்கே பதவியில் இருந்திருந்தால், 44% வரியை முழுமையாக நீக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் 24% ஆகக் குறைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

https://athavannews.com/2025/1428090

யாழில். 35 ஆண்டுகளின் பின் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட வீதி!

2 weeks 1 day ago

20250410_064310.jpg?resize=750%2C375&ssl

யாழில். 35 ஆண்டுகளின் பின் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட வீதி!

யாழ்.வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை – பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான குறித்த வீதியானது கடந்த 1990ஆம் ஆண்டு முதல் மக்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டிருந்தது.

அதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வடக்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்கள் காங்கேசன்துறை சென்று அங்கிருந்தே பலாலி வடக்கிற்கு செல்லும் நிலைமை காணப்பட்டு வந்த நிலையில் குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்திற்கு அனுமதிக்குமாறு யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் சுமார் 15 வருட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் குறித்த வீதியானது இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் , பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் மக்கள் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டப்பட்டுள்ளது.

குறித்த வீதி ஊடாக காலை 06 மணி முதல் மாலை 05 மணி வரை மாத்திரமே மக்கள் பயணிக்க முடியும் என்றும் வீதியில் பயணிப்பவர்கள் வீதியின் இடையில் வாகனத்தினை நிறுத்துதல், வாகனங்களைத் திருப்புதல், பயண நேரத்தில் புகைப்படம், காணொளி எடுத்தல், ஆகிய நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் நடைபயணம் மற்றும் பேருந்து தவிர்ந்த பாரவூர்திகள் குறித்த வீதியூடாக செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மணித்தியாலத்துக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் மாத்திரமே பயணிக்க வேண்டும். சாரதிகளுக்கான அடையாள ஆவணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்

இவ்வாறான கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனும் அறிவுறுத்தல் பதாகை வீதியில் தமிழ் மொழியில் எழுதி காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1428116

வவுனியாவில் எல்லை கற்கள் நடும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் அறிவுறுத்தல்

2 weeks 2 days ago

09 APR, 2025 | 07:20 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 

வவுனியா கணேசபுரத்தில் வனவளத்துறை  திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட எல்லை கற்கள் நடும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட  அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக  கூட்டுறவு அபிவிருத்தி  பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 பாராளுமன்ற    உறுப்பினர்  செல்வம்  அடைக்கலநாதன்  விசேட கோரிக்கையை முன்வைத்து உரையாற்றுகையில்,

வவுனியா கணேசபுரம் மக்கள் தற்போது ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். வன இலாகா திணைக்களத்தால் அந்தப் பகுதியில் கல் நடப்படுவதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்ட பின்னர் அந்த விடயங்களை கையாளுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

எவருக்கும் கூறாது கல் நாட்டப்படக் கூடாது என்றே அபிவிருத்திக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவருக்கும் கூறாது அது நடைபெறும் நிலையில் மக்கள் அங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உடனடியாக அந்த நடவடிக்கைகளை நிறுத்த அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

இதற்கு  எழுந்து பதிலளித்த   பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, இந்த விடயம்   நேற்று செவ்வாய்க்கிழமை (08)   காலையில் எங்களுக்கு அறியக் கிடைத்தது. அதனை அறிந்த உடனேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதாவது தேர்தல் காலம் முடிவடையும் வரையிலும் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி அதனை செயற்படுத்தும் வரையில் அந்த நடவடிக்கைகளை நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/211630

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க மாட்டோம் - ஜனாதிபதி

2 weeks 2 days ago

Published By: VISHNU 09 APR, 2025 | 07:24 PM

image

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றங்களிலிருந்து அரசியல் பொறிமுறையை மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதால், அதிகார பொறிமுறையும் விரைவில் சரியான பாதைக்கு திரும்ப வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

WhatsApp_Image_2025-04-09_at_18.36.59_cf

அதற்காக இதுவரையான 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாகவும், அதிகாரிகளின் பொறிமுறை சரியாகாத பட்சத்தில், எதிர்வரும் மே மாதத்திற்குப் பிறகு அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பின்வாங்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி  கூறினார்.

WhatsApp_Image_2025-04-09_at_18.36.59_f9

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற "தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029" வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

WhatsApp_Image_2025-04-09_at_18.37.02_8a

நாட்டின் அரச நிறுவன கட்டமைப்பின் கௌரவம் மற்றும் பெறுமதிகளை அழித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் ஆட்சி  செய்வதாகவும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் அரச சேவையில் எந்தவொரு பகுதியும் சரிவதற்கு இடமளிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதிகாரிகள் பொறிமுறை இனியும் மாறத் தயாராக இல்லையெனில், மே மாதத்திற்குப் பிறகு அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

WhatsApp_Image_2025-04-09_at_18.36.58_69

இலஞ்ச மற்றும் ஊழல் குற்றங்கள் காரணமாக  உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை பல தசாப்தங்களாக பின்தங்கியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசியல் பழிவாங்கல் அன்றி, மனிதாபிமான கடமை என்பதையும் வலியுறுத்தினார்.

WhatsApp_Image_2025-04-09_at_18.37.00_d4

சட்டத்தை மதிக்கும், சட்டத்திற்கு அஞ்சும் சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும், இதற்கு கருத்தரங்குகளும், பயிற்சி பட்டறைகளும் மாத்திரம் போதாது என்றும், குற்றமொன்றிற்கு தண்டனை வழங்கப்படுமென நடைமுறையில் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

WhatsApp_Image_2025-04-09_at_18.37.00_b6

கிராமத்தில் மண் வீதியில் ஆரம்பித்த இலஞ்சம் மற்றும் ஊழல், பிரஜைகளை கண் பார்வை இழக்கச் செய்யும் மருந்துப் பொருட்களைக் கொண்டுவருவது வரையிலும், எளிய இடங்களில் ஆரம்பித்த இலஞ்சம் மற்றும் ஊழல் உச்சகட்ட மனிதாபிமானமற்ற நிலைமை வரையிலும்,  பிரதேச சபை முதல் மத்திய வங்கியில் திருடித் தின்பது வரையிலும் பரவியிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி முன்னைய ஆட்சியாளர்கள் அந்த நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அளித்தனர் என்பதையும் நினைவுபடுத்தினார்.

WhatsApp_Image_2025-04-09_at_18.36.58_38

பொது நிர்வாக நிறுவனங்கள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களில் சிலர் மற்றும் ஆயுத குற்றக் கும்பலும் உள்ளடங்கியதான இலஞ்சம் மற்றும் ஊழலை செய்யும் திருடர்களின் வளையம்பொன்று உருவாகியுள்ளதாகவும், அதனை தற்போது அடையாளம் காண்டிருப்பதாகவும் எதிர்காலத்தில் அதற்கான தீர்வுகள் செயல்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

WhatsApp_Image_2025-04-09_at_18.36.59_a4

நாட்டிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கும் பொறுப்பை அடுத்த தலைமுறையின் மீது சாட்டாமல், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அதற்கு தீர்வு காணப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இலங்கைக்கு ஒரு வருடத்திற்கு முன்பாக சுதந்திரம் பெற்ற இந்தியா, தேசிய நிகழ்ச்சி நிரலுடன் முன்னேறியதன் பலனாக விண்வெளி மற்றும் மென்பொருள் துறைகளில் பெருமளவான சிரமப் படையினை உருவாக்கியுள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலங்கையின் அரசியல் அதிகார தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களினால் 2022 ஆம் ஆண்டில் இலங்கை வங்குரோத்து நாடாக மாறியது என்றும் கூறினார்.

மக்களின் ஒவ்வொரு ரூபாய்க்கும் பொறுப்புக்கூறும் வகையில் தேசிய நிகழ்ச்சி நிரலின் மூலம் இலங்கையை உலக நாடுகளுக்கு முன்பாக உயர்த்தி வைக்கும் பொறுப்பை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றி வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

அவ்வாறு செய்வதன் மூலம் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மீது பிரஜைகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்றும், குற்றத்தை செய்துவிட்டு சட்டத்திலிருந்து தப்பிக்க வழியில்லை என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

"தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029" ஊடாக நாட்டை "வளமான தேசத்தை நோக்கி" கொண்டு செல்வதே நோக்கமாகும் என்பதுடன், ஜனாதிபதி செயலகம் உட்பட அனைத்து அரசு நிறுவனங்களிலும் உள் விவகார பிரிவுகளை நிறுவி, டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் அதைக் கண்காணிக்கக்கூடிய ஒரு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கல்வி மற்றும் சமூக பங்களிப்பு, நிறுவனங்களை வலுப்படுத்தல் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தல், சட்டம் மற்றும் கொள்கை சீர்திருத்தம் ஆகியவற்றுக்கு இடமளிக்கும்  மூலோபாய முன்னுரிமைத் துறைகளுக்காக இந்த செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க வேண்டியது முக்கியமானதாகும், இலங்கைக்குள் அந்த பொறிமுறையை மிகவும் வலுப்படுத்தக்கூடிய முன்னணி அரச நிறுவனமாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவை கூறலாம்.

அதன்படி, இலஞ்சம் இல்லாத சமூகத்தை உருவாக்க, அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் ஒரு வலுவான தேசிய ஊழல் எதிர்ப்புக் கொள்கையை உருவாக்க வேண்டியதன் அவசியம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தேசிய செயல் திட்டத்தை தயாரிக்கும்போது, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, அனைத்து பங்குதாரர்களினதும் ஆதரவுடன், தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் நிகழ்ச்சிகளை நடத்தியதுடன், மூன்று மொழிகளிலுமான  பத்திரிகை விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஊழல் பிரச்சினைகள் குறித்த பொதுமக்களின் கருத்தை மதிப்பீடு செய்வதற்காக நடத்தப்பட்ட விரிவான கணக்கெடுப்பும் அதற்குள் அடங்கியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், அரச அதிகாரிகள், தனியார் துறை, சர்வதேச அமைப்புகள், சிவில் அமைப்புகள். சமூக அமைப்புகள், மதக் குழுக்கள், பல்வேறு தேவைகள் உள்ள குழுக்கள், ஊடகம், இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களின் அனுபவங்கள், மற்றும் சகல மாகாணங்களில் உள்ள  பல்வேறு குழுக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பரிந்துரைகள்  ஆகியவை தேசிய செயல் திட்டத்தை தயாரிப்பதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், ஊழலுக்கு எதிராகப் போராடும், ஊழலை நிராகரிக்கும் பிரஜைகள் குழு, ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அனைத்து வழிகளிலும் ஆதரிக்கும் அரசியல் விருப்பம், சட்டத்தை செயல்படுத்த தேவையான அனைத்து பின்னணிகள் மற்றும்  அரச சேவையுடன் அனைத்து துறைகளிலும் நேர்மைத்திறனை ஏற்படுத்தி, எதிர்கால சந்ததிக்கு நேர்மைத் திறனான நாட்டை உருவாக்க அனைவரினதும் ஒத்துழைப்பு  எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசமோட்டோவும் இந்த நிகழ்வில் உரையாற்றினார். முந்தைய ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் இலங்கையிலிருந்து தூரமான முதலீட்டாளர்கள் தற்போதைய அரசாங்கத்தின் திட்டங்கள் காரணமாக தற்போது இலங்கையை நெருங்கி வருவதாகக் தெரிவித்தார்.

வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சி என்பன நிலையான பொருளாதார அபிவிருத்திக்கு அடிப்படை தூண்கள் என்று ஜப்பான் உறுதியாக நம்புவதால், உலகம் முழுவதும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஜப்பான் ஆதரிப்பதாகவும் ஜப்பானிய தூதுவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான  ஐ.நா அபிவிருத்தித் திட்டப் பிரதிநிதி அசுசா கொபோடாவும் இந்த நிகழ்வில் உரையாற்றினார். கடந்த ஆண்டு இலங்கையின் முதல் தேசிய வரி செலுத்துவோர் தொடர்பான தொகை மதிப்பின் படி,  84% வீதமானோர் வரி செலுத்தும் விருப்பத்தை ஊழல் நேரடியாக பாதிக்கிறது என்று குறிப்பிட்டனர்.  ஊழல் முதலீட்டைத் தடுக்கிறது என்றும் வர்த்தகம் செய்வதற்கான செலவை அதிகரிக்கிறது எனவும்  நிலையான அபிவிருத்தி மற்றும் மனித பாதுகாப்பை தடுக்கிறது என்றும்  ஊழல் காரணமாக வளர்ந்து வரும்  நாடுகள் ஆண்டுதோறும் 1.3 டிரில்லியன் அமெரிக்க  டொலர்களை இழக்கின்றன என்றும்  கொபோடா சுட்டிக்காட்டினார்.

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி சுட்டிக்காட்டியது போல, வரி செலுத்துவோரின் ஒவ்வொரு சதத்திற்கும் அரச பொறுப்பேற்க வேண்டும் என்கின்ற இந்த  செயல் திட்டம், இலங்கை சமூகத்தின் மாற்றத்திற்கான ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

பிரதம நீதியரசர் முர்து நிருபா பிந்துஷினி பெர்னாண்டோ, சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தலைவர்  முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர்  நீல் இத்தவெல, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எஸ்.ஏ. திசாநாயக்க, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள்  இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/211652

உடுத்துறை கடல் பகுதியில் 304 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு!

2 weeks 2 days ago

உடுத்துறை கடல் பகுதியில் 304 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு!

வடமராட்சி-உடுத்துறை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடலின் போது, சுமார் 304 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.


இதன்போது, கேரள கஞ்சா கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட டிங்கு படகுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


இலங்கை கடற்படையினர், கிளிநொச்சி-உடுத்துறை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து நேற்று நடத்தப்பட்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த மீட்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.


இதேவேளை, கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையின் பெறுமதியானது 121 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முல்லியான் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


சந்தேக நபர், கேரள கஞ்சா பொதி மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதன்கேனி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

உடுத்துறை கடல் பகுதியில் 304 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு!

வேலணை பிரதேச சபையினுள் அத்துமீறி நுழைந்த பசு! - சபை வாயிலில் உரிமையாளர் போராட்டம்!

2 weeks 2 days ago

09 Apr, 2025 | 05:13 PM

image

(எம்.நியூட்டன்)

உரிமையாளரால் மேய்ச்சலுக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட பசு ஒன்று வேலணை பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து தாவரங்களை தின்று சேதமாக்கியதால் அந்த பசுவை பிரதேச சபையினர் சட்டத்தின்படி பிடித்து கட்டிவைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலணை நகர்ப்பகுதியில் கால்நடை பண்ணை நடத்திவரும் பெண் உரிமையாளர் ஒருவர் பிரதேச செயலக நுழைபாதையை வழிமறித்து இன்று புதன்கிழமை (9) ஆர்ப்பாட்டம்  செய்ததால் அப்பகுதியில் சில மணிநேரம் குழப்பநிலை ஏற்பட்டது. 

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது : 

IMG-20250409-WA0031.jpg

வேலணை நகர்ப் பகுதியில் பால் உற்பத்தியை சுயதொழிலாகக் கொண்டு பசு மாடு வளர்ப்பில் ஈடுபட்டுவரும் பெண் ஒருவரது பசு கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், வேலணை நகர் பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த சிறு தாவரங்களை சேதப்படுத்தியதாக கூறி பிரதேச சபையின் ஊழியர்கள் அந்த பசுமாட்டினை பிடித்து, முதற்கட்ட நடவடிக்கையாக உரிமையாளர் தேடி வரும் வரை சட்ட விதிமுறைகளுக்கேற்ப தமது பராமரிப்பில் வைத்திருந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த பசுமாட்டின் உரிமையாளர் இரண்டாவது நாளான இன்று பிரதேச சபையின் பொறுப்பில் பசுமாடு இருப்பதை அறிந்து, பிரதேச சபை சட்டத்துக்கு விரோதமாக பசுவினை பிடித்து கட்டிவைத்துள்ளதாக தெரிவித்து, பசுவை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். 

IMG-20250409-WA0039.jpg

மேலும், தான் மாடு வளர்ப்புத் தொழிலை பல இலட்சங்கள் முதலீடு செய்து மேற்கொண்டுவரும் நிலையில், தற்போது நிலவும் வெப்பமான காலநிலையை கருத்திற்கொண்டு மாடுகளின் நலன் கருதி, அவற்றை அவிழ்த்துவிட்டதாகவும் அவ்வாறான நிலையில், ஒரு பசு பிரதேச சபையின் வளாகத்துக்குள் சென்ற காரணத்துக்காக பிடித்து கட்டிவைக்கப்பட்டுள்ளது எனவும் அந்த பெண் கூறியுள்ளார். 

இது சட்டமுரணானது. இவ்வாறான செயற்பாடுகள் எமது தொழிலை பாதிக்கின்றன. எனவே, சட்டத்துக்கு முரணாக பிரதேச சபையால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பசு மாட்டை தண்டப் பணம் அறவிடாமல் விடுவிக்க வேண்டும் எனவும், இனியொரு முறை இவ்வாறு மாடுகள் பிடிக்கப்படக்கூடாது எனவும் கோரியே போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடர்ந்து அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வேலணை பிரதேச சபையின் செயலரிடம் கேட்டபோது,

IMG-20250409-WA0030.jpg

எமது பிரதேசத்தில் கால்நடைகளால் வருடாவருடம் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. கட்டாக்காலி மாடுகள் ஒருபுறமிருக்க வளர்ப்பு மாடுகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாலும் பிரச்சினைகள் நாளாந்தம் ஏற்படுகின்றன.

வளர்ப்பு பிராணிகளை கட்டி வளர்க்கவேண்டியது உரிமையாளர் ஒவ்வொருவரதும் பொறுப்பு. குறிப்பாக, வங்களாவடி சந்தி பகுதியை அண்டிய சூழலில் மாலை 6 மணிக்கு பின்னர் நாளாந்தம் 50க்கு மேற்பட்ட மாடுகள் வீதிகளில் தமது இரவு நேரத்தை கழிக்கின்றன. இதனால் நாளாந்தம் விபத்துக்களும் ஏற்படுகின்றன. ஒருசில பாரிய விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன

இதேநேரம் வீட்டுப் பயிர்களை அழிப்பதாகவும் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துவருகின்றன. இவ்வீதியில் உறங்கும் மாடுகளில் அதிகமானவை வளர்ப்பு மாடுகளாகவே இருக்கின்றன. இதை கட்டுப்படுத்துமாறும் தொடர்ச்சியாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. நாம் மக்களின் நலன்களை கருத்திற்கொண்டே செயற்பட்டு வருகின்றோம்.

எமது சபைக்கு கட்டாக்காலி மாடுகளானாலும் சரி வளர்ப்பு மாடுகளானாலும் சரி ஆபத்துக்கள், சேதங்களை ஏற்படுத்தும் வகையில் அவை இருந்தால் அல்லது சபைக்குள் நுழைந்தால்,  அவற்றை பிடிப்பதற்கும் உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும்  அதிகாரம் உண்டு.

IMG-20250409-WA0037.jpg

கடந்த மாதம் நடைபெற்ற வேலணை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் உலவுகின்ற மாடுகள் மற்றும் கட்டாக்காலிகள்  தொடர்பில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை? அல்லது அது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது. அதன் பின்னர், இவ்வாறான அசௌகரியங்களை ஏற்படுத்தும் கால்நடைகளை கட்டுப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் எவரும் மாடுகளை பிடிக்க வேண்டாம், தண்டப்பணம் அறவிட வேண்டாம் என கூறவில்லை. நடவடிக்கை எடுக்குமாறே வலியுறுத்தியிருந்தனர்.

இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்ட பெண் இவ்வாறான சம்பவம் தொடர்பில் பல முறை பிரதேச சபைக்கு தண்டம் செலுத்தியுள்ளார். ஒரு தடவை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தண்டிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு தண்டமும் செலுத்திய ஒருவர் ஆவார். 

அவ்வாறான சம்பவம் ஒன்றே இன்றும் நடந்துள்ளது. நாம் சட்டப்படியே செயற்பட்டோம். எவரது கால்நடை விலங்குகளும் இன்னொருவரது வீடுகளுக்கோ அல்லது பொது நிறுவனங்களின் வளாகத்துக்குள்ளோ சென்றால் அல்லது நாசப்படுத்தினால் அதை பிடித்து, அதற்கு நடவடிக்கை எடுக்க முடியும்.   

எனவே, வளர்ப்பு மாடுகளை ஒவ்வொருவரும் தத்தமது வளர்ப்பிடங்களில் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டுமே தவிர அவற்றை கட்டவிழ்த்து விடுவது இவ்வாறான பிரச்சினைகளையே ஏற்படுத்தும் எனவும் பிரதேச சபையின் செயலர் தெரிவித்தார். 

அத்துடன் அந்த பசு மாட்டின் உரிமையாளர் பிரதேச சபையின் சட்டங்களின் பிரகாரம், பசுமாடு சபையினுள் நுழைந்ததற்கான தண்டப்பணமாக 5,600 ரூபாவினை செலுத்தியே இன்றும் தனது பசுமாட்டை மீட்டுச் சென்றுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வேலணை பிரதேச சபையினுள் அத்துமீறி நுழைந்த பசு! - சபை வாயிலில் உரிமையாளர் போராட்டம்!  | Virakesari.lk

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் பலனளிக்கின்றது : முழுமையான மீட்சியை நோக்கி நகர்வது அவசியம் -

2 weeks 2 days ago

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் பலனளிக்கின்றது : முழுமையான மீட்சியை நோக்கி நகர்வது அவசியம் - பீற்றர் புரூவர் மற்றும் மார்தா ரெஸ்பயே வொல்டெமைகல் ஆகியோர் தெரிவிப்பு.

09 Apr, 2025 | 08:33 PM

image

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் பலனளிக்கின்றது என்றும் முழுமையான மீட்சியை நோக்கி நகர்வது அவசியம் என்றும் இலங்கைக்கான பன்னாட்டு நாணய நிதியத்தின் முன்னாள் சிரேஷ்ட பணிக்குழுப் பிரதானி பீற்றர் புரூவர் மற்றும் இலங்கையிலுள்ள பன்னாட்டு நாணய நிதியத்தின் தற்போதைய வதிவிடப் பிரதிநிதியான மார்தா ரெஸ்பயே வொல்டெமைகல் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பன்னாட்டு நாணய நிதியத்தினால் ஆதரவளிக்கப்பட்ட இலங்கையின் நான்கு ஆண்டு கால பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் நடுப்புள்ளியை இம்மார்ச் மாதம் குறிக்கின்றது. அதன் தொடக்கத்திலிருந்து இரு ஆண்டுகளில் கடினமான ஆனாலும் மிகவும் தேவையான மறுசீரமைப்புக்கள் குறிப்பிடத்தக்க நன்மைகளுடன் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இலங்கை மக்களின் அர்ப்பணிப்பிற்கும் தியாகத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மிகவும் அவதானிக்கத்தக்க விடயம், எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் மருந்து என்பவற்றிற்கு இனிமேல் வரிசைகள் காணப்படாது என்பதுடன் அட்டவணைப்படுத்தப்பட்ட மின்துண்டிப்புக்களும் இல்லை.

பொருளாதாரமானது வலுவாகவும் விரைவாகவும் மீண்டெழுந்துள்ளது – 2024இல் அது 5 சதவீதம் வளர்ச்சியடைந்து 2018இல் உச்சத்திலிருந்து 2023இன் தாழ்வின்  எல்லைக்குச் சென்ற வெளியீட்னெ; அரைவாசிக்குக் கீழிருந்து இழப்பு வெறும் 18 மாதங்களிலேயே  மீண்டுள்ளது.

வானுயர்ந்து சென்ற பணவீக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்காக வரி வருவாய்கள் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் உயர்வடைந்து, வட்டிக் கொடுப்பனவுகள் நீங்கலாக அரசாங்கத்தின் மீதி (ஆரம்ப மீதி) ஏறத்தாழ 6 சதவீதப் புள்ளிகளால் மேம்பட்டுள்ளது. பல குடும்ப அலகுகள் இன்னும் தாக்கத்தினை முழுமையாக உணராத போதிலும் பேரண்டப்பொருளாதாரத் திருப்பமானது குறிப்பிடத்தக்கதாகும். 

வெளிநாட்டு கடன்கொடுநர்கள் மூலம் வழங்கப்பட்ட படுகடன் நிவாரணம் இலங்கை மக்கள் தோல்கொடுக்க வேண்டிய சுமையினை குறைத்துள்ளது. வெளிவாரி கடன்கொடுநர்கள் படுகடனின் ஐ.அ.டொலர் 3 பில்லியனை கைவிட்டுள்ளதுடன் அண்மைய காலத்தில் நிலுவையாகவிருக்கின்ற அல்லது ஏற்கனவே தவணை கடந்த மற்றுமொரு ஐக்கிய அமெரிக்க டொலர் 25 பில்லியன் தொகையினை  மிகவும் குறைக்கப்பட்ட வட்டி வீதங்களுடன் அடுத்த 20 ஆண்டுகளுக்கு மேல் மிக நீண்டகால வீச்சில்  நீடித்துள்ளனர்.

இலங்கையின் வர்த்தகப்படுத்தக்க படுகடன் சாதனங்கள் பன்னாட்டு முறிச் சுட்டிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளமையினாலும் இலங்கையின் கொடுகடன் தரமிடலானது குறைந்தது 3 படிமுறைகளினாலேனும் உயர்த்தப்பட்டமையினாலும் அவை மீண்டும் முதலீட்டாளர்களைக் கவருகின்றன. 

2023இல் 30 சதவீதம் கொண்ட உச்சத்திலிருந்து தற்போதைய 8 சதவீதத்திற்கு உள்நாட்டு கடன்பெறுதல் செலவில் சடுதியான வீழ்ச்சிகளுடனும்  பன்னாட்டுச் சந்தைகளில் நாட்டிற்கான இடர்நேர்வு “விரிவு” குறிகாட்டி 70 சதவீதம் கொண்ட உச்சத்திலிருந்து 5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளமை என்பவற்றைக் கொண்டு சந்தைகள் இலங்கையின் மறுசீரமைப்புகளுக்கு கைமாறளித்துள்ளன.  பொறுப்புமிக்க பன்னாட்டு சந்தை அணுகலினை அடுத்த சில ஆண்டுகளில் எட்டக்கூடியதாக இருக்க வேண்டும்.

இலங்கை மக்கள் கடந்தகால கொள்கைத் தவறுகளுக்காகவும் முடக்கத்தை ஏற்படுத்திய துரதிஸ்டத்திற்காக போதுமானளவு தயாராகாமைக்கும் வருந்தத்தக்கவிதத்தில் உயர் விலையினைச் செலுத்துகின்றனர். நிலைபேறற்ற குறைவான வரிகள் மற்றும் மக்களைவிட பெரும்பாலும் தொழில்முயற்சிகளுக்கு நன்மையளித்த பாரிய வரி விலக்களிப்புகள் என்பன நிகழவுள்ள விபத்தொன்றாகவிருந்தது.

வரிசெலுத்துநர்கள் வருமானத்தையும் சொத்துக்களையும் கொண்டு சமமாகப் பங்களிப்பதற்கு அவர்கள் கோரப்பட்டிருந்தும் கூட, அதன் அத்தியாவசிய பணிகளுக்கு இன்று நிதியிடுவதற்கு அரசாங்கத்தின் மேம்பட்ட இயலுமையின் அடுத்த பக்கம் உயர்வான சுமைக்கு அவர்கள் தோல்கொடுக்க வேண்டியிருந்ததாகும்.

அதேபோன்று எரிபொருள் மற்றும் மின்சாரம் எனபவற்றின்; முழுமையான செலவு தற்போது அரசாங்கத்தின் உதவுதொகைகளின்றி அதன் பயன்பாட்டாளர்கள் மூலமே ஏற்கப்பட்டு, அரிதான அரசாங்க மூலவளங்கள் சமூகப் பாதுகாப்பு போன்ற முன்னுரிமைத் துறைகளை நோக்கி திசைப்படுத்தப்பட்டிருப்பதற்கு இயலச்செய்யப்பட்டுள்ளது.

இன்னும் மிகவும் பாதிக்கப்படும் நிலையிலிருக்கின்ற இலங்கை முழுமையாக சுயமாக சிக்கலிலிருந்து விடுபடக்கூடியதாகவிருப்பதை உறுதிசெய்வதற்கும் 2022இல் எதிர்கொண்ட அபாயகரமான நிலைமைகளுக்கு மீண்டும் செல்வதைத் தடுப்பதற்கும் இவ்வகையான தியாகங்கள் அவசியமானதாகக் காணப்படுகின்றன. 

2023 தொடக்கம் பன்னாட்டு நாணய நிதிய நிதியிடல், நிகழ்ச்சித்திட்டத்திற்கு முன்னர் இலங்கையர்கள் அனுபவித்த மிக மோசமான விளைவுகளை தவிர்ப்பதற்குத் துணையளித்துள்ளது. பன்னாட்டு நாணய நிதியம் ஆதரவளித்த பொருளாதார நிகழ்ச்சித்திட்டம் ஏனைய பல்தரப்பு மற்றும் இருதரப்பு பங்காளரிடமிருந்து நிதியிடலை வினையூக்கச்செய்கின்ற மறுசீரமைப்புக்களுக்கு அர்பணிப்பதற்கு நம்பகமான கட்டமைப்பொன்றினைத் தொடர்ந்தும் வழங்குகின்றது. கடன்கொடுநர்கள் வழங்குகின்ற படுகடன் நிவாரணம் மறுசீரமைத்தலின் பின்னர் எஞ்சியிருக்கின்ற படுகடனைத் தீர்ப்பதற்கு இலங்கையினை இயலச்செய்யுமென அது அவர்களுக்கு உத்தரவாதமளித்தது. 

கடந்த தேர்தல் இடம்பெற்றதன் பின்னர், பன்னாட்டு நாணய நிதியம் அவர்களின் கொள்கை முன்னுரிமைகளின் சிலவற்றை அதிகாரிகள் நிறைவுசெய்வதற்கு உதவுவதற்காக நிகழ்ச்சித்திட்டத்தை மீள அளவமைப்பதற்கு புதிய அரசாங்கத்துடன் விரைவாக நெருங்கிப் பணியாற்றியது. 

வெற்றிகரமான வருவாய்த் திரட்டல் முயற்சிகளுக்கு நன்றி. இது, நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை மக்களுக்கு சில நிவாரணத்தை வழங்குவதற்கும் வேறு அத்தியாவசியத் தேவைகளை வழங்குவதற்கு அரசாங்கத்தின் இயலுமையினை காக்கின்ற விதத்தில் அரசாங்கத்திற்கு அது சாத்தியமாகவிருந்தது. தனிப்பட்ட வருமான வரி கட்டமைப்பு சீராக்கப்பட்டு, கடந்தகால உயர்வான பணவீக்கத்திற்கு பகுதியளவில் ஈடளிப்பதற்கு அரசாங்கத் துறைச் சம்பளங்கள் உயர்த்தப்பட்டு வருவதுடன் பாற்பண்ணை உற்பத்திப் பயன்பாட்டாளர்களுக்கு சில  நிவாரணங்கள் வழங்கப்பட்டன. 

இந்;நடுநிலைப் புள்ளியில், மறுசீரமைப்பினைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதும் கடந்தகால தவறுகளைத் தவிர்ப்பதும் முக்கியத்துவம் மிக்கதாகும். தற்போதைய நிகழ்ச்சித்திட்டத்திற்கு முன்னர் பன்னாட்டு நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டங்களின் சுமார் அரைவாசியளவு இலங்கை முன்கூட்டியே முடிவுறுத்திமையினால் அதனைத் தொடர்ந்து பொருளாதாரத்தில் குறைவான செயலாற்றம் இடம்பெற்றது. இவ்வளர்ச்சி முடக்கல் சுழற்சியை நிறுத்தி, நிச்சயமற்ற உலகளாவிய நிலைமையிலும்கூட மீட்சி தொடர்ச்சியாக இருக்கக்கூடிய விதத்திலும் அனைத்து இலங்கையர்களும் அதிலிருந்து நன்மையடையும் விதத்திலும் பொருளாதாரத்தை முகாமைசெய்வதும் முக்கியமானதாகும்.  

நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்குகின்ற வளர்ச்சி மற்றும் அரசிறை மற்றும் படுகடன் நிலைபெறுதன்மை என்பவற்றிற்கான பாதை தொடர்ந்தும் குறுகியே காணப்படுகின்றது. கொள்கைத் தவறுகளுக்கு இடமளிக்கக்கூடாது. வரி விலக்களிப்புக்களை மட்டுப்படுத்தல் மூலமானவை உள்ளடங்கலாக அத்தியாவசிய அரசாங்கப் பணிகளுக்குத் தேவையான வருவாய்களைத் தொடர்ந்தும் வழங்குவது மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கும்.

எரிபொருள் மற்றும் மின்சாரம் என்பவற்றிற்கான செலவு – மீட்பு விலையிடலை மீளமைத்தல் மற்றும் சமூக ரீதியான ஆதரவை மிகவும் பாதிக்கப்பட்டவர்களை நோக்கி நன்கு இலக்கிடுவதை நிச்சயப்படுத்தல் என்பன மூலம் அரிதான அரசாங்க மூலவளங்கள் பாதுகாக்கப்பட வேண்டியுள்ளது. பொருளாதார மீளெழுச்சியில் போதுமானளவு பங்கேற்பதற்கு வறியவர்களுக்கும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படவேண்டும். இலங்கையின் நீண்ட கால உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்கொணர்வதற்கு நடுத்தரகால வளர்ச்சிக்கு ஆதரவளித்தலில் மூலதனச் செலவிடல் மிகவும் எதிர்வுகூறத்தக்கவிதத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். 

வரவிருக்கும் கடமைகள் பேராவல்மிக்கவையாயினும் நிறைவேற்றப்படத்தக்கவையாகும். இடம்பெறுகின்ற மறுசீரமைப்பு உத்வேத்தைத் தக்கவைத்தல் முழுமையான மீட்சிக்கு முக்கியமானதாக அமைந்திருந்து இத்தலைமுறைக்கு மாத்திரமின்றி எதிர்காலத் தலைமுறையினருக்கும் நன்மைபயக்கக்கூடியதாகவுமிருக்கும். அனைத்துக் குடிமக்களினதும் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதில் வலுவான மற்றும் நீடித்த மீட்சியொன்றினைப் பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு ஆதரவளிக்கும் பொருட்டு உறுதியானதொரு பங்காளராகப் பன்னாட்டு நாணய நிதியம் தொடர்ந்தும் இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் பலனளிக்கின்றது : முழுமையான மீட்சியை நோக்கி நகர்வது அவசியம் - பீற்றர் புரூவர் மற்றும் மார்தா ரெஸ்பயே வொல்டெமைகல் ஆகியோர் தெரிவிப்பு | Virakesari.lk

முல்லைத்தீவில் நீதிமன்ற அனுமதியுடன் எரியூட்டப்பட்ட சட்டவிரோத மீன்பிடி வள்ளங்கள்

2 weeks 2 days ago

09 Apr, 2025 | 05:16 PM

image

முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் களப்பு பகுதியில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாக மீனவர்கள் தொடர்ச்சியாக முன்வைத்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து  தொடர்ச்சியாக சில மாதங்களாக கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் மற்றும் மீனவ அமைப்புகள் விசேட அதிரடிப்படை கடற்படை என அனைத்து தரப்பினரும் இணைந்து பல்வேறு சுற்றி வளைப்புகளையும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வகையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு மற்றும் கைது நடவடிக்கைகளில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட உள்நாட்டு நிர்மாண விதிகளுக்கு முரணாக தயாரிக்கப்பட்ட வெட்டு வள்ளங்கள் எனப்படுகின்ற 20 வள்ளங்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நேற்றைய தினம் (08) தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 

தொடர்ச்சியாக நந்திக்கடல் களப்பில் அதிகரிக்கின்ற சட்டவிரோத தொழில்களுக்கு பயன்படுத்தப்படுகின்ற குறித்த உள்நாட்டு நிர்மாண விதிமுறைகளுக்கு முரணாக தயாரிக்கப்பட்ட பல்வேறு தினங்களில் கைப்பற்றப்பட்ட வெட்டுவள்ளங்கள் எனப்படுகின்ற 20 வள்ளங்கள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் எரியூட்டப்பட்டன.

நந்திக்கடல் களப்பை அண்மித்த பகுதியிலே இந்த வள்ளங்கள் இருபதும் எறியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கடந்த 03.04.2025 அன்று கைது செய்யப்பட்ட எட்டு வள்ளங்களும் 02.04.2025 அன்று கைது  செய்யப்பட்ட ஏழு  வள்ளங்களும் 28.02.2025 அன்று கைது செய்யப்பட்ட மூன்று வள்ளங்களும் 25.02.2025 அன்று  கைது செய்யப்பட்ட இரண்டு வள்ளங்களுமாக 20 வெட்டு வள்ளங்கள் எரியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக நந்திக்கடல் களப்பு பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்ற செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெறும் எனவும் மீனவர்களை சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாது சட்டபூர்வமாக மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தனது வாழ்வாதாரத்தை முன்னெடுக்குமாறு கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகள் மீனவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

IMG-20250409-WA0006.jpg

IMG-20250409-WA0011.jpg

IMG-20250409-WA0014.jpg

IMG-20250409-WA0015.jpg

IMG-20250409-WA0020.jpg


முல்லைத்தீவில் நீதிமன்ற அனுமதியுடன் எரியூட்டப்பட்ட சட்டவிரோத மீன்பிடி வள்ளங்கள் | Virakesari.lk

நல்லூரில் பாத்தீனியத்தை அழிக்க நடவடிக்கை

2 weeks 2 days ago

09 Apr, 2025 | 03:08 PM

image

யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலைகளில் பாத்தீனிய செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புகுழு கூட்டம்  நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. 

இதன்போது பாடசாலை இடைவிலகல் மற்றும் ஒழுங்கீனங்கள், சிறுவர்கள் பாடசாலைகளில் சமூகத்தில் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகள், சிறுவர்கள் தொடர்பாக கிராம மட்ட அமைப்புக்களின் முக்கியத்துவம் தொடர்பாகவும், பாடசாலையில் புதிய மாணவர்களை இணைக்கும் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 

அதேவேளை பாடசாலை மட்டத்தில், கிராம மட்டத்தில் பாதீனியம் அதிகளவு காணப்படுவதனால் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறைகள் தொடர்பாகவும்  கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் நல்லூர் மற்றும் யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார பிரிவு உத்தியோகத்தர்கள், வலயக்கல்வி பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள், நன்னடத்தை உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர், கிராம நிர்வாக உத்தியோகத்தர்,  கிராம அலுவலர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் இல்ல முகாமையாளர்கள், சிறுவர்  பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர்  சார் சமூக நலன் விரும்பிகள் ஆகியோர் பங்குபற்றினார்கள்.

நல்லூரில் பாத்தீனியத்தை அழிக்க நடவடிக்கை | Virakesari.lk

புதுக்குடியிருப்பு - மாணிக்கபுரம் கிராமத்தில் மக்களின் போராட்டத்தினை தொடர்ந்து கசிப்பு வியாபாரிகளின் வீடுகள் முற்றுகை ; ஆறு பேர் கைது!

2 weeks 2 days ago

புதுக்குடியிருப்பு பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராமத்தில் கசிப்பு வியாபாரம் அதிகரித்து காணப்படுவதாக கடந்த 6 ஆம் திகதி மாணிக்கபுரம் கிராம அலுவலர் அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட மூன்று குடும்பங்கள் மக்களால் இனங்காணப்பட்டு அவர்களின் வீட்டுப் படலைகளில் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டன.

இந்த நிலையில் இவ்வாறு சட்டத்திற்கு முரணான வகையில் வீடுகளில் வைத்து கசிப்பு வியாபாரம் செய்து வந்த குறித்த மூன்று குடும்பங்களின் வீடுகள் புதுக் குடியிருப்பு பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சிறப்பு அதிரடிப்படையினரின் சுற்றி வளைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை (9) காலை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இந்த சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதன்போது 16. 5 லீற்றர் கசிப்பு 3 வீடுகளிலும் இருந்து  விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களையும் சான்றுப் பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிசார் ஈடுபட்டு வருகின்றார்கள்.

FB_IMG_1744188344619.jpg


புதுக்குடியிருப்பு - மாணிக்கபுரம் கிராமத்தில் மக்களின் போராட்டத்தினை தொடர்ந்து கசிப்பு வியாபாரிகளின் வீடுகள் முற்றுகை ; ஆறு பேர் கைது! | Virakesari.lk

இலங்கை தமிழரசுக் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும்!

2 weeks 2 days ago

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று மற்றும் ஏறாவூர் நகருக்கான பொதுக் கூட்டமும் வேட்பாளர் அறிமுக கூட்டமும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) அன்று பிற்பகல் 3 மணியளவில் செங்கலடி ஐயன்கேணி கிராமத்தில் நடைபெற உள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுக நிகழ்வுகள் இம்முறை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச சபை பிரிவிலும் தனித்தனியாக நடாத்தப்பட்டு வரும் நிலையில் ஏறாவூர் பற்று மற்றும் ஏறாவூர் நகருக்கான பொதுக் கூட்டமும் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா சாணக்கியன், சிறிநேசன், வைத்தியர் சிறிநாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளனர்.

நீண்ட காலத்திற்கு பிறகு செங்கலடி ஐயன்கேணி கிராமத்தில் நடைபெற உள்ள மேற்படி நிகழ்வில் பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக் கூட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று தொகுதி கிளை அழைப்பு வந்துள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும்! | Virakesari.lk

Checked
Fri, 04/25/2025 - 18:23
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr