அரசியல் அலசல்

பஞ்சமா தந்திரங்கள்? - நிலாந்தன்

1 day 9 hours ago

பஞ்சமா தந்திரங்கள்? - நிலாந்தன்

IMG-20260207-WA0004-1024x692.jpg 

கட்சிக்குள் சிறீதரனை மதிப்பிறக்கம் செய்வதில் சுமந்திரன் தொடர்ந்து முன்னேறி வருகிறார். முக்கால் நூற்றாண்டு கால வயதைக் கொண்ட கட்சிக்குள் முதன்முதலாக தலைவருக்காக நடந்த ஒரு தேர்தலில் தெரிவு செய்யப்பட்டவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தலைமைப் பொறுப்பை ஏற்க விடாமல் தடுக்கப்பட்டு வருகிறார். இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியான தந்திரமான புத்திசாலித்தனமான நகர்வுகளின் ஊடாக ஓரங்கட்டப்பட்டு வருகிறார்.

சிறீதரனை கட்சிக்குள் சுற்றிவளைக்கும் வேலையை கடந்த இரண்டு ஆண்டுகளாக சுமந்திரன் அணி செய்து வருகிறது. சிறீதரன் எவ்வாறு கட்சிக்குள் ஓரங்கட்டப்படுகிறார்?

75 ஆண்டு கால வயதை கொண்ட கட்சிக்குள் முதன்முதலாக நடந்த தலைவர் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டவர் செயற்பட முடியாதபடி வழக்குப் போடப்பட்டது. அடுத்ததாக கட்சிக்குள் தீர்மானம் எடுக்கும் பொறுப்புகளில் அவருக்கு எதிரானவர்கள் அல்லது அவருடைய எதிர் அணியின் பக்கம் சாயக்கூடியவர்கள் படிப்படியாக நகர்த்தப்பட்டார்கள். இதன்மூலம் கட்சித் தீர்மானங்கள் சிறீதரனை ஓரங்கட்டும் விதத்தில் அமைவது உறுதி செய்யப்பட்டது. அவ்வாறு பொறுப்பான பதவிகளை சிறீதரனின் எதிரணி கையில் எடுத்ததன்மூலம் கட்சியின் அடிமட்டக் கட்டமைப்பை படிப்படியாக சிறீதரனுக்கு எதிரானதாக வடிவமைக்கும் வேலைகள் தொடங்கின.

அடுத்ததாக சிறீதரனின் சொத்துக்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள். அவர் மதுச் சாலை அனுமதி பெற்றுக் கொடுத்ததாகக் குற்றச்சாட்டுக்கள். இது தொடர்பான முறைப்பாடுகளைச் செய்வதற்கு தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவர் பயன்படுத்தப்படடார்.

அதேசமயம் கட்சித் தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் தோற்ற காரணத்தால் மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒதுக்கப்பட்டிருந்த சுமந்திரன், கட்சிக்குள் பொறுப்பான பதவியைப் பெற்றதன்மூலம் மீண்டும் ஊடகங்களுக்கு முன் அடிக்கடி தோன்றும் வாய்ப்புகள் அதிகரித்தன. யார் தூதரகங்களை நெருங்கிச் செல்வது, குறிப்பாக யார் இந்தியாவின் இதயத்தில் இடம் பிடிப்பது என்பதிலும் போட்டி.

அரசியலமைப்புப் பேரவையில் சிறீதரன் அரசாங்கத்திற்கு ஆதரவாக 8 தடவைகள் வாக்களித்துள்ளார் என்ற குற்றச்சாட்டை கட்சிக்கு உள்ளேயும் கட்சிக்கு வெளியே பகிரங்கமாகவும் திரும்பத்திரும்ப கூறுவதன் மூலம் கட்சிக்குள் மட்டுமல்ல சமூகத்துக்குள்ளும் அவரை மதிப்பிறக்கம் செய்ய முயற்சிக்கப்பட்டது. அதைவிட முக்கியமாக அவருடைய தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கேள்விக்கு உள்ளாக்க முயற்சிக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டின் இறுதி விளைவாகத்தான் இப்பொழுது கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியில் கை வைக்கப்பட்டிருக்கிறது.

சிறீதரன் கட்சிக்குள் மட்டும் சுற்றிவழிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்திலும் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினராகிய தயாசிறீ கட்சியின் உள் மோதல்களைப்  பிரதிபலித்தார். தமிழ் மக்கள் மத்தியில் உள்ள நீண்ட பாரம்பரியத்தை கொண்ட மூத்த கட்சி ஒன்றுக்குள் ஏற்பட்ட உள் முரண்பாட்டை ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாகப் பேச வைத்தமை என்பது தமிழ்த் தேசிய வரலாற்றில் இதுதான் முதல் தடவை.

இவை தவிர சிறீதரனின் அணிக்குள் இருப்பவர்கள் கழட்டி எடுக்கப்படுகிறார்கள். அவர்கள் ஊடகச் சந்திப்புகளை நடத்தி சிறீதரனை அவமானப்படுத்துகிறார்கள்.

ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் உள்நாட்டு அலுவலர் என்னிடம் கேட்டார், “ஹை புரொபைலில்” இருப்பவர்கள்கூட சிறீதரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப் பிரதிபலிப்பதாகத் தெரிகிறது. ஏன் இப்படி” என்று.

சிறீதரனுக்கு எதிரான பிரசார அணிக்குள் பிரபலமானவர்கள் லோயர்கள்,  ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், சமூகத்தில் நல்ல பொறுப்புகளை வகிப்பவர்கள், சமூகத்தில் மதிப்புக் கெட்டவர்கள், தாயகத்தில் இருப்பவர்கள், புலம்பெயர்ந்து வாழ்பவர்கள்…. என்று ஒரு பெரிய அணி இறக்கப்பட்டுள்ளது. மெய்யான முகநூல் கணக்குகள், பொய்யான முகநூல் கணக்குகள் என்று சமூக வலைத்தளங்களில் இரண்டு அணிகளும் பணம் செலுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றன என்ற பொதுவான அவதானிப்பு உண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்வாறு சிறீதரனுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது.

சிறீதரனுக்கு எதிராக மிக நுட்பமான, மிகப் புத்திசாலித்தனமான, மிகத் தந்திரமான, சதி சூழ்ச்சிகள் நிறைந்த ஒரு வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் ஓர் உட்கட்சி முரண்பாட்டைக் கையாள்வதற்கு இவ்வளவு தந்திரமும் இவ்வளவு புத்திசாலித்தனமும் இதற்கு முன் பிரயோகிக்கப்பட்டதில்லை.

இதேயளவு தந்திரத்தை, புத்திசாலித்தனத்தை சிங்கள பௌத்த அரசு கட்டமைப்புக்கு எதிராகவும் ஏன் பயன்படுத்த முடியவில்லை? இதேயளவு தந்திரத்தை, ராஜதந்திரத்தை, புத்திசாலித்தனமான கணிதபூர்வமான நகர்வுகளை ஏன் வெளிநாடுகள், ,பேரரசுகளுடனான அணுகுமுறைகளில் கைக்கொள்ள முடியவில்லை?

தமிழ்ச் சமூகத்தில் சாதாரணமாக குடும்பத்துக்குள்ளேயே கணவன், மனைவிக்கும்-தாய்க்கும் இடையே சுழித்தோட முயற்சிப்பான். சிலசமயம் சகோதரர்களே ஒருவர் மற்றவரைச் சுழித்துக் கொண்டு ஓடுவதுண்டு. சமூகத்தின் மிகச்சிறிய அலகாகிய குடும்பத்துக்குள் இவ்வாறு மைக்ரோ தந்திரத்தை  முன்னெடுக்கும் ஒரு சமூகமானது, தனது வெளியுறவுகளில் குறிப்பாக வெளிநாடுகளை அணுகும் விடயத்தில் ஏன் அவ்வாறு ராஜதந்திரமாக நடந்து கொள்வதில்லை?

தமிழ் மக்கள் அதிகமாகப் பார்க்கும் திரைத் தொடர்களில் பெரும்பாலானவை பெண் மைய திரை நாடகங்களே. இதில் வரும் நாயகிகள் செய்யும் தந்திரம் சில சமயம் அரசியல்வாதிகள் செய்யும் தந்திரத்தை விடவும் கணிதபூர்வமானதாக இருக்கும். நமது வீடுகளில் அதிகம் பார்க்கப்படுவது இந்த தந்திர நாடகங்கள்தான். ஏற்கனவே நமது சிறுவர் கதைப் புத்தகங்களில் பஞ்ச தந்திரம் என்ற கதைத் தொகுதி உண்டு.

பஞ்சதந்திரத்தில் தொடங்கி தொலைத் தொடர் தந்திரங்கள் வரையிலும் தந்திரங்களை வாசிக்கின்ற, பார்க்கின்ற ஒரு சமூகம், வீட்டுக்குள் குடும்பத் தந்திரத்தை வெற்றிகரமாகப் பயிலும் ஒரு சமூகம்,சமூகத்தின் சிறிய நிறுவனங்களாகிய  சனசமூக நிலையங்கள், ஆலய அறங்காவல் சபைகள், திருச்சபைகள், பழைய மாணவர் சங்கங்கள், பாடசாலைகள் அலுவலகங்களில் “ஸ்டாஃப் ரூம்கள்” போன்ற பெரும்பாலான நிறுவனங்களுக்குள் வெற்றிகரமாக அணிகளை உருவாக்கி தந்திரம் செய்யும் ஒரு சமூகம், ஏன் அரசியல் அரங்கில் மட்டும் வெளிநாடுகளோடும் வல்லரசுகளோடும் தந்திரமாக புத்திசாலித்தனமாக நடக்க முடியவில்லை?

தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய சிந்தனையாளரும் ஆன்மீகவாதியும் படைப்பாளியும் ஆகிய மு.தளையசிங்கம் கூறுவார் “சத்திய தந்திரம்” என்று. மகாபாரதத்தில் கிருஷ்ணரின் தந்திரங்கள் இல்லையென்றால் பாண்டவர்கள் வென்றிருக்கவே முடியாது. மகா பாரதத்தை அத்தகைய அர்த்தத்த்தில் சொன்னால் அது கிருஷ்ண தந்திரந்தான். எனவே சத்தியத்துக்காகப் போராடுகிறவர்கள் தந்திரம் பயில வேண்டும் என்ற பொருளில் தளையசிங்கம் அதை சத்திய தந்திரம் என்று அழைத்தார்.

ஆனால், தமிழ்ச் சமூகத்தின் பஞ்ச மகாதந்திரங்கள் சொந்தச் சமூகத்துக்குள்ளேயே, சொந்தக் குடும்பத்துக்குள்ளையே, ஒரே பாடசாலைக்குள்ளேயே, ஒரே ஸ்டாஃப் ரூமுளுக்குள்ளேயே, ஒரே அறக்கட்டளைகளுக்குள்ளேயே, ஒரே திருச்சபைகளுக்குள்ளேயே, ஒரே கட்சிக்குள்ளேயே மட்டும் தானா? வெளி உலகத்தோடு இல்லையா?

https://www.nillanthan.com/8113/

தையிட்டி; கிவுல் ஓயா; கரிநாள் - நிலாந்தன்

1 day 9 hours ago

தையிட்டி; கிவுல் ஓயா; கரிநாள் - நிலாந்தன்

facebook_1770040495908_74240879321495505

கடந்த வாரம் மூன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. முதலாவது ஆர்ப்பாட்டம் தையிட்டியில். அது வழமையாக நடப்பது. இரண்டாவது ஆர்ப்பாட்டம், கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டத்திற்கு எதிரான நெடுங்கேணிப் போராட்டம். மூன்றாவது ஆர்ப்பாட்டம், 78ஆவது சுதந்திர தினம் என்று கூறப்படுவதை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த பேரணி.

மிகக்குறுகிய கால இடைவெளிக்குள் நடந்த இந்த மூன்று ஆர்ப்பாட்டங்களையும் தொகுத்துப் பார்ப்போம்.தையிட்டியில் கடந்த பௌர்ணமி நாளன்று மிகக்குறைந்த எண்ணிக்கையானவர்களே காணப்பட்டார்கள். அதிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்களே அதிகம். ஆனால் கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் அதிகளவு எண்ணிக்கையானவர்கள் அங்கே வந்திருந்தார்கள். அந்த ஆர்ப்பாட்டங்களை தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேச சபை முன் நின்று ஒழுங்கமைத்தது. அது ஒப்பீட்டளவில் அனைத்துக் கட்சி பரிமாணத்தைக் கொண்ட ஒரு போராட்டம். அரசியல்வாதிகளும் செயல்பாட்டாளர்களும் அங்கே காணப்பட்டார்கள்.

அடுத்த போராட்டம், கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டத்திற்கு எதிரானது. இந்த போராட்டத்தை பெருளவுக்கு ஒருங்கிணைத்தது தமிழரசு கட்சிக்குள் காணப்படும் சுமந்திரன் அணியைச் சேர்ந்தவர்கள். சுமந்திரன் அதனை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தன் கட்சிக்காரர்களும் உட்பட பெருமளவிலான ஆட்களை அங்கே கொண்டு வருவதற்காக உழைத்தார். ஆயிரத்தை தாண்டாத ஜனத்தொகை அங்கே வந்திருந்தது. தமிழரசுக் கட்சியோடு இப்பொழுது உறவாடி வரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் அங்கு காணப்பட்டார்கள்.

ஆனால் தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணியை மையமாகக் கொண்ட தமிழ்த் தேசியப் பேரவையைச் சேர்ந்தவர்களை அங்கே காண முடியவில்லை. நெடுங்கேணிப் போராட்டம் நடந்து கொண்டிருந்த அதே காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ரில்கோ விருந்தினர் விடுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் கடல் தொழிலாளர் சங்கங்களுக்கும் இடையே ஒரு சந்திப்பு இடம்பெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள் அந்தச் சந்திப்பில் காணப்பட்டார்கள்.

நீரைக் கொடுத்து நிலத்தைப் பறிக்கும் நீர் முகாமைத்துவத் திட்டமாகிய கிவுல் ஓயாத் திட்டதுக்கு எதிராகத் தமிழ் மக்கள் போராட வேண்டும். எனவே அந்தப் போராட்டத்திற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதேசமயம் அதற்குள் உட்க்கட்சிப் போட்டிகள் சார்ந்த உள்நோக்கங்களும் உண்டு.

சுமந்திரனைப் பொறுத்தவரை இதுபோன்ற போராட்டங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவருடைய எதிரணி அவரை தமிழ்த் தேசிய நீக்கம் செய்பவர் என்று குற்றம்சாட்சி வருகிறது. எனவே தான் நிலப் பறிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிரான மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பார் என்பதனை அவர் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. மேலும்,கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் கட்சிக்குள் தன்னுடைய தவிர்க்க முடியாமையை நிரூபிப்பதற்காக எல்லாவிதமான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறார். அந்த அடிப்படையில் ஒரு பதில் செயலாளராக கட்சியின் கீழ்மட்டக் கட்டமைப்பை அவர் பெருமளவுக்கு தன்னால் கையாளப்படத் தக்கதாக வடிவமைத்தும் வருகிறார். அதன் விளைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அவர் முன்னைய தேர்தலை விட அதிக முன்னேற்றங்களைக் காட்ட முடிந்தது.

ஆனால் தமிழரசுக் கட்சியின் வாக்குத்தளம் எனப்படுவது தனிய அதன் கீழ்மட்ட கட்டமைப்புப் பலம் மட்டுமல்ல. அதைவிட ஆழமான பொருளில் அது தமிழ் இன உணர்வுகளின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு வாக்குத் தளம். அந்த வாக்குத்தளத்தைக் கைப்பற்றுவது என்று சொன்னால் தன்னை புத்திசாலியான ஒரு தலைவராகக் காட்டிக் கொண்டால் மட்டும் போதாது. அதைவிட முக்கியமாக தமிழ் இன உணர்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  ஒரு தலைவர் என்றும் நிரூபிக்க வேண்டும். எனவே இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உண்டு.

அடுத்த உள்நோக்கம்,தமிழ்த் தேசியப் பேரவையைத் தனிமைப்படுத்துவது. அண்மை மாதங்களாக “எக்கிய ராஜ்ய” என்ற தீர்வு முன் வரைபை முன்வைத்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அவர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறது. இதனால் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான உறவுகள் முன்னரை விட அதிகம் பகை நிலைக்குச் சென்று விட்டன. அதோடு,சிறீதரனை முன்னணி நெருங்கி வருவதும் சுமந்திரனை ஆத்திரப்படுத்துகிறது.கட்சிக்குள் காணப்படும் உள் முரண்பாடுகளை முன்னணி கையாள முயற்சிக்கிறது என்று அவர் நம்புகிறார். இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள்தான், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஏதோ ஓர் இணக்கத்துக்கு வர அவர் முயற்சிக்கிறார். அதன் மூலம் பேரவையைத் தனிமைப்படுத்தலாம் என்றும் சிந்திக்கிறார். அதற்கு இது போன்ற போராட்டங்கள் தேவை.

அடுத்த உள்நோக்கம்,மாகாண சபைத் தேர்தல் என்று ஒன்று நடந்தால், அதில் தமிழ் மக்களின் பாரம்பரிய வாக்களிப்புக் கோலத்தின் அடிப்படையில் சிந்தித்தால், தமிழரசுக் கட்சிக்குத்தான் வெற்றி வாய்ப்புகள் அதிகம். அந்த வாய்ப்புகளை மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு உறவை வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதே சமயம் அந்த உறவு தேர்தலில் தமிழ்த் தேசியப் பேரவையை தனிமைப்படுத்த உதவும்.

மேற்சொன்ன உள்நோக்கங்களும் கிவுல் ஓயா போராட்டத்தில் பின்னணியில் இருந்தன. என்றாலும் நிலப் பறிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிராக தமிழ்த் தேசிய உணர்வுகளை கொதி நிலையில் வைத்திருப்பது என்று பார்த்தால் அந்தப் போராட்டத்திற்கு காலகட்ட முக்கியத்துவம் உண்டு. மேலும் அந்தப் போராட்டத்தை ஒழுங்கமைத்தது சுமந்திரன் அணி என்ற போதிலும் அதில் சிறீதரன் அணியும் கலந்து கொண்டது. ஒரு பொது விடயத்தில் உட்கட்சி முரண்பாடுகளை ஒதுக்கிவிட்டு சிறீதரன் அவ்வாறு கலந்து கொண்டமை வரவேற்கத்தக்கது.

ஆனால் அந்தப் போராட்டத்தின் பின்னணியில், அடுத்தடுத்த நாள், சிறீதரனுக்கு எதிரான மற்றொரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய நாடாளுமன்றக் குழுத் தலைமைப் பதவி பறிக்கப்பட்டு விட்டது.

கிவுல் ஓயா போராட்டத்திற்கு அடுத்தடுத்த நாள்,அதாவது 04ஆம் திகதி பல்கலைக்கழக மாணவர்கள் கரிநாள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். அதுதொடர்பாக அவர்கள் கட்சி முக்கியஸ்தர்களை சந்தித்தும் வந்தார்கள். ஆனால் இந்தச் சந்திப்புகளில் சுமந்திரன்,சிவஞானம் போன்றவர்கள் உள்ளடக்கப்படவில்லை என்று தெரிகிறது. அதனால் கிளிநொச்சி ஆர்ப்பாட்டத்தில் சுமந்திரன்,சிவஞானம் போன்றவர்களைக் காண முடியவில்லை. எனினும் ஏனைய தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் பலர் அங்கே காணப்பட்டார்கள். கிளிநொச்சியில் உள்ள சுமந்திரன் அணியைச் சேர்ந்தவர்களும் காணப்பட்டார்கள். ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலரும் காணப்பட்டார்கள்.

IMG-20260207-WA0016-1024x576.jpg

மட்டக்களப்பில் கரி நாள்

அவர்களைவிட காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும்  சங்கங்களைச் சேர்ந்தவர்களும், ஏற்கனவே இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களும் அங்கு அதிகமாகக் காணப்பட்டார்கள். கிழக்கிலும் அதுபோன்ற ஓர் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதாவது கரிநாள் போராட்டம் ஒப்பீட்டளவில் தாயகம் தழுவியதாகக் காணப்பட்டது.

இப்படிப் பார்த்தால் கடந்த கிழமை மிகக்குறுகிய நாள் இடைவெளிக்குள் நடந்த மூன்று ஆர்ப்பாட்டங்களிலும் பெரியது கிளிநொச்சி ஆர்ப்பாட்டந்தான். அது ஒப்பீட்டளவில் பெரியது, எழுச்சிகரமானது;வடக்கு கிழக்காக தாயகம் கழுவியதாக காணப்பட்டது. அனைத்துக் கட்சி பரிமாணத்தை அதிகமாகக் கொண்டது. யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர் தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவருக்காகப் போராடும் அமைப்புக்களும் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தார்கள்.

மாணவர்கள் முன்னணிக்கு வரும்பொழுது கட்சி பேதங்களைக் கடந்து பெருந் திரளைக் கொண்டுவர முடியும் என்பதற்கு அது ஆகப்பிந்திய ஓர் உதாரணம் ஆகும்.கட்சிகளால் பிரிக்கப்பட்டிருக்கும் மக்களும் தொண்டர்களும் கட்சி கடந்து ஒருங்கிணைக்கப்படும்போது இனமாகத் திரள்வார்கள் என்ற நம்பிக்கையைப் பலப்படுத்திய ஆர்ப்பாட்டம் அது.

https://www.nillanthan.com/8121/

78 ஆண்டு கால “சுதந்திரம்” ? நிலாந்தன்!

1 day 13 hours ago

78th-national-independence-day-sri-lanka

78 ஆண்டு கால “சுதந்திரம்” ? நிலாந்தன்!

இலங்கைத் தீவு பிரித்தானியரிடமிருந்து விடுபட்டு 78 ஆண்டுகள் ஆகிறது. இலங்கைத் தீவின் ஒரு பகுதி மக்கள் அதனை சுதந்திர தினம் என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ் மக்களில் கணிசமானவர்கள் அதனை கரிநாள் என்று கருதுகிறார்கள். தங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும் தமிழ் மக்கள் நம்புகிறார்கள்.

கடந்த 4 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் ஒப்பீட்டளவில் அதிகம் சிங்கக் கொடிகளை காணக்  கூடியதாக இருந்தது. வட மாகாண ஆளுநர் அலுவலகம் வழமையை விட வித்தியாசமாக பெருமெடுப்பில் அந்த நாளைக்  கொண்டாடியது.

ஆனால் அதே நாளில்,கிளிநொச்சியில்,மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணிகள் இடம்பெற்றன.அது சுதந்திர நாள் அல்ல கரிநாள் என்று பிரகடனப்படுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்புகளும் இணைந்து அந்த ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்தின. அதே நாளில் பிற்பகல் யாழ்ப்பாணம் வைஎம்சிஏ மண்டபத்தில்,ஒரு கருத்தரங்கை சிறீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி ஒழுங்குப்படுத்தியிருந்தது.அக்கருத்தரங்கின் தலைப்பு “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்”.

சிங்கள மக்கள் சுதந்திர நாள் என்று கொண்டாடுவதை ஏன் தமிழ் மக்கள் கரி நாள் என்று அழைக்கிறார்கள்? தமிழ் மக்கள் ஏன் அதனை சுதந்திர தினமாக கருதவில்லை? அதைவிட முக்கியமாக,அது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, சிங்கள மக்களுக்கும் அதன் மெய்யான பொருளில் சுதந்திர தினம் தானா?

இல்லை. அண்மையில் பன்னாட்டு நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டு தெரிவித்திருந்தது. பன்னாட்டு நாணய நிதியம் அல்லது உலக வங்கி ஓர் அரசாங்கத்தைப் பாராட்டுகிறது என்று சொன்னால் அதன் பொருள் என்ன? அந்த உலகளாவிய நிதி அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலுக்கு கீழ்படிவாக அந்த நாடு செயல்படுகிறது என்று பொருள்.அவ்வாறு பன்னாட்டு நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு கீழ்ப்படியும் ஒரு நாடு பொருளாதார அர்த்தத்தில் தன்னை ஒரு சுதந்திரமான நாடு என்று அழைத்துக் கொள்ள முடியாது.இது முதலாவது.

இரண்டாவது,ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்,இந்த நாட்டின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99ஆண்டு கால குத்தகைக்கு வாங்கிவிட்டது.அதுபோலவே கொழும்பு துறைமுகத்திற்கு அருகே சீனா ஒரு துறைமுகப் பட்டினத்தைக் கட்டி வருகிறது.

இந்த பிராந்தியம் இந்தியப் பேரரசின் செல்வாக்கு மண்டலத்துக்குள் காணப்படுவது.அவ்வாறு இந்தியப் பேரரசின் செல்வாக்கு மண்டலத்தில் காணப்படும் ஒரு தீவில், இங்கிருந்து கிட்டத்தட்ட 400 கடல் மைல் தொலைவில் உள்ள மற்றொரு வெளிப் பிராந்தியப் பேரரசு ஆகிய சீனா பலமாக காலூன்றி விட்டது. இந்தியா அதனைச் சகித்துக் கொள்ளுமா? இல்லை. இந்தியாவும் தன் பிடியை இங்கு எப்படிப் பலப்படுத்தலாம் என்றுதான் சிந்திக்கும். யாழ்ப்பாணத்தின் தீவுகளில் மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்களை இந்தியா சீனாவிடமிருந்து தன் வசப்படுத்திக் கொண்டு விட்டது. கச்சதீவையும் அம்பாந்தோட்டையைப்போல லீசிங்கில் கேட்டால் என்ன என்ற ஓர் உரையாடல் இந்திய உயர் மட்டத்தில் உண்டு என்று தெரிகிறது. தவிர மன்னாருக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையே ஒரு பாலத்தை கட்டுவதும் இந்தியாவின் விருப்பம் என்று தெரிகிறது.

இவை இதனை காட்டுகின்றன? இந்தச் சிறிய தீவு இரண்டு பேரரசுகளின் இழிவிசைகளுக்குள் சிக்கியிருக்கிறது என்பதைத்தான்.அதாவது கலைத்துவமாகச் சொன்னால் இச்சிறிய தீவு இப்பொழுது பேரரசுகள் பங்கிடும் ஓர் அப்பம். இந்த அப்பத்துக்குள் வாழும் ஓர் இனம் தன்னை மட்டும் இறமையும் சுதந்திரமும் உள்ளதாக எப்படிக் கருதிக் கொள்ளலாம்? இது இரண்டாவது.

மூன்றாவதாக,1948இல் இருந்து இன்றுவரையிலுமான 78ஆண்டுகால பகுதிக்குள் சரி அரை வாசிக்கும் கூடுதலான காலகட்டம் அதாவது 46 ஆண்டுகள் இலங்கைத் தீவு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தான் ஆட்சி செய்யப்பட்டு வருகிறது. பேராசிரியர் ஜெயதேவ உயாங்கொட கூறுவது போல, காலனித்துவ ஆட்சிக்குப் பின் 1971 இலிருந்து இன்றுவரையிலும் இலங்கைத் தீவு அசாதாரண சட்டங்களால்தான் ஆட்சி செய்யப்படுகிறது. இவ்வாறு அசாதாரண சட்டங்களே சாதாரண சட்டங்கள் போல நடைமுறையில் உள்ள ஒரு சிறிய தீவு தன்னை சுதந்திரமான தீவு என்று அழைத்துக் கொள்ளலாமா?

இல்லை. சாதாரண சட்டங்களின் கீழ் இந்த நாட்டை ஆள முடியவில்லை என்பது இந்த நாடு அசாதாரண சூழ்நிலைகளின் கீழ் உள்ளது என்பதைக் காட்டுகிறது. அந்த அசாதாரணச் சூழல் எவ்வாறு உருவாகியது?  சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள்,மலையக மக்கள் ஆகிய நான்கு மக்கள் கூட்டங்களும் கௌரவமான விதத்தில், பொருத்தமான விதத்தில் இந்தச் சிறிய தீவைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்பதால்தான் நாட்டில் பல தசாப்த காலமாக அசாதாரண நிலை நிலவுகிறது.

சிங்களத் தலைவர்கள் கூறுவார்கள்,நாட்டில் ஜனநாயகம் உண்டு என்று. ஆனால் ஜனநாயகம் என்பது வாக்களிப்பு உரிமை மட்டுமல்ல.அதைவிட ஆழமான பொருளில், தீர்மானம் எடுக்கும் அதிகாரமும்தான். சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நாடாளுமன்றத்தில் தமிழ் மக்கள் மிஞ்சி மிஞ்சிப் போனால் 22 ஆசனங்களைத்தான் இதுவரை பெற்றிருக்கிறார்கள். அப்படியென்றால் எப்படி தீர்மானத்தில் பங்கெடுப்பது?இதுதான் பிரச்சினையே.

இவ்வாறு சிங்கள மக்களைத் தவிர ஏனைய சிறிய மக்கள் கூட்டங்கள் அரசியல் தீர்மானங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாதவர்களாகக் காணப்படும் ஒரு தீவு தன்னை இறமையுள்ளது என்றும் சுதந்திரமானது என்றும் அழைத்துக் கொள்ளலாமா?

தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக, தங்களுக்கு அரசியல் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் வேண்டும் என்று கேட்டுத்தான் கடந்த 78 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகிறார்கள். அவர்களை நசுக்குவதற்குத்தான் நாடு அசாதாரண சட்டங்களின் கீழ் தொடர்ச்சியாக ஆளப்பட்டு வருகிறது. எனவே தமிழ் மக்களின் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், சிங்கள மக்களும் நிம்மதியாக இருக்கமுடியாது;முஸ்லிம் மக்களும் நிம்மதியாக இருக்க முடியாது;மலையக மக்களும் நிம்மதியாக இருக்கமுடியாது என்பதுதான் கடந்த 78 ஆண்டுகால அனுபவம் ஆகும்.

அதிலும் குறிப்பாக கடந்த 78 ஆண்டுகளில் இலங்கைத் தீவில் மூன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் வெளிநாட்டுப் படைகள் தரையிறங்கியுள்ளன. முதலாவது சந்தர்ப்பம் ஜேவிபியின் முதலாவது ஆயுதப் போராட்டம். 1971 இல். இரண்டாவது சந்தர்ப்பம், 1987இல் வடமராட்சியைக் கைப்பற்றும் படை நடவடிக்கையின் போது இந்தியா தனது விமானங்களை அனுப்பி உணவுப் பொதிகளை தமிழ்ப் பகுதிகளுக்குள் போட்டது.அங்கேயே இலங்கையின் இறைமை மீறப்பட்டு விட்டது. சுதந்திரம் சோதனைக்கு உள்ளாகி விட்டது.

அடுத்தது 2004 ஆம் ஆண்டு நோர்வையின் சமாதான முயற்சிகள்.இந்த முயற்சிகளின் போதும் யுத்த நிறுத்தத்தைக் கண்காணிப்பதற்கு கண்காணிப்புக் குழு ஒன்று நாட்டுக்குள் இறங்கியது.அதுவும் படைப் பரிமாணத்தைக் கொண்ட ஒரு கட்டமைப்புத் தான்.

இவ்வாறு வெளிநாட்டுப் படைகள் அல்லது யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுக்கள் அல்லது ஐநாவின் சிறப்புத் தூதுவர்கள் நாட்டுக்குள் வருகிறார்கள் என்று சொன்னால் இந்த நாடு முழு அளவுக்கு சுதந்திரமாக உள்ளது என்று எப்படிக் கூறலாம்? திம்புவில் தொடங்கி ஒஸ்லோ வரையிலுமாக பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தும் பொழுதே விவகாரம் நாட்டுக்கு வெளியே போய்விட்டது.அதை இலங்கைக்குள் தீர்க்க முடியவில்லை.இது பன்னாட்டுத் தலையீட்டைக் காட்டுகிறது.இவ்வாறு பன்னாட்டு சமூகம் ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும்போது அந்த நாடு எப்படித் தன்னை சுதந்திரமான நாடு என்று கூறலாம்?

ஒவ்வொரு ஆண்டும் இலங்கை அரசாங்கம் ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் உலகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் மலையக மக்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டியிருப்பதை சுதந்திரம் என்று எடுத்துக் கொள்ளலாமா?

அதைவிடக் குறிப்பாக,யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததாகப் போற்றப்படுகின்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கக் கண்டத்துக்குப் போக முடியாது. போரை முன்னெடுத்த முக்கிய தளபதிகள் அமெரிக்கக் கண்டத்துக்கு அல்லது ஐரோப்பாவின் சில நாடுகளுக்குப் போக முடியாது.அப்படியென்றால் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்ததன் மூலம் இந்த நாடு உறுதிப்படுத்திக் கொண்ட, பாதுகாத்துக் கொண்ட சுதந்திரத்தின் பொருள் என்ன?

எனவே கடந்த 78 ஆண்டுகளையும் தொகுத்துப் பார்க்கும் போது தெளிவாகத் தெரியும் படம் என்ன? சிங்கள மக்களும் சுதந்திரமாக இல்லை; தமிழ் முஸ்லிம் மலையக மக்களும் சுதந்திரமாக இல்லை. இலங்கைத் தீவு இப்பொழுது பேரரசுகள் பங்கிடும் ஓர் அப்பம். இங்கே தமிழ் மக்களுக்குச் சுதந்திரம் இல்லையென்றால் சிங்கள மக்களுக்கும் இல்லை, முஸ்லிம் மக்களுக்கும் இல்லை, மலையக மக்களுக்கும் இல்லை.

https://athavannews.com/2026/1463708

கிவுல் ஓயா திட்டமும் 13 ஆவது திருத்தச் சட்டமும்.

1 day 22 hours ago

கிவுல் ஓயா திட்டமும்

13 ஆவது திருத்தச் சட்டமும்

--- --- ---

*உலக அரசியல் ஒழுங்குக் குழப்பங்களை நன்கு பயன்படுத்தும் இலங்கை

*பண்டாரநாயக்க, ஜேஆர் காலம் முதல் அநுர வரையான அறிவூட்டல் அவசியமானது

*ரில்வின் சில்வா குழுவின் டில்லி பயணம் வெளிப்படுத்துவது என்ன?

--- ---- ---

இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகள் முன்வைக்கப்படுவதற்கு முன்னர், வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் சாத்தியப்படக் கூடியது அல்ல என்பது ஏற்புடைய யதார்த்தம்.

ஏனெனில், காணி அதிகாரம் என்பது மிக முக்கியமானது. அந்த அதிகாரத்தை தமிழர்களிடம் வழங்காமல். கொழும்பில் இருந்து அபிவிருத்தித் திட்டங்களைத் தீர்மானிக்க முடியாது.

இதன் காரண காரியமாகவே, போர் இல்லாது ஒழிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில். கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் முன்வைத்த அபிவிருத்தி திட்டங்கள் பல தோல்வி கண்டன.

அவை அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் பிரதேசங்களில் கவர்ச்சிகரமாக மேற்கொள்ளும் அரசியல் பிரச்சாரங்கள் மாத்திரமே.

இப் பின்ணியை அறிந்துதான், ஈழத்தமிழர்களின் 80 வருடங்களுக்கும் மேற்பட்ட அரசியல் விடுதலை விவகாரத்தை, “மாற்றம்” “சோசலிசம்” “சமத்துவம்” என்ற பொதுச் சொல்லாடல்களுக்குள் வலிந்து திணிக்கிறார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க.

அதாவது --

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சியை கைப்பற்றிய ஜேவிபியை மையப்படுத்திய அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, அபிவிருத்தி என்ற மாயை “இன சமத்துவம்” என்ற புதிய வடிவத்தில் முன்நிறுத்தி தமிழர் பிரதேசங்களில் அரசியல் சித்து விளையாட்டை பரிசோதிக்கிறது.

குறிப்பாக --

பண்டாரநாயக்க, ஜேஆர் காலத்து சிந்தனைகளை “மாற்றம்” என்று பொறி வைத்து அநுர கையாளுகிறார் என்றால், “இலங்கை ஒற்றையாட்சி அரசு” என்ற பௌத்த கோட்பாட்டுச் சிந்தனையில், அநுரவுக்கும் மாற்றுக் கருத்தில்லை என்பது பகிரங்கமாகியுள்ளது.

அதாவது “மாற்றம்” என்ற பொறிக்குள் பௌத்த சிந்தனையை, அநுர மிக நுட்பமாக கொண்டு வருகிறார் என்பதே இதன் பொருள்.

அநுர, எதிர்க்கட்சியாக இருந்தபோது அந்த நிலைப்பாடு தெரிந்தது. ஆனாலும் அரசாங்கத்தை அமைத்த பின்னர் “அரச முறைமை மாற்றம்” (System Change) ஏற்படும் என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்தது.

ஆனால், அரச முறைமை மாற்றம் என்பது கூட பௌத்த தேசியத்தை முதன்மைப்படுத்தியது என்பதை வடக்குக் கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாக்களித்த மக்களுக்கு புரியவில்லை. ஆனால், தற்போது படிப்படியாக அது வெளிப்பட ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக --

தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்த கடந்த ஒரு வருடத்தில் அதாவது கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் வடமாகாணத்தை பிரதானப்படுத்தி அறிவிக்கப்பட்ட கிவுல் ஓயா நீர்ப்பாசன மற்றும் குடியேற்றத் திட்டம், வாக்களித்த தமிழர்கள், அநுர மீது வைத்திருந்த அந்த நம்பிக்கையை தற்போது கருவறுத்துள்ளது.

பொய்யான வாக்குறுதிக்கு வாக்களித்து ஏமாந்துவிட்டோம் என்ற உணர்வு தற்போது அந்த மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

அதாவது, பண்டாரநாயக்க காலத்தில் 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்லோயா குடியேற்றச் சிந்தனையின் நீட்சியை. அநுர, புதிய வடிவத்தில் செதுக்குகிறார் என்பது பட்டவர்த்தனமாகியுள்ளது.

கிவுல் ஓயாத் திட்டத்தை 2011 ஆம் ஆண்டு முதன் முதலில் செதுக்கியவர் மகிந்த ராஜபக்ச.

அப்போது அவருடைய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம். கல்லோயா குடியேற்றத் திட்டம், மகாவலி அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே கிவில் ஓயாத் திட்டமும் அமைய வேண்டும் என்ற தொனி வெளிப்பட்டிருந்தது.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மகிந்தவுக்கு ஆதரவு வழங்க, ஜேவிபி கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தில், வீடற்றவர்களுக்கான குடியேற்றத் திட்டங்கள், பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை உள்ளிட்ட பல நிபந்தணைகள் உள்ளடங்கியிருந்தன.

சிங்கள மொழியில் வெளியான ஒப்பந்தத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக அபிவிருத்திக்கான முக்கியத்துவம் என்பது அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

“வீடற்றவர்களுக்கான குடியேற்றத் திட்டம்”. “அபிவிருத்தி” என்பதன் பொருள் வடக்கு கிழக்கை மையப்படுத்தியிருந்தது. அப்போதைய தேர்தல் பிரச்சாரங்களில் அது தென்பட்டது.

அது மாத்திரமல்ல --

13 ஆவது திருத்தச் சட்டம் கூட அவசியம் இல்லை என்ற பேச்சுகள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் தீவிரமாக பேசப்பட்டது. 2017 ஆம் ஆண்டு வேறு சில காரணங்களை கூறி மாகாண சபைத் தேர்தல்கள் நிறுத்தப்பட்டதன் பின்னணியும் இதுதான்.

2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆயிரம் விகாரைகள் அமைக்கப்படும் என்றும், குடியேற்றத் திட்டங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் உள்ளடக்கம். வடக்கு கிழக்கை மையப்படுத்தியது. தேர்தல் பிரச்சாரங்களில் சஜித் அப்போது அதனை பகிரங்கப்படுத்தியிருந்தார்.

கோட்டாபய முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனமும் வடக்கு கிழக்கை மையப்படுத்திய குடியேற்றங்கள், பௌத்த சமய முன்னுரிமை மற்றும் நிர்பாசன அபிவிருத்தித் திட்டங்கள் முக்கியமானது.

ஆகவே --

இதன் நீட்சிதான் அநுர அரசாங்கம் முன்வைத்த கிவுல் ஓயாத் திட்டம். இத் திட்டம், 13 ஆவது திருத்தச் சடடத்தை ரத்துச் செய்யும் ஒரு உத்தி என்றே ஈழத்தமிழர்கள் பொருள் கொள்ள வேண்டும்.

ஏனெனில் --

இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழு 1972 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டிருந்தாலும், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், 1987 ஆம் ஆண்டின் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஆனால் ---

13 ஆவது திருத்தத்தின் கீழ் உள்ள மாகாண சபை அதிகாரப் பட்டியலில் காணி விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், இலங்கைத் தேசிய காணி கொள்கை, அரச காணிகள் தொடர்பான மத்திய அரசின் அதாவது கொழும்பு நிர்வாக அதிகாரம் தொடர்ந்து நிலவுவதால், நடைமுறையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

அதாவது, சிங்கள அரச அரசியல் தலைவர்களின் கீழ் இயங்கும் சிங்கள அரச அதிகாரிகளிடம் அந்த அதிகாரங்கள் உள்ளன. தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அவர்களிடமே உண்டு.

அதேவேளை --

இலங்கை காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம், 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் (11 ஆம் அட்டவணை) காணி நிர்வாக விடயங்களின் ஒரு பகுதி மாகாண சபைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆனாலும், மாகாணங்களுக்கிடையிலான அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மத்திய அரசிற்குரிய காணிகளின் நிர்வாகம், காணி ஆணையாளர் திணைக்களத்தின் அதிகார வரம்பிற்குள் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாகவே செயல்படுகிறது.

அதாவது --

கொழும்பு அரசியல் நிர்வாகத்தின் இறுதி முடிவில்லாமல் காணி ஆணையாளர் நாயகம் இயங்க முடியாது.

அதேவேளை, இலங்கை தேசிய காணி கொள்கை, ஒட்டுமொத்த இலங்கைக் காணி வளங்களை நிலையான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க வகையில் நிர்வகித்தல், காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல், மற்றும் தேசிய அபிவிருத்திக்காக காணிகளைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இக் கொள்கையானது கொழும்பை மையப்படுத்திய காணிப் பயன்பாட்டுக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம் மூலம் நிர்வகிக்கப்பட்டு, சட்டரீதியான சட்டக் கட்டமைப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஆகவே --

13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவான முறையில் காணி அதிகாரங்கள், பெயரளவில் மாகாணத்துக்கு உரியதாக இருந்தாலும், செயற்பாட்டுப் பொறிமுறைகள், இலங்கை ஒற்றையாட்சி அரசின் அமைச்சரவையும் அதன் நாடாளுமன்றமும் எடுக்கும் தீர்மானத்துக்கு ஏற்பவே இயங்குகின்றன என்பது இங்கே தெளிவாகப் புரிகிறது.

குறிப்பாக --

அற்ப சொற்ப அதிகாரமுடைய 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கும் பரிந்துரைகள், மிலிந்த மொறகொட பேராசிரியர் ரொகான் குணரெட்ன மற்றும் சில மூத்த சிங்கள அரசியல் தலைவர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் ஒன்று கசிந்துள்ளது,

ஏற்கனவே அநுர அரசாங்கத்திடம் அந்த நிலைப்பாடு தெளிவாக உண்டு. இப் பின்புலத்தில் தான் ரில்வின் சில்வா புதுடில்லிக்கு அழைக்கப்பட்டார் என்று கூட உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

டொனால்ட் ட்ரம்பின் குழறுபடிகளினால் எழுந்துள்ள புவிசார் அரசியல் சூழலில், 13 ஐ விடவும். இலங்கை அரசு என்ற கட்டமைப்பு இந்திய நலனுக்கு அவசியமானது.

ஆகவே --

ஈழத்தமிழர் பற்றிய ஜேவிபியின் நிலைப்பாடு பற்றி புதுடில்லி கவனத்தில் எடுக்காமல் இருக்கும் சந்தர்ப்பங்கள் இல்லாமலில்லை.

ஆகவே, இப் பின்புலத்தில், இலங்கைத் தேசிய காணிக் கொள்கைக்கு அமைவாக, இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழு, இலங்கை காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம் ஆகியவற்றின் பரிந்துரைகளோடு கிவுல் ஓயாத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை புலனாகிறது.

அதாவது ---

கடந்த ஏழு வருடங்களாக மாகாண சபைகள் இயங்காத நிலையில், மாகாணங்களுக்குரிய காணி அதிகாரங்கள் முழுமைப்படுத்தாத பின்னணியில், மாகாணங்களை மையப்படுத்திய தேசிய காணிக் கொள்கை இதுவரையும் உருவாக்கப்படாத சூழலில், கொழும்பு அரச இயந்திரம், 1949 இல் இருந்து இயங்கிய அதே ஒற்றையாட்சிப் பொறிமுறையில் இன்றும் இயங்குகின்றது என்பதையே கிவில் ஓயாத் திட்டம் கோடிட்டுக் காட்டியுள்ளது.

ஆகவே ---

'மாற்றம்' 'சோசலிசம்' 'சமத்துவம்' என்று மார்தட்டிய அநுர அதாவது, தேசிய மக்கள் சக்தி என்று பெயரை மாற்றிக் கொண்ட ஜேவிபியின் உண்மை முகம் என்பது பண்டாநாயக்க, ஜேஆர் கால முகமாகவும், மகிந்தவின் வழித் தோன்றலாகவும் நடப்பு 2026 ஆம் ஆண்டு பகிரங்கமாகியுள்ளது.

எனவே, தற்போதைய புவிசார் அரசியல் போட்டிகளினால் ஐ. நா சபை உள்ளிட்ட சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் இன அழிப்பை தடுக்கும் சர்வதேச நீதிமன்றங்கள் அனைத்தும் செயலிழக்கவுள்ள ஆபத்தான ஒரு கட்டத்தில் இருக்கும் போது, ஈழத்தமிழர்களுக்கு எதிராக கடந்த 80 வருடங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் இன அழிப்புத் திட்டம் பற்றிய நுட்பமான வரை படங்கள் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அவ்வாறு தெளிவுபடுத்தாமல் மக்களை ஒன்றிணைத்து நடத்தும் போராட்டங்கள் வெறும் உணர்வு சார்ந்ததாக மாத்திரமே அமையும். உரிய அறிவூட்டல்களோடுதான், ஜனநாயக வழியிலான உரையாடல்கள் நடத்தப்பட வேண்டும்.

ஏனெனில் ---

குழப்பமடைந்துள்ள உலக அரசியல் ஒழுங்கைப் பயன்படுத்தி இலங்கை பொருளாதார உதவிகளை இந்தியாவிடம் இருந்து பெருமளவில் பெறக்கூடிய சாத்தியங்கள் நெருங்கியுள்ளன. சீனாவும் இலங்கையுடன் பேச்சு நடத்துகிறது.

ஆகவே, இந்த நிதிகளை வடக்கு கிழக்கு அபிவிருத்தி என்று கூறி கிவுல் ஓயா போன்ற திட்டங்களை நிறைவேற்றக் கூடிய சாத்தியங்கள் உண்டு. எனவே அறிவும் உணர்வும் ஒன்றித்த, மக்கள் பங்கேற்பு உரையாடல்கள் ஜனநாயக வழியில் அவசியமானது. அதுவும் கட்சி அரசியலுக்கு அப்பால்.

அவ்வாறு நடத்தப்படும் உரையாடல்கள் தீர்வுக்குரிய பொறிமுறை தயாரிப்புக்கும் வழி வகுக்கும்.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid029PG66whPEcruSHDMhW6tCsLWS5ftmuMBdeMXYYz49hnRELHwA11Z1JY78iiVqNwEl&id=1457391262

தமிழர் பகுதியில் அமைய உள்ள கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்துக்கு தமிழர்கள் எதிர்ப்பு ஏன்?

2 days 8 hours ago

தமிழர் பகுதியில் அமைய உள்ள நீர்த்தேக்க திட்டத்துக்கு தமிழர்கள் எதிர்ப்பு ஏன்?

தமிழர் பகுதியில் கொண்டு வரும் நீர்த்தேக்க திட்டத்திற்கு தமிழர்கள் எதிர்ப்பு ஏன்?

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • 6 பிப்ரவரி 2026

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ள உத்தேச கிவுல் ஓயா நீர்பாசனத் திட்டத்திற்கு தமிழர்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்தை கைவிடுமாறு கோரி, வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றும் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், தொடர்ச்சியாக பல்வேறு வகையிலும் தமது எதிர்ப்புக்களை தமிழர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான தமிழ் கட்சிகள் இந்த திட்டத்திற்கு தமது எதிர்ப்புக்களை பதிவு செய்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

தமிழர் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த திட்டத்திற்கு தமிழர்களே ஏன் எதிர்ப்பை வெளியிடுகின்றனர்?

கிவுல் ஓயா திட்டம்

கிவுல் ஓயா திட்டம்

வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள காணிகளில் 1983ம் ஆண்டு குடியமர்த்தப்பட்ட சிங்கள மக்களுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு உருவாக்கப்பட்ட திட்டமே இந்த கிவுல் ஓயா திட்டம் என தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

குறித்த பகுதிகளில் வாழும் சிங்கள மக்களினால் செய்கை செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கும், அவர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கும் தேவையான நீர் இந்த திட்டத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளது என தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

2011ம் ஆண்டு கிவுல் ஓயா திட்டத்திற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், பல்வேறு காரணங்களினால் இந்த திட்டத்தின் பணியை முன்னெடுக்க முடியவில்லை.

இந்த நிலையிலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இந்த திட்டத்தை அமலுக்கு கொண்டு வர தீர்மானித்துள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இதன்படி, 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட இந்தத் திட்டம், வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள மா ஓயாவின் முக்கிய துணை நதியான கிவுல் ஓயாவை குறுக்காக அணை அமைத்து கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், 1,700 ஹெக்டேர் புதிய நிலங்களில் விவசாயம் செய்ய நீர் வழங்கப்படுவதுடன், ஏற்கனவே உள்ள 700 ஹெக்டேர் நிலங்களின் பயிர்செய்கை திறனையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிவுல் ஓயா தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம்

படக்குறிப்பு,இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம்

எதிர்ப்பில் ஈடுபடுவோர் என்ன சொல்கின்றார்கள்?

பாரம்பரியமாக வாழ்ந்த தமிழர்களுக்கு விடுவிக்க முடியாத காணிகளை, சிங்கள மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்படுகின்ற கிவுல் ஓயா திட்டத்திற்கு விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

''நாங்கள் இலங்கையின் உலர் வலயத்தில் வாழ்கின்ற மக்கள். வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் நீர்த்தேவை என்பது விவசாய தேவைக்கும், அன்றாட ஜீவனோபத்திற்கும் முக்கியமானது. இந்த நீர்த்தேவை தனியே குடியேற்றப்பட்ட மக்களுக்கு மாத்திரம் இல்லை. அந்த குடியேற்றப்பட்ட மக்கள் என்பது இந்த வன்னி தேர்தல் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் சிறிய மக்கள். அவர்களுக்கு இருக்கின்ற அதே தேவை, மகாவலி எல் வலயத்திற்கு வெளியிலுள்ள மக்களுக்கும் இருக்கின்றது.'' என்றார் பத்மநாதன் சத்தியலிங்கம்

''அந்த குறிப்பிட்ட மக்களுக்கு மாத்திரம் இந்த திட்டத்தை செய்கின்றார்கள். ஏனைய மக்கள் கைவிடப்பட்ட மக்களாகவே இப்போதும் இருக்கின்றார்கள். யுத்தம் இடம்பெற்ற பகுதியில் பலர் மீள்குடியேறியுள்ளனர். அவர்கள் வாழ்ந்த பாரம்பரிய பூமி இன்று காடாகியிருக்கின்றது. 2014ம் ஆண்டு இருந்த அரசாங்கம் கூகுள் வரைப்படத்தில் எங்கேங்கெல்லாம் பச்சை நிறமாக இருந்ததோ, அந்த நிலங்களை வனவல திணைக்களத்திற்கு சொந்தமானது என விசேட வர்த்தமானியூடாக அறிவித்திருந்தது.'' என்றார் அவர்

''அப்படி அறிவித்த அந்த பிரதேசத்திற்குள் தமிழ் மக்கள் வாழ்ந்த கிராமங்கள், அவர்கள் பயிர் செய்த நீர்பாசன குளங்கள், வயல்கள் எல்லாம் அதற்குள் உள்ளடங்கப்பட்டுள்ளது. இந்த பிரதேசத்திற்குள் மீள்குடியேற வந்த மக்களை அந்த வர்த்தமானியை காட்டி இன்று வரை அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.

இந்த இடத்தை விடுவிக்க நாங்கள் அரசாங்கத்திடம் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். அதை விடுவிக்க மறுப்பு தெரிவிக்கவில்லை. விடுவிப்போம் என்று சொல்கின்றார்கள். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் அறிக்கை தருகின்றார்கள்.''

''பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்களை குடியேற விடாத அரசாங்கம், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காட்டை கிவுல் ஒயா திட்டத்திற்காக விடுவித்திருக்கின்றார்கள்'' என பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவிக்கின்றார்.

தமிழர் பகுதியில் கொண்டு வரும் நீர்த்தேக்க திட்டத்திற்கு தமிழர்கள் எதிர்ப்பு ஏன்?

சிங்கள குடியேற்றமா?

புதிய சிங்கள குடியேற்றங்களை மீண்டும் கொண்டு வந்து, தமிழர் பகுதிகளில் குடியமர்த்தும் திட்டத்தை இந்த அரசாங்கமும் முன்னெடுக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் குறிப்பிடுகின்றார்.

''1983ம் ஆண்டு செய்ததை போல அல்லது மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் வேறு மாகாணங்களிலிருந்து பெருந்தொகையான சிங்கள மக்களை கொண்டு வந்து குடியேற்றியதை போல இந்த அரசாங்கமும் பெரும்பான்மை சிங்கள மக்களை குடியேற்ற போகின்றார்களா? என்ற சந்தேகம் வருகின்றது'' என்றார் அவர்.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணவேணி திருநாவுகரசு

படக்குறிப்பு,வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணவேணி திருநாவுகரசு

கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக தமிழர் பிரதேசத்தின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் முயற்சியை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணவேணி திருநாவுகரசு கோரிக்கை விடுக்கின்றார்.

''வவுனியா வடக்கு பிரதேசமானது, தமிழர்களின் பூர்வீக பிரதேசமாக காணப்படுகின்றது. எங்களுடைய இந்த பூர்வீக பிரதேசத்தில் சிங்கள மயமாக்குவதற்கான, அதாவது எங்களுடைய பிரதேசத்தில் இன பரம்பலை மாற்றியமைப்பதற்கான அந்த வேலைத்திட்டங்களை இந்த அரசாங்கம் செய்கின்றது என்பது எங்களுக்கு தெட்ட தெளிவாக தெரிகின்றது.'' என்றார் அவர்

''இவ்வாறான திட்டங்களை இந்த அரசாங்கம் நிறுத்த வேண்டும்.'' என அவர் குறிப்பிடுகின்றார்.

முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

படக்குறிப்பு,முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

அபிவிருத்தி என்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்கின்ற போதிலும், அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் இருப்பில் கை வைக்க முயற்சிப்பார்களாயின் அதற்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கின்றார்.

''சிங்கள மக்களுக்கு நாங்கள் எதிர் அல்ல. சிங்கள குடியேற்றங்களை இனவாதிகள் கொண்டுவர முயற்சிப்பதற்குதான் நாங்கள் எதிர்க்கின்றோம். வவுனியா வடக்கில் அரைவாசிக்கு மேல் சிங்கள குடியேற்றங்கள் வந்து விட்டன. அபிவிருத்தி திட்டமா? சிங்கள குடியேற்றமா?'' என கேள்வி எழுப்புகிறார் அவர்.

சமூக செயற்பாட்டாளர் மாணிக்கம் ஜெகன்

படக்குறிப்பு,சமூக செயற்பாட்டாளர் மாணிக்கம் ஜெகன்

யானை மனித மோதல்

காடுகள் அழிக்கப்பட்டு இந்த திட்டம் அமல்படுத்தப்படும் பட்சத்தில், யானை மனித மோதல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் மாணிக்கம் ஜெகன் குறிப்பிடுகின்றார்.

''எங்களுடைய காடுகள் அழிக்கப்படுகின்றன. இந்த காடுகள் அழிக்கப்படுகின்றமையினால் மனித யானை மோதல்கள் இன்னும் அதிகமான இருக்கும். இன்றும் கூட அடிக்கடி யானைகளினால் மனிதர்களின் உயிர்கள் வன்னி பகுதிகளில் இழக்கப்படுகின்றன. இது இன்னும் அதிகரித்து செல்லும் என்ற பயம் இருக்கின்றது.'' என அவர் குறிப்பிடுகின்றார்.

அரசாங்கம் என்ன கூறுகின்றது?

''கிவுல் ஓயா திட்டமானது, இன மற்றும் மத அடிப்படையிலான நோக்கங்களை கொண்டது என கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது'' என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிக்கின்றார்.

தமிழ் மக்களின் நில உரிமைகளும், சமூக உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படும். எந்த ஒரு சமூகமும் அநீதிக்குள்ளாக்கப்பட அனுமதிக்கப்படமாட்டாது. சட்டத்துக்கு முரணான நில கையகப்படுத்தல்கள் எதுவும் இடம்பெறாது, திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உரிய சட்ட நடைமுறைகளின் கீழே மேற்கொள்ளப்படும்'' அவர் தெரிவித்தார்.

மேலும், கிவுல் ஓயா திட்டத்தின் மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய உற்பத்தி அதிகரிக்கப்படுவதோடு, ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கு நிலையான நீர்ப்பாசன வசதி கிடைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தை இன அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல், நாட்டின் நீண்டகால அபிவிருத்தித் தேவையாகக் கருதி அணுக வேண்டும் என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cqxyxwlplrxo

சமஷ்டி நூற்றாண்டும் தமிழரசுக்கட்சியும்.!

2 days 11 hours ago

சமஷ்டி நூற்றாண்டும் தமிழரசுக்கட்சியும்.!

February 6, 2026

சமஷ்டி நூற்றாண்டும் தமிழரசுக்கட்சியும்.!  (மூன்றாவது கண்:VI)

— அழகு குணசீலன் —

இலங்கை அரசியலில் சமஷ்டி சிந்தனை பிறந்து நூறாண்டுகளாகிறது.  சிங்கள தேசியவாத, நாயக்க வம்ச ஆளுமை எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கா இலங்கை சமூக, பொருளாதார, அரசியல் பன்மைத்துவ கட்டமைப்புக்கு சமஸ்டி- கூட்டாட்சி முறைமையே பொருத்தமானது என்று 1926 இல் கருத்துருவாக்கத்தில் ஈடுபட்டார்.  அதற்கான அவசியத்தையும், நியாயத்தையும் முன்வைத்தார். இலங்கைத் தீவை  கண்டி, கரையோரம், வடக்கு கிழக்கு என்று சுயாட்சி பிராந்தியங்களாக பிரித்து கூட்டாட்சி அரசியல் கட்டமைப்பை நிறுவுவது அவரது கருத்தாக இருந்தது.

அப்போது சமஷ்டி முறைமையானது இன ஒற்றுமையை பாதிக்கும் வகையிலான ஒரு இனவாத கருத்தியல் என்று ஜேம்ஸ்.ரட்ணம் பண்டாரநாயக்காவின் கருத்துக்கு எதிராக பேசியும், எழுதியும் விவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சிங்களவர் தமிழரை ஒரு சிறுபான்மை தேசிய இனமாக அங்கீகரித்து இலங்கைத்தீவின் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள முன்வந்ததற்கு மட்டும் அன்றி அதை இனவாதம் என்று தமிழரே எதிர்த்ததற்கும் – தட்டிக்கழித்ததற்கும்- நிராகரித்ததற்குமான சமஷ்டி நூற்றாண்டு இந்த 2026. 

இந்த நூற்றாண்டு குறித்து நிலமும், புலமும் அறிந்த பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய கட்டுரை இலங்கை  அரசியல் பரப்பில் அதிக கவன ஈர்ப்பை பெற்றுள்ளது. வரலாற்றை திரும்பிப் பார்ப்பதற்கும், கலந்துரையாடல்களுக்கும்,  தமிழர் அரசியலில் மாற்று அணுகுமுறை தேவை என்ற கருத்தையும் இன்றைய தலைமுறைக்கு சொல்லியிருக்கிறது. 

1949 இல் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக்கட்சி -சமஷ்டி கட்சி நிறுவப்ப்பட்டு இதே சமஷ்டிக்கோரிக்கையை வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு ஒரு அரசியல் கோரிக்கையாக முன் வைத்தது. அந்த தமிழ்த்தரப்பு சமஷ்டி கருத்தியலும் முக்கால் நூற்றாண்டை கடந்து விட்டது. தமிழரசுகட்சியானது தற்போது எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தான் சமஷ்டியின் தந்தை என்ற கோதாவில் அற்ப அரசியல் செய்வதுடன்,  பண்டா- செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறிந்ததையே அரசியல் முதலீடாக கொண்டிருக்கிறது. சிங்கள, பௌத்தர்களின் எதிர்ப்பால் பண்டாரநாயக்கா  1957 யூலை 26  இல் ஒப்பமிடப்பட்ட, நகலை கிழித்தெறிந்ததை பிரச்சாரம் செய்யும் தமிழரசுக்கட்சி, முதலில்  சமஷ்டி யோசனையை முன்வைத்தது ஒரு சிங்களத்தலைமை என்பதையும், அதை நிராகரித்தது தமிழர் தரப்பே  என்பதையும் அடக்கி வாசிக்கிறது.

அண்மைய செய்திகள், பதிவுகளின் படி சமஷ்டி  கோரிக்கையை கொண்டு இழுக்க புதிய அரசியல் அணுகுமுறை – ஒரு மாற்று அரசியல் பாதை அவசியம் என்பதை தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்திருக்கிறார்.  “பண்டாரநாயக்காவின் சமஷ்டி நூற்றாண்டை மையமாகவைத்து அதற்கான வேலைத்திட்டம் ஒன்றை இந்த வருடத்தில் ஆரம்பிக்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார் சுமந்திரன். அவரது இந்த கருத்து அந்த வேலைத்திட்டம் குறித்து தெளிவாகவோ, ஆழமாகவோ பேசவில்லை. எப்படியாயினும் தமிழர் அரசியலில் ஒரு மாற்று அணுகுமுறை காலத்தின் கட்டாயம்.

 எம்.ஏ.சுமந்திரனின் கருத்தில் தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் ‘சமஷ்டி’ குறித்து நிலவும் ‘அச்சத்தை’  போக்குவதும், ‘தீர்வு’ ஒன்றை எட்டும் நிலையில் அதற்கான சர்வஜனவாக்கெடுப்பில், அரசாங்க தரப்புடன்  இணைந்து மேடையேறும் போது சமஷ்டிக்கான, சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல என்றும் அவர் கூற வருகிறார் என்றே கொள்ள வேண்டும்.

“சிங்களக் கட்சி எதுவும் சமஷ்டி என்ற சொல்லை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகையால் பெயர்ப் பலகையில் தொங்கிக் கொண்டிருக்காமல் அர்த்தமுள்ள விதத்தில், மீளப்பெற முடியாத அதிகாரப்பகிர்வு முறையை அடையவேண்டும்.அதற்கு நிட்சயமாக எதிர்த்தரப்பு கட்சிகளின் ஆதரவையும் பெற வேண்டும்”.

“இந்தியா இந்தப்பிராந்திய வல்லரசு என்பதையும் தாண்டி ஒரு உலக வல்லரசாக மாறியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இதற்கான முக்கிய காரணம். மிக அண்டை நாடான இந்தியாவின் வளர்ச்சியை எமதாக்கி கொள்ள வேண்டும். அதற்கு இந்தியாவின் பங்களிப்பு எமது அரசியலிலும் கட்டாயமாக இருக்கவேண்டும். அது தமிழ் மக்களுக்கு ஒரு போதும் கேடாக அமையாது”.   

சுமந்திரன்   பத்தியாளர் சிவராசா கருணாகரன் உடனான  நேர்காணல் கூறிய இரண்டு கருத்துக்களும் மிகவும் முக்கியமானவை மட்டும் அன்றி பிராந்திய அரசியல் ஜதார்த்தம் கொண்டவை.  ஆனால் இந்தியாவை பயன் படுத்தல் என்பதில் – அதன் வரையறையில் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் பரப்புக்கு உள்ளேயும், வெளியேயும், புகலிடச் சூழலிலும் முரண்பாடான நிலைப்பாடுகள் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதில் முக்கியமான இன்னொரு விடயம் என்னவெனில் சுமந்திரன் “இந்தியாவை பயன்படுத்தல்” என்ற கருத்தோடு தென்னிலங்கை தீவிர சிங்கள பௌத்த பேரினவாதத்தை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதுதான். 

சிங்கள மக்களுக்கு சமஷ்டி குறித்து இருக்கும் அச்சத்தை அகற்ற சுமந்திரனின் இந்தியாவை பயன்படுத்தல் எந்தளவுக்கு உதவப்போகிறது?  

அதுவும் இலங்கைக்கும் -இந்தியாவுக்குமான உறவானது முற்றிலும் பொருளாதார நலன் சார்ந்த உறவாக நாளாந்தம் மாறிக்கொண்டிருக்கின்ற நிலையில், இனப்பிரச்சினை தீர்வுக்கான ஒரு அரசியல் அழுத்தம் இந்தியாவில் இருந்து எதிர்பார்க்கக்கூடியதா?

 இதை சிங்கள தேசம் குறிப்பாக தென்னிலங்கை முற்போக்கு சக்திகள் கூட இந்திய அழுத்தத்தை எப்படி நோக்கப் போகிறார்கள்? சுமந்திரனின் ‘இந்தியாவை பயன்படுத்தல்’ என்ற கருத்து சிங்கள மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தி, சிங்கள, பௌத்த பேரினவாதத்தின் பக்கம் சிங்கள மக்களை அணிதிரட்டமாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இந்தியாவுக்கு இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலம், இயற்கை அனர்த்த நிவாரண முகாமைத்துவ உதவிக்காலம்,  சர்வதேச நாணய நிதிக்கு இலங்கைக்கு சார்பாக பிணை நின்றகாலம்…. என்ற பல வாய்ப்புகள் இனப்பிரச்சினை குறித்து குறைந்த பட்சம் அர்த்தமுள்ள தீர்வு குறித்து பேச பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஆனால்   வடக்கு,கிழக்கு தமிழ்தேசிய அரசியல்வாதிகள் கொழும்புக்கு படையெடுத்து  இந்தியப் பிரதிநிதிகளை சந்திக்கும் போது தமிழ் தேசியத்தின் பலவீன அரசியல் பற்றியே அதிகம் அறிவுறுத்திய இருக்கிறது.

 இந்த பலவீனம் காரணமாகவும், கொழும்பின் பலம் காரணமாகவும் தான்  டெல்லியிடம் ஈழத்தமிழர்கள் தங்கியிருக்கிறார்கள் என்பதை இந்திய வெளியுறவுத்துறை புரிந்து இருக்கிறதா?  கொழும்பினதும், தமிழ்தரப்பினதும் பலவீனங்களை இதுவரை இந்திராகாந்தி, ராஜீவ்காந்தியினால் மட்டுமே பயன்படுத்த முடிந்திருக்கிறது.  அதையும்  புலிகளும், புலிக்குபயந்த கட்சிகளும், அமைப்புக்களும், அவர்களை நியாயப்படுத்திய தாயக, புகலிட சக்திகளுமே கெடுத்தார்கள்.  பண்டாரநாயக்காவுக்கு ஒரு தமிழரான ஜேம்ஸ் இரட்ணம் போன்று ராஜீவ்காந்திக்கு ஒரு  தமிழ் அமைப்பாக புலிகள் குறுக்கே நின்றார்கள். இதனால் சிங்களதேசமே  அனைத்துப் பயன்களையும் அள்ளியது. இந்த புள்ளியில் சுமந்திரனின் ” அது தமிழ்மக்களுக்கு ஒரு போதும் கேடாக அமையாது.” என்ற வார்த்தைகளை அழுத்திக் கூறவேண்டியுள்ளது. 

தமிழ் மக்களுக்கு விளைவிக்கப்பட்ட   கேட்டுக்கு புலிகளும், ஜே.வி.பி.யும் பங்குதாரர்கள். இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு எதிரான தங்கள் நடவடிக்கையை ஜே.வி.பி. இந்திய மேலாதிக்கத்திற்கு எதிரானது என்றும், இனவாதம் இல்லை என்றும் நியாயப்படுத்துவது அரசியல் அபத்தம். இன்றைய பிராந்திய, உலகப் பொருளாதார ஒழுங்கில் இந்திரா – ராஜீவ்காந்தி காலங்கள் மீண்டும் உயிர்த்தெழப்போவதில்லை. அதுமட்டுமின்றி இந்திய பொருளாதார மேலாதிக்கத்தை தவிர்த்து ஓடுவதை  அநுர அரசாங்கத்தினாலும் நினைத்துபார்க்க முடியாது. சிங்கள, பௌத்த மேலாதிக்க அதிகாரத்தை பாதுகாக்க எந்த மேலாதிக்க சக்திகளோடும் கூட்டுச்சேர தயார் என்பதை நிரூபிக்க ஜே.வி.பி/என்.பி.பி. அரசாங்கத்திற்கு சில மாதங்களே தேவைப்பட்டன.

எம்.ஏ.சுமந்திரனின் கடந்த 15 ஆண்டுகால பாராளுமன்றமன்ற அரசியல் உட்கட்சி ஜனநாயகம் மட்டும் அன்றி வெளிப்படைத்தன்மையும் அற்றது. ”  …   அவர்கூறுகின்ற பெயர்ப் பலகையில் தொங்கிக்கொண்டிருக்காமல்….. என்கின்ற அந்த பலகைக்கு பின்னால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும்,  மதியாபரணம் ஆபிரகாம் சுயந்திரனுக்கும் இடையிலான கருத்து மோதல் ஒழிந்து இருக்கிறது. இது ஒற்றையாட்சி – ஏக்கயராட்சிய வரைவிலக்கண அரசியல் வித்துவ செருக்கு. ஏக்கயராட்சியவுக்கு  வேறு பெயர் சமஷ்டி என்று தமிழ்மக்களுக்கு காட்டும் அதேவேளை சிங்கள மக்களுக்கு அதை மறைக்கும் வெளிப்படைத்தன்மையற்ற அரசியல் ஏமாற்றே சுமந்திரன் கூறுகின்ற பலகை கதை. சிங்கள மக்களையும், அவர்களின் அரசியல் தலைமைகளையும் கூட்டாட்சிக்கு பதிலாக ஏக்கயராட்சிய என்ற வார்த்தையை  பிரதியீடு செய்து ஏமாற்றலாம் என்று சுமந்திரன் நினைப்பது அரசியல் சிறுபிள்ளைத்தனம்.

இந்த ஒழித்து பிடித்து விளையாடும் அரசியலை விட்டு விட்டு சிங்கள மக்களின் நம்பிக்கையை இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு பெறவேண்டுமானால் அரசியல் நேர்மையுடன் தமிழரசுக்கட்சி / தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும்  சகல தமிழ் கட்சிகளும், தங்கள் பங்குக்கு செய்யவேண்டிய வேறு அரசியல் வேலைகள் நிறையவே உள்ளன. அதை அவர்கள் செய்யவேண்டும். 

1. திம்புக்கோட்பாடு, வட்டுக்கோட்டை பிரகடனம் போன்றவை சிங்கள மக்களுக்கு தங்கள் எதிர்காலம் குறித்து அச்சத்தை ஏற்படுத்துகின்ற  முக்கிய விடயங்கள்.  இவற்றை தமிழரசுக்கட்சி மீளப்பெற்று தமிழ்த்தரப்பு நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும். பிரிவினையற்ற ஒன்றுபட்ட நாட்டுக்குள் வாழவே விரும்புகிறோம் என்பதை உறுதிப்படுத்துகின்ற ஒரு செயலாக இது அமையும்.

2.வடக்கு , கிழக்கு மாகாணங்களை இணைப்பது போன்ற  இனியும் சாத்தியமற்ற போலிக்கோரிக்கைகளை முன் வைப்பதை தவிர்த்தல், மற்றும்  அங்கு வாழும் சகல இன மக்களுக்கும் அந்த உரிமையை பிரகடனம் செய்தல். இதில் முக்கியமானது வடக்கு கிழக்கு தமிழர்தாயகம், தமிழ்மக்களின் பாரம்பரிய பிரதேசம் என்ற வார்த்தையாடல்களையும் தவிர்த்துக்கொள்வதாகும். இது பாரம்பரியமாக வாழும் முஸ்லிம்களின் நம்பிக்கையை பெறுவதற்கும் உதவும்.

3. திம்புக்கோட்பாடு பேசுகின்ற மலையக மக்கள் குறித்த விடயங்களுக்கு ஆதரவாக செயற்படுவது வேறு அதை கையில் எடுத்து அரசியல் செய்வது வேறு. பதுளை மற்றும் வடமேற்கு கரையோரங்களை உள்ளடக்கிய தமிழீழ வரைபடத்தை வாபஸ் பெறுவதுடன், மலையக மக்களின் அரசியல் தீர்மானங்களை அவர்களிடமே விட்டு விடல்.

4. கொழும்பில் ஒரு தமிழரசுக்கட்சி கிளை பெயர்ப்பலகை இருக்கிறது. செயற்படுகிறது (?),  ஆனால் கொழும்பு தமிழர்கள், “தமிழர்கள்” என்ற உணர்வோடு இருந்தாலும், அவர்களின் அரசியல் தென்னிலங்கை சார்ந்தது. இவர்களால்  வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியலை தீர்மானிக்க முடியாது என்பது கடந்த காலங்களில் பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் தானே “கொழும்பார்கள்” வடக்கு கிழக்கில் அரசியல் செய்கிறார்கள்.

5. தென்னிலங்கை சகல முற்போக்கு சக்திகளுடன் மட்டும் அன்றி அரசாங்கம், எதிர்கட்சி தரப்புகளுடன்  தமிழ்தரப்பு நல்லெண்ணத்தை பேணவேண்டும். இதனை தமிழ்மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளான காணி, நிர்வாக,  மொழி மற்றும் கலாச்சார பண்பாட்டு வாழ்வுரிமை, மனித உரிமைகளை விட்டுக் கொடுக்கவேண்டும் என்று அர்த்தப்படுத்தத்தேவையில்லை. 

6. மாகாணங்களுக்கு பொலிஸ் நிர்வாக உரிமை கிடைக்குமாயின் அது விரும்பத்தக்கது. ஆனால் அது சிங்கள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. அதற்கு மாற்றாக இன விகிதாரசாரத்தை பேணும் வகையில் பொலிஸ்சேவை ஆட்சேர்ப்பு இடம்பெறுமாயின் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும். மேலும் முப்படைகளிலும் இதனை கோர முடியும்.

7. ஜனாதிபதி அநுரகுமார தனது சுதந்திர தின உரையில் இந்த நாட்டில் இனவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் இடமில்லை என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.  இந்த கருத்துக்கு தமிழரசுக்கட்சி எதிரானது அல்லவே. ஆனால் சிறுபான்மை தேசிய இனம் ஒன்று தனது இருப்புக்காக பெரும்பான்மை அடக்குமுறை, ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடுவதை இனவாதம் என்று அரசாங்கமும், சிங்கள தீவிரவாதிகளும் முத்திரை குத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேவேளை அரசாங்க வேலைத்திட்டங்களை தமிழ்தரப்பு ஒட்டுமொத்தமாக  இனவாதமாகவும் நோக்க கூடாது.

8. தமிழரசுக்கட்சியும் ஆதரித்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கரிநாள் பேரணியில் வட்டுக்கோட்டை பிரகடனம், சுயநிர்ணய உரிமை கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த வகையான அரசியல்  சிங்கள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துமே அன்றி நல்லிணக்கத்திற்கு உதவாது. காலாவதியான வட்டுக்கோட்டை தீர்மானத்தை மனப்பாடம் செய்து மீட்டல் செய்வதில் இனியும் அர்த்தம் இருக்கிறதா…?

ஆக, எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ள சமஷ்டி நூற்றாண்டின் அவரது வேலைத்திட்டம்  சாத்தியமற்ற அரசியல் செயற்பாடுகளை நிராகரித்து நடைமுறைச்சாத்தியமான , ஜதார்த்த அரசியலுடன் கூடிய காலத்திற்கு பொருத்தமான வேலைத்திட்டமாக அமையவேண்டும். 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி/ என்.பி.பி அரசாங்கம் இந்த நாட்டு மக்கள் அனைவரும் ‘இலங்கையர்’ என்ற இலக்கை அவர்களின் முகவரி, கடவுச்சீட்டு, அடையாள அட்டை ஊடாக அடையமுடியாது. அனைத்து மக்களினதும் குறிப்பாக சிறுபான்மை மக்களின் இதயங்களில் “நாங்களும் இலங்கையர்” என்ற உணர்வு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டும். 

இல்லையேல் சமஷ்டிக்கு நூறுவயது என்பதற்கும், இந்த நாட்டில் இனிமேல் இனவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும்  இடமில்லை என்று ஒரு காலத்தில் இவை இரண்டையும் சுமந்து இருந்தவர்கள் கூறுவதில்  எந்த ஒரு அரசியல் அர்த்தமும் இல்லை.

https://arangamnews.com/?p=12657

மக்கள் பிரதிநிதித்துவத்தின் தார்மீகப் பொறுப்பும் ஓய்வூதிய சர்ச்சையும்

3 days 15 hours ago

மக்கள் பிரதிநிதித்துவத்தின் தார்மீகப் பொறுப்பும் ஓய்வூதிய சர்ச்சையும்

Veeragathy Thanabalasingham

on February 6, 2026

576804468_1330572192416009_2859843338032

Photo, THE PARLIAMENT OF SRI LANKA

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தான் பெற்று வந்த ஓய்வூதியத்தை நிறுத்தினால் சாகப்போவதாக ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவரும் 1999 ஜனாதிபதி வேட்பாளருமான நந்தன குணதிலக கடந்த ஓகஸ்டில் செய்த எச்சரிக்கை தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. தன்னை ஒரு ‘கெரில்லா’ என்று வர்ணித்த அவர் தன்னந் தனியாளாக சாகப் போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஓய்வூதியம் நிறுத்தப்படும் பட்சத்தில் வாழ்வாதாரத்தை இழந்தால் வேறு பலரையும் கொலை செய்துவிட்டுத்  தானும் உயிரை மாய்ப்பதற்கு ‘தற்கொலைத் தாக்குதலை’ நடத்துவதற்கு அவர் திட்டமிட்டிருந்தாரோ தெரியவில்லை.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இல்லாமல் செய்வதற்கான சட்டமூலத்தை அவரது முன்னாள் தோழர்களின் அரசாங்கம் ஜனவரி 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து அது குறித்து அரசியல் அரங்கில் ஒரு விவாதம் மூண்டிருக்கும் வேளையில், குணதிலக உயிருடன் இல்லை. குறுகியகால சுகவீனத்துக்குப் பிறகு ஜனவரி 18ஆம் திகதி அவர் காலமானார். தனது வாழ்வின் இறுதியில் மருத்துவச் செலவைக் கூட செலுத்த முடியாத நிலையில் அவர் இறந்ததாக  கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதிகள் அரச செலவில் அனுபவித்து வந்த ஆடம்பரமான வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்த சட்டம் நிறைவேற்றப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்த நிலையில், சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை ஆட்சேபித்து பல மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் இல்லாமல் செய்வதாக 2024 தேசிய தேர்தல்களில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருக்கிறது என்று அரசாங்கத் தலைவர்கள் கூறுகிறார்கள்.

சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட அன்றைய தினமே தற்போது ஓய்வூதியத்தை பெறுகின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அதற்காக அரசாங்கத்துக்கு ஏற்படுகின்ற செலவினங்கள் பற்றிய விபரங்களை அரசாங்க உறுப்பினர் காமினி இரத்நாயக்க நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கமே சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து நாடாளுன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை 1976ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இலங்கையின் மூத்த இடதுசாரி தலைவர்களில் ஒருவரான கலாநிதி என்.எம். பெரேரா அப்போது நிதியமைச்சராக இருந்தார். குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

காமினி இரத்நாயக்க வெளியிட்ட விபரங்களின் பிரகாரம் தற்போது 330 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தைப் பெற்று வருகிறார்கள். இதற்கு மேலதிகமாக, மரணமடைந்த 182 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விதவை மனைவிமாரும் ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் தங்கியிருந்த ஏழு பேர் அரச கொடுப்பனவுகளைப் பெறுகின்றார்கள்.

ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக மாதந்தம் 23,541,645 ரூபாவும் விதவைகளுக்காக 11,025,216 ரூபாவும் தங்கியிருந்தவர்களுக்காக 420,121 ரூபாவும். அரசுக்கு செலவாகுவதாக அவர் சபையில் கூறினார். ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை இம்மாத இறுதியளவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த ஓய்வுதிய ஒழிப்பு திட்டம்  தொடர்பில் தனது விசனத்தை வெளிப்படுத்தியிருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய சகல கட்சிகளினதும் பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்றுடன் ஆராய்ந்து சட்டமூலத்துக்கு ஒரு மனிதாபிமான பரிமாணத்தை கொடுக்கக்கூடிய திருத்தங்களைச் செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவிடம் கேட்டிருக்கிறார்.

ஜெயசூரியவை போன்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசதி படைத்த வாழ்க்கைப் பின்புலத்தைக் கொண்டவர்கள் என்பதால் அவர்கள் வாழ்வாதாரத்துக்காக ஓய்வூதியத்தில் தங்கியிருப்பவர்கள் அல்ல. ஓய்வூதியத்தை சமூக சேவைக்கு தன்னால் செலவிடக்கூடியதாக இருப்பதை போன்று பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் செய்யமுடியாது என்றும் அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் அவர்கள் பெரும் இடர்பாட்டுக்கு உள்ளாகும் ஆபத்து இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமைப்பின் பதில் தலைவராக இருக்கும் ஜெயசூரிய ஜனாதிபதிக்கு கடந்த வாரம் எழுதிய கடிதம் ஒன்றில் ஊழல்வாதிகள் என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் அரசியல்வாதிகள் சார்பில் தான் பேசவில்லை என்பதை குறிப்பிடத்தவறவில்லை. பொதுவில் அரசியல்வாதிகளை பழிபாவத்துக்கு அஞ்சாத பேர்வழிகளாகவே மக்கள் நோக்குகிற அளவுக்கு இலங்கையின் அரசியல் ஊழல்மயமாகியிருக்கிறது என்பதால் ஜனாதிபதியிடம் தன்னால் முன்வைக்கப்படும் கோரிக்கை மக்களினால் எவ்வாறு நோக்கப்படும் என்பதில் ஜெயசூரிய கொண்டிருக்கும் கரிசனை கடிதத்தில் தெளிவாக பிரதிபலித்தது.

“சகல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஊழல்வாதிகள் என்று அழைப்பது நியாயமானதல்ல. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஜே.வி.பியின் 30 முன்னாள் உறுப்பினர்கள் உட்பட மக்களின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பெற்ற நேர்மையான இடதுசாரி அரசியல்வாதிகள் பலரும் அடங்குகிறார்கள்.

“எதிர்கால ஓய்வூதியத்தை பற்றி அக்கறைப்படாமல் வாழ்க்கையின் சிறந்த பருவத்தில் அரசாங்க சேவையில் இருந்து விலகி அரசியலுக்கு வந்த பலர் இருக்கிறார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இல்லாமல் செய்தால் அவர்கள் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும். தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பவர்களும் எதிர்காலத்தில் அதே கஷ்டத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

“நாடு சுதந்திரமடைந்த நேரத்தில் தனவந்தர்கள், நிலச்சுவாந்தர்கள் மற்றும் சமூகத்தின் உயர்மட்டத்தில் இருந்தவர்களும் அரசியலில் முதன்மை வாய்ந்தவர்களாக விளங்கினார்கள். 1956ஆம் ஆண்டில் இடம்பெற்ற சமூக மாற்றம் அந்த நிலைவரத்தை பெருமளவுக்கு மாற்றியமைத்து சாதாரண மக்களும் அரசியல் வாய்ப்புக்களில் நியாயமான பங்கைப் பெறுவதற்கு வழிசமைத்தது.

“நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய உரிமையை இல்லாமல் செய்தால் முறைகேடாக சொத்தைக் குவிக்கும் முதலாளித்துவவாதிகளும் பெரும் வர்த்தகர்கள் மற்றும் ஊழல்வாதிகளும் மீண்டும் அரசியல் களத்தை ஆக்கிரமிக்கும் சூழ்நிலை உருவாகும். சமுதாயத்தின் நலன்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பிறகு மன அமைதியுடன் வாழ்வதற்காக மக்கள் பிரதிநிதிகளுக்கு பல வசதிகளை வழங்குவது பல நாடுகளில் பாரம்பரிய நடைமுறையாக இருக்கிறது” என்று முன்னாள் சபாநாயகர் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் தொடர்பிலான விவாதம் நேர்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் பல கேள்விகளை எழுப்புகிறது. பொதுமக்கள் பாதூரமான பொருளாதார இடர்பாட்டுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அதுவும் குறிப்பாக நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட முன்னென்றுமில்லாத பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை மீட்பதற்காக விதிக்கப்பட்டிருக்கும் கடுமையான வரிகள் உட்பட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளின் விளைவான நெருக்குதல்களினால் அவலப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நேரத்தில் அரசியல்வாதிகள் வரப்பிரசாதங்களை அனுபவிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

அரச சேவை ஊழியர்கள் தங்களது 60 வயதுவரை 25 – 30 வருடங்கள் பணியாற்றிய பிறகு பெறுகின்ற ஓய்வூதியங்களை விடவும் பெருமளவுக்கு அதிகமான ஓய்வூதியத்தை அரசியல்வாதிகள் வெறுமனே ஒரு ஐந்து வருடங்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த பிறகு வாழ்நாள் பூராவும் பெறுவதை மக்கள் ஒரு முறைகேடாகவே நோக்குகிறார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களாக வருவதற்கு முன்னர் பெரும்பாலான அரசியல்வாதிகளிடம் இருந்த சொத்துக்களையும் பல வருடங்களாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த பிறகு அவர்களிடம் இருக்கும் சொத்துக்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அரசியலை அவர்கள் மக்கள் சேவையாக அன்றி செல்வத்தைக் குவிப்பதற்கான ஒரு வழிமுறையாகவே பயன்படுத்துகிறார்கள் என்பது தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

உலகின் பல நாடுகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் வசதிகள் வழங்கப்படுவது நடைமுறையாக இருந்து வருகிறது. எமது அயல் நாடான இந்தியாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதாந்தம் 25 ஆயிரம் ரூபாவை ஓய்வூதியமாகப் பெறுகிறார்கள். முதல் ஐந்து வருடங்களுக்கு அப்பால் நாடாளுமன்றத்தில் அவர்கள் அங்கம் வகித்த ஒவ்வொரு வருடத்துக்கும் 2 ஆயிரம் ரூபா மேலதிகமாக வழங்கப்படுகிறது. இந்தியா, இலங்கை போன்று அரசியலிலும் ஆட்சிமுறையிலும் ஊழலும் முறைகேடுகளும் தலைவிரித்தாடிய நாடுகளில் அரசியலைப் பயன்படுத்தி பெரும் தனவந்தர்களாக மாறிய எத்தனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஓய்வூதியங்களை பெறுகிறார்கள் என்பது முக்கியமான ஒரு கேள்வி.

அதேவேளை, தென்கிழக்காசியாவில் மிகவும் வறிய நாடுகளில் ஒன்றான கிழக்கு திமோரில் அரச அதிகாரிகள் அனுபவிக்கும் ஆடம்பரமான சலுகைகளுக்கு எதிராக மாணவர்கள் தலைமையில் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிப்பதற்கான சட்டம் கடந்த செப்டெம்பரில் நிறைவேற்றப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு தங்களுக்குள் கருத்தொருமித்துச் செயற்படமுடியாத அரசியல்வாதிகள் தங்களுக்கான வரப்பிரசாதங்களை அதிகரிப்பதற்கு நாடாளுமன்றத்தில் ஒன்றுபட்டு சட்டங்களை நிறைவேற்றிய பல சந்தர்ப்பங்களை நாம் கண்டிருக்கிறோம். தவறான ஆட்சிமுறைக்கும் ஊழலுக்கும் எதிராக இலங்கையின் வரலாறு முன்னென்றும் கண்டிராத 2022 மக்கள் கிளர்ச்சிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அத்தகைய நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கு பெரும்பாலும் வாய்ப்பில்லை.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இல்லாமல் செய்யும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் கரு ஜெயசூரிய போன்ற தலைவர்கள் அரசாங்கத்திடம் முன்வைத்திருக்கும் கோரிக்கையை நாட்டு மக்கள் சாதகமான முறையில் நோக்க முடியாத அளவுக்கு இலங்கையின் அரசியல் வர்க்கம் ஊழல் நிறைந்ததாக இருந்து வந்திருக்கிறது. இதன் விளைவாக தவிர்க்க முடியாத வகையில் நேர்மையான அரசியல்வாதிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை.

முன்னாள் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் காலஞ்சென்ற சாம் விஜேசிங்க தனது இறுதிக்காலத்தில் ஆங்கிலப்பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறிய ஒரு கதையை இச்சந்தர்ப்பத்தில் நினைவுமீட்டுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

புதிதாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானவர்களுக்கு நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக ஏற்பாடுசெய்யப்படும் பயிற்சிப் பட்டறைகளில் விரிவுரை நிகழ்த்துவதற்கு விஜேசிங்க அழைக்கப்படுவது வழமை. ஒரு பயிற்சிப் பட்டறையில் புதிய உறுப்பினர்களிடம் நாடாளுமன்றத்துக்கு வந்த நோக்கம் குறித்து அவர் கேட்டபோது, அவர்கள் எல்லோருமே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே வந்திருப்பதாகக் கூறினார்களாம். அப்போது விஜேசிங்க, ‘இல்லை, நீங்கள் குறுகிய காலத்திறகுள் பணம் குவிப்பதற்காகவே நாடாளுமன்றத்துக்கு வந்திருக்கிறீர்கள்’ என்று நேரடியாகவே கூறிவிட்டாராம்.

வீரகத்தி தனபாலசிங்கம்

https://maatram.org/articles/12579

தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுச் சிதைப்பு திட்டமிட்டு நடைபெறுகிறதா?

4 days 12 hours ago

கூட்டம் கூட்டமாக கண்டிய நடனமாடித்திரிகிறது யாழ்ப்பாணச்சமூகம்

ஒரு பெரும் பண்பாட்டுச் சிதைப்பை அமைதியாக செய்து முடித்திருக்கும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம்.

ஈழத்தமிழர்களின் இன இருப்பு வழிபாட்டிடங்கள் பண்பாடு என பலதளங்களிலும் ஒரு பெரும் அழிவுச்சுட்டியை ஶ்ரீலங்காவின் அரசும் அதன் கட்டமைப்புகளான தொல்லியல் திணைக்களம் வன வளத்திணைக்களம் என ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு ஈழத்தமிழர்கள் மீதும் அவர்களின் மரபு பண்பாட்டுக்கூறுகள் மீதும் திணித்து வரும் நிலையில் அந்த பட்டியலில் தானும் முந்தியிருக்கிறது யாழ்ப்பாண மாவட்ட செயலகம்.

கடந்த 01.02.2026 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு உலகக் கிண்ணம் எடுத்துவரப்பட்டது.

யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்ட உலக்கிண்ணத்திற்கு யாழ் மாவட்ட செயலகத்தால் அமோகமான வரவேற்பளிக்கப்பட்டது. கண்டிய சிங்கள நடனம் , சிங்களவர்களின் பாணியிலான காவடி நடனம் என யாழ்ப்பாணத்தின் பண்பாட்டிற்கு சிங்கள முலாம் பூசி மகிழ்ந்திருந்தனர். யாழ் மாவட்ட செயலாளரும் அதிகாரிகளும்!

ஈழத்தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரம் என்று கொண்டாடப்படும் யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் சார்பில் ஏன் சிங்கள நடனம் வரவேற்பிற்கு பயன்படுத்தப்பட்டது?

யாழ்ப்பாணத்தில் பண்பாட்டுக் கூறுகளுக்கு பஞ்சமா? வரவேற்பை வழங்கக்கூடிய கலைகள் யாழ்ப்பாணத்தில் இல்லையா?

ஒரு தமிழ் மாவட்ட செயலாளர் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்து யாழ்ப்பாண பண்பாட்டின் முகமாக சிங்கள நடனங்களை காட்சிப்படுத்தினார்?

அரசு சார்பில் மாவட்ட செயலாளருக்கு இப்படியான அறிவுறுத்தல் வழங்கப்பட்டதா?

ஏற்கனவே திட்டமிட்டு பாரிய குடிப்பரம்பல் மாற்றம் செய்யப்படப்போகிறது என தமிழ் மக்கள் கொதித்துக்கொண்டிருக்கும் ஒரு காலப்பகுதியில் ஏன் இப்படியான ஒரு செயற்பாடு அரங்கேற்றப்பட்டது?

ஒரு இனத்தை அழிப்பதற்கு அதன் பண்பாட்டை அழித்தால் போதுமென்பார்கள், இனம் தானாக தன்னை அழித்துக்கொள்ளும் அல்லது திரிபடைந்துகொள்ளும்.

ஆக யாழ்ப்பாணத்தை இலக்கு வைத்து இப்படி ஒரு சதித்திட்டம் அரங்கேற்றப்படுகிறதா? அல்லது இந்த சிங்கள நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றும் அரசுக்கான தனது விசுவாசத்தை இப்படி ஒரு வகையில் காட்ட முற்படுகிறாரா யாழ்ப்பாண மாவட்ட செயலாளர்?

இப்படி ஒரு ஆபத்தான திரிபை அரச கட்டமைப்புகள் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திக்கொண்டிருக்க உலகக் கிண்ணத்தை நல்லூர் தேவஸ்தானம் தனது எல்லைக்குள் இருந்து அப்புறப்படுத்தியது சரியா? பிழையா? என்று வேலிச்சண்டையிட்டு வன்மங்களை வாரியிறைத்துக் கொண்டிருக்கிறது யாழ்ப்பாணச்சமூகமும் அதன் ஊடகக்கலாசாரமும்.

உலகில் எங்கு சென்றாலும் தமிழரின் பண்பாடு என கேட்க யாழ்ப்பாணத்தை கைகாட்டுவார்கள், ஆனால் யாழ்ப்பாணத்தில் பண்பாட்டு வரவேற்பென கண்டிய சிங்கள நடனத்தை ஆடிக்காட்டியிருக்கிறார் யாழ் மாவட்ட செயலாளரும் அவரது நிருவாகமும்!

ஏற்கனவே தமிழ்த்தேசிய எழுச்சியின் அடையாளமாக பலரின் உணர்வூற்றில் மையப்படுத்தப்படும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் கோலாகலமாக சிங்களச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு கண்டிய நடனமாடிக்களித்த நிலையில் அந்த சூடு ஆறுமுன்பே மாவட்ட செயலகமும் ஆடிக்காட்டியிருப்பது ஏதோ ஒரு மறைமுகமான செய்தியை ஈழ்த்தமிழ் சமூகத்திற்கு சொல்லி நிற்கிறது.

பண்பாடு அழிக்கப்பட்டால் இனம் பாழ்விழுந்துபோம் என்ற அடிப்படை அறிவை எப்போது இந்த சமூகம் புரிந்துகொள்ளப்போகிறது.

https://ibctamil.com/article/jaffna-community-performs-kandyan-dance-1770130957

தேவையற்ற விவகாரங்களில் தமிழர்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது.

1 week ago

தேவையற்ற விவகாரங்களில் தமிழர்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது.

--- --- ---

*1970 களில் விடுதலை இயக்கங்களை உருவாக்கிய காரணங்கள், 2009 இற்குப் பின்னர், எவ்வித தடைகளும் இன்றி, அரசாங்கத்தால் தொடரப்படுகிறதே!

பண்டாரநாயக்கா, ஜேஆர் - இன்றைய அநுர வரை...

*புவிசார் அரசியல் போட்டிகளை நன்கு பயன்படுத்தும் இலங்கை..

*இந்திய நிதியுதவி எங்கு பயன்படுத்தப்படும்?

--- --- ---

இலங்கை அரசாங்கம் குறிப்பாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மிகவும் நுட்பமாக காய்நகர்த்தி, பொருளாதாரத்தை முன்னேற்ற பல திட்டங்களை வகுத்துள்ளது.

சமகால புவிசார் அரசியல் போட்டிகளை கன கச்சிதமாக பயன்படுத்தி இந்தியாவிடம் இருந்து பெருமளவு நிதிகளையும் - நன்கொடைகளையும், அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக இலங்கை பெறுகிறது.

வெளிநாட்டு முதலீடுகளுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

ஏன், அமெரிக்கா - சீனா ஆகிய நாடுகளும் ஏட்டிக்குப் போட்டியாக இலங்கைக்குப் பெருமளவு நிதிகளை அள்ளி வழங்கக் கூடிய சந்தர்ப்பங்களை, சமகால புவிசார் அரசியல் சூழல் உருவாக்கி வருகிறது...

2009 இல் இருந்த புவிசார் அரசியல் சூழலைப் பயன்படுத்தி எவ்வாறு ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதோ, அதேபோன்ற ஒரு புவிசார் அரசியல் போட்டி 2026 இல் உருவாகியுள்ளது.

இதனை நன்கு பயன்படுத்தி இலங்கையின் பொருளாதார பலவினங்கள் நிவர்த்தி செய்யப்பட்டு, தமிழர்களின் அரசியல் விடுதலை விவகரமும். வடக்கு கிழக்கு அபிவிருத்தி என்ற போர்வைக்குள் மூழ்கும் ஆபத்துகள் நெருங்கியுள்ளன...

குறிப்பாக ----

தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்தி என்ற போர்வையில் கிவுல் ஓயாத் திட்டம் போன்ற பல திட்டங்களை செயற்படுத்தி, அதற்குரிய நிதிகள். தொழில்நுட்ப உதவிகளைக் கூட பெறுவதற்குரிய ஏற்பாடுகள் உண்டு.

பெருமளவு நிதி வழங்குகின்ற இந்தியா, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று மாத்திரமே கேட்கும்.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துங்கள் எனவும் இந்தியா அழுத்தம் கொடுக்கும்..

அதற்கு இணக்கம் தெரிவித்துப் பின்னர், அதனை நடைமுறைப்படுத்த முடியாது என்று அநுர அரசாங்கம் வேறு கதைகளைக் கூறிச் சமாளிக்கும்.

13 ஆவது திருத்தம் நிரந்தர அரசியல் தீர்வு அல்ல என்பது வேறு..

தமிழர்கள் அதிகமானோர், ஏற்கவில்லை என்பதும் வேறு...

ஆனால் --

13 ஐ கூட நடைமுறைப்படுத்த அநுர மாத்திரமல்ல, வேறெந்த ஒரு சிங்களத் தலைவர்களுக்கும் விருப்பம் இல்லை என்பதே உண்மை...

2009 இற்குப் பின்னர், 13 கூட தமிழர்களுக்குத் தேவையில்லை என்பதே சிங்கள பெளத்த தேசிய நிலைப்பாடு...

ஆனால் --

1949 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்லோய குடியேற்றத் திட்டச் சிந்தனை, 2009 இற்குப் பின்னரான சூழலில் வடக்கு கிழக்கில் நிறைவேற்றப்படுகிறது.

அதுவும் வெளிநாடுகளின் நிதியுதவியில்....

குறிப்பாக ---

A) நில அபகரிப்புகள்

B) வடக்கு கிழக்கு நிலத் தொடர்புகளைத் துண்டிக்கும் சிங்களக் குடியேற்றங்கள்..

C) புத்த சிலை வைத்தல் - விகாரை அமைத்தல்..

கிவுல் ஓயா போன்ற நீர்ப்பாசணத் திட்டங்கள்..

இதனை விளக்கமாகச் சொல்வதானால் --

1970 களில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் ஆயுத இயககங்கள் உருவாவதற்கான காரண காரியங்கள், 2009 இற்குப் பின்னர் எந்தவிதமான தடகளும் இன்றி தொடருகின்றன என்று கற்பிதம் செய்ய முடியும்...

அதற்கு வசதியாக தமிழ்த்தரப்பின் கவனத்தை திசை திருப்ப, 2009 இற்குப் பின்னர் பல சதித் திட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

தமிழ்த்தரப்பும் அதற்குப் பலியாகித் தமக்குள்ளேயே அடிப்பட்டுக் குத்துப்பட்டுத் தம்மைத் தாமே தரம் தாழ்த்தி வருகின்றன.

குறிப்பாக, அநுரவின் ஆட்சிக் காலத்தில் ....

1) மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் நாகரிகமற்ற வாக்குவாதங்கள்.

2) தமிழர்களிடம் நிர்வாகத் திறன் இல்லை என்று காணிக்கும் நடைமுறைகள்.

3) சிங்கள தலைவர்கள் - சிங்கள அரச அதிகாரிகள் நல்லவர்கள் என்று கண்பிக்கும் உத்திகள்...

4) சுமந்திரன் - சிறீதரன் மோதல். தமிழரசுக் கட்சியை பிளவுபடுத்தும் கருத்து வெளிப்பாடுகள்...

5) மாவை சேனாதிராஜா மாமனிதர் என்ற விவகாரம்..

6) சுமந்திரன் - கஜேந்திரகுமார் தரப்பு மாறி மாறி வசைபாடுதல்.

7) நல்லூர் ஆலயச் சூழலில் உலகக் கிண்ணக் கோப்பையை கொண்டு வந்த விவகாரம்...

போன்றவை பற்றிய வாதங்கள், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் அரசியல் விடுதலை தொடர்பான சிந்தனைகளைத் திட்டமிட்டு திசை திருப்புகின்றன.

இச் செயற்பாடுகளில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான சில தமிழ் உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்துடையோர் உடந்தையாக உள்ளனர் என்பது பட்டவர்த்தனம்.

ஆகவே --

16 வருடங்கள் தொடர்ச்சியாக வெவ்வேறு வடிவங்களில் தமக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் சதிகள் பற்றிப் புரிந்துகொள்ளாமல், தமிழ்ச் சமூகம் ஏன் இவ்வளவு தரம் தாழ்ந்து செல்கிறது?

ஆகவே, தமிழ்த் தேசியக் கட்சிகளைக் கடந்து. பொது அமைப்புகள் - சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது....

குறிப்பாக---

ஜேஆர் காலத்தில் இருந்து, ஏன் பண்டாரநாய்கா. சேனநாயக்கா காலத்தில் இருந்து இன்றைய அநுர வரையும், தமிழர் விவகாரத்தில் சிங்கள தலைவர்கள் எல்லோரும் ஒரே நிலைப்பாட்டோடு தான் செயற்பட்டு வருகின்றனர் என்பதை, வரலாறு காட்டி நிற்கிறது...

இது தமிழர்களுக்கான இலகுவான அரசியல் விஞ்ஞான விளக்கம்...

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid032RqM5BgwgzJeZzVRtvoh1HxopvY7K6zX1KVng39WXUqh9kPdEa9vTAqwCyrTFQcfl&id=1457391262

சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிப்பது – நிலாந்தன்!

1 week 1 day ago

sl-in.jpg?resize=750%2C375&ssl=1

சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிப்பது – நிலாந்தன்!

ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிப்பதற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.இதுதொடர்பான சந்திப்புகளை அவர்கள் தமிழர் தாயகம் எங்கிலும் முன்னெடுத்து வருகிறார்கள். கட்சிகள்,செயற்பாட்டாளர்கள்,காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புக்கள், மதத்தலைவர்கள், என்று பல்வேறு தரப்புக்களையும் மாணவ பிரதிநிதிகள் சந்தித்து வருகிறார்கள்.

“மாணவர்களே போராட்டத்தின் கூர்முனைகள்” என்று ஹெர்பர்ட் மார்க்யூஸ் கூறினார்.கம்யூனிசத்தின் எழுச்சிக்குப் பின் இழப்பதற்கு எதுவுமில்லாத பாட்டாளி வர்க்கம்தான் போராட்டத்தின் கூர்முனை என்று கருதப்பட்டு வந்த ஒரு பின்னணியில்,கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த, ஹெர்பர்ட் மார்க்யூஸ் மாணவர்களே போராட்டத்தின் கூர் முனை என்று கூறினார்.

ஆனால், தமிழர் தாயகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் எந்த ஒரு தமிழ்த் தேசியக் கட்சிக்கும் மாணவ அமைப்பு கிடையாது. மாணவர்களை அரசியல் உணர்திறன் மிக்கவர்களாக மாற்றி போராட்டத்தை முன்னெடுக்க தேவையான அரசியல் இயக்கங்களும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை.

இப்படிப்பட்டதோர் வெற்றிடத்தில்தான்,கடந்த 16 ஆண்டுகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள் அவ்வப்போது உணர்ச்சிகரமாக எழுச்சி கொண்டு போராடியிருக்கிறார்கள்.கடந்த 16ஆண்டுகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள் வீரமாகப் போராயிருக்கிறார்கள்.அரசியல் கைதிகளுக்காக,நினைவு கூரும் உரிமைக்காக,காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காக….என்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராடியிருக்கிறார்கள். “எழுக தமிழ்கள்”,”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான ஆர்ப்பாட்டம்” போன்றவற்றின் வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள். மாணவர்கள் அவ்வாறு போராட்டத்தை ஒருங்கிணைக்கும்போது கட்சிகளும் உற்சாகமாக களத்தில் இறங்குகின்றன.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவ்வாறான பேரெழுச்சிகளைக் காண முடியவில்லை.ஒரு மக்கள் இயக்கம் இல்லாத அரசியற் சூழலில்,பல்கலைக்கழக மாணவர்களை அரசியல் உணர்திறன் மிக்கவர்களாகச் செதுக்கியெடுக்கும் சக்தி எந்தத் தமிழ்த் தேசியக் கட்சியிடமாவது உண்டா ?

இக்கட்டுரை எழுதப்படுகையில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் ஆகிய மாவை சேனாதிராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.மாவை என்று கூறி யாருடையதோ ஒரு முகத்தைச் செதுக்கி,சிலையாக்கி,திறந்து வைத்திருக்கிறார்கள்.அதைத் தனியே எழுத வேண்டும்.

அதைவிட முக்கியமாக இங்கே எழுத வேண்டியது என்னவென்றால், அந்தத் திறப்பு விழாவில் கட்சியின் பதில் தலைவரோ பதில் செயலரோ அழைக்கப்பட்டிருக்கவில்லை என்பதுதான்.கட்சியின் பதில் தலைவராகிய சிவஞானமும் பதில் செயலர் ஆகிய சுமந்திரனும் கட்சியின் விவகாரங்களை பெருமளவுக்கு கட்டுப்படுத்தும் ஒரு வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் பின்னணியில், அவர்கள் இருவரையும் புறக்கணித்துவிட்டு சிலை திறக்கப்பட்டிருக்கிறது.

மேலும் மாவை சேனாதிராஜாவின் நினைவுக் கூட்டத்தில்,நினைவுப் பேருரை ஆற்றியது யார் என்றால் மறவன்புலவு சச்சிதானந்தம் ஆகும். அண்மையில் அவர் சிவஞானத்தையும் சுமந்திரனையும் கடுமையான வார்த்தைகளால் குற்றம் சுமத்தி விமர்சித்திருந்தார்.அவர் சிவஞானத்துக்கு எதிராக முன் வைக்கும் விமர்சனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடியும் என்று சுமந்திரனுக்கு ஆதரவாக எழுதும் “காலை முரசு” பத்திரிகை எழுதியிருக்கிறது.

அவ்வாறு சுமந்திரனையும் சிவஞானத்தையும் விமர்சித்த ஒருவரை அழைத்து மாவையின் நினைவு நாளை அனுஷ்டித்ததன் மூலம் கட்சிக்குள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவும் உட்பூசல் நினைவு நாட்களையும் விட்டு வைக்கவில்லை என்று தெரிகிறது. மாவை இறந்தபோது அவருடைய இறுதி நிகழ்விலும் அந்த உட்கட்சிப் பூசல் அசிங்கமாக வெளிப்பட்டது. இப்பொழுது அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளிலும் வெளிப்படுகிறது.

அதாவது மாவை இறந்து ஓராண்டு கழிந்து விட்டது.ஆனால் கட்சிக்குள் உட்பகை தொடர்ந்து புகைந்து கொண்டேயிருக்கிறது.அந்த உட்பகையை தீர்த்துக் கொள்ள கட்சியால் முடியவில்லை. இரண்டு அணிகளுக்கும் இடையே கட்சி கிழிபடுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் சுமந்திரன் கட்சிக்குள் தன் பிடியைப் பலப்படுத்தி வருகிறார். அவருடைய அணி அணி சிறீதரனை பெருமளவுக்குச் சுத்திவளைத்து விட்டது. ஆனாலும் கட்சியின் தலைமைத்துவத்தை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர இன்றுவரை சுமந்திரனால முடியவில்லை.

உள்ளதில் பெரிய கட்சி இவ்வாறு உட்பகைக்குள் சிக்கி தன் சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கிறது.நினைவு நாட்களை அனுஷ்டிப்பதில் மட்டும் அல்ல,அரசுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளிலும்,இந்தியாவைக் கையாளும் விடையத்திலும் இந்த உட்கட்சி பூசல் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

அப்படிப்பட்டதோர் பின்னணியில்,சுமந்திரன் அணி கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டத்திற்கு எதிராக ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கையிலும் உட்கட்சிப் பூசல் பிரதிபலிப்புகளை ஏற்படுத்துமா தெரியவில்லை.

இவ்வாறு உள்ளதில் பெரிய கட்சி,தானே தனக்குள் மோதி, தன் சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கும் ஓர் அரசியல் சூழலில்,யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கட்சிகளை தமது கோரிக்கைகளை நோக்கித் திரட்டுவார்களா?

தமிழ்த் தேசிய அரசியல் எனப்படுவது சாராம்சத்தில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்ல.அது தமிழ்த் தேசிய வியூகத்தின் ஒரு பகுதி மட்டும்தான். இதயமான பகுதி எதுவென்றால், தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதுதான். தமிழ் மக்களை கட்சி பேதம் கடந்து ஒரு திரளாகத் திரட்டினாலே போதும்.அதுவே பலம். அவ்வாறு திரட்டப்பட்ட மக்கள் தென்னிலங்கைக் கட்சிகள் நோக்கிப் போக மாட்டார்கள்.தேசமாகத் திரட்டப்படாத மக்களே தென்னிலங்கைக் கட்சிகளால் கவரப்படுகிறார்கள்.

ஆனால் தமிழரசுக் கட்சி தன்னிடம் உள்ள பலமான கீழ்மட்டக் கட்டமைப்பை வைத்துக்கொண்டு,தானே பெரிய கட்சி, தானே தலைமை தாங்கும் கட்சி என்று கூறிக் கொண்டாலும்,தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதில் தோல்வி அடைந்து விட்டது. அக்கட்சி மட்டுமல்ல எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதிலும் தோல்வியடைந்து விட்டன; தங்களை கட்சிகளாகப் பலப்படுத்திக் கொள்வதிலும் தோல்வியடைந்து விட்டன. இவ்வாறு தங்களைப் பலமான கட்சிகளாகத் திரட்டிக் கொள்ள முடியாதவர்கள் எப்படித் தமிழ் மக்களைத் திரட்டுவார்கள்?

இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரெழுச்சியைப் போன்ற ஒரு பேரெழுச்சியைக் காட்ட தமிழ் மக்களால் கடந்த சில ஆண்டுகளாக முடியவில்லை என்பதுதான் துர்ப்பாக்கியமான ஒர் அரசியல் யதார்த்தமாகும். தையிட்டியில் நடக்கும் கவன ஈர்ப்பு போராட்டங்களைத்தவிர பேரெழுச்சிகள் என்று சொல்லத்தக்க எழுச்சிகளை தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகக் காண முடியவில்லை.இந்நிலையில்,சுதந்திர தினத்தைக் கரி நாளாக அனுஷ்ட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை எதிர்ப்பது மட்டுமல்ல, அதுபோன்ற அரச எதிர்ப்பு மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் எல்லாவற்றின் விடயத்திலும், தமிழ்த் தேசிய அரசியலானது கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக ரியாக்ரிவ் ஆகத்தான் அதாவது பதில் வினையாற்றும் அரசியலாகத்தான் காணப்படுகிறது.ப்ரோ ஆக்ட்டிவாக-செயல் முனைப்புடையதாக இல்லை.

அரசாங்கத்தின் நிலப்பறிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அல்லது சிங்கள பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக அல்லது ஐநா கூட்டத் தொடர்களை முன்னிட்டு தமிழ் மக்கள் அவ்வப்போது எதிர்ப்பு நடவடிக்கைகளை ஈடுபடுகிறார்கள்.ஆனால் இந்த நடவடிக்கைகள் யாவும் ஒரு மையத்தில் இருந்து திட்டமிடப்படுவதில்லை. இது முதலாவது பலவீனம்.அவை தொடர்ச்சியானவை அல்ல என்பது இரண்டாவது பலவீனம்.மூன்றாவது பலவீனம்,இவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போது அவை பதில் வினையாற்றும் அரசியல் நடவடிக்கைகள்தான்.அதாவது தமிழ்த் தேசிய அரசியலை செயல் முனைப்போடு முன்னெடுக்கின்ற புரோஆக்டிவ் ஆன நடவடிக்கைகள் அல்ல.

இப்பொழுது கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டமும் அத்தகையது தான்.சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிப்பதும் அத்தகையதுதான். இவை போன்ற ரியாக்ட்டிவ் நடவடிக்கைகளின்மூலம் தமிழ் மக்களை அரசியல் உணர்திறன் மிக்கவர்களாக மாற்றுவதில் எவ்வளவு தூரம் வெற்றிபெற முடிந்திருக்கிறது என்ற கேள்விக்கு விடை முக்கியம்.

தமிழ்த் தேசிய அரசியலானது தொடர்ந்தும் கட்சி அரசியலாக, ரியாக்ரிவ் ஆனதாக காணப்படுகிறது.உள்ளதில் பெரிய கட்சி தானே தன்னைத் தோற்கடித்துக் கொண்டிருக்கும் ஓர் அரசியற் சூழலில், அதை ப்ரோஆக்டிவ் ஆக முன்னெடுக்கும் அரசியல் இயக்கம் எதுவும் அரங்கில் இல்லாத வெற்றிடத்தில்,பல்கலைக்கழக மாணவர்களின் தலையில் அதிகம் பொறுப்பு சுமத்தப்படும் ஓர் அரசியற் சூழலில்,2009க்குப் பின்னரான 16 ஆவது சுதந்திர தினம் வருகிறது.

https://athavannews.com/2026/1462539

யார் முருகன் ?  யார் சூரன்? -நிலாந்தன்

1 week 1 day ago

யார் முருகன் ?  யார் சூரன்? -நிலாந்தன்

facebook_1769770164791_74229540812673153

தமிழ் ரப் பாடகர் வாகீசனைத் தூக்கியது அவருடைய முருகன் பாடல். அப்பாடலில் முருகன் ஒரு கடவுளாக மட்டும் சித்தரிக்கப்படவில்லை. அவர் தமிழ் மக்களைக் காக்கும் ஒரு தலைவராகவும் வர்ணிக்கப்படுகிறார். அதாவது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரை மறைமுகமாக அது சுட்டுகிறது என்று பொதுவான விளங்கிக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு,தனது முருகன் பாடலுக்குள் உட்பொதிந்துள்ள அரசியலுக்கு ஊடாகவும் கொண்டாடப்படுகின்ற ஒரு ரப் பாடகரைக் கொண்ட அதே சமூகத்தில்தான், அண்மையில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட உறுப்பினர் ஒருவர் அனுரவை முருகனோடு ஒப்பிட்டு முகநூலில் எழுதியிருந்தார்.

அனுரவை தோழராக,சகோதரராக, ஏழைகளுக்கு இனியவராக, செல்ஃபி நாயகனாக…இன்னபிறவாக சித்திரித்த அரசியல் விசுவாசம், அதன் அடுத்த கட்டமாக அவரை கடவுளுக்கு நிகராகச் சித்தரிக்கும் ஒரு வளர்ச்சிக்கு வந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் தமிழ் உறுப்பினர்களில் ஒருவர் அவ்வாறு வர்ணித்துள்ளார். ஒரு சிங்களத் தலைவரை அவருடைய தமிழ் அடியார் ஒருவர் இவ்வாறு தெய்வ நிலைக்கு உயர்த்துவது என்பது இதற்கு முன் காணப்பட்டிராத ஒன்று.

சிங்களத் தலைவர்களைப் போற்றும் தமிழ்த் தொண்டர்கள் இதற்கு முன்னரும் இருந்திருக்கிறார்கள். ஆனால் அப்பொழுது டிஜிட்டல் புரோமோஷன் என்பது இருக்கவில்லை. தவிர யுத்த காலங்களில் இனமுரண்பாடு கூர்மையாக இருந்தபோது சிங்களத் தலைவர்களைப் பகிரங்கமாகப் போற்ற தமிழர்கள் துணியவில்லை. இப்பொழுது ஆயுத மோதல்கள் இல்லாத ஓர் அரசியல் சூழலில், அனுர அரைக்காற் சட்டையோடு நடக்கிறார். பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி வந்து செல்பி எடுக்கிறார். தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் கைகளை நீட்டி அவரை அழைக்கிறார்கள். மூதாட்டிகளும் சிறுவர்களும் நெருங்கிச் சென்று அணைக்கிறார்கள். இந்தக் காட்சிகளை அரசாங்கத்தின் டிஜிட்டல் புரோமோஷன் அணி கவர்ச்சியான காணொளிகளாக சந்தையில் விற்கிறது.

623073359_10163664130019054_746724976684

அனுர எங்கே நாயகனாகிறார்? அல்லது நாயகன் ஆக்கப்படுகிறார்?

அவருடைய எளிமை,உடல் மொழி போன்றன அவரை விளம்பரப்படுத்த வசதியாக உள்ளன. இதற்கு முன்னிருந்த சிங்களத் தலைவர்கள் பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி வர முடியாதவர்கள். தமிழ் மக்கள் அவர்களை நெருங்கி அணைக்க முயற்சிக்கவில்லை மட்டுமல்ல, அவ்வாறு அணைக்கவரும் தமிழர் ஒரு மனிதக் குண்டாக இருக்கலாம் என்று அச்சப்படும் அரசியல் சூழல் இரு தசாப்தங்களாக இருந்தது.

அனுர அந்தப் பயமின்றி தமிழ் மக்களை நெருங்கக்கூடிய அரசியல் சூழல் இப்பொழுது உண்டு. தவிர அவருடைய கட்சிக்காரர்கள் தமிழ் மக்களை அவரை நோக்கிக் கொண்டுசெல்கிறார்கள். அரசாங்கத்தின் டிஜிட்டல் புரோமோஷன் அணி அதைக் காணொளிகள் ஆக்கி, வைரல் ஆக்குகிறது. இது ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய தெளிவான ஒரு பிரச்சார நிகழ்ச்சி நிரல். பலாலியில் அவர் அரைக்காற் சட்டையோடு நடந்தபோதும்,வடமராட்சியில் ஒரு வயோதிபப் பெண் அவரை அணைத்தபோதும், பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை அவரிடம் கொடுத்து செல்ஃபி எடுக்கும்போதும், அரசாங்கத்தின் டிஜிட்டல் புரமோஷன் அணி அதைக் கவர்ச்சியான பிரச்சாரப் பண்டமாக மாற்றுகிறது. இது திட்டமிட்டுச் செய்யப்படுகிறது. அதாவது தமிழ் மக்கள் மத்தியில் அனுரவை ஒரு நாயகனாகக் கட்டியெழுப்புவது என்பது திட்டமிட்டுச் செய்யப்படுகின்ற ஒரு பிரச்சார உத்தி. அதுதான் உண்மை. ஆனால் அவ்வாறு அனுரவை ஒரு நாயகனாகக் கட்டியெழுப்பும் அளவுக்கு தமிழ்த்தேசியப் பரப்பில் ஒரு வெற்றிடம் நிலவுகிறது என்பதும் அதே அளவு உண்மை.

அனுரவைப் போல தமிழ்ப் படப் பாடல்களின் பின்னணியில் நாயக நடை போட தமிழ் மக்கள் மத்தியில் தலைவர்கள் அல்லது செயல்பாட்டாளர்கள் இல்லையா? அல்லது இருப்பவர்களைக் கொண்டாட இந்தச் சமூகம் தயாரில்லையா? இப்பொழுது அரங்கில் காணப்படும் தமிழ் ஆளுமைகளில் யாரையுமே அவ்வாறு கொண்டாட முடியாத ஒரு நிலைமை ஏன் தோன்றியது?

தமிழ்த்தேசிய அரசியலானது ஒருவர் மற்றவரை வில்லன் ஆக்கிக் கொண்டிருக்க, துரோகி ஆக்கிக்கொண்டிருக்க,யாருமே கதாநாயகராக கதாநாயகியாக மினுங்க முடியவில்லை.

ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொள்ளாத, சந்தேகிக்கின்ற, குற்றச்சாட்டுகின்ற, ஓர் அரசியல் சூழலில்,யாரும் யாரையும் அங்கீகரிக்கத் தயாரில்லை. அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி, சமூகத் தலைவர்களாக இருந்தாலும் சரி, சமயத் தலைவர்களாக இருந்தாலும் சரி,யாரும் புகழோடு இருக்க முடியாது. சமூகத்தில் யாரெல்லாம் துருத்திக்கொண்டு,மினுங்கிக்கொண்டு மேலெழுகிறார்களோ, அவர்கள் எல்லோரின் மீதும் விமர்சனங்கள்; அவதூறுகள்.

கடந்த 16 ஆண்டுகளில் தமிழ் மக்கள் மத்தியில் எந்த ஓர் உள்ளூர் தலைவரும் சரி, மாவட்ட மட்டத் தலைவரும் சரி,தேசியமட்டத் தலைவரும் சரி தொடர்ச்சியாக ஜனவசியத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போனது ஏன்?

தமிழ்மக்கள் யார் சொன்னால் கேட்பார்கள்? யாரை வாழும் முன்னுதாரணமாகப் பார்க்கிறார்கள்? யாருமே வாழும் முன்னுதாரணமாக இல்லாத ஒரு சமூகமா இது? தியாகிகளைப் போற்றும் ஒரு சமூகத்தில் உயிருள்ள வாழும் முன்மாதிரிகள் ஒருவரும் இல்லையா?

ஒருவர் மற்றவரை சந்தேகிக்கின்ற,அல்லது அங்கீகரிக்காத ஒரு நிலைமை என்பது ஒரு சமூகத்தின் கூட்டுணர்வை,கூட்டுச் செயற்பாட்டைப் பாதிக்கும். இது கட்சிகளில் தொடங்கி,சமூக நிறுவனங்கள், ஆலய அறக் கட்டளைகள், திருச்சபைகள், பழையமாணவ  சங்கங்கள்..என்றிவ்வாறாக  முழுச்சமூகத்துக்குமான ஒரு பொது வியாதியாக மாறிவருகிறது.

621875708_10163664130134054_478402080618

சமூக வலைத்தளங்களுக்கு முற்பட்ட காலத்தில் மொட்டைக் கடிதம் இருந்தது. மல முட்டி இருந்தது. இப்பொழுது இரண்டும் இணைந்து பேக் ஐடிகளாக, முகம் காட்டா முகநூல் கணக்குகளாக மாறிவிட்டன. மல முட்டி என்பது, தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும்  இரு துருவங்களாக இருந்த காலகட்டத்தில் இருந்த ஒரு தோற்றப்பாடு. தமது கட்சி எதிரியைத் தாக்குவதற்கு, அசிங்கப்படுத்துவதற்கு மண்பானையில் மலத்தைச் சேகரித்துக் கொண்டுவந்து அரசியல் எதிரியின் வீட்டின் முற்றத்தில் அல்லது வாசலில் பானையை உடைத்து விடுவார்கள்.

ஆயுதப் போராட்டத்திற்கு முன்னர் காணப்பட்ட இந்த மல முட்டி அரசியல் மொட்டைக் கடிதத்தோடு இணைந்து முழுச்சமூகமும் நாறும் ஒரு நிலைமை வளர்ந்து வருகிறது. ஒரே கட்சிக்குள்ளேயே இரண்டு அணிகள் ஒன்று மற்றதன் மீது மலத்தை வாரி வீசும்போது இரண்டுமே நாறுகின்றன. அண்மையில் மட்டக்களப்பில் சுமந்திரன் அவ்வாறான முகங்காட்டா முகநூல் பக்கங்களைக் குறித்துப் பேசியிருக்கிறார்.

முகங்காட்டா முகநூல் பக்கங்கள்,தொண்டர்களை ஏவி வழக்குத் தொடுக்கும் தலைவர்கள், தனது கட்சிக்காரனை அல்லது தன்னை விமர்சிப்பவரை மடக்குவதற்கு வழக்குப் போடுவேன் என்று மிரட்டும் அரசியல்வாதிகள், தன் கட்சிக்காரனுக்கு எதிராக தென்னிலங்கை மையக் கட்சி ஒன்றின் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரை நாடாளுமன்றத்தில் பேச வைக்கும் தமிழ் அரசியல் வாதிகள், சமூகத்தில் யாராவது மினுங்கிக் கொண்டு மேலெழுந்தால் அவர்களைக் காலால் மிதித்துச் சப்பையாக்கிவிடக் காத்திருக்கும் சமூக வலைத்தள நீதிபதிகள்…என்றிவ்வாறாக தமிழ்ச்சமூகம் அதன் மாண்பை இழந்து கொண்டு போகிறது.

ஒருகாலம் திட்டமிட்டு வெறுப்பர்களை உற்பத்தி செய்த, வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்ட,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நடவடிக்கைகளில் இப்பொழுது மாற்றம் தெரிகிறது. ஆனால் உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சியோ நாறிக் கொண்டிருக்கிறது.

சிங்கள நாடாளுமன்ற உறுப்பினராகிய தயாசிறீயை, சிறீதரனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசவைத்தது யார் என்பது எல்லாருக்கும் தெரியும். தனது உட்கட்சி முரண்பாட்டைக் கையாள்வதற்கு இவ்வாறு தென்னிலங்கை மையக் கட்சி ஒன்றின் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரைக் கருவியாகக் கையாள்வது என்பது தமிழ்த்தேசிய அரசியல் எங்கே வந்துநிற்கிறது என்பதைக் காட்டுகிறது. அதேசமயம் சிறீதரன் அரசியலமைப்பு பேரவையில் படைப் பிரதானிகளுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார் என்ற விடயம் அவரைப் பொது வெளியில் அம்பலப்படுத்த, அவமானப்படுத்தத் தேவையான வாய்ப்புகளை வழங்குகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழரசுக்  கட்சிக்குள் தீர்க்கப்படாத உட்கட்சி முரண்பாடு இடக்கிடை நாடாளுமன்றத்திலும் அடிக்கடி ஊடக ஒலிவாங்கிகளுக்கு முன்னரும் அசிங்கமான விதங்களில் வெளிப்படுகிறது. கட்சியின் கூட்டுணர்வை,சகோதரத்துவத்தைக் கவனத்தில் எடுத்து உட்கட்சிப் பிரச்சனையை உட்க்கட்சிக்குள்ளேயே தீர்க்க முடியாத அளவுக்கு கட்சி பலவீனமாக உள்ளது. தமிழரசுக் கட்சிக்குள் இப்பொழுது பலமான தலைவர்கள் இல்லை என்பதுதான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலான யதார்த்தம். சுமந்திரனாலும் கட்சியைத் தனது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.சிறீதரனாலும் முடியவில்லை.

யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் தனக்கென்று நிலையான வாக்கு வங்கியைக் கொண்டிருப்பவர் சிறீதரன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்குடா நாட்டுக்குள் தமிழரசுக் கட்சிக்கு ஆசனம் கிடைக்கவில்லை. தேர்தல் தொகுதி என்ற அடிப்படையில் கிளிநொச்சியில் சிறீதரன் பெற்ற வெற்றியும் இல்லையென்றால் தமிழரசுக் கட்சிக்கு யாழ்ப்பாணத்தில் ஆசனமே இல்லை.

எல்லாவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் அப்பால்,கிளிநொச்சியில் இப்பொழுதும் சிறீதரனுக்கு நிலையான வாக்கு வங்கி உண்டு. யாழ்குடா நாட்டில் மட்டுமல்ல, தமிழரசு கட்சிக்குள் நிலையான வாக்கு வங்கியைக் கொண்ட ஒருவர் அவர். தமிழரசுக் கட்சிக்குள் அவரைத் தோற்கடித்தாலும், கிளிநொச்சியில் அவரைத் தோற்கடிக்கலாமா என்பதனை இனிமேல்தான் பரிசோதிக்க வேண்டும்.

ஆனால் சிறீதரனை அவமானப்படுத்தி அவருடைய மாவட்டத்துக்குள்ளேயே முடக்க இன்றுவரை சுமந்திரனால் முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் கட்சிக்குள் சுமந்திரன் தன்னுடைய நிலையை ஒப்பீட்டளவில் பலப்படுத்தி வந்தாலும் வாக்காளர்கள் மத்தியில் அவர் பலமாக உள்ளாரா என்பதை இனிமேல்தான் பரிசோதிக்க வேண்டும்.

இந்த முரண்பாடுகளின் மத்தியிலும் தமிழரசுக் கட்சி பலமாக உள்ளது என்ற ஒரு தோற்றம் வெளியே தெரிகிறது. ஏன் தெரியுமா? அது வெல்லக்கூடிய கட்சி என்று அந்தக் கட்சி உறுப்பினர்கள் நம்பி அந்தக் கட்சிக்குள் ஒட்டிக் கொண்டிருப்பதுதான். நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட,வடக்குக் கிழக்காக கீழ்மட்ட வலையமைப்பை கொண்ட ஒரு கட்சி அது. வெல்லக்கூடிய குதிரை என்பதால் அநேகர் கட்சிக்குள் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 75 ஆண்டுகளிலும் அந்தக் கட்சியில் வாக்காளர்களைப் பிரதிபலிக்கும் தலைவர்களும் கொழும்பை அனுசரித்துப் போகும் தலைவர்களும் இருந்ததுண்டு. இந்த இரண்டு பண்புகளினதும் கலப்புத்தான் தமிழரசுக் கட்சி. இந்த இரண்டு போக்குகளும் ஒன்று மற்றதை அனுசரித்துப் போனமைதான் கட்சியின் பலம். ஆனால் இப்பொழுது இந்த இரண்டு போக்குகளும் முரண்படும் ஒரு நிலை தோன்றியிருக்கிறது. இது கட்சியை எங்கே கொண்டு போய்விடும்?

தமிழரசுக் கட்சி சிதையுமாக இருந்தால் அந்த வெற்றிடத்தை நிரப்ப தமிழ்த் தேசியப் பேரவையால் முடியுமா? அது இப்பொழுதுவரை ஒரு பிரதான நீரோட்டக் கட்சிக்குரிய பண்புகளோடு காணப்படவில்லை. மாறாக மாற்று நீரோட்டக் கட்சியாகத்தான் காணப்படுகிறது.

இவ்வாறு தமிழ் தேசிய பரப்பில் கட்சிகளுக்குள்ளும் கட்சிகளுக்கு இடையிலும் ஒருவர் மற்றவரை வில்லன் ஆக்கும் மோதல்களால்,தமிழ்த் தேசியப் பரப்பில் யாருமே கதாநாயகராக எழ முடியவில்லை. அந்த வெற்றிடத்தில் அரச பலத்தோடு, அரச வளங்களைப் பிரயோகித்து அனுர நாயகனாக இறக்கப்படுகிறார். கடந்த வாரம் முருகனாகப் பதவி உயர்த்தப்பட்டிருக்கிறார். அதாவது தமிழர்கள் ஒருவர் மற்றவரை சூரன்கள் ஆக்கிக் கொண்டிருக்க முருகன்கள் வெளியில் இருந்து குதிக்கிறார்களா? விக்னேஸ்வரனுக்கும் வாகீசனுக்கும் கையில் வேலைக் கொடுத்த ஒரு சமூகம், விரைவில் அனுரவிக்கும் ஒரு வேலைக் கொடுத்து விடுமோ ?

https://www.nillanthan.com/8106/

சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிப்பது – நிலாந்தன்!

1 week 1 day ago

சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிப்பது – நிலாந்தன்!

சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிப்பது – நிலாந்தன்!

ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிப்பதற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். இதுதொடர்பான சந்திப்புகளை அவர்கள் தமிழர் தாயகம் எங்கிலும் முன்னெடுத்து வருகிறார்கள். கட்சிகள்,செயற்பாட்டாளர்கள்,காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புக்கள், மதத்தலைவர்கள், என்று பல்வேறு தரப்புக்களையும் மாணவ பிரதிநிதிகள் சந்தித்து வருகிறார்கள்.

“மாணவர்களே போராட்டத்தின் கூர்முனைகள்” என்று ஹெர்பர்ட் மார்க்யூஸ் கூறினார். கம்யூனிசத்தின் எழுச்சிக்குப் பின் இழப்பதற்கு எதுவுமில்லாத பாட்டாளி வர்க்கம்தான் போராட்டத்தின் கூர்முனை என்று கருதப்பட்டு வந்த ஒரு பின்னணியில், கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த, ஹெர்பர்ட் மார்க்யூஸ் மாணவர்களே போராட்டத்தின் கூர் முனை என்று கூறினார்.

ஆனால், தமிழர் தாயகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் எந்த ஒரு தமிழ்த் தேசியக் கட்சிக்கும் மாணவ அமைப்பு கிடையாது. மாணவர்களை அரசியல் உணர்திறன் மிக்கவர்களாக மாற்றி போராட்டத்தை முன்னெடுக்க தேவையான அரசியல் இயக்கங்களும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை.

இப்படிப்பட்டதோர் வெற்றிடத்தில்தான், கடந்த 16 ஆண்டுகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள் அவ்வப்போது உணர்ச்சிகரமாக எழுச்சி கொண்டு போராடியிருக்கிறார்கள். கடந்த 16ஆண்டுகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள் வீரமாகப் போராயிருக்கிறார்கள். அரசியல் கைதிகளுக்காக,நினைவு கூரும் உரிமைக்காக, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காக…. என்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராடியிருக்கிறார்கள். “எழுக தமிழ்கள்”,”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான ஆர்ப்பாட்டம்” போன்றவற்றின் வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள். மாணவர்கள் அவ்வாறு போராட்டத்தை ஒருங்கிணைக்கும்போது கட்சிகளும் உற்சாகமாக களத்தில் இறங்குகின்றன.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவ்வாறான பேரெழுச்சிகளைக் காண முடியவில்லை. ஒரு மக்கள் இயக்கம் இல்லாத அரசியற் சூழலில்,பல்கலைக்கழக மாணவர்களை அரசியல் உணர்திறன் மிக்கவர்களாகச் செதுக்கியெடுக்கும் சக்தி எந்தத் தமிழ்த் தேசியக் கட்சியிடமாவது உண்டா ?

இக்கட்டுரை எழுதப்படுகையில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் ஆகிய மாவை சேனாதிராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. மாவை என்று கூறி யாருடையதோ ஒரு முகத்தைச் செதுக்கி, சிலையாக்கி, திறந்து வைத்திருக்கிறார்கள்.அதைத் தனியே எழுத வேண்டும்.

அதைவிட முக்கியமாக இங்கே எழுத வேண்டியது என்னவென்றால், அந்தத் திறப்பு விழாவில் கட்சியின் பதில் தலைவரோ பதில் செயலரோ அழைக்கப்பட்டிருக்கவில்லை என்பதுதான். கட்சியின் பதில் தலைவராகிய சிவஞானமும் பதில் செயலர் ஆகிய சுமந்திரனும் கட்சியின் விவகாரங்களை பெருமளவுக்கு கட்டுப்படுத்தும் ஒரு வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் பின்னணியில், அவர்கள் இருவரையும் புறக்கணித்துவிட்டு சிலை திறக்கப்பட்டிருக்கிறது.

மேலும் மாவை சேனாதிராஜாவின் நினைவுக் கூட்டத்தில், நினைவுப் பேருரை ஆற்றியது யார் என்றால் மறவன்புலவு சச்சிதானந்தம் ஆகும். அண்மையில் அவர் சிவஞானத்தையும் சுமந்திரனையும் கடுமையான வார்த்தைகளால் குற்றம் சுமத்தி விமர்சித்திருந்தார். அவர் சிவஞானத்துக்கு எதிராக முன் வைக்கும் விமர்சனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடியும் என்று சுமந்திரனுக்கு ஆதரவாக எழுதும் “காலை முரசு” பத்திரிகை எழுதியிருக்கிறது.

அவ்வாறு சுமந்திரனையும் சிவஞானத்தையும் விமர்சித்த ஒருவரை அழைத்து மாவையின் நினைவு நாளை அனுஷ்டித்ததன் மூலம் கட்சிக்குள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவும் உட்பூசல் நினைவு நாட்களையும் விட்டு வைக்கவில்லை என்று தெரிகிறது. மாவை இறந்தபோது அவருடைய இறுதி நிகழ்விலும் அந்த உட்கட்சிப் பூசல் அசிங்கமாக வெளிப்பட்டது. இப்பொழுது அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளிலும் வெளிப்படுகிறது.

அதாவது மாவை இறந்து ஓராண்டு கழிந்து விட்டது. ஆனால் கட்சிக்குள் உட்பகை தொடர்ந்து புகைந்து கொண்டேயிருக்கிறது. அந்த உட்பகையை தீர்த்துக் கொள்ள கட்சியால் முடியவில்லை. இரண்டு அணிகளுக்கும் இடையே கட்சி கிழிபடுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் சுமந்திரன் கட்சிக்குள் தன் பிடியைப் பலப்படுத்தி வருகிறார். அவருடைய அணி அணி சிறீதரனை பெருமளவுக்குச் சுத்திவளைத்து விட்டது. ஆனாலும் கட்சியின் தலைமைத்துவத்தை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர இன்றுவரை சுமந்திரனால முடியவில்லை.

உள்ளதில் பெரிய கட்சி இவ்வாறு உட்பகைக்குள் சிக்கி தன் சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கிறது. நினைவு நாட்களை அனுஷ்டிப்பதில் மட்டும் அல்ல, அரசுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளிலும்,இந்தியாவைக் கையாளும் விடையத்திலும் இந்த உட்கட்சி பூசல் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

அப்படிப்பட்டதோர் பின்னணியில்,சுமந்திரன் அணி கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டத்திற்கு எதிராக ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கையிலும் உட்கட்சிப் பூசல் பிரதிபலிப்புகளை ஏற்படுத்துமா தெரியவில்லை.

இவ்வாறு உள்ளதில் பெரிய கட்சி,தானே தனக்குள் மோதி, தன் சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கும் ஓர் அரசியல் சூழலில்,யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கட்சிகளை தமது கோரிக்கைகளை நோக்கித் திரட்டுவார்களா?

தமிழ்த் தேசிய அரசியல் எனப்படுவது சாராம்சத்தில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்ல. அது தமிழ்த் தேசிய வியூகத்தின் ஒரு பகுதி மட்டும்தான். இதயமான பகுதி எதுவென்றால், தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதுதான். தமிழ் மக்களை கட்சி பேதம் கடந்து ஒரு திரளாகத் திரட்டினாலே போதும்.அதுவே பலம். அவ்வாறு திரட்டப்பட்ட மக்கள் தென்னிலங்கைக் கட்சிகள் நோக்கிப் போக மாட்டார்கள். தேசமாகத் திரட்டப்படாத மக்களே தென்னிலங்கைக் கட்சிகளால் கவரப்படுகிறார்கள்.

ஆனால் தமிழரசுக் கட்சி தன்னிடம் உள்ள பலமான கீழ்மட்டக் கட்டமைப்பை வைத்துக்கொண்டு,தானே பெரிய கட்சி, தானே தலைமை தாங்கும் கட்சி என்று கூறிக் கொண்டாலும்,தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதில் தோல்வி அடைந்து விட்டது. அக்கட்சி மட்டுமல்ல எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதிலும் தோல்வியடைந்து விட்டன; தங்களை கட்சிகளாகப் பலப்படுத்திக் கொள்வதிலும் தோல்வியடைந்து விட்டன. இவ்வாறு தங்களைப் பலமான கட்சிகளாகத் திரட்டிக் கொள்ள முடியாதவர்கள் எப்படித் தமிழ் மக்களைத் திரட்டுவார்கள்?

இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரெழுச்சியைப் போன்ற ஒரு பேரெழுச்சியைக் காட்ட தமிழ் மக்களால் கடந்த சில ஆண்டுகளாக முடியவில்லை என்பதுதான் துர்ப்பாக்கியமான ஒர் அரசியல் யதார்த்தமாகும். தையிட்டியில் நடக்கும் கவன ஈர்ப்பு போராட்டங்களைத்தவிர பேரெழுச்சிகள் என்று சொல்லத்தக்க எழுச்சிகளை தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகக் காண முடியவில்லை. இந்நிலையில்,சுதந்திர தினத்தைக் கரி நாளாக அனுஷ்ட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை எதிர்ப்பது மட்டுமல்ல, அதுபோன்ற அரச எதிர்ப்பு மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் எல்லாவற்றின் விடயத்திலும், தமிழ்த் தேசிய அரசியலானது கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக ரியாக்ரிவ் ஆகத்தான் அதாவது பதில் வினையாற்றும் அரசியலாகத்தான் காணப்படுகிறது. ப்ரோ ஆக்ட்டிவாக-செயல் முனைப்புடையதாக இல்லை.

அரசாங்கத்தின் நிலப்பறிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அல்லது சிங்கள பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக அல்லது ஐநா கூட்டத் தொடர்களை முன்னிட்டு தமிழ் மக்கள் அவ்வப்போது எதிர்ப்பு நடவடிக்கைகளை ஈடுபடுகிறார்கள். ஆனால் இந்த நடவடிக்கைகள் யாவும் ஒரு மையத்தில் இருந்து திட்டமிடப்படுவதில்லை. இது முதலாவது பலவீனம்.அவை தொடர்ச்சியானவை அல்ல என்பது இரண்டாவது பலவீனம்.மூன்றாவது பலவீனம், இவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போது அவை பதில் வினையாற்றும் அரசியல் நடவடிக்கைகள்தான்.அதாவது தமிழ்த் தேசிய அரசியலை செயல் முனைப்போடு முன்னெடுக்கின்ற புரோஆக்டிவ் ஆன நடவடிக்கைகள் அல்ல.

இப்பொழுது கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டமும் அத்தகையது தான்.சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிப்பதும் அத்தகையதுதான். இவை போன்ற ரியாக்ட்டிவ் நடவடிக்கைகளின்மூலம் தமிழ் மக்களை அரசியல் உணர்திறன் மிக்கவர்களாக மாற்றுவதில் எவ்வளவு தூரம் வெற்றிபெற முடிந்திருக்கிறது என்ற கேள்விக்கு விடை முக்கியம்.

தமிழ்த் தேசிய அரசியலானது தொடர்ந்தும் கட்சி அரசியலாக, ரியாக்ரிவ் ஆனதாக காணப்படுகிறது.உள்ளதில் பெரிய கட்சி தானே தன்னைத் தோற்கடித்துக் கொண்டிருக்கும் ஓர் அரசியற் சூழலில், அதை ப்ரோஆக்டிவ் ஆக முன்னெடுக்கும் அரசியல் இயக்கம் எதுவும் அரங்கில் இல்லாத வெற்றிடத்தில்,பல்கலைக்கழக மாணவர்களின் தலையில் அதிகம் பொறுப்பு சுமத்தப்படும் ஓர் அரசியற் சூழலில்,2009க்குப் பின்னரான 16 ஆவது சுதந்திர தினம் வருகிறது.

https://athavannews.com/2026/1462539

தமிழக தேர்தல் களம்: சில கருத்துகள்

1 week 2 days ago

தமிழக தேர்தல் களம்: சில கருத்துகள்

January 30, 2026

 — கருணாகரன் —

சென்னைப் புத்தகக் காட்சிக்குச்சென்று திரும்பியவுடன் இலங்கையில் சந்தித்த ஊடகத்துறை நண்பர்கள் கேட்ட முதற்கேள்வி, “தமிழ் நாட்டின் அரசியல் நிலவரம் எப்படி உள்ளது? வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு அல்லது  எந்தத் தரப்புக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?” என்பதே. தமிழ்நாட்டுக்குச்சென்று வந்த ஒருவருடன் பேசுவது, அங்குள்ள களநிலவரத்தை அறிவதற்குக் கூடுதலாக உதவக் கூடும் என்பது அவர்களுடைய எதிர்பார்ப்பு.

நான் சென்றது புத்தகக்காட்சிக்காக. அங்கே என்னுடைய நான்கு நூல்களின் வெளியீடு. சக எழுத்தாளர்களின் நூல் வெளியீடுகளிலும் உரையாடல் அரங்குகளிலும் கலந்து கொண்டேன். இவை முடிய இலக்கிய, பதிப்புத் துறையைச் சேர்ந்த சில நண்பர்களைச் சந்தித்தேன். அடுத்துச் செய்தது, வீட்டுக்கு(இலங்கைக்கு) எடுத்து வருவதற்கு சில பொருட்களை வாங்குவதற்காக நண்பர்களோடு கடைக்குச்சென்றது. இந்தச் சிறிய நிகழ்ச்சி நிரலில் எந்த அரசியல் சந்திப்புகளும் இல்லை. முந்திய சென்னைப் பயணங்களில் தவறாமல், சில அரசியல் தலைவர்களையும் அரசியற் செயற்பாட்டாளர்களையும் ஊடகர்களையும் சந்தித்துப் பேசுதுண்டு. இந்தத் தடவை அதற்கான அவகாசம் இருக்கவில்லை. மட்டுமல்ல, அதற்கான உந்துதலும் இல்லை. காரணங்கள் –

1.   தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளில் அரசியற்தலைவர்கள் தீவிரமாக இருந்தனர். அதற்கிடையில் எமக்கு நேரம் ஒதுக்கிக்கொள்ளக் கேட்பது அவ்வளவு பொருத்தமானதல்ல.

2.   ஈழத்திலே நம்முடைய அரசியலையே ஈடேற்ற முடியாமல், திணறிக்கொண்டிருக்கிறோம். ஈழப்போராட்டம் சிதைந்து தெருவிலே நாறிக்கிடக்கிறது. அறுபது ஆண்டுகாலப் போராட்டத்தில் எதையுமே பெறாதிருப்பது மட்டுமல்ல, அதிலிருந்து எந்தப்பாடத்தையும் படிக்க விருப்பமின்றிய மக்கள் கூட்டமாக இருக்கிறோம். அதாவது நம்முடைய அரசியலையே கொண்டு நடத்த முடியவில்லை. இந்த நிலையில் தமிழகத்தின் அரசியல் – தேர்தல் பற்றி நாம் என்ன அவர்களுக்குச்சொல்ல முடியும்?

3.   தேர்தல் வெற்றி – தோல்விகள், தேர்தற்கூட்டுகள் பற்றிய செய்திகளும் பேச்சுகளுமே சென்னைத் தெருக்களையும் ஊடகங்களையும் நிறைத்திருந்தன. ஓட்டோ ஓட்டுநர்கள், ஊபர் சாரதிகள், கடைக்காரர்கள், கடற்கரையில் காற்று வாங்கிக் களிப்பவர்கள் தொடக்கம் சந்திப்போரில் பெரும்பாலானோரும் தேர்தல் நிலவரத்தைப் பற்றிய தங்கள் அபிப்பிராயங்களையும் விருப்பங்களையும் வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தனர். அதை அறிவதில் இந்தப் பயணத்தில் ஆர்வம் காட்டினேன்.

இதுதான் என்னுடைய பயணத்தில் நடந்தவைகளும் நான் கவனித்தவையும் என்றேன். அவர்கள் விடுவதாயில்லை. ஊடகத்துறையினரின் குணமே இதுதான். தாம் எதிர்பார்க்கின்ற விடயத்தில் ஒரு சிறு துரும்பாவது தமக்குக் கிடைத்து விடாதா? என்ற தீவிரத்தில் விடாப்பிடியாக முயன்று கொண்டேயிருப்பார்கள். 

“அரசியற் தலைவர்களையும் கட்சிகளின் பிரமுகர்களையும்விட மக்கள்தான் முக்கியமானவர்கள். அதுவும் தேர்தல் காலத்தில் அவர்களுடைய அபிப்பிராயங்களுக்கே பெறுமதி அதிகம். அவர்கள்தான் வாக்களிப்பவர்கள். மாற்றங்களை நிகழ்த்தக் கூடிய வல்லமை உடையவர்கள். ஆகவே அங்கே மக்கள் என்ன சொல்கிறார்கள்? அதைச் சொல்லுங்கள்” என்று பிடித்துக் கொண்டார்கள். 

என்னுடைய அவதானிப்பைச் சொன்னேன்.

சென்னையில் எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் தி.மு.கவின் ஆட்சி தொடர வேண்டும் என்றே விரும்புகிறார்கள். ”தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் சாதிய ஒடுக்குமுறையை மட்டுப்படுத்தியதிலும் மொழி, பண்பாட்டு அடையாளங்களைக் காப்பாற்றி, வளர்க்கும் முயற்சிகளிலும் தி.மு.க அளித்த வரலாற்றுப் பங்களிப்புகள் முக்கியமானைவை. அண்ணாத்துரை, கருணாநிதி எனத் தொடர்ந்த உறுதியான இந்த வழிமுறையை இப்பொழுது ஸ்டாலின் தொடருகிறார். இதனை மேலும் வளர்த்து முன்னெடுக்க வேண்டிய தேவையும் பொறுப்பும் உள்ளது. என்பதால் நாம் மிக நிதானமாக இந்தத் தேர்தலையும் கையாள வேண்டும். தி.மு.க இல்லை என்றால், தமிழ் நாட்டில் பா.ஜ.கவின் கைதான் மேலோங்கும். அது மாநிலத்தின் சுயாதீனத்தையே அடியோடு அளித்து விடும். இப்போதே மத்திய அரசின் ஏவலாளைப் போல ஆளுநர் செயற்படுகிறார். தி.மு. க இல்லை என்றால் மாநிலத்தின் அதிகாரம் மத்திய அரசிடமே குவியும். பா.ஜ.க வின் வேலையே அதுதான். அதற்கு நாம் இடமளிக்க முடியாது….”என்றவாறு சொல்கிறார்கள். 

இன்னொரு நிலையில் இவர்களிற் பலருக்கும் தி. மு.கவில் தொடருக்கின்ற குடும்ப ஆட்சி உவப்பானதாக இல்லை. கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலினை ஏற்றுக்கொள்கின்றவர்கள், உதயநிதியின் இடையீட்டையும் ஆதிக்கத்தையும் விரும்பவே இல்லை. பலரும் இதை வெளிப்படையாகவே சொல்கிறார்கள். ”தி.மு.க என்ற பகுத்தறிவுக் கட்சியில் இப்படிக் குடும்ப ஆட்சிக் கட்டமைப்புத் தொடருவது முரண். பிரபுத்துவ அம்சங்கள் தி.மு.க வுக்குள் வளர்ச்சியடைந்து வருகிறது. இதற்கு வழிகோலியவர் கருணாநிதி. இது தி.மு.கவைப் பலவீனப்படுத்துகிறது. அதாவது எதிர்காலத்தில் கட்சியையும் இது பலவீனப்படுத்தும். மாநிலத்தில் தி.மு.க வின் செல்வாக்கையும் ஆட்சித் தகுதியையும் கேள்விக்குள்ளாக்கும்”என்கிறார்கள். இதனை அவர்கள் விமர்சனமாக முன்வைப்பதைவிடக் கவலையோடு சொல்கிறார்கள். 

வெளியே உள்ள அச்சுறுத்தல் மிகுந்த அபாய ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்புடன் – வரலாற்றுக் கடமையுடன்  கருணாநிதியின் குடும்பம் நடந்து கொள்ளவேண்டும். கட்சியில் மூப்பு, திறமை, பங்களிப்பு போன்றவற்றின் அடிப்படையில் ஜனநாயக ரீதியில் பொறுப்புகளும் அதிகாரமும் அளிக்கப்பட வேண்டும். இல்லையென்றால், இதுவரையில் அவர்கள் (கருணாநிதி தரப்பினர்)  ஆற்றிய பங்களிப்புகளும் பணிகளும் பெறுமதியற்றுப்போய் விடும். நேரு குடும்பத்தின் செல்வாக்கு எப்படி அழிந்து மங்கி மறைந்து போய்க்கொண்டிருக்கிறதோ, அதைப்போல கருணாநிதி குடும்பத்தின் வரலாறும் அமையக்கூடாது. காங்கிரஸை நேரு குடும்பத்தின் சொத்துப் போலாக்கியதன் விளைவே, இப்போதும் காங்கிரஸ் மீள எழு முடியாதிருக்கிறது. மட்டுமல்ல, அந்த இடத்தில் பா.ஜ.க என்ற தீய சக்தி வந்து வலுப்பெற்றுள்ளது. அதே நிலை தமிழ் நாட்டிற்கும் தி.மு.கவுக்கும் வரக்கூடாது. தி.மு.க வை ஆதரிப்பது என்பது நியாயமான ஒரு ஆட்சித் தரப்பை வலுப்படுத்துவதற்கே அன்றி, ஒரு குடும்பத்தின் நலனுக்காக இல்லை. ஆகவே இந்த அடிப்படையை ஸ்டாலினும் உதயநிதியும் புரிந்து கொள்ள வேண்டும்” என்பதே எங்களுடைய விருப்பம் என்று சொன்னார்கள். 

மேலும் அவர்கள் இன்னொன்றையும் சொன்னார்கள் – இந்தத் தேர்தல், தி. மு. க வுக்குச் சவாலானதுதான். இந்தச்சவாலுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, ஊழல் குற்றச்சாட்டு. தி. மு.க வுக்கும் ஊழலுக்கும் தொடர்பு உள்ளது. நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் இல்லை என்றாலும் மக்களின் மனதில் தி.மு. க ஊழலுடன் சம்மந்தப்பட்டே உள்ளது என்ற நம்பிக்கை பலரிடத்திலும் உள்ளது. அதை யாருமே மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது. ஊழல் இருப்பதால்தான் கட்சிக்குள் ஜனநாயகத்தைப் பேணமுடியவில்லை. கட்சியின் மூத்த உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் தமது அடையாளம், தமது பதவி, தமக்கான அங்கீகாரம் போன்றவற்றை விடவும் தாம் உழைத்துக் கொள்வதற்கான இடமிருந்தால் போதும் என்றே சிந்திக்கிறார்கள். ஆகவேதான், கட்சிக்குள் அதற்கான வாய்ப்பை மட்டும் தேடிக்கொள்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் உதயநிதியின் மகன் வந்து பொறுப்பை எடுத்துக்கொண்டாலும் பிரச்சினையில்லை. தமது வருவாய்க்கான வாய்ப்பிருந்தால்போதும் என்றே பார்க்கிறார்கள். ஊழல் இல்லாத ஆட்சியொன்றை வழங்க வேண்டும் என்ற உணர்வு இல்லாமல் போய் விட்டது. ஊழல்பற்றி மக்களிடம் உள்ள நியாயமான உணர்வை மதிப்பதற்கு முடியாமல் இருக்கிறார்கள். 

இரண்டாவது காரணம், தி.மு.க வில் தொடரும் குடும்ப ஆட்சியும் அதிகாரமும். ஐம்பது ஆண்டுகளைக் கடந்த ஒரு பெரிய பகுத்தறிவுக் கட்சிக்குள்ளே பெருந்தலைவர்கள் இல்லை. அல்லது அவர்களைக் கட்சி அங்கீகரிக்கத் தயாரில்லை என்பது அதனுடைய பகுத்தறிவுச்சிந்தனைக்கும் கோட்பாட்டுக்கும் எதிரானது என்று தலையைக் குனிகிறார்கள். கட்சிக்குள் அடிமைத்தனம் வளர்ந்துள்ளதன் அடையாளமே இதுவாகும். 

இதையெல்லாம் நீங்கள் தி.மு. கவின் உயர் மட்டக் கவனத்துக்குக்கொண்டு செல்ல்லாம் அல்லவா என்று கேட்டேன். 

”தி,மு.க வின் உயர் மட்டத்தில் நம்முடைய பேச்சைக் கேட்கக்கூடியவர்களுக்கு அதிகாரம் இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் இதையெல்லாம் கேட்கமாட்டார்கள். அவர்களுக்குக் காதுகளில்லை” என்றார் ஒரு மூத்த எழுத்தாளர். 

“அப்படியென்றால் என்னதான் முடிவு?” என்று கேட்டேன். 

”நெருக்கடிதான். ஆனால் எதையும் மக்கள் தீர்மானித்துக் கொள்வார்கள். அதுதானே வரலாறு” என்று சொல்லி மெதுவாகப் பலரும் நகர்ந்துவிட்டனர். 

சிலரோ ‘தி.மு.க வே இந்தத் தடவையும் வெற்றியைப் பெறும்‘ என்று அடித்துச் சொல்கிறார்கள். ஆனால் ‘அந்த வெற்றி சவாலானதாக இருக்கும். சிலவேளை தி.மு.க கூட்டணி தோற்கடிக்கப்படலாம். அப்படித்தோற்கடிக்கப்பட்டாலும் அதுவும் சவாலான – கடினமான தோல்வியாகவே இருக்கும்‘ என்றனர். 

இதையெல்லாம் விலகியதாகவே ஓட்டோ ஓட்டுநர்கள், ஊபர் சாரதிகள், கடைக்காரர்கள், விடுதிக் காப்பாளர்கள், விடுதிகளில் பணி செய்வோர் போன்ற சாதாரணர்களின் அபிப்பிராயம் உள்ளது. அவர்களிடம் தி.மு.க மீதான கோபமே உள்ளது. இவர்கள்தான் பொது மக்களின் உளநிலையைப் பிரதிபலிப்பவர்கள். தினமும் பல ஆயிரக்கணக்கானோருடன் உறவாடுகின்றவர்கள். இவர்களில் ஒரு சாரார் தமிழ்நாடு வெற்றிக்கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் வெற்றியடைவார் என்று சொல்கிறார்கள். அப்படி அவருக்கு வெற்றி கிடைக்காதுவிட்டாலும் தங்களுடைய வாக்குகள் விஜய்க்குத்தான் என்று உறுதியுடன் சொல்கிறார்கள்.

‘எதற்காக இப்படியொரு தீர்மானத்துக்கு வந்தீர்கள்?‘ என்று கேட்டேன். 

‘விலைவாசி ஏறியிருக்கு. வருமானத்தில் உயர்வில்லை. எந்தப் பிரச்சினையும் தீர்ந்தமாதிரித் தெரியவில்லை. கிராமங்களில் வளர்ச்சியே இல்லை. நகரத்தில் சும்மா “ஷோ” காட்டுகிறார்கள். அவ்வளவுதான். கிராமங்கள் அப்படியே பாழடைந்து கிடக்கின்றன. எனவே ஒரு மாற்றம் வருவதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்‘ என்கின்றனர்.

‘நீங்கள் விரும்புகிற மாற்றத்தை விஜய் தருவார், செய்வார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அவருக்கு அதற்கான அனுபவமும் ஆற்றலும் உண்டா? வெறும் சினிமா கவர்ச்சி மட்டும்போதுமா?‘ என்று சில கேள்விகளைப்போட்டேன்.

தமிழ் நாட்டில் சினிமாக்காரன்கள்தானே ஆட்சியை நடத்துகிறார்கள். கலைஞர், எம். ஜி. ஆர், ஜெயல்லிதா, விஜயகாந் எல்லோரும் சினிமாக்காரர்கள்தானே! இப்ப உதயநிதி எத்தகைய அனுபவங்களோடு, துணைமுதல்வராக இருக்கிறார்? அவர் சினிமாக்காரர் இல்லையா? உதயநிதியை விட விஜய் திறமையாளர் இல்லையா? உதயநிதியை விட விஜய்க்கு மக்கள் ஆதரவு உண்டா இல்லையா?‘ என்று என்னை மடக்க முயற்சிக்கிறார்கள். 

இன்னொரு சாரார் பா.ஜ.க வை விரும்புகிறார்கள். ”ஒரு தடவை மாற்றத்துக்கு இடமளித்துப் பார்ப்போமே. எப்போதும் ஒரேதரப்பு ஆட்சியிலிருந்தால் அது தப்பாகி விடும். மாற்றிப்பார்த்தால்தான் நன்மைகள் தீமைகள் என்ன என்று விளங்கும். சில ஊடகங்களும் சில ஆய்வாளர்களும் பயங்காட்டுகிறார்கள். அது உண்மையா இல்லையா என்பதை நாம் நேரில் அறிய வேண்டாமா?”என்று கேட்கிறார்கள்.

அவர்களுக்கு, பா.ஜ.கவின் நோக்கத்தையும் அது பிற மாநிலங்களில் செய்து வரும் அத்துமீறல்களையும் ஆட்சித்தவறுகளையும் சொன்னேன்.

‘அதெல்லாம் முழுசா உண்மை கிடையாது. வதந்திதான்‘ என்று நம்முடைய கருத்தை ஏற்கமறுக்கிறார்கள். ஒரு சிலர் மட்டும் நாம் தெளிவூட்டும் விடயங்களைப்பற்றிச் சிறிது சிந்தித்து, தம்முடைய முடிவை மாற்றிக்கொள்ளும் உளநிலையுடன் உள்ளனர். ஆனால், இதற்குக் கடுமையாக வேலை செய்யவேண்டும் என்றேன் ஊடக நண்பர்களிடம். 

‘அப்படியென்றால், அ.தி.மு.க, சீமானைப் பற்றியெல்லாம் பேச்சே இல்லையா?‘ என்று கேட்கிறார்கள் நமது ஊடகர்கள். 

ஈழத் தமிழ் ஊடகர்களுக்கு சீமான் இன்னும் ஒரு கவர்ச்சி முகம்தான். 

அ.தி.மு.க, பா.ஜ.க விற்குள் கரைந்து விட்டது. சீமானை, அவருடைய வாக்குத்தளத்தை விஜய் எடுத்துக் கொள்கிறார். இதுதான் அங்குள்ள நிலவரமாக உள்ளது. இதை நான் ஒரு வெளிப்பார்வையாளராகத்தான்அவதானித்தேன்‘ என்று முடித்துக்கொண்டேன். 

தேர்தல் நிலவரத்தை அறிவதற்கு தி.மு.க உட்பட ஒவ்வொருதரப்பும் தமிழகம் முழுவதிலும் சர்வே (மதிப்பீட்டுக் கணக்கெடுப்பை) நடத்துகின்றன. தி.மு.க வில் செல்வாக்கு மிக்க நபராக, முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீஸ்வரன் இருக்கிறார். தி.மு.க வில் கட்சிக்குள்ளே செல்வாக்கும் அதிகாரமும் உள்ள நபர் சபரீஸ்வரன்தான். இலங்கையில் ராஜபக்ஸக்களின் தரப்பில் பஸில் ராஜபக்ஸ இருந்தாரோ அப்படி. பஸில் எம்.பியாகவும் அமைச்சராகவும் கட்சியின் பொறுப்பு மிக்க பதவியிலும் வெளிப்படையாகவும் செயற்பட்டார். சபரீஸ்வரன் அப்படியல்ல. அவர் நிழல் முகம். ஆனால், உள்ளே இருந்து எதையும் தீர்மானிக்கும் கப்டன் அவர்தான். தி.மு.க வின் சார்பாக மேற்கொள்ளப்படும் சர்வே நடவடிக்கை, சபரீஸ்வரன் வேதமூர்த்தியின் தலைமையில்தான் நடக்கிறது. 

இதைப்போல வெவ்வேறு கட்சிகளும் சர்வேயை மேற்கொள்கின்றன. அதற்காகப்பெருந்தொகை நிதி செலவழிக்கப்படுகிறது. நிபுணத்துவ நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் என்பது எளிய ஒரு ஏற்பாடு. மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கும் ஒரு ஜனநாயக நடவடிக்கை என்ற காலம் போய் விட்டது. இப்பொழுது அது பல்வேறு உத்திகள், தந்திரங்கள், ஏமாற்றுக்கலை எனப் பலவகையான ஏற்பாடுகளுடன் தொடர்புபட்ட ஒன்றாகி விட்டது. 

மக்களின் உணர்வை நாடிபிடித்து அறிவதில் இருக்கும் ஆர்வமும் பதட்டமும் தேர்தல் காலத்தில் மட்டும் என்றில்லாமல், மக்களுடைய வாழ்க்கையின் நிலைவரம் எப்படி உள்ளது, அதை மாற்றுவதற்கான பொறிமுறைகளின் – நடவடிக்கைகளின் வளர்ச்சி எப்படி உள்ளது என்று தொடர்ந்து அறிந்து கொண்டிருப்பதும் அதற்கான தீர்வுகளை வைப்பதுமே உண்மையான சர்வேயாக இருக்கவேண்டும். 

ஒரு வெளியாளின் பார்வை என்று இதைப் பார்த்தாலும் அடிப்படையில் ஒரு உண்மை உண்டு. மக்கள் இயல்பாகவே மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த உணர்வு அவர்களுடைய நிறைவின்மைகளினால் உருவாகிறது. அதிற் குறிப்பாகப் பொருளாதார நெருக்கடி முதன்மையான பாத்திரத்தை வகிக்கிறது. இதில் ஊழல் ஒரு தீர்க்கமான பாத்திரமாகும். ஊழலுக்கு எதிரான மக்களின் உணர்வுகளைக் கையாள்வதில்தான் எதிர்த்தரப்புகள் கவனம் செலுத்துகின்றன. ஊழலின் பருமன் எவ்வளவு என்பது இங்கே முக்கியமானதல்ல. அந்தச் சொல் ஒரு அழகிய, ஆழமான அரசியல் முதலீடாக உருமாற்றம் பெறுகிறது. இலங்கையின் அனுபவம் கூட அதுதான். போரை முடித்து வைத்தவர்கள், போரிலே வெற்றியடைந்தவர்கள் என்ற கதைகளை எல்லாம் மக்கள் தூக்கி எறிந்து விட்டு, ஊழலுக்கு எதிராகவே மக்கள் ஒன்று திரண்டார்கள். அதனுடைய விளைவே எவராலுமே மதிப்பிட முடியாதிருந்த தேசிய மக்கள் சக்தி (NPP) யின் வெற்றியாகும்.

உலகெங்கும் ஊழலுக்கு எதிரான ஆட்சி மாற்றம் என்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் விஜய் கையில் எடுத்திருப்பதும் இதையே. ஆனால், அதைசினிமாக் சாகஸமாகவே அவர் கையாளர்கிறார். இயல்பான மக்கள் எழுச்சியாக இல்லாமல் செயற்கையாக உருவாக்கப்படும் அரசியல் கூடுகைகள் வீண் செலவீனத்திலேயே போய்முடிவதுண்டு. எதிர்க்கட்சிகளும் விஜயை ஒரு சினிமாச் சாகஸக்காரராகவே அடையாளப்படுத்த முயற்சிக்கின்றன. ஆனாலும் இதை ஆதரிப்பதற்கும் ஒரு குழு உண்டு. அதில் விஜய் ரசிகநிலையில் உள்ள எழுத்தாளர்கள் சிலரும் இருக்கிறார்கள். 

விஜயைப்போல ஊழல் விவகாரத்தை அ.தி.மு.கவோ, பா.ஜ.க வோ இதை எடுக்கமுடியாது. அவற்றின் கைகளில் கறைகள் தாராளமாகவும் ஏராளமாகவும் உண்டு. அவர்களுடைய ஒரே முதலீடு, மோடிதான். மோடியும் அமித்ஸாவும் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள் என்று கைகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றனர் அ.தி.மு.கவினர். இப்படியொரு நிலை அ.தி.மு.கவுக்கு வரும் என்று தாம் நினைக்கவே இல்லை என்று அ.தி.மு.க வின் நெடுங்கால ஆதரவாளர் ஒருவர் கண்ணீர் விட்டார். எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்காது சார் என்று கைகளைப் பிடித்தார்.

தமிழ்நாடு வரலாற்று நெருக்கடிகளையும் சோதனைகள் பலவற்றையும் கண்டு வந்திருக்கிறது. அதனிடம் ஒரு அறிவார்ந்த நோக்கு நிலை எப்போதும் உண்டு. பெரியார், அண்ணாத்துரை, காமராஜர், கருணாநிதி எனப் பல ஆளுமைகளும் தலைவர்களும் உருவாக்கி வளர்த்தெடுத்த பாரம்பரியம் இது. இந்தத்தலைமுறை இதை எப்படிக்கையாளப்போகிறது, எப்படித்தொடரப்போகிறது என்பதைப்பார்க்க வேண்டும். தி.மு.ககூட்டணியின் அரசியல் வியூகம் எப்படி இருக்கப்போகிறது என்பதில்தான் எல்லாமே தங்கியுள்ளது. 

https://arangamnews.com/?p=12645

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிங்கள ”ஸ்ரீ”யும் தமிழ் ”ஸ்ரீ”யும்

1 week 3 days ago

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிங்கள ”ஸ்ரீ”யும் தமிழ் ”ஸ்ரீ”யும்

January 29, 2026

large.IMG_7210.jpeg.24e16508f0bbd02bd8f6

1957 இல், தனிச் சிங்களச் சட்டம் அமுலான பின்னர், இலங்கையில் வாகனத் இலக்கத் தகடுகளில் சிங்கள “ஸ்ரீ” எழுத்தைப் பயன்படுத்தியதற்கு எதிராகத் தமிழரசுக் கட்சி தலைமையில் போராட்டம் வெடித்து சிங்கள “ஸ்ரீ” எழுத்து கறுப்பு மை பூசப்பட்டு, தமிழ் “ஸ்ரீ” யாக மாற்றப்பட்டது. இந்த போராட்டமே தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் பலமான அடித்தளமாக அமைந்தது. ஆனால் அதே தமிழரசுக்கட்சி தற்போது தமது கட்சியிலுள்ள மக்கள் பலமான தமிழ் ”ஸ்ரீ ”க்கு (ஸ்ரீதரனுக்கு)எதிராக முன்னெடுக்கும் சதி தமிழரசுக் கட்சியின் அடித் தளத்தை, மக்கள் பலத்தை ஆட்டம் காண வைக்கப் போகின்றது—–”

கே.பாலா

24-65a72725b158b.jpg

தமிழரசுக்கட்சியின் தலைவராக பொதுக்குழுவினால் தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீதரனை சட்ட சதியினால் அப்பதவியை ஏற்கவிடாது தடுத்தவர்கள் தற்போது அவரை பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளதன் மூலம் ஸ்ரீதரனுக்கு எதிரான தமது ”பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியை பறிப்பது, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்பது, தமிழரசுக்கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்குவது”என்ற 3 சதிகளில் ஒன்றை சகுனித்தனமாக அரங்கேற்றியுள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக என்று சிவஞானம் ஸ்ரீதரன் வாக்கெடுப்பு மூலம் பொதுக்குழுவினால் தெரிவுசெய்யப்பட்டாரோ அன்று அவருக்கு பிடித்த ”சனி” இன்றுவரை அவரை விடாது துரத்தி வருகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஸ்ரீதரன் ஆதரித்தமையை சாட்டாக வைத்து ”ஸ்ரீதரன் கட்சிக்கு கட்டுப்படவில்லை, தலைமையின் முடிவுக்கு முரணாக செயற்படுகின்றார் ஆகவே அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்ற சதியை முன்னெடுத்தனர்.ஆனால் அது வெற்றிபெறவில்லை.

அடுத்ததாக ஸ்ரீதரனை பாராளுமன்றத் தேர்தலில் எப்படியாவது தோற்கடித்து அவரின் மக்கள் செல்வாக்கை இல்லாமல் செய்து அதன்மூலம் அவரை கட்சியிலிருந்து வெளியேற்றத் திட்டமிட்டமிட்டு ”ஸ்ரீதரன் மதுபானசாலைக்கான அனுமதிகளை ரணில் அரசிடமிருந்து அரசியல் இலஞ்சமாக பெற்றுள்ளார்”என்ற குற்றச்சாட்டை பாராளுமன்றத்தேர்தலின்போது தீவிர பிரசாரமாக முன்னெடுத்தனர். ஆனால் ஸ்ரீதரனின் வெற்றியை தடுப்பதற்கு பதிலாக அவர்களே தேர்தலில் மண்கவ்வினர்.

சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தனாக சற்று மாற்று யோசித்தவர்கள் ஸ்ரீதரனுக்கு எதிராக சிங்களவர்களை பயன்படுத்தத் தொடங்கினர். இவர்களின் பின்னணியில் ஸ்ரீதரன் சட்டத்துக்கு முரணாக சொத்துக்கள் வைத்திருப்பதாக சிவில் ஆர்வலர் சஞ்சய் மஹாவத்த என்பவர் குற்றப் புலனாய்வுத்துறையில் முறைப்பாடு செய்தனர் .அந்த முறைப்பாட்டை உடனடியாக விசாரணை செய்து உண்மையை வெளிப்படுத்துமாறு ஸ்ரீதரனும் வலியுறுத்தியபோதும் சில மாதங்கள் கடந்தும் அந்த முறைப்பாடு கிடப்பில்தான் கிடக்கின்றது.

அதன் தொடர்ச்சியாக அரசியலமைப்பு பேரவையில் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாகவுள்ள ஸ்ரீதரன் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாகவுள்ள ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக அரசு நியமிக்க ஆதரவாக வாக்களித்து விட்டார் என்ற குற்றச்சாட்டை சிங்கள இனவாத எம்.பி.க்களான சாமர சம்பத் தசாநாயக்க ,தயாசிறி ஜயசேகர ஆகியோர் மூலமாக பாராளுமன்றத்தில் முன் வைக்க வைத்து அதனைப்பயன்படுத்தி கட்சியின் கட்டுப்பாட்டை மீறி இராணுவ அதிகாரி ஒருவருக்கு ஸ்ரீதரன் ஆதரவாக வாக்களித்து விட்டார் என்ற குற்றச்சாட்டில் ஸ்ரீதரனிடம் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு விளக்கம் கோரியதுடன் அரசியலமைப்பு பேரவையிலிருந்து ஸ்ரீதரன் உடனடியாக விலக வேண்டுமெனவும் பணித்தது.

ஆனால் ”அரசியலமைப்பு பேரவை ஒரு சுயாதீனமான பேரவை .இதில் எந்தவிதமான அரசிய தலையீடும் கட்சி செல்வாக்கும் இருக்க முடியாது. இதில் எனது கட்சியின் செல்வாக்குகளை நான் பிரயோகிக்க முடியாது இந்த சபை மூலம் கட்சி சார்பு அரசியலும் செய்ய முடியாது. செய்யக்கூடாது அரசியலமைப்பு பேரவையில் எனது பங்களிப்பும் வாக்களிப்பும் மனச் சாட்சியின் படியானவை. அத்துடன் அரசியலமைப்பு பேரவைக்கு நான் எனது கட்சியின் அரசியல் குழு அல்லது மத்திய செயற்குழுவால் பெயர் குறித்து நியமிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் எனது கட்சியின் அரசியல்குழுவிலுள்ள சிலரின் தனிப்பட்ட அரசியல் விரோதங்களுக்காகவும் நிகழ்ச்சி நிரலுக்காகவும் நான் பதவி விலக முடியாது”என ஸ்ரீதரன் உறுதியாக கூறிவிட்டார்

இவ்வாறான நிலையில்தான் இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் ஆலோசனையை பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் ஏற்றுக்கொள்ள மறுத்த காரணத்தினால் அவரின் பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியை மீளப்பெற கட்சி தீர்மானித்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார். அரசியல்குழு அவர்மீது நம்பிக்கை வைத்து ஏகமனதாக பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியை அவருக்கு வழங்கியது. அரசியல் குழு இரண்டு தடவைகள் அவர் பாராளுமன்ற அரசியல் பேரவையிலிருந்து இராஜிநாமா செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை வழங்கியிருந்தது. தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் ஆலோசனையினை ஏற்றுக்கொள்ள ஸ்ரீதரன் மறுத்ததன் காரணத்தினால் அரசியல் குழுவினால் வழங்கப்பட்ட நியமனத்தினை மீளப்பெறுவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் முக்கிய குற்றச்சாட்டு நாட்டின் கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க ஒரு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்கு ஸ்ரீதரன் ஆதரவாக வாக்களித்து விட்டார்”என்பதாகவே உள்ளது.அதாவது தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்ட இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தை சேர்ந்த ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கு ஸ்ரீதரன் ஆதரவாக வாக்களித்து விட்டார். இதன் மூலம் தமிழரசுக்கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராக ஸ்ரீதரன் செயற்பட்டு விட்டார் என்பதே தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் முக்கிய குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டு நியாயம் என்றால் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவிடம் சில கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது.

இலங்கை இராணுவத் தளபதியாகவிருந்து தமிழ் மக்களுக்கு எதிரான இறுதிப்போரை வழிநடத்தி பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை இனப்படுகொலை செய்ததன் முக்கிய சூத்திரதாரியான ஜெனரல் சரத்பொன்சேகா 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியபோது சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென இலங்கை தமிழரசுக் கட்சி பகிரங்க வேண்டுகோள் விடுத்ததுடன் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவாக பிரசாரங்களும் மேற்கொண்டதுடன் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக வாக்களித்ததும் எந்த வகையில் நியாயம்?

அண்மையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலின் மூலம் சபைகளில் ஆட்சியமைக்க தமிழினத் துரோகி என தமிழ் மக்களினால் அடையாளப்படுத்தப்படும் இராணுவ துணைக்குழுவாக செயற்பட்ட, நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர் ,யுவதிகள் படுகொலை செய்யப்பட, காணாமல் போக காரணமாகவிருந்த,மனிதப் படு கொலையாளர் எனக் குற்றம் சாட்டப்பட்ட ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்ப்பாணம் ஸ்ரீதர் திரையரங்கிலுள்ள அலுவலகம் தேடிச்சென்று தமிழரசுக்கட்சியின் தலைமை,அதாவது பதில் தலைவரான சிவஞானம் ஈ,.பி. டி.பி.யின் காலடியில் மண்டியிட்டது குற்றமில்லையா? சில சபைகளில் அவரின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது குற்றமில்லையா?

2017 ஜனவரியில் சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டி இலங்கை புலனாய்வுப் பிரிவினர் சிலரைக் கைது செய்தனர்.இதனைத்தொடர்ந்து சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவரது வீடு,அலுவலகம், வாகனம் என அனைத்திலும் விசேட அதிரடிப்படையினரே நிறைந்திருந்தனர். சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தனது சொந்த தொகுதிக்கு செல்லும்போதுகூட அதிரடிப்படையினர் புடைசூழவே சென்றார். ஸ்ரீதரன் ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கு அதுவும் மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் எதுவும் முன்வைக்கப்படாத ஒருவருக்கு ஆதரவளித்தது குற்றமென்றால் சுமந்திரன் தமிழினப் படுகொலையாளிகளின் ஒரு தரப்பான விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் வடக்கில் வலம் வந்தது குற்றமில்லையா? அது அரசாக வழங்கிய பாதுகாப்பு என்று கூறினாலும் அதனை வேண்டாம் என மறுக்கும் உரிமை சுமந்திரனுக்கு இருந்தது.ஏன் மறுக்கவில்லை ?

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக்கட்சிகளினதும் தமிழ் பொது அமைப்புகளினதும் ஆதரவுடன் தமிழ் பொது வேட்பாளராக தமிழின உணர்வாளரும் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தருமான அரியநேத்திரன் களமிறங்கிய போது தமிழ் மக்களின் விருப்புக்கு மாறாக அரிய நேத்திரனை தோற்கடித்தே தீருவோம்.சஜித் பிரேமதாசாவை வெற்றிபெற வைப்போம் என தமிழரசுக்கட்சியின் தற்போதைய பதில் பொது செயலாளர் பொது வெளியில் சூளுரைத்ததுடன் சொன்னதையும் செய்தார். தமிழ் தேசிய உணர்வாளரான அரியநேத்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம் ,சஜித் பிரேமதாசவுக்கு வாக்களியுங்கள் என தமிழ் மக்களின் விருப்புக்கு எதிராக செயற்பட்ட குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?தமிழ் தேசிய உணர்வாளருக்கு எதிராகவும் சிங்கள இனவாதி ஒருவருக்கு ஆதரவாகவும் தமிழரசுக்கட்சியின் தலைமை செயற்பட்டது குற்றமில்லையா?

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கான வாக்கெடுப்புக்கு பின்னர் வேறு ஒரு தெரிவுக்கான வாக்கெடுப்பு அரசியலைப்பு பேரவையில் நடந்தபோது அதில் ஸ்ரீதரன் வாக்களிக்கவில்லை. இதனையும் வாக்களிக்காது விட்டது மூலம் ஸ்ரீதரன் அரசுக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளார் என்று தமிழரசின் சில பிரகிருதிகள் ஸ்ரீதரனுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தனர்.அநுரகுமார அரசின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றபோது தமிழரசுக்கட்சி வாக்களிக்கவில்லை.அப்படியானால் அநுரகுமார அரசின் வரவு செலவுத் திட்டத்திற்கு தமிழரசுக்கட்சி மறைமுகமாக ஆதரவளித்ததா?

இது மட்டுமா ஸ்ரீதரன் ஓய்வுபெற்ற சிங்கள இராணுவ அதிகாரி ஒருவருக்கு ஆதரவாக அரசிலமைப்பு பேரவையில் வாக்களித்து விட்டார் என்பதற்காக கொதித்தெழுந்து அவரது பாராளுமன்றகுழுத் தலைவர் பதவியை பறிப்பதில் முன்னின்ற இருவரில் ஒருவர் தனது மருமகளாகவும் சம்பந்தியாகவும் சிங்களக் குடும்பத்துடன் இணைந்துள்ளார். மைத்திரிபால சிறிசேன தலைவராக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் முக்கிய பதவியில் இருந்தவரும் பின்னர் அங்கிருந்து மஹிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுனவுக்கு தாவி தேர்தலில் போட்டியிட்டு மக்களினால் நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழரசுக்குள் பின்கதவால் நுழைந்தவருமான இன்னொருவரோ தனது வருங்கால மனைவியாக, தற்போதைய காதலியாக ஒரு சிங்களப் பெண்ணுடன் தொடர்பில் இருக்கின்றதாக தகவல்கள் உள்ளபோதும் தற்போது அதனை வெளிக்காட்டாமல் இருக்கின்றார். இவர்கள்தான் ஓய்வு பெற்ற சிங்கள இராணுவ அதிகாரி ஒருவருக்கு ஸ்ரீதரன் வாக்களித்துவிட்டதாக ”தமிழ் தேசிய உணர்வோடு” குமுறுகின்றனர்

எனவே தற்போது அரசியலமைப்பு பேரவையில் ஸ்ரீதரன் ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கு வாக்களித்து விட்டார் என்ற குற்றச்சாட்டை பயன்படுத்தி தமது உள்வீட்டு அரசியல் எதிரியான ஸ்ரீதரனை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி அந்தப் பதவியைக் கைப்பற்றுவதுடன் தமிழரசுக்கட்சியிலிருந்து ஸ்ரீதரனை வெளியேற்றும் சதியே முன்னெடுக்கப்படுகின்றது.

, 1957 இல், தனிச் சிங்களச் சட்டம் அமுலான பின்னர், இலங்கையில் வாகனத் இலக்கத் தகடுகளில் சிங்கள “ஸ்ரீ” எழுத்தைப் பயன்படுத்தியதற்கு எதிராகத் தமிழர் தரப்பில் போராட்டங்கள் வெடித்தன. இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைமையிலேயே இப்போராட்டம் தீவிரமடைந்து சிங்கள “ஸ்ரீ” எழுத்து கறுப்பு மை பூசப்பட்டு, தமிழ் “ஸ்ரீ” யாக மாற்றப்பட்டது. தமிழரசுக்கட்சியின் தீவிர தமிழ் தேசியப்பற்றை வெளிப்படுத்திய இந்த போராட்டமே தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் தமிழ் மக்களின் பேராதரவுக்கும் பலமான அடித்தளமாக அமைந்து தமிழரசுக்கட்சியை தமிழ் தேசிய இனத்தின் தாய்க் கட்சியாக மாற்றியது .

தமிழ் தேசிய உணர்வாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் வெளியேற்றங்கள்,உறுப்புரிமை நீக்கங்கள், பழிவாங்கல்கள், பதவி பறிப்புக்கள்,சதிகள்.தமிழரசுக்கட்சியை மிகவும் பலவீனப்படுத்தி,தமிழ் மக்கள் வெறுத்து ஒதுக்கும் ஒரு கட்சியாக மாற்றி வருகின்றது.இதற்கு உதாரணமாக அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கில் தமிழரசுக்கட்சி அடைந்த படுதோல்வியையும் அதன்பின்னர் நடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பரிதாப நிலையையும் எடுத்துக் கொள்ளமுடியும். இவ்வாறானதொரு நிலையில் இந்த நிலையை மேலும் மோசமாக்கும் வகையில் தமிழரசுக்கட்சி தற்போது தமது கட்சியிலுள்ள மக்கள் பலமான தமிழ் ”ஸ்ரீ ”க்கு (ஸ்ரீதரனுக்கு)எதிராக முன்னெடுக்கும் சதி தமிழரசுக் கட்சியின் அடித் தளத்தைஆட்டம் காண வைப்பதுடன் , தற்போதுள்ள கொஞ்ச நஞ்ச மக்கள் பலத்தை அடியோடு இல்லாமல் செய்யும் என்பது மட்டும் உண்மை.

https://uthayannews.ca/2026/01/29/இலங்கைத்-தமிழரசுக்-கட்ச-2/

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

1 week 3 days ago

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

January 26, 2026

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

(இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்பு மாற்றம், தமிழ்ப்பிரதேசங்களின் அபிவிருத்தி, மாகாண சபைகளுக்கான தேர்தல் மற்றும் அதிகாரம், ஆட்சிலிருக்கும் தேசியமக்கள் சக்தியின் செயற்பாடுகள், தமிழரசுக் கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் எனப் பல விடயங்களையும் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஜனாதிபதி சட்டத்தரணி திரு. எம்.ஏ. சுமந்திரனுடன் உரையாடினோம். இலங்கை அரசியற்பரப்பிலும் தமிழர்களின் அரசியலிலும் சுமந்திரனின் அடையாளமும் குரலும் முதன்மையானது. என்பதால் அனைத்துத் தரப்பினரோடும் உரையாடக்கூடியவராகவும் அனைத்துத்தரப்பினரும் உரையாடும் ஒருவராகவும் சுமந்திரன் காணப்படுகிறார். இது அவரைக் குறித்த கவனத்தையும் அதேவேளை சில சர்ச்சைகளையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில் அவருடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நேர்காணல் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.)

   — கருணாகரன் —

1.  இலங்கையில் மிகப் பெரிய பிரச்சினைகளாகத் தொடரும் இனப்பிரச்சினை,  பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்குத் தீர்வைக் காண்பது எப்படி? இதற்கான சரியான வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு ஆட்சியாளர்களால் முடியாதிருப்பது ஏன்?

எந்தவொரு பிரச்சனையும் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், இந்தத் தீவில் சிங்கள பெளத்தர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் உலகிலும், ஏன் இந்தப்பிராந்தியத்திலும், அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவர்கள். எனவே அவர்களுக்கு இயல்பாகவே ஒரு பீதி – உளவியல் ரீதியான அச்சம் – இருக்கிறது. அரசியல் தீர்வு விடயத்தில் இது வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால்தான் அவர்கள் பௌத்தத்திற்கும் சிங்களத்திற்கும் முதலிடத்தைக் கொடுக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். பொருளாதார விடயங்களிலும் தங்களை மற்றவர்கள் விழுங்கி விடுவார்கள் என்ற பயம் உள்ளது, இது சுயாதீனமாக முடிவுகள் எடுப்பதைத் தடுக்கிறது. ஆட்சியாளர்கள், மக்களுக்கு அவர்களது பயம் நீங்கும்படியான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மாற்றமும் தீர்வும் முன்னேற்றமும் நிகழும். 

2.  மக்களுடைய உணர்வுகளும் தேவைகளும் பாராளுமன்றத்திலும் ஆட்சியிலும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது எதற்காக? 

⁠முழுமையாக அப்படிப் புறக்கணிக்கப்படுவதாகச் சொல்ல முடியாது. ஒரு சில தருணங்களில் அதிகாரப் போதை காரணமாக மக்களது உணர்வுகளையும் தேவைகளையும் ஆட்சியாளர்கள் மறந்து விடுகிறார்கள். 

3.  அப்படிச் சொல்ல முடியாதே! மக்களுடைய உணர்வுகளும் தேவைகளும் புறக்கணிக்கப்பட்டதால்தானே நாட்டில் பிரச்சினைகள் மேலும் மேலும்  கூடிச் சென்றிருக்கின்றன. புதிய பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அது உலக வழமை. பழைய – பல பத்தாண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்வதற்குக் காரணம், மக்களுடைய உணர்வுகள் புறக்கணிக்கப்பட்டதனால்தானே? 

மக்களுடைய உணர்வுகள் மதிக்கப்படுவதால் மாத்திரம் பிரச்சனைகள் தீராது. பல சந்தர்ப்பங்களில் இவை இரண்டிற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. மாறாக சில சமயங்களில் மக்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் இருக்க நினைப்பதனாலேயே பிரச்சனைகளையும் தீர்க்க முடியாமல் இருக்கும். 

4.  பாராளுமன்ற ஜனநாயகம் அர்த்தமிழந்த ஒன்றாக மாறுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அதற்கும் காரணம் மக்கள்தான். அவர்கள் பொறுப்போடும் தூர நோக்கோடும் தங்களது தெரிவுகளை மேற்கொண்டால் பாராளுமன்றத்தில் ஜனநாயகம் மேலோங்குவதைக் காணலாம். குறுகிய நோக்கங்களுக்காக தவறானவர்களைத் தெரிவு செய்தால் பாராளுமன்ற ஜனநாயகம் அர்த்தமற்றதாக மாறி விடும்.

5.  மாற்றத்துக்கான ஆட்சி, System Change என்றெல்லாம் சொல்லி அதிகாரத்துக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மெய்யாகவே மாற்றத்திற்கான வழியில்தான் பயணிக்கிறதா? 

ஓரளவு மாற்றம் தெரிகிறது. இது ஆரம்பம் மட்டும்தான் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்களது பல செயற்பாடுகள் மாற்றத்தை நோக்கினதாகவே தென்படவில்லை. இதுவும் பழைய குருடி கதவைத் திறடி என்றுதான் முடியும்.

6.  அவ்வாறில்லை என்றால், அதைச் சரியான திசையில் செலுத்துவதற்கான வழிமுறைகள் என்ன? இதில் எதிர்க்கட்சிகளின் திறனும் அர்ப்பணிப்பும் எப்படி உள்ளது? எப்படி அமைய வேண்டும்?

எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக அரசாங்கத்தை சவாலுக்கு உட்படுத்த வேண்டும். அதற்கான திறனோ அர்ப்பணிப்போ பிரதான எதிர்க் கட்சியிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

7.  நாட்டின் தேவை, மக்களின் எதிர்பார்ப்பு, சிறுபான்மைத் தேசிய இனங்களான தமிழ் பேசும் சமூகங்களின் நியாயமான உரிமைகளில் எல்லாம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலைப்பாடும் செயற்பாடும் (நடைமுறைகள்) எப்படி உள்ளது?

தமிழ்பேசும் மக்களின் உரிமைகள் சார்ந்த விடயங்களை இந்த அரசு நியாயமான முறையில் அணுகுவதாக தெரியவில்லை. அப்படி ஒரு தேசிய இனப்பிரச்சனை இருப்பதையே அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் எந்தச் செயற்பாடும் அதை ஒட்டியதாக இல்லை.

8.  முன்னைய ஆட்சியாளர்களுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் என்ன? ஒன்றுமைகள் என்ன? 

⁠தீர்க்கப்படாத இனப்பிரச்சனை ஒன்று இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளாத நிலைப்பாடு முன்னைய ஆட்சியாளர்களுக்கும் இவர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையைக் காட்டுகிறது. ஊழல் விவகாரங்கள் மிக குறைவாக காணப்படுவதுதான் வேற்றுமை.

9.  ஒப்பீட்டளவில் ‘தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பரவாயில்லை. முன்னேற்றகரமானது’ என்ற அபிப்பிராயம் உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திலும் உண்டு. இப்படியான சூழலில் இந்த அரசாங்கத்தோடு பல விடயங்களில் சேர்ந்து செயற்படும் வாய்ப்புள்ளது அல்லவா!

ஆம். ஆனால் எவரையும் சேர்த்து செயற்படும் எண்ணம் தேசிய மக்கள் சக்திக்கு அறவே கிடையாது.

10.அப்படியென்றால், இது கதவைச் சாத்திக் கொண்டு மூடப்பட்ட அறைக்குள் குடித்தனம் நடத்துவதைப்போன்ற ஒரு ஆட்சியா? அரசியல் சொல்லாடலில் இதை ஏகத்துவத்தின் சர்வாதிகார இயல்பு (The authoritarian nature of monotheism) என்று சொல்லலாமா? 

ஆம். நிச்சயமாக அப்படித்தான்.

11.          தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் தமிழரசுக் கட்சி எத்தகைய அணுமுறையைப் பேண விரும்புகிறது? ஏனென்றால், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தேசிய மக்கள் சக்தியுடன் சிநேகபூர்வமானதொரு உறவு தனிப்பட்ட ரீதியில் உங்களுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இருந்தது. அந்த உறவை ஆட்சியிலிருக்கும்போது மேலும் வளர்த்தெடுக்க முடியாமலிருப்பது ஏன்?

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களோடு தனிப்பட்ட சிநேகிதம் இருந்தது. ஆனால் ஆட்சியாளர்களான பின்பு அவர்களது அரசியல் நகர்வுகள் பலவற்றை நாம் பகிரங்கமாக எதிர்க்க வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டது. அதை நாம் செய்கிறபோது அவர்கள் அதனை ஏற்றுக் கொள்கிற மனப் பக்குவம் உள்ளவர்களாகத் தெரியவில்லை. அந்தச் சூழலில் முன்னர் இருந்த சிநேகிதத்தைப் பேண முடியாதுள்ளது.

12.          தமிழ் அரசியற் தரப்பினர் கோருகின்ற – எதிர்பார்க்கின்ற – வலியுறுத்துகின்ற அரசியல் அதிகாரத்தை(சமஸ்டி உள்ளடங்கலான தீர்வை) வழங்குவதற்கான அரசியல் உளநிலை ஆட்சியாளர்களிடத்திலும் இல்லை. ஆட்சிக்கு வெளியே உள்ள சிங்கள அரசியலாளர்களிடத்திலும் சிங்களச் சமூகத்திடமும் இல்லை. அரசியலமைப்பு மாற்றம், அரசியற் தீர்வு ஆகியவற்றை எட்டுவதாக இருந்தால், சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இவ்வாறான ஒரு சூழலில் எப்படித் தமிழ்மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வைப் பெறுவது?

எந்த அரசியல் தீர்விற்கும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தியே ஆக வேண்டும் என்பது எமது நிலைப்பாடு. அது இல்லாமல் எந்த தீர்வும் நீடித்து நிலைக்காது. அது முடியாத காரியமல்ல. ஆட்சியிலிருக்கும் கட்சியும் நாமும் கூட்டாக மக்கள் முன் சென்று தீர்வை விளக்கினால் இது இலகுவாக சாத்தியப்படும்.

13.          ‘தமிழ்த் தேசியவாத அரசியலை முன்னெடுக்கும் தரப்புகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்‘ என்ற கோரிக்கையின் நடைமுறைச் சாத்தியமென்ன?தற்போது இந்த விடயத்தில் ஒரு இணக்க மனநிலை– ஐக்கியத்துக்கான சூழல் – தென்படுகிறது. அதேவேளை ‘இது நேர்மையான உறவாக இருக்கப்போவதில்லை. சந்தர்ப்பவாதக் கூட்டு’ என்ற பேச்சுகளும் சமாந்தரமாக உள்ளது. மெய்யாகவே தமிழ்க் கட்சிகளின் ஐக்கியத்தை உருவாக்குவதற்கு உங்களுடைய உளப்பூர்வமான எண்ணங்களும் நடவடிக்கைகளும் என்ன?

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒரு அணியில் சேர்ந்து இயங்குவது சாத்தியமான ஒரு விடயமே. தங்கள் கட்சிகளின் தனித்துவத்தை இழந்து விடாமல் அரசியல் தீர்வு விடயத்தில் இணங்கிச் செயற்படலாம். தேர்தல் கூட்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும் தீர்வு விடயத்தில் இணைந்து செயல்படுவது அத்தியாவசியமானதும் கூட.

14.          தமிழரசுக் கட்சி, கட்சிக்கு உள்ளே (ஒழுக்காற்று நடவடிக்கைகளில்) இறுக்கமாகவும் வெளியே ஏனைய அரசியற் தரப்புகளோடு இணக்கமாகவும் செயற்படுகிறது. புதிய தலைமையில் ஒரு பண்பு மாற்றத்தை உணர முடிகிறது. கட்சியின் எதிர்காலத்தைக் குறித்து நிதானமாகச் சிந்திப்போரிடத்திலும் தமிழ்ச் சமூகத்தின் அரசியலைப் பற்றி அக்கறைப்படுவோரிடத்திலும் இதற்கு எத்தகைய வரவேற்புண்டு? 

இதற்கு பாரிய வரவேற்பு உண்டு. இப்போதுதான் கட்சி கட்டுப்பாட்டோடு செயற்படுகிறது என்பது அனைவருடைய கருத்தாக உள்ளது. ஒற்றுமையில் பலம் உண்டு என்பதனால் மற்றைய கட்சிகளோடு இணக்கமாகச் செயற்பட வேண்டிய தேவை உள்ளது என்பதையும் அனேகமானோர் புரிந்து வைத்துள்ளார்கள்.

15.         பாராளுமன்றத்தினால் செய்ய முடியாத ஆட்சி மாற்றச் சூழல் ஒன்றை மக்கள் தமது ‘அரகலய’ (2022 Sri Lankan protests)  போராட்டத்தின் மூலமாக நிறைவேற்றியிருக்கிறார்கள் . இனப்பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்பு மாற்றம் உள்ளிட்ட முக்கியமான வேலைகளையும் அப்படித்தான் செய்ய வேண்டும் என்பதைத்தானே பிந்திய நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.  அப்படியென்றால் மக்கள் போராட்டத்தோடு நீங்களும் எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியது அவசியமல்லவா?

அரகலயவில் நாமும் பங்கு கொள்ள வேண்டும் என்று அந்த வேளைகளில் நான் பல தடவை சொல்லி இருக்கிறேன். ஆனால் அரசியலமைப்பு மாற்றம் இறுதியில் ஒரு சட்ட முறைமையினூடாகத் தான் செய்யப்பட வேண்டும். அது மட்டுமல்ல, மக்களோடு சேர்ந்து அறகல போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது ஒன்று. ஆனால் மற்றைய எதிர்க்கட்சிகளோடு இணைந்து செயல்படுவது என்பது வித்தியாசமானது. யாரோடு எதற்காக இணைவது என்பது முக்கியமானது.

16.          தமிழ்த் தேசியவாத அரசியலில் புத்துணர்வற்ற – புதிய சிந்தனைகளற்ற சம்பிரதாயத்தன்மையே மேலோங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. உலக மாற்றங்களையும் பிராந்திய – உள்நாட்டு நிலவரங்களையும் உய்த்துணர்ந்து செயற்படக் கூடிய தன்மை போதாதென்றும் சொல்லப்படுகிறது. இதற்கான காரணங்கள் என்ன?

தமிழ்த் தேசியவாத அரசியல் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்த போது ஜனநாயகப் போராட்டம் எப்படி இருந்ததோ, அதே பாணியில் போருக்குப் பின்னரான அரசியலையும் நகர்த்தியதே இதற்குக் காரணம். அதே பாணியில் பயணிப்பதற்கு வலுவான காரணங்கள் இருந்த போதும் 3 தசாப்த இடைவெளியை அனுசரித்து சில அணுகுமுறை மாற்றங்களை செய்திருக்க வேண்டும். 

17.          பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தூதுவர்கள், பிரதானிகளோடு பேசிவரும் உங்களுடைய அனுபவத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற போர்க்குற்ற விசாரணை, அரசியல் தீர்வு, அரசியலமைப்பு மாற்றம் போன்றவற்றுக்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புகள் தென்படுகின்றனவா?

ஒரு நியாயமான அரசியல் தீர்வுக்கு நிச்சியமாக அவர்கள் அழுத்தம் கொடுப்பதற்கு தயாராக இருப்பார்கள். அதை அடைவதற்கு போர்க்குற்ற விசாரணையை உபயோகிப்பார்கள்.

18.           பௌத்த விரிவாக்கம், சிங்கள மேலாதிக்கம் போன்றவற்றை நடைமுறையிலும்(ஆட்சிமுறையிலும்) அரசியலமைப்பில் முதன்மைப்படுத்தியும் வைத்திருப்பது பன்மைத்துவத்துக்கும் ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தல் அல்லவா!இதைக்குறித்துத்தானே வெளியுலகச் சமூத்தின் கவனத்தைத் திருப்ப வேண்டும். அப்படித் தமிழ்த்தரப்பு எங்கேனும் செயலாற்றியுள்ளதா? 

ஆம். எல்லாத் தருணங்களிலும் இதை உதாரணமாக எடுத்துக் காட்டியிருக்கிறோம். 

19.         இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் அரசியமைப்பு மாற்றத்துக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் அரசியல் கட்சிகளுக்கு அப்பால் புத்திஜீவிகள், பல்கலைக்கழத்தின் அரசியல் மற்றும் சமூக ஒருங்கிணைப்புத் துறையினரின் பரிந்துரைகள் எதையும் முன்வைப்பதில் அக்கறையற்றிருப்பது ஏன்?

போர்ச் சூழலில் அப்படியானவர்கள் ஒதுங்கி இருக்கவே விரும்பினார்கள். இப்போதும் சமூக வலைத்தளங்களினூடாக செய்யப்படும் அவதூறுகள் காரணமாக பலர் இப்படியான பொது விடயங்களில் ஈடுபட விரும்புவதில்லை. 

20.           இந்தியாவின் அரசியல், பொருளாதார பங்களிப்புகளைப் பற்றி உங்கள் பார்வை என்ன? 

இந்தியா இந்தப் பிராந்திய வல்லரசு என்பதையும் தாண்டி ஒரு உலக வல்லரசாக மாறியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இதற்கான முக்கிய காரணம். மிக அண்டை நாடான நாம் இந்தியாவின் வளர்ச்சியை எமதாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு இந்தியாவின் பங்களிப்பு எமது அரசியலிலும் கட்டாயமாக இருக்க வேண்டும். அது தமிழ் மக்களுக்கு ஒரு போதும் கேடாக அமையாது. 

21.          தமிழரசுக் கட்சி 75 ஆண்டுகளைக் கடந்து பயணிக்கிறது. ஆனாலும் அது முன்வைத்த அரசியல் கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை. இடையில் பல தலைவர்களின் காலம் கடந்து விட்டது. கட்சியின் செயலாளர் என்ற வகையில் தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வும் தமிழ்ப் பிரதேசங்களின் மேம்பாடும் உங்களுடைய தலைமைத்துவத்தில் எட்டப்படுமா? அதற்கான புதிய பொறிமுறைகளை வகுத்துள்ளீர்களா? 

ஆம். எமது கட்சியின் இலக்கு விரைவில் எட்டப்பட வேண்டும். அது இலங்கை மக்களின் பெரும்பான்மையவரின் இணக்கத்தோடு மட்டுமே அடையப்படலாம். அதிகாரப் பகிர்வு சகல மக்களுக்கும் நன்மை பயக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும். அதற்கான வேலைத்திட்டம் ஒன்றை இந்த வருடத்தில் ஆரம்பிக்க உள்ளேன். இந்த வருடத்தோடு SWRD பண்டாரநாயகா இலங்கைக்கு சமஷ்டி என்ற எண்ணக் கருவை அறிமுகம் செய்து 100 ஆண்டுகள் நிறைவாகின்றது. அதை மையமாக வைத்து இந்தவேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டால், அது சிங்கள மக்கள் பலரது ஆதரவையும் பெற உதவும் என்பது எனது நம்பிக்கை.

20. ஆட்சியிலிருக்கும் தரப்பின் ஒத்துழைப்போடு தீர்வுக்கான வேலைத்திட்டத்தை மேற்கொண்டாலும் எதிர்த்தரப்பிலுள்ள கட்சிகளின் ஆதரவின்றி இது சாத்தியமாகுமா? சமஸ்டி என்ற சொல்லை ஏற்றுக்கொள்ளக்கூடிய உளநிலை சிங்களத் தரப்பிடமுண்டா?

சிங்களக் கட்சி எதுவும் சமஷ்டி என்ற சொல்லை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகையால் பெயர் பலகையில் தொங்கிக் கொண்டிருக்காமல் அர்த்தமுள்ள விதத்தில் மீளப் பெறப்பட முடியாத அதிகாரப் பகிர்வு முறையை அடைய வேண்டும். அதற்கு நிச்சயமாக எதிர்த் தரப்பு கட்சிகளின் ஆதரவையும் பெற வேண்டும். 

21. அரசியற் தீர்வில் முஸ்லிம்களின் பங்கேற்பும் ஆதரவும் வேண்டுமே?

அதிகாரப் பகிர்வுக்குமுஸ்லிம்களின் ஆதரவுஎப்போதுமே இருந்திருக்கிறது. அலகு விடயத்தில் அவர்களுடன்ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தாகவேண்டும். 

22. மாகாணசபைத் தேர்தல், மாகாணசபைகளின் இயங்குமுறை, அதற்கான அதிகாரம் என்ற பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு என்ன? அதை எவ்வாறு எட்டுவது?

தற்போது அரசியலமைப்பில் உள்ள அதிகாரங்களை இழந்துவிடாமல் அவற்றையாவது நிறைவேற்றச் செய்ய வேண்டும். அந்த அடிப்படையிலிருந்துதான் அடுத்த நிலைக்குச் செல்லலாம். அதற்கு முதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடாத்த அழுத்தம் கொடுக்க வேண்டும். அது நடந்தால் மாகாண சபைகளை உபயோகித்து அரசியலமைப்பிலுள்ள முழு அதிகாரத்தையும் பெற வேண்டும்.

https://arangamnews.com/?p=12632

பிரித்தானிய பிரதமர் - சீன ஜனாதிபதி சந்திப்பு!

1 week 4 days ago

*பிரித்தானிய பிரதமர் - சீன ஜனாதிபதி சந்திப்பு!

--- --- ---

*பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒன்றுசேர முடியுமா?

--- --- ---

சீனா எந்த வகையில் வளர்ந்தாலும், வளர்ச்சி அநை்தாலும் ஏனைய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், (Xi Jinping) இன்று வியாழக்கிழமை பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை (Keir Starmer) சந்தித்த போது கூறினார்.

சீனத் தலைநகர் பீஜிங்கில் இச் சந்திப்பு இடம்பெற்றது.

டொனால்ட் ட்ரம்ப்பின் சர்வதேசச் சட்டங்களை மீறிய நகர்வுகளின் பின்னர், முதற் தடவையாக இச் சந்திப்பு இடம்பெற்றிருக்கிறது.

அமைதியான வளர்ச்சிக்கு உரிய உறுதிப்பாட்டை வலியுறுத்திய ஜி ஜின்பிங், சீனா ஒருபோதும் போரைத் திணிக்காது என்றும் எடுத்துரைத்தார்.

வெளிநாட்டுகளில் ஒரு அங்குல நிலத்தை, சீனா ஆக்கிரமிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

“ட்ரம்பின் செயற்பாடுகளினால், ஐரோப்பிய நாடுகளை நோக்கி. சீனா நேசக் கரம் நீட்டுகிறது” என்று, நான் சென்ற 18 ஆம் திகதி யாழ் உதயன் சஞ்சீவி ஞாயிறு வார இதழில் எழுதிய கட்டுரையை இச் சந்திப்பு நியாயப்படுத்துகிறது.

ஆனால், பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒன்று சேர முடியுமா?

இருந்தாலும், ட்ரம்பின் தன்னிச்சையான முடிவுகள், சிலவேளை, பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் விரும்பியோ விரும்பாமலோ குறிபிட்ட சில காலத்துக்கேனும், ஒன்று சேரும் வாய்ப்புகள் இல்லாமில்லை.

இப் பின்னணியிலேதான், இந்தியா அவசர அவசரமாக இலங்கையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முழு முயற்சி எடுக்கிறது.

இது பற்றியும் சென்ற ஞாயிற்றுக்கிழமை எனது கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது...

இது பற்றிய மேலும் விளக்கங்கள், எனது அடுத்த புவிசார் அரசியல் கட்டுரைகளில் வெளிவரும்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கட்சிகளிடையேயான மோதல், கட்சியின் உள்ளக மோதல், தற்போதைய புவிசார் அரசியல் சூழலில், ஆரோக்கியமானது அல்ல.

சுமந்திரன், சிறீதரன் -- சுமந்திரன், கஜேந்திரகுமார் இது பற்றி உணரத் தலைப்பட வேண்டும்...

கட்சி வேறுபாடுகள் இருந்தாலும், அரசியல் தீர்வு விடயத்தில், ஈழத்தமிழர்களாக ஒரு புள்ளியில் நிற்க வேண்டிய காலமிது...

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

https://www.facebook.com/1457391262/posts/pfbid02PbTsURNBj7iXkcMRzMcuyFbE7Ltn9hFpmJUkefWUiP4KKk4578A1SE3pEMbMVAXXl/?

கிழக்கும் கவனிக்கப்பட வேண்டும்

1 week 4 days ago

கிழக்கும் கவனிக்கப்பட வேண்டும்

மொஹமட் பாதுஷா

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வளங்களில் வெளிநாடுகள் கண்வைக்கத் தொடங்கி நெடுங்காலமாயிற்று. இதற்கிடையில் வடக்கில் இதற்கு மக்களின் எதிர்ப்புக்கள் கிளம்பியிருக்கின்றன. அல்லது மக்கள் மிகக் கவனமாக ஒவ்வொரு நகர்வையும் உற்றுநோக்கி வருகின்றனர்.

கிழக்கில் உள்ள திருகோணமலை துறைமுகம், எண்ணெய்க் குதங்கள், சுற்றுலா சார் வளங்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் குறி மேலோங்கியிருப்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம் தான். ஆனால் மக்கள் பெரிதாக இதில் அக்கறை கொண்டாக தெரியவில்லை.

இந்தப் பின்னணியில் வடக்கு போன்ற சில மாகாணங்களுக்கு கொடுக்கப்படுகின்ற அளவுக்கு முக்கியத்துவம் கிழக்கிற்குக் கொடுக்கப்படுகின்றதா என்பது ஒரு ஐயப்பாடாக உள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டன. ஒப்பீட்டளவில் வட மாகாணத்திலேயே இந்த பாதிப்பு அதிகமுள்ளது. தமிழ் அரசியல்வாதிகள்; வருடக் கணக்காக உரிமை பற்றியே பேசி வருகின்ற ஒரு பின்புலத்தில் வடக்கின் பல பகுதிகளில் வாழ்வாதார உதவிகள் தேவையான மக்கள் இன்றும் இருக்கின்றார்கள். 

கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகள் சற்று முன்கூட்டி இடம்பெற்றமையால் மக்கள் வாழ்வில் சில முன்னேற்றங்கள் இருந்தாலும் அபிவிருத்திகள், நலனோம்பு திட்டங்களில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் இருக்கவே செய்கின்றார்கள்.

இந்த விடயத்தில், வடக்கையும் கிழக்கையும் விட மலையக தோட்டப்புற மக்கள்தான் அதிகமாகப் பின்தங்கிய நிலையில் இருக்கின்றனர்.

சுனாமி அனர்த்தத்திற்குப் பிறகு கிழக்கு மாகாணத்திற்குப் பல அபிவிருத்தித் திட்டங்கள் வந்தன. கிழக்கு விடுக்கப்பட்ட பிறகு அதாவது 2007ஆம் ஆண்டிலிருந்து இது இன்னுமொரு பரிமாணத்தை எடுத்தது. ஆனால், ஒப்பீட்டளவில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகக் கிழக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை எந்த அரசாங்கமும் முன்னெடுக்கவில்லை.

வீதிகள், கட்டிடங்கள் அமைக்கப்பட்டாலும் நீண்டகால நோக்கிலான செயற்றிட்டங்கள், சமூகத்திற்குப் பரவலாகப் பயன்படக் கூடிய பாரிய முதலீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது குறைவாகும்.

அரசாங்கங்களுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இதோ இந்தப் பிரதேசத்தை துணையாக, சிங்கப்பூராக மாற்றப் போகின்றோம் என்று வாயால் வடை சுட்டுக் கொண்டு காலத்தைக் கடத்தினார்களே தவிர, கிழக்கில் இரு முஸ்லிம் அரசியல்வாதிகளைத் தவிர, மற்ற யாருமே குறிப்பிடத்தக்க அபிவிருத்திகளைக் கொண்டு வரவில்லை.

சமகாலத்தில், தமிழ் அரசியல்வாதிகள் வடக்கைப் போல, கிழக்கிலும் உரிமை அரசியலையும் அபிவிருத்தி அரசியலையும் சமாந்திரமாக முன்கொண்டு செல்வதற்குத் தவறி விட்டனர். அபிவிருத்தி திட்டங்களுக்கான அழுத்தங்களையாவது அவர்கள் கொடுக்காமல் விட்டதால் அவர்கள் ஊடாக அபிவிருத்திகள் பெரியளவில் கிழக்கிற்கு வந்து சேரவில்லை எனலாம்.

இப்போது, நிலைமைகள் சற்று மாறி வருகின்றது. புதிய அரசாங்கம் எல்லா மக்களுக்கும் அபிவிருத்தியை சமமாகப் பகிர்ந்து கொடுப்பதற்கு முயற்சிகளை எடுக்கின்றது. இருப்பினும், ஒரு காலத்தில் கிழக்கிற்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இப்போது கொடுக்கப்படுவதில்லையா என்ற சந்தேகம்  எழவே செய்கின்றது.

ஆனால், வேறு அரசியல் மற்றும் பரப்புரை சார் காரணங்களுக்காக வட மாகாணத்திற்கு இப்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதான ஒரு தோற்றப்பாடு, பிம்பம் கட்டியெழுப்பப்படுகின்றதா? என்றும் அந்த விடயத்தில் கிழக்கு இரண்டாம் பட்சமாக நோக்கப்படுகின்றதா? என்பதும் ஒரு சாதாரண பொது மகனுக்கு எழுகின்ற சந்தேகமாகும்.

தமிழ் மக்களை அரவணைக்க வேண்டிய தேவையும் அதனூடாக சர்வதேச சமூகத்தை ஆசுவாசப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் கடந்த அரசாங்கங்களுக்கு இருந்தது. 13ஆவது திருத்தம், வடக்கு, கிழக்கு இணைப்பு, மாகாண சபைத் தேர்தல், அதிகாரப் பகிர்வு என்றெல்லாம் ஒரு படத்தை ஓட்டிக் கொண்டு இருந்தார்கள். அந்த நிர்ப்பந்தம் இந்த அரசாங்கத்திற்கும் ஏற்பட்டிருப்பது யதார்த்தமானதே.

இந்தப் பின்னணியில் ஒரு அவதானிப்பு இருக்கின்றது. அதாவது, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போதும், தற்போது, அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக இருக்கின்ற போதும், வடக்கிற்கான விஜயங்கள் கிழக்கிற்கான விஜயங்களைவ  விட அதிகமாக இடம்பெற்றதை, இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.

அரசுக்கு எதிரான தமிழ்த் தரப்பின் அழுத்தத்தைக் குறைப்பது, இந்தியாவைக் கையாள்வது, தமிழ் மக்களை மனம் குளிரச் செய்வது என்பது உள்ளிட்ட காரணங்களுக்காக, ஒரு மாகாணத்திற்கு முக்கியத்துவம், அந்த நிர்ப்பந்தம் இல்லாத மாகாணத்திற்கு வேறு ஒரு அணுகுமுறையும் பின்பற்றப்படுகின்றதா என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது.

வடக்கிற்கு அபிவிருத்தி செய்தால் எமக்கும் தர வேண்டும் என்று பொறாமைக் கண்ணுடன் கிழக்கு மக்கள் கேட்கின்றார்கள் என்று இதனைத் தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது.

கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் அதிக அபிவிருத்திகள் இடம்பெற்றபோது, நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள மக்கள் எங்களுக்குத் தாருங்கள் என்று போராட்டம் நடத்தவில்லை. கிழக்கில் அபிவிருத்திகள் பெருவீச்சில் இடம்பெற்றபோது, வடக்கு, மலையக மக்கள் அதனைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்களே தவிர, விமர்சிக்கவில்லை.

எனவே, இப்போது வட மாகாணத்திற்கோ அல்லது நாட்டின் வேறு பகுதிகளுக்கோ அதிக கவனம் செலுத்தப்படுவது கிழக்கு போன்ற ஏனைய பகுதிகளில் உள்ள மக்களுக்கு சந்தோசமான செய்திதான். ஆனால், அதே கவனம் தங்கள் மீது ஏன் செலுத்தப்படவில்லை என்று அவர்களது மனக் கிடக்கை நியாயமானதுதானே.?!

வடக்கில் தமிழ் மக்கள் பெருமளவுக்கு வாழ்கின்றனர். அங்கு நடக்கின்ற விடயங்கள் சர்வதேச முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே, இதில் மக்கள் சேவைக்கு அப்பால் ஆளும் கட்சிக்கு ஒரு அரசியலும் இருக்கின்றது எனலாம். கிழக்கில் நிலைமைகள் வேறு மாதிரி உள்ளன.

கிழக்கு மாகாணம் முஸ்லிம் பெரும்பான்மை மாகாணமாகும். முஸ்லிம்களுக்கு அடுத்தபடியாக தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அதுமட்டுமன்றி, சிங்களவர்களும் கணிசமாக உள்ளனர்.

எனவே, வடக்கில் செய்கின்ற அரசியலைக் கிழக்கில் அதே பாணியில் செய்ய முடியாத ஒரு சிக்கல் கடந்த அரசாங்கங்களுக்கும் ஏற்பட்டிருந்தது. அந்த நிலையிலேயே என்.பி.பி. அரசாங்கமும் இருப்பதாக கருதுவதற்கு இடமுள்ளது.

எது எப்படியாயினும், நாட்டின் எல்லாப் பாகங்களுக்கும் அபிவிருத்திகள் சரியாக பகிரப்படப்பட வேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் என்ற வகையில் வடக்கும், கிழக்கும் இரு கண்கள் போன்று பார்க்கப்பட வேண்டும்.

கிழக்கிற்கும் அபிவிருத்திகள், அரச அலுவலகங்கள் வர வேண்டும். பாரிய செயற்றிட்டங்கள், முதலீடுகள் கொண்டு வரப்பட வேண்டும். வடக்கைப் போல, கிழக்கிற்கும் அரச தலைவர்கள், அமைச்சர்கள் அடிக்கடி விஜயம் செய்து மக்களைச் சந்திக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த பல வருடங்களாக அபிவிருத்தியில் பாரிய தேக்க நிலை ஒன்று உருவாகியுள்ளது. மக்களின் காணி உள்ளிட்ட பல பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. மேலே குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் வடக்கிற்குக் கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் கிழக்கு மாகாணத்திற்குக் கொடுக்கப்படுவதாக ஆறுதல் கொள்ள முடியாத நிலைமைகளே உள்ளன.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் சுமார் 75,000 ஏக்கர் காணிகளின் பிரச்சினைகள் உள்ளன. அவ்வாறே தமிழ், சிங்கள மக்களுக்கும் காணிப் பிணக்குகள் உள்ளன. கிழக்கைச் சேர்ந்த இலட்சக்கணக்கான இளைஞர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். பல நூறுபேர் ஒவ்வொரு வாரமும் கடவுச்சீட்டு எடுப்பதற்காக நெடுந்தூரம் செய்கின்றனர். அப்படியிருந்தும் ஏன் கிழக்கில் ஒரு அலுவலகமாவது இதுவரை திறக்கப்படவில்லை?

கிழக்கு மாகாணத்திலும் எதிர்காலத்தில் சர்வதேச விளையாட்டு மைதானம் நிறுவப்படுவதுடன் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை உருவாக்கக் கூடிய முதலீட்டுத் திட்டங்களும் தொழில்பேட்டைகளும் உருவாக்கப்பட வேண்டிய தேவையுள்ளது.

பெரிய கனவுகளோடும் பெரும் பொருட்செலவிலும் அமைக்கப்பட்ட ஒலுவில் துறைமுகம் அதன்மூலம் எதிர்பார்க்கப்பட்ட பலனில் கால்வாசியைக் கூட பெற்றுத் தரவில்லை. கிட்டத்தட்ட ஒன்றுக்கும் உதவாத ஒரு செயற்றிட்டமாக மாறிக் கொண்டிருக்கின்றது. எனவே, ஏனைய துறைமுகங்களை மேம்படுத்துவது போல, அனுர அரசாங்கம் ஒலுவில் துறைமுகத்தையும் கண்கொண்டு பார்க்க வேண்டியுள்ளது.

திருகோணமலை துறைமுகத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் இந்தியா போன்ற வெளிநாடுகளின் செல்வாக்கை அதிகரிக்க விடாமல் தடுப்பதுடன், நமது மக்களுக்கும் நாட்டுக்கும் பயன்தரக் கூடிய விதத்தில் இத்துறைமுகமும் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

வாழைச்சேனை காகித ஆலை, இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலை, ஹிங்குரான சீனித் தொழிற்சாலை மற்றும் ஆடைத் தொழிற்சாலைகள் என கிழக்கில் பல தொழிற்சாலைகள் ஒன்றில் மூடப்பட்டுள்ளன அல்லது தூர்ந்து போயுள்ளன. இவற்றை மறுசீரமைக்கவும் இதுபோன்ற திட்டங்களைக் கிழக்கிலும் அமுல்படுத்தவும் வேண்டிய கடப்பாட்டைச் சமத்துவம் பேசும் என்.பி.பி. அரசு கொண்டுள்ளது.

கிழக்கிற்கான புகையிரத பாதையை பொத்துவில் வரைக்கும் விஸ்தரிப்பதற்கான செயற்றிட்டத்தை அனுர அரசு மேற்கொள்ளுமாயின், அம்பாறை மாவட்ட மக்கள் அளித்த வாக்கின் பலனை அடுத்த தலைமுறையிலும் உணர்வார்கள். இன்று நாட்டில் எத்தனையோ அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன. இவற்றைக் கணிசமான வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், வடக்கு அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அதன் முதற்கட்டம் முடிவடைந்து விட்டது.

ஆனால், பெயருக்காவது கிழக்கு நெடுஞ்சாலை அபிவிருத்தித் திட்டம் என்ற ஒன்றை அரசாங்கம் பிரகடனப்படுத்தவில்லை. எனவே கிழக்கில் உள்ள மக்கள் சுமார் 200 கிலோ மீற்றர் பயணித்தே குருணாகல் அல்லது மாத்தறை நெடுஞ்சாலையில் ஏற வேண்டியிருக்கின்றது. கிழக்கு மக்களுக்கும் இதன் தேவைப்பாடு உள்ளது என்பதை இந்த அரசாங்கமாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

தங்களுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமெனக் கிழக்கு மக்கள் கருதுவது நியாயமில்லை என்று எந்த நியாயவாதியாவது கூற முடியுமா?

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கிழக்கும்-கவனிக்கப்பட-வேண்டும்/91-371643

தமிழ் இனப்படுகொலை பற்றிய ஓர் ஆவணப்படம் | French

1 week 5 days ago

புலம்பெயர் வாழ் இளந்தலைமுறையினரின் முயற்சியால் வெளிவந்துள்ள ஓர் ஆவணப்படம். ஆதரவளிப்பீர்!

வெறுமனே பாராட்டாமல், நல்ல உருப்படியான கருத்துக்கள் இடுங்கள். அப்போது தான் பலரைச் சென்றடையும்.

The Tamil Genocide that no one talks about

வெளிநாட்டில் வாழுவோரும் வாக்களிக்க முடியும்!

1 week 6 days ago

அமைச்சரவைத் தீர்மானம்.

வெளிநாட்டில் வாழுவோரும் வாக்களிக்க முடியும்!

--- --- ---

*வாக்களிக்கத் தகுதியானோர் பற்றிய விபரங்கள் தெளிவில்லை...

*ஐரோப்பிய, மேற்கு நாடுகளில் வாழ்வோர் வாக்களிக்க முடியுமா?

*மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிவோர் மாத்திரமா?

*முடிவுத் திகதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் அனுப்பிய கடிதம்...

-- -- ---

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு, தேர்தல் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்வது தொடர்பாக. 23 /09 /2025 இல் இடம்பெற்ற அமைச்சவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

நடவடிக்கை குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் --

26/1 என்று மாத்திரம் குறிப்பிட்டு திகதியிடப்படாமல், ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் கடிதத்தை குறித்த குழு அனுப்பியுள்ளது.

அதாவது --

தங்கள் பிரதேசங்களில் இருந்து, வெளிநாடுகளில் வாழ்வோர் பற்றிய விபரங்களை வழங்கமாறு கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. முடிவுத் திகதி ஜனவரி 31

ஆனால் --

இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை கூட்டம் முடிவடைந்து, இரண்டரை மாதங்களின் பின்னர் அதுவும், முடிவுத் திகதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் தான், கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் கடிதங்களை குறித்த குழு அனுப்பியிருக்கிறது.

கோரப்பட்டுள்ள நான்கு அம்சங்களும் வருமாறு ---

1) வெளிநாடுகளில் இருக்கிற தேருநர்களை தேர்தல் இடாப்பில் பதிவு செய்தல்.

2) தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்.

3) வாக்களித்தல்

4) வாக்கெண்ணுதல்.

என்ற நான்கு அம்சங்கள் பற்றியும் கட்சிகளின் கருத்துகள் குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளன.

ஆனால், கடிதத்தில் கோராப்பட்டுள்ள முதலாவது அம்சம் தொடர்பாக கேள்விகள் எழுகின்றன.

A) “வெளிநாடுகளில் வாழ்வோர்” என்றால், ஐரோப்பிய மற்றும் மேற்கு நாடுகளில், இலங்கைக் கடவுச் சீட்டுடன் வாழ்வோரும் உள்ளடக்கமா?

B) அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பெண்கள் மற்றும் பொறியியலாளர்கள், போன்ற உத்தியோகஸ்த்தர்களாக பணிபுரியும் இலங்கையர்கள் மாத்திரம் வெளிநாடுகளில் வாழ்வோர் என்று அர்த்தப்படுத்தப்படுகிறதா?

ஆகவே --

இந்த விடயங்கள் செயலாளர்களுககு அனுப்பியுள்ள கடிதத்தில் விபரமாக இல்லை.

அதாவது வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வாக்களிக்க முடியும் என்ற அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானம் விளக்கமாக கடிதத்தில் இல்லை.

இவை பற்றி தமிழ்த்தேசியக் கட்சிகள் உள்ளிட்ட வேறு எந்தவொரு சிங்களக் கட்சியும் இதுவரை விளக்கம் கோரவுமில்லை.

குறிப்பாக --

வடக்கு கிழக்கு தமிழர்கள் அதுவும் யாழ்ப்பாண தமிழர்கள் பலர், ஐரோப்பிய, ஸ்கண்டிநேவிய மற்றும் மேற்கு நாடுகளில், இலங்கைக் கடவுச்சீட்டுடன் வாழ்கின்றனர். வேறு சிலருக்கு இரட்டைப் பிரஜாவுரிமையும் உண்டு...

ஆகவே, வாக்களிக்கத் தகுதியான வெளிநாட்டவர்கள் யார் என்பது பற்றி விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சு அல்லது வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு தெளிவுபடுத்த வேண்டும்.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

https://www.facebook.com/1457391262/posts/pfbid0sy9i7wSuEkL3QrrHoM3vE75bMhAMhLtm8YvAKXu4e8zTumtqAe3YfC3PQ33c9b2cl/?

வெறுப்புணர்வின் வெளிப்பாடு

1 week 6 days ago

வெறுப்புணர்வின் வெளிப்பாடு

லக்ஸ்மன்

அனுராதபுரம் ஸ்ரீ மகா போதியைக் கடந்து வழிபாட்டிற்காக யாழ்ப்பாணத்திற்கு வருவது 'வெறுப்பு' காரணமாகவே, ஒவ்வொரு 'போயா' தினத்திலும் யாழ்ப்பாணத்தின் ஓரிடத்தில் கூடிக் காணி கேட்டுப் போராடுவதும் வெறுப்புணர்வினாலேயே, இவ்வாறு போராடுபவர்களுக்கு அந்த இடத்தில் உண்மையில் காணிகள் இருக்கிறதா என்று ஆராயுமாறு புலனாய்வுப் பிரிவினருக்குத் பணிப்புரை விடுத்துள்ளேன் என்று ஜனாதிபதி அனுர யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தார். இதிலுள்ள மூன்று விடயத்தையும் ஒன்றாகவும் பார்க்கலாம். வெவ்வேறாகவும் விளக்கத்துக்குட்படுத்தலாம். ஆனால் இது தையிட்டி விகாரையை மையப்படுத்தியதாக மட்டுமே நகர்த்தப்பட்டு வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கொழும்பில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவைத் தவிர்த்து வடமாகாண பொங்கல் விழாவுக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்தமை பெரும் விமர்சனத்துக்குரியதாக இருந்தது.  அங்கு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய வெறுப்புணர்வு தொடர்பான விடயம்  நாட்டில் களேபரமாக மாறி வருகிறது. பௌத்தமே முதன்மையான நாட்டில், விகாரைகளுக்கு வழிபாட்டிற்காக  வருகை தரும் பௌத்தர்கள் மனதில் குரோத்துடன்  வருகிறார்கள் என்ற கருத்துப்பட பேசியிருந்தார். அவர் இந்தக் கருத்தை வாபஸ் பெறுவாரா? இல்லையா? என்பது ஒருபுறம் இருக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர்  உட்பட பல அரசியல் தலைவர்களும் ஜனாதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் நிலை உருவாகி வருவதனை அவதானிக்க முடிகிறது. ஆனால்,ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது மாத்திரம் வெளிப்படை. அதேநேரத்தில், அவருடைய கருத்துக்கு ஆதரவான கருத்துக்களும் வெளிவராமலில்லை. அது அவர்களுடைய அரசியலாகவும் இருக்கலாம்.

ஆனால், பௌத்தம் என்பது மனித குலத்துக்கு, அதன் வாழ்வியலுக்குத் தேவையான பல்வேறு நல்ல விடயங்களைக் கற்பிக்கின்ற ஒருமார்க்கம் என்ற அடிப்படையில் ஜனாதிபதி தனது கருத்தை முன்வைத்திருக்கலாம் என்ற அளவீட்டில் கடந்து போய்விட யாரும் தயாரில்லாத நிலை காணப்படுகிறது. இது மிக மோசமானதே.

இலங்கையின் கடந்த கால  வரலாறு ஜே.வி.பியின் இரண்டு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளுக்கும். தமிழ் மக்களின்  சுய நிர்ணயப் போராட்டத்துக்கும் உட்பட்டிருக்கிறது. ஜே.வி.பி. தமது போராட்டத்தில் தோற்று, மண்டியிட்டு தற்போது அரசியல் ரீதியாக நாட்டைக் கைப்பற்றியிருக்கிறது. அதே நேரத்தில், தமிழ் மக்களின் ஆயுத ரீதியான போராட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையுடன் அரசியல் ரீதியான போராட்டம் தொடர்ந்த வண்ணமிருக்கிறது. இந்த நிலையில் ஜே.வி.பி. தலைமையில் நடைபெறுகின்ற தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் தலைவரான ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளியிடும் கருத்துக்கள் அரசாங்கத்தின் கருத்துக்களே என்ற வகையில் யாழ்ப்பாணத்தில் அவர் வெளியிட்ட கருத்தும் அரசின் கருத்தே என்பது மாத்திரம் உறுதியானது. அந்த வகையில்தான், ஜனாதிபதிக்கு எதிரான கருத்துக்கள் வெளியாவது, அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கும்படி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்வதும் நடைபெற்று வருகின்றன.

நாட்டில் நடைபெற்ற 'அரகலய' போராட்டம் ஒரு ஜனாதிபதியைப் பதவியிலிருந்து தப்பியோட வைத்திருந்தது. அதன்பின்னர் இலங்கை வரலாற்றில் நடைபெறாத பாராளுமன்றத் தெரிவுமூலம் நாட்டுக்கு ஜனாதிபதி ஒருவர் தெரிவானார்.

பின்னர் யாரும் எதிர்பார்த்திராத வகையில் பெரும்பான்மை தேசியக் கட்சிகளை மேவியவகையில் ஜனாதிபதியாக ஜே.வி.பியின் தலைவரான அனுரகுமார திசாநாயக்க தெரிவானார். அவர் பெரும்பான்மையற்ற வகையில் தெரிவானார் என்பது வேறுகதை. அதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சியே பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்திருக்கிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம், புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம். ஊழலற்ற நாட்டை உருவாக்குவோம். போதையற்ற நாட்டை எதிர்கால சந்ததிகளிடம் கையளிப்போம் என பல கோசங்களுடன் ஆட்சியைப் பொறுப்பேற்ற தேசிய மக்கள் சக்தி ஒருவருடத்தைக் கடந்த ஆட்சியில் சற்றுத் தீவிரமாகச் செயற்படுவதாகவே மக்கள் உணரத் தொடங்கியிருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அதிகாலையில் எழுந்து யாழ்ப்பாணத்தின் பிரதான வீதியில் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டார். சாதாரண மக்களுடன் உரையாடினார். இவையெல்லாம் சாதாரணமான செயற்பாடுகளாகப் போயின. அங்கு அவர் பேசிய பேச்சு விமர்சனத்துக்குள்ளானது. உண்மையில் ஜே.வி.பியின் செயற்பாடுகள்  விமர்சிப்பதற்கும், ஆராய்வதற்கும் ஏற்ற வகையில் இருந்தாலும், சற்று வித்தியாசமுடனேயே இருக்கிறது என்று மக்கள் சிந்திக்கின்றனர். இருந்த போதிலும், ஏற்கெனவே அமைச்சுப் பொறுப்புக்களுடன் சிறிது காலம் இருந்த அனுபவம் உள்ளதாக ஜே.வி.பி. இருந்தாலும்,  தற்போதைய ஆட்சி சற்று வித்தியாசமானது என்பதனை அவர்கள் மறந்து விடுகிறார்களாக என்று எண்ணத் தோன்றுகிறது.

அந்த ஒழுங்கில்தான், பௌத்தத்தை முதன்மைப்படுத்தியதான நாட்டில் ஜனாதிபதியும், அரசாங்கமும் அதனை அவமதிக்கிறது என்ற அரசியல் தரப்பினரது முன்வைப்புக்கள் தவறல்ல. ஆனால், இனவாதமற்ற, மத வாதமற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கம் கொண்ட இந்த அரசாங்கத்தின் செயற்பாட்டில் இந்த விமர்சனங்கள் பட்டை தீட்டலாக அமையக்கூடும். ஆனால்,  வங்குரோத்தாகியிருந்த நாட்டை, ஆட்சிக்கு வந்தவுடன்  ஜனாதிபதி மீட்டெடுத்துவிட்டார் என்று கூறுமளவிற்கு நாடு மீட்சி பெறவில்லை என்பது மாத்திரம் உண்மை.

காங்கேசன்துறை தையிட்டி திஸ்ஸ விஹாரைப் பிரச்சினை இன்னமும் முடிவுக்கு வரவில்லை. திருகோணமலையில் விகாரை அமைக்க முயன்ற பிக்குகள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் தொல்பொருள் தரப்பினர் தமது அடையாளங்களை நிறுவி வருகின்றனர். அது பிரச்சினையாகிக் கொண்டும் இருக்கிறது. தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் இப்போது தொடங்கியதல்ல. இது கடந்த ஆட்சிக்காலத்திலேயே தொடங்கி விட்டது. தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிக்குள் அடாத்தாக அமைக்கப்பட்டதே அந்த விகாரை என்பது அம் மக்களது போராட்டம். அதேபோன்று, தொல்பொருள் சின்னங்கள் நிறுவுதலும் நாட்டின் அடிப்படைச் சட்டத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது. பல்வேறு இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டதும் கடந்த ஆட்சிக் காலங்களிலேயே ஆகும். இருந்தாலும் பிரச்சினைகள் இந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்த இடத்தில்தான், வடக்கு கிழக்கில் பௌத்தத்தை நிலைநாட்டத் துடிக்கும் பிக்குகளினதும் பௌத்த மதவாதச் சிந்தனையும் தமிழ் மக்களது விடயத்துக்குள் உரசிக் கொள்கின்றன என்று கூறலாம். திஸ்ஸ விஹாரை என்பது கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம் வரை செல்லும் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு பௌத்த விகாரையாகும். தேவநாம்பியதிஸ்ஸ மன்னன் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த விகாரை, கனிஷ்டதிஸ்ஸ, வோஹாரிகதிஸ்ஸ போன்ற மன்னர்களால் அபிவிருத்தி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொன்மை வாய்ந்த புனிதத்தலம் வடக்கின் யுத்த காலத்தில் பாழடைந்து போனது என்ற நிலைமையொன்று உருவாகிறது.

இந்த விகாரை யுத்தக் காலத்திற்கு முன்னர் செயற்பாட்டில் இருந்ததா? என்ற கேள்வியும் இருக்கிறது. இருந்தாலும். இதற்கென ஒதுக்கப்பட்ட நிலம் ஒன்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திஸ்ஸ விஹாரைக்குச் சொந்தமான காணி தொடர்பான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் நாகதீப விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய நவந்தகல பதுமகித்தி ஹிமி தெரிவித்திருக்கிறார். ஆனால், அவரே தற்போது வாகாரை அமைந்திருக்கும் இடம் அதற்குரிய இடமல்ல என்றும் கூறியிருக்கிறார்.

எவ்வாறானாலும், போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன திஸ்ஸ விகாரை விவகாரம் அரசாங்கத்தால் சுமுகமாகத் தீர்க்கப்பட்டேயாகவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றாலும், நாட்டில் பௌத்த மத்துக்கெதிராக ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருப்பதாக உருவாகியிருக்கும் பிரச்சினை திஸ்ஸ விகாரையால்தான் உருவானதென்று மட்டுப்படுத்திவிட முடியாது. இது காலங்காலமாக இருந்து வருவதேயாகும். அடிப்படையில் ஊட்டப்பட்டதாக இருக்கின்ற இந்த மனோநிலையை மாற்றியமைப்பதானது சிறு முயற்சியால் குறிப்பிட்ட காலத்தில் களைந்துவிடக்கூடியதல்ல என்பது உண்மையானதே.

இருந்தாலும், வடக்கைப் பிரதானமாக மையப்படுத்தியதாகவே நகரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியல் செயற்பாட்டில் வடக்கு மக்களின் மனங்களை வென்றால் தமிழ் மக்களின் மனங்களையும் வென்றுவிடலாம் என்பது ஒரு எடுகோளாகும். அந்தவகையில், நடைபெறும் ஒரு அரசியலாக ஜனாதிபதியின் இந்த பௌத்த்துக்கு எதிரான என்று சொல்கின்ற கருத்தையும் நாம் கடந்துவிட முயலவேண்டும்.

எவ்வாறானாலும், 2009இல் யுத்தம் முடிவடைந்த கையோடு இராணுவ முகாம் இருந்த காணியில் இராணுவத்தினரால் தையிட்டி  திஸ்ஸ விஹாரை கட்டப்பட்டது. பௌத்த பிக்கு ஒருவரை அழைத்து வந்து அங்கே தங்க வைக்க இராணுவம் நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கை தேசிய ரீதியில் முக்கியமானது. திஸ்ஸ விஹாரையை மீண்டும் நிறுவுவது இராணுவத்தின் ஒரு தேசியப் பணியே தவிர, அது ஒரு வெறுப்புணர்வுச் செயலல்ல என்ற சிந்தனை பெரும்பான்மை மக்களிடம் இருக்கையில்  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கருத்து அவருடைய அரசியலாலேயே முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும். இருந்தாலும் அந்தக் கருத்துக்கெதிராக உருவாகிவருகின்ற எதிர்ப்பலையானது வெறுப்புணர்வின் வெளிப்பாடென்றே முடிவுக்கு வரவும் வேண்டும். ஜனாதிபதி தனது கருத்தை வாபஸ் பெறுவாரா என்பதைப் பொறுத்தே அதற்கான முடிவும் கிடைக்கும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வெறுப்புணர்வின்-வெளிப்பாடு/91-371589

Checked
Mon, 02/09/2026 - 23:19
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed