ஊர்ப்புதினம்

சமூகத்தின் மனப்பான்மை ரீதியான மாற்றத்திற்க அரச ஊடகங்களின் பங்களிப்பைப் பெறத் திட்டம் தயாரிக்குக - ஜனாதிபதி

3 weeks 5 days ago

சமூகத்தின் மனப்பான்மை ரீதியான மாற்றத்திற்க அரச ஊடகங்களின் பங்களிப்பைப் பெறத் திட்டம் தயாரிக்குக - ஜனாதிபதி

20 Aug, 2025 | 10:19 AM

image

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சிற்கு  2025 ஆம் ஆண்டில்  ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டம் தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல்  நேற்று செவ்வாய்க்கிழமை (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் உள்ள 04  திணைக்கலன்களில் உள்ள 41 நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது.

சுகாதார அமைச்சின் கீழ் உள்ள ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கு அடுத்த  வரவு செலவுத் திட்டத்தில் விசேட  கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு  ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

ஆரம்ப சுகாதார மையங்களை மேம்படுத்துவதற்கான தற்போதைய திட்டங்கள் தொடர்பாகவும் அவர் கேட்டறிந்தார். தற்போது 30,000 பேருக்கு 01 என்ற விகிதத்தில் இயங்கும் ஆரம்ப சுகாதார சேவையை 10,000 பேருக்கு 01 என்ற விகிதத்தில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய தொழில்நுட்ப மற்றும் சமூக நிலைமைகளுக்கு ஏற்ப சுகாதார சேவையில் நிறுவன மற்றும் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்வதற்கான திட்டங்கள் இங்கு ஆராயப்பட்டது. சுகாதாரத் துறையின் கட்டுமானங்கள் மற்றும் அதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

சுகாதாரத் துறையில் தற்போது எழுந்துள்ள ஒரு பாரிய பிரச்சினையான ஆயுர்வேதத் துறையை உள்ளடக்கிய கொள்முதல் வழிகாட்டுதல்களை புதுப்பிப்பது குறித்தும் ஆராயப்பட்டது, அதே நேரத்தில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மருந்துகளை கொள்வனவு செய்யும் போது மருந்துகளின் தரத்தை உறுதி செய்வது தொடர்பான வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.

தேசிய இரத்தமாற்று சேவை போன்ற சேவைகளுக்கு தேவையான வாகனங்களை இந்த வருடத்திற்குள்  கொள்வனவு செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

நவீன தொழில்நுட்பம் மற்றும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப சுகாதார சேவையின் பௌதீக மற்றும் மனித வளங்களை மாற்ற வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அடுத்த ஆண்டு ஒரு தேசிய சுகாதாரக் கொள்கை மற்றும் மூலோபாயத் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும்  இங்கு குறிப்பிடப்பட்டது.

வெளிநாட்டு உதவி மற்றும் நன்கொடைகளின் கீழ் பெறப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்தி  அவற்றினால் எதிர்பார்க்கும் பயனை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மாகாண சபை மட்டத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளை கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்து வைப்பது குறித்தும்  இதன் போது பரிந்துரைக்கப்பட்டது.

சுகாதாரத் துறையில் வழங்கப்படும் நன்கொடைகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.  மானியங்களை வழங்கும் மற்றும் பெறும் நபர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவது குறித்தும் முன்மொழியப்பட்டது.

தற்போது நாட்டின் 272 இடங்களில் செயற்படுத்தப்படும் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவையை மேலும் விரிவுபடுத்தி அதனை 400 இடங்கள் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

வெகுஜன ஊடக அமைச்சு தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.  சமூக மனப்பாங்குகளின் மாற்றத்தில் தலையிடுவது  அரச ஊடகங்களின் பொறுப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  தெரிவித்தார்.

எனவே, சமூக மனப்பாங்குகளின் மாற்றத்திற்கு பங்களிக்கும் வகையில் பொருத்தமான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு அரச ஊடகங்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கப்படும் என்று கூறினார்.

தபால் சேவையை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு புதுப்பிப்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. கூரியர் சேவைகள் போன்ற சேவைகளை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற்றி தபால் சேவையை புதிய மாதிரிக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

தேவையான திட்டங்களுக்கு  வரவு செலவுத் திட்டத்தில் நிதி  ஒதுக்கீடு செய்யப்படாமையே முன்பிருந்த பிரச்சினை என்றும், அந்த நிலைமையை மாற்றுவதற்காக, கடந்த வரவு செலவுத் திட்டத்தில்  அனைத்து துறைகளுக்கும் போதுமான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

குறிப்பிட்ட நிதியாண்டில் குறிப்பிட்ட திட்டங்களுக்கு அந்த ஒதுக்கீடுகள் அனைத்தையும் முறையாகப் பயன்படுத்தி, மக்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக  அமைச்சின் செயலாளர்  விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர்களான ரஸல் அபோன்சு, கபில ஜனக பண்டார மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2025-08-20_at_09.13.34__2

WhatsApp_Image_2025-08-20_at_09.13.34__1

WhatsApp_Image_2025-08-20_at_09.13.33__2

WhatsApp_Image_2025-08-20_at_09.13.33__1

WhatsApp_Image_2025-08-20_at_09.13.33.jp

WhatsApp_Image_2025-08-20_at_09.13.32.jp

https://www.virakesari.lk/article/222916

முத்தையன்கட்டு சம்பவம்: கைதான 4 இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்

3 weeks 5 days ago

முத்தையன்கட்டு சம்பவம்: கைதான 4 இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்

20 August 2025

1755654995_2612497_hirunews.jpg

முல்லைத்தீவு - முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பான விசாரணைக்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று இராணுவத்தினர் முன்னதாக கைது செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, இராணுவ சிப்பாய் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையிலேயே, குறித்த சந்தேகநபரும் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் நேற்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட போது, அவர்கள் நால்வரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

https://hirunews.lk/tm/415507/muthaiyankattu-incident-4-arrested-army-soldiers-remanded

10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தவுள்ள தாய்லாந்து!

3 weeks 5 days ago

New-Project-164.jpg?resize=750%2C375&ssl

10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தவுள்ள தாய்லாந்து!

தாய்லாந்தின் அமைச்சரவை 10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல் அளித்துள்ளதாக தாய்லாந்து மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கொடிய எல்லை மோதலைத் தொடர்ந்து கம்போடிய தொழிலாளர்கள் நாடு திரும்புவதால் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து, வயதான மக்கள் தொகை மற்றும் சுருங்கி வரும் பணியாளர்கள் எண்ணிக்கை என்பவற்றினால் விவசாயம், கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளில் குறைந்தது 3 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.

வேலைவாய்ப்புக்காக இலங்கையில் இருந்து 30,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர்.

மேலும், முதல் கட்டத்தில் 10,000 பேர் தாய்லாந்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று தாய்லாந்தின் தொழிலாளர் அமைச்சர் பொங்காவின் ஜங்ருங்ருங்ராங்கிட் செய்தியாளர்களிடம் கூறினார்.

இது நேபாளம், பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களையும் விண்ணப்பிக்க அனுமதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த மாதம் தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த எல்லைப் பிரச்சினை, பல தசாப்தங்களில் மிக மோசமான சண்டையாக மாறியது.

எல்லையின் இருபுறமும் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர்.

இரண்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளும் இப்போது ஒரு பலவீனமான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன.

மோதல் தொடங்குவதற்கு முன்பு, 520,000 க்கும் மேற்பட்ட கம்போடியர்கள் தாய்லாந்தில் பணிபுரிந்தனர்.

இது நாட்டின் வெளிநாட்டுப் பணியாளர்களில் 12 சதவீதமாகும் என்று அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்தில் பணிபுரியும் சுமார் 400,000 கம்போடியர்கள் மோதலின் போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கம்போடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், தொழிலாளர்களின் முக்கிய ஆதாரமாக உருவெடுத்துள்ள இலங்கை, 2024 ஆம் ஆண்டில் சாதனை அளவில் 314,786 குடிமக்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடி பலரை வெளிநாடுகளுக்கு வேலை தேடத் தள்ளியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளே இலங்கையர்களின் முதன்மையான இடமாக அதில் உள்ளது.

மேலும் பலர் தென் கொரியா மற்றும் ஜப்பானிலும் வேலை புரிகின்றனர்.

தெற்காசிய தீவு நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மிகப்பெரிய ஆதாரமாக இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1443783

பேலியகொடை துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வௌியானது

3 weeks 6 days ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

பேலியகொடை மீன் சந்தையின் ஊழியர் ஒருவர் இன்றைய (19) துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

இந்த துப்பாக்கி பிரயோகத்தின் போது, துப்பாக்கி சூட்டுக்காக இலக்கு வைக்கப்பட்டவர் மாத்திரம் இன்றி, அங்கு வீதியில் சென்ற ஒருவரும் காயமடைந்தார்.

பேலியகொடை ஞானரதன மாவத்தை பகுதியில் இன்று காலை 9:30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் T - 56 ரக துப்பாக்கியில் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் சந்தேகநபரால் இலக்கு வைக்கப்பட்டவர் இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காயமடைந்த மற்றையவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் ஐயப்பன் பிரபு என்ற 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

பேலியகொடை மீன் சந்தையில் வேலை முடித்து வீடு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட நபர் முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் வெல்லே சாரங்க என்ற குற்றங்களில் ஈடுபடும் நபர் ஒருவரினால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பேலியகொடவிற்கு மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாரங்கவின் சகோதரனைக் கொலை செய்ய முற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்தே, வெல்லே சாரங்கா அவரைக் கொலை செய்வதாக மிரட்டியதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கொலை செய்யப்பட்ட நபர் பூங்கொடி கண்ணா என்ற குற்றவாளியின் நெருங்கிய நண்பர் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.

பழனி ரிமோஷன் மற்றும் கஞ்சிபாணி இம்ரான் ஆகியோர் இந்தக் கொலைக்கு உதவியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

https://adaderanatamil.lk/news/cmeiqh5m902r7qp4ket7a6qvf

மன்னார் மறைமாவட்ட ஆயர் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு - பேசிய விடயம் என்ன?

3 weeks 6 days ago

Published By: DIGITAL DESK 3

19 AUG, 2025 | 04:32 PM

image

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இடையில் நேற்று திங்கட்கிழமை (18) மாலை இடம்பெற்ற விசேட சந்திப்பு குறித்து மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று திங்கள் கிழமை மன்னார் ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது மன்னார் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மன்னார் ஆயர் அவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார்.

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள கனிய மணல் அகழ்வு தொடர்பான பிரச்சினை, மின்சக்தியை பெறுவதற்காக மன்னாரில் காற்றாலை அமைக்கும் செயற்பாடுகளால் எழுந்துள்ள பாரிய பாதிப்புக்கள், வடக்கு மாகாண அரசாங்கத்தின் கீழ் உள்ள மன்னார் பொது வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டியதன் அவசியம் போன்ற விடயங்கள் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டன.

கனிய மணல் அகழ்வு தொடர்பான பிரச்சினைகளையும் அதனால் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பாதிப்புக்களையும் ஆயர்  ஜனாதிபதிக்கு எடுத்து விளக்கியபோது அச்செயற்பாடு முற்றாக நிறுத்தப்படும் என ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார்.

மின் சக்தியை பெறுவதற்காக மன்னாரில் காற்றாலை அமைக்கும் செயற்பாடுகளால் எழுந்துள்ள பாரிய பாதிப்புகள், இத்திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன், குறிப்பாக மக்களுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண அரசாங்கத்தின் கீழ் உள்ள மன்னார் பொது வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை ஆயர் வலியுறுத்திய போது இது தொடர்பாக உரிய அமைச்சர்களுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/222892

தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை? இராமநாதன் அர்ச்சுனா கேள்வி

3 weeks 6 days ago

archuna-090325-seithy.jpg?resize=380%2C2

தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை? இராமநாதன் அர்ச்சுனா கேள்வி.

வடக்கில் இடம்பெற்றுள்ள நிதி மோசடி தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று சபையில் குற்றம் சுமத்தியிருந்ததுடன் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் பல கேள்விகளை முன்வைத்திருந்தார்.

குறிப்பாக தெற்கில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நிதி மோசடிகளுக்கான வழக்குகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஆனால் வடக்கில் அவ்வாறு இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, குறிப்பிட்டுள்ளார்.

எனவே தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கலை மாத்திரமே முன்னெடுப்பதாக, மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளதாக இராமநாதன் அர்ச்சுனா, குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால  ” குறித்த விடயம் தொடர்பில் தனக்கு இரண்டு நாட்கள் அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  குறித்த விடயம் தொடர்பில்  பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்திருந்தால் அல்லது சிஜடிக்கு முறைப்பாடு செய்திருந்தால் அது தொடர்பான விபரங்களை தன்னிடம் வழங்குமாரும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் லஞ்ச ஊழல் ஆணைக்குழு என்பது, சுயாதீனமாக இயங்குகின்ற ஆணைக்குழு  எனவும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் லஞ்ச ஊழல் ஆணைக்குழு வருவதில்லை எனவும், எனினும் இரண்டு நாட்களுக்குள் இதற்கான பதிலை தான்  வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1443671

நல்லூரில் கண்ணீரை வரவழைத்த தண்ணீரின் கதை நாடகம்; தொடரும் நீர்க்கண்காட்சி

3 weeks 6 days ago

19 AUG, 2025 | 01:30 PM

image

நல்லூர் முருகன் ஆலய திருவிழாவை முன்னிட்டு 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' எனும் தொனிப் பொருளில் வடக்கின் நிலத்தடி நீர் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த WASPAR & Young Water Professionals முயற்சியில் நீர்வள சபை, நீர்ப்பாசண திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, யாழ் மாநகர சபை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ் இந்துக்கல்லூரி மற்றும் பல தன்னார்வலர் அமைப்புகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்திட்டத்தின் இரண்டாவது நீர்வளக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (15) மாலை நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஆரம்பமாகி தொடர்ந்து  ஞாயிற்றுக்கிழமை (24) வரை இடம்பெறவுள்ளது.

நீர்வளக் கண்காட்சியின் ஒரு கட்டமாக ஊருணி ஆற்றுகைக் களத்தில் பல்வேறு ஆற்றுகை நிகழ்வுகளும், கலந்துரையாடல்களும்  தினமும் மாலை வேளையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.    

அந்த வகையில்   திங்கட்கிழமை (18)  மாலை செம்முகம் ஆற்றுகைக் குழுவின் "தண்ணீரின் கதை" நாடக ஆற்றுகை இடம்பெற்றது. நிலத்தடி நீரை மட்டும் நம்பியிருக்கும் யாழ்ப்பாணத்தில் எதிர்காலத்தில் தண்ணீர் இல்லாமல் போனால் என்னவாகும் என்பதனை சித்தரிக்கும் வகையில் நாடகம் உயிர்ப்புள்ளதாக இருந்தது. பார்வையாளர்களை கண்ணீரில் நனைய வைத்த நாடகத்தின் பின் பலரது அனுபவ பகிர்வுகளும் உருக்கமாக அமைந்திருந்தன.

நீர்வளக் கண்காட்சியின் ஐந்தாம் நாளான செவ்வாய்க்கிழமை (19) ஆற்றுகை நிகழ்வாக பாடல் நிகழ்வுகளும், "கேணி: நீர் மரபுரிமைக் கட்டுமானங்களைக் காக்க வேண்டிச் சில முன்வைப்புகள்" என்கிற தலைப்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், ஆய்வாளருமான அகிலன் பாக்கியநாதன் அவர்களின் கருத்துரையும்  உரையாடலும் இடம்பெறும்.

நிலத்தடி நீரும் எமது பிரதேச நிலக்கட்டமைப்பு மற்றும் வழுக்கையாறு திட்ட மாதிரிகளின் கண்காட்சிகள், விஞ்ஞான விளக்கங்கள், ஆய்வு முடிவுகள், விளையாட்டுகள், புதிர்ப்போட்டிகளில் பங்கேற்கும் சிறார்களுக்கான ஏராளமான பரிசுப் பொருட்களுடன் நிலத்தடி நீரை பக்குவமாக பாதுகாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கை இக்கண்காட்சி ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

20250818_190147.jpg

20250818_190535.jpg

20250818_190450.jpg

20250818_190450__1_.jpg

20250816_181417.jpg

20250815_194601.jpg

https://www.virakesari.lk/article/222859

வீரமுனை பெயர்ப்பலகை அமைக்க தடுத்த சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர்கள்; அதிகாரிகளுக்கு சாதகமாக செயற்பட்ட பொலிஸார் - வீரமுனை மக்கள் குற்றச்சாட்டு

3 weeks 6 days ago

Published By: VISHNU

19 AUG, 2025 | 03:24 AM

image

அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை பகுதியில் வீரமுனையின் பெயரைக் குறிக்கும் பெயர்ப் பலகையிடுவதை சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

535552787_794945669727565_69084630498399

அம்பாறை - கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான பிரதான வீதியில் வீரமுனை ஆண்டியர் சந்தியில் இந்த பெயர்பலகையினை இடும் செயற்பாடுகளை இன்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்திருந்தது.

535025774_794945746394224_33022277578122

எனினும் அங்குவந்த சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

535387458_794945713060894_82707185262095

இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்குவந்த சம்மாந்துறை பொலிஸாரும் பிரதேசசபை உறுப்பினர்களுக்கு சாதகமான முறையில் செயற்பட்டதாக வீரமுனை மக்கள் தெரிவிக்கின்றனர்.

536281844_794945566394242_58314418237441

வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வீதியில் பெயர்பலகை நடுவதற்கு பிரதேசசபையிடம் எந்த அனுமதியும் பெறத்தேவையில்லாத நிலையில் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் இந்த செயற்பாடுகளை முன்னெடுத்தமை தொடர்பில் பிரதேச மக்கள் அதிர்ப்தி தெரிவித்துள்ளனர்.

536269722_794945793060886_52655039531793

ஏற்கனவே வீரமுனை வரவேற்பு கோபுரம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் அதனை போலியான காரணங்கள் கூறி தடுத்தவர்கள் மீண்டும் அதே வேலையினை செய்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்மாந்துறை பிரதேச சபையில் உள்ள சில உறுப்பினர்கள் தொடர்ச்சியாக வீரமுனையின் அடையாளத்தினை இல்லாமல் செய்யும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் இது கண்டனத்திற்குரியது எனவும் அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/222831

குறிஞ்சாத்தீவு உப்பளத்தை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி

3 weeks 6 days ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற போர்ச்சூழல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குறிஞ்சாத்தீவு (ஆனையிறவு வடக்கு) உப்பளத்தின் உற்பத்தி மற்றும் தொழிற்பாடுகளை அரச - தனியார் பங்குடமை முறைமையின் கீழ் ஆரம்பிப்பதற்காக உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் முன்மொழிவு விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அதன்மூலம் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை அடைவதற்கு இயலாமல் போயுள்ளது.

அதனால், குறிஞ்சாத்தீவு (ஆனையிறவு வடக்கு) உப்பளத்தின் உற்பத்தி நடவடிக்கைகளை அரச தனியார் பங்குடமை முறைமையின் கீழ் மீண்டும் ஆரம்பிப்பதற்காக சர்வதேச முன்மொழிவு விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmei6lpu302pzqp4k7sb5zz0g

வாகரை பனிச்சங்கேணியில் பிள்ளையானின் 50 ஆவது பிறந்த தின நிகழ்வுகள்

3 weeks 6 days ago

வாகரை பனிச்சங்கேணியில் பிள்ளையானின் 50 ஆவது பிறந்த தின நிகழ்வுகள்

InShot_20250818_170140145-920x425.jpg

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் 50 ஆவது பிறந்த தினம் வாகரை பனிச்சங்கேணியில் பல்வேறுபட்ட நிகழ்வுகளுடன் இன்று கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்வுகளை கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வி, கலை, கலாசாரப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் தொனிப் பொருளில் இரத்தான நிகழ்வு நடைபெற்றது.

பலர் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.

அத்துடன் பனிச்சங்கேணி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட பூசையும் அன்னதான நிகழ்வும் நடைபெற்றது.

குறிப்பாக அவரது 50 ஆவது அகவையினை முன்னிட்டு ஆதாரவாளர்களால் 50 மண் பானைகளில் பொங்கலிட்டு சுவாமிக்கு படைத்து வழிபட்டனர்.

இதன்போது அவரது கட்சியின் தற்போதைய தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான திரவியம் கட்சியின் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகான சபை உறுப்பினருமான பிரசாந்தன், வாகரை பிரதேச சபை தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் மற்றும் கிழக்கு தமிழர் கூடட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

சிவநேசதுரை சந்திரகாந்தன் ஈஸ்டர் குண்டு தாக்குதல் மற்றும் கிழக்கு பல்கலைக் கழக உபவேந்தர் ரவிந்திரநாத்தின் படுகொலை தொடர்பாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp-Image-2025-08-18-at-4.46.06-PM-WhatsApp-Image-2025-08-18-at-4.43.10-PM-WhatsApp-Image-2025-08-18-at-4.41.59-PM-WhatsApp-Image-2025-08-18-at-4.37.29-PM-WhatsApp-Image-2025-08-18-at-4.41.58-PM-

https://www.voiceofmedia.lk/14806

தமிழகத்திலிருந்து இலங்கை ஏதிலிகளை திருப்பியனுப்பும் செயற்பாடு நிறுத்திவைப்பு

3 weeks 6 days ago

தமிழகத்திலிருந்து இலங்கை ஏதிலிகளை திருப்பியனுப்பும் செயற்பாடு நிறுத்திவைப்பு

19 August 2025

தமிழகத்தில் இருந்து இலங்கையின் ஏதிலிகளை திருப்பியனுப்பும் செயற்பாடுகளை ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் நிறுத்தியுள்ளது. 

த ஹிந்து செய்தித்தாள் இந்த செய்தியைப் பிரசுரித்துள்ளது. 

தாம் இலங்கைக்குத் திரும்பிச் சென்றால், கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாகக் கூறும் தன்னார்வமாகத் திரும்புபவர்களுக்கான வசதியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து தெரிவித்துள்ளது. 

இலங்கைக்குத் திரும்பிச் சென்ற நிலையில் குடிவரவுச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் குறைந்தது நான்கு ஏதிலிகள், அண்மைக்காலங்களில் தடுத்து வைக்கப்பட்டதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ தரப்புக்களின் தகவல்படி, நாடு திரும்பிய 54 வயதான ஒருவர், 2025 ஆகஸ்ட் 12ஆம் திகதியன்று கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் நீதிமன்ற பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

அதேபோன்று 2025 மே 28, மற்றொரு தமிழ் ஏதிலி யாழ்ப்பாணத்தில் தரையிறங்கிய பிறகு கைது செய்யப்பட்டார்.

ஆகஸ்ட் முதல் வாரத்தில், ஐக்கிய நாடுகளின் உதவியில்லாமல் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய இலங்கை தமிழ் தம்பதியினரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் 1996 முதல் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் ஏதிலிகள் முகாமில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அவர்கள் இலங்கையின் குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்லுபடியாகும் கடவுச்சீட்டுக்கள் அல்லது பயண ஆவணங்கள் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டின் பேரில், தாமாக முன்வந்து நாடு திரும்பும் ஏதிலிகளை இலங்கை அதிகாரிகள் கைது செய்வது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

2002 முதல், யுஎன்எச்சீஆர் என்ற ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் 18,643 இலங்கை தமிழ் ஏதிலிகளை, தமிழகத்திலிருந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பியுள்ளது.

இந்தநிலையில் தாமாக முன்வந்து நாடு திரும்பும் ஏதிலிகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதே தற்போதைய நடவடிக்கைக்கான காரணம் என்று ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

பொதுவில், இன மோதலில் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகப் பயந்து ஏதிலிகள் நாட்டை விட்டு வெளியேறியதால் குடியேற்றச் சட்டங்களை மீறுவது மன்னிக்கப்படுகிறது என்றும் அந்த உயர்ஸ்தானிகரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விடயம், இராஜதந்திர வழிகளில் பரிசீலிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

குடியேற்ற விதிகளை மீறியதற்காக இலங்கை ஏதிலிகள் கைது செய்யப்பட மாட்டார்கள் என்றும், கண்ணியத்துடன் நடத்தப்படுவார்கள் என்றும் இலங்கை அதிகாரிகளிடமிருந்து உத்தரவாதம் கிடைக்கும் வரை, அவர்களை திருப்பி அனுப்பும் செயல்முறை நிறுத்தி வைக்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

https://hirunews.lk/tm/415305/repatriation-of-sri-lankan-nationals-from-tamil-nadu-suspended

கொட்டாஞ்சேனை மாணவி அம்சிகாவின் வழக்கு செப்டெம்பர் மாதம் ஒத்திவைப்பு!

3 weeks 6 days ago

கொட்டாஞ்சேனை மாணவி அம்சிகாவின் வழக்கு செப்டெம்பர் மாதம் ஒத்திவைப்பு!

2025-05-15

 கொட்டாஞ்சேனை மாணவி அம்சிகாவின் வழக்கு செப்டெம்பர் மாதம் ஒத்திவைப்பு!

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வசித்து வந்த பாடசாலை மாணவி அம்சிகா, கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதியன்று தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த  மாணவி, ஏற்கனவே பாடசாலை ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்ததாக கூறி தொடரப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மாணவின் மரணம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு வரும் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தின் கொழும்பு வடக்கு பிரிவின் பொறுப்பதிகாரி, இந்த சம்பவம் தொடர்பாகக் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்போது சிசிடிவி காட்சிகள் மேலதிக ஆய்வுக்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன எனவும், விசாரணை அறிக்கைகள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் நேற்று மன்றில் தெரிவித்திருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக பலரது வாக்குமூலங்களை பதிவு செய்யும் பணி நடைபெற உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும் ஆதாரங்களையும் கருத்தில் கொண்டு, நீதவான் இந்த விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1443624

புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தும் அநுர அரசு - விமல் வீரவன்ச கருத்து!

3 weeks 6 days ago

புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தும் அநுர அரசு - விமல் வீரவன்ச கருத்து!

31905788.jpeg

அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்தும் வகையில் செயற்படுவதுடன் இவர்களை மகிழ்விப்பதற்காக மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்கும் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர கொண்டு வந்த இலங்கை மின்சாரசபை சட்டத்தை தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்தது.

மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கவாதியான கடுவலை மாநகர சபையின் தற்போதைய மேயர் ரஞ்சன் ஜயலால் சட்டவரைபை தீ வைத்து கொளுத்தினார்.

கஞ்சன விஜேசேகர கொண்டு வந்த சட்டத்தில் போலியான திருத்தங்களை செய்து அண்மையில் இலங்கை மின்சாரசபை சட்டவரைபு நிறைவேற்றப்பட்டது.

அன்று எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இன்று முழுமையான ஆதரவளித்துள்ளார்கள். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இவ்விடயம் தொடர்பில் ஏதும் பேசுவதில்லை.

அண்மையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மின்சாரசபை சட்டத்தினால் இலங்கையின் மின்சாரம் மற்றும் வலுசக்தித்துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்படும்.

வலுசக்தி துறையின் சுயாதீனத்தை பிற நாடுகளுக்கு விட்டுக்கொடுத்து நாட்டின் இறையாண்மையை அரசாங்கம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

பிரிவினைவாத கொள்கை கொண்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. இவர்களை மகிழ்விப்பதற்காக எதிர்வரும் ஆண்டு முதல் காலப்பகுதியில் மாகாண சபைத்தேர்தலுக்கான அறிவிப்பை அரசாங்கம் விடுக்கும்.

மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டால் நாட்டில் தேவையில்லா பிரச்சினைகள் ஏற்படும். அண்மையில் நிறைவேற்றப்பட்ட மின்சார திருத்தச் சட்டத்தால் வலுசக்தி துறையின் தனியுரிமை கூறாக்கப்படும் என்றார்.

https://newuthayan.com/article/புலம்பெயர்_தமிழர்களை_திருப்திப்படுத்தும்_அநுர_அரசு_-_விமல்_வீரவன்ச_கருத்து!

ஹர்த்தால் வெற்றியே என்கிறார் சுமந்திரன்!

3 weeks 6 days ago

ஹர்த்தால் வெற்றியே என்கிறார் சுமந்திரன்!

adminAugust 19, 2025

Suma-Siva.jpg?fit=1170%2C658&ssl=1

யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.

குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த சுமந்திரன்,

வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தினரை அகற்றுமாறு கோரிக்கையை முன் வைத்து ஹர்த்தாலுக்கு தமிழரசு கட்சி அழைப்பு விடுத்தது.

அதனை ஏற்று வடக்கு கிழக்கில் பெரும்பாலான இடங்களில் ஹர்த்தலுக்கு ஆதரவு கிடைத்திருந்தது.

யாழ்ப்பாணத்தில் குறிப்பாக யாழ், நகர் பகுதியில் மாத்திரமே வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தது. அவர்கள் ஆதரவு வழங்காதது மன வருத்தமே …

வடக்கு கிழக்கு முழுவதும் மக்களை ஒன்றிணைந்து போராட்டம் நடாத்த கூடிய கட்சியாக தமிழரசு கட்சியே உள்ளது. அந்த வகையில் நாம் ஹர்த்தலுக்கு அழைப்பு விடுத்தோம். அது வெற்றியை தந்துள்ளது.

எமது ஹர்த்தால் அறிவிப்பு வந்தவுடனையே ஜனாதிபதி , அமைச்சர் பிமல் உள்ளிட்டவர்கள் எம்மை தொடர்பு கொண்டு பேசி இருந்தனர். முத்துஐயன்கட்டு இராணுவ முகாமை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என கூறினார்கள். இதுவே வெற்றி.

வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும் அவர்கள் மக்களுடன் மக்களாக இருக்க முடியாது.

தெற்கில் இராணுவ முகாம்கள் உள்ளன. அங்கு அவர்கள் இராணுவ முகாம்களுக்குள் முடங்கி காணப்படுவார்கள். ஆனால் வடக்கு கிழக்கில் அந்த நிலைமை இல்லை. அவர்கள் மக்களோடு மக்களாக , மக்களின் இயல்வு வாழ்வில் தலையீடு செய்கின்றனர்.

பாடசாலைகள் , தனியார் காணிகள் , ஏன் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றுக்கு சொந்தமான காணியை கூட கையகப்படுத்தி அதில் நிலைகொண்டுள்ளனர். அதனால் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும்.

இந்த ஹர்த்தால் ஒரு அடையாள போராட்டமே. இனிவரும் காலங்களில் இராணுவ முகாம்களை அகற்ற கோரி போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம்.

வடக்கு – கிழக்கில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் தமிழரசு கட்சியின் கட்டுப்பாட்டிலையே உள்ளன. அதனால் , அந்த அந்த பிரதேசங்களில் மக்களை ஒன்றிணைந்து , அந்த பிரதேசங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளோம்.

பருத்தித்துறை நீதிமன்றுக்கு சொந்தமான காணியில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்ற கோரி, பருத்தித்துறை நகர சபை நகர பிதாவின் அழைப்பில் போராட்டம் நடைபெறவுள்ளது. அவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றாலும்  அந்த போராட்டத்திற்கு தமிழரசு கட்சி பூரண ஆதரவை வழங்கும்.

வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கலுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.

அதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் .சி.வி.கே. சிவஞானம் கருத்து தெரிவிக்கையில்,

முத்துஐயன்கட்டு இளைஞன் கொலையானதும், இளைஞன் தொடர்பாகவும் சில விமர்சனங்கள் உள்ளன அவை எமக்கும் தெரியும். ஆனால் இதனை இராணுவ மயமாக்கலுக்கு எதிரான சுட்டியாக கொண்டே நாம் ஹர்த்தலுக்கு அழைப்பு விடுத்தோம்.

இங்கு நோக்கம் இராணுவ மயமாக்கலை எதிர்ப்பது. எனவே நோக்கம் சரியாக இருப்பின் ஹர்த்தலுக்கு ஆதரவு வழங்க வேண்டும். அதற்கு யார் அழைப்பு விடுத்தார்கள். யார் செய்கிறார்கள் என ஆராயாமல் ஆதரவு வழங்க வேண்டும்.

இங்கே ஒற்றுமை ஒற்றுமை என கூறி திரிபவர்கள் இந்த விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். நாம் நோக்கம் சரியாக இருந்தால் அதற்காக ஆதரவு கொடுப்பவர்கள். அவ்வாறு ஆதரவு கொடுத்து சென்றாலும் எங்களை துரத்துவதில் குறியாகவே உள்ளனர். அது தெரிந்தும் நோக்கம் சரியாக உள்ள போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளோம். போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.

P2P போராட்டத்தின் நாயகர்கள் நாமே .. யாழில்.சுமந்திரன் தெரிவிப்பு.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் நாயகர்களே நாங்கள் தான் என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, கடந்த காலங்களில் சுமந்திரன் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளதாக கேள்வியெழுப்பிய போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பலருக்கு ஞாபக மறதிகள் இருக்கலாம், அல்லது தமது அரசியலுக்காக ஞாபகம் இருந்தும் மறந்து போனது போல குற்றச்சாட்டுக்களை கூறலாம்

நாம் கடந்த காலங்களிலும் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடாத்தி இருந்தோம். வலி .  வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க கோரி போராட்டங்களை முன்னெடுத்தோம். காணி சுவீகரிப்பு எதிராக சட்ட போராட்டங்களையும் முன்னெடுத்தோம். தற்போதும் அந்த வழக்குகள் விசாரணையில் உள்ளன.

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரி கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டையில் உள்ள  மஹிந்த ராஜபக்சேயின் சொந்த ஊரான தங்காலை வரையில் பேரணி சென்றோம். பேரணிக்காக ஒழுங்கு செய்யப்பட்ட வாகனத்தை காலி முகத்திடலில் வைத்து பொலிஸார் கடத்தி சென்றனர். அதனை போராடி மீட்டே எமது பேரணியை முன்னெடுத்தோம்.

P2P என அழைக்கப்பட்ட பொதுவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தை முன்னின்று பொலிகண்டி வரையில் கொண்டுவந்து சேர்ந்தது நாமே.

அன்றைக்கு சுமந்திரனும் , சாணக்கியனும் இல்லை என்றால் போராட்டம் பொத்துவிலுடன் முடிக்கப்பட்டு இருக்கும் என அன்றே பலர் ஊடக சந்திப்புக்களில் கூட கூறியிருந்தார்கள்.

நாங்கள் தான் பொலிஸ் தடைகளை உடைத்து பொலிகண்டி வரை பேரெழுச்சியாக பேரணி சென்றடைய முன்நின்றோம். அதற்காக பொலிஸ் விசாரணைகளை கூட எதிர்கொண்டோம்.

இந்த ஹர்த்தால் கூட ஒரு அடையாள போராட்டமே. வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ முகாம்கள் முற்றாக அகற்றப்படும் வரையில் நாம் தொடர் போராட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுப்போம் என மேலும் தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2025/219445/

ஆளுநர்களின் கீழ் மாகாண சபைகள் செயல்படுவது சட்டவிரோதம் - பொதுஜன பெரமுன

4 weeks ago

18 AUG, 2025 | 04:50 PM

image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியான ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் மாகாண சபைகள் இயங்குவது சட்டவிரோதமானதுடன், ஜனநாயகத்துக்கும் விரோதமானது. மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், இந்நாள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் பொறுப்புக்கூற வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில்  திங்கட்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் பற்றி அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாதாள குழுக்களின் எழுச்சிக்கு கடந்த அரசாங்கங்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள கருத்து அவதானத்துக்குரியது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் தான் பாதாள குழு தலைவர்கள் நாட்டை விட்டு ஓடி தலைமறைவானார்கள். பாதாள குழுக்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

பாதாள குழுக்களுக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை கடந்த அரசாங்கங்கள் எடுக்கும் போது மக்கள் விடுதலை முன்னணி அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு பாதாள குழுக்களை பாதுகாத்தது. அதன் விளைவை இன்று நாடு எதிர்கொள்கிறது.

பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளன.பொலிஸாரின் முன்பாக துப்பாக்கிதாரிகள் தமது இலக்கினை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.

பொதுமக்களின் பாதுகாப்பு அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கங்களை விமர்சித்துக் கொண்டிருக்காமல் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி பாதாளக்குழுக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

இலங்கையின் அரச நிர்வாக கட்டமைப்பில் பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் பிரதானவையாக காணப்படுகிறது.

மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. இதற்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.

மாகாணசபைத் தேர்தல்முறைமையை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நெருக்கடிக்குள்ளாக்கினார். இதற்கு தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சூழல் காணப்படுகிறது. ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியான ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் மாகாண சபைகள் இயங்குவது சட்டவிரோதமானதுடன், ஜனநாயகத்துக்கும் விரோதமானது. ஆகவே தேர்தலை நடத்த அரசாங்கம் உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/222807

வேலை நிறுத்த போராட்டத்தினால் ஸ்தம்பிதமடைந்த தபால் பரிமாற்ற சேவைகள்

4 weeks ago

18 AUG, 2025 | 04:02 PM

image

(எம்.மனோசித்ரா)

தபால் மற்றும் தொலைதொடர்பாடல் நிலைய அதிகாரிகள் சங்கமும், ஒன்றிணைந்த தபால் சேவையாளர்கள் சங்கமும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (17) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ள போதிலும், பெரும்பாலான தபால் சேவையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஒத்துழைப்பினை வழங்கியுள்ளனர்.

இதனால்  திங்கட்கிழமை (18)மத்திய தபால் பரிமாற்றம் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தது. தபால் சேவைகள் இடம்பெறாமையால் சேவை பெறுநர்களும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

எவ்வாறிருப்பினும் பேச்சுவார்த்தைகளில் இணக்கம் தெரிவிக்கப்பட்ட விடயங்களை உள்ளடக்கி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது நியாயமற்றது என தபால்மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வாரமும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. ஆனால் இணக்கப்பாடுகளை மீறியே தற்போது வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

எனவே வேலை நிறுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். பேச்சுவார்த்தைகள் மூலம் இதனை நிறைவுக்கு கொண்டு வர தொழிற்சங்கங்கள் விரும்பினால் அதற்கு நாமும் தயாராகவே இருக்கின்றோம்.

தபால் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெறும் வருமானத்தை விட சம்பளம் மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவுகளுக்கான செலவுகள் அதிகமாகவுள்ளன.

தற்போது  4 பில்லியனாகக் காணப்படும் நஷ்டம், சம்பள அதிகரிப்புடன் 10 – 12 பில்லியன் வரை அதிகரிக்கக் கூடிய அபாயம் காணப்படுகிறது. வேலை நிறுத்தங்களால் ஒரு நாள் மாத்திரம் இழப்புக்கள் ஏற்படப் போவதில்லை. அதன் விளைவுகள் நீண்ட காலத்துக்கு தொடரும். எனவே அவற்றை சரி செய்வது கடினமாகும்.

தபால் சேவை என்பது போட்டித்தன்மை மிக்கதாகும். தனியார் துறையினரும் இந்த சேவையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறிருக்கையில் இவ்வாறு அடிக்கடி வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டால், எமக்கான வாய்ப்புக்கள் இயல்பாகவே தனியார் துறையை நோக்கி நகரக் கூடும்.

இயலாத பட்சத்திலேயே வேலை நிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். முன்வைக்கப்பட்டுள்ள 19 கோரிக்கைகளில் 17 கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எம்மால் சவால் விடுக்க முடியாது என்றார்.

அம்பாறை மாவட்ட தபால் அலுவலக சேவைகளும் முடக்கம்

தபால் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகள் காரணமாக இன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல தபால் நிலையங்கள்  மூடப்பட்டிருந்தன.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் கிழங்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உப தபால் நிலைய அஞ்சல் அதிபர்கள், ஊழியர்கள் ஆதரவளித்தமையினால்  தபால் அலுவலக சேவைகள் யாவும் முடங்கியுள்ளன.

அதன்படி அம்பாறை மாவட்டத்தில்  கல்முனை   பிரதான தபாற்கந்தோர் தவிர  12 தபால் நிலையங்கள்  குறித்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மூடப்பட்டிருந்ததுடன்  இந்த வேலைநிறுத்தத்தின் காரணமாக கல்முனை பிரதேச பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட நிலையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

அத்துடன் பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு நடவடிக்கையில்  ஈடுபட்டுள்ளதையும் காண முடிகிறது.

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள்  சங்கத்தின் தலைவர் தேசமான்ய யூ.எல்.எம். பைஸர் ஜே.பி இப்போராட்டம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், தமது பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண சம்பந்தப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடின் எமது போராட்டம் காலவரையறையின்றி தொடரும் என்றார்.

Dilan__6_.jpeg

Dilan__8_.jpeg

Dilan__7_.jpeg

Dilan__5_.jpeg

Dilan__3_.jpeg

Dilan__1_.jpeg

 மட்டக்களப்பு மாவட்டம் 

மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று தபால் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. 

மட்டக்களப்பு பிரதான தபால் நிலையம் உட்பட மாவட்டத்தின் அனைத்து தபாலகங்களும் உப தபாலகங்களும் ஊழியர்களின் பணி நிறுத்தம் காரணமாக மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

ஊழியர்களின் பணி நிறுத்தத்தை அறியாத பொதுமக்கள் பலர் தபாலகங்களுக்கு வந்து திரும்பிச் சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது.

20250818_090738.jpg

20250818_090605.jpg

நீர்கொழும்பு  

நீர்கொழும்பு  பிரதான தபாலகமும் இன்று மூடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், பல்வேறு தேவைகளுக்காக தபால் நிலையத்துக்கு வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதை  காணக்கூடியதாக இருந்தது.

download__3_.jpg

https://www.virakesari.lk/article/222801

மனிதப் புதைகுழிகள் : சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு - கிழக்கில் கையெழுத்துப் போராட்டத்துக்கு ஏற்பாடு

4 weeks ago

18 AUG, 2025 | 03:38 PM

image

நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட, குறிப்பாக, வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டு அகழப்பட்டு வரும் மனித புதைகுழிகள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் மனித குலத்திற்கு எதிராக, இந்த பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் கையெழுத்துப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

யுத்த காலத்தில்  தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட  இன அழிப்பு நடவடிக்கைக்கு நீதி கோரி தமிழ் மக்கள் இன்றும் போராடி வருகின்றனர். குறிப்பாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் வருடக்கணக்கில் போராட்டம் நடாத்தி வருகின்றனர். 

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்த அரசும் இதுவரை எந்த பதிலும் வழங்கவில்லை. இதேவேளை புதிது புதிதாக மனித புதைகுழிகளும் கண்டுபிடிக்கப்பட்டு அதற்குள் இருந்து சிறுவர்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களின் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

ஆனாலும் இந்த மனித புதைகுழிகள் தொடர்பில் உள்நாட்டில் நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும், குற்றம் இழைத்தவர்களுக்கான தண்டனையும் கிடைக்கும் என  தமிழ் மக்கள் எதிர்பார்க்கவில்லை.  ஆகவேதான் தமிழ் மக்கள் இந்த விடயங்களில் சர்வதேச விசாரணை ஒன்றை  கோருகின்றனர். 

மனித புதைகுழிகள் தொடர்பான நவீன தொழில்நுட்ப உதவிகள் உட்பட சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் இக்கோரிக்கையினை வலியுறுத்தி ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியானது வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் கையெழுத்துப் போராட்டத்தை அடுத்த வாரம் முன்னெடுக்கவுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/222805

இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால்

4 weeks ago

Published By: VISHNU

18 AUG, 2025 | 02:02 AM

image

(இராஜதுரை ஹஷான்)

முத்தையன்கட்டு இளைஞன் மரணம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் திங்கட்கிழமை (17) காலை முதல் மதியம் வரை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது.

இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த ஹர்த்தாலுக்கு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் வணிக பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் முழுமையான ஆதரவு வழங்குகின்றனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் முழுமையாக முடங்க வேண்டும். அதனுடாக அரசாங்கத்துக்கு வலுவான செய்தியை எடுத்துரைக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுமக்களிடம் வலியுறுத்துகிறது.

முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய இளைஞனின் சடலம் கடந்த 8 ஆம் திகதி முத்தையன்கட்டு குளத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டது. முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த இளைஞர்களை இராணுவத்தினர் ஆகஸ்ட் 7 ஆம் திகதி முத்தையன்கட்டு முகாமிற்குள் அழைத்துச் சென்றதாகவும், இராணுவத்தினரால் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அதனால் ஒரு இளைஞர் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு 'முத்தையன்கட்டு முகாமிற்குள் ஒருதரப்பினர் அனுமதியின்றி சென்றதாகவும், அவர்களை விரட்டியடிக்கும் போது ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக குறிப்பிட்டு,.இந்த சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணைகளை மேற்கொள்வதாக'குறிப்பிட்டிருந்தது.

முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடிகொண்டுள்ள இராணுவ பிரசன்னத்துக்கும், இளைஞனின் மரணத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தது. இந்த தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதிக்கு எழுத்துமூலமாக அறித்து கடந்த 15 ஆம் திகதி ஹர்த்தாலில் ஈடுபட அறிவித்திருந்தது.

இருப்பினும் பல்வேறு நியாயமான காரணிகளால் ஹர்த்தால் இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த பூரண ஹர்த்தாலுக்கு பாராளுமன்றத்தை பிரதிநிதிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள், சிவில் தரப்பினர், வணிக அமைப்பினர் முழுமையாக ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

இதற்கமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் காலை முதல் மதியம் வரை பூரண ஹர்த்தாலில் அமுல்படுத்தப்படுகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஹர்த்தாலில் ஈடுபடுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி சகல தரப்பினரிடமும் வலியுறுத்துகிறது.

https://www.virakesari.lk/article/222768

வவுனியா ஓமந்தையில் கோரவிபத்து! பெண் உட்பட இருவர் பலி பலரது நிலை கவலைக்கிடம்

4 weeks ago

வவுனியா ஓமந்தையில் கோரவிபத்து! பெண் உட்பட இருவர் பலி பலரது நிலை கவலைக்கிடம்

August 18, 2025 8:55 am

வவுனியா ஓமந்தையில் கோரவிபத்து! பெண் உட்பட இருவர் பலி பலரது நிலை கவலைக்கிடம்

வவுனியா ஓமந்தை ஏ9 வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தமையுடன் 13பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலகுரக வாகனம் வவுனியா ஓமந்தை மாணிக்கர் வளவுப்பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுவிபத்திற்குள்ளாகியது.

விபத்தின் போது குறித்த வாகனத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 15ற்கும் மேற்ப்பட்டோர் பயணித்துள்ளனர். விபத்தினால் வாகனத்தில் இருந்த அனைவரும் வீதியில் தூக்கிவீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்திருந்தனர்.

மேலும் இலகுரக வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகிய பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கனரக வாகனம் குறித்த பட்டா ரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

இதன்போது வீதியால் பயணித்த பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் உட்பட இருவர் உயிரிழந்தமையுடன் 13பேர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெண்கள் , சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர் உயிரிழந்தவர்கள் முல்லைத்தீவு விசுவமடு பகுதியை சேர்ந்த யாழினி வயது33, சுயன் வயது 30 என்று தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த அனைவரும் ஒரே குடும்பங்களை சேர்ந்த உறவினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் கண்டியில் இடம்பெற்ற மரணவீடு ஒன்றிற்கு சென்று விட்டு மீண்டும் விசுவமடு நோக்கிப்பயணித்துக்கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை படுகாயமடைந்த சிறுவன் ஒருவன் உட்பட மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து தொடர்பாக வவுனியா ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

https://oruvan.com/fatal-accident-in-omanthai-vavuniya-two-people-including-a-woman-killed-many-in-critical-condition/

பிசுபிசுத்துப் போன ஹர்த்தால் – முல்லைத்தீவு, அம்பாறையிலும் வழமைப் போன்று செயற்பாடுகள்

4 weeks ago

பிசுபிசுத்துப் போன ஹர்த்தால் – முல்லைத்தீவு, அம்பாறையிலும் வழமைப் போன்று செயற்பாடுகள்

August 18, 2025 10:33 am

பிசுபிசுத்துப் போன ஹர்த்தால் – முல்லைத்தீவு, அம்பாறையிலும் வழமைப் போன்று செயற்பாடுகள்

வடக்கு மற்றும் கிழக்கில் இன்று முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளும் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக இன்றையதினம் (18) கடையடைப்பு போராட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வழமை போல் அனைத்து செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றது.

வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றிற்கு எதிராக இன்றையதினம் வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் முதல் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், அதற்கு இணையாக பலரும் எதிர்ப்பும் வெளியிட்டிருந்தனர்.

இதனையடுத்து, கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளும் நேரத்தை மட்டுப்படுத்தி தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் நேற்றையதினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தும் அனைத்து செயற்பாடுகளும் வழமைபோல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை , சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள் வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியது.

இப்பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்துள்ள போதிலும் கற்றல் செயற்பாடு இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.

மாவட்டத்தில் வழமை போன்று அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது.

பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டப்பளம், சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்தியமுகாம், உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து வழமை போன்று செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸாருடன் இணைந்து கடற்படை இராணுவம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.

அத்துடன் கல்முனை பொது சந்தை உட்பட அதனை சூழ உள்ள பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டியது.

மேலும் வியாபார நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள், பாடசாலைகள், மருந்தகங்கள், வங்கிகள், எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கபட்டடு வியாபாரம் இடம்பெற்றது.

எனினும் சில இடங்களில் பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://oruvan.com/hartal-ends-in-chaos-business-as-usual-in-mullaitivu-and-ampara/

Checked
Mon, 09/15/2025 - 22:38
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr