சமூகச் சாளரம்

மாவளி கண் பார்

1 week 3 days ago

மாவளி கண் பார்

--------------------------

large.Maavali.jpg

சொக்கப்பானை தான் அதன் பெயர் என்று நினைத்திருந்தேன். ஐம்பது வயதில் கூட அப்படித்தான் நினைத்திருந்தேன். முன்னர் இறைவனுக்கும், மனிதர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்த காலம் ஒன்றில் இப்படியான ஒரு நெருப்புக்குள் புகுந்து சொர்க்கத்திற்கு போகும் ஒரு வழி இருந்திருக்கின்றது போல என்று ஒரு கதையை எனக்கு நானே சொல்லியும் இருக்கின்றேன். அந்தக் காலங்களில் கடவுள் அடிக்கடி தோன்றி மனிதர்களை காப்பாற்றிய கதைகள் ஏராளம் உண்டு தானே. சொக்கப்பானையின் நெருப்புக்குள் புகும் மனிதர்களையும் கடவுள் காப்பாற்றினார் ஆக்கும் என்று நான் நினைத்ததில் பெரிய பிழை என்று எதுவும் இல்லை.

நடுவில் பச்சை தென்னை மரம் ஒன்றையே வைத்திருந்தார்கள் என்று நினைக்கின்றேன். நீண்ட காலமாக இந்த நிகழ்வை நேரடியாக பார்க்கும் சந்தர்ப்பங்கள் எனக்கு அமையவில்லை. 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நட்ட தென்னை மரத்தைச் சுற்றி கூம்பு வடிவில் பச்சை தென்னை ஓலைகளை கட்டியிருந்தார்கள். பின்னர் சடங்கு மற்றும் பூசைகளின் பின் அதை எரித்தார்கள். பச்சை ஓலைகள் வெடித்து வெடித்து எரிந்ததும், எரி துகள்கள் மின்னி மின்னிப் பறந்ததும், ஒரு சிறுவன் காற்சட்டையுடன் சற்றுத் தள்ளி நின்று ஆவென்று பார்த்ததும், சுற்றியுள்ள இடங்கள் இருட்டாக இருந்ததும், கார்த்திகை மாத ஈரமும் நேற்று நடந்தவை போல நினைவில் இருக்கின்றது. எரிந்தது தென்னை மரம் என்றபடியால் பனை பற்றிய யோசனையே என்றும் மனதில் எழவில்லை.

சொக்கப்பனை என்ற சொல்லை முதலில் கண்ட போது அது எழுத்துப்பிழை என்றே நினைத்தேன். மக்கள் என்பதைக் கூட மாக்கள் என்று எழுதினாலும், அது மக்களே என்று அனுசரித்து வாசித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு நாங்கள் வந்துவிட்டோம். எழுத்துப்பிழைகள் ஒரு குற்றமே கிடையாது, 'விசயம் விளங்குது தானே.....................' என்று எழுத்துப்பிழைகளை ஏற்றுக் கொள்வதும், அமெரிக்க ஆங்கிலத்தை ஆங்கிலம் என்று ஏற்றுக் கொள்வதும் ஒன்றே. விசயம் விளங்குது தானே.

நேற்றிரவு கூட பாடசாலையில் தமிழ் படிப்பித்த ஆசிரியர் பற்றி நினைக்க வேண்டியதாக இருந்தது. ஆறாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை அவரே தமிழும், சமயமும் படிப்பித்தார். அவர் எதுவுமே படிப்பிக்கவில்லை என்று தான் நேற்றிரவும் நான் முடிவெடுத்து இருந்தேன். பின்னர் அப்படியே நித்திரை ஆகிவிட்டேன். சொக்கப்பனை பற்றி அவர் வகுப்பில் ஒரு மூச்சுக் கூட விட்டதில்லை. ஆனால் மாக்கள் என்ற சொல்லை அவர் வகுப்பில் சில தடவைகள் சொல்லியிருந்தது இப்போது ஞாபகத்தில் வருகின்றது. அவருக்கு தமிழ் தெரிந்திருக்கின்றது, ஆனால் வகுப்பில் படிப்பிக்க வேண்டும் என்ற விசயம் விளங்கயிருக்கவில்லை போல.

பனை தமிழர்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்த ஒன்று என்கின்றார்கள். பனை ஒன்றை நடுவில் வைத்து, பனை ஓலைகளால் கூம்பாக மூடி எரிப்பதே சொக்கப்பனை என்ற விளக்கத்தை இணையங்களில் பார்த்தேன். சொக்கனின் பனை சொக்கப்பனை. அந்தக் காலத்தில் விவேகானந்தா சபையினரால் நடத்தப்படும் சமயப் பரீட்சைகளில் இப்படி ஒரு கேள்வியையும் கேட்டிருக்கலாம். நான் ஐம்பது வயதுகள் வரும் வரையும் இப்படி விசயம் விளங்காமல் இருந்திருக்க வேண்டியதில்லை.

ஆரியர் திராவிடச் சொத்துகளை எரித்து அழிப்பதற்கு இதை ஒரு வழியாகப் பயன்படுத்தினார்கள் என்கின்றார்கள். சமஸ்கிருத ஆதரவாளர்கள் தமிழை நெருப்பில் தள்ளி விட சொக்கப்பனையை உபயோகித்தார்கள் என்கின்றார்கள். ஆரியம் - திராவிடம் - தேசியம்  அந்த நாட்களில் ஆஸ்பத்திரிகளில் கொடுத்த திரிபோசா மா போன்ற ஒன்று. அந்த மா இலவசமாகக் கிடைத்தது, ஆனால் மனிதர்களை உசாராக வைத்திருக்க உதவியது. ஆனால் நான் சொல்ல வந்த விசயம் அதுவல்ல. சொக்கப்பனையை பிடித்த உடன், மாவளி என்றால் என்ன என்பதே அடுத்த கேள்வியாக எழுந்தது. அடுத்த 50 வருடங்கள் காத்திருக்க முடியாது என்பதால் மாவளியைத் தேடினேன்.

வீட்டுக்கு முன்னால் நாலு திசைகளிலும் நாலு தீபச் சுட்டிகளை வைத்து விட்டு, அதை மூன்று தடவைகள் கைகளைத் தட்டிக் கொண்டு சுற்றவேண்டும். அப்படிச் சுற்றும் போது, 'மாவளி கண் பார். எங்களை கண் பார். எல்லோரையும் கண் பார்..................' என்று பாட வேண்டும். சங்கீத சாரீரம் இல்லாதவர்கள் வசனமாகக் கூட சொல்லிக் கொள்ளலாம். இது எந்த ஊர் வழக்கம் என்று கேட்காதீர்கள். இது எனக்கு தெரிய வரும்போது நான் குடும்பஸ்தனாகி இருந்தேன். அதுவரை காலமும் இப்படி ஒரு பாடல் இருக்கின்றது என்பதே தெரியாமல் இருந்ததற்கு ஆசிரியரை குறை சொல்வதா, பிறந்த வீட்டைக் குறை சொல்வதா, உற்றார் உறவுகள் நட்புகளை குறை சொல்வதா என்று ஒரே குழப்பமாக இருக்கின்றது.

உங்கள் வீட்டில் இன்று என்ன செய்வீர்கள் என்று கேட்டிருக்கின்றார்கள். கொழுக்கட்டை என்ற சொல்லை விட மோதகம் என்னும் சொல் நல்ல ஒரு ஓசையுடன் வருவதால் மோதகம் என்று சொல்லியிருக்கின்றேன். மோதகமா........... அப்படி என்றால் என்ன என்று சிலர் திருப்பிக் கேட்டிருக்கின்றார்கள். கேட்டது தமிழ்நாட்டு நண்பர்கள் தான். அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் வல்லின கொழுக்கட்டை என்ற சொல்லே கைகொடுத்தது. அவர்களில் ஒருவர் தனியே என்னைக் கூட்டிப் போய், 'அது மோதகம் இல்லை சார்....................... மோதஹம்................' என்று மோதகத்தின் ஓசையை ஒரு மந்திரம் போல ஆக்கினார். திராவிடருக்கு கொழுக்கட்டை, ஆரியருக்கு மோதஹம் என்று நான் நினைவில் வைத்துக்கொண்டேன். 

மோதகமா, மோதஹமா அல்லது கொழுக்கட்டையா என்னும் பெயர் பெரிய பிரச்சனையே அல்ல. மாவளி பாடி முடிந்து ஒரு ஐந்து நிமிடங்களின் பின் தான் அந்த வஸ்துவை சாப்பிட முடியும் என்பது தான் நடைமுறை. அதனாலேயே வாழ்வில் மாவளி முக்கிய ஒன்றாகிவிட்டது. கொழுக்கட்டையை காக்க வைக்கும் இந்த மாவளி என்ன சாமியாக இருக்கும் என்று தான் முதல் சந்தேகம் வந்தது. பின்னர் தான் இதுவும் பனையின் பொருட்களில் இருந்து செய்யப்படும் ஒன்று என்று தெரிந்தது. மேலே படத்தில் இருப்பது. பனையின் பூக்களை பதமாக எரித்து விறகாக்கி, பச்சை பனை மட்டையை இடையில் மூன்றாகப் பிளந்து, அதற்குள் பூ விறகை வைத்துக் கட்டி, எரித்து, தலைக்கு மேல் வேகமாகச் சுற்றும் ஒரு தமிழர் பாரம்பரியமே விளக்கீடு அன்று மாவளி செய்து சுற்றுதல் என்று தகவல்கள் சொல்கின்றன.

தமிழர் சமூகங்களில் மிகப் பழைய காலத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்றால், முழுக் கல்லை தூக்கு, அரைவட்டக் கல்லை தூக்கு, குஸ்தி போடு என்று எல்லாம் சொல்வார்களாம். இந்த விடயத்துக்காக ஆரியர்கள் வில்லையே வளைத்து இருக்கின்றார்கள். அந்த நாட்களில் எங்கள் முன்னோர்கள் விளக்கீடு அன்று கொழுக்கட்டை வேண்டும் என்றால் மாவளி செய்து, கொழுத்தி, தலைக்கு மேல சுற்று என்றும் சொல்லியிருப்பார்கள் போல. வீரப் பரம்பரை தான், சந்தேகமே இல்லை, ஆனால் மாவளியையே சுற்றிக் கொண்டிருந்திருக்காமால், வெடிமருந்தையும் கண்டு பிடித்திருக்கலாம்.          

     

இனிமேல் மரணங்கள் இப்படித்தான் இருக்கு மா? படித்ததும் பகிர்ந்ததும்

3 weeks 1 day ago

இனிமேல் மரணங்கள் இப்படித்தான் இருக்கும்*.

சென்னை பெசண்ட் நகரில் அமைந்திருந்தது அந்த பங்களா!

காலை 8மணி என்பதால் சாலை வழக்கப்படி பரபரப்பாக இருந்தது..!

சரியாக 8.15க்கு அந்த வீட்டின் முன் நகரின் பிரபலமான மருத்துவமனைக்குசொந்தமான ஆம்புலன்ஸ் வந்து நின்றது..!

அதிலிருந்து ஐஸ்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உடலை மருத்துவமனை ஊழியர்கள் இறக்கி வீட்டிற்குள் வைத்துவிட்டு

பணத்தைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டனர்..!ஆம்!!

அநத குடும்பத்தலைவர் சுப்பிரமணிதான் நேற்றிரவு மாஸிவ் அட்டாக்கில் உயிர் விட்டிருந்தார்...

பிணத்தின் கால்மாட்டில் வந்து நின்ற அவர் மனைவி மாலா முகத்தைப்பார்த்து கண் கலங்கினாள்..,.!

மணி 8.45- நகரின் பிரபலமான பிரௌசிங் சென்டரிலிருந்து வந்த இரு நபர்கள் கேமிராவை பொருததி வீடியோ கான்பரன்சில் அவரது உடல் உலகெங்கும் தெரியச்செய்துவிட்டுச்சென்றனர்!!

பக்கத்துவீட்டு ராவ் வந்து துக்கம் விசாரித்துவிட்டுசென்றார்....!

ஆஸ்திரேலியா-

சிட்னியில் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்த அநத வீட்டின் வீடியோ கான்பரன்சிங்கில் தெரிந்த தன் தந்தையின் உடலைப்பார்த்து விசும்பினாள் சுப்பிரமணியத்தின் மகள் மஞ்சு..!

மதியம் 1மணிக்கு வீட்டுக்கு சாப்பிட வந்த அவள் கணவன் ஈஸ்வரன் " என்ன? Body தெரியறதா? சரிசரி, எனக்கு சாப்பாடு போடு. நான் அர்ஜெண்டா போகணும்" என்று கூறிய படியே சாப்பாடு மேஜையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்...

சிங்கப்பூர் நகரின் சற்றே ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருந்தது கோபாலன் வீடு..!

சுப்பிரமணியத்தின் இரணடாவது புத்திரன்!!

"ஏண்டி! நாம ஒரு எட்டு போய்ட்டு வந்திருக்கலாமோ?" என்றான் கோபாலன், சற்றே கவலையுடன்..!

" சும்மா இருங்க! போன வருஷம்தானே போய்ட்டு வந்தோம்? நாம போனா மட்டும் போன உயிர் வந்திடவா போகுது?

பேசாம நெட்லயே பார்த்துக்கங்க!" என அழகாகப்பேசினாள் அவனது சகதர்மினி பாமா..

கோபாலன் மௌனமானான்!!

USAவில் லாஸ்ஏஞ்சல்ஸ்

அருகேயுள்ள ஏஞ்சல்ஸ் அபார்ட்மெண்டில் 45 வது மாடியில் இருந்தான் சீனிவாசன்..!

சுப்ரமணியத்தின் ஜேஷ்ட குமாரன்!!

காலை செய்தியை கேட்டபோதிருந்தே கலங்கிப்போயிருந்தான்.!

கிருஷ்ணனின் மனைவி லிண்டா அவன் அருகே வந்து நின்று அவனது கையைப்பிடித்துகொண்டாள்..

"Don't worry dear! You know, we can't do anything against the nature!!" என்று ஆறுதல் கூறினாள்..!

அவளைத்திருமணம் செய்துகொண்டதால்தான் இன்று அவன் கிரீன்கார்டு சிட்டிசனாக அங்கே நிரந்தரமாகி இருக்கிறான்!!

" why are you looking sad dad?

Is anything going wrong? " என்று அவனைப்பார்த்து பாசத்துடன் கேட்டாள் அவனது 5வயது மகள் ரோஸலின்..!

அவனது கண்கள் மானிட்டர் மீதே நிலைத்திருந்தது.......!!

ன்னையில் காலை 10.30..!

பெசண்ட் நகரில் சுப்பிரமணியம் உடல் மீது ஒரு பெரிய மாலையைக்கொண்டுவந்து போட்டார் ராவ்..!

வெளியே யாரோ வரும் அரவம் கேட்டது..!

தான் போனவாரம் புதிதாய் வாங்கிய BMW ல் சம்பந்தி சாந்தமூர்த்தியுடன்(யெஸ், தட் பாமாவின் அப்பா) வந்து இறங்கினார் நீலகண்ட சாஸ்திரிகள்..!

அவரது கையில் லேப்டாப்பும் சிலபல எலக்ட்ரானிக் டிவைஸ்களும் இருந்தன....!

சுப்பிரமணியத்தின் உடலைப்பார்த்ததும் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன் அவர் தன்னிடம் கூறியது சாஸ்திரிகள் நினைவுக்கு வந்தது. " எப்படியாவது என் பெரிய மகன் கையால எனக்கு கொள்ளி வைக்கணும்! அதுதான் எனக்கு கடைசி ஆசை சாஸ்திரிகளே!" என்று தம்மிடம் கூறியதை நினைவு கூர்ந்து நீண்ட பெருமூச்சு விட்டார்!...

நேரம் பிற்பகல் 3மணியைத்தாண்டியது..!

இறுதி ஊர்வலத்திற்கு சாஸ்திரிகள் ஏற்பாடு செய்தபடி அட்வான்ஸ் டெக்னாலஜியுடன் கூடிய தனியார் வாகனம் வந்து நின்றது.

காரியங்கள் மளமளவென நடந்தன.! ஓரிரு சடங்குகளைச்செய்தபின் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது..!

BMWகாரில் வந்திருந்த நான்கைந்து உறவினர்கள் ஏறிக்கொள்ள அடுத்த பத்தாவது நிமிடம் சடலம் சுடுகாட்டை அடைந்தது...

மணி 4.30

சுடுகாட்டில் இருந்த உதவியாளன் "என்ன சாமி, இந்தக்காலத்துல யாருமே விறகு வெச்சி பொணத்தை எரிக்கறதே இல்ல! கரண்ட்லயும் gasலயும் தான் எரிக்கறாங்க! , நீங்க என்னடான்னா வெறகே வேணும்னு கேக்கறீங்க!" என்றான் சாஸ்திரிகளிடம்..!

"நீ தொணதொணன்னு பேசாம வேலையைப் பாருப்பா!" என்றார் சாஸ்திரிகள்.

விறகுக்கட்டைகள் அடுக்கப்பட்டு அதன்மீது சுப்பிரமணியம் உடல் வைக்கப்பட்டது..

சிலபல எலக்ட்ரானிக் வேலைகளைச்செய்தபிறகு தனது லேப்டாப்பை ஆன் செய்து யாருடனோ வீடியோவில் பேசினார்.

உடலைச்சுற்றி பெட்ரோல் ஊற்றினார்.

பெட்ரோல் மீது பட்டாசு போன்ற ஒரு டிவைசை வைத்தார்.

வீடியோ காமிராவில் சில மந்திரங்களை சொல்லியபடி

"சரி சீனிவாசன், நீ இக்னிட்டரை ஆன் பண்ணு!" என்றார்.

திரையில் தெரிந்த அமெரிக்காவிலிருந்த சீனிவாசன் தன் கையிலிருந்த கேஸ் அடுப்பின் லைட்டர் போன்ற ஒரு வஸ்துவை கம்ப்யூட்டர் மானிட்டரை நோக்கி கண்களில் கண்ணீருடன் அழுத்த அடுத்த கணம் சென்னை பெசண்ட் நகரில் சுடுகாட்டில் கிடத்தப்பட்டிருந்த சுப்பிரமணியத்தின் உடலின் மீது ஊற்றியிருந்த பெட்ரோல் குபுக்கென பற்றியது..!

ஒரு இரண்டு நிமிடம் அமைதியாக நின்றிருந்த அனைவரும் பின் ஒவ்வொருவராக கலைந்தனர்..

கொள்ளி வைத்த சீனிவாசன் தன் தந்தையின் மீது பாசம் மேலிட அமெரிக்காவில் குமுறிக்குமுறி அழுதான்...

இண்டர்நெட்டில் அப்பாவின் முகம் பல பழைய நினைவுகளை அவன் கண் முன் கொண்டு வந்தது...!

சுப்பிரமணியத்தின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மனநிறைவுடன் தானும் வீட்டுக்கு கிளம்பினார் சாஸ்திரிகள்..”

படித்ததும் பகிர்ந்ததும்

செல்போன் பயன்பாடு உங்கள் உறவுகளை பாதிக்கிறதா? தவிர்க்க எளியதொரு வழி

3 weeks 6 days ago

phubbing

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • யாஸ்மின் ரூஃபோ

  • பிபிசி நியூஸ்

  • 18 நவம்பர் 2025

நமது போன்கள் நமது உறவுகளுக்கு அவ்வளவு நல்லதல்ல என்பது நம் அனைவருக்கும் தெரியும், இருந்தாலும் ஒரு நாளைக்கு டஜன் கணக்கான முறை நாம் ஃபோனை எடுப்பதைத் அது தடுப்பதில்லை.

இப்படியாகத்தான் ஃப்பப்பிங் (Phubbing) எனப்படும் - உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் புறக்கணித்து ஃபோனைப் பயன்படுத்துதல் தினசரி தருணங்களில் மெதுவாக ஊடுருவுகிறது.

இது உங்கள் துணையை உதாசீனப்படுத்தப்பட்டதாக உணர வைப்பதன் மூலம் உங்கள் உறவைப் பாதிக்கலாம். மேலும் பெற்றோரின் ஃபோன் பயன்பாடு இளைய குழந்தைகளுடனான பிணைப்பை பலவீனப்படுத்துவது மற்றும் வளர்ந்த குழங்தைகளின் சுய மரியாதையை குறைப்பது எனப் பல வழிகளில் குழந்தைகளையும் பாதிக்கலாம்.

சுயக்கட்டுப்பாடு இல்லாததைப் பற்றி உங்களை நீங்களே குறைக் கூறுவதற்குப் பதிலாக, நாம் சாதனங்களை எப்போது எடுப்பது என்ற நோக்கத்துடன் செயல்படுவதில் கவனம் செலுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஒரு உளவியலாளர் கூறுகிறார்.

phubbing

பட மூலாதாரம், Getty Images

எளியதொரு வழி என்ன?

லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் இணைப் பேராசிரியரான கெய்டலின் ரெகெர், நீங்கள் மற்றவருடன் இருக்கும்போது இயந்திரத்தனமாக ஃபோனை எடுப்பதைத் தடுக்க ஒரு எளிய வழியைப் பரிந்துரைக்கிறார்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் ஃபோனை எடுக்க முற்படும்போது, ஏன் அதைச் செய்கிறீர்கள் என்பதை மற்றவரிடம் சொல்லுங்கள், முடித்தவுடன், அதை கீழே வைத்துவிட்டு மீண்டும் அவர்களிடம் கவனத்தை செலுத்துங்கள்.

இது மிகவும் எளிதானதாகத் தோன்றலாம், ஆனால் ரெகெர், 'வுமன்ஸ் ஹவர்' (Woman's Hour) நிகழ்ச்சியில் பேசுகையில், இந்தச் சிறிய மாற்றம் நமது நடத்தையை மாற்ற உதவும் என்கிறார்.

ஏனென்றால் நாம் பெரும்பாலும் சிந்திக்காமல் மெசேஜ்களை பார்க்கிறோம், நோட்டிஃபிகேஷன்களைத் தள்ளுகிறோம் அல்லது "விரைவாக ஏதாவது ஒன்றைத் தேடுகிறோம்."

இங்கு வெளிப்படையாக இருப்பதுதான் முக்கியம். எனவே, நீங்கள் பார்க்க வேண்டிய ஒரு மெசேஜ் வந்தால், நீங்கள் உங்களுடன் இருப்பவரிடம் அல்லது குழுவினரிடம், "நான் இதற்குப் பதிலளிக்க வேண்டும், அதன் பிறகு உங்கள் மீது என் கவனம் இருக்கும்" என்று கூற வேண்டும்.

"நான் எனது ரயில் நேரத்தைச் சரிபார்க்க வேண்டும்" அல்லது "நான் என் அம்மாவுக்குப் பதிலளிக்கிறேன்" என்று குறிப்பிடுவதன் மூலம், நீங்கள் ஃபோனைச் பார்க்கும் தன்னியக்கப் பழக்கத்தைத் தடுக்கிறீர்கள், மேலும் உங்கள் அருகில் இருப்பவருக்கு அவர் இன்னும் முக்கியமானவர்தான் என்ற செய்தியையும் இது தருகிறது.

"இது மற்றவர் புறக்கணிக்கப்பட்டதாக உணர்வதைத் தடுக்கிறது," என்று ரெகெர் கூறுகிறார்.

"மேலும், இது உங்களை பொறுப்புடையவராக வைத்திருக்கிறது, ஏனெனில் நீங்கள் மற்ற செயலிகள் அல்லது முடிவில்லாத ஸ்க்ரோலிங்கில் செல்ல வாய்ப்பு குறைவாக உள்ளது."

இதைச் செய்வது உங்கள் உறவுகளை மேம்படுத்தவும் உதவும்.

phubbing

பட மூலாதாரம், Getty Images

ஆய்வு சொல்வது என்ன?

சௌத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் உளவியல் இணைப் பேராசிரியரான கிளாரி ஹார்ட், உறவுகள் மற்றும் ஃபோன் பயன்பாடு குறித்து 196 நபர்களிடம் பேசிய ஒரு ஆய்வுக்குத் தலைமை தாங்கினார்.

ஒட்டுமொத்தமாக, நீங்கள் எவ்வளவு அதிகமாக ஃப்பப்பிங் (Phubbing) செய்யப்படுவதாக உணர்கிறீர்களோ, அவ்வளவு மோசமாக உங்கள் உறவு இருக்க வாய்ப்புள்ளது என்று முடிவுகள் காட்டின.

"எல்லோரும் ஒரே மாதிரி எதிர்வினையாற்றுவதில்லை," என்று ஹார்ட் கூறுகிறார். "இது ஆளுமையைப் பொறுத்தது, ஆனால் ஒருவர் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்தவுடன், அது பதிலடி கொடுப்பதைத் தூண்டலாம்.''

"அவர்களும் தங்கள் சொந்த ஃபோனை எடுக்கிறார்கள், அப்போதுதான் இது ஒரு ஆபத்தான சுழலாக மாறுகிறது, ஏனெனில் ஒவ்வொரு துணையும் திரையில் உள்ளதைவிடத் தாங்கள் மதிப்பற்றவர்களாகவோ அல்லது நிராகரிக்கப்பட்டதாகவோ உணர்கிறார்கள்."

ஒவ்வொரு முறையும் நீங்கள் ஃப்பப்பிங் செய்யும்போது, நீங்கள் தொடர்பை இழக்கிறீர்கள்.

திரையைப் பார்ப்பதற்காக குடும்பத்தினர்/நண்பர்கள் சூழ்ந்த ஒரு தருணத்தை விட்டு நீங்கள் விலகிய பிறகு அதே தருணத்திற்கு திரும்புவதற்குச் சிறிது நேரம் ஆகலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2le378j02o

குடும்ப உறவுகளிலுள்ள சுயநலமும் பொறுமையும்

1 month ago

இது ஜெயமோகன் அவர்களின் இணைய தளத்தில் இருக்கின்றது. வாசகர் ஒருவரின் கேள்வியும், அதற்கான பதிலும்.

இதில் வரும் மனிதர்களைப் போன்றவர்களையும், இதே போன்ற கேள்விகளையும் எண்ணற்ற தடவைகள் நாங்கள் பலரும் கடந்து வந்திருப்போம். இன்னும் கடக்கவும் இருக்கின்றோம். ஜெயமோகனின் பதிலும், விளக்கமும் ஒரு தெளிவைக் கொடுக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன்.

சமீபத்தில் ஒரு உறவினரின் வீட்டில் முன் அறிமுகமில்லாத ஒருவரைச் சந்தித்தேன். உறவினர் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். கூடுதல் தகவலாக அந்தப் புதியவர் வாரத்தில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டுமே வேலைக்குப் போகின்றார் என்ற தகவலையும், இரண்டு நாட்கள் வேலையே அவருக்கு போதும் என்ற திருப்தியுடன் அவர் வாழ்வதாகவும் சொன்னார். அந்தப் புதியவர் அங்கிருந்து போன பின், உறவினரின் மனைவி பொங்கி எழுந்துவிட்டார். 'அவர் இரண்டு நாட்கள் தான் வேலைக்கு போகின்றார்.............. ஆனால் அவரின் மனைவி ஐந்து நாட்களும் வேலைக்குப் போகின்றார்......... அது உங்களுக்கு தெரியுமோ.................' என்று பின்னர் அது ஒரு சின்ன வாக்குவாதம் ஆகியது..................

https://www.jeyamohan.in/222076/

குடும்ப உறவுகளிலுள்ள சுயநலமும் பொறுமையும்

November 13, 2025

big.jpg

அன்பின் ஜெ,

எனது வாழ்க்கையில் நான் கவனித்து வரும் மூன்று நபர்களின் நடத்தைகளையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக இந்திய கலாச்சாரத்தின் பின்னணியில் காட்டும் அசாதாரண பொறுமையையும் புரிந்துகொள்ள உங்கள் ஆலோசனையை நாடுகிறேன். மேலும், இந்த நபர்களுடன் பேசும்போது, அவர்கள் தங்களை மிகவும் புத்திசாலிகளாகவும், எல்லாம் தெரிந்தவர்களாகவும் கருதுவதை கவனித்துள்ளேன்.

நபர் 1: எனது உறவினர்களில் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்யாமல், தனது மனைவியின் வருமானத்தில் முழுமையாகச் சார்ந்து வாழ்கிறார். அவரது மனைவி குடும்பத்தில் பல சவால்களை எதிர்கொள்கிறார், மேலும் இவர் மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கியுள்ளதால் அவரது பிரச்சனைகள் மேலும் அதிகரித்துள்ளன. ஆனால், இவருடன் பேசும்போது, இவர் தன்னை மிகவும் புத்திசாலியாகவும், எல்லாம் அறிந்தவராகவும் கருதுகிறார்.

நபர் 2: எனது நண்பர் ஒருவர், 40 வயதாகியும் திருமணம் செய்யாமல், வேலை ஏதும் செய்யாமல், ஒரு சிறிய ஊரில் தனது தாயின் ஓய்வூதியத்தில் வாழ்கிறார். நான் அவரது வீட்டிற்கு செல்லும்போது, அவரது தாய் அடிக்கடி கவலையுடன் இருப்பதை காண்கிறேன். இவரும் தன்னை மிகவும் அறிவாளியாகவும், எல்லாம் தெரிந்தவராகவும் நினைத்துக்கொள்கிறார்.

நபர் 3: மற்றொரு உறவினர், 40 வயதை எட்டியும் உயர்கல்வி பெறவில்லை, நிலையான வேலை இல்லை, மேலும் திருமணமும் செய்யவில்லை. இவர் தனது சகோதரியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று, அங்கு மூன்று வேளையும் உணவு உண்கிறார். இவரது வருகை அந்த வீட்டில் பல முரண்பாடுகளையும் பதற்றங்களையும் ஏற்படுத்துகிறது. ஆயினும், இவரும் தன்னை மிகவும் புத்திசாலியாகவும், அனைத்தையும் அறிந்தவராகவும் எண்ணுகிறார்.

இந்த மூன்று நபர்களின் மனைவி, தாய், மற்றும் சகோதரி ஆகியோரின் பொறுமை என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இந்த ஆண்களின் குறைபாடுகளையும், அவர்கள் ஏற்படுத்தும் சிரமங்களையும் பொருட்படுத்தாமல், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து ஆதரவளித்து, பராமரித்து வருகின்றனர். இத்தகைய ஏற்பு இந்திய கலாச்சாரத்தில் மட்டுமே காணப்படுகிறதா என்று எண்ணத் தோன்றுகிறது, அங்கு குடும்ப பந்தங்கள் மற்றும் கடமைகள் தனிப்பட்ட சிரமங்களை மீறி நிற்கின்றன.

இவர்களின் பொறுமைக்கு பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்ள எனக்கு உதவ முடியுமா? இந்த பெண்கள், இந்த சிரமங்கள் இருந்தபோதிலும் ஏன் இவர்களை ஆதரிக்கின்றனர்? இந்த ஏற்பு கலாச்சார மதிப்புகளில் வேரூன்றியதா? மேலும், தங்களை மிகவும் புத்திசாலிகளாகக் கருதும் இந்த நபர்களை எவ்வாறு கையாள்வது மற்றும் அவர்களைப் புரிந்துகொள்வது?

அன்புடன்

ராஜேஷ் 

பெங்களூர்

அன்புள்ள ராஜேஷ்,

இது சாமானியமாகத் தோன்றினாலும் நம் குடும்பம் என்னும் அமைப்பை, அதன் தொடக்கம் முதல் இன்றைய நிலைவரையிலான பரிணாமத்தைக் கருத்தில்கொண்டு யோசிக்கவேண்டிய விஷயம்.

குடும்பம் என்னும் அமைப்பு எங்கல்ஸ் எண்ணியதுபோல (குடும்பம் தனிச்சொத்து சமூகம்) செயற்கையான ஒன்று அல்ல. முதிராச் சிந்தனையுடன் பின்நவீனத்துவர் சிலர் சொன்னதுபோல அது இல்லாமலாகப் போவதுமில்லை. அது ஏராளமான உயிர்களில் ஏதேனும் வகையில் நீடிக்கும் ஓர் அமைப்புதான். குடும்பம் என நாம் எண்ணுவது மனிதக்குடும்பம்.ஆனால் குடும்பம் என்னும் அமைப்பு குரங்குகளில் உள்ளது. எறும்புகள் வரை வெவ்வேறு உயிர்களில் வெவ்வேறுவகையான குடும்பங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்ப மாதிரிகளை இன்றைய உயிரியலாளர் அடையாளப்படுத்தியுள்ளனர்.

குடும்பம் என்னும் அமைப்பு உயிரியல் பரிணாமத்தின் ஒரு பகுதியாக உருவாகி வந்தது. எந்த உயிரினமும் தனித்து வாழமுடிவதில்லை. சேர்ந்து வாழவேண்டும் என்றால் ஒரு திரள் அமைப்பு தேவை. தனியாக இருக்கையில் ஓர் உயிர் கொள்ளும் குறைபாடுகளை நிரப்பும் பிறர்தான் குடும்பம். மனிதக்குழந்தைக்கு அறிவும் உடற்திறனும் உருவாக நீண்ட ஆண்டுகள் ஆகின்றன. ஆகவே நிலையாந குடும்ப அமைப்பு தேவையாகிறது. உயிரியல்தேவை அமைப்பை உருவாக்கியது. அமைப்பு தன்னை பலபடியாக வளர்த்துக்கொண்டு நெறிகளை, நம்பிக்கைகளை , உணர்வுகளை உருவாக்கிக்கொண்டது.

ஓர் அமைப்பு, அது எதுவானாலும் அதில் அதிகப் பங்களிப்பாற்றுபவர், குறைவாகப் பங்களிப்பாற்றுபவர் என்னும் வேறுபாடு இருக்கும். கொடுப்பவர் -பெறுபவர் என்னும் இடங்கள் இருக்கும். ஆதிக்கம் செலுத்துபவர், வழிநடத்துபவர் என்னும் ஆளுமைகள் இருக்கும். அடங்குபவர்,தொடர்பவர் என்னும் ஆளுமைகளும் இருக்கும். நீங்கள் உங்கள் அலுவலகத்தையே உதாரணமாக எடுக்கலாம். அலுவலகம் என்பது அண்மைக்கால உருவாக்கம். அது இயற்கையானது அல்ல. அதில் ‘செண்டிமெண்ட்ஸ்’ இல்லை. ஆனாலும் இந்த வேறுபாடுகள் உள்ளன.

அப்படி வேறுபாடுகள் ஏதுமற்ற ‘சமத்துவ’ அமைப்புதான் தேவை என கற்பனை செய்யலாம். ஆனால் உயிரியல் ரீதியாக அது சாத்தியமல்ல. எறும்புகளிலும் சிம்பன்ஸிக்களிலும் இல்லாத ஒன்று மனிதனில் மட்டும் திகழமுடியாது. வேண்டுமென்றால் அந்த வேறுபாட்டை குறைக்கலாம். அந்த வேறுபாடு வன்முறையற்றதாக ஆகும்படி முயலலாம். ஆனால் அந்த வேறுபாடு இருக்கவே செய்யும்.

நம் குடும்பங்கள் அனைத்திலுமே அளிப்போர், பெறுவோர் என்னும் இரு நிலைகள் எப்போதும் இருக்கின்றன. நாம் வளர்ந்து நம் வருமானத்தில் நிற்பது வரை நாம் பெறுவோர் மட்டுமே. நம் பெற்றோர் அளிப்போராக திகழ்கிறார்கள். பல நடுத்தரக் குடும்பங்களில் தந்தை மட்டுமே பணமீட்டுபவர், பிற அனைவருமே அதைப் பெற்று வாழ்பவர்கள்தான்.

பழைய கூட்டுக்குடும்பங்களில் திறனற்றவர்களை அக்குடும்பங்களே பேணும் தன்மை இருந்தது. சிலரால் வேலை செய்ய முடியாது. சிலருக்கு போதிய அறிவுத்திறனோ உடல்வளர்ச்சியோ இருக்காது. அவர்கள் சுமை என கருதப்பட்டதில்லை. குடும்பத்தின் பொறுப்பு அவர்களையும் பேணுவதுதான் என்றே கொள்ளப்பட்டது.

குடும்பம் என்னும் நிறுவனத்தின் விரிவான அமைப்பே குலம். குலம் விரிந்து ஊர். ஊர் விரிந்து நாடு அல்லது சமூகம். சென்றகாலங்களில் தானாக வாழும் தகுதியற்ற ஒருவனை அக்குலம் பேணியதுண்டு. அந்த ஊர் பேணியதுண்டு. நான் சிறுவனாக இருந்தபோது என் ஊரில் பத்துக்கும் மேற்பட்ட மனவளர்ச்சி இல்லாதவர்கள், உடல்வளர்ச்சி இல்லாதவர்கள் இருந்தனர். முதுமையால் உடல்நலிந்தவர்கள் ஐம்பதுபேராவது இருந்தனர். அவர்களை ஊர்தான் பேணியது. என் அப்பா அவருடைய வருமானத்தில் கால்வாசிப்பங்கை வெவ்வேறு நபர்களுக்கு அளித்தார்.

இன்று சமூகம், நாடு அத்தகையோரைப் பேணுகிறது. அப்படிப் பேணுவதுதான் நல்ல சமூகம். நவீன மேலைச்சமூகங்களில் உழைப்பவர் அளிக்கும் வரிப்பணத்தில் கால்பங்கு உழைக்கமுடியாதவர்களுக்கு நலனுதவிகளாக வழங்கப்படுகிறது. அவர்களில் முதியோர், உடற்குறை உள்ளவர்கள் உண்டு. வேலை இழந்து வேலைதேடும் நிலையிலுள்ளவர்களும் உண்டு. வேலைசெய்யமுடியாது என அறிவித்து, தெருவில் வாழும் ஹிப்பிகள், சமூக எதிர்ப்பாளர்கள் மற்றும் போதையடிமைகளுக்கும் குறைந்தபட்சம் சாப்பாடாவது கிடைக்கும்படி அந்த அரசுகள் ஏற்பாடு செய்கின்றன. சாகவிடுவதில்லை.

பெறுபவர்கள் எல்லாமே இழிந்தோர், அவர்களுக்கு கொடுப்பது வீண் என்னும் மனநிலை சமூகத்தை அழிக்கும். ஒவ்வொருவரும் உழைக்கவேண்டும் , உழைக்காதவர் அழியவேண்டும் என்பது ஓர் உயர்ந்த மனநிலை என்றும்; அது ‘உழைப்பைப் போற்றும் மனநிலை’ என்றும் சிலரால் சொல்லப்படுகிறது. ஆனால் அது ஒரு குறுகிய, சுயநல மனநிலை. நீங்கள் எவரென்றாலும் உங்களால் ஈட்டப்படும் செல்வத்தில் சிறு பங்கையே நீங்கள் செலவழிக்கிறீர்கள். எஞ்சியதை முழுக்க குடும்பத்திற்காகச் செலவழிக்கிறீர்கள், சேர்த்து வைக்கிறீர்கள். அதில் ஒரு பங்கை இயலாதோருக்கு அளிப்பதில் என்ன பிழை?

ஒரு குடும்பத்தில் எவர் இயலாதோர்? குழந்தைகள், மாணவர்கள் எப்படியும் பிறரை நம்பி இருக்கவேண்டியவர்கள். முதியோரும் அவ்வாறே. இதைத்தவிர பலவகையான உடல், உளக் குறைபாடுள்ளவர்களும் பேணப்படவேண்டும். குடும்பம் அவர்களை பேணுவதே முறை. அல்லது ஊர் அல்லது சமூகம் பேணவேண்டும். ஏனென்றால் இங்கே இன்னும் முழுக்க அனைவர்நலனையும் நாடும் அரசு உருவாகவில்லை.

நம் சமூகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக துறவிகள், நாடோடிகள் பேணப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் சாவடிக்குச் சென்று “இரவுணவு உண்ணாத எவரேனும் உண்டா?” என்று கேட்டு, இருந்தால் அவர்களுக்கு உணவிட்டுவிட்டே ஊர்த்தலைவர் உண்ணவேண்டும் என்னும் மரபு அண்மைக்காலம் வரை இருந்தது. என் அப்பா அவருடைய இறுதிவரை அதைச்செய்துவந்தார். அவ்வாறு சாப்பிடுபவர் உழைக்கமுடியாதவரா, உழைக்க மனமில்லாதவரா என்று பார்க்கக்கூடாது. அது அறமின்மை. ஏனென்றால் நாம் எப்படி அதை அறியமுடியும்?

“போய் உழைக்கவேண்டியதுதானே?” என்று பிச்சைக்காரர்களிடம் கேட்பவர்கள் உண்டு. (கேட்பவர் என்ன உழைக்கிறார் என்று பார்த்தால் பத்துரூபாய்க்கு பொருள் வாங்கி இருபது ரூபாய்க்கு விற்பவராக இருப்பார். உண்மையில் சமூகத்தைச் சுரண்டும் கிருமி அவர். அல்லது அதேபோல ஏதாவது வெட்டிவேலை செய்வார். எதையாவது உற்பத்திசெய்பவர் இங்கே எத்தனைபேர்?) அந்தப் பிச்சைக்காரர்களில் ஒருவராக நித்யசைதன்ய யதி இருந்திருக்கிறார். நடராஜகுருவும் நாராயணகுருவும் விவேகானந்தரும் இருந்திருக்கிறார்கள். அவர்களை அழியவிடவேண்டும் என்றும், இந்த சம்பாதிக்கும் கூட்டம் மட்டும் சோறுதின்று கொழுக்கவேண்டும் என்றும் நான் சொல்ல மாட்டேன்.

மிக அரிதாக நீங்கள் சொல்வது போல உழைக்க மனம் ஒவ்வாதவர்கள், இயல்பிலேயே உழைக்கும் உளமில்லாதவர்கள் குடும்பத்தில் இருப்பார்கள். அதுவும் மனித இயல்பே. மானுடத்தின் வண்ணமே. அவர்களுக்கான காரணங்கள் அவர்களுக்கு இருக்கலாம். அவர்கள் வேண்டுவது வெறுமே சோறு, உறைவிடம், துணி மட்டுமே என்றால் அதை அளிப்பது அவசியம் என்பதே என் எண்ணம். அது கொடுப்பவர்களுக்கு பெரிய சுமை அல்ல என்றால் கொடுப்பதன் வழியாக அவர்கள் உறவை நிலைநாட்டுகிறார்கள் என்றும், குடும்பம் என்னும் அமைப்பின் இயல்பான அறத்தை நிலைநாட்டுகிறார்கள் என்றும்தான் பொருள்.

அவ்வாறு சார்ந்திருப்பவர்கள் உழைப்பவர்களின் பணத்தை வாங்கி வீணடித்தார்கள் என்றால் அதை அனுமதிக்கக்கூடாது. போதைக்கோ சூதுக்கோ பணம் அளிக்கலாகாது. ஆனால் அவர்கள் உழைக்காவிட்டால் சாகவேண்டும் என்று சொல்வது குடும்பம் என்னும் அமைப்புக்கே எதிரானது. என் அப்பா வாழ்ந்த நாளெல்லாம் கடைப்பிடித்த அறம் இது. அவர் மறைந்தபோது கிட்டத்தட்ட இருபதுபேர் அவரைச் சார்ந்திருந்தனர் என அறிந்தேன். அவர்களில் பலர் வெறுமே சாப்பிட்டுவிட்டுச் சும்மா இருந்தவர்கள்தான்.

ஏனென்றால் குடும்பம் என்னும் அமைப்பே ஒருவரின் பலவீனத்தை, குறைபாட்டை இன்னொருவர் ஈடுகட்டுவதில்தான் உள்ளது. உழைக்கமுடியாதவர் உழைப்பவரைச் சார்ந்திருக்கிறார். அவர் உழைப்பவரைச் சுரண்டுகிறார் என்று எண்ணுவது குடும்பம் என்னும் மனநிலையை அழிப்பது. இன்றைக்கு உழைப்பவர் சட்டென்று நோயாளியாகி பிறரைச் சார்ந்திருக்கவும்கூடும். எந்நிலையிலும் ஒரு தனிநபரை குடும்பம் கைவிடக்கூடாது. அதுவே குடும்பம் என்னும் அமைப்பின் அடிப்படை அறம். அந்த நம்பிக்கையில்தான் நீங்களும் நானும் உயிர்வாழ்கிறோம். அந்த நம்பிக்கை இல்லாமலானால் நாமனைவருமே அனாதைகள், அல்லது அனாதைகளாக ஆகும் வாய்ப்புள்ளவர்கள்.

பிச்சை எடுக்க வருபவர்கள் ‘தர்மம் செய்யுங்க’ என்றுதான் சொல்கிறார்கள். ஈதல் அறம் என்றே நம் மரபு சொல்கிறது. ஒருவருக்கான அடிப்படை உணவு என்பது ஒருபோதும் வெட்டிச்செலவு அல்ல. அவர் என்னவாக இருக்கிறார் என நாம் அறியமுடியாது. ஒருவேளை அவர் சிந்தனையாளரோ, கலைஞரோ ஆக இருக்கலாம். அல்லது அப்படி எதிர்காலத்தில் மாறலாம். அல்லது வெட்டியாகவே இருந்தால்கூட அவரைப்போன்ற ‘வெட்டிக்கூட்டத்தில்’ ஒருவராக ஒருவேளை கலைஞனும் சிந்தனையாளனும் இருக்க வாய்ப்புண்டு.  வெட்டிக்கூட்டத்தை ஒட்டுமொத்தமாகக் கைவிட்டோம் என்றால் கலைஞர்களையும் சிந்தனைகயாளர்களையும் அழித்துவிடுவோம். அதை உழைப்பை சிரமேற்கொண்டு போற்றும் மேற்குநாடுகளே கூட செய்வதில்லை.

நடராஜகுருவும் நித்யாவும் ரயிலில் செல்கிறார்கள். ஒரு குழந்தை வந்து பிச்சை கேட்கிறது. உடனிருக்கும் மார்க்ஸியர் ஒருவர் அருவருப்புடன் பிச்சை எடுப்பதை இழித்துப்பேசுகிறார். அது சோம்பலை வளர்க்கும் என்கிறார். நடராஜகுரு சொல்கிறார். ‘ஒரு குழந்தை எனக்குப் பசிக்கிறது என்று உலகத்திடம் கேட்பதில் மகத்தானதாக ஒன்று உள்ளது. இந்த உலகம் மீது அக்குழந்தை வைத்திருக்கும் நம்பிக்கை அது. அதை எப்போது பார்த்தாலும் எனக்குக் கண்ணீர் வருகிறது. அந்த நம்பிக்கையை ஒருபோதும் உலகம் இழந்துவிடலாகாது’

‘எனக்கு சோறு மட்டும் போதும்’ என சொல்லும் ஒருவரிடம் ‘சோறுதானே, சாப்பிடு’ என்று சொல்லும் நிலையில் உள்ள குடும்பமே அறம் சார்ந்தது, அப்படிச் சொல்லும் சமூகமும் நாடுமே வாழும் அறம் கொண்டவை. சோற்றில் கணக்குபார்ப்பவர்கள் ஒன்றை யோசிக்கலாம், அவர்கள் உண்ணும் சோறுக்கு எங்கோ கணக்குகள் பார்க்கப்படும்.

ஜெ

இனிவரும் காலங்களில் நோயில்லாமல் வாழ..!!

1 month 1 week ago

◆ ஒரு பனை ஓலைக் குடிசை...!!!

வாசலில் இரண்டு வேப்பமரங்கள்...!!!

வெளியே ஒரு விசுவாசமான நாய்.

◆ பால் கறக்கும் ஒரு பசுமாடு . இரண்டு உழவு எருதுகள்..

ஒரு ஏர்...இரண்டு மண்வெட்டி...

பத்து ஆடுகள்...ஒரு சேவல்...ஐந்து கோழி...+30 குஞ்சுகள்

◆ இரண்டு ஏக்கர் நிலம்.... அதிலொரு கிணறு....

சுற்றிலும் பத்து தென்னை மரங்கள்..

◆ ஒரு முருங்கை ஒரு கருவேப்பிலை மரமும்;பக்கத்தில் பத்து வாழைமரம்...!

அடுத்து ஒரு புளியமரம்...!!!

◆ பிரண்டைக் கொடியும் தூதுவளையும் படர்ந்த

ஒரு அகத்திமரம்..

◆ விளைநிலத்தின் ஓரத்தில் ஆங்காங்கே தானாகவே ஏராளமாய் வளரும் கீ்ரைச் செடிகளும்...

◆ மண் சட்டி கழுவும் இடத்தில் நாலைந்து மிளகாய்ச் செடிகளும்...!!!!!

◆ மீதமுள்ள விளை நிலத்தில் விளையும் கம்பும்...சோளமும்... கேழ்வரகும்.. .

தானியக்குதிருக்குள் சேமிக்கப்படும்.இவை மட்டுமே போதும்...

எவனையும் எதிர் பாராமல் உலகின் மிக அழகிய வாழ்வை பேரரசனைப் போல் நலமோடு அமைதியாய் வாழ்ந்து அனுபவிக்க.

■ உலகின் சிறந்த தற் சாற்புப் பொருளாதாரம் இதுதான்!

நன்றி .........முக நூல் .

தமிழர் பகுதியில் சீரழியும் கலாச்சாரம்..!😱

1 month 1 week ago

தமிழர் பகுதியில் சீரழியும் கலாச்சாரம்..!

Vhg நவம்பர் 06, 2025

AVvXsEhXRVAJPvSMfdXYOtExyIxASKYkI34GvGTJcuWyKCNYljmz1VQj-Hwrs64uurN6fRyyDPG0Vg0hEVSdhEjiRMZ04mhxVsAj03uvvCpFMw8KaXk-vnd4PQ3m9Ly-U1zs01eA4nKehh_XcXKAY95qWux25gKSnauAIQKVZvDktNLd21KtMGxWT2F83BjSoQeC

அண்மைய காலங்களில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறு கலாசார சீரழிவுகள் , குற்ற செயல்கள், ஈழத் தமிழினத்தை அழிவு பாதைக்கு செல்லும் அவலம் தொடர்பில் சமூக வலைத்தங்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

போதைபொருள் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் இளம் குடும்ப தலைவிகள் ஒருபுறமும் , மறுபுறம் போதையாலும் குற்றசெயல்களாகும் கெட்டு சீரழியும் இளம் சமுதாயம் ஒரு புறமுமாக ஈழத தமிழர் கலாச்சாரம் வழி மாறி போய்கொண்டிருக்கின்றது.

போதைபொருள் விற்பனை - கள்ள உறவுகள்

ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த காலங்கள் மலையேறி கொண்டிருக்கின்றது. குடும்ப வன்முறைகள் கொலைகளில் வந்து முடிகின்றது. சுகபோக  வாழ்க்கை மற்றும் பணத்தின் மீதான  மோகம்  வாழ்க்கையில்  அமைதியையும் உண்மையையும் மாற்றி விடுகின்றது.

அந்தவகையில் யாழில் தவில் வித்துவானை நம்பி கணவன் பிள்ளைகளை கைவிட்டு சென்ற குடும்ப பெண் , தகாத உறவால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முல்லைத்தீவில் 26 வயதான பெண் ஒருவர் நான்கு திருமணங்கள் செய்த சம்பவங்கள் என பல்வேறு கலாச்சார சீரழிவுகள் தமிழர் பகுதிகளில் அரங்கேறி வருகின்றது.

அதுமட்டுமல்லாது  வவுனியாவில்  நேற்று முன் தினம்  மனைவியின் தகாத உறவால்  கணவன் மனைவியை கொன்று   பிள்ளையுடன்  பொலிஸாரிடம் சரணடைந்த  சம்பவமும்  நடந்துள்ளது.

அதேவேளை புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் எம்மவர்கள் சிலரும் இந்த சம்பவங்களுக்கு துணைபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் நம் கலாசாரம் இப்படி போகிறதே என தம்மை சீர்திருத்தி வாழ பழகாவிட்டால் அடுத்த சமுதாயத்தை எங்கே கொண்டு செல்லும் என்கின்ற கேள்வியை சமூக மட்டத்தில் எழவைத்துள்ளது.

அதிலும் இளவயது குடும்ப பெண்கள் கலாசார சீரழிவுகளை நோக்கி நகர்வது வேதனைக்குரிய விடயம் ஆகும். உலகில் ஒப்பற்ற தமிழனமாக போற்றப்பட்ட எம்மினம் இன்று தடம்மாறி தடுமாறி போய்கொண்டிருக்கின்றது.

குறிப்பாக யாழ்ப்பாணம், வன்னி பிரதேசங்களில் திட்டமிட்டு பரப்படும் விச செடிகள் படர்வது போல கலாசார சீரழிவுகள் தலை விரித்து ஆடுவது வேதனையை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

https://www.battinatham.com/2025/11/blog-post_707.html

யார் மடையர்கள்?...

1 month 2 weeks ago

மடையன் என்பதன் அர்த்தம் என்ன என்பதை தெறிந்து கொள்வோம்

ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேறத் தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் "மடை"

மடைகளை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன. .

வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லப்படும் மரங்களையே தேர்வுசெய்து அதன் உள்தண்டை நீக்கிவிட்டால் உறுதியான நீண்ட குழாய் தயாராகிவிடும்.

அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள்.

இதுதான் ஆரம்பகால மடை. பிற்காலங்களில் பாறைகள், மரச்சட்டங்களில் மடைகள் அமைக்கப்பட்டது.

வெள்ளக்காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள். மடையைத் திறப்பது சாதாரண விடயமில்லை. உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப்பணியாகும்.

மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச்சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார்.

மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்துவிடுவார்.

மடை திறந்ததும் புயல்வேகத்தில் வெளியேறும் வெள்ளம் மடைத்திறந்தவரையும் இழுத்துச்செல்லும்.

அந்த வேகத்திலிருந்து தப்பி பிழைப்பது மிகவும் கடினம்.

மடை திறக்க செல்பவர்கள் உயிர்பிழைப்பது அரிது. அவர்கள் தம் மனைவி, பிள்ளைகள் மற்றும் அனைவரிடம் பிரியா விடை பெற்றுச்செல்வார்கள்.

மடை திறக்கச்சென்று மாண்டவர்கள் அதிகம், மீண்டவர்கள் குறைவு.

இவர்கள்தான் "மடையர்கள்" என அழைக்கப்பட்டார்கள்.

வரலாற்றின் பக்கங்களில் இந்த தியாகிகளைப் பற்றிய குறிப்புகள், கல்வெட்டுக்கள், பதிவுகள் எதுவும் இல்லை.

வரலாறு எழுதுபவர்கள் இதைக் கருத்தில் கொள்ளலாம் அல்லவா? எம் குழந்தைகளுக்கு இவ்வீரத் தமிழ்த்தியாகிகளின் வாழ்வு ஒரு ஊக்கத்தையும் தியாகத்தையும் ஊட்டும் அல்லவா?

இனி யாரையாவது மடையா என்று திட்டும் முன் யோசியுங்கள்...

மடை திறந்து தாவும் நதியலை நான்

நன்றி முக நூல்

தனித்து விடப்படும் முதியவர்கள் - நிலாந்தன்

1 month 4 weeks ago

தனித்து விடப்படும் முதியவர்கள் - நிலாந்தன்

2020_12image_04_05_55562158300-ccc.jpg

புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் அண்மையில் ஊருக்கு வந்திருந்தார். அவருடைய ஊரில் அவருக்குத் தூரத்து உறவான ஒரு முதிய பெண் தனித்து வசிக்கிறார். பெரிய வீடு; வசதியான குடும்பம்; ஆனால் பிள்ளைகள் இல்லை. காசு உண்டு. ஆனால் பராமரிக்க ஆளில்லை. அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு படை முகாமில் இருப்பவர்கள் அவருக்குச் சாப்பாடு கொடுக்கிறார்கள். ஆனால் அவர் பல நாட்கள் குளித்திருக்கவில்லை என்றும் அவருடைய சுத்தம் சுகாதாரத்தைத் தொடர்ச்சியாகக் கவனிப்பதற்கு அங்கே ஆட்கள் இல்லையென்றும் நண்பர் சொன்னார். அப்படியென்றால் அவரை அழைத்துக் கொண்டு வந்து ஒன்றில் அரச முதியோர் இல்லத்தில் சேர்க்கலாம் அல்லது கட்டணத்தோடு முதியோரைப் பராமரிக்கும் இல்லங்களில் இணைக்கலாம்.போதியளவு பணம் இருந்தாலும் பராமரிக்க ஆளில்லாமல் தவிக்கும் முதியோரை கட்டணம் பெற்றுக்கொண்டு பராமரிக்கும் இல்லங்களில் சேர்க்கலாம். எனவே அந்த முதிய பெண்ணை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் இணைத்தால் என்ன என்று நண்பரிடம் கேட்டேன்.

அதற்கு நண்பர் சொன்னார்,”குறிப்பிட்ட மூதாட்டிக்கு 80 வயதுக்கு மேலாகிறது. இனி அவர் தனது வீட்டிலிருந்து வேரைப் பிடுங்கிக்கொண்டு வேறொரு இடத்துக்கு வரத் தயாராக இல்லை. எல்லாவிதமான அசௌகரியங்கள், பற்றாக்குறைகளோடும் தான் பிறந்து, வளர்ந்து, திருமணம்செய்து சந்தோஷமாக வாழ்ந்த அந்த வீட்டிலேயே இருந்து இறந்து போகத்தான் விரும்புவார் என்று தோன்றுகிறது. அவரை இந்த வயதில் வேரை அறுத்துக் வெளியே எடுப்பது சாத்தியமா?” என்று.

அது சாத்தியமா இல்லையா என்பதல்ல பிரச்சினை. அவருடைய “குவாலிட்டி ஒஃப் லைஃப் “- வாழ்க்கைத் தரம் உயர்வானதா? என்பதுதான் இங்கு பிரச்சனை. அவரைப் போன்ற பல முதியவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு வெளியே வரத் தயாராக இல்லை. தாங்கள் பிறந்து வளர்ந்த அந்த வீட்டுக்குள் எல்லா விதமான பற்றாக்குறைகளோடும் ஆபத்துக்குகளோடும் சீவிப்பதில் அவர்கள் மன நிறைவடைகிறார்கள். இங்கே அடிப்படைக் கேள்வி ஒன்று எழுதுகிறது.”குவாலிட்டி ஒஃப் லைஃப் ” என்பது மனதால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதா? அல்லது உடலால் நவீன மருத்துவத் தராதரங்களுக்கு ஏற்ப பராமரிக்கப்படுகிறவர்களாக இருப்பதா? எனக்குத் தெரிந்த பல முதியவர்கள் குறிப்பாக 80 வயதுக்கு மேலானவர்கள் தாம் பிறந்து வளர்ந்த வீட்டிலேயே இருந்து சாவதைத்தான் தமது வாழ்க்கை தரத்தில் உயர்ந்த நிலை என்று கருதுவதாகத் தெரிகிறது.

ஆனால் பராமரிப்பின்றி தனிமையில் உழல்வதை விடவும் முதியோர் இல்லங்களில் சக வயதினரோடு இருப்பது சந்தோஷமானது என்று கருதும் முதியோரும் உண்டு. ஓர் ஆசிரியை வெளிநாட்டுக்குப் போகும்போது தன் தகப்பனை அரசு முதியோர் இல்லத்தில் இணைத்துவிட்டுச் சென்றார். நாடு திரும்பியதும் தகப்பனை வீட்டுக்கு அழைத்து வரச் சென்ற போது தகப்பன் மறுத்துவிட்டார். இங்கே எனது வயதொத்தவர்களோடு சந்தோஷமாக இருக்கிறேன். இது எனக்கு விருப்பமாக இருக்கிறது. என்று கூறி அந்த முதியவர் அங்கேயே தங்கி விட்டார். ஆனால் இது மிகச் சிறிய தொகை.

பைபிளில் கூறப்படுவது போல “பிள்ளைகள் இருக்கவும் மலடுகளாய்போன பெற்றோரின்” தொகை அதிகமுடைய ஒரு சமூகம் இது. போர் பிள்ளைகளைத் தின்றுவிட்டது. புலப்பெயர்ச்சி பிள்ளைகளைப் பெற்றோரிடம் இருந்து பிரித்துவிட்டது. பெற்றோர் பிள்ளைகளுக்கு இறுதிக் கிரியைகளைச் செய்யும் ஒருகாலம் வந்தபோது பிள்ளைகள் தூர தேசத்திலாவது உயிர்  பிழைத்திருக்கட்டும் என்று பெற்றோரே அனுப்பி வைத்தார்கள். எனவே முதியோர் தனித்துவிடப்படுதல் என்பது போரின் நேரடி விளைவுதான். தவிர குடும்பங்களில் விழுமியங்கள் சீரழிந்ததன் விளைவுந்தான்.

image_1475506398-df6ec0a4a0-ccc.jpg

இங்கு மூன்று உதாரணங்களைக் கூறலாம். முதலாவது உதாரணம், வன்னியில் நடந்தது. அங்குள்ள முன்னணிப் பாடசாலை ஒன்றுக்கு பழைய மாணவர்கள் சிலர் இணைந்து ஒரு சிற்றுண்டிச் சாலையைக் கட்டிக்  கொடுத்தார்கள். அந்த சிற்றுண்டிச் சாலையை தமது பள்ளிக் காலத்தில் தமது வகுப்பு தோழர்களாக இருந்து பின்னர் போரில் நாட்டுக்காக தங்கள் உயிரைக் கொடுத்த தியாகிகளுக்கு அர்ப்பணித்திருந்தார்கள். அப்பழைய மாணவர்களில் ஒருவர் என்னைச் சந்தித்தார். அவரிடம் நான் கேட்டேன்“அந்த சிற்றுண்டிச் சாலையைத் திறக்கும் வைபவத்திற்கு குறிப்பிட்ட தியாகிகளின் பெற்றோரை அழைத்தீர்களா?” என்று. அப்பொழுதுதான் ஒரு விடயம் தெரியவந்தது. அந்தத் தியாகிகளில் ஒருவருடைய பெற்றோர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது.

அந்தத் தியாகி ஒரு சிறந்த உதைப்பந்தாட்ட வீரர். அவரைத் தவிர ஏனைய சகோதரர்கள் ஏற்கனவே புலம்பெயர்ந்து விட்டார்கள். அவர்தான் பெற்றோருக்கு உதவியாக இருந்தார். கடைசிக் கட்டப் போரில் கட்டாய ஆட் சேர்ப்பின்போது அவர் போருக்குள் இணைக்கப்பட்டார். போர்க்களத்தில் உயர்நீத்தார். தாயும் போரில் கொல்லப்பட்டு விட்டார். தனித்து விடப்பட்ட தந்தையை  புலம்பெயர்ந்து வாழும் ஒரு பிள்ளை உறவினர் ஒருவருக்கூடாக முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார். மேற்படி தகவல்களைச் சேகரித்த பழைய மாணவர்கள் அந்த முதியோர் இல்லத்துக்கு வந்துவிட்டார்கள். ஆனால் அவர் விடுமுறையில் சென்று விட்டதாக முதியோர் இல்லத்தில் கூறப்பட்டது. விசாரித்தபோது தெரிந்தது, வெளிநாட்டில் வாழும் ஒரு பிள்ளை தாயகத்துக்கு வந்திருந்தபடியால் தகப்பனைப் பார்ப்பதற்காக முதியோர் இல்லத்தில் இருந்து அவரை தான் இருக்கும் இடத்துக்கு எடுத்திருக்கிறார். பழைய மாணவர்களில் ஒருவர் அந்தப் பிள்ளையின் கைபேசி இலக்கத்தை எடுத்து அவரோடு கதைத்திருக்கிறார். அவரையும் முதியவரையும் சந்திப்பதற்காக வரப்போவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அதன்பின் அந்தப் பிள்ளை தொடர்பு எடுக்கவில்லை மட்டுமல்ல, தகப்பனைக் கொண்டுவந்து இல்லத்தில் சேர்த்துவிட்டு வெளிநாட்டுக்குப் போய் விட்டார்.

இரண்டாவது உதாரணம், ஒரு பேராசிரியர். பல மாதங்களுக்கு முன்பு அவர் இறந்தபொழுது அவருடைய உடலை யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு கொடுக்குமாறு கேட்டிருந்தார். அவரும் அவருடைய மனைவியும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில்தான் வசித்து வந்தார்கள். யாழ்ப்பாணத்தின் உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் பீடாதிபதியாக இருந்தவர் அவர்.

மூன்றாவது உதாரணம், ஓர் அரசியல் செயற்பாட்டாளர். ஈழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய மொழிபெயர்ப்பாளர்.நோர்வியின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளின்போது பெரும்பாலான எல்லாப் பேச்சுவார்த்தைகளிலும் அவருடைய முகம் உண்டு. அவருக்கு ஒரே பிள்ளை. அவரும் புலம்பெயர்ந்து விட்டார். 2009க்கு பின் அவரை தன்னுடன் வந்து இருக்குமாறு பிள்ளை அழைத்திருக்கிறார். ஆனால் இந்த முதியவர் தாயகத்தை விட்டு வெளியேபோக விரும்பவில்லை. எனவே அவருடைய பிள்ளை அவரை மாதாந்தம் பெருந்தொகை பணத்தை அறவிடும் தனியார் முதியோர் இல்லம் ஒன்றில் சேர்த்து விட்டார். அந்த மொழிபெயர்ப்பாளர் அந்த முதியோர் இல்லத்தில்தான் உயர்நீத்தார்.

நான்காவது உதாரணம்,சில மாதங்களுக்கு முன் நடந்தது. புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வசிக்கும் எனது நண்பர்,ஒர் அரசியற் செயற்பாட்டாளர், அண்மையில் தனது தகப்பனாரைப் பராமரிப்பதற்கு யாரையாவது ஒழுங்கு செய்ய முடியுமா என்று கேட்டார். இந்த விடயத்தில் முதியோர் இல்லத்துக்குப் போக விரும்பாத முதியவர்களைப் பராமரிப்பதற்கு ஊரில் யாராவது உதவியாளரைக் கண்டுபிடித்தால் அது நல்லது.

இரண்டாவது தெரிவு,மானிப்பாயில் உள்ள  மருத்துவர் கிரீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் முதியோரைப் பராமரிப்பதற்கான ஒரு கட்டமைப்பு உண்டு. அங்கு பயிற்றப்பட்ட தாதியர்கள் உண்டு. அவர்களைச் சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்தலாம்.

மூன்றாவது தெரிவு,செக்யூரிட்டி நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டு வீட்டுக்கு ஒரு செக்யூரிட்டியை வேலைக்கு அமர்த்தலாம். இந்த ஏற்பாடு எல்லா முதியவர்களுக்கும் பொருந்தாது. தன்னுடைய அலுவல்களைத் தானே கவனிக்கக்கூடிய அளவுக்குத் தெம்பாக உள்ள முதியவர்களுக்குத்தான் பொருந்தும்.

நான்காவது ஏற்பாடு,வீட்டில் கண்காணிப்புக் கமராவைப் பொருத்துவது. இதுவும் தானாக இயங்கும் முதியவர்களுக்குத்தான் பொருந்தும். ஆனால் கமரா சரிவர இயங்கவில்லை என்றாலோ அல்லது கமராவின் கண்காணிப்பு வீச்சுக்கு வெளியே முதியவர் போய்விட்டாலோ அதன் பின் அவருடைய நடமாட்டங்களைக் கவனிக்க முடியாது. இதில் கமராவைத் தொடர்ச்சியாக அடிக்கடி பார்க்க வேண்டியிருக்கும். யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டில் அவ்வாறு கமரா பொருத்தப்பட்டிருந்தது. பிள்ளைகள் முதியோரின் நடமாட்டத்தைக் கமரா மூலம் கண்காணிக்க முடிந்தது. ஆனால் ஒருநாள் முதியவரைக் காணவில்லை. இரண்டாம் நாளும் காணவில்லை. பிள்ளைகள் அயலவர்களோடு தொடர்புகொண்ட பொழுது அயலவர்கள் வீட்டு வளவில் கமராவின் கண்காணிப்பு வீச்சுக்கு வெளியே முதியவர் விழுந்து கிடக்கக் கண்டுபிடித்தார்கள். ஆனால் கண்டுபிடித்தபொழுது முதியவருக்கு உயிர் இருக்கவில்லை. அவர் இறந்து இரண்டு நாட்களாகி விட்டது.

இந்த ஏற்பாடுகளில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்யும்படி எனது நண்பரிடம் சொன்னேன். தனித்து விடப்பட்ட முதியவர்களுக்காகக் காசு செலவழிக்கத் தயாராக இருப்பவர்களுக்குத்தான் இந்தத் தெரிவுகள். இல்லையென்றால் ஏதாவது முதியோர் இல்லத்துக்குத்தான் போக வேண்டும்.

Geriatrician என்று அழைக்கப்படுகின்ற முதியோர் துறைசார் மருத்துவர்கள் தமிழில் மிகக்குறைவு. அதுமட்டுமல்ல முதியோரைப் பராமரிப்பதற்கான பயிற்றப்பட்ட தாதியர்களும் தமிழ்பகுதிகளில் குறைவு. இக்கட்டுரையில் முன்பு குறிப்பிடப்பட்ட மானிப்பாய் கிரீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் முதியோர் பராமரிப்புக்கென்று பயிற்சிகளை வழங்கும்(Institute of Medical Sciences) “மருத்துவ விஞ்ஞான நிறுவனம்” என்ற நிறுவனம் உண்டு. 2013இலிருந்து முதியோரைப் பராமரிப்பதற்குரிய தொழில்சார் பயிற்சிகளை வழங்கிவருகிறது. இங்கு வழங்கப்படும் தொழில்சார் பயிற்சியானது இலங்கைத் தீவின் தேசிய தொழில்சார் தகமை மட்டத்தில் நான்காவது மட்டத்துக்குரியது. ஐந்தாவது தொழிற்சார் தகமை மட்டும்தான் டிப்ளமோ. அப்படிப் பார்த்தால் தமிழ்ப்பகுதிகளில் இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கும் முதியோரைப் பராமரிக்கும் தாதியர்கள் அனைவருமே குறைந்தபட்சம் டிப்ளோமா தரத்துக்குரிய தொழில் தகமையைக்கூட கொண்டிருக்கவில்லை.ஆனால் மேற்கத்திய நாடுகளில் அது நான்கு ஆண்டுகாலப் பட்டப்படிப்பாகவும் காணப்படுகிறது.

வடக்கில் மானிப்பாய் கிரீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் மட்டும்தான் அவ்வாறான கற்கை நெறி உண்டு. அதேசமயம் முதியோரியல் துறைக்குரிய மருத்துவ நிபுணர்களின் தொகையும் குறைவு.

ஆனால் தமிழர் தாயகத்தில் வடக்கில்  மட்டும் 60வயது கடந்த முதியோர் மொத்தம் இரண்டு இலட்சத்து 29ஆயிரத்து867பேருக்கு மேல் உண்டு. இதில் யாழ்ப்பாணத்தில் மட்டும் ஒரு லட்சத்து 54ஆயிரத்து 626 முதியோர் உண்டு. வடக்கில் மட்டும் மொத்தம் 28 முதியோர் இல்லங்கள் உண்டு. இவற்றுள் ஆகப் பெரியது கைதடியில் உள்ள அரச முதியோர் இல்லந்தான். அங்கே 200க்கும் குறையாத முதியோர் உண்டு. அதாவது வடக்கில் மட்டும் மொத்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 20 விகிதம் முதியவர்கள்.

எனக்குத் தெரிந்து புலம் பெயர்ந்துபோன பிள்ளைகளில் ஒரு பகுதியினர் தமது முதிய பெற்றோரைப் பராமரிப்பதற்காக ஊரில் குறிப்பிட்ட காலத்துக்கு வந்து தங்கி நிற்கிறார்கள். அதிகம் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோருக்கு தொடர்ச்சியாக யாராவது ஒரு பிள்ளை வீட்டில் நிற்கின்றது. அது ஒரு கொடுப்பினை. ஆனால் எல்லாருக்கும் இல்லை.

எனவே தமிழ் மக்கள் இதுதொடர்பில் வேகமாக முடிவெடுக்க வேண்டும். தாயகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் புலம் பெயர்ந்த தமிழர்களும் சேர்ந்து இதுதொடர்பாக பொருத்தமான முடிவுகளை  எடுக்கலாம். இதுவிடயத்தில் பின்வரும் விடயப்பரப்புகளின் மீது கவனத்தைக் குவிக்கவேண்டும். முதலாவதாக எத்தனை முதியவர்கள் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள் என்பது தொடர்பாக சரியான புள்ளி விபரங்களைச் சேகரிப்பது. இரண்டாவது, முதியோரை பராமரிப்பதற்கான நிறுவனங்களைக் கட்டியெழுப்புவது. மூன்றாவது,பராமரிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் கற்கை நெறிகளை குறைந்தபட்சம் தனியார் கல்விக் கட்டமைப்புகளுக்கு ஊடாகத் தொடங்குவது.இது ஒரு தேசியக் கடமை.

முதியோர் இல்லங்களைக் கட்டியெழுப்புவது என்பது தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் தேச நிர்மாணத்தின் ஒரு பகுதிதான். முதியோரைப் பராமரிப்பதற்கு மட்டுமல்ல கைவிடப்பட்ட முன்னாள் இயக்கத்தவர்கள், விதவைகள்,மாற்றுத் திறனாளிகள்,மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், போதைப்பொருள் பாவனையாளர்கள் போன்ற எல்லாத் தரப்பினரையும் பராமரிப்பதற்கான  கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இவையாவும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான கட்டமைப்புகள்தான்.

இனப்பிரச்சனைக்குத் தீர்வு வரும்வரையிலும் இந்தக் கட்டமைப்புகளை ஒத்தி வைக்க முடியாது. பராமரிக்கப்பட வேண்டிய பிரிவினர் பராமரிக்கப்படாமல் அனாதைகளாக விடப்படுவது என்பது ஒரு தேசிய அவமானம். எனவே தேசத்தைக் கட்டியெழுப்புவதன் ஒரு பகுதியாக மேற்கண்ட நிறுவனங்களைக் கட்டியெழுப்ப வேண்டும். நான் இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கும்போது எங்கேயோ ஒரு தொலை கிராமத்தில் யாரோ ஒரு முதியவர் உதவிக்கு ஆளில்லாமல் இறந்து போயிருக்கலாம்.

https://www.nillanthan.com/7852/

திருமணம் - ஒரு மோசமான ஒப்பந்தம் ..

3 months 2 weeks ago

திருமணம் - ஒரு மோசமான ஒப்பந்தம் ..

tamil-marriage-rituals.jpg

அன்புள்ள ஆண்களே..,

இது எல்லா ஆண்களுக்கும் அல்ல...

பெரும்பாலான ஆண்களுக்கானது...

நவீன திருமணம் உங்களுக்கு பயனளிக்காது.

திருமணம் என்பது பெரும்பாலும் ஆண்களுக்கு ஒரு மோசமான ஒப்பந்தம், பல திருமண கதைகள் பலருக்கு கொடூரமான யதார்த்தத்தை மட்டுமே எடுத்துக்காட்டுகின்றன.

ஒரு மனிதன் தனது முழு வாழ்க்கையையும் தியாகம் செய்வதில் செலவிடுகிறான் - நீண்ட நேரம் வேலை செய்தல், பள்ளிக் கட்டணத்தைச் செலுத்துதல் மற்றும் தனது குடும்பத்திற்கு வசதியான வாழ்க்கையை வழங்குதல். அவர் தனிப்பட்ட இன்பங்களைத் துறந்து, தனது கனவுகளைத் தள்ளி வைத்து, தனது குழந்தைகள் வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் கொட்டுகிறார். தன்னைச் சுற்றி அன்பு மற்றும் விசுவாசத்தின் கோட்டையைக் கட்டியுள்ளதாக நினைத்து ஓய்வு பெறுகிறார். ஆனால் உண்மை என்ன? அங்குதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர் தனியாக விடப்படுகிறார், அவர் எல்லாவற்றையும் தியாகம் செய்தவர்களால் ஒதுக்கி வைக்கப்படுகிறார்.

இதை உடைப்போம்:

1. அவருக்கு வயது 72, ஓய்வு பெற்றவர், தனியாக இருக்கிறார்.

அவருடைய அனைத்து ஆண்டுகால வேலை, மற்றும் வீடு கட்டுதல் ஆகியவை அவரது வயதான காலத்தில் அமைதிக்கு வழிவகுக்கும் என்று கருதப்பட்டது. அதற்கு பதிலாக, அவர் வெற்று அறைகளையும் தனிமையான இரவுகளையும் வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

2. அவரது மனைவிக்கு வயது 62. தங்கள் குழந்தைகளுடன் வாழ்க்கையை செலவிடுகிறார்.

ஏன்? ஏனென்றால், சமூகம் பெண்களுக்குக் கணவர்களை விடக் குழந்தைகளை முதன்மைப்படுத்தக் கற்றுக்கொடுக்கிறது. அவர் எவ்வளவு நல்லவராக இருந்தார், எவ்வளவு தியாகம் செய்தார் என்பது முக்கியமல்ல - குழந்தைகள் வளர்ந்தவுடன், கணவர் பெரும்பாலும் மனைவியின் வாழ்க்கையில் ஒரு சிறிய அங்கமாக மட்டுமே மாறுகிறார்.

3. அவரது குழந்தைகள் அரிதாகவே அவரிடம் பேசுகிறார்கள்.

அவர்கள் வெளிநாட்டிலோ, வெளியூரிலோ தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள், அங்கு அவர்களை அனுப்ப தனது முதுகெலும்பை உடைத்துக்கொண்ட மனிதனை மறந்துவிடுகிறார்கள். அவரது தியாகங்கள் இப்போது சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

4. அவர் இப்போது மீண்டும் ஒரு பிரம்மச்சாரி - 72 வயதில்.

ஒரு குடும்பத்தைக் கட்டி பராமரித்த இந்த மனிதர், இப்போது தன்னைத்தானே கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவர் நோய்கள், தனிமை மற்றும் தன்னைத் தவிர மற்ற அனைவரிடமும் தனது பணத்தை, தனது உடல் பலத்தை கொடுத்ததை உணர்ந்து போராடுகிறார்.

திருமணத்தில் ஆண்களுக்கான கடுமையான யதார்த்தம்

உண்மை என்னவென்றால், ஆண்கள் பெரும்பாலும் குறுகிய வட்டத்தில் அடைபடுகிறார்கள். இந்த அமைப்பு உங்களிடமிருந்து பறித்து உங்களை காலியாக விடுவதற்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு பிரச்சனையில்லை. அவர்களின் குழந்தைகள், சமூகம் ஆகியவற்றிலிருந்து ஆதரவைப் பெறுகிறார்கள். ஆனால் ஒரு ஆண்? கொடுக்கும் திறன் இல்லாதபோது அவரது பயன்பாடு முடிகிறது.

சமூகம் உங்களை "ஒரு ஆணாக இருங்கள்", "உங்கள் குடும்பத்திற்காக தியாகம் செய்யுங்கள்" என்று சொல்கிறது, ஆனால் உங்களுக்காக யார் தியாகம் செய்கிறார்கள்? உங்கள் மகிழ்ச்சி, உங்கள் ஆரோக்கியம், உங்கள் மன அமைதியை யார் உறுதி செய்கிறார்கள்? யாரும் இல்லை. கொடுப்பவராக உங்கள் பங்கு முடிந்ததும், நேற்றைய செய்தித்தாளை போல நீங்கள் நிராகரிக்கப்படுகிறீர்கள்.

இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

1. முதலில் உங்களை நேசியுங்கள்:

காலியான கோப்பையிலிருந்து எதையும் ஊற்ற முடியாது. உங்கள் உடல்நலம், உங்கள் பொழுதுபோக்குகள் மற்றும் உங்கள் மகிழ்ச்சியில் முதலீடு செய்யுங்கள். ஒரு கணவன் அல்லது தந்தையாக இருப்பதை மட்டுமே சார்ந்து இல்லாத, உங்களுக்கான ஒரு நேரத்தையும், வாழ்க்கையையும் உருவாக்குங்கள்.

2. உங்கள் ஓய்வு நேரத்தைத் திட்டமிடுங்கள்:

நீங்கள் எப்படி வாழ்வீர்கள் என்பதைக் கண்டுபிடிக்க வயதாகும் வரை காத்திருக்காதீர்கள். செயலற்ற வருமான வழிகளை (PASSIVE INCOME) உருவாக்கத் தொடங்குங்கள், புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள், மேலும் உங்களை நம்பியிருக்கக்கூடிய எதிர்காலத்தைப் பாதுகாக்கவும்.

3. எல்லைகளை முன்கூட்டியே அமைக்கவும்:

உங்கள் முழு அடையாளத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதில் நேரம் செலவிடாதீர்கள். நீங்கள் ஒரு மனிதன், ஒரு இயந்திரம் அல்ல என்பதை உங்கள் மனைவியும் குழந்தைகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

4. உங்கள் சொந்த சமூகத்தை உருவாக்குங்கள்:

வயதான காலத்தில் உங்கள் குடும்பத்தை மட்டுமே சார்ந்திருக்காதீர்கள். உங்கள் வீட்டிற்கு வெளியே உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தரும் நட்புகள், பொழுதுபோக்குகள் மற்றும் நெட்வொர்க்குகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

5. திருமணத்தைப் பற்றி யதார்த்தமாக இருங்கள்:

உங்கள் கண்களை அகலத் திறந்து வைத்து திருமணத்திற்குள் நுழையுங்கள். உங்கள் தியாகங்கள் அங்கீகரிக்க படாமல் போகலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். திருமணம் ஒரு சூதாட்டம், வாய்ப்புகள் அரிதாகவே உங்களுக்கு சாதகமாக இருக்கும். உணர்ச்சி ரீதியாகவும் நிதி ரீதியாகவும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இறுதி வரிகள்:

ஆண்களே, சமூகம் உங்களை வாழ்நாள் முழுவதும் அடிமைத்தனத்தில் தள்ள அனுமதிக்காதீர்கள். நீங்கள் ஒரு பணப்பையோ அல்லது வேலைக்கார குதிரையோ அல்ல. திருமணம், இன்றைய நிலையில், ஆண்களுக்கு, குறிப்பாக முதுமையில் சிறிய வெகுமதியை வழங்குகிறது. உங்கள் வாழ்க்கையை இப்போதே கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். எதிர்காலத்திற்காகத் திட்டமிடுங்கள். உங்கள் குடும்பத்தை நேசியுங்கள், ஆனால் முதலில் உங்களை நேசிக்க மறக்காதீர்கள்.

வாழ்த்துக்கள் நண்பர்களே.

புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது..

https://www.facebook.com/share/p/16Dbh9bZth/

டிஸ்கி :

தமிழக வாழ்வியல் சூழலில் இருந்து இந்த பேஸ்புக் கட்டுரையாளர் பதிவிடுகிறார்.. வெளிநாட்டில் நிலவரம் என்ன ரெல் மீ ..கிளியர் லீ ..?

Checked
Tue, 12/16/2025 - 10:49
சமூகச் சாளரம் Latest Topics
Subscribe to சமூகச் சாளரம் feed