ஊர்ப்புதினம்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு பிடியாணை

2 weeks ago

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு கோட்டை நீதவானால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு ஒன்று தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரசாங்க வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 9 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணக்காக  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு பிடியாணை | Virakesari.lk

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்

2 weeks ago

03 Dec, 2025 | 01:20 PM

image

வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும், முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

அரசாங்கத்திற்கு எதிராக பேசக்கூடாது என்ற தோரணையில் எவரும் எங்களை விமர்சிக்ககூடாது. உண்மை வெளிவந்தால்தான் நிவாரணப்பணிகளும் சரியானமுறையில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஊடாக இந்த நிவாரணப்பொருட்கள் வழங்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன. 

இதன்முதல் கட்டமாக களுவாஞ்சிகுடி பகுதியில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட சுமார் 1000 பேருக்கான நிவாரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தலைமையில் களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மே.வினோராஜின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தில் போரதீவுப்பற்ற பிரதேசசiபின் தவிசாளர் வி.மதிமேனன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிவாரண வேலைத்திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த சுமந்திரன்,

மலையகத்திற்கு விஜயம்செய்தபோது பல பரிதாபகரமான சம்பங்கள் தொடர்பில் அறிந்துகொண்டோம்.சில இடத்தில் முழு கிராமமுமே புதையுண்ட நிலை காணப்படுகின்றது.

அந்தநேரத்தில் வீடுகளில் இல்லாத சிலர் தப்பி பிழைத்துள்ளனர்.அங்கிருந்த ஒருவர் தனது முழுக்குடும்பமுமே புதையுண்டுள்ளதாகவும் மீட்பு நடவடிக்கைகளுக்கு யாரும் வரவில்லை, மூன்று நாட்களாக எப்படியாவது தமதுகுடும்பத்தினரின் உடல்களை மீட்கவேண்டும் என போராடிவருவதாக தெரிவித்தார். அங்கு சிலர் தமது பணத்தினைக்கொடுத்து டிசல்,இயந்திரங்களை எடுத்து தேடும் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் நிவாரண பணிகளில் அனைவரும் கட்சி பேதங்கள் கடந்து அனைவரும் ஒன்றிணையவேண்டும் என அரசாங்கமும் சொல்கின்றது நாங்களும் கூறுகின்றோம் அனைவரும் கூறுகின்றார்கள்.

ஆனால் இந்த விடயங்களில் ஏனைய கட்சிகளை புறந்தள்ளிவைப்பதில் அரசாங்கம் மும்முரமாக செயற்படுவது வெளிப்படையாக தெரிகின்றது.

நேற்றை தினம் கண்டி அரசாங்க அதிபரை சந்தித்தபோது கம்பளை பகுதியில் 19பேர்தான் உயிரிழந்துள்ளதாக சொல்கின்றார்.நாங்கள் சென்ற முதல் இடத்திலேயே 26 உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் 50க்கும் மேற்பட்டவர்கள் புதையுண்டுள்ளதாக கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு பல கிராமங்கள் பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. அந்த பகுதிகளில் மக்கள் சென்று மீள வாழமுடியாத வகையில் அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளது.

நேற்று நாங்கள் சென்ற பதுளை மாவட்டம்,நுவரேலியா மாவட்டங்களில் பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது.அங்குள்ள மக்கள் எங்களைக்கண்டதும் கண்ணீருடன் தமது கஸ்டங்களை கூறினார்கள்.

அப்பகுதியில் உடனடி நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்படாதது மக்கள் மூலம் அறியமுடிந்தது.இதனை நாங்கள் கூறைகூறவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை.அரசாங்கத்தினை குறைகூறுவதற்காக இதனை சொல்லவில்லை.

மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் சென்றடையவேண்டும்,மக்களின் உயிரிழப்புகள் எத்தனையென்பது தெளிவாக தெரியவேண்டும்.உண்மையினை முழுப்புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கமுடியாது.

நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கின்றபோது முகத்தினை இறுக்கமாக வைத்துக்கொண்டு பத்து பதினைந்துபேர்தான் உயிரிழந்துள்ளார்கள் என அரசாங்கம் பதில் சொன்னால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்தவேளையில் அரசாங்கத்திற்கு எதிராக பேசக்கூடாது என்ற தோரணையில் எவரும் எங்களை விமர்சிக்ககூடாது.

உண்மை வெளிவந்தால்தான் நிவாரணப்பணிகளும் சரியானமுறையில் நடைபெறும். விசேடமாக ஊடகங்களை இதனை விமர்சிப்பதை பார்க்கமிகவும் அருவறுப்பாக இருக்கின்றது.

செய்தியை பிரசுரிப்பதுதான் அவர்களின் வேலையாக இருக்கவேண்டுமே தவிர செய்திகளின் பின்பக்கமான கிரிக்கட் வர்ணணை போன்று தமது விமர்சனங்களை முன்வைப்பது அருவறுக்கத்தக்க செயலாகும்.

இந்த பேரிடர் எவ்வளவு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியாமல் அவர்கள் அரசியல் செய்துகொண்டிருப்பதை காணமுடிகின்றது. இந்தநேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்துதான் மக்களை காப்பாற்றவேண்டும்.இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் தயாராகயிருக்கின்றோம் என்று கூறுகின்றோம்.

சுனாமி அனர்த்தம் வந்தவேளையில் அன்றைய அரசாங்கமே வடகிழக்கில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து கட்டமைப்பினை ஏற்படுத்தியது. அந்த பிரதேசங்களிலே ஆளுகை செய்தவர்கள் அவர்கள்.

அந்தவேளையில் அதனை தடுப்பதற்கு நீதிமன்றபடியேறிய ஜேவிபியினருடன் இணைந்து வேலைசெய்வதற்கு நாங்கள் தாயராகயிருக்கின்றோம் என்றால் வேறு யாருடன் நாங்கள் சேர்ந்து செயற்படமாட்டோம். அனைவருடமும் இணைந்து நாங்கள் செயற்படுவோம் என்றார். 

IMG_2004.JPG

IMG_2019__1_.JPG

IMG_1996.JPG

IMG_2025.JPG


முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன் | Virakesari.lk

மன்னாரில் இறைச்சி விற்பனைக்கு தற்காலிகத் தடை

2 weeks ago

03 Dec, 2025 | 03:14 PM

image

மன்னார் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை (03) முதல் மறு அறிவித்தல் வரை ஆடு மற்றும் மாடு இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்த ஆடு, மாடுகளை இறைச்சியாக்கி மன்னார் மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மிருக வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாகவும் இன்று புதன் கிழமை முதல் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும்  ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வெள்ளத்தினால் நோய்வாய்ப்பட்ட மற்றும் உயிரிழந்த ஆடு மற்றும் மாடு இறைச்சிக்காக வெட்டப் பட்டுள்மை தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

உத்தரவை மீறி ஆடு மற்றும் மாடு இறைச்சிக்காக வெட்டி விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,இவ்விடயம் தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடன் செயல்படு மாறும் மறு அறிவித்தல் கிடைக்கும் வரை ஆடு மற்றும் மாட்டு இறைச்சிகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னாரில் இறைச்சி விற்பனைக்கு தற்காலிகத் தடை | Virakesari.lk

டித்வா புயல் பேரழிவு – இலங்கைக்கு வருகிறது 47 பேர் கொண்ட பாகிஸ்தான் இராணுவத்தின் சிறப்பு மீட்பு குழு

2 weeks ago

03 Dec, 2025 | 03:43 PM

image

இலங்கையில் டித்வா புயலால் ஏற்பட்ட மாபெரும் அழிவைத் தொடர்ந்து, இலங்கை அரசின் அவசர உதவி கோரிக்கைக்கு இணங்க பாகிஸ்தான் அரசு மனிதாபிமான நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் பிரதமர் முகம்மது ஷஹ்பாஸ் ஷரீப்பின் சிறப்பு உத்தரவின் பேரில், இன்று அதிகாலை பாகிஸ்தான் இராணுவத்தின் சிறப்பு தேடல் மற்றும் மீட்பு குழு இலங்கைக்காக அனுப்பப்பட்டது.

பாகிஸ்தான் விமானப்படையின் C-130 விமானம் மூலமாக, 47 பேர் கொண்ட சிறப்பு அணி மற்றும் 6.5 தொன் அவசியமான மீட்பு உபகரணங்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில், கூட்டாட்சி அமைச்சர் டாக்டர் தரிக் பசல் சௌத்ரி, பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் லெப்டினெண்ட் ஜெனரல் இனாம் ஹைதர் மாலிக்,

இலங்கை உயர்ஸ்தானிகர் அட்மிரல் ஃப்ரெட் செனவிரத்ன ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது பாகிஸ்தான் அமைச்சர் டாக்டர் தரிக் பசல் சௌத்ரி கூறியதாவது:

“பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும்,” என்றார்.

இலங்கை உயர்ஸ்தானிகர் ஃப்ரெட் செனவிரத்ன, பாகிஸ்தான் அரசு மற்றும் மக்களுக்கு அவர்களின் தகுந்த நேர உதவிக்காக நன்றி தெரிவித்தார்.

இதேவேளை, பாகிஸ்தான் பிரதமர் ஷஹ்பாஸ், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டார்.

இதேவேளை, பாகிஸ்தானில் இருந்து 200 தொன் நிவாரணப் பொருட்கள் கடல் மார்க்கமாக அனுப்பப்பட்டுள்ளது.

பிரதமரின் உத்தரவின் பேரில்,தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று 200 தொன் நிவாரணப் பொருட்களை கடல் மார்க்கமாக கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளது. கூடுதலாக, கொழும்பு – லாகூர் விமான சேவையின் மூலம் கூடுதல் நிவாரண பொருட்கள் அனுப்பப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ள நிவாரணப்பொருட்களில், குடும்பங்களுக்கான தற்காலிக கூடாரங்கள், போர்வைகள், கம்பளிகள், உயிர்காப்பு ஜாக்கெட்கள், காற்றேற்றக் கூடிய படகுகள், நீர் அகற்றும் பம்புகள், விளக்குகள், தரைப்பாய்கள், நுளம்பு வலைகள், குழந்தைகளுக்கான பால் மாக்கள், உடனடியாக உணவாக உட்கொள்ளக்கூடிய பொதியுணவுகள், முக்கிய மருந்துகள் அடங்குகின்றன.

மேலும், பாகிஸ்தான் கடற்படை கப்பல்களும் ஹெலிகாப்டர்களும் ஏற்கனவே இலங்கையில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இலங்கை ஜனாதிபதியின் சிறப்பு கோரிக்கையின் பேரில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அணுகுமுறை மற்றும் பாலங்களின் தற்காலிக மாற்றீட்டு பணிகளுக்காக பாகிஸ்தான் இராணுவம் தற்காலிக பாலங்களையும் அனுப்பவுள்ளது.

“இலங்கையின் சகோதர மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்தும் வழங்குவோம்; மனிதாபிமான ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒற்றுமைக்கான எங்கள் அர்ப்பணிப்பு எப்போதும் உறுதியாக இருக்கும், என பாகிஸ்தான் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2025-12-03_at_2.33.56_PM_

WhatsApp_Image_2025-12-03_at_2.33.55_PM_


டித்வா புயல் பேரழிவு – இலங்கைக்கு வருகிறது 47 பேர் கொண்ட பாகிஸ்தான் இராணுவத்தின் சிறப்பு மீட்பு குழு | Virakesari.lk

எதிர்வரும் நாட்கள் மழைக்கான சாத்தியம் : விழிப்பூட்டும் முன்னறிவிப்பு !

2 weeks ago

03 Dec, 2025 | 05:00 PM

image

03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி மணிக்கு இலங்கை வானிலை தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா முக்கிய விழிப்பூட்டும் முன்னறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நாளை 04.12.2025 அன்று வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு , மத்திய மாகாணங்களில்  மிதமான மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 

எதிர்வரும் 05.12.2025 அன்று கிழக்கு மாகாணத்திற்கு குறிப்பாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு கனமழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

அன்றைய தினம்( 05.12.2025) வடக்கு, மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

எதிர்வரும் 06 மற்றும் 07 ம் திகதிகளில் நாடு முழுவதும் பல இடங்களில் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக மன்னார், அனுராதபுரம், புத்தளம், சிலாபம், கண்டி, நுவரெலியா, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, களுத்துறை, காலி,பதுளை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் 08.12.2025 அன்று வடமத்திய, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் பதுளை மாவட்டத்திற்கும் சற்று கனமழை கிடைக்கும் என்பதோடு வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும். 

எதிர்வரும் 09.12.2025 திகதி நாடு முழுவதும் மிதமானது முதல் கனமான மழை கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. 10.12.2025 அன்று நாடு முழுவதும் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.  

இது வடகீழ்ப் பருவக்காற்று காலம் என்பதனால் அவ்வப்பொழுது இலங்கையில் பல இடங்களிலும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புக் காணப்படுகின்றது.  

ஆயினும் ஒரு தீவிரமான வானிலை நிகழ்வுக்குரிய எந்த வாய்ப்பும் அடுத்து வரும் 07 நாட்களுக்கு இல்லை என்பதனால் மக்கள் மழை  கிடைத்தாலும் அச்சம் கொள்ள தேவையில்லை. 

ஆனால் ஏற்கெனவே புயலினால் மிகக்கனமழை கிடைத்து, ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்து, குளங்கள் வான் பாய்ந்து மண் ஈரலிப்பாக உள்ள நுவரெலியா, கண்டி, பதுளை, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு சற்று கனமான மழை கிடைத்தாலே (குறைந்தது 30-40 மி.மீ. கிடைத்தால் கூட) அது நிலச்சரிவைத் தூண்டும் என்பதனால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் இது தொடர்பாக மிக அவதானமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக எதிர்வரும் 6,7,8,9 ம் திகதிகளில் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ ணமாகாண மக்கள் அவதானமாக இருப்பது அவசியம்.  மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் அனர்த்த மீட்பு பணிகளில் ஈடுபடுவோரும் இதனைக் கருத்தில் கொண்டு செயற்படுவது சிறந்தது.

சாத்தியமான அனர்த்தம் ஒன்றை கருத்தில் கொண்டு நாம் தயாராக இருந்தால், அந்த அனர்த்தம் நிகழாவிட்டாலும் எமக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் தயராக இல்லாது விட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்கள் மழைக்கான சாத்தியம் : விழிப்பூட்டும் முன்னறிவிப்பு ! | Virakesari.lk

இலங்கைக்கு 890 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான அவசர உதவியை வழங்கும் ஐக்கிய இராச்சியம்

2 weeks ago

03 Dec, 2025 | 04:38 PM

image

இலங்கையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஐக்கிய இராச்சியம் 890,000 அமெரிக்க டொலர்கள் (£675,000 பவுண்ட்கள் ) மதிப்பிலான அவசர மனிதாபிமான நிவாரணத்தை வழங்கியுள்ளது.

இந்த உதவிகளை, செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. முகவரமைப்புக்கள், உள்ளூர் சிவில் சமூக அமைப்புகளுடன் ஏற்கனவே செயற்பட்டுவரும் மனிதாபிமான அமைப்புகளின் பங்காளர்கள் மூலம் வழங்கப்படும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிக கூடாரம், குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் வாழ்க்கையை பாதுகாக்க அவசியமான உதவிகள் இதன் மூலம் வழங்கப்படவுள்ளன. 

வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துடனான சந்திப்பின் போது, இலங்கைக்கான உதவியை மேலும் வலுப்படுத்துவதில் ஐக்கிய இராச்சியத்தின் அர்ப்பணிப்பை, இலங்கைக்கான இடைக்கால பிரித்தானிய உயர்ஸ்தானிகராக உள்ள தெரசா ஓ’மாஹோனி உறுதியளித்தார்.

இதேவேளை, இங்கிலாந்து மன்னர், டித்வா புயல் பாதிப்புக்குள்ளான அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், அவசர மீட்பு பணியாளர்களின் தைரியத்திற்கும், உதவி வழங்கும் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

புயல் காரணமாக வீடுகள், வாழ்வாதாரங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை இழந்த மக்களுக்கு உதவுவது என்பது பிரிட்டன் – இலங்கை நட்புறவின் நீண்டகால  இணைப்பினை பிரதிபலிப்பதாக உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளதுடன், இலங்கையுடன் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கு 890 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான அவசர உதவியை வழங்கும் ஐக்கிய இராச்சியம் | Virakesari.lk

போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ?

2 weeks ago

03 Dec, 2025 | 04:55 PM

image

இலங்கைக்கு காலாவதியான பொருட்கள் வழங்கியதாக பரவும் செய்தியை பாகிஸ்தான் கடற்படை மறுத்துள்ளது. 

இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களில் காலாவதியான உணவுப்பொருட்கள் இருந்தன என சமூக வலைதளங்களில் பரவிய செய்தி பொய்யானது என பாகிஸ்தான் கடற்படை அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தியுள்ளது.

இவ்வாறு சமூக ஊடகங்களி்ல் பரப்பிய பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பாகிஸ்தான் கடற்படை,

பேரிடர் நிவாரணப் பொருட்கள் நிரப்பப்பட்டிருந்த பைகள், உணவுப் பொருட்களுக்கானவை அல்ல, அவை ஏற்கனவே பாகிஸ்தான் கடற்படை பயிற்சி கப்பலில் இருந்த பழைய பைகள், இலங்கைக்கு அவசரமாக உதவி அனுப்ப வேண்டியிருந்ததால், அந்த பைகள் விரைவாக கொண்டுசெல்லும் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டன. பைகளுக்குள் இருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் புதியதும், காலாவதி நிறைவடையாதவையும் ஆகும்.

“இலங்கை மக்களுக்கு உதவுவதில் நாம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம். பொய்யான தகவல்கள் மற்றும் பிரசாரங்களுக்கு எவரும் உள்ளாக வேண்டாம்.” டித்வா புயல் காரணமாக இலங்கையில் மிகப்பெரிய நிவாரண தேவை நிலவுகின்ற நிலையில், சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களால் மீட்பு முயற்சியை திசைதிருப்பக் கூடாது.


போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ? | Virakesari.lk

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்.

2 weeks ago

WhatsApp-Image-2025-12-03-at-15.08.37-1.

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்.

இலங்கை – யாழ்ப்பாண மாவட்ட சதுரங்கச் சங்கம் (JDCA) தலைமையில் மூன்றாவது யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 இன்று (டிசம்பர் 3) யாழ்ப்பாணத்தில் சிறப்பாகவும், அமைதியான சூழலிலும், யாழ் மாவட்ட சதுரங்கச் சங்கத் தலைவர் எந்திரி ந. நந்தரூபன் தலைமையில் ஆரம்பமாகியது. இப்போட்டி வரும் டிசம்பர் 7 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு குறித்த போட்டிற்கு ஆதவன் தொலைக்காட்சி , ஆதவன் வானொலி, தமிழ் எப்.எம் மற்றும் ஒருவன் ஆகியன ஊடக அனுசரணை வழங்குகின்றமை சிறப்பம்சமாகும்.

WhatsApp-Image-2025-12-03-at-15.08.38-1.jpeg?resize=600%2C450&ssl=1 WhatsApp-Image-2025-12-03-at-15.08.37.jpeg?resize=600%2C450&ssl=1

இன்றைய தொடக்க நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட சீரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ளு. அறிவழகன், கௌரவ விருந்தினராக இந்திய துணைத் தூதரக அதிகாரி திரு சங்கரன் ராஜகோபால், சிறப்பு விருந்தினராக வைத்திய கலாநிதி ளு. சிவன்சுதன் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

WhatsApp-Image-2025-12-03-at-14.06.39-1.jpeg?resize=600%2C338&ssl=1
யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு பெருமை மிக்க நிலத்தில் உலகத் தரத்திலான சதுரங்கத்தை வெளிப்படுத்தும் இந்தப் போட்டி, இலங்கை சதுரங்க வரலாற்றில் புதிய மைல்கல்லாக திகழ்கிறது. மொத்தம் ரூ. 24 இலட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுவது, இதுவரை நாட்டில் நடைபெற்ற எந்த சர்வதேச சதுரங்கப் போட்டியிலும் இல்லாத மிக உயர்ந்த பரிசாகும்.

WhatsApp-Image-2025-12-03-at-15.08.38.jpeg?resize=450%2C600&ssl=1

கடந்த ஆண்டுகளின் சிறப்பான சாதனையாளர்கள்

இந்தப் போட்டி முதன்முதலில் 2023 ஆம் ஆண்டு அறிமுகமானது.

முதல் JICC 2023 சாம்பியன்:  இந்தியா – நாக்பூரைச் சேர்ந்த IM Anup Deshmukh

இரண்டாவது JICC 2024 சாம்பியன்:  இந்தியா – மும்பையைச் சேர்ந்த IM Nubairshah Shaikh

தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இந்திய வீரர்கள் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியதை அடுத்து, இந்த ஆண்டும் இந்தியாவின் பல முன்னணி வீரர்கள் வருகை தந்துள்ளதால் போட்டியில் அதிக ஆவல் நிலவுகிறது.

WhatsApp-Image-2025-12-03-at-14.06.46-1.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2025-12-03-at-14.06.38.jpeg?resize=600%2C338&ssl=1

இந்த ஆண்டின் சிறப்பு அம்சங்கள்

இந்த ஆண்டு JICC பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவிலிருந்து 20-க்கும் மேற்பட்ட உயர்தர ரேட்டிங் வீரர்கள் பங்கேற்கின்றனர். மலேசியா, பங்களாதேஷ், செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் போட்டியாளர்கள் இணைந்துள்ளனர். இந்த

ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவுகள்:

Mechalite and Corporate Sector

School Category (Open & Women’s)

Higher Education Sector

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளர்களுக்கு பரிசுத் தொகைகள், கோப்பைகள், பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

உள்ளூர் வீரர்களுக்கான உயர்வான வாய்ப்பு

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டியின் முக்கிய சாதனைகளில் ஒன்று, உள்ளூர் வீரர்களுக்கு FIDE Rating பெறும் வாய்ப்பை வழங்குவதாகும்.
2024 ஆம் ஆண்டில் மட்டும் 72 புதிய வீரர்கள் தங்கள் முதல் சர்வதேச ரேட்டிங்கைப் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு மேலும் பல வீரர்கள் தங்கள் ரேட்டிங்கை மேம்படுத்தவும் அல்லது புதிதாகப் பெறவும் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

போட்டியின் பெருமை மற்றும் தாக்கம்

சாதாரண விளையாட்டு நிகழ்வைத் தாண்டி, இது யாழ்ப்பாணத்திற்கும் இலங்கைக்கும் ஒரு முக்கிய மைல்கல். சர்வதேச தரத்திலான போட்டி அனுபவத்தை நாட்டிற்கு கொண்டு வருவது உள்ளூர் திறமையாளர்களை உலக அரங்கிற்கு அறிமுகப்படுத்துவது. நாடுகளுக்கிடையேயான கலாச்சார நட்புறவை வலுப்படுத்தும் மேடையாக அமைவது. யாழ்ப்பாணம் அறிவு, பண்பாடு, சிந்தனை ஆகியவற்றின் மையமாக இருப்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில், இந்தப் போட்டி மிகுந்த சிறப்புடன் நடைபெற்று வருகிறது.

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 இலங்கை இளைஞர்களுக்கு சர்வதேச மேடையைத் திறக்கிறது. உலகத்துடன் போட்டியிடும் திறனை உருவாக்குகிறது. யாழ்ப்பாணத்தை உலக சதுரங்க வரைபடத்தில் மேலும் உயர்த்துகிறது. அடுத்த சில நாட்களில் பல அதிரடி ஆட்டங்கள் சதுரங்க ரசிகர்களை கவரும் என்பதில் ஐயமில்லை. . இப்போட்டியின் பரிசளிப்பு வைபவம் டிசம்பர் 7 ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெறும்.

WhatsApp-Image-2025-12-03-at-14.06.46.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2025-12-03-at-14.06.45-1.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2025-12-03-at-14.06.45.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2025-12-03-at-14.06.44.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2025-12-03-at-14.06.43.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2025-12-03-at-14.06.40-1.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2025-12-03-at-14.06.40.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2025-12-03-at-14.06.39.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2025-12-03-at-14.06.38-1.jpeg?resize=600%2C338&ssl=1 WhatsApp-Image-2025-12-03-at-14.06.37.jpeg?resize=600%2C338&ssl=1

https://athavannews.com/2025/1455021

22 மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு!

2 weeks 1 day ago

22 மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு!

22 மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு!

22 மாவட்டங்களை “தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகள்” என்று அறிவித்து ஒரு அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்புப் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் பகுதி II இன் பிரிவு 9 இன் விதிகளின்படி, நவம்பர் மாதம் ஏற்பட்ட டித்வா சூறாவளியின் விளைவுகளால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள் “தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகள்” என்று வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த வர்த்தமானியை பதிவாளர் ஜெனரல் சசிதேவி ஜலதீபன் வெளியிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1454913

யாழில் மீண்டும் எலிக்காய்ச்சல்!

2 weeks 1 day ago

யாழில் மீண்டும் எலிக்காய்ச்சல்!

பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு மருத்துவ கலாநிதி கேதீஸ்வரன் விளக்கம்

அண்மைய சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் அதிகரித்து வருகின்றது.இதனால். ஏற்கனவே இருவர் உயிரிழந்துள்ள நிலையில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம் இவ்வாறு யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது:-
எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வாரம் இருவர் உயிரிழந்தனர், கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரியின் பிரிவிலேயே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன. கடந்த வருடமும் நவம்பர், டிசெம்பர் மாதங்களில் எலிக்காய்ச்சல் தீவிரமாகப் பரவி 8 பேர் உயிரிழந்தனர். எனவே, இந்த நோய் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருப்பது மிகவும் அவசியமாகும்.


எலிக்காய்ச்சல் ஒருவகை பக்ரீறியாவினால் ஏற்படுகின்றது. எலிகள் போன்ற விலங்குகளின் சிறுநீர் மூலம் வெள்ள நீர், வயல்நீர், சேற்று நிலங்களில் கிருமிகள் சென்றடைகின்றன. மனிதர்கள் வெள்ளநீரில்,வயல் நிலங்களில். சேற்று நிலங்களில் வேலை செய்யும் போது அவர்களின் தோலில் உள்ள புண்கள் அல்லது காயங்கள் மூலம் கிருமிகள் மனித உடலுக்குள் செல்கின்றன. கடுமையான காய்ச்சல், கடுமையான தசைவலி, கடுமையான தலையிடி, இருமல், கண்கள் செந்நிறமாதல், வாந்தி, சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல், சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் போன்றன இதன் அறிகுறிகளாக உள்ளன. இந்த நோய் ஏற்பட்டால், சிறுநீரகம், சுவாசத்தொகுதி, இதயம், ஈரல், மூளை போன்ற உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு மரணம் சம்பவிக்கும். இந்த நோயானது பெரும்பாலும் வயல்கள், சேற்று நிலங்களில் பயிர்செய்யும் விவசாயிகள் மத்தியிலும், கடல்நீரேரிகளில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுபவர்கள் மத்தியிலும், வெள்ள நீருடன் தொடுகையில் ஈடுபடுபவர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகின்றது. இந்நோயிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள வயல், சேற்று நிலங்களில் வேலை -செய்யும் விவசாயிகள் கடல்நீரேரிகளில் மீன்பிடிப்பவர்கள் உடலில் காயங்கள் அல்லது புண்கள் இருப்பின் அவற்றை நீர் உட்புகாத வகையில் கட்டுப்போடுதல் வேண்டும். வெள்ளநீரில் அல்லது அசுத்தமான நீரில் பணியாற்றும் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் கால், கைகளுக்கு பாதுகாப்பு அங்கிகளை அணிய வேண்டும்.


வயல்களில், சேற்றுநிலங்களில் வேலை செய்யும் விவசாயிகளும், கடல்நீரேரி மீன்பிடித்தொழிலாளர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளிகளும் இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை உங்களது பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவக அதிகாரி பணிமனையில் அல்லது பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடம் பெற்றுக் கொள்ளலாம். வெள்ளநீருடன் தொடுகை ஏற்படுத்திக் கொள்பவர்களும் மேற்படி தடுப்பு மருந்தைப்பெற்றுக்கொள்ளலாம் என்றுள்ளது.

193955607.jpg


யாழில் மீண்டும் எலிக்காய்ச்சல்!

தொடரும் சீரற்ற காலநிலையால் இறந்து ஒதுங்கும் கால்நடைகள்!

2 weeks 1 day ago


1501636532.jpeg

யாழ்ப்பாணம் 5 மணி நேரம் முன்

தொடரும் சீரற்ற காலநிலையால் இறந்து ஒதுங்கும் கால்நடைகள்!

சீரற்ற காலநிலை காரணமாக தேங்கியிருந்த வெள்ளத்தில் இருந்து பெருமளவு கால்நடைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்படுகின்றன. வடமராட்சி கிழக்கு புன்னையடிப் பகுதியில் பெருமளவான கால்நடைகள் வீதிகளில் இறந்து கிடப்பதை அவதானிக்க முடிகின்றது. இறந்து கிடக்கும் கால்நடைகளை அகற்றும் பணிகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.

தொடரும் சீரற்ற காலநிலையால் இறந்து ஒதுங்கும் கால்நடைகள்!

சீரற்ற வானிலையால் பல இலட்சம் கோழிகள் உயிரிழப்பு!

2 weeks 1 day ago

02 Dec, 2025 | 12:34 PM

image

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் சுமார் 15 இலட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளதாக  அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தெதுறு ஓயாவை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் மாத்திரம் சுமார் 10 இலட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளன. 

இதன்காரணமாக, முட்டை உற்பத்தி நூறில் நாற்பது வீதம் குறைவடைந்துள்ளதாகவும் முட்டையின் விலை உயர்ந்துள்ளதாகவும்  அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் பல இலட்சம் கோழிகள் உயிரிழப்பு! | Virakesari.lk

மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க கூட்டு நடவடிக்கை!

2 weeks 1 day ago

02 Dec, 2025 | 03:51 PM

image

மன்னார், நானாட்டான், முருங்கன், விதயானகுளம் மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்பதற்காக இலங்கை கடற்படை மற்றும் இராணுவத்தால் நவம்பர் 29 ஆம் திகதி முதல் டிசம்பர் 01 ஆம் திகதி வரை கூட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, இந்த கூட்டு மீட்பு நடவடிக்கையின் மூலம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  58 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

10.jpg

09.jpeg

08.jpg


மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க கூட்டு நடவடிக்கை! | Virakesari.lk

இளவயதினருக்கே எயிட்ஸ் நோய்! - வைத்தியர் சந்திரகுமார்

2 weeks 1 day ago

02 Dec, 2025 | 06:18 PM

image

வவுனியாவில் இதுவரை 43 பேர் எயிட்ஸ்நோயாளிகளாகஇனம்காணப்பட்டுள்ளதுடன், இளவயதினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியாமாவட்ட பாலியல்நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்புவேலைத்திட்டத்தின் பொறுப்புவைத்திய அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்தார். 

எயிட்ஸ் நோய் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (2) ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்தார் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.....  

உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம்1 ம் திகதி உலகம் முழுவதும் கடைப்படிக்கபட்டு வருகின்றது. இம்முறை சவால்களை சமாளித்து புதிய வழிகளில் போராடுதல் எனும் தொணிப்பொருளில் உலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கபடவிருக்கின்றது.  

இலங்கையில் இதுவரை 7168 பேர் எயிட்ஸ் நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். 

ஆண்கள்5544 பெண்கள் 1603,இடைநிலை பால்நிலையை சேர்ந்த 21பேர் இதனுள் அடங்கும். இதுவரை நாட்டில் 1629 இந்நோயால் இறந்துள்ளனர். எந்தவித தொற்று அறிகுறிகளும் இன்றி நோய்தொற்றுடன் 5700 பேர் நடமாடி வருகின்றார்கள்.

 வவுனியாமாவட்டத்தில் இதுவரை43 எயிட்ஸ்நோயாளிகள் இனம்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 34 பேர் எம்மிடம் மருந்துவ சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். 

அவர்களில் 21பேர் ஆண்கள். 13 பேர் பெண்கள்

2கர்பிணி தாய்மாரும் உள்ளனர். அவர்களிடம் இருந்து பிள்ளைக்கு தொற்றாத வகையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. 13பேர் இதுவரை மரணத்தை தளுவியுள்ளனர்.

ஏனைய நோயாளர்களிற்கான சிகிச்சைகள் எம்மால் வழங்கபட்டுவருகிறது. அவர்களிற்கான மருந்துகளை நாம் வழங்கிவருகின்றோம். அந்த மருந்துகளின் மூலம் ஒருவரது மரணத்தினை தாமதப்படுத்தமுடியும். 

எயிட்ஸ் நோய்பரவுவதற்கான மூன்று காரணங்களில் எச்ஐவி தொற்றுள்ள ஒருவருடன் பாதுகாப்பற்ற வகையில் பாலியல் ரீதியாகதொடர்புகொள்ளல். நோய்தொற்றுள்ள ஒருவரின்குருதியை இன்னுமொருவருக்குசெலுத்துதல்,தொற்றுள்ள தாய்ஒருவருக்கு பிறக்கின்ற பிள்ளை ஆகியோருக்கு இந்த நோய்பரவுகிறது. 

இலங்கையில் தற்பொது குருதி மாற்றங்களின்போது உரிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது. 

அத்துடன் கர்பிணி பெண்களிற்கு அவர்களது இணக்கத்துடன் எச்.ஜ.வி, பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது.  

நாட்டில் 15 வயது தொடக்கம்25 வயதிற்குட்பட்டவர்களே தொற்றாளர்களாக இருக்கும் நிலை உள்ளது. நோய்தொற்று ஏற்பட்டவர் சாதாரண ஒரு மனிதரை போலவே இருப்பர். 

அவரது முகத்தை வைத்து நோயை கண்டுபிடிக்க இயலாது. குருதியினை பரிசோதனை செய்வதன் மூலம் மாத்திரமே அதனை கண்டுபிடிக்கமுடியும்.எனவே ஒரு தரமாவது பரிசோதனையை மேற்கொண்டால்குறித்த நோய் மற்றவர்களிற்கு தொற்றாமல் தடுக்கலாம். 

வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல்நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவில் பொதுமக்கள் தாமாகவந்து பரிசோதனைகளை மேற்கொள்ளமுடியும். இங்கு பரிசோதனைகள் மேற்கொள்பவர்களது இரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்றார்.

இளவயதினருக்கே எயிட்ஸ் நோய்! - வைத்தியர் சந்திரகுமார் | Virakesari.lk

நாவலப்பிட்டி பரகல கீழ் பிரிவில் மண் மற்றும் கற்பாறை சரிந்ததில் 65குடும்பங்களை சேர்ந்த 250பேர் பாதிப்பு; 08 பேர் சடலங்கலாக மீட்பு மேலும் 05 பேர் மாயம்

2 weeks 1 day ago

நாவலப்பிட்டி பரகல கீழ் பிரிவில் மண் மற்றும் கற்பாறை சரிந்ததில் 65குடும்பங்களை சேர்ந்த 250பேர் பாதிப்பு; 08 பேர் சடலங்கலாக மீட்பு மேலும் 05 பேர் மாயம்

Published By: Vishnu

02 Dec, 2025 | 06:41 PM

image

குருந்துவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி பரகல கீழ் பிரிவில் தோட்டப் பகுதியில் கடந்த மாதம் 27ம் திகதி மண்சரிவு மற்றும் பாரிய கற்பாறைகள் சரிந்து விழுந்ததில் குறித்த தோட்டத்தை சேர்ந்த 65குடும்பங்களை சேர்ந்த 250பர் பாதிக்கபட்டு தற்காலிகமாக உடஹேன்தென்ன கிறேஹெட் இல 01 தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர் லயன் குடியிருப்பை சேர்ந்த 13வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளது கற்பறைகள் மற்றும் மண்மேடு சரிந்து விழுந்த பகுதியில் இருந்து இதுவரையிலும் 08பேர் சடலமாக மீற்கப்பட்தாகவும் இன்றைய தினமும் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு  மேலும் 05 பேர் கானாமல் போயுள்ளதாகவும் இவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கபாபட்டு வருவதாக குருந்துவத்த பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட ஏழு பேரின் சடலங்களும் மண்சரிவு ஏற்பட்ட பகுதியின் அருகாமையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது .இந்த விபத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் உடமைகள் அனைத்தும் மண்ணில் புதையுண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம் மண்ணில் புதையுண்ட சடலங்களை மீட்பதற்கு இரானுவத்தினரோ பொலிஸாரோ குறித்த பகுதிக்கு வரவில்லை எனவும் கடந்த இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்ட மக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளை பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கபாபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG_20251202_130906_4.jpg

IMG_20251202_130959_2.jpg

IMG_20251202_131029_1.jpg

IMG_20251202_131101_3.jpg

IMG_20251202_133013_9.jpg

IMG_20251202_131444_1.jpg

IMG_20251202_131328_2.jpg

IMG_20251202_131113_7.jpg

IMG_20251202_134119_0.jpg


நாவலப்பிட்டி பரகல கீழ் பிரிவில் மண் மற்றும் கற்பாறை சரிந்ததில் 65குடும்பங்களை சேர்ந்த 250பேர் பாதிப்பு; 08 பேர் சடலங்கலாக மீட்பு மேலும் 05 பேர் மாயம் | Virakesari.lk

இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்!

2 weeks 2 days ago

PUTIN.jpg?resize=750%2C375&ssl=1

இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்!

இலங்கை முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவுகளால் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் பெருமளவிலான சேதங்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தனது இரங்கல் செய்தியில் அவர்,

மனித உயிரிழப்புகள் மற்றும் பரவலான சேதங்களுக்கு வருத்தம் தெரிவித்தார்.

இந்த கடினமான காலகட்டத்தில் ரஷ்யா இலங்கையுடன் துணை நிற்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு தனது அனுதாபங்களையும் ஆதரவையும் தெரிவிக்குமாறு ஜனாதிபதி திசாநாயக்கவை புட்டின் கேட்டுக்கொண்டார்.

அதே நேரத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் – என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்ட இலங்கையில் பெரிய அளவிலான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தொடர்ந்து வரும் நிலையில் ரஷ்ய ஜனாதிபதியின் இந்த செய்தி வந்துள்ளது.

https://athavannews.com/2025/1454770

இளங்குமரன் எம்.பி.யைக் கண்டித்து; கறுப்புப் பட்டியுடன் கிராம அலுவலர்கள்

2 weeks 2 days ago

இளங்குமரன் எம்.பி.யைக் கண்டித்து; கறுப்புப் பட்டியுடன் கிராம அலுவலர்கள்

200176691.jpg

கிளிநொச்சி உமையாள்புரம் கிராமஅலுவர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் தாக்கப்பட்டதைக் கண்டித்து, கறுப்புப் பட்டிகளுடன் பணியில் ஈடுபடப்போவதாக கிராம அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் வெள்ளப் பேரிடர் உதவி வழங்கலின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தன்னைத் தாக்கினார் என்று கிராம அலுவலர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் அவர் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். இதையடுத்தே, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனைக் கண்டித்து ஒரு வாரத்துக்குக் கறுப்புப் பட்டியுடன் பணியில் ஈடுபடப்போவதாக கிளிநொச்சி மாவட்ட கிராம அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் சட்டரீதியான தீர்வுகள் கிடைக்காதவிடத்து மேலதிக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

https://newuthayan.com/article/இளங்குமரன்_எம்.பி.யைக்_கண்டித்து;_கறுப்புப்_பட்டியுடன்_கிராம_அலுவலர்கள்

யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு – 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் இன்னமும் தங்கியுள்ளனர்!

2 weeks 2 days ago

யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு – 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் இன்னமும் தங்கியுள்ளனர்!

adminDecember 2, 2025

5-4.jpg?fit=1170%2C816&ssl=1

யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 ஆயிரத்து 312குடும்பங்களை சேர்ந்த 51ஆயிரத்து 879 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம், காரைநகர், நல்லூர், கோப்பாய், உடுவில், தெல்லிப்பளை, மருதங்கேணி, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 1710 குடும்பங்களைச் சேர்ந்த 5ஆயிரத்து 443 பேர் 59 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டன.

சீரான காலநிலை காரணமாக சில பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருந்த மக்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை மீண்டும் வீடு திரும்பியதால் தற்போது 1264 குடும்பங்களைச் சேர்ந்த 4ஆயிரத்து 040 அங்கத்தவர்கள் 46 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டு வருகின்றன.

11 046 குடும்பங்களை சேர்ந்த 34ஆயிரத்து 718 பேர்  நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை 2 வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 322 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2025/223446/

நிவாரணங்களுடன் வந்தது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் விமானம்

2 weeks 2 days ago

02 Dec, 2025 | 09:58 AM

image

இலங்கை முகங்கொடுத்துள்ள பேரிடர் அனர்த்த நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அனுப்பிய முதல் நிவாரண உதவி விமானம் செவ்வாய்க்கிழமை (02) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை நிலையத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த விமானத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 48 தற்காலிக கூடாரங்கள், ஒரு குடும்பத்திற்குப் 14 நாட்களுக்கு போதுமான 2,592 உணவு பொதிகள், கூடாரங்கள், மீட்பு படையினருக்கான உபகரணங்கள், கடினமான பாதைகளில் செலுத்தக்கூடிய மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பெருமளவு நிவாரணப் பொருட்கள் அடங்கியிருந்தன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விமானப்படைக்கு சொந்தமான, உலகின் மிகப் பெரிய சரக்கு கொண்டு செல்லும் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படும் C-17 வகை விமானம், அபுதாபி நகரிலிருந்து இந்த நிவாரண சரக்குகளை ஏற்றி இலங்கைக்கு வந்தது.

மேலும் இதே போன்ற மேலும் 3 விமானங்கள் எதிர்வரும் சில சில நாட்களுக்குள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வரவுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிவாரண விமானம் வந்தடைந்த சமயத்தில், இலங்கையில் உள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் துணை தூதர் ரஷீத் அல் மஸ்ரூயி, இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் பணிப்பாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கப்டன் தமித்து ரம்புக்வெல்ல, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் குழுவொன்றும், இலங்கை இராணுவ அதிகாரிகள் குழுவொன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்தனர்.

633abea9-d3e9-4802-a2fc-35bd0e827e48.jpg

61d5ec44-3b09-46e5-a0da-fe22cfe5b562.jpg

b555ad86-a4b4-4cdd-b02b-56998bd7b479.jpg

edf4dd93-2408-4f4b-aeb0-2df743bc4ae3.jpg

https://www.virakesari.lk/article/232204

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நிவாரணக் குழுக்களுக்கு பொலிஸ் விடுத்துள்ள அறிவிப்பு

2 weeks 2 days ago

Published By: Digital Desk 3

02 Dec, 2025 | 09:54 AM

image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான நிவாரணக் குழுக்கள் இருப்பது, தற்போதைய வீதி மறுசீரமைப்பு பணிகளுக்கு  இடையூறாக இருப்பதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு. வூட்லர்,

இந்த நிவாரணக் குழுக்கள் வழங்கும் மதிப்புமிக்க சேவைகளுக்கு தனது மனமார்ந்த பாராட்டுகள். 

எனினும், தற்போது வீதி மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் மாவட்டங்களுக்குள் வாகனங்கள் அதிக அளவில் வருவது, மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு இடையூறாக உள்ளது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவும்,  வீடியோக்களை பதிவு செய்யவும் நிறுத்தி வைக்கப்படும் சில மோட்டார் சைக்கிள் சாரதிகளால்  இந்தப் பகுதிகளில் செயல்படும் பணியாளர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுகிறது. 

இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட வலயங்களுக்குள் நுழைபவர்களுக்கும் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துகிறது.

அதன்படி, பொதுமக்களுக்கான நிவாரணங்களை விநியோகிப்பதற்கு முறையாக ஒருங்கிணைக்க, அனைத்து நிவாரணக் குழுக்களும் அந்தந்த பொலிஸ் பிரிவுகளின் பொறுப்பதிகாரிகளை (OIC) தொடர்பு கொள்ளுஙங்கள்.

நிவாரணங்களை  வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய அனர்த்த செயல்பாட்டு மையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

பொலிஸ் சிறப்பு செயல்பாட்டு மைய தொடர்பு இலக்கங்கள்:

071-8595884

071-8595883

071-8595882

071-8595881

071-8595880

https://www.virakesari.lk/article/232205

Checked
Thu, 12/18/2025 - 08:09
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr