தமிழகச் செய்திகள்

தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் முருகன் அரசியல் எடுபடுமா? கடந்த காலம் சொல்வது என்ன?

11 hours ago

முருகன் வழிபாடு, தமிழ்நாடு அரசியல், பாஜக, திமுக, நாம் தமிழர், அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 15 நிமிடங்களுக்கு முன்னர்

மதுரையில் ஜூன் 22ஆம் தேதி மிகப்பெரிய முருகன் மாநாட்டை நடத்த இந்து முன்னணி திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு, பா.ஜ.கவும் பிற இந்து அமைப்புகளும் ஆதரவளிக்கின்றன. மதுரையில் நிர்வாகிகள் மாநாட்டில் பேசிய அமித் ஷா முருகனை குறிவைத்து சில விஷயங்களையும் பேசியிருக்கிறார். முருகனை முன்வைத்து செய்யும் அரசியலுக்கு தமிழ்நாட்டில் பலன் இருக்குமா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமையன்று மதுரையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது, திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என தி.மு.க. அழைப்பதாகவும் ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடக்கும் முருகன் மாநாட்டில் அனைவரும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

அமித் ஷா குறிப்பிடும் முருகன் மாநாட்டை, 'முருக பக்தர்கள் மாநாடு' என்ற பெயரில் இந்து முன்னணி ஜூன் 22ஆம் தேதி நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 5 லட்சம் பேரை பங்கேற்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை பாண்டி கோவிலுக்கு அருகிலுள்ள அம்மா திடலில் இந்த மாநாட்டை நடத்த இந்து முன்னணி திட்டமிட்டிருக்கிறது.

இந்தத் திடலில் மாநாடு நடப்பதற்கு முன்பாகவே, அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து பூஜைகளை நடத்தவும் பொது மக்களுக்குப் பிரசாதம் கொடுக்கவும் மாநாட்டு அமைப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர். ஜூன் 10ஆம் தேதியில் இருந்து மாநாடு நடக்கும் ஜூன் 22ஆம் தேதிவரை இந்த நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், காவல் துறை இந்த நிகழ்வுகளுக்கு அனுமதி மறுத்துவிட்டது.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றக் கிளை, ஜூன் 12ஆம் தேதிக்குள் காவல்துறை முடிவெடுக்க வேண்டுமெனக் கூறியுள்ளது.

இந்த மாநாடு குறித்து தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

"மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் இந்து சமய நம்பிக்கை உள்ள மக்களை பா.ஜ.க. தனது அரசியல் சுய லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் சதியில் ஈடுபட்டுள்ளது" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டே இருக்கும் நிலையில், இந்த மாநாட்டை பா.ஜ.க. அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கருதப்படுகிறது.

தமிழ்நாடு அரசியலில் முருகன்

முருகன் வழிபாடு, தமிழ்நாடு அரசியல், பாஜக, திமுக, நாம் தமிழர், அதிமுக

பட மூலாதாரம்,L MURUGAN/X

படக்குறிப்பு,பா.ஜ.க 2020ஆம் ஆண்டில் இருந்து முருகனைப் பற்றிப் பேச ஆரம்பித்தது.

தமிழ்நாட்டில் முருகனை முன்வைத்து அரசியலை முன்னெடுப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் இது நடந்துள்ளது.

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இருந்தே முருகனை முன்னிறுத்தி வருகிறது. 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில் முருகனை முன்னிறுத்தி வீரத்தமிழர் முன்னணி என்ற துணை அமைப்பை பழனியில் துவங்கினார் சீமான். இதற்கு அடுத்த மாதமே திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டுமெனக் கோரி வீரத்தமிழர் முன்னணி பேரணி ஒன்றை நடத்தியது. 2016ஆம் ஆண்டில் இருந்து வேல் வழிபாடு என்ற பெயரில் தைப்பூச நாளில் விழா ஒன்றையும் அக்கட்சி நடத்தி வருகிறது.

பா.ஜ.கவை பொறுத்தவரை 2020ஆம் ஆண்டில் இருந்து முருகனைப் பற்றிப் பேச ஆரம்பித்தது. அந்த ஆண்டு ஜூலையில் கறுப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனலில் முருகனைப் போற்றிப் பாடும் கந்த சஷ்டி கவசத்தை அவமதித்ததாக இந்து அமைப்புகளும் பா.ஜ.கவினரும் போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பானவர்களைக் கைது செய்ய வேண்டுமென சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பா.ஜ.க. புகார் அளித்தது. அந்த யுடியூப் சேனலை தடை செய்ய வேண்டுமெனக் கோரி போராட்டங்களையும் பா.ஜ.க. நடத்தியது. மேலும், அ.தி.மு.க., தி.மு.க. போன்ற கட்சிகள் இந்த விஷயத்தில் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுமென்றும் அழுத்தம் கொடுத்தது. முடிவில் அந்த சேனலை சேர்ந்தவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர். சிலர் குண்டர் சட்டத்தின் கீழும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கறுப்பர் கூட்டம் சர்ச்சையின் தொடர்ச்சியாக வேல் யாத்திரை ஒன்றை நடத்தப் போவதாக பா.ஜ.கவின் அப்போதைய மாநிலத் தலைவர் எல். முருகன் அறிவித்தார். நவம்பர் 6ஆம் தேதி திருத்தணியில் துவங்கி, டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் இந்த யாத்திரையை முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

அந்தத் தருணத்தில் கொரோனா பரவல் இருந்ததால், அந்த யாத்திரைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்தது. கூட்டணிக் கட்சியாக இருந்தும் வேல் யாத்திரைக்கு அ.தி.மு.க. அரசு அனுமதி மறுத்தது அந்தத் தருணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தபோதும் நவம்பர் 6ஆம் தேதி சென்னையில் இருந்து திருத்தணிக்குப் பெரும் ஊர்வலமாகப் புறப்பட்டார் எல். முருகன். இதை காவல்துறை தடுத்து நிறுத்தி, பிறகு சில வாகனங்களுடன் அனுமதித்தது.

பின்னர் திருத்தணியில் இருந்து தனது வேல் யாத்திரையைத் தொடங்கிய முருகனை காவல்துறை கைது செய்தது. இதுபோல, தினமும் வேல் யாத்திரை செய்ய முருகன் முயல்வதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்தது. முடிவில் டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு மாநாட்டை நடத்தினார். இதில் அப்போதைய மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

முருகன் வழிபாடு – ஆன்மீகமா? அரசியலா?

முருகன் வழிபாடு, தமிழ்நாடு அரசியல், பாஜக, திமுக, நாம் தமிழர், அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,திருப்பரங்குன்றம் மலையின் ஒருபுறம் முருகன் கோவில் உள்ளது, மறுபுறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது.

"வீரத் தமிழர் முன்னணி மூலம் முதன்முதலில் முருகனை முன்னிறுத்தியது நாங்கள்தான். திருமுருகப் பெருவிழா என்ற விழாவை ஒவ்வோர் ஆண்டும் நடத்துகிறோம். முருகன் ஒரு கடவுள் என்பதற்காக அல்ல, அவன் எங்கள் முப்பாட்டன், எங்கள் முன்னோர் என்று கூறி இதை நடத்தி வருகிறோம். இதற்கும் தேர்தல் அரசியலுக்கும் சம்பந்தமில்லை" என்கிறார் நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செய்தித் தொடர்பாளரான சே. பாக்கியராசன்.

இப்போது பா.ஜ.கவும் அதைத்தான் சொல்கிறது. "இதை நாங்கள் தேர்தல் அரசியலுக்காகச் செய்யவில்லை. காலங்காலமாக இந்து சமயத்தினர் நம்பும் ஒரு கோவிலில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அசைவ உணவை அருந்தினார். அவர் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யவில்லை.

தமிழ்நாட்டை ஆளும் கட்சி, இந்து சமயத்திற்கு எதிரான கட்சியாக இருக்கிறது. இதனால், இஸ்லாமியர்களின் வாக்கு மொத்தமாக தி.மு.க-வுக்கு விழுகிறது. இந்தச் சூழலில் சாதாரணமான எதிர்ப்புக்கெல்லாம், அரசு மசிவதாக இல்லை. ஆகவே, தமிழ்நாட்டில் அதிகமாக வழிபடக்கூடிய தெய்வமான முருகனை முன்வைத்து எதிர்ப்பு தெரிவிக்கிறோம்" என்று தெரிவித்தார் பா.ஜ.கவின் மாநிலப் பொறுப்பாளரான எஸ்.ஆர். சேகர்.

மேலும், "கோடிக்கணக்கான முருக பக்தர்கள் இருக்கிறார்கள். அந்த பக்தர்கள் மூலமாக எதிர்ப்பைக் காண்பிக்கலாம் எனக் கருதுகிறோம். இந்த எதிர்ப்பை பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் முன்னெடுத்துச் செய்வதால் அரசியலாகப் பார்க்கப்படுகிறது" என்று குறிப்பிட்டார்.

அதோடு, அரசியல் கட்சியான தாங்கள் இதைச் செய்ய வேண்டியிருப்பதற்குக் காரணமாக "இந்து சமயத்தில் இப்படி எதிர்ப்புகளை முன்னெடுத்துச் செல்ல ஆட்கள் இல்லை. தமிழ்நாட்டில் இருக்கும் மடாதிபதிகளையும் சங்கங்களையும் இதன் மூலம் ஒன்றிணைக்க நினைக்கிறோம். இந்த மாநாடு இந்த சமய அவமானத்தைத் துடைக்கும் மாநாடு. இந்த மாநாட்டின் மூலம் இந்துக்களை ஒருங்கிணைக்க முடியும் என நினைக்கிறோம்" என்றார் எஸ்.ஆர். சேகர்.

இந்த மாநாட்டின் மூலம் எவ்வித தேர்தல் லாபத்தையும் இலக்கு வைக்கவில்லை என்றும், இந்து உரிமைகளைப் பெறுவதுதான் நோக்கம் என்றும் கூறுகிறார் அவர். "ஆனால், இதன் விளைவு அரசியல் ரீதியாக பா.ஜ.கவுக்கு சாதகமாக இருக்கலாம்" எனத் தெரிவித்தார் எஸ்.ஆர். சேகர்.

ஆனால், இதற்கு முந்தைய இதுபோன்ற முயற்சிகளுக்கு அப்படி எந்தச் சாதகமான விளைவும் கிடைக்கவில்லை. 2021ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக பா.ஜ.க. முருகனை முன்னிறுத்தி வேல் யாத்திரையை நடத்தியும்கூட, 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்குப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. அ.தி.மு.கவின் கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சியால் நான்கு இடங்களையும் 2.62 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

பாக்கியராசனும் இதையேதான் கூறுகிறார். "தமிழ்நாட்டு மக்கள் இது போன்ற விஷயங்களை தேர்தலோடு இணைத்துப் பார்ப்பதில்லை. அரசியல் வேறு, ஆன்மீகம் வேறு என்றுதான் இருக்கிறார்கள். மதம் சார்ந்த செயல்பாடுகள் ஒருபோதும் தேர்தலில் எதிரொலித்தது இல்லை. ஒரு சில தொகுதிகளில் மதம் சார்ந்த நிகழ்வுகள் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மாநிலம் தழுவிய அளவில் மதம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. மதத்தையும் அரசியலையும் இணைப்பதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் விரும்பியதில்லை" என்று கூறினார்.

முருகன் வழிபாடு பாஜகவுக்கு பலன் தருமா?

முருகன் வழிபாடு, தமிழ்நாடு அரசியல், பாஜக, திமுக, நாம் தமிழர், அதிமுக

படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்

திருப்பரங்குன்றம் விவகாரத்தை உள்ளூர்க்காரர்களே பெரிதாக விரும்பாத நிலையில், பா.ஜ.க. அதைக் கையில் எடுத்திருப்பதால் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.

அதுகுறித்து விரிவாகப் பேசியபோது, "பா.ஜ.கவை பொறுத்தவரை பொதுவாக ராமரை முன்வைத்து அரசியல் செய்வதாகக் கருதப்பட்டாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தக் கடவுள் பிரபலமாக இருக்கிறாரோ, அந்தக் கடவுளை முன்னிறுத்தவும் பா.ஜ.க. முயல்வதுண்டு. ஒடிசாவுக்கு சென்றால் ஜெய் ஜெகன்னாத் என்பார்கள். கொல்கத்தாவுக்கு சென்றால் ஜெய் துர்கா என்பார்கள். தமிழ்நாட்டில் முருகனை தூக்கிப் பிடிப்பார்கள். ஆனால், இதற்கெல்லாம் பலன் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ராமர் கோவிலைக் கட்டிய பிறகும் உத்தர பிரதேசத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே பெரும்பான்மை கிடைக்காமல் போய்விட்டது," என்று விளக்கினார்.

மேலும், தமிழ்நாட்டில், கறுப்பர் கூட்டம் வீடியோவை வைத்து வேல் யாத்திரையெல்லாம் சென்றும் 2021 தேர்தலில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்பதைக் குறிப்பிட்ட ப்ரியன், தற்போதும் திருப்பரங்குன்றத்தை முன்வைத்துச் செய்யும் அரசியலுக்கும் எந்தப் பலனும் கிடைக்காது என்கிறார்.

"அங்கே பெரிய கூட்டத்தைக் கூட்டலாம். அவர்கள் எல்லாம் ஏற்கெனவே பா.ஜ.கவில் இருப்பவர்கள்தான். முருகனைக் காப்பாற்றப் போகிறார்கள், திருப்பரங்குன்றம் மலையைக் காப்பாற்றப் போகிறார்கள் என யாரும் புதிதாக அந்தக் கூட்டத்தில் இணையப் போவதில்லை. உள்ளூர்வாசிகளே இதை ரசிக்க மாட்டார்கள்" என்கிறார் ப்ரியன்.

தமிழ்நாட்டில் தோன்றும் முருகனின் பிரமாண்ட சிலைகள்

முருகன் வழிபாடு, தமிழ்நாடு அரசியல், பாஜக, திமுக, நாம் தமிழர், அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மலேசியாவில் உள்ள பிரமாண்ட முருகன் சிலை (கோப்புப் படம்)

இவையெல்லாம் ஒருபுறமிருக்க கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் முருகனுக்கு பிரம்மாண்டமான அளவில் சிலை வைக்கும் போக்கும் தொடங்கியுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டில் சேலம்-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில், வாழப்பாடிக்கு அருகிலுள்ள புத்திரகவுண்டன்பாளையத்தில் 146 அடி உயரத்தில் பிரமாண்டமான முருகன் சிலை நிறுவப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பாக, வேலூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோவிலில் 92 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்கிடையில் மருதமலை கோவிலில் 160 அடி உயரத்தில் கற்களால் ஆன முருகன் சிலையை பிரதிஷ்டை செய்வது குறித்து ஆய்வு நடந்து வருவதாகவும் அப்படி ஒரு சிலை அமையும்பட்சத்தில் அந்தச் சிலை ஆசியாவிலேயே மிக உயரமான முருகன் சிலையாக இருக்கும் எனவும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.

இதுபோல முருகனுக்கு ஒரு பிரமாண்டமான சிலையை வைப்பது மலேசியாவில்தான் நடந்தது என்கிறார் முருகன் வணக்கத்தின் மறுபக்கம் என்ற நூலின் ஆசிரியரான சிகரம் ச. செந்தில்நாதன்.

மலேசியாவில் உள்ள பட்டு மலையின் (Batu Caves) அடிவாரத்தில் 2006ஆம் ஆண்டில் 140 அடி உயரத்திற்கு ஒரு முருகன் சிலை அமைக்கப்பட்டது. இந்தச் சிலை அமைக்கப்பட்டபோது உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலையாக இது அடையாளம் காணப்பட்டது.

இந்த நிலையில்தான் தற்போது தமிழ்நாட்டிலும் இதுபோல மிகப்பெரிய அளவில் முருகன் சிலைகளை வைக்கும் போக்கு துவங்கியிருக்கிறது. ஆனால், இது மரபு அல்ல என்கிறார் சிகரம் ச. செந்தில்நாதன்.

"தமிழ்நாட்டில் கோபுரங்களைத்தான் பெரிதாகக் கட்டுவார்கள். சிலைகளை இப்படிப் பெரிதாக வைக்கும் வழக்கம் கிடையாது. சிலைகளை இப்படிப் பெரிதாக வைத்தால், அவற்றுக்கு ஆராதனை செய்வது சிக்கலாகிவிடும். இவ்வளவு பெரிய சிலைகள் குறித்து எந்த ஆகமத்திலும் குறிப்பிடப்படவில்லை" என்கிறார் அவர்.

முருகன் வழிபாடு, தமிழ்நாடு அரசியல், பாஜக, திமுக, நாம் தமிழர், அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோப்புப் படம்

ஆன்மீகப் பேச்சாளரான சுகி சிவமும் இந்தப் போக்கு சரியானதல்ல என்கிறார்.

"மரபுகளோ சிந்தனையோ இப்போது தேவையில்லை என்றாகிவிட்டது. ஆகம விதிகளின்படி, ஒரு சிலை எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு நெய்வேத்தியம் செய்ய வேண்டும். இவ்வளவு பெரிய சிலைக்கு அப்படிச் செய்ய முடியுமா? ஆனால், அந்தக் கணக்கெல்லாம் இப்போது யாருக்கும் தேவையில்லை என்றாகிவிட்டது.

கூட்டமும் சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாயும் போதுமென்று நினைக்கிறார்கள். மதம் இப்போது அரசியல்வாதிகளாலும் வியாபாரிகளாலும் கைப்பற்றப்பட்டுவிட்டது. இதெல்லாம் தவறு எனச் சொல்ல வேண்டியவர்கள்கூட இதனால் பேசாமல் இருக்கிறார்கள்" என்கிறார் சுகி சிவம்.

முருகனுக்கான முக்கியத்துவம் மீண்டும் அதிகரிக்கிறதா?

தமிழ்நாட்டில் மிக நீண்ட காலமாக முருகனை வழிபடும் மரபு இருக்கிறது. சங்க இலக்கிய நூல்களில் பிற்காலத்தைச் சேர்ந்த நூலான பரிபாடலில் திருப்பரங்குன்றத்தில் முருகனை வழிபடுவது குறித்த செய்திகள் இருப்பதை நா. வானமாமலை தனது 'பரிபாடலில் முருக வணக்கம்' நூலில் சுட்டிக்காட்டுகிறார். இதற்குப் பிறகு வட இந்திய வழிபாட்டு மரபுகளின் தாக்கம் ஏற்பட்டது என்கிறார் நா. வானமாமலை.

"ஆனால், அதற்குப் பிறகு தேவார காலத்தில் முருக வழிபாடு பின்னால் சென்றுவிட்டது. சோழர்கள் முழுக்க முழுக்க சிவன் வழிபாட்டைத்தான் முன்னெடுத்தார்கள். சிவனுடைய மகன் என்ற வகையில்தான் முருகன் வழிபடப்பட்டார். பிறகு நாயக்கர் காலத்தில் அருணகிரிநாதர்தான் மீண்டும் முருகன் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளித்தார்.

நாயக்கர் காலத்தில் சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டபோது, மீண்டும் முருகனுக்கு முக்கியத்துவம் அளித்தார் அவர். சிவன் கோவில்கள் பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், தமிழ்க் கடவுளாக முருகன் முன்னிறுத்தப்பட்டார்" என்கிறார் ச. செந்தில்நாதன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgq3d4lg755o

மத்திய அரசு அறிமுகம் செய்த 2 மரபணு மாற்ற அரிசி ரகங்களுக்கு வேளாண் நிபுணர்கள் எதிர்ப்பு ஏன்?

1 day 10 hours ago

வேளாண்மை, விவசாயம், விவசாயி, அரிசி, நெல், விதை, பயிர், மரபணு மாற்றப்பட்ட விதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,புதிய வகைகள் அதிக விளைச்சல் தரும் என அரசு கூறுகிறது

கட்டுரை தகவல்

  • எழுதியவர், கரிகிபதி உமாகாந்த்

  • பதவி, பிபிசிக்காக

  • 9 ஜூன் 2025, 02:37 GMT

சமீபத்தில் இரண்டு புதிய மரபணு மாற்றப்பட்ட அரிசி வகைகள் மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சௌகானால் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதில் புசா டிஎஸ்டி அரிசி -1 வகை, புசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஏஆர்) ஒரு அங்கமான இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதே போல் டிஆர்ஆர் 100 அரிசி (கமலா) வகை ஹைதராபாத்தின் ராஜேந்திர நகரில் உள்ள இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தால் மே 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

"இந்த இரண்டு புதிய வகை விதைகள் 20 சதவிகிதம் வரை விளைச்சலை அதிகரிக்கும். பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வை குறைக்கும். இந்த புதிய நெல் விதைகள் உரப் பயன்பாட்டைக் குறைக்கும். இந்த விதைகளைப் பயிரிடுவதன் மூலம் தண்ணீரை சேமித்து காலநிலை நெருக்கடிகளை சமாளிக்க முடியும்" என மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த இரண்டு வகைகளும் அறுவடை காலத்தை 20 நாட்கள் வரை குறைக்கின்றன. வழக்கமாக, நெல் பயிரின் விளைச்சல் காலம் 130 நாட்கள் என்ற நிலையில் இந்த விதைகள் 110 நாட்களிலே விளைச்சலைத் தரும்.

ஒட்டுமொத்த பயிர் காலம் குறைந்து விளைச்சல் அதிகரிக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

டிஆர்ஆர் 100 அரிசி வகை ஒவ்வொரு நெல்லுக்கும் அதிக தானியங்களைக் கொடுக்கும் என வேளாண் அமைச்சகம் தெரிவிக்கிறது. அதே போல் புசா டிஎஸ்டி 1 அரிசி வகை உப்புத்தன்மை மற்றும் களர் நிலங்களில் விளைச்சலை 9.66 சதவிகிதத்தில் இருந்து 30.4 சதவிகிதமாக உயர்த்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகைகள் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார், உத்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்காக வடிவமைக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் புவி வெப்பமடைதலை சமாளித்து 20 சதவிகிதம் அதிக விளைச்சலைத் தரும் இந்த மரபணு மாற்றப்பட்ட அரிசி வகைகள் இரண்டும் கிறிஸ்ப்ர்-கிராஸ்-9 என்கிற புதிய மரபணு திருத்த தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

எப்படி உருவாக்கப்பட்டது?

வேளாண்மை, விவசாயம், விவசாயி, அரிசி, நெல், விதை, பயிர், மரபணு மாற்றப்பட்ட விதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இரண்டு புதிய மரபணு மாற்றப்பட்ட அரிசி ரகங்கள் மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சௌகானால் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது

மரபணு திருத்தம் என்பது ஒரு தொழில்நுட்பம் ஆகும்.

ஒரு உயிரணுவின் மரபணு வரிசையை ஒரு உயிரியல் ஆய்வகத்தில் வெட்டி ஒட்டுவதைப் போன்றது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு தாவரம் அல்லது விலங்கின் டிஎன்ஏவில் சிறிய மாற்றங்களை விஞ்ஞானிகளால் செய்ய முடியும்.

இந்த வகை தொழில்நுட்பம் கிறிஸ்ப்ர் சிஏஎஸ்9 என்கிற கருவியை பயன்படுத்துகிறது. இதனை மரபணு கத்திரிக்கோல் என கூறலாம்.

"கிறிஸ்ப்ர் சிஏஎஸ்9-ஐ பயன்படுத்தி விஞ்ஞானிகள் மரபணு வரிசையில் குறிப்பிட இடங்களில் டிஎன்ஏவை வெட்டுகின்றனர் அல்லது மரபணுவை அழிப்பது அல்லது திருத்துவது போன்ற வேலைகளைச் செய்கின்றனர்" என வேளாண் பொருளாதார நிபுணர் முனைவர் கிலாரு பூர்ணசந்திர ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.

டிஆர்ஆர் அரிசி 100 (கமலா) வகை சம்பா முசோரி வகையைச் சார்ந்தது.

இது ஹைதராபாத்தில் உள்ள இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தால் சம்பா முசோரி (பீபிடி-5204) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

புசா டிஎஸ்டி அரசி-1 வகை இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் எம்டியூ 1010 அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

"சம்பா முசோரியின் பீபிடி 5204 வகை குறுகிய காலத்தில் அதிக விளைச்சலைப் பெறும் வகையில் மரபணு திருத்தப்பட்டுள்ளது. ஆனால் இது பரிசோதனை கட்டத்தில் இருந்து கள நிலைக்குச் செல்வதற்கு இன்னும் காலம் எடுக்கும். பீபிடி 5204 வகை நாற்பது வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று நம் மாநிலத்தில் பெரும்பாலான மக்களால் உட்கொள்ளப்படும் அரிசி சம்பா முசோரி, குர்னூல், நந்த்யால், சோனா அரிசி மற்றும் இதர அரிசி வகைகள் பீபிடி 5204-ஐ சேர்ந்தது தான்." என பபாட்லாவில் உள்ள ஆச்சாரியா என்.ஜி ரங்கா வேளாண் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் முனைவர் சதீஷ் யாதவள்ளி பிபிசியிடம் தெரிவித்தார்.

மத்திய வேளாண் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ள கமலா மற்றும் புசா என்கிற இரண்டு மரபணு மாற்ற அரிசி வகைகளுக்கும் சில வேளாண் வல்லுநர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

மணல் கலவை, ஊட்டச்சத்துகள், தண்ணீர் மற்றும் நுண் உயிர்கள் போன்ற காரணிகளை கருத்தில் கொள்ளாமல் ஒரு மாற்றத்தை மட்டும் செய்து விளைச்சலை அதிகரிக்க முடியுமா என விஞ்ஞானிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த புதிய வகை அரிசி விதை விளைச்சலை அதிகரிக்கவே என அரசு கூறுகிறது.

இந்த விதைகளால் என்ன பயன்?

வேளாண்மை, விவசாயம், விவசாயி, அரிசி, நெல், விதை, பயிர், மரபணு மாற்றப்பட்ட விதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,விவசாயிகளின் நேரடி பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் வேளாண் நிபுணரான முனைவர் டோந்தி நரசிம்ம ரெட்டி

விவசாயிகளின் நேரடி பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் வேளாண் நிபுணரான முனைவர் டோந்தி நரசிம்ம ரெட்டி "அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் சமாளிக்க முடியாத விலையேற்றம் போன்ற விவசாயிகள் சந்திக்கும் நிஜப் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தாமல் இந்த அறிவியல்பூர்வமற்ற மரபணு திருத்தப்பட்ட விதைகளால் என்ன பயன்?" என அவர் கேள்வி எழுப்புகிறார்.

"மத்திய வேளாண் அமைச்சக அதிகாரிகள் இந்த அரிசி வகைகள் ஒரு புதிய தொழில்நுட்ப புரட்சி என்கின்றனர். அரசியில் உள்ள ஒரு மரபணு அதிக விளைச்சலைத் தரும் என்கின்றனர். அவர்கள் மரபணுவை திருத்துவதால் வரும் நீண்ட கால விளைவுகளைப் பற்றி பேசுவதில்லை.

இந்த விதைகளை உற்பத்தி செய்யும் மக்கள் மீது இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என யாருக்கும் தெரியாது. இத்தகைய விதைகளால் இயற்கை விதைகள் மாசடைந்தால் அதனை தூய்மைப்படுத்துவது சாத்தியமற்றதாகிவிடும். ஆராய்ச்சி, அவதானிப்புகள் மற்றும் பரிசோதனைகள் இன்னும் சில வருடங்களுக்கு ஆய்வகங்களில் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ள நிலையில் அவசர கதியில் இந்த இரண்டு வகைகளையும் மத்திய அரசு வெளியிட்டது சரியில்லை" என பிபிசியிடம் தெரிவித்தார்.

"இது விமர்சனங்களுக்கான நேரம் இல்லை"

வேளாண்மை, விவசாயம், விவசாயி, அரிசி, நெல், விதை, பயிர், மரபணு மாற்றப்பட்ட விதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

"மத்திய அமைச்சர் அதனை அன்று சம்பிரதாயமாக அறிமுகம் செய்து வைத்தார், ஆனால் இந்த வகைகள் அனைத்தும் தற்போது ஆராய்ச்சி கட்டத்தில் தான் உள்ளன. இந்த அரிசி விதைகள் பற்றிய தெளிவு மூன்று, நான்கு மாதங்கள் கழித்து தான் கிடைக்கும். தற்போது அதைப்பற்றி பேசவோ விமர்சனங்களுக்கு பதில் அளிக்கவோ முடியாது" என இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி சாய் பிரசாத் பிபிசியிடம் தெரிவித்தார்.

"இந்த புதிய மரபணு மாற்றப்பட்ட வகைகளைப் பற்றி நிலத்தில் பரிசோதித்த பிறகு பேசுவதே சிறந்ததாக இருக்கும். தற்போதே அதைப்பற்றி பேசுவது சரியாக இருக்காது. பலரும் இவற்றை மரபணு மாற்றப்பட்ட விதைகள் என நினைக்கின்றனர். வேறொரு உயிரினத்தின் உயிரணுக்களில் இருந்து கொண்டு வரப்பட்டு இணைக்கப்பட்டால் அவை மரபணு மாற்றப்பட்டது என அழைக்கப்படுகிறது" என ஓய்வுபெற்ற வேளாண் பொருளாதார நிபுணரான கிலாரு பூர்ணசந்திர ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "காட்டன் விதைகளுக்குள் பேசிலஸ் துரிஞ்சியென்ஸ் பாக்டீரியாவில் இருந்து ஒரு மரபணுவை செலுத்தி பிடி காட்டன் உற்பத்தி செய்யப்பட்டது. இது மரபணு மாற்றம் என அழைக்கப்படுகிறது. இங்கு அது செய்யப்படவில்லை. விஞ்ஞானிகள் இங்கு மேற்கொண்டது மரபணு திருத்தம் மட்டுமே. அதாவது, தாங்களே அரிசி விதைகளில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளனர். எனவே தான் களத்தில் பரிசோதித்து முடிவுகளை அறிந்த பிறகே அவற்றைப் பற்றி நாம் பேச முடியும்" என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1e61gq6wewo

சென்னையில் லிவ்-இன் உறவில் இருந்த பெண் சாவில் திருப்பம் - மருத்துவர் கைது

2 days 19 hours ago

சென்னையில் லிவ்-இன் உறவில் இருந்த பெண் சாவில் திருப்பம் - மருத்துவர் கைதானது ஏன்? இன்றைய முக்கிய செய்தி

இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,TAMIL HINDU

3 மணி நேரங்களுக்கு முன்னர்

இன்று, ஜூன் 8 அன்று, தமிழ்நாட்டில் வெளியான பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்களில் இடம் பெற்ற முக்கியச் செய்திகளின் தொகுப்பை நாம் இங்கே காணலாம்.

சென்னை கொடுங்கையூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் இறந்த வழக்கில் மருத்துவரை போலீஸார் கைது செய்தனர் என்று இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு, இவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின.

"திருச்சியை சேர்ந்தவர் நித்யா (26). இவரும், கொடுங்கையூர் வெங்கடேஷ்வரா காலனி 6-வது தெருவைச் சேர்ந்த பாலமுருகனும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் கொடுங்கையூர் ஆசிரியர் காலனியில் வாடகை வீட்டில் இரண்டு மாதங்களாக தம்பதியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 5-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த நித்யாமர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வீட்டின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த 25 பவுன் தங்கநகைகள் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் நித்யா, சில மாதங்களுக்கு முன்பு வரை சைதாப்பேட்டை சடையப்பன் சந்து பகுதியைச் சேர்ந்த மருத்துவர் சந்தோஷ்குமார் (27) என்பவரை காதலித்திருப்பதும், பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருப்பதும், சம்பவம் நடந்த அன்று சந்தோஷ்குமார் அங்கு வந்து சென்றிருப்பதும் தெரியவந்தது.

தொடர் விசாரணை இதையடுத்து போலீஸார் சந்தோஷ்குமாரிடம் விசாரணை நடத்தியதில், நித்யா கொலை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என மறுத்துள்ளார். அவர் வீட்டுக்கு வந்து சென்றது குறித்த கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட ஆதாரங்களை காட்டி போலீஸார் விசாரணை நடத்தியதில், நித்யாவை கொலை செய்ததை சந்தோஷ்குமார் ஒப்புக் கொண்டார்.

விசாரணையில் சந்தோஷ் சைதாப்பேட்டையில் வசித்து வருகிறார், ஆலந்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக வேலை செய்து வருகிறார். சமூக ஊடகம் மூலமாக கடந்தாண்டு அவருக்கு நித்யா அறிமுகமாகியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"நித்யா, தான் மென்பொறியாளர். அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன் என்று சொன்னதை, சந்தோஷ்குமார் நம்பியுள்ளார். காதலிக்க தொடங்கிய இருவரும், திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் தம்பதிகளாக வாழ்ந்தனர். இதற்கிடையே நித்யாவுக்கு வேறு ஒரு இளைஞருடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், சந்தோஷ்குமார் பிரிந்து சென்றுள்ளார்.

ஆனால் நித்யா, இருவரும் தனிமையில் இருந்த புகைப்படங்கள், வீடியோக்களை சந்தோஷ்குமாரிடம் காட்டி, சமூக ஊடகங்களில் அதை வெளியிட்டு விடுவேன் என மிரட்டி சந்தோஷ் குமாரிடம் இருந்து ரூ.8.50 லட்சம் பறித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று நித்யா, சந்தோஷ்குமாரை தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். அன்று சந்தோஷ்குமார் சென்றதும், இருவரும் மது அருந்தியுள்ளனர். இதில் நித்யா, மதுபோதையில் இருந்தபோது தனக்கு லேசாக தலைவலிப்பதாக தெரிவித்துள்ளார்.

உடனே சந்தோஷ்குமார், நித்யாவின் தலைக்கு மசாஜ் செய்வதுபோல நடித்து, அவரை கொலை செய்துள்ளார்.

பின்னர் அந்த வீட்டின் பாதுகாப்பு பெட்டகத்தை நித்யாவின் கைவிரல் ரேகை மூலம் திறந்து, அதில் இருந்த 25 பவுன் தங்க நகையை எடுத்து கொண்டு தப்பியோடியுள்ளார். நகையை, தனது வீட்டின் எதிரே வசிக்கும் நண்பரிடம் கொடுத்துள்ளார். அந்த நகையையும் போலீஸார் தற்போது மீட்டுள்ளனர். இதையடுத்து, சந்தோஷ்குமாரை கைது செய்த போலீஸார், இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள் பூமித் தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கின்றனர் என நீதிபதி கருத்து

பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கும் குவாரி உரிமையாளர்கள்: உயர் நீதிமன்றம் கருத்து

தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள் பூமித் தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கின்றனர் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"குவாரி உரிமம் முடிந்த நிலையிலும், குவாரியை வெட்டி எடுத்த கோவை குவாரி உரிமையாளர் செந்தாமரைக்கு ரூ.32.29 கோடி அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூன் 7 அன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் குவாரி நடத்த உரிமையில்லை. சட்டவிரோதமாக எடுத்த கனிமத்துக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்று அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. அபராதம் விதிப்பை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவார்த்தி, "தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள் பூமித் தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கின்றனர்.

பேராசைக்காரர்களிடம் இருந்து பூமியைக் காக்கவே சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் உள்ளது. குவாரி மூடப்பட்டதாக அறிக்கை தந்துவிட்டு மறுபுறம் குவாரி செயல்பட அதிகாரிகள் அனுமதி அளித்திருக்கிறார்கள்.

குவாரி உரிமம் 2023ல் முடிந்ததால் அதை ரத்து செய்ய வேண்டிய அவசியம் தற்போது இல்லை. இந்த வழக்கில் இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. குவாரி மோசடியில் அதிகாரிகள் பங்கு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும், "நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5yxv3155kgo

கோபுர கலசங்களில் இரிடியம் உள்ளது என்பது உண்மையா? சிலர் கோடிக்கணக்கில் தர தயாராக இருப்பது ஏன்?

3 days 21 hours ago

இரிடியம், பணமோசடிகள், ரிசர்வ் வங்கி முத்திரை, தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 6 ஜூன் 2025

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

'ரிசர்வ் வங்கி மூலமாக இந்திய அரசு ரகசியமாக இரிடியத்தை விற்பனை செய்வதால் அதில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும்' எனக் கூறி சுமார் 4.5 கோடி ரூபாயை மோசடி செய்ததாக 6 பேரை தமிழ்நாடு சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்தும் போலி ஆவணங்களைத் தயாரித்தும் அவர்கள் மோசடியில் ஈடுபட்டதாக, ஜூன் 2-ஆம் தேதி சிபிசிஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது.

பிளாட்டினம், தங்கத்தைவிட அதிக மதிப்புள்ளதாக இருப்பதால் இரிடியத்தை மையமாக வைத்து மோசடிகள் அரங்கேறுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இரிடியம் மோசடியில் ஈடுபட்டதாக 6 பேர் சிக்கியது எப்படி? இரிடியத்தை முன்வைத்து மோசடி நடப்பது எப்படி?

இரிடியம் மோசடி நடந்தது எப்படி?

இரிடியம், பணமோசடிகள், ரிசர்வ் வங்கி முத்திரை, தமிழ்நாடு

படக்குறிப்பு, இரிடியம்

இந்திய ரிசர்வ் வங்கியின் உதவி பொதுமேலாளர் ஏ.ஜே.கென்னடி, கடந்த ஆண்டு மே மாதம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.

நிதி மோசடிப் புகார்கள் தொடர்பான புகார்களைக் கையாளும் ரிசர்வ் வங்கியின் 'SACHET' இணையதளத்தில் தனி நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், புகார் மனுவை ஏ.ஜெ.கென்னடி அளித்திருந்தார்.

தனது மனுவில், 'இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தியும் போலியான ஆவணங்களைத் தயார் செய்தும் பொதுமக்களை சிலர் ஏமாற்றி வருகின்றனர். ரிசர்வ் வங்கி மூலமாக இந்திய அரசிடம் இருந்து இரிடியம் மற்றும் தாமிரம் விற்பனைக்காக பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் பெறப்பட்டதாகவும் இந்தப் பணத்தை வெளியில் கொண்டு வருவதற்கு ரிசர்வ் வங்கிக்கு சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் சிலர் பொதுமக்களை நம்ப வைத்து ஏமாற்றியுள்ளனர்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணத்தைப் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு கமிஷன் தொகை கொடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு செலுத்தினால் அதிக வட்டியுடன் முதலீட்டுத் தொகை திரும்பக் கிடைக்கும் எனக் கூறி ஏமாற்றியுள்ளதாக மனுவில் அவர் கூறியிருந்தார்.

இதுதொடர்பான போலி ஆவணங்களை நம்பி சிலர் ஏமாந்துள்ளதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. போலீஸ் நடத்திய விசாரணையில் கடந்த மே மாதம் 28 அன்று தஞ்சாவூரை சேர்ந்த நித்யானந்தம், சந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இரிடியம், பணமோசடிகள், ரிசர்வ் வங்கி முத்திரை, தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

அவர்கள் மீது 419, 465, 468, 471, 420 IPC & 66 D of IT Act 2000 3 r/w 5of Emblems & Name (Prevention of improper use) Act 1950 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏமாற்றுதல், மோசடி, ரிசர்வ் வங்கி முத்திரையை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றை இப்பிரிவுகள் குறிக்கின்றன.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சேலத்தைச் சேர்ந்த அன்புமணி, முத்துசாமி, கேசவன், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காடி சார்லா கிஷோர்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக, சிபிசிஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இவர்களிடம் இருந்து தங்க நிற உலோகம், போலி ஆவணங்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள சிபிசிஐடி, சென்னை, தஞ்சாவூர், கோவை, சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நபர்களை இவர்கள் ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளது.

'மும்பை, டெல்லியில் ரகசிய கூட்டம்'

இரிடியம் வர்த்தகத்தை மத்திய அரசு ரகசியமாக மேற்கொண்டு வருவதாகக் கூறி ரிசர்வ் வங்கி சின்னத்துடன் கூடிய போலி சான்றிதழ்களைக் காட்டி பண மோசடியில் இக்குழுவினர் ஈடுபட்டு வந்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி கூறியுள்ளது.

ஒருகட்டத்தில் முதலீட்டுத் தொகையை வாடிக்கையாளர்கள் கேட்டுள்ளனர். 'அவர்களை நம்ப வைப்பதற்காக டெல்லி மற்றும் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு அவர்களை வரவழைத்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல சிலரை நடிக்க வைத்து நம்ப வைத்துள்ளனர்' என சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

இரிடியம்-காப்பர் திட்டத்தில் முதலீடு எனக் கூறி சுமார் 4.5 கோடி ரூபாய் வரை இக்குழுவினர் ஏமாற்றியுள்ளது, விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

தங்களை ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் என்றும் இரிடியம்-செம்பு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி கட்டாயப்படுத்தி முதலீடு செய்ய வைத்ததாக, சில ஊடகங்களிடம் சிபிசிஐடி பிரிவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் டி.எஸ்.அன்பு தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறுவது என்ன?

இரிடியம், பணமோசடிகள், ரிசர்வ் வங்கி முத்திரை, தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

மோசடியைக் கண்டறிந்தது தொடர்பாக மேலதிக தகவல்களை அறிய, இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல கிளை அலுவலகத்தை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.

"ரிசர்வ் வங்கியின் புகார் தளத்தில் (Sachet) தனி நபர் அளித்த தகவலின் அடிப்படையில் உதவிப் பொது மேலாளர் புகார் அளித்தார். அவர் தற்போது ஓய்வுபெற்றுவிட்டார்" எனக் கூறினார், பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர்.

"நிதி மோசடி தொடர்பாக புகார்கள் வந்தால் அதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். அதன்பேரில் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்" எனக் கூறிய அவர், "இதுதொடர்பாக, மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து மட்டுமே அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும்" என்று மட்டும் பதில் அளித்தார்.

தொடரும் இரிடியம் மோசடிகள்

இரிடியம், பணமோசடிகள், ரிசர்வ் வங்கி முத்திரை, தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பூமிக்கு அடியில் மிகக் குறைவாக கிடைக்கும் உலோகங்களில் ஒன்றாக இரிடியம் உள்ளது

தமிழ்நாட்டில் இரிடியத்தை முன்வைத்து தொடர்ந்து பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. 2023 ஆம் ஆண்டில் திருவண்ணாமலையில் இரிடியம் விற்பனை தொடர்பாக 4 பேருக்குள் ஏற்பட்ட மோதல், மோசடியை வெளிக்கொண்டு வந்தது.

முதல் தகவல் அறிக்கையின் படி, "ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த சீனி முகமது என்ற நபர், திருவண்ணாமலையை சேர்ந்த ரவி என்பவரை அணுகியுள்ளார். அவரிடம், தன்னிடம் இரிடியம் உள்ளதாகவும் அதை விற்பனை செய்தால் பல லட்சம் சம்பாதிக்கலாம் என சீனி முகமது கூறியுள்ளார். இதை நம்பி ரவி உள்பட மூன்று பேர் சில லட்சங்களை முதலீடு செய்துள்ளனர். ஒருகட்டத்தில், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து சீனி முகமதுவிடம் தகராறு செய்துள்ளனர். இதையறிந்து நான்கு பேரையும் திருவண்ணாமலை போலீஸ் கைது செய்துள்ளது."

கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் மீது இரிடியம் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி மதுரை தெற்கு வாசல் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரனிடம், இரிடியம் கலசத் தொழிலில் ஈடுபட்டால் பல லட்சம் சம்பாதிக்கலாம் எனப் பெண் ஒருவர் கூறியதை நம்பி திருவள்ளூரை சேர்ந்த தி.மு.க பிரமுகரிடம் சுமார் 18 லட்ச ரூபாய் வரை இழந்துவிட்டதாக, காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இரிடியம் மூலம் சுமார் 20 கோடி வரை லாபம் கிடைக்கும் எனக் கூறி மோசடி செய்ததாக காவல்துறையில் தெய்வேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, முகமது ரபி, கலைச்செல்வி ஆகியோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இரிடியத்துக்கு இவ்வளவு மதிப்பு ஏன்?

இரிடியம், பணமோசடிகள், ரிசர்வ் வங்கி முத்திரை, தமிழ்நாடு

படக்குறிப்பு,பிளாட்டினம், தங்கம் ஆகியவற்றைவிட இரிடியத்தின் விலை 2 அல்லது 3 மடங்கு அதிகம் என்கிறார் பார்த்திபன்.

கடந்த 10 ஆண்டுகளாக இரிடியத்தை முன்வைத்து பல்வேறு வடிவங்களில் மோசடிகள் நடப்பதாகக் கூறுகிறார், அசாமில் உள்ள தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி பார்த்திபன்.

"பூமிக்கு அடியில் மிகக் குறைவாக கிடைக்கும் உலோகங்களில் ஒன்றாக இரிடியம் உள்ளது. கனடா, மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இரிடியம் அதிகமாக கிடைக்கிறது. குறிப்பாக, கடற்கரையோர பகுதிகள் மற்றும் வண்டல் (sediment) படிமங்களில் இவை கிடைக்கிறது.

பிளாட்டினம், தங்கம் ஆகியவற்றைவிட 2 அல்லது 3 மடங்கு இதன் விலை அதிகம். சர்வதேச சந்தையில் ஒரு கிராம் இரிடியத்தின் விலை என்பது நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் டாலர்களாக உள்ளது. அதனால் இதனை மோசடியாக வாங்கி விற்பதில் சிலர் முயற்சிக்கின்றனர்" எனக் கூறுகிறார் பார்த்திபன்.

'தங்கத்தைவிட அடர்த்தி அதிகம்'

"இரிடியத்தின் அணு எண் 191. இதை வேதியியல் ஆய்வகத்தில் வினை ஊக்கியாக (Catalyst) பயன்படுத்துகின்றனர். தங்கம், பிளாட்டினம் ஆகியவற்றைவிடவும் அதிக அடர்த்தி கொண்ட உலோகமாக இரிடியம் உள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"நீர், அமிலம் என இரிடியத்தை எங்கு தூக்கிப் போட்டாலும் அதற்கு ஒன்றும் ஆகாது" எனக் கூறும் பார்த்திபன், "அடர் அமிலத்தில் அதிக நேரம் வைத்திருந்தால் மட்டுமே அதற்கு பாதிப்பு ஏற்படும். எளிதில் தீப்பிடிக்காது என்பதால் விமானத்தில் மின்சாதன கருவிகளில் பயன்படுத்துகின்றனர்" என்கிறார்.

"இரிடியம் பூசப்பட்ட (coated) எல்.இ.டி விளக்குகள், லேப்டாப் போன்றவற்றுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இதை தொழிற்சாலைகளில் அதிகம் பயன்படுத்துகின்றனர்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"இரிடியத்தை நியூட்ரான் கொண்டு மோதவிடும்போது அது இரிடியம் 192 ஆக மாறிவிடும். இதை ரேடியோ ஆக்டிவ் ஐசோடோப் (radio active isotope) என்கின்றனர். அப்போது அதிக கதிரியக்க தன்மை வாய்ந்த கதிர்கள் வெளிப்படும்" எனக் கூறுகிறார் பார்த்திபன்.

'மனித உயிருக்கே ஆபத்து'

"இவ்வாறு மாற்றப்படும் போது அதை இயல்பாக கையாள முடியாது. பாதுகாப்பான கருவிகள் அல்லது மரத்தால் ஆன பொருள் மூலம் மூடப்பட வேண்டும் (Personal protected equipment (PPE). சுமார் 90 அடி வரையில் அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அவ்வாறு கையாளாவிட்டால் கதிரியக்கம் வெளிப்பட்டு மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்" எனவும் தெரிவித்தார்.

மருத்துவமனைகளில் இரிடியம் 192 பயன்படுத்துவதாகக் கூறும் அவர், "ப்ராஸ்டேட் புற்றுநோய், தோல் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சையில் இவை பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோய் செல்களை அழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன" எனக் கூறுகிறார்.

கோவில் கலசங்களில் இரிடியம் உள்ளதா?

இரிடியம், பணமோசடிகள், ரிசர்வ் வங்கி முத்திரை, தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

"கோவில் கலசங்களில் இரிடியம் உள்ளதாக மோசடிகள் நடந்தன. இதில் உண்மை உள்ளதா?" எனக் கேட்ட போது, "தங்கம், செம்பு உள்பட வேறு உலோகங்களுடன் வினைபுரியும்போது துணைப் பொருளாக (Bi Product) இரிடியம் கிடைக்கிறது. மிகப் பழைமையானதாக இருக்கும் உலோகத்தில், இவை இயல்பாகவே உருவாகும்" எனக் கூறுகிறார்.

உதாரணமாக, பழமையான கோவில் கலசத்தில் 2 கிராம் அளவு தங்கம் இருந்தால் அதில் சுமார் 500 மி.கி அளவு இரிடியம் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறும் அவர், "மிகக் குறைவாக கிடைத்தாலும் அதன் விலை என்பது மிக அதிகம். அரசு அனுமதி பெற்ற ஆய்வகங்களுக்கு 1 கிராம் சுமார் 83 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது" என்கிறார்.

தொடர்ந்து பேசும்போது, "இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அலாய் வீல்களைத் தயாரிக்கும்போதும் நகை தயாரிப்பிலும் இரிடியம் உருவாகின்றன. அவ்வாறு கிடைத்தால் சட்டவிரோதமாக யாருக்கும் விற்கக் கூடாது என இந்திய அரசு தடை விதித்துள்ளது" எனக் கூறினார்.

"இரிடியம் 192 வகையை மிகப் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்" எனக் கூறும் பார்த்திபன், 2015 ஆம் ஆண்டு மெக்ஸிகோ நாட்டில் உள்ள டாபாஸ்கோ (Tabasco) மாநிலத்தில் மருத்துவ ஆய்வகத்தில் இருந்து இரிடியத்தை சிலர் சட்டவிரோதமாக திருடிய சம்பவத்தை மேற்கோள் காட்டினார்.

"இரிடியத்தை மூடப்பட்ட கலனில் பாதுகாப்பாக கொண்டு செல்லாததால் நிறைய பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதில் தொடர்புடைய நபர்களை அந்நாட்டு அரசு கைது செய்தது" எனக் கூறுகிறார் பார்த்திபன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cd62l1z4710o

பொள்ளாச்சி: மனநலம் குன்றியவர் கொலையில் என்ன நடந்தது? மனநல காப்பகங்களை கண்காணிப்பது யார்?

1 week ago

மனநல காப்பகத்தில் கொலை, யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட், கோவை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள்

பட மூலாதாரம்,YUTHIRA WEBSITE

படக்குறிப்பு, யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

பொள்ளாச்சியில் மனநல காப்பகத்தில் இருந்த மனநலம் குன்றியவர், கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் மனநல காப்பகங்கள் மீதான ஆய்வு தொடங்கியுள்ளது. அனைத்து மனநல காப்பகங்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில், 'யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட்' என்ற பெயரில், மனநல காப்பகம் செயல்பட்டு வந்தது.

ஆட்டிசம், டிஸ்லெக்சியா, டவுன்சிண்ட்ரோம் உள்ளிட்ட 5 வகையான மனநல பாதிப்பு உள்ளவர்களுக்கான காப்பகம் மற்றும் பயிற்சி மையம் என்ற பெயரில் இதற்கு இணையத்திலும் ஏராளமான புகைப்படங்களுடன் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இணைய விளம்பரத்தில் ஈர்க்கும் மனநல காப்பகம்

நட்சத்திர விடுதிகளுக்கு இணையான வசதிகளுடன் கூடிய கட்டடம், உள்விளையாட்டு அரங்கம், சிறப்புப் பயிற்சி மையங்கள், திறந்தவெளி மைதானங்கள், அதிநவீன பயிற்சி வகுப்பறைகள் என இந்தக் காப்பகத்தின் விளம்பரமே எல்லோரையும் ஈர்ப்பதாக உள்ளது.

இதை மனநல ஆலோசகரான டாக்டர் கவிதா, அவருடைய கணவர் லட்சுமணன், மகள்கள் சுருதி, ஸ்ரேயா, ஷாஜி ஆகியோர் அறக்கட்டளை நிர்வாகிகளாக இருந்து நடத்தி வந்துள்ளனர். இங்கு மனநல பயிற்சியளிக்கும் பயிற்றுநர்கள், உடல் திறன் தேர்வுக்கான பயிற்சியாளர்கள், காப்பாளர்கள், பராமரிப்பாளர்கள் எனப் பலர் பணியாற்றி வந்தனர்.

இந்தக் காப்பகத்தில், கோவை மாவட்டம் சோமனுார் அருகேயுள்ள கரவளி மாதப்பூரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகன் வருண் காந்த் (வயது 24) உள்பட 25க்கும் மேற்பட்டோர் மனநல சிகிச்சைக்காகத் தங்கியிருந்தனர்.

கடந்த மே 13 ஆம் தேதியன்று, அவர்களை ஆழியாறு அணைக்கு சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றபோது, வருண் காந்த் காணாமல் போய்விட்டதாக, ரவிக்குமாருக்கு காப்பகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி ஆழியாறு காவல் நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதற்குப் பிறகு ரவிக்குமாரும், அவரது மனைவியும் காப்பகத்திற்குச் சென்று பார்த்துள்ளனர்.

காவல் நிலையத்தில் புகார்

மனநல காப்பகத்தில் கொலை, யுத்ரா சேரிட்டபிள் டிரஸ்ட், கோவை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், வருண் காந்த்

பட மூலாதாரம்,TNPOLICE

படக்குறிப்பு, கொலை செய்யப்பட்ட வருண் காந்த்

அப்போது அங்கிருந்த சிலர் அளித்த தகவலின்பேரில், மே 13ஆம் தேதி ஆழியாறுக்கு அழைத்துச் சென்றபோது, காப்பகத்தில் இருந்து தங்கள் மகன் வருண் காந்த் வாகனத்தில் ஏறுகின்ற காட்சி, காப்பகத்திலுள்ள சிசிடிவியில் இருக்கிறதா என்று ரவிக்குமார் ஆய்வு செய்துள்ளார். அப்போது, அவர் அங்கிருந்து ஏறவில்லை என்பதும், அதற்கு முதல் நாளிலேயே வருண் காந்த்தை காப்பக ஊழியர்கள் தாக்கியதும் தெரிய வந்துள்ளது.

அதுகுறித்த விவரங்களை வழங்கிய மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் "கடந்த மே 12ஆம் தேதியன்று, வருண் காந்தை காப்பக ஊழியர்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அதில் அவர் உயிரிழந்துள்ளார். ஆனால் அதை வருணின் பெற்றோர் மற்றும் காவல்துறையிடம் தெரிவிக்காமல், மறைக்க முயன்று, டாக்டர் கவிதாவுக்கு சொந்தமான நடுப்புணி பி.நாகூர் பகுதியிலுள்ள தோட்டத்தில் குழி தோண்டி வருண் காந்தின் உடலைப் புதைத்துள்ளனர்.

அதன் பிறகு மே 13ஆம் தேதியன்று, ஆழியாறுக்கு காப்பகத்தில் உள்ளவர்கள் எல்லோரையும் சுற்றுலா அழைத்துச் செல்வது போல அழைத்துச் சென்று, அங்கே வைத்து வருண் காணாமல் போய்விட்டதாகப் புகார் கொடுக்கவும் திட்டமிட்டு, அதையே செய்துள்ளனர்," என்று தெரிவித்தனர்.

தலைமறைவான நிர்வாகிகள்

மனநல காப்பகத்தில் கொலை, யுத்ரா சேரிட்டபிள் டிரஸ்ட், கோவை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், வருண் காந்த்

பட மூலாதாரம்,TN POLICE

படக்குறிப்பு, வருண் காந்தின் உடல் புதைக்கப்பட்ட இடம்

இந்தக் கொலை தொடர்பாக, முதலில் காப்பக நிர்வாகி கிரி ராம், கேர் டேக்கர் நிதீஷ், பணியாளர்கள் சதீஷ், ஷீலா, ரங்கநாயகி, அறக்கட்டளை நிர்வாகி ஷாஜியின் தந்தை செந்தில் பாபு ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

காப்பக அறக்கட்டளை நிர்வாகிகள் டாக்டர் கவிதா, அவருடைய கணவர் லட்சுமணன், மகள்கள் சுருதி, ஸ்ரேயா, ஷாஜி ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். அவர்களைப் பிடிப்பதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஐந்து பேரும் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக, விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இறுதியில் 5 பேரும், கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 11 பேர் மீதும் கொலை, கொலையை மறைத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக மகாலிங்கபுரம் போலீசார் தெரிவித்தனர்.

''தாக்கப்பட்டதில் வருண் காந்த் உயிரிழந்ததும் காவல்துறையிடம் தெரிவித்திருந்தால், அவரைத் தாக்கியவர்கள் மீது மட்டும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் அறக்கட்டளை நிர்வாகிகள், காப்பகப் பணியாளர்கள் என எல்லோரும் சேர்ந்து இந்தக் கொலையை மறைப்பதற்கு முயற்சி எடுத்து, இந்த நாடகத்தை அரங்கேற்றியதால்தான் இப்போது 11 பேரையும் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது'' என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரி கைது

மனநல காப்பகத்தில் கொலை, யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட், கோவை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், வருண் காந்த்

பட மூலாதாரம்,TN POLICE

படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட காப்பக அறக்கட்டளை நிர்வாகிகள் டாக்டர் கவிதா, அவரது கணவர் லட்சுமணன், மகள்கள் சுருதி மற்றும் ஸ்ரேயா (இடப்புறத்தில் இருந்து)

இந்தச் சம்பவத்தில் கொலையில் தொடர்புடையதாக 11 பேர் கைது செய்யப்பட்டதுடன், எதிர்பாராத திருப்பமாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் பணம் மற்றும் நகையைக் கையாடல் செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

காப்பக அறக்கட்டளை நிர்வாகிகளைக் கைது செய்தபோது, அவர்களிடம் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 18.5 சவரன் நகை ஆகியவை தனிப்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

அதை முறைப்படி ஒப்படைக்காமல் தனிப்படையைச் சேர்ந்த காவல் துணை ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரும், அவருடன் பணத்தைப் பங்கிட்டுக் கொண்ட மற்றொரு துணை ஆய்வாளரான மகாராஜா இருவரும் கோவை சரக டி.ஐ.ஜி. சசிமோகன் உத்தரவின் பேரில் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். தற்போது இதுகுறித்த விவாதங்களும் சூடு பிடித்துள்ளன.

மனநல காப்பகங்கள் குறித்து எழும் அச்சம்

மனநலம் குன்றிய இளைஞர் வருண் காந்த் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. கொலை செய்யும் அளவுக்கு அவரைத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஊடகங்களில் பல தரப்பினரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு போலீஸ் அதிகாரி, ''வருண் காந்த் காப்பகத்திலுள்ள மற்றவர்களைவிட, எப்போதுமே விவாதம் செய்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். கடந்த வாரத்தில் ஒரு நாள் அவரை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்களை வெளியில் அழைத்துச் சென்றதால், கோபமாகிக் கத்தியுள்ளார். அப்போது காப்பக நிர்வாகியின் முகத்தில் எச்சில் துப்பியுள்ளார். அதில்தான் மிகவும் கோபமடைந்து, எல்லோரும் சேர்ந்து குரூரமாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்'' என்று விவரித்தார்.

இதற்கு முன்பாக வருண் காந்த், கோவை சரவணம்பட்டியில் உள்ள கெளமாரம் பிரசாந்தி அகாடமி என்ற மனநல காப்பகத்தில் இரண்டு ஆண்டுகள் இருந்துள்ளார். யுதிரா மனநல காப்பகத்தின் வசதிகளைப் பார்த்துவிட்டு, கடந்த பிப்ரவரியில்தான் வருண் காந்தை அவருடைய பெற்றோர் இங்கு சேர்த்துள்ளனர்.

ஆனால் அவருக்கு அங்கு பல பிரச்னைகள் ஏற்பட்டு வந்ததால், இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் பழைய காப்பகத்தில் சேர்ப்பதற்கு அவர்கள் திட்டமிட்டு இருந்ததாகத் தங்கள் விசாரணையில் தெரிய வந்ததாக மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

பிபிசி தமிழிடம் பேசிய கெளமாரம் பிரசாந்தி அகாடமி மனநல காப்பகத்தின் பிசியோதெரபிஸ்ட் மாதையன், ''வருண் காந்த் அதிகமாகப் பேசுவார். எங்களிடம் இருந்த இரண்டு ஆண்டுகளில் ஒருபோதும் முரட்டுத்தனமாகவோ, தவறாகவோ நடந்து கொண்டதில்லை. பயிற்சி கொடுத்தால் நன்றாகச் செய்வார். எங்களிடம் இருந்தபோது யார் மீதும் எச்சில் துப்பியதில்லை,'' என்றார்.

அரசின் அனுமதி கிடைத்த அதே நாளில் நடந்த கொலை

மனநல காப்பகத்தில் கொலை, யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட், கோவை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், வருண் காந்த்

பட மூலாதாரம்,YUTHIRA WEBSITE

படக்குறிப்பு, யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட் முகப்பு

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவலின்படி, இந்த மனநலக் காப்பகம், அரசின் நிதியுதவி ஏதுமின்றி சுயநிதியில் நடந்துள்ளது.

ஒவ்வொரு நபருக்கும் குறைந்தபட்சம் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை மாதாந்திர கட்டணம் வசூலித்துள்ளனர். வருணின் பெற்றோர் அவரைப் பார்க்க வரும்போதெல்லாம், உணவு, விளையாட்டுப் பொருள் என எது வாங்கினாலும் அனைவருக்கும் சேர்த்தே வாங்கி வருவார்கள் என்றனர்.

இந்தக் கொலை சம்பவத்துக்குப் பின், கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறையினர், மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலில், காப்பகத்தை ஆய்வு செய்து, அங்கிருந்தவர்களை வேறு காப்பகத்துக்கு மாற்றியுள்ளனர். தற்போது அந்தக் காப்பகம் மூடப்பட்டுள்ளது. இந்தக் காப்பகம், வாடகைக் கட்டடத்தில்தான் இயங்கி வந்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தாலும், கடந்த மாதத்தில்தான் இதற்கு தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் துறையிடம் இருந்து முறையான அனுமதி கிடைத்துள்ளது.

இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய கோவை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், ''அந்தக் காப்பகத்துக்கு அனுமதி கோரி கடந்த பிப்ரவரியில் விண்ணப்பித்துள்ளனர். அதன்பின் நாங்கள் ஆய்வு செய்தோம். கட்டடம் சகல வசதிகளுடன் இருந்தது. வட்டாட்சியரிடம் கட்டட அனுமதியும், தீயணைப்புத்துறையிடம் தீயணைப்புச் சான்றும் பெற்றிருந்தனர். காப்பகங்களுக்கான விதிமுறைகளின்படி காப்பகப் பராமரிப்பாளர், மருத்துவர், பயிற்றுநர் என எல்லோரும் தகுதியுடன் இருந்ததால் நாங்கள் ஆய்வு செய்து பரிந்துரை செய்தோம். அதற்கான அனுமதி மே 12 அன்றுதான் வந்தது'' என்றார்.

காப்பகத்துக்கு அரசின் முறையான அனுமதி வந்ததாக மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கூறும் அதே நாளில்தான், அந்தக் காப்பகத்தில் வருண் காந்த் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். இந்த மனநல காப்பக்ததில் வருணையும் சேர்த்து 28 பேர் இருந்துள்ளதாகக் கூறிய மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், அவர்களில் 20 பேர், கோடை விடுமுறைக்கு அவர்களின் பெற்றோர்களால் அழைத்துச் செல்லப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

மனநல காப்பகத்தில் கொலை, யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட், கோவை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், வருண் காந்த்

படக்குறிப்பு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கோயம்புத்தூர்

''கொலை நடந்தபோது, வருணையும் சேர்த்து 8 பேர் மட்டுமே இருந்துள்ளனர். சம்பவத்துக்குப் பிறகு, மீதமுள்ள 7 பேரில் 6 பேருடைய பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து, அவர்கள் வந்து அழைத்துச் சென்றுவிட்டனர். அவர்களில் ஒருவரின் பெற்றோர் கனடாவில் இருந்ததால், அவருடைய உறவினர் வீட்டில் ஒப்படைத்தோம். மீதமிருந்த ஒருவருக்கு பெற்றோர் இல்லை. தாத்தா, பாட்டி வயதானவர்கள் என்பதோடு, அவரின் பாட்டிக்கு இதய அறுவை சிகிச்சை நடக்க இருப்பதால், அவரை மற்றொரு காப்பகத்தில் சேர்த்துள்ளோம்'' என்றார் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, கோவை மாவட்டத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 19 காப்பகங்களிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். கடந்த 3 நாட்களில் 17 காப்பகங்களில் ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 2 காப்பகங்களில் மட்டுமே ஆய்வு நடத்தப்பட வேண்டியிருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் பகிர்ந்தனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மனநல மீளாய்வுக் குழு என்ற குழு செயல்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலான இந்தக் குழுவில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், மனநல மருத்துவர்கள் உள்ளிட்ட 5 பேர் உள்ளனர்.

அந்தக் குழுவின் கூட்டமும் நடத்தப்பட்டு, அவர்களும் காப்பகங்களில் ஆய்வு நடத்தியுள்ளனர். தற்போது இக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி குமணன் உள்ளார். சேலம் மாவட்டத்துக்கான குழுத் தலைவரான இவர்தான், தற்போது கூடுதலாக கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களையும் பார்த்து வருவது தெரிய வந்துள்ளது.

பொள்ளாச்சி சம்பவத்தின் எதிரொலியாக, கோவை மாவட்டத்தில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள மனநல காப்பகங்களில் ஆய்வுகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக மாநில மாற்றுத்திறனாளிகள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு உரிமைகள் (TN RIGHTS) மாவட்ட திட்ட அலுவலர் சுந்தரேஸ்வரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள TN RIGHTS என்பது, இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில்தான் துவக்கப்பட்டு இருப்பதாகவும், இதில் உலக வங்கியின் நிதி 70 சதவிகிதமும், தமிழக அரசின் 30 சதவிகிதமும் இதற்காகச் செலவிடப்படுவதாகவும் திட்ட அலுவலர் விவரித்தார். இந்தத் திட்டத்தின் கீழ், தற்போது தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பும் தொடங்கி இருப்பதாகவும் அவர் கூறினார்.

மனநல காப்பகங்களுக்கான விதிமுறைகளும் கண்காணிப்பும்

மனநல காப்பகத்தில் கொலை, யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட், கோவை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், வருண் காந்த்

பட மூலாதாரம்,DEPARTMENT OF WELFARE OF DIFFERENTLY ABLED PERSONS

படக்குறிப்பு, கோவை மாவட்ட மனநல மீளாய்வுக் குழுவினரின் ஆலோசனை

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் துறை தமிழக முதல்வரின் கீழ் இருந்தாலும், சமூக நலத்துறை அமைச்சரான கீதா ஜீவன்தான் இந்தத் துறை சார்ந்த பல்வேறு கூட்டங்களையும் நடத்தி, கணக்கெடுப்பு உள்ளிட்டவற்றைக் கண்காணித்து வருவதாக அத்துறை அலுவலர்கள் தகவல் பகிர்கின்றனர். மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம்தான் மனநல காப்பகங்களுக்கான அனுமதியை வழங்குகிறது.

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016இன் படியே (RPWD-The Rights of Persons with Disabilities Act, 2016) மனநல காப்பகங்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

"இதற்கு படிவம் வடிவிலான விண்ணப்பமே இத்துறை மூலமாக வழங்கப்படுகிறது. அதில் ஏராளமான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, கட்டடம், கழிப்பறை, சாய்வு தளம், மேல்மாடி அனைத்தும் எந்தெந்த விதங்களில் பாதுகாப்பாக அமைக்கப்பட வேண்டும் என்று விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

இதன்படி கட்டடம் அமைந்துள்ளதா என்பதைப் பார்த்து வருவாய் வட்டாட்சியர் கட்டட உரிமம் தர வேண்டும். தீத்தடுப்பு பாதுகாப்பு முறைகளை ஆய்வு செய்து, தீயணைப்புத்துறை தடையில்லாச் சான்று வழங்க வேண்டும். தொடர்ந்து 3 ஆண்டுகள் அந்தக் காப்பகம் இயங்கியிருக்க வேண்டும்," என்று மாற்றுத்திறனாளிகள் துறையினர் விளக்குகின்றனர்.

அவர்களது கூற்றுப்படி இயங்கும் காப்பகங்களில் சுகாதாரமான முறையில் சமையல் செய்யப்படுகிறதா, மனநலம் குன்றியவர்களைக் கையாளும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத அலுவலர்கள் முறையான பயிற்சி பெற்றிருக்கிறார்களா, கணக்குகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா, மருத்துவர்கள், மருத்துவ வசதிகள் உள்ளதா, மனநலம் குன்றியவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், அதற்கான கட்டமைப்பு, கண்காணிப்பு கேமரா உள்ளனவா என்பதை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தலைமையிலான குழு ஆய்வு செய்து, அந்த விண்ணப்பத்தை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்குப் பரிந்துரைக்கும்.

அந்த ஆணையரகத்தில் மனநல மருத்துவர்கள் உள்ளனர். அவர்களும் பரிசீலித்து பரிந்துரைக்கும் அடிப்படையில் இறுதியாக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரால் மனநல காப்பகத்துக்கான அனுமதி வழங்கப்படும்.

இந்த காப்பகங்களைக் கண்காணிக்க மாவட்டந்தோறும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலான மாவட்ட மனநல மீளாய்வுக் குழு செயல்படுகிறது.

"அந்தக் குழு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் காப்பகங்களை ஆய்வு செய்யும். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரும் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு மேற்கொள்வார். ஏதாவது குறைபாடுகள் இருப்பின், அந்தக் காப்பகத்தின் அனுமதியைப் புதுப்பிப்பது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும்," என்று மாற்றுத்திறனாளிகள் துறையினர் விளக்கினர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0mrg310p0no

டெல்லியில் இடிக்கப்பட்ட 'மதராஸி கேம்ப்' - 4 தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தமிழர்களின் நிலை என்ன?

1 week 2 days ago

மதராஸி கேம்ப், மதராஸி முகாம், ஜங்பூர், டெல்லி, தமிழர்கள், டெல்லி தமிழ்ச்சங்கம் , புலம்பெயர் தமிழர்கள்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சங்கரநாராயணன் சுடலை

  • பதவி, பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

"என்னை டெல்லி அழைத்து வந்த கணவர் இப்போது இல்லை. மகனும் இறந்து விட்டார். இப்போது வீட்டை இடித்து விட்டார்கள். நான் எங்கே செல்வேன்?" என்கிறார் கண்ணம்மா. கடலூர் மாவட்டம் விருத்தசாலத்தைச் சேர்ந்த 70 வயதான கண்ணம்மா அவரது கணவர் டெல்லியில் வேலை பார்த்ததால் அவருடன் 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து குடியேறினார். அன்று முதல் டெல்லியே அவரது நிரந்த முகவரி ஆனது. சொந்த ஊரில் தனக்கென யாரும் இல்லை எனக் கூறும் கண்ணம்மா, தன்னால் அரசு கூறும் புதிய இடத்தில் வாழ முடியுமா என கவலையுடன் யோசிக்கிறார்.

புதுடெல்லியில் உள்ள ஜங்புராவில் தமிழர்கள் வசிக்கும் மதராசி கேம்பில் சுமார் 370 வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டன. நீர்நிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகக் கூறி டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வீடுகள் இடிக்கப்பட்டன. இங்கு வசித்த சுமார் 189 குடும்பங்களுக்கு மட்டுமே புதிய வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய குடும்பங்கள் வீடுகளைப் பெற தகுதி பெறவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் புதிய இடம் தங்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்றதாக இல்லை என இங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.

புதுடெல்லியில் உள்ள ஜங்புரா பகுதிக்கு நாங்கள் சென்ற போது, காலை 8 மணியளவில் வீடுகளை இடிக்கும் பணியை தெற்கு டெல்லி மாவட்ட நிர்வாகம் தொடங்கியிருந்தது. சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. பொக்லைன் எந்திரங்கள் வீடுகளை இடிக்கும் முன்னதாக போது வீடுகளிலிருந்து மின்சார மீட்டர்கள், போன்றவற்றை மின்துறை பணியாளர்கள் அகற்றிவிட்டு வெளியேறினர். பொதுமக்கள் யாரும் இடிபாடுகள் உள்ள பகுதிகளுக்குள் நுழைந்து விடாதவாறு போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

கேள்விக்குறியாகும் கல்வி

மதராஸி கேம்ப், மதராஸி முகாம், ஜங்பூர், டெல்லி, தமிழர்கள், டெல்லி தமிழ்ச்சங்கம் , புலம்பெயர் தமிழர்கள்

படக்குறிப்பு, மதராசி கேம்ப் இடிக்கப்பட்டு தங்களின் வீடுகள் மாற்றப்பட்டால் தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என மக்கள் அச்சப்படுகின்றனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த ரந்தன் டெல்லி ஜங்புராவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அருகில் உள்ள நான்கு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடையில் மெக்கானிக்காக வேலை பார்க்கும் ரந்தன் 10ம் வகுப்பு முடித்திருக்கிறார். இவரது தலைமுறையில் முதன்முறையாக தனது குழந்தைகளை பட்டப்படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறும் ரந்தன் குமார், தற்போது மதராசி கேம்ப் இடிக்கப்பட்டு தங்களின் வீடுகள் மாற்றப்பட்டால் தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என அச்சப்படுகிறார். ஆனால் தமது குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளாக தமது குழந்தைகளை உருவாக்குவேன் என உறுதியுடன் தெரிவித்தார் ரந்தன்.

"எனது மகன் 7வது வகுப்பு படிக்கிறார், மகள் 3 ம் வகுப்பு படிக்கிறார். இருவரும் இங்கு லோதிபார்க் பகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளியில் படிக்கின்றனர். ஆனால் இங்கிருந்து புதிதாக வீடுகள் வழங்கப்படும் நரேலா பகுதிக்கு சென்றால் அங்கிருந்து பள்ளிக்கு வரவே 40 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டியது வரும்" என்கிறார் ஜங்புராவில் வசித்து வரும் ரந்தன். இவரது மகன் "ஞாலம் கருதினுங் கைகூடுங்" என்ற திருக்குறளை மனப்பாடமாக கூறினார்.

"வருவாய் ஆதாரம் பறிபோகும்"

மதராஸி கேம்ப், மதராஸி முகாம், ஜங்பூர், டெல்லி, தமிழர்கள், டெல்லி தமிழ்ச்சங்கம் , புலம்பெயர் தமிழர்கள்

படக்குறிப்பு, "புதிய வசிப்பிடத்தினருகே தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை"

ஜங்புரா மதராசி கேம்ப்பில் வசிக்கும் ஆண்களில் பெரும்பாலானோர் ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று பணிகளைச் செய்கின்றனர். அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் கார்களை கழுவும் பணிக்குச் செல்கின்றனர். கார் ஒன்றுக்கு மாதம் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கிடைப்பதாகவும் இதன் மூலம் மாதத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடிவதாக சிவா என்பவர் குறிப்பிடுகிறார். இதுவே இருப்பிடத்திலிருந்து வெகு தூரத்தில் தற்போது குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நரேலா பகுதிக்கு சென்றால் இந்த வாழ்வாதாரமே இல்லாது போய்விடும் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இதே போன்று பெண்களும் வீட்டு வேலை செய்பவர்களாக உள்ளனர். சுற்றுவட்டார குடியிருப்புகளிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றால் வாழ்வாதாரம் எப்படி கிடைக்கும்? என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பிருந்தா என்ற பெண், தனது தாயார் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தற்போது போதுமான நேரம் கொடுக்கப்படாமல் தங்களின் வீடுகள் இடிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

வீடுகளை இடிக்கும் பணிக்கு நடுவே பெண்களில் சிலர் தடுப்புகளை மீறி தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய முயன்றதால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

"ஆக்கிரமிப்பு எனில் வீடு கட்ட அனுமதித்தது ஏன்?"

மதராஸி கேம்ப், மதராஸி முகாம், ஜங்பூர், டெல்லி, தமிழர்கள், டெல்லி தமிழ்ச்சங்கம் , புலம்பெயர் தமிழர்கள்

படக்குறிப்பு, குடிசை அகற்றம் என கூறப்பட்டாலும் பெரும்பாலும் கான்கிரீட் வீடுகளே உள்ளன

ஜங்புராவில் மதராசி கேம்ப் இடிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்படுவது, இதன் அருகில் ஓடக் கூடிய பாராபுலா ஓடை தான். கடந்த 2024ம் ஆண்டு பருவமழையின் போது இந்த ஓடை நிறைந்து அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ஆக்கிரமிப்பு அதிகரித்ததே இதற்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஓடையின் குறுக்கே உள்ள புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்தே தற்போது ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்று வருகிறது.

ஆனால் கடந்த காலத்தில் அதிகாரிகளின் அலட்சியம் இதில் இருப்பதாக அங்கு வசிப்பவர்கள் குற்றம் சாட்டினர். பிபிசி தமிழிடம் பேசிய சரவணன் என்ற ஜங்புராவாழ் தமிழர், கடந்த ஆண்டு தான் 3 முதல் 4 லட்ச ரூபாய் செலவிட்டு தனது வீட்டைக் கட்டியதாக கூறுகிறார். குடிசை அகற்றம் என்று தான் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அவர்களின் கூற்றுக்குமாறாக இங்கு அனைத்தும் காங்கிரீட் வீடுகளாக உள்ளன எனச் சுட்டிக்காட்டும் அவர் வீடு கட்டுவதற்காக தானே அதிகாரிகளுக்கு சுமார் 20,000 ரூபாய் வரை லஞ்சம் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறார்.

தமிழ்நாடு அரசின் வாக்குறுதி என்ன?

மதராஸி கேம்ப், மதராஸி முகாம், ஜங்பூர், டெல்லி, தமிழர்கள், டெல்லி தமிழ்ச்சங்கம் , புலம்பெயர் தமிழர்கள்

படக்குறிப்பு,போராட்டம் நடத்த முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்

"குடிசை எங்கோ, அங்கேயே வீடு" (aha Jhuggi Waha Makaan) என்ற வாக்குறுதியின் பேரில் டெல்லியில் தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. வாக்குறுதி அளித்ததாகக் கூறும் மக்கள், தற்போது அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மதராசி கேம்ப் எனக் குறிப்பிடப்படும் பகுதியிலிருந்து மேலும் 50 மீட்டர் வரையிலும், புறம் போக்கு நிலத்தில் தான் வீடு கட்டப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்கள் வசிக்கும் பகுதியைத் தாண்டி ஆக்கிரமிப்பு அகற்றம் நடக்கவில்லை என்பது அங்குவசிக்கும் மக்களின் புகாராக உள்ளது.

ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய தெற்கு டெல்லி மாவட்ட மாஜிஸ்திரேட் (ஆட்சியர்) அனில் பங்கா," நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது, நீதிமன்ற உத்தரவை பின்பற்றியே அனைத்துப் பணிகளும் நடைபெறுகிறது" என்று கூறினார்.

"பாராபுலா ஓடை ஆக்கிரமிப்புகள் காரணமாக மிகவும் குறுகிவிட்டது. கனழை பெய்யும் போது ஆக்கிரமிப்புகள் காரணமாக குடியிருப்பு பகுதிகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து கொள்கிறது. இதனால் இங்கு வீடுகள் இடிக்கப்பட்டு , நரேலா பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறினார்.

"சட்ட விரோத ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டு, 370 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. இவர்களில் 189 குடும்பங்கள் மறுகுடியேற்றத்திக்கு தகுதியானவர்களாக கண்டறியப்பட்டு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 181 குடும்பங்களுக்கு வீடு வழங்கப்படவில்லை" எனக் கூறினார்.

டெல்லி முதலமைச்சரான ரேகா குப்தா, தாம் பொறுப்பேற்ற பின்னர் குடிசைப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார் என ஏஎன்ஐ செய்தி முகமை குறிப்பிடுகிறது. குடிசை வாழ் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் அதே நேரத்தில் யமுனை நதியும் பாதுகாக்கப்பட வேண்டும் என ரேகா குப்தா அதில் கூறியுள்ளார்.

இதனிடையே தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் டெல்லி "மதராசி கேம்ப்" குடியிருப்புவாசிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் தமிழ்நாடு திரும்பி வர விரும்பினால் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் எனவும் அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c9q0e881lyvo

மாநிலங்களவை செல்லும் பெண் கவிஞர் : யார் இந்த சல்மா?

1 week 3 days ago

மாநிலங்களவை செல்லும் பெண் கவிஞர் : யார் இந்த சல்மா?

30 May 2025, 7:00 AM

who is Salma and what her background?

திமுக சார்பில் மாநிலங்களவைக்குச் செல்லவிருப்பவர்கள் பட்டியலில் ரொக்கையா மாலிக் என்கிற சல்மா என்னும் பெயரைப் பார்த்ததும் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். இவர் கவிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி. ஆனால் ஆரவாரமான அரசியலுக்கோ பரபரப்பான எழுத்துக்கோ இவரிடம் இடம் இல்லை. அதனாலேயே பலருக்கும் இவரைத் தெரியாது. ஆனால், இவரைத் தெரிந்தவர்களுக்கு இவர் மீது மரியாதை அதிகம். காரணம், அவருடைய நேர்மை, உழைப்பு, அன்பு, எழுத்துத் திறமை. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இலக்கிய உலகில் அழுத்தமான தடம் பதித்துவருபவர் சல்மா.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்த இவர் தொண்ணூறுகளின் மத்தியில் எழுதத் தொடங்கினார். சிறிய ஊர்களையும் கிராமங்களையும் சேர்ந்த பலர் எழுத்தாளர்களாகியிருக்கிறார்கள். இவர் மட்டும் என்ன சிறப்பு என்ற கேள்வி எழலாம்.

சல்மா எட்டாம் வகுப்பைத் தாண்டவில்லை. படிக்கவைக்க அவர் குடும்பத்துக்குப் பண வசதி இல்லையா? அதெல்லாம் ஒன்றுமில்லை. அவர் பிறந்த ஊரில், அவர் சார்ந்த தமிழ் இஸ்லாமியச் சமூகத்தில் பெண்கள் படிப்பது என்பது இயல்பான ஒன்றல்ல. பெண்கள் வயதுக்கு வரும்வரை படிக்கவைப்பார்கள். அதன் பிறகு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் கல்யாணம் செய்து வைத்துவிடுவார்கள். கல்யாணத்திற்குப் பிறகு படிப்பது என்பதெல்லாம் கற்பனைக்கும் எட்டாத சங்கதிகள். ரொக்கையா பேகம் என்னும் இயற்பெயர் கொண்ட சல்மாவுக்கும் 17 வயதிலேயே திருமணமாகிவிட்டது. ஆனால் அதுவரை படித்திருந்தாலும் குறைந்தது 10ஆம் வகுப்பு தேறியிருக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். ஒரு சினிமாதான் சல்மாவின் கல்வியை முடக்கிப்போட்டது என்று சொன்னால் நம்புவீர்களா?

8ஆம் வகுப்பு படிக்கும்போது சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆசையில் பள்ளித் தோழிகளுடன் உள்ளூர்த் திரையரங்கிற்குச் சென்றிருக்கிறார். அவர் படம் பார்த்த விஷயம் குடும்பத்திற்கும் ஊருக்கும் தெரிந்துவிட்டது. அதனால் முகம் சிவந்த அவர் குடும்பம் பள்ளிக்கூடத்திற்கே போக வேண்டாம் என்று சொல்லிவிட்டது.

unnamed-9-888x1024.jpg

இலக்கிய வாசனை

என்றாலும் சல்மா தளரவில்லை. தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர் அப்துல் ஹமீதின் (கவிஞர் மனுஷ்யபுத்திரன்) உதவியால் நிறைய புத்தகங்களைப் படித்தார். அந்த நூல்கள் அவருடைய சிந்தனையின் வாசல்களை அகலமாகத் திறந்தன. உலகை அறிய வழி வகுத்தன. இந்த உலகில் தான் யார், தன்னுடைய இடம் எது, ஏன் சிலருக்கு மட்டும் சில விஷயங்கள் கிடைப்பதில்லை என்பது குறித்த கேள்விகள் முளைத்தன. இந்தக் கேள்விகளை முன்வைத்து அவர் எழுதத் தொடங்கினார். இப்படித்தான் ராஜாத்தி என்னும் சிறுமி, சல்மா என்னும் கவிஞராகப் பரிணமித்தார்.

சல்மாவின் படைப்புலகம்

சல்மாவின் கவிதைகள் பெண்களின் அக உலகையும் தனிமையையும் பாடுபொருளாகக் கொண்டவை. பெண்கள்மீதான அடக்குமுறைகள் எவ்வளவு நுட்பமான தளங்களில் செயலாற்றுகின்றன என்பதை அவர் கவிதைகள் கூர்மையாகவும் ஆரவாரமற்ற தொனியிலும் கூறுகின்றன. அவருடைய சமூகமும் குடும்பமும் அவர் எழுதிய இந்தக் கவிதைகளை ரசிக்கவில்லை. என்றாலும் அவர் எழுத்தின் மூலம்தான் விடுதலை என்பதை உணர்ந்தவராகத் தொடர்ந்து எழுதிவந்தார். பிறரது கட்டுப்பாடுகள் தன் எழுத்தைப் பாதித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இந்த உறுதியே இலக்கிய உலகில் இவருக்கென்று ஓர் இடத்தை உறுதிசெய்தது.

1990களில் தமிழ் இலக்கியத்தில் அதுவரை அதிகம் பங்குபெறாமல் இருந்த பிரிவுகளிலிருந்து பலரும் எழுதத் தொடங்கினார்கள். தலித்துகள், இஸ்லாமியர்கள், ஒடுக்கப்பட்ட இதர பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் எனப் பலர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். தமிழ் இலக்கியத்திற்கு இது புது வரவாக இருந்தது. இந்தப் புதிய எழுத்துக்களில் சல்மாவின் பங்களிப்பு கணிசமானது. பெண்களின் அக உலகையும் வெளியில் தெரியாத விதங்களில் அவர்கள் அடக்கப்படுவதையும் ஒடுக்கப்படுவதையும் அவர்களுக்கான புழங்குவெளி குறுக்கப்படுவதையும் சல்மா வலுவான கவிதை மொழியில் வெளிப்படுத்தினார். பல பெண்களுக்கு உத்வேகமூட்டும் கவிதைகளாக அவை அமைந்தன. தமிழில் பெண் கவிதைகளின் புதிய அலையை உருவாக்கியதில் சல்மாவின் கவிதைகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமியின் அறிமுகம் 1995இல் ஏற்பட்டது. சுந்தர ராமசாமியின் வழிகாட்டுதலும் அவர் தந்த ஊக்கமும் சல்மாவின் இலக்கியப் பயணத்திற்குப் பெரிதும் துணைபுரிந்தன. சல்மாவின் நூல்களை வெளியிட்டுவரும் காலச்சுவடு பதிப்பகமும் அவருடைய எழுத்து தமிழகத்திலும் அதைத் தாண்டியும் பலரைச் சென்றடைவதில் முக்கியப் பங்காற்றிவருகிறது. இரண்டாம் சாமங்களின் கதை என்னும் நாவலை 2003இல் எழுதினார். தமிழ்நாட்டின் சிறு நகரங்களைச் சேர்ந்த இஸ்லாமிய சமூகத்துப் பெண்களின் அக உலகைச் சித்தரித்த அந்த நாவல், தமிழ் இலக்கிய உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் ஆங்கில மொழியாக்கம் ஆசியப் படைப்புகளுக்கான புக்கர் விருதின் தேர்வுப் பட்டியலில் இடம்
பெற்ற முதல் தமிழ்ப் படைப்பு. இதையடுத்து மனாமியங்கள், அடைக்கும் தாழ் என இன்றைய சமூகத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றிய நாவல்களையும் முஸ்லிம் பெண்களின் இன்றைய நிலையை உணர்த்தும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் அவர் எழுதியிருக்கிறார்.

image-2220-1024x570.png

உலகமே வீடு

சல்மாவின் படைப்புகள் ஆங்கிலம் மலையாளம் ஆங்கிலம், மராத்தி, ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளன. சிற்றூரில் பிறந்து பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியாத நிலையில் வாழ்ந்துவந்த சல்மா, தன் எழுத்தின் மூலம் உலகம் சுற்றும் படைப்பாளியாக மாறினார். வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டிய சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்து உலகமே என் வீடு என்ற நிலைக்கு அவர் வாழ்க்கை விரிவடைந்தது. 2002இல் இலங்கையில் நடந்த சர்வதேசப் பெண்ணுரிமை மாநாட்டில் பங்குகொள்ள அழைக்கப்பட்டார். 2006இல் ஃப்ராங்க்பர்ட் புத்தக விழா, 2009இல் லண்டன் புத்தகக் கண்காட்சி, 2010இல் பெய்ஜிங் புத்தகக் கண்காட்சி ஆகியவற்றில் பங்கேற்றார். 2007இல் சல்மாவின் படைப்புகளை முன்வைத்து சிகாகோ பல்கலைக்கழகத்தில் நார்மன் கட்லர் நினைவுக் கருத்தரங்கு நடைபெற்றது. 2007இல் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FETNA) தமிழ் விழா, உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, சிக்காகோ தமிழ்ச்சங்கப் பொன்விழா ஆகியவற்றை உள்ளடக்கிய முப்பெரும் விழாவில் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டார்.

unnamed-3.jpg

அரசியல் பணிகள்

எழுத்துப் பயணத்துடன் அரசியலிலும் ஈடுபட்ட சல்மா, தன் கணவர் அப்துல் மாலிக் சார்ந்திருந்த திமுகவில் இணைந்து தன் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 2004இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். பொன்னாம்பட்டி துவரங்குறிச்சி பேரூராட்சி பெண்களுக்கான தொகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. சல்மா அதில் போட்டியிட்டுத் தேர்தலில்
வென்றார். தொகுதியில் சிறப்பான பணிகளைச் செய்ததால் பரவலாக அவர் கவனிக்கப்பட்டார். 2006இல் மருங்காபுரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் தமிழ்நாடு சமூகநல வாரிய தலைவியாக நியமனம் செய்யப்பட்டார். சமூகநல வாரியத்தில் பல நலத்திட்டங்களை முன்னெடுத்தார்.
திருச்சி நகரில் பிச்சை எடுப்பவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டத்தைத் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஒருங்கிணைத்தார். கிராமத் தத்தெடுப்புத் திட்டம் மூலம் கிராமத்தில் பெண் முன்னேற்றம், அனைவருக்குமான கல்வி, போன்ற திட்டங்களை முன்னெடுத்தார். திருச்சி மாவட்டத்தில் திருநங்கையருக்கான ஆலோசனை மையங்கள், ஆதரவற்ற பெண்களுக்கான கணினி மையங்கள்,மாணவர்களுக்கான ஆலோசனை மையங்களை அவரது தலைமையில் சமூகநல வாரியம் ஏற்படுத்தியது. 2018ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் ‘தந்தை பெரியார் விருது’ சல்மாவுக்கு வழங்கப்பட்டது. 

image-2221-1024x576.png

இவருடைய அசாத்தியமான பயணத்தைச் சித்தரிக்கும் விதமாக ‘சல்மா’ என்னும் ஆவணப்படம் 2013இல் எடுக்கப்பட்டது. இது சல்மாவின் தன்வரலாற்றையும் அவர் சந்தித்த ஒடுக்குமுறைகளின் பின்னால் உள்ள சமூக, சமய, பண்பாட்டு, அரசியல் சிக்கல்களையும் பற்றியது. இப்படத்தை கிம் லோங்னோரோ (Kim Longinotto) இயக்கினார். இப்படம் சண்டான்ஸ் திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்டு, பின்னர் பல நாட்டு விழாக்களிலும் நிகழ்வுகளில் திரையிடப்பட்டது.

தன் சமூகம் தனக்கு முன் கட்டியெழுப்பியிருந்த தடைகளையும், அதனால் விளைந்த பிரச்சனைகளையும் அவர் தாண்டி வந்த விதம் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டுமின்றி, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்குப் பெரும் தன்னம்பிகையை அளிக்கின்றன. அரசியலை அதிகாரத்துக்கான வாகனமாக எண்ணாமல் மக்கள் தொண்டுக்கான வாய்ப்பாகப் பார்த்து இவர் செய்துவந்த சேவைகளை அங்கீகரிக்கும் விதமாகவே திமுக தலைமை அவரை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கியிருக்கிறது.

image-2219-1024x574.png

சல்மாவின் நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்

🔷ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
🔷பச்சை தேவதை
🔷 தானுமானவள்

நாவல்கள்

🔷இரண்டாம் ஜாமங்களின் கதை
🔷மனாமியங்கள்
🔷அடைக்கும் தாழ்

சிறுகதைத் தொகுப்புகள்

🔷 சாபம்
🔷பால்யம்

அபுனைவு

🔷 கனவு வெளிப் பயணம்

தொகுப்பு: மின்னம்பலம் ஆசிரியர் குழு

https://minnambalam.com/who-is-salma-and-what-her-background/#google_vignette

பாஜக கூட்டணி வேண்டும் என அன்புமணி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.. போட்டு உடைத்த ராமதாஸ்!

1 week 4 days ago

பாஜக கூட்டணி வேண்டும் என அன்புமணி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.. போட்டு உடைத்த ராமதாஸ்!

Yogeshwaran MoorthiUpdated: Thursday, May 29, 2025, 12:40 [IST]

PMK Founder Ramadoss Alleges Anbumani s Suicide Threat to Push for BJP Alliance

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக - பாஜக கூட்டணி அமைந்தது. பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிட்டது. 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. தர்மபுரி தொகுதியில் அன்புமணி மனைவி செளமியா அன்புமணி மட்டும் கடுமையான சவால் அளித்து, கடைசியில் தோல்வியை அடைந்தார்.

ராமதாஸ் பேட்டி

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற முடிவை அன்புமணியே எடுத்தார் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசுகையில், தகப்பனிடம் தோற்பது மானக்கேடு அல்ல.

அதிமுக கூட்டணி

அன்புமணி கூசாமல் பொய் பேசுவார்.. கூட்டத்திற்கு நிர்வாகிகள் வருவதை அன்புமணி தடுத்தார். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி பற்றி பேசினோம். நான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதி, எடப்பாடி பழனிசாமியுடன் பேசுமாறும் அறிவுறுத்தினேன். அதன்பின் அவரும் பேசினார். எடப்பாடி பழனிசாமியும் சிவி சண்முகம் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

கதறிய அன்புமணி

ஆனால் திடீரென ஒருநாள் பாஜகவுடன் கூட்டணி செல்ல வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் முடிவு செய்தார். அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால், குறைந்தது 3 தொகுதிகளில் வென்றிருப்போம். அவர்களும் 6 முதல் 7 தொகுதிகளில் வென்றிருப்பார்கள். அதிமுக - பாமக இயல்பான கூட்டணி. ஆனால் எனது ஒரு காலினை அன்புமணி பிடித்து கொண்டார்.

தற்கொலை மிரட்டல்

இன்னொரு காலினை அன்புமணியின் மனைவி செளமியா அன்புமணி பிடித்து கொண்டு கதறினார். எதற்கு அழுதார்கள் என்றால், பாஜகவுடன் கூட்டணி செல்ல வேண்டும் என்றார்கள். என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. பின், அன்புமணி வாயில் இருந்து, இதற்கு நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீங்கள் தான் எனக்கு கொள்ளி வைக்க வேண்டும்.

பாரத் மாதா கி ஜே

பாஜக கூட்டணிக்காக ஏற்பாடுகளை செளமியா செய்துவிட்டார். அண்ணாமலையுடன் அவர்களே பேசிவிட்டார்கள். அடுத்த நாள் காலையிலேயே பாரத் மாதா கி ஜே என்று ஒரு கோஷம் கேட்கிறது. காலையிலேயே அண்ணாமலையும் வந்துவிட்டார். எனக்கு தெரியாமலேயே இது நடந்தது. இப்படிதான் கூட்டணி அமைந்தது என்று தெரிவித்தார்.

https://tamil.oneindia.com/news/villupuram/pmk-founder-ramadoss-alleges-anbumani-s-suicide-threat-to-push-for-bjp-alliance-708047.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel

பிகு

அரசவை புலவர் பாலபத்ர ஓணாண்டி க்கு யாராவது @ போட்டு விடுங்கப்பா.

பெரிய மாங்கா- சின்ன மாங்கா மோதலுக்கு பிஜேபி காரணம் அல்ல, அது குடும்ப உட்பூசல், நான் “பிஜேபி-நோயால் பீடிக்கப்பட்டு உளறுகிறேன்” என சொன்னவர்.

விஜய்யின் மர்ம வியூகம்! திமுக-அதிமுகவின் கோட்டை உடைக்கப்படுமா?

1 week 4 days ago

Screenshot-2025-05-29-162620.png?resize=

விஜய்யின் மர்ம வியூகம்! திமுக-அதிமுகவின் கோட்டை உடைக்கப்படுமா?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (டிவிகே), பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத ஒரு அரசியல் கட்சியாக, 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஒரு பொதுத் தேர்தல் சின்னத்திற்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் (ECI) வகுக்கப்பட்ட விதிகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மாவட்ட அளவிலான தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், கிரிக்கெட் மட்டை, வைரம், ஹாக்கி ஸ்டிக் மற்றும் பந்து, மைக்ரோஃபோன் (மைக்), மோதிரம் மற்றும் விசில் போன்ற சின்னங்கள் சாத்தியமான தேர்வுகளில் முதலிடத்தில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இவற்றுள், கிரிக்கெட் மட்டை, மைக், வைரம் மற்றும் மோதிரம் ஆகியவை இதுவரை மிகவும் விரும்பப்படும் தேர்வுகளாகத் தோன்றுகின்றன. இது ஒருபுறம் ஒரு புதிய கட்சிக்கு ஒரு அங்கீகாரமாகத் தோன்றினாலும், மறுபுறம், தமிழகத்தின் ஆளும் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, புதிய கட்சிகள் எழுச்சி பெறுவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் விதிகளைப் பயன்படுத்துகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. ஒரு பொதுச் சின்னம் பெறுவதற்கான இந்த போராட்டம், தமிழக அரசியலில் ஆழமாக வேரூன்றியுள்ள அதிகாரப் போட்டியின் பிரதிபலிப்பாகும்.

தேர்தல் ஆணைய விதிகளின்படி, தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு (மே 6, 2026) ஆறு மாதங்களுக்கு முன்னதாக, நவம்பர் 5 அன்று சின்னத்திற்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கும். டிவிகே வட்டாரங்கள், கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், சமீபத்தில் மூத்த அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, தேர்தல் ஆணையத்தின் 190 இலவச சின்னங்கள் பட்டியலில் இருந்து பரிந்துரைகளை அழைத்ததாகத் தெரிவித்தனர்.

நடிகர் விஜய் தனது திரைப்படப் புகழ் மூலம் அரசியல் களத்தில் நுழைய முயல்கிறார். ஆனால், ஒரு பொதுச் சின்னத்தைப் பெறுவதற்கான போராட்டம், அவர் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்றாகும். ஏற்கனவே தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுகவின் ஆதிக்கம் உள்ள நிலையில், ஒரு புதிய கட்சிக்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட சின்னம் கிடைப்பது மிகவும் முக்கியம். இது ஒருபுறம் ஜனநாயக நடைமுறையின் ஒரு பகுதி என்றாலும், மறுபுறம், பெரிய கட்சிகள் புதிய கட்சிகள் தங்கள் இடத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்குத் தடையாக உள்ளனவா என்ற சந்தேகம் எழுகிறது. தேர்தல் ஆணையம் நடுநிலைமையுடன் செயல்படுகிறதா அல்லது ஆளும் கட்சிகளின் செல்வாக்கிற்கு உட்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இந்தச் சின்னம் குறித்த போராட்டம், தமிழக அரசியலில் ஒரு பெரிய மோதலைத் தூண்டிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

https://athavannews.com/2025/1433810

'ரூ.15,000 கடனுக்காக வாத்துப் பண்ணையில் கொத்தடிமை' - 9 வயது சிறுவனுக்கு காஞ்சிபுரத்தில் நேர்ந்த கொடுமை

1 week 4 days ago

ஆந்திரா, தமிழ்நாடு, குற்றம், குழந்தைத் தொழிலாளர்

படக்குறிப்பு,ஆந்திராவைச் சேர்ந்த பழங்குடி பெண்ணான அங்கம்மாள்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 29 மே 2025

"என் மகனைக் கொன்றதற்கான தண்டனை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். நான் பட்ட துன்பத்தை இன்னொரு தாய் படக்கூடாது. என் மகன் எங்கே எனத் தெரியாமல் ரொம்பவே பாதிக்கப்பட்டேன். அந்த வலி இன்னொருவருக்கு வந்துவிடக்கூடாது" எனக் கலங்கியவாறு பேசுகிறார், ஆந்திர மாநிலம், கூடூரைச் சேர்ந்த அங்கம்மாள்.

மே 19ஆம் தேதியன்று சத்தியவேடு காவல் நிலைத்தில் 9 வயதான தனது மகனை மீட்டுத் தருமாறு அங்கம்மாள் புகார் கொடுத்திருந்தார். அடுத்த 3 நாள்களில் காஞ்சிபுரத்தில் உள்ள பாலாறு படுகையில் அவரது மகன் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில், சிறுவனை குழந்தைத் தொழிலாளராகப் பணியமர்த்திய முத்து-தனபாக்கியம், அவர்களது மகன் ராஜசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தூர் டி.எஸ்.பி ரவிக்குமார் கூறுகிறார்.

குழந்தைத் தொழிலாளராக வைக்கப்பட்ட ஒன்பது சிறுவன் இறந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவிருப்பதாக, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

ஒன்பது சிறுவன் கொத்தடிமையாக வைக்கப்பட்டாரா? சிறுவன் மரணத்தின் பின்னணியில் என்ன நடந்தது?

15 ஆயிரம் கடனுக்கு பண்ணை வேலை

ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், கூடூரில் உள்ள சாவடபலேம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண்ணான அங்கம்மாள், சத்தியவேடு காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நானும் எனது கணவர் மற்றும் குழந்தைகள் சத்தியவேடு கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவரின் பண்ணையில் வேலை செய்து வந்தோம்."

"ஒரு வருடத்துக்கு முன்பு நெலட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் எனது கணவருக்குக் கொடுத்த கடன் தொகையைக் கேட்டார். இதை அறிந்து எனக்கு 15 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து முத்து உதவி செய்தார். இதற்கு ஈடாகத் தனது வாத்துப் பண்ணையில் எங்களைக் குடும்பத்துடன் வேலை பார்க்க வைத்தார்" எனத் தெரிவித்துள்ளார்.

காலை முதல் இரவு வரை அதிக வேலைகள் கொடுக்கப்பட்டதாகப் புகார் மனுவில் கூறியுள்ள அங்கம்மாள், "எனக்கும் என் குழந்தைகளுக்கும் அதிக வேலைகளைக் கொடுத்தனர். ஆனால், சம்பளத்தை உயர்த்திக் கொடுக்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திரா, தமிழ்நாடு, குற்றம், குழந்தைத் தொழிலாளர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

இதற்கிடையில், தனது கணவர் செஞ்சய்யா இறந்துவிடவே அதற்கான சடங்குகளைச் செய்துவிட்டு பணத்தைத் திரட்டி அனுப்புவதாக முத்துவிடம் அங்கம்மாள் கூறியுள்ளார்.

ஆனால், "42 ஆயிரம் ரூபாய் வரை பணம் தர வேண்டும். ஒன்று பணம் செலுத்த வேண்டும் இல்லாவிட்டால் ஒன்பது வயது மகனை பணத்துக்கு உத்தரவாதமாக வாத்துப் பண்ணையில் விட்டுச் செல்ல வேண்டும்" என முத்து கூறியதாக புகார் மனுவில் அங்கம்மாள் தெரிவித்துள்ளார்.

இதனால் தனது கடைசி மகனை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு கூடூர் வந்ததாகக் கூறுகிறார், அங்கம்மாள்.

பிபிசி தமிழிடம் பேசிய அங்கம்மாள், "10 மாதங்களுக்குப் பிறகு (மே 15) பணத்தைத் திரட்டிக் கொண்டு மகனை மீட்கப் போனேன். அப்போது, என் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி, '70 ஆயிரம் தர வேண்டும். அப்படியே பணம் கொடுத்தாலும் உன் மகனை அனுப்ப மாட்டேன்' என முத்துவும் அவரது மனைவி தனபாக்கியமும் மிரட்டினர்" என்றார்.

வாத்து பண்ணையில் என்ன நடந்தது?

ஆந்திரா, தமிழ்நாடு, குற்றம், குழந்தைத் தொழிலாளர்

படக்குறிப்பு,வாத்துப் பண்ணை உரிமையாளர் முத்து

"வாத்துப் பண்ணையில் என் மகன்கள் மிகவும் சிரமப்பட்டனர். வாத்துகளை வயலுக்குள் அழைத்துச் செல்லும்போது சேற்றில் நடந்து காலில் காயங்கள் ஏற்படும். வேலை செய்யாவிட்டால், கடுமையாகத் திட்டி அடிக்க வருவார்கள்" என்கிறார் அங்கம்மாள்.

தொடர்ந்து பேசிய அவர், "கையில் பணம் தர மாட்டார்கள். அருகில் உள்ள மளிகைக் கடையில் பொருள்களை வாங்கிக் கொள்ள வேண்டும். அதுவும் குறைவாகத்தான் தருவார்கள். ஒரு கட்டத்தில் வெளியில் சென்று வேலை பார்த்து உங்கள் பணத்தைக் கொடுத்து விடுகிறோம் எனக் கூறியும் அவர்கள் விடவில்லை" என்கிறார்.

தனது மகனை மீட்டுத் தருமாறு சத்தியவேடு காவல் நிலையம் சென்ற அங்கம்மாள் அங்கு தனக்குத் தொடக்கத்தில் எந்த உதவிகளும் கிடைக்கவில்லை எனக் குற்றம் சாட்டுகிறார்.

அதுகுறித்துப் பேசியபோது, "அங்கிருந்த போலீசார், இரண்டு நாள் அவகாசம் கேட்டனர். அங்கு சரியான பதில் கிடைக்காததால் கூடூர் எம்.எல்.ஏ பாசம் சுனில்குமார் மூலமாக உதவி கேட்டேன். அவர் காவல்துறைக்கு ஃபோன் செய்து பேசியதால் முத்துவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்" எனக் கூறுகிறார் அவர்.

"மே 21 அன்று முத்து-தனபாக்கியம், அவர்களது மகன் ராஜசேகர் ஆகியோரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், ஏப்ரல் 12 அன்று திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிறுவன் இறந்துவிட்டதாகக் கூறினர்" என்று சத்தியவேடு முதன்மை நீதிமன்றத்தில் காவல்துறை சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாலாற்று படுகையில் சிறுவன் சடலம்

ஆந்திரா, தமிழ்நாடு, குற்றம், குழந்தைத் தொழிலாளர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

ஆந்திராவின் சத்தியவேடு கிராமத்தில் இருந்து, தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள தங்கள் உறவினரின் வீட்டுக்கு வாத்துகளை மேய்ப்பதற்காக சிறுவனை கூட்டிச் சென்றதாகவும் முத்து மற்றும் அவரது குடும்பத்தினர் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் இறப்பு குறித்து பெற்றோருக்குக் கூறாமல், காஞ்சிபுரம் மாவட்டம், புஞ்சை அரசன் தாங்கல் கிராமத்துக்கு அருகில் உள்ள பாலாறு படுகையில் சிறுவனை அடக்கம் செய்தது விசாரணையின்போது தெரிய வந்ததாக காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், சிறார் நீதிச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டம், யாருக்கும் தெரியாமல் சடலத்தைப் புதைத்தது உள்படப் பல்வேறு பிரிவுகளில் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாற்றுப் படுகையில் சிறுவனின் சடலத்தை தாசில்தார் முன்னிலையில் காவல் துறை தோண்டியெடுத்தது. அப்போது ஆந்திரா, தமிழ்நாடு என இரு மாநில காவல் துறையும் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் பிறகு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட உடற்கூராய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.

புத்தூர் டி.எஸ்.பி கூறியது என்ன?

ஆந்திர மாநிலம் புத்தூர் டி.எஸ்.பி ரவிக்குமார் இந்தச் சம்பவம் குறித்துப் பேசியபோது, "சிறுவனை கொடிய ஆயுதம் கொண்டு தலையில் தாக்கியதால் மரணம் ஏற்பட்டுள்ளதாக உடற்கூராய்வு முடிவு கூறுகிறது. இதனால் கைதான மூவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மே 19 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மே 21 அன்று இந்த வழக்கில் கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன் கைது செய்யப்பட்டனர். உடற்கூராய்வு முடிவுகளுக்குப் பிறகு இது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

ஆந்திரா, தமிழ்நாடு, குற்றம், குழந்தைத் தொழிலாளர்

படக்குறிப்பு,புத்தூர் டி.எஸ்.பி ரவிக்குமார்

அதன்படி, 103(1) BNS (Punishment for murder) எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989, சிறார் நீதிச் சட்டம் 2015, குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம் 1986 உள்படப் பல்வேறு பிரிவுகளில் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுவனை ஆயுதங்களைக் கொண்டு தலையில் தாக்கியதால் மரணம் ஏற்பட்டுள்ளதால், அதற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் புத்தூர் டி.எஸ்.பி ரவிக்குமார் தெரிவித்தார்.

'கைது செய்வதில் சிரமம் ஏற்படவில்லை'

"முதலில் மஞ்சள் காமாலை ஏற்பட்டு சிறுவன் இறந்துவிட்டதாக முத்து கூறியுள்ளார். ஆனால் கடுமையான சித்திரவதைக்குப் பிறகே சிறுவன் இறந்துள்ளார். தலை, தோள்பட்டை ஆகிய இடங்களில் ஆயுதத்தால் கடுமையான காயங்களை ஏற்படுத்தியுள்ளனர்" எனக் கூறுகிறார், வழக்கை கவனித்து வரும் குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர்.

"சிறுவன் காணாமல் போவதற்குச் சில நாள்களுக்கு முன்பு அவனிடம் அங்கம்மாள் பேசியுள்ளார். அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என சிறுவன் கூறவில்லை. கடுமையான தாக்குதலுக்குப் பிறகே அவர் இறந்துள்ளார். அதைத்தான் பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுகிறது" எனவும் அவர் தெரிவித்தார்.

"இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களைக் கைது செய்வதில் எந்தச் சிரமங்களும் ஏற்படவில்லை" எனக் கூறுகிறார், புத்தூர் டி.எஸ்.பி ரவிக்குமார். "அவர்கள் மூன்று பேர் மீதும் சந்தேகம் இருப்பதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அவர்களைக் கைது செய்து விசாரிப்பதில் எந்தச் சிரமங்களும் ஏற்படவில்லை" எனத் தெரிவித்தார்.

கூடூர் பகுதியில் ஏனாதி சமூகத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் அதிகம் வசிப்பதாகக் கூறிய ரவிக்குமார், "அங்கம்மாள் குடும்பம், மிக ஏழ்மையான நிலையில் உள்ளது. விவசாயப் பணிகள், வாத்து மேய்த்தல், மாடு மேய்த்தல் பணிகளில் மாத சம்பளத்துக்குத் தங்கி வேலை பார்க்கின்றனர். அவர்களுக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்க வேண்டியதில்லை," என்றும் குறிப்பிட்டார்.

"முத்துவின் வாத்துப் பண்ணையில் எங்களைப் போல குடும்பமாக யாரும் வேலை செய்யவில்லை. நாங்கள் சென்றபோது, ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த 12 வயது சிறுவனைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஒரு கட்டத்தில் அவரது பெற்றோர் பணம் கொடுத்து கூட்டிச் சென்றனர்" எனக் கூறுகிறார் அங்கம்மாள்.

'அந்த வலி இன்னொருவருக்கு வரக் கூடாது'

இந்த வழக்கில் கூடூரை சேர்ந்த சிவா ரெட்டி என்பவர், அங்கம்மாள் குடும்பத்தினருக்கு உதவிகளைச் செய்துள்ளார்.

"அவரது எலுமிச்சம் பழத் தோட்டத்தில் வேலை பார்க்கிறேன். பத்தாவது படிக்க வேண்டிய மகன், இடையில் வாத்துப் பண்ணையில் வேலை பார்த்ததால் படிப்பு பாதியில் நின்றுவிட்டது. விரைவில், அவர் தனது படிப்பைத் தொடரவுள்ளார். மகள், ஏழாவது படித்து வருகிறார்" எனக் கூறுகிறார் அங்கம்மாள்.

இதற்கான செலவை சிவா ரெட்டி பார்த்து வருவதாகவும் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கைதாவதற்கு அவர் பல வகைகளில் உதவி செய்ததாகவும் அங்கம்மாள் குறிப்பிட்டார்.

"என் மகனைக் கொன்றதற்கான தண்டனை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். நான் பட்ட துன்பத்தை இன்னொரு தாய் படக்கூடாது. என் மகன் எங்கே எனத் தெரியாமல் பல மாதங்களாக ரொம்பவே பாதிக்கப்பட்டேன். அந்த வலி இன்னொருவருக்கு வந்துவிடக் கூடாது" எனவும் வேதனையுடன் கூறினார்.

'இறந்தால் மட்டுமே வருகின்றனர்'

சிறுவன் மரணம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் அரசு, "ஒரு குழந்தைத் தொழிலாளர் இறந்துவிட்டால் மட்டுமே அனைத்து உதவிகளும் செய்வதற்கு அரசுத் துறைகள் முன்வருகின்றன" எனக் கூறுகிறார்.

"கிராம குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு முறையாகச் செயல்பட்டிருந்தால் சிறுவன் இறந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது" என விமர்சிக்கும் தேவநேயன் அரசு, "இக்குழுவினர், தங்கள் பகுதியில் உள்ள குழந்தைத் தொழிலாளர் குறித்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை கொடுக்க வேண்டும். அதை முறையாகச் செய்திருந்தால் இது நடந்திருக்காது" என்கிறார்.

ஆந்திரா, தமிழ்நாடு, குற்றம், குழந்தைத் தொழிலாளர்

படக்குறிப்பு,தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்

"தமிழ்நாட்டில் மாட்டுப் பண்ணைகள், கல் குவாரிகளில் வேலை செய்வதற்கு வடமாநிலங்களில் இருந்து குடும்பமாக வருகின்றனர். அவர்களின் வாழ்வுநிலை குறித்தோ, குழந்தைகள் பணி செய்வது குறித்தோ அதிகாரிகள் சரி வர ஆய்வு நடத்துவதில்லை" எனவும் தேவநேயன் குற்றம் சாட்டினார்.

மேலும், "குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனைகளை நடத்த வேண்டும். அவர்களும் ஆய்வு நடத்துவதில்லை. குழந்தைத் தொழிலாளர்களை மீட்பதற்கு வருவாய்த் துறை, தொழிலாளர் நலத்துறை, சமூக நலத்துறை ஆகியவை ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். ஆனால், அது முறையாக நடப்பதில்லை" என்றார்.

அமைச்சர் சொல்வது என்ன?

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பிபிசி தமிழ் பேசியது.

அப்போது அவர், "ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்திலும் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து ஆய்வு நடத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். எங்கள் கவனத்துக்குத் தகவல் தெரிய வந்தால் உடனே நடவடிக்கை எடுக்கிறோம்" எனக் கூறினார்.

சிறுவன் இறப்பு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2je05pg48o

தமிழக மீனவர்களின் இன்னல்களைப் போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி!

1 week 5 days ago

MK-Stalin-.jpeg?resize=750%2C375&ssl=1

தமிழக  மீனவர்களின் இன்னல்களைப் போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி!

”தமிழக  மீனவர்களின் இன்னல்களைப் போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி” என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சூரை மீன் பிடி துறைமுக திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது கடந்த 4 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள்  1,383 பேர் இலங்கை கடற்படையினரால்  கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களை மீட்குமாறு  வலியுறுத்தி மத்திய அரசுக்கு இதுவரை 76 கடிதங்களை தான் எழுதியுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2025/1433623

கமலுக்கு ராஜ்யசபா இடம், வைகோவுக்கு இல்லை : மு.க.ஸ்டாலின் எடுத்த கறாரான முடிவு - அ.தி.மு.க. முகாமில் நிலவரம் என்ன?

1 week 6 days ago

ராஜ்யசபா தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல், திமுக, அதிமுக

பட மூலாதாரம்,GETTY/STALIN/X

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் ஆறு ராஜ்யசபா இடங்களுக்கு வரும் ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற உள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தி.மு.க சார்பில் பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிட உள்ளதாகவும் மக்கள் நீதி மய்யத்துக்கு ஓர் இடம் ஒதுக்கப்படுவதாகவும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க-வுக்கு 4 இடங்களும் அ.தி.மு.க-வுக்கு 2 இடங்களும் கிடைக்க உள்ள நிலையில், 'தி.மு.க வசம் கூடுதலாக உள்ள 23 வாக்குகளுக்கு ஐந்தாவதாக ஒரு வேட்பாளர் நிறுத்தப்படலாம்' என பார்க்கப்பட்டது.

ஆனால், அப்படியொரு முயற்சியில் தி.மு.க இறங்கவில்லை. காரணம் என்ன?

தி.மு.க-வை சேர்ந்த பி.வில்சன், எம்.சண்முகம், எம்.எம்.அப்துல்லா மற்றும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் ராஜ்யசபா பதவிக் காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

அ.தி.மு.க சார்பில் சந்திரசேகரன், பா.ம.க தலைவர் அன்புமணி ஆகியோரின் பதவிக்காலமும் இதே காலகட்டத்தில் நிறைவடைய உள்ளது. இந்த ஆறு இடங்களை நிரப்புவதற்கு வரும் ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற உள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

யாருக்கு என்ன பலம்?

இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2 ஆம் தேதியன்று தொடங்க உள்ளது. ஜூன் 9 ஆம் தேதியன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 10 அன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளதாகவும், ஜூன் 12 அன்று வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற்ற உடன், அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தி.மு.க கூட்டணிக்கு 159 உறுப்பினர்கள் (திமுக 134, காங்கிரஸ் 17, விடுதலைச் சிறுத்தைகள் 4, இ.கம்யூ 2, மா.கம்யூ 2) உள்ளனர். ஒரு ராஜ்யசபா இடத்துக்கு 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அந்தவகையில், தி.மு.க-வுக்கு நான்கு ராஜ்யசபா உறுப்பினர்கள் கிடைக்க உள்ளனர்.

அ.தி.மு.க-வுக்கு சட்டசபையில் 66 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பன்னீர்செல்வம் உள்பட 4 உறுப்பினர்கள் தனி அணியாக உள்ளனர். பன்னீர்செல்வம் அணியினர் வாக்களிக்காமல் அ.தி.மு.கவுக்கு பா.ஜ.க ஆதரவளித்தால் எண்ணிக்கை 66 ஆக உயரும் (62 + பாஜகவின் 4 வாக்குகள்). 2 ராஜ்யசபா இடங்களில் வெற்றி பெறுவதற்கு மேலும் 2 உறுப்பினர்களின் ஆதரவு அ.தி.மு.க-வுக்கு தேவைப்படுகிறது.

ராஜ்யசபா தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல், திமுக, அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தமிழ்நாட்டில் ஆறு ராஜ்யசபா இடங்களுக்கு வரும் ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற உள்ளது

முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அணி மற்றும் பா.ம.கவில் இருந்து 2 பேர் ஆதரவு தெரிவித்தால் மட்டும் அ.தி.மு.க-வுக்கு 2 ராஜ்யசபா இடங்கள் கிடைக்கும். "இதில் எந்தவித சிக்கலும் இல்லாமல் அ.தி.மு.க இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுவிடும்" எனக் கூறுகிறார், பத்திரிகையாளர் குபேந்திரன்.

நான்கு வேட்பாளர்களை தி.மு.க அறிவித்தால் அ.தி.மு.க இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுவிடும். மாறாக, உபரியாக உள்ள வாக்குகளுக்கு ஐந்தாவதாக ஒரு வேட்பாளரை தி.மு.க நிறுத்தினால் போட்டி கடுமையாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது நான்கு இடங்களுக்கு மட்டுமே தி.மு.க வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

"கட்சிக்குக் கெட்ட பெயர் வரும்"

ராஜ்யசபா தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல், திமுக, அதிமுக

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,தி.மு.க செய்தித்தொடர்புத் துறை செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன்

"தி.மு.க வசம் 23 ஓட்டுகள் கூடுதலாக உள்ளதால் ஐந்தாவதாக ஒரு வேட்பாளரை நிறுத்தி தனது வலிமையைக் காட்ட முயற்சி செய்திருக்கலாம். ஆனால், அப்படியொரு சர்ச்சைக்கு தி.மு.க தலைமை இடம் கொடுக்கவில்லை" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம்.

"தற்போதுள்ள நிலையில் அ.தி.மு.க அணியில் வாக்குகள் பிரிவதற்கு வாய்ப்பில்லை" எனக் கூறும் ஜென்ராம், "அவரவர் வாக்கு அவரவருக்கே என்ற நிலையை எடுத்து தேவையற்ற சர்ச்சையை தி.மு.க தலைமை தவிர்த்துள்ளது" என்கிறார்.

"தி.மு.க தலைவராக ஸ்டாலின் வந்த பிறகு அரசியல்ரீதியாக சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்ததில்லை" எனக் கூறும் ஜென்ராம், "கொள்கைரீதியான முடிவுகளில் உறுதியாக இருக்கிறார். எனவே, அரசியல்ரீதியாக புதிய முயற்சிகளில் அவர் ஆர்வம் காட்டுவதற்கு வாய்ப்பில்லை" எனவும் குறிப்பிட்டார்.

தி.மு.க செய்தித்தொடர்புத் துறை செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "உபரியாக உள்ள வாக்குகளை வைத்து ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்றாலும் அது கட்சிக்குக் கெட்ட பெயரைக் கொண்டு வரும். தோற்றாலும் அது தி.மு.கவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தித் தரும்" எனக் கூறுகிறார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு, அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டது. இதைச் சுட்டிக் காட்டிப் பேசிய கான்ஸ்டன்டைன், "அப்போது தி.மு.க பக்கம், அ.தி.மு.க எம்.எல்.ஏக்களைக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால், அதில் தனக்கு விருப்பமில்லை என ஸ்டாலின் கூறிவிட்டார்" எனக் கூறுகிறார்.

"முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இதுபோன்று செய்தால் அதை வேறு மாதிரி எடுத்துக் கொள்வார்கள். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் இதுபோன்ற சர்ச்சைகளில் இறங்க மாட்டார் என்று இதர அரசியல் கட்சிகளுக்குத் தெரியும்" எனக் கூறுகிறார் கான்ஸ்டன்டைன்.

அதேநேரம், "தங்களிடம் கூடுதலாக உள்ள வாக்குகளை வைத்து ராஜ்யசபா தேர்தலில் கூடுதலாக வேட்பாளரை நிறுத்தும் வேலைகளைக் கடந்த காலங்களில் தி.மு.க செய்துள்ளது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

1984 உதாரணம் என்ன?

ராஜ்யசபா தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல், திமுக, அதிமுக

படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்

"ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர் அறிவிப்பின் மூலம் ஐந்தாவதாக ஒரு வேட்பாளரை தி.மு.க நிறுத்த விரும்பவில்லை என்பது தெரிகிறது. வேட்பாளர் பட்டியலில் கவிஞர் சல்மா பெயர் இடம்பெற்றுள்ளது எதிர்பாராத ஒன்று" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தி.மு.கவுக்கு நான்கு இடங்கள் உறுதியாகிவிட்டதால், ஓட்டு போடும்போது சட்டமன்ற உறுப்பினர்களை 34 என நான்கு வகைகளாக பிரித்து, யார் எந்த வேட்பாளருக்கு ஓட்டுப் போட வேண்டும் எனக் கூறுவார்கள். மீதமுள்ள வாக்குகள் உபரியாக இருக்கும்.

தி.மு.கவுக்கு உபரியாக 23 வாக்குகள் உள்ள நிலையில், ஐந்தாவது வேட்பாளருக்கு வாக்கு செலுத்தலாம் எனக் கூறலாம். ஆனால், அ.தி.மு.கவுக்கு 34 வாக்குகளும் வந்துவிட்டால், தி.மு.க நிறுத்தும் ஐந்தாவது வேட்பாளர் தோற்றுப் போவார். அதனால் வேட்பாளரை நிறுத்தியும் பலன் இல்லை" எனக் கூறுகிறார்.

"ஐந்தாவது வேட்பாளரை நிறுத்தும்போது, பா.ம.கவும் பா.ஜ.கவும் அ.தி.மு.கவை ஆதரிப்பதாக அறிவித்தால் தி.மு.கவின் முயற்சி எடுபடாது. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே இப்படியொரு தோல்வியை தி.மு.க விரும்பாது" என்கிறார், ஷ்யாம்.

1984 ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலை சுட்டிக் காட்டிப் பேசும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "அப்போது ஏழாவது வேட்பாளராக ஆற்காடு வீராசாமியை தி.மு.க முன்னிறுத்தியது. ஆனால், அவர் வெற்றி பெறவில்லை" எனக் கூறுகிறார்.

1984 ஆம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா, வலம்புரி ஜான், ராஜாங்கம், ராமநாதன் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் கே.வி.தங்கபாலுவும் போட்டியிட்டனர். தி.மு.க சார்பில் வைகோவும் ஏழாவது வேட்பாளராக ஆற்காடு வீராசாமியும் போட்டியிட்டனர். இதில் ஆற்காடு வீராசாமி தோல்வியடைந்தார்.

"1996ஆம் ஆண்டில் ராஜ்யசபா வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ் நிறுத்தப்பட்டார். அவருக்கு எதிராக வேட்பாளராக உதயபானு போட்டியிட்டார். அவர் வெற்றி பெறவில்லை. உறுதியாக வெற்றி பெறலாம் என்ற வாய்ப்பு இருந்தால் மட்டுமே கடினமான முடிவுகளை தி.மு.க எடுக்கும்" என்கிறார் ஷ்யாம்.

1996 ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட 5 பேர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் தரப்பில் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் அவரை எதிர்த்து வாழப்பாடி ராமமூர்த்தி அணியின் சார்பில் உதயபானு ஆகியோர் போட்டியிட்டனர். இதில் பீட்டர் அல்போன்ஸ் வெற்றி பெற்றார்.

ஓ.பி.எஸ் தரப்பு வாக்குகள் யாருக்கு?

ராஜ்யசபா தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல், திமுக, அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பன்னீர்செல்வம் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசுவதில்லை என்கிறார் பத்திரிக்கையாளர் குபேந்திரன்

"தி.மு.க வசம் கூடுதலாக உள்ள 23 வாக்குகளுடன் பன்னீர்செல்வம் அணி, பா.ம.க மற்றும் சிறிய கட்சிகள் இணைந்தால் புதிதாக ஒரு ராஜ்யசபா சீட் கிடைக்க வாய்ப்புள்ளதே?" என, பத்திரிகையாளர் குபேந்திரனிடம் கேட்டோம்.

"பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசுவதில்லை. இருவரும் அமைதியாகிவிட்டனர்" என்கிறார்.

"ஐந்தாவது வேட்பாளரை தி.மு.க நிறுத்தினால் பன்னீர்செல்வம் அணியினர் வாக்குகளை மாற்றிப் போட வாய்ப்பில்லை. அ.தி.மு.க-வுக்கு ஓ.பி.எஸ் அணியும் பா.ம.கவும் வாக்களிக்கவே வாய்ப்புகள் அதிகம். பா.ஜ.க-வை மீறி இந்த கட்சிகள் வாக்குகளை மாற்றிப் போடுவதற்கு வாய்ப்பில்லை" என்கிறார் குபேந்திரன்.

கூட்டணிக் கட்சிகளைத் தவிர்ப்பது ஏன்?

ராஜ்யசபா தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல், திமுக, அதிமுக

பட மூலாதாரம்,KAMALHAASAN/X

படக்குறிப்பு,2024 மக்களவைத் தேர்தலின்போது மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக தி.மு.க உறுதியளித்தது

தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஏற்கெனவே ஒப்புக் கொண்டபடி ஒரு ராஜ்யசபா இடம் வழங்கப்படுவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க கூட்டணியில் கடந்த முறை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. இந்தமுறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதுதொடர்பாக, கடந்த மாதம் தனது கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்திலேயே, 'தி.மு.க மீண்டும் சீட் கொடுக்குமா?' எனக் கேள்வி எழுப்பும் தொனியில் வைகோ பேசியிருந்தார்.

"வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவருக்கு கொடுப்பதற்கு வாய்ப்பில்லாததால் தான் துரை வைகோவுக்கு திருச்சி எம்.பி தொகுதி ஒதுக்கப்பட்டது" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

இதே கருத்தை முன்வைக்கும் தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன், "மக்கள் நீதி மய்யத்தைத் தவிர மற்ற மூன்று இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவதை தி.மு.க தலைமை விரும்பவில்லை" எனக் கூறுகிறார்.

"ராஜ்யசபாவில் தி.மு.கவின் குரல் எதிரொலிக்க வேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறார். கூட்டணிக் கட்சிகள் பேசினாலும் அது கட்சியின் குரலாக இருக்காது என நினைக்கிறார். கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்க விரும்பாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்" எனக் கூறினார்.

"அன்புமணி விரும்பவில்லை"

ராஜ்யசபா தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல், திமுக, அதிமுக

பட மூலாதாரம்,ANBUMANI/X

படக்குறிப்பு,"ராஜ்யசபா இடத்தைப் பெறுவதற்கு அன்புமணி ஆர்வம் காட்டவில்லை"

அ.தி.மு.க உடன் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க கூட்டணி வைக்கவில்லை. அந்தவகையில், அன்புமணிக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது.

"கட்சி வளர்ச்சிப் பணிகளில் அன்புமணி தீவிரம் காட்டி வருவதால், மீண்டும் ராஜ்யசபா சீட்டை அவர் எதிர்பார்க்கவில்லை" என, பா.ம.க-வை சேர்ந்த நிர்வாகி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"ராஜ்யசபா இடத்தைப் பெறுவதற்கு அன்புமணி ஆர்வம் காட்டவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் தனியாக போட்டியிடுவது குறித்து பா.ம.க தலைமை பேசி வருகிறது" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

அ.தி.மு.க தரப்பில் ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில், அவ்விரு இடங்களுக்கும் கட்சியின் சீனியர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதாக, அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் தெரிவித்தார்.

"பொறுமை கடலினும் பெரிது" - பிரேமலதா

ராஜ்யசபா தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல், திமுக, அதிமுக

பட மூலாதாரம்,_PREMALLATHADMDK/INSTAGRAM

படக்குறிப்பு,நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க உடன் ராஜ்யசபா சீட் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார்.

அ.தி.மு.க அணியில் 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தே.மு.தி.க இணைந்தது. அப்போது, தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பேசி வந்தார்.

"நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க உடன் ராஜ்யசபா சீட் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. யார் வேட்பாளர் என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும்" எனவும் செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "எங்கள் தரப்பில் இருந்து அப்படி எந்த வாக்குறுதிகளும் அளிக்கப்படவில்லை" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தற்போது ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக செவ்வாய்க் கிழமையன்று பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, " பொறுமை கடலினும் பெரிது. பொறுத்திருங்கள்" எனக் கூறியவர், "ஜனவரி 9 ஆம் தேதியன்று கடலூரில் மாநாடு நடக்க உள்ளது. எங்கள் நிலைப்பாட்டை அப்போது தெரிவிப்போம்" என்றார்.

"2026 சட்டமன்றத் தேர்தலில் ராஜ்யசபா தேர்தல் முடிவுகள் எதிரொலிக்குமா?" என, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் கேட்டபோது, "கட்சிக்குள் இருக்கும் சீனியர்கள் சீட்டை எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும்போது அது தேர்தலில் எதிரொலிக்கும்" எனக் கூறுகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg5v400z1no

'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?

1 week 6 days ago

கன்னட மொழி, கமல் ஹாசன்,  தக் லைஃப்

பட மூலாதாரம்,@RKFI

28 மே 2025, 09:29 GMT

புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்

தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியிருந்த நடிகர் கமல் ஹாசன், தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு கர்நாடக மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கமல்ஹாசன் கன்னட மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கோருகின்றனர்.

இந்நிலையில், இன்று (மே 28) இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் கமல் ஹாசன், "அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா, "கன்னட மொழிக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. அது அவருக்கு (கமல் ஹாசன்) தெரியாது." என்று தெரிவித்துள்ளார்.

கமல் பேசியது என்ன?

கன்னட மொழி, கமல் ஹாசன்,  தக் லைஃப்

பட மூலாதாரம்,@RKFI

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் பங்கேற்றிருந்தார்.

மேடையில் பேசிய கமல்ஹாசன், "ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும்போது 'உயிரே உறவே தமிழே' என்று தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்" என்று பேசியிருந்தார்.

கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?

தக்லைஃப், தமிழ், கன்னடா

பட மூலாதாரம்,KAMALHAASAN/X

கமல் ஹாசனின் பேச்சு சர்ச்சையான நிலையில், இன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்த தக் லைஃப் திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்த விஷயத்தில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். நான் அன்பினால் தான் அப்படி சொன்னேன்." என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "பல வரலாற்று ஆசிரியர்கள் எனக்கு மொழியின் வரலாற்றை பற்றி கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். நான் எதையும் குறிப்பாக அர்த்தப்படுத்த விரும்பவில்லை. தமிழ்நாடு அடிப்படையில் தனி சிறப்பு கொண்டது. இங்கு ஒரு மேனன், ஒரு ரெட்டி, மாண்டியாவிலிருந்து வந்த ஒரு கன்னட ஐயங்கார் ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்திருக்கின்றனர்.

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ஒரு முதலமைச்சரால் எனக்கு ஒருமுறை சென்னையில் பிரச்னை வந்தபோது, கர்நாடக மக்கள் எனக்கு ஆதரவளித்தார்கள். எனவே தக் லைஃப் படத்தையும், எனக்கு எதிரான மொழி பிரச்னையையும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அரசியல்வாதிகளுக்கு மொழியைப் பற்றி பேச தகுதியில்லை, நான் உள்பட. இத்தகைய மிக ஆழமான விவாதங்கள் அனைத்தையும் வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மொழி நிபுணர்களிடம் விட்டுவிடுவோம்." என கூறினார்.

மேலும், "நான் அளிப்பது விளக்கம், பதில் அல்ல. அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது" என்றும் கூறினார்.

கர்நாடக பாஜக என்ன கூறுகிறது?

கமல்ஹாசன் சர்ச்சைப் பேச்சு

பட மூலாதாரம்,VIJAYENDRA YEDIYURAPPA

படக்குறிப்பு, கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா

'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் கமல் ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியதற்கு கர்நாடகாவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், "ஒருவர் தனது தாய்மொழியை நேசிக்க வேண்டும், ஆனால் அதன் பெயரில் ஆணவம் காட்டுவது நாகரிகமற்ற நடத்தை. குறிப்பாக கலைஞர்கள் ஒவ்வொரு மொழியையும் மதிக்கும் பண்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்.

கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் நடித்த நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவராஜ்குமாரை தனது தமிழ் மொழியைப் புகழ்வதில் இணைத்து கன்னடத்தை அவமதித்திருப்பது ஆணவத்தின் உச்சம். இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் கன்னடம் பல நூற்றாண்டுகளாக ஒரு முக்கிய மொழியாக இருந்து வருகிறது.

மேலும், "எந்த மொழி எந்த மொழியிலிருந்து தோன்றியது என்பதை வரையறுத்து கூற கமல்ஹாசன் வரலாற்றாசிரியர் அல்ல. ஆனால் இரண்டரை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட கன்னட மொழி, இந்திய வரைபடத்தில் செழிப்பையும் நல்லிணக்கத்தையும் குறிக்கிறது.

கன்னடர்கள் மொழியை வெறுப்பவர்கள் அல்ல, ஆனால் கன்னட நிலம், மொழி, மக்கள், நீர் மற்றும் கருத்துக்களைப் பொறுத்தவரை ஒருபோதும் சுயமரியாதையை தியாகம் செய்ததில்லை என்பதை ஒரு உண்மையான ஞானியைப் போலப் பேசிய கமல்ஹாசன் நினைவில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

திரைப்படத்தை வெளியிட விட மாட்டோம் என எச்சரிக்கை

தக் லைஃப், கன்னடா, கமல்ஹாசன், கன்னட ரக்ஷன வேதிகே

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி (கோப்புப் படம்)

கன்னட அமைப்புகள் சிலவும் கமல்ஹாசனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி கமலை எச்சரித்து வெளியிட்டுள்ள வீடியோவில், "தமிழ் பிறந்த பிறகுதான் கன்னடம் பிறந்தது என்றும் கன்னடத்தை விட தமிழ்தான் சிறந்தது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். நாங்கள் கமலை எச்சரிக்கிறோம். உங்களுக்கு கர்நாடகாவில் வியாபாரம் வேண்டும். ஆனாலும் கன்னடத்தை அவமதிக்கிறீர்களா?

இன்று நீங்கள் எங்கள் மாநிலத்தில் இருந்திருந்தால், உங்கள் மீது நாங்கள் கருப்பு மை பூசி இருப்போம். நீங்கள் தப்பிவிட்டீர்கள். கர்நாடகாவுக்கும் அதன் மக்களுக்கும் எதிராகப் பேசினால், உங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்று நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம். உங்கள் படம் கர்நாடகாவில் தடை செய்யப்படும் என்றும் நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார்.

செவ்வாய்கிழமை பெங்களூருவில் கமல் ஹாசன் ஒரு நிகழ்வில் கலந்துகொள்வதாக இருந்தது. அந்த இடத்தில் கன்னட அமைப்பினர் சிலர் கூடி கன்னடத்தில் கோஷங்கள் எழுப்பினர். தக் லைஃப் படத்தின் போஸ்டர்களை கன்னட அமைப்பினர் கிழிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இவை மட்டுமல்லாமல் கன்னட அமைப்பினர் பலர் சமூக ஊடகங்களில் கமல் ஹாசனுக்கு கருத்துக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clyr17pd5rpo

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி… மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!

1 week 6 days ago

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி… மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!

28 May 2025, 10:52 AM

  Anna University student sexual assault case

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் வழக்கில் இன்று (மே 28) சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனது ஆண் நண்பருடன் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி இரவு, இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவி பேசிக்கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த ஒருவர் இருவரையும் மிரட்டி, அந்த ஆண் நண்பரை விரட்டிவிட்டு அம்மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி 100 க்கு போன் செய்து புகார் தெரிவிக்க, இந்த தகவல் கோட்டூர்புரம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. 

Anna-University-case.jpg

இதையடுத்து கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது ஆண் நண்பர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபர் யார் என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரனை கடந்த டிசம்பர் 24ஆம் தேதி கைது செய்தனர். 

இந்த நிலையில், ஞானசேகரன் மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட போது தொலைபேசியில் ‘சார்’ என்று ஒருவரை அழைத்து பேசியதாகவும் தகவல் வெளியானது. 

இதனால் யார் அந்த சார்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். 

குறிப்பாக ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என்று கூறி அரசுக்கு எதிராக அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தினர். 

இந்த நிலையில் சட்டப்பேரவையில் விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின் ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல. திமுக அனுதாபி தான் என்று விளக்கமளித்திருந்தார். 

இந்த சூழலில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உத்தரவிட்டது. 

கடந்த ஜனவரி 5ஆம் தேதி ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதோடு ஞானசேகரன் மீது திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து ஞானசேகருக்கு எதிராக 100 பக்க குற்ற பத்திரிக்கையை கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி சைதாப்பேட்டை 9ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர். இதையடுத்து கடந்த மார்ச் 7ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. 

இந்த சூழலில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது என்றும் ஆதாரம் இல்லாமல் என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றும் தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் ஞானசேகரன் தாக்கல் செய்த மனுவை கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி மகளிர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

அதாவது பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடுதல், ஆதாரங்களை அழித்தல், கல்லூரி மாணவியை மிரட்டி நிர்வாணப்படுத்துதல், புகைப்படம் எடுத்து வெளியிடுதல் போன்ற பாலியல் குற்றங்களுக்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு சாட்சி விசாரணை தொடங்கியது. இதில் மொத்தம் 29 பேர் சாட்சியம் அளித்தனர். ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அரசு சார்பில் 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த மே 20 முதல் 23 வரை இறுதி வாதங்கள் நடைபெற்றன. 

காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேரி ஜெயந்தி, “ஞானசேகரனுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் வலுவாக உள்ளது. குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்று வாதிட்டார். 

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார். 

அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, “ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறி அவர் குற்றவாளி” என அறிவித்தார். சிறப்பு விசாரணை குழு அறிக்கையை ஏற்று இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி தண்டனை விவரத்தை ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஏற்கனவே சென்னை பெருநகர முதலாவது கூடுதல் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இட மாறுதல் செய்யப்பட்டார். தற்போது இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கி இருக்கும் நிலையில் புதிய பொறுப்பை அவர் ஏற்க உள்ளார். 

ஏற்கனவே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

https://minnambalam.com/anna-university-student-sexual-assault-case-verdict/#google_vignette

நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?'

1 week 6 days ago

நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?'

Today at 6 AM

கமல்ஹாசன் - சல்மா

தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை மாதத்தோடு முடிவடைய உள்ளது.

2019, ஜூலை 25-ம் தேதி, தமிழ்நாட்டிலிருந்து ஆறு பேர் மாநிலங்களவை எம்.பி-க்களாகத் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களில், வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா ஆகியோர் தி.மு.க சார்பாகவும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தி.மு.க கூட்டணி சார்பாகவும் தேர்வாகினர். அதேபோல, அ.தி.மு.க-விலிருந்து சந்திரசேகர், அந்தக் கட்சியின் ஆதரவுடன் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களின் இடத்துக்கு தான் இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது திமுக தனது மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

திமுக வெளியிட்ட பட்டியல்

திமுக வெளியிட்ட பட்டியல்

அந்தப் பட்டியலில் திமுக வேட்பாளர்களாக வழக்கறிஞர் வில்சன், எஸ்.ஆர் சிவலிங்கம் மற்றும் ரொக்கையா மாலிக் என்கிற கவிஞர் சல்மா இடம்பெற்றிருக்கிறார்கள்.

மேலும், ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, மக்கள் நீதி மையத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது என்று அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மநீம சார்பில், கமல் களமிறங்குவார் என அக்கட்சி செயற்குழு சார்பில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?'

இதில் வில்சன் ஏற்கனவே ராஜ்யசபா எம்.பியாகத் தான் இருந்தார். தற்போது அவர் பதவிக்காலம் முடிய இருக்கும் நிலையில், மீண்டும் எம்.பி வேட்பாளாராக களம் இறங்குகிறார்.

https://www.vikatan.com/government-and-politics/kamalhasan-rajya-sabha-mp-dmk

சென்னையில் எந்திரத்தை ஏமாற்றி ஏடிஎம் கொள்ளை - சனி, ஞாயிறு மட்டுமே குறிவைக்கும் உ.பி. கும்பல் சிக்கியது எப்படி?

1 week 6 days ago

ஏடிஎம் கொள்ளை, சென்னை

பட மூலாதாரம்,TAMIL NADU POLICE

படக்குறிப்பு, ஏடிஎம் கொள்ளையில் கைது செய்யப்பட்ட மூவர்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 27 மே 2025

"எந்த ஊருக்குச் சென்றாலும் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே தங்குகின்றனர். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். விடுமுறை தினம் என்பதால் ஏடிஎம் சேவையில் குறைபாடு ஏற்பட்டு அதை வங்கிகள் கவனிப்பதற்குள் தப்பிவிடுகின்றனர்" என்கிறார் சென்னை, திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் முகமது புகாரி.

மே 26 அன்று ஏடிஎம் இயந்திரத்தின் பெட்டியை உடைக்காமல் கொள்ளையடித்ததாக உ.பி-யை சேர்ந்த மூன்று பேர் கைதான விவகாரத்தில் அவர்களின் பின்னணி குறித்து பிபிசி தமிழிடம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏடிஎம் மைய கொள்ளைச் சம்பவத்தில் என்ன நடந்தது? பணம் திருடு போனால் பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?

சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வரும் நரேன்குமார், ஹிட்டாச்சி ஏடிஎம் சர்வீஸ் (Hitachi ATM Service) நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஞாயிறு அன்று தங்களின் மும்பை அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாக, திருவான்மியூர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளார்.

திருவான்மியூர், திருவள்ளூவர் நகரில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கிக் கிளையின் ஏடிஎம் மையத்தில் ஏதோ தவறு நடந்துள்ளதாகவும் அதை உடனே சென்று சோதனை செய்யுமாறு தங்கள் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியதாக புகார் மனுவில் நரேன்குமார் குறிப்பிட்டுள்ளார்.

ஏடிஎம் மையத்தில் சோதனை செய்தபோது, பணம் வெளியில் வரக் கூடிய இடத்தின் உள்புறத்தில் கருப்பு நிற அட்டையை வைத்து பணம் வெளியில் வராமல் சிலர் தடுத்துள்ளதாக அவர் மனுவில் கூறியுள்ளார்.

அதிகாலை கொடுத்த அதிர்ச்சி

ஏடிஎம் கொள்ளை, சென்னை

பட மூலாதாரம்,TAMIL NADU POLICE

படக்குறிப்பு, கொள்ளை சம்பவம் நிகழ்ந்த ஏடிஎம்

'வங்கிக் கிளையின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, ஞாயிற்றுக்கிழமை (மே 25) அதிகாலை சுமார் 4.30 மணியளவில் ஏடிஎம் இயந்திரத்தின் முதல் கதவை இரண்டு பேர் திறந்துள்ளனர். பணம் வரக்கூடிய இடத்தில் கருப்பு நிற அட்டையை வைத்து பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்' என புகார் மனுவில் நரேன்குமார் கூறியுள்ளார்.

அதன்பிறகு வாடிக்கையாளர் ஒருவர் 1500 ரூபாயை எடுக்க முயன்றும் வராததால் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் அதைச் சோதிக்க சென்றபோது குற்றச் சம்பவம் நடந்திருப்பதை தான் உறுதி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

". இதனால் பணம் வெளியில் வராமல் உள்ளேயே நின்றுவிடும். பிறகு போலி சாவி மூலம் லாக்கரை திறந்து அங்கு கிடக்கும் பணத்தை எடுத்துள்ளனர்" எனக் கூறுகிறார், திருவான்மியூர் காவல்நிலைய ஆய்வாளர் முகமது புகாரி.

"இரண்டாவது லாக்கர் என்பது பணம் வைக்கப்படும் இடம் என்பதால், அதை உடைத்தால் அலாரம் சத்தத்தை எழுப்பும் என்பதால் அதை கைதான நபர்கள் தொடவில்லை" எனவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

முதல் லாக்கரைத் திறப்பதற்கு பயன்படுத்திய சாவி என்பது அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் பொருந்தக் கூடிய தோற்றத்தில் இருந்ததாகக் கூறும் முகமது புகாரி, "ஏடிஎம் இயந்திரத்தில் எந்தெந்த வகைகளில் கொள்ளையடிக்கலாம் என்பதை சமூக வலைதளங்களின் மூலமாக கைதான நபர்கள் கற்றுக் கொண்டு திருடியுள்ளனர்" எனக் கூறினார்.

"தமிழ்நாட்டில் 3 மாதங்கள்"

ஏடிஎம் கொள்ளை, சென்னை

பட மூலாதாரம்,முகமது புகாரி

படக்குறிப்பு, காவல் ஆய்வாளர் முகமது புகாரி.

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் திருடு போன சம்பவத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த குல்தீப் சிங், பிரிஜ்பான், ஸ்மித் யாதவ் ஆகியோரை, திங்கள் கிழமையன்று திருவான்மியூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் குல்தீப் சிங் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். மற்ற இருவரும் விவசாய வேலை பார்த்து வந்துள்ளனர்.

"மூவரும் உ.பி-யில் உள்ள கான்பூரில் ஒரே ஊரில் வசிப்பவர்கள். தமிழ்நாட்டுக்கு மார்ச், ஏப்ரல், மே என மூன்று மாதங்கள் மட்டும் தங்கி ஏடிஎம் மையங்களில் திருட வந்துள்ளனர். முதலில் செங்குன்றம், அடுத்து மாதவரம், மூன்றாவதாக திருவான்மியூரில் அறை எடுத்து தங்கியுள்ளனர்" எனக் கூறுகிறார் காவல் ஆய்வாளர் முகமது புகாரி.

"சனி, ஞாயிறு தான் டார்கெட்"

ஒவ்வோர் இடத்திலும் வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டும் மூவரும் தங்குவதாகக் கூறும் முகமது புகாரி, "சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அன்று வங்கிகள் விடுமுறை என்பதால் புகார் பதிவாகி கவனிப்பதற்குள் ஞாயிறு இரவு விமானம் அல்லது ரயிலில் ஏறி சொந்த ஊர் சென்று விடுகின்றனர்" என்றார்.

தொடர்ந்து பேசிய முகமது புகாரி, "ஒவ்வொரு இடத்திலும் கிடைக்கும் பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். 20 ஆயிரம் முதல் ஆயிரம் வரையில் கூட கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். பணம் வராதால் வாடிக்கையாளர் சேவை மையத்துக்குப் பொதுமக்களில் சிலர் தொடர்பு கொண்டு கூறியுள்ளனர்" எனக் கூறினார்.

அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் ஏதோ பிரச்னை எனக் கூறி வங்கி ஊழியர்கள் அமைதியாக இருந்துவிட்டதாகக் கூறிய அவர், "மும்பையில் ஹிட்டாச்சி நிறுவனத்தில் உள்ள பணியாளர் ஒருவர் சிசிடிவி காட்சிகளைப் பார்த்து சென்னை கிளைக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார்" என்கிறார்.

காட்டிக் கொடுத்த 40 கேமராக்கள்

ஏடிஎம் கொள்ளை, சென்னை

பட மூலாதாரம்,TAMIL NADU POLICE

படக்குறிப்பு, ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள முதல் லாக்கரில் பணம் வரும் இடத்தின் உட்புறத்தில் ஸ்டிக்கர் ஒட்டி வைத்துள்ளனர்

இதன்பிறகு, சுமார் 40 கண்காணிப்பு கேமராக்களை காவல்துறை ஆய்வு செய்துள்ளது. "முதல் சிசிடிவி காட்சிலேயே அவர்களின் முகம் தெரிந்துவிட்டது. சாலையின் வெளிப்புற கேமரா காட்சிகள், அவர்கள் சென்ற வாகனம் ஆகியவற்றை ஆய்வு செய்தோம். அவர்களின் செல்போன் எண்ணும் கிடைத்துவிட்டதால் கைது செய்ய முடிந்தது" என்கிறார் முகமது புகாரி.

எந்த ஊருக்குச் சென்றாலும் ஓட்டலில் அறை எடுத்து தங்குவதை கைதான நபர்கள் வாடிக்கையாக வைத்துள்ளதாகக் கூறும் முகமது புகாரி, "திருட்டில் ஈடுபடும்போது மட்டும் கால் டாக்ஸியை வாடகைக்கு எடுத்துள்ளனர். அப்போது தான் யாருக்கும் சந்தேகம் வராது என நினைத்துள்ளனர்" எனக் கூறுகிறார்.

கைதான மூவர் மீதும் பொதுச்சொத்தை சேதப்படுத்தியது, திருட்டில் ஈடுபட்டது உள்பட மூன்று பிரிவுகளில் (305(a),62 BNS Act r/w 3 of TNPPDL Act) வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறும் முகமது புகாரி, "ஞாயிறு மாலை சுமார் 4 மணிக்குக் காவல்துறையில் புகார் கொடுத்தனர். மறுநாள் காலை 9 மணிக்குள் கைது செய்துவிட்டோம். அவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம்" என்றார்.

வங்கி அதிகாரி கூறுவது என்ன?

ஏடிஎம் கொள்ளை, சென்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஏடிஎம் இயந்திரம் (கோப்புப்படம்)

"ஏடிஎம் இயந்திரத்தின் முதல் கதவைத் திறந்து இவ்வாறு மோசடி செய்ய வாய்ப்புள்ளதா?" என, பொதுத்துறை வங்கி ஒன்றின் கிளை மேலாளரிடம் பிபிசி தமிழ் பேசியது.

பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அவர், "முதல் கதவு என்பது சாதாரண லாக்கராக வடிவமைக்கப்பட்டிருக்கும். போலி சாவி மூலம் இதன் கதவைத் திறந்துள்ளனர்" எனக் கூறுகிறார்.

கடந்த நான்கைந்து ஆண்டுகளாக இதுபோன்ற மோசடிகள் தொடர்வதாகக் கூறிய அந்த அதிகாரி, "ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வராமல் தடுத்து, வாடிக்கையாளர் சென்ற பிறகு எடுக்கும் சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளன. பாஸ்வேர்டை கண்டறிந்து பணம் எடுப்பது என தவறுகள் தொடர்கின்றன" என்கிறார்.

தொழில்நுட்பரீதியாக இதுபோன்ற குறைகளைக் களைவதற்கு போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய அந்த அதிகாரி, "ஏ.டி.எம்மை அந்தந்த வங்கிக் கிளைகள் தான் பாதுகாக்க வேண்டும். இயந்திரத்தில் யாரும் சேதம் ஏற்படுத்தினால் காவல் நிலையம், வங்கி மேலாளர் ஆகியோருக்குத் தகவல் சென்றுவிடும் வகையில் அலாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் வங்கி சேவைகளுக்கு ஏடிஎம் இயந்தித்தைத் தயாரித்துக் கொடுப்பதில் நான்குக்கும் அதிகமான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறும் வங்கி மேலாளர், "பணம் சிக்கிக் கொண்டால் எடுத்துக் கொடுப்பது, தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்வது போன்ற பணிகளை இவர்கள் செய்கின்றனர். அப்போது வங்கி ஊழியரும் உடன் இருப்பார்" எனக் கூறுகிறார்.

"ஒரு நபர் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரையில் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுக்க முடியும். பணம் வராவிட்டால் புகார் வந்து நடவடிக்கை எடுப்பதற்குள் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுவிடுகின்றனர்" எனவும் அவர் தெரிவித்தார்.

"பணத்தைத் திரும்பப் பெறலாம்" - வழக்கறிஞர் கார்த்திகேயன்

ஏடிஎம் கொள்ளை, சென்னை

பட மூலாதாரம், வழக்கறிஞர் கார்த்திகேயன்

படக்குறிப்பு,"ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வராமல் போனால் மக்கள் பயப்படத் தேவையில்லை எனக் கூறுகிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன்.

"ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வராமல் போனால் மக்கள் பயப்படத் தேவையில்லை. அது மக்களின் பணம் கிடையாது. வங்கியின் பணம்" எனக் கூறுகிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பணம் எடுக்கப்படாமல் எடுக்கப்பட்டதாக தகவல் வந்தால் அதற்கு வங்கி தான் முழுப் பொறுப்பு. 2017 ஆம் ஆண்டு இதுதொடர்பான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது" எனவும் குறிப்பிட்டார்.

ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் இதுதொடர்பான தகவல்கள் இருப்பதைக் காண முடிந்தது.

உங்களின் பங்களிப்பு இல்லாமல் பணம் திருடு போயிருந்தால் அதற்கு நீங்கள் பொறுப்பு அல்ல. ஏடிஎம் இயந்திரம் என்பது வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கு வாடிக்கையாளர் பொறுப்பேற்க முடியாது என ரிசர்வ் வங்கியின் விதிகள் கூறுவதாக கார்த்திகேயன் குறிப்பிட்டார்.

பணத்தைத் திரும்பப் பெற வழிமுறைகள் என்ன?

ஏடிஎம் கொள்ளை, சென்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான வழிமுறைகளையும் பட்டியலிட்டார் வழக்கறிஞர் கார்த்திகேயன்.

பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான வழிமுறைகளையும் அவர் பட்டியலிட்டார்.

* ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வெளியில் வராவிட்டால் வங்கியிடம் 3 நாள்களில் முறையிட வேண்டும். அவ்வாறு முறையிட்டால் 10 நாள்களுக்குள் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

* மூன்று நாட்கள் கடந்துவிட்டால் 4 முதல் 5 நாட்கள் வரை கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குரிய சேவைக் கட்டணத்தை மட்டும் வங்கி பிடித்தம் செய்து கொள்ளும்.

* பணம் எடுக்கப்பட்டதாக (debit) செல்போனுக்கு அழைப்பு வந்தும் பணம் வராவிட்டால் காவல்துறையில் புகார் தெரிவிக்குமாறு வங்கி நிர்வாகம் கூறும். ஆனால், அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை.

* குற்றத்தில் ஈடுபட்ட நபரைக் கண்டுபிடித்து அவரிடம் இருந்து பணத்தைப் பறிமுதல் செய்யும் வரை வாடிக்கையாளர் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

* வாடிக்கையாளர் வெளியூரில் இருந்தால் பதிவு செய்யப்பட்ட இமெயில் முகவரி மூலம் புகார் மனுவை அனுப்பலாம்.

* இமெயில் முகவரி இல்லாவிட்டால் வங்கியின் இணையதளத்தில் ரிசர்வ் வங்கி விதியின்படி புகார் பக்கம் அமைக்கப்பட்டிருக்கும். அதில், வங்கியின் ஏடிஎம் கிளை, பணம் வராமல் போன நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு புகார் கொடுத்தால் போதும். காவல்நிலையம் செல்ல வேண்டியதில்லை.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c36545xejldo

சென்னையில் தரையிறங்கும் விமானத்தில் பாய்ச்சப்பட்ட லேசர் ஒளி - இதன் விளைவுகள் என்ன?

2 weeks ago

சென்னை விமானம், லேசர் ஒளி

பட மூலாதாரம்,CHENNAI (MAA) AIRPORT/X

படக்குறிப்பு,சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாரான விமானத்தின் மீது பச்சை நிற லேசர் ஒளி அடிக்கப்பட்டது. (சித்தரிப்புப் படம்)

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 54 நிமிடங்களுக்கு முன்னர்

துபையில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த நிலையில், அதன் மீது சக்தி வாய்ந்த லேசர் ஒளி பாய்ச்சப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தரையிறங்கும் விமானங்களின் மீது பாயும் லேசர் ஒளி ஏன் விமானங்களைத் தடுமாற வைக்கிறது?

மே 25ஆம் தேதியன்று துபையில் இருந்து 326 பயணிகளுடன் சென்னைக்கு எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது.

அந்த விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாரானபோது, அதன்மீது பரங்கிமலை பகுதியில் இருந்து பச்சை நிற லேசர் ஒளி அடிக்கப்பட்டது. இதனால் தொந்தரவுக்கு உள்ளான விமானிகள் விமானக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர்.

இதற்குச் சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த ஒளி நின்றுவிட்டது. இதன் பிறகு, விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது. ஆனாலும் இந்தச் சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முந்தையை சம்பவங்கள்

சென்னையில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல.

இதற்கு முன்பு, 2023, 2024ஆம் ஆண்டுகளில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன.

இதையடுத்து, இந்திய விமான நிலைய ஆணையம் எச்சரிக்கை விடுத்ததோடு, இதுபோல விமானப் போக்குவரத்துக்கு இடையூறு செய்வோர் குறித்துத் தகவல் தெரிந்தால் அருகே உள்ள காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட மே மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதத்துக்குள் மூன்று முறை விமானங்கள் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. சென்னை விமான நிலைய காவல்துறையினரும் இதுதொடர்பாக தனிப்படை அமைத்துத் தேடுதல் வேட்டைகளை நடத்தினர். பிறகு இந்தச் சம்பவங்கள் நின்றுவிட்டன. இந்த நிலையில், கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்துப் பெயர் தெரிவிக்க விரும்பாமல் பேசிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையின் அதிகாரி ஒருவர், "சென்னை விமான நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஓடுபாதையில் இறங்குவதற்காகத் தாழ்வாகப் பறக்கும் விமானங்கள் மீது இதுபோன்று பல வண்ணங்களில் லேசர் ஒளிக்கற்றைகள் அடிக்கப்படுகின்றன. இரவு நேரங்களில் இது நடக்கிறது. இது விமானிகளுக்குப் பல பிரச்னைகளையும் ஆபத்துகளையும் ஏற்படுத்துகிறது" எனத் தெரிவித்தார்.

அதாவது, "விமானத்தைத் தரையிறக்கும்போது விமானிகள் பல வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும், பல விஷயங்களைக் கவனிக்க வேண்டியிருக்கும். அந்தத் தருணத்தில் இதுபோன்ற லேசர் ஒளிக்கற்றைகளை அடிப்பது விமானிகளைத் தடுமாறச் செய்யும். விமானிகள், ஓடுபாதையை விட்டு விலகித் தரையிறக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தும்" என்று விளக்கினார்.

விமானம் தரையிறங்கும்போது இதுபோன்ற விளக்குகள் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்கின்றனர் விமானிகள்

பட மூலாதாரம்,CHENNAI (MAA) AIRPORT/X

படக்குறிப்பு,விமானம் தரையிறங்கும்போது இதுபோன்ற விளக்குகள் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்கின்றனர் விமானிகள்

அதேபோல, விமானக் கட்டுப்பாட்டு அறையின் மீது இதுபோன்ற லேசர் ஒளியை அடித்தால், அதுவும் அங்கு இருப்பவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

சென்னை போன்ற விமான நிலையங்களில் ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒரு முறையும் ஒரு விமானம் தரையிறங்கவோ, மேலேறவோ செய்துகொண்டிருக்கும். அத்தகைய சூழலில், மிகக் கவனமாக உத்தரவுகளை வழங்க வேண்டிய தருணத்தில் இதுபோன்ற விளக்குகள் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்று கூறினார் பெயரை வெளியிட விரும்பாத அந்த அதிகாரி.

'உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்'

விமானிகளுக்கு இது ஆபத்தான குழப்பத்தை ஏற்படுத்தும் என்கிறார் இந்திய விமானப் படையின் முன்னாள் வீரரான செல்வ ராமலிங்கம்.

"விமானங்களைத் தரையிறக்குவது என்பது மிகச் சிக்கலான ஒரு செயல்பாடு. ரன்வேயின் லைட்டை ஃபோகஸ் செய்துதான் வருவார்கள். தேவையில்லாத லைட் வந்தால் குழப்பம் ஏற்படும். இந்த விளக்கு ஏன் வருகிறது என யோசிப்பார்கள். அந்தச் சந்தேகம் வரும்போது மறுபடியும் ஏடிசியை தொடர்புகொள்வர்கள்.

நான் லேண்ட் செய்யலாமா எனக் கேட்பார்கள். டே டைமில்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. ரன்வேயில் ஒவ்வொரு விளக்குக்கும் ஒவ்வொரு சமிக்ஞை இருக்கிறது. எல்லோர் உயிரும் அதைக் கண்டறிந்து இயக்கும் விமானியின் கையில்தான் இருக்கிறது" என்றார்.

சிறிய டார்ச் அளவுக்கு உள்ள லேசர் கருவிகளைக் கொண்டு ஒளியை அடித்தால், அது சில நூறு மீட்டர் தூரத்துக்கே பாயும். ஆனால், விமான நிலையங்களுக்கு அருகில் நடக்கும் நிகழ்ச்சிகளில் சக்தி வாய்ந்த லேசர் விளக்குகளைப் பயன்படுத்தினால், அந்த லேசர்கள் விமானத்தில் பட்டால் அது மிக உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் விமானிகளுக்கே குழப்பத்தையும் சிக்கலையும் ஏற்படுத்தும் என்கிறார்கள் அதிகாரிகள்.

தற்காலிக பார்வையிழப்பு ஏற்படும் அபாயம்

சென்னை விமானம், லேசர் ஒளி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,உலகம் முழுவதுமே இந்தப் பிரச்னை இருக்கிறது என்கிறார், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவை சேர்ந்த விமானியான அசோகன்

ஆனால், சென்னையில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இந்தப் பிரச்னை இருப்பதாகக் கூறுகிறார், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவை சேர்ந்த விமானியான அசோகன்.

"விமானத்தைத் தரையிறக்குவது என்பது மிகவும் சிக்கலான தருணம். அந்த நேரத்தில் விமானிகள் பல விஷயங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பார்கள். அளவைக் காட்டும் பல்வேறு மீட்டர்களை கவனித்துக் கொண்டிருப்பார்கள். ஓடுபாதையையும் விமானத்தையும் ஒரே நேர்கோட்டில் பொருத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும்.

அப்போது ஒரு மில்லிவிநாடியைக்கூட வீணாக்க முடியாது. அந்த நேரத்தில் சக்தி வாய்ந்த லேசர் ஒளி கண்ணில் அடித்தால், தற்காலிகமாகப் பார்வையிழப்பு ஏற்படும்" என்கிறார் அவர்.

"இதனால் மிக அரிதான தருணங்களில் இதன் காரணமாக, missed approach செய்ய வேண்டியிருக்கும். அதாவது விமானத்தைத் தரையிறக்காமல் மீண்டும் பறக்கச் செய்து, மறுபடியும் ஏடிசியின் அனுமதியைப் பெற்றுத் தரையிறக்க வேண்டியிருக்கும். இதுபோல தீவிர கவனத்துடன் வேலை செய்துகொண்டிருக்கும் தருணத்தில் லேசர் ஒளி கண்ணில் படுவது, விமானிகளுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும், அது மிக அபாயகரமானது" என்கிறார் அசோகன்.

'கண்டுபிடிப்பதே கடினம்'

பிற நாடுகள் இதுபோன்ற விவகாரங்களை மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் என்று கூறுகிறார், இந்தியாவில் ஒரு தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றும் பெயரை வெளியிட விரும்பாத விமானி ஒருவர்.

"இதுபோல, லேசர் ஒளியை அடிப்பதால், விமானம் விபத்தில் சிக்காது. ஆனால், வேறு பல பிரச்னைகள் ஏற்படும். அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுபோலச் செய்தால், மிகக் கடுமையான அபராதமும் பல ஆண்டுகள் சிறைத் தண்டனையும் கிடைக்கும். இந்தியாவில் இதுபோலச் செய்பவர்களைக் கண்டுபிடிப்பதே கடினமாக இருக்கிறது" என்கிறார் அவர்.

இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வையும் அவர் முன்வைக்கிறார். "பொதுமக்களின் கையில் இதுபோன்ற கருவிகள் கிடைத்த பிறகு அவர்களைக் கட்டுப்படுத்துவது கடினம். ஆனால், இதுபோன்ற கருவிகளைத் தயாரிப்பவர்கள், இறக்குமதி செய்பவர்களைக் கட்டுப்படுத்தலாம். அவர்கள் யாருக்கு விற்கிறார்கள் என்ற விவரங்களைச் சேகரிக்கச் சொல்ல வேண்டும். அப்படித்தான் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள முடியும்" என்கிறார் அந்த விமானி.

இந்தியாவில் சென்னை தவிர, மைசூர், கொல்கத்தா விமான நிலையங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் முன்னர் நடந்துள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce81zvln4kko

"நன்கொடை கொடுக்கலாம், உபயதாரர் ஆக முடியாது" திருநாகேஸ்வரம் கோவிலில் பட்டியல் சாதியினருக்கு என்ன பிரச்னை?

2 weeks ago

திருநாகேஸ்வரர் கோவில்

பட மூலாதாரம்,FACEBOOK/KUNDRATHUR NAGESWARAR TEMPLE

படக்குறிப்பு, சேக்கிழார் கட்டியதாகக் கூறப்படும் இந்தக் கோவிலுக்கு கி.பி. 1182 ஆம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் விளக்கெரிக்க தானம் அளிக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 18 மே 2025

'ஒரு மனிதனின் தாழ்ந்த நிலையைக் காரணம் காட்டி கோவில்களில் நன்கொடை பெற மறுப்பது தீண்டாமையின் மற்றொரு வடிவம்' என, கடந்த ஏப்ரல் 29 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் திருநாகேஸ்வரர் கோவிலில் தங்களை உபயதாரராக சேர்க்க மறுப்பதாகக் கூறி பட்டியல் பிரிவினர் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அறநிலையத்துறை அதிகாரிகளும் கோவில் அறங்காவலர்களும் மறுக்கின்றனர். தங்களிடம் மனு கொடுக்காமல் நீதிமன்றத்தை நாடிவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

கோவிலில் என்ன பிரச்னை?

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலின் சிறப்புகளைக் கூறுவதற்கு 45 கல்வெட்டுகள் உள்ளதாக கோவில் குறித்து இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

சேக்கிழார் கட்டியதாகக் கூறப்படும் இந்தக் கோவிலுக்கு கி.பி. 1182 ஆம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் விளக்கெரிக்க தானம் அளிக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது எனவும் இணையதளம் கூறுகிறது.

கி.பி. 1192 ஆம் ஆண்டு காமாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்டதாகவும் கோவிலில் பணிபுரிந்த ஆடல் மகளிரும் வழிபாட்டுக்காக தானம் அளித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கி.பி. 1546 ஆம் ஆண்டு விஜயநகர மன்னரும் திருநாகேஸ்வரம் வந்துள்ளதாகவும் பெரிய புராணம் எழுதிய சேக்கிழாருக்கு இங்கு தனிக்கோவில் உள்ளதாகவும் அறநிலையத்துறை கூறியுள்ளது.

குன்றத்தூரில் திருநாகேஸ்வரம் கிராமத்தில் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்துள்ள கூலி வேலைகள் பிரதானமாக உள்ளன.

'குறிப்பிட்ட சாதி கட்டுப்பாட்டில் கோவில்'

திருநாகேஸ்வரம்

பட மூலாதாரம்,FACEBOOK/KUNDRATHUR NAGESWARAR TEMPLE

படக்குறிப்பு, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நபரை கோவிலுக்குள் உபயதாரராக சேர்க்க மறுப்பதாகக் கூறுவது அரசியல் சாசன சட்டத்தின் 17 ஆவது பிரிவை மீறுவதாகும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

"கோவிலுக்கு அருகில் முருகன் கோவில், பெருமாள் கோவில், சிவன் கோவில் ஆகியவற்றில் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் அறங்காவலர் குழுவில் உள்ளனர். ஆனால், திருநாகேஸ்வரர் கோவிலை குறிப்பிட்ட சாதியினர் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்" எனக் கூறுகிறார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாண்டியராஜன். இவர் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கத்தின் தலைவராக இருக்கிறார்.

சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் தான் கோவிலில் உபயதாரராக உள்ளதாகக் கூறும் அவர், "பட்டியல் சாதியைப்போல பிற சாதியினருக்கு உபயதாரராக முக்கியத்துவம் தருவதில்லை. அனைத்து சாதிகளுக்கும் உரிமை கொடுக்க உத்தரவிடுமாறு வழக்கு தொடர்ந்தேன்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கையை மூன்று வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்ரவர்த்தி உத்தரவிட்டார்.

'கடவுள் முன் சாதி ஒரு பொருட்டல்ல'

தீர்ப்பில், 'இந்த நாட்டில் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தன்னைவிட கீழ் நிலையில் உள்ள நபரிடம் நன்கொடைகளை வாங்காமல் இருப்பது தீண்டாமையின் மற்றொரு வடிவம். கடவுள் முன் சாதி ஒரு பொருட்டல்ல' என நீதிபதி கூறியுள்ளார்.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நபரை கோவிலுக்குள் உபயதாரராக சேர்க்க மறுப்பதாகக் கூறுவது அரசியல் சாசன சட்டத்தின் 17 ஆவது பிரிவை மீறுவதாகும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதேபோன்ற ஒரு வழக்கில் (நாமக்கல் மாவட்டம் பொன் காளியம்மன் கோவில் வழக்கு) பிப்ரவரி 5 ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் நீதிபதி மேற்கோள் காட்டியுள்ளார்.

இந்த வழக்கில், 'காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவிலில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே உபயதாரராக இருக்க முடியும்' என இந்து அறநிலையத்துறை வாதிட்டதாகக் கூறுகிறார், வழக்கைத் தொடர்ந்த பாண்டியராஜனின் வழக்கறிஞர் சுகந்தன்.

"சமூக நீதி அரசை நடத்துவதாகக் கூறும் ஆட்சியில் இப்படியொரு பதிலைக் கூற முடியாது. கோவிலில் பக்தர்களிடம் நன்கொடைகளை வாங்குகின்றனர். ஆனால், குறிப்பிட்ட சாதியினரின் விழாவாக கொண்டாடுகின்றனர்" எனக் கூறுகிறார்.

திருநாகேஸ்வரம்

பட மூலாதாரம்,FACEBOOK/KUNDRATHUR NAGESWARAR TEMPLE

அழைப்பிதழ் சர்ச்சை

திருநாகேஸ்வரர் கோவிலில் கடந்த மே 13 ஆம் தேதி பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

"பத்து நாட்களாக நடைபெற்ற இந்த விழாவுக்கு அனைத்து சாதியினரிடம் இருந்தும் நன்கொடை பெற்றனர். ஆனால், விழா அழைப்பிதழில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் பெயர் மட்டும் இருந்தது" எனக் கூறுகிறார், குன்றத்தூரை சேர்ந்த வைரமுத்து.

கோவில் விழா தொடர்பான அழைப்பிதழை நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு சமர்ப்பித்ததாகக் கூறும் வைரமுத்து, "குறிப்பிட்ட சாதியைத் தவிர வேறு யாரும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர்" என்கிறார்.

கோவில் வளாகத்தில் குறிப்பிட்ட சாதியின் பெயரில் சங்கம், திருமண மண்டபம் உள்ளதாகக் கூறும் அவர், "இது அவர்களின் மூதாதையரின் கோவிலாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்" என்றார்.

திருநாகேஸ்வரர் கோவில் கடந்த 1968 ஆம் ஆண்டு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறும் பாண்டியராஜன், "60 பேர் கொண்ட குழுவில் பத்து பேர் உபயதாரராக உள்ளனர். அவர்கள் 10 பேரும் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள். இவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விழா நடத்துகின்றனர். வேறு சாதிக்கு அனுமதியில்லை" என்கிறார்.

"திருவிழாவுக்கு நன்கொடை வசூல் செய்தால் அதற்குரிய ரசீதுகள் கொடுக்கப்படுவதில்லை. கணக்கு வழக்குகளும் இல்லை. அனைத்தும் தங்கள் சாதிக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், "கோவிலில் வழிபாடு நடத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை" எனக் கூறும் வைரமுத்து, "கோவிலில் உபயதாரராக பட்டியல் சாதி உள்பட இதர சாதியினருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். நன்கொடைகளையும் பாரபட்சம் பார்த்து தான் வாங்குகின்றனர்" எனக் கூறுகிறார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை கோவில் அறங்காவலர் குழுவைச் சேர்ந்த ராஜ்பாபு முழுமையாக மறுத்தார்.

அறங்காவலர் குழு சொல்வது என்ன?

திருநாகேஸ்வரர் கோவில்

பட மூலாதாரம்,FACEBOOK/KUNDRATHUR NAGESWARAR TEMPLE

படக்குறிப்பு,திருநாகேஸ்வரர் கோவிலில் கடந்த மே 13 ஆம் தேதி பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

"முறைசாரா பரம்பரை அறங்காவலர் திட்டத்தின்கீழ் இந்தக் கோவில் வருகிறது. அதன்படி அறங்காவலர் குழுவில் ஒரே சாதியினர் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அரசு உத்தரவு" எனக் கூறுகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கோவிலுக்கு நியமிக்கப்படும் ஐந்து அறங்காவலர்களில் 3 பேரை அறநிலையத்துறை ஆணையரும் 2 பேரை துறையின் செயலரும் நியமிப்பார்கள்" என்கிறார்.

சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலை குறிப்பிட்ட சாதியினர் மட்டும் நிர்வாகம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

"எங்கள் சாதியினர் கோவிலை சிறப்பாக நிர்வாகம் செய்வதாகக் கூறி நாயக்கர், செட்டியார், வன்னியர், ஆதிதிராவிடர் என அனைவரும் சேர்ந்து கடிதம் கொடுத்தனர். அதை அடிப்படையாக வைத்து நிர்வாகம் செய்து கொள்வதற்கு அறநிலையத்துறை உத்தரவிட்டது" எனக் கூறுகிறார் ராஜ்பாபு.

ஒரு சாதியினர் உரிமை கோர முடியுமா?

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சாதியினர் கோவிலை நிர்வகிக்க உரிமை கோரினால், அறநிலையத்துறை சட்டப்படி அதனை பரிசீலித்து அனுமதி வழங்கும் நடைமுறையை நிர்வாக திட்டம் (scheme) எனக் கூறுகின்றனர்.

இவை கிராமங்கள், ஊர்க்காரர்கள், சாதி ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், 'கோவிலுக்கு ஒரு சாதியினர் மட்டும் உரிமை கோர முடியாது' என நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொன் காளியம்மன் கோவில் வழக்கில் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூகத்தில் அமைதியின்மையை உருவாக்குவதற்கு கோவில்களை பயன்படுத்திக் கொள்வதாக தீர்ப்பில் கூறிய நீதிபதி பரத சக்ரவர்த்தி, பெரும்பாலான பொதுக் கோவில்கள் குறிப்பிட்ட சாதியினரின் கோவில்களாக முத்திரை குத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 25, 26 ஆகியவை மத உரிமைகள் மற்றும் மத நடைமுறைகளை மட்டுமே பாதுகாப்பதாகக் கூறிய நீதிபதி, 'அப்படிப் பார்த்தால் எந்த சாதியினரும் கோவிலுக்கு உரிமை கோர முடியாது' எனக் குறிப்பிட்டார்.

"தகவல் சொல்லாமல் வழக்கு"

அதேநேரம், தங்கள் வழக்கில் உண்மைக்கு மாறான தகவல்களை மனுதாரர் வழங்கியுள்ளதாகக் கூறுகிறார் திருநாகேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுவைச் சேர்ந்த ராஜ் பாபு.

"கோவிலில் உபயம் செய்வதற்கு ஏதுவாக பொறுப்பு கொடுக்குமாறு கேட்டிருந்தால் பரிசீலித்திருக்கலாம். ஆனால், எந்தவித தகவலும் சொல்லாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர்" என்கிறார்.

"அதேநேரம், நன்கொடை பெறுவதில் எந்தவித பிரச்னையும் இல்லை. கோவிலில் 16 உண்டியல்கள் உள்ளன. ஏராளமான கியு.ஆர் கோடு அட்டைகள் உள்ளனர். யார் வேண்டுமானாலும் நன்கொடை அளிக்கலாம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்தில் நடைபெற்ற பிரம்மோற்வ விழாவுக்கு உபயதாரர்கள், பக்தர்கள், ஊர் பெரியவர்கள் ஆகியோரிடம் நன்கொடை பெற்று நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

"நன்கொடை வாங்காமல் எந்த விழாவையும் நடத்த முடியாது. அனைத்துக்கும் கணக்குகள் உள்ளன. இதில் தவறு நடந்தால் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும்" என்கிறார் ராஜ்பாபு.

"அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினால் அவர்களிடம் எங்கள் தரப்பு விளக்கத்தை அளிப்போம்" எனக் கூறும் ராஜ்பாபு, "கோவிலில் கருங்கல் மண்டபம் உள்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளோம். அப்போதெல்லாம் உதவி செய்வதற்கு இவர்கள் வரவில்லை" எனக் கூறினார்.

திருநாகேஸ்வரர் கோவில்

பட மூலாதாரம்,FACEBOOK/KUNDRATHUR NAGESWARAR TEMPLE

அறநிலையத்துறை கூறுவது என்ன?

கோவில் செயல் அலுவலர் சுதாகரிடம் பிபிசி தமிழ் பேசியது.

"இதுவரை உபயதாரராக சேர்க்குமாறு அவர்கள் எந்த மனுவையும் கொடுக்கவில்லை. ஏதேனும் இடங்கள் காலியாக இருந்திருந்தால் மனுவை பரிசீலித்திருப்போம். ஆனால், நேரடியாக நீதிமன்றம் சென்றுவிட்டனர்" எனக் கூறினார்.

உபயதாரர்களையும் நன்கொடையாளர்களையும் கோவில் நிர்வாகம் வரவேற்பதாகக் கூறும் சுதாகர், "யார் வேண்டுமானாலும் நன்கொடை தரலாம். எந்த சாதி வேறுபாடுகளும் இல்லை" என்கிறார்.

கோவிலுக்கு குறிப்பிட்ட சாதியினர் பணம் செலவழித்து விழாக்களை நடத்துவதாகக் கூறும் சுதாகர், "உபயதாரர்களாக அவர்கள் செலவுகளை ஏற்றுக் கொள்கின்றனர். சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இதனைச் செய்து வருகின்றனர்" என்கிறார்.

முறைசாரா பரம்பரை அறங்காவலர் திட்டத்தின்கீழ் நாகேஸ்வரம் கிராமத்தில் வசிக்கும் குறிப்பிட்ட சாதியினர் அறங்காவலராக இருக்க வேண்டும் என 1981 ஆம் ஆண்டு சென்னை அறநிலையத்துறை துணை ஆணையர் மூலமாக உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

"கோவில்களுக்கு ஒரு குறிப்பிட்ட சாரார் உரிமை கோர முடியாது" என, நாமக்கல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து கோவில் செயல் அலுவலர் சுதாகரிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"தமிழ்நாட்டில் பெரும்பாலான கோவில்களை குறிப்பிட்ட சாதியினர் அறங்காவலர்களாக இருந்து நிர்வாகம் செய்கின்றனர். திருநாகேஸ்வரர் கோவில் வழக்கில் இணை ஆணையர் விசாரணை நடத்தி மனுவை பரிசீலனை செய்வார்" என்று மட்டும் பதில் அளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gk2vxx6e4o

தமிழ்நாட்டில் கனமழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் இருந்த 3 பேர் மீட்கப்பட்டது எப்படி?

2 weeks 1 day ago

தமிழ்நாடு, கனமழை, பருவமழை, மழை பாதிப்பு

படக்குறிப்பு,கனமழை பாதிப்பு

26 மே 2025, 08:45 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் திங்கள் காலை வரை அதிகபட்சமான நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சியில் 35 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் சின்னக்கல்லாரில் 21 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக கோவை மாவட்டத்தின் வால்பாறையில் 29.5 செ.மீ மழையும், கோவை மாநகரில் 22 செ.மீ மழையும் பதிவாகியிருந்தது. அதே போல் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் கனமழை செய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. தமிழ்நாட்டிக்கு வருகிற மே 29ம் தேதி வரை கணமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி கேரளாவில் மழை பெய்வதன் மூலம் தனது வருகையை அறிவிக்கும் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு மே 27-ம் தேதியே தொடங்கிவிடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு கேரளாவில் முதல் முறையாக பருவ மழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் மே 24-ம் தேதியே தென் மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று தினங்களில் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு

தென் மாநிலங்களில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே நீலகிரி, கோவை மாவட்டங்களில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று மற்ற இடங்களுக்கும் இது பரவும் என வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும், மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிராவின் சில பகுதிகளிலும், பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகாவின் சில பகுதிகளிலும், ஆந்திர மற்றும் தெலங்கானாவில் பல இடங்களிலும் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நிலை என்ன?

நீலகிரி, தமிழ்நாடு, கனமழை, பருவமழை, மழை பாதிப்பு

படக்குறிப்பு,நீலகிரியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. குறிப்பாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் மழையின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது.

குறிப்பாக உதகை அருகே உள்ள அவலாஞ்சியில் அதிகபட்சமாக 35 சென்டிமீட்டர் மழையும் அப்பர் பவானி பகுதியில் 30 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. இதனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது

இந்த கன மழையின் காரணமாக உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம், தேயிலை பூங்கா, அவலாஞ்சி சூழல் சுற்றுலா, உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், குன்னூர் லேம்ஸ் ராக், பைகாரா நீர்வீழ்ச்சி ஆகிய சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

மரம் விழுந்ததில் உயிரிழந்த சிறுவன்

அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று கேரளா மாநிலம் கள்ளிக்கோட்டை வடகரை தாலுகாவைச் சேர்ந்த பிரசித் என்பவரது குடும்பம் உதகையிலிருந்து கூடலூர் செல்லும் சாலையில் சாலையோரம் உள்ள பைன் ஃபாரஸ்ட் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அப்போது அங்கு மரம் விழுந்ததில் பிரசித்தின் மகனான 15 வயது நிரம்பிய ஆதிதேவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அண்டை மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கை

தமிழ்நாடு, கனமழை, பருவமழை, மழை பாதிப்பு

படக்குறிப்பு,மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலங்களான கேரள மாநிலம் வயநாடு மற்றும் மலப்புறம் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அந்தப் பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால் அவர்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுக்க கோரிக்கை விடுத்ததாகவும், மேலும் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட ஆட்சியருக்கும் நீலகிரி மாவட்டத்தின் மழை எச்சரிக்கை கொடுத்து தங்களது மாவட்ட மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில் கேரளாவைச் சேர்ந்த 4 பேர் பயணித்த கார் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. காருக்குள் மூன்று பேர் சிக்கிக் கொண்டனர். அவர்கள் கூச்சலிட்டதை அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேரம் போராடி அவர்களை மீட்டனர்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள்

தமிழ்நாடு, கனமழை, பருவமழை, மழை பாதிப்பு

கூடலுார் அருகேயுள்ள வடவயல் என்ற கிராமத்தில் கனமழை காரணமாக, வீடுகள் மிகவும் சேதம் அடைந்திருப்பதால் அரசு பள்ளி ஒன்றில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கூடலூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தொரப்பள்ளி அருகே உள்ள தேன்வையில் கிராமத்தை ஆற்று வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்து குளம் போல காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் 30க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர்.

வால்பாறையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

தமிழ்நாடு, கனமழை, பருவமழை, மழை பாதிப்பு

படக்குறிப்பு,வால்பாறையில் சரிந்து விழுந்த மரம்

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதனை ஒட்டியுள்ள எஸ்டேட் பகுதிகளில் சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வால்பாறையை அடுத்த பாலாஜி கோயில் செல்லும் பிரதான சாலையான கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் சாலைகளில் விழுந்து அக்கா மலையிலிருந்து வால்பாறை நோக்கி வரும் பேருந்து லாரி ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் சாலையில் கிடந்த மரத்தை அப்புறப்படுத்தி சாலையை சீர் செய்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

முழு கொள்ளளை எட்டிய பில்லூர் அணை

தமிழ்நாடு, கனமழை, பருவமழை, மழை பாதிப்பு

படக்குறிப்பு,பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவான 97 அடியை எட்டியுள்ளது.

அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளாவின் அட்டப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக பருவ மழை பெய்து வருவதால் அனைக்கான நீர்வரத்து வினாடிக்கு 18000 கன அடியாக இருந்து வருகிறது.

அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 18,000 கன அடி தண்ணீர் நான்கு மதகுகள் மூலம் உபரியாக பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது

பவானி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பாக நெல்லித்துறை மேட்டுப்பாளையம், ஸ்ரீரங்க ராயன் ஓடை, சிறுமுகை, ஆலங்கொம்பு, வச்சினம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தொடர்ந்து பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து வருகின்றனர்.

கோவையில் பழமையான மரங்கள் அகற்றம்

கோவை, தமிழ்நாடு, கனமழை, பருவமழை, மழை பாதிப்பு

படக்குறிப்பு,கோவையில் வேப்ப மரம் வீட்டின் சுவரின் மீது சாய்ந்தது

கோவையில் பருவமழை துவங்கியுள்ள நிலையில் மாநகராட்சியால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் காணப்படும் பழமையான மரங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன.

நேற்று மாலை உக்கடம் கோட்டைமேடு வின்சென்ட் ரோட்டில் உள்ள 35 ஆண்டு கால பழமையான மே பிளவர் மரத்தை மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு காரணத்திற்ளாக வின்சென்ட் ரோடு சாலை மூடப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

குனியமுத்தூர் பகுதியில் மின் நகரில் கனமழையின் காரணமாக வேப்ப மரம் வீட்டின் சுவரின் மீது சாய்ந்தது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

ராமநாதபுரத்தில் சூறைக்காற்று

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் சாலைகளில் புழுதி காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தென் தமிழக கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 55 வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தின் சுற்றுவட்டார பகுதிகளான பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், உச்சிப்புளி ஆகிய கடலோர பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சூறைக்காற்று வீசி வருகின்றன.

காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள், ஆங்காங்கே போடப்பட்டிருந்த பந்தல்கள் காற்றில் பறக்கின்றன.

தென்னை மரங்கள், வாழை மரங்கள் இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வளைந்து அங்கும், இங்குமாக அசைந்து ஆடுகிறது. சாலைகளில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு காற்றின் வேகம் உள்ளதால் பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வீசி வரும் சூறைக்காற்று ஏற்பட்ட புழுதியால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கடலுக்குச் செல்லாத நாட்டுப்படகு மீனவர்கள்

நெல்லை, திருநெல்வேலி, தமிழ்நாடு, கனமழை, பருவமழை, மழை பாதிப்பு

படக்குறிப்பு,நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

அரபிக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 600 நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கூடங்குளம், உவரி, கூத்தங்குழி, கூட்டப்புளி, பெருமணல், தோமையார்புரம், பஞ்சல், இடிந்தகரை உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 6000 நாட்டு படகு மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை.

குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதிகளில், இன்று தொடங்கி வருகிற 29 வரை சூறாவளி காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை வீச கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது அதே போன்று சுற்றுலா பயணிகளும் கடற்கரை, நீர் நிலைகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர் வீழ்ச்சிகளுக்குச் செல்லத் தடை

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர் வீழ்ச்சிகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சிறுவாணி அருகே அமைந்துள்ள கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சிக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு மேல் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அங்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தென்காசி மாவட்டம் குற்றால நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு, தமிழ்நாடு, கனமழை, பருவமழை, மழை பாதிப்பு

படக்குறிப்பு,முல்லைப் பெரியாறு அணை

தமிழக - கேரளா எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து இருப்பதால் அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கன அடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 115.65 அடியாக உள்ளது.

அணைக்கு வரும் நீர்வரத்து 1,648.03 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 100 கன அடியாகவும், அணையின் மொத்த நீர் இருப்பு 1844.00 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் 55.08 மில்லி மீட்டரும் அளவும் தேக்கடி பகுதியில் 36.2 மில்லி மீட்டர் அளவும் மழை பதிவாகியிருந்தது. இங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படை கேரளா விரைவு

கேரளாவிற்கு அடுத்த மூன்று நாட்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கக் கூடிய நிலையில் தமிழ்நாட்டில் இருந்து பேரிடர் மீட்பு படையினர் கேரளா விரைந்துள்ளனர்.

அரக்கோணத்தை மையமாகக் கொண்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரள மாநிலம் விரைகின்றனர்.

கேரளாவின் காசர்கோடு, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு 30 பேர் கொண்ட மூன்று குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் மோப்ப நாய்கள் பிரின்ஸ் மற்றும் மிக்கி ஆகியோர் கொண்ட குழுவினர் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள விரைவதாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crk2j7ye5z8o

நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களை அண்மித்த 'நீரில் 115 மடங்கு அதிக பாதரசம்' - பிபிசி தமிழ் கள ஆய்வு

2 weeks 1 day ago

'நீரில் 115 மடங்கு அதிக பாதரசம்' - என்எல்சியை ஒட்டிய கிராமங்களில் என்ன நடக்கிறது? பிபிசி தமிழ் கள ஆய்வு

என்.எல்.சி, நெய்வேலி, நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையம், கடலூர், சுகாதாரப் பிரச்னைகள்

பட மூலாதாரம்,NLC

படக்குறிப்பு,என்.எல்.சி

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

"வேலைக்குப் போனால் 200 ரூபாய் சம்பளம் வரும். மாதம் மருந்து செலவுக்கே மூன்றாயிரம் தேவைப்படுகிறது. தனியார் மருத்துவரிடம் தான் சிகிச்சை பெறுகிறேன். எங்கள் கிராமத்தில் மருத்துவ வசதிகள் இல்லை"

நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களை ஒட்டியுள்ள சிறிய கிராமமான அம்மேரியைச் சேர்ந்த மணி என்பவரின் கூற்று இது. விவசாய கூலியாக இருக்கும் அவரது 2 சிறுநீரகங்களுமே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (NLC) நிறுவனத்தை ஒட்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு அனல்மின் நிலையம் மற்றும் சுரங்கத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் காற்று மாசு ஆகியவையே காரணம் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நெய்வேலியில் நடத்திய ஆய்வில், நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு பாதரசம் இருப்பதைக் கண்டறியப்பட்டிருப்பதாக, பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஆனால், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என என்எல்சி நிர்வாகம் கூறுகிறது. அப்படியானால் நிலக்கரி சுரங்கங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் என்ன பிரச்னை? பிபிசி தமிழின் கள ஆய்வில் தெரியவந்தது என்ன?

என்.எல்.சி, நெய்வேலி, நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையம், கடலூர், சுகாதாரப் பிரச்னைகள்

படக்குறிப்பு,நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு பாதரசம் இருப்பது தெரியவந்துள்ளது

64 ஆயிரம் ஏக்கர் திறந்தவெளி சுரங்கம்

கடலூர் மாவட்டத்தில் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் இந்தியா லிமிடெட் இயங்கி வருகிறது.

சுமார் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வெட்டியெடுக்கப்படும் நிலக்கரி, நான்கு அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அனல் மின் நிலையத்தில் 3390 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் உள்ளதாக என்எல்சியின் இணையதளம் கூறுகிறது. நிலக்கரி சுரங்கத்துக்காக 1956-ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்கள் அமைந்துள்ள இடத்துக்கு சுமார் 2 கி.மீ தொலைவில் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அம்மேரி, ஆதண்டார் கொல்லை, கரிவெட்டி, கூரைப்பேட்டை, மூலப்பட்டு ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன.

நீர் நிலைகளில் பாதரசம்

என்.எல்.சி, நெய்வேலி, நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையம், கடலூர், சுகாதாரப் பிரச்னைகள்

படக்குறிப்பு,கிராமங்களில் உள்ள நீர் ஆதாரங்களில் காட்மியம், துத்தநாகம், போரான் (Boron), செலினியம் போன்ற உலோகங்கள் இருப்பது தெரியவந்ததாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு நெய்வேலி, பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளில் மக்கள் பயன்பாட்டில் உள்ள குடிநீர், நிலத்தடி நீர், நீர்நிலை, விவசாய நிலம் ஆகியவற்றில் 'பூவுலகின் நண்பர்கள்' என்ற சுற்றுச்சூழல் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது.

இங்கு சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்பி சோதனை செய்தபோது, வடக்கு வெள்ளூரில் உள்ள குடிநீர்த் தொட்டியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு பாதரசம் இருப்பது தெரியவந்தது என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

இதுதவிர, கிராமங்களில் உள்ள நீர் ஆதாரங்களில் காட்மியம், துத்தநாகம், போரான் (Boron), செலினியம் போன்ற கன உலோகங்கள் இருப்பது தெரியவந்ததாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாயின. இதனைக் கண்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தது தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம்.

மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்கள், கடலூர் மாவட்ட ஆட்சியர், மெட்ரோ குடிநீர் வாரியம் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

களநிலவரம் என்ன?

என்.எல்.சி, நெய்வேலி, நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையம், கடலூர், சுகாதாரப் பிரச்னைகள்

படக்குறிப்பு,நெய்வேலி முதல் சுரங்கத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் ஆதாண்டார் கொல்லை, மூலப்பட்டு, அம்மேரி உள்பட சுமார் 65 கிராமங்கள் உள்ளன.

நெய்வேலி முதல் சுரங்கத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் ஆதாண்டார் கொல்லை, மூலப்பட்டு, அம்மேரி உள்பட சுமார் 65 கிராமங்கள் உள்ளன.

இந்தக் கிராமங்களின் அருகில் சுரங்கத்தில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் நடந்து வருவதை பிபிசி தமிழ் கள ஆய்வின் போது பார்க்க முடிந்தது. பல இடங்களில் மிகப் பெரிய அளவில் குழிகள் தோண்டப்பட்டிருந்தன.

சுரங்கம் செயல்படும் இடங்களுக்குச் சென்றபோது, முழுதாக கம்பி வேலி அமைக்கப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் (CISF) தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அங்கு நம்மிடம் பேசிய சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி ஒருவர், "எந்தப் பகுதியில் இருந்து வருகிறீர்கள்?" என விசாரித்தார். அந்த வழியாக செல்லும் ஒவ்வொருவரையும் அவர் தீவிரமாக கண்காணிப்பதைப் பார்க்க முடிந்தது.

நிலத்தடி நீரால் சிறுநீரக பாதிப்பா?

என்.எல்.சி, நெய்வேலி, நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையம், கடலூர், சுகாதாரப் பிரச்னைகள்

படக்குறிப்பு,சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்பட்டதால் அதற்கான மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டு வருகிறார் தனசேகரன்.

அங்கிருந்து ஆதண்டார் கொல்லை கிராமத்துக்கு பிபிசி தமிழ் குழுவினர் சென்றோம். ''இங்கு குடியேறி 45 ஆண்டுகள் ஆகிவிட்டd. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கை, கால்களில் வலி, வீக்கம் இருந்ததால் ஆஸ்பத்திரிக்குப் போனேன். உப்பு அதிகமானதாக கூறி பரிசோதனைகளை எடுத்தார்கள்' எனக் கூறுகிறார், தனசேகரன்.

இவருக்கு சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்பட்டதால் அதற்கான மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டு வருகிறார். 'எனக்கு மது, சிகரெட் என எந்தப் பழக்கமும் இல்லை. நிலத்தடி நீரைத் தான் குடிப்பதற்கு பயன்படுத்தி வருகிறேன்.' எனக் கூறினார்.

தனது வீட்டில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் நிலக்கரிச் சுரங்கம் இருப்பதாக கூறுகிறார் தனசேகரனின் மகன் சத்தியமூர்த்தி.

"என் அப்பாவுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் மருத்துவ செலவுக்கு தேவைப்படுகிறது. ஒருநாள் மருந்து சாப்பிடாவிட்டால் கால் வீக்கம் அதிகமாகிவிடும். இதைக் கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் டயாலிஸில் வரை சென்றிருக்கும்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் சத்தியமூர்த்தி.

மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் சொன்னது என்ன?

என்.எல்.சி, நெய்வேலி, நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையம், கடலூர், சுகாதாரப் பிரச்னைகள்

படக்குறிப்பு,கடலூரில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 115 மடங்கு பாதரசம் உள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது.

கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூடுதல் முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் விஜயலட்சுமி கூடுதல் அறிக்கை ஒன்றை தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தார்.

அதில், நீர்நிலைகள் (Surface water), நிலத்தடி நீர், மண், சாம்பல் துகள் என 22 மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆய்வில் 17 நீர்நிலைகளில் 15 இடங்களில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் பாதரசம் (0.0012 mg/l to 0.115 mg/l) உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடலூரில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 115 மடங்கு பாதரசம் உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. இவை குடிநீர் மற்றும் பாசனத்துக்கு ஏற்றதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்.எல்.சி, நெய்வேலி, நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையம், கடலூர், சுகாதாரப் பிரச்னைகள்

பட மூலாதாரம்,NLC

படக்குறிப்பு,வானதி ராயபுரம் பகுதிகளில் நிலத்தடி நீர் மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 62 மடங்கு அதிகம் பாதரசம் இருப்பது அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்

"வளையமாதேவி கூட்டுக் குடிநீர்த் திட்டம், வாலஜா ஏரி, அய்யன் ஏரி, பரவனாறு ஆகியவை குடிநீர் ஆதாரமாக இருந்துள்ளன. நீர்நிலைகளில் இயற்கையாக பாதரசம் உருவாகாது. இவற்றில் எப்படி உருவானது" என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் வீரஅரசு கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சோதனையில் 9 நிலத்தடி நீர் மாதிரிகளில் ஆறு இடங்களில் பாதரசம் இருந்துள்ளது. அதன் அனுமதிக்கப்பட்ட அளவு என்பது 0.001 Mg/1 என, இந்திய அரசின் குடிநீர் தரக்கட்டுப்பாடு வரையறுத்துள்ளது.

குடிநீரில் 0.006 mg/L என்ற அளவில் பாதரசம் இருக்கலாம் எனவும் செலினியத்தில் 0.01 என்ற அளவிலும் இருக்கலாம் எனவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

அப்படியிருக்கும்போது, இங்கு 0.0025 Mg/l முதல் 0.0626 வரை பாதரசம் காணப்பட்டுள்ளது. "இது அனுமதிக்கப்பட்ட அளவைவிட 2.5 முதல் 62 மடங்கு வரை அதிகம்" எனக் கூறுகிறார், பிரபாகரன் வீர அரசு.

அதிலும், வானதி ராயபுரம் பகுதிகளில் நிலத்தடி நீர் மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 62 மடங்கு அதிகம் பாதரசம் இருப்பது அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

"நிலக்கரி சுரங்கங்களை ஒட்டி வாழும் மக்கள் இந்த நிலத்தடி நீரைத் தான் பயன்படுத்துகின்றனர்" எனவும் அவர் கூறினார்.

"இது வெறும் வாழ்வாதார பிரச்னை மட்டும் அல்ல. மக்களின் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏராளமானோர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் டயாலிஸிஸ் செய்து வருகின்றனர். அவர்களுக்கு முறையான சிகிச்சை வசதிகள் கிடைப்பதில்லை" என்கிறார், பிரபாகரன் வீர அரசு.

"நிலத்தடி நீரைத் தவிர வேறு ஆதாரம் இல்லை"

என்.எல்.சி, நெய்வேலி, நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையம், கடலூர், சுகாதாரப் பிரச்னைகள்

படக்குறிப்பு,அம்மேரி கிராமத்தில் சுமார் 25 வருடங்களாக வசிக்கும் மணி என்பவருக்கும் இதே பிரச்னை தான்.

அம்மேரி கிராமத்தில் சுமார் 25 வருடங்களாக வசிக்கும் மணி என்பவருக்கும் இதே பிரச்னை தான். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் உடல் வீக்கம் அதிகமானதால், தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

"இரண்டு சிறுநீரகமும் சுருங்கிப் போய்விட்டதாக மருத்துவர் கூறினார். ஒவ்வொரு முறையும் சிகிச்சைக்குச் செல்லும்போது 3 ஆயிரம் செலவாகிறது." என்கிறார் மணி.

"மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்றால் கடலூர் அல்லது புதுச்சேரி போக வேண்டும். எங்கள் கிராமத்துக்கு ஒரு செவிலியர் கூட வந்ததில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"நிலத்தடி நீரைத் தவிர வேறு எந்தத் தண்ணீரும் எங்களுக்கு வருவதில்லை." என்கிறார் மணி.

அரசு மருத்துவமனை உள்ளது.. ஆனால்?

என்.எல்.சி, நெய்வேலி, நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையம், கடலூர், சுகாதாரப் பிரச்னைகள்

படக்குறிப்பு,இக்கிராமத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் என்எல்சி அரசு மருத்துவமனை அமைந்துள்ளது.

அம்மேரி கிராமத்தில் மட்டும் சுமார் 700 குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் என்எல்சி மருத்துவமனை அமைந்துள்ளது.

"இங்கு பொதுமக்கள் சென்றால் முதலுதவி சிகிச்சை மட்டும் செய்வார்கள். என்எல்சி ஊழியர்களுக்கு மட்டுமே அங்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. கிராமத்தில் எந்த மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டதில்லை" என்கிறார், ஆதண்டார் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த மணி.

நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெளியே வரும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து என்எல்சி டவுன்ஷிப்புக்கு (TownShip) கொடுப்பதாகக் கூறும் மணி, "கிராமங்களுக்கு அந்த நீர் வருவதில்லை. சுரங்கத்தில் மண்ணை இலகுவாக்குவதற்கு வெடி வைக்கின்றனர். அதன் கழிவுகள் ஓடை வழியாக செல்கிறது" எனக் குறிப்பிட்டார்.

என்.எல்.சி, நெய்வேலி, நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையம், கடலூர், சுகாதாரப் பிரச்னைகள்

படக்குறிப்பு,சுரங்கத்தின் பரப்பளவு அதிகரிப்பதால் கிராமத்துக்கு பிரச்னை அதிகரிப்பதாகக் கூறும் ரவி

சுரங்கத்தின் பரப்பளவு அதிகரிப்பதால் கிராமத்துக்கு பிரச்னை அதிகரிப்பதாகக் கூறும் ரவி, "கீழே படியும் கரி உள்பட அனைத்துக் கழிவுகளையும் வெளியேற்றுகின்றனர். அது இங்குள்ள ஓடை வழியாக செல்கிறது" என்கிறார்.

அனல்மின் நிலையத்தின் கழிவுகள், வாலஜா ஏரியில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாய் சென்று அங்கிருந்து பெருமாள் ஏரி மூலமாக கடலில் சென்று கலப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆதண்டார் கொல்லையைச் சுற்றி வந்தபோது, ஊருக்குள் நீரோடை போல தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. "அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இது" எனக் கூறினார் ரவி. அந்த நீர் கருப்பு நிறத்தில் இருந்தது.

என்.எல்.சி, நெய்வேலி, நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையம், கடலூர், சுகாதாரப் பிரச்னைகள்

படக்குறிப்பு,"அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இது" எனக் கூறினார் ரவி. அந்த நீர் கருப்பு நிறத்தில் இருந்தது."

என்னென்ன பாதிப்புகள் வரும்?

"பாதரசம் உள்ளிட்ட கன உலோகங்களால் மனித உடலுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும்?" என, சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த புகழேந்தியிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"சிறுநீரகங்களால் கன உலோகங்கள் வடிகட்டப்படும்போது அவை அதில் தங்கி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவை மோசமான புற்றுநோய் பாதிப்பையும் ஏற்படுத்தும்" என்று அவர் கூறுகிறார்.

தொழிற்சாலைக் கழிவுகளில் இருந்து ஆற்றில் கலக்கும் கன உலோகங்களால் புற்றுநோய், சிறுநீரக பாதிப்புகள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

என்.எல்.சி, நெய்வேலி, நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையம், கடலூர், சுகாதாரப் பிரச்னைகள்

படக்குறிப்பு,என்.எல்.சி

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் பதில்

நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்ரீதியான பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"இதுவரை என் கவனத்துக்கு வரவில்லை. அங்குள்ள நிலவரம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன்" என்று மட்டும் பதில் அளித்தார்.

என்எல்சியின் விளக்கம் என்ன?

என்எல்சியின் மக்கள் தொடர்புத் துறையின் துணைப் பொது மேலாளர் கல்பனா தேவியிடம் பிபிசி தமிழ் பேசியது.

"உடல்நலப் பிரச்னைக்கு பாதரசம் உள்ளிட்டவை காரணம் எனக் கூறுகின்றனர். அதற்கான காரணம் குறித்து எந்த ஆவணங்களும் (Records) இல்லை" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள அறிக்கைக்கு நீதிமன்றத்தில் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். இந்த விவகாரத்தை சட்டரீதியாகவே நாங்கள் கையாண்டு வருகிறோம்" எனக் கூறினார்.

மக்களுக்கு மருத்துவ முகாம்களை நடத்தாமல் இருப்பது குறித்துக் கேட்டபோது, "ஏராளமான மருத்துவ முகாம்கள் நடந்து வருகின்றன. சில விஷயங்கள் மக்களிடையே தவறாக கொண்டு செல்லப்படுகிறது. இதை சட்டரீதியாக என்எல்சி நிர்வாகம் கையாள உள்ளது" என்கிறார் கல்பனா தேவி.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clyg6npd68po

Checked
Wed, 06/11/2025 - 01:54
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed