அரசியல் அலசல்

மூன்று வருட இடைவெளியில் மூன்று ஆட்சியாளர்களை விரட்டிய தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகள்

23 hours 22 minutes ago

மூன்று வருட இடைவெளியில் மூன்று ஆட்சியாளர்களை விரட்டிய தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகள்

Veeragathy Thanabalasingham

September 16, 2025

09int-Nepal-Protests-Leadall-03-tzgk-vid

Photo, NY TIMES

தெற்காசியாவில் மூன்று வருடங்களில் மூன்று அரசாங்கங்களை மக்கள் கிளர்ச்சிகள் பதவி கவிழ்த்திருக்கின்றன. முதலாவதாக, 2022ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி ராஜபக்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. இரண்டாவதாக, 2024 ஆகஸ்டில் பங்களாதேஷ் மக்கள் கிளர்ச்சி பிரதமர் ஷேய்க் ஹசீனாவின் அரசாங்கத்தை கவிழ்த்தது. மூன்றாவதாக, கடந்த வாரம் அதேபோன்ற மக்கள் கிளர்ச்சி நேபாளத்தில் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் அரசாங்கத்தை வீழ்த்தியிருக்கிறது.

இலங்கையினதும் பங்களாதேஷினதும் கிளர்ச்சிகளின்போது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவும் ஷேய்க் ஹசீனாவும் நாட்டை விட்டு தப்பியோடினார்கள். ஆனால், கடந்த வாரம் பதவியில் இருந்து விலகிய நேபாளப் பிரதமர் இராணுவத்திடம் பாதுகாப்பைத் தேடிக் கொண்டார். நாட்டை விட்டு வெளியேறிய கோட்டபாய சில வாரங்களில் நாடுதிரும்பிய அதேவேளை, ஷேய்க் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். அவரை பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் விசாரணைக்கு உட்படுத்துவதற்காக நாடுகடத்துமாறு பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம் கோரிக்கை விடுத்திருக்கின்ற போதிலும், இந்தியா அதற்கு இணங்குவதற்கான சாத்தியங்கள் இல்லை.

இலங்கையில் மக்கள் கிளர்ச்சிக்கு இரு வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற தேசிய தேர்தல்களில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மக்களின் பேராதரவுடன் பதவிக்கு வந்ததன் மூலம் அதிகார மாற்றம் அமைதியான முறையில் இடம்பெற்றது. அந்த மாற்றம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் இடதுசாரிக்கட்சி ஒன்று ஜனநாயக தேர்தல்கள் மூலம் முதன் முதலாக அதிகாரத்தைக் கைப்பற்றிய ‘சாதனையாக’ பதிவாகியிருக்கிறது. பங்களாதேஷில் நோபல் சமாதானப் பரிசாளரான முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தலை நடத்தவிருக்கிறது. கடந்த வாரத்தைய கிளர்ச்சியை அடுத்து நேபாளத்திலும் இடைக்கால அரசாங்கம் ஒன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கிறது.

தெற்காசியாவின் இந்த மூன்று மக்கள் கிளர்ச்சிகளையும் பொறுத்தவரை, பங்களாதேஷிலோ அல்லது நேபாளத்திலோ இடம்பெற்ற படுமோசமான வன்முறைகளுடன் ஒப்பிடும்போது இலங்கையின் கிளர்ச்சி பெருமளவுக்கு அமைதியான முறையிலேயே முன்னெடுக்கப்பட்டது. ஆனால், தெற்காசியப் பிராந்தியத்தில் மக்கள் கிளர்ச்சி மூலம் அரசாங்கத்தை கவிழ்த்த முதல் நாடாக இலங்கை வரலாற்று முக்கியத்துவம் ஒன்றைக் கொண்டிருக்கிறது.

சகல கிளர்ச்சிகளிலும் மாணவர்களும் இளைஞர்களுமே முன்னரங்கத்தில் நிற்பது இயல்பு. ஆனால், கடந்த வாரத்தைய நேபாளக் கிளர்ச்சியில் இளைஞர்களின் பங்கேற்பு முன்னென்றும் இல்லாத வகையில் ஒரு குறிப்பிட்ட தலைமுறை இளைஞர்களின் போராட்டமாகவே முதலில் அடையாளப்படுத்தப்பட்டது. 1900 களின் பிற்பகுதிக்கும் 2010 களின் முற்பகுதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பிறந்த இளைஞர்கள் ‘இஸற்’ தலைமுறையினர் என்று வர்ணிக்கப்படுகின்றனர். குறிப்பாக 1997ஆம் ஆண்டுக்கும் 2012ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பிறந்த இவர்கள் 13 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

நேபாளத்தில் இடம்பெற்ற கிளர்ச்சி ‘ஜென் இஸற் இயக்கம்’ ( Gen. Z movement) என்றே பிரபல்யமாக அழைக்கப்படுகிறது. அந்தத் தலைமுறையினரின் சார்பில் பரந்தளவிலான அரசியல் சீர்திருத்தங்களை வேண்டிநிற்கும் ‘ஹமி நேபாள்’ (நாங்கள் நேபாளியர்கள்) என்ற இயக்கமே போராட்டத்துக்கு தலைமை வகித்தது. நேபாளம் ஆர்ப்பாட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் புதிய நாடு அல்ல. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலமாக மாவோவாத கம்யூனிஸ்டுகளின் ஆயுதப் புரட்சியினால் பெரும் இழப்புக்களையும் அழிவுகளையும் நேபாளம் சந்தித்தது.

ஆனால், குறிப்பிட்ட வயதைச் சேர்ந்த  இளைய தலைமுறையினர் நேபாளத்தின் வீதிகளில் தற்போது எதற்காக  இறங்கினார்கள்?

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) தலைமையிலான அரசாங்கம் சகல சமூக ஊடகங்களையும் (2023 சமூக ஊடக பயன்பாட்டு ஒழுங்கு விதிகளின் கீழ்) ரெலிகோம் அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒருவார காலக்கெடு விதித்து ஆகஸ்ட் 28ஆம் திகதி அறிவித்தது. முக்கியமான சமூக ஊடகளில் எதுவும் அந்த அறிவிப்பை கருத்தில் எடுக்காத நிலையில் செப்டெம்பர் 4ஆம் திகதி அரசாங்கம் (பேஸ்புக், எக்ஸ், வட்ஸ்அப் உட்பட ) 26 சமூக ஊடகங்களை தடைசெய்தது. சுமார் மூன்று கோடி சனத்தொகையை கொண்ட நேபாளத்தில் ஒரு கோடியே 65 இலட்சம் பேர் இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என்று கூறப்படுகிறது.

சமூக ஊடகங்கள் மீது அரசாங்கம் விதித்த தடையை மக்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் ஒரு தணிக்கையாகவும் தகவல்களைப் பெறுவதற்கான ஒரு கட்டுப்பாடாகவுமே பார்த்தார்கள். சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் இணையத்தை பெருமளவுக்கு பயன்படுத்துகின்ற ஒரு நாட்டில்  இத்தகைய தடைவிதிப்பு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் முன்கூட்டியே சிந்தித்துப் பார்க்கவில்லை.

செப்டெம்பர் 8ஆம் திகதி வீதிக்கு இறங்கிய இளைஞர்களின் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் எடுத்த நடவடிக்கைகளில் 19 பேர் பலியானதுடன் நூறுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தார்கள். அதையடுத்து தலைநகர் காத்மண்டுவில் மாத்திரமல்ல, நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினார்கள்.

செப்டெம்பர் 9ஆம் திகதி சமூக ஊடகங்கள் மீதான தடையை அரசாங்கம் நீக்கிய போதிலும் போராட்டங்கள் தணியவில்லை. நேபாளத்தில் கடந்தகாலப்  போராட்டங்களின்போது  இடம்பெறாத அளவுக்கு படுமோசமான வனமுறைகள் கடந்த வாரம் இடம்பெற்றன. அரசியல் தலைவர்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. நாடாளுமன்றம், ஜனாதிபதி மாளிகை, உயர்நீதிமன்றம் உட்பட பெருவாரியான அரசாங்கச் சொத்துக்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தார்கள். சமூக ஊடகங்கள் மீதான தடைக்கு எதிராக இளைய தலைமுறையினர் அமைதியான முறையில் முன்னெடுத்த போராட்டம் இறுதியில் அரசாங்கத்தை கவிழ்த்த மாபெரும் மக்கள் வன்முறைக் கிளர்ச்சியாக மாறியது.

வன்முறைகள் தீவிரமடைந்து சிறையுடைப்புச் சம்பவங்களும் இடம்பெற்றன. ஆனால், நேபாள இராணுவம் ஓரிரு நாட்களில் அராஜக நிலைவரத்தை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. கடந்த வார வன்முறைகளில் குறைந்தது 51 பேர் பலியானதாகவும் பல நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தாகவும் செய்திகள் தெரிவித்தன. முன்னாள் பிரதமர் ஒருவரின் மனைவி உயிருடன் எரிக்கப்பட்ட கொடூரச் சம்பவமும் இடம்பெற்றது.

அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களான நேபாள கம்யூனிஸ்ட் (ஐக்கிய மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சியின் தலைவர் (பிரதமர்) கே.பி. சர்மா ஒலி, நேபாள காங்கிரஸ் கட்சி தலைவர் ஷெர் பகதூர் டியூபா மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் (மாவோவாத நிலையம்) கட்சியின் தலைவர் பிரசண்டா ஆகியோருக்கு எதிராக ஏற்கெனவே கடுமையாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தன. கோட்பாடுகளைப் பொறுத்தவரை, பெருமளவுக்கு ஒத்துப்போகாத இந்தத் தலைவர்களை ஊழலே பிணைத்து வைத்திருந்தது என்று கூட விமர்சனங்கள் வெளியாகின.

ஆட்சியாளர்களின் குடும்பங்கள் ஆபாசத்தனமான ஆடம்பரத்தில் வாழ்வதைக் கண்டு கொதித்துக் கொண்டிருந்த இளைஞர்களும் மக்களும் அரசாங்கத்தை விரட்டுவதற்கு எடுத்த முடிவை எவராலும் தடுக்க முடியவில்லை. முடியாட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அரசியல் தலைவர்கள் ஜனநாயகத்தை குடும்ப அதிகாரமாகவும் ஆட்சிமுறையை தனிப்பட்ட நலன்களுக்கான சாதனமாகவும் மாற்றியதைக் கண்டு சீற்றமடைந்த ஒரு தலைமுறையின் முழக்கம் நேபாளத்தை உலுக்கியிருக்கிறது.

நேபாள அரசியல் தலைமைத்துவம் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய அரசியலமைப்பின் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டாட்சி (சமஷ்டி) ஜனநாயக குடியரசின் புதிய அரசியல் முறைமை மக்கள் மத்தியில் பெருமளவு எதிர்பார்ப்புக்களை தோற்றுவித்தது. ஆனால், இறுதியில் மக்கள் அரசியல் உறுதிப்பாடின்மை, மந்தமான பொருளாதார வளர்ச்சி மற்றும் ஊழலையே சந்தித்தார்கள். கடந்த 15 வருட காலப்பகுதியில் நேபாளத்தில் 17 அரசாங்கங்கள் பதவியில் இருந்தன. மாவோவாத ஆயுதக்கிளர்ச்சிக்குத் தலைமைதாங்கிய தலைவர்களும் மற்றைய கம்யூனிஸ்ட் தலைவர்களும் கூட பிரதமர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். ஆனால், அரசியல் தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையில் பெரிய வெளி இருந்தது.

முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த மக்கள் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் ஆட்சிகளினால் நேபாள மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற முடியாமல் போனமையும் இறுதியில் அவர்களுக்கு எதிராகவே மக்கள் கிளர்ந்தெழுந்து அதிகாரத்தில் இருந்து அவர்களை விரட்டியிருப்பதையும்  ‘அறகலய ‘ மக்கள் கிளர்ச்சியை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை மாற்றங்களின் விளைவாக தேர்தல்களில் வெற்றி பெற்று பதவிக்குவந்த இடதுசாரி இயக்கமான ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கவனத்தில் எடுப்பது அவசியம்.

பங்களாதேஷைப் போன்றே அடுத்த கட்ட அரசியல் செயன்முறைகளை தீர்மானிப்பதில் நேபாளத்தில் இராணுவம் தீர்க்கமான பாத்திரத்தை வகிக்கிறது. இளைய தலைமுறையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் இராணுவத்துடன் ஜனாதிபதி ராம் சந்திர பவுடேல் நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு நேபாளத்தின் முன்னாள் பிரதம நீதியரசரான 73 வயதான சுசீலா கார்கி இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக வெள்ளிக்கிழமை ( செப்டெம்பர் 12) பதவியேற்றிருக்கிறார்.

நேபாளத்தின் முதல் பெண் பிரதம நீதியரசரான கார்கி  (2016 – 2017), அந்த நாட்டின் நிருவாகத்துக்கு தலைமை தாங்கும் முதல் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என்ற இளைய தலைமுறை இயக்கத்தின் கோரிக்கைக்கு ஜனாதிபதி இணங்கிக் கொண்டதன் பின்னரே கார்கியின் நியமனம் சாத்தியமாகியது. இடைக்கால நிருவாகத்தில் ‘ஹமி நேபாள்’ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இடைக்கால அரசாங்கம் ஆறு மாத காலத்திற்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டியிருக்கிறது.

முடியாட்சியின் முடிவுக்குப் பின்னரான கடந்த சுமார் 20 வருடகால ஜனநாயக பரீட்சார்த்தம் கண்டிருக்கும் தோல்வி நேபாளத்தின் அரசியல் எதிர்காலம் குறித்து குழப்பம் தரும் கேள்விகளை எழுப்புகிறது. தற்போதைய நெருக்கடியை நேபாளத்தின் குழப்பகரமான ஜனநாயக மாற்றத்தின் பரந்த பின்புலத்திலேயே விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இரண்டு வெற்றிகரமான மக்கள் போராட்ட இயக்கங்கள் (1990 & 2006) விரிவான அரசியலமைப்பு வரைவுச் செயன்முறை மற்றும் கூட்டாட்சி குடியரசு ஆட்சிமுறை ஆகியவற்றுக்குப் பின்னரும் கூட சாதாரண மக்களுக்கு அர்த்தபுஷ்டியான மாற்றத்தை நேபாளம் கொண்டுவரவில்லை. இத்தகைய சூழ்நிலையை தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்ற முடியாட்சிக்கு ஆதரவான சக்திகளும் இருக்கின்றன.

தெற்காசியாவின் மூன்று மக்கள் கிளர்ச்சிகளையும் பொறுத்தவரை, இலங்கையில் மாத்திரமே இடைக்கால அரசாங்கங்கள் நியமிக்கப்படவில்லை.கோட்டபாய நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் இருந்து ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பிறகு அரசியலமைப்பு ஏற்பாடுகளின் பிரகாரம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தினால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். பிறகு 2024 செப்டெம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவானார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றியது. ஜனாதிபதியாக திசாநாயக்க பதவியேற்று இன்னமும் சில நாட்களில் ஒரு வருடம் நிறைவடையப்போகிறது.

பங்களாதேஷில் அடுத்த வருட முற்பகுதியில் நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. அந்தத் தேர்தல்கள் அமைதியான அதிகார மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேபாளத்தில் தற்போது வெளிக்கிளம்புகின்ற அரசியல் மாற்றுச் சக்திகள் புதிய நெருக்கடியை கையாளுவதற்கு கடைப்பிடிக்கக்கூடிய அணுகுமுறைகளிலேயே அந்த நாட்டின் எதிர்கால அரசியல் தசைமார்க்கம் தங்கியிருக்கிறது.

பொதுவில் மக்கள் அரசியல் வர்க்கத்தின் மீது கடுமையாக வெறுப்படைந்திருக்கிறார்கள் என்பதையே இந்த தெற்காசியக் கிளர்ச்சிகள் பிரகாசமாக வெளிக்காட்டுகின்றன.

Thanabalasingam-e1742967550320.jpg?resizவீரகத்தி தனபாலசிங்கம்

https://maatram.org/articles/12303

பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?

2 days 3 hours ago

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1982ம் ஆண்டில் பிரபாகரன் முதலும் கடைசியுமாக அப்போதைய மெட்ராஸுக்கு வந்தார்

கட்டுரை தகவல்

  • ரெஹான் ஃபசல்

  • பிபிசி ஹிந்தி

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

எச்சரிக்கை: இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள சில விவரிப்புகள் உங்களுக்கு சங்கடம் தரலாம்.

2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களில் ஒருபிரிவினர் இன்றும் அதனை ஏற்க மறுக்கின்றனர்.

இப்படியான சூழலில், பிரபாகரனின் கடைசி தருணங்கள் குறித்து இந்த கட்டுரை அலசுகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் 2008ம் ஆண்டு, நவம்பர் 27-ஆம் தேதி மாவீரர் தினத்தை முன்னிட்டு ஆற்றிய உரையே அவருடைய கடைசி உரையாக பதிவாகியுள்ளது.

அதற்கடுத்த சில மாதங்களில் அவருடைய வாழ்க்கை முடிவுக்கு வரும் என்று யாரும் நினைக்கவில்லை, ஆனால் அவருடைய வாழ்வின் கடைசி தருணம் வரை அவருடைய மனோபாவம் மாறவே இல்லை.

1976-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை தொடங்கினாலும் கூட பிரபாகரன் நீண்ட காலமாக பெரிதும் அறியப்படாத ஒருவராகவே திகழ்ந்தார்.

1982 மே மாதம் சென்னையில் முதலும் கடைசியுமாக பிரபாகரன் பிடிபட்ட போது, இந்திய அரசு அவர் மீது அதிக கவனம் செலுத்தவில்லை.

அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவத்திற்கு சவால் விடுவதற்கும் தயங்காத வகையில், பிரபாகரனின் செல்வாக்கு மற்றும் நம்பிக்கை அபரிமிதமாக அதிகரித்தது.

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் ராணுவ சக்திக்கு சவால் விடுக்கும் அளவுக்கு பிரபாகரனின் செல்வாக்கு இருந்தது

பிரபாகரனின் பாணி

இலங்கையின் புனித நகரமான அனுராதபுரத்தில் சிங்களர்கள் கொலைக்குப் பிறகு, பிரபாகரன் குறித்து பெரும் விவாதம் எழுந்தது.

அதன்பிறகு, இலங்கையில் போட்டி தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இது, தமிழர்கள் மத்தியில் தனிப்பெரும் தலைவராக உருவாவதற்கான முயற்சியாகவே நம்பப்பட்டது.

பிரபல பத்திரிகையாளர் எம்கே நாராயண் சுவாமி தன்னுடைய 'தி ரௌட் ஆஃப் பிரபாகரன்' (The Route of Prabhakaran) எனும் புத்தகத்தில், "பிரபாகரனின் ஒவ்வொரு வார்த்தையும் சட்டம் போன்றது. அவரை யாரும் சவால் செய்ய முடியாது. அவருக்கு முன் தலை தாழ்ந்து, அவர் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, உங்களால் தமிழ் ஈழத்துக்காக போராட முடியும்," என எழுதியுள்ளார்.

"அவருடன் உடன்படவில்லையென்றால், ஒன்று நீங்கள் விடுதலைப் புலிகளை விட்டு வெளியேற வேண்டும், அல்லது உலகை விட்டு நீங்க வேண்டும். அவரை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர் 'துரோகி' என அறிவிக்கப்படுவார். சோவியத் முன்னாள் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தன்னுடைய எதிரிகளை எப்படி நடத்தினாரோ, அவர் அப்படி நடத்தப்படுவர்."

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், konark

படக்குறிப்பு, பிரபல பத்திரிகையாளர் எம்கே நாராயண் சுவாமி எழுதிய 'தி ரௌட் ஆஃப் பிரபாகரன்' புத்தகம்

அடுத்தடுத்து நடந்த கொலைகள்

விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் மட்டுமல்லாது, இந்தியாவிலும் குறிப்பிட்ட சிலருக்கு குறிவைத்தது. பிரபாகரனுக்கோ அல்லது விடுதலைப் புலிகள் அமைப்புக்கோ சில சமயங்களில் உதவியிருந்தவர்களும் கூட இலக்காயினர்.

பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அனிதா பிரதாப், தன்னுடைய 'ஐலாண்ட் ஆஃப் பிளட்' (Island of Blood) எனும் புத்தகத்தில், "பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கை குறித்து புத்தகம் எழுத திட்டமிட்டிருந்த நபர் ஒருவர், பாரிஸில் தன்னுடைய இல்லத்தின் முன்பாக சுட்டு கொலை செய்யப்பட்டார்." என எழுதியுள்ளார்.

இலங்கை பாதுகாப்பு அமைச்சர் தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டார். வெளியுறவு அமைச்சர் (தமிழர்) ஒருவர் நீச்சல் குளத்தில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இலங்கை ஜனாதிபதி ஒருவரும் மே தின பேரணியில் உரையாற்றியபோது கொலை செய்யப்பட்டார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது தற்கொலை தாக்குதலில் கொலை செய்யப்பட்டார்.

ராஜிவ் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராஜிவ் காந்தி கொலையிலும் பிரபாகரன் தொடர்புபடுத்தப்படுகிறார்.

பிரபாகரனின் சரிவு

ஒரு கட்டத்தில், இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரபாகரனின் கட்டுப்பாடு ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கு சுருங்கும் நேரம் வந்தது.

"முதன் முறையாக விடுதலைப் புலிகள் அமைப்பு போராளிகளின் கண்களில் நான் பயத்தை பார்த்தேன். பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளை நெருங்கி பார்த்துவரும் எனக்கு இது முற்றிலும் புதிய விஷயமாக இருந்தது," என பெயர் குறிப்பிட வேண்டாம் என கேட்டுக்கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.

"மே 17 அன்று, பிரபாகரன் தன் நெருங்கிய கூட்டாளிகளிடையே, தான் போர்க்களத்திலிருந்து ஓடவோ அல்லது ஆயுதங்களை கைவிடவோ மாட்டேன் என்றும், யாராவது போராட்டத்திலிருந்து விலகிக்கொள்ள விரும்பினால், அதை அவர்கள் தாராளமாக செய்யலாம் என்றும் கூறினார். குடிமக்களுடன் இணைய யாராவது விரும்பினால், அவர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அங்கே செல்லலாம். எதிரியின் கைகளால் வீழ்த்தப்படுவதை தவிர்க்கும் விதமாக யாரேனும் இறக்க விரும்பினால், சயனைடை உட்கொண்டு இறக்கலாம்."

சூரிய கடவுளின் அவதாரம் என்றும் யாராலும் வீழ்த்தப்பட முடியாதவர் என்றும் தன் ஆதரவாளர்களால் அழைக்கப்பட்ட ஒருவருக்கு இது மோசமான பிரியாவிடையாக இது இருந்தது.

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தான் விரும்பிய அனைத்தையும் சொல்வதற்கு மே 17-ஆம் தேதியை பிரபாகரன் தேர்ந்தெடுத்தது தற்செயல் நிகழ்வு அல்ல.

பிரபாகரனும் எட்டாம் எண்ணும்

தான் விரும்பிய அனைத்தையும் சொல்வதற்கு மே 17-ஆம் தேதியை பிரபாகரன் தேர்ந்தெடுத்தது தற்செயல் நிகழ்வு அல்ல.

பிரபாகரனின் பழைய கூட்டாளியான ராஜேஷ் குமார் பிரிட்டனில் வசிக்கிறார், அவர் தற்போது ராகவன் எனும் பெயரில் அறியப்படுகிறார்.

அவர் கூறுகையில், "பிரபாகரன் 8 எனும் எண்ணை துரதிருஷ்டவசமான எண்ணாக கருதினார். பிரபாகரன் எந்தவொரு வேலையையும் 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் செய்வதை தவிர்ப்பார், அது எதிர்காலத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும் என கருதினார். இந்த நாட்களில் மறைவிடத்திலேயே நாள் முழுவதும் பதுங்கியிருந்து அடுத்த நாளே வெளியில் வரும் அளவுக்கு அவருக்கு அதன் மீது வலுவான மூடநம்பிக்கை இருந்தது" என்றார்.

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மெய்க்காப்பாளருடன் பிரபாகரன்

தோல்விகளால் குலைந்த மன உறுதி

2008-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மன்னார் மாவட்டம் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதன்பின், நவம்பர் மாதத்தில் விடுதலைப் புலிகள் வியூக ரீதியாக தங்களின் முக்கிய இடங்களான பூநகரி மற்றும் மாங்குளத்திலிருந்து வெளியேற வேண்டியிருந்தது.

2008-ஆம் ஆண்டு மே மாதம், விடுதலைப் புலிகளின் மிகவும் அனுபவம் வாய்ந்த தளபதி கந்தையா பாலசேகரன் எனும் பால்ராஜ் மாரடைப்பில் இறந்தது பிரபாகரன் பெரும் பின்னடைவாக அமைந்தது.

பாலசேகரனின் நினைவாக மூன்று நாள் துக்கம் அனுசரிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்தது. பாலசேகரன் இறந்திருக்காவிட்டால், இலங்கை ராணுவத்துடனான போரின் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும் என, அந்த அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் நம்புகின்றனர்.

2009-ஆம் ஆண்டுவாக்கில் பிரபாகரன் மேலும் அதிகமான பின்னடைவுகளை சந்திக்க ஆரம்பித்தார். இலங்கை அரசுப் படைகள், முதலில் பரந்தன் நகரத்தையும் பின்னர் அதன் அருகிலுள்ள கிளிநொச்சியையும் கைப்பற்றின. இதில், கிளிநொச்சி, விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்படும் பகுதிகளின் தலைநகரமாக கருதப்பட்டது. கிளிநொச்சியில் தோல்வியடைந்தது, விடுதலைப் புலிகள் அமைப்பினரின் மன உறுதியை கடுமையாக குலைத்தது.

இந்த நகரத்தில் தான் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை பிரபாகரன் சந்தித்தார்.

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விடுதலைப் புலிகளின் மிகவும் அனுபவம் வாய்ந்த ராணுவப் பிரிவு தலைவராக கந்தையா பாலசேகரன் இருந்தார்.

இலங்கைக்கு அமெரிக்கா நெருக்கடி

விடுதலைப் புலிகளின் முக்கியமான ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த வேலாயுதன் தயாநிதி எனும் தயா மாஸ்டர் மற்றும் பிரபாகரனின் உரைகளை மொழிபெயர்த்த குமார் பஞ்சரத்னம் எனும் ஜார்ஜ் இருவரும் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்ததால் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது.

அப்போது ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஸவும், அவரது இளைய சகோதரர் கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தனர். விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஸ தலைமை வகித்தார்.

எம்ஆர் நாராயண் சுவாமி எழுதுகையில், "சண்டையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு அமெரிக்காவிடமிருந்து கோட்டாபய ராஜபக்ஸ பெரும் அழுத்தத்தை சந்தித்தார். அமெரிக்க குடியுரிமையையும் கொண்டுள்ள கோட்டாபய ராஜபக்ஸ, பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க பிரதிநிதிகளிடம் எவ்வித உறுதியையும் அளிக்கவில்லை. எனினும், இதுதொடர்பான தன்னுடைய கவலைகளை ராணுவ தளபதிகளிடம் மே 14-ஆம் தேதி பகிர்ந்துகொண்டார்," என எழுதியுள்ளார்.

"இன்னும் எவ்வளவு காலம் இந்த போர் தொடரும் என அவர் கேள்வியெழுப்பினார். இந்த போர் கூடிய விரைவில் வெற்றியுடன் முடிவுற வேண்டும், இல்லையெனில், அமெரிக்காவின் அழுத்தத்தை எதிர்கொள்வது கடினமாகிவிடும்."

கோட்டாபய ராஜபக்ஸ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அப்போது கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்

சண்டையை தொடர பிரபாகரன் முடிவு

மே 16 அன்று, இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளின் கடைசி கட்ட பாதுகாப்பையும் அழித்தது.

ஜி-11 மாநாட்டில் பங்கேற்றிருந்த நிலையில், இந்த செய்தியை அறிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, விடுதலைப் புலிகளை ராணுவம் வெற்றி கொண்டதாக முன்கூட்டியே அறிவித்தார்.

விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்கள் தலைவர் குமரன் பத்மநாதன் எனும் கேபி, கோலாலம்பூரில் அதே நாள், "சண்டை இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. எங்களது துப்பாக்கிகளை கைவிடுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்." என தெரிவித்தார்.

பிரபாகரன் இந்த சண்டையை தொடர முடிவெடுத்ததால், மஹிந்த ராஜபக்ஸவும் குமரன் பத்மநாதனும் இவ்வாறு பேசியதாக தெரிகிறது.

விடுதலைப் புலிகள் பல நாட்களாக குளிக்கக் கூட முடியாத அளவுக்கு சண்டை கடுமையானதாக இருந்தது. அவர்களுக்கான உணவுப் பொருட்கள் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டன. விடுதலைப் புலிகளின் கொரில்லா படையினர் (எதிரிகள் மீது திடீர் தாக்குதல் நடத்துபவர்கள்) சிலர், இலங்கை படையினரால் பிடிக்கப்படக் கூடாது என்பதற்காக, தற்கொலை செய்துகொண்டனர்.

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மே 17 அன்று இரவு, விடுதலைப் புலிகளின் கடைசிப் படைகளை 1600 சதுர மீட்டருக்குள் இலங்கை ராணுவம் நெருக்கியது.

கடைசியாக உயிருடன் பார்க்கப்பட்டது எப்போது?

மே 17 அன்று இரவு, விடுதலைப் புலிகளின் கடைசிப் படைகளை 1600 சதுர மீட்டருக்குள் இலங்கை ராணுவம் நெருக்கியது. இலங்கை ராணுவம் மூன்று புறங்களில் சூழ்ந்திருந்தது. நான்காவது பக்கத்தில், இலங்கை கடற்படை தொடர்ந்து கண்காணித்து வந்த நந்திக்கடல் இருந்தது.

மே 17 அன்று விடுதலைப் புலிகளின் பல தளபதிகள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதையடுத்து, அந்நாள் அந்த அமைப்புக்கு மிகவும் துரதிருஷ்டவசமான நாளாக அமைந்தது.

விடுதலைப் புலிகளின் கொரில்லா படையை சேர்ந்த 'எஸ்கே' பின்னொரு நாளில் அளித்த நேர்காணலில், "மே 17 அன்று கடைசியாக பிரபாகரன் உயிருடன் காணப்பட்டார். 6 மணிக்கு பிரபாகரன் இருந்த இடத்தை நான் அடைந்தேன். எங்களுடைய உணவு முழுவதும் தீர்ந்துவிட்டது" என்றார்.

"நம்பினால் நம்புங்கள், தமிழ் ஈழம் எனும் கனவு சிதைய போகிறது என்பதை உணர்ந்திருந்த போதிலும், பிரபாகரன் மிகவும் சாதாரணமாகவே காணப்பட்டார்."

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

பிரபாகரனின் மகன் மரணம்

அடுத்த நாள், மீதமுள்ள விடுதலைப் புலிகள், ராணுவ முற்றுகையை தகர்க்க முயற்சித்தனர். அதில் அவர்கள் வெற்றியடைந்தனர், ஆனால், 30 நிமிடங்களில் இலங்கை படையினர் மீண்டும் குழுக்களாக இணைந்தனர்.

இந்த முறை இலங்கை படையின் எதிர் தாக்குதலில், விடுதலைப் புலிகள் படையை சேர்ந்த தளபதிகள் பலரும் பிரபாகரனின் 24 வயது மகன் சார்லஸ் ஆண்டனியும் கொல்லப்பட்டார்.

ஆண்டனியின் உடலை இலங்கை படையினர் தேடியபோது, அவரிடம் 23 லட்சம் இலங்கை பணம் இருந்ததை கண்டறிந்தனர்.

53வது பிரிவின் படைத்தளபதியாக இருந்த கமல் குணரத்ன, அச்சமயத்தில் பிரபாகரன், பொட்டு அம்மான் மற்றும் சூசை தவிர விடுதலைப் புலிகளின் தலைமை பொறுப்பில் இருந்த பலரும் அழிக்கப்பட்டதாக கூறினார்.

இலங்கை ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, பிரபாகரன் குறித்த செய்தி வரும் வரை சண்டை தொடரும் என தெளிவாக கூறினார்.

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி (வலதுபக்கம் உள்ளவர்)

பிரபாகரன் மரணம் குறித்த செய்தியை பெற்ற குணரத்ன

மே 19 அன்று வரை பிரபாகரன் எங்கிருக்கிறார் என்ற செய்தி மேஜர் குணரத்னவுக்கு சிறிதும் தெரியவில்லை. இதையடுத்து, நந்திக்கடல் பகுதியின் சேறு நிறைந்த உவர் நீரில் கடுமையான சண்டை வெடித்ததாக இளநிலை அதிகாரி ஒருவர் அவரிடம் தெரிவித்தார். விடுதலைப் புலிகளை சேர்ந்த பலரும் அங்கே சிக்கியிருந்தனர். அவர்களுள் யாரும் ஆயுதத்தைக் கைவிட தயாராக இல்லை.

இறுதியில் சண்டை முடிந்து ஒரு மணிநேரம் கழித்து, தான் காத்திருந்த செய்தி குணரத்னவுக்கு கிடைத்தது.

தன்னுடைய 'தி கேஜ், தி ஃபைட் ஃபார் ஸ்ரீ லங்கா அண்ட் தி லாஸ்ட் டேஸ் ஆஃப் தமிழ் டைகர்ஸ்' (The Cage, The Fight for Sri Lanka and the Last Days of the Tamil Tigers) எனும் தன் புத்தகத்தில் கார்டன் வெய்ஸ், "கர்னல் ரவிப்ரியா மேஜர் ஜெனரல் குணரத்னவிடம், 'சார், நாங்கள் பிரபாகரனை கொலை செய்துவிட்டோம்'. என கூறினார்," என எழுதியுள்ளார்.

ஆச்சர்யமடைந்த குணரத்ன, 'உறுதியாக கூறுகிறீர்களா' என கேட்டதற்கு, 'ஆமாம், உறுதியாக,' என பதிலளித்துள்ளார்.

ஆனால், குணரத்ன இதனை உறுதியாக அறிய விரும்பியதால், கர்னல் லலிந்த கமகேவை சம்பவ இடத்துக்கு அனுப்பினார். சில நிமிடங்களிலேயே கமகேயின் குரல் ராணுவ தொலைபேசியில் ஒலித்தது: 'சார், அது சரியான செய்திதான், பிரபாகரன் தான்.' என தெரிவித்தார்.

பிரபாகரனின் உடல் கண்டறியப்பட்டது

ஜெனரல் சரத் ஃபொன்சேகா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெனரல் சரத் பொன்சேகா

முற்றிலும் உறுதிப்படுத்திய பின் குணரத்ன இந்த செய்தியை ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அனுப்பினார். அதற்கு முன்பு, பிரபாகரனின் உடலை கொண்டு வருமாறு படையினரை கேட்டுக்கொண்டார்.

எம்ஆர் நாராயண் சுவாமி எழுதுகையில், "அந்த சமயத்தில் இலங்கை படையினர் சுமார் மூவாயிரம் பேர் பிரபாகரனின் உடல் கிடத்தப்பட்டிருந்த இடத்தில் திரண்டிருந்தனர். சேறு நிறைந்த ஆழமற்ற நீரில் இறங்கி படையினர் உடலை வெளியே எடுத்தனர்." என குறிப்பிட்டுள்ளா.

"பிரபாகரனின் உடலை படையினர் பார்த்த உடனேயே, அவர்கள் வானத்தை நோக்கி சுட ஆரம்பித்தனர். படையினரை ஒருங்குபடுத்த அதிகாரி முயற்சி மேற்கொண்டார், ஆனால் அவரின் வார்த்தைகளுக்கு பயனில்லாமல் போனது."

ஜெனரல் பொன்சேகா இந்த செய்தியை அறிந்தபோது இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்தார். பொன்சேகாவிடம் குணரத்ன சிங்கள மொழியில் தொலைபேசியில், 'மஹா எஸ் இவராய்' என்றார், அதாவது, 'பெரியவன் முடிந்து விட்டான்'.

அடையாள அட்டை

பிரபாகரனின் அடையாள அட்டை

பட மூலாதாரம், Ministry of Defence Sri Lanka

படக்குறிப்பு, பிரபாகரனின் அடையாள அட்டை

பிரபாகரன் சுமார் 9.15 மணியளவில் இறந்தார். அவருக்கு அப்போது வயது 54.

எம்ஆர் நாராயண் சுவாமி எழுதுகையில், "அவருடைய நெற்றியில் பெரிய காயம் இருந்தது, இதனால் அவருடைய தலை இரண்டு பாகங்களாக பிளவுபட்டிருந்தது. அவருடைய வாய் திறந்திருந்தது, அவருடைய கண் மேல் நோக்கி இருந்தது. அவருடைய தாடி வெள்ளை நிறத்தில் இருந்தது." என எழுதியுள்ளார்.

"குணரத்ன அவருடைய உடலை தொட்ட போது, அது இன்னும் சூடாக இருந்தது. அவருடைய நெற்றி தவிர வேறெங்கும் துப்பாக்கி குண்டு காயம் இல்லை. பிரபாகரன் அப்போது ராணுவ உடையில் இருந்தார். அவருடைய பாக்கெட்டில் தேடியபோது, 001 எனும் வரிசை எண்ணுடன் விடுதலைப் புலிகளின் அடையாள அட்டை கண்டறியப்பட்டது, அந்த அடையாள அட்டை ஜனவரி 1, 2007 அன்று வழங்கப்பட்டது."

இதுதவிர, நீரிழிவு மருந்துகள் சிலவும் கண்டறியப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து வாங்கப்பட்ட திராட்சை மணத்துடன் கூடிய லோஷனும் (hand lotion) இருந்தது. அவரின் தலையில் இருந்த காயம் நீல நிற துணியால் மூடப்பட்டிருந்தது.

கார்டன் வெய்ஸ் எழுதுகையில், "12.7 எம்எம் தோட்டாவால் பிரபாகரன் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார்." என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ராணுவத்தின் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, பிரபாகரனின் ராணுவ உடையை கழற்றுமாறு உத்தரவிட்டார். இலங்கை படையினரை தவிர, ராணுவ உடையணிய யாருக்கும் உரிமை இல்லை என்பது அவரின் வாதமாக இருந்தது.

பிரபாகரனின் உடல் அடையாளம் காணப்பட்டது

நாராயண் சுவாமி எழுதுகையில், "பிரபாகரனின் உடலை அடையாளம் காண கர்னல் கருணா மற்றும் தயா மாஸ்டர் எனும் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களை அனுப்புவதாக பொன்சேகா குணரத்னேவிடம் தெரிவித்தார்." என குறிப்பிட்டுள்ளார்.

"இருவரும் ராணுவ விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். அந்த உயிரற்ற உடலை அடையாளம் காண அவர்கள் ஒரு நொடி கூட எடுத்துக்கொள்ளவில்லை."

பிரபாகரனின் மரணத்தால் தமிழ் ஈழத்துக்கான ஆயுத போராட்டமும் இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gvrppzdgno

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் : பெறோர்கள் எழுதும் பரீட்சை ? - நிலாந்தன்

3 days 1 hour ago

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் : பெறோர்கள் எழுதும் பரீட்சை ? - நிலாந்தன்

facebook_1757217343241_73703037316274215

கடந்த வாரத்துக்கு முதல் வாரம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளிவந்தன. பெற்றோரும் உறவினர்களும் தங்களுடைய பிள்ளைகளின் பரீட்சைப் பெறுபேறுகளை முகநூலில் பகிர்ந்து கொண்டாடினார்கள். இந்த இடத்தில் எனது நண்பர் ஒருவர் கூறிய உரையாடல் ஒன்று எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த உரையாடல் நடந்த இடம் யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபல்யமான  தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் வாசலில். புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் தங்கள் பிள்ளைகளுடைய வகுப்பு முடியும் வரையிலும் தனியார் கல்வி நிறுவனத்தின் வாசலில் காத்துக் கொண்டிருந்த பெற்றோருக்கு இடையிலான உரையாடல் அது. இந்த உரையாடலை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த எனது நண்பரும்  ஒரு கட்டத்தில் அந்த உரையாடலில் ஈடுபட்டார். அந்த உரையாடல் வருமாறு…

பெற்றோர்-1-“இந்தச் சின்ன வயதில் எங்கட பிள்ளைகள் எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வேண்டி இருக்கு? அஞ்சு மணிக்கு எழுப்ப வேணும்”.

பெற்றோர்-2-“அப்படியே? அஞ்சு மணிக்கு எழும்பி எத்தனை மணி மட்டும் படிக்கிறது?”

பெற்றோர்-1-“அஞ்சு மணியிலிருந்து ஆறு மணி மட்டும் வீட்டில படிப்பு. ஆறிலிருந்து ஏழு மட்டும் ரியூஷன். ரியூசன் முடிஞ்ச கையோட வீட்ட வந்து சாப்பிட்டிட்டு பள்ளிக்கூடத்துக்குப் பறக்க வேணும்”.

பெற்றோர் -2 -”பள்ளிக்கூடத்தால வந்து?”

பெற்றோர்-1- “வந்த வேகத்தில் சாப்பிட வேணும்.பிறகு ஒரு சின்னத் தூக்கம். பிறகு இரண்டிலிருந்து நாலு மணி மட்டும் ரியூஷன். பிறகு நாலரையில இருந்து இந்த டியூஷன்.பிறகு ஏழில இருந்து ஒன்பது மட்டும் வீட்டில தாய் படிப்பிப்பா”.

பெற்றோர் -2- “அப்ப பிள்ளை எப்ப நித்திரைக்குப் போகும்?”

பெற்றோர் -1- “10 மணிக்கு .. நாலரைக்கு எழும்ப வேணுமே ?எங்கட பிள்ளையள் எவ்வளவு வருந்திப் படிக்க வேண்டி இருக்கு?”

இந்த உரையாடல் போய்க்கொண்டிருக்கும்போது வகுப்பு முடிந்து பிள்ளைகள் வெளிவரத் தொடங்கி விட்டன. எனவே முதலாவது பெற்றோர் தனது பிள்ளையை ஏற்றிக்கொண்டு சென்று விட்டார். இரண்டாவது பெற்றோர் இப்பொழுது எனது நண்பரோடு கதைக்கிறார்….

“பாத்தீங்களே  பிள்ளைய எப்பிடிப் படிப்பிக்கினம் என்று? அவர் சொன்னது உண்மை எண்டு நம்புறீங்களே ?”

எனது நண்பர் – “ஏன் பொய்யே?”

பெற்றோர் -2- “ஓம்.அது பொய்.அவர் சொன்னவர் பிள்ளை அஞ்சு மணிக்கு எழும்புது என்று. அது பொய். பிள்ள மூன்று மணிக்கு எழும்புது. அது பத்து மணிக்கு நித்திரைக்குப் போறதில்ல. 11 மணிக்குத்தான் போகுது”.

நண்பர்- “உண்மையே? ஏன் அப்பிடிப் பொய் சொன்னவர்?”

பெற்றோர் -2- “ஏனெண்டால் தன்ர பிள்ள அவ்வளவு நேரம் படிக்குது எண்டு சொன்னா நீங்களும் உங்கட பிள்ளைய அப்படிப் படிப்பீங்கள்.போட்டியில உங்கட பிள்ளை முன்னுக்கு வரலாம்.அதுதான் தன்ர பிள்ள படிக்கிற நேரத்தக் குறைச்சுச் சொன்னவர்”…..

இது அந்தத் ரியூட்டரி வாசலில் நடந்த ஓர் உரையாடல். புலமைப் பரிசில் பரீட்சையின் போட்டி மனோநிலையை அது காட்டுகிறது. பரவலாக விமர்சிக்கப்படுவதுபோல அது பிள்ளைகளின் பரீட்சை அல்ல. நடுத்தர வர்க்கப் பெற்றோரின் பரீட்சைதான். அதுவும் படித்த நல்ல உத்தியோகம் பார்க்கும் பெற்றோர். ஆனால் பிள்ளைகளிடம் அவ்வாறான போட்டி மனோநிலை இருக்கும் என்று எடுத்துக்கொள்ள முடியாது. அப்படி ஒரு போட்டி மனோநிலைக்குரிய வயது அதுவல்ல.

எனக்குத் தெரிந்த ஓர் ஆசிரியரின் பிள்ளை பரீட்சை எழுதிய பொழுது கல்வியதிகாரியான அவருடைய நண்பர் ஒருவர் சொன்னார்… “பரீட்சை எழுதப் போகும்போது பிள்ளைக்கு உறிஞ்சிக் குடிக்கும் ஒரு தண்ணீர்ப் போத்தலை வாங்கி கொடுங்கள். பரீட்சைச் சூழலில். பதட்டத்தில் பிள்ள மூடியைத் திறக்கும்போதோ அல்லது மூடும்போதோ நீரைச் சிந்தி விடக்கூடும்”….. என்று. தண்ணீர்ப் போத்தலின் மூடியை பதட்டத்தில் சரியாக மூட முடியாத ஒரு வயதில் இப்படி ஒரு தேசிய மட்டப் பரீட்சை தேவையா? இந்தக் கேள்வி இந்த நாட்டில் ஏற்கனவே பல மனநிலை மருத்துவர்களாலும் கல்வியியலாளர்களாலும் கேட்கப்பட்டுவிட்டது. ஆனால் மாற்றம் நடக்கவில்லை.

அந்தப் பரீட்சையின் போட்டித் தன்மை காரணமாக அந்தப் பரீட்சைக்குத் தயார்படுத்தும் தனியார் கல்வி நிறுவனங்கள் அதிக வருவாயீட்டும் தொழிற் துறையாக வளர்ந்து விட்டன. அங்கே இலவசக் கல்வி கேள்விக்குள்ளாகிறது. அங்கே வசூலிக்கப்படும் காசு ஏனைய தேசியமட்டப் பரீட்களுக்காகப் படிக்கும் பிள்ளைகளிடம் வசூலிக்கப்படும் காசைவிட அதிகமாகவும் இருப்பதுண்டு. பரீட்சை பெறுபேறுகளின் பின் ஆசிரியர்கள் கௌரவிக்கப்படும் விதத்திலும் பெற்றோரின் மனோநிலை தெரிகிறது. சில ஆசிரியர்களுக்கு தங்கச் சங்கிலி பரிசாக வழங்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் தென்னிலங்கையில் ஒரு தகப்பன் ஆசிரியருக்கு ஒரு காரை வாங்கிக் கொடுத்தார்.

ஆனால் இதில் சித்தி பெற்ற பிள்ளை பின்னர் வரக்கூடிய சாதாரண தரம் உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் வெற்றி பெறும் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி ஒருவர் சொன்னார்….மேல் மாகாணத்தில் அவருக்கு நியமனம் கிடைத்தது. நியமனம் கிடைத்ததும் அவர் முதலில் போனது கொரனவில் உள்ள தக்க்ஷிலா மத்திய கல்லூரிக்கு. அங்கேதான் புலமைப் பரிசில் பரீட்சையில் நாட்டிலேயே முதற் தடவை 200 புள்ளிகளைப் பெற்ற பிள்ளை படித்துக் கொண்டிருந்தது. அந்தப் பிள்ளையின் ஆறாவது ஆண்டு தவணைப் பரீட்சைகளின் பெறுபேறுகளை அவர் தொகுத்துப் பார்த்திருக்கிறார். அந்தப் பிள்ளை முன்னணியில் நிற்கவில்லை.

அதாவது ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற எல்லா பிள்ளைகளுமே கல்விப் பொது சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளில் பிரகாசிக்கும் என்றில்லை. ஒரு தேசிய பரீட்சையின் முக்கியத்துவத்தை உணர முடியாத வயதில் பிள்ளைகளை பந்தயக் குதிரைகளாக மாற்றுவது பெற்றோர்தான். இந்த பந்தயக் குதிரை மனோபாவம் பிள்ளைகளின் உளவியலைப் பாதிக்கின்றது. அதேயளவுக்கு அவர்களுடைய உளப்பாங்கையும் தீர்மானிக்கின்றது. உலகின் முன்னேறிய கல்வி முறைமையைக் கொண்டிருக்கும் நாடுகளில், குறிப்பாக யப்பானில் பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட வயதுவரை பரீட்சைகள் இல்லை. அதற்குக் கூறப்படும் விளக்கம் என்னவென்றால், உளப்பாங்கு உருவாகும் ஒரு காலகட்டத்தில் போட்டிப் பரீட்சைகளை வைத்தால் அது  பிள்ளைகளின் உளப்பாங்கில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிறு பிராயத்திலேயே உருவாக்கப்படும் போட்டிச் சூழல் பிள்ளைகளை சுயநலமும் பேராசையும் பொறாமையும் கள்ளத்தனமும் கொண்டவர்களாக மாற்றி விடுகிறது.

“பிள்ளைகளுக்கு இந்த புலமைப்பரிசில் பரீட்சையின் மூலம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மிகவும் கடினமான சுமையை கொடுக்கிறார்கள். புலமைப்பரிசில் பரீட்சை ஒரு சிறந்த வியாபாரமாகவும் மாறிவிட்டது. உண்மையில், குழந்தைகள் இன்னும் இந்த சுமையை புரிந்து கொள்ளும் அளவு முதிர்ச்சி அடையவில்லை. எனவே, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பிள்ளைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.உங்கள் பிள்ளை சித்தி அடைந்தாலும் அல்லது தோல்வியடைந்தாலும், கல்வியின் பெறுமதியை பற்றிய அவர்களின் புரிதல் காலப்போக்கில் தெரிய ஆரம்பிக்கும்.கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள உதவும் சூழலை அவர்களுக்கு உருவாக்குங்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள்,பெரியவர்கள் மற்றும் பிறருக்கு மரியாதை கொடுப்பதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள், ஏனெனில் இந்த பண்புகள் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் கல்விக்கு மிக முக்கிய பங்களிக்கும்”என்று கூறுகிறார், பேராதனைப் பல்கலைக்கழக,பொறியியற் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி. நவரட்ணராஜா.

போட்டிபோட்டுப் படித்து பட்டம் பெற்று, முன்னிலைக்கு வந்த பலர் சில ஆண்டுகளுக்கு முன் நாட்டில் பொருளாதார நெருக்கடி தோன்றிய பொழுது நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார்கள். இந்த போட்டி மனோநிலை முன்னேறுவதில் மட்டுமல்ல தப்பிச் செல்வதிலும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றையும் நன்கு தெரிந்த  ஒருவர் பிரதமராகவும் கல்வி அமைச்சராகவும் உள்ள அரசாங்கத்தால்கூட  புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக பொருத்தமான முடிவை  எடுக்க முடியவில்லை. கடந்த வாரத்துக்கு முதல் வாரம் கொழும்பில் தேசிய கல்வி ஆனைக்குழுவை சந்தித்த பிரதமர் ஹரினி இந்த  விடயதைப் பற்றியும் உரையாடியுள்ளார். புலமை பரிசில் பரீட்சையை இப்போதைக்கு அவர்கள் நீக்கப் போவதில்லை என்று தெரிகிறது. சிலசமயம் அவர்களுடைய ஆட்சிக்காலம்  முடிவதற்கு இடையிலாவது நீக்கப்படுமா என்பதும் சந்தேகம்தான். சிறு பிள்ளைகளுக்கான ஒரு தேசிய  பரீட்சையை நீக்கும் விடயத்தில்  சமூகத்தின் கூட்டு உளவியலை மீறிப்போகப் பயப்படும் ஒர் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வு,யுத்த வெற்றி நாயகர்களை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தலாமா இல்லையா? போன்ற இதயமான பிரச்சினைகளில் துணிந்து முடிவெடுக்கும், ரிஸ்க் எடுக்கும் என்று எப்படி நம்புவது?

https://www.nillanthan.com/7764

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம்

3 days 3 hours ago

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம்

main photo

76 வருட ஆட்சியின் "அபிவிருத்தி" என்ற பழைய அணுகுமுறை மீணடும்

சாத்தியக்கூற்று - சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் எதுவும் இல்லாத அரசியல் நிகழ்ச்சி

பதிப்பு: 2025 செப். 13 19:14

யாழ்ப்பாணம் மண்டைதீவு பிரதேசத்தில் சர்வதேச கிரிக்கெட் (Cricket) விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கு அநுர அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள பின்னணியில், யாழ்ப்பாணத்தின் தீவுப் பிரதேசங்கள் பற்றிய கரிசனை குறிப்பாக அங்கு வாழும் மக்களின் அடிப்படை வசதிகள், தொழில் முயற்சிகளில் கவனம் செலுத்தப்பட்டதா என்பது தொடர்பான சந்தேகங்கள் எழுகின்றன. சாத்தியக்கூற்று அறிக்கைகள் (Feasibility Report) சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் (Environmental Report) எதுவும் இன்றி வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 2009 இற்குப் பின்னர் 'தமிழ் மக்களுக்கு நாங்கள் அனைத்தையும் செய்கிறோம்' என்பதை உலகிற்கு காண்பிக்கும் நோக்கில் மாத்திரமே அபிவிருத்தி என்ற மாயை உருவெடுத்திருக்கிறது.
 

மாறாக நூறு வருடங்களுக்கு மேற்பட்ட அரசியல் போராட்டம் ஒன்றை நடத்தி வரும் ஈழத் தமிழ்ச் சமூகம், தனது அரசியல் விடுதலை விவகாரத்தில் பொருத்தமான தீர்வு கிடைக்காத ஒரு பின்னணியில் அபிவிருத்தித் திட்டங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கேள்விகளுக்கு சிங்கள தலைவர்களிடம் இருந்து பதில் இல்லை.

வடக்கு கிழக்கில் சிங்கள மயமாக்கல் நகர்வுகள் மிக நுட்பமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில், அபிவிருத்தி என்ற போர்வையில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறாது என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை.

அபிவிருத்தி செய்தால் அரசியல் தீர்வு அவசியம் இல்லை என்ற தவறான கற்பிதம் ஒன்றை இலங்கை ஒற்றையாட்சி அரசு அன்று முதல் நுட்பமாக கட்டமைத்துள்ளது.

1949 ஆம் ஆண்டு கிழக்கில் கல்லோயா குடியேற்றத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அங்கு சிங்கள மக்களுக்கு முதலிடம் வழங்கப்பட்ட ஒரு பின்னணியில் தான், 1956 ஆண்டு கல்லோயா இன அழிப்பு மோதல் ஏற்பட்டது.

இப் பின்புலத்தில்தான், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் 1949 ஆம் ஆண்டு கல்லோயா குடியேற்றத் திட்டம் போன்றொரு அபிவிருத்திகளை வடக்கு கிழக்கில் அவதானிக்க முடிகிறது.

இதற்கு சந்திரிகா, மகிந்த, மைத்திரி - ரணில் மற்றும் கோட்டாபய என்று தொடர்ச்சியாக உற்று நோக்கினால், அபிவிருத்தி என்ற போர்வையில் இந்த நுட்பங்களை அவதானிக்க முடியும்.

அதேநேரம் அரசியல் நோக்கிலும் ஆட்சி செய்யும் கட்சிகள் தமது செல்வாக்கை தமிழ் மக்களிடம் வேரூன்ற செய்து, தமிழ்த் தேசியக் கட்சிகளை பின்தள்ளும் நோக்கில் வடக்கு கிழக்கில் பெரும் ஆடம்பரமாக ஆரம்பிக்கப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் பின்னர் கைவிடப்பட்ட சம்பவங்களும் உண்டு.

உதாரணமாக மண்டைதீவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என பிரச்சாரம் செய்யப்பட்டு அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

ஆனால், 2015 ஆம் ஆண்டு மைத்திரி ரணில் அரசாங்கத்தில் யாழ்.மண்டைதீவில் ஆரம்பிக்கப்பட்ட சுற்றுலா மையத்தின் செயற்பாடுகள் உரிய முறையில் செய்யப்படவில்லை.

யாழ் மாவட்ட செயலகம் ஊடாக ஜனாதிபதி செயலகம் முன்னெடுத்த நடவடிக்கை பொருத்தமானதாக அமையவில்லை.

சுமார் 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் யாழ்.மாவட்ட செயலகத்தால் மண்டைதீவு சுற்றுலா மையத்தின் வேலை திட்டத்திற்கான நிதி விடுவிப்பு செய்யப்பட்டது.

குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வேலனை பிரதேச செயலகம் மற்றும் வேலனை பிரதேச சபை இணைந்து மண்டைதீவு சுற்றுலா மையத்தின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்த நிலையில், குறித்த திட்டம் பொருத்தமான முறையில் முடிவுறுத்தப்படவில்லை.

எந்தவிதமான ஆய்வுகளும் செய்யப்படாமல் அரசியல் நோக்கில் அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, பிரதமராக இருந்த ரணில் ஆகியோருடைய படங்கள் பொறிக்கப்பட்ட பெயர் பலகை மண்டைதீவில் நாட்டப்பட்டிருந்தது.

திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட கடற்பிரதேசம் ஆழம் குறைந்த கடல் பகுதியில் காணப்படும் நிலையில் படகுச் சவாரிகளை மேற்கொள்ள, குறித்த கடல் பிரதேசத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற கேள்விகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர்தான் எழுந்தன.

ஆகவே, சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிக்க முன்னர் இது பற்றிய சாத்தியக் கூற்று ஆய்வுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆய்வுகள் செய்திருக்க வேண்டும்.

ஆனால்,அவ்வாறு எந்த ஒரு ஆய்வுகளும் இல்லாமல் அரசியல் நோக்கில் எடுத்த எடுப்பில் கொழும்பு அரசியல் நிர்வாகம் தமிழ் மக்களை தம் வசப்படுத்த வேண்டுமென்ற ஒரே ஒரு நோக்கில் வடமாகாண அதிகாரிகளை நன்கு பயன்படுத்தியிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் ஏனைய தீவுப் பகுதிகளான சாட்டி, காரைநகர் கடற்கரைகள் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியாக அடையாளம் காணப்பட்டிருந்த ஒரு நிலையில், ஏன் குறித்த திட்டத்தை மண்டைதீவில் செயற்படுத்தினார்கள் என்ற நியாயமான கேள்விகளுக்கு கொழும்பு அரசியல் நிர்வாகத்தினால் இன்றுவரை பதிலளிக்க முடியவில்லை.

ஆகவே, கொழும்பு மைய சிங்கள அரசியல் கட்சிகளுக்கு குடை பிடிக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள அதன் தமிழ் முகவர்கள் முன் யோசனைகள் எதுவுமின்றி பெயர் பலகையை நாட்டுவது, அடிக்கல் நாட்டுவது போன்ற நிகழ்வுகளை பெரும் பிரச்சாரமாக காண்பித்து வாக்கு அரசியலில் ஈடுபடுகின்றனர் என்பது மாத்திரம் இங்கே பகிரங்கமாக தெரிகிறது.

மக்களின் வரிப்பணத்தில் அமைச்சினால் ஒதுக்கப்பட்ட சுமார் 8 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்படும் மண்டதீவு சுற்றுலா மையம் தற்போது உரிய முறையில் செயற்படுத்தப்படாமல் கவனிப்பாரற்று உள்ளமை அரசியல் வேடிக்கை.

இவ்வாறு பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும் மண்டைதீவு சுற்றுலா மையத்திற்கு ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதற்கு யார் பொறுப்பு?

யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள் இத் திட்டத்தை செயற்படுத்தினாலும், கொழும்பு அரசியல் நிர்வாகத்தின் அழுத்தங்களும் அரசியல் நோக்கங்களும் இருந்தன என்ற பின்னணியில் யாழ் செயலக அதிகாரிகள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை கொழும்பு நிர்வாகமே முன்வைக்கும் ஆபத்துகள் உண்டு.

கொழும்பு நிர்வாக அரசியல் செல்வாக்குகளின் ஊழல் மோசடிகளை மூடி மறைக்கும் நோக்கில் தான் சமீபகாலமாக வடமாகாண அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன.

ஆகவே, இப்படி ஓர் அபிவிருத்தித் திட்டம் தான், மண்டைதீவு பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானமும் என்ற முடிவுக்கு வரலாம்.

ஏனெனில், மைதானம் அமைப்பதற்குரிய சாத்தியக் கூற்று ஆய்வுகள், சுற்றுப்புறச் சூழல் ஆய்வுகள் செய்யப்பட்டமை தொடர்பான ஆய்வு அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அல்லது வெளியிடப்படாமல் இருக்கலாம்.

இந்த அறிக்கைகள் வடமாகாணத்தை பிரதானப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையளிக்கப்பட்டதா? அல்லது துறை சார்ந்தவர்களுடன் அது பற்றிய உரையாடல் நடத்தப்பட்டதா?

மைதானம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் கூட, இதுவரை ஆய்வு அறிக்கைகள் எதுவும் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரியவில்லை.

அதேநேரம் மண்டைதீவு பிரதேசம் விவசாய நிலம் என்றும் அங்கு கடல் வாழ் உயிரினங்கள் இருப்பதாக யாழ் மாவட்ட செயலகம் 2022 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு அறிக்கை ஒன்று செயலகத்தின் இணையத்தில் உண்டு.

பா.ராஜ்குமார் என்ற ஆய்வாளர் மண்டை தீவுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்.

அதனைவிட மண்டைதீவு விவசாய நிலம் என்றும், ஆனாலும் தொழில்நுட்ப ஆய்வுகள் செய்யப்பட்டு அதற்குத் தேவையான மேலதிக உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் மொறட்டுவ பல்கலைக்கழக மாணவிகள் 2018 இல் செய்த ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், மண்டைதீவின் நில பயன்பாடுகள் பற்றிய ஆய்வு ஒன்றை 2020 இல் செய்த தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் அந்த நிலப்பகுதி விவசாயத்திற்குரியது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மண்டைதீவில் நன்னீர் வளம் மிகக் குறைவாகவே உள்ளது. தீவின் சில பகுதிகளில் மாத்திரம் நன்னீர் கிணறுகள் உள்ளன. கடல் நீர் நிலத்தின் கீழாக நிலப்பரப்பிற்குள் ஊடுருவுவது இதற்கான காரணம்

மண்டைதீவில் மூலிகைகள் அதிகம் காணப்படுகின்றன. 2009 இற்குப் பின்னர், யாழ் மாவட்ட கல்லூரிகளின் உயர்தர வகுப்பு மாணவர்கள் அங்கு சென்று தாவரவியல் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதுண்டு.

ஆகவே, மண்டைதீவில் சர்வதேச மைதானம் அமைக்கப்பட வேண்டும் என தீர்மானம் எடுத்தவர்கள் இது பற்றியெல்லாம் கவனம் செலுத்தினார்களா?

வெறுமனே அரசியல் நோக்கில் ஆய்வுகள் எதுவுமின்றி நிலம் ஒன்றை தெரிவு செய்து மைதானத்தை அமைத்த பின்னர் அதில் உள்ள பக்க விளைவுகள் பாதிப்புகள் போன்றவற்றை எதிர்கொள்ளப் போவது மண்டைதீவு பிரதேச மக்கள் தான்.

ஆகவே, உண்மையில் மக்கள் நலன் நோக்கில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறதா? அல்லது ஜனாதிபதியை மேன்மைப்படுத்தி அபிவிருத்தி என்ற மாயைகளை காண்பித்து, 'அரசியல் விடுதலை' என்ற உணர்வுகள் கோரிக்கைகளை தமிழ் மக்களிடம் இருந்து மடைமாற்றும் உத்தியா?

இவ்வாறான உத்திகளையே மகிந்த, மைத்திரி, கோட்டாபய, ரணில் ஆகியோர் செய்தார்கள். ஆகவே, 76 ஆண்டு கால ஆட்சி முறைகளில் இருந்து மாற்றம் என்று மார்தட்டிக் கொண்டு பதவிக்கு வந்த அநுர அரசாங்கமும் முன்னய சிங்கள அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட பகட்டு அரசியலை முன்னெடுக்கிறது என்ற உணர்வு சாதாரண மக்களிடம் மேலோங்கியுள்ளது.

இதனை யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தமிழ் முகவர்கள் புரிந்திருப்பர்.

அதேநேரம் அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட சுமார் 80 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் - பெண்கள் கொலை செய்யப்பட்டு மண்டைதீவு தோமையார் ஆலயக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

வேலனை பிரதேச சபை தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றி இருந்தது. தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில், மண்டைதீவில் உள்ள பல பாழடைந்துள்ள கிணறுகளில் எலும்புக்கூடுகள் இருப்பதாகவும், 1990 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டு கிணறுகளுக்குள் வீசப்பட்டதாகவும் அத்தீர்மானத்தில் உண்டு.

மண்டைதீவில் மனித புதைகுழிகள் இருப்பதாகவும் சாட்சியங்கள் இன்னும் உண்டு எனவும் உறுப்பினர் பிரகலாதன் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது சுட்டிக்காட்டியிருந்தார்.

இராணுவம் பொதுமக்களின் காணிகளை அபகரித்து பாரிய முகாம்களை அமைத்துள்ளது என்றும் காணிகளை இழந்த மக்கள் வேறு பிரதேசங்களில் வாழ்வதாகவும் வேலனை பிரதேச சபை உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

ஆகவே, சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு முன்னர் பிரதேச மக்களின் அடிப்படை வசதிகள், அந்த மக்களின் உள்ளூர் சுய தொழில் முயற்சிகள் போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும். குடிதண்ணீர் பிரச்சினைக்கு முதலில் தீர்வு காண வேண்டும்.

மைதானம் அமைக்கப்பட்டால் பிரதேச மக்களுக்கு முதலில் அங்கு தொழில்வாய்ப்பு என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆகவே, வெறும் அரசியல் நிகழ்ச்சி நிரலாகவும், தமிழர்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை குறைத்து மதிப்பீடு செய்யும் வகையிலும் அநுர அரசாங்கம் செயல்படுகின்றமை பகிரங்கமாக தெரிகிறது.

மைத்திரி - ரணில் ஆட்சி காலத்தில் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப மண்டைதீவில் கிரிக்கெட் மைதானம் அமைக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால், அப்போது முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் மேற்படி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதன் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது.

ஆகவே, 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் ஏற்கவில்லை என்பது வேறு. ஆனால் 13 இன் கீழ் உள்ள மாகாண சபைகள் இயங்காத பின்னணியில், மாகாணங்களின் அரைகுறை அதிகாரங்களை கூட மீறும் வகையில் அநுர அரசாங்கம் செயல்படுகிறது என்ற முடிவுக்கு வரலாம்.

அத்துடன் காணி அதிகாரங்கள், கட்டிட நிர்மாண அனுமதி அதிகாரங்கள் அனைத்தும் கொழும்பு நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதையும் இந்த மண்டைதீவு சர்வதேச மைதான விவகாரம் எடுத்துக் காண்பிக்கிறது.

1981 ஆம் ஆண்டு அமரர் ஜேஆர் ஆட்சியின் போது, யாழ் கல்லுண்டாய் வெளி சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த முறைகள் பற்றியும் ஞாபகப்படுத்த வேண்டும்...

https://www.koormai.com/pathivu.html?therivu=2610&vakai=5

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கு: ஓர் அலசல்

4 days 1 hour ago

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கு: ஓர் அலசல்

KILLING-SRI-LANKAN-JOURNALISTS_THE-CASE-

Photo, ITJP

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன், இலங்கையின் உள்நாட்டுப் போரின் உச்சக்கட்டத்தில் உண்மையை உரக்கச் சொன்ன ஒரு துணிச்சலான குரல். பிபிசி (BBC) மற்றும் பல முன்னணி ஊடகங்களுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து அவர் ஆற்றிய பணி, போரின் கொடூரங்களையும், அரசியல் ஊழல்களையும், அரச ஆதரவு துணை இராணுவக் குழுக்களின் வன்முறைகளையும் அச்சமின்றி வெளிக்கொணர்ந்தது. இதன் விளைவாக, அக்டோபர் 19, 2000 அன்று, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில், அவரது குடும்பத்தினர் கண்முன்னே அவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை, தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஆரம்பகால தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், இது இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு எதிரான வன்முறைகளின் ஒரு முக்கியத் திருப்புமுனையாகவும், தசாப்தங்களாக நீடிக்கும் தண்டனையின்மைக் கலாச்சாரத்தின் குறியீடாகவும் மாறியுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனத்தின் படுகொலை வழக்கு தொடர்பாக ITJP அண்மையில் விரிவான ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

இந்த ஆய்வு, நிமலராஜனின் படுகொலைக்குப் பின்னணியில் உள்ள அரசியல் சூழல், உத்தியோகபூர்வ விசாரணையில் ஏற்பட்ட திட்டமிட்ட தோல்விகள், மற்றும் இலங்கையின் நீதிப் பொறிமுறை நீதி வழங்கத் தவறியதன் பரந்த தாக்கங்களை ஆழமாக ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு தனிநபரின் துயரத்தை ஆவணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் இந்தப் படுகொலை ஏன் ஒரு மையப் புள்ளியாகத் தொடர்கிறது என்பதையும் இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது. ஆய்வு தொடர்பாக சுருக்கமான ஓர் அலசல் கீழே தரப்பட்டுள்ளது.

கொலைக்கான அரசியல் மற்றும் சமூகச் சூழல்

மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை ஒரு தற்செயலான தனிப்பட்ட சம்பவம் அல்ல. மாறாக, அது 2000ஆம் ஆண்டில் நிலவிய கொந்தளிப்பான அரசியல் மற்றும் இராணுவச் சூழலின் தவிர்க்க முடியாத விளைவாகும். அரசின் பாதுகாப்புப் படைகளும், அவற்றுடன் இணைந்து செயல்பட்ட துணை இராணுவக் குழுக்களும் யாழ்ப்பாணத்தில் தண்டனையின்மையுடன் பெரும் செல்வாக்குச் செலுத்திய ஒரு காலகட்டத்தில், ஒரு சுயாதீன ஊடகவியலாளர் ஏன் சக்திவாய்ந்த அமைப்புகளுக்கு இலக்கானார் என்பதைப் புரிந்துகொள்ள இந்தப் பின்னணியை ஆராய்வது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது.

2000ஆம் ஆண்டில், இலங்கையின் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருந்தது. விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டை 1995இல் இலங்கை இராணுவம் கைப்பற்றியிருந்தாலும், மோதல்கள் தொடர்ந்து நீடித்தன. யாழ்ப்பாணம் ஒரு உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு, இலங்கை இராணுவத்தின் 512ஆவது பிரிகேட்டின் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. நகரம் முழுவதும் இராணுவச் சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டிருந்ததுடன், இரவு நேரங்களில் கடுமையான ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்தக் காலகட்டத்தில், அரசாங்கத்தின் ஆதரவுடன் ‘ஒட்டுக் குழுக்கள்’ என்று அழைக்கப்பட்ட துணை இராணுவக் குழுக்கள் பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து செயல்பட்டன. இவை அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்கும், தகவல்களைச் சேகரிப்பதற்கும், அரச படைகளின் நலன்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டவர்களை அச்சுறுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டன.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) பங்கு

அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட மிக முக்கியமான அரச ஆதரவு துணை இராணுவக் குழு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) ஆகும். அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆவார். ஈ.பி.டி.பி. அரசாங்கத்தின் அரசியல் மற்றும் பொருள் ஆதரவுடன், தண்டனையின்மையுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. தமிழ் அரசியல் எதிரிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்தல், அவர்களை அச்சுறுத்துதல் மற்றும் இலக்கு வைத்துக் கொலை செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக ஈ.பி.டி.பி மீது பரவலாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. டக்ளஸ் தேவானந்தா மற்றும் அதன் முக்கிய உறுப்பினர்கள் பின்னர் வந்த அரசாங்கங்களில் அமைச்சரவை அமைச்சர்களாகவும் பதவிகளை வகித்தனர். இது அவர்களின் அரசியல் செல்வாக்கையும், தண்டனையிலிருந்து அவர்கள் பெற்ற பாதுகாப்பையும் எடுத்துக்காட்டுகிறது.

அக்டோபர் 2000 பொதுத் தேர்தல்

அக்டோபர் 10, 2000 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தல், நிமலராஜனின் கொலைக்கான உடனடித் தூண்டுதலாக அமைந்தது. இந்தப் போர்க்காலத் தேர்தலின் போது, ஈ.பி.டி.பி.யினர் தேர்தல் வன்முறைகள், வாக்காளர் மோசடி மற்றும் அச்சுறுத்தல்களில் ஈடுபட்டதாக நிமலராஜன் தனது செய்திகளின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். இந்தச் செய்திகள், கொலைக்கான நேரடி நோக்கத்தை நிறுவுவதில் முக்கியத்துவம் பெறுகிறது, குறிப்பாக ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த பகிரங்க எச்சரிக்கையின் பின்னணியில். தேர்தலில் ஈ.பி.டி.பி. நான்கு ஆசனங்களை வென்ற போதிலும், யாழ்ப்பாணத்தில் எதிர்பார்த்த பெரும்பான்மையைப் பெறத் தவறியதற்கு நிமலராஜனின் செய்திகளே ஒரு காரணம் என அக்கட்சி கருதியதாக நிமலராஜனே தனது நண்பர்களிடம் தெரிவித்திருந்தார். தேர்தலுக்குப் பின்னர், டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஒரு நேர்காணலில், “உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நிமலராஜன் தனது விவகாரங்களை நடத்திக் கொண்டிருப்பதாக” அவர் எச்சரித்திருந்தார். இந்த அரசியல் சூழல், நிமலராஜனின் ஊடகப் பணிக்கு நேரடி அச்சுறுத்தலாக மாறி, அவரது படுகொலைக்கு வழிவகுத்தது.

யாழ்ப்பாணத்தின் குரல்: மயில்வாகனம் நிமலராஜன்

மயில்வாகனம் நிமலராஜன், பிபிசி தமிழ் மற்றும் ஆங்கில சேவைகள், தமிழ் நாளிதழான வீரகேசரி, சிங்கள வார இதழான ராவய மற்றும் தமிழ்நெற் இணையதளம் உள்ளிட்ட பல ஊடகங்களுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து பணியாற்றிய ஒரு பன்மொழி ஊடகவியலாளர் ஆவார். போரினால் சிதைக்கப்பட்ட யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயங்கிய மிகச் சில சுயாதீனக் குரல்களில் ஒருவராக அவர் விளங்கினார். குண்டுவெடிப்புகள், இராணுவ நடவடிக்கைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள், அரசியல் ஊழல்கள், தேர்தல் முறைகேடுகள் மற்றும் போருக்கு மத்தியில் தமிழ் மக்களின் அன்றாடப் போராட்டங்கள் எனப் பலதரப்பட்ட விடயங்களை அவர் அச்சமின்றி வெளிக்கொணர்ந்தார். கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிக் குறைபாடுகளுக்கு மத்தியிலும், சைக்கிளில் பயணம் செய்து செய்திகளைச் சேகரித்து, தொலைபேசி மூலம் லண்டனில் உள்ள பிபிசி அலுவலகத்திற்கு தனது செய்திகளை வாசித்துக் காட்டுவார். அவரது பணி, யாழ்ப்பாணத்தில் நடக்கும் நிகழ்வுகளை வெளி உலகிற்கு கொண்டு சென்ற ஒரு முக்கிய இணைப்பாக இருந்தது.

அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும்

அவரது படுகொலைக்கு முன்னதாக, நிமலராஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பலமுறை மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. குறிப்பாக, 2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தொடர்பான அவரது செய்திகளுக்குப் பிறகு, ஈ.பி.டி.பியினரிடமிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்ததாக அவரே தனது நண்பர்களிடம் தெரிவித்திருந்தார். “தனக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு ஈ.பி.டி.பி.யே காரணமாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த அச்சுறுத்தல்கள் குறித்து அவர் பொலிஸாரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தும், அந்த அழைப்புகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றே அவருக்குப் பதில் கிடைத்தது.

கொலைக்கு சில நாட்களுக்கு முன்பு, இராணுவத்தினர் அவரது வீட்டிற்குச் சென்று, தேர்தல் வேட்பாளர்களின் புகைப்படங்களை அவர் வைத்திருந்தது குறித்து விசாரணை நடத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புகைப்படங்களை அனுப்பத் திட்டமிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியபோது, கொழும்பில் உள்ள ‘ராவய’ பத்திரிகையின் ஆசிரியர் கேட்டதற்காகவே அவற்றைச் சேகரித்ததாக நிமலராஜன் விளக்கினார். படுகொலைக்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பு கூட, அவர் இராணுவத்தினரால் மீண்டும் விசாரிக்கப்பட்டதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு (RSF) பதிவு செய்துள்ளது. இந்த நிகழ்வுகள் தற்செயலானவை அல்ல, மாறாக அவரை அமைதியாக்குவதற்கான ஒரு திட்டமிட்ட நடவடிக்கையின் முன்னறிவிப்புகளாகவே இருந்தன.

தாக்குதல் மற்றும் படுகொலை: நிகழ்வுகளின் காலவரிசை

தாக்குதல் நடந்த இரவின் விவரங்கள், உயர் பாதுகாப்பு வலயத்தில் அரசின் பாதுகாப்புப் பொறிமுறை எவ்வளவு படுமோசமாகத் தோல்வியடைந்தது என்பதை அம்பலப்படுத்துகின்றன. இது பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் சந்தித்த அதிர்ச்சியையும், நீதிக்காக அவர்கள் எதிர்கொண்ட நீண்ட போராட்டத்தின் தொடக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

தாக்குதலின் இரவு

அக்டோபர் 19, 2000 அன்று இரவு, யாழ்ப்பாணம் கடுமையான ஊரடங்குச் சட்டத்தின் கீழ் இருந்தது. திட்டமிடப்பட்ட மின்வெட்டு காரணமாக நகரம் இருளில் மூழ்கியிருந்தது. இரவு சுமார் 9:45 மணியளவில், நிமலராஜன் தனது வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் தனது படிக்கும் அறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அவரது தந்தை, கணபதிப்பிள்ளை மயில்வாகனம், வானொலியில் பிபிசி தமிழோசையைக் கேட்டுக் கொண்டிருந்தார். அச்சமயம், இரண்டு ஆயுததாரிகள் வீட்டினுள் நுழைந்தனர்.

ஒருவன் நிமலராஜனின் தந்தையை ஒரு கத்தியால் சரமாரியாக வெட்டித் தாக்கினான். அதே நேரத்தில், மற்றொருவன் நிமலராஜனின் அறைக்குள் நுழைந்து அவரை நோக்கி மூன்று முறை சுட்டான். துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது தாய் லில்லி திரேஸ் மற்றும் 11 வயது மருமகன் பிரசன்னா ஆகியோர் காயமடைந்தனர். தாக்குதல்தாரிகள் தப்பிச் செல்லும் போது ஒரு கைக் குண்டினை வீசினர், அது பொது அறையின் நடுவே வெடித்துச் சிதறியது. இதில் நிமலராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தந்தை, தாய் மற்றும் மருமகன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

உடனடிப் பின்விளைவுகள்

தாக்குதலுக்குப் பிறகு, காயமடைந்த குடும்ப உறுப்பினர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது ஒரு பெரும் போராட்டமாக அமைந்தது. நிமலராஜனின் மைத்துனர் உடனடியாக அருகிலுள்ள இராணுவச் சோதனைச் சாவடிக்கு ஓடிச் சென்று உதவி கோரினார். இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு வர சுமார் 15-20 நிமிடங்கள் ஆனது. ஆனால், அவர்கள் காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்ல வாகன உதவியை வழங்கவில்லை.

இறுதியில், ஒரு அயலவரின் சிறிய உழவு இயந்திரத்தின் (லாண்ட் மாஸ்டர்) பெட்டியில் நிமலராஜனின் உடலையும், படுகாயமடைந்த மூன்று குடும்ப உறுப்பினர்களையும் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததால், வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைச் சென்றடைய அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆனது. கடுமையான ஊரடங்கு மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு நகரத்தில், அரச படைகளின் தலையீடு இன்றி தாக்குதல் நடத்துவதும், பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைப்பதைத் தடுப்பதும் எவ்வளவு எளிதாக இருந்தது என்பதை இந்த நிகழ்வு அம்பலப்படுத்துகிறது. இந்தத் துயர நிகழ்வு, நீதியை வழங்கும் நோக்கம் கொண்டிராத ஒரு தோல்வியுற்ற விசாரணைக்கே வழிவகுத்தது.

விசாரணை

நிமலராஜன் படுகொலையில் விசாரணை என்பது நீதிக்கான ஒரு கருவியாகச் செயல்படவில்லை; மாறாக, அது அரச ஆதரவு பெற்ற குற்றவாளிகளைப் பாதுகாக்கவும், பொறுப்புக்கூறலைத் திட்டமிட்டுச் சிதைக்கவும் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவியாகவே விளங்கியது. சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ், ஒரு மரணம் தொடர்பான விசாரணை சுயாதீனமாகவும், முழுமையாகவும், உடனடியாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும். நிமலராஜன் வழக்கில், விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த அடிப்படைக் கோட்பாடுகள் மீறப்பட்டன.

குற்றச்சம்பவம் இடம்பெற்ற இடத்தில் ஆரம்பகட்ட தோல்விகள்

விசாரணையின் முதல் சில மணி நேரங்களிலேயே மிக மோசமான தவறுகள் இழைக்கப்பட்டன. இதுவே வழக்கின் அடித்தளத்தைச் சிதைத்தது.

  • குற்றச்சம்பவம் இடம்பெற்ற இடத்தைப் பாதுகாக்கத் தவறியது: உயர் பாதுகாப்பு வலயத்தில் கொலை நடந்த போதிலும், பொலிஸார் சம்பவ இடத்தைச் சுற்றிப் பாதுகாப்பு வலையத்தை அமைக்கவில்லை. இதனால், முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம்.

  • ஆவணப்படுத்தத் தவறியது: குற்றச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் புகைப்படங்கள் அல்லது வரைபடங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. இது பிற்காலப் பகுப்பாய்வுகளுக்கு அவசியமான அடிப்படைத் தகவல்களை இல்லாமற் செய்தது.

  • தடயவியல் சான்றுகளைச் சேகரிக்கத் தவறியது: கைரேகைகள் மற்றும் பிற தடயவியல் சான்றுகள் முறையாகச் சேகரிக்கப்படவில்லை. சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் மற்றும் கைக் குண்டின் பாகங்கள் உடனடியாகப் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படவில்லை.

இந்த ஆரம்பகட்டத் தவறுகள், விசாரணை ஒருபோதும் தீவிரமான நோக்கத்துடன் மேற்கொள்ளப்படவில்லை என்பதற்கான தெளிவான அறிகுறிகளாகும்.

சாட்சியங்கள் மற்றும் சாட்சியங்களை கையாண்ட விதம்

விசாரணையின் போது சாட்சியங்களும் மிகவும் மோசமாகக் கையாளப்பட்டன. இது நீதியைப் பெறுவதற்கான வாய்ப்புகளை மேலும் குறைத்தது.

  • தாமதமான விசாரணைகள்: கொலை நடந்த இரவில் கடமையில் இருந்த இராணுவ வீரர்களிடம் விசாரணை நடத்த பல ஆண்டுகள் ஆனது. நிமலராஜனுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து அவரது குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் வாக்குமூலம் பெற விசாரணையை மேற்கொள்பவர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டனர்.

  • தடயவியல் தாமதங்கள்: சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் மற்றும் கைக்குண்டின் பாகங்கள் பகுப்பாய்வுக்காக அனுப்பப்படுவதற்கு ஒரு மாதத்திற்கும் மேல் ஆனது. பகுப்பாய்வு முடிவுகள் வெளிவர மேலும் பல மாதங்கள் தாமதமானது.

  • தவறான முன்னுரிமைகள்: நிமலராஜனுக்கு வந்த அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகளைப் பற்றி விசாரிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, விசாரணையாளர்கள் அவரது வங்கிக் கணக்கை ஆய்வு செய்வது போன்ற பொருத்தமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

சந்தேக நபர்கள்: கைதுகளும் தண்டனையின்மையும்

விசாரணை இறுதியில் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் மீது திரும்பியது. ஜெகன், முரளி, பாஷா மற்றும் நெப்போலியன் போன்ற முக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், இந்த நடவடிக்கைகள் நீதியை நிலைநாட்டத் தவறின.

  • கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், தாங்கள் பொலிஸாரால் சித்திரவதை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டினர். அவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்கள் இதன் மூலம் சட்டரீதியாக பயனற்றதாகிவிட்டன, இது மேலதிக விசாரணையின்றி அவற்றை நிராகரிக்க அதிகாரிகளுக்கு ஒரு வசதியான காரணத்தை வழங்கியது, இதன் மூலம் வழக்கின் ஒரு முக்கிய தூண் தகர்க்கப்பட்டது.

  • ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, கொலைக்கான நோக்கம் குறித்து பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், ஒருபோதும் பொலிஸாரால் விசாரிக்கப்படவில்லை. இது விசாரணையின் நம்பகத்தன்மையை முற்றிலுமாகச் சிதைத்தது.

  • முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான நெப்போலியன் போன்றவர்கள், பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இது அரச தரப்பினரின் உடந்தையை உறுதிசெய்து, இலங்கையில் வேரூன்றியிருந்த தண்டனையின்மைக் கலாச்சாரத்தின் தெளிவான எடுத்துக்காட்டாக அமைந்தது.

நீதியின் தேக்கம் (2004-2021)

2004ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்த வழக்கு கிட்டத்தட்ட முழுமையாக முடங்கியது. விசாரணைக் கோப்பு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட பின்னர், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எந்தவித பதிலும் வரவில்லை. இறுதியாக, 2021 நவம்பரில், சட்டமா அதிபர் திணைக்களம், சந்தேக நபர்கள் மீது வழக்குத் தொடரப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தீர்மானித்தது. இதன் விளைவாக, கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் பிணையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். 21 வருடங்களுக்குப் பிறகு வழங்கப்பட்ட இந்த இறுதி முடிவு, இலங்கையின் உள்நாட்டு நீதிப் பொறிமுறையின் முழுமையான தோல்வியை உறுதிப்படுத்தியது.

“நிமலராஜன் படுகொலை விசாரணையின் விளைவு”: ஒரு அச்சமூட்டும் முன்னுதாரணம்

நிமலராஜன் படுகொலை கொலையாளிகள் தண்டிக்கப்படாதது, இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு ஒரு அபாயகரமான முன்னுதாரணத்தை உருவாக்கியது. இந்தக் கொலைக்குப் பிறகு, 2000 முதல் 2010 வரையான காலப்பகுதியில் குறைந்தது 44 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளுக்கு யாரும் பொறுப்புக்கூறப்படவில்லை. இந்தத் தண்டனையின்மைக் கலாச்சாரம், ஊடகவியலாளர்களிடையே ஒரு ஆழமான அச்சத்தை விதைத்தது. இதன் விளைவாக, பலர் சுய தணிக்கையை மேற்கொண்டனர், சிலர் உயிருக்குப் பயந்து நாட்டை விட்டு வெளியேறினர்.இது சுயாதீன ஊடகவியலத்தின் குரல்வளையை நெரித்தது.

நிமலராஜனின் கொலை, அவரது துணிச்சலான ஊடகப் பணியை அமைதியாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அரசியல் படுகொலையாகும். ஆரம்பம் முதலே, விசாரணை வேண்டுமென்றே சிதைக்கப்பட்டது: குற்றச்சம்பவம் இடம்பெற்ற இடம் பாதுகாக்கப்படவில்லை, சாட்சியங்கள் தாமதமாக விசாரிக்கப்பட்டன, மேலும் முக்கிய சந்தேக நபர்கள், குறிப்பாக அரசியல் செல்வாக்குள்ளவர்கள், ஒருபோதும் முறையாக விசாரிக்கப்படவில்லை. இந்த வழக்கு, அரசு மற்றும் அரசு ஆதரவு துணை இராணுவக் குழுக்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு நீதி வழங்குவதில் இலங்கை நீதிப் பொறிமுறை தொடர்ச்சியாகத் தவறி வருவதை எடுத்துக்காட்டுகிறது. இதன் விளைவாக, இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரானவன்முறைகளுக்கு ஒரு அபாயகரமான முன்னுதாரணம் உருவாக்கப்பட்டுள்ளது. தமது மகன் கொலை செய்யப்பட்டமைக்கு நீதி கிடைக்காத நிலையில் நிமலராஜனின் பெற்றோர் வெளிநாட்டிலேயே இறந்துபோனார்கள் என்பது, இந்த நீதியின்மையின் தலைமுறை கடந்த துயரத்தின் சான்றாகும்.

ஆசிரியர் குறிப்பு: NotebookLM உதவியுடன் ITJP அறிக்கையைக் கொண்டு வீடியோ பதிவு மற்றும் அறிக்கையின் சுருக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

https://maatram.org/articles/12294

காணாமலாக்கப்பட்ட 158 பேர் பற்றிய உண்மைக்கான நம்பிக்கை ஒளி

4 days 1 hour ago

காணாமலாக்கப்பட்ட 158 பேர் பற்றிய உண்மைக்கான நம்பிக்கை ஒளி

190912-EE-Eastern-University-massacre5.j

Photo, TAMILGUARDIAN

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு நான் செம்மணியில் நின்று அகழ்வாராய்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, லேபிள் ஒட்டப்பட்டு மேலதிக செயல்முறைகளுக்காக பொதி செய்யப்பட்டிருந்தன. மிகவும் கடினமான மற்றும் சிரமமான பணி. என்னைச் சுற்றி நீதிபதிகள், சட்டத்தரணிகள், மனித உரிமை குழுக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், பொலிஸார், பாதுகாப்பு அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அந்த இடத்தில் கூடியிருந்தார்கள். அவர்கள் அனைவரும், “இங்கு புதைக்கப்பட்டவர்கள் யார், அவர்களைப் புதைத்தவர்கள் யார்?” என்ற புதிரைத் தீர்க்க முயற்சிப்பதைப் பார்த்தேன்.

புதைக்கப்பட்டவர்கள் தங்களுக்கு இப்படியொரு நாள் வரும் என்று எப்போதாவது நினைத்திருப்பார்களா என்று நான் நினைத்தேன். அவர்களில் சிலர் இன்னும் தங்களின் பாடசாலைப் பைகளை சுமந்து கொண்டு செல்லும் குழந்தைகள் மட்டுமே.

சிறையில் உள்ள இராணுவ அதிகாரி ஒருவர் இந்த மனித புதைகுழியைப் பற்றியும் அதன் கீழ் புதைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையைப் பற்றியும் நீதிமன்றில் வைத்து அம்பலப்படுத்தினார். இது உண்மையா? இல்லையா? அவர் சொல்வது சரியா? இன்னும் பலர் நிலத்தின் கீழே புதைக்கப்பட்டிருக்கிறார்களா? இன்று வரை, தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக் கூட்டுத்தொகுதிகள் எண்ணிக்கை 231 என அறிவிக்கப்பட்டுள்ளது (வீரகேசரி, செப்டம்பர் 04, 2025).

செப்டம்பர் 5, 1990 அன்று நான் கிழக்குப் பல்கலைக்கழக அகதிகள் முகாமில் நூற்றுக்கணக்கானோருடன் நான் இருந்தபோது என்ன உணர்வோடு இருந்தேன் என்பதில் என் மனம் அலைவதை என்னால் தடுக்க முடியவில்லை. அங்கிருந்து 158 பேர் ஆயுதப்படைகளால் அழைத்துச் செல்லப்பட்டனர். இன்று வரை, அவர்களுக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. அவர்களிடமிருந்து எல்லாவற்றையும் பறித்தபோது, அவர்களின் வாழ்க்கையையும் குடும்பங்களையும் பற்றி அவர்களின் மனங்களில் என்ன கடந்து சென்றிருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கிறேன். இத்தனை வருடங்களாக அவர்களது குடும்பங்கள் தங்களின் கனத்த இதயங்களில் என்ன சுமந்துகொண்டிருப்பார்கள் என்பது பற்றியும் நான் நினைக்கிறேன். நான் என்னையே கேட்டுக் கொள்கிறேன் – என்னைப் பற்றி என்ன சொல்ல முடியும்?

நான் எப்போதாவது அவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்படுவதைப் பார்ப்பேனா அல்லது அவர்கள் உயிருடன் திரும்பி வருவதைக் கண்டு நான் ஆச்சரியப்படுவேனா? ஆதாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வரலாறு எப்போதாவது எங்கள் கதைகளைச் சொல்லும். நீதி நிஜமாக நிறைவேறாவிட்டால், பின்னர் தெய்வீகமாகவோ அது நிறைவேறும் என்று நான் நம்புகிறேன். அதைப் பார்ப்பதற்கு நான் உயிருடன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் வந்தாறுமூலையிலிருந்து அழைத்துச் சென்ற அந்த 158 பேரின் பாரம்பரியம் தொடரும். அரசாங்க அறிக்கைகளிலும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையிலும் அவர்கள் இன்னும் ‘காணாமல் போன நபர்கள்’ என்று குறிப்பிடப்படுகிறார்கள்.

கிழக்கு மாகாணத்தின் காணாமல் போனவர்கள் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி நான் பட்டியலிட்ட நபர்களிடம் அதிகாரிகள் எப்போதாவது விசாரணை நடத்தியிருக்கிறார்களா? விசாரணை நடாத்தியிருந்தால் விசாரணை முடிவுகள் எங்கே? விசாரணை நடாத்தவில்லை என்றால் ஏன்? வேறொரு வழக்கில் ரத்நாயக்கே போன்ற ஒருவர் விரல் நீட்டி இது தான் நடந்தது என்று சொல்லக்கூடியவராக இருப்பாரா, அவர்களின் கடைசி நாட்களில் கூட ஆறுதல் பெற காத்திருக்கிறேன். வேறொரு வழக்கில் ரத்னாயக்கா அம்பலப்படுத்தியது போல ஒருவர், அவரது வாழ்க்கையின் இறுதியிலும் கூட, ஏதேனும் ஆறுதல் பெற முடியும் வகையில் விரல் நீட்டி உண்மையில் என்ன நடந்தது என்று சொல்ல முடியுமா? அந்த ஒரு சந்தர்ப்பத்திற்காக நான் இன்னும் காத்திருக்கிறேன்.

செப்டம்பர் 5, 1990 மற்றும் அந்த நாட்களைச் சுற்றி எதையாவது பார்த்த மற்றவர்கள் அப்பகுதியில் உள்ளனரா, அன்றைய நாட்களின் என்ன நடந்தது என்பது பற்றி தகவல்களை  கொடுத்துதவ முடியுமா? வதந்திகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத கதைகளிலிருந்து நாம் கேள்விப்பட்டது என்னவென்றால், கைது செய்யப்பட்டவர்கள் முதலில் வாழைச்சேனை காகித தொழிற்சாலை முகாமில் வைக்கப்பட்டு பின்னர் நாவலடி முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்? சம்பவம் இடம்பெற்று மூன்று நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 8, 1990 அன்று அகதிகள் முகாமுக்கு வந்த ஜெனரல் என்னிடம் சொன்னார், “அவர்கள் அனைவரும் எல்.ரி.ரி.ஈ. அவர்களைப் பற்றி கேட்காதே.” அவர் அவ்வாறு குறிப்பிட்டதன் அர்த்தம் என்ன? நான் இதை ஜனாதிபதி ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும், விசாரணையில் வேறு எதுவும் வெளிவராதது ஏன்?

பல சந்தர்ப்பங்களில், சிறுபான்மையினர், நாட்டில் எந்த உரிமையும் இல்லாத வெளியாட்கள் என்று கருதப்படுகிறார்கள். உதாரணமாக, முஸ்லிம்கள் அரேபியாவுக்கு செல்ல வேண்டும் என்றும், தமிழர்கள் இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்றும் ஒரு முன்னாள் அமைச்சர் ஒருமுறை கூறியது என் நினைவில் உள்ளது. வெறுப்புப் பேச்சு சட்டங்களின் கீழ் கூட அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்போது காணாமல் போனவர்கள் பற்றிய புதிய அலுவலகம் ஒன்று இருப்பதாக நான் பார்க்கிறேன். ஆனால் ஆரம்பத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுக்களிடமும் காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்திடமும் செய்யப்பட்ட முறைப்பாடுகள் இன்னும் ஏன் நிலுவையில் உள்ளன அல்லது அதிகாரப்பூர்வமாக முத்திரையிடப்பட்டுள்ளன என்று ஆச்சரியப்படுகிறேன். இது சில சர்வதேச சட்டங்கள் அல்லது ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதற்காக மட்டுமே செய்யப்படுகிறதா? புதிய அரசாங்கம் வித்தியாசமானதாக இருக்கலாம். எனவே, நான் ஓரளவு நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஆனால் சர்வதேச ஒப்பந்தங்களைப் புறக்கணித்து, மாகாண உரிமைகளை நிராகரித்து மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் தயக்கம் காட்டுவது சந்தேகத்தை எழுப்புகிறது. இது புதிய பெயரின் கீழ் இயங்கும் அதே பழைய முறைமையா? இருப்பினும், 2000ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களை விசாரிப்பதாக ஜனாதிபதியின் சமீபத்திய வாக்குறுதி, காணாமல் போன 158 பேர் மற்றும் பல பேரின் குடும்பங்களுக்கு சிறிது நம்பிக்கையை கொடுத்துள்ளது.

1990 கிழக்குக்கு பயங்கரமான ஆண்டாக இருந்தது. முஸ்லிம் கிராமங்கள் இரண்டின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அகதிகள் முகாம் உருவாக்கப்பட்டது. தன்னாமுனை உட்பட தமிழ் பகுதிகளில் ஏராளமான கடத்தல்கள் மற்றும் கைதுகள் நடந்தன. இந்தச் சம்பவங்களைப் பற்றி அதிகம் எழுதப்பட்டுள்ளது, சித்தாண்டி மற்றும் பங்குடாவெளி போன்ற இடங்களும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களின் உடலங்களை கண்டுபிடிப்பது ஒரு பணியாக இருக்கலாம். ஆனால், அதிகாரப்பூர்வ கோப்புகளை திறப்பது மற்றொரு பணியாகும். நாம் உடலங்களை கண்டுபிடிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம். அப்படி இடம்பெறாவிட்டால் கோப்புகளை ஒருபோதும் திறக்க முடியாது. ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உதவியுடன் செம்மணியில் பயன்படுத்தப்படும் உபகரணங்களைப் போல, மனித புதைக்குழிகளைக் கண்டுபிடிப்பதற்கு அதிக ரேடார் உபகரணங்களைப் பயன்படுத்துவது ஒரு பரிந்துரையாகும். உண்மையைத் தேடுவதை விரைவுபடுத்தும் அத்தகைய முயற்சிகளுக்கு புலம்பெயர் சமூகம் நிதி வழங்கலாம்.

காணாமல் போனவர்களுடன் பணிபுரிபவர்கள் எல்லா பக்கங்களிலும் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள் என்று அவர்களோடு பணிபுரிபவர்கள் எனக்குக் கூறினார்கள். குடும்பத்தின் வருமான மார்க்கமாக இருந்த, உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மைக்காக காத்திருக்கும் இந்த குடும்பங்களுக்கு OMP இடைக்கால மனிதாபிமான உதவியாக இழப்பீடுகளைக் கருத்தில் கொள்வது நல்லது.

மரண சான்றிதழுக்கு பதிலாக குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட காணாமல் போனவர்களின் சான்றிதழைப் பயன்படுத்தி நில பரிமாற்றங்கள், EPF மற்றும் ETF பணம் பெறுவதில் நிர்வாக இடையூறுகள் உள்ளன என்றும் எனக்கு அறியக்கிடைத்தது. இவற்றைத் தீர்க்குமாறு நான் அரசாங்கத்திடம் பணிவுடன் கோருகிறேன். ஏனென்றால், இந்த மக்கள் கடந்த 35 ஆண்டுகளாக காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடி வருகிறார்கள், அவர்கள் அனுபவித்துவரும் வேதனைக்கு மேலதிகமாக அவர்கள் மற்றொரு சுமையை எதிர்கொள்ள வேண்டியிருக்கக் கூடாது.

வீடுகளை இழந்த எம்.பி.க்களுக்கு சில மாதங்களுக்குள் மில்லியன் கணக்கான இழப்பீடு வழங்கப்பட்டது என்பதை நினைவில் கொள்வது பொருத்தமானது. மோதலில் வீடுகளை இழந்த நூற்றுக்கணக்கான சாதாரண மக்கள் இன்னும் கொடுப்பனவுகளுக்காக பட்டியலில் சேர்க்கப்படவில்லை. உண்மையான அரசியல் விருப்பம் இருந்தால், எப்போதும் ஒரு வழி இருக்கிறது. ஏற்கனவே 35 ஆண்டு சாதாரண வாழ்க்கையை இழந்த இந்த குடும்பங்களுக்கு அரசு அதை செய்து காட்ட வேண்டும்.

நான் எதையும் கேட்கவில்லை. ஆனால், பாடசாலை நாட்களில் நான் படித்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. “கடவுள் உண்மையைப் பார்க்கிறார். ஆனால், காத்திருக்கிறார்.” நான் இதை நம்புகிறேன். என்றாவது ஒரு நாள், ஆணைக்குழு மூலமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் உண்மை வெளியே வரும், செம்மணியில் நடந்ததைப் போல உலகம் உண்மையான கதையை அறியும். இந்த ‘மரகத தீவில்’ இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் வேதனை என்றென்றும் மறைக்கப்படாது.

Jeyasingam.jpg?resize=100%2C129&ssl=1பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம்
* கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
* 1990 கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை அகதி முகாம் பொறுப்பதிகாரி

https://maatram.org/articles/12285

சிறிதரன்: தவறுகளும் மீளலும் — கருணாகரன் —

5 days 4 hours ago

சிறிதரன்: தவறுகளும் மீளலும்

September 11, 2025

— கருணாகரன் —

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனைப் பற்றிய ‘படங்காட்டுதல் அல்லது சுத்துமாத்துப் பண்ணுதல்‘ என்ற கட்டுரை, அவரைத் தனிப்பட்ட ரீதியில் தாக்குவதாக அமைந்திருக்கிறது என்று சிலர் குற்றம் சாட்டினர். அவர்களுடைய கேள்விகளில் முக்கியமானவை –

1.   சிறிதரன் மட்டும்தான் இப்படி (கட்டுரையில் குறிப்பிட்டவாறு கல்வி, மருத்துவம், விவசாயம், சூழல் விருத்தி, கடற்றொழில், பனை தென்னை வளத் தொழில், பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான ஆதாரம், மாற்றுத் திறனாளிகளின் எதிர்காலத்துக்கு, முன்னாள் போராளிகளின் வாழ்க்கைக்கு – 

பிரதேசங்களின் அபிவிருத்திக்கு, இளைய தலைமுறையினரின் திறன் விருத்திக்கு, தொழில் வாய்ப்புகளுக்கு, பண்பாட்டு வளர்ச்சிக்கு, வரலாற்றுத்துறைக்கு, இலக்கிய மேம்பாட்டுக்கு – 

சமூக வளர்ச்சிக்கு….) பங்களிப்புச் செய்யாத ஒருவரா? அவரையும் விட நீண்ட காலமாக செல்வம் அடைக்கலநாதன் வன்னியில்(மன்னாரில்) பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவரைப்போல வேறு ஆட்களும் உள்ளனர். அவர்களைப் பற்றியெல்லாம் எழுதாமல், சிறிதரனை இலக்கு வைத்து தாக்குவது ஏன்? அதாவது தெரிவு செய்யப்பட்ட இலக்காக ஒருவரைக் கொள்வது ஏன்? என்பது.

2.   இவ்வாறான குற்றச்சாட்டுகளை வைத்தாலும் சிறிதரனுக்குத் தொடர்ச்சியாக மக்கள் ஆதரவு உள்ளதே! அதனால்தானே அவர் வெற்றியடைந்து கொண்டிருக்கிறார். அப்படியென்றால், மக்களின் உணர்வையும் தெரிவையும் தவறு என்று சொல்கிறீர்களா? மக்களின் தெரிவை (ஏற்பை) மறுதலிப்பதற்கான அதிகாரம் உங்களுக்கு இல்லையே! என்பது. 

3.   நீங்கள் (கட்டுரையாளர்) ஒரு அரசியற் சார்பில் நின்று கொண்டு, அதற்கெதிரான தரப்பில் நிற்கும் சிறிதரனை இலக்கு வைக்கிறீர்கள். இது அரசியற் போட்டியின் விளைவான காழ்ப்புணர்ச்சி  வெளிப்பாடாகும் என்பது.

ஏனைய குற்றச்சாட்டுகள் பொருட்படுத்தக் கூடியன அல்ல. 

இதேவேளை வேறு பலர் பாராட்டினார்கள். அவர்கள் பாராட்டியதற்குக் காரணம் –

1.   பேச வேண்டிய – குறிப்பிடப்பட வேண்டிய விடயத்தைத் துணிச்சலோடு பேசியுள்ளீர்கள். உரியவர்களுக்குரிய(சிறிதரனுக்கும் அவரை ஆதரிப்போருக்கும்) பொறுப்பைச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். ஒரு எழுத்தாளர் அல்லது அரசியல் விமர்சகருக்கு இந்தத் துணிச்சலும் பக்கம் சாராமையும் அவசியமாகும். பொருத்தமான காலத்தில் அதைச் சுட்டிக்காட்டுவது முக்கியமானது. அது இங்கே(குறித்த கட்டுரையில்) உள்ளது என்பது. 

2.   போரினால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் மக்கள் பிரதிநிதி ஒருவர் ஆற்றியிருக்க வேண்டிய பணிகளைப் பட்டியலிட்டுள்ளீர்கள். அது முக்கியமானது. ஏனென்றால், அதில் ஒரு துறையில் கூட எந்த வகையான முன்னேற்றத்துக்கோ வளர்ச்சிக்கோ மாற்றங்களுக்கோ இவர்(சிறிதரன்) எத்தகைய பங்களிக்கவும் இல்லை என்பதைச் சவாலுக்கு உட்படுத்தியுள்ளீர்கள். நியாயமாக நடப்பவர்களாக இருந்தால், நிச்சயமாக இதைக் குறித்துச் சிந்திப்பார்கள் என்பது. 

3.   தனிப்பட்ட ரீதியில் சிறிதரன் குற்றம் சாட்டப்படவில்லை. அதாவது அரசியற் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளில்லை. வெளிப்படையாக, சிறிதரனையும் அவரை ஆதரிப்போரையும் சேர்த்தே கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கேள்விக்குட்படுத்துவது, விமர்சிப்பது வேறு. குற்றம் சாட்டுவதும், அவதூறு செய்வதும் வேறு. இங்கே கட்டுரையில் செய்யப்பட்டிருப்பது கேள்விக்குட்படுத்தியதும் விமர்சனம் செய்திருப்பதுமேயாகும். ஆகவே இதற்கான பதிலை அவர்கள் தரவேண்டும். அது இந்தக் கட்டுரைக்கு(உங்களுக்கு அல்லது அதைப் பிரசுரித்த ஊடகத்துக்கு)  நேரடியான பதிலாகவும் இருக்கலாம். அல்லது தங்களுடைய முன்னேற்றகரமான எதிர்காலச் செயற்பாடுகளின் வழியாகவும் அந்தப் பதில் இருக்கலாம் என்பது. 

4.   சிறிதரனின் மீதான குற்றச்சாட்டு என்பது அவரை ஆதரிக்கும் மக்களையும் மக்களின் ஆதரவைத்திரட்டிக் கொடுப்போரையும் கேள்விக்கு உட்படுத்தாத ஊடகங்களையும் புத்திஜீவிகளையும் சாரும். இத்தகைய கேள்விகளை எழுப்புவது மக்களை விழிப்புணர்வு அடையச் செய்வது மட்டுமல்ல, கேள்வி கேட்கக் கூடிய ஜனநாயக வீரியத்தையும் துணிச்சலையும் உருவாக்கும். அது எவரை நோக்கியும் கேள்வி கேட்கக் கூடிய – எவரையும் விமர்சிக்கக்கூடிய முன்னேற்றகரமான ஒரு பண்பியல் வளர்ச்சியை மக்களிடம் உருவாக்கும். அதற்கு இந்தக் கட்டுரை பங்களிக்கிறது. இப்படியான ஒரு விழிப்புணர்வு தென்னிலங்கையில் ஏற்பட்டபடியால்தான் அங்கே ஒரு ஆட்சி மாற்றம் நிகழ முடிந்தது. பாரம்பரிய ஆட்சியாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பயனில்லாதவர்கள் சமூகத்துக்குச் சுமையல்லவா என்பது.

5.   ஒரு மாவட்டத்தின் முன்னேற்றத்தை – வளர்ச்சியைக் குறித்துச் சிந்திப்பவரின் ஆதங்கமும் கருத்தும் கோபமும் இப்படித்தான் வெடித்து வெளிப்படும். இது இப்பொழுது ஒரு பத்திரிகையாளருக்குள் நிகழ்ந்திருக்கிறது. எதிர்காலத்தில் இந்த வெடிப்பும் கொந்தளிப்பும் மக்களிடத்திலும் ஏற்படும். அதைக் கட்டியமாகச் சொல்லியுள்ளது அந்தக் கட்டுரை. அதைப்போலப் போரினால் ஏற்பட்ட பாதிப்பைச் சொல்லியும் எடுத்தற்கு எல்லாம் அரசாங்கத்தை திட்டியும் தொடர்ந்தும் அரசியல் நடத்த முடியாது. மக்களைத் துயரங்களிலிருந்தும் அவலங்களிலிருந்தும் மீட்பதே அவர்களுடைய போராட்டகாலப் பங்களிப்புகளுக்கும் பாதிப்புக்கும் செய்யும் நீதியாகும். அதையும் கட்டுரை சுட்டிக் காட்டியுள்ளது. பொதுவான வாசகர்களித்திலும் கூட இத்தகைய கொந்தளிப்பும் வெடிப்பும் நிச்சயமாக நிகழும். அது அவசியமாகும் என்பது. 

இப்படி வேறும் சில கருத்துகள் வந்தன. இவை போதும் என்பதால் அவை தவிர்க்கப்பட்டுள்ளன. . 

சரி, இனி குறித்த விடயத்துக்கு வருவோம். 

முதலில், குற்றம்சாட்டியோரின் நியாயத்தைக் குறித்துப் பார்க்கலாம். 

குற்றம்சாட்டியோர் எதையும் முறையாக விவாதிக்கவும் பரிசீலிக்கவும் தயாராக இல்லை. அப்படியாக இருந்திருந்தால் அது ஆரோக்கியமான விவாதமாகவும் அறிவார்ந்த செயற்பாடாகவும் பயனுள்ள விடயமாகவும் இருக்கும். 

ஒரு மக்கள் பிரதிநிதியைத் தொடர்ந்து வெற்றியடையச் செய்யும் ஆதரவாளர்களிடமிருந்து ஒரு நல்ல பதில் கூட வரவில்லை; வரமுடியாமலிருக்கிறது என்பது அவருடைய வீழ்ச்சியையும் அந்தத் தரப்பின் இயலாமையுமே காட்டுகிறது. 

இவ்வளவுக்கும் தமிழரசுக்கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவர் சிறிதரன். அந்தப் பொறுப்பேற்புத் தொடர்பான விவகாரம் கூட வழக்கில் உள்ளது. இருந்தும் அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட சிறிதரனுடைய மக்கள் பணிகளின் குறைபாடுகள், அரசியல் அணுகுமுறை போன்றவற்றைக் குறித்து முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனத்துக்கு கட்சிக்குள்ளிருந்து கூட எந்தக் குரலும் எழுவதில்லை.

பாராளுமன்றத்தில் உச்சக் குரலில் பேசுவது வேறு. பாராமன்றத்தையும் அரசியல் வெளியையும் கையாள்வது வேறு. இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது, ஜனாதிபதி அநுரகுமாரவுடன் சாணக்கியன் பேச்சுகளை மேற்கொண்டு, மக்களுக்கான பல விடயங்களைச் சாதமாக்கியுள்ளார். இப்படி முன்னரும் சில விடயங்களை அவர் சாத்தியப்படுத்தினார். 

ஒரே கட்சியில், அதுவும் இளைய பிரதிநிதி ஒருவர் அப்படிச் சாதிக்க முடியுமாக இருக்கும்போது, அந்தக் கட்சியில் தொடர்ந்து வெற்றியீட்டிய மூத்த பிரதிநிதியினால் அது முடியாமலிருப்பது ஏன்?

காரணம், எளிது. இதற்கொரு அண்மைய உதாரணம். தற்போது ஆட்சியலிருக்கும் NPP யின் பா. உறுப்பினரான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கடந்த வாரம் பளை – வேம்போடுகேணி பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வுக்குச் சென்றிருந்தார். அதே நிகழ்வில் இன்னொரு அழைப்பாளராகச் சிறிதரனும் சென்றிருந்தார். ரஜீவனைக் கண்டதும் சிறிதரன் நிகழ்வில் கலந்து கொள்ளாமல் திரும்பி விட்டார். 

இவ்வாறான தவறுகளே மக்களுக்கான அரசியல் பெறுமானங்களை சிறிதரனால் உருவாக்க முடியாதிருப்பதற்கான காரணமாகும். 

தவிர,  இலங்கையிலுள்ள முன்னணி அரசியற் கட்சிகளின் குறைபாடுகள், தவறுகள், பொறுப்பின்மைகள், மக்கள் விரோதச் செயற்பாடுகள் போன்றவற்றைப் பற்றி வெளிப்படையாகவே பேசப்பட்டு வந்துள்ளது. மட்டுமல்ல, அவற்றின் தலைமைப் பொறுப்புகளில் உள்ளோரின் செயற்பாடுகள், நடவடிக்கைகள், நடைமுறைகள் பற்றிய விமர்சனங்களும் தொடர்ந்து செய்யப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிட்டே அவை செய்யப்பட்டுள்ளன. யாரும் விலக்கல்ல. தனிப்பட்ட முறையில் யாரும் குறி வைத்து விமர்சிக்கப்படவுமில்லை. அப்படிச் செய்வது மக்களிடமிருந்து கட்டுரையும் குறித்த ஊடகமும் விலக்கம் செய்யப்படக் கூடிய சூழலையே உருவாக்கும். 

கட்டுரையைப் படிக்கும்போது வாசகர்களுக்கு இங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ள செல்வம் அடைக்கலநாதனைப்போல, வேறு பலருடைய முகங்களும் நினைவுக்கு வரலாம். ஏன் இதைப்போல பிற சமூகங்களில் உள்ள அரசியல்வாதிகளைப் பற்றிக் கேள்விகளும் எழலாம். அப்படி நிகழுமானால், அது கட்டுரையின் வெற்றியாகும். மக்களை விழிப்படையச் செய்வதுதானே இத்தகைய கட்டுரைகளின் (எழுத்துகளின்) நோக்கமாகும். 

அதேவேளை தம்மீதான விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் உரிய பதில்களை அவர்கள் காண முற்பட வேண்டும். அதனையே கட்டுரை விரும்புகிறது. நோக்கமும் அதுதான். 

தவிர, தனிப்பட்ட ரீதியில் சிறிதரன் விமர்சிக்கப்படவில்லை. அதாவது அவரைக் குறித்து சமூக வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் மக்களிடத்திலும் பேசப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள், சொத்துக் குவிப்புப் போன்றவற்றையெல்லாம் கட்டுரை அக்கறைப்படவில்லை. அத்தகைய குற்றச்சாட்டுகளை சிவில் செயற்பாட்டாளரான சஞ்சய் மஹாவத்த என்பவர் சட்டரீதியாக ஊழலுக்கு எதிரான குற்றப்புலனாய்வுப்பிரிவில் முறையிட்டு ஆவணப்படுத்தியுள்ளார். இருந்தும் அவை இன்னும் நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளாக மாறவில்லை என்பதால் இந்தக் கட்டுரையில் அவை எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இங்கே மக்களுக்கு (சமூகத்துக்கு) தேவையான வேலைகளைச் செய்யவில்லை. அதற்குப் பொறுப்புக் கூறவேண்டும். அதற்கான கடப்பாடு குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கும் அவரை ஆதரித்து நிற்போருக்கும் உண்டு என்பதே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

அடுத்தது – 

ஒருவருக்கு தொடர்ந்தும் மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதற்காக அவருடைய அரசியற் செயற்பாடுகள் சரியானவை, ஏற்றுக் கொள்ளத் தக்கவை என்று கொள்ள முடியாது. கடந்த கால ஆட்சியாளர்களை தொடர்ந்தும் மக்கள் ஆதரித்து வந்தனர். அப்படி வந்தபடியால்தான் அவர்கள் 30, 40, 50 ஆண்டுகளாக அரசியலிலும் பாராளுமன்றத்திலும் வெற்றிகரமாக இருந்திருக்க முடிகிறது. 

ஆனால், அவர்கள் செய்ததெல்லாம் என்ன? நாட்டுக்கும் மக்களுக்கும் தீமைகளைத்தானே! அதனால்தானே நாடு இவ்வாறான வங்குரோத்து நிலைக்குள்ளானது? ஆகவே மக்களின் தொடர்ச்சியான ஆதரவைப் பெற்றவர்கள் என்பதற்காக அவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்? கேள்வி கேட்க முடியாதவர்கள் என்றில்லை. அவர்கள் மீதான பொறுப்புக் கூறலைக் கோர முடியாது என்று யாரும் கூறவும் முடியாது. 

அப்படி யாராவது கூற முற்பட்டால், அது ஜனநாயகத்துக்கு மாறானது. ஜனநாயக விழுமியம் என்பது எவரைப்பற்றிய நியாயமான விமர்சனங்களையும் எழுப்பலாம். எவரைக் குறித்தும் கேள்வி எழுப்பலாம் என்பதே. அதுதான் மக்களாட்சிச் சிறப்பாகும். 

மட்டுமல்ல, கேள்விகளும் விமர்சனங்களும்தான் மக்களைச் சிந்திக்க வைக்கும். இல்லையெனில், மக்கள் தொடர்ந்தும் தவறானவர்களையே – பயனற்றவர்களையே தெரிவு செய்து கொண்டிருப்பார்கள். அதனால்தான் குறித்த நபர்கள் தொடர்ந்தும் சுலபமாக வெற்றி பெற முடிகிறது.

அடுத்த விடயம், அரசியற் காழ்ப்புணர்ச்சியினால் சார்பு நிலைப்பட்டு கட்டுரை எழுதப்பட்டுள்ளது என்பது தொடர்பாக – 

கட்டுரையானது மக்களின் நிலை நின்றே பேசுகிறது. எழுப்பப்பட்டுள்ள கேள்விகளும் முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களும் மக்களின் நிலையிலானவையே. அங்கே பக்கச்சார்பு எதுவும் இல்லை. கட்டுரையாளரிடம் ஏதாவது அரசியற் சார்புகள் இருந்தால், அதற்கான ஆதாரங்களோடு எதிர்வினையை யாரும் ஆற்றலாம். அது அவசியமானது. 

இனி, தொடர்ந்து பேச வேண்டியதைப் பார்க்கலாம். 

நம்முடைய அரசியற் சூழலில் மட்டுமல்ல, நிர்வாகம், பொது அமைப்புகள், சமூகச் சூழல் போன்ற பல இடங்களிலும் நிலவுகின்ற குறைபாடுகள், தவறுகள் பற்றிப் பலரும் அறிந்திருப்பார்கள். அந்தக் குறைபாடுகளும் தவறுகளும் அவர்களுக்குப் பாதிப்பைக் கூட ஏற்படுத்தியிருக்கலாம். அதனாலும் அப்படித் தமக்குத் தனிப்பட்ட பாதிப்புகள் ஏதுமில்லாதபோதும் தார்மீக ரீதியில் இவற்றைக் குறித்து அவர்களுக்கு கோபமும் விமர்சனமும் உருவாகியிருக்கும்.

ஆனால், அவர்கள் அதை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. சிலர் மட்டும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவர். அதுவும் பட்டும் படாமலும். ஏனையோர் தமக்கிடையில் பேசிக்கொள்வதும் குமைந்து கொள்வதுமே நடக்கிறது. 

அவ்வாறான சூழலில்தான் இத்தகைய விமர்சனங்கள் வரும்போது அது மக்களுக்கு உற்சாகமாகவும் பாராட்டக் கூடியதாகவும் இருக்கிறது. ஆனால், உண்மையில் தாமறிந்த உண்மையை எல்லோரும் தயக்கமின்றிச் சொல்லத்  துணிய வேண்டும். அதுவொரு சமூகக் கடமையாகும்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ச்சியாக 15 ஆண்டுகளுக்கு மேல் அதே மாவட்டத்தில் அல்லது அதே பிரதேசத்தில் பதவியில் உள்ளார் என்றால், அவர், அந்த மாவட்டத்தில் பல பணிகளைத் திட்டமிட்டுச்செய்திருக்க முடியும்; செய்திருக்க வேண்டும். 

2010 இல் முதற்தடவையாகச் சிறிதரன் தேர்வு செய்யப்பட்டபோது அவருக்குப் பல நெருக்கடிகள் இருந்தன என்பது புரிந்து கொள்ளக் கூடியது. 

1.   சிறிதரன் அப்பொழுதுதான் அரசியலுக்கே புதியவராக இருந்தார். பாராளுமன்றத்துக்கும் புதியவர். ஆகவே தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கு அவகாசம் வேண்டியிருந்தது. ஆனால், அதற்கு ஓராண்டு காலம் ஓரளவுக்குப் போதுமானது. தவிர, ஒருவர் ஒரு பணிக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுதான், அதில் இறங்க வேண்டும் என்பதையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். இருந்தாலும் அவருடைய அனுபவத்துக்காக அந்தக் காலப்பகுதியை நாம் மேலும் நீட்டியும் கொள்ளலாம். 

2.   அது போர் முடிந்திருந்த சூழல். மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலம். ஜனநாயகச் சூழல் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அந்தச் சூழலில் சிறிதரன் போன்றவர்கள் தமது அரசியல் நடவடிக்கையை – மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து, தேவைகளை நிறைவேற்றுவதற்கு நெருக்கடிகள் இருந்தன. ஆனால், மறுவளத்தில் அரசியல் ரீதியாக (அரச எதிர்ப்பைச் பேசி) தம்மை வளர்த்துக் கொள்வதற்கு அந்தச் சூழல் தாராளமாக வாய்ப்பளித்தது. 

3.   ஆனால், சிறிதரன் கிளிநொச்சி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்தவர். அந்த மக்களின் கூடுதல் ஆதரவைப்பெற்றிருந்தவர். அந்த மாவட்டத்தில் படித்து, ஆசிரியப் பணியை ஆற்றியவர் என்பதால், அந்த மாவட்டத்தின் தேவைகள், பிரச்சினைகளைப் பற்றி மற்றவர்களை விடவும் அதிகமாகத் தெரிந்தவர். அத்துடன், நிர்வாகத்தில் பொறுப்பான பதவிகளில் இருந்தோரும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தோரும் பரஸ்பரம் அறிமுகமானவர்கள். மட்டுமல்ல, அப்போதிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிறிதரனுக்கே புலம்பெயர் சமூகத்தில் பேராதரவு இருந்தது. போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர், புலிகளின் தளபதிகளில் ஒருவரான தீபனின் குடும் உறவினர் போன்ற காரணங்கள் இந்த ஆதரவைப் பெருக்கக் காரணமாக இருந்தன. 

ஆகவே மாவட்டத்தை மீளக் கட்டியெழுப்புவதில் அவருக்கு அதிக வாய்ப்புகளிருந்தன; சிரமங்களிருக்கவில்லை. தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, மக்களின் மீதான கரிசனையோடு முறையாகச் செயற்பட்டிருந்தால், தேவையான கட்டமைப்புகளை உருவாக்கியிருக்க முடியும். ஏற்கனவே இருந்த சமூக அமைப்புகளை நெறிப்படுத்தி, வினைத்திறன் மிக்கவை ஆக்கியிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் இப்பொழுது கிளிநொச்சி மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியிருக்கும்.

இப்போது கிளிநொச்சியின் நிலை –

1.   போரினால் பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு தொகுதியினர் இன்னும் கையேந்தும் நிலையிலேயே உள்ளனர். ஆனால், பெருமளவு புலம்பெயர் நிதி வந்தது. அரச நிதியும் அரச சார்பற்ற நிதியும் பொருத்தமற்ற முறையில் அதிகாரிகளின் முறையற்ற திட்டமிடற் குறைபாடும் 

2.   நகருக்கு அப்பால் எந்த இடமும் எத்தகைய வளர்ச்சியையும் பெறவில்லை. கிராமங்கள் பாழடைந்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக அக்கராயன். ஸ்கந்தபுரம், உருத்திரபுரம், வன்னேரிக்குளம், கோணாவில், பாரதிபுரம், செல்வாநகர், சாந்தபுரம், மலையாளபுரம், பொன்னகர், அம்பாள்குளம், மருதநகர், ஊற்றுப்புலம், கல்மடு, புதுமுறிப்பு போன்றவற்றோடு பூநகரி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுகள் முற்றாகவே பின்தங்கிய நிலைக்குள்ளாகியுள்ளன. இங்கே கல்வி, சமூக வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் எல்லாமே பெரும் பிரச்சினையாக உள்ளன. இதனால், இந்தப் பிரதேசங்களில் குற்றச்செயல்களும் தவறான நடத்தைக்களும் அதிகரித்துள்ளன. சட்டவிரோத மது உற்பத்தி(கசிப்பு) விற்பனை, மணல் அகழ்வு, மரம் தறித்தல் அல்லது காடழிப்பு, போதைவஸ்து வியாபாரமும் பாவனையும் திருட்டு, பாலியல் பிறழ்வு, குடும்ப வன்முறைகள் எனப் பல சீரழிவு நிலை உருவாகியுள்ளது. பொலிஸ், நீதிமன்றப் பதிவுகளும் சமூக சேவைகள் திணைக்களம், சிறுவர் நன்னடைத்தைப் பிரிவு போன்றவற்றின் புள்ளிவிவரங்களும் இதைக் காட்டுகின்றன. இதில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் (13 – 35 வயதுக்குட்பட்ட) இளைய தலைமுறையினரே ஆகும். 

3.   தொழில்துறை மேம்பாட்டுக்கான ஏற்பாடுகள் எதுவுமே உருவாக்கப்படாத காரணத்தினால் வசதியுள்ளோர் வெளிநாடுகளை நோக்கிச் செல்கின்றனர். ஏனையோர் சமூகச் சீரழிவுச் செயற்பாடுகளில் ஈடுபட்டு அழிகின்றனர். 

4.   2010 க்குப் பிறகு கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களில் உள்ள அரச காணிகள் பலவும் செல்வாக்குள்ளோருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதில் நாமல் ராஜபக்ஸ, டக்ளஸ் தேவானந்தா,அங்கயன் இராமநாதன் போன்றோரின் செல்வாக்கு அதிகமுண்டு. ஆனால், இதை சிறிதரன் எதிர்த்திருக்க முடியும். அதைச் செய்யவில்லை. மட்டுமல்ல, அந்தத் தவறுக்கு சிறிதரனின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பிரதேச சபைகள் தாராளமாக ஒத்துழைத்துள்ளன. இதற்குக் காரணம், சிறிதரனின் அணியினரும் இந்தக் காணி அபகரிப்பில் பயன்பெற்றுள்ளனர். 

5.   கமக்காரர் மற்றும் விவசாய அமைப்புகள் உளுத்துப்போய் விட்டன. அவை விவசாயிகளின் மேம்பாட்டுக்கு எத்தகைய பயனையும் விளைக்கவில்லை என்பதோடு தொடர்ந்தும் ஒரே தரப்பினரே 10 ஆண்டுக்கும் மேலாக பதவிகளில் உள்ளனர்.

6.   கிளிநொச்சியிலிருந்து இதுவரையிலும் ஒரு சட்டநிபுணரோ, பேராசிரியரோ, விஞ்ஞானத்துறையில் அறியப்பட்டவரோ, சிறந்த இசைக்கலைஞர்களோ, பேச்சாளர்களோ, சமூகத் தலைவர்களோ, பத்திரிகையாளர்களோ, நாடகவியலாளர்களோ, மருத்துவ நிபுணர்களோ  உருவாகவில்லை. ஏன் ஒரு இசை, ஓவிய, நடன, நாடகக் கல்லூரி கூட இல்லை. கூட்டுறவுத்துறை படுத்து விட்டது. கரைச்சி கிழக்கு (வட்டக்கச்சி) ப.நோ.கூ. சங்கம் மூடப்பட்டு விட்டது. கிராமப்புறப் பாடசாலைகளின் கல்வி நிலையும் பெற்றோர் பாடசாலைகளோடு கொள்ளும் உறவு நிலையும் சீரற்றிருக்கிறது. 

7.   பருவ முதிர்ச்சியைப் பெறாத பெண் பிள்ளைகளும் குடும்பப் பிறழ்வுக்கான பெண்களும் அதிகமாகக் கர்ப்பம் தரிக்கும் நிலை கூடியுள்ளது. இவ்வாறானவர்களைப் பரிமரித்துப் பாதுகாத்துக் குழந்தைகளைப் பெற்றெடுக்கின்ற கட்டமைப்பு ஒன்று 2010 க்குப் பிறகு (கனகபுரத்தில்) உருவாக்கப்பட்டுள்ளது. அங்கே வரவரக் கூடுதலானோர் புனர்வாழ்வு பெற வருகின்றனர். 

8.   சிறார் இல்லங்கள் பெருகியுள்ளன. சிறார் இல்லங்களுக்கு வருகின்ற சிறார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. போர்க்காலத்தில் இவ்வாறான நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இது போர் முடிவுக்குப் பிறகான காலமாகும். இந்தக் காலத்தில் இவை குறைவடைந்திருக்க வேண்டும். மட்டுமல்ல, அதிகரித்த மதுப்பாவனை, போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்டோருக்கான புனர்வாழ்வு நிலையமும்(தருமபுரத்தில்) உருவாக்கப்பட்டுள்ளது.

9.   இந்த நிலையும் இந்த அமைப்புகளும் பெருகுவதற்குப் பதிலாகக் குறைவடைந்திருக்க வேணும். அல்லது மூடப்பட வேண்டும். பதிலாக அறிவையும் தொழிற்திறன்களையும் ஆற்றச் சிறப்பையும் வளர்க்கக்கூடிய – பெருக்கக்கூடிய புதிய நிறுவனங்களும் அமைப்புகளும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறான திறன் அமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தால்(செயற்பட்டிருந்தால்) சீரழிவுகளும் குற்றச்செயல்களும் பாதிக்குமேல் குறைவடைந்திருக்கும். 

10. மாவட்டத்தின் வளங்களான மணல், காடு, ஆறுகள், குளங்கள், காணி அல்லது நிலம் சிதைக்கப்பட்டுள்ளது. அபகரிக்கப்பட்டுள்ளது.அழிக்கப்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். பதிலாக இவற்றைச் செய்வோர் சிறிதரனின் பகிரங்கமான ஆதரவாளர்களாக உள்ளனர். இதைக்குறித்த வெளிப்படையான சமூக வலைத்தளப் பதிவுகளும் நீதி மன்ற, பொலிஸ் ஆவணங்களும் ஊடக அறிக்கைகளும் ஆதாரமாக உண்டு.

11. கோயில்களிலும் தலைமைத்துவப்போட்டியும் ஊழலும்  பெருகியுள்ளது. காரணம், அங்கும் அரசியலே.

இவற்றைத் தவிர, ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வினைத்திறனோடு இயங்க வைத்திருக்கலாம். கரைச்சி தெற்குப் ப.நோ. கூ சங்கத்துக்கு 2012 இல் 15 மில்லியன் ரூபாய் செலவில் (பல தரப்பின் நிதிப்பங்களிப்போடு) உருவாக்கப்பட்ட மிகப் பெரியதொரு அரிசி ஆலை போதிய இயக்கமின்றி உள்ளது. கூட்டுறவுச் சங்கங்களின் சமாச அரிசி ஆலை தனியாருக்கு விடப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் சீராக இயங்க வைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டிருக்க முடியும். இப்படிப் பல. பழம் பதனிடும் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. நன்னீர் மீன்பிடியில் முன்னேற்றம் எட்டப்படவில்லை. பனை, தென்னைவள உற்பத்திகள் மேம்படுத்தப்படவில்லை. 

குறைபாடுகளின் பட்டியல்  நீண்டது. அதைச் சொல்வதால் பயனில்லை. 

செய்யக் கூடியவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

கிளிநொச்சியை ஒரு விவசாயப் பொருளாதார நகரமாக உருவாக்கியிருக்க முடியும். அதற்கான கருத்திட்டத்தை நிபுணர்கள் குழுவொன்று மக்கள் சிந்தனைக் களத்தின் மூலம், கிளிநொச்சி பொறியியற் பீடம், விவசாய பீடம் ஆகியவற்றில் நடந்த ஆய்வரங்கில் முன்வைத்திருந்தனர். அதை அல்லது அவ்வாறான ஒன்றை ஆரம்பித்திருக்கலாம்.

கிளிநொச்சியில் உற்பத்தி செய்யப்படும் நெல்லை வெளியே அப்படியே அனுப்பாமல், அதை முடிவுப் பொருளாக்கி (அரிசி, மா, அவல் போல) சந்தைக்கு அனுப்புவதற்கான தொழில் முயற்சிக்கு வித்திட்டிருக்கலாம். இதைப் பற்றிப் பலரும் தொடர்ந்து பேசி வருகின்றனர். 

கிளிநொச்சியில் 09 நீர்ப்பாசனக் குளங்கள் உண்டு. சிறுகுளங்கள் 400 வரையில் உண்டு. இவற்றில் நன்னீர் மீன்பிடி நடக்கிறது. நன்னீர் மீன்வளர்ப்பும் சிறிய அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. இதை துறைசார்ந்தவர்களுடன் இணைந்து சிறப்பான கட்டமைப்பாக்கம் செய்து, இந்தத் தொழிலை விரிக்க  வேண்டும். 

பனம்பொருட்கள் இன்று உச்ச விலைப் பெறுமானத்தை அடைந்துள்ளன. ஆனால், உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. பனை அபிவிருத்திச் சபை, பனை, தென்னை வளச் சங்கங்கள், சமாசங்கள், இணையங்கள் எல்லாம் உள்ளன. இவற்றை ஒரு வலையமைப்பின் கீழ் கொண்டு வந்து உற்பத்தியை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். 

பனை, தென்னை மதுசார உற்பத்தியை சிறப்பாகச் செய்யலாம். அதுவொரு வலுவான பொருளாதார நடவடிக்கையாகும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

பழப்பொருட்களைப் பதனிடும் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. அவற்றை மீள்நிலைப்படுத்துவதன் மூலம் சிறப்பாக பழ உற்பத்தியும் பழப்பொருள் உற்பத்தியும் கிடைக்கச் செய்ய முடியும்.

கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை ஆகிய பிரதேசங்களில் அபிவிருத்தி வலயங்களை உருவாக்கியிருக்க முடியும். அதற்கான  அடிப்படைகள் அங்கே தாராளமாக உண்டு. அரசாங்கம் அதற்கு அனுமதிக்காது என்று எளிதாகச் சொல்லித் தப்பி விட முடியாது.

கார்கில்ஸ், நோர்த் லங்காபோன்ற நிறுவனங்கள் கிளிநொச்சியிலும் இயக்கச்சியிலும் பால் பதப்படுத்துதலை அமைத்து, கால்நடை மேம்பாட்டில் முதலீடு செய்துள்ளன.

வேளாண் பொருட்கள் பதனிடலையும் செய்ய முடியும்.

கிளிநொச்சியில் (தம்புள்ளவுக்கு முதல்) 1970, 80 களில் இருந்த பெரும்சந்தையை வடக்கின் பெரும் சந்தையாக உருவாக்க முடியும் – உருவாக்க வேண்டும். 

பல்வேறு வழிகளிலும் பலர் முதலீடுகளைச் செய்வதற்குத் தயாராக இருந்தனர்; இருக்கின்றனர். 

இயக்கச்சியில் ReaCha சுற்றுலா மையம், பூநகரி – கௌதாரிமுனையில் சுற்றாலாத் தளம் போன்றவற்றைப்போல வெவ்வேறு வாய்ப்புகள் தாராளமாக உள்ளது. 

இவற்றையெல்லாம் தனியொருவராக அவரால் செய்ய முடியாது என்றால், யாரையெல்லாம் இணைத்துக் கொள்ள வேண்டுமோ, அவர்களை இணைத்துச் செயற்படுத்தியிருக்கலாம். மக்களுக்கான பணிகளைச் செய்வதற்கு உலகமெங்கும் பல்வேறு தரப்பினர் உள்ளனர். அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இணையக் கூடிய புள்ளிகள் நிறைய உண்டு.

ஆனால், அப்படிப் பலரையும் இணைத்துச் செயற்படுவதற்கு சிறிதரனின் இயல்பு (குணாம்சம்) தடையாக உள்ளது. இன்று தமிழ்த்தேசியப் பரப்பில் இயங்கிக் கொண்டிருக்கின்ற அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகளில் ஒரு சிலரைத் தவிர, வேறு எவரும் சிறிதரனோடு உறவில் இல்லை. ஏன், தமிழரசுக் கட்சிக்குள்ளேயே அவர் தனிமையாகிக் கொண்டே போகிறார். 

மக்களுடைய அரசியல் பிரதிநிதியாக இருப்பவர் சொந்த விருப்பு வெறுப்புகளையும் தனி நலன்களையும் ஓரங்கட்ட வேண்டும். முடிந்தளவுக்கு இறங்கியும் இணைந்தும் செயற்பட வேண்டும். இந்தப் பண்பு இல்லாதிருப்பதே சிறிதரனின் தோல்வியாகும். இந்தக் குறைபாட்டை விலக்கவில்லை என்றால், தேர்தல்களில் அவர் தொடர்ந்து வெற்றியீட்டலாம். வரலாற்றில் தோல்வி கண்ட அரசியல்வாதியாகவே அவர் மதிப்பிடப்படுவார். வரலாற்றின் நாயகர்கள் யாரென்றால் சமூக வளர்ச்சியை, சமூக மாற்றத்தை உருவாக்கியவர்களே. அவர்களுக்கே வரலாறுண்டு. 

https://arangamnews.com/?p=12313

முந்தைய கட்டுரை

“ஜனாதிபதி தமிழர் முகங்களில் கரிபூசியுள்ளார்”

5 days 4 hours ago

“ஜனாதிபதி தமிழர் முகங்களில் கரிபூசியுள்ளார்”

முருகானந்தன் தவம் 

கடந்த 1ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு  இரு நாள் விஜயம் செய்து யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின்  3ஆவது கட்டத்தின் பணிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத் திறப்பு ,யாழ்ப்பாணம், மண்டை தீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு

முன்மொழியப்பட்டுள்ள நவீன கிரிக்கெட் மைதானத்தின் பணிகள் ,உலக தென்னை தினத்தை முன்னிட்டு புதுகுடியிருப்பில்  ‘கப்துரு சவிய’ தேசிய வேலைத்திட்டம், முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள்   போன்ற அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளதுடன் சர்ச்சைக்குரிய கச்சத்தீவுக்கும் அதிரடி விஜயம் செய்து  அங்குச் சென்ற முதல் ஜனாதிபதி என்ற பெயரையும் வரலாற்றில் பதிவு செய்துகொண்டார்.

செப்டம்பர் 1 ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு  இரு நாள் விஜயம் செய்யவுள்ளதாக அறிவிப்புக்கள் வெளியான நிலையில், இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி நாட்டினதும் சர்வதேசத்தினதும்  கவனத்தை ஈர்த்துள்ள செம்மணி மனிதப்புதைகுழி அகழ்விடத்திற்குச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு தமிழ்  மக்களிடம் தமிழ் அரசியல் தரப்புக்களிடமும் ஏற்பட்டிருந்தது.

ஜனாதிபதி செம்மணி மனிதப்புதைகுழி அகழ்விடத்திற்கு வருகை தர வேண்டுமென்ற வேண்டுகோள்களும் விடுக்கப்பட்டிருந்தன.
யாழ்ப்பாணத்தில் வைத்து ஜனாதிபதி உரையாற்றும் போது,  “செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் எவ்வித மாற்றமும் இல்லை.

செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்  இந்த விசாரணைகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது” என தமிழ் மக்களுக்கு  உறுதியளித்த நிலையில் அவர் எப்படியும் செம்மணிக்கு வந்து மனிதப் புதைகுழிகளை  பார்வையிடுவார்  என்றும் இதன்மூலம் தனக்கும் தனது கட்சிக்கும் பெருமளவில் வாக்களித்த தமிழ் மக்களுக்கு அவர் ஒரு செய்தியைச் சொல்வார்  என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஜனாதிபதி அனுரகுமார செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்திற்கு விஜயம் செய்வார் என முன்னதாக, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும்  கூறியிருந்தார். அதுமட்டுமன்றி அரச தரப்பின்   பல்வேறு தரப்பினராலும் உறுதியுமளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், யாழ்ப்பாணத்திற்குக் குறிப்பிட்ட நாளுக்கு முதல் நாளே வந்து விட்ட  ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் முழுவதும் தங்கிநின்றபோதும் செம்மணி வீதியை ஜனாதிபதி வாகனத் தொடரணியாக கடந்து பயணித்த போதிலும், செம்மணி மனித புதைகுழியைச் சென்று  பார்வையிடவில்லை.செம்மணிப் பகுதியில்  வாகனத்தை  மெதுவாகச் செலுத்திக்  கூட   அப்பகுதியைப் பார்க்க அவர் விரும்பவில்லை.

ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அமைச்சர்,எம்.பிக்கள் ஏற்கெனவே செம்மணி மனிதப் புதைகுழியைச் சென்று பார்வையிட்ட நிலையில், இலங்கையில் செம்மணி மட்டுமன்றி, கொக்குத்தொடுவாய், மண்டைதீவ, மன்னார், கொழும்பு துறைமுகம் என பல இடங்களில் மனிதப் புதைகுழிகள்  உள்ளநிலையில், இந்த புதைகுழிகளின் உரிமையாளர்கள் ரணில் மற்றும் ராஜபக்‌ஷக்களே தவிர நாம் அல்ல.

இந்த புதைகுழிகள், காணாமல் ஆக்கப்பட்டோருடன் தொடர்புடைய சிலர் வடக்கிலும் உள்ளனர். செம்மணி மனிதப் புதைகுழியுடன் தொடர்புடையவர்கள் வடக்கில் உள்ளூராட்சி சபைகளுக்கும் தெரிவாகியுள்ளனர்.

இந்த மனிதப் புதைகுழிகள் தொடர்பிலான, விசாரணைகள் போன்றவற்றுக்கு நாம் போதியளவு நிதியை ஒதுக்கி  வசதிகளைச் செய்து கொடுத்துள்ளோம்  என அமைச்சர் பிமல் ரத்நாயக்க பகிரங்கமாகவே அறிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செம்மணி மனிதப் புதைகுழியைச் சென்று பார்வையிட்டிருக்க முடியும். ஆனால், தமக்கோ, தமது கட்சிக்கோ, தமது அரசுக்கோ தொடர்பில்லாத செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அனுரகுமார  பார்வையிடாததற்கு இனவாத சிந்தனையும்  சிங்களவர்களை மட்டும் திருப்திப்படுத்தும் அரசியலுமே பிரதான  காரணம்.

இந்த செம்மணி மனிதப் புதைகுழி புறக்கணிப்பு மூலம்  சிவப்பு சட்டைக்காரர்களான  ஜே .வி.பியினர் இன்னும் இனவாதத்திலிருந்து  மாறவில்லை அவர்கள் ஒருபோதுமே மாறப்போவதில்லை.’மாற்றம்’, ‘புதிய திசை’ என்பதெல்லாம் வெறும் கோஷம் என்பதையே ஜனாதிபதி அநுரகுமாரவின் யாழ்ப்பாண விஜயம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுரகுமார தனது பயண  நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத அல்லது உள்ளடக்கப்பட்டும் இறுதிவரை வெளிப்படுத்தப்படாத கச்சத்தீவு பயணத்தை மேற்கொண்டுள்ளார். 

இதன்மூலம் இந்தியாவைப் பகைக்க நேரிடும், அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும் அரசியல் ரீதியான சர்ச்சைகளை  ஏற்படுத்தும் என தெரிந்தும் சிங்கள, தமிழர்களைத் திருப்திப்படுத்த, எமது நிலத்தின் ஒரு அங்குலத்தையேனும் விட்டுக்கொடுக்க நாம் தயாரில்லையென்பதனை வெளிப்படுத்தவே  சிங்கள, தமிழ் அரசியல் ஆதாயத்திற்காக ஜனாதிபதி கச்சத்தீவுக்குக்  கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு வரலாற்றுப்பதிவை ஏற்படுத்தினார்.

அதே ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்குள் உள்ள செம்மணி மனித புதைகுழிப் பகுதிக்கும் விஜயம் செய்திருந்தால்,  இலங்கையில் அகழப்படும் மனிதப் புதைகுழிப் பகுதியைச் சென்று பார்வையிட்ட முதல் ஜனாதிபதி என்ற வரலாற்றுப் பதிவிலும் ஜனாதிபதி அனுரகுமார இடம்பிடித்திருப்பார்.

தமிழ்  மக்கள் மனங்களிலும் நீங்கா இடம்பிடித்திருப்பார். ஆனால், சிங்களவர்களினால், சிங்கள படைகளினால் ஏற்படுத்தப்பட்ட மனிதப்  புதைகுழியைப் பார்வையிட்ட ஜனாதிபதி என சிங்களவர்களினால் புறக்கணிக்கப்பட்டிருப்பார், வெறுக்கப்பட்டிருப்பார், விமர்சிக்கப்பட்டிருப்பார்.

ஆகவே, தான் சிங்களவர்களே முதல் விருப்பத் தெரிவு, அவர்களைப் பகைக்க முடியாது  என்ற அடிப்படையில்தான்  ஜனாதிபதி அனுரகுமார செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடத்திற்குச் செல்லவில்லை.

அரசுக்கு எதிராக ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும் ஜே.வி.பியினர் ஒன்றும் புனிதமானவர்களோ மாற்றமானவர்களோ அல்ல. அவர்களும் பக்கா இனவாதிகள்தான். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை அழிக்க 50,000 சிங்கள இளைஞர்களை இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு செய்து கொடுத்தவர்கள்.

அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான நோர்வே அனுசரணையிலான சமாதான முயற்சிகளைச் சீர்குலைத்து யுத்தத்துக்குத் தூண்டியவர்கள் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான சுனாமி பொதுக் கட்டமைப்பை கடுமையாக எதிர்த்து மக்களைத்தூண்டி போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் பயனாக இணைக்கப்பட்ட தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கு மாகாணங்களை வழக்கு தாக்கல் செய்து  பிரித்தவர்கள்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை அழித்தொழிக்க ஆட்சி பீடமேறிய அனைத்து  அரசுகளுக்கும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியவர்கள்.
ஆகவே, என்னதான் தேசிய மக்கள் சக்தி என்ற முகமூடியைப்  போட்டு ‘மாற்றம்’ ஏற்படுத்த வந்தவர்களாக, புதிய திசையில் நாட்டையும் மக்களையும் பயணிக்க

வைக்க வந்தவர்களாக தம்மைக் காட்டிக்கொள்ள ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா தலைமையிலான ஜே.வி.பியினர் என்ற இனவாதிகள் மாறு வேடத்தைப் போட்டாலும், ‘போக்கிரி’ படத்தில் வரும்  வடிவேலு போல் ‘மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துட்டியே’ என்ற கதையாகவே தமது இனவாத சிந்தனையிலிருந்து அவர்கள் மாறவே இல்லையென்பதனையும் மாறப்போவதில்லை என்பதனையும்  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அண்மைய யாழ்ப்பாண விஜயமும் செம்மணி மனிதப் புதைகுழி விடயமும்  மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன், இலங்கையின் ஆட்சியாளர்கள் அனைவரும்  ‘ஒரே குட்டையில்  ஊறிய மட்டைகள்’ தான்  என்பதனை தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ற பெருமையைப் பெற்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் நிரூபித்து தமிழர் முகங்களில்  கரிபூசியுள்ளார். 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜனாதிபதி-தமிழர்-முகங்களில்-கரிபூசியுள்ளார்/91-364440

இலங்கை, வங்கதேசம் வரிசையில் நேபாளமா? - இந்தியாவின் அண்டை நாடுகளில் என்ன நடக்கிறது?

6 days 22 hours ago

நேபாளத்தில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள்

நேபாளத்தில் சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டதற்கு எதிராக இளைஞர்களின் ஆர்ப்பாட்டங்கள்.

கட்டுரை தகவல்

  • சந்தன் குமார் ஜஜ்வாரே

  • பிபிசி செய்தியாளர்

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் இந்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது.

கடந்த வாரம் நேபாள அரசு 26 சமூக ஊடக தளங்களுக்குத் தடை விதித்தது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற பிரபலமான சமூக ஊடக மற்றும் மெசேஜிங் தளங்களும் இதில் அடங்கும்.

சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இளைஞர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

நேபாளத்தில் திங்கள்கிழமை நடந்த போராட்டத்தின் காட்சிகள், கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தை நினைவூட்டின.

இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டில் இலங்கையிலும் மக்கள் அரசுக்கு எதிராக பெரிய போராட்டங்களை நடத்தினர்.

டயர்களுக்கு தீவைத்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்

BBC/Madhuri Mahato பீர்கஞ்சில் போராட்டக்காரர்கள் டயர்களை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவின் அண்டை நாடுகளில் உள்ள இளைஞர்கள் போராட்டங்கள் மூலம் பல வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.

தெற்காசியப் புவிசார் அரசியல் நிபுணரும், தெற்காசியப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியருமான தனஞ்சய் திரிபாதி, "இந்த தெற்காசியப் பகுதி இளைஞர்கள் நிறைந்த பகுதி, ஆனால் அரசுகளால் இந்த இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியவில்லை. இந்த மூன்று நாடுகளின் போராட்டங்களிலும் இதுதான் பொதுவான ஒற்றுமை" என்கிறார்.

தனஞ்சய் திரிபாதியின் கூற்றுப்படி, நேபாளத்தில் 15 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகம், ஆனால் இவர்களுக்கு வேலைவாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளன.

"நேபாளத்தில் மற்றொரு நெருக்கடி என்னவென்றால், முடியாட்சி முடிந்த பிறகு எந்த ஒரு அரசாங்கமும் ஐந்து ஆண்டுகள் முழுமையாகப் பதவியில் இல்லை. இதன் காரணமாக நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை நிலவுகிறது, மேலும் ஊழல் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுகின்றன. இப்போது, அரசு இளைஞர்களிடையே பிரபலமான செயலிகளையும் தடை செய்துவிட்டது," என்று அவர் கூறுகிறார்.

நேபாளத்தில் இருந்து பெருமளவிலான மக்கள் இந்தியா உட்படப் பல நாடுகளுக்கு வேலை தேடிச் செல்கின்றனர்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லாதது ஒருபுறம் இருக்க, சமீபத்திய தடைகளுக்குப் பிறகு அவர்களால் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ளக்கூட முடியவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இளைஞர்களின் பங்கு

நேபாளதில் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தாக்குதல்

நேபாளத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் மீது போலீசார் நீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர்.

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. அதேசமயம், இலங்கையின் போராட்டத்தில் பொருளாதாரப் பிரச்னைகள் ஆதிக்கம் செலுத்தின.

டெல்லியில் உள்ள அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் அமைப்பின் ஆய்வு மற்றும் வெளியுறவுக் கொள்கைப் பிரிவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஹர்ஷ் பந்த் கூறுகையில், "இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய மூன்று நாடுகளின் போராட்டங்களுக்கான காரணங்கள் வேறுபட்டிருந்தாலும், மக்கள் எதிர்பார்ப்புகளுக்கும் அரசின் செயல்பாடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளிதான் இந்த போராட்டங்களுக்குப் பொதுவான காரணம்."

அவரது கூற்றுப்படி, "இந்த மூன்று போராட்டங்களிலும் 'இளைஞர்கள்' தான் மிகப் பெரிய காரணி. ஆட்சி மாற்றத்தின் மிகப் பெரிய தாக்கம் இளைஞர்கள் மீதே விழுகிறது. இந்த இளைஞர் பிரிவினர்தான் அரசின் மீது கோபமாக உள்ளனர்."

அரசு இளைஞர்களின் கோபத்தைத் தணிக்க முயற்சி செய்யாவிட்டால், இந்த போராட்டம் இன்னும் பெரிதாக வளரக்கூடும் என்று ஹர்ஷ் பந்த் நம்புகிறார்.

இருப்பினும், நேபாளப் போராட்டத்தில் தலைவரோ அல்லது அமைப்போ இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

தனஞ்சய் திரிபாதியும் இந்த கருத்தை ஒப்புக்கொள்வதாகத் தெரிகிறது.

"அரசு புரிதலுடனும் நெகிழ்வுத்தன்மையுடனும் நடந்து கொண்டால், இந்தப் போராட்டத்தை அமைதிப்படுத்த முடியும். இதில் இறந்தவர்களின் மரணம் குறித்து விசாரிக்க ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட வேண்டும். அரசு இளைஞர்களிடம் உணர்வுபூர்வமாக நடந்து கொள்ள வேண்டும், அது தற்போது காணப்படவில்லை," என்று அவர் கூறுகிறார்.

இதற்கு முன்னதாக, வங்கதேசத்தில் அரசு போராட்டக்காரர்களை கடுமையாகக் கையாள முயற்சித்தது, ஆனால் அது இளைஞர்களின் கோபத்தை இன்னும் அதிகரித்தது.

வங்கதேச மாணவர் போராட்டம்

வங்கதேசத்தில் பிரதமர் இல்லத்தின் மீது ஏறி போராடிய மக்கள்

Getty Images வங்கதேசத்தில் பிரதமரின் இல்லத்தில் இருந்த போராட்டக்காரர்கள் (கோப்புப் படம்)

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர் போராட்டம், வன்முறை மற்றும் நூற்றுக்கணக்கானோர் இறப்பு ஆகியவற்றிற்கு மத்தியில், வங்கதேசத்தின் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியையும் நாட்டையும் விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

அரசு வேலைகளில் இடஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய இந்த மாணவர் போராட்டம், நாடு தழுவிய போராட்டமாக மாறியது. இறுதியில் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்வதற்கு காரணமாக இருந்தது.

இதன் மூலம் அவரது 15 ஆண்டுகால தொடர் ஆட்சி மற்றும் ஐந்தாவது பதவிக்காலம் திடீரென முடிவுக்கு வந்தது.

கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி தொடங்கிய மாணவர் போராட்டத்திற்குப் பிறகு, ஜூலை 21ஆம் தேதி வங்கதேச உச்ச நீதிமன்றம் அரசு வேலைகளில் இடஒதுக்கீட்டை கிட்டத்தட்ட ரத்து செய்தது.

ஆனால், இந்தத் தீர்ப்பு வந்தபிறகும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கோபம் தீரவில்லை. ஷேக் ஹசீனாவின் ராஜினாமா கோரிக்கை மேலும் வலுப்பெற்றது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தொடங்கிய போராட்டம், நாட்டின் மூலை முடுக்குகளை அடைந்தது. எதிர்க்கட்சிகளும் வீதியில் இறங்கின.

மாணவர் அமைப்புகள் ஆகஸ்ட் 4 முதல் முழு ஒத்துழையாமைப் போராட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்திருந்தன.

அரசு இந்தப் போராட்டங்களை கடுமையாக ஒடுக்க முயன்றது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, ராணுவம் வீதியில் இறங்கியது, ஆனால் மக்கள் பின்வாங்கவில்லை.

ஆகஸ்ட் 4ஆம் தேதி நடந்த வன்முறையில் குறைந்தது 94 பேர் கொல்லப்பட்டனர்.

மாணவர் போராட்டம் தொடங்கியதில் இருந்து உயிரிழப்புகள் எண்ணிக்கை 300ஐத் தாண்டியது. ஆகஸ்ட் 5ஆம் தேதி ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

2022ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த போராட்டம்

இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்ட கோப்புக் காட்சி

EPA/CHAMILA KARUNARATHNE 2022ஆம் ஆண்டில் போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசும் இலங்கை போலீஸ் (கோப்புப் படம்).

2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையில் பணவீக்கம் வேகமாக அதிகரித்தது.

அந்நிய செலாவணி கையிருப்பு காலியானது. நாட்டில் எரிபொருள், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.

சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட இந்த மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில், மக்கள் ஒரு நாளைக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டை எதிர்கொண்டனர்.

இந்த நிலைக்கு அதிபர் கோட்டாபய ராஜபக்சேவையும் அவரது குடும்பத்தினரையும் பலர் குற்றம் சாட்டினர். அவரது மோசமான கொள்கைகள்தான் அந்நிய செலாவணி கையிருப்பு காலியானதற்குக் காரணம் என்று நம்பப்பட்டது.

ராஜபக்சே குடும்பத்தினர் மீது ஊழல் மற்றும் பொதுமக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்தனர். கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு சுற்றுலா வருவாய் குறைந்தது மற்றும் யுக்ரேன் போரால் எண்ணெய் விலைகள் உயர்ந்ததால் இந்த நெருக்கடி ஏற்பட்டதாக அவர்கள் வாதிட்டனர்.

அப்போது, போராட்டங்கள் இரவும் பகலும் தொடர்ந்து நடந்தன. மாலையில் கூட்டம் அதிகரித்தது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் முதல் பாதிரியார்கள் மற்றும் புத்த பிக்குகள் வரை அனைவரும் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றனர்.

நாடு முழுவதும் "கோட்டா கோ ஹோம்" (கோட்டா வீட்டுக்கு போ) என்ற கோஷம் எதிரொலித்தது.

இந்தப் போராட்டங்கள் சிங்களர், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய மூன்று முக்கிய சமூகங்களை ஒன்றிணைத்தன.

சில வாரங்களுக்குப் பிறகு, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தபோது, இந்தப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது.

சில நாட்களுக்குப் பிறகு, கோட்டாபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி, சிங்கப்பூரிலிருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.

இந்த நிகழ்வு "அரகலய" அல்லது மக்கள் போராட்டத்தின் வெற்றியாகப் பார்க்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cnvr3rl84n1o

அஷ்ரபின் மரணம் தூசு தட்டப்படுமா?

1 week ago

அஷ்ரபின் மரணம் தூசு தட்டப்படுமா?

மொஹமட் பாதுஷா

‘அஷ்ரபின் படுகொலை மரணம், 43 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க சி.ஐ.ஏயினால் கொலை செய்யப்பட்ட சிலியின் மக்கள் தலைவன் சில்வர்டோர் அலேண்டேயின் அரசியல் படுகொலையுடன் ஒப்பிடக் கூடியது.

அஷ்ரபின் மரணம் வெறுமனே ஒரு உள்ளூர் திட்டமிடல் அல்ல. இதன் பின்னால் சர்வதேச அரசியலின் ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்திருக்கின்றது என நான் உறுதியாக நம்புகின்றேன். அதற்கு ஏவப்பட்ட ஒரு கருவியே விடுதலைப் புலிகள். இதன் பின்னால் நோர்வே மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் இருந்துள்ளனர்

சர்ஜூன் ஜமால்தீன் எழுதிய ‘எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணம்’ நூலுக்கு அஷ்ரபோடு நீண்டகாலம் மிக நெருக்கமாக இருந்தவரும் அரசியல், சமூக ஆய்வாளருமான எம்.பௌஸர் எழுதியுள்ள முன்னுரையில் குறிப்பிட்டுள்ள வரிகளே இவையாகும்.  இந்த மரணத்தின் பின்னால் இருந்த பாரதூரத்தைச் சொல்வதற்கு இவை மட்டுமே போதுமானவையாகும்.

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரான எம்;.எச்.எம். மரணித்து எதிர்வரும் 16ஆம் திகதியுடன் 25 வருடங்கள் நிறைவடைகின்றன. இன்று எத்தனையோ பழைய கோப்புக்கள் தூசுதட்டப்பட்டு விசாரணைகள் எடுக்கப்படுகின்ற போதிலும், அவரது மர்ம மரணம் பற்றிய கோப்பு மட்டும் தூசுதட்டப்பட்ட, உண்மை இன்னும் வெளிக் கொணரப்படவில்லை.

ஒரு பெரும் முஸ்லிம் தலைவரின் இந்த மரணம் படுகொலையாக இருக்கலாம் என்ற பலமான சந்தேகங்கள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இருக்கின்ற போதிலும், முஸ்லிம்கள் ஒரு சமூகமாக தமது மறைந்த தலைவரின் மரணத்திற்காக நீதி வேண்டிப் போராடவில்லை.

அஷ்ரபை வைத்து இன்று வரை பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்ற றவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்களும் அரசியல்வாதிகளும் கூட இந்த விசாரணைகளுக்காகத் தாம் அதிகாரத்தில் இருந்த போது, முன்னிற்கவும் இல்லை. அதிகாரமில்லாத காலத்தில் அழுத்தம் கொடுக்கவும் இல்லை.

அஷ்ரபிடமிருந்து இமாலய அனுகூலங்களைப் பெற்றுக் கொண்ட சந்திரிகா குமாரதுங்க ஒரு விசாரணைக் குழவை நியமித்தார். அது தனது அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. ஆனால், உண்மையை அவர் வெளியில் கொண்டு வரத் தவறிவிட்டார். குறைந்தபட்சம் இந்த விசாரணை அறிக்கையின் முழுமையான பிரதிகூட சுவடிகள் திணைக்களத்திற்கு இன்னும் வழங்கப்படவில்லை எனச் சொல்லப்படுகின்றது.

முஸ்லிம்களுக்காகத் தனித்துவ அடையாள அரசியலை வடிவமைத்து, மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே ஒரு தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸையும் தன்னையும் உருவாக்கியிருந்த ஒரு மிகப் பெரும் தலைவர்தான் அஷ்ரப்.அவரது மரணத்தின் பின்னால் உள்ள உண்மைகள் இவ்வாறு மறைக்கப்படுகின்றது என்றால், விசாரணை அறிக்கைகளின் பக்கங்கள் காணாமல் போகின்றன என்றால், அரசியல் தரப்பினர் மௌனம் காக்கின்றனர் என்றால் இதற்குப் பின்னால் ‘ஏதோ ஒரு சதித்திட்டம்’  இருக்கின்றது என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கு எழத்தானே செய்யும்?

குறிப்பாக, முஸ்லிம் காங்கிரஸின் உருவாக்கத்திற்கு முன்னரான முஸ்லிம் அரசியல் என்பது வேறு விதமாக அமைந்திருந்தது. அஷ்ரப் காலத்து அரசியல் முற்று முழுதாக வேறுபட்டிருந்தது. அரசாங்கத்தோடும் தமிழ் அரசியல்வாதிகளோடும் உறவுகளைப் பேணி வந்தார் அவர்.

ஆனால், சமகாலத்தில், சிங்கள இனவாத அரசியல்வாதிகளும் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அடக்குமுறையைப் பிரயோகித்த போது, அவற்றைப் பகிரங்கமாகவே நெஞ்சை நிமிர்த்திப் பேசக் கூடிய தைரியம் அவருக்கு மட்டுமே இருந்தது.

அவர் மீதும் ஒருசில விமர்சனங்களை முன்வைப்போர் உள்ளனர்.
 ஆயினும், முஸ்லிம்களின் அபிலாஷை, காணிப் பிரச்சினைகள், முஸ்லிம் தனியலகு, கரையோர மாவட்டம், இனப் பிரச்சினை தீர்வில் உரிய பங்கு என தனது சமூகத்தோடு சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களிலும் தெளிவான நிலைப்பாட்டை வலியுறுத்தி வந்த தலைவர் அஷ்ரப் மட்டும்தான்.

எனவே, அஷ்ரப் பலருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். இன்னும் பலருக்கு ஒருவித தலையிடியாக இருந்தார் என்பதை அன்றைய அரசியல் உள்ளரங்கம் தெரிந்தோர் அறிவார்கள். 

பெரும்பான்மைக் கட்சிகளின் ஆட்சியைத் தீர்மானிக்கக் கூடிய வல்லமையை மு.கா. பெற்றிருந்தது இது அக்காலத்தில் தேசிய அரசியலில் இரண்டாம், மூன்றாம் நிலைகளில் இருந்த சிங்களக் கட்சிகளுக்கு நல்லதாகப் படவில்லை.
 
கொழும்பை மையமாகக் கொண்டு முஸ்லிம்களுக்கான அரசியலை காலகாலமாகச் செய்து வந்த சில முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட, முஸ்லிம் அரசியல் கிழக்கை நோக்கி நகர்வதை அறவே விரும்பவில்லை என்றும், எப்போதும் அஷ்ரபை பற்றி நெஞ்சுக்குள் குமுறிக் கொண்டே இருந்தார்கள் என்றும் சொல்வார்கள். 

முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களையும் நோக்கிப் போகாமல் விடுவதற்கு மு.கா.லின் அரசியல்மயமாக்கமும் ஒரு காரணமாக அமைந்தது எனலாம். இந்தப் பின்னணியில், விடுதலைப் புலிகளும் அவர்களுக்கு ஒத்து ஊதிய தமிழ் அரசியல்வாதிகளும் அஷ்ரபின் பலத்தையும் நெஞ்சுரத்தையும் தமக்கு சாதகமானதாகப் பார்க்கவில்லை.

மிக முக்கியமாக, முஸ்லிம்களுக்கு எதிரான மறைமுக நிகழ்ச்சித் திட்டங்களுடன் இலங்கைக்குள் நுழையும் வெளிநாடுகள், வெளிநாட்டுச் சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பதில் அஷ்ரப்பும் அவரது அக்காலத்து அரசியல் தோழர்களும் உறுதியாக இருந்தனர்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை சேகு இஸ்ஸதீன், அஷ்ரப் உள்ளிட்டோர் எதிர்த்தது ஒருபுறமிருக்க, பிற்காலத்தில் நோர்வே போன்ற வெளிநாட்டுச் சக்திகளின் உள் வருகையை அஷ்ரப், ஜனாதிபதி சந்திரிகா ஊடாக தடுத்தார் என்று நம்பகரமாகச் சொல்லப்படுகின்றது.

இலங்கையில் சமாதான பேச்சுவார்த்தை என்ற ஒரு விடயம் வந்தபோது, அது குறித்து அஷ்ரபிடம் ஆலோசனை கேட்டார் சந்திரிகா அம்மையார்,
‘இந்த திட்டத்தின் மூலம் வடக்கு, கிழக்கிற்கோ எனது சமூகத்திற்கோ எந்த நன்மையும் இல்லை. எனவே, இதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சந்திரிகாவிடம் அஷ்ரப் சொன்னதாக அஷ்ரபை அதற்கு முதல் நாள் இரவும் கூட, சந்தித்திருந்த  முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுவ்லா கூறுகின்றார்.  

ஆகவே, தலைவர் அஷ்ரப் உண்மையிலேயே திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றால், சம்பந்தப்பட்டோர் எதிர்பார்த்த மாறுதல்கள், பலன்கள் அவர்களுக்குக் கிடைத்ததாகவே சொல்ல முடியும். இந்தப் பின்னணியில் அஷ்ரப் மரணம் என்ற விடயமும் மூடிமறைக்கப்பட்டது எனலாம்.
 இதனை பௌஸர், மேற்படி நூலில் இவ்வாறு கூறுகின்றார்.

“2002இல் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த அரசியல் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலில் ஒரு முக்கிய காய்நகர்த்தலே அஷ்ரப் மீது நடத்தப்பட்ட படுகொலைத் தாக்குதலாகும்.

ஒரு நாட்டில் ஒரு விடயத்தைச் செய்வதற்கு முன் தமது நிகழ்ச்சி நிரலை தங்குதடையின்றி நிகழ்த்த வாய்ப்பான சூழலை சர்வதேச ஆதிக்க அரசுகள் எப்படித் திட்டமிடும், அதற்கு என்ன என்ன செய்யும் என்பதை சமகால சர்வதேச அரசியல் தொடர்பில் அறிவுள்ளவர்கள் ஓரளவேனும் புரிந்து கொள்ளலாம்’ என்கின்றார்.

விபத்துக்குள்ளான ஹெலியில் தலைவர் அஷ்ரபுடன் கதிர்காமத்தம்பி என்ற ஒருவரும் சென்றிருந்தார். அவருக்கு விடுதலைப் புலிகள் பின்னர்  மாவீரர் பட்டம் வழங்கியதாகவும் அவர் கொண்டு சென்ற பையிலேயே குண்டு இருந்திருக்கலாம் என்றும் அக்காலத்தில் பேசப்பட்டது. ஆனால், அன்றைய தினம் அஷ்ரபுடன்  பெரியதம்பி என்று ஒருவரும் பயணித்துள்ளார் என்ற புதிய தகவலும் ஆச்சரியமளிக்கின்றது.

ஆகவே, நன்றாகக் கவனியுங்கள்,.... அஷ்ரபின் மரணத்திற்கு முன்னரான நிலை.... அதன் பிறகு தற்போது வரையான முஸ்லிம் அரசியலின் போக்கு எல்லாவற்றையும் பார்த்தால் வலுவான ஆனால் நியாயமான சந்தேகம் ஒன்று உருவாகின்றது.
அஷ்ரப் எல்லாவற்றையும் இழுத்துப் பிடிக்கின்றார். பிறகு அவாது மரணம் நிகழ்கின்றது...... பேரியலும் ஹக்கீமும் இணைத் தலைவர்களாகின்றனர். பிறகு ஹக்கீம் தனித் தலைவராகின்றார்.

அதன் பிறகு எந்த தங்கு தடையுமின்றி, அஷ்ரப் தடுத்த நோர்வே உள்ளே வருகின்றது, எல்லாம் ‘அவர்கள்’ திட்டமிட்டபடி நடக்கின்றது. ஹக்கீம் எதிர்க்கலில்லை. முஸ்லிம்களுக்கு உரிய  இடம் இல்லை என்பதை அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

அதன்பிறகு, இன்று வரையான காலத்தில் முஸ்லிம் அரசியல் கெட்டுக் குட்டிச் சுவராகி இருக்கின்றது. கிட்டத்தட்ட முஸ்லிம் கட்சிகளும் சரி முஸ்லிம் மக்களும் சரி 1970களில் இருந்த நிலைமைக்கு, மீண்டும் பெருந்தேசியக் கட்சிகளை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளனர்.

சமூகத்திற்கான அரசியல் உண்மையில் தெருவில் நிற்கின்றது.
ஆகவே, வெளிநாட்டுச் சக்தி, உள்நாட்டில் ஒரு தரப்பினர், புலிகள் எனப் பல தரப்பினர் ஒரு கூட்டுச் சதித்திட்டத்தைத் தீட்டி, தமது இலக்குகளுக்குத் தடையாக இருந்த அஷ்ரப் என்ற பெருவிருட்சம் வேரறுத்துள்ளதுடன்?

அதன் மூலம் நீண்டகால அடிப்படையில் முஸ்லிம்களின் அரசியல் அடையாளத்தின் அசல் தன்மையைச் சீரழித்துள்ளனரா? என்பதுதான் கவலையும் ஆபத்தும் உறைந்த கேள்வியாகும்;.

இந்தக் கேள்விக்கு விடை காணப்படாவிட்டால், இதே உத்தியை இனியும் ‘அவர்கள்’ பிரயோகிக்க மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அஷ்ரபின்-மரணம்-தூசு-தட்டப்படுமா/91-364291

செம்மணியோடு முடக்கப்படுமா யுத்தகால மீறல்களுக்கான நீதி?

1 week ago

Published By: Vishnu

08 Sep, 2025 | 01:02 AM

image

(நா.தனுஜா)

இலங்கையில் மனிதகுலத்துக்கு எதிராக சக மனிதன் நிகழ்த்திய அட்டூழியங்கள் பற்றிய உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டு, நீதி நிலைநாட்டப்படும் எனக் காத்திருந்த காலமும், அந்த அட்டூழியங்களின் சாட்சியாக அமைதிகாத்து நின்ற நிலமும், நீளும் காத்திருப்பின் வலி தாழாமல் இன்று தம் அமைதி கலைத்துப் பேச ஆரம்பித்திருக்கின்றன. இப்போது செம்மணி நிலம் உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கும் மனிதப்பேரவலக்கதை உலகின் மனசாட்சியை உலுக்க ஆரம்பித்திருக்கிறது. இலங்கையில் இனவழிப்போ, போர்க்குற்றங்களோ இடம்பெறவில்லை எனக் காலம் காலமாக மறுத்து வந்தவர்களை வாயடைக்கச்செய்திருக்கிறது.  

கிருஷாந்தி குமாரசுவாமி கொல்லப்பட்டு 29 ஆண்டுகள்

நாமறிந்த செம்மணி நிலத்தின் கதை கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலையுடன் ஆரம்பமாகிறது. 1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி  யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் க.பொ.த உயர்தரப்பரீட்சை எழுதச்சென்ற கிருஷாந்தி குமாரசுவாமியும், அவரைத்தேடிச்சென்ற அவரது தாய் ராசம்மா குமாரசுவாமி, இளைய சகோதரன் குமாரசுவாமி பிரணவன், அயலவர் சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டு இன்றோடு 29 வருடங்கள் பூர்த்தியடைகின்றன.

கிருஷாந்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, 1998 ஆம் ஆண்டு முதன்முறையாக செம்மணி பற்றிய உண்மைகளை உலகுக்கு வெளிப்படுத்தினார். 1995 - 1996 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அரச படையினரால் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் காணாமல்போன பலர் கொல்லப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டதாகவும், அங்கு சுமார் 300 - 400 பேர் வரை புதைக்கப்பட்டிருக்கக்கூடும் எனவும் சோமரத்ன வெளிப்படுத்தியதை அடுத்து, 1999 இல் அவரால் அடையாளம் காண்பிக்கப்பட்ட பகுதிகளில் சர்வதேசக் கண்காணிப்புடன் மேற்கொள்ளப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான அகழ்வுகளில் 15 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. அத்தோடு செம்மணி பற்றிய உண்மைகள் ஓர் தற்காலிக ஓய்வுக்குச் சென்றன.

மீளப் பேசும் செம்மணி நிலம்

இந்நிலையில் இவ்வாண்டு பெப்ரவரி மாதம் செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தின் புனரமைப்புப்பணிகளின்போது சில மனித எச்சங்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, சட்ட மருத்துவ அதிகாரிகள், பொலிஸார் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் மேற்பார்வையின்கீழ் அகழ்வுப்பணிகளை முன்னெடுக்குமாறு யாழ் நீதிவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கடந்த வியாழக்கிழமையுடன் (4) இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகளில் 43 நாட்கள் பூர்த்தியடைந்துள்ளன. இதுவரையான காலப்பகுதியில் (4 செப்டெம்பர் 2025) மொத்தமாக 235 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 224 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணியில் கண்டறியப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் எலும்புக்கூடுகள், சிறுவர்கள் பயன்படுத்தும் பாடசாலைப் புத்தகப்பை, விளையாட்டுப்பொம்மை, பால் போத்தல் என்பனவும், கடந்த ஜுன் மாதம் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் செம்மணி மனிதப்புதைகுழிக்கான விஜயமும் இதுவரை வட, கிழக்கின் பேரவலக்கதைகளைக் காதுகொடுத்துக் கேட்காத, புரிந்துகொள்ள முயற்சிக்காத தெற்கின் கவனத்தைக்கூட செம்மணியின் பக்கம் திருப்பியிருக்கிறது. 'செம்மணிக்கு நீதி' என ஒட்டுமொத்த நாடும் ஒருமித்துக் குரல் எழுப்பாவிட்டாலும், அந்நீதியைக்கோரி குறித்தவொரு தரப்பு எழுப்பும் கோஷத்தைத் தடுக்க முற்படாத சூழ்நிலையொன்று தெற்கில் பகுதியளவில் உருவாகியிருக்கிறது.

சோமரத்ன ராஜபக்ஷவின் புதிய வெளிப்படுத்தல்கள்

இது ஒருபுறமிருக்க 1996 ஆம் ஆண்டு 7 ஆம் காலாட்படை தலைமையகத்தில் கொல்லப்பட்டு செம்மணி சோதனைச்சாவடிக்குக் கொண்டுவரப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமியினதும், அவரது குடும்பத்தாரினதும் சடலங்களை கப்டன் லலித் ஹேவாகேயின் ஆணைக்கு அமைவாகப் புதைத்ததைத் தவிர வேறெந்தக் குற்றத்தையும் புரியாத தனது கணவர், செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருக்கிறார் எனக் குறிப்பிட்டு மரணதண்டனைக்கைதி சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி சேனாலி சம்பா விஜேவிக்ரம அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.

அதுமாத்திரமன்றி 'யாழ். அரியாலையில் சம்பத் எனும் பெயரில் குறிப்பிடத்தக்களவு காலம் பணியாற்றியவன் என்ற ரீதியில், 1996 ஆம் ஆண்டில் அரியாலை பிரதேசத்தில் காணாமல்போன சகல நபர்களும் 7 ஆவது இராணுவக் காலாட்படை தலைமையகத்தின் உயரதிகாரிகளினாலேயே கைதுசெய்யப்பட்டனர் என்பதை நானறிவேன். அவ்வதிகாரிகள் யார் என்பதையும், 1996 இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சகல குற்றங்கள் பற்றிய விபரங்களையும் வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறேன்' என சோமரத்ன ராஜபக்ஷ பிறிதொரு வெளிப்படுத்தலையும் செய்திருந்தார்.

காலம் கனிந்திருக்கிறது

ஆக, கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையுடன் வெளிச்சத்துக்கு வந்து கிடப்பில் போடப்பட்ட ஒரு மனிதப்பேரவலத்தையும், அதன் காரணகர்த்தாக்களையும் வெளிக்கொணர்வதற்கான காலம் கனிந்திருக்கிறது. செம்மணி மனிதப்புதைகுழி என்பது தனியொரு சம்பவம் அல்ல. மாறாக அது தமிழர்களுக்கு எதிராக அரச அனுசரணையுடன் இராணுவத்தினரால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களின் ஒரு சாட்சியம் மாத்திரமே என்பதை சோமரத்ன ராஜபக்ஷவின் அண்மைய வெளிப்படுத்தல்கள் உணர்த்துகின்றன.

இப்போது எம்முன் இரண்டு கேள்விகள் தொக்குநிற்கின்றன. முதலாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை (8) ஆரம்பமாகவிருக்கும் நிலையில் யுத்தகாலத்தில் இடம்பெற்ற சகல மீறல்களுக்குமான நீதியையும், பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதற்கான சாட்சியமாகத் திகழும் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தை எவ்வாறு கையாளப்போகிறோம்? இரண்டாவது, ஒட்டுமொத்த மீறல்களுக்குமான நீதியை அரசாங்கம் செம்மணியோடு மாத்திரம் மட்டுப்படுத்திவிடுமா?

இங்கு முதலாவது கேள்விக்கான பதிலை சரிவரக் கண்டறிந்து, அதனை தமிழ் அரசியல் தலைமைகள், சிவில் சமூகம், புலம்பெயர் தமிழர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் ஒன்றிணைந்து உரியவாறு நடைமுறைப்படுத்துவதன் ஊடாக மாத்திரமே இரண்டாவது கேள்வியில் எழுப்பப்பட்டிருக்கும் சந்தேகத்தைக் களையமுடியும்.

மனிதப்புதைகுழி விவகாரத்தையும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தையும் வேறுபடுத்திப் பார்க்கமுடியாத பின்னணியில், சர்வதேச விசாரணை பற்றிய சோமரத்ன ராஜபக்ஷவின் கருத்து நீண்டகாலமாக நீதிக்காகப் போராடிவரும் தமக்குச் சாதகமாக அமைந்திருப்பதாகவும், அதனை தமிழ்த்தரப்புக்கள் சரிவரப்பயன்படுத்திக்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணையை நோக்கிச் செல்லப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள்.

இருப்பினும் இங்கு மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடுவதற்கு வாய்ப்பளிக்கக்கூடியவகையில் ரோம சாசனத்தில் கையெழுத்திட்டிருக்காத இலங்கையை வேறு எந்த அடிப்படைகளில் நடைமுறைச்சாத்தியமான சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை நோக்கித் தள்ளமுடியும் என்ற கேள்வி எழுகிறது.

சர்வதேச விசாரணைக்கான சாத்தியப்பாடுகள்

'சர்வதேச விசாரணை என்பது கட்டாயமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெறவேண்டிய விசாரணையா? அல்லது வேறு வகையான சர்வதேச விசாரணையா? என்ற வினா மக்கள் மத்தியில் நிலவும் அதேவேளை, அரசியல்வாதிகள் மத்தியிலும் இதுபற்றிய புரிதலின்மை காணப்படுகிறது. ரோம சாசனத்தில் உறுப்புரிமை அற்ற நாடுகளிலும், உறுப்புநாடுகள் ரோம சாசனத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னரான காலப்பகுதியில் அந்நாடுகளிலும் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான நியாயதிக்கம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இல்லை. எனவே ரோம சாசனத்தில் கையெழுத்திடாத இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் அங்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடு மிகக்குறைவு. இருப்பினும் சர்வதேச நீதியை நோக்கி நகர்வதற்கான வேறுபல வழிமுறைகள் சர்வதேச சட்டங்களில் உண்டு. உதாரணமாக யூகோஸ்லாவியா மற்றும் ருவாண்டா போன்ற நாடுகளில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பான விசாரணைகளுக்கான யுன ர்ழஉ வுசiடிரயெட எனப்படும் சர்வதேச தீர்ப்பாயங்கள் நெதர்லாந்தின் ஹேக் நகரில் தனியாக உருவாக்கப்பட்டன. அதேபோன்று கம்போடியாவில் இடம்பெற்ற இனப்படுகொலை உள்ளடங்கலாக பல்வேறு சந்தர்ப்பங்களில் கலப்புமுறையிலான பல தீர்ப்பாயங்கள் காலத்துக்குக்காலம் நிறுவப்பட்டுள்ளன' என சர்வதேச நீதியை நாடுவதில் உள்ள மாற்றுத்தெரிவுகள் பற்றி விளக்கமளிக்கிறார் சிரேஷ்ட சட்டத்தரணி மரியதாஸ் யூட் டினேஷ்.

அதுமாத்திரமன்றி, கனேடிய அரசாங்கத்தின் பங்களிப்புடன் சர்வதேச சட்டத்தில் உட்புகுத்தப்பட்ட விடயமான 'பாதுகாக்கவேண்டிய கடப்பாடு' பற்றி சுட்டிக்காட்டிய அவர், இக்கோட்பாட்டின் பிரகாரம் இலங்கையில் இடம்பெற்ற மனிதப்பேரவலத்தைத் தடுப்பதற்கு ஐ.நா தவறிவிட்டது என்பதை அப்போதைய செயலாளர் நாயகம் பான் கி-மூன் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருந்ததாகவும், எனவே மேற்படி கோட்பாட்டின்படி உள்நாட்டில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாதவிடத்து, அடுத்தகட்டமாக அதனைச் செய்யவேண்டிய கடப்பாடு ஐ.நா வுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

செம்மணியோடு நீதி முடக்கப்படக்கூடாது

அதேவேளை கடந்தகாலங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் பின்தள்ளப்பட்டுவந்த நிலையில், தற்போது கண்டறியப்பட்டிருக்கும் செம்மணி மனிதப்புதைகுழியானது 1948 ஆம் ஆண்டு முதல் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுவரும் இனவழிப்பை வெறுமனே இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற 6 மாதகாலத்துக்குள் முடக்கிவிடக்கூடாது எனத் தொடர்ச்சியாகக் கூறிவரும் தரப்பினருக்குக் கிடைத்த பெருவாய்ப்பு என குறிப்பிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 'இலங்கை தொடர்பில் இதுவரை காலமும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுவந்த தீர்மானங்களின் பலவீனம் மற்றும் குறுகிய தன்மையை வெளிப்படுத்துவதற்கும், அத்தீர்மானங்களைப் பரந்துபட்ட அடிப்படையில் விரிவுபடுத்துவதற்கும் நாம் செம்மணி விவகாரத்தைப் பயன்படுத்தவேண்டும். அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதாரங்கள் திரட்டப்பட்டிருக்கும் நிலையில், இனி இவ்விவகாரம் சர்வதேச மட்டத்தில் நீதிமன்றப்பொறிமுறை ஒன்றின் ஊடாக விசாரிக்கப்படும் அதேவேளை, அதில் செம்மணி மனிதப்புதைகுழியும் உள்வாங்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்' என்றார்.

உள்ளகப்பொறிமுறைகளை உதாசீனப்படுத்தக்கூடாது

இருப்பினும் செம்மணி மனிதப்புதைகுழி உள்ளடங்கலாக இலங்கையில் இடம்பெற்ற மீறல் குற்றங்கள் தொடர்பான சர்வதேச நீதி, பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கான சாத்தியப்பாடு குறித்து ஆராய்வதுடன் அவற்றுக்கான முயற்சிகளை மேற்கொள்ளும் அதேவேளை, உள்ளக ரீதியில் இயங்கிவரும் பொறிமுறைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டியது அவசியம் என வலியுறுத்தும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், மறுபுறம் மனிதப்புதைகுழி தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகள் குறித்து நிலவும் நம்பிக்கையீனம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பக்கூடியவகையில் அச்செயன்முறை மாற்றியமைக்கப்படவேண்டிய விதம் என்பன பற்றியும் பின்வருமாறு விளக்கமளிக்கிறார்.

'முதலாவதாக செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளில் சர்வதேச நிபுணத்துவம் மற்றும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் உள்வாங்கப்படவேண்டும். அப்புதைகுழி மழைக்காலத்தில் உரியவாறு பேணப்படவேண்டும். அத்தோடு அங்கு கண்டறியப்படும் எலும்புக்கூடுகள் யாருக்குச் சொந்தமானவை என்பதைக் கண்டறிவதற்கு உள்நாட்டிலேயே மரபணு வங்கியொன்று (னுNயு டீயமெ) நிறுவப்படவேண்டும். இவற்றுக்கு அப்பால் இந்த மனிதப்புதைகுழி தொடர்பில் யார் விசாரணைகளை முன்னெடுக்கப்போகிறார்கள் என்பது மிகமுக்கியம். இலங்கையைப் பொறுத்தமட்டில் பொலிஸார் யுத்தத்துடன் தொடர்புடைய மற்றும் அதனுடன் தொடர்பற்ற பல்வேறு மீறல்களில் ஈடுபட்ட வரலாறு இருக்கிறது.

அவ்வாறிருக்கையில் இந்த பொலிஸார் மனிதப்புதைகுழி தொடர்பில் சுயாதீனமானதும், நியாயமானதுமான விசாரணைகளை முன்னெடுப்பார்களா? அவ்விசாரணைகள்மீது பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளடங்கலாகப் பொதுமக்கள் நம்பிக்கை வைப்பார்களா? என்ற கேள்வி நிலவுகிறது. எனவே இவ்விசாரணைகளுக்காக பொலிஸ் திணைக்களத்துடன் தொடர்பற்ற, உரிய நிபுணத்துவம் உடைய அதிகாரிகள் மற்றும் சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய சுயாதீன விசாரணைக் கட்டமைப்பொன்றை அரசாங்கம் உருவாக்கவேண்டும். அடுத்ததாக சர்வதேச நியாயாதிக்கம் (ருniஎநசளயட துரசளைனiஉவழைn) உள்ளடங்கலாக சர்வதேச நீதிக்கான நகர்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதேவேளை, உள்நாட்டுப்பொறிமுறைகளை உதாசீனப்படுத்தக்கூடாது. ஏனென்றால் நீதியை நிலைநாட்டவேண்டிய கடமை அரசாங்கத்துக்கு இருக்கிறது. அவ்வாறிருக்கையில் நாம் அவற்றை உதாசீனப்படுத்துமிடத்து, தாம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும், ஆகையினால் தம்மால் எதனையும் செய்யமுடியவில்லை எனவும் அரசாங்கம் கூறிவிடும்' எனச் சுட்டிக்காட்டினார்.

மனிதப்புதைகுழிகள் சிக்கலானவை

அதற்கமைய இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் இயங்கிவரும் உள்ளகப்பொறிமுறையான காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் மிராக் ரஹீம், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தைப் பொறுத்தமட்டில் அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நிதியைப் பெற்றுக்கொடுப்பதிலும், கண்காணிப்பு மற்றும் ஆவணப்படுத்தல்களை மேற்கொள்வதிலும் தமது அலுவலகத்தின் பங்களிப்புக் குறித்துத் தெளிவுபடுத்தினார். 'மனிதப்புதைகுழிகளைக் கையாள்வது மிகச்சிக்கலானதாகும். ஏனெனில் இவ்விவகாரத்தில் மனித எச்சங்களை ஆராயவேண்டும். மனிதப்புதைகுழி மண்ணின் தன்மையை ஆராயவேண்டும். வாக்குமூலங்களை சேகரிக்கவேண்டும். முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகளைப் பரிசீலிக்கவேண்டும். இவ்வாறு பல்வேறு தரப்பினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் ஊடாகவே மனிதப்புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் யாருடையவை? அவர்கள் எவ்வாறு மரணித்தார்கள்? அவர்கள் அங்கு எப்படிப் புதைக்கப்பட்டார்கள்? என்ற கேள்விகளுக்கான பதில்களைப் பெறமுடியும்' எனச் சுட்டிக்காட்டிய மிராக், மறுபுறம் மனிதப்புதைகுழி அகழ்வு மற்றும் பகுப்பாய்வுப் பணிகளில் எதிர்வருங்காலங்களில் உள்வாங்கப்படவேண்டியிருக்கும் தடயவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம், எலும்புக்கூடுகள் தொடர்பான பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான ஆய்வுகூட வசதிகள் இன்மை பற்றியும் பிரஸ்தாபித்தார்.

சகல மீறல்களுக்குமான நீதி

ஆக, யுத்தகாலத்தில் இடம்பெற்ற இனவழிப்பு, போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் என்பன உள்ளடங்கலாக சகல குற்றங்களுக்குமான நீதியையும், பொறுப்புக்கூறலையும் நிலைநாட்டுமாறு தமிழர்கள் கோரிவரும் நிலையில், அது செம்மணிக்கான நீதியாக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுவிடக்கூடாது. மாறாக ஏனைய அனைத்து மீறல்களுக்குமான நீதியை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இன்னமும் உரத்து வலியுறுத்துவதற்கான ஆயுதமாக செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தைப் பயன்படுத்தவேண்டும். செம்மணியின் கீழும், இன்னமும் அடையாளம் காணப்படாத மனிதப்புதைகுழிகளின் கீழும் உதவிகோரத் திராணியின்றி உயிரடங்கிப் புதையுண்ட ஆயிரமாயிரம் உறவுகளுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கவேண்டிய தார்மீகக் கடப்பாடு சகலருக்கும் உண்டு.

https://www.virakesari.lk/article/224483

உலக அரங்கில் பெரியார்; ஆக்ஸ்ஃபோர்டு கருத்தரங்கமும், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த பெரியாரின் திருவுருவப் படமும்

1 week 1 day ago

உலக அரங்கில் பெரியார்; ஆக்ஸ்ஃபோர்டு கருத்தரங்கமும், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த பெரியாரின் திருவுருவப் படமும்

8 Sep 2025, 7:12 AM

Periyar portrait at Oxford University

 ராஜன் குறை

தொன்மையான தமிழ் பண்பாடு உலக சிந்தனைக்கு அளித்த எத்தனையோ கொடைகளில் இரண்டினை முதன்மைப்படுத்திச் சொல்ல வேண்டும் என்றால் அது ஐயன் திருவள்ளுவரின் திருக்குறளும், பெரியாரின் சிந்தனைகளும் எனலாம். திருவள்ளுவர் தொடர்ந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வந்திருக்கிறார். லண்டனில் முதல்வர் ஸ்டாலின், திருக்குறளை 1886-ஆம் ஆண்டே மொழியாக்கம் செய்த ஜி.யு.போப் அவர்களின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார். அதனால் திருக்குறள் உலகில் பரவலாக அறியப்பட்டது.  

பெரியாரைப் பொறுத்தவரை அவர் தன் சிந்தனைகளைத் தொகுத்து நூலாக எழுதவில்லை. ஒரு சில பிரசுரங்கள் அவர் பெயரில் வந்துள்ளனவே தவிர, ஒரு விரிவான அரசியல் தத்துவ நூலாகவோ, சித்தாந்த நூலாகவோ எழுதவில்லை. மாறாக அவர் தொடர்ந்து மக்களிடையே பிரசாரம் செய்து பெரும் சிந்தனைப் புரட்சியை பொதுமன்றத்தில் உருவாக்கியவர். செயல்முறை தத்துவம் (philosophical praxis) என்பதை மேற்கொண்டவர். கற்றோருக்கான நூல்களை எழுதுவதைவிட, அனைத்து மக்களையும் சிந்திக்க வைத்து சுயமரியாதையை சுடர் விடச் செய்வதையே அவர் முக்கியப் பணியாகக் கருதினார். 

அவர் வாழ்நாளிலேயே அவர் உரைகளின் எழுத்து வடிவங்களும், எழுத்துக்களும் தொகுக்கப்பட்டு வெளிவந்தாலும் அவை மொழியாக்கம் செய்யக் கடினமானவை என்பதால் பெருமளவு அவ்விதம் நடந்து வெளியுலகில் பரவவில்லை. மேலும் கல்விப்புலத்தில் நிறைந்திருந்த பார்ப்பனர்களுக்கும், பிற மேல் தட்டினருக்கும் அவரைக் குறித்த சரியான புரிதல் இல்லை. இட து சாரி சிந்தனையாளர்கள் பலருக்கும் கூட அவரைக் குறித்த சரியான புரிதல் இருக்கவில்லை. அதனால் அவருடைய அளப்பரிய அரும்பணி, மானுடவரலாற்றில் அவர் உருவாக்கிய  தனித்துவமிக்க  சிந்தனைப் புரட்சியின் சிறப்பம்சங்கள் உலக அரங்கில் விவாதிக்கப்பட கணிசமான காலதாமதம் ஆகியுள்ளதைப் புரிந்துகொள்ள முடியும். 

அப்படி அறியப்படவேண்டிய சிறப்பம்சங்கள் என்ன என்பதையும் சுருக்கமாக க் கூறிவிடுவோம். பெரும்பாலான உலகத் தலைவர்கள் மக்களை திரட்டி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவார்கள் அல்லது தேசிய விடுதலையை சாதித்து புதிய அரசுருவாக்கத்திற்கு வகை செய்வார்கள். இதற்கு மாறாக பெரியார் மக்களின் சிந்தனையிலே புரட்சிகர மாற்றத்தை உருவாக்கி, புதிய விழுமியங்களின் அடிப்படையிலே குடியரசை உருவாக்க முயற்சித்தார். இதனை சமூக சீர்திருத்தம் என்று சொல்லிவிட முடியாது. புதிய குடியரசின் அடித்தளத்தை உருவாக்குதல். 

இன்னும் தெளிவாகச் சொன்னால் இந்திய சமூகத்தில் பரவலாக வேரூன்றிய வர்ண தர்ம சிந்தனையை, பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு கற்பிக்கும், பிறப்பையே தண்டனையாக்கும் வர்ண தர்ம சமூக ஒழுங்கை முற்றிலும் அகற்றி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப சமத்துவ விழுமியத்தை நிலைநிறுத்துவதே அவர் மேற்கொண்ட சிந்தனைப் புரட்சியின் அடிப்படை. அவருடைய பணியின் விளைவாக “திராவிட-தமிழர்” என்ற ஒரு மக்கள் தொகுதி தன்னுணர்வு பெற்று பிராமணீய கருத்தியல் மேலாதிக்கத்தினை (Brahmin Hegemony) மறுதலிக்கும் ஆற்றலுடன் செயல்படுவது சாத்தியமானது. இருப்பினும் இந்திய ஒன்றிய அரசிடம் குவிந்துள்ள அதிகாரங்கள் உருவாக்கும் தளைகளை மீறி இந்த மக்கள் தொகுதி தொடர்ந்து தன் இலட்சியத்தை அடைய போராடி வருகிறது.  

இந்த உண்மை, பெரியார் மக்களின் சிந்தனைப் புரட்சியை நாடியவர், தேசிய அரசை உருவாக்க முனையாமல், குடியரசு விழுமியங்களை நிறுவ முயன்றவர், அதன் மூலம் மக்களின் மன ங்களிலே சுயமரியாதைக் கனலை உருவாக்கியவர் என்ற உண்மை இன்னம் முழுமையாக உள்வாங்கப்படவில்லை. தேசிய அரசை உருவாக்குபவர்களே வரலாற்றில் கவனம் பெறுவார்கள் என்பதால் பெரியாரின் சிந்தனைப் புரட்சி போதிய கவனம் பெறவில்லை என்றும் கூறலாம். 

ஆனாலும் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்பது போல பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் பேரொளி எல்லை கடந்தும் வீசத் துவங்கியுள்ளதை வியப்பதற்கில்லை. இந்த கருத்தரங்கத்தை ஒருங்கமைத்த அமைப்பு எது, பங்கேற்ற அறிஞர்கள் யார், யார் என்பதை நாம் சுருக்கமாக அறிய வேண்டும். 

Rajan-1-2-1024x467.jpg

இரு நாள் கருத்தரங்கம்

ஆயிரம் ஆண்டுகள் பழமையான, உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் பல்வேறு துறைகளும், 36 கல்லூரிகளும் அடங்கியுள்ளன. அவற்றில் ஒரு கல்லூரிதான் செயிண்ட் ஆண்டனி கல்லூரி. அதில் உள்ள ஆசிய ஆய்வு மையம் “சுயமரியாதை இயக்கமும், அதன் தாக்கங்களும்” (Self Respect Movement and its Legacies) என்ற தலைப்பில் ஒருங்கமைத்த கருத்தரங்கம் செப்டம்பர் 4,5 தேதிகளில் நடந்தேறியது. அந்த கல்லூரியின் பேராசிரியர்கள் ஜிம் மாலின்சனும், ஃபைசல் தேவ்ஜியும் இந்த கருத்தரங்கின் அமைப்பாளர்கள் ஆவார்கள். இந்த கருத்தரங்கம் குறித்த செய்திகள் பல்வேறு நாளேடுகளிலும் இடம்பெற்றுள்ளன. 

உலகின் பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆய்வாளர்கள் பலர் இதில் பங்கேற்று கட்டுரைகள் வாசித்துள்ளனர். அபிமன்யு ஆர்ணி, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகம்; கணேஷ்வர், ஹைதராபாத் பல்கலைகழகம்; சுந்தர் சருக்காய், பேர்ஃபுட் பிலாசஃபர்; எஸ்.ஆனந்தி, எம்.ஐ.டி.எஸ்; கிருபா முனுசாமி, மிடில்சக்ஸ் பல்கலைகழகம்; விக்னேஷ் ராஜாமணி, கிங்க்ஸ் காலேஜ், லண்டன்; கார்த்திக் ராம் மனோஹர், நேஷனல் லா ஸ்கூல்; ஜெ.ஜெயரஞ்சன், தமிழ்நாடு மாநில திட்டக்குழு; ஆ.இரா.வெங்கடாசலபதி, எம்.ஐ.டி.எஸ்; கிறிஸ்டொஃபே ஜெஃபர்லோ, சையின்ஸ் போ, பாரிஸ்; சூரஜ் யாங்டே, ஹார்வார்டு பல்கலைகழகம்; பிரான்சிஸ் கோடி, டொராண்டோ பல்கலைகழகம்; மார்த்தா ஆன் செல்பி, ஹார்வார்டு பல்கலைகழம்; சாரா ஹோட்ஜஸ், கிங்க்ஸ் காலேஜ், லண்டன்; சுமதி ராமசாமி, டியூக் பல்கலைகழகம்; தாரிணி அழகர்சாமி, சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகம்; கமலா விஸ்வேஸ்வரன், ரைஸ் பல்கலைகழகம்; சரோஜ் கிரி, டெல்லி பல்கலைகழகம் என முன்னணி ஆய்வாளர்கள் பங்கேற்று பங்களித்துள்ளனர். 

இந்த சிறப்புமிக்க கருத்தரங்கின் பகுதியாகத்தான்  செப்டம்பர் 4 ஆம் தேதி மாலை முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றியுள்ளார். பகுத்தறிவுப் பகலவன் பெரியார் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துள்ளார். செப்டம்பர் 5-ஆம் தேதி மாலை இறுதிச் சிறப்புரையை புகழ்பெற்ற மூத்த மானுடவியல் ஆய்வாளர், தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அர்ஜுன் அப்பாதுரை அவர்கள் நிகழ்த்தியுள்ளார். 

Rajan-3-1.jpg

இந்த நிகழ்வுகளின் பகுதியாக கார்த்திக் ராம் மனோஹரனும், ஆ.இரா.வெங்கடாசலபதியும் தொகுத்துள்ள கேம்பிரிட்ஜ் கம்பேனியன் டு பெரியார் என்ற ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியிடப்பட்டுள்ளது. பெரியார் குறித்த ஆய்வுப்புலத்திற்கு முக்கிய பங்களிப்பாக அமையக்கூடிய நூல் இது எனலாம். 

இத்தகைய சிறப்பு வாய்ந்த நிகழ்வில் முதல்வர் பங்கேற்றது, பெரியார் பட த்தை திறந்துவைத்ததும் திராவிட மாடல் அரசின் சித்தாந்த வேர்களை எடுத்துரைக்கும் சிறப்பு வாயந்தது. சுயமரியாதை என்ற சொல்லின் சிறப்பினை முதல்வர் எடுத்துரைத்து உரை நிகழ்த்தியுள்ளதை காணொலிகளில் காண முடிகிறது. திராவிடவிய அரசியலின் வரலாற்றுத் தொடர்ச்சியில் மற்றொமொரு மைல்கல்லாக இந்த நிகழ்வு அமைகிறது என்றால் மிகையாகாது. முதல்வருடன் மனுராஜ் சண்முகசுந்தரம் உள்ளிட்ட திராவிட இயக்க ஆர்வலர்களும் பங்கேற்றுள்ளனர். 

Rajan-2-1-1024x782.jpg

பாஜக ஏன் பெரியாரை எதிர்க்கிறது? 

இந்த நிகழ்ச்சி தரும் எழுச்சியை சகிக்க முடியாமல் பாஜக தலைவர் தமிழிசை பேசியுள்ள ஒரு காணொலி ஒன்று இணையத்தில் பரவலாகக் கிடைக்கிறது. அவர் இந்த நிகழ்ச்சியை ஆக்ஸ்போர்டு பல்கலைகழகமே நடத்தவில்லை, அந்த வளாகத்தில் ஒரு அரங்கத்தை வாடகைக்கு எடுத்து தி.மு.க நட த்தியுள்ளது என்றெல்லாம் பேசியுள்ளார். இதே போன்ற தகவலை தினமலர் நாளேடும் காணொலியாக வெளியிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. அதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்விற்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று வலியுறுத்திச் சொல்கிறார்கள். கல்யாண மண்டபத்தில் ஒரு அரங்கத்தை வாடகைக்கு எடுப்பதுபோல தி.மு.க-வினர் வாடகைக்கு எடுத்து அதனை ஆக்ஸ்போர்டு பல்கலைகழக நிகழ்ச்சி என்று பொய் பிரசாரம் செய்வதாகக் கூறுகிறார்கள். 

முதலில் சுயமரியாதை உள்ள தமிழர்களாக நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பெரியாரைக் குறித்து கருத்தரங்கம் நடத்துவதால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்குத்தான் பெருமையே தவிர, அதனால் பெரியாருக்கோ, தி.மு.க-விற்கோ தனியான பெருமை எதுவும் சேரப்போவதில்லை. திராவிட இயக்கத்தின் பெருமையெல்லாம் தமிழ் சமூகத்தை வர்ண தர்மத்தின் பிடியிலிருந்து விடுவித்து மானமுள்ள, சுயமரியாதையுள்ள தன்னுணர்வு பெற்ற சமூகமாக மாற்றி வருவதுதான். உலக வரலாற்றை படிப்பதற்குத்தான் பல்கலைகழகமே தவிர, பல்கலைகழகத்திற்காக வரலாறு நிகழ்வதில்லை.

அடுதத்ததாக நாம் மேலே சொன்னபடி கருத்தரங்க நிகழ்வுகளை தெளிவாக நாளேடுகளில் வாசித்து அறியலாம். நாம் சொன்ன பேராசிரியர்கள் மேடையில் முதல்வருடன் அமர்ந்திருக்கும் படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அரங்கத்தை வாடகைக்கு எடுத்ததுபோல பேராசிரியர்களாக யாரேனும் நடிக்கிறார்கள் என்றும்கூட சொல்வார்கள். அந்த பேராசிரியர்கள் நாம் நன்கு அறிந்தவர்கள்தான். அவர்கள் பெயர்களை கூகுள் செய்து அவர்கள் புகைப்படங்களைப் பார்த்துத் தெளியலாம்.  இவ்வளவு மலினமான பொய் பிரசாரத்தை ஏன் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் கேள்வி. 

இந்தக் காழ்ப்பிற்கு விடை தேடுவது கடினமல்ல. அதையும் இந்த கட்டுரையின் துவக்கத்தில் பார்த்தோம். வர்ண தர்மத்தை இந்தியக் குடியரசு முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றவர் பெரியார். அதனையே குடியரசின் அடிப்படையாக க் கொள்ள வேண்டும் என்றவர் ஆர்.எஸ்.எஸ் சிந்தாந்தவாதி கோல்வால்கர். 

பொதுவாகவே இந்திய தேசியவாதிகள், சிந்தனையாளர்கள் பலரும் உறுதிபட மனு ஸ்மிருதி முன்வைக்கும் வர்ண தர்மத்தை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று கூறியதில்லை. அவ்விதம் கூறுவது அந்த தர்மத்தை சமஸ்கிருதத்தில் எழுதி, இன்று வரை தங்களை அதன்படி உயர் பிறப்பாளர்களாக க் கருதிக்கொள்ளும் பிராமணர்களை வருந்தச் செய்யும் என்பதால் சற்றே நீக்கு போக்காகத்தான் அதைப்பற்றிப் பேசுவார்கள். அதனை முற்று முழுதாக எதிர்த்து பேசியவர்கள் பூலே, பெரியார், அம்பேத்கர் ஆகிய பேராளுமைகள்தான். 

பெரியார் அதனை பெரியதொரு மக்கள் இயக்கமாக மாற்றி. திராவிடர் கழகம் என்றும், திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக விட்டுச் சென்றுள்ளார்.அது இன்றுவரை வர்ண தர்ம மீட்பு வாத த்துடன் போராடுகிறது. அதுதான் அவர்களுக்கு இந்த காழ்ப்பு. இந்த மையப் பிரச்சினையை மறைத்து கடவுள் நம்பிக்கை, இந்து மதம் என்று ஏதேதோ பேசுவார்கள். ஆனால் திராவிட-தமிழ் மக்கள் ஏமாறுவதில்லை. அவர்கள் விரும்பும் தெய்வங்களை வழிபடுவார்கள்; பெரியாரின் சுயமரியாதை தத்துவத்தையும் புரிந்துகொள்வார்கள். 

பிரச்சினை மனிதர்களுக்குள் பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு கூடாது என்பதுதானே தவிர கடவுளை வணங்குவது இல்லை. கடவுள் பெயரால் பார்ப்பனர்கள் ஏற்றத்தாழ்வை உருவாக்குவதால்தான் பெரியார் கடவுளின் இருப்பையும் கேள்விக்கு உள்ளாக்கினார். அவர் அதையே தெளிவாக விளக்கவும் செய்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அனைத்து சமூகத்தையும் சார்ந்த முற்போக்கு சிந்தனையாளர்கள் அவரைக் கொண்டாடவே செய்தனர். புகழ்பெற்ற எழுத்தாளர் பார்ப்பன வகுப்பைச் சார்ந்த வ.ராமசாமி, 1944-ஆம் ஆண்டு வெளியான தமிழ் பெரியோர்கள் என்ற நூலில் பெரியாரையே முதலில் சிறப்பித்து, கொண்டாடி எழுதியுள்ளார்.    

பாரதீய ஜனதா கட்சியும் வர்ண தர்ம பித்தை அகற்றிவிட்டு, திராவிட நெறியான பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை மனப்பூர்வமாக ஏற்க வேண்டும். அதுவே உண்மையான தேச நலனாக இருக்கும். அப்போது பெரியாரும் தேசியத் தலைவராகத் தெரிவார். 

கட்டுரையாளர் குறிப்பு:  

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி

https://minnambalam.com/periyar-portrait-at-oxford-university/

ஜனாதிபதி அநுரவின்  கச்சதீவு விஜயம் — வீரகத்தி தனபாலசிங்கம் — 

1 week 2 days ago

ஜனாதிபதி அநுரவின்  கச்சதீவு விஜயம்

September 7, 2025

ஜனாதிபதி அநுரவின்  கச்சதீவு விஜயம்

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தகராறுக்குரிய ஒரு பிராந்தியமாக கச்சதீவு இருந்திருந்தால் கடந்த வாரம் (செப்டெம்பர் 1) ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தரிசு நிலமாகக் கிடக்கும் அந்த தீவுக்கு மேற்கொண்ட முன்கூட்டியே அறிவிக்கப்படாத விஜயம் சர்ச்சை ஒன்று மூளுவதற்கு காரணமாக இருந்திருக்க முடியும்.  ஆனால்,  இலங்கைக்கு சொந்தமான  ஒரு  நிலப்பரப்புக்கு  அதன் ஜனாதிபதி செய்த விஜயம் அரசியல் மற்றும் இராஜதந்திர உரையாடல்களில் ஒரு பேசுபொருளாக கச்சதீவை மாற்றியிருக்கிறது. 

இந்திய அரசாங்கம் திசநாயக்கவின் கச்சதீவு விஜயம் குறித்து இதுவரையில் எந்தவிதமான பிரதிபலிப்பையும் வெளிக்காட்டவில்லை. ஆனால்,  இந்திய அரசியல் அரங்கிலும் ஊடகப்பரப்பிலும் பெருமளவில் விமர்சனரீதியான கருத்துக்கள்  முன்வைக்கப்படுகின்றன.  அந்த விஜயத்தின் மூலமாக இலங்கை ஜனாதிபதி எத்தகைய செய்தியை, யாருக்கு  கூறுவதற்கு முயன்றார் என்ற கேள்வியைச் சுற்றியவையாகவே அந்த கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. 

இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும்  அரசியல் அவதானியுமான  நிருபமா சுப்பிரமணியன் “இலங்கையின் ஒரு  தீவிடமிருந்து சமிக்கை” ( Signal From a Lankan island) என்ற தலைப்பில்  எழுதிய கட்டுரையில் ‘சீனாவில் ஜனாதிபதிகள் சி ஜின்பிங்குடனும் விளாடிமிர் புட்டினுடனும் கமராக்களுக்கு முன்னால் நின்று பிரதமர் நரேந்திர மோடி தோழமை  பாராட்டியபோது  இந்தியா வடக்கு நோக்கி கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த அதேவேளை, இந்தியாவின் தென்திசை அயல்நாடு புதுடில்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஆரவாரமின்றி  ஒரு செய்தியை அனுப்பியிருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மிகுந்த நல்லுறவு நிலவுகின்ற ஒரு நேரத்தில், அதுவும் கச்சதீவு தொடர்பில் புதுடில்லி எந்தப் பிரச்சினையையும் கிளப்பியிராத  வேளையில், புதுடில்லிக்கு ஒரு செய்தியை அனுப்ப வேண்டிய தேவை ஜனாதிபதி திசநாயக்கவுக்கு இருந்திருக்குமா என்ற கேள்வி எழுகிறது. 

ஆனால், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் இன்னமும் ஆறு மாதங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறவிருக்கும் பின்புலத்தில் மாநில அரசியல்வாதிகள் கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்கவேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் முனைப்புடன் முன்வைக்கத் தொடங்கியிருப்பதால்  அவர்களுக்கு ஒரு செய்தியைக் கூறுவதற்காக திசநாயக்க அந்த தீவுக்கு விஜயம் செய்திருக்கக்கூடும் என்ற ஒரு கருத்து இருக்கிறது. 

கச்சதீவுக்கு செல்வதற்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள்  மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி  திசநாயக்க அந்தத் தீவு இலங்கை மக்களுக்குச் சொந்தமானது என்றும் பலவந்தமாக அதை பறிக்க எவரையும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறினார். 

எது எவ்வாறிருந்தாலும், திசநாயக்கவின் கச்சதீவு விஜயம் அடையாளபூர்வமான கனதியொன்றைக் கொண்டிருக்கிறது. இந்தியாவுடன் உடன்படிக்கையை கைச்சாத்திட்டதன் மூலம்  கச்சதீவை இலங்கைக்கு சொந்தமாக்கிய முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க கூட கச்சதீவை பார்வையிட வேண்டும் என்று அக்கறை காட்டவில்லை. அவருக்கு பிறகு பதவிக்கு வந்த எந்தவொரு பிரதமரோ அல்லது ஜனாதிபதியோ கச்சதீவுக்கு விஜயம் செய்ததில்லை. இந்தியாவுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்க்கூடாது என்பதற்காகத்தான் அவர்கள் 285 சதுரகிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட அந்தத்தீவுக்கு விஜயம் செய்வதற்கு  அக்கறை காட்டாமல் இருந்தார்களோ  தெரியவில்லை.  அந்தத் தீவில் காலடிவைத்த முதல் இலங்கை அரச தலைவராக ஜனாதிபதி திசநாயக்க “வரலாற்றுப் பெருமையை” தனதாக்கிக் கொண்டிருக்கிறார்.

அவரின் அந்த விஜயம் குறித்து  அறிக்கையொன்றை வெளியிட்ட ஜனாதிபதி ஊடகப்பிரிவு “யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியான பல அங்குரார்ப்பண நிகழ்வுகள் மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்களில் இன்று (01) பங்கேற்றதை தொடர்ந்து ஜனாதிபதி அநுரா குமார திசநாயக்க  கச்சதீவுக்கு ஒரு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.  கடற்தொழில், நீரியல்வள மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, வடபகுதி கடற்படைத் தளபதி றியர் அட்மிறல் புத்திக்க லியனகமகே ஆகியோரும் ஜனாதிபதியுடன் அந்த விஜயத்தில் இணைந்து கொண்டனர்” என்று மாத்திரம் குறிப்பிட்டது.

பாக்குநீரிணையில் தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறல்களினால்  படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் வடபகுதி மீனவர்களுக்கு  தனது ஒருமைப்பாட்டை வெளிக்காட்டும் ஒரு “துணிச்சலான சமிக்கையாக” ஜனாதிபதி கச்சதீவுக்கு சென்றிருக்கக்கூடும் என்று  இன்னொரு கருத்து இருக்கிறது. ஆனால், வடபகுதி மீனவர்கள் தங்களது கரையோரங்களுக்கு தமிழ்நாட்டு மீனவர்கள்  நெருக்கமாக வந்து கடல் வளங்களைச் சூறையாடுவது குறித்து கவலைப்படுகிறார்களே தவிர, கச்சதீவைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இருப்பதாக  கூறமுடியாது. 

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கூறுவது போன்று கச்சதீவை மீண்டும் இந்தியா தனதாக்கிக் கொள்வதன்  மூலம் மாநில மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணமுடியும் என்றால், யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரையோரங்களுக்கு மாத்திரமல்ல, கிழக்கிலங்கை கரையோரத்துக்கும் நெருக்கமாக இந்திய மீனவர்கள் எதற்காக வருகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. 

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள்  குறித்து நிருபமா சுப்பிரமணியன் தனது கட்டுரையில் முன்வைத்திருக்கும் கருத்து மிகுந்த கவனத்துக்குரியது. 

“இழுவைப்படகுகள் போன்ற நீண்டகாலத்துக்கு பயன்படுத்த முடியாத மீன்பிடி முறைகளை தமிழ்நாட்டு மீனவர்கள் கடைப்பிடித்து வந்ததால், பாக்குநீரிணையின் இந்தியப் பக்கத்தில் இருந்த கடல் வளங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின்போது கண்டிப்பான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளின் விளைவாக யாழ்ப்பாண மீனவர்கள் கடலுக்கு செல்லாத காரணத்தால் பெருமளவு வளங்களை  கொண்டதாக இருந்த பாக்குநீரிணையின் இலங்கைப் பக்கம் இந்திய மீனவர்களை கவர்ந்திழுக்கிறது.

“அனேகமாக தினமும் இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் செய்கின்ற ஊடுருவல்கள் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதிலும் படகுகளையும் வலைகளையும் பறிமுதல் செய்வதிலும் வந்து முடிகிறது. ஆனால், மாற்று வாழ்வாதாரங்களை உருவாக்குவதில் அல்லது மீன்பிடித்துறையை பல்வகைப்படுத்துவதில் உள்ள பிரதான சவால்களை கையாளுவதற்கு பதிலாக, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தலைவர்கள் மீனவர்களின் சகல பிரச்சினைகளுக்கும் கச்சதீவே பதில் என்ற மாயையை ஊக்குவிக்கிறார்கள்.” என்று அவர் எழுதியிருக்கிறார்.

கச்சதீவை இந்தியா மீண்டும் சொந்தமாக்க  வேண்டும் என்று இரு பிரதான திராவிட இயக்கக் கட்சிகளின் அரசாங்கங்கள் இதுவரையில் நான்கு தீர்மானங்களை தமிழ்நாடு சட்டசபையில்  நிறைவேற்றியிருக்கின்றன. கச்சதீவு தொடர்பில் இலங்கையுடன் இந்தியா  செய்த உடன்படிக்கைக்கு எதிராக  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2008 ஆம் ஆண்டில்  உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் தற்போது அந்த வழக்கை தொடர்ந்து முன்னெடுக்கிறது. அந்த வழக்கு மீண்டும் செப்டெம்பர் 15 ஆம் விசாரணைக்கு வருகிறது.

இத்தகைய பின்புலத்தில்  சினிமா நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ஆகஸ்ட் 21 ஆம் திகதி மதுரையில்  தனது கட்சியின் மகாநாட்டில் கச்சதீவை  இலங்கையிடம் இருந்து மீட்டெடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

“இலங்கை கடற்படையின் தாக்குதல்களினால் இதுவரையில் சுமார் 800 தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதைக் கண்டிப்பதற்கு பெரிதாக எதையும் செய்யுமாறு நான் பிரதமர் மோடியைக் கேட்கவில்லை. மிகவும் சிறிய ஒரு விடயத்தை செய்யுமாறுதான் கேட்கிறேன். எமது மீனவர்களின் பாதுகாப்புக்காக இப்போதாவது கச்சதீவை இலங்கையிடமிருந்து பிரதமர் மீட்டெடுக்க வேண்டும்” என்று விஜய் கூறினார். 

இது தொடர்பாக கொழும்பில் செய்தியாளர்கள் மகாநாட்டில் கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் “தேர்தல்காலப் பேச்சு” என்று அதை  அலட்சியம் செய்தார். “தென்னிந்தியாவில் தேர்தல்கள் நடத்தப்படவிருக்கின்றன. வாக்குகளை பெறுவதற்காக தேர்தல் மேடைகளில் அரசியல்வாதிகள் பல்வேறு விடயங்களைக் கூறுவார்கள். இது முதற்தடவை அல்ல. முன்னரும் கூட கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்கவேண்டும் என்ற கோரிக்கைகள் தேர்தல் பிரசாரங்களின்போது முன்வைக்கப்பட்டன” என்று அவர்  கூறினார். 

ஜனாதிபதி திசநாயக்கவின் கச்சதீவு விஜயத்துக்கு பிறகு கடந்த வியாழக்கிழமை (4) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய அரசாங்க பேச்சாளரான சுகாதார அமைச்சர் நாலிந்த ஜயதிஸ்ஸ தென்னிந்திய அரசியல்வாதிகளுக்காக கூச்சல்களுக்காக  ஜனாதிபதி கச்சதீவுக்கு செல்லவில்லை என்றும் இலங்கைக்கு சொந்தமான அந்த தீவு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை  என்றும் குறிப்பிட்டார். 

தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை மக்களின் உணர்ச்சிகளை கிளறக்கூடிய கோரிக்கைகளை சிறிய உதிரிக்கட்சிகள் மாத்திரமல்ல, பிரதான  கட்சிகளும் கூட தேர்தல் காலங்களில் முன்வைக்கத் தவறுவதில்லை. இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினை போன்றவை அவற்றில் முக்கியமானவை. தேர்தல்கள் முடிவடைந்ததும்  அந்த கோரிக்கைகளின் உக்கிரம் தணிந்து விடுவதும் வழமை.

கடந்த வருடம் புதிதாக கட்சியை தொடங்கி அரசியலில் குதித்திருக்கும் நடிகர் விஜயை பொறுத்தவரை,  மற்றைய அரசியல்வாதிகளை விடவும் முற்றிலும் வேறுபட்டவராக தன்னை காண்பிக்க வேண்டிய அவசியம்  இருக்கிறது.  கச்சதீவு விவகாரத்தில் இந்திய மத்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக பல தடவைகள் அறிவித்திருக்கின்ற போதிலும் கூட,  மீனவர் சமூகத்தின் வாக்குகளைப் பெறுவதற்கான போட்டியில்  அந்தத் தீவை மீட்கவேண்டும் என்ற கோரிக்கையை  தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். 

திராவிட இயக்கத்துக்கு எதிரான தீவிரமான தமிழ்த் தேசியவாதியாக தன்னைக் காட்டிக் கொள்ளும் நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் தனது வழமையான  தான்தோன்றித்தனமான பாணியில் கச்சதீவை இந்தியாவிடமிருந்து மீட்காவிட்டால் தமிழ்நாடு மாநிலம் இந்தியாவில் இருந்து பிரிந்துசெல்ல நேரிடும் என்று எச்சரிக்கை  விடுத்திருக்கிறார். விஜயின் அரசியல் பிரவேசத்தின் விளைவாக தனது கட்சியின் மக்கள் ஆதரவில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என்று அஞ்சும் சீமானுக்கு இனத்துவ தேசியவாத  உணர்ச்சிகளை தூண்டிவிட  வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம்  இருப்பதாக தெரிகிறது. 

வழமையாக தமிழ்நாட்டு மாநிலக் கட்சிகளே கச்சதீவுப் பிரச்சினையை தேர்தல் காலங்களில் கிளறுவதை வழக்கமாகக் கொண்டிருந்த ஒரு போக்கில்  2024 லோக்சபா தேர்தல் பிரசாரங்கள் ஒரு குறிப்பிடத்தக்க  மாற்றத்தைக் கண்டன. இந்திய  பிரதமர் நரேந்திர  மோடியும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் கூட பாரதிய ஜனதாவுக்கு மாநில மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக  கச்சதீவுப் பிரச்சினை பயனபடுத்துவதில் அக்கறை காட்டினர். 

இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகவும் கருணாநிதி தமிழ்நாட்டு முதலமைச்சராகவும் இருந்த காலப்பகுதியிலேயே தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல்  கச்சதீவை இலங்கைக்கு விட்டுக் கொடுக்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய மோடியும்  ஜெய்சங்கரும் தமிழ்நாட்டு மீனவர்கள் பாக்குநீரிணையில் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காங்கிரஸும் திராவிட முன்னேற்றக் கழகமுமே முக்கிய காரணம் என்று தேர்தல் மேடைகளில் பேசினர்.

கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்த பிறகு கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் உடன்படிக்கை தொடர்பில் தேர்தல் பிரசாரங்களின்போது பிரச்சினை கிளப்பிய  முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே என்பது குறிப்பிடத்தக்கது. லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு அவர் கச்சதீவைப் பற்றி பேசியதாக செய்தி எதுவும் வந்ததாக இல்லை.

காங்கிரஸுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான பிரசாரத்துக்காக  கச்சதீவு உடன்படிக்கை பற்றி  மோடியும் ஜெய்சங்கரும் பேசினார்களே தவிர, அந்தத் தீவை மீட்டெடுப்பது  குறித்து எதுவும் பேசவில்லை. அடுத்த வருடம் ஏப்ரில் — மே மாதங்களில் நடைபெறவிருப்பதாக எதிர்பார்க்கப்படும் தமிழ்நாட்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் மோடி  கச்சதீவு விவகாரத்தை  மற்றைய கட்சிகளும் ஏட்டிக்குப் போட்டியாக பிரசாரங்களில்  பெருமளவுக்கு பயன்படுத்தக்கூடிய  சாத்தியம் இருக்கிறது. அதன் அறிகுறிகளை தற்போது இருந்தே காணக்கூடியதாக இருக்கிறது.

ஜனாதிபதி திசநாயக்கவின் கச்சதீவு விஜயம் மீண்டும் இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் தீவிரமடையக்கூடும் என்ற அச்சத்தை தமிழ்நாட்டின் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டங்களின் மீனவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருப்பதாக சில இந்தியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஜனாதிபதியின்  விஜயத்தை இலங்கை கடற்படையினர் கச்சதீவுக்கு அண்மையாக  மீன்பிடிக்கும்  இந்திய மீனவர்களை தாக்குவதற்கு கிடைத்திருக்கும் “இலவச அனுமதியாக” கருதாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்வதற்கு கொழும்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மீனவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்திய அரசாங்கத்தைக் கேட்டிருப்பதாக டெக்கான் ஹெரால்டசெய்தி வெளியிட்டிருந்தது.

திசநாயக்கவின் விஜயம் கச்சதீவை மீட்கவேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கைக்கு நேரடியான  ஒரு சவாலே தவிர வேறு ஒன்றுமில்லை என்று தமிழ்நாடு படகு  மீனவர்கள் சங்கத்தின் தலைவர்  என்.ஜே. போஸ் கூறியதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் இந்திய அரசாங்கம் எத்தகைய வியாக்கியானத்தை செய்யும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

https://arangamnews.com/?p=12304

தையிட்டி; மயிலிட்டி; கச்சதீவு ; செம்மணி - நிலாந்தன்

1 week 2 days ago

தையிட்டி; மயிலிட்டி; கச்சதீவு ; செம்மணி - நிலாந்தன்

facebook_1756788690892_73685058333649848“நாங்கள் கேட்டது சர்வதேச விசாரணையை. அனுர தருவது சர்வதேச விளையாட்டு மைதானத்தை”. என்று முகநூலில் ஒரு பதிவு காணப்பட்டது. தமிழ் மக்கள் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றைக்  கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் அரசாங்கமோ “இதோ உங்களுக்கு விளையாட்டு மைதானம்; இதோ உங்களுக்கு மயிலிட்டித் துறைமுகம்; இதோ உங்களுக்கு வட்டுவாகல் பாலம்” என்றிவ்வாறாக அபிவிருத்தித் திட்டங்களை முன்வைக்கின்றது.

அனுர அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட்டு இந்த மாதத்தோடு ஒராண்டு முடிகிறது. பதவியேற்ற ஓராண்டு காலப் பகுதிக்குள் வடக்கிற்கு அதிக தடவைகள் வருகை தந்த ஒரே ஜனாதிபதியாக அவர் காணப்படுகிறார். கடந்த கிழமை அவர் வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களையும் தொடக்கி வைத்துள்ளார். இடையில் ஒரு சாகசப் பயணமாக கச்சதீவுக்கும் போய் வந்திருக்கிறார்.

கடந்த ஓராண்டு கால பகுதிக்குள் வடபகுதிக்கு மட்டும் 1250 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் முல்லைத்தீவில் வைத்துச் சொன்னார். கடந்த கிழமை வடக்கில் அவர் மண்டை தீவில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கான அடிககல்லை நாட்டினார். மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திக்கான வேலைகளையும் தொடக்கி வைத்தார். யாழ்.நூலகத்தை டிஜிட்டல் தளத்தில் நுகர்வதற்குரிய வேலைகளையும் தொடக்கி வைத்தார். யாழ்ப்பாணத்தில் ஒரு கடவுச்சீட்டு அலுவலகத்தையும் திறந்து வைத்தார். வன்னியில் தெங்கு முக்கோணத் திட்டம் ஒன்றை தொடக்கி வைத்தார். வவுனியாவில் 7 ஆண்டுகளுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த மத்திய பொருளாதாரம் மையத்தைத் திறந்து வைத்தார். முல்லைத்தீவில் வட்டுவாகல் பாலத்தைப் புதிதாகக் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.”உங்களுக்கு ஒரு சக்தி வாய்ந்த பொருளாதாரத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு. அந்தப் பொறுப்பை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று முல்லைத்தீவில் வைத்து அனுர கூறினார்.

அபிவிருத்தி வேண்டும். அதில் சந்தேகமில்லை. போரால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி மக்கள் தொடர்ந்து அந்த பாதிப்பில் இருந்து விடுபடாதவர்களாக காணப்படுகிறார்கள். அவர்கள் தங்களைப் பொருளாதார ரீதியாக பலப்படுத்த வேண்டும். எனவே அபிவிருத்தி வேண்டும்.

ஆனால் தமிழ் மக்கள் போராடியது அபிவிருத்திக்காக அல்ல. அபிவிருத்தி செய்வதற்கான கூட்டு உரிமைகளுக்காகத்தான். அபிவிருத்தி என்பது ஒரு சமூகம் அதன் நோக்கு நிலையில் இருந்து செய்ய வேண்டியது. அது அதன் நோக்கு நிலையிலிருந்து அபிவிருத்தியைத் திட்டமிடுவதற்கு அவசியமான கூட்டு உரிமைகளைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் தனது கடலின் மீதும், துறைமுகங்களின் மீதும்,காட்டின் மீதும்,நிலத்தின் மீதும் அதன் வளங்களின் மீதும் அதிகாரத்தைக் கொண்டிராத ஒரு மக்கள் கூட்டமானது தனக்குரிய அபிவிருத்தியைத்  தானே திட்டமிட முடியாது.

அபிவிருத்தி செய்வதற்கான கூட்டு உரிமைகளை உறுதிப்படுத்தாமல் அபிவிருத்தியை முன்னெடுப்பது என்பது இனப்பிரச்சினையை ஒரு பொருளாதாரப் பிரச்சினையாக வியாக்கியானப்படுத்தும் ஓர் உத்திதான்.

எதை அபிவிருத்தி செய்வது? எப்பொழுது செய்வது? எப்படிச் செய்வது? யாரிடம் உதவி எடுப்பது? போன்ற எல்லாவற்றையும் திட்டமிடுவதற்கும் செயற்படுத்துவதற்கும் தமிழ் மக்களுக்கு உரிய கூட்டுஉரிமைகள் வேண்டும். அந்தக் கூட்டு உரிமைகள் அதாவது அரசியல் உரிமைகளைக் கேட்டுத்தான் தமிழ் மக்கள் போராடினார்கள்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு வரும் வரையிலும் அதாவது தமிழ் மக்களின் கூட்டு உரிமைகள் உறுதி செய்யப்படும் வரையிலும் அபிவிருத்தியைச் செய்யாமல் இருக்க முடியாது என்பதனை கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் தமிழ்மக்கள் தமது கூட்டுரிமைக்கான கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் தமிழ் மக்களிடம் எப்பொழுதும் இருக்கும்.

facebook_1756728601892_73682538018335980

அனுர அவருடைய யாழ்ப்பாண விஜயத்தின்போது தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு தெரியாமல் தனது நண்பர் ஒருவரின் வீட்டில், தட்டாதெருவில் தங்கியிருக்கிறார். இதற்கு முதல் முறை யாழ்ப்பாணம் வந்த பொழுது அவர் குருநகர் மத்தியூஸ் வீதியில் உள்ள க்யூடெக் அலுவலகத்திற்கு சற்று நேரே உள்ள ஒரு நண்பரின் வீட்டில்தான் இளைப்பாறிக் ,குளித்து உடைமாற்றிக் கொண்டு சாப்பிட்டார். கடந்த கிழமை புதுக்குடியிருப்புக்குச் சென்ற போது அங்கே தன்னுடைய கட்சிக்காக உழைக்கும் ஒருவருடைய வீட்டில் மதிய உணவை எடுத்தபின் அந்த வீட்டுக் குழந்தையைத் தூக்கிவைத்துக் கொண்டு ஒரு படம் எடுத்துக் கொண்டார். பொதுவாக வடக்குக்கு வரும் ஜனாதிபதிகள் இங்குள்ள உயர்தர விடுதிகளில்தான் தங்குவார்கள். பாதுகாப்பு ஒரு காரணமாகக் கூறப்படும். ஆனால் அனுர தன் பழைய நண்பர்களைத் தேடிச் சென்று அவர்களுடைய வீடுகளில் தங்குகிறார்; உணவருந்துகிறார்; குளித்து உடுப்பு மாற்றிக் கொள்கிறார். சிங்கள மக்கள் மத்தியில் அவர் ஒரு எளிமையான, எளிதில் கிடைக்கக்கூடிய தலைவர் என்ற அபிப்பிராயம் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டு விட்டது. தமிழ் மக்கள் மத்தியிலும் அப்படி ஒரு பிம்பத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கிறார்.

அவர் எந்தப் பிம்பத்தை கட்டியெழுப்பினாலும் இறுதியாக நிலைக்கப் போகும் பிம்பம் எது என்பதை இனப்பிரச்சினைக்கான அவருடைய தீர்வு எது என்பதுதான் தீர்மானிக்கப் போகிறது.

தேசிய மக்கள் சக்தி,தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனை அதன் தேர்தல் பிரச்சாரங்களிலும் அதன் தேர்தல் அறிக்கையிலும் காண முடிந்தது. தமிழ் மக்களை ஒரு தேசிய இனமென்று ஏற்றுக்கொண்டால்தான் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அவர்கள் தங்களைத் தாங்களே அபிவிருத்தி செய்யத் தேவையான  கூட்டு உரிமைகளை ஏற்றுக்கொள்ளலாம்.

உதாரணமாக மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட விரிவாக்கம். மயிலிட்டித் துறைமுகம் எனப்படுவது ஒரு காலம் இலங்கைத்தீவின் முன்னணி கடல் வாணிபத் துறைமுகமாக விளங்கியது. தமிழ் மக்கள் நீண்ட கடல் எல்லையைக் கொண்டவர்கள். போருக்கு முன்பு தீவின் மொத்தக் கடலுணவில் கிட்டத்தட்ட 40 விகிதம் வடக்கிலிருந்தே கிடைத்தது. வடக்கில் மயிலிட்டிதான் முன்னணித் துறைமுகமாகக் காணப்பட்டது. போரில் அது உயர் பாதுகாப்பு வலையத்துக்குள் விழுங்கப்பட்டது. விளைவாக மயிலிட்டி அதன் சோபையை, பொலிவை இழந்து விட்டது. அதன் மக்கள் இடம்பெயர்ந்து, புலம்பெயர்ந்து மெலிந்து போய்விட்டார்கள். தொடர்ச்சியான இடப்பெயர்களால் ஒரு தலைமுறை அதன் பாரம்பரிய தொழில் தொடர்ச்சியை,தொழில் திறன்களின் தொடர்ச்சியை இழந்து வருகிறது. இப்படிப்பட்டதோர் பின்னணியில் மயிலிட்டி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்தியை ஜனாதிபதி தொடக்கி வைத்திருக்கிறார்.

.ஆனால் மயிலிட்டி அமைந்திருக்கும் அதே பிரதேசத்தில் சில கிலோமீட்டர் தொலைவில்தான் தையிட்டி அமைந்திருக்கிறது. அங்கு கட்டப்பட்டிருக்கும் ஒரு விகாரையானது சிங்கள பௌத்த மயமாக்கலின்,நிலப் பறிப்பின் ஆகப்பிந்திய குறியீடாக நிற்கிறது. தையிட்டி விகாராதிபதி மயிலிட்டியில் நடந்த வைபவத்துக்கு வருவாராக இருந்தால் அது ஒரு விவகாரமாக மாறும் என்று கருதியதனால் அந்த வைபவத்துக்கு எந்த மதத் தலைவர்களும் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் மண்டைதீவில் வைத்து  அனுர தையிட்டி விகாரதிபதியிடம் ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

மயிலிட்டியில் அபிவிருத்தி;தையட்டியில் நிலப்பறிப்பும் சிங்கள பௌத்தமயமாக்கலும். இது தற்செயலான முரண்பாடு அல்ல. இவை இரண்டுமே ஒரே நோக்கத்தை கொண்ட அரசு இயந்திரத்தின் இரு வேறு செயற்பாடுகள்தான். ஒன்று வெளிப்படையாக ஆக்கிரமிப்பைச் செய்கின்றது. தமிழ் மக்களுக்கு அவர்களுடைய நிலத்தின் மீதும் கடலின் மீதும் உரிமை இல்லை என்பதனை அது நிரூபிக்கின்றது. இன்னொன்று தமிழ் மக்களை  அபிவிருத்திக்குள் கரைத்து விட முயற்சிக்கின்றது. அதனால்தான் திரும்பத்திரும்பக் கூறவேண்டியிருக்கிறது,தமிழ் மக்கள் கேட்பது அபிவிருத்தியை அல்ல.அபிவிருத்தி செய்வதற்கான கூட்டு உரிமைகளை என்று.

கடந்த வாரம் அனுர யாழ்ப்பாணத்தில் நின்ற அன்று செம்மணியில் ஏழு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. செம்மணிப்  புதைகுழியை உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்கான ஒரு களமாக அரசாங்கம் கையாண்டு வருகிறது. புதுக்குடியிருப்பில் அனுர ஒரு சிறு பிள்ளையைத் தூக்கி வைத்துக்கொண்டு படம் எடுத்திருக்கிறார். அதுபோல ஒரு சிறு பிள்ளையை அணைத்தபடி செம்மணியில் ஒரு தாய் புதைக்கப்பட்டார். அந்தத் தாய்க்கும் குழந்தைக்கும் நீதி கிடைத்தால்தான் புதுக்குடியிருப்பில் அனுர எடுத்த படத்துக்கு ஒரு வரலாற்றுப் பெறுமதியிருக்கும். இல்லையென்றால் அது வரலாற்றின் குப்பை கூடைக்குள் எறியப்பட்டுவிடும். ஏனென்றால் “வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி” என்று மார்க்சிஸ்டுக்கள் கூறுவார்கள்.

https://www.nillanthan.com/7726/

செம்மணியின் பின்னணியில் ஐநா கூட்டத் தொடர் – நிலாந்தன்.

1 week 3 days ago

semmani950-800x450-1.jpg?resize=750%2C37

செம்மணியின் பின்னணியில் ஐநா கூட்டத் தொடர் – நிலாந்தன்.

ஐநாவின் அறுபதாவது கூட்டத்தொடர் இம்மாதம் எட்டாம் தேதி அதாவது நாளை ஆரம்பமாகிறது. இக்கூட்டத் தொடரில் அதிசயங்கள் அற்புதங்கள் நிகழ்வதற்கு இடமில்லை.ஏனென்றால் ஈழத் தமிழர்களின் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் ஐநா அதிசயங்களும் அற்புதங்களும் நிகழ்வதற்குரிய ஒரு களம் அல்ல.போராடும் மக்கள் மத்தியில்தான் அதிசயங்களும் அற்புதங்களும் நிகழும்.

எனினும், எல்லாவிதமான வரையறைகளோடும், தமிழ் மக்களுக்கு என்று கடந்த 16 ஆண்டுகளாக திறந்து வைக்கப்பட்டிருக்கும் ஒரே அனைத்துலக அரங்கு மனித உரிமைகள் பேரவைதான். அந்த மனித உரிமைகள் பேரவைக்குள் காலை ஊன்றிக் கொண்டுதான் தமிழ் மக்கள் அடுத்த கட்டத்திற்கு பாயலாம். ஐநாவுக்கு கூட்டுக் கடிதம் எழுதும் ஒரு சந்திப்பின்போது சிவாஜிலிங்கம் அதை ஓர் உவமையோடு சுட்டிக்காட்டியிருந்தார். மனித உரிமைகள் பேரவையை முற்றாக நிராகரிக்க முடியாது. ஏனென்றால் நாங்கள் பாயப் போகிறோம் என்று சொன்னால் எங்கேயாவது ஒரு காலை ஊன்ற வேண்டும்.ஒரு காலை ஊன்றினால்தான் பாயலாம்.இப்போதைக்கு மனித உரிமைகள் பேரவைதான் எங்களுக்குத் தளம். எனவே அதில் ஊன்றியிருக்கும் காலையும் எடுத்து விட்டால் நாங்கள் விழுந்து விடுவோம் என்று சிவாஜி சொன்னார்.

மனித உரிமைகள் பேரவையில் கடந்த நான்கு ஆண்டுகளாக சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது. அது தொடர்பாக தமிழ் மக்களுக்கு விமர்சனங்கள் உண்டு.எனினும் அந்த அலுவலகத்தின் அடுத்த கட்டம் தொடர்பாக இந்தமுறை கூட்டத் தொடரில் தீர்மானிக்கப்படும்.ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வந்து சென்றிருக்கும் ஒரு பின்னணியில்,அவர் இங்கு அவதானித்தவற்றின் தொகுப்பாகவும் ஐநாவின் நடவடிக்கைகள் அமையும்.

அனுர அரசுத் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டு ஓராண்டு முடியும் ஒரு மாதத்தில் ஐநாவின் 60ஆவது கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த அரசாங்கம் தனக்கு தமிழ் மக்களின் ஆணையும் இருப்பதாகக் கூறிக் கொள்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனக்குக் கிடைத்த ஏழு ஆசனங்களையும் அது தமிழ் மக்கள் தனக்கு வழங்கிய ஆணை என்று ஐநாவிலும் உலக அளவிலும் புதுடில்லியிலும் கூறி வருகிறது. ஐநாவும் புதிய அரசாங்கத்தின் கழுத்தை நெரிப்பதற்குப் பதிலாக அதற்க ஒரு சந்தர்ப்பத்தை வழங்கலாம் என்று சிந்திப்பதாகத் தெரிகிறது. இலங்கை வருகையின் பின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவிக்கும் கருத்துக்கள் அவ்வாறு கருதத்தக்கவையாக உள்ளன.

இவ்வாறு ஐநா இலங்கைக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கலாம் என்று சிந்திக்கும் ஒரு காலகட்டத்தில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது கடந்த ஓராண்டு காலப்பகுதிக்குள் பொறுப்புக் கூறல் தொடர்பில் என்னென்ன செய்திருக்கிறது ?

முதலாவதாக, அவர்கள் செம்மணிப் புதை குழியும் உட்பட எல்லாப் புதைகுழிகளின் விசாரணைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். இந்த விடயத்தில் அரசாங்கம் உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்கான ஒரு வாய்ப்பாக செம்மணியைப் பார்க்கின்றது.

இரண்டாவதாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இந்த மாதம் நீக்கப்போவதாக ஒரு தகவல் வெளிவந்திருக்கிறது.எனினும் இக்கட்டுரை எழுதப்படும் நாள்வரையிலும் அதுதொடர்பாக உத்தியோகபூர்வமான அறிவிப்புகள் எவையும் வெளி வந்திருக்கவில்லை.

மூன்றாவதாக,ஊழலுக்கு எதிரான கைது நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.இதுவரை 70 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் அவர்களுக்குள் முன்னாள் ஜனாதிபதி ரணிலும் உட்பட முன்னாள் அமைச்சர்கள்,பிரபல அரசியல்வாதிகள்,படைத்துறைப் பிரதானிகள்,காவல்துறைப் பிரதானிகள்,உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளோடு தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படுகின்ற பாதாள உலகத் தலைவர்கள் போன்ற பலரும்அடங்குவர்.

இக்கைது நடவடிக்கைகளின் மூலம் நாடு ஊழலுக்கு எதிராகத் துணிச்சலாக முன்னேறி வருகிறது என்ற ஒரு தோற்றத்தை அரசாங்கம் கட்டி எழுப்பி வருகிறது.இதுவும் ஐநாவில் அரசாங்கம் காட்டக்கூடிய ஒரு வீட்டு வேலையாக இருக்கும்.

நாலாவதாக,அரசாங்கம் அதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களையும் தொடங்கியிருக்கிறது.இவ்வாறு தொடங்கப்பட்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்களில் சர்வதேச விளையாட்டு மைதானம், வட்டுவாகல் பாலத்தைப் புதிதாகக் கட்டுவது, தெங்கு முக்கோணத் திட்டம், வவுனியா,மத்திய பொருளாதாரம் மையத்தைத் திறந்து வைத்தமை, யாழ்ப்பாணத்தில் ஒரு கடவுச்சீட்டு அலுவலகத்தைத் திறந்தமை, மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம்கட்ட அபிவிருத்தியைத் தொடக்கி வைத்தமை,யாழ் பொதுசன நூலகத்தை டிஜிட்டல் தளத்தில் நுகர்வதற்குரிய ஏற்பாடுகளைத் தொடக்கி வைத்தமை ….போன்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களும் அடங்கும். இந்த அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் அரசாங்கம் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகப் பாரபட்சமின்றி உழைக்கிறது என்ற ஒரு தோற்றத்தை வெளியே காட்ட முடியும்.

அனுர ஜனாதிபதியாகத் தெரிவு தெரிவு செய்யப்பட்ட ஓராண்டுக்குள் அவர் தமிழ் மக்களுக்குச் செய்தவற்றின் பட்டியல் ஒன்றை அரசாங்கம் ஐநாவில் காட்ட முடியும். மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அரசாங்கத்துக்கு வாய்ப்புகளை வழங்கலாம் என்று சிந்திக்கின்ற ஒரு ராஜதந்திரச் சூழலில் அரசாங்கம் மேற்கண்டவாறு ஐநாவை நோக்கி ஒரு தொகுதி வீட்டு வேலைகளைச் செய்து வருகிறது.

இதுவரையிலுமான கைது நடவடிக்கைகளில் போர்க் குற்றங்கள் அல்லது தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களோடு தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் அநேகமாக இல்லை. ஒரு கடற்படை பிரதானி கைது செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் தென்னிலங்கையில் இடம்பெற்ற ஒரு கடத்தல் சம்பவத்தோடு தொடர்புடையது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் மீதான குற்றச்சாட்டுகளில் நேரடியாகப் போர் குற்றங்கள் சம்பந்தப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

தவிர,ரணில் விக்கிரமசிங்கவின் கைது நடவடிக்கையின்போது அவரை 40 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்து இருந்திருக்க வேண்டும் என்ற பொருள்பட அமைச்சர் விஜித ஹேரத் யாழ்ப்பாணத்தில் வைத்துச் சொன்னார். அதன் பொருள் என்னவென்றால், 40 ஆண்டுகளுக்கு முன்பு போர்க்காலத்தில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் எதிராக அவர் அங்கம் வகித்த அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்திருக்க வேண்டும் என்பதாகும்.

ஆனால் ரணில் அண்மையில் கைது செய்யப்பட்டது அவ்வாறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அல்ல. பொதுச் சொத்தைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில்தான்.

எனவே தொகுத்துப் பார்த்தால் இதுவரை கைது செய்யப்பட்ட 70க்கும் அதிகமானவர்களில் யாருமே போர்க் களத்தில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

எனவே இப்பொழுது நடக்கும் கைது நடவடிக்கைகள் நாட்டின் ஒட்டுமொத்த ஊழல் கட்டமைப்புக்கு எதிரானவைகளாகத்தான் காணப்படுகின்றன. ஐநாவில் ஏற்கனவே இயங்கி வருகின்ற சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் கட்டமைப்பினால் இனங்காடப்பட்ட படைப்பிரதானிகளுக்கு எதிரானவைகள்கூட அல்ல.அவ்வாறு அடையாளம் காணப்பட்ட சில படைப் பிரதானிகளுக்கு எதிராக ஏற்கனவே கனடா,அமெரிக்கா,பிரித்தானியா போன்றன பயணத் தடைகளை விதித்து, நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. ஆனால் அரசாங்கமோ அவர்களுக்குப் பொறுப்புகளை வழங்கி வருகிறது.

எனவே நாட்டில் தற்பொழுது இடம்பெறும் பெரும்பாலான கைது நடவடிக்கைகள் தமிழ் நோக்கு நிலையில் ஐநாவின் பொறுப்புக்கூறும் செய்முறைகளின் பிரதான பகுதிக்குள் வரவில்லை.அதை ஒரு வீட்டு வேலையாக அரசாங்கம் ஐநாவில் காட்ட முடியாது.ஆனால் உள்நாட்டு நீதியின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு அவை அரசாங்கத்திற்கு உதவும்.

எனவே கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வரும் திருப்பகரமான மாற்றங்களில் ஐநாவில் காட்டக்கூடிய மாற்றங்கள் ஒப்பீட்டளவில் குறைவுதான்.தமிழ் நோக்கு நிலையில் இருந்து உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியிருக்கும்.

“அரசாங்கம் போர் வீரர்களை வேட்டையாடுகிறது” என்ற பொருள்பட நாமல் அண்மையில் எச்சரித்திருந்தார்.இந்த எச்சரிக்கையானது அரசாங்கம் அதன் கைது நடவடிக்கைகளில் எதுவரை போகலாம் என்பதை உணர்த்தும் நோக்கிலானது. எது எவ்வாறு இருப்பினும்,ஜெனிவா கூட்டத்தொடரில் இம்முறை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பலவீனமாக இல்லை என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் தமிழ்த் தரப்பு?

இதுவரை நான்குக்கும் குறையாத கடிதங்கள் ஐநாவுக்கு போயிருக்கின்றன. ஒரு கடிதம், தமிழ் தேசிய பேரவையும் சிவில் சமூகங்களும் இணைத்து அனுப்பியது. இரண்டாவது கடிதம், தமிழரசுக் கட்சி அனுப்பியது. மூன்றாவது கடிதம் தமிழ்த் தேசியப் பேரவையின் கடிதத்தில் போதாமைகள் உண்டு என்று கூறி புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒருவரும் தாயகத்தில் உள்ள அவருடைய சிவில் சமூக நண்பர்களும் இணைந்து தமிழ்ப் பொது வேட்பாளர் உட்பட சில அரசியல்வாதிகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டு அனுப்பிய ஒரு கடிதம். நாலாவது கடிதம் பிரித்தானியத் தமிழர் பேரவை அனுப்பியது.

இப்படியாக நான்குக்கும் குறையாத கடிதங்கள் ஐநாவை நோக்கிப் போயிருக்கின்றன.அரசில்லாத சிறிய தேசிய இனமாகிய தமிழ் மக்கள் தங்களுக்குள் ஐக்கியப்படாமல் கட்சிக்கொரு கடிதம் சிவில் சமூகத்துக்கு ஒரு கடிதம் என்று “ஈகோ”க்களாகப் பிரிந்து போய் நிற்கிறார்கள்.

செம்மணி எதிர்பாராத புதிய வாய்ப்புகளைத் தமிழ் மக்களுக்குத் திறந்து விட்டுள்ளது.அதேசமயம் அரசாங்கத்திற்கு அது எதிர்பாராத ஒரு சோதனைக் களம்.ஆனால் அந்தச் சோதனைக் களத்தை அரசாங்கம் ஒருமுகமாக எதிர்கொள்கிறது அந்த விடயத்தில் அரசாங்கம் உள்நாட்டு நீதியின் நம்பகத் தன்மையைப் பலப்படுத்துகிறது என்ற ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்பப் பயன்படுத்தி வருகிறது. ஆனால் செம்மணி திறந்து வைத்திருக்கும் புதிய வாய்ப்புகளைத் தமிழ்த் தரப்பு எவ்வாறு கையாளப் போகின்றது? அதுவும் ஜெனிவா கூட்டத் தொடர் நாளை தொடங்கும் பொழுது?

செம்மணிக்கு நீதி கேட்டும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் அனைத்துலக விசாரணையைக் கேட்டும் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றன. அது வரவேற்கத்தக்கது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த விடயத்தை முன்னெடுத்து வருகிறது. அதில் கட்சி பேதமின்றி தமிழரசுக் கட்சியும் உட்பட அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.அது வரவேற்கத்தக்க விடயம். ஐநா கூட்டத் தொடருக்கு சில கிழமைகளுக்கு முன்னராவது அப்படி ஒரு ஞானம் உதித்ததைப் பாராட்ட வேண்டும்.ஐநா கூட்டத் தொடர்களில் தேசிய மக்கள் சக்திக்கு அனுகூலமான நிலைமைகள் அதிகமிருக்கும் ஒரு ராஜதந்திரச் சூழலில் தமிழ்த் தரப்பு அவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவதுதான் பலமானது பொருத்தமானது.

Athavan News
No image previewசெம்மணியின் பின்னணியில் ஐநா கூட்டத் தொடர் - நிலாந்தன்.
ஐநாவின் அறுபதாவது கூட்டத்தொடர் இம்மாதம் எட்டாம் தேதி அதாவது நாளை ஆரம்பமாகிறது. இக்கூட்டத் தொடரில் அதிசயங்கள் அற்புதங்கள் நிகழ்வதற்கு இடமில்லை.ஏனென்றால் ஈழத் தமிழர்களின் நோக்கு நிலையில் இருந்து பார்த்த

ஈழத்தமிழரின் அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் - சி. அ. யோதிலிங்கம் | தொடர்

1 week 4 days ago

1833 – 1921 வரையான காலகட்டம்: தமிழ்த் தலைவர்களும் இலங்கை தேசிய காங்கிரசும்

April 18, 2025 | Ezhuna

1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது

உதவி : ஜீவராசா டிலக்ஷனா

இலங்கையில் ஒரு பொதுவான நிர்வாக முறையையும், சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சியையும், தாராண்மை ஜனநாயக அரசாங்க முறையையும் நிலைநிறுத்துவதற்காக கோல்புறூக்கமரன் குழுவினர் 1829 ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி இலங்கை வந்தனர். இவர்களில் கோல்புறூக் குழுவினர் அரசியல் சீர்திருத்தத்தையும், கமரன் குழுவினர் நீதிச் சீர்திருத்தத்தையும் சிபாரிசு செய்தனர். 1831 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி கோல்புறூக் குழுவினர் தமது அறிக்கையைச் சமர்ப்பித்தனர். தமது அறிக்கையைச் சமர்ப்பிக்க பல்வேறு வழிகளில் பொருளாதார, சமூக, நிர்வாகம் பற்றிய தகவல்களைப் பெற்றனர். அரச ஊழியர்களிடம் கேள்விக்கொத்துகளை வழங்கி தகவல்களைப் பெற்றதுடன், பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று மக்கள், மதகுருமார்களுடன் கலந்துரையாடியும் தகவல்களைப் பெற்றனர். இவர்களினால் சிபாரிசு செய்யப்பட்ட கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் 1833 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது. கோல்புறூக் அரசியல் சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்களாக:

  1. சட்டசபை அறிமுகம் செய்யப்பட்டமை.

  2. சட்ட நிர்வாக சபை அறிமுகம் செய்யப்பட்டமை.

  3. மாகாணங்கள் ஐந்தாகக் குறைக்கப்பட்டமை.

  4. ஆங்கிலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டமை.

  5. இராஜகாரியமுறை நீக்கப்பட்டமை.

  6. கட்டற்ற வர்த்தகம் அறிமுகம் செய்யப்பட்டமை.

  7. இலங்கை முழுவதும் ஒரே நிர்வாகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டமை.

  8. தேசாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டமை.

  9. அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமை.

  10. கிராமசபை அதிகாரங்கள் குறைக்கப்பட்டமை.  

என்பவற்றைக் குறிப்பிடலாம்.

தமிழர்கள் உட்பட ஏனைய சமூகங்கள் அரச அதிகாரக் கட்டமைப்புக்கு வெளியே தூக்கி வீசப்பட்டனர். அவர்கள், வரலாறு வழியாக கட்டங்கட்டமாகத் தூக்கிவீசப்பட்ட ஒரு செயற்பாடு நடைமுறையில் நிகழ்ந்திருக்கின்றது. இதற்கு எதிரான போராட்டமே தமிழர்களின் விடுதலைப் போராட்டம்.

இலங்கையில் பிரித்தானியர்களின் கைகளில் இருந்த ஆட்சி அதிகாரங்கள் அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் ஊடாகவே இலங்கையர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டது. 1833 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கைமாற்றம் 1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு அரசியல் யாப்பு அறிமுகத்துடன் முடிவுக்கு வந்தது. இதிலிருந்து, இலங்கையர்களின் அரசியல் யாப்பு வரலாறு என்பது தமிழ் மக்களை ஆட்சி அதிகாரக் கட்டமைப்பிலிருந்து தூக்கிவீசிய வரலாறாக இருக்கின்றது. 1833 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கைமாற்றம் 1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்புடன் அரைப்பொறுப்பாட்சியை வழங்குவதாகவும், 1947 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்புடன் முழுப்பொறுப்பாட்சியை வழங்குவதாகவும், 1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்புடன் பேரளவு அதிகாரங்களைக்கூட கைவிடுவதாகவும் அமைந்திருந்தது.

முதலாவது காலகட்டத்தில் தமிழர்கள் ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் பாரதூரமான விளைவுகளைப் புரிந்திருக்கவில்லை. ஆட்சி அதிகாரங்கள் ஆங்கிலேயரின் கைகளில் இருந்தமையினால் ஒடுக்குமுறைகளைத் தொட்டுணரக்கூடிய சூழலும் இருக்கவில்லை. இதனால் முதலாவது காலகட்டத்தில் தமிழர்களின் அரசியல் என்பது அரசியல் தளத்தில் இலங்கையர் என்ற அடையாளத்தையும், பண்பாட்டுத்தளத்தில் தமிழர்கள் என்ற அடையாளத்தையும் பேணுவதாக இருந்தது.

I-2-19.jpg

அன்று தமிழர்களின் தலைவர்களாக இருந்தவர்களும், தமிழர்களுக்கு மட்டும் தலைவர்களாக இருக்கவில்லை, முழு இலங்கைக்கும் தலைவர்களாக இருந்தனர். குறிப்பாக அதில் மூன்று பேர் முக்கியமானவர்கள். இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதில் முதலாவது நபர் சேர். முத்துக்குமாரசாமி. இவர் சேர். பொன்னம்பலம் இராமநாதனின் தாய் மாமன் ஆவர். இவர்தான் முதன்முதலாக ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துக் கருத்துகளைக் கூறியவர். இவரிடம் ஆசிய தேசியவாதம் காணப்பட்டது. இவருடைய மகன்தான் கலாயோகி ஆனந்தக் குமாரசுவாமி. அவர் பண்பாட்டுத்தளத்தில் ஆசிய அடையாளத்தை நிலைநிறுத்திய ஒருவராக விளங்கினார். இரண்டாமவர் சேர். பொன்னம்பலம் இராமநாதன்.  மூன்றாமவர் சேர். பொன் அருணாசலம். இவர் சேர். பொன் இராமநாதனின் இளைய சகோதரனாவார்.

கோல்புறூக் சட்டசபை

கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம்மூலம் இலங்கையில் முதன்முதலாக சட்டசபை உருவாக்கப்பட்டது. இதில் 15 பேர் அங்கம் வகித்தனர். இவர்களில் 9 பேர் உத்தியோகப்பற்றுள்ள அங்கத்தவர்களாகவும், 6 பேர் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களாகவும் விளங்கினர். உத்தியோகப்பற்றுள்ள அங்கத்தவர்கள் அந்தந்த உத்தியோகங்களை வகிப்பதன் ஊடாக சட்டசபையில் அங்கம் வகித்தனர். உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்கள் மக்களின் பிரதிநிதிகளாக விளங்கினர்.

  • ஐரோப்பியர்  – 3       

  • சிங்களவர் – 1         

  • தமிழர் – 1        

  • பறங்கியர் – 1

என்றவகையில் இப்பிரதிநிதித்துவம் அமைந்திருந்தது. தமிழர் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டவர் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி ஆவார். இவர் சேர். பொன் இராமநாதனின் தாயின் தந்தை ஆவார். தேசாதிபதியின் மொழிபெயர்ப்பாளராக இருந்த இவரை இராஜினாமாச் செய்யவைத்த தேசாதிபதி, மக்கள் பிரதிநிதியாக நியமித்தார். உத்தியோகப்பற்ற அங்கத்தவர்கள் அனைவரையும் தேசாதிபதியே நியமித்தார்.

கோல்புறூக் குழுவினர் இலங்கையின் பன்முகச் சமூகத்தன்மையை அடையாளம் கண்டனர். இதனாலேயே பல இனத்தைச் சேர்ந்தவர்களும் சமமான வகையில் பிரதிநிதித்துவத்தைப் பெறும்வகையில் இனவாரிப் பிரதிநிதித்துவமுறையை அறிமுகம் செய்தனர். இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இனவாரிப்பிரதிநிதித்துவ முறையை முன்வைத்தனர் எனலாம்.

உண்மையில் இதனை அடுத்த கட்டத்திற்கு வளர்த்திருக்க வேண்டும். அந்த அடுத்த கட்டம் என்பது மரபுரீதியாக தனித்தன்மைவாய்ந்த இனங்கள் அதிகாரக் கட்டமைப்பில் தங்களது சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்கக்கூடிய வகையில் பங்குபெறுவதாக இருந்திருக்க வேண்டும். 1889 வரை தமிழர்களையும் முஸ்லிம்களையும் தமிழ்ப்பிரதிநிதியே பிரதிநிதித்துவப்படுத்தினார். தங்களை தமிழ்ப்பிரதிநிதி பிரதிநிதித்துவப்படுத்துவதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் 1889 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு என தனியான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. அந்த அடிப்படையில் ‘காசிம் அப்துல் ரகுமான்’ தேசாதிபதியால் நியமிக்கப்பட்டார்.

ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி

ஆ. குமாரசுவாமி பருத்தித்துறைக்கு அண்மையில் உள்ள கெருடாவில் கிராமத்தில் 1783 ஆம் ஆண்டு பிறந்தார். கொழும்புக்கு அவர் வந்தபோது இவரது பண்புமிக்க நடத்தை, திறமை, வியாபார நுண்ணறிவு என்பனவற்றினால் நகரத்தின் முன்னணித் தமிழர்களின் நன்மதிப்பை விரைவில் சம்பாதித்துக்கொண்டார். 1808 இல், முதலில் இவர் தேசாதிபதி தோமஸ் மெயிட்லண்ட்க்கு மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்தார். பின்னர் 1810 இல் ஒரு தமிழரினால் வகிக்கப்படக்கூடிய அதி உயர்ந்த பதவியாகிய தேசாதிபதியின் ‘பிரதம தமிழ் மொழிபெயர்ப்பாளர்’ பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.

குருமக்கலம் அரசியல் திருத்தம் – 1912

1912 ஆம் ஆண்டு குருமக்கலம் அரசியல் திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்கீழ் தேர்தல்முறை அறிமுகப்படுத்தப்பட்டதோடு நான்கு பிரதிநிதிகள் தேர்தல்மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். ஐரோப்பியர் இரண்டு, பறங்கியர் ஒன்று, படித்த இலங்கையர் ஒன்று எனத் தேர்தல்மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். இத்தேர்தலில் கல்வியறிவு உடையோரும், சொத்துடையோரும் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். தேர்தல் இடம்பெற்றபோது முழு இலங்கையிலும் படித்த இலங்கையர் சார்பில் சேர். பொன் இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். ஓய்விற்காக தமிழ்நாடு, கொடைக்கானல் விடுதியில் தங்கியிருந்த இராமநாதனை வேட்பாளராக நிறுத்த, சிங்கள அரசியல் தலைவரான ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் தந்தை ஹெக்டர் ஜெயவர்த்தனா அங்கே சென்று, அவரைச் சம்மதிக்க வைத்து, அங்கேயே வேட்புமனு விண்ணப்பத்தின் மீது கையொப்பமும் வாங்கிவந்தார் எனக் கூறப்படுகின்றது. இத்தேர்தலில் மார்க்கஸ் பெர்னாண்டோ என்கின்ற சிங்கள மருத்துவரோடு போட்டியிட்டு, இராமநாதன் வெற்றிபெற்றார். மார்க்கஸ் பெர்னாண்டோ மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த கரவா சாதியினராக இருந்தமையினால், சிங்கள உயர் சாதியினர் இராமநாதனையே ஆதரித்தனர். தொடர்ந்து 1916 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலிலும் டி.எஸ். ஜெயவர்த்தனா என்பவரோடு போட்டியிட்டு இராமநாதனே வெற்றிபெற்றார்.

இக்காலத்தின் அரசியல் விவகாரத்தைப் பொறுத்தவரை இராமநாதன் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்தார் எனக் கூறமுடியாது. அவர் இலங்கை மக்களுக்காக, குறிப்பாகச் சிங்கள மக்களுக்காகக் குரல் கொடுத்த ஒருவராக விளங்கினார். வெசாக்தினத்தை விடுமுறை தினமாக்கியதில் இவரது பங்கு அதிகமாக இருந்தது. சிங்களமொழியைப் போதனா மொழியாக்குவதற்கு இவர் கடுமையாகக் குரல் கொடுத்தார்.

சிங்கள – முஸ்லிம் கலவரம் (1915)

1915 ஆம் ஆண்டு சிங்கள – முஸ்லிம் கலவரம் இடம்பெற்றது. கலவரம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து குறுகிய காலத்திலேயே இலங்கை முழுவதும் பரவியது. இது, முதலாம் உலக மகா யுத்த காலத்தில் இடம்பெற்றமையினால், ஜேர்மனியின் உளவாளிகள் சிங்கள மக்களிடையே இருந்து செயற்படுகின்றார்கள் என ஆங்கிலேயர்கள் கருதினர். ஆகவே இதனை மிகமோசமாக நசுக்கத் தொடங்கினர். குறிப்பாக மது ஒழிப்பு இயக்கத்தில் பங்குபற்றிய பல சிங்கள அரசியல் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இலங்கையின் முதலாவது பிரதமராக இருந்த டி.எஸ். சேனநாயக்காவும் ஒருவராவார். பலர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இது விடயத்தில் ஆட்சியாளர்களின் மிக மோசமான அடக்குமுறையைக் கண்டித்து சேர். பொன் இராமநாதன் சட்டசபையில் நீண்ட நேரம் உரையாற்றியது மட்டுமல்லாமல், நோய்வாய்ப்பட்ட நிலையிலும் முதலாம் உலக மகா யுத்த நெருக்கடிக் காலத்தினையும் கவனத்தில் கொள்ளாது, கப்பல்மூலம் லண்டன் சென்று அங்கு பிரதமர், குடியேற்ற நாட்டுச் செயலாளர் என்பவர்களுடன் பேசி, கலவரத்தை உடனே நிறுத்தினார். கைது செய்யப்பட்ட சிங்கள அரசியல் தலைவர்களையும் விடுவித்தார். லண்டனிலிருந்து கப்பலில் இராமநாதன் நாடு திரும்பியதும், துறைமுகத்தில் இறங்கி தனது குதிரை வண்டியில் வீடு செல்லத் தயாரானபோது, சிங்கள அரசியல் தலைவர்கள் குதிரையைக் கழற்றி தாங்களே அவரை வீடுவரை இழுத்துச் சென்றனர்.

சேர். பொன் அருணாசலத்தின் வகிபங்கு

1. சேரிப்புற மக்கள் மத்தியில் பணிபுரிதல்

சேர். பொன் அருணாசலம், சேர். பொன் இராமநாதனின் இளைய சகோதரன் ஆவார். பதிவாளர் நாயகமாக இருந்த இவர், 1913 ஆம் ஆண்டு தனது பதவியில் இருந்து ஓய்வுபெற்று நேரடியாக அரசியலுக்கு வந்தார். அரசியலில் அவர் முதல் தெரிவுசெய்த மக்கள் கூட்டம், கொழும்பின் சேரிப்புறங்களில் வாழும் அடிநிலை மக்கள்தான். இம்மக்களின் நலன்களைப் பேண தொழிலாளர் நலன்புரிச் சங்கத்தை உருவாக்கினார். சேரிப்புற மக்களின் நலன்களை விஞ்ஞானபூர்வமாக மேம்படுத்தும் பொருட்டு, லண்டன் சென்ற அவர், லண்டன் மாநகரசபை எவ்வாறு சேரிப்புற மக்களின் நலன்களைப் பேணுகிறது என்பதை ஆராய்ந்தறிந்து, அதனை இங்கு நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தினார்.

2. மலையக மக்கள் மீதான அக்கறை

சேர். பொன் அருணாசலம் சேரிப்புற மக்களுக்கு அடுத்ததாக, அக்காலத்தில் மிகுந்த ஒடுக்குமுறைக்கு உள்ளான மலையக மக்களின் நலன்களில் அக்கறை கொண்டார். மலையக வம்சாவளியினரான பெரிசுந்தரத்துடன் இணைந்து தோட்டத் தொழிலாளர் நலன்புரி அமைப்பை உருவாக்கினார். இவ் அமைப்பின் தலைவராக அருணாசலமும் செயலாளராக பெரிசுந்தரமும் விளங்கினார்கள். மலையகத்தில் நிலவிய மோசமான ஒடுக்குமுறையான துண்டுமுறையை இல்லாது ஒழிப்பதில் இவரது பங்கு முக்கியமாகக் காணப்பட்டது. துண்டுமுறை என்பது ‘ஒருவர் தோட்டத்திலிருந்து திருமணம் காரணமாகவோ அல்லது வேறு விடயங்களின் காரணமாகவோ இன்னொரு தோட்டத்திற்குச் செல்லவேண்டி ஏற்பட்டால், முன்னர் கடமையாற்றிய தோட்ட நிர்வாகம் குறித்த நபர் நன்னடத்தை உடையவர் என்றும், இவருக்கு கடன் எதுவும் இல்லை என்றும், ஒரு கடிதத்தை எழுத்தில் வழங்க வேண்டும்.’ கடிதம் இருந்தால் மட்டுமே மற்றைய தோட்டம் குறித்த நபரை ஏற்றுக்கொள்ளும்.

இலங்கையில் வாழும் அடிநிலை மக்களின் நலன்களில் அக்கறைகொண்ட காரணத்தினாலேயே இவரை ‘இலங்கையின் சமூக மாற்ற அரசியலின் தந்தை’ என அழைக்கின்றனர். ஏ.ஈ. குணசிங்க போன்ற தொழிற்சங்க தலைவர்கள் இவரது கருத்தியலினால் கவரப்பட்டு அரசியலுக்கு வந்தனர். ஏ.ஈ. குணசிங்க தன்னுடைய அரசியல் குரு அருணாசலம்தான் என்பதைக் கூறுவதற்கு ஒருபோதும் தயங்கியதில்லை.

I-1-18.jpg

3. இலங்கை தேசிய காங்கிரஸ் தோற்றம் – (1919 டிசம்பர் 11)

சிங்கள – முஸ்லிம் கலவரம் போன்று இன்னொரு கலவரம் வரக்கூடாது என்பதற்காகவும், இலங்கை மக்களுக்கு உள்ளூர் நிர்வாக சுயாட்சி அதிகாரத்தைக் கோருவதற்காகவும் 1919 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி இலங்கையின் முதலாவது தேசிய இயக்கமான இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கத்தில் சேர். பொன் அருணாசலம் முதன்மையாகச் செயற்பட்டமையினால், இலங்கை தேசிய காங்கிரஸின் முதலாவது தலைவராக அருணாசலமே ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக்கத்தின்போது இலங்கையில் உள்ள பல்வேறு இனங்களையும் ஐக்கியபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதன் அடிப்படையில் சிங்களத் தலைவர்கள், தமிழ்த் தலைவர்களிடையே சேர். பொன் அருணாசலம் தலைமையில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது. சிங்கள மக்கள்சார்பாக இலங்கை தேசிய சங்கத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பீரிசும், இலங்கை அரசியல் சீர்திருத்தக்கழகத்தைச் சேர்ந்த ஈ.ஜே. சமரவிக்கிரமவும் கலந்து கொண்டனர். தமிழ் மக்கள்சார்பாக யாழ்ப்பாணச் சங்கத்தைச் சேர்ந்தோர்; அம்பலவாணர் கனகசபை தலைமையில் கலந்துகொண்டனர். 1906 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் யாழ்ப்பாணச் சங்கம் உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாணச் சங்கம் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாகப் புதிய அரசியல் சீர்திருத்தத்தின்போது, தமிழர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், கொழும்பில் வாழும் தமிழர்களுக்கு என ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் இரு கோரிக்கைகளை முன்வைத்தது. இரு கோரிக்கைகளையும் ஏற்று, சிங்களத் தலைவர்கள் உத்தரவாதத்தை வழங்கினர். இதுவே தமிழ்த்தரப்பிற்கு சிங்களத்தரப்பு வழங்கிய முதலாவது எழுத்து மூல உத்தரவாதமாகும்.

மனிங் அரசியல் சீர்திருத்தம் – 1921

1921 ஆம் ஆண்டு மனிங் அரசியல் சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்தது. இது முதன்முதலாக இலங்கையில் பிரதேசவாரி பிரதிநிதித்துவமுறையை அறிமுகம் செய்தது. இதன்படி இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களில், மேல் மாகாணம் தவிர, ஏனைய மாகாணங்களுக்கு தலா ஒவ்வொரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. மேல் மாகாணம் சனத்தொகை கூடிய மாகாணமாக இருந்ததால் 3 பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. இந்த மூன்று பிரதிநிதித்துவத்தினுள் ஒரு பிரதிநிதித்துவம், முன்னரே உத்தரவாதம் அளிக்கப்பட்டதன்படி தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழ்த்தரப்பு ஒரு கோரிக்கையை முன்வைத்தது. இதைச் சிங்களத் தலைவர்கள் நிராகரித்தனர். இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக முன்னர் வழங்கப்பட்ட உத்தரவாதத்திற்கு இலங்கை தேசிய காங்கிரஸே பொறுப்பாகாது எனக் கூறப்பட்டது.

ஏ.ஈ. குணசிங்க போன்ற சில தலைவர்கள் இதில் சமரசத்தில் ஈடுபட்டு, தமிழ்த்தரப்பிற்கு ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்ற உடன்பாட்டைக் கொண்டுவந்தனர். இதை நம்பி சேர். பொன்னம்பலம் அருணாசலம் வேட்பு மனுத்தாக்கல் செய்ய அரசாங்கச் செயலகத்திற்கு சென்றார். அவர் செல்ல முன்னரே, மூன்று வேட்பு மனுத்தாக்கல்களும் செய்யப்பட்டு இருந்தன. இதனால் அருணாசலம் மிகவும் அதிருப்தி அடைந்தார். “பிரமாணம் பிரமாணமாக இருக்க வேண்டும். சிங்களத் தலைவர்கள் அதை மீறிவிட்டனர். எனவே இவர்களுடன் ஒன்றாகப் பயணிக்க முடியாது” எனக்கூறிவிட்டு, இலங்கை தேசிய காங்கிரஸிலிருந்து வெளியேறினார். இந்த வெளியேற்றத்துடன் தமிழரசியல் வரலாற்றின் இரண்டாம் கட்டம் ஆரம்பித்துவிட்டது எனலாம்.


https://www.ezhunaonline.com/the-period-from-1833-to-1921-tamil-leaders-and-the-ceylon-national-congress/

சிறிதரன் எம்.பியின் கருத்து:முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லையா?

1 week 6 days ago

சிறிதரன் எம்.பியின் கருத்து:முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லையா?

மொஹமட் பாதுஷா

இலங்கையில் உண்மையிலேயே எத்தனை தேசிய இனங்கள் வாழ்கின்றன? முஸ்லிம்களும்;   மலையக மக்களும் தனித்தனியான தேசிய இனங்கள் இல்லையா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையைத் தொடர்ந்தே இந்த கேள்விக்கான விடையைத் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

சபையில் உரையாற்றிய சிறிதரன் எம்.பி. ‘சபாநாயகர் அவர்களே, இந்த நாட்டில் இரு தேசிய இனங்கள் உள்ளன. ஒன்று தமிழ் பேசும் மக்கள் தமிழ்த் தேசிய இனம் மற்றையது சிங்கள தேசிய தினம் ஆகியவையாகும்’ என்று கூறி, தொடர்ச்சியாக உரையாற்றினார்.

பெருந்தேசிய அரசியலில் தற்போதைய ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்க ஒரு எம்.பியாக எவ்வாறு கனகச்சிதமாக உரையாற்றினாரோ, அவ்வாறு உரையாற்றுகின்ற ஒரு தமிழ் அரசியல்வாதியாகவே சிறிதரன் எம்.பியைச் சொல்ல முடியும். இவர் உரையாற்றுகின்ற பாணிக்கு முஸ்லிம் சமூகத்திடையேயும் ஒரு வரவேற்பிருந்தது எனலாம்.

இலங்கையில் சிங்கள மக்கள், தமிழ் மக்கள் மட்டுமன்றி, முஸ்லிம் மக்களும் மலையக மக்களும் கூட தனியான தேசிய இனங்களாக வாழ்கின்றனர். ஏன்? கத்தோலிக்க மக்களும், பூர்வீகக் குடியைச் சேர்ந்த (வேடுவ) மக்களும் தங்களைத் தேசிய இனங்களாக முன்னிறுத்த முடியும் என்பதுதான் யதார்த்தமாகும்.

இதுவெல்லாம் தெரியாத ஒரு அரசியல்வாதி என சிறிதரனை குறிப்பிட முடியாது. அத்துடன், அவர் தவறுதலாக உரையாற்றியதாகக் குறிப்பிடவும் முடியாது. அப்படிச் செய்திருந்தால் அந்த 20 நிமிட உரையில் எங்காவது ஒரு இடத்தில் அவர் அதனைத் திருத்தியிருப்பார் அல்லது வெளியில் வந்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பார்.

எனவே, அவர் இதனைத் தெளிவாக, திட்டமிட்டே உரையாற்றியிருக்கின்றார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சிறிதரனுக்குப் பிறகு பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் எம்.பிக்களும் இவ்விடயத்தைச் சரிப்படுத்தவோ சமாளிக்கவோ முற்படவில்லை என்பது இங்கு கவனிப்பிற்குரியது.

இந்த நாட்டில் இரண்டு தேசிய இனங்கள் மட்டும்தான் வாழ்கின்றன என்ற தொனியில் உரையாற்றியதன் மூலம், அபத்தமானதும் பிற்போக்குத்தனமானதுமான கருத்தொன்றை மேற்படி தமிழ் எம்.பி. முன்வைத்திருக்கின்றார். இப்படியொரு கருத்தை சிறிதரன் போன்றவர்களிடமிருந்து முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கவில்லை.

வரைவிலக்கண அடிப்படையில் நோக்கினால், இனம் என்பது வேறு, தேசிய இனம் என்பது வேறு. ஒரு மக்கள் கூட்டம் வாழுகின்ற நிலப்பகுதி, கலாசாரம், பண்பாட்டு நடைமுறைகள், இன மரபு வரலாறு, மதம், மொழி என்பவற்றின் அடிப்படையிலேயே தேசிய இனங்கள் வரையறை செய்யப்படுகின்றன.

இதன் அடிப்படையில் முஸ்லிம்கள் நூற்றாண்டு காலமாக இலங்கையில் ஒரு தேசிய இனமாக ஆகிவிட்டனர். இது, தமிழ்த் தேசியமோ சிங்கள தேசியமோ நிராகரிக்க முடியாத நிதர்சனமாகும்.அதனையும் மீறி யாராவது, இரண்டு தேசிய இனங்கள்தான் இந்த நாட்டில் உள்ளன என்று கூறுவார்களாயின் அதன் பின்னால் ஒரு கருத்தியல் ரீதியான நிகழ்ச்சிநிரல் இருக்கின்றது என்றுதான் கருத வேண்டியுள்ளது.

ஆரம்பக் காலங்களில் மொழியைப் பிரதான காரணியாக வைத்து தேசிய இனங்கள் தீர்மானிக்கப்பட்டாலும் அப்படி மொழியை மட்டும் கொண்டு தேசிய இனங்களைத் தீர்மானிக்கும் காலம் இப்போது மலையேறிப் போய்விட்டது.

இப்போது மொழி என்பது, ஒரு தேசிய இனத்தை அடையாளப்படுத்துவதற்கான ஏகப்பட்ட காரணிகளுள் ஒரேயொரு காரணி மட்டுமே என்பதைக் கவனிக்க வேண்டும்.

முஸ்லிம்கள் மொழியால் ஒன்றுபட்டாலும் ஏனைய காரணிகளால் வேறுபடுகின்றார்கள். கலாசாரம், மதம், பண்பாடு, மரபினம், ஆட்புல எல்லை, பொருளாதார அம்சங்கள் என ஏனைய எல்லா விதத்திலும் பிரத்தியேகமான அடையாளங்களை முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கின்றது.

அத்துடன், தெற்கில் பல பகுதிகளில் முஸ்லிம்கள் தங்களது தாய் மொழியாக சிங்களத்தையே பேசுகின்றனர் என்பதையும் சிறிதரன் போன்றோர் 
மறந்து விடக் கூடாது.

அவர் சொல்வது போல, வடக்கு, கிழக்கில் மொழியை அடிப்படையாக வைத்து முஸ்லிம்களைத் தமிழ் பேசும் தேசிய இனமாகக் கருதுவதாயின், தெற்கில் முஸ்லிம்கள் சிங்களத்தைப் பிரதானமாகப் பேசுகின்றார்கள் என்பதற்காக சிங்கள தேசிய இனத்திற்குள் உள்ளடக்க முடியுமா? அது மட்டுமன்றி, தமிழை விட அதிகமாக சிங்களத்தைப் பேசுகின்ற தமிழர்களையும் சிங்கள தேசிய இனமாகக் கொள்ள முடியுமா?

முஸ்லிம்களும் தமிழர்களும் தமிழ் பேசும் சமூகங்களே அன்றி தமிழ் பேசும் ஒரு தனி தேசிய இனம் அல்ல. வடக்கு, கிழக்கில் அவர்கள் தமிழர்களோடும் அதற்கு வெளியே பெரும்பான்மைச் சமூகத்தோடும் பின்னிப் பிணைந்து வாழ்கின்றார்கள் என்பதற்காக தங்களது தேசிய இனத்திற்குள் முஸ்லிம்களை உள்ளடக்கி விட முடியாது.

குறிப்பாக, முஸ்லிம்களும் தமிழ் பேசும் இனம் என்று கருதியிருந்தால் வடக்கில் இருந்து தனியே முஸ்லிம்களைப் புலிகள் வெளியேற்றியிருக்க மாட்டார்கள். வடக்கு, கிழக்கில் பல இடங்களில் முஸ்லிம்கள் ‘தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு’ தமிழ் ஆயுதக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்.

இதனையெல்லாம் மறந்து விட்டு, கருத்துக் கூற முற்படும் பழமைவாத சிந்தனையைத் தமிழ் அரசியல்வாதிகள் களைய வேண்டும். முஸ்லிம்களைத் தனியொரு தேசிய இனமாகக் கூட கருத முடியாத மனநிலையில் இருக்கின்ற தமிழ் அரசியல்வாதிகள்தான், சிங்கள தேசியத்திடம் தமிழ் மக்களுக்கான உரிமையை வேண்டி நிற்கின்றனர் .

என்பது முரண்நகை இல்லையா?20 இலட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு சமூகத்தை, மதம், கலாசாரம், பண்பாடு என பல அடிப்படைகளில் தனித்துவமான அடையாளங்களின் அடிப்படையில் ஒரு தேசிய இனமாகக் கூறுவதற்குக் கூட விரும்பாத சூழலில் நாம், நல்லிணக்கம் பற்றிப் பேசுவது நகைப்புக்கிடமானது இல்லையா?உலக அரங்கில் தேசிய இனங்களைப் பிரகடனப்படுத்தும் ஒழுங்குகள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரே மாறிவிட்டன.

முன்னைய காலங்களில் மொழி ஒரு பிரதான தீர்மானிக்கும் சக்தியாக இருந்த போதும், இப்போது மொழியை விட வேறு பல காரணிகள்தான் தேசிய இனங்களைத் தீர்மானிக்கின்றன என்பதைத் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.

மதப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டே நெதர்லாந்தில் வாழ்ந்த மக்களில் ஒரு பகுதியினர் தம்மைத் தேசிய இனமாக பிரகடனப்படுத்தி, பெல்ஜியம் என்ற நாடாகப் பிரிந்து சென்றனர். தவிர, மொழியை அடிப்படையாகக் கொண்டல்ல. இஸ்‌ரேல் உருவானதும் மொழியை அன்றி யூதர்கள் என்ற அடையாளத்தை மையமாகக் கொண்டே ஆகும்.

மதத்தை அடிப்படையாக வைத்து ஒரு தேசிய இனம் பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கியது. உலகில் வாழும் ஆங்கிலம் பேசுகின்ற எல்லோருமே ஒரு தேசிய இனத்திற்குள் உள்ளடங்குவது கனவிலும் சாத்தியமில்லை.

ஐரோப்பாவில், ஆங்கிலம் என்ற ஒரே மொழியைப் பேசுகின்ற சமூகங்கள் வேறு காரணங்களை முன்வைத்து தம்மை, தனியான தேசிய இனங்களாக முன்னிறுத்தி, பிரிந்து செல்ல முற்படுவதை நாம் கண்டிருக்கின்றோம்.

அரபு மொழியைப் பேசும் நாடுகளிலும் இவ்வாறு தனித்தனியான பல தேசிய இனங்கள்; உருவாகியுள்ளன.இதனையெல்லாம் இருட்டடிப்புச் செய்து விட்டு, இலங்கையில் இரு தேசிய இனங்கள் உள்ளன என்று நாட்டின் உயரிய சபையில் உரையாற்றிச் செல்வது. குறுகிய அரசியல் சிந்தனையையே வெளிப்படுத்துகின்றது.

பாராளுமன்றத்தில் இக்கருத்தை சிறிதரன் எம்.பி. கூறியபோது, இரு முஸ்லிம் எம்.பிக்கள் மாத்திரம் எழுந்து பதிலளித்தனர். ஹக்கீம். றிசாட் போன்ற  கட்சித் தலைவர்களும் அரச தரப்பு முஸ்லிம்களும் மௌனமாக இருந்தாலும் கூட, இக்கருத்தை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் கண்டிக்கின்றது.

இப்படியான வேலையைச் சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தில் இருந்தே பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சில தமிழ் தலைவர்கள் செய்து வந்தார்கள். ‘முஸ்லிம்களும் தமிழர்கள்’ அல்லது ‘தமிழ் பேசும் இனத்தவர்’ 
என்று சொன்னார்கள்.

ஆனால், அதனை முஸ்லிம் சமூகம் மறுதலித்து. தாங்கள் ஒரு தனி தேசிய இனம் என்பதைப் பல வழிகளில் நிரூபித்தது. பின்வந்த தமிழ்த் தேசிய தலைவர்கள் இந்த யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு செயற்பட்டதாகச் சொல்லலாம்.

ஆனால், சிறிதரன் எம்.பியின் அண்மைய உரையானது, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் குறுகிய அரசியல் சிந்தனை என்ற முருங்கை மரத்தில் மீண்டும் ஏறுகின்றார்களா? என்ற சந்தேகத்தைக் குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தியுள்ளது,

இக்கருத்து உண்மையில், சிறிதரன் எம்.பியின் தனிப்பட்ட கருத்தா அல்லது ஒட்டுமொத்த தமிழ்த் தேசியத்தின் கருத்தும் இதுதானா என்பதைத் தெளிவுபடுத்துவது ஏனைய தமிழ் எம்.பிக்களின் பொறுப்பாகும். 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிறிதரன்-எம்-பியின்-கருத்து-முஸ்லிம்கள்-ஒரு-தேசிய-இனம்-இல்லையா/91-363965

1949 – 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 4

1 week 6 days ago

https://www.ezhunaonline.com/1949-1968-national-political-transformation-and-resistance-struggles-of-eelam-tamils-part-4/?fbclid=IwY2xjawMlZMVleHRuA2FlbQIxMABicmlkETB0MElRM2M2V0VxY3ZnUUF2AR7uFU-uioeOd-SHnslD1sRgljbk-gk2XoWrXqWLWL3xJApN6QDb5LDnaJlJkg_aem_azGvcdRkWsVOtS2coOUB3w

1949 – 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 4

September 3, 2025 | Ezhuna

1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது

தமிழரசுக்கட்சி தடை செய்யப்படுதலும் அதன் தலைவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படலும்

தமிழரசுக்கட்சி தடை செய்யப்பட்டதுடன் கே.எம்.பி. ராஜரட்னாவின் இயக்கமும் தடை செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் பிரசார ஏடான ‘சுதந்திரன்’ பத்திரிகையும் தடை செய்யப்பட்டது. 1958 யூன் 05 ஆம் திகதி கட்சியின் தலைவர்களும் மத்திய குழு உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். பெரும்பாலானோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட, அமிர்தலிங்கம், வன்னியசிங்கம், இராசவரோதயம், செ. இராசதுரை, வி.என். நவரத்தினம், வி. நவரத்தினம், செனட்டர் நடராசா என்போர் கொழும்பில் ஒரு வீட்டில் காவலில் வைக்கப்பட்டனர். மூன்று மாதங்களின் பின்னர் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் சுதந்திரன் பத்திரிகைக்கான தடை நீங்க மேலும் பல மாதங்கள் சென்றன. தடை நீங்கிய பின் செயற்குழுக் கூட்டம் 02.11.1958 இல் நடைபெற்றது. இதில், தொடர்ச்சியாக சாத்வீக வழியில் போராடுதல் என முடிவெடுக்கப்பட்டதுடன் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்

யாழ் நகரத்திலுள்ள தேனீர்க் கடைகளில் சாதி அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படுவதை ஒழிக்கும் பொருட்டு யாழ் நகரத் தேநீர்ச் சாலை உரிமையாளர்களின் மாநாடொன்றை நடாத்துவதென்றும், 24.11.58 தொடக்கம் ஒரு வாரம் தீண்டாமை ஒழிப்பு வாரமாக அனுஷ்டிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அ. அமிர்தலிங்கம், கு. வன்னியசிங்கம், சு. நடராசா என்போர் இவ்வேலைக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டனர். வன்னியசிங்கத்தின் அழைப்பின் பேரில் கூட்டப்பட்ட தேநீர்ச்சாலை உரிமையாளர்களின் மாநாட்டில் யாழ் நகர உணவு விடுதிகளில் சாதி பேதம் பார்க்கப்படுவதில்லை என ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரசாரம், சமபந்திப் போசனம் என்பனவும் மேற்கொள்ளப்பட்டது.

மலைநாட்டுக் குழந்தைகளின் கல்வி

உயர்கல்விக்கு வசதியற்ற மலைநாட்டுத் தமிழ்ப் பிள்ளைகள் 25 பேருக்கு உபகாரச் சம்பளம் பெற்றுக்கொடுக்கப்பட்டு, யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் சேர்க்கப்பட்டனர். விடுதி வசதி, இலவசப் புத்தகங்கள் என்பன அவர்களுக்கு வழங்கப்பட்டன. இப்பணிகளில் கட்சியின் சார்பில் கு. வன்னியசிங்கம் ஈடுபட்டார். 1959 செப்டெம்பர் 17 இல் கு. வன்னியசிங்கம் மரணமடைந்தார். இதே மாதம் பண்டாரநாயக்காவும் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்ப நிலையால் பொதுத் தேர்தல் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியது.

IMAGE-002-1.jpg

1960 மார்ச் தேர்தலும் சிம்மாசனப் பிரசங்கத்தில் அரசாங்கம் தோற்கடிக்கப்படலும்

1959 புதிய தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 101 இலிருந்து 157 ஆக அதிகரிக்கப்பட்டது. இதன் கீழ் 1960 மார்ச் இல் தேர்தல் நடைபெற்றது. அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு – கிழக்கில் 19 தொகுதிகளில் போட்டியிட்டு 176, 492 வாக்குகளைப் பெற்று 15 தொகுதிகளில் வெற்றியீட்டியது. 

இதைவிட கட்சியின் ஆதரவினைப் பெற்ற இரு சுயேட்சை வேட்பாளர்கள் நிந்தவூர், பொத்துவில் தொகுதிகளில் வெற்றி பெற்றனர். ஐக்கிய தேசிய கட்சியும் 50 இடங்களையும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 46 இடங்களையும் கைப்பற்றியது. டட்லி ஆட்சியை அமைத்ததும் பாராளுமன்றத்தில் ஆதரவை நாடினார். தமிழரசுக்கட்சி இரு பெரும் கட்சிகளிடமும் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தது. அவையாவன:

  1. பண்டா – செல்வா உடன்படிக்கையில் கூறப்பட்டதன் பிரகாரம் பிரதேச சபைகள் நிறுவப்படல் வேண்டும். அதற்கிடையில் தமிழ்ப்பிரதேசத்தில் அத்துமீறிய குடியேற்றம் நிறுத்தப்படல் வேண்டும். 

  2. பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமைகள் யாவும் தமிழ்மொழிக்குச் சட்டபூர்வமாக வழங்கப்பட வேண்டும். 

  3. இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தில் குறிப்பிட்ட திகதி என்பது நீக்கப்பட்டு இரண்டு தலைமுறைக்கு இந்நாட்டில் பிறந்தோர் அனைவருக்கும் குடியுரிமை வழங்குவதன் மூலம் ‘நாடற்ற தமிழர்’ என்ற நிலை நாளடைவில் மாற வேண்டும். 

  4. குடியுரிமைப் பிரச்சினை தீரும் வரை 06 நியமனப் பிரதிநிதிகளில் 04 பேர் மலைநாட்டுத் தமிழ்மக்களின் பிரதிநிதித்துவம் வாய்ந்த ஸ்தாபனமான இலங்கை ஜனநாயக காங்கிரசினால் நியமிக்கப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். 

இதையொட்டிய விபரங்கள் ஆளும் கட்சிக்கும் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படல் வேண்டும். அத்துடன் ஏற்றுக்கொண்ட விடயங்கள் சிம்மாசனப் பிரசங்கத்தில் இடம்பெற வேண்டும் எனக் கூறப்பட்டது. இக்கோரிக்கைகளை எழுத்தில் பெற்ற டட்லி அதனை நிராகரித்தார். அதேவேளை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட சீ.பி.டி. சில்வா, ஏ.பி. ஜெயசூரிய, மைத்திரிபால சேனநாயக்க, பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க என்போர், கோரிக்கைகள் பண்டாரநாயக்காவின் கொள்கைகளுக்கு ஏற்ப இருப்பதால் அதனைத் தாம் ஏற்பதாகக் கூறினர். சிறீலங்கா சுதந்திரக் கட்சி உடனான உடன்பாட்டின்படி 1960 ஏப்ரல் 22 ஆம் திகதி சிம்மாசனப் பிரசங்க வாக்கெடுப்பில் தமிழரசுக்கட்சி எதிர்த்து வாக்களித்தமையினால் அரசாங்கம் பதவி விலகியது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க முற்பட்ட போது தமிழரசுக்கட்சியும் அதற்கு ஆதரவை வழங்கியது.

இது தொடர்பான கடிதம் செல்வநாயகம், என்.எம். பெரேரா, எஸ்.ஏ. விக்கிரமசிங்க, சி.பி.டி. சில்வா என்போர் சார்பில் கையொப்பமிட்டு மகாதேசாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் மகாதேசாதிபதி இதனைக் கருத்திற் கொள்ளாமல் மரபை மீறி பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கு ஏற்பாடு செய்தார்.

1960 யூலை தேர்தலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வாக்குறுதிகளை மீறுதலும்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையினை சிறிமாவோ பண்டாரநாயக்கா ஏற்றார். இருப்பினும் 1960 யூலை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தமிழர்கள் தம்மைத் தோற்கடித்தார்கள் என இனவாதப் பிரசாரத்தினை மேற்கொண்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஸ்ரீலங்கா சமஷ்டிக் கட்சி எனக் கேலி செய்தது. எனினும் ஐக்கிய தேசியக் கட்சி 30 ஆசனங்களை மட்டும் பெற்றுத் தோல்வியடைந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 75 ஆசனங்களைப் பெற்று தனியாக ஆட்சி பெறக்கூடிய நிலையை எய்தியது. தமிழரசுக் கட்சி 21 தொகுதிகளில் போட்டியிட்டு 218, 753 வாக்குகளைப் பெற்று 16 இடங்களைக் கைப்பற்றியது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியை அமைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியுடனான உடன்பாட்டை நிறைவேற்றப்போவதாகக் காட்டிக்கொண்டது. 

1957 ஆம் ஆண்டு தனிச் சிங்களத்தில் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிம்மாசனப் பிரசங்கத்தை பகிஷ்கரித்து வந்த தமிழரசுக்கட்சி இத்தடவை தமிழ் மொழிபெயர்ப்பும் உடன் வாசிக்கப்பட்டதால் பிரசங்கத்தில் கலந்துகொண்டது. எனினும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்தது. தொண்டமான் நியமனப் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார். உடன்பட்ட விடயங்களை அமுல்படுத்துவது பற்றி பிரதமர் தலைமையில் அமைச்சர் குழுவுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையே அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே எவ்வித முன்னறிவிப்புமின்றி சிங்களத்தை நாடு முழுவதும் நீதிமன்ற மொழியாக்கும் சட்டத்தை நீதியமைச்சர் சாம்.பி.சி. பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனால் அரசிற்கும் தமிழரசுக் கட்சியிற்கும் இடையிலான உறவு சிதைவடைந்தது. சட்டமூலத்திற்கு தமிழரசுக்கட்சி பலமான எதிர்ப்பைத் தெரிவித்த போதும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதே சமயம் தமிழ்மொழி உபயோகச் சட்டத்தின் கீழ் மிகக்குறைந்த உரிமைகள் வழங்கும் சட்டத்தையும் நீதிமந்திரி சமர்ப்பித்தார். இருப்பினும் தமிழரசுக்கட்சியின் எதிர்ப்பினால் அது கைவிடப்பட்டது. இரண்டாவது தடவையும் சிங்களத் தலைமைகள் வாக்குறுதிகளை கைவிட்டமையால் தமிழரசுக்கட்சி போராட்டத்திற்குத் தயாராகியது. 1961 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் வடக்கு – கிழக்கு உட்பட நாடு முழுவதும் தனிச் சிங்களச்சட்டம் பூரணமாக அமுல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இதனால் சிங்கள உத்தியோகத்தர்களும் தமிழ்ப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். தமிழரசுக்கட்சி நடாத்த இருந்த போராட்டத்தின் முதற்படியாக செல்வநாயகம் தலைமையில் மக்கள் ஊர்வலமாக யாழ் கச்சேரிக்குச் சென்று தமிழில் நிர்வாகம் நடாத்தப்படல் வேண்டும் என்று மனுச் சமர்ப்பித்தனர்.

தமிழரசுக்கட்சியின் ஏழாவது மாநில மாநாடு (1961 ஜனவரி, யாழ்ப்பாணம்)

1961 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வன்னியசிங்கம் அரங்கில் மாநாடு நடைபெற்றது. பட்டிருப்புத் தொகுதியைச் சேர்ந்த சி.மு. இராசமாணிக்கம் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து நேரடி நடவடிக்கைகளில் இறங்குவது என்றும், பெப்ரவரி 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் போராட்டத்தை ஆரம்பிப்பது என்றும், தொடர்ந்து மற்றைய மாவட்டங்களுக்கு விஸ்தரிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

சத்தியாக்கிரகப் போராட்டம் (1961)

சத்தியாக்கிரகத்தை ஒரு நாளைக்கு ஒரு தொகுதியின் மக்களினால் அத்தொகுதி உறுப்பினர் தலைமையில் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது (பொலிசார் கைது செய்யலாம் எனக் கருதியே இவ்வாறு ஒழுங்கு செய்யப்பட்டது). 1961 பெப்ரவரி 20 ஆம் திகதி செல்வநாயகம் தலைமையில் காங்கேசன்துறை தொகுதி மக்கள் சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றினர். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களும் வெளியில் உதவிக்கு நின்றனர். முதலாம் நாள் திட்டமிட்டபடி யாழ் அரசாங்கச் செயலக வாசலில் எவரும் உள்ளே செல்லவிடாது தடுத்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர். பொலிஸார் பிரதான வாயில் ஊடாக அலுவலர்கள் உள்ளே செல்வதற்கு பாதை அமைக்க முற்பட்ட போது எல்லாப் பாராளுமன்ற உறுப்பினர்களும், மக்களும் அவ்விடத்துக்குச் சென்று பாதைக்குக் குறுக்கே படுத்துக்கொண்டனர். பொலிஸார் பலாத்காரமாக சத்தியாக்கிரகிகளை தூக்கி அப்புறப்படுத்த முற்பட்டு மிருகத்தனமாகத் தூக்கி வீசினர். இதனைப் பார்த்துக்கொண்டு வெளியில் நின்ற மக்களும் நூற்றுக்கணக்கில் சத்தியாக்கிரகிகளோடு சேர்ந்தமையினால் பொலிஸாரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

அன்று பகல் 11 மணிக்கு மேல் நீதிமன்றத் திறப்புவிழா இடம்பெற்றது. அதற்குரிய ஆணையை அரசாங்கத்தின் சார்பில் அரசாங்க அதிபர் நீதியரசரிடம் கொடுப்பதற்குச் செல்ல வேண்டியிருந்தது. இதனால் அரசாங்க அதிபரின் வாசஸ்தலம் அமைந்திருந்த பழைய பூங்கா வாயிலிலும் சத்தியாக்கிரகவாசிகளினால் மறியல் போராட்டம் செய்யப்பட்டது. குண்டாந்தடிகளினால் சத்தியாக்கிரகிகளைத் தாக்கி அவர்களுக்கு ஊடாக அரசாங்க அதிபரின் வண்டியைக் கொண்டு செல்ல பொலிஸார் முற்பட்டனர். ஈ.எம்.வி. நாகநாதன் உட்பட பல சத்தியாக்கிரகிகள் காயங்களுக்கு உட்பட்டனர். 2 ஆம் நாள் சத்தியாக்கிரகம் வட்டுக்கோட்டைத் தொகுதி மக்களால் அ. அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

முதலாம் நாள் பொலிஸாரின் அட்டூழியத்திற்குப் பலத்த கண்டனம் ஏற்பட்டதால் அவர்களின் அட்டூழியம் சற்றுக் குறைவடைந்தது. எனினும் அரச ஊழியர்களை சத்தியாக்கிரகிகளுக்கூடாக அழைத்துச் செல்ல முற்பட்டனர். இதற்கு அரச ஊழியர்களும் மறுப்புத் தெரிவித்தனர்.

3 ஆம் நாள் வி.ஏ. கந்தையா தலைமையில் ஊர்காவற்துறை மக்களும், 4 ஆவது நாள் என். நவரத்தினம் தலைமையில் சாவகச்சேரி மக்களும் கலந்துகொண்டனர். இவ்வாறு தொடர்ந்து 50 நாட்கள் நடைபெற்றமையினால் யாழ் மாவட்ட அரச நிர்வாகம் முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது.

1961 பெப்ரவரி 27 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சத்தியாக்கிரகம் விஸ்தரிக்கப்படல்

1961 பெப்ரவரி 27 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டமெங்கும் யாழ்ப்பாணத் தாக்குதலுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் முகமாக ஹர்த்தால் நடைபெற்றது. 1961 பெப்ரவரி 28 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்கச் செயலகத்தின் முன்னாலும் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டது. 1961 மார்ச் 4 ஆம் திகதி திருகோணமலையில் அரசாங்கச் செயலகத்தின் முன்னால் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டது. பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் 10 பேர் காயமடைந்ததுடன் மூதூரின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். மார்ச் 22 ஆம் திகதி படுகாயமுற்ற ஏகாம்பரம் மரணமடைந்தார். தொடர்ந்து மன்னார், வவுனியா அரசாங்கச் செயலகங்களுக்கு முன்னாலும் சத்தியாக்கிரகம் விஸ்தரிக்கப்பட்டது.

“இரண்டு மாகாணங்களிலும் அரசாங்கமே இல்லை” என பிரதமர் செனற் சபையில் கூறினார். சத்தியாக்கிரகத்தை நிறுத்துவது தொடர்பாக அரசு பேச்சுவார்த்தைக்குத் தயாராகியது. அரசின் சார்பில் நீதி அமைச்சர் பி.எல். பெர்ணான்டோ பங்குபற்றினார். மு. திருச்செல்வத்தின் கொழும்பு இல்லத்தில் 1961 ஏப்ரல் 05 ஆம் திகதி இரவு பேச்சுவார்த்தை நடைபெற்றது. மொழியுரிமை தொடர்பாக மிகக்குறைந்த கோரிக்கைகளில் கூட உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தைத் தொடருவது எனத் தீர்மானிக்கப்பட்டது. 

தமிழ் அரசு தபால் சேவை

போராட்டத்தின் தீவிரத்தினால் அரசாங்கம் பங்கீட்டு உணவு வழங்காது மக்களைப் பணியவைக்க முற்பட்டது. இதனால் போராட்டத்தை வேறு துறைகளிலும் விரிவாக்கும் நோக்கத்துடன், அரச தபால் சேவை சட்டத்தை மீறி, தமிழரசு தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1961 ஏப்ரல் 14 ஆம் திகதி பகல் 12 மணிக்கு செல்வநாயகம் இதனை ஆரம்பித்து வைத்தார். 10,000 பேர் வரிசையில் நின்று தமிழரசு தபால் தலைகளைப் பெற்றுக்கொண்டனர். தமிழரசு தபால் சேவையின் தபால் மா அதிபராக செனட்டர் நடராசா நியமிக்கப்பட்டார். தமிழரசு தபால் பெட்டிகள் பல இடங்களிலும் வைக்கப்பட்டது.

அவசரகால, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படலும், இராணுவம் தாக்குதல்களை மேற்கொள்ளுதலும்

1961 ஏப்ரல் 17 ஆம் திகதி 12 மணிக்கு அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட அதேவேளை 48 மணிநேர ஊரடங்குச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. கச்சேரியின் முன் அமைதியாக இருந்த சத்தியாக்கிரகிகள் இராணுவத்தினால் தாக்கப்பட்டனர். பழனியப்பன் என்ற இளைஞரினது தொடை துளைக்கப்பட, அவர் மயக்க நிலையை எய்தினார். பெண் சத்தியாக்கிரகிகள் இராணுவத்தினால் வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டு பல மைல்களுக்கு அப்பால் தனிமையான இடத்தில் விடப்பட்டனர். தலைவர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் – இராணுவ முகாம்களுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். வடக்கு – கிழக்கு இராணுவ ஆட்சியின் கீழ் விடப்பட்டது. திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் உட்பட தலைவர்களும் பிரதான தொண்டர்களுமாக 74 பேர் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு பனாகொடை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். தமிழரசுக்கட்சி, சுதந்திரன் பத்திரிகை என்பன தடை செய்யப்பட்டதோடு சுதந்திரன் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பத்திரிகைத் தணிக்கை அமுலுக்கு வந்தது.

இரகசிய ஏடுகள் பிரசுரமாதல்

‘சத்தியாக்கிரக’ என்ற ஆங்கில ஏடு மாதம் இருமுறை தட்டச்சில் வெளியாகியது. ‘தமிழன் கண்ணீர்’ என்ற தமிழ் ஏடும் வெளியாகியது. கோவில் பிரார்த்தனைகளை கட்சி ஒழுங்கு செய்தலும், எஞ்சியிருந்த தலைவர்கள் அதில் பேசுதலும் (கூட்டம் நடாத்துவது தடை செய்யப்பட்டிருந்தமையால்) இடம்பெற்றது.

சத்தியாக்கிரகிகள் தாக்குதல் தொடர்பில் மலையகத்தில் எழுச்சி

சத்தியாக்கிரகம் நடைபெற்ற போது தொண்டமான் நேரடியாகச் சென்று உற்சாகப்படுத்தினார். வவுனியா, மன்னார் பகுதிகளில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் நேரடியாகவே பங்குபற்றினர். வவுனியா இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதி நடேசபிள்ளையும் தலைவர்களுடன் கைது செய்யப்பட்டார். சத்தியாக்கிரகம் நசுக்கப்பட்டதற்கு முதல் நாள், 1961 ஏப்ரல் 24 ஆம் திகதி தோட்டத்தொழிலை அத்தியாவசிய சேவையாக்கும் சட்டவிதிகளை அரசாங்கம் பிரகடனம் செய்தது. எனினும் 1961 ஏப்ரல் 25 ஆம் திகதி 5 லட்சம் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். அன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தமிழரசுக் கட்சியின் நான்கு அம்சக் கோரிக்கைகளை அரசுக்குச் சமர்ப்பித்தது. இதேவேளை தோட்டப்பகுதிக்கும் இராணுவம் அனுப்பப்பட்டது. 1961 ஐப்பசியில் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். கட்சியின் தடை நீங்க மேலும் சில மாதங்கள் சென்றன.

மீண்டும் சிங்கள ‘ஸ்ரீ’ பஸ்வண்டி

1958 ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து ஸ்ரீ பொறித்த பஸ் வண்டிகள் தமிழ்ப் பிரதேசத்தில் ஓடவிடப்படவில்லை. ஆனாலும் 1961 ஐப்பசியில் சிங்கள ஸ்ரீ பொறித்த பஸ் வண்டிகள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டது. பஸ்வண்டி வந்து சேர்ந்த மறுநாளே இளைஞர்கள் சிலர் பஸ் நிலையத்திற்குள் நுழைந்து காவலாளிகளையும் சுட்டுக்காயப்படுத்தி பஸ் வண்டியையும் தீக்கிரையாக்கினர். அடுத்த நாள் எஞ்சிய ஸ்ரீ பொறித்த பஸ் வண்டிகள் மீளப் பெறப்பட்டன. 

தமிழரசுக் கட்சியின் 8 ஆவது மாநில மாநாடு – மன்னார் (1961 ஓகஸ்ட் 31, செப்டெம்பர் 1, 2)

தமிழரசுக் கட்சியின் 8 ஆவது மாநில மாநாடானது மன்னாரில் 1961 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31 மற்றும் செப்டெம்பர் மாதம் 1, 2 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. சி.மு. இராசமாணிக்கம் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். 1963 ஏப்ரல் 17 ஆம் திகதிக்குப் பிந்தாமல் போராட்டத்தை ஆரம்பித்தனர். தோட்டத்தொழிலாளர்களுக்கு என கட்சியின் சார்பில் தொழிற்சங்கம் ஒன்றை அமைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன்மூலம் இரண்டு சமூகங்களுக்கிடையேயும் அமைப்பு ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சித்தனர். இதன்படி ‘இலங்கைத் தொழிலாளர் கழகம்’ ஹட்டனில் 22.12.1962 (சனி) அன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவராக அ. தங்கதுரை தெரிவு செய்யப்பட்டார். 

இந்தியாவின் மீதான சீனாவின் படையெடுப்பில் இந்தியாவுக்கு ஆதரவு

1961 இறுதியில் சீனா இந்தியாவின் மீது படையெடுத்தது. இவ்விடயத்தில் சீனாவைக் கண்டித்து தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு 18.11.1961 இல் தீர்மானம் நிறைவேற்றியது. 

தீர்மானத்தின் விபரம்: 

  1. சர்வதேசக் கண்ணியத்தையும் கௌரவமான நடத்தையை மீறியும் உலகத்திற்குத் தானும் பிரகடனப்படுத்திய பஞ்சசீலக் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டும் கம்யூனிஸ்ட் சீனா, இந்தியா மீது நடத்தும் ஆக்கிரமிப்பை இலங்கைத் தமிழரசுக்கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் கம்யூனிஸ்ட் சீன ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஆசியாக்கண்டத்தில் ஜனநாயகம் நிலைபெறவும், தனது நாட்டையும் தேசிய கௌரவத்தையும் காப்பாற்றவும் நடாத்தப்படும் இப்போரில், இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களின் சார்பில் இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் தனது ஆதரவை அளிப்பதுடன் இந்திய மக்களுடன் இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கிருக்கும் ஐக்கியத்தையும் காட்ட, கட்சி விரும்புகின்றது. 

  2. ஏகாதிபத்தியச் சீனாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும் தனது சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகத்திற்காகவும் போராடும் இந்தியாவிற்கு ஆதரவு நல்க வேண்டுமென்றும் இலங்கை அரசாங்கத்தை இக்கட்சி கேட்டுக்கொள்கிறது.

  3. தனது பாதுகாப்பிற்குப் போதிய ஆட்பலம் இந்தியாவிடம் இருப்பினும், மாண்புமிக்க கொள்கைகளுக்காகவே இந்தியா போரிடுவதால், மனித சுதந்திரத்திற்காக நடத்தப்படும் இப் புனிதப்போரில் ஒரு சிறிதளவேனும் பங்கெடுக்க விரும்புவதனால், இப்போரில் பங்கெடுப்பதற்காக இலங்கைவாழ் தமிழ்பேசும் இளைஞர்களைத் தொண்டர்களாகச் சேரும்படி இக்கட்சி அழைக்கின்றது. 

மந்திரிமார் வருகைக்கு மீண்டும் எதிர்ப்பு

தமிழரசுக்கட்சியை மீண்டும் போராட்டத்திற்கு தயார்ப்படுத்தும் வகையில், 24.02.1963 இல் கட்சிச் செயற்குழு மந்திரிகள், அரச பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு – கிழக்கிற்கு வரும்போது, வருகையை எதிர்ப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. அவர்கள் வடக்கு – கிழக்கிற்கு கோலாகல விஜயங்கள் செய்யின் கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி யாழ்ப்பாணத்திற்கும் பருத்தித்துறைக்கும் அமைச்சர் ரி.பி. இலங்கரத்தின வருகைதந்த போது கறுப்புக்கொடி காட்டினர். நூற்றுக்கணக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பருத்தித்துறை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத் திறப்புவிழாவிலும் அணிவகுத்து நின்று கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தினை நடாத்தினர். இவ்வார்ப்பாட்டத்தின் போது ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினர் வி.ஏ. கந்தையா உட்பட பல ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டனர். தாக்குதலினால் பாதிக்கப்பட்ட வி.ஏ. கந்தையா 4.06.1963 இல் மரணமடைந்தார். தொடர்ந்து வ. நவரத்தினம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

‘எல்லாம் தமிழ் இயக்கம்’ உருவாதல்

சிங்களத் திணிப்பை எதிர்ப்பதற்கும், தமிழ் மக்களை அரசுடனான தம் கருமங்களைத் தமிழில் ஆற்றத் தூண்டுவதற்குமாக எல்லாம் தமிழ் இயக்கத்தை 1963 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 8 ஆம் திகதியில் உருவாக்கினர். இதன்படி தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள தபால் நிலையங்கள், வேறு அரசாங்க அலுவலகங்கள் ஆகியவற்றின் முன் போராட்டக்காரர்கள் விண்ணப்பங்கள், தந்திகள், முகவரிகள் என்பவற்றை தமிழில் எழுதுமாறு தூண்டினர். தேவையானவர்களுக்கு தாமே எழுதிக்கொடுத்தனர்.

அரசாங்கம் 1964 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி சத்தியாக்கிரகத்தால் கைவிடப்பட்ட தனிச்சிங்கள சட்டத்தை வடக்கு – கிழக்கில் அமுல்படுத்தப்போவதாக அறிவித்தது. தமிழரசுக் கட்சி முழுச் சக்தியையும் திரட்டி இதனை எதிர்ப்பது என 30.6.1963 இல் கொழும்பில் தீர்மானித்தது. அரசாங்கம் தீர்மானித்தபடியே சிங்கள அரசாங்க ஊழியர்களை வடக்குக்கு அனுப்ப முயற்சி செய்யப்பட்டது. அதேவேளை தமிழ்ப் பாடசாலைகளில் சிங்களத்தைத் திணிக்கும் நோக்கில் 2000 சிங்கள ஆசிரியர்களையும் வடக்கு – கிழக்கிற்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது.

தமிழரசுக் கட்சி இதனைப் பகிஷ்கரிப்பது என்றும் இப்போராட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்களை இணைப்பது என்றும் தீர்மானித்தது. தமிழரசுக் கட்சியின் போராட்ட அச்சத்தினால் சிங்கள ஊழியர்கள், ஆசிரியர்கள் வடக்கு – கிழக்குக்குச் செல்ல மறுத்தனர். இதனையொட்டி, அரசு 01.01.1964 அன்று அறிவித்தமைக்கு எதிரான மாபெரும் கண்டன ஊர்வலங்களை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், வவுனியா என்பவற்றில் நடாத்தியது. அவ்வவ் மாவட்டக் கச்சேரிகளுக்கு முன்னால் தனிச்சிங்களச் சட்டப்பிரதிகளையும் எரித்தது.

பாதயாத்திரை

சாதி பேதத்தை ஒழிக்கவும் கட்சியின் இலட்சியங்களை மக்கள் முன் பிரசாரம் செய்யவும் என பாதயாத்திரை நடாத்தப்பட்டது. செல்வநாயகம் தலைமையில் காங்கேசன்துறை தொகுதியிலிருந்து பாதயாத்திரை ஆரம்பமானது. பலவாரங்களாக நடைபெற்ற பாதயாத்திரையின் போது தங்கிநிற்கின்ற இடங்களில் தீண்டாமை ஒழிப்பின் அவசியம் பற்றியும், தமிழ் மக்களின் அரசியல் நிலை பற்றியும் கருத்தரங்குகளை நடாத்தினர்.

அரசு மீண்டும் சமரசப்பேச்சுக்கு வருதல்

இடதுசாரி ஐக்கிய முன்னணியின் தலைமையில் தொழிற்சங்கங்கள் 21 கோரிக்கைகளை சமர்ப்பித்து பெரிய போராட்டத்துக்கு ஆயத்தங்களைச் செய்தன. இந்நேரம் தமிழரசுக்கட்சியின் ஆதரவை அரசாங்கம் வேண்டி பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. சிறீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கம் இடதுசாரி ஐக்கிய முன்னணியின் பிரதான அமைப்பான லங்கா சமசமாஜக் கட்சியை தன்னுடன் இணைப்பதில் வெற்றி கண்டது. இதன்பின்னர் தொழிற்சங்கப் போராட்டமும் நின்றுபோனது. தமிழரசுக் கட்சியுடனான பேச்சுவார்த்தையும் நின்றுபோனது.

தமிழரசுக் கட்சியின் ஒன்பதாவது மாநில மாநாடு 

தமிழரசுக் கட்சியின் ஒன்பதாவது மாநில மாநாடு 1964 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 21, 22, 23 ஆம் திகதிகளில் திருகோணமலை இடம்பெற்றது. இம்மாநாட்டில் செல்வநாயகம் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். இதன்போது தொடர் போராட்டம் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம்

IMAGE-003-1.jpg

சிறீமா – சாஸ்திரி ஒப்பந்தம் 1964 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 30 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின் சார்பில் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவும், இந்தியாவின் சார்பில் அப்போதைய இந்தியப் பிரதமர் லாவ்பகதூர் சாஸ்திரியும் கையொப்பமிட்டனர். இலங்கையில் வாழ்ந்த மலையகத் தமிழர்கள் 975,000 பேரில் 525,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதென்றும் 300,000 பேரை இலங்கை ஏற்றுக்கொள்வதென்றும் முடிவிற்கு வந்தனர். மீதி 15,000 பேர் பற்றி பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் உடன்பாட்டிற்கு வந்தனர்.

1967 இல் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டத்தின் மூலம் இது நடைமுறைக்கு வந்தது. திருப்பி அனுப்பப்படும் செயன்முறை 15 வருட காலத்திற்குள் இடம்பெற வேண்டும் எனத் தீமானிக்கப்பட்டது. மலையக மக்கள் மத்தியில் பலம் வாய்ந்த அமைப்பாக விளங்கிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் எந்தவிதக் கலந்தாலோசனையும் மேற்கொள்ளாமலே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் தலைவர் தொண்டமான் நியமன உறுப்பினராக இருந்தபோதும் அவருடன் எந்தக் கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது விட்டனர். தமிழரசுக் கட்சி இதனைக் காரசாரமாக எதிர்த்தது. இந்தியா தன்னுடைய நலன்களுக்காக மலையக மக்களை விலையாகக் கொடுத்த நிகழ்வாக இது இருந்தது. மலையக மக்களின் அரசியல் பலம் பலவீனமடைந்தது. இது பற்றி மனோகணேசன் கூறும் போது “இந்தியா முழு மலையக மக்களையும் இந்தியாவிற்கு அழைத்திருக்க வேண்டும் அல்லது முழுப்பேரையும் இலங்கையில் விட்டிருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

அரசாங்கம் கவிழ்தல்

அரசாங்கம் ஏரிக்கரை பத்திரிகையை தேசியமயமாக்கும் மசோதாவைக் கொண்டுவந்தது.  அரசாங்கக் கட்சியின் சபை முதல்வர் சி.பி.டி. சில்வா தலைமையில் பல உறுப்பினர்கள் இதனை எதிர்த்து எதிர்க்கட்சிக்கு மாறினர். இந்நிலையில் அமைச்சர்கள் பலர் தமிழரசுக்கட்சியின் உதவியை நாடினர். ஆனால் முன்னைய அனுபவத்தினால் அதனை கட்சி நிராகரித்தது. மசோதா வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது தமிழரசுக்கட்சி எதிர்த்து வாக்களித்தது. இதனால் அரசாங்கம் கவிழ்ந்தது.

1965 மார்ச் பொதுத்தேர்தல்

இத்தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 217,986 வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களைக் கைப்பற்றினர். ஐக்கிய தேசியக் கட்சி 66 இடங்களையும் சிறீலங்கா சுதந்திரக்கட்சி 41 இடங்களையும் கைப்பற்றியது. ஐக்கிய தேசிய கட்சியினர் தமிழரசுக்கட்சியின் ஆதரவை நாடினர். இதனைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சி அரசில் சேர்ந்தது.

டட்லி – செல்வா ஒப்பந்தம்

1965 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி டட்லி – செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தமிழ்மொழியில் நிர்வாகம் நடத்துவதற்கும், தமிழிலேயே பதிவதற்கும், தமிழ் பேசும் மக்கள் நாடு முழுவதிலும் அரச கருமங்கள் விடயத்தில் தமிழில் தொடர்பு கொள்வதற்கும், வடக்கு – கிழக்கிலுள்ள நீதிமன்ற அலுவல்களைத் தமிழில் நடாத்தவும் ஏற்றவகையில் தமிழ்மொழி உபயோகச் சட்டத்தைக் கொண்டு வந்தனர். 

அதிகாரப் பகிர்வை வழங்கும் வகையில் மாவட்ட சபைகளை உருவாக்குதல், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்படும் போது; முதலில் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள காணியற்றவர்களுக்கு வழங்குதல், இரண்டாவதாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கு வழங்குதல், மூன்றாவதாக இலங்கையின் ஏனைய பகுதிகளிலுள்ள தமிழ்பேசும் இனத்தவர்களுக்கு முதலிடம் கொடுத்த பின்னர் ஏனையவர்களுக்கு வழங்குதல் என்பன ஒப்பந்தத்தில் உள்ளடங்கியிருந்தன. இவ் ஒப்பந்தத்தின் பின்னர் தமிழரசுக்கட்சி அரசாங்கத்தில் சேந்தது. இதில் திரு.மு. திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சராகப் பொறுப்பேற்றார். தமிழரசுக்கட்சியின் போராட்டங்கள் முடிவுக்கு வந்தன. அதன் வரலாற்றுப் பாத்திரமும் முடிவு பெற்றது.

தமிழரசுக்கட்சி அரசில் சேர்ந்ததினால் அரச ஊழியர்களில் பழையவர்களுக்கு சிங்களத் தேர்ச்சியின்றி, சம்பள உயர்வு, பதவி உயர்வு என்பன வழங்கப்பட்டன. புதிய ஊழியரின் சிங்களத் தேர்ச்சி 8 ஆம் தரமாக்கப்பட்டது. ஆனால் திறைசேரி அதிகாரிகள் 9 ஆம் தரச் சோதனையை 8 ஆம் தரம் என நடத்திச் சலுகையை முறியடித்தனர். நிதியமைச்சர் வன்னி நாயக்கா, பிரதமரோடு தமிழரசுக் கட்சி நடாத்திய மாநாட்டில் இதனை ஒத்துக்கொண்டார்.

தமிழ்மொழி உபயோகச் சட்டவிதிகள் மசோதா – 1966 ஜனவரி 08

1958 இல் பண்டாரநாயக்காவினால் கொண்டுவரப்பட்ட தமிழ்மொழி உபயோகச்சட்டத்தின் கீழ் அதன் இயங்கு விதிகள் தொடர்பான சட்ட மூலம் தமிழரசுக்கட்சியின் நிர்ப்பந்தத்தின் கீழ் 1966 ஜனவரி 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன்படி வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழையும் நிர்வாக மொழியாகவும், நாடு முழுவதிலும் தமிழ்பேசும் மக்கள் தமிழில் அரசாங்கத்தோடு கருமமாற்றவும் ஒழுங்கு செய்யப்பட்டது. இதனை சிறீலங்கா சுதந்திரக்கட்சி, இடதுசாரிக் கட்சிகள் உட்பட சிங்கள எதிர்க்கட்சிகள் யாவும் காரசாரமாக எதிர்த்தன. இச்சட்டவிதிகள் மூலச்சட்டத்தின் எல்லையை மீறியுள்ளன எனக் கூறப்பட்டது. அரச தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதோடு எதிர்க்கட்சிகள், கொழும்பு விகாரமாதேவி பூங்காவிலிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும் நடத்தியது.

ஊர்வலம் கட்டுக்கடங்காமல் சென்றதால் பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ரத்தினசாரதேரோ என்ற பௌத்தபிக்கு சூடுபட்டு மரணமடைந்தார். எனினும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் நடைமுறையில் பெரிதாகச் செயற்படவில்லை. இடதுசாரிக் கட்சிகள் இதன்மூலம் தமது இனவாதப் போக்கினை வெளிக்காட்டின. 

மாவட்ட சபை தொடர்பான வெள்ளை அறிக்கை

தமிழ்ப் பிரதேசங்களுக்கு ஓரளவு அதிகாரம் பகிரக்கூடிய சட்டமூலத்திற்காக வெள்ளை அறிக்கை மு. திருச்செல்வத்தினால் தயாரிக்கப்பட்டது. பல மாதங்கள் பிரதமரினாலும் அமைச்சர்களினாலும் கட்சித் தலைவர்களினாலும் ஆராயப்பட்ட வெள்ளை அறிக்கை பராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டது. அரசாங்கக் கட்சி உறுப்பினர்கள், பௌத்த பிக்குகள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர். இவ்வெதிர்ப்புக்கு அஞ்சிய பிரதமர் டட்லி சேனநாயக்க “மாவட்ட சபை மசோதவை தாம் பராளுமன்றத்தில் நிறைவேற்ற மாட்டோம்” எனக் கூறினார்.

IMAGE-001-2.jpg

தமிழரசுக்கட்சியின் பத்தாவது மாநில மாநாடு (1966 யூன் 23, 24, 25 – கல்முனை)

தமிழரசுக் கட்சியின் 10 ஆவது மாநில மாநாடானது 1966 ஆம் ஆண்டு யூன் மாதம் 23, 24, 25 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கட்சியின் தலைவராக ஈ.எம்.வி. நாகநாதன் தெரிவு செய்யப்பட்டார். முதன்முறையாக பிரதமர் டட்லி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். “இலகுவில் வாக்குக்கொடுக்க மாட்டேன், கொடுத்தால் நிறைவேற்றத் தவறமாட்டேன்” என டட்லி மாநாட்டில் உறுதிமொழி அளித்தார். 

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டம்

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டத்தை அரசாங்கம் இயற்ற முற்பட்ட போது தமிழரசுக் கட்சியினதும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசினதும் முயற்சியினால் ஆட்சேபத்திற்குரிய அம்சங்கள் நீக்கப்பட்டது. விருப்பத்திற்கு மாறாக யாரையும் இந்தியப் பிரஜையாகப் பதிவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தியா திரும்பியோரின் வீதத்திற்கே இலங்கைப் பிரஜையாகப் பதிவு செய்யும் திட்டம், இலங்கைப் பிரஜைகளாகப் பதிவு செய்தோரை தனிவாக்காளர் இடாப்பில் அடக்கும் அம்சம் என்பனவே நீக்கப்பட்டன. ஆட்களைப் பதிவு செய்து அடையாள அட்டை வழங்குவதற்கான சட்டமும் மாற்றப்பட்டது. பிரஜை, நாடற்றவர் என்ற பேதமின்றி இந்நாட்டில் சட்டபூர்வமாக வாழும் 18 வயதிற்கு மேற்பட்டோர் எல்லோரையும் பதிந்து அடையாள அட்டை வழங்குவதற்கு சட்டமியற்றப்பட்டது.

இச்சட்டங்களை தமிழரசுக்கட்சியின் ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினர்கள் வ. நவரத்தினம் ஏற்றுக்கொள்ளவில்லை; எதிர்த்து வாக்களித்தார். இதனால் 24.04.1968 இல் கூடிய கட்சியின் பொதுச்சபை வ. நவரத்தினம் அவர்களைக் கட்சியிலிருந்து ஏகமனதாக வெளியேற்றியது. இதன்பின்னர் வ. நவரத்தினம் ‘தமிழர் சுயாட்சிக் கழகம்’ எனும் புதிய கட்சியை உருவாக்கினார். 

மு. திருச்செல்வம் அமைச்சர் பதவியைத் துறத்தல்

திருகோணமலை கோணேசர் கோவிலைச் சார்ந்த பிரதேசத்தை புனித பிரதேசமாக்க மு. திருச்செல்வம் முயற்சித்தார். இதற்காக தமிழர், சிங்களவர், பறங்கியர் என மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. சேருவல பௌத்த ஆலயத் தலைமைப் பிக்கு இதை எதிர்த்தார். பிரதமர் டட்லி சேனநாயக்க மு. திருச்செல்வத்துடன் கலந்தாலோசிக்கமாலே குழுவை நிறுத்தி வைத்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1968 புரட்டாதி மாதம் 16 ஆம் திகதி மு. திருச்செல்வம் அமைச்சர் பதவியை இராஜனாமாச் செய்தார். இதன் பின்னரும் தமிழரசுக் கட்சி சில மாதங்கள் அரசாங்கத்தில் நீடித்தது. 1968 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தமிழரசுக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகியது.


ரணில் எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்தக்கூடிய வல்லமையைப் பெற்றுவிட்டாரா?

2 weeks ago

ரணில் எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்தக்கூடிய வல்லமையைப் பெற்றுவிட்டாரா?

Veeragathy Thanabalasingham

on September 1, 2025

Ranil-Boris.jpg?resize=1200%2C550&ssl=1

Photo, Social Media

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் அரசியல் வரலாற்றில் பல முதலாவது ‘சாதனைகளுக்கு’ சொந்தக்காரர். இந்த நாட்டின் மிகவும் பழைமை வாய்ந்த அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக விக்கிரமசிங்கவை போன்று வேறு எந்த அரசியல் தலைவரும் நீண்டகாலம் பதவி வகித்ததில்லை. மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தனது கட்சியின் தலைவராக இருந்து வரும் அவரே மிகவும் நீண்டகாலம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த அரசியல் தலைவர்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்றத்தில் தேர்தல் மூலமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவான முதல் அரசியல் தலைவர் விக்கிரமசிங்கவே. இறுதியில் அவரே அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முதலாவது முன்னாள் ஜனாதிபதி என்ற அவப்பெயரையும் தனது சுமார் அரை நூற்றாண்டுகால அரசியல் வாழ்வின் அந்திமக் காலத்தில் சம்பாதிக்க வேண்டியதாகப் போய்விட்டது.

ஜனாதிபதியாக இருந்த வேளையில் 2023ஆம் ஆண்டு செப்டெம்பரில் ஜி 77 நாடுகளின் உச்சி மகாநாட்டில் பங்குபற்றுவதற்காக கியூபாவுக்கும் அடுத்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78ஆவது வருடாந்த கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்காவுக்கும் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்ட விக்கிரமசிங்க நாடு திரும்பும் வழியில் லண்டனில் தனிப்பட்ட தேவைக்காக தங்கிநின்ற இரு நாட்கள் தனக்கும் தனது குழுவினருக்குமான செலவுகளுக்கு அரச பணத்தைப் பயன்படுத்தியதன் மூலம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து விட்டார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டாகும்.

முன்னாள் ஜனாதிபதியின் மனைவியான பேராசிரியை மைத்ரி. விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பல்கலைக்கழகம் ஒன்று கௌரவப் பேராசிரியை பட்டம் வழங்கிக் கௌரவித்த வைபவத்தில் பங்கு பற்றுவதற்காகவே அவர் லண்டனுக்குச் சென்றார். பேராசிரியை மைத்ரி தனக்குரிய கௌரவத்தைப் பெறுவதற்காக தனது சொந்தப் பணத்திலேயே ஐக்கிய இராச்சியத்துக்கு சென்றிருந்தார். அமெரிக்க விஜயத்தை முடித்துக் கொண்டு லண்டனுக்குச் சென்று தங்கியிருந்த போது விக்கரமசிங்க தனது அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கான செலவினங்களுக்கு 16.6 மில்லியன் ரூபா அரச பணத்தை செலவிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

இலங்கை பொலிஸின் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் அழைப்பின் பேரில் ஆகஸ்ட் 22ஆம் திகதி தனது வாக்குமூலத்தை வழங்குவதற்கு அதன் தலைமையகத்துக்குச் சென்ற விக்கிரமசிங்கவை நீண்டநேரம் விசாரணை செய்த பிறகு பொலிஸார் கைதுசெய்து கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். ‘நாடக பாணியிலான’ நிகழ்வுகளுக்குப் பிறகு அன்றையதினம் இரவு 10 மணிக்குப் பிறகு அவரை ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

கைவிலங்கிடப்பட்ட நிலையில் சிறைச்சாலை வாகனத்தில் கூட்டிச் செல்லப்பட்ட விக்கிரமசிங்கவின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததை அடுத்து அவர் முதலில் வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலையிலும் பிறகு கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவரால் ஆகஸ்ட் 26ஆம் திகதி நீதிமன்றத்திற்கு செல்லமுடியவில்லை. இணையவழியின் மூலமாக நீதிமன்றத்தில் தனது பிரசன்னத்தை உறுதிசெய்த முன்னாள் ஜனாதிபதியின் உடல் நிலையைக் கருத்தில்கொண்டு கோட்டை மாஜிஸ்திரேட் அவரை தலா ஐந்து மில்லியன் ரூபா மூன்று ஆளுறுதிப் பிணையில் விடுதலை செய்தார்.

ஒருவாரகாலம் தேசிய வைத்தியசாலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் இருதய நோய் மற்றும் நீரிழிவு உட்பட பல பாரதூரமான நோய்களுக்காக விசேட வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்ற பிறகு ஆகஸ்ட் 29 வெள்ளிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி வீடு திரும்பினார். வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதற்கு விக்கிரமசிங்க விரும்பினால் அரசாங்கம் அதற்கு அனுமதிக்குமா என்று தெரியவில்லை. முன்னாள் ஜனாதிபதி வெளிநாட்டுக்குச் செல்லாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்யுமாறு சட்டமா அதிபரின் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

மீண்டும் விக்கிரமசிங்கவின் வழக்கு அக்டோபர் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படும். அவரின் கதியை இனிமேல் நீதிமன்றமே தீர்மானிக்கும் என்பதால் இதற்கு மேல் நாம் அதைப்பற்றி எதையும் கூறுவது நீதித்துறையை அவமதிப்பதாக அமைந்து விடும். அரச பணத்தை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டதற்குப் பிறகு அந்த விவகாரம் முற்றிலும் சட்டப்  பிரச்சினையாக மாறிவிட்டாலும் கூட, அது அரசியல் அரங்கில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்திருக்கிறது.

விக்கிரமசிங்கவை கடந்த காலத்தில் மிகவும் கடுமையாக விமர்சித்த அரசியல்வாதிகளும் கூட அணிதிரண்டு அவருக்கு தங்களது ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் வெளிக்காட்டினர். பெரும்பாலும் சகல எதிர்க்கட்சிகளின் தலைவர்களுமே செய்தியாளர்கள் மகாநாடுகளைக் கூட்டி விக்கிரமசிங்கவை நியாயப்படுத்தியதுடன் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ வாழ்வையும் தனிப்பட்ட வாழ்வையும் வேறுபடுத்திப்பார்க்கக் கூடாது என்றும் கூறினர். மேலும், விக்கிரமசிங்க மீதான சட்ட நடவடிக்கையை அவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் என்றே வர்ணிக்கிறார்கள்.

விக்கிரமசிங்கவுக்கு எதிரான நடவடிக்கையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் மீதான பெரும் தாக்குதல் என்று கண்டனம் செய்த அதேவேளை, முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்‌ஷ விக்கிரமசிங்கவின் கைதை அரசியல் பழிவாங்கல் என்று வர்ணித்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கட்டமைத்து வருகின்ற அரசியலமைப்பு ரீதியான சர்வாதிகாரத்தை தோற்கடிப்பதற்கு கட்சி வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். கோட்டபாய ராஜபக்‌ஷ மாத்திரமே இந்த விவகாரத்தில் பகிரங்கமாக கருத்து எதையும் வெளியிடாமல் இருந்துவரும் முன்னாள் ஜனாதிபதியாவார்.

விக்கிரமசிங்க விவகாரம் ஒரு ஜனாதிபதியின் தனிப்பட்ட விஜயங்களையும் உத்தியோகபூர்வ விஜயங்களையும் வேறுபடுத்திப் பார்க்க முடியுமா என்ற விவாதம் ஒன்றையும் மூளவைத்திருக்கிறது. அவ்வாறு வேறுபடுத்திப்பார்க்க முடியாது என்று விக்கிரமசிங்க கூறியதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

தேசிய மக்கள் சக்தி/ ஜே.வி.பியின் நிகழ்ச்சிகளுக்கும் அநுராதபுரத்தில் தனது குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதற்கும் செல்லும் போது ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க பாதுகாப்புப் பிரிவினர் இல்லாமல் தனது சொந்த வாகனத்தையா பயன்படுத்துகிறார் என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின.

இதற்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஜனாதிபதி தனிப்பட்ட தேவைகளுக்காக, குறிப்பாக சுகவீனமுற்றிருக்கும் தனது தாயாரைப் பார்வையிடுவதற்காக நாட்டுக்குள் பயணங்களைச் செய்வதையும் முன்னாள் ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு விமானங்களில் செல்வதையும் ஒருபோதும் ஒப்பிட முடியாது என்று குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகள் முடியுமானால் திசாநாயக்கவின் உள்நாட்டுப் பயணங்கள் தொடர்பில் நீதிமன்றத்தை நாடட்டும் பார்க்கலாம் என்று ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சவால் விட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

தற்போதைய இலங்கை அரசியல் தலைவர்களில் விக்கிரமசிங்கவே சர்வதேச மட்டத்தில் செல்வாக்கும் மதிப்பும் கொண்டவராகக் கருதப்படுவதால் அவருக்கு எதிரான நடவடிக்கைகளை குறிப்பாக, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் கண்டனம் செய்யும் என்றும் அவரை உடனடியாகவே விடுவிக்க வேண்டும் என்று அரசாங்கத்துக்கு நெருக்குதல்களைக் கொடுக்கும் என்றும் பரவலான  எதிர்பார்ப்பு இருந்தது. அவ்வாறு எதுவுமே நடைபெற்றதாகத் தெரியவில்லை. இலங்கையின் நிகழ்வுப் போக்குகளை அந்த நாடுகள் அவதானித்துக் கொண்டிருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வெளிநாடுகளில் இருந்து அவருக்கு சார்பாக பகிரங்கமாக கருத்து வெளியிட்டவர்கள் என்றால் இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூரும் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் நோர்வேயின் எரிக் சொல்ஹெய்முமேயாவர். விக்கிரமசிங்க பாரதூரமான குற்றச் செயல் எதையும் செய்யவில்லை என்று கூறிய அவர்கள் இருவரும் அவரை உனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தினார்கள்.

முன்னாள் ஜனாதிபதியின் கைது தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்கள் உட்பட சர்வதேச சமூகத்திடமிருந்து நெருக்குதல்கள் வந்ததா என்று அமைச்சரவை செய்தியாளர்கள் மகாநாட்டில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்திடம் கேட்கப்பட்டபோது அதற்குப் பதிலளித்த அவர், எந்தவொரு வெளிநாட்டு இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர அமைப்போ எந்தக் கருத்தையும் கூறவில்லை என்றும் சில தனிப்பட்டவர்கள் வெளிநாடுகளில் இருந்து வெளியிட்ட கருத்துக்கள் முக்கியத்துவமற்றவை என்றும் குறிப்பிட்டார். கடந்த காலத்தில் தற்போது இலங்கையில் சட்டத்தின் ஆட்சி சமத்துவமான முறையிலும் நேர்மையாகவும் பிரயோகிக்கப்படுகிறது என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதியின் கைதுக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து கொழும்பில் உள்ள பல்வேறு வெளிநாட்டு தூதரகங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவர்கள் விளக்கிக் கூறியதாகவும் கைது தொடர்பில் மேலதிக விபரங்களை குறிப்பிட்ட சில சர்வதேச அமைப்புக்கள் அவர்களிடம் கோரியதாகவும் கட்சி வட்டாரங்கள் அறிவித்தன.

விக்கிரமசிங்க விவகாரம் தற்போது சிதறிப்போயிருக்கும் எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்தி அரசாங்கத்துக்கு பெரிய சவாலைத் தோற்றுவிக்கக்கூடிய சாத்தியத்தை எதிர்பார்ப்பதற்கில்லை. முன்னாள் ஜனாதிபதியின் கைதுக்கு உடனடியாக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் காணப்பட்ட ஆரவாரம் தற்போது தணிந்து போயிருப்பதாகவே தோன்றுகிறது. எதிர்க்கட்சிகளின் பரந்தளவிலான கூட்டணியொன்றை அமைப்பதற்கு அவற்றை வழிநடத்தக்கூடிய அரசியல் செல்வாக்கும் வல்லமையும் கொண்ட ஏற்புடைய தலைவர் ஒருவர் அவர்கள் மத்தியில் இல்லை. அதேவேளை, கடந்த வாரத்தைய சம்பவங்களுக்குப் பிறகு எதிரணி அரசியல் கட்சிகளை ஐக்கியப்படுத்தக்கூடிய ஒரு வலிமையான அரசியல் காரணியாக விக்கிரமசிங்க மாறியிருக்கிறாரா என்பதும் முக்கியமான ஒரு கேள்வி.

இன்றைய எதிர்க்கட்சி அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் அவர்களது கடந்தகால முறைகேடான செயற்பாடுகளுக்காக அரசாங்கத்தினால் எளிதாக இலக்கு வைக்கப்படக்கூடிவர்களாக இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் தங்கள் மீது சட்ட நடவடிக்கைகளை எடுப்பதில் அரசாங்கம் நாட்டம் காட்டாமல் இருப்பதை உறுதிசெய்யக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்காகவே ஐக்கியப்படுவது குறித்தும் மக்களை அணிதிரட்டுவது குறித்தும் அவர்கள் பேசுகிறார்கள். அத்தகைய அணுகுமுறை மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான சாத்தியம் குறித்து வலுவான சந்தேகம் எழுகிறது.

அதேவேளை, கடந்த வருடத்தைய தேசிய தேர்தல்களின்போது நாட்டு மக்களுக்கு அளித்த பெருவாரியான வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முக்கியமான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திருப்புவதற்காக முன்னைய ஆட்சியாளர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் அக்கறை காட்டுகிறது என்ற விமர்சனமும் இருக்கிறது. விக்கிரமசிங்கவை விடவும் கூடுதலான அளவுக்கு செல்வாக்குடைய பலம்பொருந்திய அரசியல் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளில் இறங்குவதற்கு முன்னதாக மக்களின் உணர்வுகளை நாடிபிடித்துப் பார்க்கும் ஒரு நடவடிக்கையே அவரின் கைது என்றும் ஊகிக்கப்படுகிறது.

அரசியல் பழிவாங்கலில் இறங்கியிருப்பதாக அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் எச்சரிக்கைளை தாங்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்று காட்டும் வகையில் நடந்துகொள்ளும் அரசாங்கத் தலைவர்கள்  ஊழல்தனமான அரசியல்வாதிகளுக்கு எதிராக மேற்கொண்டு எடுக்கப்போகும் நடவடிக்கைகளைப் பற்றி அறிவிப்புகளைச் செய்கிறார்கள். விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நீதிமன்ற வளாகத்துக்கு ஆர்ப்பாட்டக்காரர்களை அணிதிரட்டிக்கொண்டு வந்தவர்களை அடையாளம் காணும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ்மா அதிபர் கூறியிருக்கிறார்.

சகல குடிமக்களுக்கும் சமத்துவமான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய ஜனாதிபதி திசாநாயக்க ஏற்கனவே எடுக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் மீள்பரிசீலனை செய்யப்படமாட்டாது என்று கூறியிருக்கிறார். அரச பணத்தை தவறாகப் பயன்படுத்தியவர்களிடம் இருந்து அது திரும்பப் பெறப்படும் என்றும் ஊழலுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் பொறுப்பானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கொழும்பில் கடந்தவாரம் நிகழ்வொன்றில் கூறினார். செப்டெம்பரில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டதும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான வீடுகள் திரும்பப் பெறப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்திருக்கிறார்.

அதேவேளை, விக்கிரமசிங்கவைப் போன்று மற்றைய முன்னாள் ஜனாதிபதிகளும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் அவை குறித்து விசாரணை செய்யப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. சட்டம் சகலருக்கும் சமமான முறையில் பிரயோகிக்கப்படும் என்று கூறிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால எவரிடமிருந்தாவது முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் மற்றைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று ஊடகங்களுக்கு கடந்த வாரம் கூறினார்.

விக்கிரமசிங்க விவகாரத்தில் முக்கியமான ஒரு அம்சத்தை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அவர் இலங்கையின் பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவர். அவரது கைதும் நீதிமன்றத்தில் அவர் பல மணி நேரமாக அனுபவிக்க வேண்டியிருந்த அசௌகரியங்களும் கொழும்பு உயர் வர்க்கத்தவர்களுக்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜனாதிபதி திசாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக, ஜே.வி.பியின் தலைவர்களின் எளிமையான குடும்பப் பின்னணிகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது விக்கிரமசிங்கவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒரு வர்க்க வன்மம் வெளிக்காட்டப்பட்டதாகவும் விமர்சனங்கள் உண்டு.

விக்கிரமசிங்கவின் அரசியலையும் எதையுமே மெத்தனமாக நோக்கும் அவரது சுபாவத்தையும் விரும்பாதவர்கள் பலர் கூட அவர் கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலை வாகனத்தில் கூட்டிச் செல்லப்பட்டதனால் கடுமையான அதிருப்தியடைந்திருக்கிறார்கள் என்பது தெளிவானது. அத்துடன், மனைவியின் பட்டமளிப்பு வைபவத்தில் பங்கேற்பதற்காக (இலங்கையில் இடம்பெற்ற நிதி தொடர்பான பாரிய ஊழல் நடவடிக்கைளுடன் ஒப்பிடும்போது) ஒரு சிறிய தொகையான 16.6 மில்லியன் ரூபாவை பயன்படுத்தியதை பாரதூரமான பிரச்சினையாக ஊதிப்பெருப்பித்து அவரை கைதுசெய்திருக்க வேண்டியதில்லை என்ற ஒரு அபிப்பிராயமும் பல மட்டங்களில் இருக்கிறது.

வழமையாக விக்கிரமசிங்கவை மிகவும் கடுமையாக விமர்சித்து வருபவரான முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜெயதிலக கடந்த வாரம் எழுதிய கட்டுரை ஒன்றில் ஜனாதிபதி திசாநாயக்கவின் நிருவாகத்தின் உண்மையான முகம் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்தை பொறுத்தவரை, சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட ஒருவராக முன்னாள் ஜனாதிபதியைக் கருதவில்லை என்று கூறியிருக்கும் தயான், விக்கிரமசிங்க தனது குடும்பத்தவர்களிடம் அல்லது நண்பர்களிடம் கேட்டிருந்தால் ஒரு நிமிடத்தில் பெற்றிருக்கக்கூடிய 16.6 மில்லியன் ரூபாவை அரச நிதியில் இருந்து அவர் கையாடியிருப்பார் என்று நம்பினால் தனது விவேகத்தையே நிந்தனை செய்வதாக அமையும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சட்டபூர்வத் தன்மைக்கும் நியாயப்பாடான தன்மைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் விளங்கிக்கொள்வது சாத்தியமில்லை என்றும் ஒப்பீட்டளவில் வலுவில்லாத ஒரு பிரச்சினைக்காக விக்கிரமசிங்கவை கைதுசெய்து அசௌகரியத்தை கொடுத்ததன் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமூக நீதியில் அதற்கு இருக்கும் பற்றுறுதியை அல்ல, அதன் தலைமைத்துவத்தின் கீழ்த்தரமான சிந்தனையையும்  மட்டுமீறிய தவறான உணர்ச்சியார்வத்தையும் வெளிக்காட்டியிருக்கிறது என்றும் தயான் மேலும் கூறியிருக்கிறார்.

இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றுமில்லாத பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தபோது ஆட்சிப் பொறுப்பை அரசியல் தைரியத்துடன் ஏற்றுக்கொண்டு மீட்சிக்கு வழிகாட்டிய ஒரு தலைவரை கைதுசெய்து அவமதித்திருக்கக் கூடாது என்றும் ஒரு பிரிவினர்  கவலைப்படுகிறார்கள். 2022 ஜூலையில் வெறுமனே 50 மில்லியன்

டொலர்களாக இருந்த வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு 2025 செப்டெம்பரில் 6 பில்லியன் டொலர்களாக உயரக்கூடியதாக நாட்டின் பொருளாதாரத்தை மீடடெடுத்த தலைவர் 53,000 டொலர்களுக்கு (16.6 மில்லியன் ரூபா)வுக்கு பெறுமதி இல்லாதவரா என்று சில தினங்களுக்கு முன்னர் ஒரு அரசியல் பத்தியாளர் தர்மாவேசத்துடன் கேள்வியெழுப்பியிருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து வெளியேறியபோது விக்கிரமசிங்க தனது கையில் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் போறிஸ் ஜோன்சனின் “கட்டவிழ்த்துவிடப்பட்டது ” (Unleashed) என்ற தலைப்பிலான சுயசரிதை நூலை கையில் வைத்திருந்தார். தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்தபோது அதை அவர் வாசித்திருக்கிறார் போன்று தெரிகிறது. அதன் மூலமாக ஏதாவது அரசியல் செய்தியை நாட்டுக்கு அல்லது அரசாங்கத்துக்கு சொல்வதற்கு அவர் நோக்கம் கொண்டிருந்தாரோ தெரியவில்லை.

போறிஸ் ஜோன்சனின் நூல் பற்றிய தகவல்களை அறியும் ஆவலில் கூகிளில் தேடுதல் நடத்தியபோது அது பற்றி லண்டன் கார்டியன் பத்திரிகையின் இணையாசிரியர் மார்டின் கெற்றில் கடந்த வருட பிற்பகுதியில் எழுதிய விமர்சனத்தை காண நேர்ந்தது. “போறிஸ் ஜோன்சனின் நூல் – ஒரு கோமாளியின் வரலாற்றுக் குறிப்புகள் ” (Unleashed by Boris Johnson review – memoirs of a clown) என்று அதற்கு தலைப்பிடப்பட்டிருந்தது.

Thanabalasingam-e1742967550320.jpg?resizவீரகத்தி தனபாலசிங்கம்

https://maatram.org/articles/12270

'ரணிலை வீழ்த்திய புலிகள்' : சர்வதேச அளவில் செல்வாக்கு பெற்றவர் இலங்கை அரசியலில் தனிமரமான கதை

2 weeks 2 days ago

ரணில் விக்ரமசிங்க, இலங்கை, அரசியல், ஐக்கிய தேசியக் கட்சி

பட மூலாதாரம், PMD SRI LANKA

படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • 28 ஆகஸ்ட் 2025

    புதுப்பிக்கப்பட்டது 29 ஆகஸ்ட் 2025

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், 6 தடவை பிரதமர் பதவியை வகித்தவரும், ஒரு தடவை ஜனாதிபதியாக பதவி வகித்தவருமான ரணில் விக்ரமசிங்க அவ்வப்போது சர்ச்சைகளை எதிர்நோக்கி வருவதை கடந்த பல பத்தாண்டுகளாகவே காணக்கூடியதாக இருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை தன்வசம் கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க, கட்சியின் உள்ளக பிரச்னைகள் முதல் தேசிய அரசியலில் பிரச்னை வரை அவ்வப்போது பல்வேறு சவால்மிகுந்த பிரச்னைகளை எதிர்நோக்கி வந்துள்ளார்.

தனது கட்சியின் உள்ளக பிரச்னைகள், கூட்டணி கட்சிகளின் பிரச்னைகள் என சந்தித்து வந்த ரணில் விக்ரமசிங்க இன்று பதவியை இழந்து கட்சி அரசியலில் மாத்திரம் ஈடுபட்டு வந்த தருணத்தில் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு புதிய வகையான பிரச்னையொன்றை எதிர்நோக்கியுள்ளார்.

வெளிநாட்டு பயணமொன்றின் ஊடாக அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு நேற்று முன்தினம் (26) நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.

50 லட்சம் ரூபாய் வீதமான 3 சரீர பிணைகளின் கீழ் ரணில் விக்ரமசிங்கவை விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

எனினும், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தருணத்தில் சுகயீனமுற்ற ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை மருத்துவமனையிலிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவருக்கு பல்வேறு நோய்கள் காணப்படுகின்ற பின்னணியில், அவர் தொடர்ந்தும் சிகிச்சை மருத்துவமனையில் தங்கியிருந்து பெற வேண்டும் என கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவ குழாம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது அரசியல் வாழ்க்கையில் எதிர்நோக்கிய சவால் மிகுந்த சர்ச்சைக்குரிய தருணங்கள் குறித்து இந்த கட்டுரை ஆராய்கின்றது.

ஐ.தே.க கட்சித் தலைவர் பதவியின் சர்ச்சை

ரணில் விக்ரமசிங்க, இலங்கை, அரசியல், ஐக்கிய தேசியக் கட்சி

பட மூலாதாரம், PMD SRI LANKA

படக்குறிப்பு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக 1994ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.

இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்ட மிக முக்கியமான பழைமை வாய்ந்த கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி காணப்படுகின்றது.

சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கத்தை அமைத்த கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக 1994ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.

அன்று முதல் இன்று வரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க பதவி வகித்து வருகின்றார்.

இந்த நிலையில், 1994-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற பெரும்பாலான தேர்தல்களில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியை சந்தித்திருந்த பின்னணியில், கட்சிக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோஷம் 2010-ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் தொடர்ச்சியாக இருந்து வந்தது.

கட்சி தலைவர் பதவி சஜித் பிரேமதாஸவிற்கு வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பினர் வலியுறுத்திய பின்னணியில், 2015-ஆம் ஆண்டுக்கு பின்னராக காலத்தில் அது வலுப்பெற ஆரம்பித்திருந்தது.

இந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்த குழுவினர் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியிருந்தனர்.

இந்த தேர்தலில் சஜித் பிரேமதாஸ பின்னடைவை சந்தித்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்த குழுவினர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்திருந்தனர்.

ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் மீதான நம்பிக்கை இழப்பே, ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பிக்க பிரதானமான காரணமாக அமைந்திருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த ஏனைய கட்சிகள் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து வெளியேறி, சஜித் பிரேமதாஸவுடன் கைக்கோர்த்திருந்தனர்.

இந்தப் பின்னணியில், 2020-ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் ரணில் விக்ரமசிங்க தனிமையடைந்திருந்தார்.

2020-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு நாடாளுமன்ற ஆசனத்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்த ஐக்கிய மக்கள் சக்தி பிரதான எதிர்க்கட்சியாக மாறியது.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் பெற்றுக்கொண்ட முழுமையான வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியல் ஊடாக ஒரு ஆசனம் கிடைக்கப் பெற்றது.

இவ்வாறு கிடைக்கப் பெற்ற ஒரு ஆசனத்தின் ஊடாக புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு 6 மாதங்களின் பின்னர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக தனியாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்திருந்தார்.

ரணில் விக்ரமசிங்க, இலங்கை, அரசியல், ஐக்கிய தேசியக் கட்சி

பட மூலாதாரம், PMD SRI LANKA

படக்குறிப்பு, 2020-ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் ரணில் விக்ரமசிங்க தனிமையடைந்திருந்தார்.

இதையடுத்து, கொரோனா தாக்கத்தின் ஊடாக நாடு பாரிய பொருளாதார சிக்கலை எதிர்நோக்கியது.

தனிநபராக நாடாளுமன்றத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்திய அவர், பொருளாதார சிக்கல் காரணமாக எழுந்த போராட்டத்தினால் ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சிகளுக்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அழைப்பு விடுத்தார்.

எனினும், பிரதான எதிர்க்கட்சிகளான சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி ஆகியன ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த பின்னணியில், தனிநபராக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்த ரணில் விக்ரமசிங்க கோட்டாபய ராஜபக்ஸவின் அழைப்பை ஏற்று பிரதமராக பதவி பிரமாணம் செய்துகொண்டார்.

அதன் பின்னர் வலுப்பெற்ற போராட்டம் காரணமாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஸ, தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, பதில் ஜனாதிபதியாக தெரிவான ரணில் விக்ரமசிங்க, அதனை தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகளின் ஊடாக புதிய ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்துகொண்டார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாது ஒரு ஆசனத்தின் ஊடாக தனது அரசியலை செய்து, இறுதியில் ஜனாதிபதியாக பதவியேற்ற ஒரேயொருவர் ரணில் விக்ரமசிங்கவாக கருதப்படுகின்றார்.

அதன்பின்னர், பொருளாதார ரீதியில் வீழ்ச்சி கண்ட நாடு, ஒரு சில மாதங்களிலேயே வழமை நிலைக்கு திரும்பியது.

எனினும், 2024ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் தோல்வியை சந்தித்திருந்தார்.

பல முறை ஆட்சி பீடம் ஏறி, இறுதியில் ஒரு ஆசனத்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட பொறுப்பை அந்த கட்சியின் தலைவராக இருக்கும் ரணில் விக்ரமசிங்க ஏற்க வேண்டும் என பல தரப்பினர் கூறியிருந்தனர்.

எனினும், சவால்களை கடந்து, இறுதியில் தனிநபராக ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார்.

சந்திரிக்கா கலைத்த அமைச்சரவை

ரணில் விக்ரமசிங்க, இலங்கை, அரசியல், ஐக்கிய தேசியக் கட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க

ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் 2001ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான மக்கள் கூட்டணி தோல்வி அடைந்து, ஐக்கிய தேசியக் கட்சி 109 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றது.

அதன் ஊடாக இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார்.

நிறைவேற்று அதிகாரம் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான கட்சி வசமும், ஆட்சி அதிகாரம் பிரதமரான ரணில் விக்ரமசிங்க வசமும் காணப்பட்டது.

இதனால், ஆட்சியை உரிய முறையில் செய்வதில் பாரிய இழுப்பறி நிலைமை அந்த காலப் பகுதியில் காணப்பட்டது.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த அந்த காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தி, நாட்டில் போர் நிறுத்தத்தை மேற்கொண்டிருந்தார்.

இவ்வாறான பின்னணியில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு காணப்பட்ட அதிகாரத்திற்கு அமைய, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி பீடமேறி இரண்டு வருடங்களின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையை கலைத்து நாடாளுமன்றத் தேர்தலுக்கு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 105 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றதுடன், ஐக்கிய தேசியக் கட்சி 82 ஆசனங்களை மாத்திரமே பெற்றது.

இந்த நாடாளுமன்ற கலைப்பானது ஜனநாயக விரோத செயற்பாடு என எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. இதுவும் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு சதித்திட்டமாக அந்த காலப் பகுதியில் கருதப்பட்டது.

'ரணிலை வீழ்த்திய விடுதலைப் புலிகள்'

ரணில் விக்ரமசிங்க, இலங்கை, அரசியல், ஐக்கிய தேசியக் கட்சி

படக்குறிப்பு, தமிழீழ விடுதலைப் புலிகளின் விடுத்த அறிவிப்பே ரணில் விக்ரமசிங்கவின் தோல்விக்கான பிரதானமான காரணமாக அமைந்திருந்ததாக அ.நிக்சன் குறிப்பிடுகின்றார்.

இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் 2005ஆம் ஆண்டு நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டியிருந்தார்.

மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

மஹிந்த ராஜபக்ஸ 4,887,152 வாக்குகளை பெற்றிருந்ததுடன், ரணில் விக்ரமசிங்க 4,706,366 வாக்குகளை பெற்றுக் கொண்டார்.

மஹிந்த ராஜபக்ஸவிடம், ரணில் விக்ரமசிங்க வெறும் 180,786 வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை சந்தித்திருந்தார்.

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோல்வியை தழுவ பிரதானமான காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடே காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதினர்.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தமிழர் பிரச்னை தொடர்பில் சரியான தீர்வுகளை முன்வைக்க தவறிய பட்சத்திலேயே, விடுதலைப் புலிகள், 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்க நடவடிக்கை எடுத்திருந்ததாக கூறப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களை, ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டாம் என தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவிப்பை ஏற்றுக்கொண்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிப்பை பெரும்பாலும் தவிர்த்திருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவிப்பே ரணில் விக்ரமசிங்கவின் தோல்விக்கான பிரதானமான காரணமாக அமைந்திருந்ததாக மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான அ.நிக்சன் குறிப்பிடுகின்றார்.

''சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வாக்குகளினால் மாத்திரமே ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் வாக்களித்திருந்தால், குறைந்தது இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை ரணில் விக்ரமசிங்க பெற்றுக் கொண்டிருந்திருப்பார். நிச்சயமாக அவர் வென்றிருப்பார். அந்த மக்கள் வாக்களிக்கவில்லை. அதனாலேயே அவர் தோல்வி அடைந்தார். ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்திருந்தாலும் போர் நடந்திருக்கும். கட்டாயம் போர் நடந்திருக்கும். ஆனால், மஹிந்த ராஜபக்ஸ மாதிரி மிக மோசமாக போர் நடந்திருக்காது. ரணில் விக்ரமசிங்க வந்திருந்தால் விடுதலைப் புலிகள் மீதான தடைகளும் சர்வதேச ரீதியாக அதிகரித்திருக்கும்.'' என மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் கூறுகின்றார்.

2018 அரசியலமைப்பு குழப்பம்

ரணில் விக்ரமசிங்க, இலங்கை, அரசியல், ஐக்கிய தேசியக் கட்சி

பட மூலாதாரம், PMD SRI LANKA

படக்குறிப்பு, 2015ம் ஆண்டு முதல் மீண்டும் பிரதமர் பதவியை வகித்த வந்த ரணில் விக்ரமசிங்கவை, மைத்திரிபால சிறிசேன மீண்டும் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி பதவி நீக்கியிருந்தார்.

ராஜபக்ஸ குடும்பத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் 2015ம் ஆண்டு, மஹிந்த ராஜபக்ஸவின் தரப்பிலிருந்த மைத்திரிபால சிறிசேனவை அங்கிருந்து பிரித்து, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் நல்லாட்சி என்ற பெயரிலான அரசாங்கத்தை ஸ்தாபித்திருந்தனர்.

2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியாக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.

2015ம் ஆண்டு முதல் மீண்டும் பிரதமர் பதவியை வகித்து வந்த ரணில் விக்ரமசிங்கவை, மைத்திரிபால சிறிசேன மீண்டும் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி பதவி நீக்கியிருந்தார்.

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 2004ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கத்தை போன்றதொரு சம்பவத்தையே, மைத்திரிபால சிறிசேன மீண்டும் ரணில் விக்ரமசிங்கவிற்கு நிகழ்த்தியிருந்தார்.

இவ்வாறு நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு பதவி விலக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவிற்கு பதிலாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.

இது இலங்கை அரசியல் வரலாற்றில் அரசியலமைப்பு குழப்ப நிலைமையை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறு ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக்கியமையானது, நாட்டில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேற மறுத்த நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேல் நீடித்த இந்த சர்ச்சையை உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தின் ஊடாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

ரணில் விக்ரமசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டு, மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்டமையானது, சட்டவிரோதமான செயற்பாடு என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதையடுத்து, ரணில் விக்ரமசிங்க மீண்டும் இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இந்த சர்ச்சையானது, இலங்கை அரசியலமைப்பு குழுப்பநிலையை ஏற்படுத்தியிருந்ததுடன், அது நாட்டின் அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

ரணில் விக்ரமசிங்க எதிர்கொண்ட மேலும் சில சர்ச்சைகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் வாழ்க்கையில் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றார்.

பட்டலந்தை சித்திரவதை முகாம் நடத்தியதாக கூறப்படும் சம்பவம், மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் என சர்ச்சைகளை எதிர்நோக்கிய ரணில் விக்ரமசிங்க, தற்போது வெளிநாட்டு பயணத்தின் போது அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் தற்போதைய ஆட்சியாளர்களினால் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்ற நிலையில், நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்துள்ளது.

எனினும், ரணில் விக்ரமசிங்க சுகயீனமுற்ற நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx23zlvel1po

Checked
Wed, 09/17/2025 - 07:47
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed