ஊர்ப்புதினம்

இன்று முதல் அனர்த்தத்தில் காணாமல் போன 193 பேருக்கும் இறப்புப் பதிவுச் சான்றிதழ் வழங்கும் திட்டம் !

3 days 20 hours ago

New-Project-88.jpg?resize=750%2C375&ssl=

இன்று முதல் அனர்த்தத்தில் காணாமல் போன 193 பேருக்கும் இறப்புப் பதிவுச் சான்றிதழ் வழங்கும் திட்டம் !

நாட்டை உலுக்கிய “டித்வா” புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் காணாமல் போன 193 நபர்களின் இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை விநியோகிக்க பதிவாளர் நாயகம் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கடந்த 2 ஆம் திகதி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, அவசர அனர்த்த நிலைமை காரணமாக காணாமல் போன ஒருவரைப் பற்றி 2 வாரங்களுக்குப் பின்னரும் தகவல் கிடைக்கவில்லை என்றால், அவருக்கு அல்லது அவளுக்கு இறப்புப் பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இந்த அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை காணாமல் போயுள்ள 203 நபர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நட்டஈட்டுப் பணத்தை விரைவில் பெற்றுக்கொள்ளும் நோக்கில், இந்தச் சான்றிதழ்களை வழங்க அந்தத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதற்கான தேவையான சட்ட ஏற்பாடுகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த அனர்த்தம் காரணமாக நபர் ஒருவர், உறவினர் அல்லது நண்பர் காணாமல் போயுள்ளார் என்பதை உரிய பிரதேச கிராம உத்தியோகத்தர் உறுதிப்படுத்தினால், அந்த மாவட்ட பிரதிப் பதிவாளருக்கு இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அனர்த்தத்துக்கு உள்ளாகி காணாமல் போன நபர் தொடர்பில் ஆட்சேபனைகள் எழவில்லை என்றால், பிரதேச செயலாளரினால் அங்கீகாரத்துக்காக அனுப்பப்படும் விண்ணப்பத்தை, பதிவாளர் நாயகத்தினால் அதிகாரம் அளிக்கப்பட்ட பிராந்திய பிரதி அல்லது உதவிப் பதிவாளர் நாயகம் அங்கீகரிப்பார்.

இதேவேளை, மத்திய மாகாண மக்களுக்காக இறப்புச் சான்றிதழ் விநியோகித்தல், காணாமல் போனவர்களின் இறப்புச் சான்றிதழ் விநியோகித்தல் உள்ளிட்ட சேவைகளை வழங்கும் விசேட நடமாடும் சேவையொன்று இன்றும் (13) மற்றும் நாளையும் (14) நடைபெறுகின்றன.

குறித்த சேவைகள் அனைத்தையும் அந்தச் சந்தர்ப்பத்திலேயே இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதிப் பதிவாளர் நாயகம் தரங்க சுபாஷினி தெரிவித்தார்.

சேதமடைந்த திருமண, பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளை வழங்குவதும் இந்த நடமாடும் சேவையின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கமைய இன்றையதினம் (13) நடமாடும் சேவையானது உடஹேன்தென்ன, இலக்கம் 1, தமிழ் மகா வித்தியாலயம், பரகல ஜனபதத்தில் காலை 9 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு – 0812224470 எனும் இலக்கத்திற்கு அழைக்குமாறும்
நாளையதினம் (14) நடமாடும் சேவை தொலுவ பிரதேச செயலகத்தில் காலை 9 மணி முதல் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1456227

யாழில். ஒரு இளைஞனின் மரணம் இரண்டு உயிர்களை காப்பாற்றியது

3 days 22 hours ago

யாழில். ஒரு இளைஞனின் மரணம் இரண்டு உயிர்களை காப்பாற்றியது

Published By: Vishnu

13 Dec, 2025 | 02:22 AM

image

வவுனியாவில் விபத்தில் சிக்கிய இளைஞன், இருவரின் உயிரை காப்பாற்றி , தனது மண்ணுலக வாழ்வை முடித்துக்கொண்டமை பலர் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது. 

3__4_.jpg

குறித்த இளைஞனின் பூதவுடலுக்கு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை கூடத்தில் வைத்தியர் குழாம் தமது இறுதி அஞ்சலியை செலுத்தி இருந்தனர். 

3__3_.jpg

வவுனியாவை சேர்ந்த ரவிராஜ் ராஜ்கிரண் (வயது 27) என்ற இளைஞன் , விபத்தில் சிக்கிய நிலையில் ,  கடந்த 08ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  அவரது மூளையின் செயற்பாடுகள் படிப்படியாக குறைவடைந்து மூளைச்சாவை அடைந்தார். 

அது தொடர்பில் இளைஞனின் பெற்றோருக்கு வைத்தியர்கள் அறிவித்ததை அடுத்து, குடும்பத்தினர் இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களையும் தானம் செய்ய முன் வந்தனர்.

அதனை அடுத்து இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவக் குழு  வெள்ளிக்கிழமை (12) வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மூலம் அகற்றி, அவை இரண்டு நோயாளிகளுக்கு மாற்று சிறுநீரகமாக வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டன.

அதேவேளை உயிரிழந்த ராஜ்கரனுக்கு சத்திர சிகிச்சை கூடத்தில் வைத்தியர் குழாமால் இறுதி வணக்கம் செலுத்தப்பட்டது.

3__1_.jpg

https://www.virakesari.lk/article/233228

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டால் பாதிக்கப்பட்ட 18 வீடுகளுக்கு சீபாரிசு

4 days 11 hours ago

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டால்  பாதிக்கப்பட்ட 18 வீடுகளுக்கு சீபாரிசு

Published By: Vishnu

12 Dec, 2025 | 08:20 PM

image

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டையடுத்து வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீட்டை சுத்தப்படுத்துவதற்கான 25,000 ரூபாய் கொடுப்பனவுக்கு 18 வீடுகள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

நவாலி கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் வெள்ளநீர் வீட்டுக்குள் உட்புகுந்த வீட்டிற்கு அரசினால் வழங்கப்படும் 25,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படாமை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

இது தொடர்பில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரியிருந்தது.

இதன் படி பிரதேச செயலகத்தால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்பிரகாரம் முறைப்பாட்டாளர் உட்பட்ட 18 வீடுகளுக்கான சேதவிபரம் சிபாரிசு செய்யப்பட்டு அரசாங்க அதிபருக்கு  நிதி ஒதுக்கீட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும் முறைப்பாட்டாளரோ அல்லது அவரது பிரதிநிதியோ நேரில் சமூகமளிக்கும்போது வெள்ளநிவாரணம் தொடர்பான சுற்றுநிருபங்கள் மற்றும் நிதிப்பிரமணம் என்பவற்றின்படி முறைப்பாட்டாளருக்கான கொடுப்பனவை வழங்கமுடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முறைப்பாட்டாளர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டபோது நேரில் வந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும்படி பிரதேச செயலாளரால் முறைப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/233219

நிவாரணப் பொருட்களுடன் திருகோணமலையில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்!

4 days 11 hours ago

நிவாரணப் பொருட்களுடன் திருகோணமலையில் தரையிறங்கிய அமெரிக்க விமானம் !

Published By: Vishnu

12 Dec, 2025 | 08:06 PM

image

அமெரிக்க விமானப்படையின் விமானம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களுடன் சீன குடா விமான நிலையத்தில் வந்திறங்கியது.

FB_IMG_1765540952956.jpg

இலங்கையின் பேரிடர் நிவாரண உதவிகளை விரைவாக இலங்கை  முழுவதும் வழங்கும் திட்டத்தின் கீழ் இவ் விமானம்  மூலம்  நிவாரணப் பொருட்கள் எடுத்து வரப்பட்டுள்ளது.

FB_IMG_1765540934020.jpg

திருகோணமலை மாவட்டத்தில் டித்வா புயல் அனர்த்தத்தினால்  பாதிக்கப்பட்டு கிண்ணியா, மூதூர், வெருகல் பகுதிகளின் இடைத்தங்கல் முகாம்களில் இருந்து வீடு திரும்பிய 250 குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள் இன்றைய தினமே வழங்கி வைக்கப்பட்டது.

FB_IMG_1765540927604.jpg

அவுஸ்திரேலிய உதவி திட்டம்,இங்கிலாந்து உதவித் திட்டம்,யுனெப்ஸ் மூலம் வழங்கப்பட்ட நிவாரண பொருட்களே இவ்விமானத்தில் எடுத்து வரப்பட்டிருந்தது.இந்நிவாரண உதவிகளை அகம் மனிதாபிமான வள நிறுவனம் விருத்தி வலையமைப்புடன் இணைந்து உரிய இடங்களுக்கு வழங்கின. மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர், வெருகல் பிரதேச செயலாளர்களுடன்  இணைப்பை ஏற்படுத்தி இச்சேவையை,வொக்கோட் நிறுவனம்,மக்கள் சேவை மன்றம் ஆகிய நிறுவனங்கள் நிவாரண உதவிகளை உரியவர்களுக்கு வழங்கின. இதன் அடிப்படையில் கிண்ணியா பிரதேசத்தில் 50 குடும்பங்களுக்கு மக்கள் சேவை மன்றம் நிறுவனமும், மூதூர் பிரதேசத்தில் 100 குடும்பங்களுக்கு வொக்கோட் நிறுவனமும்,வெருகல் பிரதேசத்தில் 100 குடும்பங்களுக்கு அகம் நிறுவனமும் இன்றைய தினமே நிவாரணங்களை வழங்கி இருந்தன. 

இந்நிகழ்வில் யுனெப்ஸ் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் மற்றும் அகம் மனிதாபிமான வள நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்களும்  கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/233218

நோர்வே 2 மில்லியன் டொலர்கள் நிதியுதவி சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் தெரிவிப்பு

4 days 11 hours ago

நோர்வே 2 மில்லியன் டொலர்கள் நிதியுதவி சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் தெரிவிப்பு

Published By: Vishnu

12 Dec, 2025 | 07:31 PM

image

(நா.தனுஜா)

'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நோர்வே சுமார் 2 மில்லியன் டொலர்கள் நிதியுதவியை வழங்கியுள்ளதாக அந்நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் அஸ்முன்ட் ஒக்ரஸ்ட் தெரிவித்துள்ளார்.

'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கிப் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகின்றனர்.

அந்தவகையில் நோர்வே அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிவரும் உதவிகள் தொடர்பில் கருத்துரைத்துள்ள அந்நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் அஸ்முன்ட் ஒக்ரஸ்ட், 'இலங்கையில் தமது வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள மக்களுக்கு அவசியமான உடனடி உதவிகளை நோர்வே வழங்கிவருகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான இருப்பிடம், உணவு, சுகாதாரம் மற்றும் மீளக்கட்டியெழுப்பல் வசதிகள் என்பன முறையாகச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதும், அதற்குரிய ஒத்துழைப்பை வழங்குவதும் இன்றியமையாததாகும்' எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரண உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கையிலுள்ள செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அலுவலகம் என்பவற்றுக்கு நோர்வே அரசாங்கம் சுமார் 2 மில்லியன் டொலர்கள் நிதியை நன்கொடையாக வழங்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இவ்வாறான பரந்தளவிலான அனர்த்தங்களின்போது நோர்வே போன்ற நாடுகள் முன்வந்து பாதிக்கப்பட்ட சமூகங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு அவசியமான உதவிகளை வழங்கவேண்டியது அவசியம் எனவும் நோர்வே அமைச்சர் அஸ்முன்ட் ஒக்ரஸ்ட் வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/233216

மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கான விசேட நடமாடும் கால்நடை வைத்திய நடவடிக்கை

4 days 14 hours ago

12 Dec, 2025 | 05:33 PM

image

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்கள் பாரிய இழப்பை சந்தித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட  கால்நடைகளுக்கான இலவச சிகிச்சை அளிக்கும்  நடமாடும் சேவை  வெள்ளிக்கிழமை (12) மாவட்ட ரீதியில் மன்னார் கால்நடை உற்பத்தி சுகாதார   திணைக்கள பிரதிப் பணிப்பாளர் கனியூட் பேபிதுரை வின்சன்ட் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்கள் பாரிய இழப்பை சந்தித்துள்ளனர்.

மாவட்டத்தில் மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு,மடு ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளது.

குறிப்பாக ஆடு,மாடு,கோழி பன்றி ,எருமை மாடு போன்ற இழப்புக்களை பண்ணையாளர்கள் சந்தித்துள்ளனர்.

குறித்த பண்ணையாளர்களின் எஞ்சிய உயிரினங்களை பாதுகாக்கும் வகையிலும்,பண்ணையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கால்நடை வைத்தியர்கள் ஆறு பேர் உள்ளடங்களாக மிருக வைத்திய குழு ஒன்றை அமைத்து 6 குழுக்களாக   வெவ்வேறு இடங்களில் இலவசமாக கால்நடை வைத்திய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அமைச்சு,கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம்,இலங்கை கால்நடை அரச வைத்தியர் சங்கம்,இலங்கை கால்நடை வைத்தியர் சங்கம் ஆகியோர் அனுசரணை வழங்கி உள்ளனர்.

பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் தொடர்ந்து தமது தொழிலை முன்னோக்கி செல்வதற்கு கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

DSC00475.JPG

DSC00476.JPG

DSC00486.JPG

DSC00479.JPG

DSC00472.JPG

மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கான விசேட நடமாடும் கால்நடை வைத்திய நடவடிக்கை | Virakesari.lk

மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு, கிழக்கு, மலையகமாக ஒன்றுபடுவோம் - அருட்தந்தை சத்திவேல்

4 days 15 hours ago

மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம் - அருட்தந்தை சத்திவேல்

12 Dec, 2025 | 05:15 PM

image

மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம். மலையகமே மலையக மக்களின் தாயகம். அங்கு சலுகைகளோடு மட்டுமல்ல மண்ணுரிமையோடு வாழ்வதே அரசியல் கௌரவம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான  அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இவரால் கடந்த வெள்ளிக்கிழமை (05)  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எல்லா கோயில் காணிகளிலும், எல்லா சிதம்பரத்து காணிகளிலும், எல்லா தர்ம காணிகளிலும் மலையக மக்களை குடியேற்றி அவர்களை காப்பாற்ற வேண்டும். அவர்கள் இங்கு வந்தால் விவசாயத்தில் செழிப்பாகும் என இயற்கை பேரிடருக்கு முகம் கொடுத்து நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள மலையக மக்கள் விடயத்தில் அவசர உணர்வு பூர்வமான கருத்தினை வெளியிட்டு இருக்கிறார் சிவ பூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி. ஆறு. திருமுகம் திருமுருகன். 

ஐயாவின் உணர்வு பூர்வமான உளவெளிபாட்டுக்கு மலையக சமூக ஆய்வு மையம் நன்றி கூறுகின்றது. இவ்வாறான உணர்வுபூர்வமான கருத்தினை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் வெளிப்படுத்தி இருந்தார். மலையக மக்களின் நிலையினை இன சுத்திகரிப்பு மற்றும் இன அழிப்பிற்கு உள்ளாகி வரும் மக்களின் நீண்டகால பாதுகாப்பு கருதி அரசியல் அறவியலில் நின்று கூட்டாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே எமது கருத்து நிலைப்பாடு.

மலையக மக்களும் 1948க்கு பின்னர் திட்டமிட்ட இன அழிப்பிற்க்கும், இன சுத்திகரிப்பிற்கும் உள்ளாகி நாளாந்தம் சிதைவுகளையே சந்தித்தவரும் ஒரு தேசிய இனமாகும். தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், தற்போதைய ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க  மலையகத்தில் வீடற்றிருக்கும் 1,50,000 பேருக்கு கொடுப்பதற்கு போதுமான காணி மலையகத்தில் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் கூறத் தொடங்கி இருக்கின்றார்.

இது அவர்களின் நீண்ட கால அரசியல் சித்தாந்தம். அதுவே சிங்கள பௌத்த கருத்தியலுமாகும். தற்போது அவர்கள் பேரிடர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மலையக மக்களை சிதைக்க முயல்வதை இன அழிப்பிற்கும் இன படுகொலைக்குப் முகம் கொடுக்கும் சமூகமாக அதனை தடுத்து நிறுத்துவதற்கும் அவர்களின் எதிர்கால அரசியல் பாதுகாப்பினையும் கருதி கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் வேண்டும்.

மலையக மக்கள் நாட்டின் சனத்தொகையில் இரண்டாம் இடத்தில் இருந்த போது அவர்களின் அரசியல் எழுச்சிக்கு பயந்து 1948 ஆம் சமூகத்தின் வாக்குகளை பறித்ததோடு மட்டும் நின்று விடாது இந்தியாவின் அயல் நாடுகளுடன் அரசியல் உறவில் ஏற்பட்டிருந்த விரிசலை தனக்கு அதனை சாதகமாக்கி 1964 ல் பல லட்சம் மலையகத்தவர்களை நாட்டை விட்டே வெளியேற்றும் ஒப்பந்தத்தை (சிரிமா-சாஸ்திரி) சிறிமாவோ பண்டாரநாயக்கா மேற்கொண்டார். இது இரு நாடுகளும் இணைந்து நடாத்திய முதலாவது இனப்படுகொலை என்றே அடையாளப்படுத்தல்.

அதே சிறிமாவோ பண்டார நாயக்க தமது 1970- 77 ஆட்சி காலகட்டத்தில் தோட்டங்களை அரசுடைமையாக்குவதாக கூறி சிங்களமயமாக்கி பல தோட்டங்களில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி; உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தை அவர்களின் வாழ்விடத்தில் இருந்து சிங்கள காடையர்களைக் கொண்டு அடித்து துரத்த இடமளித்த வரலாறும் உண்டு.

மேலும் நாட்டின் பொருளாதார சீர்திருத்த செயல் திட்டத்தினை முன்னெடுத்து மலையத்தவர்களை பட்டிணி சாவிற்குள் தள்ளி கொலை செய்ததையும் மறக்க முடியாது.இதனால் பல ஆயிரம் குடும்பங்கள் உயிர் பாதுகாப்பு தேடி சுயமாகவும், காந்திய வழிகாட்டலோடும் வடக்கு மற்றும் கிழக்கு சென்று குடியேறினர். இதனையே சிங்கள பௌத்தமும் விரும்பியது.

அடுத்து வந்த ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் திறந்த பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி எனும் பேரில் மலையகத்தவர் வாழுடங்கள் சூறையாடப்பட்டு அவ் அவ்விடங்களில் இருந்து மலையக மக்கள் வெளியேற்றப்பட்டனர். 

அவர்கள் காலத்தில் நடந்த திட்டமிட்ட இனவாத வன் செயலின் காரணமாக பாதிக்கப்பட்டோர் வடக்கு கிழக்கிற்கும், இந்தியாவிற்கும் சென்றனர். மலையகத்தை அபிவிருத்தி திட்டத்திற்குள் கொண்டுவராது, பெருந்தோட்டத் தொழிலுக்கு அப்பால் தொழில் வாய்ப்பினை உருவாக்காது, கல்வி, சுகாதாரத் துறைகளை மேம்படுத்தாது கைவிட்டதால் ஆயிரக்கணக்கானோர் மலையகத்தை விட்டு தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் தினமும் வெளியேறிவருகின்றனர். இதிலே மௌன மகிழ்வு காண்பது சிங்கள பௌத்த பேரினவாதமே. 

அதுமட்டுமல்ல கடந்த காலங்களில் மலையக மக்களுக்கு காணி கொடுப்பதாக கூறிய எந்த பேரினவாத ஆட்சியாளர்களும் அதனை கொடுப்பதற்கு துணியவில்லை. அரசியலுக்காக வீடுகளைக் கட்டி சலுகை மாயைக்குள் அவர்களை தள்ளி தேர்தல் அரசியலையே முன்னெடுத்தனர். வீட்டுக்குரிய உரிமை முழுமையாக இதுவரை கொடுக்காது இருப்பதும் காணி உரிமை நிரந்தரமாக அவர்களுக்கு கிடைக்கக் கூடாது எனும் மனநிலையிலாகும்.

மலையக மக்கள் தமக்கே உரிய இன அடையாளங்களை பாதுகாப்பு தேசிய இனமாக வளர்ந்து நிற்கும் சூழ்நிலையில் அவர்கள் தங்களது கடும் உழைப்பாலும் உயிர்த்தியாகத்தாலும் உருவாக்கிய மலையகம் எனும் தேசத்தில் வாழ்வதே அவர்களுக்கான அரசியல் பாதுகாப்பாகும்.

தற்போது நிகழ்ந்திருக்கும் இயற்கை பேரிடர் இக்கட்டான சூழலை பயன்படுத்தி மலையக மக்களின் நில உரிமையை தட்டி பறிக்கும் செயல்பாட்டுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ எவரும் துணை போகக்கூடாது.

நாட்டில் வடகிழக்கு தமிழர்களும், மலையகத் தமிழர்களும் இந்துக்கள் அல்லது சைவர்கள் என்பதற்காக இதுவரை ஒடுக்கப்படவுமில்லை படுகொலை செய்யப்பட்டவுமில்லை. தமிழர்கள் என்பதற்காகவே நாம் தொடர்ந்து ஒடுக்கப்படுகின்றோம். அழிக்கப்படுகின்றோம்.நில பறிப்பிற்கு உள்ளாகின்றோம். இதற்கு எதிராக கூட்டு அரசியல் செயல்பாடு என்பது அவரவர் நிலத்தில் அவரவரது அடையாளங்களோடு அரசியல் கௌரவத்தோடு வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதாகும்.

இயற்கை அனர்த்தத்தை பயன்படுத்தி ஆட்சியாளர்கள் மலையக மக்களை வேறு இடங்களில் குடியமர்த்துக்கு எடுக்கும் முயற்சிக்கு எந்த வகையிலும் எவரும் இடமளிக்காத இருப்பதோடு அவர்களின் அரசியல் பாதுகாப்பு மிகு எதிர்காலம் கருதி மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம். மலையகமே மலையக மக்களின் தாயகம். அங்கு சலுகைகளோடு மட்டுமல்ல மண்ணுரிமையோடு வாழ்வதே அரசியல் கௌரவம் என்று தெரிவித்துள்ளார். 

https://www.virakesari.lk/article/233198

பேரிடரின் பின்னர் மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இலங்கை உளநல வைத்தியர்கள் சங்கத்தின் ஆலோசனை

4 days 15 hours ago

பேரிடரின் பின்னர் மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இலங்கை உளநல வைத்தியர்கள் சங்கத்தின் ஆலோசனை

Published By: Digital Desk 3

12 Dec, 2025 | 02:05 PM

image

மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதன் மூலம், பேரிடர்களை வென்று முன்னேறலாம் என இலங்கை உளநல வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேரிடர்களுக்கு பின்னர் மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு உதவும் விடயங்கள் மற்றும் தவிர்க்க வேண்டியவை பற்றி இலங்கை உள வைத்தியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை உள வைத்தியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வரலாறு முழுவதும், பல்வேறு பேரிடர்களை எதிர் கொண்டு நாம் ஒரு வலிமையான தேசமாக உருவெடுத்துள்ளோம். கடந்த சில தசாப்தங்களாக நாம் சுனாமி, நீண்ட கால உள்நாட்டு யுத்தம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட் தொற்றுநோய், பொருளாதார நெருக்கடி போன்ற பல இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர்களை எதிர் கொண்டுள்ளோம்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் மீண்டெழுந்து ஒருவருக் கொருவர் ஆதரவளித்து, நமது தேசத்தை வலுவாக மீண்டும் கட்டியெழுப்பினோம். ஒருவருக்கொருவர் உதவுதல், தேவைப்படுபவர்களுக்கு செவி சாய்ப்பதன் மூலமும், இன்றைய நெருக்கடியையும் நமது வளர்ச்சிக்கான வாய்ப்பாக மாற்ற முனைவோம். பாதுகாப்பான வீடுகள் மற்றும் வீதிகளை மட்டுமல்ல, வலுவான, புரிந்துணர்வுடைய நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக இதைப் பயன்படுத்துவோம்.

பேரிடர்களுக்கு பின்னர் நீங்கள் மன அழுத்தம், கவலை, கோபம், பயம், பதட் டம், குழப்பம் போன்ற உணர்வுகளை அனுபவிப்பது முற்றிலும் இயல்பானது. உங்கள் மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதன் மூலம், நீங்கள் பேரிடர் தாக்கங்களை வென்று முன்னேறலாம்.

உதவும் விடயங்கள்

1. உங்கள் பலங்கள் மற்றும் சிறிய, நிர்வகிக்கக்கூடிய விடயங்களில் கவனம் செலுத்துங்கள்:

சுத்தம் செய்தல், ஆவணங்களை ஒழுங்குபடுத்துதல், உறவினர்களின் சுகம் விசாரித்தல், அண்டை வீட்டாருடன் இணைதல் மற்றும் தன்னார்வத் தொண்டு செய்தல் ஆகியவை கட்டுப்பாட்டு உணர்வை அளிக்கும். இப்படியான சிறிய படிகள் மீட்சிக்கு வழிவகுக்கும்.

2. மற்றவருடன் தொடர்பில் இருங்கள்

பாதிக்கப்படக்கூடிய குழுக்களைக் கவனியுங்கள்: மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை நாம் ஆதரிக்கும்போது, முழு தேசமும் வலு வடைகிறது. கர்ப்பிணித் தாய்மார்கள், சிறு குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள், முதியவர்கள் (குறிப்பாக தனியாக வசிப்பவர்கள்), உதவி தேவைப்படக் கூடிய குறைபாடுகள் உள்ளவர்கள், கூடுதல் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய சமூக உதவி பயனாளிகள், நீண்டகால நோய் அல்லது மனநோய் நிலைமைகள் உள்ள அனைவரையும் கவனியுங்கள்

3. சிறுவர்களை ஆறுதல்படுத்துங்கள்

சிறுவர்களின் அன்றாட செயற்பாடுகளை முடிந்தவரை இயல்பாக வைத்திருப்பது முக்கியம். இன்றைய சூழ்நிலையை அவர்களுக்கு விளங்கக் கூடிய வகையில் எளிமையான அனைவரின் வார்த்தைகளில் பாதுகாப்பையும் விளக்குங்கள். பெரியவர்கள் உறுதி செய்வதில் கடினமாக உழைக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுங்கள்.

4. ஆன்மீக மற்றும் கலாச்சார நடைமுறைகள் நன்மை பயக்கும்

பிரார்த்தனைகள், தியானம், கலாச்சார சடங்குகள் மற்றும் சமூகக் கூட்டங்கள் என்பன மனதிற்கு பாதுகாப்பு மற்றும் ஆறுதல் உணர்வை அளிக்கும்.

5. வழக்கமான மருந்துகளைத் தொடரவும்

நீங்கள் ஒரு நீண்ட காலநோய் ஒன்று க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால், அதற்கான தினசரி மருந்துகளை தொடர் ந்து தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு உங்கள் அருகிலுள்ள வைத்தியர் அல்லது வைத்தியசாலையின் உதவியை நாடுங்கள்.

தவிர்க்க வேண்டியவை

1. துயரமளிக்கும் செய்திகளைப் பார்ப்பது

அதிகமாக துயரமளிக்கும் செய்தி களைப் பார்ப்பது அல்லது கேட்பது பயத்தை அதிகரிக்கும். அதிகாரபூர்வமான அரசு மற்றும் சரிபார்க்கப்பட்ட செய்தி ஆதாரங்களை மட்டுமே நம்புங்கள்

2. தகவல்களைப் பகிரும்போது பொறுப்பாக இருங்கள்:

வதந்திகளைத் தவிர்க்க வும்: சரிபார்க்கப்படாத தகவல்கள், தனிப்பட்ட தரவு, அடையாளம் காணக்கூடிய தகவல்கள் மற்றும் துயரமளிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் மற்றவருக்குப் பகிர்வதைத் தவிர்க்கவும்

3. மது மற்றும் போதைப்பொருட்களைத் தவிர்க்கவும்

பிரச்சினைகளைச் சமாளிக்க மது மற்றும் போதைப்பொருட்களை நாடுவதைத் தவிர்க்கவும். அவை பின்னர் பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். தேவைப்பட்டால் விரைவாக அதற்கான தொழில்முறை உதவியை நாடுங்கள். நீங்கள் ஏற்கனவே மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருந்தால், அவற்றிலிருந்து விடுபட இதுவே சிறந்த நேரமாக இருக்கலாம்.

4. பேரிடர் சூழ்நிலையைப் தனிப்பட்ட நலத்துக்காக தவறாகப் பயன்படுத்திக் கொள்ளாதீர்கள்:

எந்தவொரு பேரனர்த்தத்திலும், மன அழுத்தம், தூக்கமின்மை, பதட்டம், அமைதியின்மை மற்றும் துன்பகரமான உணர்ச்சிகளை யார் வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். அத்தகைய நேரங்களில் உதவியை நாட தயங்காதீர்கள். ஒருவர் உதவியை நாடுவது என்பது பலவீனத்தின் அல்ல, மாறாக அவரிலுள்ள பலத்தின் அடையாளம். தேசிய மனநல உதவி எண் 1926 க்கு தொலைபேசியில் அழைப்பை மேற்கொள்வதன் மூலம் வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேர இலவச ஆலோசனை மற்றும் ஆதரவைப் பெறலாம். அத்துடன் நாட்டில் உள்ள எந்தவொரு வைத்தியசாலை மூலமாகவும் உங்களுக்கான மனநல சேவைகளைப் பெறலாம்.

இந்த கடினமான நேரத்தில், பேரனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களை ஆதரிப்பதில் இலங்கை உளவைத்தியர்கள் சங்கமாக, நாம் உறுதியாக இருக்கிறோம்.

“நாம் ஒன்றாக மீண்டெழுந்திடுவோம்!" வலிமையாகவும், உறுதியுடனும்

https://www.virakesari.lk/article/233174

200 மில்லியன் டொலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி

4 days 16 hours ago

200 மில்லியன் டொலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி

Dec 12, 2025 - 12:50 PM

200 மில்லியன் டொலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி

இலங்கையின் மிகப்பெரிய பல்நோக்கு நீர் வள அபிவிருத்தித் திட்டமான மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 200 மில்லியன் டொலர் கடன் வசதியை அனுமதித்துள்ளது. 

இந்த அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக மகாவலி ஆற்றின் மேலதிக நீரை இலங்கையின் வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் வறண்ட பிரதேசங்களுக்குத் திருப்புவதே இதன் முதன்மை நோக்கமாகும். 

இந்த மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத் திட்டம், விவசாயத்துறையின் தாங்குதிறனை வலுப்படுத்துதல் மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலம் வடமத்திய மாகாணத்தில் உள்ள 35,600 க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு நேரடிப் பயன்களைப் பெற்றுத்தரும் என ஆசிய அபிவிருத்தி வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது. 

இத்திட்டத்திற்கான ஒருங்கிணைந்த இணை நிதியளிப்பு முயற்சிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தலைமை தாங்குகின்றது. 

இதன் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவிக்கு மேலதிகமாக, சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் (OPEC) நிதியத்திலிருந்து 60 மில்லியன் டொலர்களையும், விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்திலிருந்து (IFAD) 42 மில்லியன் டொலர்களையும் திரட்ட எதிர்பார்க்கப்படுகிறது.

https://adaderanatamil.lk/news/cmj2jf20a02nyo29nnz93ycm3

வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை : முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர்

4 days 16 hours ago

வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை : துறை சார்ந்தோருடன் கலந்துரையாடி முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம்

12 Dec, 2025 | 03:46 PM

image

(எம்.மனோசித்ரா)

வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை மேலும் வலுப்பெறுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய சம்பந்தப்பட்ட சகல துறையினருடனும் கலந்துரையாடி முன்னாயத்த நடவடிக்கைககள் எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்தியா, பாக்கிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து விசேட குழுக்கள் நாட்டுக்கு வந்து மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இவை தவிர மேலும் பல நாடுகளிடமிருந்து நிவாரண உதவிகளும் கிடைக்கப் பெறுகின்றன. இந்தியா, துருக்கி, பங்களாதேஷ், இஸ்ரேல், ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து பாரிய நிவாரண உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை மேலும் வலுப்பெறுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமானது சம்பந்தப்பட்ட சகல துறையினருடனும் கலந்துரையாடி முன்னாயத்த நடவடிக்கைககளை முன்னெடுத்துள்ளது. வடக்கு மாகாணத்தில் வழமைக்கு மாறாக அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேபோன்று வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வழமையை அண்மித்தளவில் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேல் மற்றும் தென் மாகாணங்களில் வழமையை விடக் குறைவான மழை வீழ்ச்சி பதிவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எதிர்வு கூறல்களுக்கமைய சகல முன்னாயத்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தித்வா புயலின் போது பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சி காரணமாக மண் ஈரப்பதன் அதிகரித்துள்ளது. நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. எனவே சிறியளவிலான மழை வீழ்ச்சி கூட பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும். எனவே மக்கள் இது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும். மண் ஈரப்பதன் அதிகரித்துள்ளதால் சிறிய மழை வீழ்ச்சியின் போது கூட மண்சரிவுகள், கற்பாறைப் பிறழ்வுகள் ஏற்படலாம்.

எவ்வாறிருப்பினும் முப்படையினர் உள்ளிட்ட சிவில் பாதுகாப்பு துறையினர் தயார் நிலையிலேயே உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக வடகீழ் பருவ பெயர்ச்சியின் போது பதிவாகிய மழை வீழ்ச்சியின் அளவை அடிப்படையாகக் கொண்டே வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எதிர்வு கூறலை முன்வைத்துள்ளது. குறிப்பாக டிசம்பர் மற்றும் ஜனவரியில் காற்றழுத்த தாழ்வு பிரதேசம் காற்றழுத்த மையமாகவோ, சூறாவளியாகவோ வலுப்பெறக் கூடிய நிலைமை காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அவ்வாறான நிலைமை ஏற்பட்ட தற்போதுள்ள காலநிலையில் மாற்றங்கள் ஏற்படும். அவை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தொடர்ந்தும் மக்களை தெளிவுபடுத்தும் என்றார். 

https://www.virakesari.lk/article/233189

அனர்த்த நிவாரணம் கோருபவர்கள் மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள்!

4 days 16 hours ago

அனர்த்த நிவாரணம் கோருபவர்கள் மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள்!

Dec 12, 2025 - 04:53 PM

அனர்த்த நிவாரணம் கோருபவர்கள் மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள்!

"இயற்கைப் பாதிப்பு எவருக்கும் ஏற்படலாம். எனினும், தவறான முறையில் பெறப்படும் நிவாரணம் எவருக்கும் பயனாக அமையாது. எனவே, நிவாரணம் கோருபவர்கள் தங்கள் மனசாட்சிக்கு அமையக் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது மட்டக்களப்பில் பாதிப்பு குறைவு என்பதால், எங்களை விடவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்" என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இன்று (12) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில்: 

"மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தத்தினால் மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், எமது மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் இருவர் வவுனியா மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 11 வீடுகள் முழுமையாகவும், 1,946 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. 

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு, நேற்று மாலை வரை 6,238 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த கால அனர்த்தங்களின் போது இடம்பெயர்ந்து முகாம்களிலோ அல்லது உறவினர் வீடுகளிலோ தங்கியிருந்தவர்களுக்குக் கூடுதலாக நிவாரணம் வழங்கப்பட்டது. 

கிராம உத்தியோகத்தர்கள் அவர்கள் தொடர்பான விபரங்களை முதலில் சேகரித்து அனுப்பினர். தற்போது அரசாங்கம் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக விபரங்களைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. அதேவேளை, பாதிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதற்கான கொடுப்பனவுகளும் விரைவாக வழங்கப்படும். 

பாதிக்கப்பட்ட எவரும் விடுபடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். அதேசமயம், பாதிக்கப்படாதவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நிவாரணங்களைப் பெற முயற்சிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். 

அனர்த்த நேரத்தில் கிராம உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உங்களுக்கு உதவி செய்யக் காத்திருந்தனர். எனவே, உங்கள் கோரிக்கை நியாயமாக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

https://adaderanatamil.lk/news/cmj2s3kdy02oco29nn86h2swi

இந்திய இழுவைப் படகுகளைத் தடுக்கக் கோரி யாழில் பாரிய போராட்டம்!

4 days 21 hours ago

Screenshot-2025-12-12-120141.jpg?resize=

இந்திய இழுவைப் படகுகளைத் தடுக்கக் கோரி யாழில் பாரிய போராட்டம்!

எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைப் படகுகளைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் முன்பாக இன்று காலை 9 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, போராட்டம் காரணமாக பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படடுள்ளது.

நீண்ட காலமாக இந்திய மீனவர்கள் இலங்கையின் வடக்குக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து இழுவைப் படகு மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி வடக்கு மீனவ அமைப்புகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்த போதிலும், அரசாங்கம் இது தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எதையும் மேற்கொள்ளவில்லை என மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனால் தமது கடல் வளங்கள் சூறையாடப்படுவதாகவும், தமது வாழ்வாதாரம் முடக்கப்படுவதாகவும் தெரிவிக்கும் மீனவர்கள், தமக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் எனக் கோரியே நூற்றுக்கணக்கானோர் ஒன்றிணைந்து இன்று இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

https://athavannews.com/2025/1456107

நாட்டை பேரழிவுக்குள் தள்ளிய ‘டித்வா’ புயலுடன் 1,241 மண் சரிவுகள்!; அவை தொடர்பான செய்மதிப் படங்கள் வெளியிடும் தகவல்கள்

4 days 22 hours ago

நாட்டை பேரழிவுக்குள் தள்ளிய ‘டித்வா’ புயலுடன் 1,241 மண் சரிவுகள்!; அவை தொடர்பான செய்மதிப் படங்கள் வெளியிடும் தகவல்கள்

home.jpg

டித்வா புயலின் போதான சீரற்ற காலநிலை காலத்தில் நாட்டில் மலையக பகுதிகளில் 1241 மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளதாக செய்மதிப் படங்களின் ஊடாக தெரியவந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கூறுவதன்படி டித்வா புயலை தொடர்ந்து நாட்டில் இடம்பெற்ற பேரழிவுகள் தொடர்பான செய்மதி படங்களுக்கமைய சிறிய மற்றும் பாரியளவிலான 1241 மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 10, 20 வருடங்களில்கூட மொத்தமாக இந்தளவுக்கு மண்சரிவுகள் கிடையாது. இந்த மண்சரிவுகளில் அதிகமானவை கண்டி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளன. இந்தளவுக்கு பேரனர்த்தம் நடந்துள்ளது. சூறாவளியின் பயண பாதை மாறியதாலும், நாட்டுக்குள் பல மணித்தியாலங்கள் இருந்தமையினாலும் பேரனர்த்தங்கள் நடந்துள்ளன. கடந்த காலங்களில் நடந்த அனர்த்தங்களுடன் இதனை ஒப்பிட முடியாது. அந்தளவுக்கு பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.

https://akkinikkunchu.com/?p=352151

லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

5 days 10 hours ago

லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

11 Dec, 2025 | 05:20 PM

image

பொலிஎக்யியல் எம்ஆர்ஐ இணக்க (டயிடேனியம்ஃகொபோல்ட் - குறோம்) லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை ( 11 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

முதுகெலும்பு சார்ந்த சத்திரசிகிச்சைகளில் முதுகெலும்பை உறுதியாகப் பேணுவதற்கும், தொடர்புபடுத்தலை விருத்தி செய்வதற்கும், முதுகெலும்பு சார்ந்த இயலாமைகள்/ விகாரமடைந்துள்ள நிலைமைகளுடன் செயலாற்றுவதற்கும், என்பு முறிவு மற்றும் ரியூமர் இற்கான சிகிச்சையளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பொலிஎக்யியல் எம்ஆர்ஐ இணக்க (டயிடேனியம்ஃகொபோல்ட் - குறோம்) லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான விநியோகிப்பதற்கான சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 03 விலைமனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில் கணிசமான பதிலளிப்புக்களை வழங்கிய ஒரோயொரு விலைமனுதாரரான இலங்கையின் யுvenierr Pharma (Pvt) Ltd. (Manufacturer : Miraclus Orthotech (Pvt) Ltd. India) இற்கு வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/233105

மன்னார் மற்றும் முள்ளிக்குளம் பிரதேசங்களில் 50 மெகாவாற்று காற்றாலை மின்சார நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

5 days 11 hours ago

மன்னார் மற்றும் முள்ளிக்குளம் பிரதேசங்களில் 50 மெகாவாற்று காற்றாலை மின்சார நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

11 Dec, 2025 | 05:27 PM

image

மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் தலா 50 மெகாவாற்று காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள் 2 நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 

2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை ( 11 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2030 ஆண்டளவில் நாட்டுக்கான மின்சார வழங்கலின் 70மூ மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களிலிருந்து பூர்த்தி செய்யும் குறிக்கோளை அடைவதற்கான அரசின் விரிவான திட்டத்துக்கமைய 20 ஆண்டு தொழிற்பாட்டு காலப்பகுதியில் நிர்மாணித்தல், உரித்தை கொண்டிருத்தல் மற்றும் அமுல்படுத்துதல் அடிப்படையில் 100 மெகாவாற்று காற்றாலை மின்னுற்பத்திப் பூங்கா (தலா 50 மெகாவாற்று கொண்ட 02 மின்னுற்பத்தி நிலையங்கள்) திட்டத்தை அமுல்படுத்துவதற்காக தனியார் துறையின் ஆர்வமுள்ள அபிவிருத்தியாளர்களிடமிருந்து முன்மொழிவுகளை கோருவதற்காக 2025-02-10 திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, சர்வதேச போட்டி விலைமனுக் கோரல் முறைமையை பின்பற்றி மேற்குறித்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கான முன்மொழிவு கோரப்பட்டு, ஏழு பேர் (7) தமது திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளார்கள்.

மேற்குறித்த முன்மொழிவுகளை மதிப்பீடு செய்த பின்னர், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாட்டு குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில் Consortium of Vidullanka PLC & David Pieris Motor Company (Lanka) Limited kw;Wk; Wind Force PLC  ஆகியவற்றுக்கு மேற்குறித்த இரண்டு (2) 50 மெகாவாற்று காற்றாலை மின்னுற்பத்தி வசதிகளை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

https://www.virakesari.lk/article/233107

யாழில் நிலவும் சீரற்ற கால நிலை - சென்னை விமானம் தரையிறங்காது மீண்டும் திரும்பியது

5 days 11 hours ago

யாழில் நிலவும் சீரற்ற கால நிலை - சென்னை விமானம் தரையிறங்காது மீண்டும் திரும்பியது

11 Dec, 2025 | 09:24 PM

image

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையில் , சென்னையில் இருந்து வந்த விமானம் யாழ்ப்பாணத்தில் தரையிறங்க முடியாது மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளது .

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை முதல் சீரற்ற கால நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட விமானம் யாழ்ப்பாணத்தை அண்மித்த நிலையில் வானில் நிலவிய கடுமையான மோக மூட்டத்தால் , சென்னைக்கு மீள திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதேவேளை, கொழும்பில் இருந்து வடமாகாணத்திற்கான நிவாரண பொதிகளை ஏற்றி வரும் அமெரிக்க விமானம் இன்றைய தினம் வியாழக்கிழமையும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து நிவாரண பொருட்களை கையளித்து சென்றமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/233116

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக டெங்கு ஒழிப்புக்கான இலகுப்படுத்தப்பட்ட ஆரம்ப செயல்திட்டம் அறிமுகம்!

5 days 16 hours ago

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக டெங்கு ஒழிப்புக்கான இலகுப்படுத்தப்பட்ட ஆரம்ப செயல்திட்டம் அறிமுகம்!

11 Dec, 2025 | 04:19 PM

image

( செ.சுபதர்ஷனி)

நாட்டில்  டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள  5 மாவட்டங்களை பிரதான கேந்திர நிலையமாகக் கொண்டு சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவால், டெங்கு ஒழிப்புக்கான இலகுப்படுத்தப்பட்ட ஆரம்ப செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், செம்பிறை சங்கங்கள் மற்றும் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியன இணைந்து  டெங்கு ஒழிப்புக்கான இலகுப்படுத்தப்பட்ட ஆரம்ப செயல்திட்டத்தை வியாழக்கிழமை (11) கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தது. 

இந்தத் திட்டமானது, டெங்கு ஒழிப்பை மையமாகக் கொண்ட உலகளாவிய முதலாவது ஆரம்ப செயல்திட்டமாகும்.

அனர்த்தங்களுக்கு எதிர்வினையாற்றும் நிலையிலிருந்து உயிர்களைக் காக்கும் முன்கூட்டிய பொதுச் சுகாதார நடவடிக்கைக்கு சமூகத்தை பழக்கப்படுத்துவதை பிரதான நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டெங்கு நோய் இலங்கையில் ஒரு குறிப்பிடத்தக்க பொதுச் சுகாதார சவாலாக உள்ளது.

நாட்டில் பருவகால மழை மற்றும் அண்மையில் பதிவான `தித்வா' சூறாவளி போன்ற வானிலை மாற்றங்களின் போது அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாவதை காணமுடிகிறது.

அவ்வாறன மழைக்காலங்களின் பின்னர் நுளம்புகள் பெருகி, பாரிய நோய் தொற்றாக பரவும் அபாயம் உள்ளது. ஆகையால் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முன்னரே உரிய நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உயிர்களைப் பாதுகாப்பதுடன், சமூகத்தில் பாதிப்பைக் குறைத்து அதிக ஆபத்துள்ள பகுதிகளில் நோயைக் கட்டுப்படுத்த முடியும்.

தற்போது தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் சுகாதார அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த இரண்டு வருட புதிய திட்டம் 2025 ஜூலை முதல் 2027 ஜுன் மாதம் வரை செயற்படுத்தப்பட உள்ளது.

குறிப்பாக டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய  ஐந்து மாவட்டங்களை பிரதானக் கேந்திர நிலையங்களாகக் கொண்டு  செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள வீடுகள் நிறுவனங்கள், பாடசாலைகள் என தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் செயற்பாட்டு ரீதியான தெளிவூட்டல் நடவடிக்கைகள் பரவலாக முன்னெடுக்கப்பட உள்ளன.

https://www.virakesari.lk/article/233091

யாழில். 13 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியவருக்கு விளக்கமறியல்!

5 days 16 hours ago

யாழில். 13 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியவருக்கு விளக்கமறியல்!

11 Dec, 2025 | 04:18 PM

image

வீட்டு வேலைகளுக்கு என 13 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் 13 வயது சிறுமியை தனது வீட்டு வேலைக்கு என சிறுமியின் பெற்றோரிடமிருந்து சிறுமியை நீண்ட காலமாக அழைத்து சென்று வந்துள்ளார்.

வீட்டுக்கு அழைத்து செல்லும் நபர் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார். 

இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. 

அதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமியை , வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி, அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு மன்று கட்டளையிட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/233090

இலங்கை வந்துள்ள அமெரிக்க உயர் மட்ட பிரதிநிதி

5 days 16 hours ago

இலங்கை வந்துள்ள அமெரிக்க உயர் மட்ட பிரதிநிதி

Dec 11, 2025 - 12:22 PM

இலங்கை வந்துள்ள அமெரிக்க உயர் மட்ட பிரதிநிதி

அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்க துணைச் செயலாளரான அலிஸன் ஹூக்கர் இன்று (11) இலங்கை வந்துள்ளார். 

பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தல், பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துதல் மற்றும் இலங்கையின் பொருளாதார மற்றும் கடல்சார் இறையாண்மையை ஆதரித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தும் பல்வேறு இருதரப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக துணைச் செயலாளர் ஹூக்கர் இலங்கையைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். 

பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் எமது மக்களின் செழிப்பு ஆகியவற்றிற்கான பரஸ்பர உறுதிப்பாட்டில் வேரூன்றிய ஒரு வலுவான மற்றும் நீடித்த பங்காண்மையினை அமெரிக்காவும் இலங்கையும் பகிர்ந்துகொள்கின்றன. 

இராணுவ, வர்த்தக மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் நெருக்கமான ஒத்துழைப்பின் ஊடாக, சுதந்திரமான, திறந்த மற்றும் மீண்டெழும் தன்மை கொண்ட ஒரு இந்தோ-பசுபிக் பிராந்தியத்தினை மேம்படுத்துவதற்காக இலங்கையும், அமெரிக்காவும் இணைந்து பணியாற்றுகிறது. 

எமது மூலோபாய பங்காண்மையினை நாங்கள் தொடர்ந்து கட்டியெழுப்பும்போது, டித்வா புயலின் பேரழிவுகரமான தாக்கங்களுக்கான பதிலளிப்பு நடவடிக்கைகளை இலங்கை மக்கள் மேற்கொள்ளும் இவ்வேளையில் அமெரிக்கா அவர்களுடன் துணை நிற்கிறது. 

எமது இரு நாடுகளுக்கும் இருக்கின்ற உடனடி சவால்கள் மற்றும் நீண்டகால வாய்ப்புகள் ஆகிய இரண்டு விடயங்களையும் எதிர்கொள்வதற்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். 

அமெரிக்க-இலங்கை பங்காண்மைக்கான எமது தொடர்ச்சியான உறுதிப்பாட்டினை இது பிரதிபலிப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmj12z9bu02mko29n8zljzo4i

Checked
Wed, 12/17/2025 - 01:57
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr