தமிழகச் செய்திகள்

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் : பிரதமர் மோடியின் கருத்துக்கு ஸ்டாலின் கடும் விசனம்

18 hours 41 minutes ago
18 MAR, 2024 | 04:19 PM
image

(எம்.மனோசித்ரா)

கச்சதீவு உரிமையை அடிப்படையாகக் கொண்டு மீனவர்களின் பிரச்சினைகள் உதாசீனப்படுத்தப்படவில்லை என இலங்கை அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் கச்சதீவு தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

கடந்த காலத்தில் தி.மு.க செய்த பாவத்தால்தான் இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ள கருத்துக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்,

'தி.மு.க. அரசின் கடும் எதிர்ப்பையும் மீறித்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது என்ற உண்மை வரலாற்றை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். நாட்டின் ஒரு பகுதியை மாநில அரசால் மற்றொரு நாட்டுக்கு வழங்க முடியும் என நம்பும் அளவுக்குத்தான் பிரதமர் அப்பாவியாக இருக்கிறாரா?

கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து சிறைப் பிடிக்கப்படுவதையும் சித்திரவதைக்கு ஆளாவதையும் தடுத்து நிறுத்தாதது ஏன்? அவர்கள் இந்தியர்கள் இல்லையா?

அதானி நிறுவனத்தின் வர்த்தக நலன்களுக்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்த ஒன்றிய பா.ஜ.க அரசு இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைக்காக வாய் திறக்காதது ஏன்? படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கிவிட்டதாக அறிவிக்கிறது இலங்கை அரசு. இந்திய அரசு இதை அதிகாரபூர்வமாக, வெளிப்படையாகக் கண்டிக்காதது ஏன்?

இரண்டாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கும் நடைமுறை என்பதே, பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டதுதான். இதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? இதற்கெல்லாம் பதிலில்லை. தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டுக்குச் செய்து கொடுத்த சிறப்புத் திட்டங்கள் என்ன என்று பதில் கூறுங்கள் பிரதமரே என்று தமிழ்நாட்டு மக்கள் கேட்ட கேள்விக்கும் பதில் இல்லை. ஆனால், வழக்கமான பொய்களும் புலம்பல்களும் மட்டும் மேடையில் எதிரொலித்தன.

விஷ்வகுரு என மார்தட்டிக்கொள்ளும் பிரதமர் மௌனகுருவாக இருப்பது ஏன்? தன் சொந்த இயலாமையை மறைக்கத் தி.மு.க மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங்கள் மீனவர்கள் தோலுரிப்பார்கள். இது அரிதாரங்கள் கலைகிற காலம்!' எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/179054

மன முதிர்ச்சியற்ற சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை

1 day 18 hours ago
திருப்பூர்: மன முதிர்ச்சியற்ற சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - அதிமுக நிர்வாகி உள்பட 8 பேர் கைது
திருப்பூர்: மனமுதிர்ச்சியற்ற 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

கட்டுரை தகவல்
  • எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் மனமுதிர்ச்சியற்ற 17 வயது சிறுமியை 6 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம், குழந்தைகளின் உடல்நலனைப் போல் மனநலனிலும் அக்கறை செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.

காவல்துறை கூறுவது என்ன?

மன முதிர்ச்சியற்ற சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக, பிபிசி தமிழிடம் காவல்துறை அதிகாரி ஒருவர் தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதன்படி, வெள்ளகோவிலில் கோவில் ஒன்றில் கடந்த 9-ம் தேதி இரவு கச்சேரி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட கூட்டத்தில் கச்சேரியைக் காண அந்த 17 வயது சிறுமியை அவரின் தாய் அழைத்து வந்துள்ளார். அச்சிறுமிக்கு மனமுதிர்ச்சி சற்று குறைவு என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சிறுமியும் நடனமாடிக் கொண்டிருக்க, ’வீட்டுக்குச் செல்லலாம் வா’ என தாய் அழைத்தபோது அவர் உடன் செல்ல மறுத்துள்ளார். நடனத்தின் மீதான ஈடுபாட்டில் பக்கத்து வீட்டுத் தோழிகளுடன் தான் பத்திரமாக வீட்டுக்கு வந்துவிடுவதாகக் கூறியதால் தாயும் அவரை அங்கேயே விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

கச்சேரியின்போது மேடைக்குக் கீழ் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் அச்சிறுமியை நோட்டமிட்டு, வீடியோவும் எடுத்துள்ளனர்.

கலைநிகழ்ச்சிகள் முடிந்து வெகுநேரமாகியும் எல்லோரும் வீடு திரும்பிய பின்பும் தனது மகளைக் காணவில்லை என்பதால், காவல்துறையிலும் இதுகுறித்து முறையிட்டார். முழு மனமுதிர்ச்சி இல்லாத பெண் என்பதால், உடனடியாகக் கண்டுபிடித்துத் தரும்படி போலீசாரிடம் கோரினார்.

இதையடுத்து போலீசாரும் ஒருபுறம் சிறுமியைத் தேடினர். அதிகாலை 3 மணியளவில் யாரோ ஒருவர் அழைத்து வந்தததாக வீடு திரும்பிய சிறுமி மிகவும் களைத்துப் போய் சோர்வுடன் காணப்பட்டிருக்கிறார்.

 
தனக்கு நேரிட்ட கொடுமையை சொல்லக் கூட தெரியாத சிறுமி
திருப்பூர்: மனமுதிர்ச்சியற்ற 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

சிறுமியின் நிலை கண்டு சந்தேகித்த தாயும், என்ன ஆனது என சிறுமியிடம் கேட்க 6 பேர் தன்னிடம் நடந்துகொண்ட விதத்தைப் பற்றி கூறி இருக்கிறார். தான் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியிருக்கிறோம் என்று கூட சொல்லத் தெரியாத அந்தச் சிறுமியின் பேச்சைக்கேட்டு தாயும் அதிர்ந்து போனார். இதுதொடர்பாக, அச்சிறுமியின் தாய் வெள்ளகோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் போலீசார், சிசிடிவி காட்சி உதவியுடன் சிறுமியை இறக்கிவிட்டுச் சென்றவர்களை அடையாளம் கண்டு இருவரைப் பிடித்தனர்.

இது போக்சோ வழக்கு என்பதால், வெள்ளகோவில் காவலர்களின் வழிகாட்டுதலின்படி, காங்கேயம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு சென்று புகாரளித்தார் சிறுமியின் தாய். இதையடுத்து போலீசார் பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

நடனத்தை யூடியூப்பில் போடுவதாகக் கூறி அழைப்பு

விசாரணையில் பின்வரும் விவரங்கள் தெரியவந்தததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தேர்த் திருவிழா கலைநிகழ்ச்சியில் சிறுமியின் நடனத்தைப் பார்த்த இளைஞர்களில் பிரபாகர், மணிகண்டன் ஆகிய இருவர் சிறுமியை அருகே வருமாறு அழைத்து, “நீ, நன்றாக நடனமாடுகிறாய். உன்னை மட்டும் தனியே நடனம் ஆட வைத்து, அதை யூடியூப்பில் பதிவேற்றினால், நீ விரைவில் பிரபலமாகிவிடுவாய்” எனக் கூறியிருக்கின்றனர். பேசிய இரு இளைஞர்களில் ஒருவர் சிறுமிக்கு ஏற்கனவே பரிச்சயமான டீ மாஸ்டர் என்பதால், சிறுமியும் அவர்களுடன் பைக்கில் சென்றுள்ளார்.

 
கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர்

காட்டுக்குள் சிறுமியை அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், சிறுமியை வீட்டில் விட அழைத்துச் சென்றபோது, அவ்வழியே வந்த அதிமுக நிர்வாகியான கதிர்வேல்சாமியின் மகனும் அதிமுக தொழில்நுட்ப அணி நிர்வாகியுமான தினேஷ் அவர்களைத் தடுத்து நிறுத்தினாராம். நடந்ததை அறிந்த தினேஷும், சிறுமியைத் தங்களிடம் விட்டுவிட்டு செல்லுமாறு கூறி சிறுமியை அழைத்துக் கொண்டனர்.

பின், தினேஷ் சிறுமியைத் தனது காரில் வைத்து கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், அவரது நண்பர்களும் சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து அவ்வழியே காரில் வந்த மேலும் 2 இளைஞர்கள் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததோடு, அவரை வீட்டின் அருகே இறக்கிவிட்டுச் சென்ற நிலையில்தான் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சிக்கியது தெரியவந்தது.

தனக்கு ஏதோ தவறாக நடக்கிறது என்றுகூட அறிந்துகொள்ளும் பக்குவம் அந்த சிறுமிக்கு இருந்திருக்காது என்றும், சிறுமியின் மனமுதிர்ச்சி ஒரு 9 வயது சிறுமியை ஒத்ததாகத்தான் இருக்கும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

அதிமுக நிர்வாகி உள்பட 8 பேர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

இந்த விசாரணைக்குப் பின், 27 முதல் 32 வயதுக்குள் உள்ள பிரபாகர், மணிகண்டன், தமிழ்செல்வன், தினேஷ், பாலசுப்ரமணி, நவீன்குமார், நந்தகுமார், மோகன்குமார் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். அவர்களின் மீது ஐபிசி பிரிவு 366, பிரிவு 506 (1), போக்சோ சட்டம் பிரிவு 6-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கெனவே திருமணமானவர்கள் ஆவர். அதில் தினேஷ் ஆட்டோ ஃபினான்ஸ் செய்துவருவதும், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட காரில் ’ஜெ’ என அதிமுக வண்ணத்தில் நம்பர் பிளேட்டில் எழுதப்பட்டிருந்தது.

எளிதில் இலக்கான மனமுதிர்ச்சியற்ற சிறுமி

சிறுமியின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன் மூலனூரில் கொலையாகி ஓராண்டுக்குப் பின்பே அவரது சடலம் மீட்கப்பட்டது. சிறுமி ஒற்றைத் தாயின் அரவணைப்பில் வளரும் மனமுதிர்ச்சியற்ற சிறுமி என்பதும், வயதுக்கு ஏற்ற பக்குவம் இல்லாததையும், சிறுமிக்கு நடனம் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதையும் நன்கு அறிந்திருந்தார் அந்த டீ மாஸ்டர். சிறுமியின் வாழ்க்கைச் சூழலை சாதகமாக்கிக் கொண்டதாக தெரிகிறது.

 
டிப்ளமோ படிக்கும் சிறுமிக்கு எப்படி மனநலப் பிரச்னை?
மனநலப் பிரச்னை
படக்குறிப்பு,

உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்

இந்தச் சிறுமி பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்து வந்தாலும், அவர் வயதுக்கு ஏற்ற முதிர்ச்சி இல்லாதது ஏன் என்ற கேள்வி எழுந்ததும் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்தை அணுகியது பிபிசி தமிழ். இந்தச் சிறுமிக்கு இருப்பது அன்டக்னைஸ்ட் இன்டலெக்சுவல் டிசெபிலிடி (Undiagnosed intellectual disability) என்ற கண்டறியப்படாத அறிவுசார் திறன் குறைபாடு என்றார். இப்படிப்பட்டவர்களில் பலர் பட்டப்படிப்பே படித்திருந்தாலும் வயதுக்கு உரிய அறிவும் பக்குவமும் இருக்காது என்றார். பெரும்பாலும் இதுமாதிரியான சிறுமிகள் தான் பாலியல் கொடூரங்களுக்கு எளிதில் இலக்காகிறார்கள் எனக் கூறினார் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்.

இந்தச் சிறுமிக்கு சமூகத்தில் எப்படிப் பழக வேண்டும் என்பது தெரியாது என்றார். ’சோசியல் ஸ்கில்ஸ் அடாப்டபிலிடி’ (Social skills adaptability) அதாவது, சமூகத்தில் பழகுவதற்கான திறமைகளை கிரகிப்பதில் அவருக்கு ‘மைல்ட் டூ மாடரேட்’ அதாவது லேசானது முதல் மிதமானது வரைதான் அறிவு இருக்கும் என்றார்.

`வளர்ந்தால் சரியாகிவிடும்` என்ற அலட்சியம்

வீட்டில் விளையாட்டுத்தனமாக இருக்கும் பிள்ளைகள் பெரும்பாலும் வளர்ந்தால் சரியாகிவிடும், திருமணமானால் சரியாகிவிடும், சிறுபிள்ளைத்தனம், விளையாட்டுப் பிள்ளை, வெகுளி, வெள்ளந்தி, அனைவரிடமும் சிரிக்கச் சிரிக்க பேசுவார்கள் என்று கூறிக்கொண்டு பெற்றோர் குறிப்பாக கிராமத்தில் வசிக்கும் பெற்றோர் ஏதும் செய்யாமல் விட்டுவிடுவார்கள். அவர்களுக்கு சமூக பக்குவம் இல்லாமல் போகும்போது, அது ஒரு மனநல பிரச்னை என்பதை அறியாமல் விட்டுவிடுவதும்தான் இதுபோன்ற சிக்கல்களில் அவர்கள் எளிதில் மாட்டிக்கொள்ளக் காரணம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சூசகமான வார்த்தைகளைச் சொல்லி தவறான செயல்களுக்கு அழைக்கும்போது அதனை புரிந்துகொள்வது 17 வயது மனமுதிர்ச்சியற்ற சிறுமிக்கு அது சிரமம்தான்“ எனக் குறிப்பிட்டார்.

 
"உடல் எல்லை, பாலியல் கல்வி மிகமிக அவசியம்"
திருப்பூர்: மனமுதிர்ச்சியற்ற 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இத்தகைய குழந்தைகள் பொதுவெளிக்குச் செல்வதற்கு முன்பே அவர்களுக்குக் கட்டாயம் பாலியல் கல்வியை பெற்றோர் கற்றுத்தர வேண்டும் என்கிறார் அவர். “இது உன் உடல், யாரும் அதைத் தொட அனுமதிக்கக் கூடாது, இதனால் நினைத்துக்கூட பார்க்க முடியாத பின்விளைவுகள் ஏற்படக்கூடும்” என்பதை அனைத்து குழந்தைகளுக்கும் சொல்லித்தர வேண்டும் என அவர் கூறுகிறார்.

“இதுபோன்ற மன முதிர்ச்சியற்றவர்களுக்கு கண்டிப்பாக சொல்லித்தர வேண்டும். ஏனெனில் இவர்கள் வெளியுலகில் யாருடைய ஆதரவும் இல்லாமல் இயங்க முடியாது எனும்போது அவர்களைப் பெற்றோர் தனித்து விடாது நிழல் போல் காக்க வேண்டும். அல்லது உடல் தொடுதல் எல்லைகளையும், `குட் டச் பேட் டச்`சையும் சொல்லித்தர வேண்டும்” என அதன் அவசியத்தை தெளிவுபடுத்தினார் சித்ரா அரவிந்த்.

பெற்றோர்கள் கவனத்திற்கு

குழந்தைகளுக்கு அறிவுசார் குறைபாடு வருகிறது என்பதை எப்படி அறிந்துகொள்ளலாம் எனவும் அவர் படிநிலைகளை விளக்கினார்.

  • குழந்தைகள் அவர்களின் வயதுக்கு ஏற்ற மைல்ஸ்டோன்களை அடையாதது
  • நடப்பது, பேசுவது ஆகியவற்றைத் தாமதமாக செய்வது
  • அதிக கோபமும், சமூகத்தில் பழகும் முறைகளைத் தெரியாதிருப்பது
  • பொருட்களைக் கையாள்வதில் சிரமம் (ஃபைன் மோட்டார் ஸ்கில்ஸ்)
  • கல்வியில் பின்தங்கியிருப்பது
  • போதிய மனநல விழிப்புணர்ச்சி இல்லாததால், பெற்றோர் இதனை கண்டுகொள்ளாது விட்டுவிடுகிறார்கள்.

`ரிஸ்கி பாபுலேசன்` (எளிதில் ஆபத்துக்கு இலக்காகுபவர்கள்) என இவர்களை அடையாளப்படுத்துவதால் பாலியல் கல்வி அளிப்பது கட்டாயம் என மீண்டும் அறிவுறுத்தினார் சித்ரா அரவிந்த்.

”நிழல் போல் இருந்து பெற்றோர் காக்க வேண்டும்”

மனப் பக்குவம், சமூகத்தில் செயல்படும் விதங்கள், பாலியல் ரீதியிலான நடத்தைகளைக் கற்றுக் கொடுத்தும் அவர்களால் கற்றுக் கொள்ள முடியவில்லை என்றால், பெற்றோர் நிழல் போல் உடன் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றார். யாரையும் நம்பி விடக்கூடாது என்றும் இதுபற்றி முதலில் பெற்றோர் விழிப்படைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

“குழந்தைக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் பெற்றோர், அதுவே மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு மனநல மருத்துவரை அணுகுவதில்லை. அதை நிராகரித்துவிடுவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். எனவே தயங்காமல், சமூகம் என்ன சொல்லும் என நினைக்காமல் தைரியமாக மனநல நிபுணர்களை அணுகவேண்டியது அவசியம்” எனக் கூறினார்.

 
IQ பரிசோதனையின் அவசியம்
திருப்பூர்: மனமுதிர்ச்சியற்ற 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிறந்ததும் குழந்தையைப் பரிசோதிக்கும் மருத்துவர்கள் குழந்தைக்கு ஏதும் பிரச்னை இருந்தால் கண்டறிந்துவிடுவார்கள். 3 அல்லது 5 வயதுக்கு மேல் அல்லது எந்த வயதிலும் கூட இத்தகைய குழந்தைகளுக்கு IQ பரிசோதனைகளை மேற்கொண்டு அவர்களின் மனநலம் பற்றி அறிந்துகொள்ளலாம். இது தலைமை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பெற்று பயனடையலாம்.

இன்டலெக்சுவல் அதாவது அறிவாற்றல் எனப்படுவது காரணம் அறிதல், பிரச்னைகளை தீர்த்தல், கல்வி கற்றல், திட்டமிடுதல், யோசித்தல், நீதி காணுதல், அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்ளுதல் என்ற படிநிலைகளின் கீழ் அறியப்படும். இவற்றை சரியாக பின்பற்றாத குழந்தைகள் அறிவுத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளாக அறியப்படுபவர்கள்.

சில குழந்தைகள் வளர்ந்த பின்பும் கூட குளிப்பது, உடை அணிந்து கொள்வது, சாப்பிடுவது, வழக்கமான பணிகளை செய்வது, அடிப்படையாக சமைப்பது, துவைப்பது, போக்குவரத்தைப் பயன்படுத்துவது ஆகியவற்றில் குறைகள் இருக்கலாம்.

சில குழந்தைகளுக்கு புதிதாக கற்றுக்கொள்ளுதல் திறன்களை வளர்த்தல் பெரியளவு வழிகாட்டுதல் இன்றி தானாகவே செயல் திறன்களை மேற்கொள்வது ஆகியவற்றில் சிரமம் இருக்கலாம்.

10 வயது குழந்தை 5 வயது குழந்தையை போல் பேசுவது இதற்கு உதாரணம்.

லேசான அறிவுத்திறன் குறைபாடு (IQ மதிப்பு 52-55 முதல் 70)
  • 5 முதல் 6 வகுப்புக்கு மேல் படிப்பில் சிரமம்
  • பேசுவது தாமதம் ஆகலாம். ஆனால் கற்றுக்கொண்ட பின் பிறருடன் தொடர்புகொண்டு பேசுவது மேம்படலாம்.
  • தன்னை தானே பார்த்துக் கொள்வது பராமரித்துக்கொள்வதில் முழுமையான சுதந்திரம் இருக்கும்.
  • படித்தல் மற்றும் எழுதலில் சிரமம் இருக்கும்.
  • சமூகத்தில் பக்குவமின்மை இருக்கும்.
  • திருமணம், குழந்தை வளர்ப்பு, பெற்றோராக கடமை ஆற்றும் பொறுப்புகளில் இயலாமை இருக்கும்.
மிதமான அறிவு திறன் குறைபாடு (IQ மதிப்பு 35 - 42 முதல் 52 – 55)
  • 2-ம் வகுப்புக்கு மேல் கல்வி கற்பதில் சிரமம்
  • மொழியை புரிந்துகொள்வதில் மெதுவாக செயல்படுவார்கள்.
  • பேசுவதிலும் பழகுவதிலும் குறைந்த திறன் இருக்கும்.
  • சாதாரணமாக படித்தல், எழுதுதல், எண்ணுதல் சாத்தியமாக இருக்கும்.
  • தனித்து சுதந்திரமாக வாழ்வது, இயங்குவதில் சிரமம்.
  • ஏற்கனவே தெரிந்த இடங்களுக்கு மட்டும்தான் சிரமம் இன்றி பயணிக்க முடியும்.
தீவிர அறிவுத்திறன் குறைபாடு (IQ மதிப்பு 22-25 முதல் 35 – 40)
  • பேசுவதிலும் ’மோட்டார் டெவலப்மென்ட்’ என்ற பொருட்களை கையாளுவதில் சிரமம் இருக்கும்
  • பாதுகாப்பான சூழலில் மருத்துவ உதவியோடு தான் வாழ முடியும்.
  • வெகு சில வார்த்தைகள் மட்டுமே புரியும்.
ஆழமான அறிவுத்திறன் குறைபாடு (IQ மதிப்பு 22-25 க்கு கீழ்)
  • பிறர் என்ன சொல்கிறார்கள் என்று புரியாது.
  • நரம்பு குறைபாட்டால் அசாதாரணமாக இருப்பார்கள்.
  • சுதந்திரமாக செயல்படுவது சாத்தியமில்லை.
  • எப்போதும் கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டியது அவசியம்.
அறிவுசார் குறைபாடு வரக் காரணம் என்ன?

மரபணு, கர்ப்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், அம்மை, மூளைக்காய்ச்சல், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற உடல்நல குறைபாடுகள் இதற்கு காரணமாக அமையலாம்.

குறிப்பாக, பெண்கள் கருவுற்றிருக்கும் போது அவர்களுக்கு மன உளைச்சல்களைக் கொடுக்கும் போதும், அவர்களின் மன நலன் பாதிக்கப்பட்டால் கருவில் இருக்கும் குழந்தையின் மனநலனும் பாதிக்கப்படக்கூடும்.

104 என்ற எண்ணில் இலசவ மனநல ஆலோசனை

குழந்தைகளை மனநல மருத்துவர்களுக்கு அழைத்துச் செல்வதில் ஏதும் தடைகள் இருந்தால், 24 மணிநேரமும் செயல்படும் 104 என்ற அரசின் மருத்துவ மற்றும் மனநல ஆலோசனை மைய எண்ணை அழைத்து, தங்களின் பிரச்னைகளைக் கூறவேண்டும். எவ்வளவு நேரமாயினும் மிகவும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு உங்களுக்கான வழிகாட்டு முறைகளை அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பகிர்வார்கள்.

மருத்துவர்கள் அறிவுறுத்தல்களை எழுதி வைத்துக்கொண்டு பின்பற்றி, அவர்கள் சொல்லும் காலகட்டத்துக்குப் பின் மீண்டும் 104 என்ற எண்ணை அழைத்து அதே மருத்துவரின் பெயரைச் சொல்லி பேச வேண்டும் எனக் கூறினால் அவர்கள் இணைப்பை வழங்குவார்கள். எத்தகைய சந்தேகங்கள் மற்றும் பிரச்னைகள், மன சங்கடங்களையும் தயக்கமின்றி பகிர்ந்து பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம்.

https://www.bbc.com/tamil/articles/cqqwe1gld15o

பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேர தமிழ்நாடு அரசு முடிவு - புதிய கல்வி கொள்கைக்கு திமுக எதிர்ப்பு என்ன ஆகும்?

1 day 18 hours ago
பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டம்: 'ஆர்வம்' காட்டும் திமுக, 'நெருக்கடி தரும்' மத்திய அரசு - முழு பின்னணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 17 மார்ச் 2024, 03:00 GMT
    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

பிஎம் ஸ்ரீ பள்ளிகளை 2024-2025 கல்வியாண்டுக்குள் தொடங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு விருப்பம் தெரிவித்து மத்திய கல்வி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் திமுக தலைமையிலான அரசு, அதன் அடிப்படையில் செயல்படும் பி.எம்.ஸ்ரீ மாதிரிப் பள்ளிகள் திட்டத்தில் இணைய விரும்புவது ஏன் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழ்நாடு அரசின் முடிவிற்கு மத்திய கல்வி அமைச்சகம் வரவேற்பு தெரிவித்துள்ளது. பிஎம் ஸ்ரீ பள்ளிகள் புதிய கல்விக்கொள்கை 2020ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படும் என மத்திய அரசு கூறுகிறது.

இதுதொடர்பாக, மத்திய கல்வித்துறை அமைச்சகம் சனிக்கிழமை (மார்ச் 16) தன் ட்விட்டர் பக்கத்தில், “பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக முக்கிய முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. பிஎம் ஸ்ரீ பள்ளிகள் என்பது புதிய கல்விக் கொள்கை-2020இன் படி அமைந்த முன்மாதிரி பள்ளிகள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2024-25 கல்வியாண்டுக்குள் தமிழ்நாடு அரசு கையெழுத்திடும் என்றும் தமிழ்நாடு அரசுக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சகத்திற்கும் இடையேயான இந்த ஒப்பந்தம், வலுவான மத்திய-மாநில உறவுகளைக் குறிப்பதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புக்காக இதைத் தாங்கள் மனமார வரவேற்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 
பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் திமுக அரசு ’ஆர்வம்’ காட்டுவது ஏன்? மத்திய அரசின் நெருக்கடி காரணமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மத்திய கல்வித்துறை அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா மார்ச் 15 அன்று எழுதிய கடிதமும் அப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், “தமிழகத்தில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு மிகுந்த ஆர்வமாக உள்ளது. அதன்படி, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில், மாநில அளவிலான குழு அமைக்கப்படும். அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே அடுத்த கல்வியாண்டுக்குள் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூன்று மற்றும் நான்காம் நிதி தவணைகளை வழங்குமாறும் மத்திய அரசிடம் அதில் கோரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "தேசிய கல்விக் கொள்கையில் உள்ள காலை உணவுத் திட்டம், தன்னார்வலர்கள் மூலம் சமுதாயத்தை உள்ளடக்கிய பயிற்றுவித்தல் போன்றவற்றை வேறு வேறு பெயர்களில் செயல்படுத்திய தமிழக அரசு, தற்போது, பி.எம்.ஸ்ரீ பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்க முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.

பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் திமுக அரசு ’ஆர்வம்’ காட்டுவது ஏன்? மத்திய அரசு நெருக்கடி அளிக்கிறதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

திமுக எதிர்ப்பு

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அப்போது, புதிய கல்விக் கொள்கைக்கு திமுக உட்பட தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின், புதிய கல்விக் கொள்கை வேத கலாசாரத்தை திணிப்பதாகவும் சமூக நீதி புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார். மும்மொழிக் கொள்கை திணிக்கப்படுகிறது, தொழிற்கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை அறிமுகப்படுத்தப் பார்க்கிறார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் செயல்படும் பிஎம் ஸ்ரீ பள்ளிகளைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆர்வம் காட்டுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த விமர்சனம் தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாநில கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு தயாரித்து வருகிறது. அதை ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு உருவாக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் கல்வியாளர்களைச் சந்தித்திருக்கிறோம். ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துகளை அறிந்துதான் மாநில கல்விக் கொள்கையைத் தயாரித்திருக்கிறோம். அதைச் சார்ந்துதான் எல்லா திட்டங்களும் செயல்படுத்தப்படும்" என்றார்.

அதோடு, மத்திய கல்வி அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு மூன்றாவது மற்றும் நான்காவது தவணையான ரூ. 1,200 கோடியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திஇருப்பதாகவும், அப்போது பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய வேண்டும் என மத்திய அரசு கூறியதாகவும் தெரிவித்த அன்பில் மகேஷ், "முதலமைச்சரிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தினோம்" எனக் கூறினார்.

அவரது கூற்றின்படி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதில் எவற்றையெல்லாம் ஏற்கலாம், ஏற்க வேண்டாம் என்பது குறித்து ஆலோசிக்க குழு அமைக்கப்படும். "அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் நமக்கு ஏற்காத விஷயங்களை எடுத்து சொல்வோம்," என்றார்.

மேலும், குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு கொண்டு வந்து அவர்களுக்கு மன உளைச்சலைத் தரும் புதிய கல்விக் கொள்கையை திமுக எப்போதும் எதிர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 
பிஎம் ஸ்ரீ பள்ளிகள் என்பது என்ன?
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பட மூலாதாரம்,ANBIL MAHESH POYYAMOZHI

படக்குறிப்பு,

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பி.எம். ஸ்கூல்ஸ் ஆஃப் ரைசிங் இந்தியா என்பதன் சுருக்கமே பி.எம்.ஸ்ரீ பள்ளிகள். இந்தியா முழுவதிலும் 14,500 பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கம். குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் இப்பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக மாற்றி, அப்பள்ளிகள் அவற்றுக்கு அருகிலுள்ள பள்ளிகளை வழிநடத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 21ஆம் நூற்றாண்டின் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தப் பள்ளிகள் இருக்கும் என புதிய கல்விக் கொள்கை-2020இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவோதயா பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உட்பட மத்திய/மாநில/யூனியன் அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகள் இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்படும். உயர்தர கல்வி, பாதுகாப்பான சூழல், பரவலான கற்றல் அனுபவங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தப் பள்ளிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பள்ளிகளாக உருவாக்கப்படும் என மத்திய அரசு கூறுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 20 லட்சம் மாணவர்கள் பயணடைவார்கள் என, 2022ஆம் ஆண்டு மத்திய அரசு தெரிவித்தது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இதுவரை ஒடிசா, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்கள் கையெழுத்திடவில்லை என, பிடிஐ செய்தி முகமையின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் என்ன பிரச்னை?
பிரின்ஸ் கஜேந்திரபாபு
படக்குறிப்பு,

பிரின்ஸ் கஜேந்திரபாபு

இப்பள்ளிகள் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசினார்.

பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் என்ன பிரச்னை என்ற கேள்விக்கு, "எல்லோருக்கும் சமமான கற்றல் வாய்ப்பைத்தான் கொடுக்க வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டம் சமத்துவக் கோட்பாட்டைத்தான் பேசுகிறது," என்று பதிலளித்தார்.

"பிஎம் ஸ்ரீ பள்ளிகள் மட்டும்தான் சிறந்த பள்ளிகளாக இருக்க வேண்டுமா? சிறந்த ஆசிரியர்கள், மாணவர்கள் அங்கு மட்டும்தான் இருப்பார்களா? இந்தக் குறிப்பிட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்தான் அங்கிருக்கும் அனைத்து வசதிகளையும் அனுபவிப்பார்கள் என்று சொன்னால், மற்ற பள்ளிகளில் இத்தகைய வசதிகள் வேண்டாமா?"

"ஒரு சிலருக்கு மட்டும் சிறந்த கல்வி வாய்ப்பைக் கொடுப்பேன் என்று சொன்னால், அது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்புடையதா?" என பிரின்ஸ் கஜேந்திர பாபு கேள்வியெழுப்புகிறார்.

ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளதா?

பிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கான இணையதளத்தில், அப்பள்ளிகளுக்கென நிர்வாக அமைப்பை மாநில அரசு ஏற்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. எந்தெந்த பள்ளிகளை இத்திட்டத்தின் கீழ் கொண்டு வர முடியும் என்பதை மாநில அரசு அடையாளம் கண்டு கூற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சில படிநிலைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

"ஏற்கெனவே தமிழ்நாடு அரசு பள்ளிகளை அடையாளம் கண்டுள்ளது. இந்த மாதிரிப் பள்ளிகள் 2 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன," என்றார் பிரின்ஸ்.

 
பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் திமுக அரசு ’ஆர்வம்’ காட்டுவது ஏன்? மத்திய அரசின் நெருக்கடி காரணமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதற்கான அமைப்பில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுதன் உறுப்பினர் செயலாளராக உள்ளதாகவும் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார். இந்நிலையில், இப்போது கடைசியாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட உள்ளதாக அவர் விமர்சிக்கிறார்.

"அடுத்த கல்வியாண்டுக்குள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் என அரசின் தலைமைச் செயலாளர் கூறுவதை எப்படி எளிதாக எடுத்துக் கொள்ள முடியும்?" என அவர் கேள்வி எழுப்புகிறார்.

முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக்கு தான் இத்தகைய கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இருக்கிறது. அப்படியிருக்கையில், "அமைச்சரவை முடிவு எடுக்காத ஒரு விஷயம் குறித்து தலைமைச் செயலாளர் எப்படி முடிவு எடுத்தார்? இதுகுறித்து முதலமைச்சர் விளக்கம் கூற வேண்டும்" என வலியுறுத்துகிறார்.

நிதியுதவி அளிக்காமல் நெருக்கடி கொடுக்கின்றனர் என்பது நியாயமான அணுகுமுறை அல்ல என்றும் அவர் கூறுகிறார். "கருணாநிதி சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்தார். இப்போது திமுக அரசு கொண்டு வரும் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் அரசமைப்பு சட்டத்திற்கு மட்டுமல்ல, கருணாநிதியின் சமச்சீர் கோட்பாட்டுக்கும் எதிரானது," என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

தமிழ்நாட்டுக்கென மாநில கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் குழு ஒன்றை 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அமைத்தது.

இதிலும் தமிழ்நாடு அரசு மீது சர்ச்சை எழுந்தது. தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எல். ஜவஹர்நேசன் மே, 2023இல் குற்றச்சாட்டு முன்வைத்தார்.

முதலமைச்சரின் செயலாளரான மூத்த ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். எனினும் அக்குற்றச்சாட்டுகளை அந்த நேரத்தில் உதயச்சந்திரன் மறுத்திருந்தார்.

 
'எப்போதும் எதிர்ப்போம்'
பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் திமுக அரசு ’ஆர்வம்’ காட்டுவது ஏன்? மத்திய அரசு நெருக்கடி அளிக்கிறதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் சல்மா கூறுகையில், ”ஆய்வு செய்து எது தேவையோ அதை மட்டும் செயல்படுத்துவோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார்.

குலக்கல்வியை ஊக்குவிப்பதாக புதிய கல்விக் கொள்கையை முதலமைச்சர் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். அனைவரும் சமம், எல்லோரும் படிக்க வேண்டும் என்பதுதான் சமூக நீதி. அதற்காகத்தான் திமுக குரல் கொடுத்து வருகிறது. அதனால் இதில் சந்தேகங்களுக்கு இடமில்லை,” எனத் தெரிவித்தார்.

மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு எல்லா வகையிலும் நெருக்கடி அளிப்பதாகவும் நிதியில்தான் முதலில் கை வைப்பதாகவும் அவர் கூறினார்.

'திமுக அரசியல் செய்கிறது'

திமுக எல்லா விவகாரங்களிலும் இரட்டை நிலைப்பாடு எடுப்பதாக பாஜக விமர்சித்துள்ளது.

பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசி தமிழிடம் பேசுகையில், "தலைமைச் செயலாளரின் கடிதத்தில், இத்திட்டத்தில் இணைய தமிழ்நாடு அரசு மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் இப்படிச் சொல்கிறார். அப்படியென்றால் திமுக அரசு இதை வைத்து அரசியல் செய்கிறது. இப்படித்தான் நீட் தேர்வு உள்ளிட்ட எல்லா விவகாரங்களிலும் திமுக இரட்டை நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.

எல்லாவற்றுக்கும் தொடக்கம் வேண்டும் என்பதால்தான் சில பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளனர்" என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c720lexrg49o

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

2 days 5 hours ago
சென்னையில் 2025 ஜூனில் 2-ம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
16 MAR, 2024 | 12:34 PM
image

தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று கணித் தமிழும் இணைந்து நற்றமிழாக நானிலமெங்கும் சிறப்புடன் திகழ்கின்றது.

தமிழ் மொழி; தொன்மை – தனித்தன்மை – பொதுமைப் பண்பு - பண்பாடு – உயர்ந்த சிந்தனை – இலக்கியத் தனித்தன்மை பங்களிப்பு ஆகிய உயர்ந்த கோட்பாடுகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றதுடன், செம்மொழி என்ற தனித்தகுதியை பெற்றுள்ள அரும்பெரும் மொழியாகும்.

தமிழை, உயர்தனிச் செம்மொழி என்று முதன்முதலில் முன்மொழிந்தவர் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் ஆவார். வளம்பெற்ற நம் மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்து தமிழர்களின் நூற்றாண்டுக் கனவை நனவாக்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி.

கழக அரசு பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டுகளாக தமிழக அரசு தனிப்பெரும் நிலையில் தகுதிவாய்ந்த தமிழறிஞர்களுக்குப் பல்வேறு விருதுகளை வழங்குவதோடு, நாடறிந்த தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவதும், பண்டையத் தமிழர் பண்பாட்டையும், பழங்காலத் தமிழர்களின் எழுத்தறிவு, நாகரிக வாழ்வு முறைமைகளை நுண்மையோடு பறைசாற்றும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தை அமைத்து, அதன் தொடர்ச்சியாக பொருநை அருங்காட்சியகத்தையும் அமைத்து வருவது தமிழ்ப் பண்பாட்டின் மணிமகுடங்களாகும்.

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் அனைத்தும் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வகையில், அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் பல்வேறு துறை சார்ந்த பாடநூல்களை தமிழில் மொழிபெயர்க்கும் பெரும் பணியினைச் செய்து வருவதும், செயற்கை நுண்ணறிவைப் போற்றும் வகையில் கணித் தமிழ் மாநாடு 24 நடத்தியதும், தாய்த்தமிழை உயிர்ப்போடும் வனப்போடும் வளர்த்தெடுக்கும் கழக அரசின் முயற்சிகளாகும்.

மேலும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் அயலகத் தமிழர் தினமாக ஜனவரி-12-ஆம் நாளினை தமிழ் வெல்லும் என்னும் கருப்பொருளை மையமாக 2024-ஆம் ஆண்டு அயலகத் தமிழர் மாநாட்டினை வெற்றியோடு நடத்தியதும், பார்போற்றும் வகையில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடத்தியதும்; தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்குவதும், திருக்கோயில்களில் தமிழ் வழிபாட்டினை முன்னிறுத்துவதுமான ஆகச்சிறந்த பல்வேறு தமிழ்ப் பணிகளை ஆற்றி வருகிறோம்.

“இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்பார் பாவேந்தர். நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/178854

திமுகவின் 'முத்தமிழ் முருகன்' மாநாடு அறிவிப்பு: இந்து வாக்குகளை கவரும் 'அரசியல் தந்திரமா'?

3 days 5 hours ago
மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தமிழ்நாட்டில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படும் என, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்திருப்பது, பாஜகவிடமிருந்து எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. பாஜக மட்டுமல்லாமல், ‘முருகன் தமிழர்களின் இறைவன்’ என்ற முழக்கத்தைத் தொடர்ந்து முன்வைத்து வரும் நாம் தமிழர் கட்சியும் இதை விமர்சித்துள்ளது. இந்து வாக்குகளை கவர்வதற்காகன ’அரசியல் தந்திரம்’ என்று அக்கட்சிகள் தெரிவித்துள்ளன. என்ன சர்ச்சை?

அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஜூன் அல்லது ஜூலையில் வெகுவிமரிசையாக நடைபெறும். உலகளவில் இருக்கும் முருக பக்தர்கள், முருக கோவில்களைப் பராமரிப்பவர்களை தமிழகத்திற்கு அழைத்து இரண்டு நாட்கள் மாநாடு நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் கண்காட்சிகள், கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே தமிழ்நாடு பாஜக இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. பாஜக பொதுச் செயலாளர் ஆர். சீனிவாசன், “முதலில் பாஜக மத்திய அரசின் திட்டங்களை தங்கள் திட்டங்களாக காட்டிக்கொண்டு ‘ஸ்டிக்கர்’ ஒட்டியது. முருகனை தமிழ்நாட்டுக்கு மட்டும் சுருக்கிவிட முடியாது. அவரை உலகம் முழுவதிலும் வழிபடுகின்றனர். இத்தகைய சூழ்ச்சிகளில் தமிழ்நாட்டு மக்கள் சிக்க மாட்டார்கள்,” எனத் தெரிவித்திருந்தார்.

இம்மாநாட்டை நடத்துவதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும் ஆட்சி அமைத்ததில் இருந்தே முருகன் கோவில்களுக்காகப் பலவித திட்டங்களுக்கு நிதியுதவி செய்து வந்ததாகவும் சேகர்பாபு விளக்கம் அளித்தார்.

”திருச்செந்தூர் முருகன் கோவிலைப் புணரமைக்க தமிழக அரசு ரூ.300 கோடி நிதி ஒதுக்கியுள்ளது” என்றும் அவர் கூறினார். இதையொட்டித்தான் தற்போது சர்ச்சை எழுந்திருக்கிறது.

'அரசியல் ஆதாயம்'

முருகனுக்கு மாநாடு நடத்துவது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், "இது நிச்சயம் அரசியல் ஆதாயத்துக்காகத்தான்," என்று விமர்சித்தார்.

தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்குக்கூட முதலமைச்சர் வாழ்த்து கூறியதில்லை. முருகனுக்கு முக்கிய நிகழ்வான தைப்பூசத்திற்குக்கூட வாழ்த்து கூறியதில்லை.

அப்படியிருக்கும்போது, இப்போது முருகனுக்கு மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன? சனாதனம் குறித்துப் பேசிய உதயநிதிக்கு எந்தவித கண்டிப்பும் தெரிவிக்காத முதல்வர் இதை நடத்துவது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.

 
'பாஜகவின் ஏ டீமா?'
சீமான்

பட மூலாதாரம்,@SEEMANOFFICIAL

'முப்பாட்டன் முருகன்', 'குறிஞ்சி தந்த தலைவன்', 'இன மூதாதை' என முருகன் 'தமிழ்க்கடவுள்', 'தமிழர்களுக்கான கடவுள்' என்ற வாதத்தை தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறது நாம் தமிழர் கட்சி. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் அக்கட்சி சார்பாகக் கொண்டாடப்படுகிறது. முருகன் 'இந்து கடவுள் அல்ல, தமிழர் கடவுள்' என்பது அக்கட்சியின் வாதம்.

இம்மாநாடு தொடர்பாக அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பிபிசி தமிழிடம் பேசுகையில், "திராவிடத்தை விடுத்து, தமிழர்களின் கடவுளைக் கொண்டாடினால்தான் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும் என்ற புரிதல் திமுகவுக்கு இப்போதுதான் வந்திருக்கிறது.

நாங்கள் முருகனைக் கொண்டாடியதற்கு எங்களை பாஜக 'பி டீம்' என்றனர். இந்துத்துவத்திற்கும் வேலுக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? ஆனால், எங்களை நோக்கி ஆர்.எஸ்.எஸ்-இன் இன்னொரு அமைப்பு என்றனர். இப்போது இவர்கள் பாஜகவின் ‘ஏ’ டீமா?" என்றார்.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஜூன் அல்லது ஜூலை மாதம் நடக்கவிருக்கும் மாநாடு குறித்து இப்போதே திமுக அறிவித்திருப்பது, தேர்தல் லாபத்திற்காகத்தான் என்றார் அவர். "இது அக்கட்சியின் அரசியல் உத்தி எனச் சொல்வதைவிட தந்திரம் என்றுதான் சொல்ல வேண்டும்," எனக் கூறுகிறார் காளியம்மாள்.

 
'பாஜகவுக்கு பயம்'
கருணாநிதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த விமர்சனங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, "அறநிலையத்துறை வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் தான் இவை. இந்து சமய விதிகளுக்கு உட்பட்டு கோவில் நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்தான். அதில் என்ன தவறு இருக்கிறது?" என்று கேள்வியெழுப்புகிறார்.

மேலும், "நாங்கள் முருகன் குறித்துப் பேசினால் பாஜகவுக்கு ஏன் கோபம் வருகிறது? அவர்கள் இதை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறார்கள் போல. அதனால் பயப்படுகிறார்கள் என நினைக்கிறேன்.

திமுகவின் கொள்கைகளைத் தெரிந்துகொள்ளாமல் பாஜக பேசுகிறது. இதற்கும் இந்துத்துவத்திற்கும் சம்பந்தமில்லை. எல்லா மதங்களுக்கும் அமைப்பு இருக்கிறது," என்றார்.

முஸ்லிம்கள் நலன்களுக்கென வக்பு வாரியம் இருப்பதையும் ஆர்.எஸ். பாரதி சுட்டிக்காட்டினார்.

 
முருகனும் தமிழக அரசியல் கட்சிகளும்
`முத்தமிழ் முருகன்` மாநாடு நடத்த உள்ளதாக அறிவித்த திமுக - பாஜக, நாம் தமிழர் விமர்சிப்பது ஏன்?

பட மூலாதாரம்,L MURUGAN TWITTER

படக்குறிப்பு,

எல். முருகன் வேல் யாத்திரை சென்றபோது

முருகனை முன்வைத்து யாத்திரை செல்வதோ, முருகனைக் கொண்டாடுவதோ தமிழக அரசியல் கட்சிகளுக்குப் புதிதல்ல.

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி, 2020ஆம் ஆண்டு இறுதியில் அப்போதைய தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தவரும் தற்போதைய மத்திய இணையமைச்சருமான எல். முருகன், திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை முருகனின் அறுபடை கோவில்களை மையமாக வைத்து ‘வேல் யாத்திரை நடத்தினார்.

அதேபோன்று, 2021ஆம் ஆண்டு ஜனவரியில், திமுக நடத்திய மக்கள் கிராமசபைக் கூட்டத்தில், மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் பரிசாக அளிக்கப்பட்டது. இதை, தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்றும் தங்களின் வேல் யாத்திரை வெற்றி பெற்றதை இது காட்டுவதாகவும் எல். முருகன் அப்போது தெரிவித்திருந்தார்.

பாஜக தவிர்த்து ஸ்டாலினுக்கு வேல் பரிசளிக்கப்பட்டதை அதிமுகவும் விமர்சித்தது.

''உண்மையான பிரார்த்தனை செய்யவேண்டும். நாம் மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்பவர்கள். ஸ்டாலின் வெளியில் பேசுவது ஒன்றாகவும், உள்ளே நினைப்பது ஒன்றாகவும் இருப்பதால், அவர் வேலை கையில் எடுத்தாலும், முருகனின் அருள் அவருக்குக் கிடைக்காது,'' என, எடப்பாடி பழனிசாமி அப்போது தெரிவித்திருந்தார்.

இத்தகைய விமர்சனங்களுக்கு அச்சமயத்தில் பிபிசியிடம் பதிலளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, "தமிழ்நாட்டில் முதலில் வேலுக்காக யாத்திரை நடத்தியவர் கலைஞர் கருணாநிதிதான். 1982இல் திருத்தணி கோவில் வேல் காணவில்லை என்பதை அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் ஏற்க மறுத்தார்.

திருச்செந்தூர் கோவில் வேல் மீட்கப்பட வேண்டும், திருடப்பட்ட வேல் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு நடைபயணம் சென்றவர் கருணாநிதி. இறுதியில், வேல் கண்டறிய அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கையை எம்ஜிஆர் வெளியிடவில்லை. கலைஞர் தனது திறமையால் அந்த அறிக்கையை வெளியில் கொண்டு வந்தார்,'' எனத் தெரிவித்தார்.

`முத்தமிழ் முருகன்` மாநாடு நடத்த உள்ளதாக அறிவித்த திமுக - பாஜக, நாம் தமிழர் விமர்சிப்பது ஏன்?
தமிழ் கலாசாரத்தில் முருகன்

இம்மாநாட்டை பாஜகவின் இந்துத்துவ அரசியலுடன் பொருத்திப் பார்ப்பது பொதுபுத்தியால் விளைந்தது என்கிறார், மூத்த பத்திரிகையாளரும் 'கருணாநிதி - எ லைஃப்' உள்ளிட்ட புத்தகத்தின் ஆசிரியருமான ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

"பெரியாருடன் 1930களில் முதல் மொழிப்போரிலிருந்து உடன் இருந்தவர் மறைமலை அடிகளார். அவர் சைவ அறிஞர். தமிழ் மெய்யியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் திருமூலரும் வள்ளலாரும்தான் இருக்கின்றனர். தமிழ் மரபில் இங்கிருக்கும் முதன்மை இசை வடிவம் காவடி சிந்துதான். இது 2,000 ஆண்டுகால மரபின் நீட்சி. முருகனுக்கு மாநாடு எடுப்பதை இதனுடன் தான் பொருத்திப் பார்க்க வேண்டும்" என்றார்.

முருகன் தமிழ் கலாசாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஒரு கருப்பொருள் எனக் கூறும் பன்னீர்செல்வன், முக்கிய இசை வடிவமான 'காவடிச் சிந்து' பாடல்களில் அதிகமான பாடல்கள் முருகனுக்காக பாடப்பட்டுள்ளதை உதாரணமாகக் காட்டினார். "முருகன் தமிழ் கலாசாரத்தின் அடையாளம்" என்றார் அவர்.

"சமபந்தியும் சாதி மறுப்பு திருமணமும்தான் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை. முருகனுக்கும் குறத்திக்குமான உறவு சாதி மறுப்பைத்தான் பேசுகிறது. அதேபோன்று, இந்த இரண்டையும் பாஜக எங்கே பேசுகிறது" என அவர் கேள்வி எழுப்பினார்.

திருவாரூர் தேரைச் சரிசெய்து இயக்கியது, கோவில்களில் அதிகமான குடமுழுக்கு நிகழ்ச்சிகளை நடத்தியது போன்றவற்றையும் குறிப்பிட்ட பன்னீர்செல்வன், இந்து சமய அறநிலையத்துறையே நீதிக்கட்சியின் நோக்கங்களுள் ஒன்றுதான் என்றார்.

பாஜக இதுகுறித்துப் பேசுவது பெரிய விஷயமாக பார்க்கப்படுவதெல்லாம் இந்த தேர்தல் வரைதான் என்றும் சிறிய தோல்வி ஏற்பட்டாலும் அக்கட்சியின் இத்தகைய பேச்சுகள் மக்கள் களத்தில் எடுபடாது என்றும் அவர் கூறினார்.

 
திமுகவும் கடவுளும்
சி.என். அண்ணாதுரை

பட மூலாதாரம்,TWITTER

பெரியார் 1950களில் விநாயகர் சிலைகளை உடைத்தபோது, திராவிடர் கழகத்தின் வழிவந்த திமுக தலைவர் அண்ணா, "பிள்ளையாரை உடைக்கவும் மாட்டேன், பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்" என்றார்.

"ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்பதுதான் கடவுள் குறித்த திமுகவின் நிலைப்பாடாக அண்ணா கூறியது.

"கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாராமாகிவிடக்கூடாது" என 'பராசக்தி' திரைப்படத்தில் வசனம் எழுதினார் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி.

தற்போது, "இந்துக்களுக்கு எதிரானது திமுக" என்ற வாதத்திற்கு எதிராக அக்கட்சியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பலமுறை கருத்து தெரிவித்துள்ளார்.

"எங்கள் கட்சியில் 90% இந்துக்களே உள்ளனர். கோவில்களுக்குச் சென்று வழிபடுவது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம். திமுக இந்து விரோத கட்சி அல்ல" என்றார்.

தங்கள் குடும்பத்தினர் கோவில்களுக்குச் செல்வது அவர்களின் தனியுரிமை சார்ந்தது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/c0jx8y85j3zo

அகதி முகாமில் பிறந்தோருக்கு சட்டத்துக்கு உட்பட்டு குடியுரிமை – சென்னை உயர்நீதிமன்று உத்தரவு

4 days 4 hours ago
அகதி முகாமில் பிறந்தோருக்கு சட்டத்துக்கு உட்பட்டு குடியுரிமை – சென்னை உயர்நீதிமன்று உத்தரவு
March 15, 2024
 

அகதிகள் முகாமில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால் குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசாங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ரவிகுமார் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும். இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த 94 ஆயிரம் பேரில் 59 ஆயிரத்து 500 பேர் முகாம்களில் உள்ளனர்.

இந்த முகாம்களில் வளரும் குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளை பெற இயலாததால், அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கோரி அளித்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், 2022ஆம் ஆண்டு டிசெம்பர் 14ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம், முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெறஉரிமையில்லை என உத்தரவு பிறப் பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த மனு பொதுப்படையாக உள்ளது. முகாமில் இருப்பவர்கள் குறித்த விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், அதை குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

 

https://www.ilakku.org/அகதி-முகாமில்-பிறந்தோருக/

 

முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் நாளை இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலை

6 days 18 hours ago

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன் என்ற ஸ்ரீஹரன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் நாளைய தினம்(13) இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சென்னை மேல்நீதிமன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

முருகன், ஜெயகுமார், ரொபர்ட் பயஸ் 

சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை பெறுவதற்காக இலங்கை உயர்ஸ்தானிகரகத்தினால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கு தமது கணவரை அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக் கோரி முருகனின் மனைவியான நளினி சென்னை மேல் நீதிமன்றில் நீதிப்பேராணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

முருகன் , ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் நாளை இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலை | Santhan Death Rajiv Gandhi Murder India Srilanka

தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மீண்டும் சென்னை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று அதிகாலை ஐந்து மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு மதியம் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகிய இவர்கள் 2022ஆம் ஆண்டளவில் விடுதலையாகியமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/santhan-death-rajiv-gandhi-murder-india-srilanka-1710243159

யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா

1 week 2 days ago
கோவை: யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா - பிபிசி தமிழின் நேரடி விசிட்
கோவை: யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா - பிபிசி தமிழின் நேரடி விசிட்
படக்குறிப்பு,

கடந்த 15 ஆண்டுகளில் கோவை - பாலக்காடு வழித்தடத்தில் 11 யானைகள் இறந்துள்ளன - வனத்துறை தரவுகள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ச.பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 9 மார்ச் 2024

தமிழ்நாடு முழுவதும் யானைகள் ரயில்களில் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறுகிறது. வனத்துறையின் அதிகாரப்பூர்வ தகவலின்படி தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே, ரயில்களில் மோதி 36 யானைகள் மரணித்துள்ளன.

இதில், குறிப்பாக கோவை மாவட்டம் மதுக்கரை அருகே, கோவை – பாலக்காடு வழித்தடத்திலுள்ள இரண்டு ரயில் தண்டவாளங்களில், 2008 முதல் இதுவரையில், 11 யானைகள் மரணித்துள்ளதாக வனத்துறை கூறுகிறது.

குறிப்பாக மதுக்கரையில் கடந்த, 2021 நவம்பர் மாதம் ஒரு குட்டியானை உள்பட மூன்று யானைகள் ரயிலில் அடிபட்டு மரணித்த சோக சம்பவமும் அரங்கேறியது. இதுபோன்று தமிழ்நாட்டில் வன எல்லையிலும், காப்புக் காட்டிற்கு உள்ளேயும் பயணிக்கும் ரயில் தண்டவாளங்களில் யானைகள் மட்டுமின்றி, இதர வனவிலங்குகள் அடிபட்டு மரணித்து வருகின்றன.

இதைத்தொடர்ந்து மதுக்கரை அருகேயும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் யானைகள் ரயிலில் மோதி இறப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம், வனத்துறை மற்றும் தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இந்தியாவில் முதல் முறையாக, ரயில்களில் யானைகள் அடிபட்டு இறப்பதைத் தடுக்க, செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையை கோவையில் வனத்துறை அமைத்துள்ளது. யானைகள் உயிரைக் காக்க இந்தக் கட்டுப்பாட்டு அறை எப்படிச் செயல்படுகிறது?

 
இந்தியாவின் முதல் AI கேமரா கண்காணிப்பு
கோவை: யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா - பிபிசி தமிழின் நேரடி விசிட்

தமிழகத்தைப்போன்று நாட்டில் பல மாநிலங்களில் இதேபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. இதைத் தடுக்க மத்திய ரயில்வே அமைச்சகம், மேற்கு வங்கம், அசாம், ஒடிசா போன்ற மாநிலங்களில், ‘கஜ்ராஜ்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

இத்திட்டத்தில் ரயில்வே தண்டவாளங்கள் அருகே செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) சென்சார்களை பொருத்தி, யானைகள் நடமாட்டம் குறித்து ரயில்வே நிர்வாகத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், கென்யா, ஆப்ரிக்கா போன்ற நாடுகள், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கேமராக்கள், சென்சார்கள் பொருத்தி, மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் யானைகளைப் பாதுகாக்கின்றனர்.

கோவை: யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா - பிபிசி தமிழின் நேரடி விசிட்
படக்குறிப்பு,

24 மணிநேரம் செயல்படும் வகையில் கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது

இதே தொழில்நுட்பத்தை மையமாக வைத்து தற்போது, தமிழ்நாடு வனத்துறை கோவை மதுக்கரையில் செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாடு அறையை அமைத்து, ரயில் தண்டவாளத்தில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

இந்தத் திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது எனவும் வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கட்டுப்பாட்டு அறை எப்படிச் செயல்படுகிறது, எப்படி யானைகள் பாதுகாக்கப்படுகிறது என்பதை அறிய, பிபிசி தமிழ் குழு கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்றிருந்தது.

கோவை மதுக்கரையில் ரயில் தண்டவாளம் அருகே அமைந்திருந்த கட்டுப்பாட்டு அறையை நாம் அடைந்தபோது, அங்குள்ள பணியாளர்கள் மும்முரமாக ரயில்வே மற்றும் வனத்துறை பணியாளர்களுக்கு, தண்டவாளம் அருகே யானைக்கூட்டம் நிற்கும் தகவலைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

12 AI கேமராக்கள் - இரண்டு வகை பார்வை
கோவை: யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா - பிபிசி தமிழின் நேரடி விசிட்
படக்குறிப்பு,

"இந்தியாவிலேயே முதல் முறையாக AI தொழில்நுட்ப உதவியுடன் யானைகள் ரயில் தண்டவாளங்களைக் கடப்பது கண்காணிக்கப்படுகிறது," என்கிறார் சுப்ரியா சாஹூ.

பிபிசி தமிழிடம் பேசிய, கட்டுப்பாட்டு அறை பணியாளர் மணிகண்டன், ‘‘யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க, கோவை – பாலக்காடு வழித்தடத்திலுள்ள இரண்டு ரயில் தண்டவாளங்கள் ‘ஏ டிராக்’ மற்றும் ‘பி டிராக்’ எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தண்டவாளங்களில் மொத்தம், 12 டவர்கள் அமைத்து அதில், 12 AI கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு கேமராவில் சாதாரண வீடியோ மற்றும் வெப்ப காட்சி (Thermal View) என இரண்டு வகை வீடியோக்களை நேரலையாகப் பார்க்க முடியும்.

ரயில் தண்டவாளத்திலும், அதன் இருபக்கமும் 100 அடி வரையில் யானை வந்ததும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் யானை கண்டறியப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் அலாரம் அடித்து எச்சரிக்கை கிடைக்கும்.

யானை கண்டறிந்தவுடன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம், அருகிலுள்ள ரயில் நிலையம், அந்த நிலையத்தின் அதிகாரி மற்றும் வனத்துறை பணியாளர்களுக்கு யானை எந்த டிராக்கில் எத்தனையாவது மைல் கல் அருகே நிற்கிறது என மெசேஜ் அனுப்பப்படும்.

உடனடியாக இந்தத் தகவல் லோகோ பைலட்டுக்கு தெரிவிக்கப்பட்டு ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு ஹாரன் அடித்துக்கொண்டே மிக மெதுவாக ரயில் இயக்கப்படும். யானை மட்டுமின்றி காட்டு மாடு, மான் கூட்டம், சிறுத்தை என எந்த விலங்கு வந்தாலும் எச்சரிக்கை அனுப்பப்படும்,’’ என்கிறார்.

 
24 மணிநேர கண்காணிப்பு
கோவை: யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா - பிபிசி தமிழின் நேரடி விசிட்

மணிகண்டன் நம்மிடம் விவரித்துக் கொண்டிருந்தபோதே ‘பி டிராக்’ பகுதியில் ஒரு குட்டியுடன் ஒரு பெண் யானை தண்டவாளத்தைக் கடந்தது. அதைப் பற்றி ரயில்வே துறைக்கும் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்து, யானை பாதுகாப்பாக தண்டவாளத்தைக் கடந்த பிறகு பேச்சைத் தொடர்ந்தனர்.

மேலும் தொடர்ந்த மணிகண்டன், ‘‘இரு துறைகளுக்கும் மெசேஜ் சென்றாலும், கூடுதலாக நாங்கள் யானையின் நகர்வைப் பொறுத்து கேமராக்களை நகர்த்தி யானையின் நடமாட்டத்தை முழுமையாகக் கண்காணிப்போம்.

இந்தத் தகவல்களை தண்டவாளம் அருகே 24 மணிநேரமும் பணியில் இருக்கும் வனத்துறை பணியாளர்களுக்கு, வாக்கி டாக்கி அல்லது மொபைல் மூலமாக நேரடியாகத் தெரிவிப்போம். அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று யானைகளைப் பாதுகாப்பாக தண்டவாளத்தில் இருந்து காட்டிற்குள் விரட்டிவிடுவார்கள்.

ரயில் வேகத்தைக் குறைப்பது, யானைகளைப் பாதுகாப்பாக வனத்தினுள் விரட்டி அவற்றை ரயில் விபத்தில் இருந்து பாதுகாப்பது ஆகியவைதான் கட்டுப்பாட்டு அறையின் முதன்மைப் பணி. இந்தக் கட்டுப்பாட்டு அறையில் நாங்கள், 4 பேர் 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,’’ என்றார்.

யானைகள் குறித்து 388 முறை எச்சரிக்கை
கோவை: யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா - பிபிசி தமிழின் நேரடி விசிட்
படக்குறிப்பு,

தெர்மல் கேமரா உதவியுடன் இரவிலும் யானையின் நடமாட்டம் கவனிக்கப்படுகிறது.

யானைகள் கண்காணிப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய, தமிழ்நாடு வனத்துறை செயலாளரும் அரசின் முதன்மைச் செயலாளருமான சுப்ரியா சாஹூ, ‘‘கோவை மதுக்கரையில் ‘ஏ டிராக்’ தண்டவாளத்தில் 1.78 கிலோமீட்டர், ‘பி டிராக்’ தண்டவாளத்தில் 2.8 கிலோமீட்டர் தொலைவு, என இரண்டும் 12 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. 7.24 கோடியில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற திட்டம் இதுவரை இல்லை, இது நாட்டின் முதல் முயற்சி," என்றார்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டுமென யோசித்து, தாங்களாகவே இத்திட்டத்தை உருவாக்கி, ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை வைத்து திட்டத்தைச் செயல்படுத்தியதாகவும் சுப்ரியா சாஹூ கூறினார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் யானைகள் கண்காணிப்பு திட்டத்தின் சோதனை ஓட்டம் துவங்கப்பட்டு இதுவரை மட்டுமே, 388க்கும் மேற்பட்ட எச்சரிக்கை ரயில்வே நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார் அவர்.

அதோடு, ‘‘யானை தண்டவாளத்திலோ, அதற்கு அருகில் வன எல்லையிலோ நின்றால், செயற்கை நுண்ணறிவு தாமாக யானைகளைக் கண்டறிந்து நமக்குத் தகவல் தருகிறது. பணியாளர்கள் மூலம் யானைகள் வனத்தினுள் விரட்டப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்தக் கட்டுப்பாட்டு அறைக்கு அருகே, யானைகள் வனத்தினுள் கடந்து செல்ல இரண்டு இடங்களில் சுரங்கப் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களால் யானைகள் தண்டவாளத்தைப் பாதுகாப்பாகக் கடந்து செல்வதுடன், யானை – ரயில் மோதல் விபத்து சம்பவங்கள் தவிர்க்கப்படுகின்றன.

அதிக ரயில் விபத்துகள் ஏற்படும் கோவை, தருமபுரி, ஓசூர் மற்றும் மனித – யானை மோதல் அதிகளவில் நிகழும் கூடலூர் என, ஐந்து இடங்களில் இத்திட்டத்தை விரைவில் வனத்துறை செயல்படுத்த உள்ளது,’’ என்றார்.

பிபிசி தமிழிடம் பேசிய கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் சந்தோஷ், ‘‘தண்டவாளத்தில் நின்ற யானை, தண்டவாளத்தின் இருபுறமும் 100 அடிக்குள் நின்ற யானைகள், வனத்தினுள் இருந்து தண்டவாளத்தை நோக்கி நகரும் யானைகள் என அனைத்தையும் பற்றி எச்சரிக்கைகளை வழங்கியுள்ளோம். அந்த வகையில்தான் 6 மாதத்தில் 388 எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், யானைகள் தண்டவாளத்தில் நின்ற சம்பவம் என்றால் அதிகபட்சமாக, 60 சம்பவங்கள்தான் இருக்கும்,’’ என விளக்கியுள்ளார்.

ரயிலில் அடிபடும் யானைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘பயணம் மிக எளிதாகிறது – விபத்து தவிர்க்கப்படுகிறது’

இந்த வழித்தடத்திலுள்ள எட்டிமடை ரயில்வே நிலைய அலுவலர் செளவுரவ் குமார், ‘‘இந்த கேமரா திட்டம் வருவதற்கு முன்பு யானைகள் எங்கு நிற்கிறது, எத்தனை யானைகள் நிற்கின்றன என எந்தத் தகவலும் தெரியாது.

பகலிலாவது லோகோ பைலட்கள் மெதுவாக வருவார்கள், கண்களால் வனத்தைப் பார்க்க முடியும். ஆனால் இரவு நேரங்களில் எதுவுமே தெரியாது. இந்தத் திட்டம் துவங்கப்பட்டபின், இரவு நேரங்களிலும் யானைகள் குறித்த தகவலை வனத்துறை வழங்குகின்றனர்," என்றார்.

"யானை எந்த மைல் (கி.மீட்டர் தொலைவில்) கல் அருகே நிற்கிறது, எத்தனை யானைகள் நிற்கின்றன, தண்டவாளத்தில் நிற்கிறதா இல்லை அருகிலா என அனைத்து தகவல்களையும் வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

யானை நிற்பதாக தகவல் வந்ததும் நாங்கள் எங்கள் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிப்போம், லோகோ பைலடுக்கு கட்டுப்பாட்டு அறை தகவல் உடனடியாகத் தெரிவித்ததும், சாதாரணமாக 70 கிலோமீட்டருக்கு மேல் செல்லும் ரயிலின் வேகத்தை 20 – 30 கி.மீ வேகமாகக் குறைப்பார்கள்.

மேலும், 2 கி.மீ தொலைவுக்கு முன்பிருந்தே ஹாரன் அடித்துக்கொண்டு பாதுகாப்பாக வருவார்கள். இந்தத் திட்டம் யானைகள் விபத்தில் சிக்குவதைத் தவிர்க்கிறது,’’ என்றார்.

https://www.bbc.com/tamil/articles/crg9n4vv12zo

ஈரோடு: பட்டியல் சாதி இளைஞரை ஆணவக்கொலை செய்ய முயன்ற பெண்ணின் பெற்றோர், சிறுமி பலி - என்ன நடந்தது?

1 week 3 days ago
ஆணவப்படுகொலை

பட மூலாதாரம்,TN POLICE

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ச.பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 8 மார்ச் 2024

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, மகளை திருமணம் செய்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை, ஆதிக்க சாதி பெண்ணின் தந்தை டெம்போ ஏற்றி ஆணவக்கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது மகனின் இருசக்கர வாகனத்தை டெம்போவால் இடித்துவிட்டு, உயிர் இருக்கிறதா என்பதை பெண்ணின் தந்தை இறங்கி வந்து பார்த்ததாக தாயார் மகேஷ்வரி கூறுகிறார். இந்தச் சம்பவம் குறித்துப் பேச முயன்றபோது குற்றம் சாட்டப்பட்ட பெற்றோரின் குடும்பத்தினர் பிபிசியிடம் பேச முன்வரவில்லை.

இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் படுகாயமடைந்து அவரின் தங்கை இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆணவக் கொலைக்கான காரணம் என்ன?

டெம்போ ஏற்றியதில் தங்கை பலி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள எரங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஜெயபிரகாஷ் – மகேஸ்வரி தம்பதியின் மகன் சுபாஷ் (24). பட்டியலினத்தைச் சேர்ந்த சுபாஷ் 2023 அக்டோபர் மாதம், அருகிலுள்ள காந்தி நகரில் வசிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த விவசாயி சந்திரன் மகள் மஞ்சு (22) என்பவரைக் காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார்.

சாதியரீதியில் பல தடைகளைத் தாண்டி திருமணம் செய்த சுபாஷ், எரங்காட்டூரில் வசித்து ஆம்புலென்ஸ் தொழில் செய்து வாழ்ந்து வருகிறார்.

 
ஆணவப்படுகொலை

பட மூலாதாரம்,TN POLICE

படக்குறிப்பு,

எரங்காட்டூர் – சத்தியமங்கலம் ரோட்டில் இருவரும் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, திடீரென வேகமாக வந்த டெம்போ இவர்கள் மீது மோதியது.

இப்படியான நிலையில், மார்ச் 6ஆம் தேதி காலை சுபாஷ், 10ஆம் வகுப்பு பயின்று வந்த தனது தங்கை ஹாசினியை (15) பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

எரங்காட்டூர் – சத்தியமங்கலம் ரோட்டில் இருவரும் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, திடீரென வேகமாக வந்த டெம்போ இவர்கள் மீது மோதியது. விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்த நிலையில், அப்பகுதியில் இருந்த மக்கள் இருவரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தினர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஹாசினி மார்ச் 6ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக மரணித்தார், சுபாஷ் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

முதல்கட்டமாக வெறும் விபத்து வழக்காகப் பதிவு செய்யப்பட்ட நிலையில், விபத்து சம்பவம் நடக்கும்போது அருகில் இருந்தவர்கள் விபத்தை ஏற்படுத்தியது மஞ்சுவின் தந்தை சந்திரன் என சாட்சியம் கொடுத்துள்ளனர்.

அதன்பின், கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட மஞ்சுவின் தந்தை சந்திரன், தாய் சித்ரா உள்பட ஆறு பேரை பவானிசாகர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில் சுபாஷின் உறவினர்கள், சிறுமி கொல்லப்பட்டதைக் கண்டித்து சந்திரனின் தோப்பிற்குள் இருந்த வீட்டையும், காரையும் சேதப்படுத்தியதால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 
'கொன்றுவிட்டு உயிர் இருக்கிறதா என்று பார்த்தார்கள்'
ஆணவப்படுகொலை

பட மூலாதாரம்,TN POLICE

படக்குறிப்பு,

ஹாசினியின் இறுதி அஞ்சலி நிகழ்வு

இந்தச் சம்பவம் தொடர்பாக, பிபிசி தமிழிடம் தொலைபேசி வாயிலாகப் பேசிய ஹாசினியின் தாய் மகேஷ்வரி, ‘‘என் பெண்ணுக்கு அன்று பள்ளிக்குப் போகத் தாமதமானதால் நானே சாப்பாடு ஊட்டிவிட்டு அனுப்பினேன். என் மகன் சுபாஷும், ஹாசினியும் ஸ்கூட்டியில் புறப்பட்டிச் சென்றனர். அவர்கள் கிளம்பிய சில நிமிடங்களிலேயே விபத்து நடந்துவிட்டதாகத் தகவல் வந்தது," என அன்று நடந்தவை குறித்துக் கூறினார்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோதே தனது மகள் இறந்துவிட்டதாகக் கூறிய ஹாசினியின் தாய் மகேஷ்வரி, தனது மகனுக்கு இடுப்பில் அறுவை சிகிச்சை செய்திருப்பதாகவும் கண்ணீருடன் தெரிவித்தார்.

தனது மருமகளின் பெற்றோரான சந்திரன் - சித்ரா குடும்பத்தைத் தங்களுக்கு நன்றாகத் தெரியும் எனக் கூறும் மகேஷ்வரி, தனது மகள் ஹாசினியை சித்ராதான் பள்ளியிலேயே சேர்த்துவிட்டதாகவும் கூறுகிறார்.

இந்நிலையில், "என் மகளைப் பள்ளியில் சேர்த்த சித்ராவே அவளைக் கொலை செய்துவிட்டாரே!" என்று கூறிக் கண்ணீர்விட்டார்.

மஞ்சுவின் பெற்றோர் அவ்வப்போது தங்கள் வீட்டிற்கு வந்து தகராறு செய்து கொண்டிருந்ததாகக் கூறும் அவர், "மகளைப் பெற்றவர்கள் என்பதால் கோவம் இருக்கும் என நினைத்து விட்டுவிடுவோம். ஆனால், கொலை செய்யும் அளவுக்குச் செல்வார்கள் என்று நினைக்கவே இல்லை," என்கிறார் சுபாஷின் தாய் மகேஷ்வரி.

சந்திரன் டெம்போவில் வந்து ஸ்கூட்டியை இடித்துவிட்டு, தனது மகனும் மகளும் இறந்துவிட்டார்களா என்பதை இறங்கி வந்து பார்த்துவிட்டு, மனைவி சித்ராவின் இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றதாகத் தெரிவித்தார் மகேஷ்வரி.

"கொன்றுவிட்டு உயிர் இருக்கிறதா என்பதை இறங்கி வந்து பார்த்திருக்கிறார்கள். இந்தத் தகவலை என் மகன் என்னிடம் சொன்னபோது உடைந்துவிட்டேன்," என்றார் கண்ணீருடன்.

இந்தச் சம்பவம் குறித்துப் பேச மஞ்சுவின் பெற்றோர் தரப்பில் பேசப் பலமுறை முயன்றும் அவர்கள் பதில் அளிக்க முன்வரவில்லை.

 
ஆணவக் கொலை நடந்தது எப்படி?
ஆணவப்படுகொலை

பட மூலாதாரம்,TN POLICE

படக்குறிப்பு,

ஹாசினியின் உடலை சுமந்து வந்த உறவினர்கள்

ஆணவக்கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள சந்திரன் வாக்குமூலத்தில் என்ன கூறினார் என்பது குறித்து சத்தியமங்கலம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் பிபிசி தமிழிடம் விளக்கினார்.

பட்டியல் சாதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சுபாஷ், ஆதிக்க சாதியைச் சேர்ந்த சந்திரனின் ஒரே மகளான மஞ்சுவை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், "விவசாயம், ரியல் எஸ்டேட், ஃபைனான்ஸ் எனப் பல தொழில்களைச் செய்து வரும் சந்திரன், தனது மகள் மாற்று சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டதால் கோபத்தில் இருந்துள்ளார்.

திருமணம் ஆனதில் இருந்தே சுபாஷின் வீட்டுக்குச் சென்ற சந்திரன் மற்றும் சித்ரா தம்பதி தகராறு செய்து, சாபம் விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். கைதான பின் கொலை செய்ததற்கான காரணமாக இதைத்தான் வாக்குமூலத்திலும் தெரிவித்துள்ளனர்," என்று கூறுகிறார் டி.எஸ்.பி சரவணன்.

சம்பவம் நடந்த அன்று, "கோபத்தில் இருந்த சந்திரன் தனது டெம்போவை வைத்து சுபாஷின் இருசக்கர வாகனத்தில் இடித்துக் கொலை செய்ய முயன்றதில் சுபாஷ் படுகாயமடைந்து அவரின் தங்கை ஹாசினி இறந்துள்ளார்,’’ என்றார்.

மேலும், தனது சாதியைச் சேர்ந்தவர்களை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை என்ற காரணதால் சந்திரன் கடும் கோபத்தில் இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக டி.எஸ்.பி சரவணன் கூறுகிறார்.

இந்த நிலையில், "பல நாட்கள் காத்திருந்து, சுபாஷின் செயல்பாடுகளைக் கண்காணித்து, கொலை செய்ய நினைத்தவர், சுபாஷுடன் சிறுமி இருந்ததைப் பற்றிப் பொருட்படுத்தவில்லை எனவும்" டி.எஸ்.பி சரவணன் கூறினார்.

 
‘கர்ப்பமாக இருக்கும் மனைவி’
ஆணவப்படுகொலை

பட மூலாதாரம்,TN POLICE

படக்குறிப்பு,

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்

‘5 மாதமாகங்களாக சுபாஷிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறதே, போலீஸார் பாதுகாப்பு கொடுக்கவில்லையா?’ என்ற கேள்வியை முன்வைத்தோம்.

கடந்த 5 மாதங்களாக சுபாஷிற்கு கொலை மிரட்டல் வந்திருந்தபோதிலும், போலீசார் ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை எனக் கேட்டபோது, "பல முறை கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்ட போதிலும், அதுதொடர்பாக சுபாஷ் தரப்பில் புகார் அளிக்கப்படவில்லை," என்றார்.

மேலும் விசாரணையின்போது, சுபாஷின் மனைவி மஞ்சு கர்ப்பமாக இருப்பதாகவும் குழந்தை பிறந்தால் பிரச்னை சரியாகிவிடும் என்று நம்பியதாலும் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று சுபாஷ் குடும்பத்தினர் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

 
‘அசாதாரண சூழல் ஏதும் இல்லை – கண்காணிக்கப்படுகிறது!
ஆணவப்படுகொலை

பட மூலாதாரம்,TN POLICE

படக்குறிப்பு,

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்

பிபிசி தமிழிடம் பேசிய ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், "ஆணவக்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி கொலையில் ஈடுபட்ட சந்திரன், அவரது மனைவி சித்ரா உள்பட ஆறு பேரை உடனடியாகக் கைது செய்துள்ளோம். எந்தப் பிரச்னையுமின்றி சிறுமியின் சடலத்தை உடற்கூராய்வு செய்து ஒப்படைத்து, உடல் நல்லடக்கமும் முடிந்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசின் நிவாரணம் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இந்தக் கொலை சம்பவத்தைப் பொறுத்தவரையில் அசாதாரண சூழல் ஏதும் இல்லை. இரு குடும்பத்தினரின் வீடுகள் மற்றும் கிராமத்தில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்," என்றார்.

சாதி மனிதனை கொடூர ஆணவக்கொலைகளைச் செய்யும் அளவுக்குத் தூண்டுவதாகக் கூறும் சமூக ஆர்வலர்கள், "தமிழ்நாடு அரசு ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் உருவாக்கி, கடும் தண்டனை கொடுத்தால் ஒழிய சாதிய படுகொலைகள் குறையாது," எனவும் வலியுறுத்துகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c723xjrj12jo

மகளிர் தினம் : மாற்றுத்திறனாளி ரூபா வாழ்க்கையில் உயரத்தை எட்டி சாதனை படைத்த கதை

1 week 4 days ago
மகளிர் தினம் : உடல் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி ரூபா வாழ்க்கையில் உயரத்தை எட்டி சாதனை படைத்த கதை
மாற்றுத்திறனாளி பெண் ரூபா
படக்குறிப்பு,

சாதனைப் பெண் ரூபா.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஹேமா ராகேஷ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 8 மார்ச் 2024, 02:29 GMT
    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னை வண்டலூரைச் சேர்ந்த 41 வயதான ரூபா வைரபிரகாஷ் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி. உயரக் குறைபாடு (Dwarfism) காரணமாக சிறுவயதில் இருந்தே இவருக்கு வளர்ச்சிதையில் சவால்கள் இருந்ததால் அவர் உயரம் குறைந்தவராக காணப்படுகிறார்.

இதனால் இவருடைய பள்ளிப்படிப்பை 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். ஆனாலும் வாழ்வின் மீது இருந்த பற்று மற்றும் ஆர்வம் காரணமாக தொடர்ந்து பல்வேறு பணிகளில் ஈடுபாடு கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும் போசியா விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கமும் வென்றுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “இந்த வாழ்க்கையில் என்னால் எதுவுமே செய்யமுடியவில்லை என்று பல நேரம் நினைத்து வருந்தியிருக்கிறேன். இன்னும் படித்திருக்கலாமோ என்று நினைத்திருக்கிறேன். இனி அவ்வளவு தான் நம் வாழ்க்கை நினைத்திருந்த நேரத்தில் தான் மாற்றுத் திறனாளிகளுக்கான போசியோ போட்டியில் நான் தங்கப்பதக்கம் வென்றேன். அந்த நொடி மீதம் இருக்கும் வாழ்வை வாழ்வதற்கான உந்து சக்தியை கொடுத்திருக்கிறது “ என புன்னகைக்கிறார் ரூபா வைரபிரகாஷ்.

 
மாற்றுத்திறனாளி பெண் ரூபா
படக்குறிப்பு,

ரூபாவின் குடும்பத்தில் பிறந்த 5 பெண்களில் ஐந்தாவதாக பிறந்தவர் ரூபா.

ரூபாவின் குடும்பம்

ரூபாவின் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பெண்கள். அவர் தான் ஐந்தாவது பெண். இவருக்கு இரண்டு அண்ணன்களும் உள்ளனர். இவருக்கு சிறு வயதிலிருந்தே இந்த உயரம் குறைபாடு இருக்கின்றது .

ஆனால் அவருடைய பெற்றோர்கள் இந்த குறைபாட்டை நினைத்து அவர் வருந்தி விடக் கூடாது என்று கவனமாக இருந்ததாக குறிப்பிடுகிறார் ரூபா.

“சிறுவயதிலிருந்தே நான் என்ன கேட்டாலும் என்னுடைய வீட்டில் எனக்கு வாங்கிக் கொடுத்து விடுவார்கள். நான் எங்கும் செல்ல முடியவில்லை என்று என்னை அவர்கள் நினைக்க வைத்ததில்லை. அதனால் பெரிதாக எதைப் பற்றியும் சிந்திக்காமல் தான் என்னுடைய பள்ளிப்பருவம் கழிந்தது. நான் என்னுடைய வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தேன். எனக்கு அப்போது படிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் வரவில்லை. ஏனென்றால் நான் படித்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பிற்கு மேல் இல்லை. அதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் எதுவும் பள்ளியில் ஏற்படுத்தாத காரணத்தினால் அதற்கு பிறகு என்னால் படிக்க முடியவில்லை” என்று தனது மழையை நினைவு கூர்கிறார் அவர்.

ஆனால் “இன்று நான் கல்வியின் அவசியத்தை உணர்ந்து இருக்கிறேன். என் உறவினர்கள் என் உறவினர் வீட்டு பிள்ளைகள் அவர்களுடைய வீட்டுப்பாடத்தை எழுதும் போது நானும் அவர்களுடன் இருந்து கவனித்தேன். அதனால் எனக்கு இருந்த அறிவை வைத்து சிறு சிறு எழுத்துக்களை நான் எழுதப் படிக்க தெரிந்து கொண்டேன்” என்கிறார் ரூபா.

 
மாற்றுத்திறனாளி பெண் ரூபா
படக்குறிப்பு,

இணையம் வழியாக பல்வேறு விஷயங்களை தெரிந்துக்கொண்டுள்ளார் ரூபா.

தானாகவே கற்றுக்கொண்ட ரூபா

ரூபா பள்ளிக்கு சென்று ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் படிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணத்தினால் கதைகள் கவிதைகள் உள்ளிட்டவற்றை எழுத்துக்கூட்டி படித்திருக்கிறார். கணிப்பொறியின் மீது அவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது.

அதனால் இணையம் வந்த புதிதில் கணிப்பொறியை எப்படி இயக்குவது என தன்னுடைய நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறார். அதற்குப் பிறகு தனக்கு தேவையான தகவல்களை கூகுளில் சிறு சிறு வார்த்தைகளாக டைப் செய்து அதன் மூலமாக எழுத படிக்க கற்றுக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “எனக்கு இணையம் மிகவும் உதவிகரமாக இருந்தது. எனக்கு உயரம் குறைவாக இருப்பதின் காரணமாக என்னால் மற்றவரின் உதவி இல்லாமல் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாது. என்னுடைய கைகளும் கால்களும் உயரம் மிக குறைவாக இருப்பதால் எனக்கு நேராக கைபேசி மற்றும் கணிப்பொறி இருந்தால் மட்டுமே என்னால் அவற்றை இயக்க முடியும். அதனால் எப்போதும் எனக்கு ஒருவரின் துணை இருக்க வேண்டி இருந்தது.”

“இணையம் வந்த புதிதில் ஏதாவது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் கூகுளை பயன்படுத்த தொடங்கினேன். அதற்கு பிறகு தொடர்ந்து எனக்கு அதில் ஆர்வம் ஏற்பட சிறு சிறு வார்த்தைகள் போன்றவற்றை பயன்படுத்த தொடங்கினேன். அதிலிருந்து பல்வேறு தகவல்களையும் நான் தெரிந்து கொள்ள தொடங்கினேன். அது என்னுடைய நேரத்தை மிகவும் உபயோகமாக மாற்றியது. கூகுள் மூலம் ஷேர் மார்க்கெட் எப்படி இயங்குகிறது என்பதை கற்றுக்கொண்டு அதையும் நான் ஒரு முறை முயன்று பார்த்திருக்கிறேன். பணத்தையும் அதில் முதலீடு செய்து இருக்கிறேன்” என்கிறார் ரூபா.

 
மாற்றுத்திறனாளி பெண் ரூபா
படக்குறிப்பு,

5ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த ரூபா தானாகவே பல புத்தகங்களையும் படிக்க கற்றுக்கொண்டுள்ளார்.

வாழ்க்கைப் பாதையை மாற்றிய சந்திப்பு

தான் உயரம் குறைவாக பிறந்து விட்டாலும் இந்த உலகில் பல விஷயங்களை சாதிக்க வேண்டும் என்று ரூபா பலமுறை எண்ணியிருக்கிறார். அப்படி அவர் நினைத்திருக்கும் நேரத்தில் தான் அவருடைய நண்பராக இருந்த மோகன் என்பவரை சந்தித்திருக்கிறார் .அவரும் ஒரு மாற்றுத்திறனாளி தான்.

இருவரும் சேர்ந்து தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு அறக்கட்டளையை உருவாக்கி தசை சிதைவு நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்னென்ன என்பது பற்றிய விழிப்புணர்வை தங்களுடைய அறக்கட்டளையின் மூலம் ஏற்படுத்துகிறார்கள். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இது தொடர்பான மருத்துவ முகாமையும் அவர்கள் நடத்தி வருகிறார்கள்.

“இப்போது பல நிகழ்ச்சிகளுக்கு தன்னம்பிக்கை பேச்சாளராக அழைக்கிறார்கள். என்னுடைய வாழ்க்கையை நான் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன், சவாலாக இருக்கக்கூடிய பிரச்சனைகளை நான் எப்படி சந்தித்து என்னுடைய வாழ்க்கையையும் என்னை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன் என்பதை நான் செல்லும் இடமெல்லாம் அனைவருக்கும் உணர்த்தி இருக்கின்றேன். பலரும் உங்களுடைய பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது என்றும், எங்களுடைய வாழ்க்கைக்கு அது வழிகாட்டுதலாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்” என்று பெருமிதத்தோடு கூறுகிறார் ரூபா.

தன்னம்பிக்கை அளிக்கும் ரூபா

“பல நேரங்களில் எனக்கு பல்வேறு நபர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வரும். அவர்களுடைய வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை என்னிடம் கூறிவிட்டு இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் வழி கேட்பார்கள். நானும் எனக்கு தெரிந்தவற்றை சொல்லுவேன். அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஏனென்றால் நான் ஒரு காலகட்டம் முன்பாக வரை என்னால் முடியுமா என்று இருந்த நிலை மாறி இன்றைக்கு என்னை பார்த்து பல பேர் நம்பிக்கையோடு தங்களுடைய வாழ்க்கையில் செயல்படுவதை நான் பெருமையாக கருதுகிறேன்” என்கிறார் ரூபா.

 
மாற்றுத்திறனாளி பெண் ரூபா
படக்குறிப்பு,

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் ரூபாவின் அணி தங்கம் வென்றது.

மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டியில் தங்கப் பதக்கம்

எப்போதும் தேடலை மட்டுமே துணையாக கொண்ட ரூபா அதன் பலனையும் அடைந்துள்ளார். உயரம் குறைவாக இருப்பதினால் நடக்க முடியாது ஓட முடியாது என்பதை மாற்றி மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்க அவர் முடிவு செய்தார்.

அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் பங்கேற்க அவர் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டார். இறுதிப்போட்டியில் அவருடைய அணி தங்கப் பதக்கம் வென்றது மிகப்பெரிய மகிழ்ச்சியையும் திருப்தி உணர்வையும் ரூபாவிற்கு கொடுத்திருக்கிறது.

இதுகுறித்து பேசுகையில் “மாற்றுத் திறனாளியான நீ என்ன செய்ய முடியும் , உன்னால் என்ன சாதிக்க முடியும் இறுதி வரை நான்கு சுவருக்குள் தான் உன்னுடைய வாழ்க்கை கழியும் என பல பேர் என்னை பற்றி நினைத்திருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் நான் தகர்த்தெறிய விரும்பினேன். மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் போசியா போட்டியில் பங்கேற்க முடிவு செய்து அதற்கான தொடர்ந்து பயிற்சியை எடுத்தேன். பயிற்சியின் விளைவாக 2019 ஆம் ஆண்டு என்னுடைய அணி தங்கப் பதக்கம் வென்றது” என்கிறார் ரூபா.

இப்போதும் கூட தனக்கு பல ஆசைகள் இருப்பதாக கூறும் அவர், நிறைய இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டும் என்றும், அதிக மக்களை சந்திக்க வேண்டும் என்றும் விரும்புகிறார். அதற்காக ஒவ்வொரு அடியாக நிதானமாக, அதேசமயம் பலமாக எடுத்து வைத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

https://www.virakesari.lk/article/178121

இலங்கை துணை தூதரகத்துக்கு முருகன் சென்றுவர அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

1 week 4 days ago
இலங்கை துணை தூதரகத்துக்கு முருகன் சென்றுவர அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு
March 8, 2024
 

murugan இலங்கை துணை தூதரகத்துக்கு முருகன் சென்றுவர அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகனுக்கு கடவுச்சீட்டு பெறுவதற்கான நேர்காணலுக்காக இலங்கைத் துணை தூதரகம் சென்று வர அனுமதி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி அவரது மனைவி நளினி சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றம் 7 பேரையும் விடுவித்தது. இந்த நிலையில், இலங்கை குடிமகன் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் எனது கணவர் முருகன் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதால், அனைத்து நாடுகளுக்கும் செல்வதற்கான கடவுச்சீட்டு வழங்க கோரி இருவரும் விண்ணப்பித்திருந்தோம். நேர்காணலுக்காக ஜனவரி 30 ஆம் திகதி அழைக்கப்பட்டோம். என்னுடைய நேர்காணல் முடிந்துவிட்டது. இந்த நேர்காணலில் கலந்துகொள்ள அனுமதிக்காததால், கணவர் முருகன், இலங்கை துணை தூதரகம் அழைத்தபோது ஆஜராக முடியவில்லை. திருச்சி முகாமில் உள்ள மோசமான சூழல் காரணமாக ஏற்கெனவே ஒரு மாதத்தில் 2 பேர் இறந்துள்ளனர். எனவே, என்னுடைய கணவருக்கு எதுவும் நடப்பதற்கு முன்பாக, நாங்கள் இருவரும் மகளுடன் சேர்ந்துவாழ விரும்புகிறோம்.

எனவே எனது கணவர் முருகன் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்குச் சென்று நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அங்கு சென்று வருவதற்கு பாதுகாப்பு தேவைப்படும்பட்சத்தில், உரிய பாதுகாப்பு வழங்க பொலிஸாருக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.ilakku.org/இலங்கை-துணை-தூதரகத்துக்க/

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 24வது முறையாக நீட்டிப்பு…!

1 week 5 days ago
senthil-balaji--640x375.webp செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 24வது முறையாக நீட்டிப்பு…!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 24வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் திகதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் 3000 பக்கங்களுடன் கூடிய  குற்றப்பத்திரிகையைத்  தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஒரு நாடல்ல’ - ஆ.ராசா பேச்சுக்கு பாஜக கண்டனம்

1 week 6 days ago
06 MAR, 2024 | 02:24 PM
image

இந்தியா ஒரு நாடல்ல என்ற திமுக எம்.பி. ஆ.ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் கோவையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசும்போது, “இந்தியா ஒரு நாடல்ல. ஒரே நாடு என்றால் ஒரே பண்பாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் இருக்க வேண்டும். எனவே இந்தியா நாடல்ல, இது துணைக் கண்டம். இங்கு தமிழ், மலையாளம், ஒரியா என பல மொழிகள் பேசும் தேசங்கள் உள்ளன. இத்தனை தேசிய இனங்களையும் சேர்த்தால் அது இந்தியா” என்று கூறியிருந்தார்.

இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக ஐ.டி. பிரிவின் தலைவர் அமித் மாளவியா தனது ‘எக்ஸ்’ பதிவில், “திமுகவின் நிலைப்பாட்டில் இருந்து வெறுப்புப் பேச்சுகள் குறைவின்றி தொடர்கின்றன.

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்த பிறகு இப்போது ஆ.ராசா இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக அழைப்பு விடுக்கிறார், பகவான் ராமரை கேலி செய்கிறார், மணிப்பூர் மக்களை இழிவுபடுத்தும் கருத்துகளை கூறுகிறார்.

ஒரு தேசமாக இந்தியா என்ற கருத்தை கேள்விக்குள்ளாக்குகிறார். காங்கிரஸும் இண்டியா கூட்டணியின் மற்ற கட்சிகளும் அமைதியாக இருக்கின்றன. இவர்களின் உத்தேச பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியும் மவுனம் காக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமித் மாளவியா தனது பதிவுடன் ஆ.ராசா உரையின் வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார். மேலும் ஆ.ராசா உரையின் ஆங்கில மொழி பெயர்ப்பையும் இணைத்துள்ளார்.

இந்நிலையில் ஆ.ராசாவின் இந்தக் கருத்தை காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட். கூறும்போது, “ஆ.ராசாவின் கருத்துகளை நான் 100 சதவீதம் ஏற்கவில்லை. இத்தகைய கருத்தை நான் கண்டிக்கிறேன்.ராமர் அனைவருக்கும் சொந்தமானவர், அனைத்தையும் உள்ளடக்கியவர் என்று நான் நம்புகிறேன். அது, ஆ.ராசாவின் சொந்த கருத்தாக இருக்கலாம். அதை நான் ஆதரிக்கவில்லை. ஒருவர் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

https://www.virakesari.lk/article/178074

அய்யா வைகுண்டர் யார்? அவர் சனாதனத்தைப் பாதுகாத்தாரா?

1 week 6 days ago
அய்யா வைகுண்டர் சனாதனத்தைப் பாதுகாத்தாரா? ஆளுநர் பேச்சுக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?

பட மூலாதாரம்,FACEBOOK

கட்டுரை தகவல்
  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 6 மார்ச் 2024, 08:09 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

“சனாதன தர்மத்தைக் காப்பதற்கே அய்யா வைகுண்டர் தோன்றினார்” என, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது, அவரின் சமீபத்திய சர்ச்சைகளுள் ஒன்றாக மாறியுள்ளது. ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. என்ன நடந்தது?

அய்யா வைகுண்டரின் 192-ஆவது அவதார தின விழா மற்றும் ‘வைகுண்டசாமி அருளிய சனாதன வரலாறு' என்ற புத்தக வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகள், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் மார்ச் 4 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “அய்யா வைகுண்டர் தோன்றிய காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலம்; சனாதன தர்மத்தை காப்பதற்கே அய்யா வைகுண்டர் தோன்றினார்” என என்றார்.

இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில், “அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்துக்கு புத்துயிரூட்டி, பெரிதும் வளப்படுத்தினார். சமூக பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடி, விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமூக நீதியை உறுதி செய்தார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
அய்யா வைகுண்டர் சனாதனத்தைப் பாதுகாத்தாரா? ஆளுநர் பேச்சுக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?

பட மூலாதாரம்,RAJ BHAVAN, TAMILNADU/X

படக்குறிப்பு,

தலைப்பாகை அணிந்துகொண்டு அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ஆர்.என். ரவி.

வலுக்கும் எதிர்ப்பு

வைகோ வெளியிட்ட அறிக்கையில், “சாதி சமய வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை வலியுறுத்திய, சனாதனத்தின் எதிரியாகத் திகழ்ந்த அய்யா வைகுண்டரை சனாதனத்தின் காவலர் என்று ஆளுநர் உளறிக் கொட்டியிருக்கிறார். இந்துத்துவா கோட்பாட்டுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் பிரசாரகர் போல ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செயல்பட்டு வருவது கடுமையான கண்டனத்துக்குரியது” என தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சாமிதோப்பு தலைமை பதி அடிகளார் பாலபிரஜாபதி, “ஆளுநர் வெளியிட்ட புத்தகம், அய்யா வைகுண்டர் வரலாற்றை திரிக்கும் முயற்சி. சனாதனத்தின் வேராக மனுதர்மம் இருக்கிறது. சனாதனத்திற்கு எதிரான செயல்களைத்தான் அய்யா வைகுண்டர் செய்திருக்கிறார்."

"பெண்ணடிமைத்தனம், சாதியத்திற்கு எதிரானவற்றை தான் செய்திருக்கிறார். இவை இரண்டுக்கும் ஆதரவானது சனாதனம். புராணமும் ஆகமங்களும் பொய்யானவை என கூறியிருக்கிறார். வைகுண்டரை அறிந்துகொண்டு தான் பேச வேண்டும். அவர் பேசியது தவறானது” என்றார்.

மேலும் பேசிய அவர், “பெண்கள் மேலாடை அணியக் கூடாது, குடத்தில் தண்ணீர் பிடிக்கக் கூடாது, தெருவுக்குள் வரக்கூடாது என்ற அடக்குமுறையெல்லாம் எதிர்த்தவர் அய்யா. இந்த வழிபாட்டில், உருவ வழிபாடு, பூஜை, புனஸ்காரம், ஹோமம் வளர்த்தல், யாகங்கள், மந்திரங்கள் இல்லை, அவரவர் தாய்மொழியிலேயே வழிபட முடியும். சமஸ்கிருதத்தில்தான் மந்திரம் சொல்ல வேண்டும் எனக்கூறும் சனாதனத்தை இதில் ஒப்பிடக் கூடாது” என்றார்.

அய்யா வைகுண்டர் வழிபாட்டின் தனித்துவம் என்ன? அய்யா வைகுண்டர் உண்மையில் சனாதனத்தைப் பாதுகாத்தவரா? அய்யா வைகுண்டர் வழிபாட்டை பின்பற்றுபவர்கள் என்ன சொல்கின்றனர்?

 
அய்யா வைகுண்டர் சனாதனத்தைப் பாதுகாத்தாரா? ஆளுநர் பேச்சுக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?

பட மூலாதாரம்,FACEBOOK

அய்யா வைகுண்டர் யார்?

19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு பகுதியில் பிறந்தவர் அய்யா வைகுண்டர். “அவரின் இயற்பெயர் முத்துக்குட்டி” என்கிறார், வரலாற்று ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன்.

அக்காலத்தில், கன்னியாகுமரி, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ளடங்கியிருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மன்னரின் ஆட்சியின்கீழ் நாடார்கள், ஈழவர்கள் உள்ளிட்ட 18 தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது ஒடுக்குமுறைகள் நிலவிவந்தன.

பெண்கள் மேலாடை அணியக் கூடாது, குடத்தில் தண்ணீர் பிடிக்கக் கூடாது, தெருவுக்குள் வரக்கூடாது என பல அடக்குமுறைகள் நிலவியதாக கூறுகிறார், ஆ.சிவசுப்பிரமணியன்.

பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க வேண்டுமானால் வரி செலுத்த வேண்டும் என திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கொடும் அடக்குமுறைகள் நிலவியதாக குறிப்பிடுகிறார் அவர். இத்தகைய அடக்குமுறைகளை எதிர்த்து அய்யா வைகுண்டர் மக்களை ஒன்றுதிரட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக வரலாற்று ஆய்வாளர்களும் அவரை பின்பற்றுபவர்களும் கூறுகின்றனர்.

“அய்யா வைகுண்டரை நாடார்கள் அதிகம் வழிபடுகின்றனர். அந்த சமூகத்தினருக்கு அவர் ஓர் எழுச்சியை உருவாக்கினார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முலை வரி போட்டிருக்கின்றனர். இதுதவிர, பல்வேறு வரி கொடுமைகளுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் ஆளாகியிருக்கின்றனர். என்னென்ன வரிகள் போட்டிருக்கின்றனர் என்பதை அவரே பாடியிருக்கிறார். வரி கொடுக்கவில்லை என்றால் அடிப்பார்கள்.

‘கருப்பட்டி கேட்டடிப்பான். பனை நுங்கு கேட்டடிப்பான்’ என அய்யா வைகுண்டரே பாடியிருக்கிறார்” என்கிறார், சிவசுப்பிரமணியன்.

அத்தகைய கொடுமைகளுக்கு ஆளான மக்கள், தங்களை மீட்க வந்தவராக அய்யா வைகுண்டரை கருதி அவரை கடவுளாக வழிபடும் போக்கு தோன்றியுள்ளது. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக இயங்கினார்” என்கிறார் அவர்.

 
அய்யா வைகுண்டர் சனாதனத்தைப் பாதுகாத்தாரா? ஆளுநர் பேச்சுக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?
படக்குறிப்பு,

ஆ. சிவசுப்பிரமணியன்

அய்யா வைகுண்டர் வழிபாடு

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இந்த வழிபாடு அகிகமாக இருக்கிறது. சென்னையில் மணலி புதூர் பகுதியில் இதற்கென வழிபாட்டுத்தலம் உள்ளது. கேரளாவில் பத்தனம்திட்டா, பொன்னானி உள்ளிட்ட பகுதிகளிலும் பெங்களூரு, மும்பையில், இடம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் சில பகுதிகளிலும் வழிபடப்படுகிறது.

சாதிக்கு அப்பாற்பட்டு இந்த வழிபாடு நடத்தப்பட்டாலும் நாடார் சமுதாயத்தினரே அய்யா வைகுண்டரை பெரும்பாலும் வழிபடுகின்றனர்.

அய்யா வைகுண்டர் வழிபாட்டில் உருவ வழிபாடு இல்லை. வழிபாட்டு தலத்தில் நிலைக்கண்ணாடியைத்தான் வைத்து வழிபடுவர். பூஜைகள், அர்ச்சனைகள் இல்லை. பலியிடுதல், தீப ஆராதனைகள் கிடையாது. விளக்கேற்றி அதன் ஒளியைத்தான் வழிபடுவர்.

அகிலத்திரட்டு அம்மானை, அருள் நூல் ஆகிய இரண்டு நூல்கள்தான் இந்த வழிபாட்டின் அடிப்படை.

“அகிலத்திரட்டு அம்மானை முற்றோதல் விழா ஊர்கூடி பத்து நாட்கள் நடத்துவர்” என்கிறார் சிவசுப்பிரமணியன்.

அய்யா வைகுண்டர் கோவிலுக்கு வரும் ஆண்கள், சட்டை அணிந்திராமல், தலைப்பாகை அணிந்திருக்க வேண்டும்.

“தலைப்பாகை அணிவது, சாதிய ஒடுக்குமுறைகளின் ஓர் அங்கம். எல்லோராலும் தலைப்பாகை அணிய முடியாது. அதை ஒழிக்கவே, தலைப்பாகை அணிந்து அவரை வழிபடுகின்றனர். இதுவொரு வகையில் மரபு மீறல்” என்கிறார், ஆ. சிவசுப்பிரமணியன்.

ஹோமம் வளர்த்து, வேதங்கள் ஓதுவது அய்யா வழி திருமணங்களில் இல்லை, கணவர் இறந்தால் தாலியை கழற்றும் வழக்கமும் இல்லை என வழிபாட்டாளர்கள் கூறுகின்றனர்.

“இப்படி, ஆகம, வேதங்களுக்கு எதிராகத்தான் வைகுண்டர் இருந்திருக்கிறார். ஆளுநர் ஆர்.என். ரவி சான்று வலு இல்லாமல் பேசக்கூடாது. குழந்தை திருமணம், கல்வி மறுப்பு, உடன்கட்டை ஏறுதல் எல்லாவற்றையும் தான் சனாதனமும் வைதீகமும் போதிக்கிறது. இதனை எதிர்த்தவர் வைகுண்டர். புனித நூல்களை எல்லோராலும் படிக்க முடியாது என்பதுதான் சனாதனம். வேதம் ஓதுவதை மறைந்திருந்து கேட்டவர்களின் காதுகளில் ஈயத்தைக் கரைத்து ஊற்றுவதுதான் சனாதனம். ஆளுநரின் பேச்சு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று உள்ளது.” என்றார், ஆ.சிவசுப்பிரமணியன்.

 
வழிபடுபவர்கள் என்ன சொல்கின்றனர்?

தன் தாத்தாவின் காலத்திலிருந்து அய்யா வைகுண்டரை தங்கள் குடும்பம் வழிபடுவதாக கூறுகிறார், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம்சங்கர்.

“அகிலத்திரட்டு அம்மானையில் வாழ்க்கை நெறிமுறைகள் கூறப்பட்டிருக்கும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிறைய ஏற்றத்தாழ்வுகளும் பிரிவினைகளும் இருந்தன. சாதிய அடக்குமுறைகள் அதிகமாக இருந்தன. தீண்டாமையும் வரிகளும் விதிக்கப்பட்டன. அப்போது பனையேற்று தொழில்தான் முதன்மை தொழில். பதநீர் எடுப்பதற்கும் நுங்கு, ஓலை எடுப்பதற்கும் வரிகள் விதிக்கப்பட்டன. இதுகுறித்து அகிலத் திரட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் இதை எதிர்த்து சண்டை போடவில்லை, மக்களை ஒன்றுதிரட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்” என்கிறார் அவர்.

'விளக்கொளி போலே வீரம தாயிருங்கோ’ என கூறியிருக்கிறார். `இறைவன் முன்பு அனைவரும் சமம்` என்று கூறியவர். அனைத்து சாதி மக்களும் ஒன்றாக அமர்ந்து அன்னதானத்தில் சாப்பிடும் முறை பின்பற்றப்படுகிறது” என இந்த வழிபாட்டு முறை குறித்து பிரேம் சங்கர் தெரிவித்தார்.

அய்யா வைகுண்டர் சனாதனத்தைப் பாதுகாத்தாரா? ஆளுநர் பேச்சுக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?

பட மூலாதாரம்,BHAVAN, TAMILNADU/X

வாக்குக்காக கவர நினைக்கிறதா பாஜக?

பாஜக குறித்து பாலபிரஜாபதி கூறுகையில், “அய்யா வைகுண்டரை அவர்கள் (பாஜக) எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், அது நடக்காது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் இதுகுறித்து பேசியிருக்கிறாரா? தேர்தல் நேரத்தில், 4-5 மாவட்டங்களில் அய்யா வைகுண்டரை கணிசமான எண்ணிக்கையில் வழிபடுபவர்களை கவர வேண்டும் என பார்க்கிறார்கள்” என்றார்.

பாஜக என்ன சொல்கிறது?

“ஆளுநர் தன் கருத்தை தெரிவித்திருக்கிறார். அதுகுறித்து பாஜக சார்பாக என்ன சொல்ல முடியும்? ஆளுநரிடம்தான் கேட்க வேண்டும்” என, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே அய்யா வைகுண்டர் அவதார விழா அன்று, அவரை நினைவுகூர்ந்து, தமிழ்நாடு பாஜக, பிரதமர் மோதியின் அதிகாரபூர்வ பக்கங்களில் பதிவுகள் பகிரப்பட்டுள்ளன.

இந்தாண்டும் பிரதமர் ‘எக்ஸ்’ தளத்தில்,“அய்யா வைகுண்ட சுவாமிகளின் பிறந்த நாளில் அவரை வணங்குகிறேன். பிறருக்கு சேவை செய்வதற்கும், அனைவருக்கும் சமமான நீதியுடைய சமுதாயத்தை வளர்ப்பதற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அய்யா வைகுண்டர். மனிதகுலத்திற்கான அவரது பார்வையை நிறைவேற்றுவதற்கான, எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.” என பதிவிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cg3q65xy8n8o

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி குற்றம்சாட்டு

1 week 6 days ago
சூடோபெட்ரின்: மெத்தபெட்டமைன் தயாரிக்கப் பயன்படும் இந்தப் பொருள் தமிழ்நாட்டுக்குள் எப்படி வருகிறது?
தமிழ்நாட்டில் போதைப் பொருள் பரவல்

பட மூலாதாரம்,HANDOUT

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி குற்றம்சாட்ட, அதனை மறுத்திருக்கிறது தமிழக காவல்துறை. போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான கவனம் தமிழ்நாட்டின் மீது திரும்பியிருக்கும் நிலையில், கடும் நடவடிக்கைகள் எடுத்துவருவதாகக் கூறுகிறது தமிழக அரசு. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது?

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, மேற்கு தில்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் சூடோபெட்ரின் (Pseudoephedrine) என்ற தடைசெய்யப்பட்ட பொருள் 50 கிலோ அளவுக்குக் கைப்பற்றப்பட்டது.

மெத்தாஃபெட்டமைன் என்ற போதைப் பொருளைத் தயாரிக்க இந்த சூடோபெட்ரின் உதவும் என்பதால், இவ்வளவு பெரிய அளவில் அந்தப் பொருள் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
தமிழ்நாட்டில் போதைப் பொருள் பரவல்

பட மூலாதாரம்,@BJP4TAMILNADU/X

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இருந்து வந்த தகவல்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இந்தியாவில் இருந்து தேங்காய்த் தூள் என அனுப்பப்பட்ட பொட்டலங்களில் சூடோபெட்ரின் இருந்ததாக இந்த நாடுகள் தெரிவித்திருந்தன. இதையடுத்துத்தான் சம்பந்தப்பட்ட கிடங்கில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது அங்கிருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு 45 முறை இதுபோல வெளிநாடுகளுக்கு இந்த போதைப் பொருள் அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதன் பின்னணியில் ஜாபர் சாதிக் என்பவர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைத் தேடுவதற்கான பணிகள் துவங்கின. சென்னையில் இருந்த அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க விமான நிலையங்களுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸும் விடுக்கப்பட்டது. அவரது 8 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.

ஜாபர் சாதிக் தி.மு.கவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்து வந்த நிலையில், அவரைக் கட்சியைவிட்டு நீக்குவதாக தி.மு.க. அறிவித்தது. அவருடைய சகோதாரர் அ. முகமது சலீம் என்பவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். அவர் வி.சிகவிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இன்னமும் ஜாபர் சாதிக்கும் முகமது சலீமும் தலைமறைவாகவே இருந்து வருகின்றனர்.

ஆனால், இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் உடனடியாக கையில் எடுத்துக்கொண்டன. முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி. பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை இதனை முன்வைத்து ஆளும் கட்சி மீது கடுமையான தாக்குதலை நடத்தினர்.

எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றையும் அ.தி.மு.க. நடத்தியது.

இதன் உச்சகட்டமாக மார்ச் 4ஆம் தேதியன்று சென்னைக்கு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் இதைச் சுட்டிக்காட்டிப் பேசினார். "ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் சார்பில், போதைப் பொருட்கள் தங்குதடையின்றி அனைத்து இடங்களிலும் புழங்கிவருகிறது என்பது என் மனதை உருக்கும் கவலை" என்று குறிப்பிட்டார் மோதி.

 
தமிழ்நாட்டில் போதைப் பொருள் பரவல்
தமிழ்நாடு காவல்துறை கூறுவது என்ன?

பிரதமரின் பேச்சுக்கு பதில் சொல்லும் வகையில், கடந்த ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் எவ்வளவு போதைப் பொருட்கள் தமிழ்நாட்டில் பிடிபட்டன என்பது குறித்த விவரத்தை தமிழக காவல்துறை வெளியிட்டது. காவல்துறை வெளியிட்ட தகவல்களின்படி, போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக 470 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

மாநிலம் முழுவதும் சேர்த்து 1914 கிலோ கஞ்சா, 2 கிலோ மெத்தபெட்டமைன், வலி நிவாரணியான டெபென்டடால் 100 எம்ஜி மாத்திரைகள் 70, 321 நைட்ரேசன் மாத்திரைகள், 2200 டைடால் மாத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

இதற்கிடையில், தமிழ்நாட்டின் இரண்டு இடங்களில் மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறையினரால் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டிருப்பதும் நடந்திருக்கிறது.

மார்ச் 1ஆம் தேதி அதிகாலை மதுரைக்கு வந்த சேர்ந்த பொதிகை ரயிலில் இருந்து இறங்கிய நபரிடமிருந்து 15 கிலோ பவுடர், 15 கிலோ திரவ வடிவிலான மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. போதைப் பொருளுடன் பிடிபட்ட நபர், சென்னையைச் சேர்ந்த பிள்ளமன் பிரகாஷ் என அடையாளம் காணப்பட்டார்.

அவர் தந்த தகவல்களின் அடிப்படையில், சென்னையில் இருந்து 3 பொட்டலங்களில் ஆறு கிலோ எடையுள்ள மெத்தபெட்டமைனை கைப்பற்றப்பட்டது. இந்த போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த அவர் திட்டமிட்டிருந்ததாக வருவாய் புலனாய்வுத் துறை கூறியது. மொத்தமாக மதுரையிலும் சென்னையில் மொத்தமாக கைப்பற்றப்பட்ட 36 கிலோ எடையுள்ள மெத்தம்பெட்டமைனின் சர்வதேச மதிப்பு 180 கோடி ரூபாய் இருக்கும், என்றும் வருவாய் புலனாய்வுத் துறை குறிப்பிட்டது.

 
தமிழ்நாட்டில் போதைப் பொருள் பரவல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கைக்கு கடத்தப்பட்ட போதைப் பொருள்

இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே, மார்ச் ஐந்தாம் தேதி ராமேஸ்வரம் கடல் பகுதியில் இலங்கையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த படகை வழிமறித்த வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், அந்தப் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து சாக்குப் பைகளைக் கைப்பற்றியதாகவும் அந்த சாக்குப் பைகளில் இருந்து 99 கிலோ எடையுடைய 111 பாக்கெட்களை எடுத்ததாகவும் தெரிவித்தனர்.

அந்தப் பாக்கெட்டுகளில் இருந்த பழுப்பு நிற பிசுபிசுப்பான பொருளை ஆய்வு செய்ததில், அது தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான ஹஷீஷ் என்பது தெரியவந்ததாக வருவாய் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. படகிலிருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

தங்களுக்கு இந்தப் பொருளை பாம்பனில் இருந்த ஒருவர்தான் தந்து, இலங்கையைச் சேர்ந்த ஒருவரிடம் தரச் சொன்னதாக கூறியதையடுத்து, அந்த நபரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தொடர்ந்து நடந்த விசாரணைகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட இந்த போதைப் பொருள் இலங்கைக்குக் கடத்தப்படுவதற்காக இங்கே கொண்டுவரப்பட்டதாக வருவாய் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

 
தமிழ்நாட்டில் போதைப் பொருள் பரவல்
போதைப் பொருள் பயன்பாடு தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதா?

தமிழ்நாட்டில் போதைப் பொருள் அதிகரித்துள்ளதா, இல்லையா என்பதைச் சொல்லும் வகையில் நடப்பு வருடத்திற்கான புள்ளிவிவரங்கள் ஏதும் இதுவரை பதிப்பிக்கப்படவில்லை. 2022ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் தான் மிக சமீபத்திய புள்ளிவிவரம்.

மதுவிலக்குத் துறையின் 2023-24ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்புகளின்படி பார்த்தால், 2022ஆம் ஆண்டு 10,665 வழக்குகள் இது தொடர்பாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. 28,383 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது. 63,848 மாத்திரைகள் பிடிபட்டுள்ளன. 98 கிலோ இதர போதைப் பொருட்கள் பிடிபட்டுள்ளன.

2022ஆம் ஆண்டில், கஞ்சாவைத் தவிர்த்த பிற பொருட்கள் மிகக் குறைவாகவே பிடிபட்டுள்ளன. ஓபியம் அடிப்படையிலான ஹெராயின் 21 கிலோ 360 கிராமும், கொக்கையின் 104 கிராமும் சூடோஎஃபிட்ரின் 27 கிலோவும் எல்.எஸ்.டி. 1 கிலோ 640 கிராமும் மெதாபெட்டமைன் 18 கிலோ 111 கிராமும் பிடிபட்டுள்ளன.

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருக்கிறதா என்பதை உடனடியாகச் சொல்ல முடியாது என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.

"சூடோஎஃபிட்ரின் கடத்தப்படுவது பல காலமாக நடந்துவருகிறது. சூடோஎஃபிட்ரின் என்பது ஒரு மருந்துப் பொருள். அது இருமல் மருந்துகளில் சேர்க்கப் பயன்படுத்தப்படுகிறது. இதனை தனி மனிதர்கள் யாரும் தயாரிக்க முடியாது. மருந்து நிறுவனங்கள்தான் தயாரிக்க முடியும். இந்திய அளவில் எந்தெந்த மருந்து நிறுவனங்கள் இதனைத் தயாரிக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும்."

"அங்கிருந்து கசியும் மருந்துகள்தான் இப்படி கடத்தப்படுகின்றன. இந்த சூடோஎஃபிட்ரினை வைத்துத்தான் மெத்தபெட்டமைன் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கஞ்சாதான் அதிகம் பிடிபடும் போதைப் பொருளாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அதீதமான அளவில் திடீர் அதிகரிப்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை" என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர்.

ஆனால், கடந்த சில நாட்களில் போதைப் பொருள் தொடர்பாக வெளியாகும் செய்திகளை வைத்துப் பார்த்தால், தமிழ்நாட்டில் திடீரென போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்ததைப் போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஆளும்கட்சி உடனடியாக சேதத் தடுப்பு நடவடிக்கையில் இறங்கியது.

 
அரசு கூறுவது என்ன?

நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்து இதுதொடர்பாக விளக்கமளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, குஜராத்தில்தான் போதைப் பொருள் அதிகம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

"தமிழ்நாட்டில் கஞ்சா விளைவிக்கப்படுவதில்லை. ஆந்திர மாநிலத்தில் விளைகிறது. அந்த மாநில டிஜிபியுடன் பேசி அதனைத் தடுக்க முயற்சித்து வருகிறோம். கடந்த ஆட்சியில் அமைச்சரே கஞ்சா வியாபாரத்திற்கு ஆதரவாக இருந்தார். இப்போது அவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. "

"2019இல் 11,418 கிலோ கஞ்சாவும் 2020இல் 15,144 கிலோ கஞ்சாவும் 2021இல் 20,431 கிலோ கஞ்சாவும் 2022இல் 28,383 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் 23,364 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தவிர, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தாம்பரம், ஆவடி, செங்கல்பட்டு, பெரம்பலூர் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஒரு கட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள்" என்று குறிப்பிட்ட அமைச்சர் ரகுபதி, அவர்கள் பா.ஜ.கவில் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதை வாசித்தார்.

மேலும், குஜராத்தில்தான் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இதற்கிடையில் சில குறிப்பிட்ட ரக மருந்துகளை வாங்கி போதைப் பொருளாக பயன்படுத்துவதைத் தடுக்க சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, X, H, H1 ஆகிய பிரிவுகளின் கீழ் வரும் மருந்துகளை விற்கக்கூடிய மருந்துக் கடைகள் அனைத்தும் ஒரு மாதத்திற்கு சிசிடிவிகளை பொருத்த வேண்டுமெனக் கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/ckmv0mz33v7o

சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள அதிவேக ஈனுலை ஆபத்தானதா? எவ்வாறு செயல்படும்?

1 week 6 days ago
அதிவேக ஈனுலை ஆபத்தானதா?

பட மூலாதாரம்,X/ANI

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 4 மார்ச் 2024
    புதுப்பிக்கப்பட்டது 5 மார்ச் 2024

தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள அதிவேக ஈனுலையின் எரிபொருள் நிரப்பப்படுவதை பிரதமர் மோதி பார்வையிட்டுள்ளார். ஆனால், இந்த ஈனுலை ஆபத்தானது என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இதில் உண்மையில் பிரச்னை இருக்கிறதா?

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அதிவேக ஈனுலை

கல்பாக்கத்தில் உள்ள அணுஉலை வளாகத்தில் இந்த முதலுறு அதிவேக ஈனுலை அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) வடிவமைத்துச் செயல்படுத்துகிறது. அதிவேக ஈனுலைகளை உருவாக்கும் திட்டம் 1980களில் திட்டமிடப்பட்டது.

இதன் கட்டுமானப் பணிகள் 2004ஆம் ஆண்டில் துவங்கப்பட்டன. இந்தப் பணிகள் 2010ல் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. பிறகு, ஒவ்வொரு ஆண்டாக இது தள்ளிச் சென்றது. கட்டுமானத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, இந்தத் திட்டத்திற்கான செலவு கிட்டத்தட்ட இரு மடங்காகியிருக்கிறது. ஆரம்பத்தில் இந்தத் திட்டம் 3,492 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2019 நவம்பரில் இந்தத் திட்டத்திற்கான மதிப்பு 6,840 கோடி ரூபாயாக இருக்கும் என மாநிலங்கள் அவையில் அரசு தெரிவித்தது.

கடந்த ஆண்டு கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து குளிர்விப்பானான சோடியத்தை நிரப்பும் பணி, 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் பத்தாம் தேதி துவங்கி 15ஆம் தேதி முடிக்கப்பட்டது. 2024 மார்ச் 4ஆம் தேதியன்று எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கிறது.

இந்த அணு உலை வெற்றிகரமாகச் செயல்படும் நிலையில், இந்தியாவில் அதிகம் கிடைக்கும் தோரியத்தை இந்த அணு உலையில் பயன்படுத்த முடியும். இந்த அணு உலை 500 மெகா வாட் உற்பத்தித் திறனைக் கொண்டது. 40 ஆண்டுகளுக்கு இந்த அணு உலை பயன்பாட்டில் இருக்கும்.

இந்த அணு உலையில் ஆரம்ப கட்டத்தில் யுரேனியமும் புளுட்டோனியமும் கலந்த எரிபொருள் பயன்படுத்தப்படும். எரிபொருள் தண்டுகளை தாராப்பூரில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் தயாரித்து அளிக்கும்.

 
அதிவேக ஈனுலைக்கு எதிர்ப்பு
சுற்றுச்சூழலியலாளர்கள் எதிர்ப்பு

சென்னைக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, கல்பாக்கத்தில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள முதலுறு அதிவேக ஈனுலை (Prototype Fast Breeder Reactor - PFBR)ல் எரிபொருள் நிரப்பப்படுவதை பார்வையிட்டார்.

ஆனால், இந்த அதிவேக ஈனுலைகள் அமைக்கப்படுவதற்கு சுற்றுச்சூழலியலாளர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த அதிவேக ஈனுலைகள் எளிதில் விபத்து ஏற்படக்கூடிய அபாயம் கொண்டவை என்கிறார்கள் அவர்கள்.

இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈனுலை தொழில்நுட்பம் பாதுகாப்பற்றது, தேவையற்றது, அதிக பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் அதை விட்டுவிட்டன. இந்த வகை உலைகளில் குளிர்விப்பானாக பயன்படுத்தப்படும் திரவ சோடியம் கசிந்த காரணத்தால் பிரான்ஸ், ஜப்பான் நாடுகளில் இத்திட்டம் தாமதம் அல்லது கைவிடப்பட்டது" என சுட்டிக்காட்டியுள்ளனர்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

"அதிவேக ஈனுலைகள் தேவையே இல்லை"

"அதிவேக ஈனுலைகளை உருவாக்கும் முயற்சியில் பல நாடுகள் தோற்றுவிட்டன. இந்த அதிவேக ஈனுலைகளில் திரவ சோடியம் கட்டுப்படுத்தும் காரணியாகவும் (Moderator) குளிர்விப்பானாகவும் பயன்படுத்தப்படுகிறது. திரவ சோடியம் எளிதில் தீப்பிடிக்கக் கூடியது. ஈரம் பட்டாலே தீ விபத்து ஏற்படும் சாத்தியங்கள் இதில் உள்ளன. ஜப்பானின் மோஞ்சுவில் உள்ள அணு உலையில் இதேபோல, சோடியம்தான் குளிர்விப்பானாக பயன்படுத்தப்பட்டுவந்தது. 1995ல் அந்த அணு உலையில் சோடியம் செல்லும் பைப்பில் இருந்து, சோடியம் கசிந்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

மேலும், யுரேனியத்தைப் பயன்படுத்தும் அணு உலைகளைவிட, இந்த அணு உலைக்கான செலவு மிக அதிகம். ஒரு காலகட்டத்தில் உலகில் யுரேனியம் மிக அரிதாகவே கிடைத்துவந்தது. அணு உலை எரிபொருளுக்கான தேவை அதிகம் இருந்ததால், இப்படி ஒரு தொழில்நுட்பம் யோசிக்கப்பட்டது. ஆனால், இப்போது பெரிய அளவில் யுரேனிய சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. ஆகவே இந்தத் திட்டத்திற்கான தேவையே இப்போது இல்லை" என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த கோ. சுந்தர்ராஜன்.

அதிவேக ஈனுலைக்கு எதிர்ப்பு

பட மூலாதாரம்,T.V.VENKATESWARAN

"அதிவேக ஈனுலை பற்றிய அச்சம் வேண்டாம்"

ஆனால், இந்த அணு உலை குறித்த அச்சங்கள் தேவையற்றவை என்கிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானியான முனைவர் த.வி. வெங்கடேஸ்வரன்.

"இந்த அதிவேக ஈனுலை குறித்த அச்சங்கள் தேவையற்றவை. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இதேபோன்ற 'Fast Breeder Test Reactor' செயல்பட்டு வருகிறது. அதில் கிடைத்த அனுபவம் இந்த ஈனுலையை இயக்குவதற்கு உதவும். தவிர, இந்த சோதனை ரியாக்டரில் சோடியம் கசிந்து விபத்து ஏற்பட்டதில்லை. கடந்த ஐம்பதாண்டுகளில் ஆபத்து ஏற்படும் அளவுக்கு எந்த விபத்தும் ஏற்பட்டதில்லை.

உலகில் எல்லா அதிவேக ஈனுலைகளிலும் புளுட்டோனியத்தையே பயன்படுத்துகிறார்கள். நாம் தோரியத்தை பயன்படுத்துகிறோம். தோரியத்தை வைத்து அணுகுண்டு தயாரிக்க முடியாது" என்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன்.

இந்த அணு உலை செயல்படும் விதம் குறித்தும் விளக்கும்போது, "இயற்கையில் யுரேனியம் இரண்டு விதங்களில் கிடைக்கும். ஒன்று யுரேனிம் - 235. மற்றொன்று யுரேனியம் 238. இதில் யுரேனியம் 235 மட்டுமே அணு உலைகளில் பயன்படும். இயற்கையில் 1/141 என்ற விகிதத்தில்தான் யுரேனியம் 235ம் யுரேயனியம் 238ம் கிடைக்கின்றன. அதிவேக ஈனுலைகளில் யுரேனியம் - 238ஐ blanketஆக பயன்படுத்தினால் அது, புளுட்டோனியம் 239ஆக மாறிவிடும். இதனை மீண்டும் எரிபொருளாக பயன்படுத்தலாம். அல்லது அணுஆயுதம் தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.

ஆனால் இங்குள்ள அதிவேக ஈனுலையில், தோரியம்தான் blanketஆக பயன்படுத்தப்படுகிறது. தோரியத்தை blanketஆக பயன்படுத்தினால் அது யுரேனியம் 233ஆக மாறிவிடும். இந்த யுரேனியம் 233ஐ மூன்றாம் கட்ட அணுஉலைகளில் எரிபொருளாக பயன்படுத்தலாம். இப்படி இன்னொரு அணு உலைக்கு எரிபொருள் தருவதால், இதனை ஈனுலைகள் என்கிறோம். இந்த யுரேனியம் 233ஐ வைத்து வைத்து அணுகுண்டு செய்ய முடியாது" என்கிறார்.

தற்போது உலகில் யுரேனியம் போதுமான அளவுக்குக் கிடைத்தாலும், இந்தியாவில் அது மிக அரிதாகவே கிடைக்கிறது. தோரியம் அதிக அளவில் கிடைக்கிறது. எனவே, எரிசக்தி பாதுகாப்பு எனும் நோக்கில் இந்த ஈனுலைகள் அவசியமானவைதான் என்கிறார் வெங்கடேஸ்வரன்.

 
அதிவேக ஈனுலையால் ஆபத்தா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிவேக ஈனுலை தயாரிக்கும் 'பாவினி' கூறுவது என்ன?

இந்த அதிவேக ஈனுலைகள் Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited - பாவினி - என்ற பொதுத்துறை நிறுவனத்திற்குச் சொந்தமானவை.

இந்தியாவில் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், யுரேனியத்தைக் குறைவாகவும் தோரியத்தை அதிகமாகவும் பயன்படுத்தும் வகையில் மூன்று கட்டங்களாக தனது அணுசக்தித் திட்டத்தைச் செயல்படுத்துவதாக பாவினி கூறுகிறது.

இதில் ஒவ்வொரு கட்டமும் அடுத்த கட்டத்தோடு தொடர்புடையவை. ஒரு கட்டத்தில் எரிக்கப்பட்ட எரிபொருள், அடுத்த கட்டத்தில் எரிபொருளாக பயன்படுத்தும் வகையில் இந்த அணுசக்தித் திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக பாவினி கூறுகிறது.

அதன்படி, முதல் கட்டத்தில் அழுத்தமூட்டப்பட்ட கனநீர் அணு உலைகள் அமைக்கப்படும். இதில் யுரேனியம் எரிபொருளாக இருக்கும். இரண்டாம் கட்ட அதிவேக ஈனுலைகளில் புளுட்டோனியம் எரிபொருளாக இருக்கும். இதிலிருந்து யுரேனியம் -233 கிடைக்கும்.

மூன்றாவது கட்ட அணுஉலைகளில் முந்தைய கட்டத்தில் கிடைத்த யுரேனியம் - 233 எரிபொருளாக பயன்படுத்தப்படும் என்கிறது பாவினி.

https://www.bbc.com/tamil/articles/c970egezvl8o

புதுச்சேரியில் மாயமான 9 வயது சிறுமி வாய்க்காலில் சடலமாக மீட்பு: பொதுமக்கள் சாலை மறியல் - போலீஸ் குவிப்பு

1 week 6 days ago

புதுச்சேரி: புதுச்சேரியில் மாயமான 9 வயது சிறுமி, வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சிறுமி மாயம்: புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த தம்பதியரின் இரண்டாவது மகளுக்கு 9 வயது. அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே கடந்த 2-ம் தேதி பிற்பகல் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார்.

மாயமான சிறுமியை பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் நாராயணன் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தீவிரமாகத் தேடினர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்ததனர். அதில் ஒரு சிசிடிவி கேமிராவில் மட்டும் சிறுமி நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. போலீஸார் அந்த பகுதியில் வீடு, வீடாக தேடினர். அப்போதும் சிறுமி பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை. சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. சிறுமியை விரைந்து மீடக்கக் கோரி குடும்பத்தினரும், உறவினர்களும் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

17096481783061.jpeg

கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட சடலம்: தொகுதி எம்எல்ஏ பிரகாஷ்குமாரும், போலீஸ் டிஜிபியை சந்தித்து சிறுமியை விரைந்து கண்டறிய கோரினார். இந்நிலையில், இன்று சோலை நகர் பகுதியில் அம்பேத்கர் வீதி - கண்ணதாசன் வீதி இடையே செல்லும் கழிவுநீர் கால்வாயில் சாக்கு மூட்டை மிதப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து முத்தியால்பேட்டை போலீஸார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு வேட்டி துணியால் சுற்றி கால்வாயில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. சிறுமியின் தந்தையும் கால்வாயில் மிதப்பது தனது மகள்தான் என்பதை உறுதி செய்தார்.

உறவினர்கள் போராட்டம்: கால்வாயில் இருந்து சிறுமியின் உடல் கிடைத்ததையடுத்து, அப்பகுதியில் பொதுமக்கள் உறவினர்கள் என நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். சிறுமியின் உடலை எடுத்துச் சென்ற காவல் துறையினர், உடலை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. இதனால் பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு நடந்தது.

இதையடுத்து போலீஸார் சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுமி கொலை செய்து கால்வாயில் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் போலீஸார் 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

17096481943061.jpeg

இதற்கிடையே, கொலையாளிகள் மீது நடவடிக்கை கோரியும், மெத்தனமாக நடந்து கொண்ட போலீஸாரை கண்டித்தும் சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சோலை நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறும்போது, “இப்பகுதியில் கஞ்சா நடமாட்டம் அதிகம் உள்ளது. அதனை தடுக்க வேண்டும். சிறுமிக்கு நடந்தது போன்ற சம்பவம் இனிமேல் நடக்கக் கூடாது. கொலையாளிகளை விரைந்து கைது செய்து கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்படுபவர்கள் யாராக இருந்தாலும் உறுதியான நடவடிக்கை இருக்க வேண்டும்" என்றனர்.

சமாதான பேச்சுவார்த்தை தோல்வி: சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பலமுறை சமாதானம் பேசினர். ஆனால், அவர்கள் மறியலை கைவிட மறுத்ததால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக மறியல் தொடர்ந்தது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த எம்எல்ஏக்கள் பிரகாஷ்குமார், நேரு ஆகியோர் பொதுமக்களிடம் பேசி சமாதானம் செய்தனர்.

நீண்ட நேரமாக போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இளைஞர் ஒருவர் போலீஸாரை ஆவேசமாக சாடி பேசினார். இதனால் கோபமடைந்த போலீஸார் அந்த இளைஞரை தாக்கி கைது செய்ய முயன்றனர். அதனை மறியலில் ஈடுபட்டவர்கள் தடுத்தனர்.

17096482073061.jpeg

துணை ராணுவப்படை வருகை: இதனால் போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் கடுமையான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் மறியலும் தொடர்ந்தது. இதையடுத்து புதுச்சேரிக்கு தேர்தல் பாதுகாப்புக்கு வந்த துணை ராணுவப்படையினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களை கண்டு மேலும் பொதுமக்கள் ஆவேசமடைந்தனர். மறியலை கைவிட மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், போக்குவரத்து வேறு பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளது.

நாளை பிரேத பரிசோதனை: இதனிடையே, சிறுமியின் உடல் நாளை (மார்ச் 6) பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே சிறுமியின் இறப்பு குறித்த விவரங்களும், கொலைக்கான காரணங்களும் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

புதுச்சேரியில் மாயமான 9 வயது சிறுமி வாய்க்காலில் சடலமாக மீட்பு: பொதுமக்கள் சாலை மறியல் - போலீஸ் குவிப்பு | Puducherry girl child found dead in sewage canal: relatives Protest - hindutamil.in

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்

1 week 6 days ago

சென்னை: கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை இன்று சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயலாகத்தான் பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார்.

கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறியது: "கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சிக்குத்தான். கடந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ள அந்தக் கட்சி 71 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அந்தக் கட்சி கர்நாடகாவுக்கு கேஸ் சிலிண்டர் சின்னமும், ஆந்திராவுக்கு கேஸ் ஸ்டவ் சின்னம் வாங்கியிருக்கிறது. அக்கட்சியின் தலைவரே சொல்லியிருக்கிறார், கரும்பு விவசாயி சின்னத்தை நான் கேட்கவில்லை; அவர்களாகவே கொடுத்தார்கள் என்று. அதில், தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 11 மாநிலங்களுக்குச் சேர்த்து கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி, இடைத்தேர்தல், சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டிருக்கிறது. 7 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். தமிழகத்தில் இருப்பதிலேயே தனித்துவமான கட்சி என்று பார்த்தால், திமுக, அதிமுகவுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சிதான். அதை கணக்கில் கொள்ளாமல், அவர் முதலில் மனு கொடுத்ததாக கூறுகின்றனர்.

வெள்ள பாதிப்பு பணிகள் காரணமாக, நாங்கள் மனு அளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. ஆனாலும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்த கால அளவுக்குள்தான் நாங்களும் மனு அளித்தோம். டார்ச் லைட் சின்னத்தை மநீமவுக்கு ஒதுக்கியப் பிறகுதான் எங்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் விஷயமே எங்களுக்குத் தெரியவந்தது.

உண்மை என்னவென்றால், கர்நாடகாவில் இருந்து வந்தவர், கடந்த டிசம்பர் 17-ம் தேதி மனு கொடுத்திருக்கிறார். அவருக்கு முதல் நாளே கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. ஆனால், நாம் தமிழர் கட்சிக்கு இந்த சின்னம் எப்படி வந்தது தெரியுமா?

தேர்தல் அறிவித்து 10 நாட்களுக்குப் பிறகு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்தனர். ஆனால், இந்த முறை தேர்தல் அறிவிக்கவே இல்லை. டிசம்பர் 17-ம் தேதியே எப்படி அந்த சின்னத்தை ஒதுக்கீடு செய்தார்கள்?

எனவே, திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாகத்தான் இதை நான் கருதுகிறேன். நாம் தமிழர் கட்சிக்கு இந்த சின்னம் இருக்கக் கூடாது என்றுதான் நான் இதைப் பார்க்கிறேன். நாங்கள் கட்சி ஆரம்பித்தது, விவசாயி சின்னம் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கவில்லையே? நான் கொண்டுபோனதால்தான் அந்த சின்னம் விவசாயி” என்றா சீமான்.

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல் | Seeman met CEO of TamilNadu regarding Election Symbol issue - hindutamil.in

சீமான் தொடர்ந்த வழக்கில் விஜயலட்சுமி மார்ச் 19-ல் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

1 week 6 days ago
சீமான் தொடர்ந்த வழக்கில் விஜயலட்சுமி மார்ச் 19-ல் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு 1210946.jpg  
 

சென்னை: தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி மார்ச் 19-ல் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘கடந்த 2011-ம் ஆண்டு அளித்த புகாரை 2012-ம் ஆண்டிலேயே திரும்பப் பெற்துக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கடிதம் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், காவல்துறை விசாரணை மேற்கொண்டு வழக்கை முடித்து வைத்தனர். இந்நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. அதை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. அதில், வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக நடிகை விஜயலட்சுமி செப்டம்பர் 29-ல் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பிறகு இந்த வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்வில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, புகார்தாரரான நடிகை விஜயலட்சுமி, மார்ச் 19-ம் தேதி பிற்பகல் 2:15மணிக்கு ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்..

சீமான் தொடர்ந்த வழக்கில் விஜயலட்சுமி மார்ச் 19-ல் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு | Madras High Court orders Vijayalakshmi to appear on March 19 in Seeman case - hindutamil.in

சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்?

2 weeks ago
சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்? 10-2.jpg

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில், அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவர் நேற்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு இணையாக, பலம் பொருந்திய கூட்டணியை உருவாக்க, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தலைமை விரும்புகிறது. அதாவது, தி.மு.க., ஆட்சியின் அதிருப்தி அலையை அறுவடை செய்ய வசதியாக, தன் தலைமையில் மெகா கூட்டணி அமைத்து, 20 தொகுதிகளை கைப்பற்றுவதற்கான தேர்தல் வியூகத்தை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வகுத்துள்ளார்.

அதன் அடிப்படையில், பா.ம.க., – தே.மு.தி.க., புதிய தமிழகம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி போன்றவற்றிடம், கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சு நடத்தப்பட்டு உள்ளது.

பா.ம.க.,விற்கு, தர்மபுரி, கடலுார், விழுப்புரம், ஆரணி, திருவண்ணாமலை உள்ளிட்ட ஆறு தொகுதிகளையும், கள்ளக்குறிச்சி, விருதுநகர் உள்ளிட்ட மூன்று தொகுதிகளை, தே.மு.தி.க.,விற்கும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியையும், சமத்துவ மக்கள் கட்சிக்கு திருநெல்வேலி தொகுதியையும் ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரத்தில், பா.ம.க., – தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளை தவிர, ஓட்டு வங்கி கூடுலாக வைத்துள்ள நாம் தமிழர் கட்சியையும் கூட்டணியில் சேர்த்தால், தி.மு.க., கூட்டணிக்கு இணையான பலத்தை, அ.தி.மு.க., அணி பெறும் என, பழனிசாமி நம்புகிறார்.

நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தை, தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால், பா.ஜ., மீது சீமான் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். பா.ஜ., வுக்கு எதிராக, தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்யவும் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், கூட்டணி தொடர்பாக, சீமான் தரப்பினரிடம் பழனிசாமி தரப்பினர் பேச்சு நடத்தினர். ‘இரு திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை’ என்று கூறி வந்த சீமானுக்கு, விவசாயி சின்னம் விவகாரத்தால், கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

எனவே, பழனிசாமியை சீமானின் குடும்ப உறுப்பினர்கள் இருவர் நேற்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சீமானுக்கு நெருக்கமானவரிடம் கேட்ட போது, ‘முதல் கட்டமாக 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுஉள்ளோம்.

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என்றால், குறிப்பிட்ட சில தொகுதிகளில் உடன்பாடு வைக்கலாமா அல்லது 40 தொகுதிகளிலும் கூட்டணியா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அ.தி.மு.க., கூட்டணியில், ஆறு தொகுதிகள் தருவதற்கு பேச்சு நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், சீமான் முடிவு தான் இறுதியானது’ என்றார்.

 

https://akkinikkunchu.com/?p=270197

Checked
Tue, 03/19/2024 - 08:45
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed