ஊர்ப்புதினம்

ஊர்காவற்துறையில் கடற்பாசி உற்பத்தி - நேரில் சென்று பார்த்த இளங்குமரன் எம்.பி

4 weeks 2 days ago

ஊர்காவற்துறையில் கடற்பாசி உற்பத்தி - நேரில் சென்று பார்த்த இளங்குமரன் எம்.பி

புதன், 01 அக்டோபர் 2025 06:51 PM

ஊர்காவற்துறையில் கடற்பாசி உற்பத்தி - நேரில் சென்று பார்த்த இளங்குமரன் எம்.பி

யாழ்ப்பாணம் , ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும்  கடல் பாசி உற்பத்தி மூலம் அப்பகுதி மக்களின் வாழ்க்கை தரம் முன்னேறும் என்ற பெருநம்பிக்கை தனக்கு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். 

ஊர்காவற்துறை பகுதியில் முன்னெடுக்கப்படும் கடற்பாசி உற்பத்தி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் , ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் லக்ஸ்மன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். 

ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி கடற்பாசி உற்பத்தி தொடர்பிலான பயிற்சி பட்டறை நடைபெறவுள்ளதாகவும் , அதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் , இந்த கடற்பாசி உற்பத்தி மூலம் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இதொரு வலுவான வழியாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

https://jaffnazone.com/news/50895

ஜெனிவாவில் புலிக்கொடி பறக்க அனுமதிக்கக் கூடாது: சுவிட்சர்லாந்து அரசாங்கத்துக்கு கே.பி. தசநாயக்க வலியுறுத்தல்!

4 weeks 2 days ago

ஜெனிவாவில் புலிக்கொடி பறக்க அனுமதிக்கக் கூடாது: சுவிட்சர்லாந்து அரசாங்கத்துக்கு கே.பி. தசநாயக்க வலியுறுத்தல்!

October 2, 2025

ஜெனிவாவில் புலிக்கொடியைக் காட்சிப்படுத்துவதற்கும், புலி ஆதரவாளர்கள் பரப்புரைகளில் ஈடுபடுவதற்கும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் இடமளிக்கக்கூடாது என்று ஒற்றையாட்சி மற்றும் இராணுவத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளரும், முன்னாள் கடற்படை அதிகாரியுமான டி.கே.பி. தசநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்றது. தமிழ்ப் புலம்பெயரிகள் மற்றும் புலி ஆதரவாளர்கள் அங்கு பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். 32 நாடுகளில் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது.

இலங்கையிலும் அந்த அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, தடைசெய்யப்பட்ட அமைப்பின் ஆதரவாளர்கள் பரப்புரையில் ஈடுபடவும், கொடிகளைக் காட்சிப்படுத்தவும் இடமளிக்கக்கூடாது – என்றார்.

https://www.ilakku.org/the-tiger-flag-should-not-be-allowed-to-fly-in-geneva-k-p-dasanayake-urges-the-swiss-government/

யாழ். குறிகாட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

4 weeks 2 days ago

யாழ். குறிகாட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

02 Oct, 2025 | 11:40 AM

image

குறிகட்டுவான் இறங்குதுறையினை பெருந்திட்டத்திற்கு அமைய (Master Plan) அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று புதன்கிழமை (01) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க , கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் துறைசார் அதிகாரிகள் சகிதம் கடந்த ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி குறிகட்டுவான் இறங்குதுறைக்கு  நேரடியாக விஜயம் மேற்கொண்டு,  ஆலோசனைகளையும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும்  உரிய அறிவுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கியதற்கமைய, அதன் தொடர் நடவடிக்கையாக பங்குதார்களுடனான கலந்துரையாடலாக இந்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.

இக் கலந்துரையாடலில் வேலணை பிரதேச சபையின் தவிசாளர், மேலதிக செயலர்களான கே. சிவகரன் மற்றும் பா. ஜெயகரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் குரூஸ், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர்,  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர், வீதி அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர், வேலணை  பிரதேச செயலாளர், பிரதேச சபையின் செயலாளர், கடற்படை அதிகாரி மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டார்கள்.

32__4_.jpg

32__1_.jpg

32__2_.jpg

32__3_.jpg  

https://www.virakesari.lk/article/226658

முகமாலையில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!

4 weeks 2 days ago

முகமாலையில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!

02 Oct, 2025 | 09:54 AM

image

கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் நேற்று புதன்கிழமை (01) பிற்பகல் 2:30 மணியளவில் வெடிக்காத நிலையில் 31 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

முகமாலை வடக்கு பகுதியில் உள்ள வீட்டு உரிமையாளர் ஒருவர் தமது வீட்டில் பள்ளம் தோண்டியுள்ளார். இதன்போது அப்  பகுதியில் ஆபத்தான வெடிகுண்டுகள் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து வீட்டு உரிமையாளர் உடனடியாக பளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அதன் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவுடன் பாதுகாப்பான முறையில் வெடிகுண்டுகளை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

https://www.virakesari.lk/article/226637

முல்லைத்தீவு - வெள்ளப்பள்ளம் குளத்தினுள் சட்டவிரோதமாக வெட்டி அழிக்கப்பட்ட மரங்கள்

4 weeks 2 days ago

முல்லைத்தீவு - வெள்ளப்பள்ளம் குளத்தினுள் சட்டவிரோதமாக வெட்டி அழிக்கப்பட்ட மரங்கள்

02 Oct, 2025 | 09:30 AM

image

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையர்கட்டு வெள்ளப்பள்ளம் குளத்தினுள் சட்டவிரோதமாக பாரிய அளவில் மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று புதன்கிழமை (01) உரிய இடத்திற்கு நேரடியாகச்சென்று நிலமைகளை ஆராய்ந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சட்டவிரோதமாக மரங்களை வெட்டியவர்களுக்கெதிராக விரைந்து நடவடிக்கைகளை எடுக்குமாறு வெள்ளப்பள்ளம் கிராமஅலுவலர், உடையார்கட்டு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் ஆகியோரை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு வெள்ளப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள வெள்ளப்பள்ளம் குளக்காணியில் உள்ள நீர்மரங்கள் பாரிய அளவில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளன.

குறித்த வெள்ளப்பள்ளம் குளத்தின் அருகிலுள்ள ஒருங்கிணைந்த பண்ணையின் உரிமையாளரினாலேயே இவ்வாறு நீர்மரங்கள் பாரியளவில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து அப்பகுதி மக்களின் முறையீட்டிற்கு அமைவாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்றையதினம் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டிருந்ததுடன், பிரச்சினை தொடர்பாக  மக்களிடம் கேட்டறிந்துகொண்டார்.

அந்தவகையில் உடையார்கட்டு கமநலசேவைநிலைய பிரிவிற்குட்பட்ட வெள்ளப்பள்ளம் குளத்தின் அருகிலுள்ள ஒருங்கிணைந்த பண்ணையின் உரிமையாளர் ஏற்கனவே குறித்த வெள்ளப்பள்ளம் குளத்திற்குரித்தான பெருமளவான பகுதிகளை ஆகிரமித்துள்ளதாக கிரமமக்களால் முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் அதன் தொடர்சியாகவே குறித்த ஒருங்கிணைந்த பண்ணையின் உரிமையாளர் குளத்தின் எஞ்சியபகுதிகளையும் ஆக்கிரமிக்கும் நோக்கிலேயே இவ்வாறு மரங்களை வெட்டியிருக்கலாமெனவும் கிராமமக்களால் தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு இவ்வாறு குளத்தின் பகுதிகளிலுள்ள நீர் மரங்கள் பெருமளவு அழிக்கப்பட்டமையால் நிலத்தடி நீர் அற்றுப்போகும் அபாயம் ஏற்படுமெனவும், அருகிலுள்ள கிணறுகளில் நீரின்றிப்போகுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் எஞ்சிய குளத்தின் பகுதிகளும் தனிநபரினால் ஆக்கிரமிக்கப்பட்டால் அப்பகுதி கால்நடைகளுக்கு குடிநீரில்லாமல் போகும் அபாயம் ஏற்படுமெனவும் மக்களால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

குளத்தின் காணிகளுக்குள் சட்டவிரோதமாக மரங்கள் பாரிய அளவில் வெட்டி அழிக்கப்பட்டமைக்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டபோதும் பொலிசார் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகவும் மக்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையீடும் செய்யப்பட்டது.

