அரசியல் அலசல்

தமிழ்க் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் அரசாங்கம்? நிலாந்தன்.

1 day 15 hours ago
spacer.png தமிழ்க் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் அரசாங்கம்? நிலாந்தன்.

ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய்மூல அறிக்கை அண்மையில் வெளிவந்தது.அதில் கூறப்பட்ட விடயங்கள் ஊடகங்களில் வெளிவந்தன.சில காணொளிகளும் அது தொடர்பாக வெளிவந்தன.அதற்கும் அப்பால் அது பற்றிய உரையாடல் பெரிய அளவில் நடக்கவில்லை. ஏனென்றால் தமிழ் மக்களுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் பல சோலிகள். எத்தனை விடயங்களைப் பற்றி தமிழ் மக்கள் சிந்திப்பது?

ஒருபுறம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தீர்வு இல்லை. இன்னொரு புறம் மேய்ச்சல் தரையை மீட்பதற்காக மட்டக்களப்பில் பண்ணையாளர்களும் செயற்பாட்டாளர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒப்பீட்டளவில் புதிய போராட்டம். அதற்கும் தீர்வு இல்லை. இவை தவிர இந்த மாதம் தொடக்கத்தில் சாந்தனின் உடல் நாட்டுக்கு வந்தது. அதன் பின் கடந்த சிவராத்திரி அன்று வெடுக்கு நாறி மலையில் பூசையில் ஈடுபட்டிருந்த மக்கள் மத்தியில் இருந்து எட்டுப் பேரை போலீஸ் கைது செய்தது.

இப்படி ஒன்றன்பின் ஒன்றாக ஏதாவது ஒரு புதுப் பிரச்சினை தோன்றிக் கொண்டேயிருக்கிறது. தமிழ் மக்களின் கவனமும் தமிழ் கட்சிகள், அரசியல் செயற்பாட்டாளர்களின் கவனமும், தமிழ் ஊடகங்களின் கவனமும் குறிப்பாக காணொளிக்காரர்களின் கவனம் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புதிய விடயத்தின் மீது குவிக்கப்படுகின்றது. இது தற்செயலான ஒன்றா? அல்லது திட்டமிட்டு தமிழ் மக்களின் கவனம் அவ்வாறு திருப்பப்படுகின்றதா?

இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கையில் சுட்டிக்காட்டப்படும் பல விடயங்களில் ஒன்று,அரசாங்கம் புதிதாக உருவாக்க முயற்சிக்கும் சட்டங்கள் மற்றும் உருவாக்கிய சட்டங்கள் பற்றியதாகும். நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பான சட்டம், சிவில் சமூகங்கள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய சட்டமூலம்.. போன்ற சட்டங்கள் மட்டும் சட்டமூலங்கள் தொடர்பாக தொடர்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் போதிய உரையாடல்கள் நிகழவில்லை.

குறிப்பாக நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக சுமந்திரன் ஒரு வழக்கைத் தொடுத்தார்.அந்தச் சட்டம் ஏன் தமிழ் மக்களுக்கும் பாதகமானது என்பதை பற்றி பெரிய அளவில் தமிழ் அரசியல் அரங்கில் விவாதங்கள் நடக்கவில்லை. அது மட்டுமல்ல இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பான சட்டமூலம், அரசு சார்பற்ற நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலம் போன்றவை தமிழ் மக்களையும் பாதிக்க கூடியவை. ஆனால் அவை தொடர்பாகவும் தமிழ் மக்களின் கவனம் பெரிய அளவில் ஈர்க்கப்படவில்லை.

ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பு புனர்வாழ்வு அதிகார சபை தொடர்பான ஒரு சட்டத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியபோது அதில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் காணப்பட்டார்கள் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. அதிலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு என்றும் சுட்டிக் காட்டப்பட்டது.

அம்பிகா சற்குருநாதன்-முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர்,இப்பொழுது ஐநாவில் ஒரு பொறுப்பான பதவியில் உள்ளார்- ஒரு காணொளியில் கருத்துத் தெரிவிக்கும் போது, மேற்படி சட்டங்களை வெள்ளை வானுடன் ஒப்பிடுகிறார். 2009க்கு முன்பு வெள்ளை வான் இருந்தது.அது தமிழ் மக்களை அச்சுறுத்தியது. இப்பொழுது அரசாங்கம் சட்டங்களைக் கொண்டு வருகிறது. அவற்றின் மூலம் தமிழ் மக்களை அச்சுறுத்துகின்றது என்று அவர் கூறியுள்ளார். மேற்படி சட்டங்கள், சட்டமூலங்கள் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் எதிரானவை. அவை தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் போதிய விவாதங்கள் நடக்கவில்லை.

இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். தமிழ் மக்களைப் பாதிக்கக்கூடிய சட்டமூலங்கள்,சாந்தனின் விவகாரம்,ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கை, கிழக்கில் மேய்ச்சல் தரைக்கான போராட்டம், வடக்கில் மரபுரிமைச் சொத்துக்களை பாதுகாப்பதற்கான போராட்டம்.. என்றெல்லாம் பல்வேறு விடயப் பரப்புகளின் மீது தமிழ் மக்கள் கவனத்தைக் குவிக்க வேண்டி இருக்கிறது.

மேற்படி விவகாரங்கள் தொடர்பான போராட்டங்களில் சில அரசியல் செயற்பாட்டாளர்களையும் ஒரு சாமியாரையும் தொடர்ந்து எல்லாப் படங்களிலும் காணொளிகளிலும் காணமுடிகிறது.சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இப்பொழுது அடிக்கடி காணப்படுகிறார்கள். அண்மைக்காலங்களில் பல்கலைக்கழக மாணவர்களைக் காண முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு பல்கலைக்கழக மாணவர்கள் மேச்சல் தரைக்காக போராடுவதற்கு என்று மட்டக்களப்புக்கு போனார்கள். திரும்பி வரும் பொழுது போலீசார் அவர்களைக் கைது செய்து சிறையில் வைத்தார்கள். அதன் பின் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களுக்கு வருவது குறைவு என்று ஒரு செயற்பாட்டாளர் சொன்னார்.

கடந்த சுதந்திர தினத்தன்று கச்சேரிக்கு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபற்றவில்லை. அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் வரவில்லை என்றும் அவர் சொன்னார். சாந்தனின் உடலை யாரிடம் பொறுப்புக் கொடுப்பது. என்ற கேள்வி வந்தபொழுது, முதலில் பல்கலைக்கழக மாணவர்கள் அதற்குத் தயாராக இருந்தார்கள்.ஆனால் பின்னர் அவர்கள் அதைப் பொறுப்பேற்கத் தயங்கினார்கள் என்று ஒரு தகவல் உண்டு. அதனால் தான் அது வேறு அமைப்புக்களிடம் கொடுக்கப்பட்டது என்று நம்ப படுகின்றது.ஒரு கைது நடவடிக்கையோடு பல்கலைக்கழக மாணவர்கள் அச்சப்படும் நிலைமை தோன்றியிருக்கிறதா?ஆனால் இந்தப் போராட்டங்களில் அதிகமாகக் காணப்படும் சாமியார் இதுக்கு முன் கைது செய்யப்பட்டிருக்கிறார்; விசாரணைக்கு அழைக்கப்பட்டுமிருக்கிறார்.அவர் தொடர்ந்து போராட்டங்களில் முன்னணியில் காணப்படுகிறார்.

ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு இந்த மே மாதத்தோடு 15 ஆண்டுகள் ஆகின்றன.15 ஆண்டுகள் எனப்படுவது பெரிய காலம். இக்காலப் பகுதிக்குள் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சிவில் சமூகங்களோ அல்லது மக்கள் அமைப்புகளோ தோன்றியிருக்கவில்லை. ஒரு குறுகிய காலம் தமிழ் மக்கள் பேரவை நொதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதுவும் பின்னர் இறந்து போய்விட்டது. இப்பொழுது கட்சிகள்தான் அரங்கில் நிற்கின்றன. இக்கட்சிகளும் கூட சிதறிக் கிடக்கின்றன. உள்ளதில் பெரிய கட்சி தமிழரசுக் கட்சி.அது யார் தலைவர் என்பதைத் தீர்மானிப்பதற்கு நீதிமன்றத்துக்கு போயிருக்கிறது.

இந்நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் ஒடுக்கு முறைகள், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகத் தொடர்ச்சியான போராட்டங்கள் இல்லை.தொடர்ச்சியான போராட்டங்களை எப்பொழுது நடத்தலாம் என்றால்,அதற்கு வேண்டிய பொறிமுறைகள் கட்டமைப்புகள் இருக்கும் பொழுதுதான். அப்படிப்பட்ட கட்டமைப்புகளை எப்பொழுது உருவாக்கலாம் என்றால், எல்லாரும் ஒன்றிணையும் போதுதான். ஆனால் ஒன்றிணைவு அல்லது ஐக்கியம் போன்ற விடயங்களைப் பற்றி உரையாடுவதே உள்நோக்கமுடையது என்று வியாக்கியானம் செய்யப்படுகின்றது.

தமிழ் சிவில் சமூகங்களை வெளிநாட்டு தூதர்கள் சந்திக்கும் பொழுது அவர்கள் பொதுவாகக் கூறும் விடயங்களில் ஒன்று, உங்களுக்குள் ஐக்கியம் இல்லை என்பது. குறிப்பாக இந்தியத் தூதரக அதிகாரிகள் சந்திப்புகளின் போது அதைத் திரும்பத் திரும்பக் கூறுவதுண்டு. அதை வைத்துக்கொண்டு தூதரகங்கள் அதை விரும்புகின்றன,எனவே அதில் ஏதோ சூது இருக்கிறது என்று ஒரு வியாக்கியானம் வேறு வைக்கப்படுகிறது.

“முதலில் நீங்கள் ஐக்கியப் படுங்கள் ” என்று கூறுவதன் மூலம் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல்வாதிகளின் வாயை அடைப்பதற்கு தூதரகங்கள் முயற்சிக்கக்கூடும். ஆனால் தூதரகங்கள் கூறுகின்றனவோ இல்லையோ தமிழ் மக்களுக்கு ஐக்கியம் தேவையா இல்லையா என்பதுதான் இங்குள்ள பிரதான கேள்வி. கடந்த 15 ஆண்டு கால தோல்விகளுக்கு ஐக்கியமின்மையே அடிப்படைக் காரணம் என்பதில் யாருக்காவது சந்தேகம் உண்டா?

ஐக்கியம்தான் பலம் என்று பாலர் வகுப்பிலிருந்து தமிழ் மக்கள் படிக்கிறார்கள். “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு”, “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு ” என்றெல்லாம் அறநெறிகளைப் போதித்து விட்டு, இப்பொழுது ஏன் ஐக்கியப்பட வேண்டும் என்று கேட்கும் ஒரு நிலை. ஐக்கியப்பட முடியவில்லை என்பதால்தான் இப்படிக் கேட்கப்படுகிறது. எங்களால் முடியாத ஒன்றை தேவையா என்று கேட்கும் அரசியல் வங்குரோத்து நிலை.

ஐக்கியத்தை ஏற்படுத்தத் தேவையான ஜனவசியம் மிக்க தலைமைகள் அரங்கில் இல்லை.எந்த ஒரு கட்சியும் ஏனைய கட்சிகளை கவர்ந்திழுக்கும் பலத்தோடும் சக்தியோடும் இல்லை. ஒவ்வொரு கட்சியும் தனி ஓட்டம்.கட்சிக்குள்ளேயே பிரமுகர்கள் தனி ஓட்டம். சிவில் சமூகங்களும் தனி ஓட்டம். அரசு சார்பற்ற நிறுவனங்களும் தனியோட்டம்.

தூதரகங்களைச் சந்திக்கப் போகும்போது தங்களுக்கு இடையே ஒன்று கூடிக் கதைத்து விட்டுப் போகும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மிகக் குறைவு. அவ்வாறு செல்லும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் வெளிநாட்டுத் தூதுவர்கள் முன் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.தங்களுக்கு இடையே முன்கூட்டியே உரையாடி யார்,எதைக் கதைப்பது என்பதனைத் தீர்மானித்து விட்டுச் செல்லும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் வெளிநாட்டுத் தூதுவர்களின் முன்னிலையில் சிறப்பாக கருத்துருவாக்கம் செய்கிறார்கள். அதை அரசியல் கட்சிகளும் பின்பற்றினால் என்ன?

கடந்த 15 ஆண்டுகளாக இதைத்தான் தொடர்ந்து எழுத வேண்டியிருக்கிறது. ஆனால் தமிழ்க் கட்சிகளும் சிவில் சமூகங்களும் தாங்களாக ஐக்கியப் படுகின்றனவோ இல்லையோ அரசாங்கம் அவர்களை ஐக்கியப் படுத்துகின்றது என்பது மட்டும் உண்மை. கடந்த வாரம் வெடுக்கு நாறி மலையில் சிவராத்திரி பூஜையில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்ட விடயம் ஒப்பீட்டளவில் கட்சிகளையும் செயற்பாட்டாளர்களையும் ஐக்கியப்படுத்தியிருக்கிறது. அது தற்காலிகமானது. ஆனாலும் எதிர் தரப்புத்தான் தமிழ்க் கட்சிகளை ஐக்கிய படுத்துகின்றது என்பதனை அது மீண்டும் நிரூபித்திருக்கிறது.

https://athavannews.com/2024/1373752

யு ரியூப்பர்களின் காலத்தில் தேசமாகச் சிந்திப்பது! நிலாந்தன்.

1 day 18 hours ago
யு ரியூப்பர்களின் காலத்தில் தேசமாகச் சிந்திப்பது! நிலாந்தன்.
adminMarch 17, 2024
 

பார்க்க ஆசையா இருக்கு எண்டாலும் மனதில ஒரு கவலை  இருக்கு

spacer.png

கடத்த ஒன்பதாந் திகதி வெடுக்குநாறி மலையில் சிவ பூசைக்குள் போலீஸ் புகுந்தது. எட்டுப் பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் சிறை வைக்கப்பட்ட அடுத்த நாள், 10ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்ற வெளியில் விமானப்படைக் கண்காட்சியின் கடைசி நாளன்று, ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே திரண்டார்கள்.

அங்கு திரண்ட சனத்தொகை சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வில் திரண்ட தொகைக்குக் கிட்ட வரும் என்று கூறப்பட்டாலும், அது ஒரு மிகை மதிப்பீடு என்று கருதப்படுகின்றது. எனினும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டார்கள் என்பது மட்டும் உண்மை.

தமது மரபுரிமைச் சொத்து ஒன்று ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராகவும், தமது வழிபாட்டு உரிமையை நிலை நிறுத்துவதற்காகவும் வெடுக்குநாறி மலையில் போராடிக் கொண்டிருக்கும் அதே மக்கள் மத்தியில் இருந்துதான் முற்ற வெளிக்கும் ஆட்கள் போனார்கள். இந்த முரண்பாட்டை எப்படி விளங்கிக் கொள்வது?

வெடுக்கு நாறி மலைக் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர், முற்றவெளிக்குப் போன மக்களைக் கடுமையாக விமர்சித்தார். 15 ஆண்டுகளுக்கு முன் நடந்தவற்றை மறந்து முற்றவெளிக்குப் போன மக்கள் மீது அவருக்குக் கோபம். அந்தக் கோபம் நியாயமானது. ஆனால் அதைவிட ஆழமான, நியாயமான ஒரு கேள்வி உண்டு. அது என்னவெனில், தமது சொந்த அரசியலின் மீதும் நேரடியான மற்றும் மறைமுக ஒடுக்குமுறைகளின் மீதும் தமிழ் மக்களின் உணர் திறனை விழிப்பை அதிகப்படுத்தும் நிகழ்ச்சி நிரல் எந்தக் கட்சியிடம் உண்டு?

ஒரு மக்கள் கூட்டத்தின் பொதுப் புத்தி அப்படித்தான் இருக்கும். அது வாழ்க்கையைக் கொண்டாடக் கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களையும் தேடிப் போகும். மக்களுக்கு பொழுது போக வேண்டும். அதுதான் அவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பண்ணை வெளிக்கு வருகிறார்கள். யாழ்ப்பாணத்தின் ஏனைய உல்லாசத் தலங்களுக்குப் போகின்றார்கள். வசதி குறைந்தவர்கள் பண்ணைக்கும் ஏனைய சிறு பூங்காக்களுக்கும் போகின்றார்கள். வசதி கூடியவர்கள் யாழ்ப்பாணத்தின் நட்சத்திர அந்தஸ்துடைய விருந்தினர் விடுதிகளுக்கு போகின்றார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்பு வரும்பொழுது தங்கள் சொந்தக்காரர்களின் வீடுகளில் தங்குவதுண்டு. இப்பொழுது கணிசமானவர்கள் விருந்தினர் விடுதிகளில் தங்குகிறார்கள். அதற்காக லட்சக்கணக்கில் செலவழிக்கின்றார்கள்.

அதாவது சமூகத்தின் வெவ்வேறு மட்டங்களில் இருப்பவர்கள் தங்கள் தங்கள் நிதித் தகமைக்கு ஏற்ப வாழ்க்கையைக் கொண்டாட விரும்புகிறார்கள். குறிப்பாக ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை வாழ்க்கையைக் கொண்டாட விரும்பும் அநேகருக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் ஒரு முன்னுதாரணம். மூன்றாவது புலப்பெயர்ச்சி அலைக்கு அது பிரதான காரணம்.

இப்படியாக வாழ்க்கையைக் கொண்டாட ஆசைப்படும் ஒரு மக்கள் கூட்டத்தை அவர்களுடைய சொந்த அரசியலின் மீது உணர்திறண் மிக்கவர்களாக மாற்றுவது எப்படி? அதை யார் செய்வது?

விமானப்படைக் கண்காட்சிக்கு வந்த ஒரு நோர்வேத் தமிழர் கூறுகிறார் “பார்க்க ஆசையா இருக்கு, எண்டாலும் ஒரு கவலை இருக்கு மனதில ” என்று. ஆசையாக இருக்கிறது என்பது வாழ்க்கையை கொண்டாட ஆசையாக இருக்கிறது என்று பொருள். கவலை இருக்கிறது என்பது இறந்த காலத்தில் தமிழர்கள் பட்ட துயரங்களை நினைக்கும் போது ஏற்படுவது.

ஆனால் அது இறந்த காலமல்ல, நிகழ்காலமுந்தான். அதனால்தான் வெடுக்கு நாறி மலையில் போராட வேண்டியிருக்கிறது; மயிலத்தமடுவில், மாதனையில் போராட வேண்டியிருக்கிறது; காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அன்னையர்கள் தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது. போர் ஒரு விளைவு மட்டுமே, மூல காரணம் அல்ல. ஒடுக்கு முறைதான் மூல காரணம். அது இப்பொழுதும் உண்டு.

எட்டுப் பேர் கைது செய்யப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் முற்றவெளிக்குப் போயிருக்கிறார்கள். அங்கே படையினர் பரசூட்டில் இறங்குவதைப் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். உலங்கு வானூர்தியில் ஏறுவதற்காக முண்டியடிக்கிறார்கள். அதைப் பெரும்பாலான யு ரியூப்பர்கள் கவர்ச்சியாக விற்கிறார்கள்.


இது யுடியூப்பர்கள் காலம். வாசிப்பதற்கான பொறுமை குறைந்து வருகின்றது. கேட்பதற்கான தாகம் அதிகரித்து வரும் ஒர் ஊடகச் சூழல். யுடியூப்பர்கள் எத்தனை பேர் தேசத்தை கட்டியெழுப்பும் பொறுப்புணர்ச்சியோடு செயல்படுகிறார்கள்? தான் பரப்புவது வதந்தியா செய்தியா என்று எத்தனை யுடியூப்பர்களுக்குத் தெரியும்? எத்தனை யுடியூப்பர்கள் தமிழுக்கு வெளியே போய் வாசிக்கின்றார்கள்? எத்தனை யுடியூப்பர்கள் தாங்கள் வெளியிடும் தகவலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துகிறார்கள்? இதை இன்னும் கூர்மையாகக் கேட்டால் ஒரு யுடியூப்பருக்கு என்ன தகைமை இருக்க வேண்டும்? ஒரு நல்ல கமராவும் வேகமான இன்டர்நெற்றும் இருந்தால் மட்டும் போதுமா? தாங்கள் கூறும் விடயத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வு எத்தனை யுடியூப்பர்களுக்கு உண்டு?

கடந்த சுதந்திர தினத்தன்று, ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். அவருடைய வருகைக்கு எதிராக கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் பழைய பூங்கா வீதியில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்த வீதியின் குறுக்கே போலீஸ் ஒரு பேருந்தை நிறுத்தி வைத்திருந்தது. அவ்வாறு பழைய பூங்கா வீதி முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதை எதிர்த்து அந்த வீதி வழியாக காரில் வந்த ஒருவர் போலீசாரோடு முரண்படுகிறார். அது தொடர்பாக ஒரு யுடியூப்பர் செய்தி வெளியிடுகையில் “காரில் வந்த இந்தியர், பார்த்து மிரண்ட இலங்கை போலீஸ்” என்று தலைபிடுகிறார். அக்காணொளி ஆறு லட்சத்து எட்டாயிரம் பேர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் பொலிசாரைக் கேள்வி கேட்கும் நபர் ஒர் இந்தியர் அல்ல. சுயாதீன திருச்சபை ஒன்றின் பாஸ்டர். அவருடைய காரின் “டாஷ் போர்ட்” பகுதியில் இந்திய தேசியக்கொடி காணப்படுகின்றது. அதை வைத்து அவர் ஒரு இந்தியர் என்று யுரியூப்பர் கூறுகிறார். ஆயின்,ஆறு லட்சத்துக்கும் அதிகமானவர்களிடம் அந்தப் பொய் சென்று சேர்ந்திருக்கின்றதா?

இலங்கையில் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்ட பொழுது ஓர் இந்திய யுடியூபர் கூறினார், வெள்ளைக்காரர்கள் வாங்கி வைத்திருக்கும் பாணை உள்ளூர் மக்கள் பறித்துக் கொண்டு ஓடுவதாக. அது ஒரு பொய்.


பெரும்பாலான யுரியூப்பர்கள் தமது காணொளிகளைப் பார்பவர்களின் தொகையை எப்படி கூட்டுவது என்று தான் சிந்திக்கிறார்கள். பார்ப்பவர்களின் தொகை கூடக்கூட வருமானம் பெருகும். எனவே பெரும்பாலானவர்கள் உழைப்பை எப்படிப் பெருக்குவது என்றுதான் சிந்திக்கின்றார்கள். இது ஓர் ஆபத்தான வளர்ச்சி. யு ரியூப்பர்களின் காலத்தில் உண்மை எது? பொய் எது? ஊடக அறம் எது? உழைப்பு மட்டும்தான் யூரியுப் தர்மமா? சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு, தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு யு ரியூப்பர்ளுக்கு இல்லையா? வாசகரை அல்லது பார்வையாளரை விமர்சனபூர்வமாகச் சிந்திக்கும் விழிப்புடைய பிரஜைகள் ஆக்குவதே தேசத்தைக் கட்டியெழுப்பும் ஊடகவியலாளரின் வேலை.
எனவே யுடியூப்பர்களின் காலத்தில் தேசத்தைக் கட்டியெழுப்புவது எத்தனை சவால்கள் மிக்கது என்பதனை விமானப்படை கண்காட்சி தொடர்பாக வெளிவந்த பெரும்பாலான யுடியூப்கள் மீண்டும் நிரூபித்தன. இது அரசியல் கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் பணி மேலும் கடினமாக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

இப்படிப்பட்டதோர் ஊடகச் சூழலில், முற்றவெளியில் திரளும் மக்களைத் திட்டித் தீர்ப்பதனால் தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாது. தமது சொந்த அரசியலின் மீது அந்த மக்களை எப்படி உணர் திறண் மிக்கவர்களாக மாற்றுவது என்று கட்சிகள் சிந்திக்க வேண்டும். அதற்கு வேண்டிய வழிவகைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். தேசியவாத அரசியல் என்பது மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது. தேசத்தை கட்டியெழுப்பும் கலையை; பண்பாட்டை; அறிவியலை; தேசத்தைக் கட்டியெழுப்பும் யுடியூப்பர்களை; தேசத்தைக் கட்டியெழுப்பும் ஊடகக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

இப்படி எழுதுவதுகூட சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கலாம். ஏனென்றால் வான்படைக் கண்காட்சி தொடர்பாக படித்தவர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்களில் அதைக் காண முடிந்தது. எல்லா பிரச்சினைகளும் முடிந்து விட்டன; நாங்கள் இப்பொழுது சந்தோஷமாகத்தான் இருக்கிறோம்; கண்டதையும் எழுதிக் குழப்பாதீர்கள்; மக்கள் சந்தோஷமாக இருக்க விரும்புகிறார்கள்; அவர்களை மீண்டும் பலியாடுகள் ஆக்காதீர்கள்… என்று கூறும் ஒரு போக்கு அதிகரித்து வருகிறது. மக்களைத் தமது நிகழ்காலத்தின் மீது உணர் திறண் மிக்கவர்களாக மாற்ற முற்படும் எழுத்துக்களுக்கு வாசிப்பும் வரவேற்பும் குறைந்து வருகிறது.

பதிலாக மாயைகளின் மீதும் பொருளற்ற மகிழ்ச்சியின் மீதும் பொய்களின் மீதும் கட்டுக் கதைகளின் மீதும் தாகம் கொள்ளச் செய்யும் ஊடக கலாச்சாரம் மேலெழத் தொடங்கிவிட்டது. வெறுப்பர்கள்-haters-எல்லாவற்றையும் எதிர்மறையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சில மாத கால இடைவெளிக்குள் யாழ்ப்பாணம் முற்ற வெளியில் மக்கள் பெருந்திரளாகக் கூடிய நிகழ்வுகளிலிருந்து தமிழ் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் குடிமக்கள் சமூகமும் புத்திஜீவிகளும் கலைஞர்களும் ஊடகங்களும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆழமான வாசிப்புக் குறைந்து, ஆழமான யோசிப்பும் குறைந்து,மேலோட்டமானவைகளை நோக்கி மொய்க்கும் ஒரு ஜன சமுத்திரத்தை புதிய ஊடக மரபு உற்பத்தி செய்து வருகிறது. செயற்கை நுண்ணறிவின் புதிய வளர்ச்சிகளின் பின்னணியில் “டீப் ஃபேக்” – deepfake- என்று அழைக்கப்படும் ஆழமான போலி உருவாக்கப்படுகின்றது. அது ஒரு வெகுசனப் பண்பாடாக வளர்க்கப்படுகிறது. ஆழமான பொய்களின் மத்தியில்; மறதி அதிகமுடைய ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில்; தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.

 

https://www.nillanthan.com/6615/

 

தமிழரசுக் கட்சியிடம் இரண்டு யாப்பா??

1 day 18 hours ago
தமிழரசுக் கட்சியிடம் இரண்டு யாப்பா??

— கருணாகரன் —

நீதிமன்ற வழக்கை முடித்துக் கொண்டு வெளியேறினாலும் தமிழரசுக் கட்சிக்குப் பிரச்சினைகளும் தலையிடியும் மேலும் மேலும் கூடுமே தவிர, குறைந்து விடாது.  அதற்கு உள்ளும் புறமுமாகக் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு அணையுமென்றில்லை. அது நீண்ட நாட்களாகத் தொடர்ந்து கனன்று கொண்டிருந்த தணலின் விளைவு.

முதலில் அதனுடைய யாப்புத் தொடர்பான பிரச்சினை.

“தேர்தல் திணைக்களத்திற்குக் கொடுக்கப்பட்ட – காட்டப்பட்ட  – யாப்பு வேறு. கட்சியின் நடைமுறையில் உள்ள யாப்பு வேறு” என்று ஒரு வலிமையான குற்றச்சாட்டு கட்சியின் முக்கியமான உறுப்பினர்களிடையே உண்டு. இதனால் ஏற்பட்ட சிக்கலே இப்பொழுது நீதிமன்றம் வரையில் செல்லும் நிலையை ஏற்படுத்தியது.

அதாவது சட்டபூர்வமான யாப்பு ஒன்றாகவும் கட்சியின் நடைமுறைகளின்போது பின்பற்றப்படும் யாப்பு இன்னொன்றாகவும் இருந்துள்ளது என்று இது பொருள்படும்.

ஏறக்குறைய எழுதப்படாத இரண்டாவது யாப்பின்படியே (நழுவல் யாப்பு) காரியங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இதற்கு அண்மைய உதாரணம், மத்திய செயற்குழுவினரும் ஒவ்வொரு தொகுதிக் கிளையிலும்  தெரிவு செய்யப்பட்ட ஐந்து உறுப்பினரும் பொதுச்சபை உறுப்பினராவர்.  இதற்கமைய ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் தலா ஐந்து உறுப்பினர்களே பொதுச்சபை உறுப்பினர்கள். இதன்படி 25 தொகுதியிலும் 125 உறுப்பினர்கள். மத்திய குழு உறுப்பினர்கள் 41. எனவே மொத்தம் 166 உறுப்பினர்களே பொதுச் சபை அங்கத்தவர்கள் ஆகும். (விதி 07  (ஆ))

ஆனால் தலைவர் தெரிவின்போது  321பேர் வாக்களிப்பில் பங்கேற்றிருக்கின்றார்கள்.

இது எப்படி நடந்தது?

இதுதான் தமிழரசுக் கட்சியினுடைய யாப்பின் விசித்திரம். தலைமையின் சிறப்பு.

மேலும் சொல்வதென்றால்,  யாப்பு விதியின்படி தலைவர் தெரிவின் பின்னரான அனைத்துத் தெரிவுகளையும் புதிய தலைவரின் தலைமையில் பொதுச்சபையே தீர்மானித்திருக்க  வேண்டும். எந்தச் சூழலிலும் மத்தியசெயற்குழு கூட்டப்பட்டு பதவிநிலைகள் தீர்மானிக்கப்படும் என்றோ அதற்கு பொதுச்சபையிடத்தில் அனுமதி பெறும் முறைமையொன்று யாப்பில் கூறப்படவில்லை.

ஆனால், இதையெல்லாம் மீறியே செயலாளர் தெரிவு உட்பட ஏனைய விடயங்கள் நடந்தன. ஏறக்குறைய புதிய தலைமை உட்பட நிருவாகத்தெரிவு விடயத்தில் யாப்பைக் கடந்து 15 க்கும் மேற்பட்ட விடயங்களை சென்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“எல்லாத்துக்கும் நாங்கள் யாப்பை வைத்துத்தான் செயற்பட வேண்டுமென்றில்லை” என்று அதனுடைய தலைவர் மாவை சேனாதிராஜா இந்த நெருக்கடிகளின்போது சொன்னதை இங்கே நினைவு கொள்ளலாம்.

தமிழ் மக்களின் மிகப் பெரிய கட்சி, பாரம்பரியம் மிக்க கட்சியின் நிலைமையையும் நடத்தைச் சிறப்பையும் பார்த்தீர்களா?

இப்படிச் சொன்ன மாவைக்கு நீதிமன்றம் தக்க பாடம் படிப்பித்துள்ளது.

ஆம், இது போன்ற தவறுகளால் யாப்பு, இப்பொழுது கட்சிக்கே ஆப்பு வைத்துள்ளது. அதாவது யாப்பின் பலவீனங்களும் யாப்பைப் பலவீனப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட தலைமை உறுப்பினர்களின் செயல்களும் கட்சியை முடக்கும் நிலைக்குள்ளாக்கியுள்ளன. கட்சியைச் சந்தி சிரிக்க வைத்துள்ளன.

யாப்புத் தவறுகளை முன்னிறுத்தியே யாழ்ப்பாணம், திருகோணமலை நீதிமன்றங்களில் கட்சிக்கு எதிரான வழக்குகள் யாப்பு விதிகளை வலியுறுத்தும் தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்டன.

இவ்வளவுக்கும் தமிழரசுக் கட்சிக்குள் ஏராளம் சட்டவாளர்கள் உள்ளனர். கட்சியின் உருவாக்குநர்களான எஸ்.ஜே.வி. செல்வநாயகம், திருச்செல்வம், நாகநாதன் தொடக்கம் சம்மந்தன், சுமந்திரன், தவராஜா வரையில் பல சட்டவாளர்கள். இருந்தும் யாப்புக் குழப்பமும் குறைபாடுகளும் நீடிக்கிறது என்றால் பதவியில் குறியாக இருப்பதைப்பற்றியே ஒவ்வொருவரும் சிந்திக்கின்றனரே தவிர, கட்சியின் எதிர்காலத்தையோ மக்கள் நலனையோ அல்ல என்பது தெளிவாகிறது.

இந்தத் தவறுகளிலிருந்தும் இந்தப் போக்கிலிருந்தும் தமிழரசுக் கட்சி தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அது எளிய விசயமல்ல. அப்படிச் செய்ய வேண்டும் என்றால் கட்சியின் தலைமைப் பதவியிலிருப்போரும் மூத்த தலைவர்களும் தங்களைச் சுய விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும். கூடவே பல நிலைகளில் விட்டுக் கொடுப்புகளைச் செய்ய வேண்டும். அதாவது தகிடு தத்தங்களைக் கைவிட்டு, கட்சியை நேர்மையாக வழிநடத்த வேண்டும். யாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றுவதுடன், அதிலுள்ள குறைபாடுகளும் களையப்பட வேண்டும்.

இதற்கு யார் தயார்?

அடுத்தது, வாய்ப்பேச்சு அரசியலிலிருந்து விடுபட்டுச் செயற்பாட்டு அரசியலில்தமிழரசுக்கட்சி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். இதனை “சூனிய அரசியல்” என்று சொல்கிறார், விடுதலை இயக்கமொன்றில் செயற்பட்ட சார்ள்ஸ் என்ற மூத்த போராளி. தமிழரசுக் கட்சியின் அரசியல் போதாமைகளை – அதனுடைய வளர்ச்சியின்மையைப் பார்க்க  வேண்டும் என்றால் 1960, 1970 களின் சுதந்திரன் பத்திரிகையையும் இப்பொழுது தமிழரசுக் கட்சியின் தலைவர்களின் பேச்சுகளையும் கவனித்தால் இது தெரியும்.

அன்றும் இன்றும் அது வெறும் பிரகடனங்களை (பீத்தல்களை) வாய்ச்சவடால்களாக அடிப்பதையே தன்னுடைய அரசியல் முறைமையாகக் கொண்டுள்ளது. அது அரசாங்கத்துக்கு 50 ஆண்டுகளாக விடுத்த எந்த எச்சரிக்கையும் கண்டனமும் பதிலடியும் விளைவுகளை உண்டாக்கியதில்லை. பதிலாக அவற்றைக் குறித்து மக்கள் சிரிக்கும் நிலையே உருவாகியது. அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் சிரிப்பதற்கான பகடியாக இருந்தது – இருக்கிறது. என்பதால்தான் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசும்போது சிங்கள உறுப்பினர்கள் அதைப் பொருட்படுத்துவதுமில்லை. அவர்கள் அங்கே இருப்பதுமில்லை.  இவர்கள் தமிழ்ப்பத்திரிகைகளில் செய்தி வர  வேண்டும் என்பதற்காகவே பேசுகிறார்கள் என்பார் நண்பர் ஒருவர். இதுதுான்  இறுதியில் தீபாவளிக்குத் தீர்வு, பொங்கலுக்குத் தீர்வு என்று தலைவர் சம்மந்தன் சொன்னதை வைத்துச் சம்மந்தனையே பகடி செய்யத் தொடங்கினர் சனங்கள். ஆழ்ந்து நோக்கினால் தமிழரசுக் கட்சியின் கையாலாகத்தனத்தை இதில் தெளிவாக உணரலாம். அது வந்து கோமாளித்தனமான தலைவர் தெரிவு வரையில் வந்து சீரழிவில் நிற்கிறது. 

ஆகவே 75 ஆண்டுகால அரசியற் பயணத்தில் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களுக்கு எத்தகைய அரசியல் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தது? தமிழ் மக்களுடைய அரசியல், பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிக்கும் நிலப் பாதுகாப்புக்கும் என்ன வகையிலான பங்களிப்புகளைச் செய்தது? அவற்றின் விளைவுகள் எவ்வாறான நற்பலன்களை விளைத்துள்ளன? போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் பிரதேசங்களையும் அது மீள்நிலைப்படுத்தியுள்ளதா? அப்படியென்றால் அதை அது எப்படிச் செய்யது? எங்கே செய்தது? குறைந்த பட்சம் போருக்குப் பிந்திய அரசியலையும் சமூகத்தையும் எப்படிக் கட்டமைத்தது? முன்னெடுத்தது? என்றும் கணக்கிட வேண்டும். கட்சியும் அதை மக்களுக்குச் சொல்ல வேண்டும். அந்தக் கட்சியை ஆதரிப்போரும் இருக்குப் பதிலளிக்க வேண்டும். அந்தக் கடப்பாடு இன்று தவிர்க்க முடியாமல் உருவாகியுள்ளது.

குறைந்த பட்சம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய மறுவாழ்வுப் பணிகளிலும் யுத்த அழிவுப் பிரதேசங்களை மீளுயிர்ப்புச் செய்வதிலும் அது ஆற்றிய பணிகள் என்ன? அதனுடைய பெறுமானங்கள் – அடையாளங்கள் என்ன என்றபது அவசியமாக அது தெளிவுபடுத்த வேண்டும்.

மூத்தகட்சி, பெரிய கட்சி என்ற அடிப்படைத் தகுதியை அது கொள்வதாக இருந்தால் இன்று உலகமெங்கும் பரவிப் பலமடைந்திருக்கும் புலம்பெயர் மக்களை அது ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும்.

அதைப்போல அது, தன்னுடைய ஒழுங்கமைப்பின் கீழும் ஒருங்கிணைப்பிலும் ஏனைய தமிழ்க்கட்சிகளைச் சேர்த்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல், அதற்கு எதிராக, ஏற்கனவே ஒருங்கிணைந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சிதைத்தது. தமிழரசுக் கட்சியின் ஜனநாயக மறுப்பும் எதேச்சாதிகாரப் போக்குமே ஏனைய பங்காளிக் கட்சிகள் விலகிச் செல்லக் காரணமாகின.

இதையெல்லாம் யார் மறுக்க முடியும்?

இப்படிச் செயற்பாடு எதுவுமே இல்லாமல், எதிர்மறையாக மக்களுக்கும் சமூகத்துக்கும் விளைவுகளை – பாதிப்புகளை உண்டாக்கும் கட்சியை எளிதில் சீராக்க விட முடியாது. அதற்கு மிகப்  பெரிய அளவில் மாற்றத்தை உள்ளேயும் வெளியேயும் உருவாக்க வேண்டும்.

இதற்கு அது தன்னுடைய வெற்றுப் பிரகடனங்களிலிருந்து விடுபட வேண்டும். மக்களையும் கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் ஏமாற்றும் அரசியலைக் கைவிட வேண்டும். தன்னை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும். உழுத்துப் போன வீட்டை அல்லது கட்டிடத்தை நாம் இடித்துப் புனரமைப்பதில்லையா? அப்படி முழுமையாக மாற்றி அமைக்க  வேண்டும். 

சொந்த வாழ்க்கையில் நாம் தேவையற்றதையெல்லாம் கழித்து ஒதுக்கி விட்டு, புதியவைகளை வாங்கிக் கொள்கிறோம். அல்லது உருவாக்கிக் கொள்கிறோம். அது வீடாக இருக்கலாம். பொருட்களாக இருக்கலாம். துணிமணிகளாக இருக்கலாம். ஏன், மிகப் பெறுமதியான நகைகளாகக் கூட இருக்கலாம். காலத்துக்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைப்பது அவசியமானது. 

வேண்டப்படும் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இன்னும் அது தமிழ் மக்களின் தலைமைக் கட்சியாகப் பேராதரவோடு இருக்கிறது என்றால்….

தமிழ் மக்களின் அரசியற் தலைவிதியை என்னவென்று சொல்வது? அவர்களுடைய அரசியல் அறிவை, புத்திஜீவித்தனத்தை எப்படிக் கூறுவது?

அடுத்தது, தமிழரசுக் கட்சியின் எதிர்காலத்துக்கான அரசியலைப் பற்றியது.

தமிழரசுக் கட்சிக்குள் இரண்டு வகையான அரசியற் போக்குண்டு.

1.      சம்மந்தன், சுமந்திரன், குகதாசன் போன்றோர் முன்னெடுக்கின்ற ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்ற வகையிலான அரசியல். இதற்காக அவர்கள் முஸ்லிம், மலையக, சிங்களத் தரப்பினரோடும் ஒரு மென்னிலை இணக்கப்பாட்டு உறவைப் பேணி வருகின்றனர். கூடவே விடுதலைப் புலிகள் முன்னெடுத்த தீவிர நிலைப்பாட்டை தவிர்க்கின்றனர். இதைப்பற்றி தலைவர் தெரிவு நடைபெற்ற பிறகு ஊடகவியலாளர் சிவராஜாவுக்கு வழங்கிய யுடியூப் நேர்காணலில் திரு சுமந்திரன் தெளிவாகவே சொல்கிறார். தலைவர் தெரிவில் தான் தோற்றிருந்தாலும் தன்னுடைய நிலைப்பாட்டை விட்டு விடப் போவதில்லை என. அது சரியானது என்றும் அவர் வாதிடுகிறார். இதனால்தான் அவர் தனியே உலக நாணய நிதியத்தின் நிதிப் பயன்பாடு பற்றிய அரசாங்கத்தின் உரையாடலில் துணிவாகச் சென்று  பங்கேற்றுள்ளமையும் நிகழ்ந்திருக்கிறது. 

2.      சிறிதரன், மாவை, அரியநேத்திரன், சிறிநேசன் போன்றோர் முன்னெடுக்கும் தீவிரத் தமிழ்த்தேசியவாத அரசியல். இதற்கான செயல்வடிவத்துக்கு அப்பால், இவர்கள் விடுதலைப் புலிகளின் தொடர்ச்சி தாமே என்று கருதிக் கொண்டு மேற்கொண்டு வரும் தனியாவர்த்தனம்.

இதுவரையிலும் கூட இந்த இரண்டு போக்கும் கட்சிக்குள்ளிருந்தன. ஆனால் இப்போதுள்ளதைப்போல அதுவொரு பெரிய வெடிப்பாக வரவில்லை. இந்த இரண்டு போக்குகளையும் பயன்படுத்தி அரசியல் அறுவடையைத் தமிழரசுக் கட்சி செய்து வந்தது. சிறிதரன் புலிக்கொடியை ஏந்துவார். சம்மந்தன் சிங்கக் கொடியைத் தூக்குவார். புலிகளை ஆதரிப்போரின் வாக்குகளும் அதற்குக் கிடைத்தன. அவர்களை எதிர்ப்போரின் வாக்குகளும் கிடைத்தன.

இதற்கான முடிவு ஏறக்குறைய வந்துள்ளது எனலாம்.

அடுத்தது, இப்போதுள்ள நிலையில் சிறிதரன் அணி மீண்டும் (நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு) தலைமையேற்றால் இன்னொரு பிரச்சினை தமிழரசுக் கட்சிக்குண்டு. சிறிதரன் மேற்கொள்கின்ற அதே தீவிர அரசியலையே கஜேந்திரகுமாரின் அணியும் மேற்கொள்கிறது. ஆகவே இரண்டு தரப்பும் களத்தில் நேருக்கு நேர் மறுபடியும் மோதக் கூடிய நிலை ஏற்படக் கூடிய சூழல் உருவாகியிருக்கிறது.

இது முன்னொரு காலம் அகில கஜேந்திரகுமாரின் பாட்டனாரான ஜீ.ஜீ. பொன்னம்பத்தின் இலங்கைத் தமிழ்க்காங்கிரசும் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் மோதியதைப்போன்றிருக்கும்.

ஆனால் அன்று  வெவ்வேறு நிலைப்பாடுகளுடன் மோதல் நடந்தது. அதனால் ஜீ.ஜீ. தோற்றார். செல்வநாயகம் வென்றார். இங்கே இருதரப்பும் ஒரே நிலைப்பாட்டில் மோதப் போகிறது. 

ஆகவே இது மீளவும் தமிழரசுக் கட்சிக்கு இன்னொரு நெருக்கடியாகவே இருக்கும். அதேவேளை அது இந்த நிலைப்பாட்டில் இருந்தால் தமிழ்ச்சமூகம் மேலும் நெருக்கடியைச் சந்திப்பதோடு, நாட்டிலிருந்து வெளியேறுவோரின் எண்ணிக்கையை மேலும் கூட்டும்.

சுமந்திரன் தரப்பு வெற்றியடைந்தால் அதுவும் நெருக்கடியைச் சந்திக்கும். இனப்பிரச்சினையைத் தீர்ப்பது – அரசியற் தீர்வைக் காண்பது தொடக்கம் தமிழ்ச்சமூகத்தை பொருளாதாரம் உட்பட அனைத்துத் தளங்களிலும் கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். இது எளிதான விசயமல்ல.

இதற்கும் கடுமையாக உழைக்க வேண்டும்.

ஆகவே தமிழரசுக் கட்சிக்கு தொடர் நெருக்கடிகளும் தவிர்க்கவே முடியாத கடப்பாடுகளும் (பொறுப்புகளும்) வரலாற்று ரீதியாக வந்து சேர்ந்துள்ளன. இனியும் அதனால் முன்னரைப்போல சுழித்தோட (தப்பியோட) முடியாது. பொறுப்புச் சொல்லியே ஆக வேண்டும்.

 

 

https://arangamnews.com/?p=10549

கோட்டாவை விரட்டியது சதியா? விதியா?

3 days 20 hours ago
கோட்டாவை விரட்டியது சதியா? விதியா?

எம்.எஸ்.எம்.ஐயூப்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2022ஆம் ஆண்டு தாம் ஜனாதிபதி பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டதைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.

அது ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

“ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி” என்பதே அதன் பெயராகும். வெளிநாட்டு சதியொன்றின் மூலமே தாம் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டதாக அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், சதிக்குத் தலைமை தாங்கிய அந்த வெளிநாட்டுச் சக்தி எது என்பதை அவர் அதில் குறிப்பிடவில்லை.

அதேவேளை, தம்மையும் தமது அரசாங்கத்தையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அவர் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரை குறை கூறியிருக்கிறார். தேசியப் பாதுகாப்பும் புலனாய்வுத்துறையும் முற்றாக சீரகுலைந்தமையே தமது அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் அவர் கூறுகிறார்.

அத்தோடு, தாம் சிங்கள பௌத்த மக்களின் ஆதரவிலேயே பதவிக்கு வந்ததாகவும் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் ஒன்று ஆறு மாதங்களில் நடைபெறவிருக்கும் நிலையிலேயே அவர் தமது புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்.

எனவே, அத்தேர்தலில் அவரது குடும்ப கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு மக்களிடம் அனுதாபத்தைத் தேடிக் கொடுக்கும் முயற்சியாகப் பலர் இப்புத்தக வெளியீட்டைக் கருதுகின்றனர்.

குறிப்பாகத் தாம் சிங்கள பௌத்த வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டதை அதனால் தான் அவர் குறிப்பிடுகிறார் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சில விந்தையான கருத்துக்களும் இதில் அடங்கி இருக்கிறது.

தாம் பதவியிலிருந்து தூக்கி எறியப்படும் போது தேசியப் பாதுகாப்பும் புலனாய்வுத்துறையும் சீர்குலைந்து இருந்ததாக அவர் கூறுவதே அதிலும் மிகவும் விந்தையான கருத்தாகும்.

‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் காலத்தில் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினமன்று முஸ்லிம் பயங்கரவாதிகள் சிலர் கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து நடத்திய குண்டுத் தாக்குதலை அடுத்து அப்போதைய அரசாங்கம் தேசியப் பாதுகாப்பையும் புலனாய்வு இயந்திரத்தையும் சீர் குழைத்தமையே அத்தாக்குதல்களுக்குக் காரணம் என்று பொதுஜன முன்னணியும் கோட்டாபயவும் கூறினர்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தேசியப் பாதுகாப்பும் புலனாய்வுத்துறையும் மிகப் பலமாக இருந்ததாகவும் கூறினர்.

அத்தாக்குதல் இடம்பெற்று ஆறு நாட்களில் கோட்டா, தாம் அதே ஆண்டு நடைபெறவிருந்த அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவித்தார். அதனையடுத்து அவரும் அவரது கட்சியினரும் பயங்கரவாத தாக்குதலைப் பாவித்து முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான முறையில் இனவாதத்தைத் தூண்டியும் மஹிந்தவும் கோட்டாவும் புலிகளிடமிருந்து நாட்டை பாதுகாத்தவர்கள் என்றும் மக்களை உசுப்பேற்றி ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றி பெற்றனர்.

தாம் பதவியிலிருந்து தூக்கியெறியப்படுவதற்குக் காரணம் தேசியப் பாதுகாப்பும் புலனாய்வுத்துறையும் சீர்குலைத்தது என்று இப்போது கோட்டா கூறுவதாக இருந்தால், அப்போது பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்தவர் யார் என்ற கேள்வி எழுகிறது.

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியே பாதுகாப்புக்குப் பொறுப்பானவர். அவரே பாதுகாப்புப் படைகளின் பிரதம கட்டளைத் தளபதியும் ஆவார்.

அவ்வாறாயின், தேசியப் பாதுகாப்பும் புலனாய்வுத்துறையும் சீர்குலைந்தமைக்கு ஜனாதிபதியாக இருந்த கோட்டாவே தான் பொறுப்பை ஏற்க வேண்டும். பாதுகாப்புச் செயலாளரையும் இராணுவத் தளபதியையும் அதற்காகக் குறை கூறமுடியாது.

அவர்கள் களத்துக்குப் போகக் கூடியவர்களாயினும் இறுதிப் பொறுப்பை ஜனாதிபதியே தான் ஏற்க வேண்டும்.

அவ்வாறில்லை என்றால், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் வெற்றிக்கும் மஹிந்த உரிமை கோர முடியாது.

அவ்வுரிமையை முழுமையாகவே அக்காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்செகாவுக்கு வழங்கியிருக்க வேண்டும்.

பாதுகாப்புச் செயலாளரும் இராணுவத் தளபதியும் 2022 ஜூலை மாதம் 9ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தை பலத்தை உபயோகித்து அடக்காதமையே அன்று தமக்கு நாட்டை விட்டுத் தப்பி ஓட வேண்டிய நிலை ஏற்படக் காரணம் என்பதே அவரது கருத்தாக இருக்கிறது.

ஆனால், அவர்கள் அதனைச் செய்யாவிட்டால் முப்படைகளின் பிரதம கட்டளைத் தளபதி என்ற வகையில் ஜனாதிபதி அதற்கு உத்தரவைப் பிறப்பித்திருக்க வேண்டும்.

ஒரு வருடத்துக்கு முன்னர் அதாவது 2021இல் ஆசிரியர்கள் ஆரப்பாட்டம் நடத்தியபோது, அவர்களைத் தாக்கி ஆர்ப்பாட்டத்தை அடக்க வேண்டும் என்று அப்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறியிருந்தார்.

ஆனால், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் சந்தேகிக்கப்படுவோர் மீது வெளிநாடுகளில் சட்ட நடவடிக்கை எடுக்க ஐ.நா. மனித உரிமை பேரவையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தாமும் அந்தப் பட்டியலில் சேரக்கூடும் என்ற அச்சத்தில் கோட்டா இருந்துள்ளார்.

எனவே, ஆசிரியர்களை தாக்குவதைக் கோட்டா விரும்பவில்லை. எனக்கு வெளிநாடொன்றுக்காவது போக முடியாத நிலையை ஏற்படுத்தப் போகிறீரா என்று அப்போது கோட்டா சரத் வீரசேகரவிடம் கேட்டதாக அந்நாட்களில் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது.

ஜனாதிபதி பதவிக் காலத்துக்குப் பின்னர் மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்ல அவர் உத்தேசித்திருந்தமையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. மக்களின் ஆர்ப்பாட்டத்தின் காரணமாகவே கோட்டா அன்று முதலில் மாலைத்தீவுக்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் தப்பிச் சென்று அங்கிருந்தே தமது இராஜினாமாக் கடிதத்தை சபாநாகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பியிருந்தார்.

அந்த ஆர்ப்பாட்டம் வெளிநாட்டுச் சதியின் காரணமாக ஏற்பட்டதா அல்லது பொருளாதார சுமையைத் தாங்க முடியாத மக்கள் கிளர்ந்தெழுந்தார்களா என்பதைக் கோட்டா இன்னமும் விளங்கிக் கொள்ளாவிட்டால் அவர் அரசியல் குழந்தை என்றே கூற வேண்டும். அவர் 2019 ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு மாதத்தில் அவர் பெருமளவில் வரிகளைக் குறைத்தார்.

அதனால் அரச வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமான பணத்தை அரசாங்கம் இழந்தது. இதனையடுத்து, கொவிட் தொற்று நாட்டை தாக்கியதில் கைத்தொழில்கள் பாதிக்கப்பட்டன. அதன் காரணமாக வெளிநாட்டுச் செலாவணித் தட்டுப்பாடு ஏற்பட்டது.

அது இலங்கை நாணயத்தின் பெறுமதியை மேலும் குறைத்தது. இதற்கிடையே கையிருப்பில் உள்ள வெளிநாட்டுச் செலாவணியைப் பாதுகாக்கவென அரசாங்கம் இரசாயன உர இறக்குமதியைத் தடை செய்தது.

அதன் விளைவாக உணவுத் தட்டுப்பாடு ஏற்படவே வெளிநாட்டுச் செலாவணியைச் செலவழித்தே உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய நேரிட்டது.

இவ்வாறு வெளிநாட்டுச் செலாவணித் தொகை கரைந்து கொண்டு போகவே ரூபாவின் பெறுமதி முன்னொருபோதும் இல்லாதவாறு குறைந்தது. ரூபாவின் பெறுமதியைக் குறையாது தக்கவைத்துக் கொள்ள அரசாங்கம் கையிருப்பிலிருந்த டொலர்களை சந்தையில் கொட்டியது.

அது தற்காலிக ஆறுதலை வழங்கினாலும் கையிருப்பில் டொலர் இல்லாத காரணத்தால் சில நாட்களில் ரூபாவின் பெறுமதி மேலும் குறைந்தது.

இறக்குமதி பொருட்களின் விலையும் ஏறியது. பொருட்களை இறக்குமதி செய்யக் கையிருப்பில் டொலரும் இல்லாமல் போய்விட்டது. எனவே, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

அது மின்சாரம் உள்ளிட்ட சகல துறைகளையும் பாதித்தது. விலைவாசி வானலவாக உயர்ந்தது.

எரிபொருட்களுக்காகவும் எரிவாயுவுக்காகவும் மக்கள் நாட்கணக்கில் கியூ வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒரு நாளைக்கு 13 மணித்தியாலம் வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மக்கள் வெறிகொண்டு கிளர்ந்தெழுந்தனர். அவர்கள் 2022 ஏப்ரல் 9ஆம் திகதி முதல் ஜனாதிபதியின் அலுவலகத்தின் முன்னால் நிரந்தரமாகத் தங்கியிருந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஒரு மாத காலமாக அப்போராட்டம் மிகவும் அமைதியாக நடைபெற்றது. நாடெங்கிலும் இருந்து வந்த மக்கள் ஆயிரக் கணக்கில் அதில் பங்குபற்றினர்.

ஆனால், மே மாதம் 9ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் ஆரப்பாட்டக்காரர்களை தாக்கியதையடுத்து, நாடெங்கிலும் வன்செயல்கள் வெடித்தன. அரசியல்வாதிகளின் வீடுகள் தாக்கப்பட்டன.

அன்றே பிரதமர் பதவி விலக வேண்டிய நிலைமை உருவாகியது. பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.

அவரும் ஆர்ப்பாட்டக்காரர்களை ஆதரித்தார். ஜூலை 9ஆம் திகதி நாடெங்கிலும் இருந்து மக்கள் இலட்சக் கணக்கில் கொழும்புக்கு வந்து ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர் கோட்டா தப்பிச் செல்ல நேரிட்டது.

இந்நிகழ்ச்சித் தொடரில் எந்த இடத்தில் வெளிநாட்டுச் சக்திகள் தலையிட்டன என்பதைக் கோட்டா தமது புத்தகத்தில் குறிப்பிடவில்லை. எனவே இது சதியல்ல, இது நிர்வாகத் திறமையற்ற ஆட்சியின் விளைவாகும். 

13.03.2024
 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கோட்டாவை-விரட்டியது-சதியா-விதியா/91-334661

கோட்டாவின் புத்தகம்

5 days 20 hours ago
கோட்டாவின் புத்தகம்
கோட்டாவின் புத்தகம் 

— வீரகத்தி தனபாலசிங்கம் —

   கோட்டாபய ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை ‘என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதற்கான சதி’ (The Conspiracy to oust me from the Presidency) என்ற தலைப்பில் நூல் ஒன்றை  வெளியிட்டிருக்கிறார். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எழுதப்பட்டிருக்கும் அந்த நூலை இலங்கையின் முக்கியமான நூல் நிலையங்களில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று அவர் கடந்த வாரம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் அறியத் தந்திருக்கிறார். கொழும்பில்  அரசியல்வாதிகளையும் இராஜதந்திரிகளையும் அழைத்து பெரும் ஆரவாரத்துடன் நூல் வெளியீட்டு வைபவத்தை  நடத்துவதை அவர் தவிர்த்திருக்கிறார்.

  உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் இந்த நூலுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், இலங்கையில் மக்கள் மத்தியில் பெரிய பரபரப்பை நூல் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறமுடியாது. 

  இலங்கையில் இதுகாலவரையில் பதவியில் இருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளில் மக்கள் கிளர்ச்சியின் விளைவாக அதிகாரத்தைத் துறக்க நிர்ம்பந்திக்கப்பட்ட  முதல் ஆளான  கோட்டாபய நூலுக்கு வேறு தலைப்பைக் கொடுத்திருந்தால் சிலவேளை கூடுதல் கவனத்தை ஈர்த்திருக்க முடியும்.

   சதி முயற்சி என்பது ராஜபக்சாக்கள் நெடுகவும் கூறிவருகின்ற ஒன்று என்பதால் நூல் ஒரு பழைய கதை என்று பலரும் கருதவும் இடமிருக்கிறது. சதிக் கோட்பாடுகளைப் புனைவது ராஜபக்ச சகோதரர்களுக்கு கைவந்த கலை. 2015 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ச தன்னை தோற்கடித்தது இந்திய புலனாய்வுப் பிரிவான ‘றோ’ தான்  என்று பகிரங்கமாகவே கூறினார். 

  இலங்கையில் முன்னென்றும் இல்லாத வகையில் இரு வருடங்களுக்கு முன்னர் தங்களை ஆட்சியதிகாரத்தில் இருந்து விரட்டிய ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சியை உள்நாட்டு,  வெளிநாட்டு சக்திகளின் சதி என்று ராஜபக்சாக்கள் நெடுகவும் கூறிவருகிறார்கள். படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ஊழல் தலைவிரித்தாடிய  தங்களது தவறான ஆட்சிமுறைக்கு  எதிராகவே மக்கள் தன்னியல்பாக வீதிகளில் இறங்கி  கிளர்ச்சி செய்தார்கள் என்பதை ராஜபக்சாக்கள்  ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. 

  கோட்டாபயவுக்கு முன்னர் ராஜபக்சாக்களின் அதிவிசுவாசிகளில் ஒருவராக இருந்து, பிறகு அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதன் காரணமாக அவர்களை விட்டு  வெளியேறிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் ‘ஒன்பது  ; மறைக்கப்பட்ட கதைகள்’ (Nine ; The Hidden Story ) என்ற நூலை கடந்த வருடம் வெளியிட்டு மக்கள் கிளர்ச்சிக்கு பின்னணியில்  வெளிநாட்டுச்சதி இருந்ததாகக் குற்றஞ்சாட்டினார். 

  உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பிறகு கோட்டாபய அரசியலில் இறங்குவதற்கான ஒரு அச்சாரமாக 2012 ஆம் ஆண்டில் பத்திரிகையாளர் சி.ஏ. சந்திரப்பிரேமா ‘ கோட்டாவின் போர் ; இலங்கையில் தமிழ்ப் புலிகளின் பயங்கரவாதம் ஒழிப்பு ‘ ( Gota’s war ; The crushing of Tamil Tiger terrorism in Sri Lanka) என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூல் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபயவுக்கே போர் வெற்றிக்கான முழுப் பெருமையையம் உரித்தாக்கும் நோக்கில் எழுதப்பட்டது.

  நீண்டகால மௌனத்தைக் கலைத்து கோட்டாபய தற்போது தனது நூலை வெளியிட்டிருப்பது மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான களத்தை அமைப்பதில் முதல் அடியெடுத்துவைப்பாக இருக்கலாம்  என்ற ஊகங்களும் ஒருபுறம் கிளம்புகின்றன. 

   சர்வதேச சக்திகளின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட ஆட்சிமாற்ற நடவடிக்கையின் விளைவாகவே அதிகாரத்தில் இருந்து தான் இறங்கவேண்டி வந்தது என்று கோட்டாபய நூலில் விபரிக்கிறார். ஆட்சிக்கவிழ்ப்பு சதி பற்றிய தனிப்பட்டதும் நேரடியானதும் அனுபவத்தின் விளக்கம் என்று நூலை அவர் வர்ணிக்கிறார். எந்த நாட்டினதும் பெயரைக் குறிப்பிடுதை அவர் தவிர்த்திருக்கிறார்.

  சீனாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டியே தனது வீழ்ச்சிக்கு பொறுப்பு என்பது அவரது நிலைப்பாடு.2006 ஆம் ஆண்டுக்கு பிறகு சீனாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட உட்கட்டமைப்புத் திட்டங்கள் இலங்கையில் புவிசார் அரசியல் போட்டிப் போக்கு ஒன்றைக் கொண்டு வந்ததன் விளைவே தனது அரசியல் வீழ்ச்சி என்பது அவரது தர்க்க நியாயம்.

  வெளிநாட்டுச் சதி இருக்கவில்லை என்று எவராவது கூறுவார்களேயானால் அவர்கள் உண்மையில் பத்தாம்பசலிகளாகவே இருக்கமுடியும் என்று வேறு அவர் கூறுகிறார்.

  நூலின் நோக்கம் குறித்து அதை வாசிக்காமேயே சுருக்கமாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக கோட்டாபய கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை அமைந்திருந்தது.

  ” விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் நாம் வெற்றிபெற்ற நாளில் இருந்து இலங்கையில் கடுமையான வெளிநாட்டுத் தலையீடு தொடங்கிவிட்டது. 2019 நவம்பரில் நான் ஜனாதிபதியாக தெரிவான நேரம் தொடக்கம் என்னை அதிகாரத்தில் இருந்து அகற்றும் நோக்குடன் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் செயற்படத் தொடங்கிவிட்டன.

  ” நான் பதவியேற்ற உடனடியாகவே இலங்கையிலும்  உலகம் முழுவதும்  கொவிட்  — 19 பரவத்தொடங்கிவிட்டது. அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் எனது இரண்டரை வருட பதவிக்காலத்தையும் செலவிடவேண்டியேற்பட்டது. தடுப்பூசி இயக்கத்தின் மூலமாக அந்த பெருந்தொற்று நோயை 2022 மார்ச் மாதமளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததை அடுத்து பொருளாதாரம் மீட்சிபெறத் தொடங்கியதும் என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை சதிகாரச்சக்திகள் தொடங்கிவிட்டன.

  “இன்று இலங்கையில் வெளிநாட்டுத் தலையீடும் உள்நாட்டு அரசியல் வெளிச்சக்திகளினால் சூழ்ச்சித்தனமாக கையாளப்படும் போக்கும் கசப்பான உண்மையாகிவிட்டது. இலங்கை தந்திரமடைந்ததற்கு பின்னர் முதல் அறுபது வருடங்களில் இத்தகைய ஒரு நிலை காணப்படவில்லை. என்னைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான அரசியல் முயற்சிகள்,  சுதந்திரம் பெற்றபிறகு தேர்தல்கள் மூலமாக அமைதியான முறையில் மாத்திரம் ஆட்சி மாற்றங்களைக்  கண்டுவந்த இலங்கையின் அரசியலில் புதிய போக்கைக் கொண்டு வந்துவிட்டன.

   ” அதனால் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் நாட்டின் எதிர்காலத்துக்கு பாரதூரமான விளைவுகளைக் கொண்டுவரும் ஆபத்து இருக்கிறது. சர்வதேச அனுசரணையுடனான ஆட்சிமாற்ற நடவடிக்கை ஒன்றின் நேரடியான, தனிப்பட்ட அனுபவத்தை விளக்கும் இந்த நூல் இலங்கையர்களுக்கு மாத்திரமல்ல, வெளிநாட்டவர்களுக்கும் அக்கறைக்கு உரியதாக இருக்கும்.” 

  அறகலய பற்றிய வியாக்கியானம் 

 கோட்டாபயவின் நூலில்  மிகவும் முக்கியமான பகுதிகள் என்று ஊடகங்கள் தெரிந்தெடுத்து கடந்த இரு தினங்களாக  வெளியிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டதாகவே இந்த கட்டுரை அமைகிறது.  ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி குறித்து அவர் எழுதிய பகுதிகளை பல ஊடகங்கள் மேற்கோள் காட்டி கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றன.

  அறகலயவுடன் தொடர்புடைய சகல போராட்டங்களையும் குறிப்பாக கொழும்பில் நடைபெற்ற போராட்டங்களை  தொடர்ந்தும்  தான்  அதிகாரத்தில் இருந்தால்  சிறுபான்மைச் சமூகங்களின் நலன்களுக்கு பாதகமான முறையில் சிங்கள பௌத்தர்கள் பலமடைந்துவிடுவார்கள் என்ற பயத்தின் காரணமாக முன்னெடுக்கப்பட்டவை என்று அவர் கூறுகிறார்.

  அறகலய அதன் முதல் நாளில் இருந்தே சிங்களவர்களின்  குறிப்பாக சிங்கள பௌத்தர்களின் நலன்களுக்கு விரோதமானதாக அமைந்திருந்ததாகவும் வெளிநாட்டு சக்திகளின் ஆதரவைக் கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்..

  மக்களின் அவலங்களுக்கு காரணமாக இருந்த பொருளாதார நெருக்கடிக்கு மூன்று ராஜபக்ச சகோதரர்களும் மத்திய வங்கியின் இரு ஆளுநர்கள் உட்பட அவர்களின் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்த சில உயரதிகாரிகளுமே பொறுப்பு என்று 2023  நவம்பர் 14 உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியபோதிலும், அந்த நெருக்கடிக்கு தனது அரசாங்கம் பொறுப்பு என்பதை  கோட்டாபய நூலில் ஒத்துக்  கொள்ளவேயில்லை. செய்ததற்கு இரங்கி பச்சாதாபம் கொள்கிற பக்குவத்தை அவர்  வெளிக்காட்டவில்லை.  பாதிக்கப்பட்ட ஒரு ஆளாகத் தன்னைக் காட்சிப்படுத்தும் அவரின் முயற்சியாகவே நூல்  அமைந்திருக்கிறது எனலாம்.

  அறகலய பற்றி அவர் எழுதிய பகுதிகள் வருமாறு ; 

  ” 2022 ஏப்ரில் 9 கொழும்பு காலிமுகத்திடலில் அறகலய தொடங்கி போராட்டக்காரர்கள் கூடாரங்களை அமைத்து ‘கோட்டா கோ கம’ என்று பிரகடனம் செய்ததை அடுத்து ஊடகங்களில் சில விமர்சகர்கள் பொதுவான குறிக்கோள் ஒன்றுக்காக சகல இனக்குழுக்களையும் மதங்களையும் அறகலய ஒன்றிணைத்திருக்கிறது என்று கூறினார்கள். எனது அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்த இளைஞர்கள், யுவதிகள் இனவாதத்தைத் தோற்கடித்துவிட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள். 

  ” ஆனால், காலிமுகத்திடல் அறகலயவில் கூடிநின்றவர்கள் யார் என்பதை எவரும் உண்மையில்  ஆராய்ந்துபார்த்தால் அவர்கள்  எந்த வகையிலும்  எனக்கு எதிரான பிரிவுகளைச் சேர்ந்தவர்களே  என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும்.

  “அறகலயவில்  சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை பெருமளவில் காணக்கூடியதாக இருந்தது. ஏனென்றால் அங்கு வருவதற்கு சிறுபான்மைச் சமூகங்களைத் தூண்டிய காரணிகள் இருந்தன.  விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் நாம் வெற்றிபெற்ற நாளில் இருந்து நான் தமிழர்களுக்கு எதிரானவனாகவே கருதப்பட்டேன். 

“ஒற்றையாட்சி அரசுக்கு (Unitary state ) பதிலாக ஐக்கிய இலங்கைக்கு (United SriLanka ) கோரிக்கை விடுக்கும் புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சிநிரலை அறகலயவில் தெளிவாகக்க காணமுடிந்தது. இது சமஷ்டி அரசொன்றை வேண்டிநிற்பவர்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்துவருகிறது. அதனால் காலிமுகத்திடல் போராட்டங்களின்போது ஜனாதிபதி செயலகத்தின் சுவர்களில் அந்த சுலோகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

 ” 2012 ஆம் ஆண்டில் பொதுபல சேனாவின் தோற்றம் மற்றும் அந்த அமைப்பில் எனக்கு ஈடுபாடு  இருந்ததாக கிளம்பிய சந்தேம் காரணமாக நான் முஸ்லிம்களுக்கு எதிரானவனாகவும் நோக்கப்பட்டேன். கொவிட் — 19 பெருந்தொற்றின் விளைவாக சடலங்களை எரிப்பது தொடர்பில் பிரச்சினை கிளம்பியபோது நான் முஸ்லிம்களுக்கு எதிரானவன் என்று ஏற்கெனவே இருந்த எண்ணம் மேலும் வலுவடைந்தது. 

 ” தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகள் என்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளருக்கே  பெருமளவில் கிடைத்த போதிலும், 

2019 ஜனாதிபதி தேர்தலில் நான் அதிகாரத்துக்கு  தெரிவு செய்யப்பட்டேன். பதவியேற்பதற்கு சிங்கள பௌத்தர்களுக்கு முக்கியமான புனித தலமான ருவான்வெலிசேய வளாகத்தையே தெரிவுசெய்தேன். பதவியேற்ற பிறகு நான் நிகழ்த்திய உரையில் சிங்கள பௌத்தர்களின் வாக்குகளினாலேயே தெரிவுசெய்யப்பட்டதாக கூறியது பல்வேறு வியாக்கியானங்களுக்கு வழிவகுத்தது.

  ” தமிழ், முஸ்லிம் சமூகங்கள் பல்வேறு காரணங்களுக்காக என்னை எதிர்ப்பதற்கு அறகலயவுக்கு வந்தன. இதை சகல இடங்களிலும் குறிப்பாக கொழும்பில் இடம்பெற்ற போராட்டங்களில் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. நான் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருந்தால் சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதகமான முறையில்  சிங்கள பௌத்தர்கள் பலமடைந்துவிடுவார்கள் என்ற பயமும் அவர்களைத் தூண்டியிருக்கக்கூடும்.

  ” வெளிநாட்டு நிதியுதவியைப் பெறுகின்ற அரசாங்க சார்பற்ற தன்னார்வ நிறுவனங்களின் தாராளபோக்குடைய  அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக ஊடகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி, ஜனதா விமுக்தி பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் முன்னரங்க சோசலிஸ்ட் கட்சி என்று பல்வேறு எதிர்க்கட்சிகளும் அறகலயவில் பங்கேற்றன. காலிமுகத்திடலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 17 கூடாரங்கள் இருந்ததாக அந்த கட்சியின் முக்கிய உறப்பினர் ஒருவரின் தகவல் மூலம் அறியமுடிந்தது. கிரிக்கெட்  வீரர்கள், அவர்களின் மனைவிமார், நடிகர் நடிகைகள் என்று பல்வேறு தரப்பினரும் அங்கு நின்றார்கள்.

 ” நூலின் முன்னுரையில் நான் சுட்டிக்காட்டியதைப் போன்று ஒரு புறத்தில் சிங்கள பௌத்தர்களின் நலன்களுக்கும் மறுபுறத்தில் சிங்களவர்களும் பௌத்தர்களும் அல்லாத சகல பிரிவினரின் நலன்களுக்கும் இடையிலான ஒரு போட்டியின் விளைவாகவே நான் அதிகாரத்துக்கு தெரிவு செய்யப்பட்டேன். கத்தோலிக்கத் திருச்சபையுடன் நான் அதுவரையில் உன்னதமான உறவைப்  பேணிவந்தபோதிலும், 2021 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இருந்து அவர்களும் எனக்கு எதிராகத் திரும்பினர்.

  ” எரிபொருள், சமையல் எரிவாயு வரிசைகளையும் மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசிய பாவனைப்  பொருட்களுக்கு நிலவிய தட்டுப்பாடுகளையும் இல்லாமற்செய்து மக்களின் இடர்பாடுகளை தணிப்பதுதான் அறகலயவின் குறிக்கோள் என்று ஒரு எண்ணம் எவருக்காவது இருந்திருந்தால் அது வெறும் மருட்சியே.  

  “அறகலயவில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு வித்தியாசமான  குறிக்கோள்களும் முன்னுரிமைகளும் இருந்தன. அறகலய என்பது அதன் முதல் நாளில் இருந்தே சிங்களவர்களின்  குறிப்பாக சிங்கள பௌத்தர்களின் நலன்களுக்கு பாதகமானதாகவே அமைந்திருந்தது. பெருமளவுக்கு அதே குறிக்கோள்களைக்  கொண்ட வெளிநாட்டுச் சக்திகள் அறகலயவுக்கு ஆதரவளித்தன.”

 பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் 

    கோட்டாபயவின  இந்த விளக்கம் மீண்டும் பெரும்பான்மையினவாத அணிதிரட்டலின் மூலம் மாத்திரமே தங்களால் அரசியலில் செல்வாக்கான நிலைக்கு வரமுடியும் என்ற ராஜபக்சாக்களின் உறுதியான தீர்மானத்தின் ஒரு  தெளிவான வெளிப்பாடாகும். 

  தங்களுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளை அவர்கள் மிகவும் சுலபமாகவே வெளிநாட்டுச் சதி என்று கூறிவிடுவார்கள். 

 அறகலய போராட்டம் தொடங்கிய நோக்கம் தெளிவானது. ஆனால், அமைதிவழியில் முன்னெடுக்கப்பட்டு முழு உலகத்தினதும் கவனத்தை இலங்கை நோக்கி  திருப்பிய அந்த போராட்டத்தில் அரசியல் புரட்சியொன்றுக்கான பல பரிமாணங்கள் காணப்பட்டன. 

  பரந்தளவிலான வெகுஜனப் போராட்டமாக அறகலய மாறியதும்  பல்வேறு அரசியல் சக்திகள் அதற்குள் ஊடுருவி வன்முறை வழியில் திசைதிருப்பியதே அதற்கு எதிரான அடக்குமுறை  நடவடிக்கைகளை அரசியல் அதிகார வர்க்கம் நியாயப்படுத்துவதற்கு வசதியான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுத்தது.

  அத்துடன் முறையான அரசியல் கோட்பாட்டின் வழிகாட்டலும் தலைமைத்துவமும் இல்லாத மக்கள் போராட்டங்களுக்கு நேரக்கூடிய கதிக்கு ஒரு அண்மைக்காலப் படிப்பினையாகவும் அறகலய அமைந்தது. 

  ஆனால், சிங்கள மக்கள் தங்களுக்கு எதிராக இவ்வளவு விரைவாக கிளர்ந்தெழுவார்கள் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்காத ராஜபக்சாக்களினால் அதை தாங்கிக் கொள்ளமுடியவில்லை. விடுதலை புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக சிங்கள சமுதாயம் என்றென்றைக்கும் தங்களுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்றும் இலங்கையின் ஆட்சியதிகாரம் தங்களது ஏகபோக உரித்து என்றும் ஒரு எண்ணத்தை அவர்கள் வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். தங்களது செயற்பாடுகளை விமர்சனமின்றி சிங்களவர்கள் ஆதரிக்க வேண்டும் என்று ராஜபக்சாக்கள் எதிர்பார்த்தார்கள்.

  அதில் தங்களுக்கு கிடைத்த தோல்வியை நிவர்த்திசெய்து மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு ராஜபக்சாக்களுக்கு வெளிநாட்டுச்சதி என்ற பிரசாரத்தையும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான அரசியலையும் தவிர வேறு மார்க்கம் இல்லை. மக்கள் கிளர்ச்சியை சிங்கள பௌத்தர்களின் நலன்களுக்கு எதிரானது என்ற கோட்டாபயவின் கருத்து அந்த சமூகத்தின்  விவேகத்தை அவமதிப்பதாகும்.

  ஊழல் முறைகேடுகளையும் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தவறான ஆட்சியையும் மூடிமறைப்பதற்கு இனிமேலும்  பெரும்பான்மை இனவாத அணிதிரட்டலுக்கு இடமளித்தால் இலங்கைக்கு எதிர்காலமேயில்லை.

  ராஜபக்சாக்கள் அந்த அணிதிரட்டலை ஏற்கெனவே ஆரம்பித்து விட்டார்கள். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செல்வாக்கை மீளக்கட்டியழுப்பும் முயற்சிகளை முன்னெடுக்கும் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல்வாரிசு நாமல் ராஜபக்ச கிராமங் கிராமமாக  விகாரைகளுக்கு சென்று பிக்குமாரைச் சந்தித்து வருகிறார். சிங்கள பௌத்தர்களிடம்  ராஜபக்சாக்களின் இந்த இனவாத அணிதிரட்டல் முயற்சி மீண்டும் எடுபடுமா என்பதை அடுத்த தேர்தல் ஒன்றின் மூலமாக மாத்திரமே தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

  தனது வீழ்ச்சிக்கு வெளிநாட்டுச்சதியே காரணம் என்று கூறும் கோட்டாபய, அவர் அதிகாரத்துக்கு வருவதற்காக சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான சுலோகங்களை முன்வைத்து மக்கள் மத்தியில் குரோதங்களை வளர்த்து சிங்கள மக்களின் வாக்குகளை அமோகமாகப் பெறுவதற்கு கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட நச்சுத்தனமான  பிரசாரங்களும் கூட ஒரு அரசியல் சதிதான் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும் என்று அரசியல் அவதானியொருவர் தெரிவித்த கருத்து மிகவும் கவனிக்கத்தக்கது. 

   இன்றைய புவிசார் அரசியல் நிலைவரங்களை நோக்கும்போது நாடுகளின் உள்விவகாரங்களில் வல்லாதிக்க நாடுகள் அவற்றின் மூலோபாய நலன்களுக்காக தலையிடும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆனால், அவ்வாறான தலையீடுகளுக்கு வசதியான சூழ்நிலைகளை ஆட்சியாளர்களே தவிர மக்கள் ஏற்படுத்துவதில்லை. 

  இன்றைய இலங்கை நிலைவரத்தை நோக்கும்போது வரவிருக்கும் தேசிய தேர்தல்களில் வெற்றிபெறுபவர்கள் யார் என்பதை நாட்டுமக்கள் மாத்திரம் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும் என்று சொல்லமுடியாமல் இருக்கிறது. வல்லாதிக்க நாடுகள் அவற்றின் நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காக வெவ்வேறு அரசியல் கட்சிகளை தங்கள் செல்லாக்கிற்கு உட்படுத்தும் வியூகங்களை வகுக்கின்றன என்பது ஒன்றும் இரகசியமானது அல்ல.

  கோட்டாபயவின் நூல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் தொடர்ச்சியாக வரும் என்று எதிர்பார்க்கலாம். 

 இது இவ்வாறிருக்க, ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின்  தன்னந்தனி உறுப்பினராக பாராளுமன்றத்தில் இருந்துகொண்டு எவ்வாறு ஜனாதிபதியாக வந்தார் என்ற கதையை நூலாக விரைவில் வெளியிடவிருப்பதாக கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன அறிவித்திருக்கிறார். அவர் ஏற்கெனவே ஜனாதிபதியைப் பற்றி பத்திரிகைகளில் வெளியான கேலிச்சித்திரங்களை தொகுத்து ஒரு நூலாக  கடந்தவாரம் வெளியிட்டிருந்தார்.

  அதிகாரத்தை விட்டு ஒடிப்போனவர் தனது கதையை வெளியிட்ட கையோடு அவரின் இடத்துக்கு அதிகாரத்துக்கு வந்தவரின் கதையும் வரவிருக்கிறது. வாசிப்போம்.

( ஈழநாடு )
 

 

https://arangamnews.com/?p=10539

வானத்திலிருந்து யாழ்ப்பாணத்தைப் பார்த்த மாணவர்கள்! - நிலாந்தன்

1 week 1 day ago
வானத்திலிருந்து யாழ்ப்பாணத்தைப் பார்த்த மாணவர்கள்! - நிலாந்தன்
 
airforce.jpg

சிறீலங்கா விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் “நட்பின் சிறகுகள்” என்ற தலைப்பில், 125 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை விமானப்படை முன்னெடுக்கின்றது. இதில் 73 பள்ளிக்கூடங்களை புனரமைக்கும் திட்டமும், பள்ளிக்கூடங்களுக்கு 73000 புத்தகங்களை வழங்குவதும் அடங்கும். ”நட்பின் சிறகுகளின்” ஒரு பகுதியாக இம்மாதம் ஆறாந் திகதியிலிருந்து பத்தாம் திகதி அதாவது இன்றுவரையிலும் யாழ் முற்ற வெளியில் – Air tattoo 2024 -எயார் டாட்டு 2024 என்ற பெயரில் ஒரு கல்வி மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி இடம்பெறுகிறது. இக்கண்காட்சியில் விமானப்படையினரின் செயற்பாடுகள் தொடர்பான தொழில்நுட்ப விளக்கங்களும் வான சாகசங்களும் இசை அணிநடைகளும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. அது ஒரு கல்வி மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி என்ற அடிப்படையில் பாடசாலைப் பிள்ளைகள் இதில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.

spacer.png

விமானங்களின் இயக்கங்கள் தொடர்பாக மாணவர்கள் விளக்கம் தருகிறார்கள். மேலும் மாணவர்களுக்கு சிறிது நேரம் ஹெலிகொப்டரில் பயணம் செய்ய வாய்ப்புத் தரப்பட்டது. மாணவர்களும் உட்பட பெற்றோரும்  ஏனையவர்களும் விருப்பத்தோடு உலங்கு வானூர்திகளில் ஏறிப் பயணம் செய்வதை காணக்கூடியதாக இருக்கிறது. வடக்கில் உள்ள வெவ்வேறு பாடசாலைகள் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகளுக்கு ஹெலிகொப்டரில் பறப்பதற்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அவர்கள் அதை விருப்பத்தோடு அனுபவித்தார்கள். வானத்திலிருந்து யாழ்ப்பாணத்தைப் பார்ப்பதில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கும். முதலாவது பறப்பு அனுபவம் அவர்களுக்குப் பரவசமூட்டக்கூடும். ஆனால் இதே வானத்தை அவர்களுடைய பெற்றோர்களும் பெற்றோர்களின் பெற்றோர்களும் பயத்தோடும் பிரார்த்தனைகளோடும் அண்ணாந்து பார்த்த ஒரு காலம் உண்டு என்பதை அவர்களுக்கு யார் சொல்லிக் கொடுப்பது?

15ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களுக்கு வானம் ஒரு மரணக் கூரையாக காணப்பட்டது. வானில் போர் விமானங்கள் தோன்றும்போது இந்த பிள்ளைகளின் பெற்றோரும் பெற்றோரின் பெற்றோரும் பதுங்கு குழிகளுக்குள் ஓடி ஒளித்தார்கள். அவ்வாறு பதுங்கு குழிகளுக்குள் புகலிடம் தேடிய சிலருக்கு பதுங்கு குழியே புதை குழியாகவும் மாறியதுண்டு. யுத்தம் வாழ்க்கையை விடவும் நிச்சயமானது போல தோன்றிய அக் காலகட்டத்தில் சிறீலங்காவின் வான் படை தமிழ் மக்கள் மீது குண்டுகளைப் போட்டது. வானத்தையும் காற்றையும் கிழித்துக்கொண்டு போர் விமானங்கள் தமிழ் மக்களின் தலைகளை நோக்கி குத்திப் பதிந்தன.

பயணிகள் போக்குவரத்து விமானம் ஆகிய “அவ்ரோ” ரக விமானங்களில் இருந்து தொடங்கி சியா மாசற்றி; அன்ரனோவ்; புக்காரா; கிபிர்; சூப்பர்சோனிக்; மிக்; சீனத் தயாரிப்பான Y12 முதலாய் பல்வேறு நாட்டு தயாரிப்புகளும் தமிழ் மக்களின் இரவுகளையும் பகல்களையும் கனவுகளையும் குண்டுகளால் பிளந்தன.

ஈழப் போரின் முதலாவது கட்டத்தின்போது பயன்படுத்தப்பட்ட அவ்ரோ என்று அழைக்கப்படும் பயணிகள் விமானம் பீப்பாய்க் குண்டுகள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்பட்ட குண்டுகளை வீசியது. சில சமயங்களில் பீப்பாய்களில் குண்டுகளுக்கு பதிலாக மனித மலம் நிரப்பப்பட்டிருந்தது. அப்படித்தான் சீனத் தயாரிப்பான Y12 விமானத்தை தமிழ் மக்கள் சகடை என்று அழைத்தார்கள். மெதுமெதுவாக மிக உயரத்தில் பறந்து போகும் அந்த விமானத்திலிருந்து எவ்வளவு பெரிய குண்டைப் போட முடியுமோ அவ்வளவு பெரிய குண்டு போடப்பட்டது. ஒரு குண்டு ஒரு பெரிய வீட்டை அப்படியே தரைமட்டமாக்கியது.

ஈழப் போரின் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிகளின் போது மிக நவீன குண்டு வீச்சு விமானங்கள் அரங்கினுள் பிரவேசித்தன. அவை காற்றையும் வானத்தையும் கிழித்துக்கொண்டு குத்தி பறந்து குண்டுகளை வீசின. சந்தைகள், சாவடிகள், பாடசாலைகள்,கோயில்கள்,தேவாலயங்கள் என்று பொதுசன இலக்குகளின் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். அல்லது உடல் உறுப்புகளை இழந்தார்கள். சொத்துக்களை இழந்தார்கள்.

குண்டு வீச்சு விமானங்கள் மட்டுமல்ல, கண்காணிப்பு விமானங்கள் அதாவது வேவு விமானங்களும் தமிழ் மக்களின் இரவுகளையும் பகல்களையும் வேவு பார்த்தன. நான்கு கட்ட ஈழப் போர்களின் போதும் வானில் வேவு விமானங்கள் நிரந்தரமாக ரீங்காரமிட்டபடி பறந்தன. குறிப்பாக இறுதிக்கட்டப் போரில் வானில் வேவு விமானங்கள் சூரியனைப் போல சந்திரனைப் போல நட்சத்திரங்களைப் போல நிரந்தரமாக காணப்பட்டன.

சோளகக் காற்று பலமாக வீசும் காலங்களில் யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளில் பட்டங்கள் பறக்க விடப்படும். பிரம்மாண்டமான பட்டங்களில் விண் பொருத்தப்படும். காற்றில் விண் அதிரும் பொழுது ஒரு வித ரீங்கார ஒலியை எழுப்பும். யுத்தம் இல்லாத காலங்களில் சோழகக் காற்று வீசும் இரவுகளில் பட்டங்களின் விண் ஒலி வானத்தில் நிரந்தரமாக உறைந்து நிற்கும். அதுபோலவே யுத்த காலங்களில் வேவு விமானங்களின் ரீங்கார ஒலி வானில் நிரந்தரமாக உறைந்து நின்றது. இறுதி கட்டப் போரின் இறுதி நாளுக்கு பின்னரும் அது கேட்டது.

spacer.png

சிறீலங்கா விமானப்படை தமிழ் மக்களை வீட்டுக்கும் பதுங்கு குழிக்கும் இடையே கிழிபட வைத்தது. போரில் குண்டுகளை, துண்டுப் பிரசுரங்களை வீசிய அதே வான் படை ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் நல்லூர் தேர்த் திருவிழாவில் பூக்களைத் தூவியது.

அந்தப் போரில் பயன்படுத்தப்பட்ட தொழிநுட்பம் இப்பொழுது முற்ற வெளியில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருக்கின்றது. ஒரு காலம் தமிழ் மக்களைக் கொல்லும் கருவிகளாக காணப்பட்டவை இப்பொழுது கண்காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டிருப்பது ஒரு மாற்றம்தான். காங்கேசந்துறை வீதியில் அமைந்திருக்கும் “ஃபொக்ஸ் ரிசோர்ட்ஸ்” என்று அழைக்கப்படுகின்ற விருந்தினர் விடுதியில் யுத்தகாலத்தில் வெட்டப்பட்ட பதுங்கு குழிகள் காட்சிக் கூடங்களாக மாற்றப்பட்டுள்ளன.

அந்தக் கட்டிடம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் யாழ்ப்பாணம் இருந்த காலகட்டத்தில் அவர்களுடைய பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமையகமாக இருந்தது. அந்தக் கட்டடத்துக்கு கீழே பாதுகாப்பான பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின் அக்கட்டிடத்தின் உரிமையாளர் அதை விருந்தினர் விடுதியாக மாற்றியுள்ளார். அங்கிருந்த பதுங்கு குழி ஞாபகச் சின்னமாக ஒரு “ஷோகேஸ் பீசாகப்” பேணப்படுகின்றது. அதன் சுவர்கள் செப்பனிடப்பட்டு, அழகாக்கப்பட்டு, அது ஒர் ஓவியக் கூடமாக, உல்லாசப் பயணிகளைக் கவரும் காட்சிப் பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது. அங்கே ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு காலம் துர்க்கனவாகக் காணப்பட்ட பதுங்குழி, இப்பொழுது ஃபொக்ஸ் விருந்தினர் விடுதியில் காட்சிப் பொருளாகப் பராமரிக்கப்படுகின்றது. அது ஒரு விருந்தினர் விடுதியின் விளம்பர உத்தி.

spacer.png

ஆனால் முற்றவெளியில் நடப்பது என்ன? ஒரு காலம் தமிழ் மக்களின் தலைகளின் மீது மலத்தைக் கொட்டிய கொலைக் கருவிகளும் கொலை வாகனங்களும் இப்பொழுது முற்ற வெளியில் காட்சிப் பொருட்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. ஒரு தொகுதி யுடியூப்பர்கள் அதை ஒளி பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த மாற்றம் மேலோட்டமானது என்பதுதான் இங்குள்ள பிரச்சினை. போர் ஒரு விளைவு. அது மூல காரணம் அல்ல. மூல காரணம் இன ஒடுக்குமுறையாகும். இன ஒடுக்குமுறை எங்கிருந்து வருகிறது? தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள மறக்கும் பொழுதுதான். தமிழ் மக்களின் தேசிய இருப்பை அழிக்க முற்படும்பொழுதுதான் இன முரண்பாடுகள் ஆயுத மோதலாக மாறின. எனவே போர் ஒரு விளைவு. இன ஒடுக்குமுறைதான் மூல காரணம். அது இப்பொழுதும் உண்டு. கண்காட்சியில் கலந்துகொள்ளும் படைப் பிரதானிகளின் பாதுகாப்புக்காக நடுப்பகல் வேளைகளில் பலாலி வீதி நீட்டுக்கும் பிரதான சந்திகளில் படையினர் நிறுத்தப்பட்டிருந்தார்கள். இக்கட்டுரை எழுதப்படுகையில், வெட்டுக்குநாறி மலையில் சிவராத்திரியை அனுஷ்டிப்பதற்கு தமிழ்மக்கள் போராட வேண்டியிருக்கிறது.

இன முரண்பாடுகளை நீக்கும் விதத்தில் இனப்பிரச்சினைக்கு இன்றுவரையிலும் தீர்வு வழங்கப்படவில்லை. இப்போதுள்ள ஜனாதிபதி அதை வடக்கின் பிரச்சினை என்று வர்ணிக்கிறார். அவருக்கு முன்பிருந்த கோட்டாபய அதனை பொருளாதாரப் பிரச்சினை என்று வர்ணித்தார். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த 15 ஆண்டுகளின் பின்னரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. அவ்வாறு தீர்வு காணப்படுவதற்குரிய அரசியல் திடசித்தம் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே போரின் மூல காரணங்கள் அப்படியே இருக்கத்தக்கதாக, யுத்தவெற்றியின் நினைவுச் சின்னங்களைப் பேணும் ஒரு படைத்தரப்பு, தனது போர்க்கருவிகளையும் போர் வாகனங்களையும் காட்சிப் பொருட்களாக கண்காட்சியில் வைப்பது என்பது, போர் தொடர்பான கொடுமையான நினைவுகளை மறக்கச் செய்யும் உள்நோக்கமுடையது. மிலன் குந்தேரா கூறுவதுபோல “அதிகாரத்துக்கு எதிரான மனிதர்களின் போராட்டம் எனப்படுவது மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டமே” மாணவர்களுக்கு மறதிக்கு எதிரான ஞாபக சக்தி இருக்க வேண்டும். அது கற்றலுக்கு அவசியம். அதைவிட அவசியம் தமது சொந்த வரலாற்றை மறந்துவிடாமலிருக்க.

ஈழத் தமிழர்கள் தாயகத்துக்கு வெளியே அதிக தொகையில் வாழும் நாடு கனடா. அங்கு இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அது தொடர்பான அறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கோடு இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் ஒன்றை அந்த நாட்டின் அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கிறது. அதாவது அடுத்தடுத்த தலைமுறை தமிழ் பிள்ளைகளுக்கு இனப்படுகொலை தொடர்பாக அறிவூட்டப்பட ஓர் ஏற்பாடு. ஆனால் தாயகத்தில் இனப்படுகொலை புரிந்ததாக தமிழ் மக்கள் குற்றம் சாட்டும் ஒரு படைத்தரப்பின் விமானங்களை தமிழ் மாணவர்களே “எங்களுடைய விமானங்கள்” என்று கூறுகிறார்கள். ஆயின்,தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்படுகின்றார்களா?
 

https://www.nillanthan.com/6597/

 

 

சாந்தனுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி எது? நிலாந்தன்!

1 week 1 day ago
Santhan-700x375.png சாந்தனுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி எது? நிலாந்தன்!

சாந்தனின் உடல்... இந்தியாவுக்கும் ஈழத் தமிழர்களுக்கும்; தமிழகத்திற்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான கசப்புணர்வை அதிகப்படுத்தியிருக்கின்றது. அதை இலங்கை அரசாங்கம் விரும்பியிருந்திருக்கும். அந்த உடல் வடக்கிற்கு கொண்டு வரப்பட்ட அதே காலப்பகுதியில், இம்மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் மூன்று தீவுகளில் மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்களை இந்தியக் கொம்பனிகளுக்கு வழங்கும் உடன்படிக்கை கைச்சாத்தாகியது. அவை முன்பு சீனக் கொம்பனிகளுக்கு வழங்கப்படவிருந்தன. இந்தியா அதை விரும்பவில்லை, அதைத் தடுக்கின்றது என்று சீனா மறைமுகமாகக் குற்றம் சாட்டியது. எனினும் நீண்ட இழுபறியின் பின் கடந்த முதலாம் தேதி தான் அதற்குரிய உடன்படிக்கை கைச்சாத்தாகியது. புதிய உடன்படிக்கையின்படி நெடுந்தீவு,அனலைதீவு, நைனா தீவு ஆகிய மூன்று தீவுகளிலும் இந்தியக் கொம்பனிகள் மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி நிலையங்களை ஸ்தாபிக்கும். அவ்வாறு மூன்று தீவுகளில் இந்திய கொம்பனிகள் கால் பதிக்க உள்ள பின்னயில்,கடந்த வாரம் இந்திய மீனவர்களுக்கு எதிராக ஈழத்தமிழ் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றார்கள்.எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து பார்க்கும் பொழுது என்ன தோன்றுகிறது?

சாந்தனின் இறுதி ஊர்வலம் அண்மை ஆண்டுகளில் வடக்கில் நிகழ்ந்த ஒப்பீட்டளவில் அதிகம் சனம் சேர்ந்த ஓர் இறுதி ஊர்வலம் எனலாம். வவனியாவிலிருந்து எல்லங்குளம் வரையிலும் மக்கள் தன்னார்வமாக சாந்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இறுதி ஊர்வலத்தை அரசியல் கைதிகளுக்கான அமைப்பாகிய “குறையற்றவர்களின் குரல்” என்ற அமைப்பும் “போராளிகள் நலன்புரிச் சங்கம்” என்ற அமைப்பும் பொறுப்பெடுத்தன.அந்த ஊர்வலம் வந்த வழிநெடுக பொதுமக்கள் அமைப்புகள் ஆங்காங்கே திரண்டு அஞ்சலி செலுத்தின. குறிப்பாக வடமராட்சியில் சாந்தனின் தாய்ப் பட்டினத்தில் சனசமூக நிலையங்கள் அதிகம் பங்களிப்பை நல்கின.சாந்தன் உயிரோடு நாடு திரும்பி இங்கே உயிர் நீத்து இருந்திருந்தால்,அவருக்கு இத்துணை அனுதாபம் கிடைத்திருக்குமோ தெரியாது.அவர் உயிரற்ற உடலாகத் திரும்பி வந்தமைதான் அவருக்கு கிடைத்த அதிகரித்த அனுதாபத்துக்கு ஒரு காரணம். 33 ஆண்டுகளாக சிறையில் இருந்தவர், தன் தாயைப் பார்ப்பதற்குத் தவித்திருந்த கடைசி நாளில் உயிர் நீத்தமை என்பது அவர் மீதான அனுதாபத்தை; அவரின் உடல் மீதான மதிப்பை அதிகப்படுத்தியது.அதுதான் வவனியாவில் இருந்து எல்லங்குளம் வரையிலும் அவருக்கு கிடைத்த மரியாதை.

ஆனால் சாந்தனுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது அதோடு முடியவில்லை.அவரோடு ஒன்றாகச் சிறப்பு முகாம்களில் இருந்த மேலும் மூவர் இதுவரை விடுவிக்கப்படவில்லை. அவர்களைப் போல பல ஈழத் தமிழர்கள் சிறப்பு முகாம்களில் இப்பொழுதும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். கிடைக்கும் புள்ளி விவரங்கள் சரியாக இருந்தால் மொத்தம் நூற்றுக்கும் குறையாத கைதிகளில் சுமார் 70-க்கும் குறையாதவர்கள் ஈழத் தமிழர்கள் என்று கூறப்படுகின்றது. இந்த 70-க்கும் குறையாத ஈழத் தமிழர்களில் பல்வேறு விதமான குற்றங்களை செய்தவர்களும் உண்டு.அரசியல் கைதிகளும் உண்டு. போதைப்பொருள் வியாபாரிகளும் உண்டு. தவிர சிறிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டவர்களும் உண்டு. உதாரணமாக ஆதார் அட்டை இல்லாமல் வாகன அனுமதிப்பத்திரம் எடுத்தவர், வெளிநாடு போக முற்படும் ஈழத் தமிழர்களுக்கு பொய்யான ஆவணங்களைத் தயாரித்துக் கொடுப்பவர் போன்றவர்களும் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது.

இந்தியாவில் சிறப்பு முகாம் என்று தோற்றப்பாடு மாநில அரசாங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. ஒரு மாநிலத்தில் உரிய பயண ஆவணம் இன்றித் தங்கியிருக்கும் வெளிநாட்டவரை அந்த மாநிலம் தனது கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பதற்கான ஏற்பாடு அது. ஆனால் ராஜீவ் காந்தி படுகொலை, பத்மநாபா படுகொலை போன்ற சம்பவங்களின் பின்னணியில் தமிழக சிறப்பு முகாம்கள் எனப்படுகின்றவை ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை கொடுமையான அனுபவங்களாகக் கருதப்படுகின்றன.

சிறப்பு முகாம்களில் மட்டுமல்ல, வெவ்வேறு குற்றச்சாட்டுகளின் பெயரில் தமிழகத்தில் கைது செய்யப்படும் ஈழத் தமிழர்கள் கௌரவமாக நடத்தப்படுவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் உண்டு.அவர்கள் வெளிநாட்டவர்களுக்குரிய மரியாதையோடு நடத்தப்படுவதில்லை என்றும்,அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கூறுகிறார்கள். ராஜீவ் காந்தி படுகொலை, பத்மநாபா படுகொலை ஆகிய சம்பவங்களின் பின்னர் தமிழகத்தில் கைது செய்யப்படும் ஈழத்தமிழர்கள் கௌரவமாக நடத்தப்படுவதில்லை என்பது ஒரு பொதுவான அவதானிப்பு. தவிர புலம்பெயர்ந்த தமிழர்கள் காசை அள்ளி வீசி எல்லாவற்றையும் செய்யலாம் என்று நம்பும் ஒரு பின்னணியில், ஈழத் தமிழ் கைதிகளை வைத்து அதிகம் உழைக்கலாம் என்ற நம்பிக்கையும் அங்கே உண்டு.

இவ்வாறானது ஒரு பின்னணியில்,சாந்தனின் மரணத்தை முன்வைத்து ஒரு அடிப்படையான விஷயத்தை இங்கே சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. பொதுவாக ஒரு நபர் ஒரு வெளிநாட்டில் கைது செய்யப்படும் பொழுது, அவருடைய நலன்களை அவருடைய தாய் நாட்டின் தூதரகம்தான் பொறுப்பேற்கும். வடகடலில் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள உப தூதரகமும் கொழும்பில் உள்ள பிரதான தூதரகமும் பொறுப்பேற்கின்றன. அவர்களுடைய நலன்களை இந்தியத் தூதரகம்தான் கவனிக்கும்.

உலகம் முழுவதிலும் இதுதான் வழமை. தமிழகத்தில் இலங்கைக்கான உப தூதரகம் உண்டு. அங்கே தமிழ் அதிகாரிகளும் உண்டு. ஆனாலும் தமிழகத்தில் கைது செய்யப்படும் ஈழத் தமிழர்களின் விடயத்தில் மேற்படி உப தூதரகம் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய அளவுக்குத் தலையிடுவது கிடையாது. அங்கே ஈழத் தமிழ் கைதிகள் நடத்தப்படும் விதத்தைத் தொகுத்துப் பார்த்தால், ஒரு விமர்சகர் கூறுவது போல, அவர்கள் அரசியல் அனாதைகளாகக் காணப்படுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.சாதாரண கைதிகளின் நிலைமையை இப்படி என்றால் அரசியல் கைதிகளின் நிலைமையைச் சொல்லத் தேவையில்லை.

இப்படிப்பட்டதோர் பின்னணியில்,தமிழகத்தில் கைது செய்யப்படுகின்ற அல்லது சிறப்பு முகாமும் உட்பட வெவ்வேறு சிறைகளில் சிறை வைக்கப்பட்டிருக்கின்ற ஈழத்தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு ஒரு பலமான சட்ட உதவி மையத்தை தமிழகத்தில் திறக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் இருந்து ஒரு கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. ஈழத் தமிழர்களிடம் நிதிப்பலம் மிக்க ஒரு புலம்பெயர் சமூகம் உண்டு. புலம்பெயர் சமூகத்தின் நிதிப் பங்களிப்போடு தமிழகத்தில் அவ்வாறு ஒரு சட்ட உதவி மையத்தை உருவாக்கினால் என்ன? அச்சட்ட உதவி மையத்தில் வேலை செய்வதற்கு அங்கே பல சட்டத்தரணிகள் தயாராக இருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின்னரும், பத்மநாபாவும் அவருடைய தோழர்களும் கொல்லப்பட்ட பின்னரும், தமிழகத்தில் ஈழ உணர்வாளர்கள் தீக்குளித்திருக்கிறார்கள் .அது மட்டுமல்ல,சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை தமிழகத்தில் உள்ள சில உணர்வாளர்கள் சந்திப்பதுண்டு. மேலும் சாந்தனும் உட்பட ஈழத்து அரசியல் கைதிகளின் வழக்குகளில் தோன்றுவது தமிழகத்தில் உள்ள ஈழ உணர்வானர்களான வழக்கறிஞர்கள்தான். சாந்தனின் உடலை பொறுப்பெடுத்து நாட்டுக்கு கொண்டு வந்ததும் அப்படி ஒரு வழக்கறிஞர்தான்.

எனவே சாந்தனின் இழப்பை முன்வைத்து தமிழகத்தில் அவ்வாறு ஒரு பலமான சட்ட உதவி மையத்தை உருவாக்குவதைக் குறித்து ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும். குறிப்பாக சிறப்பு முகாம்களில் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை வெளிப்பதிவு அகதிகளாக மாற்ற வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் வைக்கப்படுகிறது.

சாந்தனும் உட்பட அரசியல் கைதிகளின் விடயத்தில் ஈழத்து தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டு. அது மட்டுமல்ல, இவர்களில் பலர் தமிழகத்திற்கு செல்வதுண்டு அங்கே தமிழக பிரபல்யங்களை கண்டு அவர்களோடு படம் எடுத்துக் கொள்வதும் உண்டு.ஆனால் இவர்களில் எத்தனை பேர் சிறைகளுக்கும் சிறப்பு முகாம்களுக்கும் அகதி முகாம்களுக்கும் சென்றிருக்கிறார்கள்? அகதிகளோடு படம் எடுத்திருக்கிறார்கள்? ஈழத் தமிழ் கைதிகளை அவர்களுடைய அரசியல் பிரதிநிதிகளை சந்திக்கவில்லை என்று சொன்னால், தமிழக அரசு அவர்களை எப்படி மதிக்கும்?

எனவே இப்பொழுது தமிழகத்தில் மிஞ்சியிருக்கும் அரசியல் கைதிகளும் உட்பட ஏனைய ஈழத் தமிழ் கைதிகளின் விடயத்தில்,தமிழ் அரசியல் சமூகம் தெளிவான சில முடிவுகளை எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று தமிழகத்துக்கு சென்று அங்குள்ள கைதிகளோடு உரையாட வேண்டும். மேலும் அங்கு உள்ள ஈழ உணர்வாளர்களின் உதவியோடு ஒரு சட்ட உதவி மையத்தை உருவாக்க வேண்டும்.அதுதான் நடைமுறைச் சாத்தியமான வழி.அதுதான் உடனடிக்குச் செய்ய வேண்டிய வேலையும். அதுதான் சாந்தனுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியும்.

https://athavannews.com/2024/1372928

ஜனாதிபதியை கேலிச்சித்திர கலைஞர்கள் நோக்கிய விதம் “Press Vs. Prez” நூல் வௌியிடு

1 week 3 days ago

Published By: VISHNU    08 MAR, 2024 | 01:37 AM

image

கடந்த காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வகிபாகத்தை இந்நாட்டு கேலிச்சித்திரக் கலைஞர்கள் சித்தரித்த விதத்தை பாராளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன “Press Vs. Prez” என்ற நூலாக வௌியிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வியாழக்கிழமை (07) கொழும்பு நெலும் பொக்குண கலையரங்கத்தில் இந்த நூல் வௌியிடப்பட்டது.  

இவ்வாறான தொகுப்புகள் ஜனநாயகத்தின் ஒரு அங்கமாகும் எனவும், அதனால் நாட்டில் சுதந்திரம் நிலைநாட்டப்பட்டுள்ளமையை உறுதி செய்ய முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

சர்வாதிகார ஆட்சியில் இவ்வாறான படைப்புகள் ஒருபோதும் பிறக்காது என்றும், குற்றவியல் அவதூறு சட்டத்தை நீக்கியமை குறித்து பெருமையடைவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் அரசாங்கம் சிரமப்பட்டு முன்னெடுத்த வேலைத்திட்டங்களினால் நாட்டின் பொருளாதாரத்தை சாதகமான நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளதாகவும், ஒரு நாடாக நாம் இக்கட்டான காலத்தின் கடைசி பகுதியில் இருக்கிறோம் என்றும்  ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.  

இக்கட்டான காலத்தில் மனதிற்கு மகிழ்ச்சி அளித்த, இந்தக் கேலிச்சித்திர படைப்புகள் அனைத்தையும் உருவாக்கிய படைபாளிகள் அனைருக்கும் ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 9 ஆவது பாராளுமன்ற உறுப்பினராக 2021 ஜூன் 23 ஆம் திகதி பதவியேற்றதிலிருந்து, மே 2023 வரையிலான அவரது பயணம் குறித்து, நாளிதழ்களில் வெளியான 618 கேலிச்சித்திரங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்நூலின் முதல் பிரதியை பாராளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன ஜனாதிபதிக்கு வழங்கிவைத்தார்.

அத்துடன் 40 கேலிச்சித்திர கலைஞர்கள் மற்றும்  20 ஊடகவியலாளர்கள் இந்த படைப்புக்கு பங்களிப்புச் செய்துள்ளனர். அவற்றை தொலைக்காட்சியின் ஊடாக வௌியிட்ட கலைஞர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு  தெரிவித்தார்.  

இந்நூல் வெளியீட்டு விழாவில் இந்திய புகழ்பெற்ற கேலிச்சித்திர கலைஞர் நள பொன்னப்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பேராசிரியர் ரொஹான் நெட்டசிங்கவால் நூல் பற்றிய விமர்சன விரிவுரையை நிகழ்த்தப்பட்டது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

"இந்த கேலிச்சித்திரங்களின் தொகுப்பு ஒரு பாரம்பரிய பணியை நிறைவேற்றியுள்ளது. ஜே.ஆர் ஜயவர்த்தன,  சேர் ஜோன் கொத்தலாவல ஆகியோரின் வீடுகளில் இவ்வாறான தொகுப்புக்களைக் கண்டிருக்கிறேன். அதனால் இன்று வஜீரவும் அவ்வாறான சம்பிரதாயபூர்வமான பணியை நிறைவேற்றியுள்ளார்.

இந்த தொகுப்பில் குறிப்பிடப்படும் 2021-2023 காலகட்டத்தை இப்போது மறந்துவிட்டோம். நான் பதில் ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட  தருணத்தில் சித்தரிக்கப்பட்ட காட்சி  இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்ததைக் கவனித்தேன். அந்த நேரத்தில் சத்தியப்பிரமானம் செய்ய இடமிருக்கவில்லை. அரச அலுவலகங்களில் செய்தால் அதற்கு தீ மூட்டிவிடுவார்கள் என்ற அச்சம் காணப்பட்டது.

பின்னர் பிரதம நீதியரசருக்கு அறிவிக்கப்பட்டு வாலுக்காராமய விகாரையில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்துகொண்டேன். அப்போது நாட்டின் நிலைமை அவ்வாறானதாக இருந்தது. வன்முறைக் கும்பல் பாராளுமன்றத்தை சுற்றிவளைக்க முற்பட்டது. இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் அதனைத் தடுத்து நிறுத்த முடிந்தது.

மேலும், நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் மாத்திரம்  2000 கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. நாம் ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்தியிருந்தால் அத்தகைய படைப்புகள் பிறந்திருக்காது. இவ்வாறான படைப்புக்கள் ஜனநாயகத்தின் ஒரு அங்கமாகும். அவதூறு சட்டத்தில் இருந்து விடுபட முடிந்ததில் பெருமை கொள்கிறேன்.

இன்று புத்தகங்கள் எழுதலாம். தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம் என எந்த வகையிலும் படைப்புக்களை  உருவாக்கலாம். அந்த சுதந்திரம் இருக்கிறது. 1931 இல் இந்த நாட்டில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இந்த நாட்டில் ஜனநாயக முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

எதிர்க்கட்சிகளைத் தடை செய்யவில்லை. எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை. பிரச்சினைகள் இருந்தன. ஆனால் ஒரு தேர்தலுக்குப் பிறகு முடிவுகளை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப தோல்வியை ஏற்றுக்கொண்டு ஆட்சியை விட்டு வெளியேறினர். ஆசியாவிலேயே இப்படி நடந்த ஒரே நாடு இலங்கைதான். நம்மிடையே எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் ஜனநாயகத்தை மதிக்கிறோம்.

இந்த கார்ட்டூன்கள் அனைத்தும் நாட்டில் உள்ள சுதந்திரத்தைக் காட்டுகின்றன. இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறும் போதும் இவ்வாறான கேலிச் சித்திரங்கள் குறையப்போதவில்லை. மாறாக அவை அதிகரிக்கும். இந்த ஜனநாயக சுதந்திரத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

நான் மிகவும் கடினமான நேரத்தில் நாட்டைக் பொறுப்பேற்றுக் கொண்டேன். நாட்டின் அரசியல் சரிவடைந்து கிடந்தது. ஆனால், எம்மால் பொருளாதாரத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வர முடிந்தது.  பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து செயற்பட்டோம்.  அந்த ஜனநாயகத்தையே இந்த சித்திரங்கள் பிரதிபலிக்கின்றன.

இந்தக் காலப்பகுதியில் நாம் சிரமப்பட்டு முன்னெடுத்த வேலைத்திட்டத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை சாதகமான நிலைக்கு கொண்டு வர முடிந்தது. நாம் எதிர்கொள்ளும் கடினமான காலத்தின் கடைசிப் பகுதி இதுவாகும். இன்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினேன். நாங்கள் இதுவரை செய்த அனைத்து செயற்பாடுகளும் வெற்றியளித்துள்ளதாக குறிப்பிட்டனர். எமக்கு கடன் வழங்கிய நாடுகளின் குழுவின் தீர்மானங்களுக்கமைய, தனியார் கடன் வழங்குநர்களும் அவர்களின் கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர்.  நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமான பிரதிபலனைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்தின் கடன் தொடர்பான கலந்துரையாடல்களில் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளை ஈடுபடுத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார். அதன்படி, அந்த யோசனைகள் அனைத்தையும் சர்வதேச நாணய நிதியத்துடன் விவாதித்து அவர்களின் இறுதி முடிவின்படி செயல்பட எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்து கலந்துரையாட முடியும். எனவே, அனைவரும் இணைந்து இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என நம்புகிறேன்.

இந்த இக்கட்டான காலங்களில் இந்த கேலிச்சித்திரங்கள் எமக்கு நிவாரணமாக அமைந்தன. அதனால் வாழ்க்கையை எளிதாகப் பார்க்க முடிந்தது. இப்போது நாம் அனைவரும் நிலையான எதிர்காலத்தை நோக்கி செல்ல வேண்டும். எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதன் அந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என நான் நம்புகிறேன். அதேபோல் கேலிச்சித்திரக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்." என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்திய கேலிச்சித்திர கலைஞர் நல பொன்னப்பா கருத்து தெரிவிக்கையில்

''இந்நூலில் ஜனாதிபதியை கேலிச்சித்திர கலைஞர்கள் மிகச் சிறப்பாகச் காண்பித்துள்ளனர்.

அரசியல்வாதிகளும் மனிதர்களே! எனவே உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் தங்கள் மக்களுக்கும் நாட்டுக்கும் எது சிறந்தது என்பதை அறிவார்கள். கேலிச்சித்திர கலைஞர்கள் தங்களுக்கு இருக்கும் அதிகபட்ச சுதந்திரத்தைப் பயன்படுத்தி  அதற்கேற்ப தங்கள் கருத்தை வெளிப்படுத்துகிறார்கள். இங்கு கூடியிருப்போரைப் பார்க்கும்போது, ஜனநாயகம் என்றால் என்ன, அது எப்படி இருக்க வேண்டும் என்பதை மக்கள் நன்கு புரிந்துகொள்ள முடியும்.

இந்தப் புத்தகம் நாடவாவிய மற்றும் உலகளாவிய ரீதியில் உள்ள நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. இது எதிர்கால சந்ததியினருக்கு அரசியல் கேலிச்சித்திர வரலாற்றைப் படிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த சவாலான காலகட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பயணம் இந்த நூலில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தில் நூறு கேலிச்சித்திரக் கலைஞர்களின் பார்வைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட 618 கேலிச் சித்திரங்கள் உள்ளன.  இந்நூல் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தொகுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கும், நாட்டு மக்களுக்கும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில், பிரகாசமான எதிர்காலம் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

அதேபோல் கேலிச்சித்திரங்களை வரைந்திருக்கும் கலைஞர்கள் மிகவும் சாதகமான முறையில் எதிர்கால சந்ததிக்காக அவர்களின் பணிகளை செய்துள்ளனர்.'' என்று அவர் தெரிவித்தார்.

பேராசிரியர் ரொஹான் நெத்சிங்க, ''இலங்கையின் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுக்கும், முதல் பெண்மணி என்ற முறையில் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவுக்கும் சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது நன்றாகவே தெரியும்.

கேலிச்சித்திர கலைஞர்கள் முதுகெலும்பு உள்ளவர்கள். நாங்கள் என்ன செய்கிறோம் என்று யாருக்காவது தெரிந்திருந்தால், இன்று போன்ற ஒரு நாளில் எங்களை இங்கு அழைத்திருக்க மாட்டார்கள். இந்த அழைப்பை பார்க்கும் போதே சிரிப்பு வருகிறது என்றார்கள். ஆனால் அதற்கு மாறான விடயமே நடந்தது. உங்கள் திறமையாலேயே இந்த பணிகளை செய்துள்ளீர்கள் என்பதை ஜனாதிபதி நன்கறிவார்.  அதனாலேயே உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

சில நேரங்களில் இந்த கேலிச்சித்திர கலைஞர்கள் செய்யும் கடுமையான விமர்சனங்கள் மன வேதனையை ஏற்படுத்துகின்றன. ஆனால் நான் முன்னர் குறிப்பிட்டது போல் ஜனாதிபதி தனது அறிவையும் திறமையையும் கூர்மைப்படுத்தியவர். அதுவே இன்று அவருக்கு வலுவாக அமைந்துள்ளது.

உங்களின் தலைமைத்துவத்திற்கும், இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும் நீண்ட ஆரோக்கியத்தையும் ஆயுளையும் பிரார்த்திப்பதோடு நல்வாழ்த்துக்களையும் கூறுகிறேன்.'' என்று தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டுத் தூதுவர்கள், ஊடகவியலாளர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய சகாக்களும் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/178216

நீதிபதி சரவணராஜாவை அடுத்து பொலிஸ் அதிகாரி வெளியேறிய பின்னணி.

1 week 6 days ago

போதை விற்பனையாளர்களாலும் உள்வீட்டார்களாலும் குறி வைக்கப்படும் பொலிஸ் அதிகாரிகள் புலனாய்குத்துறை அதிகாரிகள்.

ஜேவிபி க்கு ஆதரவாக களமிறங்கியுள்ள இந்தியா.அடுத்துவரும் தேர்தல்களில் கோடிகோடியாக பணத்தை கொட்ட தயாராகும் இந்தியா.

அமெரிக்கா தனது தரப்பில் அரசுகளை பிரட்டக் கூடிய ஆளை அனுப்பி வைத்ததைப் போன்று 

இந்தியாவும் தனது அணியிலிருந்து ஒருவரை இறக்கியுள்ளது.

கூடிய விரைவில் வடகிழக்கு இந்தியாவின் முழு கட்டுப்பாட்டில்.

 

"இந்திய மீனவர்களால் எங்கள் வாழ்வாதாரம் பறிபோகிறது" - இலங்கை மீனவர்கள் கொந்தளிப்பது ஏன்?

2 weeks ago
இலங்கை, தமிழ்நாடு மீனவர் பிரச்னை
கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் மற்றும் பிரபுராவ் ஆனந்தன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்களும், இலங்கை அரசைக் கண்டித்து தமிழ்நாடு மீனவர்களும் நடுக்கடலில் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். மீனவர்களுக்கு இடையே என்ன பிரச்னை?

தமிழக மீனவர்கள் தங்கள் கடற்பரப்பினுள் வருவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று கூறி, அதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இலங்கை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று (ஞாயிறு, மார்ச் 3) நடத்தினர்.

யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்மித்துள்ள கடற்கரைப் பகுதிகளிலுள்ள மீனவர்கள் இந்த போராட்டத்தை நடத்தினர். படகுகளில் கறுப்பு நிறக்கொடிகளை பறக்கவிட்டு, நடுக்கடலுக்கு சென்று இலங்கை மீனவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதனால், இதை அறிந்த ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிறன்று மண்டபம் மற்றும் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச்சீட்டு வழங்கவில்லை.

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தினர்.

முன்னர், கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிவரை தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி படகுகளில் கருப்பு கொடி கட்டி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருந்தனர்.

இரண்டு நாட்டு மீனவர்களும் கடலில் போராட்டம் நடத்தும் அளவுக்கு என்ன நடக்கிறது இவ்விஷயத்தில்?

அதை அறிந்துகொள்ள பிபிசி தமிழ், யாழ்ப்பாணம் மற்றும் ராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்திய மீனவர்களிடம் பேசியது.

 
இலங்கை, தமிழ்நாடு  மீனவர் பிரச்னை
படக்குறிப்பு,

படகுகளில் கறுப்பு நிறக்கொடிகளை பறக்கவிட்டு, நடுக்கடலுக்கு சென்று இலங்கை மீனவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்

போராட்டம் எப்படி நடத்தப்பட்டது?

மார்ச் 3-ஆம் தேதி இலங்கை யாழ்ப்பாணம் கடலில் சுமார் மூன்று மணிநேரம் நடத்தப்பட்ட போராட்டத்தில் நூற்றுக்கணக்கான படகுகளில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இந்திய மீனவர்களின் வருகையை தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

தடை செய்யப்பட்டுள்ள இழுவை முறையிலான மீன்பிடி நடவடிக்கைகளில் இந்திய மீனவர்கள் ஈடுபடுவதனால் இலங்கையின் கடல் வளங்கள் முற்றாக அழிக்கப்பட்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். தமது கடல் வளத்தையும் அழித்து, தமது வாழ்வாதாரத்தையும் இந்திய மீனவர்கள் அழித்து வருவதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இலங்கை கடற்படைக்கு மகஜரொன்றை கையளிக்க இலங்கை மீனவர்கள் முயற்சித்தனர்.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படைக்கு சொந்தமான படகை மறித்து, மகஜரை கையளிக்க முயற்சித்த போதிலும், இலங்கை கடற்படை படகு நிறுத்தாது அங்கிருந்து பயணித்தது.

இதையடுத்து, யாழ்ப்பாணம் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு, மீண்டும் கரைக்குத் திரும்பினார்கள்.

 
இலங்கை, தமிழ்நாடு  மீனவர் பிரச்னை
படக்குறிப்பு,

அருள்தாஸ்

இலங்கை மீனவர்கள் சொல்வது என்ன?

போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மீனவர் அருள்தாஸ், "இந்திய மீனவர்களின் வருகையால் எங்கள் மக்கள் படகை இழந்திருக்கிறார்கள். தொழில் செய்ய முடியவில்லை," என்கிறார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை காரணமாக, தமது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்படுவதாக யாழ்ப்பாணத்து மீனவர்கள் கூறுகின்றனர்.

''நேற்று 8 வலைகள் இல்லாமல் போயின. மூன்று பேரின் வலைகளை அறுத்து விட்டார்கள். எப்படித் தொழில் செய்வது. இன்றைக்கு தொழிலுக்கு போகாத காரணம் இது தான். இப்படி தொழில் செய்து என்ன பிரயோசனம்? ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் இல்லாமல் போயின. அப்படியே எடுத்துக்கொண்டு போய் விட்டார்கள்," என ஒரு மீனவர் குறிப்பிட்டார்.

“ஒருமுறை வல்வெட்டித்துறை கடலுக்கு வந்து இந்திய மீனவர்கள் எங்கள் வலைகளை இழுத்துக்கொண்டு போய்விட்டார்கள். எங்கள் அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. டிராலர் வலைகளை நிறுத்தினால்தான், இலங்கை மீனவர்கள் வாழ முடியும்," என மற்றுமொரு மீனவர் கூறினார்.

 
இலங்கை, தமிழ்நாடு  மீனவர் பிரச்னை
படக்குறிப்பு,

டக்ளஸ் தேவானந்தா

இந்திய மீனவர்கள் தங்கள் கடற்பரப்பில் புகுந்து டிராலர் வலைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஆவன செய்யவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கூறினர்.

இலங்கை அமைச்சரின் பதில் என்ன?

இலங்கை மீனவர்கள், இலங்கை அரசாங்கம் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டு குறித்து, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பிபிசி தமிழ் வினவியது.

“அரசாங்கத்தை பொருத்தவரையில் கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில் நாங்கள் எங்களால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு தான் இருக்கின்றோம்," என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதிலளித்தார்.

 
இலங்கை, தமிழ்நாடு  மீனவர் பிரச்னை
படக்குறிப்பு,

கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிவரை தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி படகுகளில் கருப்பு கொடி கட்டி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருந்தனர்

தமிழக மீனவர்கள் கூறுவது என்ன?

இலங்கை மீனவர்கள் நடத்திய இந்தப் போராட்டம் குறித்து ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கப் பிரதிநிதி எமரிட் பிபிசி தமிழிடம் பேசுகையில், கடந்த வாரம் இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி படகுகளில் கருப்பு கொடி கட்டி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாகக் கூறினார்.

“ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை, இந்திய அரசை கண்டித்து மட்டும் போராட்டம் நடத்தினரே தவிர இலங்கை மீனவர்களுக்கு எதிராக இதுவரை தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தியதில்லை. ஆனால் இன்று தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்கள் கருப்பு கொடியுடன் கடலில் போராட்டம் நடத்தியது தமிழக மீனவர்களுக்கு வருத்தம் அளிக்கிறது,” என்றார்.

மேலும் பேசிய அவர், இரு நாட்டு அரசுகளும் உடனடியாக மீனவர் பிரச்சனையில் கவனம் செலுத்தி மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே தமிழக மீனவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளதாகக் கூறினார்.

“இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்னையை தீர்வு கிடைப்பதற்கு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும். இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தையில் மட்டுமே நிரந்தர தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது."

“இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே இரு நாட்டு அரசும் மீனவர் பிரச்னைக்கு கவனம் செலுத்தி மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க தமிழக மீனவர்கள் எதையும் விட்டுக் கொடுத்து போவதற்கு தயாராக உள்ளோம்,” என்றார்.

இலங்கை மீனவர்களுடன் மோதல் போக்கு தொடர்வதை தமிழக மீனவர்கள் விரும்பவில்லை. வரையறுக்கப்பட்ட மீன்பிடி தொழில் செய்வதற்கு இரு நாட்டு அரசும் உதவி செய்ய வேண்டும் என்பது தமிழக மீனவர்கள் கோரிக்கை என்றார் மீனவ சங்க பிரதிநிதி எமரிட்.

 
இலங்கை, தமிழ்நாடு  மீனவர் பிரச்னை
‘தமிழக மீனவர்கள் எதையும் விட்டுக்கொடுக்கத் தயார்’

இலங்கை மீனவர்களின் கருப்புக்கொடி போராட்டம் குறித்து இலங்கை இந்திய பேச்சுவார்த்தை குழு தலைவர் ஜேசுராஜா பிபிசி தமிழிடம் பேசுகையில், கடந்த சில மாதங்களாக இருநாட்டு மீனவர்கள் இடையே பிரச்னை பெரிதாகி வருகிறது, என்றார்.

"இது தொடர்பாகவும், இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்து பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி இந்திய மீன்வளத்துறை அமைச்சர் ரூபாலா மற்றும் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இருவரையும் ராமேஸ்வரம் மீனவர்கள் டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். இருவரும் விரைவில் இரு நாட்டு மீனவ பேச்சுவார்த்தை நடைபெற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ள நிலையில் இன்று தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்கள் கடலில் கருப்பு கொடி கட்டி முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர், இது வேதனையளிக்கிறது," என்றார்.

“மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக இலங்கையில் மீனவர்கள் போராடுகிறார்கள். அதை தமிழக மீனவர்கள் ஏற்று கொள்ள கூடிய ஒன்று தான். அதே நேரத்தில் வயிற்றுப் பிழைப்புக்காக மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை அடைக்கபட்ட மீனவர்களுக்காக இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்தினோம்.

“ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தியதால் இன்று இலங்கை மீனவர்கள் கருப்பு கொடி கட்டி இந்திய மீனவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவது எந்த வகையிலும் நியாயம் இல்லை,” என்றார்.

மேலும் பேசிய அவர், இரு நாட்டு மீனவர்களும் ஒருவருக்கொருவர் ஆர்ப்பாட்டம் செய்வதால் எந்த பயனும் இல்லை. மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுமே தவிர பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாது, என்றார்.

“இலங்கை மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழக மீனவர்கள் மீன்பிடி முறையில் மாற்று திட்டம் கொண்டு வர பல்வேறு யோசனைகளை செய்து வருகிறோம். தமிழக மீனவர்கள் இழுவை மடி படகை மாற்றி மீன்பிடிக்க அரசுடன் ஆலோசனை செய்து மாற்றுத் திட்டத்திற்கு காத்திருக்கின்றோம்."

"போராட்டம் தொடர்ந்தால் கடலில் இரு நாட்டு மீனவர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்படும். இரு நாட்டு மீனவர் பேச்சு வார்த்தையை மீண்டும் நடத்தி மீனவப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க அரசாங்கங்கள் முயற்சி செய்ய வேண்டும்," என இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தை குழு தலைவர் ஜேசுராஜா தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c4nd509z0wwo

தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவும் சிவில் சமூகங்களும்! நிலாந்தன்.

2 weeks 1 day ago
spacer.png தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவும் சிவில் சமூகங்களும்! நிலாந்தன்.

தமிழரசுக் கட்சி அதன் 73 ஆண்டுகால நீண்ட வரலாற்றில் உட்கட்சி மோதல் காரணமாக நீதிமன்றம் ஏற வேண்டிய ஒரு நிலை தோன்றியிருக்கின்றது. இந்த வழக்குகளில் சுமந்திரன் தான் நேரடியாக சம்பந்தப்படவில்லை என்று கூறுகிறார்.ஆனால் எல்லாவற்றின் பின்னணிகளும் அவர்தான் இருக்கிறார் என்ற சந்தேகம் பரவலாகக் காணப்படுகின்றது.

தமிழரசு கட்சிக்குள் நடந்த தலைவர் தெரிவில் மட்டும் சுமந்திரன் தோற்கவில்லை. அதன் பின் கட்சிக்குள் நடக்கும் எல்லா விடயங்களிலும் அவர் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டேயிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு வரை அவரைப் போற்றிப் புகழ்ந்தவர் கம்பவாருதி. வெளிநாடுகளோடு உறவாடவும் வெளிவகாரங்களைக் கையாள்வதற்கும் சுமந்திரனைப் போன்ற சட்டப் புலமையும் ஆங்கிலப் புலமையும் மிக்கவர் தலைமைப் பதவிக்கு வர வேண்டும் என்று தேர்தலுக்கு முன்னரே அவர் எழுதியிருக்கிறார்.ஆனால் அதே கம்பவாருதி இப்பொழுது தமிழ் மக்கள் சுமந்திரனைப் போன்ற தந்திரசாலிகளை தலைவர்களாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற பொருள்பட எழுதத் தொடங்கிவிட்டார்.அதாவது சுமந்திரனின் ஆதரவு அணிக்குள் இருந்து ஒரு முக்கியமான மதப் பிரமுகர் எதிரணியை நோக்கிப் போகிறார் என்று பொருள்.

கடந்த செவ்வாய்க்கிழமை சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன், நல்லை ஆதீன முதல்வர் போன்ற சைவ சமயப் பெரியார்களும் யாழ். மறைமாவட்ட ஆயரும் இணைந்து ஒரு சமாதான முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த செவ்வாய் இரவு 8 மணிக்கு நடக்கவிருந்த அந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்கு இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் ஒப்புக் கொண்டிருந்தார்கள்.எனினும் துரதிஷ்டவசமாக சுமந்திரனின் தாயார் இறந்து போனதால்,அந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அந்தச் சந்திப்பை ஒழுங்குபடுத்தியது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு காட்சி ஊடகத்தின் அதிபர் என்ற கருத்து வெளியில் உண்டு. அவருடைய காட்சி ஊடகம் சிறீதரனுக்கு ஆதரவான பிரச்சாரங்களை முன்னெடுத்தது என்று சுமந்திரன் அணியினால் குற்றம் சாட்டப்படுகிறது. இவர்கள் அனைவரையும் இந்தியத் தூதரகம் இயக்குகிறது என்றும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.மிகக்குறிப்பாக சிறீதரனுக்கு ஆதரவாக ஈழத்து சிவசேனைத் தலைவர் தெரிவித்த கருத்துக்களையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மேலும் தமிழக பாரதிய ஜனதா ஆதரவாளர்களால் அல்லது சிவசேனை ஆதரவாளர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஓர் இளம் கவிஞரும் சிறீதரனுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகிறார். தென்மாராட்சியில் இடம்பெற்ற ஒரு கருத்தரங்கில் அவர் பேசியிருக்கிறார். இவை எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து சுமந்திரன் ஆதரவு அணி மேற்கண்டவாறு குற்றச்சாட்டை முன்வைக்கின்றது.

ஆயின்,தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி மோதலில் இந்தியா சிறீதரனின் பக்கம் நிற்கிறது என்று அவர்கள் கூற வருகிறார்களா ?ஒரு பிராந்தியப் பேரரசு கையாளும் அளவுக்கு தமிழரசுக் கட்சியின் உட்கட்சி மோதல் ஆழமானதாக மாறி வருகிறதா? அப்படி என்றால் கட்சிக்குள் தோன்றியிருக்கும் இரண்டு அணிகளையும் இணைப்பது சாத்தியமில்லையா?

கட்சி தொடர்ந்து நீதிமன்றத்தில் நிற்க வேண்டிய ஒரு நிலைமை தொடருமாக இருந்தால், ஒரு தேர்தல் ஆண்டை-இந்த ஆண்டை -கட்சி எப்படி எதிர்கொள்ளப் போகின்றது?

இந்த ஆண்டு மட்டுமல்ல, அடுத்த ஆண்டும் ஒரு தேர்தல் ஆண்டாகவே அமையலாம் என்று ஊகிக்கலாம். ஏனெனில் இந்த ஆண்டின் இறுதியில் நடக்கக்கூடிய ஜனாதிபதித் தேர்தலில் வெல்லக்கூடிய தரப்பு பெரும்பாலும் அடுத்த ஆண்டு அந்த வெற்றியை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கத்தோடு நாடாளுமன்ற தேர்தலையும் நடத்தும். தொடர்ந்து மாகாண சபை தேர்தலும் உள்ளூராட்சி சபை தேர்தலும் நடக்கக்கூடும். அதாவது இனிவரும் இரண்டு ஆண்டுகளும் தேர்தல் ஆண்டுகளாக அமையக்கூடிய வாய்ப்புகள் அதிகம் தெரிகின்றன.

இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில், தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சியான தமிழரசுக் கட்சி இரண்டாகி நிற்பது யாருக்கு லாபம்?

ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்குகள் கையெழுத்து வைக்கப்பட்ட பெற்றுக் காசோலையாக ஏதோ ஒரு சிங்கள வாக்காளருக்கு வழங்கப்பட்டு வந்தன. இந்த முறை அதைவிடக் கேவலமான ஒரு நிலை தோன்றலாம். தமிழ் வாக்குகள் வீதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வெற்றுக் காசோலையாக மாறக்கூடிய ஆபத்து அதிகரிக்கிறது.

தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவைச் சரி செய்வதற்கு சிவில் சமூகங்கள் தலையிட வேண்டும் என்ற கருத்தை இக்கட்டுரை ஆசிரியர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். ஆனால் சிவில் சமூகங்கள் இந்த விடயத்தில் தலையிட முடியாத அளவுக்கு பலவீனமாக காணப்படுகின்றன. தேர்தலுக்கு முன்பு மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிவில் சமூகம் இரண்டு தரப்புகளையும் மேசைக்கு கொண்டுவர முயற்சித்தது. அந்த சிவில் சமூகத்தின் தலைவர் முன்பு தமிழரசுக் கட்சியில் இருந்தவர். அவர் இப்பொழுது சுமந்திரனுக்கு சார்பாக இருப்பதாக கருதிய சிறிதரன் அணி அந்த சமரசம் முயற்சியை ஏற்றுக் கொள்ளவில்லை. அது தொடர்பாக எழுதலாமா என்று இக்கட்டுரை ஆசிரியர் மேற்படி சிவில் சமூகத் தலைவரிடம் கேட்டபோது அவர் அது பகிரங்கமாக முன்னெடுக்கப்படாத ஒரு நகர்வு என்பதனால் எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

அதன்பின் வழக்கிற்கு சில நாட்களுக்கு முன் திருமலை ஆயரின் தலைமையில் நடந்த சந்திப்பும் வெற்றி பெறவில்லை. நல்லை யாதீனத்தில் நடக்கவிருந்த சந்திப்பு சுமந்திரன் தாயாரின் மரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது. அதனால் திருக்கோணமலை நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பு விவகாரத்தை கட்சிக்குள் சுமூகமாகத் தீர்க்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன.

இத்தோல்வியில் இருந்து கற்றுக்கொண்டு சிவில் சமூகங்கள் மீண்டும் ஒரு தடவை அவ்வாறான முயற்சியை முன்னெடுக்குமா?

தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒப்பிட்டுளவில் பலமான சிவில் சமூகமாகிய தமிழ் சிவில் சமூக அமையமானது இந்த விடயத்தில் தலையிடுவதற்குத் தயங்குவதாகத் தெரிகிறது. ஏனெனில் அந்த சிவில் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு சட்டத்தரணிகள் சம்பந்தப்பட்ட இரண்டு அணிகளுக்கும் சார்பாக நிற்கிறார்கள்.ஒருவர் சிறீதரனுக்கு எதிரான தரப்புக்காக யாழ்ப்பாணத்தில் வாதாடினார்.மற்றொருவர் திருக்கோணமலை வழக்கில் சிறீதரனுக்காக வாதிடுகிறார். ஒரே சிவில் சமூகத்தின் இரண்டு சட்டத்தரணிகள் ஒரு கட்சிக்குள் மோதலில் ஈடுபடும் இரண்டு தரப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துவது எதைக் காட்டுகின்றது?

உள்ளதில் பலமான கட்சி இரண்டாக உடைந்து நீதிமன்றத்தில் நிற்கின்றது. உள்ளதில் பலமான சிவில் சமூகம் சமரச முயற்சிகளில் ஈடுபாட முடியாத ஒரு நிலை.கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழ் அரசியல் சமூகமும் பலமாக இல்லை; சிவில் சமூகமும் பலமாக இல்லை.

பொதுவாக ஒரு நாட்டில் அல்லது ஒரு மக்கள் கூட்டத்தில், அரசியல் சமூகம் பலவீனம் அடையும் பொழுது அல்லது தனக்குள் ஏற்பட்ட ஒரு பிரச்சினையை தானே தீர்க்க முடியாத போது சிவில் சமூகங்கள் தலையிடுவதுண்டு. சிவில் சமூகங்கள் பொதுவாக அரசியலில் நேரடியாக ஈடுபட விரும்பாதவர்களால் உருவாக்கப்படுகின்றன.சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு அரசியல் அபிலாசைகள் இல்லை என்பதுதான் அவர்களுடைய மகத்துவம்.அவர்கள் சமூகத்துக்கு நீதியானது எதுவோ நன்மையானது எதுவோ அதற்காகப் பக்கச் சார்பின்றி,உள்நோக்கம் இன்றி உழைப்பார்கள் என்ற நம்பிக்கைதான் அவர்களுக்கு உள்ள மகத்துவம். அவ்வாறு நேர்மையாக, நீதியாக இயங்குகின்ற, பக்கம் சாராத சிவில் சமூகப் பிரதிநிதிகள் தலையிடும் பொழுது அதற்கு ஒரு மதிப்பு இருக்கும்.கனம் இருக்கும். அவ்வாறான சிவில் சமூகங்கள் அரசியல் சமூகத்தின் மீது தலையீடு செய்யும் பொழுது அது தாக்கமான விளைவுகளை ஏற்படுத்துவதுண்டு. அதைத்தான் பேராசிரியர் உயாங்கொட “அரசியல் கட்சிகளின் மீதான சிவில் சமூகங்களின் தார்மீகத் தலையீடு” என்று வர்ணித்தார்.

அவர் அவ்வாறு வர்ணித்தது 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் நின்ற சிங்களச் சிவில் சமூகங்களுக்குத் தலைமை தாங்கிய மறைந்த சோபித பேரர் அவர்களின் நினைவுப் பேருரையிலாகும். அவ்வாறு அரசியல் சமூகத்தின் மீது தார்மீகத் தலையீடு செய்யக்கூடிய பலத்தோடு தமிழில் இப்பொழுது சிவில் சமூகங்கள் இல்லை.தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவை இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் நீதிமன்றத்துக்குப் போகாமல் தீர்க்க முடியாது போனமை அதைத்தான் காட்டுகின்றது.

சிவில் சமூகங்கள் கட்சிகளின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகின்றது.இல்லை.அது தமிழ் மக்களுக்குப் பொருந்தாது. கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளில் சிவில் சமூகங்கள் ஈடுபடலாம் என்றால், ஏன் கட்சிகளுக்குள் ஏற்படும் பிளவைச் சரி செய்வதற்கு சிவில் சமூகங்கள் தலையீடு செய்யக் கூடாது?

தமிழரசுக் கட்சிதான் கடந்த 15 ஆண்டு கால தோல்விகளுக்கும் பொறுப்பு. அதனால் அக்கட்சி அழிந்து போகட்டும் என்று சிவில் சமூகப் பிரதிநிதிகள் கூறலாமா? தமிழரசுக் கட்சி தான் கடந்த 15 ஆண்டு கால தோல்விகளுக்கு பொறுப்பு என்பதை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அதற்காக ஒரு தேர்தல் ஆண்டில் அக்கட்சியை முற்றாகச் சிதைய விட்டால் என்ன நடக்கும்? ஒரு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தேவை என்று எல்லாரும் எழுதுகிறோம். ஆனால் நடைமுறையில் அரங்கில் மக்கள் இயக்கம் எதுவும் கிடையாது. இருப்பவை எல்லாம் தேர்தல் மையக் கட்சிகள் தான். அவற்றின் பிரதான ஒழுக்கம் தேர்தல் அரசியல்தான். இந்நிலையில் பலமான ஒரு மக்கள் இயக்கம் இல்லாத வெற்றிடத்தில், இருக்கின்ற பெரிய கட்சியும் சிதைந்தால் என்ன நடக்கும்?

எனவே இப்போது தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையில் சிவில் சமூகங்கள் தலையீடு செய்ய வேண்டும். தமிழ்த் தேசிய உணர்வுடைய சிவில் சமூகங்கள் அவ்வாறு தலையீடு செய்யவில்லை என்றால், அந்த வெற்றிடத்தில் புதிது புதிதாக சிவில் சமூகங்கள் முளைக்கும். அதை ராணுவப் புலனாய்வுத் துறையும் உட்பட வெளிதரப்புகள் இயக்கும். அப்பொழுது என்ன நடக்கும்?

https://athavannews.com/2024/1372014

சாந்தன்: இரண்டு ஆயுள் தண்டனைகள் ; இரண்டு பிரேத பரிசோதனைகள் - நிலாந்தன்

2 weeks 1 day ago
சாந்தன்: இரண்டு ஆயுள் தண்டனைகள் ; இரண்டு பிரேத பரிசோதனைகள் - நிலாந்தன்

429919057_7322181917827800_7751763333685

சாந்தன் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர். பொதுவாக இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் ஆயுள் தண்டனை எனப்படுவது விடுமுறை நாட்களைக் கழித்து பார்த்தால் 15 ஆண்டுகள். சிறை, சிறப்பு முகாம் போன்ற இடங்களில் சாந்தன் தடுத்து வைக்கப்பட்டிருந்தது 33 ஆண்டுகள். அப்படிப்பார்த்தால் அவர் இரண்டு ஆயுள் தண்டனைகளை முடித்துவிட்டார். அதற்கு பின்னரும் அவர் தாயகம் திரும்புவதற்கு அனுமதிக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள சட்டச் செயற்பாட்டாளர்கள்  தமிழக அரசைக் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.

இந்த விடயத்தில் தாயகத்தில் உள்ள அரசியல்வாதிகளும் பொறுப்புணர்ந்து செயல்படவில்லை. இந்திய மண்ணில் பாரதூரமான குற்றச் செயல்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள், விடுவிக்கப்பட்ட பின் அவர்கள் இந்தியர்களாக இருந்தால் வீட்டுக்கு போகலாம். வெளிநாட்டவர்களாக இருந்தால் நாடு கடத்தப்படுவார்கள். அல்லது இந்தியாவில் அவர்களைப் பொறுப்பேற்கக்கூடிய உறவினர்கள் இருந்தால் அவர்களிடம் போகலாம். சாந்தன் தாயகத்துக்கு வர விரும்பினார். தன் தாயுடன் இறுதிக் காலத்தைக் கழிக்க விரும்பினார். அவரோடு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனையவர்கள் இப்பொழுதும் திருச்சி சிறப்பு முகாமில்தான். தண்டனைக் காலம் முடிந்த பின் விடுதலை செய்யப்ட்ட வெளிநாட்டவர்கள் அவர்களுடைய நாட்டுக்குத் திரும்பும் வரையிலும் அவ்வாறு தடுத்து வைக்கப்படுகின்றார்கள்.

விடுவிக்கப்பட்ட சாந்தன் நாட்டுக்குத் திரும்பினால் இலங்கைச் சட்டங்களின் பிரகாரம் அவருக்கு ஆபத்து ஏற்படுமா என்ற ஒரு பயம் அவருக்காக உழைத்த சட்டச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் காணப்பட்டது. நாட்டிலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி, உரிய அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக ஒரு பதிலை பெறுவது நல்லது என்றும் அவர்களிற் சிலர் அபிப்பிராயப்பட்டார்கள். ஆனால் அது தொடர்பாக எடுக்கப்பட்ட முயற்சிகள் எவையும் வெற்றி பெறவில்லை. தமிழ் அரசியல்வாதிகளில் ஒருவருக்கு அது தொடர்பாக எழுதப்பட்ட மின்னஞ்சலுக்குப் பதில் கிடைக்கவில்லை. சில அரசியல்வாதிகள் எங்கே, யாரிடம் அதைக் கேட்க வேண்டுமோ அங்கே கேட்காமல், சாந்தனின் வீட்டுக்கு போய் அவருடைய தாயாரைக் கண்டு படமெடுத்துக் கொண்டார்கள்.

இவ்வாறு சாந்தனை விடுவிப்பதற்கு யாரிடம் கதைக்க வேண்டும்? எங்கே போராட வேண்டும்? என்பது தொடர்பாக தமிழ் அரசியல் சமூகம் தெளிவற்றுக் காணப்பட்டது. அல்லது பொறுப்போடு நடந்து கொள்ளவில்லை. அல்லது மூத்த சட்ட மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளரான  ஒருவர் கூறுவது போல அதற்கு வேண்டிய அரசியல் பெருவிருப்பம்-political will-அவர்களிடம் இருக்கவில்லை.

திருச்சி சிறப்பு முகாமானது இதற்கு முன்னிருந்த சிறைகளை விடக் கொடுமையானது என்று அங்கு இருப்பவர்கள் கூறுகிறார்கள். அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரிகள் சிறப்பு முகாமுக்குள் இருந்தபடியே தமது வியாபாரத்தைத் தொடர்ந்தமை கண்டு பிடிக்கப்பட்டது. அதன்பின்  முகாமில் கட்டுப்பாடுகள் அதிகரித்தன. அது அரசியல் கைதிகளையும் பாதித்தது. சாந்தனைப் போன்றவர்கள் ஏனைய கைதிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு தனியறைகளில் வைக்கப்பட்டார்கள். சுற்றிவரக் கண்காணிப்பு. உடற்பயிற்சி செய்ய முடியாது. அவர்கள் தடுத்து வைக்கப்பட்ட அறைகளோடு கழிப்பறைகளும் இணைக்கப்பட்டிருந்தபடியால் வெளியே நடமாடுவதற்கும் வரையறைகள் இருந்தன. சிறைக்குள் சாந்தன் பெருமளவுக்கு ஒரு சன்னியாசி போலாகிவிட்டார் என்று வழக்கறிஞர் ஒருவர் சொன்னார். பெருமளவுக்குத் தனித்திருப்பதாகவும் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டவர் போல காணப்பட்டதாகவும் அவர் சொன்னார். சிறப்பு முகாமில் அவர் சோறு சாப்பிடாமல் கஞ்சி மட்டும் தருமாறு கேட்பதாகவும் கூறப்பட்டது. சிறப்பு முகாமும் சாந்தனின் உடல் கெடுவதற்கு ஒரு காரணம். முடிவில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் ஒரு நிலை வந்த பொழுது மீண்டும் அவரது குடும்பத்தவர்கள் தமிழ்த் தேசிய அரசியற் சமூகத்தை அணுகினார்கள்.

அப்பொழுதும் தமிழ்த் தேசிய அரசியற் சமூகம் அதே மந்தத்தனத்தோடு பொறுப்பின்றி நடந்து கொண்டது. சாந்தனை நாட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பான முடிவை இலங்கையில் எடுக்க வேண்டியது வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும்தான். சம்பந்தப்பட்ட அமைச்சுக்களோடு மிகவும் பிந்தித்தான், அதாவது அவர் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு கிட்டத்தட்ட 14 மாதங்களின் பின்னர்; அதிலும் குறிப்பாக அவர் இறப்பதற்குச் சில கிழமைகளுக்கு முன்புதான் தொடர்பு கொள்ளப்பட்டிருக்கிறது.

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த விடயத்தில் ஜனாதிபதியை, வெளி விவகார அமைச்சரை அணுகிய அதே காலப்பகுதியில் சாந்தனின் குடும்பத்தவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அணுகியிருக்கிறார்கள். மற்றொரு யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினராகிய அங்கஜனும் அதில் அக்கறை காட்டியிருக்கிறார். அதாவது சாந்தனின் விடயத்தில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, அதற்கு வெளியே உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சரும் அரசாங்கத்தை அணுகியதன் விளைவாகத்தான் நாடு திரும்புவதில் சாந்தனுக்கு இருந்த தடைகள் அகற்றப்பட்டன.

ஆனால், அப்பொழுது எல்லாமே பிந்திவிட்டது. விமானத்தில் பயணம் செய்ய முடியாத அளவுக்கு  சாந்தன்  நோயாளியாகி விடடார் என்று ராஜீவ் காந்தி மருத்துவமனையின் டீன் ஒரு வழக்கறிஞரிடம் கூறியுள்ளார். முடிவில், சாந்தனின் உயிரற்ற உடலைத்தான் அவருடைய தாய்க்குக் காட்ட முடிந்தது. விடுதலை செய்யப்பட்ட பின்னரும் அவர் ஒரு கைதியாகவே இறந்தார். உயிருடன் இருக்கும் போது அவர்  இரண்டு ஆயுள் தண்டனைகளை அனுபவித்தார். உயிர் பிரிந்தபின் அவருடைய உடலை இரண்டு தடவைகள் போஸ்மோர்டம் செய்திருக்கிறார்கள். முதலில் இந்தியாவில் பின்னர் இலங்கையில்.

சாந்தனுக்காக தாயகத்தில் உள்ள தமிழ் அரசியல் சமூகம் பெரிய அளவில் போராடவில்லை. இப்பொழுதும் சிறப்பு முகாம்களில் இருப்பவர்களை விடுதலை செய்யவதற்காக யார்  போராடுகிறார்கள்? சாந்தனோடு சிறையில் வைக்கப்பட்டிருந்த இந்தியப் பிரஜையாகிய பேரறிவாளனை விடுவிப்பதற்காக அவருடைய தாயார் அற்புதம்மாள் தொடர்ச்சியாகப் போராடினார். ஒரு தாயின் நிகரற்ற போராட்டங்களில் அதுவும் ஒன்று. கிழக்கில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த அன்னை பூபதியின் போராட்டத்தைப்போல அது முன்னுதாரணமானது. ஈழத் தமிழ் அரசியலில் தாயக களத்துக்கு வெளியே நடந்த ஓர் அன்னையின் மகத்தான போராட்டமாக அற்புதம்மாளின் 32 ஆண்டுகாலப் போராட்டம் காணப்பட்டது.

சாந்தனை விடுவிப்பதற்காக அல்லது நாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழ் அரசியல் சமூகம் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய போராட்டம் எதையும் முன்னெடுத்திருக்கவில்லை. அது மட்டுமல்ல, சாந்தனை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதிலும் தமிழ் அரசியல்வாதிகளிடம் பொருத்தமான அணுகுமுறைகள் இருக்கவில்லை. சாந்தனின் குடும்பம் சலிப்படைந்து, களைப்படைந்து, ஒரு விதத்தில் விரக்தியடைந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நோக்கிப் போனது.

 

429931246_911388340989428_65808419120999

 

ஆனால் தமிழ் தேசியக் கட்சிகள் தங்கள் சொந்தக் கட்சிக்குள் பதவிப் போட்டி என்று வரும் பொழுது எப்படியெல்லாம் போராடுகிறார்கள்? கடந்த வாரம் தமிழ்த் தேசிய அரசியலின் இயலாமைகளை நிரூபித்த ஒரு வாரம். முதலாவது சாந்தனின் மரணம். இரண்டாவது தமிழரசுக் கட்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டமை. அங்கே அவர்கள் புத்திசாலித்தனமாக நடந்தார்களா இல்லையா என்பது வேறு கதை. கட்சிக்குள் வந்த பிணக்கை கட்சிக்குள்ளேயே தீர்க்க முடியவில்லை என்பது ஒரு பாரதூரமான தோல்வி. அதனைத் தீர்ப்பதற்கு கட்சிக்கு வெளியேயும் சிவில் சமூகங்கள் இல்லை என்பது மற்றொரு தோல்வி. கடந்த 15 ஆண்டு காலத் தோல்விகளுக்கு அந்தக் கட்சி பொறுப்பு என்ற படியால் அது அழியட்டும்; அதன் வாக்குகள் தென்னிலங்கைக் கட்சிகளுக்குப் போனால்கூட பரவாயில்லை என்று கருதுமளவுக்கு சில சிவில் சமூகப் பிரதிநிதிகள் காணப்படுகிறார்கள் என்பது அதைவிடத் தோல்வி.

இது ஒரு தேர்தல் ஆண்டு. ஜனாதிபதித் தேர்தலில் தற்போதுள்ள நிலவரங்களின்படி அரச தரப்பு; எதிர்க்கட்சி; ஜேவிபி என்று மூன்று அணிகள் போட்டியிடக்கூடிய வாய்ப்புகள் தெரிகின்றன. தென்னிலங்கையில் படித்த நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் ஜேவிபி ஆதரவு அலை ஒன்று வீசுகிறது. அது வாக்குகளாக மாறுமா? இல்லையா?அல்லது அதை கண்டு பயந்து ஏனைய வலதுசாரிக் கட்சிகள் தங்களுக்கு இடையே ஐக்கியத்துக்கு போகுமா? இல்லையா? என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மேற்சொன்ன மூன்று தரப்புக்களும் போட்டியிட்டால், சிங்கள மக்களின் வாக்குகள் மூன்றாகப் பிரியும். அப்பொழுது தமிழ்த் தரப்பு ஒரு தீர்மானிக்கும் சக்தியாக மேலெழக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகும். ஆனால் அவ்வாறு  அரசியல் களத்தில் துணிந்து புகுந்து விளையாடுவதற்கு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. உள்ளதில் பெரிய கட்சி நீதிமன்றம் ஏறத் தொடங்கிவிட்டது. மற்றொரு கட்சி தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துவிட்டது. அதாவது துணிந்து புகுந்து விளையாடத் தயாரில்லை. ஒரு பொது வேட்பாளரை நிறுத்தப் போவதாகக் கூறிய குத்து விளக்குக் கூட்டணி அதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறதே தவிர செயல்படுவதாகத் தெரியவில்லை. தமிழரசுக் கட்சி தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்காவிட்டால் குத்துவிளக்குக் கூட்டணி அந்தப் பரிசோதனையில் இறங்குமா?

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெல்லப்போகும் கட்சி அல்லது கூட்டு, அடுத்த ஆண்டு அனேகமாக பொது தேர்தலை வைக்கும். தொடர்ந்து மாகாண சபைத் தேர்தல், உள்ளுராட்சி சபைத் தேர்தல் போன்றன வைக்கப்படலாம். அதாவது வரும் இரண்டு ஆண்டுகளும் தேர்தல் ஆண்டுகளாக அமையக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. தமிழ் மக்கள் மத்தியில் இப்பொழுது மக்கள் இயக்கம் எதுவும் இல்லை. இருப்பதெல்லாம் தேர்தல் கேட்கும் கட்சிகள்தான். அடுத்தடுத்து வரும் இரு தேர்தல் ஆண்டுகளை எதிர்கொள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளிடன் என்ன உபாயம் உண்டு? நிர்ணயகரமான ஒரு காலகட்டத்தில், அரங்கில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக்கூடிய தரப்புக்களை இந்தியாவும் அமெரிக்காவும் ஏனைய பேரரசுகளும் அணுகிக் கையாள முற்படும் ஒரு காலகட்டத்தில், அரங்கில் துணிந்து புகுந்து விளையாட வேண்டிய தமிழ்த் தரப்பு என்ன செய்து கொண்டிருக்கிறது?

அரசியலில் துணிந்து புகுந்து விளையாடும் தரப்புகள்தான் ரிஸ்க் எடுக்கும். ரிஸ்க் எடுக்கும் தரப்புகள்தான் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைக்கும். தலைமை தாங்கும். துணிந்து புகுந்து விளையாடும் தரப்புகள்தான் வரலாற்றை உருவாக்குகின்றன. உட்கட்சிச் சண்டையை நீதிமன்றத்துக்கு கொண்டு போகும் கட்சிகள் வரலாற்றை உருவாக்குவதில்லை. அதுமட்டுமல்ல தேர்தல் வரும்பொழுது தமிழ்த் திரைப்படங்களில் கடைசி நேரத்தில் விசிலடித்துக் கொண்டு வரும் போலீஸ்போல அறிக்கை விடும் சிவில் சமூகங்களும் வரலாற்றைத் தீர்மானிப்பதில்லை.

 

https://www.nillanthan.com/6582/

அநுரகுமாரவின் இந்திய விஜயம்; ஜே.வி.பியின் இந்திய விரோத கடந்த காலத்தை பொருட்படுத்தாத மோடி அரசு

2 weeks 1 day ago
அநுரகுமாரவின் இந்திய விஜயம்; ஜே.வி.பியின் இந்திய விரோத கடந்த காலத்தை பொருட்படுத்தாத மோடி அரசு

on March 1, 2024

GFjedoSW4AAHFrA.jpeg?resize=1200%2C550&s

Photo, X, @DrSJaishankar

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவும் அவரது மூன்று தோழர்களும் ஐந்து நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியிருந்தார்கள். தங்களையும் கூட இந்திய அரசாங்கம் அழைத்துப் பேசவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகி வேண்டுகோள் விடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. அந்தளவுக்கு தேசிய மக்கள் சக்தி தலைவரின் இந்திய பயணம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்புடன் கூடிய கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்தியா வழமையாக  தமிழ் அரசியல் கட்சிகளுக்குப் புறம்பாக ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற பெரிய கட்சிகளுடனேயே ஊடாட்டங்களைச் செய்துவந்திருக்கிறது; ஆனால், தேசிய ஐக்கிய மக்கள் சக்தி போன்ற இடதுசாரிக் கட்சிகளை அழைத்துப் பேசியதில்லை.

இந்திய, இலங்கை இடதுசாரி அரசியல்வாதிகள் அவர்களின் கட்சிகளின் மகாநாடுகளில் கலந்துகொள்வதற்காக பரஸ்பரம் விஜயங்களை மேற்கொள்வதுண்டு. அத்தகைய விஜயங்கள் குறிப்பிட்ட கட்சி வட்டாரங்களுக்கும் ஒரளவுக்கு ஊடக கவனிப்புக்கும் அப்பால் பெரிதாகக் அக்கறைக்குரியவையாக  இருப்பதில்லை.

ஆனால், இந்தத் தடவை தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களின் இந்திய பயணத்துக்கு அதிவிசேட முக்கியத்துவம் ஒன்று இருக்கிறது. திசாநாயக்கவையும் தோழர்களையும் இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைத்து இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறது. இலங்கை அரசியல் கட்சியொன்றின் தலைவர்களை இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைத்துப் பேசியிருப்பது அண்மைய தசாப்தங்களில் இதுவே முதற்தடவையாக இருக்கவேண்டும்.

திசாநாயக்கவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க, தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோரும் இந்தியா சென்றிருந்தனர்.

அவர்களுடன்  இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் மற்றும் வெளியுறவு செயலாளர் வினாய் மோகன் கவாட்ரா ஆகியோர் இலங்கையின் பொருளாதாரம், அரசியல் நிலைவரம், எதிர்கால அரசியல் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடியதாக செய்திகள் கூறின.

திசாநாயக்கவுடனான சந்திப்புக்குப் பிறகு கலாநிதி ஜெய்சங்கர் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் “இலங்கையின் தேசிய மக்கள் சக்தியினதும் ஜனதா விமுக்தி பெரமுனவினதும் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவை  சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி. இருதரப்பு உறவுகள், பரஸ்பர நலன்கள், இலங்கையின் பொருளாதாரச் சவால்கள், முன்னோக்கிச் செல்வதற்கான பாதை குறித்து நல்ல பேச்சுவார்த்தையை நடத்தினேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஐந்து நாள் விஜயத்தின்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் உள்ள தென்னிந்திய மாநிலமான கேரளாவுக்கும் சுற்றுலாவை மேற்கொண்டு சிந்தனைக் குழாம்கள் உட்பட பல்வேறு தரப்புகளுடனும் கலந்துரையாடினார்கள்.

இவ்வருட பிற்பகுதியில் இரு தேசிய தேர்தல்களுக்கு இலங்கை தயாராகிவரும் நிலையில், ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தன்னை அறிவித்திருக்கும் திசாநாயக்கவின் மக்கள் செல்வாக்கு பெருமளவுக்கு அதிகரித்திருப்பதாக தோன்றும் ஒரு நேரத்தில் இந்திய அரசாங்கம் அவரை அழைத்துப் பேசியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

இரு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சிக்கு பின்னரான அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் ஆதரவைப் பெருமளவுக்கு வளர்த்துக்கொண்ட கூட்டணியாக கட்சியாக தேசிய மக்கள் சக்தி விளங்குகிறது. அதன் தலைமைக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின்  (ஜே.வி.பி.) பொதுக் கூட்டங்களிலும் ஊர்வலங்களிலும் மக்கள் பெருமளவில் அணிதிரண்டாலும் அந்த திரட்சி தேர்தல்களில் வாக்குகளாக மாறுவதில்லை என்ற ஒரு வரலாறு இருக்கிறது. ஆனால், அதே வரலாறு இனிமேலும் தொடரும் என்று கூறமுடியாது என்றே தோன்றுகிறது.

மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஜனாதிபதி வேட்பாளரா திசாநாயக்கவே விளங்குவதாக கொழும்பை தளமாகக் கொண்டியங்கும் ‘சுகாதாரக் கொள்கைக்கான நிறுவனம்’ என்ற ஆய்வு அமைப்பு ஜனவரியில் செய்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்திருக்கிறது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 50 சதவீதமானவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கே வாக்களிக்கப்போவதாக கூறியிருக்கும் அதேவேளை, 33 சதவீதமானவர்கள்  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெறுமனே 9 சதவீதமானவர்கள் மாத்திரமே ஆதரிப்பதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. இந்த பிந்திய ஆய்வு கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

தேசிய மக்கள் சக்தி அமைக்கப்பட்ட சில மாதங்களில் நடைபெற்ற 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட திசாநாயக்க 3.1 சதவீத வாக்குகளையே பெறக்கூடியதாக இருந்தது. மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு தேசிய மக்கள் சக்தியின் ஆதரவு எவ்வளவுதான் அதிகரித்திருந்தாலும் திசாநாயக்க அடுத்த  ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறவேண்டுமானால் அவரின் வாக்குகள் அந்த மூன்று சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரிக்கவேண்டும். அது சாத்தியமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

எது எவ்வாறிருந்தாலும், இலங்கையின் இன்றைய அரசியல் நிலைவரத்துக்கு மத்தியில் தேசிய மக்கள் சக்தியை புதுடில்லிக்கு உத்தியோகபூர்வமாக அழைத்துப் பேசும் அளவுக்கு முக்கியமான அரசியல் சக்தியாக இந்திய அரசாங்கம் நோக்குகிறது என்பது தெளிவானது.

இந்திய விரோத கடந்த காலம்

ஜே.வி.பியைப் பொறுத்தவரை அதன் ஆரம்பம் முதலிருந்தே மிகவும் வெறித்தனமான இந்திய விரோதக் கொள்கையைக் கடைப்பிடித்த வரலாற்றைக் கொண்டிருக்கிறது.

காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் என். சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிபர் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்த ரோஹண விஜேவீர 1960 களின் பிற்பகுதியில்  கட்சியில் இருந்து வெளியேறி புதிதாக அமைத்துக்கொண்ட ஜே.வி.பியின் கொள்கைகளில் இந்திய விரோதம் முக்கியமான ஒரு கூறாக இருந்தது.

இலங்கையின் ஏனைய சமூகங்களின் தொழிலாளர் வர்க்கத்தினருடன் ஒப்பிடும்போது மெய்யான  பாட்டாளி வர்க்கத்தினராக நோக்கக்கூடிய  தமிழர்களான இந்திய வம்சாவளி மலையக தோட்டத்தொழிலாளர்களை இந்தியாவின் ஐந்தாம் படையென்றும் இந்திய விஸ்தரிப்புவாதத்தின் கருவிகள் என்றும்  விஜேவீர வர்ணித்தார்.

மலையக பெருந்தோட்டங்களில் தேயிலைச் செடிகளை அகற்றிவிட்டு உருளைக் கிழங்கை பயிரிடுவது குறித்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது.

1980 களின் பிற்பகுதியில் கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையை ‘இரண்டாவது மலைநாட்டு உடன்படிக்கை’ (Second Upcountry Pact) என்று விஜேவீர வர்ணித்ததாக இலங்கையில் இந்தியாவின் தலையீடுகள் தொடர்பில் அவரின் சிந்தனைகள் குறித்து 2019ஆம் ஆண்டில் உதேனி சமன் குமார என்ற என்பவர் எழுதிய விரிவான கட்டுரையொன்றில் பதிவு இருக்கிறது.

கண்டி பிரதானிகளுக்கும் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளுக்கும் இடையில் கைச்சாத்திப்பட்ட உடன்படிக்கையே இறுதியில் முழு இலங்கையும் பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழ் வருவதற்கு வழிவகுத்தது. அதுவே முதலாவது மலைநாட்டு உடன்படிக்கை எனப்படுகிறது. இந்தியாவுடனான சமாதான உடன்படிக்கையை இலங்கை முழுவதும் இந்தியாவின் ஆதிக்கத்தின் கீழ் வருவதற்கு வழிவகுக்கக்கூடியது என்று விஜேவீர சிங்கள மக்களுக்கு கூறினார் என்பதை இதில் இருந்து புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.

அந்த சமாதான உடன்படிக்கையை அடுத்து இரண்டாவது ஆயுதக்கிளர்ச்சியை முன்னெடுத்த ஜே.வி.பி. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணமுடியும் என்ற நம்பிக்கையில் மாகாண சபை முறையை ஆதரித்த தென்னிலங்கை அரசியல்வாதிகள் பலரை படுகொலை செய்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் கணவர் விஜய குமாரதுங்கவும் அவர்களில் ஒருவர். ஆனால், விஜேவீரவின் மறைவுக்கு பிறகு சில வருடங்கள் கழித்து ஜே.வி.பி. தேர்தல்களில் போட்டியிட்டு மாகாண சபைகளில் அங்கம் வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஜே.வி.பியும் அதன் நவீன அவதாரமான தேசிய மக்கள் சக்தியும் மாகாண சபை முறைக்கு வழிவகுத்த அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன. அந்த திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தனக்கு இருக்கும் விருப்பத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க கடந்த வருட முற்பகுதியில்  வெளியிட்டபோது  கடும்போக்கு சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத அளவுக்கு தேசிய மக்கள் சக்தி அதை எதிர்த்தது.

ஆனால், தற்போதைய புவிசார் அரசியல் நிலைவரங்களுக்கு மத்தியில் ஜே.வி.பியின் இந்திய விரோதக் கடந்தகாலத்தை மோடி அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. தேசிய மக்கள் சக்தியும் அதன் இந்தியா தொடர்பிலான அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது.

இந்தியாவின் முக்கியமான ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்றான சென்னை இந்துவின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு கடந்த டிசம்பரில் திசாநாயக்க வழங்கிய நேர்காணலில் இலங்கையின் நெருங்கிய அயல்நாடான இந்தியா முக்கியமான அரசியல் மற்றும் பொருளாதார மையமாக மாறிவிட்டது என்றும் அரசியல், பொருளாதாரத் தீர்மானங்களை எடுக்கும்போது அவை இந்தியாவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எப்போதும் கவனத்திற்கொண்டே செயற்படப்போவதாகவும் கூறினார்.

சீனாவுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இந்திய விஜயத்தின் பின்னர் சீனாவை எவ்வாறு கையாளுவார்கள் என்பது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதாகும்.

கடந்த வாரம் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரியவிடம் அவரது கட்சி வல்லரசுகளுடனான உறவுகளை எவ்வாறு கையாளும் என்று கேள்வியழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “எமக்கு சிறப்பான முறையில் பொருத்தமாக அமையக்கூடிய நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையிலேயே நாம் எந்த நாட்டுடனும் விவகாரங்களைக் கையாளவேண்டும். சீனாவோ, இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ அவர்களுக்கென்று ஒரு நிகழ்ச்சித்திட்டம் இல்லாமல் எம்முடன் விவகாரங்களைக் கையாள வரப்போவதில்லை. எமக்கென்று ஒரு நிகழ்ச்சித்திட்டம் இல்லாவிட்டால் அவர்களின் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரகாரமே நாம் செயற்படவேண்டியிருக்கும்” என்று பதிலளித்தார்.

சீனாவின் வியூகங்கள் பற்றிய அக்கறை 

இலங்கை உட்பட இந்து சமுத்திரத்தின் கரையோர நாடுகளில் சீனா அதன் செல்வாக்கைத் திணிக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியிருக்கும் பினபுலத்தில், இந்திய வெளியுறவு அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் வெளியுறவுச் செயலாளரும் தங்களது நாட்டின் அக்கறைகளை தேசிய மக்கள் சக்தியின் தலைவரின் கவனத்துக்குக் கொண்டுவருவந்திருப்பார்கள் என்பது நிச்சயம்.

இலங்கையில் இந்தியாவின் நலன்கள் உறுதிசெய்யப்படுவதை ஆதரிக்கக்கூடிய மாற்றுக் கட்சியொன்றை புதுடில்லி தேடுவதன் அறிகுறியே தேசிய மக்கள் சக்திக்கு நீட்டப்பட்ட நேசக்கரமாகும் என்று இலங்கையில் சில அவதானிகள் உணருகிறார்கள்.

ஆனால், திசாநாயக்கவின் புதுடில்லி விஜயத்தை விக்கிரமசிங்க அரசாங்கம் முழுமையாக ஆதரிக்கிறது போன்று தெரிகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவருவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் திட்டத்துக்கு தேசிய மக்கள் சக்தியின் ஒத்துழைப்பைப் பெறுவதில்  ஜனாதிபதி அக்கறையாக இருக்கிறார். இது இந்திய நலன்களுடனும் ஒத்துப்போகக்கூடியது  என்று கொழும்பை மையமாகக்கொண்டியங்கும் இந்தியப்  பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான பி.கே. பாலச்சந்திரன் கூறுகிறார்.

பொருளாதார மறுசீரமைப்பு செயற்திட்டத்துக்கு சகல கட்சிகளினதும் ஒத்துழைப்பை நாடிநிற்பதாக நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்த பிறகு  கொள்கைவிளக்க உரையில் விக்கிரமசிங்க கூறினார்.

தமிழர்களின் மனநிலை

அதேவேளை, சமஷ்டி அரசாங்க முறையையோ அல்லது குறைந்தபட்சம் 13ஆவது திருத்தத்தையோ கூட ஆதரிக்காத தேசிய மக்கள் சக்தியுடனான இந்தியாவின் ஊடாட்டத்தை தமிழர்கள் விரும்பமாட்டார்கள் என்பது நிச்சயம். ஆனால், இந்தியாவுடன் ஆரம்பித்திருக்கும் நெருக்கம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுதொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்துவதற்கு உதவவும் கூடும் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுவதாகவும் பாலச்சந்திரன் கூறுகிறார்.

ஆனால், தற்போதைய சூழ்நிலையில் இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய விவகாரங்கைளை திசாநாயக்க குழுவினருடன் இந்திய அதிகாரிகள் கலந்துரையாடியிருப்பார்கள் என்று பெரும்பாலும்  எதிர்பார்ப்பதற்கில்லை.

இது இவ்வாறிருக்க, இந்தியா நேசக்கரத்தை நீட்டியிருக்கும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தென்னிலங்கையில் உள்ள இந்திய விரோத அரசியல் சக்திகள் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுக்கத் தொடங்கியிருப்பதையும்  காணக்கூடியதாக இருக்கிறது.

பெரும்பாலான இலங்கையர்கள் எதிர்க்கும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு ஆதரவைப் பெறும் நோக்குடனேயே தேசிய மக்கள் சக்திக்கு இந்தியா அழைப்பை அனுப்பியதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூறியிருக்கிறார்.

தங்களுக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி இந்தியா அந்த உடன்படிக்கையில் விரைவில் கைச்சாத்திடவிருக்கிறது என்று செய்தியாளர்களிடம் கூறிய வீரவன்ச, இலங்கையின் வர்த்தகத்தையும் தொழிற்சந்தையையும் இந்தியாவுக்கு திறந்துவிடுவதே அந்த உடன்படிக்கையின் நோக்கம். இலங்கையை தனது காலனி நாடாக மாற்றவிரும்பும் இந்தியா சகல அரசியல் கட்சிகளையும் பூனைக்குட்டிகள் போன்று கட்டுப்படுத்தி வைத்திருக்க விரும்புகிறது என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

ஸ்ரீலங்கா ரெலிகோமுடன் இந்தியா உடன்பாடு ஒன்றுக்கு வருவதற்கான சாத்தியம் இருக்கும் பின்புலத்திலேயே தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான அனில் ஹேவத்த நெத்திக்குமார  கூறியிருக்கிறார்.

தேசிய மக்கள் சக்தி தலைவர்களின் இந்திய விஜயத்துக்கு எதிரான பிரசாரங்கள் தேசிய தேர்தல்களுக்கு இலங்கை தயாராகும் சூழ்நிலையில் புதிய இந்திய விரோத உணர்வு அலைக்கு வழிவகுக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக சில அவதானிகள் கருதுகிறார்கள்.

இலங்கையில் இந்திய முதலீடுகளுக்கு எதிராக குரலெழுப்பிவந்த தேசிய மக்கள் சக்தி இனிமேல் அத்தகைய முதலீடுகள் தொடர்பில் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என்பதும் இந்திய விஜயம் தொடர்பில் தேசியவாத சக்திகளினால் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எவ்வாறு பதிலளிக்கும் என்பதும் முக்கியமான கேள்விகள்.

இந்திய விஜயம் தேசிய மக்கள் சக்திக்கும் அதன் தலைவர்களுக்கும் பிராந்திய மட்டத்தில் ஒரு பெரிய அரசியல் மற்றும் இராஜதந்திர வெற்றி என்று நோக்கப்படுகின்ற போதிலும், இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மிக முக்கியமான ஒரு அரசியல் சக்தியாக அவர்களை இந்தியா நோக்குவது எந்தளவுக்கு விவேகமானது, பொருத்தமானது என்ற கேள்வி பல மட்டங்களில் எழுப்பப்படுகிறது.

Thanabalasingam-e1660548844481.jpeg?resiவீரகத்தி தனபாலசிங்கம்
 

https://maatram.org/?p=11249

 

ஜனாதிபதி தேர்தல் பற்றிய பேச்சுக்கள் ஓடாத குதிரைக்கான பந்தயமா?

2 weeks 4 days ago
ஜனாதிபதி தேர்தல் பற்றிய பேச்சுக்கள் ஓடாத குதிரைக்கான பந்தயமா?

எம்.எஸ்.எம்.ஐயூப்

சிங்கள மக்கள் எதனையும் இரண்டு வாரங்களில் மறந்துவிவார்கள் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளைபிரபாகரன் கூறியதாக சிங்களத் தலைவர்கள் அடிக்கடி கூறுவார்கள். அவர் எப்போது எங்கு அதனைக் கூறினார் என்று எவரும் கூறுவதில்லை. எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்களவர்கள் மட்டுமன்றி, நாட்டில் அனைவரும் எதனையும் இரண்டு வாரங்களில் மறந்து விடுவதாக நினைத்துக் கொண்டே செயற்படுகிறார் போலும்.

அதனால் தான் அவர் அடிக்கடி முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். இனப் பிரச்சினை தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்களை நாம் பல கட்டுரைகளில் சுட்டிக்காட்டி இருந்தோம். 2023 சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக 2022 நவம்பர் மாதம் அவர் வரவு-செலவு திட்ட விவாதத்தின்போது கூறினார்.

மக்கள் அதனை மறந்து விட்டதாக நினைத்தோ என்னவோ 2023 தைப்பொங்கல் அன்று இரண்டு வருடங்களில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தைப் பூரணமாக அமுலாக்குவதாகக் கூறினார். மீண்டும் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகக் கூறினார். ஜூலை மாதம் இந்தியாவுக்கு செல்லும்முன் மீண்டும் 13ஆவது திருத்தத்தைப் பற்றிய வாக்குறுதியொன்றை வழங்கினார்.

இதைப்போல், கடந்த வருடம் நவம்பர் 13ஆம் திகதி வரவு-செலவு திட்டத்தைப் பாராளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றும்போது, 2024இல் ஜனாதிபதி தேர்தலும், பொதுத் தேர்தலும் நடைபெறும் எனக் கூறினார்.

ஒன்பது நாட்களுக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிபோதே அவ்வாறு கூறினார். அவரை நம்பி ஊடகத்துறை அமைச்சர்
கலாநிதி பந்துல குணவர்தனவும் அந்த இரண்டு தேர்தல்களும் இவ்வாண்டு நடைபெறும் என்று இம்மாதம் 6ஆம் திகதி ஊடகவியலாளர்களிடம் கூறினார். ஆனால், அவரது கூற்றை மட்டுமல்லாது அதற்கு முன்னர் ஜனாதிபதி தெரிவித்த கருத்தையும் மறுத்து இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் மட்டுமே நடைபெறும் என்றும் அதற்கு மட்டுமே வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி செயலகம் அறிக்கையொன்றின் மூலம் கூறியது. அடுத்த பொதுத் தேர்தல்

2025 ஆண்டே நடைபெறும் என்றும் அதற்கு அடுத்த வரவுசெலவு திட்டத்தின் மூலமே நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு இருந்தது. தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழவிடமே இருப்பதாகவும் அவசியம் ஏற்பட்டால் அதுதொடர்பாக ஜனாதிபதி செயலகம்
அவ்வாணைக்குழுவுடன் தொடர்புகொள்ளும் என்றும் அறிக்கை மேலும் கூறியது. ஜனாதிபதி அலுவலகத்தின் அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை. சாதாரண சட்டத்தையே அது குறிப்பிட்டு இருந்தது.

அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் அவர் தேர்தல்கள் விடயத்தில் தலையிடாது இருந்தால் தேர்தல்கள் ஆணைக்குழுவே தேர்தல் தினத்தை நிர்ணயிக்கும். அரசியலமைப்பின் 19, 20 மற்றும் 21ஆவது திருத்தங்களின் படி ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளாகும். இறுதியாக 2019 நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலும் 2020 ஓகஸ்ட்மாதம் பொதுத் தேர்தலும் நடைபெற்றது.

எனவே, ஜனாதிபதி தலையிடாவிட்டால் இவ்வருடம் ஜனாதிபதத் தேர்தலும் அடுத்த வருடம் பொதுத் தேர்தலும் நடைபெறவேண்டும். ஆனால், ஜனாதிபதி தலையிட்டு பாராளுமன்றத்தின் பதவிக் காலம் முடியும் முன் அதனைக் கலைத்து விட்டால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்படலாம். இவ்வருடத்தில் ஒரு தேர்தலுக்கு

மட்டும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளமையே அதற்குள்ள ஒரே தடையாகும். ஏனெனில், ஒரு தேர்தலுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அலுவலகமே கூறுகிறது. இவ்வருடம் ஒரு தேர்தலை நடத்த மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவும் தகவலறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலாகத் தெரிவித்துள்ளது.

அந்நிதி ஜனாதிபதித் தேர்தலுக்கே உபயோகிக்க வேண்டும் ஏனெனில் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கச் சட்டத்தில் இடமில்லை. அதனைப் புறக்கணித்து ஜனாதிபதி பாராளுமன்றத்தை இவ்வருடத்திற்குள் கலைத்தால் அரசியல் நெருக்கடியொன்று உருவாகும் ஆபத்து இருக்கிறது. விந்தையான விடயம் என்னவென்றால் நிதியமைச்சர் என்ற வகையில், இந்த வருடத்தில் ஒரு தேசிய மட்ட தேர்தலை மட்டும் நடத்துவதற்காக வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்த ஜனாதிபதி ரணில் இந்த வருடம் ஜனாதிபதித்

தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டும் நடைபெறும் என்று தமது வரவுசெலவுத் திட்ட உரையிலேயே குறிப்பிட்டு இருந்தமையாகும். அதனை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் கவனிக்கவில்லைபோலும். ஜனாதிபதிக்கு மட்டுமே இந்த முரண்பாட்டை விவரிக்க முடியும்.

ஆனால், ஜனாதிபதியின் மீதான தமது விசுவாசத்தை வெளியிடுவதைப் போல் இந்த முரண்பாட்டைத் தீர்க்க ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன மேற்படி தமது ஊடகவியலாளர் மாநாட்டின் போது முன்வந்தார். ஒருதேர்தலுக்கு 1000 கோடி ரூபாதேவை என்றாலும் நாட்டு நிலைமையைக் கருத்திற்கொண்ட ஒதுக்கப்பட்ட 1000 கோடி ரூபாவைக் கொண்டு இரண்டு தேர்தல்களையும் சமாளித்து நடத்த வேண்டும் என்று அவர் கூறினார். ஒன்பது நாட்கள் தான் சென்றடைந்தது,

ஒரு தேர்தலுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் எனவே, ஜனாதிபதித் தேர்தல் மட்டுமே இவ்வருடம் நடைபெறும் என்றும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது. தேர்தல்களுக்கு நிதி வழங்குவது தொடர்பான மற்றுமொரு பிரச்சினையும் அரசாங்கத்தின் தலையில் விழகாத்திருக்கிறது. கடந்த வருடம் மார்ச் மாதம் 9ஆம்
திகதி நடைபெறவிருந்து அரசாங்கம் நிதிவழங்காமையால் நடத்த முடியாமல் போய்விட்ட உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டனவேயன்றி, இரத்துச் செய்யப்படவில்லை.

அத்தேர்தல்களை ஒத்திவைக்கக் கட்டளையிடுமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார். அவ்வாதிகாரி அண்மையில் உயிரிழந்தார்.

அவருக்குப் பதிலாக மற்றொருவரை மனுதாரராக ஏற்றுக் கொண்டு வழக்கைத் தொடரவேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக
நீதிமன்றம் இன்னமும் தீர்ப்பு வழங்கவில்லை.

அது நிராகரிக்கப்பட்டால் அல்லது அது ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் வழக்கு தோல்வியடைந்தால் தேர்தலை நடத்த வேண்டியநிலை ஏற்படலாம் அப்போதுமீண்டும் நிதிப் பிரச்சினை எழலாம்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான நிதியைத் தடுத்து வைத்துக்கொள்ளக்கூடாது என்று நீதிமன்றம் கடந்த வருடம் மார்ச் மாதம் 3ஆம் திகதி நிதியமைச்சரின் செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்தது. அச்செயலாளர் அத்தரவை நிதியமைச்சரான ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தார். ஜனாதிபதி அந்நீதி மன்ற உத்தரவைப் பொருட்படுத்தாமல் இருக்கிறார். அது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்.

ஆனால் அது தொடர்பாக எவரும் இது வரை நீதிமன்றம் செல்லவில்லை. அமெரிக்காவில் போல் வருடத்தில் குறிப்பிட்டதோர் நாளில் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்று இலங்கையில் சட்டம் இல்லை. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் நடத்தப்படவேண்டும் என்று இந்நாட்டு சட்டத்தில் பொதுவாக இருந்தபோதிலும்,ஜனாதிபதி நினைத்தால் அதனையும் மாற்ற அவருக்கு அரசியலமைப்பால் அதிகாரம்வழங்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றம் முதலாவதாகக் கூடிய நாளிலிருந்து இரண்டரை ஆண்டுகள் சென்றடைந்ததன் பின்னர் ஜனாதிபதி நினைத்தால் பாராளுமன்றத்தைக் கலைத்து புதிதாக பொதுத் தேர்தலை நடத்த முடியும்.

தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவர் தமது பதவிக் காலம் முடிவடையும் முன் இரண்டாவது முறையாகத் தேர்தலில் போட்டியிட விரும்பினால் அவரது பதவிக் காலத்தில் நான்கு ஆண்டுகள் முடிவடைந்ததன் பின்னர் புதிதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும். ஜனாதிபதிகள் அந்த அதிகாரத்தைப் பாவித்து தமது கட்சிக்குச் சாதகமான சந்தர்ப்பத்தைப் பாரத்துத் தேர்தல்களை நடத்துகிறார்கள். இது எந்த வகையிலும் ஜனநாயகமல்ல.

ஜே.ஆர்.ஜயவர்தன 1978ஆம் ஆண்டிலேயே முதலாவதாக ஜனாதிபதியாகப் பதவியேற்றார். எனவே 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம் 1984ஆம் ஆண்டிலேயே அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டியிருந்தது.

இதற்கிடையே ஜே.ஆரின் பிரதான அரசியல் எதிரியான சிரிமா பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமை 1980ஆம் ஆண்டு ஏழாண்டுகளுக்கு இரத்துச் செய்யப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்து ஜே ஆர். 1982ஆம் ஆண்டிலேயே (உரிய காலத்துக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னரே) தேர்தலை நடத்தி மீண்டும் ஜனாதிபதியானார்.

தற்போது அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகள் முன்னணியில் இருக்கும் நிலையில் தேர்தல்களை ஒத்திப் போடுவதற்காக அதுபோன்ற சூழ்ச்சிகள் இடம்பெறலாம். அச்சூழ்ச்சி எதுவாக
இருக்கும் என்பதை எவராலும் முன்கூட்டியே கூற முடியாது. சிலவேளை நாட்டில் பாரியளவில் வன்செயல்கள் வெடிக்கலாம், இனக் கலவரங்களும் வெடிக்கலாம்.

28.02.2024
 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜனாபதி-தேர்தல்-பற்றிய-பேச்சுக்கள்-ஓடாத-குதிரைக்கான-பந்தயமா/91-333944

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை மோசடிகளால் அழிகிறதா?

2 weeks 5 days ago

Published By: DIGITAL DESK 3    27 FEB, 2024 | 04:00 PM

image

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வாழைச்சேனை என்றதும் அங்கு அமைந்துள்ள கடதாசி தொழிற்சாலை தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். என்றாலும் 1990 களில் இத்தொழிற்சாலை மூடப்பட்டதோடு அந்நினைவு பெரும்பாலானவர்களின் மனங்களில் இருந்து நீங்கிவிட்டது.

1947 இல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சராக ஜோர்ஜ் ஈ.டி.சில்வா பதவி வகித்தார். அப்பதவி 1948 இல் ஜி.ஜி பொன்னம்பலத்திற்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1951 இல் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலைக்கு பொன்னம்பலம் அடிக்கல் நாட்டினார். ஜேர்மன் நாட்டின் உதவித் திட்டத்தின் கீழ் இத்தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

என்றாலும் 1952 இல் நடைபெற்ற பொதுத்தேர்லிலும் ஐ.தே.க வே ஆட்சிக்கு வந்தது. அந்த அரசிலும் பொன்னம்பலமே கைத்தொழில் அமைச்சரானார். அதனால் அவர் அடிக்கல் நாட்டி ஆரம்பித்த கடதாசி தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் டட்லி சேனநாயக்காவின் ஆட்சியிலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.

1953 இல் இடம்பெற்ற ஹர்த்தாலைத் தொடர்ந்து சேர்.ஜோன்.கொத்தலாவல நாட்டின் பிரதமராகப் பதவி ஏற்ற போதிலும் ஜி.ஜி. பொன்னம்பலத்தின் அமைச்சு பதவி மாறவில்லை. அதன் பயனாக அவர் ஆரம்பித்த வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையின் நிர்மாணப்பணிகள் 1956 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியாகும் போது நிறைவடையும் கட்டத்தை அடைந்தது. நீண்ட காலம் பலர் மேற்கொண்ட அர்ப்பணிப்பு மிக்க பணிகளின் ஊடாக கிழக்கு கடதாசி ஒருங்கிணைப்பு சபை என 1956 இல் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை அமைக்கப்பட்டமை தெரிந்ததே.

WhatsApp_Image_2024-02-26_at_10.35.57__1

என்றாலும் 2015 முதல் 2020 வரையும் மின்சாரம் இல்லாத காரணத்தினால் இத்தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டிருந்த போதிலும் அதன் தலைவர்கள் மாதாந்த சம்பளம் பெற்றனர். 2020 இல் தான் இத்தொழிற்சாலை அரசின் ஏற்பாட்டில் மீண்டும் திறக்கப்பட்டது.

இத்தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நல்லதொரு காலம் உருவாகியுள்ளதாக கருதினோம். ஆனால் எதிர்பார்ப்பு பொய்த்து போயுள்ளது. அன்று இத்தொழிற்சாலைக்கு பொறுப்பான அமைச்சராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச எம்.பி பதவி வகித்தார். நான் கொரிய முதலீட்டாளருடன் அவரைச் சந்தித்து இத்தொழிற்சாலையை 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பார்வையிடச் சென்றோம்.

50 வருடங்களுக்கு முன்னர் ஜேர்மன் பொறியியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட இத்தொழிற்சாலையில் உள்ள சிறந்த தொழில்நுட்ப பெறுமானங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் படி, மீண்டும் உற்பத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய நிலையில் இங்குள்ள உற்பத்தி இயந்திரங்கள் காணப்பட்டன. அவற்றைத் திருத்தவென நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. அச்சமயம்  தொழிற்சாலையில் காணப்பட்ட நிலையை இட்டு நாம் அதிர்ச்சியடைந்தோம்.  மிகவும் சிறந்த நிலையில் காணப்பட்ட கார்ட்போர்ட் உற்பத்தி இயந்திரத்தின் மூன்று பிரிவுகளின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு 100 முதல் 150 ஜி.எஸ்.எம். வரையான காகிதாதிகள் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் நான் பதவி வகிக்கும் போது 150 முதல் 550 ஜி.எஸ்.எம். வரையான காகிதாதிகள் உற்பத்தி செய்யப்பட்டமை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

WhatsApp_Image_2024-02-26_at_10.35.57.jp

இத்தொழிற்சாலையின் சில பிரிவுகளது உற்பத்தி செயற்பாடுகள் நிறுத்தப்பட  பல இயந்திரங்கள் துண்டு துண்டாகக் கழற்றப்பட்டு வேறாக்கப்பட்டிருந்ததும்  சில இயந்திரப் பாகங்கள் தொழிற்சாலை வளாகத்திற்கு வெளியே அப்புறப்படுத்தப்பட்டிருந்தமையும் காரணங்களாக விளங்கின. இத்தொழிற்சாலைக்கு பொறுப்பாக 2020 முதல் 2021 வரைப் பதவி வகித்த நிர்வாக அதிகாரி, இந்த இயந்திரத்தின் உதிரிப் பாகங்களைப் புதுப்பிப்பதற்காகக் கொண்டு செல்வதாகத் தெரிவித்ததாக ஊழியர்களே தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து கீழ் மாடியிலுள்ள கடதாசி உற்பத்தி இயந்திரத்தைப் பார்வையிடச் சென்ற போது, அந்த இயந்திரமும் கூட துண்டு துண்டாகக் கழற்றி வேறாக்கப்பட்டிருந்தது. அதன் சில பாகங்கள் அங்கு காணப்படவே இல்லை. அது தொடர்பில் விசாரித்த போது உற்பத்தி முகாமையாளர், இந்த கார்ப்போர்ட் இயந்திரத்தை பொருத்துவதற்காகவே கழற்றி வேறாக்கியதாகவும்  அதன் பாகங்கள் காகிதாதி இயந்திரத்திற்கு பொருத்தமானதாக இல்லை என்பது தெரிந்தது. அதனால் அதனை திருத்தியமைக்க அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிட்டார். வெளிநாட்டவர்கள் புதிய பாகங்களைக் கொண்டு வர முயற்சி செய்த போதிலும் அதற்கு நிதி இல்லை என நிதியமைச்சு குறிப்பிட்டதாகவும் அந்த முகாமையாளர் கூறினார்.

இவ்வாறான நிலையில் நான், ஏன் இந்த இயந்திரத்தைத் துண்டு துண்டாகக் கழற்றினீர்கள் என விசாரித்தேன். கடதாசி உற்பத்தி இயந்திரங்கள் தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற தமிழகத்தின் கோயம்புத்தூர் பொறியியலாளர்கள் மூன்று தடவைகள் இந்நாட்டுக்கு வருகை தந்த சமயம், ஜேர்மனியில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இந்த voith கடதாசி உற்பத்தி இயந்திரத்தின் ஆயுட்காலத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்கள் வழங்கிய அனைத்து அறிக்கைகளும் என்னிடமுள்ளது. அவர்களது அறிக்கைப்படி, இந்த இயந்திரங்களை முழுமையாகப் புதுபித்த பின்னர் மேலும் 25 வருடங்கள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி செயற்படக்கூடிய இயந்திரங்கள் இவை என்றும் குறிப்பிட்டுள்ளனர் என்பதையும் எடுத்துக்கூறினேன்.

WhatsApp_Image_2024-02-26_at_10.35.58.jp

14 வருடங்களுக்கு பின்னர் மீளக்கட்டியெழுப்பப்பட்ட இந்த இயந்திரத்தை இவ்வாறு துண்டு துண்டாகக் கழற்றி சேதப்படுத்தியுள்ளமை குறித்து நாம் கடும் கவலைக்கும் வேதனைக்கும் உள்ளானோம்.

இத்தொழிற்சாலையின் தற்போதைய தலைவர் பதவி வகிக்கும் காலப்பகுதியில் திருத்தியமைக்கும் இடத்தில் பல பொருட்கள் இல்லாதுள்ளன. அத்தோடு வாழைச்சேனை நீதிமன்றத்தினால் இத்தொழிற்சாலைக்கு விடுவிக்கப்பட்ட 115 மோட்டார் இயந்திரங்களும் தற்போது அங்கிருக்கின்றதா என்பதும் கேள்விக்குரிய விடயமாக உள்ளது.

இத்தொழிற்சாலையின் இந்து கோவிலுக்கு பின்பகுதியில் காணப்பட்ட பெறுமதி மிக்க தேக்கு மரங்கள் கூட வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அம்மரங்களின் அடிப்பாகங்கள் கூட பெகோ இயந்திரத்தைக் கொண்டு இருந்த அடையாளம் தெரியாதபடி அப்புறப்படுத்தப்பட்டு நிலம் சம தரையாக்கப்பட்டுள்ளன. இவற்றின் கிளைகள் தொழிற்சாலையின் நீராவி இயந்திரத்திற்கு (பொயிலர்) விறகாகப் பாவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த தொழிற்சாலையின் இதயமே இந்த நீராவி இயந்திரமேயாகும்.

WhatsApp_Image_2024-02-26_at_10.35.59__1

இவற்றை திருத்தியமைப்பதற்கு 28 மில்லியன் ரூபாவுக்கு கேள்விமனு (டென்டர்) கோரப்பட்டிருந்த போதிலும் அதனை உள்நாட்டவரைக்கு கொண்டு நான் 11 மில்லியன் ரூபாவுக்கு திருத்தியமைத்தேன். இன்றும் அந்த நீராவி இயந்திரமே (பொயிலர்) இயங்குநிலையில் உள்ளது. இவை அனைத்தும் 2020 இல் இத்தொழிற்சாலைக்கு பொறுப்பான அமைச்சராக இருந்த விமல் வீரவன்ச  எம்.பியினால் நியமிக்கப்பட்ட புதிய தலைவரின் பதவிக்காலத்தில் இடம்பெற்றவையாகும். அவரே தற்போதும் தலைவராகப் பதவி வகிக்கிறார். ஆனால் இத்தொழிற்சாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சேதங்களும் அழிவுகளும் முன்பு பதவி வகித்த தலைவர்களின் காலத்தில் இடம்பெற்றவையாக அவர்  கூறிவருகிறார். 

மேலும் இத்தொழிற்சாலையின் வரலாற்று பின்புலத்தை அறிந்து கொள்ள வேண்டுமெனில், இத்தொழிற்சாலைக்கு அருகில் வசிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன் ஊடாகவும் அறிந்து கொள்ளலாம்.  அவர் இத்தொழிற்சாலையின் முன்னேற்றத்தில் தீவிர அக்கரை கொண்டிருப்பவர் என்பதோடல்லாமல், அவ்வப்போது இத்தொழிற்சாலைக்கு வந்து செல்லக்கூடியவராகவும் இருந்தார். அத்தோடு இதன் அபிவிருத்திக்காக பாராளுமன்றத்தில் கூட அவர் குரல் எழுப்பியுள்ளார் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

WhatsApp_Image_2024-02-26_at_10.35.59.jp

இவ்வாறான விடயங்களை இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய தேவை ஒரு முக்கிய விடயத்திற்காக ஏற்பட்டுள்ளது. அதாவது கிழக்கு மாகாணத்தின் பாரிய அபிவிருத்திக்கு வித்திடும் வாழைச்சேனை சுற்றுலா ஒருங்கிணைப்பு அபிவிருத்தி கருத்திட்டம் குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்காவை 2023 நவம்பர் 23 ஆம் திகதி சந்தித்து அளவலாவினேன். அச்சமயம் அவர் தெரிவித்த விடயங்கள் என்னை ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியதோடு அவற்றால் கடும் கவலையும் வேதனையும் அடைந்தேன்.

அதாவது வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையின் இயந்திரங்களும் அவற்றின் பாகங்களும் எனது பதவிக்காலத்தில் தான் இரும்புக் கணக்குக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அது தொடர்பில் முறைப்பாடு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆனால் நான் உண்மையான அறிக்கைகளுடன் அவரைச் சந்திக்க சென்றிருந்தேன். அதனால் என் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் குறித்து எனக்கு அறியத்தந்த இராஜாங்க அமைச்சருக்கு முதலில் தனிப்பட்ட முறையில் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டேன்.

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கா நாடு தொடர்பிலும் நாட்டின் வளங்கள் குறித்தும் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளக்கூடிய ஒருவராவார். அந்த வகையில் இராஜாங்க அமைச்சருக்கு சகல விடயங்களையும் ஆவணங்களின் ஆதாரங்களுடன் நான் எடுத்துக்கூறினேன்.

எந்தவொரு நிறுவனத்திலும் பதவியொன்றை வகிக்கும் போது நிகழ்ச்சிநிரல், நடைமுறைச் சாத்தியமான முகாமைத்துவம் குறித்த ஒரளவாவது அறிவு தேவை என்பதை நாமறிவோம். அவை எதனையும் கொண்டிராதவர்கள் செயற்றிறன் மிக்க நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் தெரிவிப்பதை விடுத்து நாட்டுக்கோ, இனத்திற்கோ, நிறுவனத்திற்கோ, எதிர்கால சந்ததியினருக்கோ உற்பத்தி திறன் மிக்க சேவைகளைச் செய்ய மாட்டார்கள்.

அதனால் எனக்கு எதிராக எவர் குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்தாலும் இத்தொழிற்சாலையின் தகுதிகாண் அதிகாரியாகக் கடமையாற்றிய காலப்பகுதியில் நிறுவனத்தின் வளங்களைப் பாதுகாத்து (ஒரு அங்குலத்தைக் கூட எவருக்கும் விற்பனை செய்யாது மொபிட்டல் நிறுவனத்தின் கோபுரத்தை அமைப்பதற்கு காணியை வழங்கி மாதா மாதம் நிறுவனத்திற்கு  25 ஆயிரம் ரூபா படி வருமானம் கிடைக்கப்பெற வழி செய்யப்பட்டுள்ளது) உற்பத்தி கொள்ளளவை அதிகரித்ததன் ஊடாக வருமானம் அதிகரித்ததோடு நஷ்டத்தைக் குறைத்து இலாபம் பெறும் நிலைக்கு கொண்டு வரவென ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நடவடிக்கைகளை மேற்கொண்டேன் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனினும் அண்மையில் நாடு எதிர்கொண்ட சவால்களை வெற்றி கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிறது. அதனால் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை அபிவிருத்தி செய்து அதற்குரிய காணியில் சுற்றுலா ஒருங்கிணைந்த அபிவிருத்தி கருத்திட்டத்தை முன்னெடுத்து 2000 தொழில்வாய்ப்புக்களை உருவாக்கி ஜனாதிபதிக்கு முழுமையாக ஒத்துழைப்பு நல்க முடியும் என நான் நம்புகிறேன்.

WhatsApp_Image_2024-02-26_at_10.35.55.jp

நாம் இத்திட்டத்தை கட்டியெழுப்புவதற்கு சாதாரண பட்டங்களையோ கலாநிதி பட்டங்களையோ கொண்டிராவிட்டாலும் சரியான நிகழ்ச்சி நிரல் மற்றும் நடைமுறைச்சாத்தியமான முகாமைத்துவம் இருக்குமாயின் சவால்களை பொறுப்பெடுப்பது சிரமமான காரியமாக இருக்காது என்பதே  எனது தனிப்பட்ட அபிப்பிராயமாகும்.

இந்த அனைத்து விடயங்களையும் புரிந்து செயற்படுவது அவசியம். எவரொருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் அதன் உண்மைத்தன்மையப் புரிந்து கொள்வது மக்கள் அபிப்பிரராயத்தை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதற்கு அறிவுபூர்வமான வழிமுறையாக அமையும். அதனால் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை இந்நாட்டின் பொருளதாதார மேம்பாட்டுக்கு பங்களிக்கும் வகையில் மேம்படுத்துவதோடு நாட்டின் காகிதாதி உற்பத்தியின் கேந்திர நிலையமாகவும் உருவாக்க வேண்டும். இதற்கு கடதாசி தொழிற்சாலை மாத்திரமல்லாமல் இந்த அபிவிருத்தி கருத்திட்டத்தையும் இங்கு முன்னெடுப்பது அவசியம். அதற்காக தொடராக ஒத்துழைப்பது எமது பொறுப்பாகும்.

தேசமான்ய மங்கள சீ செனரத்,
முன்னாள் தகுதிகாண் அதிகாரி,
வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை

https://www.virakesari.lk/article/177407

Checked
Tue, 03/19/2024 - 02:42
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed