சமூகச் சாளரம்

'ஒருவனுக்கு ஒருத்தி' மனிதனின் இயல்பான குணமா? கலாசாரங்களில் பலதார மணம் எப்படி இருந்தது?

1 day 10 hours ago

மனிதன், திருமண முறை, ஒருதார மணம், பலதார மணம், மோனோகமி, பாலிகமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க்ரவுட்சயின்ஸ் நிகழ்ச்சி

  • பதவி, பிபிசி உலக சேவை

  • 9 ஜூன் 2025, 10:12 GMT

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

டேட்டிங் செயலிகள் முடிவில்லாத வாய்ப்புகளை வழங்கி, உறவுகளின் லேபிள்களும் மாறி வரும் இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் இயற்கையாகவே ஒருதார மணம் செய்யும் தன்மை (மோனோகமி) கொண்டவர்களா என்கிற கேள்வி முன்பு எப்போதையும் விட பொருத்தமுள்ளதாகிறது.

லண்டனில் வசிக்கும் ரோமானியரான அலினா 'பாலிஅமோரி' அனுபவம் பெற்ற பிறகு இதே எண்ணத்தில் தான் இருந்தார். பாலிஅமோரி என்பது சம்மந்தப்பட்டவர்களின் ஒப்புதலுடன் ஒரே நேரத்தில் பல நெருக்கமான உறவுகளில் இருப்பது.

"நான் சமீபத்தில் பாலிஅமோரி பின்பற்றும் ஒருவரைச் சந்தித்தேன், அவர் எப்போதுமே அப்படித்தான் இருந்துள்ளார்" என விவரித்தவர், நாம் ஏன் ஒரு சமூகமாக ஒருதார மணம் தான் விதி என ஏற்றுக் கொண்டோம் எனக் கேள்வி எழுப்புகிறார்.

நம்முடைய பரிணாம வளர்ச்சி பாதை புரிந்து கொள்ள நமக்கு நெருக்கமான உயிரினங்களின் இனப்பெருக்க உத்திகளை ஆராய்வது உதவியாக இருக்கும்.

"கொரில்லாக்கள் பல தார மணம் செய்பவை, ஒரு ஆண் உயிரினம் பல பெண் உயிரினங்களுடன் இனச்சேர்க்கை மேற்கொள்ளும்" என பிரிட்டனில் உள்ள ப்ரிஸ்டால் பல்கலைக்கழகத்தில் பரிணாமத்தை ஆய்வு செய்யும் உயிரியலாளரான கிட் ஓபி தெரிவித்தார்.

"எனவே அந்தக் குழுவில் உள்ள சந்ததியினர் அனைவரும் தந்தை ஒருவராக இருப்பார், ஆனால் தாய் வேறு வேறாக இருப்பார்கள்" என்றார்.

ஆனால் இது ஒரு திறன்மிகு இனப்பெருக்க உத்தி இல்லை என்கிறார் ஓபி. ஏனென்றால் இது அதிக அளவிலான சிசுக் கொலைக்கு வழிவகுக்கும் எனக் கூறுகிறார்.

சிசுக்கொலை என்பது கொரில்லா வாழ்க்கையில் மிகவும் கொடூரமான ஒன்று எனக் கூறும் அவர், "ஒரு ஆண் கொரில்லா தனக்கு பிறக்காத குழந்தை கொரில்லாக்களை கொல்லும், இதன் மூலம் அதன் தாயுடன் விரைவாக இனப்பெருக்கம் மேற்கொள்ள முடியும். இத்தகைய பரிணாம உத்தியை நாம் பின்பற்ற முடியாது" என்றார்.

மனிதன், திருமண முறை, ஒருதார மணம், பலதார மணம், மோனோகமி, பாலிகமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பெண்கள் குரங்குகள் பல ஆண் குரங்குகளுடன் இனப்பெருக்கும் மேற்கொள்ளும்.

ஆனால் மனிதருக்கு நெருக்கமான குரங்கினங்களான சிம்பன்சிக்கள் மற்றும் போனோபோஸ்களில் பெண்கள் வேறு விதமான பரிணாம உத்தியைப் பின்பற்றுகின்றன. பெண் குரங்குகள், பல ஆண் குரங்குகளுடன் இனப்பெருக்கும் மேற்கொள்ளும். இதன் மூலம் தந்தை யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டு குழந்தை கொரில்லாக்கள் தாக்கப்படுவதற்கான சாத்தியங்கள் குறையும்.

மனிதகுலமும் கிட்டத்தட்ட இதே போன்ற அமைப்பில் இருந்து தான் தொடங்கி இருக்கக்கூடும். ஆனால் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அனைத்தும் மாறின. இதற்கு காலநிலை மாற்றம் தான் காரணம் என்கிறார் ஓபி.

"நம் மூதாதையர்கள் வாழ்ந்த ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட வறட்சியால் பல இடங்கள் தரிசாக மாறின. ஆதி மனிதர்கள் தங்களை வேட்டை விலங்குகளிடமிருந்து பாதுகாத்து கொள்ள பெரிய குழுக்களில் இருக்க வேண்டியிருந்தது. இத்தகைய பெரிய சிக்கலான குழுக்களை சமாளிப்பதற்காக மூளை பெரிதாகியது, இதனால் பாலூட்டும் காலமும் அதிகரித்தது" என்றார்.

பெரிய குழுக்களில் அதிக ஆண்கள் இருப்பதால், தந்தை வழியை பின்பற்றாதிருப்பது கடினமானது.

"அதே நேரத்தில் பெண்களுக்கு தங்களின் பிள்ளைகளை வளர்க்க ஆண்களின் துணை தேவைப்பட்டது. எனவே அவர்கள் ஒரு தார மணம் என்கிற முறைக்கு மாறினர்"

மோனோகமி சிறந்த உத்தியா?

மனிதன், திருமண முறை, ஒருதார மணம், பலதார மணம், மோனோகமி, பாலிகமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பெரிய மூளை கொண்ட மெதுவாக வளரும் ஆண் குழந்தைகளை வளர்க்க அதிக அளவிலான பெற்றோரின் ஈடுபாடு தேவைப்பட்டது.

இந்த மாற்றம் என்பது மோனோகமி சிறந்தது என்பதனால் நிகழவில்லை, அது தான் ஒரே சாத்தியமான வாய்ப்பு என்பதால் தான் சாத்தியமானது என ஓபி கூறுகிறார்.

பெரிய மூளை கொண்ட மெதுவான வளரும் ஆண் குழந்தைகளை வளர்க்க அதிக அளவிலான பெற்றோரின் ஈடுபாடு தேவைப்பட்டது. இது ஒரு தாயால் சமாளிக்கக்கூடியதை விட மிகுதியானது.

ஆதி மனிதர்கள் ஒரு தார மணம் செய்பவர்களாகப் பரிணமித்ததாக வரலாறு கூறினாலும், அதனை தேர்வு செய்தவர்கள் ஒருவருக்கு மட்டும் உண்மையாக இருக்க சிரமப்பட்டனர்.

"வாழ்நாள் முழுவதும் ஒருவருடனே வாழ்ந்து, ஏமாற்றாத உயிரினங்களும் உள்ளன. ஆனால் அவை மிகவும் அரிது" என்கிறார் முனைவர் ஓபி.

மேலும் அவர், "நமக்கு மிகவும் நெருக்கமான உறவினர் கிப்பன் குரங்குகள் தான். கிப்பன்கள் மற்ற ஜோடிகளிடம் இருந்து தனித்து வசிப்பதால், காட்டில் தங்கள் பகுதிக்குள் யார் வருகிறார்கள், யார் வருவதில்லை போன்றவற்றை கட்டுப்படுத்துவது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எளிதாக இருந்தது."

"ஆனால் மனிதர்கள் போன்ற அதிக ஆண்கள், அதிக பெண்கள் வாழும் குழுக்களில் நீங்கள் இருந்தால், அங்கு கட்டுப்படுத்துவது என்பது கடினம், உங்களின் துணை ஏமாற்றுகிறாரா இல்லையா என்று அறிவது கடினம்" என்கிறார்.

அந்த விதத்தில் பார்க்கையில் ஒரு தார மணம் என்பது இயற்கையான தேர்வு என்பதை விட பிழைக்கும் உத்தியாகவே உள்ளது. ஆனால் இதில் குறைகளும் உள்ளன.

பந்தம் உருவாக்குவதன் பின்னணி என்ன?

நாம் காதலில் விழுந்தாலோ அல்லது உண்மையாக இருந்தாலோ நம் மூளைகளில் என்ன நடக்கிறது என்ற கேள்வி எழாமல் இல்லை.

அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகத்தில் நரம்பியல் முனைவர் பட்ட மாணவரான சாரா ப்ளூமெந்தல், பிரேரி வோல்ஸ் என்கிற உயிரினத்தை ஆய்வு செய்து வருகிறார். இந்த சிறிய உயிரினங்கள், மனிதர்களைப் போல நீண்ட கால பிணைப்புகளை மேற்கொள்பவை.

மனிதன், திருமண முறை, ஒருதார மணம், பலதார மணம், மோனோகமி, பாலிகமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிரேரி வோல்ஸின் மூளையில் அதிக அளவிலான ஆக்ஸிடாஸின் ரிசப்டர்கள் உள்ளன.

அவர்களின் மற்ற வோல் உறவினர்களைப் போல அல்லாமல் பிரேரி வோல்ஸின் மூளையில் அதிக அளவிலான ஆக்ஸிடாஸின் ரிசப்டர்கள் உள்ளன.

ஆக்ஸிடாஸின் "கட்டிள் ஹார்மோன்" (cuddle hormone) என்றும் அழைக்கப்படுகிறது. இவை தொடுதல் ஏற்படுகிற சமயங்களில் மூளையில் வெளியாகும் நியூரோகெமிக்கல் ஆகும்.

"நாம் பரிசோதனை முறையில் பிரேரி வோல்ஸ்களில் உள்ள ஆக்ஸிடாஸின் அளவை சீண்டினால் அவர்களால் வலுவான பந்தத்தை உருவாக்க முடியவில்லை. அவர்களின் துணைகளுடன் குறைவான நேரத்தையே செலவிடுகின்றனர்" என்றார் ப்ளூமெந்தல்.

மனிதன், திருமண முறை, ஒருதார மணம், பலதார மணம், மோனோகமி, பாலிகமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மனிதர்களிடமும் இதே போன்ற ஆக்ஸிடாஸின் அமைப்பு தான் உள்ளது, நம்முடைய மூளை பந்தம் மேற்கொள்வதை நேர்மறையாக அணுகுவதற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

ஆனால் மற்றொரு கெமிக்கலான டோபமைன், அர்ப்பணிப்பு என்பதற்கு மாறாக புதுமையை நோக்கி நம்மை தள்ளுகிறது.

பந்தத்தின் தொடக்க கட்டத்தில் நம்முடைய மூளையில் டோபமைன் நிரம்பி வழிகிறது, இது ஈர்ப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை தூண்டுகிறது. பந்தம் உருவான பிறகு டோபமைன் வடிவங்கள் மாறுகின்றன.

பல கணவன்கள் கொண்ட பெண்கள்

ஒரு தார மணத்திற்கான பரிணாம வாதம் இருந்தாலும், மனித கலாச்சாரங்கள் எப்போதுமே பல தரப்பட்ட உறவு ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன.

அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மானுடவியலாளர் முனைவர் கேட்டி ஸ்டார்க்வெதர், நேபாள், திபெதி தொடங்கி ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அமெரிக்கா என உலகம் முழுவது, 50-க்கும் மேற்பட்ட பாலியண்ட்ரி சம்பவங்களை ஆவணப்படுத்தியுள்ளார். பாலியண்ட்ரி என்றால் ஒரு பெண் பல கணவன்கள் வைத்திருக்கும் முறையைக் குறிக்கிறது

மனிதன், திருமண முறை, ஒருதார மணம், பலதார மணம், மோனோகமி, பாலிகமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பாலியண்ட்ரி என்றால் ஒரு பெண் பல கணவன்கள் வைத்திருக்கும் முறையைக் குறிக்கிறது

ஒரு தார மணத்திற்கான பரிணாம வாதம் இருந்தாலும், மனித கலாச்சாரங்கள் எப்போதுமே பல தரப்பட்ட உறவு ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன.

அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மானுடவியலாளர் முனைவர் கேட்டி ஸ்டார்க்வெதர், நேபாள், திபெதி தொடங்கி ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அமெரிக்கா என உலகம் முழுவது, 50-க்கும் மேற்பட்ட பாலியண்ட்ரி சம்பவங்களை ஆவணப்படுத்தியுள்ளார். பாலியண்ட்ரி என்றால் ஒரு பெண் பல கணவன்கள் வைத்திருக்கும் முறையைக் குறிக்கிறது.

பாலிஜினியை (ஒரு ஆண் பல மனைவிகள் வைத்திருப்பது) விட பாலியண்ட்ரி அரிதானது என்றாலும் அந்த கூற்றை நம்ப முடியாத ஒன்றாகப் பார்க்க வேண்டாம் என எச்சரிக்கிறார் ஸ்டார்க்வெதர்.

"பல பார்ட்னர்கள் வைத்திருப்பதன் மூலம் பெண்கள் பொருளாதார ரீதியாக பலன் அடையலாம். ஒருவரின் முதன்மையான கணவன் இறந்தாலோ அல்லது சில பூர்வகுடி வட அமெரிக்க குழுக்களிடம் இருப்பதைப் போன்று நீண்ட காலம் கணவன் காணாமல் போனாலோ மாற்று திட்டம் கையில் வைத்திருப்பது சிறந்தது தான்" என அவர் கூறுகிறார்.

சில சந்தர்ப்பங்களில், பல தார ஏற்பாடுகள் மரபணு நன்மைகளையும் வழங்கியுள்ளன.

"மக்கள் அதிகமான நோய்வாய்ப்பட்டு அதனால் உயிரிழக்கும் சூழல்களில், நீங்கள் சற்று வேறு விதமான மரபணு அமைப்பு கொண்ட பல பிள்ளைகளைக் கொண்டிருந்தால் நீங்கள் நல்ல நிலையில் தான் இருப்பீர்கள்" என ஸ்டார்க்வெதர் விவரிக்கிறார். "அவர்கள் நடப்பு சூழலில் நன்றாகப் பொருந்திப் போவார்கள்" என்றும் தெரிவித்தார்.

ஆனால் பல தார முறையில் சவால்களும் இல்லாமல் இல்லை. பல உறவுகளைச் சமாளிப்பதற்கு, நேரம், உணர்வியல் சக்தி மற்றும் பேச்சுவார்த்தை தேவைப்படும்.

"நீங்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி பல துணைகள் வைத்திருப்பது மிகவும் கடினமானது. பொருளாதார ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் சரி அது மிகவும் கடினம். ஒரு தார மணம் என்பது எண்ணிக்கை அளவில் மிகவும் பொதுவான திருமண வடிவமாக இருப்பதற்கு இது தான் முதன்மை காரணம் என நினைக்கிறேன்" என்று தெரிவித்தார் ஸ்டார்க்வெதர்.

பாலிஅமோரி அனுபவம் எப்படி உள்ளது?

அலினாவுக்கு அவருடைய முந்தைய ரிலேஷன்ஷிப்பில் மோனோகமி வேலை செய்யவில்லை என்கிறார். தற்போது பாலிஅமோர் உறவில் இருக்கும் அவர் பல சிக்கலான உணர்வுகளைக் கடந்து வருகிறார்.

பொறாமை என்பது மிகவும் கடினமாகவும் வலுவாகவும் இருக்கும் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறார். "ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில், இந்த உணர்வுகளில் பெரும்பாலானவை நம்முடைய பார்ட்னர் நம்மிடம் நேர்மையாக இல்லை என்கிற உணர்வில் இருந்து தான் வருகின்றன. அவர் நேர்மையாக தான் இருக்கிறார் எனத் தெரிவது பொறாமை உணர்வை சமாளிக்க உதவுகிறது" என்றார்.

மனிதன், திருமண முறை, ஒருதார மணம், பலதார மணம், மோனோகமி, பாலிகமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சிலருக்கு பல தார முறை என்பது உணர்வியல் சுதந்திரம் மற்றும் பொருளாதார நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

பொறாமை என்பது பெரிய பிரச்னை இல்லை என அவரின் பார்ட்னர் கூறுகிறார். "பல ஆரோக்கியமான உறவுகளை சமாளிக்க தேவைப்படும் நேரம் மற்றும் முயற்சி பெரும் சுமையாக இருக்கலாம்" என்றார்.

அவர்கள் இருவருமே இது சரியானது தான் என்கின்றனர். முன்னரே தீர்மானிக்கப்பட்ட விதிகள் எதுவும் இல்லை என்கிறார் அலினா. மேலும் அவர், "அது உங்களை உரையாட வைக்கிறது, மற்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் அதை மேற்கொள்ள மாட்டீர்கள், அது தான் எங்கள் உறவை வலுவானதாக்குகிறது" என்றார்.

எனவே, நாம் இயற்கையில் ஒரு தார தன்மை கொண்டவர்களா எனக் கேள்வி எழுப்பினால் ஆம் மற்றும் இல்லை என்கிற இரண்டுமே தான் பதிலாக அமையும்.

வரலாறு மற்றும் கலாச்சாரங்கள் முழுவதுமே, மனிதர்களின் தங்களின் சமூக, பொருளாதார மற்றும் சூழலியல் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற பல வகையான உறவு முறைகளை உருவாக்கியுள்ளனர். சிலருக்கு பல தார முறை என்பது உணர்வியல் சுதந்திரம் மற்றும் பொருளாதார நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. ஆனால் பிறருக்கு, காதலைக் கடத்திச் செல்ல ஒரு தார மணம் என்பது எளிமையான மற்றும் சமாளிக்கக்கூடிய வழியாக உள்ளது.

மனிதர்கள் நெகிழ்வாக இருக்க பரிணமித்துள்ளனர். இது நாம் உறவுகள் வைத்திருப்பது மற்றும் திருமணம் செய்து கொள்ளும் முறை ஆகியவற்றை உள்ளடக்கும் எனக் கூறும் ஸ்டார்க்வெதர் "நாம் உலகின் அனைத்து விதமான சுற்றுச்சூழலிலும் வாழ்கிறோம். அதற்கு நாம் கொண்டிருக்கும் நெகிழ்வுத்தன்மை மற்றும் அணுகுமுறையே காரணம்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c39xe3mj21ro

கே.எஸ் பாலசந்திரனின் சூ மந்திரகாளி

1 month ago

நம்பிக்கைகளும் கிராமிய வாழ்க்கையும்: ஒரு பார்வை

ஆய்வுக் குறிப்பின் நோக்கம்:

இந்த ஆவணம், வழங்கப்பட்ட தமிழ் மூலத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய கருப்பொருள்கள், யோசனைகள் மற்றும் உண்மைகளை விரிவாக ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது கிராமிய வாழ்க்கையில் நம்பிக்கைகள் மற்றும் மூடநம்பிக்கைகளின் தாக்கத்தை மையமாகக் கொண்டுள்ளது.

முக்கிய கருப்பொருள்கள்:

பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் மூடநம்பிக்கைகள்: கிராமப்புற சமூகங்களின் வாழ்க்கையை நம்பிக்கைகள் மற்றும் மூடநம்பிக்கைகள் எந்த அளவிற்கு பாதிக்கின்றன என்பது முக்கிய கருப்பொருளாகும். லியோன் யுரிஸின் 'றினிற்றி' நாவலில் அயர்லாந்து கிராமப்புற மக்களின் நம்பிக்கைகள், மூலத்தில் கூறப்பட்டுள்ள தமிழ் கிராமப்புற மக்களின் நம்பிக்கைகளுடன் ஒப்பிடப்படுகின்றன. "ஐதிகங்களின் அடிப்படையில் உருவான நம்பிக்கைகளுடன் வாழ்ந்திருக்கிறார்கள் என்றறிந்து வியப்படைந்தேன்." என்ற வரி இதை எடுத்துக்காட்டுகிறது.

பயம் மற்றும் அறியாமை: அறியாமை மற்றும் அனுபவமின்மை ஆகியவை பயத்தை எவ்வாறு உருவாக்குகின்றன என்பது மற்றொரு முக்கிய கருப்பொருள். குறிப்பாக மின்சாரம் இல்லாத காலங்களில், மரங்கள் மற்றும் சில இடங்கள் பயமுறுத்தும் காட்சிகளாகத் தோன்றின.

பேய் கற்கள் போன்ற விசித்திர நிகழ்வுகள்: திடீரென்று நிகழும் கல் வீச்சு போன்ற விசித்திரமான மற்றும் விளக்க முடியாத நிகழ்வுகள் கிராம மக்களிடையே எவ்வாறு அச்சத்தையும் பதட்டத்தையும் உருவாக்குகின்றன என்பது விவாதிக்கப்படுகிறது. இது அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்து, குடும்பங்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது.

மந்திரவாதிகள் மற்றும் சூனியம்:

விளக்க முடியாத நிகழ்வுகளுக்கு சூனியம் காரணமாக இருக்கலாம் என்ற நம்பிக்கை மற்றும் அதை முறிப்பதற்கு மந்திரவாதிகளின் உதவி நாடப்பட்டது என்பது விவாதிக்கப்படுகிறது.

உரு வருதல் மற்றும் ஆவேசம்: குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் (குறிப்பாக இளம் பெண்) உரு வந்து ஆடுவது, தெய்வத்தின் பெயரால் படையல்கள் கேட்பது போன்றவை கிராமப்புற நம்பிக்கைகளின் மற்றொரு அம்சமாக காட்டப்பட்டுள்ளது. இது அந்தப் பெண்ணின் வாழ்க்கையையும் படிப்பையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. "‘உரு வாற பிள்ளை’ என்று கதை பரவியவுடன்..." என்ற வாக்கியம் இந்த நிலையை விளக்குகிறது.

சகுனங்கள் மற்றும் நிமித்தங்கள்:

பூனை குறுக்கே செல்வது, பல்லி சொல்வது, தும்மல் போன்ற அன்றாட நிகழ்வுகள் சகுனங்களாகவும் நிமித்தங்களாகவும் பார்க்கப்பட்டு, திட்டமிடப்பட்ட செயல்களை ரத்து செய்யும் அளவிற்கு அவை செல்வாக்கு செலுத்தின என்பது விவாதிக்கப்படுகிறது. "அப்பாவுக்கு போக வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது." என்ற வரி இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

உண்மையான நிகழ்வுகளை தவறாகப் புரிந்துகொள்வது: சுடலையில் நடந்த தேத்தண்ணிக் கடை நிகழ்வை பேய்களாகப் புரிந்துகொள்வது போன்ற, உண்மையான நிகழ்வுகளை பயத்தின் காரணமாக தவறாகப் புரிந்துகொள்ளும் போக்கு காட்டப்பட்டுள்ளது. இது கிராமிய மக்களின் அறியாமையையும் பயத்தையும் வெளிப்படுத்துகிறது.

மிக முக்கியமான யோசனைகள் / உண்மைகள்:

நம்பிக்கைகளின் எதிர்மறை விளைவுகள்: "‘நம்புங்கள். நம்பிக்கை வாழ வைக்கும்' என்றால் எங்கள் இந்த நம்பிக்கைகள் வாழ்க்கையையே சிதைத்துவிடும்." என்ற முக்கிய வரி, சில நம்பிக்கைகள் வாழ வைப்பதற்கு பதிலாக வாழ்க்கையை சீர்குலைத்துவிடும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.

உரு வந்த பெண்ணின் படிப்பும் உடல்நிலையும் பாதித்தது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

அறியாமையே பயத்தின் மூலம்: மின்சாரம் இல்லாத காலம், அடர்ந்த புளிய மரத்தின் தோற்றம் போன்ற காரணங்கள் பயத்தை உருவாக்கின.

தேத்தண்ணிக் கடையை பேய்களாகப் பார்த்ததும், இருட்டில் அல்லது அறியாமையில் உருவான ஒரு தவறான புரிதலே.

சமூகத்தின் தாக்கம்: கல் வீச்சு போன்ற நிகழ்வுகள் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையையே சிதைத்துவிடுகின்றன. உரு வந்த பெண்ணோடு பழகுவதற்கே நண்பர்கள் தயங்குவது சமூகத்தின் பயம் மற்றும் ஒதுக்குதலைக் காட்டுகிறது.

காலம் மாறினாலும் சில நம்பிக்கைகள் நீடிக்கின்றன: கட்டுரை எழுதும்போது அடுத்த வீட்டுக்காரர் தும்மியதை ஒரு சகுனமாகப் பார்ப்பதும், புதிய தொலைபேசி இணைப்பு எடுத்தவர் கோயிலுக்கு முதல் அழைப்பு எடுப்பதும் "காலம் ஒன்றும் மாறிவிடவில்லை." என்ற கருத்தை வலுப்படுத்துகிறது.

மேற்கோள்கள்:

"அயர்லாந்து நாட்டு கிராமிய மக்கள் எங்களி இளமைக்காலவாழ்க்கையைப்போலவே ஐதிகங்களின் அடிப்படையில் உருவான நம்பிக்கைகளுடன் வாழ்ந்திருக்கிறார்கள் என்றறிந்து வியப்படைந்தேன்." (ஆரம்பப் பகுதி)

"வஞ்சனைப்பேய்கள் என்பார்.. அந்த மரத்தில் என்பார் இந்தக் குளத்தில் என்பார்.. துஞ்சுது முகட்டிலென்பார் மிகத் துயர்ப்படுவார்... எண்ணிப் பயப்படுவார்" (பாரதியின் பாடல் மேற்கோள்)

"புளிய மரத்தில் முனி இருக்கிறதென்றால் அவ்வளவுதான். புளிய மரம் காய்த்து குலுங்கினாலும் யாரும் தொடமாட்டார்கள்."

"எறிபவர்கள் அயல் வீட்டுக்காரராக இருக்கலாம். கோபக்காரராக இருக்கலாம். எது எப்படியோ அந்தக் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையே சிதைந்து போய் விடும்."

"அந்த வீட்டுக்காரரின் நடு வயது மகள் உரு வந்து ஆடுவாள். தனக்கு படையல் போடுங்கள் என்ற ஆவேசமாக காளியின் சார்பாக கேட்டுக்கொள்வாள்..."

"‘உரு வாற பிள்ளை’ என்று கதை பரவியவுடன், ‘காணமல் போன பசுமாடு எங்கு நிற்கிறது’

‘கடைசிப்பொடியன் படிப்பு குழப்புவானா’ என்றெல்லாம் கேட்பதற்கு ஆட்கள் எலுமிச்சம் பழத்தடன் வரிசையாக வருவார்கள்."

"‘நம்புங்கள். நம்பிக்கை வாழ வைக்கும்' என்றால் எங்கள் இந்த நம்பிக்கைகள் வாழ்க்கையையே சிதைத்துவிடும்."

"அப்பா சைக்கிள் பின்காரியரில் இருந்து வரும் சித்தப்பாவை 'அந்தப்பக்கம் பார்க்காதை பார்க்காதை' என்று சொல்லித்தடுத்து விட்டாராம்."

"காலம் ஒன்றும் மாறிவிடவில்லை."

"ஏனென்று கேட்டதிற்கு முதல் அழைப்பு கோயிலுக்கு எடுத்தால் நல்லது என்றார்.

முடிவுரை:

வழங்கப்பட்ட மூலமானது, பாரம்பரிய கிராமிய சமூகங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள நம்பிக்கைகள் மற்றும் மூடநம்பிக்கைகள் தனிநபர்களின் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. சில நம்பிக்கைகள் வாழ்வாதாரமாக இருந்தாலும், அறியாமை மற்றும் பயத்தின் அடிப்படையில் உருவாகும் பல நம்பிக்கைகள் வாழ்க்கையை சீர்குலைத்து, தேவையற்ற துயரத்தையும் அச்சத்தையும் உருவாக்குகின்றன என்ற உண்மையை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

காலம் மாறினாலும், சில வகையான நம்பிக்கைகளும் சகுனங்களும் இன்னும் சமூகத்தில் நீடிக்கின்றன என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.

இந்த ஆய்வு குறிப்பு மூலத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய கருத்துக்களைப் பற்றிய விரிவான புரிதலை வழங்குகிறது

கே.எஸ் பாலசந்திரனின் சூ மந்திரகாளி என்னும் பதிவின் தரவுகளின் அடிப்படையில் இந்த செயற்கை நுண்ணறிவு பாத்திரங்களை பேச வைத்திருக்கிறேன்

கேட்டுபாருங்கள்

அம்புலன்ஸ் ..( அவசர நோயாளர் காவு வண்டி )

1 month 2 weeks ago

அம்புலன்ஸ் ..( அவசர நோயாளர் காவு வண்டி )

அண்மையில் ஒரு சம்பவம் என்னை சிந்திக்க வைத்தது . மனித நேயம் எங்கே என்று ....ஒரு முதியோர் ஒன்றுகூடும் நிகழ்வில், அந்த நிகழ்வு நிறைவுறும் தருவாயில் ஒரு மூதாட்டிக்கு மூக்கினால் ரத்தம் சிந்த ஆரம்பித்தது. நன்றாக இறுக்கி பிடித்தவாறு இருக்கிறார் ...துடைக்கும் பேப்பர்கள் தோய்ந்துபோகின்றன அயலில் நின்றவர்கள் எத்தனையோ பேப்பர்களை கொடுத்தாகிவிட்ட்து (அத்தனையும் ரத்தத்தால் தோய்ந்தபடி ) அம்புலன்சுக்கு அழைத்தாகி விட்ட்து.ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவதாக சொல்கிறார்கள்.

ஒருவாறு பத்துநிமிடத்தில் அம்புலன்ஸ் வருகிறது . அவர்கள் அந்த நிலையத்தை தாண்டி செல்கிறார்கள் ..பின் மேலும் ஐந்து நிமிடம் கழித்து திருப்பி கொண்டு வருகிறார்கள். நோயாளி நடக்க சிரமம் உள்ளவர் .படியைக் காட்டி ஏறி உள்நுழையும்படி சொல்கிறார்கள் .மூதாட்டி முடியாமல் படியில் உட்க்கார்ந்து விட்டார் . அதுவும் இரண்டு வெள்ளையின பெண் ஒட்டியும் உதவியாளரும்.(இரக்கமென்பதே இல்லாமல் ) .ஒருவாறு ஒருவர் ஸ்ட்ரெச்சர் ஐ வெளியே எடுத்து அதில் படுக்க வைத்து ஏற்றிச் சென்றார்கள்...

..(.மீதி அவர் சொல்லக்கேள்விப்பட்ட்து ).

அங்கு கொண்டுசென்றதும் ஒரு காத்திருப்பு இடத்தில நிறுத்திவிட்டார்கள்

ஒருவர் நேர்ஸ் வருவார் என ...சொல்லிவிட்டு .( மதிய நேரம்,.... பதடடம் ) ரத்தம் கசிந்துகொண்டேயிருக்கிறது. மேலும் ...மேலும்.... துடைக்கும் காகிதம் கேட்க்கிறார் அவர்களும் தேடுகிறார்கள் ஒரு துடிப்பு.....ஒரு உதவும் மனம் ...(பொசிந்து ஓடுவது ரத்தம அதை உடலில் பெற எவ்வளவு ஊட்ட்ச்சத்துக்கள தேவை இடையே கட்டிபடட ரத்தம் வாயாலும் வடிகிறது ) ஒரு இரக்கம் அனுதாபம் ....மேலும் ரெண்டு மணி நேர தாமதத்துக்கு பின் ( படுக்கை இல்லையாம் . கிளீண் பண்ணுகிறார்களாம்)

டாகடர் பார்க்க வருகிறார்..... உதவி டாகடர் பார்த்து ..மருந்து தோய்ந்த பஞ்சு ஒன்றை மூக்கினுள் செலுத்தினார்களாம் அதுவும் நிற்கவில்லை பின் பெரிய டாகடர் வந்து ஒருவித வயர் பூடட படட (சற்று அசெளகரியம் தரும்) மூக்கினுள் நுளைத்து சற்று கவனித்து மேலும் அரைமணி தாமதித்து வீட்டிற்கு அனுப்பினர்களாம். மூன்றாம் நாளதை நீக்க வரும்படி .

நாம வாழும் நாடு (கனடா )மருத்துவ துறையில் மிகவும்

சிறப்பாக இருந்தது. ஒரு காலத்தில ....தற்போது ...தாமதங்கள் ...கால நீடிப்புகள் .வைத்தியர் பற்றாக குறை .....உதவியாளரின்( பணியாளரின் ) அசமந்த போக்கு ....எங்கே செல்கிறது மனித நேயம்.

சிறப்பு வைத்தியரின் முன்பதிவு எடுக்க மாதங்களாகும் ( மாசி மாதம் நோயால் வருந்தியவனுக்கு ஆடிமாதம் சிறப்பு வைத்தியர் முன்பதிவு கிடைத்தது )

மனித உயிர் அவ்வளவு மலி னமா ?

தாமதிக்கும் ஒவ்வொருகணமும் ...

தவணை முறையில் மரணம் நிகழும்

....

Offensive ? So what ? - சோம.அழகு

2 months 1 week ago

Offensive ? So What ?

- சோம.அழகு

நீங்கள் எந்த வயதினராகவும் இருக்கலாம். ஏற்கெனவே உங்களுள் ஊறிப் போன கற்பிதங்களையும் நம்பிக்கைகளையும் தாண்டி ஏரணம் மிகுந்த நியாயமான கேள்விகளுக்கு உங்கள் மனதில் இடமளிக்கும் அளவிற்குப் பக்குவம் பெற்றவராயின் தொடரலாம். அறிவைத் தக்கனூண்டு அளவில் பயன்படுத்தினாலே உள்ளம் துக்கப்பட்டு துயரப்பட்டு காயப்பட்டு புண்பட்டு உழல்வோராயின் இப்புள்ளியிலேயே விடை பெற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

உணவு, உறைவிடம் ஆகியவற்றைத் தேடிக் கொள்வதும் நமது பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்வதும் உள்ளுணர்வாக இருக்கையில் இறை என்பது இயற்கையான உள்ளுணர்வாக ஏன் இல்லை? அல்லது இறைவன் ஏன் அதை உள்ளுணர்வாக இயற்றவில்லை? இறை போதிக்கப்படாவிட்டால் திணிக்கப்படாவிட்டால் முற்றிலும் மறைந்து விடும் தன்மையானதாக ஏன் இருக்கிறது? ஒரு குழந்தை ஐரோப்பா/இந்தியா/இஸ்ரேல்/ சவுதி அரேபியாவில் பிறக்குமாயின் அது பெரும்பாலும் கிறித்தவ/இந்து/யூத/இசுலாம் மதத்தைச் சார்ந்ததாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். எனில் மதம் என்பது முற்றிலும் புவியியல் சார்ந்தது. எனவே இறை நம்பிக்கை என்பது தானாகக் கிட்டும் தெய்வீக அனுபவமோ ஒரு நிலையான உண்மையோ அல்ல. எனவே ஒரு குறிப்பிட்ட தலைமுறையில், அனைத்து குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களான பின் சுமாராக இருபது வயதிற்குப் பின்னர் தான் அவர்களுக்கு மதமும் கடவுள் நம்பிக்கையும் சொல்லித்தரப் பட வேண்டும் என உலகம் முழுக்க ஒரு தீர்மானம் கொண்டு வரப் பட்டால் அத்தலைமுறையோடு அனைத்து மதங்களும் அழிந்துவிடும்.

‘ஓர் ஆசுவாசத்தைத் தருகிறது’, ‘மன அமைதியைக் கொடுக்கிறது’… என பிறருக்குத் தொல்லை தராத வரை ஒரு தனிநபரது கடவுள் நம்பிக்கையில் எப்பிரச்சனையும் இல்லை. ஆனால் உடன்பாடு இல்லாத பிறர்மீதும் அர்த்தமற்ற சடங்குகளைத் திணிக்கும் போதும் பெரும்பாலான பக்திப் பரவச உரையாடல்களில் “அப்டிங்களா… ரொம்ப சந்தோசம்… நன்றி” என்று வெறுமனே கடந்து செல்ல முனையும் என்னைக் கிட்டத்தட்ட ‘சண்டைக்கு வா’ என அழைப்பு விடுக்கும் போதும் அவர்களின் மடமையை நான் பரிகசிப்பதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள். அதிலும் சிலர் வம்படியாக வந்து என்னுள் கடவுள் நம்பிக்கையை விதைக்கும் நற்பொறுப்பை ஏற்று அதை ஏதோ தாம் இறைவனுக்கு ஆற்றும் தொண்டாகக் கருதி அதில் முழு முயற்சியுடன் ஈடுபட்டு, பின்னர் மலங்க மலங்க முழித்தவாறே திரும்பிச் சென்ற சுவாரஸ்யமான தருணங்கள் சில உண்டு. அவ்வப்போது வாசிக்கக் கிடைத்த பெரும் ஆளுமைகள் பதிலுரைக்கும் போது மிகச் சரியாக வந்து கை கொடுத்திருக்கிறார்கள்!

“நம்மை மீறிய அற்புத சக்தி ஒன்று நிச்சயம் இருக்கிறது. நம்பு, நம்பிக்கைதானே எல்லாம்”

“சரி. நிரூபியுங்கள்”

“உனக்குத்தானே சந்தேகம்? நீ இல்லைன்னு நிரூபி, பார்ப்போம்”

“ஓ! நீங்க அப்பிடி வர்றீங்களா? அப்ப சரி. நான்தான் அந்த அற்புத சக்தி”

“அது எப்படி?”

“உங்கள் தர்க்க படி, உங்களுக்கு சந்தேகம்னா இப்போ நீங்கதான் நிரூபிக்கணும், நான் அற்புத சக்தி இல்லனு!”

“கடவுள் சர்வ வல்லமை படைத்தவர்”

“நானும்தான்”

“உன்னால கடவுள் செய்யுறத எல்லாம் செய்ய முடியுமா?”

“நடக்குறதெல்லாம் பாத்துட்டு கம்முன்னு கல்லாட்டம் இருக்கணும்தான? கொஞ்சம் கஷ்டம்தான்”

“பகுத்தறிவாளர்கள் ஏன் கடவுளைப் பற்றிப் பேசுகிறீர்கள்?”

“மருத்துவர்கள் ஏன் நோய்களைப் பற்றிப் பேசுகிறார்கள்?”

“இறையின் இடத்தை எதைக் கொண்டு சமன் செய்வாய்?”

“புற்றுநோய்க் கட்டியை அகற்றிய பின் அவ்விடத்தை எதைக் கொண்டும் நிரப்ப வேண்டியதில்லை”

“கடவுள் நம்பிக்கையே இல்லாவிட்டால் வாழ்வின் அர்த்தம்தான் என்ன?”

“ ‘எஜமானர்களே இல்லாவிட்டால் நான் யாருக்கு அடிமையாக இருப்பது?’ என கவலைப்படுகிறீர்களா?” (உபயம் : Dan Barker)

“பொதுவுடைமை, பகுத்தறிவாதம்லாம் கேட்க நல்லாருக்கும்; நடைமுறைக்கு சரி வராது”

“முதலாளித்துவம், மதம்லாம் கேட்கவே நல்லா இல்லையே”

“ ‘ஒரு’ கடவுளின் மீது கூடவா நம்பிக்கை இல்லை?”

“மடமை எவ்வுருவில் எப்பெயரில் வந்தால் என்ன?”

“என்ன நடந்தால் நம்புவாய்?”

“பெரியார் சொன்னதைப் போல் நேரில் வந்தால் நம்பி விடுவேன்”

“நம்பிக்கையற்ற உனக்கு ஏன் தரிசனம் தர வேண்டும்?”

“என்னை நம்ப வைக்க!”

“அதீத பக்தியுடன் இருக்கும் எங்களுக்கே தரிசனம் கிட்டியதில்லை”

“Exactly. அப்புறம் எதுக்கு நம்பிகிட்டு?”

“புனித நூல்களைக் கொஞ்சம் வாசி. அப்போதாவது உன்னில் மனமாற்றம் வருகிறதா, பார்க்கலாம்”

“பேசும் பாம்புகள், ஏழு தலை உயிரினங்கள், சூரியனை விழுங்கும் குட்டி குரங்கு, எலியின் மீது அமர்ந்து வலம் வரும் யானை, மலையைச் சுமக்கும் பறக்கும் குரங்கு…. – இவை இடம் பெற்றிருப்பவற்றை புனித நூல்கள் என்பதை விட ‘புனைவுகள்’ என்று கூறினால் சாலப் பொருத்தமாயிருக்கும். அவற்றைக் கொஞ்சம் வாசித்த பிறகுதான் கடவுள் இருப்பு குறித்த சந்தேகங்கள் முற்றிலும் அகன்று, ‘கருப்பு’ மனதிற்கு நெருக்கமாகிப் போனது”

“ப்ச்… எவ்வளவு நன்னெறி ஒழுக்கங்கள் மதிப்பீடுகள் கற்றுக்கொள்ளலாம் தெரியுமா?”

“அதற்கெல்லாம் உங்களுக்கு ஒரு புத்தகம் தேவைப்படுகிறதா? சரி எது தவறு எது என்று பிரித்தறியக் கூடவா தெரியாது?”

“இவ்வளவு பெரிய அண்டம் இத்தனை அற்புதங்களுடன் தானாக உருவாகியிருக்கவே இயலாது. அனைத்து உயிரினங்களும் தாமாக உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை”

“ஹ்ம்ம்… பூமியை உருவாக்கி பரிணாம வளர்ச்சிக்கான ஆதாரத்தையும் அதிலேயே விட்டு அதை கண்டறியும் அறிவையும் நமக்குத் தருவானேன்? நாம் சந்தேகம் கொண்டு இறையின் இருப்பைக் கேள்வி கேட்டு நரகத்திற்குச் செல்ல வேண்டியா? நமக்குச் சிந்திக்கும் ஆற்றலைத் தந்து அதைப் பயன்படுத்துவதற்குத் தடையும் விதித்து வினோதமான வழிமுறைகளுடன் இயங்குகிறார் கடவுள்”

“கடவுள் அன்பே உருவானவர். நீ ஏன் அவரை வெறுக்கிறாய்?”

“முதலாவதாக நீங்கள் இந்த உருவகத்தின் மூலம் அன்பைக் கொச்சைப்படுத்துகிறீர்கள். இரண்டாவதாக, இல்லாத ஒன்றை எப்படி நான் வெறுக்க இயலும்? கடவுள் என்னும் பெயரில் உலவும் கருத்தாக்கத்தைத்தான்(concept) வெறுக்கிறேன்”

“நீ அவரது அன்பை உணர மறுக்கிறாய்”

“ஆமாமா! இஸ்ரேலியர்கள் மனிதத் தன்மையுள்ளவர்கள்; இந்திய ஒன்றிய அரசு இஸ்லாமியர்களை நேசிக்கிறது; பார்ப்பனர்கள் சனாதனத்தை அடியோடு வெறுப்பவர்கள்;…. கடவுளும் அன்பானவர்தான். உணர்ந்துட்டேன்”

“சரி! உன்னைப் பொறுத்த வரை கடவுள்னா என்ன?”

“பசியில் வாடும் குழந்தைகளின் முனகல்கள், புற்றுநோயுடன் போராடும் குழந்தைகளின் வலி மிகுந்த அழுகைகள், வன்புணர்வு செய்யப்படும் குழந்தைகளின் ஓலங்கள், காஸாவில் தனது ஏழு வயது மகனின் தலை மட்டும் தனியாகக் கிடைக்க அதைக் கையில் ஏந்தியபடி வெளிப்பட்ட ஒரு தந்தையின் கேவல்கள், பிரசவித்த மறுநொடியே தன் குட்டியைச் சிங்கக் கூட்டத்திடம் இருந்து காப்பாற்ற முயன்று போராடி இறுதியில் இயலாமல், தாயும் (நிற்கப் பழகுவதற்குக் கூட நேரம் கிட்டாத) மான்குட்டியும் இரையாகிப் போகும் போது காடு அதிர கேட்கும் வெற்றி கர்ஜனை - இவை அனைத்தும் விண்ணை முட்டி வெளியை (space) அடையும் போது இவற்றிற்குப் பதிலாகக் கிடைக்கும் காதைக் கிழிக்கும் குரூரமான அமைதியின் பெயர்தான் ‘கடவுள்’!”

இவற்றுக்கெல்லாம் உச்சகட்டமாக எரிச்சலூட்டும் ஒரு வாதம் உண்டு.

“நானும் ஒரு காலத்தில் உன்னை மாதிரிதான் இருந்தேன்” - “மொதல்ல தெளிவாதான் இருந்தேன்; அப்புறம்தான் மண்ட கோளாறு வந்துச்சு” என்பதில் என்ன பெருமை? இப்படிச் சொல்வதன் மூலம் தமது மடமையை இன்னும் அதிகப்படுத்திக் கொள்கிறார்களே அன்றி வேறென்ன? ஏதோ இப்போது உலகம் புரிந்துவிட்டதாகவும் தான் ஞானி ஆகி விட்டதாகவும் நம்மை நம்ப வைக்கும் பரிதாப முயற்சிகள் எதற்கு? கொள்கை பிடிப்புள்ள பகுத்தறிவாளர் யாரும் எந்தக் கட்டத்திலும் மனமாற்றம் அடைந்து இறையைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். எனவே இவ்வாறு பேசுபவர்களுள் துவக்கத்திலிருந்தே ஆத்திகமும் ஒருபிடி அடிப்படைவாதமும் உறைந்தே இருந்திருக்கிறது என்றுதான் பொருள்.

“நானும் (சிறுவயதில்) உங்களைப் போல்தான் இருந்தேன். நீங்கள் பொய்களை நம்பத் தொடங்கிய காலத்தில் நான் அதைக் கைவிடத் துவங்கியிருந்தேன்” என பதிலுக்குச் சொல்லச் சொல்லி அரித்தெடுக்கும் மனதைப் பல முறை அமைதிபடுத்தியிருக்கிறேன்.

எல்லாரும் நாத்திகர்களாகத்தான் பிறக்கிறார்கள், வளர்கிறார்கள் - பயமும் மதமும் விதைக்கப்படும் வரை. “வளர வளர புரியும்” என்கிறார்கள். வளர வளர என்னிடம் கேள்விகள்தாம் பெருகிக் கொண்டே இருக்கின்றன. அடுத்ததாக இன்னும் ஒரு படி மேலே சென்று சிலர் “கடைசி காலத்தில் இறையை உணருவாய்” என்று சாபம் விடும் தொனியில் கூறும் போதுதான் சிரிப்பை அடக்க இயலாது எனக்கு. என் மரணப் படுக்கையில் இல்லாத கடவுளைப் பற்றி ஏன் எண்ணிக் கொண்டிருக்கப் போகிறேன்? அப்பாவிடம் இன்னும் ஒரு ரசனையான சங்கப் பாடலைச் சொல்லச் சொல்லிக் கேட்டிருக்கலாம்; அம்மாவின் கையால் இன்னும் ஒரு நெய் தோசை சாப்பிட்டிருக்கலாம்; என் மகளை இன்னும் ஒரு முறை இறுக அணைத்து அன்பைப் பொழிந்திருக்கலாம்; என்னவனுடன் இன்னும் ஒரு பயணம் சென்றிருக்கலாம்; இன்னும் ஒரு புத்தகம், ஒரு நல்ல சினிமா, இசைக்கோர்வை என ரசித்திருக்கலாம்… இப்படித்தான் நீளும் என் சிந்தனைகள். மேலும், ஒருவேளை உண்மையாக இருந்தாலும் கூட (வாய்ப்பில்லை! சும்மா ஒரு பேச்சுக்கு) அத்தருணத்தில் இறையை உணார்ந்துதான் என்ன ஆகப் போகிறது?

You have the right to believe in what you want; I have the right to believe it’s ridiculous – Ricky Gervais

ஒரு முறை வீட்டில் நான் தலை சீவிக் கொண்டிருக்கையில் சாமி கும்பிட வரச் சொல்லி அழைப்பு விடுக்கப்பட்டது. உடனே என்ன தோன்றியதோ? விளையாட்டாக இவ்வாறாக பதில் கூறினேன் – “இச்சீப்பின் வழியாக ஆண்டவனாகிய கடவுளிடம் எல்லாம் வல்ல இறைவனிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்”. “பைத்தியம்! சீக்கிரம் வா” என்று சிரித்தவாறே சென்றுவிட்டார் அழைக்க வந்தவர். அவ்வாக்கியத்தில் ‘சீப்பு’ என்ற சொல் ஒன்றுதான் பிரச்சனையாகப் பட்டிருக்கிறது, பாருங்களேன்! மற்றபடி அடுத்த அறைக்கு சென்று சில வண்ண வண்ணப் படங்களைப் பார்த்துப் பேசுவது, கல்லைப் பார்த்துப் பேசுவது, உத்திரத்தை நோக்கிப் பேசுவது, சுவற்றுடன் பேசுவது, நெடுஞ்சாண் கிடையாகவோ மண்டியிட்டோ விழுந்து தரையுடன் பேசுவது – இவையெல்லாம் நல்ல மனநிலையில் உள்ளவர் செய்வதற்கு ஏற்றவைதானாம். “நீங்கள் மனமுருகி பிரார்த்தனை செய்து வேண்டிக்கொள்ளுங்கள்; நான் அவ்வாறு செய்வதாக நடிக்கிறேன்” – இரண்டிற்குமான பலன்களில் என்ன வித்தியாசம் என்று காண விருப்பம். கோவில் வாசலில் இரப்பவனின் தட்டில், உள்ளே செல்லும் சாமானியன் இடும் அதே அலட்சியமும் மௌனமும் கருவறையில் வீற்றிருக்கும் கல்லிடம் இருந்து அச்சு பிசகாமல் அப்படியே சாமானியனுக்கும் கிட்டுவதுதான் இயற்கையின் சமநிலை!

“எனது நம்பிக்கையால் நான் இதைச் செய்கிறேன்/செய்ய மாட்டேன்” என்ற அளவில் இருப்பது “எனது நம்பிக்கையால் நீ இதையெல்லாம் செய்/செய்யாதே” என்றாகும் போதுதான் பிரச்சனையே! ஒரு கட்டத்தில் ‘சரி! செய்துவிட்டுத்தான் போவோமே! இச்செய்கைகள் என்னில் என்ன பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்து விடப் போகின்றன?’ என பிறரது நம்பிக்கைகளை மதிக்கும் பொருட்டு விளக்கேற்றி பூஜை செய்தாலும் ‘கடமைக்குன்னு செய்றதுக்கு எதுக்கு செய்யணும்?’ என்ற அஸ்திரம் வரும். பகுத்தறிவாத நங்கைகளிடம் “உன் நம்பிக்கையில் நான் தலையிட மாட்டேன்” என்று கூறும் ஆத்திகர்களை ஓரளவு முற்போக்குவாதிகளாக நான் அனுமானித்து வைத்திருந்த காலம் மலையேறிவிட்டது. அதாகப்பட்டது ஓர் இறை மறுப்பாளரின் நம்பிக்கையைத் தவறென்று நேரடியாகப் பழித்துரைக்காது இச்சமூகம். சடங்குகள், வழிபாட்டு முறைகள் என எல்லாவற்றையும் அவர் ஒழுங்காகப் பின்பற்றிவிட வேண்டும் என்று மட்டுமே எதிர்ப்பார்க்கப்படும். (என்னே உங்கள் சனநாயகம்!) அப்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் எனது பிம்பம் கண்ணாடியில் எதிரொளிக்கும் போது எனக்கு ஊன்றுகோலாயிருக்கும் பகுத்தறிவுப் பகலவனின் கைத்தடியும் என் பார்வையை விசாலமாக்கித் தெளிவுபடுத்தித் தரும் அன்னாரது கண்ணாடியும் கொஞ்சம் கொஞ்சமாக என்னில் இருந்து தூரமாக விலக ஆரம்பித்தது போல் இருந்தது. மீண்டும் மீண்டும் அவற்றை இறுகப் பற்றிக் கொள்வதில்தான் புதைந்திருக்கிறது என் ஆளுமை!

ஒரு தனிமனிதனின் மதிப்பீடுகள் வாழ்வியல் நெறிமுறைகள் ஒழுக்கங்கள் ஆகியவற்றை இறை நம்பிக்கையோடு சிக்கலான முடிச்சு போட்டே பார்த்துப் பழகிய சமூகத்திற்குப் புரியாத புதிராக விளங்கும் ஒன்று – இறை மறுப்பாளர்களால் எவ்வித கண்காணிப்பு சாதனமும் இன்றி தாமாகவே நல்லவர்களாகவும் கற்பனையான உந்துதலின்றி தன்னம்பிக்கையாளர்களாகவும் இயங்க இயலும் என்பதே!

எவ்வித ஆதாரங்களும் இன்றி நம்பப்படுவது எனில் மதத்திற்கும் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட பொய்களால் ஆன ஒரு ஸ்தாபனத்திற்கும் உள்ள வேறுபாடுதான் என்ன? மதம் என்பது மனிதத்திற்கும் மனித குலத்தின் மதிநுட்பத்திற்கும் இழைக்கப்பட்ட துரோகம், மாபெரும் அவமதிப்பு. அறிவுக்கு நேர்மையாக நடந்து கொள்வதன் இயற்கை விளைவாகிய பகுத்தறிவாதம் என்பது உண்மையும் நம்பிக்கையும் ஒரே புள்ளியாகி ஒன்றாக சங்கமிக்கும் இடம்.

நாம் முன்வைக்கும் ஒரு வாதத்திற்கு ஏரணத்திற்குட்பட்ட ஒரு சரியான எதிர்வாதம் இல்லாதவர்களின் கடைசி புகலிடம் - ‘It’s offensive’. இதன் பின்னால் ஒளிந்து கொண்டால் தாம்தான் சரியென்றும் ஒரு படி மேலே சென்றுவிட்டதாகவும் இவர்களுக்கு யார் சொல்லித் தந்தது? ‘That’s offensive’ is not an argument – Christopher Hitchens

இனி ‘offensive’ஐ தூக்கிக் கொண்டு வருபவர்களுக்கு எனது பதில், “So What?”

"One day Atheism will disappear as a concept. Instead there will be normal people and some weirdo believers" – Frank Zappa

நன்றி - 'கீற்று' இணைய இதழ்.

https://www.facebook.com/share/r/1AaTbmWWi1/

Am an atheist - சோம.அழகு

2 months 2 weeks ago

Am an atheist

                      - சோம.அழகு

  

        தமிழ் வகுப்புகள் செம்மையாக நடந்து கொண்டிருந்தன. என் வகுப்பைச் சற்று சுவாரஸ்யமாக்கும் பொருட்டு பாடதிட்டத்தைத் தாண்டி சில விஷயங்களைப் பிள்ளைகளுக்குச் சொல்லித் தரத் தொடங்கினேன். தமிழின் தொன்மையைப் பற்றி, அத்தொன்மையைப் பறைசாற்றும் விதமாகக் கிடைத்திருக்கும் கீழடி, ஆதிச்சநல்லூர் சான்றுகள் பற்றி, பழமையானதாகக் கருதப்படும் லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகள் மற்றும் கொரியன், ஆங்கிலம் போன்ற இன்ன பிற மொழிகளிலும் காணப்படும் தமிழ்ச்சொற்கள் பற்றி, பாவாணரின் சொல்லாராய்ச்சி மற்றும் வேர்ச்சொல் ஆராய்ச்சி பற்றி, தமிழர் நாகரிகம் பற்றி, பழைய சங்கப்பாடல்களில் மிக இயல்பாகத் தென்படும் அறிவியல் உண்மைகள் பற்றி…. என நீண்டது எங்கள் உரையாடல்.

சமீபமாக ஒவ்வொரு வகுப்பின் போதும் பாடப்புத்தகத்தில் ஒரு பாடம் நடத்தி முடிக்கும் வரை ‘எப்போதடா முடியும்?’ என வேறு வழியின்றி ரொம்ப கஷ்டப்பட்டுப் பொறுத்துக் கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியர், பாடம் முடிந்த உடன் மீதமிருக்கும் நேரத்தில் மேற்கூறிய தலைப்புகள் குறித்து இன்னும் இன்னும் என்னைப் பேசச் சொல்லிக் கேட்பார்கள். பத்து பன்னிரெண்டு வயதிற்கே உரிய அவர்களது ஆர்வமும் ஆவலும் எனக்கான உந்துதலாக அமைந்தன. அவர்களிடம் ஒவ்வொரு விஷயம் குறித்தும் ஏராளமான கேள்விகள் இருந்தன. அதிர்ஷ்டவசமாக பெரும்பாலானவற்றிக்கு என்னிடம் பதிலும் இருந்தன. அல்லாதவற்றிற்கு மறு வாரம் விடை தேடிச் சொல்வேன். தமிழின் சிறப்புகள் குறித்துப் புதிய தகவல்களைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவரது கண்களும் ஆச்சரியத்தில் விரியும்.

ஒரு முறை தமிழிலிருந்து பிற மொழிகளுக்குச் சென்ற சொற்கள் ஐந்தேனும் கண்டுபிடித்து வரும்படி வீட்டுப்பாடம் தந்திருந்தேன். கூகுள் யுகத்தில் இது ஒன்றும் கடினமான பணி அல்ல என்பதால் எல்லோரும் எழுதிக் கொண்டு வந்தார்கள். அதில் ஒருவள் ‘அவ்வை 🡪 Eve’ என எழுதியிருந்ததைப் பார்த்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தாங்கவில்லை எனக்கு. இது பொதுவாக கூகுள் காட்டும் பட்டியல்களில் வராது. தான் எழுதியது தவறோ என தயங்கிக் கொண்டிருந்தவளை வெகுவாகப் பாராட்டி ஆதனும் அவ்வையும் தாம் Adam Eve என்று கூறவும் அது குறித்து மேலும் தெரிந்து கொள்ள ஆயத்தமாகும் பொருட்டு வேக வேகமாக புத்தகத்தை மூடினார்கள். சிரித்தவாறே சொல்லத் துவங்கினேன்.

            சில வருடங்களுக்கு முன்பு கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய கட்டுரைகளை விரும்பிப் படித்தது மிகச் சரியாக அன்று நினைவிற்கு வந்து கைகொடுத்தது. Edward Seuss என்னும் ஆஸ்திரிய புவியியல் வல்லுநர், அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன் தெற்கில் இருந்த மிகப் பெரிய நிலப்பரப்பிற்கு (இன்றைய தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென்னிந்தியா, அண்டார்டிகா ஆகியவற்றை உள்ளடக்கியது), ‘கோண்டுவானா’ எனப் பெயரிட்டது; அங்கு ‘லெமூர்’(தேவாங்கு) என்ற உயிரினம் இருந்ததால் உயிர் நூலார் அப்பகுதியை ‘லெமூரியா’ என அழைக்கத் துவங்கியது; மனித இனம் லெமூரியாவில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்று ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானி Ernst Haeckel கூறியது; இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் இருந்த லெமூரியா ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு கடற்கோளால்(சுனாமி) அழிந்ததில் தப்பிய பகுதிதான் குமரிக் கண்டம் என்று தமிழ் மொழி வல்லுநரும் வரலாற்று ஆய்வாளருமான கா. அப்பாதுரையார் கூறியது; மனித இனம் மொத்தமும் ஒரே பெற்றோரிலிருந்துதான் தோன்றியது என்றும் அந்த ஆதிப் பெற்றோர் அறுபதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையோரத்தில் வாழ்ந்திருந்தார்கள் என்றும் நிறுவிய பரிணாம வளர்ச்சி உயிரியல் அறிஞர் முனைவர் ஸ்பென்ஸர் வெல்ஸ், தமிழ்நாட்டிற்கும் வந்து மரபணு ஆராய்ச்சி செய்து இந்திய நிலப்பரப்பில் முதலில் வந்தது திராவிடர்கள் என்று கண்டுபிடித்தது; பைபிளிலும் திருக்குரானிலும் வரும் ஆதாம் ஏவாள் பூமியில் இருந்தததாகக் கூறப்படும் இடமான ‘செரந்தீப்’ என்பது இந்தியாவுடன் அப்போது இணைந்திருந்த இலங்கை என அறிஞர்கள் சுட்டுவது; இன்றும் குமரி மாவட்டத்தில் குறத்தியறை, தாழக்குடி மற்றும் முப்பந்தல் ஆகிய மூன்று இடங்களில் தாய் வழிபாட்டின் தொடர்ச்சியாக இருக்கும் அவ்வையாரம்மன் கோவில்கள்; அவை புலவர் ஔவையாருக்காகக் கட்டப்பட்டிருப்பதாகத் தவறாகக் கருதப்படுவது; சங்க கால ஔவை, ‘ஆத்திசூடி’ பாடிய ஔவை, ‘ஞானக் குறள்’ பாடிய ஔவை ஆகிய இம்மூவருக்கும் குமரிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாதது…. என ஞாபகமிருந்தவரை எல்லாவற்றையும் அவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் கூறினேன்.

மிகுந்த ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள். தாம் மிகப் பெரிய நாகரிக்கத்திற்குச் சொந்தக்காரர்கள் என்ற பெருமிதத்தை ஓரளவு அவர்களிடம் விதைத்து விட்ட திருப்தி! அவர்களின் அறிவுத் தேடலை விரிவுபடுத்தவும் வாசிப்பை அதிகரிக்கவும் என்னால் இயன்ற சிறு முயற்சி. அவ்வளவே!  

“இப்போது உங்கள் முறை. நீங்கள் வாசித்ததில் உங்களுக்குப் பிடித்தவை பற்றிப் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று அவர்களைத் தமிழில் உரையாட வைக்கும் முனைப்பில் கூறினேன். வரிசையாக ஒவ்வொருவராகக் கூறிக் கொண்டு வர ஒருவள், “விஷ்ணுவின் அவதாரங்கள் குறித்த புத்தகம் ஒன்றை வாசித்தேன். மிகவும் பிடித்திருந்தது” என்றாள். “விஷ்ணுவின் முதல் அவதாரம்?” என்ற என் கேள்விக்கு, “மத்ஸ்ய அவதார்… that fish one” என்றாள்.

             “இவ்விடத்தில் ஒரு ஒப்புமை உண்டு. மீன் உருவில் வந்த விஷ்ணு மனுவிடம் பிரளயம் ஒன்று வரப்போவதைக் குறித்து எச்சரிக்கவும் மனு பெரிய படகு ஒன்றைத் தயார் செய்து அதில் தனது குடும்பத்தினர், ரிஷிகளின் குடும்பத்தினர், ஒன்பது வகையான விதைகள், விலங்குகள் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு தப்பித்தார். பைபிளின் ‘நோவாவின் பேழை’ கதையும் கிட்டத்தட்ட இதுதான். நோவாவிற்கும் கடவுள் தான் ஏற்படுத்தப் போகும் பேரழிவைப் பற்றிக் கூறி கப்பல் ஒன்றில் நோவாவின் குடும்பம், அனைத்து உயிரினத்திலும் ஆண் ஒன்று பெண் ஒன்று, அனைவருக்கும் தேவையான உணவு எனத் தயார் செய்து கொண்டு தப்பிக்கும் வழிமுறையைச் சொல்வார். மனுவிற்கும் நோவாவிற்கும் அக்கட்டளைகள் மிகச் சரியாக ஏழு நாட்களுக்கு முன்பு தரப்படும். Noah, Navy போன்ற சொற்கள் ‘நாவாய்’ என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து வந்தவையே. இந்தப் பெருவெள்ளக் கதைகள் சுமேரிய மற்றும் பாபிலோனிய நாகரிகம், அமெரிக்காவின் மயன் இனத்தவர், ஆப்பிரிக்காவின் யொரூபா இனத்தவர் என அனைவரிடத்தும் உண்டு. ஆனால் கடல் கொண்ட இடம் என்பதற்கான சான்று ‘குமரிக் கண்டம்’ என நம்மிடம் ஆணித்தரமாக உண்டு” என்று சொல்லி முடிக்கவும்…..

“Aunty! How do you know so much?” என்று கேட்டாள் அச்சிறுமி.

“நிறைய எல்லாம் இல்லடா… ஏதோ கொஞ்சம் வாசிச்சதிலிருந்து சொன்னேன். நீங்களும் நிறைய வாசிங்க” என்று ஊக்கப்படுத்தினேன்.

“Aunty! Have you read the whole Bible?” என்று இன்னொரு சிறுவன் கேட்டான்.

“இல்லை” என்றேன் சிரித்தவாறே.

“Then which holy book have you read completely?” – கேள்விகள் தொடர்ந்தன

“எதையும் அல்ல. ஆனால் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்கப் பிடிக்கும். அதன் பொருட்டு எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். வெவ்வேறு கலாச்சாரங்களில் தென்படும் ஒற்றுமைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முயற்சியில் கிடைத்த சில தகவல்கள் இவை. எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒரு துளி கடல்” என்று மறுமொழிந்தேன்.

“வேறென்ன ஒற்றுமைகள் இருக்கின்றன?”

“கிருஷ்ண அவதாரத்திற்கும் மோசஸ்க்கும் நிறைய ஒற்றுமை உண்டு. இருவருமே கால்நடை மேய்ப்பாளர்களாக இருந்தனர். கம்சனைப் போன்ற அரசன்தான் பார்வோன். இரண்டு பேருமே தத்தமது ராஜ்யத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகளைக் கொல்ல ஆணையிட்டிருந்தனர். கிருஷ்ணன் மற்றும் மோசஸின் தாயார்கள் தத்தமது குழந்தைகளை ஆற்றில் விட்டனர்.

குந்திதேவி – மேரி மாதா, சிறுதொண்ட நாயனார் – ஆபிரகாம், சீதை – கிரேக்க புராணத்தில் வரும் Persephone…. என எனக்குத் தெரிந்த சில இவை”

“Aunty! You talk about everything. Which religion do you belong to?”

“Am an atheistடா”

“Wow!” – ஒரே குரலில் சிலரது வியப்பு வெளிப்பட்டது.

“சரி! அடுத்து யாரு பிடிச்ச புத்தகத்தைப் பற்றி சொல்லப் போறீங்க?”

அடுத்ததாக ஒரு சிறுமி ஹாரி பாட்டரை களத்தில் இறக்க அதன் பிறகு முழுமையாக அவர்களின் பேச்சைக் கவனிக்கலானேன்.

வகுப்பு முடிந்து கலைந்து செல்கையில் “Aunty! Could you share more stories next week too? Both historical and mythological ones. Also we would like to know a bit more about etymology.”

“கண்டிப்பா டா. நான் இன்னும் நிறைய வாசிக்கணும் அப்போ. அடுத்த வாரம் பார்ப்போம்” என்று கலைந்து சென்றோம்.

**************************

இப்ப என்னாச்சுன்னா மக்களே…..

மறுநாள் மாலை எனக்கு ஒருங்கிணைப்பாளரிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது. முந்தைய நாள் வகுப்பைப் பற்றி எதார்த்தமாகக் கேட்டுக் கொண்டிருந்தவர் மெல்ல விஷயத்தைப் போட்டு உடைத்தார்.

“அது…. ஒண்ணுமில்ல… ஒரு complaint வந்துருக்கு”

மனதினுள் வேகமாக ஒரு முறை ஓட்டிப் பார்த்தேன். சர்ச்சைக்குரிய கருத்துகள் எதுவுமே இடம் பெறவில்லையே!

“என்னாச்சு சார்?”

“நீங்க ஏதோ கடவுள் இல்லனு சொன்னதா…. ஒரு parent கொஞ்சம் hurt ஆகிட்டாங்க”

ங்கே…. எதே?!

“கடவுள் இருப்பைப் பற்றியோ மறுப்பைப் பற்றியோ பேசவே இல்லையே” என்றபடி வகுப்பில் நடந்தவற்றை ஒன்று விடாமல் ஒப்பித்தேன்.

சட்டென விஷயம் முழுவதும் புரிந்து கொண்டவராக “ஓ! ஓகே! ஓகே! விடுங்க பாத்துக்கலாம்” என்றபடி நடந்ததை விளக்கினார்.

வகுப்பில் உள்ள ஒரு குழந்தை வீட்டினரிடம் “கடவுள்ன்னு ஒண்ணு உண்டா?” என்று கேட்டிருக்கிறது. அநேகமாக ‘atheist’ஐ கூகுள் செய்திருக்க வேண்டும். அல்லது தானாக யோசித்திருக்க வேண்டும். அந்தப் பெற்றோர் அந்த ஒற்றைக் கேள்வியின் காரணத்தை அறிய முயன்று ஆராய்ச்சியின் முடிவாக அவர்கள் கண்டுகொண்டது – நான் ‘கடவுள் மறுப்பு’ பிரசங்கம் செய்திருக்கிறேன்.

எனக்குச் சிரிப்புதான் வந்தது. அக்குழந்தையைக் குறை சொல்லவே முடியாது. யோசிக்கும் திறன் பெற்ற எந்த உயிரினத்திற்கும் இயல்பாக எழும் கேள்வியைத்தான் கேட்டிருக்கிறான்/ள்.

“ஒரு குழந்தை கேட்ட கேள்விக்கு என் தனிப்பட்ட தெரிவைக் கூறினேன். இதுக்கெல்லாமா offend ஆவாங்க? வகுப்பில் வரலாறு மற்றும் நாகரிகம் சார்ந்த எவ்வளவோ கருத்துகள் தகவல்கள் பரிமாறப்பட்டன. அந்த ஒரு வார்த்தைக்கு இந்தப் பாடா?”

“குழந்தைகளின் சிந்தனைத் திறன் சரியாகத்தான் இருக்கிறது. அதைச் சரியாகக் கையாளுபவர்களால் ஆன சூழல் பெரும்பாலும் அவர்களுக்கு அமைவதில்லை. இனிமேல் நான் பாத்துக்குறேன். உங்களைப் பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் என்ன நடந்தது என்று ஒரு வார்த்தை சம்பிரதாயமாகக் கேட்டேன்” – நிதானமாகப் பேசிய அவர் தீவிரமான கடவுள் நம்பிக்கையுள்ளவர். ஆனால் பகுத்தறிவாதிகளையும் மதிக்கும் பக்குவம் வாய்க்கப் பெற்றவர் – “வக்கீலு… ஆனா நல்லவரு” என்ற பாபநாசம் பட வசனத்தோடு நோக்கற்பாலது.

                 ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்தார் ஒருங்கிணைப்பாளர். ஒரு வகுப்பில் முதல் திருக்குறளைச் சொல்லி அதற்குப் பொருள் விளக்கம் அளிக்கையில் ‘ஆதி பகவன்’ என்பது சிவபெருமானைக் குறிப்பதாக ஆசிரியர் ஒருவர் கூறியிருக்கிறார். கிறிஸ்தவ குடும்பத்தைச் சார்ந்த அவ்வகுப்புக் குழந்தை ஒன்றின் பெற்றோருக்கு மனம் புண்பட்டு, சொல்லாமல் கொள்ளாமல் வகுப்பை விட்டு நிறுத்திவிட்டார்களாம். சில பல மாதங்களுக்குப் பிறகுதான் வேறொருவர் மூலம் தெரிய வந்ததாம். பரிமேலழகரின் வழித் தோன்றலான அந்த ஆசிரியர் பரிமேலழகரையே ஒரு எட்டு முந்திச் சென்று கொடுத்த விளக்கம் ஒரு பறக்கோடி என்றால் பிள்ளையைப் பள்ளியிலிருந்து நிறுத்தியது இன்னொரு பறக்கோடி.

போகிற போக்கைப் பார்த்தால் தேம்பாவனி, சீறாப்புராணம், தேவாரம் போன்றவற்றையும் சமயம் சார்ந்தவை என்ற ஒரே காரணத்திற்காகப்  புறக்கணித்துவிடுவார்கள் போலும்.

ஜெய் அல்லா! கந்தனுக்கு ஸ்தோத்திரம்!

பொசுக் பொசுக்கென்று புண்பட்டுவிடுகிறார்கள் மனிதர்கள். மாற்றுக் கருத்துக்கு இடமே அளித்துவிடத் துணியாத ஒரு அற்புதமான தலைமுறையை வளர்த்தெடுக்கிறார்கள். நல்லவேளை! ஜியார்டானோ புருனோ, கலீலியோ போன்றோரின் காலங்களில் நான் பிறக்கவில்லை!

*********************

இதை அப்பாவிடம் பகிர்ந்த போது, “It happens. இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே” என்றார்கள்.  

“ஆனாலும் அமெரிக்காவில் இதை நான் எதிர்பார்க்கல” என்றதற்கு,

“அமெரிக்காவில் இருப்பவர்களுக்கெல்லாம் அந்த உலகம் மனதை விசாலமாக்கிப் பக்குவப்படுத்தி….” என்ற எனது பொதுப்புத்தியை “வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்” என்பதோடு ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லிச் சிரித்தார்கள் அப்பா.

தாம் இத்தாலியில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் உடன் பணிபுரிந்த எலெயனோரா அவர்களின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தார். அர்ஜெண்டினாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் ஆய்வுப் படிப்பை முடித்து இத்தாலியில் வசிக்கும் அவர், “அமெரிக்காவைப் பொறுத்த வரை, உலகெங்கிலும் என்று கூட வைத்துக் கொள்ளலாம்… நீங்கள் வேறு மதத்தைச் சார்ந்தவர் என்பதைக் கூட ஏற்றுக் கொள்வார்கள். நாத்திகவாதி என்பதைத்தான் மிகப்பெரிய குற்றமாகப் பார்ப்பார்கள்” என்றார்களாம் அப்போதே.

            அதாவது தனது மூட நம்பிக்கைகள் இல்லாவிட்டாலும் அதற்கு ஒப்பான வேறு ஏதோவொரு கட்டமைப்பில் சக மனிதன் இயங்குவது வரை எம்மனிதனுக்கும் பிரச்சனை இல்லை. அவ்வாறாக எதுவுமே இன்றி ஒருவர் அடிப்படை அறிவுடன் வலம் வந்தால் பிறருக்கு மனம் புண்பட்டு சீழ் வைத்து நமநமத்துவிடும். அதானே? அமெரிக்கர்களே இப்படி என்றால் அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் பரந்துபட்டதொரு பார்வையை எதிர்ப்பார்த்த என் மடமையைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன்.

பிறகு நிதானமாக அத்தருணத்தை மீண்டும் மனதில் ஓட்டிப் பார்த்தேன்.

“Aunty! Which religion do you belong to?”

ஏதாவதொரு மதத்தைச் சொல்லியிருக்கலாமோ? எப்படி முடியும்? உதாரணமாக, ஒரு கற்பனையான சூழல் – அரசியல் கலந்துரையாடல் நிகழ்கிறது. எதேச்சதிக்காரத்தையும் சர்வாதிகாரத்தையும் ஆதரித்து பேச வந்தவர்கள் பெரும்பாலானோர் அதைத் தூக்கிப் பிடிக்கும் கட்சியின் பெயரை வெளிப்படையாகப் போட்டுக் கொள்ள நாணி ‘விமர்சகர்’, ‘ஆய்வாளர்’, ‘செயற்பாட்டாளர்’ என வித விதமான முகமூடிகளை அணிந்து கொள்வர். இப்போது நான் பசப்பியவாறே கழுவுற நீரில் நழுவுற மீனாகப் பேசிக் கொண்டிருந்தால், ஃபாசிசத்தையே கொள்கையாகக் கொண்ட கட்சியின் சாயத்தையோ பாயாசம் கிண்டும் தற்குறி கட்சியின் சாயத்தையோ (இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்பது ஒரு புறம் இருக்கட்டும்!) யாரேனும் என் மீது பூச எத்தனிப்பார்கள். அவசர அவசரமாக பதற்றத்தோடு அதை மறுதலிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதற்குப் பதில் முதலிலேயே ஒழுங்கு மரியாதையாக கருப்புச் சாயத்தைப் பெருமிதத்துடன் பூசி எனது அடையாளத்தை வெளிப்படுத்துவது உசிதம் அல்லவோ? இதே சூழல்தானே அதுவும்.

பொதுவாக பகுத்தறிவாளர்கள் யாரிடமும் போய்த் தாமாக அறிவித்துக் கொண்டு திரிவதில்லை. நானும் முடிந்த வரை வெகுசனத்தில் கரைந்து போகவே முயல்வேன். ஆனால் இப்படி நேருக்கு நேர் ஒரு கேள்வியை எதிர்கொள்ளும் போது சும்மானாங்காட்டி ஏதோ ஒன்றைச் சொல்லி வைக்க மனம் ஒப்பவில்லை.

“நீங்கள் வலதுசாரியா?”, “முதலாளித்துவத்தை ஆதரிப்பீர்களா?”, “அடிமைத்தனம் சரிதானே?”, “மூடத்தனங்களை ஏற்றுக் கொள்வீர்களா?”, “சாமி கும்பிடுவீர்களா?” – இவற்றுக்கு எப்படி “எப்போதாவது” என்று பதில் கூற முடியும்? வளைந்து நெளிந்து குழைந்து என் ஆளுமையை விட்டுக்கொடுத்து என்னை இழக்க வேண்டிய அவசியம்தான் என்ன? NO, THANK YOU!

மனம் சங்கெடுத்து முழங்கியது   – “Am an atheist”.

மதுசாரம், புகைப்பொருட்கள், போதைப்பொருட்களின் பாவனைகளால் எவ்வாறு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்?

3 months ago

மதுசாரம் எவ்வாறு பெண்களின் உரிமைகளை மீறுகின்றன?

மதுசாரம், புகைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களின் பாவனைகளால் எமது நாடு பல்வேறு வழிகளிலும் பாதிப்படைகின்றது. குறிப்பாக பொருளாதாரம், சுகாதாரம், சமூக சீர்கேடுகள் என பல பிரச்சினைகள் இவற்றினால் ஏற்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. எமது நாட்டில் பெண்களின் மதுசார பாவனை மற்றும் புகைத்தல் பாவனை ஆகியன புறக்கணிக்கத்தக்க சதவீதத்திலேயே காணப்படுகின்றன. ஆகவே பெண்களை பாவனையாளர்களாக மாற்றுவதற்கும் பெண்கள் மத்தியில் மதுசாரத்தையும், புகைப்பொருட்களையும் சாதாரணமாக்க வேண்டும் என்பதற்காகவும் மதுசார நிறுவனங்களும் புகையிலை நிறுவனமும் பல நுணுக்க்களில் முயற்சித்து வருகின்றன.

மேலும் பெண்களின் மதுசார பாவனை மிகவும் குறைவான விகிதாசாரத்தில் காணப்பட்டாலும் மதுசாரத்தினால் ஏற்படுகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு பெண்கள் முகங்கொடுக்கின்றனர். இவற்றை வெளிக்கொணரும் வகையிலும், ஏனையோரின் மதுசார பாவனையினால் பெண்கள் முகங்கொடுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கும் 2025ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமானது ஆய்வொன்றினை மேற்கொண்டது. 25 மாவட்டங்களிலிருந்தும் 15 வயதிற்கும் மேற்பட்ட 1000 பெண்களிடம் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது மதுசார பாவனையினால் பெண்கள் எவ்வாறான பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர், மதுசாரம் எவ்வாறு பெண்களின் உரிமைகளை மீறுகின்றன? என்பனவற்றை ஆராயும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகும்.

ஆய்வின் சாரம்சம்

54 வீதமான பெண்கள் மதுசார பாவனையினால் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்
42 வீதமான பெண்கள் உள ரீதியாக பாதிப்படைகின்றனர்
69 வீதமான பெண்கள் பொது இடங்களில் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்
பெண்களின் உரிமைகளுடன் இணைத்து மதுசார நிறுனங்கள் அதிகமான விளம்பரங்களை மேற்கொள்ளுகின்றன. எனினும் 37 வீதமான பெண்கள் இன்னமும் அது தொடர்பாக அறிந்திருக்கவில்லை.
மதுசார நிறுவனங்கள் தமது உற்பத்தி பொருளை விற்பனை செய்வதற்கு பெண்களை பயன்படுத்தும் சந்தர்ப்பங்களில் பெண்களின் உரிமைகள் மீறப்படுகின்றன என 64 வீதமான பெண்கள் குறிப்பிட்டனர்.

54 வீதமான பெண்கள் மதுசார பாவனையினால் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் என்பது எமது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

பல்வேறு தரப்பினர்களின் மதுசார பாவனையால் பெண்கள் பாதிப்படைகின்றனர். குறிப்பாக 27.4 வீதமான பெண்கள் அயலவர்களின் பாவனையாலும், 27 வீதமான பெண்கள் இணந்தெரியாதோர்களின் பாவனையாலும், 20 வீதமான பெண்கள் உறவினர்களின் பாவனையாலும் பிரச்சினைகளுக்கு ஆளாகுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மதுசார பாவனையின் காரணமாக 42 வீதமான பெண்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். 38.2 வீதமான பெண்கள் தமது மகிழ்ச்சி சீர்குழைவதாக குறிப்பிட்டுள்ளனர், 24 வீதமானோர் தமது சுதந்திரம் மட்டுப்படுவதாகவும், 27.3 வீதமானார் பொருளாதார நெருக்கடிகளை சந்திப்பதாகவும், 12 வன்முறைகளுக்கு ஆளாகுவதாகவும், 18 வீதமான பெண்களின் கல்விக்கு தடை ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

மதுசார பாவனையின் காரணமாக பொது இடங்களில் 69 பெண்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர், மேலும் தாங்கள் உட்பட தங்களது நண்பிகளும் இவ்வாறான அசௌகரியங்களுக்கு ஆளாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுசார பாவனையின் காரணமாக பொது இடங்களில் அசௌகரியப்படும் பெண்களில் அதிகமானோர் அவற்றிற்கான பிரதிபலிப்புக்களை வழங்குவதில்லை. 61 வீதமான பெண்கள் பொது இடங்களில் அசௌகரியத்திற்கு ஆளாகினாலும் அதற்கான பிரதிபலிப்புக்களை வழங்குவதில்லை என குறிப்பிட்டிருந்தனர். 11 வீதமான பெண்கள் அது தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்கும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களை மதுசார பாவனைக்கு ஈர்ப்பதற்காக மதுசார நிறுவனங்கள் வெவ்nவுறு வழிகளிலும் முயற்சிப்பதாக 40 வீதமான பெண்கள் கருத்து தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

பெண்களின் உரிமையுடன் இணைத்து மதுசாரத்தை விளம்பரப்படுத்துவதாக 29 வீதமான பெண்கள் குறிப்பிட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது, மேலும் 34 வீதமானோர் இது தொடர்பான விழிப்புணர்வு மிகவும் குறைவாகக் காணப்பட்டமை ஆய்விலிருந்து தெரிய வருகின்றது.

மதுசார நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை விளம்பரப்படுத்துவதற்காக பெண்களை விளம்பர நாமமாக பயன்படுத்துவதால் பெண்களின் உரிமை மீறப்படுவதாக 64 வீதமான பெண்கள் கூறியிருந்தனர்.

பெண்களை இலக்கு வைத்து திரைப்படங்களில் மதுசார விளம்பரங்கள் இடம்பெறுவதாக 54 பெண்கள் குறிப்பிட்டதோடு, 43 வீதமானோர் முகப்புத்தகங்களில் விளம்பரங்கள் இடம்பெறுவதாகவும், 29.3 வீதமானோர் டிக்டொக் மூலம் விளம்பரம் இடம்பெறுவதாகவும், வெவ்வேறு சமூக வலைதளங்களின் ஊடாக இலக்கு வைக்கப்பட்டு விளம்பரங்கள் இடம்பெறுவதாகவும், விளம்பரங்கள் 24.2 வீதமானோர் நிகழ்ச்சிகளில் விளம்பரங்கள் இம்பெறுவதாகவும், 23.6 வீதமானோர் ஒன்றுகூடல்களின் போது விளம்பரப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

பெண்கள் உடல், உள ரீதியாக சமூகத்தில் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வாழ்க்கையை நகர்த்திச் செல்கின்ற மிகவும் முக்கியமான தரப்பினராகும். ஆகவே ஆண்கள் ஏற்கனவே சிக்கியிருக்கின்ற மதுசாரம் எனும் பிரயோசனமற்ற வலையில் பெண்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளை குறைப்பதற்காகவும் பெண்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் விளப்பரங்களை கட்டுப்படுத்துவதற்காகவும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமான கீழ்வரும் பரிந்துரைகளை முன்வைக்கின்றது.

மதுசாரம் மற்றும் புகையிலை மீதான அதிகார சபை சட்டத்திற்கமைய பெண்கள், இளைஞர்கள், என அனைத்து தரப்பினரையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் மதுசாரம் மற்றும் புகைப்பொருட்களின் விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் விளம்பரங்கள் இன்னமும் வெவ்வேறு வலைதளங்களில் மேற்கொள்ப்படுகின்றது. ஆகவே Nயுவுயு சட்டத்தை வலுப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும்.

மதுசாரம் என்பது பிரயோசனமற்ற ஒன்று என்கின்ற விழிப்புணர்வை பெண்கள் ஏற்படுத்த வேண்டும்.

மதுசாரம் எனும் போர்வையில் மேற்கொள்ளுகின்ற தொந்தரவுகளுக்கு பிரதிபலிப்புக்களை வழங்குவதற்கு பெண்களை வலுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
எமது நாடானது மிகவும் கலாச்சாரம் பொருந்திய நாடாகும் “அம்மா”எனும் பதம் அதிலுள்ள அன்பு, அரவணைப்பு, மதிப்பு ஆகியவை அனைத்து பெண்களிடத்திலும் செறிந்து காணப்படுகின்ற அழகிய பெறுமதியான சமூகம் வாழும் நாடாகும். ஆகவே இப்பெறுமதியை சீர்குழைப்பதற்கு மதுசார நிறுவனங்கள் பெரிதும் முயற்சிக்கின்றன.

ஆகவே பெண்களை இலக்கு வைத்து மதுசார நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை வெளிக்கொணர்ந்து, அதற்கு ஏமாறாமல், அவறறை முற்றுமுழுதாக கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.

பெண்களின் சுதந்திரம், உரிமை என்பன தொடர்பான தெளிவு மற்றும் இவற்றை காரணமாகக்கொண்டு எமது கலாச்சாரத்தை அழிப்பதற்கு எவ்வாறு மதுசாரம், மற்றும் புகையிலை நிறுவனங்கள் திட்டமிடுகின்றன என்கின்ற தெளிவும் சிறு வயதிலிருந்தே பெண்பிள்ளைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

1-1-730x1024.jpg 2-1-730x1024.jpg

https://thinakkural.lk/article/315737

இலங்கையில் பள்ளி செல்லும் சிறுமிகள் கர்ப்பமடைவது அதிகரித்து வருவது ஏன்? என்ன காரணம்?

3 months ago

இலங்கையில் குழந்தைகள் கர்ப்பமடைதல் அதிகரிப்பு

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கடந்த 2024இல், 213 பாடசாலை மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்களின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கையில் பாடசாலை செல்லும் வயதிலுள்ள சிறுமிகள் மத்தியில் பதிவாகியுள்ள குழந்தை கர்ப்பிணிகளில், 10 வயதான சிறுமி ஒருவரும் அடங்குவதாக அதிகாரபூர்வ தகவல்களின் ஊடாக உறுதி செய்யபட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு 163 பாடசாலை மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதுடன், 2024ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கையானது 213 வரை அதிகரித்துள்ளதாக போலீஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக விசாரணை பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 2024ஆம் ஆண்டு பதிவான குழந்தைத் தாய்மார்களுக்கு மத்தியில், 10 வயதான சிறுமி ஒருவரும் அடங்குவதாக போலீஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக பிரிவின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எனினும், அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ள குழுந்தைத் தாய்மார்களை விடவும், அதிக எண்ணிக்கையிலான குழந்தைத் தாய்மார்கள் இலங்கையில் இருக்கக்கூடும் என போலீஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக பிரிவிற்குப் பொறுப்பான பிரதி போலீஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் அனுமதிக்கப்பட்ட சிறுவர் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்தின் பிரகாரம், 18 வயதுக்கு குறைவான அனைவரும் சிறுவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் தண்டனைச் சட்ட கோவையின் 363(இ) சரத்தின் பிரகாரம், 16 வயதுக்கு உட்பட்ட பெண் ஒருவரின் ''ஒப்புதல்'' பொருந்தாது என்பதால், அவ்வாறானவர்களுடன் உடலுறவு கொள்வதானது ''பாலியல் வன்கொடுமை'' எனக் கருதப்படுகின்றது.

சிறு வயது காதல் காரணமாக ஏற்படும் சம்பவங்கள்

தற்போது பதிவாகின்ற குழந்தைகள் கர்ப்பமடைவதானது, காதல் தொடர்புகளின் பெறுபேறுகளினால் ஏற்படுகின்ற சம்பவம் என பிரதி போலீஸ் மாஅதிபர் குறிப்பிடுகின்றார்.

''இதில், 16 வயதுக்குக் குறைவான சிறுமிகளின் விருப்பத்துடன் இடம் பெறுகின்ற சம்பவங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையே எமக்குள்ள பிரச்னையாகும். அது துஷ்பிரயோகம் என சட்ட ரீதியாக உரித்தானாலும், அது பலவந்தமாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல. காதல் ஏற்பட்டு விருப்பத்துடன் இடம்பெற்ற சம்பவங்களாலேயே அந்தச் சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர்.''

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பலவந்தமாக இடம்பெற்ற துஷ்பிரயோகங்களில் கர்ப்பமடைவதைத் தடுப்பதற்கு வாய்ப்பில்லை. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கும்போது, அந்தச் சிறுமி கர்ப்பமடைந்து பல மாதங்கள் ஆகியிருக்கும் எனவும் அவர் கூறுகின்றார்.

''பலவந்தமாக இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள் தொடர்பில் கட்டாயம் போலீஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கும். அதன் பின்னர் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். கர்ப்பமடைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியும்.

சம்பவம் இடம்பெற்று முதல் 24 அல்லது 48 மணித்தியாலங்களுக்குள் வருகை தரும் பட்சத்தில், நீதிமன்றம், மருத்துவர்கள் அது தொடர்பான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். ஆனால், அவர்களுடன் சம்பந்தப்பட்ட சிறுமிகள் தொடர்புகளைப் பேணுகின்றமையினால் பல சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இதனால், அவர்கள் அவற்றை மறைத்து காலம் செல்லும் போதே அறிந்துகொள்ள முடிகின்றது'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் குழந்தைகள் கர்ப்பமடைதல் அதிகரிப்பு

பட மூலாதாரம்,Getty Images

இலங்கையிலுள்ள சட்டத்தின் பிரகாரம், குழந்தைகள் கர்ப்பமடைந்தால், தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் தவிர்த்து. கர்ப்பத்தைக் கலைப்பதற்கு சட்டத்தின் இயலுமை இல்லை.

நாட்டில் தற்போது பதிவாகின்ற சில சம்பவங்களில், கர்ப்பத்திற்குப் பொறுப்பு கூற வேண்டிய ஆண்கள், 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் எனவும் பிரதி போலீஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவிக்கின்றார்.

அண்மைக் கால தரவுகளின் அடிப்படையில், இவ்வாறான சம்பவங்களில் 14 முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட பெண் குழந்தைகள் உட்படுத்தப்படுகின்றமை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

குழந்தைத் தாய்மார்களின் குழந்தைகள் ''பாதிக்கப்பட்டவர்களாகவே'' இந்த உலகத்தைக் காண்பதாகக் கூறும் பிரதி போலீஸ் மாஅதிபர், இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சமூகத்தின் கவனம் திரும்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

''யாரும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதை நான் காணவில்லை. இவர்களை நீதிமன்றம் வேறு யாருக்காவது ஒப்படைத்து விடும். பெரும்பாலும் அவர்களின் குடும்பத்திடமே ஒப்படைக்கப்படும். விருப்பம் என்றால் வளர்த்துக்கொள்ள முடியும்.''

தெளிவின்மையால் ஏற்படுகின்ற குழந்தை கர்ப்பமடைதல்

இலங்கையில் குழந்தைகள் கர்ப்பமடைதல் அதிகரிப்பு - என்ன காரணம்?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சிறார்கள் தங்களுக்கென ஒரு குடும்பம் என்ற கற்பனை உலகிற்குள் விரைவாகப் பிரவேசிக்க முயல்வதாகக் கூறுகிறார் மாத்தளை மாவட்ட தாய் மற்றும் குழந்தை சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் நுவன் தோடவத்த

பாலியல் தொடர்பான போதிய தெளிவின்மையே குழந்தைகள் இவ்வாறான பேராபத்திற்கு முகம் கொடுக்கக் காரணம் என பிரதி போலீஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர கூறுகின்றார்.

''பாலியல் தொடர்பான கல்வி, அது தொடர்பில் காணப்படும் அறிவு மற்றும் தேவையற்ற விதத்தில் கர்ப்பமடைவதைப் பாதுகாத்துக் கொள்வது ஆகியவை குறித்த தெளிவின்மை இதற்கு ஒரு காரணம். பாலியல் உறவைப் பேணும் ஒருவராயின், அவர் கட்டாயமாகப் பாதுகாப்பு குறித்து அறிந்திருக்க வேண்டும். அதைப் பேணுவதற்கு வயது பொருத்தமற்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது குறித்து அறிந்துகொள்ள வயது எல்லை எதுவும் கிடையாது.''

''நாங்கள் இந்தச் சம்பங்கள் குறித்துப் பார்க்கும்போது அந்தச் சிறுமிகள் அது தொடர்பில் அறிந்திருப்பதில்லை என்பதை உணர்ந்துகொள்ள முடிகின்றது'' என்பதை விசாரணை அனுபவங்களின் ஊடாக அவர் குறிப்பிட்டார்.

''நாங்கள் இந்தப் பிரச்னைகள் குறித்து ஆராயும்போது, குடும்பங்களில் காணப்படும் பிரச்னைகள் குறித்து அதிகளவில் அவதானிக்கின்றோம். பெரும்பாலான சிறார்கள் பாதுகாப்பற்ற முறையில் இருக்கின்றார்கள். தாயும், தந்தையும் பிரிந்துள்ளமை அதற்கான காரணம். இவ்வாறான நிலையிலேயே காதலுக்கு மிகவும் விரைவாக அடிமையாகின்றனர்.''

எவ்வாறாயினும், சரியாக இந்த நிலைமைக்கான காரணம் தொடர்பில் கூற முடியாது என போலீஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதானி பிரதி போலீஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர குறிப்பிடுகின்றார்.

'முறையற்ற விதத்தில் குழந்தைகள் அறிவைப் பெறுகின்றனர்'

இலங்கையில் குழந்தைகள் கர்ப்பமடைதல் அதிகரிப்பு

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,குழந்தைகளுக்கு அவர்கள் ஆபத்தில் விழக்கூடிய சந்தர்ப்பங்கள் தொடர்பான தெளிவு வழங்கப்படுவதில்லை என்கிறார் மருத்துவ அதிகாரி தோடவத்த.

குழந்தைகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான அறிவைப் பெற்றுக் கொள்வதற்கு உரிய நடைமுறை இல்லாமையால், பாலியல் தொடர்பில் முறைசாரா விதத்தில் அவர்கள் அறிவைப் பெற்றுக் கொண்டுள்ளதாக மாத்தளை மாவட்ட தாய் மற்றும் குழந்தை சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் நுவன் தோடவத்த, பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

''பாடசாலை கல்வியில் முறையான விதத்தில் இவற்றைக் கற்பிப்பதில்லை. அதனால், முறைசாரா விதத்தில் அவர்கள் இது தொடர்பான அறிவைப் பெற்றுக்கொண்டுள்ளனர். பெரியோரிடம், நண்பர்களிடம், பாலியல் திரைப்படங்களைப் பார்த்து இவ்வாறான அறிவைப் பெற்றுக்கொண்டுள்ளனர். தெளிவின்மை காரணமாகவே குழந்தைகள் கர்ப்பமடைகின்றனர். அவ்வாறானவர்களை நாங்கள் சந்திக்கின்றோம்.''

''இலங்கையில் 12 முதல் 14 வயது குழந்தைகளுக்குக்கூட இது தொடர்பில் தெரியாது. துஷ்பிரயோகம் செய்பவர்கள் பெரியவர்களாக இல்லாத போதிலும்கூட, அவர்கள் அது குறித்து அறிந்திருக்க மாட்டார்கள்" என அவர் கூறுகின்றார்.

குழந்தைகள் ஆபத்தில் விழும் சந்தர்ப்பங்கள் தொடர்பான தெளிவு வழங்கப்படுவதில்லை எனக் கூறும் மருத்துவ அதிகாரி தோடவத்த, எதிர்காலத்தைத் திட்டமிடும் வகையிலான கல்வி இல்லாமையானது, பாரிய பிரச்னை எனத் தெரிவிக்கின்றார்.

''துஷ்பிரயோகத்தை ஒருபுறத்தில் வைப்போம். எமது இளைய சமூகத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான குழந்தைகள் 18 வயதில் திருமணம் செய்து கொண்டு, 19 வயதில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்றனர். அவர்கள் தங்களுக்கென ஒரு குடும்பம் என்ற கற்பனை உலகத்திற்குள் விரைவாகப் பிரவேசிக்க முயல்கின்றனர்.''

''இந்தக் குழந்தைகள் ஆபத்தில் விழக்கூடிய சந்தர்ப்பங்கள் தொடர்பில் தெளிவு வழங்கப்படுவதில்லை. உதாரணமாக சமூக ஊடகப் பயன்பாட்டைக் கூற முடிகின்றது. அவ்வாறான இடத்தில் அதிக ஆபத்து எந்த இடத்தில் இருக்கின்றது. அதை புத்திசாதுரியமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பவை எந்தவோர் இடத்திலும் கல்வி முறையில் கற்பிக்கப்படவில்லை'' என அவர் குறிப்பிடுகின்றார்.

குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான அறிவைப் பெற்றுக் கொடுக்கும் வயது தொடர்பில் டாக்டர் நுவன் தோடவத்தவிடம் வினவப்பட்டது.

''சிறு வயது முதலே, தமது உடலிலுள்ள உறுப்புகள் குறித்த தெளிவு கிடைக்கும் சந்தர்ப்பத்திலேயே, சிறிது சிறிதாக இந்த அறிவை வழங்க ஆரம்பிக்க வேண்டும். மூன்று வயது குழந்தைக்கு மாதவிடாய் சுழற்சி புரிவதில்லை. எனினும், வயிற்றைப் பிடிப்பது, முகத்தைப் பிடிப்பது, மார்பைப் பிடிப்பது புரியும்.''

குழந்தைப் பருவ அபிவிருத்தி நிலையங்கள் ஊடாக இது தொடர்பான கல்வியை ஆரம்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார். குறிப்பிட்ட வேலைத் திட்டத்தின் ஊடாக கல்வி முறையில் இவ்வாறான சம்பவங்களைக் குறைத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czxne79jwveo

மகா சிவராத்திரியும், மகா பெரிய வி.வி.ஐ.பிக்களும்!

3 months 1 week ago

மகா சிவராத்திரியும், மகா பெரிய வி.வி.ஐ.பிக்களும்!

-சந்திர மோகன்

99999.jpg

ஒவ்வொரு ஆண்டும் மிகப் பெரிய வி.வி.ஐப்பிக்களின் வருகையோடு ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி விழா அரங்கேறுகிறது! ஒரு ஆன்மீக மையம் பிரதமர், குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் என ஆகப் பெரிய அதிகார மையங்களை  இதற்கு தொடர்ந்து அழைப்பது ஏன்?

அதிகார மையங்களிடம் இருந்து விலகி நிற்றல் அல்லவா ஆன்மீகத்தின் இயல்பாக இருக்க முடியும்.

காரணம், மிக எளிமையானது! தன்னுடைய சட்ட விரோத, சமூக விரோத செயல்பாடுகள் மீது அரசு அமைப்புகள் எதுவும் நடவடிக்கை எடுக்க நினைத்து பார்க்கவே அச்சப்பட வேண்டும் என்பது தான்!

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் சுமார் 400 ஏக்கர் வன நிலத்தில் நிலத்தில் – யானை வழித்தடத்தில் – ஆக்கிரமிப்பு செய்து வன & கட்டிட விதிகளை மீறி, 5 லட்சம் சதுர அடியில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது;

சுமார் 5,000 பேர் நிரந்தரமாக தங்குகின்ற இடமாக – பல்லாயிரம் தன்னார்வ தொண்டர்கள் தங்கள் சேவையை கட்டணமின்றி தந்து செல்லும் இடமாக – தினசரி சுமார் 5,000 முதல் 10,000 சுற்றுலா பயணிகளைக் கவரும் இடமாக ஒரு சாம்ராஜ்யம் போல எழுந்து நிற்கும் இந்த இடம் பல அராஜகங்களுக்கு மத்தியில் தான் எழுந்து நிற்கிறது. இந்த இடம் உருவாக இலட்சக்கணக்கான மரங்கள், காட்டுயிர்கள் சந்தன மரங்கள் உட்பட பழமையான, அரிதான மரங்கள், செடிகள் அழித்தொழிக்கப்பட்டன. ஆசிரமத்தை சுற்றியும், சட்டவிரோதமான மின்வேலிகள் அமைக்கப்பட்டன. யானைகள் தடம் மாறியதால், பழங்குடியினர் வாழ்வாதாரம், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. விலங்கு- மனித மோதல்கள் நடைபெற்றன. 2006-11 காலங்களில் மட்டும் 50 யானைகள் இறந்ததாகவும், 57 மனிதர்கள்!

1352314.jpg

பாஜக , ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், பார்ப்பன VIP கள், பெரு முதலாளிகள், செல்வந்தர்கள், நடிகர்கள்,  உயர்தர மற்றும் மத்திய வர்க்கத்தினர், சுற்றுலாவாசிகள், பக்தர்கள் எனப் பலரும் இந்த ஈஷா மகா சிவராத்திரியில் பங்கேற்கின்றனர்.

இப்படி அதிகார மைய வி.வி.ஐபிக்கள் வருகையில் முக்கியமான அரசு சார்பிலான செலவுகள் :-

1) டெல்லி- கோவை வந்து போன விமானப்படை தனி விமான வாடகை—–?

2) கோவை விமான நிலையம்-ஈசா மையம் சென்ற, திரும்பிய ஸ்பெஷல் ஹெலிகாப்டர் + ஸ்பேர் ஹெலிகாப்டர் இரண்டுக்கும்  வாடகை…..?

3)மேடைக்கு செல்ல கொண்டு வரப்பட்ட குண்டு துழைக்காத கார் வாடகை…?

4) ஈசா மையத்தில் வான்வெளி கண்காணிப்புக்காக போடப்பட்ட ஆளில்லா விமானங்கள் (UAV-2 & Tether Copter -1)மற்றும் ADGP + IG பொறுப்பிலான கண்ட்ரோல் ரூம் செலவுகள்…?

5) அதிகார வி.வி.ஐ.பிக்களுடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகள்  டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழு சம்பளம், படிகள், போக்குவரத்து செலவுகள்….?

6) வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் பாதுகாப்பு பணிக்காக போடப்பட்ட 6,000 காவல்துறையினர்( காவலர்கள் + அதிகாரிகள், சிறப்பு அதிரடிப் படையினர், மத்திய மாநில உளவு, நக்சல் ஒழிப்பு பிரிவினர்)  சம்பளம், போக்குவரத்து செலவுகள்……?

7) கோவை மாநகரம் – பேரூர் வரை போக்குவரத்து முறைப்படுத்த அமர்த்தப்பட்ட 1300 மாநகர காவல் துறை சம்பளம்…..

இந்த கார்ப்பரேட் திருவிழாவிற்கு இவை போன்ற செலவு எல்லாம் அரசாங்கம் சார்ந்தது!

GWcEKmsaQAA3MQ4.jpg

குவியும் பணம்;

இந் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கெடுத்துக் கொண்டனர். இது புதிது அல்ல! இவர்களின் ஒரு நாள் வருகையாலும், அதிரும் ஒலி பெருக்கிகள் பாடல்களாலும், அங்கு சேரும் மனித கழிவுகளாலும் அந்த வனப் பகுதி பாழ்படுகிறது என்பது ஒருபுறமிருக்க, இது ஏதோ அந்தக் கால ராஜாங்க விழாவைப் போல நடந்தேறுகிறது, 5,000 முதல் 5 லட்சங்கள் வரை இங்கு அமர்வதற்கான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. உத்திராட்ச மாலை உள்ளிட்ட பக்தி அயிட்டங்கள்,  ஜக்கியின் காலடி போட்டோவின் விலை ரூ 3,200 ..ஆகியவற்றின் விற்பனை பல லட்சங்களை தாண்டும்.

இசை உலகின் மிகப் பிரபலங்களை இந்த நிகழ்விற்கு பாடவும்,இசைக்கவும் அழைக்கிறார்கள். அவர்கள் அதற்காக கட்டணங்கள் வசூலிப்பதில்லை. இதை ஒரு ஆன்மீகத் தொண்டாகவே செய்கிறார்கள் அவர்கள்!

பல பெரு நிறுவனங்கள் இதற்கு ஸ்பான்சர் செய்கின்றன. அதனால், இரண்டு இலட்சம் பேருக்கு மஹா அன்னதானம், பிரமாண்டமான ஒளி, ஒலி அமைப்புகள், ஒருவார கால ஆட்டம் பாட்டம், இசை- பாடல்கள், நாட்டிய, சொற்பொழிவுகள் எனப் பல செலவுகள் யாவற்றையும் பணக்கார பக்தர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.

Sadhgurus-Isha-foundation.jpg

ஏன் இந்த மெஹா ராத்திரி என்றால், அதிகார மையங்களுடன் தனக்கிருக்கும் நெருக்கத்தை உணர்த்தி, இலட்சக்கணக்கான பக்தர்களிடம் பார்ப்பனீய இந்துத்துவா அரசியலை நிறுவிக் கொள்வதோடு, மிகப் வருவாய் ஈட்டுவதாகும். இவை எதற்கும் முறையான கணக்கோ, வருமான வரியோ ஈஷா மையம்  கொடுப்பதில்லை.

ஜக்கி உண்மையான துறவியா?

ஜக்கியின் வார்த்தையை உண்மையென நம்பி 500-க்கும் மேலானோர் இதுவரை துறவறம் எடுத்திருப்பார்கள். வாயில் நுழையாத பெயர் மாற்றம், அவர்கள் முக்திக்கு மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தினர் அனைவரின் முக்திக்கும் (முக்திக்கும் மட்டும்) உத்திரவாதம், மறுபிறவி இல்லை என்ற உறுதி எல்லாம் கொடுப்பார். அவர்களை தனது அங்கங்கள் (ஈஷாங்க) என்று வர்ணிப்பார்.  உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அனைவர்க்கும் தான் ஒரு கவசமாக இருந்து காப்பாற்றுவேன் என்றெல்லாம் நம்பவைப்பார்; அனைவருக்கும் வருடம் தவறாமல் Health insurance premium கட்டிவிடுகிறார்.

“ஆன்மீக பாதைக்கு துறவற வாழ்க்கைதான் சிறந்தது என்றும், குடும்ப வாழ்கை ஒரு சுமையோடு மலை ஏறுவது போல கடினமானது” என்றெல்லாம் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசுவார். இதை கேட்டு, பலர் தங்கள் குடும்பங்களை (கணவன்/மனைவி) துறந்திருக்கிறார்கள். அவர்களிடம் வரும்போது மறக்காமல் அவர்கள் சொத்துக்களை பிரித்து வாங்கி வந்து விடுமாறு அறிவுறுத்துவார். கரூரில் பிரபலமான பரமேஷ் என்பவரின் குடும்ப கதையே இதற்கு சான்று.

ishayoga2-1740388240.jpg

2017 -ல் மோடி வந்த போது

எனினும், இதுவரை 150-க்கும் மேலான சாமியார்கள் ஆசிரமத்தை விட்டு  வெளியேறியுள்ளார்கள். மேலும்,குடும்ப வாழ்கையில் இருந்து கொண்டும் ஆன்மீக தொண்டு என்று இவர் கூறியதை நம்பி வந்தவர்களில் வெளியே சென்றவர்களின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்தை தாண்டும். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பாலமுருகன் என்னும் பஞ்சாப் cadre IAS 5 வருட காலம் ஈஷாவின் CEO வாக சம்பளம் இல்லாமல் தொண்டு புரியும் ஆவலோடு வந்தவருக்கு இரண்டு  வருடத்திலேயே பல உண்மைகள் புரிய வெளியேறிவிட்டார்.

20-25 ஆண்டு காலம் ஈசாவின் மேல் மட்டத்தில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த பலர் வெளியேறிவிட்டார்கள். குறிப்பாக திலிப் அண்ணா என்கிற திலிப்/ AUDITOR  ராஜரத்தினம் ஈஷாவின் Managing Trustee யாக 1999-2010வரை இருந்து வந்தார். ‘விஜியின் இறப்பின் மர்மத்தில் தான் கைது செய்யப்படுவோம்’ என்று எதிர்பார்த்து ஜக்கி அவருக்கு பதிலாக இந்த பதவியில் திலிப்பை அமர்த்தினார். நிலங்கள் வாங்குவதில் ஜக்கி காட்டும்  பேராசையையும், குறுக்கு வழிகளையும் கண்டு Managing Trusteeயாக கையெழுத்திட பயந்து ஜக்கியை எதிர்க்க, அவரை அந்தப் பதவியில் இருந்து விடுவித்து விட்டார். ஈஷாவில் இருந்து விலகிய திலீப் 2014 அக்டோபர் மாதம் கோத்தகிரி மலைப்பாதையில் ஒரு  மர்மமான விபத்தில் மரணம் அடைந்தார்.

கர்மா, விழிப்புணர்வு, சம்போ, சிவசம்போ, அண்ணா, அக்கா  போன்ற வார்த்தைகளை மட்டுமே அதிகம் பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படும். ஜக்கி வளர்க்கும் சித்தா, மல்லி, லீலா சம்சன் போன்ற பெயர் கொண்ட  பல ஜாதி நாய்கள் முதல் மாடுகள் வரை மேய்க்கும் பொறுப்புகள் கொடுக்கப்படும். சிஷ்யர்களுக்கு என்று  கொடுக்கப்படும் சில தனிப்பட்ட பயிற்சிகள் எப்போதும் இவர்களை ஒரு அரை மயக்கத்தில்  வைத்திருக்கும்.

dinamani_2025-02-26_e73c21nd_ANI_2025022

நாள் ஒன்றுக்கு 18 மணிநேரம் வேலை வாங்கப்படும். தங்கள் கர்மாவை வேகமாக கழிக்க பல மணிநேரம் வேலை செய்யவேண்டும் என்று ஜக்கி அறிவுறுத்துவார். அதாவது ஒரு ஆள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வேலை செய்தால் கழியும் கர்மாவை 18 மணி நேரம் செய்து 18 நாள் கர்மாவை ஒரே நாளில் கழிக்க முடியும் என்று பாடம் சொல்லித்தருவர்.  ஒரு ஆளுக்கு 3 ஆள் வேலை கொடுத்து விரட்டுவார். காலை 5மணி முதல் இரவு 12-1 மணி வரை வேலை. இரண்டு வேலை உணவு, தீவிர ஹட யோகா என்று உடலை பிழிந்து எடுத்து இரவு படுத்தால் பிணம் போல் கிடப்பார்கள். ஓய்வு என்று கொடுக்கும் காலத்தில் கூட மௌனத்தில் (silence) இருக்க செய்து விடுவார். இப்படியாக அவர்கள் கவனத்தை சிதற விடாமல் ஒரே திசையில் வைத்திருப்பார்.

இதுபோல சுமார் 10-20 வருடம் வேலை செய்தும் கர்மாவை முழுவதும் கழிக்க முடியாமல் பலர் வயதாகி திணறிக்கொண்டு இருக்கிறார்கள். யாராவது “எனக்கு கைவலி கால்வலி” என்று ஜக்கியிடம் சொன்னால், … “உன் கர்மா மூட்டை வெயிட் அதிகம். உனது முக்திக்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் ” என்பார். இதைக்கேட்கும் மற்றவர்கள் அடுத்து அப்படி கேட்க மாட்டார்கள் இல்லையா !

சந்நியாசிகளுக்குள் பிணக்கு ஏற்படும் போது அவரிடம் முறையிடும் நபரை “நீ ஏன் அவன் கர்மாவை சுமக்கிறாய்? போச்சு போ உன் அக்கௌண்டில் புது கர்மாவும் சேர்த்துவிட்டது. கோட்டை அழி மொதல்ல இருந்து துவங்கு” என்று கூறி விடுவார்.

இங்குள்ள இளம் சிறார்களுக்கான பள்ளியில் படிக்கும், ஆண், பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்படுவதான குற்றசாட்டுகள் சுமார் 20 வருடங்களாகவே தொடர்ந்து வெளி வந்த போதும், இது வரை அவை குறித்து தீவிர விசாரணையோ, வழக்கு பதிவோ, குற்றப்பதிவோ அரசு தர்ப்பில் இல்லை. அவை குறித்து தற்போது பல புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

ஜக்கி ஒரு இண்டெலக்சுவல் ப்ராடு சாமியார்!

கட்டுரையாளர்; சந்திர மோகன்

https://aramonline.in/20890/isha-jakki-vasudev-fraud-godmen/

பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 21

3 months 2 weeks ago

பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 21

"மற்றவைகளும் முடிவுரையும்"

(மூட நம்பிக்கையின் வெவ்வேறு அம்சத்தை [கூறுபாடுகளை] காட்டக்கூடியதாக நான் படித்த, கேட்ட இரு கதைகளை, இந்த நீண்ட கட்டுரையின் முடிவுரையாக சுருக்கமாக தருகிறேன். உங்களின் இந்த கட்டுரை பற்றிய கருத்து, ஆக்கபூர்வமான திறனாய்வு [விமர்சனம்], எண்ணம், மதிப்பீடு வரவேற்க தக்கது.)

ஒருவருக்கு அடிக்கடி வருத்தம் வந்து கொண்டே இருந்தது. அதனால் அவர் அடிக்கடி வைத்தியசாலைக்கு செல்ல வேண்டி இருந்தது. அவரும்,

அவரது மனவியும் இப்படி நெடுகவும் உடல்நிலை குன்றிப் போவதற்கு என்ன காரணம் என யோசித்தார்கள். இறுதியாக ஒரு 'மை' போட்டுப் பார்ப்பவரிடம் போவோம் என முடிவு எடுத்தார்கள்.

இவரின் குடும்பத்துக்கு என சிறு வைரவர் கோவில் உள்ளது. அந்த மை போட்டுப் பார்ப்பவர் இவர்களிடம் சொன்னார்: "உங்களுடைய கோவிலில் இருக்கும் வைரவரை உங்கள் எதிரி ஒருவர் கட்டி வைத்திருக்கிறார். அதனால் தான் உங்களுக்கு இப்படி அடிக்கடி உடல் நலமற்றுப் போகின்றது. இதை சரி செய்ய, அந்த கட்டி வைத்திருப்பவர் செய்திருக்கும் செய்வினையை கண்டு பிடித்து அகற்ற வேண்டும்" என அறிவுரை கூறினார்.

அதன் படி, அந்த மை போட்டுப் பார்ப்பவர் அவர்கள் வீட்டுக்கு வந்து, அந்த காணி முழுவதும் சுற்றித் திரிந்து, செய்வினை புதைத்து வைத்திருக்கும் இடத்தை கண்டு பிடித்ததாக கூறி, அந்த இடத்தை தோண்டச் சொல்லி, அங்கிருந்து ஏதோ சில பொருட்களை அகற்றினார். அதன் பின் தட்சனையாக பணமும் வேறு சில பொருட்களும் வாங்கிச் சென்றார்.

அவருக்கு அதற்குப் பின்னர் எந்த உடல் நலக் குறைவும் வரவில்லையாம். அது மட்டும் அல்ல அவரால் இப்ப துவிச்சக்கர வண்டி கூட ஓட்டிக் கொண்டு செல்ல முடிகிறதாம் என ஆனந்தமாக கூறுகின்றார். அதாவது அவருக்கு, அந்த மை போடுபவர் சொன்னதில் இருந்த முழுமையான நம்பிக்கை, அவரை சுகமானவராக்கி வைத்திருக்கின்றது. அது தற்காலிகமானதாக இருந்தாலும், அவர் கொஞ்ச நாளைக்கு, சந்தோஷமாகவும், உடல்நலத்துடனும் இருக்கப் போகின்றார் என்பது உண்மை.

இனி நாம் இரண்டாவது கதைக்கு போவோம் .

முன்னொரு காலத்தில் ராமாபுரி என்ற ஒரு நாடு இருந்தது. அதை ராஜகம்சன் என்ற அரசன் ஆண்டுவந்தான். மாதம் மும்மாரி பொழிய எல்லாவளமும் பெற்று செழிப்பாக இருந்தது அந்தப் பூமி. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தனர். கொலை, கொள்ளை என எந்தக் குற்றமும் நடப்பதில்லை. ஏனெனில், எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து வந்தது. மக்களை நேசிக்கக் கூடிய ராணுவத்தைக் கொண்ட நாடு அது.

ராமாபுரிக்கு அண்டை நாடு தாணடவராயன் ஆளும் விஜயபுரி. அவன் தந்திரமானவன், அதே சமயம் பேராசைக்காரனும் கூட. அவனும் சிறப்பாகத்தான் ஆட்சி புரிந்து வந்தான். மக்களை எந்தக் குறையும் இல்லாமல் ஆண்டான். அவனுக்கு ராமாபுரியின் மீது எப்பொழுதும் ஒரு கண் இருந்து வந்தது. எப்பாடுபட்டாவது அந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டுமென துடியாய் துடித்துக் கொண்டிருந்தான்.

ஆனால், அந்த நாட்டு மக்களின் ஒற்றுமையையும், ராணுவத்தின் வீரத்தையும் கண்டு அவன் மிகவும் யோசித்தான். அந்த நாட்டின் பலமே பொருளாதாரத்தில் தான் இருக்கிறது. அதைக் குலைத்தால், அங்கே மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு ... அதையே நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி, நாம் படையெடுத்து விடலாம் என மந்திரி கூறியதை பல முறை சிந்தித்துப் பார்த்தான்.

அப்போதுதான் திடீரென்று அவனுடைய மனதுக்குள் ஒரு யோசனைப் பிறந்தது. ராமாபுரி மக்கள் வலிமையானவர்களாக இருந்தாலும், மூடநம்பிக்கைச் சேற்றில் மிகவும் ஊறியவர்கள். ஏன் இந்த ஒரு காரணத்தை வைத்து ஏதாவது செய்ய முடியாதா என்று யோசித்தான் தாண்டவராயன். உடனே மந்திரிகளை அழைத்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.

ராமாபுரிக்கு சாமியார் ஒருவர் வந்தார். ஒரு கோயில் மண்டபத்தில் அவர் தங்கிக் கொண்டார். புதிதாக சாமியார் வந்திருக்கும் விஷயம் கேள்விப்பட்டதும், அந்நாட்டு மக்கள் அலை அலையாய் வந்து அந்தச் சாமியாரை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். வெகு விரைவிலேயே அந்தச் சாமியாரின் புகழ் பரவியது.

சாமியாரின் வருகையை அறிந்த ராமாபுரி மன்னன் ராஜகம்சன். அவரை தன்னுடைய அரண் மனைக்கு அழைத்துவர உத்தரவிட்டான். “சிறிது காலத்திற்கு நீங்கள் அரண்மனையில் தங்கி இந்த இடத்தைப் புனிதப்படுத்த வேண்டும்” என்று மன்னன் கேட்டுக் கொண்டான். துறவியும் உடனே சம்மதித்தார். ஒரு வாரம் சென்றது. துறவிக்கு ராஜ உபசாரம்தான். அவர் தானாக எதையும் கேட்கவில்லை. அதே சமயம் கொடுப்பதையும் மறுக்கவில்லை. அன்று ஒரு நாள் மன்னன் ராஜகம்சன் துறவியின் அறைக்கு வந்தான்.

அங்கு துறவி சோகமாக அமர்ந்திருப்பதைக் கண்ட மன்னன் “என்ன காரணம்?” என்று பணிவாகக் கேட்டான். முதலில் வாய் திறக்காத அந்தத் துறவி, மன்னன் சிறிது வலியுறுத்திக் கேட்ட பின்னர் பேச ஆரம்பித்தார்.

“மன்னா! உங்கள் நாட்டை கேடு சூழ்ந்துள்ளது” என்றார்.

இதைக் கேட்ட மன்னன் திகைப்படைந்தான். “என்ன சொல்லுகிறீர்கள்?”

“ஆம் மன்னா! இந்நாட்டு குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஆபத்து காத்திருக்கிறது. அவர்களின் உயிர் அவர்களின் கையில் இல்லை” என்றார் துறவி. இதைக் கேட்டதும் மன்னன் அதிர்ச்சியடைந்தான்.

“நீங்கள் கூறுவது வியப்பாகவும், அதிர்ச்சியாவும் உள்ளதே!” என்றான் மன்னன்.

“உன்மை மன்னா! நான் கூறுவது உண்மை.உயிரைப் பறிக்கும் தீய சக்தியின் தற்போதைய இருப்பு எங்குள்ளது என்பதை சக்தியின் அருளால் நாம் கண்டு கொண்டோம். இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு பச்சை மரத்திலும் அந்த தீயசக்தி குடிகொண்டுள்ளது. வரும் அமாவாசை அன்று அது உயிர் பெற்று வெளியே வரும். மக்கள், படைவீரர்கள் ஆகியோர் அதன் இலக்கு!”

“நம்பவே முடியவில்லையே.”

“நம்பித்தான் ஆக வேண்டும். நான் சொல்வதை சொல்லிவிட்டேன். தடுக்க வேண்டிய பொறுப்பு உங்களைச் சார்ந்ததாகும்.”

“எவ்வாறு தடுப்பது?”

“அமாவாசைக்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ளன. அதற்குள் தீய சக்தி குடியிருக்கும் மரங்களை வெட்டி அழிக்க வேண்டும்.

“அப்படிப்பட்ட மரங்களை எவ்வாறு அடையாளம் காண்பது?

“அடையாளம் காண வேண்டிய அவசியமே கிடையாது. இருக்கும் ஒவ்வொரு மரத்திலும் தீய சக்தியின் இருப்பு உள்ளது.”

“அய்யய்யோ! அப்படி என்றால் ஒவ்வொரு மரத்தையும் வெட்டி ஆக வேண்டுமா?”

“நிச்சயமாக வேறு மார்க்கமே இல்லை. மரம் கூட வேறொன்று நட்டுவிடலாம். ஆனால் மனிதரை ...”

“உண்மைதான்! இப்போதே ஆணையிடுகிறேன்.”

படை வீரர்களுக்குத் தகவல் அனுப்பட்டது. அவர்கள் துரிதரீதியில் செயல்பட்டு அனைத்து மரங்களையும் வெட்டினர். மன்னன் துறவிக்கு நன்றி தெரிவித்தான்.பரிசு கொடுக்கவும் முனைந்தான். ஆனால் துறவி எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சாந்தமாக புறப்பட்டுப் போனார். மக்களின் உயிரைக் காப்பாற்ற வந்த அந்தத் துறவியை எல்லோரும் மனதில் நினைத்து வழிபட்டனர்.

அமாவாசை கழிந்தது.எல்லோரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.அவர்கள் விடுகிற அசுத்தக் காற்றை எடுத்துக் கொண்டு தூயக் காற்றை கொடுக்க இப்போது ஒரு மரமும் அந்த நாட்டில் இல்லை.மக்களும் சரி, மன்னனும் சரி இதையெல்லாம் உணரவேயில்லை.

இரண்டு, மூன்று நாளாக ஓய்வு இல்லாமல் வேலை செய்த களைப்பு காரணமாக மக்களும்,வீரர்களும் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தனர். அப்போது தான் அது நடந்தது.

வெளியே போர் முரசு ஒலிக்கும் சத்தம் கேட்டது. அரண்மனைக்கு வெளியே வந்து பார்த்தான் மன்னன் ராஜகம்சன். விஜயபுரி நாட்டு கொடி பறக்க ஒரு பெரும்படை திரண்டு வந்திருந்தது. “முன் அறிவிப்பு இன்றியே போர் தொடுக்க தாண்டவராயன் வந்து விட்டானே ... அவன் புத்தியே இதுதான்” என நினைத்த மன்னன், அவசரமாக படைகளுக்கு ஆனணயிட்டான். ஆனால், உடல் களைப்பு காரணமாக யாருமே செயல்பட முடியவில்லை.

சிறிது நேரத்தில்... எது நட்க்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்தது.ராமாபுரியைக் கைப்பற்றினான் தான்டவராயன்.மன்னன்,மந்திரிகள்,படைவீரர்கள்,மக்கள் எல்லோருமே அவன் பிடியில்.கை விலங்கு பூட்டப்பட்ட ராஜகம்சனைப் பார்த்து தாண்டவராயன் பேசினான்.

“என்ன ராஜகம்சா! நான் அனுப்பிய துறவி நன்றாகத் தான் வேலை செய்திருக்கிறார். வலிமையுள்ள மக்களும், படையும் கொண்ட நாடு ராமாபுரி. ஆனால், மூட நம்பிக்கைச் சேற்றில் சிக்கியிருந்தீர்கள். உங்களை அடிமைப்படுத்த அதையே நான் வாய்ப்பாகக் கொண்டேன்”. துறவி இங்கே வந்து நடந்து கொண்டதெல்லாம் நான் வகுத்த திட்டப்படியே. முட்டாள்களே! மரத்தில் தீய சக்தியாவது, அது மக்களை அழிப்பதாவது. இக்கணம் முதற்கொண்டு நீங்கள் எனது அடிமைகள். நான் உத்தரவிடுவதை தட்டாமல் நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.

“ஏற்கெனவே வெட்டப்பட்ட மரங்களை உடனடியாக சீன நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். அடுத்து, எவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டதோ அதே அளவுக்கு புதிய மரங்கள் நடப்பட வேண்டும்”. என்னுடைய இந்த முதல் உத்தரவை நிறைவேற்றி விட்டு வாருங்கள் என்று அட்டகாசமாய் சிரித்தவாரே கூறினான் தாண்டவராயன். ராஜகம்சன் ஏதும் பேசாது திரும்பி நடந்தான். மக்களும் அவனைப் பின் தொடர்ந்து தலைக்குனிந்து சென்றனர்.

முடிவுற்றது

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 19

3 months 2 weeks ago

பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 19

"கர்ப்பிணி [புள்ளதாய்ச்சி]"

"அம்ம வாழி தோழி காதலர்

இன்னே கண்டுந் துறக்குவர் கொல்லோ

மு நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ

ஒதுங்கல் செல்லாப் ,பசும்புளி வேட்கைக்

கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு

விசும்பி இவர் கல்லாது தாங்குபு புணரிச்

செழும்பல் குன்றம் நோக்கிப்

பெருங்கலி வானம் ஏர்தரும் பொழுதே."

[குறுந்தொகை287]

இந்த பாடல் வழியே நாம் அறிவது கருவுற்ற மகளிரை நீர் கொண்ட மேகத்துடன் ஒப்பிடுவதையும், கருவுற்ற மகளிர் புளிச்சுவையை மிகவும் விரும்புவர் என்பதையும், மேலும் மகளிர் கருவுறும் காலம் 12 மாதம்? என இப்பாடல் சுட்டும் கருத்து புதுமையாகவும் உள்ளது. [மு நால் திங்கள்-three times four,months, பசும் புளி வேட்கைக் -desire green tamarind ]

கருவுற்ற காலத்தில் முதல் ஒன்பது மாதமும் இந்த குழந்தை எப்படிபட்டது, அதாவது இது கம்பீரமாக இருக்குமா?, பெருந்தன்மையுள்ளதாக இருக்குமா? செல்வச் செழிப்பாக இருக்குமா?, அழகாக இருக்குமா?, பலசாலியாக இருக்குமா? பொறுமையாளியாக இருக்குமா? இப்படியெல்லாம் ஆராய்ந்து கொண்டிருப்பார். இவைகள் சில முட நம்பிக்கைகளை நம்ப வழிவகுக்கிறது.

சூரிய, சந்திர கிரகணத்தின் பாதிப்புக் கருதி, கருவுற்ற பெண்கள் குழந்தைகளுக்குத் தீங்கு ஏற்படாதிருக்க வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. அந்நேரங்களில் காய்கறி நறுக்குதல், வெற்றிலை போடுதல், பிற உயிர்களைத் துன்புறுத்துதல் போன்ற செயல்களைச் செய்யக்கூடாது என்றும், கிரகணம் முடியும் வரை எவ்வித உணவும் உண்ணுதல் கூடாது என்றும் நாட்டுப்புற மக்களிடையே நம்பிக்கை காணப்படுகிறது. கருவுற்றிருக்கும் பெண்கள் நாய், பூனை போன்ற விலங்குகளைத் தாண்டிச் செல்லுதல், ஊசி, நூல் இவைகளைக் கொண்டு துணிகளைத் தைத்தல் போன்ற செயல்களைச் செய்யக்கூடாது. மேலும் கருவுற்றிருக்கும் பெண்கள் விரும்பிக் கேட்கும் அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை இன்றளவும் காணப்படுகிறது. மேலும் கர்ப்பனியில் தேரை (toad) பாய்ந்தால் கால் சொத்தியாய் தேய்ஞ்சு பிறக்கும் எனவும் நம்புகிறார்கள். சில மூட நம்பிக்கைகள் அவர்களின் ஒரு பாதுகாப்பிற்காக அந்த காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப ஏற்படுத்தப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்படியனவைகளில் ஒன்று கர்ப்பிணி பெண், இரவில் தனிய அலைந்து திரியக் கூடாது அல்லது வெறுமையான வீட்டிற்குள் நுழையக் கூடாது என்பதாகும். அது மட்டும் அல்ல சன நெரிச்சல் கூடிய இடங்கள் அல்லது ஆலயம் போன்றவற்றிற்கும், குறிப்பாக இருட்டில், பிள்ளை பெறுவதற்கு ஒரு சில மாதங்களே இருக்கும் தருவாயில் போவது தடை செயப்படுகிறது. இதற்கு கூறும் காரணம் கெட்ட ஆவிகள் பரவித் தாக்கும் அல்லது அவளுக்கு துயரளிக்கும் என்பது. ஆனால் உண்மையில் அப்படி இல்லை. அந்த கால சூழ்நிலைக்கு ஏற்ப, தனிமையில் அல்லது இருட்டில் போகும் போது, ஒரு அவசரத்திற்கு ஆள் உதவி தேவை என்பதால். அது போலவே அவளின் கணவன் அந்த நேரத்தில் வீடு கட்டக்கூடாது என்பார்கள். அப்படி கட்டிக் கொண்டு இருந்தால் அவனின் முழு கவனமும் கர்ப்பிணியான அவனது மனைவியின் மேல் இருக்காது என்பதே. அது மட்டும் அல்ல ஒரு பெண் கர்ப்பம் தரித்து இருக்கும் போது, கணவனின் இருப்பு, ஒரு தார்மீக கடமையும் கூட. இது அவளுக்கு ஒரு தெம்பு, ஊக்கம் கொடுக்கிறது. இதனால் தான் இந்த தடைகள், ஆவிகள், பேய்கள் எல்லாம். இதனால் தான் கணவனின் தேவையற்ற நீண்ட பயணங்கள் அல்லது ஏதாவது செய்பணி ஒன்றில் ஆழ்ந்த ஈடுபாடு தவிர்க்கப்படுகிறது அல்லது பின்போடப்படுகிறது.

மேலும் கர்ப்பிணி பெண்ணை படம் பிடிக்கக் கூடாது என்றும், அவள் கேட்கும் உணவு பொருட்களை, பயன்படு பொருள்களை [edibles and consumer articles] வாங்க்கிக் கொடுக்க வேண்டும் என்பார்கள். அழகான பெண்ணொருவர் குழந்தை உண்டானால் கர்ப்ப காலம் முன்னோக்கி நகர, அவரது அழகு பின்னோக்கி நகரும். வனப்பும், பொலிவும் குறையும். இயற்கையான தன்மையிது. கர்ப்ப காலம் கடந்து குழந்தைப்பேறு முடியும் வரை அழகு குறித்து மனைவியிடம் வெறுப்பு காட்டக்கூடாது. அன்பு காட்டிப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளணும். அதனால் தான் இப்படியான கட்டலைகள் போலும். இதை உறுதிபடுத்துவது போல விவேகச் சிந்தாமணி பாடல் 16

‘‘கெற்பத்தான் மங்கையருக்கு அழகு குன்றும்.. கேள்வி இல்லா அரசனால் உலகம் பாழாம்.. நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார்... .. "

இப்படி அமைந்துள்ளதோ?

கர்ப்பிணி பெண் வாழும் வீட்டிலோ அல்லது அதை சுற்றியோ உள்ள குளவி அல்லது குருவி [பறவை] களின் கூடுகளை அகற்றவோ அல்லது குழப்பவோ கூடாது என்றும் கூறுவார்கள்.

என்னதான் நாம் மேலே கூறியிருந்தாலும், இன்னும் பெண்ணை சிலர் கேவலமாக அல்லது ஒரு குறைபாடாகத்தான் கருதுகிறார்கள். ஏன் பேயை, பேய் மகன் என்று கூட கூறமாட்டார்கள். அதை பேய் மகள் என்றே பாடல்களில் அழைக்கிறார்கள். அது மட்டும் அல்ல பெண்களை குறிக்கும் சொற்களை பாருங்கள். அதாவது பேதை, மடந்தை, மடவார் ... ஆகியவை முட்டாள்தனமான ஒரு ஆளை குறிக்கிறது என்பது தெரிய வரும். அதே நேரத்தில் ஆண் என்ற சொல்லை பாருங்கள். இது ஆண்மை என்ற சொல்லுடன் தொடர்புடையது. மேலும் கணவன் என்பது "கண் + அவன்" என பிரித்து உணரலாம்? இது மட்டுமா?"ஆசைக்கு ஒரு பெண் .. ஆஸ்திக்கு ஒரு பிள்ளை .", "கோணல் பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளை" என்று வேறு சொல்லி விட்டு போயுள்ளார்கள். "பெண் புத்தி பின் புத்தி", "தையல் சொல் கேளேல் /ஆத்திசூடி63" ... இப்படி அடிக்கிக் கொண்டு போகலாம். ஆகவே அதை விட்டுவிட்டு, இறுதியாக விவேக சிந்தாமணி — பாடல் 30 யை கிழே தருகிறேன். பெண்ணின் நிலை சிலர் மத்தியில் என்ன பாடு படுகிறது என்பது புரியும்.

"படியினப் பொழுதே வதைத்திடும் பச்சை நாவியை நம்பலாம்

பழி நமக்கென வழி மறித்திடும் பழைய நீலியை நம்பலாம்

கொடுமதக்குவ டெனவளர்த்திடு குஞ்சரத்தையும் நம்பலாம்

………………

நடை குலுக்கி முகம் மினுக்கி நகை நகைத்திடு மாதரை

நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய் காணுமே"

“உடனே கொல்லும் விஷத்தை நம்பலாம், பழியைக் கருதாத ஒரு வணிகனை வழிமறித்துக் கொலை செய்த பழையனூர் நீலியை நம்பலாம், கொடிய மும்மதங்களை உடைய மலை போன்று வளர்ந்த யானையையும் நம்பலாம் …………….. என்று சொல்லிக்கொண்டே போய்

“நடை குலுக்கி முகம் மினுக்கி நகை நகைத்திடு மாதரை நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய் காணுமே” என்று முடிகிறது கவிதை.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி 20: "மற்றவைகளும் முடிவுரையும்" தொடரும்.

Checked
Wed, 06/11/2025 - 01:54
சமூகச் சாளரம் Latest Topics
Subscribe to சமூகச் சாளரம் feed