அரசியல் அலசல்

வெனிசூலாவை ஆக்கிரமித்த அமெரிக்கா.. - எஸ்.வி.ராஜதுரை

3 days 12 hours ago

வெனிசூலாவை ஆக்கிரமித்த அமெரிக்கா.. -

எஸ்.வி.ராஜதுரை

4 Jan 2026, 11:48 AM

SVT-Top.jpg

1823இல், அப்போது அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த ஜேம்ஸ் மன்றோவின் அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த க்வென்ஸி என்பவரால் எழுதப்பட்டதும் அன்று முதல் இன்று வரை அந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் முக்கியக் கூறாக உள்ளதும்தான் ‘மன்றோ கொள்கை’ (Monroe Doctrine) எனக் கூறப்பட்டு வருகிறது.

அக்காலத்தில் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் காலனிகளாக இருந்த தென்னமெரிக்க நாடுகளில் நடந்த புரட்சிகரக் கொந்தளிப்புகளின் காரணமாக அவை தேசிய விடுதலை பெறும் நிலையில் இருந்தன. இருந்தபோதிலும் அமெரிக்காவின் மன்றோ கொள்கை இனி ‘புதிய உலகம்’ எனச் சொல்லப்படும் அமெரிக்கக் கண்டங்களில், குறிப்பாக இலத்தின் அமெரிக்கா எனச் சொல்லப்படும் தென்னமெரிக்காவிற்குள் – ஐரோப்பிய நாடுகள் இனி புதிய ஆக்கிரமிப்புகளைச் செய்யக்கூடாது என்றும், அதேவேளை ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் உள்விவகாரங்களிலோ அல்லது அவற்றிடம் எஞ்சியிருந்த இலத்தின் அமெரிக்கக் காலனி நாடுகளிலோ அமெரிக்கா தலையிடாது என்றும் மன்றோ கொள்கை கூறியது.

ஆனால், இலத்தின் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல, உலகிலுள்ள வேறு எந்த நாட்டிலும் அமெரிக்கா தலையிடாது என்ற வரம்பு மன்றோ கொள்கையில் சேர்க்கப்படவில்லை. எனவே அமெரிக்கா இலத்தின் நாடுகளில் மட்டுமின்றி உலகின் ஆறு கண்டங்களிலும் தலையிட்டுள்ளது. புவிக் கோளத்தில் குறைந்தபட்சம் பாதியளவு தனது உடைமையில் இருக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் குறிக்கோள்.

இலத்தின் அமெரிக்க நாடுகளைத் தன் புழக்கடையாகக் கருதும் அமெரிக்கா தன்  நலனுக்குப் புறம்பாக நடந்து கொள்ளும் நாடுகளை ஆக்கிரமித்தோ அல்லது அந்த நாடுகளில், தனது உளவுத் துறை மூலமாகவோ ‘எதிர்க் கட்சிகளை’ உருவாக்கி ஆட்சிக் கலைப்பு செய்தோ தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது. உலக நாடுகளில் பிரதிநிதி என்று சொல்லப்படும் ஐ.நா.வின் விதிகளையும் சர்வதேசச் சட்டங்களையும் துச்சமெனக் கருதும் அமெரிக்கா, 2000த்தில் தொடங்கிய புத்தாயிரமாண்டில் மட்டும் லிபியா, சிரியா, இராக், பாலஸ்தீனம் முதலிய நாடுகளில் நேரடியாக இராணுவத் தலையீடு செய்துள்ளது. அண்மையில் வங்கதேசத்திலும் நேப்பாளத்திலும் நடந்த ”இளந்தலைமுறையினரின் புரட்சிகளி”லும் அமெரிக்காவின் கை உள்ளதாகச் சொல்லப்படுகின்றது.

ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கக் கண்ட விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற மன்றோ கொள்கையைக் காட்டி, 1950களில் குவாதமாலா நாட்டிற்கும் 1960களில் கியூபாவிற்கும் சோவியத் யூனியன் செய்த பொருளாதார உதவிகளையும்கூட அந்த நாடுகளின் உள்விவகாரங்களில் செய்யப்பட்ட தலையீடு என்று அமெரிக்கா கூறியது.1960 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா,  கியூபாவுடன் எந்த நாடும் வணிகம் செய்யக்கூடாது என்ற தடை விதித்து, அந்த நாட்டின் பொருளாதாரத்தை முடக்கியுள்ளது.

இலத்தின் அமெரிக்க நாடுகள் ஏதும் சோசலிசத்தை மட்டுமல்ல சுயேச்சையான, இறையாண்மையுள்ள பொருளாதாரத்தை உருவாக்குவதைக்கூட அமெரிக்காவால் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே நேரடியாகவும் மறைமுகமாகவும் எந்த நாட்டின் மீதும் இராணுவத் தலையீடு செய்யும் திமிர் அமெரிக்காவிற்கு இருந்து வருகிறது. அணு உலைகள் தொடர்பான சர்வதேச அமைப்பின் கண்காணிப்புக்கு ஈரான் உடன்படவில்லை என்று கூறியும் உலக எஜமானனாகத் தன்னைப் பாவித்தும் சிலமாதங்களுக்கு முன் அமெரிக்க இராணுவ விமானங்கள் ஈரானின் அணு உலைகள் இருந்த இடத்தின் மீது குண்டு மாரி பொழிந்துவிட்டுச் சென்றன. அந்த நடவடிக்கையில் அமெரிக்காவின் கூட்டாளியாக இருந்த இஸ்ரேலுக்கு தக்க பாடம் புகுத்தியது ஈரான். தற்போது ஈரானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக அந்த நாட்டின் அரசை எதிர்த்து வன்முறைக் கிளர்ச்சிகளை நடத்துபவர்கள் மீது ஈரானிய அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்தால் அமெரிக்கா அந்த நாட்டில் தலையிடும் என்று இரண்டு நாள்களுக்கு முன் ட்ரம்ப் விடுத்த அறிக்கைக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளது அந்த நாட்டு அரசாங்கம்.

SVR-1-1024x850.jpg

1998முதல் 2013 வரை வெனிசூலாவின் குடியரசுத் தலைவராக இருந்த ஹ்யூகோ சாவெஸ், அந்த நாட்டை சோசலிசப் பாதையில் கொண்டு சென்றார். அவரது ஆட்சிக் காலத்தின்போது அமெரிக்கா தன் உளவுப் படைகள் மூலமும் அங்குள்ள அரசியல் கைக்கூலிகள் மூலமும் சாவெஸ் அரசாங்கத்தைக் கவிழ்க்கப் பல முயற்சிகளைச் செய்தது. சாவெஸ் இறந்த பிறகு அவரது அரசியல் வாரிசான நிக்கோலா மதுரோ ஆட்சிக்கு வந்த நாள் முதல் அமெரிக்கா கடும் பொருளாதாரத் தடைகளை விதித்து அந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரம் சீர்குலையும்படி செய்து வந்தது. உலகிலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடு வெனிசூலா. அந்த வளத்தைக் கொள்ளையடித்து வந்த பன்னாட்டு முதலாளிய நிறுவனங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தன வெனிசூலாவின் சாவெஸ், மதுரோ அரசாங்கங்கள்.

ட்ரம்ப் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக பதவியேற்ற முதல், வெனிசூலா அரசாங்கம் போதைப் பொருள்களை அமெரிக்காவுக்குக் கடத்திச் செல்லும் கும்பல்களுக்கு ஆதரவளிப்பதாகத் தொடர்ந்து பிரசாரம் செய்துவந்தார். அது உண்மைதான் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும்கூட, உலகில் மிக சக்தி வாய்ந்த நாடாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் அமெரிக்கா போதைப் பொருள்கள் தன் நாட்டிற்குள் நுழைவதைத் தடுத்திருக்க வேண்டுமல்லவா?

SVR-2-779x1024.jpg

மேற்சொன்ன பிரசாரத்துடன், இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிராக மக்களில் ஒரு பகுதியினரைத் திரட்டிக் கொண்டு வந்துள்ளவருமான மரியா கொரினா மச்சோடோ போன்றவர்கள் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நாட்டில் கலவரச் சூழ்நிலையை ஏற்படுத்தி வந்தது ட்ரம்ப் அரசாங்கம். மேலும், அங்கு கூலிப் படைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

SVR-4.jpg

இலத்தின் அமெரிக்க நாடுகளில் தனக்குப் பிடிக்காத அரசாங்கங்களை எண்ணற்ற முறை கவிழ்க்கவும் தேவைப்பட்டால் அந்த நாடுகளின் ஆட்சியாளர்களைக் கொல்லவும் தீர்மானித்து வந்த அமெரிக்க அரசாங்கத்தின் இராணுவம், தன் கைக்கூலி நாடுகளுடன் இணைந்து 1983இல் கரீபியன்கடல் பகுதியிலுள்ள சின்னஞ் சிறு தீவு நாடான கிரெனாடாவின் மீது படையெடுத்து அந்த நாட்டின் பிரதமர் மாரிஸ் பிஷப்பைக் கைது செய்து வீட்டுக் காவலில் வத்து பின்னர் கொலை செய்தது.

SVR-6.jpg

அமெரிக்க நேரப்படி 3.1.2026 அதிகாலையில் அமெரிக்க இராணுவ விமானங்கள் வெனிசூலாவின் தலைநகர காரகாஸ் மீதும் நாட்டின் பல பகுதிகள் மீது பரவலாகவும் குண்டுமாரி பொழிந்துள்ளன. வெனிசூலாவின் இராணுவத் தளங்கள், எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகள் ஆகியவற்றின் மீதே தாக்குதல் தொடுப்பதாக ட்ரம்ப் அரசாங்கம் கூறினாலும், மக்கள் வசிக்கும் இடங்களிலும் இராணுவத் தாக்குதலை நடத்தியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை இனிமேல்தான் தெரிய வரும். இது ஒருபுறமிருக்க வெனிசூலாவின் குடியரசுத் தலைவர் நிக்கோலா மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்து வேறு நாட்டுக்குக் கொண்டு சென்றுள்ளதாக ட்ரம்ப் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதைவிட அக்கிரமமான செயல் உலக அரசியலில் இருக்க முடியுமா?

மதுரோவும் அவரது மனைவியும் உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்கான சான்றை அமெரிக்கா தர வேண்டும் என்று வெனிசூலாவின்  துணைக் குடியரசுத் தலைவர் வற்புறுத்தியுள்ளார். அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சரோ, தனது நாடு எவருக்கும் பணிந்துவிடாது என்றும் அமெரிக்க இராணுவம் தங்கள் நாட்டிற்குள் நுழைந்தால் தக்க பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார். எத்தனை பிணக்குவியல்களை அந்த நாடு காணப் போகிறதோ? அமெரிக்க மக்களில் 35 விழுக்காட்டினர் மட்டுமே ட்ரம்புக்கு ஆதரவு கொடுத்துள்ளனர் என்றாலும் அமெரிக்காவின் மிகப் பெரும் பணக்காரர்களும், இராணுவமும், காவல் துறையும் ட்ரம்பிற்குப் பக்க பலமாக இருக்கின்றன.

SVR-9.jpg

வியட்நாம் போரின் போது அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக அந்த நாட்டுக் குடிமக்கள் கிளர்ந்தெழுந்தது போன்ற நிகழ்வுகள் இப்போதும் நடக்குமா? அல்லது ரஷியா, சீனா, ஈரான் போன்றவை வெனிசூலாவுக்கு ஆதரவாக அறிக்கையுடன் நிற்காது வேறுவகையில் உதவி செய்யுமா? காஸா விவகாரத்தில் நடந்து கொண்டது போல இந்திய அரசாங்கம் இப்போதும் மெளனம் காக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற தீய சக்தி ஒழிந்தால்தான் உலக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும்.

கட்டுரையாளர் குறிப்பு:

The Monroe Doctrine and American Occupations special story by SV Rajadurai

எஸ்.வி.ராஜதுரை – மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.

https://minnambalam.com/the-monroe-doctrine-and-american-occupations/

புத்தாண்டுத் தீர்மானம் - நிலாந்தன்

3 days 13 hours ago

புத்தாண்டுத் தீர்மானம் - நிலாந்தன்

610972412_33105061925775512_810575339534

ஒரு புதிய ஆண்டு எப்படி அமையக்கூடும் என்பது கடந்த ஆண்டில் கிடைத்தவை, கிடைக்காதவை என்பவற்றின் விளைவுதான். இருப்பவற்றில் இருந்துதான் அரசியல் செய்யலாம். அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியக்கூறுகள் என்றால் இருப்பவைதான். இல்லாதவை அல்ல. எனவே கடந்த ஆண்டில் என்னென்ன இருந்தனவோ அவற்றின் விளைவுதான் புதிய ஆண்டு. இந்த இயற்கையை மீறி ஏதாவது நடப்பதாக இருந்தால் அதனை அதிசயம் அல்லது அற்புதம் என்று அழைக்கவேண்டும். யூதர்களின் புலப்பெயர்ச்சி வரலாற்றைக் கூறும் “தாயகம் நோக்கிய பயணம்” என்ற நூலில் ஓரிடத்தில் கூறப்படுவதுபோல “அதிசயங்கள் அற்புதங்களின் காலம் எப்பொழுதோ முடிந்துவிட்டது”. இது ஈழத் தமிழர்களுக்கும் பொருந்துமா?

அப்படி அதிசயங்கள் அற்புதங்கள் நிகழ்வது என்றால் அதுகூட ஏற்கனவே இருப்பவற்றுள் ஏதாவது ஒன்று எதிர்பாராத புதிய மாற்றங்களை அடைய வேண்டும். தமிழ் அரசியலில் ஏற்கனவே பலமாகக் காணப்படும் அம்சங்களில் அல்லது நபர்களில் வழமைக்கு மாறான மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டும்தான் இயற்கை விதிக்கு மாறாக ஏதாவது அதிசயங்கள் அற்புதங்களை எதிர்பார்க்கலாம். எனவே,இப்பொழுது கடந்த ஆண்டின் முடிவில் எம்மிடம் இருப்பவற்றை முதலில் மதிப்பிடுவோம்.

கடந்த ஆண்டு என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை பெருமளவுக்கு ஒரு தோல்வி ஆண்டுதான். ஆண்டின் தொடக்கத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஓர் அரசாங்கம் ஏற்கனவே ஆட்சிக்கு வந்திருந்தது. ஆண்டின் முடிவில் அந்த அரசாங்கம் வடக்கில் முதலாவது பிரதேச சபையைக் கைப்பற்றி விட்டது. முள்ளிவாய்க்கால் பிரதேசம் அமைந்திருக்கும் கரைத் துறைப் பற்று பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிவிட்டது.

ஆண்டின் தொடக்கமும் தோல்வி. முடிவும் தோல்வி. இடையில் செம்மணிப் புதை குழி புதிய வாய்ப்புகளைத் திறந்தது. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வந்தார். எனினும் ஐநா தீர்மானம் தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது மட்டுமல்ல அது ஒரு தெளிவான செய்தியைக் கூறியது. தமிழ் மக்கள் அனைத்துலக அரங்கிலும் பலமாக இல்லை என்பதே அது.

ஆண்டின் முடிவில்,தமிழ்க் கட்சிகளில் ஒரு பகுதி தமிழகத்தை நோக்கிச் சென்றது. இன்னொரு பகுதி கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரை நோக்கிச் சென்றது. இவ்வாறு தமிழ்த் தரப்பு இரண்டாக இந்தியாவை அணுகியபோது, இந்தியா கொழும்பை நோக்கி வந்தது. கொழும்பில்,இந்திய வெளியுறவு அமைச்சரைத் தமிழ்க் காட்சிகள் ஒன்றாகச் சந்தித்தன. ஆனால் இரண்டாகக்  கோரிக்கைகளை முன் வைத்தன. தமிழரசுக் கட்சி ஒர் ஆவணத்தை என்வலப்பில் வைத்துக் கொடுத்தது. அதில் என்ன இருந்தது என்று மற்றவர்களுக்குத் தெரியுமா?மக்களுக்குத் தெரியுமா?

கடந்த ஆண்டு முழுவதிலும் தமிழ் மக்கள் பெற்ற பின்னடைவுகளைத் தொகுத்துப் பார்த்தால் தெளிவாகக் கிடைக்கும் விடை என்ன தெரியுமா? ஒற்றுமையின்மையால் கிடைத்த தோல்வி. எனவே புதிய ஆண்டு ஒரு வெற்றி ஆண்டாக அமைவதாக இருந்தால் ஒற்றுமைப்படுவதைத்தவிர வேறு வழி இல்லை. தமிழ் மக்களைப் பொறுத்தவரை புத்தாண்டுத் தீர்மானம் அதுவாகத்தான் இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு முழுவதிலும் அவ்வாறு ஒற்றுமைப்படுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளைத் தொகுத்துப் பார்க்கலாம். புதிய நாடாளுமன்றத்தில் காணப்படும் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்து ஒரு கூட்டாகச் செயல்படுவதற்கு கஜன் முயற்சி செய்தார். அரசாங்கம் ஒரு புதிய யாப்பைக் கொண்டுவரக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதனால் அப்புதிய யாப்பை எதிர்ப்பதற்குத் தமிழ்க் கட்சிகள் ஒன்றாகத் திரளவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் தமிழரசுக் கட்சி அதற்கு ஒத்துழைக்கவில்லை.

மற்றொரு முயற்சி, அதுவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டது. அது தமிழரசுக் கட்சி அல்லாத ஏனைய கட்சிகளை இணைத்து ஒரு கூட்டை உருவாக்கும் ஒரு முயற்சி. முதலில் தமிழ்த் தேசியப் பேரவை என்று உருவாக்கப்பட்டது. அது அடுத்த கட்டமாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பையும் இணைத்துக் கொண்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்புக்கும் இடையிலான உடன்படிக்கையானது எழுத்துமூல ஆவணம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது.

எனினும்,அந்தக் கூட்டுக்குள் காணப்பட்ட ஈபிஆர்எல்எஃப் கட்சியானது மாகாண சபைத் தேர்தல்களை வைக்க வேண்டும் என்று கேட்டு, தமிழ்ப் பகுதிகளில் கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தியதன் விளைவாக ஏற்பட்ட முரண்பாடுகளால் அந்தக் கூட்டு பெருமளவுக்கு செயற்படா நிலையை அடைந்து விட்டது. அந்தக் கூட்டு உருவாகும்போது கஜேந்திரகுமார் ஊடகங்களுக்குத் தெரிவித்த ஒரு கருத்து ஊன்றி கவனிக்கத்தக்கது. இந்த “ஐக்கியம் உடையுமாக இருந்தால் தமிழ் மக்கள் அதைத் தாங்க மாட்டார்கள்” என்று அவர் சொன்னார்.

அதன் பின் ஐநா தீர்மானத்தை முன்னோக்கி, தமிழ்க் கட்சிகளை மீண்டும் இணைப்பதற்கு ஒரு முயற்சி எடுக்கப்பட்டது. இந்த முயற்சியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டது. அங்கேயும் தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கவில்லை. ஐநாவுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டன.

அதன்பின் அண்மையில் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பும் சந்தித்து உரையாடியிருக்கின்றன. மாகாண சபைத் தேர்தல் ஒன்றை நோக்கிய பேச்சுவார்த்தை அது என்று ஊகிக்கப்படுகிறது.

இவை யாவும் கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் நிகழ்ந்த ஐக்கிய முயற்சிகள் ஆகும். இந்த முயற்சிகள் அனைத்திலும் இரண்டு பொதுப் பண்புகளைக் காணலாம். முதலாவது பொதுப்பண்பு,இந்த முயற்சிகளை முன்னெடுத்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. பின்னணியில் சில சிவில் சமூகங்கள் நின்றன. இரண்டாவது பொதுப் பண்பு, இந்த முயற்சிகள் பெரும்பாலானவற்றை தோற்கடித்தது தமிழரசுக் கட்சி.

தமிழரசுக் கட்சியானது தானே பெரிய கட்சி, தானே முதன்மை கட்சி, தானே தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கும் கட்சி என்று கருதுகின்றது; கூறிக் கொள்கிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலில் தோல்வியடைந்த காரணத்தால் தன்னை சுதாகரித்துக் கொள்வதற்காகவும், தன்னை பலப்படுத்திக் கொள்வதற்காகவும் இவ்வாறான ஐக்கிய முயற்சிகளில் ஈடுபடுகிறது என்று தமிழரசுக் கட்சி நம்புகிறது. மேலும் இந்த முயற்சிகளின் பின்னணியில் இருக்கும் சிவில் சமூகங்கள் தமிழரசுக்கட்சிக்கு எதிரானவை அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவானவை என்றும் தமிழரசுக் கட்சி நம்புகின்றது.

முன்னணியின் ஐக்கிய முயற்சிகள் பெரும்பாலானவை தமிழரசுக் கட்சியை தனிமைப்படுத்தும் நோக்கிலானவை என்று தமிழரசுக் கட்சி நம்புகின்றது. அதிலும் குறிப்பாக தமிழரசுக் கட்சிக்குள் இப்பொழுது இரண்டு அணிகள் உண்டு. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியானது,சிறீதரனை அரவணைத்து அதன்மூலம் தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் தலைமைத்துவப் போட்டியை தனக்குச் சாதகமாகக் கையாளப் பார்க்கின்றது என்றும் ஒரு குற்றச்சாட்டு சுமந்திரன் அணியினர் மத்தியில் உண்டு.

இவ்வாறான சந்தேகங்கள், ஈகோக்கள் என்பவற்றின் விளைவாக கடந்த ஆண்டு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட ஐக்கிய முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி பெரும்பாலும் ஒத்துழைக்கவில்லை. எனவே கடந்த ஆண்டு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்ட ஐக்கிய முயற்சிகளில் பெரும்பாலும் குழப்பத்தை விளைவித்தது அல்லது ஒத்துழைக்க மறுத்தது அல்லது ஒரு பெரிய கட்சி, மூத்த கட்சி என்ற அடிப்படையில் பொறுப்போடு முடிவை எடுக்கத்தவறியது தமிழரசுக்கட்சிதான்.

இங்கே மிக அடிப்படையான பேருண்மை ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். தனக்குள் ஒற்றுமைப்படாத ஒரு கட்சி,ஏனைய ஐக்கிய முயற்சிகளுக்கு எப்படி ஒத்துழைக்கும்?

இதுதான் கடந்த ஆண்டு. தொகுத்துப் பார்த்தால் அது ஒரு தோல்வி ஆண்டு. அந்தத் தோல்விக்குப் பெருமளவு காரணம் மூத்த,பிரதான கட்சியாகிய தமிழரசுக் கட்சிதான். ஒரு மூத்த அண்ணனாக,பொறுப்போடு, பொறுமையோடு, பரந்த மனப்பான்மையோடு ஏனைய கட்சிகளை அரவணைத்து உண்மையான ஐக்கியத்தைக் கட்டியெழுப்பி இருந்திருந்தால் ஆண்டின் முடிவிலாவது குறைந்தபட்சம் கரைத்ததுறைப்பற்று பிரதேச சபையைக் காப்பாற்றி இருந்திருக்கலாம்.

எனவே இப்பொழுது மிகத்தெளிவான ஒரு பார்வை நமக்கு கிடைக்கிறது. கடந்த ஆண்டுகளைப் போலன்றி புதிய ஆண்டின் பலன் நல்லதாக அமைய வேண்டுமாக இருந்தால் அதற்கு ஒரே ஒரு நிபந்தனைதான் உண்டு. அதுதான் ஐக்கியம். ஒற்றுமைப்பட்டால் மட்டும்தான் புதிய ஆண்டு ஒரு வெற்றி ஆண்டாக அமையும். சிலசமயம் இந்த ஆண்டு மாகாணசபைத் தேர்தல் நடந்தாலும்,வெற்றிக்கு அதுதான் முன் நிபந்தனை. தையிட்டியில் நேற்று கட்சிகள் இணைந்தபடியால்தான் போராட்டம் தீவிரமடைந்தது. தமிழ்த்தேசிய அரசியலில் இப்பொழுது அதிசயம் அல்லது அற்புதம் என்று சொன்னால் அது ஐக்கியம் மட்டும்தான்.

https://www.nillanthan.com/8039/

அரசியல் கூட்டு என்பதால் ஆயுள்காலம் குறைவாகவே இருக்கும்

3 days 13 hours ago

அரசியல் கூட்டு என்பதால் ஆயுள்காலம் குறைவாகவே இருக்கும்

முருகானந்தம் தவம்

இலங்கையின் அரசியலில் தமிழ்த் தேசிய கட்சிகளின்  தாய்க் கட்சி என்று  கூறிக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் 5  பங்காளிக் கட்சிகளின்  கூட்டாக அடிக்கடி கட்சி மாறிக் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில்    மீள் இணைவு இடம்பெற்றுள்ள நிலையில் அண்மையில்  இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரையும் இக்கூட்டு சந்தித்தது.

பதில் தலைவராக .சி.வி.கே.சிவஞானத்தையும் பதில் பொது செயலாளராக எம்.ஏ.சுமந்திரனையும் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கூட்டு அமைத்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்  (ஈ.பி.ஆர்.எல்.எவ்.)  தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,  தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் (புளொட்)  தர்மலிங்கம் சித்தார்த்தன்,  தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சிவானந்தன் நவநீதராஜா, சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் பங்காளிக் கட்சித் தலைவர்களாகவுள்ளனர்.

ஜனநாயக தமிழ்த் தேசியக்  கூட்டணி ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய அமைப்பாக இயங்கி வருகிறது. தனியான யாப்பையும் சின்னத்தையும் கொண்டிருக்கும் அந்தக் கூட்டணி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருக்கிறது. அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏற்கெனவே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில், அந்தக் கூட்டணி  செயற்பட்டு வருகிறது. ஆனால், அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் மாகாண சபைகள் முறைமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று  ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கொண்டிருக்கும் நிலைப்பாடு காரணமாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் முரண்பட வேண்டியேற்பட்டது.
நடைபெற்று முடிந்த மூன்று தேர்தல்களான ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் வடக்கு , கிழக்கிலிருந்த தமிழ் கட்சிகள் பெரும்பாலும் தனித்தனியாகவே செயற்பட்டிருந்தன. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரைக் களமிறக்கியபோது, அதற்கு எதிராக தமிழரசுக் கட்சி பகிரங்கமாகவே செயற்பட்டபோது, தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து  முன்னிலையில் நின்று செயற்பட்டது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி. இவர்கள் பாராளுமன்றத் தேர்தலிலும் அதே கூட்டைப் பயன்படுத்தி பின்னர், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலிலும் அதையே தொடர்ந்தனர்.

பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தனித்துக் களமிறங்கியபோதும், ஒரு பாராளுமன்ற ஆசனத்தை மட்டுமே பெற முடிந்தது .உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களின் பின்னர் ஆட்சியமைக்கும் விடயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பக்கம் நிற்காது  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பக்கம் இது சாய்ந்திருந்தது. இருந்தபோதும், சபைகளின் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான அரசியல் கூட்டாக மாத்திரம் அது அமைந்தது. அதற்கும் அப்பால் சென்று அரசியல் கூட்டணியாகத் தொடரவில்லை.

இவ்வாறாக  கொள்கை, இலக்கு எதுவுமின்றி, “தறி கெட்ட மாடு போல்”  சகல கட்சிகளுடனும் 'கூட்டு' என ஒட்டிக்கொண்டு திரிந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியைத்தான் தற்போது இலங்கை தமிழரசுக் கட்சி தன்னுடன் இணைத்துக் கொண்டு ஏதோ பெரிதாகச் சாதித்து விட்டது போல்  கதை  விட்டுக் கொண்டிருக்கின்றது. அத்துடன், கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோருடனான சந்திப்பிலும் இக்கூட்டுப் பங்கு பற்றியது.

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் நடைபெற்ற மீள் இணைவுக்கான  சந்திப்பில் முக்கியமாக இரண்டு பிரதான விடயங்கள் பற்றியே அதிகம் பேசப்பட்டுள்ளது. முதலாவது, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமல் பிற்போடப்படும் சூழ்நிலையில், அத்தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதாகும். இரண்டாவது  தமிழ் மக்களுக்கான நீதியான - நியாயமான அரசியல் தீர்வு சம்பந்தமாக ஒருமித்த நிலைப்பாட்டை வெளிக்கொணர்ந்து தொடர்ச்சியான சந்திப்புக்களை நடத்துவது என்பதாகவே இருந்தது .

இரண்டு விடயங்களுடனேயே தமது சந்திப்பு மட்டுப்படுத்தப்பட்டதாக இரு தரப்பிலும் கூறப்பட்டாலும் அரசியல் தீர்வு விடயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் காலத்தில் தயாரித்த முன்மொழிவின் அடிப்படையில், கலந்துரையாடல்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்க இங்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இதுபற்றிய கலந்துரையாடல்களை மாதாந்தம் நடத்துவதற்கும்  பல தரப்பினருடன் விரிவான கருத்துப் பரிமாற்றங்களை முன்னெடுப்பதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரையில் கடந்த மூன்று நான்கு தேர்தல்கள் அவர்களுக்குப் பல பாடங்களைப்  புகட்டியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் பல பகுதிகளில் வீசிய அனுர அலை வடக்கு, கிழக்கிலும் தாக்கம் செலுத்தியிருந்தது. எவரும் எதிர்பாராத விதமாகப் பாராளுமன்றத் தேர்தலில் அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு அதிகமான ஆசனங்கள் கிடைத்தன. தமக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் குறுகிய அரசியல் இலாபங்கள் காரணமாகப் பிரிந்து நின்ற தமிழ் கட்சிகளின் வாக்கு வங்கிகளில் சரிவு ஏற்பட்டது.
வடக்கு, கிழக்கில் பல உள்ளூராட்சி சபைகளைத்  தமிழ்த் தேசிய கட்சிகளினால் கைப்பற்ற முடிந்தாலும் ஒப்பீட்டளவில் தேசிய மக்கள் சக்திய கணிசமான வாக்குகளைத் தனதாக்கிக் கொண்டது. இவ்வாறான பின்னணியில் நடைபெறக்கூடிய மாகாண சபைத் தேர்தலில் தொடர்ந்தும் தமிழ் கட்சிகள் பிரிந்து நின்றால் தேசிய மக்கள் சக்தி ஏனைய அரசியல் தரப்புக்களுடன் இணைந்து தமிழர் தாயகமான, தமிழ்த் தேசிய கட்சிகளின் அரசியல் உயிர் மூச்சான  வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆட்சியமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.இவ்வாறான பின்னணியிலேயே பொதுக் காரணிகளை முன்வைத்து ஒன்றிணைந்து செயற்படுவதற்கான முஸ்தீபுகளைத் தமிழ்த் தேசிய கட்சிகள் எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

இவ்வாறான நிலையில், இலங்கையின் அண்மைய அரசியல் வரலாற்றில் வடக்கிலுள்ள மக்களின் கணிசமான ஆதரவைப் பெற்ற ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க விளங்குவது தமிழ்த் தேசியக் கட்சிகள் பலவற்றுக்குச் சவாலாக உள்ளது. எனவே, வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியத்திற்குத் தொடர்ந்தும் சவாலாக இருக்கும் தேசிய மக்கள் சக்தியை எதிர்கொள்ள வேண்டுமானால் தமக்கிடையில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் வந்துள்ளமை வரவேற்கத்தக்கதே. ஆனால், இக்கூட்டு எந்தளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதுதான் இங்குள்ள கேள்வி.

உள்ளளூராட்சி சபைகளுக்கான  தேர்தலுக்கு  முன்னர் தமிழரசுக் கட்சிக்கும்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றிருந்தபோதும், அது தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லப்பட்டிருக்கவில்லை. தமிழ்த் தேசிய அரசியல் என்றால், அது தாமே என்றதொரு தோற்றப்பாட்டை முன்வைக்கும் அரசியலையே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்து வருகின்றது. வடக்கில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் சமஷ்டியை வலியுறுத்தி தமிழகத் தலைவர்களுடன் நடத்திய சந்திப்புக்கள் மூலம் இது தெளிவாகியுள்ளது.  எனவே, தமிழரசுக் கட்சி-ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கூட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  ஒரு போதும் இணையப் போவதில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதில் தமிழரசு கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் ஆர்வமும் அதற்கு ஏற்ப, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி  தமிழரசுக் கட்சியுடன் மீண்டும் இணைந்திருப்பதும் வரவேற்கப்பட வேண்டியவை. ஏனெனில், தமிழ்க் கட்சிகள் பல்வேறு அணிகளாகச் சிதறியிருப்பதால் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதற்கான அணுகுமுறைகளைப் பொறுத்தவரை ஒருமித்த நிலைப்பாடுகளை எடுக்க முடியாமல் இருக்கிறது என்று தமிழ் மக்கள் நீண்ட நாட்களாகவே கவலையடைந்திருக்கிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலிலும் வடக்கிலும் கிழக்கிலும் தேசிய மக்கள் சக்திக்கு அவர்கள் பெருமளவில் வாக்களித்ததற்கான காரணங்களில் இது முக்கியமானது..

இவ்வாறான நிலையில்,  2001ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள்  2022ஆம் ஆண்டு பிளவடைந்து வெளியேறிப் பல அரசியல் பாடங்களைக் கற்றுக் கொண்ட பின்னர் மீண்டும் தற்போது தாய்க் கட்சியான தமிழரசுக் கட்சியுடன் இணைந்துள்ளமை என்பது தமிழ்த் தேசிய அரசியலில் முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டாலும், இது மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கான மீள் இணைவாக, அரசியல் ஆதாயத்திற்கான  கூட்டாக  இருப்பதால் இதன் ஆயுள்காலம் குறைவாகவே இருக்கும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசியல்-கூட்டு-என்பதால்-ஆயுள்காலம்-குறைவாகவே-இருக்கும்/91-370514

தையிட்டி: அனுரவின் தீர்வு என்ன? நிலாந்தன்.

3 days 14 hours ago

anura.jpg?resize=750%2C375&ssl=1

தையிட்டி: அனுரவின் தீர்வு என்ன? நிலாந்தன்.

யாழ் நகரத்தில் நோ லிமிட் திறக்கப்படுகையில் தையிட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் நிலப் பறிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிராகப்  போராடிக் கொண்டிருந்தார்கள்.இந்த இரண்டு நிகழ்வுகளிலும் எங்கே சனக்கூட்டம் அதிகம் என்று கேட்டு முகநூலில் பதிவுகள் பகிரப்பட்டன.

 

நோ லிமிட் திறப்பு விழாவில் ஒப்பீட்டளவில் அதிக தொகை நின்றது என்பதே உண்மை. காலையிலிருந்து இரவு வரையிலும் அங்கே பறை மேளம் முழங்கிக் கொண்டிருந்தது. மக்கள் வெள்ளம் அலை மோதியது.அந்தப் பகுதியில் போக்குவரத்து செய்வது கடினமாக இருந்தது.  

ஆனால் அதற்காக நோ லிமிட்டுக்கு போனவர்கள் எல்லாருமே தையிட்டி போராட்டத்துக்கு ஆதரவில்லை அல்லது எதிரானவர்கள் என்று முடிவெடுக்க தேவையில்லை. ஒரு மக்கள் கூட்டத்துக்குள் பல்வேறு தரப்பினரும் இருப்பார்கள். அரசியல் ஈடுபாடு உடையவர்களும் இருப்பார்கள்,அரசியல் விழிப்பு இல்லாதவர்களும் இருப்பார்கள். ஏன் அதிகம் போவான்? இறுதிக்கட்டப் போரில் வன்னியில் வாழ்ந்தது 3 லட்சத்துக்கும் குறையாத ஒரு சனத் தொகை. மொத்த ஈழத் தமிழ் ஜனத் தொகையில் அது ஒரு சிறிய விகிதம்.ஆனாலும் முழு இனத்துக்குமான போராட்டத்தின் சிலுவையை ஒப்பிட்டுளவில் அதிகமாக சுமந்தது அந்த சிறிய சனத் தொகைதான்.அதேசமயம் ராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்த தமிழர்கள் அந்த காலகட்டங்களில் தமது இயல்பு வாழ்க்கையை முன்னெடுத்தார்கள். அரசியல் ஈடுபாடு கொண்டவர்கள் பயந்து பயந்து வாழ்ந்தார்கள்.எனவே இறுதிக்கட்டப் போரின் போதும் தமிழ் ஜனத்தொகையில் பெரும் பகுதி போராட்டக்களத்துக்கு வெளியேதான் இருந்தது. அது தன்னுடைய வழமையான காரியங்களைச் செய்து கொண்டிருந்தது. இது ஒரு சமூக யதார்த்தம்.

 

நோலிமிட்டுக்கு போனவர்களை தையிட்டிக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுடையது;ஊடகங்களுடையது; கருத்துருவாக்கிகள்,புத்திஜீவிகள்,மதத்தலைவர்கள்,செயற்பாட்டாளர்களுடையது.  

தையிட்டியில் கடந்த 30 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடக்கின்றது. ஒவ்வொரு பௌர்ணமி நாளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அங்கே போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.ஆனால் அவற்றில் பெரும்பாலானவை கவனயீர்ப்பு போராட்ட வகைப்பட்டவை.அங்கே பெருந் திரள் மக்களை பெரும்பாலும் காண முடிவதில்லை.இதுதொடர்பாக முன்னணியின் மீது விமர்சனங்கள் வைக்கப்படுவதுண்டு.எனினும் எல்லாவிதமான விமர்சனங்களுக்கும் அப்பால் தையிட்டி   விவகாரத்தை தொடர்ச்சியாக ஏரியும் நிலையில் வைத்திருந்ததும் அந்த நெருப்பை தணியவிடாது பேணியதும் முன்னணிதான்.

 

அதேசமயம் ஏனைய தமிழ் கட்சிகளும் அந்த போராட்டத்தில் இணையும்போது அந்தப் போராட்டத்தில் அதிகரித்த மக்கள் பங்களிப்பை பார்க்க முடிந்திருக்கிறது. கடந்த 30 மாதங்களுக்கு மேலான காலப்பகுதியில் அவ்வாறு சில நாட்களில் அதிகரித்த தொகை மக்களை அங்கே காண முடிந்தது. அவ்வாறான நாட்களில் அது அனைத்துக் கட்சிப் போராட்டமாக,மக்கள் அமைப்புக்கள்,செயற்பாட்டாளர்கள் இணைந்த போராட்டமாக,பலமான எதிர்ப்பாகக் காணப்படுவதுண்டு.  

அப்படி ஒரு எதிர்ப்புத்தான் கடந்த மாத இறுதியில் கட்டப்பட்டது.அந்த எதிர்ப்பை ஒருங்கிணைத்தது விகாரை அமைந்திருக்கும் பிரதேசத்துக்குரிய உள்ளூராட்சி சபையாகும்.அந்த உள்ளூராட்சி மன்றம் அந்த விகாரைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி,அதற்காக போராட அழைப்பு விடுத்தது. அந்தப் போராட்டம் ஒரு விதத்தில் அனைத்துக் கட்சி போராட்டம்தான். வழமையாக அங்கே போராடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள் இந்தியாவில் சந்திப்புகளில் ஈடுபட்டிருந்த காரணத்தால், அக்கட்சியின் அடுத்தடுத்த நிலைத் தலைவர்கள்,தொண்டர்கள் அங்கே காணப்பட்டார்கள். சஜித் பிரேமதாசாவின் கட்சியைச் சேர்ந்தவர்களும் அங்கே காணப்பட்டார்கள்.ஆனால் தேசிய மக்கள் சக்தியின் தமிழ் உறுப்பினர்கள் யாரும் அங்கே இருக்கவில்லை. அதுவும் தையிட்டியில்  ஒப்பீட்டளவில் அதிகம் பேர் திரண்ட ஒரு போராட்டம்.

 

அப்படித்தான் நேற்று நடந்த போராட்டமும். அங்கேயும் வழமையை விட அதிக தொகையினர் வந்திருந்தார்கள். எல்லாக் கட்சிகளும் இணைந்தால், மக்கள் அமைப்புகளும் பல்கலைக்கழக மாணவர்களும் சிவில் சமூகங்களும் செயற்பாட்டாளர்களும் இணைந்தால்,அப்படிப் பெரிய அளவில் போராட முடியும் என்பதற்கு அது ஓர் ஆகப்பிந்திய உதாரணம். இந்த உதாரணத்தைப் பின்பற்றி போராட்டத்தை மேலும் மக்கள் மயப்படுத்தினால் அதிக சனத்தொகையை கொண்டு வர முடியும்.  

கடந்த மாத இறுதியில் நடந்த போராட்டத்தை அரசாங்கம் பலப் பிரயோகத்தின் மூலம் அடக்க முற்பட்டது. அதன் விளைவாக நான்கு பேர் கைது செய்யப்பட்டார்கள்.அது பரவலாக எதிர்ப்பைக் கிளப்பியது.போராட்டம் அடக்கு முறையை வேகப்படுத்தும்.அடக்குமுறை போராடத்தைப்  பலப்படுத்தும்;மக்கள் மயப்படுத்ததும். அப்படிப்பட்டதோர் பின்னணியில், நேற்றைய பௌர்ணமி நாளில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது அது அதற்கு முதல் நடந்த போராட்டத்தை விடப் பெரியதாக அமையலாம் என்று அரசாங்கம் ஊகித்திருக்க முடியும்.

 

அவ்வாறு பெரிய அளவு போராட்டம் வெடித்தெழுவதைத் தடுக்கும் நோக்கத்தோடு அரசாங்கம் தன்னுடைய முகவர்களின் ஊடாக சமூக வலைத்தளச் சூழலைப் பயன்படுத்தியது என்று காணி உரிமையாளர்களில் ஒருவராகிய பெண் சுட்டிக்காட்டுகிறார். மேலும், நேற்று நடந்த போராட்டத்தைத் திசை திருப்பும் நோக்கத்தோடு யாழ் அரச அதிபர் காணி உரிமையாளர்களை சந்தித்தார் என்ற தொனிப்படவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.மிகத் தெளிவாகப் பேசும் அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கலாம்.

 

ஏனென்றால் கடந்த 15 மாதங்களாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியில் இருக்கிறது. இந்த15 மாத கால பகுதிக்குள்ளும் அந்த விகாரை தொடர்பான நிர்ணயகரமான முடிவுகளை எடுக்க அரசாங்கம் முயற்சிக்கவில்லை. முன்னைய அரசாங்கத்தைப் போலவே இந்த அரசாங்கமும் தையிட்டி விடயத்தில் ஒரு தீர்வைத் தரும் என்று தமிழ்மக்கள் நம்பக்கூடிய விதத்தில் எதுவும் நடக்கவில்லை.  

ஆனால் தமிழ்ப் பகுதிகளில் உள்ள மிக முக்கிய விகாரைகளில் ஒன்று ஆகிய நைனா தீவு விகாரையின் அதிபதி போராடும் மக்களுக்குச் சாதகமாக கருத்துத் தெரிவிக்கின்றார்.சக்தி மிக்க மகாநாயக்கர்களுக்கு எரிச்சலூட்டக்கூடிய கருத்துக்களைக் கூறுகிறார்.

 

அவருக்கும் தையிட்டி விகாரையின் அதிபதிக்கும் இடையில் ஏதோ முரண்பாடு உள்ளது என்பது ஏற்கனவே அவதானிக்கப்பட்ட ஒரு விடயம். எனினும் தமிழ்ப் பகுதிகளில் உள்ள ஒரு முக்கிய விகாரையின் அதிபதி தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்துக் கதைப்பது மிக அரிதான ஒரு புறநடை.

 

“டாண்” தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய நேர்காணலில் அவர் சக்தி மிக்க பௌத்த மகா நாயக்கர்களை விமர்சிப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. அதேசமயம் அந்த நேர்காணலின் ஊடாக தெரியவந்த மற்றொரு விடயம் என்னவென்றால்,நைனாதீவு விகாராதிபதியைப் போன்றவர்களின் கருத்துக்களை பலமான மகா சங்கங்கள் பொருட்படுத்தாது என்பதுதான்.  

இவ்வாறு பெரும்பான்மைக்குள் காணப்படும் மிகச்சிறிய சிறுபான்மை எப்பொழுதும் ஒடுக்கப்படும் மக்களின் பக்கம் நிற்கும். ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படும் பொழுது பெரும்பான்மையின் உணர்வுகள்தான் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். அந்த அடிப்படையில் தையிட்டி விகாரையை அகற்றும் ஒரு முடிவை அரசாங்கம் எடுக்காது. அப்படி எடுத்தால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது அது வாக்குறுதி அளித்த உண்மையான மாற்றத்தை தொடக்கி வைக்கிறது என்று பொருள்.

 

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு மேலாகிவிட்டது.தையிட்டி போராட்டம் கடந்த 30 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. அது தனியாக ஒரு காணிப் பிரச்சினை மட்டுமல்ல. சட்டப் பிரச்சினை மட்டுமல்ல.அது ஒரு மதப் பிரச்சினை மட்டுமல்ல. அவற்றை விட ஆழமான பொருளில் அது நிலப்பறிப்பு பற்றிய பிரச்சினை. அது அதன் இறுதி அர்த்தத்தில் ஓர் அரசியல் பிரச்சினை.எனவே அதற்கு அரசியல் தீர்வுதான் உண்டு.அந்தத் தீர்வை முன்வைக்கத் தேவையான அரசியல் திட சித்தம் தேசிய மக்கள் சக்தியிடம் உண்டா?

 

தமிழ்த் தரப்பில்,அந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர்கள், அந்தப் பிரச்சினையை தொடர்ந்தும் எரியும் நிலையில் வைத்திருந்த அரசியல் கட்சிகள், செயற்பாட்டாளர்கள் ஆகிய அனைத்துத் தரப்புக்களும் இணைந்து ஒரு கட்டமைப்பாகச் செயல்பட வேண்டியது அவசியம். நில மீட்புப்புக்கான அந்தக் கட்டமைப்புத்தான் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும்.தனியே காணிச் சொந்தக்காரர்கள் அரச உயர் அதிகாரிகளோடு பேசுவதனால் அதைத் தீர்க்க முடியாது மட்டுமல்ல, அதனை வெறுமனே ஒரு காணிப் பிரச்சினையாகக் குறுக்குவதில் முடிந்து விடும்.  

அது காணிப் பிரச்சினை அல்ல.அது இனப்பிரச்சினை.அது ஓர் அரசியல் பிரச்சினை.தனிய சட்டப் பிரச்சினை மட்டுமல்ல.அதற்கு அரசியல் தீர்வுதான் வேண்டும்.இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த 15 மாதங்களாக தமிழ்மக்களுக்கு நம்பிக்கை ஊட்டத் தவறியிருக்கிறது. இனப்பிரச்சினை இல்லை,இனவாதம் இல்லை என்று திரும்பத்திரும்ப கூறிக் கொண்டிருக்கும் ஓர் அரசாங்கம்,சட்டம் சகலருக்கும் சமம் என்று கூறிக் கொண்டிருக்கும் ஓர் அரசாங்கம்,தமிழ் மக்களுக்கு எங்கே துலக்கமான விதங்களில் மாற்றத்தைக் காட்டியிருந்திருக்க வேண்டுமோ அங்கே அந்த மாற்றத்தைக் காட்டத் தவறியிருக்கிறது.

https://athavannews.com/2026/1458301

இந்த வளமும் எனதே, மண்ணும் எனதே! - வெனிசுவேலாவை சூழும் போர் மேகம்

5 days 16 hours ago

இந்த வளமும் எனதே, மண்ணும் எனதே!

sudumanal

வெனிசுவேலாவை சூழும் போர் மேகம்

flugzeugtraeger-100-1920x1080-1.jpg?w=10

Thanks for image: deutschlandfunk. de

இன்றைய இன்னொரு போர்ச் சூழல் கரீபியன் கடலில் தகிக்கத் தொடங்கி சில வாரங்களாகின்றன. வெனிசுவேலா மீது அமெரிக்கா சிலுப்பிக் காட்டுகிற போர் அரசியல்தான் அது. ட்றம்ப் இன் முதல் ஆட்சிக் காலகட்டத்தில் (2017-2021) வெனிசுவேலா மீதான ட்றம்பின் கழுகுப் பார்வை விழுந்தது. வெனிசுவேலாவுக்கு எதிரான பாரிய பொருளாதாரத் தடைகள் 2017 இல் அறிவிக்கப்பட்டன. வெனிசுவேலா பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளாகியது. மீண்டும் ஏழ்மை பெரும் பகுதி மக்களை படிப்படியாக அழுத்தத் தொடங்கியது. அது பைடன் காலத்திலும் தொடர்ந்தது. இப்போ ட்றம்ப் இன் இரண்டாவது ஆட்சிக் காலம் ‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’ என்பதுபோல், இன்றைய நெருக்கடி தோன்றியிருக்கிறது. ட்றம்ப் இன் இறுதி இலக்கு வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தை மீண்டும் கைப்பற்றி கொள்ளை அடிப்பதுதான்.

உலகத்திலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடாக வெனிசுவேலா இருக்கிறது. 1900 களில் இருந்து கால்பதித்த சர்வதேச எண்ணெய்க் கம்பனிகள் காசு பார்க்கத் தொடங்கியிருந்தன. 1972 இல்  அன்றைய வெனிசுவேலாவின் ஜனாதிபதியாக இருந்த Carlos Andres Perez அவர்கள் பெற்றோலிய உற்பத்தியை தேசியமயமாக்கம் செய்தார். அப்போது எண்ணெய் உற்பத்தியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த மேற்குலக நாடுகளில் பிரித்தானியா-டச்சு பல்தேசியக் கம்பனியான SHELL உம், அமெரிக்காவின் Texaco, Exxon, Chevron போன்ற பரகாசுரக் கம்பனிகளும் குறிப்பிடத்தக்கவைகள் ஆகும். வேறும் பல கம்பனிகள் அங்கு செயற்பட்டுக் கொண்டிருந்தன. சமாதான முறையில் பேசித் தீர்க்கப்பட்டு, தேசியமயமாக்கம் கம்பனிகளின் ஒப்புதலுடன் நடந்தேறியது. 1.3 பில்லியன் நட்ட ஈடாகவும் வழங்கப்பட்டது. என்றபோதும் சில கம்பனிகள் தாம் எதிர்பார்த்த நட்ட ஈடு கிடைக்கவில்லை என்ற திருப்தியின்மையுடன் இருந்தன. இந்த தேசிய மயமாக்கலின்போது PDVSA என்ற அரச எண்ணெய்க் கம்பனியை வெனிசுவேலா அரசு உருவாக்கியது. இது எண்ணெய் உற்பத்தி, சுத்திகரிப்பு, எண்ணெய் வளக் கண்டுபிடிப்புகள், ஏற்றுமதி என எல்லாவற்றுடனும் தொடர்புபட்டிருந்தது.

1998 இல் வெனிசுவேலாவில் சாவோஸ் (Hugo Chavez) ஆட்சிக்கு வந்தார். கியூபாவாலும் சோசலிசத்தாலும் ஈர்க்கப்பட்ட அவர் வெனிசுவேலாவை சோசலிசக் கூறுகளுடன் மாற்றியமைத்தார். 2007 இல் அவர் எல்லா எண்ணெய்க் கம்பனிகளின் மீதான PDVSA இன் கட்டுப்பாட்டை 60 வீதமாக அதிகப்படுத்தினார். Chevron (USA),Total (France), Statoil (Norway), BP (UK) கம்பனிகள் அதை ஏற்றுக் கொண்டு தொடர்ந்து இயங்கின. உடன்பாடின்மை கொண்ட அமெரிக்காவின் Exxon, Conoco Phillips கம்பனிகள் வெனிசுவேலாவை விட்டு வெளியேறின. சாவேஸ் எல்லா கம்பனிகளினதும் சொத்துகளையும் கட்டுமானங்களையும் அரச உடைமை ஆக்கினார். 2005 இலிருந்து வெனிசுவேலாவின் சில தனிநபர்கள் மீதான ஆரம்பநிலை பொருளாதாரக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதிக்கத் தொடங்கியது. சாவேஸை ஆட்சியிலிருந்து கவிழ்க்க சிஐஏ செய்த சதிகள் வெற்றிபெறவில்லை.

2000 ஆண்டுகளில் ஒரு நாளைக்கு மூன்று மில்லியன் பீப்பாக்களை வெனிசுவேலா உற்பத்தி செய்தது. எண்ணெய் ஏற்றுமதியால் வந்த பணத்தை சமூக நலத் திட்டங்களுக்கு சாவேஸ் செலவிட்டார். அதன்மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார். 2013 மார்ச் இல் தனது மரணம் நிகழும்வரையான ஆட்சிக்காலத்துள் 70 வீதமாக இருந்த ஏழ்மையை வெறும் ஏழு வீதமாக குறைத்தார். ஒன்பது மில்லியன் குடும்பங்களுக்கு வீடுகள் சொந்தமாகக் கிடைத்தன. அப்போது சாவேஸின் வலது கரமாக இருந்தவர்தான் -ஒரு பஸ் சாரதியான- நிக்கொலாஸ் மடுரோ.

2013 இல் மடுரோ தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதி ஆனார். மடுரோவின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையாலும் பெரும் எண்ணெய்க் கம்பனிகளின் வெளியேற்றத்தாலும் எண்ணெய் உற்பத்தி வீழ்ச்சி காணத் தொடங்கியிருந்தது. மடுரோவின் ஆட்சித் திறமையின்மையும் காரணம் என சொல்லப்படுகிறது. 2000 களில் நாளொன்றுக்கு 3 மில்லியன் பரல்களாக இருந்த எண்ணெய் உற்பத்தி 2024 இல் எட்டு இலட்சத்துக்கு குறைவாக வீழ்ச்சி கண்டது.

venezuvela-oil-export-diagram.png?w=841

2017 இல் முதல் கட்டமாக ஆட்சிக்கு வந்த ட்றம்ப் தமது எண்ணெய் கம்பனிகளுக்கும் அமெரிக்காவுக்கும் வெனிசுவேலா அநீதி இழைத்துவிட்டதாக சொல்லி, வெனிசுவேலா மீதான பொருளாதாரத் தடையை பாரிய அளவில் செயற்படுத்தினார். அது வெனிசுவேலாவினை மோசமாகப் பாதித்தது.  எண்ணெய் ஏற்றுமதி மேலும் வீழ்ச்சி கண்டது. ஏழ்மை மீண்டும் அதிகரித்தது. பெருமளவான அகதிகள் அல்லது குடியேற்றவாசிகள் வெனிசுவேலாவிலிருந்து அமெரிக்காவுக்குள் வரத் தொடங்கினர். ட்றம் 2021 இல் போனார். பைடன் வந்தார். ட்றம்ப் 2025 இல் மீண்டும் வந்தார். வெனிசுவேலாவின் நிலைமை அப்படியே தொடர்ந்தது.

வெனிசுவேலாவிலிருந்து பெருந்தொகையானவர்கள் அமெரிக்காவுக்குள் வருகிறார்கள். அவர்கள் கிரிமினல்கள், சிறைக் கைதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், மனநலம் குன்றியவர்கள் என்றார். அதைத் தடுக்க வேண்டும் என கரீபியன் கடலில் முதலாவது கடற்படைக் கப்பலை விட்டார். பிறகு சுருதியை மாற்றி வெனிசுவேலாவிலிருந்து பெருந்தொகை போதைப் பொருள் அமெரிக்காவுக்குள் கடத்தப்படுகிறது, வெனிசுவேலா அரசு இலட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மரணத்துக்கு காரணமாக இருக்கிறது, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமானம் தாங்கிக் கப்பலையும் அதில் 15000 இராணுவத்தனரையும் ஏற்றினார். 

40 க்கு மேற்பட்ட சிறு படகுகளும் அதில் பயணித்த சுமார் 80 க்கு மேற்பட்டவர்களும் கரீபியன் கடலில் அடுத்தடுத்து குண்டுவீசி தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.  அந்தப் படகில் இருந்தது என்ன, போதைப்பொருள்தானா என்ற எந்த ஆதாரமும் காட்டப்படவில்லை. படகுகளை மறித்து சோதனை செய்யவுமில்லை. அதிலிருந்தவர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படவுமில்லை. குண்டுகள் அவர்களை படகோடு எரியூட்டின. அதெல்லாம் மீன்பிடிப் படகுகள் என வெனிசுவேலா சொல்கிறது. எந்த ஆதாரமும் ட்றம்புக்கு தேவைப்படவில்லை. ஏனெனில் அவரது கரிசனையில் குடிபெயர்வாளர்களுமில்லை. போதைப் பொருளுமில்லை.

ஒபாமாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கொண்டுராஸ் இன் முன்னாள் ஜனாதிபதி  Juan Orlando 2019 இல் நியுயோர்க் நீதிமன்றத்தால் ஆயுட்கால சிறைத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டவர்.  400 தொன் போதைப் பொருளை அமெரிக்காவுக்குள் கடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 2022 இல் அவர் (பதவிக் காலம் முடிந்தபின்)  அமெரிக்காவால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து இப்போ ட்றம்ப் ஆலோசித்து வருகிறார். போதைப்பொருளுக்கு எதிராக போராடும் மக்கள் தலைவர் ட்றம்பின் அழகு இதுதான். ஆக வெனிசுவேலாவுக்கு எதிரான சண்டித்தனத்துக்கு போதைப்பொருள் குற்றச்சாட்டை வைக்கும் அவரது சமூகப் பொறுப்பு புல்லரிக்காமல் என்ன செய்யும்.

இப்போ நேரடியாகவே விசயத்துக்கு வந்திருக்கிறார். “வெனிசுவேலாவின் எண்ணெய் வளமும் எனதே. இயற்கை வளமும் எனதே. அந்த நிலமும் எனதே” என வரவேண்டிய இடத்துக்கு வந்துவிட்டார். “அமெரிக்க எண்ணெய் கம்பனிகளை சட்டத்துக்கு புறம்பான வழியில் நாட்டிலிருந்து ‘கம்யூனிஸ்ட்’ சாவேஸ் இன் அரசாங்கம் வெளியேற்றி கொள்ளையடித்தது. அமெரிக்காவை ஏமாற்றியுள்ளது” என குமுறுகிறார். ஆக அவரது இலக்கு அந்த வளத்தை களவெடுப்பதுதான்.

இதை சாதிக்க அவர் முதலாவதாக தேர்ந்தெடுத்திருக்கிற வழி ஆட்சிமாற்றத்தை ஒரு சதிப்புரட்சியின் மூலம் அடைவது. ஏற்கனவே இந்த வழியை சாவேஸ் அரசாங்கத்துக்கு எதிராக பல முறை செய்து தோற்றது சிஐஏ. பிறகு 2018 இல் இராணுவ அணிவகுப்பு நடந்துகொண்டிருந்த நிகழ்வில் வைத்து இப்போதைய ஜனாதிபதி மடுரோவை ட்றோண் தாக்குதல் மூலம் கொல்ல முயற்சிசெய்து தோற்றது. இப்போ மீண்டும் இன்னொரு முயற்சியில் இறங்கியிருக்கிறது. சிஐஏ வெனிசுவேலாவுக்குள் சென்று சதியில் இறங்க, அதற்காகச் செயற்பட அனுமதியளித்து ஏற்கனவே ட்றம்ப் கையொப்பமிட்டிருந்தார். இந்த ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசை பெற்ற மரியா கொரீனாவை ஆட்சிக்கு கொண்டுவர சிஐஏ நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. இவர் அமெரிகக் கம்பனிகளுக்கு வாயிலைத் திறந்து தடங்கலற்ற களவை செய்ய அனுமதிக்க தயாராக இருப்பவர். அத்தோடு அவர் சியோனிச இஸ்ரேலிய அரசின் ஆதரவாளர். ஆனால் மடுரோ பலஸ்தீனத்தை அங்கீகரித்ததோடு, இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வருபவரும் ஆவார். அதனால் நெத்தன்யாகு உட்பட சியோனிஸ்டுகள் மடுரோவை வீழ்த்தி மரியா கொரீனாவை ஆட்சியிலமர்த்துவதை ஊக்குவிக்கின்றனர்.

மடுரோ நாட்டைவிட்டு வெளியேறி ரசியாவுக்கு குடும்பத்துடன் செல்ல நவம்பர் 30 வரை காலக்கெடு விதித்தார் ட்றம்ப். மடுரோ மறுத்துவிட்டார். இப்போ காலக்கெடு முடிந்துவிட்டது. தனது அடிவருடி ஆட்சியை அங்கு நிறுவி மீண்டும் வெனிசுவேலாவின் முழு எண்ணெய் வளத்தையும் கொள்ளை அடிப்பது இலகுவான வழிமுறை என அவர் நம்புகிறார். ஆட்சிமாற்றத்துக்கான நியாயமாக ஒரு கதையாடலை அவர் உருவாக்குகிறார். “மடுரோ ஒரு சர்வாதிகாரி, அமெரிக்காவுக்குள் குடியேற்றவாசிகள் மூலம் பயங்கரவாதத்தை கடத்துகிறார். தூளைக் கடத்துகிறார். வெனிசுவேலாவில் ஜனநாயகம் இல்லை. வெனிசுவேலாவில் மக்கள் பட்டினியில் வாடுகிறார்கள். அவருக்கு மக்கள் ஆதரவு கிடையாது” என்று அவரது பட்டியல் நீள்கிறது.

மடுரோவின் ஆட்சியை பெரும்பான்மையான மக்கள் விரும்பவில்லை என்று என்று புலம்பெயர்ந்த வெனிசுவேலாவின் ஊடகவியலாளர்கள் சொல்கிறார்கள். ஊடக சுதந்திரம் என்பதும் நசுக்கப்பட்டிருந்ததாக அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இப்போது அமெரிக்க ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மடுரோ ஆட்சியின் கீழ் அந்த மக்களை ஒருங்கிணைத்து வருவதாக சொல்லப்படுகிறது. அவர்கள் வீதிக்கு வந்து குரல் எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். எங்கள் பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், அமெரிக்கா ஒரு ஆணியும் பிடுங்கத் தேவையில்லை என்ற தொனியில் ஊர்வலத்தில் பங்குபற்றியவர்கள் ஊடகங்களுக்கு சொல்கிறார்கள்.

ட்றம்ப் இன் இரண்டாவது வழிமுறையானது, ஆட்சி மாற்றம் சாத்தியப்படாத பட்சத்தில், இராணுவ நடவடிக்கை மூலம் அந்த எண்ணெய் வளப் பிரதேசத்தைக் நிரந்தரமாகக் கைப்பற்றும் நோக்கமாகவும் இருக்கலாம். இதன்மூலம் எண்ணெய் வளத்தை கொள்ளை அடிக்க முடியும். இது நடந்தால், வெனிசுவேலா அமெரிக்கத் தாக்குதலால் சின்னாபின்னமாக போக இடமுண்டு. பெரும் பேரழிவுகளும் கொலைகளும் நடந்தேறும். எவளவுதான் தேசியவெறியை வெனிசுவேலாவின் மடுரோ ஆயுதமாக எடுத்தாலும் பெரும் படைபலமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியாது.

அதேநேரம் சில ஆய்வாளர்கள் “அப்படியொரு யுத்தம் நடந்தால் அது இலகுவில் முடிவடைந்துவிடப் போவதில்லை. வெனிசுவேலா ஒரு வியட்நாமாக, ஆப்கானிஸ்தானாக, நிக்கரகுவாவாக மாறும். மீண்டும் 10, 20 வருடங்கள் அமெரிக்கா களமாடவேண்டிய நிலை உருவாகலாம்” என்கின்றனர். வரலாற்று ரீதியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீது வெறுப்புக் கொண்டிருக்கும் தென் அமெரிக்க நாடுகளில் மக்கள் ஏற்கனவே இதற்கெதிராக குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர். பிரேசில், கொலம்பியா, உருகுவே, மத்திய அமெரிக்கா, மெக்சிக்கோ நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவின் அணுகுமுறை பேரழிவை ஏற்படுத்தக் கூடியது என எச்சரித்துள்ளனர். வெனிசுவேலாவின் இறைமை மீதான தாக்குதலாக இது இருக்கிறது என கண்டிக்கின்றனர். தென் அமெரிக்கா ஸ்திரத்தன்மையற்றதாக மாற இடமுண்டு என்ற அச்சம் புறக்கணிக்க முடியாதது.

இதற்குள் இயங்குகிற பூகோள அரசியல்தான் பிரமாண்டமானது. வெனிசுவேலாவின் எண்ணெயில் பெருமளவை சீனா இறக்குமதி செய்கிறது. அதுமட்டுமல்ல 500 க்கு மேற்பட்ட எண்ணைக் கிணறுகளை சீனா நவீனமயப்படுத்தியுள்ளன. சீனாவின் மேற்பார்வையின் கீழும் அவை உள்ளன. ஏற்கனவே கடந்த ஏப்ரலிலிருந்து ட்றம்ப் உருவாக்கிவிட்டிருக்கும் உலக பொருளாதாரப் போர் ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதில் மோதிக்கொண்டிருக்கும் இரு பெரும் வல்லரசுகள் அமெரிக்காவும் சீனாவும் ஆகும். வெனிசுவேலா எண்ணெய் வளத்தை ஆக்கிரமிப்பதன் மூலம் சீனாவிற்கான வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதி இல்லாமல் போகும். அது சீனாவுக்கு பாதகமான பொருளாதார விளைவை ஏற்படுத்தும். அத்தோடு கரீபியன் கடலில் சீனாவின் தலையீட்டை அல்லது நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும். இந்தியாவும் வெனிசுவேலாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இன்னொரு முக்கியமான பிரிக்ஸ் நாடு ஆகும்.

பெற்றோலியப் பொருட்களை வாங்குகிற, விற்கிற நாடுகள் அதற்கான பணப்பரிவர்த்தனையை டொலரில் மேற்கொள்ள வேண்டும் என்பதை 1973 இல் அமெரிக்கா நிறுவியதன் மூலம் இலாபமீட்டி வருவதோடு, உலக பொருளாதாரத்தை தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கவும் டொலர்மயமாக்கல் தன்பங்குக்கு வழிசமைத்திருந்தது. அதை “பெற்றோ டொலர்” முறைமை என அழைப்பர். இந்த முறைமைக்கு சவாலாக இப்போ பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் எடுத்திருக்கிற எதிர்பாராத நகர்வு அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ரசியா, சீனா, இந்தியா, ஈரான் மட்டுமல்ல, சவூதி உட்பட பல மத்திய கிழக்கு நாடுகள் டொலரை விட்டு அந்தந்த நாடுகளின் பணப் பரிவர்த்தனையில் ஈடுபத் தொடங்கிவிட்டன. இது அமெரிக்காவுக்குக் கிடைத்த பெரும் அடி. அத்தோடு அமெரிக்காவின் எடுபிடியாக இருந்த இரண்டாவது பெரிய எண்ணெய் வளத்தைக் கொண்ட நாடான சவுதி அரேபியா பிரிக்ஸ் இல் இணைந்தும் விட்டது. ஜி7 (G7) இன் பொருளாதாரத்தை பிரிக்ஸ் சரிவு நோக்கி தள்ளியுள்ளதால் பிரிக்ஸ் நாடுகளை வரிப் போரால் மிரட்டியும் வருகிறார் ட்றம்ப். வெனிசுவேலாவும் ப்ரிக்ஸ் இல் இணைய விருப்பம் தெரிவித்திருந்தது.

அமெரிக்காவில் கிடைக்கும் எண்ணெய் வளம் மிகப் பெரியதல்ல. அமெரிக்காவுக்கு ஆதாரமாக இருந்த கனடிய எண்ணெய் வளமும் இந்த வரிப் போரில் ஏற்பட்ட முரண்பாட்டால் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. ஆக அமெரிக்காவுக்கு நிரந்தரமான எண்ணெய்வள நாடு என்று எதுவும் இப்போது இல்லை. அந்த இடைவெளியை வெனிசுவேலா எண்ணெய் வளப் பிரதேசத்தை கைப்பற்றி வைத்திருப்பதன் மூலம் நிரப்ப ட்றம்ப் முயற்சிக்கிறார் என இன்னொரு கோணத்திலும் நோக்க முடியும்.

வெனிசுவேலாவின் இன்னொரு பாதுகாப்பு அரணான நாடாக ரசியாவை பலரும் சொல்கின்றனர். வெனிசுவேலாவுடனான இந்த நெருக்கடி தோன்றப் போவதான சமிக்ஞைகள் தெரிந்ததும் ரசியா வெனிசுவேலாவுக்கு இன்னும் மேலதிகமாக உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை வழங்கியுள்ளது. சரியாகச் சொன்னால் வியாபாரம் செய்தது என்பதே பொருத்தமானது. இந்தப் போரில் வெனிசுவேலாவுக்கு ஆதரவாக நேரடியாக களத்தில் ரசியாவோ, சீனாவோ வந்திறங்கும் என யாரும் எதிர்பார்த்தால், அது ஒரு ஜனரஞ்சக நினைப்பு மட்டுமே. அது யதார்த்தமேயில்லை. வல்லரசுகள் இலகுவில் தமக்குள் நேரடியாக மோதிக் கொள்வதில்லை. அது இன்னொரு நாட்டை மைதானமாக வைத்துத்தான் போர்களை நடத்துகின்றன.  எனவே வெனிசுவேலா மீது அமெரிக்கா தாக்குதல் தொடுத்தால், சீனாவோ ரசியாவோ நேரடியாக துணைக்கு இறங்கப் போவதில்லை. அப்படி இறங்கும் என நினைக்கும் அரசியல் ஜனரஞ்சகமானது, அது அடுத்த உலகயுத்தத்தையும் சேர்த்தே கொண்டுவரும் என்ற யதார்த்தத்தை மறுக்க வக்கற்றதாக இருக்கும். இது அதிகாரத்துக்கான போட்டி என்ற புரிதலில் கவனம் கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள் ஆகும். வெனிசுவேலா மீது அமெரிக்கா போர் தொடுத்து நில ஆக்கிரமிப்பு செய்தால், அதன்பின் அது வல்லரசுகளின் இன்னொரு களமாக சிக்கிச் சீரழியும்.

பூகோள அரசியலில் இன்னொரு பரிமாணமும் உள்ளது. இதுபற்றி அமெரிக்க அரசியல் விஞ்ஞானியான ஜெப்ரி ஸக்ஸ் அவர்கள் பேசியிருக்கிறார். கடந்த வருட மார்ச் மாதம் ரசியாவும் கியூபாவும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தத்தை செய்தன. இந்த வருடம் யூன் மாதம் -அணுவாயுதத்தை ஏவக்கூடிய ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும்- ரசிய நீர்மூழ்கிக் கப்பல் கருங்கடலில் புளோரிடாவிலிருந்து 90 கடல் மைல் தூரத்தில் உள்ள கியூப கடற் பரப்பினுள் வந்து நின்றது. இது ஒரு சமாந்தரமான நடவடிக்கை என ரசியா இதற்கு விளக்கம் கொடுத்தது. அதாவது உக்ரைனுக்கு அமெரிக்கா நீண்ட தூர ஏவுகணையை கொடுக்க எடுத்த முடிவுக்கு சமாந்தரமான எதிர் நடவடிக்கை என்பதே அதன் பொருளாகும். இன்னொரு வகையில் சொல்வதானால் “நீ எனது எல்லை அருகில் உக்ரைனுக்குள் ஏவுகணையை நிறுத்தினால், நானும் உனது எல்லை அருகில் நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்துவேன்” என்றும் எடுத்துக் கொள்ளலாம். 1962 இல் துருக்கியில் அமெரிக்கா நிறுத்திய ஏவுகணைக்கு எதிர்வினையாக சோவியத் யூனியன் கியூபாவில் தனது ஏவுகணையை நிறுத்த கப்பலில் வந்திருந்ததும், அது ஓர் அணுவாயுதப் போராக வெடிக்குமோ என உலகை அச்சுறுத்தியதுமான வரலாறு உண்டு.

இந்த வருடம் கரீபியன் கடலில் ரசிய நீர்மூழ்கிக் கப்பல் பின் அரங்க நிகழ்வுகள் நடந்து சில மாதங்களின் பின்னர், கரீபியன் கடலில் பெரும் எடுப்பிலான இராணுவ பிரசன்னத்தை அமெரிக்கா செய்துள்ளது. வெனிசுவேலாவுடன் ரசியா மட்டுமல்ல சீனாவும் நெருங்கிய உறவு வைத்திருக்கிறது. அமெரிக்காவின் படையெடுப்புக் கண்காட்சி இரண்டு நாட்டுக்கும் “எங்களது அதிகார பரப்புக்குள்ளிருந்து வெளியே நில்லுங்கள்” என்ற செய்தியை சொல்லியிருப்பதாகவும் எடுத்துக் கொள்ள முடியும். கருங்கடலில் நீர்மூழ்கிக் கப்பலுடன் நடமாடுகிற ரசியாவுக்கும், வியாபார வழித் தடத்தில் அமளியாக இயங்குகிற சீனாவுக்கும் மறைமுகமான ஓர் இராணுவ ரீதியிலான எச்சரிக்கையாகவும் வெனிசுவேலாவின் கடற்பரப்பில் சூழ்ந்து நடத்தப்படும் அமெரிக்கப் படைக் கண்காட்சி இருக்கிறது.

இராஜதந்திர ரீதியில் உக்ரைனை நேட்டோவில் அங்கம் வகிக்க முடியாதவாறும், ரசியா கைப்பற்றிய டொன்பாஸ் மற்றும் கிரைமியா பகுதிகளை ரசியாவுக்கு உக்ரைன் வழங்க நிர்ப்பந்தித்தும் ட்றம்ப் தனது ஆட்டத்தை ஆடுகிறார். நேட்டோவில் உக்ரைன் அங்கம் வகிக்க முடியாது என்பது நேட்டோ ரசிய எல்லை வரை வராது என்ற உத்தரவாதத்தை ரசியாவுக்குக் கொடுப்பதாகிறது. ஆகவே “அதுபோலவே நீ எனது கரீபியன் கடல் எல்லைவரை வராமல் இரு” என்ற செய்தியை இதற்குள்ளால் வாசிக்க முடியும். இது ஓர் எழுதப்படாத டீல் ஆக அவரவர் நலன் அடிப்படையில் அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் இடையில் அமைந்து விடுகிறது.

இதேபோலவே உக்ரைன் நிலப் பரப்பை ரசியாவுக்கு விட்டுக் கொடுக்கச் செய்வதன் மூலம் வெனிசுவேலாவின் எண்ணை வளப் பிரதேசத்தை நிரந்தரமாக தன்னுடன் வைத்திருக்க அமெரிக்கா ஒரு ‘லைசன்ஸ்’ இனை பெற்றுக் கொள்கிறது. ரசியாவைப் பொறுத்தவரை, டொன்பாஸை தமதாக்குகிற இலக்கை முதன்மையில் வைத்திருக்கவே செய்யும். அதனால் வெனிசுவேலா மீது அமெரிக்கா போர் தொடுத்தால், ரசியா தலையிடாமல் இருப்பதற்கான இன்னொரு காரணம் இராஜதந்திர ரீதியில் உருவாக்கப்படுகிறது. இதை சூட்சுமமாக அணுகும் ட்றம்ப் வெனிசுவேலா தமது எண்ணெய் கம்பனிகளுக்கு அநீதி இழைத்தது என்ற தொனியை இப்போ உருமாற்றி, “அது எங்களது எண்ணெய்” என்று சொன்னதை விரிவுபடுத்தி, “எங்களது எண்ணெய். எங்களது வளம். எங்களது நிலம்” என்று நிலத்தையும் சேர்த்து பேசத் தொடங்கியிருக்கிறார். இது ஒரு அப்பட்டமான காலனிய மனக்கட்டமைப்பு என்பதை மடுரோ உரத்துச் சொல்கிறார்.

அமெரிக்காவின் இந்த படையெடுப்பு குறித்தும் மனித உரிமை மீறல் குறித்தும் அமெரிக்காவின் பிரபல பத்திரிகைகளும் ஊடகங்களும் கள்ள மவுனம் சாதிக்கின்றன. ஐரோப்பாவும் கள்ள மவுனம் சாதிக்கிறது. வெனிசுவேலா மீதான இந்த அச்சுறுத்தல் அல்லது சாத்தியமாகக் கூடிய ஆக்கிரமிப்பு யுத்தம் குறித்து ஐநா சபையும் இதுவரை எதுவும் செய்யவில்லை. மடுரோ ஐநா செயலாளருடன் பேசியபின்னரே பாதுகாப்புச் சபையை கூட்ட ஐநா செயலர் முடிவெடுத்திருக்கிறார். அமெரிக்காவிடம் வீட்டோ அதிகாரம் இருக்கும்போது இந்த கூட்டம் ஒரு ஒப்புக்கு நடந்தேறுவதாகவே அமையும். அமெரிக்க மக்களும்கூட இதுவரை வீதிக்கு வந்து இந்த காலனிய மனக்கட்டமைப்புக்கு எதிராக போராடவில்லை. வெனிசுவேலாவின் எண்ணை வளத்தை திருடுவதன் மூலம் இன்றைய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளாடும் தமது வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட மட்டுமல்ல, தமது சலுகைபெற்ற வாழ்வை இழந்துவிடத் தயாராக இல்லாத காலனிய கருத்தியல் சிந்தனை முறையின் கைதிகளா அமெரிக்க மக்கள் என எண்ணத் தோன்றுகிறது. 

கரீபியன் கடல் போர்க் கோலம் பூண்டது போன்று அமளியாக மாறியிருக்கிறது. உலகின் மிகப் பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல் வெனிசுவேலாவை அண்டிய கடற்பரப்பில் நிற்கிறது. வெனிசுவேலாவை கடல்வழியாக முற்றுகையிட்டு பல போர்க்க கப்பல்கள் நிற்கின்றன. இதுவரை 16000 இராணுவத்தினர் காவல்நாய்களாகவும், ட்றம்ப் ஏவினால் கடித்துக் குதற தயாராக இருப்பவர்களாகவும் கடற்பரப்பில் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றனர். எண்ணெய் பீப்பாக்களை தாங்கியபடி வெனிசுவேலாவுக்குள் வரவும் வெனிசுவேலாவிலிருந்து வெளியே போகவும் எந்த கப்பலுக்கும் அனுமதியில்லை. அதை செயலில் எச்சரிக்கும் விதமாக 1.9 மில்லியன் எண்ணெய்ப் பீப்பாக்களுடன் கருங்கடலில் காணப்பட்ட ‘நிழல் கப்பலை’ டிசம்பர் 10ம் தேதி அமெரிக்கா தடாலடியாக கைப்பற்றியது. அதிலிருந்த எண்ணெய் முழுவதையும் திருடியுமுள்ளது. கப்பலை தடுத்தும் வைத்துள்ளது. அதற்குப் பிறகு மேலும் இரண்டு கப்பல்களை கைப்பற்றியுள்ளது. ஆனால் வெனிசுவேலாவில் இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கக் கம்பனியான செவ்ரோன் 500’000 பீப்பாக்களுடன் அமெரிக்கா போய்க்கொண்டிருந்த காணொளி வெளியாகியிருந்தது.

உலக சமாதான நாயகனாக படம் காட்டி நோபல் பரிசுக்கு அலையும் ட்றம்ப், அதற்கு முரண்நிலையாக செயற்பட்டு இந்தப் போரை நடத்துவாரா, அல்லது அழுத்தச் செயற்பாடாக தனது இராணுவ மிரட்டலை செய்து வெனிசுவேலாவில் தனது எடுபிடி ஆட்சியொன்றை நிறுவி, எண்ணை வளத்தை கொள்ளையடிக்கப் போகிறாரா என்பது விரைவில் தெரிய வந்துவிடும். அப்படியொன்று நடந்தால் வெனிசுவேலாவின் ஜனாதிபதி மடுரோவையும் குடும்பத்தையும் (சிரியாவிலிருந்து அசாத் இனை ரசியாவுக்குள் கொணர்ந்ததுபோல) ரசியாவுக்கு அழைத்துவர புட்டினுக்கு ட்றம் அனுமதியளிப்பார் என்பது மட்டும் உறுதி. மடுரோ வெனிசுவேலாவை விட்டு வெளியேற வேண்டி வந்தால், தனது நாடு அவரை வரவேற்கும் என (ரசியாவின் செல்லப்பிள்ளையான) பெலாருஸ் அதிபர் அலெக்ஸண்டர் லூக்காசெங்கோ கூறியிருப்பதை வெறும் கூற்றாக மட்டும் எடுப்பதா, அதோடு சேர்த்து ஓர் எதிர்கால அரசியல் நிகழ்வின் சாத்தியப்பாட்டை முன்னறிவிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாமா?.

https://sudumanal.com/2026/01/01/இந்த-வளமும்-எனதே-மண்ணும்/

2025: உலக நிலவரம் எப்படி இருந்தது?

5 days 16 hours ago

2025: உலக நிலவரம் எப்படி இருந்தது?

ஜனவரி 1, 2026

பயஸ் ஃபோஸன் (Pius Fozan)

35-1.jpg?fit=793%2C387&ssl=1

ந்தத் தீர்வும் எட்டப்படாமலேயே இந்த ஆண்டு (2025) முடிவுக்கு வருகிறது. உலகம் எதையெல்லாம் சகித்துக்கொள்ளத் துணிந்துவிட்டது என்பதற்கான நீண்ட பட்டியல்தான் இங்கே எஞ்சி நிற்கிறது. அந்தப் பட்டியலின் முக்கிய அம்சங்கள்:

  • காஸாவில் இஸ்ரேலியப் படைகளால் 18,457க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

  • இரண்டரை ஆண்டுகளைக் கடந்தும் உள்நாட்டுப் போர் சூடானைச் சிதைத்து வருகிறது.

  • உலகில் வெறும் 6.6% மக்கள் மட்டுமே முழுமையான ஜனநாயகச் சூழலில் வாழ்கிறார்கள்.

  • ஒட்டுமொத்த மனித குலத்தில் வெறும் 0.001% பேர் (சுமார் 60,000 பேர்) உலக மக்கள் தொகையின் சரிபாதிப் பேர் வைத்துள்ள செல்வத்தைப் போல மூன்று மடங்கு செல்வத்தைத் தங்கள் பிடியில் வைத்திருக்கிறார்கள்.

  • உக்ரைனில் ரஷ்யா தொடுத்த போர் நான்காவது ஆண்டிற்குள் நுழைகிறது.

சில நெருக்கடிகளுக்கு இங்கே கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் சூடான், ஹைட்டி, கொங்கோ போன்ற நாடுகளின் துயரங்களோ கவனிக்க ஆளின்றி அனாதையாக இருக்கின்றன.

சூடான் உலகக் கவனத்திலிருந்து ஏன் நழுவியது என்பது சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை நம் ஸ்மார்ட்போன் திரையில் ஓடும் ‘ஸ்க்ரோலிங்’ வேகத்தில், மக்களின் வலிகள் ஏதோ ஒரு புதுமையான செய்தியுடன் போட்டி போட முடியாமல் தோற்றுப்போகின்றனவா? அல்லது ஆபிரிக்காவில் போர் நடப்பது வழக்கம்தான், அது அந்த மண்ணுக்கே உரியது என நாம் பழகிப்போன ‘இனவாத’ முன்முடிவுகள் காரணமா? அல்லது எது ‘அவசரம்’ என்பதை அதிகாரவர்க்கம் தீர்மானிக்கிறதா?

36-1.jpg?fit=678%2C848&ssl=1

சூடான் ஏன் தலைப்புச் செய்திகளில் இடம் பெறவில்லை என்பது மட்டுமல்ல; சூடானைப் பற்றிப் பேசாததால் கிடைக்கும் அமைதியால் பலன் அடைவது யார் என்பதுதான் கேள்வி. சூடானைப் பொறுத்தவரை, அந்த அமைதிக்கான விலையைத் ‘தங்கம்’ மூலம் அளவிடலாம். இந்த மோதலில் தங்கத்தைத் தோண்டி எடுக்கும் ஆசையில் இருக்கும் ஐக்கிய அரபு இராச்சியம், அங்கிருக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கு (RSF) ஆயுதங்களை வழங்கியதை ஐக்கிய நாடுகள் சபையே ஆவணப்படுத்தியுள்ளது.

தாறுமாறாகிப்போன சர்வதேச ஒழுங்குமுறை

வெறும் சம்பிரதாயச் சடங்காக மாறியிருந்த சர்வதேச ஒழுங்குமுறை, 2025 இல் இன்னும் மோசமாக உடைந்துபோனது. அமெரிக்கா தன் இஷ்டத்திற்கு அதிகாரத்தைச் செலுத்தியது; தான் உருவாக்கிய உலகளாவிய விதிமுறைகளைத் தனது தேவைக்கேற்ப வளைத்துக்கொண்டது.

37.jpg?fit=1024%2C602&ssl=1

இஸ்ரேல் மீதான விசாரணையைத் தொடர்ந்ததற்காகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மீதே அமெரிக்கா தடைகளை விதித்தது. காஸாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களைப் புலனாய்வு செய்த ஐக்கிய நாடுகளின் சிறப்பு அதிகாரி ஃபிரான்செஸ்கா அல்பனீஸுக்கும் முட்டுக்கட்டை போடப்பட்டது. வெறுப்புப் பேச்சுகளைக் கேள்வி கேட்டதற்காகவும், அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களைப் பொறுப்புக்கூற வைத்ததற்காகவும் ஐரோப்பியச் சமூகத் தலைவர்கள் தண்டிக்கப்பட்டனர். அமெரிக்காவிற்குள் புலம்பெயர்ந்த மக்கள் நீதிமன்றங்களிலும் தெருக்களிலும் வேட்டையாடப்பட்டனர். அவர்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டும், தாக்கப்பட்டும், கேள்விக்குரிய சூழலில் நாடுகடத்தப்பட்டும் வருகின்றனர்.

இங்கே தர்க்கமும் தண்டனை கொடுப்பவரும் ஒருவர்தான்; ஆனால் கூச்சல் மட்டும் சில இடங்களுக்குச் சாதகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஐரோப்பியத் தலைவர்கள், தங்கள் ஆள் ஒருவருக்கு அமெரிக்கா தடை விதித்தபோது கதறினார்கள். ஆனால், தாங்களே உருவாக்கிய சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) இஸ்ரேலைத் தண்டித்ததற்காகத் தடை விதிக்கப்பட்டபோது மௌனம் காத்தனர். இவர்களைப் பொறுத்தவரை நீதி என்பது அவர்கள் விருப்பத்திற்குத் தேர்ந்தெடுத்துக்கொள்ளக்கூடிய ஒன்று (Optional). பொறுப்புக்கூறல் என்பது நிபந்தனை. யாருக்கு வலி ஏற்படுகிறது, யாரால் வலி ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தே இது மாறுகிறது.

சர்வதேச ஒழுங்கும் சட்டத்தின் ஆட்சியும் இங்கே ஒருபோதும் சமமாகப் பயன்படுத்தப்பட்டதில்லை. 2025 இல் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒன்றும் புதிதாக எதையும் உடைத்துவிடவில்லை; இந்தத் தறிகெட்ட அமைப்பு இப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர் அப்பட்டமாகக் காட்டியிருக்கிறார். இந்த அமைப்பு நடுநிலையானது அல்ல; இது அதிகாரத்திற்குச் சேவை செய்யவே உருவாக்கப்பட்டது. அதன் போலித்தனத்தை இனி யாராலும் மறைக்க முடியாது.

பலவீனமாகிவரும் ஜனநாயகம்

ஜனநாயகமும் சுதந்திரமும் தொடர்ந்து பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. பத்தில் ஒருவருக்குக்கூட இப்போது முழுமையான ஜனநாயகம் கிடைப்பதில்லை. உலக மக்கள்தொகையில் சுமார் 72% பேர் சர்வாதிகார அமைப்புகளின் கீழ் வாழ்கிறார்கள். இது 1970களுக்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த அளவாகும். மக்கள் பங்களிப்பு சுருங்கிவிட்டது, நிறுவனங்கள் மீதான நம்பிக்கை தளர்ந்துவிட்டது.

தொழில்நுட்ப ஜாம்பவான் சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம் உலகின் முதல் ‘ட்ரில்லினியர்’ (Trillionaire) ஆகும் நிலையை நெருங்கிவிட்டார். இந்த ஓராண்டுக் காலத்தில் அவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. ஊடகம், பாதுகாப்புத் துறை, செயற்கைக்கோள் கட்டமைப்பு என அவரது ஆதிக்கம், தனிநபர் மூலதனத்திற்கும் பொது அதிகாரத்திற்கும் இடையிலான எல்லையை மங்கச் செய்துவிட்டது. அறிஞர்கள் இதை ஒருவகை ‘தனியார் ஆட்சி’ (Private Governance) என்றே விவரிக்கிறார்கள். அவரது பணமும் தளங்களும் உலகெங்கிலும் ஒரு புதிய நவீன சர்வாதிகாரத்தை வடிவமைத்துச் சீரமைக்கின்றன.

இந்தச் சீர்குலைந்த பொருளாதார அமைப்பால் பலன் அடைந்தவர் எலான் மஸ்க் மட்டும் அல்ல. உலக சமத்துவமின்மை அறிக்கை 2026இன்படி, முதல் 10% வருமானத்தை ஈட்டுபவர்கள் மீதமுள்ள 90% பேர் பெறும் மொத்த வருமானத்தைவிட அதிகமாகப் பெறுகிறார்கள். உலகச் செல்வத்தில் 75%-ஐ அந்த முதல் 10% பணக்காரர்கள் வைத்திருக்கிறார்கள்; அடித்தட்டு மக்களுக்கோ வெறும் 2% மட்டுமே மிஞ்சுகிறது. அதே சமயம், உலகளாவிய தொழிலாளர்களின் ஊதியமோ தேக்கமடைந்து அல்லது சரிந்துவருகிறது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால், இந்த அளவிலான சமத்துவமின்மை மிகவும் அசாதாரணமானது.

38.jpg?fit=1024%2C650&ssl=1

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிலும் இந்த அழுத்தம் அப்பட்டமாகத் தெரிந்தது. இந்தியாவின் முதல் 1% பணக்காரர்கள் நாட்டின் 40% செல்வத்தைக் கொண்டுள்ளனர். இது இந்தியாவை உலகின் மிக மோசமான சமத்துவமின்மை கொண்ட சமூகங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. இது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி இருந்த காலத்தைவிடவும் மோசமானது.

ஒரு துளி நம்பிக்கை எஞ்சியிருக்கிறது…

நேபாளம், வங்கதேசம் முதல் பல்கேரியா, ஜோர்ஜியா, மடகாஸ்கர்வரை போராட்டங்கள், மாணவர் இயக்கங்கள் மூலம் இளைஞர்கள் அரசியலின் தற்போதைய நிலையைத் தகர்த்துவருகின்றனர். அரசாங்கங்கள் கவிழ்ந்தன, புதிய அரசியல் கட்டமைப்புகள் வடிவம் பெறுகின்றன. ஜோர்ஜியா இந்த மாற்றத்தின் அடையாளமாக மாறியது; இளைஞர்கள் அடக்குமுறையை மீறி வீதிகளில் உறுதியாக நிற்கிறார்கள்.

39.jpg?fit=677%2C453&ssl=1

அமெரிக்காவில், ஜோஹ்ரான் மம்தானி போன்ற சோஷலிசவாதிகள், காஸா விவகாரம், சமூக நீதி ஆகியவற்றுக்கான தங்கள் உறுதியான ஆதரவை மாற்றிக்கொள்ளாமலேயே தேர்தலில் வெற்றி பெற முடியும் எனக் காட்டினார்கள். இன்றைக்கும் கொள்கை அரசியலுக்கு இடமுண்டு என்பதற்கான சான்று இது. நியூயார்க் மேயர் தேர்தலில் வென்றபோது ஜோஹ்ரான் மம்தானி தன் மொழியையோ அல்லது வாக்குறுதிகளையோ ஒருபோதும் நீர்த்துப்போகச் செய்யவில்லை.

2025 இல் பெண்களின் உறுதியும் வெளிப்பட்டது. ஐரோப்பாவில் பெண்கள் ஒன்றுதிரண்டு பாதுகாப்பான கருக்கலைப்பு என்பது புவியியல் சார்ந்த விஷயம் அல்ல, அது தனிநபர் உரிமை என்பதை ஐரோப்பிய நாடாளுமன்றம் அங்கீகரிக்கச் செய்தனர். இது விவாதத்தின் போக்கை அறநெறியிலிருந்து ‘உரிமை’ நோக்கி மாற்றியது.

ஆற்றல் துறையிலும் மாற்றம் நிகழ்ந்தது. முதல் முறையாக நிலக்கரி மின்நிலையங்களை விடவும் காற்று, சூரிய ஒளி ஆகியவை மூலம் அதிக மின்சாரம் இந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது. இது உலக மின்சார அமைப்பில் ஒரு பெரும் திருப்புமுனை.

நெறிமுறைகள் எவ்வளவு எளிதாகச் சிதைக்கப்படும் என்பதை இந்த ஆண்டு காட்டியது. அதே சமயம், மக்கள் திரண்டு அழுத்தம் கொடுத்தால் அதிகாரம் எப்படிப் பணியும் என்பதையும் காட்டியிருக்கிறது. இந்த அழுத்தங்கள் எந்த அளவுக்கு ஒரு நிலையான கட்டமைப்பாக மாறப்போகின்றன என்பதைப் பொறுத்தே வருங்காலம் அமையும்.

மூலம்: 2025: A year without alibis

https://chakkaram.com/2026/01/01/2025-உலக-நிலவரம்-எப்படி-இருந்/

டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால்…..!

6 days 14 hours ago

டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால்…..!

December 31, 2025

டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால்…..!(வெளிச்சம்:099)

 — அழகு குணசீலன் —

ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  அழைப்பின் பேரில் விசாரணைக்கு சென்றபோது குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 26.12. 2025 அன்று கைது செய்யப்பட்ட அவர் 72 மணித்தியால தடுத்து வைப்புக்கு பின்னர், தொடர்ந்தும் விசாரணைகளுக்காக 2026 ஜனவரி 9 ம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு இடையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் விடுத்த கோரிக்கையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நிராகரித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் டக்ளஸ் கைதுக்கு பின்னால் உள்ள அரசியல் என்ன…?

1990 முதல் இன்று வரை ஈ.பி.டி.பி. மீதும் அதன் தலைமை மீதும் மிகக்கடுமையான குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் ஒரு பகுதியினரால் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கும், விமர்சனங்களுக்கும் விதிவிலக்கான மாற்று இயக்கங்களும் இல்லை, தலைமைகளும் இல்லை. பொதுவாக அனைத்து  தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும், தலைமைகளும் தங்கள் நலன் சார்ந்து இந்த இயக்கங்களுக்கு பின்னால் நின்று அவர்களை ஊக்குவித்தும் உள்ளன. தவறுகளை சுட்டிக் காட்டுவதை விடவும் இயக்கங்களோடு ஒத்து ஓடுதல் தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு உயிர்ப்பிச்சையாக இருந்திருக்கிறது.

 தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்ட அமைப்பொன்றின்  படைத்துறைத்தளபதியாக இருந்து ஸ்ரீலங்கா மத்திய அரசின் அமைச்சரவை அமைச்சர் வரை பல பதவிகளை டக்ளஸ் வகித்து இருக்கிறார். தமிழ்த்தேசிய அரசியல் விடுதலைப்போராட்ட நிலையில் இருந்து பயங்கரவாத வடிவத்தை படிப்படியாக உள்வாங்கி கொண்டபோது தமிழ்த் தேசியத்தின் பெயரிலான பயங்கரவாத செயற்பாடுகளை எதிர்த்து நின்றவர் டக்ளஸ்.  ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்திற்கு எதிராக ஆயுதம் தூக்கியதுடன் விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்திற்கும் எதிராக எந்த சமரசமும் இன்றி போராடிய ஒருவர்.

கடந்த 35 ஆண்டுகளாக வடக்கு கிழக்கு தமிழர் அரசியலில் அவர் எதைச் சொன்னாரோ அதுவே நடந்திருக்கிறது. நடந்து கொண்டும் இருக்கிறது.இந்த எதிர்வு கூறலில் உள்ள  உண்மையை ஈழத்தமிழர்கள் இலகுவாக கடந்து செல்லமுடியாத அரசியல் தீர்க்கதரிசனம்.

ஸ்ரீ லங்கா அரசியலமைப்பின் ஆறாவது சரத்தை ஏற்றும், ஒட்டுமொத்த 1978 அரசியலமைப்பையும், தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட சுமார் 20 அரசியலமைப்பு மாற்றங்களையும் ஏற்றுக் கொண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டு, மக்கள் மத்தியில் போலி தமிழ்த்தேசிய – சமஸ்டி, ஒற்றையாட்சி நிராகரிப்பு,   இன்னும் தனித் தமிழ் ஈழம் என்ற  முரண்பாட்டு அரசியலை  டக்ளஸ் தேவானந்தா செய்யவில்லை. அரசியல் அமைப்பு நடைமுறைகளுக்கு உட்பட்ட அரசியலே அவரது அரசியலாக இருக்கிறது.

இந்திய -இலங்கை சமாதான உடன்படிக்கை ஊடான மாகாணசபை அதிகாரப்பகிர்வை மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று அசைக்க முடியாத உறுதியுடன் இன்றுவரை வெளிப்படையாக இடித்துரைப்பவர். இது விடயத்தில் விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை , அவர்கள் முப்படைகளோடும் பலமாக இருந்த காலத்திலும், தனது மக்களுக்கான  அரசியல் நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் விடுதலைப்புலிகளின் 13 பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொண்டார்.

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு மாகாணசபை முறை தீர்வு அல்ல என்று கூறிக்கொண்டு, புலிகள் இருக்கும் வரை மாகாணசபையை பகிஷ்கரித்தும், புலிகள் தோற்கடிக்கடிக்கப்பட்ட பின்னர்,…. ஆரம்பம், அடிப்படை, அந்த புள்ளி, இந்த புள்ளி என்று ஏமாற்று அரசியலை டக்ளஸ் செய்யவில்லை. 

ஏன்? இன்றும் “ஏக்கய ராஜ்சிய” வார்த்தையாடலின் போதும்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கூட மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்றாமல் இருக்க தயாரில்லை. 

இந்திய -இலங்கை சமாதான உடன்படிக்கையை இந்திய மேலாதிக்கம் என்றும், இராணுவ ஆக்கிரமிப்பு என்றும்  பயங்கரவாதத்தை கையில் எடுத்து கிளர்ச்சி செய்த ஜே.வி.பி.யினர் கூட இறுதியில் மாகாணசபை தேர்தலில் பங்கு பற்றினர். ராஜீவ்காந்தி மீது தாக்குதல் நடாத்திய ஜே.வி.பி. உறுப்பினர்/ ஆதரவாளரான கடற்படை வீரரை ஜே.வி.பி. மாகாணசபை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தினர்.

புலிகள் இயக்கமும், புலிகளால் இந்திய கைக்கூலிகள் என்று தடைசெய்யப்பட்ட இயக்கங்களும், புலிகளை  அராஜகவாதிகள் என்று  கூறிய  இந்த இயக்கங்களும் உண்மையில் இந்திய வெளியுறவில் இரு துருவங்களைச் சேர்ந்தவை. தமிழ்தேசிய கூட்டமைப்பு அமைக்கப்பட்ட போது புலிக்கு பின்னால் போனவர்கள் இப்போது புலி இல்லாத நிலையில் இந்தியாவுக்கு பின்னால் போகின்றார்கள். 

இந்த தளம்பல், சந்தர்ப்பவாதம் டக்ளஸ் இடத்தில்  இருந்ததில்லை. அன்று முதல் இன்றுவரை அவர் இந்தியாவை பிராந்தியத்தின் ஒரு அரசியல் நிர்ணய சக்தியாகவே பார்க்கிறார். தேவையான நெருக்கத்துடனும், தேவையான தூரத்திலும் வைத்து  அரசியல் செய்கிறார். இதை ஜே.வி.பி.கூட அதிகாரத்தை கைப்பற்றிய பின்னரே கற்றுக்கொண்டது.

பயங்கரவாதத்தை பயங்கரவாதமாக பார்த்தவர் -பார்க்கிறவர் டக்ளஸ். அதனால் புலிப் பயங்கரவாதத்தையும், அரசபயங்கரவாதத்தையும் அவர் பயங்கரவாதமாகவே பார்த்தார். புலிகளின் மக்கள் மீது அக்கறையற்ற வெறும் அதிகாரப்பசிக்கான அரசியல் இலங்கை அரசையும், இந்திய அரசையும் தூண்டி மக்களை அழிக்கும் என்பது டக்ளஸின் அரசியல் நோக்கு. புலிகள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கம் என்று அவர் கூறினார்.  இதை புலிகள் இல்லாத போது சொன்ன சுமந்திரன் பிராதான தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளர். செல் நெறியை நிர்ணயிப்பவர். ஆனால் இந்த  உண்மையை புலிகள் இருக்கும் போதே சொன்னவர் டக்ளஸ்.

மற்றைய அமைப்புக்கள், கட்சிகள் போன்று புலிக்கு பசுத்தோலை அவர் போர்க்கவில்லை. டக்ளஸின் கருத்தையே சர்வதேசமும், இந்தியாவும் கொண்டிருந்தன. தமிழ்க் கட்சிகள் தூதரகங்களின் பூட்டிய கதவுக்குள்ளும், வெளிநாட்டு சந்திப்புக்களிலும் ஒன்றையும், மக்கள் மத்தியில்  வேறொன்றையும் சொல்லி செய்யும் ‘தெப்பிராட்டிய அரசியலை’ டக்ளஸ் தேவானந்தா செய்யவில்லை.

தற்போது 2001 இல்  தனக்கும், தனது அமைப்புக்குமான தற்பாதுகாப்புக்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி தென்னிலங்கை குற்றவாளி ஒருவரின் கரங்களுக்கு எப்படி போனது என்பதே கேள்வி/ விசாரணை. 

இத்துப்பாக்கி 18 ஆண்டுகளுக்கு பின்னர் 2019 இல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  

அதற்கான விசாரணை கண்டுபிடிக்கப்பட்டு 6 வருடங்களுக்கு பிறகு நடைபெறுகிறது.

அதை டக்ளஸிடம் இருந்து,  தான் பெற்றுக்கொண்டதாக குறிப்பிட்ட குற்றவாளி தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

 இராணுவத்தரப்பு பதிவேட்டின் படி 13 – T56 ரக துப்பாக்கிகளையும், 6 ரிவோல்வர் களையும்  டக்ளஸ் அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற முன் நிபந்தனைகளுடன் சுயமாக கையொப்பமிட்டடு பெற்றுள்ளார் என்கிறது புலனாய்வுப் பிரிவு.

புலிகளால் தடைசெய்யப்பட்ட  இயக்கத் தலைமைகளும், உறுப்பினர்களும் புலிகளால் வேட்டையாடப்பட்ட  சூழலில் டக்ளஸ் தேவானந்தா மட்டும் அல்ல மற்றைய அமைப்புக்களும், தலைமைகளும் இலங்கை, இந்திய அரசாங்கங்களின் இராணுவ/ ஆயுத உதவிகளை பெற்றுள்ளன.

 என்பதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. 

இன்றைய கேள்வி அந்த துப்பாக்கி மற்றைய தரப்புக்கு எப்படி போனது என்பதுதான்?  பார்க்கவும், கேட்கவும் இது நியாயமான கேள்விதான். இல்லை என்பதல்ல. அதுவும் சட்ட ரீதியில் மிக முக்கியமான கேள்வியும் கூட. ஆனால் ஒரு இயக்கத்தின், அரசாங்க  இயந்திரத்தின் யுத்தகால செயற்பாடுகளை தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் புதிரல்ல. ஜே.வி.பி.யும், ஜனாதிபதியும் இந்த சூழ்நிலைக்கூடாகவை பயணித்துள்ளனர்.

ஈ.பி.டி.யில் இருந்து விலகிச்சென்றவர்களால். கையாடப்பட்டு  தென்னிலங்கையில் விற்கப்பட்டிருக்கலாம், 

அல்லது, யுத்தத்திற்கு பின்னர்  மீள ஒப்படைக்கப்பட்டும் துப்பாக்கிகள் வழங்கப்பட்ட/ மீள ஒப்படைக்கப்பட்ட பதிவுகளை மீளப்பெறாத வகையில், ஆயத களஞ்சியத்தில் இருந்து களவாடப்பட்டிருக்கலாம்..

அல்லது, இராணுவத்திடம் இருந்து கூட இந்த துப்பாக்கி கைமாறியிருக்கலாம்,

அல்லது துப்பாக்கியோடு சென்றவர் இறந்திருக்கலாம்,.

 என்பது  போன்ற பல கேள்விகளே  ஈ.பி.டி.பி. தரப்பில் உறுதியாக கூற முடியாத ஒரு பதிலாக அடிபடுகிறது.  

படையில் இருந்து தப்பியோடிய பல சிப்பாய்களிடம் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

தென்னிலங்கை குற்றச்செயல்களில் இந்த படையினரும், அவர்கள் கொண்டு சென்ற ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

ஆனால் இந்த வாதங்கள்  டக்ளஸை இந்த குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்ய போதுமானதா? என்றால் இல்லை. மாறாக சூழலை மேலும் விளங்கிக்கொள்வதற்கான மேலதிக தகவல்கள் மட்டுமே.

தற்போது, டக்ளஸ் கைது செய்யப்பட்டது  அரசாங்கம் பிள்ளையார் பிடிக்கப்போன…. கதையை நினைவூட்டுகிறது. புலனாய்வு பிரிவினர் கடந்த காலங்களில் மறுதலித்து வந்த ஒரு உண்மையை அவர்களே சர்வதேகத்திற்கு  இடமின்றி வெளிப்படுத்தியுள்ளனர். அதுதான் இராணுவத்தின் ஆதரவுடன் தமிழ்க்குழுக்கள் இணைந்து செயற்பட்டன என்பதும், அக்குழுக்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது என்பதும் வெளிப்பட்டிருக்கிறது. இது இலங்கை மக்களுக்கு ஒன்றும் இரகசியம் அல்ல. இதற்கு ஈ.பி.டி.பி. மட்டும் அல்ல புலிகளால் தடைசெய்யப்பட்ட மற்றைய குழுக்களும் விலக்கல்ல. 

பிரேமதாச -ரஞ்சன் விஜயரெட்ண காலத்தில் புலிகளுக்கும் அரசாங்கம் ஆயுதங்களை வழங்கியது. பணமும் வழங்கப்பட்டது. 

இந்திய இராணுவத்தை வெளியேற்றவும், ஈ.பி.ஆர்.எல்.எப். ஈ.என்.டி.எல்.எப். கூட்டு தமிழ்த்தேசிய இராணுவத்தை செயலிழக்கச் செய்யவும் என்று கூறி புலிகள் இந்த ஆயுதங்களை பெற்றுக்கொண்டனர். 

இந்த ஆயுதங்களை புலிகள் அரசாங்கத்திடம் மீள ஒப்படைத்ததற்கு வரலாறு இல்லை.

ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை ஈரோஸ் பொறுப்பேற்று அதற்கான ஆயுதங்களையும், சம்பளங்களையும், வாகனங்களையும் பெற்றுக்கொண்டது. 

இந்த ஆயுதங்களில்  ஒரு பகுதியையும், வாகனங்களையும் ஈரோஸ் முகாம்களை தாக்கி புலிகள் எடுத்துச்சென்றனர். இவற்றிற்கான பட்டியலை எங்கு தேடுவது.? 

முதலமைச்சர் வரதராஜ பெருமாள் காலத்தில் மாகாணசபை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அது இலங்கை படையினர் முகாமுக்குள் இருந்த காலம். ஆனால் மாகாணசபை உறுப்பினர்களின்  சம்பளம், அவர்களின் பாதுகாப்பு செலவுகளை கொழும்பு அரசாங்கமே செய்தது.  பஜீரோ ஜீப் வாகனங்களும். வழங்கப்பட்டன. 

 இவை எல்லாம் எப்போது? எங்கே வைத்து ஒப்படைக்கப்பட்டன. ஆயுதங்களை இந்தியாவும், இலங்கையும் வழங்கியதாக கூறப்படுகிறது..  இப்படி உள்நாட்டு யுத்தம் ஒன்றின் போது முறையற்ற, ஒழுங்கமைக்கப்படாத  நிர்வாகம் என்பது எல்லா நாடுகளிலும் பொதுவான ஒரு போக்கு. 

இது டக்ளஸ் தேவானந்தாவை பிணையெடுப்பதற்கான பதிவல்ல. ஜதார்த்தம். சட்டம், ஒழுங்கு, நீதி, நிர்வாகம் சீர்குலைந்து, செயலிழந்து இருக்கின்ற நிலையில் பொதுவான தன்மை.

ஜே.வி.பி. கிராமிய மட்டத்தில் தனது அமைப்பை ஸ்திரப்படுத்த ஓய்வு பெற்ற படையினருக்கான அமைப்புக்களை உருவாக்கியது. இவர்களில் பெரும்பாலானோர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள். இராணுவத்தில்  இருந்து, ஆயுதங்களோடு தப்பியோடியவர்கள். இவர்களை பாதுகாக்கவே டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால் அரசாங்கம் ஒழித்து பிடித்து விளையாடுகிறது. டக்ளஸ் தேவானந்தாவை நீதிமன்றத்தில் நிறுத்துவதைவிடவும் சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களில் இருந்து  படைத்தரப்பு போர்க்குற்றவாளிகளை பாதுகாக்க படாதபாடு படுகிறது அரசாங்கம்.

 இறுதியாக, இன்று கர்மா….., தெய்வம் நின்றறுக்கும்….., மன்னருக்கு செங்கம்பள வரவேற்பு…. என்றெல்லாம் பேசுபவர்களுக்கு. 

அந்த கர்மாவின் பங்காளிகளான  நீங்கள் கர்மாவை முள்ளிவாய்க்காலுக்கு பின்னரும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். என்றால் கர்மா பற்றிய உங்களின்  புரிந்துணர்வு தான் என்ன…?

 பத்துக்கும் மேற்பட்ட தாக்குதல்களில் தப்பிய ஒருவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் . 

அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியவர்களை கர்மா  கொலை செய்தது என்று சொல்லலாமா?

இங்கு எது கர்மா…..? கைது செய்யப்படுவர்களுக்கு  கர்மாதான் காரணம் என்றால், 

காணாமல் போனவர்கள்…. 

சிறையில் வாடும் அரசியல் கைதிகள்…..,  

போரில் அங்கவீனம் அடைந்தோர்…

 நிற்கதியாக்கப்பட்ட. தாய்மார்கள்…. 

பிள்ளைகள்…. எல்லாம் கர்மாவைச் சுமக்கிறார்களா …?

உங்கள் குடும்பங்களில் ஏற்பட்ட போர்க்கால இழப்புக்களுக்கு என்ன பெயர்..?  

கர்மாவா …? 

மூளைக்கும் வாய்க்கும் சம்பந்தம் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல்.

https://arangamnews.com/?p=12565

வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளும் இந்தியாவும் — வீரகத்தி தனபாலசிங்கம் — 

1 week ago

வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளும் இந்தியாவும்

December 29, 2025

வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளும் இந்தியாவும்

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

வழமை போன்றே வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் கடந்த வாரமும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை சந்திப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தின்போது  மாகாணசபை தேர்தல்களை  விரைவில் நடத்துவதுடன்  அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா நெருக்குதலைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தன.

கடந்த மாதம் டித்வா சூறாவளியின் விளைவான பேரழிவில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கான இந்தியாவின் உதவித் திட்டத்தை அறிவிப்பதற்காக ஜெய்சங்கர் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக கொழும்புக்கு ஒரு நாள் விஜயமாக கடந்த செவ்வாய்கிழமை  வந்திருந்தார்.

இலங்கை தமிழரசு  கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவர்கள் “இந்தியா இல்லத்தில்” ஜெய்சங்கரை கூட்டாகச் சந்தித்துப் பேசினர்.  அவரிடம்  கூறவேண்டிய விடயங்கள் குறித்து இந்த தலைவர்கள் முன்கூட்டியே தங்களுக்குள் வேறு ஒரு இடத்தில்  கலந்தாலோசனை நடத்தியது இந்த தடவை வித்தியாசமான ஒரு அணுகுமுறையாக  அமைந்திருந்தது.  தங்களுக்குள் முரண்பாடுகள்  இருக்கின்ற போதிலும்,  தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேசும்போது தங்களுக்குள் ஒரு குறைந்தபட்ச  புரிந்துணர்வாவது இருப்பது அவசியம் என்று இப்போது  தமிழ் அரசியல்வாதிகள் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றார்கள் போலும். 

இயற்கை அனர்த்தத்தினால் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய  நிவாரண மற்றும் புனரமைப்பு பணிகள்  குறித்தும் இந்திய வெளியுறவு அமைச்சருடன் பேசிய இந்த தலைவர்கள் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு இலங்கையை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையே பிதானமாக  முன்வைத்தனர். அத்துடன் பிரதமர் மோடிக்கான கடிதம் ஒன்றையும் அவரிடம் இவர்கள் கையளித்தனர். 

மாகாணசபைகளை பற்றி வழமையாக அக்கறை காட்டாமல் இருந்துவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் மாகாணசபை தேர்தல்களை நடத்த வேண்டியது அவசியம் என்று ஏனைய தலைவர்களுடன் சேர்ந்து ஜெய்சங்கரிடம் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்புக்களை இடைநடுவில் நிறுத்திவிட்டு ஜெய்சங்கருடனான சந்திப்புக்காக அவர் அவசரமாக கொழும்பு திரும்பினார். 

மாகாணசபை தேர்தல்களை நடத்த வேண்டிய அவசியத்தை மற்றைய தமிழ் தலைவர்களுடன் சேர்ந்து இந்திய வெளியுறவு அமைச்சருக்கு கூறிய அதேவேளை, கஜேந்திரகுமார் இலங்கையில்  ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பரவலாக்கலை  உருப்படியாகச் செய்வது சாத்தியமில்லை என்றும் அதனால் கூட்டாட்சி (Federal system)  அடிப்படையிலான ஏற்பாடு மாத்திரமே  இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமைய முடியும் என்றும்  சுட்டிக்காட்டியதன் மூலமாக  தன்னை மற்றையவர்களிடம் இருந்து வேறுபடுத்துவதில்  அக்கறை காட்டினார். 

ஆனால், தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் உடனடியாகவே  தாங்களும்  இனப்பிரச்சினைக்கு நிலைபேறான அரசியல்  தீர்வாக கூட்டாட்சி  முறையே இருக்கமுடியும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும்  தங்களைப் பொறுத்தவரை கூட்டாட்சி  என்ற அடையாளப் பெயரில் அல்ல, அதிகாரங்களின் உள்ளடக்கத்திலேயே  அக்கறை கொண்டிருப்பதாகவும் கூறினார். 

ஜெய்சங்கருடனான சந்திப்புக்கு பிறகு கஜேந்திரகுமார் கடந்த வாரம் நடத்திய செய்தியாளர்கள் மகாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள் மற்றைய தமிழ்க்கட்சிகளுக்கும் தனது கட்சிக்கும் இடையிலான  கொள்கை வேறுபாட்டை விளக்கும் நோக்கில் அமைந்திருந்தன. தமிழரசு கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் மாகாணசபை தேர்தல்களிலும் 13 வது திருத்தத்தின் நடைமுறைப்படுத்தலிலும் அக்கறை செலுத்திய அதேவேளை, கூட்டாட்சி  முறையின் அடிப்படையிலான அரசியலமைப்பை இலங்கை அரசாங்கம் கொண்டுவருவதற்கு இந்தியா ஊக்கம் கொடுக்க வேண்டும் என்பதை  ஜெய்சங்கரிடம் வலியுறுத்தியுறுத்துவதில் மாத்திரமே கவனம் செலுத்தியதாக கூறினார். 

பிரதமர் மோடிக்கான கடிதத்தின் உள்ளடக்கம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அது என்றைக்குமே தெரிய வராமலும் போகலாம் என்றும் கூட கஜேந்திரகுமார் செய்தியாளர்களிடம் கூறினார். அந்த கடிதத்தில் மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதலை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை  உள்ளடங்கியிருக்கிறதே தவிர, கூட்டாட்சிமுறை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று  நம்பகமாகத் தெரியவருகிறது.

மாகாணசபை தேர்தல் தொர்பிலான தமிழ்க் கட்சிகளின் வலியுறுத்தலோ அல்லது கூட்டாட்சி முறை பற்றிய நிலைப்பாடோ ஜெய்சங்கருக்கு புதியவை அல்ல. வெளியுறவு அமைச்சராக மாத்திரமல்ல, அதற்கு முன்னர் வெளியுறவு செயலாளராக பதவி வகித்த நாட்களிலும் அவர் இலங்கை தமிழ்க் கட்சிளுடன் பல தடவைகள் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறார். அவர்  வெளியுறவு செயலாளராக இருந்தபோது கொழும்பில்  தமிழ்க் கட்சிகளுடனான  சந்திப்பு ஒன்றில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு குறித்து  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கவனத்துக்கு கொண்டுவந்த சந்தர்ப்பத்தில் இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பிறகு பெருமளவு நிகழ்வுகள் இடம்பெற்றுவிட்டன என்றும் மீண்டும்  இரு மாகாணங்களின்    இணைப்பு குறித்து கொழும்புடன் பேசக்கூடிய நிலையில் இந்தியா இல்லை என்றும் கூறியிருந்தார். 

வெளியுறவு அமைச்சராக வந்த பிறகு கொழும்பில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பு ஒன்றில் 13 வது அரசியலமைப்பு திருத்தத்தை தானும் மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக நடைமுறைப்படுத்தாமல் இருந்துவரும் இலங்கை அரசாங்கங்களிடம்  கூட்டாட்சி  கோரிக்கையை எவ்வாறு முன்வைக்க முடியும்  என்று ஜெய்சங்கர்  கேள்வியெழுப்பினார். கஜேந்திரகுமாரும்  கலந்துகொண்ட அந்த சந்திப்பில் கூட்டாட்சி முறை குறித்து வாழ்நாள் பூராவும் பேசிக் கொண்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார். 

கடந்த வாரத்தைய சந்திப்பில் அவர் கூட்டாட்சி முறையைப் பற்றி முன்னரைப் போன்று எதையும் கூறியதாக தெரிய வரவில்லை. மாகாணசபை தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு கொழும்பை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்ற தமிழ்த் தலைவர்களின் வேண்டுகோளுக்கு கூட நேரடியான பதில் எதையும் அவர் கூறவில்லை என்று அதில் கலந்துகொண்ட தலைவர் ஒருவர் தெரிவித்த தகவல்களின் மூலம் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. பதிலாக, இயற்கை அனர்த்தம் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் சூழ்நிலையில் மாகாணசபை தேர்தல்களை எவ்வாறு நடத்தச் செய்வது என்று தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடமே ஜெய்சங்கர் ஆலோசனை கேட்கும் தொனியில் பேசியதாகவும் தெரியவருகிறது. 

தேசிய மக்கள் சக்தியின் பிரதான அங்கத்துவக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் ( ஜே.வி.பி. ) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா புதுடில்லிக்கு வரும்போது மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்துவது குறித்தும் மாகாணசபைகள் முறைமையை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் அவரிடம் வலியுறுத்திக்கூறுமாறு தமிழ் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கும் ஜெய்சங்கர் பதில் எதையும் கூறாமல் சகலவற்றையும் அவதானித்துக் கொண்டிருந்ததாக சந்திப்பில் கலந்துகொண்ட ஒரு தலைவர் கூறினார். 

சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதற்கு பின்னரான 38 வருட காலத்தில் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இலங்கையை வழிக்குக் கொண்டுவர இந்தியாவினால் முடியவில்லை. பெருமளவுக்கு மாறிவிட்ட புவிசார் அரசியல் நிலைவரங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவின் அரசாங்கத்தின் மீது இனப்பிரச்சினை விவகாரத்தில் எந்தவிதமான நெருக்குதலையும் கொடுப்பதற்கு மோடி அரசாங்கம் நாட்டம் காட்டும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

ஆனால், மாகாணசபை தேர்தல்களை நடத்துவதுடன் இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேயிருக்கும் என்பதை மாத்திரம் எதிர்பார்க்கலாம். அதுவும் குறிப்பாக, இயற்கை அனர்த்தத்தின் அழிவுகளில் இருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்புவதில் தீவிர கவனத்தை செலுத்துகின்ற ஒரு அரசாங்கத்திடம் மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று உடனடியாக கேட்பதற்கு மோடி அரசாங்கம் முன்வரும் என்றும் எதிர்பார்க்க முடியாது. 

மாகாணசபை தேர்தல்களை  நடத்துவதற்கு அரசாங்கத்தைக் கோரும் அரசியல்  போராட்ட  இயக்கம் ஒன்றை ஜனவரி முதல் முன்னெடுக்கப் போவதாக தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் சூறாவளிக்கு முன்னர் கூறியிருந்தார். மாகாணசபை தேர்தல்களை நடத்துவதில் அக்கறையில்லாமல் இருந்துவரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவற்றை  மேலும் பின்போடுவதற்கு சூறாவளியின் வடிவில் வசதியான சாட்டு ஒன்று கிடைத்திருக்கிறது. 

இந்தியாவிடம் வேண்டுகோள் விடுப்பதை தவிர, தமிழ்க் கட்சிகளுக்கு வேறு மார்க்கமே இல்லை. ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வை முடக்காமல் கூட்டாட்சி அடிப்படையிலான தீர்வொன்றை புதிய அரசியலமைப்பின் மூலம் அறிமுகப்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இந்தியாவைக் கொண்டு நெருக்குதல் கொடுப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகளின் உதவியை கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசியப் பேரவை நாடியிருக்கிறது. 

தமிழகத்தில் இன்னமும் நான்கு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பிரசாரங்களில் மீண்டும் இலங்கை தமிழர் பிரச்சினையை முக்கியத்துவம் பெறச் செய்வதற்கான ஒரு முயற்சியாகவும் இதை சில அவதானிகள் கருதுகிறார்கள். மாகாணசபை தேர்தல் தொடக்கம் கூட்டாட்சிக் கோரிக்கை  வரை இலங்கை தமிழர்களின் கதியை  இந்தியாவின் காலடியில்  சமர்ப்பித்துவிட்டு நிற்கின்றன தமிழ்க் கட்சிகள்.  இலங்கை அரசாங்கத்தை அசைப்பதற்காக இந்திய அரசாங்கத்தை முதலில் அசைப்பதே தற்போது பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

சமாதான உடன்படிக்கைக்கு பின்னரான காலப் பகுதியில் இந்தியாவைக் கையாளுவதில் தமிழர் தரப்பு  இழைத்த மாபெரும் தவறையும் அதற்கு காரணமான முக்கிய சக்திகளையும்  பற்றிய தெளிவான விளக்கப்பாட்டை தமிழ்க் கட்சிகள் கொண்டிருப்பது அவசியம். மாகாணசபை முறைமையின் இன்றைய சீரழிவுக்கு தமிழர் தரப்பும் கணிசமானளவுக்கு காரணம் என்பதும் வெளிப்படையாக ஒத்துக் கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.

https://arangamnews.com/?p=12559

அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் (PSTA): தேசிய மக்கள் சக்தி வழிதவறிச் செல்கிறதா?

1 week ago

அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் (PSTA): தேசிய மக்கள் சக்தி வழிதவறிச் செல்கிறதா?

605129996_1441781024624950_5131196563666

Photo, Anura Kumara Dissanayake fb page

வரலாறு மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளபடி, பிரஜைகளின் நடத்தைகளைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள், அரசியல் ரீதியான சட்டபூர்வத்தன்மையை வலுவிழக்கச் செய்து, அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிடுகின்றன. சோவியத் ஒன்றியம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். அடக்குமுறையானது பெரும்பாலும் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவதை விட, சமூக இயக்கங்களையும் அரசியல் பங்கேற்பையும் ஊக்குவிக்கவே செய்கின்றது.

ஜனநாயகம் வெற்றியடையவும், நிலையான ஆட்சி வேரூன்றவும் வேண்டுமானால், அரசாங்க மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பிரஜைகளை உள்வாங்கப்பட வேண்டும்; மக்கள் பங்கேற்பின் மூலம் இணக்கப்பாட்டை வளர்த்தெடுக்க வேண்டும். அத்துடன், காலாவதியான அடக்குமுறை நடவடிக்கைகளை விட, பரஸ்பர செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மக்களுக்கு எதிராக எடுக்கப்படும் பலவந்தமான நடவடிக்கைகள் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கும் அதேவேளை, மக்கள் இணக்கப்பாடும் பொறுப்புக்கூறலும் மாத்திரமே ஸ்திரத்தன்மையை பெற்றுத்தரும்.

2024 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, தேசிய மக்கள் சக்தி (NPP) கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA – 1979) நீக்குவதாக உறுதியளித்தது. தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தின் “A Thriving Nation, A Beautiful Life” என்ற ஆங்கிலப் பிரதியின் 129ஆம் பக்கத்தில், “பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் நீக்குதல் மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்களின் சிவில் உரிமைகளை உறுதிப்படுத்துதல்” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த குறிப்பிட்ட வாக்குறுதியை சிங்களப் பிரதியில் காண முடியவில்லை. இது தேசிய மக்கள் சக்தியும் அதன் சட்டக் குழுவும் விளக்கமளிக்க வேண்டிய ஒரு முரண்பாடாகும். இருப்பினும், இரண்டு பிரதிகளுமே நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை ஒழிப்பது பற்றி குறிப்பிடுகின்றன.

கடந்த 45 ஆண்டுகளாக, பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) பல இலங்கையர்களின், குறிப்பாக சிறுபான்மையின சமூகங்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளது. இது பொதுமக்களின் எதிர்ப்பு, அரசியல் இடையூறுகள் மற்றும் அரசியல் அதிகாரத்திற்கு எதிரான அச்சுறுத்தல்களை ‘அறிவிக்கப்படாத பயங்கரவாதச் செயல்களாக்க்’ கருதுகிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் இல்லாமலேயே, முந்தைய அரசாங்கங்கள் இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டன. பரந்த பயங்கரவாத எதிர்ப்பு விதிகள் சிவில் சமூகத்தின் கண்காணிப்பைக் கட்டுப்படுத்துவதோடு, அதிகாரப்பூர்வ ஊழலுக்கு வழிவகுக்கின்றன என்பதை அங்கீகரித்து, சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) கூட இந்தச் சட்டத்தை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன.

மக்கள் விடுதலை முன்னணி (JVP), தனது ஆரம்பகால கொள்கை பிரகடனத்தின் ‘அரசின் கட்டமைப்பு’ எனும் 14ஆவது பிரிவின் கீழ், அடக்குமுறை சட்டங்களை முழுமையாக ஒழிப்பதாக உறுதியளித்தது. இந்த அருவருப்பான சட்டத்தை இரத்துச் செய்யுமாறு அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களுக்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. பிரஜைகளுக்கு எதிராக மீண்டும் மீண்டும் தவறாகப் பயன்படுத்தப்பட்ட இந்த அபாயகரமான சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்பதே மக்களின் எளிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஒரு முற்போக்கான அரசாங்கம், போர் மற்றும் ஆயுத மோதல்களின் வடுக்களைக் கையாண்டு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இதுவே ஒரே வழியாகும்.

வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குதல்

“தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தற்போது தனது தேர்தல் நேர்மை குறித்த ஒரு முக்கியமான சோதனையை எதிர்கொள்கிறது. NPP அளித்த பொருளாதார வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதில் தடைகள் ஏற்பட்டுள்ளன. முந்தைய ஆட்சியால் இயற்றப்பட்ட சட்டங்கள், எதிர்கால அரசாங்கங்களை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கன நடவடிக்கைக் கட்டமைப்பிற்குள் பிணைத்துள்ளமை இதற்கு ஒரு காரணமாகும் (கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் மக்களுக்கு சில சலுகைகளை வழங்குவதற்காக NPP அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்ற போதிலும்). மேலும், பல்வேறு அரசியல் அபிலாஷைகள் மற்றும் ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாகவும் சில வாக்குறுதிகளின் முன்னுரிமைகள் மாற்றப்பட்டுள்ளன. இத்தகைய சூழல்களால் அல்லது வேறு காரணங்களால், நீண்ட காத்திருப்போ அல்லது பெரும் வளங்களோ தேவைப்படாத சில முக்கியமான விவகாரங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதாகத் தெரிகிறது.

எதிர்க்கட்சியில் இருந்தபோது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறியது போல, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) தொடர்வதற்கோ அல்லது அதற்குப் பதிலாக வேறொரு சட்டத்தைக் கொண்டு வருவதற்கோ எந்தவொரு நியாயமான காரணமும் இல்லை. எதிர்க்கட்சியில் இருந்து ஆட்சிக்கு வந்த பின்னர், அரச அடக்குமுறையின் தொடர்ச்சியான கருவியாக இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை வேறு வடிவத்தில் வைத்திருப்பதற்குத் தேவையான புதிதாக எதையாவது NPP கண்டறிந்துள்ளதா? எதுவாக இருந்தாலும், இது தேர்தல் வாக்குறுதி அல்ல.

PTA வை முழுமையாக ஒழிக்கவேண்டும் என்பதே தேர்தல் பிரச்சாரத்தின் போது இருந்த தெளிவான புரிதலாகும். பயங்கரவாதத் தாக்குதல்களைக் கையாளுவதற்குப் பதிலாக, சமூக – பொருளாதார அல்லது தேசிய ரீதியான குறைகளுக்குத் தீர்வு தேடுபவர்களுக்கு எதிராக பாரிய அளவில் அரச பயங்கரவாதத்தை தீவிரப்படுத்துவதன் மூலம் நிலைமையை மேலும் மோசமாக்குவதற்கு இச்சட்டம் பங்களிப்பு செய்துள்ளதாக இதனை ஒழிப்பதற்காகக் குரல் கொடுத்தவர்கள் நம்பியிருந்தனர்.

காரணம் எதுவாக இருந்தாலும், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தான் ஒரு காலத்தில் எதிர்ப்புத் தெரிவித்த, முந்தைய அனைத்து அரசாங்கங்களின் பாதையையே பின்பற்றி, தற்போது தனது வாக்குறுதியிலிருந்து பின்வாங்குவது போல் தோன்றுகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) ஒழிப்பதற்குப் பதிலாக, சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளைப் பின்பற்றி, உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான ஒரு சட்டக் கட்டமைப்பைப் பரிந்துரைக்க அரசாங்கம் ஒரு குழுவை நியமித்துள்ளது. சர்வதேச மற்றும் உள்நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு இருக்கும் நிலையில், அரசாங்கம் இந்தச் சட்டத்தை நேரடியாக ரத்து செய்திருக்க வேண்டும்.

சர்வதேச சூழல்

சர்வதேச அளவில், பயங்கரவாதத்திலிருந்து அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கூறப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், பெரும்பாலும் அதற்கு நேர்மாறாகச் செயல்பட்டு, அதே உரிமைகளை மீறுவதோடு அவற்றைச் சீர்குலைக்கவும் செய்கின்றன. காஸாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் இனப்படுகொலை இதற்குச் சிறந்த சமகால உதாரணமாகும். பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடுபவர்கள் பயங்கரவாதிகளாகக் கருதப்பட்டு, தாக்கப்படுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள் மற்றும் தடுத்து வைக்கப்படுகிறார்கள். ஆனால், நெதன்யாகுவின் பயங்கரவாதப் பிரச்சாரங்களை ஆதரிப்பவர்கள் எவ்வித விளைவுகளையும் எதிர்கொள்வதில்லை. ஆஸ்திரேலியாவில், ஹனுக்கா (Hanukkah) கொண்டாட்டத்தின் போது யூதர்கள் மீது நடாத்தப்பட்ட போண்டி பீச் (Bondi Beach) தாக்குதலுக்குப் பிறகு, எதிர்க்கட்சிகள் மற்றும் மறைமுக சியோனிச சக்திகளின் அழுத்தத்தினால், சியோனிசம் மற்றும் நெதன்யாகுவின் பயங்கரவாத ஆட்சியை விமர்சிப்பவர்களின் ஜனநாயக சுதந்திரத்தை மேலும் கட்டுப்படுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

அடக்குமுறை நடவடிக்கைகளை விட ஆலோசனை மற்றும் உரையாடல்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு சாதகமான சூழலை உருவாக்குவது, அமைதியான முறையில் மோதல்களைத் தீர்ப்பதற்கான ஒரு முக்கிய தூணாகக் கருதப்படுகிறது. இதுவே நிலையான உறுதிப்பாட்டை வளர்ப்பதோடு, அடிப்படை சமூக – பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது. அடக்குமுறைச் சட்டங்களை இயற்றுவதும் செயல்படுத்துவதும், இன்னும் கடுமையான சட்டங்களுக்கான தேவையையே உருவாக்குகின்றன. இது இறுதியில் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் நிகழ்ந்தது போன்ற வெடிப்புச் சூழல்களுக்கே வழிவகுக்கின்றன. ஏனெனில், இத்தகைய சட்டங்கள் எப்போதும் அடக்குமுறை, துஷ்பிரயோகம் மற்றும் தவறான பயன்பாடு ஆகிய நோக்கங்களுடனேயே உருவாக்கப்படுகின்றன. சமூகச் சுமைகளைக் களைவதும், வடுக்களைக் குணப்படுத்துவதும், பாலங்களை உருவாக்குவதுமே முற்போக்கான சமூகங்களுக்கான சிறந்த மாற்றாக எப்போதும் இருந்து வந்துள்ளன.

அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் (PSTA)

இந்தச் சூழலில்தான், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் (PTA) பதிலாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமான ‘அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டத்தை’ (PSTA) நாம் பரிசீலிக்க வேண்டும். தற்போது பரிசீலனையில் உள்ள மற்றும் பொதுமக்களின் கருத்துக்களுக்காகத் திறக்கப்பட்டுள்ள இந்த PSTA, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு மேம்படுத்தப்பட்ட பதிப்பாக முன்வைக்கப்படுகிறது. இருப்பினும், PTA-வில் உள்ள மிகவும் கவலைக்குரிய அம்சங்களையும், முந்தைய அரசாங்கங்கள் 2018 இல் வர்த்தமானியில் வெளியிட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (CTA) மற்றும் 2023 மார்ச் மற்றும் செப்டெம்பரில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) ஆகியவற்றின் கீழ் கொண்டுவர விரும்பிய விதிகளையும் இது அப்படியே கொண்டுள்ளது. CTA மற்றும் ATA ஆகிய இரண்டு சட்டமூலங்களுமே பரவலான விமர்சனங்களுக்கு உள்ளானதுடன், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தப் புதிய PSTA சட்டமூலமானது தேசிய மக்கள் சக்தி (NPP) மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைப் பிரதிபலிக்கவில்லை.

பரந்த வரைவிலக்கணம்

ஒரு பயங்கரவாதச் சூழலை உருவாக்குதல், பொதுமக்களை அச்சுறுத்துதல், இலங்கை அரசாங்கத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு அரசாங்கத்தையோ ஒரு செயலைச் செய்யுமாறு அல்லது செய்யாதிருக்குமாறு வற்புறுத்துதல் அல்லது போரை பிரசாரம் செய்தல் அல்லது நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது இறையாண்மையை மீறுதல் போன்ற நோக்கங்களுடன் திட்டமிட்டுச் செய்யப்படும் செயல்களைப் ‘பயங்கரவாதக் குற்றம்’ என PSTA சட்டமூலம் வரைவிலக்கணப்படுத்துகிறது. முன்னரைப் போலவே, இந்த வரைவிலக்கணம் இப்போதும் ஆபத்தான முறையில் மிகப்பரந்ததாகவே உள்ளது. தற்போதைய அரசாங்கம் உட்பட எந்தவொரு அரசாங்கமும், நியாயமான பொது மக்கள் போராட்டங்கள், சிவில் சமூக நடவடிக்கைகள் மற்றும் தொழிற்சங்கச் செயல்பாடுகளைப் ‘பயங்கரவாதம்’ என முத்திரை குத்த இதைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக, ‘அரசாங்கத்தை வற்புறுத்தும்’ நோக்கம் ஒரு பயங்கரவாதக் குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் பயங்கரவாதமாகக் கருதப்படாது என்று ஒரு விலக்கு நிபந்தனை இருந்தபோதிலும், இந்த அரசாங்கமோ அல்லது எதிர்கால அரசாங்கங்களோ பொதுப் போராட்டங்களைப் பயங்கரவாதச் செயல்களாக முத்திரை குத்தக்கூடிய அபாயம் இன்னும் நீடிக்கவே செய்கிறது.

விசாரணையின்றி நீண்டகாலம் தடுத்து வைத்தல்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமிருந்து தடுப்புக் காவல் உத்தரவைப் பெறுவதன் மூலம், பொலிஸ் மா அதிபர் எவரையும் தடுத்து வைக்க முடியும். ஆரம்பத்தில் இரண்டு மாதங்களுக்கு, பின்னர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு ஆண்டு வரை இதை நீடிக்க முடியும். இது நீதித்துறை மேற்பார்வை குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது. இத்தகைய உத்தரவு அமுலில் இருக்கும்போது, ஒரு நீதவானால் பிணை வழங்கவோ அல்லது சந்தேக நபரை விடுதலை செய்யவோ முடியாது. மேலும், ‘நியாயமான சந்தேகத்தின்’ அடிப்படையில் நபர்களை நிறுத்தவும், சோதனை செய்யவும், கைது செய்யவும் மற்றும் பொருட்களைக் பறிமுதல் செய்யவும் இராணுவத்தினருக்கு இந்த சட்டமூலம் அதிகாரத்தை வழங்குகிறது. 1971 மற்றும் 1988-89 காலப்பகுதிகளில் இத்தகைய சட்டம் இருந்திருந்தால், அதன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் என்பதை ஒருவரால் கற்பனை செய்து மட்டுமே பார்க்க முடியும்.

நீதித்துறை மேற்பார்வை, மனிதாபிமான முறையிலான தடுப்புக்காவல் நிபந்தனைகள், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நீதித்துறை அதிகாரிகள் வந்து பார்வையிடுதல், தனிமனித ரகசியங்களுக்கு மதிப்பளித்தல் மற்றும் குடும்பத்தினர் மற்றும் சட்டத்தரணிகள் வந்து பார்ப்பதற்கான உரிமைகள் போன்ற சில ஏற்பாடுகள், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது போல் தோன்றுகின்றன. ஆனால் யதார்த்தத்தில், இத்தகைய பாதுகாப்புகளைப் பெற்றுக்கொள்வது கடினமானதாகும். அதிகார துஷ்பிரயோகம் குறித்து மீளாய்வு செய்ய உயர் நீதிமன்றத்தை நாடுவது என்பது எளிதான அல்லது மலிவான காரியம் அல்ல.

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி அதிகாரங்கள்

அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தாமல், வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை உத்தரவுகள் மற்றும் ஊரடங்குச் சட்ட உத்தரவுகளைப் பிறப்பிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடைக்கும். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எந்தவொரு இடத்தையும் “தடைசெய்யப்பட்ட பகுதி” என அறிவிக்க முடியும். அவ்வாறான இடத்தில் புகைப்படம் எடுப்பது அல்லது காணொளி எடுப்பது கூட மூன்று வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றமாக மாறும். ‘வழக்குத் தொடர்வதைத் தள்ளிவைத்தல்’ எனும் விதியின் கீழ், ஒருவரை விசாரணைக்கு உட்படுத்தாமல் ‘புனர்வாழ்வு’ அளிப்பதற்கு அரசாங்கத்திற்கு அனுமதி வழங்கும் ஏற்பாடுகள் ஆழமான கவலையை ஏற்படுத்துகின்றன; இது அடக்குமுறையை நுட்பமான முறையில் மீண்டும் அறிமுகப்படுத்துகிறது. ஒரு சந்தேக நபரை குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்ய முடிந்தால், அவருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டாம் என்று ஒப்புக்கொண்டு, அவரை ஒரு ‘புனர்வாழ்வு’ திட்டத்திற்கு அனுப்ப சட்டமா அதிபரால் முடியும்.

கடுமையான தண்டனைகளும் கண்காணிப்பும்

அரசாங்கம் வரைவிலக்கணப்படுத்துவது போன்ற ஒரு “பயங்கரவாத அமைப்புடன்” தொடர்புகளைப் பேணுதல் அல்லது அரசாங்கம் அர்த்தப்படுத்துவது போன்ற “பயங்கரவாதப் பிரசுரங்களைப் பரப்புதல்” ஆகியவற்றுக்காக, ஒரு நபருக்கு மேல் நீதிமன்ற விசாரணையின் பின்னர் இருபது ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைத்தண்டனையும் 15 மில்லியன் ரூபா வரை அபராதமும் விதிக்கப்படலாம். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நேரடி அல்லது மறைமுக நோக்கத்துடன் ‘கவனக்குறைவாக’ ஒரு அறிக்கையை விநியோகிப்பது உட்பட, எந்தவொரு பிரசுரத்தையும் விநியோகிப்பது, விற்பனை செய்வது அல்லது வைத்திருப்பது குற்றமாக்கப்பட்டுள்ளது.

இது டிஜிட்டல் சுதந்திரத்திற்கும் தனிமனித இரகசியத்திற்கும் (Privacy) கணிசமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது. 11ஆவது சரத்து சில விதிவிலக்குகளை வழங்கிய போதிலும், கைதுகளை மேற்கொள்ளும் போது பொலிஸார் இத்தகைய விதிவிலக்குகளைப் புறக்கணிக்கும் விதத்தைக் கருத்தில் கொண்டால், இது நடைமுறையில் எவ்வாறு அமுல்படுத்தப்படும் என்பதை எவராலும் ஊகிக்க முடியும். இந்தச் சட்டமூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக விரிவான அதிகாரங்களை வழங்குகிறது. Encrypted செய்யப்பட்ட டிஜிட்டல் தொடர்புகள் உட்பட எந்தவொரு தொடர்பாடலையும் இடையில் மறித்து அதன் குறியீடுகளை நீக்க (Decryption) முடியும். இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பலவீனமான தன்மையை நன்கு அறிந்த நிலையில், கைது செய்யப்பட்ட 24 மணித்தியாலங்களுக்குள் அது குறித்து அறிவிப்பதன் மூலம் அதிகார துஷ்பிரயோகத்தை எவ்வாறு தடுக்க முடியும் என்பது ஒரு நியாயமான கேள்வியாகவே உள்ளது.

சிவில் நடவடிக்கைகளைக் குற்றமாக்குதல்

கடந்த காலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகாரத்தில் இருந்திருந்தால், தற்போது ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியினரால் ஏப்ரல் அல்லது நவம்பர் மாதங்களில் நினைவுகூரப்படும் “வீரர்களை” கொண்டாடும் எவரும் இந்த ஏற்பாடுகளின் கீழ் சிறையிலடைக்கப்பட்டிருப்பார்கள் அல்லது தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள். பரந்த வரைவிலக்கணங்கள் மூலம் தற்செயலாகவே சட்டபூர்வமான சிவில் நடவடிக்கைகள், ஊடகவியல் மற்றும் பொதுக் கலந்துரையாடல்கள் குற்றமாக்கப்படலாம் என்பதே பிரதான கவலையாக உள்ளது. புதிய சட்டமூலத்தின் கீழ், போராட்டத்தில் ஈடுபடும் நபர்களின் புகைப்படத்தைப் பிரசுரிக்கும் ஒருவர் கூட பயங்கரவாதியாக முத்திரை குத்தப்படலாம். 78ஆவது சரத்தானது மிகவும் பரந்த மற்றும் தெளிவற்ற வரைவிலக்கணமாக உள்ளது. அதன்படி, “நம்பகமான தகவல்” என்பது ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் மேற்கொள்ளும் சாதாரண செயற்பாடுகளைக் கூடக் குறிக்கலாம். அத்தகைய நடவடிக்கைகள் பாரிய குற்றங்களாக அர்த்தப்படுத்தப்படலாம்.

கட்டாயத் தகவல் வழங்கலும் நாட்டின் எல்லைக்கு அப்பாலான விரிவாக்கமும்

சட்டமூலத்தின் 15ஆவது சரத்தானது, பயங்கரவாதம் தொடர்பான தகவல்கள் அளிப்பதைக் கட்டாயமாக்குகிறது; இதனை மீறுபவர்கள் ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படலாம். நீதியை எதிர்பார்க்கும் மக்கள் மீது, குறிப்பாகப் பெரும்பான்மையினத்தைச் சேராத சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இந்த ஏற்பாடுகள் கொடூரமான முறையில் பயன்படுத்தப்படுமா? தகவல் பெறுபவர்களைக் கூட அரசாங்கத்தின் உளவாளிகளாக மாறும்படி இது வற்புறுத்தக்கூடும்.

அதுமட்டுமன்றி, இந்தச் சட்டமூலமானது இலங்கையின் எல்லைகளுக்கு அப்பாலும் விரிவடைகிறது. பிரிவு 2(c)-இன் படி, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும் என்பது தெளிவாகிறது. தாய்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் புலம்பெயர் சமூகங்களுக்கு எதிராக PSTA ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படலாம். இதன் விளைவாக, வெளிநாட்டில் இருந்து சமூக ஊடகங்களில் இலங்கையின் நிகழ்வுகள் குறித்துக் கருத்துத் தெரிவிப்பது கூட சட்டவிரோதமான செயலாக மாறக்கூடும்.

முடிவுரை

மக்களை அல்ல, அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு கட்டமைப்பு

பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதம் சார்ந்த குற்றங்களைத் துஷ்பிரயோகம் செய்ய முடியாதபடி துல்லியமாக வரையறுக்கத் தவறியதன் மூலம், PTA, CTA மற்றும் ATA ஆகியவற்றில் இருந்த அதே சிக்கல்களையும் குறைபாடுகளையும் PSTA-வும் கொண்டுள்ளது. இதில் உள்ள விதிவிலக்கு சரத்துகள், ஏனைய வரையறைகளுடன் (அரசாங்கத்தை வற்புறுத்துதல் போன்றவை) முரண்படுவதோடு, நடைமுறைச் செயல்பாட்டின் போது அவை வலுவிழந்து போகும் அபாயத்தையும் கொண்டுள்ளன.

இந்தச் சட்டமூலத்தின் தலைப்பு அதன் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. அதன் நோக்கம் அரசாங்கத்தையும் அதன் மூலம் அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியையும் பாதுகாப்பதாகும். சிவிலியன்களுக்கு எதிரான வன்முறைகளைப் பிரயோகித்தல் மற்றும் மனித உயிர்களைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் மக்கள் மையப்படுத்தப்பட்ட ஒரு கட்டமைப்பு இதில் இல்லை. பல ஏற்பாடுகள் இந்த நோக்கங்களைச் சிதைக்கின்றன. அந்த ஏற்பாடுகள் நியாயமான விசாரணைக்கான உரிமை மற்றும் தன்னிச்சையான தடுப்புக்காவலில் இருந்து சுதந்திரம் பெறுதல் உள்ளிட்ட அரசியலமைப்பிலும் சர்வதேச மனித உரிமை ஆவணங்களிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணாக அமைந்திருப்பதாகத் தெரிகிறது.

PTA சட்டத்தைப் போலவே, PSTA சட்டமும் ஜனாதிபதி, பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு போதிய ஆதாரங்கள் இன்றி நபர்களைத் தடுத்து வைக்கவும், தெளிவற்ற முறையில் வரைவிலக்கணப்படுத்தப்பட்ட பேச்சுகளைக் குற்றமாக்கவும், முறையான நீதித்துறை மேற்பார்வையின்றி கூட்டங்கள் மற்றும் அமைப்புகளைத் தன்னிச்சையாகத் தடை செய்யவும் விரிவான அதிகாரங்களை வழங்குகிறது. இது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது போன்ற குற்றங்களையும் உள்ளடக்கும் வகையில் பயங்கரவாதத்தின் வரைவிலக்கணத்தை விரிவுபடுத்துகிறது; அத்துடன், பேச்சுரிமை மற்றும் ஒன்றுகூடும் உரிமையைக் கட்டுப்படுத்துவதோடு, பிடியாணை இன்றி எவரையும் நிறுத்தவும், விசாரணை செய்யவும், சோதனையிடவும் மற்றும் கைதுசெய்யவும் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அனுமதி அளிக்கிறது. மேலும், எந்தவொரு குற்றத்திற்காகவும் தண்டிக்கப்படாத நபர்கள் மீது ‘சுயவிருப்பின் பேரில்’ மேற்கொள்ளப்படும் ‘புனர்வாழ்வை’ திணிக்க சட்டமா அதிபருக்கு இது அதிகாரம் அளிக்கிறது.

இந்தத் திட்டமிடப்பட்ட சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், NPP அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்துச்செய்வதாக வழங்கிய வாக்குறுதியை மீறியுள்ளது அல்லது அது வழிதவறிச் சென்றுள்ளது. முன்னைய PTA சட்டத்தைப் போலவே, இந்தப் புதிய சட்டமூலமும் சிவில் ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை ஒடுக்கப் பயன்படுத்தப்படலாம்.

NPP கட்சியானது, எதிர்க்கட்சியில் இருந்த பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) அரச அடக்குமுறையின் ஒரு தொடர்ச்சியான கருவியாக வேறு வடிவில் வைத்திருப்பதை நியாயப்படுத்தும் வகையில் புதிதாக எதனையாவது கண்டறிந்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது. தமக்குக் கிடைத்த தேர்தல் ஆதரவு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச மற்றும் தேசிய மனித உரிமை அமைப்புகளின் ஒத்துழைப்புடன், அரசாங்கம் PTA சட்டத்தைத் திருத்துவதற்கான வழிகளைக் கண்டறிய ஒரு குழுவை நியமிப்பதற்குப் பதிலாக, அதனை முழுமையாக ரத்துச் செய்திருக்க வேண்டும்.

மக்கள் விரைவான சீர்திருத்தங்களை எதிர்பார்த்தனர். காலம் கடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக NPP கொண்டுள்ள அர்ப்பணிப்பு இப்போது சோதனைக்கு உள்ளாகியுள்ளது. அவர்கள் தமது பாதையிலிருந்து வழிதவறிச் சென்றுள்ளனரா என்பதற்கான விடை, அவர்கள் அடுத்து எடுக்கப்போகும் நடவடிக்கைகளின் மூலமே தீர்மானிக்கப்படும்.

Lionel-Bopage-e1748346474550.jpg?resize=லயனல் போபகே

https://maatram.org/articles/12519

சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த 2025 : விதுரன்

1 week ago

சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த 2025 : விதுரன்

December 31, 2025

2025ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக வரலாற்றில் ஒரு மாபெரும் மாற்றத்திற்கான ஆண்டாகவும், அதே வேளை சொல்லொணா இயற்கைப் பேரிடர்களால் நாடு சோதைக்குள்ளாகியுள்ளதொரு காலப் பகுதி யாகவும் வரலாற்றுத் தடத்தில் பதிவாகியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தனது அதிகாரத்தை பேரனர்த்த நிவாரணங்களை பயன்படுத்தியேனும் அடிமட்டம் வரை கொண்டு செல்ல முயற்சித்துக்கொண்டிருக்கும் மூன்றாந்தர அரசியல் கலாசாரம் அரங்கேறிவருகின்ற அதே வேளை, தமிழ் மக்களின் நீண்டகால அபிலா ஷைகள், பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச இராஜதந்திர நகர்வுகள் இவ்வருடம் முழுவதும் கனவுகளாக நாட்கள் கடந்தோடும் காலமாகவே தான் அமைந்துள்ளன.

அரசியல் களத்தைப் பொறுத்தமட்டில், மே 6, 2025 அன்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நாட்டின் புதிய அரசியல் வரைபடத்தை வெளிப்படுத்தியுள்ளன. இந்தத் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி  அரசாங்கம் 43.26சதவீதமான வாக்குகளைப் பெற்று, மொத்தமுள்ள 339 உள்ளுரா ட்சி சபைகளில் 265 சபைகளைக் கைப்பற்றி தனது பலத்தை நிலைநிறுத்தியது.

இருப்பினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் நிலவிய பிளவுகளுக்கு மத்தியிலும் கணிசமான செல்வாக்கைச் செலுத்தியிருந்தன.  குறிப்பாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி 35 சபைகளைக் கைப்பற்றி தனது மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டது. அதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எப். ரெலோ, புளொட், ஜனநாயகப் போராளிகள், தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய ஐந்து கட்சிகளும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்ற பெயரில் தமிழரசுக் கட்சிக்கு மாற்றாக ‘சங்கு’ சின்னத்தில் போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றிருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தனது பங்கிற்கு வெற்றி களைத் தக்க வைத்துக்கொண்டது.

இருப்பினும் ஆட்சியமைப்பதில் தமிழர சுக் கட்சி யின் விட்டுக்கொடுக்காத தன்மையால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், ஜன நாயக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கூட்டிணைவு பத்து உள்ளுராட்சி மன்றங்கள் வரையில் தமதாக்கிக் கொண்டன. இந்தக் கூட்டிணைவ கொள்கை அடிப்படையில் அமை வதாகவே காண்பிக்கப்பட்டு உடன்பாடும் செய்யப்பட்டது. குறித்த கொள்கைக் கூட்டில் சந்திரகுமார் தலைமையிலான சமவத்துக் கட்சியும் இணைந்து கொண்டிருந்தது.

எனினும் சொற்ப காலத்தில் ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணியானது 13ஆவது திருத் தச்சட்டத்தினை வலியுறுத்தி செயற்பாடுகளை ஆரம்பித்தமையால் தமிழ்த் தேசிய மக்கள் முன் னணி முரண்பட்டது. ஈற்றில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தமிழரசுக்கட்சியுடன் மீண்டும் கைகோர்க்கும் நிலையை அடைந்துள்ளது. இதற் குப் பின்னால் சுமந்திரனின் முதலமைச்சர் கனவும் காணப்படுகின்றது என்பது தனிக்கதை.

அதேநேரம், மலையக அரசியலில், பாரம் பரியமாக ஆதிக்கம் செலுத்தி வந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடுமையான பின்ன டைவைச் சந்தித்த நிலையில், மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி ஓரளவு தம்மை தக்க வைக்கும் நிலைக்குச் சென் றிருந்தன.

குறிப்பாக, அக்டோபர் மாதம் முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 1,700 ரூபா நாளாந்த அடிப்படைச் சம்பளம், ஒரு நீண்டகாலப் போராட்டத்திற்குப் பின் கிடைத்த சமூக நீதியாகவும், அரசாங்கத்தின் முக்கிய தீர்மானத்தின் பிராகரம் எடுக்கப்பட்ட செயற் பாடாகவும் பார்க்கப்படுகிறது.

தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தில் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் கறுப்பு அத்தி யாயமாக அமைந்திருக்கின்றது. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது, குழந்தைகள்  உள்ளிட்ட 240 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டமை சர்வதேச அளவில் அதிர் வலைகளை ஏற்படுத்தியது.

இந்தச் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம், போர்க்கால மீறல்கள் தொடர்பான விவாதங்களை மீண்டும் உலக அரங்கிற்கு கொண்டு வந்திருந்ததோடு பொறுப்புக்கூறலின் அவசியத்தையும் வெகுவாகவே வலியுறுத்தியுள் ளது.

இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 6, 2025 அன்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில், இலங்கையின் பொறுப்புக் கூறலை வலியுறுத்தும் 60ஃ1 தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப் பட்டது. இத்தீர்மானம் இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை கண்காணிக்கும் சர்வதேச பொறிமுறையை 2027வரை நீட்டித்துள்ளது.

அரசாங்கம் இந்தத் தீர்மானத்தினை ‘வெளிநாட்டுத் தலையீடு’ என்று ஆரம்பத்தில் விமர்சித்தாலும், சர்வதேச அழுத்தங்களுக்குப் பணிய வேண்டிய கட்டாயத்தில், நவம்பர் மாதம் வடக்கு-கிழக்கில் இராணுவக் கட்டுப் பாட்டிலிருந்த சுமார் 5,000 ஏக்கர் பொதுமக்களின் காணி விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக் கைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்தது. ஆனால் தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியது.

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் 2025ஆம் ஆண்டு ‘அனைத்து நாடுகளுடனும் நட்பு’ என்ற கொள்கையின் கீழ் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க விஜயங்களைக் கண்டது. குறிப்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஏப்ரல் 4 முதல் 6 வரையிலான காலப்பகுதியிலர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் மிகவும் முக்கியமானது. இதன்போது, இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே மன்னார் முதல் தமிழ்நாடு வரையிலான கடல்வழி மின்சார இணைப்பு, திருகோணமலை எரிசக்தி மையம் மற்றும் இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க ‘UPI’ பணப்பரிமாற்ற முறைமையை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட 10 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத் தாகின.

அத்துடன் மலையகத்தில் மேலும் 10,000 வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்திய விஜயத்தைத் தொடர்ந்து, மே மாதம் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் லம்மியும், ஜூன் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கும் மற்றும் நவம்பர் மாதம் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூவும் இலங்கைக்கு வருகை தந்து, நாட்டின் மனித உரிமை, பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து விரிவாகக் கலந்துரையாடினர்.

மறுபுறம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2025இல் சீனா (ஜனவரி), வியட்நாம் (மே), ஜேர்மனி (ஜூன்) மற்றும் ஜப்பான் (செப்டெம்பர்) நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டார். செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்ற அவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைச் சந்தித்து இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து விளக் கமளித்தார். ஆனால் குறித்த சந்தித்து உத்தியோக பூர்வ இருதரப்பு சந்திப்பாக நடைபெற்றிருக்க வில்லை.

பொருளாதார ரீதியாக, செப்டெம்பரில் ஜப்பான் மற்றும் சீனாவின் நிதியுதவியுடன் நிறுத்தப்பட்டிருந்த மத்திய அதிவேக நெடுஞ் சாலைப் பணிகள் (கடவத்தை – மீரிகம) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதோடு  அரசாங்கத்தின் ‘கிளீன் சிறிலங்கா’ திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு கெடுபிடிகள், கடந்த கால ஆட்சியாளர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் போன்றவை நிர்வாக ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

குறிப்பாக ‘மிஸ்டர் கிளீன்’ என்று சொல்லப்படுகின்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டுப் பயண மொன்றுக்காக பயன்படுத்திய நிதி தொடர்பில் கைது செய்யப்பட்டமையானது கொழும்பு வாழ் மேல்தட்டு வர்க்கத்துக்கு பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

ஆண்டின் இறுதியில், நவம்பர் 28 அன்று இலங்கையின் கிழக்குக் கரையைத் தாக்கி, பின்னர் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ‘தித்வா’ சூறாவளி ஒரு பாரிய மனிதாபிமான நெருக்கடியை உள்நட்டில் உருவாக்கியுள்ளது. இச்சூறாவளியால் நாடு முழுவதும் சுமார் 640க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 1.6மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் கிராமங் களையே துடைத்தெறிந்திருக்கின்றன. இத்தகைய இக்கட்டான சூழலில், இந்தியாவின் ‘சாகர் பந்து’ நடவடிக்கையின் கீழ் இந்தியக் கடற்படை மற்றும் விமானப்படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். புயலின் பாதிப்புகள் தணியாத நிலையில், டிசம்பர் 23, 2025 அன்று இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு வருகை தந்து, பாதிக்கப்பட்ட மக்களின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பாரிய உதவித் திட்டத்தை அறிவித்துள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் ஆழத்தைப் பிரதிபலிப்பதாக வெளிப்படையில் காணப்படுகின்றது.

ஆனால் இதற்கான பின்னணியைப் பார்க்கின்றபோது இந்தியா இலங்கையில் எந்த வொரு தரப்பினரையும் காலூன்றுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என்பதை அப்பட்ட மாகவே வெளிப்படுத்துவதாகவே உள்ளது. ஆகவே குறித்த விடயத்தில் தீவிரமான கவனம் அவசியமானின்றது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், 2025 ஆம் ஆண்டு என்பது இலங்கை அரசாங்கம் தனது உள்நாட்டு ஊழல் ஒழிப்பு கெடுபிடிகளுக்கும், சர்வதேச இராஜதந்திர விட்டுக்கொடுப்புகளுக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேண முயற்சித்த ஆண்டாகும்.  தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் முன் னேற்றங்கள் ஏற்படுவது போன்று தென்பட்டாலும்  நிலையான அரசியல் தீர்வு மற்றும் நீதிக்கான பயணம் இன்னமும் நீண்டதாகவே உள்ளது.

பொருளாதார மீட்சி மற்றும் பேரிடர் மேலாண்மையில் சர்வதேச ஆதரவுடன் இலங்கை நடைபோட்டாலும், மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவு மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவை 2026 ஆம் ஆண்டிற்கான பெரும் சவால்களாக எஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்விதமான சூழலில் புதிய ஆண்டை முகங்கொடுப்பது மிகவும் அவதானத்துக்கு உட்பட்டதாகும்.

https://www.ilakku.org/சோதனைகளும்-வேதனைகளும்-நி/

2025: அனுர அலையில் தொடக்கி மனிதாபிமான அலையில் முடிந்த ஆண்டு - நிலாந்தன்

1 week 3 days ago

2025: அனுர அலையில் தொடக்கி மனிதாபிமான அலையில் முடிந்த ஆண்டு - நிலாந்தன்

599682467_122221042040114056_90464635600

இந்த ஆண்டு பிறந்த போது நாட்டில்  “அனுர அலை” வீசியது. இந்த ஆண்டு முடியும் போது புயலுக்கு பின்னரான ஒரு மனிதாபிமான அலை நிலவுகிறது. இரண்டுமே அலைகள்தான். இரண்டுமே அரசாங்கத்தைப் பலப்படுத்தும் அலைகள்தான்.

அனுர அலை என்பது தமிழ் நோக்கு நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளியது. அது நாடாளுமன்றத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டது. தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த அதீயளவு ஆசனங்கள்தான் அரசாங்கத்துக்கும் கிடைத்தன. யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது தெரியாமலேயே தமிழ்மக்கள் வாக்களித்திருந்தார்கள். இப்படிப் பார்த்தால் இந்த ஆண்டு தொடங்கும் பொழுது அது தமிழ்த்தேசிய அரசியலுக்குப் பாதகமான ஓர் ஆண்டாகத்தான் தொடங்கியது.

அந்தத் தோல்விக்கான காரணங்களைக் கண்டுபிடித்து அவற்றைச் சரி செய்யும் விடயத்தில் தமிழ்த்தேசிய அரசியல் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது? உள்ளூராட்சி சபைகளில் பெற்ற வெற்றிகள் சற்று ஆறுதல் தரக்கூடும். ஆனால் கடந்த வாரம் கரைத்துறைப் பற்று பிரதேச சபையில் என்ன நடந்தது? வடக்கில் அரசாங்கம் முதலாவது உள்ளூராட்சி சபையை கைப்பற்றியிருக்கிறது. அதற்கு என்ன காரணம்? சந்தேகத்துக்கிடமின்றி தமிழ் கட்சிகளுக்கு இடையிலான ஐக்கியமின்மைதான் முதலாவது காரணம். அந்த ஐக்கியமின்மையை சரிசெய்யத் தேவையான தலைமைத்துவம் தமிழரசுக் கட்சியிடம் இல்லை என்பதுதான் இரண்டாவது காரணம்.

சிதறிக் கிடக்கும் தமிழ்த்தேசிய கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு கடந்த ஓராண்டுக்கு மேலான காலப்பகுதியில் அதாவது ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் மூன்று முயற்சிகள் எடுக்கப்பட்டன. முதலாவது,தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றாக்கும் முயற்சி. தமிழரசுக் கட்சி அதைத் தோற்கடித்தது. இரண்டாவது,தமிழ்த்தேசியப் பேரவை என்ற பெயரில் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி. அதுவும் இப்பொழுது ஏறக்குறைய தோற்கும் நிலைக்கு வந்துவிட்டது. மூன்றாவது அண்மையில் தமிழரசுக் கட்சியும் டிரிஎன்ஏயும் சந்தித்து மாகாண சபைத் தேர்தல்களை ஒன்றாக எதிர்கொள்வைத்தற்கான பேச்சுவார்த்தை. ஆனால் அந்த ஒற்றுமை முயற்சிகள் எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பதற்கு கரத் துறைப் பற்று பிரதேச சபை ஓர் ஆகப் பிந்திய உதாரணமாக அமையுமா? தேர்தலை நோக்கி உருவாக்கப்படும் கூட்டுக்கள் நிலைத்திருக்காது என்பதைத்தான் கடந்த 16 ஆண்டுகளும் நிரூபித்திருக்கின்றன.

எனவே தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து பார்த்தால் ஆண்டு தொடங்கும் போது இருந்த அதே கட்சி நிலைமைகள்தான் ஆண்டு முடியும் போதும் காணப்படுகின்றன. மே 18ஐ நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் கிராமம் அமைந்திருக்கும் கரத்துறைப் பற்று பிரதேச சபையைத் தக்கவைக்க முடியாத தமிழ் கட்சிகள் இனிமேல் மாகாண சபைத் தேர்தல் ஒன்று நடந்தால், அதில் ஒன்றாக நின்று அரசாங்கத்தை எதிர்கொள்ளும் என்று எப்படி நம்புவது?

இந்த ஆண்டு பிறந்த போது ஒருபுறம் அனுர அலையின் விளைவுகளால் தமிழ் தேசிய அரசியல் சேதத்துக்கு உள்ளாகியிருந்தது. அதேசமயம் இன்னொருபுறம் யாரும் எதிர்பாராமல் திறக்கப்பட்ட செம்மணிப் மனித புதை குழியானது தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு புதிய அனைத்துலக வாய்ப்புகளைத் திறந்துவிட்டது. மனிதப் புதைகுழி என்பது உணர்வு பூர்வமானது. அது உள்ளூரில் மக்களைத் திரட்ட உதவும். இன்னொரு புறம் பொறுப்புக் கூறும் விடயத்தில் உலக சமூகத்துக்கு எடுத்துக் காட்டத்தக்க ஆகப்பிந்திய உதாரணமாகவும் அது அமைந்தது. அதன் காரணமாகத்தான் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வர வேண்டியிருந்தது. ஆனால் ஐநா செம்மணிக்கூடாக பொறுப்புக்கூறலை அணுகவில்லை என்பதைத்தான் கடைசியாக நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானம் உணர்த்துகின்றது. அதாவது தமிழ் மக்கள் ஐநாவில் பலமாக இல்லை என்பதைத்தான் அது உணர்த்தியது.

உள்நாட்டிலும் தமிழ் மக்கள் பலமாக இல்லை அனைத்துலக அளவிலும் தமிழ் மக்கள் பலமாக இல்லை. ஆண்டு பிறந்த போதும் பலமாக இல்லை. ஆண்டு முடியும்போதும் பலமாக இல்லை. இந்த ஆண்டின் ஆகப்பிந்திய தோல்வி கரைத்துரைப் பற்று பிரதேச சபை. ஒரு புயலுக்கு பின்னரான அரசியலில்,தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஆதீனத் தலைவரும் உட்பட பல போராட்டக்காரர்கள் மீது பலப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் அதிலும் குறிப்பாக, இந்திய வெளியுறவு அமைச்சர் கொழும்புக்கு வருகை தந்த அதே நாளில்,வடக்கில் முதலாவது பிரதேச சபையை தமிழ் தேசியத் தரப்பு அரசாங்கத்திடம் இழந்திருக்கிறது.

அரசாங்கம் புயலுக்கு பின் முன்னரைவிடப் பலமாகக் காணப்படும் ஓர் அரசியல் சூழலில் தமிழ்த் தேசியத் தரப்புக்கு ஏற்பட்ட தோல்வி இது. ஆண்டின் முடிவில் நாட்டைத் தாக்கிய புயலின் விளைவாக ஒரு மனிதாபிமானச் சூழல் உருவாகியது. அந்த மனிதாபிமானச் சூழலை ஜேவிபி உள்நாட்டில் கிராமங்கள் தோறும் நிவாரண அரசியலாக,தொண்டு அரசியலாக திட்டமிட்டுக் கட்டமைத்தது. அதன்மூலம் எதிர்க்கட்சிகளை பெருமளவுக்கு பலவீனப்படுத்தியது. ஆண்டு தொடங்கும்போது பலவீனமாக இருந்த எதிர்க்கட்சிகள்  இடையில் நுகேகொட பேரணிமூலம் தலையெடுக்க முயற்சித்தன. ஆனால் புயல் வந்து அரசாங்கத்தை மீண்டும் பலப்படுத்தி விட்டது.

அண்மையில் உலகளாவிய 120 நிபுணர்கள் அடங்கிய குழு வெளியிட்ட அறிக்கை அதைக் காட்டுகிறது. கடனை மீளக்கட்டமைக்கும் விடயத்தில்  அரசாங்கத்துக்குச் சாதகமாக முடிவெடுக்குமாறு அந்த அறிக்கை கேட்டிருக்கிறது. அதாவது புயலுக்கு பின்னரான மனிதாபிமான அலை என்பது உள்நாட்டில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை கடந்து போவதற்கு அரசாங்கத்துக்கு உதவுகிறது. அனைத்துலக அளவில் கடனை மீள கட்டமைக்கும் நெருக்கடியிலிருந்து விடுபட உதவியிருக்கிறது.

புயலின் பின்னரான மனிதாபிமானச் சூழலுக்குள் முதலில் இறங்கியது இந்தியா. அதிகமாக உதவியதும் இந்தியா. இயற்கை அழிவு ஒன்றுக்குப் பின்னரான இலங்கைத் தீவின் அரசியலில் இந்தியா தன்னுடைய பிடியை மேலும் பலப்படுத்தியிருக்கிறது.

இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தது அனுர அலை, அது மூன்றில் இரண்டு பெரும்பான்மை. இந்த ஆண்டின் முடிவில் இருப்பது மனிதாபிமான அலை. அது இலங்கை அரசாங்கத்தைப் பலப்படுத்தும் அலை. எதிர்க்கட்சிகளை மேலும் வாயடைக்கச் செய்யும் அலை. இந்த இரண்டு அலைகளுமே எதிர்கட்சிகளை மட்டுமல்ல தமிழ்த்தேசியக் கட்சிகளையும் பலவீனப்படுத்தியிருக்கின்றன.

G82jHPbbMAA5g1f-cccc-1024x548.jpg

புயலுக்குப் பின்னரான மனிதாபிமான அலையின் பின்னணியில், தமிழ்த் தேசியப் பேரவை தமிழகத்தை நோக்கிச் சென்றது. தமிழரசுக் கட்சியும் டிரிஎன் ஏயும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தை நோக்கிச் சென்றன. ஆனால் தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்தியாவை நோக்கிச் சென்ற அதே காலகட்டத்தில், இந்தியா கொழும்பை நோக்கி அதன் வெளிவிவகார அமைச்சரை அனுப்பியது. தமிழ்க் கட்சிகள் இந்திய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்தபோது ஒருமித்த நிலைப்பாட்டோடு இருக்கவில்லை என்பதைத்தான் பின்னர் வெளிவந்த அறிக்கைகள் காட்டுகின்றன.

அதிலும் குறிப்பாக இந்திய வெளிவகார அமைச்சர் கொழும்புக்கு வந்த அதே நாளில்தான் கரைத்துறைப்பற்று பிரதேச சபையை தமிழ்க் கட்சிகள் அரசாங்கத்திடம் பறி கொடுத்தன. எனவே இந்த ஆண்டு முடியும்போது தமிழ் மக்களின் உடனடி பிரச்சினைகளுக்கும் இந்த அரசாங்கம் தீர்வைத் தரவில்லை. உதாரணமாக,அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவில்லை அதற்குப் பதிலாக புதிய சட்டம் வருகிறது. சிங்கள பௌத்த மயமாக்கல்,நிலப்பறிப்பு போன்ற பெரும்பாலான உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை. திருமலையில் அண்மையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்திலேயே இருக்கிறது. அதாவது தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கவில்லை. நிரந்தரப் பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தைகள் தொடங்கவில்லை.

அதேசமயம் ஆண்டின் இறுதியில் வீசிய புயல் அரசாங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. அது எதிர்கொள்ளக் கடினமான பிரச்சினைகளையும் வாக்குறுதிகளையும் ஒத்திவைப்பதற்கு வேண்டிய அவகாசத்தை அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கிறது.

கடந்த மூன்று தசாப்த காலத்துக்குள் ஏற்பட்ட இரண்டாவது இயற்கைப் பேரிடர் ஒன்றுக்குப் பின்னரான மனிதாபிமான அலை இது. இந்த மனிதாபிமான அலையை,ஜேவிபியின் கிராமமட்ட வலையமைப்பு திட்டமிட்டு எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் அரசாங்கத்தை பலப்படுத்தும் நோக்கத்தோடும் கட்டமைத்து வருகிறது. ஜேவிபியின் கிராமமட்ட வலைப்பின்னலுக்கூடாக உள்ளூர் தொண்டர்களும் தன்னார்வலர்களும் இந்த மனிதாபிமான அலையைக் கட்டியெழுப்பினார்கள். இலங்கைக்கான ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி கூறுவதுபோல,இது ஓர் அசாதாரணமான சகோதரத்துவநிலைதான்.

ஆனால் இதே போன்றதொரு மனிதாபிமான அலை 2004ஆம் ஆண்டு சுனாமிப் பேரழிவின் பின்னரும் தோன்றியது. அப்பொழுது யுத்த நிறுத்தம் நிலவியது. எனவே அது நாடு முழுவதுமான ஒரு மனிதாபிமான அலையாகக் காணப்பட்டது. அந்த மனிதாபிமானச் சூழலை அரசியல் தீர்வு ஒன்றுக்கான சாதகமான நிலைமைகளைக் கனியவைப்பதற்கான ஒரு சூழலாக மாற்றலாமா என்று பரிசோதிப்பதற்கு அப்பொழுது சமாதானத்தை முன்னெடுத்த மேற்கு நாடுகள் முயற்சித்தன. அதன் விளைவாக உருவாக்கப்பட்ட மனிதாபிமானக் கட்டமைப்புத்தான் சுனாமிக்கு பின்னரான பொதுக் கட்டமைப்பாகும். அந்தக் கட்டமைப்பு வெற்றிகரமாக இயங்கி இருந்திருந்தால் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு பரிசோதனைக் கட்டமைப்பாக அது அமைந்திருக்கக்கூடும். ஒரு மனிதாபிமானச் சூழலை அவ்வாறு அரசியல் உள்நோக்கத்தோடு பயன்படுத்த மேற்கு நாடுகள் முயற்சித்தன. முதற்கட்டமாக அதில் வெற்றியும் அடைந்தன. அரசாங்கமும் விடுதலைப்புலிகள் இயக்கமும் சுனாமி பொதுக் கட்டமைப்புக்கு இணங்கின.

ஆனால் அந்த மனிதாபிமானச் சூழலுக்குள் இனவாத அலையைத் தூண்டியா ஜேவிபி அதைத் தோற்கடித்தது. சுனாமிக்குப் பின்னரான ஒரு மனிதாபிமானச் சூழலை இனவாதத்தின் மூலம் தோற்கடித்த அதே இயக்கத்தை அடித்தளமாகக் கொண்ட இப்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, புயலுக்குப் பின்னரான மனிதாபிமானச் சூழலை தன்னைப் பலப்படுத்துவதற்கும் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவதற்கும் கெட்டித்தனமாகப் பயன்படுத்துகின்றது. ஆனால் இந்த அசாதாரண மனிதாபிமானச் சூழலை அரசாங்கம் இனவாதத்துக்கு எதிராக கட்டமைக்கவில்லை. அவ்வாறு கட்டமைக்கும் என்று நம்பத்தக்கதாக தேசிய மக்கள் சக்தியின் கடந்த ஓராண்டு காலம் அமையவில்லை.

https://www.nillanthan.com/8034/

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை: யார் பொறுப்பு? நிலாந்தன்.

1 week 3 days ago

Jaffna-dcc.jpg?resize=750%2C375&ssl=1

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

எனது நண்பரான உளவளத் துணை ஆலோசகர் ஒருவர் அடிக்கடி ஒரு மேற்கோளை சுட்டிக்காட்டுவார்…”எதிர்த் தரப்பு உங்களை கோபப்படுத்தி விட்டதென்றால் அது அதன் முதலாவது வெற்றியைப் பெற்றுவிட்டது என்று பொருள்”

ஒருவர் உங்களை கோபப்படுகிறார் என்றால், உங்களைக் கோபப்படுத்துவது தான் அவருடைய நோக்கம் என்றால், நீங்கள் கோபப்படாமல் இருப்பதுதான் அவரைத் தோல்வி அடையச் செய்யும். நீங்கள் கோபப்பட்டீர்கள் என்றால், கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டி விட்டீர்கள் என்றால், எதிரி நினைப்பதை நீங்கள் செய்கிறீர்கள் என்று பொருள்.

இது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கும் பொருந்தும். ஓர் அரசியல் செயற்பாட்டாளர் முகநூலில் எழுதுகின்றார்..மருத்துவர் அர்ஜுனா அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கருவி என்று. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அபிவிருத்தி தொடர்பான சீரியஸான உரையாடல்களை திசை திருப்பி, தனிநபர் தாக்குதல்கள், குழப்பங்கள்,மோதல்கள் போன்றவற்றின் மூலம் முடிவுகளை எடுக்க விடாமல் தடுப்பதுதான் அர்ஜுனாவுக்கு வழங்கப்பட்ட வேலை என்றும். அந்த வேலையை அவர் திறம்படச்  செய்கிறார் என்றும்….

இது ஒரு சதிக் கோட்பாடு.இக்கட்டுரை எப்பொழுதும் சதி,சூழ்ச்சிக்  கோட்பாடுகளை எடுத்த எடுப்பில் நம்புவதில்லை. மருத்துவர் அர்ஜுனா யாருடைய கருவி என்பதை விடவும் முக்கியமானது, ஆழமானது எதுவென்றால், அவர் உங்களைக் கோபப்படுத்தும்போது நீங்கள் எப்படிப் பொறுமையாக இருக்கிறீர்கள் என்பதுதான். நீங்கள் கோபப்பட்டு அவரைப்போலவே தகாத வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்களா இல்லையா என்பதுதான்.நீங்கள் கோபப்படுவதன்மூலம் அவரை வெற்றி அடைய வைக்கிறீர்களா இல்லையா என்பதுதான்.

இது அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல,அரசு நிர்வாகிகளுக்கு குறிப்பாக அர்ஜுனா அடிக்கடி நோண்டும் மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கும் பொருந்தும்.அவர் உங்களிடமிருந்து கோபமான பதிலை,எதிர்வினையை எதிர்பார்க்கிறார் என்றால் நீங்கள் கோபப்படாமல் இருப்பதுதான் உங்களுடைய முதிர்ச்சி;பக்குவம். ஏன் அதுதான் உரிய உபாயமும் கூட.

ஆனால் கடந்த ஓராண்டு காலத்துக்கு மேலாக நடைபெறும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களைப் பார்த்தால் யாரும் நிதானமாக இருப்பதாகத் தெரியவில்லை. சில சமயங்களில் ஆளுநரும் அரச அதிபரும் சாட்சிகளாக இருக்கிறார்கள்.அவர்கள் வாயைத் திறக்க விரும்பவில்லை. அவர்கள் அரச ஊழியர்கள். அரசியல்வாதிகளின் சண்டைகளுக்குள் வாயை கொடுத்து பதவியை கெடுத்துக் கொள்ள அவர்கள் தயாரில்லை. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் ஆளுநரும் அரச அதிபரும் அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு, சில சமயங்களில் சிரிப்பையும் அடக்கிக் கொண்டு, சென் பௌத்த ஞானிகள் போல சாட்சிகளாக இருக்கிறார்கள்.

அப்படி நமது அரசியல்வாதிகளும் இருந்தால் என்ன?அரசாங்கம் அபிவிருத்திக்  குழுக் கூட்டங்களை குழப்புவதற்காகத்தான் இப்படிப்பட்ட வேலைகளை பின்னிருந்து ஊக்கிவிக்கின்றது என்று கூறுவோமாக இருந்தால், அபிவிருத்திக்  குழுக் கூட்டங்கள் தொடர்பாக தமிழ் கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரு முடிவுக்கு வரலாம்.அதை மக்களுக்கு வெளிப்படுத்தலாம்.அதை அரசாங்கத்துக்கு ஒரு முறைப்பாடாகத் தெரியப்படுத்தலாம்.

இங்கு பிரச்சினையாக இருப்பது அர்ச்சுனா மட்டுமல்ல.அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும்தான்.”இப்படிப்பட்ட குழப்பங்கள், கோளாறுகள் சிங்களப் பகுதிகளில் இல்லை.குறிப்பாக யாழ்ப்பாணத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில்தான் இவை காணப்படுகின்றன…” என்று கூறிய ஓய்வு பெற்ற மூத்த நிர்வாகி ஒருவர்,அபிவிருத்திக்  குழுக் கூட்டங்களுக்குள் யாருடைய கமராவை அனுமதிப்பது என்ற முடிவை எடுப்பதன்மூலம் இந்தக் குழப்பங்களை உடனடியாகத் தடுக்கலாம் என்று.

ஆனால் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் மட்டுமல்ல,ஆளுநரும் அடிக்கடி அரச ஊழியர்களை,நிர்வாகிகளைக் குற்றம் சாட்டுகிறார்.சில சமயங்களில் எச்சரிக்கின்றார்.இதன் மூலம் “தமிழ் அரச நிர்வாகிகளில்தான் தவறு உண்டு, அரசாங்கத்தில் இல்லை”என்ற ஒரு தோற்றம் வெற்றிகரமாகக் கட்டி எழுப்பப்படுகிறது.

ஆளுநர் யார்? அவர் அரசாங்கத்தின் பிரதிநிதி.அவர் தன்னுடைய அதிகாரங்களைப் பயன்படுத்தி தனக்குக் கீழே வேலை செய்யும் நிர்வாகிகளை மாற்றலாம் தண்டிக்கலாம்.ஆனால் அவர் அப்படிச் செய்வதை விடவும் அதிகமாக அரச நிர்வாகிகளைக் குறை கூறுகிறார் என்பதுதான் கடந்த பல மாத கால அவதானிப்பு ஆகும்.

இவ்வாறு தமிழ் அதிகாரிகளை தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளோடு மோத விடுவது;தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கு இடையே மோதிக் கொள்வது; தங்களுடைய அபிவிருத்தியைத் தீர்மானிக்கும் கூட்டங்களை தமிழ் மக்கள் நகைச்சுவை காட்சிகளாகப் பார்ப்பது….போன்றவற்றின் மூலம் தமிழ் அரசியலின் சீரியஸைக் குறைத்து அதை ஒரு பகிடியாக்கி விடுவது என்பது ஒரு நிகழ்ச்சி நிரலாக இருக்க முடியும்.

ஒருங்கிணைப்புக் குழுக்  கூட்டங்கள் குழப்பப்படுவதற்கு அல்லது கோமாளிக்  கூத்துகளாக மாற்றப்படுவதற்கு பின்வரும் காரணங்கள் கூறப்படுகின்றன.

முதலாவது காரணம் ஏற்கனவே இக்கட்டுரையில் கூறப்பட்டது போல அரசாங்கத்தின் சூதான ஒரு நிகழ்ச்சி நிரல்.

இரண்டாவது காரணம், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தலைவர்களின் ஆளுமை குறைவு.

மூன்றாவது காரணம்,அர்ஜுனாவும் உட்பட சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை நாகரீகத்தைப் பேணாமை.

நான்காவது காரணம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்குள் கமராக்கள் அனுமதிக்கப்படுவது.அல்லது அங்கே நடக்கும் விவாதங்களை சில ஊடகவியலாளர்கள் வணிக நோக்கு நிலையில் இருந்து கையாள்வது.

இதில் முதலாவதாகக் கூறப்படுவது ஒரு சூழ்ச்சிக் கோட்பாடு.ஆனாலும் தமிழர்களைத் தமிழர்களோடும் மோத விடுவதன்மூலம் தமிழ்த் தேசிய அரசியலை மதிப்பிறக்கம் செய்ய விரும்புகின்றவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து சிலரை அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ கையாள முடியும் என்ற சந்தேகம் பலமாக உண்டு.

அரசாங்கத்தின் சதி சூழ்ச்சிகள் என்பவற்றிற்கும் அப்பால்,அவ்வாறு அரசாங்கத்தால் கையாளப் படத்தக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் உண்டு என்பது தமிழ் அரசியல் வீழ்ச்சியைக் காட்டுவது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவையான முதிர்ச்சியோடும் பக்குவத்தோடும் இல்லை என்பதுதான் இங்கு முதலாவது காரணம்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் ஆளுமை எதுவென்பதல்ல இங்கு பிரச்சனை.தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆளுமை எதுவென்பதுதான் இங்கு முதல் பிரச்சினை.

தமிழ்த் தேசிய அரசியல் அவ்வாறு சீரழிந்து போனதுக்கு எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொருத்தமான முடிவுகளை எடுக்கத் தவறியதன் விளைவாக தமிழ் மக்கள் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்.கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்களை தோற்கடிப்பது வெளித் தரப்புகள் என்பதை விடவும், தமிழ்த் தரப்பே   என்பதுதான் உண்மை.

தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசிய இனம் என்று அழைத்துக் கொண்டாலும், நடைமுறையில் அவர்கள் ஒரு தேசமாக இருக்கிறார்களா என்ற பாரதூரமான கேள்வியை இங்கே எழுப்ப வேண்டும். ஒரு தேசத்துக்குரிய கூட்டுணர்வோ சகோதரத்துவமோ தமிழ் மக்கள் மத்தியில் உண்டா? ஒருவர் மற்றவரை துரோகியாக்குவது; ஒருவர் மற்றவருக்கு “பார்” பட்டம் சுட்டுவது;ஒருவர் மற்றவரை வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனங்களின் முகவர் என்று முத்திரை குத்துவது; ஒரு கட்சிக்குள்ளேயே இரு குழுக்கள் பிரிந்து நின்று ஒன்று மற்றதை அவதூறு செய்வது; யாராவது சமூகத்தில் மினுங்கிக் கொண்டு எழுந்தால், யாராவது சமூகத்துக்கு நல்லதைச் செய்ய முயற்சித்தால், அல்லது நல்லதை சொல்ல முயற்சித்தால்,அவரைச் சந்தேகிப்பது;அவரை அவதூறு செய்வது;வசை பாடுவது; சிறுமைப்படுத்துவது… இப்படியே தமிழ் மக்கள் ஒருவர் மற்றவரை நம்பாமல், ஒருவர் மற்றவரை சந்தேகித்து, ஒருவர் மற்றவரைத் துரோகியாக்கி, ஒருவர் மற்றவரை சிறுமைப்படுத்திச் சீரழிய,தமிழ் சமூகத்தில் யாருமே கதாநாயகர்களாக எழ முடியாமல் போய்விட்டது.

தாங்கள் வாக்களித்த தலைவர்களையே ஒரு சமூகம் சந்தேகிக்கின்றது; அவதூறு செய்கிறது என்று சொன்னால்,அது அந்த சமூகத்தின் வீழ்ச்சியைக் காட்டுகிறது.தான் வாக்களித்த ஒரு தலைவரைப் பார்த்து ஒரு சமூகம் சிரிக்கிறது என்று சொன்னால் அந்தச் சமூகம் தன்னுணர்வை,கூருணர்வை இழந்து வருகிறது என்று பொருள்.இவ்வாறு தமிழர்கள் ஒருவர் மற்றவரைத் துரோகியாக்கிக் கொண்டிருக்க,யாருமே கதாநாயகர்களாக எழமுடியாத தோல்விகரமான ஒரு வெற்றிடத்தில்,தென்னிலங்கையிலிருந்து அனுர குமார திஸநாயக்க கதாநாயகராக இறக்கப்படுகிறார்.தமிழ்ப் பாடல்களின் பின்னணியில் அவர் நாயக நடை போடுகிறார். அனுரவைப் போல நாயக வலம் வரும் தமிழ்த் தலைவர் யாராவது உண்டா? ஏன் இல்லாமல் போனது?

எல்லாத் தோல்விகளுக்கும் எதிரியைப் பழி செல்வதும்,சூழ்ச்சிக் கோட்பாடுகளை உற்பத்தி செய்வதும் ஒரு வழக்கமாகப் போய்விட்டது. நாங்கள் எங்கே பிழை விட்டோம்? நாங்கள் எங்கே தேசமாக இல்லாமல் போனோம்? என்பதனை தமிழ்த் தரப்பு தன்னைத்தானே சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.

இது தமிழ் மக்கள் தங்களை தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம். சில நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்சிகளையும் திட்டிக் கொண்டிருப்பதனால் பிரச்சனை தீராது.உள்ளதில் பெரிய கட்சி கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் கரைத்துறைப் பற்று பிரதேச சபையில் ஏற்பட்ட தோல்வி காட்டுகிறது.ஒரு தேசமாகத் திரட்டப்படாத மக்கள் சிதறிக் கொண்டே போகிறார்கள்.சிரிப்புக்கிடமாகி விட்டார்கள். அடுத்த ஆண்டாவது தமிழ் மக்கள் தங்களைப் பார்த்து தாங்களே சிரிக்காத ஒரு ஆண்டாக மலராதா?

https://athavannews.com/2025/1457504

இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்குமா? தவிர்ப்பதற்கான 3 வழிகள்

1 week 4 days ago

இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்குமா? தவிர்ப்பதற்கான 3 வழிகள்

இலங்கை, திட்வா புயல், பொருளாதார பாதிப்பு

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட பௌதிக ரீதியான நேரடிப் பாதிப்புகளின் பெறுமதி 4.1 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுரை தகவல்

  • ஆர்.யசிஹரன்

  • பிபிசி தமிழுக்காக

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் 'திட்வா' புயல் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.

இது ஒருபுறம் மனித துயரத்தை வெளிப்படுத்தியிருக்கும் அதே வேளையில் மறுபுறம் தொடர்ச்சியான காலநிலை அதிர்ச்சிகளைத் தாங்கும் அளவுக்கு இலங்கையிடம் போதிய நிதி வசதி இல்லை எனவும், இத்தகைய தீவிர வானிலை மாற்றங்கள் 2022 பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னர் எட்டப்பட்ட முன்னேற்றங்களைத் தலைகீழாக மாற்றக்கூடும் எனவும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் உலக நாடுகளைச் சேர்ந்த அனர்த்த முகாமைத்துவ தொழில்நுட்ப நிபுணர்கள் ஊடாக இப்பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் உலக வங்கி மதிப்பீடு ஒன்றை மேற்கொண்டு வருகின்றது. அம்மதிப்பீட்டின் ஊடாகக் கண்டறியப்பட்ட ஆரம்பகட்டத் தகவல்களை உள்ளடக்கிய பூர்வாங்க அறிக்கை இந்த வாரம் வெளியிடப்பட்டது.

பேரனர்த்தத்தினால் 4.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பாதிப்பு

'திட்வா' புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உலக வங்கியின் பூர்வாங்க மதிப்பீட்டு அறிக்கையின் தரவுகளுக்கு அமைய, இப்பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட பௌதிக ரீதியான நேரடிப் பாதிப்புகளின் பெறுமதி 4.1 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 4 சதவீதம் எனவும் கணிக்கிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த அனர்த்தத்தினால் ஏற்பட்ட மறைமுகப் பாதிப்புகளின் பெறுமதி மற்றும் மீளக்கட்டியெழுப்பல் செலவினங்கள் என்பன கணிப்பிடப்பட்டதன் பின்னர் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட மொத்தப் பாதிப்பின் அளவு மேலும் உயர்வடையக்கூடும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்த 4.1 பில்லியன் அமெரிக்க டாலராகக் கணிப்பிடப்பட்டிருக்கும் பௌதிக ரீதியான நேரடிப் பாதிப்புகளில் வீதிகள், பாலங்கள், புகையிரதப் பாதைகள், மின்விநியோகக் கட்டமைப்புகள், தொலைத்தொடர்புக் கட்டமைப்புக்கள், நீர் விநியோகக் கட்டமைப்புகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் பெறுமதி 1.735 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

  • பொதுமக்களின் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் பெறுமதி 985 மில்லியன் அமெரிக்க டாலராகும்.

  • நெற்பயிர்ச்செய்கை நிலங்கள், ஏனைய விவசாய நிலங்கள், விவசாய நடவடிக்கைகளுக்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகள், உள்ளூர் மீன்பிடி நடவடிக்கைகளில் ஏற்பட்ட பாதிப்புகள் என்பன உள்ளடங்கலாக விவசாயம் மற்றும் மீன்பிடித்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பின் பெறுமதி 814 மில்லியன் அமெரிக்க டாலராகும்.

  • பாடசாலைகள், சுகாதார வசதிகள், வணிகங்கள், கைத்தொழில் என்பன உள்ளிட்ட வீடுகள் அல்லாத கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் பெறுமதி 562 மில்லியன் அமெரிக்க டாலராகும்.

"வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையே பறித்துள்ளது"

இலங்கை, திட்வா புயல், பொருளாதார பாதிப்பு

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் செயற்பாடுகள் மிகவும் கடினமான ஒன்றாக மாறியுள்ளது

இந்த நேரடித் தாக்கமானது இலங்கையின் பொருளாதார மீட்சிப்பாதையை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன், அடுத்த கட்ட நிலைமைகளை கையாள்வதில் அரசாங்கம் நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்துள்ளதாக இலங்கையின் முன்னணி பொருளாதார ஆய்வு அமைப்பான "அட்வகாட்டா" சுட்டிக்காட்டுகின்றது.

இது குறித்து அட்வகாட்டா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தனநாத் பெர்னாண்டோ பிபிசி தமிழிடம் பேசுகையில், "இந்த அனர்த்தம் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையே பறித்துள்ளது. இலங்கையின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மத்திய மலைநாட்டின் பிரதேசங்களில் மிகவும் கடினமாக உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை நாசமாக்கியுள்ள நிலையில் அவற்றை மீட்டெடுக்கும் செயற்பாடுகள் மிகவும் கடினமான ஒன்றாக மாறியுள்ளது." எனத் தெரிவித்தார்.

மறைமுக தாக்கங்கள் குறித்து ஆராய்ந்தால் இந்த இழப்பானது மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்று கூறும் தனநாத், இலங்கை கடினமான சூழலை எதிர்கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்களின் வாழ்வாதாரம், அவர்கள் மீண்டெழும் கால எல்லை, இதனால் அடுத்ததாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படப்போகும் தாக்கங்களை கணக்கிட்டால் இந்த சேதங்கள் மற்றும் அதனால் ஏற்படப் போகும் விளைவுகள் மிக மோசமானதாக அமையப் போகின்றது." என்றார்.

அதுமட்டுமல்லாது இந்த பேரனர்த்தத்தில் அதிகளவில் பொது சொத்துகளே அழிந்துள்ளன என்றும் தனநாத் தெரிவித்தார்.

"இவற்றை மீள் கட்டமைக்க அரச நிதியே முழுமையாக செலவாகும். ஆகவே அரசாங்கத்தின் ஏனைய நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் இவற்றை முதலில் கையாள வேண்டியுள்ளமையானது மிகப்பெரிய கடினத்தன்மையை உருவாக்கப் போகின்றது" எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை, திட்வா புயல், பொருளாதார பாதிப்பு

பட மூலாதாரம்,Dhananath Fernando

படக்குறிப்பு,அட்வகாட்டா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தனநாத் பெர்னாண்டோ

'வறுமை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை மேலும் அதிகரிக்கக் கூடும்'

இப்பேரனர்த்தத்தின் விளைவாக விவசாயத்துறை வெகுவாகப் பாதிப்படைந்தமையினால் வறுமை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை என்பன மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் உலக வங்கியின் பூர்வாங்க அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 'திட்வா' சூறாவளியினால் சுமார் 277,000 விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மீன்பிடித்துறையில் 20.5 முதல் 21.5 மில்லியன் இலங்கை ரூபாய் வரையில் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

மேலும் 2026-ஆம் ஆண்டின் பெரும்போகத்தை எதிர்பார்த்து பயிர்ச்செய்கையை மேற்கொண்ட மற்றும் பயிரிடுவதற்கு உத்தேசித்திருந்த விவசாயிகள் இப்பேரனர்த்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பேரனர்த்தத்தினால் 374,000 தொழிலாளர்கள் பாதிப்பு

அதேபோன்று, இப்பேரனர்த்தத்தினால் தொழிலாளர்கள் மத்தியிலும், தொழிற்சந்தையிலும் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் தொடர்பில் மதிப்பீடு ஒன்றை மேற்கொண்டிருக்கும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம், அதனூடாகக் கண்டறியப்பட்ட அடிப்படைத் தகவல்கள் அடங்கிய பூர்வாங்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.

'அந்த அறிக்கையில் 'திட்வா' புயலை அடுத்து ஏற்பட்ட பேரனர்த்தமானது 16 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியை அச்சுறுத்தல் நிலைக்குள் தள்ளியிருக்கிறது. இதன் பெறுமதி சுமார் 16 பில்லியன் டாலராகும்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 374,000 தொழிலாளர்கள் வசிப்பதாகவும், இதன் விளைவாக அவர்கள் தமது வாழ்வாதாரம் மற்றும் குடும்ப வருமானத்தை இழந்திருப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் 244,000 ஆண்களையும், 130,000 பெண்களையும் உள்ளடக்கிய இத்தொழிலாளர்களின் மாதாந்த வருமான இழப்பு சுமார் 48 மில்லியன் அமெரிக்க டாலராகும்.

இலங்கை, திட்வா புயல், பொருளாதார பாதிப்பு

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இலங்கையில் அனர்த்தத்தினால் சுமார் 374,000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

துறை ரீதியாக நோக்குமிடத்து இவர்களில் 85,000 பேர் விவசாயத்துறை சார்ந்தும், 125,000 பேர் கைத்தொழில்துறை சார்ந்தும், 164,000 பேர் சேவைத்துறை சார்ந்தும் தொழில்களில் ஈடுபட்டவர்களாவர் என்ற தரவுகளை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் வெளியிட்டுள்ளது.

விவசாயம் மற்றும் மீன்பிடி என்பன இந்நாட்டுப் பொருளாதாரத்தின் இரு பிரதான துறைகளாகும். மொத்த வேலைவாய்ப்பில் நான்கில் ஒரு பங்கானவை இவ்விரு துறைகளையும் சார்ந்தவையாகும்.

குறிப்பாக மத்திய மலைநாட்டில் மேற்கொள்ளப்படும் தேயிலைப் பயிர்ச்செய்கை மூலம் 2.5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பைப் பெற்றிருப்பதுடன், அத்துறையானது வருடாந்திதிர ஏற்றுமதிகளில் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் பங்களிப்பைக் கொண்டிருக்கின்றது.

தற்போதைய பேரனர்த்தத்தினால் இத்துறை பரந்துபட்டளவில் பாதிப்படைந்திருக்கின்றது. அதேவேளை ஆரம்பகட்ட மதிப்பீடுகளின் பிரகாரம் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படும் பகுதிகளில் 23 சதவீதமானவை வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படக் கூடிய அச்சுறுத்தலைக் கொண்டிருக்கின்றன என்ற காரணிகளை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் வெளிப்படுத்தியுள்ளது.

அத்தியாவசிய பொருள் விலையேற்றம் மக்களுக்கு நெருக்கடி தருமா?

இந்த அனர்த்தத்தின் விளைவாக நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் வரி உயர்வுக்கு பொதுமக்கள் முகங்கொடுக்க நேரிடலாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதேநேரத்தில் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்காத வகையில் பொருளாதாரத்தையும் கையாள வேண்டும். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் மக்கள் அதிக பணம் கொடுத்து அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாது. எனினும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்போகின்றதா என்ற சந்தேகம் எழுதுள்ளது," என அவர் தெரிவித்தார்.

இலங்கை, திட்வா புயல், பொருளாதார பாதிப்பு

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அனர்த்தத்தின் விளைவாக நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் வரி உயர்வுக்கு பொதுமக்கள் முகங்கொடுக்க நேரிடலாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார். (கோப்புப்படம்)

இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்குமா?

இந்நிலையில், பேரனர்த்தத்தின் பின்னர் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்ரிக்ளிற்ஸ் உள்ளிட்ட 121 சர்வதேசப் பொருளாதார நிபுணர்கள் இலங்கையின் நிலைமையை தெளிவுபடுத்திய கூட்டறிக்கை ஒன்றினையும் விடுத்துள்ளனர்.

இலங்கையின் தற்போதைய கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் நாட்டின் கடன் நெருக்கடிக்கு நிலையான தீர்வைத் தரவில்லை. 'திட்வா' சூறாவளி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்க வருமானத்தில் 25 சதவீதத்தை வெளியகக் கடன் செலுத்தலுக்குப் பயன்படுத்துவது உலகிலேயே மிக உயர்ந்த அளவாகும் என அந்த அறிக்கையின் ஊடாக அவர்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர்.

மேலும், "இது நாட்டின் மீள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பெரிதும் பாதிக்கிறது. மீண்டும் ஒரு கடன் நெருக்கடி ஏற்பட 50 சதவீத வாய்ப்புள்ளதாகச் சர்வதேச நாணய நிதியமே எச்சரித்துள்ள சூழலில், தற்போதைய கடன் செலுத்தலை உடனடியாக இடைநிறுத்திவிட்டு, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தக்கூடிய புதிய கடன் மறுசீரமைப்பு செயன்முறைக்குச் செல்ல வேண்டும்." என அவர்கள் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

"நாட்டை மீட்டெடுக்க அரசாங்கத்திடம் நிதி உள்ளது"

இலங்கை, திட்வா புயல், பொருளாதார பாதிப்பு

பட மூலாதாரம்,Anil Jayantha

படக்குறிப்பு,நிதி அமைச்சர் அனில் ஜயந்த

இவ்வாறான சவால்கள் குறித்து சர்வதேச மற்றும் தேசிய அளவில் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை நிதி அமைச்சர் அனில் ஜயந்த பிபிசி தமிழிடம் விவரித்தார்.

"தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்கும் போது பொருளாதார ரீதியாக முழுமையாக வீழ்ச்சியடைந்த நாட்டையே பொறுப்பேற்றோம். ஆகவே நெருக்கடியில் இருந்த நாட்டை முதலில் மீட்டெடுக்கும் சவாலுக்கே முகங்கொடுக்க நேர்ந்தது. இம்முறை அரசாங்கம் முன்வைத்த வரவு செலவு திட்டமானது நாட்டின் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தும் வகையிலான வரவு செலவு திட்டமாகவே அமைந்தது." என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் "அதில் படிப்படியாக வெற்றிகண்டு வந்திருந்த நிலையில் தான் எதிர்பாராத விதமாக இயற்கை அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. ஆனால் இந்த அனர்த்தம் அரசாங்கத்தின் வெற்றிகரமான பயணத்தை தடுத்துள்ளது என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. கடந்த ஆண்டு அரசாங்கம் கையாண்ட அரச நிதி முகாமைத்துவம் மற்றும் அனாவசிய செலவுகளைக் குறைத்து சேமித்த பணத்தில் ஒரு பங்கினை மக்களுக்காக செலவு செய்யக்கூடியதாக உள்ளது," என்றார்.

சர்வதேச நாடுகளின், அமைப்புகளின் நிதி உதவிகள் மற்றும் நீண்டகால கடன் அடிப்படையிலான நிதி உதவிகள் கிடைத்து வருகின்ற நிலையில் இந்த மோசமான நிலைமைகளை கையாள இலகுவாக உள்ளது என்று அனில் ஜயந்த தெரிவித்தார்.

முதலில் மக்களின் வாழ்வாதாரத்துக்கும், நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான பங்கினை வகிக்கும் துறைகளுக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களை சீர்செய்து நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுதுவதற்கே அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை முன்னுள்ள 3 வழிகள்

தற்போது செலவு செய்வதற்கான நிதி தம்மிடம் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் இந்த நிதி தற்போதைய பேரனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு போதுமானதாக இருந்தாலும் அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முன்னெடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட வேலைத் திட்டங்களுக்கு இந்த நிதி போதுமானதாக இருக்காது என்பதை பொருளாதார ஆய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

இலங்கையின் பிரதான பொருளாதார ஆய்வு அமைப்புகளான 'அட்வகாட்டா' மற்றும் 'வெரிடே', பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை சாதாரண நிலைமைக்கு கொண்டுவர மேலும் சில ஆண்டுகள் கட்டாயமாக தேவைப்படும், அதுவரையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படப் போகும் தாக்கங்களை சமாளிக்க மிகக் கடினமாக இருக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.

விவசாய நிலங்கள் பாரிய அளவில் சேதமடைந்துள்ள நிலையில் உணவு தட்டுப்பாடு மற்றும் உற்பத்தியில் பின்னடைவுகளுக்கு முகங்கொடுத்தே ஆகவேண்டிய சூழ்நிலை உருவாகும் என வெரிடே ஆய்வு மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நிஷான் டி மெல் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"இந்த காலகட்டத்தில் சகல பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கே முன்னுரிமை கொடுக்கும் நிலைமை ஏற்படும்., இந்த நெருக்கடிகளை சமாளிக்க அரசாங்கம் புதிதாக பணத்தை அச்சடிக்க வேண்டும் அல்லது கடன் பெற வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் வரிகளை அதிகரிக்க வேண்டும். இது மூன்றும் இல்லாத மாற்றுவழி அரசாங்கத்திடம் இல்லை," என்கிறார் தனநாத் பெர்னாண்டோ.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp9kgjep5xno

ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.கவும்! - ஷோபாசக்தி

1 week 5 days ago

ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.கவும்!

ஷோபாசக்தி

ந்தியப் பெருநிலப் பரப்பிலிருந்து பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்த தெற்கு நோக்கிய புலப்பெயர்வே இலங்கைத் தீவின் தமிழ் – சிங்களம் பேசும் மக்களின் நிலைத்த குடிசன வரலாறு. இனம், மதம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இரு நிலங்களுக்கும் இடையே பெரும் ஒற்றுமையுண்டு. நிலையான தேசங்கள் தோன்றாத பண்டைய காலத்திலும் பின்னர் காலனியக் காலத்திலும் இலங்கைத் தீவின் வரலாறு எப்போதும் இந்தியப் பெருநிலத்துடன் இணைத்தே எழுதப்பட்டிருக்கிறது. கண்டி அரசின் கடைசி நான்கு மன்னர்களும் மதுரை நாயக்கர்கள் என்பதும், யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னர்கள் ஆரியச் சக்கரவர்த்திகள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கவை. சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கையின் உள்நாட்டு அரசியலிலும் பொருளியலிலும் போரிலும் இந்திய ஒன்றிய அரசின் தலையீடும் கட்டுப்பாடும் இன்றுவரை வலுவாகவே இருக்கின்றது. எனவே, இந்தியப் பெருநிலப் பரப்பில் நிகழ்ந்த எந்த அரசியல் – பண்பாட்டு மாற்றங்களும் இலங்கையிலும் வலுவான பாதிப்பைச் செலுத்தியுள்ளன.

இந்த வகையில், தமிழகத்தில் தோன்றிய திராவிட இயக்கக் கருத்தியல் இலங்கைத் தமிழர்களிடையேயும் உடனடியாகவே பரவத் தொடங்கியது. 1925-இல் ஈ.வெ.ரா. பெரியாரால் தொடக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் கருத்தியலை உள்வாங்கி, 1927-இல் யாழ்ப்பாணத்தில் ‘திராவிடன்’ பத்திரிகை வெளியாகத் தொடங்கியது. ‘திராவிட வித்தியா அபிவிருத்தி சங்கம்’, ‘திராவிட வித்தியாசாலை’ ஆகியவை யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டன. வடமராட்சியில், தமிழறிஞரும் பகுத்தறிவாளருமான கந்தமுருகேசனாரின் தலைமையில் இளைஞர் திரள் திராவிட இயக்கச் சிந்தனைகளுடன் செயற்பட்டது. இவர்களால் ‘திராவிடர் கலை மன்றம்’ என்ற வாசகசாலை ஆரம்பிக்கப்பட்டு ‘திராவிட நாடு’ ,’குடியரசு’ போன்ற பத்திரிகைகள் தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்டன. 4 பெப்ரவரி 1938-இல் ‘புலோலி’ கிராமச் சங்கத் தேர்தலில் ‘துறையா’ வார்ட்டில் சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் முருகப்பர் வேலுப்பிள்ளை போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார். இவர் புரோகித மறுப்புச் சங்கத்தின் தலைவருமாவார். அதேபோன்று ‘ஆலடி’ வார்ட்டில் சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் ப.கதிர்காமர் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இந்தச் செய்தியை 10 ஏப்ரல் 1938 தேதியிடப்பட்ட ‘குடியரசு’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. தொகுத்துப் பார்க்கும்போது ஈழத் தமிழர்களிடையே தமிழ்த் தேசியச் சிந்தனைகளும் இடதுசாரிச் சிந்தனைகளும் அறிமுகமாவதற்கு முன்பே திராவிட இயக்கச் சிந்தனைகள் அறிமுகமாகியிருந்தன எனக் கருதக் கூடியதாகவே உள்ளது.

1932-இல் கொழும்பில் ‘இலங்கை சுயமரியாதை இயக்கம்’ ஆரம்பிக்கப்பட்டது. இதே வருடத்தில்தான் பெரியார் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொழும்பு, கண்டி, நாவலப்பிட்டி, ஹட்டன், யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆகிய இடங்களில் உரைகளை நிகழ்த்தினார். அந்த உரைகளில் தேசம், தேசியம், சாதி, மதம் போன்றவற்றைக் கடுமையாகத் தாக்கி விமர்சித்துப் பேசி, பகுத்தறிவையும் சுயமரியாதையையும் ஒடுக்கப்பட்டவர்களின் ஒற்றுமையையும் பெரியார் வலியுறுத்தினார். ‘தேசியம் ஒரு கற்பிதம்’ என்ற எண்ணத்தை முன்வைத்தார். இதற்கு 50 வருடங்கள் கழித்துத்தான் பெனடிக்ட் ஆண்டர்ஸனின் ‘Imagined Communities’ என்ற புகழ்பெற்ற நூல் வெளியாகி, தேசியம் என்பது கட்டமைக்கப்பட்ட கருத்தாக்கம் என்றவாறான சிந்தனை 1990-களில் தமிழில் விவாதிக்கப்பட்டது.

“தோழர்களே! கடவுள், மதம், ஜாதியம், தேசியம், தேசாபிமானம் என்பவைகள் எல்லாம் மக்களுக்கு இயற்கையாக தானாக ஏற்பட்ட உணர்ச்சிகள் அல்ல. சகல துறைகளிலும் மேல்படியிலுள்ளவர்கள் தங்கள் நிலை நிரந்தரமாயிருக்க ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கட்டுப்பாடான ஸ்தாபனங்களின் மூலம் பாமர மக்களுக்குள் புகுத்தப்பட்ட உணர்ச்சிகளேயாகும். இந்தப்படி புகுத்தப்படவேண்டிய அவசியமும், காரணமும் என்னவென்று பார்த்தால் அவை முற்றும் பொருளாதார உள் எண்ணத்தையும், அந்நியர் உழைப்பாலேயே வாழவேண்டும் என்கின்ற உள் எண்ணத்தையும் கொண்ட பேராசையும், சோம்பேறி வாழ்க்கைப் பிரியமுமேயாகும்” என்று தனது கொழும்பு உரையில் பெரியார் குறிப்பிட்டார்.

1944-இல் இந்தியாவில் சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் இணைக்கப்பட்டு ‘திராவிடர் கழகம்’ தோற்றுவிக்கப்பட்டபோது, இலங்கை சுயமரியாதை இயக்கமும் ‘திராவிடர் கழகம்’ எனப் பெயர் மாற்றிக்கொண்டது. 1949-இல் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறியவர்கள் தி.மு.கவை நிறுவியபோது, இலங்கையிலும் அவ்வாறே திராவிடர் கழகத்திலிருந்து ஏ.இளஞ்செழியனின் தலைமையில் ‘இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகம்’ (இ.தி.மு.க.) தோற்றம் பெற்றது.

இ. தி.மு.க. இலங்கைக்கான அரசியலையே முதன்மையாக முன்னெடுத்தது. ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று திராவிட நாட்டையே முன்வைத்துத் தமிழக தி.மு.க. பெயரிட்டிருப்பதால், இலங்கையைத் தாயகமாகக் கொண்டவர்களுக்கு அது பொருந்தாது எனக் கருதிய இ. தி.மு.கவினர் ‘திராவிடர் முன்னேற்றக் கழகம்’ என்றே தமது இயக்கத்தின் பெயரை வைத்துக்கொண்டனர். இயக்கக் கொள்கைகளான சாதியொழிப்பு, பெண் விடுதலை, மொழிப்பற்று மற்றும் பண்பாட்டு முன்னெடுப்புகளை தி.மு.கவைப் பின்பற்றியே இ. தி.மு.கவினர் அமைத்துக்கொண்டனர்.

தமிழகத்தில் வெளியாகிய தி.மு.க பத்திரிகைகளின் தொடர்ச்சியாகவே இலங்கையிலும் 1950 – 1971 காலப்பகுதியில் ‘திராவிடமணி'(கொழும்பு) ‘நாம்’ (பதுளை) ‘ஈழமுரசு’ (மட்டக்களப்பு) ‘இனமுழக்கம்’ (யாழ்ப்பாணம்) ‘எரிமலை’ (அக்கரைப்பற்று) போன்ற முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட திராவிடச் சிந்தனைப் பத்திரிகைகள் வெளியாகின.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களிடையே இ.தி.மு.க கிளைகளை அமைப்பதற்குத் திராவிட இயக்க சினிமாக்கள் உதவின எனச் சொல்லும் ஆய்வாளர் பெ.முத்துலிங்கம் “பராசக்தி திரைப்படம் மலையக சினிமாக் கொட்டகைகளில் திரையிடப்பட்டது. தென்னிந்தியாவிலிருந்து இலங்கை, பிஜி, மலேசியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்ற தமிழர்களின் அவலநிலை பற்றி இப்படத்தில் குரலெழுப்பப்படுவதுடன் சீர்திருத்தக் கருத்துகளையும் கடவுளின் பெயரால் மேற்கொள்ளப்படும் அட்டூழியங்களுக்கு எதிரான காட்சிகளையும் இப்படம் கொண்டிருந்தது” எனச் சுட்டிக்காட்டுகிறார்.

1951 டிசம்பரில் முதல் மாநில தி.மு.க மாநாடு சென்னையில் நடத்தப்பட்டபோது, இ. தி.மு.க. பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், இ.தி.மு.கவால் திரட்டப்பட்ட நிதியையும் மாநாட்டுக்கு அளித்தனர். காலத்திற்குக் காலம் தமிழகத் திராவிட இயக்கத்தினர் இ.தி.மு.கவின் அழைப்பின்பேரில் இலங்கைக்கு வந்து நாடு முழுவதும் பரப்புரைக் கூட்டங்களில் சொற்பொழிவாற்றினார்கள். இவ்வாறு இலங்கை வந்தவர்களில் பேராசிரியர் க. அன்பழன், ஆசிரியர் கி.வீரமணி, சி.பி. சிற்றரசு, கலைவாணர் என் .எஸ்.கிருணன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, நாவலர் இரா. நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன் போன்ற பலர் இருந்தார்கள்.

இலங்கையில் தமிழ் மொழிக்குச் சமவுரிமை கோரியும், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழியினருக்குக் குடியுரிமை கோரியும், தமிழகத்தில் நிகழ்ந்த இந்தித் திணிப்புக்கு எதிராகவும் இ.தி.மு.க பலமுனைப் போராட்டங்களை முன்னெடுத்த போதெல்லாம், தமிழக தி.மு.கவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைத்தது. இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவளித்து தமிழக தி.மு.க. தலைவர்கள் அறிக்கைகளையும் செய்திகளையும் வெளியிட்டார்கள். யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிளைகளை அமைத்திருந்த இ.தி.முக 1957 டிசம்பரில் சாதியொழிப்பை முன்வைத்து சமூக சீர்திருத்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தத் திட்டமிட்டபோது, அந்த மாநாட்டுக்குத் தமிழகத்திலிருந்து நாவலர் நெடுஞ்செழியன், ஈ.வி.கே. சம்பத், பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். எனினும், அவர்கள் மூவரையும் இலங்கை வர இந்திய அரசு அனுமதிக்கவில்லை.

இக்காலகட்டத்தில், இலங்கையில் நிலவும் ஒற்றையாட்சி முறைக்கு மாற்றாகத் தமிழ் -சிங்கள கூட்டாட்சி முறையை முன்வைத்துப் போராடிக்கொண்டிருந்த ‘இலங்கை தமிழரசுக் கட்சி’க்கும் இ.தி.மு.கவுக்கும் இடையே தோழமை நிலவியது. இரு அமைப்புகளும் பல தருணங்களில் சேர்ந்து செயற்பட்டன. இ.தி.மு.க 1960-இல் பண்டாரவளையில் நடத்திய கலாசார மாநாட்டில் தமிழரசுக் கட்சித் தலைவர்களான சாம் தம்பிமுத்து, எம். திருச்செல்வம், செனட்டர் மு. மாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டார்கள். 1961-இல் தமிழரசுக் கட்சியினர் யாழ்ப்பாணத்தில் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பொதுச்செயலாளர் ஏ. இளஞ்செழியனின் தலைமையில் இ.தி.மு.க பங்கெடுத்தது. நுவரெலியாவில் இ.தி.மு.க நடத்திய கூட்டத்தில் அ.அமிர்தலிங்கம், எம்.சிவசிதம்பரம், மங்கையர்க்கரசி போன்ற தமிழரசுக் கட்சியினர் கலந்துகொண்டார்கள். இந்தக் கூட்டத்தின் முடிவில் தமிழரசுக் கட்சியுடன் கூட்டாகச் செயற்படுவது என இ.தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியது. 1962 ஏப்ரலில், ஹட்டன் நகரத்தில் மொழியுரிமை – மலையக மக்களின் குடியுரிமை ஆகியவற்றை முன்வைத்து இ.தி.மு.க நடத்திய இரண்டாவது மாநில மாநாட்டில் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே. வி. செல்வநாயகம் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

கூட்டாட்சி கோரிப் போராடிக்கொண்டிருந்த தமிழரசுக் கட்சியுடனான இ.தி.மு.கவின் அரசியல் கூட்டு சிங்கள இனவாத அரசியல்வாதிகளுக்குக் கலக்கத்தைக் கொடுத்தது. திராவிட நாடொன்றை உருவாக்க முயலும் தமிழக தி.மு.க செயற்பாட்டின் ஓர் அங்கமே இ.தி.மு.கவின் இந்த நடவடிக்கை எனக்கூறி இ.தி.மு.கவைத் தடை செய்யுமாறு சிங்கள இனவாத அரசியல்வாதிகள் கூக்குரலிட்டார்கள். பெயர்பெற்ற சிங்கள இனவாதிகளான கே.எம்.பி. ராஜரத்ன, ஆர்.ஜி.சேனநாயக்க, கம்யூனிஸ்ட் கட்சியின் பேர்ஸி விக்ரமரத்ன ஆகியோர் நாடாளுமன்றத்தில் இ.தி.மு.வை தடைசெய்யுமாறு கோரினார்கள். இவர்கள் இ.தி.மு.கவை, தமிழக தி.மு.கவின் நேரடிக் கிளை என்றும் அது இலங்கையைத் தமிழகத்துடன் இணைக்க முயல்கிறது என்றும் சொன்னார்கள். 1962 ஜூலை 22-ஆம் தேதி, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசால் அவசரகாலச் சட்டத்தின்கீழ் இ.தி.மு.க. தடைசெய்யப்பட்டது.

இந்தத் தடையைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் அ.அமிர்தலிங்கம் நீண்ட உரையாற்றினார். அந்த உரையில் “இவர்கள் குறிப்பிடும் பூதம் என்ன என்பதை நான் குறிப்பிட வேண்டியிருக்கிறது. இந்தத் திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இன்று நேற்றுத் தோன்றிய ஓர் இயக்கமல்ல. நான் இலங்கைச் சர்வகலாசாலையில் 1946- 1947 ஆண்டளவில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே இலங்கை திராவிடர் கழகம் இருந்தது. இவர்களது நோக்கம் இலங்கையில் வாழ்கின்ற மலைநாட்டுத் தமிழர்கள் மத்தியில் சாதியின் பெயரால் காணப்படும் பேதங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதாகும்…மலைநாட்டுத் தமிழ் மக்கள் தன்மானம் பெற்றவர்களாகப் பகுத்தறிவுப் பாதையில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இலங்கையில் தி.மு.க இயங்கி வருகிறது” என்றார். இலங்கை சமசமாஜக் கட்சியும் இந்தத் தடையைக் கண்டித்து “மலையக மக்களின் அடிப்படை உரிமையான குடியுரிமை இலங்கை அரசால் மறுக்கப்படுவதே இ.தி.மு.கவின் வளர்ச்சிக்கு முதன்மையான காரணம்” என்றது.

இ.தி.மு.கவின் மீதான தடை 1963-இல் நீக்கப்பட்டது. 1965-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது, இடதுசாரிக் கட்சிகள் ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்திற்கு ஆதரவளித்தார்கள். தமிழரசுக் கட்சியினர் அந்த ஒப்பந்தத்தை எதிர்த்தார்கள். எனவே, இ.தி.மு.க. பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு நிலையெடுத்து வடக்கு – கிழக்கில் பரப்புரையை மேற்கொண்டது. எனினும், தேர்தலின் பின்பு தமிழரசுக் கட்சி டட்லி சேனநாயக்கவின் அரசு அமைய ஆதரவு கொடுத்ததால், தமிழரசுக் கட்சியுடனான உறவை இ.தி.மு.க முறித்துக்கொண்டது.

1968-இல் இ.தி.மு.க தன்னை அரசியல் கட்சியாக நிறுவிக்கொண்டது. அதே வருடத்தில் அக்டோபர் 14-ஆம் தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை கொழும்பில் நடத்தியது. இவ்விழாவில் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த தி.மு.கவினரும் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்வை திரிபுபடுத்தி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ‘எத்த’ நாளிதழ் “ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி திருப்பி அனுப்ப வேண்டியுள்ள இந்தியர்களைத் தடுத்து, இலங்கை திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்து, தென்னிந்தியாவையும் வட இலங்கையையும் ஒன்றிணைத்து திராவிட இராச்சியத்தை உருவாக்குவதற்கான சதி அம்பலமாகியுள்ளது. இந்திய தி.மு.கவின் தலைவர் அண்ணாதுரையின் பிறந்தநாளைக் கொண்டாடும் தோரணையில் இலங்கை வந்துள்ள அண்ணாதுரை குழுவினர் இதற்கான அமைப்பு வேலைகளை நடாத்திச் செல்கின்றனர்” என்று எழுதியது

இ.தி.மு.க. யாழ் மாவட்டத்தின் நான்காவது மாநில மாநாட்டை 18.09.1969-இல் நடத்தியது. அன்றைய தினம் முற்றவெளியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய இ.தி.மு.க பொதுச்செயலாளர் ஏ. இளஞ்செழியன் “தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களை சாத்வீகப் போராட்டத்தின் மூலம் பெற முடியாவிடின், புரட்சி ஒன்றின் மூலம் பெறவிரும்பினால் தமிழ் மக்கள் கெரில்லா யுத்தத்திற்குத் தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். காவல்நிலையங்களைத் தகர்த்தல், ஆயுதப் பயிற்சி முகாம் அமைத்தல் வேண்டும்” என்று கூறினார். எனினும் “அதற்கான தேவை தற்போது இல்லை” என்றும் குறிப்பிட்டார். ஈழநிலத்தில் முதன்முதலாக ‘கெரில்லா போராட்டம்’ என்ற சொல்லாடல் இ.தி.மு.கவாலேயே உச்சரிக்கப்பட்டிருக்கிறது. இந்த உரையைச் சிங்கள அரசியல்வாதிகள், பத்திரிகைகள் மட்டுமல்லாமல் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகளும் ஒட்டுமொத்தமாகக் கண்டித்தார்கள். மறுபடியும் இ.தி.மு.க. மீது தடை கோரப்பட்டது. 1971-இல் ஜே.வி.பி. நடத்திய ஆயுதக் கிளர்ச்சியைத் தொடர்ந்து ஏ.இளஞ்செழியனும் இ.தி.மு.கவின் பல உறுப்பினர்களும் கைதுசெய்யப்பட்டார்கள்.

இ.தி.மு.கவை ஒரு பிரிவினைவாதச் சக்தியாகவும், தமிழக தி.மு.கவின் திராவிட நாடு கொள்கையை முன்னெடுக்கும் இலங்கைக் கிளையாகவுமே இலங்கை அரசு, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஜே.வி.பி, சிங்கள ஊடகங்கள் போன்றவை தொடர்ச்சியாகச் சித்திரித்துக்கொண்டிருந்தன. இது இ.தி.மு.கவுக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியது. உண்மையில் இ.தி.மு.க, தமிழக தி.மு.கவின் நேரடிக் கிளை என இ.தி.மு.வோ அல்லது தி.மு.கவோ ஒருபோதும் சொல்லியதில்லை. இரண்டு இயக்கங்களுக்குமிடையே அரசியல் – கலாசார கூட்டிணைவு உள்ளது என்றே இரு இயக்கங்களுமே பிரகடனப்படுத்தியிருந்தன.

தமிழகத்தில் தி.மு.கவில் பிளவு ஏற்பட்டு, எம். ஜி. ஆர் அ.தி.மு.கவை தோற்றுவித்தார். இந்தப் பிளவின் தாக்கம் இலங்கையிலும் நிச்சயமாக எதிரொலித்து இ.தி.மு.கவைப் பலவீனப்படுத்தியிருக்கும். இன்னொருபுறத்தில் இ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து ஏ.இளஞ்செழியன் விலகி ‘இளம் சோசலிஸ முன்னணி’ என்ற அமைப்பை உண்டாக்கினார். இந்தப் அமைப்பு ட்ராட்ஸ்கிய அரசியலை முன்னெடுத்தது.

1972-இல் இலங்கையில் புதிய அரசியல் சாசனம் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் இளைஞர்களிடையே தோன்றிய தமிழ்த் தேசியவாதப் பேரலை, 1976-இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழீழப் பிரகடனம், இளைஞர்களின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்பு ஆகியவற்றால் இலங்கையின் அரசியல் சூழல்கள் மாறின. உள்நாட்டுப் போர் இலங்கையின் மீது இறங்கிக்கொண்டிருந்தது. அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதத் தடைச் சட்டமும் அமலுக்கு வந்தன. இவையெல்லாம் இ.தி.மு.க. தொடர்ந்தும் வீறுடன் இயங்குவதற்கான சூழலை நாட்டில் இல்லாமல் செய்தன. எழுபதுகளின் இறுதியில் இ.தி.மு.க. கலைந்துபோயிற்று. இ.தி.மு.கவின் துணை அமைப்புகளாகச் செயற்பட்ட ‘இலங்கை இளம் திராவிடர் முன்னேற்றக் கழகம்’, ‘கலைஞர் கருணாநிதி நற்பணி மன்றம்’ போன்றவையும் செயலிழந்தன.

“இ.தி.மு.க. மூன்று தசாப்த வரலாற்றுடன் அஸ்தமித்த போதிலும், அது ஒரு வரலாற்றுத் தேவையைப் பூர்த்தி செய்துள்ளது. மலையக மக்களின் அடிப்படை மனித உரிமையான பிரஜாவுரிமைப் பிரச்சினை தொடர்பாக மக்கள் போராட்டத்தை இதுவே முன்னெடுத்தது. மலையக மக்கள் மத்தியில் நிலவிய அறியாமை நீங்கி விழிப்புணர்வு ஏற்படுவதற்கும் இ.தி.மு.கவே காரணமாக இருந்துள்ளது” என்று இ.தி.மு.கவை மதிப்பிடுகிறார் ஆய்வாளர் பெ. முத்துலிங்கம்.

2

2012-இல், பெரவள்ளூர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கலைஞர் மு. கருணாநிதி “தமிழீழம் என்பது அய்ம்பது – அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தந்தை செல்வா அவர்கள் தலைமையில் உருவான கீதம். அந்தக் காலத்திலிருந்து அவரோடு இணைந்து திராவிட முன்னேற்ற கழகமும், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், நானும், நம்முடைய நண்பர்களும் நின்றிருக்கிறோம்” என்றார். உண்மையிலேயே ‘தமிழீழம்’ என்ற கருத்தாக்கத்தின் துணையாக மட்டுமல்லாமல், அந்தக் கருத்தாக்கத்தின் தோற்றத்திற்கான ஒரு காரணமாகவும் தி.மு.க. இருந்திருக்கிறது.

1940 ஆகஸ்ட் 24 -இல், பெரியார் ‘நீதிக்கட்சி’ மாநாட்டில் தொடக்கிவைத்த ‘திராவிட நாடு’ முழக்கத்தை தி.மு.க. 1962-வரை முன்னெடுத்தது. ‘அடைந்தால் தனிநாடு இல்லையேல் சுடுகாடு’ போன்ற பலநூறு முழக்கங்கள் உருவாகின. தி.மு.க. உருவாகிச் சரியாக மூன்று மாதங்கள் கழித்து, இலங்கையில் எஸ்.ஜே. வி. செல்வநாயகத்தின் தலைமையில் ‘தமிழரசுக் கட்சி’ தொடக்கப்பட்டது. தமிழரசுக் கட்சியின் உருவாக்கத்தில் தி.மு.கவின் கருத்தியல் தாக்கம் கணிசமாகவே இருந்தது.

தமிழரசுக் கட்சி முன்நிறுத்திய இனவுணர்வு, மொழிப்பற்று, சங்ககாலப் பெருமிதங்கள், பண்டைய தமிழ் அரசர்களின் காலத்தைப் பொற்காலமாகச் சித்திரிப்பது, மேடைகளில் முழங்கும் அடுக்குத் தமிழ், தீப்பொறியான பத்திரிகை எழுத்துகள் எல்லாமே தி.மு.கவிடமிருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டன.

தமிழரசுக் கட்சி ஆதரவு ‘சுதந்திரன்’ பத்திரிகையில் தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைவர்களைக் குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகின. அண்ணாவும் கலைஞரும் உலகத் தமிழினத்தின் தலைவர்களாகவும் சமூக மறுமலர்ச்சியாளர்களாகவும் கருதப்பட்டார்கள். ஈழத் தமிழ் அரசியலாளர்களின் முதன்மை நட்புச் சக்தியாக தி.மு.கவே இருந்தது. ஈழத் தமிழர்களின் இல்லங்களிலே பேரறிஞர் அண்ணாவின் படமும் கலைஞரின் படமும் தொங்கத் தொடங்கின. அண்ணாவின் பெயரால் படிப்பகங்களும் மன்றங்களும் உருவாகின. அண்ணாவின் உருவச் சிலைகள் நிறுவப்பட்டன. 1969-இல் யாழ்ப்பாண முற்றவெளியில் நிகழ்ந்த இ. தி.மு.க. மாநாட்டில் யாழ்.முற்றவெளிக்கு ‘அண்ணா நகர்’ எனப் பெயரிட வேண்டும் என்ற தீர்மானத்தை வேலணை வீரசிங்கம் முன்மொழிந்து அந்தத் தீர்மானம் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. பத்திரிகைகள் இலங்கையில் பரவலாகப் படிக்கப்பட்டன. தி.மு.க.இயக்கத் திரைப்படங்கள் – குறிப்பாக கலைஞர் எழுதியவை- இலங்கையில் கொண்டாடப்பட்டன. ஈழ அரசியலிலும் முன்னொருபோதும் இல்லாத அடைமொழிகள் ‘தந்தை’, ‘தளபதி’, ‘சொல்லின் செல்வர்’, ‘உணர்ச்சிக் கவிஞர்’ , ‘தீப்பொறி’ என்றெல்லாம் தோன்றின. தி.மு.கவின் மேடைப்பேச்சுப் பாணியைப் பின்பற்றி செ.இராசதுரை, ம.க.அ.அந்தனிசில், காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் என ஒரு பேச்சாளர் பட்டாளமே உருவானது. 1972-இல் தொடங்கப்பட்ட ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’யின் தேர்தல் சின்னமாக ‘உதயசூரியன்’ இருந்தது.

1970-களின் மத்தியில் ஈழ இளைஞர்கள் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கினார்கள். இவர்களிடமும் தி.மு.கவின் கருத்தியல் தாக்கம் இருந்ததைப் புலிகள் இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும் புலிகளின் முதலாவது மத்தியகுழு உறுப்பினருமான கணேசன் “அப்போது தூய தேசியவாதச் சிந்தனையுடனேயே செயற்பட ஆரம்பித்தோம். தமிழ் பிரச்சினைகள் பற்றிப் பேசுபவர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, தமிழரசுக் கட்சி என்பதே எமக்குத் தெரிந்திருந்தவை” என்று அவரது ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்’ நூலில் குறிப்பிடுகிறார்.

எந்தவொரு தமிழகத் தலைவருக்கும் முன்னாலேயே கலைஞர் ஈழப் போராளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார். 1977-இல் பிரபாகரன் தனது 23-வது வயதில் கலைஞரைச் சந்தித்தார். காசி ஆனந்தனும் மாவை சேனாதிராஜாவும் அழைத்துச் சென்றிருந்தார்கள். பிரபாகரன் ஒருமுறை கலைஞருக்கு உதவி கோரி எழுதிய கடிதத்தில் “எங்களின் நம்பிக்கை நட்சத்திரம் நீங்கள்” என எழுதியிருந்தார். கலைஞர் மறைந்தபோது, வடக்கு – கிழக்கு முன்னாள் முதலமைச்சரான வரதராஜப்பெருமாள் “அவர் தமிழர்களின் மொழியை, கலைகளை, இலக்கியத்தை, ஊடகங்களை, அரசியலை, சமூகத்தை எனத் தமிழுலகின் பல பாகங்களையும் அய்ம்பது வருடங்களுக்கு மேல் ஆண்ட பேரரசன். அவரைத் தேர்தல் அரசியலுக்கு அப்பால் கௌரவமாக வழியனுப்பி வைப்பதே தமிழர்களுக்கு அழகு” என்று எழுதினார்.

கலைஞர் மு.கருணாநிதி அனைத்து ஈழப் போராளி இயக்கத் தலைவர்களுடனும் தொடர்ச்சியான உறவையும் உரையாடலையும் வைத்திருந்தார். ஈழப் பிரச்சினையின் அடிப்படை குறித்துத் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தார். தமிழகத்தின் பல்வேறு ஈழ ஆதரவாளர்களைப் போன்று வெறுமனே குருட்டுத்தனமாகப் புலிகளின் புகழைப் பாடுபவராகக் கலைஞர் ஒருபோதும் இருந்ததில்லை. ஈழத்தில் நிகழ்ந்த சகோதரப் படுகொலைகளுக்காகப் புலிகளைக் கண்டித்தார். புலிகளை எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்த்தார். ஆனால், அந்த எதிர்ப்பு ஒருபோதும் வெறுப்பாக மாறியதில்லை. புலிகளின் அரசியல்துறைத் தலைவர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது, கலைஞர் இரங்கல் கவிதையும் எழுதினார்.

இலங்கையில் தமிழர்கள் மீதான இன வன்முறை 1956-இல் ஆரம்பித்தது. இதன் பின் எத்தனையோ இன வன்முறைகள். அத்தனை வன்முறைகளையும் எதிர்த்து இந்தியாவிலிருந்து ஒலிக்கும் முதல் குரல் தி.மு.கவுடையதாகவே இருந்தது. 1956-இல் சிதம்பரத்தில் நடைபெற்ற தி.மு.க.பொதுக்குழுவில் ‘இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1958, 1977, 1981, 1983 என்றெல்லாம் இலங்கையில் தமிழர்களின் மீது இனரீதியான தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டபோது, தி.மு.க. இந்தத் தாக்குதல்களுக்கு எதிராகக் குரலை ஓங்கி ஒலித்துக்கொண்டேயிருந்தது. இந்திய ஒன்றிய அரசுக்கு இது குறித்துக் கடிதங்களை எழுதியது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழக மக்களை அணிதிரட்டியது. 1983-இல், வெலிகடைச் சிறைப் படுகொலைகளை தி.மு.க. கண்டித்து எட்டு இலட்சம் மக்களைத் திரட்டிச் சென்னையில் பேரணியை நடத்தியது. 1983 ஆகஸ்ட் 10-இல், மத்திய – மாநில அரசுகள் ஈழத் தமிழர் பிரச்னையில் போதிய கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி, கலைஞரும் பேராசிரியர் அன்பழகனும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்தனர்.

கலைஞர் 1985-இல் தமிழீழ ஆதரவாளர் அமைப்பை (டெசோ ) உருவாக்கினார். 1986-இல் மதுரையில் டெசோ அமைப்பின் சார்ப்பில் மாபெரும் இலங்கைத் தமிழர் ஆதரவு மாநாடு நடத்தப்பட்டது. வாஜ்பாய்,என்.டி.ராமராவ் போன்ற அனைத்திந்தியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான உரிமை கிடைக்கும்வரை போராடுவது, ஈழப்போராளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது, ஈழத் தமிழினத்தின் பாதுகாப்புக்காக எந்தவிதத் தியாகத்திற்கும் தயாராக இருப்பது, இந்தக் கடமைகளைச் செய்யும்போது மத்திய-மாநில அரசுகளின் அடக்குமுறைகளுக்கு ஆளாக நேர்ந்தாலும் அவற்றை இன்முகத்துடன் ஏற்பது என நான்கு தீர்மானங்கள் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தி.மு.கவினர் வெறும் அறிக்கைகளிலும் மேடைகளிலும் மட்டும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்கள் அல்ல. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தி.மு.க. தனது தோற்றம் முதலே இயங்கியிருக்கிறது. எண்ணற்ற ஆர்ப்பாட்டங்களையும் மாநாடுகளையும் பேரணிகளையும் மனிதச் சங்கிலிப் போராட்டங்களையும் நடத்தியிருக்கிறது. தி.மு.கவினர் ஈழப் போராளிகளுக்குத் தமது வீடுகளிலும் சட்டமன்ற விடுதியிலும் அடைக்கலம் கொடுத்தார்கள். பல்வேறு இக்கட்டுகளிலிருந்து போராளிகளைக் காப்பாற்றினார்கள். இதற்காகத் தி.மு.கவினர் நீண்டகாலம் சிறைவாசத்தையும் அனுபவித்திருக்கிறார்கள்.

இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து திரும்பியபோது, அமைதிப்படையை வரவேற்க கலைஞர் மறுத்தார். “இந்திய இராணுவம் இலங்கையில் என் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த அய்ந்தாயிரம் பேர் கொல்லப்படக் காரணமாக இருந்தது என்பதை எண்ணித்தான், அந்தப் படையை வரவேற்க நான் செல்லவில்லை” என முதலமைச்சராகக் கலைஞர் கூறியது சட்டமன்றத்தில் பதிவாகியது.

ஈழத்தில் இறுதி யுத்தம் நடந்த காலப்பகுதியில் தி.மு.க. ஆட்சியிலிருந்தது. யுத்தத்தை நிறுத்தக் கலைஞர் தன்னால் முடிந்தளவு முயற்சித்தார். தி.மு.க. முக்கியஸ்தர்கள் சிலரோடு புலிகள் கடைசிவரை தொடர்பை வைத்திருந்தார்கள். யுத்தத்தை நிறுத்துமாறு தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்தது. மனிதச் சங்கிலிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் பெருமளவில் நடத்தியது. இலங்கையில் தலையீடு செய்து போரை நிறுத்துமாறு ஒன்றிய அரசைக் கோரியது.

2009 ஏப்ரல் 27-ம் தேதி, மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் கலைஞர் யுத்த நிறுத்தம் கோரி உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். உண்ணாவிரதத்திலிருந்த கலைஞரை பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் தொடர்புகொண்டு பேசினார்கள். இலங்கை அரசு கனரக ஆயுதத் தாக்குதல்களையும் விமானத் தாக்குதல்களையும் நிறுத்துவதாக உறுதியளித்தது. அந்த உறுதியளிப்பின் நகல் பிரணாப் முகர்ஜி மூலம் கலைஞரிடம் கையளிக்கப்பட்ட பின்பே கலைஞர் உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டார். எனினும், எப்போதும் போலவே இலங்கை அரசு இந்தமுறையும் தனது வாக்குறுதியைச் சீக்கிரமே மீறியது.

ஒரு மாநில அரசாக தி.மு.க. ஈழப் பிரச்சினையில் தனது உச்சபட்ச அழுத்தத்தை ஒன்றிய அரசுக்குக்குக் கொடுத்திருக்கிறது. இந்தியாவில் வேறெந்தக் கட்சியோ இயக்கமோ ஒன்றிய அரசுக்கு இந்தளவுக்கு அழுத்தத்தைக் கொடுத்ததில்லை. இந்திய அரசியல் சாசனத்தில் ஒரு மாநில அரசினதும் முதல்வரினதும் அதிகார எல்லைகள் இவ்வளவே.

இந்த அழுத்தங்கள் போதாது, தி.மு.க. மத்திய அரசிலிருந்து விலக வேண்டும் என்றெல்லாம் அப்போது சிலர் விமர்சித்தார்கள். இந்த விமர்சனம் சரியற்றதும் தொலைநோக்கற்றதுமாகும். தி.மு.கவின் பதினெட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை விலக்கிக்கொள்வதால் மத்தியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்திருக்காது. மாறாக 1990-இல் நிகழ்ந்ததைப் போன்று தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் கலைக்கப்பட்டிருக்கக்கூடும். அது தி.மு.கவுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் கேடாகத்தான் முடிந்திருக்கும். தி.மு.க. பதவி விலகியிருந்தாலும் ஈழத்தில் யுத்தம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்காது. ஏனெனில், அந்த யுத்தம் சர்வதேச அரசுகளின் நீண்டகாலத் திட்டத்துடன் புலிகளை அழிப்பதற்காக நடத்தப்பட்டது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சர்வதேச அரசுகள் புலிகளுக்கு முன்வைத்த நிபந்தனைகளைப் புலிகளும் ஏற்றுக்கொள்ளாமல் மே 15-வரை போரிட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஈழத்தின் எந்த அரசியல் தலைவரோ, அறிவுச் சமூகமோ தி.மு.கவிடம் பதவி துறப்புக் கோரிக்கையை வைத்ததில்லை. புலிகள் கூட வைத்ததில்லை. அந்த நேரத்தில் வேறெவரையும் விடக் கலைஞர் தமிழக ஆட்சிப் பொறுப்பிலிருப்பதுதான் உகந்ததென அவர்கள் கருதினார்கள். 2009 மே மாதம் நிகழ்ந்த நாடாளுமன்றத் தேர்தலில், புலிகளின் தீவிர ஆதரவுத்தளமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தி.மு.கவோடு கூட்டணிக்குச் செல்லுமாறு புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அறிவுறுத்தியதாக 2019-இல் லண்டனில் நிகழ்ந்த ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நூலின் விமர்சனக் கூட்டத்தில் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

போருக்குப் பின்னும் ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க. தீவிரமாகவே இயங்கியது. 2011 ஏப்ரல் 27- இல் நடைபெற்ற தி.மு.க உயர்நிலை செயற்திட்டக் குழு கூட்டத்தில் முதல் தீர்மானமாக ‘இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்காக அய்க்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, இலங்கைப் படையினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது. இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2012 மார்ச் 1-இல் தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்ட அறிக்கையில் ‘அய்.நா மனிதவுரிமை ஆணையத்தில் கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது, இந்திய அரசு எக்காரணம் கொண்டும் இலங்கை அரசை ஆதரிக்கக்கூடாது’ என்று வலியுறுத்தினார்.

தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளுக்காகத் தி.மு.க பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. அப்போதைய தமிழக முதல்வர் கலைஞரின் வேண்டுகோளை ஏற்று எழுத்தாளரும் சட்டமன்ற உறுப்பினருமான து.இரவிக்குமார் ஈழ அகதிகள் முகாம்களைப் பார்வைட்டு 04.07.2006 அன்று முதல்வரிடம் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தார். அது குறித்து து. இரவிக்குமார் விகடன் இதழில் (11.10.2009) இவ்வாறு எழுதியிருந்தார்:

“முதல்வர், உடனடியாக சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். தமிழ் அகதிகளுக்கு அதுவரை மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த பணக்கொடை மிகமிகக் குறைவாக உள்ளது என்பதை அறிக்கையில் நான் சுட்டிக்காட்டியிருந்தேன்… அது மிகவும் குறைவு என்பதை உணர்ந்த முதல்வர் உடனடியாகப் பணக்கொடையை இரு மடங்காக உயர்த்தி ஆணையிட்டார். அது மட்டுமின்றி, அகதி முகாம்களின் நிலைமைகளைச் சீர்படுத்திடப் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் முதல்வர் ஆணையிட்டார். முதல்வரிடம் வழங்கிய அறிக்கையில் நான் முன்வைத்திருந்த கோரிக்கைகள் பலவும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளன. குடியுரிமை தொடர்பான எனது கோரிக்கையும் இன்று தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு மத்திய அரசிடம் அது தொடர்பாக வலியுறுத்துவதற்கு தமிழக முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.”

ஈழ அகதி மாணவர்ளுக்கு மருத்துவம், பொறியியல், ஐ.டி.ஐ. போன்ற துறைகளில் தி.மு.க. அரசு இட ஒதுக்கீடுகளை வழங்கியிருந்தது. அதன்பின்பு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு, ஈழ அகதி மாணவர்களுக்கு 12-ஆம் வகுப்புக்கு மேல் படிக்க அனுமதி இல்லை என்று 03.09.1991-இல் ஆணை பிறப்பித்தது. மறுபடியும் தி.மு.க. ஆட்சிக்கு வந்துதான் இந்த ஆணையை விலக்கிக்கொண்டது.

தி.மு.க என்ற 75 வருட வரலாறு கொண்ட கட்சியின்மீது வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த விமர்சனங்கள் பலவற்றில் நியாயமும் உண்டு. ஆனால், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையைப் பொறுத்தளவில் தி.மு.க. மீதான எதிர் விமர்சனங்கள் செல்லுபடியவற்றவை என்றே நான் கருதுவேன். ஏனெனில், இலங்கைத் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் இனவழிப்புகளையும் முக்கால் நூற்றாண்டாகத் தொடர்ச்சியாகக் கவனமெடுத்துக் குரல் கொடுத்த இலங்கைக்கு வெளியிலுள்ள ஒரேயொரு கட்சியாக தி.மு.கவே இருக்கிறது. இலங்கையில் இருக்கும் சிங்கள முற்போக்குக் கட்சிகளோ, இடதுசாரி இயக்கங்களோ கூட இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.க. அளவுக்குப் போராடிய வரலாறு கிடையாது. இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காக தி.மு.க. தன்னால் முடிந்த அனைத்தையுமே செய்திருக்கிறது. இலங்கைத் தமிழர்களின் வரலாற்றிலும் ஈழப் போராட்டத்திலும் தி.மு.கவின் மதிப்பு மிக்க பங்களிப்பு இன்னும் விரிவாகப் பேசப்பட வேண்டிய ஒன்றாகும். இன்னும் துல்லியமாகச் சொன்னால் ஈழத் தமிழர்கள் மீது நேர்மையான கரிசனம் கொண்டு ஈழத்திற்கு வெளியே செயலாலும் சிந்தனையாலும் தியாகங்களாலும் இயங்கிய ஒரேயொரு பேரியக்கம் தமிழகத் திராவிட இயக்கமேயாகும்.

கட்டுரையை எழுதப் பயன்பட்டவை:
1.எழுதாத வரலாறு – பெ. முத்துலிங்கம்.
2. ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை – நாவலர் ஏ.இளஞ்செழியன்.
3.ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி – என்.கே.ரகுநாதன்.
4.’நமது மலையகம்’ இணையத்தளம்.
5.’நமது’ வலைத்தளம்.

(‘காலத்தின் நிறம் கருப்பு – சிவப்பு’ தொகுப்பு நூலுக்காக எழுதப்பட்ட கட்டுரை. நவம்பர் 2025).

https://www.shobasakthi.com/shobasakthi/2025/12/26/ஈழத்தில்-திராவிடச்-சிந்த/

மலையக மக்களின் காணி உரிமை: மலையகத்திலா அல்லது வடக்கு – கிழக்கிலா? - வீரகத்தி தனபாலசிங்கம்

2 weeks ago

மலையக மக்களின் காணி உரிமை: மலையகத்திலா அல்லது வடக்கு – கிழக்கிலா?

Veeragathy Thanabalasingham

December 23, 2025

605559826_10224987406747333_804467048616

Photo, Sakuna Miyasinadha Gamage

இயற்கையின் சீற்றம் அண்மையில் மலையகத்தில் ஏற்படுத்திய பேரழிவையடுத்து மலையக தமிழ் மக்களை குறிப்பாக, தோட்டத் தொழிலாளர்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குடியேற வருமாறு தமிழ் அரசியல்வாதிகள் சிலர் விடுத்த அழைப்பு ஒரு  தீவிரமான விவாதத்தை மூளவைத்திருக்கிறது.

மலையகத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் துனபங்களை கேட்டறிந்த  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அந்த மக்களைப் பாதுகாப்பான முறையில் வேறு இடங்களில் குடியேற்றுவது குறித்து பேசினார்.

மண்சரிவு ஆபத்து இல்லாத மலையகப் பகுதிகளில் அந்த மக்களை குடியேற்றுவதற்கான சாத்தியங்கள் குறித்து அரசாங்கத்துடன் பேசப்போவதாக கூறிய மனோ கணேசன் மலையகத்தில் போதியளவில் காணிகளைப் பெறமுடியாமல்போகும் பட்சத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குடியேறுவதற்கு முன்வருவீர்களா என்று அவர்களை நோக்கி கேள்வியெழுப்பினார். அங்கு நின்றவர்களில் பெரும்பாலானவர்கள் அதற்குத் தயாராக இருப்பதாகப் பதிலளித்தனர்.

இயற்கை அனர்த்தத்தினால் படுமோசமாக பாதிக்கப்பட்டு வீடு வாசல்களை இழந்து நிராதரவாக நின்ற அந்த மக்கள் உடனடியாக அவ்வாறு கூறுவது இயல்பானதே. ஆனால், அந்த ஒரு மக்கள் கூட்டத்தினரின் பதிலை மாத்திரம் அடிப்படையாக வைத்து மலையக மக்கள் தங்களது பாரம்பரியமான வாழ்வாதாரங்களளையும் வாழ்க்கை முறையையும் துறந்தெறிந்துவிட்டு பெருமளவில் வடக்கு, கிழக்கில் குடியேறுவதற்கு விரும்புகிறார்கள் என்று கருதமுடியாது.

பாதிக்கப்பட்ட மக்களுடனான மனோ கணேசனின் அந்தச் சந்திப்புக்கு ஊடகங்கள் பிரதானமாக, சமூக ஊடகங்கள் பெரும் முக்கியத்துவத்தை கொடுத்தன. அதையடுத்து இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மலையக தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கில் தாங்களாக வந்து குடியேற விரும்பினால் அதை வரவேற்பதாகவும் அதற்கான உதவிகளைச் செய்யத் தயாராயிருப்பதாகவும் அறிவித்தார்.

அவரைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் மலையகத்தில் பாதுகாப்பற்ற பகுதிகளில் வாழும் தமிழ் மக்களை கிழக்கில் குடியேறவருமாறு அழைத்தார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) பொதுச்செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் மலையக மக்கள் தமிழ்ப்பகுதிகளில் குடியேறுவதற்கு ஆதரவையும் உதவியையும் வழங்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.

மலையக தமிழ் மக்கள் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பது இதுதான் முதற்தடவை அல்ல. இலங்கையின் சனத்தொகையில் வேறு எந்த பிரிவினரை விடவும் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்துவரும் தோட்டத்தொழிலாளர்கள் காலங்காலமாக மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குப் பாதுகாப்பான வாழ்வை உறுதிசெய்வதற்கு ஒருபோதுமே அரசாங்கங்கள் பயனுறுதியுடைய திட்டங்களை முன்னெடுத்ததில்லை.

அத்தகையதொரு சமூகம் பேரழிவை மீண்டும் சந்தித்து நிராதரவாக நிற்கும் இடர்மிகுந்த ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இந்த தமிழ் அரசியல்வாதிகள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியதையும் வடக்கு, கிழக்கில் வந்து குடியேறுமாறு அழைப்பு விடுத்ததையும் நிச்சயம் வரவேற்க வேண்டும்.

திடீரென்று ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தை அடுத்து உருவான வேதனை மிகுந்த சூழ்நிலையில்  பாதுகாப்பாக வாழ்வதற்கு இடமில்லை என்று மலையக மக்கள் கூறும்போது அவர்களை வரவேற்க வேண்டியது தங்களது கடமை என்று கூறிய சுமந்திரன் காணிகளையும் வீடுகளையும் கொடுப்பது மாத்திரம் பிரயோசனமானதல்ல, அவர்களுக்கான வாழ்வாதாரங்களையும் உறுதிசெய்வது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

அடுத்த கட்டமாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மனோ கணேசனுடன் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும் மக்களை குடியேற்றும் இத்தகைய செயற்பாடுகள் குறித்து அரசாங்கத்துடனும் பேசவேண்டியிருக்கிறது என்றும் சுட்டிக் காட்டினார். அத்துடன், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த பலர் வடக்கு, கிழக்கில் தங்களது காணிகளை மலையக தமிழர்களுக்கு வழங்குவதற்கு முன்வருவதாக அறிவித்திருக்கிறார்கள் என்ற தகவலையும் சுமந்திரன் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.

எது எவ்வாறிருந்தாலும், மலையக தமிழ் மக்கள் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படாதிருப்பதை உறுதிசெய்வதற்கான திட்டங்கள் அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் பிராந்தியங்களிலேயே பிரதானமாக முன்னெடுக்கப்பட வேண்டும். படிப்படியாக பாதுகாப்பான பகுதிகளில் குடியமர்த்தும் பரந்தளவிலான திட்டம் ஒன்றின் கீழ் அவர்களை  சுயவிருப்பத்தின் பேரில் வடக்கு, கிழக்கிற்கு அனுப்புவதில் பிரச்சினை எதுவும் இல்லை. அத்தகையதொரு திட்டத்தை அரசாங்கத்தினால் மாத்திரமே முன்னெடுக்க முடியும்.

தேசிய மக்கள் சக்தி பெருந்தோட்டங்களில் வசிக்கும் தமிழ் மக்களின் காணி மற்றும் வீட்டுவசதி பிரச்சினைகள் குறித்து எத்தகைய நிலைப்பாட்டை கடந்த வருடத்தைய இரு தேசிய தேர்தல்களுக்கு முன்னதாக வெளிப்படுத்தியது என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது அவசியமாகும்.

மலையக தமிழ்ச் சமூகம் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு 200 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், அவர்களின் உரிமைகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி 2023 அக்டோபர் 15ஆம் திகதி ஹட்டன் பிரகடனம் ஒன்றை வெளியிட்டது. அதில் காணி, வீட்டுப் பிரச்சினைகள் குறித்து பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது:

“பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்கள் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று வீடமைப்பு தொடர்பானதாகும். 2012/ 2013 சனத்தொகை, புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் அவர்களில் 67.8 சதவீதமானவர்கள் இன்னமும் லயன் அறைகளிலேயே வாழ்கின்றனர். தேசிய மக்கள் சக்தி அந்த மக்களின் அபிவிருத்திக்கு உதவக்கூடிய வீடமைப்புத் திட்டம் ஒன்றின் மூலமாக அவர்களுக்குப் பொருத்தமான வீடுகளை வழங்கும்.

“பெரும்பாலான தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் தங்களது பணத்தையும் உழைப்பையும் செலவிட்டு வீடுகளை நிர்மாணித்திருக்கின்ற போதிலும், காணிகளைப் பதிவுசெய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட உறுதிப்பத்திரங்கள் இன்னமும் அவர்களிடம் கிடையாது. இந்தப் பிரச்சினைக்கு நியாயபூர்வமான தீர்வொன்று காணப்பட்டு அந்த மக்கள் தங்கள் வீடுகளில் தொடர்ந்தும் வசிப்பதற்கான  உரிமையை தேசிய மக்கள் சக்தி உறுதிசெய்யும். பெருந்தோட்டப் பகுதிகளில் பயிர் செய்யப்படாத பிரதேசங்களும் கைவிடப்பட்ட காணிகளும் மலையகத்தில் வேலையின்றி இருக்கும் இளைஞர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும்.”

ஹட்டன் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டதன் பிரகாரம் மலையகத் தமிழ் மக்களின் அடையாளத்தையும் உரிமைகளையும் அங்கீகரித்து அவர்களின் காணி, வீடமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று 2024 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேசிய மக்கள் சக்தி உறுதியளித்தது.

ஆட்சியதிகாரத்துக்கு வந்தபிறகு கடந்துவிட்ட ஒரு வருடத்துக்கும் அதிகமான காலப் பகுதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மலையக மக்களுக்கு வழங்கிய இந்த வாக்குறுதியை  நிறைவேற்றுவதை நோக்கி எந்தளவுக்கு கவனம் செலுத்தியிருக்கிறது என்பது முக்கியமான ஒரு கேள்வி.

அண்மைய இயற்கை அனர்த்தத்தைத் தொடர்ந்து மலையக மக்களின் காணிப் பிரச்சினை மீது மீண்டும் கவனம் பெருமளவுக்கு திரும்பியிருக்கும் நிலையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை  தமிழ்க் கட்சிகள் கோரவேண்டும். அது தொடர்பில் அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுப்பதற்கான இயக்கம் ஒன்றை முன்னெடுப்பதில் மலையக தமிழ்க் கட்சிகளுடன் வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளும் இணைந்து கொள்ள வேண்டும்.

மலையக மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவது குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கவனத்துக்கு தான் கொண்டுவந்தபோது அவர் ‘காணி எங்கே இருக்கிறது?’ என்று தன்னிடம் கேட்டதாக  மனோ கணேசன் கூறியிருந்தார். காணி எங்கே இருக்கிறது என்று தெரியாமலா ஜனாதிபதி மலையக மக்களின் காணியுரிமைப் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக  வாக்குறுதியளித்தார் என்ற கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை.

மலையக தமிழ் மக்கள் ஏற்கெனவே வடக்கில் குறிப்பாக, வன்னிப் பிராந்தியத்தில் குடியேறியிருக்கிறார்கள். கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்தில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்செயல்களுக்குப் பிறகு பாதுகாப்புத்தேடி குறிப்பிட்ட எண்ணிக்கையான மலையக மக்கள் வடக்கிற்கு குடிபெயர்ந்தார்கள். அவர்களின் இன்றைய எண்ணிக்கை ஒரு இலட்சத்துக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.

தற்போது மலையக மக்களை வடக்கு, கிழக்கிற்கு வருமாறு அழைக்கும்போது ஏற்கெனவே அங்கு குடியேறியவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை பற்றிய ஒரு சரியான மதிப்பீடு அவசியம். வடக்கு, கிழக்கு மக்களுடன் சமத்துவமானவர்களாக வாழ்வாதாரங்களையும் ஏனைய வசதிகளையும் பாகுபாடின்றி அவர்களினால் பெறக்கூடியதாக இருக்கிறதா என்பதைப் பற்றி முதலில் சிந்திக்க வேண்டும்.

புலம்பெயர்ந்த தமிழர்களில் பலர் தங்களது காணிகளை மலையக மக்களுக்கு தருவதற்கு தயாராக இருப்பதாக சுமந்திரன் கூறுகிறார். அவர்களில் எத்தனை பேர் அந்த மக்களுக்குச் சொந்தமாக காணிகளைக் கொடுப்பார்கள்? அல்லது காணிகளை பராமரிப்பதற்காக அவர்களிடம் கொடுப்பார்களா? 2009 ஆண்டில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பிறகு இலங்கைக்கு வந்த புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர் தங்களது காணிகளை திருப்பித்தருமாறு கேட்ட அனுபவமும் மலையக மக்களுக்கு இருக்கிறது.

அதேவேளை, இன்றைய மலையக தமிழ் இளைய தலைமுறையினர் தங்களது சமூகத்தின் எதிர்காலம் குறித்து எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று இனிமேலும் அழைக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. மலையகத் தமிழர்கள் என்ற தனியான இனத்துவ அடையாளம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக இருக்கிறது. மலையக தமிழ்தேசியம் என்ற கோட்பாடு பற்றி பேசுபவர்களும் இருக்கிறார்கள்.

உண்மையிலேயே, மலையகத் தமிழ் மக்களுக்கு இலங்கையின் ஏனைய தமிழ்பேசும் சமூகங்களை விடவும் தனித்துவமான பிரச்சினைகள், தனித்துவமான வாழ்வாதாரங்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் கலாசாரம் ஆகியவை இருக்கின்றன. வடக்கு, கிழக்கு தமிழர்கள் இன்று வெளிநாடுகளுக்கு பெரும் எண்ணிக்கையில் செல்வதைப் போன்று மலையகத் தமிழர்களும் இலங்கையின் வேறு பாகங்களுக்கு குடிபெயரத் தொடங்கினால் தங்களுக்கான உரிமைகளைக் கோரமுடியாதவாறு தனியான ஒரு சமூகம் என்ற அடையாளத்தை அவர்கள் இழந்து விடக்கூடிய ஆபத்து இருக்கிறது.

அவர்களை நாட்டின் எந்தப் பாகத்திலும் குடியேற்றக்கூடிய ஒரு நாடோடிக் கூட்டமாக நோக்கக்கூடாது. தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தின் பிரதானமான பிரிவினராவர். நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக அந்த மக்கள் பல தலைமுறைகளாக உழைத்துவருகிறார்கள்.

அவர்களை இயற்கை அனர்த்த ஆபத்துக்கள் நிறைந்த பகுதிகளில் இருந்து வேறு இடங்களில் குடியமர்த்துவதாக இருந்தாலும் கூட, அதற்கான திட்டங்களை பிரதானமாக அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த பிராந்தியங்களுக்குள் முன்னெடுப்பதே பொருத்தமானதாகும்.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டையில் உதவி அரசாங்க அதிபராக பதவிவகித்த ஆங்கிலேயரான லெனார்ட் வூல்வ் இலங்கையில் சமஷ்டி ஆட்சிமுறையை ஏற்படுத்தவேண்டியதன் தேவை குறித்து 1936ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அனுப்பிய மகஜர் ஒன்றில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள், மலைநாட்டுச் சிங்களவர்கள், கரையோரச் சிங்களவர்களுக்கு என்று அலகுகளை விதந்துரைத்த அதேவேளை, தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழ்கின்ற மலையகத்தின் பகுதிகளை ஒன்றிணைத்து தனியான அலகை ஏற்படுத்தலாம் என்று கூறினார்.

மலையகத் தமிழர்கள் மற்றைய சமூகங்களைப் போன்று தங்களுக்கென்று தனித்துவமான உரிமைகளைக்  கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒரு வெள்ளையரான  காலனித்துவ அதிகாரி 90 வருடங்களுக்கு முன்னரே கூறினார் என்பது கவனிக்கத்தக்கது.

ஆனால், சுதந்திரத்துக்குப் பின்னரான முதல் இலங்கை அரசாங்கம் மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கியது. அரைநூற்றாண்டுகால போராட்டங்களுக்குப் பிறகு குடியுரிமையையும் வாக்குரிமையையும் வென்றெடுத்த அந்த மக்கள் காணியுரிமைக்காகவும் ஏனைய வசதிகளுக்காகவும் எவ்வளவு காலத்துக்கு போராட வேண்டியிருக்குமோ யாரறிவார்?

வீரகத்தி தனபாலசிங்கம்

https://maatram.org/articles/12493

புதிய கடன்மறுசீரமைப்பு செயன்முறைக்குச் செல்லுங்கள்; பொருளியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் 121 பேர் கூட்டாக வலியுறுத்தல்

2 weeks 1 day ago

இலங்கையின் கடன்மீள்செலுத்துகையை உடன் இடைநிறுத்துங்கள்: நிலையான தீர்வை வழங்கக்கூடிய புதிய கடன்மறுசீரமைப்புக்குச் செல்லுங்கள் - உலகநாடுகளைச் சேர்ந்த பிரபல பொருளியலாளர்கள், துறைசார் நிபுணர்கள் 121 பேர் கூட்டாக வலியுறுத்தல்

Published By: Vishnu

23 Dec, 2025 | 02:25 AM

image

(நா.தனுஜா)

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தமானது இலங்கையின் கடன்நெருக்கடிக்கு நிலையான தீர்வை வழங்கத் தவறியிருக்கின்றது. ஆகவே இலங்கையின் வெளியகக்கடன் மீள்செலுத்துகையை உடனடியாக இடைநிறுத்துவதுடன், அதன் கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தக்கூடியவாறான புதிய கடன்மறுசீரமைப்பு செயன்முறைக்குச் செல்லுங்கள் என நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்ரிக்ளிற்ஸ் உள்ளடங்கலாக உலகநாடுகள் பலவற்றைச்சேர்ந்த பொருளியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் 121 பேர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து இலங்கை, அமெரிக்கா, பிரான்ஸ், கிரீஸ், பிரிட்டன், இந்தியா, பிரேஸில், நெதர்லாந்து, மெக்ஸிக்கோ, வியட்நாம், இத்தாலி, கனடா, ஆர்ஜென்டீனா, சுவீடன், ஜேர்மனி, அயர்லாந்து, பெல்ஜியம், அவுஸ்திரேலியா, நோர்வே, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச்சேர்ந்த பிரபல பொருளியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் 121 பேர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சர்தேச நாணய நிதியத்தின் 48 மாதகால விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின்கீழ் இலங்கையின் 17 ஆவது இறைக்கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதுடன், அதனூடாக மீளச்செலுத்தப்படவேண்டிய கடன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வொப்பந்தம் இலங்கையின் கடன் நெருக்கடிக்கு நிலையான தீர்வை வழங்குவதற்குத் தவறியிருப்பதுடன் குறிப்பாக இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட வெளியகத் தாக்கங்களால் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நலிவடைந்த நிலையில் இலங்கையை நிறுத்தியிருக்கின்றது.

அதன்விளைவாக மிகமோசமான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களுக்கும், 800 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதற்கும், காணாமல் போவதற்கும், 1.4 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்வதற்கும் வழிவகுத்த 'தித்வா' சூறாவளியின் பின்னர் இலங்கை மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையின் எதிர்காலம் தொடர்பான கரிசனைகள் மேலும் தீவிரமடைந்திருக்கின்றன.

தற்போது நடைமுறையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தினால் ஆதரவளிக்கப்படும் ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கை மீளச்செலுத்தவேண்டிய கடன் பெறுமதியை 17 சதவீதத்தினால் (சமகாலத்தில் உள்ள பெறுமதியில்) குறைப்பதற்கு கடன்வழங்குனர்கள் இணங்கினர்.

அதன்படி மொத்த வருமானத்தில் சுமார் 25 சதவீதத்தை வெளியகக் கடன்களை மீளச்செலுத்துவதற்குப் பயன்படுத்தவேண்டிய நிலைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டது. இது உலகளாவிய ரீதியில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக உயர்வான பெறுமதியாகும்.

சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளின் கருத்தின்படி, இலங்கை கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவதற்கு 50 சதவீத வாய்ப்புக் காணப்படுவதுடன், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கடன்மறுசீரமைப்பின் பின்னர் மீண்டுமொரு கடன்மறுசீரமைப்பு தேவைப்படும் நிலையில் இருக்கின்றது. 'இன்னும் பல வருடங்களுக்கு கடன் அச்சுறுத்தல் மிக உயர்வான மட்டத்தில் இருக்கும்' என சர்வதேச நாணய நிதியம் பகிரங்கமாகவே கூறியிருக்கின்றது.  

அண்மைய சூறாவளி, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் மிகமோசமாகப் பாதிப்படைந்திருக்கும் நிலையில், தற்போது இலங்கை தீவிர பொருளாதார அழுத்தத்துக்கு முகங்கொடுத்திருக்கின்றது.

இயற்கை அனர்த்தங்களால் இலகுவில் பாதிக்கப்படக்கூடிய இலங்கையின் நலிவுற்ற தன்மையும், இப்போது பதிவாகியிருக்கும் சேதங்களின் அளவும் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு தற்போது நடைமுறையில் இருக்கும் கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தம் போதுமானதன்று என்பதைக் காண்பிக்கின்றன. ஏற்கனவே தளர்வடைந்திருக்கும் இலங்கையின் சமூக - பொருளாதாரக் கட்டமைப்பானது இப்போது வருமான வீழ்ச்சி, மீள்கட்டுமான செலவின அதிகரிப்பு மற்றும் இறக்குமதிக் கேள்வி அதிகரிப்பு போன்ற காரணங்களால், முன்னர் எதிர்வுகூறப்பட்ட கடன்மறுசீரமைப்பு அடைவுகள் சரிவடையக்கூடிய ஆபத்தை எதிர்கொண்டிருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் மீண்டும் இயற்கை அல்லது பொருளாதாரம் சார்ந்த அழிவுகளுக்கு முகங்கொடுக்காமல் இருப்பதுடன், நாட்டின் மீளெழுச்சிக்கு உதவக்கூடிய செயற்திறன்மிக்க கடன் தீர்வொன்று இலங்கைக்கு அவசியமாகின்றது.

எனவே இலங்கை பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தற்போது நடைமுறையில் இருக்கும் கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தமானது வெளியக அழுத்தங்களிலிருந்து நலிவுற்ற சமூகப்பிரிவினரைப் பாதுகாப்பதற்குப் போதுமானதன்று என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அத்தோடு பாரிய கடன் சலுகைக்குப் பதிலாக கடன்மீள்செலுத்துகை தொடர்வதற்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் இலங்கை பொருளாதாரம் மீதான கட்டமைப்பு ரீதியான தாக்கம் மற்றும் மக்கள் மீதான எதிர்கால அனர்த்தங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் இடமளிக்கின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் கடன்களை மீளச்செலுத்துவதற்கான கடப்பாட்டை இலங்கைமீது தொடர்ந்து திணிப்பதன் மூலம், அதனை மீளச்செலுத்துவதற்கான இயலுமையை இலங்கை கொண்டிருக்கிறதா, இல்லையான என்ற விடயம் புறந்தள்ளப்படுகின்றது. அதுமாத்திரமன்றி இக்கடன் மீள்செலுத்துகையானது நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கும், விவசாயம் மற்றும் உட்டமைப்பு வசதிகளை சீரமைப்பதற்கும், சமூகப்பாதுகாப்பை வழங்குவதற்குமான முயற்சிகளைப் பின்தள்ளுகின்றது.

ஆகவே இலங்கையின் வெளியகக்கடன் மீள்செலுத்துகையை உடனடியாக இடைநிறுத்துமாறும், இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தக்கூடியவாறான புதிய கடன்மறுசீரமைப்பு செயன்முறைக்குச் செல்லுமாறும் வலியுறுத்துகின்றோம் என அக்கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/234149

பெயரில் மட்டுமே மாற்றம் : ஆனால் ஆபத்து

2 weeks 2 days ago

பெயரில் மட்டுமே மாற்றம் : ஆனால் ஆபத்து

லக்ஸ்மன்

தமது உரிமைகளுக்காகப் போராடும் தரப்புக்களை சிறைக்குள் தள்ளி, அச்சுறுத்தி, உரிமைகளை நசுக்க அரசால் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ அல்லது அதனையொத்த எந்தவொரு சட்டத்தையோ முற்றாக எதிர்க்கின்றோம் என்ற நிலைப்பாடே தமிழ் மக்கள் மத்தியில் கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது.

இந்த நிலையில்தான், “பயங்கரவாதமானது, அதன் பல்வேறு வடிவங்களிலும் வெளிப்படுத்தல்களிலும் நாடுகளினது சமுதாயத்தின் சமாதானத்துக்கும் பந்தோபஸ்துக்கும் ஒரு பாரிய அச்சுறுத்தலாக உள்ளதாதலாலும், அத்துடன் இலங்கையையும், அதன் மக்களையும், அவர்களின் ஆதனங்களையும் பயங்கரவாதச் செயல்களிலிருந்தும் தொடர்புபட்ட செயல்களிலிருந்தும் பாதுகாத்தல் இலங்கை அரசாங்கத்தின் முதன்மைக் கடமையொன்றாக உள்ளதாதலாலும் என்ற முன்னுரை அடியைக் கொண்டு பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டம் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டின் முன்னேற்றத்துக்காக எதனை முதலில் செய்யவேண்டும். எது இப்போது தேவையானது என்பதனைப்பற்றிய யோசனைகளின்றி சில விடயங்கள் இந்த ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியேற்பு முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதையாகப் பல அசம்பாவிதங்கள், அனர்த்தங்கள் நிகழ்கின்றன. இது அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டவைகள் இல்லையானாலும், மக்களது பிரச்சினை என்பது பொதுவானதாக இருந்து விடுகிறது.

அனர்த்தத்தினை அரசியலாக்க முயற்சி நடக்கிறது. இராணுவத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நாட்டின் முன்னேற்றமே நோக்கம் என்று கூறிக் கொண்டு அரசியல் பழிவாங்கல்கள் நடைபெறுகின்றன என பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் அவற்றினை காதில் வாங்கிக் கொள்ளாது நடைபெற்று வருகின்ற செயற்பாடுகளின் ஒரு பகுதியாகவே தற்போது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய வகையில், பயங்கரவாதக் குற்றங்கள் எனும் பதத்துக்குப் பரந்துபட்ட வரைவிலக்கணம் வழங்கப்பட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்ற  பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டத்தையும் பார்க்கலாம்.

இலங்கையை பொறுத்தவரையில், பிரித்தானியரிடமிருந்து கையளிக்கப்பட்டு சுதந்திரம் வழங்கப்பட்டதன் பின்னர், 70களில் நாட்டைக் கைப்பற்றிக் கொள்வதற்காக ஒரு ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. அடுத்தது வடக்குக் கிழக்கை தாயகமாக் கொண்ட தமிழ் மக்கள் தங்களுக்கான சுயநிர்ணயக் கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை நடத்தினர். ஆரம்பத்தில் அது அகிம்சை வழியாக இருந்த போதிலும் அரசின் அடக்குமுறைகள், இராணுவ மயமாக்கல், நெருக்கடிகள் ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமாகின. அந்த ஆயுதப் போராட்டத்தினை அடக்குவதற்காக 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) கொண்டுவரப்பட்டது. இருந்தாலும், இதுவரையில் அச்சட்டம் நீக்கப்படவில்லை.

கடந்த அரசாங்க காலங்களில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி தமிழ்த் தேசியத் தரப்பினர் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை விடுத்துவந்திருந்ததுடன், போராட்டங்களையும் நடத்தினர். அக் காலத்தில் நடைபெற்ற போராட்டங்களில் தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் ஆர்வத்துடன் பங்களிப்புச் செய்திருந்தனர். ஆனால் அந்த வேகம் இப்போது இல்லாமலிருப்பது கவலையளிப்பதாகத் தமிழ்த் தலைவர்கள் கருத்து வெளியிட்டுமிருந்தனர். இருந்தாலும் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 10 வருடங்களின் பின்னர், நாட்டில் நிகழ்ந்த ஈஸ்ர் குண்டுத் தாக்குதல்கள் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கான தேவையைத் தூண்டின. அப்போது பயங்கரவாத தடைச்சட்டம் முஸ்லிம்கள் மீது பாயத் தொடங்கியது. அதே நேரத்தில் கோட்டாபய  ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்து வேளையில் நடைபெற்ற 'அரகலய' போராட்டம் சிங்களவர்களையும் அச்சட்டம் பதம்பார்க்க வழியைக் கொடுத்தது. அதுவரையில் பயங்கரவாத தடைச்சட்டம் பற்றிய கவலையேயின்றி இருந்து வந்த முஸ்லிம், சிங்கள மக்கள் தங்கள் மீது அச்சட்டம் பாய்ந்த வேளையில் விழித்துக் கொண்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் மற்றும் அந்த அமைப்புடன் இணைந்து செயல்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இன்றும் சிறைவாசம் அனுபவித்து வருபவர்கள் விடுவிக்கப்படாமைக்கு தென்பகுதியிலிருக்கும் புலிகளின் மீளுருவாக்கம் என்ற அச்சம் காரணமாக இருந்தது. இப்போதும் தொடர்கிறது. ஆயுதப் போராட்டம் ஆரம்பமாவதற்கான காரணிகளை அவ்வாறே வைத்துக்கொண்டு நாட்டில் அனைத்து மக்களிடமும் சமாதானத்தை ஏற்படுத்த முயல்வதும், நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களையும் ஏனைய மக்களையும் கிலிகொள்ளச் செய்து மீண்டுமொரு நெருக்கடி, ஆபத்து மிக்க சட்டத்தை உருவாக்குவதற்கு நடைபெற்றுவருகின்ற முயற்சி முறியடிக்கப்படவேண்டும் என்பது பெரும்பான்மையானவர்களின் எண்ணமாக இருந்தாலும் நடைபெறப் போகும் ஆபத்து தடுக்கப்படுமா என்பதுதான் சந்தேகமானது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை நிச்சயமாக எதிர்த்தே செயற்படுவோம். அது எந்தக் கட்சியாக இருந்தாலும் எதிர்த்தே செயற்படுவோம் என்ற நிலைப்பாட்டிலிருக்கும் தமிழ்த் தரப்பு தங்களது பக்க நியாயங்களைச் சொல்கின்றன. அமைப்புகள் ரீதியாவும், தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், கட்சிகளாகவும் கருத்துகள் வெளிவருகின்றன.

அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் நீதியமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே ஒரு மாத காலம் கருத்தறிய வழங்கியிருந்த போதிலும் தற்போது பெப்ரவரி 28ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. சட்டவரைவு குறித்து கடந்த ஒகஸ்ட் மாத்தில் அரசாங்கம் தகவல் வெளியிட்டிருந்த நிலையில் இப்போது வரைபு

வெளியிடப்பட்டிருக்கிறது. இருந்தாலும் ஒருசிலருடைய கருத்து இது சரியான காலமா என்பதே.  தித்வா சூறாவளியால் நாடு பாதிக்கப்பட்டு நெருக்கடி நிலை காணப்படுகிறது. இந்த நிலையில், இச்சட்டம் கொண்டுவருவதற்கு என்ன அவசியம் இருக்கிறது என்பது அதன் பொருள்.

பயங்கரவாதத்தடைச் சட்டத்திற்குப் பதிலீடாக முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அனைவராலும் எதிர்க்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் அரசைப்பாதுகாக்கும் சட்டமானது அச்சட்டங்களை விடவும் மோசமானதாகவே சொல்லப்படுகிறது.  பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குப் பிரத்தியேக சட்டமொன்று தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்த  'தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்த போதிலும் ஆட்சிக்கு வந்த பின்னர் பிறி தொரு சட்டத்தின் ஊடாக பதிலீடு செய்ய முனைவது வாக்குறுதிகளை மீறும் செயலாகவே பார்க்கப்படுகிறது.

எந்தவொரு சட்டமும் வெளிப்படையானதும் கலந்துரையாடலுக்குள்ளாக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சில விடயங்களை கருத்துக்களைப் பெற்றுக் கொண்டு ஒரு சட்டம் ஏற்படுத்தப்படுமாக இருந்தால், அதனை சகலரையும் உள்ளடக்கிய வெளிப்படைத்தன்மைவாய்ந்ததாகக்  கொள்ள முடியாது என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. இந்த இடத்தில் பயங்கரவாத்தத தடைச்சட்டம் போன்றதொரு சட்டம் தேவையில்லை என்ற அழுத்தம் காணப்படுகின்ற வேளையில், இச்சட்டத்தை அரசாங்கம் ஏன் கொண்டுவர முயற்சிக்கிறது என்பதுதான் கேள்வி.

இருந்தாலும், வழமைபோலவே முக்கியமான சட்டங்கள் கொண்டுவரப்படுகின்ற வேளைகளில் அது குறித்து பொதுமக்களுடக்  கலந்துரையாடல்கள் நடத்தி, விளிப்புணர்வுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடும் சிவில் அமைப்புகளில் பெரும்பான்மையானவைகள் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பான வேலைகளில் இருக்கின்ற வேளையில் இச்சட்டமூலம் தொடர்பில் பொதுமக்களின் கருத்தறியும் செயற்பாடு சிறப்பாக நடைபெறுமா என்பதும் கலந்துரையாடலுக்கானதே.

இந்நிலையில், சட்டமூலம் தொடர்பில் வெளியிடப்பட்டு வருகின்ற கருத்துக்களின் முக்கியமாக, சட்டமூலத்தை  பொதுத்தளத்தில் பகிரங்கமாக வெளியிட்டமைக்குப் பாராட்டியுள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், கருத்துக்களை முன்வைப்பதற்கும், கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கும் மேலும் கால அவகாசத்தைச் கோரியிருக்கிறது. அத்தோடு, இந்த சட்டமூலமானது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விட முன்னேற்றகரமானதாக இருக்கின்றதா? எனும் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படக் கூடாது. மாறாக நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் இலங்கை கொண்டிருக்கும் சர்வதேச மனித உரிமைகள் சார் கடப்பாடுகளுக்கு அமைவாக  அமைந்திருக்கின்றதா என்ற அடிப்படையில் மதிப்பிடவேண்டும். பயங்கரவாதத்தடைச் சட்டம் அரசியலமைப்பின் பிரகாரம் வரையப்பட்டது அல்ல என்பதையும், அதனை அடிப்படை உரிமைகள் சார் நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைப்பதற்கு ஆக்கப்பூர்வமான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இச் சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில், அரசாங் கத்தினால் புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் வரைவில் முன்னைய திருத்தச் சட்டமூலங்களை விடவும் மோசமான விடயங்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதை விடுத்து, அதனைப் பதிலீடு செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முற்றாக எதிர்ப்பதாகவும் கூறியிருக்கின்றார். ஒட்டு மொத்தத்தில், பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட்ட வேண்டுமென்ற வலியுறுத்தல்கள் வந்துகொண்டிருக்கின்ற வேளையில்  பயங்கரவாதம் என்பதனை பயங்கரவாதத்திலிருந்து மாற்றி மேலும் மோசமானதொரு சட்டத்தை ஏற்படுத்த முனையும் அரசின் செயற்பாடு  இடதுசாரித்தனம்தானா என்றே கேட்கத் தோன்றுகிறது.

எது எவ்வாறானாலும், சர்வதேச தரநெறிகளினதும் நியமங்களினதும், உள்நாட்டுத் தேவைகளினதும் அடிப்படையின்மீது, பயங்கரவாதத்துக்கு எதிராகக் குற்றவியல் நீதியை நிருவகிப்பதற்கான பயனுள்ள முறைமையொன்றை வலுவுறுத்துவதனூடாக உள்நாட்டு மற்றும் சர்வதேச பயங்கரவாதத்தை இலங்கையில் அடியோடு அழிப்பதற்கும் தடுப்பதற்கும் உறுதி பூண்டு உருவாக்கப்படுகின்ற இச்சட்டத்தால் நாடு எப்பாடுபடப்போகிறதோ என்பதை எதிர்காலமே  தீர்மானிக்கும்.  

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பெயரில்-மட்டுமே-மாற்றம்-ஆனால்-ஆபத்து/91-369951

திட்வா புயல்: '200 ஆண்டு பின்னோக்கி' சென்ற மலையகத் தமிழர்களின் வாழ்க்கை

2 weeks 3 days ago

திட்வா புயல்: '200 ஆண்டு பின்னோக்கி' சென்ற மலையகத் தமிழர்களின் வாழ்க்கை

திட்வா புயல் - மலையக தமிழர்கள்

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் 200 ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாற்றை கொண்ட இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் வாழ்க்கையை, திட்வா புயல் முற்றாக மாற்றியமைத்துள்ளது.

எந்தவித வசதிகளும் இல்லாத லைன் அறைகளில் (Line Rooms) வாழ்ந்து வந்த மலையக தமிழர்கள் கடந்த சில வருடங்களாகவே படிப்படியாக தனி வீடுகளுக்கு செல்ல ஆரம்பித்திருந்தனர்.

இலங்கை அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் என்ற அடிப்படையில் இவர்களின் வாழ்க்கை, சுமார் 200 ஆண்டுகளின் பின்னர் படிப்படியாக மாற ஆரம்பித்திருந்தது.

பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் தனி வீடுகளுக்கு சென்ற மலையக தமிழர்களில் பலர் இன்று மீண்டும் லைன் அறைகளில் வாழ்க்கைக்கு திரும்பியுள்ளமை கவலையளிக்கின்றது.

இலங்கை அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் ஆகியவற்றில் ஏற்பட்ட அபாயகர நிலைமையே இதற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளது.

இந்த வீட்டுத் திட்டங்களை அமைப்பதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இரண்டு விதமான ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தது.

வீட்டுத் திட்டம் அமையப் பெறும் முழு காணிக்கான ஆய்வு அறிக்கை மற்றும் தனி வீடுகளை அமைக்கும் காணிகளுக்கான ஆய்வு அறிக்கை என இரண்டு விதமான அறிக்கைகளை சமர்ப்பித்ததன் பின்னரே இந்த வீட்டுத் திட்டங்கள் அமைக்கப்பட்டன.

எனினும், அபாயகரமற்ற, அதிவுயர் பாதுகாப்பு பகுதிகளையும் திட்வா புயல் அபாயகரமான பகுதிகளாக இப்போது மாற்றியுள்ளது.

லைன் அறைகளுக்கு மீண்டும் சென்ற மலையக மக்கள்

திட்வா புயல் - மலையக தமிழர்கள்

வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய திட்வா

மாத்தளை - ஹூன்னஸ்கிரிய பகுதியில் வாழ்ந்து வருபவர்கள் எலிஸ்டன் மற்றும் ஜூலியட் தம்பதியின் குடும்பம். மூன்று பிள்ளைகளின் பெற்றோராகிய இவர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்தமையினால், இந்த குடும்பத்திற்கு வீட்டுத் திட்டம் கிடைத்துள்ளது.

தலைமுறையின் 200 வருட லைன் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, தனி வீட்டு வாழ்க்கைக்கு சென்ற அவர்கள், தமது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் பல்வேறு வகையிலும் சிந்தித்ததாக கூறுகின்றனர்.

தனது கையில் முறிவு ஏற்பட்டதை அடுத்து தோட்ட தொழிலுக்கு செல்வதை தான் தவிர்த்ததாக ஜூலியட் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஜூலியட்டின் கணவர் எலிஸ்டன், கூலித் தொழிலை செய்வதற்காக தோட்டத்திலிருந்து வெளியில் சென்றுள்ளார். எலிஸ்டனின் தொழில் முன்னேற்றம் காரணமாக வாழ்க்கை படிப்படியாக முன்னேறிய வந்த நிலையில், திட்வா புயல் தாக்கியது.

பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் லைன் வீட்டிலிருந்து தனி வீட்டுக்கு சென்ற தம்மை, திட்வா புயல் மீண்டும் லைன் வாழ்க்கைக்கே திரும்பியனுப்பியதாக எலிஸ்டன், பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

திட்வா புயல் - மலையக தமிழர்கள்

படக்குறிப்பு,200 வருட வாழ்க்கையை விட்டு போக வேண்டும் என்று சொல்லி தான் கொஞ்சம் முன்னோக்கி போனோம். கடைசியில் மீண்டும் கீழே வீழ்ந்து விட்டோம் என்கிறார் எலிஸ்டன்

''நாங்கள் சாப்பிட போகும் போது பின்நேரம் 4.30 (மாலை) இருக்கும். எங்களுடைய வீட்டின் பின்னால் இருந்த சுவர் இடிந்து வீழ்ந்து விட்டது. சாப்பாடு கூட சாப்பிடாமல் அப்படியே எல்லாவற்றையும் போட்டு விட்டு மாமா விட்டுக்கு வந்து விட்டோம். 200 வருட வாழ்க்கைக்கு திரும்பவும் வந்து விட்டோம். எங்களுடைய பிள்ளைகளுக்கு ஆசையை காட்டி மோசம் பண்ணி விட்டோம். திரும்புவும் அந்த வீட்டில் இருக்க முடியாது.

திரும்பவும் ஒரு அனர்த்தம் வந்தால் எங்களுடைய பிள்ளைகளை நாங்களே குழியில் தள்ளுற மாதிரி தான். லைன் வாழ்க்கையை தொடரக்கூடாது என்பதே எமது ஆசை. இதையும் விட்டு வெளியில் போக வேண்டும். 200 வருட வாழ்க்கையை விட்டு போக வேண்டும் என்று சொல்லி தான் கொஞ்சம் முன்னோக்கி போனோம். கடைசியில் மீண்டும் கீழே வீழ்ந்து விட்டோம்.'' என எலிஸ்டன் குறிப்பிடுகின்றார்.

மீண்டும் லைன் வாழ்க்கைக்கு திரும்பியது தமக்கு கவலை அளிப்பதாக எலிஸ்டனின் மனைவியான ஜூலியட் தெரிவிக்கின்றார்.

''கதைக்க இயலாது. சரியான கவலையாக இருக்கு. அப்பாவுடைய வீடு இருந்ததால் அங்கு வந்திருக்கிறோம். நான் தோட்டத்தில் வேலை செய்தேன். விழுந்து கையில் மூட்டு ஒன்று விலகியதனால் தோட்டத்தில் வேலை இல்லை. கணவர் மட்டும் தான் வேலை பார்க்கிறார். 3 பிள்ளைகள் படிக்கின்றார்கள். லைன் வீட்டை விட்டுவிட்டு தான் நாங்கள் அங்கே போனோம். பிள்ளைகள் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்றே நாங்கள் புதிய காணிக்கு போனோம். மறுபடியும் இந்த நிலைமைக்கு வந்தது கவலை தான்.'' என ஜூலியட் தெரிவிக்கின்றார்.

இந்த திட்வா புயல் எலிஸ்டன், ஜூலியட்டை மாத்திரம் 200 வருடங்களை நோக்கி பின்தள்ளவில்லை. அதே இடத்தில் வாழ்ந்த பலரையும் மீண்டும் லைன் வாழ்க்கைக்கு அனுப்பியுள்ளது.

திட்வா புயல் - மலையக தமிழர்கள்

படக்குறிப்பு,மீண்டும் லைன் வாழ்க்கைக்கு திரும்பியது தமக்கு கவலை அளிப்பதாக எலிஸ்டனின் மனைவியான ஜூலியட் தெரிவிக்கின்றார்.

ஹூன்னஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த நடராஜாவும் இதே பாதிப்பை எதிர்நோக்கியுள்ளார்.

''எங்களுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் வீடு கட்டிக் கொடுத்தார்கள். நாங்கள் அந்த வீட்டிற்கு போய் இரண்டு வருடங்கள் இருக்கும். எங்களுடைய பிள்ளைகள் நல்லா வாழ வேண்டும் என்றே அந்த காணியை நாங்கள் வாங்கினோம். இப்போது அந்த காணிகளில் வாழ இயலாமல் இருக்கு. எங்களுடைய வீட்டிற்கு 20 அடி கீழே மண் சரிவு போயிருக்கு. அன்றைக்கே தோட்ட நிர்வாகம் சொல்லி விட்டார்கள். இங்கே இருக்க வேண்டாம். லயின் அறைக்கே போகுமாறு சொல்லிவிட்டார்கள். இந்த வீட்டில் இருக்க எங்களுடைய பிள்ளைகள் விருப்பம் இல்லை.'' என அவர் கூறுகின்றார்.

இலங்கை அரசாங்கத்தின் வீட்டுத் திட்டங்கள் மாத்திரமன்றி, இந்திய வீட்டுத் திட்டங்களிலும் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய வீடுகளைச் சுற்றி சேதங்கள் இருப்பதால், அச்சமடைந்து மக்கள் வெளியேறியுள்ளனர்

படக்குறிப்பு,புதிய வீடுகளைச் சுற்றி சேதங்கள் இருப்பதால், அச்சமடைந்து மக்கள் வெளியேறியுள்ளனர்

இந்தியாவிலிருந்து வருகைத் தந்த தமது முன்னோர், இலங்கையில் தமது வாழ்க்கையை ஆரம்பித்த அதே லைன் அறைகளில் மீண்டும் தற்போதைய தலைமுறையும் வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

ஹூன்னஸ்கிரிய பகுதியிலுள்ள 16 வீடுகளை கொண்ட வீட்டுத் திட்டத்தின் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு விதமான பாதிப்புக்களை சந்தித்துள்ளன.

ஒரு சில வீடுகளின் மீது மண்மேடுகள் சரிந்துள்ளதுடன், சில வீடுகளுக்குள் வெள்ள நீர் பிரவேசித்துள்ளன. அத்துடன், பெரும்பாலான வீடுகளில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இந்த வீடுகளுக்கு கீழ் சில இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளமையினால், தமது வீடுகள் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளமை, வீடுகள் தாழிறங்கியுள்ளமை, மண்மேடுகள் சரிந்து வீடுகளின் மீது வீழ்ந்துள்ளமை உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக வைத்து, அதிகாரிகள் தம்மை மீண்டும் லைன் அறைகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியதாக அந்த பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆபத்தற்ற பகுதி என கருதப்பட்ட பகுதிகளும் திட்வா புயலுக்குப் பின் அபாயகரமானதாக மாறியுள்ளன

படக்குறிப்பு,ஆபத்தற்றது என கருதப்பட்ட பகுதிகளும் திட்வா புயலுக்குப் பின் அபாயகரமானதாக மாறியுள்ளன

எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் விடுக்கும் கோரிக்கை

மலையக மக்களுக்கான வீட்டுத் திட்டத்துடன் நெருங்கி செயற்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபத் தலைவரும், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் முன்னாள் தலைவருமான பாரத் அருள்சாமியிடம் பிபிசி தமிழ் இந்த விடயம் தொடர்பில் வினவியது.

''எந்த வீட்டுத் திட்டமாக இருந்தாலும், தனியான காணியை தேர்வு செய்து வீடுகளை கட்டுவதாக இருந்தாலும் அதற்கான சரியாக திட்டம், கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையோடு தான் இதை செய்வார்கள். இந்த நடைமுறை இந்திய வீட்டுத் திட்டத்திலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை இருந்தால் மாத்திரமே அந்த இடத்தில் வீடுகளை கட்ட முடியும். அது இல்லாமல் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையை முழுமையாக காணிகளுக்கும் பெற்று, அதே போன்று வீடுகளை நிர்மாணிக்கும் இடத்திற்கும் எடுத்திருந்தோம்.

ஏனென்றால், கட்டப்படும் பெரும்பாலான வீடுகள் மலைப்பாங்கான இடங்களில் இருப்பதனால், அந்த முறையை கொண்டு வந்தோம். இப்போது ஏற்பட்டிருக்கின்ற இயற்கை அனர்த்தம் யாருமே எதிர்பார்க்காத இடங்களிலும் ஏற்பட்டிருக்கின்றது. பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு ஏனைய மக்களைப் போன்றே உதவிகள் வழங்கப்பட வேண்டும். நாங்கள் இந்த நாட்டு பிரஜைகளே. ஏனைய பிரஜைகளுக்கு வழங்கப்படும் உரிமைகள், எமக்கும் உரித்தாகும். அந்த நிவாரண திட்டங்கள் எங்கள் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.'' என பாரத் அருள்சாமி கோரிக்கை விடுக்கின்றார்.

''இவர்கள் இந்த இடத்திலிருந்து மீண்டும் லைன் அறைகளுக்குப் போவது என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். இவர்கள் தனிவீட்டிற்கு போய் விட்டார்கள். அப்படியென்றால் கிராம வாழ்க்கைக்கு போய்விட்டார்கள். அப்படியென்றால், அரசாங்கம் அறிவித்த அந்த நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.'' எனவும் பாரத் அருள்சாமி குறிப்பிடுகின்றார்.

திட்வா புயல் - மலையக தமிழர்கள்

படக்குறிப்பு,திட்வா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள்

அரசாங்கத்தின் பதில்

லைன் அறைகளிலிருந்து தனிவீட்டிற்கு சென்று திட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பின்னணியில், மீண்டும் லைன் வீடுகளுக்கு சென்றவர்கள் குறித்து பெருந்தோட்ட, உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபனிடம் பிபிசி தமிழ் வினவியது.

''தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைகளின் பிரகாரம், தனி வீட்டுத் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு மீண்டும் அதே வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என பிபிசி தமிழிடம் அவர் உறுதியளித்தார்.

பெருந்தோட்ட பகுதிகளில் லைன் அறைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிகளை வழங்க தாம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cre3pgez439o

இந்தியாவை நோக்கிச்செல்லும் தமிழ்க் கட்சிகள் – நிலாந்தன்!

2 weeks 3 days ago

TPC.jpg?resize=750%2C375&ssl=1

இந்தியாவை  நோக்கிச்செல்லும்  தமிழ்க் கட்சிகள் – நிலாந்தன்!

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மீனவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடல் தொழில் அமைச்சரின் இணைப்பாளராகிய ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை அகற்றி, சீனத் தூதரகத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டிருந்தார்.

ஓர் அமைச்சருடைய இணைப்பாளர், அதிலும் குறிப்பாக ஆளுங்கட்சியின் வேட்பாளராக பிரதேச சபைகளில் போட்டியிட்டவர், அவ்வாறு பகிரங்கமாக பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுகிறார். அதுதொடர்பாக அவர் சார்ந்த கடல் தொழில் அமைச்சரோ அல்லது அரசாங்கமோ இதுவரை உத்தியோகபூர்வமாக மறுப்பு எதையும் தெரிவித்திருக்கவில்லை..

அரசாங்க அமைச்சரின் இணைப்பாளர் அவ்வாறு கூறிய அடுத்தடுத்த நாள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு சென்றார்கள். துணைத் தூதரைச் சந்தித்து படம் எடுத்துக் கொண்டார்கள். கடல் தொழிலாளர்களின் போராட்டத்தில் கடல் தொழில் அமைச்சரின் இணைப்பாளர் இந்தியாவுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவித்தார்கள். புயலுக்குப்பின் முதலில் உதவிய நாடும் அதிகம் உதவிய நாடும் இந்தியா என்ற அடிப்படையில் இந்திய உதவிகளுக்கு நன்றியும் தெரிவித்தார்கள்.

இந்த இரண்டு சம்பவங்களினதும் பின்னணியில்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ் தேசிய பேரவை தமிழ்நாட்டுக்குச் சென்றிருக்கிறது.அங்கே அவர்கள் மீனவர்கள் விவகாரமும் உட்பட இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கம் முன்வைக்கப் போகும் “எக்கிய ராஜ்ய” இடைக்கால வரைவை எதிர்ப்பது முதலான பல விடயங்களை குறித்தும் தமிழகத்  தலைவர்களோடு பேசியதாகத் தெரிய வருகிறது.

தமிழ்த் தேசிய பேரவையின் இந்திய விஜயம் தொடர்பான செய்திகள் வந்து கொண்டிருந்த பின்னணியில், மற்றொரு செய்தியும் கிடைத்தது. தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரை சந்திப்பதற்கு நேரம் கேட்டிருப்பதாக அச்செய்தி தெரிவிக்கின்றது.

கிடைக்கப்பெறும் தகவல்கள்படி இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள விருப்பவர்களின் பட்டியலில் சுமந்திரனின் பெயர் இல்லை என்றும் கூறப்படுகிறது.இந்தச் சந்திப்பின் நோக்கம் மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக வைக்குமாறு அரசாங்கத்துக்கு இந்தியா அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று கேட்பதுதான் என்று தெரிய வருகிறது.

அமைச்சரின் இணைப்பாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தை அகற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கும் ஒரு பின்னணியில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டிராத ஈபிடிபியும் உட்பட தமிழ்க் கட்சிகள் அந்தக் கருத்துக்கு எதிரான விதத்தில் இந்தியாவை நோக்கியும் தமிழகத்தை நோக்கி உழைப்பதைத்தான் மேற்படி செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.

இலங்கை மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கு புதுடில்லி அல்லது தமிழகம் தேவை என்று தமிழ்க் கட்சிகள் கருதுவதாகத் தெரிகிறது.அதுதான் உண்மையும் கூட.

இந்த உண்மையை கடந்த 16 ஆண்டுகளாகவும் அதற்கு முன்னரும் எடுத்துக் கூறிய அரசியல் விமர்சகர்களையும் நோக்கர்களையும் ஒரு பகுதி தமிழ்க் கட்சிகள் கேவலமாக விமர்சித்தன. அவர்களை இந்தியாவின் ஏஜென்ட்கள் என்றும் இந்திய புலனாய்வுத் துறையால் இயக்கப்படுகிறவர்கள் என்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்திடம் சம்பளம் வாங்குகின்றவர்கள் என்றும் விமர்சித்தன. அவர்கள் சோற்றுக்காகத்தான் அப்படியெல்லாம் கூறுகிறார்கள் என்று மீம்ஸ்கள் போடப்பட்டன.இதனால் அந்த விமர்சகர்களின் சிலர் மனம் நொந்து பொது வெளியிலிருந்தே விலகி நின்றார்கள்.

இறுதிக்கட்டப் போரில் அப்பொழுது தமிழகத்தை ஆட்சி செய்த திமுக அரசாங்கம் ஈழத் தமிழர்கள் இன அழிப்பு செய்யப்படுவதையும் ஆயுதப் போராட்டம் நசுக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டிருந்தது என்ற ஒரு குற்றச்சாட்டு ஈழத்தமிழர்கள் மத்தியில் உண்டு.திமுக நினைத்திருந்திருந்தால் இறுதிக்கட்ட போரின் முடிவை மாட்டியிருந்திருக்கலாம் என்று கருதுபவர்களும் உண்டு. தமிழகம் தன்னியல்பாக எழுச்சி பெற்ற போது அந்தப் பேரெழுச்சியை திமுக மடைமாற்றி வடியச் செய்துவிட்டது என்றும் திமுக மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

இக்குற்றச்சாட்டுகளின் பின்னணியில் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஒரு பகுதியினர் திமுகவுக்கு எதிராக சீமானை நோக்கிப் போனார்கள்.இன்னொரு பகுதியினர் பாரதிய ஜனதாவை நோக்கிப் போனார்கள்.

சமூக வலைத்தளங்களில் திமுக தொடர்பாகவும் காங்கிரஸ் தொடர்பாகவும் குறிப்பாக கலைஞர் கருணாநிதியின் குடும்பம் தொடர்பாகவும் எழுதப்படும் விமர்சனங்களைப் பார்த்தால் ஈழத் தமிழர்கலீல் ஒரு பகுதியினர் எந்த அளவுக்கு திமுகவின் மீது கோபமாக,வெறுப்பாக இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.

திமுகவின் மீதான தமிழ் மக்களின் கோபத்தை சீமான் சிறப்பாக அறுவடை செய்தார். 2009க்கு பின் தன்னை ஈழப் போராட்டத்தின் உரித்துள்ள வாரிசாக காட்டிக்கொண்டார்.புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதியினர் அவரை நிபந்தனையின்றி ஆதரித்தார்கள்.விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான கருத்துக்களைத் தெரிவிப்பது தமிழகத்தில் சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டிருந்த ஒரு பின்னணியில், சீமான் துணிந்து விடுதலைப்புகளின் சின்னங்களையும் படங்களையும் முன்வைத்து அரசியல் செய்தார்.இதனால் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் அவரை அதிக எதிர்பார்ப்போடு பார்த்தார்கள்.

சீமான் தன்னுடைய விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தமிழகத்தின் உள்நாட்டு அரசியலுக்குள் ஒரு கருவியாக உபயோகிக்கிறார். 2009 க்குப் பின்னரான உளவியலின் பின்னணியில்,அவர் தமிழ்;திராவிடம் இரண்டையும் எதிரெதிர் நிலையில் வைத்து அரசியல் செய்கிறார். உள்ளூரில் தனது அரசியல் எதிரிகளை மடக்குவதற்கு அவர் தமிழீழ விடுதலை போராட்டத்தோடு தனக்குள்ள தொடர்பை ஒரு கவசமாக முன்வைக்கின்றார். இதனால் சீமானுக்கு விழும் அடி பல சமயங்களில் ஈழப் போராட்டத்திற்கும் விழுகிறது.

எனினும் சீமானின் நாம் தமிழர் கட்சியானது இப்பொழுதும் ஒரு மாற்று நீரோட்ட கட்சியாகத்தான் காணப்படுகிறது.அது தமிழகத்தின் பெருந்திரள் உணர்வுகளைப் பிரதிபலிக்கும், தீர்மானிக்கும் பிரதான நீரோட்டக் கட்சியாக இன்றுவரை எழுச்சி பெறவில்லை.அதனால் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக வெகுஜனங்களை ஒன்று  திரட்டி பெருந்திரளாகப் போராட வைப்பதற்கு சீமானால் கடந்த 16 ஆண்டுகளிலும் முடியவில்லை. திராவிடக் கட்சிகளும் அந்த விடயத்தில் ஆர்வமாக இல்லை. இதனால் கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் கொதிக்காத,கொந்தளிக்காத ஒரு நிலைதான் தொடர்ந்து காணப்படுகிறது.இப்படிப்பட்டதோர் தமிழகச் சூழலில்தான் தமிழ்த்தேசியப் பேரவை அண்மையில் தமிழகத்துக்குச் சென்றிருக்கிறது.

இந்தியாவைக் கையாள வேண்டும்,மத்திய அரசாங்கத்தின் முடிவுகளை மாற்றுவதற்கு தமிழகத்தை நொதிக்கச் செய்யவேண்டும் என்று கூறியவர்களை இந்தியாவின் ஏஜென்ட்கள்,ரோவின் கையாட்கள் என்றெல்லாம் விமர்சித்த ஒரு கட்சி,கிட்டதட்ட 16 ஆண்டுகளின்பின் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறது. இதனால் கடந்த 16 ஆண்டுகளிலும் அவர்கள் இந்தியாவிற்கு எதிராகவும் திமுகவுக்கு எதிராகவும் முன்வைத்த அனைத்து விமர்சனங்களும் இப்பொழுது பூமரங் ஆக அவர்களை நோக்கித் திரும்பி வருகின்றன.

தமிழ்நாட்டுக்குச் செல்வது என்று தமிழ்த் தேசிய பேரவை எடுத்த முடிவு காலத்தால் பிந்தியது. இந்தியாவை கையாள்வது என்று அவர்கள் எப்பொழுதோ முடிவெடுத்து இருந்திருக்க வேண்டும். ஈழத் தமிழ் நோக்கு நிலையில் இருந்து இந்தியாவைக் கையாள்வது என்பது இந்தியாவிடம் சரணடைவதோ அல்லது கண்ணை மூடிக்கொண்டு 13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்வதோ அல்ல. இந்தியாவைக் கையாள்வது என்பது இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களும் ஈழத் தமிழர்களின் நலன்களும் சந்திக்கும் பொதுப் புள்ளிகளை அடையாளம் கண்டு அந்த இடத்தில் பேரம் பேசுவது. அதாவது ஓர் அரசைப் போல சிந்திப்பது;முடிவெடுப்பது;செயல்படுவது.ஆனால் தமிழ்த் தேசியக் கட்சிகள் அதைக் கடந்த 16 ஆண்டுகளிலும் செய்திருக்கவில்லை. இப்பொழுதும் கூட கட்சிகளுக்கு இடையில் உள்ள போட்டிகள் காரணமாக ஒரு கூட்டு தமிழகத்தை நோக்கிச் சென்றிருக்கிறது.இன்னொரு கூட்டு இந்தியத் தூதுவரை நோக்கிச் சென்றிருக்கிறது. இங்கேயும் தமிழ் மக்கள் ஓர் அரசு போல முடிவெடுக்கவில்லை.ஒரு கூட்டு “எக்கியராஜ்ய” வேண்டாம் என்று கூறுகிறது. இன்னொரு கூட்டு,மாகாண சபைத் தேர்தலை வைக்க வேண்டும் என்று கேட்கிறது.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் இருந்து இரண்டு விதமான கோரிக்கைகள் இந்தியாவை நோக்கியும் தமிழகத்தை நோக்கி முன்வைக்கப்படும் போது இந்தியா எப்படிப்பட்ட ஒரு முடிவை எடுக்கும்? தமிழ் கட்சிகளுக்கு இடையிலான ஐக்கியமின்மையை எப்படி தனது நோக்கு நிலையில் இருந்து கையாளலாம் என்று சிந்திக்கலாம்தானே? இந்தியா மட்டுமல்ல எந்த ஒரு பேரரசும் அப்படித்தான் சிந்திக்கும். அரசுக்கும் அரசுக்கும் இடையிலான உறவுகள் நலன்களின் அடிப்படையிலானவை.நிச்சயமாக அன்பு,பாசம்,அறம்,தொப்புள் கொடி உறவு…போன்றவற்றின் அடிப்படையிலானவை அல்ல.ஈழத் தமிழர்கள் வெளி அரசுகளோடு இடையூடாடும்  போதும் இதுதான் விதி.இந்த விதியின் அடிப்படையில்தான் இனி மேலும் அரசியல் செய்யலாம்.

https://athavannews.com/2025/1456862

வேடன்;வாகீசன்;முருகப்பெருமான் - நிலாந்தன்

2 weeks 3 days ago

வேடன்;வாகீசன்;முருகப்பெருமான் - நிலாந்தன்

vedan-accusations.jpg

சில மாதங்களுக்கு முன் கேரளாவை சேர்ந்த வேடனின் Rap – ரப் பாடல்கள்  சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பரவின. இப்பொழுது வாகீசனின் பாடல். வேடன் யாழ்ப்பாணத்து தாய்க்கும் மலையாளத்து தகப்பனுக்கும் பிறந்தவர். வாகீசன் யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவர். இருவருமே குறுகியகால இடைவெளிக்குள் தமிழ் சமூகவலைத் தளங்களில் லட்சக்கணக்கானவர்களைக் கவர்ந்திருக்கிறார்கள்.

வேடன் 2020ல் இருந்து பாடுகிறார். அவர் வாகீசனிடம் இருந்து வேறுபடும் இடங்களில் ஒன்று, அவர் அதிகம் ஒடுக்கப்படும் சமூகங்களின், மக்களின் குரலாக ஒலிப்பதுதான். அவருடைய முதலாவது முயற்சி “குரலவற்றவர்களின் குரல்” என்ற தலைப்பின் கீழ்தான் வெளிவந்தது. அவர் ஈழத் தமிழர்களின் அரசியலில் தொடங்கி சிரியா,பாலஸ்தீனம் என்று உலகளாவிய அரசியலைப் பேசும் பாடல்களைப் பாடியுள்ளார். அவருடைய முக்கியத்துவமே அவ்வாறான போராடும் மக்களின் குரலாக ஒலிப்பதுதான்.கரிய தேகம்;சீவப்படாத தலைமுடி; கழுத்தில் பெரிய உலோக மாலை; சில மேடைகளில் மேல் சட்டை இல்லாமலேயே காணப்படுகிறார். தனது உடல் மொழி, பாடல் வரிகள்,உச்சரிப்பு போன்ற எல்லாவற்றிலும் அவர் தன்னை ஒரு கட்டுடைப்பாளனாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வெளிக்காட்டுகிறார்.

எனினும் அவர் மீது பாலியல் வகைப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்டு. அவரால் பாதிக்கப்பட்டதாக கூறி பெண்கள் சிலர் நீதிமன்றங்களை நாடியிருந்தார்கள். அவை தமது புகழை மங்கச் செய்வதற்காக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என்று வேடன் தரப்பு கூறுகிறது.

வாகீசன் வேடனை விடவும் வயது குறைந்தவர். எங்கே வேடனிடமிருந்து வித்தியாசப்படுகிறார் என்றால்,அவர் நேரடியாக புரட்சிகரமான விடயங்களைப் பாடுவதில்லை. ஜனரஞ்சகமான விடயங்களைத்தான் பாடுகிறார். ஆனால் அதிகம் பிரபல்யமடைந்த அவருடைய முருகன் பாடல் “காக்கும் வடிவேல்” முருக பக்திப் பாடல் மட்டுமல்ல அங்கே அரசியல் உண்டு. அந்தப் பாடலுக்கு மதப்பரிமாணம் மட்டுமல்ல. அரசியல் பரிமாணமும் உண்டு. அங்கே முருகன் மீட்பின் கடவுளாக, போராடும் மக்களின் தலைவனாக, போராடி தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை கட்டமைத்த தலைவனாகக் காட்டப்படுகிறார். அதில் மறைமுகமாக அரசியல் உண்டு. வேடனைப்போல வாகீசன் வெளிப்படையாக,நேரடியாக அரசியலைப் பாட முடியாத அரசியல் சூழலுக்குள் வாழ்பவர்.

601136910_3766859750274748_8295561209694

வாகீசனின் முருகன் பாடலில் பாரம்பரிய இசைக் கூறுகளும் உண்டு. அது ஒரு ஹைபிரிட் பாடல். ரப் பாடலாகவும் இருக்கிறது. அதேசமயம் சாஸ்திரிய சங்கீதத்தின் கூறுகளும் உண்டு. அதன் கலப்பு வடிவம்தான் அதற்குள்ள கவர்ச்சி. வாகீசனைத் தூக்கிய பாடல் அது. அந்தப் பாடலில் உள்ள ஹைபிரிட்தனம்தான் அந்தப் பாடலைப் பரவலாக்கியது. இப்பொழுதும் அந்தப் பாடலுக்கு ஆடும் பெரும்பாலான தென்னிந்திய நடனக் கலைஞர்கள் அப்பாடலில் உள்ள மரபு இசை வகைப்பட்ட பகுதிக்குத்தான் ஆடுகிறார்கள். ரப் இசைக்கு அல்ல.

ஒரு சமையல் நிகழ்ச்சியின் ஊடாக அதிகம் பிரபல்யமான அவருடைய தனித்துவம் எதுவென்றால், அசல் யாழ்ப்பாணத்து தமிழில் அவர் கதைப்பது. அதில் ஒருவித அப்பாவித்தனமான ஆர்வம் இருக்கும். அதேசமயம் வேரை விட்டுக் கொடுக்காத தனித்துவமும் இருக்கும். தமிழ்நாட்டில் வசிக்கும் அல்லது தமிழ்நாட்டுக்கு அடிக்கடி சென்றுவரும் ஈழத் தமிழர்கள் பெரும்பாலும் தமிழகத்தில் உரையாடும்போது அல்லது தமிழகத்தவரோடு உரையாடும்போது ஒரு தமிழ்நாட்டுக்காரரை போலவே பெரும்பாலும் உரையாடுவார்கள். முதலாவதாக தங்களுடைய தமிழ் அவர்களுக்கு விளங்க வேண்டும் என்ற கரிசனை. இரண்டாவதாக தன்னுடைய ஈழத்தமிழ் அடையாளம் காரணமாக வரக்கூடிய பிரச்சினைகளை தவிர்க்கும் தற்காப்பு உத்தி போன்ற பல காரணங்களினாலும் அவ்வாறு தமிழ்நாட்டு தமிழைக்  கதைப்பதுண்டு.”டூரிஸ்ட் பாமிலி” திரைப் படத்தில் வருவதுபோல.

ஆனால் வாகீசன் ஒரு ஜனரஞ்சக மேடையில் யாழ்ப்பாணத்துத் தமிழை பேசுகிறார். அந்தத் தமிழில் எழுதப்பட்ட வரிகளை இசைக்கிறார். அவருக்கு கிடைக்கும் பிரபல்யத்துக்கு அவருடைய தமிழும் ஒரு காரணம். அதைவிட முக்கிய காரணம் அவரைத் தூக்கிய பாடல் ஒரு முருக பக்திப் பாடலாக இருப்பது. அதில் அரசியல் வாடையும் இருப்பது. அந்தப் பாடலுக்குள்ள மதப்  பரிமாணமும் அது திடீரென்று பெற்ற எழுச்சிக்கும் பிரபல்யத்துக்கும் ஒரு காரணம். அதற்கு இந்தியாவின் இப்போதுள்ள அரசியல் சூழல் மிகவும் அனுகூலமானது.

கடவுளர்கள் ஏற்கனவே ரப் இசைக்குள் வந்துவிட்டார்கள். கிறிஸ்தவ ரப் பாடல்கள் ஏற்கனவே வந்து விட்டன. சிவன்,ஹனுமான் போன்ற கடவுளர்க்கும் ரப் பாடல்கள் உண்டு. தமிழ் பக்தி இலக்கிய மரபில்,அருணகிரிநாதரின் திருப்புகழில் ரப் சாயல் உண்டு. முருக பக்தி மரபில் ஏற்கனவே சுசீலா ராமன் என்ற பெண் இசையமைப்பாளர் தமிழ் முருக பக்திப் பாடல்களை ஆடலுக்கு ஏற்ப மீள உருவாக்கிப் பாடியிருக்கிறார்.

சுசீலா ராமன் இந்திய வேரிலிருந்து வந்த பிரத்தானிய இசையமைப்பாளர். பல்வேறு இசைப் பாரம்பரியங்களையும் கலந்து பரிசோதனை செய்தவர். ஏற்கனவே உள்ள முருக பக்தி பாடல்களை துள்ளிசையாக ரீமேக் செய்தவர். அவரும் தன் பாடலுக்கு ஒத்திசைவான கோலத்தோடு மேடையில் தோன்றுவார். அடங்காத சுருள் முடி. எப்பொழுதும் ஆடத் தயாரான நெகிழும் உடல். சுசீலா மேடையில் பரவசமாகி தன்னை மறந்து துள்ளிக்குதித்துப் பாடுவார். அவருடைய பாடல்கள் இப்பொழுது நமது உள்ளூர் கோவில்களில் ஒலிக்க விடப்படுகின்றன. கோவில் மேடைகளிலும் ஏனைய இசை மேடைகளிலும் நமது உள்ளூர் பாடகர்கள் அவற்றைப் பாடக் கேட்கலாம். புதிய தொழில்நுட்பமும் அந்தத் தொழில்நுட்பத்தின் கைதியாக உள்ள புதிய தலைமுறையும் ரசனைகளிலும் பாடல்களிலும் பக்தியை வெளிப்படுத்தும் விதத்திலும் மாற்றத்தை விரும்புகின்றது.

17659818511335870807909022864343-952x102

இது ரசனை மாற்றத்தை, புதிய தொழில்நுட்ப வருகைகளால் ஏற்பட்டிருக்கும் லயமாற்றத்தை காட்டுவது. ஒரு தலைமுறை பக்திப் பாடல்களையும் ரப் இசையில் கேட்க விரும்புகிறது. அதே சமயம் தமிழ்நாட்டில் ஈழத்து உச்சரிப்பில் ரப் பாடலைக் கேட்கும் ரசிகர்களின் தொகை அதிகரிக்கின்றது.சமூக வலைத்  தளங்களில் அலையும் ஒரு தலைமுறையின் இசை,அரசியல்,அறிவியல் தொடர்பான பார்வைகள் மாறிக்கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே “சரிகமப” நிகழ்ச்சியில் ஈழத்துப் பாடகர்கள் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள்.அதில் வணிக உள்நோக்கங்கள் இருக்கலாம். ஆனாலும் பாக்கு நீரிணையின் இரண்டு பக்கமும் உள்ள இரண்டு தமிழ்ச் சமூகங்களுக்கும் இடையிலான பிணைப்பு கடந்த 16 ஆண்டுகளாக அதிகம் சோதனைக்கு உள்ளாகியிருக்கும் ஓர் அரசியல், பண்பாட்டுப் பின்புலத்தில், ஈழத்துப் பாடகர்கள் தமிழக மேடைகளை நோக்கிச் செல்வது பிணைப்புகளைப் பலப்படுத்தும். சரிகமப மேடை என்பது அதிகபட்சம் ஜனரஞ்சக வணிக சினிமாவின் நீட்சியும் அகற்சியுந்தான். அங்கே மரபுகளை உடைத்துக் கொண்டு வெளியே வருவது குறைவு. ஆனால் ரப் இசை எப்பொழுதும் மரபுகளை உடைப்பதற்கான அதிகரித்த வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது.

அதன் தொடக்கமே புரட்சிகரமானது. மேற்கில் அது எதிர்ப்பின் வடிவமாகத்தான் எழுச்சி பெற்றது. பாதிக்கப்பட்டவர்கள்,ஒடுக்கப்பட்டவர்கள்,நசுக்கப்பட்டவர்கள் தங்கள் குரலை வெளிக்காட்டும் இசை வடிவமாக அது மேலெழுந்தது. அங்கே இசை அல்லது தாள லயத்துடன் உச்சரிக்கப்படும் வரிகள் எதிர்ப்பின் கருவிகளாக மேல் எழுகின்றன.

ஈழத் தமிழ் வேரில் பிறந்த வேடனும் வாகீசனும் இந்திய உபகண்டப் பரப்பை நோக்கி, பெருந் தமிழ்ப் பரப்பை நோக்கிப் பாடுகிறார்கள். சரிகமப மேடையில் ஈழத்துப் பாடகர்கள் பாடுகிறார்கள். ”டூரிஸ்ட் பமிலி” திரைப்படம் ஈழத் தமிழர்களை நோக்கிக் கேட்கிறது “உங்களை யார் அகதி என்று சொன்னது?” என்று. இவை யாவும் கடந்த 16ஆண்டுகளாக மெலிந்து போயிருக்கும் தமிழக-ஈழத் தமிழ்ப் பிணைப்புக்களை மீளக்கட்டி எழுப்புவதற்கான நம்பிக்கைகளைப்  புதுப்பிக்கின்றன;பலப்படுத்துகின்றன.

https://www.nillanthan.com/8018/

Checked
Wed, 01/07/2026 - 23:38
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed