விளையாட்டுத் திடல்

ஆஸ்திரேலியாவில் பயிற்சியின் போது உயிரிழந்த 17 வயது கிரிக்கெட் வீரர் – என்ன நடந்தது?

1 day ago

கிரிக்கெட், பென் ஆஸ்டின்

பட மூலாதாரம், Supplied

படக்குறிப்பு, பயிற்சியின் போது கிரிக்கெட் பந்து தாக்கியதில் 17 வயதான பென் ஆஸ்டின் இறந்தார்

கட்டுரை தகவல்

  • லானா லாம்

  • பிபிசி செய்தியாளர்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மெல்போர்னில் கிரிக்கெட் பயிற்சியின் போது பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய சிறார் ஒருவர் உயிரிழந்தார்.

செவ்வாயன்று கிரிக்கெட் வலை பயிற்சி செய்துகொண்டிருந்த 17 வயதான பென் ஆஸ்டின் கழுத்து பாதுகாப்பு இல்லாமல் ஹெல்மெட் மட்டும் அணிந்திருந்தார். அப்போது, கையடக்க பந்து லாஞ்சரைப் பயன்படுத்தி வீசப்பட்ட பந்து அவரது கழுத்தில் தாக்கியது.

தகவல் தெரிவிக்கப்பட்டதும், உள்ளூர் நேரப்படி மாலை 5:00 மணியளவில் அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கிரிக்கெட்டர் பென், வியாழக்கிழமையன்று உயிரிழந்தார்.

மகனை இழந்த குடும்பம் "முற்றிலும் உடைந்துபோய்விட்டதாக" பென்னின் தந்தை ஜேஸ் ஆஸ்டின் கூறினார். நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் சமூகம் பென் ஆஸ்டினின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிப்பதாக கிரிக்கெட் விக்டோரியா தெரிவித்துள்ளது.

மகனை இழந்து வாடும் தங்களது குடும்பத்தின் இழப்பு குறித்த விவரங்களை தந்தை ஜேஸ் ஆஸ்டின் அறிக்கை ஒன்றின் மூலம் பகிர்ந்து கொண்டார்.

"டிரேசிக்கும் எனக்கும் அன்பான மகன், கூப்பர் மற்றும் சாக்கிற்கு பிடித்தமான சகோதரர் மற்றும் எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வாழ்க்கையில் ஒளிரும் விளக்காக இருந்தார் பென்," என்று அவர் கூறினார்.

"இந்த சோகமான சம்பவம் பென் ஆஸ்டினை எங்களிடமிருந்து பறித்துவிட்டது, அவர் பல கோடை காலங்களில் செய்து வந்தது போலவே, கிரிக்கெட் விளையாடுவதற்காக நண்பர்களுடன் சென்றார். அவர் கிரிக்கெட்டை நேசித்தார், அது அவரது வாழ்க்கையின் மகிழ்ச்சிகளில் ஒன்றாகும்."

விபத்து நடந்தபோது வலைகளில் பந்துவீசிக் கொண்டிருந்த பென்னின் சக வீரருக்கு தாங்கள் ஆதரவாக இருப்பதாக ஆஸ்டின் கூறினார்.

"இந்த விபத்து இரண்டு இளைஞர்களைப் பாதித்துள்ளது, நாங்கள் அவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக உள்ளோம்" என்று அவர் கூறினார்.

விபத்துக்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட் சமூகத்தினர் வழங்கிய ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார், மேலும் தனது மகனுக்கு உதவிய மீட்புப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் , 2014-ஆம் ஆண்டு  பேட்டிங் செய்யும் போது கழுத்தில் பந்து தாக்கியதில் இறந்தார் .

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் , 2014-ஆம் ஆண்டு பேட்டிங் செய்யும் போது கழுத்தில் பந்து தாக்கியதில் இறந்தார் .

கிரிக்கெட் விக்டோரியாவின் தலைமை நிர்வாக அதிகாரி நிக் கம்மின்ஸ், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது "மிகவும் சவாலான நேரம்" என்றார்.

"10 ஆண்டுகளுக்கு முன்பு பில் ஹியூஸ் சந்தித்ததைப் போன்ற விபத்து இது. பந்து அவரது கழுத்தில் பட்டது," என் கம்மின்ஸ் கூறியதாக ஏபிசி செய்தி தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் , 2014-ஆம் ஆண்டு பேட்டிங் செய்யும் போது கழுத்தில் பந்து தாக்கியதில் இறந்தார் .

அவரது மரணத்துக்கு யாரும் காரணம் அல்ல என்று பிரேத பரிசோதனை அதிகாரி கண்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டு வீரர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களை மேம்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

'திறமையான வீரர், அணியில் பிரபலமானவர்'

பென்னைத் தாக்கிய பந்து, பொதுவாகப் பயன்படுத்தப்படும் கையடக்க சாதனம் ஒன்றைப் பயன்படுத்தி வீசப்பட்டது என்பது தெளிவாகிறது.

"விக்டோரியாவிலும் - தேசிய அளவிலும் - முழு கிரிக்கெட் சமூகத்துக்கும் இந்த இழப்பு துக்கமளிக்கிறது. எங்களால் எப்போதும் இதை மறக்க முடியாது" என கம்மின்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

பென் திறமையான வீரர், அணியில் பிரபலமானவர் மற்றும் கேப்டன் என்றும், மெல்போர்னின் தென்கிழக்கில் 18 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் என்றும் கம்மின்ஸ் தெரிவித்தார்.

"இளைஞர் ஒருவரின் வாழ்க்கை இவ்வளவு குறுகிய காலத்தில் முடிவடைந்தது மனவேதனை அளிக்கிறது" என்று கம்மின்ஸ் கூறினார்.

ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப்பிற்காக பென் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த கிளப் வெளியிட்ட சமூக ஊடக பதிவில், பலருக்கு மகிழ்ச்சியைத் தந்த அந்த இளைஞருக்கு அஞ்சலி செலுத்தியது.

ஹியூஸுக்கு செய்யப்பட்டதைப் போலவே, "put your bats out for Benny" என்ற முன்னெடுப்பை மேற்கொண்டு பென்னிக்கு அஞ்சலி செலுத்த நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களை கிளப் கேட்டுக் கொண்டது.

வேவர்லி பார்க் ஹாக்ஸ் ஜூனியர் கால்பந்து கிளப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடிய பென் பற்றி கூறிய கால்பந்து கிளப், அவர் "கனிவானவர்", "மரியாதைக்குரியவர்" மற்றும் "அருமையான கால்பந்து வீரர்" என்று கூறியது.

"எங்கள் கிளப்பும் சமூகமும் உண்மையிலேயே மிகச் சிறந்த இளைஞர் ஒருவரை இழந்துவிட்டன, சிறப்பான இளைஞராக வளர்ந்து கொண்டிருந்த அவரது இழப்பை எங்கள் கிளப் பல ஆண்டுகளுக்கு மிகவும் ஆழமாக உணரும்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c77zd1ypyp3o

தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் - இலங்கைக்கு இரண்டாம் இடம்

4 days 7 hours ago

Oct 27, 2025 - 09:35 AM -

தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் - இலங்கைக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் ராஞ்சியில் நேற்று (26) முடிவடைந்த தெற்காசிய சிரேஸ்ட தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 

பல போட்டிகளில் இந்தியாவுடன் போட்டியிட்ட இலங்கை, பதக்கப் பட்டியலில் 4 தங்கப் பதக்கங்கள் வித்தியாசத்தில் முதலாம் இடத்தை இழந்தது. 

இலங்கை 16 தங்கம், 14 வெள்ளி மற்றும் 10 வெண்கலத்துடன் 40 பதக்கங்களை வென்றது. 

20 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா, பதக்கப் பட்டியலில் முன்னிலை பெற்றதுடன், 20 வெள்ளி மற்றும் 18 வெண்கலப் பதக்கங்களையும் வென்றது. 

இருப்பினும், இலங்கை மற்றும் இந்தியாவைத் தவிர, வேறு எந்த நாடும் தங்கப் பதக்கத்தை வெல்லவில்லை. 

குறிப்பாக, 02 வெள்ளிப் பதக்கங்களை வென்ற நேபாளத்தைத் தவிர, வேறு எந்த நாடும் வெள்ளிப் பதக்கத்தை ஏனும் வெல்லவில்லை 

பங்களாதேஷ் 3 வெண்கலப் பதக்கங்களையும், மாலைத்தீவு 1 வெண்கலப் பதக்கத்தையும் வென்ற போதும், பூட்டான் ஒரு பதக்கத்தையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 60 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். 

போட்டியை நடத்திய இந்தியா மற்றும் இலங்கையைத் தவிர, பூட்டான், நேபாளம், மாலைத்தீவு மற்றும் பங்களாதேஷை பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

https://adaderanatamil.lk/news/cmh8m6pz20188qplpbb297cwt

விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் பட்டியலில் இரண்டாமிடம் - சங்காவை முந்தினார்

6 days 2 hours ago

ஒருநாள்  கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் பட்டியலில் சங்காவை முந்தினார் விராட் கோலி

25 Oct, 2025 | 06:42 PM

image

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் பட்டியலில் குமார் சங்ககராவை முந்தினார் இந்திய அணியின் விராட் கோலி.

அவுஸ்திரேலியா- இந்தியா இடையிலான 3ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது.

முதலில் துடுப்படுத்தாடிய அவுஸ்திரேலியா 236 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 237 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

சுப்மன் கில் 24 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். முதல் இரண்டு போட்டிகளில் டக்அவுட் ஆன விராட் கோலி, முதல் பந்திலேயே ஓட்டத்தைப்பெற்று கையை காட்டினார்.

ரோகித் சர்மா 63 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இது அவருடைய 60ஆவது அரைசதம் ஆகும். மறுமுனையில் விராட் கோலி, 56 பந்தில் 4 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.

இந்த ஜோடி 100 ஓட்டங்களைக் கடந்தது. இதன் மூலம் ரோகித் சர்மா- விராட் கோலி ஜோடி கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக 100 ஓட்டங்களைப் பகிர்ந்து இணைப்பாட்டத்தை ஏற்படுத்தியது. 

விராட் கோலி 54 ஓட்டங்களை எட்டியபோது, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்களைப்பெற்றவரகள் பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்திருந்த குமார் சங்கக்கராவை பின்னுக்கு தள்ளினார். 

சங்கக்கரா 14,234 ஓட்டங்களை எடுத்து 2ஆவது இடத்தில் இருந்தார். சச்சின் டெண்டுல்கர் 18426 ஓட்டங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

https://www.virakesari.lk/article/228668

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

1 week 5 days ago

2026 ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாட நேபாளம், ஓமான் தகுதி

16 Oct, 2025 | 08:10 PM

image

(நெவில் அன்தனி)

இந்தியாவிலும் இலங்கையிலும் அடுத்த வருடம் கூட்டாக நடத்தப்படவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவதற்கு நேபாளம், ஓமான் ஆகிய நாடுகள் தகுதிபெற்றுள்ளன.

ஆசிய பிராந்தியத்திலிருந்து மூன்றாவது நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் தகுதிபெறுவதற்கான வாயிலை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

ஓமானின் அல் அமீரத்தில் நடைபெற்றுவரும் ஆசிய - கிழக்கு ஆசிய பசுபிக் பிராந்திய ரி20 உலகக் கிண்ண தகுதிகாணின் சுப்பர் 6 சுற்று நிறைவடைவதற்கு முன்னரே நேபாளமும் ஓமானும் ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டுள்ளன.

இந்த இரண்டு அணிகளும் சுப்பர் 6 சுற்றில் முதல் மூன்று இடங்களுக்குள் வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்தே அவை ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ளன.

இப் பிராந்தியத்திலிருந்து மேலும் ஒரு அணி ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதிபெறும்.

அல் அமீரத்தில் இன்று நடைபெற்ற சமோஆ உடனான போட்டியில் அமோக வெற்றியீட்டிய ஐக்கிய அரபு இராச்சியம்  சுப்பர் 6 சுற்று அணிகள் நிலையில் 3ஆம் இடத்தில் இருக்கிறது.

ஓமானும் நேபாளமும் முதலிடத்தில் இருப்பதுடன் அவற்றின் நிலைகளை நிகர ஓட்ட வேகம் வேறுபடுத்துகிறது.

ஐக்கிய அரபு இராச்சியம் தனது அடுத்த சுப்பர் 6 சுற்று போட்டியில் ஜப்பானை நாளை எதிர்த்தாடவுள்ளது.

சுப்பர் சிக்ஸ் சுற்றில் கத்தாரும் பங்குபற்றுகிறது.

இந்தியாவிலும் இலங்கையிலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் வரவேற்பு நாடுகளாக இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளும் 2024 உலகக் கிண்ணத்தில் வரவேற்பு நாடுகளை விட முதல் 7 இடங்களைப் பெற்ற ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, ஐக்கிய அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய  நாடுகளும்    ஐசிசி ரி20 தரவரிசைப் பிரகாரம் அயர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய  நாடுகளும்   ஐசிசி ரி20 உலகக் கிண்ணம் - 2026இல் நேரடியாக விளையாட தகுதிபெற்றன.

தகுதிகாண் சுற்றுகள் மூலம் கனடா (அமெரிக்க வலயம்), இத்தாலி மற்றும் நெதர்லாந்து (ஐரோப்பிய வலயம்), நமிபியா மற்றும் ஸிம்பாப்வே (ஆபிரிக்க வலயம்), நேபாளம் மற்றும் ஓமான் (ஆசிய வலயம்) ஆகியன ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாட தகதிபெற்றுள்ளன.

கடைசி அணியாக ஐக்கிய அரபு இராச்சியம் தகுதிபெறும் என நம்பப்படுகிறது.

1610_nepal_and_oman_qualify_for_t20_wc_2

https://www.virakesari.lk/article/227929

ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் தொடர்

1 week 5 days ago

ஆஸ்திரேலிய தொடரில் இந்தியாவின் வெற்றியைத் தீர்மானிக்கும் 5 விஷயங்கள்

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா, கோலி, ரோஹித்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 18 அக்டோபர் 2025

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) பெர்த் நகரில் தொடங்குகிறது. 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதிய இவ்விரு அணிகளும் மறுபடியும் மோதுவதால் இத்தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

பொதுவாகவே ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடர்கள் சவால் நிறைந்தவையாக இருக்கும். ஆஸ்திரேலியாவின் பலமான வேகப்பந்துவீச்சு, அதிரடியான பேட்டர்கள், எப்போதும் இந்தியாவுக்கு பிரச்னையாக விளங்கும் டிராவிஸ் ஹெட் என இம்முறையும் இந்திய அணிக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. அவற்றை சமாளித்து இந்தியா இந்தத் தொடரை வெல்வதில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய 5 விஷயங்கள் என்னென்ன?

1. ரோஹித் மற்றும் கோலியின் கம்பேக்

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா, கோலி, ரோஹித்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2025 ஐபிஎல் தொடரில் விளையாடிய கோலி மற்றும் ரோஹித் அதன்பிறகு எந்தத் தொடரிலும் பங்கேற்கவில்லை.

விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் மறுபடியும் இந்திய அணிக்கு திரும்பியிருப்பது இந்தத் தொடர் மீது வழக்கத்தை விட அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2025 ஐபிஎல் தொடரில் விளையாடிய அவர்கள், அதன்பிறகு எந்தத் தொடரிலும் பங்கேற்கவில்லை. அதனால் அவர்களை மறுபடியும் இந்திய ஜெர்ஸியில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அதேசமயம் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய பந்துவீச்சை அவர்கள் மண்ணில் சமாளிக்க இந்த இரண்டு சீனியர் வீரர்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானதாக இருக்கும். பொதுவாகவே ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பேட்டர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். அப்படியிருக்கும்போது பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜாஷ் ஹேசல்வுட் அடங்கிய ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சு கூட்டணி மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

அந்த சவால்களை சமாளிக்க கோலி மற்றும் ரோஹித் இருவரின் அனுபவமும் முக்கியம். ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் 50+ சராசரியில் இருவரும் ஆடியிருக்கிறார்கள். அதை அவர்கள் தொடரும்பட்சத்தில் இந்திய அணிக்கு நல்ல தொடக்கங்கள் கிடைக்கும்.

அதேசமயம் கடைசியாக அவர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் ஆடிய 2024-25 பார்டர் கவாஸ்கர் டிராபியில் இருவரின் செயல்பாடும் எதிர்பார்த்த அளவு இருக்கவில்லை. கடைசி 4 போட்டிகளில் கோலி 85 ரன்கள் மட்டும் அடித்திருக்க, விளையாடிய 3 போட்டிகளிலும் சேர்த்து 31 ரன்கள் மட்டுமே எடுத்தார் ரோஹித். அந்த செயல்பாட்டை மறக்கடிக்கும் வகையில் கோலியும், ரோஹித்தும் விளையாடவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.

2. புதிய கேப்டன் ஷுப்மன் கில்

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா, கோலி, ரோஹித்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோலி, ரோஹித் என இரண்டு முன்னாள் கேப்டன்களுக்குத் தலைமை தாங்கவேண்டிய பொறுப்பு கில்லுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்தத் தொடரில் முதல் முறையாக ஷுப்மன் கில் தலைமையில் ஓர் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி. 2027 உலகக் கோப்பையை நோக்கிய இந்தப் பயணத்தில் அவர் மீது நிச்சயம் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும்.

அதேசமயம் டெஸ்ட் கேப்டனாக அவரது பயணம் சிறப்பாகவே தொடங்கியிருக்கிறது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கில் தலைமையில் சமன் செய்த இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வென்றது. இந்த செயல்பாடுகள் அவருக்கு நம்பிக்கை தருவதாக இருக்கும்.

மறுபக்கம் கோலி, ரோஹித் என இரண்டு முன்னாள் கேப்டன்களுக்குத் தலைமை தாங்கவேண்டிய பொறுப்பும் கில்லுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஓர் இளம் கேப்டனுக்கு இது நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமையலாம். ஆனால், தான் இந்த வாய்ப்பை எதிர்பார்த்திருப்பதாக கூறியிருந்தார் கில்.

ஆஸ்திரேலியா போன்ற ஒரு பெரிய அணியை அவர்கள் மண்ணில் எதிர்கொள்வது சவாலாகவே இருக்கும். வீரர்களின் ஸ்லெட்ஜிங் மட்டுமல்லாமல், ரசிகர்களை சமாளிப்பதும்கூட ஒரு பெரிய சவால் தான். அதுபோன்ற தருணங்களில் கேப்டனாக கில் எடுக்கும் முடிவுகள் ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இத்தொடருக்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்த அக்‌ஷர் படேல், "ஷுப்மன் கில் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறார். அவர் நெருக்கடியை தனக்குள் எடுத்துக்கொள்ளவேயில்லை. ஒரு தலைவருக்கான மிக முக்கிய குணம் அது" என்று கூறியிருந்தார். அதை இந்தத் தொடர் முழுவதும் கில் வெளிப்படுத்துவது அவசியம்.

3. பும்ரா இல்லாத வேகப்பந்துவீச்சு குழு

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா, கோலி, ரோஹித்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பும்ரா இல்லாதது இந்திய பந்துவீச்சுக்கு சற்று பின்னடைவாகத்தான் இருக்கும்.

வேலைப்பளுவை சரியாகக் கையாள்வதற்காக ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு இந்தத் தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முன்னணி பௌலரான பும்ரா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலுமே விளையாடியிருந்தார்.

2024-25 பார்டர் கவாஸ்கர் டிராபியின் தொடர் நாயகனான பும்ரா இல்லாதது இந்திய பந்துவீச்சுக்கு சற்று பின்னடைவாகத்தான் இருக்கும். அதனால் மற்ற வேகப்பந்துவீச்சாளர்கள் மீதான எதிர்பார்ப்பும் நெருக்கடியும் அதிகரிக்கும். அதிரடி காட்டும் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு எதிராக இந்த பௌலர்களுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது.

முகமது சிராஜ் நிறைய போட்டிகளில் விளையாடியிருப்பதால் அவர் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்குவார். அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா மூவரில் இருவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்பு அதிகம். அவர்களின் செயல்பாடுகள் கூர்ந்து கவனிக்கப்படும்.

குறிப்பாக ஹர்ஷித் ராணாவின் செயல்பாடுகள் மீது அனைவரின் கவனமும் இருக்கும். பயிற்சியாளர் கம்பீரின் தயவால் தான் அவர் எல்லா போட்டிகளிலும் ஆடுகிறார் என்று சமீபத்தில் பேசப்பட, அதை சில தினங்கள் முன் கடுமையாக விமர்சித்திருந்தார் கம்பீர். அப்படியிருக்கும்போது ஹர்ஷித் ராணாவின் ஒவ்வொரு அசைவுமே பேசுபொருளாக்கப்படும். இதுவும் அந்த இளம் வீரருக்குக் கூடுதல் நெருக்கடி கொடுப்பதாக அமையலாம்.

பிரசித், அர்ஷ்தீப் ஆகியோருக்கும் அணியில் நிரந்தர இடம் பிடிக்கவேண்டும் என்ற தேவை இருப்பதால், அதுவும் உளவியல் ரீதியாக அவர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தலாம்.

இந்த அனைத்து சவால்களையும் சமாளித்து இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஜொலிக்கவேண்டும்.

4. துணைக் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா, கோலி, ரோஹித்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்தியாவுக்காக அதிக ரன்கள் (5 இன்னிங்ஸ்களில் 243) எடுத்திருந்தது ஷ்ரேயாஸ் தான்.

2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பாக ஷ்ரேயாஸ் ஐயரை வெளியேற்றுவது பற்றித்தான் டீம் மீட்டிங்கில் விவாதித்தோம் என்று கூறியிருந்தார் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ். அந்த அளவுக்கு அவரது விக்கெட் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அந்த இறுதிப் போட்டியில் அவர் டக் அவுட் ஆனதில் இருந்துதான் இந்தியா பின்னடைவை சந்திக்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டிகளில் சீரான செயல்பாட்டை அவர் கொடுத்துக்கொண்டிருப்பதும், எந்தவித பந்துவீச்சையும் அவர் நன்றாக எதிர்கொள்வதும் அதற்கான முக்கியக் காரணங்கள். கடைசியாக விளையாடிய சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்தியாவுக்காக அதிக ரன்கள் (5 இன்னிங்ஸ்களில் 243) எடுத்திருந்தது ஷ்ரேயாஸ் தான். அதனால் அவருக்கு ஆஸ்திரேலிய பௌலர்கள் சிறப்பு வியூகம் வகுப்பார்கள். அதனால் அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

இப்போது துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருக்கும் ஷ்ரேயாஸ் மிடில் ஆர்டரில் இந்தியாவுக்கு நல்ல பங்களிப்பைக் கொடுத்தால் அது ஆஸ்திரேலிய பௌலர்களுக்கு நிச்சயம் தலைவலியாக அமையும்.

5. நித்திஷ் குமார் ரெட்டியின் இன்னொரு அறிமுகம்

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா, கோலி, ரோஹித்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தன் அறிமுக டெஸ்ட் தொடரில் இதே ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்டிருந்தார் நித்திஷ்.

மிகவும் முக்கியமான வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இடத்துக்கு நித்திஷ் ரெட்டியை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறது இந்திய அணி. ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயத்தால் அவதிப்படுவதால் நித்திஷை அனைத்து ஃபார்மட் வீரராக நிலைநிறுத்த விரும்புகிறார்கள். அதனால் இப்போது ஒருநாள் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

காரணம் 2023 உலகக் கோப்பையின் பிற்பகுதியில் ஹர்திக் இல்லாததால் அந்த ஒரு இடத்தை நிரப்ப சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி என இரண்டு வீரர்களை இந்தியா பயன்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படியொரு நிலை மறுபடியும் வராமல் இருக்க அதேபோல் இன்னொரு வீரரையும் வளர்த்தி வைத்திருப்பது அவசியமாகிறது.

இந்த வாய்ப்பை நித்திஷ் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது இந்திய அணிக்கும் மிகவும் அவசியம். அந்த வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இடம் சரியாக நிரப்பப்பட்டால் அணியின் காம்பினேஷனில் தேவையான மாற்றங்களை செய்ய கேப்டனுக்கு அது உதவியாக இருக்கும். ஒருவேளை அவர்கள் ஒரு கூடுதல் ஸ்பின்னரை பயன்படுத்தவும் அது உதவலாம். அதனால் அவரது அறிமுகம் மீதும் அதிக கவனம் இருக்கும்.

தன் அறிமுக டெஸ்ட் தொடரில் இதே ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்டிருந்தார் நித்திஷ். இப்போது ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், இந்த ஒருநாள் அறிமுகத்திலும் அவர் ஜொலித்தால் அது இந்திய அணிக்கு பெரும் பலமாக அமையும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly4g8jzwqgo

148 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஜாக் காலிஸ் சாதனையை யாராலும் நெருங்க முடியாதது ஏன்?

2 weeks 1 day ago

ஜாக் காலிஸ்

பட மூலாதாரம், Duif du Toit/Gallo Images/Getty Images

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • மணி நேரங்களுக்கு முன்னர்

தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ் இன்று அரைசதம் அடித்திருக்கிறார். பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என கிரிக்கெட்டின் அனைத்து ஏரியாக்களிலும் ஜொலித்த அவருக்கு இன்றோடு ஐம்பது வயது ஆகிறது.

சுமார் 19 ஆண்டுகள் சர்வதேச அரங்கில் விளையாடிய அவரது பயணத்தை எண்களின் வாயிலாக அலசுவோம். ஏனெனில், "நம்பர்களை வைத்துப் பார்த்தால் ஒரு முழுமையான கிரிக்கெட்டர் என்பதற்கு மிக அருகில் வருவது காலிஸ்தான்" என்று டிராவிட்டே கூறியிருக்கிறார்!

ஜாக் காலிஸ்

பட மூலாதாரம், Cameron Spencer/Getty Images

டெஸ்ட் கிரிக்கெட்டில் காலிஸ்

166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் காலிஸ், 55.37 என்ற சராசரியில் 13289 ரன்கள் குவித்திருக்கிறார். சச்சின், ஜோ ரூட், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கு அடுத்து டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் குவித்தவர் இவர்தான்.

அதிக டெஸ்ட் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கு (51) அடுத்து 45 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

"டெஸ்ட் பேட்டர் காலிஸை உடைப்பதென்பது சாதாரண விஷயமில்லை. எத்தனை திட்டங்கள் வேண்டுமானால் தீட்டுங்கள், நாளின் முடிவில் அவர் ஆட்டமிழக்காமல் களத்தில் நிற்பார்" என்று ஒருமுறை புகழ்ந்திருந்தார் ரிக்கி பாண்டிங். ஆனால், அவரது சாதனைகள் பேட்டிங்கோடு நின்றுவிடவில்லை.

பேட்டிங் போல் பந்துவீச்சிலேயும் காலிஸ் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். 32.65 என்ற சராசரியில் 292 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் அவர்.

அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் 43வது இடத்தில் இருக்கும் காலிஸ், ஹர்பஜன் சிங், இஷாந்த் ஷர்மா, ஜஹீர் கான், ஸ் ரீவ் ஹார்மிசன் (steve harmison) போன்ற முன்னணி பௌலர்களுக்கு இணையான சராசரி வைத்திருக்கிறார்.

148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10000 ரன்களுக்கு மேலும் 250 விக்கெட்டுகளுக்கு மேலும் எடுத்த ஒரே வீரர் காலிஸ்தான்.

ஏன், 5000+ ரன்கள் & 250+ விக்கெட்டுகள் என்ற பட்டியலில் இருப்பவர்களே மூவர்தான். அதில் காலிஸோடு இருப்பவர்கள் கபில் தேவ் மற்றும் சர் இயான் போத்தம் ஆகியோர் மட்டுமே.

இது மட்டுமல்ல, டெஸ்ட் போட்டிகளில் அதிக ஆட்ட நாயகன் விருதுகள் (23) வென்றவரும் இவர்தான். 9 முறை தொடர் நாயகன் விருது பெற்று, அஷ்வின் & முரளிதரன் (இருவரும் 11) இருவருக்கும் அடுத்து அந்தப் பட்டியலிலும் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் காலிஸ்.

ஜாக் காலிஸ்

பட மூலாதாரம், Graham Crouch-ICC/ICC via Getty Images

ஒருநாள் போட்டிகளில்...

ஒருநாள் ஃபார்மட்டைப் பொறுத்தவரை 328 போட்டிகளில் 44.36 என்ற சராசரியில் 11579 ரன்கள் விளாசியிருக்கிறார். அதிக ஒருநாள் ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் எட்டாவது இடம். அதேபோல் 31.79 என்ற சராசரியில் 273 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். இந்தப் பட்டியலில் 19வது இடம். தென்னாப்பிரிக்காவின் மிகச் சிறந்த பௌலராகக் கருதப்படும் ஆலன் டொனால்டை விடவும் அதிக விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார்.

ஆல்ரவுண்டராகப் பார்க்கும்போதும், ஒருநாள் போட்டிகளில் 5000+ ரன்களும் 250+ விக்கெட்டுகளும் எடுத்திருக்கும் ஐந்து பேரில் இவரும் ஒருவர்.

முன்பொருமுறை காலிஸின் ஒருநாள் போட்டி அணுகுமுறையைப் புகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங், "காலிஸ் ஒருநாள் கிரிக்கெட்டை செஸ் போட்டி போல் மாற்றிவிடுவார். வியூகங்கள் வகுப்பார், நிதானமாகக் காத்திருப்பார், கருணை காட்டமாட்டார். ஆர்ப்பாட்டமே இருக்காது. ஆனால், முடிவுகள் கிடைக்கும்" என்று கூறியிருந்தார்.

ஜாக் காலிஸ் சாதனையை 148 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாராலும் முறியடிக்க முடியாதது ஏன்?

பட மூலாதாரம், Carl Fourie/Gallo Images/Getty Images

மூன்று ஃபார்மட்களிலும் சேர்த்தால்?

கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு ஃபார்மட்களிலுமே 10,000 ரன்களுக்கு மேல் எடுத்தவர்கள் மொத்தமே ஆறு பேர் தான் - சச்சின், டிராவிட், பான்டிங், ஜெயவர்தனே, சங்கக்காரா, காலிஸ். இவர்களுள் பந்துவீச்சிலும் கலக்கியது சச்சினும், காலிஸும் மட்டும்தான்.

டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து ஃபார்மட்களிலும் சேர்த்து 25534 ரன்கள் (ஆறாவது இடம்) & 519 விக்கெட்டுகள் (31வது இடம்) எடுத்துள்ள இவர், அதிக 50+ ஸ்கோர்கள் (211) எடுத்ததில் ஐந்தாவது இடம் பிடித்திருக்கிறார்.

இவ்வளவு ஏன் ஐபிஎல் அரங்கிலும் கூட சிறப்பாகவே செயல்பட்டார். 2010 சீசனில் 572 ரன்கள் விளாசி இரண்டாம் இடம் பிடித்தார். 2012 சீசனில் 409 ரன்கள் குவித்ததோடு 15 விக்கெட்டுகளும் கைப்பற்றி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியக் காரணமாக விளங்கினார்.

ஜாக் காலிஸ்

பட மூலாதாரம், Duif du Toit/Gallo Images/Getty Images

நீண்ட காலம் சீராக ஆடியவர்!

காலிஸ் இன்னும் அதிகளவு புகழப்படுவதற்கு இன்னொரு காரணம் அவர் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்பது.

வேகப்பந்துவீச்சைத் தேர்ந்தெடுக்கும்போதே கிரிக்கெட் வீரர்கள் காயத்துடனான போராட்டத்துக்கும் தயாராகிவிடுவார்கள். பேட்டர்கள் போல், ஸ்பின்னர்கள் போல் அவர்களால் அனைத்து போட்டிகளிலும் விளையாடிவிட முடியாது.

அதேபோல், எந்தவொரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராலும் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் விளையாடிட முடியாது. இன்றைய காலகட்டத்தில் ஹர்திக் பாண்டியா தொடங்கி ஆண்ட்ரே ரஸல் வரை அவர்கள் காயத்தோடு போராடுவதை பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம்.

ஆனால், சர்வதேச அரங்கில் 519 போட்டிகளில் விளையாடியிருக்கிறார் காலிஸ். அனைத்து ஃபார்மட்களிலும் சேர்த்து அதிக போட்டிகளில் விளையாடியவர்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 45346 பந்துகளை சந்தித்திருக்கும் காலிஸ், பௌலராக 31258 பந்துகள் வீசியிருக்கிறார். வக்கார் யூனுஸ், டேல் ஸ்டெய்ன், பிரெட் லீ போன்ற ஜாம்பவான் பௌலர்களை விடவும் அதிக பந்துகள் வீசியிருக்கிறார்.

மொத்தம் 76604 பந்துகளில் நேரடியாக காலிஸின் பங்களிப்பு இருந்திருக்கிறது. அதாவது சுமார் 10026 ஓவர்கள் அந்த 22 யார்டு பிட்சுக்கு நடுவே உழைத்திருக்கிறார்.

தொடர்ந்து போட்டிகளில் விளையாடியது மட்டுமல்லாமல், அந்தப் போட்டிகளில் அவர் சீரான செயல்பாட்டையும் கொடுத்திருக்கிறார். 1999 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் ஒரே ஒரு ஆண்டு மட்டும்தான் (2008) அவரது ஆண்டு பேட்டிங் சராசரி நாற்பதுக்கும் குறைவாக இருந்திருக்கிறது.

காலிஸ் பற்றி ஒருமுறை பேசிய இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கார, "தென்னாப்பிரிக்க அணிக்கு ஒரு டிராவிட்டும், கபில் தேவும் இருந்திருந்து, அவர்களை ஒன்றிணைத்தால் என்ன வருமோ அதுதான் காலிஸ். அவரது திறன், ஒழுக்கம், நீண்ட காலம் ஆடிய தன்மையெல்லாம் அசாத்தியமானது" என்று புகழ்ந்தார்.

ஃபீல்டிங்கிலும் அசத்துபவர்!

ஜாக் காலிஸ்

பட மூலாதாரம், Getty Images

பேட்டிங், பௌலிங் மட்டுமல்ல, காலிஸ் ஃபீல்டிங்கிலும் அசத்தும் முழுமையான 3D வீரர். சர்வதேச அரங்கில் அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் 338 கேட்சுகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார் அவர்! இத்தனைக்கும் பெரும்பாலான கேட்ச்களை கடினமான ஸ்லிப் பகுதியில் நின்று பிடித்திருக்கிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் நிர்வாக இயக்குநரான ஜாய் பட்டச்சார்யா காலிஸின் ஃபீல்டிங் திறனை வெகுவாகப் பாராட்டி சில ஆண்டுகளுக்கு X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவில், "2011ம் ஆண்டு டெல்லிக்கு எதிரான போட்டியில் பௌண்டரி எல்லையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார் காலிஸ். அங்கு மூன்று முழு நீள டைவ்கள் அடித்து 3 பௌண்டரிகளைத் தடுத்தார் காலிஸ். அணியின் ஃபிசியோ அவருக்கு உதவி செய்வதற்காக கிளம்பியபோது வேண்டாம் என்று காலிஸ் மறுத்துவிட்டார். அந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 18 ரன்களில் வென்றது. டிரஸிங் ரூமில் காலிஸ் அவர் உடையைக் கழற்றியபோது அனைவரும் உரைந்து போனார்கள். ஏனெனில் உடல் முழுக்க காயம் பட்டிருந்தது. ரத்தம் ஒழுகியது. இளம் வீரர்கள் அர்ப்பணிப்பின் அர்த்தத்தை அன்று உணர்ந்து கொண்டார்கள்" என்று குறிப்பிடிருந்தார் ஜாய் பட்டாச்சார்யா.

இந்த நிகழ்வு நடந்தபோது காலிஸின் வயது 35.

ஓய்வுப் பிறகான சர்ச்சைகள்

ஓய்வு பெறும் வரை தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டுக்கு பெரும் பங்களிப்பைக் கொடுத்த காலிஸ், ஓய்வுக்குப் பிறகு சில சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார்.

2016ம் ஆண்டு இட ஒதுக்கீடு இலக்குகளை எட்டாததற்காக தென்னாபிரிக்க விளையாட்டு சங்கத்தை அந்நாட்டு அரசு கலைத்தது.

அதை விமர்சித்து அப்போது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார் காலிஸ். அது விமர்சனத்துக்குள்ளனதும், "நான் அரசியில் தலையீட்டைத்தான் விமர்சித்தேனே ஒழிய, சமத்துவத்துக்கு எதிராக கருத்து சொல்லவில்லை" என்று விளக்கம் கூறிவிட்டு அந்தப் பதிவை நீக்கினார்.

1995ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்காக அறிமுகம் ஆனவர் 2014 வரை சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார். சாதனைகள் பல படைத்திருந்தாலும், தென்னாப்பிரிக்க அணிக்காக ஒரு உலக கோப்பையை வெல்ல முடியாதது குறித்து எப்போதுமே வருந்தியிருக்கிறார்.

காலிஸைப் பற்றி சுருக்கமாகச் சொல்ல, ஜாம்பவான் பிரயன் லாரா ஒருமுறை சொன்னதையே பயன்படுத்தலாம் "ஒரு அணியில் பேட்டராக மட்டும் காலிஸால் இடம்பெற முடியும். ஒரு அணியில் பௌலராக மட்டுமே அவரால் இடம்பெற முடியும். ஒரு அணியில் ஸ்லிப் ஃபீல்டராக மட்டுமே அவரால் இடம்பெற முடியும். காலிஸ் அவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்".

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg4z00w6gqo

மாரத்தான் போட்டிகளுக்கு தயாராவது எப்படி?

2 weeks 2 days ago

சென்னையில் இளைஞர் மரணம்: மாரத்தானில் யாரெல்லாம் பங்கேற்கக் கூடாது?

மாரத்தான், உடல்நலம், உடற்பயிற்சி, இதய பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

கட்டுரை தகவல்

  • மோகன்

  • பிபிசி தமிழ்

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற மாரத்தான் ஒன்றில் கலந்து கொண்ட 24 வயது இளைஞர் போட்டியின்போதே திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

கோட்டூர்புரம் அருகே நடைபெற்ற இந்த மாரத்தானில் பங்கேற்ற, தாம்பரத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான பரமேஷ் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவர்கள் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்துவிட்டனர்.

மருத்துவ பரிசோதனை மற்றும் உடல்தகுதி பரிசோதனை இல்லாமல் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்கிறார் உடற்பயிற்சி நிபுணரான சுஜாதா.

மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ள குறைந்தது 3 மாதம் பயிற்சி தேவை என்கிறார் அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் மூத்த நரம்பியல் மருத்துவரான வி சதீஷ் குமார்.

மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தங்களால் முடிந்த தூரம் மட்டுமே செல்ல வேண்டும் என்கிறார் சதிஷ் குமார்.

"பெரும்பாலான மாரத்தான் போட்டிகளில் கட்டணம் செலுத்தி தான் கலந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அதனால் கட்டணம் செலுத்தி நுழைவுச்சீட்டு பெறுபவர்கள் எப்படியாவது முடித்து விட வேண்டும் என்று கருதி அவர்கள் உடல் ஒத்துழைக்கும் தூரத்தையும் தாண்டி செல்வது தான் சிக்கல்களுக்கு காரணம்," என்கிறார் சுஜாதா.

மாரத்தான், உடல்நலம், உடற்பயிற்சி, இதய பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

இதய துடிப்பின் முக்கியத்துவம்

மாரத்தான், மலையேற்றம் போன்ற தீவிர செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அதற்கான முன் தயாரிப்பின்றி செல்லக்கூடாது என்றும் கூறுகிறார்.

"தசை, எலும்பு ஆரோக்கியம் இதில் முக்கியமானது. மாரத்தான் போட்டிக்கு முன்பாக நம்முடைய உடல் தகுதியை தீர்மானிக்க சில வழிகள் உள்ளன. இதயம் மற்றும் சுவாசம் சீராக இருப்பது முதன்மையானது. இதய துடிப்பின் அளவை கணிக்க வேண்டும்." என்கிறார் சுஜாதா.

இதில் ரெஸ்ட்டிங் ரேட் (resting rate), ரிக்கவரி ரேட் (recovery rate) என்கிற இரண்டு அம்சங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ரெஸ்ட்டிங் ரேட் என்பது நாம் தூங்கி எழுந்த உடன் உள்ள நமது இதயத் துடிப்பின் அளவைக் குறிப்பதாகக் கூறும் அவர், அது 60 - 80 என்கிற அளவில் இருக்க வேண்டும்.

மாரத்தானில் யாரெல்லாம் பங்கேற்கக் கூடாது?

"முன் அனுபவம் இல்லாமல் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் படிப்படியாகத் தான் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சிக்கு பின்பு இதய துடிப்பு அதிகரிப்பது இயல்பானது. ரிக்கவரி ரேட் என்பது நாம் உடற்பயிற்சியை நிறுத்திய பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் கால அளவை தான் இது குறிக்கிறது. இந்த அளவை நாம் கண்காணிக்க வேண்டும். 1 நிமிடத்திற்குள் நமது இதய துடிப்பு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்." என்றார்.

பல்வேறு அம்சங்கள் நாம் இயல்புநிலைக்கு திரும்புவதை பாதிப்பதாகக் கூறும் அவர், "அழுத்தம், தூக்கமின்மை மற்றும் தீவிர பணிச் சுமை இருப்பவர்கள் மாரத்தானில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். சுவாசம் மற்றும் இதயம் சார்ந்த பிரச்னை இருப்பவர்கள் அதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்." என்கிறார்.

மாரத்தான், உடல்நலம், உடற்பயிற்சி, இதய பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

இரு கட்ட பரிசோதனை

மாரத்தான் போட்டிகளுக்கு தயாராவதற்கு முன்பாக மருத்துவ பரிசோதனை அவசியம் என்கிறார் சுஜாதா.

"நம்முடைய உடலில் அறியப்படாமல் நோய்கள் அல்லது அறிகுறிகள் ஏதேனும் இருக்கின்றவா என்பதை உறுதி செய்து முழுமையான சான்று பெற்றுக் கொள்ள வேண்டும். மலையேற்றம் செல்வதற்கு உள்ளதைப் போலவே மாரத்தான் போட்டிகளுக்கும் உடல்தகுதி சான்று கட்டாயமாக்கப்பட வேண்டும்." என்று தெரிவித்தார்.

மாரத்தான் ஒடுவதற்கு இதயமும் தசைகளும் பழக வேண்டும் என்கிறார் மருத்துவர் சதீஷ்குமார்.

"மாரத்தான் போட்டிகளில் அட்ரினலின் அதிக அளவில் வெளியேறும் என்பதால் ஜோன் 2 (Zone 2) என்கிற பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய அதிகபட்ச இதய துடிப்பிலிருந்து ஒரு சீரான அளவில் பயிற்சி மேற்கொள்வதை அது குறிக்கிறது." என்றார்.

முன் பயிற்சியோ அல்லது அனுபவமோ இல்லாமல் மாரத்தான் சென்றால் இதயத்தின் மீது அழுத்தம் அதிகரிக்கும் என்று குறிப்பிடுகிறார்.

அதனை மேலும் விவரித்த அவர், "குறைந்தது ஆறு வார காலம் பயிற்சி எடுத்துக் கொண்டால் தான் அதிகரித்த இதய துடிப்புக்கு நம் உடல் தகவமைத்துக் கொள்ளும். இதயத்தின் மீது சுமை அதிகரிக்கும் போது சமநிலை பாதிக்கப்பட்டு ரத்த சுழற்சி நின்றுவிடும். இதனால் ரத்த நாளங்கள் அடைக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும் சூழல் உருவாகின்றது." என்றார்.

மாரத்தான் போட்டி அல்லது பயிற்சியில் அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக நிற்க வேண்டும் என்றும் கூறுகிறார். "நம்மால் தொடர முடியாதபோது நம் உடல் அதனை வெளிப்படுத்தும். அதனை புறந்தள்ளிவிட்டு தொடர்வது தவறு." என்றும் குறிப்பிட்டார்.

மாரத்தான், உடல்நலம், உடற்பயிற்சி, இதய பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

மாரத்தான் போட்டிகளுக்கு தயாராவது எப்படி?

முதலில் நாம் ஓட நினைக்கும் தூரத்தை தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவிக்கிறார் சதீஷ்குமார்.

"நீண்ட தூரம் செல்ல வேண்டுமென்றால் குறைந்தது 4 மாதம் பயிற்சி அவசியம். உதாரணத்திற்கு 40 கிமீ மாரத்தான் என்றால் 10 கிலோமீட்டரிலிருந்து தொடங்க வேண்டும், வாரத்திற்கு மூன்று நாட்களாவது ஓடி பயிற்சி எடுக்க வேண்டும். அதனை பகுதியாக மேற்கொள்ளலாம். வாரத்தில் ஒருநாள் இடைவெளி இல்லாமல் நீண்ட தூர பயிற்சியில் ஈடுபட வேண்டும். தூரத்தை ஒவ்வொரு வாரமும் சீராக அதிகரிக்க வேண்டும். அதிகரித்த இதய துடிப்பை சமாளிக்க இதயம் பழக வேண்டும், அதற்கான கால அவகாசத்தை நாம் கொடுக்க வேண்டும்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crklddknello

38ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா

2 weeks 4 days ago

உயரம் பாய்தலில் மன்னார் மாணவி வில்ஷியா, களுதாவளை மாணவன் பகிர்ஜன் புதிய போட்டி சாதனைகள் 

Published By: Digital Desk 3

13 Oct, 2025 | 03:22 PM

image

(நெவில் அன்தனி)

தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 38ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவி ஒருவரும் மாணவன் ஒருவரும் உயரம் பாய்தலில் சாதனைகள் படைத்து தங்கப் பதக்கங்களை சுவீகரித்து அசத்தியுள்ளனர்.

14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான உயரம் பாய்தல் போட்டியில் 1.56 மீற்றர் உயரத்தைத் தாவிய மன்னார் பற்றிமா  மத்திய மகா வித்தியாலய மாணவி டபிள்யூ. வில்ஷியா புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உயரம் பாய்தலில் 1.98 மீற்றர் உயரத்தைத் தாவிய மட்டக்களப்பு பண்டத்தரிப்பு களுதாவளை மகா வித்தியாலாய மாணவன் கே. பகிர்ஜன் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

பகிர்ஜனின் ஆற்றல் வெளிப்பாடு பிரமிக்கத்தக்கதாக அமைந்துள்ளது என மெயல்வல்லுநர்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான தட்டெறிதல் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் கே. கிருஷான் 50.39 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண பாடசாலைகள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து ஏனைய பாடசாலைகளை பிரமிக்கவைத்தன.

இப்போட்டியில் அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவி பி. சண்முகப்பிரியா, விக்டோரியா கல்லூரி மாணவி கே. வைஷ்ணவி, ஸ்கந்தவரோதயா கல்லூரி மாணவி எஸ். சகானா ஆகியோர் 2.60 மீற்றர் உயரத்தை தாவி முயற்சிகளின் அடிப்படையில் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

3_shanmugapriya.jpg

4_vaishanvi.jpg

5_sahana.jpg

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் முருங்கன் மகா வித்தியாலய மாணவன் ஏ.கெமில்டன் (6.91 மீற்றர்) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி ஆயிலிலாய் (10.04 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா காமினி மகா வித்தியாலய மாணவன் ஈ. விகிர்தன் (3:59.20) வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றி பாய்தலில் 4.50 மீற்றர் உயரத்தைத் தாவிய தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவன் சந்திரகுமார் துஷாந்தன் முதலாம் இடத்தையும் சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவன் கஜானன் அதே உயரத்தைத் தாவி இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

7_kajanan.jpg

எனினும் இப் போட்டியில் முன்றாம் இடத்தைப் பெற்ற மேல் மாகாண பாடசாலை மாணவனின் அவயவத்தில் பச்சைக் குத்தப்பட்டிருந்ததாகவும் இது பாடசாலை மாணவர்களுக்கான ஒழுக்க விதிகளை மீறுவதாகவும் தெரிவித்து அவரை தகுதிநீக்கம் செய்யுமாறு தெல்லிப்பழை மகாஜனா, சாவகச்சேரி இந்து, ஸ்கந்தவரோதயா ஆகிய கல்லூரிகளின் அதிகாரிகள் எழுத்துமூல ஆட்சேபனை செய்ததால் அப் போட்டிக்கான முடிவு தீர்ப்பாளர்களால் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஆட்சேபனை மனுவை பரீசீலித்த கல்வி அமைச்சு அதிகாரிகள், குறிப்பிட்ட மாணவனை சோதனையிட்ட போது அவரது கையில் பச்சைக் குத்தப்பட்டிருப்பது ஊர்ஜிதமானதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை பணிப்பாளர் லூத்தினன் கேனல் அனுர அபேவிக்ரமவிடம் வினவியபோது, இந்த ஆட்சேபனையை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாணவனின் தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேன்முறையீட்டு குழுவினர் வழங்கும் தீர்ப்பின் பின்னரே போட்டி முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் பதிலளித்தார்.

கிழக்கு மாகாண வெற்றியாளர்கள்

14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான நீளம் பாய்தலில் ஒலுவில் அல் ஹம்ரா மகா வித்தியாலய மாணவன் யூ. அப்துல்லா (5.99 மீ.) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

8_abdullah_no_304.jpg

20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் மூதூர் அல் ஹம்ரா மாணவன் ஆர்.எம். அஹ்சான் (40.88 மீ.) 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் கந்தளாய் அல் தாரிஹ் மகா வித்தியலாய மாணவன் எம்.பி.எம். அஸாம் (10.85 செக்.) ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றெடுத்தனர்.

9_assam.jpg

https://www.virakesari.lk/article/227619

மகளிர் விளையாட்டின் உலகளாவிய கொண்டாட்டமாக ஐசிசி மகளிர் கிரிக்கெட் வராத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறுமுகப்படுத்துகிறது

3 weeks 1 day ago

09 Oct, 2025 | 12:28 PM

image

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் முதல் தடவையாக ஐசிசி மகளிர் கிரிக்கெட் வாரத்தை அறிமுகப்படுத்தப்படுகிறது.

மகளிர் கிரிக்கெட்டின் உலகளாவிய கொண்டாட்டமாக அமையும் இந்த நிகழ்வு அக்டோபர் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறும். இந்த கொண்டாட்டம் ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2025 உடன் இணைந்து நடத்தப்பட உள்ளது.

இந்த புதுமையான முயற்சியானது, ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டுடன் இணைத்தவாறு உலகளாவிய கிரிக்கெட் சமூகத்தை ஒன்றிணைக்கவும், பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சியை வெளிப்படுத்தவும் ஆதரிக்கவும்; கிரிக்கெட் சபைகள் அர்த்தமுள்ள மற்றும் உள்ளூர் ரீதியாக பொருத்தமான வழிகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் வாரம், இந்தியாவில் இந்த வருடம் நடைபெறும் உலகக் கிண்ணத்தின்போது தொடங்கி, உலகளாவிய ரீதியில் கிரிக்கெட்டில் பெண்களின் தெரிவு நிலை, சுயவிபரம் மற்றும் பங்கேற்பை கணிசமாக மேம்படுத்தும் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் ஆண்டுதோறும் நடைபெறும்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா,

'இந்த வருடம் மகளிர் கிரிக்கெட் ஏற்கனவே ஒரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது. சாதனை படைக்கும் வகையில் விளையாட்டு அரங்குகளில் நிரம்பி வழிகின்றனர். முக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெறுவதுடன் கிரிக்கெட் விளையாட்டின் மீதான உத்வேகம் அதிகரித்துள்ளது.

'ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் வாரம் அறிமுகமாவதன் மூலம் மற்றொரு பெருமைமிகு மைல்கல் பதிவாகிறது. கிரிக்கெட் அரங்கில் உள்ள வீராங்கனைகள் மட்டுமல்ல, துடுப்பை அல்லது பந்தை கையில் எடுக்கும் ஒவ்வொரு பெண்ணையும் சாத்தியமானதைப் பற்றி கனவு காண்பதைக் கொண்டாட வைக்கிறது. இது பூரண மற்றும் இணை உறுப்பு நாடுகளுக்கு உலகளாவிய நிகழ்வில் பங்கேற்கவும், தங்களது சொந்த சமூகங்களில் பெண்கள் விளையாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கவும் ஒரு அர்த்தமுள்ள வாய்ப்பை வழங்குகிறது' என்றார்.

இது இவ்வாறிருக்க, உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் வரவேற்பு நாடு அல்லாத பல பூரண அங்கத்துவ நாடுகள் ஏற்கனவே புதுமையான நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டாடியுள்ளன.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கட் சபை, நியூஸிலாந்து கிரிக்கெட் சபை ஆகியன ஏற்கனவே சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தன..

கிரிக்கெட் சவுத் அப்ரிக்கா (தென் ஆபிரிக்கா கிரிக்கெட் நிறுவனம்) தமது தேசத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் ஒரு முழு நாள் நிகழ்வை நடத்தவுள்ளது. இதில் குழு விவாதம், மினி-கிரிக்கெட் போட்டிகள் மற்றும் முன்னாள் தென் ஆபிரிக்க வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டி ஆகியவை அடங்கும்.

அது மட்டுமல்லாமல் பெர்முடா முதல் ஹொங்கொங் வரை ஒவ்வொரு கண்டத்திலும், 45க்கும் மேற்பட்ட ஐ.சி.சி இணை உறுப்பு நாடுகள் மகளிர் கிரிக்கெட் வாரத்தில் ஈடுபட தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.

https://www.virakesari.lk/article/227305

மகளிர் கிரிக்கெட்டின் வரலாறு

3 weeks 5 days ago

ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல; மகளிர் கிரிக்கெட்டின் தலையெழுத்து மாறியது எப்படி?

கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட், சமூகம், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்கும் மிதாலி ராஜ் (கோப்புப் படம், 2017)

கட்டுரை தகவல்

  • தினேஷ்குமார்

  • பிபிசி தமிழுக்காக

  • 4 அக்டோபர் 2025

நடப்பு மகளிர் உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்பது பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது. ஒருகாலத்தில் இந்திய ஆடவர் அணியின் நிழலில் ஒதுங்கியிருந்த இந்திய மகளிர் அணி, இன்று உலகின் வலிமையான அணிகளுள் ஒன்று.

விராட் கோலி, ரோஹித் சர்மாக்களுக்கு இணையாக இன்று, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்றோர் ரசிகர்களின் அபிமானத்தை பெற்றுள்ளனர். ஆடவர் கிரிக்கெட்டுக்கு சச்சின் எப்படியோ, அதேயளவு மிதாலி ராஜும் ஆதர்சமாக திகழ்கிறார். எள்ளி நகையாடப்பட்ட இந்திய மகளிர் அணி எழுச்சி பெற்றது எப்படி?

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை புரிந்துகொள்வதற்கு, மகளிர் கிரிக்கெட்டின் ஆதிவரலாற்றை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அது எப்படி இந்தியாவில் உள்வாங்கப்பட்டது என்பதையும் தொடக்க காலத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள் என்னவென்பதையும் அதன் முன்னத்தி ஏர்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

கிரிக்கெட்டில் ஆதியிலே பெண்கள் இருந்தார்கள்

கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட், சமூகம், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்மிருதி மந்தனா

கிரிக்கெட்டும் ஆதியில் சமத்துவத்திற்கு உட்பட்டதாகவே இருந்தது. பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்த யோகன் டி கிரிஸின் (Johann de Grise) ஓவியங்கள் அதற்கு இன்றளவும் சான்றாக உள்ளன.

கிராமங்களில் வளர்ந்த ஆட்டம் என்பதால், ஒருசில கட்டுப்பாடுகள் தவிர்த்து அனைத்துத் தரப்பு மகளிரும் பொழுதைப் போக்கும் ஆட்டமாகத்தான் கிரிக்கெட் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது.

அதுநாள் வரை மகளிர் கிரிக்கெட் என்பது சேவல் சண்டையைப் போல, பாதுகாப்பு கவசங்கள் இல்லாத குத்துச் சண்டையைப் போல, குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு மகளிர் ஆடும் ஒரு சாகச ஆட்டம்; அவ்வளவுதான். பாதுகாப்பற்ற எக்குத்தப்பான களங்களில் மகளிர் ஆடுவதாலே அது ஒரு அதிசாகச ஆட்டமாக வர்ணிக்கப்பட்டது.

அதனால் இயல்பிலேயே சூது, குடி உள்ளான கேளிக்கைகளுக்கு ஏற்றதாகவும் தீவிர அபிமானம் கொண்ட ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்வதற்கு ஏதுவான பேசுபொருளாகவும் அது அமைந்தது.

எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஆரம்பத்தில் மகளிர் கிரிக்கெட் ஒரு ஆங்கில ஆட்டமாக இருக்கவில்லை. விக்டோரிய யுகத்தில்தான் யார்யார் மட்டைப் பிடிக்க வேண்டுமென்ற எழுதப்படாத விதி ஒன்று உருவானது.

சொல்லி வைத்தது போல அப்போதுதான் எம்சிசி (MCC) அமைப்பும் ஆட்டம் தொடர்பான விதிகளும் உருப்பெறத் தொடங்கின. உயர்குடி அல்லாத மகளிர் குறித்தான அந்தக் காலத்திய மதிப்பீடு 'அற்பத்தனமானது ; வளர்ச்சிக்கு வழியில்லாதது ; நன்நெறிகளுக்கு உட்படாது' என்றே இருந்தது என்கிறார் Playing the Game புத்தகத்தை எழுதிய காத்லீன் இ.மேக்ரோன்.

1998இல் தான் எம்சிசி நிறுவனம் மகளிர் கிரிக்கெட்டை முழுமையாக அங்கீகரித்தது.

ஆண்களின் குறுகிய உலகம்

கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட், சமூகம், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான லென் ஹட்டன் (இடமிருந்து முதலில் இருப்பவர்) மகளிர் கிரிக்கெட்டை 'அபத்தம்' எனச் சாடினார்.

காலப்போக்கில் இந்த சமத்துவமின்மை மகளிர் கிரிக்கெட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. ஆனாலும் ஆண்மயக் கண்ணோட்டத்திலிருந்து அது பார்க்கப்படுவது தொடர்ந்தபடியே இருந்தது.

கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான லென் ஹட்டன் (Len Hutton) மகளிர் கிரிக்கெட்டை 'அபத்தம்' எனச் சாடினார். கிரிக்கெட் எழுத்தின் மணிமகுடம் என சொல்லத்தக்க 'The Art and science of Cricket' புத்தகத்தை எழுதிய பாப் ஊல்மர் அவன்/அவள் சிக்கல் தொடர்பான அரசியல் சரித்தன்மையை நியாயப்படுத்தும் பொருட்டு தனது முன்னுரையில் இப்படி எழுதுகிறார். "இந்தப் புத்தகம் அனைவருக்கும் பயன்படக் கூடியது என்றாலும் ஆடவர் கிரிக்கெட்டை மட்டுமே முன்னிறுத்தி எழுதப்பட்டது." இதே அர்த்தம் தொனிக்குமான ஒரு உரையை தனது 'On Form' புத்தகத்தில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் பிரயர்லியும் எழுதுகிறார்.

மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஆண் வர்க்கம் தொடர்ந்து முட்டுக் கட்டைகளை – தெரிந்தோ தெரியாமலோ – ஏற்படுத்தினாலும் அது ஆரம்ப காலம் தொட்டே ஒட்டுமொத்த கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் வழிகாட்டி வந்துள்ளது.

அது டபிள்யூ.ஜி.கிரேஸிடமிருந்து (W. G. Grace) தொடங்குகிறது. நவீன பேட்டிங்கில் பெரும் தாக்கத்தை செலுத்திய கிரேஸின் கிரிக்கெட் குரு வேறு யாருமல்ல; அவருடைய தாய் மர்தா கிரேஸ்தான்.

இன்னும் கொஞ்சம் காலத்தை பின்னோக்கி நகர்த்தினால் 1820களில் கிறிஸ்டியானோ பந்தை தூக்கிப் போட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார். அவர்தான் கிரிக்கெட்டில் தற்போது நடைமுரையில் உள்ள 'Overarm' பாணியில் முதல்முறையாக பந்துவீசியவர்.

ஆனால் வழக்கம் போல வரலாற்றில் அவர் பெயர் மறைக்கப்பட்டு அவருடைய சகோதரரான ஜான் வைல்ஸின் (John Willes) கல்லறையில் 'Overarm பந்துவீச்சின் பிதாமகன்' என பொறிக்கப்பட்டது.

ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் உலககோப்பை தொடர் நடத்துவதற்கு முன்னுதாரணமாக நின்று வழிகாட்டியவர் கேப்டன் ரேச்சல் ஹேஹோ பிளின்ட் (Rachael Heyhoe Flint). இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனான அவர் 1973இல் முதல் மகளிர் உலககோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக நடத்தியும் காட்டினார். பேட்டிங் திறன் அடிப்படையில் அவரை மகளிர் கிரிக்கெட்டின் முதல் உச்ச நட்சத்திரம் என சொல்லலாம்.

கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட், சமூகம், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டபிள்யூ.ஜி.கிரேஸ்

இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்

18ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் கிரிக்கெட் நுழைந்தாலும், மகளிர் கிரிக்கெட் முழுமையான வடிவம் எடுக்க 250 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

1973இல் தான் The Women's Cricket Association of India தொடங்கப்பட்டது. அக்காலத்திய மகளிர் கிரிக்கெட் என்பது பம்பாய், டெல்லி, கல்கத்தா மாதிரியான பெருநகரங்களில் வாழ்பவர்களுக்கான ஒன்றாகவே பார்க்கப்பட்டது.

அன்றைய இந்திய மகளிர் கிரிக்கெட்டின் போக்கிற்கும் வர்க்க பார்வைக்கும் சரியான உதாரணமென பம்பாயின் 'த அல்பீஸ் கிளப்'பை (The Albees Club) சொல்லலாம். பெரு மதிப்பு வாய்ந்த அந்த கிளப்பின் வீரர்களில் ஒருவர் நூதன் கவாஸ்கர். இவர் லிட்டில் மாஸ்டர் சுனில் காவஸ்கரின் தங்கை.

70களில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது. அதற்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆதரவும் ஒரு முக்கிய பங்காற்றியது என்பதை மறுக்க முடியாது.

அன்றைய காலகட்டத்தில் நட்சத்திர வீரர்கள் என இருவரை அறுதியிட்டு சொல்ல முடியும். ஒருவர் சாந்தா ரங்கஸ்வாமி. இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முதல் ஆல்ரவுண்டர் இவர்தான். இன்னொருவர் இடக்கை சுழலரும் அதிரடி மட்டையாளருமான டயானா எடுல்ஜி (Diana Edulji).

குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிட்டினாலும் கூட 90களின் இறுதிவரை வரை உச்ச நட்சத்திரம் என சொல்லும்படியான ஒரு ஆட்டக்காரர் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் உருப்பெறவில்லை. 2006இல் தான் The Women's Cricket Association of India அமைப்பு பிசிசிஐ உடன் முறையாக இணைக்கப்பட்டது.

கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட், சமூகம், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கபில் தேவுடன் சாந்தா ரங்கஸ்வாமி (நடுவில்)

ஒப்பீடு என்னும் இழிவு

மகளிர் கிரிக்கெட்டில் போய் ஆடவர் கிரிக்கெட்டை தேடாமல் இருக்க வேண்டும். அதுதான் மகளிர் கிரிக்கெட்டை ரசிப்பதற்கான அடிப்படை பால பாடம். இந்தப் புரிதல் இல்லாமல் போகும் போதுதான், அது வேகமில்லாத, ஆக்ரோஷம் குறைவான, சுறுசுறுப்பு இல்லாத ஆட்டமாக மட்டுப்படுகிறது.

மகளிர் கிரிக்கெட், காணும் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான உணர்வெழுச்சியை உண்டாக்கவல்லது. ஒரு கலை வடிவத்தைப் போல. ஆடவர் கிரிக்கெட்டின் போலி தேசியவாத சலம்பல்களுக்கு மத்தியில் மகளிர் கிரிக்கெட் ஒரு ஆறுதல் என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் முகுல் கேசவன்.

மகளிர் கிரிக்கெட்டை புரிந்துகொள்ள திறந்த மனதும் அறிவுசார்ந்த நேர்மையான கற்பனை வளமும் தேவை என்கிறார் கார்த்திகேய தத்தா. இங்கிலாந்தின் முன்னாள் நட்சத்திர பேட்டர் சாரா டெய்லர், தனது ஆட்டத்திறனை விஸ்தீகரிக்கும் பொருட்டு ஓர் உள்ளூர் ஆடவர் அணியில் இணைந்து மட்டையாடினார். ஆனால் இது போன்ற முயற்சிகள் எல்லாம் மகளிர் கிரிக்கெட் மீதான கடந்த காலக் கற்பிதங்களை உறுதிப்படுத்துவதற்குத்தான் உதவும்.

ஒருமுறை மிதாலியிடம் உங்களுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் எனக் கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல் அவர் சொன்ன பதில் "ஒரு ஆண் கிரிக்கெட் வீரரிடம் உங்களுக்கு பிடித்த பெண் கிரிக்கெட் வீரர் யார் எனக் கேட்பீர்களா?"

கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட், சமூகம், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெமிமா ரோட்ரிக்ஸ்

WPL என்னும் கேம் சேஞ்சர்

ஒருகாலத்தில் கிரிக்கெட்டை பின்தொடரும் பெண்களுக்கு இருந்த பிரச்னை, மகளிர் கிரிக்கெட்டில் அவர்களுக்கு என்று ரோல் மாடல்கள் இருக்கமாட்டார்கள். ஆடவர் கிரிக்கெட்டில் இருந்து தங்களுக்கான ரோல் மாடல்களை அவர்கள் வரித்துக்கொண்டாக வேண்டும்.

ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. மிதாலி ராஜை தொடர்ந்து ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்றோர் நாடறிந்த பிரபலங்கள் உள்ளனர்.

மகளிர் கிரிக்கெட்டின் நிலை தற்போது நிறையவே மாறியிருக்கிறது என்கிறார் இந்திய முன்னாள் வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன். தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டரான இவர், மகளிர் டெஸ்ட், மகளிர் ஒருநாள், மகளிர் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

"முன்பு மகளிர் கிரிக்கெட்டர்கள் பெரும்பாலும் ஆடவர் கிரிக்கெட்டில் இருந்துதான் ரோல் மாடல்களை தேடுவார்கள். நான் 10 வயதிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கிவிட்டேன். எங்கள் தெருவில் உள்ள பையன்களுடன் சேர்ந்து விளையாடுவேன். எனக்கு அப்போது சச்சின்தான் ஆதர்சம்.

மகளிர் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாரான மிதாலி ராஜ் குறித்து அப்போது நான் அறிந்திருக்கவிலை. கிரிக்கெட்டில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்ற பிறகுதான், மிதாலி ராஜ் யார் என்பது எனக்கு தெரியவந்தது.

பிறகு அவருடன் இணைந்து விளையாடியதுடன், நெருங்கிப் பழகும் வாய்ப்பையும் பெற்றேன். ஆனால், இன்று அப்படியில்லை. ஸ்மிருதி மந்தனா இன்று வெளியே சென்றால், அவரை காண்பதற்கு ஒரு மிகப்பெரிய கூட்டம் காத்திருக்கிறது" என்கிறார்.

முன்பு கிரிக்கெட்டை ஒரு கரியராக பெண்கள் தேர்வு செய்ய முடியாத சூழல் இருந்தது. முன்னர் ரயில்வே அணியில் இருந்து பெரும்பாலான மகளிர் கிரிக்கெட்டர்கள், இந்திய அணிக்கு தேர்வானதை குறிப்பிட்டாக வேண்டும். வேலை உத்தரவாதம் கிடைப்பதால், தத்தமது மாநில அணிகளை விட ரயில்வே அணிக்கு விளையாடவே மகளிர் கிரிக்கெட்டர்கள் விரும்பினர். ஆனால், இன்று சூழல் வெகுவாக மாறியிருக்கிறது என்கிறார் நிரஞ்சனா நாகராஜன்.

கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட், சமூகம், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முன்பு கிரிக்கெட்டை ஒரு கரியராக பெண்கள் தேர்வு செய்ய முடியாத சூழல் இருந்தது என்கிறார் நிரஞ்சனா நாகராஜன்.

திருப்புமுனை தந்த 2017 உலகக்கோப்பை

"2017 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி பைனல் வரைக்கும் முன்னேறியது. இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில், அதுவொரு திருப்புமுனை தருணம் என்றே சொல்லவேண்டும். அதன்பிறேகே மகளிர் கிரிக்கெட்டை ரசிகர்கள் பெரியளவுக்கு பின்தொடர ஆரம்பித்தனர்.

2022இல் ஆடவருக்கும் மகளிருக்கும் சரிசமமான ஊதியம் என்பதை பிசிசிஐ உறுதிசெய்தது. ரோஹித் சர்மாவுக்கு எவ்வளவு ஊதியமோ, இன்று அதேயளவு ஹர்மன்பிரீத் கவுரும் பெறுகிறார். WPL அறிமுகமான பிறகு, பெண்களுக்கு கிரிக்கெட் விருப்பம்(passion) என்பதை கடந்து ஒரு கரியராகவும்(career) மாற்றமடைந்துள்ளது.

நல்ல ஊதியம் கிடைப்பதால், மகளிர் கிரிக்கெட்டர்களின் பயிற்சி முறைகள், டயட் போன்றவை முன்னேற்றம் அடைந்துள்ளன. இது களத்தில் இந்திய அணியின் வெற்றிகளில் எதிரொலிக்கிறது" என்கிறார்.

சரிசமமான ஊதியம், WPL போன்றவை வளர்ச்சிக்கு வித்திட்டாலும், ஆடவர் கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் லைம்லைட், பெருந்திரள் ரசிகர் கூட்டத்தில் பாதியை கூட மகளிர் கிரிக்கெட் எட்டவில்லை. ஆனால், இந்த வாதத்தை முழுவதுமாக நிரஞ்சனா நாகராஜன் மறுக்கிறார்.

"நீங்கள், மகளிர் கிரிக்கெட்டை ஆடவர் கிரிக்கெட்டுடன் ஒப்பிடுவதே தவறு. மரபியல்ரிதியாக இரு தரப்புக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆடவர் கிரிக்கெட்டுக்கு இணையாக மகளிர் ஆட்டத்திலும் இப்போது பெரிய சிக்சர்கள் எல்லாம் பறக்கின்றன. ஊடக வெளிச்சம், ரசிகர்கள் ஆதரவு இல்லை என்பதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். நடப்பு உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தை காண 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்(22,843) கவுகாத்தி மைதானத்தில் குவிந்தனர். இந்த எண்ணிக்கையை கடந்த காலங்களில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது." என்றார்.

கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட், சமூகம், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹர்மன்பிரீத் கவுர்

அடுத்த பத்தாண்டுகள் எப்படி இருக்கும்?

மகளிர் கிரிக்கெட்டின் சமீபத்திய வளர்ச்சிக்கு பிசிசிஐ அளித்த பங்களிப்பை மறுக்க முடியாது என்கிறார் கிரிக்கெட் வர்ணனையாளர் வித்யுத் சிவராமகிருஷ்ணன். CSK அணிக்காக தோனி தலைமையில் விளையாடிய வித்யுத், 11வது வீரராக களமிறங்கி ரஞ்சி கோப்பையில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர்.

"கடந்த காலங்களில் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டுக்கு சரியான கட்டமைப்பு கிடையாது. ஊதியமும் மிகவும் சொற்பம் என்பதால், யாரும் கிரிக்கெட்டை ஒரு கரியர் வாய்ப்பாக பார்க்கவில்லை. ஆனால், WPL, ஆடவருக்கு இணையான ஊதியம் போன்றவற்றால் நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது.

உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளதால், மகளிர் கிரிக்கெட்டர்களின் பீல்டிங், உடற்தகுதி போன்றவை கடந்த பத்தாண்டுகளில் முன்னேற்றம் கண்டுள்ளன. உலகளவில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் பங்கேற்கும் WPL, இந்திய மகளிர் கிரிக்கெட்டர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். சமீப காலமாக நட்சத்திர வீராங்கனைகள் மட்டுமன்று உள்ளூர் கிரிக்கெட்டர்களும் WPL இல் முத்திரை பதித்துவருகின்றனர்." என்றார்.

அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா நிறைய உலகக்கோப்பைகளை கைப்பற்றும் என்று வித்யுத் சிவராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

"நடப்பு உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்ற அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன. பிசிசிஐ தரும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி, நவீன கிரிக்கெட்டுக்கு இன்றியமையாத அம்சங்களான பவர் ஹிட்டிங் (power hitting) உள்ளிட்டவற்றை இந்திய மகளிர் கிரிக்கெட்டர்கள் மேம்படுத்திக் கொண்டுவருகிறார்கள்" என்றார்.

அங்கீகாரம் மறுக்கப்பட்டது அந்த காலம்

அரை நூற்றாண்டுக்கும் மேலாக கிரிக்கெட் இதழாளராக உள்ள ஆர். மோகனிடம் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிப் போக்கு பற்றி பேசினோம். 2006 இல் இந்திய மகளிர் கிரிக்கெட்டை பிசிசிஐ அமைப்பின் கீழ் முறையாக கொண்டுவந்த பிறகே நிலைமை மாறத் தொடங்கியது என்று கூறினார்.

"70–80களில் எல்லாம் மகளிர் கிரிக்கெட்டை யாரும் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள். சாந்தா ரங்கஸ்வாமி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை கிரிக்கெட் வட்டாரம் அறிந்திருந்தது. ஆனால், அவர்களுக்கு பெரியளவில் வாய்ப்புகளை அங்கீகாரமோ கிடைக்கவில்லை. கவாஸ்கர் போன்றவர்கள் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளை ஊக்குவிக்க வேண்டுமென விரும்பினர். ஆனால், நிறுவனங்களின் துணையின்றி தனிநபர்களால் ஓரளவுக்கு மேல் முடியவில்லை. உலகளவில் மகளிர் கிரிக்கெட்டில் ஏற்பட்ட மாற்றங்கள், 2006 இல் பிசிசிஐ மகளிர் கிரிக்கெட்டை அரவணைக்க வழிவகுத்தன. WPL, சரிசமமான சம்பளம் என தற்போது அது உச்சத்தை எட்டியுள்ளது" என்றார்.

நடப்பு உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றினால், அது இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மைல்கல்லாக பார்க்கப்படும். ரசிகர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யுமா இந்திய அணி?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c5yqv93q634o

2026 கால்பந்து உலகக் கிண்ணம் : வெளியிடப்பட்டது புதிய பந்து 'ட்ரையோண்டா'

3 weeks 5 days ago

03 Oct, 2025 | 02:38 PM

image

கனடா, மெக்சிக்கோ மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 2026 ஃபிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டிக்கான உத்தியோகபூர்வ பந்தான 'ட்ரையோண்டா' (TRIONDA)வை ஃபிபா (FIFA) அமைப்பு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

ட்ரையோண்டாவின் சிறப்பம்சங்கள்

அடிடாஸ் (Adidas) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்தப் பந்து, மூன்று நாடுகளின் ஒற்றுமை மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

1. பெயரின் பின்னணி:

'ட்ரையோண்டா' என்ற பெயரானது, ஸ்பானிய மொழியில் "மூன்று அலைகள்"(Three Waves) என்று பொருள்படும்.'ட்ரை' (Tri) என்பது போட்டியை நடத்தும் மூன்று நாடுகளையும், 'ஓண்டா' (Onda) என்பது அலை அல்லது உற்சாகத்தையும் குறிக்கிறது.

2. வடிவமைப்பு மற்றும் நிறங்கள்:

பந்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்கள் போட்டியை நடத்தும் நாடுகளான கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவின் வர்ண்ணங்களைப் பிரதிபலிக்கின்றன.

மேலும், கனடாவின் மேப்பிள் இலை, மெக்சிகோவின் கழுகு, அமெரிக்காவின் நட்சத்திரம் போன்ற ஒவ்வொரு நாட்டின் சின்னங்களும் வடிவமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளன. உலகக்கிண்ணத்தின் வெற்றிக் கிண்ணத்தைக் குறிக்கும் வகையில் தங்க நிற அலங்காரங்களும் இடம்பெற்றுள்ளன.

3. முன்னோடித் தொழில்நுட்பம் (Connected Ball Technology):

ட்ரையோண்டா பந்தின் உள்ளே அதிநவீன 500Hz மோஷன் சென்சார் சிப் (Motion Sensor Chip) பொருத்தப்பட்டுள்ளது. இந்தச் சிப் பந்தின் அசைவுகள் குறித்த துல்லியமான தகவல்களை வீடியோ உதவி நடுவர் (VAR) முறைமைக்கு நிகழ்நேரத்தில் அனுப்பும். இதன் மூலம் ஓப்சைட் மற்றும் பந்து கையால் அடிக்கப்பட்டதா போன்ற முடிவுகளை நடுவர்கள் விரைவாகவும் துல்லியமாகவும் எடுக்க முடியும்.

4. மேம்படுத்தப்பட்ட செயல்பாடு:

இந்தப் பந்து நான்கு பேனல் (Four-panel) வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இது பந்து காற்றில் செல்லும்போது நிலைத்தன்மை மற்றும் கட்டுப்பாட்டை மேம்படுத்தும் வகையில் ஆழமான தையல் கோடுகளைக் (deep seams) கொண்டுள்ளது.ஈரமான அல்லது பனிமூட்டம் நிறைந்த சூழலில் பந்தை உதைக்கும்போது பிடியை (Grip) அதிகரிக்க, அதன் மேற்பரப்பில் நுண்ணிய சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

ஃபிபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ இந்த வெளியீட்டின் போது, "2026 உலகக்கிண்ணத்தின் அதிகாரப்பூர்வ பந்து இங்கே உள்ளது, அது ஒரு அழகு! இந்தப் பந்தின் வடிவமைப்பு போட்டியை நடத்தும் நாடுகளின் ஒற்றுமையையும் ஆர்வத்தையும் உள்ளடக்கியது" என்று பெருமிதமாக தெரிவித்தார்.

48 அணிகள் பங்கேற்கவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் 2026ஆம் ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறவுள்ளது.

https://www.virakesari.lk/article/226788

ரோஹித் கேப்டன் பதவி பறிப்பு: பிசிசிஐ முடிவால் எழும் கேள்விகள் - முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?

3 weeks 5 days ago

ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், பிசிசிஐ, கிரிக்கெட், கேப்டன்சி மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் இடம்பெற்றுள்ளார்கள். இருவரும் சுப்மன் கில் தலைமையின் கீழ் விளையாட உள்ளனர்.

ரோஹித் சர்மா நீக்கம் பற்றி பிசிசிஐ தேர்வு குழுவின் தலைவர் அஜித் அகர்கரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது 2027 ஒருநாள் உலக கோப்பையை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்

இந்த முடிவு பற்றி ரோஹித் சர்மா தற்போது வரை எந்தக் கருத்தும் தெரிவிக்காத நிலையில் சமூக ஊடகங்களில் யூகங்கள், விமர்சனங்கள், ஆதரவுகள் என விவாதிக்கப்பட்டு வருகின்றன.

கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள சுப்மன் கில், "ஒருநாள் உலக கோப்பைக்கு முன்பாக 20 போட்டிகள் உள்ளன. 2027-ல் தென் ஆப்ரிக்காவில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடரை வெல்வது தான் எங்களின் மிகப்பெரிய இலக்கு." எனத் தெரிவித்தார்.

ரோஹித் சர்மா, அஜித் அகர்கர் இடையே என்ன நடந்தது?

ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், பிசிசிஐ, கிரிக்கெட், கேப்டன்சி மாற்றம்

பட மூலாதாரம், Gareth Copley/Getty Images

படக்குறிப்பு, அஜித் அகார்கர்

ரோஹித் சர்மாவிடம் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டதா என்கிற கேள்விக்குப் பதிலளித்த அகர்கர், அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு முன்பாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது என்றார்.

கேப்டன்சி முடிவுக்கு ரோஹித்தின் எதிர்வினை பற்றிய கேள்விக்கு, "அது எனக்கும் ரோஹித்துக்கும் இடையிலான உரையாடல். அதனைப் பொதுவெளியில் தெரிவிக்க விருப்பமில்லை." எனத் தெரிவித்தார்.

எதிர்கால திட்டத்தின் ஒரு அங்கமாக புதிய கேப்டனுக்கு தன்னை அந்தப் பொறுப்பில் நிரூபித்துக் கொள்ள போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டியது முக்கியமானது என்றும் கூறினார்.

"அடுத்த உலக கோப்பைக்கு இரண்டு ஆண்டுகள் உள்ளன. அதற்குள் புதிய கேப்டன் அணியுடன் கூடுதல் நேரம் செலவழித்து திட்டங்களை மேற்கொள்ள போதுமான வாய்ப்பு கிடைக்கும். அதனால் தான் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது." என்கிறார் அகார்கர்.

ஒவ்வொரு வடிவத்திற்கும் (டெஸ்ட், ஒருநாள், டி20) வெவ்வேறு கேப்டன்கள் இருப்பது எளிதல்ல எனக் கூறும் அவர், "அது திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளைக் கடுமையாக்குகிறது. ரோஹித் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். ஆகவே, ஒருநாள் கேப்டன்சியையும் இளம் வீரர்களிடம் கொடுக்கலாம் என தேர்வாளர்கள் எண்ணினர்." எனத் தெரிவித்தார்.

ரோஹித் சர்மா 2023 ஒருநாள் உலக கோப்பை இறுதி போட்டிக்கு இந்திய அணியை வழிநடத்திச் சென்றார். இந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை அவர் வென்று கொடுத்தார். அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கும் முடிவு எளிதானது அல்ல என்பதை அகர்கர் ஒப்புக்கொள்கிறார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறுவது என்ன?

ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், பிசிசிஐ, கிரிக்கெட், கேப்டன்சி மாற்றம்

பட மூலாதாரம், Gareth Copley/Getty Images

படக்குறிப்பு, ஹர்பஜன் சிங்

ரோஹித் சர்மா நீக்கப்பட்டது தனக்கு ஆச்சரியமளித்ததாக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சாம்பியன்ஸ் டிராபி வென்ற அவருக்கு ஆஸ்திரேலியாவில் அணியை வழிநடத்த தகுதியுள்ளது என்றும் கூறினார்.

இந்த முடிவு பற்றி ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் ஹர்பஜன் பேசியதாக பிடிஐ செய்தி முகமை கூறுகிறது.

"சுப்மன் கில்லுக்கு வாழ்த்துக்கள். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். தற்போது மேலும் ஒரு பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ரோஹித்தின் இடத்தில் சுப்மன் கில் வைக்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறந்த சாதனைகளை கொண்ட வீரர் ரோஹித்."

"ரோஹித்தை கேப்டனாக பார்க்காமல் இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் ரோஹித்தை அணியில் தேர்வு செய்கிறீர்கள் என்றால் அவரை கேப்டன் ஆக்குங்கள், ஏனென்றால் சமீபத்தில் தான் அவர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்துள்ளார். இந்தத் தொடரில் அவர் கேப்டனாக இருந்திருக்க வேண்டும். அணி தேர்வாளர்கள் 2027 ஒருநாள் உலக கோப்பையைப் பற்றி யோசிக்கிறார்கள் என்றால் அதற்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது." என்றார்.

ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், பிசிசிஐ, கிரிக்கெட், கேப்டன்சி மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆகாஷ் சோப்ரா

முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா பெரிய தொடர்களுக்கு முன்பாக ரோஹித் சர்மாவுக்கு போதிய நேரம் வழங்கப்பட்டதைப் போல சுப்மன் கில்லுக்கும் வழங்கப்படுவது சரியே என்கிறார்.

"ரோஹித் 2022 டி20 உலககோப்பையில் கேப்டனாக இருந்தார், அதே போல் 2024 உலக கோப்பையிலும் கேப்டனாக இருந்தார். உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப அணியைக் கட்டமைக்குமாறு அவரிடம் கூறப்பட்டது. நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் எடுக்கப்பட்டார்கள், முடிவாக கோப்பை கிடைத்தது. அதன் பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. ரோஹித் சர்மாவுக்கு போதிய நேரம் வழங்கினீர்கள். ரோஹித் சர்மாவுக்கு நேரம் வழங்கப்பட்டால் சுப்மன் கில்லுக்கும் நேரம் வழங்கப்பட வேண்டும்." எனத் தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் உதவி பயிற்சியாளரான அபிஷேக் நாயர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசுகையில், இந்த முடிவு பற்றி ரோஹித்தும் தேர்வாளர்களும் பேசிக் கொள்வது முக்கியமானது எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "என்னைப் பொருத்தவரை, தேர்வாளர்கள் ரோஹித் சர்மாவிடம் பேசினார்களா என்பது மட்டுமே முக்கியமானது. ரோஹித் சர்மாவும் தேர்வாளர்களும் கில்லுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என ஒப்புக்கொண்டால், இது சரியே. இதற்கான பதிலை ரோஹித் சர்மா மட்டுமே கொடுக்க முடியும். ஒரு கேப்டனாக அவர் 2027 உலக கோப்பைக்கு தயாராகி வந்தார். எனவே இதைப்பற்றி உரையாடல் நடைபெற்றிருக்கும் என்றும், இந்த முடிவில் ரோஹித்தும் தேர்வாளர்களும் ஒப்புக் கொண்டிருப்பார்கள் என்றும் நம்புகிறேன்." எனத் தெரிவித்தார்.

பிசிசிஐ மீது எழுப்பப்படும் கேள்விகள்

ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், பிசிசிஐ, கிரிக்கெட், கேப்டன்சி மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

முன்னாள் வீரர்கள் மற்றும் வல்லுநர்களைக் கடந்து இந்த முடிவு சமூக ஊடகங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

விஷால் என்பவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில், "5 ஐபில் கோப்பைகள் மற்றும் பல வருட கடின உழைப்பிற்கு மும்பை இந்தியன்ஸ் கொடுத்தது என்ன? அவமரியாதையும் துரோகமும் தான். 2 தொடர் ஐசிசி கோப்பைகளும் பல வருட வெற்றிகளுக்கும் பிசிசிஐ கொடுத்தது என்ன? அவமரியாதையும் துரோகமும் தான்." எனப் பதிவிட்டுள்ளார்.

தனய் என்பவர், "ரோஹித் சர்மாவை கேப்டன்சியிலிருந்து நீக்கியதற்கு பிசிசிஐ ஒரு காரணம் கொடுங்கள்." என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் சிலர் பிசிசிஐயின் முடிவை நியாயப்படுத்தியும் பேசுகின்றனர்.

'கில் தி வில்' ('Gill The Will') என்கிற கணக்கில், "ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு சுப்மன் கில்லை தற்போது கேப்டன் ஆக்கியதற்கு நீங்கள் (ரோஹித் சர்மா ரசிகர்கள்) அனைவரும் சோகமாக இருப்பீர்கள் என எனக்குத் தெரியும். நீங்கள் கில்லை விமர்சிப்பதற்கு முன்பாக ஒன்றை யோசியுங்கள். விராட் கோலிக்குப் பிறகு ரோஹித் சர்மா கேப்டன் ஆன போது நீங்கள் முழுமையாக அவரை ஆதரித்தீர்கள் தானே? தற்போது அதே மரியாதை சுப்மன் கில்லுக்கும் வழங்கப்பட வேண்டும். கேப்டனான சிறந்த நினைவுகளைத் தந்ததற்கு நன்றி ரோஹித் சர்மா!" எனப் பதிவிடப்பட்டுள்ளது.

பாவ்னா என்பவர், "சுப்மன் கில்லுக்கு வாழ்த்துகள். ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா இடத்தை நிரப்புவது எளிதான காரியம் அல்ல. அவர் மிகப்பெரிய பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார், அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது கில்லுக்கு மிகப்பெரிய பொறுப்பாக இருக்கும்." என எழுதியுள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 19, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 29 முதல் நவம்பர் 8 வரை நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgl1jgwe0x3o

இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் போட்டிகள்

3 weeks 6 days ago

இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி - பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் ஜொலித்த ஜடேஜா

இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முதல் இன்னிங்ஸில் 104 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் எடுத்த ஜடேஜா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஆமதாபாத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

ஆமதாபாத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 2) தொடங்கியது.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் சிராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் 0 - 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி

இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோஸ்டன் சேஸ்

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக, ஜான் கேம்பல் மற்றும் டேகனரின் சந்தர்பால் களமிறங்கினர்.

சந்தர்பால் 3வது ஓவரில், ரன்கள் ஏதும் எடுக்காமல் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக 6வது ஓவரில், 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஜான் கேம்பல், பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு சீரான இடைவெளியில், விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. கேப்டன் ரோஸ்டனும் 24 ரன்கள் மட்டுமே எடுத்து, சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். 44.1 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சு, வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களைத் திணறடித்தது.

குறிப்பாக, முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் யாருமே 50 பந்துகளுக்கு மேல் எதிர்கொள்ளவில்லை. ஜஸ்டின் கிரீவ்ஸ் மட்டுமே 32 ரன்கள் எடுத்திருந்தார், மற்ற அனைத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் 30 ரன்களை தாண்டவில்லை.

இந்திய அணியில், முகமது சிராஜ் 14 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து, 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் எடுத்திருந்தனர்.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ்

இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் நடக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் ராகுல் சதமடிப்பது இது இரண்டாவது முறை.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

சிறப்பான முறையில் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிய இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தது. பின்னர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சீல்ஸ் பந்தில், 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார் ஜெய்ஸ்வால்.

அதன்பிறகு களமிறங்கிய சாய் சுதர்சன், 7 ரன்கள் மட்டுமே எடுத்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

மறுபுறம், சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் சதத்தை பூர்த்தி செய்தார். இந்தியாவில் நடக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் ராகுல் சதமடிப்பது இது இரண்டாவது முறை. இதற்கு முன்னர், 2016இல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அவர் 199 ரன்கள் எடுத்திருந்தார்.

197 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து, வாரிக்கன் பந்தில் ஆட்டமிழந்தார் கே.எல்.ராகுல்.

இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துருவ் ஜூரெல் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார்.

ராகுல் மட்டுமல்லாது, துருவ் ஜூரெல் (125 ரன்கள்), ரவீந்திர ஜடேஜா (104 ரன்கள்) ஆகியோரும் சதமடித்தனர். குறிப்பாக துருவ் ஜூரெல் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 128 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்தநிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது.

ஜடேஜா 104 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சில் ரோஸ்டன் சேஸ் இரண்டு விக்கெட்டுகளையும், ஜேடன் சீல்ஸ், ஜோமல் வாரிக்கன், காரி பியர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்திய அணியின் வெற்றி

இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

286 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

100 ரன்களைக் கடப்பதற்கு முன்பாகவே 8 விக்கெட்டுகளை இழந்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இறுதியில், 45.1 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் அலிக் அதனேஸ் மட்டுமே 38 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற அனைவருமே 30 ரன்களுக்கும் குறைவாகவே எடுத்திருந்தனர். இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் சிராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் 104 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் எடுத்த ஜடேஜா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெஸ்ட் இண்டீஸ் அணி

இந்த வெற்றியின் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய கடைசி 5 டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணியிடம் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளில் எதுவும் மூன்றாம் நாளைத் தாண்டி நீடிக்கவில்லை.

அதேபோல, 2002க்குப் பிறகு இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடப்பு டெஸ்ட் தொடரின் 2வது போட்டி அக்டோபர் 10 - 14 தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg40xj07k2o

யாழ்ப்பாணம் விக்சித் பாரத் ஓட்டம் 2025

1 month ago

28 Sep, 2025 | 05:23 PM

image

இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை  (28) நடைபெற்ற 'யாழ்ப்பாணம் விக்சித் பாரத் ஓட்டம் 2025' இன் நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி ஆகியோர் கலந்து கொண்டு, ஓட்ட நிகழ்வைத் தொடக்கி வைத்ததுடன் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவித்தனர்.

உலகளாவிய அளவில் 150 இற்க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற விக்சித் பாரத் ஓட்டம் 2025, இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தை கொண்டாடுவதோடு, சேவை, மனவொற்றுமை மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவித்து, உலகம் முழுவதும் சமூகங்களை இணைக்கும். இந்தியாவின் முன்னேற்றத்தையும் பண்பாட்டு மதிப்புகளையும் இந்நிகழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. 

IMG-20250928-WA0011__1_.jpg

IMG-20250928-WA0000.jpg

IMG-20250928-WA0010.jpg

IMG-20250928-WA0009.jpg

IMG-20250928-WA0008.jpg

IMG-20250928-WA0006.jpg

https://www.virakesari.lk/article/226340

பெலன் டி'ஓர் விருது விழா 2025: அதிசிறந்த வீரர் உஸ்மான் டெம்பிலி, அதிசிறந்த வீராங்கனை ஆய்ட்டானா பொன்மாட்டி

1 month ago

Published By: Vishnu

24 Sep, 2025 | 07:22 PM

image

(நெவில் அன்தனி)

பிரான்ஸ் நியூஸ் மெகஸின் (பிரான்ஸ் செய்தி சஞ்சிகை) மற்றும் பிரெஞ்சு கால்பந்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றினால் வருடாந்தம் வழங்கப்படும் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான பெலன் டி'ஓர் விருதை பாரிஸ் செய்ன்ட் ஜேர்மெய்ன் கழக வீரரும் பிரான்ஸ் தேசிய வீரருமான உஸ்மான் டெம்பிலி வென்றெடுத்தார்.

அதி சிறந்த வீராங்கனைக்கான பெலன் டி'ஓர் விருதை மூன்றாவது தொடர்ச்சியான வருடமாக பார்சிலோனா மற்றும் ஸ்பெய்ன் மத்திய கள வீராங்கனை ஆய்ட்டானா பொன்மாட்டி வென்றெடுத்தார்.

பிரான்ஸ் தேசத்தில் பாரிஸ் நகரில் அமைந்துள்ள தியேட்டர் டு சாட்லே அரங்கில் கடந்த திங்கட்கிழமை இரவு 69ஆவது பெலன் டி'ஓர் விருது விழா கோலாகலமாக நடைபெற்றது.

இவ் விழாவில் அதி சிறந்த வீரருக்கான பெலன் டி'ஓர் விருதை உஸ்மான் டெம்பிலி வென்றெடுத்தார். இந்த விருதை அவர் முதல் தடவையாக வென்றதுடன் அவ்விருதை கன்னீர்மல்க பெற்றுக்கொண்டார்.

நடந்து முடிந்த 2024 - 2025 கால்பந்தாட்ட பருவ காலத்தில் தனது அதிசிறந்த கால்பந்தாட்ட நுட்பத்திறன்மூலம் பாரிஸ் செய்ன்ட் ஜேர்மெய்ன் கழகத்திற்கு நான்கு சம்பியன் பட்டங்களை உஸ்மான் டெம்பிலி கிடைக்கச் செய்திருந்தார்.

ஐரோப்பிய சுப்பர் கிண்ணம், ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக், உள்ளூர் இரட்டைப் பட்டங்களான லீக் 1, கூப் டி பிரான்ஸ் ஆகிய நான்கு சம்பியன் பட்டங்களையே பாரிஸ் செய்ன்ட் ஜேர்மெய்ன் வென்றிருந்தது.

மூன்றாவது தொடர்ச்சியான விருது

பார்சிலோனா மற்றும் ஸ்பெய்ன் வீராங்கனை ஆய்ட்டானா பொன்மாட்டி மூன்றாவது தொடர்ச்சியான வருடமாக பெலன் டி'ஓர் விருதை வென்று வரலாறு படைத்தார்.

2014இலிருந்து பார்சிலோனா கழகத்தில் தொடர்ந்து விளையாடி வரும் பொன்மாட்டி, நடந்து முடிந்த கால்பந்தாட்ட பருவகாலத்தில் தனது கழகத்தின் மூன்று பிரதான வெற்றிகளில் பெரும் பங்காற்றி இருந்தார்.

லீகா எவ், கொப்பா டி லா ரெய்னா, சுப்பர்கோப்பா ஆகிய சம்பியன் பட்டங்களை பார்சிலோனா கழகம் வென்றிருந்தது.

அத்துடன் 2025 யூரோ கிண்ண இறுதிப் போட்டிக்கு ஸ்பெய்ன் முன்னேறுவதில் பொன்மாட்டி முக்கிய பங்காற்றி இருந்தார்.

2023 பீபா மகளிர் உலகக் கிண்ண சம்பியனான ஸ்பெய்ன் அணியில் இடம்பெற்ற பொன்மாட்டி, மகளிர் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் பட்டங்களை 3 தடவைகள் வென்றெடுத்த பார்சிலோனா அணியிலும் அங்கம் வகித்திருந்தார்.

ஏனைய விருதுகள்

* உயிராபத்துக்களை எதிர்நோக்கும் சிறுவர்களுக்கும் இளையவர்களுக்கும் உதவும் காருண்ய மன்றத்துக்கான சொக்ரேட்ஸ் விருது - ஸானா காருண்ய மன்றம்

* வருடத்தின் அதிசிறந்த ஆடவர் கழகம் - பாரிஸ் செய்ன்ட் ஜேர்மெய்ன்

* வருடத்தின் அதிசிறந்த மகளிர் கழகம் - ஆர்சனல் கழகம்

* அதிக கோல்களைப் போட்ட வீரருக்கான ஜேர்ட் முல்லர் விருது - விக்டர் ஜியோக்ரஸ் (ஸ்போட்டிங் சி பி ஃ சுவீடன் - 52 போட்டிகளில் 59 கோல்கள்) அவர் இப்போது ஆர்சனல் கழகத்திற்காக விளையாடி வருகிறார்.

* அதிக கோல்களைப் போட்ட வீராங்கனைக்கான ஜேர்ட் முல்லர் விருது - ஈவா பஜோர் (பார்சிலோனா ஃ போலந்து - 46 போட்டிகளில் 43 கோல்கள்)

* வருடத்தின் அதிசிறந்த ஆடவர் அணி பயிற்றுநருக்கான ஜொஹான் க்ருய்வ் விருது - லூயி என்ரிக் (பாரிஸ் செய்ன்ட் ஜேர்மெய்ன் கழகம் - 4 சம்பியன் பட்டங்கள்)

* வருடத்தின் அதிசிறந்த மகளிர் அணி பயிற்றுநருக்கான ஜொஹான் க்ருய்வ் விருது - சரினா வீக்மான் (இங்கிலாந்து - ஐரோப்பிய கிண்ண சம்பியன்)

ousman_dembele_1st_ballon_d_or_winner.pn

aitana_bonmati_1st_ballon_d_or_winner.pn

both_ballon_d_or_winners_men_and_women.j

https://www.virakesari.lk/article/225994

கைகுலுக்காத சர்ச்சை: ரெஃப்ரி மீது பாகிஸ்தான் ஆவேச புகார் - பிசிசிஐ கூறியது என்ன?

1 month 2 weeks ago

போட்டியின் போது எடுக்கப்பட்ட பாகிஸ்தான் அணியின் புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துபையில் நடந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணி

4 மணி நேரங்களுக்கு முன்னர்

"இந்திய அரசு, பிசிசிஐ மற்றும் நாங்கள் மூவரும் ஒரே பக்கத்தில் இருந்தோம். நாங்கள் இங்கு வந்தோம், ஒரு முடிவை எடுத்தோம். நாங்கள் இங்கு விளையாட மட்டுமே வந்தோம் என்று நினைக்கிறேன், நாங்கள் அவர்களுக்குச் சரியான பதிலைக் கொடுத்தோம்."

ஆட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் எதிரணி வீரர்களுடன் கை குலுக்காதது குறித்துக் கேட்கப்பட்டபோது, அவர் தெளிவாகப் பதிலளித்தார்.

ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தைப் பற்றிப் பேசப்படாததை விட, டாஸின் போதும், சூர்யகுமார் யாதவ் வெற்றி ஷாட்டை அடித்த பிறகும் நடந்த விஷயங்கள் குறித்துதான் அதிகம் பேசப்பட்டது.

ஆட்டம் முடிந்ததும், பாகிஸ்தான் வீரர்கள் கை குலுக்க முன்னேறினர். ஆனால், அதற்குள் இந்திய வீரர்கள் டிரெஸ்ஸிங் அறைக்குத் திரும்பிவிட்டனர். டாஸின் போதும் சூர்யகுமார் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவுக்கு இடையே சடங்குபூர்வமான "கை குலுக்கல்" நடக்கவில்லை.

போட்டிக்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், பாகிஸ்தான் கேப்டன் ஆகாவுக்குப் பதிலாகப் பயிற்சியாளர் மைக் ஹெசன் கலந்து கொண்டார். "ஆட்டத்திற்குப் பிறகு கை குலுக்க நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், எதிரணி அவ்வாறு செய்யாதது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது" என்று கூறினார் அவர்.

ஹெசன் மேலும் கூறுகையில், "நாங்கள் கை குலுக்க முன்னேறினோம், ஆனால் அதற்குள் அவர்கள் டிரெஸ்ஸிங் அறைக்குச் சென்றுவிட்டனர். இது ஏமாற்றமளிக்கும் முடிவு. நாங்கள் எங்கள் ஆட்டத்தால் ஏற்கனவே ஏமாற்றமடைந்திருந்தோம், ஆனால் கை குலுக்க நாங்கள் தயாராக இருந்தோம்."

ரெஃப்ரியை குறிவைக்கும் பாகிஸ்தான்

இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான டாஸின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, துபையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி டாஸின் போது இரு கேப்டன்களும் போட்டி நடுவரும்

இந்த சர்ச்சையை மேலும் வளர்த்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இப்போது போட்டி ரெஃப்ரி குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) புகார் அளித்துள்ளது.

பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி, எக்ஸ் தளத்தில், "ஐசிசி நடத்தை விதி மற்றும் கிரிக்கெட்டின் உணர்வு தொடர்பான எம்சிசி விதிகளை மீறிய போட்டி ரெஃப்ரி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யிடம் புகார் அளித்துள்ளது" என்று எழுதினார்.

"எனக்கு நம் நாட்டின் மரியாதையை விட முக்கியமானது எதுவும் இல்லை" என்று நக்வி மேலும் எழுதினார்.

டாஸின் போது இரு அணி கேப்டன்களும் கை குலுக்க வேண்டாம் என்று போட்டி ரெஃப்ரி ஆண்டி பைக்ரோஃப்ட் கூறியதாகப் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. எனினும் போட்டி ரெஃப்ரி தரப்பில் இருந்து அத்தகைய அறிவுறுத்தல் எதுவும் வழங்கப்படவில்லை என்று இந்திய அணியின் வட்டாரங்களை மேற்கோள் காட்டி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

டாஸின் போது இரு அணி கேப்டன்களும் கை குலுக்குவதும், போட்டி முடிந்த பிறகு இரு அணிகளின் அனைத்து வீரர்களும் ஒருவருக்கொருவர் கை குலுக்குவதும் நீண்ட கால பாரம்பரியமாகும். கோவிட் காலகட்டத்தில் இது சிறிது காலம் நிறுத்தப்பட்டது, ஆனால் அது தவிர இந்த பாரம்பரியம் தொடர்ந்து நடந்து வருகிறது.

துபையில் நடைபெற்ற போட்டியின் போது சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

கை குலுக்காதது குறித்து இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவ், "சில விஷயங்கள் விளையாட்டு உணர்வை விட பெரியவை" என்று போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

இதற்கிடையில், இந்தியக் கேப்டனோ அல்லது அணியோ கை குலுக்காததன் மூலம் எந்த விதியையும் மீறவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) கூறியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம், ஆட்டத்திற்குப் பிறகு கை குலுக்குவது ஒரு "நல்லெண்ண சைகை" மட்டுமே என்று கூறினார்.

"நீங்கள் விதிகளைப் படித்தால், எதிரணியுடன் கை குலுக்குவது குறித்து எதுவும் தெளிவாகக் கூறப்படவில்லை. இது உலகம் முழுவதும் விளையாட்டு உலகில் காணப்படும் ஒரு நல்லெண்ண சைகை, ஒரு பாரம்பரியம், ஆனால் இது ஒரு சட்டம் அல்ல" என்றார் அந்த மூத்த அதிகாரி.

"சட்டம் இல்லாதபோது, எதிரணியுடன், குறிப்பாக, மோசமான உறவுகளின் வரலாறு கொண்ட ஒரு எதிரணியுடன் கை குலுக்க இந்திய அணிக்கு எந்தக் கட்டாயமும் இல்லை," என அவர் மேலும் கூறினார்.

எம்.சி.சி விதிமுறைகள் என்ன சொல்கின்றன?

இந்தியா பாகிஸ்தான் போட்டியில் டாஸ் வீசிய சூர்யகுமார்

பட மூலாதாரம், Getty Images

கிரிக்கெட் எந்த நாட்டில் விளையாடப்பட்டாலும், எந்த நாடுகள் விளையாடினாலும், சில விதிகளின்படிதான் விளையாடப்படும். அந்த விதிகளைத் தீர்மானிப்பது எம்சிசி ஆகும். எம்சிசி என்றால் மெரிலெபோன் கிரிக்கெட் கிளப் (Marylebone Cricket Club) ஆகும்.

இது உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் கிளப். லார்ட்ஸ் மைதானத்தின் உரிமையாளர் இந்த கிளப் ஆகும். இதுவே கிரிக்கெட் விளையாட்டின் விதிகளை உருவாக்கி பாதுகாக்கிறது

அந்த கிளப்பின் வலைத்தளத்தில் தேடியபோது, கை குலுக்குதல் அல்லது கை கொடுப்பது பற்றி குறிப்பாக எந்த விதியும் இல்லை. ஆனால், அதன் முன்னுரையின் (preamble) கீழ் சில முக்கிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

  • மரியாதை, கிரிக்கெட்டின் உணர்வில் மையமாக உள்ளது.

  • உங்கள் கேப்டனின் அதிகாரம், எதிரணி மற்றும் நடுவருக்கு மரியாதை கொடுங்கள்.

  • நேர்மையாக விளையாடுங்கள்.

  • உங்கள் நடத்தையின் மூலம் நேர்மறையான சூழலை உருவாக்குங்கள், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்கவும்.

  • சூழ்நிலைகள் உங்களுக்கு எதிராக இருந்தாலும் ஒழுக்கத்தை நிலைநாட்ட வேண்டும்.

  • எதிரணிக்கு வெற்றி கிடைக்கும்போது வாழ்த்துங்கள், உங்கள் அணிக்கு வெற்றி கிடைக்கும்போது கொண்டாடுங்கள்.

  • போட்டி முடிந்த பிறகு, முடிவு எதுவாக இருந்தாலும், அதிகாரிகள் மற்றும் எதிரணிக்கு நன்றி சொல்லுங்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0jq7v35l08o

உலக தடகள செம்பியன்ஷிப் - 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் அமெரிக்கா மற்றும் ஜமைக்கா வீரர்கள் வெற்றி

1 month 2 weeks ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஜப்பானின் டோக்கியோவில் இடம்பெறும் 2025 ஆம் ஆண்டுக்கான உலக தடகள செம்பியன்ஷிப் போட்டியில், அமெரிக்காவின் மெலிசா ஜெபர்சன் வூடன், பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் 100 மீட்டர் ஓட்டப்போட்யை 10.61 வினாடிகளில் நிறைவு செய்துள்ளார்.

இதற்கிடையில், ஜமைக்காவின் ஒப்லிக் செவில்லே ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியை 9.77 வினாடிகளில் நிறைவு செய்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmfjr9skw00e9qplpmdrbz4zp

இருபதுக்கு - 20 கிரிக்கெட் : புதிய சாதனை படைத்த இங்கிலாந்து வீரர் பில் சால்ட்!

1 month 2 weeks ago

Published By: Digital Desk 1

13 Sep, 2025 | 02:06 PM

image

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையே, மான்செஸ்டரில் நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில், இங்கிலாந்து அணி 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்களை பெற்று, சர்வதேச இருபதுக்கு - 20 வரலாற்றில் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரராகக் களமிறங்கிய, பில் சால்ட், 60 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் உட்பட 141 ஓட்டங்களைக் குவித்தார்.

இதன் மூலம், இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக சதம் அடித்தவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

அவர் 39 பந்துகளில் இந்த சதத்தை எட்டினார். 

இதற்கு முன்பு, லியாம் லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் சதம் அடித்திருந்ததே இங்கிலாந்தின் அதிவேக சதமாக இருந்தது.

இந்தப் போட்டியின் சதம், பில் சால்ட்டிற்கு சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் நான்காவது சதமாகும். 

இதன் மூலம், அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் அவர் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவுடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டார். 

இந்த இரு வீரர்களும் தலா 4 சதங்கள் அடித்துள்ளனர். ரோகித் சர்மா மற்றும் கிளென் மெக்ஸ்வெல் ஆகியோர் தலா 5 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் மற்றொரு ஆரம்ப ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர், 30 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் உட்பட 83 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

முதல் விக்கெட்டுக்கு இருவரும் 126 ஓட்டங்களை இணைப்பாட்டமாக சேர்த்தனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி, 158 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இதன் மூலம் இங்கிலாந்து அணி 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

WhatsApp_Image_2025-09-13_at_14.03.38.jp

https://www.virakesari.lk/article/224991

வீரர்களின் உடல்நிலை குறித்து அணி நிர்வாகம் அக்கறை கொள்வதில்லை - ஷர்துல் தாக்கூர் வேதனை!

1 month 3 weeks ago

1375793.jpg

தொடர்ந்து விளையாடி வரும் வீரர்களின் உடல்நிலை குறித்து அணி நிர்வாகம் எவ்வித அக்கறையையும் வெளிப்படுத்துவது இல்லை என்று ஷர்துல் தாக்கூர் வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 11 மாதங்களாக இடைவெளியின்றி பல்வேறு போட்டிகளில் விளையாடி வரும் ஷர்துல் தாக்கூர், வீரர்களின் உடல் தகுதி விஷயத்தில் கவனம் செலுத்தும் அணி நிர்வாகம் தொடர்ந்து விளையாடும் வீரர்களின் உடல் நிலை குறித்து கவனம் கொள்வதில்லை என வேதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர், "ஆண்டு முழுதும் பல்வேறு தொடர்களில் ஆடுகிறோம். எனவே ஒரே மாதிரியான உடல்தகுதியினை பராமரிப்பது கடினம்.

பெரும்பாலான நேரங்களில் நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுகிறோம். நிர்வாகம் உயர்ந்த மட்டத்தில் இல்லை. பல மாதங்கள் ஆடிய பிறகும் கூட எங்கள் உடல் நிலை என்ன? எப்படியிருக்கிறது? எப்படி உணர்கிறோம் என்று யாரும் எங்களிடம் நேரடியாகக் கேட்பது கூட கிடையாது. ஆனால் நான் என் உடல்தகுதியை சுயமாகவே பரமாரிக்கிறேன்.

விளையாடுவதற்குத்தானே எல்லாம். விளையாடாமல் ஆட்டத்திலிருந்து விலகுவதற்காகவா இருக்கிறோம்? ஆனால் சிலபல இடைவெளிகளும் ஓய்வுகளும் அவ்வப்போது அவசியமாகிறது. ஏனெனில் ஆட்டத்திற்குள் நுழைந்து விட்டால் பணிச்சுமை பற்றியெல்லாம் பேச முடியாது. அங்கு ஆட்டச்சூழ்நிலையில் நாம் மூழ்கி விடுவோம்.

ஆட்டத்திற்குள் நுழைந்து விட்டால் நம்மால் சிறப்பாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து தான் ஆகவேண்டும். ஆனால் ஆட்டத்திற்கு இடையே ஓய்வு முக்கியம். அந்த ஓய்வில்தான் உடல்நிலையைப் பாதுகாக்க முடியும், பரமாரிக்க முடியும். ஆட்டத்தில் நமக்கு பெரிய ரோல் இல்லை என்றால் வலையில் கொஞ்சம் அதிக நேரம் செலவழிக்கலாம். ஆனால் ஆட்டத்தில் முழுச்சுமையும் உங்கள் மேல் இருக்கும் போது வலையில் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கலாம்" என தெரிவித்துள்ளார்.

அவர் இப்படிக் கூறக் காரணம், பும்ராக்களையும் ஷமிக்களையும் யோசிக்கும் நிர்வாகம், சலுகை அளிக்கும் நிர்வாகம் ஷர்துல் தாக்கூர்களைக் கண்டு கொள்வதில்லை என்பதுதான் உண்மை. அவர் கடந்த 11 மாதங்களாக இடைவெளியில்லாமல் கிரிக்கெட் ஆடி வருகிறார். கடந்த அக்டோபரில் இரானி கோப்பையில் தொடங்கிய சீசன் அவருக்கு 2024-25 ரஞ்சி சீசன், விஜய் ஹஜாரே டிராபி, சையத் முஷ்டாக் அலி கோப்பை, முதலில் விற்கப்படாமல் போனாலும் 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஆட நேரிட்டது, பிறகு இந்தியா ஏ தொடர் என்று வரிசையாக அவர் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஆடிவருகிறார். எனவே பணிச்சுமை விவகாரம் சில எலைட் வீரர்களுக்கு ஒருதலைப்பட்சமாகச் சாதகமளிக்கும் வேளையில் ஷர்துல் தாக்கூர் போன்ற விளிம்பில் இருக்கும் வீரர்களுக்கு சாதகமாக இருப்பதில்லை.

https://www.hindutamil.in/news/sports/1375793-there-is-no-concern-about-the-health-of-the-players-shardul-thakur-1.html

பந்துவீச்சில் ஆகாஷ் தொடர்ச்சியாக பிரகாசிப்பு, இளையோர் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது இலங்கை

1 month 3 weeks ago

Published By: Digital Desk 3

05 Sep, 2025 | 02:33 PM

image

(நெவில் அன்தனி)

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விக்னேஸ்வரன் ஆகாஷ் தொடர்ச்சியாக பந்துவீச்சில் பிரகாசிக்க, மேற்கிந்தியத் தீவுகளுடனான 3ஆவது போட்டியில் 8 விக்கெட்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 7 போட்டிகளைக் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை முன்னிலை அடைந்துள்ளது.

இந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஆகாஷ், இந்தப் போட்டியில் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றி இலங்கையின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

அவருக்கு பக்கபலமாக பந்துவீசிய சாமிக்க சமுதித்த 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அன்டிகுவா கூலிஜ் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 39.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இயர்சின்ஹோ ஃபொன்டெய்ன் 51 ஓட்டங்களையும் ஜொஷுவா டோர்ன் 29 ஓட்டங்களையும் டைரிக் ப்றயன் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 22 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

விரான் சமுதித்த ஆட்டம் இழக்காமல் 64 ஓட்டங்களையும் கவிஜ கமகே ஆட்டம் இழக்காமல் 28 ஓட்டங்களையும் புலிஷ திலக்கரத்ன 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஆர்'ஜாய் கிட்டன்ஸ் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/224283

Checked
Fri, 10/31/2025 - 17:25
விளையாட்டுத் திடல் Latest Topics
Subscribe to விளையாட்டுத் திடல் feed