அரசியல் அலசல்

வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் - நிலாந்தன்

9 hours 52 minutes ago

வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் - நிலாந்தன்

558241154_10233149357381359_240366287494

அனர்த்த காலங்கள் அவற்றுக்கேயான புதிய பேச்சாளர்களை வெளிக் கொண்டு வரும். இறுதிக்கட்டப் போரின்போது வன்னி கிழக்கில் வாழ்ந்த மக்களின் சார்பாக குரல்தரவல்ல அதிகாரியாக மருத்துவர் சத்தியமூர்த்தி காணப்பட்டார். அப்படித்தான் அண்மை ஆண்டுகளில் இயற்கை அனர்த்தங்களின்போது மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கைகளை விடுக்கும் ஒரு “பப்ளிக் இன்ரலெக்சுவலாக” பேராசிரியர் பிரதீபராஜா மேலெழுந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 03.09.2025 புதன்கிழமை அவர் முகநூலில் எதிர்வரும் மாதங்களுக்கான வானிலை மாற்றங்கள் குறித்து நீண்ட முன்னறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நொவம்பர் மாத நடுப்பகுதியிலும் இறுதிப்பகுதியிலும்  ஏற்படக்கூடிய தாழமுக்கங்கள் தீவிர தாழமுக்கங்கள் ஆகவோ அல்லது புயல்களாகவோ மாறலாம்  என்பதை கிட்டத்தட்ட  மூன்று மாதங்களுக்கு முன்னரே முன்னறிவித்திருந்தார்.

அரச வளிமண்டலவியல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக வானிலை மாற்றங்களை அறிவிக்கும். வரக்கூடிய ஆபத்துக்களையும் முன்கூட்டியே அறிவித்து எச்சரிக்கும். ஊடகங்கள் அவற்றை உடனுக்குடன் அறிவித்து மக்களை எச்சரிக்கை செய்யும். இம்முறை டித்வா புயல் தாக்கப்போவது குறித்து அரச வளிமண்டலவியல் திணைக்களம் பொருத்தமான எச்சரிக்கைகளை முன்னறிவிக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. புயல் அனுராதபுரத்தை அடையும் வரையிலும் அதுதொடர்பான எச்சரிக்கைகள் விடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

ஆனால் தமிழ்ப் பகுதிகளைப் பொறுத்தவரை குறிப்பாக யாழ்ப்பாணத்தில், பிரதீபராஜா இதுபோன்ற இயற்கை அனர்த்தங்களைக் குறித்து ஏற்கனவே சில நாட்களுக்கு அல்லது பல நாட்களுக்கு முன் எச்சரிப்பதுண்டு. அவருடைய எச்சரிக்கைகள் சில சமயங்களில் பிழைக்கலாம். மிகைப்படுத்தலாகவும் இருக்கலாம். அதனால் சில சமயங்களில் மீனவர்களுக்கோ விவசாயிகளுக்கோ அல்லது ஏனைய  துறையினருக்கோ நட்டங்கள் ஏற்படலாம். ஆனால் அவர் எதிர்வு கூறியதுபோல இயற்கை அனர்த்தங்கள் நிகழ்ந்து அதனால் ஏற்படக்கூடிய உயிர்ச் சேதங்களோடு ஒப்பிடுகையில், வருமுன் காக்கும் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய பொருட்சேதம் பொருட்படுத்தத்தக்கது அல்ல.

590284076_25061867350136233_969412489308

மழைக்காலங்களில் மலைகளில் மண் சரிவு ஏற்படுவது வழமை. ஒவ்வொரு பருவ மழைக்கும் மலையக மக்கள் மண் சரிவுகளில் சிக்கி உயிரிழந்து வருகிறார்கள். மழை வீழ்ச்சி அதிகரிக்கும்போது,மண் சரிவு ஏற்படக்கூடிய பிரதேசங்களில் வாழும் மக்களை எச்சரிக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு உண்டு. அந்த மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. இக்கட்டுரையில் முன் கூறியதுபோல வருமுன் காக்கும் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய சிரமங்கள், நட்டங்களை விடவும் அந்த முன்னெச்சரிக்கையின்படி நிகழும் அனர்த்தத்தால் இழக்கும் உயிர்களின் நட்டம் பெரிது. நாடு இப்பொழுது அவ்வாறான உயிர்ச் சேதத்தைத்தான் எதிர்கொண்டிருக்கிறதா?.

ஒரு புயல் தாக்கப் போகிறது என்பதனை பிரதீபராஜா ஏற்கனவே தெளிவாகக் கூறியிருந்தார். அதை அவர் வழமைபோல தனது முகநூல் பக்கத்தில் மட்டும் பகிரவில்லை. இந்தமுறை வடமாகாண ஆளுநர் அவரை தன்னுடைய அலுவலகத்துக்கு உத்தியோகபூர்வமாக அழைத்து உரையாடியுள்ளார். அந்தச் சந்திப்பில் சம்பந்தப்பட்ட துறைசார் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது பிரதீபராஜா தெரிவித்த தகவல்கள் பின்னர் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளிவந்தன. அதன்படி 130 ஆண்டுகளுக்குப் பின் ஒரு பேரிடர் நாட்டை நெருங்கி வருவதனை அவர் முன்கூட்டியே எச்சரித்திருந்தார்.

இந்த விடயத்தில் இப்போதுள்ள வடமாகாண ஆளுநர் வேதநாயகன் பாராட்டப்பட வேண்டியவர். ஏனென்றால் அவருக்கு முன் இருந்த ஒரு பெண் ஆளுநர் பிரதீபராஜாவை பொருட்படுத்தவில்லை. அந்தப் பெண் ஆளுநரின் காலத்தில் நடந்த ஒரு மெய்நிகர் சந்திப்பில் பிரதீபராஜா தனது கருத்தைக் கூற முற்பட்டபோது ஆளுநர் அவரைப் பொருட்படுத்தவில்லை. இதுதொடர்பாக அரச வளிமண்டலவியல் திணைக்களங்கள் தரும் தகவல்களைத்தான் நாங்கள் உத்தியோகபூர்வமாக எடுத்துக்கொள்ள முடியும். உங்களுடைய தகவல்கள் எங்களுக்குத் தேவையில்லை என்ற பொருள்பட அவர் பிரதிபராஜாவை அவமதித்திருக்கிறார்.

ஆனால் இம்முறை டித்வா புயலுக்கு முன்னரே வடமாகாண ஆளுநர் பிரதீபராஜாவுக்கு உரிய கௌரவத்தை கொடுத்து அவரை அழைத்துப் பேசியிருக்கிறார். பிரதீபராஜா எச்சரித்ததை போலவே புயல் பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் பிரதீபராஜாவைப் போலவே சென்னையை மையமாகக் கொண்ட செல்வக்குமார் என்ற வானிலை முன்னறிவிப்பாளரும் இலங்கையை நோக்கி முன்னெச்சரிக்கைகளை விடுத்திருக்கிறார்.

“வானிலை அறிவியல்” என்ற யூடியூப் தளத்தில், செல்வகுமார் இலங்கைக்கான வானிலை அறிக்கை என்ற தலைப்பில் ஒரு காணொளியை 24ஆம் திகதி வெளியிட்டார். நவம்பர் 26 தொடக்கம் 28 வரையிலுமான மூன்று நாட்களில் முன்னப்பொழுதும் காணாத பெருமழை பெய்யும் என்றும் நிலச்சரிவு ஏற்படும் என்றும் எச்சரித்திருந்தார். ( https://youtu.be/p-ayF49Ov7Q?si=lf20WuDgEkL-hr0R )

இந்த இயற்கை அனர்த்தத்தில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு மக்கள் கால்நடைகளையும் முக்கிய ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார். இந்த இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் அவசர கால நிலையை பிரகடனம் செய்ய வேண்டிவரும் என்பதையும் செல்வகுமார் முன்கூட்டியே மிகச்சரியாக ஊகித்திருந்தார். தன்னுடைய எச்சரிக்கையை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் அந்த காணொளியில் அவர் கேட்டிருந்தார். அவர் பயன்படுத்திய வார்த்தைகளில்  மிகைப்படுத்தல்கள் இருந்திருக்கலாம். ஆனால் இழக்க கொடுத்தவர்களின் நோக்குநிலையில் இருந்துபார்த்தால் அவை மிகைப்படுத்தலாகத் தெரியாது.

ccc-1024x596.png

அதாவது நாட்டுக்குள் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு புவியியல் துறை பேராசிரியரும் நாட்டுக்கு வெளியே அயலில் தமிழகத்திலிருந்து ஒரு துறைசார் வல்லுநரும் எச்சரித்த போதும்கூட அந்த எச்சரிக்கைகள் சம்பந்தப்பட்டவர்களின் காதில் விழவில்லை. அதற்குக் காரணம் என்ன?

பொதுவாக சமூக வலைத்தளங்களில் யூடியூப்களில் வரும் செய்திகள், தகவல்கள், எச்சரிக்கைகள் தொடர்பாக பொருட்படுத்தாத ஒரு பொதுப் புத்தி வளர்ந்து வருகிறது. யூடியூப் தலைப்புக்கள் அல்லது எச்சரிக்கைகள் மிகைப் படுத்தப்பட்டவை என்ற அபிப்பிராயம் பரவலாக உண்டு. வியூவர்ஸை கவர்ந்திழுப்பதற்காக கவர்ச்சியான தலைப்புகளைப் போடும் யூடியூப் பாரம்பரியமானது பாரதூரமான விடையங்களின் மீதான சீரியஸான கவனிப்பைக் குறைத்து விடுகிறது. பல யூடியூப்களில் தலைப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் தொடர்பு இருப்பதில்லை. இதனால் தலைப்பைக் கண்டு உள்நுழைந்து ஏமாற்றமடைந்த வியூவர்ஸ் குறிப்பாக அறிவுதெளிந்த, புத்திசாலித்தனமான வியூவர்ஸ் மீண்டும் ஒரு தடவை யூடியூப்களின் கவர்ச்சியான தலைப்புகளை, எச்சரிக்கைகளைக் கண்டு ஏமாற விரும்புவதில்லை. இந்த யூடியூப் பண்பாடு, வானிலை முன்னெச்சரிக்கை போன்ற விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

யூடியூப் பார்வையாளர்கள் மட்டுமல்ல ஏனைய சமூக வலைத்தள நுகர்வோரும் அவ்வாறுதான். எல்லாவற்றையும் ஸ்குரோல் பண்ணிக் கடக்கும் ஒரு சமூக வலைத்தளச் சூழல் வளர்ந்து விட்டது. உண்மையான எச்சரிக்கை எது உண்மையான ஆபத்து எது என்பதனை பகுத்தறிய முடியாத அளவுக்கு சமூக வலைத்தளச் சூழல் மேலோட்டமானதாக,அதிகம் ஜனரஞ்சகமானதாகக் காணப்படுகிறது.

பிரதீபராஜாவையும் செல்வகுமாரையும் தொடர்ந்து அவதானித்துவரும் சீரியசான சமூக வலைத்தளப் பாவனையாளர்கள் அவர்களுடைய எச்சரிக்கைகள் முன்னுணர்த்தும் ஆபத்துக்களை விளங்கிக் கொள்வார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரட்ன கூறுவதுபோல,இலங்கை அரசாங்கம் அல்லது சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் வருமுன் காக்கும் நடவடிக்கைகளை எடுத்திருந்தால், அழிவை ஒப்பீட்டளவில் குறைத்திருக்கலாமா ?

நாடாளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரட்ன,நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, கம்பளை பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுக்கும்,  உயிரிழப்புகளுக்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம் சாட்டினார். அது இயற்கை அனர்த்தம் என்ற போதிலும் உயிரிழப்புகள் இந்தளவுக்கு அதிகரிக்கக் காரணம், உரியநேரத்தில் முன்னெச்சரிக்கை விடுக்கப்படாமையே  என்றும் கூறினார். வழக்கமாக 160 மில்லிமீற்றர் மழை பெய்தாலே மகாவலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உண்டு. ஆனால், இம்முறை 400 மில்லிமீற்றர் மழை பெய்யும் என முன்கூட்டியே தெரிந்திருந்தும், மக்களுக்கு அதுகுறித்து எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை  என்றும், குறிப்பாக, நவம்பர் 27ஆம்திகதி ஏற்படவுள்ள ஆபத்தை உணர்ந்து, 26ஆம் திகதி நடைபெறவிருந்த உத்தியோகபூர்வ கூட்டங்கள் ரத்து செய்யப்பட்ட போதிலும், சாதாரண மக்களுக்கு அந்த ஆபத்துக் குறித்து  அறிவிக்கப்படாததற்கு, சம்பந்தப்பட்ட திணைக்களங்களே பொறுப்பு என்று அவர் குற்றம் சாட்டினார். நாவலப்பிட்டி நீர்ப்பாசனத் திணைக்கள உபஅலுவலகம் நீர்மட்டத்தை அளவிட்டிருந்தும்,அந்தத் தகவலை கம்பளை மக்களுக்குப் பரிமாறத் தவறியதே பல உயிர்கள் பறிபோகக் காரணமாக அமைந்தது என்றும்  அவர் கூறினார். மேலும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கொத்மலை அணை திறக்கப்பட்டமை நிலைமையை மேலும் மோசமாக்கியது என்றும் அவர் குற்றம் சாட்டினார்

புயலுக்கு பின்னரான உரையாடல்கள் அவ்வாறு அரசு திணைக்களங்களின் மீதான விமர்சனங்களாகவே காணப்படுகின்றன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பகுதியினர் அரசு திணைக்களங்களில் பிழை பிடிக்கிறார்கள் என்று அரசாங்கத்துக்கு ஆதரவானவர்கள் கூறுகிறார்கள். எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இயற்கை அனர்த்தங்களை துல்லியமாக எதிர்வுகூற முடியாது என்று அரசாங்கத்துக்கு ஆதரவான தமிழ் விரிவுரையாளர்கள் நியாயம் கூறுகிறார்கள்.

உண்மை. பேரியற்கையோடு ஒப்பிடுகையில் மனிதர்கள் அற்பமானவர்கள். சீனர்களுடைய பாரம்பரிய ஓவியங்களில் வரும் நிலக்காட்சிகளை இங்கு சுட்டிக்காட்டலாம். அந்த நிலக் காட்சிகளில் இயற்கை மிகப் பிரமாண்டமாக வரையப்படும். மனிதர்களோ மிகச் சிறிய,அற்ப புள்ளிகளாக காட்டப்படுவார்கள்.

எனவே பேரியற்கையின் போக்கை துல்லியமாக எதிர்வுகூறுவது கடினம்தான். ஆனால் அவ்வாறு சில துறைசார் நிபுணர்கள் எதிர்வுகூறிய போதிலும் அதை சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்கள்  கவனத்தில் எடுத்திருந்தால் இந்த அளவுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்குமா? முன்னெச்சரிக்கை மிக்க வருமுன் காக்கும் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய நட்டத்தை விடவும் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் இடர் பெரியது.இழப்பு பெரியது. துயரம் பெரியது.

https://www.nillanthan.com/7984/

டித்வா புயல் அனுரவை பலப்படுத்தியிருக்கிறதா? நிலாந்தன்.

9 hours 55 minutes ago

Anura.jpg?resize=750%2C375&ssl=1

டித்வா புயல்  அனுரவை பலப்படுத்தியிருக்கிறதா? நிலாந்தன்.

ரணில் விக்கிரமசிங்கவால் “எல்போர்ட்” அரசாங்கம் என்று அழைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு டித்வா புயல் ஒரு சோதனையாக வந்திருக்கிறது. கடந்த 14 மாதங்களாக தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த எதிர்க் கட்சிகள் நுகேகொடவில் ஒர் ஆர்ப்பாட்டப் பேரணியை ஒழுங்குப்படுத்தி மெல்லத் தலைதூக்க முயற்சித்தன.அந்தப் பேரணி திறந்துவிட்ட வாய்ப்புகளைவிட அதிக வாய்ப்புகளை டித்வா புயல் எதிர்க்கட்சிகளுக்கு திறந்து விட்டிருக்கிறது. இது ஒரு எல்போர்ட் அரசாங்கம் என்று நிரூபிப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தை எதிர்க்கட்சிகள்  பயன்படுத்துகின்றன.

எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.முதலாவது குற்றச்சாட்டு, அரசாங்கம் முன்னெச்சரிக்கையோடு நடக்கவில்லை என்பது. இதில் ஓரளவுக்கு உண்மை உண்டு. இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் தொடர்பாக நொவம்பர் 13 ஆம் திகதியே  எச்சரித்திருந்தது. நவம்பர் 26வரை அனைத்துத் தகவல்களும் இலங்கையுடன் பரிமாறப்பட்டுள்ளன என்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்” இணையத்தளம் கூறுகிறது.மேலும் உத்தியோகப்பற்றற்ற  விதத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை தலைவராகிய பேராசிரியர் பிரதீபராஜா நொவம்பர் மாதக் கடைசியில் வரக்கூடிய புயலைக் குறித்து முன்னெச்சரிக்கை விடுத்திருந்தார். அவரைப்போலவே தமிழகத்தைச் சேர்ந்த வானிலை முன்னறிவிப்பாளர் செல்வக்குமார் தன்னுடைய யூடியூப்  தளத்தில் புயலின் வருகையைக் குறித்து எச்சரித்திருந்தார்.ஆனால் இந்த எச்சரிக்கைகளை அரசாங்கமோ அல்லது சம்பந்தப்பட்ட திணைக்களங்களோ ஏன் கவனத்தில் எடுக்கவில்லை? புயல் நாட்டைத் தாக்கப்போகிறது என்பதனை வளிமண்டலவியல் திணைக்களம் உரிய நேரத்தில்,உரிய வேகத்தில் எச்சரித்திருக்கவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

 இரண்டாவது குற்றச்சாட்டு,அரசு திணைக்களங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இருக்கவில்லை என்பது. பாதிக்கப்பட்ட மக்களும் அதனைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இந்த விடயத்தில் முழு அளவுக்கு ஒருங்கிணைப்போடு செயற்பட்டு இருந்திருந்தால் இழப்பின் அளவைக் குறைத்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.குறிப்பாக  வளிமண்டலவியல் திணைக்களம்,நீர்பாசனத் திணைக்களம்,அனர்த்த முகாமைத்துவத் நிலையம் போன்றன இந்த விடயத்தில் மக்களை எச்சரிக்கத் தவறி விட்டதாகவும்,தங்களுக்கிடையில் ஒருங்கிணைப்போடு செயல்படவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜெயரட்ன,ரவூப் ஹக்கீம் போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் வைத்துச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை ஒரே வேளையில் திறக்கப்பட்டதால் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கைக் குறித்து சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மக்களை எச்சரிக்கத் தவறியமை போன்ற பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த விடயத்தில் திணைக்களுங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பு இல்லாதது சேதத்தை அதிகப்படுத்தி இருப்பதனால் வருங்காலத்தில் நதிப் படுக்கைகளுக்கு என்று அதிகார சபை ஒன்றை உருவாக்கும் யோசனையை ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் முன் வைத்திருக்கிறார்.

மூன்றாவது குற்றச்சாட்டு,முன்னெச்சரிக்கை உணர்வோடு வருமுன் காக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து இருந்திருந்தால் சேதத்தின் அளவைக் குறைத்திருக்கலாம் என்பது. பருவ மழையின்போது மண் சரிவு ஏற்படும் பிரதேசங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.மழை வீழ்ச்சி அதிகரிக்கும் போது மண் சரிவு அபாயம் உண்டு என்பது சம்பந்தப்பட்ட எல்லா அரசுக்கு கட்டமைப்புக்களுக்கும் தெரியும் என்பதால் வரக்கூடிய ஆபத்தை முன்கூட்டியே அனுமானித்து பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பிரதேசங்களில் இருந்து மக்களை முன்கூட்டியே இடம்மாற்றி இருந்திருந்தால் சேதத்தின் அளவை குறைத்து இருக்கலாமா என்ற கேள்வி உண்டு. இந்த விடயத்தில் அரசாங்கம் அனர்த்த காலம் ஒன்றை நோக்கி வினைத்திறனோடு செயல்படவில்லை என்றும் அனர்த்தத்தின் போதும் அதன் பின்னரும் நிலைமைகளைச் சரியாக முகாமை செய்யவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றன.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை, அவை வழமையான எதிர்ப்பு அரசியல் என்ற பெட்டிக்குள் தூக்கிப் போட்டுவிட முடியாது. அதே சமயம் நுகேகொட பேரணிக்குப்பின் அரசங்கத்தை விமர்சிப்பதற்கு கிடைத்த அதிகரித்த வாய்ப்பாக புயலுக்கு பின்னரான அரசியற் சூழலை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றன என்பதும் உண்மை.

 எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்திருந்தாலும்,வானிலை மாற்றங்களை மிகத் துல்லியமாக எதிர்வுகூற முடியாது என்று அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ் புத்திஜீவிகள் சமூக வலைத்தளங்களில் எழுதி வருகிறார்கள். தொழில்நுட்பம் அதிகம் வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட இயற்கை அனர்த்தங்களைக் குறித்து மிகச்சரியாகக் கணிக்க முடிவதில்லை என்றும் அவ்வாறு கணிப்பிட்டு இருந்தாலும் அழிவுகளை முழுமையாகத் தடுக்க முடிவதில்லை என்று அவர்கள் வாதிடுகிறார்கள். அதில் உண்மை உண்டு.

ஆனால் இந்திய வானிலை அவதானிப்பு மையம் உரிய காலத்தில்  எச்சரித்திருந்த போதிலும் துறைசார் வல்லுநர்கள் சிலர் உள்நாட்டிலும் அயல் நாட்டிலும் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் இதுதொடர்பாக எச்சரிக்கைகளை விடுத்திருந்த போதிலும் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் ஏன் அதனை கவனத்தில் எடுக்கத் தவறின?

இப்பொழுது அழிவு நடந்து விட்டது.இனி இறந்த காலத்தைப் போஸ்ட் மோர்ட்டம் செய்து கொண்டிருப்பதை விடவும்,மண்ணில் புதைந்திருப்பவர்களை எப்படி மீட்பது? உடைந்து தொங்கும் பாலங்களை எப்படிச் சீரமைப்பது? சிதைந்துபோன வாழ்வை எப்படி மீளக் கட்டியெழுப்புவது? என்பதுதான் முதன்மைச் சவால்.

நாட்டின் முழுக் கவனமும் புயலுக்குப் பின்னரான மனிதாபிமான நிலவரங்களின் மீது குவிந்திருக்கின்றது.நாட்டுக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் அதிகளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்கின்றன.

 தமிழ்ப் பகுதிகளில் உயிர் இழப்பு ஒப்பீட்டளவில் குறைவு.ஆனால் சொத்திழப்பு உண்டு.அடிக்கட்டுமானங்கள் சேதமடைந்துவிட்டன.முல்லைத்தீவு மாவட்டம் சில நாட்கள் துண்டிக்கப்பட்டிருந்தது.மன்னாரில் 15000க்கும் குறையாத  கால்நடைகள் கொல்லப்பட்டு விட்டன.திருகோணமலையிலும் மலையகத்திலும் கால்நடைகள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டிருக்கின்றன.புயலுக்குப்பின் கிட்டத்தட்ட ஒரு கிழமை கழித்து இக்கட்டுரை எழுதப்படுகையிலும்கூட கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை முழுமையாகக் கிடைக்கவில்லை.இது அனர்த்தத்தின்  பாரதூரத் தன்மையைக் காட்டுகின்றது.

அதனால்தான் உலக சமூகம் இலங்கைக்கு உதவ முன் வந்திருக்கிறது முதலில் உதவ வந்தது இந்தியா.அதிகம் உதவியதும் இந்தியா.அதைத் தொடர்ந்து பெரும்பாலான அயல்நாடுகளும் உட்பட உலக சமூகம் தாராளமாக உதவி செய்து வருகிறது.அனர்த்த காலம் இலங்கை மீதான அனுதாபத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.இந்த அனுதாபம் ஒரு விதத்தில் அனுர அரசாங்கத்தைப் பலப்படுத்தக் கூடியது.

 அரசாங்கம் அறிவித்திருக்கும் இழப்பீடுகளின் பருமன் அது மக்களுடைய நம்பிக்கையை வெல்வதற்கு முயற்சிக்கிறது என்பதைக் காட்டுகின்றது. இதற்கு முன்பு ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போது முன்னிருந்த அரசாங்கங்கள் அறிவித்திராத பெருந்தொகை இழப்பீட்டுத் தொகையை அரசாங்கம் அறிவித்திருக்கிறது.அதன் மூலம் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான அபிமானத்தைக் கட்டியெழுப்ப முடியும். இது வெறும் வாக்குறுதிதான் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.நடைமுறையில் அரசாங்கம் எவ்வளவு தொகையைக் கொடுக்கப் போகிறது என்பதனைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனாலும் அறிவிக்கப்பட்டிருக்கும் இழப்பீட்டுத் தொகை ஒப்பீட்டளவில் பெரியது.

மேலும்,சிதைந்த நகரங்களையும் வாழ்வையும் மீளக்கட்டியெழுப்பும் முயற்சியில் அரச நிறுவனங்களோடு பொது மக்களும் தன்னார்வமாக இணைந்து வருகிறார்கள்.பாதிக்கப்படாத பகுதியைச் சேர்ந்த மக்கள், அல்லது ஒப்பீட்டளவில் அதிகம் பாதிக்கப்படாத பகுதியைச் சேர்ந்தவர்கள, தாங்களாகத் திரண்டு,தன்னார்வமாக முன்வந்து,ஏனைய பகுதிகளுக்கு உதவுகிறார்கள். மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் உதவுகிறார்கள்.சேறு படிந்த தெருக்களை,வீடுகளைக் கழுவிச் சுத்தமாக்குகிறார்கள்.பொதுமக்கள் மத்தியில் இருந்து நிவாரணங்களைத் திரட்டி, பாதிக்கப்பட்ட மக்களை நோக்கிக் கொண்டு போகிறார்கள். இந்த மனிதாபிமானத் தன்னார்வச் சூழல் அரசாங்கத்துக்கு அனுகூலமானது.

குறிப்பாக வடக்கிலிருந்து தமிழ் அரசியல்வாதிகளும் தன்னார்வலர்களும் மலையகத்தை நோக்கி உதவிகளோடு போகிறார்கள்.புயல் ஓய்ந்த கையோடு தனித்து விடப்பட்ட அல்லது துண்டிக்கப்பட்ட முல்லைத்தீவை நோக்கி யாழ்ப்பாணத்தில் இருந்து தன்னார்வலர்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் போனார்கள். தங்களால் இயன்ற நிவாரணங்களைக் கொடுத்தார்கள். உதவிகளைச் செய்தார்கள்.இப்பொழுது மலையகத்தை நோக்கிப் போகிறார்கள். அனர்த்த காலம் தமிழ் மக்களுக்கு இடையிலான சகோதரத்துவத்தை உணர்வு பூர்வமாகப் பலப்படுத்தியிருக்கிறது- அது மட்டுமல்ல அனுர அரசாங்கத்தையும் அது பலப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் தான் அதிகமாகத் தெரிகின்றன.

https://athavannews.com/2025/1455496

மாவீரர் நாள்;புயல்;கொலை - நிலாந்தன்

10 hours 2 minutes ago

மாவீரர் நாள்;புயல்;கொலை - நிலாந்தன்

595662198_122174169644769546_50017657207

டித்வா புயல் மாவீரர் நாளுக்குப் பின்னரான உரையாடலின் மீதான கவனத்தைத் திசை திருப்பிவிட்டது. அரசாங்கம் இம்முறை மாவீரர் நாளை பெரிய அளவில் உத்தியோகபூர்வமாகத் தடுக்கவில்லை. அதனால் மாவீரர் நாள் தாயகத்தில் பரவலாகவும் செறிவாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. எல்லாத் துயிலும் இல்லங்களுக்கும் இப்பொழுது ஏற்பாட்டுக் குழுக்கள் உண்டு. மேலும் இம்முறை உள்ளூராட்சி சபைகளும் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டின. புதிய உள்ளூராட்சி சபைகள் இயங்கத் தொடங்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகின்றன. இம்முறை மாவீரர் நாளை அனுஷ்டிப்பதில் உள்ளூராட்சி சபைகள் கணிசமான அளவுக்குப் பங்களிப்பை நல்கின. மாவீரர் நாளையொட்டி நகரங்களை அலங்கரிப்பது,தெருக்களை அலங்கரிப்பது, முதலாக பல்வேறு விடயங்களிலும் உள்ளூராட்சி சபைகள் ஆர்வம் காட்டின.

மழை;வெள்ளம் ;புயல் எச்சரிக்கை எனினும் மக்கள் பரவலாக துயிலும் இல்லங்களை நோக்கி வந்தார்கள். பெரும்பாலான துயிலும் இல்லங்களில் மக்கள் குடைகளைப் பிடித்தபடி அஞ்சலி செய்தார்கள். மழை சற்றுக் கடுமையாக இருந்த இடங்களில் சுடருக்குக் குடை பிடித்து அதைப் பாதுகாத்துக் கொண்டு நனைந்தபடி நின்றார்கள். குறிப்பாக ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தில் சுடர் அணையக்  கூடாது என்பதற்காக தமது தலைக் கவசத்தை சுடருக்கு மேல் பிடித்து சுடரைப் பாதுகாத்ததாக ஒருவர் முகநூலில் எழுதியிருந்தார்.

இவ்வாறு பரவலாகவும் செறிவாகவும் பெருமடுப்பிலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டிருந்த ஒரு பின்னணிக்குள், அதுதொடர்பான உரையாடல்களின் மீதான கவனக் குவிப்பை புயல் திசை திருப்பியது. மாவீரர் நாளுக்காக அலங்கரிக்கப்பட்ட சிவப்பு மஞ்சள் கொடிகள் நனைந்து தொங்கிய தெருக்களைக் குறுக்கறுத்து வெள்ளம் பாய்ந்தது. மாவீரர் நாளுக்காக கட்டப்பட்டிருந்த வரவேற்பு வளைவுகள் கழட்டப்படுவதற்கு முன்னரே புயல் நாட்டுக்குள் வந்து விட்டது. புயலின் அகோரம் காரணமாக ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களின் கவனக்குவிப்பு மாவீரர் நாளில் இருந்து புயலை நோக்கித் திரும்பியது.

புயல் வடக்கு கிழக்கில் ஒப்பீட்டளவில் குறைந்த அளவு உயிரிழப்புகளைத்தான் ஏற்படுத்தியது. அதிக உயிரிழப்பு தெற்கில்தான். வடக்கு கிழக்கில் உட்கட்டுமானங்கள் சிதைவடைந்தன. மக்கள் இடம் பெயர்ந்தார்கள். அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டம் துண்டிக்கப்பட்டது; மன்னாரில் ஆயிரக் கணக்கில் மாடுகள் இறந்தன. எனினும் வடக்கில் உயிரிழப்பு என்று பார்த்தால் மொத்தம் நான்கு பேர்தான். ஒருவர் தெற்கு நோக்கி பேருந்தில் சென்ற போது பேருந்து வெள்ளத்தில் சிக்கியதால் உயிரிழந்தவர். மற்றவர் கடற்தொழிலாளி. ஏனைய இருவரும் வவுனியாவிலிருந்து அவர்கள் பயணம் செய்த வாகனம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்கள்.

facebook_1764824140328_74022089510750673

ஒருபுறம் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நோக்கி எதிர்பாராத திசைகளில் இருந்து மனிதாபிமான உதவிகள் கிடைத்தன. இன்னொரு புறம் வணிகர்களில் ஒருபகுதியினர் மனிதாபிமானமாக நடந்து கொள்ளவில்லை. பாதிக்கப்பட்டவர்களை நோக்கிப் பல்வேறு தரப்புகளும் உதவிக்கரம் நீட்டின. உள்ளூர் தொண்டு நிறுவனங்கள்,மத நிறுவனங்கள்,புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் போன்ற பல்வேறு வகைப்பட்டவர்களும் உதவிகளைச் செய்தனர். நாடுகளைப் பொறுத்தவரை முதலில் உதவியது இந்தியா. அதன் பின் அமெரிக்கா, பாகிஸ்தான், மாலை தீவுகள், சீனா உட்பட பெரும்பாலான நாடுகள் உதவி புரிந்தன.

ஆனால் உள்ளூரில், வணிகர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கினார்கள். மரக்கறி,முட்டை போன்றவற்றின் விலைகளை உயர்த்தினார்கள். புயலுக்கு அடுத்தடுத்த நாட்களில் யாழ்ப்பாண நகரத்தின் பெரும்பாலான சிலிண்டர் கடைகளில் மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள். திடீரென்று சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு வந்துவிட்டது. பாதைகள்  அடைபட்ட காரணத்தால் சிலிண்டர்கள் வரவில்லை என்று ஒரு விளக்கம் சொல்லப்பட்டது. அது உண்மையல்ல. ஒவ்வொரு நாளும் தென்னிலங்கையில் இருந்து வரும் சிலிண்டர்களைத்தான் கடைகளில் வைத்து விற்கிறார்கள் என்பது உண்மையல்ல. அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு தேவையான குறிப்பிட்ட தொகை சிலிண்டர்களைச் சேமித்து வைத்திருப்பார்கள். அதுதான் வியாபார வழமை.பாதைகள் அடைபட்டதைச் சாட்டாக வைத்து அவர்கள் செயற்கையாக ஒரு தட்டுப்பாட்டை  உருவாக்கினார்களா?

சிலிண்டர்களுக்கு நிர்ணய விலை உண்டு. விலை கூட்டி விற்க முடியாது. ஆனால் மரக்கறிகளுக்கு அப்படியல்ல. மரக்கறிகளை விரும்பின விலைக்கு விற்றார்ர்கள். கிட்டத்தட்ட ஐந்து மடங்கு  அதிகமான விலைகள். பச்சை மிளகாயில் இருந்து இஞ்சி வரை,  விலை சடுதியாக உயர்ந்தது. வெள்ளம் வடிந்த பின்னரும், புயல் ஓய்ந்த பின்னரும், மரக்கறிகளின் விலை குறையவில்லை. ஒரு பகுதி மரக்கறி வியாபாரிகளின் இதயம்  இளகவில்லை.

மரக்கறிகள் மட்டுமல்ல முட்டை, கோழி இறைச்சி போன்ற பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பெரும்பாலான இறைச்சிக் கடைகளில் பேரண்ட்ஸ் வகை இறைச்சிக் கோழிகள் கிடைக்கவில்லை. ஏன் என்று கேட்டபோது தெற்கில் இருந்துதான் அவை வருகின்றன. பாதைகள் அடைபட்டதால் அவை வரவில்லை என்று சொன்னார்கள். புயலுக்கு முன் முட்டையின் விலை 30 ரூபாய். புயலோடு முட்டை விலை 36ரூபாய். ஏனென்றால் முட்டை ஒவ்வொரு நாளும் வவுனியாவுக்கு அப்பாலிருந்து வருகிறது என்று சொன்னார்கள். ஒரு முட்டை வியாபாரி தெற்கில் தனக்கு வழமையாக முட்டை சப்ளை செய்யும் மொத்த வியாபாரி அனுப்பிய வாட்சப் ஒளிப்படம் ஒன்றைக் காட்டினார். அதில் கோழிப் பண்ணையில் இருந்த கோழிகள் புயலில் அடிபட்டுச் செத்துக் கிடந்தன.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது. புயல் வந்து, வெள்ளம் பெருகி பாதைகள் தடைபட்டதும் மரக்கறிகளின் விலை,முட்டை விலை  உயர்ந்துவிட்டது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு. பேரன்ட்ஸ் வகைக் கோழிகள் கிடைக்கவில்லை. அப்படியென்றால் வடக்கின் பொருளாதாரம் மேற்கண்ட பொருட்களுக்காக தெற்கில் தங்கியிருக்கின்றதா? வடக்கிலிருந்து தெற்குக்கான பாதைகள் அடைபட்டால் யாழ்ப்பாணத்தவர்களுக்கு முட்டை, பச்சை மிளகாய், பேரன்ட்ஸ் கோழி இறைச்சி போன்றவை கிடைக்காதா?

புயல் எழுப்பிய கேள்விகளில் இது முக்கியமானது. மற்றொரு கேள்வி, தொலைத் தொடர்பு தொடர்பானது. தமிழ் மக்களில் அதிகமானவர்கள் குறிப்பாக கிராமப் பகுதி மக்கள் அதிகமாக பயன்படுத்துவது டயலக் தொலைபேசி அட்டைகளைத்தான். ஆனால் புயலின் போதும் புயலுக்குப் பின்னரும் டயலக் சிம்கள் பெரும்பாலும் வேலை செய்யவில்லை. அந்த சிம்களை பயன்படுத்திய பலர் தொடர்புகளை இழந்து தவித்தார்கள். அனர்த்த காலங்களில் தொலைத் தொடர்பும் ஓர் அத்தியாவசிய சேவைதான். தொலைதொடர்பு இல்லையென்றால் ஆபத்தில் இருப்பவர்கள்  தனித்து விடப்படுவார்கள். இது கடந்த புயல் நாட்களில் நடந்தது. அது இயற்கை அனர்த்தம் மட்டுமல்ல தொலைத்தொடர்பு அனர்த்தமும்கூட.

டயலக் கொம்பனி உட்பட பெரும்பாலான தொலைத்தொடர்புக் கொம்பெனிகள் சாதாரண மக்களிடம் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி பணத்தை வசூலிக்கின்றன இந்த குற்றச்சாட்டு பரவலாக உண்டு. சிம்மை விற்கும் பொழுது அல்லது சேவையை தொடங்கும் பொழுது நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி அதன் மூலமே அப்பாவி மக்களிடமிருந்து சிறுகச்சிறுக பணத்தைச் சுரண்டுகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு பரவலாக உண்டு. கேள்வி கேட்காத அப்பாவியான ஒரு வாடிக்கையாளரிடம் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு ரூபாயை சுரண்டினால் கூட லட்சக்கணக்கானவரிடம் இருந்து ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான ரூபாய்களைச் சுரண்ட முடியும். இவ்வாறு ஏற்கனவே குற்றச்சாட்டுகளுக்கும் விமர்சனங்களுக்கும் இலக்காகியிருந்த தொலைதொடர்புக் கொம்பனிகள் குறிப்பாக டயலாக் கொம்பனி இம்முறை புயலோடு அதன் நம்பகத் தன்மையை இழந்துவிட்டது.

இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் டயலக் தொலைத்தொடர்பு சீராகவில்லை. பலருடைய டயலாக் இன்டர்நெட் இணைப்பு மோசமாக இருக்கிறது. உயிரிழந்தவர்கள்,பாதிக்கப்பட்டவர்களில் ஒருபகுதியினர் இவ்வாறு தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதாலும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று கூறமுடியும். டயலக் கொம்பனி அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும். மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

IMG_1918-1024x576.jpeg

புயல் தணிந்த காலையில், யாழ்ப்பாணத்தவர்கள் பொருட்களை வாங்க தெருக்களில் தயங்கித் தயங்கி இறங்கிய வேளையில், திருநெல்வேலியில் ஒரு கொலை நடந்தது. கொலைக்கு காரணம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் அநேகமானவர்கள் இளவயதினர். சம்பவம் நடந்தது அதிகம் சனப்புழக்கமுள்ள ஓரிடம். திருநெல்வேலி சந்தைக்கு அருகே ஆடியபாதம் வீதி. ஒரு நபரை மூன்று பேர் துரத்தி துரத்தி வெட்டுகிறார்கள். அப்பகுதியில் நின்றவர்கள் அதில் சம்பந்தப்படாமல் விலகி விலகி நிற்கிறார்கள். யாருமே கொல்லப்பட்டவரைக் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கவில்லை. அங்கு கிடைத்த சிசிடிவி கமரா பதிவுகளின்படி அங்கு நின்ற அனைவருமே பார்வையாளர்களாக நின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் அதைத் தடுக்கும் சக்தியற்றவர்களாக, அதைத் தடுக்கும் துணிச்சலற்றவர்களாக, தங்களைத் தாங்களே தற்காத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு தப்பிச் செல்பவர்களாகத்தான் அவர்கள் காணப்பட்டார்கள். இத்தனைக்கும் ஒரு காலம் தன் வீரத்துக்கும் தியாகத்துக்குமாக உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு மக்கள் கூட்டம். புயல் தணிந்த வேளை நடந்த கொலை அது. அந்தக் கொலையை விடக் கொடுமையானது, அதை கையாலாகாத சாட்சிகளாகப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் கூட்டம்.

facebook_1764743293174_74018698535367880

அதேசமயம் அதே மக்கள் கூட்டத்தின் மத்தியில் இருந்துதான் இன்னொரு தொகுதி இளையவர்கள் தாங்களாக முன்வந்து வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பிரதேசங்களை நோக்கிப் போனார்கள். ஆபத்தை எதிர்கொண்டு நனைந்து நனைந்து, பாதிக்கப்பட்ட மக்களை, தனித்து விடப்பட்ட மக்களைத் தேடித்தேடி உதவினார்கள்.

இந்த இரண்டுமே ஒரே சமூகத்தில் காணப்படும் ஒன்றுக்கொன்று முரணான காட்சிகள். ஆனால் இதற்குள்தான் இருக்கிறது தமிழ் மக்களின் தற்போதைய அரசியல் யதார்த்தம். ஒருபுறம் தானும் தன்பாடும் என்று கூட்டுப் புழுக்களாகப் பதுங்க முற்படும் கூட்டு மனோநிலை. இன்னொருபுறம் மழை,வெள்ளம்,புயல் என்பவற்றைத் தாண்டி ஆபத்தில் சிக்கியிருக்கும் மக்களைத் தேடிச் செல்லும் இளையோர் கூட்டம். சரியான பொருத்தமான தலைமைகள் இந்த இளையவர்களை ஒருங்கிணைத்து இலட்சிய வேட்கை கொண்டவர்களாக வார்த்தெடுத்தால், அவர்கள் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் என்பதைத்தான் டித்வா புயலுக்கு பின்னரான மனிதாபிமானச் சூழல் நமக்கு உணர்த்துகின்றது.

https://www.nillanthan.com/7971/

வரைபடங்களும் மனிதர்களும் ! உக்ரைன்-ரசிய சமாதான ஒப்பந்த முயற்சி குறித்த அலசல்

3 days 6 hours ago

வரைபடங்களும் மனிதர்களும் !

sudumanalDecember 1, 2025

உக்ரைன்-ரசிய சமாதான ஒப்பந்த முயற்சி குறித்த அலசல்

peace.webp?w=1024

image: washington times

மூன்று வருடங்களும் எட்டு மாதங்களுமாகிவிட்டதாக சுட்டப்படும் உக்ரைன்-ரசிய போரினை முடிவுக்குக் கொண்டுவர, 28 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் ட்றம்ப் குழாமினால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழாமில் அரச செயலாளர் மார்க்கோ றூபியோ, விசேடதூதுவர் ஸ் ரீவ் விற்கோவ் இருவரும் முக்கியமானவர்கள். இந்த ஒப்பந்தம் ரசியாவுக்கு சார்பானதாக இருப்பதாகவும், உக்ரைனின் இறைமையைப் பாதிப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் விமர்சித்து, இந்த ஒப்பந்தத்தை 19 அம்சங்கள் கொண்டதாக மறுவரைவு செய்து ட்றம் இடம் முன்வைத்திருக்கின்றன. இக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த 19 குறித்து விபரமாக எதுவும் தெரியவில்லை.

போர் எப்போ தோடங்கியது?

உக்ரைன்- ரசியா போர் 2022 பெப்ரவரியில் தொடங்கியதல்ல. உண்மையில் 2014 இல் தொடங்கியது அது. 2010 இல் உக்ரைன் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட யனுகோவிச் (Yanukovych) இன் ஆட்சியை 2014 இல் “மைடான் புரட்சி” என்ற பெயரில் சதி மூலம் அமெரிக்கா கவிழ்த்தது. ரசியாவுடன் நல்ல உறவுநிலையில் இருந்த அவரை இடம்பெயர்த்துவிட்டு, மேற்குலகு சார்பான பொரொசெங்கோவை (Petro Poroshenko) ஆட்சிக்கு கொண்டு வந்தது அமெரிக்கா. (இந்த சதிப்புரட்சி பற்றிய இரகசிய தொலைபேசி உரையாடல் பின்னர் கசிந்து பொதுவெளிக்கு வந்தது). எச்சரிக்கை அடைந்த ரசியா உடடினடியாகவே செயற்பட்டு மூன்று நாட்களுக்குள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததும், பெரும்பான்மை ரசிய மொழி பேசுபவர்களையும் கொண்ட கிரைமியா (Crimea) பகுதியை கைப்பற்றியது. சோவியத் காலத்தில் முக்கிய கடற்படைத்தளம் அங்குதான் இருந்தது. இது நேட்டோவிடம் பறிபோனால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற ஒரே காரணத்துக்காக ரசியா அதை கைப்பற்றியது. எழுந்துள்ள நிலைமைகளையும் நேட்டோவின் தலையீடுகளையும் பார்க்கும்போது இனி ஒருபோதும் ரசியா அதை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்பது நிச்சயமானது.

பொரசெங்கோவின் ஆட்சியில் ரசிய மொழி பேசும் மக்களைக் கொண்ட டொன்பாஸ் இன் 4 மாகாணங்களிலும் ரசிய மொழி தடைசெய்யப்பட்டது. AVOZ என்ற நாசிசப் படைப் பிரிவு உக்ரைன் இராணுவத்தின் ஒரு பகுதியாக செயற்பட்டது. இவர்கள் டொன்பாஸ் க்கு அனுப்பிவைக்கப் பட்டார்கள். இவர்கள் 2014 இலிருந்து தொடக்கி வைத்த படுகொலை 14000 ரசிய மொழி பேசும் டொன்பாஸ் மக்களை கொன்றொழித்தது. துப்பாக்கியை விடவும் வெட்டிக் கொல்லப்பட்டவர்களே பலர். உக்ரைன் அரசின் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்த இயக்கங்களான டொனெற்ஸ்க் மக்கள் குடியரசு (DPR), லுகான்ஸ்க் மக்கள் குடியரசு (LPR) இனை ரசியா ஆதரித்தது. ஆயுத உதவி வழங்கியது.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பின் மூலகாரணம் 2008 இல் தோற்றுவிக்கப்பட்டது. 2008 இல் ‘புக்காரெஸ்ற்’ (ருமேனியா) இல் நடந்த நேட்டோ மாநாட்டில் ஜோர்ஜ் புஷ் இன் அமெரிக்காவானது உக்ரைனையும் ஜோர்ஜியாவையும் நேட்டோவில் இணைக்க தீர்மானம் கொண்டுவந்தது. இதை அப்போதைய ஜேர்மன் சான்சலர் அங்கலா மேர்க்கலும் (Angela Merkel, பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கொலாஸ் சார்க்கோசியும் (Nicolas Zarkozy) எதிர்த்தார்கள். அங்கலா மேர்க்கல் தெளிவாக ஒன்றை முன்வைத்தார். “நேட்டோ விஸ்தரிப்பை உக்ரைனூடாக ரசிய எல்லைவரை கொண்டு போவதை புட்டின் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார். நிச்சயமாக அது போரில் போய் முடியும் ஆபத்தைக் கொண்டது” என்றார். அதன்படி 2022 இல் நடந்திருக்கிறது.

சோவியத் யூனியனின் கடைசி அதிபராக இருந்த கோர்ப்பச்சேவ் இன் (கிளாஸ்நோஸ்ற், பெரஸ்றொய்க்கா) கொள்கைகள் 1989 இல் பேர்லின் சுவர் வீழ்த்தப்பட்டு, 1990 இல் கிழக்கு-மேற்கு ஜேர்மனி இணைக்கப்படுவதற்கும், கிழக்கு ஜேர்மனியில் இருந்த சோவியத் படைகள் படிப்படியாக வெளியேறுவதற்கும் வழிவகுத்தது. இந்த பரபரப்பான காலகட்டத்தில் 1990 பெப்ரவரியில் மொஸ்கோவில் வைத்து கோர்ப்பச்சேவ் க்கு நேட்டோ சார்பில் அமெரிக்க அரச செயலாளர் ஜேம்ஸ் பேர்க்கர் ((James Baker) வழங்கிய முக்கிய வாக்குறுதி “நேட்டோ படையானது ஜேர்மனியிலிருந்து ஓர் அங்குலம் கூட கிழக்கு நோக்கி நகராது” என்பதே. 1955 இல் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் கூட்டாக உருவாக்கிய Warsaw Packt இன் கீழ் இருந்த இராணுப் பிரிவும் 1991 இல் கலைக்கப்பட்டது. சோவியத் யூனியன் என்ற கட்டமைப்பு உதிர்ந்து போனது. அப்போதே நேட்டோவுக்கான தேவையும் இல்லாமல் போனது. இருந்தபோதும் நேட்டோ கலைக்கப்படவில்லை.

ஆனால் நேட்டோ விஸ்தரிப்பு குறித்த வாக்குறுதிகளை நேட்டோ கடைப்பிடிக்காமல் ஏமாற்றியது. சோவியத் இலிருந்து பிரிந்து சென்ற நாடுகளையும் ஒன்றன்பின் ஒன்றாக இணைத்துக் கொண்டது. பின்னாளில் நேட்டோ விஸ்தரிப்புகள் குறித்து கொர்பச்சேவ் ஜேர்மனியில் பேசும்போது “எம்மை ஏமாற்றிவிட்டீர்கள்” என விமர்சித்துப் பேசினார். 2000 ஆண்டு ஜனாதிபதியாக தெரிவான புட்டின் இந்த நேட்டோ விரிவாக்கம் குறித்து எச்சரித்திருந்தார். பின்னர் உக்ரைனை நேட்டோவில் இணைப்பதானது நேட்டோ தனது எல்லை வரை வர வழிசமைக்கும் எனவும், அது தமது நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக வரும் எனவும் பலமுறை சொல்லியுமிருந்தார். “அது சிவப்புக் கோட்டைத் தாண்டுவதாக அமையும், ரசியா பார்த்துக் கொண்டு இருக்காது” என எச்சரித்தார். இந்த எல்லா எதிர்ப்பையும் எச்சரிக்கைகளையும் மீறி ஜேர்மன் எல்லையிலிருந்து ரசிய எல்லைவரை நேட்டோவை படிப்படியாக நகர்த்தி வந்துவிட்டு, ரசியாவால் ஐரோப்பாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என சொல்வது எவளவு கோமாளித்தனமானது. அத்தோடு ரசியாவும் ஐரோப்பாதான் என்பதை மறந்து பேசுவது இன்னொரு கோமாளித்தனம் அல்லது வஞ்சகத்தனமானது.

இவ்வாறாக அமெரிக்கா தனது பரிவாரமான (32) நேட்டோ நாடுகளுடன் செயற்பட்டு உக்ரைனை போர்க்களமாக்கியதுதான் வரலாறு. இப்போ “அது நான் தொடங்கிய போர் அல்ல. பைடன் தொடங்கிய போர்” என ட்றம்ப் சொல்கிறார். “இது எமது போர் அல்ல, உங்கள் போர்” என ஐரோப்பாவுக்குச் சொல்கிறார். உக்ரைன் ரசிய போர் மோசமான நிலையை நோக்கி நகர்ந்திருக்கிறது. இலகுவில் தீர்க்கப்பட முடியாத பிரச்சினை போல் தோற்றமளித்ததற்குக் காரணம் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ என்பவற்றின் தலையீடாக இருந்தது. உண்மையில் இந்தப் போர் ரசியாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான நிழற்போர் என்பதே பொருத்தமானது. அதன் களம் உக்ரைன். பலியாடுகள் உக்ரைன் மக்களும் இராணுமும்.

நேட்டோ/ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கு

  1. நேட்டோ தனது விஸ்தரிப்புவாதத்தை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.

  2. ரசியாவை -இராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும்- பலவீனமாக்குவது அவர்களின் மைய நோக்கமாக இருக்கிறது.

2.1) அதற்கான கதையாடல்களை (narratives) உருவாக்கினார்கள். உக்ரைனின் பாதுகாப்பு என்பது ஐரோப்பாவின் பாதுகாப்பு எனவும், ஐரோப்பாவின் பாதுகாப்பு உத்தரவாதத்துக்கு ரசியா அச்சுறுத்தலாக இருக்கிறது எனவும் கட்டமைத்தார்கள்.

2.2) ரசியாவுக்கு எதிராக 27000 க்கு மேற்பட்ட பொருளாதாரத் தடையை விதித்தார்கள்.

2.3) 300 பில்லியன் வரையான ரசிய நிறுவனங்களின் நிதியை தமது வங்கிகளில் முடக்கினார்கள். அதாவது உறைநிலை ஆக்கினார்கள்.

2.4) ஐரோப்பாவுக்கு ‘Nord Stream-2’ கடலடி குழாய் மூலமாக ரசியா எரிவாயுவை ஏற்றுமதி செய்து பொருளீட்டியது. அந்தக் குழாயை அநாமதேயமாக உடைத்தார்கள். அல்லது உக்ரைன் உதவியுடன் உடைத்தார்கள்.

2.5) ரசியாவிடமிருந்து பெருமளவு கச்சா எண்ணெயை வாங்கும் சீனா, இந்தியா மீது அழுத்தம் கொடுக்க முயற்சித்தார்கள். ஆனாலும் திரைமறைவில் இன்னமும் 40 வீதமான எரிவாயு ஐரோப்பாவுக்குள் வந்து சேர்கிறது என்பது ஒரு முரண்நகை. அத்தோடு இந்தியாவிடமிருந்து (ரசிய) எண்ணெயை வாங்கினார்கள். இந்த வர்த்தகத்தின் மூலம் சீனாவும் இந்தியாவும் ரசியாவின் ஆக்கிரமிப்புப் போருக்கு முதலிடுவதாக குற்றம் சுமத்திப் பார்த்தார்கள். ட்றம்ப் உம் அதே பாட்டைப் பாடினார். (அவர்களது அழுத்தத்தை இந்த இரு நாடுகளும் புறந்தள்ளின)

  1. இந்தப் போரில் தாம் நேரடியாக ஈடுபடாமல் தமது நோக்கம் சார்ந்து உக்ரைனை பலிக்கடாவாக்கினார்கள். போருக்காக பில்லியன் கணக்கிலான நிதியையும், ஆயுதங்களையும் கடனாக வழங்கினார்கள். அத்தோடு இராணுவ தகவல் தொழில்நுட்பத்தையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். உக்ரைன் மக்களும் இராணுவமும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

4. இவளவு அழிவுக்குப் பின்னரும், ட்றம்ப் பின்வாங்கிய பின்னரும், ஐரோப்பா இந்தப் போர் முடிந்துவிடக்கூடாது என்ற நோக்கில் செயற்படுகிறது. மேற்கு ஐரோப்பா அதுவும் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி நாடுகள் தீவிரமாகச் செயற்படுகின்றன. இதற்கு நான்கு காரணங்கள் உள்ளன.

4.1) காலனிய மனக் கட்டமைப்பு (colonial mindset)

அவர்களின் காலனிய மனக் கட்டமைப்பானது ரசியாவிடம் தமது நிழற்போர் தோற்றுவிடக் கூடாது என்ற பதட்டத்தை வழங்கியிருக்கிறது. ரசியாவுக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையானது அவர்கள் கணித்ததுக்கு மாறாக ரசியாவை விட அவர்களையே அதிகம் தாக்கியிருக்கிறது. பொருளாதார நெருக்கடிக்குள் அகப்பட்டு இருக்கிறபோதும் கூட, அந்த காலனிய மனக் கட்டமைப்பானது அவர்களை பின்வாங்கச் செய்ய இலகுவில் விடுவதாக இல்லை.

4.2) போர்ப் பொருளாதாரம்

இந் நாடுகளின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இன்னொரு வகையில் ‘போர்ப் பொருளாதாரம்’ பெரும் பக்கபலமாக இருக்கிறது. ‘உக்ரைன் பாதுகாப்பு என்பது ஐரோப்பாவின் பாதுகாப்பு’ என வசனம் பேசும் அவர்கள் உக்ரைனுக்கு ஆயுதங்களையோ நிதியையோ அன்பளிப்பாகக் கொடுக்கவில்லை. கடனாகவே கொடுத்திருக்கிறார்கள். ஆயுத உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மூலம் அவர்களுக்கு சேரவேண்டிய பணத்தை எதிர்காலத்தில் உக்ரைன் செலுத்தியாக வேண்டும்.

அத்தோடு பொருளாதாரத் தடையால் உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள ரசிய சொத்துகளும் அதன் வட்டியும் அவர்களின் இப்போதைய பொருளாதாரத்துக்கு இன்னொரு பக்கபலமாக உள்ளது. ஐரோப்பிய பெரு நிதிநிறுவனமான Euroclear வெளியிட்டுள்ள கணக்கின்படி, ஐரோப்பிய வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்ட 194 பில்லியன் யூரோக்கள் பெறுமதியான ரசிய சொத்துகள் 2025ம் ஆண்டின் அரைப் பகுதியில் மட்டும் 2.7 பில்லியன் யூரோக்களை வட்டியாக பொரித்துள்ளது. 2024 இல் இதே அரையாண்டு காலத்தில் 3.4 பில்லியன் யூரோக்களை பொரித்துள்ளது.

4.3) தத்தமது நாடுகளில் இயன்றளவு தமது பதவியையும் அதிகாரத்தையும் தக்கவைக்கும் முயற்சி

இஸ்ரேல் பலஸ்தீனப் பிரச்சினையில் இஸ்ரேலை தொடர்ந்து ஆதரிப்பதற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்திய மக்களிடம் முழுமையாக -தத்தமது நாடுகளில்- மேற்கு ஐரோப்பிய நாட்டு அரசாங்கங்கள் அம்பலப்பட்டுப் போயின. நெத்தன்யாகுவுக்கு எதிராக மட்டுமன்றி, தமது தலைவர்களுக்கு எதிராகவும் அவர்கள் போராடியதால் தலைவர்கள் அரசியல் செல்வாக்கு இழந்து போயிருக்கிறார்கள். அத்தோடு தோற்றுப் போகிற உக்ரைன் போருக்கு பில்லியன் கணக்கான நிதியை இப்போதும் வழங்கிக் கொண்டிருப்பதால், உள்நாட்டில் பொருளாதார நெருக்கடியும் வேலைவாய்ப்பின்மையும் வரி அதிகரிப்பும் மக்களின் சகிப்புத் தன்மையை சோதித்துப் பார்த்திருக்கின்றன. அதனால் மேற்கு ஐரோப்பிய தலைவர்களின் அரசியல் எதிர்காலமும், அதிகாரமும் கேள்விக்கு உள்ளாகியிருக்கின்றன. போர் தோல்வியில் முடிந்தால் அவர்கள் தேர்தல்களில் தூக்கி எறியப்படுவர். அதிகார சுகிப்பை இழந்து போய்விடுவர். இந்த அதிகாரத்தை தக்கவைக்க அவர்களுக்கு உக்ரைன் போர் இப்போ சமாதானத்தில் முடியக் கூடாது.

4.4) அவமானம்

ரசியாவை பலவீனப்படுத்தும் நோக்கில் உக்ரைன் மண்ணையும் மக்களையும் பலிகொடுத்து இந்தப் போருக்கு எண்ணெய் ஊற்றி வளர்த்த அந்த நோக்கமும் இதுவரை நிறைவேறவில்லை. அது ஒரு சமநிலையில்கூட முடியாமல் தோல்வியை நோக்கி சரிவது மிகப் பெரும் அவமானமாகவும் ஜீரணிக்க முடியாததாகவும் இருக்கிறது.

அவர்கள் கையாளும் வழிமுறை

ஐரோப்பிய மக்களை போர் அச்சமான சூழல் ஒன்றுக்குள் வைத்திருப்பதன் மூலம் தமது நோக்கங்களை சாதிக்க முயல்கிறார்கள்.

  1. ரசியாவால் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும், உக்ரைன் தோல்வியுற்றால் ரசியா அதனை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றைய ஐரோப்பிய நாடுகளையும் ஆக்கிரமிக்கத் தொடங்கும் எனவும், புட்டினின் இலக்கு பழைய சோவியத் ஒன்றிய கட்டமைப்பை நோக்கிய ஆக்கிரமிப்புத்தான் எனவும் கதையாடல்களை உருவாக்கி மக்களுக்கு தீத்தும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.

  2. டென்மார்க், பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளின் இராணுவ கேந்திர நிலையங்களின் மீது மர்ம ட்றோன்கள் பறந்து உளவு பார்ப்பதாக சொல்லி அச்சமூட்டினர். ட்றோன்களை ஏன் சுடவில்லை என நிருபர்கள் கேட்டதற்கு அதைச் சுட்டால் அதன் உதிரிப் பாகங்கள் மக்களின் தலைகளில் வீழ்ந்துவிடலாம் என்ற காரணத்தை கோமாளித்தனமாக முன்வைத்தனர். தமது நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தக்கூடிய நடவடிக்கையை அவர்கள் இவ்வாறாகவா அணுகுவார்கள். இலங்கையில் கோட்டபாய அரசாங்க காலத்தில் ‘கிறீஸ் பூதம்’ என்ற மர்ம கதாபாத்திரத்தை உருவாக்கி, தமிழ் மக்களை அச்ச நிலையில் வைத்திருந்ததை இந்த மர்ம ட்ரோன்கள் ஞாபகப்படுத்துகின்றன.

  3. அத்தோடு பாதுகாப்புக்கு என அதிகளவு நிதியை இந்த நாடுகள் தமது வரவுசெலவுத் திட்டங்களில் ஒதுக்குகின்றன. ஐரோப்பிய ஒன்றியமும் அதே வேலையைச் செய்கின்றது. நேட்டோ தனது உறுப்பு நாடுகள் தத்தமது GDP இலிருந்து ஒதுக்கும் நிதியை இரண்டு வீதத்திலிருந்து ஐந்து வீதமாக அதிகரிக்கக் கோருகின்றது.

  4. பிரான்சின் மக்ரோனும், பிரித்தானியாவின் ஸ்ரார்மரும் தத்தமது நாடுகளில் இராணுவ உசுப்பேத்தல்களை வேறு ஆரம்பித்திருக்கிறார்கள். போர்ப் பதட்ட உளவியலை மக்களிடம் உருவாக்க முயல்கிறார்கள்.

ஆனால் உக்ரைன்-ரசியா இடையில் நிரந்தரமான சமாதானத்தை முயற்சிக்க அமெரிக்கா விரும்புகிறது. அப்படித்தான் சொல்கிறது. அதன் பேரில் பிரச்சினைகளை தமது ஏகாதிபத்திய அதிகார நிலையில் நின்று அணுகி, நாடுகளை மிரட்டி அல்லது அழுத்தம் கொடுத்து டீல் பண்ணும் வேலையை ட்றம் செய்துவருகிறார். அவருக்கு நேட்டோவின் மானப் பிரச்சினை முக்கியமல்ல. அவர் அமெரிக்கா சார்ந்த பொருளாதார நலனின் அடிப்படையிலும், தூர நோக்கான அரசியல் இராஜதந்திரத்தின் அடிப்படையிலும் இச் சமாதான ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர முயல்கிறார். மற்றபடி அவர் ஒரு சமாதான விரும்பியல்ல. சமாதான நடிகன்.

“நாங்கள் உக்ரைனுக்கு மேலும் பணத்தையும் ஆயுதங்களையும் கொடுப்பதோடு இன்னுமாய் பொருளாதாரத் தடைகளையும் செயற்படுத்தினால் வெற்றி எமது கைகளில் தவழும் என ஒரு ஜனரஞ்சகமான கற்பனை நிலவுகிறது. தோல்வியடைந்த இராஜதந்திரிகளாலோ கனவுலகில் வாழும் அரசியல்வாதிகளாலோ சமாதானம் உருவாகாது. யதார்த்த உலகிலுள்ள ஆளுமையானவர்களால் இதை ஏற்படுத்த முடியும்” என அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் கூறுகிறார். போர்களையே உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் ஒரு நாட்டின் சார்பாக சமாதானம் பற்றிய இந்த தத்துவத்தை பேச வான்ஸ் க்கு என்ன அறம் இருக்கிறதோ தெரியவில்லை. இருந்திட்டுப் போகட்டும்.

trump-put-zel.jpeg?w=680

இந்த சமாதான ஒப்பந்தத்தின் பிரசவம்

புட்டினும் ட்றம்ப் உம் அலாஸ்காவில் சந்தித்த பரபரப்புக் காட்சியின் முன்னரேயே இரு நாட்டு ஆலோசகர்களும் இரகசியமாக சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது. அச் சந்திப்பின் போது புட்டின் தனது தரப்பில் உத்தியோக பூர்வமாக திரைமறைவில் கையளித்த நிபந்தனைகள்தான் ட்றம்ப் இப்போது கொணர்ந்த சமாதான ஒப்பந்தத்தின் அடிக்கல் என அதன் உள்ளடக்கத்தைப் பார்க்கிறபோது தெரிகிறது.

அது இதுவரை காலமும் இரகசியமாக பேணப்பட்டது என்பதை விடவும், அதன் அம்சங்கள் சாத்தியப்பாடற்றவை என ஓரத்தில் வைக்கப்பட்டது என்பதே பொருத்தமானது. அலாஸ்கா பேச்சுவார்த்தையின் பின் ட்றம் புட்டின் கோருவது சாத்தியமில்லாத விடயங்கள் என பேசியதும், புட்டின் மீதான நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தி பத்திரிகையாளாகளின் கேள்விகளுக்கு பதிலளித்ததும் நடந்தது. அதுக்கும் மேலாக ஹங்கேரியில் அந் நாட்டின் தலைவர் விக்ரர் ஓர்பான் அனுசரணையில் நடக்க ஒப்புக்கோண்ட புட்டின்-ட்றம்ப் பேச்சுவார்த்தையை திடீரென ட்றம் இரத்துச் செய்தார். “புட்டினோடு சாத்தியமில்லாதவைகளைப் பேசி பயனில்லை” என்ற காரணத்தையும் முன்வைத்தார். அலாஸ்கா சந்திப்பின் பின்னும் அமெரிக்கா உக்ரைனுக்கு இராணுவ ரீதியில் இராணுவத் தகவல் பரிமாற்றங்களுக்கு உதவியது. பைடன்கூட வழங்க மறுத்த அமெரிக்காவின் சக்தி வாய்ந்த ஏவுகணையான ‘ரோமாஹவ்க்’ (Tomahawk) இனை உக்ரைனுக்கு தருவதாக ட்றம்ப் ஒப்புக்கொண்டார். (பின் மறுத்தார் என்பது வேறு விடயம்). இவையெல்லாம் எதைக் காட்டுகிறது. புட்டினின் நிபந்தனைகளை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என ட்றம் எடுத்த முடிவைத்தான் என்பதை மதிப்பிட முடிகிறது.

அப்படியாயின் ஏன் அதை திரும்ப எடுத்தார்கள்?

  1. உக்ரைன் தோல்வி

அலாஸ்கா சந்திப்பின் பின் ரசியாவின் உக்ரைன் மீதான தாக்குதல் மூர்க்கத்தனமாக இருந்தது. துரிதமான நில ஆக்கிரமிப்பும், உக்ரைனின் தலைநகர் கீவ் உட்பட ஏனைய நகரங்கள் மீதான பெரும் ஏவுகணை மற்றும் ட்றோன் தாக்குதலும், முன்னரங்குகளில் உக்ரைன் இராணுவத்தின் பெருந்தொகை மரணங்களும் சரணடைவுகளும் எல்லாமுமாக தவிர்க்க முடியாமல் புட்டினின் நிபந்தனைகளை பரிசீலிக்க வைத்திருக்கிறது. புட்டின் ஏவிய கொடுந் தாக்குதல்களின் நோக்கமும் இவ்வாறான ஓர் அழுத்தத்தை ட்றம்ப்பிற்குக் கொடுக்கும் நோக்கமாக இருந்திருக்கலாம்.

உக்ரைனை களமாக வைத்து ஆடிய நேட்டோவின் நிழற்போர் தோல்வியில் முடியப் போகிறது என்பதை ட்றம்ப் கணித்துமிருக்கலாம். அதை அவர் செலன்ஸ்கியிடம் ஏற்கனவே ஓவல் அலுவலகத்தில் வைத்து உக்ரைனுக்கு காட்டமாக தெளிவுபடுத்தியிருந்தார். “விளையாட உன்னிடம் கார்ட்ஸ் ஏதும் இல்லை” என திரும்பத் திரும்ப கூறி செலன்ஸ்கியை அவமானப்படுத்தினார். மூன்றாம் உலகப் போரில் கொண்டுபோய் நிறுத்தப் போகிறாய் என வேறு செலன்ஸ்கியை சொற்களால் தாக்கினார். அது நடந்து பல மாதங்களாகி விட்டது.

இப்போ இது தமது போரல்ல. ஐரோப்பாவின் போர். அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என அமெரிக்கா பின்வாங்கியிருக்கிறது. அது தற்காலிகமாகவும் இருக்கலாம். காலம்தான் இந்த சூட்சுமத்தை அவிழ்த்துக் காட்டும்.

2. ட்றம்ப் இன் பொருளாதார நோக்கம்

  1. உக்ரைனுக்கு தாம் ஆயுதம் இனி வழங்க மாட்டோம். வேண்டுமானால் ஐரோப்பா (இன்னொரு வார்த்தையில் சொன்னால், அமெரிக்கா தவிர்ந்த நேட்டோ) தம்மிடம் அதை வாங்கி உக்ரைனுக்கு வழங்கலாம் என ட்றம் சொன்னார். அது நடக்கவும் செய்தது. குறிப்பாக ஜேர்மனி பெருமளவு நிதியை அதற்காகச் செலவிட்டு வாங்கி உக்ரைனுக்குக் கொடுத்தது. அமெரிக்கா இலாபமடைந்தது.

  2. இன்னொரு வழியாலும் அமெரிக்கா வந்தது. நேட்டோ உறுப்பு நாடுகள் தமது GDP இல் 5 வீதத்தை ஒதுக்க வேண்டும் என நிர்ப்பந்தித்ததன் மூலம் இந்தப் பணத்தை தமதாக்க முயற்சித்தார். அதாவது ஐரோப்பாவையும்விட பல மடங்கு உற்பத்தித் திறன் கொண்டதும், தொழில்நுட்ப வளர்ச்சியடைந்ததுமான தமது இராணுவ தளபாடங்களை நேட்டோவுக்கு விற்று காசு பார்க்க ட்றம்ப் திட்டமிட்டார். அது வெற்றிபெறவும் செய்கிறது.

  3. இப்போ சமாதான ஒப்பந்தத்திலும் பொருளாதார நோக்கம் பல தளங்களில் வெளிப்படுகிறது. அதில் பின்வரும் நான்கை சுட்ட முடியும்

3.1) ரசியா மீதான பொருளாதாரத் தடையை முன்வைத்து ரசியாவின் சொத்துக்களை ஐரோப்பா முடக்கியது. ரசிய நிறுவனங்களுக்குச் சொந்தமான பல பில்லியன் டொலர் பெறுமதியான சொத்து மட்டுமல்ல, பணமும் ஐரோப்பிய வங்கிகளில் உறைநிலையில் வைக்கப்பட்டது. பெல்ஜியத்தின் வங்கியில் பெருமளவு உறைநிலை நிதி உள்ளது. இதில் 140 பில்லியனை எடுத்து கடனாக உக்ரைன் அரசாங்கம் தன்னை நிர்வகிக்க இரண்டு ஆண்டு காலத்துக்கான உதவியாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சித்தது. அந்தப் பிரேரணையை பெல்ஜியம், ஹங்கேரி, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் ஏற்றக்கொள்ளவில்லை.

இந்த இழுபறிக்குள்ளால் ட்றம் இன் சமாதான ஒப்பந்தமானது “உறைநிலையில் வைக்கப்பட்டிருக்கும் ரசியாவின் நிதியில் 100 பில்லியன் டொலரை உக்ரைன் அபிவிருத்தி நிதி க்கு ஒதுக்க வேண்டும்” என்ற ஓர் அம்சத்தை உள்ளடக்கியிருக்கிறது. இந்தப் பணத்தை வேகமாக வளர்ச்சியடையும் தொழில்நுட்பம், தரவு வங்கி நிலையங்கள், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் உக்ரைன் முதலிடும் எனவும், அத்தோடு மறுகட்டுமானம், அபிவிருத்தி, எரிவாயு கட்டுமான நவீனமயமாக்கல் என்பவற்றிலும் முதலிடும் எனவும், இவை எல்லாவற்றையும் அமெரிக்காதான் தலைமை ஏற்று செய்யும் எனவும், வரும் இலாபத்தில் 50 வீதம் அமெரிக்காவுக்கானது எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரசியாவின் உறைநிலைப் பணத்தை கையாள நினைத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் முகத்திலறைந்தது போல இது இருக்கிறது.

3.2) யப்பான், அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் Euroclear என்ற பெருநிதி நிறுவன சந்தை போன்றவற்றில் உறைநிலையில் வைக்கப்பட்டிருக்கும் மீதிச் சொத்து அல்லது பணத்தை (300 பில்லியன் வரை வரலாம் என சொல்லப்படுகிறது.) விடுவித்து, அதை வைத்து அமெரிக்கா-ரசியா கூட்டாக முதலீட்டில் ஈடுபடுவது எனவும், அதன் மூலம் இரு நாடுகளுக்குமான நெருக்கம் உண்டாகும் எனவும், அது எதிர்காலத்தில் முரண்பாடுகள் வீரியமாகாமல் தடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்படி எரிசக்தி, இயற்கை வளம், கட்டுமானம், அண்டாட்டிக் (Antatic) இலுள்ள அரியவகை கனிம வள அகழ்வு என்பவற்றில் ரசியாவும் அமெரிக்காவும் கூட்டாக ஈடுபடும் என்பதெல்லாம் ட்றம்ப் இன் சமாதான ஒப்பந்த சூழ்ச்சித் திட்டமாக எழுதப்பட்டுள்ளது. ரசியா இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளுமா எனத் தெரியவில்லை.

3.3) உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை அமெரிக்கா வழங்கும் எனவும் அதற்கான நஷ்ட ஈட்டை உக்ரைன் அமெரிக்காவுக்கு தொடர்ந்து செலுத்த வேண்டும் எனவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3.4) G7 இல் மீண்டும் இணைய ரசியாவுக்கு அழைப்பு விடுகிறது ஒப்பந்தம். அதன் மூலம் (ரசியா உட்பட்ட) பிரிக்ஸ் கூட்டமைப்பின் பொருளாதாப் போட்டியில் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் G7 உடன் ரசியாவின் பொருளாதாரத்தை இணைக்கும் இன்னொரு சூழ்ச்சி ட்றம்ப் இன் ஒப்பந்தத்தில் உள்ளது.

ட்றம்ப் இன் தூர நோக்கு அரசியல்

சீனாவுடனான எதிர்காலப் போர்!. இன்றைய உலக ஒழுங்கு ஒற்றைத் துருவ உலக ஒழுங்கிலிருந்து பல் துருவ உலக ஒழுங்கை நோக்கி முட்டிமோதல்களுக்கு உள்ளாகத் தொடங்கியிருக்கிற காலம். இரண்டாம் உலகப் போர் வரை முதல் உலக சாம்ராஜ்யமாக திகழ்ந் பிரித்தானியாவின் இடத்தை அமெரிக்கா எடுத்த போதும், ஒற்றைத் துருவ நிலையை முழுமையாகப் பேண முடியவில்லை. சோவியத் யூனியன் இன்னொரு வல்லரசாக அமெரிக்காவுக்கு சகல தளங்களிலும் சவாலாக திகழ்ந்தது. இரு துருவ நிலை என அதை சொல்ல முடியும். ஆனால் 1991 இல் சோவியத் உடைவின் பின் அமெரிக்கா ஒற்றைத் துருவ உலக ஒழுங்கை முழுமையாக நிறுவியது. உலகம் முழுவதும் 750 க்கு மேற்பட்ட இராணுத் தளங்களை 80 க்கு மேற்பட்ட நாடுகளில் அது வைத்திருக்கிறது.

பிரேசில், ரசியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆபிரிக்கா என்ற 5 நாடுகளை முதன்மையாகக் கொண்டு எழுந்த பிரிக்ஸ் இன் எழுச்சி அமெரிக்காவுக்கும் G7 பணக்கார நாடுகளுக்கும் சவாலாக எழுந்துள்ளது. அத்தோடு சீனா, ரசியா, இந்தியா என்பவற்றின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பன காலனிய மனக் கட்டமைப்புக் கொண்ட மேற்குலகுக்கு ஜீரணிக்க முடியாத ஒன்று. ரசியா மீதான இவர்களின் அணுகுமுறையில் இந்த மனக் கட்டமைப்பு பெரும் பங்கு வகிக்கிறது. முன்னைய சோவியத் போல, அல்லது அதையும்விட சிறப்பாக கடந்த 30 வருடங்களில் சீனா சகல தளங்களிலும் அமெரிக்காவுக்கு சவாலாக எழுந்துள்ளது. எனவே தனது அதிகார நிலையை மேல்நிலையில் வைத்திருக்கும் வேட்கையானது எதிர்காலத்தில் சீனாவுடன் அமெரிக்கா (நேட்டோவின் துணையுடன்) போர் தொடுக்க வேண்டிய புள்ளியில் கொண்டுவந்து நிறுத்தலாம். அது ஏறத்தாழ 2007 இல் நிகழலாம் என சிஐஏ கணித்திருக்கிறது. அதற்கான இன்னொரு உக்ரைனாக தாய்வானை அது குறிவைத்துள்ளது.

முன்னர் அமெரிக்காவானது சோவியத் யூனியனை எதிர்கொள்ள சீனாவுடன் நட்புறவு பேணி, சீனாவை தூர இருக்க வைக்க மேற்கொண்ட உத்திபோல, சீனாவுடன் போர் ஒன்று உருவாகும் பட்சத்தில், ரசியாவை சீனாவிடமிருந்து தூரப்படுத்த அல்லது தலையிடாமலிருக்க வைக்க வேண்டிய தூர நோக்கு ஒன்று ட்றம்ப் இடம் இருக்கிறது.

இதை ட்றம்ப் க்கும் புட்டினுக்குமான நட்பு என சொல்வது ஓர் அரசியல் பார்வையே அல்ல. அரசியல் காய் நகர்த்தல் என்பதே பொருத்தமானது. எல்லா நாடுகளும் தத்தமது நலனை முன்னிறுத்தியே செயற்படுகின்றன. அதை சாதிக்க இராஜதந்திர அணுகுமுறைகளை ஒரு சதுரங்க ஆட்டமாக ஆடுகின்றன. அவர்களின் முகத்துக்கும் பிடரிக்கும் இடையிலான மொழி ஒன்றாக இருப்பதில்லை. அது அறமற்ற மொழியின் பாற்பட்டது. ட்றம்பின் இந்த அரசியல் சதுரங்கத்தை புட்டின் நன்கு புரிந்தவர் என்பதால், ஆடுகளத்தில் ட்றம்பை வைத்து தனது இலக்கை அடைய அவரும் தன் பங்குக்கு காய் நகர்த்துகிறார்.

அரசியல் சதுரங்கம்

மேற்கூறிய பொருளாதார மற்றும் அரசியல் நலன்களை கருத்தில் கொண்டு ட்றம்பின் ஆலோசகர்கள் 28 அம்ச சமாதான ஒப்பந்தத்தை உக்ரைன்-ரசியா இடையில் முன்வைத்திருக்கிறார்கள். போரில் வெற்றிக்கு அருகாக வந்திருக்கும் ரசியாவுக்கும் தோல்வியை தழுவும் உக்ரைனுக்கும் இடையிலான ஒப்பந்தம் சமச்சீரற்றதாகவே இருக்கும் என்ற யதார்த்தத்தைப் பயன்படுத்தி ட்றம்ப் தனது ஆட்டத்தை ஆடுகிறார்.

உக்ரைன் இனி ஒருபோதும் நேட்டோவில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது என்பது ஒப்பந்தத்தின் ஓர் அம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரசியாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக 2022 பெப்ரவரி வரை புட்டின் அமெரிக்காவிடமும் செலன்ஸ்கியிடமும் கேட்டது “நேட்டோவில் இணையாமல் நடுநிலையாக இருக்க வேண்டும்” என்பதே. இதை மறுத்த செலன்ஸ்கி இன்று எந்த இடத்தில் நிற்பாட்டப்பட்டிருக்கிறார். நேட்டோவில் நிரந்தரமாக சேர முடியாது என்பது மட்டுமன்றி, உக்ரைன் இராணுவத்தை ஆறு இலட்சத்துக்கு மேல் வைத்திருக்க முடியாது, அதி தூர ஏவுகணைகளை உக்ரைன் வைத்திருக்க முடியாது, அணு ஆயுதத்தை உருவாக்க முடியாது என்பனவெல்லாம் ஒப்பந்தத்தினூடு உக்ரைன் வந்து சேர வேண்டிய இடமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. நேட்டோவுக்காக உக்ரைன் இழந்தவைகள் இவை மட்டுமல்ல. உக்ரைன் மக்கள் மற்றும் இராணுவம் என பெரும் மனிதப் பேரழிவுகளும், மனித அலைச்சல்களும், உளவியல் நசிவுகளும், கட்டுமான இழப்புகளும் போன்று துயரங்களும் ஆகும்.

இது மட்டுமா. ரசிய மொழி பேசும் மக்களைக் கொண்ட, உக்ரைன் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய, டொன்பாஸ் பிரதேசங்களில் 90 வீதத்தை செலன்ஸ்கி ரசியாவிடம் பறிகொடுத்தும் இருக்கிறார். ரசியாவால் கைப்பற்றப்பட்டிருக்கும் இப் பிரதேசங்கள் ரசியாவிடம் உத்தியோகபூர்வமாக இணைக்கப்படுவதற்கான வாசலையும் இந்த ஒப்பந்தம் திறந்துவிட்டிருக்கிறது. ஆனாலும் இவை தெளிவான வரையறுப்புகளுக்கு உட்படுவதில் அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் ஒத்த கருத்து இல்லை. மறுபுறத்தில் உக்ரைன் தனது பிரதேசமான டொன்பாஸ் மற்றும் கிரைமியா பிரதேசங்களை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.

2002 பெப்ரவரியில் போர் தொடங்கிய போதும், 2002 ஏப்ரலில் ரசியா உக்ரைனை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இஸ்தான்புல்லில் இது நடைபெற்றது. நேட்டோவின் விஸ்தரிப்புவாதத்துக்கு எதிராக ரசிய பாதுகாப்பு உத்தரவாதத்தை உறுதிப்படுத்த “உக்ரைன் நேட்டோவில் இணையக்கூடாது. நடுநிலையாக இருக்க வேண்டும்” என ரசியா உக்ரைனை வலியுறுத்தியதை செலன்ஸ்கி தான் ஏற்றுக் கொள்வதாக சொல்லி மேசைக்கு வந்தார். அது நடந்திருந்தால் உக்ரைன் இப்படி சின்னாபின்னப்பட்டு இருக்காது. பிரதேசங்களை பறிகொடுத்தும் இருக்காது.

ஆனால் செலன்ஸ்கியை பேச்சுவார்த்தையிலிருந்து இடைமறித்து “நாம் இருக்கிறோம் உனக்கு உதவ. நீ நேட்டோவில் சேருவதை யாராலும் தடுக்க முடியாது பேச்சுவார்த்தையிலிருந்து வெளியே வா” என்றெல்லாம் நம்பிக்கை கொடுத்து அல்லது உசுப்பேத்தி பேச்சுவார்த்தையைக் குழப்பியது பொரிஸ் ஜெல்சனின் பிரித்தானியாவும் பைடனின் அமெரிக்காவும்தான்!. இவர்களே உக்ரைனின் இன்றைய நிலைக்கு மிகப் பெரும் காரணமானவர்கள். இவர்களுக்குப் பின்னால் இழுபட்டுப் போன ஐரோப்பாவானது இப்போ வலையில் சிக்கியுள்ளது. ட்றம்ப் “இது எனது போர் அல்ல. இது பைடன் ஆரம்பித்த போர்… இப்போ உங்களது போர்” என ஐரோப்பாவுக்கு விரல் நீட்டுகிறார். இன்னொரு கோணத்தில் இது ஒரு படம் காட்டலாகக் கூட இருக்கலாம். அதை எதிர்காலம் வெளிச்சமிடும்.

தமது பாதுகாப்பு உத்தரவாதத்தை கோரும் ஐரோப்பாவானது ரசியாவின் பாதுகாப்பு உத்தரவாதத்தை என்றாவது ஒருநாள் ஏற்று பேசியதுண்டா என்றால், ஒருபோதும் இல்லை. ரசிய எல்லைவரை வந்த ‘நேட்டோ ஜக்கற்’ அணிந்த ஐரோப்பாவானது, தனது பாதுகாப்பு உத்தரவாதம் பற்றி உரக்க கத்தும் அதே நேரம், தனது எல்லைக்குள் நின்று தனது பாதுகாப்பு உத்தரவாதம் பற்றி பேச ரசியாவுக்கு இருக்கும் உரிமையை மறுக்கிறது. பலஸ்தீன மக்களின் பாதுகாப்பு உத்தரவாதத்தைப் பற்றிப் பேசாமல், இஸ்ரேலின் பாதுகாப்பு உத்தரவாதம் பற்றி பேசிய இழிநிலைதான் ஐரோப்பாவின் இறைமை பற்றிய வியாக்கியானத்துக்கான தகுதியாக இருக்க முடியும். தனது பாதுகாப்பு உத்தரவாதத்தை மட்டுமன்றி ரசியாவின் பாதுகாப்பு உத்தரவாதத்தையும் கவனத்தில் எடுத்து நேர்மையாக பேச்சுவார்த்தை மேசையில் எல்லோருமாக உட்கார்ந்தால் இப் பிரச்சினையை எப்போதோ முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம்.

ஆக, அமெரிக்கா இன்று பின்வாங்குகிற நிலையில் கூட, ஐரோப்பா பின்வாங்கவில்லை. ஐரோப்பிய நலன் அடிப்படையில் என்பதைவிட ஐரோப்பிய அரசியல் தலைவர்களின் நலன்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. ட்றம்பின் 28 அம்ச சமாதான ஒப்பந்தம் உக்ரைனின் இறைமையைப் பாதிக்கிறது என கூறி, ஐரோப்பா இந்த 28 அம்சங்களையும் பிரித்து மேய்ந்து, 19 அம்ச ஒப்பந்தமாக உருமாற்றி ட்றம் இடம் கையளித்திருக்கிறது. இதை எழுதிக்கொண்டிருக்கும் வரை அவை பற்றிய விபரம் தெரியவில்லை. ஆனால் சமாதானம் வர இவர்கள் இலகுவில் விடப்போவதில்லை. குறிப்பாக மக்ரோன், ஸ்ராமர், மேர்ற்ஸ் போன்ற போர்வெறியர்கள் சமாதானத்துக்கு எதிராகவே நிற்கின்றனர்.

அமெரிக்காவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்ட 32 நாடுகளின் கூட்டணியாக விரிவாக்கம் அடைந்திருக்கும் நேட்டோவுடன் நேரடியாக ரசியா தனியாக போர் புரிவது என்பது முடியவே முடியாத காரியம். நேட்டோவிலுள்ள ஒரு நாட்டைத் தாக்கினால் அது நேட்டோ உறுப்பு நாடுகள் எல்லோரையும் தாக்கியதாக கணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது நேட்டோவின் 5வது சரத்து ஆகும். இந்தவகை பாதுகாப்பு உத்தரவாதம், பெருமளவு கூட்டு இராணுவ எண்ணிக்கை, அமெரிக்காவின் நவீன தொழில்நுட்பங்கள் ஆயுத உற்பத்திகள், நிதி திரட்சி எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு ரசியாவால் ஐரோப்பாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என பேசுவதை நம்ப மக்கள் கேணையர்களாக இருக்க வேண்டும்.

ஐரோப்பாவை புட்டின் ஆக்கிரமிக்கும் ஆபத்து உள்ளதாக அடிக்கடி உச்சரிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘ரசிய ஆக்கிரமிப்பு’ கதையாடலை பலமுறை மறுத்த புட்டின், ஐரோப்பிய தலைவர்கள் மாயையில் வாழ்கின்றனர் என்றார். சென்ற வாரம் அவர் பேசுகிறபோது ரசியா ஒருபோதும் ஐரோப்பாவை ஆக்கிரமிக்காது என எழுத்தில் தரக்கூட தான் தயார் என அறிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை அதுகுறித்து எதுவும் பேசாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது.

யதார்த்தம்

உக்ரைன் வரலாற்றாசிரியரான Marta Havryshko அவர்கள் கூறுகிறபோது, “இலட்சக்கணக்கான உக்ரைன் இராணுவ வீரர்கள் மடிந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோரும் அவர்களின் விருப்பின்றி பலவந்தமாக பிடித்துச் செல்லப்பட்டு முன்னரங்குகளில் விடப்பட்டவர்கள். அவர்களின் குடும்பங்கள் நடுவீதியில் விடப்பட்டிருக்கிறார்கள். ரசியாவின் தாக்குதலில் மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஒவ்வொரு இரவிலும் தூங்கச் செல்லும்போது நாளை உயிருடன் இருப்போமா என்ற ஏக்கம் அவர்களை உயிரோடு கொன்று போடுகிறது. உளவியல் சிதைவுகள் அவர்களை தாக்குகிறது. இளஞ் சமுதாயம் நாட்டைவிட்டு களவாக தப்பியோடி பெருமளவில் புலம்பெயர்ந்திருக்கிறது. தமது எதிர்காலம் குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள்” என்கிறார்.

ரசியாவின் ஆக்கிரமிப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. கடுமையாக எதிர்க்கிறார். ஆனால் “உக்ரைன் அரசாங்கம் ஊழல் நிறைந்த அதிகாரிகளாலும் அமைச்சர்களாலும் ஆனது. அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். போர் வேண்டும் என்பவர்கள் தாமே போய் முன்னரங்கில் நிற்கட்டும்” என்கிறார். அவர் இறுதியாக ஒன்றைச் சொல்கிறார், “இங்கு வரைபடங்கள் அல்ல முக்கியம், மனிதர்கள்தான் முக்கியம். அவர்கள் ஏங்குவது தமது உயிருக்காக, அமைதியான வாழ்வுக்காக” என்கிறார்.

உண்மைதான். நாட்டுப் பற்று என்பது எளிய மக்களின் தியாகத்தைத்தான் வேண்டுகிறது. அதற்கான கதையாடல்களையும் போரையும் உருவாக்குபவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் வசதியைப் பெருக்கி வாழுகிறார்கள். அது உக்ரைனாக இருந்தாலென்ன ரசியாவாக இருந்தாலென்ன, அமெரிக்கா ஐரோப்பாவாக இருந்தாலென்ன!

ட்றம்பின் அமெரிக்கா என்பதும் புட்டினின் ரசியா என்பதும் நிரந்தரமல்ல. அது எதிர்காலத்திலும் தத்தமது நலனுக்கேற்ப ஆடுகளங்களில் நிற்கும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அரசியலில் நிரந்தரமான நண்பருமில்லை பகைவருமில்லை என்பது இதைத்தான். கண்முன்னே இதற்கான உதாரணங்கள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. அதேபோலவே, இன்றைய ஐரோப்பிய ஒன்றியம் வரைவுசெய்யும் எல்லைதான் ஐரோப்பா அல்ல என்பதும், பூகோள ரீதியில் ரசியாவும் ஓர் ஐரோப்பிய நாடுதான் என்பதையும் கவனம் கொள்ள வேண்டும். அதேநேரம் இந்த இரண்டு முகாம்களுக்கும் இடையிலான பகை என்பது இலகுவில் தீர்க்க முடியாதளவுக்கு வரலாற்று ரீதியிலானது என்பதும் அவற்றின் மனக் கட்டமைப்பு ஒன்றல்ல என்பதும், அவை புறந்தள்ள முடியாதளவு இடைவெளியைக் கொண்டது என்பதும் சிந்தனை கொள்ளத் தக்கது. சீனாவை நோக்கி ரசியாவை தள்ளியது மேற்குலகின் அல்லது நாட்டோவின் அணுகுமுறை மட்டுமல்ல, இந்த மனக் கட்டமைப்பு வேறுபாடும்தான் என்பதை கவனம் கொள்ள வேண்டும். இதை பைடனைப் போலன்றி ட்றம்ப் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்.

ஆனாலும் ஐரோப்பாவின் காலனிய மனக் கட்டமைப்பு சமாதானத்துக்கு குறுக்காக வாள் வீசி நிற்கிறது. அதைத் தாண்டி சமாதானம் முகிழ்ப்பது இலகுவானதல்ல என்பது ட்றம்ப் க்கு நன்றாகவே தெரியும். அமெரிக்கா தள்ளி நிற்கிறபோதும், ஐரோப்பாவுடன் இழுபடுகிற செலன்ஸ்கியின் பதவியை கைமாற்றியாவது தனது நோக்கத்தை சாதிக்க ட்றம்ப் தயங்க மாட்டார். அதற்கு ஒத்திசைவாக, செலன்ஸ்கி அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளின் மில்லியன் கணக்கான பண மோசடியும் ஊழலும் பூதமாக வெளிக்கிளம்பியிருக்கிறது. “வரும் ஆனால் வராது, வராது ஆனால் வரும்” என்ற நிலையில் சமாதானம் உக்ரைனின் வாசற்படியில் குந்தியிருக்கிறது!.

https://sudumanal.com/2025/12/01/வரைபடங்களும்-மனிதர்களும/#more-7502

நினைவேந்தல் நிகழ்வுகளும் தமிழர் அரசியலும் — வீரகத்தி தனபாலசிங்கம் — 

3 days 12 hours ago

நினைவேந்தல் நிகழ்வுகளும் தமிழர் அரசியலும்

December 2, 2025

நினைவேந்தல் நிகழ்வுகளும் தமிழர் அரசியலும் 

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

இலங்கை முழுவதும் இயற்கையின் சீற்றத்தினால்  பேரிடருக்கு  உள்ளாகியிருக்கின்ற  நிலைவரத்துக்கு  மத்தியிலும் கடந்த வாரம் வடக்கு, கிழக்கில் மாவீரர் வாரம் முன்னென்றுமில்லாத வகையில் ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்பட்டிருக்கிறது. இறுதி நாளான நவம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற பிரதான நினைவேந்தல் நிகழ்வுகளில் பெருமளவில் மக்கள் அணிதிரண்டது குறித்து செய்திகளை வெளியிட்ட சில ஊடகங்கள் விடுதலை புலிகளின் காலத்தில் கூட இந்தளவுக்கு பிரமாண்டமானதாக மாவீரர்தின நிகழ்வை காணக்கூடியதாக இருந்ததில்லை என்று கூறியிருந்தன..

விடுதலை புலிகள் இயக்கம் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டிருக்கின்ற போதிலும், அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71 வது பிறந்த தினமான நவம்பர் 26 புதன்கிழமை வடக்கு,  கிழக்கில் பல்வேறு இடங்களில்  அவரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. போரில் பலியானவர்களை நினைவுகூருவதன் பேரில் விடுதலை புலிகளை புகழ்ந்து போற்றும் நிகழ்வுகளுக்கு இடமளிக்க முடியாது என்று அரசாங்கத் தரப்பில் தொடக்கத்தில் கூறப்பட்ட போதிலும், பிரபாகரனின் பிறந்ததினக் கொண்டாட்டங்களை தடுப்பதற்கு பொலிசாரோ அல்லது படையினரோ எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பிறகு இரண்டாவது தடவையாக கொண்டாடப்பட்ட மாவீரர் வாரம் இதுவாகும்.  இலங்கை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஒரு அறையில் இலங்கை தமிழரசு கட்சியின்  கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கார்த்திகைப்பூவின் முன்னால் தீபமேற்றி நினைவேந்தல் செய்து படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தனர்.  முன்னென்றுமில்லாத வகையில் இந்தத் தடவை பாராளுமன்றத்தில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்க் கட்சிகளின்  உறுப்பினர்கள் பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்ற வேளைகளில்  மாவீரர்களை நினைவேந்திய வண்ணமே தங்களது பேச்சுக்களை ஆரம்பித்தையும் பிரபாகரனுக்கு பிறந்ததின வாழ்த்துக் கூறியதையும்  காணக்கூடியதாக இருந்தது. ஆனால், அதற்கு அரசாங்கத் தரப்பில் இருந்தோ அல்லது எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்தோ எவரும் ஆட்சேபம் தெரிவிக்கவுமில்லை. 

கடந்த வருடமும் கூட மாவீரர்வாரக் கொண்டாட்டங்களை அமைதியான முறையில் நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதித்திருந்தது. ஆனால், கடந்த வருடத்தை விடவும் இந்த தடவை கொண்டாட்டங்களில் கூடுதலான அளவுக்கு உத்வேகத்தை காணக் கூடியதாக இருந்தது. வடக்கு, கிழக்கில்  தமிழ் அரசியல் கட்சிகள் குறிப்பாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழரசு கட்சியும் நினைவேந்தல்களில் தீவிரமாக பங்கேற்றன. முன்னர் இத்தகைய நினைவேந்தல்களில் பெருமளவுக்கு அக்கறை காட்டாத தமிழரசு கட்சியின் பொதுச்  செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் போன்றவர்களும் கூட கடந்த வாரம் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான இராமலிங்கம் சந்திரசேகரும் மாவீரர்களை நினைவுகூர்ந்து கருத்துக்களை வெளியிட்டிருந்தார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் போரை முழுவீச்சில் முன்னெடுப்பதற்கு தத்துவார்த்த வழிகாட்டியாகச்  செயற்பட்ட ஜனதா விமுக்தி பெரமுனக்கு  (ஜே.வி.பி.) தமிழ் மக்களின் விமோசனத்துக்காக தங்களது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவேந்தல் செய்வதற்கு எந்த தகுதியும் கிடையாது என்று பாராளுமன்றத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம் செய்தததையும் காணக்கூடியதாக இருந்தது.

எது எவ்வாறிருந்தாலும், முன்னைய அரசாங்கங்களைப் போலன்றி ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க  தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்நாட்டுப்போரில் இறந்தவர்களை  எந்தவிதமான இடையூறுமின்றி சுதந்திரமாக நினைவு கூருவதற்கு தமிழ் மக்களை அனுமதித்தது நிச்சயமாக வரவேற்கத்தக்க ஒரு செயலாகும். 

ஜே.வி. பி.யின் தாபகத் தலைவர் றோஹண விஜேவீர உட்பட அரச படைகளினால் கொல்லப்பட்ட  தங்களது முன்னைய தலைவர்களையும்  இரு ஆயுதக் கிளர்ச்சிகளிலும் பலியான இயக்க உறுப்பினர்களையும் வருடாந்தம் நினைவேந்தல் செய்து வரும் அரசாங்கத் தலைவர்கள் உள்நாட்டுப்போரில் உயிர்தியாகம் செய்த தமிழ்ப் பேராளிகளும் பலியான மக்களும் நினைவுகூரப்படுவதை தடுப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல  என்ற தர்க்கநியாயத்தின் அடிப்படையிலேயே  மாவீரர்தின நிகழ்வுகளை சுதந்திரமாக நடத்துவதற்கு அனுமதிக்க தாங்களாகவே நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் எனலாம்.

ஜே.வி.பி. 1994 ஆம் ஆண்டு தொடக்கம் ‘நவம்பர் வீரர்கள் தினத்தை’ அனுஷ்டித்து வருகிறது. விஜேவீர கொழும்பில் 1989 நவம்பர் 13 ஆம் திகதி கொல்லப்பட்டதால் வருடாந்தம் அன்றைய தினத்தில் அவர்கள் நினைவு நிகழ்வை நடத்திவருகிறார்கள். இறுதியாக இரு வாரங்களுக்கு முன்னர் நவம்பர் 14 கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஜனாதிபதி  அநுர குமார திசநாயக்க தலைமையில் நவம்பர் வீரர்கள் தின நிகழ்வு இடம்பெற்றது. 

அதேவேளை, மாவீரர் தினத்தை விடுதலை புலிகள் 1989 ஆம் ஆண்டு அனுஷ்டிக்கத் தொடங்கினர். அரசாங்க படையினருடனான மோதலில் முதன்முதலாக இயக்கப் போராளி (சங்கர் என்ற சத்தியநாதன்) 1982 நவம்பர் 27 ஆம் திகதி கொல்லப்பட்ட காரணத்தினால் மாவீரர் தினத்தை வருடாந்தம் அனுஷ்டிப்பதற்கு அன்றைய தினத்தை  அவர்கள் தெரிவு செய்தனர். பிரபாகரனின் பிறந்ததினம் நவம்பர் 26 ஆம் திகதியாகும். 

முதலாவது மாவீரர்தினம் முல்லைத்தீவு காட்டுக்குள் அனுஷ்டிக்கப்பட்டபோது வடக்கு, கிழக்கில் இந்திய படையினர் நிலைகொண்டிருந்தனர். அவர்கள் 1990 மார்ச் மாதம் முற்றாக வெளியேறியதை தொடர்ந்து விடுதலை புலிகள் தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்த பகுதிகளில் மாவீரர்தின நிகழ்வுகளை விரிவுபடுத்தினர். அந்த தினத்தில் பிரபாகரன் முக்கியமான உரையை நிகழ்த்துவதும் வழக்கமாக இருந்தது. 

2009 மே மாதம் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பிறகு ராஜபக்சாக்களின் ஆட்சியில் மாவீரர்தின நிகழ்வுகளை பகிரங்கமாக நடத்தக்கூடியதாக இருக்கவில்லை. ஆனால், சில சிவில் சமூக அமைப்புக்களின் உதவியுடன் எளிமையான முறையில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆங்காங்கே இடம்பெற்றன.  ஆட்சிமாற்றங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து படிப்படியாக விரிவான முறையில் அந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுவந்தன. தற்போது பரந்தளவில் மக்களின் பங்கேற்புடன்  நடத்தப்பட்டுவரும் மாவீரர் வார நிகழ்வுகளில் தமிழ் அரசியல் கட்சிகள் தீவிரமான ஈடுபாட்டைக் காண்பிக்கின்றன. 

போரினால் பாதிக்கப்பட்ட மக்களும்  காணாமல் போனோரினதும்  உயிரிழந்த போராளிகளினதும்  குடும்பங்களும் இதுவரையில் தங்களுக்கு நீதி கிடைக்காத நிலையில்  கவலையையும் வேதனையையும் வெளிக்காட்டுவதற்கு  நினைவேந்தல் நிகழ்வுகளில் பெருமளவில் அணிதிரண்டு  பங்கேற்கிறார்கள். 

ஆனால், போரின் முடிவுக்கு பின்னரான காலப்பகுதியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்கள் வேண்டி நிற்பதற்கு ஏற்ற  முறையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாமல் இருக்கும் தமிழ்க் கட்சிகள்  தியாகங்களும் அழிவுகளும் நிறைந்த போராட்டகால நினைவுகளுடன் தமிழ் மக்களைக் பிணைத்து வைத்திருப்பதில் குறியாக இருக்கின்றன. பல தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை, நினைவேந்தல்களே அவை  முன்னெடுக்கின்ற பிரதான அரசியல் செயற்பாடுகளாக இருக்கின்றன. தங்கள் சொந்தத்தில் கொள்கைகளை வகுத்து தமிழ் மக்களை வழிநடத்த முடியாத நிலையில் இருக்கும் இந்த கட்சிகள் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள சில சக்திகளின் உதவியுடன் கடந்த காலப் போராட்டங்களை நினைவுபடுத்துவதில் காலத்தைக் கடத்துகின்றன.

விஜேவீரவோ அல்லது பிரபாகரனோ விட்டுச் சென்ற இடத்திலிருந்து அவர்களின் போராட்டத்தை எவரும்  தொடர முடியாது. அரசியல் யதார்த்தத்தை தெளிவாக விளங்கிக் கொண்ட ஜே.வி.பி.யினர்   ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்து   பாராளுமன்ற அரசியலின் மூலமாக இன்று அதிகாரத்தையும் கைப்பற்றிவிட்டனர். விஜேவீரவை வருடம் ஒருமுறை நினைவு கூருவதை தவிர,  அவரது கொள்கைகளைப் பற்றி அவர்கள் பெரிதாகப் பேசுவதில்லை.

தேசிய மக்கள் சக்தி என்ற புதிய அவதாரத்துடன் இன்று ஆட்சியை நடத்துகின்ற ஜே.வி.பி. தலைவர்கள் பழைய கொள்கைகள் பலவற்றைக் கைவிட்டு உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்களுக்கு இசைவான முறையில் தங்களை மாற்றிக்கொண்டுவிட்டதாக பகிரங்கமாக கூறுகிறார்கள். 

விஜேவீர அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக  இரு  ஆயுதக் கிளர்ச்சிகளை  வெவ்வேறு காலகட்டங்களில்  முன்னெடுத்தார். ஆனால், தோற்கடிக்கப்பட்ட பிறகு புதிய சூழ்நிலைகளில் அரசியலில் எவ்வாறு மீண்டெழுவது என்பதை அவரின் இயக்கத்தில் எஞ்சியிருந்தவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்.

 பிரபாகரன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு தனிநாடொன்றை அமைப்பதற்காக ஆயுதமேந்திப் போராடினார். ஆனால், பிரபாகரனின் இயக்கத்தைப் பொறுத்தவரை, அவ்வாறு மீண்டெழுவதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. விடுதலை புலிகள் இயக்கம்  இலங்கையில் மாத்திரமல்ல, இந்தியா உட்பட பல்வேறு வெளிநாடுகளிலும் தொடர்ந்தும் தடை செய்யப்பட்டிருக்கிறது. விடுதலை புலிகள் இயக்கத்தின் பழைய போராளிகள் சிலர் சேர்ந்து அமைத்த அரசியல் கட்சி ஒன்று தற்போது ஜனநாயக அரசியலில் இருக்கிறது.  ஆனால், அந்த கட்சியைச் சேர்ந்த எவரையும் தமிழ் மக்கள் பிரதேச சபைக்குத் தானும் இதுவரையில் தெரிவு செய்யவில்லை. 

இத்தகைய பின்புலத்தில்,   நினைவேந்தல் அரசியலையே தொடர்ந்து முன்னெடுப்பதன் மூலம் தமிழ் மக்களை எதுவரைக்கும் கொண்டுசெல்ல முடியும் என்பதை தமிழ் அரசியல்வாதிகள் சிந்தித்துப் பார்க்க வேணடும். பிரதேச சபை தொடக்கம் பாராளுமன்றம் வரை நினைவேந்தலை முதன்மைப்படுத்துவதாகவே தமிழர் அரசியல் விளங்குகிறது. 

இந்தக் கருத்துக்களை தமிழர்களின் விமோசனத்துக்காக தங்களது உயிர்களை தியாகம் செய்த போராளிகளை நிந்தனை செய்யும் நோக்கில் முன்வைக்கப்படுபவையாக வியாக்கியானம் செய்யவேண்டியதில்லை.  அவர்களின் தியாகங்களை நினைவுகூருவதை மாத்திரம் முக்கியமான அரசியல் செயற்பாடாக முன்னெடுப்பதன் மூலமாக தங்களது அரசியல் இயலாமையை மறைக்க முயற்சிக்கும் தமிழ் அரசியல்வாதிகளை நோக்கியவையே இந்த கருத்துக்கள். 

இறுதியாக, மாவீரர்வாரத்தை சுதந்திரமாக கொண்டாடுவதற்கு அனுமதித்ததன் மூலமாக தமிழ் மக்களுக்கு பெரியதொரு விட்டுக்கொடுப்பைச் செய்துவிட்டதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்க தலைவர்கள் நினைக்கக்கூடாது. இன்று அரசியலமைப்பில் இருக்கின்ற ஒரேயொரு அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாடான மாகாணசபைகள் முறையை புதிய அரசியலமைப்பில் ஒழித்துவிடப்போவதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆபத்தை உணர்ந்து தமிழ் அரசியல் தலைவர்கள்  செயற்பட வேண்டும். கற்பனையில் காலத்தைக் கடத்தினால் இறுதியில் தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்காமல் போகும்.

https://arangamnews.com/?p=12467

மலையகம்: பேரழிவும் மீட்சியும்

3 days 12 hours ago

மலையகம்: பேரழிவும் மீட்சியும்

ba83163011046c5f2fdd1eca6f005758d4368226

Photo, Facebook: mariyan.teran

காலநிலை மாற்றம் (Climate Change) என்பது பூகோள ரீதியில் ஒரு நீண்டகால சவாலாக இருந்தாலும், வெப்பமண்டலப் பகுதிகளில் அமைந்துள்ள இலங்கையை பொறுத்தவரை, இதன் தாக்கம் தீவிரமானதாகவும் உடனடியானதாகவும் உள்ளது. புவி வெப்பமடைதல் காரணமாக வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் ஏற்படும் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை அதிகரிப்பு, சூறாவளிகள் (Cyclones) உருவாகும் வீதத்தையும், அதன் தீவிரத்தையும் (Intensity) கணிசமாக உயர்த்தியுள்ளது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையின் நிலப்பரப்பு, அதன் புவியியல் மற்றும் சனத்தொகையின் அடர்த்தி காரணமாக, பருவமழை தொடர்பான வெள்ளப்பெருக்குகள் மற்றும் நிலச்சரிவுகளுக்கு (Landslides) மிக எளிதில் ஆளாகிறது. கடந்த தசாப்தங்களில், நாட்டின் மத்திய மலைப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுப் பேரழிவுகளின் அதிர்வெண் மற்றும் அளவு அதிகரித்துள்ளது. உதாரணமாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) தரவுகள், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகள் ஆண்டுதோறும் நிலச்சரிவு அபாயத்தின் கீழ் உள்ளன என்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்த பின்னணியில், ‘திட்வா’ போன்ற தீவிர இயற்கைப் பேரழிவுகள், இலங்கையின் பொருளாதாரத்தையும், சமூக உட்கட்டமைப்பையும் கடுமையாகச் பாதிக்கும் ஒரு புறச் சக்தியாக எழுந்துள்ளன.

திட்வா சூறாவளி (Cyclone Ditwah), சடுதியான தீவிரமடைந்து, இலங்கையின் மீது நேரடியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, இலங்கை முழுவதும் அசாதாரணமான அளவில் பலத்த காற்று, கடும் மழை மற்றும் பாரிய வெள்ளம் ஏற்பட்டன. அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்ட அதிக மழை வீழ்ச்சியும் பலத்த காற்றும் முக்கியமாக மத்திய மலை நாட்டின் நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களை கடுமையாகப் பாதித்தது. இந்த மாவட்டங்களே இலங்கையின் பெருந்தோட்டங்களை மையப்படுத்திய மலையக சமூகம் செறிந்து வாழும் தோட்டப் பகுதிகளாகும். காலநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட தொடர்ச்சியான மற்றும் அதிக கனமழை, ஏற்கனவே நிலச்சரிவு அபாயத்தில் இருந்த இச்சமூகத்தின் குடியிருப்புகளைத் தாக்கியது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, திட்வாவின் தாக்கத்தினால் சுமார் 11 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டனர், மேலும் 15,000க்கும் அதிகமான வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ சேதமடைந்தன.இந்தப் பேரழிவு பல சமூகங்களை பாதித்தாலும், இலங்கையின் சமூக, பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளில் ஒன்றான மலையகத் தமிழ்ச் சமூகங்களின் மீது திட்வாவின் தாக்கம் அசமத்துவமான அளவில் அதிகமாக இருந்தது.

எனவே, இந்த ஆய்வுக் கட்டுரையின் முதன்மை நோக்கங்கள் பின்வருமாறு அமைகின்றன,

நிலச்சரிவுகளின் தாக்கம்: திட்வா சூறாவளியைத் தொடர்ந்து மத்திய மலைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளின் தீவிரத்தையும், அதனால் ஏற்பட்ட உயிர்ச் சேதம் மற்றும் காயங்களின் அளவையும் ஆவணப்படுத்துதல்.

குடியிருப்புகளின் அழிவு: பாரம்பரிய லயன் அறைகள் (Line Rooms) மற்றும் தோட்டக் குடியிருப்புகள் மீது ஏற்பட்ட அழிவின் அளவை மதிப்பீடு செய்தல்.

இழப்பீட்டுப் பொறிமுறைகள்: அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட நிவாரண மற்றும் இழப்பீட்டுத் திட்டங்களின் (Compensation Schemes) அணுகல், அமுலாக்கம் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்கள் அவற்றை எதிர்கொண்ட சவால்கள் ஆகியவற்றை விரிவாக ஆராய்வது.

நீடித்த தாக்கம்: பேரழிவின் விளைவாக இச்சமூகங்களின் வாழ்வாதாரத்தில் (Livelihood) ஏற்பட்டுள்ள நீண்டகால பாதிப்புகளைப் பகுப்பாய்வு செய்தல்.

இந்த ஆய்வின் முக்கியத்துவமானது பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் நிலையை ஆவணப்படுத்துதல் மற்றும் கொள்கை வகுப்பவர்களுக்கு பரிந்துரைகளை வழங்குதல் என்பனவாகும். அதாவது, திட்வா சூறாவளியால் மலையக சமூகம் எதிர்கொண்ட தனிப்பட்ட துயரங்கள், இழப்பு மற்றும் சேதத்தின் (Loss and Damage) அளவை ஒரு முறையான ஆவணப்படுத்துதல், அதேபோல் காலநிலை மாற்றத்தின் தாக்கம், வரலாற்று ரீதியிலான சமூக, பொருளாதார ஒடுக்குமுறையுடன் எவ்வாறு இணைந்து, பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் மீதான சுமையை அதிகரிக்கிறது என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவருதல், மற்றும் எதிர்காலத்தில் காலநிலை சார்ந்த பேரழிவுகளை எதிர்கொள்வதற்கு, குறிப்பாக அனர்த்த முகாமைத்துவம் (Disaster Management), மீள்குடியேற்றம் (Resettlement) மற்றும் இழப்பீடு வழங்கும் பொறிமுறைகளில் உள்ள இடைவெளிகளைக் களைய, வலுவான மற்றும் சமூகநீதி சார்ந்த பரிந்துரைகளை வழங்குதல் என்பனவாகும்.

வரலாற்று ரீதியிலான பாதிப்பு

மலையகத் தமிழ்ச் சமூகம் என்பது 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போது தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்குத் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் வம்சாவளியினரைக் குறிக்கிறது. இந்த மக்கள் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தபோதிலும், சமூக, பொருளாதார ரீதியில் நீடித்த பாதிப்புக்குள்ளானவர்களாகவே உள்ளனர். இவர்கள் ஆரம்பம் முதலே அடிப்படை மனித உரிமைகள், குடியுரிமை மற்றும் உரிய ஊதியம் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்தனர். 1948 மற்றும் 1949ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட சட்டங்களால் இவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. இது இவர்களை நாடற்றவர்களாகவும், இலங்கையின் சமூக அமைப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்களாகவும் ஆக்கியது. இவர்களின் குடியிருப்பு ‘லயன் அறைகள்’ 150 ஆண்டுகளுக்கும் மேலானவை, மிகக் குறைந்த கட்டமைப்புத் தரம் கொண்டவை, மேலும் அதிக மழை மற்றும் காற்றைத் தாங்கும் வலிமையற்றவை.தோட்டத் தொழிலாளர்கள் இந்த லயன் அறைகளில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்தாலும், இந்த நிலம் பெரும்பாலும் தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமானது. இதனால், இவர்களுக்குத் தங்கள் வசிப்பிடத்தின் மீதான நிரந்தர உரிமையும் (Tenure Rights), நில ஆவணங்களும் (Land Deeds) இல்லை. இந்த வீட்டுரிமைப் பிரச்சினை, பேரழிவுக் காலங்களில் அரசாங்கத்திடம் இருந்து இழப்பீடு மற்றும் மீள்குடியேற்ற உதவியைப் பெறுவதைத் தடுக்கிறது அல்லது தாமதப்படுத்துகிறது. இவர்களின் வரலாற்று வறுமை (ஏனைய சமூகங்களை விடக் குறைவான வருமானம் மற்றும் அதிக வறுமைக் கோட்டின் கீழ் வாழ்தல்), நிரந்தரமற்ற வசிப்பிடம் மற்றும் வீட்டுரிமையின்மை ஆகியவை, திட்வா போன்ற பேரழிவுகளின் போது இவர்களின் பாதிப்பை பன்மடங்கு அதிகரிக்கச் செய்கின்றன.

மலையகத் தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகள், இலங்கையின் மத்திய மலைப் பிரதேசங்களில் குறிப்பாக செங்குத்தான மலைச் சரிவுகளிலும், நீரோடைகள் மற்றும் ஆறுகளுக்கு அருகிலும் அமைந்துள்ளன. இந்த புவியியல் அமைப்பே, அவர்களை இயற்கைப் பேரழிவுகளுக்கு மிகவும் ஆளாக்குகிறது. தேயிலைத் தோட்டங்கள் பெரும்பாலும் மழைநீர் விரைவாக வெளியேற முடியாத பாறைகள் மற்றும் களிமண் கலந்த சரிவுகளில் காணப்படுகின்றன. லயன் அறைகள் அமைக்கப்படும் இடங்கள் நீடித்த குடியிருப்புகளுக்கு உகந்ததாக வடிவமைக்கப்படவில்லை. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர மழைவீழ்ச்சியின் போது, மண் அதிக நீரை உறிஞ்சி, அதன் இறுக்கத்தை இழக்கிறது. இதனால், செங்குத்தான சரிவுகளில் உள்ள லயன் அறைகள் மீது நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் மிக அதிகமாகிறது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பல தோட்டப் பகுதிகளை உயர்ந்த அபாய வலயங்களாக (High-Risk Zones) வகைப்படுத்தியுள்ளது. இந்தப் பகுதிகளில் காணப்படும் முறையற்ற வடிகால் மற்றும் கழிவுநீர் அமைப்புகளும், மழைக்காலங்களில் நீரின் ஓட்டத்தைத் தடுத்து, மண் அரிப்பை (Soil Erosion) விரைவுபடுத்துகின்றன, இது நிலச்சரிவு அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது. திட்வா சூறாவளியின் போது ஏற்பட்ட மழைவீழ்ச்சியின் அளவு (சில பகுதிகளில் 400 மி.மீ.க்கு மேல்), இந்த அபாயங்களை ஒரு பேரழிவாக மாற்றியது.

வாழ்வாதாரத்தின் தன்மை

மலையகத் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வாதாரம் (Livelihood) ஏறத்தாழ தேயிலைத் தோட்டத் தொழிலை சார்ந்தே உள்ளது. இந்த ஒற்றைச் சார்புத் தன்மை, அவர்களைப் பேரழிவுகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களாக ஆக்குகிறது. தொழிலாளர்கள் நாளொன்றுக்கு பறிக்கும் தேயிலை அளவைப் பொறுத்தே பெரும்பாலும் அவர்களின் வருமானம் நிர்ணயிக்கப்படுகிறது. தோட்ட வேலை பாதிக்கப்படும்போது, அவர்களின் அன்றாட வருமானம் உடனடியாக நின்றுவிடுகிறது. திட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் தேயிலைத் தோட்டப் பயிர்கள், தொழிற்சாலைகள், களஞ்சியங்கள் மற்றும் பெருந்தோட்ட வீதிகள் என்பவற்றுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தின. இந்தச் சேதங்கள் நீண்டகாலத்திற்குத் தேயிலைத் தோட்டச் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துகின்றன. தங்கள் வீடுகளை இழந்ததோடு மட்டுமல்லாமல், தங்கள் வேலையையும் இழந்த தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் வேலையில் சேர்வதற்கும், மீண்டு வருவதற்கும் நீண்டகாலம் எடுக்கும். இது இவர்களை ஆழமான வறுமைச் சுழற்சிக்குள் (Deeper Poverty Cycle) தள்ளுகிறது. உதாரணமாக, ஒரு சில நாட்கள் வேலை இழந்தால் கூட, அது குடும்பத்தின் அத்தியாவசிய உணவுத் தேவைகள் மற்றும் குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளை நேரடியாகப் பாதிக்கிறது.

பேரிடர் காலங்களில் சமூகத்தின் தயார்நிலை மற்றும் அணுகல்

பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், மலையகச் சமூகங்களின் தயார்நிலை (Preparedness) மற்றும் உதவிகளை அணுகும் திறன் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க சவால்கள் உள்ளன. தோட்டப் பகுதிகளுக்கான நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் பெரும்பாலும் தேசிய மொழிகளிலோ (சிங்களம், தமிழ்) அல்லது ஆங்கிலத்திலோ வெளியிடப்படுகின்றன. ஆயினும், இந்தத் தகவல் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில், தெளிவான முறையில், அவர்களது உள்ளூர் மட்டத்தில் சென்றடைவதில்லை. தகவல் தொடர்பில் உள்ள இடைவெளிகள் காரணமாக, பலர் அபாயங்களை அலட்சியப்படுத்துகிறார்கள் அல்லது தாமதமாகவே வெளியேற முற்படுகிறார்கள்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயத்தின் போது, தொழிலாளர்கள் தங்கள் லயன் அறைகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால், அருகிலுள்ள பாதுகாப்பான வெளியேற்ற மையங்கள் (Evacuation Centers) பாடசாலைகள், சமூக மண்டபங்கள் பெரும்பாலும் போதிய இடவசதி, அடிப்படைச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளைக் கொண்டிருப்பதில்லை. மனிதாபிமான உதவி வரும்போது, அது பொதுவாக உள்ளூர் அரசியல் மற்றும் நிர்வாகத் தடங்கல்களால் மெதுவாகவே சென்றடைகிறது. நாடற்றவர்களாக வாழ்ந்த வரலாற்றுப் பின்னணி காரணமாக, இச்சமூகத்தினர் அதிகார மட்டத்தில் தங்கள் தேவைகளைக் கோருவதிலும், நிவாரண உதவிகளைப் பெறுவதிலும் உள்ள சவால்கள் அதிகம்.

திட்வா சூறாவளியின் நேரடித் தாக்கம்

திட்வா சூறாவளியின் போது ஏற்பட்ட அசாதாரணமான கனமழை (பல பகுதிகளில் 400 மி.மீ முதல் 500 மி.மீ வரை), இலங்கையின் மத்திய மலைப் பகுதிகளில் பெரும் நிலச்சரிவுகளைத் தூண்டியது. இந்த நிலச்சரிவுகளே, மலையகத் தமிழ்ச் சமூகத்தின் மீதான திட்வாவின் மிகக் கொடூரமான நேரடித் தாக்கமாக அமைந்தது. திட்வா சூறாவளியின் மையப்பகுதிகளில் ஒன்றான நுவரெலியாவில் தலவாக்கலை மற்றும் ஹட்டன் போன்ற தோட்டப் பகுதிகளில் பெரிய நிலச்சரிவுகள் பதிவாகின. இங்குள்ள செங்குத்தான சரிவுகளில் லயன் அறைகள் மீது பாறைகளும், மண்ணும் சரிந்ததால், பல குடும்பங்கள் விடியலுக்கு முன்னர் உயிருடன் புதைக்கப்பட்டன. அதேபோல் ஊவா மாகாணத்தின் அமைந்துள்ள தோட்டப் பகுதிகளில் நிலச்சரிவுகள் மிகவும் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தின. மீரியபெத்தை போன்ற வரலாற்று ரீதியிலான நிலச்சரிவு அபாயப் பகுதிகளில், மீண்டும் பல சிறிய மற்றும் நடுத்தர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பெரும்பாலான உயிரிழப்புகள் நிலச்சரிவுகளின் போது, அதிகாலையில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது நிகழ்ந்தன. இதனால், எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் வெளியேற அவகாசம் கிடைக்கவில்லை. ஒரே குடும்பத்தின் பல உறுப்பினர்கள் உயிரிழந்த சோக நிகழ்வுகள் பல தோட்டப் பகுதிகளில் ஆழமான சமூக வடுவை ஏற்படுத்தின.

திட்வா சூறாவளியின் காற்று மற்றும் வெள்ளம் காரணமாக, மலையக சமூகத்தின் குடியிருப்புகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகள் பாரிய சேதத்தை சந்தித்துள்ளன. நாடு முழுவதும் சுமார் 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக அழிந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், நுவரெலியா, பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள லயன் அறைகளும் அடங்கும். இவை பெரும்பாலும் நிலச்சரிவுகள் அல்லது வெள்ளப்பெருக்கால் முழுமையாக இடிந்து, பயன்படுத்த முடியாதவையாகின. அதிகமான லயன் அறைகள் பகுதியளவில் சேதமடைந்தன. சுவர்கள், கூரைகள், சமையலறைகள் மற்றும் கழிவறைகள் போன்றவை சேதமடைந்ததால், மக்கள் தங்கள் வீடுகளில் தொடர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வீடுகளை இழந்த சுமார் 2 இலட்சம் மக்கள் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட தற்காலிக நிவாரண முகாம்களில் (பாடசாலைகள், சமூக மண்டபங்கள், கோவில் வளாகங்கள்) தங்க வைக்கப்பட்டனர். இந்த முகாம்களில் சுகாதாரம், உணவு மற்றும் தனியுரிமை (Privacy) ஆகியவை பெரும் சவால்களாக அமைந்தன. இவை நிரந்தரத் தீர்வுகள் அல்ல என்பதால், நீண்டகால மீள்குடியேற்றத்தின் அவசியம் உடனடியாக  உணரப்பட்டுள்ளது.

பல தோட்டப் பாடசாலைகள் நிவாரண முகாம்களாகப் பயன்படுத்தப்படுவதால்,மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கும்போது பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் சேதமடைந்த மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் ஆகியவை காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. நிலச்சரிவுகளாலும், வெள்ளத்தினாலும் பிரதான வீதிகள், தோட்ட வீதிகள்  மற்றும் புதையிரத பாதைகள் பெரும் சேதமடைந்துள்ளன. தோட்டங்களுக்குள் உள்ள வீதிகள் மற்றும் கால்வாய்கள் அழிந்ததால், நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதிலும், அத்தியாவசிய சேவைகளை வழங்குவதிலும் பெரும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

வாழ்வாதார மற்றும் பொருளாதார இழப்புகள்

மலையகச் சமூகத்தின் வாழ்வாதாரமான தேயிலைத் தோட்டத் தொழிலில் ஏற்பட்ட இழப்புகள், இந்த பேரழிவின் மிக நீண்டகால விளைவுகளைக் கொண்டிருக்கும். தொடர்ச்சியான வெள்ளப்பெருக்கால், ஆயிரக்கணக்கான ஹெக்டேயர் பரப்பளவிலான தேயிலைத் தோட்டப் பயிர்கள் நிலச்சரிவுகளால் புதைந்து போயின. குறிப்பாக இளம் தேயிலை நாற்றுக்கள் முழுமையாக அழிந்தன. அதேபோல் நீர் மின் உற்பத்தி நிலையங்கள், நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் மற்றும் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள தோட்டக் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. சுமார் 50,000க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தங்கள் வேலைகளை இழந்துள்ளனர் அல்லது வேலையின்றி இருக்க நேரிட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் பெரும்பாலும் அன்றாடத் தேயிலை பறிக்கும் அளவைச் சார்ந்துள்ளது. வேலை நிறுத்தம் செய்யப்பட்டதால், இவர்களின் அன்றாட வருமானம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை உடனடியாகவும், கடுமையாகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரண உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், பலர் பசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இன்றி இன்றும் தவிக்கின்றனர்.

தேயிலை அல்லாத சிறிய அளவிலான உணவுப் பயிர்கள் (உதாரணமாக, மரக்கறிகள், உருளைக்கிழங்கு) மற்றும் தோட்டப் பகுதிகளுக்கு அருகிலுள்ள சிறு விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.பல குடும்பங்களின் சிறிய அளவிலான கால்நடைகள் (மாடுகள், கோழிகள், ஆடுகள்) வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் உயிரிழந்தன. இந்த இழப்புகள், ஏற்கனவே பின்தங்கியுள்ள சமூகத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் சொத்து இருப்பை மேலும் சிதைத்துள்ளன.

இழப்பீடு மற்றும் மீள்குடியேற்றச் சவால்கள்

திட்வா சூறாவளியால் மலையகத் தமிழ்ச் சமூகம் அனுபவித்த பேரழிவுக்குப் பிந்தைய மீட்சி நடவடிக்கைகளில், அரசாங்கத்தின் இழப்பீட்டுப் பொறிமுறைகளை அணுகுவது தற்போது ஒரு பெரும் போராட்டமாக இருக்கிறது. அரசாங்கம் நிவாரணத் திட்டங்களை அறிவித்திருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் இச்சமூகத்தின் பாதிப்பைத் தீவிரப்படுத்துகின்றன. அரசாங்கம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளையும், உயிர் இழந்தவர்களுக்கு இழப்பீடுகளையும் வழங்குவதற்கான பல திட்டங்களை அறிவித்தது. இருப்பினும், இந்தப் பொறிமுறைகள் மலையகத் தமிழ்ச் சமூகங்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வதில் பெரும் சவால்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.பேரழிவைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆரம்பத்தில் நிவாரணமும் இழப்பீடும் அறிவிக்கப்பட்டது. பிரதேச செயலகங்கள் (Divisional Secretariats) மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் மூலமாகவே நிவாரணப் பொருட்கள் மற்றும் ஆரம்ப நிதி உதவிகள் விநியோகிக்கப்படுகின்றன.

மத்திய அரசிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு, மாகாண மற்றும் பிரதேச செயலகங்கள் வழியாக, தோட்டத் தொழிலாளர்களைச் சென்றடையும் இந்தச் சங்கிலி சிக்கலாகவும், காலதாமதம் ஏற்படுத்துவதாகவும் உள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் ஆவணங்களைச் சரிபார்ப்பது, அனுமதி வழங்குவது மற்றும் நிதி விடுவிப்பது ஆகியவை தாமதமாகின்றன. சேதத்தின் அளவு மிக அதிகமாக இருப்பதால், அரசாங்கம் ஒதுக்கிய நிதி ஒட்டுமொத்த தேவைகளை ஈடுசெய்யப் போதாமல் இருக்கிறது. இதனால், உதவிகள் பல குடும்பங்களுக்குக் குறைவான அளவிலேயே  கிடைக்க வாய்ப்பு உள்ளது. உள்ளூர் மட்டத்தில் அரசியல் தலையீடுகள் காரணமாகவும், தோட்ட நிர்வாகத்திற்கும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்புக் குறைபாடுகளாலும் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியைப் பெறுவதில் சவால்கள் உள்ளதாக சமூக அமைப்புகள் ஆரம்ப காலங்களிலும் தொடர்ந்து சுட்டிக்காட்டி உள்ளன. இவ்வாறான சவால்கள் இம்முறையும் ஏற்படலாம்.

இழப்பீட்டை வெற்றிகரமாகப் பெறுவதற்குத் தேவையான சட்ட மற்றும் நிர்வாகத் தேவைகள், இந்தச் சமூகத்திற்கு மிகப்பெரிய தடையாக இருக்கின்றன. பெரும்பாலான லயன் அறைகளில் வசிப்பவர்களுக்கு வீட்டுப் பத்திரங்கள் (Land Deeds) அல்லது சட்டரீதியான நிரந்தர வீட்டுரிமை ஆவணங்கள் இல்லை. இழப்பீடு பெறுவதற்கு வீட்டு உரிமையை நிரூபிக்க வேண்டிய தேவை இருப்பதால், பலரது கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. இழப்பீடு மற்றும் மறுசீரமைப்பு மானியங்களைப் பெற, இறந்தவர்களின் மரணச் சான்றிதழ்கள், குடும்ப உறுப்பினர்களின் பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் சொத்து சேதத்தை நிரூபிக்கும் மதிப்பீட்டு அறிக்கைகள் உள்ளிட்ட பல உத்தியோகபூர்வ ஆவணங்கள் அவசியமாகின்றன. நீண்ட காலமாக ஒதுக்கப்பட்ட நிலையில் வாழும் இந்தச் சமூகத்தில், இந்த ஆவணங்களைப் பெறுவதிலும், அவற்றைத் தயாரித்து சமர்ப்பிப்பதிலும் மிகப் பெரிய சவால்கள் காணப்படுகின்றன. இழப்பீட்டு விண்ணப்பப் படிவங்கள், செயல்முறைகள் மற்றும் அதற்கான வழிகாட்டல்கள் ஆகியவை தமிழ் மொழியில் முழுமையாகவோ அல்லது தெளிவாகவோ தோட்டப் பகுதிகளுக்குச் சென்றடையாதது, விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதில் குழப்பங்களையும் பிழைகளையும் ஏற்படுத்துகிறது.

பேரழிவினால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை நிவர்த்தி செய்வதில் காப்புறுதிப் பாதுகாப்பு (Insurance Coverage) முக்கியப் பங்கை வகிக்கிறது. ஆனால், திட்வாவால் பாதிக்கப்பட்ட மலையகச் சமூகத்தைப் பொறுத்தவரை இது மிகவும் பற்றாக்குறையாகவே உள்ளது. லயன் அறைகள் தோட்டத் தொழிலாளர்களுக்குச் சொந்தமானவை அல்ல; அவை தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமானவை. சொத்தின் மீதான உரிமையின்மை காரணமாக, தொழிலாளர்கள் தனிப்பட்ட முறையில் தங்கள் வசிப்பிடங்களுக்குக் காப்புறுதி செய்ய முடியாது. பெரும்பாலான தோட்டக் கம்பனிகள், தங்கள் தொழில்சார் சொத்துகளுக்கு (தொழிற்சாலைகள், இயந்திரங்கள்) மட்டுமே காப்புறுதி செய்கின்றன. தொழிலாளர்கள் வசிக்கும் லயன் அறைகளைக் காப்புறுதி செய்வதற்கான நிதிப் பொறுப்பை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். இதன் விளைவாக, திட்வாவால் லயன் அறைகள் அழியும்போது, தொழிலாளர்கள் நேரடியாக எந்தக் காப்புறுதிப் பணத்தையும் பெற முடிவதில்லை. மேலும் மலையகத் தமிழ்ச் சமூகத்தின் குறைந்த வருமானம் காரணமாக, தனிப்பட்ட குடும்பங்கள் தனியார் காப்புறுதித் திட்டங்களில் முதலீடு செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

இழப்பீடுகளைக் கடந்து, திட்வாவால் பாதிக்கப்பட்டு, நிலச்சரிவு அபாயத்தில் வாழும் மலையக மக்களுக்கு பாதுகாப்பான நிரந்தர மீள்குடியேற்றத்தை வழங்குவது அரசாங்கத்தின் மிகப்பெரிய பொறுப்பாக இருக்கிறது. பாதுகாப்பான புதிய இருப்பிடங்களைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கலும் கவனத்தில் கொள்ளத்தக்கது. நுவரெலியா, பதுளை போன்ற மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் இல்லாத, பாதுகாப்பான, மற்றும் குடியிருப்புகளுக்கு உகந்த நிலங்கள் குறைவாகவே இருக்கின்றன. புதிய இருப்பிடங்கள் தோட்டத் தொழிலாளர்களின் வேலை செய்யும் இடத்திலிருந்து அதிக தூரத்தில் இருந்தால், அது அவர்களின் அன்றாடப் போக்குவரத்துச் செலவை அதிகரித்து, வருமானத்தைக் குறைக்கிறது. எனவே, பாதுகாப்பையும், பொருளாதார அணுகலையும் இணைக்கும் நிலங்களைத் தேர்ந்தெடுப்பது சிக்கலாக இருக்கிறது. புதிய குடியிருப்புகளுக்கான நிலத்தை ஒதுக்கீடு செய்வதில் அரசியல் தலையீடுகள் மற்றும் பிரதேசவாதக் காரணிகள் செல்வாக்குச் செலுத்துவதாகவும், உரியவர்களுக்குப் பதிலாக அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் நிலங்களைப் பெறுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டிருக்கின்றன.

பரிந்துரைகள் 

பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ்ச் சமூகங்களை மீளக் கட்டியெழுப்புவதில், நீடித்த மற்றும் பாதுகாப்பான மீள்குடியேற்றம் (Sustainable Resettlement) முக்கிய மையமாக இருக்கிறது. அபாயகரமான லயன் அறைகளிலிருந்து அவர்களை மாற்றுவது மிக அவசியமாகிறது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) ஆலோசனையின்படி, நிலச்சரிவு அபாயம் இல்லாத புதிய நிலப் பகுதிகளை அரசாங்கம் உடனடியாக அடையாளம் காண வேண்டும். இந்த நிலங்கள் தோட்டத் தொழிலாளர்களின் வேலை செய்யும் இடங்களுக்கு அணுகக்கூடியதாக இருப்பது இன்றியமையாதது. மீள்குடியேற்றத்தின் போது நிர்மாணிக்கப்படும் புதிய வீடுகளுக்கு முழுமையான வீட்டுரிமைப் பத்திரங்களை (Full Land Deeds) பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்குவது அடிப்படைத் தேவையாக உள்ளது. இது, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு, நிதி மற்றும் சமூகப் பாதுகாப்பையும் வழங்குகிறது. புதிய குடியிருப்புகள் அமையவிருக்கும்போது, இச்சமூகத்தின் கலாசார மற்றும் சமூகப் பிணைப்புகளைக் காக்கும் வகையில், சமூக மையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கூட்டுப் போக்குவரத்து வசதிகளுடன் கூடிய கூட்டு வாழ்க்கைத் திட்டங்களை உருவாக்குவது அவசியம்.

திட்வா போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகளால் ஏற்படும் நிரந்தரமான மற்றும் ஈடுசெய்ய முடியாத இழப்புகளுக்கு (Non-Economic Losses), சர்வதேச காலநிலை நிதியுதவியை அணுகுவது இலங்கைக்கு இப்போது அவசரமாகத் தேவைப்படுகிறது.இந்தச் சூறாவளியால் ஏற்பட்ட இழப்புகளின் அளவு, நாட்டின் உள்நாட்டு வளங்களைக் கொண்டு ஈடுசெய்ய முடியாததாக இருக்கிறது. எனவே, ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டின் (UNFCCC) கீழ் நிறுவப்பட்டுள்ள இழப்பு மற்றும் சேத நிதியிலிருந்து (Loss and Damage Fund) நிதியுதவியைப் பெற அரசாங்கம் வலுவான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இந்த நிதி உதவியைப் பெறும்போது, மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மலையகத் தமிழ்ச் சமூகத்தின் மறுசீரமைப்புத் தேவைகளை இந்த நிதியில் முதன்மைப்படுத்துவது, காலநிலை நீதியை நிலைநாட்டுவதாகும்.

இனிவரும் காலநிலை அபாயங்களை எதிர்கொள்ள, மலையகச் சமூகங்களின் பேரிடர் தயார்நிலையை முழுமையாக மேம்படுத்துவது மிகவும் அத்தியாவசியமாகிறது.தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் உடனடியாக, துல்லியமாக மற்றும் தமிழ் மொழியில் தோட்டப் பகுதி மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். இந்தத் தகவலை உள்ளூர் மட்டத் தலைவர்கள் மூலம் உரிய நேரத்தில் மக்களுக்கு வழங்க புதிய தொழில்நுட்ப வழிமுறைகள் (குறுஞ்செய்தி சேவைகள்) தற்போது பயன்படுத்தப்படுகின்றன. நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது வெளியேறும் வழிகள், தங்குமிடங்கள் மற்றும் சுய-பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சமூகங்களுக்குத் தொடர்ச்சியாகப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு தோட்டப் பிரிவிலும் அனர்த்த முகாமைத்துவப் பணிகளை ஒருங்கிணைக்க, நன்கு பயிற்சி பெற்ற சமூக அடிப்படையிலான குழுக்களை (Community-Based Organizations) உருவாக்குவது அவசியம்.

முடிவுரை

திட்வா சூறாவளியின் நேரடித் தாக்கம் முடிவடைந்திருந்தாலும், அதன் சமூக, பொருளாதார விளைவுகள் மலையகத் தமிழ்ச் சமூகத்தில் தற்போது வரை நீடிக்கின்றன. வீடுகளின் நிரந்தரமற்ற தன்மை, வாழ்வாதாரத்தின் இழப்பு, மற்றும் நிவாரணம் பெறுவதில் உள்ள நிர்வாகத் தாமதங்கள் ஆகியவை, காலநிலை மாற்றம் என்பது சமூக அநீதியுடன் இணைந்த ஒரு நெருக்கடி என்பதை மீண்டும் நிரூபிக்கிறது. அரசு, இந்தச் சமூகத்தின் பாதுகாப்பற்ற தன்மையைப் புறக்கணிப்பதை நிறுத்திவிட்டு, லயன் அறைகள் என்ற பழமையான வசிப்பிட அமைப்பை முற்றிலுமாக மாற்றியமைக்கும் ஒரு வலுவான கொள்கை முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது இருக்கிறது. நீடித்த மீட்சி (Resilience) அடைய, மலையக மக்களின் வீட்டுரிமையை உறுதிப்படுத்துவதுடன், வாழ்வாதாரப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் முழுமையான அணுகுமுறை தற்போது தேவைப்படுகிறது.

Ramesh-Arul-e1764751501850.jpg?resize=10அருள்கார்க்கி

https://maatram.org/articles/12449

பழைய பூங்காவைப் பாதுகாப்பது - நிலாந்தன்

1 week ago

பழைய பூங்காவைப் பாதுகாப்பது - நிலாந்தன்

Old_Kachcheri_Old_Park_Jaffna-cccc-1024x

“நான் எழுதிய கட்டுரையை நானே மீண்டும் மேற்கோள் காட்ட வேண்டியிருக்கிறது அல்லது நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது” என்று மு.திருநாவுக்கரசு அடிக்கடி கூறுவார். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள மிக மூத்த, தொடர்ச்சியாக எழுதும் ஒரே அரசறிவியலாளர் அவர்தான்.

அவர் மட்டுமல்ல அவரைப் போன்று முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் தமது சமூகத்திற்கான தமது பங்களிப்பை திரும்பத்திரும்ப தாங்களே நினைவூட்ட வேண்டியிருக்கிறது. அரசியல் கைதிகளுக்காக அரசியல் கைதிகள்தான் பெரும்பாலும் போராட வேண்டியிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அவர்களுடைய உறவினர்கள்தான் பெரும்பாலும் போராட வேண்டியிருக்கிறது.

மு.திருநாவுக்கரசு மட்டுமல்ல கடந்த பல தசாப்தங்களாக எழுதிவரும் பலரும் தாங்கள் எழுதியதை நினைவூட்ட வேண்டிய துர்பாக்கியமான ஒரு நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதனை நிரூபிக்கும் விதத்தில் கடந்த வாரம் ஒரு சம்பவம் நடந்தது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் ஓர் உள்ளக விளையாட்டு அரங்கைக் கட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. இது தொடர்பாக  சமூக வலைத்தளங்களில் எழுதிய அனேகர் பழைய பூங்காவின் பல்பரிமாண முக்கியத்துவம் தொடர்பாக இதுவரை வெளிவந்த கட்டுரைகள், உரைகள் தொடர்பாக அறிந்திருக்கவில்லை என்பதைத்தான் அவர்களுடைய கருத்துக்கள் காட்டின.

பழைய பூங்கா ஏற்கனவே சிதைக்கப்பட்டு விட்டது. அதைச் சிதைத்தவர் மஹிந்தவின் காலத்தில் ஆளுநராக இருந்த முன்னாள் படைத் தளபதியாகிய சந்திரசிறீ. இதுதொடர்பாக விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் யாழ்.இந்துக் கல்லூரி சபாபதி மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் நான் பேசியிருந்தேன். யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் பா.அகிலனின் “காலத்தின் விளிம்பு” என்ற நூல் வெளியீட்டு விழா அது. மரபுரிமைச் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான கட்டுரைகளின் தொகுப்பு அது. அபிவிருத்தியின் பெயரால் மரபுரிமைச் சொத்துக்கள் அழிக்கப்படுவது தொடர்பாக அகிலன் ஏற்கனவே பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

காலத்தின் விளிம்பு நூல் வெளியீட்டில் பழைய பூங்காவுக்குள்ள மரபுரிமை முக்கியத்துவம்,சுற்றுச்சூழல் முக்கியத்துவம்,அரசியல்,பண்பாடு முக்கியத்துவம் போன்றவற்றைத் தொகுத்து நான் பேசினேன்.அது ஒரு பண்பாட்டு இன அழிப்பு என்றும் சுட்டிக்காட்டினேன்.

அதன் பின்,சில மாதங்களுக்கு முன்,யாழ்.பல்கலைக்கழகத்தில்,நூலக கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்ட கட்டடப்படக் கலைஞர் மயூரநாதனின் “யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு” என்ற நூல் வெளியீட்டு விழாவின் போதும் நான் அதைச் சுட்டிக்காட்டிப் பேசினேன். அதன் பின்,புதிய வட்டுவாகல் பாலம் தொடர்பாக,ஈழநாட்டில் எழுதிய கட்டுரையிலும் பழைய பூங்காவைப்பற்றிய குறிப்புக்கள் உண்டு.

நமது அரசியல்வாதிகள் எத்தனைபேர் இவற்றை வாசிக்கிறார்கள்? சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விடயங்களை எழுதிக் கொண்டிருக்கும் எத்தனைபேர் அவற்றை வாசிக்கிறார்கள்? தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் விமர்சகர்கள் குறைவு. அதே சமயம் அதை வாசிப்பவர்களும் குறைவு. அரசியல் விமர்சனங்களை அந்த அரசியலை முன்னெடுக்கும் தரப்புகள் அல்லது அந்த அரசியலில் ஆர்வமுடைய தரப்புகள் வாசிக்கவில்லை என்றால் அரசியலில் அறிவும் செயலும் எப்படி இணைய முடியும்? அரசியல் செய்பவர்கள், அரசியலை விமர்சிப்பவர்களை ஒருவித ஒவ்வாமையோடு பார்க்கிறார்கள். அதனாலும் அவர்கள் எழுதுவதை வாசிக்காமல் விடுகிறார்கள்.

சரி.அதை வாசிக்க வேண்டாம். ஆங்கிலத்தில்,சிங்களத்தில் வருபவற்றையாவது வாசிக்கலாம்தானே? தமிழ்த் தேசிய அரசியலில் முன்னணியில் தெரியும்  எத்தனை பேர் தொடர்ச்சியாக வாசிப்பவர்கள்? அவர்களில் பலருடைய உரைகளைப் பார்த்தால் அவர்கள் எதையும் வாசிப்பதாகத் தெரியவில்லையே? குறைந்தபட்சம் அரசியல் ஆழம்மிக்க காணொளிகளைக்கூட பார்ப்பதாகத் தெரியவில்லையே ?

இவ்வாறு தமிழ்த் தேசியப் பரப்பில் அறிவும் செயலும் பிரிந்திருக்கும் ஒரு துப்பாக்கியமான,தோல்விகரமான ஓர் அரசறிவியல்சூழல் காரணமாகத்தான் தமிழ்மக்கள் தமது இறுதி இலக்குகளை வெல்லமுடியாத மக்களாகத் தொடர்ந்தும் காணப்படுகிறார்களா ?

இக்கேள்வியோடு இக்கட்டுரையின் மையப் பகுதிக்கு வரலாம். பழைய பூங்கா. 1800ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜேம்ஸ் கோடினரின் குறிப்பின்படி,கேர்னல். பார்பெட் என்ற பிரிட்டிஷ் நிர்வாகியால் அமைக்கப்பட்ட, சுற்று மதியோடு கூடிய ஒரு தோட்டம் பற்றிக் கூறப்படுகிறது. இந்தத்  தோட்டத்தைத்தான் யாழ்ப்பாணத்தின் முதலாவது அரச அதிபராக இருந்த பி.ஏ.டைக்(1831 -1867 )விலைக்கு வாங்கி ஏற்கனவே காணப்பட்ட பூங்காவை விஸ்தரித்ததோடு,அரச அதிபருக்கான மாளிகையும் உட்பட சில கட்டடங்களைக்  கட்டியதாக கட்டடப்படக் கலைஞர் மயூரநாதனின் நூலில் கூறப்பட்டுள்ளது.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அதாவது பிரிட்டிஷ்காரரின் ஆட்சிக் காலத்தின் பிற்பகுதியில், பழைய பூங்கா அதன் பராமரிப்பை இழந்து விட்டது என்பதை பிரிட்டிஷ் நிர்வாகிகளின் குறிப்புகளில் இருந்து அறியமுடிகிறது. அதிலிருந்து தொடங்கி அது யாழ்பாணத்தின் நகர்ப்புறக் காடாக வளரத் தொடங்கியது. ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் குறிப்பாக முதலாங் கட்ட ஈழப் போரின் தொடக்கத்தில் அது படையினரின் முகாமாக இருந்தது. யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் அது அவர்களுடைய  காவல்துறைத் தலைமையகமாக,பயிற்சி மையமாக இருந்தது. படையினரும் சரி விடுதலைப் புலிகள் இயக்கமும் சரி அங்கிருந்த முதுமரங்களை ஒரு கவசமாக,ஒரு குடையாக, ஒரு விதத்தில் மறைப்பாகப்பயன்படுத்தினார்கள் என்றுதான் கூறவேண்டும்.

ஆனால் நாலாங் கட்ட ஈழப்போரின் பின்,சந்திரசிறீ ஆளுநராக இருந்த காலகட்டத்தில் பழைய பூங்கா சிதைக்கப்பட்டது. அரச திணைக்களங்களின் கட்டடங்கள் அங்கே கட்டியெழுப்பப்பட்டன. ஆளுநர்  சந்திரசிறீ முது மரங்களை மட்டும் வெட்டவில்லை, அந்த மரங்களில் வாழ்ந்த வெளவால்கள் எச்சமிடுவதாகக் கூறி அவற்றைச் சுட்டதாக ஐங்கரன்நேசன் கூறினார். சந்திரசிறி பழைய பூங்காவைச் சிதைக்கும்போது  தமிழ் மக்களின் விருப்பத்தைக் கேட்கவில்லை. அப்போது இருந்த தமிழ் மக்களின்  பிரதிநிதிகள்  அதுதொடர்பாக வலிமையான எதிர்ப்பைக் காட்டியிருக்கவில்லை. ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தின் வேரை அறுக்கும் பண்பாட்டுப் படுகொலை அது. சந்திரசிறீ பழைய பூங்காவின் ஆன்மாவை பெருமளவுக்கு சிதைத்து விட்டார். பின்னர் அதன் மூலையில் ஒரு சிறிய புதிய பூங்காவை உருவாக்கினார்.

20170103_044031535_iOS-1024x768.jpg

பழைய பூங்காவுக்குப் பல் பரிமாண முக்கியத்துவங்கள் உண்டு. முதலாவதாக அது ஒரு மரபுரிமைப் பிரதேசம். குடியேற்றவாத ஆட்சியாளர்களின் காலத்தில், அதாவது பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் யாழ்ப்பாணத்துக்கான நிர்வாகத் தலைமையகமாகவும் அதேசமயத்தில் ஒரு பூங்காவாகவும் அது பராமரிக்கப்பட்டுள்ளது. அதை உருவாக்கிய வடபகுதிக்கான முதலாவது அரச அதிபரான டைக் அதனை ஒரு பூங்காவாக மட்டும் கருதி உருவாக்கவில்லை என்பதனை அதுதொடர்பான குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது. அதனை அவர் ஒரு பூங்கா என்பதற்கும் அப்பால் ஒரு பழத் தோட்டமாகவும் பராமரித்துள்ளார். அங்கிருந்த  பழங்களை யாரும் இலவசமாகச் சாப்பிடலாம் என்றும் அனுமதித்திருக்கிறார்.

பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சி காலம் என்பது தமிழ் மக்களின் நவீன வரலாற்றில் ஒரு காலகட்டம். பழைய பூங்கா பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தின் நிர்வாக மையமாகக் காணப்பட்டது. அங்குள்ள கட்டடங்கள், கட்டுமானங்கள் அனைத்தும் வரலாற்றின் ஒரு காலகட்ட  நினைவுகளை தாங்கி நிற்கும் மரபுரிமை சின்னங்கள் ஆகும். அந்த அடிப்படையில் பழைய பூங்கா ஒரு மரபுரிமைப் பிரதேசம். அதைப் பாதுகாப்பது என்பது தமிழ் மக்களின் வரலாற்றின் ஒரு பகுதியை பாதுகாப்பது. அபிவிருத்தியின் பெயரால் அந்த மரபுரிமைச் சொத்துக்களைச் சிதைப்பது என்பது தமிழ் மக்களுடைய வரலாற்றின் ஒரு பகுதியை இல்லாமல் செய்வதுதான். அது மரபுரிமைப் பிரதேசங்கள் தொடர்பான உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்களுக்கு எதிரானது.

இரண்டாவது பரிமாணம், அது ஒரு நகர்ப்புற காடு. உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகள் நகரங்களின் சுவாசப் பைகளாக நகர மத்தியில் சிறு காடுகளை உருவாக்கிவரும் ஒரு காலகட்டத்தில், ஏற்கனவே  யாழ்ப்பாணத்திலிருந்த, நூற்றாண்டு கால முதிய காடு ஒன்றின் தப்பி பிழைத்த சிறு பகுதியையாவது யார் பராமரிப்பது?

அந்த முதுமரங்களில் வசித்த லட்சக்கணக்கான வௌவால்களும் அந்தக் காட்டின் ஒரு பகுதிதான். மிக அரிதான முதுமரங்களை விதைத்தவை அந்த வௌவால்கள்தான்.  இது பழைய பூங்காவுக்குள்ள சூழலியல் முக்கியத்துவம். இதுதொடர்பாக ஐங்கரநேசன் ஏற்கனவே ஊடகச் சந்திப்பொன்றில் விரிவாகப் பேசியுள்ளார்.

மூன்றாவது தாவரவியல் பரிமாணம். அரிதாகிச் செல்லும் பாரம்பரிய முதுமரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபுரிமை நடைமுறைகளில் ஒன்று. பழைய பூங்காவில் வானளாவ வளர்ந்து நிற்கும் முது மரங்கள் பல யாழ்ப்பாணத்தில் இப்பொழுது உயிருடன் இருக்கும் எல்லாரையும் விட, அவர்களுடைய முப்பாட்டன் முப்பாட்டிகளை விட மூத்தவை. நகரங்களைக் கட்டமைக்கும் போதும் வீதிகளை விசாலிக்கும்போதும் முதுமரங்களைப் பாதுகாப்பது என்பது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுரிமை,தாவரவியல் ,சூழலில் நடைமுறைகளில் ஒன்று.

எனவே பழைய பூங்காவை அதன் முதுமரங்களோடும் வெளவால்களோடும் பாதுகாக்க வேண்டியது தமிழ் மக்களுடைய பொறுப்பு. போர்க் காலத்திலேயே பராமரிக்கப்பட்ட  ஒரு மரபுரிமை பிரதேசத்தை அபிவிருத்தியின் பெயரால் சிதைப்பதற்கு அனுமதிக்கலாமா? இப்பொழுது உயிரோடிருக்கும் எல்லா யாழ்ப்பாணதவர்களை விடவும் அவர்களுடைய  முப்பாட்டன் முப்பாட்டிகளை விடவும் வயதால் மூத்த அந்த மரங்களை வெட்ட அனுமதிக்கலாமா? தனது வேர் களைப் பாதுகாக்க முடியாத ஒரு மக்கள் கூட்டம் ஒரு தேசிய இனமாக நிமிர முடியுமா?

https://www.nillanthan.com/7955/#google_vignette

நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டு நினைவு நாட்கள் - நிலாந்தன்

1 week ago

நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டு நினைவு நாட்கள் - நிலாந்தன்

590766592_824918727098699_52485070505619

வெள்ளம்,மழை,புயல் எச்சரிக்கை… எல்லாவற்றையும் மீறி மாவீரர் நாள் பரந்த அளவில்,பெரியளவில் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரான 17ஆவது மாவீரர் நாள் இது. நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டாவது தியாகிகளின் நினைவு நாள் இது.

இம்மாதம் 13ஆம் திகதி,ஜேவிபி அதனுடைய  தியாகிகளின் நாளை அனுஷ்டித்தது. அதே மாதத்தில் மாவீரர் நாளும் அனுஷ்டிக்கப்படுவது ஒரு நூதனமான ஒற்றுமை. இச்சிறிய தீவில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த இரண்டு பெரிய அமைப்புகளின் தியாகிகள் தினம் இவ்வாறு ஒரே மாதத்தில் வருவது ஒரு நூதனமான ஒற்றுமைதான்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது மாவீரர் தன் உயிரைத்  தியாகம் செய்த நாள் மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஜேவிபியின் தலைவர் ரோகண விஜயவீர அரச படைகளால் கைது செய்யப்பட்டு, குரூரமாகக் கொல்லப்பட்ட நாள் அந்த அமைப்பின் தியாகிகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

ஜேவிபியின் நினைவு நாள் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவின் வெளியரங்கில் நடந்தது. இலங்கைத் தீவில் இரண்டு ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்து, இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட, இரண்டு தடவைகள் நசுக்கப்பட்ட, ஓர் அரசியல் இயக்கம் ஜேவிபி. ஆனால் தன் சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டெழ முடியும் என்பதற்கு இந்தப் பிராந்தியத்தில்  மட்டுமல்ல முழு உலகத்திலும் மிக அரிதான முன்னுதாரணங்களில் ஒன்று.

அன்றைய நிகழ்வில் விகாரமகாதேவி பூங்காவின் வெளியரங்கம் சிவப்பு நிறச் சட்டைகளாலும் முதிய பெண்களின் கண்ணீராலும் பிரகடனங்களாலும் நிறைந்திருந்தது. பெரும்பாலானவர்கள் சிவப்பு நிற மேலாடைகளோடு வந்திருந்தார்கள். அரங்கின் முன்வரிசையில் வயதான முதிய பெண்கள் சிலர் காணப்பட்டார்கள். மெலிந்த சதைப்பிடிப்பில்லாத முகங்கள். எடுப்பில்லாத உடுப்புகள். மென்மையான சோக இசையின் பின்னணியில் அவர்களில் சிலர் அழுதார்கள். அவர்களுடைய கண்ணீர் உண்மையானது. அன்னையரின் கண்ணீர் பொய்யானது அல்ல. அன்னையரின் கண்ணீர் எல்லா நினைவு நாட்களிலும் ஒன்றுதான். அதில் உள்ள உப்புச் சுவையும் ஒன்றுதான்.

அந்த நிகழ்வின் ஒளிப்படங்களை என்னோடு பகிர்ந்த ஒரு நண்பர், என்னிடம் கேட்டார், “நீங்கள் சொல்வது போல ஜேவிபி அதன் சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டெழுந்த ஓர் இயக்கம். இப்பொழுது அரசாங்கமாக அந்த நிகழ்வை பெருமெடுப்பில் ஒழுங்குப்படுத்தியிருக்கிறது” என்று.

நான் அவரிடம் கேட்டேன் “அது ஒரு அரச நிகழ்வா அல்லது ஒரு இயக்கத்தின் அல்லது கட்சியின் நினைவு நிகழ்வா?” என்று. அதில் நாட்டின் அரசுத் தலைவரும் உட்பட பிரதான அமைச்சர்கள் பங்குபற்றினார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் அது ஒரு அரசு நிகழ்வு போலத் தோன்றும். ஆனால் அது பெருமளவுக்கு ஓர் இயக்க நிகழ்வுதான்; ஒரு கட்சி நிகழ்வுதான். அங்கே அரசுத் தலைவருக்கும் அமைச்சருக்கும் பாதுகாப்பாக படையினர் ஆங்காங்கே காணப்பட்டார்கள். எனினும் வழமையான அரசு நிகழ்வுகளைப்போல சீருடை அணிந்த படையினரின் பிரசன்னம் தூக்கலாக வெளித்தெரியவில்லை. அந்தப் படையினரின் சீருடைக்கும் அங்கு வந்திருந்த பெரும்பாலானவர்களின் சிவப்பு உடுப்புகளுக்கும் பொருந்தவேயில்லை. விறைப்பாக நின்ற அந்தப் படையினரின் துப்பாக்கிகளும் அழுது கொண்டிருந்த முதிய பெண்களின் கண்ணீரும் ஒன்றுக்கொன்று எதிரானவை.

AKD-JVP-commemoration.jpg

இப்பொழுது ஜேவிபி ஆளுங்கட்சி.அதுதான் அரசாங்கம். அப்படிப் பார்த்தால் அரசாங்கத்தின் தியாகிகள் நாட்டுக்கும் தியாகிகள்தானே?அந்த அடிப்படையில் அது ஓர் அரச நிகழ்வாகத்தான் அமைய வேண்டும். ஆனால் அப்படியல்ல.

அங்கே இறந்தவர்களுக்காக மலர்கள் வைக்கப்பட்டன. பாடல்கள் இசைக்கப்பட்டன. உரைகள் நிகழ்த்தப்பட்டன. ஆனால் படையினரின் ராணுவ அணிவகுப்போ,மரியாதை வேட்டுக்களோ தீர்க்கப்படவில்லை. அரசாங்கத்தின் தேசிய தியாகிகளின் நாளில் படையினரின் அணிவகுப்பு இருக்கும்; பீரங்கிகளில் முழங்கும்; முப்படை தளபதிகளும் பிரசன்னமாகியிருப்பர்.

ஆனால் 13-ஆம் தேதி விகார மகாதேவி பூங்காவின் வெளியரங்கில் நடந்தது ஒரு அரச நிகழ்வு அல்ல. நாட்டை ஆளுங்கட்சி அதன் தியாகிகள் நாளை தேசிய விழாவாகக் கொண்டாடவில்லை. அது தனக்கென்று தனியாக ஒரு தியாகிகள் நாளை அனுஷ்டிக்கின்றது. அதிலும் குறிப்பாக, ஜேவிபியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தனித்தனியாக நினைவு நாட்களை அனுஷ்டிக்கிறார்கள். ஜேவிபியின் முதலாவது ஆயுதப் போராட்டம் நடந்த ஏப்ரல் ஐந்தாம் திகதியை ஒரு பகுதியினர் அனுஷ்டிக்கிறார்கள். நவம்பர் 13 ஐ ஜேவிபியிடமிருந்து பிரிந்து  சென்றவர்கள் தனியாக அனுஷ்டிக்கிறார்கள். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கு என்று தனித்தனியாக தியாகிகள் நாளை அனுஷ்டிப்பது போல.

ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டிய வேறுபாடு என்னவென்றால், ஆளுங்கட்சியாக உள்ள ஜேவிபியின் நினைவு நாள் ஒர் அரசு நிகழ்வாக கொண்டாடப்படவில்லை என்பதுதான். சிங்களபௌத்த அரசின் தேசியத் தியாகிகள் நினைவு நாள் வேறாகவும் ஜேவிபி அரசாங்கத்தின் தியாகிகள் நினைவு நாள் வேறாகவும் இருக்கின்றன என்பதுதான்.

சிறிய இலங்கை தீவு தன்னகத்தே பல தியாகிகளின் நாட்களைக் கொண்டிருக்கிறது. படையினரின் தியாகிகள் நாள்,ஜேவிபியின் தியாகிகள் நாள்,விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் நாள், ஏனைய தமிழ் இயக்கங்களின் தியாகிகள் நாள், என்று பல தியாகிகளின் நாட்கள் இச்சிறிய தீவில் உண்டு.

589343022_1305779798257307_1048150586159

ஜேவிபி இப்பொழுது அரசாங்கமாக இருந்த போதிலும், அதன் தியாகிகள் தினம் தனியே கொண்டாடப்படுகிறது. ஜேவிபியின் பிரதானியான அனுர ஒரு ஜனாதிபதியாக, முப்படைகளின் தளபதியாக இருக்கிறார். ஆனால் அவருடைய தோழர்களை நினைவு கூரும் நாளில் முப்படைகளின் அணிவகுப்பு இல்லை. அது இப்பொழுதும் ஓர் அரச நிகழ்வு அல்ல.

விகாரமாதேவி பூங்காவில் கூடிய ஜேவிபியினர் சிவப்புச்சட்டை அணிந்திருந்தார்கள். விகார மகாதேவி பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நினைவுச் சின்னத்திலும்  சிவப்பு நிறம் இருந்தது. ஆனால் அந்த சிவப்பு கம்யூனிச சிவப்பு அல்ல. நாட்டில் தற்பொழுது நடப்பது கம்யூனிச ஆட்சியும் அல்ல. பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்ட ஓர் ஆட்சி.

ஆனால் லண்டனில் உரை நிகழ்த்திய ரில்வின் சில்வா, “வீரர்கள் சிந்திய குருதியை ஏற்று சிவப்பு மலர்கள் மலரட்டும்” என்று கூறினார். அந்தச் சிவப்பு மலர்கள்  நிச்சயமாக மார்க்சிய சித்தாந்தத்தை பிரதிபலிக்கவில்லை. அவ்வாறு ஜேவிபி ஒரு மெய்யான மார்க்சிஸ்ட் அமைப்பாக இருந்திருந்தால் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொண்டிருந்திருக்கும்.

ரில்வின் உரை நிகழ்த்திய அதே கூட்டத்தில் ஜேவிபியின் பிரதித் தலைவராக இருந்த உபதிச கமநாயக்கவின் மனைவி உரை நிகழ்த்தும்போது, மூன்றாவது தலைமுறை ஜேவிபியினர் நாட்டை ஆளும் வளர்ச்சிக்கு வந்திருப்பதை பெருமையோடு சுட்டிக்காட்டினார். சிறு ஓடையாக இருந்த இயக்கம் இப்பொழுது பெரும் நதியாக மாறிவிட்டது என்றும் சொன்னார்.

ரில்வின் சில்வா லண்டனில் சிவப்பு மலர்களைப்பற்றி பேசிய அதே காலப்பகுதியில் கொழும்பில் அவர்களுடைய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் புதிதாக வந்திருக்கும் கனேடிய தூதுவருக்கு என்ன சொன்னார்? கனடாவில் உள்ள தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் இலங்கையில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் கருத்துக்களை முன்னெடுப்பதற்கு எதிராகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சின்னம் போன்றவற்றை பகிரங்கமாக பயன்படுத்துவதற்கு எதிராகவும் கனேடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கனடாவில் வாழும் சில செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள்,இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்குப் பாதகமாக அமைந்துள்ளன என்றும் அமைச்சர் ஹேரத் கூறியுள்ளார்.

அதாவது நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் சின்னங்களை கனடாவில் உள்ள தமிழர்கள் உயர்த்திப் பிடிப்பதை அவர் கனேடியத் தூதுவருக்குச் சுட்டிக்காட்டுகிறார். கனடாவிலும் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட அமைப்பு என்ற அடிப்படையில் மேற்சொன்ன செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆனால்  கடந்த அரை நூற்றாண்டு காலப்பகுதிக்குள் ஜேவிபி நாட்டில் இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்டது. அவ்வாறு இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கம் கனடாவில் தடை செய்யப்பட்ட சின்னங்களை தமிழ் மக்கள் முன்னிறுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று கேட்கின்றது.

தனது இயக்கத்தின் தியாகிகளின் நாளும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் தியாகிகளின் நாளும் ஒன்று அல்ல என்பது தெளிவாகத் தெரியும் ஒர் அரசியல் சூழலில், அமைச்சர் விஜித ஹேரத் கனேடிய தூதுவரிடம் அவ்வாறு கூறியுள்ளார். கார்த்திகை மாதத்தில் நாட்டில் இனரீதியாக இரு வேறு நினைவு தினங்கள் அனுஷ்டிக்கப்படும் ஓர் அரசியல் யதார்த்தத்தை தடைகளின் மூலம் மாற்ற முடியாது.

இந்த நாட்டில் ஏன் இனரீதியாக இரு வேறு நினைவு நாட்கள்? எல்லாத் தடைகளையும் மீறி தமிழ் மக்கள் கடந்த 17 ஆண்டுகளாக ஏன்  மாவீரர் நாளை தொடர்ந்து அனுஷ்டித்து வருகிறார்கள்? இனரீதியாக இரண்டு வேறு தியாகிகள் தினங்களைக் கொண்ட ஒரு  நாட்டின் வெளி விவகார அமைச்சராகிய விஜித ஹேரத்   கனேடிய  தூதுவருக்கு கூறுகிறார், அரசாங்கம் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதாக. விகாரமகாதேவி பூங்காவில் தற்காலிகமாக உருவாக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தில் பூசப்பட்டிருந்த சிவப்பு நிறம் வெளிறும் இடம் இதுதான்.

https://www.nillanthan.com/7959/

இலங்கையின் மத சுதந்திர நிலைப்பாட்டை ஆராய்தல்

1 week 1 day ago

இலங்கையின் மத சுதந்திர நிலைப்பாட்டை ஆராய்தல்

February 11, 2015

sri_lanka_guards.jpg?resize=1200%2C550&s

Photo, AP Photo/Eranga Jayawardena

வரலாற்றை நோக்கினால் சட்ட ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இன, மதக் குழுக்களுக்கு இணக்கமாகவே இலங்கை செயற்பட்டு வருகின்றது. அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 9 இன் கீழ் பௌத்த மதத்திற்கு “முதன்மையான இடம்” அளிக்கப்பட்டாலும், உறுப்புரைகள் 10 மற்றும் 14(1)(உ) ஊடாக மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்திற்கான உரிமை பாதுகாக்கப்படுகின்றது. இலங்கை உச்ச நீதிமன்றம் மத சுதந்திரத்தை முழுமையான உரிமையாக அடையாளம் கண்டுள்ளது (உறுப்புரை 10). மேலும், பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும் கூட அனைவருக்கும் சமத்துவத்தையும் மத சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. மத சுதந்திரத்திற்கு அரசியலமைப்பு உத்தரவாதம் காணப்படுகின்றபோதும், தேசியப் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, பொது சுகாதாரம், ஒழுக்கம் அல்லது மற்றவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் போன்றவை காரணமாக ஒருவர் தனது மதத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமானது (உறுப்புரை 14(1)(உ) பல சட்டக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுகின்றது.

இருப்பினும், நீண்டகாலமாக நிலவிவரும் பல்வேறு போக்குகள் தொடர்ந்தும் மத சுதந்திரத்தைக் குறைத்து மதிப்பிட்டு, சட்டக் கொள்கை, அரச நடவடிக்கை என இரண்டையும் கையாள்கின்றன. சமூகத்தின் பிரச்சினைகளைத் தமது நன்மைக்காகப் பயன்படுத்தும் அரசியல் மற்றும் மத ரீதியான கடும்போக்குவாதக் குழுக்கள் மற்றும் அதிகரித்து வரும் மத உணர்வுகள் போன்றவை அதேயளவு தாக்கம் செலுத்தும் ஏனைய காரணிகளாக உள்ளன. தீவிர தேசியவாத பௌத்த இயக்கங்கள், சுவிசேஷ அமைப்புடன் அடையாளம் காணப்படும் குறிப்பிட்ட கிறிஸ்தவக் குழுக்களின் நடைமுறைகள், தீவிர இஸ்லாமிய மற்றும் இந்து குழுக்கள் மத சுதந்திரத்தையும் பன்மைத்துவத்தையும் குறைத்து மதிப்பிடும் சூழலுக்குக் காரணமாகின்றன. அரச மற்றும் அரசு சாரா பங்காளர்களிடையே வேரூன்றிக் காணப்படும் இத்தகைய போக்குகளின் வடிவங்கள் குறித்த “இலங்கையில் மத சுதந்திரத்தின் நிலைப்பாடு: ஆண்டறிக்கை 2024” என்ற தலைப்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக் கூட்டணியின் அண்மைய அறிக்கையின் முடிவுகளை இக்கட்டுரை சுருக்கமாக முன்வைக்கின்றது. மேலும், இலங்கையில் மத சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கான சூழலை ஆதரிக்கும் அல்லது குறைத்து மதிப்பிடும் சம்பவங்களையும் முன்னேற்றங்களையும் இக்கட்டுரை ஆராய்கின்றது. 2024 முதல் 2025 வரை இடம்பெற்ற முன்னேற்றங்களில் கவனம் செலுத்தும் அதேநேரம் எதிர்காலத்திற்கான கண்ணோட்டத்தையும் தருகின்றது.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மத சுதந்திரத்திற்கு முன்னுரிமை அளித்து, அதன் பாதுகாப்பை நிர்வாகம் மற்றும் கொள்கை முடிவுகளில் ஒருங்கிணைப்பதற்கு முந்தைய நிர்வாகங்களுடன் ஒப்பிடும்போது அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிகின்றது. தீவிரமான குழுக்களால் முன்வைக்கப்படும் தவறான மத விளக்கங்களுக்கு எதிரான ஆலோசனைக் குழுக்களை புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் ஊடாக 2025 அக்டோபரில் அரசாங்கம் நியமித்தது. “நான்கு முக்கிய மதங்கள் பற்றிய திரிவுபடுத்தப்பட்ட மற்றும் தவறாக வழிநடத்தப்படும் கருத்துகளைப் பரப்புவது குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு” பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறான சமீபத்திய முன்னேற்றங்களின் பின்னணியில், தற்போதைய இந்த அரசியல் சூழல் இவ்வாறான விவாதங்களை முன்னெடுப்பதற்குப் பொருத்தமானதாகவும் நேரத்திற்கேற்றதாகவும் உள்ளது என்ற புரிதலுடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

அரசியல் சூழலை மேம்படுத்துதல்

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின்போது பௌத்த மதத்தின் பங்கு குறித்த அரசியல் செய்திகளில் NPP கொண்டிருந்த மாற்று நிலைப்பாடுதான் அதன் மீதான நம்பிக்கை அதிகரிக்கக் காரணமான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். தேர்தலில் ஆதரவைப் பெறுவதற்காக பெரும்பாலும் சிறுபான்மை சமூகங்களின் நலன்களில் கவனம் செலுத்தாமல், மத அடையாளங்களில் பெரிதும் நம்பியிருந்த முந்தைய தேர்தல் பிரச்சாரங்களைப் போலல்லாமல், NPP இன் 2024 பிரச்சாரம் அத்தகைய விமர்சனப் போக்கிலிருந்து விலகிக் காணப்பட்டது. இது அனைவரையும் உள்ளடக்கிய, வரவேற்கத்தக்க அரசியல் கலாச்சாரத்தை நோக்கிய சாதகமான மாற்றத்தைக் குறிக்கின்றது. ஒரு காலத்தில் தேர்தலின்போது வாக்காளர்களைக் கவர்ந்த பிளவை ஏற்படுத்தும் சொற்பிரயோகங்கள் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2024 இல் பெருமளவில் குறைந்து போயிருந்தன.

இந்த மாற்றம் மத சுதந்திரத்திற்கு மிகவும் உகந்த சூழலுக்கான தொனியை அமைக்க உதவியுள்ளதுடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) போன்ற முக்கிய அரச நிறுவனங்கள் சுயாதீனமாகச் செயல்படவும் பயனுள்ள தலையீடுகளை மேற்கொள்ளவும் உதவுகின்றது. HRCSL மத சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்திவருவதுடன் மத சுதந்திரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரச தலையீடுகளையும் கண்காணித்து வருகின்றது. உதாரணமாக, 2024 ஜூன் மாதம் திருகோணமலை சாஹிரா கல்லூரியில் காதுகளை மூடும் வகையில் ஆடை அணிந்திருந்தமை காரணமாக 70 மாணவர்களின் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டதை ஆணைக்குழு விசாரித்தது. கண்காணிப்பாளர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டமை விசாரணையில் தெரியவர முடிவுகளை நிறுத்தி வைக்கும் முடிவு நியாயமற்றது எனத் தெரிவித்தது. மார்ச் 2018 இல் இடம்பெற்ற திகன கலவரம் தொடர்பான விசாரணை குறித்த அறிக்கையையும் 2025 செப்டம்பரில் HRCSL வெளியிட்டது. அந்த நேரத்தில் சமூக ஊடகங்கள் குறிப்பாக/ பேஸ்புக் மூலம் பரப்பப்பட்ட தவறான தகவலும் வெறுப்புப் பேச்சும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வன்முறையைத் தீவிரப்படுத்தியதில் கொண்டிருந்த பங்கினை இந்த அறிக்கை விரிவாகக் குறிப்பிட்டுள்ளது.

சட்டங்கள், கொள்கைகள் மற்றும் மத சுதந்திரம்

நாட்டின் நிர்வாகத்துடன் தொடர்புடைய பல முக்கிய சட்டங்கள் மத சுதந்திரத்தைப் பாதிக்கின்றன அல்லது அதனால் பாதிக்கப்படுகின்றன. அத்துடன், ஏனைய அடிப்படை உரிமைகளிலும் இவை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இத்தாக்கத்தை சட்டம் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது அல்லது அந்தச் சட்டத்தின் விதிகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதில் காணலாம்.

தண்டனைச் சட்டக்கோவை, 2007ஆம் ஆண்டின் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை சட்டம் (ICCPR சட்டம்), 1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA), மற்றும் சமீபத்திய 2024 ஆம் ஆண்டின் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் (OSA) ஆகியவை அத்தகைய சட்டங்களின் ஒரு தொகுப்பாகும். இச்சட்டங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகத் தோன்றினாலும், அவற்றில் உபயோகிக்கப்பட்டுள்ள பரவலான மற்றும் தெளிவற்ற சொற்கள் அவற்றைத் தவறாகப் பயன்படுத்த வழிவகுத்துள்ளன. பெரும்பாலும் சிறுபான்மை சமூகங்களை அநியாயமாகக் குறிவைக்கும் முறையில் அமைகின்றன.

சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையை இலங்கை அங்கீகரித்துடன், தேசியச் சட்டத்தில் இன்னும் அங்கீகரிக்கப்படாத சில ICCPR பிரிவுகளுக்கு உள்நாட்டு சட்டரீதியான அமல்படுத்தலை வழங்கும் நோக்கில் ICCPR சட்டத்தையும் இயற்றியது. தண்டனைச் சட்டக்கோவை மற்றும் ICCPR சட்டத்தில் உள்ள விதிகள் மதத்தை அவமதிப்பதாகக் கருதக்கூடிய வெளிப்பாடுகளைக் குற்றமாக்குவதன் மூலம் மத உணர்வுக்கு சிறப்பு பாதுகாப்பை வழங்குகின்றன என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவை “நிந்தனைக்கு எதிரான நடைமுறைத் தடையை” உருவாக்குவதாக விபரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய கட்டுப்பாடுகளின் பரந்த நோக்கம், தேவை மற்றும் விகிதாசாரத்தின் சர்வதேச அளவுகோல்களைப் பூர்த்திசெய்யாமல் அளவுக்கு மீறிய தணிக்கையை ஏற்படுத்தும் ஆபத்தை விளைவிக்கின்றது. 2024 மே மாதத்தில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ICCPR சட்டத்தின் பிரிவு 3 இன் தவறான பயன்பாட்டைச் சுட்டிக்காட்டியது. திருகோணமலையில் நினைவேந்தல் நிகழ்வொன்றில் ஈடுபட்டதற்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டது மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக அதன் பயன்பாட்டைச் சுட்டிக்காட்டியது. ICCPR சட்டத்தின் தவறான பயன்பாடு குறித்த நிலைப்பாட்டை ஆணைக்குழு மீண்டும் 2025 மே மாதம் வலியுறுத்தியது. மே மாதத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் அமைதியான நினைவேந்தல் நிகழ்வுகளை குற்றமாக்குவதையோ தடுப்பதையோ பொலிஸார் நிறுத்த வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக அவற்றை அரசியலமைப்பு மற்றும் இழப்பீட்டுச் சட்டத்தின் கீழ் தமிழ் சமூகத்திற்குக் கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வ உரிமைகளாக முறையாக அங்கீகரித்து பாதுகாக்க வேண்டும் என்றும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்தது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் OSA ஆகியவை குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பிற்போக்குத்தனமான விதிகளைக் கொண்டிருப்பதாகவும் இன – மதக் குழுக்களைத் தேர்ந்தெடுத்துக் குறிவைப்பதாகவும் நீண்ட காலமாக விமர்சிக்கப்படுகின்றது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கான அரசாங்க உறுதிமொழிகள் இருந்தபோதிலும், அது கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தப்படுவதாக 2025 ஆகஸ்ட் மாதம் ஐ. நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது குறிப்பிட்டார். அதைத் தற்காலிகமாக தடைசெய்யுமாறும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். அதற்கு முன்னர், 2025 ஏப்ரல் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் OSA ஆகிய இரு சட்டங்கள் குறித்து கவலைகளை எழுப்பியிருந்தது. இச்சட்டங்கள் வர்த்தகத்துடன் தொடர்புடைய முடிவுகளில் கவனத்தில் கொள்ளப்படுகின்றன என்பதையும், குறிப்பாக GSP+ வரிச்சலுகை திட்டத்தில் தொடர்ந்து தகுதி பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்திருந்தது. அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, NPP அரசாங்கம் செப்டம்பர் 2025 இல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு நாடாளுமன்றத்திலும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்விலும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தாலும் இதேபோன்ற கேள்விகள் எழுந்துள்ளன. OSA இன் பிரிவு 16 இல் மத உணர்வுகளைச் சீற்றப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு குழுவின் மத நம்பிக்கைகளை அவமதிக்கும் அல்லது அவமதிக்க முயற்சிக்கும் எந்தவொரு தவறான அறிக்கையையும் ஒன்லைனில் வெளியிடுவது குற்றமாக வரையறுக்கப்படுகின்றது. ஆயினும், அந்த நோக்கம் எவ்வாறு நிரூபிக்கப்படும் என்பதற்கான தெளிவான அளவுகோல்களைச் சட்டம் வழங்கவில்லை. அதேபோன்று, பிரிவு 15, தவறான அறிக்கைகள் மூலம் சட்டபூர்வமான மதக் கூட்டங்களுக்கு இடையூறு விளைவிப்பதைக் குற்றமாகக் கருதுகின்றது. இவ்வாறு தெளிவில்லாமல், மிகவும் விரிவாக எழுதப்பட்ட விதிகள், சட்டபூர்வமான கருத்து வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. பிரிவு 16 ஐ ரத்து செய்வது உட்பட சட்டத்தில் திருத்தங்களை NPP அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 2025 இல் பொதுமக்களின் ஆலோசனைக்காக OSA ஐ முன்வைத்துள்ளமை அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைக் குறிக்கின்றது.

பாலின சமத்துவச் சட்டமூலத்தின் சிறப்புத் தீர்மானம் கடந்த ஆண்டு நிகழ்ந்த மற்றொரு முக்கியமான முன்னேற்றம் ஆகும். மத சுதந்திரம் அல்லது நம்பிக்கையை மேம்படுத்துவதாகக் கூறப்படும் சில விதிகள் மற்றும் கொள்கைகள் சில நேரங்களில் கருத்துச் சுதந்திரம் மற்றும் பாலின சமத்துவம் போன்ற பிற உரிமைகளை மீறுவதற்கு எவ்வாறு பங்களித்துள்ளன என்பதை இது நிரூபித்தது. இந்தச் சட்டமூலம் ஏப்ரல் 17, 2024 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சட்டமூலத்தில் மதம் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இது வேகமாக மத சுதந்திரம் குறித்த விவாதங்களின் மையப் புள்ளியாக மாறியது. இது இயற்றப்பட்டால், மதப் பணிகளில் இணைய விரும்புவோரின் சேர்க்கையில் மத நிறுவனங்கள் (சாசனம், மடங்கள், பிக்கு பல்கலைக்கழகங்கள், பிரிவேனாக்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் உட்பட) பாலின அடிப்படையிலான அளவுகோல்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் என்று மனுதாரர்கள் வாதிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பாலினத்திற்கு அப்பாற்பட்டு, ஓரினச்சேர்க்கையைக் குற்றமற்றதாக்குதல் மற்றும் ஒரே பாலினத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்குதல் போன்ற தொடர்புடைய பிரச்சினைகளுக்கும் நீட்டிக்கப்பட்டது. இந்தச் சட்டமூலம் ஏற்கனவேயுள்ள மத போதனைகள் மற்றும் நடைமுறைகளுடன் முரண்படும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இறுதியில், இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் உறுப்புரை 10 (சிந்தனை, மனசாட்சி மற்றும் மத சுதந்திரம்) மற்றும் உறுப்புரை 14(1)(உ) (மதம் அல்லது நம்பிக்கையின் வெளிப்பாடு) ஆகியவற்றை மீறுவதாகக் கூறியது. பௌத்தத்தைப் பொறுத்தவரை, “முதன்மையான இடம்” என்று கூறும் உறுப்புரை 9 ஐ மீறுவதாக நீதிமன்றம் மேலும் கண்டறிந்தது.

தொல்பொருள் பாதுகாப்பிடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சர்ச்சைகள்

அண்மைக் காலங்களில் வவுனியாவில் உள்ள வெடுக்குநாரி மற்றும் முல்லைத்தீவில் உள்ள குருந்தூர்மலை போன்ற மதத் தலங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் உள்ளூர் இந்து சமூகங்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. 2018ஆம் ஆண்டில் இந்த இரண்டு இடங்களும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகக் குறிப்பிடப்பட்டதுடன், அடுத்தடுத்த ஆண்டுகளில் தொல்பொருள் திணைக்களம், இராணுவம் மற்றும் பௌத்தத் துறவிகள் ஆகியோரின் செயல்பாடுகள் இங்கு அதிகரித்தன. தொல்பொருள் கட்டளைச் சட்டம் மற்றும் தொடர்புடைய சட்டங்கள் இது போன்ற சந்தர்ப்பங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்பட்டன. அவை சிறுபான்மை சமூகங்களைக் குறிவைத்து மத சுதந்திரப் பாதுகாப்பைக் குறைத்து மதிப்பிடுகின்றன. வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள காணிகள் அல்லது கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் தொடர்பான பல விதிகள், குறிப்பாக 1940 ஆம் ஆண்டின் 9 ஆம் இல. தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) பிரிவுகள் 6, 8, 18 மற்றும் 31 ஆகியவை இன – தேசியவாத நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுக்க இலக்கு வைக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மார்ச் 2024 இல் வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளில் ஈடுபட முயன்ற பல இந்து பக்தர்கள் மற்றும் பூசாரிகள் கைது செய்யப்பட்டனர். இது அந்த இடத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி, போராட்டங்களுக்கு வழிவகுத்தது. ஜூன் 2025 இல் ஒரு முக்கியமான நீதிமன்றத் தீர்ப்பில், குருந்தூர்மலையைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை முல்லைத்தீவு நீதிமன்றம் விடுவித்தது. வழக்கு விசாரணையின் போது, சர்ச்சைக்குரிய காணி தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமானது என்று அறிவித்து எந்த வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பதை அரசாங்கம் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதன் விளைவாக, விவசாயிகள் மீதான வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டு, அவர்கள் விடுவிக்கப்பட்டனர். பல ஆண்டுகளாக அரசாங்கத்தின் ஆதரவுடன் அந்தப் பகுதியில் தொல்பொருள் தளமாகக் கருதி செயல்பாடுகள் இடம்பெற்று வந்தபோதிலும், சட்டப்பூர்வ அறிவிப்பு இல்லாததால் சர்ச்சைக்குரிய நிலத்தின் குறைந்தபட்சம் ஒரு பகுதிக்கேனும் திணைக்களத்திடம் முறையான உரிமை இல்லை.

இதேபோன்று, அம்பாறையில் உள்ள முள்ளிக்குளம் மலையில் தொல்பொருள் திணைக்களம் 1940ஆம் ஆண்டின் 9ஆம் இல. தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) 15 மற்றும் 16ஆம் பிரிவுகளைப் பயன்படுத்தி நிலத்தை தொல்பொருள் தளமாகக் கோரியது. இதன் மூலம் உள்ளூர் முஸ்லிம் சமூகம் மீண்டும் அப்பகுதியில் விவசாயத்தைத் தொடங்குவதைத் தடுத்தது. தொல்பொருள் கட்டளைச் சட்டத்திற்கு கூடுதலாக நகர்ப்புற மேம்பாட்டுப் பகுதிகளை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கும் 1946ஆம் ஆண்டின் 13ஆம் இல. நகர மற்றும் கிராமிய நிர்மாணக் கட்டளைச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) பிரிவு 6(2) வடக்கு மற்றும் கிழக்கில் புத்த விகாரைகளைக் நிர்மாணிப்பதற்கு உதவும் வகையில் “புனிதப் பகுதிகள்” என்று அறிவிக்கத் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழ்நிலைகளில், இந்த மாகாணங்களில் உள்ள உள்ளூர் நீதிமன்றங்கள், சில சமயங்களில் இத்தகைய இன – தேசியவாத உந்துதல்களைத் தடுக்க முயற்சித்துள்ளன. இருப்பினும், நீதித்துறை அதன் பங்கை நிறைவேற்றினாலும் கூட அமுலாக்கம் நிச்சயமற்றதாகவே உள்ளது. நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவது அரச இயந்திரத்தைப் பொறுத்தது ஆகும். இது பெரும்பாலும் பௌத்த மதகுருமார்கள் மற்றும் இராணுவத்துடன் நெருங்கிய இணக்கத்துடன் செயல்படுகின்றது. இக்குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு அப்பால், 1950ஆம் ஆண்டின் 9ஆம் இல. காணி கையகப்படுத்தல் சட்டம், உயர் பாதுகாப்பு வலயங்களை அறிவிக்க அனுமதிக்கும் அவசரகால விதிமுறைகள், 1979ஆம் ஆண்டின் 23ஆம் இல. மகாவலி அதிகாரசபை சட்டம் மற்றும் 2005ஆம் ஆண்டின் 38ஆம் இல. சுற்றுலாச் சட்டம் போன்ற காணி தொடர்பான சட்டங்களும் இம்முயற்சிகளுக்கு துணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து நிலம் கையகப்படுத்தலுக்கான பொதுவான கட்டமைப்பை உருவாக்குவதுடன், அரசாங்கம் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வகையில் அதிக அதிகாரத்தை வழங்குவதுடன் மக்களுக்கு குறைவான அதிகாரத்தை வழங்கி சமமற்ற நிலையைத் தோற்றுவிக்கின்றது.

இந்த நடவடிக்கை சமூக மட்டத்தில் சாதகமான குழுக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. அங்கு சிறுபான்மை மதக் குழுக்களுக்கு எதிரான விரோதம் பெரும்பாலும் உள்ளூர்வாசிகளால் தூண்டப்பட்டு, மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ அரச அதிகாரிகளால் ஆதரிக்கப்படுகின்றது. சுவிசேஷ மற்றும் சுயாதீன தேவாலயங்கள், அதேபோன்று இந்து சமூகங்கள் அடிக்கடி இலக்கு வைக்கப்படுகின்றன. மத வழிபாட்டுத் தலங்களைப் பதிவு செய்வதைச் சுற்றியுள்ள தெளிவின்மை அதிருப்திக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இலங்கைச் சட்டம் அத்தகைய பதிவைக் கட்டாயப்படுத்தவில்லை என்றாலும், ஒன்றுகூடுவதைத் தடுக்க உள்ளூர் அதிகாரிகள் தெளிவற்ற வரையறுக்கப்பட்ட விதிகளைப் பயன்படுத்தியுள்ளனர். புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள், 2008, 2011 (2012 இல் ரத்து செய்யப்பட்டது) மற்றும் 2022 இல் புதிய மதத் தலங்களை நிர்மாணிப்பதற்கு அமைச்சின் ஒப்புதல் தேவை என்பதை அறிமுகப்படுத்தின. இந்தச் சுற்றறிக்கைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அமுலாக்கம் பெரும்பாலும் கிறிஸ்தவர்களையும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிக்கும் உரிமையையும் கட்டுப்படுத்தியுள்ளது.

இலங்கையில் நிறுவப்பட்ட சபாத் இல்லம் எனப்படும் யூத மத நிலையங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. அவை சர்ச்சையில் சிக்கியிருந்தாலும், அரசாங்கத்தின் பாதுகாப்பால் அவை பயனடைந்துள்ளன. அண்மையில் சுதந்திர பாலஸ்தீன இயக்கத்தின் உறுப்பினர்கள் துன்புறுத்தப்பட்டதுடன் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சூழலில் இது நிகழ்ந்துள்ளது. மேலும் ‘இஸ்ரேலுக்கு எதிரானது’ எனக் கருதப்படும் செயற்பாடுகளில் ஈடுபட்ட பிரஜைகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் இந்து தேசியவாதக் குழுக்களின் செயல்பாடுகள்

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தேசிய அளவில் சிங்கள – பௌத்த தேசியவாத விமர்சனங்கள் குறைந்துள்ள நிலையில், அடிமட்ட அளவில் இந்து கடும்போக்கு குழுக்களின் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதிலும் போராட்டங்களை ஏற்பாடு செய்வதிலும் சிவசேனை மற்றும் ருத்ர சேனா போன்ற அமைப்புகள் தீவிர பங்காற்றியுள்ளன. இக்குழுக்கள் பெரும்பாலும் கட்டாய மதமாற்றம் மற்றும் பசுவதை தொடர்பான பிரச்சினைகளில் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் குறிவைக்கின்றன. இக்குழுக்கள் இந்து வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பில் பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலமும், இந்து இளைஞர்களுடன் கூட்டங்களை நடத்துவதன் மூலமும் உள்ளூர் மக்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றன.

ஊடகங்களில் பிரிவினைவாத விமர்சனங்கள்

கடந்த ஆண்டில் ஊடகங்களில் பிரிவினைவாத விமர்சனம் வீழ்ச்சியின் அறிகுறிகளைக் காட்டியுள்ளது. குறிப்பாகத் தேர்தல்களின்போது இந்நிலைமை காணப்பட்டது. இது இன – மதக் குழுக்களைக் குறிவைக்கும் தீங்கு விளைவிக்கும் விமர்சனம் குறிப்பிடத்தக்களவில் குறைந்திருப்பதைப் பிரதிபலித்தது. இருப்பினும், இந்த ஒட்டுமொத்த சரிவுக்கு மத்தியில், குறிப்பாக முஸ்லிம்களைத் தொடர்ந்து குறிவைக்கும் நிலைப்பாடு தொடர்கின்றது. மதமாற்றம் மூலம் மக்கள் தொகை மாற்றம் குறித்த ஆழமான அச்சங்களைப் ஏற்படுத்தும் கதைகள், இஸ்லாமிய பழக்கவழக்கங்களை அரக்கத்தனமாகச் சித்தரித்தல் மற்றும் இஸ்லாத்தை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்துதல் போன்றவை மூலம் முஸ்லிம் சமூகத்தவர்கள் ஒன்லைனில் அதிகம் குறிவைக்கப்படுகின்றனர். இந்த விமர்சனம், காசா மீதான இஸ்ரேலின் போர் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் நெருக்கடி உள்ளிட்ட உலகளாவிய சம்பவங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை உள்ளூரில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வைத் தூண்டின. 2024ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒன்லைன் விமர்சனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தன. வடக்கு மற்றும் கிழக்கில் வாக்களிக்கும் முறைகள் குறித்த விவாதங்கள் இன – மத அடிப்படையில் வேகமாக வடிவமைக்கப்பட்டன.

மத மாற்றங்கள் குறித்து தொடரும் விவாதம்

இலங்கையில் மதமாற்றம் குறித்து பேச்சிலும் விவாதத்திலும் இரண்டு முக்கியமான கண்ணோட்டங்கள் நீண்டகாலமாக உள்ளன. சமூக மட்டத்தில், மத மாற்றத்திற்கு எதிராக ஆழமாக வேரூன்றிய கலாச்சாரம் மற்றும் சமூகச் சார்பு உள்ளது. குறிப்பாக சில சுயாதீன அல்லது சுவிஷேச கிறிஸ்தவக் குழுக்கள் மதம் மாற்ற முயலும்போது இந்த எதிர்ப்பு மேலும் வலுப்பெறுகின்றது. பிப்ரவரி 2025 இல் NCEASL வெளியிட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் கிறிஸ்தவக் குழுக்களுக்கு எதிராக பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மத மாற்றம் அடிப்படையிலான அச்சங்கள் காரணமாக ஏற்பட்டவை. மதமாற்றம் பெரும்பாலும் கட்டாயப்படுத்தப்பட்டதாகவோ சூழ்ச்சியாகவோ சித்தரிக்கப்படுகின்றது. இது பயத்தை ஏற்படுத்துகின்றது. மத மாற்றம் தொடர்பான இலங்கையின் சட்டப் பாதுகாப்புகளும் தெளிவற்றவை. அரசியலமைப்பின் உறுப்புரை 14(1)(உ)இ தனிப்பட்ட முறையில் அல்லது பொதுவில், தனியாக அல்லது மற்றவர்களுடன் இணைந்து, வழிபாடு, அனுசரிப்பு மற்றும் கற்பித்தலில் ஒருவரின் மதம் அல்லது நம்பிக்கையை “வெளிப்படுத்தும் உரிமையை” உத்தரவாதம் செய்தாலும், இலங்கைச் சட்டம் ஒருவரின் மதம் அல்லது நம்பிக்கையை “பிரச்சாரம் செய்யும் உரிமையை” அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கவில்லை. இருப்பினும், கருவலகஸ்வெவ விதானலேகே ஸ்வர்ண மஞ்சுளா மற்றும் பலர் எதிர் புஷ்பகுமார, கெகிராவா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பலர் (2018) மற்றும் எம். ஏ. எஸ். கல்யாணி டி சில்வா மற்றும் பலர் எதிர் எஸ்.ஜே.பி. சுவாரிஸ் மற்றும் பலர் (2025) ஆகிய சமீபத்திய இரண்டு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பிரச்சாரம் செய்வது குற்றமாகக் கருதப்படமாட்டாது எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

மறுபுறம், சில சுவிசேஷ மற்றும் சுயாதீன கிறிஸ்தவ சமூகங்களிடம் காணப்படும் வற்புறுத்தலான மற்றும் கலாச்சார ரீதியாக உணர்ச்சியற்றதாகக் கருதப்படும் மதமாற்ற நடைமுறைகள் தொடர்ந்து பதற்றங்களைத் தூண்டுகின்றன. சில சந்தர்ப்பங்களில் ஏனைய மதக் குழுக்களுடன் சமூகங்களுக்கு இடையேயான மோதல்களையும் கிறிஸ்தவ சமூகத்திற்குள் சமூகங்களுக்கு உள்ளேயான மோதல்களையும் தூண்டுகின்றன. தேசிய சமாதானப் பேரவையின் 2024 கணக்கெடுப்பின்படி, அதில் பதிலளித்த பௌத்த, இந்து மற்றும் ரோமன் கத்தோலிக்கச் சமூகங்களைச் சேர்ந்தவர்களில் 50% அதிகமானோர் மதமாற்ற நடைமுறைக்கு முதன்மையாக சில கிறிஸ்தவக் குழுக்களே பொறுப்பு என்றும், இந்த நடைமுறை பெரும்பாலும் அவர்களின் மதத்தை எதிர்மறையாகப் பாதிக்கும் விதத்தில் நடைபெறுகின்றது என்றும் அடையாளம் காண்கின்றனர். அவர்களது பிரச்சார முறைகள் சமூகங்களுக்கு இடையேயான மற்றும் சமூகங்களுக்கு உள்ளேயான மோதலுக்கு வழிவகுக்கின்றது என்பதை இது குறிக்கின்றது.

சமீபத்திய ஆய்வுகளும் அதைத் தொடர்ந்துவரும் முன்னேற்றங்களும் நேர்மறையான முன்னேற்றத்தைக் குறிப்பதுடன், தொடர்ந்து வரும் ஆண்டுகளில் மேலும் பல முன்னேற்றங்களுக்கான வாய்ப்பைச் சுட்டிக் காட்டினாலும் பல முக்கியப் பிரச்சினைகளுக்கும் போக்குகளுக்கும் மதச் சமூகங்கள் அரசாங்கம் மற்றும் சிவில் சமூகம் உள்ளிட்ட அனைத்து முக்கிய பங்குதாரர்களின் நெருக்கமான கவனம் தேவைப்படுகின்றது. மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தை மதிக்கும் பன்முகச் சூழலை ஊக்குவிப்பதற்கு சமூக உறுப்பினர்களிடையே நடத்தைகள் மற்றும் அணுகுமுறைகளை வளர்ப்பதில் மதத் தலைவர்கள், மத நிறுவனங்கள் மற்றும் மத அடிப்படையிலான அமைப்புகள் சமூக மட்டத்தில் தனித்துவமான நிலையில் உள்ளன. உதாரணமாக, கலாச்சார ரீதியாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிபாட்டு நடைமுறைகளை ஊக்குவிப்பது சில மதக் குழுக்களின் சர்ச்சைக்குரிய பிரச்சார முறைகள் தொடர்பான கவலைகளைத் தீர்க்க உதவும். கூடுதலாக, ஏனைய மதக் குழுக்களைக் குறிவைக்கும் சித்தாந்தங்களுக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையை ஏற்றுக்கொள்வது சமூகத்தில் கடும்போக்கு மத அமைப்புகளின் எழுச்சியை ஊக்கப்படுத்தாது.

இனங்களுக்கு இடையேயான பதற்றங்களைத் தூண்டிவிட்ட நீண்டகால கவலைகளைத் தீர்க்க NPP விருப்பம் காட்டுவது ஊக்கமளிக்கின்றது. ஆனால், தொடர்ச்சியான சவால்களைத் தீர்க்க இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும். அனைத்து சமூகங்களுக்கும் மத சுதந்திரத்தை வலுப்படுத்துவதற்கு, குறிப்பாக சிறுபான்மையினரைக் குறிவைக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படும் சட்டத்தைச் சீர்திருத்துவதில் முன்முயற்சியுடன் கூடிய நடவடிக்கை தேவைப்படும். இத்தகைய சீர்திருத்தங்கள் மாற்றத்திற்கான உத்வேகத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், பன்மைத்துவத்திற்கு உகந்த நீண்டகால அரசியல் சூழலை உருவாக்கவும் உதவும். சட்டங்களின் பிற்போக்கான பயன்பாடு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடவடிக்கைகளால் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவை ஒரு முக்கியமான முன்னுதாரணத்தைத் தரும். கடந்த கால அரசாங்கங்களின் நடவடிக்கைகளால் பிளவு மற்றும் பாகுபாடு பெரும்பாலும் ஆழமாக வேரூன்றி சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள சமூக மட்டத்தில் இந்த நடவடிக்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியின் மத சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் இந்தப் போக்குகளை மாற்றியமைப்பது அவசியமாகும்.

2024 ஆம் ஆண்டில் இலங்கையில் மத சுதந்திரத்தின் நிலைப்பாடு மற்றும் 2025 ஆம் ஆண்டில் சமூக – அரசியல் முன்னேற்றங்கள் குறித்து இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக் கூட்டணி வெளியிட்ட அறிக்கையை இக்கட்டுரை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

ஜோவிட்டா அருளானந்தம்
யனித்ரா குமரகுரு
அம்மாரா நிலாப்தீன்

https://maatram.org/articles/12431

திருகோணமலை புத்தர்சிலை சர்ச்சையும் எதிரணியின் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் நாட்டமும்   — வீரகத்தி தனபாலசிங்கம் — 

1 week 5 days ago

திருகோணமலை புத்தர்சிலை சர்ச்சையும் எதிரணியின் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் நாட்டமும்

November 24, 2025

திருகோணமலை புத்தர்சிலை சர்ச்சையும் எதிரணியின் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் நாட்டமும்

  — வீரகத்தி தனபாலசிங்கம் — 

திருகோணமலையில் கடந்த வாரம் புத்தர் சிலை தொடர்பாக மூண்ட சர்ச்சையை கையாளுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்  கடைப்பிடித்த அணுகுமுறையும் அதற்கு  எதிரணி அரசியல் கட்சிகள் வெளிக்காட்டிய எதிர்வினையும் இதுகாலவரையில் இனவாத மற்றும் மதவாத அரசியலின் விளைவாக நாடும் மக்களும் அனுபவித்த அவலங்களில் இருந்து தென்னிலங்கை அரசியல் சமுதாயம் எந்தவிதமான படிப்பினையையும் பெறவில்லை என்பதை பிரகாசமாக வெளிக்காட்டியிருக்கிறது.. 

இலங்கையில் இனவாதமும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும்  அனுமதிக்கப்போவதில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு எதிர்நோக்கக்கூடிய சவால்களையும் அரசியலில் மீண்டெழுவதற்கு எதிரணி கட்சிகள் பெரும்பான்மை இனவாத அணிதிரட்லை செய்வதற்கு கிடைக்கக்கூடிய எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தத் தவறப்போவதில்லை என்பதையும்  திருகோணமலை சம்பவம்  எமக்கு உணர்த்தியது. 

திருகோணமலை கடற்கரையோரமாக அமைந்திருக்கும் ஸ்ரீ சம்புத்த போதி ரஜமகா விகாரை வளாகத்தில் நவம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை இரவோடிரவாக வைக்கப்பட்ட புத்தர்சிலையை பிக்குமாரின் எதிர்ப்புக்கு மத்தியில் பொலிசார் அகற்றினர் என்ற போதிலும், மறுநாள் திங்கட்கிழமை நண்பகல் அந்த சிலை அதே இடத்தில் பொலிசாரின் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு பௌத்த மத  நிகழ்வுகள் இடம்பெற்றன. 

இரவில் புத்தர் சிலைக்கு எவராவது சேதம் விளைவித்துவிடக்கூடும் என்ற காரணத்தினாலேயே  பாதுகாப்பு கருதி அதை அகற்றியதாகவும் மீண்டும் அதே இடத்தில் அந்த சிலை வைக்கப்படும் என்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் அன்றைய தினம் முன்கூட்டியே  அறிவித்திருந்தார். 

புத்தர் சிலை அகற்றப்பட்ட வேளையில்  விகாரை வளாகத்தில் இடம்பெற்ற குழப்பநிலையை பயன்படுத்தி இலங்கையில் பௌத்த மதத்துக்கு பேராபத்து ஏற்பட்டிருக்கிறது  என்பதைப் போன்று எதிரணி கட்சிகள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஆவேசமாகக் குரலெழுப்பின. இந்து அல்லது கிறிஸ்துவ சிலை ஒன்று அது வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து பொலிசாரினால் அகற்றப்பட்டிருந்தால் இத்தகைய அமர்க்களம் ஏற்பட்டிருக்குமா என்ற கேள்விக்கான பதிலை நாம் சொல்லித்தான் எவரும் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை.

பாராளுமன்றத்தில் நவம்பர் 18 ஆம் திகதி திருகோணமலை சம்பவங்கள் குறித்து பேசிய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க மத வழிபாட்டுத் தலத்தை அமைப்பது தொடர்பிலானதாக இந்த சர்ச்சை தோன்றுகின்ற போதிலும், வேறு கதையும் அதற்குள் இருப்பதாக கூறினார். சம்பவங்கள் குறித்து பாதுகாப்பு செயலாளரிடம் அறிக்கை ஒன்றைக் கோரியிருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை நியாயப்படுத்துவதற்கு வேறு எந்த விவகாரமும் கிடைக்கவில்லை என்பதால் எதிரணியினர் இனவாதத்தை தூண்டிவிடுவதற்கு புத்தர் சிலை சர்ச்சையை பயன்படுத்துவதில் நாட்டம் காட்டுகிறார்கள் என்றும் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். அவரைப் பொறுத்தவரை, நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்திருக்கும் நிலையில், அந்த சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டது. 

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்று தாங்கள் கருதுகின்ற இடங்களில் மாத்திரமல்ல, பெளத்தர்கள் வசிக்காத இடங்களிலும்  கூட பிக்குமாரில் ஒரு பிரிவினர் புத்தர் சிலைகளை இரவோடிரவாக கொண்டுவந்து வைப்பதும் பிறகு படிப்படியாக அரசாங்கங்களின் அனுசரணையுடன் விகாரைகளை கட்டியெழுப்புவதும்  புதிய ஒரு விடயம் அல்ல. சம்பந்தப்பட்ட பகுதிகளின் மக்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்புகின்ற   வேளைகளில்  அரச இயந்திரம் சட்டவிரோதமானது என்று அந்த மக்கள் குற்றஞ்சாட்டுகின்ற  நடவடிக்கைகளுக்கு  துணைபோவதே நடைமுறையாக இருந்துவருகிறது. 

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட இடத்திலேயே மீண்டும் பொலிசாரின் உதவியுடன் அது  கொண்டு வந்து வைக்கப்பட்ட சம்பவத்தையும்  அதற்கு அரசாங்கத் தரப்பில் அளிக்கப்பட்ட  விளக்கத்தையும் மேற்கூறிய வழமையான நடைமுறையே  தொடருகின்றது என்பதற்கான சான்றாக ஏன் கருதமுடியாது என்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்க தலைவர்களும் மாத்திரமே பதில் கூற வேண்டும். 

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச உட்பட எதிரணி அரசியல்வாதிகள் புத்தர் சிலை சர்ச்சை தொடர்பாக கருத்து வெளியிட்டபோது இலங்கையின் அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முதன்மையான முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பதை  அடிக்கடி  சுட்டிக்காட்டியதை காணக்கூடியதாக இருந்தது. 

ஆனால், அந்த முன்னுரிமையை  பிக்குமாரில் ஒரு பிரிவினர்  அல்லது மதவாத அடிப்படையில் சமூகங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்த முயற்சிக்கும் சக்திகள் தங்களின்  சட்டவிரோதமான அல்லது பௌத்த தர்மத்துக்கு மாறான நடவடிக்கைகளை நியாயப்படுத்த தவறான முறையில் கேடயமாகப்  பயன்படுத்துவதை எவ்வாறு அனுமதிக்க முடியும்?  தாங்கள் எதைச் செய்தாலும் அரசாங்கம் தட்டிக்கேட்க முடியாது என்ற எண்ணத்தை மகாசங்கத்தின் ஒரு கணிசமான பிரிவினர் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெளத்த மதத்துடன் தொடர்புடைய சகல பணிகளையும் முன்னெடுப்பதில் பிக்குமாருக்கு இருக்கும் சுதந்திரத்தில் தலையீடு செய்வதற்கு எவருக்கும் உரிமை கிடையாது என்று கூறும் பிரேமதாச பௌத்த மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணான அடாத்தான நடவடிக்கைகளில் பிக்குமாரில் சில பிரிவினர் ஈடுபட்ட எத்தனை சம்பவங்களை பகிரங்கமாக கண்டனம் செய்தார் என்ற கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை. 

பௌத்த மதத்துக்கு அரசியலமைப்பு வழங்கியிருக்கும்  முன்னுரிமையை சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுக்கக்கூடிய வகையிலான நடவடிக்கைகளுக்கு  பிக்குமாரில் ஒரு பிரிவினர் பயன்படுத்துகிறார்கள் என்பது வெளிப்படையானது. 

கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்முறைகளுக்கு தலைமை தாங்கியவர் என்று அறியப்பட்ட பிரச்சினைக்குரிய  பிக்கு ஒருவர்  புத்தர் சிலை சர்ச்சைக்கு பிறகு  கடந்த வாரம் திருகோணமலைக்கு சென்று சமூகங்களுக்கு இடையில் குரோதங்களை தூண்டும் வகையில் பேசியிருப்பதுடன் அரசாங்கத்துக்கு சாவாலும் விடுத்திருக்கிறார்.  இஸ்லாமிய மதத்தை நிந்தனை செய்யும் விதத்தில் பேசியதாக நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்ட அவர் திருகோணமலை சர்ச்சையில் தன்னை ஈடுபடுத்துவதில் வலிந்து நாட்டம் காட்டுகிறார். 

பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்கள் இத்தகைய பிக்குமாரின் முறைகேடான செயற்பாடுகளை ஆதரிப்பதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அவற்றை அவர்கள்  எதிர்ப்பதுமில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. கெடுதி செய்பவர்களினால் அல்ல, அந்த கெடுதியை தடுக்க எதையும் செய்யாமல் இருப்பவர்களினாலேயே உலகம் ஆபத்தானதாக இருக்கிறது என்ற அறிவியல் மேதை அல்பேர்ட் அயன்ஸ்டீனின் கூற்று நினைவுக்கு வருகிறது. கெட்டவர்களின் வெறுப்பு  பேச்சுக்களுக்கும் செயல்களுக்காகவும் மாத்திரமல்ல, நல்லவர்களின் மௌனத்துக்காகவும் இந்த தலைமுறையில் நாம் பச்சாதபப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று அமெரிக்க கறுப்பின தலைவர் மார்டின் லூதர் கிங் கூறினார்.

சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் இலங்கைக்கு ஒன்றும் புதியதல்ல.  அது இலங்கையின் பெரும்பான்மை இனவாத அரசியலுடன் சமாந்தரமாக வளர்ச்சி கண்ட அருவருக்கத்தக்க ஒரு போக்காகும். ஆனால், சகல சமூகங்களுக்கும் அழிவை ஏற்படுத்திய மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு பின்னரும் கூட, தென்னிலங்கை அரசியல் சமுதாயம் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை ஏற்றுக் கொள்ளத் தவறுவதே  பெரும் கவலைக்குரியதாக இருக்கிறது.

அரசியலில் பெரும் செல்வாக்கைச் செலுத்துவதற்கு பௌத்த மதகுருமார் நாட்டம் காட்டுவதே இலங்கையில் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காணமுடியாமல் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். பிக்குமார் நேரடியாக அரசியலில் ஈடுபட்டு தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள். அவர்களின் செயல்கள் புத்தபெருமானின் அடிப்படைப் போதனைகளுக்கு முரணானதாக இருந்தாலும் கூட, நேரடி அரசியலில் ஈடுபடுவதில் இருந்து அவர்களை தடுக்க மகாநாயக்கர்களினால்  கூட முடியாமல் இருக்கிறது. இலங்கையில் பௌத்தம் நடைமுறையில் ஒரு அரசியல் மதமாக மாற்றப்பட்டுவிட்டது. 

தென்னிலங்கை அரசியல் வரலாற்றில்  பெளத்த மதகுருமாரின் செல்வாக்கு பெருமளவுக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கிறது. இன்று தமிழர்களின் அரசியலிலும் முன்னென்றும் இல்லாத வகையில் மதவாதம் ஊடுருவுகின்ற போக்கை  காணக்கூடியதாக இருக்கிறது. இந்தியாவின் ‘ இந்துத்வா’ அரசியலின் செல்வாக்கே இதற்கு காரணம் எனலாம். சிங்களவர்களாக இருந்தாலென்ன, தமிழர்களாக இருந்தாலென்ன இலங்கைச் சமூகம் அரசியலில் இருந்து மதத்தைப் பிரிக்காவிட்டால் இலங்கைக்கு எதிர்காலம் இல்லை.

ஜனாதிபதி திசநாயக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் வெறுமனே  சகல குடிமக்களையும் சமத்துவமாக நடத்துவதே தங்களின் கொள்கை என்று கூறிக்கொண்டிருந்தால் மாத்திரம் போதாது. கடந்த காலத்தில் அரசாங்கங்கள் கடைப்பிடித்த பாகுபாடான கொள்கைகள் மற்றும் அடக்குமுறைகளின் விளைவாக சிறுபான்மைச் சமூகங்கள் அனுபவிக்கின்ற பிரத்தியேகமான பிரச்சினைகளை  போக்குவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காட்டினால் மாத்திரமே  சமத்துவமான குடிமக்கள் என்ற உணர்வை அந்த மக்கள் மத்தியில்  படிப்படியாக ஏற்படுத்த முடியும். 

சாந்தமே உருவான புத்தர் சிலையை ஆக்கிரமிப்பின் ஒரு கருவியாக சிறுபான்மைச் சமூகங்கள் நோக்குகின்ற துரதிர்ஷ்டவசமான  நிலைவரத்தை மாற்றியமைக்க வேண்டியதும் அரசாங்கம் தீர்வுகாண வேண்டிய அந்த பிரத்தியேகமான பிரச்சினைகளில் ஒன்று. 

அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரங்களுக்கு இனவாதத்தையும் மதவாதத்தையும் பயன்படுத்துவதில் எதிரணி கட்சிகள் கொண்டிருக்கும் நாட்டத்தை திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை வெளிக்காட்டியிருக்கிறது. தங்களது தவறான ஆட்சிமுறையையும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களையும்   மறைப்பதற்காக பெரும்பான்மை இனவாத அணிதிரட்டலை தீவிரமாக முன்னெடுத்த முன்னைய ஆட்சியாளர்கள் பொருளாதார ரீதியில் நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததை நாட்டு மக்கள் மறந்துவிடக்கூடாது. மீண்டும் 

அத்தகைய அணிதிரட்டலை அனுமதித்தால்  தொடர்ந்தும் அதே  பிரச்சினைகளுடனேயே  இலங்கையர்கள் வாழவேண்டியிருக்கும். 

https://arangamnews.com/?p=12455

உலகளவில் 736 மில்லியன் பெண்கள் மீது பாலியல் வன்முறை; பிறப்புறுப்பு சிதைப்பினால் 230 மில்லியனுக்கும் அதிக பெண்கள், சிறுமிகள் பாதிப்பு

1 week 5 days ago

உலகளவில் 736 மில்லியன் பெண்கள் மீது பாலியல் வன்முறை ; பிறப்புறுப்பு சிதைப்பினால்  230 மில்லியனுக்கும் அதிக பெண்கள், சிறுமிகள் பாதிப்பு - பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் அதிர்ச்சித் தகவல்

25 Nov, 2025 | 11:23 AM

image

லகளவில் சுமார் மூன்று பெண்களில் ஒருவர், அல்லது 736 மில்லியன் பெண்கள், பாலியல் வன்முறையை அனுபவித்து வருகின்றனர். உலகில் 230 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகள் பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உட்பட்டுள்ளனர் என்று சமூக செயற்பாட்டாளர் மற்றும் பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் தெரிவித்துள்ளார். 

அத்துடன் அவர், 2023ஆம் ஆண்டின் தரவுகளின்படி, உலகளவில் சுமார் 51,100 பெண்கள் நெருங்கிய துணைவர்களாலோ அல்லது பிற குடும்ப உறுப்பினர்களாலோ வேண்டுமென்றே கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு நவம்பர் 2ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 10ஆம் திகதி வரையான பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்களில் அர்த்தபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் சமூக செயற்பாட்டாளர் மற்றும் பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை தொடர்பில் மேலும் கூறுகையில்,

cfcd29a8-6d20-412c-addd-d5956cf14f89.jpg

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளினால் பொதுவாக மனிதர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பாதிப்படைகின்றனர்.

பால்நிலை  அடிப்படையிலான வன்முறை (GBV) தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும், பேரழிவு தரும் மற்றும்  நீண்ட கால பாதகமான  விளைவுகளைக் கொண்டுள்ளது. இந்த விளைவுகள் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இருக்கலாம். மேலும், கடுமையான சந்தர்ப்பங்களில் மரணத்துக்கும் வழிவகுக்கும்.

பொதுவாக சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட விதிமுறைகள், கட்டுப்பாடுகள், சட்ட திட்டங்கள், அதிகார கட்டமைப்பாட்டுக்கள், சமய சம்பிரதாய நம்பிக்கைகள் மற்றும் பாரபட்சங்கள் இவ்வாறானவை வன்முறைகளுக்கு அடிப்படை காரணங்களாக இருக்கின்றன.

சமூகத்தில் பாதிப்புறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில்  பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

உலகளவில் பால்நிலை  அடிப்படையிலான வன்முறை தொடர்பான சில முக்கிய தரவுகள் குறிப்பிடவேண்டும்.

உலகளவில்  அண்ணளவாக மூன்று பெண்களில் ஒருவர், அல்லது உலகளவில் 736 மில்லியன் பேர் நெருங்கிய துணைவர், துணைவர் அல்லாத  நபரால் அல்லது இருவராலும் உடல் ரீதியான அல்லது பாலியல் வன்முறையை அனுபவித்துள்ளனர். இந்த புள்ளிவிபரம் இரண்டு தசாப்தங்களாக பெரும்பாலும் மாறாமல் உள்ளது.

பெண் கொலை : 2023ஆம் ஆண்டின் தரவுகளின்படி, உலகளவில் சுமார் 51,100 பெண்கள் நெருங்கிய துணைவர்களாலோ அல்லது பிற குடும்ப உறுப்பினர்களாலோ வேண்டுமென்றே கொல்லப்பட்டுள்ளனர். இது சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 5க்கும் மேற்பட்ட பெண்கள் அல்லது சிறுமிகள் தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரால் கொல்லப்படுவதற்கு சமமான தரவாகிறது.

குழந்தை திருமணம்: ஒவ்வோர் ஆண்டும் 18 வயதுக்கு முன்பே 12 மில்லியன் பெண்கள் அல்லது நிமிடத்துக்கு சுமார் 23 பெண்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள் அல்லது திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள். மேலும், இந்த பெண்கள்  வீட்டு வன்முறைக்கு அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.

பெண் பிறப்புறுப்பு சிதைப்பு (FGM) : இன்று உயிருடன் இருக்கும் 230 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகள் பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உட்பட்டுள்ளனர். இது 31 நாடுகளில்  அதிகமாக செய்யப்படுகிறது.

வன்முறையை அனுபவிக்கும் பெண்களில் 40% க்கும் குறைவானவர்களே ஏதாவது சில  வகையான உதவிகளை நாடுகிறார்கள். மிகக் குறைவானவர்களே காவல்துறை அல்லது சுகாதார சேவைகள் போன்ற முறையான நிறுவனங்களை அணுகுகிறார்கள். பெரும்பாலும் பயம் மற்றும் களங்கம் காரணமாக இவர்கள் இதனை யாரிடமும் கூறுவதில்லை.

மோதல், மனிதாபிமான நெருக்கடிகள், காலநிலை மாற்றம் மற்றும் COVID-19 தொற்றுநோய் ஆகியவை பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் அபாயத்தையும் பரவலையும் அதிகப்படுத்தியுள்ளன. இந்த சூழ்நிலைகளில் பெண்கள் அதிக விகிதாசாரத்தில்  பாதிக்கப்படுகின்றனர்.

பால்நிலை அடிப்படையிலான வன்முறை தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் குறிப்பிடத்தக்க செலவுகளை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் ஆண்டு செலவு EUR 366 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விசேட தேவையுடைய பெண்கள், பழங்குடி பெண்கள் மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்கள்  அதிகமாக இத்தகைய வன்முறைக்கு முகங்கொடுக்கின்றனர்.

60%க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்னும் சம்மதத்தின் அடிப்படையில் பாலியல் பலாத்கார  சட்டங்கள் இல்லை. மேலும், உலகின் பெண் சனத்தொகையில் பாதிக்கும் குறைவானவர்கள் சைபர் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டங்களால் பாதுகாக்கப்படுகிறார்கள்.

சமூகத்தின் எல்லா பிரிவினரும் இந்த பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிர்வினை ஆற்றவேண்டியது கட்டாயமாக உள்ளது. விசேடமாக  ஆண்களும் சிறுவர்களும் தீங்கு விளைவிக்கும் ஆணாதிக்க விதிமுறைகள் மற்றும் அமைப்புகளுக்கு சவால்விடுவதன் மூலம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதிலும் முடிவுக்குக் கொண்டுவருவதிலும் சுறுசுறுப்பான மற்றும் பொறுப்புணர்வுள்ள பங்காளிகளாக மாற வேண்டும் என்று நான் எல்லா அன்னைகளுக்கும் சிறுவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

வன்முறை என்பது மனித உரிமைகளை மீறுவதாகும்: பால்நிலை அடிப்படையிலான வன்முறை (GBV) என்பது ஒரு பரவலான மனித உரிமைகள் பிரச்சினை என்றும் அது வாழ்க்கையின் இயற்கையான, இயல்பான அல்லது தவிர்க்க முடியாத பகுதி அல்ல என்றும்; அதை நிறுத்த முடியும், நிறுத்தவேண்டும் என்றும் நாம் நமது நண்பர்கள், சமூக வட்டங்களில், நமது முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் நாம் பிரச்சாரம் செய்வோம் என அழைப்பு விடுக்கின்றேன்.

ஆண்கள் ஒரு அடி முன்வைக்க வேண்டும் : "எல்லா ஆண்களும்" வன்முறையில் ஈடுபடுவதில்லை என்பதை ஒப்புக்கொண்டாலும், பால்நிலை அடிப்படையிலான வன்முறையை  இயல்பாக்கப்பட்ட  நிலையிலேயே உலகில் அனைத்து ஆண்களும் வாழ்கிறார்கள் என்றும், இதனால் இந்த வன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் தீர்வின் ஒரு பகுதியாக இருக்க நம் அனைத்து ஆண்களுக்கும் பொறுப்பு உள்ளது.

நாம் நமக்கும் சமூகத்துக்கும் தீங்கு விளைவிக்கும் ஆண்மைத்துவ சிந்தனைகள், எண்ணக்கருக்கள், நம்பிக்கைகளுக்கு சவால் செய்வோம் : ஆண்மைத்துவம் என்பதே  வன்முறை, ஆதிக்கம் செலுத்தும் மற்றும் கட்டுப்படுத்தும் வரையறைகளை  கொண்டிருப்பதுதான்  என்ற விடயங்களை விமர்சன ரீதியாக ஆராய்ந்து நிராகரித்து, அதற்கு பதிலாக கவனிப்பு, இரக்கம் மற்றும் ஒத்துழைப்பு போன்ற மதிப்புகளைத் தழுவ (உள்வாங்க)வேண்டியதன் அவசியம்  நமது செய்தியின் மையக்கூறு ஆகும்.

பெண்ணிய இயக்கங்களை, சிந்தனைகளை  ஆதரிப்போம் : ஆண்களும் சிறுவர்களும் பாலியல் அடிப்படையிலான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டத்தை வழிநடத்தும் பெண்ணிய அமைப்புகள் மற்றும் பெண்ணிய இயக்கங்களின் பொறுப்புள்ள பங்காளியாக இருக்க நாம் நமது ஆண் நண்பர்கள் மற்றும் பங்காளர்களுடனான  உரையாடலை  ஊக்குவிப்போம்.

அனைத்து மட்டங்களிலும் செயற்படுவோம் : நாம் எம்முடன் தொடர்புபட்ட  தனிநபர், சமூகம் மற்றும் அமைப்பு ரீதியான எல்லா மட்டங்களிலும்  நடவடிக்கை எடுக்க முன்வருவோம்.  இதில்  பாலியல் ரீதியிலான வன்முறைகளில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களுக்கு நீதியை உறுதி செய்யும் மற்றும் வன்முறையின் மூல காரணங்களை நிவர்த்தி செய்யும் வலுவான சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நிறுவனங்களை ஆதரித்து வாதாடலும் அடங்கும்.

பார்த்தும் பாராதிருக்கும், கேட்டும் கேளாதிருக்கும் மௌனத்தைக் கலைப்போம் : துஷ்பிரயோகத்திற்கு எதிராகப் பேசவும், துஷ்பிரயோகம் செய்பவர்களை நிராகரிக்கவும், புகாரளிக்கவும், வன்முறையைத் தவிர்க்கவோ அல்லது சாக்குப்போக்கு சொல்லவோ கூடாது என்று நாம் நமது ஆண் சகாக்கள் மற்றும் நண்பர்களை ஊக்குவிப்போம். இதனூடாக நாம் ஒரு அடி எடுத்து வைத்து பால்நிலை அடிப்படையிலான வன்முறையை முடிவுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/231371

அமைதியை தவிர வேறு வழியில்லை - லக்ஸ்மன்

1 week 6 days ago

அமைதியை தவிர வேறு வழியில்லை

லக்ஸ்மன்

இனவாதமும் பௌத்த மேலாதிக்கமுமே ஆரம்பத்திலிருந்து இலங்கையின் இன
முரண்பாடுகளுக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கும் மூல காரணம் என்பது
எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்ததே. இருந்தாலும் அதனை வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதற்கு அவர்களுக்கும் 
துணிச்சல் இல்லை.

அதனாலேயே சுதந்திரமடைந்து 80 வருடங்களாகின்ற போதிலும், நிம்மதியற்ற இலங்கையே இருந்து வருகிறது.கடந்த வாரத்தில் உருவான திருமலை புத்தர் சிலை விவகாரத்தில் கருத்துவெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “பிக்குகளைக் கொண்டே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தமிழ் மக்களுக்கெதிராக அரசியல் செய்தார்.

திருகோணமலைப் பகுதியில் பிரதிஸ்ட்டை செய்யப்பட்ட புத்தர் சிலை
அகற்றப்பட்டமை தேசியப் பிரச்சினை ஆகவே சிலையை அதே இதத்தில்
வைக்கவேண்டும்” என்று தெரிவித்திருந்தார். 

இந்தக் கருத்தைத் தவறான கருத்தாகச் சுட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர், தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என்று கூறியிருந்தார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி
அரசாங்கத்தின் “இந்த நாட்டில் இனிமேலும் இன, மத வாதங்களுக்கு இடமில்லை. இனவாதிகளை சட்டம் சும்மா விடமாட்டாது.

இருக்கின்ற சட்டங்கள் போதாது என்றால் மேலும் சட்டங்களைக் கொண்டு வந்து இனவாதிகளை அடக்குவோம்” என்ற கருத்துக்கு சஜித்தின் கருத்து நேர் எதிரானது. திருகோணமலை புத்தர் சிலை விவகாரமானது தங்களால் சரியாகக் கையாளப்பட்டதாகவும் இனவாதிகளின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாகவும் தற்போது கதைகள் உலாவ விடப்படுகின்றன. 

ஆனால், யார் முயற்சி செய்தாலும் அதன் பலாபலன் தமக்கே கிடைக்க வேண்டும் என்கிற முறைமையைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கையாண்டிருப்பதையே காணமுடிகிறது. 

வடக்கு கிழக்கானது தமது பாரம்பரிய தாயகம் என்று சொல்கின்ற தமிழர்களின் பிரதேசத்துக்குள்ளேயே இருக்கின்ற திருகோணமலையில் இந்த அரசாங்கத்தின் காலத்துக்குள் மாத்திரமல்ல கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களிலும் புத்தர் சிலைகள் பல முளைத்ததும் விகாரைகள் கட்டப்பட்டதும் நடைபெற்றே இருக்கிறது. ஆனால், அவற்றினை மக்கள் விடுதலை முன்னணி எதிர்த்ததில்லை.

அதே நேரத்தில், இந்தச் சிலை விவகாரத்தினைப் பார்த்தால், உள்ளுராட்சிச் சபைகள் அதிகாரத்தில் இருக்கின்ற வேளையில் திருகோணமலை நகர 
சபையின் எல்லைக்குள் இந்தச் சிலை அனுமதியின்றி நிறுவப்பட்டிருக்கிறது.
சட்டத்திற்கு முரணான நடவடிக்கை உள்ளூர் அரசியல்வாதிகள், பொலிஸாரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டபோது  புத்தர் சிலை இரவோடிரவாக அகற்றப்பட்டிருக்கிறது.

அதனை அறிந்த தமிழ் மக்கள் சிறிது மகிழ்ச்சியடைந்தனர்.  அந்த மகிழ்ச்சி திருப்தியாக மாற்றமடைவதற்கு முன்னரே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால பாதுகாப்பு காரணங்களுக்காகவே புத்தர் சிலை அகற்றப்பட்டது. அகற்றியவர்களால் மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்ததும் ஏமாற்றமாகிப் போனது. அவ்வாறானால் இப்போது அச்சிலை சட்டரீதியாகநிறுவப்பட்டிருப்பதாகவே கொள்ளலாம்.

அதே நேரத்தில், புத்தர் சிலை விடயத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்குத் தொடர்பில்லை என்று திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிவர்த்தன விகாரையின் விகாராதிபதி கல்யாண வங்ச திஸ்ஸ தேரர் தெரிவித்திருந்தார்.

இந்தச் சிலை விவகாரத்தில் தமிழ் மக்கள் அக்கறையில்லாமல் இருக்கின்ற வேளையிலும் கூட அவர்களை இதற்குள் இழுத்துவிடும் செயற்பாடு நடைபெற்றிருக்கிறது என்பதனை இது காட்டுகிறது. அதே நேரத்தில், தமிழ் மக்களிடம் இருக்கின்ற ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்துவிட்டோம் அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்கிற அசட்டை மனோநிலை இந்த விடயத்தில் தமிழ் மக்களின் கவனக் குறைவுக்குக் காரணமாக இருக்கலாம்.

அதற்கு ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அல்லது ஜனாதிபதியின் கடந்த கால வார்த்தைகள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக இருக்கலாம். ஆனால் அகற்றப்பட்ட சிலை மீண்டும் சட்ட ரீதியாகவே நிறுவப்பட்டமையானது சிறுபான்மை மக்கள் மத்தியில் கவலையையே ஏற்படுத்தியிருக்கிறது. 

பொலிசாரால் அகற்றப்பட்ட அந்த சிலை  அரசாங்க ஆசீர்வாதத்துடன் மீண்டும் அங்கு நிறுவப்பட்டமையானது எதனையும் சட்டரீதியாகச் செய்யுங்கள் என்று ஒரு தகவலை இனவாதிகளுக்குக்கொடுத்திருக்கிறது எனலாம். எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாசா  அரசியலமைப்பின் இரண்டாவது சரத்தைச் சுட்டிக்காட்டிப் பேசுகிறார். இனவாதம், மதவாதம் இனி இல்லை என்று சொன்ன தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர் பாதுகாப்பு காரணங்களுக்காகவே சிலை அகற்றப்பட்டதாகக் கூறி அதனை மீண்டும் நிறுவச் செய்கிறார்.  

இது சஜித்தின் கருத்தை ஆதரித்து ஏற்றுக் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது.
மற்றொருவகையில் பார்த்தால், சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு அரசாங்கம் அடிபணிந்தே சிலையை மீண்டும் நிறுவியிருக்கிறது என்று கொள்ளமுடியும். அதே நேரத்தில் அரசாங்கத்தின் கொள்கை தோற்றுவிட்டது.

இனவாதிகள் வெற்றிபெற்றிருக்கிறார் என்றும் கொள்ள முடிகிறது. மாறாக, சட்டரீதியற்ற முறையில் நிறுவப்பட்ட சிலையை பொலிஸார் அகற்றினர்.

அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவேண்டிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் வாதாடியிருந்தால் அரசாங்கம் சொன்னதையே செய்கிறது என்று கொள்ள முடியும். ஆனால், நடைபெற்றிருப்பதோ வேறொன்று. 

அத்துடன், மகிந்த கூட்டணியுடன் தொடர்புடையதே இந்த புத்தர் சிலை. அவர்களுடைய தரப்பினரே இந்தக் காரியத்தை நடத்தினர். பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஏற்பாட்டில் நுகேகொடவில் நடைபெறவிருந்த பேரணிக்கு ஆதரவு திரட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அந்தவகையில், எதிர்க்கட்சிகளின் இன, மதவாத சதி அரசியல் இது என்று 
கூறும் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் சரியானதா என்ற கேள்வி சிறுபான்மை மக்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது.

கடந்த காலத்தில் இனவாத அரசியலையே செய்து கொண்டிருந்த ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தியாகத் தன்னை மாற்றிக்கொண்டபோது, முற்று முழுதாக மாறி விட்டது. என்று மனோநிலையை முழுமையாக மாற்றிக்கொள்ள முனைகின்ற தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களும், தமிழ் மக்களின் உரிமை பற்றிச் சிந்திக்கின்ற சிறுதொகைச் சிங்கள மக்களும் இதிலிருந்தேனும் பாடம் 
கற்றுக்கொள்ள வேண்டும். 

அதே நேரத்தில், ஒரு தலைமையின் கீழ் ஒரு கட்டளையாளரின் கீழ் மாத்திரமே தேசிய மக்கள் சக்தி இயங்க, செயற்பட வேண்டும் என்கிற நெறிமுறைக் கட்டுப்பாடுகள் அரசாங்கத்துக்குள் இருக்கிறதா? என்கிற கேள்வியை  அவர்கள் கேட்டுக் கொள்ளவும் வேண்டும்.

அவ்வாறானால், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ள இடதுசாரிச் சிந்தனையாளர்களாக தம்மைக் காட்டிக்கொள்ள முனைகின்ற அரசாங்கம் பௌத்த மேலாத்திக்க வாதத்துக்குள் இருந்து வெளியில் வந்ததாக அறிவித்துக் கொள்வதற்குக் கிடைத்த வாய்ப்பினை தவறவிட்டிருக்கிறது, வீணடித்து விட்டது.

அவ்வாறானால், அது அரசாங்கத்தின் இயலாமையால் நடைபெற்றதா?, பலவீனமானதாக அரசாங்கம் இருக்கிறதா? என்பதே இப்போது ஆராயப்பட வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரையில் பௌத்த 
தேசியவாதம், தமிழ்த் தேசியவாதம், இஸ்லாமியத் தேசியவாதம் என தங்கள் தங்கள் நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்ற சமூகங்கள் ஒவ்வொரு இனத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடவே செய்கின்றனர்.

ஆனால், சிங்களவர்களை அனுசரிக்கின்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால் நாட்டில் வாழ முடியும் தங்களது இனத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்ற கொள்கையை எடுத்துக் கொள்வதில் தமிழர்களுக்கு மனோநிலை இடம் கொடுப்பதில்லை.

இவ்வாறான நிலையில்தான் தங்களது தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்த கொண்டிருக்கின்ற சூழலை உணர்ந்து வெளிப்படுத்தப்பட்ட தோரணைகளைக் கண்ணுற்று தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருந்தனர். எது எவ்வாறானாலும், தமிழ் மக்கள் தங்களது இந்த முடிவினைத் தவறென்று எடுத்துக் கொள்வார்களா?, அப்படியே விட்டுவிடுவோம் என்று கொள்வார்களா? என்பது காலத்தின் கையில் விடப்பட்டதே.

இருந்தாலும், வடக்குக் கிழக்கில் நடைபெற்ற இனப் பரம்பல் குறைப்பு நடவடிக்கைகள், சிங்கள மயமாக்கல் குடியேற்றங்கள், பௌத்த மேலாதிக்க செயற்பாடுகள், தொல்பொருள் ஆதிக்கங்கள் நிறுத்தப்படப் போவதில்லை 
என்பதனை மீண்டும் ஒருமுறை திடமாக உறுதிப்படுத்திய சம்பவமாகத் திருமலை சிலை நிறுவலைக் கொள்ளமுடியும் என்பதே நிச்சயம்.

ஆனாலும், ஆயுதத்தை ஆயுதத்தால் அணுகுகின்ற, இனவாதத்தை, இனவாதத்தால் அணுகுகின்ற நிலைப்பாடுகள் வலுத்துவருகின்ற  இன்றைய சூழலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு வேறுவழியுமில்லை என்று அமைதியடைந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

புத்தர் திருகோணமலையின் கடற்கரையோரப் பாதுகாப்பு வலயத்தில் தற்காலிகமாகக் குடியேற்றப்படவில்லை அவர் நிரந்தரமாகவே அமர்த்தப்பட்டார். அங்கு விரைவில் விகாரையும் அமையும் என்பது உண்மையானாலும், தமிழர்களைப் பொறுத்தமட்டில். இப்போது போன்று அப்போதும் அமைதியாகவே இருப்பர்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அமைதியை-தவிர-வேறு-வழியில்லை/91-368414

அரசும் அரசாங்கமும்

2 weeks ago

அரசும் அரசாங்கமும்

sudumanal

budha.jpg?w=1024

அரசாங்கம் (government), என்பதும் அரசு (state) என்பதும் ஒன்றல்ல. தமிழ் ஊடகங்கள் அதை மாத்தி மாத்திப் பாவிப்பதால் பலரும் குழப்பமடைகிறார்கள். அரசின் நிகழ்ச்சி நிரலை மக்களிடம் கொண்டுசென்று செயற்படுத்தும் முக்கியமான நிர்வாக அலகுதான் அரசாங்கம். அரசாங்கத்துக்கும் அதன் தலைவர் அல்லது ஜனாதிபதிக்கும் அதிகாரங்கள் இருக்கிறதுதான். அவர்களுக்கான பலமாக அரசியல் யாப்பும் இருக்கிறது. அதன் எல்லைக்குள் அவர்கள் செயற்படுகிறபோது எந்தச் சிக்கலும் அரசு(state) க்கு இருப்பதில்லை. மக்கள் எழுச்சியும்கூட அப்படித்தான் கையாளப்படுகிறது.

அரசின் இனவாதத்தை செவ்வனே செயற்படுத்திய ராஜபக்ச பரம்பரையை ஆட்டங்காணச் செய்த காலிமுகத் திடல் போராட்டத்தின் போது ராஜபக்சக்களை கைவிட அரசு தயாராக இருந்தது. புதிதாக அந்த இடத்தை நிரப்ப அரசியல்வாதிகள் உண்டு என அரசுக்குத் தெரியும். அரசமாளிகையை முற்றுகையிட்டு உள்ளே புகுந்து விளையாடுற எல்லைவரை -தனது இராணுவத்தை வாபஸ் பெறச் செய்து- போராட்டக்காரரை அனுமதித்தது. தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்திருந்து அந்தக் காட்சிகளை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதே போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தினுள் புக முயற்சித்த நேரத்தில், அந்த வன்முறை இயந்திரங்கள் கடுமையான தடுப்புகளைப் போட்டு வீரியமாக எதிர்கொண்டன. அதையும் உடைத்து அன்று போராட்டக்காரர் பாராளுமன்றத்தினுள் உள்நுழைந்திருந்தால் ஒரு படுகொலையோடு அந்தப் போராட்டம் முடிவடைந்திருக்கும் சாத்தியமே இருந்தது.

அரசாங்கங்கங்கள் தேர்தலின் மூலம் மாறலாம். அரசு கட்டமைப்பு அரசாங்க மாற்றத்தோடு சேர்ந்து மாறாது. அது தனது தொடர்ச்சியை பேணியபடி இருக்கும். அரசு என்பது புலப்படும் மற்றும் புலப்படாத (visible & invisible) கட்டமைப்பைக் கொண்டது. அதன் வன்முறை இயந்திரங்களான இராணும் பொலிஸ், உளவுப்படை, நீதிமன்றம் போன்றவை புலப்படும் நிலையில் உள்ளவை. அரசின்; கருத்தியல் என்பது புலப்படாத நிலையில் இருப்பது. இந்த நிறுவனங்களில் பதவி மாற்றங்களை அரசாங்கம் நிகழ்த்தலாம். இந்த சில்லறை மாற்றங்கள் அரச கட்டுமானத்தையோ அதன் கருத்தியலையோ மாற்றாது. இலங்கையில் எல்லா அரசாங்கங்களும் அரச கட்டுமானத்தைப் போலவே அரச கருத்தியலையும் கையாள்வதில் இதுவரை பிசகின்றி சேர்ந்தே நடந்திருக்கின்றன.

இந்த முட்டுச் சந்தியில்தான் என்.பி.பி அரசாங்கமும் விடப்பட்டிருக்கிறது. இதுவரையான அரசாங்கங்கள் இனவாதத்தைப் பேசிப் பேசியே ஆட்சியை அமைக்க இலகுவான வழியாக அதைத் தேர்ந்தெடுத்தார்கள். அரச கட்டுமானத்தின் கருத்தியல் பௌத்த மேலாதிக்கமாக கண்ணுக்குப் புலப்படாத அதிகாரத்துடன் செயற்பட்டு வருகிறது. ஓர் அரசின் மிக முக்கிய அங்கங்கள் மக்கள் திரளும், நிலமும், கருத்தியல் நிறுவனங்களும், வன்முறை இயந்திரங்களும் ஆகும். இவை எல்லாவற்றையும் நிர்வகிக்கும் நிறுவனமாக அரசாங்கம் இருக்கிறது என்றபோதும், அரசாங்கமானது அரசின் அதிகாரத்தை தடாலடியாக மீறிச் செயற்படுவது என்பது இலகுவானதல்ல.

அரசு தனது மக்கள் திரளை ஒன்றிணைத்து இந்த மீறல்களை சுலபமாக எதிர்கொள்ள கருத்தியல் ஆயுதத்தை பயன்படுத்தும். இலங்கையைப் பொறுத்தவரை பெரும்பான்மையானவரை அதாவது சிங்கள மக்களை மொழி மற்றும் (பௌத்த) மத அடிப்படையில் ஒன்றிணைக்க இலகுவாக இருக்கிறது. சிங்கள மக்களில் மிகப் பெரும்பாலானோரும் பௌத்த மதத்தை கடைப்பிடிப்பது இன்னும் அதிகார சக்திகளுக்கு இலகுவாகப் போயிருக்கிறது. எனவே இனவாதம் என்பது மொழி, இனம் என்ற இரண்டு தளங்களிலும் செழிப்பாக இருக்கிறது. மொழியைப் பொறுத்தவரை “இலங்கையில் மட்டுமே சிங்கள மொழி இருக்கிறது. தமிழ் அப்படியல்ல. இந்தியாவில் பல கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். எனவே சிங்கள மொழியைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை எமக்கு உண்டு” என கிளம்ப ஒரு கருத்தியல் தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இலகுவாக மாறா நிலையிலுள்ள அரச கட்டுமானத்தை மாறும் நிலையிலுள்ள அரசாங்கங்கள் கையாள்வதற்கு அரசியல் யாப்புத்தான் ஒரு பாதையை திறந்து வைத்திருக்கிறது. இந்த அணுகுமுறைக்கு மக்கள் நலன்மேல் அக்கறையுடைய ஓர் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தோடு தன்னை முதலில் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. இன்றைய என்பிபி அரசாங்கம் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஆனால் என்பிபி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்தும், அரசியல் சட்டத்தில் கைவைக்க தயங்குவதற்கான ஒரே காரணம் அரச வடிவத்தின் சிங்கள பௌத்த மேலாதிக்க கருத்தியல் வடிவம்தான். நீருக்குள் இறங்காமல் நீச்சல் பழக முடியாது. காலம் தேவைப்படலாம். முயற்சி அதைவிட முக்கியம் என்பதை என்பிபி அரசாங்கத்துக்கு சொல்லிவைக்கலாம்.

70 வருட இனவாத கருத்தியலில் கட்டப்பட்டு தொடர்ச்சியுறும் அரசாங்க பாரம்பரியத்திலிருந்து, தாம் சொல்வதுபோல தம்மை என்பிபி யினர் எவ்வாறு முறித்துக் கொள்ளப் போகிறார்கள். இதை அவர்கள் நேர்மையாக முன்வைக்கும் பட்சத்தில், அது அவர்களிடமிருந்து செயல் வடிவத்தைக் கோருகிறது. இனவாதமற்ற, மதவாதமற்ற ஓர் நாட்டை கட்டியமைப்போம் என்ற அவர்களின் குரல் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்தார்கள். இந்தக் குரலையும் மேவிய என்பிபி யின் குரலானது ஊழலையும் போதைவலையமைப்பையும் தகர்த்து இல்லாமலாக்குவோம் என்பது. அதுவே இன்று நடைமுறையில் பரபரப்பாக செயற்படுகிறது. இனவாத ஒழிப்புக்கான நடைமுறையல்ல.

அதிகாரப் பகிர்வு என்பது பற்றி பேசவே தயங்குகிற சூழல் அவர்களது. “சட்டம் எல்லோருக்கும் பொதுவானது, எல்லோரும் சம உரிமை கொண்ட மக்கள், எல்லா பிரதேசங்களும் சமமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்” என்றெல்லாம் பொதுமையாகப் பேசுவது அரச இனவாதக் கட்டமைப்புக்கோ அதன் கருத்தியல் நிறுவனங்களுக்கோ எந்த அச்சத்தையும் விளைவிக்காது. இவற்றை நடைமுறைப் படுத்துகிறபோது தான், அவர்கள் சட்டையைக் கொழுவிக் கொண்டு களமாடப் புறப்படுவார்கள்.

உண்மையில் என்பிபி தான் பேசுபவற்றை நடைமுறையாக்க தயாராகுமானால், சிங்கள முற்போக்கு சக்திகளோடு தமிழ் முஸ்லிம் மலையக மக்களும் அதற்கு உந்துதலாகவும் ஆதரவாகவும் செயற்பட வேண்டும். அல்லது அரசாங்கத்தை படிப்படியாக இனவாதத்துக்கு எதிரான செயல் வடிவத்துள் தள்ள அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை எதிர்நிலையில் நின்று செய்வது சாத்தியமில்லை. வெளியில் அரசாங்கத்தை மீண்டும் இனவாத அலகால் கௌவிப் பிடிக்க அலையும் வல்லூறுகள் இந்த 70 வருடமும் மாறிமாறி ஆட்சி நடத்திய இனவாதிகள் என்பதை கவனம் கொள்ள வேண்டும். இதற்கான பக்குவமோ, முதிர்ச்சியோ, அரசியல் சிந்தனையோ, அணுகுமுறையோ தமிழ் முஸ்லிம் மலையக கட்சிகளுக்குக் கிடையாது. அவர்களுக்கு அரசியல் என்பது பழக்க தோசம். அது பேரினவாதத்தை எதிர்க்கும் சிறுபான்மை (எதிர்)இனவாத மனக்கட்டமைப்பிலிருந்து எழுவது. அதுவே திருகோணமலை புத்தர் விவகாரத்தில் என்பிபி தமிழ் எம்பிக்களை பதவி விலக வேண்டும் என பழுத்த தமிழ் அரசியல்வாதியான சுமந்திரனை சொல்ல வைக்கிறது. இனப்படுகொலையை செயற்படுத்திய மகிந்த பரம்பரையோடு ஒத்துழைக்கக் கூட தயாராக இருக்கிறார்கள் அவர்கள். நாட்டின் இனவாத பிரச்சினையை இவர்கள் அணுகுகிற அழகு இது.

எனவே என்பிபி அரசாங்கம் அதிகாரப் பகிர்வு குறித்தான விடயத்துக்கு மட்டுமல்ல, இந்த பௌாத்த மேலாதிக்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் அரசியல்யாப்பில் திருத்தங்களை கொண்டுவர முயல வேண்டும். இவ்வாறான பிரச்சினைகளை சட்ட நுணுக்கங்கள் மூலம் வரையறுக்க வேண்டும். உதாரணமாக சுவிஸில்ஒரு ஊரில் ஒரு பாதையை போட அல்லது பாலத்தைக் கட்டக் கூட அந்த பிரதேச மக்களிடம் வாக்கெடுப்பின் மூலம் அபிப்பிராயம் பெறப்படுகிறது. அதை அங்கீகரிக்கவோ மறுக்கவோ அந்த மக்களுக்கு உரிமை இருக்கிறது. அதை மீறி அரசாங்கம் செயற்படாது. இவ்வாறான நடைமுறை மூலம் காணி ஆக்கிரமிப்புகள் புத்தர் பயிரிடல் என்பவற்றை -இன மத எல்லையைத் தாண்டி- சட்ட ரீதியில் அணுக முடியும்.

இதற்கு மதச் சார்பின்மையான அரசாங்கமாக இருத்தல் முக்கியமானது. மதம் எளிய மனிதர்களுக்கான ஆத்ம பலத்தைத் தரலாம். ஆனால் அதுவே ஆன்மீக நிலையிலிருந்து அதிகார நிலைக்கு மாறுகிறபோது பெரும் ஆபத்து நிகழ்கிறது. அதே எளிய மக்களை அதன் கருத்தியலால் ஒன்றிணைத்து மனிதவிரோத செயல்களை செய்ய முடிகிறது. இந்தியாவில் சங்கிகளும், இலங்கை மியன்மார் போன்ற இடங்களில் காவிகளையும் இந்த போர்க்களங்களில் காண முடியும். எனவே அரச கட்டமைப்பின் கருத்தியலாக இருக்கும் பௌத்த மேலாதிக்க கருத்தியலை என்பிபி அரசாங்கள் அரசியல் சட்ட திருத்தங்களினூடாக அணுக தயாராக வேண்டும். அதற்கு என்பிபி தயாராக இருக்கிறதா என்ற கேள்வி முக்கியமனானது. தயாராகுமெனின், அதற்கு பக்கபலமாக தமிழ் முஸ்லிம் மலையக அரசியல்வாதிகளும் மக்களும், சிங்கள முற்போக்குவாதிகளும் செயற்பட வேண்டும். இச் சந்தர்ப்பத்தை அவர்கள் தவறவிடக் கூடாது.

பலஸ்தீனப் பிரச்சினை குறித்து மட்டுமல்ல, ட்றம்பின் வரிப்போர், நெத்தன்யாகுவின் மனிதவிரோதம் என்பவற்றுக்கு எதிராக உலக நாடுகளில் பலவற்றிலும் இளஞ் சந்ததி சளைக்காத போராட்டங்களையும் குரலையும் எழுப்பி வருகிறது. அவளவுக்கு அரசியல் விழிப்புணர்ச்சி இளைஞர் சமூகத்திடம் மேலோங்குகிற உலக சூழல் தோன்றியிருக்கிறது. ஆனால் இவளவு காலமாக தொடர்ச்சியுறும் மக்கள் விரோத இனவாத செயற்பாடுகளை எதிர்க்க சிங்கள சமூகம் உட்பட எல்லா இன இளஞ் சந்ததிகளும் தயாராக இருக்கிறதா? இருக்குமெனின், இலங்கையில் இனவாதத்தை பலவீனமாக்கும் மாற்றத்தை நிகழ்த்த அரசாங்கங்கள் மறுபுறத்தில் நிர்ப்பந்திக்கப்படும் இயங்குநிலை உருவாகும். இதில் தமிழ் முஸ்லிம் மலையக மக்களுக்கும் பங்கு உண்டு என்பது மட்டுமல்ல முக்கியமாக, இளஞ் சந்ததியிடம் சிந்தனை மாற்றம் செழுமையுறுவதும் அவசியமானது.

சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இனவாதத்தால் கட்டமைக்கப்பட்ட அரச வடிவமும் அதை செவ்வனே செய்து இனவாத்தை வளர்த்துவிட்ட அரசாங்கங்களும் என தொடர்ந்த இரு கட்சிகளின் மேலாதிக்க பாரம்பரியத்துக்கு வெளியே மூன்றாவது கட்சியாக ஜேவிபி யை மேலே கொணர்ந்ததும் இளஞ் சந்ததியின் காலிமுகத் திடல் போராட்டம்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவ்வாறு மேல்நிலைக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு வரலாற்று முறிவை பழங்கஞ்சி அரசியலால் அணுக முடியாது. இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முற்படும் இனவாத கும்பலோடு கூட்டுச் சேரும் அரசியல் களங்கள் நிராகரிக்கப்பட வேண்டியது.

https://sudumanal.com/2025/11/18/அரசும்-அரசாங்கமும்/#more-7497

நீரில் மிதக்கும் பனிக்கட்டி? - நிலாந்தன்

2 weeks ago

நீரில் மிதக்கும் பனிக்கட்டி? - நிலாந்தன்

G6EJEbsWQAAbdliccccc-1024x683.jpg

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் மாமியார், கடந்த புதன்கிழமை,கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் இயற்கை எய்தினார். ஆனந்த சுதாகரனின் பிரிவினால் நோயாளியாகிய அவருடைய மனைவி 2018ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவருடைய தாயார் கமலாதான் பேரப்பிள்ளைகளைப் பராமரித்து வந்தார். அவரும் இப்பொழுது இறந்து விட்டார். ஆனந்த சுதாகரன் 17 ஆண்டுகளாகச் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான திருமதி.லக்மாலி அண்மையில் கொழும்பில் நடந்த ஊடக விவாத நிகழ்ச்சியொன்றில் பின்வருமாறு வாதிட்டதை முகநூல் பதிவொன்றில் காண முடிந்தது. ”சிறையில் இருப்பவர்கள் அரசியல் கைதிகள் அல்லர். நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள். தலதா மாளிகை சம்பவம் உட்பட பாரிய குற்றச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள். தமிழ் மக்கள் இதனை விளங்கிக் கொண்டுதான் இப்போது எமது அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர். ”

சிறையில் இருப்பவர்கள் தண்டிக்கப்பட்ட கைதிகள் என்று கூறுவதன்மூலம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று லக்மாலி கூறுகிறார். அதாவது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டு தண்டிக்கப்பட்டவர்கள் என்று பொருள்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கப் போவதாக கடந்த ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன்பாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால் இன்றுவரையிலும் அதை அவர்கள் செய்யவில்லை. இப்பொழுது அந்தச் சட்டத்தைத் திருத்தி ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வரப் போவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் எனப்படுவது தமிழ் மக்களின் அரசியல் எதிர்ப்பை பயங்கரவாதமாக சட்ட வியாக்கியானம் செய்து சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வதற்கான ஒரு சட்டச்சூழலை எப்பொழுதும் பேணுவது. அதாவது தமிழ்மக்களின் எதிர்ப்பை பயங்கரவாதமாகச் சித்தரிக்கக்கூடிய வாய்ப்புகளை எப்பொழுதும் பேணுவது. இந்தவிடயத்தில் கடந்த காலங்களில் இலங்கைத்தீவை ஆண்டு வந்த மேட்டுக்குடி அரசியல்வாதிகளின் அதே அணுகுமுறையைதான் தேசிய மக்கள் சக்தியும் கொண்டிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?

அரசியல் கைதிகளின் விடயத்தில் மட்டுமல்ல, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அகற்றுவதில் மட்டுமல்ல, தொல்லியல் விவகாரங்களுக்கான ஆலோசனைக் குழுவை நியமித்தபோது மட்டுமல்ல, திடீரென்று முளைக்கும் புத்தர் சிலைகளைக் கையாளும் விடயத்திலும் என்.பி.பி அரசாங்கமானது முன்னைய மேட்டுக்குடி அரசியல்வாதிகளைப் போலவே சிந்திக்கிறது என்பதைத்தான் கடந்த வாரம் திருக்கோணமலையில் நடந்த புத்தர் சிலை விவகாரம் நமக்குக் காட்டுகிறதா ?

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் எனப்படுவது சிலையிலிருந்து தொடங்கவில்லை. அது அந்தச் சிலை வைக்கப்பட்ட காணிக்குள் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த ஒரு ரெஸ்ரோரண்டில் இருந்து தொடங்குகிறது. அந்த ரெஸ்ரோரன்ட் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருக்கிறது என்று அதில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் தரப்புகளும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சித்த ஒரு பின்னணியில், கடந்த வாரத்துக்கு முதல் வாரம் அந்த ரெஸ்ரோரண்டின் மையப் பகுதியை வைத்துக்கொண்டு ஏனைய பகுதிகளை அகற்றுவதற்கு அங்கிருந்த பௌத்த மதகுரு ஒப்புக்கொண்டார்.

ஆனால் அவர் ஒப்புக்கொண்டபடி நடக்காமல் அந்த விடயத்தை உணர்ச்சிகரமான விதத்தில் திசைதிருப்பும் நோக்கத்தோடு புத்தர் சிலையை உள்ளே கொண்டு வந்திருக்கிறார். அதாவது சட்டவிரோதக் கட்டுமானம் ஒன்றை அகற்றுவதைத் தவிர்ப்பதற்கு புத்தர் சிலை ஒரு திசை திருப்பும் கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அது சட்டவிரோதமானது என்பதனால்தான் போலீசார் முதலில் அதனை அகற்றினார்கள். ஆனால் அதே போலீசார் அந்த சிலையை மீண்டும் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள். அப்படியென்றால் போலீசார் சட்டவிரோதமான ஒரு சிலையை சட்டபூர்வமானது ஆக்கியிருக்கிறார்களா?

புத்தர் சிலைக்கு ஒரு சட்டம்; தமிழ் மக்களுக்கு இன்னொரு சட்டம். ஏற்கனவே திருமலை மறை மாவட்டத்தின் ஆயர் இதுபோன்ற விடையங்களை முன்வைத்துத்தான் இலங்கைத் தீவில் இரண்டு சட்டங்கள் இருக்கின்றனவா என்று கேட்டிருந்தார்.

புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கும் காணிக்குள் காணப்படும் ரெஸ்ரோரண்டை அகற்ற வேண்டும் என்று போராடி வருபவர்களில் இப்பொழுது தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ரொஷான் அக்கீமனவும் ஒருவர். அந்த வளவிலிருந்து குறிப்பிட்ட கட்டுமானத்தை அகற்றக்கோரி போராடியவர்கள் மத்தியில் அவர் முன்பு காணப்பட்டார். ஆனால் இப்பொழுது எல்லாத் தரப்புக்களையும் சமாளிக்கப் பார்க்கிறார். அவர் மட்டுமல்ல திருகோணமலையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் உதவி வெளிவிவகார அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரவும் எல்லாத் தரப்புக்களையும் சமாளிக்க முயல்கிறார்.

அவர் பதவி விலக வேண்டும் என்று சுமந்திரன் கேட்கிறார். ஆனால் சிலையை வைத்து இனவாதத்தைக் கிளப்பும் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டவர் சுமந்திரன். அதற்குப் பிராயசித்தமாக அவரும் தன் பொறுப்புகளைத் துறக்க வேண்டும்.

2015இல் ஆட்சிக்கு வந்த ரணில் மைத்திரி அரசாங்கத்தில் சஜித் பிரேமதாசவின் பொறுப்பின் கீழ்தான் புத்தசாசன அமைச்சு காணப்பட்டது. அக்காலகட்டத்தில்தான் தையிட்டியில் விகாரையைக் கட்டத் தொடங்கினார்கள். நாடு முழுவதும் ஆயிரம் விகாரைகளைக் கட்டுவதற்கு 500 மில்லியன் ரூபாயை ஒதுக்குவோம் என்று சிங்கள மக்களுக்கு வாக்குறுதி அளித்தவர்களில் சஜித்தும் ஒருவர். எனவே அப்படிப்பட்ட சஜித்தை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்குமாறு கேட்ட சுமந்திரன் இப்பொழுது அருண் ஹேமச்சந்திர ராஜினாமாச் செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனக்கு முன்னிருந்த ஆட்சிகளில் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டும்போது சுட்டிக்காட்டும் வேறுபாடுகளில் ஒன்று, தாங்கள் இனவாதத்துக்கு தலைமை தாங்கவில்லை என்பது. ஆனால் இக்கட்டுரையில் ஏற்கனவே கூறப்பட்டதுபோல,அரசியல் கைதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டம், தொல்லியல் விவகார ஆலோசனைக் குழு,புத்தர் சிலைகள் போன்ற விடயங்களில் இந்த அரசாங்கத்துக்கும் முன்னைய அரசாங்கங்களுக்கும் இடையில் வித்தியாசங்கள் உண்டா?

புத்தர் சிலையை வைத்து எதிர்க்கட்சிகள் இனவாதத்தைக் கிளப்புகின்றன அதன் மூலம் நுகேகொடவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்களை திரட்டும் உணர்ச்சிகரமான அரசியல் சூழலை உருவாக்க முயற்சிக்கின்றன என்று அரசாங்கம் எதிர்க்கட்சிகளைக் குற்றம் சாட்டியது.

எதிர்க்கட்சிகளை இனவாதக் கட்சிகள் அல்லது இனவாதத்தை வைத்துப் பிழைத்த கட்சிகள் என்று குற்றச்சாட்டும் இந்த அரசாங்கமானது,தான் இனவாதி அல்ல என்பதனை நிரூபிப்பதற்கு கடந்த ஓராண்டுக்கு மேலான காலத்தில் என்ன செய்திருக்கிறது ?

தாங்கள் இனவாதிகள் அல்ல என்று கூறிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. நடைமுறையில் தாங்கள் இனவாதத்திற்கு எதிரானவர்கள் என்பதை நிரூபிக்கத் தேவையான அர்ப்பணிப்பும் துணிச்சலும் அவர்களிடம் உண்டா என்பதுதான் இப்பொழுதுள்ள கேள்வி.

facebook_1763556166480_73968906832939502

இனவாதிகள் தலையெடுக்கக்கூடாது என்றால் இந்த அரசாங்கத்தை எப்படியாவது பாதுகாக்கவேண்டும். இந்த அரசாங்கம் தோல்வியுற்றால் இனவாதிகள் மீண்டும் தலையெடுத்து விடுவார்கள் என்று அரசாங்கத்தை ஆதரிப்பவர்கள், குறிப்பாக யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள சில விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இது ஒன்றும் புதிய தர்க்கம் அல்ல. இந்த நாட்டை இதுவரையிலும் ஆண்ட இனவாதக் கட்சிகள் மத்தியில் ஒப்பீட்டளவில் லிபரல்களாகத் தோன்றும் பலரும் அப்படித்தான் கூறிவந்தார்கள். அதாவது இனவாதத்தை தோற்கடிப்பதற்கு குறிப்பிட்ட லிபரல் அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று. ஆனால்,யதார்த்தத்தில் என்ன நடந்தது என்றால்,வெளிப்படையான இனவாதத்துக்கு எதிராக முகமூடி அணிந்த இனவாதம் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் ஒரு தந்திரமாகவே அது காணப்பட்டது. இதன் மூலம் முகமூடி அணிந்த இனவாதம் தமிழ்,முஸ்லிம் வாக்குகளையும் கைப்பற்றிக் கொண்டது.

“அரகலய” போராட்டம் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில் அந்தப் போராட்டத்தின் பின்னணியில் நின்ற அமைப்புகளில் ஒன்றாகிய முன்னிலை சோசிலிச கட்சியின் தலைவராகிய குமார் குணரட்ணத்தோடு உரையாடக் கிடைத்தது. சுமார் 5 மணித்தியால உரையாடல். அந்த உரையாடலின் ஒரு கட்டத்தில் அவர் சொன்னார்,தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்ள முடியாது; சமஸ்டியை ஒரு வெளிப்படையான தீர்வாக முன்வைக்க முடியாது என்ற பொருள்பட. நாங்கள் இதை வெளிப்படையாக உங்களுக்குச் சொல்கிறோம். ஆனால் ஜேவிபி அதை வெளியில் சொல்லாமல் அரசியல் செய்கிறது. அவர்கள் அதை வெளிப்படையாகச் சொன்னால் தென்னிலங்கையில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு விடுவார்கள் என்று.

இந்த விடையத்தில் முன்னைய லிபரல் அரசாங்கங்களைப் போலவே என்பிபியும் இனவாதத்தை எதிர்த்துத் தியாகம் செய்யத் தயாரில்லை என்பதைத்தான் கடந்த ஓராண்டுக்கு மேலான அவர்களுடைய ஆட்சிக் காலம் நிரூபித்திருக்கிறது. அதாவது இனவாதத்தை எதிர்த்து நின்று அழிய அவர்கள் தயாராக இல்லை. மாறாக இனவாதம் அருட்டப்பட்டுவிடும் என்று கூறி தமிழ் எதிர்ப்பைத் தணிக்கப் பார்ப்பார்கள். இதைத்தான் லிபரல் இனவாதிகளும் செய்கிறார்கள்; சில வெளிநாட்டுத் தூதரகங்களும் செய்கின்றன.

சந்திரிகா “வெண்தாமரை” இயக்கத்தைத் தொடங்கி சமாதானத்துக்கு சிங்கள மக்களைத் தயார்படுத்தப் போவதாகக் கூறினார். ஆனால் அந்த இயக்கம் நடைமுறையில் படையினருக்கும் படையினரின் குடும்பங்களுக்கும் தொண்டு செய்யும் ஒரியக்கமாகவே மாறியது.

என்பிபியின் அடித்தளமாகக் காணப்படும் ஜேவிபியில் உறுப்பினராக இருந்து, பின்னர் விலகிச் சென்ற ஒருவர் கூறுவார், ”மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படையான இனவாதி. ஆனால் ஜேவிபி சமூக நீதியின் பின் பதுங்கும் இனவாதி”என்று. இக்கூற்று பிழையானது என்பதை நிரூபிப்பதற்குக் கிடைத்த கடந்த ஓராண்டுக்கு மேலான காலத்தை ஜேவிபி பயன்படுத்தவில்லை. எனவே இதற்கு முன்பு ஆட்சிசெய்த லிபரல் முகமூடி அணிந்த, ஆனால் இனவாதத்துக்கே தலைமை தாங்கிய ஆட்சியாளர்களைப் போலவே என்பிபியும் அதே குட்டையில் ஊறிய மட்டைதானா ?

எனது நண்பர் ஒருவர் யாழ்ப்பாணத்தின் சில புத்திஜீவிகளைப்பற்றிச் சொல்லும்போது ஒர் உதாரணத்தை எடுத்துக்காட்டுவார். ”நீரில் மிதக்கும் பனிக்கட்டிகள்” என்று. அதாவது அவர்களும் யாழ்ப்பாணிகள்தான். ஆனால் தங்களை முற்போக்கானவர்களாகக் காட்டிக்கொண்டு கொஞ்சம் மேலே மிதப்பார்கள். நீரில் மிதக்கும் பனிக்கட்டியைப் போல. ஆனால் பனிக்கட்டியும் நீரும் அடிப்படையில் ஒரே பண்பிலிருந்து வந்தவைதான். இது இப்பொழுது என்பிபிக்கும் பொருந்துமா?

https://www.nillanthan.com/7950/

நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன்.

2 weeks ago

Sajith-Namal.jpg?resize=550%2C310&ssl=1

நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன்.

அந்த வெள்ளிக்கிழமை நுகேகொடவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டம் ஒப்பீட்டளவில் வெற்றிகரமானது. கடந்த 14 மாதங்களாக அமுங்கிக் கிடந்த எதிர்கட்சிகள் இனி தெம்போடு நடமாடும். 14 மாதங்களாக அரசாங்கம் எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்கு தள்ளியிருந்தது. ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை திருப்பித் தாக்கும் நிலைக்கு படிப்படியாக முன்னேறி வருவதனை அந்த ஆர்ப்பாட்டம் காட்டியதா?.

எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லாதபடியால்தான் தேசிய மக்கள் சக்தி கடந்த தேர்தல்களில் பெரிய வெற்றிகளைப் பெறமுடிந்தது.தமிழ் பிரதேசங்களிலும் இதுதான் நடந்தது. எதிர்க்கட்சிகளுக்கு இடையே தலைமைப் போட்டி. அது இப்பொழுதும் உண்டு.ஆனால் ஊழலுக்கு எதிராகவும் போதைப்பொருள் கட்டமைப்புக்கு எதிராகவும் பாதாள உலகக் கும்பல்களுக்கு எதிராகவும் அரசாங்கம் முன்னெடுத்த திட்டவட்டமான விட்டுக்கொடுப்பற்ற நடவடிக்கைகளின் விளைவாக எதிர்க்கட்சிகள் உஷாரடைந்து விட்டன.

இது ஒரு கட்டத்தில் தங்களுடைய மடியில் கை வைக்கும் என்ற நிலை தோன்றிய போது அவர்கள் ஒன்றாகினார்கள்.ஏனென்றால் பாதாள உலகம், போதைப் பொருள் வாணிபம், ஊழல்வாதிகள் என்று எல்லாவிதமான குற்றச் செயல்களையும் செய்துவிட்டு இனவாதத்தின் பின் பதுங்கும் அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிகம்.அதன் பொருள்,ஜேவிபி இனவாதம் இல்லாதது, பரிசுத்தமானது என்பது அல்ல. ஆனால் கடந்த பல தசாப்தங்களாக இலங்கைத்  தீவை  ஆட்சி செய்து வந்தது எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள்தான். தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றியது கடந்த ஆண்டில்தான். எனவே ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் என்ற அடிப்படையில் இந்த ஆட்சிக்கு முன் நிகழ்த்த பல குற்றச் செயல்களுக்கும் எதிர்க்கட்சிகள்தான் அதிகமாகப் பொறுப்பேற்க வேண்டி இருக்கும்.அரசாங்கத்தின் ஊழல் மற்றும் போதைப்பொருள் வாணிபத்திற்கு எதிரான நடவடிக்கைகள் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை நெருங்கத் தொடங்கியதன் விளைவாகவும் முன்னாள் ஜனாதிபதியாகிய ரணிலைப் போன்றவர்கள் கைது செய்யப்படும் ஒரு நிலைமை தோன்றிய பின்னரும் எதிர்க்கட்சிகள் உஷாரடைந்தன.அதன் விளைவுதான் நுகேகொட பேரணி.

பேரணி நடக்கவிருந்த பாதைகளில் மின்கம்பங்களில் ஆங்காங்கே புற் கட்டுக்கள் கட்டப்பட்டிருந்தன.அதன் பொருள் மாடுகள் அதாவது மந்தைகள் அந்த வழியாக வரப்போகின்றன என்பதுதான்.மேலும் கூட்டத்தில் ஏற்பாட்டாளர்கள் உயரத்தில் பொருத்தி வைத்திருந்த ஒலிபெருக்கிகளையும் போலீசார் அகற்றினார்கள்.அப்பொழுது உயர்தரப் பரீட்சை நடந்து கொண்டிருந்தது. கடந்த திங்கட்கிழமைதான் அந்த பரீட்சை முடிந்தது. எனவே பரீட்சையில் படிக்கும் பிள்ளைகளுக்கு அந்த ஒலி பெருக்கிகள் தொந்தரவாக இருக்கும் என்ற ஒரு பொருத்தமான காரணத்தை போலீசார் கூறினார்கள்.

எனினும்,எல்லாவற்றையும் தாண்டி எதிர்க் கட்சிகள் ஆயிரக்கணக்கானவர்களை அந்த இடத்துக்கு கொண்டுவந்தன.கடந்த 14 மாதங்களிலும் எதிர்க் கட்சிகள் தங்களை அவ்வாறு ஒருங்கிணைத்தது இதுதான் முதல் தடவை.ரணில் விக்கிரமசிங்க அங்கே இருக்கவில்லை. அவர் ஆர்ப்பாட்டம் நடந்த அன்று இந்தியாவிற்குச் சென்று விட்டார்.ஆனால் அவருடைய கட்சிக்காரர்கள் கலந்து கொண்டார்கள். மஹிந்த வரவில்லை. அவர்களுடைய எதிர்கால வாரிசு நாமல் முன்னணியில் நின்றார். ஒரு வகையில் அது நாமலின் எழுச்சியைக் காட்டிய கூட்டம். அதை மனோ கணேசன் தனது  முகநூல் பக்கத்தில் “சஜித் பலத்தைக் காட்டும்வரை நாமல்தான் எதிர்க்கட்சித் தலைவர்” என்று  எழுதியிருந்தார்.

எதிர்க்கட்சிகள் மத்தியில் தலைமைத்துவப் போட்டி உண்டு. அதுதான் கடந்த ஆண்டு தேசிய மக்கள் சக்தி பெற்ற பிரம்மாண்டமான வெற்றிகளுக்கு ஒரு காரணம். இப்பொழுதும் அதே போட்டி உண்டு. நுகேகொட பேரணியில் நாமல் முன்னிலைக்கு வந்து விட்டார்.அவருடைய தோற்றம்,நடை உடை பாவனை எல்லாவற்றிலும் அவ்வாறு எதிர்க்கட்சிகளுக்கு தலைமை தாங்கும் ஆர்வம் தெரிந்தது. ஆனால் தகப்பனைப் போல தோற்ற மிடுக்கும் சன்னமான குரலும் அவருக்கு இல்லை.

அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திரண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அவர்களை ஒன்று திரளுமாறு நிர்பந்தித்திருக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால் எதிர்க்கட்சிகள் தாங்கள் ஒரு பலமான அணியாகத் திரள வேண்டும் என்று திட்டமிட்டு இதைச் செய்யவில்லை. ஏனென்றால் இப்பொழுதும் அங்கே தலைமைப் பிரச்சினை உண்டு. யாரை யார் தலைவராக ஏற்றுக்கொள்வது என்ற “ஈகோ”க்கள் உண்டு. அரசாங்கத்துக்கு எதிரான தற்காப்புக் கூட்டுத்தான் அது.எதிர்காலத்தில் ஒன்றாக நின்று ஆட்சி அமைக்கும் கூட்டு என்று கூற முடியாது.

திருகோணமலை புத்தர் சிலையை வைத்து இனவாதத்தைக் கிளப்பி சேகரித்த சனத்தொகையும் அங்கே உண்டு.அந்தப் புத்தர் சிலை விடயத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இனவாதத்தைக் கக்கின.அதில் சஜித் முக்கியமானவர்.அந்தச் சிலை விடயம் எதிர்க்கட்சிகளை தமிழ் மக்களுக்கு அம்பலப்படுத்தி விட்டது.

ஆனால் திருகோணமலை புத்தர் எதிர்க்கட்சிகளை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. அரசாங்கத்தையும் சேர்த்து அம்பலப்படுத்தி விட்டார். சட்டவிரோதமாக நிறுவப்பட்ட ஒரு ரெஸ்ரோரண்டை அகற்றாமல் விடுவதற்காக உள்ளே கொண்டுவரப்பட்ட புத்தரை அரசாங்கம் முதலில் தெளிவான முடிவெடுத்து அகற்றியது.ஆனால் இனவாதத்துக்கு பயந்து பின்வாங்கியது.அந்த விடயத்தில் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்ததன்மூலம் அரசாங்கமும் தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு விட்டது.

நுகேகொட பேரணியில்  தென்பகுதியில் உள்ள தமிழர்கள் உதிரிகளாகக் கலந்து கொண்டார்கள்.ஆனால் வடக்குக்  கிழக்கிலிருந்து தமிழ்த் தேசியக் கட்சிகள் எவையும் அங்கே போகவில்லை. தமிழ் மக்கள் அந்த ஆர்ப்பாட்டத்தை தங்களுக்கு உரியதாகக் கருதவில்லை என்பதைத்தான் அது காட்டியது.

நாமல் ராஜபக்ச சில வாரங்களுக்கு முன் சுமந்திரனை சந்தித்து தமது ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டிருந்தார். ஆனால் தமிழரசுக் கட்சி அதற்கு மறுத்துவிட்டது.மறுக்கத்தான் வேண்டும். ஏனென்றால் திருமலைச் சிலை விவகாரம் நாமலையும் ஏனைய எதிர்க்கட்சிகளையும் அம்பலப்படுத்தியிருந்த ஒரு பின்னணியில்,அந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழரசுக் கட்சி கலந்து கொண்டு இருந்திருந்தால் அது தமிழ் மக்களைக் காட்டிக் கொடுப்பதாக இருந்திருக்கும்.

நுகேகொட   பேரணியில் தமிழ் மக்கள் கலந்து கொள்ளாமல் விட்டதற்கு காரணம் அரசாங்கத்தை தமிழ் மக்கள் எதிர்க்க விரும்பவில்லை என்பதனால் அல்ல.தமிழ் மக்கள் எதிர்க்கட்சிகளை ஆதரிக்க விரும்பவில்லை என்பதனால்தான். இதில் எதிர்க்கட்சிகளுக்கு கூர்மையான ஒரு செய்தி உண்டு. திருமலை புத்தர் சிலையின் பின்னணியில் தமிழ் மக்கள்  எதிர்க்கட்சிகளின் மீது கோபமாக இருக்கிறார்கள்.

ஆனால் இதே எதிர்க்கட்சிகளில் ஒன்று ஆகிய ஐக்கிய மக்கள் சக்திக்கு அதாவது சஜித்துக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று சுமந்திரன் கேட்டிருந்தார். இப்பொழுது சஜித் யார் என்பதை திருமலைப்  புத்தர் காட்டிவிட்டார்.தமிழ் வாக்குகளை சஜித்துக்குச் சாய்த்துக் கொடுத்த சுமந்திரனையும் அவர் அம்பலப்படுத்தி விட்டார். கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரித்த சுமந்திரன்  கிட்டத்தட்ட 14 மாத கால இடைவெளிக்குள் நுகேகொட பேரணியில் சஜித்தை  ஆதரிக்கவில்லை.

நுகேகொட ஆர்ப்பாட்டம் நடக்கவிருந்த ஒரு காலச் சூழலில்,கடந்த புதன்கிழமை, தமிழரசுக் கட்சி ஜனாதிபதியை சந்தித்தது. அந்த சந்திப்புக்கான அழைப்பை விடுத்தது தமிழரசுக் கட்சிதான்.அந்தச் சந்திப்பில் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளும் உட்பட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ஒரு புதிய யாப்பை உருவாக்கும் விடயத்தில் ஏற்கனவே 2015ல் இருந்து தொடங்கி 2019வரையிலும் உரையாடப்பட்ட இடைக்கால வரைபை முழுமைப்படுத்துவது என்று அங்கே உரையாடப்பட்டிருக்கிறது. சுமந்திரன் தனது  “எக்ஸ்” பக்கத்தில்  அதுதொடர்பாகப் பதிவிட்டிருந்தார்.அதாவது ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட “எக்கிய ராஜ்ய” என்று அழைக்கப்படுகின்ற அந்த இடைக்கால வரைபை அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் சென்று ஒரு புதிய யாப்பைத் தயாரிப்பதுதான் சுமந்திரனின் நோக்கமாகத் தெரிகிறது.

ஆனால், கஜேந்திரகுமார் அது ஒற்றை ஆட்சிப் பண்புடைய ஒரு தீர்வு என்று விமர்சிக்கின்றார். அனுர அரசாங்கத்தோடு தமிழரசுக் கட்சி பேசவிருக்கும் தீர்வுத் திட்டம் அதுதானா என்ற கேள்வி இப்பொழுது வலிமையாக மேலெழுகிறது.

அவ்வாறு பேசப்பட்ட காலம் எதுவென்று பார்த்தால், நுகேகொட ஆர்ப்பாட்டம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்.அதன்மூலம் தமிழரசுக் கட்சி எதிர்க்கட்சிகளை நோக்கி தான் வரவில்லை என்பதனை சூசகமாக தெரிவிக்க முற்பட்டதா? அந்தச் சந்திப்புக்கான அழைப்பை விடுத்தது தமிழரசுக் கட்சி. ஆனால் சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்கியது அரசாங்கம்.நுகேகொட ஆர்ப்பாட்டத்திற்குச் சில நாட்களுக்கு முன்னதாக அவ்வாறு நேரத்தை ஒதுக்கிக் கொடுத்து,அந்தச் சந்திப்பின் மூலம்,அரசாங்கம் எதிர்க்கட்சிகளுக்கு மறைமுகமாக ஒரு செய்தியை வெளிப்படுத்த விரும்பியிருக்கலாம். தமிழரசுக் கட்சியும் அவ்வாறு விரும்பியதா?

கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சஜித்தை ஆதரிக்க வேண்டும் என்று கேட்ட அதே சுமந்திரன் இப்பொழுது அனுரவோடு சேர்ந்து  தீர்வுக்கான பேச்சுக்களில் இறங்கப் போகிறாரா?கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டது தவறு என்பதனை திருமலை புத்தர் நிரூபித்து விட்டார்.அன்றைக்கு சஜித்துக்கு வாக்களித்த தமிழ் மக்களை சஜித் திருமலை புத்தர் விடயத்தில் ஏமாற்றி விட்டார்.

நுகேகொட பேரணியில் தமிழ்மக்கள் விலகி நின்றமை அரசாங்கத்திற்குச் சாதகமானது.ஆனால் அதனை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசாங்கத்தின் முயற்சிகளை அல்லது திருமலை புத்தர் சிலை விடயத்தில் அரசாங்கத்தின் தளம்பலான முடிவுகளை தமிழ் மக்கள் ஏற்றுக்  கொண்டதாக வியாக்கியானம் செய்ய முடியாது.

https://athavannews.com/2025/1453627

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை - பௌத்த விகாரையை தமிழர்கள் எதிர்ப்பது ஏன்?

2 weeks 2 days ago

திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், RAMESH

படக்குறிப்பு, திருகோணமலையில் பௌத்த விகாரை நிர்மாணிப்பது தொடர்பாக பாரிய சர்ச்சை எழுந்துள்ளது.

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கை திருகோணமலை நகரிலுள்ள கடற்கரையோரத்தில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விவகாரம், நாட்டில் இன்றும் பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த புத்தர் சிலையை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்திய நிலையில், அடுத்த தினமே போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் போலீஸாரின் கைகளாலேயே கொண்டு வரப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை நகரம் அமைந்துள்ளது.

திருகோணமலை நகரில் கடந்த 16ம் தேதி காலை கரையோர பகுதியில் திடீரென ஒன்று திரண்ட பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சில பௌத்த பக்தர்கள் விகாரையொன்றை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, அந்த இடத்தில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், இந்த விடயம் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

திருகோணமலை கரையோர பகுதியில் நிர்மாணிக்கப்படுகின்ற விகாரையானது சட்டவிரோதமானது என, கரையோர பாதுகாப்பு திணைக்களம், போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அத்துடன், இந்த விகாரை நிர்மாணிக்கப்படுவதற்கு கரையோர பாதுகாப்பு திணைக்களம் மாத்திரமன்றி, தமிழர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

'தமிழர் பகுதிகளில் சிங்கள ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளும் நோக்கில்' பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக, தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

இந்த நிலையில், கரையோர பாதுகாப்பு திணைக்களம் செய்த முறைப்பாடு குறித்து, போலீஸ் அதிகாரிகள், விகாரையின் விகாராதிபதிக்கு (தலைமை பிக்கு) அறிவித்திருந்தனர்.

எனினும், தமது நடவடிக்கையானது சட்டவிரோதமானது அல்லவெனவும், தம்மால் விகாரையின் நிர்மாணப் பணிகளை நிறுத்த முடியாது எனவும் விகாரையின் பிக்குகள் போலீஸாருக்கு தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, இந்த விகாரை நிர்மாணிக்கப்படுகின்றமையானது சட்டவிரோதமானது என தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தனர்.

திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், RAMESH

இந்த நிலையில், திருகோணமலையில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பௌத்த விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த புத்தர் சிலையை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்த அதேநாள் இரவு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

போலீஸார் குவிக்கப்பட்டு, புத்தரின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டதுடன், அந்த புத்தர் சிலை திருகோணமலை கரையோர போலீஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

இதன்போது பௌத்த பிக்குகளுக்கும், போலீஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதுடன், கைக்கலப்புகளும் இடம்பெற்றிருந்தன.

இந்த கைகலப்பில் இரண்டு பௌத்த பிக்குகள் காயமடைந்து, மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் நாட்டில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

புத்தரின் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

புத்தர் சிலை கைது செய்யப்படுவதானது, புத்த பெருமானே கைது செய்யப்பட்டமைக்கு சமமானது என அனைத்து பௌத்த மக்களும் கவலையடைந்த ஒரு சம்பவமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், RAMESH

படக்குறிப்பு, புத்தர் சிலையை போலீஸார் எடுத்துச் சென்றபோது பௌத்த பிக்குகளுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது

ஏன் புத்தர் சிலையை போலீஸார் எடுத்து சென்றனர்?

திருகோணமலை பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்தப்படும் என கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே தாம் புத்தர் சிலையை அப்புறப்படுத்தியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

''பிரதிஷ்டை செய்யப்பட்ட புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்தப்படும் என்று போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அந்த இடத்திலிருந்து புத்தர் சிலை அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது." என தெரிவித்தார்.

மீண்டும் அந்த புத்தர் சிலையை அந்த விகாரையில் பிரதிஷ்டை செய்யுமாறு தாங்கள் போலீஸாருக்கு ஆலோசனை வழங்கியதாக கூறிய அவர், அன்றைய தினத்திலிருந்து முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

"அந்த இடத்தில் சிற்றுண்டிசாலையொன்று நடத்திச் செல்லப்படுவதாக முன்னர் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த விடயம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து நீதிமன்றத்திற்கு விடயங்கள் தெளிவுப்படுத்தப்படவுள்ளன. நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்புக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும்.'' என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், SJB MEDIA

படக்குறிப்பு, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

எதிர்கட்சிகள் வெளியிட்ட எதிர்ப்பு

புத்தர் சிலை அப்புறப்படுத்தப்பட்டு, பதற்றம் ஏற்பட்டமை குறித்து எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.

இனவாதத்தை தூண்டுவதற்கு பார்த்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கு அதற்கான பிரவேசத்தை வழங்கும் நடவடிக்கையாகவே இதனை பார்ப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

''இவ்வாறு செயற்படுவதன் ஊடாக இனவாதத்தை தூண்டுவதற்கு பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு அதற்கான பிரவேசத்தை வழங்கும் நடவடிக்கையாகவே பார்க்க முடிகின்றது. நள்ளிரவில் போலீஸாரை அனுப்பி விகாரையொன்றுக்குள் நடைபெறுகின்ற அபிவிருத்தி பணிக்கு போலீஸார் எப்படி தலையீடு செய்வது?" என அவர் கேள்வியெழுப்பினார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முயற்சித்த போது, அதற்கு சபாநாயகர் சந்தர்ப்பத்தை வழங்காதமையானது, தவறான செயற்பாடு என கூறிய சஜித், ஜனநாயகத்தை இல்லாது செய்வதற்கு சபாநாயகர் ஆசனத்திலிருந்து செய்யும் இந்த நடவடிக்கையை தயவு செய்து நிறுத்துங்கள் என குறிப்பிட்டார்.

புத்தர் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தை இனவாத பிரச்னையாக மாற்ற வேண்டாம் என்பதுடன், அரசாங்கம் இதற்கு தலையீடு செய்து நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், SLPP MEDIA

படக்குறிப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ

''புத்தர் சிலையின் பாதுகாப்புக்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலை கொண்டு செல்லப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிக்கின்றார். பாதுகாப்புக்காக புத்தர் சிலை வெளியில் கொண்டு செல்லப்படும் போது, போலீஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி, இரண்டு பௌத்த பிக்குகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புத்தர் சிலையின் பாதுகாப்புக்காகவா புத்தர் சிலை வெளியில் கொண்டு செல்லப்பட்டது. அல்லது பிக்குகளின் பாதுகாப்புக்காகவா வெளியில் கொண்டு செல்லப்பட்டது. அல்லது போலீஸாரிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காகவா என்று கேள்வி எமக்குள் எழுகின்றது." என்றார் நாமல் ராஜபக்ச.

1951ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 2004ம் ஆண்டு புனித பூமியாக பிரகடனப்படுத்திய கிழக்கு மாகாணத்தின் மிகவும் பழைமை வாய்ந்த பௌத்த விகாரையாக இந்த விகாரை காணப்பட்டது எனக்கூறிய நாமல், "இதனை இனவாத பிரச்னையாக மாற்ற வேண்டாம். நீங்கள் தலையீடு செய்து, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை குறிப்பிட்டு இரண்டு தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடல்களை நடத்துங்கள். அதனூடாக நியாயத்தை பெற்றுக்கொடுங்கள். இது இனவாத பிரச்னையாக மாறிவிட வாய்ப்புள்ளது. இதற்கு தலையீடு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்'' என கூறினார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கூட வடக்கு கிழக்கில் பௌத்த சின்னங்களை விடுதலை புலிகள் அழிக்கவில்லை என்றும், சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது எனவும் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், SHANAKIYAN

படக்குறிப்பு, இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன்

''பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் தெரிவித்திருந்தார். பௌத்த மதமோ, எந்த மதமோ சட்டவிரோத செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது. அது நானாக இருந்தாலும் சரி, பௌத்த துறவியாக இருந்தாலும் சரி. திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமான விகாரை புதிதாக உருவெடுத்தது. இது சட்டவிரோதமானது, நிறுத்துவார்கள் என நம்பியிருந்தோம். சிலையை பாதுகாப்பதற்காக அகற்றப்பட்டதாக அமைச்சர் கூறியிருந்தார். 30 வருடம் யுத்தம் நடைபெற்ற காலத்தில் கூட வடக்கு கிழக்கில் பௌத்த மதத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு சின்னம் கூட விடுதலைப் புலிகளினால் கூட அழிக்கப்படவில்லை. தமிழ் மக்கள் இரவோடு இரவாக சென்று சிலைகளை உடைக்கின்ற மக்கள் அல்ல'" என்றார் ராசமாணிக்கம்.

திருகோணமலை சம்பவத்தின் ஊடாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும், முந்தைய அரசாங்கத்தை போலவே ஒரு இனவாத, சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் என்பதை நிறுவியுள்ளது என இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் ஆனந்த விஜயபால, திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், ANANATHA WIJAYAPALA

படக்குறிப்பு, அமைச்சர் ஆனந்த விஜயபால

''அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தேசிய மக்கள் சக்தி அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு ஏற்ப செயல்படுவதை காண்கிறோம். அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலை போலீஸாரினால் அகற்றப்பட்ட போது, அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கிறது என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் அப்படியல்ல என்பதை சில மணி நேரத்துக்குள்ளேயே அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்." என்றார் சுமந்திரன்.

இலங்கை தமிழரசு கட்சி, பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், SUMANTHIRAN

படக்குறிப்பு, இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்

பழைமை வாய்ந்த விகாரை என தகவல்

திருகோணமலையில் நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட குறித்த இடமானது, பழமையான விகாரைக்கு சொந்தமான ஆவணங்களை கொண்டுள்ள விகாரை என விகாரையின் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜா விகாரை என்ற பெயரில் இந்த விகாரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

திருகோணமலை கோட்டை வீதியிலுள்ள இந்த விகாரையானது, 1951ம் ஆண்டு புத்தசாசன திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமைக்கான ஆவணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த இடத்தில் நடத்தி செல்லப்பட்ட பௌத்த அறநெறி பாடசாலை, சுனாமி அனர்த்தத்தில் அழிவடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு அழிவடைந்த இடத்திலேயே புதிதாக தாம் விகாரையை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துள்ள பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விகாரைக்கு மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அதற்கான உறுதிப் பத்திரத்தை வழங்கியுள்ளதாகவும் பிக்குகள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், குறித்த இடத்தில் தனிநபர் ஒருவரினால் விகாரையின் அனுமதியுடன் உணவகமொன்று அமைக்கப்பட்டு நடத்திச் செல்லப்படுகின்றது. இந்த உணவகத்தின் ஊடாக கிடைக்கின்ற வருமானத்தில் 25 வீதத்தை விகாரைக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்த உணவகம் நடத்திச் செல்லப்படுகின்றது.

கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான இடத்தில் உணவகம் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே, உணவகத்தை முதலில் அகற்றுமாறு கூறப்பட்டிருந்தது. எனினும், தாம் உரிய அனுமதியை பெற்று இந்த உணவகத்தை நடத்தி வருவதாக உணவகத்தின் உரிமையாளர் குறிப்பிட்டிருந்தார்.

உணவகத்தை அகற்றுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த பின்னணியிலேயே, திடீரென விகாரையை நிர்மாணிக்கும் நோக்கில் புத்தர் சிலையொன்று அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை,  புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், ANANATHA WIJAYAPALA

மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்ட புத்தர் சிலை

திருகோணமலை போலீஸாரினால் தமது பொறுப்புக்கு எடுக்கப்பட்ட புத்தர் சிலை, அடுத்த தினமே போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் போலீஸாரின் கைகளிலேயே கொண்டு வரப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பௌத்த சமய வழிபாடுகளுக்கு அமைய இந்த புத்தர் சிலை மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அப்போது அங்கு ஒன்று திரண்ட பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த மக்கள் தமது சமய நடைமுறைகளை பின்பற்றி, போலீஸாரின் ஒத்துழைப்புடன் புத்தர் சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்தனர்.

நீதிமன்றம் என்ன சொல்கின்றது?

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜா விகாரை தொடர்பில் எழுந்த பதற்ற நிலைமையை, சமாதானமான முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் நவ. 19 அன்று தெரிவித்தது.

இந்த மனு மீதான விசாரணைகளை டிசம்பர் மாதம் 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்தது.

விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரரினால் மனுவொன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், RAMESH

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜா விகாரையின் ஒரு பகுதியை அப்புறப்படுத்துமாறு கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை, செயற்படுத்துவதனை தவிர்க்கும் வகையில் கட்டளையொன்றை பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை நிறைவடையும் வரை, பிரதேசத்தின் அமைதியை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம், உரிய திணைக்களங்களுக்கு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி என்ன சொல்கின்றார்?

திருகோணமலையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் மதஸ்தலமொன்றை அமைப்பதைப் போன்றே, அதற்குப் பின்னால் மற்றொரு விவகாரமும் இருப்பது தெளிவாக தெரிகின்றது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

குறித்த இடத்தில் பிக்குவுக்கு சொந்தமான காணியொன்று இருந்த போதிலும், மத அனுஷ்டானங்கள் மேற்கொள்ளும் இடமொன்று இருக்கவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், RAMESH

''இந்த புத்தர் சிலை பாதுகாப்புக்காகவே போலீஸுக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீஸ் நிலையத்திலுள்ள பதிவேட்டில் தெளிவாகவுள்ளது. புத்தர் சிலை மீண்டும் அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டு, அதற்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்போது அந்த பிரச்னை நீதிமன்றத்தில் உள்ளது." என்றார் ஜனாதிபதி அநுர.

அதற்கு முன், அரசாங்க அதிபர் அலுவலகத்தில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் 2014ம் ஆண்டு குறித்த காணிக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் தற்போது இந்த இடம் விகாரையாக அழைக்கப்பட்ட போதும் அண்மைக் காலங்களில் இந்த இடம் விகாரையாகப் பயன்படுத்தப்படாமல் ஒரு உணவகமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"உணவகத்தில் சட்டவிரோத நிர்மாணப் பணிகள் இருப்பதால் சட்டவிரோத நிர்மாணங்களை அகற்ற கடலோர பாதுகாப்புத் திணைக்களம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவுக்கு எதிராக சுற்றாடல் அமைச்சிற்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டை சுற்றாடல் அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார். அதன் பின்னர், போலீஸ் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில், தங்களுக்கு மேலும் ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்றும், மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் செல்ல எதிர்பார்ப்பதாகவும் பிக்குகள் தெரிவித்திருந்தனர். அந்தக் கால அவகாசம் 14ம் தேதியுடன்; முடிவடைந்தது." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இடத்தில் பிக்குவுக்கு உரித்தான காணியொன்று இருந்தது என்றும், ஆனால் மத அனுஷ்டானங்கள் மேற்கொள்ளும் இடம் இருக்கவில்லை, அதுதான் உண்மையான நிலைமை என கூறிய அநுர, "சம்பந்தப்பட்ட விவகாரத்திற்குப் பிறகு, அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், முறையான அளவீடு செய்ய, கடலோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கு வழங்கவும் விகாரைக்குச் சொந்தமான காணியை தனித்தனியாக பெயரிட்டு வழங்கவும் உடன்பாடு எட்டப்பட்டது." என்றார்.

ஆனால் பழைய வழக்கின் பிரகாரம் இங்கு புதிய நிர்மாணப் பணிகள் எதுவும் செய்யக்கூடாது எனவும் ஏற்கெனவே உள்ள நிர்மாணங்களை அகற்றக்கூடாது எனவும் நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, "நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, விகாரைக்குச் சொந்தமான காணி ஒதுக்கப்பட்ட பிறகு தொடர்புடைய பணிகளை முன்னெடுக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, இந்தப் பிரச்சினை தற்போது நிறைவடைந்து விட்டது" என்றார்.

இனவாதத்திற்கு இனி ஒருபோதும் இடமளிக்கப்படாது எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

''சந்தர்ப்பவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் தீ வைப்பு தான் தற்போது நடந்திருக்கிறது . ஆனால் நாங்கள் இனவாதத்தை அனுமதிக்க மாட்டோம். நான் மட்டுமல்ல, இந்த நாட்டின் பௌத்த மக்களும் அதை அனுமதிக்க மாட்டார்கள். இந்த நாட்டின் இந்து, முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். எனவே, இந்த நாட்டில் பழைய இனவாத நாடகங்களை யாராவது மீண்டும் உயிர்ப்பிக்க முயன்றால், அது இறந்த வரலாற்றில் மட்டுமே இருக்கும்.'' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2n24qrwp7o

மாவீரர் நாள்: கேள்விகளும் பதிலும் — கருணாகரன் —

2 weeks 5 days ago

மாவீரர் நாள்: கேள்விகளும் பதிலும்

November 17, 2025

மாவீரர் நாள்: கேள்விகளும் பதிலும்

— கருணாகரன் —

ஈழப்போராட்டம் எதிர்பார்த்த விடுதலையையும் அரசியல் முன்னேற்றத்தையும் தராமல் முடிந்து விட்டது. இதுபெருந்துயரமே. ஆனால், அது உண்டாக்கிய நினைவலைகள் ஓயவில்லை. எந்தப்போராட்டத்திலும் இத்தகைய நிலையிருக்கும். அதில் ஒன்று, போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த வீரர்களின் நினைவாகும். அதைத்தமிழ் மக்கள் மாவீரர்நாளாக ஒவ்வாரு ஆண்டும் நவம்பர் 27 இல் நினைவு கூருகிறார்கள். 

இது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கிய மரபாகும். இந்த மரபு இன்று விடுதலைப்புலிகள் இயக்கம் நடைமுறையில் இல்லாத போதும், உலகங்கும் உள்ள தமிழ் மக்களால் தொடரப்படுகிறது. இது வியப்புக்குரிய ஒன்று. ஏனென்றால், குறித்த இயக்கம் இல்லாத போதும் அந்த இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு நடைமுறையை மக்கள் பின்பற்றுகிறார்கள் – தொடருகிறார்கள். இதற்குக் காரணங்கள் சில உண்டு. 

1.  தங்களுடைய விடுதலைக்காகப் போரடி மரணத்தைத் தழுவிய போராளிகள் பற்றிய உணர்வும் மதிப்பும் மக்களிடம் நீங்காமல் உள்ளது. இதனால் அவர்களை எப்படியும் நினைவு கொள்ள வேண்டும் என்ற உணர்வு மக்களில் பெரும்பாலானவர்களிடம்உண்டு. மாவீரர் நிகழ்வுகளின் அடிப்படைகளில் ஒன்று இதுவாகும். 

2.  இன்னொரு தரப்பினருக்கு ஒரு வகையில் இதுவொரு குற்றவுணர்ச்சியும் கூட. வாழும் வயதில், தங்களுடைய இளமையை போராட்டத்துக்கென அர்ப்பணித்துச் செயற்பட்டு, இறுதியில் மரணத்தையும் தழுவிக் கொண்ட போராளிகளை நினைக்கும்போது, தங்களுக்காகப் போராடியவர்கள் சாவடைந்துவிட்டனர். ஆனால், நாமோ எல்லாவற்றைக் கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற குற்றவுணர்ச்சி இவர்களைக் குடைந்து கொண்டேயிருக்கிறது. இதை நீக்குவதற்கு குறைந்தபட்சம் இத்தகைய நினைவு கூருதல்களைச் செய்து தங்களை ஆற்றுப்படுத்திக் கொள்கிறார்கள். அதனால், குறைந்த பட்சம் இந்த நிகழ்விலேனும் பங்கு பற்றவேண்டும் என்று எண்ணுகிறார்கள். 

3.  போராடி மரணத்தைத்தழுவிக் கொண்டோரின் பெற்றோர், உறவினர், நண்பர்கள், சக தோழதோழியரால் நினைவு கொள்ளப்படுதல். இது கூடி வாழ்ந்தவர்களை அஞ்சலித்தல் என்பதாகும். இவர்கள் நேர்மையான முறையில் அஞ்சலி செலுத்துகின்றனர். 

4.  அரசியற் காரணங்களுக்காக அல்லது தங்களுடைய அரசியல் நலனுக்காக மாவீரர் என்ற பெயரைப் பயன்படுத்திக்கொள்வதும் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதும் அதில் பங்கேற்பதுமாக நடப்பது. அதாவது, இவர்களால் மக்களுக்கெனத் தியாகம் எதையும் செய்யமுடியாது. தம்மை அர்ப்பணித்து தேசத்துக்கான பணிகளைச் செய்வதற்கும் இயலாது. மற்றவர்களின் தியாகங்களைக் கூறி, பிழைக்க மட்டுமே முடியும். அடிப்படையில் இது ஒரு பிழைப்புவாத அரசியலாகும். 

5.  இந்த மரணங்களின் பெறுமதி எத்தகையது? இப்படி நினைவு கொள்வதன் அடிப்படைகள் என்ன? இவ்வாறு நினைவு கொள்வதன் மூலமாக நாம் எடுத்துக் கொள்ளும் அரசியல் தொடர்ச்சியும் வளர்ச்சியும் எவ்வாறானது? நினைவுகொள்ளப்படும் (நினைவுகூரப்படும்) மறைந்த வீரர்களுடைய கனவுகளை எப்படி நிஜமாக்குவது- நிறைவேற்றுவது? உண்மையான நினைவுகூருதல் என்பது என்ன? அது எவ்வாறு அமைய வேண்டும்? என்பதைப் பற்றிய கேள்விகளோ சிந்தனையோ எதுவுமே இல்லாமல், ஏதோ நடக்கிறது. அதில் நாமும் சேர்ந்து நிற்போம் என்ற மாதிரிக் கலந்து கொள்வது.  

இதுபோலப் பல காரணங்கள் உண்டு. 

இவ்வாறான காரணங்களால்தான் வெவ்வேறு அணிகளால் அல்லது பல அணிகளால் மாவீரர்நாள் கொண்டாடப்படுகிறது – அனுஸ்டிக்கப்படுகிறது. அவரவர் தத்தமது தேவைகளுக்காக மாவீரர் நாளைக் கொண்டாடுகின்ற – அனுஸ்டிக்கின்ற – ஒரு நிலை உருவாகியுள்ளது. அதாவது இது உருவாகிய தேவையும் சூழலும்வேறு. இன்று பின்பற்றப்படும் தேவையும் சூழலும் வேறு. 

ஈழப்போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை மதித்துப் போற்றவேண்டும் என்றால், அவர்களுடைய கனவுகளுக்கும் நடைமுறைகளுக்கும் நேர்மையாக – விசுவாசமாக இருக்க வேண்டும். இதனுடைய அர்த்தம், அவர்கள் கொண்டிருந்த அதே அரசியலை இன்றும் மேற்கொள்வது என்பதல்ல. அது நடைமுறைச் சாத்தியமும் இல்லை. அந்த அரசியல் நிலைப்பாடு இன்றைய காலத்துக்குப் பொருத்தமானதும் அல்ல. ஆனால், தாம் தேர்வுசெய்கின்ற அல்லது பிரகடனப்படுத்துகின்ற அரசியலுக்காக – அதை நடைமுறைப்படுத்துவதற்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணிக்கும் பண்பாடும் உளநிலையும் துணிச்சலும் இருக்கவேண்டும். அதுவே நேர்மையானது. அதையே நாம், தம்மை அர்ப்பணித்த போராளிகளுக்குச் செய்கின்ற நேர்மையான மதிப்பார்ந்த அஞ்சலியாகும். அவ்வாறில்லை என்றால், அவர்களுடைய பெயரைவைத்துப் பிழைக்கும் பிழைப்புவாத அரசியலைச் செய்வதாகவே அமையும். 

இதேவேளை, அனைத்து இயக்கப்போராளிகளுக்கும் என ஒரு பொது நாளினைத் தெரிவுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் நாம் இந்த இடத்தில் இணைத்துப் பார்ப்பது பொருத்தமாகும். ஏனென்றால், ஈழ விடுதலைக்காகப் போராடி, மரணத்தைத் தழுவியவர்கள் அனைவரும் மதிப்புக்குரியவர்களே. அப்படியாயின் அவர்கள் அனைவரையும் உள்ளடக்கி, ஒரேநாளில் நினைவு கொள்ளலாம். அது விடுதலைப் புலிகளின் மாவீர்ர் நாளான நவம்பர் 27 ஆகவும் இருக்கலாம். அல்லது பிறிதொரு நாளாகவும் இருக்கலாம். அப்படி ஒரு பொதுநாள் ஏற்றுக்கொள்ளப்படுமாக இருந்தால், அது அரசியல் ரீதியாகவும் நினைவு கூரலின் அடிப்படையிலும் சிறியதொரு முன்னேற்றத்தைத் தரக் கூடும்.  

இதற்கும் அப்பால் இந்த நினைவுகூரல் இப்பொழுது – அதாவது எந்த இயக்கமும் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் இல்லாத சூழலில் – நடப்பதற்கான காரணத்தை நாம் அர்த்தமாக்குவதாக இருந்தால், அதைக் குறித்து ஆழமாகச்சிந்திக்க வேண்டும். அப்படிச் சிந்திக்கும்போதுதான் இந்தச்சடங்குத்தனமான, சம்பிரதாயமான நினைவு கூரல் என்ற அர்த்தக் குறைவான நடைமுறை மாறி, புதியபோக்கொன்று அர்த்தபூர்வமாக விளையும். 

1989 இல் மாவீர்ர் நாளை விடுதலைப் புலிகள் இயக்கம் மரணத்த போராளிகளை நினைவுகூரும் விதமாக அனுஸ்டிக்கத்தொடங்கியது. அதற்காக அது தன்னுடைய அமைப்பிலிருந்து முதல் சாவடைந்த போராளியான சத்தியநாதன் என்ற சங்கர் மரணித்த நவம்பர் 27 ஆம் நாளையும் அந்த நேரத்தையும் தேர்வு செய்தது. அதுவே இப்பொழுது மாவீரர் நாளாக பின்பற்றப்பட்டு வருகிறது. 

விடுதலைப் புலிகளின் வளர்ச்சியும் அது தேர்ந்தெடுத்த ஆயுதப்போராட்ட வடிவமும் நேரடியாகவே ஒரு யுத்தத்தை விரித்தது. அப்படி விரிவடைந்த யுத்தம், பல நூற்றுக் கணக்கில் ஏன் சில சந்தர்ப்பங்களில் ஆயிரக்கணக்கிலான போராளிகளின் உயிரைக்கோரியது. இப்படி பல நூறு பேர் யுத்த களத்தில் மடியும்போது, அது மக்களிடையே ஒரு பெரும்கலக்கத்தையும் கேள்வியையும் எழுப்பக் கூடும். முடிவற்ற சாவு என்பது இழப்பு உணர்வையே ஏற்படுத்தக் கூடியது. அரசியல் தீர்வோ, யுத்த முடிவோ அல்லாமல் யுத்தம் நீண்டு செல்லும்போது இந்த உணர்வு மேலும் அதிகரிக்கும். அதுவும் ஈழத்தமிழர்கள் ஒரு சிறிய இனம்மட்டுமல்ல, சிறிய பிரதேசத்திற்குள்ளேயே வாழ்கின்றவர்கள் என்பதால் அதிகரித்த மரணங்களை போராட்டத்தில் சந்திக்கும் போது, அது மக்களின் உளநிலையில் குழப்பங்களையும் போராட்டத்தைத் தொடர்வதில் தயக்கத்தையும் உண்டாக்கும். இப்படியே இந்த யுத்தம் சென்றுகொண்டிருந்தால், கூடிச்செல்லும் மரணங்களைக் குறித்த கேள்விகளும் தயக்கமும் குழப்பமும் எழுந்து போராட்டத்துக்கு எதிரான மக்கள் அலையாக – இயக்கத்துக்க எதிரானபோக்காக மாறக் கூடும் என்று சிந்திக்கப்பட்டதன் விளைவே, மாவீரர்நாளாகும். 

களத்தில் மடிந்த போராளிகளை மகத்தான வீர்ர்களாக, வரலாற்று நாயகர்களாக, விடுதலையின் வித்துகளாக, மண்ணின் முத்துகளாக சித்திரிப்பதன் மூலம் உங்களுடைய பிள்ளையோ கணவரோ, சகோதரரோ வெறுமனே சாவைத் தழுவிக்கொள்ளவில்லை. அவர்களுடைய சாவுக்கொரு மகத்துவமும் பெறுமதியும் உண்டு. அதற்கொரு வரலாற்று முக்கியத்துவம் உள்ளது என்ற உணர்வு நிலையைக் கட்டமைப்பது. இதற்கு தமிழ் வரலாற்றிலிருந்து வீர மரணத்தைத் தழுவிக்கொள்ளும் பெருமிதப் பாடல்கள்(சங்க இலக்கியம்) உதவின. இதைப் புலிகளின் ஆதரவுப்புலவர்களும் பேராசிரியர்களும் தமிழ்மொழி அறிஞர்களும் நிறைவேற்றி உதவினர். புறநானூற்றுப் பாடல்களில் வரும் நடுகல் பண்பாடு, முறத்தினால் புலியை விரட்டிய பெண், நெற்றியில் வீரத்திலகமிட்டுப் போர்க்களத்துக்கு அனுப்பிய அன்னை போன்ற கதையாடல்கள் விடுதலைப்புலிகளின் ஊடகங்களில் மீட்டெடுத்துப் புதுமைப்படுத்தப்பட்டன. 

இதன்மூலம்  சாவடையும் போராளிகளுடைய உறவுகளுக்கும் தோழர்களுக்கும் ஒருவிதமாக ஆறுதலையும் அவர்கள் திருப்திப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு நிறைவையும் கொடுப்பதாக உணர வைப்பதாகும். அதாவது இந்தச் சாவுகளுக்கு அர்த்தமும் பெறுமதியும் உண்டென நம்பவைப்பது. 

இத்தகையதொரு வரலாற்றுக்காரணம், போராடும் அல்லது போர் செய்யும் தரப்புக்கு அவசியம் தேவை. இதையே இன்னொரு பரிமாணத்தில் – இன்னொரு கோணத்தில் அரசும்செய்தது. அது படைகளின் உளநிலையையும் அவர்களுடைய உறவுகளின் உளத்தை ஆற்றுப்படுத்தவுமாக. இதை இலங்கை அரசு மட்டுமல்ல, உலகளாவிய அளவில் அனைத்து அரசுகளும் செய்கின்றன. போரில் பலியாகும் வீரர்களைப் போற்றி, தேசிய வீரர்களாக மகத்துவப்படுத்தும் உத்தி இது. ஆனால், அந்த வீரர்கள் இன்னொரு தளத்தில் – எதிர்த்தரப்பில் – அழிவையும் சேதங்களையும் உண்டாக்கியோராகவே இருப்பர். இது பற்றித் தனியாகச் சிந்திக்கவேண்டும்.

இன்று சூழல் முற்றாகவே மாறி உள்ளது. இது போர் முடிந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாகிய சூழல். விடுதலையைப் பெற்றுத்தரும் என்று நம்பப்பட்ட போராட்டம் அதற்கு மாறான விதத்தில் பெரும் பின்னடைவோடு முடிந்திருக்கும் காலம். போராட்டத்தில் வெற்றிகிட்டும் என்ற எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் இல்லாதொழிந்த சூழல். என்பதால் இப்பொழுது புதிய அரசியல் முன்னெடுப்புகளும் அதற்கான வழிமுறைகளும் கண்டறியப்பட வேண்டிய நிலை. இந்தச் சூழலில், கடந்த காலத்தின் அரசியல் அடையாளங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றும்போது, அதை எத்தகைய அடிப்படையில் பின்பற்றுவது? அதனுடையபெறுமதி என்ன? அதற்கான இன்றைய தேவை என்ன? உணர்வைத் திருப்திப்படுத்தத்தான் நம்முடைய அரசியல் பயன்படுத்தப்படுகிறதா? அல்லது மரணித்த வீரர்களின் கனவுக்கு நேர்மையாகவும் விசுவாசமாகவும் அறிவுபூர்வமாகச் செயற்பட்டு, விடுதலையை நோக்கிய அரசியலை முன்னகர்த்துவதா? என்ற கேள்விகள் எழுகின்றன. 

இப்பொழுது மாவீரர் நிகழ்வுகளை நடத்தும்போது அல்லது போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும்போது நாம் மனதிற்கொள்ள வேண்டியது, எதிர்கால அரசியலைக் குறித்த சிந்தனைகளை, வெற்றிகரமான செயல் வடிவமாக்குவது எப்படி என்பதாகவே இருக்க வேண்டும். அதையே ஒவ்வொரு போராளியும், மரணித்த ஒவ்வொரு வீரரும் தங்களுடைய கனவாக, விருப்பாகக் கொண்டிருந்தனர். 

அப்படியாயின் இதனை எவ்விதம் முன்னெடுப்பது? யார் முன்னெடுப்பது? என்றகேள்விகள் மேலும் எழுகின்றன. ஏனென்றால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு தரப்பும் தாம் சொல்வதே சரி. அதுவே நிஜம் என்றே முடிவற்று வாதிடப்படுகிறது. இந்தச் சூழலில் எத்தகைய நிலைப்பாட்டை, எத்தகைய கருத்து நிலையை ஏற்றுக் கொள்வது? அல்லது எந்தத் தரப்பை அங்கீகரிப்பது என்ற குழப்பம் மக்களுக்கு உண்டு. 

முதலில் நடைமுறை ரீதியாகச் சாத்தியப்படக் கூடிய அரசியலை முன்னெடுப்பவர்களையே மக்கள் ஆதரிக்க வேண்டும். அவர்களே வெற்றியின் நாயகர்கள். அவர்களே பொறுப்பான முறையில் சிந்திக்கிறார்கள். அவர்களுக்கே மக்களுடைய வலியும் சுமையும் புரிகிறது. அவற்றைக் குறித்து அவர்களே ஆழமாக உணர்கிறார்கள். அவர்களுக்கே பிராந்திய, சர்வதேச அரசியல், பொருளாதார அசைவுகளைப் பற்றிய – அவற்றின் யதார்த்தத்தைப் பற்றிய புரிதல் உண்டு. என்பதால் அவர்களே மரணித்த வீர்களின் கனவுக்கு விசுவாசமாக உள்ளனர். ஒப்பீட்டளவில் அவர்களே இதற்கு நேர்மையாளர்கள். இவற்றைப்பற்றி அக்கறைப் படாமல் வெறும் வார்த்தைகளால் மாண்டவீரர்களைப் போற்றிப்புகழ்பவர்கள், அந்த வீரர்களையும் அவர்களுடைய கனவையும் தமது அரசியல் நலக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். எனவே இவர்கள் மாவீரர்களுக்கு, அவர்களை நினைவு கூருதலுக்கு எதிரானவர்களாகும். 

என்பதால், இந்தக் கயவர்களை எதிர்த்து, நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில் சிந்திப்பவர்களின் –  செயற்படுவோரின் வழியில்திரள்வதும் அந்தப் போக்கைப்பலப்படுத்துவதும் அவசியமாகும். அதுவே மாவீரர்களுக்கு அல்லதுபோராட்டத்தில் மரணத்ததோழர்களுக்கு செலுத்தும்உண்மையான அஞ்சலியாகும்.  

அதேவேளை மாவீர்ர்களைப் போற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, அந்த வீரர்களின் கனவுக்கும் உணர்வுக்கும் மாறாக உள்ளோர் வியாபாரிகள், வரலாற்று மூடர்கள், எதிரிகள், சமூக – மக்கள் விரோதிகள் என்பதை மக்களுக்குத் தெளிவுறச் சொல்ல வேண்டும். இவர்களை எதிர்ப்பதும் அம்பலப்படுத்துவதும் மாவீரர்களுக்கு செய்கின்ற அஞ்சலி. அவர்களுக்குச் செலுத்துகின்ற மதிப்பாகும்.

என்பதால் வரலாறு, ஒரு மாறுதலுக்கான காலக்கட்டத்தில் நின்று இந்தக் கேள்விகளை – இந்தச் சிந்தனையை எழுப்புகிறது. நாம் என்ன செய்யப்போகிறோம்? என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை.  

ஆகவே விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாத சூழலில் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த மாவீரர் நாள், இன்றைய சூழலில் எத்தகைய பெறுமானத்துக்குரியது? அதனுடைய எதிர்கால விளைச்சல் என்னவாக இருக்கவேண்டும்? ஒரு காலகட்டத்து விடுதலைப் போராளிகள் என்று கருதப்பட்டோரின் கனவுகளுக்கு இன்று எத்தகைய மதிப்பு வழங்கப்படுகிறது? இதை நாம் எப்படிச் சீராக்கி முன்னெடுப்பது? என்பதே இந்த மாவீர்ர் நாள் சிந்தனைகளாகவும் நடைமுறைகளுக்கான கேள்விகளாகவும் இருக்கட்டும். 

https://arangamnews.com/?p=12440

கொள்கைகளுக்காக அஞ்சலிப்போம்

2 weeks 5 days ago

கொள்கைகளுக்காக அஞ்சலிப்போம்

லக்ஸ்மன்

“எமது நாட்டு மக்களின் நீண்ட கால கனவாகக் காணப்பட்ட தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அரசியல் ரீதியாக எமக்கு பல நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால், இனி இந்த நாட்டில் இனவாத அரசியலுக்கு
இடமில்லை.

எந்த விதத்திலும் மதவாதச் செயற்பாடுகள் எழுச்சி பெறுவதற்கும்
இடமளியோம். நாம் போதுமென்ற அளவில் இனவாதத்தினால் பாதிப்பைக் கண்டிருக்கிறோம்.

ஆறுகள் நிறைய கண்ணீரை கண்டிருக்கிறோம். இன்று நாட்டில் ஒவ்வொருவர் இடையிலும் குரோதமும் சந்தேகமும் அதிகளவில் வலுப்பெற்றுள்ளது.
பொருளாதாரம், ஜனநாயகம் என்று பல வகையில் இருக்கலாம்.

ஆனால், இனி எவரும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இனவாத, மதவாத போராட்டங்களை முன்னெடுக்க இடமளியோம் என்று உறுதியளிக்கிறேன்” என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது முதலாவது அக்கிராசன உரையில்  தெரிவித்திருந்தார்.

அது அவருடைய பொது நிலைப்பாடாகும். ஆனால், அதில், உட்பொதிகை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் போராட்டமாகவே இருந்தது. இலங்கையைப் பொறுத்தவரையில் கார்த்திகை மாதம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் அன்னியராக்கப்பட்டமை, ஜே.வி.பியின் கார்த்திகை வீரர்கள் நினைவு போன்ற பல விடயங்களுக்கு முக்கியமானது.

தமிழர்களைப் பொறுத்தவரையில், இது மாவீரர் வாரம். ஆனால், பாதுகாப்புத் தரப்பினர் இதனை மாவீரர் மாதமாகவே கொள்வார்கள். கார்த்திகை தொடங்கினாலே தகவல்களைச் சேகரிப்பார்கள்,

வடக்கு, கிழக்கில் எந்த அமைப்பு, தனிப்பட்ட நபர்கள், யாரெல்லாம் மாவீரர் தினத்துக்கான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்ற தகவல்களைத் திரட்டுவார்கள். கடந்த வருடங்களில் செயற்பட்டவர்களைக் கண்காணிப்பார்கள். இது வழமையாகவே நடைபெற்று வருகின்ற விடயம்.

யுத்த காலத்தில் பாதுகாப்புத் தரப்பினர் மிகுந்த அச்சத்துடன், இந்த
வேலையைச் செய்து கொண்டிருந்தனர். ஏனெனில், புலிகள் எங்கு வருவார்கள்,
எப்போது தாக்குதல் நடத்துவார்கள் என்ற அச்சம். அதே நேரத்தில், புலிகளின்
பகுதிகளுக்கு தமிழ் மக்கள் செல்லும் போதும், திரும்பும் போதும்
அவர்களுக்கும் விசாரணைகள், கைது, மரண அச்சங்கள் இருந்தன.

ஆனால், யுத்தம் மௌனத்திற்கு வந்த பின்னர் இருந்த ஒவ்வொரு ஆட்சியிலும் ஒவ்வொரு விதமாக நிலைமை இருந்து வந்தது. 2009இல் விடுதலைப் புலிகளுடனான ஆயுத யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் மாவீரர் நிகழ்வுகளுக்கான செயற்பாடுகள் தமிழர்களின் பிரதேசங்களில் குதிரைக் கொம்பாகவே இருந்தது.

தடை உத்தரவுகள், மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், நெருக்கடிகள், கைதுகளாக இருந்தன. அவற்றினையும் மீறி, ரகசியமாக நிகழ்வுகள் ஒருவாறு நடந்து விட்டாலும், அதன் பின்னரும் கைதுகள், விசாரணைகள் நடைபெற்றிருந்தன. பின் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்க காலத்தில் நிலைமை சற்று மாறியிருந்தாலும், முழுமையாக இருக்கவில்லை.

அதன் பின்னர் வந்த கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசாங்கத்தில் நிலைமை தலைகீழாக மாறியது. அப்போது, கொவிட்- கொரானா காரணமாக காட்டப்பட்டு கைதுகள், நெருக்குதல்கள் நீதிமன்ற தடைய உத்தரவுகள் இருந்தன. பின்னர் உருவான ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்திலும் பாதுகாப்புத் தரப்பினர் தமிழ் மக்களுக்குச் சாதகமான வேறு முறைகளைக் கையாண்டிருந்தனர்.

இப்போது, கடந்த காலத்தில் நாட்டைக் கைப்பற்ற இரண்டு முறை ஆயதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு தோற்றுப்போன, தமது தலைவர் உட்பட பலரையும் பலிகொடுத்த ஒரு போராட்ட இயக்கமான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம்.

கடந்த வருடம் ஆட்சி பீடம் ஏறியபோது, கொஞ்சம் பாதுகாப்புத் தரப்பினருடைய பிரச்சினைகள் இருந்தாலும், இவ்வருடம் கெடுபிடிகள் எதுவுமின்றி மாவீரர் தினத்துக்குரிய ஏற்பாடுகள் வடக்குக் கிழக்கில் நடைபெறுகின்றன. 
ஆனால், சிறியளவுக்கான அச்சத்தினைத் தமிழர்கள் வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு நம்பிக்கை மாத்திரம் அவர்களிடம் இப்போது இருக்கிறது. ஜே.வி.பியின் கார்த்திகை வீரர்கள் தின நிகழ்வு. கடந்த 13ஆம் திகதி கொழும்பு
விகாரமகாதேவி திறந்தவெளி அரங்கில் ஜே.வி.பியின் 36ஆவது கார்த்திகை வீரர்கள் நினைவேந்தல் நடைபெற்றது. இதில் அக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மலர் அஞ்சலி செலுத்தினார்.

ஒரு போராட்ட இயக்கத்தின் கொள்கைக்காக மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஒரு உளப்பூர்வமான நிறைவுதான் அதனை ஒவ்வொரு வருடத்திலும் உணர்பவர் அவர். அந்தவகையில், தங்களுடைய கொள்கைகளுக்காக மணரத்தைத் தழுவிக் கொண்ட மாவீரர்களை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நினைவு கூருகின்ற ஆத்மார்த்த முன்வருதலானது மாவீரர் தினமாகும். 

ஆனால், எழுச்சிமிகு நாளாக வடக்கு கிழக்கில் நிகழ்வெடுக்கப்படுகின்ற இந்த மாவீரர் வாரத்தில் தமிழர்களின் அரசியல் தரப்புகள் கொண்டுள்ள நிகழ்ச்சி நிரல்களால் பிரச்சினைகள் எழுந்துவருவது தமிழ் மக்கள் மத்தியில் கவலைகளையும், குழப்பங்களையும் உருவாக்கி வருகிறது.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் பல்வேறு முக்கியப்படுத்தல்கள், நினைவுபடுத்தல்கள், கௌரவிப்புகள் இருந்து வருகின்றன. முக்கியமாக அன்னை பூபதி, தியாகி திலிபன் ஆகியோர் இந்திய இராணுவத்திற்கெதிராக உண்ணா நோன்பிருந்து தங்களது உயிர்;களைத் தியாகம் செய்திருந்தார்கள். 

இப்போது அவர்களுடைய தியாகங்கள் நம்மவர்களாலேயே எள்ளிநகையாடுகின்ற அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.வடக்கு, கிழக்கு மக்களின் தேசிய நிகழ்வுகளாக உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்படவேண்டிய நிகழ்வுகள் அரசியல் போட்டியும், தனிப்பட்ட சுய லாபங்களுக்கானதாக மாறி வருகின்றன. தனிப்பட்ட கோபதாபங்கள், வெறுப்புகளைத் தமிழ்த் தேசியத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் விடயங்களாகப் பயன்படுத்துகின்றனர். சிலவேளைகளில் இது தமிழ்த் தேசியத்தைப் பாதிக்கின்ற விடயங்களாக உணராமல் இவ்வாறு நடைபெறுகின்றதாகக்கூடக் கொள்ளலாம். 
அதேநேரத்தில், தமிழர்களின் அரசியல் மயப்படுத்தலில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே உருவாகியிருக்கின்றன என்றும் கொள்ளலாம்.

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட தினமாக நினைவு கூரப்படுகின்ற மே-18 நிகழ்வுகளும் அரசியல் சுய லாபத்திற்காக நடத்தப்படுகின்ற ஒன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது.

அது மக்களை அரசியல் மயப்படுத்தாதிருப்பதன் பலாபலனே. அதே நேரத்தில் தமிழ் மக்களின் சுய நிர்ணயப் போராட்டமானது ஏன் தொடங்கப்பட்டது, அதன் அரசியல் வரலாறு என்ன, பட்டறிவுகள் எவ்வாறானது. அதன் பாதிப்புகள் எத்தகையது.

அதற்கானஅடுத்த கட்டம் என்ன, உலக மயமாதலால் எவ்வாறான விளைவுகள் தமிழர்களின் போராட்டத்திற்கு ஏற்படும் போன்ற விடயங்கள் சரியான முறையில் அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தப்பட்டதா, கடத்தப்படுகிறதா?, அதற்கான வேலைத்திட்டங்கள் செய்யப்படுகின்றனவா போன்றவைகள் ஆராயப்படவில்லை. அதனாலேயே தமிழர்களுக்கான அரசியலை செய்யவென புறப்பட்டவர்கள், கட்சிகளும்கூட தமக்கென ஒவ்வொரு வழிகளில் சென்று கொண்டிருப்பதற்கான காரணமாகும். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களின் அரசியல் வரலாறுகளிலிருந்து மாற்றத்தினை ஏற்படுத்துகின்ற மாதமாக இந்த கார்த்திகை மாதம் இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாகும்.

இந்தஎதிர்பார்ப்பு நிறைவேறுவதற்கான அரசியலைச் முன் நகர்த்துவதற்குத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் முயலாமல் இருப்பது உண்மையிலேயே அவர்களின் இயலாமையாகக்கூட இருக்கலாம்.

தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வினை நிச்சயப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களாகத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், கட்சிகள் மாறாதவரையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையான சுயநிர்ணய உரிமை என்கிற இலக்கு நிறைவேறப்போவதில்லை. 

இதற்காக தமிழ்த் தேசிய அரசியலைச்செய்துவருகின்ற தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்குள் உள்ள விட்டுக்கொடுக்க முடியாத விடயங்களைப் பொதுக் கலந்துரையாடல்களுக்குட்படுத்தி தமிழ்த் தேசியத்துக்கான பொது நிலைப்பாட்டுக்கு வருதலே சிறப்பாகும்.

நாட்டுக்குள் சிங்கள மக்களிடம் காணப்படுகின்ற புலிகளின் மீளுருவாக்கம் நடைபெற்றுவிடும் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் தொடங்கிவிடும், மாவீரர் தினம் அதற்கான வழியைத் தோற்றுவித்துவிடும் என்ற அச்சம் தமிழ் மக்கள்மா வீரர் நினைவுகூரலை நடத்துவதில் தடைகளை ஏற்படுத்துவதாக இருந்து
வருகிறது.

அதற்கு வடக்கு கிழக்கில் இருக்கின்ற பாதுகாப்புத் தரப்பினரும் ஒருவித காரணமாகும். இவ்வாறான சூழலை உருவாக்குவதற்கான எந்தவித ஏதுக்களும் இல்லையானாலும் ஆரம்பத்திலிருந்தான அவர்களின் அச்சம் அதனைச் செய்யத் தூண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனாலும், அதற்காக அவர்கள் முன்வைக்கப்படுகின்ற காரணங்கள் உண்மைக்கும் யதார்த்தத்துக்கும் புறம்பானதாக இருப்பது வேடிக்கை. மொத்தத்தில், ஆயதக்கிளர்ச்சியில் ஈடுபட்டு மோசமான முறையில் அடக்கப்பட்டுத் தோற்றுப் போய் அரசியல்வழியில் நாட்டைக் கைப்பற்றியிருக்கின்ற ஜே.விபி. கைக்கொண்ட மக்களை அரசியல்மயப்படுத்தும் செயற்பாடு தமிழ்களுக்கும் முன்னுதாரணமாகும். இந்த அரசியல் மயப்படுத்தலை செய்யாதவரையில் தமிழர்களின் அரசியல் அபிலாசை ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை.

இதற்கான உறுதிபூணலை இந்தக் கார்த்திகையிலேனும் தமிழ் அரசியல் தரப்பினர் மேற்கொண்டாக வேண்டும். இதுவே கொண்ட கொள்கைக்காக உயிர்நீத்த ஒவ்வொருவருக்கும் செய்கின்ற சரியான அஞ்சலியாக இருக்கும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொள்கைகளுக்காக-அஞ்சலிப்போம்/91-368071

தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும்

2 weeks 6 days ago

இந்தியாவுக்கு பாக்கு நீரிணை நிரந்தர எதிரி. சிங்கள பௌத்த அரசுக்கு பாக்கு நீரிணை நிரந்தர நண்பன், அது வரமும் சாபமும் கலந்த நண்பன் அல்லது அமிர்தமும் நஞ்சும் நிறைந்த நண்பன் அல்லது அமுதமும் நஞ்சும் கலந்த நண்பன். ஈழத் தமிழருக்கு பாக்கு நீரிணை அரை நண்பன்.

அமிர்தம் என்பது தேவர்கள் அருந்துவதாக கூறப்படும் ஒரு புராண உணவு. அமுதம் என்பது ஈயத்தை தங்கமாக மாற்றும் அழியாமையைக் தரும் ஒரு கற்பனைத் திரவம். இங்கு நஞ்சை கழைந்து அமிர்தத்தை கடைந்தெடுக்கும் அரசியல் வித்தை சிங்கள தலைவர்களுக்கு தெரியும்.

இந்திய அரசுக்கு பாக்கு நீரிணை எப்போதும் அதன் முழு எதிரியாய் உள்ளது. ஆதலாற்தான் தனுஷ்கோடி -- தலைமன்னார் தரைப்பாலத்தை அமைப்பதன் வாயிலாக அந்தப் பாக்கு நீரிணையை தனது நண்பனாக்க இந்தியா முயல்கிறது. சிங்களவிற்கு வெள்ளிடை மலையென ஒன்று தெரியும்.

பாக்கு நீரிணை

அதாவது அந்தப் பாக்கு நீரிணைதான் இந்தியாவின் தொடர் நிலப்பரப்பிலிருந்து இலங்கையை பிரித்து ஒரு தீவாக்கியது. இதன் மூலம் பாக்கு நீரிணைதான் இலங்கையை ஒரு நாடாக்கியது. அதுதான் இலங்கையை ஒரு தனி அரசாக்கியது. இந்த வகையில் பாக்கு நீரிணை சிங்கள பௌத்தத்துக்கு ஒரு வரம்.

பௌத்தம் பிறந்த இந்தியாவிலேயே இந்து மதப் பிரிவுகளினால் பௌத்தம் அழிக்கப்பட்ட போதிலும் பௌத்தம் புகுந்த இலங்கைத் தீவில் அந்தப் பாக்கு நீரிணையால் அந்த பௌத்தமும் பௌத்த அரசும் பாதுகாக்கப்படுகிறது.

தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் | Is The Thalaimannar Dhanushkodi Flyover Feasible

ஒருவேளை கிமு 3 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து இந்திய பேரரச ஆதிக்க விருத்தியின் ஒரு வடிவமாக பௌத்தம் இலங்கைக்கு சமாதானபூர்வமாக கொண்டுவரப்பட்ட போதிலும் அனுராதாபுரம் மன்னன் தீசன் மௌரியப் பேரரசர் அசோகத் சக்கரவர்த்தியின் கட்டளைப்படி மீள் முடி தரிக்கப்பட்டார் என்று மகாவம்சம் கூறுகிறது.

மேலும் சக்கரவர்த்தி அசோகரின் பட்டப்பெயரான "தேவநம்பிய" என்பது தீசனுக்கான முடிக்குரிய பேராக்கப்பட்டு தீசன் தேவநம்பிய தீசன் என அரச பட்டப் பெயர் சூட்டப்பட்டார். இது இந்திய பேரரச ஆதிக்கப் படர்ச்சியின் தெளிவான அரசியல் வடிவம்.

ஆயினும் சிங்கள அரச பௌத்த சமூக உருவாக்கமானது இலங்கை அனுராதபுரத்தில் தோன்றி வளர்ந்து வந்த ஒரு அரச சமூக வளர்ச்சியின் கழுத்தில் ஒரு கூரிய இந்திய ஆதிக்க வாளாக பௌத்தம் இலங்கையை அணுகிய போது அனுராதபுரத்தில் முகிழ்ந்து எழுந்து வந்த உயர அரச குழாம் கழுத்துக்கு ஓங்கப்பட்ட அந்த வாளை தமது தலைக்கும் நெஞ்சுக்குமான கவசமாக மாற்றிக் கொண்டனர். இது ஒரு பொழுதில் நிகழ்ந்தது அல்ல.

பௌத்த அரச பண்பாடு

தொடர் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் இவ்வாறு முகிழ்ந்தெழுந்து. இந்நிலையில் சிங்கள அரசு, பௌத்த மகா சங்க நிறுவனம், பொதுமக்கள் என அனைவரையும் ஒன்று திரட்டிய ஒரு வடிவமாய் சிங்கள பௌத்த அரச பண்பாட்டு வாழ்வு முதிர்ச்சி அடைந்தது. அரசை பௌத்த நிறுவனத்தினாலும் மக்களாலும் என ஒன்றுடன் ஒன்றாய் மூன்றையும் திரட்டி எடுத்தனர்.

சிங்கள பௌத்த இலங்கை அரசு என்பதன் தெளிவான திரட்சி பெற்ற வடிவம். மேற்படி மூன்றுக்கும் அச்சாணியாயும் அரணாயும் விளங்குவது பாக்கு நீரிணையாகும். இந்தியாவிலிருந்து இலங்கையை பிரித்து பாதுகாப்பு அளிக்கும் இந்த பாக்கு நீரிணை என்ற அரணை எப்படி ஒரு பாலத்தின் மூலம் இந்தியாவோடு இணைக்கத் தயாராகுவார்கள்.

தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் | Is The Thalaimannar Dhanushkodi Flyover Feasible

ஆனால் அப்பக் கோப்பைத் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு பாக்கு நீரிணை என்ற மந்திர வித்தை இன்னும் தெரிந்து கொள்ளப்பட்டதாய் இல்லை. ஒருவேளை அவர்கள் அதைத் தெரிந்து கொள்ள விரும்புவதும் இல்லை, அப்படி ஒரு பொருள் இருப்பதாக திரும்பி பார்ப்பதும் இல்லை.

வானத்து வெள்ளியை அண்ணாந்து பார்த்துக் கொண்டு, பாம்பு புதருக்குள் காலூன்றி நடக்கும் நிலையிற்தான் தமிழ் அரசியல் தலைவர்களின் அரசியல் போக்கு உண்டு. பாலம் கட்டுவது தொடர்பாக புத்திசாலித்தனமான சிங்கள தலைவனை கேட்டால் அதற்கு "ஆம்" என்று பதில் சொல்வான், ஆனால் பாலம் கட்டமாட்டான். ஆம் என்று சொல்வதற்கு காரணம் தூணேறிய சிங்கமாக ஒருபுறமும் காராம் பசுவாக மறுபுறமும் உள்ள இந்தியாவின் முன் அதன் கவனத்தை ஈர்ந்து ஆடிப் பாடிப் பால் கறப்பதற்கு.

அதேவேளை பாலம் கட்டுவது பற்றி ஒரு அடிமட்ட சாதாரண சிக்கள மகனிடம் கேட்டால் கட்டவேண்டாம் என்று சொல்லுவான் கட்டவிடவும் விட மாட்டான். சிங்கள புத்திசாலியின் "ஆம்" என்ற தந்திரம் துணேறிய சிங்கத்தை திசை திருப்பவும் உதவும் காராம் பசுவில் பால் கறக்கவும் உதவும்.

வைஷ்ணவ கடவுளாகக் கொள்ளப்படும் இராமபிரானின் ஆணைப்படி இலங்கை மீது படையெடுப்பதற்காக தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே ஹனுமானால் கட்டப்பட்டது இராமர் பாலம் என்கிறது இதிகாசம். "சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்" என்றார் இந்திய தேசிய கவிஞர் பாரதியார். எனவே மத நம்பிக்கையின் படியும் இலங்கைக்கு ஒரு பாலம் அமைக்க வேண்டும் என்று இந்தியா எதிர் பார்க்கிறது.

இலங்கைக்கு ஒரு பாலம்

இந்திய தேசிய சிந்தனையின்படியும் இலங்கைக்கு ஒரு பாலம் அமைக்க வேண்டும் என்று இந்திய தேசியம் எதிர்பார்க்கிறது. முழு இந்தியாவையும் கூடவே அத்துடன் இலங்கைத்தீவையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே "சிந்து நதியின் மிசை நிலவினிலே ..." என்று தொடங்கும் பாரதியாரின் கவிதை ஆகும்.

சிங்கள பௌத்த அரசையும் சிங்கள பௌத்த மதத்தையும் பொறுத்தவரை பாக்குநீரிணை சிங்கள பௌத்த அரசுக்கு ஓர் அரணாகும். பாக்கு நீரிணைதான் புவியியல் ரீதியாக இந்தியாவுடன் இருந்துவந்த நிலத் தொடரைத் துண்டித்து இலங்கையை ஒரு தீவாயும், ஒரு நாடாயும், ஒரு தனியரசாயும் ஆக்கியது.

தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் | Is The Thalaimannar Dhanushkodi Flyover Feasible

பௌத்தம் பிறந்த இந்தியாவில் அது இந்து மதப் பிரிவுகளால் இந்தியாவை விட்டு துரத்தப்பட்ட போது இலங்கை என்ற தீவிற்தான் அது தரித்துப் பாதுகாக்கப்பட கூடியதாக இருந்தது. அந்த வகையில் பாக்கு நீரிணை சிங்கள பௌத்தர்களுக்கு ஒரு வரமும் கொடையுமாகும்.

அதேவேளை பாக்கு நீரிணையின் ஒரு புறத்தில் ஈழத் தமிழரும் அதன் மறுபுறத்தில் தமிழகத் தமிழரும் வாழ்ந்து வரும் நிலையில் ஈழத் தமிழருக்கும் தமிழக தமிழருக்கும் இடையேயான உறவை சிங்கள பௌத்த அரசு கசப்புடன் பார்த்து வருவதுடன் அத்தகய கசப்பினதும் பயத்தினதும் பின்னணியில் சிங்கள பௌத்த அரசு ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்து வருகின்றது என்பதும் கண்கூடு.

மேலும் ஈழத் தமிழரை இந்திய ஆதிக்க படர்ச்சியின் கருவிகளாகவும் இந்திய அரசின் ஆதிக்க படர்ச்சிக்கான ஓர் ஏதுவாகவும் ஈழத் தமிழரை சிங்கள அறிஞர்களும், வரலாற்றாளர்களும், தலைவர்களும், பௌத்த மத நிறுவனமும் ஆழமாக நம்பியும், கருதியும் வருகின்றனர்.

கூடவே கி.மு 3 ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த பௌத்தமும் இந்திய பேரரச ஆதிக்கப் படர்ச்சியின் ஒரு பகுதியாகவே நிகழ்ந்ததை சிங்கள பௌத்த தரப்பினர் உணரத் தவறவில்லை. இந்த வகையில் ஒட்டுமொத்த இந்திய ஆதிக்க பரவலை பெரிதும் தடுப்பதற்கு இயற்கையாக காணப்படும் பாக்கு நிரிணையை ஒரு வரமாகவே கருதும் சிங்கள பௌத்த தரப்பினர் செயற்கையாக 23 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு தரைவழிப் பாலம் அமைக்கப்படுவதை ஒரு போதும் விரும்ப மாட்டார்கள்.

ஜேவிபி தலைமையிலான அரசாங்கம் 

சிங்களவரின் கண்ணில் இராமர் கட்டிய பாலம் இலங்கை மீதான இந்தியாவின் படையெடுப்புகானது. இந்துமா கடலின் மையத்தில் இந்தியாவுக்கு மிக அருகில் அமைந்துள்ள இலங்கைதீவு வெளி வல்லரசுகளின் ஆதிக்கத்துக்கோ அன்றி செல்வாக்குக்கோ உள்ளாகும் போது இந்தியாவை பெரிதும் பாதிக்கும் என்ற நிலையில் ஒரு பாலம் அமைப்பதன் மூலம் வெளி வல்லரசுகளுக்கான வாய்ப்பை துண்டித்து விடலாம் என இந்திய அரசு நம்புகிறது.

இத்தகைய பின்னணியில் மேற்படி பாலம் அமைப்பது பற்றிய அவாவும் கற்பனையும் இந்திய தரப்பில் எழுவது இயல்பு. அதன்படி இந்தியா அதற்கான முயற்சிகளை கற்பனை கலந்த ரசனையுடன் மேற்கொள்கிறது.

2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்படி பாலம் கட்டுவதற்கான வாக்குறுதிகளை வானளாவ நட்சத்திரங்கள் என பறக்க விட்டார்.

தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் | Is The Thalaimannar Dhanushkodi Flyover Feasible

நிச்சயம் அவருக்குத் தெரியும் தான் புளுகுப் பெட்டிகளை அவிழ்த்து விடுகிறேன் என்பது. அவருக்கு இருந்த அரசியல் நெருக்கடியில் இந்தியாவின் வாயில் அல்வாவை வைத்து காராம் பசுவிடமிருந்து கறக்க வேண்டியவற்றை கறப்பதற்காக அப்படி அவர் இந்திய மண்ணில் நின்று செயல்பட்டார்.

தொடர்ந்து இலங்கை இந்திய அமைச்சர்கள் மட்டத்திலான கலந்து உரையாடல்களும் கருத்து பரிமாற்றங்களும் திட்டமிடல் பணிகளும் இடம்பெற்றன.

ஆசிய வங்கியில் இதற்காக இந்திய அரசு 22 ஆயிரம் கோடி ரூபாக்களைக் கடன் கோரியும் இருந்தது. அந்தளவுக்கு திட்டம் நடைமுறை சார்ந்து இந்திய தரப்பில் நம்பிக்கை உடன் மேற்கொள்ளப்பட்டது.

சிங்கள தரப்பை பொறுத்தவரையில் அதிகாரத்தில் உள்ளஒரு புத்திசாலியிடம் கேட்டால் அவன் பாலம் அமைக்க "ஓம்" என்று சொல்வான், ஆனால் கட்டமாட்டான். ஓர் அப்பாவின் சிங்களமகனை கேட்டால் அவன் பாலம் கட்ட வேண்டாம் என்று சொல்லுவான்.

இங்கு புத்திசாலியோ அப்பாவியோ இருவரும் பாலம் கட்ட மாட்டார்கள் என்பது உறுதி. இதில் ரணில் முதலாவது தரத்தைச் சேர்ந்தவர். இதுதான் சிங்கள பௌத்த யதார்த்த நிலை. சிங்கள தரப்பை பொறுத்தவரையில் அரசனோ ஆண்டியோ, ஞானியோ பாமரனோ எவரும் பாலம் கட்டுவதில்லை என்பதில் உறுதியானவர்கள்.

இந்நிலையில் இப்போது பதவி இருக்கும் ஜேவிபி தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் இந்தப் பாலத்தை கட்ட மாட்டாது. கட்டப்பட உள்ளதாக இருப்பது கற்பனை; கட்டப்படாமல் இருக்கப் போவதே யதார்த்தம்.

https://tamilwin.com/article/is-the-thalaimannar-dhanushkodi-flyover-feasible-1763327912

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் எழுதிய “சட்டத்தின் ஆட்சி” என்ற நூல் சொல்லும் செய்தி!

3 weeks ago

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் எழுதிய “சட்டத்தின் ஆட்சி” என்ற நூல் சொல்லும் செய்தி!

*** *** ***

*மேற்கு - ஐரோப்பிய அரசியல் கோட்பாடுகளை விட, சீன அரசியல் கோட்பாடுகள் மேலெழும் சூழல்...

*ஜனநாயகம் - யதார்த்த அரசியல் - என்ற ஏமாற்றை விடவும் சீன ஜனநாயகம் மேல் என்ற உணர்வு...

** *** ******

மேற்கு நாடுகள் எழுதி வைத்த ”ஜனநாயக கோட்பாடு”, ”சட்டத்தின் ஆட்சி” ”அரச இறைமைக் கோட்பாடு என்பற்கு மாறாக கம்யூனிஸ்ட் கொள்கையை பின்பற்றி வரும் சீனா, இன்று உலகத்துக்குப் பெரும் சவலாக மாறியுள்ளது.

”நான் சொல்வதை நீ செய்” என்ற அதிகாரத் தேரணையில் இயங்கும் அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளுக்கும், ”ஜனநாயகம்” - ”சட்ட ஆட்சி” என்றால் என்ன என்பதை, சீனா காண்பித்துள்ளது.

இப்போது அதனை நூலாக வெளியிடுவதன் ஊடாக, எதிர்காலத்தில் மேற்கு - ஐரோப்பிய நாடுகளின் அரசியல் கோட்பாடுகளுக்குப் பதிலாக சீன அரசியல் கோட்பாடுகளை மாணவர்கள் கற்கும் நிலை தோன்றும் என்பதில் ஐயமில்லை.

ஏன் உலகமே அதனை ஏற்கக் கூடிய சாத்தியங்களும் வரலாம்.

ஏனெனில் --

டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலிய ஜனாதிபதி நெதன்யாகு ஆகியோர் உள்ளிட்ட சில உலகத் தலைவர்களின் அட்டகாசம் - மிரட்டல் போன்ற செயல்கள், சீன அரசியல் கோட்பாட்டுக்கு மாணவர்களை தள்ளக் கூடிய ஏது நிலை தெரிகிறது.

நேர்மையான கம்யூனிஸ்ட் கொள்கையை சீனா பின்பற்றவில்லை என்று பலரும் குற்றச்சாட்டலாம்.

ஆனால் --

அக் குற்றச்சாட்டுகளைக் கடந்து, சீனா இன்று உலக வளர்ச்சியில் பல முன்னேற்றங்களையும், ஒழுங்கு முறையான அரசியல் நடைமுறைகளையும் (Orderly Political Procedures) அறிமுகப்படுத்தி - நியாயப்படுத்தி உலகத்துக்குக் கற்பிதம் செய்துள்ளது எனலாம்.

இது சிலருக்கு கசப்பாக இருக்கும். ஆனால் அது தான் உண்மை.

சீனாவில் கட்சிக்குள் அரசு - அரசுக்குள் கட்சி என்ற தன்மை உண்டு. ஆனால், ஒரு கட்சி ஆட்சி முறைமை (System) தான் சிறந்தது போல் தெரிகிறது.

ஏனெனில் ---

ஜனநாயம் - மாற்றுக் கருத்து - யதார்த்த அரசியல் - அபிவிருத்தி அரசியல் என்று ஏமாற்றி, ஈழத்தமிழ் இனம் போன்ற தேசிய இனங்களை மேற்கு - ஐரோப்பிய நாடுகள் கைவிடுகின்றன.

இலங்கை போன்ற இன ஒடுக்கல் அரசுகளுக்கு ஒத்தூதுகின்றன.

அத்துடன் ---

புவிசார் அரசியல் என்ற போர்வையில், தமது அரசியல் - பொருளாதார நலன்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

அதேநேரம் --

சீன ஒடுக்குமுறை இல்லை என்று கூறவும் முடியாது. புவிசார் அரசியல் போட்டியை, சீனா பயன்படுத்தி வருகிறது என்பதையும் மறுக்க இயலாது...

ஆனால் --

மேற்கு - ஐரோப்பிய நாடுகளின் ஓரங்கட்டலை விட அல்லது “நான் சொல்வதை நீ செய்” என்ற அதிகாரத் தோரணையை விடவும், சீனாவின் ஒரு கட்சி ஆட்சி முறைமை சிறந்தது என்ற எண்ணம் உருவாகின்றது.

அதேநேரம் ---

கம்யூனிஸ்ட் கொள்கையுடை பலர் சந்தர்ப்பவாதிகள் என்ற கருத்து உண்டு.

குறிப்பாக --

இலங்கையில் ஒழுங்கான கம்யூனிஸ்ட்கள் இல்லை. இடதுசாரிகளும் அப்படித்தான்...ஜேவிபி அதற்கு சிறந்த உதாரணம்...

அதேநேரம் --

சீன கம்யூனிஸ்ட் ஒரு வகையான முதலாளித்துவ சாயல் கொண்டது என்ற கருத்தும் உண்டு.

ஆனால் --

கம்யூனிஸ்ட் என்பதை தவிர்த்து, சீன ”அரசியல் கோட்பாடுகள்” என்று நோக்கினால், ”சீன ஜனநாயகம்”, ”சீன இறைமை” என்பது சிறப்பான மாற்றம் என்ற சிந்தனை எழுலாம்.

ஆகவே --

சீன அரசியல் முறைமை (Political System) ஆபத்தா அல்லது நன்மையா என்பதை காலம் சொல்லும்...

இப்போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், எழுதிய “சட்டத்தின் ஆட்சி” என்ற நூல் பற்றிய செய்திக்கு வருவோம் ---

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (Communist Party of China - CPC) மத்தியக் குழுப் பொதுச் செயலாளர், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், எழுதிய “சட்டத்தின் ஆட்சி” (Rule of Law) என்ற மேற்படி நூல் பீஜிங்க நகரில் வெளியிடப்பட்டுள்ளது.

2012 ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு பெ்பரவரி மாதம் வரையிலான சட்டத்தின் ஆட்சியில் ஜி ஜின்பிங் எழுதிய கட்டுரைகள், உரைகள் ஆகியவற்றின் மிக முக்கியமான மற்றும் அடிப்படையான படைப்பியல் கருத்துக்கள் 69 பகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த நூல் சீன பண்புகளுடன் கூடிய சோசலிச சட்டத்தின் அமைப்பை வளர்ப்பதற்கும், சட்டத்தின் கீழ் ஒரு சோசலிச நாடாக சீனாவை உருவாக்குவதற்கும், புதிய வகிபாகத்தில் சட்ட அடிப்படையிலான நிர்வாகத்தை தொடர்ந்து வகுப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது.

இதனை 'குளோபல்ரைம்ஸ்' என்ற (globaltimes) சீன அரச ஆங்கில செய்தி ஊடகம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் கட்சி வரலாறு - இலக்கிய நிறுவனத்தால் இந்த நூல் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

1953 ஆம் ஆண்டு பிறந்த ஜி ஜின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், மத்திய இராணுவ ஆணைக்குழு தலைவராகவும், 2012 ஆம் ஆண்டு முதல் சீனாவின் மூத்த அரசியல் தலைவராகவும் விளங்கினார்.

2013 ஆண்டு முதல், ஜி ஜின்பிங், சீனாவின் ஜனாதிபதி பதவியை வகிக்கிறார்.

ஐந்தாவது தலைமுறை சீனத் தலைமையின் உறுப்பினராக, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின்னர் பிறந்த முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிகையாளர்

நிக்ஸன்

Checked
Sun, 12/07/2025 - 18:45
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed