ஊர்ப்புதினம்

தமிழர் தாயகப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளின் கைகளுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும் – செயற்பாட்டாளரான கருணாகரன் நாவலன்

2 weeks 4 days ago

தமிழர் தாயகப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளின் கைகளுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும் – செயற்பாட்டாளரான கருணாகரன் நாவலன்

07 Apr, 2025 | 09:00 AM

image

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழர் தாயகப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளின் கைகளுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள சமூக செயற்பாட்டாளரான கருணாகரன் நாவலன், தேசிய மக்கள் சக்தி என்ற போர்வைக்குள் இருக்கின்ற இனவாத ஜே.வி.பியின் கைகளுக்கு சென்றால் அது தமிழ் மக்களின் இருப்புக்கே ஆபத்து என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்களது வாக்குகள் தத்தமது பிரதேசங்களை உள்ளடக்கிய தமிழ் தேசிய கட்சிகளை நோக்கியதாகவே இருப்பது அவசியமானது. இதை மக்கள் உணர்ந்துகொள்வதும் அவசியமாகும்.

ஏனெனில் தமிழ் மக்களின் இருப்பையும் உரிமைகளையும் பறித்து ஜே.வி.பி என்ற வன்முறைக் குழு இன்று தேசிய மக்கள் சக்தி என்ற  போர்வையில் தம்மை உருமாற்றிக்கொண்டு தமிழ் மக்களை ஏமாற்ற முற்படுகின்றது. 

இந்த வேடதாரிகளின் பொறிக்குள் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் வீழ்த்தப்பட்டதனால் இன்று தமிழரது உரிமைகள் விடயமாகவோ, அரசியல் கைதிகள் விடயமாகவோ அன்றி அபிவிருத்திகள் தொடர்பிலோ தீர்வுகள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது அந்தரிக்கும் நிலையில் இருக்க நேரிட்டுள்ளது.

இதைவிட கடந்த காலங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்றுவந்த மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களைக் கூட இந்த தேசிய மக்கள் சக்தி என்ற ஜேவிபியின் ஆளுமையற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் உள்ளடங்கிய குழுவினர் குழப்பி எமது மக்களின் அடிப்படை தேவைகளை கூட தடுக்க முற்படுகின்றனர்.

அனைவருக்கும் சம உரிமை, சட்டங்களும் அனைத்து மக்களுக்கும் சமமானவை, ஊழலை இல்லாதொழிப்போம் என்று  கோசமிட்டு ஆட்சியை பிடித்தா இந்த வன்முறைக் குழு இன்று தமது உண்மையான முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. 

குறிப்பாக மாவீரர்களை நினைவு கூரமுடியும் என்றவர்கள் ஆட்சியை பிடித்தபின் நினைவுகூர்ந்த மக்களை கைது செய்து பயங்கரவாத சட்டத்தில் தடுத்து சித்திரவதை செய்கின்றனர்.

மத்தியில் தமது அதிகாரமே இருக்கின்றது என கூறி பிரதேசங்களின் அதிகாரங்களை சூறையாட தற்போது மக்களாகிய உங்களிடம் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் வரக் கூடும். சில சலுகைகளை தரலாம் என்றும் கூற முற்படுவார்கள்.  அந்த பசப்பு வார்த்தைகளை நம்பி மக்களாகிய நீங்கள் இனியொரு தடவை ஏமாந்துவிடாதீர்கள்.

உள்ளூராட்சி அதிகாரங்கள் அந்த இனவாத தேசிய மக்கள் சக்தி என்ற ஜே்விபியினரிடம் சென்றால் இருக்கின்ற காணி நிலங்கள் கூட எமக்கு இல்லாது போகும் நிலை உருவாகும்.

குறிப்பாக பலாலி விமான நிலையத்தை அடுத்த மூன்று மாதங்களுக்குள் அபிவிருத்தி செய்யப்போவதாக கூறுகின்றார்கள். இந்த விமான நிலையம் ஏற்கனவே இந்திய அரசின் அனுசரணையுடன் அபிவிருத்தி செய்யப்பட்டு சர்வதேச விமான நிலையமாக வியாபித்திருக்கின்றது.

இந்நிலையில் அதை மீளவும் அபிவிருத்தி செய்ய போவதாக கூறுவது காணிகளை சுவீகரிப்பதற்கான முயற்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது.

எனவே இவ்வாறான போக்கு உடையவர்களை எமது  பிரதேசங்களில் காலூன்ற விடாது எமது மக்களின் தீர்ப்பு தமிழ் தரப்பின்பால் இருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/211355

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டு சபைகளுக்கே வாக்காளர் அட்டைகள்!

2 weeks 4 days ago

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டு சபைகளுக்கே வாக்காளர் அட்டைகள்!

1539389808.jpg

நீதிமன்ற அறிவுறுத்தலின் பின்பே ஏனையவற்றுக்கு விநியோகம்

தபால் மூல வாக்காளர் அட்டைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இரு உள்ளூராட்சிச் சபைகளுக்கு மட்டுமே தற்போது தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. ஏனைய உள்ளூராட்சிச் சபைகள் தொடர்பான நீதிமன்றங்களின் அறிவுறுத்தல்கள் கிடைத்ததும் தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன என்று யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன் தெரிவித்தார்.

உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளவுள்ளது. தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் தபால் மூல வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுமுதல் ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தபால் மூல வாக்காளர் அட்டை விநியோகத்துக்காக அவற்றை தபால் திணைக்களத்திடம் கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் இன்று காலை நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பருத்தித்துறை நகர சபை மற்றும் வேலணை பிரதேச சபை ஆகியவற்றுக்கான தபால் மூல வாக்காளர் அட்டைகளே இன்று விநியோகிக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 64 பேர் தபால் மூல வாக்களிப்புக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், இன்று 768 தபால் மூல வாக்காளர் அட்டைகளே விநியோகிக்கப்படவுள்ளன. பருத்தித்துறை நகர சபையில் 463 பேரும், வேலணை பிரதேச சபையில் 305 பேரும் தபால் மூல வாக்களிப்புக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

ஏனைய உள்ளூராட்சிச் சபைகள் தொடர்பாக நீதிமன்றங்களின் அறிவுறுத்தல்கள் கிடைத்த பின்னர் அவற்றுக்கான தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

https://newuthayan.com/article/இரண்டு_சபைகளுக்கே_வாக்காளர்_அட்டைகள்!

மோதி வழிபாடு செய்த அநுராதபுரம் புத்த விகாரைக்கும் அசோக பேரரசுக்கும் என்ன தொடர்பு?

2 weeks 5 days ago

மோதி வழிபாடு செய்த அநுராதபுரம் புத்த விகாரை

பட மூலாதாரம்,X/NARENDRAMODI

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கை வருகைத் தந்த பிரதமர் நரேந்திர மோதி, இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு சந்திப்புக்களில் கலந்துக்கொண்டதுடன், உடன்படிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார்.

தனது இலங்கை விஜயத்தின் இறுதி நாளான இன்று (ஏப்ரல் 6) அநுராதபுரம் நோக்கி பயணித்து, அங்கிருந்து இந்தியா நோக்கி புறப்பட்டார். அநுராதபுரம் விமானப்படை தளத்திலிருந்து, இந்திய விமானப்படைக்கு சொந்தமான விசேட ஹெலிகொப்டர் மூலம் இராமேஸ்வரம் நோக்கி பிரதமர் நரேந்திர மோதி பயணித்தார்.

அநுராதபுரம் ஏன் சென்றார்?

நரேந்திர மோதி, அநுராதபுரம், புத்த விகாரை, தேரர், புத்த கயா, மோதி இலங்கை பயணம், அநுர குமார திஸாநாயக்க

படக்குறிப்பு,புத்த விகாரையின் வருகைப் பதிவேட்டில் மோதி கையெழுத்திடுகிறார்

வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதி விகாரைக்கு சென்ற மோதி வழிபாடுகளில் ஈடுபட்டார். மோதியுடன் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் கலந்துக்கொண்டிருந்தார்.

விகாரைக்கு வருகைத் தந்த பிரதமர், அட்டமஸ்தானாதிபதி நுவரகலாவியே பிரதான சங்கநாயக்க தேரர் பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரரை சந்தித்து ஆசிப் பெற்றதுடன், அவருடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.

தான் பிறந்த குஜராத் மாநிலத்தில் 1960ம் ஆண்டு காலப் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது புத்தரின் புனித சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோதி, இதன்போது நாயக்க தேரரிடம் தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோதி, அநுராதபுரம், புத்த விகாரை, தேரர், புத்த கயா, மோதி இலங்கை பயணம், அநுர குமார திஸாநாயக்க

படக்குறிப்பு,புத்த கயா தொடர்பான கோரிக்கைகளை வழங்கிய தேரர்

இந்த புனித சின்னங்களை இலங்கையில் காட்சிப்படுத்துகின்றமை தொடர்பில் தான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை நடத்துவதாகவும் பிரதமர் கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

மேலும், இந்தியாவின் புத்த கயாவை ஆன்மீக நகரமாக பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அட்டமஸ்தானாதிபதி, பிரதமர் நரேந்திர மோதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கை குறித்து, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் எதிர்காலத்தில் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் மோதி தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பை அடுத்து, ஜயஸ்ரீ மகா போதி விகாரை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த நுழைவாயிலை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்துள்ளார்.

வடக்குக்கான ரயில் மார்க்கம் திறப்பு

நரேந்திர மோதி, அநுராதபுரம், புத்த விகாரை, தேரர், புத்த கயா, மோதி இலங்கை பயணம், அநுர குமார திஸாநாயக்க

படக்குறிப்பு,இலங்கையில் இந்திய உதவியுடன் புதிய ரயில் திட்டங்கள் தொடக்கம்

இந்திய நிதியுதவித் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட மஹவ - ஓமந்தை ரயில் தண்டவாளம் மற்றும் அநுராதபுரம் - மஹவ ரயில் சமிக்ஞை கட்டமைப்பு ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோதி இன்று திறந்து வைத்துள்ளார்.

அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோர், அந்த ரயில் மார்க்கத்தின் ஊடாக ரயில் சேவையை பச்சை கொடியை அசைத்து தொடக்கி வைத்திருந்தனர்.

சுமார் 91.27 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் மஹவ - ஓமந்தை ரயில் தண்டவாளம் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன், 14.89 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மஹவ - அநுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு, இந்திய நிதியுதவியில் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் வடக்குக்கான ரயில் மார்க்கத்தின் பணிகளை இந்தியா முன்னெடுத்திருந்ததுடன், அநுராதபுரம் தொடக்கம் ஒமந்தை வரையான ரயில் தண்டவாள பணிகளை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகளையும் இந்தியா முன்னெடுத்திருந்தது.

இவ்வாறான நவீனமயப்படுத்தப்பட்ட ரயில் மார்க்கத்தின் சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் ரயில் தண்டவாளம் ஆகியனவே இன்று (ஏப்ரல் 6) திறந்து வைக்கப்பட்டன.

நரேந்திர மோதி, அநுராதபுரம், புத்த விகாரை, தேரர், புத்த கயா, மோதி இலங்கை பயணம், அநுர குமார திஸாநாயக்க

படக்குறிப்பு,ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் நோக்கி பயணித்தார் நரேந்திர மோதி

ஜயஸ்ரீ மகா போதி விகாரையின் சிறப்பு என்ன?

நரேந்திர மோதி, அநுராதபுரம், புத்த விகாரை, தேரர், புத்த கயா, மோதி இலங்கை பயணம், அநுர குமார திஸாநாயக்க

படக்குறிப்பு,புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு கிளையிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள மரம் அநுராதபுரம் விகாரையில் உள்ளது

இந்திய பிரதமர் நரேந்திர மோதி அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதி விகாரைக்கு இன்று வழிபாடுகளுக்காக சென்ற நிலையில், அந்த விகாரையின் தொடர்பில் அதிகம் பேசப்படுகின்றது.

புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையிலிருந்து வளர்க்கப்பட்டதாக கூறப்படும் வெள்ளரசு மரத்துடன் அமையப் பெற்ற விகாரையாக அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதி விகாரை கருதப்படுகின்றது.

இந்த வெள்ளரசு மரமானது கி.மு 288ம் ஆண்டில் நடப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.

இலங்கை மாத்திரமன்றி உலக வாழ் பௌத்த மக்களினால் புனித பூமியாக இந்த இடம் கருதப்படுகின்றது.

பௌத்தர்களின் புனித சின்னமாக கருதப்படுகின்ற வெள்ளரசு மரத்தின் கிளையை, தற்போது இந்தியாவில் உள்ள பகுதியை ஆண்ட அசோக பேரரசரின் மகளும், பௌத்த பிக்குணியுமான சங்கமித்தையினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, அநுராதபுரத்தை ஆட்சி செய்த அரசரான தேவநம்பியதீசனால் இந்த மரம் நடப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்தியாவின் புத்த கயாவிற்கும், அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதிக்கும் இடையில் நேரடி தொடர்பு காணப்படுவதாக வரலாறுகள் கூறுகின்றன.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கைக்கு தனது முதலாவது விஜயத்தில் ஈடுபட்ட 2015ம் ஆண்டு, அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதி விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c078kvrjl0go

அமெரிக்காவின் கதவுகள் அடைக்கப்பட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தின் கதவுகள் திறக்கப்படும் என நம்பாதீர் ஜி.எஸ்.பி. பிளசும் இல்லாமல் போகும் - கலாநிதி ஹர்ஷ எச்சரிக்கை

2 weeks 5 days ago

Published By: VISHNU 06 APR, 2025 | 07:48 PM

image

(எம்.மனோசித்ரா)

அமெரிக்காவினால் கதவுகள் அடைக்கப்படும் போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவுகள் திறக்கப்படும் என்று எவராவது எண்ணினால் அது முற்றிலும் தவறாகும். ஐரோப்பிய பாராளுமன்றத்தினால் கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டத்துடன் புதிய ஜி.எஸ்.பி. பிளஸ் வரவுள்ளது. அதற்கமைய தற்போது ஜி.எஸ்.பி. பிளஸ் கிடைக்கப் பெறும் சுமார் 6 நாடுகள் அதனை இழக்க நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் மற்றும் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் அடுத்த பாராளுமன்ற அமர்வுகளில் கேள்வியெழுப்ப எதிர்பார்க்கின்றோம். கைசாத்திடப்பட்டப்பந்தங்கள் தொடர்பில் தெரிந்து கொள்வதற்கான உரிமை சகலருக்குமுள்ளது.

இந்திய பரவாலக்கத்தை கடுமையாக எதிர்த்த குழுவொன்று இன்று இந்திய பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பளித்து அவருக்கு இலங்கையில் வழங்கப்படும் அதியுயர் கௌரவ நாமத்தையும் வழங்கியிருக்கின்றமை உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. இலங்கைக்கு மிக அருகிலுள்ள பாரிய பொருளாதார சக்தி இந்தியாவாகும்.

தென்னிந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்ரா ஆகிய மாநிலங்கள் அடுத்த தசாப்தத்தில் உலகில் மிக வேகமாக அபிவிருத்தியடையும் வலயமாக அமையும். இவற்றின் இந்த துரித அபிவிருத்தியில் பயன்பெறுவதற்கு எமக்கு சிறந்த வாய்ப்பிருக்கிறது. எவ்வாறிருப்பினும் அதற்கான முன்னெடுப்புக்களுக்கு தமது சிந்தனையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இந்த அரசாங்கம் ஆட்சியமைத்த்திலிருந்து சுவர்களை உடைத்து, பாலங்களை அமைக்குமாறு நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றேன். அவ்வாறு சுவர்களை உடைத்து, பாலங்களை அமைத்தவர்களுக்கு அமெரிக்காவால் தடை விதிக்கப்படவில்லை. மாறாக பாலங்களை உடைத்து சுவர்களை அமைத்தவர்களுக்கு தடையிருக்கிறது. இதன் மூலம் நாம் பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

வருடாந்தம் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கு அரச குழுவொன்று செல்வது வழமையாகும். இதன் போது அமெரிக்காவின் வரி குறித்து பேசப்படப் போகிறதா என்பது எமக்குத் தெரியாது. நாணய நிதியத்திலிருப்பதால் எமக்கு நிவாரணம் வழங்குமாறு கோரினால் அதனை ஏற்கக் கூடியவரல்ல ட்ரம்ப்.

வியட்நாம் ட்ரம்பிடம் முன்மொழிந்துள்ளதைப் போன்று அசாதாரணமான வாய்ப்பொன்றை வழங்கினால் வரி குறைப்பு குறித்து சிந்திக்க முடியும் என்று அமெரிக்கா கூறுகிறது. அவ்வாறெனில் அந்த அசாதாரணமான வாய்ப்பு என்ன என்பது குறித்து அரசாங்கமும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சும் தீர்மானிக்க வேண்டும்.

பிராந்திய பொருளாதார ஒப்பந்தங்களுக்குச் செல்லாமல் நாட்டுக்கு தேவையான பொருளாதார வளர்ச்சியை அடைய முடியாது. சிந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் எம்மால் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது. ஐக்கிய மக்கள் சக்தியின் ப்ளு பிரின்ட் வெளியீட்டில் இது தொடர்பில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றோம்.

இந்திய பிரதமருடன் தற்போது பேச வேண்டிய மிக முக்கிய காரணி எக்டாவாகும். பொருளாதார ரீதியில் எவ்வாறு இணைந்து செயற்படுவது, தென்னிந்திய 5 மாநிலங்களின் தீவிர அபிவிருத்தியிலிருந்து எவ்வாறு பயன் பெறுவது என்பது குறித்து கலந்தாலோசிக்க வேண்டும். ஜி.எஸ்.பி. பிளஸ் இருப்பதால் அமெரிக்க வரி அதிகரிப்பினால் சிக்கல் இல்லை என்று சிலர் கூறுகின்றனர்.

இவ்வாண்டுடன் ஜி.எஸ்.பி. பிளஸ் நிறைவடையப் போகிறது. ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஜி.எஸ்.பி. பிளஸ் தொடர்பான புதிய முன்மொழிவுகள் முன்வைக்கப்படவுள்ளன. எனவே புதிய சட்டத்துடன் புதிய ஜி.எஸ்.பி. பிளஸ் வரவுள்ளது. அதற்கமைய தற்போது ஜி.எஸ்.பி. பிளஸ் கிடைக்கப் பெறும் சுமார் 6 நாடுகள் அதனை இழக்க நேரிடும்.

பயங்கரவார தடைச்சட்டம், நல்லிணக்கம் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பில் இலங்கை என்ன செய்திருக்கிறது என்பதையும் ஐரோப்பிய ஒன்றியம் ஆராயும். இன்னும் இரு வாரங்களில் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு இலங்கை வரவுள்ளது. வந்ததன் பின்னர் நிச்சயம் இவை தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.

அமெரிக்காவினால் கதவுகள் அடைக்கப்படும் போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவுகள் திறக்கப்படும் என்று எவராவது எண்ணினால் அது முற்றிலும் தவறாகும். ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை மீளப் பெற்றுக் கொள்வதற்கு எந்தளவுக்கு இலங்கை போராடியது என்பதை என்னைத் தவிர இந்த பாராளுமன்றத்தில் யாருக்கும் தெரியாது. எனவே இவை தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமாக சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/211341

யாழில் ஒன்றரை கோடிக்கும் அதிகமான பண மோசடி செய்த சந்தேகநபருக்கு விளக்கமறியல்

2 weeks 5 days ago

06 Apr, 2025 | 02:09 PM

image

யாழ்ப்பாணத்தில் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான பணமோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

நெல்லியடி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாடு செல்வதற்காக வட்டுக்கோட்டையை சேர்ந்த ஒருவரிடம் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா பணத்தினை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அந்த பணத்தினை வாங்கிய நபர் அவரை வெளிநாட்டுக்கும் அனுப்பாமல், அந்த பணத்தினை திருப்பியும் கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். 

இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தார். அந்தவகையில் மேற்படி குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எம்.உதயானந்தன் தலைமையிலான குழுவினர் சந்தேகநபரை கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.

இந்நிலையில் சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

யாழில் ஒன்றரை கோடிக்கும் அதிகமான பண மோசடி செய்த சந்தேகநபருக்கு விளக்கமறியல் | Virakesari.lk

வைத்தியரால் பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகம் ; விசாரணைகள் ஆரம்பம்

2 weeks 5 days ago

06 Apr, 2025 | 03:51 PM

image

நீர்கொழும்பு பொது  வைத்தியசாலையில்  வைத்தியரால் பெண்ணொருவர் பாலியல்  துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த மாதம் 31 ஆம் திகதி  பெண்ணொருவர் தனது தாயாருடன் பல்வலி  மற்றும் தோல் நோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள  நீர்கொழும்பு பொது  வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இதன்போது,  தன்னை பரிசோதித்த வைத்தியர்  பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மூலம் பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு  அளித்துள்ளார்.

அதன்படி, கடந்த 2  ஆம் திகதி இந்த பெண்ணை சட்ட வைத்திய அதிகாரி பரிசோதித்தார். எனினும், வைத்திய அறிக்கையில் திருப்தியடையாமையினால்,  விசேட மருத்துவ குழுவால் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார்  மேலதிக   விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வைத்தியரால் பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகம் ; விசாரணைகள் ஆரம்பம் | Virakesari.lk

யாழில் இடுகாட்டை வாங்கிய தனியார் ; தமது உறவுகளின் கல்லறைகளை பாதுகாக்க கோரும் உறவுகள்

2 weeks 5 days ago

06 Apr, 2025 | 04:58 PM

image

யாழ்ப்பாணத்தில் இடுகாடு ஒன்றினை தனியார் ஒருவர் கொள்வனவு செய்து, அதில் கட்டடங்களை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

சுழிபுரம் பகுதியில் உள்ள காணி ஒன்றை நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் இடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். 

அங்கு சுமார் 150 க்கும் மேற்பட்ட உடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் பல கல்லறைகளும் கட்டப்பட்டுள்ளன. 

அத்துடன் அப்பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், சிறுமியின் உடலம் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த இடுகாட்டிலையே புதைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது 

இந்நிலையில் குறித்த இடுகாடு அமைந்துள்ள காணியை அண்மையில் தான் பணம் கொடுத்து வாங்கியுள்ளதாகவும் அது தனக்கு சொந்தமானது என கூறி, கல்லறைகளை அகற்றி விட்டு, அதில் சுற்றுலா மையம் ஒன்றினை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தனியார் ஒருவர் அப்பகுதி மக்களிடம் கூறியுள்ளார். 

இது தொடர்பில் பிரதேச செயலரிடம் தெரிவித்த நிலையில் , குறித்த காணி தனியாருக்கு சொந்தமானது எனவும் , இடுகாட்டுக்காக இனிவரும் மூளாய் பகுதியில் 2 ஏக்கர்  காணியை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

எமது உறவுகளின் கல்லறைகள் இந்த இடுகாட்டில் உள்ளது அதனை ஒருவர் அழித்து அதன் மீது சுற்றுலா தளம் ஒன்றினை அமைப்பதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. 

எனவே எமது இடுகாட்டையும்  எம் உறவுகளின் கல்லறைகளையும் பாதுகாத்து தாருங்கள் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

யாழில் இடுகாட்டை வாங்கிய தனியார் ; தமது உறவுகளின் கல்லறைகளை பாதுகாக்க கோரும் உறவுகள் | Virakesari.lk

முல்லைத்தீவு – புலிபாய்ந்தகல் பகுதியில் அத்துமீறி வாடி அமைக்கும் சிங்கள மீனவர்கள்!

2 weeks 5 days ago

முல்லைத்தீவு – புலிபாய்ந்தகல் பகுதியில் அத்துமீறி வாடி அமைக்கும் சிங்கள மீனவர்கள்!

April 6, 2025

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் – புலிபாய்ந்தகல் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மீனவர்களின் சில வாடிகளை அடாவடித்தனமாக அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் அத்துமீறி வாடி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் கடந்த வருடமும் அத்துமீறி குறித்த பகுதியில் வாடி அமைப்பதற்கு சில பெரும்பான்மையின மீனவர்கள் முயற்சி மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி மீனவர்கள் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் இணைந்து குறித்த அத்துமீறல் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இத்தகைய சூழலில் மீளவும், புலிபாய்ந்தகல் பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த சில சிங்கள மீனவர்கள், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடமோ, கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணிப் பிரிவிடமோ எவ்வித அனுமதிகளையும் பெறாது அத்துமீறி வாடிகளை அமைத்துள்ளனர்.
அத்துடன் அவர்களின் மீன்பிடிப் படகொன்றும் அனுமதி பெறப்படாமல் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொக்குத்தொடுவாய் கடற்றொழிலாளர் சங்கத்தின் அழைப்பை ஏற்று அப்பகுதிக்குச் சென்ற வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தென்னிலங்கை மீனவர்களால் அத்துமீறி வாடி அமைக்கப்பட்டமை தொடர்பில் கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியதுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

இதன்படி, அனுமதிகள் எவையும் பெறப்படாமல் அத்துமீறி அடாவடியாக தென்னிலங்கை மீனவர்களால் அமைக்கப்பட்டுள்ள வாடிகளை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு கரைதுறைப்பற்று பிரதேச செயலக் காணிப் பிரிவால் அப்பகுதியில் துண்டுப்பிரசுரம் காட்சிப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது https://www.ilakku.org/sinhala-fishermen-encroaching-on-the-mullaitivu-pulibaindhakal-area-and-setting-up-a-wharf/

கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பெயரை தொடர்ந்து அனுமதியின்றி பயன்படுத்தினால் நீதிமன்றத்தை நாடுவோம் - கோபாலகிருஸ்ணன்

2 weeks 5 days ago

கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பெயரை தொடர்ந்து அனுமதியின்றி பயன்படுத்தினால் நீதிமன்றத்தை நாடுவோம் - கோபாலகிருஸ்ணன்

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D

தங்களின் அனுமதியின்றி கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பெயர் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் த.கோபாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட தரப்பினர் தம்முடன் கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

எவ்வாறாயினும் கட்சியின் பெயரைப் பயன்படுத்த முடியாது என அப்போதே அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், தொடர்ந்தும் அந்த பெயர் பயன்படுத்தப்பட்டால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும், கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் தலைவர் த.கோபாலகிருஸ்ணன் கூறியுள்ளார்.

https://www.hirunews.lk/tamil/402215/கிழக்கு-தமிழர்-கூட்டமைப்பின்-பெயரை-தொடர்ந்து-அனுமதியின்றி-பயன்படுத்தினால்-நீதிமன்றத்தை-நாடுவோம்-கோபாலகிருஸ்ணன்

மஹவ – ஓமந்தை ரயில் பாதையை இந்திய பிரதமர் மோடியும் ஜனாதிபதி அநுரவும் இணைந்து திறந்து வைத்தனர்!!

2 weeks 5 days ago

மஹவ – ஓமந்தை ரயில் பாதையை இந்திய பிரதமர் மோடியும் ஜனாதிபதி அநுரவும் இணைந்து திறந்து வைத்தனர்!!

April 6, 2025

rsdzg.jpg

அநுராதபுரத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (6) காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன்  விஜயம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, புனித ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

அதன்பின்னர்,  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்கவுடன் இணைந்து நவீனமயமாக்கப்பட்ட மஹவ – ஓமந்தை ரயில் பாதை மற்றும் மஹவ – அநுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பை மக்கள் பயன்பாட்டிற்காக இந்தியப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில்,

“அநுராதபுரத்தில், மாஹோ-ஓமந்தை இடையேயான  தரமுயர்த்தப்பட்ட புகையிரதப் பாதையினை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் நானும் கூட்டாக அங்குரார்ப்பணம் செய்துவைத்தோம். அதேபோல மாஹோ  முதல் அனுராதபுரம் வரையிலான தொகுதிக்குரிய நவீன சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் தொலைத் தொடர்பு பொறிமுறையினை ஸ்தாபித்தல் உள்ளிட்ட சமிக்ஞை தொகுதி திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இலங்கையின் அபிவிருத்தி பயணத்தின் பல்வேறு அம்சங்களிலும் இலங்கைக்கான ஆதரவை நல்குவதில் இந்தியா பெருமிதம் கொள்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Capture-5.jpg

sa.jpg

erdgf.jpg

https://eelanadu.lk/மஹவ-ஓமந்தை-ரயில்-பாதையை-இ/

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுடன் சுமூகமான சந்திப்பு!

2 weeks 5 days ago

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுடன் சுமூகமான சந்திப்பு!

adminApril 5, 2025

Up-Country.jpeg?fit=1170%2C658&ssl=1

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் மலையக அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலும் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இது குறித்து தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய பிரதமர், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுடன் சுமூகமான சந்திப்பு இடம்பெற்றிருந்ததாக குறிப்பிட்டார்.

இச்சமூகத்தினர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்குமான ஒரு வாழும் உறவுப் பாலமாக திகழ்கின்றனர்.

இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்புடன் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுக்காக 10000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித சீதை அம்மன் ஆலயம் ஆகியவற்றின் நிர்மாணம் மற்றும் ஏனைய சமூக அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்தியா ஆதரவு வழங்கும் என இந்திய பிரதமர் தமது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

https://globaltamilnews.net/2025/214150/

சந்திரிக்கா, மஹிந்த, ரணில், மைத்திரி நாளை கொழும்பில் விசேட சந்திப்பு

2 weeks 5 days ago

06 APR, 2025 | 09:39 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பங்கேற்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை திங்கட்கிழமை (07) கொழும்பில் இடம்பெறவுள்ளது. 

இலங்கை எதிர்கொள்கின்ற பொருளாதார மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு இடம்பெறும் இந்த சந்திப்பை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்பாடு செய்துள்ளார்.

அமெரிக்காவின் வரி விதிப்பு உள்ளிட்ட உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இலங்கைக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக மாறியுள்ளது.

இந்த சவால்களை முறையாக எதிர்கொள்ளா விடின் தேசிய பொருளாதாரம், அரசியல் மற்றும் பாதுகாப்பு என்பன சீர்குலைந்து விடும்.

எனவே முன்னாள் ஜனாதிபதிகள் என்ற வகையில், நாடு எதிர்கொள்கின்ற புதிய சவால்களுக்கு ஏற்ப முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட உள்ளது.

அத்துடன், இலங்கையின் பாதுகாப்பு படைகளின் முன்னாள் தளபதிகளுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடையை தொடர்ந்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாடு என்ற வகையில் இதனை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற விடயங்களும் முன்னாள் ஜனாதிபதிகளின் சந்திப்பில் கவனத்தில் கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/211274

பொலிஸ் காவலில் இளைஞன் உயிரிழப்பு; சட்டத்தரணிகள் சங்கம் கவலை!

2 weeks 5 days ago

New-Project-87.jpg?resize=750%2C375&ssl=

பொலிஸ் காவலில் இளைஞன் உயிரிழப்பு; சட்டத்தரணிகள் சங்கம் கவலை!

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அதிகாலை அதிகாலை வெலிக்கடை சிறைச்சாலையின் தடுப்புக் காவலில் இருந்தபோது இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

காவலில் இருந்தபோது அந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான காயங்களை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

எனினும், அவை குறித்த இளைஞன் தானே ஏற்படுத்திக் கொண்டதாகவும், அந்த நேரத்தில் அவர் சரியான மனநிலையில் இல்லை என்றும் வெலிக்கடை பொலிஸார் கூறுகின்றனர்.

எவ்வாறெனினும், கடுமையான காயங்களுக்கு உள்ளான இளைஞன் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார்.

இந்த நிலையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய, சம்பவம் அறிக்கையிடப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் சட்ட அமலாக்க பொறுப்புக்கூறல் மற்றும் பொது நம்பிக்கை மீதான பரந்த தாக்கங்கள் குறித்து சங்கத்தின் கடுமையான கவலைகளை வெளிப்படுத்தும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்த சம்பவம் குறித்து உடனடி மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு பதில் பொலிஸ்மா அதிபரை கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பான முன்னேற்றங்களை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உன்னிப்பாகக் கண்காணிக்கும், மேலும் உரிய நடைமுறை பின்பற்றப்படுவதையும் சட்டத்தின் ஆட்சி உறுதி செய்யப்படுவதையும் உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க இலங்கை பொலிஸ் உட்பட சட்ட அமலாக்க முகவர் நிறுவனங்கள் மிகுந்த அக்கறையுடனும், எச்சரிக்கையுடனும், பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்று பல தசாப்தங்களாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தொடர்ந்து எச்சரித்து வருவதாக அவர் மேலும் வலியுறுத்தினார்.

https://athavannews.com/2025/1427650

ராஜீவ்காந்தி மீது தாக்குதலை மேற்கொண்டதற்காக நான் வருத்தப்படவில்லை - விஜிதரோஹன விஜேமுனி

2 weeks 5 days ago

Published By: RAJEEBAN 06 APR, 2025 | 10:24 AM

image

சண்டேடைம்ஸ்

1987ம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மீது தாக்குதலை மேற்கொண்டமை குறித்து தான் வருத்தப்படவில்லை என முன்னாள் கடற்படைவீரர் விஜிதரோஹன விஜேமுனி தெரிவித்துள்ளார்.

1987ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கையில் காணப்பட்ட இரகசிய தன்மை ஜேவிபி அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையிலும் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

1987ம் ஆண்டு ஜூலை மாதம் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி மீது தனது துப்பாக்கியின் பிடியினால்  தாக்குதலை மேற்கொண்ட விஜிதரோஹன விஜேமுனி இலங்கை குறித்த இந்தியாவின் நோக்கங்கள் குறித்து தொடர்ந்தும் சந்தேகம் கொண்டவராக காணப்படுகின்றார்.

இந்தியாவுடனான உடன்படிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டும் என அவர் தெரிவிக்கின்றார்.

1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டவேளை அது குறித்து இரகசிய தன்மை காணப்பட்டது, இலங்கை அரசாங்கம் தற்போது இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்திடவுள்ள உடன்படிக்கைகள் குறித்து பொதுமக்களிற்கு எதுவும் தெரியாது என அவர் தெரிவித்தார்.

vijitha_muni.jpg

இந்திய இலங்கை உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர் கொழும்பிலிருந்து புறப்படவிருந்த ராஜீவ்காந்திக்கு இராணுவஅணிவகுப்பு மரியாதையை வழங்குவதற்காக 21 வயது விஜித ரோகன விஜயமுனி தெரிவு செய்யப்பட்டவேளை அவர் இலங்கை கடற்படையில் கனிஷ்ட தரத்தில் காணப்பட்டார்.

இந்திய பிரதமர் தன்னை கடந்து சென்றதும் விஜயமுனி அவரை தனது துப்பாக்கி பிடியினால் தாக்கினார். ஆனால் ராஜீவ்காந்தி தனது எச்சரிக்கை உணர்வினால் அந்த தாக்குதலில் இருந்த தப்பினார், அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது.

தாக்குதலை மேற்கொண்டவரை ஏனைய கடற்படை வீரர்கள் உடனடியாக மடக்கிபிடித்து தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர், பின்னர் அவர் இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார், ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கடற்படையிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த சம்பவம் இடம்பெற்று 38 வருடங்களாகிவிட்ட போதிலும், இலங்கையின் அரசமைப்பின் 13வது திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு காரணமாகயிருந்த இந்திய இலங்கை உடன்படிக்கையை விஜேமுனி தொடர்ந்தும் எதிர்க்கின்றார்.

மாகாணசபை முறை தோல்வியடைந்து விட்டது, மாகாணசபைகள் கடந்த மூன்று வருடங்களாக இயங்கவில்லை, அவை இல்லாமலே அரசசேவைகள் சிறப்பாக இயங்குவதை நாங்கள் பார்க்கின்றோம் என அவர் தெரிவிக்கின்றார்.

இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு அதிகாரங்களை மாவட்ட மட்டத்தில் அல்லது உள்ளுராட்சி அளவிலேயே பகிரவேண்டும், தமிழ் நாடு மாத்திரமே இலங்கையை விட இரண்டரை மடங்கு பெரியது என அவர் தெரிவித்துள்ளார்.

விஜேமுனிக்கு ஆறுவருட சிறைத்தண்டனை வழங்கப்பட்ட போதிலும், அவர் இரண்டரை வருட கால தண்டனயை பூர்த்தி செய்திருந்த நிலையில்  முன்னாள் ஜனாதிபதி  ரணசிங்க பிரேமதாச அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்தார்.

அதன் பின்னர் அவர் ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை  பூர்த்தி செய்தார், அரசியலில் ஈடுபட்டார், ஜோதிடத்தையும் கற்றார். தற்போது அதில் ஈடுபாடு கொண்டவராக காணப்படுகின்றார்.

விஜேமுனி தான் இந்திய இலங்கை உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைசாத்திடுவதற்கு எதிராக பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்த ஜேவிபியின் உறுப்பினரில்லை என்கின்றார்.

indo_lanka.jpg

இந்தியாவுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதன் மூலம் நாட்டின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் முயற்சிகள் குறித்து தான் கடும் சீற்றம் கொண்டிருந்ததாகவும் அதன் காரணமாகவே ராஜீவ்காந்தி மீது தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர்  தெரிவிக்கின்றார்.

நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினர் சிந்தனை அந்த நாட்களின்  எவ்வாறானதாக காணப்பட்டதோ அதனை எனது நடவடிக்கை வெளிப்படுத்தியது  என்கின்றார் அவர்.

https://www.virakesari.lk/article/211282

தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி

2 weeks 6 days ago

தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி

Saturday, April 05, 2025 செய்திகள்

GnxF7arWQAAWPlm.jpeg


இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் மோடி தமிழ் தலைவர்களை சந்தித்துள்ளார். 

சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரின் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்து, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கண்ணியம், நீதி நிறைந்த வாழ்க்கைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியதாக தனது X தளத்தில் மோடி  குறிப்பிட்டுள்ளார்.


https://www.jaffnamuslim.com/2025/04/blog-post_92.html?m=1

.

ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் இணைந்து 3 அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர்

2 weeks 6 days ago

05 APR, 2025 | 05:40 PM

image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து 3 அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர்.

அந்தவகையில், தேசிய மின் கட்டமைப்பில் 50 மெகாவாட் மின்சாரத்தை இணைக்கும் சம்பூர் சூரிய மின்சக்தித் திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய தம்புள்ளை விவசாயக் களஞ்சிய கட்டிடத்தொகுதி மற்றும் 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின் கலங்களை  நிறுவும் திட்டம் திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்நாட்டிற்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின்  விஜயத்துடன் இணைந்து, இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் நாட்டில் செயல்படுத்தப்படும் மூன்று அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு மற்றும் திறப்பு விழா இன்று சனிக்கிழமை (05) நடைபெற்றது.

தேசிய மின் கட்டமைப்பில் 50 மெகாவாட் மின்சாரத்தை இணைக்கும் சம்பூர் சூரிய மின்நிலையத்தின் பணிகள் ஆரம்பித்தல், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய தம்புள்ளை விவசாய களஞ்சி கட்டிடத் தொகுதி மற்றும் இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின் கலங்களை நிறுவும் திட்டம் ஆகியவை இணையவழி (online) தொழில்நுட்பம் மூலம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டன.

இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பிற்குப் பிறகு இரு தலைவர்களும் இதில் இணைந்துகொண்டனர். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான  "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது.

இந்தியாவின் என்டீபீசீ(NTPC) லிமிடெட் மற்றும் இலங்கை மின்சார சபை (CEB) ஆகியவற்றின் கூட்டு முயற்சியான திருகோணமலை மின்சார நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படவுள்ள சம்பூர் சூரிய மின்  நிலையம், நீண்டகால மின் உற்பத்தி 

விரிவாக்கத் திட்டத்தின் (LTGEP) கீழ் நிறுவப்படவுள்ள வடகிழக்கு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வலயத்தின் ஒரு பகுதியாகும்.

சம்பூர் சூரிய மின் நிலையத் திட்டம் இரண்டு கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இரண்டாம் கட்டம் 2027 இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக 500 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன்,  இதன் மூலம் 50 மெகாவாட் மின்சாரம் நாட்டின் தேசிய மின்சார விநியோகத்தில் இணைக்கப்படும்.

N-type TOPCon solar cells என்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிறுவப்படும் இந்த திட்டம், வலுசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் என்றும், நாட்டின் வலுசக்தி அமைப்பை புதைபடிவ எரிபொருட்களை நம்புவதற்குப் பதிலாக புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை நோக்கி மாற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, சம்பூர் சூரிய மின்நிலையத் திட்டம் ஆண்டுதோறும் வளிமண்டலத்திற்கு வெளியேற்றப்படும் காபனீரொக்சைட் அளவை சுமார் 02 மில்லியன் டொன்கள் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம், பசுமையான எதிர்காலத்தை நோக்கிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கிறது.

அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளை சுமார் 40% குறைத்தல், விவசாயப் பொருட்களின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்துதல், நுகர்வோருக்கு தரமான உணவை வழங்குதல் மற்றும் விவசாய நிலைபேற்றுத்தன்மையை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன், 5,000 மெட்ரிக் டொன் கொள்ளளவும், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாகவும் நிர்மாணிக்கப்பட்டுள்ள தம்புள்ளை விவசாய களஞ்சிய கட்டிடத்தொகுதி (குளிர் கிடங்கு) இன்று திறந்து வைக்கப்பட்டது.

பல்வேறு பயிர்களுக்கான உகந்த சேமிப்பு முறைகள் குறித்த ஆராய்ச்சியை எளிதாக்குவதற்காக இந்த களஞ்சியத் தொகுதியில் ஆறு அறைகள் நிறுவப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு அறையும் வெவ்வேறு காலநிலை நிலைமைகளை உருவகப்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முதலில்  நிறுவப்படும் இந்தக் களஞ்சிய கட்டிடத் தொகுதியின் மொத்தச் செலவு 524 மில்லியன் ரூபாவாகும். இதில், 300 மில்லியன் ரூபா இந்திய அரசாங்கத்தின் நன்கொடையாவதோடு,  இதற்காக இலங்கை அரசாங்கம்  224 மில்லியன் ரூபாய்களை செலவிடுகிறது.

5,000 மதஸ்த் தலங்களின் கூரைகளில் சூரிய மின் கலங்களை நிறுவும் திட்டம், நாடு முழுவதும் உள்ள 25 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாகவும், அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட 5,000 மதஸ்த் தலங்களில் சூரிய மின் கலங்களை  நிறுவும் திட்டமாகும்.

இந்த திட்டத்தில் இந்திய அரசாங்கம் 17 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது, மேலும் இலங்கை மின்சார சபை, இலங்கை நிலைபெறுதகு வலு சக்தி அதிகாரசபை மற்றும் இலங்கை மின்சார நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன.

அதன்படி, பௌத்த, இந்து, முஸ்லிம், கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களின் கூரைகளில் 5 kW  கொள்ளளவைக் கொண்ட 5,000 சூரிய மின் கலங்கள் நிறுவப்படும். இது நாட்டின் வலுசக்திக் கட்டமைப்பில் 25 மெகாவாட் சூரிய மின்சக்தி திறனை இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் செலவு குறைந்த, நிலைபேறான மற்றும் நம்பகமான வலுசக்தி அமைப்பை நோக்கிய அரசாங்கத்தின் நோக்கத்தை வலியுறுத்துகிறது.

https://www.virakesari.lk/article/211248

IPKF நினைவிடத்தில் மோடி அஞ்சலி

2 weeks 6 days ago

பத்தரமுல்லையில் உள்ள   IPKF நினைவிடத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

இலங்கையின் அமைதி, ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த இந்திய அமைதி காக்கும் படையின் துணிச்சலான வீரர்களை நாங்கள் நினைவு கூர்கிறோம். 

அவர்களின் அசைக்க முடியாத துணிச்சலும் அர்ப்பணிப்பும் நம் அனைவருக்கும் உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளது. R

image_a11bd6a1c3.jpgimage_4807c78fda.jpgimage_a65dde590b.jpgimage_0dccdf619d.jpg


Tamilmirror Online || IPKF நினைவிடத்தில் மோடி அஞ்சலி

இராணுவத்தின் பிடியிலிருந்த பரந்தன் தொழிற்சாலையின் 15 ஏக்கர் காணி விடுவிப்பு

2 weeks 6 days ago


1589409678.jpg

கிளிநொச்சி 23 மணி நேரம் முன்

இராணுவத்தின் பிடியிலிருந்த பரந்தன் தொழிற்சாலையின் 15 ஏக்கர் காணி விடுவிப்பு

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்குச் சொந்தமான காணிகள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் காணிகளில் 15 ஏக்கர் பரப்பளவான காணிகள் நேற்று முறைப்படி விடுவிக்கப்பட்டுள்ளன.


காணி விடுவிப்புத் தொடர்பான ஆவணங்கள், கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரனிடம் 553ஆவது படைப்பிரிவின் நிர்வாக அதிகாரியால் கையளிக்கப்பட்டன. 

இராணுவத்தின் பிடியிலிருந்த பரந்தன் தொழிற்சாலையின் 15 ஏக்கர் காணி விடுவிப்பு

பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் ஆபத்து - ஐ.தே.க. அரசாங்கத்துக்கு எச்சரிக்கை

2 weeks 6 days ago

04 Apr, 2025 | 05:24 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கும் வரியை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகம்கொடுக்க நேரிடும் அபாயம் இருக்கிறதென ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் இலங்கைக்கு விதித்திருக்கும் 44வீத தீர்வை வரி அதிகரிப்பு, எமது ஏற்றுமதி பொருளாதாரத்துக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. ஏனெனில் எமது ஏற்றுமதியில் அமெரிக்காவுக்கே அதிக ஏற்றுமதிகளை மேற்கொள்கிறோம். 2024ஆம் ஆண்டில் எமது நாடு 12.7 பில்லியன் டொலர் வரை ஏற்றுமதி செய்திருக்கிறது.

அதில் 3 பில்லியன் டொலர் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது.எமது மொத்த ஏற்றுமதியில் நூற்றுக்கு 23சதவீதம் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த 23சதவீதத்துக்கும் அமெரிக்காவின் வரி அதிகரிப்பு தாக்கம் செலுத்தும். இதில் ஆடை தொழிற்சாலைக்கே பாரிய பாதிப்பு ஏற்படப்போகிறது. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 3 பில்லியன் டொலரில் 2 பில்லியன் டொலர்கள் ஆடை உற்பத்தியாகும்.

அதனால் அமெரிக்காவின் இந்த தீர்வை வரி அதிகரிப்பால் எமது ஆடை தொழிற்சாலைகளுக்கு பாரிய தாக்கம் செலுத்தம் அபாயம் இருக்கிறது. அதனால் எங்களுக்கு ஆடை விலை அதிகரித்து ஏற்றுமதி செய்யும்போது எமது ஆடைகளுக்கான கேள்வி குறைந்துவிடும்.

எமக்கு ஏனைய நாடுகளுடன் போட்டியிட முடியாத நிலைமை ஏற்படும். இதன் காரணமாக நாட்டில் ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டு, பாரியளவில் தொழில் இல்லாமல் போகும் அபாயம் இருக்கிறது.இதுதொடர்பில் ஆராய்ந்து பார்க்க ஜனாதிபதி குழுவொன்றை அமைத்திருக்கிறார். ரணில் விக்ரமசிங்க கொண்டுவந்த  அதிகாரிகளைக்கொண்டே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

 ரணிலின் இந்த அதிகாரிகளை விரட்டுவதாகவே அரசாங்கம் ஆரம்பத்தில் தெரிவித்து வந்தது. ஆனால் தற்போது ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரிகளை வைத்துக்கொண்டே அரசாங்கம் பொருளாதாரத்தை செயற்படுத்தி வருகிறது. குழு அமைத்து பிரயோசனம் இல்லை. இதற்கு அரசியல் தலைமைத்துவ வழிகாட்டல் மற்றும் சர்வதேச முகாமைத்துவம் ஒன்று இருந்தாலே இந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முடியுமாகும்.

அதேநேரம் அரசாங்கம் எந்த திட்டமும் இல்லாமல் வருமான வரிகளை குறைத்துக்கொண்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய எந்த திட்டமும் இல்லாமலே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

அதனால் அரசாங்கம் பொய் உரைப்பதை கைவிட்டு உண்மை நிலைமையை மக்களுக்கு தெரியப்படுத்தி உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.

அதேநேரம் நாட்டில் மீண்டும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு இந்த நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு செல்லும்.

அதேபோன்று எரிவாயு விலை அதிகரித்துள்ளதால் ஹோட்டல்களில் தேநீரின் விலையை 10ரூபாவால் அதிகரிக்க ஹோட்டல் உரிமையாயளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. முட்டை விலையை அரசாங்கம் வேண்டுமென்றே அதிகரித்துள்ளது. முட்டைக்கு 18வீத வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் முட்டை விலை 10ரூபா வரையாவது விலை அதிகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாது.

அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளபோதும் அது ஏற்கனவே வழங்கப்பட்டுவந்த கொடுப்பனவுகளை நீக்கியே இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதனால் அடுத்த மாத சம்பளத்தில் அவர்கள் எதிர்பார்க்கும் சம்பள அதிகரிப்பு கிடைக்கப்போவதில்லை. ஆனால் அரசாங்கத்தின் இந்த சம்பள அதிகரிப்பு, குறித்த அரச ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, அவர்களுக்கு பூரண நண்மை கிடைக்கிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.

பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் ஆபத்து - ஐ.தே.க. அரசாங்கத்துக்கு எச்சரிக்கை | Virakesari.lk

இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால் சீனா அதிருப்தியடையும் - அரசாங்கத்துக்கு வீரசேகர எச்சரிக்கை

2 weeks 6 days ago

(இராஜதுரை ஹஷான்)

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில்  அதிகார போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ள பின்னணியில் இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் சீனா கடும் அதிருப்தியடையும். ஒரு நாட்டுக்காக ஏனைய நாடுகளை பகைத்துக்கொள்ள கூடாது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.அவரை அன்புடன் வரவேற்கிறோம். இந்த விஜயத்தின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதில் பாதுகாப்பு தொடர்பில் முக்கிய விடயங்களை உள்ளடக்கிய வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தங்கள் குறித்து பாராளுமன்றத்துக்கும்இ நாட்டு மக்களுக்கும் அறிவிக்கப்படவில்லை. பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மற்றும் உள்ளடங்கங்கள் என்னவென்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். உண்மையை வெளிப்படுத்தாத வரையில் சாதாரண சந்தேகம் தோற்றம் பெறும்.

இலங்கை பிளவுப்படாத வெளிவிவார கொள்கையை கடைப்பிக்கின்ற நிலையில் பாதுகாப்பு தொடர்பில் ஒரு நாட்டுடன் மாத்திரம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது நாட்டின் வெளிவிவகார கொள்கையை கேள்விக்குள்ளாக்கும்.

இந்தியாவுக்கும்இ சீனாவுக்கும் இடையில்  அதிகார போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ள பின்னணியில் இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் சீனா கடும் அதிருப்தியடையும்.

நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துக் கொண்டு தான் அனைத்து நாடுகளுடன் செயற்பட வேண்டும்.குறித்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இராணுவ பயிற்சி,  பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டசபையில் இலங்கையின் கச்சத்தீவை மீளப்பெற்றுக் கொள்வதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் இந்தியாவுடனான பாதுகாப்பு குறித்து சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிகாலத்தில் தான் விடுதலை புலிகள் அமைப்புக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இக்காலப்பகுதியில் தான் இலங்கை - இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஆகவே இந்தியாவுடனான ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.

 இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால் சீனா அதிருப்தியடையும் - அரசாங்கத்துக்கு வீரசேகர எச்சரிக்கை    | Virakesari.lk

Checked
Sat, 04/26/2025 - 00:24
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr