ஊர்ப்புதினம்

மேலும் 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் : இலங்கையின் 2 ஆவது பெரிய மனித புதைகுழியாக பதிவானது 'செம்மணி'

2 weeks 6 days ago

26 Aug, 2025 | 08:45 PM

image

நீதிமன்றத்தால் குற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது பெரிய புதைகுழியாக மாறியுள்ளது.

இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 34வது நாளான இன்றைய தினம் (ஓகஸ்ட் 26) செம்மணி மனித புதைகுழியில் மேலும் 16 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ரனிதா ஞானராஜ் தெரிவிக்கின்றார்.

அகழ்வு தளத்தை பார்வையிட்ட ஊடகவியலாளர்கள் குழந்தைகளினுடையது என சந்தேகிக்கப்படக்கூடிய எலும்புகளை கண்டுள்ளனர், எவ்வாறெனினும் தடயவியல் பரிசோதனைக்குப் பின்னரே இது தொடர்பில் உறுதிப்படுத்தப்படும் என சட்டத்தரணி ரனிதா கூறுகிறார்.

செம்மணி புதைகுழியிலிருந்து ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டது இன்றைய தினமாகும்.

செம்மணி மனித புதைகுழி வளாகத்தில் இருந்து இதுவரை குழந்தைகள் உள்ளிட்ட 166 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

32 நாட்கள் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஓகஸ்ட் 6 ஆம் திகதி முதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உட்பட 150 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

18 நாட்களின் பின்னர் அகழ்வாய்வுகள் நேற்று (ஓகஸ்ட் 25) மீண்டும் ஆரம்பமாகியபோது ஸ்கேன் பரிசோதனைக்கு அமைய அகழ்வு தளத்தை விரிவுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழி மன்னாரில் உள்ள சதொச மனித புதைகுழியாகும். அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

2013 ஆம் ஆண்டில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படும் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழியான கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழியிலிருந்து குறைந்தது 88 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு அதன் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஐந்தாவது பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழியாகும். அங்கு 2013 இல் 82 மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு பணிகள் நிறைவடைந்த நேரத்தில், 52 நபர்களின் எச்சங்கள் மீட்கப்பட்டன.

chemmani.png

WhatsApp_Image_2025-08-25_at_19.32.28.jp

WhatsApp_Image_2025-08-25_at_19.32.27__1

WhatsApp_Image_2025-08-25_at_19.32.27.jp

IMG-20250826-WA0041.jpg

IMG-20250826-WA0036.jpg

IMG-20250826-WA0038.jpg

IMG-20250826-WA0034.jpg


மேலும் 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் : இலங்கையின் 2 ஆவது பெரிய மனித புதைகுழியாக பதிவானது 'செம்மணி' | Virakesari.lk

சம்பூர் பகுதியில் மனித எச்சங்களை ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்காக பட்ஜட் மன்றில் சமர்ப்பிப்பு

2 weeks 6 days ago

26 Aug, 2025 | 07:24 PM

image

(துரைநாயகம் சஞ்சீவன்)

சம்பூர் பகுதியில் மேலதிக மனித எச்சங்கள் தொடர்பில் ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்காக சம்பூர் பொலிஸாரினால் இன்று செவ்வாய்க்கிழமை (26) பட்ஜட் சமர்ப்பிக்கப்பட்டதுடன், மாகாண மேல் நீதிமன்ற அனுமதியுடன் மேலதிக நடவடிக்கைக்காக குறித்த வழக்கானது செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

திருகோணமலை சம்பூர் பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட விடயம் தொடர்பான வழக்கானது மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி. தஸ்னீம் பௌசான் முன்னிலையில் இன்றைய தினம்  விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது குறித்த பகுதியில் மேலதிக மனித எச்சங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக  சம்பூர் பொலிஸ் பொறுப்பதிகாரியினால் உத்திதேச பட்ஜட் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த பகுதியில் தொல்பொருள் திணைக்களத்திடம் இருக்கின்ற ஜி.பி.ஆர் என்ற ஸ்கான் இயந்திரத்தை கொண்டு குறித்த பகுதியில் மேலும் மனித எச்சங்கள் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்வதற்காக சட்ட வைத்திய அதிகாரி, தொல்லியல் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக காணாமல் போனோர் அலுவலகத்தினால் ஒப்பமிடப்பட்டு குறித்த உத்தேச பட்ஜட் ஆனது தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்,

குறித்த பட்ஜட் ஆனது மூதூர் மாவட்ட நீதிமன்ற கட்டளையுடன் மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு மாகாண மேல் நீதிமன்றத்தின் அனுமதியுடன் மேலதிக நடவடிக்கைகள் எடுப்பதற்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி குறித்த வழக்கானது தவணையிடப்பட்டுள்ளதாகவும் காணாமல் போனோர் அலுவலகத்தின் சார்பாக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி எம்.எம்.நஸ்லீம் தெரிவித்தார்.

சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் ஆயுபு என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த யூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதியில் இருந்து சிதைந்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் பின்னர் மிதிவெடி அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

537336547_1119233983492056_4979525262593


சம்பூர் பகுதியில் மனித எச்சங்களை ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்காக பட்ஜட் மன்றில் சமர்ப்பிப்பு | Virakesari.lk

ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்! -பிமல் ரத்நாயக்க

2 weeks 6 days ago

download-2-696x464-1.jpg?resize=633%2C37

ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்! -பிமல் ரத்நாயக்க.

ரணில் விக்ரமசிங்கவிற்கு மாத்திரமல்ல, விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர்களுக்கு உரித்தான சட்டமே ஜனாதிபதிகளுக்கும் உரித்தாகும், அவர்களுக்குப் பிரத்தியேகமான சட்டம் இல்லை, அதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும், அலோசியஸிடம் பணம் பெற்றவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். 

மக்கள் வழங்கியுள்ள ஆணையில், இது முக்கியமான விடயமாகும் எனவே அதனை விரைவில் நிறைவேற்றுவோம்” என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1444628

சாவகச்சேரி நகர சபை, பிரதேச சபைகளில் சைக்கிள் கட்சியினரை வெளியேற்ற வழக்கு!

2 weeks 6 days ago

சாவகச்சேரி நகர சபை, பிரதேச சபைகளில் சைக்கிள் கட்சியினரை வெளியேற்ற வழக்கு!

1756132819-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E

சாவகச்சேரி நகர சபைக்கும், சாவகச்சேரி பிரதேச சபைக்கும் தெரிவு செய்யப்பட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களின் தேர்வுகளை இரத்துச் செய்து, அவர்கள் போட்டியிட்ட வட்டாரங்களில் அடுத்த நிலையில் இருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களைச் சபையின் உறுப்பினர்களாக அறிவிக்கக் கோரி தமிழரசுக் கட்சி உறுப்பினர்களினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சூசைதாசன் முன்னிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுமார் ஒன்றரை மணி நேரம் வாதாடி முன்வைத்த சமர்ப்பணங்களை ஏற்றுக்கொண்டு எதிர்த் தரப்புக்கு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்க நீதிபதி கட்டளையிட்டார்.

மேற்படி இரு உள்ளூராட்சி சபைகளிலும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு பெண் உறுப்பினர்கள் அந்தந்த சபைகளில் போட்டியிடுவதற்கான தகமையற்றவர்கள், தகுதியீனம் உடையவர்கள் என உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது.

அந்தத் தீர்ப்பின்படி மேற்படி இரு பெண் உறுப்பினர்களும் அந்தந்தச் சபைகளின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறத் தகுதியற்றவர்கள் எனக் காணப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட இரு வேட்புமனுக்களிலும் இருக்க வேண்டிய பெண் உறுப்பினர்களின் விகிதாசாரம் குறைந்து அந்தப் பட்டியல்களே தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை இழந்து விட்டன எனத் தற்போது மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அது தொடர்பான விளக்கங்களை செவிமடுத்த நீதிபதி அதன் அடிப்படையில் எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

சாவகச்சேரி பிரதேச சபைக்குப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியின் 23 வேட்பாளர்களும் சாவகச்சேரி நகர சபைக்குப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியின் 16 வேட்பாளர்களும் இந்த மனுக்களில் மனுதாரர்கள் ஆவர்.

இரண்டு சபைகளிலும் போட்டியிட்ட மற்றைய கட்சிகள் அனைத்தினதும் வேட்பாளர்கள் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். அதன்படி சாவகச்சேரி பிரதேச சபை தொடர்பான வழக்கில் 225 பேரும், சாவகச்சேரி நகர சபை தொடர்பான வழக்கில் 151 பேரும் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டங்களின்படி இத்தகைய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால், அந்த வழக்கு முதல் தடவை நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தினத்தில் இருந்து ஆறு மாதங்களுக்குள் வழக்கு விசாரித்து முடிவுறுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த இரு வழக்குகளும் காலம் இழுபடாமல் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன், பெனிஸலஸ் துஷான் ஆகியோரும் மன்றில் ஆஜராகினர்.

https://akkinikkunchu.com/?p=338425

அடுத்த ஆண்டு வடக்கு மாகாண சபைக்கு அதிக நிதி ஒதுக்கம்: வாழ்வதரத்தை உயர்த்தும் திட்டங்களை தயார் செய்யுமாறு ஆளுநர் பணிப்பு

2 weeks 6 days ago

அடுத்த ஆண்டு வடக்கு மாகாண சபைக்கு அதிக நிதி ஒதுக்கம்: வாழ்வதரத்தை உயர்த்தும் திட்டங்களை தயார் செய்யுமாறு ஆளுநர் பணிப்பு

26 Aug, 2025 | 10:27 AM

image

வடக்கு மாகாண சபைக்கு அடுத்த ஆண்டு அதிகளவான நிதி ஒதுக்கப்படவுள்ளது எனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்களை இப்போதே தயார் செய்யுமாறும் பணித்தார்.  

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில்  திங்கட்கிழமை  (25) நடைபெற்றது. 

அதன்போது, மகளிர் விவகார அமைச்சு, சமூகசேவைகள் திணைக்களம், தொழிற்றுறை திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு என ஒவ்வொரு திணைக்களத்தினதும் திட்டங்களின் முன்னேற்றங்கள் விரிவாக ஆராயப்பட்டன.   

நிதி ஆணைக்குழு, அடுத்த ஆண்டுக்குரிய திட்டங்களை இந்த ஆண்டிறுதிக்குள்ளேயே அனுமதிப்பதாகத் தெரிவித்துள்ளமை சிறப்பான விடயம் எனக் குறிப்பிட்ட ஆளுநர், விரைவாக திட்டங்களை அடையாளம் காணவேண்டும் என்றும் தெரிவித்தார். அத்துடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் விளைவுகள் என்ன என்பதையும் அதை முன்னிறுத்தியே திட்டங்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர்  குறிப்பிட்டார். 

கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலன், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன், ஆகியோரும், சமூகசேவைகள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர்  லு.தனுஜா, தொழிற்றுறை திணைக்களத்தின் பணிப்பாளர் செ.வனஜா, கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் அகல்யா சேகராஜா, கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் பா.அபிராமி கட்டடங்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்தினதும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

e8b0a249-a902-4b05-b416-8f94c4fa1675__1_


https://www.virakesari.lk/article/223376

ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது - சிறைச்சாலைகள் ஆணையாளர்

2 weeks 6 days ago

ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது - சிறைச்சாலைகள் ஆணையாளர்

26 August 2025

1756180864_5770291_hirunews.jpg

தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (ஊடகம், திறன்கள், தொழில்துறைகள்) ஜகத் வீரசிங்கவிடம், எமது செய்தி சேவை வினவிய போது, ”மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், ரணில் விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பெரும்பாலும் சாத்தியமில்லை” என்று தெரிவித்தார். 

அவருக்கு மேலும் ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதால், அந்தச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு ரணில் விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார். 

இருப்பினும், சூம் (Zoom) தொழில்நுட்பம் மூலம் ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்துடன் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வந்தால், அது தொடர்பாகத் தேவையான வசதிகளை வழங்கச் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்று ஜகத் வீரசிங்க மேலும் தெரிவித்தார்.

https://hirunews.lk/tm/416623/ranil-wickremesinghe-cannot-be-produced-before-the-fort-magistrates-court-commissioner-of-prisons

கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு

2 weeks 6 days ago

கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு

 கொழும்பில் நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக, பொது ஒழுங்கைப் பராமரிக்கவும், எந்தவித இடையூறுகளையும் தடுக்கவும் நகரத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் (OIC) அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

ஏதேனும் வன்முறை ஏற்பட்டாலோ அல்லது சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராகவோ சட்ட நடவடிக்கை எடுக்க தெளிவான அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன,  

கூடுதலாக, எந்தவொரு அமைதியின்மைக்கும் விரைவாக பதிலளிக்க கலகத் தடுப்புப் படைகள் மற்றும் கூடுதல் பொலிஸ் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

https://www.tamilmirror.lk/செய்திகள்/கலகம்-தடுக்கும்-படைகள்-குவிப்பு/175-363499

நான்கு காணொலிகளில் ரணில் கைதுக்கு விளக்கம்

2 weeks 6 days ago

நான்கு காணொலிகளில் ரணில் கைதுக்கு விளக்கம்

1857670224.jpeg

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விளக்கமறியல் தொடர்பாக நான்கு விளக்கக் காணொலிகளை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த விளக்கங்கள் ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பில் வெவ்வேறு கோணங்களில் இருந்து வழங்கப்பட்டுள்ளன.

சமூகவியல் விளக்கத்தை களனி பல்கலைக்கழக மக்கள் தொடர்புத் துறைத்தலைவர் மனோஜ் ஜிந்தாச வழங்கியுள்ளார். மத மற்றும் நல்லிணக்கக் கண்ணோட்டத்தை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஓமரே புண்யசிறிதேரர் வழங்கியுள்ளார். சட்ட விளக்கத்தை மூத்த சட்டக்கல்வியலாளர் பேராசிரியர் பிரதிபா மகாநாமஹேவா வழங்கியுள்ளார். அதேநேரம் ஊடக மற்றும் சமூகவியல் கண்ணோட்டத்தை ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன வழங்கியுள்ளார்.

https://newuthayan.com/article/நான்கு_காணொலிகளில்_ரணில்_கைதுக்கு_விளக்கம்

108 தம்பதியினருக்கு இலவச திருமணம்!

3 weeks ago

108 தம்பதியினருக்கு இலவச திருமணம்!

adminAugust 25, 2025

Weding.jpg?fit=794%2C542&ssl=1

யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்யத முடியாத நிலையில் உள்ள 108 தம்பதியினருக்கு  திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக சங்க தலைவர் இ ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட துரை தம்பதியினரின் , நிதியுதவியில் , 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது .

தாலி , கூறை சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு , 108 தம்பதிகளுக்கும் செல்வ சந்நிதி ஆலயத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி திருமணம் நடாத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இந்த 108 தம்பதியினரையும் , யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாகவே தெரிவு செய்தோம்.

அன்றைய திருமண நிகழ்வில் கலந்து கொண்டு 108 தம்பதியினரையும் வாழ்த்தி , அன்று மதியம் ஆலயத்தில் நடைபெறவுள்ள மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

https://globaltamilnews.net/2025/219610/

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி 30ஆம் திகதி வடக்கு, கிழக்கில் போராட்டம் ஏற்பாடு

3 weeks ago

25 AUG, 2025 | 04:48 PM

image

(எம்.நியூட்டன்)

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி, எதிர்வரும் 30ஆம்  திகதி வடக்கு, கிழக்கில் மாபெரும் ஆர்ப்பாட்டம்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம், அதனை வலுப்படுத்த பேதங்களற்ற வகையில் அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (25) நடத்திய ஊடக சந்திப்பில்   மேலும் தெரிவிக்கையில், 

அண்மையில் ஐ.நா பிரதிநிதி யாழ்ப்பாணத்துக்கு வந்து செம்மணியின் தடயங்களை பார்வையிட்டார். அவரது இந்த செயலால், நீதிக்கான சமிக்ஞை கிடைக்கும் என நம்பினோம். ஆனால் அத்தனையும் கலைந்துவிட்டது.

ஐ.நாவின் பிரதிநிதி உள்ளக பொறிமுறையை எம்மிடம் திணித்துச் சென்றதைப் போன்று அவரது கருத்து இருக்கிறது.

நாம் சர்வதேச விசாரணையையே கோருகின்றோம். அதனையே இன்றும் வலியுறுத்துகின்றோம். எனவே, எமக்கு உள்ளக பொறிமுறை வேண்டாம். அதில் எமக்கு நம்பிக்கை இல்லை.

எனவே, எதிர்வரும் 30ஆம் திகதி செம்மணியில் போராட்டம் ஒன்றை வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளோம்.

அந்தப் போராட்டத்துக்கு மதத் தலைவர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என அனைவரும் பேதங்களற்ற வகையில் ஒன்றுதிரண்டு போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

https://www.virakesari.lk/article/223336

செம்மணி மனித புதைகுழி: இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு தொடக்கம்

3 weeks ago

Published By: VISHNU

25 AUG, 2025 | 08:37 PM

image

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், கடந்த 06ஆம் திகதி வரையில் 32 நாட்கள் முன்னெடுக்ககப்பட்ட நிலையில், பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

WhatsApp_Image_2025-08-25_at_19.53.47_42

இந்நிலையில் 33ஆவது நாளான திங்கட்கிழமை (25) மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் ஆரம்பமானது.

இன்றைய தினம், ஏற்கனவே இருந்த அகழ்வு தளங்களை மேலும் விரிவாக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (26) பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

WhatsApp_Image_2025-08-25_at_19.53.50_5c

அதேவேளை கடந்த 06ஆம் திகதி வரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 150 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் அவை முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது மேலும் அகழ்வு பணிகள் முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான பாதீடுகளை தயாரிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுகிறது.

https://www.virakesari.lk/article/223358

பிள்ளையானின் மற்றுமொரு சகா ஒருவர் மட்டக்களப்பில் கைது

3 weeks ago

பிள்ளையானின் மற்றுமொரு சகா ஒருவர் மட்டக்களப்பில் கைது

August 25, 2025 4:49 pm

பிள்ளையானின் மற்றுமொரு சகா ஒருவர் மட்டக்களப்பில் கைது

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வைத்து பிள்ளையானின் மற்றுமொரு சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) கைது செய்துள்ளது.

இந்த கைது நடவடிக்கையை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் எட்டாம் திகதி பிள்ளான் என்றழைக்கப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன, முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர் 15 ஆம் திகதி கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் சிஐடியினர் அவரது மட்டக்களப்பு காரியாலயத்தில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் அந்த காலப்பகுதியில் கிரான் பகுதியில் இயங்கிவந்த ரி.எம்.வி.பியின் முகாமின் பொறுப்பாளராக இருந்து வந்துள்ள அந்தப் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பவரை சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பில் இருந்து வந்த சிஜடி யினரால் கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளது அவர் தெரிவித்தார்.

இதேவேளை பிள்ளையான் கைதை தொடர்ந்து அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான முன்னாள் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே.புஸ்பகுமார் கடந்த ஜூலை ஆறாம் திகதி திருக்கோவில் வைத்து அவரது சகாவான சசிதரன் தவசீலன் மட்டு சந்திவெளியில் வைத்தும் சிஐடியினர் கைது செய்தனர்

அதனை தொடர்ந்து இனிய பாரதியின் முன்னாள் சாரதியான தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த செந்தூரனை கடந்த ஜூலை ஏழாம் திகதி தனியார் போக்குவரத்து பஸ் வண்டியை செலுத்திச் சென்ற நிலையில் கல்முனையில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பிரகாரம் யூலை (27) இனியபாரதியின் மற்றும் ஒரு சகாவான தொப்பிமனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோயில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் கைது செய்யப்பட்டதுடன் பிள்ளையான் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கி சூடு நடத்திய பிள்ளையானின் சகாவான காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் ஷகித் என்பவரை கடந்த 13ஆம் திகதி காத்தான்குடியில் வைத்து கைது செய்ததுடன்.

கொழும்பில் இனியபாரதி நடாத்தி வந்ததாக கூறப்படும் வதைமுகாம் பொறுப்பாக இருந்த கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உட்பட இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://oruvan.com/another-associate-of-pillaiyan-arrested-in-batticaloa/

வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு - விசாரணை திகதி அறிவிப்பு

3 weeks ago

வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு - விசாரணை திகதி அறிவிப்பு

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

குறித்த மனுக்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்றம் இன்று (25) அறிவித்துள்ளது. 

இந்த மேன்முறையீட்டு மனுக்கள் பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய அமர்வின் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது. 

இதன்போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்திரணி, நீதிமன்றத்தின் முன் சாட்சியங்களை முன்வைத்ததுடன், வழக்கின் தமிழ் மொழி பெயர்ப்புகளைப் பெற நான்கரை ஆண்டுகள் வரை சென்றதாக சுட்டிக்காட்டினார். 

எனவே, மேன்முறையீட்டு விசாரணைக்கு, குறுகியகால திகதி ஒன்றை வழங்குமாறு பிரதிவாதி சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார். 

அதற்கமைய, பிரதிவாதிகளின் மேன்முறையீடு தொடர்பான மனுவை எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதியரசர்கள் அறிவித்துள்ளனர். 

2015 மார்ச் 3 ஆம் திகதி பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் புங்குடுத் தீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்யா என்ற 18 வயது பாடசாலை மாணவி கடத்தி, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். 

இந்த வழக்கில் பிரதான குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பிரதிவாதிகளுக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

தங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என்றும், எனவே தங்களை இந்த வழக்கில் குற்றமற்றவர்கள் எனக் கருதி விடுவிக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, சட்டத்தரணிகள் ஊடாக பிரதிவாதிகள் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmeqvvwij0001qpfibjgjfyxv

வட்டுக்கோட்டையில் புதுப்பொலிவு பெறும் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்!

3 weeks ago

வட்டுக்கோட்டையில் புதுப்பொலிவு பெறும் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்!

adminAugust 25, 2025

0-4-2.jpg?fit=1170%2C881&ssl=1

மிகத் தொன்மையான வழிப்பாட்டுத் தலமான வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலயம் பல ஆண்டு காலம் கவனிப்பார் இன்றிக் காணப்பட்ட நிலையில் அதனை மீள் உருவாக்கம் செய்வதற்குரிய பணிகள் யாழ்ப்பாணம் மரவுரிமை அமையத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களின் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டடது.

குறித்த பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தினை அடைந்து இருக்கும் நிலையில் மிக விரைவில் கும்பாவிஷேகம் நடாத்தி மக்களின் வழிபாட்டுத் தலாமாக்கப்படவுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கின்ற கைதடியினைச் சேர்ந்த கலாநிதி சிவயோகநாதனின் மகளும் Meta நிறுவனத்தில் பணிபுரிகின்ற வருபவரான பாலயோகஸ்தினி சிவயோகநாதன் இவ்வாலயத்தை பழைய நிலைக்கு மீள் உருவாக்கம் செய்வதற்குரிய நிதியுதவியினை வழங்கியிருந்த நிலையில் குறித்த ஆலயம் மீள் எழுச்சி கண்டுள்ளது.

குறித்த ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஸ்ட்டை செய்தல், எண்னைக் காப்பு சாத்தல், கும்பாவிஷேகம் தொடர்பான விபரங்கள் யாழ்ப்பாண மரவுரிமை மையத்தினரால் விரைவில் அறிவிக்கப்படும்.

எமது மரவுரிரைச் சின்னங்களினை பாதுகாத்து அதனை அடுத்த தலைமுறை தலைமுறை தலைமுறையாக கடந்த வேண்டும் என்ற எண்ணப்பாட்டுடன் 2021 ஆம் ஆண்டு அப்போதையை யாழ்.மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் காலத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மரவுரிமை அமையமானது,

நல்லூர் இராஜதானியின் தோரண வாசல் மீள் உருவாக்கம், ஆனைக்கோட்டை அகழ்வாராய்ட்சி, போன்றவற்றினை நிறைவேற்றிய நிலையில் 400 வருடங்கள் பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலயத்தின் மீள்உருவாக்கப் பணி யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் 3ஆவது செயற்றிட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2025/219590/

ரணிலை விடுதலை செய்யுமாறு எரிக் சொல்ஹெய்ம் கோரிக்கை

3 weeks ago

Published By: DIGITAL DESK 3

25 AUG, 2025 | 01:59 PM

image

(எம்.மனோசித்ரா)

இலங்கைக்கான முன்னாள் நோர்வே சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தடுப்புக்காவலில் உள்ள அவரது உடல்நிலை குறித்து ஆழ்ந்த கவலையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2022-இல் நாடு மிக மோசமான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது இலங்கையைக் காப்பாற்ற முன்வந்த தலைவர் விக்கிரமசிங்க என்று சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மீதான குற்றச்சாட்டுகள் 'ஆதாரமற்றவை' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவை நிரூபிக்கப்பட்டாலும், ஐரோப்பிய தரங்களின்படி அவை குற்றவியல் அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

'இலங்கை அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு நான் முழு ஆதரவு அளிக்கிறேன், ஆனால் அது உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்,' என்று குறிப்பிட்டுள்ள சொல்ஹெய்ம், ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரது சர்வதேச காலநிலை ஆலோசகராகவும் இருந்த சொல்ஹெய்ம், முன்னாள் ஜனாதிபதியின் கைது குறித்து கவலை தெரிவித்த பல இலங்கை மற்றும் தெற்காசிய அரசியல்வாதிகளுடன் இணைந்துள்ளார்.

https://www.virakesari.lk/article/223313

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக தலைமன்னார் வந்த குடும்பஸ்தர் மீது கடற்படையினர் கொடூர தாக்குதல் - யாழ். வைத்தியசாலையில் அனுமதி

3 weeks ago

Published By: DIGITAL DESK 3

25 AUG, 2025 | 01:55 PM

image

இந்தியாவில் இருந்து கடந்த 18 வருடங்களின் பின்னர் கடல் மார்க்கமாக தலைமன்னார் பகுதிக்கு படகில் வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது கடற்படையினர் கடுமையாக தாக்கிய நிலையில் குறித்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

முல்லைத்தீவு உடையார் கட்டு பகுதியைச் சேர்ந்த தங்கையா டேவிட் பாலேந்திரன் என்ற இளம் குடும்பஸ்தர் 2007 ஆம் ஆண்டில் தனது 18 வது வயதில் கடல் மார்க்கமாக இந்தியா சென்றுள்ளார்.பின்னர் கடந்த 18 வருடங்களாக இந்தியாவில் வசித்து வந்த நிலையில் மீண்டும் தாயகம் திரும்ப முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 22 ஆம் திகதி இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக படகு ஒன்றில் தலைமன்னார் பகுதியை நோக்கி வந்துள்ளார்.

இதன்போது தலைமன்னார் கடற்படையினரால் குறித்த குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டார்.

40 வயதுடைய குறித்த குடும்பஸ்தருக்கு இதய நோய் காணப்படுகின்ற நிலையில் அதற்கான மருத்துவ அறிக்கைகளையும் தன் வசம் எடுத்து வந்துள்ளார். எனினும் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்ற கடற்படையினர் நோயாளியான குறித்த குடும்பஸ்தரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளர்.

பின்னர் குறித்த நபரை கடற்படையினர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். தலைமன்னார் பொலிஸார் குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

பின்னர் குறித்த நபரை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்ட பதில் நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதய நோயாளியான குறித்த குடும்பஸ்தர் தனக்கான அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் காண்பித்த போதும் கடற்படையினர் கடுமையாக தாக்கியதாக குறித்த குடும்பஸ்தர் உறவினர்கள் மற்றும் வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/223311

மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை கைப்பற்றி 222 ஆண்டுகள் நிறைவு - விசேட பெயர்ப்பலகை திரைநீக்கம்

3 weeks ago

25 AUG, 2025 | 03:58 PM

image

மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை கைப்பற்றி வெற்றிபெற்று, 222  ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு விசேட பெயர்ப்பலகை இன்று (25) திரைநீக்கம் செய்யப்பட்டது. 

ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த முல்லைத்தீவு கோட்டை, அந்நியப் படையெடுப்புகளை எதிர்த்து வீரப்போர் நடத்திய பண்டாரவன்னியன் தலைமையிலான படைகளால் 1803ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் திகதி கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. 

1000500098.jpg

இந்த நிகழ்வு இடம்பெற்று 222 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று, மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன்  தலைமையில்  நடைபெற்ற விசேட நிகழ்வில் பண்டாரவன்னியனின் வெற்றியை குறிக்கும் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது. 

இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) சி.குணபாலன், மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) ஜெயகாந், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர்  சற்குணேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஜி.ஜெயரஞ்சினி உட்பட மாவட்ட செயலக அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மாவட்ட  செயலக வளாகத்தில் தற்போது அழிவடைந்த நிலையில் காணப்படும்   முல்லைத்தீவு கோட்டையானது ஒல்லாந்தரால் கட்டப்பட்ட கோட்டை ஆகும்.

1715ஆம் ஆண்டில்  மரத்தாலும் மரவேலிகளாலும் இக்கோட்டை நிறுவப்பட்டது. 1721ஆம் ஆண்டில் நாற்பக்கல் வடிவில் இக்கோட்டை ஒல்லாந்தரால் கட்டப்பட்டது. பின்னர், பிரித்தானியரால் இக்கோட்டை 1795ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்டது. அடுத்து, 1803 ஆகஸ்ட் 25ஆம் திகதி பண்டாரவன்னியனால் இக்கோட்டை கைப்பற்றப்பட்டு இடிக்கப்பட்டமை வரலாற்றுப் பதிவாகிறது. 

1000500099.jpg

1000500100.jpg

https://www.virakesari.lk/article/223329

படகுகளை மீட்க கடல் வழியாக யாழ்.வந்துள்ள தமிழக கடற்தொழிலாளர்கள்

3 weeks ago

25 AUG, 2025 | 12:05 PM

image

இலங்கையில் உள்ள தமது படகுகளை நேரில் பார்வையிட்டு, அதனை மீட்டு செல்வது தொடர்பில் ஆராய்வதற்காக  தமிழகத்தில் இருந்து 14 பேர் கொண்ட குழுவினர் படகில் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர். 

கடந்த 2022 - 2023 ஆம் ஆண்டு கால பகுதிகளில், இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.  

குறித்த வழக்கு விசாரணைகள் நிறைவுற்று, நீதிமன்றினால், படகுகள் விடுக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை மீண்டும் தமிழகம் எடுத்து செல்வதில் சிக்கல் நிலைமைகள் காணப்பட்டமையால், அது தொடர்பில் படகு உரிமையாளர்கள், இந்திய மற்றும் இலங்கை அரசாங்கத்திடம் தமது படகுகளை தம்மிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி இருந்தனர். 

இந்நிலையில், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு கடந்த வாரம் படகுகளை படகின் உரிமையாளர்கள் மீட்டு இந்தியாவிற்கு எடுத்து செல்ல அனுமதி அளித்தனர்.  

அதனை அடுத்து, திங்கட்கிழமை (25) இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க தலைவர் தலைமையில் படகு உரிமையாளர்கள் உள்ளிட்ட 14 பேர் கொண்ட குழு விசைப்படகு ஒன்றில் யாழ்ப்பாணம் நோக்கி வருகை தந்தனர். 

அவர்களை இலங்கை - இந்திய கடல் எல்லையில் வைத்து , இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்று, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று, அங்கிருந்து அவர்களின் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்து செல்லவுள்ளனர். 

அங்கு நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட ஏழு படகுகளையும் பார்வையிட்டு, அவற்றின் தரங்களை பரிசோதித்து, மீட்டு செல்ல கூடிய படகுகளை மீட்டு செல்லவும், ஏனைய படகுகளை மீட்பது தொடர்பில் ஆராயவுள்ளனர். 

குறித்த குழுவினர்  மீண்டும் இராமேஸ்வரம் நோக்கி பயணிக்கவுள்ளனர். அவர்களை இலங்கை கடற்படையினர், இலங்கை - இந்திய கடல் எல்லை வரையில் அழைத்து சென்று இந்திய கடலோர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/223301

பிரதி பொலிஸ்மா அதிபர் கைது!

3 weeks ago

srilanka-police-officer.jpg?resize=750%2

பிரதி பொலிஸ்மா அதிபர் கைது!

கொழும்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர்  உதித்த லியனகே இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அனுராதபுரம் – ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில், அவரது  மனைவி புதையல் தோண்டிய விவகாரம்  தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, குறித்த கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி மற்றும் 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1444448

நல்லூர் ஆலயத்திற்கான மணல் தொடர்பான தீர்மானங்கள் வருத்தத்துக்குரியன – வடக்கு ஆளுநர் கவலை!

3 weeks 1 day ago

நல்லூர் ஆலயத்திற்கான மணல் தொடர்பான தீர்மானங்கள் வருத்தத்துக்குரியன – வடக்கு ஆளுநர் கவலை!

adminAugust 24, 2025

2-3-2.jpg?fit=1170%2C739&ssl=1

எந்தவொரு விடயம் அழிக்கப்படுகின்றதோ அல்லது கால ஓட்டத்தில் மறைந்து செல்கின்றதோ அதைத்தக்க வைப்பதற்கும் அடுத்த சந்ததிக்கு ஒப்படைப்பதற்காகவும் தான் தினங்கள், அமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன. அதைப்போலத்தான் நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் அமைப்பையும் நான் பார்க்கின்றேன். காலத்துக்கு தேவையான அமைப்பு. பொருத்தமான இடத்திலிருந்து பொருத்தமானவர்களால் தொடக்கப்பட்டு நடைபோடுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் அமைப்பின் பரிசளிப்பு நிகழ்வும் ஆண்டு விழாவும், நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (23.08.25) அமைப்பின் இணைத்தலைவரும் முன்னாள் பிரதம செயலருமான இ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பண்பாட்டு கலைக்கூடலின் மாணவர்களால் பண்ணிசை, கோலாட்டம் என்பன நடத்தப்பட்டன.

அத்துடன் யாழ்ப்பாணம், வலிகாமம் வலயப் பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

அத்துடன், முனைவர் திருநாவுக்கரசு கமலநாதனின் ‘பொழிலும் பொலிவும்’ நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. காலைக்கதிர் பத்திரிகைக்கு செல்வழி நயனம் விருதும் நிகழ்வில் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆளுநர் உரையாற்றுகையில்,

ஆன்மீகத்தில் ஈடுபாடு குறைந்து செல்வது மாத்திரமல்லாது ஆன்மீகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது கூட குறைந்துள்ளது. ஆன்மீகம் வாழ்வியலுக்குத் தேவை. இன்று நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடம் செய்துள்ள பணி பாராட்டுக்குரியது.

5 ஆண்டுகளாக அவர்கள் இதைச் செய்து வருகின்றார்கள். இளம் பிள்ளைகளை இதில் அதிகளவு ஈடுபடுத்தி ஊக்கப்படுத்தியிருக்கின்றார்கள்.

நல்லூர் ஆலயத்திற்கான மணல் தொடர்பான தீர்மானங்கள் வருத்தத்துக்குரியன. யாழ்ப்பாணத்தின் அடையாளமாக நல்லூர் கந்தசுவாமி கோயிலே உலகம் எங்கு அடையாளப்படுத்தப்படுகின்றது. நாங்கள் யாழ்ப்பாண மண்ணிலே பிறந்தோம் என்று பெருமை கொள்ளுவதற்கும் அந்த நல்லூரே காரணமாக இருக்கின்றது.

இன்று சைவத்துக்கும், தமிழுக்கும் பல தரப்புக்களாலும் உள்ளக, வெளியக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. அந்த அழுத்தங்களிலிருந்து சைவத்தையும், தமிழையும் பாதுகாத்துக் கொள்வதற்கு இவ்வாறான அமைப்புக்கள் காலத்தின் தேவையாக சேவையாற்றுகின்றன, என ஆளுநர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் சா.சுதர்சன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் இ.த.ஜெயசீலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நாங்கள் எங்கள் கலாசாரம், அடிப்படை விழுமியங்களை கைவிடக்கூடாது.

பிரதேச, மாவட்ட, மாகாண கலாசார விழாக்கள் பல கலைஞர்களுக்கான மேடை வாய்ப்புக்களை வழங்குகின்றன. இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுவதற்கு தொடர்ந்து ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதுடன் அதிகளவு கலைஞர்களை குறிப்பாக இளம் கலைஞர்களை மேடையேற்றவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வலி. மேற்கு பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடத்திய பண்பாட்டு பெருவிழா அராலி இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

அராலி வடக்கு முருகமூர்த்தி ஆலயத்திலிருந்து விருந்தினர்கள் கலாசார நடனங்களுடன் விழா நடைபெற்ற மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரால் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த கலைஞர்கள் 5 பேருக்கு காலைவாரிதி விருதும் வழங்கப்பட்டது.

அங்கு உரையாற்றிய ஆளுநர்,

சிறுவர்களாக நாங்கள் இருந்த காலத்தில் பல்வேறு கலை நிகழ்வுகள் பல்வேறு இடங்களில் நடைபெறும். இன்று அவ்வாறு நடைபெறுவதைக் காண்பது அரிதாக உள்ளது. நாங்கள் எங்கள் கலாசாரம், அடிப்படை விழுமியங்களை கைவிடக்கூடாது. அடுத்த தலைமுறைக்கு அதை நாம் எடுத்துச் செல்லவேண்டும். எங்களுக்குரிய தனித்துவமான அம்சங்களை ஊடுகடத்த வேண்டும்.

இந்தப் பண்பாட்டு விழா ஊர் மக்களின் பங்கேற்புடன் நடைபெறுகின்றது. அதிகளவு மக்கள் ஆதரவளித்திருக்கின்றார்கள். நாங்கள் கலாசார ஊர்த்திப் பவனியுடன் அழைத்து வருகின்றபோது ஊர்மக்கள் அபரிதமான ஆதரவு வழங்கியதை நேரில் காணக்கூடியதாக இருந்தது. அவ்வாறுதான் விழாக்கள் நடத்தப்படவேண்டும்.

கலை, விளையாட்டு இரண்டிலும் இளம் சந்ததியின் பங்கேற்பை ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் கவனங்கள் சிதறவிடாது பார்த்துக்கொள்ளவேண்டும். எங்களால் முடிந்தவரையில் இதை நாம் செய்துகொள்வோம் என ஆளுநர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், வலி. மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் ச.ஜயந்தன் சிறப்பு விருந்தினராகவும், யாழ். மாவட்டச் செயலக சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் வி.சுகுணாலினி, அராலி இந்துக் கல்லூரி அதிபர் ந.சிவானந்தராஜா மற்றும் சிற்பக் கலைஞர் தி.விஜயசிறி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

https://globaltamilnews.net/2025/219563/

Checked
Mon, 09/15/2025 - 22:38
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr