ஊர்ப்புதினம்

இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்!

2 weeks ago

New-Project-18.jpg?resize=750%2C375&ssl=

இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்!

கடந்த பெப்ரவரி 19 அன்று வாழைத்தோட்டம் நீதிமன்ற வளாகத்திற்குள் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதற்கு உதவியதாகக் கூறப்படும் தப்பியோடிய பெண் ‘இஷார செவ்வந்தி’ நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அண்மையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மே மற்றும் பிறரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த தகவல் தெரியவந்ததாக சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை குறிவைத்து இலங்கை பொலிஸார், இந்தோனேசிய பொலிஸார் மற்றும் இன்டர்போல் நடத்திய கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தக் கைதுகள் நடந்தன.

கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த மற்றும் பேக்கோ சமன் உள்ளிட்ட குழுவினர் தற்போது 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்படுகிறார்கள்.

https://athavannews.com/2025/1445565

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

2 weeks ago

New-Project-4-1.jpg?resize=600%2C300&ssl

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று(01) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் மண்டைதீவில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷாமி சில்வா, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ச.ஶ்ரீபவானந்தராஜா வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

வடமாகாணத்தில் கிரிக்கெட்டின் மேம்பாட்டிற்கும், இளம் வீரர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த மைதானம் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த மைதானம் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான வழிவகையை ஏற்படுத்தி, இலங்கையின் விளையாட்டுத் துறையில் புதிய கட்டத்தை ஆரம்பிக்க உள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து, நாடு முழுவதும் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காகவும், அனைத்துப் பகுதிகளிலும் உள்ள திறமையான வீரர்களுக்குச் சர்வதேசத் தரத்திலான வசதிகளை அளிப்பதற்கும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

இதேவேளை, எதிர்வரும் 3 வருடங்களில் இங்கு சர்வதேச போட்டிகள் இடம்பெறும் என ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடடதக்கது.

a7a39e94-6056-43ae-8848-a7e14bdebfe2.jpg

https://athavannews.com/2025/1445596

ஜனாதிபதியின் கவனத்தைப் பெற மயிலிட்டியில் காணி உரிமையாளர்கள் போராட்டம் - பொலிஸார் அராஜகம்!

2 weeks ago

01 Sep, 2025 | 03:30 PM

image

மயிலிட்டி துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காகச் சென்ற ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக, வலி. வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் போராட்டத்தை முன்னெடுக்க முயன்றபோது, முதியவர்கள், பெண்கள் என அனைவரையும் மிக மோசமான முறையில் பொலிஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை இந்த சம்பவத்தின்போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் பொலிஸார் மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டித் துரத்தியடித்துள்ளனர்.

மயிலிட்டி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட்கிழமை (1) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன்போது, கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேறி தற்காலிக இடங்களில் வசிக்கும் மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கடந்த பல வருடங்களாக கோரி வருகின்றனர். 

1002408175.jpg

இந்நிலையில் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளின் உரிமையாளர்கள், ஜனாதிபதியின் கவனத்தினை ஈர்க்கும் முகமாக, மயிலிட்டி பகுதியில் வீதியோரமாக அமைதியான முறையில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை நடாத்த முயன்றனர். 

இந்நிலையில் அங்கு வந்த பொலிஸார், வயோதிபர்கள், பெண்கள் என்றும் பாராமல், அவர்களை மிக மோசமான வார்த்தைகளால் திட்டி, அந்த மக்களை தமது பலத்தினை பயன்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்றி, பெண்களை ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தள்ளி, தகாத வார்த்தைகளால் பேசித் துரத்தினர்.

அவ்வேளை, செய்தி சேகரித்துக்கொண்டிருந்த  ஊடகவியலாளர்களையும் பொலிஸார் அச்சுறுத்தி அங்கிருந்து துரத்தியடித்தனர்.

1002408178.jpg

மக்களின் காணிகள் மக்களுக்கே என கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி, தான் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு, அபிவிருத்திப் பணிகளை தொடங்கிவைக்க மயிலிட்டி பகுதிக்கு சென்றார். 

அவ்வேளை, “எமது காணிகளை விடுவியுங்கள்” என அவரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக நாம் போராட்டத்தை நடாத்த முற்பட்டபோது கடந்த கால அரசாங்கத்தைப் போன்றே, இந்த அரசாங்கத்திலும், பொலிஸார் எம்மிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டுள்ளனர். 

மாற்றம் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தமிழ் மக்கள் விடயத்தில் மாற்றத்தை விரும்பவில்லை என்பதற்கு, பொலிஸார் எம்மிடம் நடந்துகொண்ட விடயம் சான்று பகிர்கிறது என காணி உரிமையாளர் ஒருவர் கவலையுடன் தெரிவித்தார். 

1002408166__1_.jpg

1002408088.jpg

1002408160.jpg

https://www.virakesari.lk/article/223933

இராணுவ பயன்பாட்டிற்காக வடக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்படும் - ஜனாதிபதி

2 weeks ago

01 Sep, 2025 | 03:11 PM

image

போரின்போது இராணுவத்தின் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட, வடக்கில் விடுவிக்கக்கூடிய அனைத்து காணிகளும் மக்களுக்காக விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட்கிழமை (1) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார். 

இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில், 

மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு.

வடக்கில் மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

WhatsApp_Image_2025-09-01_at_2.46.52_PM.

கடந்த அரசாங்கங்கள் போரை எதிர்பார்த்து பணியாற்றிய போதிலும், இந்த நாட்டில் மீண்டும் எந்த விதமான யுத்தமும் ஏற்படாத வகையில் நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் பாடுபடுகிறது.

கடந்த போரின்போது இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட, வடக்கில் விடுவிக்கக்கூடிய அனைத்து காணிகளும் மக்களுக்காக விடுவிக்கப்படும்.

நாட்டைச் சுற்றியுள்ள கடல், தீவுகள் மற்றும் காணிகளை மக்களுக்காகப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அதில் எந்த விதமான அழுத்தத்திற்கும் இடமளிக்கப்படாது எனத் தெரிவித்தார். 

மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஜனாதிபதி அடையாள ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

WhatsApp_Image_2025-09-01_at_2.46.50_PM.

இதன் கீழ், வட மாகாணத்தில் உள்ள மீனவ சமூகம் மாத்திரமன்றி, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் இருந்து வரும் மீன்பிடி படகுகளுக்கும் நீர், மின்சாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய வசதிகள், குளிர்பதன சேமிப்பு வசதிகள், வலை தயாரிப்பு நிலைய வசதிகள், ஏலவிற்பனை மண்டப வசதிகள் மற்றும்  தொடர்பாடல் பரிமாற்ற மைய வசதிகள்  என்பனவும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்த ஆண்டு அரசாங்கம்  298 மில்லியன்  ரூபா ஒதுக்கியுள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், வட  மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்  அமைச்சின் செயலாளர்  மற்றும் வட மாகாண அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படை பிரதானிகள் மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2025-09-01_at_2.46.51_PM.

WhatsApp_Image_2025-09-01_at_2.46.54_PM_

WhatsApp_Image_2025-09-01_at_2.46.51_PM_

WhatsApp_Image_2025-09-01_at_2.46.53_PM.

https://www.virakesari.lk/article/223926

சட்டவிரோத மின் வேலியில் சிக்கி , ஒருவர் உயிரிழப்பு!

2 weeks ago

சட்டவிரோத மின் வேலியில் சிக்கி , ஒருவர் உயிரிழப்பு!

written by admin September 1, 2025

death-body.jpg?fit=910%2C606&ssl=1

யாழ்ப்பாணத்தில் தான் அமைத்த சட்டவிரோத மின் வேலியில் சிக்கி , ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழையை சேர்ந்த குணரத்தினம் சிவகுமார் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அவரது மரவள்ளி தோட்டத்தை பன்றிகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக , தோட்டத்தை சுற்றி சட்டவிரோதமான முறையில் மின் வேலி அமைத்துள்ளார். இரவு வேளைகளில் மாத்திரம் , வேலிக்கு மின் இணைப்பினை வழங்கி விட்டு , காலையில் அதனை துண்டித்து விடுவதனை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்நிலையில் , நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மின் இணைப்பினை துண்டிக்க மறந்து , வேலியை தொட்ட வேளை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

அது தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, காவற்துறையினர் சடலத்தை மீட்டு,  உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைதத்ததுடன், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


https://globaltamilnews.net/2025/219905/

நல்லூர் திருவிழாவில் பொருட்களை தவறவிட்டோருக்க்கான அறிவிப்பு!

2 weeks ago

நல்லூர் திருஅறிவிப்புவிழாவில் பொருட்களை தவறவிட்டோருக்கான அறிவிப்பு!

written by admin September 1, 2025

urgent-anonsment.jpg?fit=1170%2C658&ssl=

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாக் காலத்தில் பக்தர்களால் தவறவிடப்பட்ட நிலையில் வேறுநபர்களால் கண்டெடுக்கப்பட்டு,  உற்சவக் காலப்பணிமனையில் ஒப்படைக்கப்பட்ட பொருட்கள் தற்போது மாநகரசபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அவற்றின் உரிமையாளர்கள் தகுந்த ஆதாரத்துடன் அடையாளத்தை உறுதிப்படுத்தி மாநகரசபையின் நிர்வாகக் கிளையின் அலுவலக நாள்களில் அலுவலக நேரத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி வரை பெற்றுக் கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


https://globaltamilnews.net/2025/219903/

முல்லைத்தீவில் வட்டுவாகல்,கேப்பாப்புலவில் இராணுவ முகாம்களில் உள்ள விகாரைகளின் கீழ் புதைகுழிகள்; ஆய்வுகள் செய்ய வலியுறுத்துகிறார் ரவிகரன்

2 weeks ago

முல்லைத்தீவில் வட்டுவாகல்,கேப்பாப்புலவில் இராணுவ முகாம்களில் உள்ள விகாரைகளின் கீழ் புதைகுழிகள்; ஆய்வுகள் செய்ய வலியுறுத்துகிறார் ரவிகரன்

thumbnail_1000080856-780x470.jpg

இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த பொதுமக்கள் மற்றும் போராளிகள் படுகொலைசெய்யப்பட்டு கேப்பாப்புலவு மற்றும் வட்டுவாகல் பகுதிகளில் அமைந்துள்ள இராணுவமுகாம்களின் விகாரைகளின் கீழ் புதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகள் ஆய்விற்குட்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு தமிழ் இனவழிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், தமிழர்தாயகப் பகுதிகளில் இனங்காணப்பட்ட மனிதபுதைகுழிகள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு பன்னாட்டு நீதி விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தற்போதைய தேசியமக்கள்சக்தி அரசாங்கம் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவிலிருந்து செம்மணிவரை மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் எம்.பி.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்தகாலத்தில் தமிழர்கள் மீது இனவழிப்புச் செயற்பாடுகள் இடம்பெற்றன என்பதற்கு வடக்கு, கிழக்கு தமிழர்தாயகத்தில் இனங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகளும், மனிதப் புதைகுழிகளிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளும்,சாட்சியாக இருக்கின்றன. இதனை யாருமே மறுக்கமுடியாது.

தற்போது செம்மணி மனிதப் புதைகுழி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. செம்மணியில் அகழ, அகழ எம்மவர்கள் எலும்புக்கூடுகளாக மீட்கப்படுகின்ற அவலங்களைக் காண்கின்றோம். கொலைசெய்தவனிடமே

நீதியைக் கோருகின்ற உள்ளக நீதிவிசாரணைப்பொறிமுறையில் எமக்கு கடுகளவும் நம்பிக்கை கிடையாது.

ஆகவேதான் தமிழ் இனவழிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மனிதப்புதைகுழிகள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு தொடர்சியாக பன்னாட்டு நீதி விசாரணையைக் கோருகின்றோம்.

முல்லைத்தீவில் வட்டுவாகல் மற்றும் கேப்பாப்புலவு பகுதிகளில் இராணுவமுகாம்களில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகள் அகற்றப்பட்டு விகாரைகளின் கீழ்ப்பகுதிகள் அகழ்ந்து ஆய்வுகள் செய்யப்படவேண்டும். அல்லது நவீன கருவிகளின் துணையுடன் ஸ்கேன் செய்யப்பட்டு விகாரையின் கீழ்ப்பகுதியில் உள்ள விடயங்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்படவேண்டும் எனக் கோருகின்றேன்.

2009ஆண்டு இறுதிக்கட்ட போரின்போது சரணடைந்த போராளிகள் மற்றும் மக்களை இராணுவம் கைதுசெய்துள்ளது. அதன்பின்னர் அவ்வாறு இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டவர்கள் வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலயத்திற்கு அருகே கடற்கரைநோக்கி போகும் பாதையினூடாக பேருந்துகளில் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். அதேபோல் சரணடைந்த பலர் கேப்பாப்புலவு நோக்கியும் இராணுவத்தினரால் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவ்வாறு இராணுவத்தால் பேருந்துகள் மூலம் அழைத்துச்செல்லப்பட்டவர்கள் திருப்பி அழைத்து வரப்படவில்லை. என்ன ஆனார்கள் என்பதும் தெரியாமலுள்ளது. அப்படியெனில் அவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டவர்கள் எங்கேபோனார்கள்.

தனிச் சைவத் தமிழ் கிராமமான வட்டுவாகலில் எதற்கு பாரிய விகாரை அமைக்கப்பட்டது. அந்த விகாரையை அகற்றி அகழ்வாய்வுகளை மேற்கொள்ளவேண்டும். அல்லது விசேட ஸ்கேன் கருவிகளைப் பயன்படுத்தி பரிசோதனை மேற்கொண்டு உண்மைத்தன்மைகள் வெளிப்படுத்தப்படவேண்டும். அதேபோல் கேப்பாப்புலவு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள பாரிய விகாரையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும். ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

இதுதொடர்பில் ஏற்கனவே பலதடவைகள் எம்மால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றிலும் இந்த கேப்பாப்புலவு மற்றும் வட்டுவாகல் இராணுவமுகாம்களில் அமைந்துள்ள விகாரைகள் ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டுமென கோரியுள்ளேன். இதுவரை அந்த விகாரைகளை ஆய்வுக்குட்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றார்.

https://akkinikkunchu.com/?p=339154

மட்டக்களப்பில் 3 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் , 2 சிறுமிகள் கர்ப்பம் - இரு சிறுவர்கள் கைது

2 weeks ago

மட்டக்களப்பில் 3 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் , 2 சிறுமிகள் கர்ப்பம் - இரு சிறுவர்கள் கைது

By kugen

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் ஒருவாரத்தில் 3 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 13 மற்றும் 17 வயதுகளுடைய இரு சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் இரு ஆண் சிறுவர்களை கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்டத்திலுள்ள ஒரு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் வாந்தியெடுத்த 17 வயது சிறுமி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்தபோது அவர் 3 மாத கர்ப்பிணியாக இருப்பதை வைத்தியர்கள் கண்டறிந்தனர்.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது குறித்த சிறுமியின் தாயார் தந்தையர்கள் மீன்பிடி தொழிலுக்காக கடற்கரை பகுதியில் மீன் வாடியில் இருந்து வருவதாகவும் வீட்டில் குறித்த சிறுமியும் அவரது சகோதரரும் தங்கியிருந்து வந்துள்ளனர்.

இதன்போது, கடந்த 3 மாத்திற்கு முன்னர் சம்பவதினம் குறித்த சிறுமி வீட்டிற்கு இரவு வீதியால் நடந்து வரும்போது இருட்டில் வந்த ஒருவன் தன்னை இழுத்துச் சென்று துஸ்பிரயோகம் செய்ததாகவும், அவனை அடையாளம் தெரியாது என பொலிஸாரின் விசாரணையின் போது தெரியவந்துள்ளதையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை, குறித்த அதே பொலிஸ் பிரிவில் 13 வயது சிறுமி ஒருவரை 3 மாத கர்ப்பிணியாக்கிய 17 வயது சிறுவன் ஒருவரை கைது செய்ததனர். இதன்போது கைது செய்யப்பட்ட சிறுவன் நான் இதற்கு காரணம் இல்லை. எனது நண்பன் தான் இந்த சம்பவத்துக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ள நிலையில், குறித்த சிறுமி இல்லை இவன்தான் காரணம் என முறைப்பாட்டில் தெரிவித்ததையடுத்து கைது செய்யப்பட்ட சிறுவனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில் மாவட்டதிலுள்ள இன்னொரு பொலிஸ் நிலைய பிரிவின் கீழ் உள்ள பிரதேசம் ஒன்றில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

இவ்வாறு ஒரு வாரத்தில் 3 சிறுமிகள் மாவட்டத்தில் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.battinews.com/2025/08/3-2.html

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய சட்டம்!

2 weeks ago

New-Project-7.jpg?resize=750%2C375&ssl=1

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய சட்டம்!

இன்று (01) முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் சீட் பெல்ட் (ஆசனப் பட்டிகள்) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட முடிவை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய வீதிகள் பாதுகாப்பு சபை தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது சீட் பெல்ட்கள் பொருத்தப்படாத சில வாகனங்களில் அவற்றைப் பொருத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 31 அன்று, அதிவேக ‍நெடுஞசாலைப் பேருந்துகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கிடையில், ஆகஸ்ட் 30 அன்று, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரும், சபைத் தலைவருமான பிமல் ரத்நாயக்க, இந்த முயற்சி “க்ளின் ஸ்ரீலங்கா” திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக செயல்படுத்தப்படுகிறது என்று விளக்கினார்.

Athavan News
No image previewஅதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய சட்டம்!
இன்று (01) முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் சீட் பெல்ட் (ஆசனப் பட்டிகள்) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட முடிவை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவ

எரிபொருள் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

2 weeks ago

Published By: Vishnu

31 Aug, 2025 | 10:28 PM

image

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி, இன்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக 289 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் புதிய விலை 283 ரூபாவாகும்.

சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 313 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அதன் விலை 325 ரூபாவாக இருந்தது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 305 ரூபாவிலிருந்து 299 ரூபாவாக அதன் புதிய விலை குறைக்கப்பட்டுள்ளது.

எனினும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. ஒக்டேன் 95 பெற்றோல் ஒரு லீற்றர் 341 ரூபாவிற்கும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 185 ரூபாவிற்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.

https://www.virakesari.lk/article/223877

பயங்கரவாதத் தடைச்சட்டம் இரத்து செய்யப்பட்டால் குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம் - சிரேஷ்ட சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா எச்சரிக்கை

2 weeks ago

31 Aug, 2025 | 09:03 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட்டால், அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அபாயம் உள்ளது என சிரேஷ்ட சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்தார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இந்த மாதத்தில் வரைவு செய்யப்படும் என இதுதொடர்பில் ஆராய்ந்து புதிய சட்டமூலம் தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு, புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டால், அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அபாயம் உள்ளது. அதனால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் அதே நேரத்தில், திட்டமிடப்பட்ட குற்றச் சட்டத்தையும் முன்னிலைக்கு கொண்டுவர வேண்டும்.

திட்டமிடப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் இந்தச் சட்டம் மிகவும் முக்கியமானது. அதனால் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும், அதேநேரம் திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்தை தடுக்கும் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச்செய்வது என்பது எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்ட விடயமாகும். அதனால்   செப்டம்பர் தொடக்கத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் வரைவை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.virakesari.lk/article/223870

காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக நீதிமன்றம் கோரிய ஆவணத்தை கடற்படை வழங்கவில்லை!

2 weeks 1 day ago

Published By: Digital Desk 3

31 Aug, 2025 | 10:55 AM

image

இறுதிக்கட்டப் போர் நிகழ்ந்த காலகட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரில் ஒரு தொகுதியினரை தடுத்து வைத்திருந்த கடற்படை அதிகாரிகள் குழுவொன்றுடன் தொடர்புடைய ஆவணத்தை வழங்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குக் கீழ்ப்படிவதற்கு கடற்படை தவறியுள்ளமை நீதிமன்றத்தின் முன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலையின் பிரபல ‘கன்சைட்’ நிலக்கீழ் வதைமுகாமை கண்காணித்ததன் பின்னர் அங்கு செயற்படும் விசேட புலனாய்வுப் பிரிவு எனும் குழுவை கலைக்குமாறு கோரி அன்றைய கடற்படை புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக பணியாற்றிய நிஷாந்த உலுகேதென்னவால் கடற்படைத் தளபதிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தின் பிரதியை கடற்படை தமக்கு வழங்கவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.  

காணாமலாக்கப்பட்ட ஒருவர் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் ஐவருக்கும் பொலிஸ் அதிகாரிகள் அறுவருக்கும் எதிரான வழக்கின் விசாரணையின்போது பொல்கஹவெல நீதவான் பிரசாந்த பெர்னான்டோ அக்கடிதத்தின் பிரதியொன்றை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்குமாறு  இரண்டாவது தடவையாகவும் கடற்படைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

நபரொருவரை காணாமலாக்கியமை தொடர்பான விசாரணைக்கு அமைவாக ஒரு மாதத்துக்கு முன் இரகசியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் தமித் நிஷாந்த சிரிசோம உலுகேதென்ன மீண்டும் ஓகஸ்ட் 27ஆம் திகதி நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்துக்கு இந்த விடயத்தை தெரிவித்தது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிராக சாட்சியங்களை முன்வைக்கத் தவறியுள்ளமையால் அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு அட்மிரல் உலுகேதென்ன சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி மகேஷ் கிரிஷாந்த நீதவானிடம் கோரிக்கை விடுத்த சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன அதற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் சந்தேகநபரை விடுதலை செய்வது பொருத்தமற்றது என சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.

கேகாலையைச் சேர்ந்த சாந்த சமரவீர என்பவரை கடத்திக் கொண்டுபோய் திருகோணமலை 'கன்சைட்'  கடற்படை வதைமுகாமில் தடுத்து வைத்து காணாமலாக்கியமை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை செப்டம்பர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் பிரசாந்த பெர்னாண்டோ உத்தரவு பிறப்பித்தார்.

சாந்த சமரவீர தடுத்து வைக்கப்பட்டிருந்த கன்சைட் வதைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் உள்ளிட்ட பதினொரு பேரில் சிலரது பெற்றோர்களும் வழக்கு விசாரணை தினத்தன்று சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுடன்  பொல்கஹவெல நீதிமன்றத்துக்கு சமுகமளித்திருந்தனர்.

சாந்த சமரவீரவை கடத்தி திருகோணமலை 'கன்சைட்'  கடற்படை வதைமுகாமில் தடுத்து வைத்து காணாமலாக்கியமை தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பில் நீதிமன்றத்தின் முன்னிலையில் பொலிஸ் சார்ஜண்ட் 38640 பண்டார, பொலிஸ் சார்ஜண்ட் 37611 ராஜபக்‌ஷ மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்க ஆகியோர் நீதிமன்றில் தகவல்களை சமர்ப்பித்தனர்.

இலங்கை கடற்படையால் அறிவிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய 2009ஆம் ஆண்டில் போர் நிறைவுக்கு வந்ததன் பின்னர் அட்மிரல் உலுகேதென்ன மூன்று மாதத்திற்கும் மேற்பட்ட காலம் கடற்படை புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றினார்.

2010 ஒக்டோபர் முதலாம் திகதி கடற்படை புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக  நியமனம் பெற்றதன் பின்னர் அப்போதைய கடற்படைத் தளபதியான அட்மிரல் சோமதிலக திசாநாயகவிடமிருந்து பெற்ற எழுத்து மூல அனுமதிக்கு அமைவாக திருகோணமலை கன்சைட் முகாமை பார்வையிடுவதற்குச் சென்றதாக சிரிசோம உலுகேதென்ன அறிவித்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஜூலை 30 ஆம் திகதி பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தது.

அதன்போது அங்கு 40 - 60 நபர்களை தடுத்து வைத்திருந்ததாக உலுகேதென்ன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் தெரிவித்ததாக அத்திணைக்களம் கடந்த வழக்குத் தவணையின்போது நீதிமன்றத்துக்கு அறிவித்தது.

2010 ஜூலை 22 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சில நாட்களின் பின்னர் காணாமலாக்கப்பட்ட கனேராலலாகே சாந்த சமரவீர தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக வெளிப்படுத்தப்பட்டுள்ள கன்சைட் கடற்படை வதைமுகாம் அப்போது கடற்படை புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த நிஷாந்த உலுகேதென்னவின் கீழ் செயற்பட்டு வந்ததன் காரணமாகவே  இலங்கை கடற்படையின் 24 ஆவது கடற்படைத் தளபதியான அவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் ஜூலை 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

திருகோணமலை நிலக்கீழ் கன்சைட் முகாம் தமது பொறுப்பில் இருந்தாலும் அங்கு விசேட புலனாய்வுப் பிரிவு என்ற பெயரில் அறியப்படும் ஓர் அலகு செயற்பட்டதாகவும் அது கடற்படை புலனாய்வுப் பிரிவால் செயற்படுத்தப்பட்ட அலகு அல்ல எனவும் நிஷாந்த உலுகேதென்ன தெரிவித்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கடந்த வழக்குத் தவணையின் போது  நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடற்கரையின் உளவுப் பிரிவுடன் தொடர்பற்றது எனக் கூறப்படும் அந்த புலனாய்வுப் பிரிவுக்கு அப்போது கமாண்டர் டீ.கே.பி. தசநாயக்க கட்டளை வழங்கியதாகவும் கடற்படையின் உறுப்பினர்களான ரணசிங்க, பொடி குமார, லொகு குமார, ரத்நாயக்க, சந்தமாலி மற்றும் கௌசல்யா ஆகிய அறுவர் அவரின் கீழ் இருந்ததாகவும் அந்த விசேட புலனாய்வுப் பிரிவு தம்மால் கலைக்கப்பட்டதாகவும் அட்மிரல் உலுகேதென்ன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

2008-09 காலப்பகுதியில் இளைஞர்கள் உள்ளிட்ட பதினொரு பேர் கடத்திக் கொண்டு போய் திருகோணமலை கன்சைட் வதைமுகாமில் தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக விசாரணை செய்யும் இரகசியப் பொலிஸ் அதிகாரிகளிடம் சுமார் ஓராண்டு காலம் கன்சைட் வதைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடற்படை புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தரான பஸ்நாயக்க முதியன்சலாகே விஜயகாந்த் என்ற பொடிமல்லி என்பவர் சாந்த சமரவீர தன்னுடன் சிறை வைக்கப்பட்டிருந்ததாகக் கூறியிருந்தார்.

இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரகீத் நிசங்சல விதானாரச்சி என்பவரும் அவர்களுடன் இருந்ததாக பொலிஸார் மேலும் கண்டுபிடித்துள்ளனர்.

கேகாலை சாந்த சமரவீரவை கடத்தி திருகோணமலை 'கன்சைட்'  கடற்படை வதை முகாமில் தடுத்துவைத்து காணாமலாக்கியமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன தொடர்பாக நடைபெற்ற கடந்த வழக்குத் தவணையில் பின்னர் அது தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்த ஒரு கூற்றினால் விசாரணை அதிகாரிகளுக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன உள்ளிட்ட சிலர் அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அது தொடர்பிலும் தற்போது ஒரு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஓகஸ்ட் 27 ஆம் திகதி பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/223815

நன்மைகள் இருப்பின் உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களுக்கு அனுமதி - அரசாங்கம்

2 weeks 1 day ago

31 Aug, 2025 | 09:09 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

நாட்டிற்கு கிடைக்கும் நன்மைகளின் அடிப்படையிலேயே உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களுக்கு இலங்கை கடற்பரப்புக்குள் நுழைய இனி அனுமதியளிக்கப்படும் என தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்  பிமல் ரத்நாயக்க, இதன் போது இந்தியாவா - சீனாவா அல்லது அமெரிக்காவா என்பது எமக்கு முக்கியமில்லை என்றும் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவது குறித்து தீர்மானிக்க வெளிவிவகார அமைச்சு விசேட குழு அமைத்து கலந்துரையாடி வருகிறது. இவ்வாறான ஆய்வுக்கப்பல்களின் வருகை குறித்து ஏனைய நாடுகள் முன்னெடுக்கும் பொறிமுறைகள் தொடர்பாகவும் ஆராய்ந்து பொதுவானவொரு திட்டத்தை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சீனா மாத்திரம் அல்ல வேறு எந்தவொரு நாட்டினதும் ஆய்வுக்கப்பல்கள் இலங்கைக்கு வருவதாயின், நாட்டிற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மறுபுறம் இவ்வாறான ஆய்வுக்கப்பல்கள் வரும் போது உலகத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதனையும் ஆராய வேண்டும். ஏனெனில் வல்லரசு நாடுகளுக்கு இடையில் போர் சூழலும் போட்டித்தன்மையும் காணப்படுகின்றமை இரகசியமான விடயமல்ல.

எனவே ஏவுகணை தாக்குதல்கள், புவிசார் அரசியல் நலன்கள், ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் கலாசார விஜயங்கள் என பல கோணங்களில் ஆய்வுக்கப்பல்களின் வருகையை கவனத்தில் கொள்ள வேண்டியதுள்ளது. எனவே தான் உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்கள் வருகையை விசேட கண்ணோட்டத்தில் நோக்குகிறோம்.

இந்த விடயத்தில சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா என வேறுப்படுத்தி பார்க்க விரும்ப வில்லை. இறுதியில் இலங்கைக்கு கிடைக்கும் நன்மைகளின் அடிப்படையிலேயே ஆய்வுக்கப்பலை அனுமதிப்பதா இல்லையா என்ற தீர்மானம் எடுக்கப்படும்.

இலங்கை போன்ற சிறிய நாடுகள் எவ்வாறு உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களை அனுமதிக்கிறது என்ற உலக படிப்பினையுடனான திட்ட வரைபை வெளிவிவகார அமைச்சின் சிறப்பு குழு விரைவில் அமைச்சரவைக்கு சமர்பிக்கும். இதன் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/223801

செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணைகள் தேவையில்லை – அரசாங்கம் அறிவிப்பு

2 weeks 1 day ago

செம்மணி மனித புகைக்குழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணைகள் தேவையில்லை – அரசாங்கம் அறிவிப்பு

31 Aug, 2025 | 09:09 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

நாட்டின் தற்போதைய சூழலில் சர்வதேச விசாரணைகள் அநாவசியமான குழப்பத்தை ஏற்படுத்துமே தவிர நீதியை பெற்றுக்கொடுக்க வழிவகுக்காது. எனவே செம்மணி மனித புகைக்குழி விவகாரத்திற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு அனுமதியளிக்க போவதில்லை என தெரிவித்துள்ள அரசாங்கம், உள்ளக விசாரணை பொறிமுறைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் மற்றும் வழிகாட்டல்களை ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளவதில் அரசாங்கம் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.

செம்மணி மனித புதைக்குழி விவகாரம் மற்றும் ஜெனிவா மனத உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார்.  

ஆவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பிற்குள் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என்பதை 2009 மற்றும் 2010 ஆண்டுகளில் நாங்கள் வலியுறுத்தி இருந்தோம். ஆனால் முன்னாள் பிரதம நீதியரசர் சிறியாணி பண்டாரநாயக்கவை ராஜபக்ஷர்கள் வெளியேற்றிய விதததிற்கு பின்னர் உலகிற்கு எம்மாள் எதுவும் கூற முடியாது போனது.

ஆனால் எமது ஆட்சியில் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை வெளிப்படுத்தி உள்ளோம். 2005 ஆம் ஆண்டில் தாரகி சிவராம் போன்ற ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். இவ்வகையான சம்பவங்களை மீள் விசாரணைக்கு எடுக்குமாறு கடந்த பெப்ரவரி மாதம் ஜனாதிபதி உத்திரவிட்டார்.

பாரின் பின்னர் செய்ய குற்றங்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. நாம் ஆட்சிக்கு வரும் போது செம்மணி மனித புதைக்குழியில் 30 எழும்புக்கூடுகளே கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

அங்குள்ள காவலர்களுக்கும் அரசாங்கமே ஊதியம் வழங்குகின்றது. செம்மணி மாத்திரம் அல்ல, கொக்குத்தொடுவாய், மண்டைத்தீவு, மன்னார், கொழும்பு துறைமுகம் என பல இடங்களில் மனித புதைக்குழிகள் இருக்கின்றன. அவற்றை தோண்டும் பணிகளும் ஆரம்பிக்கப்படும். காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம் மீள நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளது. எனவே அரசாங்கம் என்ற ரீதியில் இந்த விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுக்க விரும்புகிறது.  

இந்த புதைக்குழிகளின் உரிமையாளர்கள் ரணில் மற்றும் ராஜபக்ஷர்களே தவிர நாம் அல்ல. சிலர் வடக்கிலும் உள்ளனர். செம்மணி மனித புதைக்குழியுடன் தொடர்புடையவர்கள் வடக்கில் உள்ளுராட்சிமன்றங்களுக்கும் தெரிவாகியுள்ளனர். எனவே சுயாதீனமான நீதிமன்ற கட்டமைப்பு நாட்டில் காணப்படும் போது, சர்வதேச விசாரணைகள் தேவையில்லை. எனவே தற்போதைய சூழலில் சர்வதேச விசாரணைகள் அநாவசியமான குழப்பத்தை ஏற்படுத்துமே தவிர நீதியை பெற்றுக்கொடுக்காது.

இருப்பினும்  உள்ளக விசாரணைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளுக்கு அனுமதியளிக்க தயாராகவே உள்ளோம். குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வழிகாட்டல்கள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் தேவைப்படலாம்.

மறுபுறம் சர்வதேச விசாரணைகள் நாட்டிற்குள் வந்ததும், தோல்வியடைந்துள்ள இனவாதிகள் மீள எழுவார்கள். குறிப்பாக ராஜபக்ஷர்கள் இதனை காரணம் காட்டி இனவாத அரசியலை முன்னெடுப்பார்கள். 6 தடவைகள் பிரதமராக இருந்த ரணிலை நீதவான் நீதிமன்றத்தினால் கைது செய்ய முடியும் என்றால் எமது நாட்டின் நீதித்துறை எவ்வாறு உள்ளது என்பதை அனைவராலும் புரிந்துக்கொள்ள முடியும் என்றார்.

https://www.virakesari.lk/article/223800

300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாண்டில் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் - பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

2 weeks 1 day ago

30 Aug, 2025 | 05:46 PM

image

(எம்.மனோசித்ரா)

எதிர்க்கட்சிகள் அரச சேவையை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம். அரச சேவைக்கு பொறுத்தமற்றவர்கள் சேவையில் இருக்கக் கூடும். அவ்வாறான 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாண்டில் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

மஹரகம நகரசபையில்  சனிக்கிழமை (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்க்கட்சிகள் அரச சேவையை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.

எவராயினும் நேர்மையாக பணியாற்றினால் யாருடைய அச்சுறுத்தலுக்கும் பயப்பட வேண்டிய நிலைமை ஏற்படாது. அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கான சேவையை சரிவர நிறைவேற்றும் பட்சத்தில் நாம் அவர்களை பாதுகாப்போம்.

எவ்வாறிருப்பினும் அரச சேவைக்கு பொறுத்தமற்ற சிலர் இருக்கலாம். பொலிஸில் கூட அவ்வாறானவர்கள் இருக்கக் கூடும். அண்மையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் செய்த சட்ட விரோத செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பொலிஸாரின் எண்ணிக்கை குறைவாகும். அதற்காக சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபபவர்கள் தொடர்ந்தும் சேவையில் நீடிக்க முடியாது. இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 300 பொலிஸார் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

தவறிழைப்பவர்களை எக்காரணத்துக்காகவும் அரச சேவையில் வைத்திருக்கப் போவதில்லை. அதேபோன்று ஏனைய துறைகளிலும் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த நிறுவனங்களின் பிரதானிகளுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே மக்களின் அபிலாஷைகளை உணர்ந்து பணியாற்றுமாறு சகல அரச உத்தியோகத்தர்களையும் கேட்டுக் கொள்கின்றோம். அவ்வாறு செய்தால் மாத்திரமே நாடு என்ற ரீதியில் முன்னோக்கி பயணிக்க முடியும் என்றார்.

https://www.virakesari.lk/article/223794

சஷேந்திர ராஜபக்ஷவுக்கு 4000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள்!

2 weeks 1 day ago

New-Project-68.webp?resize=750%2C375&ssl

சஷேந்திர ராஜபக்ஷவுக்கு 4000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள்!

நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள் முன்னாள் அமைச்சர் சஷேந்திர ராஜபக்ஷவிற்கு  4000 கோடி ரூபாய்  மதிப்புள்ள சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ஷவின் மகனான சஷேந்திர ராஜபக்ஷ, அரசியலில் முன்னதாக ஊவா மாகாண சபையின் தலைவராகவும், பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இராஜாங்க அமைச்சராகவும் பணியாற்றினார்.

அவரிடம், BMW கார், V8 வகை கார், நிஷான் வகை பெட்ரோல் கார் மற்றும் யாரிஸ் வகை கார் போன்ற நான்கு ஆடம்பர மோட்டார் வாகனங்கள் உள்ளன. இவை மனோஜ் ஏகநாயக்க என்ற எழுத்தாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சஷேந்திர ராஜபக்ஷவிற்கு நுகேகொடை, நாவல வீதியில்  40 கோடி  ரூபாய் மதிப்புள்ள சொகுசு வீடு மற்றும் நிலமும்,  பாலவத்த வீதியில்  11 கோடி ரூபாய்  மதிப்புள்ள வீடும், கொழும்பு 7, ரோஸ்மீட் பிரதேசத்தில் 4 அடுக்கு கொண்ட  55 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர வீடும், தெஹிவளையில் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும்  நாரஹென்பிட்டவில்  20 கோடி ரூபாய்  மதிப்புள்ள நிலமும் இருப்பதாக   தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவைதவிர நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான, பத்தரமுல்லையில்  70 பெர்ச் அளவுள்ள ஒரு நிலத்தை, சஷேந்திர ராஜபக்ஷ, தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தவறான ஆவணங்களை உருவாக்கி, தனது பெயரில் பெற்றுள்ளார். அதன் மதிப்பு 70 கோடி ரூபாய்  ஆகும்.

அத்துடன் சீதுவ பிரதேசத்தில் ஒரு வீடு மற்றும் நிலம் 300 கோடி மதிப்பில் சமீபத்தில் விற்கப்பட்டதாகவும், கதிர்காமம் பிரதேசத்தில் ஒரு ஹோட்டல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சஷீந்திர ராஜபக்ஷவிடம், அவுஸ்திரேலியாவில் சொகுசு வீடுகள் இரண்டு உள்ளன. அவற்றை அங்கு அவரது மகன் கண்காணிக்கிறார் எனக் கூறப்படுகின்றது.

இவை தவிர, சஷேந்திர ராஜபக்ஷவிடம் இன்னும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக ஊகிக்கப்பட்டு வருகிறது. சில சொத்துக்கள் அவர் பெயரிலும், சில நெருக்கமான நபர்களின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முழுமையான விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1445387

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு , மயிலிட்டியில் அடித்து நொறுக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகள்

2 weeks 1 day ago

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு , மயிலிட்டியில் அடித்து நொறுக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகள்

August 31, 2025 3:38 pm

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு , மயிலிட்டியில் அடித்து நொறுக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகள்

மயிலிட்டி துறைமுக புனரமைப்பு பணிகளை நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ள நிலையில், மயிலிட்டி துறைமுக பகுதிகளில் உள்ள தமிழக கடற்தொழிலாளர்களின் படகுகள் ஜே.சி.பி வாகனம் மூலம் அடித்து உடைக்கப்பட்டு , அங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட வேளைகளில் அவர்களின் படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றி , மயிலிட்டி மீன்பிடி துறைமுக பகுதிகளில் தடுத்து வைத்திருந்தனர்.

அவ்வாறு 124 படகுகள் தற்போது மயிலிட்டி மீன்பிடி துறைமுக பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நீதிமன்றங்களில் தனித்தனி வழக்குகளாக நடைபெற்று வரும் நிலைகளில் சில வழக்குகள் முடிவடைந்துள்ளன.

அவற்றின் அடிப்படையில் இதுவரையில் முடிவற்ற வழக்குகளில் 33 படகுகள் அரச உடமையாக்கப்பட்டுள்ளன. மேலும் 07 படகுகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏனைய படகுகள் மீதான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையிலையே நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி மயிலிட்டி துறை முக பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அரசுடைமையாக்கப்பட்ட 33 படகுகளையும் ஜே.சி.பி வாகனம் மூலம் அடித்து உடைத்து அவற்றை அச்சுவேலி தொழில் பேட்டைக்கு எடுத்து செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை உரிமையாளர்களிடம் கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட 07 படகுகளையும் அதன் உரிமையாளர்கள் கடந்த 25ஆம் திகதி தமிழகத்தில் இருந்து கடற்படையினரின் பாதுகாப்புடன் மயிலிட்டி பகுதிக்கு வந்த தமது படகுகளை பார்த்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

https://oruvan.com/tamil-nadu-fishermens-boats-being-smashed-in-myiliti-ahead-of-presidents-visit/

அதிக நேரம் நிகழும் சந்திர கிரகணம் ; காணத்தவறாதீர்கள்

2 weeks 1 day ago

அதிக நேரம் நிகழும் சந்திர கிரகணம் ; காணத்தவறாதீர்கள்

31 Aug, 2025 | 03:51 PM

image

செப்டம்பர் 7 ஆம் திகதி இரவு வானத்தில் முழு சந்திர கிரகணம் தோன்றுவதால், இலங்கையர்கள் மற்றும் வானியல் ஆர்வலர்களுக்கு பார்வையிடும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்த அற்புதமான நிகழ்வு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முழுமையாகத் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் தலைவரும், வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளரும் ஆர்தர் சி கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். 

பூமி சூரியனை சுற்றி வரும் பாதையிலும், சந்திரன் பூமியை சுற்றி வரும் பாதையிலும் சில நேரங்களில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும். 

அப்போது, சூரிய ஒளி பூமியில் விழுந்தாலும் சந்திரன் மீது விழாது. இதனால் சந்திர கிரகணம் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

சந்திர கிரகணம் நிகழும் நேரம் பின்வருமாறு, 

கிரகணம் ஆரம்பம் - இரவு 8:58 (செப்டம்பர் 7) 

பகுதி கிரகணம் ஆரம்பம் - இரவு 9:57 

முழுமையான கிரகணம் - இரவு 11:01 

அதிகபட்ச கிரகணம் - நள்ளிரவு 11:42 

கங்கண கிரகணம் முடிவு - அதிகாலை 12:22 (செப்டம்பர் 8) 

பகுதி கிரகணம் முடிவு - அதிகாலை 1:26 

கிரகணம் முடிவு - அதிகாலை 2:25

https://www.virakesari.lk/article/223852

கோட்டாபய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைப்பு

2 weeks 1 day ago

கோட்டாபய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைப்பு

adminAugust 31, 2025

Gotabaya.jpg?fit=650%2C433&ssl=1

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  வாக்குமூலம்   பெறுவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியமை  தொடர்பாக முன்னாள்  காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோன் அளித்த வாக்குமூலம் தொடர்பிலேயே  அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது போதிலும் அவர் அழைக்கப்பட்ட திகதி குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

https://globaltamilnews.net/2025/219865/

ஹெரோயினுடன் கைதான இளைஞனை விடுவிக்க லஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கைது

2 weeks 1 day ago

ஹெரோயினுடன் கைதான இளைஞனை விடுவிக்க லஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கைது

adminAugust 31, 2025

0-9.jpg?fit=1170%2C878&ssl=1

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த நபரை கைது செய்யாது தவிர்க்க 20 இலட்ச ரூபாய் இலஞ்சம் வாங்க முற்பட்ட மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மூவர்  காவல்துறையினரினால் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்

மாதகல் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த இளைஞன் ஒருவர் மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தரினால் கைது செய்யப்பட்டார்.   கைதில் இருந்து குறித்த நபரை விடுவிக்க , 30 இலட்ச ரூபாய் பணம் இளைஞனிடம் லஞ்சமாக கோரியுள்ளனர். அதற்கு இளைஞன் சம்மதிக்காது , 20 இலட்ச ரூபாய் கொடுப்பதற்கு சம்மதித்ததை அடுத்து , இளைஞனை விடுவித்து , சங்கானையில் உள்ள மதுவரி திணைக்கள அலுவலகத்திற்கு வந்து பணத்தினை தருமாறு கூறி சென்றுள்ளனர்.

அதனை அடுத்து , தன்னிடம் லஞ்சம் கோரிய விடயம் தொடர்பாக இளைஞன் காங்கேசன்துறை பிரிவு குற்றத்தடுப்பு  காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளார்.  காவல்துறையினர் குறித்த  இளைஞனுடன் சிவில் உடையில் மதுவரி திணைக்களத்திற்கு சென்று , இளைஞனை ஒரு தொகை பணத்தினை கொடுக்க வைத்து , பணத்தினை பெற முயன்ற மூன்று அதிகாரிகளையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்த  நடவடிக்கை எடுத்துள்ள காவல்துறையின ர்  இலஞ்சமாக கொடுக்க முற்பட்ட ஒரு தொகை பணத்தினை  சான்று பொருளாக    மன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்

https://globaltamilnews.net/2025/219869/

Checked
Mon, 09/15/2025 - 22:38
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr