தமிழ்நாட்டில் 42 யானை வழித்தடங்கள் - வனத்துறை பரிந்துரைக்கு கூடலூர், மசினகுடியில் எதிர்ப்பு ஏன்?
பட மூலாதாரம்,GETTY IMAGES
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
-
15 மே 2024, 09:04 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
யானை - மனித மோதல்களைத் தவிர்க்கவும், யானைகளை பாதுகாக்கவும் வனத்துறை சார்பாக தமிழகம் முழுவதும் 42 யானை வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு, அது தொடர்பான 161 பக்க விரிவான அறிக்கை கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதற்கு சில அரசியல் கட்சிகளும், தொடர்புடைய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் யானை - மனித மோதல்களால் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 500 மனிதர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட யானைகளும் இறப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் யானை- மனித மோதல்கள் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக கோயம்புத்தூர், கூடலூர், சத்தியமங்கலம் மற்றும் ஓசூர் ஆகிய வனக்கோட்டங்களில் கடுமையான யானை- மனித மோதல்கள் நடந்துள்ளன என்றும், அதற்கான தீர்வு தான் இந்த புதிய யானை வழித்தடங்கள் என்று தமிழ்நாடு வனத்துறை அறிக்கை கூறுகிறது.
அடையாளம் காணப்பட்டுள்ள இந்த யானை வழித்தடங்களில் தனியார் விடுதிகள், நெடுஞ்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள், விவசாய நிலங்கள் மட்டுமல்லாது மக்கள் வசிக்கும் பகுதிகளும் உள்ளன. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் தொகுதியின் 46 கிராமங்கள் இதில் உள்ளன. அப்பகுதி மக்கள் வனத்துறையின் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை (மே 13) தங்கள் வீடுகள், கடைகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினார்கள்.
யானைகளுக்கான வழித்தடங்கள் என்றால் என்ன? வனத்துறை அடையாளம் கண்டுள்ள யானை வழித்தடங்களால் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பாதிப்புகள் ஏற்படுமா?
பட மூலாதாரம்,TNFORESTDEPARTMENT
தமிழ்நாடு வனத்துறை அறிக்கையின் படி, 2023இல் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின் மூலம் தமிழ்நாட்டின் 20 வனக் கோட்டங்களில் மொத்தம் 2,961 யானைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் முதுமலை புலிகள் காப்பகத்தின் உதகை மற்றும் மசினகுடி வனக் கோட்டங்களில் 790 யானைகள் (26.7%), சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் ஹாசனூர் மற்றும் சத்தியமங்கலம் வனக் கோட்டங்களில் 668 யானைகள் (22.6%), ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் வனக் கோட்டங்களில் 337 யானைகள் (11.4%), தமிழ்நாட்டின் மீதமுள்ள வனக் கோட்டங்களில் 1,166 (39.3%) யானைகள் உள்ளன.
அதிகரித்து வரும் யானை- மனித மோதல் பிரச்னைக்கு தீர்வு காணவும், யானைகளுக்கான கூடுதல் வழித்தடங்களை அடையாளம் காணவும், தமிழக அரசின் வனத்துறை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் வி.நாகநாதன் (வனஉயிரினம்) தலைமையில் வனத்துறை மற்றும் அறிவியல் நிபுணர்கள் அடங்கிய குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தமிழக யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இக்குழு தமிழகம் முழுவதும் 42 யானை வழித்தடங்களை அடையாளம் கண்டுள்ளது. இவை ஓசூர், தருமபுரி, ஈரோடு, மசினகுடி, கூடலூர், கோயம்புத்தூர், சத்தியமங்கலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளின் வனக் கோட்டங்களில் அமைந்துள்ளன.
161 பக்க அறிக்கையில் பாலக்காட்டுக் கணவாய்க்கு மேற்குப் பகுதியில் உள்ள வழித்தடங்கள், தெற்குப் பகுதியில் உள்ள வழித்தடங்கள் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
பட மூலாதாரம்,AFP/GETTY IMAGES
மேலும், அந்த வழித்தடங்களைப் பயன்படுத்தும் யானைகளின் எண்ணிக்கை, அந்தப் பகுதியில் இருக்கும் வீடுகள், விவசாய நிலங்கள், நெடுஞ்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள், கோயில்கள், தனியார் விடுதிகள், நிறுவனங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள், அவை யானைகளுக்கு எந்தெந்த வகையில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் ஆகிய விவரங்கள் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானைகளைப் பாதுகாக்க அரசு சார்பாக எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 2022இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 80 யானைகள் இருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யானைகளுக்கு இரண்டு வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவை தேவர்சோலா- நிலம்பூர் மற்றும் ஓவேலி. தேவர்சோலா- நிலம்பூர் வழித்தடத்தில் உள்ள 7 கிராமங்களில் 34,796 குடும்பங்கள் வசிக்கின்றன. ஓவேலி வழித்தடத்தில் உள்ள 31 கிராமங்களில், 2,547 குடும்பங்கள் வசிக்கின்றன.
அதேபோல மசினகுடி வனக்கோட்டத்தில் 61 யானைகள் இருப்பதாக 2023 கணக்கெடுப்பில் தெரியவந்தது. இங்கு அடையாளம் காணப்பட்டுள்ள சீகூர் வழித்தடத்தில் உள்ள 8 கிராமங்களில் 513 குடும்பங்கள் வசிக்கின்றன.
- மசினகுடி- உதகை பாதையில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கக் கூடாது, உதகை செல்ல கூடலூர் பாதையைப் பயன்படுத்த வேண்டும்.
- யானைகள் செல்ல அதிக பாலங்கள் கட்டப்பட வேண்டும்.
- வழித்தடத்தில் உள்ள இரும்புக்கம்பி வேலிகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்.
- பொக்காபுரத்தில் உள்ள நீலகிரி மலைச் சரிவுகள் முதல் மாயார் பள்ளத்தாக்கு வரை உள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக (ESA- Eco sensitive areas) அறிவிக்கப்படும்.
- யானைகள் வழித்தடங்களில் சுதந்திரமாக நடமாடுவதற்கு இடையூறாக இருக்கும் அனைத்து நெருக்கடியான பகுதிகளும் (Bottle neck points) சரிசெய்யப்பட வேண்டும்.
- முக்கிய நெருக்கடி பகுதிகளில் நிலங்களைக் கையகப்படுத்தி, மனித வாழ்விடங்களை அகற்ற வேண்டும்.
- அதேபோல கூடலூரில் தனியார் நிலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். குத்தகை காலம் முடிந்த தோட்ட நிலங்களை கைப்பற்றி, அவற்றை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும்.
- யானை- மனித மோதல்களைத் தவிர்க்க புதிய கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்பட வேண்டும்.
- தேயிலைத் தோட்ட நிர்வாகங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ரிசர்வ் வனப்பகுதிக்கு அருகில் உள்ள செக்ஷன் 17 நிலங்களை கையகப்படுத்த வேண்டும்.
வனத்துறை அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டால், இந்தப் பகுதிகள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் சென்று விடும் எனவும், பல தலைமுறைகளாக இங்கு வசிப்பவர்கள் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் கூடலூர் மற்றும் மசினகுடி கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்த பிரச்னை தொடர்பாக பேசிய மசினகுடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வர்கீஸ், இந்த புதிய அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்தினால் யானை- மனித மோதல்கள் அதிகரிக்கவே செய்யும் என்கிறார்.
“வழித்தடம் என்பதே இரண்டு யானை வாழ்விடங்களுக்கு இடையே செல்லக்கூடிய ஒரு குறுகிய பகுதி. அத்தகைய வழித்தடங்கள் வழியாக யானைகள் செல்லலாம், சாப்பிடலாம், தண்ணீர் குடிக்கலாம். ஆனால் அந்த இடத்தில் அவை தங்கி இனப்பெருக்கம் செய்ய முடியாது. இதுவே யானை வழித்தடத்திற்கான வரையறை." என்கிறார்.
மேலும், "நீலகிரி மலைப்பகுதியில் இருந்து மாயார் பள்ளத்தாக்கு வரை உள்ள 61,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதியை வழித்தடம் என கூறியுள்ளார்கள். முதுமலையும் சத்தியமங்கலமும் தான் யானையின் வாழ்விடங்கள். இவ்வளவு பெரிய பகுதியை வழித்தடமாக மாற்றும்போது, யானைகள் தங்கள் வாழ்விடங்களை மாற்றிக்கொண்டு இங்கேயே தங்கி இனப்பெருக்கம் செய்யத் தொடங்கும்" என்கிறார் வர்கீஸ்.
"யானைகளின் இயற்கை வாழ்விடங்கள் மாறினால், அது யானை- மனித மோதலை அதிகரிக்கவே செய்யும். இந்த 61,000 ஹெக்டேர் பகுதியில் 1193 ஹெக்டேர் நிலப்பரப்பில் 10 பகுதிகளில் மனிதர்கள் வசிக்கிறார்கள். முதுமலை முதல் சத்தியமங்கலம் வரை உள்ள காடுகள் வழியாக யாரையும் தொந்தரவு செய்யாமல் யானைகள் சென்று வரும். மனிதர்களும் அவற்றை சீண்டுவதில்லை. இப்படியிருக்க முழு பகுதியையும் வழித்தடம் என அறிவித்தது தவறு.” என்று கூறுகிறார் வர்க்கீஸ்.
தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவே இந்தப் பகுதியின் அனைத்து வீடுகள், கடைகளில் கறுப்புக்கோடி ஏற்றியுள்ளோம். மக்கள் கருத்தைக் கேட்டு அரசு முடிவெடுக்க வேண்டும், அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து யானை வழித்தடங்களை முறையாக அடையாளம் காண வேண்டும்” என்று கூறினார்.
யானை வழித்தடங்களை எப்படி கண்டறிய வேண்டும் என்பதில் ஒரு பெரும் குழப்பம் நீடிப்பதாகக் கூறுகிறார் கூடலூர் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக கட்சியைச் சேர்ந்தவருமான பொன். ஜெயசீலன்.
“2000ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் 25 யானை வழித்தடங்கள் இருப்பதாக வனத்துறையினர் கூறினார்கள். பின்னர் 2017இல் மீண்டும் ஒரு கணக்கெடுப்பில் 18 வழித்தடங்கள் எனக் கூறினார்கள். அதன் பிறகு 2023இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 20 என்றும் அதில் 15 தமிழ்நாட்டு எல்லைக்குள்ளும், மீதம் 5 கர்நாடகா, கேரளா எல்லைகளில் இருக்கிறது என்றும் கூறினார்கள். இப்போது 42 என்கிறார்கள்." என்று கூறினார்.
தொடர்ந்து பேசுகையில், “இந்த 161 பக்க அறிக்கையை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்கள். இப்பகுதியில் உள்ள பாமர மக்கள் இதை எப்படி படித்து புரிந்துகொள்வார்கள். எனவே மக்களையும் உள்ளூர் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேச வேண்டும், இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்கிறார் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன்.
இந்த உலகிற்கு காடுகள் வேண்டும் என்றால், காடுகளைக் காப்பாற்ற யானைகள் வேண்டும், யானைகளைக் காப்பாற்ற யானை வழித்தடங்கள் வேண்டும் என்று கூறுகிறார் சூழலியல் செயல்பாட்டாளரும், தமிழ்நாடு வன உயிரின வாரிய உறுப்பினருமான ஓசை காளிதாசன்.
“இரண்டு வாழ்விடங்களுக்கு இடையேயான குறுகிய பாதையை தான் யானை வழித்தடம் அல்லது வலசைப் பாதை என்று சொல்வார்கள். ஒரு வளர்ந்த யானைக்கு 150 கிலோ உணவு, 200 லிட்டர் தண்ணீர் வரை தேவைப்படும். உணவு தேடி அவை பயணித்துக் கொண்டே இருக்கும். இந்த வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டால் யானைகளால் ஒரு வாழ்விடத்திலிருந்து மற்றொன்றிற்கு செல்ல இயலாது.” என்கிறார் ஓசை காளிதாசன்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த சில வருடங்களாக பல பெரும் ஆக்கிரமிப்புகளால் யானை வலசைப் பாதைகள் மாறிவிட்டன. இதனால் யானைகளின் வாழ்விடங்கள் சுருங்கி விட்டதால், அவை விளை நிலங்களுக்குள் நுழைகின்றன. மக்கள் வசிக்கும் பகுதிகளால் யானைகளுக்கு பாதிப்பு இல்லை, காரணம் மக்களும் பழங்குடிகளும் பல காலமாக யானைகளோடு தான் வாழ்ந்து வருகிறார்கள். பிரச்னை யாரால் என்றால் புதிதாக முளைத்துள்ள பெரிய நிறுவனங்களின் ரிசார்டுகளாலும், ஆசிரமங்களாலும் தான். யானைகள், மக்கள் மற்றும் பழங்குடிகள், இரண்டு தரப்பையும் நாம் பாதுகாக்க வேண்டும்” என்று கூறுகிறார் ஓசை காளிதாசன்.
பட மூலாதாரம்,@MMATHIVENTHAN
யானை வழித்தடத் திட்டத்துக்கு எழுந்திருக்கும் எதிர்ப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், “கூடலூர், மசினகுடி மக்கள் யாரும் பதற்றப்படத் தேவையில்லை. இப்போது வெளியிடப்பட்டிருப்பது ஒரு திட்ட வரைவு மட்டுமே. அது நிபுணர்களுக்காக தயாரிக்கப்பட்ட வரைவு என்பதால் தான் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மக்களிடம் இது குறித்து கருத்து கேட்கவில்லை. தேர்தல் முடிந்ததும் ஒவ்வொரு பகுதி மக்களிடமும் சென்று கருத்து கேட்போம்." என்றார்.
எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்க முயற்சி செய்வதாகக் குற்றம்சாட்டிய அமைச்சர், "யானைகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் தான், அதற்காக எடுத்தோம் கவிழ்த்தோம் என்று யாரையும் வெளியேறச் சொல்ல மாட்டோம். சில பகுதிகளில் அதற்கான தேவை ஏற்பட்டாலும் அவர்களுக்கு தகுந்த நஷ்ட ஈடும், மாற்று இடமும் வழங்கப்படும்” என்றார்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
ஆனால் கூடலூர், மசினகுடி பகுதி மக்கள் இதை ஏற்பதாகத் தெரியவில்லை. கூடலூரைச் சேர்ந்த விமல் பேசுகையில், “இப்படித்தான் கூடலூரின், ஓவேலி பகுதியில் புலிகள் காப்பகத் திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும்போது நஷ்ட ஈடும், மாற்று இடமும் தருவதாகச் சொன்னார்கள், ஆனால் அந்த மக்களுக்கு இன்றுவரை அது கிடைக்கவில்லை. பத்து தலைமுறைக்கும் மேலாக இங்கு வாழ்ந்து வருகிறோம். ஒருபோதும் யானை வாழ்விடங்களையோ வழித்தடங்களையோ நாங்கள் ஆக்கிரமித்ததில்லை” என்று கூறும் அவர் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறார்,
“பழங்குடிகளுக்கும் எங்களுக்கும் யானைகள் தான் பாதுகாப்பு, யானைகளுக்கு நாங்கள் தான் பாதுகாப்பு. எங்களை வெளியேற்றிவிட்டு என்ன செய்யப் போகிறார்கள்?”