விளையாட்டுத் திடல்

சர்வதேச டி- 20 யில் இருந்து ஓய்வு பெறுவதாக கேன் வில்லியம்சன் அறிவிப்பு

2 months 4 weeks ago

Nov 2, 2025 - 08:51 AM

சர்வதேச டி- 20 யில் இருந்து ஓய்வு பெறுவதாக கேன் வில்லியம்சன் அறிவிப்பு

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

35 வயதாகும் வில்லியம்சன் 2011 ஆம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார். 

இதுவரை 93 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 18 அரை சதத்துடன் 2,575 ஓட்டங்களை பெற்றுள்ளார். 

தமது ஓய்வு குறித்து அவர் தெரிவிக்கையில், 

எதிர்பார்த்ததைவிட, அதிக ஆண்டுகள் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளேன். 

மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது. நிறைய அனுபவங்களையும் நியூசிலாந்து டி20 அணியில் கற்றுக்கொண்டேன் என தெரிவித்துள்ளார். 

டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள கேன் வில்லியம்சன், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாட உள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmhh597uu01c8o29ndn1dgf0s

இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் அய்யர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்!

2 months 4 weeks ago

01 Nov, 2025 | 01:00 PM

image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது காயம் காரணமாக சிட்னியில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இந்திய அணியின் துணைத் தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர், தற்போது சிகிச்சை முடித்து அங்கிருந்து வெளியேறியுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது, அவுஸ்திரேலிய விக்கெட்காப்பாளர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை அருமையாகக் கேட்ச் பிடிப்பதற்காகப் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்தபோது, ஷ்ரேயாஸ் அய்யரின் இடது விலாப்பகுதி மைதானத்தில் பலமாக அடிபட்டது.

வலியால் துடித்த அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார், அதன் பிறகு அவரால் களத்தடுப்பு செய்ய வர முடியவில்லை.

ஆரம்பத்தில் அவர் இடது கீழ் விலா எலும்புப் பகுதியில் காயமடைந்திருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால், சில 'ஸ்கேன்' பரிசோதனைகளுக்குப் பிறகு, காயம் விலா எலும்பையும் தாண்டி மண்ணீரலில் கீறலை ஏற்படுத்தி, அதனால் உள்ளுறுப்பு இரத்தக்கசிவு (Internal Bleeding) உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அணியின் வைத்தியரின் அறிவுறுத்தலின் பேரில் சிட்னியில் உள்ள ஒரு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்குச் சிறப்பு மருத்துவக் குழுவினர் உடனடியாக இரத்தக்கசிவைத் தடுப்பதற்கான சிகிச்சைகளை அளித்தனர்.

தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஷ்ரேயாஸ் அய்யர், தற்போது உடல்நிலை சீரானதையடுத்து (Condition is Stable) வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை முடித்து வெளியேறியுள்ளார். அவர் பூரண குணமடைந்து விரைவில் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/229223

ஆஸ்திரேலியாவில் பயிற்சியின் போது உயிரிழந்த 17 வயது கிரிக்கெட் வீரர் – என்ன நடந்தது?

3 months ago

கிரிக்கெட், பென் ஆஸ்டின்

பட மூலாதாரம், Supplied

படக்குறிப்பு, பயிற்சியின் போது கிரிக்கெட் பந்து தாக்கியதில் 17 வயதான பென் ஆஸ்டின் இறந்தார்

கட்டுரை தகவல்

  • லானா லாம்

  • பிபிசி செய்தியாளர்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மெல்போர்னில் கிரிக்கெட் பயிற்சியின் போது பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய சிறார் ஒருவர் உயிரிழந்தார்.

செவ்வாயன்று கிரிக்கெட் வலை பயிற்சி செய்துகொண்டிருந்த 17 வயதான பென் ஆஸ்டின் கழுத்து பாதுகாப்பு இல்லாமல் ஹெல்மெட் மட்டும் அணிந்திருந்தார். அப்போது, கையடக்க பந்து லாஞ்சரைப் பயன்படுத்தி வீசப்பட்ட பந்து அவரது கழுத்தில் தாக்கியது.

தகவல் தெரிவிக்கப்பட்டதும், உள்ளூர் நேரப்படி மாலை 5:00 மணியளவில் அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கிரிக்கெட்டர் பென், வியாழக்கிழமையன்று உயிரிழந்தார்.

மகனை இழந்த குடும்பம் "முற்றிலும் உடைந்துபோய்விட்டதாக" பென்னின் தந்தை ஜேஸ் ஆஸ்டின் கூறினார். நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் சமூகம் பென் ஆஸ்டினின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிப்பதாக கிரிக்கெட் விக்டோரியா தெரிவித்துள்ளது.

மகனை இழந்து வாடும் தங்களது குடும்பத்தின் இழப்பு குறித்த விவரங்களை தந்தை ஜேஸ் ஆஸ்டின் அறிக்கை ஒன்றின் மூலம் பகிர்ந்து கொண்டார்.

"டிரேசிக்கும் எனக்கும் அன்பான மகன், கூப்பர் மற்றும் சாக்கிற்கு பிடித்தமான சகோதரர் மற்றும் எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வாழ்க்கையில் ஒளிரும் விளக்காக இருந்தார் பென்," என்று அவர் கூறினார்.

"இந்த சோகமான சம்பவம் பென் ஆஸ்டினை எங்களிடமிருந்து பறித்துவிட்டது, அவர் பல கோடை காலங்களில் செய்து வந்தது போலவே, கிரிக்கெட் விளையாடுவதற்காக நண்பர்களுடன் சென்றார். அவர் கிரிக்கெட்டை நேசித்தார், அது அவரது வாழ்க்கையின் மகிழ்ச்சிகளில் ஒன்றாகும்."

விபத்து நடந்தபோது வலைகளில் பந்துவீசிக் கொண்டிருந்த பென்னின் சக வீரருக்கு தாங்கள் ஆதரவாக இருப்பதாக ஆஸ்டின் கூறினார்.

"இந்த விபத்து இரண்டு இளைஞர்களைப் பாதித்துள்ளது, நாங்கள் அவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக உள்ளோம்" என்று அவர் கூறினார்.

விபத்துக்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட் சமூகத்தினர் வழங்கிய ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார், மேலும் தனது மகனுக்கு உதவிய மீட்புப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் , 2014-ஆம் ஆண்டு  பேட்டிங் செய்யும் போது கழுத்தில் பந்து தாக்கியதில் இறந்தார் .

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் , 2014-ஆம் ஆண்டு பேட்டிங் செய்யும் போது கழுத்தில் பந்து தாக்கியதில் இறந்தார் .

கிரிக்கெட் விக்டோரியாவின் தலைமை நிர்வாக அதிகாரி நிக் கம்மின்ஸ், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது "மிகவும் சவாலான நேரம்" என்றார்.

"10 ஆண்டுகளுக்கு முன்பு பில் ஹியூஸ் சந்தித்ததைப் போன்ற விபத்து இது. பந்து அவரது கழுத்தில் பட்டது," என் கம்மின்ஸ் கூறியதாக ஏபிசி செய்தி தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் , 2014-ஆம் ஆண்டு பேட்டிங் செய்யும் போது கழுத்தில் பந்து தாக்கியதில் இறந்தார் .

அவரது மரணத்துக்கு யாரும் காரணம் அல்ல என்று பிரேத பரிசோதனை அதிகாரி கண்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டு வீரர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களை மேம்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

'திறமையான வீரர், அணியில் பிரபலமானவர்'

பென்னைத் தாக்கிய பந்து, பொதுவாகப் பயன்படுத்தப்படும் கையடக்க சாதனம் ஒன்றைப் பயன்படுத்தி வீசப்பட்டது என்பது தெளிவாகிறது.

"விக்டோரியாவிலும் - தேசிய அளவிலும் - முழு கிரிக்கெட் சமூகத்துக்கும் இந்த இழப்பு துக்கமளிக்கிறது. எங்களால் எப்போதும் இதை மறக்க முடியாது" என கம்மின்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

பென் திறமையான வீரர், அணியில் பிரபலமானவர் மற்றும் கேப்டன் என்றும், மெல்போர்னின் தென்கிழக்கில் 18 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் என்றும் கம்மின்ஸ் தெரிவித்தார்.

"இளைஞர் ஒருவரின் வாழ்க்கை இவ்வளவு குறுகிய காலத்தில் முடிவடைந்தது மனவேதனை அளிக்கிறது" என்று கம்மின்ஸ் கூறினார்.

ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப்பிற்காக பென் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த கிளப் வெளியிட்ட சமூக ஊடக பதிவில், பலருக்கு மகிழ்ச்சியைத் தந்த அந்த இளைஞருக்கு அஞ்சலி செலுத்தியது.

ஹியூஸுக்கு செய்யப்பட்டதைப் போலவே, "put your bats out for Benny" என்ற முன்னெடுப்பை மேற்கொண்டு பென்னிக்கு அஞ்சலி செலுத்த நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களை கிளப் கேட்டுக் கொண்டது.

வேவர்லி பார்க் ஹாக்ஸ் ஜூனியர் கால்பந்து கிளப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடிய பென் பற்றி கூறிய கால்பந்து கிளப், அவர் "கனிவானவர்", "மரியாதைக்குரியவர்" மற்றும் "அருமையான கால்பந்து வீரர்" என்று கூறியது.

"எங்கள் கிளப்பும் சமூகமும் உண்மையிலேயே மிகச் சிறந்த இளைஞர் ஒருவரை இழந்துவிட்டன, சிறப்பான இளைஞராக வளர்ந்து கொண்டிருந்த அவரது இழப்பை எங்கள் கிளப் பல ஆண்டுகளுக்கு மிகவும் ஆழமாக உணரும்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c77zd1ypyp3o

தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் - இலங்கைக்கு இரண்டாம் இடம்

3 months ago

Oct 27, 2025 - 09:35 AM -

தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் - இலங்கைக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் ராஞ்சியில் நேற்று (26) முடிவடைந்த தெற்காசிய சிரேஸ்ட தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 

பல போட்டிகளில் இந்தியாவுடன் போட்டியிட்ட இலங்கை, பதக்கப் பட்டியலில் 4 தங்கப் பதக்கங்கள் வித்தியாசத்தில் முதலாம் இடத்தை இழந்தது. 

இலங்கை 16 தங்கம், 14 வெள்ளி மற்றும் 10 வெண்கலத்துடன் 40 பதக்கங்களை வென்றது. 

20 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா, பதக்கப் பட்டியலில் முன்னிலை பெற்றதுடன், 20 வெள்ளி மற்றும் 18 வெண்கலப் பதக்கங்களையும் வென்றது. 

இருப்பினும், இலங்கை மற்றும் இந்தியாவைத் தவிர, வேறு எந்த நாடும் தங்கப் பதக்கத்தை வெல்லவில்லை. 

குறிப்பாக, 02 வெள்ளிப் பதக்கங்களை வென்ற நேபாளத்தைத் தவிர, வேறு எந்த நாடும் வெள்ளிப் பதக்கத்தை ஏனும் வெல்லவில்லை 

பங்களாதேஷ் 3 வெண்கலப் பதக்கங்களையும், மாலைத்தீவு 1 வெண்கலப் பதக்கத்தையும் வென்ற போதும், பூட்டான் ஒரு பதக்கத்தையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 60 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். 

போட்டியை நடத்திய இந்தியா மற்றும் இலங்கையைத் தவிர, பூட்டான், நேபாளம், மாலைத்தீவு மற்றும் பங்களாதேஷை பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

https://adaderanatamil.lk/news/cmh8m6pz20188qplpbb297cwt

விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் பட்டியலில் இரண்டாமிடம் - சங்காவை முந்தினார்

3 months ago

ஒருநாள்  கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் பட்டியலில் சங்காவை முந்தினார் விராட் கோலி

25 Oct, 2025 | 06:42 PM

image

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் பட்டியலில் குமார் சங்ககராவை முந்தினார் இந்திய அணியின் விராட் கோலி.

அவுஸ்திரேலியா- இந்தியா இடையிலான 3ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது.

முதலில் துடுப்படுத்தாடிய அவுஸ்திரேலியா 236 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 237 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

சுப்மன் கில் 24 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். முதல் இரண்டு போட்டிகளில் டக்அவுட் ஆன விராட் கோலி, முதல் பந்திலேயே ஓட்டத்தைப்பெற்று கையை காட்டினார்.

ரோகித் சர்மா 63 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இது அவருடைய 60ஆவது அரைசதம் ஆகும். மறுமுனையில் விராட் கோலி, 56 பந்தில் 4 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.

இந்த ஜோடி 100 ஓட்டங்களைக் கடந்தது. இதன் மூலம் ரோகித் சர்மா- விராட் கோலி ஜோடி கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக 100 ஓட்டங்களைப் பகிர்ந்து இணைப்பாட்டத்தை ஏற்படுத்தியது. 

விராட் கோலி 54 ஓட்டங்களை எட்டியபோது, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்களைப்பெற்றவரகள் பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்திருந்த குமார் சங்கக்கராவை பின்னுக்கு தள்ளினார். 

சங்கக்கரா 14,234 ஓட்டங்களை எடுத்து 2ஆவது இடத்தில் இருந்தார். சச்சின் டெண்டுல்கர் 18426 ஓட்டங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

https://www.virakesari.lk/article/228668

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

3 months 1 week ago

2026 ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாட நேபாளம், ஓமான் தகுதி

16 Oct, 2025 | 08:10 PM

image

(நெவில் அன்தனி)

இந்தியாவிலும் இலங்கையிலும் அடுத்த வருடம் கூட்டாக நடத்தப்படவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவதற்கு நேபாளம், ஓமான் ஆகிய நாடுகள் தகுதிபெற்றுள்ளன.

ஆசிய பிராந்தியத்திலிருந்து மூன்றாவது நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் தகுதிபெறுவதற்கான வாயிலை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

ஓமானின் அல் அமீரத்தில் நடைபெற்றுவரும் ஆசிய - கிழக்கு ஆசிய பசுபிக் பிராந்திய ரி20 உலகக் கிண்ண தகுதிகாணின் சுப்பர் 6 சுற்று நிறைவடைவதற்கு முன்னரே நேபாளமும் ஓமானும் ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டுள்ளன.

இந்த இரண்டு அணிகளும் சுப்பர் 6 சுற்றில் முதல் மூன்று இடங்களுக்குள் வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்தே அவை ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ளன.

இப் பிராந்தியத்திலிருந்து மேலும் ஒரு அணி ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதிபெறும்.

அல் அமீரத்தில் இன்று நடைபெற்ற சமோஆ உடனான போட்டியில் அமோக வெற்றியீட்டிய ஐக்கிய அரபு இராச்சியம்  சுப்பர் 6 சுற்று அணிகள் நிலையில் 3ஆம் இடத்தில் இருக்கிறது.

ஓமானும் நேபாளமும் முதலிடத்தில் இருப்பதுடன் அவற்றின் நிலைகளை நிகர ஓட்ட வேகம் வேறுபடுத்துகிறது.

ஐக்கிய அரபு இராச்சியம் தனது அடுத்த சுப்பர் 6 சுற்று போட்டியில் ஜப்பானை நாளை எதிர்த்தாடவுள்ளது.

சுப்பர் சிக்ஸ் சுற்றில் கத்தாரும் பங்குபற்றுகிறது.

இந்தியாவிலும் இலங்கையிலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் வரவேற்பு நாடுகளாக இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளும் 2024 உலகக் கிண்ணத்தில் வரவேற்பு நாடுகளை விட முதல் 7 இடங்களைப் பெற்ற ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, ஐக்கிய அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய  நாடுகளும்    ஐசிசி ரி20 தரவரிசைப் பிரகாரம் அயர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய  நாடுகளும்   ஐசிசி ரி20 உலகக் கிண்ணம் - 2026இல் நேரடியாக விளையாட தகுதிபெற்றன.

தகுதிகாண் சுற்றுகள் மூலம் கனடா (அமெரிக்க வலயம்), இத்தாலி மற்றும் நெதர்லாந்து (ஐரோப்பிய வலயம்), நமிபியா மற்றும் ஸிம்பாப்வே (ஆபிரிக்க வலயம்), நேபாளம் மற்றும் ஓமான் (ஆசிய வலயம்) ஆகியன ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாட தகதிபெற்றுள்ளன.

கடைசி அணியாக ஐக்கிய அரபு இராச்சியம் தகுதிபெறும் என நம்பப்படுகிறது.

1610_nepal_and_oman_qualify_for_t20_wc_2

https://www.virakesari.lk/article/227929

ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் தொடர்

3 months 1 week ago

ஆஸ்திரேலிய தொடரில் இந்தியாவின் வெற்றியைத் தீர்மானிக்கும் 5 விஷயங்கள்

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா, கோலி, ரோஹித்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 18 அக்டோபர் 2025

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) பெர்த் நகரில் தொடங்குகிறது. 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதிய இவ்விரு அணிகளும் மறுபடியும் மோதுவதால் இத்தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

பொதுவாகவே ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடர்கள் சவால் நிறைந்தவையாக இருக்கும். ஆஸ்திரேலியாவின் பலமான வேகப்பந்துவீச்சு, அதிரடியான பேட்டர்கள், எப்போதும் இந்தியாவுக்கு பிரச்னையாக விளங்கும் டிராவிஸ் ஹெட் என இம்முறையும் இந்திய அணிக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. அவற்றை சமாளித்து இந்தியா இந்தத் தொடரை வெல்வதில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய 5 விஷயங்கள் என்னென்ன?

1. ரோஹித் மற்றும் கோலியின் கம்பேக்

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா, கோலி, ரோஹித்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2025 ஐபிஎல் தொடரில் விளையாடிய கோலி மற்றும் ரோஹித் அதன்பிறகு எந்தத் தொடரிலும் பங்கேற்கவில்லை.

விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் மறுபடியும் இந்திய அணிக்கு திரும்பியிருப்பது இந்தத் தொடர் மீது வழக்கத்தை விட அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2025 ஐபிஎல் தொடரில் விளையாடிய அவர்கள், அதன்பிறகு எந்தத் தொடரிலும் பங்கேற்கவில்லை. அதனால் அவர்களை மறுபடியும் இந்திய ஜெர்ஸியில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அதேசமயம் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய பந்துவீச்சை அவர்கள் மண்ணில் சமாளிக்க இந்த இரண்டு சீனியர் வீரர்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானதாக இருக்கும். பொதுவாகவே ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பேட்டர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். அப்படியிருக்கும்போது பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜாஷ் ஹேசல்வுட் அடங்கிய ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சு கூட்டணி மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

அந்த சவால்களை சமாளிக்க கோலி மற்றும் ரோஹித் இருவரின் அனுபவமும் முக்கியம். ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் 50+ சராசரியில் இருவரும் ஆடியிருக்கிறார்கள். அதை அவர்கள் தொடரும்பட்சத்தில் இந்திய அணிக்கு நல்ல தொடக்கங்கள் கிடைக்கும்.

அதேசமயம் கடைசியாக அவர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் ஆடிய 2024-25 பார்டர் கவாஸ்கர் டிராபியில் இருவரின் செயல்பாடும் எதிர்பார்த்த அளவு இருக்கவில்லை. கடைசி 4 போட்டிகளில் கோலி 85 ரன்கள் மட்டும் அடித்திருக்க, விளையாடிய 3 போட்டிகளிலும் சேர்த்து 31 ரன்கள் மட்டுமே எடுத்தார் ரோஹித். அந்த செயல்பாட்டை மறக்கடிக்கும் வகையில் கோலியும், ரோஹித்தும் விளையாடவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.

2. புதிய கேப்டன் ஷுப்மன் கில்

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா, கோலி, ரோஹித்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோலி, ரோஹித் என இரண்டு முன்னாள் கேப்டன்களுக்குத் தலைமை தாங்கவேண்டிய பொறுப்பு கில்லுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்தத் தொடரில் முதல் முறையாக ஷுப்மன் கில் தலைமையில் ஓர் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி. 2027 உலகக் கோப்பையை நோக்கிய இந்தப் பயணத்தில் அவர் மீது நிச்சயம் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும்.

அதேசமயம் டெஸ்ட் கேப்டனாக அவரது பயணம் சிறப்பாகவே தொடங்கியிருக்கிறது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கில் தலைமையில் சமன் செய்த இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வென்றது. இந்த செயல்பாடுகள் அவருக்கு நம்பிக்கை தருவதாக இருக்கும்.

மறுபக்கம் கோலி, ரோஹித் என இரண்டு முன்னாள் கேப்டன்களுக்குத் தலைமை தாங்கவேண்டிய பொறுப்பும் கில்லுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஓர் இளம் கேப்டனுக்கு இது நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமையலாம். ஆனால், தான் இந்த வாய்ப்பை எதிர்பார்த்திருப்பதாக கூறியிருந்தார் கில்.

ஆஸ்திரேலியா போன்ற ஒரு பெரிய அணியை அவர்கள் மண்ணில் எதிர்கொள்வது சவாலாகவே இருக்கும். வீரர்களின் ஸ்லெட்ஜிங் மட்டுமல்லாமல், ரசிகர்களை சமாளிப்பதும்கூட ஒரு பெரிய சவால் தான். அதுபோன்ற தருணங்களில் கேப்டனாக கில் எடுக்கும் முடிவுகள் ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இத்தொடருக்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்த அக்‌ஷர் படேல், "ஷுப்மன் கில் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறார். அவர் நெருக்கடியை தனக்குள் எடுத்துக்கொள்ளவேயில்லை. ஒரு தலைவருக்கான மிக முக்கிய குணம் அது" என்று கூறியிருந்தார். அதை இந்தத் தொடர் முழுவதும் கில் வெளிப்படுத்துவது அவசியம்.

3. பும்ரா இல்லாத வேகப்பந்துவீச்சு குழு

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா, கோலி, ரோஹித்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பும்ரா இல்லாதது இந்திய பந்துவீச்சுக்கு சற்று பின்னடைவாகத்தான் இருக்கும்.

வேலைப்பளுவை சரியாகக் கையாள்வதற்காக ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு இந்தத் தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முன்னணி பௌலரான பும்ரா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலுமே விளையாடியிருந்தார்.

2024-25 பார்டர் கவாஸ்கர் டிராபியின் தொடர் நாயகனான பும்ரா இல்லாதது இந்திய பந்துவீச்சுக்கு சற்று பின்னடைவாகத்தான் இருக்கும். அதனால் மற்ற வேகப்பந்துவீச்சாளர்கள் மீதான எதிர்பார்ப்பும் நெருக்கடியும் அதிகரிக்கும். அதிரடி காட்டும் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு எதிராக இந்த பௌலர்களுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது.

முகமது சிராஜ் நிறைய போட்டிகளில் விளையாடியிருப்பதால் அவர் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்குவார். அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா மூவரில் இருவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்பு அதிகம். அவர்களின் செயல்பாடுகள் கூர்ந்து கவனிக்கப்படும்.

குறிப்பாக ஹர்ஷித் ராணாவின் செயல்பாடுகள் மீது அனைவரின் கவனமும் இருக்கும். பயிற்சியாளர் கம்பீரின் தயவால் தான் அவர் எல்லா போட்டிகளிலும் ஆடுகிறார் என்று சமீபத்தில் பேசப்பட, அதை சில தினங்கள் முன் கடுமையாக விமர்சித்திருந்தார் கம்பீர். அப்படியிருக்கும்போது ஹர்ஷித் ராணாவின் ஒவ்வொரு அசைவுமே பேசுபொருளாக்கப்படும். இதுவும் அந்த இளம் வீரருக்குக் கூடுதல் நெருக்கடி கொடுப்பதாக அமையலாம்.

பிரசித், அர்ஷ்தீப் ஆகியோருக்கும் அணியில் நிரந்தர இடம் பிடிக்கவேண்டும் என்ற தேவை இருப்பதால், அதுவும் உளவியல் ரீதியாக அவர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தலாம்.

இந்த அனைத்து சவால்களையும் சமாளித்து இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஜொலிக்கவேண்டும்.

4. துணைக் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா, கோலி, ரோஹித்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்தியாவுக்காக அதிக ரன்கள் (5 இன்னிங்ஸ்களில் 243) எடுத்திருந்தது ஷ்ரேயாஸ் தான்.

2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பாக ஷ்ரேயாஸ் ஐயரை வெளியேற்றுவது பற்றித்தான் டீம் மீட்டிங்கில் விவாதித்தோம் என்று கூறியிருந்தார் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ். அந்த அளவுக்கு அவரது விக்கெட் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அந்த இறுதிப் போட்டியில் அவர் டக் அவுட் ஆனதில் இருந்துதான் இந்தியா பின்னடைவை சந்திக்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டிகளில் சீரான செயல்பாட்டை அவர் கொடுத்துக்கொண்டிருப்பதும், எந்தவித பந்துவீச்சையும் அவர் நன்றாக எதிர்கொள்வதும் அதற்கான முக்கியக் காரணங்கள். கடைசியாக விளையாடிய சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்தியாவுக்காக அதிக ரன்கள் (5 இன்னிங்ஸ்களில் 243) எடுத்திருந்தது ஷ்ரேயாஸ் தான். அதனால் அவருக்கு ஆஸ்திரேலிய பௌலர்கள் சிறப்பு வியூகம் வகுப்பார்கள். அதனால் அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

இப்போது துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருக்கும் ஷ்ரேயாஸ் மிடில் ஆர்டரில் இந்தியாவுக்கு நல்ல பங்களிப்பைக் கொடுத்தால் அது ஆஸ்திரேலிய பௌலர்களுக்கு நிச்சயம் தலைவலியாக அமையும்.

5. நித்திஷ் குமார் ரெட்டியின் இன்னொரு அறிமுகம்

கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா, கோலி, ரோஹித்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தன் அறிமுக டெஸ்ட் தொடரில் இதே ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்டிருந்தார் நித்திஷ்.

மிகவும் முக்கியமான வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இடத்துக்கு நித்திஷ் ரெட்டியை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறது இந்திய அணி. ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயத்தால் அவதிப்படுவதால் நித்திஷை அனைத்து ஃபார்மட் வீரராக நிலைநிறுத்த விரும்புகிறார்கள். அதனால் இப்போது ஒருநாள் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

காரணம் 2023 உலகக் கோப்பையின் பிற்பகுதியில் ஹர்திக் இல்லாததால் அந்த ஒரு இடத்தை நிரப்ப சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி என இரண்டு வீரர்களை இந்தியா பயன்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படியொரு நிலை மறுபடியும் வராமல் இருக்க அதேபோல் இன்னொரு வீரரையும் வளர்த்தி வைத்திருப்பது அவசியமாகிறது.

இந்த வாய்ப்பை நித்திஷ் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது இந்திய அணிக்கும் மிகவும் அவசியம். அந்த வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இடம் சரியாக நிரப்பப்பட்டால் அணியின் காம்பினேஷனில் தேவையான மாற்றங்களை செய்ய கேப்டனுக்கு அது உதவியாக இருக்கும். ஒருவேளை அவர்கள் ஒரு கூடுதல் ஸ்பின்னரை பயன்படுத்தவும் அது உதவலாம். அதனால் அவரது அறிமுகம் மீதும் அதிக கவனம் இருக்கும்.

தன் அறிமுக டெஸ்ட் தொடரில் இதே ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்டிருந்தார் நித்திஷ். இப்போது ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், இந்த ஒருநாள் அறிமுகத்திலும் அவர் ஜொலித்தால் அது இந்திய அணிக்கு பெரும் பலமாக அமையும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly4g8jzwqgo

148 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஜாக் காலிஸ் சாதனையை யாராலும் நெருங்க முடியாதது ஏன்?

3 months 2 weeks ago

ஜாக் காலிஸ்

பட மூலாதாரம், Duif du Toit/Gallo Images/Getty Images

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • மணி நேரங்களுக்கு முன்னர்

தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ் இன்று அரைசதம் அடித்திருக்கிறார். பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என கிரிக்கெட்டின் அனைத்து ஏரியாக்களிலும் ஜொலித்த அவருக்கு இன்றோடு ஐம்பது வயது ஆகிறது.

சுமார் 19 ஆண்டுகள் சர்வதேச அரங்கில் விளையாடிய அவரது பயணத்தை எண்களின் வாயிலாக அலசுவோம். ஏனெனில், "நம்பர்களை வைத்துப் பார்த்தால் ஒரு முழுமையான கிரிக்கெட்டர் என்பதற்கு மிக அருகில் வருவது காலிஸ்தான்" என்று டிராவிட்டே கூறியிருக்கிறார்!

ஜாக் காலிஸ்

பட மூலாதாரம், Cameron Spencer/Getty Images

டெஸ்ட் கிரிக்கெட்டில் காலிஸ்

166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் காலிஸ், 55.37 என்ற சராசரியில் 13289 ரன்கள் குவித்திருக்கிறார். சச்சின், ஜோ ரூட், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கு அடுத்து டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் குவித்தவர் இவர்தான்.

அதிக டெஸ்ட் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கு (51) அடுத்து 45 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

"டெஸ்ட் பேட்டர் காலிஸை உடைப்பதென்பது சாதாரண விஷயமில்லை. எத்தனை திட்டங்கள் வேண்டுமானால் தீட்டுங்கள், நாளின் முடிவில் அவர் ஆட்டமிழக்காமல் களத்தில் நிற்பார்" என்று ஒருமுறை புகழ்ந்திருந்தார் ரிக்கி பாண்டிங். ஆனால், அவரது சாதனைகள் பேட்டிங்கோடு நின்றுவிடவில்லை.

பேட்டிங் போல் பந்துவீச்சிலேயும் காலிஸ் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். 32.65 என்ற சராசரியில் 292 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் அவர்.

அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் 43வது இடத்தில் இருக்கும் காலிஸ், ஹர்பஜன் சிங், இஷாந்த் ஷர்மா, ஜஹீர் கான், ஸ் ரீவ் ஹார்மிசன் (steve harmison) போன்ற முன்னணி பௌலர்களுக்கு இணையான சராசரி வைத்திருக்கிறார்.

148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10000 ரன்களுக்கு மேலும் 250 விக்கெட்டுகளுக்கு மேலும் எடுத்த ஒரே வீரர் காலிஸ்தான்.

ஏன், 5000+ ரன்கள் & 250+ விக்கெட்டுகள் என்ற பட்டியலில் இருப்பவர்களே மூவர்தான். அதில் காலிஸோடு இருப்பவர்கள் கபில் தேவ் மற்றும் சர் இயான் போத்தம் ஆகியோர் மட்டுமே.

இது மட்டுமல்ல, டெஸ்ட் போட்டிகளில் அதிக ஆட்ட நாயகன் விருதுகள் (23) வென்றவரும் இவர்தான். 9 முறை தொடர் நாயகன் விருது பெற்று, அஷ்வின் & முரளிதரன் (இருவரும் 11) இருவருக்கும் அடுத்து அந்தப் பட்டியலிலும் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் காலிஸ்.

ஜாக் காலிஸ்

பட மூலாதாரம், Graham Crouch-ICC/ICC via Getty Images

ஒருநாள் போட்டிகளில்...

ஒருநாள் ஃபார்மட்டைப் பொறுத்தவரை 328 போட்டிகளில் 44.36 என்ற சராசரியில் 11579 ரன்கள் விளாசியிருக்கிறார். அதிக ஒருநாள் ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் எட்டாவது இடம். அதேபோல் 31.79 என்ற சராசரியில் 273 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். இந்தப் பட்டியலில் 19வது இடம். தென்னாப்பிரிக்காவின் மிகச் சிறந்த பௌலராகக் கருதப்படும் ஆலன் டொனால்டை விடவும் அதிக விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார்.

ஆல்ரவுண்டராகப் பார்க்கும்போதும், ஒருநாள் போட்டிகளில் 5000+ ரன்களும் 250+ விக்கெட்டுகளும் எடுத்திருக்கும் ஐந்து பேரில் இவரும் ஒருவர்.

முன்பொருமுறை காலிஸின் ஒருநாள் போட்டி அணுகுமுறையைப் புகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங், "காலிஸ் ஒருநாள் கிரிக்கெட்டை செஸ் போட்டி போல் மாற்றிவிடுவார். வியூகங்கள் வகுப்பார், நிதானமாகக் காத்திருப்பார், கருணை காட்டமாட்டார். ஆர்ப்பாட்டமே இருக்காது. ஆனால், முடிவுகள் கிடைக்கும்" என்று கூறியிருந்தார்.

ஜாக் காலிஸ் சாதனையை 148 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாராலும் முறியடிக்க முடியாதது ஏன்?

பட மூலாதாரம், Carl Fourie/Gallo Images/Getty Images

மூன்று ஃபார்மட்களிலும் சேர்த்தால்?

கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு ஃபார்மட்களிலுமே 10,000 ரன்களுக்கு மேல் எடுத்தவர்கள் மொத்தமே ஆறு பேர் தான் - சச்சின், டிராவிட், பான்டிங், ஜெயவர்தனே, சங்கக்காரா, காலிஸ். இவர்களுள் பந்துவீச்சிலும் கலக்கியது சச்சினும், காலிஸும் மட்டும்தான்.

டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து ஃபார்மட்களிலும் சேர்த்து 25534 ரன்கள் (ஆறாவது இடம்) & 519 விக்கெட்டுகள் (31வது இடம்) எடுத்துள்ள இவர், அதிக 50+ ஸ்கோர்கள் (211) எடுத்ததில் ஐந்தாவது இடம் பிடித்திருக்கிறார்.

இவ்வளவு ஏன் ஐபிஎல் அரங்கிலும் கூட சிறப்பாகவே செயல்பட்டார். 2010 சீசனில் 572 ரன்கள் விளாசி இரண்டாம் இடம் பிடித்தார். 2012 சீசனில் 409 ரன்கள் குவித்ததோடு 15 விக்கெட்டுகளும் கைப்பற்றி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியக் காரணமாக விளங்கினார்.

ஜாக் காலிஸ்

பட மூலாதாரம், Duif du Toit/Gallo Images/Getty Images

நீண்ட காலம் சீராக ஆடியவர்!

காலிஸ் இன்னும் அதிகளவு புகழப்படுவதற்கு இன்னொரு காரணம் அவர் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்பது.

வேகப்பந்துவீச்சைத் தேர்ந்தெடுக்கும்போதே கிரிக்கெட் வீரர்கள் காயத்துடனான போராட்டத்துக்கும் தயாராகிவிடுவார்கள். பேட்டர்கள் போல், ஸ்பின்னர்கள் போல் அவர்களால் அனைத்து போட்டிகளிலும் விளையாடிவிட முடியாது.

அதேபோல், எந்தவொரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராலும் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் விளையாடிட முடியாது. இன்றைய காலகட்டத்தில் ஹர்திக் பாண்டியா தொடங்கி ஆண்ட்ரே ரஸல் வரை அவர்கள் காயத்தோடு போராடுவதை பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம்.

ஆனால், சர்வதேச அரங்கில் 519 போட்டிகளில் விளையாடியிருக்கிறார் காலிஸ். அனைத்து ஃபார்மட்களிலும் சேர்த்து அதிக போட்டிகளில் விளையாடியவர்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 45346 பந்துகளை சந்தித்திருக்கும் காலிஸ், பௌலராக 31258 பந்துகள் வீசியிருக்கிறார். வக்கார் யூனுஸ், டேல் ஸ்டெய்ன், பிரெட் லீ போன்ற ஜாம்பவான் பௌலர்களை விடவும் அதிக பந்துகள் வீசியிருக்கிறார்.

மொத்தம் 76604 பந்துகளில் நேரடியாக காலிஸின் பங்களிப்பு இருந்திருக்கிறது. அதாவது சுமார் 10026 ஓவர்கள் அந்த 22 யார்டு பிட்சுக்கு நடுவே உழைத்திருக்கிறார்.

தொடர்ந்து போட்டிகளில் விளையாடியது மட்டுமல்லாமல், அந்தப் போட்டிகளில் அவர் சீரான செயல்பாட்டையும் கொடுத்திருக்கிறார். 1999 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் ஒரே ஒரு ஆண்டு மட்டும்தான் (2008) அவரது ஆண்டு பேட்டிங் சராசரி நாற்பதுக்கும் குறைவாக இருந்திருக்கிறது.

காலிஸ் பற்றி ஒருமுறை பேசிய இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கார, "தென்னாப்பிரிக்க அணிக்கு ஒரு டிராவிட்டும், கபில் தேவும் இருந்திருந்து, அவர்களை ஒன்றிணைத்தால் என்ன வருமோ அதுதான் காலிஸ். அவரது திறன், ஒழுக்கம், நீண்ட காலம் ஆடிய தன்மையெல்லாம் அசாத்தியமானது" என்று புகழ்ந்தார்.

ஃபீல்டிங்கிலும் அசத்துபவர்!

ஜாக் காலிஸ்

பட மூலாதாரம், Getty Images

பேட்டிங், பௌலிங் மட்டுமல்ல, காலிஸ் ஃபீல்டிங்கிலும் அசத்தும் முழுமையான 3D வீரர். சர்வதேச அரங்கில் அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் 338 கேட்சுகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார் அவர்! இத்தனைக்கும் பெரும்பாலான கேட்ச்களை கடினமான ஸ்லிப் பகுதியில் நின்று பிடித்திருக்கிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் நிர்வாக இயக்குநரான ஜாய் பட்டச்சார்யா காலிஸின் ஃபீல்டிங் திறனை வெகுவாகப் பாராட்டி சில ஆண்டுகளுக்கு X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவில், "2011ம் ஆண்டு டெல்லிக்கு எதிரான போட்டியில் பௌண்டரி எல்லையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார் காலிஸ். அங்கு மூன்று முழு நீள டைவ்கள் அடித்து 3 பௌண்டரிகளைத் தடுத்தார் காலிஸ். அணியின் ஃபிசியோ அவருக்கு உதவி செய்வதற்காக கிளம்பியபோது வேண்டாம் என்று காலிஸ் மறுத்துவிட்டார். அந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 18 ரன்களில் வென்றது. டிரஸிங் ரூமில் காலிஸ் அவர் உடையைக் கழற்றியபோது அனைவரும் உரைந்து போனார்கள். ஏனெனில் உடல் முழுக்க காயம் பட்டிருந்தது. ரத்தம் ஒழுகியது. இளம் வீரர்கள் அர்ப்பணிப்பின் அர்த்தத்தை அன்று உணர்ந்து கொண்டார்கள்" என்று குறிப்பிடிருந்தார் ஜாய் பட்டாச்சார்யா.

இந்த நிகழ்வு நடந்தபோது காலிஸின் வயது 35.

ஓய்வுப் பிறகான சர்ச்சைகள்

ஓய்வு பெறும் வரை தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டுக்கு பெரும் பங்களிப்பைக் கொடுத்த காலிஸ், ஓய்வுக்குப் பிறகு சில சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார்.

2016ம் ஆண்டு இட ஒதுக்கீடு இலக்குகளை எட்டாததற்காக தென்னாபிரிக்க விளையாட்டு சங்கத்தை அந்நாட்டு அரசு கலைத்தது.

அதை விமர்சித்து அப்போது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார் காலிஸ். அது விமர்சனத்துக்குள்ளனதும், "நான் அரசியில் தலையீட்டைத்தான் விமர்சித்தேனே ஒழிய, சமத்துவத்துக்கு எதிராக கருத்து சொல்லவில்லை" என்று விளக்கம் கூறிவிட்டு அந்தப் பதிவை நீக்கினார்.

1995ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்காக அறிமுகம் ஆனவர் 2014 வரை சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார். சாதனைகள் பல படைத்திருந்தாலும், தென்னாப்பிரிக்க அணிக்காக ஒரு உலக கோப்பையை வெல்ல முடியாதது குறித்து எப்போதுமே வருந்தியிருக்கிறார்.

காலிஸைப் பற்றி சுருக்கமாகச் சொல்ல, ஜாம்பவான் பிரயன் லாரா ஒருமுறை சொன்னதையே பயன்படுத்தலாம் "ஒரு அணியில் பேட்டராக மட்டும் காலிஸால் இடம்பெற முடியும். ஒரு அணியில் பௌலராக மட்டுமே அவரால் இடம்பெற முடியும். ஒரு அணியில் ஸ்லிப் ஃபீல்டராக மட்டுமே அவரால் இடம்பெற முடியும். காலிஸ் அவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்".

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg4z00w6gqo

மாரத்தான் போட்டிகளுக்கு தயாராவது எப்படி?

3 months 2 weeks ago

சென்னையில் இளைஞர் மரணம்: மாரத்தானில் யாரெல்லாம் பங்கேற்கக் கூடாது?

மாரத்தான், உடல்நலம், உடற்பயிற்சி, இதய பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

கட்டுரை தகவல்

  • மோகன்

  • பிபிசி தமிழ்

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற மாரத்தான் ஒன்றில் கலந்து கொண்ட 24 வயது இளைஞர் போட்டியின்போதே திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

கோட்டூர்புரம் அருகே நடைபெற்ற இந்த மாரத்தானில் பங்கேற்ற, தாம்பரத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான பரமேஷ் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவர்கள் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்துவிட்டனர்.

மருத்துவ பரிசோதனை மற்றும் உடல்தகுதி பரிசோதனை இல்லாமல் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்கிறார் உடற்பயிற்சி நிபுணரான சுஜாதா.

மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ள குறைந்தது 3 மாதம் பயிற்சி தேவை என்கிறார் அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் மூத்த நரம்பியல் மருத்துவரான வி சதீஷ் குமார்.

மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தங்களால் முடிந்த தூரம் மட்டுமே செல்ல வேண்டும் என்கிறார் சதிஷ் குமார்.

"பெரும்பாலான மாரத்தான் போட்டிகளில் கட்டணம் செலுத்தி தான் கலந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அதனால் கட்டணம் செலுத்தி நுழைவுச்சீட்டு பெறுபவர்கள் எப்படியாவது முடித்து விட வேண்டும் என்று கருதி அவர்கள் உடல் ஒத்துழைக்கும் தூரத்தையும் தாண்டி செல்வது தான் சிக்கல்களுக்கு காரணம்," என்கிறார் சுஜாதா.

மாரத்தான், உடல்நலம், உடற்பயிற்சி, இதய பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

இதய துடிப்பின் முக்கியத்துவம்

மாரத்தான், மலையேற்றம் போன்ற தீவிர செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அதற்கான முன் தயாரிப்பின்றி செல்லக்கூடாது என்றும் கூறுகிறார்.

"தசை, எலும்பு ஆரோக்கியம் இதில் முக்கியமானது. மாரத்தான் போட்டிக்கு முன்பாக நம்முடைய உடல் தகுதியை தீர்மானிக்க சில வழிகள் உள்ளன. இதயம் மற்றும் சுவாசம் சீராக இருப்பது முதன்மையானது. இதய துடிப்பின் அளவை கணிக்க வேண்டும்." என்கிறார் சுஜாதா.

இதில் ரெஸ்ட்டிங் ரேட் (resting rate), ரிக்கவரி ரேட் (recovery rate) என்கிற இரண்டு அம்சங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ரெஸ்ட்டிங் ரேட் என்பது நாம் தூங்கி எழுந்த உடன் உள்ள நமது இதயத் துடிப்பின் அளவைக் குறிப்பதாகக் கூறும் அவர், அது 60 - 80 என்கிற அளவில் இருக்க வேண்டும்.

மாரத்தானில் யாரெல்லாம் பங்கேற்கக் கூடாது?

"முன் அனுபவம் இல்லாமல் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் படிப்படியாகத் தான் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சிக்கு பின்பு இதய துடிப்பு அதிகரிப்பது இயல்பானது. ரிக்கவரி ரேட் என்பது நாம் உடற்பயிற்சியை நிறுத்திய பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் கால அளவை தான் இது குறிக்கிறது. இந்த அளவை நாம் கண்காணிக்க வேண்டும். 1 நிமிடத்திற்குள் நமது இதய துடிப்பு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்." என்றார்.

பல்வேறு அம்சங்கள் நாம் இயல்புநிலைக்கு திரும்புவதை பாதிப்பதாகக் கூறும் அவர், "அழுத்தம், தூக்கமின்மை மற்றும் தீவிர பணிச் சுமை இருப்பவர்கள் மாரத்தானில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். சுவாசம் மற்றும் இதயம் சார்ந்த பிரச்னை இருப்பவர்கள் அதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்." என்கிறார்.

மாரத்தான், உடல்நலம், உடற்பயிற்சி, இதய பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

இரு கட்ட பரிசோதனை

மாரத்தான் போட்டிகளுக்கு தயாராவதற்கு முன்பாக மருத்துவ பரிசோதனை அவசியம் என்கிறார் சுஜாதா.

"நம்முடைய உடலில் அறியப்படாமல் நோய்கள் அல்லது அறிகுறிகள் ஏதேனும் இருக்கின்றவா என்பதை உறுதி செய்து முழுமையான சான்று பெற்றுக் கொள்ள வேண்டும். மலையேற்றம் செல்வதற்கு உள்ளதைப் போலவே மாரத்தான் போட்டிகளுக்கும் உடல்தகுதி சான்று கட்டாயமாக்கப்பட வேண்டும்." என்று தெரிவித்தார்.

மாரத்தான் ஒடுவதற்கு இதயமும் தசைகளும் பழக வேண்டும் என்கிறார் மருத்துவர் சதீஷ்குமார்.

"மாரத்தான் போட்டிகளில் அட்ரினலின் அதிக அளவில் வெளியேறும் என்பதால் ஜோன் 2 (Zone 2) என்கிற பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய அதிகபட்ச இதய துடிப்பிலிருந்து ஒரு சீரான அளவில் பயிற்சி மேற்கொள்வதை அது குறிக்கிறது." என்றார்.

முன் பயிற்சியோ அல்லது அனுபவமோ இல்லாமல் மாரத்தான் சென்றால் இதயத்தின் மீது அழுத்தம் அதிகரிக்கும் என்று குறிப்பிடுகிறார்.

அதனை மேலும் விவரித்த அவர், "குறைந்தது ஆறு வார காலம் பயிற்சி எடுத்துக் கொண்டால் தான் அதிகரித்த இதய துடிப்புக்கு நம் உடல் தகவமைத்துக் கொள்ளும். இதயத்தின் மீது சுமை அதிகரிக்கும் போது சமநிலை பாதிக்கப்பட்டு ரத்த சுழற்சி நின்றுவிடும். இதனால் ரத்த நாளங்கள் அடைக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும் சூழல் உருவாகின்றது." என்றார்.

மாரத்தான் போட்டி அல்லது பயிற்சியில் அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக நிற்க வேண்டும் என்றும் கூறுகிறார். "நம்மால் தொடர முடியாதபோது நம் உடல் அதனை வெளிப்படுத்தும். அதனை புறந்தள்ளிவிட்டு தொடர்வது தவறு." என்றும் குறிப்பிட்டார்.

மாரத்தான், உடல்நலம், உடற்பயிற்சி, இதய பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

மாரத்தான் போட்டிகளுக்கு தயாராவது எப்படி?

முதலில் நாம் ஓட நினைக்கும் தூரத்தை தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவிக்கிறார் சதீஷ்குமார்.

"நீண்ட தூரம் செல்ல வேண்டுமென்றால் குறைந்தது 4 மாதம் பயிற்சி அவசியம். உதாரணத்திற்கு 40 கிமீ மாரத்தான் என்றால் 10 கிலோமீட்டரிலிருந்து தொடங்க வேண்டும், வாரத்திற்கு மூன்று நாட்களாவது ஓடி பயிற்சி எடுக்க வேண்டும். அதனை பகுதியாக மேற்கொள்ளலாம். வாரத்தில் ஒருநாள் இடைவெளி இல்லாமல் நீண்ட தூர பயிற்சியில் ஈடுபட வேண்டும். தூரத்தை ஒவ்வொரு வாரமும் சீராக அதிகரிக்க வேண்டும். அதிகரித்த இதய துடிப்பை சமாளிக்க இதயம் பழக வேண்டும், அதற்கான கால அவகாசத்தை நாம் கொடுக்க வேண்டும்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crklddknello

38ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா

3 months 2 weeks ago

உயரம் பாய்தலில் மன்னார் மாணவி வில்ஷியா, களுதாவளை மாணவன் பகிர்ஜன் புதிய போட்டி சாதனைகள் 

Published By: Digital Desk 3

13 Oct, 2025 | 03:22 PM

image

(நெவில் அன்தனி)

தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 38ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவி ஒருவரும் மாணவன் ஒருவரும் உயரம் பாய்தலில் சாதனைகள் படைத்து தங்கப் பதக்கங்களை சுவீகரித்து அசத்தியுள்ளனர்.

14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான உயரம் பாய்தல் போட்டியில் 1.56 மீற்றர் உயரத்தைத் தாவிய மன்னார் பற்றிமா  மத்திய மகா வித்தியாலய மாணவி டபிள்யூ. வில்ஷியா புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உயரம் பாய்தலில் 1.98 மீற்றர் உயரத்தைத் தாவிய மட்டக்களப்பு பண்டத்தரிப்பு களுதாவளை மகா வித்தியாலாய மாணவன் கே. பகிர்ஜன் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

பகிர்ஜனின் ஆற்றல் வெளிப்பாடு பிரமிக்கத்தக்கதாக அமைந்துள்ளது என மெயல்வல்லுநர்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான தட்டெறிதல் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் கே. கிருஷான் 50.39 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண பாடசாலைகள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து ஏனைய பாடசாலைகளை பிரமிக்கவைத்தன.

இப்போட்டியில் அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவி பி. சண்முகப்பிரியா, விக்டோரியா கல்லூரி மாணவி கே. வைஷ்ணவி, ஸ்கந்தவரோதயா கல்லூரி மாணவி எஸ். சகானா ஆகியோர் 2.60 மீற்றர் உயரத்தை தாவி முயற்சிகளின் அடிப்படையில் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

3_shanmugapriya.jpg

4_vaishanvi.jpg

5_sahana.jpg

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் முருங்கன் மகா வித்தியாலய மாணவன் ஏ.கெமில்டன் (6.91 மீற்றர்) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி ஆயிலிலாய் (10.04 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா காமினி மகா வித்தியாலய மாணவன் ஈ. விகிர்தன் (3:59.20) வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றி பாய்தலில் 4.50 மீற்றர் உயரத்தைத் தாவிய தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவன் சந்திரகுமார் துஷாந்தன் முதலாம் இடத்தையும் சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவன் கஜானன் அதே உயரத்தைத் தாவி இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

7_kajanan.jpg

எனினும் இப் போட்டியில் முன்றாம் இடத்தைப் பெற்ற மேல் மாகாண பாடசாலை மாணவனின் அவயவத்தில் பச்சைக் குத்தப்பட்டிருந்ததாகவும் இது பாடசாலை மாணவர்களுக்கான ஒழுக்க விதிகளை மீறுவதாகவும் தெரிவித்து அவரை தகுதிநீக்கம் செய்யுமாறு தெல்லிப்பழை மகாஜனா, சாவகச்சேரி இந்து, ஸ்கந்தவரோதயா ஆகிய கல்லூரிகளின் அதிகாரிகள் எழுத்துமூல ஆட்சேபனை செய்ததால் அப் போட்டிக்கான முடிவு தீர்ப்பாளர்களால் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஆட்சேபனை மனுவை பரீசீலித்த கல்வி அமைச்சு அதிகாரிகள், குறிப்பிட்ட மாணவனை சோதனையிட்ட போது அவரது கையில் பச்சைக் குத்தப்பட்டிருப்பது ஊர்ஜிதமானதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை பணிப்பாளர் லூத்தினன் கேனல் அனுர அபேவிக்ரமவிடம் வினவியபோது, இந்த ஆட்சேபனையை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாணவனின் தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேன்முறையீட்டு குழுவினர் வழங்கும் தீர்ப்பின் பின்னரே போட்டி முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் பதிலளித்தார்.

கிழக்கு மாகாண வெற்றியாளர்கள்

14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான நீளம் பாய்தலில் ஒலுவில் அல் ஹம்ரா மகா வித்தியாலய மாணவன் யூ. அப்துல்லா (5.99 மீ.) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

8_abdullah_no_304.jpg

20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் மூதூர் அல் ஹம்ரா மாணவன் ஆர்.எம். அஹ்சான் (40.88 மீ.) 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் கந்தளாய் அல் தாரிஹ் மகா வித்தியலாய மாணவன் எம்.பி.எம். அஸாம் (10.85 செக்.) ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றெடுத்தனர்.

9_assam.jpg

https://www.virakesari.lk/article/227619

Checked
Sat, 01/31/2026 - 13:05
விளையாட்டுத் திடல் Latest Topics
Subscribe to விளையாட்டுத் திடல் feed