சமூகச் சாளரம்

திருமணம் - ஒரு மோசமான ஒப்பந்தம் ..

2 weeks 1 day ago

திருமணம் - ஒரு மோசமான ஒப்பந்தம் ..

tamil-marriage-rituals.jpg

அன்புள்ள ஆண்களே..,

இது எல்லா ஆண்களுக்கும் அல்ல...

பெரும்பாலான ஆண்களுக்கானது...

நவீன திருமணம் உங்களுக்கு பயனளிக்காது.

திருமணம் என்பது பெரும்பாலும் ஆண்களுக்கு ஒரு மோசமான ஒப்பந்தம், பல திருமண கதைகள் பலருக்கு கொடூரமான யதார்த்தத்தை மட்டுமே எடுத்துக்காட்டுகின்றன.

ஒரு மனிதன் தனது முழு வாழ்க்கையையும் தியாகம் செய்வதில் செலவிடுகிறான் - நீண்ட நேரம் வேலை செய்தல், பள்ளிக் கட்டணத்தைச் செலுத்துதல் மற்றும் தனது குடும்பத்திற்கு வசதியான வாழ்க்கையை வழங்குதல். அவர் தனிப்பட்ட இன்பங்களைத் துறந்து, தனது கனவுகளைத் தள்ளி வைத்து, தனது குழந்தைகள் வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் கொட்டுகிறார். தன்னைச் சுற்றி அன்பு மற்றும் விசுவாசத்தின் கோட்டையைக் கட்டியுள்ளதாக நினைத்து ஓய்வு பெறுகிறார். ஆனால் உண்மை என்ன? அங்குதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர் தனியாக விடப்படுகிறார், அவர் எல்லாவற்றையும் தியாகம் செய்தவர்களால் ஒதுக்கி வைக்கப்படுகிறார்.

இதை உடைப்போம்:

1. அவருக்கு வயது 72, ஓய்வு பெற்றவர், தனியாக இருக்கிறார்.

அவருடைய அனைத்து ஆண்டுகால வேலை, மற்றும் வீடு கட்டுதல் ஆகியவை அவரது வயதான காலத்தில் அமைதிக்கு வழிவகுக்கும் என்று கருதப்பட்டது. அதற்கு பதிலாக, அவர் வெற்று அறைகளையும் தனிமையான இரவுகளையும் வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

2. அவரது மனைவிக்கு வயது 62. தங்கள் குழந்தைகளுடன் வாழ்க்கையை செலவிடுகிறார்.

ஏன்? ஏனென்றால், சமூகம் பெண்களுக்குக் கணவர்களை விடக் குழந்தைகளை முதன்மைப்படுத்தக் கற்றுக்கொடுக்கிறது. அவர் எவ்வளவு நல்லவராக இருந்தார், எவ்வளவு தியாகம் செய்தார் என்பது முக்கியமல்ல - குழந்தைகள் வளர்ந்தவுடன், கணவர் பெரும்பாலும் மனைவியின் வாழ்க்கையில் ஒரு சிறிய அங்கமாக மட்டுமே மாறுகிறார்.

3. அவரது குழந்தைகள் அரிதாகவே அவரிடம் பேசுகிறார்கள்.

அவர்கள் வெளிநாட்டிலோ, வெளியூரிலோ தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள், அங்கு அவர்களை அனுப்ப தனது முதுகெலும்பை உடைத்துக்கொண்ட மனிதனை மறந்துவிடுகிறார்கள். அவரது தியாகங்கள் இப்போது சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

4. அவர் இப்போது மீண்டும் ஒரு பிரம்மச்சாரி - 72 வயதில்.

ஒரு குடும்பத்தைக் கட்டி பராமரித்த இந்த மனிதர், இப்போது தன்னைத்தானே கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவர் நோய்கள், தனிமை மற்றும் தன்னைத் தவிர மற்ற அனைவரிடமும் தனது பணத்தை, தனது உடல் பலத்தை கொடுத்ததை உணர்ந்து போராடுகிறார்.

திருமணத்தில் ஆண்களுக்கான கடுமையான யதார்த்தம்

உண்மை என்னவென்றால், ஆண்கள் பெரும்பாலும் குறுகிய வட்டத்தில் அடைபடுகிறார்கள். இந்த அமைப்பு உங்களிடமிருந்து பறித்து உங்களை காலியாக விடுவதற்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு பிரச்சனையில்லை. அவர்களின் குழந்தைகள், சமூகம் ஆகியவற்றிலிருந்து ஆதரவைப் பெறுகிறார்கள். ஆனால் ஒரு ஆண்? கொடுக்கும் திறன் இல்லாதபோது அவரது பயன்பாடு முடிகிறது.

சமூகம் உங்களை "ஒரு ஆணாக இருங்கள்", "உங்கள் குடும்பத்திற்காக தியாகம் செய்யுங்கள்" என்று சொல்கிறது, ஆனால் உங்களுக்காக யார் தியாகம் செய்கிறார்கள்? உங்கள் மகிழ்ச்சி, உங்கள் ஆரோக்கியம், உங்கள் மன அமைதியை யார் உறுதி செய்கிறார்கள்? யாரும் இல்லை. கொடுப்பவராக உங்கள் பங்கு முடிந்ததும், நேற்றைய செய்தித்தாளை போல நீங்கள் நிராகரிக்கப்படுகிறீர்கள்.

இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

1. முதலில் உங்களை நேசியுங்கள்:

காலியான கோப்பையிலிருந்து எதையும் ஊற்ற முடியாது. உங்கள் உடல்நலம், உங்கள் பொழுதுபோக்குகள் மற்றும் உங்கள் மகிழ்ச்சியில் முதலீடு செய்யுங்கள். ஒரு கணவன் அல்லது தந்தையாக இருப்பதை மட்டுமே சார்ந்து இல்லாத, உங்களுக்கான ஒரு நேரத்தையும், வாழ்க்கையையும் உருவாக்குங்கள்.

2. உங்கள் ஓய்வு நேரத்தைத் திட்டமிடுங்கள்:

நீங்கள் எப்படி வாழ்வீர்கள் என்பதைக் கண்டுபிடிக்க வயதாகும் வரை காத்திருக்காதீர்கள். செயலற்ற வருமான வழிகளை (PASSIVE INCOME) உருவாக்கத் தொடங்குங்கள், புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள், மேலும் உங்களை நம்பியிருக்கக்கூடிய எதிர்காலத்தைப் பாதுகாக்கவும்.

3. எல்லைகளை முன்கூட்டியே அமைக்கவும்:

உங்கள் முழு அடையாளத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதில் நேரம் செலவிடாதீர்கள். நீங்கள் ஒரு மனிதன், ஒரு இயந்திரம் அல்ல என்பதை உங்கள் மனைவியும் குழந்தைகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

4. உங்கள் சொந்த சமூகத்தை உருவாக்குங்கள்:

வயதான காலத்தில் உங்கள் குடும்பத்தை மட்டுமே சார்ந்திருக்காதீர்கள். உங்கள் வீட்டிற்கு வெளியே உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தரும் நட்புகள், பொழுதுபோக்குகள் மற்றும் நெட்வொர்க்குகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

5. திருமணத்தைப் பற்றி யதார்த்தமாக இருங்கள்:

உங்கள் கண்களை அகலத் திறந்து வைத்து திருமணத்திற்குள் நுழையுங்கள். உங்கள் தியாகங்கள் அங்கீகரிக்க படாமல் போகலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். திருமணம் ஒரு சூதாட்டம், வாய்ப்புகள் அரிதாகவே உங்களுக்கு சாதகமாக இருக்கும். உணர்ச்சி ரீதியாகவும் நிதி ரீதியாகவும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இறுதி வரிகள்:

ஆண்களே, சமூகம் உங்களை வாழ்நாள் முழுவதும் அடிமைத்தனத்தில் தள்ள அனுமதிக்காதீர்கள். நீங்கள் ஒரு பணப்பையோ அல்லது வேலைக்கார குதிரையோ அல்ல. திருமணம், இன்றைய நிலையில், ஆண்களுக்கு, குறிப்பாக முதுமையில் சிறிய வெகுமதியை வழங்குகிறது. உங்கள் வாழ்க்கையை இப்போதே கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். எதிர்காலத்திற்காகத் திட்டமிடுங்கள். உங்கள் குடும்பத்தை நேசியுங்கள், ஆனால் முதலில் உங்களை நேசிக்க மறக்காதீர்கள்.

வாழ்த்துக்கள் நண்பர்களே.

புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது..

https://www.facebook.com/share/p/16Dbh9bZth/

டிஸ்கி :

தமிழக வாழ்வியல் சூழலில் இருந்து இந்த பேஸ்புக் கட்டுரையாளர் பதிவிடுகிறார்.. வெளிநாட்டில் நிலவரம் என்ன ரெல் மீ ..கிளியர் லீ ..?

எனக்கு பிடித்த சில  வரிகள்.

3 weeks 2 days ago

எனக்கு பிடித்த சில  வரிகள்.

1. சில சூழ்நிலைகள் கடந்துசெல்ல உடல் வலிமையை  விட மனவலிமை அதிகம் தேவைப்படுகிறது .
இந்த  சோகங்கள்  துக்கங்கள் எல்லாம் ஒரு நாள் மாறிவிடும்.ஆனால் உடனே  மாறிவிடாது. 

2.ஒரு பெண் தன்னை ஒருவரிடம் ஒப்படைக்கும் வரை தான் அவள் வாழ்க்கை  அவள் கையில் . அதன் பிறகு அவள்  ராணியாக வாழ்வதும் நடைப்பிணமாக வாழ்வதும் ஆணின் கையில் தான் உள்ளது .  

3. குடும்ப நலன் கருதி யாரோ  ஒருவர் மௌனமாகி போவதால் தான் ...பல பிரச்சினைகள் பெரிதாகாமல் இருக்கின்றன.  

4  வாழவேண்டிய வயதில் வசதி இருக்காது ...வசதி வரும்போது வயது இருக்காது ...இதுதான் வாழ்க்கை

5. எல்லா உறவுகளுக்கும் மனம் ஏங்காது  எல்லார்   தீண்டல்க்கும் பெண்மை வளையாது. விரும்பிய ஒருவருடன் தான் உணர்வுகளும்  காதலும்

6. குடும்பத்துடன் நேரம் செலவிடாத மனிதன் ஒருபோதும் உண்மையான மனிதனாக இருக்க முடியாது  .

7.பிடிக்காத   விஷயத்தை கண்டு கொள்ளாமல், வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாமல் தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல்  இருந்தாலும் உடலும் மனமும் ஆரோக்கியமாக  இருக்கும்

8.சில மனிதர்கள் கற்றுத்தரும்  பாடங்கள்   எந்த புத்தகத்திலும் இருப்பதில்லை

பெண்ணின் பேச்சில் நியாயம் இருக்கும் வரை  அவளின் சத்தம்  கொஞ்சம் அதிகம் தான் இருக்கும்./ 

தாய் சொல்லைத் தட்டாதே

1 month 1 week ago

எனக்குப் பதினைந்து வயது இருக்கும்போது, நான் கல்லூரியில் கணிதம் / கணினியியல் / அறிவியல் படிக்க வேண்டும் என என் அம்மா ஆசைப்பட்டார். எனக்கு இலக்கியத்தைத் தவிர எதிலும் நாட்டமில்லை. கல்வி மகிழ்ச்சியானதாக, என் இலக்குடன் தொடர்புள்ளதாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அம்மா என்னென்னமோ காரணம் சொல்லி என்னை ஏற்க வைக்க முயன்றார். படிக்கவே வைக்க மாட்டேன் என்று மிரட்டினார். வயதுக்கே உரிய பிடிவாதத்தால் நான் ஏற்கவில்லை. கல்லூரியில் இலக்கியம் கற்றேன். ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு கணத்தையும் ரசித்து பங்குபெற்றேன். இளங்கலையிலும், முதுகலையிலும் முதலாவது மதிப்பெண் பெற்றேன். தங்கப்பதக்கம் வென்றேன். அப்போது எனக்கு நான் எடுத்தது மிகச்சிறந்த முடிவு எனத் தோன்றியது.

அதன்பிறகு நான் ஆய்வுக் கட்டுரைகளைத் திருத்துவது, தொழில்நுட்பக் கட்டுரைகளை எழுதுவது போன்ற பணிகளைச் செய்தபோதும், கல்லூரி ஆசிரியர் ஆனபோதும் என் முடிவு மிகவும் சரியானது என்றே நினைத்தேன் - ஏனென்றால் மொழிசார்ந்த பணிகள் எவையும் சிரமமாக இருக்கவில்லை. நான் ஏற்கனவே கற்றிருந்தவையே போதுமானதாக இருந்தது - புதிதாக மெனெக்கெட்டுக் கற்று என்னை வேலையிடத்தில் நிரூபிக்கத் தேவையிருக்கவில்லை. சுலபமாக வேலையில் ஜொலிக்கவும் நற்பெயர் வாங்கவும் முடிந்தது. முனைவர் பட்ட ஆய்வு கூட ஒரு புத்தகம் எழுதுவதைப் போலத்தான் இருந்தது. இப்படி என் பட்டப்படிப்புக்குப் பின் முதல் 10-15 ஆண்டுகள் ‘துளிகூட வியர்க்காமல்’ கழிந்தது. நான் மென்பொருளோ மருத்துவமோ கற்றிருந்தால் பிடிக்காத வேலையைச் செய்து மனம் ஒப்பாமல் நாளைக் கழித்து நிம்மதியற்று இருந்திருப்பேன் என ஒவ்வொரு நாளும் எனக்குச் சொல்லிக்கொண்டேன்.

ஆனால் கடந்த அரைப்பத்தாண்டுகளில் கல்விப்புலத்தில் தனியார்மயமாக்கல் உச்சம் பெற்றது; ஆசிரியப் பணியென்றால் ஆவணமாக்கல், தேர்வுத்தாள் திருத்துதல், மீண்டும் மீண்டும் தோல்வியுறும் மாணவர்களுக்கு மீண்டும் மீண்டும் மதிப்பெண்களை அளித்தல், சிவாலய ஓட்டம் போலத் தொடரும் எண்ணற்ற கூட்டங்களில் கலந்துகொள்ளுதல் மட்டுமே, கல்வி கற்பித்தம் கட்டக்கடைசியாகச் செய்ய வேண்டியது எனும் நம்பிக்கை வேரூன்றிவிட்டது. குமாஸ்தா பணி! பெரும்பாலான தனியார் உயர்கல்வி ஆசிரியர்கள் கற்பித்தலுக்கும் ஆய்வுக்கும் தொடர்பற்ற பணிகளிலே 90% நேரத்தைச் செலவிட வேண்டிய அழுத்தம் உள்ளது (பள்ளி ஆசிரியர்களின் நிலையும் இதுதான்). இன்னொரு பிரச்சினை ஊதியமும் வேலையுயர்வும் - ஒரு கட்டத்திற்கு மேல் இரண்டுமே சாத்தியமில்லை என்றாகிறது. தொழில்நுட்பக் கல்வியில் இளங்கலைக் கற்றவருக்கு உள்ள வாய்ப்புகளில் 1% கூட முனைவர் பட்டம் முடித்தவருக்கு இருக்காது. ஒரு பள்ளிக்கும் இன்னொரு பள்ளிக்கும், ஒரு கல்லூரிக்கும் இன்னொரு கல்லூரிக்கும் வித்தியாசம் இல்லாதபடி கல்வி நிறுவன நிர்வாகமும் அதன் மொழியும் நகலெடுக்கப்படுகிறது. எங்கு போனாலும் ஒரே இடத்தில் இருப்பதாகவே தோன்றும்.

இப்போதுதான் எனக்கு வேலையென்பது விரும்பிச் செய்வது அல்ல, சம்பாதிக்கவும் வளரவும் செய்வது எனும் தெளிவு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் நாம் என்னதான் விரும்பிச் செய்தாலும் சூழல் மாறிவிட்டால் டைட்டானிக் கப்பல் மூழ்கும்போது இரண்டு இசைக்கலைஞர்கள் வாசித்துக்கொண்டிருப்பார்களே அப்படித்தான் இருக்க வேண்டும். மரியாதை, அங்கீகாரம், கண்ணியம் எதுவும் கிடைக்காது. மேலும் கணிதமோ மென்பொருளோ கொஞ்சம் பிரயத்தனம் பண்ணியிருந்தால் என்னால் கற்றிருக்க முடியும், நான் பெரிய போராட்டமின்றி படிப்பை முடித்து நல்லவேலையில் அமர்ந்திருக்க முடியும் என இப்போது தோன்றுகிறது. அப்போதிருந்த பிடிவாதம் என் மனதை மூடிவிட்டிருந்ததால் நிறைய விசயங்கள் புரியவில்லை. என் தொழில்வாழ்வு ரெண்டாயிரத்தில் ஆரம்பித்திருந்தால் பல்வேறு வாய்ப்புகளைப் பெற்றிருப்பேன், பொருள் வாழ்வில் சிரமங்கள் இன்றி இருந்திருப்பேன்.

என்னுடன் முதுகலையில் ஒரு நண்பர் படித்தார். அவர் இளங்கலை ஆங்கில இலக்கியம் முடித்துவிட்டு பி.பி.ஓவில் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு முதுகலை படிக்க எங்களுடன் இணைந்தார். அவர் படிப்பில் சுத்தமாக ஆர்வம் காட்ட மாட்டார். நான் ஒருநாளில் 18 மணிநேரமும் படித்துக்கொண்டிருப்பேன். அவர் ஜெயிக்கும் அளவுக்கு மட்டுமே படித்து பட்டம் பெற்றபின்னர் ஒரு பிரசித்தமான வங்கியில் சேர்ந்தார். நான் அவரைப் படிப்பில் ஆர்வமற்ற தெளிவற்றவர் என நினைத்தேன். ஆனால் அவர் இப்போது அந்த வங்கியில் வி.பியாக இருக்கிறார். இன்னொரு சகமாணவர் பிரமாதமான கிரிக்கெட் வீரர். அவரும் படிப்பில் சரியாக கவனம் செலுத்த மாட்டார். முழுநேரமும் மைதானத்திலே இருப்பார். நான் படிப்பை முடித்து வேலையில் சேர்ந்தபோது அவர் எந்த கிரிக்கெட் கிளப்பிலும் நிலைக்க முடியாமல் ஊருக்குப் போய்விட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். வருத்தமாக இருந்தது. அதன்பிறகு அவர் என்ன செய்தார் என்பதை நான் சில ஆண்டுகளுக்குப் பின்பே தெரிந்துகொண்டேன் - அவர் கடற்பொறியியல் படிக்க அமெரிக்கா சென்றார். அப்படியே அங்கு கப்பற்படையில் வேலை பெற்று, பின்னர் தனியார் கப்பல்களில் சேர்ந்து பணிபுரிந்து பல நாடுகளில் சுற்றித்திரிந்து அமெரிக்கப் பெண்ணொருத்தியை மணமுடித்து செட்டில் ஆகிவிட்டார். இரண்டு பேரும் என் புரிதலில் ஆரம்பத்தில் தோல்வியுற்றவர்கள், ஆனால் நிஜத்தில் அவர்களே வென்றவர்கள். நாம் தீவிரமான நேசிக்கும் ஒன்றையோ திறமையுள்ள ஒன்றையோ அல்ல, சம்பாதிக்க வாய்ப்பைத் தரும் ஒன்றையே கற்றுக்கொள்ள வேண்டும், வேலையாக செய்ய வேண்டும் என்று இளமையிலேயே புரிந்துகொண்டவர்கள். இலக்கியம் கற்றாலும் அதன் பொறியில் சிக்கி அழியாதவர்கள்.

மேலும் இரு நண்பர்களையும் குறிப்பிட வேண்டும். அவர்களும் என்னைப் போலத்தான் - வகுப்பில் ஜொலித்தவர்கள், ஆனால் பின்னர் சாதாரண வேலைகளில் சிக்கி அலைகழிபவர்கள். அன்று என்னிடம் கேட்டிருந்தால் அவர்கள் மிக உயர்ந்த நிலையை எட்டுவார்கள் என்று சொல்லியிருப்பேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. அதுவே எதார்த்தம்.

அதனாலே passionஐப் பின் தொடர்ந்துப் போகப் போகிறேன் என்று சொல்லும் இளைஞர்களை நான் இப்போதெல்லாம் ஊக்கப்படுத்துவதில்லை. நமது கனவைப் பின் தொடர்வது அல்ல அக்கனவு நம்மை எங்கு கொண்டு போய் சேர்க்கும் என்பதே முக்கியம். போகாத வழியைக் கனவு காண்பதால் பயனில்லை.

என் அம்மா அதிகமாகப் படித்தவர் அல்லர். நான் என் பதின்வயதை எட்டியபோது நான் அவரைவிட பலமடங்கு அதிகமாகக் கற்றிருந்தேன். அதனாலே அவரால் என்னிடம் வாதிட்டு என்னை ஏற்றுக்கொள்ள வைக்க இயலவில்லை. என்னளவுக்கு ஆயிரக்கணக்கான நூல்களை வாசிக்காத ஒருவருடைய சொல்லை நான் ஏன் கேட்க வேண்டும் என்னுடைய ஈகோவும் அவரைப் பொருட்படுத்த என்னை அனுமதிக்கவில்லை. என்ன வேண்டுமானாலும் பண்ணிக் கொள் எனும் மனநிலை கொண்டவர் என் அப்பா. இப்போதுள்ள முதிர்ச்சி அப்போதிருந்தால் அதிகம் படிக்காத என் அம்மா சொல்வதையே கேட்டிருப்பேன். கொஞ்சம் மனம் வைத்துப் படித்தால் சுலபத்தில் எந்த பட்டப்படிப்பையும் என்னால் முடித்திருக்கவும் எந்த வேலையிலும் சிறந்திருக்க முடியும். முனைவர் பட்டம் முடித்து ஆசிரியராகி - ஆசிரியப் பணிக்குச் சம்மந்தமில்லாமல் - குமாஸ்தா வேலையைப் பன்ணிக்கொண்டிருக்க மாட்டேன். எந்த சக-ஆசிரியரிடம் பேசினாலும் அவர்களும் என்னைப் போன்றே புலம்புவதைக் கேட்டுக்கொண்டிருக்க மாட்டேன். படிப்பு, வேலை விசயத்தில் மட்டுமல்ல உறவுகள் விசயத்திலும்கூட என் அம்மா தந்த அறிவுரைகள் எவ்வளவு சிறப்பானவை என்பதையும் நான் தாமதமாகவே ஒவ்வொரு முறையும் புரிந்துகொள்கிறேன்.

தாய் சொல்லைத் தட்டாதே!

Posted 14 hours ago by ஆர். அபிலாஷ்

https://thiruttusavi.blogspot.com/2025/08/blog-post_8.html

திருமணம் செய்து கொள்வதன் நன்மைகள், தீமைகள் என்ன? - சார்லஸ் டார்வின் செய்த பகுப்பாய்வு

2 months 1 week ago

சார்லஸ் டார்வின், மனிதர்கள், திருமணம், இயற்கைத் தேர்வு, வாழ்க்கைத் துணை, லியோ டால்ஸ்டாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எம்மா (1808 –1896) மற்றும் சார்லஸ் டார்வின் (1809-1882), தங்களது 43 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில், 10 குழந்தைகளைப் பெற்றனர்.

கட்டுரை தகவல்

  • பிபிசி நியூஸ் முண்டோ

  • 6 ஜூலை 2025

சார்லஸ் டார்வின் 1838ஆம் ஆண்டில் இயற்கைத் தேர்வு (Natural selection) குறித்த தனது கருத்துக்களை வகுக்கத் தொடங்கினார். ஹச்எம்எஸ் (HMS) பீகிள் என்ற அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலில் உலகம் முழுவதும் மேற்கொண்ட பயணத்தின் போது, குறிப்பாக தென் அமெரிக்காவில் அவர் பெற்ற அவதானிப்புகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்தார்.

இந்த காலகட்டத்தில், அவர் லண்டன் புவியியல் சங்கத்தின் செயலாளராகவும் ஆனார், அந்தப் பதவி கணிசமான பொறுப்புகளைக் கொண்டிருந்தது. மேலும் பிற ஆராய்ச்சிகளைத் தொடரும் அதே வேளையில், பல முக்கியமான ஆய்வுக் கட்டுரைகளையும் டார்வின் சமர்ப்பித்தார்.

அந்த வருடத்தின் அத்தனை பணிகளுக்கும் மத்தியில், ஒரு தனிப்பட்ட விஷயம் அவரது எண்ணங்களை ஆக்கிரமித்தது.

வாழ்க்கைத் துணை இருப்பது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? திருமணம் அவரது வாழ்க்கையிலும் வேலையிலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

அதே வருடம், ஏப்ரல் மாதத்தில், தனியாக வாழ்வதன் நன்மைகள் மற்றும் துணையோடு வாழ்வதன் தீமைகள் குறித்து அவர் சில குறிப்புகளை எழுதினார்.

திருமணம் செய்வதன் நன்மைகள் மற்றும் தீமைகள்

ஜூலை மாதம், டார்வின் இந்த விஷயத்தின் மீது மீண்டும் கவனம் செலுத்தினார், ஆனால் இந்த முறை மிகச்சிறப்பாக, 29 வயதான அந்த இயற்கை ஆர்வலர், திருமணம் குறித்த அந்த முக்கியமான கேள்விக்கு விடை கண்டறிய இரண்டு பட்டியல்களை உருவாக்கினார்.

'திருமணம் செய்து கொள்வது' என்ற தலைப்பின் கீழ், நன்மைகள் என அவர் கருதியவற்றை பின்வருமாறு பட்டியலிட்டார்:

  • குழந்தைகள் (இறைவன் நாடினால்).

  • உங்கள் மீது அக்கறை காட்டும் நிலையான துணை (வயதான காலத்தில் அந்த துணை நண்பராகவும் இருக்கக்கூடும்).

  • விளையாடவும் நேசிக்கவும் ஏதோ ஒன்று இருக்கும் (எப்படியும் ஒரு நாயை விட சிறந்தது).

  • வீடும், அந்த வீட்டைப் பராமரிக்க ஒருவரும்.

  • இசையின் வசீகரமும் பெண்ணிய உரையாடலும்.

"இந்த விஷயங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் நேரத்தை வீணடிப்பதாகும்." என பின்னர் அவர் கூறினார்.

"அய்யோ கடவுளே, வாழ்நாள் முழுவதையும், ஒரு ஆண்மை நீக்கப்பட்ட தேனீயைப் போல, வேலை செய்து கொண்டே, வேறு எதுவுமே செய்யாமல் கழிப்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இல்லை, நான் அதை ஒருபோதும் செய்ய மாட்டேன்." என்றார் டார்வின்.

சார்லஸ் டார்வின், மனிதர்கள், திருமணம், இயற்கைத் தேர்வு, வாழ்க்கைத் துணை, லியோ டால்ஸ்டாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சார்லஸ் டார்வின்

அவர் இரண்டு காட்சிகளை ஒப்பிட்டுப் பார்த்தார்: "லண்டனில், ஒரு அழுக்கு வீட்டில் தனியாக வாழ்வதை கற்பனை செய்து பாருங்கள். மறுபுறம், ஒரு நல்ல சோஃபா, மென்மையான மனைவி, குளிருக்கு நல்ல நெருப்பு, அதனுடன் புத்தகங்கள் மற்றும் இசை என கற்பனை செய்து பாருங்கள்."

பின்னர் அவர் 'திருமணம் செய்யாதீர்கள்' என்ற தலைப்பின் கீழ், பின்வருபவற்றை பட்டியலிட்டார்:

  • எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கான சுதந்திரம்.

  • மற்றவர்களுடன் பழகலாமா வேண்டாமா என்பதைத் நீங்களே தேர்ந்தெடுப்பது.

  • கிளப்களில் புத்திசாலி மனிதர்களுக்கு இடையேயான உரையாடல்.

  • உறவினர்களைப் பார்க்கச் சென்று ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் வளைந்து கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

  • குழந்தைகளின் செலவுகள் மற்றும் பதற்றத்தைத் தவிர்க்கலாம். (ஒருவேளை சண்டைகள்).

  • நேர விரயம்.

  • மதிய வேளைகளில் படிக்க முடியாமல் இருப்பது.

  • உடல் பருமன் மற்றும் சோம்பல்.

  • பதற்றம் மற்றும் பொறுப்பு.

  • புத்தகங்கள் போன்றவற்றுக்குக் குறைவான பணம்.

  • உங்களுக்கு நிறைய குழந்தைகள் இருந்தால், நீங்கள் உணவுக்கு அதிகம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள் (அதிகமாக வேலை செய்வது உங்கள் உடல்நலத்திற்கு மிகவும் மோசமானது).

  • ஒருவேளை என் மனைவிக்கு லண்டன் பிடிக்காமல் போகலாம்; அப்படியானால் நான் நாடுகடத்தப்பட்டு, எங்கோ ஒரு இடத்தில் சோம்பேறியாகவும், படைப்புத்திறன் அற்றவனாகவும் வாழும் நிலையை அடையலாம்.

தீமைகளின் பட்டியல் நீளமாக இருந்தாலும், நன்மைகள் அதிக மதிப்பைக் கொண்டிருந்தன, ஏனெனில் டார்வினின் இறுதி முடிவு என்பது: "எனவே, நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதுதான் தர்க்கரீதியான முடிவு."

திருமணம் எப்போது செய்துகொள்ள வேண்டும்?

ஒரு முடிவுக்கு வந்த பிறகு, டார்வின் புதிய கேள்விகளை எடுத்துக்கொண்டார்: "திருமணம் செய்வது அவசியம் என்று நிரூபிக்கப்பட்ட பிறகு, எப்போது செய்துகொள்ள வேண்டும்? கூடிய விரைவிலா அல்லது பின்னரா?"

"நீங்கள் இளமையாக இருந்தால், வளைந்து கொடுக்கும் குணம் அதிகம் இருக்கும், அதற்கு ஏற்ப உணர்வுகளும் தெளிவாக இருக்கும். நீங்கள் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், நிறைய மகிழ்ச்சியான தருணங்களை இழக்க நேரிடும். எனவே விரைவில் திருமணம் செய்யுமாறு" சமூகம் டார்வினுக்கு அறிவுறுத்தியது.

ஆனால் அவ்வாறு செய்வதற்கான வாய்ப்பு அவரைப் பயமுறுத்தியது.

"முடிவற்ற பிரச்னைகள் மற்றும் செலவுகள், அற்பமான சமூக வாழ்க்கைக்குள் தள்ளப்படுவதால் ஏற்படக்கூடிய விவாதங்கள் மற்றும் தினசரி நேரத்தை வீணடிப்பது" ஆகியவற்றை அவர் எதிர்பார்த்தார்.

நேரம் மட்டுமல்ல, வாய்ப்புகளும் கூட வீணாகும் என அவர் நினைத்தார்.

"என்னால் பிரெஞ்சு கற்றுக்கொள்ள முடியாது, முழு கண்டத்தை சுற்றிப் பார்க்க முடியாது, அமெரிக்கா செல்ல முடியாது, பலூன் விமானத்தில் பறக்க முடியாது, வேல்ஸுக்கு தனியாக பயணம் மேற்கொள்ள முடியாது. ஒரு அடிமை போன்ற வாழ்க்கை" என்று அவர் எழுதினார்.

ஆனால், தன் கருத்தில் இருந்து அவர் பின்வாங்குவது போல் தோன்றியபோது, அவர் தனது தொனியை மாற்றி எழுதினார்: "உற்சாகமாக இருங்கள். நீங்கள் இந்த தனிமையான வாழ்க்கையை, ஒரு சோர்வு நிறைந்த முதுமையுடன், குளிரில், நண்பர்கள் இல்லாமல், குழந்தைகள் இல்லாமல் வாழ முடியாது."

மேலும், "கவலைப்படாதே, வாய்ப்புகளின் மீது நம்பிக்கை கொள். பல மகிழ்ச்சியான அடிமைகள் நம்மைச் சுற்றி உள்ளனர்." என்றும் குறிப்பிட்டார்.

நவம்பர் 11ஆம் தேதி, அவர் தனது நாட்குறிப்பில், "மிகவும் சிறந்த நாள்!" என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். காரணம் அன்று, டார்வினின் உறவினர் எம்மா வெட்ஜ்வுட், அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்தார். அதை டார்வின் கொண்டாடினார்.

சார்லஸ் டார்வின், மனிதர்கள், திருமணம், இயற்கைத் தேர்வு, வாழ்க்கைத் துணை, லியோ டால்ஸ்டாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டார்வினின் பணியை சாத்தியமாக்கிய பல அம்சங்களை எம்மா கையாண்டார்.

எம்மாவின் "சம்மதம்" மகிழ்ச்சிக்குக் காரணமாக இருந்தாலும், அது எதிர்பாராதது அல்ல.

டார்வின் மற்றும் வெட்ஜ்வுட் பரம்பரைகளுக்கு இடையே பல தலைமுறைகளாக திருமண பந்தங்கள் இருந்தது. டார்வினுக்கு எம்மா தான் பொருத்தமான தேர்வாக இருந்தார். அவர்களது குடும்பத்தினரும், இருவரும் நல்ல ஜோடியாக இருப்பார்கள் என்பதை ஒப்புக்கொண்டனர்.

இருப்பினும், டார்வினின் 'திருமண ஆசை மற்றும் முன்மொழிவு' எம்மாவை ஆச்சரியப்படுத்தியது. ஏனென்றால் அவர் டார்வினை விரும்பினார், ஆனால் டார்வின் தன்னை ஒரு சாதாரண உறவினராக மட்டுமே பார்த்தார் என எம்மா நினைத்திருந்தார்.

ஆனால் டார்வினை திருமணம் செய்து கொள்வதா வேண்டாமா என்பது பற்றிய பட்டியல்களை எம்மா உருவாக்கியிருந்தால், அவருடைய பட்டியல் வேறுபட்டிருக்கும் என ஹெலன் லூயிஸ் பிபிசி தொடரான "கிரேட் வைவ்ஸ்"-இல் சுட்டிக்காட்டுகிறார்.

தனியாக வாழ்ந்தால், டார்வினுக்கு கிடைக்கக்கூடிய எந்த வசதிகளும் அவருக்குக் கிடைத்திருக்காது.

பலூன் விமான பயணங்களோ அல்லது வேல்ஸுக்கு தனியாக பயணிக்கவோ முடியாது.

அந்தக் காலத்தில், ஒரு பெண்ணுக்கு, ஒரு வளர்ப்பு நாய் இருப்பதை விட, ஒரு கணவன் கிடைப்பதே சிறந்தது எனக் கருதப்பட்டது.

அப்போது இருந்த சூழ்நிலைகளைப் பொறுத்தவரை, ஒரு பெரிய அல்லது பணக்கார மனிதரின் மனைவியாக இருப்பது ஒரு சிறந்த, தர்க்கரீதியான தேர்வாக இருந்தது.

'எம்மா- ஒரு அற்புதமான துணைவி'

சார்லஸ் டார்வின், மனிதர்கள், திருமணம், இயற்கைத் தேர்வு, வாழ்க்கைத் துணை, லியோ டால்ஸ்டாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டவுன் ஹவுஸ் தோட்டத்தில் சார்லஸ் டார்வின் (1870). இங்கு அவர் தனது பெரும்பாலான நேரத்தை நடைபயிற்சி மற்றும் சிந்திப்பதில் செலவிட்டார். இந்த வீட்டில்தான் அவர் 40 ஆண்டுகள் வசித்து வந்தார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, எம்மாவும் சார்லஸ் டார்வினும் திருமணம் செய்து கொண்டனர்.

அவர்கள் ஆழமான உணர்ச்சிப் பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டனர், பத்து குழந்தைகளைப் பெற்றனர், அன்பான குடும்ப வாழ்க்கையை நடத்தினர், 1882இல் டார்வின் இறக்கும் வரை ஒன்றாக இருந்தனர்.

அந்த 43 வருடங்களில், எம்மா தனது கணவரின் எழுத்துக்களை நகலெடுத்து தட்டச்சு செய்தது மட்டுமல்லாமல், தனது மொழித் திறனைப் பயன்படுத்தி, அறிவியல் முன்னேற்றங்கள் தொடர்பான செய்திகளை மொழிபெயர்த்து அவருக்குத் தெரிவித்தார்.

மேலும், இது அவரது மிகவும் பலவீனமான உடல்நலம் குறித்த அழுத்தத்தில் இருந்தும், தொற்று மற்றும் பரம்பரை நோய்களால் அவரது குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து பாதிக்கப்படுவதைப் பார்ப்பதால் ஏற்படும் உளவியல் துயரத்தில் இருந்தும் அவரைக் காப்பாற்றியது.

டார்வினின் பக்கம் அவர் இருந்ததால், டார்வினுக்கு கிடைத்த நன்மைகள் எண்ணற்றதாக இருந்திருக்கும். ஏனெனில் டார்வினின் பணியை சாத்தியமாக்கிய பல அம்சங்களை எம்மா கையாண்டார்.

இதனால் (டார்வினின் மகன்களில் ஒருவர் விவரித்தபடி) டார்வினின் தினசரி வாழ்க்கை சீராக இருந்தது: காலை 7:00 மணிக்கு அவர் தனியாக காலை உணவை உட்கொள்வார், காலை 7:45 மணி முதல் மதியம் வரை அவர் வேலை செய்வார். பிறகு தோட்டத்தில் விறுவிறுப்பான நடைப்பயிற்சிக்கு பிறகு, அவர் தனது குடும்பத்தினருடன் மதிய உணவு சாப்பிடுவார்.

அன்றைய தினம் தனது அறிவுசார் பணிகளை முடித்த பிறகு, அவர் எம்மாவிடம் ஒரு நாவலையோ அல்லது வேறு இலக்கியப் படைப்பையோ படித்துக் காட்டச் சொல்வார்; பின்னர் அவர் மீண்டும் நடைப்பயிற்சி மேற்கொள்வார், சில வேலைகளைச் செய்வார்,

பின்னர், மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை, இரவு உணவிற்கு முன் எம்மா மீண்டும் அவருக்கு வாசித்துக் காட்டுவார். டார்வின் விரும்பியதெல்லாம் அவரது விருப்பப்படி வழங்கப்பட்டது.

ஒரு அற்புதமான துணை இருப்பது, வாழ்க்கையின் சலிப்பான, முடிவில்லாத பணிகளால் திசைதிருப்பப்படாமல், வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தில் கவனம் செலுத்த அனுமதித்தது.

19ஆம் நூற்றாண்டு மற்றும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த, சிறந்த எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கலைஞர்களை விட, அறிவுசார் பணிகளுக்கு ஏற்ற மிகவும் சரியான வீட்டுச் சூழல்களை சிலர் அனுபவித்திருக்கிறார்கள்.

காபி அல்லது தேநீர் கோப்பைகள் வருவது அல்லது மேஜையில் உணவுகள் திடீரென தோன்றுவது தவிர, எந்த இடையூறும் இல்லாமல் அவர்களால் பணிகளைச் செய்ய முடியும்.

ஒரு காதல் கதை

சார்லஸ் டார்வின், மனிதர்கள், திருமணம், இயற்கைத் தேர்வு, வாழ்க்கைத் துணை, லியோ டால்ஸ்டாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வேரா (1902-1991) விளாடிமிர் நபோகோவ் (1899-1977) உடன், 1923இல் பெர்லினில்.

ஒரு சிறந்த மனைவியால் எவ்வளவோ விஷயங்களைச் செய்ய முடியும், அது வேரா நபோகோவ் விஷயத்தில் மிகவும் உண்மையாக இருந்தது.

வேராவின் கணவர் எழுத்தாளர் விளாடிமிர் நபோகோவ் சொற்பொழிவுகளை நிகழ்த்தும்போது, அவருக்கு உதவுவதற்காக மேடையின் ஓரத்தில் வேரா அமர்ந்திருப்பார்.

வேரா தான், அவருடைய கணவரின் ஏஜென்ட், மொழிபெயர்ப்பாளர், தட்டச்சு செய்பவர், கோப்புகளைச் சேமித்து வைப்பவர், ஆடை வடிவமைப்பாளர், நிதி மேலாளர், ஓட்டுநர். கணவரது அனைத்து நாவல்களின் முதல் வாசகராகவும் வேரா இருந்தார்.

கணவர் பல்கலைக்கழகத்தில் பாடங்களை எடுக்க தவறியபோது கூட, வேராவே கணவருக்குப் பதிலாக வகுப்புகளை எடுத்தார்.

ஒரு சமையல்காரர், கணவனைக் கவனித்துக்கொள்பவர், சலவைத் தொழிலாளி மற்றும் பணிப்பெண் என அந்த காலத்தில் ஒரு மனைவியிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அனைத்து கடமைகளையும் அவர் செய்தாலும், தான் ஒரு 'மோசமான இல்லத்தரசி' என்றே அவர் நினைத்துக்கொண்டிருந்தார்.

மேலும், கணவருடன் பட்டாம்பூச்சிகளைச் சேகரிக்கச் சென்றார். அவை 5 வயதிலிருந்தே கணவரைக் கவர்ந்த உயிரினங்கள். கணவரோ அவற்றைத் தேடி, ஆய்வு செய்ய பயணம் செய்தார்.

12 வயது சிறுமியை விரும்பும் ஒரு மனிதனைப் பற்றிய நாவலான "லோலிடா" வெளியான பிறகு, நபோகோவ் சர்ச்சைக்கு ஆளானார். எனவே வேரா தனது பணப்பையில் ஒரு துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், கணவனுக்காக எந்த கொலையாளியையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அவர்களுடையது ஒரு சிறந்த காதல். 1923இல் பெர்லினில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர்கள் சந்தித்தனர். தனது கவிதைகளில் சிலவற்றை வேராவுக்கு, நபோகோவ் வாசித்துக் காட்டினார்.

பின்னர் அவர் எழுதினார்: "என் ஒவ்வொரு எண்ணத்திற்கும் உங்கள் ஆன்மாவில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது."

வேராவின் அறிவுத்திறன், சுதந்திர உணர்வு, நகைச்சுவை உணர்வு மற்றும் இலக்கியத்தின் மீதான காதல் ஆகியவற்றால் கவரப்பட்ட அவர், வேராவுடன் சில மணிநேரங்கள் செலவிட்ட பிறகு வேராவுக்கான தனது முதல் கவிதையை எழுதினார்.

அவர்களது 52 வருட திருமண வாழ்வில், வரலாற்றின் மிகச்சிறந்த காதல் கடிதங்களில் சில எனக் கருதப்பட்ட கடிதங்களை வேரா பெற்றார். அவை 'லெட்டர்ஸ் டு வேரா' என்ற புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், எல்லா மேதைகளின் மனைவிகளும் அவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் அல்ல.

புகழ்பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாயின் மணவாழ்க்கை

சார்லஸ் டார்வின், மனிதர்கள், திருமணம், இயற்கைத் தேர்வு, வாழ்க்கைத் துணை, லியோ டால்ஸ்டாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரஷ்ய நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய்

ரஷ்ய நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய் எழுதி 1889 இல் வெளியிடப்பட்ட "தி க்ரூட்ஸர் சொனாட்டா" என்ற சிறு நாவல், முந்தைய பத்து ஆண்டுகளில் அவர் கட்டமைத்த தார்மீக தத்துவத்திற்கு ஒரு மெல்லிய மறைமுக ஊடகமாக இருந்தது.

அதற்குள் அவர், கிறித்தவம் குறித்த தனது சொந்த பதிப்பை உருவாக்கி, தனது பிரபுத்துவ பட்டத்தைத் துறந்து, தனது முந்தைய நாவல்களைப் பற்றி மோசமாகப் பேசியிருந்தார்.

அவர் "அன்னா கரேனினா"-வை (லியோ எழுதிய ஒரு நாவல்) அருவருப்பானது என்று கூறி, ஒரு விவசாயியைப் போல உடை அணியத் தொடங்கினார்.

"தி க்ரூட்ஸர் சொனாட்டா"வில், காதலுக்காக திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை கேலி செய்யும் ஒரு ஆணுடன், கதை சொல்பவர் ஒரு ரயில் பயணத்தை மேற்கொள்கிறார்,

வாழ்க்கையில் பெண்களுடன் தனக்கு ஏற்பட்ட அனைத்து காதல் விவகாரங்களுக்கும் தான் வருந்துவதாக அந்த ஆண் கூறுகிறார்.

"பெண்களின் பிரச்னை என்னவென்றால், அவர்கள் தங்கள் உடைகள் மற்றும் உடலால் ஆண்களை மயக்குகிறார்கள். மனித இனத்தில் பத்தில் ஒன்பது பங்கு மக்களை, பெண்கள் கடின உழைப்புக்கு அடிமைப்படுத்துகிறார்கள். ஏனென்றால் பெண்கள் சுரண்டப்பட்டுள்ளனர், ஆண்களுக்கு சமமான அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. பின்னர் அவர்கள் நமது காம உணர்வைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வலையில் நம்மைச் சிக்க வைத்து பழிவாங்குகிறார்கள்," என்று அந்தக் கதாபாத்திரம் கூறும்.

டால்ஸ்டாயின் நாவலின் முக்கிய கதாபாத்திரம் பொறாமையால் அவதிப்படுகிறது, ஏனெனில் அந்த நபர் தனது மனைவி ஒரு அழகான வயலின் கலைஞரைக் காதலிக்கிறாள் என்று சந்தேகிக்கிறார்.

டால்ஸ்டாயின் மனைவி சோபியா, குடும்ப இசை ஆசிரியருடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார், எனவே இந்தப் படைப்பை அவர் மீதான விமர்சனமாகப் பார்க்கலாம்.

டால்ஸ்டாய் தம்பதியினருக்கு இடையேயான சிக்கலான உறவு

சார்லஸ் டார்வின், மனிதர்கள், திருமணம், இயற்கைத் தேர்வு, வாழ்க்கைத் துணை, லியோ டால்ஸ்டாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டால்ஸ்டாயின் சீடர்கள் சோபியாவை ஒரு மந்தமான, அறிவற்ற பெண்ணாக, பொருள் சார்ந்த விஷயங்களில் மட்டுமே அக்கறை கொண்டவராக சித்தரித்தனர்.

டால்ஸ்டாயின் கையெழுத்துப் பிரதிகளை நகலெடுத்தவர் சோபியா என்பதால், அவருக்கு செய்தி புரிந்திருக்கும் என்று நாவலாசிரியர் உறுதியாக நம்பலாம்.

டால்ஸ்டாய் தம்பதியினருக்கு இடையே சிக்கலான உறவு இருந்தது.

சோபியாவின் வாழ்க்கை, அவரது கணவரின் தொழில், வீட்டுப் பொறுப்புகள் மற்றும் சொத்து மேலாண்மை மற்றும் அவரது பொறுப்பில் இருந்த விவகாரங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. அவர் எப்போதும் தனது கணவரின் இலக்கிய லட்சியங்களை ஆதரித்தார்.

டால்ஸ்டாய், மனைவியிடம் கருத்துகளைக் கேட்டார், மேலும் பல்வேறு ஆலோசனைகளை அவருடன் நடத்தினார். டால்ஸ்டாயின் முழுமையான படைப்புகளை வெளியிடும் மகத்தான திட்டத்திற்கு சோபியா திட்ட மேலாளராகவும் செயல்பட்டார். அது தொடர்புடைய சட்ட மற்றும் நிர்வாகச் சிக்கல்களை கையாண்டார்.

மேலும் 13 பிரசவங்களின்போது படுக்கையில் இருந்தபோதும், ஒரு சிறப்பு மேசையை உருவாக்கி, அவர் தொடர்ந்து கணவரின் எழுத்துக்களை நகலெடுக்கும் வேலையைச் செய்தார்.

இவற்றில் சுமார் 6,00,000 வார்த்தைகள் கொண்ட "போர் மற்றும் அமைதி" (War and peace) போன்ற படைப்புகளும் அடங்கும். இது தவிர, டால்ஸ்டாய் நான்கு பெரிய நாவல்கள், சுமார் ஒரு டஜன் குறு நாவல்கள் மற்றும் குறைந்தது 26 சிறுகதைகளை எழுதினார்.

'தி க்ரூட்ஸர் சொனாட்டா' வெளியிடப்பட்ட நேரத்தில், கணவருடனான சோபியாவின் உறவு இறுக்கமடைந்தது, ஏனெனில் அந்தச் சிறந்த எழுத்தாளர், இளம் பிரபுவான விளாடிமிர் செர்ட்கோவுடன் அதிக நேரம் செலவிட்டார்.

அந்தப் பிரபுவோ, மனைவிக்கு எதிரான கருத்துக்களால் டால்ஸ்டாயின் மனதை நிரப்பினார், மேலும் அராஜகவாதத்தில் (அதிகார மையங்களுக்கு எதிரான கோட்பாடு) அவரது ஆர்வத்தையும் ஊக்குவித்தார்.

எனவே டால்ஸ்டாய் தனது உலக உடைமைகள் அனைத்தையும் துறந்து, அவற்றை ஊழல் நிறைந்ததாகக் கருதியபோது, தனது குழந்தைகள் பசியால் இறக்காமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சோபியாவிடம் இருந்தது.

எனவே கணவரது நாவல்களை வெளியிடும் பொறுப்பை சோபியா ஏற்றுக்கொண்டார். மேலும் தணிக்கை காரணமாக கணவரது புத்தகங்களைத் தடை செய்வதை நிறுத்துமாறு ஜார் மன்னர் மற்றும் தேவாலயத்திடம் கெஞ்சினார்.

'சோபியாவின் இந்த வணிக ரீதியான பரிசீலனைகள், அவர் ஒரு துரோகி மற்றும் முதலாளித்துவவாதி என்பதை நிரூபித்ததாக' செர்ட்கோவ் டால்ஸ்டாயிடம் கூறினார்.

அக்டோபர் 28, 1910 அன்று, டால்ஸ்டாய் வீட்டை விட்டு வெளியேறினார். அவர்களுக்கு திருமணமாகி 48 ஆண்டுகள் ஆகியிருந்தன.

ஒரு வாரத்திற்கும் மேல் தேடிய பிறகு, இறுதியாக தனது 82 வயதான கணவர் மற்றும் எழுத்தாளர் டால்ஸ்டாயை கண்டுபிடித்தார் சோபியா. ஆனால், ஒரு ரயில் நிலையத்தில், ரசிகர்கள் மற்றும் சீடர்களால் சூழப்பட்ட நிலையில், அவர் மரணத்திற்கு அருகே இருந்தார்.

டால்ஸ்டாயின் மரணம் ஒரு ஊடக நிகழ்வாக மாறியது.

ஆனால் அவரது கடைசி நிமிடங்கள் வரை, டால்ஸ்டாயின் மரணப் படுக்கையிலிருந்து சோபியா ஒதுக்கி வைக்கப்பட்டார்.

"நான் கிட்டத்தட்ட 40 வருடங்களாக நூற்றுக்கணக்கான முறை, ஒரு அடிமை போல சேவை செய்திருக்கிறேன். என் அறிவுசார் ஆற்றல் மற்றும் எல்லா வகையான ஆசைகளும் என்னுள் கிளர்ந்தெழுவதை உணர்ந்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் அந்த ஏக்கங்களையெல்லாம் நசுக்கி, அடக்கி வைத்திருக்கிறேன்." என அந்நிகழ்வுக்கு சில வருடங்களுக்கு முன்பு சோபியா குறிப்பிட்டிருந்தார்.

"எல்லோரும் கேட்கிறார்கள், 'ஆனால் உங்களைப் போன்ற ஒரு பயனற்ற பெண்ணுக்கு ஏன் அறிவுசார் அல்லது கலை வாழ்க்கை தேவை? என்று" எனக் குறிப்பிட்டுள்ள சோபியா, "அந்தக் கேள்விக்கு ஒரு பதிலையே கூற முடியும், 'எனக்குத் தெரியாது, ஆனால் ஒரு மேதைக்கு சேவை வேண்டும் என்பதற்காக, எனது உணர்வுகளை நிரந்தரமாக அடக்கிவைப்பது ஒரு பெரிய அவமானமாக இருக்கும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c20w9wqqexgo

சம்பவத்திலும் ஒரு சம்பாத்தியம்.

2 months 1 week ago

சம்பவத்திலும் ஒரு சம்பாத்தியம்.

கிளிபோல வளர்த்த ஒரு பெண் கால நேரம் வந்ததும் கோலாகலமாக கல்யாணம் செய்து வைத்தனர் வாழ்வில் முதலடி எடுத்து வைக்கிறாள் கண்ணியமாய் காக்க வேண்டிய கண்வன் காமக் கொடூரன் ஆகிறான். துணைக்கு மாமனார் மாமியார் அவள் பணம் காய்க்கும் மரம் என மீண்டும் மீண்டும் நச்ச்ரிக்கின்றனர் .வீட்டுச்சிறை புறக்கணிப்பது அடக்குமுறை சைக்கோவுடன் வாழ்கை எரிதழலில்வீழ்ந்தபுழுவானாள். "என்னால் முடியலை அப்பா" கார் எடுத்து கோவில் சென்ற பிள்ளை வசதி வாய்ப்பு பணத்துக்குபஞ்சமில்லை ஒரு கண்காணாத இடத்தில யார் கண்ணிலும் படாமல் ஒரு இல்லிடத்தில் வாழ்ந்திருக்கலாம் .சடடத்தை நாடியிருக்கலாம். மேலே படித்து தான் காலில் நிற்க முயன்று இருக்கலாம். பாவம் எல்லோருக்கும் வாழ்க்கை நாம் நினைக்குமாறு நடப்ப தில்லை

தாய்வீடு சென்றாலும் அங்கு " அழைக்கும் பேர்வழி" என அவளை விட்டு வைக்க வில்லை .போய் நச்சரித்தார்கள் .பாவம் நொந்து போன maனம் என்ன செய்யும். . மிகவும் மன வேதனைப்படடாள் ஆறுதல்கூற எவரும் இல்லை ..ஊர் என்ன சொல்லும் உறவென்ன சொல்லும் என ஊருக்கா வாழ்ந்தீர்கள்?. வாழவும் முடியாது வெட்டி விடவும் முடியவில்லை. தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.

எங்கே அந்த ஊரவர்கள் எங்கே அந்த உறவுகள் மாண்ட உயிரை மீண்டும் தர முடியுமா ? தாய் தந்தை சகோதரனுக்கு மாறாத துயரம்.சமூக வலைத்தளங்கள் கூவி கூவி செய்தி போடடன தங்களுக்கு "வியூஸ்" வர வேண்டும் என முக புத்தகம் யூயூ டுயூப் இன்ஸ்டா என்று அத்தனை வகைக்கும் மெல்ல அவல் கிடைத்தது போல, எல்லோர் வாயிலும் நுழைந்தது காற்றை பறக்கிறது. போதும் நிறுத்துங்கள் சட்ட்ம் தான் கடமையை செய்யுங்கள் அவர்கள் கர்மாவாழ்வு முழுதும் துரத்தட்டும் .ஆயிரம் காலத்துப்பயிர் என்பர் எவ்வ்ளவு தூரம் விசாரித்தார்கள்?

.அவன் சைக்கோவாம் வேலையற்றவனாம் பூட்டிய அறைக்குள் இருபவனாம் ஆனால் தாய் தந்தைக்கு தெரியாதாம். என்ன பிள்ளை பெத்தது வளர்த்து வைத்திருக்கிறார்கள். அப்பாவியின் உயிரை எடுக்கவா அதுவும் இக்காலத்தில் இப்படி படட பிற போக்குத் தனமா ? தயவு செய்து மீண்டும் பெற்றவர்களைக் பேசி பேசியே காயப் படுத்தாதீர்கள்.மீடியாவுக்கு முகம் காட்டுவதை பேட்டி எடுப்பதை குறையுங்கள்.காலத்துக்கு காலம் கொடுமைகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. சடடமும் ஒழுங்கும் முறையாக பின்பற்றபடடால் நாடு சிறக்கும்.

தேவை குற்றங்களுக்கு கடுமையான தண்டனை. பிரச்சினைகளுக்கு மரணம் தீர்வல்ல

பல்லாண்டு பல்லாண்டு - சுப.சோமசுந்தரம்

2 months 2 weeks ago

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

- சுப.சோமசுந்தரம்

மனிதர்களில் பெரும்பாலானோர் தம் மரணத்தைப் பற்றிப் பேசுவதை, ஏன் நினைப்பதையே விரும்புவதில்லை. "அது வரும்போது வரட்டுமே !" என்று கடந்து போவதோ அல்லது நழுவி விடுவதோ எளிது. ஒரு நாள் தற்செயலாக ஒரு அருமையான நிகழ்வைக் காணும் பேறு பெற்றேன். தாத்தா ஒருவர் தம் பேரனிடம், "எலேய், தாத்தா செத்துப் போனா எப்படி டான்ஸ் ஆடுவே ?" என்று கேட்டார். அவர்கள் சமூகத்தில் வயதானோர் சாவைக் (வெளிப்படையாக) கொண்டாடும் வழக்கம் இருக்கலாம். உடனே அப்பேரன் ஆடிக் காண்பிக்கவே, அந்தத் தாத்தா கைதட்டி ரசித்தார். தம் சாவைத் தாமே கொண்டாடும் இவரின் முதிர்ச்சி எனக்கும் வாய்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அன்று என் மரணத்தையும் கற்பனையில் ரசித்தேன். அந்த மரணத்திற்கு என்னைத் தயார் செய்வதற்கே எனது எஞ்சியுள்ள வாழ்க்கை என்று எனக்குத் தோன்றியது.

எனது வீட்டிற்கு மிக அருகில் இருக்கும் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு எனது உடலைத் தானம் செய்வதாய் எழுதிக் கொடுத்தேன் (என் மரணத்திற்குப் பிறகுதான் !). எனது நண்பரும் குருநாதர்களில் ஒருவருமான பேராசிரியர் ஒருவர் அதனைச் சமூக வலைத்தளங்களில் பதிவிடச் சொன்னார். முதலில் எனக்குத் தயக்கம் இருந்தது. இதில் நான் தனியன் இல்லையே ! பலர் இல்லாவிட்டாலும், இச்சமூகத்தில் சிலர் இதுபோல் எழுதிக் கொடுத்தது உண்டே ! என் நண்பர்கள் சிலரே உண்டு. எனவே பொதுவெளியில் நான் பதிவிடுவது சுய விளம்பரம் ஆகாதா ? இக்கேள்விகளுக்கு என் பேராசிரியர் பதிலோடு வந்தார், "எதை எதையோ பதிவிட்டு மக்கள் சுய விளம்பரம் தேடும் காலகட்டத்தில் இது இன்னொரு சுய விளம்பரமாக இருந்து விட்டுப் போகட்டுமே !இதனால் பெரும் பயன் ஒன்று உண்டு. மிகவும் சாதாரண விஷயங்கள் கூட நம்மில் பலருக்குப் பல நேரங்களில் தோன்றுவதில்லை. மற்றவர் செயல்படுத்துவதைப் பார்த்த பின்பே நாமும் செய்யலாமே எனத் தோன்றுகிறது. அதில் இதுவும் ஒன்றாக இருக்கட்டுமே !". உண்மைதான். சமீபத்தில் அநேகமாக எல்லோருக்கும் தோன்றும் ஒரு சாதாரணச் செயல்பாட்டிற்கு சாட்சிக் கையொப்பமிட எனது இன்னொரு குருநாதரை அழைத்தேன். அவர் மிக்க மகிழ்ச்சியுடன் வந்தது மட்டுமல்லாமல் தாமும் அது போன்று விரைவில் செயல்படுத்த வேண்டும் எனக் கூறினார். என்னை விடப் பத்து வயது மூத்த என் குருவானவர்க்கு நான் வழிகாட்டியாய் இல்லாவிடினும், ஒரு நினைவூட்டலாய் அமைந்ததை இவ்விடத்தில் பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது. எனவே உடல் தானத்தின் மூலமாக இறுதிச் சங்கு வேண்டாம் என முடிவெடுத்தபின் சுய விளம்பரம் எனும் சங்கை எடுத்து நானே முழங்கி விடுகிறேனே !

இந்த உடல் தானம் தொடர்பில் மேலும் ஒரு அனுபவப் பகிர்வு உண்டு. நான் எழுதிக் கொடுத்த உடல் தானம் சிறப்பு என்றால் அச்சிறப்பின் பெரும்பகுதி என் மனைவி, மக்களையே சாரும். என் உடல் தானத்திற்கு அவர்கள் எழுதித் தந்த சம்மதம் மலையினும் மாணப் பெரிது. இறை நம்பிக்கையுள்ள என் மனைவி அந்த நம்பிக்கை இல்லாத என்னிடமும் பிள்ளைகளிடமும் தன் கருத்தைத் திணிக்க முற்படுவதில்லை. எங்களை எங்களின் கருத்துகளோடும் முன்னுரிமைகளோடும் ஏற்றுக்கொண்ட என் மனைவி எங்களுக்கான வரம். அவள்தன் சாமியால் (!) எங்களுக்காகவே படைக்கப்பட்டு இருப்பாளோ என்னவோ ! எனவே என் கருத்தையும் உணர்வையும் அறிந்து என் உடல் தானத்திற்கு அவள் எழுதிக் கொடுத்த சம்மதம் இயல்பான ஒன்றாகவே அமைந்தது. பகுத்தறிவாளர்களாகவே வளர்ந்த எனது இரு பெண் பிள்ளைகளும் முதலில் தயக்கம் காட்டியது நான் எதிர்பாராத ஒன்று. இறையிலும் மதத்திலும் நம்பிக்கை இல்லாத அவர்களுக்கு ஈமச்சடங்குகள் முதலிய சம்பிரதாயங்கள் ஒரு பொருட்டே அல்ல. அவர்களது தயக்கத்திற்குக் காரணங்கள் இரண்டு. முதலாவது, அவர்கள்தம் தந்தையின் மரணத்தை இப்போதே நினைத்துப் பார்ப்பதினால் ஏற்படும் அதிர்வு; இரண்டாவது, தம் தந்தையின் உடல் கூறு போடப்படுவது அவர்கள் நினைத்தே பார்க்க விரும்பாதது. இவற்றில் முதலானதை நான் எளிதாய் எதிர் கொண்டேன். "இவ்வாறு எழுதித் தரும் மகிழ்ச்சியில் நான் நூறு வருடங்கள் வாழலாம். உதாரணமாக ஒருவர் தம் பிள்ளைகளுக்கு உயில் எழுதி வைத்த பின்பு உடனே மரணிக்க வேண்டும் என்பதில்லை; எச்சரிக்கையாய் இருக்கிறார் என்று பொருள்". இரண்டாவது காரணத்திற்குப் பின்வருமாறு கேட்டேன், "தந்தையின் இறந்த உடல் செந்தழலில் வேகும்போது உங்களுக்குச் சுடாதா ? உடல் வேகும்போது சுருண்டு கொள்ளுமே, அப்போது சுடுகாட்டில் வெட்டியான் எனப்படும் அத்தொழிலாளி கழியால் அடித்துச் சமன் செய்வாரே ! அப்போது உங்களுக்கு வலிக்காதா ? மின் மயானம் எனின் உங்கள் உடலில் அந்த மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு ஏற்படாதா ?". போதாக்குறைக்கு எனது தோழர் பேரா.வ.பொன்னுராஜ் அவர்களை என் பிள்ளைகளிடம் பேசச் சொன்னேன். அவர் மீது அவர்களுக்கு அளப்பரிய அன்பும் மரியாதையும் உண்டு. "மண்ணோ நெருப்போ உண்ணப் போகும் உடலை வைத்து மாணாக்கர் சிலர் படித்துவிட்டுப் போகட்டுமே ! சமூகத்திற்கு அவர்கள் கற்றது பயன்படும். அவர்கள் படித்தபின் மீண்டும் அவ்வுடல் மண்ணில் புதையுண்டு மரத்திற்கு உரமாகும். ஒரு மனிதன் நன்றாக வாழ்ந்தபின் அழியும் உடலுக்கு இதற்கு மேல் என்ன மரியாதை இருக்க முடியும் ?" - இவை அவர் பேசியவை. இவற்றை முழுமையாக ஏற்றுக் கொண்டு என் பிள்ளைகளும் மன நிறைவோடு தம் சம்மதத்தை எழுதித் தந்தார்கள். நான் கற்றவையும் பெற்றவையும் நன்றாகவே அமைந்த நிறைவு எனக்கு. இந்த அனுபவப் பகிர்வு உங்கள் அனைவருக்கும் உதவும் எனும் நோக்கத்திலேயே !

எல்லாம் சரிதான். ஆனால் இறை நம்பிக்கை, மதச் சடங்குகளில் நம்பிக்கை என நம்பிக்கைகளிலேயே வாழும் மனிதர்களுக்கும் இது தொடர்பில் சமாதானம் உண்டா ? உண்டு. இறந்தபின் நீங்கள் உங்கள் இறைவனை சந்திக்க அல்லது இறைவனிடத்தில் கரைந்திட இந்த உடலை எடுத்துக் கொண்டா செல்வீர்கள் ? உங்கள் கூற்றின்படி உங்கள் ஆன்மாதானே இறை தேடும் ? இந்தப் பாழும் உடலை வைத்துக்கொள்ள முடியாமல்தானே அதனை மண்ணில் புதைக்கிறீர்கள் அல்லது சிதையில் தள்ளுகிறீர்கள் ?

எனவே யாராக இருந்தாலும், வாழும்போது ஒரு திறந்த புத்தகமாக வாழ்ந்தோமோ என்னவோ, செத்த பின்பு உறுதியாய் ஒரு பயனுள்ள புத்தகமாய் அமைவோமே ! உடல் தானம் எழுதிக் கொடுத்தபின் இந்த மன நிறைவுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்வோமே !

https://www.facebook.com/share/p/1Xm7GdHGzi/

'ஒருவனுக்கு ஒருத்தி' மனிதனின் இயல்பான குணமா? கலாசாரங்களில் பலதார மணம் எப்படி இருந்தது?

3 months ago

மனிதன், திருமண முறை, ஒருதார மணம், பலதார மணம், மோனோகமி, பாலிகமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க்ரவுட்சயின்ஸ் நிகழ்ச்சி

  • பதவி, பிபிசி உலக சேவை

  • 9 ஜூன் 2025, 10:12 GMT

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

டேட்டிங் செயலிகள் முடிவில்லாத வாய்ப்புகளை வழங்கி, உறவுகளின் லேபிள்களும் மாறி வரும் இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் இயற்கையாகவே ஒருதார மணம் செய்யும் தன்மை (மோனோகமி) கொண்டவர்களா என்கிற கேள்வி முன்பு எப்போதையும் விட பொருத்தமுள்ளதாகிறது.

லண்டனில் வசிக்கும் ரோமானியரான அலினா 'பாலிஅமோரி' அனுபவம் பெற்ற பிறகு இதே எண்ணத்தில் தான் இருந்தார். பாலிஅமோரி என்பது சம்மந்தப்பட்டவர்களின் ஒப்புதலுடன் ஒரே நேரத்தில் பல நெருக்கமான உறவுகளில் இருப்பது.

"நான் சமீபத்தில் பாலிஅமோரி பின்பற்றும் ஒருவரைச் சந்தித்தேன், அவர் எப்போதுமே அப்படித்தான் இருந்துள்ளார்" என விவரித்தவர், நாம் ஏன் ஒரு சமூகமாக ஒருதார மணம் தான் விதி என ஏற்றுக் கொண்டோம் எனக் கேள்வி எழுப்புகிறார்.

நம்முடைய பரிணாம வளர்ச்சி பாதை புரிந்து கொள்ள நமக்கு நெருக்கமான உயிரினங்களின் இனப்பெருக்க உத்திகளை ஆராய்வது உதவியாக இருக்கும்.

"கொரில்லாக்கள் பல தார மணம் செய்பவை, ஒரு ஆண் உயிரினம் பல பெண் உயிரினங்களுடன் இனச்சேர்க்கை மேற்கொள்ளும்" என பிரிட்டனில் உள்ள ப்ரிஸ்டால் பல்கலைக்கழகத்தில் பரிணாமத்தை ஆய்வு செய்யும் உயிரியலாளரான கிட் ஓபி தெரிவித்தார்.

"எனவே அந்தக் குழுவில் உள்ள சந்ததியினர் அனைவரும் தந்தை ஒருவராக இருப்பார், ஆனால் தாய் வேறு வேறாக இருப்பார்கள்" என்றார்.

ஆனால் இது ஒரு திறன்மிகு இனப்பெருக்க உத்தி இல்லை என்கிறார் ஓபி. ஏனென்றால் இது அதிக அளவிலான சிசுக் கொலைக்கு வழிவகுக்கும் எனக் கூறுகிறார்.

சிசுக்கொலை என்பது கொரில்லா வாழ்க்கையில் மிகவும் கொடூரமான ஒன்று எனக் கூறும் அவர், "ஒரு ஆண் கொரில்லா தனக்கு பிறக்காத குழந்தை கொரில்லாக்களை கொல்லும், இதன் மூலம் அதன் தாயுடன் விரைவாக இனப்பெருக்கம் மேற்கொள்ள முடியும். இத்தகைய பரிணாம உத்தியை நாம் பின்பற்ற முடியாது" என்றார்.

மனிதன், திருமண முறை, ஒருதார மணம், பலதார மணம், மோனோகமி, பாலிகமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பெண்கள் குரங்குகள் பல ஆண் குரங்குகளுடன் இனப்பெருக்கும் மேற்கொள்ளும்.

ஆனால் மனிதருக்கு நெருக்கமான குரங்கினங்களான சிம்பன்சிக்கள் மற்றும் போனோபோஸ்களில் பெண்கள் வேறு விதமான பரிணாம உத்தியைப் பின்பற்றுகின்றன. பெண் குரங்குகள், பல ஆண் குரங்குகளுடன் இனப்பெருக்கும் மேற்கொள்ளும். இதன் மூலம் தந்தை யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டு குழந்தை கொரில்லாக்கள் தாக்கப்படுவதற்கான சாத்தியங்கள் குறையும்.

மனிதகுலமும் கிட்டத்தட்ட இதே போன்ற அமைப்பில் இருந்து தான் தொடங்கி இருக்கக்கூடும். ஆனால் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அனைத்தும் மாறின. இதற்கு காலநிலை மாற்றம் தான் காரணம் என்கிறார் ஓபி.

"நம் மூதாதையர்கள் வாழ்ந்த ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட வறட்சியால் பல இடங்கள் தரிசாக மாறின. ஆதி மனிதர்கள் தங்களை வேட்டை விலங்குகளிடமிருந்து பாதுகாத்து கொள்ள பெரிய குழுக்களில் இருக்க வேண்டியிருந்தது. இத்தகைய பெரிய சிக்கலான குழுக்களை சமாளிப்பதற்காக மூளை பெரிதாகியது, இதனால் பாலூட்டும் காலமும் அதிகரித்தது" என்றார்.

பெரிய குழுக்களில் அதிக ஆண்கள் இருப்பதால், தந்தை வழியை பின்பற்றாதிருப்பது கடினமானது.

"அதே நேரத்தில் பெண்களுக்கு தங்களின் பிள்ளைகளை வளர்க்க ஆண்களின் துணை தேவைப்பட்டது. எனவே அவர்கள் ஒரு தார மணம் என்கிற முறைக்கு மாறினர்"

மோனோகமி சிறந்த உத்தியா?

மனிதன், திருமண முறை, ஒருதார மணம், பலதார மணம், மோனோகமி, பாலிகமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பெரிய மூளை கொண்ட மெதுவாக வளரும் ஆண் குழந்தைகளை வளர்க்க அதிக அளவிலான பெற்றோரின் ஈடுபாடு தேவைப்பட்டது.

இந்த மாற்றம் என்பது மோனோகமி சிறந்தது என்பதனால் நிகழவில்லை, அது தான் ஒரே சாத்தியமான வாய்ப்பு என்பதால் தான் சாத்தியமானது என ஓபி கூறுகிறார்.

பெரிய மூளை கொண்ட மெதுவான வளரும் ஆண் குழந்தைகளை வளர்க்க அதிக அளவிலான பெற்றோரின் ஈடுபாடு தேவைப்பட்டது. இது ஒரு தாயால் சமாளிக்கக்கூடியதை விட மிகுதியானது.

ஆதி மனிதர்கள் ஒரு தார மணம் செய்பவர்களாகப் பரிணமித்ததாக வரலாறு கூறினாலும், அதனை தேர்வு செய்தவர்கள் ஒருவருக்கு மட்டும் உண்மையாக இருக்க சிரமப்பட்டனர்.

"வாழ்நாள் முழுவதும் ஒருவருடனே வாழ்ந்து, ஏமாற்றாத உயிரினங்களும் உள்ளன. ஆனால் அவை மிகவும் அரிது" என்கிறார் முனைவர் ஓபி.

மேலும் அவர், "நமக்கு மிகவும் நெருக்கமான உறவினர் கிப்பன் குரங்குகள் தான். கிப்பன்கள் மற்ற ஜோடிகளிடம் இருந்து தனித்து வசிப்பதால், காட்டில் தங்கள் பகுதிக்குள் யார் வருகிறார்கள், யார் வருவதில்லை போன்றவற்றை கட்டுப்படுத்துவது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எளிதாக இருந்தது."

"ஆனால் மனிதர்கள் போன்ற அதிக ஆண்கள், அதிக பெண்கள் வாழும் குழுக்களில் நீங்கள் இருந்தால், அங்கு கட்டுப்படுத்துவது என்பது கடினம், உங்களின் துணை ஏமாற்றுகிறாரா இல்லையா என்று அறிவது கடினம்" என்கிறார்.

அந்த விதத்தில் பார்க்கையில் ஒரு தார மணம் என்பது இயற்கையான தேர்வு என்பதை விட பிழைக்கும் உத்தியாகவே உள்ளது. ஆனால் இதில் குறைகளும் உள்ளன.

பந்தம் உருவாக்குவதன் பின்னணி என்ன?

நாம் காதலில் விழுந்தாலோ அல்லது உண்மையாக இருந்தாலோ நம் மூளைகளில் என்ன நடக்கிறது என்ற கேள்வி எழாமல் இல்லை.

அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகத்தில் நரம்பியல் முனைவர் பட்ட மாணவரான சாரா ப்ளூமெந்தல், பிரேரி வோல்ஸ் என்கிற உயிரினத்தை ஆய்வு செய்து வருகிறார். இந்த சிறிய உயிரினங்கள், மனிதர்களைப் போல நீண்ட கால பிணைப்புகளை மேற்கொள்பவை.

மனிதன், திருமண முறை, ஒருதார மணம், பலதார மணம், மோனோகமி, பாலிகமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிரேரி வோல்ஸின் மூளையில் அதிக அளவிலான ஆக்ஸிடாஸின் ரிசப்டர்கள் உள்ளன.

அவர்களின் மற்ற வோல் உறவினர்களைப் போல அல்லாமல் பிரேரி வோல்ஸின் மூளையில் அதிக அளவிலான ஆக்ஸிடாஸின் ரிசப்டர்கள் உள்ளன.

ஆக்ஸிடாஸின் "கட்டிள் ஹார்மோன்" (cuddle hormone) என்றும் அழைக்கப்படுகிறது. இவை தொடுதல் ஏற்படுகிற சமயங்களில் மூளையில் வெளியாகும் நியூரோகெமிக்கல் ஆகும்.

"நாம் பரிசோதனை முறையில் பிரேரி வோல்ஸ்களில் உள்ள ஆக்ஸிடாஸின் அளவை சீண்டினால் அவர்களால் வலுவான பந்தத்தை உருவாக்க முடியவில்லை. அவர்களின் துணைகளுடன் குறைவான நேரத்தையே செலவிடுகின்றனர்" என்றார் ப்ளூமெந்தல்.

மனிதன், திருமண முறை, ஒருதார மணம், பலதார மணம், மோனோகமி, பாலிகமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மனிதர்களிடமும் இதே போன்ற ஆக்ஸிடாஸின் அமைப்பு தான் உள்ளது, நம்முடைய மூளை பந்தம் மேற்கொள்வதை நேர்மறையாக அணுகுவதற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

ஆனால் மற்றொரு கெமிக்கலான டோபமைன், அர்ப்பணிப்பு என்பதற்கு மாறாக புதுமையை நோக்கி நம்மை தள்ளுகிறது.

பந்தத்தின் தொடக்க கட்டத்தில் நம்முடைய மூளையில் டோபமைன் நிரம்பி வழிகிறது, இது ஈர்ப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை தூண்டுகிறது. பந்தம் உருவான பிறகு டோபமைன் வடிவங்கள் மாறுகின்றன.

பல கணவன்கள் கொண்ட பெண்கள்

ஒரு தார மணத்திற்கான பரிணாம வாதம் இருந்தாலும், மனித கலாச்சாரங்கள் எப்போதுமே பல தரப்பட்ட உறவு ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன.

அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மானுடவியலாளர் முனைவர் கேட்டி ஸ்டார்க்வெதர், நேபாள், திபெதி தொடங்கி ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அமெரிக்கா என உலகம் முழுவது, 50-க்கும் மேற்பட்ட பாலியண்ட்ரி சம்பவங்களை ஆவணப்படுத்தியுள்ளார். பாலியண்ட்ரி என்றால் ஒரு பெண் பல கணவன்கள் வைத்திருக்கும் முறையைக் குறிக்கிறது

மனிதன், திருமண முறை, ஒருதார மணம், பலதார மணம், மோனோகமி, பாலிகமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பாலியண்ட்ரி என்றால் ஒரு பெண் பல கணவன்கள் வைத்திருக்கும் முறையைக் குறிக்கிறது

ஒரு தார மணத்திற்கான பரிணாம வாதம் இருந்தாலும், மனித கலாச்சாரங்கள் எப்போதுமே பல தரப்பட்ட உறவு ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன.

அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மானுடவியலாளர் முனைவர் கேட்டி ஸ்டார்க்வெதர், நேபாள், திபெதி தொடங்கி ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அமெரிக்கா என உலகம் முழுவது, 50-க்கும் மேற்பட்ட பாலியண்ட்ரி சம்பவங்களை ஆவணப்படுத்தியுள்ளார். பாலியண்ட்ரி என்றால் ஒரு பெண் பல கணவன்கள் வைத்திருக்கும் முறையைக் குறிக்கிறது.

பாலிஜினியை (ஒரு ஆண் பல மனைவிகள் வைத்திருப்பது) விட பாலியண்ட்ரி அரிதானது என்றாலும் அந்த கூற்றை நம்ப முடியாத ஒன்றாகப் பார்க்க வேண்டாம் என எச்சரிக்கிறார் ஸ்டார்க்வெதர்.

"பல பார்ட்னர்கள் வைத்திருப்பதன் மூலம் பெண்கள் பொருளாதார ரீதியாக பலன் அடையலாம். ஒருவரின் முதன்மையான கணவன் இறந்தாலோ அல்லது சில பூர்வகுடி வட அமெரிக்க குழுக்களிடம் இருப்பதைப் போன்று நீண்ட காலம் கணவன் காணாமல் போனாலோ மாற்று திட்டம் கையில் வைத்திருப்பது சிறந்தது தான்" என அவர் கூறுகிறார்.

சில சந்தர்ப்பங்களில், பல தார ஏற்பாடுகள் மரபணு நன்மைகளையும் வழங்கியுள்ளன.

"மக்கள் அதிகமான நோய்வாய்ப்பட்டு அதனால் உயிரிழக்கும் சூழல்களில், நீங்கள் சற்று வேறு விதமான மரபணு அமைப்பு கொண்ட பல பிள்ளைகளைக் கொண்டிருந்தால் நீங்கள் நல்ல நிலையில் தான் இருப்பீர்கள்" என ஸ்டார்க்வெதர் விவரிக்கிறார். "அவர்கள் நடப்பு சூழலில் நன்றாகப் பொருந்திப் போவார்கள்" என்றும் தெரிவித்தார்.

ஆனால் பல தார முறையில் சவால்களும் இல்லாமல் இல்லை. பல உறவுகளைச் சமாளிப்பதற்கு, நேரம், உணர்வியல் சக்தி மற்றும் பேச்சுவார்த்தை தேவைப்படும்.

"நீங்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி பல துணைகள் வைத்திருப்பது மிகவும் கடினமானது. பொருளாதார ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் சரி அது மிகவும் கடினம். ஒரு தார மணம் என்பது எண்ணிக்கை அளவில் மிகவும் பொதுவான திருமண வடிவமாக இருப்பதற்கு இது தான் முதன்மை காரணம் என நினைக்கிறேன்" என்று தெரிவித்தார் ஸ்டார்க்வெதர்.

பாலிஅமோரி அனுபவம் எப்படி உள்ளது?

அலினாவுக்கு அவருடைய முந்தைய ரிலேஷன்ஷிப்பில் மோனோகமி வேலை செய்யவில்லை என்கிறார். தற்போது பாலிஅமோர் உறவில் இருக்கும் அவர் பல சிக்கலான உணர்வுகளைக் கடந்து வருகிறார்.

பொறாமை என்பது மிகவும் கடினமாகவும் வலுவாகவும் இருக்கும் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறார். "ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில், இந்த உணர்வுகளில் பெரும்பாலானவை நம்முடைய பார்ட்னர் நம்மிடம் நேர்மையாக இல்லை என்கிற உணர்வில் இருந்து தான் வருகின்றன. அவர் நேர்மையாக தான் இருக்கிறார் எனத் தெரிவது பொறாமை உணர்வை சமாளிக்க உதவுகிறது" என்றார்.

மனிதன், திருமண முறை, ஒருதார மணம், பலதார மணம், மோனோகமி, பாலிகமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சிலருக்கு பல தார முறை என்பது உணர்வியல் சுதந்திரம் மற்றும் பொருளாதார நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

பொறாமை என்பது பெரிய பிரச்னை இல்லை என அவரின் பார்ட்னர் கூறுகிறார். "பல ஆரோக்கியமான உறவுகளை சமாளிக்க தேவைப்படும் நேரம் மற்றும் முயற்சி பெரும் சுமையாக இருக்கலாம்" என்றார்.

அவர்கள் இருவருமே இது சரியானது தான் என்கின்றனர். முன்னரே தீர்மானிக்கப்பட்ட விதிகள் எதுவும் இல்லை என்கிறார் அலினா. மேலும் அவர், "அது உங்களை உரையாட வைக்கிறது, மற்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் அதை மேற்கொள்ள மாட்டீர்கள், அது தான் எங்கள் உறவை வலுவானதாக்குகிறது" என்றார்.

எனவே, நாம் இயற்கையில் ஒரு தார தன்மை கொண்டவர்களா எனக் கேள்வி எழுப்பினால் ஆம் மற்றும் இல்லை என்கிற இரண்டுமே தான் பதிலாக அமையும்.

வரலாறு மற்றும் கலாச்சாரங்கள் முழுவதுமே, மனிதர்களின் தங்களின் சமூக, பொருளாதார மற்றும் சூழலியல் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற பல வகையான உறவு முறைகளை உருவாக்கியுள்ளனர். சிலருக்கு பல தார முறை என்பது உணர்வியல் சுதந்திரம் மற்றும் பொருளாதார நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. ஆனால் பிறருக்கு, காதலைக் கடத்திச் செல்ல ஒரு தார மணம் என்பது எளிமையான மற்றும் சமாளிக்கக்கூடிய வழியாக உள்ளது.

மனிதர்கள் நெகிழ்வாக இருக்க பரிணமித்துள்ளனர். இது நாம் உறவுகள் வைத்திருப்பது மற்றும் திருமணம் செய்து கொள்ளும் முறை ஆகியவற்றை உள்ளடக்கும் எனக் கூறும் ஸ்டார்க்வெதர் "நாம் உலகின் அனைத்து விதமான சுற்றுச்சூழலிலும் வாழ்கிறோம். அதற்கு நாம் கொண்டிருக்கும் நெகிழ்வுத்தன்மை மற்றும் அணுகுமுறையே காரணம்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c39xe3mj21ro

Checked
Tue, 09/16/2025 - 10:44
சமூகச் சாளரம் Latest Topics
Subscribe to சமூகச் சாளரம் feed