அதேவேளை இவ்வாறு குளக்காணிக்குள் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டமைக்கு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிராமமக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு இதன்போது மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் உடனடியாக உடையார்கட்டு கமநலசேவைநிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் வெள்ளப்பள்ளம் பகுதிக்குரிய கிராம அலுவலர் ஆகியோரை குறித்த பகுதிக்கு அழைத்ததுடன், நிலைமைகளை காண்பித்து சட்டவிரோதமாக குளக்காணிக்குள் நீர்மரங்கள் வெட்டப்பட்டமைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

அதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளருக்கும் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு சட்டவிரோதமாக குளக்காணிக்குள் பாரிய அளவில் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டமைக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தினர்.

அந்தவகையில் வெள்ளப்பள்ளம் குளத்தின் பகுதிக்குள் சட்டவிரோதமாக பாரிய அளவில் மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டமைக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கிராமஅலுவலர், உடையார்கட்டு கமநலசேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் ஆகியோரால் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-20251001-WA0186_resized_2.jpg

IMG-20251001-WA0064_resized_2__1_.jpg

IMG-20251001-WA0074_resized_1.jpg


https://www.virakesari.lk/article/226635

இலங்கையர்களில் மதுவால் தினமும் 50 பேர் அகால மரணம்

4 weeks 2 days ago

இலங்கையர்களில் மதுவால் தினமும் 50 பேர் அகால மரணம்

image_bc7bfa0ea1.jpg

'எதிர்வரும் 2026ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தில் மதுசாரத்திற்கான வரியை சரியான முறையில் அதிகரித்து எதிர்கால சந்ததியினர் மது பாவனைக்கு ஆளாகும் சதவீதத்தை குறைப்பதற்கும், மது பாவனையினால் ஏற்படுகின்ற சுகாதார மற்றும் பொருளாதார பிரச்சினைகளைக் குறைப்பதற்கும் அரசாங்கத்தின் விரைவான திட்டமொன்று தேவை' என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது,

வருடாந்தம் மது பாவனையினால் சுமார் 03 மில்லியன் பேர் அகால மரணமடைகின்றனர். உலகளாவிய ரீதியில் ஏற்படுகின்ற தடுக்கக்கூடிய 10 மரணங்களுள் 08 மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. மேலும் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான நான்கு பிரதான காரணங்களில் மது பாவனை முன்னனி காரணியாகும் என்று குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் ஏற்படும் மரணங்களில் 83 சதவீதமான மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன, மது பாவனையினால் தினமும் சுமார் 50 இலங்கையர்கள் அகால மரணமடைகிறார்கள், மேலும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20,000 இலங்கையர்கள் அகால மரணமடைகிறார்கள். இருதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு மதுசார பாவனை ஒரு முக்கிய காரணியாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

https://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கையர்களில்-மதுவால்-தினமும்-50-பேர்-அகால-மரணம்/175-365626

வடக்கு, கிழக்குப் பாடசாலைகளை நவீனமயப்படுத்த 'நிப்பொன்` உதவி!

4 weeks 2 days ago

வடக்கு, கிழக்குப் பாடசாலைகளை நவீனமயப்படுத்த 'நிப்பொன்` உதவி!

1043885221.JPG

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 100 பாட சாலைகளின் புனரமைப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்கான எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க ஜப்பான் நிப்பொன் மன்றம் உத்தரவாதமளித்துள்ளது.

டோக்கியோவில் உள்ள நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபகத் தலைவருக்கும் ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்குச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையே நடந்தகலந்துரையாடலில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும் நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபகத் தலைவர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

https://newuthayan.com/article/வடக்கு,_கிழக்குப்_பாடசாலைகளை_நவீனமயப்படுத்த_'நிப்பொன்%60_உதவி!

செம்மணி மனிதப் புதைகுழி: நீதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

4 weeks 2 days ago

செம்மணி மனிதப் புதைகுழி: நீதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அலுவலக மட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார  கருத்து தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு போதுமான நிதி, தமது அமைச்சிடம் இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குருக்கள்மடம் மனிதப் புதைகுழிக்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இதன்போது கூறினார்.

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அலுவலக மட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உரிய நடைமுறைகளை விரைவில் பூரணப்படுத்தி, தேவையான நிதியை வழங்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, மனிதப் புதைகுழி அகழ்வுக்கான நிதி விடயத்தில் எவ்வித சிக்கல்களும் இல்லை என ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

செம்மணி மற்றும் குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய பாதீடுகள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் துறைசார் திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.samakalam.com/செம்மணி-மனிதப்-புதைகுழி-2/

மன்னார் போராட்டக்காரர்களுக்கு எதிராக வழக்கு!

4 weeks 2 days ago

மன்னார் போராட்டக்காரர்களுக்கு எதிராக வழக்கு!

மன்னார் நகரப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (26) இரவு மக்களின் எதிர்ப்பை மீறி கொண்டு வரப்பட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களுக்கு எதிராக, மன்னார் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை நேற்று (01.10.2025) மன்னார் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

போராட்டத்தில் பொலிஸ் தாக்குதலில் காயமடைந்த மூன்று போராட்டக்காரர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்களுக்கு எதிராக பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். சனிக்கிழமை அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ஒவ்வொருவருக்கும் ரூ.5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், மேலும் ஐந்து நபர்களுக்கு எதிராகவும் மன்னார் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர். இதில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்கஸ் அடிகளார் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட ஆறு நபர்கள் அடங்குவர்.

குறித்த நபர்கள் சட்டத்தரணி பா. டெனிஸ்வரன் மூலம் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்பட்ட நிலையில் , ஐந்து சந்தேக நபர்களையும் தலா ரூ.5 லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைகள் மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

https://www.samakalam.com/மன்னார்-போராட்டக்காரர்க/

யாழ்ப்பாணத்தில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்!

4 weeks 2 days ago

யாழ்ப்பாணத்தில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்!

adminOctober 2, 2025

IMG_0113.jpg

மகாத்மா காந்தியின் 156 வது காந்தி ஜெயந்தி கொண்டாட்ட நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் இந்திய துணைத்தூதர் சாய் முரளி , வடமாகாண பிரதம செயலாளர் மு.தனுஜா, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், யாழ் மாநகர பிரதி முதல்வர் இ.தயாளன்,யாழ் மாநகர ஆணையாளர் கிருஷ்ணேந்திரன் மற்றும் சமய சமூக பிரதிநிதிகள், இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், அகில இலங்கை காந்தி சேவா சங்க பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது காந்தீயம் ஏடு வெளியிட்டு வைக்கப்பட்டு அதன் பிரதி அனைவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை இந்திய துணைத் தூதரக அதிகாரிகளால் துவிச்சக்கர வண்டி பவனியொன்றும் மேற்கொள்ளப்பட்டது.

https://globaltamilnews.net/2025/221065/

வெளிநாட்டவருக்கு இலங்கையில் வதிவிட விசா!

4 weeks 2 days ago

வெளிநாட்டவருக்கு இலங்கையில் வதிவிட விசா!

adminOctober 2, 2025

visa.jpg

திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபர் முதலீட்டாளர் பிரிவின் கீழ் இலங்கை தமது வரலாற்றில் முதல் வதிவிட விசாவை வழங்கியுள்ளது.

குறித்த விசேட விசா ஜெர்மன் நாட்டவரான ப்ரே ட்ரெக்ஸ்செல் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தியோகபூர்வமாக இந்த விசாவை கையளித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், வெளிநாட்டவர்கள் முதலீடு செய்வதன் மூலம் இலங்கையில் நீண்டகால வதிவிட விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கமைய, 5 வருட வதிவிட விசாவை பெறுவதற்கு 1 லட்சம் அமெரிக்க டொலர் அல்லது அதற்குச் சமமான வேறு வெளிநாட்டு நாணயத்தை முதலீடு செய்ய வேண்டும்.

அதேநேரம், 10 வருட வதிவிட விசாவை பெறுவதற்கு 2 லட்சம் அமெரிக்க டொலர் அல்லது அதற்குச் சமமான வேறு வெளிநாட்டு நாணயத்தை முதலீடு செய்ய வேண்டும்.

நிரந்தர வதிவிட விசா

https://globaltamilnews.net/2025/221068/

யாழ். நகர் பகுதியில் வன்முறை குழுக்கள் அட்டகாசம் - மக்கள் அச்சம்!

4 weeks 2 days ago

Published By: Digital Desk 1

02 Oct, 2025 | 09:56 AM

image

யாழ். நகர் பகுதியில் நேற்று புதன்கிழமை (01) மாலை 5.40 மணியளவில் வன்முறை குழுக்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இதன்போது தாக்குதல்களும் நடாத்தப்பட்டது.

இந்த தாக்குதலை நடாத்தியவர்கள் யார்? தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்ற விடயங்கள் வெளியாகவில்லை.

பொது இடத்தில் இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டதால் மக்கள் அச்ச நிலையில் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

இது குறித்து பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொது இடத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவித்து, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/226638

சுயாதீன சட்டத்தரணி அலுவலகம் நிறுவ நிபுணர் குழு நியமனம்

4 weeks 2 days ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

நாட்டில் நீதித்துறை செயல்முறையை வலுப்படுத்துவதற்காக, சுயாதீன சட்டத்தரணி அலுவலகம் நிறுவுவதற்கு அரசாங்கம் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது.

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில், நேற்று (01.10.2025) இக்குழுவின் உறுப்பினர்களிடையே கலந்துரையாடல் நடைபெற்றதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்போது, சுயாதீன சட்டத்தரணி அலுவலகத்தை நிறுவுவதற்கான அடிப்படைத் திட்டங்களைத் தயாரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

அமைச்சு, இதற்கான அடிப்படைக் கருத்துப் பத்திரத்தைத் தயாரித்த பின்னர், பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்களைப் பெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இக்கலந்துரையாடலில் உயர் நீதிமன்ற நீதிபதியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பாரிந்த ரணசிங்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

https://adaderanatamil.lk/news/cmg8rxgr200rro29nma7dwrh3

வசீம் தாஜூதின் மரணம் அரசியலுக்கு பயன்படுத்தப்படக்கூடாது – நாமல் ராஜபக்ஷ

4 weeks 2 days ago

01 Oct, 2025 | 03:58 PM

image

(இராஜதுரை ஹஷான்)

வசீம் தாஜூதின் மரணத்தை தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் அரசாங்கம் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தை அரசியலுக்கு பயன்படுத்துவது அவரது ஆத்மாவுக்கும் இழைக்கும் மாபெரும் அநீதியாகும். அரசியல் பேசுபொருளுக்காகவே பொலிஸ் ஊடக பிரிவு புதிய விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் புதன்கிழமை (01) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ராஜபக்ஷர்கள் இந்த அரசாங்கமும் நல்லாட்சி அரசாங்கமும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன. விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன. தேர்தல் மேடைகளில் குறிப்பிட்ட பொய்களை உண்மையாக்குவதற்கு முயற்சித்தார்கள்.

வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் நாராஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை கைது செய்து போலியான வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கும் கடந்த அரசாங்கத்தின் அதிகாரிகள் முயற்சித்தார்கள். அந்த அதிகாரிகள் தான் இந்த அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ளார்கள்.

முன்னாள் கடற்படைத் தளபதி கைது விவகாரத்தில் போலியான வாக்குமூலம் வழங்குவதற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக குறிப்பிட்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீதிமன்றம் சென்றுள்ளார். 

ஒருசில அதிகாரிகள் போலியான சாட்சியங்களை திரட்டி அரசாங்கத்தையும்,ஆட்சியாளர்களையும் திருப்திப்படுத்த முயற்சிக்கிறார்கள். வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடகங்களுக்கு விடயங்களை குறிப்பிடுகிறார்.

இந்த விடயம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்துக்கு அறிக்கையிட வேண்டுமே தவிர ஊடகங்களுக்கு குறிப்பிட கூடாது. அரசியல் பேசுபொருளுக்காகவே இந்த விடயம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.  இந்த விடயத்துடன் தொடர்புடைய  சி.சி.டி காணொளியில் இடப்பில் கை வைத்துக் கொண்டிருப்பவர் தனது கணவர் என்று அவரது மனைவி குறிப்பிட்டதாக பொலிஸார் குறிப்பிடுகிறார். 

அந்த நபர் கடந்த காலங்களில் யாருடன் இருந்தார்,யாருக்காக செயற்பட்டார் என்பதை பொலிஸார் விசாரிக்க வேண்டும். வசீம் தாஜூதின் மரணத்தை தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் அரசாங்கம் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தை அரசியலுக்கு பயன்படுத்துவது அவரது ஆத்மாவுக்கும் இழைக்கும் மாபெரும் அநீதியாகும்.

ரணில் வாரம், ஐஸ் வாரம் முடிவடைந்து விட்டது.தற்போது வசீம் தாஜூதின் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரங்கள் எவ்வாறானதாக இருக்கும் என்று தெரியவில்லை.

அரசாங்கத்தின் நோக்கத்துக்கு அமைய பொலிஸ் ஊடக பேச்சாளர் ஊடங்களுக்கு பொய்யான விடயங்களை குறிப்பிடுவதும், நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தகவல்களை குறிப்பிட்டால் அவருக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.

https://www.virakesari.lk/article/226599

சீட் பெல்ட் கட்டாயம்; வர்த்தமானி வெளியீடு!

4 weeks 2 days ago

New-Project-16.jpg?resize=750%2C375&ssl=

சீட் பெல்ட் கட்டாயம்; வர்த்தமானி வெளியீடு!

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் (ஆசனப் பட்டி) அணிவதை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சினால் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வர்த்தமானி அறிவிப்பின்படி, ஒரு அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் மோட்டார் வாகனத்தின் சாரதி மற்றும் எந்த இருக்கையிலும் அமர்ந்து வாகனத்தில் பயணிக்கும் ஒவ்வொரு பயணியும் தனிநபரும், சீட் பெல்ட் அணிய வேண்டும்.

https://athavannews.com/2025/1449273

அடுத்த மாதம் முதல் இலவச பொலித்தீன் பைகள் இல்லை

1 month ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஷொப்பிங் பைகள் போன்ற பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க முடியாத வகையில், நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிக்க வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எதிர்பார்ப்பதாக சுற்றாடல் அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகள் இன்று உயர் நீதிமன்றுக்கு அறிவித்தனர். .

பொலித்தீன் பயன்பாடு சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்துவதால், அவற்றின் பயன்பாட்டைக் குறைக்க ஒரு திட்டத்தை வகுக்க உத்தரவிடக் கோரி சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த மனு, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் சம்பத் அபேகோன் உள்ளிட்ட மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் அழைக்கப்பட்டது.

சிறப்பு அங்காடிகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களால் நுகர்வோருக்கு வழங்கப்படும் ஷொப்பிங் பைகளின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக அவற்றின் மீது வரி விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுற்றாடல் அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளால் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி உயர்நீதிமன்றில் இணக்கம் வௌியிட்டிருந்ததாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த இணக்கத்திற்கு அமைய பிரதிவாதிகள் செயற்படாமை காரணமாக இந்த மனுவை தாக்கல் செய்ய வேண்டி ஏற்பட்டதாக சுற்றுச்சூழல் நீதி மையம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே, தெரிவித்துள்ளார்.

இதன்போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அவந்தி பெரேரா, நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஷொப்பிங் பைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் வகையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

அதன்படி, அந்த அறிவிப்புக்கு சுற்றுச்சூழல் நீதி மையம் இணக்கம் வௌியிட்டதால் வழக்கு விசாரணையை நிறுவுறுத்தி உத்தரவிடப்பட்டது.

https://adaderanatamil.lk/news/cmg7wkw5j00qtqplpdo3d4a71

'அன்புடன் காப்போம் - உலகை வெல்வோம்' : உலக சிறுவர்கள் தின தேசிய விழா - 2025

1 month ago

Published By: Priyatharshan

01 Oct, 2025 | 08:23 PM

image

இந்த ஆண்டு உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சு ஒரு வார கால தேசிய சிறுவர்கள் தின வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.

அதன் நிறைவு விழா மற்றும் உலக சிறுவர்கள் தின தேசிய கொண்டாட்ட நிகழ்வு இன்று புதன்கிழமை (ஒக்டோபர் 01) அலரி மாளிகையில் நடைபெற்றது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன.

இதன்போது, உலக சிறுவர்கள் தின நினைவு முத்திரை மற்றும் தபால்தலை வெளியிடப்பட்டது. உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இலக்கியப் போட்டிகளின் தொகுப்பாகிய "க்ஷேம பூமி" (Kshema Bhoomi) இலக்கியத் தொகுப்பு வெளியீட்டு வைக்கப்பட்டது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட "சிந்துவெளி சித்தம்" (Sithuvili Siththam) ஓவியப் போட்டியின் வெற்றியாளர்கள் இன்றைய நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட சிறுவர்களுக்காகப் பல்வேறு செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட விசேட நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

சிறுவர்கள் கலந்துகெண்ட  இந்த முக்கிய நிகழ்வில், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்,  பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன,  பாராளுமன்ற மகளிர் மன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள், பல நாடுகளின் தூதுவர்கள் உள்ளிட்ட இராஜதந்திரப் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2025-10-01_at_17.59.03.jp

WhatsApp_Image_2025-10-01_at_17.59.03__1

WhatsApp_Image_2025-10-01_at_17.59.04.jp

WhatsApp_Image_2025-10-01_at_17.59.05.jp

WhatsApp_Image_2025-10-01_at_17.59.05__1

WhatsApp_Image_2025-10-01_at_17.59.06.jp

WhatsApp_Image_2025-10-01_at_17.59.09.jp

WhatsApp_Image_2025-10-01_at_17.59.10.jp

WhatsApp_Image_2025-10-01_at_18.01.15.jp

WhatsApp_Image_2025-10-01_at_18.01.16.jp

WhatsApp_Image_2025-10-01_at_18.01.17.jp

WhatsApp_Image_2025-10-01_at_18.01.18.jp

WhatsApp_Image_2025-10-01_at_18.01.18__1

WhatsApp_Image_2025-10-01_at_18.01.20.jp

WhatsApp_Image_2025-10-01_at_18.01.19.jp

WhatsApp_Image_2025-10-01_at_18.01.20__1

WhatsApp_Image_2025-10-01_at_18.01.22.jp

WhatsApp_Image_2025-10-01_at_18.01.21.jp

WhatsApp_Image_2025-10-01_at_18.01.23.jp

WhatsApp_Image_2025-10-01_at_18.01.23__1

WhatsApp_Image_2025-10-01_at_18.01.24.jp

WhatsApp_Image_2025-10-01_at_18.01.24__1

WhatsApp_Image_2025-10-01_at_18.01.25__1

WhatsApp_Image_2025-10-01_at_18.01.25.jp

WhatsApp_Image_2025-10-01_at_18.01.26.jp

WhatsApp_Image_2025-10-01_at_18.01.26__1

https://www.virakesari.lk/article/226627

”சிறிபாலவும் ஞானரத்னமும் தாஜுதீனை கொல்லவில்லை”

1 month ago

Simrith   / 2025 ஒக்டோபர் 01 , பி.ப. 06:23 - 0     - 22

வாசிம் தாஜுதீன் கொலை போன்ற குற்றங்களை கிராமத்தில் இருக்கும் சிறிபால அல்லது ஞானரத்னம் செய்யவில்லை, மாறாக நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று தெரிவித்தார்.

விசாரணைகளின்படி குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அரசியல் ஆர்வலர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு எதிராக சட்டம் அமல்படுத்தப்படும் என்று அவர் அனுராதபுரத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

தாஜுதீன் கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அவர்கள் அரசியல் ஆர்வலர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

"இந்த குற்றங்களை கிராமத்தில் ஊரில் இருக்கும் சிறிபால அல்லது ஞானரத்னம் செய்யவில்லை. இந்த குற்றங்களை நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்தனர். அவர்கள் குற்றங்களை மூடி மறைத்தனர்.

வாசிம் தாஜுதீன் 2012 இல் கொலை செய்யப்பட்டார், 2015 இல் பத்திர மோசடி மற்றும் 2019 இல் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்கள் செய்யப்பட்டன. சம்பந்தப்பட்டவர்கள் அரசியல் செயல்பாட்டாளர்களா இல்லையா என்பது குறித்த விசாரணைகளின் அடிப்படையில் சட்டம் செயல்படுத்தப்படும்," என்று அவர் கூறினார்.

இந்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கம் தலையிடாது என்று அமைச்சர் கூறினார்.

Tamilmirror Online || ”சிறிபாலவும் ஞானரத்னமும் தாஜுதீனை கொல்லவில்லை”

அளவுக்கு அதிக கடன்சுமையால் வன்னியில் பெண்கள் உயிர்மாய்ப்பு; அமைச்சர் சந்திரசேகர் சுட்டிக்காட்டு!

1 month ago

கடன்தொல்லை காரணமாக, வன்னியில் பெண்கள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பது அதிகரித்துள்ளது என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.


வடக்கு மாகாண பெண்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் அரியாலையிலுள்ள வடமாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச் சின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவித்ததாவது:- நாட்டுக்கு கூடுதலான வருவாய் ஈட்டித்தருபவர்களாக பெண்கள் காணப்பட்ட போதிலும், சில மாவட்டங்களில் பெண்களின் வாழ்க்கை நிலை மிகவும் பின்னடைவாகவே காணப்படுகின்றது. குறிப்பாக வன்னி மாவட்டத்தில் பெண்கள் பெரும் துன்பங்களை எதிர்கொள்கின்றனர். கடன்கள் காரணமாக உயிர்மாய்க்கும் பெண்களின் எண்ணிக்கை வன்னியில் அதிகளவில் உள்ளது. இந்த நிலையை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் இயலுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். கடந்த வருடம் 3 ஆயிரத்து 600 இற்கும் மேற்பட்ட பத்து வயதுக்கும் குறைவான சிறுவர்கள் இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று சிறுவர் அதிகாரசபை கூறியுள்ளது. பதிவுசெய்யப்பட்ட எண்ணிக்கையையும் விட அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கச் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. ஏனெனில், பலர் பல்வேறு காரணங்களுக்காக முறைப்பாடுகளை வழங்காமல் விட்டிருக்கலாம் - என்றார்.

அளவுக்கு அதிக கடன்சுமையால் வன்னியில் பெண்கள் உயிர்மாய்ப்பு; அமைச்சர் சந்திரசேகர் சுட்டிக்காட்டு!

கொழும்பில் நீச்சல் தடாகத்தில் மயங்கிய பாடசாலை மாணவனுக்கு மூளை பாதிப்பு ; தந்தை பொலிஸில் முறைப்பாடு!

1 month ago

கொழும்பு நீச்சல் கழகத்திற்கு  (Colombo Swimming Club) எதிராக, கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 8 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனின் தந்தை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  அளித்துள்ளார்.

பாடசாலை மாணவனின் தந்தை முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாவது,

எனது மகன் கொழும்பு நீச்சல் கழகத்தில் நடைபெற்ற  பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். 

இதன்போது எனது மகன் நீச்சல் தடாகத்தில் விளையாடியுள்ள நிலையில் திடீரென மயக்கமடைந்துள்ளார்.

இதனையடுத்து எனது மகன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வைத்திய பரிசோதனையில் மகனுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது.

மகனுக்கு எவ்வளவு நேரம் ஒட்சிசன் வழங்கப்பட்டது, அம்புலன்ஸ் எப்போது வந்தது என வைத்தியர்கள் கேட்ட கேள்விகளுக்கு எங்களிடம் பதில் இல்லை. 

ஏனென்றால், கொழும்பு நீச்சல் கழகத்தின் அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பில் சரியான தகவல்களை எங்களிடம் வழங்கவில்லை. அவர்களிடம் சிசிடிவி கமராக்களும் இல்லை. 

எனது மகனுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டமைக்கு கொழும்பு நீச்சல் கழகத்தின் கவனக்குறைவே காரணம்.

எனவே நான் இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தேன்.

எனது மகன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனவே, இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் கேட்டுக்கொள்கின்றேன் என அந்த தந்தை முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நீச்சல் தடாகத்தில் மயங்கிய பாடசாலை மாணவனுக்கு மூளை பாதிப்பு ; தந்தை பொலிஸில் முறைப்பாடு! | Virakesari.lk

Checked
Sat, 11/01/2025 - 17:30
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr