கொழும்பு பேர வாவியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்
(இராஜதுரை ஹஷான்)
உள்ளக விமான சேவையை அபிவிருத்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது. ஆகவே உள்ளக விமான சேவைக்கு தனியார் துறையினர் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பு பேர வாவியை பயன்படுத்தி நீர் விமான சேவையை ஆரம்பிக்கும் திட்டம் கொழும்பு சினமன் லேக் ஹோட்டல் முனையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேற்று வருகைத் தந்த சிறிய ரக நீர் விமானத்தை அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்த, ஜோன்ஸ் கீல்ஸ் குழுமம் மற்றும் சினமன் ஹோட்டல் குழுமத்தின் தலைவர் கிருஷான் பாலேந்திர ஆகியோர் வரவேற்றனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க,கொழும்பு துறைமுக நகரத்தை அண்மித்த வகையில் உள்ளக விமான சேவையை ஆரம்பிப்பதில் பாதுகாப்பு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பல பிரச்சினைகள் கடந்த காலங்களில் காணப்பட்டன.
சுமார் 12 ஆண்டுகால முயற்சியின் பயனாக பாதுகாப்பு அமைச்சின் முழுமையான கண்காணிப்புடன் இந்த உள்ளக விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உள்ளக விமான சேவையை அபிவிருத்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது. ஆகவே உள்ளக விமான சேவைக்கு தனியார் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜோன்ஸ் கீல்ஸ் குழுமம் மற்றும் சினமன் ஹோட்டல் குழுமத்தின் தலைவர் கிருஷான் பாலேந்திர,கொழும்பு பேர வாவியை அண்மித்து உள்ளக விமானசேவையை ஆரம்பித்துள்ளமை சிறந்ததாகும்.
இந்த சேவை ஊடாக அனைவரும் பயனடைவார்கள்.குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் இலகுவானதாக அமையும்.சினமன் எயார் விமானம் பிரதானமாக கொழும்புக்கு வெளியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பயணத்தை மேற்கொள்கிறது.
இருப்பினும் தற்போது கொழும்பு பேரா வாவியை அண்மித்து விமானசேவையை ஆரம்பித்துள்ளமை சிறந்ததாகும்.இந்த சேவை ஊடாக அனைவரும் பயனடைவார்கள்.குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் இலகுவானதாக அமையும்.
கொழும்பு நகரில் பிரதான சுற்றுலா ஹோட்டல்கள் அமையப்பெற்றுள்ளது.இந்த புதிய திட்டத்தின் ஊடாக சுற்றுலாத்துறை மேம்படும்.
உள்ளக விமான சேவைக்கும் புதிய அனுபவமாக அமையும்.ஆகவே இந்த புதிய சேவையானால் நாட்டின் சுற்றுலாத்துறை கைத்தொழில் அபிவிருத்தியடையும் என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுநிலை) சம்பத் துய்யகொந்த, இந்த திட்டத்துக்குரிய பாதுகாப்பு வசதிகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து இந்த உள்ளக விமான சேவையை ஆரம்பிப்பதற்கு அனுமதியளித்துள்ளோம்.
இந்த திட்டத்தை மேலும் விரிவுப்படுத்துவதற்கு பாதுகாப்பு சட்டங்களுக்கமைய அனுமதி வழங்குவோம் என்றார்.




கொழும்பு பேர வாவியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம் | Virakesari.lk
