அரசியல் அலசல்

நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன்.

6 hours 19 minutes ago

Sajith-Namal.jpg?resize=550%2C310&ssl=1

நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன்.

அந்த வெள்ளிக்கிழமை நுகேகொடவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டம் ஒப்பீட்டளவில் வெற்றிகரமானது. கடந்த 14 மாதங்களாக அமுங்கிக் கிடந்த எதிர்கட்சிகள் இனி தெம்போடு நடமாடும். 14 மாதங்களாக அரசாங்கம் எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்கு தள்ளியிருந்தது. ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை திருப்பித் தாக்கும் நிலைக்கு படிப்படியாக முன்னேறி வருவதனை அந்த ஆர்ப்பாட்டம் காட்டியதா?.

எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லாதபடியால்தான் தேசிய மக்கள் சக்தி கடந்த தேர்தல்களில் பெரிய வெற்றிகளைப் பெறமுடிந்தது.தமிழ் பிரதேசங்களிலும் இதுதான் நடந்தது. எதிர்க்கட்சிகளுக்கு இடையே தலைமைப் போட்டி. அது இப்பொழுதும் உண்டு.ஆனால் ஊழலுக்கு எதிராகவும் போதைப்பொருள் கட்டமைப்புக்கு எதிராகவும் பாதாள உலகக் கும்பல்களுக்கு எதிராகவும் அரசாங்கம் முன்னெடுத்த திட்டவட்டமான விட்டுக்கொடுப்பற்ற நடவடிக்கைகளின் விளைவாக எதிர்க்கட்சிகள் உஷாரடைந்து விட்டன.

இது ஒரு கட்டத்தில் தங்களுடைய மடியில் கை வைக்கும் என்ற நிலை தோன்றிய போது அவர்கள் ஒன்றாகினார்கள்.ஏனென்றால் பாதாள உலகம், போதைப் பொருள் வாணிபம், ஊழல்வாதிகள் என்று எல்லாவிதமான குற்றச் செயல்களையும் செய்துவிட்டு இனவாதத்தின் பின் பதுங்கும் அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிகம்.அதன் பொருள்,ஜேவிபி இனவாதம் இல்லாதது, பரிசுத்தமானது என்பது அல்ல. ஆனால் கடந்த பல தசாப்தங்களாக இலங்கைத்  தீவை  ஆட்சி செய்து வந்தது எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள்தான். தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றியது கடந்த ஆண்டில்தான். எனவே ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் என்ற அடிப்படையில் இந்த ஆட்சிக்கு முன் நிகழ்த்த பல குற்றச் செயல்களுக்கும் எதிர்க்கட்சிகள்தான் அதிகமாகப் பொறுப்பேற்க வேண்டி இருக்கும்.அரசாங்கத்தின் ஊழல் மற்றும் போதைப்பொருள் வாணிபத்திற்கு எதிரான நடவடிக்கைகள் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை நெருங்கத் தொடங்கியதன் விளைவாகவும் முன்னாள் ஜனாதிபதியாகிய ரணிலைப் போன்றவர்கள் கைது செய்யப்படும் ஒரு நிலைமை தோன்றிய பின்னரும் எதிர்க்கட்சிகள் உஷாரடைந்தன.அதன் விளைவுதான் நுகேகொட பேரணி.

பேரணி நடக்கவிருந்த பாதைகளில் மின்கம்பங்களில் ஆங்காங்கே புற் கட்டுக்கள் கட்டப்பட்டிருந்தன.அதன் பொருள் மாடுகள் அதாவது மந்தைகள் அந்த வழியாக வரப்போகின்றன என்பதுதான்.மேலும் கூட்டத்தில் ஏற்பாட்டாளர்கள் உயரத்தில் பொருத்தி வைத்திருந்த ஒலிபெருக்கிகளையும் போலீசார் அகற்றினார்கள்.அப்பொழுது உயர்தரப் பரீட்சை நடந்து கொண்டிருந்தது. கடந்த திங்கட்கிழமைதான் அந்த பரீட்சை முடிந்தது. எனவே பரீட்சையில் படிக்கும் பிள்ளைகளுக்கு அந்த ஒலி பெருக்கிகள் தொந்தரவாக இருக்கும் என்ற ஒரு பொருத்தமான காரணத்தை போலீசார் கூறினார்கள்.

எனினும்,எல்லாவற்றையும் தாண்டி எதிர்க் கட்சிகள் ஆயிரக்கணக்கானவர்களை அந்த இடத்துக்கு கொண்டுவந்தன.கடந்த 14 மாதங்களிலும் எதிர்க் கட்சிகள் தங்களை அவ்வாறு ஒருங்கிணைத்தது இதுதான் முதல் தடவை.ரணில் விக்கிரமசிங்க அங்கே இருக்கவில்லை. அவர் ஆர்ப்பாட்டம் நடந்த அன்று இந்தியாவிற்குச் சென்று விட்டார்.ஆனால் அவருடைய கட்சிக்காரர்கள் கலந்து கொண்டார்கள். மஹிந்த வரவில்லை. அவர்களுடைய எதிர்கால வாரிசு நாமல் முன்னணியில் நின்றார். ஒரு வகையில் அது நாமலின் எழுச்சியைக் காட்டிய கூட்டம். அதை மனோ கணேசன் தனது  முகநூல் பக்கத்தில் “சஜித் பலத்தைக் காட்டும்வரை நாமல்தான் எதிர்க்கட்சித் தலைவர்” என்று  எழுதியிருந்தார்.

எதிர்க்கட்சிகள் மத்தியில் தலைமைத்துவப் போட்டி உண்டு. அதுதான் கடந்த ஆண்டு தேசிய மக்கள் சக்தி பெற்ற பிரம்மாண்டமான வெற்றிகளுக்கு ஒரு காரணம். இப்பொழுதும் அதே போட்டி உண்டு. நுகேகொட பேரணியில் நாமல் முன்னிலைக்கு வந்து விட்டார்.அவருடைய தோற்றம்,நடை உடை பாவனை எல்லாவற்றிலும் அவ்வாறு எதிர்க்கட்சிகளுக்கு தலைமை தாங்கும் ஆர்வம் தெரிந்தது. ஆனால் தகப்பனைப் போல தோற்ற மிடுக்கும் சன்னமான குரலும் அவருக்கு இல்லை.

அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திரண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அவர்களை ஒன்று திரளுமாறு நிர்பந்தித்திருக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால் எதிர்க்கட்சிகள் தாங்கள் ஒரு பலமான அணியாகத் திரள வேண்டும் என்று திட்டமிட்டு இதைச் செய்யவில்லை. ஏனென்றால் இப்பொழுதும் அங்கே தலைமைப் பிரச்சினை உண்டு. யாரை யார் தலைவராக ஏற்றுக்கொள்வது என்ற “ஈகோ”க்கள் உண்டு. அரசாங்கத்துக்கு எதிரான தற்காப்புக் கூட்டுத்தான் அது.எதிர்காலத்தில் ஒன்றாக நின்று ஆட்சி அமைக்கும் கூட்டு என்று கூற முடியாது.

திருகோணமலை புத்தர் சிலையை வைத்து இனவாதத்தைக் கிளப்பி சேகரித்த சனத்தொகையும் அங்கே உண்டு.அந்தப் புத்தர் சிலை விடயத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இனவாதத்தைக் கக்கின.அதில் சஜித் முக்கியமானவர்.அந்தச் சிலை விடயம் எதிர்க்கட்சிகளை தமிழ் மக்களுக்கு அம்பலப்படுத்தி விட்டது.

ஆனால் திருகோணமலை புத்தர் எதிர்க்கட்சிகளை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. அரசாங்கத்தையும் சேர்த்து அம்பலப்படுத்தி விட்டார். சட்டவிரோதமாக நிறுவப்பட்ட ஒரு ரெஸ்ரோரண்டை அகற்றாமல் விடுவதற்காக உள்ளே கொண்டுவரப்பட்ட புத்தரை அரசாங்கம் முதலில் தெளிவான முடிவெடுத்து அகற்றியது.ஆனால் இனவாதத்துக்கு பயந்து பின்வாங்கியது.அந்த விடயத்தில் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்ததன்மூலம் அரசாங்கமும் தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு விட்டது.

நுகேகொட பேரணியில்  தென்பகுதியில் உள்ள தமிழர்கள் உதிரிகளாகக் கலந்து கொண்டார்கள்.ஆனால் வடக்குக்  கிழக்கிலிருந்து தமிழ்த் தேசியக் கட்சிகள் எவையும் அங்கே போகவில்லை. தமிழ் மக்கள் அந்த ஆர்ப்பாட்டத்தை தங்களுக்கு உரியதாகக் கருதவில்லை என்பதைத்தான் அது காட்டியது.

நாமல் ராஜபக்ச சில வாரங்களுக்கு முன் சுமந்திரனை சந்தித்து தமது ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டிருந்தார். ஆனால் தமிழரசுக் கட்சி அதற்கு மறுத்துவிட்டது.மறுக்கத்தான் வேண்டும். ஏனென்றால் திருமலைச் சிலை விவகாரம் நாமலையும் ஏனைய எதிர்க்கட்சிகளையும் அம்பலப்படுத்தியிருந்த ஒரு பின்னணியில்,அந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழரசுக் கட்சி கலந்து கொண்டு இருந்திருந்தால் அது தமிழ் மக்களைக் காட்டிக் கொடுப்பதாக இருந்திருக்கும்.

நுகேகொட   பேரணியில் தமிழ் மக்கள் கலந்து கொள்ளாமல் விட்டதற்கு காரணம் அரசாங்கத்தை தமிழ் மக்கள் எதிர்க்க விரும்பவில்லை என்பதனால் அல்ல.தமிழ் மக்கள் எதிர்க்கட்சிகளை ஆதரிக்க விரும்பவில்லை என்பதனால்தான். இதில் எதிர்க்கட்சிகளுக்கு கூர்மையான ஒரு செய்தி உண்டு. திருமலை புத்தர் சிலையின் பின்னணியில் தமிழ் மக்கள்  எதிர்க்கட்சிகளின் மீது கோபமாக இருக்கிறார்கள்.

ஆனால் இதே எதிர்க்கட்சிகளில் ஒன்று ஆகிய ஐக்கிய மக்கள் சக்திக்கு அதாவது சஜித்துக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று சுமந்திரன் கேட்டிருந்தார். இப்பொழுது சஜித் யார் என்பதை திருமலைப்  புத்தர் காட்டிவிட்டார்.தமிழ் வாக்குகளை சஜித்துக்குச் சாய்த்துக் கொடுத்த சுமந்திரனையும் அவர் அம்பலப்படுத்தி விட்டார். கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரித்த சுமந்திரன்  கிட்டத்தட்ட 14 மாத கால இடைவெளிக்குள் நுகேகொட பேரணியில் சஜித்தை  ஆதரிக்கவில்லை.

நுகேகொட ஆர்ப்பாட்டம் நடக்கவிருந்த ஒரு காலச் சூழலில்,கடந்த புதன்கிழமை, தமிழரசுக் கட்சி ஜனாதிபதியை சந்தித்தது. அந்த சந்திப்புக்கான அழைப்பை விடுத்தது தமிழரசுக் கட்சிதான்.அந்தச் சந்திப்பில் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளும் உட்பட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ஒரு புதிய யாப்பை உருவாக்கும் விடயத்தில் ஏற்கனவே 2015ல் இருந்து தொடங்கி 2019வரையிலும் உரையாடப்பட்ட இடைக்கால வரைபை முழுமைப்படுத்துவது என்று அங்கே உரையாடப்பட்டிருக்கிறது. சுமந்திரன் தனது  “எக்ஸ்” பக்கத்தில்  அதுதொடர்பாகப் பதிவிட்டிருந்தார்.அதாவது ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட “எக்கிய ராஜ்ய” என்று அழைக்கப்படுகின்ற அந்த இடைக்கால வரைபை அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் சென்று ஒரு புதிய யாப்பைத் தயாரிப்பதுதான் சுமந்திரனின் நோக்கமாகத் தெரிகிறது.

ஆனால், கஜேந்திரகுமார் அது ஒற்றை ஆட்சிப் பண்புடைய ஒரு தீர்வு என்று விமர்சிக்கின்றார். அனுர அரசாங்கத்தோடு தமிழரசுக் கட்சி பேசவிருக்கும் தீர்வுத் திட்டம் அதுதானா என்ற கேள்வி இப்பொழுது வலிமையாக மேலெழுகிறது.

அவ்வாறு பேசப்பட்ட காலம் எதுவென்று பார்த்தால், நுகேகொட ஆர்ப்பாட்டம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்.அதன்மூலம் தமிழரசுக் கட்சி எதிர்க்கட்சிகளை நோக்கி தான் வரவில்லை என்பதனை சூசகமாக தெரிவிக்க முற்பட்டதா? அந்தச் சந்திப்புக்கான அழைப்பை விடுத்தது தமிழரசுக் கட்சி. ஆனால் சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்கியது அரசாங்கம்.நுகேகொட ஆர்ப்பாட்டத்திற்குச் சில நாட்களுக்கு முன்னதாக அவ்வாறு நேரத்தை ஒதுக்கிக் கொடுத்து,அந்தச் சந்திப்பின் மூலம்,அரசாங்கம் எதிர்க்கட்சிகளுக்கு மறைமுகமாக ஒரு செய்தியை வெளிப்படுத்த விரும்பியிருக்கலாம். தமிழரசுக் கட்சியும் அவ்வாறு விரும்பியதா?

கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சஜித்தை ஆதரிக்க வேண்டும் என்று கேட்ட அதே சுமந்திரன் இப்பொழுது அனுரவோடு சேர்ந்து  தீர்வுக்கான பேச்சுக்களில் இறங்கப் போகிறாரா?கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டது தவறு என்பதனை திருமலை புத்தர் நிரூபித்து விட்டார்.அன்றைக்கு சஜித்துக்கு வாக்களித்த தமிழ் மக்களை சஜித் திருமலை புத்தர் விடயத்தில் ஏமாற்றி விட்டார்.

நுகேகொட பேரணியில் தமிழ்மக்கள் விலகி நின்றமை அரசாங்கத்திற்குச் சாதகமானது.ஆனால் அதனை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசாங்கத்தின் முயற்சிகளை அல்லது திருமலை புத்தர் சிலை விடயத்தில் அரசாங்கத்தின் தளம்பலான முடிவுகளை தமிழ் மக்கள் ஏற்றுக்  கொண்டதாக வியாக்கியானம் செய்ய முடியாது.

https://athavannews.com/2025/1453627

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை - பௌத்த விகாரையை தமிழர்கள் எதிர்ப்பது ஏன்?

2 days 9 hours ago

திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், RAMESH

படக்குறிப்பு, திருகோணமலையில் பௌத்த விகாரை நிர்மாணிப்பது தொடர்பாக பாரிய சர்ச்சை எழுந்துள்ளது.

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கை திருகோணமலை நகரிலுள்ள கடற்கரையோரத்தில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விவகாரம், நாட்டில் இன்றும் பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த புத்தர் சிலையை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்திய நிலையில், அடுத்த தினமே போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் போலீஸாரின் கைகளாலேயே கொண்டு வரப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை நகரம் அமைந்துள்ளது.

திருகோணமலை நகரில் கடந்த 16ம் தேதி காலை கரையோர பகுதியில் திடீரென ஒன்று திரண்ட பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சில பௌத்த பக்தர்கள் விகாரையொன்றை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, அந்த இடத்தில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், இந்த விடயம் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

திருகோணமலை கரையோர பகுதியில் நிர்மாணிக்கப்படுகின்ற விகாரையானது சட்டவிரோதமானது என, கரையோர பாதுகாப்பு திணைக்களம், போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அத்துடன், இந்த விகாரை நிர்மாணிக்கப்படுவதற்கு கரையோர பாதுகாப்பு திணைக்களம் மாத்திரமன்றி, தமிழர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

'தமிழர் பகுதிகளில் சிங்கள ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளும் நோக்கில்' பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக, தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

இந்த நிலையில், கரையோர பாதுகாப்பு திணைக்களம் செய்த முறைப்பாடு குறித்து, போலீஸ் அதிகாரிகள், விகாரையின் விகாராதிபதிக்கு (தலைமை பிக்கு) அறிவித்திருந்தனர்.

எனினும், தமது நடவடிக்கையானது சட்டவிரோதமானது அல்லவெனவும், தம்மால் விகாரையின் நிர்மாணப் பணிகளை நிறுத்த முடியாது எனவும் விகாரையின் பிக்குகள் போலீஸாருக்கு தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, இந்த விகாரை நிர்மாணிக்கப்படுகின்றமையானது சட்டவிரோதமானது என தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தனர்.

திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், RAMESH

இந்த நிலையில், திருகோணமலையில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பௌத்த விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த புத்தர் சிலையை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்த அதேநாள் இரவு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

போலீஸார் குவிக்கப்பட்டு, புத்தரின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டதுடன், அந்த புத்தர் சிலை திருகோணமலை கரையோர போலீஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

இதன்போது பௌத்த பிக்குகளுக்கும், போலீஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதுடன், கைக்கலப்புகளும் இடம்பெற்றிருந்தன.

இந்த கைகலப்பில் இரண்டு பௌத்த பிக்குகள் காயமடைந்து, மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் நாட்டில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

புத்தரின் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

புத்தர் சிலை கைது செய்யப்படுவதானது, புத்த பெருமானே கைது செய்யப்பட்டமைக்கு சமமானது என அனைத்து பௌத்த மக்களும் கவலையடைந்த ஒரு சம்பவமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், RAMESH

படக்குறிப்பு, புத்தர் சிலையை போலீஸார் எடுத்துச் சென்றபோது பௌத்த பிக்குகளுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது

ஏன் புத்தர் சிலையை போலீஸார் எடுத்து சென்றனர்?

திருகோணமலை பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்தப்படும் என கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே தாம் புத்தர் சிலையை அப்புறப்படுத்தியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

''பிரதிஷ்டை செய்யப்பட்ட புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்தப்படும் என்று போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அந்த இடத்திலிருந்து புத்தர் சிலை அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது." என தெரிவித்தார்.

மீண்டும் அந்த புத்தர் சிலையை அந்த விகாரையில் பிரதிஷ்டை செய்யுமாறு தாங்கள் போலீஸாருக்கு ஆலோசனை வழங்கியதாக கூறிய அவர், அன்றைய தினத்திலிருந்து முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

"அந்த இடத்தில் சிற்றுண்டிசாலையொன்று நடத்திச் செல்லப்படுவதாக முன்னர் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த விடயம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து நீதிமன்றத்திற்கு விடயங்கள் தெளிவுப்படுத்தப்படவுள்ளன. நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்புக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும்.'' என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், SJB MEDIA

படக்குறிப்பு, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

எதிர்கட்சிகள் வெளியிட்ட எதிர்ப்பு

புத்தர் சிலை அப்புறப்படுத்தப்பட்டு, பதற்றம் ஏற்பட்டமை குறித்து எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.

இனவாதத்தை தூண்டுவதற்கு பார்த்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கு அதற்கான பிரவேசத்தை வழங்கும் நடவடிக்கையாகவே இதனை பார்ப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

''இவ்வாறு செயற்படுவதன் ஊடாக இனவாதத்தை தூண்டுவதற்கு பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு அதற்கான பிரவேசத்தை வழங்கும் நடவடிக்கையாகவே பார்க்க முடிகின்றது. நள்ளிரவில் போலீஸாரை அனுப்பி விகாரையொன்றுக்குள் நடைபெறுகின்ற அபிவிருத்தி பணிக்கு போலீஸார் எப்படி தலையீடு செய்வது?" என அவர் கேள்வியெழுப்பினார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முயற்சித்த போது, அதற்கு சபாநாயகர் சந்தர்ப்பத்தை வழங்காதமையானது, தவறான செயற்பாடு என கூறிய சஜித், ஜனநாயகத்தை இல்லாது செய்வதற்கு சபாநாயகர் ஆசனத்திலிருந்து செய்யும் இந்த நடவடிக்கையை தயவு செய்து நிறுத்துங்கள் என குறிப்பிட்டார்.

புத்தர் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தை இனவாத பிரச்னையாக மாற்ற வேண்டாம் என்பதுடன், அரசாங்கம் இதற்கு தலையீடு செய்து நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், SLPP MEDIA

படக்குறிப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ

''புத்தர் சிலையின் பாதுகாப்புக்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலை கொண்டு செல்லப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிக்கின்றார். பாதுகாப்புக்காக புத்தர் சிலை வெளியில் கொண்டு செல்லப்படும் போது, போலீஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி, இரண்டு பௌத்த பிக்குகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புத்தர் சிலையின் பாதுகாப்புக்காகவா புத்தர் சிலை வெளியில் கொண்டு செல்லப்பட்டது. அல்லது பிக்குகளின் பாதுகாப்புக்காகவா வெளியில் கொண்டு செல்லப்பட்டது. அல்லது போலீஸாரிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காகவா என்று கேள்வி எமக்குள் எழுகின்றது." என்றார் நாமல் ராஜபக்ச.

1951ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 2004ம் ஆண்டு புனித பூமியாக பிரகடனப்படுத்திய கிழக்கு மாகாணத்தின் மிகவும் பழைமை வாய்ந்த பௌத்த விகாரையாக இந்த விகாரை காணப்பட்டது எனக்கூறிய நாமல், "இதனை இனவாத பிரச்னையாக மாற்ற வேண்டாம். நீங்கள் தலையீடு செய்து, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை குறிப்பிட்டு இரண்டு தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடல்களை நடத்துங்கள். அதனூடாக நியாயத்தை பெற்றுக்கொடுங்கள். இது இனவாத பிரச்னையாக மாறிவிட வாய்ப்புள்ளது. இதற்கு தலையீடு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்'' என கூறினார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கூட வடக்கு கிழக்கில் பௌத்த சின்னங்களை விடுதலை புலிகள் அழிக்கவில்லை என்றும், சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது எனவும் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், SHANAKIYAN

படக்குறிப்பு, இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன்

''பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் தெரிவித்திருந்தார். பௌத்த மதமோ, எந்த மதமோ சட்டவிரோத செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது. அது நானாக இருந்தாலும் சரி, பௌத்த துறவியாக இருந்தாலும் சரி. திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமான விகாரை புதிதாக உருவெடுத்தது. இது சட்டவிரோதமானது, நிறுத்துவார்கள் என நம்பியிருந்தோம். சிலையை பாதுகாப்பதற்காக அகற்றப்பட்டதாக அமைச்சர் கூறியிருந்தார். 30 வருடம் யுத்தம் நடைபெற்ற காலத்தில் கூட வடக்கு கிழக்கில் பௌத்த மதத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு சின்னம் கூட விடுதலைப் புலிகளினால் கூட அழிக்கப்படவில்லை. தமிழ் மக்கள் இரவோடு இரவாக சென்று சிலைகளை உடைக்கின்ற மக்கள் அல்ல'" என்றார் ராசமாணிக்கம்.

திருகோணமலை சம்பவத்தின் ஊடாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும், முந்தைய அரசாங்கத்தை போலவே ஒரு இனவாத, சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் என்பதை நிறுவியுள்ளது என இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் ஆனந்த விஜயபால, திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், ANANATHA WIJAYAPALA

படக்குறிப்பு, அமைச்சர் ஆனந்த விஜயபால

''அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தேசிய மக்கள் சக்தி அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு ஏற்ப செயல்படுவதை காண்கிறோம். அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலை போலீஸாரினால் அகற்றப்பட்ட போது, அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கிறது என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் அப்படியல்ல என்பதை சில மணி நேரத்துக்குள்ளேயே அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்." என்றார் சுமந்திரன்.

இலங்கை தமிழரசு கட்சி, பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், SUMANTHIRAN

படக்குறிப்பு, இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்

பழைமை வாய்ந்த விகாரை என தகவல்

திருகோணமலையில் நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட குறித்த இடமானது, பழமையான விகாரைக்கு சொந்தமான ஆவணங்களை கொண்டுள்ள விகாரை என விகாரையின் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜா விகாரை என்ற பெயரில் இந்த விகாரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

திருகோணமலை கோட்டை வீதியிலுள்ள இந்த விகாரையானது, 1951ம் ஆண்டு புத்தசாசன திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமைக்கான ஆவணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த இடத்தில் நடத்தி செல்லப்பட்ட பௌத்த அறநெறி பாடசாலை, சுனாமி அனர்த்தத்தில் அழிவடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு அழிவடைந்த இடத்திலேயே புதிதாக தாம் விகாரையை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துள்ள பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விகாரைக்கு மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அதற்கான உறுதிப் பத்திரத்தை வழங்கியுள்ளதாகவும் பிக்குகள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், குறித்த இடத்தில் தனிநபர் ஒருவரினால் விகாரையின் அனுமதியுடன் உணவகமொன்று அமைக்கப்பட்டு நடத்திச் செல்லப்படுகின்றது. இந்த உணவகத்தின் ஊடாக கிடைக்கின்ற வருமானத்தில் 25 வீதத்தை விகாரைக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்த உணவகம் நடத்திச் செல்லப்படுகின்றது.

கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான இடத்தில் உணவகம் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே, உணவகத்தை முதலில் அகற்றுமாறு கூறப்பட்டிருந்தது. எனினும், தாம் உரிய அனுமதியை பெற்று இந்த உணவகத்தை நடத்தி வருவதாக உணவகத்தின் உரிமையாளர் குறிப்பிட்டிருந்தார்.

உணவகத்தை அகற்றுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த பின்னணியிலேயே, திடீரென விகாரையை நிர்மாணிக்கும் நோக்கில் புத்தர் சிலையொன்று அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை,  புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், ANANATHA WIJAYAPALA

மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்ட புத்தர் சிலை

திருகோணமலை போலீஸாரினால் தமது பொறுப்புக்கு எடுக்கப்பட்ட புத்தர் சிலை, அடுத்த தினமே போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் போலீஸாரின் கைகளிலேயே கொண்டு வரப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பௌத்த சமய வழிபாடுகளுக்கு அமைய இந்த புத்தர் சிலை மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அப்போது அங்கு ஒன்று திரண்ட பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த மக்கள் தமது சமய நடைமுறைகளை பின்பற்றி, போலீஸாரின் ஒத்துழைப்புடன் புத்தர் சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்தனர்.

நீதிமன்றம் என்ன சொல்கின்றது?

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜா விகாரை தொடர்பில் எழுந்த பதற்ற நிலைமையை, சமாதானமான முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் நவ. 19 அன்று தெரிவித்தது.

இந்த மனு மீதான விசாரணைகளை டிசம்பர் மாதம் 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்தது.

விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரரினால் மனுவொன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், RAMESH

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜா விகாரையின் ஒரு பகுதியை அப்புறப்படுத்துமாறு கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை, செயற்படுத்துவதனை தவிர்க்கும் வகையில் கட்டளையொன்றை பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை நிறைவடையும் வரை, பிரதேசத்தின் அமைதியை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம், உரிய திணைக்களங்களுக்கு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி என்ன சொல்கின்றார்?

திருகோணமலையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் மதஸ்தலமொன்றை அமைப்பதைப் போன்றே, அதற்குப் பின்னால் மற்றொரு விவகாரமும் இருப்பது தெளிவாக தெரிகின்றது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

குறித்த இடத்தில் பிக்குவுக்கு சொந்தமான காணியொன்று இருந்த போதிலும், மத அனுஷ்டானங்கள் மேற்கொள்ளும் இடமொன்று இருக்கவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், RAMESH

''இந்த புத்தர் சிலை பாதுகாப்புக்காகவே போலீஸுக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீஸ் நிலையத்திலுள்ள பதிவேட்டில் தெளிவாகவுள்ளது. புத்தர் சிலை மீண்டும் அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டு, அதற்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்போது அந்த பிரச்னை நீதிமன்றத்தில் உள்ளது." என்றார் ஜனாதிபதி அநுர.

அதற்கு முன், அரசாங்க அதிபர் அலுவலகத்தில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் 2014ம் ஆண்டு குறித்த காணிக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் தற்போது இந்த இடம் விகாரையாக அழைக்கப்பட்ட போதும் அண்மைக் காலங்களில் இந்த இடம் விகாரையாகப் பயன்படுத்தப்படாமல் ஒரு உணவகமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"உணவகத்தில் சட்டவிரோத நிர்மாணப் பணிகள் இருப்பதால் சட்டவிரோத நிர்மாணங்களை அகற்ற கடலோர பாதுகாப்புத் திணைக்களம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவுக்கு எதிராக சுற்றாடல் அமைச்சிற்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டை சுற்றாடல் அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார். அதன் பின்னர், போலீஸ் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில், தங்களுக்கு மேலும் ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்றும், மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் செல்ல எதிர்பார்ப்பதாகவும் பிக்குகள் தெரிவித்திருந்தனர். அந்தக் கால அவகாசம் 14ம் தேதியுடன்; முடிவடைந்தது." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இடத்தில் பிக்குவுக்கு உரித்தான காணியொன்று இருந்தது என்றும், ஆனால் மத அனுஷ்டானங்கள் மேற்கொள்ளும் இடம் இருக்கவில்லை, அதுதான் உண்மையான நிலைமை என கூறிய அநுர, "சம்பந்தப்பட்ட விவகாரத்திற்குப் பிறகு, அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், முறையான அளவீடு செய்ய, கடலோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கு வழங்கவும் விகாரைக்குச் சொந்தமான காணியை தனித்தனியாக பெயரிட்டு வழங்கவும் உடன்பாடு எட்டப்பட்டது." என்றார்.

ஆனால் பழைய வழக்கின் பிரகாரம் இங்கு புதிய நிர்மாணப் பணிகள் எதுவும் செய்யக்கூடாது எனவும் ஏற்கெனவே உள்ள நிர்மாணங்களை அகற்றக்கூடாது எனவும் நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, "நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, விகாரைக்குச் சொந்தமான காணி ஒதுக்கப்பட்ட பிறகு தொடர்புடைய பணிகளை முன்னெடுக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, இந்தப் பிரச்சினை தற்போது நிறைவடைந்து விட்டது" என்றார்.

இனவாதத்திற்கு இனி ஒருபோதும் இடமளிக்கப்படாது எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

''சந்தர்ப்பவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் தீ வைப்பு தான் தற்போது நடந்திருக்கிறது . ஆனால் நாங்கள் இனவாதத்தை அனுமதிக்க மாட்டோம். நான் மட்டுமல்ல, இந்த நாட்டின் பௌத்த மக்களும் அதை அனுமதிக்க மாட்டார்கள். இந்த நாட்டின் இந்து, முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். எனவே, இந்த நாட்டில் பழைய இனவாத நாடகங்களை யாராவது மீண்டும் உயிர்ப்பிக்க முயன்றால், அது இறந்த வரலாற்றில் மட்டுமே இருக்கும்.'' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2n24qrwp7o

மாவீரர் நாள்: கேள்விகளும் பதிலும் — கருணாகரன் —

5 days 8 hours ago

மாவீரர் நாள்: கேள்விகளும் பதிலும்

November 17, 2025

மாவீரர் நாள்: கேள்விகளும் பதிலும்

— கருணாகரன் —

ஈழப்போராட்டம் எதிர்பார்த்த விடுதலையையும் அரசியல் முன்னேற்றத்தையும் தராமல் முடிந்து விட்டது. இதுபெருந்துயரமே. ஆனால், அது உண்டாக்கிய நினைவலைகள் ஓயவில்லை. எந்தப்போராட்டத்திலும் இத்தகைய நிலையிருக்கும். அதில் ஒன்று, போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த வீரர்களின் நினைவாகும். அதைத்தமிழ் மக்கள் மாவீரர்நாளாக ஒவ்வாரு ஆண்டும் நவம்பர் 27 இல் நினைவு கூருகிறார்கள். 

இது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கிய மரபாகும். இந்த மரபு இன்று விடுதலைப்புலிகள் இயக்கம் நடைமுறையில் இல்லாத போதும், உலகங்கும் உள்ள தமிழ் மக்களால் தொடரப்படுகிறது. இது வியப்புக்குரிய ஒன்று. ஏனென்றால், குறித்த இயக்கம் இல்லாத போதும் அந்த இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு நடைமுறையை மக்கள் பின்பற்றுகிறார்கள் – தொடருகிறார்கள். இதற்குக் காரணங்கள் சில உண்டு. 

1.  தங்களுடைய விடுதலைக்காகப் போரடி மரணத்தைத் தழுவிய போராளிகள் பற்றிய உணர்வும் மதிப்பும் மக்களிடம் நீங்காமல் உள்ளது. இதனால் அவர்களை எப்படியும் நினைவு கொள்ள வேண்டும் என்ற உணர்வு மக்களில் பெரும்பாலானவர்களிடம்உண்டு. மாவீரர் நிகழ்வுகளின் அடிப்படைகளில் ஒன்று இதுவாகும். 

2.  இன்னொரு தரப்பினருக்கு ஒரு வகையில் இதுவொரு குற்றவுணர்ச்சியும் கூட. வாழும் வயதில், தங்களுடைய இளமையை போராட்டத்துக்கென அர்ப்பணித்துச் செயற்பட்டு, இறுதியில் மரணத்தையும் தழுவிக் கொண்ட போராளிகளை நினைக்கும்போது, தங்களுக்காகப் போராடியவர்கள் சாவடைந்துவிட்டனர். ஆனால், நாமோ எல்லாவற்றைக் கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற குற்றவுணர்ச்சி இவர்களைக் குடைந்து கொண்டேயிருக்கிறது. இதை நீக்குவதற்கு குறைந்தபட்சம் இத்தகைய நினைவு கூருதல்களைச் செய்து தங்களை ஆற்றுப்படுத்திக் கொள்கிறார்கள். அதனால், குறைந்த பட்சம் இந்த நிகழ்விலேனும் பங்கு பற்றவேண்டும் என்று எண்ணுகிறார்கள். 

3.  போராடி மரணத்தைத்தழுவிக் கொண்டோரின் பெற்றோர், உறவினர், நண்பர்கள், சக தோழதோழியரால் நினைவு கொள்ளப்படுதல். இது கூடி வாழ்ந்தவர்களை அஞ்சலித்தல் என்பதாகும். இவர்கள் நேர்மையான முறையில் அஞ்சலி செலுத்துகின்றனர். 

4.  அரசியற் காரணங்களுக்காக அல்லது தங்களுடைய அரசியல் நலனுக்காக மாவீரர் என்ற பெயரைப் பயன்படுத்திக்கொள்வதும் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதும் அதில் பங்கேற்பதுமாக நடப்பது. அதாவது, இவர்களால் மக்களுக்கெனத் தியாகம் எதையும் செய்யமுடியாது. தம்மை அர்ப்பணித்து தேசத்துக்கான பணிகளைச் செய்வதற்கும் இயலாது. மற்றவர்களின் தியாகங்களைக் கூறி, பிழைக்க மட்டுமே முடியும். அடிப்படையில் இது ஒரு பிழைப்புவாத அரசியலாகும். 

5.  இந்த மரணங்களின் பெறுமதி எத்தகையது? இப்படி நினைவு கொள்வதன் அடிப்படைகள் என்ன? இவ்வாறு நினைவு கொள்வதன் மூலமாக நாம் எடுத்துக் கொள்ளும் அரசியல் தொடர்ச்சியும் வளர்ச்சியும் எவ்வாறானது? நினைவுகொள்ளப்படும் (நினைவுகூரப்படும்) மறைந்த வீரர்களுடைய கனவுகளை எப்படி நிஜமாக்குவது- நிறைவேற்றுவது? உண்மையான நினைவுகூருதல் என்பது என்ன? அது எவ்வாறு அமைய வேண்டும்? என்பதைப் பற்றிய கேள்விகளோ சிந்தனையோ எதுவுமே இல்லாமல், ஏதோ நடக்கிறது. அதில் நாமும் சேர்ந்து நிற்போம் என்ற மாதிரிக் கலந்து கொள்வது.  

இதுபோலப் பல காரணங்கள் உண்டு. 

இவ்வாறான காரணங்களால்தான் வெவ்வேறு அணிகளால் அல்லது பல அணிகளால் மாவீரர்நாள் கொண்டாடப்படுகிறது – அனுஸ்டிக்கப்படுகிறது. அவரவர் தத்தமது தேவைகளுக்காக மாவீரர் நாளைக் கொண்டாடுகின்ற – அனுஸ்டிக்கின்ற – ஒரு நிலை உருவாகியுள்ளது. அதாவது இது உருவாகிய தேவையும் சூழலும்வேறு. இன்று பின்பற்றப்படும் தேவையும் சூழலும் வேறு. 

ஈழப்போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை மதித்துப் போற்றவேண்டும் என்றால், அவர்களுடைய கனவுகளுக்கும் நடைமுறைகளுக்கும் நேர்மையாக – விசுவாசமாக இருக்க வேண்டும். இதனுடைய அர்த்தம், அவர்கள் கொண்டிருந்த அதே அரசியலை இன்றும் மேற்கொள்வது என்பதல்ல. அது நடைமுறைச் சாத்தியமும் இல்லை. அந்த அரசியல் நிலைப்பாடு இன்றைய காலத்துக்குப் பொருத்தமானதும் அல்ல. ஆனால், தாம் தேர்வுசெய்கின்ற அல்லது பிரகடனப்படுத்துகின்ற அரசியலுக்காக – அதை நடைமுறைப்படுத்துவதற்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணிக்கும் பண்பாடும் உளநிலையும் துணிச்சலும் இருக்கவேண்டும். அதுவே நேர்மையானது. அதையே நாம், தம்மை அர்ப்பணித்த போராளிகளுக்குச் செய்கின்ற நேர்மையான மதிப்பார்ந்த அஞ்சலியாகும். அவ்வாறில்லை என்றால், அவர்களுடைய பெயரைவைத்துப் பிழைக்கும் பிழைப்புவாத அரசியலைச் செய்வதாகவே அமையும். 

இதேவேளை, அனைத்து இயக்கப்போராளிகளுக்கும் என ஒரு பொது நாளினைத் தெரிவுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் நாம் இந்த இடத்தில் இணைத்துப் பார்ப்பது பொருத்தமாகும். ஏனென்றால், ஈழ விடுதலைக்காகப் போராடி, மரணத்தைத் தழுவியவர்கள் அனைவரும் மதிப்புக்குரியவர்களே. அப்படியாயின் அவர்கள் அனைவரையும் உள்ளடக்கி, ஒரேநாளில் நினைவு கொள்ளலாம். அது விடுதலைப் புலிகளின் மாவீர்ர் நாளான நவம்பர் 27 ஆகவும் இருக்கலாம். அல்லது பிறிதொரு நாளாகவும் இருக்கலாம். அப்படி ஒரு பொதுநாள் ஏற்றுக்கொள்ளப்படுமாக இருந்தால், அது அரசியல் ரீதியாகவும் நினைவு கூரலின் அடிப்படையிலும் சிறியதொரு முன்னேற்றத்தைத் தரக் கூடும்.  

இதற்கும் அப்பால் இந்த நினைவுகூரல் இப்பொழுது – அதாவது எந்த இயக்கமும் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் இல்லாத சூழலில் – நடப்பதற்கான காரணத்தை நாம் அர்த்தமாக்குவதாக இருந்தால், அதைக் குறித்து ஆழமாகச்சிந்திக்க வேண்டும். அப்படிச் சிந்திக்கும்போதுதான் இந்தச்சடங்குத்தனமான, சம்பிரதாயமான நினைவு கூரல் என்ற அர்த்தக் குறைவான நடைமுறை மாறி, புதியபோக்கொன்று அர்த்தபூர்வமாக விளையும். 

1989 இல் மாவீர்ர் நாளை விடுதலைப் புலிகள் இயக்கம் மரணத்த போராளிகளை நினைவுகூரும் விதமாக அனுஸ்டிக்கத்தொடங்கியது. அதற்காக அது தன்னுடைய அமைப்பிலிருந்து முதல் சாவடைந்த போராளியான சத்தியநாதன் என்ற சங்கர் மரணித்த நவம்பர் 27 ஆம் நாளையும் அந்த நேரத்தையும் தேர்வு செய்தது. அதுவே இப்பொழுது மாவீரர் நாளாக பின்பற்றப்பட்டு வருகிறது. 

விடுதலைப் புலிகளின் வளர்ச்சியும் அது தேர்ந்தெடுத்த ஆயுதப்போராட்ட வடிவமும் நேரடியாகவே ஒரு யுத்தத்தை விரித்தது. அப்படி விரிவடைந்த யுத்தம், பல நூற்றுக் கணக்கில் ஏன் சில சந்தர்ப்பங்களில் ஆயிரக்கணக்கிலான போராளிகளின் உயிரைக்கோரியது. இப்படி பல நூறு பேர் யுத்த களத்தில் மடியும்போது, அது மக்களிடையே ஒரு பெரும்கலக்கத்தையும் கேள்வியையும் எழுப்பக் கூடும். முடிவற்ற சாவு என்பது இழப்பு உணர்வையே ஏற்படுத்தக் கூடியது. அரசியல் தீர்வோ, யுத்த முடிவோ அல்லாமல் யுத்தம் நீண்டு செல்லும்போது இந்த உணர்வு மேலும் அதிகரிக்கும். அதுவும் ஈழத்தமிழர்கள் ஒரு சிறிய இனம்மட்டுமல்ல, சிறிய பிரதேசத்திற்குள்ளேயே வாழ்கின்றவர்கள் என்பதால் அதிகரித்த மரணங்களை போராட்டத்தில் சந்திக்கும் போது, அது மக்களின் உளநிலையில் குழப்பங்களையும் போராட்டத்தைத் தொடர்வதில் தயக்கத்தையும் உண்டாக்கும். இப்படியே இந்த யுத்தம் சென்றுகொண்டிருந்தால், கூடிச்செல்லும் மரணங்களைக் குறித்த கேள்விகளும் தயக்கமும் குழப்பமும் எழுந்து போராட்டத்துக்கு எதிரான மக்கள் அலையாக – இயக்கத்துக்க எதிரானபோக்காக மாறக் கூடும் என்று சிந்திக்கப்பட்டதன் விளைவே, மாவீரர்நாளாகும். 

களத்தில் மடிந்த போராளிகளை மகத்தான வீர்ர்களாக, வரலாற்று நாயகர்களாக, விடுதலையின் வித்துகளாக, மண்ணின் முத்துகளாக சித்திரிப்பதன் மூலம் உங்களுடைய பிள்ளையோ கணவரோ, சகோதரரோ வெறுமனே சாவைத் தழுவிக்கொள்ளவில்லை. அவர்களுடைய சாவுக்கொரு மகத்துவமும் பெறுமதியும் உண்டு. அதற்கொரு வரலாற்று முக்கியத்துவம் உள்ளது என்ற உணர்வு நிலையைக் கட்டமைப்பது. இதற்கு தமிழ் வரலாற்றிலிருந்து வீர மரணத்தைத் தழுவிக்கொள்ளும் பெருமிதப் பாடல்கள்(சங்க இலக்கியம்) உதவின. இதைப் புலிகளின் ஆதரவுப்புலவர்களும் பேராசிரியர்களும் தமிழ்மொழி அறிஞர்களும் நிறைவேற்றி உதவினர். புறநானூற்றுப் பாடல்களில் வரும் நடுகல் பண்பாடு, முறத்தினால் புலியை விரட்டிய பெண், நெற்றியில் வீரத்திலகமிட்டுப் போர்க்களத்துக்கு அனுப்பிய அன்னை போன்ற கதையாடல்கள் விடுதலைப்புலிகளின் ஊடகங்களில் மீட்டெடுத்துப் புதுமைப்படுத்தப்பட்டன. 

இதன்மூலம்  சாவடையும் போராளிகளுடைய உறவுகளுக்கும் தோழர்களுக்கும் ஒருவிதமாக ஆறுதலையும் அவர்கள் திருப்திப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு நிறைவையும் கொடுப்பதாக உணர வைப்பதாகும். அதாவது இந்தச் சாவுகளுக்கு அர்த்தமும் பெறுமதியும் உண்டென நம்பவைப்பது. 

இத்தகையதொரு வரலாற்றுக்காரணம், போராடும் அல்லது போர் செய்யும் தரப்புக்கு அவசியம் தேவை. இதையே இன்னொரு பரிமாணத்தில் – இன்னொரு கோணத்தில் அரசும்செய்தது. அது படைகளின் உளநிலையையும் அவர்களுடைய உறவுகளின் உளத்தை ஆற்றுப்படுத்தவுமாக. இதை இலங்கை அரசு மட்டுமல்ல, உலகளாவிய அளவில் அனைத்து அரசுகளும் செய்கின்றன. போரில் பலியாகும் வீரர்களைப் போற்றி, தேசிய வீரர்களாக மகத்துவப்படுத்தும் உத்தி இது. ஆனால், அந்த வீரர்கள் இன்னொரு தளத்தில் – எதிர்த்தரப்பில் – அழிவையும் சேதங்களையும் உண்டாக்கியோராகவே இருப்பர். இது பற்றித் தனியாகச் சிந்திக்கவேண்டும்.

இன்று சூழல் முற்றாகவே மாறி உள்ளது. இது போர் முடிந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாகிய சூழல். விடுதலையைப் பெற்றுத்தரும் என்று நம்பப்பட்ட போராட்டம் அதற்கு மாறான விதத்தில் பெரும் பின்னடைவோடு முடிந்திருக்கும் காலம். போராட்டத்தில் வெற்றிகிட்டும் என்ற எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் இல்லாதொழிந்த சூழல். என்பதால் இப்பொழுது புதிய அரசியல் முன்னெடுப்புகளும் அதற்கான வழிமுறைகளும் கண்டறியப்பட வேண்டிய நிலை. இந்தச் சூழலில், கடந்த காலத்தின் அரசியல் அடையாளங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றும்போது, அதை எத்தகைய அடிப்படையில் பின்பற்றுவது? அதனுடையபெறுமதி என்ன? அதற்கான இன்றைய தேவை என்ன? உணர்வைத் திருப்திப்படுத்தத்தான் நம்முடைய அரசியல் பயன்படுத்தப்படுகிறதா? அல்லது மரணித்த வீரர்களின் கனவுக்கு நேர்மையாகவும் விசுவாசமாகவும் அறிவுபூர்வமாகச் செயற்பட்டு, விடுதலையை நோக்கிய அரசியலை முன்னகர்த்துவதா? என்ற கேள்விகள் எழுகின்றன. 

இப்பொழுது மாவீரர் நிகழ்வுகளை நடத்தும்போது அல்லது போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும்போது நாம் மனதிற்கொள்ள வேண்டியது, எதிர்கால அரசியலைக் குறித்த சிந்தனைகளை, வெற்றிகரமான செயல் வடிவமாக்குவது எப்படி என்பதாகவே இருக்க வேண்டும். அதையே ஒவ்வொரு போராளியும், மரணித்த ஒவ்வொரு வீரரும் தங்களுடைய கனவாக, விருப்பாகக் கொண்டிருந்தனர். 

அப்படியாயின் இதனை எவ்விதம் முன்னெடுப்பது? யார் முன்னெடுப்பது? என்றகேள்விகள் மேலும் எழுகின்றன. ஏனென்றால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு தரப்பும் தாம் சொல்வதே சரி. அதுவே நிஜம் என்றே முடிவற்று வாதிடப்படுகிறது. இந்தச் சூழலில் எத்தகைய நிலைப்பாட்டை, எத்தகைய கருத்து நிலையை ஏற்றுக் கொள்வது? அல்லது எந்தத் தரப்பை அங்கீகரிப்பது என்ற குழப்பம் மக்களுக்கு உண்டு. 

முதலில் நடைமுறை ரீதியாகச் சாத்தியப்படக் கூடிய அரசியலை முன்னெடுப்பவர்களையே மக்கள் ஆதரிக்க வேண்டும். அவர்களே வெற்றியின் நாயகர்கள். அவர்களே பொறுப்பான முறையில் சிந்திக்கிறார்கள். அவர்களுக்கே மக்களுடைய வலியும் சுமையும் புரிகிறது. அவற்றைக் குறித்து அவர்களே ஆழமாக உணர்கிறார்கள். அவர்களுக்கே பிராந்திய, சர்வதேச அரசியல், பொருளாதார அசைவுகளைப் பற்றிய – அவற்றின் யதார்த்தத்தைப் பற்றிய புரிதல் உண்டு. என்பதால் அவர்களே மரணித்த வீர்களின் கனவுக்கு விசுவாசமாக உள்ளனர். ஒப்பீட்டளவில் அவர்களே இதற்கு நேர்மையாளர்கள். இவற்றைப்பற்றி அக்கறைப் படாமல் வெறும் வார்த்தைகளால் மாண்டவீரர்களைப் போற்றிப்புகழ்பவர்கள், அந்த வீரர்களையும் அவர்களுடைய கனவையும் தமது அரசியல் நலக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். எனவே இவர்கள் மாவீரர்களுக்கு, அவர்களை நினைவு கூருதலுக்கு எதிரானவர்களாகும். 

என்பதால், இந்தக் கயவர்களை எதிர்த்து, நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில் சிந்திப்பவர்களின் –  செயற்படுவோரின் வழியில்திரள்வதும் அந்தப் போக்கைப்பலப்படுத்துவதும் அவசியமாகும். அதுவே மாவீரர்களுக்கு அல்லதுபோராட்டத்தில் மரணத்ததோழர்களுக்கு செலுத்தும்உண்மையான அஞ்சலியாகும்.  

அதேவேளை மாவீர்ர்களைப் போற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, அந்த வீரர்களின் கனவுக்கும் உணர்வுக்கும் மாறாக உள்ளோர் வியாபாரிகள், வரலாற்று மூடர்கள், எதிரிகள், சமூக – மக்கள் விரோதிகள் என்பதை மக்களுக்குத் தெளிவுறச் சொல்ல வேண்டும். இவர்களை எதிர்ப்பதும் அம்பலப்படுத்துவதும் மாவீரர்களுக்கு செய்கின்ற அஞ்சலி. அவர்களுக்குச் செலுத்துகின்ற மதிப்பாகும்.

என்பதால் வரலாறு, ஒரு மாறுதலுக்கான காலக்கட்டத்தில் நின்று இந்தக் கேள்விகளை – இந்தச் சிந்தனையை எழுப்புகிறது. நாம் என்ன செய்யப்போகிறோம்? என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை.  

ஆகவே விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாத சூழலில் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த மாவீரர் நாள், இன்றைய சூழலில் எத்தகைய பெறுமானத்துக்குரியது? அதனுடைய எதிர்கால விளைச்சல் என்னவாக இருக்கவேண்டும்? ஒரு காலகட்டத்து விடுதலைப் போராளிகள் என்று கருதப்பட்டோரின் கனவுகளுக்கு இன்று எத்தகைய மதிப்பு வழங்கப்படுகிறது? இதை நாம் எப்படிச் சீராக்கி முன்னெடுப்பது? என்பதே இந்த மாவீர்ர் நாள் சிந்தனைகளாகவும் நடைமுறைகளுக்கான கேள்விகளாகவும் இருக்கட்டும். 

https://arangamnews.com/?p=12440

கொள்கைகளுக்காக அஞ்சலிப்போம்

5 days 9 hours ago

கொள்கைகளுக்காக அஞ்சலிப்போம்

லக்ஸ்மன்

“எமது நாட்டு மக்களின் நீண்ட கால கனவாகக் காணப்பட்ட தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அரசியல் ரீதியாக எமக்கு பல நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால், இனி இந்த நாட்டில் இனவாத அரசியலுக்கு
இடமில்லை.

எந்த விதத்திலும் மதவாதச் செயற்பாடுகள் எழுச்சி பெறுவதற்கும்
இடமளியோம். நாம் போதுமென்ற அளவில் இனவாதத்தினால் பாதிப்பைக் கண்டிருக்கிறோம்.

ஆறுகள் நிறைய கண்ணீரை கண்டிருக்கிறோம். இன்று நாட்டில் ஒவ்வொருவர் இடையிலும் குரோதமும் சந்தேகமும் அதிகளவில் வலுப்பெற்றுள்ளது.
பொருளாதாரம், ஜனநாயகம் என்று பல வகையில் இருக்கலாம்.

ஆனால், இனி எவரும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இனவாத, மதவாத போராட்டங்களை முன்னெடுக்க இடமளியோம் என்று உறுதியளிக்கிறேன்” என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது முதலாவது அக்கிராசன உரையில்  தெரிவித்திருந்தார்.

அது அவருடைய பொது நிலைப்பாடாகும். ஆனால், அதில், உட்பொதிகை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் போராட்டமாகவே இருந்தது. இலங்கையைப் பொறுத்தவரையில் கார்த்திகை மாதம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் அன்னியராக்கப்பட்டமை, ஜே.வி.பியின் கார்த்திகை வீரர்கள் நினைவு போன்ற பல விடயங்களுக்கு முக்கியமானது.

தமிழர்களைப் பொறுத்தவரையில், இது மாவீரர் வாரம். ஆனால், பாதுகாப்புத் தரப்பினர் இதனை மாவீரர் மாதமாகவே கொள்வார்கள். கார்த்திகை தொடங்கினாலே தகவல்களைச் சேகரிப்பார்கள்,

வடக்கு, கிழக்கில் எந்த அமைப்பு, தனிப்பட்ட நபர்கள், யாரெல்லாம் மாவீரர் தினத்துக்கான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்ற தகவல்களைத் திரட்டுவார்கள். கடந்த வருடங்களில் செயற்பட்டவர்களைக் கண்காணிப்பார்கள். இது வழமையாகவே நடைபெற்று வருகின்ற விடயம்.

யுத்த காலத்தில் பாதுகாப்புத் தரப்பினர் மிகுந்த அச்சத்துடன், இந்த
வேலையைச் செய்து கொண்டிருந்தனர். ஏனெனில், புலிகள் எங்கு வருவார்கள்,
எப்போது தாக்குதல் நடத்துவார்கள் என்ற அச்சம். அதே நேரத்தில், புலிகளின்
பகுதிகளுக்கு தமிழ் மக்கள் செல்லும் போதும், திரும்பும் போதும்
அவர்களுக்கும் விசாரணைகள், கைது, மரண அச்சங்கள் இருந்தன.

ஆனால், யுத்தம் மௌனத்திற்கு வந்த பின்னர் இருந்த ஒவ்வொரு ஆட்சியிலும் ஒவ்வொரு விதமாக நிலைமை இருந்து வந்தது. 2009இல் விடுதலைப் புலிகளுடனான ஆயுத யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் மாவீரர் நிகழ்வுகளுக்கான செயற்பாடுகள் தமிழர்களின் பிரதேசங்களில் குதிரைக் கொம்பாகவே இருந்தது.

தடை உத்தரவுகள், மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், நெருக்கடிகள், கைதுகளாக இருந்தன. அவற்றினையும் மீறி, ரகசியமாக நிகழ்வுகள் ஒருவாறு நடந்து விட்டாலும், அதன் பின்னரும் கைதுகள், விசாரணைகள் நடைபெற்றிருந்தன. பின் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்க காலத்தில் நிலைமை சற்று மாறியிருந்தாலும், முழுமையாக இருக்கவில்லை.

அதன் பின்னர் வந்த கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசாங்கத்தில் நிலைமை தலைகீழாக மாறியது. அப்போது, கொவிட்- கொரானா காரணமாக காட்டப்பட்டு கைதுகள், நெருக்குதல்கள் நீதிமன்ற தடைய உத்தரவுகள் இருந்தன. பின்னர் உருவான ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்திலும் பாதுகாப்புத் தரப்பினர் தமிழ் மக்களுக்குச் சாதகமான வேறு முறைகளைக் கையாண்டிருந்தனர்.

இப்போது, கடந்த காலத்தில் நாட்டைக் கைப்பற்ற இரண்டு முறை ஆயதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு தோற்றுப்போன, தமது தலைவர் உட்பட பலரையும் பலிகொடுத்த ஒரு போராட்ட இயக்கமான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம்.

கடந்த வருடம் ஆட்சி பீடம் ஏறியபோது, கொஞ்சம் பாதுகாப்புத் தரப்பினருடைய பிரச்சினைகள் இருந்தாலும், இவ்வருடம் கெடுபிடிகள் எதுவுமின்றி மாவீரர் தினத்துக்குரிய ஏற்பாடுகள் வடக்குக் கிழக்கில் நடைபெறுகின்றன. 
ஆனால், சிறியளவுக்கான அச்சத்தினைத் தமிழர்கள் வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு நம்பிக்கை மாத்திரம் அவர்களிடம் இப்போது இருக்கிறது. ஜே.வி.பியின் கார்த்திகை வீரர்கள் தின நிகழ்வு. கடந்த 13ஆம் திகதி கொழும்பு
விகாரமகாதேவி திறந்தவெளி அரங்கில் ஜே.வி.பியின் 36ஆவது கார்த்திகை வீரர்கள் நினைவேந்தல் நடைபெற்றது. இதில் அக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மலர் அஞ்சலி செலுத்தினார்.

ஒரு போராட்ட இயக்கத்தின் கொள்கைக்காக மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஒரு உளப்பூர்வமான நிறைவுதான் அதனை ஒவ்வொரு வருடத்திலும் உணர்பவர் அவர். அந்தவகையில், தங்களுடைய கொள்கைகளுக்காக மணரத்தைத் தழுவிக் கொண்ட மாவீரர்களை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நினைவு கூருகின்ற ஆத்மார்த்த முன்வருதலானது மாவீரர் தினமாகும். 

ஆனால், எழுச்சிமிகு நாளாக வடக்கு கிழக்கில் நிகழ்வெடுக்கப்படுகின்ற இந்த மாவீரர் வாரத்தில் தமிழர்களின் அரசியல் தரப்புகள் கொண்டுள்ள நிகழ்ச்சி நிரல்களால் பிரச்சினைகள் எழுந்துவருவது தமிழ் மக்கள் மத்தியில் கவலைகளையும், குழப்பங்களையும் உருவாக்கி வருகிறது.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் பல்வேறு முக்கியப்படுத்தல்கள், நினைவுபடுத்தல்கள், கௌரவிப்புகள் இருந்து வருகின்றன. முக்கியமாக அன்னை பூபதி, தியாகி திலிபன் ஆகியோர் இந்திய இராணுவத்திற்கெதிராக உண்ணா நோன்பிருந்து தங்களது உயிர்;களைத் தியாகம் செய்திருந்தார்கள். 

இப்போது அவர்களுடைய தியாகங்கள் நம்மவர்களாலேயே எள்ளிநகையாடுகின்ற அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.வடக்கு, கிழக்கு மக்களின் தேசிய நிகழ்வுகளாக உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்படவேண்டிய நிகழ்வுகள் அரசியல் போட்டியும், தனிப்பட்ட சுய லாபங்களுக்கானதாக மாறி வருகின்றன. தனிப்பட்ட கோபதாபங்கள், வெறுப்புகளைத் தமிழ்த் தேசியத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் விடயங்களாகப் பயன்படுத்துகின்றனர். சிலவேளைகளில் இது தமிழ்த் தேசியத்தைப் பாதிக்கின்ற விடயங்களாக உணராமல் இவ்வாறு நடைபெறுகின்றதாகக்கூடக் கொள்ளலாம். 
அதேநேரத்தில், தமிழர்களின் அரசியல் மயப்படுத்தலில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே உருவாகியிருக்கின்றன என்றும் கொள்ளலாம்.

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட தினமாக நினைவு கூரப்படுகின்ற மே-18 நிகழ்வுகளும் அரசியல் சுய லாபத்திற்காக நடத்தப்படுகின்ற ஒன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது.

அது மக்களை அரசியல் மயப்படுத்தாதிருப்பதன் பலாபலனே. அதே நேரத்தில் தமிழ் மக்களின் சுய நிர்ணயப் போராட்டமானது ஏன் தொடங்கப்பட்டது, அதன் அரசியல் வரலாறு என்ன, பட்டறிவுகள் எவ்வாறானது. அதன் பாதிப்புகள் எத்தகையது.

அதற்கானஅடுத்த கட்டம் என்ன, உலக மயமாதலால் எவ்வாறான விளைவுகள் தமிழர்களின் போராட்டத்திற்கு ஏற்படும் போன்ற விடயங்கள் சரியான முறையில் அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தப்பட்டதா, கடத்தப்படுகிறதா?, அதற்கான வேலைத்திட்டங்கள் செய்யப்படுகின்றனவா போன்றவைகள் ஆராயப்படவில்லை. அதனாலேயே தமிழர்களுக்கான அரசியலை செய்யவென புறப்பட்டவர்கள், கட்சிகளும்கூட தமக்கென ஒவ்வொரு வழிகளில் சென்று கொண்டிருப்பதற்கான காரணமாகும். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களின் அரசியல் வரலாறுகளிலிருந்து மாற்றத்தினை ஏற்படுத்துகின்ற மாதமாக இந்த கார்த்திகை மாதம் இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாகும்.

இந்தஎதிர்பார்ப்பு நிறைவேறுவதற்கான அரசியலைச் முன் நகர்த்துவதற்குத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் முயலாமல் இருப்பது உண்மையிலேயே அவர்களின் இயலாமையாகக்கூட இருக்கலாம்.

தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வினை நிச்சயப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களாகத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், கட்சிகள் மாறாதவரையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையான சுயநிர்ணய உரிமை என்கிற இலக்கு நிறைவேறப்போவதில்லை. 

இதற்காக தமிழ்த் தேசிய அரசியலைச்செய்துவருகின்ற தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்குள் உள்ள விட்டுக்கொடுக்க முடியாத விடயங்களைப் பொதுக் கலந்துரையாடல்களுக்குட்படுத்தி தமிழ்த் தேசியத்துக்கான பொது நிலைப்பாட்டுக்கு வருதலே சிறப்பாகும்.

நாட்டுக்குள் சிங்கள மக்களிடம் காணப்படுகின்ற புலிகளின் மீளுருவாக்கம் நடைபெற்றுவிடும் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் தொடங்கிவிடும், மாவீரர் தினம் அதற்கான வழியைத் தோற்றுவித்துவிடும் என்ற அச்சம் தமிழ் மக்கள்மா வீரர் நினைவுகூரலை நடத்துவதில் தடைகளை ஏற்படுத்துவதாக இருந்து
வருகிறது.

அதற்கு வடக்கு கிழக்கில் இருக்கின்ற பாதுகாப்புத் தரப்பினரும் ஒருவித காரணமாகும். இவ்வாறான சூழலை உருவாக்குவதற்கான எந்தவித ஏதுக்களும் இல்லையானாலும் ஆரம்பத்திலிருந்தான அவர்களின் அச்சம் அதனைச் செய்யத் தூண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனாலும், அதற்காக அவர்கள் முன்வைக்கப்படுகின்ற காரணங்கள் உண்மைக்கும் யதார்த்தத்துக்கும் புறம்பானதாக இருப்பது வேடிக்கை. மொத்தத்தில், ஆயதக்கிளர்ச்சியில் ஈடுபட்டு மோசமான முறையில் அடக்கப்பட்டுத் தோற்றுப் போய் அரசியல்வழியில் நாட்டைக் கைப்பற்றியிருக்கின்ற ஜே.விபி. கைக்கொண்ட மக்களை அரசியல்மயப்படுத்தும் செயற்பாடு தமிழ்களுக்கும் முன்னுதாரணமாகும். இந்த அரசியல் மயப்படுத்தலை செய்யாதவரையில் தமிழர்களின் அரசியல் அபிலாசை ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை.

இதற்கான உறுதிபூணலை இந்தக் கார்த்திகையிலேனும் தமிழ் அரசியல் தரப்பினர் மேற்கொண்டாக வேண்டும். இதுவே கொண்ட கொள்கைக்காக உயிர்நீத்த ஒவ்வொருவருக்கும் செய்கின்ற சரியான அஞ்சலியாக இருக்கும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொள்கைகளுக்காக-அஞ்சலிப்போம்/91-368071

தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும்

6 days 3 hours ago

இந்தியாவுக்கு பாக்கு நீரிணை நிரந்தர எதிரி. சிங்கள பௌத்த அரசுக்கு பாக்கு நீரிணை நிரந்தர நண்பன், அது வரமும் சாபமும் கலந்த நண்பன் அல்லது அமிர்தமும் நஞ்சும் நிறைந்த நண்பன் அல்லது அமுதமும் நஞ்சும் கலந்த நண்பன். ஈழத் தமிழருக்கு பாக்கு நீரிணை அரை நண்பன்.

அமிர்தம் என்பது தேவர்கள் அருந்துவதாக கூறப்படும் ஒரு புராண உணவு. அமுதம் என்பது ஈயத்தை தங்கமாக மாற்றும் அழியாமையைக் தரும் ஒரு கற்பனைத் திரவம். இங்கு நஞ்சை கழைந்து அமிர்தத்தை கடைந்தெடுக்கும் அரசியல் வித்தை சிங்கள தலைவர்களுக்கு தெரியும்.

இந்திய அரசுக்கு பாக்கு நீரிணை எப்போதும் அதன் முழு எதிரியாய் உள்ளது. ஆதலாற்தான் தனுஷ்கோடி -- தலைமன்னார் தரைப்பாலத்தை அமைப்பதன் வாயிலாக அந்தப் பாக்கு நீரிணையை தனது நண்பனாக்க இந்தியா முயல்கிறது. சிங்களவிற்கு வெள்ளிடை மலையென ஒன்று தெரியும்.

பாக்கு நீரிணை

அதாவது அந்தப் பாக்கு நீரிணைதான் இந்தியாவின் தொடர் நிலப்பரப்பிலிருந்து இலங்கையை பிரித்து ஒரு தீவாக்கியது. இதன் மூலம் பாக்கு நீரிணைதான் இலங்கையை ஒரு நாடாக்கியது. அதுதான் இலங்கையை ஒரு தனி அரசாக்கியது. இந்த வகையில் பாக்கு நீரிணை சிங்கள பௌத்தத்துக்கு ஒரு வரம்.

பௌத்தம் பிறந்த இந்தியாவிலேயே இந்து மதப் பிரிவுகளினால் பௌத்தம் அழிக்கப்பட்ட போதிலும் பௌத்தம் புகுந்த இலங்கைத் தீவில் அந்தப் பாக்கு நீரிணையால் அந்த பௌத்தமும் பௌத்த அரசும் பாதுகாக்கப்படுகிறது.

தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் | Is The Thalaimannar Dhanushkodi Flyover Feasible

ஒருவேளை கிமு 3 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து இந்திய பேரரச ஆதிக்க விருத்தியின் ஒரு வடிவமாக பௌத்தம் இலங்கைக்கு சமாதானபூர்வமாக கொண்டுவரப்பட்ட போதிலும் அனுராதாபுரம் மன்னன் தீசன் மௌரியப் பேரரசர் அசோகத் சக்கரவர்த்தியின் கட்டளைப்படி மீள் முடி தரிக்கப்பட்டார் என்று மகாவம்சம் கூறுகிறது.

மேலும் சக்கரவர்த்தி அசோகரின் பட்டப்பெயரான "தேவநம்பிய" என்பது தீசனுக்கான முடிக்குரிய பேராக்கப்பட்டு தீசன் தேவநம்பிய தீசன் என அரச பட்டப் பெயர் சூட்டப்பட்டார். இது இந்திய பேரரச ஆதிக்கப் படர்ச்சியின் தெளிவான அரசியல் வடிவம்.

ஆயினும் சிங்கள அரச பௌத்த சமூக உருவாக்கமானது இலங்கை அனுராதபுரத்தில் தோன்றி வளர்ந்து வந்த ஒரு அரச சமூக வளர்ச்சியின் கழுத்தில் ஒரு கூரிய இந்திய ஆதிக்க வாளாக பௌத்தம் இலங்கையை அணுகிய போது அனுராதபுரத்தில் முகிழ்ந்து எழுந்து வந்த உயர அரச குழாம் கழுத்துக்கு ஓங்கப்பட்ட அந்த வாளை தமது தலைக்கும் நெஞ்சுக்குமான கவசமாக மாற்றிக் கொண்டனர். இது ஒரு பொழுதில் நிகழ்ந்தது அல்ல.

பௌத்த அரச பண்பாடு

தொடர் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் இவ்வாறு முகிழ்ந்தெழுந்து. இந்நிலையில் சிங்கள அரசு, பௌத்த மகா சங்க நிறுவனம், பொதுமக்கள் என அனைவரையும் ஒன்று திரட்டிய ஒரு வடிவமாய் சிங்கள பௌத்த அரச பண்பாட்டு வாழ்வு முதிர்ச்சி அடைந்தது. அரசை பௌத்த நிறுவனத்தினாலும் மக்களாலும் என ஒன்றுடன் ஒன்றாய் மூன்றையும் திரட்டி எடுத்தனர்.

சிங்கள பௌத்த இலங்கை அரசு என்பதன் தெளிவான திரட்சி பெற்ற வடிவம். மேற்படி மூன்றுக்கும் அச்சாணியாயும் அரணாயும் விளங்குவது பாக்கு நீரிணையாகும். இந்தியாவிலிருந்து இலங்கையை பிரித்து பாதுகாப்பு அளிக்கும் இந்த பாக்கு நீரிணை என்ற அரணை எப்படி ஒரு பாலத்தின் மூலம் இந்தியாவோடு இணைக்கத் தயாராகுவார்கள்.

தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் | Is The Thalaimannar Dhanushkodi Flyover Feasible

ஆனால் அப்பக் கோப்பைத் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு பாக்கு நீரிணை என்ற மந்திர வித்தை இன்னும் தெரிந்து கொள்ளப்பட்டதாய் இல்லை. ஒருவேளை அவர்கள் அதைத் தெரிந்து கொள்ள விரும்புவதும் இல்லை, அப்படி ஒரு பொருள் இருப்பதாக திரும்பி பார்ப்பதும் இல்லை.

வானத்து வெள்ளியை அண்ணாந்து பார்த்துக் கொண்டு, பாம்பு புதருக்குள் காலூன்றி நடக்கும் நிலையிற்தான் தமிழ் அரசியல் தலைவர்களின் அரசியல் போக்கு உண்டு. பாலம் கட்டுவது தொடர்பாக புத்திசாலித்தனமான சிங்கள தலைவனை கேட்டால் அதற்கு "ஆம்" என்று பதில் சொல்வான், ஆனால் பாலம் கட்டமாட்டான். ஆம் என்று சொல்வதற்கு காரணம் தூணேறிய சிங்கமாக ஒருபுறமும் காராம் பசுவாக மறுபுறமும் உள்ள இந்தியாவின் முன் அதன் கவனத்தை ஈர்ந்து ஆடிப் பாடிப் பால் கறப்பதற்கு.

அதேவேளை பாலம் கட்டுவது பற்றி ஒரு அடிமட்ட சாதாரண சிக்கள மகனிடம் கேட்டால் கட்டவேண்டாம் என்று சொல்லுவான் கட்டவிடவும் விட மாட்டான். சிங்கள புத்திசாலியின் "ஆம்" என்ற தந்திரம் துணேறிய சிங்கத்தை திசை திருப்பவும் உதவும் காராம் பசுவில் பால் கறக்கவும் உதவும்.

வைஷ்ணவ கடவுளாகக் கொள்ளப்படும் இராமபிரானின் ஆணைப்படி இலங்கை மீது படையெடுப்பதற்காக தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே ஹனுமானால் கட்டப்பட்டது இராமர் பாலம் என்கிறது இதிகாசம். "சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்" என்றார் இந்திய தேசிய கவிஞர் பாரதியார். எனவே மத நம்பிக்கையின் படியும் இலங்கைக்கு ஒரு பாலம் அமைக்க வேண்டும் என்று இந்தியா எதிர் பார்க்கிறது.

இலங்கைக்கு ஒரு பாலம்

இந்திய தேசிய சிந்தனையின்படியும் இலங்கைக்கு ஒரு பாலம் அமைக்க வேண்டும் என்று இந்திய தேசியம் எதிர்பார்க்கிறது. முழு இந்தியாவையும் கூடவே அத்துடன் இலங்கைத்தீவையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே "சிந்து நதியின் மிசை நிலவினிலே ..." என்று தொடங்கும் பாரதியாரின் கவிதை ஆகும்.

சிங்கள பௌத்த அரசையும் சிங்கள பௌத்த மதத்தையும் பொறுத்தவரை பாக்குநீரிணை சிங்கள பௌத்த அரசுக்கு ஓர் அரணாகும். பாக்கு நீரிணைதான் புவியியல் ரீதியாக இந்தியாவுடன் இருந்துவந்த நிலத் தொடரைத் துண்டித்து இலங்கையை ஒரு தீவாயும், ஒரு நாடாயும், ஒரு தனியரசாயும் ஆக்கியது.

தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் | Is The Thalaimannar Dhanushkodi Flyover Feasible

பௌத்தம் பிறந்த இந்தியாவில் அது இந்து மதப் பிரிவுகளால் இந்தியாவை விட்டு துரத்தப்பட்ட போது இலங்கை என்ற தீவிற்தான் அது தரித்துப் பாதுகாக்கப்பட கூடியதாக இருந்தது. அந்த வகையில் பாக்கு நீரிணை சிங்கள பௌத்தர்களுக்கு ஒரு வரமும் கொடையுமாகும்.

அதேவேளை பாக்கு நீரிணையின் ஒரு புறத்தில் ஈழத் தமிழரும் அதன் மறுபுறத்தில் தமிழகத் தமிழரும் வாழ்ந்து வரும் நிலையில் ஈழத் தமிழருக்கும் தமிழக தமிழருக்கும் இடையேயான உறவை சிங்கள பௌத்த அரசு கசப்புடன் பார்த்து வருவதுடன் அத்தகய கசப்பினதும் பயத்தினதும் பின்னணியில் சிங்கள பௌத்த அரசு ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்து வருகின்றது என்பதும் கண்கூடு.

மேலும் ஈழத் தமிழரை இந்திய ஆதிக்க படர்ச்சியின் கருவிகளாகவும் இந்திய அரசின் ஆதிக்க படர்ச்சிக்கான ஓர் ஏதுவாகவும் ஈழத் தமிழரை சிங்கள அறிஞர்களும், வரலாற்றாளர்களும், தலைவர்களும், பௌத்த மத நிறுவனமும் ஆழமாக நம்பியும், கருதியும் வருகின்றனர்.

கூடவே கி.மு 3 ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த பௌத்தமும் இந்திய பேரரச ஆதிக்கப் படர்ச்சியின் ஒரு பகுதியாகவே நிகழ்ந்ததை சிங்கள பௌத்த தரப்பினர் உணரத் தவறவில்லை. இந்த வகையில் ஒட்டுமொத்த இந்திய ஆதிக்க பரவலை பெரிதும் தடுப்பதற்கு இயற்கையாக காணப்படும் பாக்கு நிரிணையை ஒரு வரமாகவே கருதும் சிங்கள பௌத்த தரப்பினர் செயற்கையாக 23 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு தரைவழிப் பாலம் அமைக்கப்படுவதை ஒரு போதும் விரும்ப மாட்டார்கள்.

ஜேவிபி தலைமையிலான அரசாங்கம் 

சிங்களவரின் கண்ணில் இராமர் கட்டிய பாலம் இலங்கை மீதான இந்தியாவின் படையெடுப்புகானது. இந்துமா கடலின் மையத்தில் இந்தியாவுக்கு மிக அருகில் அமைந்துள்ள இலங்கைதீவு வெளி வல்லரசுகளின் ஆதிக்கத்துக்கோ அன்றி செல்வாக்குக்கோ உள்ளாகும் போது இந்தியாவை பெரிதும் பாதிக்கும் என்ற நிலையில் ஒரு பாலம் அமைப்பதன் மூலம் வெளி வல்லரசுகளுக்கான வாய்ப்பை துண்டித்து விடலாம் என இந்திய அரசு நம்புகிறது.

இத்தகைய பின்னணியில் மேற்படி பாலம் அமைப்பது பற்றிய அவாவும் கற்பனையும் இந்திய தரப்பில் எழுவது இயல்பு. அதன்படி இந்தியா அதற்கான முயற்சிகளை கற்பனை கலந்த ரசனையுடன் மேற்கொள்கிறது.

2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்படி பாலம் கட்டுவதற்கான வாக்குறுதிகளை வானளாவ நட்சத்திரங்கள் என பறக்க விட்டார்.

தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் | Is The Thalaimannar Dhanushkodi Flyover Feasible

நிச்சயம் அவருக்குத் தெரியும் தான் புளுகுப் பெட்டிகளை அவிழ்த்து விடுகிறேன் என்பது. அவருக்கு இருந்த அரசியல் நெருக்கடியில் இந்தியாவின் வாயில் அல்வாவை வைத்து காராம் பசுவிடமிருந்து கறக்க வேண்டியவற்றை கறப்பதற்காக அப்படி அவர் இந்திய மண்ணில் நின்று செயல்பட்டார்.

தொடர்ந்து இலங்கை இந்திய அமைச்சர்கள் மட்டத்திலான கலந்து உரையாடல்களும் கருத்து பரிமாற்றங்களும் திட்டமிடல் பணிகளும் இடம்பெற்றன.

ஆசிய வங்கியில் இதற்காக இந்திய அரசு 22 ஆயிரம் கோடி ரூபாக்களைக் கடன் கோரியும் இருந்தது. அந்தளவுக்கு திட்டம் நடைமுறை சார்ந்து இந்திய தரப்பில் நம்பிக்கை உடன் மேற்கொள்ளப்பட்டது.

சிங்கள தரப்பை பொறுத்தவரையில் அதிகாரத்தில் உள்ளஒரு புத்திசாலியிடம் கேட்டால் அவன் பாலம் அமைக்க "ஓம்" என்று சொல்வான், ஆனால் கட்டமாட்டான். ஓர் அப்பாவின் சிங்களமகனை கேட்டால் அவன் பாலம் கட்ட வேண்டாம் என்று சொல்லுவான்.

இங்கு புத்திசாலியோ அப்பாவியோ இருவரும் பாலம் கட்ட மாட்டார்கள் என்பது உறுதி. இதில் ரணில் முதலாவது தரத்தைச் சேர்ந்தவர். இதுதான் சிங்கள பௌத்த யதார்த்த நிலை. சிங்கள தரப்பை பொறுத்தவரையில் அரசனோ ஆண்டியோ, ஞானியோ பாமரனோ எவரும் பாலம் கட்டுவதில்லை என்பதில் உறுதியானவர்கள்.

இந்நிலையில் இப்போது பதவி இருக்கும் ஜேவிபி தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் இந்தப் பாலத்தை கட்ட மாட்டாது. கட்டப்பட உள்ளதாக இருப்பது கற்பனை; கட்டப்படாமல் இருக்கப் போவதே யதார்த்தம்.

https://tamilwin.com/article/is-the-thalaimannar-dhanushkodi-flyover-feasible-1763327912

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் எழுதிய “சட்டத்தின் ஆட்சி” என்ற நூல் சொல்லும் செய்தி!

1 week ago

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் எழுதிய “சட்டத்தின் ஆட்சி” என்ற நூல் சொல்லும் செய்தி!

*** *** ***

*மேற்கு - ஐரோப்பிய அரசியல் கோட்பாடுகளை விட, சீன அரசியல் கோட்பாடுகள் மேலெழும் சூழல்...

*ஜனநாயகம் - யதார்த்த அரசியல் - என்ற ஏமாற்றை விடவும் சீன ஜனநாயகம் மேல் என்ற உணர்வு...

** *** ******

மேற்கு நாடுகள் எழுதி வைத்த ”ஜனநாயக கோட்பாடு”, ”சட்டத்தின் ஆட்சி” ”அரச இறைமைக் கோட்பாடு என்பற்கு மாறாக கம்யூனிஸ்ட் கொள்கையை பின்பற்றி வரும் சீனா, இன்று உலகத்துக்குப் பெரும் சவலாக மாறியுள்ளது.

”நான் சொல்வதை நீ செய்” என்ற அதிகாரத் தேரணையில் இயங்கும் அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளுக்கும், ”ஜனநாயகம்” - ”சட்ட ஆட்சி” என்றால் என்ன என்பதை, சீனா காண்பித்துள்ளது.

இப்போது அதனை நூலாக வெளியிடுவதன் ஊடாக, எதிர்காலத்தில் மேற்கு - ஐரோப்பிய நாடுகளின் அரசியல் கோட்பாடுகளுக்குப் பதிலாக சீன அரசியல் கோட்பாடுகளை மாணவர்கள் கற்கும் நிலை தோன்றும் என்பதில் ஐயமில்லை.

ஏன் உலகமே அதனை ஏற்கக் கூடிய சாத்தியங்களும் வரலாம்.

ஏனெனில் --

டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலிய ஜனாதிபதி நெதன்யாகு ஆகியோர் உள்ளிட்ட சில உலகத் தலைவர்களின் அட்டகாசம் - மிரட்டல் போன்ற செயல்கள், சீன அரசியல் கோட்பாட்டுக்கு மாணவர்களை தள்ளக் கூடிய ஏது நிலை தெரிகிறது.

நேர்மையான கம்யூனிஸ்ட் கொள்கையை சீனா பின்பற்றவில்லை என்று பலரும் குற்றச்சாட்டலாம்.

ஆனால் --

அக் குற்றச்சாட்டுகளைக் கடந்து, சீனா இன்று உலக வளர்ச்சியில் பல முன்னேற்றங்களையும், ஒழுங்கு முறையான அரசியல் நடைமுறைகளையும் (Orderly Political Procedures) அறிமுகப்படுத்தி - நியாயப்படுத்தி உலகத்துக்குக் கற்பிதம் செய்துள்ளது எனலாம்.

இது சிலருக்கு கசப்பாக இருக்கும். ஆனால் அது தான் உண்மை.

சீனாவில் கட்சிக்குள் அரசு - அரசுக்குள் கட்சி என்ற தன்மை உண்டு. ஆனால், ஒரு கட்சி ஆட்சி முறைமை (System) தான் சிறந்தது போல் தெரிகிறது.

ஏனெனில் ---

ஜனநாயம் - மாற்றுக் கருத்து - யதார்த்த அரசியல் - அபிவிருத்தி அரசியல் என்று ஏமாற்றி, ஈழத்தமிழ் இனம் போன்ற தேசிய இனங்களை மேற்கு - ஐரோப்பிய நாடுகள் கைவிடுகின்றன.

இலங்கை போன்ற இன ஒடுக்கல் அரசுகளுக்கு ஒத்தூதுகின்றன.

அத்துடன் ---

புவிசார் அரசியல் என்ற போர்வையில், தமது அரசியல் - பொருளாதார நலன்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

அதேநேரம் --

சீன ஒடுக்குமுறை இல்லை என்று கூறவும் முடியாது. புவிசார் அரசியல் போட்டியை, சீனா பயன்படுத்தி வருகிறது என்பதையும் மறுக்க இயலாது...

ஆனால் --

மேற்கு - ஐரோப்பிய நாடுகளின் ஓரங்கட்டலை விட அல்லது “நான் சொல்வதை நீ செய்” என்ற அதிகாரத் தோரணையை விடவும், சீனாவின் ஒரு கட்சி ஆட்சி முறைமை சிறந்தது என்ற எண்ணம் உருவாகின்றது.

அதேநேரம் ---

கம்யூனிஸ்ட் கொள்கையுடை பலர் சந்தர்ப்பவாதிகள் என்ற கருத்து உண்டு.

குறிப்பாக --

இலங்கையில் ஒழுங்கான கம்யூனிஸ்ட்கள் இல்லை. இடதுசாரிகளும் அப்படித்தான்...ஜேவிபி அதற்கு சிறந்த உதாரணம்...

அதேநேரம் --

சீன கம்யூனிஸ்ட் ஒரு வகையான முதலாளித்துவ சாயல் கொண்டது என்ற கருத்தும் உண்டு.

ஆனால் --

கம்யூனிஸ்ட் என்பதை தவிர்த்து, சீன ”அரசியல் கோட்பாடுகள்” என்று நோக்கினால், ”சீன ஜனநாயகம்”, ”சீன இறைமை” என்பது சிறப்பான மாற்றம் என்ற சிந்தனை எழுலாம்.

ஆகவே --

சீன அரசியல் முறைமை (Political System) ஆபத்தா அல்லது நன்மையா என்பதை காலம் சொல்லும்...

இப்போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், எழுதிய “சட்டத்தின் ஆட்சி” என்ற நூல் பற்றிய செய்திக்கு வருவோம் ---

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (Communist Party of China - CPC) மத்தியக் குழுப் பொதுச் செயலாளர், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், எழுதிய “சட்டத்தின் ஆட்சி” (Rule of Law) என்ற மேற்படி நூல் பீஜிங்க நகரில் வெளியிடப்பட்டுள்ளது.

2012 ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு பெ்பரவரி மாதம் வரையிலான சட்டத்தின் ஆட்சியில் ஜி ஜின்பிங் எழுதிய கட்டுரைகள், உரைகள் ஆகியவற்றின் மிக முக்கியமான மற்றும் அடிப்படையான படைப்பியல் கருத்துக்கள் 69 பகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த நூல் சீன பண்புகளுடன் கூடிய சோசலிச சட்டத்தின் அமைப்பை வளர்ப்பதற்கும், சட்டத்தின் கீழ் ஒரு சோசலிச நாடாக சீனாவை உருவாக்குவதற்கும், புதிய வகிபாகத்தில் சட்ட அடிப்படையிலான நிர்வாகத்தை தொடர்ந்து வகுப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது.

இதனை 'குளோபல்ரைம்ஸ்' என்ற (globaltimes) சீன அரச ஆங்கில செய்தி ஊடகம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் கட்சி வரலாறு - இலக்கிய நிறுவனத்தால் இந்த நூல் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

1953 ஆம் ஆண்டு பிறந்த ஜி ஜின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், மத்திய இராணுவ ஆணைக்குழு தலைவராகவும், 2012 ஆம் ஆண்டு முதல் சீனாவின் மூத்த அரசியல் தலைவராகவும் விளங்கினார்.

2013 ஆண்டு முதல், ஜி ஜின்பிங், சீனாவின் ஜனாதிபதி பதவியை வகிக்கிறார்.

ஐந்தாவது தலைமுறை சீனத் தலைமையின் உறுப்பினராக, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின்னர் பிறந்த முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிகையாளர்

நிக்ஸன்

கட்சிகளுக்கிடையிலான சண்டைக்குள் சிக்கிய திருமாவின் யாழ் வருகை: நிலாந்தன்.

1 week ago

THIRUMA.jpg?resize=750%2C375&ssl=1

கட்சிகளுக்கிடையிலான சண்டைக்குள் சிக்கிய திருமாவின் யாழ் வருகை: நிலாந்தன்.

திருமாவளவனின் யாழ் வருகை பரவலாக வாதப் பிரதிவாதங்களை கிளப்பியுள்ளது. ஆனால் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவது இதுதான் முதல் தடவை அல்ல. அதுவும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருப்பது இதுதான் முதல் தடவை அல்ல. இந்த மேடையில் அவர் பேசுவதும் இதுதான் முதல் தடவை அல்ல. ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இதே நிகழ்வுக்காக அவர் வந்திருந்தார்;பேசினார். அப்பொழுது வராத எதிர்ப்பு இப்பொழுது வர காரணம் என்ன ?

இறுதிக்கட்டப் போரின்போது கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் கொந்தளிப்பை மடைமாற்றி விட்டதாக ஈழத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். அதன்பின் அதாவது 2009 மே மாதத்திற்குப் பின் தமிழகத்தில் இருந்து வந்த தூதுக்குழுவில் திருமாவளவன் இடம்பெற்றது தவறு என்றும் ஈழத்தமிழர்கள் நம்புகிறார்கள்.அதனால் அவரை விமர்சிக்கிறார்கள்.

இந்த விமர்சனங்களின் பின்னணியில்தான் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் திமுகவின் மீதும் திருமாவளவனின் மீதும் தொடர்ச்சியாகக் கோபத்தோடு காணப்படுகிறார்கள்.எனினும்,கடந்த 2018ஆம் ஆண்டு அவர் வருகை தந்தபோது காட்டப்படாத அளவு எதிர்ப்பு ஏன் இந்த முறை காட்டப்படுகிறது?

திருமாவை ஊருக்கு அழைத்தது தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்.அது இப்பொழுது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு உறவாக இருக்கிறது.தமிழ்த் தேசியப் பேரவை என்ற கூட்டுக்குள் பசுமை இயக்கமும் ஓர் அங்கம். எனவே திருமாவை முன்வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தாக்குவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதற்குப் பிரதான காரணம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் பாரம்பரியம்தான்.அக்கட்சியானது தொடக்கத்தில் இருந்தே தன்னை பெருமளவுக்கு தூய்மைவாத கட்சியாகவும் தீவிர தேசியவாத கட்சியாகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நேரடி வாரிசாகவும் காட்டிக்கொண்டது. ஏனைய கட்சிகளை அவர்கள் இந்த அளவுகோல்களின் ஊடாகத்தான் அளந்தார்கள்.எனவே அக்கட்சியோடு கூட்டில் இருக்கும் ஐங்கரநேசன் திருமாவை அழைத்தபோது அக்கட்சியை அடிப்பதற்கு இதை ஒரு சந்தர்ப்பமாக கட்சியின் எதிரிகள் பயன்படுத்துகிறார்கள். 2018இல் திருமா யாழ்ப்பாணம் வந்தபோது இந்த அளவு விமர்சனங்கள் ஏழவில்லை.

அப்பொழுது ஐங்கரன்நேசனை யாரும் அவமரியாதையாக விமர்சிக்கவில்ல்லை.ஆனால் இப்பொழுது திருமாவோடு சேர்த்து ஐங்கரன் நேசனும் விமர்சிக்கப்படுகிறார்;அவமதிக்கப்படுகிறார்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் விமர்சிக்கப்படுகிறது.அப்படிப் பார்த்தால் இந்த விமர்சனங்களின் பின்னணியில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடு உண்டு.

இப்படிப்பட்ட ஒரு விமர்சனச் சூழலை உற்பத்தி செய்ததில் தமிழ்த் தேசியமக்கள் முன்னணிக்கும் பெரிய பங்கு உண்டு.அக்கட்சி தன்னுடைய அரசியல் எதிரிகளைத் தாறுமாறாக விமர்சிக்கும் பண்பைக் கொண்ட ஒரு கட்சி.ஏன் என்னையும்கூட அவர்கள் மிகக் கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார்கள். தமது அரசியல் எதிரிகளை துரோகிகள் ஆக்கியது அந்த கட்சிதான். தமிழ்த் தேசிய அரசியலில் தூய்மைவாத அளவுகோல்களை வைத்துக்கொண்டு தமது அரசியல் எதிரிகளை தமது தராசுகளால் நிறுத்த கட்சி அது. இப்பொழுது சமூக வலைத்தளங்களைப் பார்த்தால் ஒன்றை விளங்கிக் கொள்ளலாம். திருமாவின் யாழ் வருகையை விமர்சிக்கும் ஒரு பகுதியினர் அந்த விமர்சனங்களை யாருடைய பார்வைக்கு முன் வைக்கின்றார்கள்? ஏற்கனவே தூய்மைவாத தமிழ் தேசிய அளவுகோல்களை வைத்துக்கொண்டு மற்றவர்களை விமர்சித்த கட்சியின் ஆதரவாளர்கள் அல்லது செயற்பாட்டாளர்களை நோக்கித்தான்.

அதுமட்டுமல்ல,இப்பொழுது அதாவது அந்தக் கட்சியின் செயலாளர் திருமாவின் கூட்டத்தில் பிரசன்னமான பின்னரும்கூட,அக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் திருமாவையும் ஐங்கரநேசனையும் விமர்சிக்கக் காணலாம்.அக்கட்சியோடு தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்ற கிராமிய உழைப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவரும்கூட திருமாவை, ஐங்கரநேசனை கடுமையாக விமர்சிக்கக் காணலாம்.

எனவே இப்பொழுது தெளிவாக ஒரு சித்திரம் கிடைக்கிறது. தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் திருமாவின் யாழ் வருகை மீது பிரதிபலிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதுதான் இங்குள்ள அடிப்படை உண்மை.

அதேசமயம் 2009 க்குப் பின் மஹிந்த ராஜபக்சவை திருமா சந்தித்தது கைகுலுக்கியது தொடர்பில் அவர் ஏற்கனவே ஒரு தன்னிலை விளக்கம் வழங்கியிருக்கிறார். ஆனால் ஒருபகுதி ஈழத் தமிழர்கள் அந்தத் தன்னிலை விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் தெரிகிறது. தமிழகத்தில் உள்ள ஈழ அபிமானிகளில், ஈழ உணர்வாளர்களில் மிக நீண்ட காலம் ஈழப்போருடன் தொடர்புற்றவர்களில் திருமாவும் ஒருவர்.மாணவராக இருந்ததில் தொடங்கி ஒரு கட்சித் தலைவராக வளர்ந்து,நாடாளுமன்ற உறுப்பினராக வந்தது வரையிலும் அவர் ஈழப் போரோடு நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார்.விடுதலைப் புலிகள் இயக்கம் அவரை மிகவும் மதித்து கௌரவமாக நடத்தியது.ஆனால் அந்த இயக்கம் போரில் தோற்கடிக்கப்பட்ட பின்,அதைத் தோற்கடித்த தரப்புடன் அவர் கைகுலுக்கியது தொடர்பில் அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் மத்தியிலும் பொதுவாக தமிழ் மக்கள் மத்தியிலும் விமர்சனங்கள் உண்டு.

ஆனால் அதற்குப் பின்னரும் முன்னரைப் போலவே அவர் ஈழத் தமிழர்களின் அரசியல் நிலைப்பாடுகளோடு தோளோடு தோள் நிற்கிறார்.எனவே,அவர் மீது விமர்சனங்களை முன்வைக்கும்போது திருமா ஒரு நேச சக்தியா அல்லது பகை சக்தியா என்ற தெளிவு ஈழத் தமிழர்களிடம் இருக்க வேண்டும்.ஒரு நேச சக்தியை விமர்சிப்பது வேறு. பகைவரை விமர்சிப்பது வேறு. இந்த விடயத்தில் ஈழத் தமிழர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.திருமா தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்.அப்படித்தான் திராவிடக் கட்சிகளும்.இந்தக் கட்சிகளை விமர்சிக்கும்போது இந்த கட்சிகள் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனவோ அந்த எட்டுக் கோடி மக்களையும் புண்படுத்தாமல் கவனமாக விமர்சிக்க வேண்டும்.

நீரிணையால் பிரிக்கப்பட்ட ஒரே இனத்தவர்கள் தமிழ்நாட்டு மக்களும் ஈழத் தமிழர்களும்.புவியியல் அமைவிடம் காரணமாக சில வேறுபாடுகள் இருக்கலாம்.ஆனால் உலகில் ஈழத் தமிழர்களுக்கு இனத்தால்,மொழியால், பண்பாட்டால்,இன்னபிற விடையங்களால் கிட்ட இருக்கும் மக்கள் அவர்கள்தான். ஈழப் போராட்டத்தின் போது இருபதற்கும் குறைாதவர்கள் தமிழகத்தில் தீக்குளித்திருக்கிறார்கள். உலகில் வேறு எங்கும் நடந்திராத ஒரு விடயம் அது.தீக்குளிப்பது என்பது சாதாரணமானது அல்ல.தன்னையே அழிப்பது. அயலில் வாழும் தனது மக்கள் கூட்டத்திற்காக தம்மையே அழித்திருக்கிறார்கள்.அதுவும் தீயில் கருகி இறப்பது என்பது எவ்வளவு கொடுமையானது? சாதாரணமாக, சமைக்கும்போது அடுப்பு நெருப்புப் பட்டாலே எப்படித் துடிக்கிறோம்?.உலகில் வேறு எந்த மக்கள் கூட்டமும் அவ்வாறு கடலால் பிரிக்கப்பட்ட இன்னொரு மக்கள் கூட்டத்திற்காக அப்படிப்பட்ட தியாகத்தைச் செய்தது இல்லை.எனவே தமிழ் நாட்டு மக்களை எப்பொழுதும் ஈழத் தமிழர்கள் மதிக்க வேண்டும். கட்சிகள் தங்களுடைய கட்சி அரசியலைச் செய்யும். ஏன் ஈழத்தமிழ் கட்சிகள் செய்யாத திருகுதாளங்களா? ஆனால் தமிழக மக்களை ஈழத் தமிழர்கள் என்றென்றும் மதிக்க வேண்டும்.

இந்த அடிப்படையில்தான் தமிழகத்தை அணுக வேண்டும்.தமிழக மக்கள் மீதுள்ள அளவு கடந்த மதிப்பின் காரணமாக அவர்களுடைய தலைவர்களை விமர்சிக்கும் போது அடிப்படை நாகரீகத்தைப் பேணவேண்டும்.

அதுமட்டுமல்ல அரசு இல்லாத தமிழ் மக்களுக்கு அயலில் உள்ள அரசு.அதுவும் பேரரசு இந்தியாதான்.இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களை ஆசைப்பதற்கு ஈழத் தமிழர்களுக்குள்ள ஒரே நொதியம் தமிழ் நாடுதான்.

மேலும்,இப்பொழுது தமிழ் மக்களின் அரசியல் பெருமளவுக்கு ஐநா மைய அரசியலாகவே காணப்படுகிறது. அண்மையில் ஐநா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் மக்கள் அந்த தீர்மானம் தங்களை ஏமாற்றி விட்டது என்று கடும் கோபமாக இருக்கிறார்கள். அந்தத் தீர்மானத்தை தமிழர்களுக்கு என்றுகூறி முன்நகார்த்திய நாடு எது? பிரித்தானியா. பிரித்தானியா முதலாவது கட்ட ஈழப் போரில் யாரோடு நின்றது? இலங்கை அரசாங்கத்தோடு நின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான போரில் இலங்கை அரசாங்கத்துக்கு எல்லா உதவிகளையும் பிரித்தானியா செய்தது. ஆயுத தளபாடங்கள், ஆலோசனைகள் மட்டுமல்ல, பிரித்தானிய கூலிப் படைகளும் களத்தில் இறக்கப்பட்டன. ஈழத் தமிழர்களை ஆட்சி செய்த மூன்று குடியேற்றவாத நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று.அரசோடு இருந்த தமிழ் மக்களை அரசற்ற மக்களாக மதிப்பிறக்கியதில் பிரித்தானியாவுக்கும் பங்கு உண்டு.அதோடு முன்கூறியது போல முதலாம் கட்ட ஈழப்போரில் இனஅழிப்பைச் செய்த அரசாங்கத்தை ஆதரித்த நாடுதான் பிரித்தானியா.

ஆனால் அதற்காக ஐநாவில் பிரித்தானியாவின் தலைமையில் தீர்மானம் கொண்டுவரப்படுவதை ஈழத் தமிழர்கள் எதிர்க்கிறார்களா? இல்லை. அதுதான் அரசியல்.அரசு இல்லாத தமிழ் மக்கள் அரசுகளை அரவணைத்தால்தான் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம். எல்லா இனப்பிரச்சினைகளும் சாராம்சத்தில் அனைத்துலகப் பிரச்சினைகள்தான். அவற்றுக்கு அனைத்துலகத் தீர்வுதான் உண்டு.எனவே ஈழத் தமிழர்கள் அரசுகளை அரவணைக்க வேண்டும்.

மேற்கு நாடுகளை,ஜநாவைக் கையாள்வதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் நொதிக்க வேண்டும்.இந்திய அரசைக் கையாள்வதற்கு,தமிழ் நாட்டு மக்கள் நொதிக்க வேண்டும்.எனவே ஈழத்தமிழர்கள் தமிழகத்தைப் பக்குவமாகக் கையாள வேண்டும்.

உலகிலேயே முதலாவது இன அழிப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தமிழகத்தில்தான்.உலகின் மிகப்பெரிய தமிழ்ச் சட்டமன்றம் அது. அதுபோலவே உலகில் இன அழிப்பு நினைவுச் சின்னங்களை தமிழர்கள் ஏனைய புலம்பெயர்ந்த நாடுகளில் நிறுவ முன்பு முதலாவது நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டது தஞ்சாவூரில்தான்.தமிழகத்தில்தான். எனவே தமிழகத்தை ஈழத் தமிழர்கள் பக்குவமாகக் கையாள வேண்டும். அரசு இல்லாத ஒரு மக்கள் கூட்டம் எவ்வளவுக்கு எவ்வளவு நண்பர்களைச் சம்பாதிக்கின்றதோ,அவ்வளவுக்கு அவ்வளவு அனைத்துலக அரங்கில் பலமாக நிற்கும்.

திருமாவின் உறவு தொடர்பான விடயம் தனிய,தமிழ் உணர்வோடு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அதைவிட ஆழமான பொருளில் இந்தியாவைக் கையாளுவது தொடர்பான ஒரு வெளியுறவு விவகாரமுந்தான்.தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான போட்டியும் மோதல் நிலையும் வெளியுறவுக் கொள்கை சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்துவது என்பது தமிழ்மக்கள் ஒரு தேசமாகத் திரள முடியாமல் தத்தளிக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

https://athavannews.com/2025/1452869

தீர்வுக்கு வழி ? கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்கோவில் நடந்த ஒரு நிகழ்வு - நிலாந்தன்

1 week ago

தீர்வுக்கு வழி ? கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்கோவில் நடந்த ஒரு நிகழ்வு - நிலாந்தன்

1002543278-1024x576.jpg

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் டில்கோ விருந்தினர் விடுதியில் ஒரு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. கலாநிதி குருபரனை பணிப்பாளராகக் கொண்ட சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான யாழ்ப்பாண கற்கை நிலை யத்தால் அந்த நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டது. இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் நிதி அனுசரணையோடு நடத்தப்பட்ட அந்த நிகழ்வில் 230க்கும் குறையாதவர்கள் பங்குபற்றினார்கள். பொதுவாக அது போன்ற நிகழ்வுகளில் அவ்வளவு தொகையினர் பங்குபற்றுவது குறைவு. ஆனால் அன்று மண்டபம் நிறைந்திருந்தது.

மூன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் நடந்த அந்த நிகழ்வில், நான்கு அம்சங்கள் இருந்தன. முதலாவது மேற்சொன்ன  சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான கற்கை நிலையத்தை அறிமுகப்படுத்துவது. இரண்டாவது, இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கைத் தீவில் இதுவரையிலும் இரண்டு சமூகங்களுக்கு இடையில் எழுதிக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களைச் சேகரிக்கும் டிஜிட்டல் தளத்தை அங்கு அறிமுகப்படுத்தியது. மூன்றாவது, மூத்த சட்டச் செயற்பாட்டாளர்,சட்டத்தரணி  ரட்ணவேல் அவர்களுடைய உரை. நான்காவது,நான்கு தமிழ்த் தேசிய கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வு.

நிகழ்வுக்கு தலைமை தாங்கிய குருபரன் அங்கு கூறியதுபோல தமிழ்த் தேசியப் பரப்பில் அவ்வாறான ஒரு சட்டச் செயற்பாட்டு  நிறுவனம் உருவாக்கப்படுவது என்பது முக்கியமானது. தேச  நிர்மாணத்தின் ஒரு பகுதி அது. தேசத்தை நிர்மாணிக்கத் தேவையான நிறுவனங்களை உருவாக்குவது. எவ்வளவுக்கு எவ்வளவு நிறுவன உருவாக்கிகள் ஒரு சமூகத்தில் தோன்றுகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்த சமூகம் திரட்சியுறும்;நொதிக்கும்; கூர்ப்படையும்.

அங்கு அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிற்றல் ஆவணக் காப்பகத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. முதலாவது இனப்பிரச்சினை தொடர்பில் இதுவரை தமிழ்த் தரப்பால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளின் தொகுப்பு.இரண்டாவது பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் என்பவற்றோடு தொடர்புடைய வழக்கு ஏடுகளை ஆவணப்படுத்துவது.

சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான கற்கை நிலையமும் “நூலகம்” நிறுவனமும் இணைந்து மேற்படி ஆவணங்களைச் சேகரித்து ஆவணப்படுத்தியுள்ள்ளன. இதுவும் தேச நிர்மாணத்தில் ஒரு பகுதிதான். அந்த நிகழ்வில் நூலகம் நிறுவனத்தின் பிரதிநிதியும் உரை நிகழ்த்தினார். அது ஒரு முழுமையான தொகுப்பு இல்லை என்றும் அதில் ஈடுபாடு கொண்டவர்கள் தமது பங்களிபின்மூலம் அதை முழுமைப்படுத்த  வேண்டும் என்றும்  அங்கு கூறப்பட்டது.

1921ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரையிலுமான சுமார் 104ஆண்டு காலப்பகுதியில்  தமிழ்த் தரப்பால் முன் வைக்கப்பட்ட அரசியலமைப்பு யோசனைகளும் இனப்பிரச்சினையோடு தொடர்புடைய உடன்படிக்கைகளும்,ஆவணங்களும்   அங்கே எண்ணிம வடிவத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு நூற்றாண்டுக்கு மேலான காலப்பகுதிக்குரிய அந்த ஆவணங்களைத் தொகுத்துப் பார்க்கும்போது ஓர் அடிப்படைக் கேள்வி எழுகிறது. தமிழ் மக்கள் ஏன் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமது அபிலாசைகளை அடைய முடியாமல் இருக்கிறார்கள்?

கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழ் தலைவர்கள் சரியாகவோ பிழையாகவோ பொருத்தமாகவோ,பொருத்தம் இன்றியோ ஏதோ ஒரு தீர்வு முன்மொழிவை முன்வைத்து சிங்களத் தலைவர்களோடு பேசியிருக்கிறார்கள். ஏதோ ஒர் இணக்கத்துக்கு வந்திருக்கிறார்கள். ஆவணங்களில் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். அதன்மூலம்,தமிழ்மக்கள் இந்தச் சிறிய தீவுக்குள் எப்பொழுதும் ஒரு தேசிய இனமாக ஏனைய இனங்களுடன் இணைந்து வாழ்வதற்குத் தயாராக இருந்திருக்கிறார்கள் என்பது அந்த ஆவணங்களைத் தொகுத்து பார்க்கும் பொழுது தோன்றுகிறது. தமிழ்த் தரப்பு தீர்வுக்குத் தயாரில்லை;அது பகல் கனவுகளை தீர்வு மேசையில் வைக்கின்றது; அந்தப் பகல் கனவுகளை அடைவதற்காக முயற்சிக்கின்றது; யதார்த்தமாகச் சிந்திப்பதில்லை; அதைவிட முக்கியமாக தமிழ்த் தரப்பு ஒன்றாக இணைந்து தீர்வு முன்மொழிவுகளை மேசையில் வைப்பதில்லை…போன்ற பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளுக்கும் அந்த ஆவணத் தொகுப்பில் பதில் உண்டு.

தமிழ்மக்கள் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கைத் தீவில் இணைந்து வாழும் விருப்பத்தை வெளிப்படுத்தும் விதத்தில் தீர்வு முன்மொழிவுகளை முன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயுதப் போராட்ட காலகட்டத்திலும்கூட திம்பு கோட்பாட்டில் தொடங்கி இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை வரையிலும் தமிழ்மக்கள் தீர்வு முன்மொழிவுகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலான காலப்பகுதியில் அந்தத் தீர்வு முன்மொழிவுகளில் பெரும்பாலானவற்றை நிராகரித்தது அல்லது உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டது அல்லது வாக்குறுதிகளை முறித்துக் கொண்டது சிங்களத் தலைவர்கள்தான். ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் சில யுத்த நிறுத்தங்களை முறித்ததற்காக தமிழ்த் தரப்பின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படலாம். ஆனால் தமிழ்மக்கள் தீர்வுக்குத் தயாரில்லை அல்லது தமிழ் மக்கள் பேச்சுவார்த்தைகளில் விசுவாசமாக இல்லை அல்லது தமிழ் மக்கள் பகல் கனவுகளை பேச்சுவார்த்தை மேசையில் வைக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் முழுவதும் உண்மையானவை அல்ல என்பதனை அந்த ஆவணத் தொகுப்பு எடுத்துக்கூறுகிறது.

மேலும் அந்த ஆவணத் தொகுப்புக்கூடாக ஒரு விடயம் துலக்கமாக வெளித் தெரிகிறது. அந்த விடயத்தை அங்கு பேசிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமாரும் சுட்டிக்காட்டினார்.”இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கத்தை இணங்க வைப்பதில் கணிசமான தூரத்துக்கு எடுத்துச்சென்ற ஓர் ஆவணம் இந்திய-இலங்கை  உடன்படிக்கை” என்று கஜன் சொன்னார். இதுவரையிலுமான இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில், சிங்கள பௌத்த அரசு கட்டமைப்புக்குள் இணைக்கப்பட்ட ஒரே தீர்வு முயற்சி என்பது இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழான பதின்மூன்றாவது திருத்தம்தான். சிங்கள பௌத்த அரச கட்டமைப்பின் ஒற்றை ஆட்சி பண்பை அது உடைக்கவில்லை என்ற காரணத்தால்தான் அந்த 13ஆவது திருத்தம் அங்கே இணைக்கப்பட்டது என்றும் கஜன் சுட்டிக்காட்டினார். அதாவது சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்புக்குள், யாப்புக்குள் இணைக்கப்பட்ட ஒரே தீர்வு முயற்சி அதுதான். ஆனால் அதுவும் கூட்டாட்சி பண்புடையது அல்ல.

1002543308.jpg

1002543302.jpg

இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால்,அந்தத் தீர்வு முயற்சி அதாவது இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு கீழான 13ஆவது திருத்தம் என்பது எத்தகைய ஓர் அரசியல் சூழலில் யாப்புக்குள் இணைக்கப்பட்டது என்பதுதான். ஒருபுறம் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம். இன்னொரு புறம் இந்தியப் பேரரசின் ராணுவ அழுத்தம்.

13வது திருத்தம் எனப்படுவது ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் விளைவு. அதேசமயம் இந்திய-இலங்கை உடன்படிக்கையின் கீழ் இந்திய அமைதி காக்கும் படையின் பிரசன்னத்தின் பின்னணியில்தான் அதுவும் சாத்தியமாகியது. அதுமட்டுமல்ல அந்தத் தீர்வில் தமிழ்மக்கள் கையெழுத்திடவில்லை. இலங்கையும் இந்தியாவும்தான் கையெழுத்திட்டன.

அதாவது கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலான காலப்பகுதியில் இனப்பிரச்சினை தொடர்பில் உருவாக்கப்பட்ட தீர்வுகளில் சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பின் யாப்புக்குள் உள்வாங்கப்பட்ட ஒரே தீர்வு அதுதான். ஆனால் அதையும் 38ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக வந்த இலங்கை அரசாங்கங்கள் அமுல்படுத்தவில்லை மட்டுமல்ல, அந்தத் தீர்வை எப்படி மேலும் தோலிருக்கச் சுளை பிடுங்கலாம் என்றுதான் சிந்தித்துச் செயல்பட்டிருக்கின்றன.

அதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையின் கீழ் கடந்த நான்கு தசாப்த காலத்துக்குள் உருவாக்கப்பட்ட ஒரு தீர்வு அது. ஆனால் அந்தத் தீர்வை அதாவது யாப்பின் அந்தப் பகுதியை நிறைவேற்றாமல் விடுவதற்குத்தான் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதுதான் கடந்த சுமார் நான்கு தசாப்த கால வரலாறு.

கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலான காலப்பகுதியில் இலங்கைத் தீவில் இனப் பிரச்சினைக்காக எழுதிக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் இரண்டே இரண்டு உடன்படிக்கைகள்தான் ஒப்பீட்டளவில் நீண்டகாலம் நின்று நிலைத்தன.

ஒன்று,இந்திய-இலங்கை உடன்படிக்கை.மற்றது, பிரபாகரன்-ரணில் உடன்படிக்கை. இரண்டு உடன்படிக்கைகளிலும் மூன்றாவது தரப்பின் பிரசன்னம் இருந்தது. இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பின்னணியில் இந்திய அமைதிகாக்கும் படை நாட்டுக்குள் இறக்கப்பட்டது. நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளில் ஸ்கண்டிநேவிய யுத்த நிறுத்தக் கண்காணிப்பு குழு நாட்டுக்குள் நின்றது.

இந்த இரண்டையும் தவிர மூன்றாவதாகக் கூறக்கூடியது ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம். ஆனால் இதில் ஐநா,அழுத்தத்தைப் பிரயோகிக்கின்ற அல்லது கண்காணிக்கின்ற ஒரு தரப்பாகச் செயற்படவில்லை. அதனால்தான் நிலைமாறு கால நீதியானது சுமந்திரன் கூறுவதுபோல”தோற்றுப்போன பரிசோதனையாக” முடிந்தது. அதைத் தோற்கடித்தது தமிழர்கள் அல்ல, சிங்களத் தரப்புத்தான்.

எனவே இப்பொழுது ஒரு தெளிவான சித்திரம் கிடைக்கிறது. தமிழ் மக்கள் போராடியதால்தான், பிராந்தியப் பேரரசாகிய இந்தியாவின் தலையீட்டினால்தான் பதின்மூன்றாவது திருத்தம்கூட சாத்தியமாகியது. தமிழ் மக்கள் போராடவில்லை என்றால் அதுவும் கிடைத்திருக்காது.

thumb_large_8-cccc.jpg

கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்கோ விருந்தினர் விடுதியில் நடந்த சந்திப்பில் உரை நிகழ்த்திய சித்தார்த்தன் ஒரு விடயத்தைத் தெளிவாகச் சொன்னார். அனுரவும் உட்பட எந்த ஒரு சிங்களத் தலைவரும் தமிழ் மக்களுக்குத்  தீர்வைத் தர மாட்டார்கள் என்று. குறிப்பாக பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற தீர்வை முன்வைத்த சந்திரிக்கா 2009க்குப்பின் இந்திய ஊடகம் ஒன்றினால் நேர்காணப்பட்டபோது, என்ன சொன்னார் என்பதனை அவர் சுட்டிக்காட்டினார். பேட்டி கண்டவர் கேட்கின்றார், ”இப்பொழுது உங்களுக்குச்  சந்தர்ப்பம் தரப்பட்டால் நீங்கள் முன்பு முன்வைத்த அந்த முன்மொழிவை நிறைவேறுவீர்களா?” என்று. அதற்குச் சந்திரிக்கா கூருகிறார் “Perhaps less”-“பெரும்பாலும் இல்லை”என்ற பொருள்பட.ஏனென்றால் இப்பொழுது விடுதலைப்புலிகள் இயக்கம் இல்லை என்பதால் என்றும்  கூறியுள்ளார்.

மேலும் சித்தார்த்தன் ஒரு விடயத்தைச் சொன்னார். நிலைமாறு கால நீதியின் கீழ், புதிய யாப்பு ஒன்றை உருவாக்குவதற்காக உழைத்தபோது, உருவாக்கப்பட்ட குழுக்களில் ஒன்றில் அவரும் அங்கம் வகித்தார். அக்காலகட்டத்தில் சம்பந்தர் அடிக்கடி தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளை வழங்குவார். “அடுத்த தீபாவளிக்குத் தீர்வு அடுத்த வருஷப்பிறப்புக்குத் தீர்வு” என்று சம்பந்தர் அடிக்கடி நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கு வழங்கி வந்தார். ஒருமுறை சித்தார்த்தன் இதுதொடர்பாக சம்பந்தரிடம் கேட்டிருக்கிறார். எதற்காக அப்படிக் கூறுகிறீர்கள்? இதில் நாங்களும் சம்பந்தப்பட்டிருப்பதனால் மக்கள் எங்களிடமும் கேட்கிறார்கள், என்று. அதற்கு சம்பந்தர் சொன்னாராம், “இந்த யாப்புருவாக்க முயற்சியில் தமிழ்த் தரப்பின் பிரதிநிதியாக நான் ஈடுபட்டு வருகிறேன். இந்த முயற்சி வெற்றி பெறாது என்று நானே  சொன்னால், பிறகு எதற்கு  அதில் நான் ஈடுபடுகிறேன் என்று மக்கள் கேட்பார்கள். எனவே நான் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளை வழங்க வேண்டியுள்ளது” என்ற பொருள்பட.

இதைச் சொன்ன சித்தார்த்தன் மேலும் ஒரு விடயத்தைச் சொன்னார், அந்த முயற்சி வெற்றி பெறாது என்பது சம்பந்தருக்கும் தெரியும் என்று. அதாவது சம்பந்தர் தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியாகப்  பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வந்திருக்கிறார். இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், சம்பந்தர் தனது மக்களுக்கு உண்மையைச் சொல்லவில்லை.

மூன்றாவது தரப்பின் அழுத்தம் இல்லாமல் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு ஒரு தீர்வை நோக்கி வளையாது என்பதனை புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், 2016இல், மன்னாரில், ஆயர் இல்லத்துக்கு அருகே நடந்த,”தடம் மாறும்  தமிழ்த்தேசியம்?”என்ற கருத்தரங்கில், நான் சம்பந்தருக்குச் சுட்டிக்காட்டினேன். அப்பொழுது சம்பந்தர் என்னை நோக்கி, தலையைச் சாய்த்து, மண்டைக்கண்ணால் பார்த்துக்கொண்டு அழுத்தம் திருத்தமான குரலில் சொன்னார் “சிங்களத் தலைவர்கள் ஒரு தீர்வைத் தர மாட்டார்கள் என்று கூறுவது வரண்ட வாதம்; வறட்டு வாதம்” என்று. ஆனால் எது வறண்ட வாதம் என்பதனை வரலாறு நிரூபித்தது. தந்தை செல்வா கலையரங்கின் கூரை பதிந்த அறைக்குள் சம்பந்தரின் உடல் தனித்துவிடப்பட்ட இரவில் வரலாறு தான்  ஒரு கண்டிப்பான கிழவி என்பதை நிரூபித்தது.

எனவே ஒரு நூற்றாண்டுக்கு மேலாகக் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், சித்தார்த்தன் கூறுவதுபோல, இப்போதுள்ள அனுரவும் உட்பட எந்த ஒரு சிங்கள தலைவரும் தமிழ் மக்களுக்குத் தாமாக முன்வந்து தீர்வைத் தர மாட்டார்கள் என்பதுதான். கஜேந்திரக்குமார் அங்கே சுட்டிக்காட்டியதுபோல,சிங்கள பௌத்த ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்புக்குள் இணைக்கப்பட்ட ஒரே ஒரு தீர்வு 13ஆ வது திருத்தம்தான். அதுகூட தமிழ்மக்களின் இரத்தத்தால் வரையப்பட்டது; இந்திய பேரரசின் அழுத்தம் இருந்தது.

எனவே தமிழ் மக்கள் போராடவில்லை என்றால்,மூன்றாவது தரப்பு ஒன்றின் அழுத்தம் இல்லையென்றால் தமிழ் மக்களுக்கு இனியும் தீர்வு கிடைக்காது.

இந்த இடத்தில்,கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்கோவில் கூடிய கட்சிகளும் உட்பட எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் இரண்டு முக்கிய கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டும். முதலாவது கேள்வி, சமஸ்ரியை அடைவதற்கு தமிழ்க் கட்சிகளின் வழி வரைபடம் என்ன? இந்தக் கேள்வியை சில ஆண்டுகளுக்கு முன் விக்னேஸ்வரன் அப்பாவித்தனமாக கேட்டிருந்தார். அவரிடம் அதற்குப் பதில் இல்லை என்பதனால் அப்படிக் கேட்டிருந்தார்.

இரண்டாவது கேள்வி. மூன்றாவது தரப்பு ஒன்றின் அழுத்தம் இல்லாமல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு இல்லை என்பதே ஒரு நூற்றாண்டு காலமாக  கற்றுக்கொண்ட பாடம். அப்படியென்றால் அந்த மூன்றாவது தரப்பை அணைத்து எடுப்பதற்கு தமிழ் மக்களிடம் உள்ள வழிவரைபடம் என்ன?

https://www.nillanthan.com/7931/

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?

1 week ago

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?

Veeragathy Thanabalasingham

on November 14, 2025

TNPF-against-13A-13.jpeg?resize=1200%2C5

Photo, Tamil Guardian

அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் உருவாகுவதற்கு அரசியல் நிர்ப்பந்தங்களே காரணம். இலங்கை தமிழரசு கட்சிக்கு அவ்வாறு எத்தகைய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டதோ தெரியவில்லை. மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதற்கு அதன் தலைவர்கள் கடந்த வாரம் விருப்பத்தை வெளிப்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது.

வவுனியா நகரில் நவம்பர் 5ஆம் திகதி தமிழரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் மத்தியில் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் சகிதம் உரையாற்றிய பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தங்களது கட்சியின் நிலைப்பாட்டை தெரியப்படுத்தியிருப்பதாகவும் அவர்கள் அதற்கு இணங்கி வந்தால் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படமுடியும் என்றும் கூறினார்.

அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டம் மீதான விவாதத்தில் தமிழரசு கட்சியின் நாடாளுமன்றக்குழு எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்தும் வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் மத்திய குழு கூட்டத்தில் பிரதானமாக ஆராயப்பட்டது என்று கூறிய சுமந்திரன் முதன்மையான தமிழ் அரசியல் கட்சி என்ற வகையில் தமிழரசு கட்சி மற்றைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு அழைப்பு விடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

முன்னர் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளான தமீழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) ஆகியவையும் வேறு சில குழுக்களுமே ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியாக மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலமாக இயங்கிவருகின்றன. அவற்றின் தலைவர்களை நோக்கியே சுமந்திரன் இந்த அழைப்பை விடுத்திருக்கிறார்.

ஜனநாயக தமிழ்த்  தேசியக் கூட்டணியின் தலைவர்களுடன் தலைவர் சிவஞானமும் தானும் ஏற்கெனவே கலந்துரையாடியிருப்பதாகவும் தாங்கள் தெரிவித்த நிலைப்பாடுகளை அவர்கள் ஏற்றுக் கொண்டால் முன்னரைப் போன்று தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறிய சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடனும் இது தொடர்பாக பேசலாமா என்று மத்திய குழுவில் ஆராயப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த அழைப்பை உடனடியாகவே வரவேற்ற ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் மீண்டும் இணைந்து செயற்படுவதற்கு தமிழரசு கட்சி முன்வைத்திருக்கும் முன்னிபந்தனைகள் எவை என்று தங்களுக்குத் தெரியவில்லை என்றும் இரு தரப்பினரும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக எந்தவிதமான பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என்றும் குறிப்பிட்டார். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக நிபந்தனைகளை விதிப்பது ஏற்புடைதல்ல என்றும் அவர் கூறினார்.

ஜனநாயக தமிழ்த் தேசியக்  கூட்டணி ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய அமைப்பாக இயங்கி வருகிறது. தனியான யாப்பையும் சின்னத்தையும் கொண்டிருக்கும் அந்தக் கூட்டணி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருக்கிறது. அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏற்கெனவே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில் அந்தக் கூட்டணி  செயற்பட்டு வருகிறது.

ஆனால், அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் மாகாண சபைகள் முறைமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கொண்டிருக்கும் நிலைப்பாடு காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அசௌகரியத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழரசு கட்சியின் அழைப்பை பிரேமச்சந்திரன் வரவேற்றிருப்பது இரு தரப்பினருக்கும் இடையிலான புரிந்துணர்வை மேலும் கேள்விக்கு உள்ளாக்குகிறது.

அதேவேளை, இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைக்கு தமிழரசு கட்சி முன்னிபந்தனைகளை விதிப்பது ஏற்புடையது அல்ல என்று கூறிய பிரேமச்சந்திரன் எதிர்கால தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிவித்த கருத்துக்கள் உண்மையில் முன்னிபந்தனைகள் போன்றே அமைந்திருக்கின்றன. முன்னைய கூட்டமைப்பில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் அந்தக் கருத்துக்களை அவர் முன்வைத்திருக்கிறார் என்பது வெளிப்படையானது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகவோ அல்லது எந்தவிதமான யாப்பையும் கொண்டதாகவோ இருக்கவில்லை. மீண்டும் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பாக இயங்க வேண்டுமானால் அதற்கென்று தனியான யாப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதுடன் அங்கத்துவ கட்சிகளின் தனித்துவத்தைப் பேணக்கூடியதாக இருக்க வேண்டும். தங்களை முதன்மையான அல்லது தலைமைத்துவ கட்சி என்று தமிழரசு கட்சி அழைத்துக்கொள்வதாக இருந்தாலும் கூட, சகல அங்கத்துவக் கட்சிகளையும் அரவணைத்து மெய்யாகவே புரிந்துணர்வுடன் கூட்டாகச் செயற்படுகின்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரேமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்கள் மகாநாட்டில் தெரிவித்தார்.

காலஞ்சென்ற மூத்த தமிழ்த் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தலைமையில் 2001ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போர்க் காலத்தில் சுயாதீனமான முடிவுகளை எடுத்துச் செயற்பட முடியவில்லை. அதற்கான காரணம் புரிந்து கொள்ளக்கூடியதே. விடுதலை புலிகள் இயக்கமே இலங்கை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று நாடாளுமன்றத்திலும் வெளியுலகிலும் குரல் கொடுப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு இயக்கம் போன்றே கூட்டமைப்பு செயற்பட்டது.

உள்நாட்டுப்போரின் முடிவுக்குப் பிறகு தமிழ் மக்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயம் ஒன்று இல்லாத சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் பலம் பொருந்திய ஒரு ஜனநாயக அரசியல் இயக்கமாக கட்டியெழுப்புவதற்கு சம்பந்தன் உட்பட தமிழ் அரசியல்வாதிகள் தவறியது குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

கஜேந்திரகுமாரின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2010 ஏப்ரல் பொதுத்தேர்தலின்போது கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது. பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். 2015 ஆகஸ்ட் பொதுத் தேர்தலின்போது கூட்டமைப்பில் போட்டியிட்ட போதிலும், 2017ஆம் ஆண்டு அதிலிருந்து வெளியேறியது. இரு கட்சிகளும் வெளியேற்றத்துக்கான தங்கள் தரப்பு காரணங்களை முன்வைத்தன என்ற போதிலும், தேர்தல் அரசியலும் அதற்கு ஒருகாரணி.

கூட்டமைப்பில் இருந்து புளொட்டும் ரெலோவும் 2022ஆம் ஆண்டு வெளியேறின. உள்ளூராட்சி தேர்தல்கள் கலப்பு தேர்தல் முறையில் நடத்தப்படுவதன் காரணமாக கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டால் கணிசமான  ஆசனங்களைக் கைப்பற்றலாம் என்றும் தேர்தலுக்கு பிறகு உள்ளூராட்சி சபைகளின் நிருவாகங்களை கூட்டாக அமைக்க அது வசதியாக இருக்கும் என்றும் தமிழரசு கட்சி முன்வைத்த யோசனையை அவ்விரு கட்சிகளும் ஆட்சேபித்தன.

ஆனால், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அரசாங்க காலத்தில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெறவில்லை. இறுதியாக தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே கடந்த மேமாதத்தில் அந்த தேர்தல்களை நடத்தியது. பல்வேறு அணிகளாகப் பிரிந்து நின்று போட்டியிட்ட தமிழ்க் கட்சிகள் உள்ளூராட்சி நிர்வாகங்களை அமைப்பதில் வடக்கிலும் கிழக்கிலும் எவ்வாறு நடந்துகொண்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. தற்போது அரசாங்கம் மாகாண சபை தேர்தல்களை அடுத்த வருடத்தில் நடத்துமா இல்லையா என்ற கேள்வி  எழுந்திருப்பதற்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மீண்டும் செயற்படுவதற்கான விருப்பத்தை தமிழரசு கட்சி வெளிப்படுத்தியிருக்கிறது.

சகல தமிழ்க் கட்சிகளையும் இணைத்து செயற்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியிருக்கும் சுமந்திரன் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ்க் கட்சிகள் ஒரே நிலைப்பாட்டை முன்வைக்குமா என்ற கேள்வி எழுந்திருப்பதாக கூறியிருக்கிறார். கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்திடம் தமிழரசு கட்சி முன்வைத்த யோசனையை மற்றைய தமிழ்க் கட்சிகளுக்கு காண்பிக்கத் தீர்மானித்திருப்பதாகவும் அந்த யோசனைகள் தொடர்பில் அவர்கள் இணங்கிவந்தால் அதை பொதுநிலைப்பாடாக அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

சகல தமிழ்க் கட்சிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவருவது நடைமுறையில் ஒருபோதும் சாத்தியமில்லை. ஆனால், பெரும்பான்மையான கட்சிகளை அரவணைத்து மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்குவதாக இருந்தாலும் கூட, கடந்த காலத்தில் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளை தோற்றுவித்த காரணிகள் மீண்டும் தலைகாட்டாமல் இருப்பதை உறுதி செய்வது முக்கியமானதாகும்.

பிரேமச்சந்திரன் தெரிவித்த கருத்துக்கள் குறித்து தமிழரசு கட்சியின் தலைவர்களிடமிருந்து உடனடியாக பிரதிபலிப்பு எதுவும் வரவில்லை. அவர்களும் கடந்த காலத்தின் கூட்டமைப்பு அனுபவங்களை கருத்தில் எடுத்து மீண்டும் அநாவசியமான முரண்பாடுகள் தோன்றாமல் இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டியது அவசியமாகும். மற்றைய தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை, தமிழரசு கட்சி மேலாண்மை செலுத்தும் மனோபாவத்துடன் நடந்துகொள்கிறது என்பதே பிரதானமான முறைப்பாடாக இருந்து வந்தது.

எது எவ்வாறிருந்தாலும், மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதில் தமிழரசு கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் ஆர்வமும் அதற்கு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தரப்பில் இருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கும் நேர்மறையான பிரதிபலிப்பும் நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டியவை. ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் காலந்தாழ்த்தாமல் விரைவில் தொடங்க வேண்டும்.

தமிழ்க் கட்சிகள் பல்வேறு அணிகளாகச் சிதறியிருப்பதால் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதற்கான அணுகுமுறைகளைப் பொறுத்தவரை ஒருமித்த நிலைப்பாடுகளை எடுக்க முடியாமல் இருக்கிறது என்று தமிழ் மக்கள் நீண்ட நாட்களாகவே கவலையடைந்திருக்கிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் தேசிய மக்கள் சக்திக்கு அவர்கள் பெருமளவில் வாக்களித்ததற்கான காரணங்களில் அதுவும் ஒன்று.

போரின் முடிவுக்குப் பின்னரான காலப்பகுதியில் சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலைவரங்கள் வேண்டி நிற்பதற்கு ஏற்றமுறையில் விவேகமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான அரசியல் அணுகுமுறைகளை கடைப்பிடிப்பதில் தமிழ்க் கட்சிகள் அக்கறை காட்டவில்லை என்பது தமிழ் மக்களின் முக்கியமான மனக்குறை. வெறுமனே ஒன்றிணைந்து செயற்படுவது மாத்திரம் போதுமானதல்ல. நீண்டகால அரசியல் இலக்குகளைப் பற்றி மாத்திரம் பேசிக் கொண்டிருக்காமல் தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளை கையாளுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

சுமந்திரன் கூறிய தகவல்களின் பிரகாரம் நோக்கும்போது தமிழ்க் கட்சிகள் ஒருங்கிணைந்து தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு யோசனையை முன்வைப்பதே மீண்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக செயற்பட வேண்டும் என்ற அக்கறையின் அடிப்படை நோக்கம் என்று தெரிகிறது. சகல தமிழ்க் கட்சிகளுமே ஒற்றையாட்சியை எதிர்ப்பதுடன் சமஷ்டி முறையின் அடிப்படையிலான அரசியல்  தீர்வு ஒன்றையே தங்களது கொள்கையாகவும் கொண்டிருக்கின்றன. அதனால் ஒருமித்த நிலைப்பாட்டை முன்வைப்பதில் எந்த பிரச்சினையும் எழுவதற்கில்லை.

அரசாங்கம் புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை முன்னெடுக்கும்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனையை தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து முன்வைப்பதற்கு புறம்பாக, அதற்கு முன்னரான காலப்பகுதியில் இடைக்காலத் தீர்வு தொடர்பில் குறிப்பாக, மாகாண சபைகள் முறைமையை பயன்படுத்துவதிலும் கருத்தொருமிப்புடன் செயற்பட வேண்டும்.

மாகாண சபைகள் முறையைப் பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்க்கட்சிகள் பலவற்றின் மத்தியில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் அக்கறை மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற தமிழரசு கட்சியின் விருப்பத்துக்கு வலுச்சேர்ப்பதாக அமையும். மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்தவும் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்கக்கூடிய வெகுஜன ஜனநாயக அரசியல் இயக்கத்தை உடனடியாக முன்னெடுப்பது பரந்தளவில் தமிழ்க் கட்சிகளும் குழுக்களும் ஓரணியில் வருவதற்கு பெரும் உத்வேகத்தைக் கொடுக்கும். நடைமுறைச் சாத்தியமான இடைக்காலத்  தீர்வுகளைப் பற்றி அக்கறைப்படாத எதிர்மறையான அரசியல் கலாசாரத்துக்கு தமிழர் அரசியல் சமுதாயம் விடைகொடுக்க வேண்டும்.

வீரகத்தி தனபாலசிங்கம்

https://maatram.org/articles/12419

2024 குடித்தொகை மதிப்பீடு: மலையக மக்களை மையப்படுத்தி ஒரு சில அவதானிப்புகள்

1 week 3 days ago

2024 குடித்தொகை மதிப்பீடு: மலையக மக்களை மையப்படுத்தி ஒரு சில அவதானிப்புகள்

Estate-workers_2.jpg?resize=1200%2C550&s

Photo, THE HINDU

மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 ஆண்டுகள் நிறைவுற்ற (மலையகம் 200) வரலாற்று நிகழ்வின் பின்னர், அவர்களின் இருப்பு ஒரு பாரிய சனத்தொகைப் புதிரை (Population Puzzle) எதிர்கொண்டுள்ளது. 2012ஆம் ஆண்டு குடித்தொகைக் கணிப்பீட்டுடன் ஒப்பிடும்போது, 2024ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளின்படி, மலையக மக்களின் குடித்தொகை, தீவிரமாக வீழ்ச்சியடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இக்கட்டுரையானது குடித்தொகை வீழ்ச்சிக்கான காரணங்களையும், அது மலையகத் தமிழ்ச் சமூகத்தின் தேசிய அடையாள கட்டுமானம், அரசியல் பேரம் பேசும் சக்தி மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றின் மீது ஏற்படுத்தும் ஆழமான தாக்கங்களை ஆராய முற்படுகின்றது. இக்கட்டுரை குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தின் தரவுகள், ஊடக அறிக்கைகள், சமூக ஊடக செய்திகள், மற்றும் கட்டுரையாசிரியர்கள் தனிப்பட்டத் தொடர்புகளைக் கொண்டு மலையகத்தின் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், அரச அதிகாரிகள் மற்றும் வேறும் பலருடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகள் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் வாத பிரதிவாதங்களுக்கு உட்படுத்தக்கூடியவையாகும்.

சனத்தொகை கணிப்பீடு என்பது ஒரு நாட்டின் சமூகப் பொருளாதார அபிவிருத்தி குறித்த திட்டங்களை தீட்டுவதற்கு அதற்கு அவசியமான நிதி மற்றும் பௌதீக வளங்களை ஒதுக்கீடு செய்வதற்கு பெரிதும் அவசியமாகும். குடிசன மதிப்பீட்டின் மூலமே அரசாங்கம் சமூக (கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, போக்குவரத்து, குடிநீர், பாதைகள், வறுமை ஒழிப்புத்திட்டங்கள்) பொருளாதார நிலை மற்றும் குடித்தொகைக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்பவற்றினை அறிந்துக்கொண்டு அதற்கேற்ப கொள்கைத் திட்டங்கள் தீட்டுகிறது. குடிசன மதிப்பீட்டு தரவுகளை அடிப்படையாகக் கொண்டே மாவட்ட ரீதியான நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகள் இடம்பெறுகின்றன. குடித்தொகை வளர்ச்சி குறைந்த மாவட்டத்திற்கு நாடாளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டு அது அதிக குடித்தொகை வளர்ச்சியினைக் கொண்ட மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்றது. இவ்யதார்த்தத்தினை விளங்கிக்கொண்டே மலையக மக்களின் சனத்தொகை வீழ்ச்சியினை நோக்க வேண்டும்.

இலங்கை மலையகத் தமிழ் மக்களின் குடித்தொகை குறித்த வரலாற்று ரீதியான பார்வை

19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் (1820களிலிருந்து) தேயிலைத் தோட்டப் பயிர்ச்செய்கைக்காக பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் மலையகத் தமிழர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் அழைத்துவரப்பட்டனர். 1948ஆம் ஆண்டு வரை இவர்கள் பருவகால தொழிலாளர்களாகக் காணப்பட்டனர். குறிப்பாக இந்தியாவில் இருந்து வருவதும் செல்வதுமாக இருந்தனர். ஆகவே, அரசாங்கத்தின் மக்கள் தொகைக் கணிப்பீட்டில் இவர்கள் இலங்கையில் வாழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளப்போதும் இச்சமூகத்தின் இன அடையாளம் மற்றும் மக்கள் தொகைப் பதிவு என்பன வரலாற்று ரீதியாக ஒழுங்கான முறையில் இடம்பெறவில்லை.

ஆரம்பகால மக்கள் தொகைக் கணிப்பீடுகளில், இந்திய வம்சாவளித் தமிழர்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டனர் என்பதில் தெளிவின்மை இருந்தது. 1881ஆம் ஆண்டு முதல் 1901ஆம் ஆண்டு வரையிலான மூன்று கணிப்பீடுகளில், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் என்ற வகைப்பாட்டின் கீழேயே கணிப்பிடப்பட்டிருந்தனர். 1911ஆம் ஆண்டு முதல் சனத்தொகை கணிப்பீட்டில் இவர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றே அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர். அண்மைக்காலங்களில் மலையகத் தமிழர் என்ற அடையாள கருத்தாடல் மற்றும் அதனுடன் இணைந்த போராட்டங்கள் தீவிரமாக எழுச்சிப்பெற்றதன் காரணமாக, 2024ஆம் ஆண்டு கணிப்பீட்டில் இந்தியத் தமிழர் மற்றும் மலையகத் தமிழர் (இந்தியத் தமிழர்/ மலையகத் தமிழர்) என்ற இரு சொற்பதங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.

1911ஆம் ஆண்டுக்குப் பிந்தைய மக்கள் தொகைக் கணிப்பீடுகளில் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் நிலையினை பின்வரும் அட்டவணையில் காணலாம்.

அட்டவணை 1: இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் சனத்தொகைப் பரம்பல் (1911–2012)

%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%

(ஆதாரம்: Dept.of. Census and Statistics, General Report 1981 & Census of Population and Housing Sri Lanka, 2012)

சனத்தொகைக் குறைவின் மிக முக்கியமான புறக்காரணி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களே ஆகும். 1971ஆம் ஆண்டின் பின்னர் 1984ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் (1964) மற்றும் இந்திரா-சிறிமா ஒப்பந்தம் (1974) காரணமாக 446,338 பேர் இந்தியாவிற்குத் திரும்பினர். இந்தக் கட்டாய வெளியேற்றத்தின் விவரம் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.

அட்டவணை 2; தாயகம் திரும்பிய இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் (1971–1984)

%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%

(ஆதாரம்: Dept.of.Census and Statistics General Report 1981 & Central Bank of Srilanka, Economic and Social statistics -1992)

மலையகத் தமிழரின் மக்கள் தொகை பெருக்கம்: ஓர் ஒடுக்கப்பட்ட இனத்தின் மந்த வளர்ச்சி

இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்களிடையே மக்கள் தொகை பெருக்க வீதம் இலங்கையின் ஏனைய சமூகங்களுடனும், தேசிய சராசரியுடனும் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. இதற்கு மலையக மக்களின் சமூக பொருளாதார நிலை தொடர்ந்தும் மோசமான நிலையில் காணப்படுதல், தொடர்ச்சியான நிறுவனமயப்படுத்தப்பட்ட பாகுபாடுகள், ஒதுக்கல்கள் போன்ற காரணிகளும் செல்வாக்கு செலுத்தியிருக்கலாம்.

மலையக மக்களின் குடித்தொகை வளர்ச்சி வீதமானது (வருடாந்த சராசரி) நீண்டகால வரலாற்றில் ஏனைய இனங்களுடன் ஒப்பிடும்போது குறைவாகவே இருந்துள்ளது. 1911 முதல் 1981 வரையிலான காலப்பகுதியின் வளர்ச்சி வீகிதம் மற்றும் 1981 முதல் 2012 வரையிலான மொத்த பெருக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த யதார்த்தம் உறுதிப்படுத்தப்படுகிறது. இதனை அட்டவணை மூன்றில் காணலாம்.

அட்டவணை 3: இனங்களிடையேயான வளர்ச்சி வீதம் (வருடாந்த சராசரி)

%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%

(ஆதாரம்: Dept.of.Census and Statistics, 1981 ரூ 2012 அறிக்கைகள்)

இச்சமூகத்தின் வளர்ச்சி அளவு 1946 – 1953 காலப்பகுதியில் 3.16 ஆக அதிகரித்துக் காணப்பட்டமைக்கு, அக்காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து சற்று அதிகரித்த தொழிலாளர் வருகையே காரணமாகும். 1971 – 1981 காலப்பகுதியில் இந்தியத் தமிழர்களின் வளர்ச்சி வீதம் -3.83 என்ற கடுமையான எதிர்மறை நிலையை அடைந்தது. இதற்குக் காரணம், சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் போன்ற அரசியல் உடன்படிக்கைகளினால் பெரும் எண்ணிக்கையிலானோர் தாயகம் திரும்பியமையே பிரதான காரணமாகும்.

1981 தொடக்கம் 2012 வரையான 31 வருட காலப்பகுதியில் தேசிய ரீதியில் மொத்தமாக 37.1 வளர்ச்சி காணப்பட்டபோதிலும், மலையக மக்களின் வளர்ச்சி 9.2 ஆக மட்டுமே காணப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியைவிட மிகவும் குறைவாகும். இதன் இறுதி விளைவாக, இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியின் பின்னர் (1953), சிங்கள பெரும்பான்மையினரை அடுத்து இரண்டாவது நிலையில் இருந்த இச்சமூகம், 1963 முதல் 1971 வரை மூன்றாம் நிலையிலும், தற்போது நான்காவது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மலையக மக்களின் குறைந்த சனத்தொகை வளர்ச்சி வீதத்திற்குக் காரணமாக குறைந்த வாழ்க்கைத்தரம், பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்துள்ள நகரங்களை நோக்கிய குடிப்பெயர்வுகளும் காரணமாக உள்ளது. இவை தவிர்ந்த, உள்ளார்ந்த உயிரியல் மற்றும் சமூக – ஆரோக்கியக் காரணிகளும் முக்கியமானவை. இவற்றைவிட, 1990 களில் இருந்து பெருந்தோட்டப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த திட்டமிட்ட குடும்பக் கட்டுப்பாட்டுத் நடவடிக்கைகள் குறைந்த சனத்தொகை வளர்ச்சி வீதத்திற்கு முக்கியமானதோர் காரணமாகும். இது தொடர்பாக தேசிய சர்வதேசிய ரீதியாக ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. இலங்கை அரசாங்கம் பெருந்தோட்டக் கம்பனிகளின் உதவியுடன் கட்டாய குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தினை முன்னெடுத்தது. நாட்டின் ஏனைய பிரிவினர்களுடன் 2012 மற்றும் 2024ஆம் ஆண்டு சனத்தொகை வளர்ச்சியினை ஒப்பிடும் போது, 2024ஆம் ஆண்டு மலையகத்தில் 27 விகித சனத்தொகை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது மிகவும் அதிகமாகும். இலங்கைத் தமிழர்களின் குடித்தொகை 18 விகிதத்தினாலும் முஸ்லிம்களின் குடித்தொகை 20 விகிதத்தினாலும் அதிகரித்துள்ளது.

இச்சமூகத்துப் பெண்கள் பின்வரும் கடுமையான சூழலை எதிர்கொள்கின்றனர்.

  • வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு.

  • சுத்திகரிக்கப்பட்ட நீர் வசதி போதிய அளவில் இல்லாமை.

  • சுகாதாரம் தொடர்பான போதிய முற்காப்பு அறிவின்மை.

  • போதிய வீட்டு வசதி இல்லாமை.

  • கடுமையான தொழில் சூழல்.

  • பாலியல் மற்றும் மீள் உற்பத்தி சுகாதாரம் (sexual and reproductive health) தொடர்பான போதிய விழிப்புணர்வின்மை

பெருந்தோட்ட மக்களது ஆரோக்கியம் தொடர்பாகக் கிடைக்கக்கூடிய சிசு மரண வீதம் (Infant Mortality Rate) மற்றும் இரத்தச் சோகை (Anaemia) பற்றிய தகவல்கள், இச்சமூகத்தினரின் குறைவான வாழ்க்கைத்தரத்தின் நிலையை வலுவூட்டுகின்றன. தோட்டப்புறங்களில் சிசு மரண வீதம் தேசிய சராசரியை விட அதிகமாகவும், ஊட்டச்சத்துக் குறைபாடு, எடை குறைந்து பிள்ளைகளின் பிறப்பு என்பன தேசிய சராசரியை விட இரண்டு மடங்கிற்கு மேலாகவும் காணப்படுவதைக் காட்டுகிறது. இவ்வாறான பின்தங்கிய வாழ்க்கைத்தர நிலைமைகள் காரணமாகவே இனப்பெருக்கம் குறைந்து, அம்மக்களின் மக்கள் தொகை பெருக்கத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த கலந்துரையாடல்கள் மற்றும் விழிப்புணர்வு என்பன அவசியமாகும். இத்தகைய வேலைத்திட்டங்களை நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தாமல் ஏனைய மாவட்டங்களிலும் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய வேலைத் திட்டங்களை தற்போது ஒரு சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மாத்திரமே மேற்கொண்டு வருகின்றன.

2024 சனத்தொகை கணக்கெடுப்பு மீதான பார்வை

2024ஆம் ஆண்டு சனத்தொகை கணிப்பீடு இன அடிப்படையில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை பின்வரும் அட்டவணை தெளிவாகக் காட்டுகிறது.

அட்டவணை 4 : இனரீதிக்கு ஏற்ப சனத்தொகை மற்றும் வருடாந்த சராசரி அதிகரிப்பு விகிதம் 2012 மற்றும் 2024

Screenshot-2025-11-12-101308.png?resize=

ஆதாரம்: Dept.of.Census and Statistics, 2024

2012ஆம் ஆண்டில் 839,504 ஆக இருந்த இந்தியத் தமிழர்/ மலையகத் தமிழர் எண்ணிக்கை, 2024 இல் 600,360 ஆகக் குறைந்துள்ளது. அதாவது, சுமார் 239,144 பேர் குறைந்துள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இவர்களின் வீதம் 4.1 லிருந்து 2.8 ஆகச் சரிந்துள்ளது.

மலையக மக்களின் வருடாந்த சராசரி அதிகரிப்பு வீதம் -2.6 ஆகக் காணப்படுகின்றது. இது இயற்கையான வீழ்ச்சியாகக் கருத முடியாது. மாறாக இதில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. மறுபுறமாக,  இலங்கைத் தமிழரின் எண்ணிக்கை 11.1 லிருந்து 12.3 ஆக அதிகரித்துள்ளதுடன், அவர்களின் வருட சராசரி அதிகரிப்பு வீதம் 1.3 ஆக உள்ளது. இது, மலையக மக்களின் வீழ்ச்சியும், இலங்கைத் தமிழர்களின் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்ற வாதத்தினை வலுப்படுத்துகிறது.

அட்டவணை 5 : மாவட்டம் மற்றும் இனத்தொகுதிக்கு ஏற்ப சனத்தொகையின் பரம்பல் 2012 மற்றும் 2024

Screenshot-2025-11-12-102145.png?resize=

ஆதாரம்: Dept.of.Census and Statistics, 2024

மலையக மக்கள் இலங்கைத் தமிழராகப் பதிவு செய்யப்பட்டிருப்பதன் மிகத் தெளிவான ஆதாரத்தை, அவர்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களின் இன விகித மாற்றங்கள் மூலம் காணலாம். மேலுள்ள அட்டவணையில் பதுளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் மலையக மக்களின் குடித்தொகை சடுதியாக வீழ்ச்சியடைந்திருப்பதனையும் அதனோடு இணைந்த வகையில் இலங்கைத் தமிழர்களின் குடித்தொகை பெரியளவில் வளர்ச்சிக்கண்டிருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது. மேலும், கொழும்பு மாட்டத்தில் சுமார் 300,000 இலட்சம் தமிழர்கள் (இலங்கை மற்றும் மலையகத் தமிழர்கள்) வாழுகின்றார்கள். ஆயினும், கணிப்பீட்டுத் தரவுகளைப் பார்க்கும் போது இவ்விரு சமூகத்தின் குடித்தொகையிலும் எந்த ஒரு பெரிய மாற்றமும் ஏற்படவில்லை என்பதனை அடையாளம் காண முடிகின்றது. இது குறித்த தரவுகளையும் தேட வேண்டும். ஏனைய மாவட்டங்களில் இலங்கை மற்றும் மலையகத் தமிழர்களின் குடித்தொகைக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கொழும்பு மாவட்ட நிலைமையுடன் ஒப்பிடும் போது இது ஒரு புதிராகக் காணப்படுகின்றது.

அட்டவணை 6: மலையக மாவட்டங்களில் சனத்தொகைப் பரம்பல் மாற்றம் (2012 – 2024)

Table_page-0002-e1762923850193.jpg?resiz

ஆதாரம்: Dept.of.Census and Statistics, 2024

இந்தத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது, மலையக மக்களின் புவியியல் மையமான நுவரெலியாவில், மலையகத் தமிழரின் செறிவு 53.1 லிருந்து 50.0 ஆகக் குறைந்திருக்கும் அதேவேளையில், இலங்கைத் தமிழரின் எண்ணிக்கை 4.6 லிருந்து 8.3 ஆகக் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது. பதுளை மாவட்டத்தில் மலையக மக்கள் 18.5 லிருந்து 11.0 ஆகக் குறைந்துள்ள நிலையில், இலங்கைத் தமிழர் வீதம் 2.7 லிருந்து 9.4 ஆக சுமார் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. இந்தப் போக்கு மலையக மாவட்டத்தில் வசிக்கும் மலையக மக்கள், இலங்கைத் தமிழர் என்று பதிவு செய்துள்ளமையையே வெளிப்படுத்துகிறது.

இங்கு சிந்திக்க வேண்டிய விடயம் யாதெனில், மலையக மக்கள் தன்னார்வ அடிப்படையில் இலங்கைத் தழிழர்கள் எனப் பதிவு செய்தார்களா அல்லது கணக்கெடுப்பு அதிகாரிகள் தமது சுய விருப்பத்தின் பெயரில் பதிவு செய்தார்களா என்பதாகும். இது குறித்த தகவல்களை தேடுவதன் மூலம் கணக்கெடுப்பு செயன்முறையில் காணப்பட்ட குறைப்பாடுகளை வெளிக்கொண்டுவர முடியும். பின்வரும் அட்டவணை மலையகத் தமிழர்களின் குடித்தொகை வீழ்ச்சியினை ஏனைய சமூகங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியுடன் ஒப்பிட்டுக் காட்டுகின்றது.

அட்டவணை 7: இலங்கையின் குடித்தொகைக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அமைப்பு – 2012 மற்றும் 2024ஆம் ஆண்டு மதிப்பீடுகள் குறித்த ஒப்பீடு

%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%

ஆதாரம்: Dept.of.Census and Statistics, 2024

கணக்கெடுப்பு நடைமுறை மீதான விமர்சனங்கள்

சனத்தொகை வீழ்ச்சியின் அடிப்படை ஒரு புறம் சமூக, பொருளாதார இடம்பெயர்வு, மலையகச் சமூகத்தில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள், குறைந்த வாழ்க்கைத்தரம், இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்தின் மீதான விருப்பம் என்றாலும், இத்தீவிர வீழ்ச்சிக்கு கணக்கெடுப்பு நடைமுறையில் ஏற்பட்ட குறைபாடுகளும் காரணமாக இருக்கலாம் என்றவாறான  விமர்சனங்கள் எழுகின்றன. 1981ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், சுமார் 213,000 மலையகத் தமிழ் மக்கள் குடியுரிமை பெற்றதன் காரணமாக தம்மை இலங்கைத் தமிழர் எனப் பதிவு செய்திருப்பது அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆகவே, 2024ஆம் ஆண்டு கணிப்பீட்டில் இன அடையாளம் குறித்த போதிய அறிவுறுத்தல்கள் கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. இரண்டு பிரதான தமிழ் சமூகங்கள் இந்த நாட்டில் வாழுகின்றனர். அவர்கள் வரலாறு, பண்பாடு, என்பவற்றில் அடிப்படையான வேறுபாடுகளைக் கொண்டவர்கள். இவ் யதார்த்தங்களை எந்தளவுக்கு அதிகாரிகள் புரிந்துக்கொண்டு கணிப்பீட்டினை நடாத்தினார்கள் என்பது இங்குள்ள பிரச்சினையாகும். பொதுவில் அதிகாரிகள் இனம் என்ற விடயத்தினைப் பற்றி எந்த விடயத்தினையும் கேட்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. மாறாக அதிகாரிகள் தாமாகவே இன அடையாளத்தினை பதிவு செய்துள்ளனர். சில இடங்களில் மலையக மக்கள் அடையாளத்தினை வலியுறுத்திக் கேட்டு தம்மை மலையகத் தமிழர் என பதிவு செய்யுமாறு கோரியுள்ளனர்.

கணிப்பீட்டு அதிகாரிகள் தோட்டப்புறங்களுக்குச் செல்லும்பொழுது, பெரும்பாலானவர்கள் வீடுகளில் இருப்பதில்லை. பொதுவில் தோட்டங்களில் இந்நிலைமையினை அவதானிக்கலாம். தொழில், கல்வி மற்றும் விவசாயம் போன்ற காரணங்களினால் வீட்டில் எவரும் இருப்பதில்லை. ஒரு சில முதியோர்கள் மாத்திரமே இருப்பார்கள். அவர்களுக்கு சனத்தொகை கணிப்பீடு மற்றும் இன அடையாளம் குறித்த புரிதல் இருப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையில் கணிப்பீடு எந்தளவுக்கு சரியாக இடம்பெற்றிருக்கும் என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. இன்று தோட்டங்களில் இருந்து ஓய்வுப்பெற்றவர்களும் நாட் சம்பளத்துக்காக வேறு தோட்டங்களுக்குத் தொழிலுக்குச் செல்கின்றார்கள். அத்தகையோரின் தொகை 50,000 க்கு மேற்பட்டதாகும். அவர்கள் கணிப்பீட்டில் உள்வாங்கப்படவில்லை. ஆகவே, தோட்டங்களுக்குள் வாழுகின்ற பெரும் எண்ணிக்கையிலானோர் கணிப்பீட்டில் முறையாக உள்வாங்கப்படவில்லை என்ற வாதத்தினை முன்வைக்கலாம்.

மேலும், கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற மாட்டங்களில் 50,000க்கு மேற்பட்ட மலையக இளைஞர் யுவதிகள் தற்காலிகமாகத் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தொழிலுக்கு செல்பவர்கள். ஆகவே, இவர்கள் முறையாக கணிப்பீட்டுக்குள் உங்வாங்கப்பட்டார்களா என்பது பிறிதொரு கேள்வியாகும். அத்துடன், மலையகத் தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்த பெரும் எண்ணிக்கையிலானோர் கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற நகரங்களில் தொழில் நிமித்தம் தற்காலிக வாடகை வீடுகளில் குடும்பமாக வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் எண்ணிக்கை குறித்த சரியான தகவல் இல்லாவிட்டாலும், இவர்கள் எந்தளவுக்கு முழுமையாக கணிப்பீட்டில் உள்வாங்கப்பட்டார்கள் என்ற நியாயமான சந்தேகம் எழுகின்றது. இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தோட்டங்களுக்குள்ளும் அதற்கு வெளியில் பல்வேறு நகரங்களிலும் வாழும் சுமார் 150,000க்கு மேற்பட்ட மலையகத் தமிழர்கள் கணிப்பீட்டில் உள்வாங்கப்படவில்லை என்ற அனுமானத்துக்கு வரலாம். ஆயினும், இது குறித்த முழுமையான ஆய்வுகள் மற்றும் தரவு தேடல்கள் அவசியமாகும். அதனை காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் குடித்தொகைக் கணிப்பீட்டில் நடந்துள்ள குறைப்பாடுகளை ஆதாரபூர்வமாக முன்வைக்க முடியும். இத்தகைய நாடுதழுவிய கணிப்பீடுகளில் புள்ளிவிபர ரீதியாக 5 விகிதமான தவறுகள் இடம்பெறலாம். அது புள்ளிவிபர ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆயினும், மலையகத்தில் கணிப்பீட்டு செயன்முறையில் அதிகளவிலான தவறுகள் இடம்பெற்றிருப்பதனை அறிய முடிகிறது. இது வேண்டுமென்றே இடம்பெற்றதா அல்லது தற்செயலாக இடம்பெற்றதா என்பதே இங்குள்ள சந்தேகமாகும்.

மேலும், மலையக மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஒருபுறம் இலங்கைத் தமிழ்ச் சமூகத்துடன் அதிக ஒருங்கிணைவை (Integration) அடைந்து வருவதாலும், மறுபுறம் ‘மலையகத் தமிழர்’’ என்ற அடையாளம் தோட்டப்புறப் பாகுபாடு (Estate Stigma) மற்றும் குறைவான வாழ்க்கைத்தரத்தைச் சுட்டுவதாலும், மலையக மக்கள் தம்மை இலங்கைத் தமிழர் எனப் பதிவு செய்ய விருப்பம் காட்டியிருக்கலாம். தென் மாகாணத்தில் பல இடங்களில் மலையகத் தமிழர்கள் தமது அடையாளத்தினை இழந்து சிங்களவர்களாகவே முற்றிலும் மாறியுள்ளனர்.

இவற்றைவிட, தோட்டங்களுக்கு வெளியில் நகர்ப்புறங்களில் வாழும் மலையகத் தமிழர்களை  கணிப்பீட்டாளர்கள், ‘இலங்கைத் தமிழர்’ எனப் பதிவு செய்ய ஊக்குவித்திருக்கலாம். இதற்கு நியாயமான காரணமும் உண்டு. போருக்குப் பின்னர் பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் முஸ்லிம் மக்களை இலக்கு வைக்க ஆரம்பித்தன. இது உயிர்த்த தாக்குதலுக்குப் பின்னர் உச்சத்தினை அடைந்தது. அதன் பின்னர் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பிரசாரங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. இத்தகைய பிரசாரங்களை சிங்கள பௌத்த தேசியவாத அமைப்புக்கள் மேற்கொண்டன. முஸ்லிம் சமூகத்தினை தீவிரவாதிகளாக சித்தரிக்க முயன்றனர். இவை முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சியினை பொறுக்க முடியாமல் மேற்கொண்ட செயற்பாடுகளாகும். இன்றளவில் சிங்கள மக்களில் பெரும்பாலானோரிடம் முஸ்லிம் எதிர்ப்பு மனப்பாங்கு எல்லா மட்டங்களிலும் காணப்படுகின்றது. அரச அதிகாரிகளிடமும் உண்டு. முஸ்லிம் சமூகத்தின் சனத்தொகை வளர்ச்சிப் பற்றிய அச்ச உணர்வு சிங்கள மக்கள் மத்தியில் பொதுவாகவே காணப்படுகின்றது. இப்பின்புலத்தில் இலங்கைத் தமிழர்களை சனத்தொகை வரிசையில் இரண்டாவது இடத்தில் தொடர்ந்தும் தக்க வைப்பதற்கான முயற்சியில் மலையகத் தமிழர்களையும் இலங்கை தமிழர் என்ற வகைப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியாகவும் இதனை நோக்கலாம். இது ஒரு அனுமான ரீதியான வாதம் மட்டுமே ஆகும். இது தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் முறையான தேடல்கள் அவசியமாகும்.

மலையக மக்களின் சனத்தொகை வீழ்ச்சி (4.1 லிருந்து 2.8 ஆக) என்பது வெறுமனே புள்ளிவிவர ரீதியான சரிவு அல்ல, அது மலையகத் தேசியம் என்ற கருத்தாக்கத்தின் அரசியல் இருப்பு மீதான பலமான அச்சுறுத்தலாகும். இந்த வீழ்ச்சி, எதிர்கால தேர்தல் எல்லை நிர்ணயத்தின்போது மலையகப் பிரதேசங்களுக்கான நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை ஆசனங்களை இழக்கும் ஆபத்தை அதிகரிக்கிறது. இன அடையாள மாற்றம் என்பது கௌரவமான வாழ்வு மற்றும் சமத்துவத்துக்கான மலையக மக்களின் உளவியல் தேடலின் பிரதிபலிப்பாகும். ஆனால், இந்த மாற்றம் மலையக மக்களின் தனித்துவமான அரசியல் அதிகாரத்தைக் கரைத்து, அவர்களைப் பெரிய சமூக நீரோட்டத்தில் இணைக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

இம்முறை கணக்கெடுப்பை மேற்கொண்ட நடைமுறைகள் மற்றும் செயல்முறைகள் மீதான பரவலான விமர்சனங்கள், இந்தப் புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக் குள்ளாக்குகின்றன. குறிப்பாக, அடையாளப் பதிவு குறித்த தெளிவின்மை, டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் கணிப்பீட்டாளரின் சுய அனுமானங்கள் ஆகியவை மலையக மக்களின் சனத்தொகை சரிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்ற வலுவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. பல இடங்களில் மலையகத் தமிழர் என்ற இன அடையாளத் தெரிவினை கணக்கெடுப்பு அதிகாரிகள் மலையக மக்களிடம் குறிப்பிடவில்லை. இலங்கைத் தமிழர் மற்றும் இந்தியத் தமிழர் என்ற இரு அடையாளங்கள் மாத்திரமே கணக்கெடுப்பின்போது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, தாம் இனியும் இந்தியத் தமிழர் இல்லை, இலங்கையில்தான் பிறப்பு முதல் வாழுகின்றோம் என்ற எண்ணத்தில் இலங்கைத் தமிழர் என்று குறிப்பிட்டிருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.

2024ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில் கணிப்பீட்டாளர்கள் வீடுகளுக்கு வருகை தராமல் தரவுகளைச் சேகரித்தனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது. பல பிரதேசங்களில், குறிப்பாக தோட்டப் புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு, அரச ஊழியர்கள் முறையாக வருகை தரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படை நோக்கமே, களத்தில் உள்ள உண்மையான எண்ணிக்கையையும், நிலையையும் பதிவு செய்வதுதான். கள விஜயங்கள் இன்றித் தரவுகள் சேகரிக்கப்படும்போது, அந்தப் பதிவின் துல்லியத்தன்மை பாதிக்கப்படுகிறது. இலத்திரனியல் சாதனங்கள் ஊடாகத் தரவுகள் சேகரிக்கப்பட்ட போது, தகவல் வழங்கும் குடியிருப்பாளர்களுக்குத் தாங்கள் வழங்கிய தகவல்கள் சரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா, குறிப்பாக இன அடையாளம் எப்படிக் குறிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளப் போதுமான வாய்ப்பு வழங்கவில்லை. சில இடங்களில் கணிப்பீட்டு அதிகாரிகள் தமது உதவியாளர்கள் மூலம் தகவல்களை சேகரித்துள்ளனர். அவர்களுக்கு இது தொடர்பான எந்தப் பயிற்சியும்  வழங்கப்படவில்லை. இப்படியான இடங்களில் இன அடையாளம் குறித்த சரியான தரவுகள் பதிவு செய்யப்பட்டிருக்க மாட்டாது.

மறுபுறம் மலையக மக்களின் சனத்தொகை வீழ்ச்சியில் மிக முக்கியமான காரணி, மலையக மக்களிடையே காணப்படும் இன அடையாளத் தெளிவின்மையே ஆகும். இந்திய வம்சாவளித் தமிழர்கள் நீண்ட போராட்டத்தின் பின்னர் குடியுரிமை பெற்றாலும், அவர்களின் இன அடையாளம் (மலையகத் தமிழர்) மற்றும் குடியுரிமை நிலை (இலங்கை பிரஜை) ஆகியன தொடர்பாக மக்கள் மத்தியில் இன்னும் தெளிவான புரிதல் இல்லை. ஆகவே, தமது அடையாளத்தை ‘மலையகத் தமிழர்’ எனப் பதிவுசெய்ய வேண்டிய அவசியத்தை உணராமல், வெறுமனே ‘இலங்கைத் தமிழர்’ என்ற பிரிவின் கீழ் தம்மைப் பதிவுசெய்ய இணங்கியிருக்கலாம்.

அடையாள குழப்பம் மற்றும் குடியிருப்பாளர்களின் குறைந்த கல்வித் தகைமையைப் பயன்படுத்திக் கொண்டு, கணிப்பீட்டாளர்கள் தாமாகவே இம்மக்களுக்கான தகவல்களை அனுமானித்து பதிவு செய்திருக்கவும் கூடும் என்ற விமர்சனமும் எழுகிறது. குடியுரிமை பெற்ற அனைவரும் இலங்கைத் தமிழரே என்ற பொதுவான புரிதலின் அடிப்படையில், பல மலையக மக்கள் ‘இலங்கைத் தமிழர்’ எனப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஆகவே, மலையகத்தில் ஏற்பட்டுள்ள சனத்தொகை வீழ்ச்சி என்பது வெறும் பிறப்பு விகிதக் குறைவு மட்டுமல்ல மாறாக வறுமை, காணியுரிமை மறுப்பு, மற்றும் சமூகப் பாகுபாடு ஆகியவற்றின் காரணமாகவும், நகர்ப்புறங்களை நோக்கிய தொழில் மற்றும் கல்வி நிமிர்த்தமான இடம்பெயர்வு என்பவற்றினாலும் இடம்பெற்றவை ஆகும். நகர்ப்புறங்களில் குடியேறும் மலையக இளைஞர்கள், சமூக அங்கீகாரத்தைப் பெறுவதற்காகவும், தனிப்பட்ட நன்மைகளுக்காகவும் தங்களைத் ‘இலங்கைத் தமிழர்’ என்ற அடையாளத்தினை விரும்பியிருக்கலாம். அதேபோல் இம்முறை சனத்தொகை கணக்கெடுப்பு இடம்பெற்ற விதம், அரச அதிகாரிகளின் அலட்சியப் போக்கு, திட்டமிட்ட புறக்கணிப்பு என்பவற்றாலும் மலையக மக்களின் சனத்தொகை, பாரியளவிலான ஒரு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது என்பதனை அனுமானிக்க முடிகின்றது.

மலையக மக்களின் மாவட்ட ரீதியான பரம்பல்

இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்கள் இலங்கையில் 25 மாவட்டங்களிலும் பரவி வாழ்ந்தாலும், அவர்களின் சமூக, அரசியல் மற்றும் கலாசார இருப்பு என்பது வரலாற்று ரீதியாக நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி போன்ற பெருந்தோட்ட மாவட்டங்களையே மையமாகக் கொண்டிருந்தது. இந்த புவியியல் மையமே ‘மலையகத் தேசியம்’ என்ற கருத்தாக்கத்தின் அடித்தளமாகும். ஆனால், 2012 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை கணிப்பீட்டுத் தரவுகள், இந்த மையமானது மிக விரைவாகவும், கூர்மையாகவும் சிதைந்து வருவதைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இலங்கையில் சுமார் 1,350,000 மலையகத் தமிழர்கள் வாழுகின்றனர் என்பதனை கடந்த காலங்களில் இடம்பெற்ற சில மதிப்பீடுகள் எடுத்துக்காட்டுகின்றன. இது எந்த வகையிலும் 2024ஆம் ஆண்டு கணிப்பீட்டில் வெளிப்படவில்லை.

அட்டவணை 8: பிரதான மலையக மாவட்டங்களில் இனப்பரம்பல் மாற்றம்

%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%

(ஆதாரம்: மாவட்டங்கள் மற்றும் இனத்தொகையின் விபரப்பரம்பல், 2012 மற்றும் 2024)

பெருந்தோட்ட மாவட்டங்களை விட்டு வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய மாவட்டங்களுக்குக் குடிபெயர்ந்தவர்களின் அடுத்த பரம்பரையினர், அப்பிரதேசங்களின் வாழ்க்கை முறை மற்றும் கலாசார செல்வாக்கிற்கு உட்பட்டு , குடித்தொகை கணிப்பீடு போன்ற உத்தியோகபூர்வ நடவடிக்கைகளில் பெருமளவுக்குத் தம்மை இலங்கைத் தமிழர்கள் என்றே பதிந்து கொள்கின்றனர். இந்த மனப்போக்கு, மலையகத் தமிழர் என்ற அடையாளத்துடன் இணைந்த சமூகப் பாகுபாடு (Social Stigma) மற்றும் குறைந்த வாழ்க்கைத்தரத்தின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கான உளவியல் தேடலின் வெளிப்பாடாகும். இன்னொரு பக்கம் இத்தகைய மாற்றத்திற்கான நாட்டம் மலையக மக்களின் துயர் தோய்ந்த வரலாற்றுடனும் பிணைந்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் பாரிய வீழ்ச்சியொன்று ஏற்படாமைக்குக் காரணம் இங்கு கணிப்பீட்டுப் பணியில் ஈடுபட்டவர்களில் பெரும்பான்மையானோர் மலையகச் சமூகத்தினை சேர்ந்தவர்கள் ஆகும். ஆகவே, அவர்களுக்கு இன அடையாளம் குறித்து புரிதல் காணப்பட்டது. அதன் காரணமாக மலையகத் தமிழர்களிள் அடையாளம் சரியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், மலையகத் தமிழர் என்ற அடையாளத்தினை மையப்படுத்திய அதிகளவிலான கலந்துரையாடல்கள் கடந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக நுவரெலியா மாவட்டத்திலேயே இடம்பெற்றது. இவை மலையகத் தமிழர் என்ற அடையாளம் குறித்த பெரியளவிலான புரிதலை ஏற்படுத்தியது. ஆனால், இப்போக்கினை ஏனைய மாவட்டங்களில் காண முடியவில்லை.

மேலும் Gen Z என அழைக்கப்படுகின்ற இளம் தலைமுறையினர் (2010க்குப் பின்னர் பிறந்தவர்கள் – சமூக ஊடகங்களுடன் இவர்கள் வாழ்க்கை பிணைக்கப்பட்டுள்ளது) தம்மை மலையகத் தமிழர் என அடையாளப்படுத்துவதில் பெரிய விருப்பம் காட்டுவதில்லை என்பதனை பல செயலமர்வுகளில் அவதானிக்க முடிந்தது. இதனை நுவரெலியா மாவட்டத்துக்கு வெளியில் அதிகம் காண முடியும். இம்மன நிலையும் சனத்தொகை வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகும்.

எனவே, 2024ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள், மலையக மக்கள் தமது சமூக அநீதிகளுக்கான போராட்டத்தை இழந்திருப்பதையும், அரசியல் அதிகாரத்தை இழக்கும் அபாயத்தில் இருப்பதையும் சுட்டிக்காட்டும் ஒரு புள்ளிவிவர எச்சரிக்கையாக (statistical warning) அமைந்துள்ளது.

மலையகத் தேசியத்தின் அரசியல் நெருக்கடி

சனத்தொகை வீழ்ச்சியின் நேரடி மற்றும் மிக ஆபத்தான விளைவு, மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை இழப்பதாகும். இலங்கையின் தேர்தல் சட்டங்களின்படி, ஒரு குறிப்பிட்ட பகுதியின் சனத்தொகை மற்றும் வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செய்யப்படுகிறது. மலையக மக்களின் மைய மாவட்டங்களான நுவரெலியா, பதுளை, கண்டி போன்ற பகுதிகளில் அவர்களின் சதவீதச் செறிவு குறைந்துள்ளதால், இது, மலையக மக்களின் சுயாதீனமான அரசியல் பலத்தையும், பேரம் பேசும் சக்தியையும் ஒட்டுமொத்தமாகப் பலவீனப்படுத்தும்.

மலையக மக்கள் தம்மை இலங்கைத் தமிழர் எனப் பதிவு செய்திருந்தாலும், இலங்கையின் தேர்தல் சட்டங்களில் ‘இன அடிப்படையிலான’ பிரதிநிதித்துவப் பாதுகாப்புகள் பல இடங்களில் இல்லை. இதனால், எண்ணிக்கை அளவில் அவர்கள் அருகிலுள்ள பெரும்பான்மை சமூகங்களுடன் கலக்க நேரிடும்போது, அவர்களின் தனித்துவமான அரசியல் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு குறைந்துவிடும். சனத்தொகை வீழ்ச்சி தொடர்ந்தால், மலையக மக்களின் அரசியல் குரல் மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு, தேசிய ரீதியாக முடிவெடுக்கும் தளங்களில் அவர்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் கவனத்தைப் பெறாமல் போகும் நிலை ஏற்படும்.

சனத்தொகை வீழ்ச்சி மற்றும் இன அடையாள மாற்றம் போன்ற நெருக்கடிகளை மலையக அரசியல் தலைமைத்துவம் எவ்வாறு கையாண்டது என்பது விமர்சனத்திற்கு உரியதாகும். சனத்தொகை வீழ்ச்சி ஒரு பாரிய அரசியல் நெருக்கடி என்பதை மலையக அரசியல் கட்சிகள் பலர் அங்கீகரித்திருந்தாலும், அதற்குப் பதிலளிக்கும் விதத்தில் நீண்டகால மற்றும் உறுதியான கொள்கைத் திட்டங்களை வகுக்கவில்லை என்ற விமர்சனம் உண்டு. அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத் திட்டங்கள் மற்றும் குறைந்தபட்ச  சம்பள அதிகரிப்புக் கோரிக்கைகள் போன்றவை வரவேற்கத்தக்கவை என்றாலும், அவை மலையக மக்களின் இடம்பெயர்வுக்கு அடிப்படையான காரணங்களான சமூகப் பாகுபாடு, காணி உரிமை மறுப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளின் போதாமை ஆகியவற்றைத் தீர்க்கும் முழுமையான தீர்வுகளாக அமையவில்லை. அரசாங்கத்தின் வீட்டு வசதித் திட்டங்கள், மக்களுக்குத் தனி வீடுகளை வழங்கிய போதிலும், தோட்டப்புறங்களை விட்டு நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வதைத் தடுக்க போதுமானதாக இல்லை. இது, அரசியல் தலைமைத்துவம் சனத்தொகை நெருக்கடியின் ஆழமான சமூகவியல் காரணிகளைப் புரிந்துகொள்ளத் தவறியதைக் காட்டுகிறது.

அதேபோல் மலையக மக்கள் தம்மை இலங்கைத் தமிழராகப் பதிவுசெய்து கொண்டமை குறித்து மலையக அரசியல் தலைவர்கள் வெளிப்படையான விவாதங்களை நடத்தவில்லை. இது, அடையாள மாற்றத்தை தவிர்க்க முடியாத ஒன்றாக ஏற்றுக்கொண்டதன் விளைவா அல்லது வாக்கு வங்கி மீதான அச்சமா என்ற கேள்வி எழுகிறது. சனத்தொகை வீழ்ச்சி மற்றும் புவியியல் பரம்பல் சிதைவு ஆகியவை மலையக மக்களின் மிக முக்கிய மூலதனமான நிலம் மற்றும் காணி உரிமை மீதான அச்சுறுத்தல்களை மேலும் அதிகரிக்கின்றன.

தோட்டப்புறங்களில் மலையக மக்களின் சனத்தொகை குறையும்போது, தோட்ட நிலங்களை பெருந்தோட்ட நிர்வாகம் அல்லது ஏனைய இனக்குழுமத்தைச் சார்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்வதற்கு வாய்ப்பு உருவாகிறது. சட்ட ரீதியற்ற காணி ஆக்கிரமிப்புகள் (Land Encroachment) பெருந்தோட்டப் பகுதிகளில் நீண்ட காலமாக இருக்கும் பிரச்சினை ஆகும். காணி உரிமைக்கான போராட்டம், மலையக மக்களின் ஒருமித்த பலத்தின் மூலமே வெற்றிபெற முடியும். ஆனால், சனத்தொகை குறைந்து, மக்கள் சிதறுண்டு போகும்போது, உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் சமூகத் திரட்சியும், பலமும் வெகுவாகக் குறைந்துவிடும்.

மலையக மக்களின் தேசியம் என்பது,  நிலத்துடன் பிணைந்துள்ளது. மக்கள் தொகை குறைந்து, அந்த நிலப்பரப்புகள் கைவிடப்படும்போது, மலையக தேசியம் அதன் புவியியல் அடித்தளத்தை இழக்கிறது. இது, அவர்களின் வரலாற்றையும், உரிமைக் கோரிக்கைகளையும் எதிர்காலத்தில் பலவீனப்படுத்தக்கூடும்.

அடையாள மாற்றம் என்பது அரசியல் மட்டுமல்ல, கலாசார இழப்பும் கூட. சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் மலையகத்தின் தனித்துவமான கலாசாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை ஆவணப்படுத்துவதன் மூலமும், மீட்டெடுப்பதன் மூலமும், புவியியல் மையத்தை இழந்தாலும் தேசியத்தின் கலாசார ஆழத்தை (Cultural Depth) பாதுகாக்க முடியும். எனினும், இந்தக் கலாசார முயற்சிகள் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் கொண்டுவரப் போதுமானதல்ல. மேலும் மலையகத் தேசியம் என்பது உணர்வுபூர்வமான அடையாளமாக இருக்கிறதா அல்லது அடித்தள மக்களின் உடனடி பொருளாதார மற்றும் சமூக தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான கருவியாக இருக்கிறதா என்ற கேள்வி முக்கியமானதாகும்.

உண்மையான மலையகத் தேசியம் என்பது, வெறும் உணர்வு அல்ல. அது, மலையக மக்களின் ஒடுக்கப்பட்ட வர்க்க இருப்பை (Oppressed Class Existence) அடையாளம் கண்டு, அவர்களின் பொருளாதாரச் சமத்துவத்தையும், கண்ணியமான வாழ்வையும் உறுதிப்படுத்துவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், பாகுபாட்டோடு வாழும் மக்கள், தேசிய உணர்வை விட நடைமுறைத் தேவைகளையே முன்னிலைப்படுத்துவார்கள்.

சனத்தொகை வீழ்ச்சி மற்றும் புவியியல் மையம் சிதைவுறும் இந்த நெருக்கடியான சூழலில், மலையக தேசியமானது தனது மையத்தைப் பாதுகாப்பதை விட, புதிய பரிணாமத்தை (New Transition) நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மலையகத் தேசியம் இனி, பொதுவான ஒடுக்கப்பட்ட வர்க்க உணர்வுடைய (Common Oppressed Class Consciousness) அடையாளமாக நிலைநிறுத்தப்பட வேண்டும். தோட்டப்புறங்களில் வாழும் தொழிலாளர்களும், நகர்ப்புறங்களில் கூலி வேலை செய்யும் தொழிலாளர்களும், வெளிநாடுகளில் வீட்டுப் பணி செய்யும் பெண்களும் ஒரே மாதிரியான வர்க்க ஒடுக்குமுறையையும், சமூகப் பாகுபாட்டையும் எதிர்கொள்கின்றனர். இந்த ஒடுக்குமுறையின் அடிப்படையில் தேசியம் மீளக் கட்டமைக்கப்பட வேண்டும்.

மலையக மக்கள் இலங்கைத் தமிழர்களாக தம்மை பதிவு செய்தமைக்கான காரணங்களை ஆய்வு ரீதியாக கண்டுப்பிடிக்க வேண்டும். அவர்கள் மத்தியில் மலையக அடையாள உணர்வினைக் கட்டியெழுப்ப அவசியமான வேலைத்திட்டங்களை வகுக்க வேண்டும். இது 2034ஆம் ஆண்டு இடம்பெறவிருக்கும் குடித்தொகை கணிப்பீட்டில் மலையக மக்களின் சனத்தொகையினை பாதுகாக்க உதவும். குடித்தொகை வீழ்ச்சி சமூக அபிவிருத்திக்கான அரசாங்க நிதி மற்றும் வள ஒதுக்கீடுகளில் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதனை நாம் மனங்கொள்ள வேண்டும். மேலும், எதிர்காலத்தில் அரசாங்கத் தொழில் வாய்ப்புகளுக்கு கோட்டா முறை அறிமுகப்படுத்தப்பட்டால், இதில் போதிய வாய்ப்பு மலையக மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை. இந்நிலை அரசியல் பிரதிநிதித்துவத்திலும் ஏற்படலாம்.

இங்குள்ள பிறிதொரு முரண்நிலை யாதெனில், வருடாந்தம் வாக்காளர் விகிதம் மலையகத்தில் அதிகரித்து செல்கின்றது, ஆனால் சனத்தொகையில் எவ்வாறு பாரிய வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறன்றது. வாக்காளர் பதிவில் மலையகத்தில் பெரியளவிலான விழிப்புணர்வு மற்றும் கரிசனை ஏற்பட்டுள்ளது. அதற்கு வாக்குரிமையுடன் இணைந்த பல நன்மைகளும் காரணமாகும். ஆகவே, வாக்குப்பதிவில் காட்டும் ஆர்வத்தினை ஏன் குடிசன மதிப்பீட்டில் மலையக மக்கள் காட்டவில்லை என்ற கேள்வியும் எழுகின்றது. அத்துடன், பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் புள்ளிவிபரங்களுடன் அரசாங்கத்தின் குடித்தொகைக் கணிப்பீட்டு முடிவுகள் முரண்படுகின்றது. ஆகவே, குடித்தொகை குறித்த அரசாங்கத்தின் வேறுப்பட்ட தரவுகளை சேகரித்து இந்த முரண்நிலையைத் தீர்க்க வேண்டும்.

இருப்புக்கான நெருக்கடியும் எதிர்கால கொள்கைத் தெரிவுகளும்

மலையக மக்களின் சனத்தொகைப் பெருக்க வீதம் தேசிய சராசரியை விடக் குறைவாக இருப்பதற்கும், இடம்பெயர்வு அதிகரிப்பதற்கும் அடிப்படை காரணம், இலங்கை அரசின் கட்டமைப்பு ரீதியான அநீதியே ஆகும். ஆகவே, மலையக மக்கள் சம உரிமைகளுடன் சம பிரஜைகளாக வாழ்வதற்கான கொள்கைத் திட்டங்களை (காணியுரிமை, வீடு, கல்வி, சுகாதாரம், வேதனம், போக்குவரத்து உட்பட) அரசாங்கம் வகுக்க வேண்டும். இதற்கு நீண்டகாலமாக பரப்புரை செய்து வருகின்ற நியாயமான பாராபட்சக் கொள்கை (policy of positive discrimination) அல்லது குறைதீர் நடவடிக்கை (affirmative action) ஒன்றினை உருவாக்க வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளத் தவறினால், மலையக மக்கள் மீதான அரசு கட்டமைப்பின் புறக்கணிப்பே சனத்தொகை வீழ்ச்சிக்குக் காரணம் என்ற விமர்சனத்தை அரசு தொடர்ந்து எதிர்கொள்ளும்.

மலையகத் தேசியத்தின் எதிர்காலப் பாதை, அதன் புவியியல் மையத்தை இழந்தாலும், அதன் வர்க்க உணர்வு (Class Consciousness) மற்றும் சிவில் சமூகத்தின் போராட்டத் திறன் ஆகியவற்றிலேயே தங்கியுள்ளது. தேசியம் என்பது இனி நுவரெலியாவை மையப்படுத்தாமல், இலங்கையிலும், வெளிநாட்டிலும் பரவி வாழும் ஒடுக்கப்பட்ட மலையக வர்க்கத்தை இணைக்கும் ஒரு கலாசார  – அரசியல் அடையாளமாக மாற வேண்டும். சனத்தொகை வீழ்ச்சிக்கு எதிரான இந்தப் போராட்டம், வெறுமனே எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்கானதல்ல. அது கௌரவமான வாழ்வுக்கான உரிமையையும், சமூக நீதியையும் நிலைநாட்டுவதற்கான இறுதிக்கட்டப் போராட்டமும் ஆகும்.

Ramesh-Arul-e1762925694515.jpg?resize=20அருள் கார்க்கி கலாநிதி ரமேஷ் ராமசாமி

https://maatram.org/articles/12402

மனிதாபிமானத்தின் தராசில் இனவழிப்பும் இனச் சுத்திகரிப்பும்: எது கனமானது?

1 week 3 days ago

மனிதாபிமானத்தின் தராசில் இனவழிப்பும் இனச் சுத்திகரிப்பும்: எது கனமானது?

20201128_ASP002_0-ezgif.com-avif-to-jpg-

Photo, THE ECONOMIST

இனவழிப்பு (Genocide) – இன சுத்திகரிப்பு (Ethnic Cleansing) இரு வார்த்தைகளில் உள்ள நுண்ணரசியல் குறித்து விளங்கிக்கொள்ள வேண்டியதொரு புள்ளியில் இன்று நாம் இருப்பதாகத் தோன்றுகின்றது.

ஓர் இன, மத அல்லது சமூகக்குழுவை முழுமையாக அழித்துவிடும் நோக்கத்துடன் திட்டமிட்டு செய்யப்படும் கொலைகள் இனவழிப்பு எனப்படுகின்றது. இது பல்வேறு முறைகளில் முன்னெடுக்கப்படலாம். கொலைகள், பாலியல் வன்முறைகள், மொழி மற்றும் கலாசார ஒழிப்புக்கள் இதனுள் உள்ளடங்கும். இது சர்வதேச சட்டத்தின் கீழ் (1948 UN Genocide Convention) தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதொரு குற்றமாகும். இதன் ஒரே நோக்கு குறிப்பிட்ட குழுமத்தினை அழிப்பது மட்டுமே.

ஆனால், இன சுத்திகரிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட பௌதீக சூழமைவுக்குள் இருந்து நீக்குவது அல்லது வெளியேற்றுவது. இது சர்வதேச சட்டத்தில் தனிக்குற்றமாக வரையறுக்கப்படவில்லை. ஆனால், போர்க்குற்றங்கள் அல்லது மனிதத்தன்மைக்கெதிரான குற்றங்கள் (Crimes against humanity) என கருதப்படுகின்றது. இது கட்டாய இடப்பெயர்வுகள், வீடுகளை எரிப்பது, அச்சுறுத்துவது, சொத்துப்பறிமுதல் செய்வது போன்ற செயற்பாடுகளின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது. இதன் இறுதி விளைவு நில அமைப்பிலிருந்து நீக்கப்படுவது மட்டுமே.

அழிக்கப்படுவதற்கும் அகற்றப்படுவதற்கும் வேறுபாடும் அதன் கனதிகளும் இவற்றின் பின்னுள்ள அரசியல் நிரல்களும் வேறானவை. இதனை நாம் சில வரலாற்று நிகழ்வுகள் மூலம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

இனவழிப்பு

1. ஹாலோகாஸ்ட் (Holocaust) – ஜேர்மனி (1939 -1945)

யூத இனத்தினை முற்றிலுமாக அழிக்கும் நோக்குடன் அடால்ப் ஹிட்லர் தலைமையிலான நாசி ஆட்சியில் சுமார் ஆறு மில்லியன் யூதர்கள் திட்டமிட்ட முறையில் கொல்லப்பட்டனர். இதன் ஒரே நோக்கம் யூத இனத்தினை உலகத்திலிருந்தே அழித்தொழிப்பதே. இது திடீரென முன்னெடுப்பட்ட வன்முறையல்ல. திட்டமிட்டு செய்யப்பட்ட பாரதூரமானதொரு செயற்பாடு. இச்செயற்பாடு மூன்று கட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

முதலாவதாக, யூத மக்களுக்கு எதிரான சட்டங்கள் நியூரெம்பர்க் சட்டங்கள் (Holocaust 1935) இயற்றப்பட்டன. குடியுரிமை பறிக்கப்பட்டது. கல்வி, வேலை மற்றும் சொத்துரிமைகள் நீக்கப்பட்டன. இரண்டாவது கட்டமாக யூதமக்கள் சிறைப்பிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். Ghettos என்றழைக்கப்படும் மூடிய சுவர் அடைப்புக்குள் மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டார்கள். இங்கு பசிப்பட்டினி, உணவுக்குறைவு, நோய்கள், இயலாமைகளுடன் மக்கள் போராடி இறந்தனர். மூன்றாவது கட்டமாக 1941 முதல் “யூத பிரச்சினைக்கான இறுதித்தீர்வு (Final Solution to the Jewish Question) எனும் திட்டத்தின் கீழ் வலுக்கட்டாய முகாம்கள் மற்றும் அழிப்பு முகாம்கள் எனும் சிறைமுகாம்களுக்கு (Concentration and Extermination Camps) யூதமக்களை கொண்டு சென்று விஷவாயு செலுத்தியும் பலவித சித்ரவதைகள் செய்தும் கொத்தாக கொன்றொழித்தனர். இந்த வரலாற்றுச் சம்பவம் இனவழிப்பிற்கானதொரு முக்கிய உதாரணம். இங்கு எதிர்பார்க்கப்பட்ட விளைவு ஒன்றுதான், அது யூதர்களை அழித்தல் மட்டுமே.

2. ருவாண்டா இனவழிப்பு (Rwanda Genocide -1994)

மத்திய ஆபிரிக்க நாட்டின் சிறியதொரு நாடான ருவண்டாவில் இரு முக்கிய இனக்குழுக்கள் இருந்தனர். இவர்களுள் பெரும்பான்மையினர் ஹூட்டு இனத்தவர்,  சிறுபான்மையினர் துத்சி இனத்தவர்கள். இரு இனங்களுக்குள்ளும் அரசியல் மற்றும் சமூக மோதல்கள் காலங்காலமாக தொடர்ந்து வந்த நிலையில் சுமார் 8 லட்சம் துத்சி இனத்தவர்கள் வெறும் 100 நாட்களுக்குள் கொல்லப்பட்டனர். பல இலட்சம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். குழந்தைகள் உணவின்மையினால் இறந்தன. பல்லாயிரக்கணக்கானோர் அங்கவீனர்களாயினர். 20ஆம் நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்டதொரு பாரிய இனவழிப்பாக இது கருதப்படுகின்றது. இங்கு துத்சி இனத்தவர்கள் முற்றாக அழிக்கப்படுவதே நோக்காக இருந்துள்ளது.

இனச்சுத்திகரிப்பு (Ethnic Cleansing)

1. பொஸ்னியா – யூகோஸ்லாவிய போர் (1992- 1995)

பொஸ்னியாவில் சர்ப்படைகள் முஸ்லீம் போஸ்னியர்களை தங்களுடைய நிலப்பகுதியில் இருந்து வெளியேற்றினர். இதன் போது சொத்துக்கள் அழிக்கப்பட்டன. மக்கள் பலவந்தமாக அகற்றப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்முறைகளுக்குட்படுத்தப்பட்டனர்.  “சர்ப் இனப்பகுதி” எனும் தூய இன நிலப்பரப்பினை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.

2. மியன்மார் – ரோஹிங்கியா பிரச்சினை (2017 முதல்)

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மியன்மார் இராணுவம் பல தாக்குதல்களையும் சொத்தழிப்புக்களையும் முன்னெடுத்தனர். மியன்மார் நாட்டின் பகுதிகளிலிருந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அவர்களை தங்களுடைய பிரதேசங்களில் இருந்து வெளியேற்றுவதே இங்கு பிரதான நோக்கமாக இருக்கிறது.

இலங்கை: ஈழப்போரும் இனவழிப்பு – இனசுத்திகரிப்பும்

இலங்கை உள்நாட்டுப்போர் அல்லது ஈழப்போர் என்பது மூன்று தசாப்தகாலமாக நீடித்ததொரு ஆயுத மோதலாகும். இது பெரும்பாலும் பேரினவாத அரசு – தமிழீழ விடுதலைப்புலிகள் இடையேயானது என்றாலும் இதன் வரலாற்று நிகழ்வுகளிலும் முரண்பாடுகளிலும் முஸ்லிம்களுக்கும் வகிபங்கு உண்டென்பதும் மலையக மக்களும் பாதிப்புற்றுள்ளார்கள் என்பதும் மறுக்க முடியாதது.

  • 1948 இல் “Ceylon Citizenship Act” என்ற சட்டம் இயற்றப்பட்ட போது சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மலையகத் தமிழர்கள் குடியுரிமையற்றவர்களாக்கப்பட்டனர். இதனால் வாக்குரிமை, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புக்கள் எல்லாவற்றினையும் இழந்தனர். நேரடியான வன்முறைகள் இன்றி நிகழ்த்தப்பட்ட இவ்வன்முறையை கட்டமைக்கப்பட்ட ரீதியில் அல்லது வடிவமைக்கப்பட்ட முறையில் அரசு முன்னெடுத்தது. சட்டங்கள், நிர்வாக முறை, பொருளாதார கொள்கைகள், கல்வி திட்டங்களிலிருந்து ஒரு இனத்தினை படிப்படியாக நீக்கி சமூக பொருளாதார ரீதியில் ஒதுக்கிவைக்கப்பட்டனர். இதனை கட்டமைக்கப்பட்ட ரீதியிலான இனச்சுத்திகரிப்பு (Structural Ethnic Cleansing) என குறிப்பிடலாம். இலங்கையின் முதலாவது இனசுத்திகரிப்பு நிகழ்வாக இது சுட்டிக்காட்டப்படுகின்றது.

  • இவ்வாறு நிறுவமைக்கப்பட்ட இனச்சுத்திகரிப்புக்குள்ளாக்கப்பட்டவர்கள் 1954 – Nehru – Kotelawala Pact மற்றும் 1964 – Sirimavo – Shastri Pact மூலம் பெரும்பாலானவர்கள் இந்தியாவிற்கு பலவந்தமாக அனுப்பப்பட்டனர். இதன் மூலம் மலையகத் தமிழர்களுள் பெரும் இனக்குழுவினர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டமை சட்டரீதியான இனச்சுத்திகரிப்பாகும் (Legal Ethnic Cleansing).

  • 1983 இல் யாழில் இராணுவத்தின் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு பழிவாங்கலாக பேரினவாத வன்முறைக்குழுக்களால் கொழும்பு, கண்டி, களுத்துறை, மாத்தளை போன்ற நகரங்களிலிருந்த தமிழர்கள் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டது. “கறுப்பு ஜுலை” கலவரம் என வர்ணிக்கப்படுகின்ற இக்கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டன. பல நூற்றுக்கனக்கான பெண்கள் பாலியல் வன்முறைகளுக்குட்படுத்தப்பட்டனர். கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர். மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகளின்படி 3000 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும் 150,000 ற்கும் மேற்பட்ட தமிழர்கள் தம்முடைய வீடுகளை, சொத்துக்களை இழந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றன. இச்சம்பவம் இனவழிப்புக்குள்ளும் அடங்கும் அதேவேளை இனரீதியாக வெளியேற்றப்பட்டமை இனசுத்திகரிப்பிற்குள்ளும் அடங்கும்.

  • 1990 – கிழக்குப் படுகொலைகள் (Eastern Massacres)

1987 இல் இந்திய அமைதிப்படைகள் (IPKF) இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப்பு லிகளுக்குமான மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்தன. 1990 இல் இரு தரப்பிற்குமிடையில் சமாதான ஒப்பந்தம் முறிவடைந்ததுடன் இரண்டாம் கட்ட உள்நாட்டு – ஈழப்போர் மீண்டும் வெடித்தது. இந்தப் போர் முதலில் கிழக்கு மாகாணங்களில் ஆரம்பமானது. இதன் உச்சகட்டமாக திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற இடங்களிலுள்ள கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களுள் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் அடங்குவர். அத்துடன், பல பெண்களும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். இரவோடிரவாக சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இவ்வாறு கொல்லப்பட்டவர்களுடைய நிலங்கள், சொத்துக்கள் அபகரிக்கப்பட்டன. இந்த கட்டமைக்கப்பட்ட படுகொலைகளை இராணுவத்தினருடன் இணைந்து ஊர்காவற் படையினரும் முன்னெடுத்தமை மேற்கோள்காட்டத்தக்கது. இங்கு இனம் சார்ந்து அக்குழுமங்களை அழிப்பதே நோக்காக இருந்துள்ளது. எனவே, இதனை இனவழிப்பு என குறிப்பிட முடியும். அதாவது, பேரினவாதமும் முஸ்லிம் ஊர்காவல்படையும் தமிழர்களுக்கெதிராக முன்னெடுத்த இனவழிப்பு. இங்கு சாதாரண முஸ்லிம் மக்களும் கொல்லப்பட்டனர். ஆயினும், கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுடன் ஒப்பிடும் போது ஒப்பீட்டளவில் மிக குறைவானதே.

  • 1990 – வடக்கு முஸ்லிம் வெளியேற்றம்

1990ஆம் ஆண்டு தமிழீழப் புலிகளினால் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளிலிருந்து முஸ்லிம் மக்கள் இரவோடிரவாக வெளியேற்றப்பட்டனர். 24 மணிநேரத்திற்குள் தங்களது இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்கின்ற புலிகளின் உத்தரவின் அடிப்படையில் மக்கள் வெளியேறினர். இவர்களது உடைமைகள் விட்டுச்செல்லப்பட்டன. இன்றும் பல தசாப்தங்களாக இவர்கள் தம்முடைய சொந்த இடத்திற்கு செல்லமுடியாதொரு நிலை காணப்படுகின்றது. இலங்கைக்குள் புலிகளால் நிகழ்த்தப்பட்ட பாரியதொரு இனசுத்திகரிப்பாக இந்த வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றத்தைக் குறிப்பிடலாம். இவ் இனசுத்திகரிப்பின் போது ஏறத்தாழ 75,000 முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

  • 2009 இறுதி யுத்தம்

2008 முதல் 2009 வரை அப்போதிருந்த மஹிந்த அரசினால் கட்டமைக்கப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பின் ஓர் பாரிய பகுதியாக இறுதியுத்தம் பார்க்கப்படுகின்றது. மனிதாபிமானமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் பல இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான சிறுவர்களும் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்கள், சிறுமிகள், போராளிகள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டனர். இன்று வரை சர்வதேச விசாரணைகள் கண்துடைப்பாக இடம்பெறுவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி இன்றும் மறுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. 2009 இல் இலங்கை அரசு போர் முடிவிற்கு வந்துவிட்டது என பகிரங்கமாக அறிவித்திருந்த போதும் அதன் பின்னர் அபிவிருத்திகளை மேற்கொள்கின்ற போதும் வலிந்து காணாமலாகப்பட்டவர்கள், அரசியல் கைதிகள், முன்னாள் போராளிகள், நிர்வாகத்தில் மறுக்கப்படுகின்ற உரிமைகள் என உள்ளக நீதிக்கான பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. அத்துடன் மொழி, கலாசார சுத்திகரிப்புக்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர்.

  • 2019 – உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்

இந்தத்தாக்குதல்கள் கத்தோலிக்க – கிறிஸ்தவ ஆலயங்களை/ மக்களை இலக்கு வைத்தே நிகழ்த்தப்பட்டுள்ளன. இன ரீதியாக நோக்குமிடத்தில் தமிழ் மற்றும் சிங்கள இனத்தவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே, குறிப்பிட்ட இன மத ரீதியாக தாக்குதல் எனும் போதும் தற்கொலை குண்டுவெடிப்புக்கள் என்பதன் இறுதி விளைவு உயிர்களை அழிப்பது என்பதன் அடிப்படையிலும் இதுவும் இனவழிப்பு நிகழ்வே. கூடவே மதரீதியான சுத்திகரிப்பு (Religious Ethnic Cleansing) என்றும் அடையாளப்படுத்தலாம்.

போருக்கு பின்னரான நீதி கோரல்களும் மனிதஉரிமைச் செயற்பாடுகளும்

2009 இற்கு பின்னர் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டதும் மக்களை உள்ளீர்த்து கட்டமைக்கப்பட்ட நிகழ்வாக அரகலயவினை குறிப்பிடலாம். ஆனால், இப்போராட்டத்தின் பின்னுள்ளதும் போராடியவர்களின் பின்னுள்ளதுமான நுண்ணரசியல் மிகவும் முக்கியமானது.

2021 – 2022 பொருளாதார நெருக்கடி வந்த போது மக்கள் தம்முடைய அன்றாட தேவைகளைக் கூட சமாளிக்க முடியாமல் வீதிக்கு இறங்கி போராடினர். ஆனால், போரியல் காலத்தில் வடக்கு – கிழக்கு மக்களும், 1948 இல் இருந்து மலையக மக்களும் இதே பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தனர், இன்றும் எதிர்கொள்கின்றனர். ஆனால், இக்கால கட்டங்களில் மௌனமாயிருந்த பெரும்பான்மையினர் தம்மை நோக்கி திரும்பிய போது சிறுபான்மையினரையும் இணைத்துக்கொண்டு இந்நெருக்கடியினை பொதுமைப்படுத்தி வீதிக்கிறங்கி போராடினர் என்பது மேற்கோள் காட்டத்தக்கது. அதேவேளை போர்காலத்தில் சில மனிதாபிமானவர்களும், சிங்கள ஊடகவியலாளர்களும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் சிறுபான்மையினருக்கு குரல்கொடுத்தனர் என்பது உண்மையே. ஆயினும், “நாட்டுமக்கள்” வீதிக்கு இறங்கியது அம்பு தம்மை நோக்கி திரும்பிய போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

2009 யுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவித்த போது பால்சோறு கொடுத்து கொண்டாடிய அதே தென் இலங்கை 2022 இல் “முள்ளிவாய்க்கால் நினைவு”களை விளக்கேற்றி அணுசரித்ததும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகும். ஒருவேளை தென்னிலங்கையானது சிறுபான்மையினரின் வலிகளை உணர்ந்துவிட்டது என்று மக்கள் நினைத்திருந்தால் அதுவும் பொய்த்துப்போனமை இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியதொன்று.

தமிழீழ விடுதலைப்புலிகளை எவ்வாறு போர் வரலாற்றில் இருந்து விலத்திட முடியாதோ அதேயளவு புலியெதிர்பாளர்களது வகிபங்கினையும் போர் காலத்திலும் போருக்கு பிந்திய காலகட்டத்திலும் நாம் தவிர்த்திட முடியாது. இயக்கம் இருந்த போது துப்பாக்கி முனைகளுக்கு பயந்தொளிந்து திரிந்தவர்கள் 2009 இற்குப் பின்னர் எவ்வாறு தம்முடைய நியாயங்களை முன்வைக்கவும் எதிர்தரப்பு முடக்கபட்ட நிலையில் தம் விவாதங்களையும் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளையும் பொதுமைப்படுத்தினார்கள் என்பதும் வரலாற்றின் படிகளே. புலிகளை விமர்சிக்கும் போது அவர்கள் தம் குரல்களை நசுக்கினார்கள் என்று மேற்கோள் காட்டியவர்கள் பின்னர் தம்முடைய “புலியெதிர்ப்பு வாதத்தினை” எவ்வாறு அரசியலாக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பது மிகவும் காத்திரமானதொரு தளத்தில் விமர்சிக்கப்பட வேண்டியடிதொரு விடயம்.

வடக்கு முஸ்லிம் வெளியேற்றம் குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பு பகிரங்கமாக மன்னிப்பினை கோரியது. எனினும், அரசினால் ஆயுதமளிக்கப்பட்டு “ஊர்காவற்படை” உருவாக்கப்பட்டு எல்லைக்கிராமங்களின் “பாதுகாப்பிற்காக” என்று நிறுத்தப்பட்டவர்கள் அப்பாவி தமிழர்களையும் அவர்களுக்கு உதவியளித்த அப்பாவி முஸ்லிம்களையும் கொன்றொழித்தது பற்றி பேசிக்கொள்வதில்லை. எந்தவொரு கட்டமைப்பும் சமூகத்தில் ஆயுதமேந்தும் போது அவ்வினம் சார் பக்கபலம் இல்லாதிருப்பதில்லை. தெரிந்தோ தெரியாமலோ இவை நிகழ்த்தப்பட்டாகத்தான் வேண்டும். இதற்கு நிறுவல்கள் தேவையில்லை. இதனடிப்படையிலேயே தமிழ் அப்பாவி இளைஞர்கள் பலர் புலிகளுக்கு உதவினார்கள் என்று கொல்லப்பட்டுள்ளார்கள், அரசியல் கைதிகளாக்கப்பட்டுள்ளார்கள். இன்று பகிரங்கமாக விடுதலைப்புலிகளில் முஸ்லிம் பிரதிநிதிகளும் இருந்தார்கள் என்று கண்காட்சி நடாத்தும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊர்காவற்படையிலும் முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்தார்கள் என்று ஒத்துக்கொண்டு பொறுப்புக்கூறல்களை முன்னெடுக்கத் தயாராகவுள்ளார்களா?

காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல் குறித்து பரவலாக பேசும் கிழக்கு முஸ்லிம் பிரதிநிதிகளும், மனிதவுரிமை ஆர்வலர்களும் கிழக்கில் நிகழ்த்தப்பட்ட ஏனைய படுகொலைகள் பற்றி ஏன் ஒப்பீட்டளவில் பரவலாக பேசுவதில்லை. (இங்கு “ஒப்பீட்டளவில்” என்பது கவனிக்கப்படவேண்டியதொரு சொல்லாடல்) இன்று வரை காத்தான்குடி பள்ளிவாசல்கள், மதரஸாக்களில் நினைவுகூறல் நினைவுகளில் பரப்படுகின்ற இன காழ்ப்புணர்வுகள் ஆர்வலர்களின் காதினை அடையாமை வியப்பானதே.

இவ்வருடம் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடங்களை நினைவு கூரும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன. ஒரு இனத்தின் வலிநிறைந்த பக்கத்தினை நினைவுகூருவதில் குற்றமில்லை. எனினும், இவ் நினைவுகூரல் குறித்த நிகழ்வுகளில் சில விடயங்கள் ஊன்றி கவனிக்கப்பட வேண்டியன. முக்கியமாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்தமை பகிரங்கமாக மேற்கோள்காட்டப்பட்டுள்ளது, முஸ்லிம் இனத்தவர்களுள் சிலர் காட்டிக்கொடுத்தார்கள் என்பது பகிரங்கமாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, அடுத்தது வடக்கு முஸ்லிம் வெளியேற்றம் இடப்பெயர்வல்ல “இனச் சுத்திகரிப்பு” என மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இதனை பகிரங்கமாக மேற்கோள் காட்டியுள்ளவர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்களும், பெண்ணியவாதிகளுமே. எனினும் மலையகத்திலும், கிழக்கிலும் கட்டமைக்கப்பட்ட ஏனைய “இன சுத்திகரிப்பு”, “இனவழிப்பு”, “பாலியல் வன்முறை” குறித்து இவர்கள் நினைவுகூராமை பெரும் முரண்நகையானதே.

ஒருவேளை மனித உரிமையாளர்கள் இதயசுத்தியுடனும் மனித உரிமைக்காகவும்தான் போராடுகின்றார்கள் எனின் ஏன் புலிகளால் மட்டும் நிகழ்த்தப்பட்ட அதேவேளை புலிகள் அமைப்பினாலேயே பகிரங்கமாக மன்னிப்பு கோரப்பட்டதொரு விடயத்தினை மட்டும் தூக்கிப்பிடிக்கின்றார்கள் என்கின்ற வினா உங்களுக்குள் எழும்பவில்லையா? ‘மனிதம்’ தான் பின்னுள்ளது என்றால் வருடாவருடம் நினைவுகூரப்படுகின்ற சத்துருக்கொண்டான் படுகொலை, வீரமுனை படுகொலைகள் மற்றும் இன்னபிற படுகொலைகள் குறித்து ஏன் இவர்கள் நினைவுகூறுவதில்லை அல்லது விமர்சிப்பதில்லை. ‘பாசிசம்’, ‘இன சுத்திகரிப்பு’ என்கின்ற சொல்லாடல்கள்களை மட்டும் மேற்கோள் காட்டி புலிகளை விமர்சிக்கும் இவ் ஆர்வலர்கள் ஏன் ஏனையவர்கள் நிகழ்த்தியவை பற்றி பேசிக்கொல்வதில்லை.

இன சுத்திகரிப்பு என்பதற்கும் இனவழிப்பு என்பதற்கும் பாரிய வேறுபாடு, விளைவுகள் அடிப்படையில் உண்டு. அவ்வாறிருக்கும் போது “இன சுத்திகரிப்பினை தூக்கிப்பிடிக்கும் ஆர்வலர்கள் இனவழிப்பினை குறித்தும் ஒப்பீட்டளவில் கனதியான இனவழிப்பின் விளைவுகள் குறித்தும் கண்டுகொள்ளாமல் போவது ‘புலிகள்’ சம்மந்தப்படாமல் இருப்பதாலா அல்லது கிழக்கில் கொலைகள் நிகழ்த்தப்பட்டதால் அதனை குறித்து பேசும் போது முஸ்லிம்களை பகைக்க வேண்டியிருக்கும் என்பதாலா? அல்லது பெரும்பான்மையின் அரசியல் நிரலின் கீழ் தம்முடைய அரசியல் பங்களிப்பினை உறுதிப்படுத்தி கொள்கின்ற அரசியலா? என்பது சிந்திக்க வேண்டியதொன்றாகின்றது.

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் தமிழ்த்தேசியத்தின் வடக்கை தமிழ்த்தேசமாக்கும் தன்மை என வாதிடும் ஆர்வலர்களும் எழுத்தாளர்களும் கிழக்கில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களின் பின்னுள்ள “கிழக்கு முஸ்லிம்களுக்கானது” என்கின்ற இன அரசியல் நிகழ்ச்சி நிரலை கண்டுகொள்ளாமல் கடப்பதேன்? வடக்கில் நிகழ்ந்தது இன சுத்திகரிப்புதான். ஆனால், கிழக்கில் நிகழ்த்தப்பட்டது இனவழிப்பு. உங்களளவில் எது கனதியானது?

போருக்கு பின்னரான சூழமைவில் மக்களின் மனவடுக்களை ஆற்றுப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு வழிநடாத்த வேண்டிய பொறுப்புள்ளவர்கள் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட முக்கிய தினங்களில் மக்களிடையே “வார்த்தை அரசியல்” செய்வதும் தம்முடைய எதிர்ப்புக்களை நியாயப்படுத்த குறிப்பிட்ட இனத்தவர்களுக்காக வருடாவருடம் கண்ணீர் வடிப்பதும் மிகவும் தெளிந்த சிந்தனையுடன் அனுகப்படவேண்டியது என்பதை இத்தனை இழப்பிற்கு பின்னராவது மக்கள் புரிந்துகொள்வார்களா? அதற்கான சித்தனை தளம் உள்ளதா என்பதே போருக்கு பின்னர் 16 வருடங்கள் கடந்த நிலையிலும் தமிழ் – முஸ்லிம் – மலையக மக்களிடம் முன்வைக்கப்பட வேண்டிய வினாவாகின்றது.

Shine_Verticle_Keshayinie-Edmund-e176283கேஷாயினி எட்மண்ட்

https://maatram.org/articles/12397

நுகேகொடை கூட்டம் எதிர்க்கட்சியினருக்கு கை கொடுக்குமா

1 week 3 days ago

நுகேகொடை கூட்டம் எதிர்க்கட்சியினருக்கு கை கொடுக்குமா

எம்.எஸ்.எம்.ஐயூப்

சில எதிர்க்கட்சிகள் இம் மாதம் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடத்தவிருக்கும் அரச எதிர்ப்பு கூட்டத்தின் நோக்கத்தை மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

ஆரம்பத்தில் அக்கட்சிகள் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக தாம் இந்தக் கூட்டத்தை நடத்துவதாக தெரிவித்தன. அரசாங்கம் அரசியலமைப்பு ரீதியான சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருவதாகவும் தனிக்கட்சி ஆட்சியை நிறுவ முயல்வதாகவும் குற்றஞ்சாட்டின.

பொதுப் பணத்தில் பிரித்தானியாவுக்கு தனிப்பட்ட பயணம்  ஒன்றை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டி பொலிஸார் கடந்த ஓகஸ்ட் மாதம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்தனர்.

இதனை அடுத்து முன்னாள் ஜனாதிபதிகளினதும் அவர்களின் விதவைகளினதும் சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்கு கடந்த செப்டம்பர் மாதம் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதன் விளைவாக முன்னாள் ஜனாதிபதிகள் அரச விடுதிகளில் இருந்து வெளியேற நேர்ந்தது.

இதனை அடுத்தே அரசாங்கம் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்ததற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவை கூறின. அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் 1000 எதிர்ப்புக் கூட்டங்கள் சத்தியாகிரகங்கள் போன்றவற்றை நடத்தவிருப்பதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.

எதிர்க்கட்சிகள் நுகேகொடையில் நடத்தவிருக்கும் கூட்டம்  ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷவை பிரபல்யப்படுத்தும் கூட்டமாகவே தெரிகிறது.

எவ்வாராயினும் இப்போது கூட்டம் நடத்தவிருக்கும் எதிர்க்கட்சிக் குழுவினர் தம்மை கூட்டு எதிர்க்கட்சி என்றே அழைக்கின்றனர். 2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்‌ஷஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த போது இந்தப் பெயரிலேயே அவரது ஆதரவாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சி  தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அவர்களும் நுகேகொடையிலேயே  தமது முதலாவது எதிர்ப்புக் கூட்டத்தை நடத்தினர்.அந்த எதிர்ப்பு அன்று சிறிது காலத்துக்குள்ளேயே மாபெரும் அலையாக மாறி மூன்றாண்டுகளில் அதாவது 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஐ.தே.கவை படுதோல்வி அடையச்செய்தது.

ஆனால், பழைய பெயரில் பழைய இடத்தில் கூட்டம் நடத்தினாலும் இம்முறை இந்த கூட்டு எதிர்க்கட்சி பாரிய எதிர்ப்பு அலையாக மாறும் சாத்தியம் இல்லை என்றே தெரிகிறது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, இந்த கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்காமையே அதற்கு முக்கிய காரணமாகும்.

2015 ஆம் ஆண்டு நுகேகொடையில் கூட்டம் நடத்தும் போது ஆளும் கட்சியான ஐ.தே.கவைப் பார்க்கிலும் எதிர்க்கட்சியான மஹிந்த ராஜபக்‌ஷ தலைமை தாங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பலம் வாய்ந்த கட்சியாக இருந்தது. ஐ.தே.க சிறுபான்மை அரசாங்கமொன்றை நடத்தியது.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐ.தே.க வெற்றி பெற்றாலும் அதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வெளியே இருந்து வழங்கிய ஆதரவினாலேயே அரசாங்கத்தை  ஐ.தே.க  நடத்தியது.

இன்று நிலைமை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. இன்று ஆளும் தேசிய மக்கள் சக்தி, விகிதாசார முறைப்படி தனியாக மூன்றில் இரண்டுக்கு மேலான பாராளுமன்ற ஆசனங்களைப் (159 ஆசனங்களை) பெற்று பலமான நிலையில் இருக்கிறது. கடந்த மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டாலும் இன்றும் நாட்டில் மிகவும் பலம் வாய்ந்த கட்சி, தேசிய மக்கள் சக்தியாகும்.

நுகேகொடை கூட்டத்துக்கான கூட்டு எதிர்க்கட்சியின் பிரதான சுலோகமான அடக்குமுறை என்பது தமக்கே பாதகமாக அமையக்கூடும் என்று அக்கட்சிகள் இப்போது உணர்வதாக தெரிகிறது.

ஏனெனில், இந்தக் கூட்டத்தை நடத்தப் போகும் ஐ.தே.க., ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் அம்முன்னணிக்குள் இருந்தவர்களின் ஆட்சிக் காலங்கள் மிகக் கொடூரமான அடக்குமுறை நிறைந்த காலங்கள் என்பதை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.

1977 முதல் 1994 ஆம் ஆண்டு வரையிலான ஐ.தே.க., ஆட்சியின் கீழ் வடக்கில் இடம்பெற்ற அடக்குமுறையே இனப்பிரச்சினையை ஆயுதப் போராக மாற்றியது. இலங்கை வரலாற்றில் நடைபெற்ற மிகவும் ஊழல் நிறைந்த தேர்தல் 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலாகும். அதே ஆண்டு நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பு இலங்கை வரலாற்றில் மிக மோசமான ஊழல் நிறைந்த வாக்கெடுப்பாகும்.

அக்காலத்தில் முதன்முதலாக அரசியல் ஆதரவு பெற்ற பாதாள உலக கோஷ்டிகள் உருவாகின. கோணவல சுனில் மற்றும் சொத்தி உபாலி போன்ற குண்டர்கள் தனியான ஆட்சியை நடத்தி வந்தனர். அக்காலத்தில் பியகம, மஹியங்கனை மற்றும் கெக்கிராவ போன்ற பகுதிகள் எதிர்க்கட்சிகளுக்கு ‘தடை செய்யப்பட்ட’ பிரதேசங்களாக இருந்தன.

1983 ஆம் ஆண்டு நாடெங்கிலும் தமிழர்களுக்கு எதிராக குண்டர்கள் ஏவி விடப்பட்டனர். எவ்வித காரணமும் இன்றி மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட மூன்று கட்சிகள் தடை செய்யப்பட்டன. அக்கால அடக்குமுறையை பற்றி ஒரு புத்தகத்தையே எழுதலாம். அந்த ஐ.தே.கவே இப்போது ஐ.தே.க என்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்றும் பிரிந்து செயல்படுகின்றன.

இதனை அடுத்து பதவிக்கு வந்த சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் குமார் பொன்னம்பலம் கொல்லப்பட்டார். பெத்தகான சஞ்சீவ என்ற பாதாள உலக குண்டன் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்தான். அக்காலத்திலும் களனி மற்றும் ஆனமடுவ போன்ற பகுதிகளில் எதிர்க்கட்சியினருக்கு தலையைக் காட்ட முடியாத நிலை ஏற்பட்டது. ஊடகவியலாளர்களான மயில்வாகனம் நிமலராஜன் மற்றும் சிவராம் ஆகியோர் சந்திரிகாவின் ஆட்சிக் காலத்திலேயே கொல்லப்பட்டனர்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் லசந்த விக்ரமதுங்க, நடேசன் மற்றும் சுகிர்த்தராஜன் போன்ற பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். உதயன், சிரச மற்றும் சியத்த ஆகிய ஊடக நிறுவனங்கள் தீயிடப்பட்டன. பெருமளவான ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் தியாகராசா மகேஸ்வரன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.

அந்த மஹிந்த ராஜபக்‌ஷவே இப்போது ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணயின் தலைவராகவும் இருக்கிறார்.தேசிய மக்கள் சக்தியின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை. எனவே நுகேகொடையில் கூட்டம் நடத்தவிருக்கும் கட்சிகள் அடக்குமுறை என்ற சுலோகத்தை வாபஸ் பெற்றிருக்கின்றன போலும். 

தே.ம.ச.,வுக்கு அதன் தேர்தல் வாக்குறுதிகளை நினைவூட்ட பொருத்தமான மாதம் இம் மாதமாகும். ஆனால், நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய கடந்த  கால ஆளும் கட்சிகளுக்கு அதற்காக தார்மிக உரிமை இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. 

அந்த வகையில் அரசாங்கத்தை விமர்சிக்கும் தார்மிக உரிமை வாக்களித்த மக்களுக்கு இருக்கிறது.  உண்மையிலேயே அரசாங்கம் அதன் சகல வாக்குறுதிகளையும் நிறைவேற்றாவிட்டாலும் சில முக்கிய விடயங்களை சாதித்துள்ளது. அதில் ஒன்று அரசியல் மட்டத்தில் ஊழலை ஒழித்தமையாகும்.

ஆளும் கட்சியில் ஊழல்வாதிகள் அறவே இல்லை என்ற உத்தரவாதத்தை வழங்க எவராலும் முடியாது. ஆனால் அவ்வாறு ஆளும் கட்சியில் ஊழல் பேர்வழிகள் இருந்து அம்பலமானால் நிச்சயமாக அரசாங்கத்தின் தலைவர்கள் அவர்களை பாதுகாக்காது  வெளியேற்றுவார்கள் என்றொரு நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இது முன்னொருபோதும் காணாத நிலைமையாகும்.

போதைப் பொருட்களுக்கு எதிரான அரசாங்கத்தின் போராட்டமும் நேர்மையானதாக தெரிகிறது.அத்தோடு வங்குரோத்து நிலையை அடைந்த நாட்டை மீட்க சர்வதேச நாணய நிதியம் கடுமையான நிபந்தனைகளுடன் திட்டம் ஒன்றை வகுத்துக் கொடுத்தது. அதனை ரணில் விக்ரமசிங்க செயல்படுத்தினார்.

ஆனால், அவர் ஊழலை கட்டுப்படுத்தவில்லை. அவரது காலத்திலும் ஊழல் மலிந்து இருந்தமை அண்மையில் ‘கோப்’ குழுவின் விசாரணை ஒன்றின் போது தெரியவந்தது.

தே.ம.ச., தலைவர் அனுரகுமார திசாநாயக்க சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுத்துகிறார். அரச நிதி நிலைமை பலமாக இருப்பதை இம்முறை வரவு -செலவு திட்ட விவாதத்தின் போது எதிர்க்கட்சியினரும் ஏற்றுக்கொண்டனர். நாளை நிலைமை எவ்வாறு அமையும் என்ற உத்தரவாதத்தை வழங்க முடியாவிட்டாலும்.

இப்போதைக்கு அரசாங்கத்தின் ஒரு வருட சாதனையை பாராட்டலாம்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நுகேகொடை-கூட்டம்-எதிர்க்கட்சியினருக்கு-கை-கொடுக்குமா/91-367849

தனபாலசிங்கத்தின் “தமிழ்த்தேசியவாத அரசியலின் எதிர்காலம்” — கருணாகரன் —

1 week 4 days ago

தனபாலசிங்கத்தின் “தமிழ்த்தேசியவாத அரசியலின் எதிர்காலம்”

November 9, 2025

தனபாலசிங்கத்தின் “தமிழ்த்தேசியவாத அரசியலின் எதிர்காலம்”

— கருணாகரன் —

தமிழ்த் தேசியவாத அரசியலுக்கு எதிராக NPP யின் எழுச்சி உருவாக்கியிருக்கும்  நெருக்கடிச் சூழலில் ‘தமிழ்த்தேசியவாத அரசியலின் எதிர்காலம்’ என்ற நூலினை ‘தினக்குரல்’ பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பு உட்பட ஊடகத்துறையின் முக்கிய பொறுப்பிலிருந்த மூத்த பத்திரிகையாளர் திரு. வீரகத்தி தனபாலசிங்கம் எழுதியிருக்கிறார். இந்த நூலில் எட்டுக் கட்டுரைகள் உள்ளன. 

இந்த எட்டுக் கட்டுரைகளில் ஏழு கட்டுரைகளும் தமிழ்த்தேசியவாத அரசியலின் இருப்பு, அதனுடைய எதிர்காலம் குறித்த கேள்விகளை ஆதாரமாக முன்வைத்துப் பேசினாலும் இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை, கடந்த கால ஆட்சியாளர்களின் தவறுகள், தமிழ்த் தலைமைகளின் தீர்க்கதரிசனமற்ற அரசியல் பார்வை, யதார்த்த அரசியலை ஏற்றுக் கொள்ளத் தயங்குவதால் தமிழ்த்தேசியவாத அரசியலாளர்களும் மக்களும் சந்திக்கின்ற பின்னடைவுகள், மாகாணசபை முறையின் அவசியம், அரசியலமைப்பைத் திருத்தும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள், ஆட்சியிலிருக்கும் NPP அரசாங்கத்தின் பொறுப்புகள் எனப் பலவற்றையும் பேசுகின்றன. 

இவற்றைப் பற்றி வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து ஆராய்கிறார் தனபாலசிங்கம். ஒரு கட்டுரை மட்டும் மறைந்த தமிழ்த் தலைவர் இரா. சம்பந்தனுடைய அரசியல் வகிபாகம் பற்றியது. அதுவும் ஒரு வகையில் தமிழ்த்தேசியவாத அரசியலைப் பற்றிப் பேசுவதான். 

எழுந்தமானமாகவோ தன்னுடைய விருப்பு – வெறுப்பு நிலையிலிருந்தோ எதையும் பேச விழையாமல், வரலாற்று நிதர்சனங்களின் ஊடாக, யதார்த்த பூர்வமாக எல்லாவற்றையும் அணுகுவது இந்த நூலின் முக்கியத்துவமாகும். தனபாலசிங்கத்தின் முக்கியத்துவமும் இதுவே. 

இந்த நூலைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால், ‘எல்லாப் பக்கமும் கூருள்ள ஆயுதமொன்றைப் போல இந்த நூல் உள்ளது’ எனலாம். அதனால் எல்லாத் தரப்பினருக்கும் விழுகிறது பாரபட்சமில்லாத அடி. கூடவே எல்லோருடைய பொறுப்புகளும் சுட்டிக்காட்டப்பட்டு நியாயமான முறையில் உணர்த்தப்படுகிறது. அதாவது, கடுமையான விமர்சனம். சிநேகபூர்வமான சுட்டிக் காட்டுதல்கள்.

இவை சமகாலத்தை மையப்படுத்திப் பேசினாலும் இலங்கைத்தீவின் அரசியல் நிலவரத்தையும் வரலாற்றையும் யதார்த்தப் பார்வையோடு, தேவைக்கேற்ப முன்பின்னாகப் பேசி, உண்மைகளைக் கண்டறிய விளைகின்றன. முழுமையாக நோக்கினால், இலங்கைத்தீவின் இனச்சிக்கலுக்குப் பொருத்தமான தீர்வைக் காண்பதையும் தமிழ்ச் சமூகம் பொருத்தமான அரசியலை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றது எனலாம்.  

என்பதால் இன்றைய அரசியலாளர்களும் மக்களும் இந்த நூலைப் படிக்க வேண்டியது அவசியமாகிறது. நூலில் உள்ள கட்டுரைகள் சொல்ல விளைகின்ற விடயங்களைத் தொகுத்துப் பார்க்கலாம்.

1.   ‘கறுப்பு ஜூலைக்குப் பிறகு 42 வருடங்கள்’ என்ற முதலாவது கட்டுரை, இந்தக் காலப் பகுதியில் மிகப் பெரிய உள்நாட்டுப்போர் நடந்து முடிந்து விட்டது. பேரழிவுகளில் நாடு சிக்கி மீண்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அனைத்துச் சமூகங்களிலும் பலியாகியுள்ளனர். பொருளாதாரம் முற்றாகவே பின்னடைவு நிலைக்குள்ளாகியிருக்கிறது. அரசியல் ரீதியாக (மனித உரிமைகள் மற்றும் தீர்வு விவகாரங்களில்) சர்வதேச தலையீடுகளும் பொருளாதார ஆக்கிரமிப்புகளும் நிகழும் நிலை உருவாகியுள்ளது. இப்படியெல்லாம் இருந்தும் இன்னும் சிங்கள மக்களுடைய – சிங்கள அதிகார வர்க்கத்தினுடைய உள நிலையில் மாற்றத்துக்கான அறிகுறியைக் காணவில்லை; படிப்பினையைப் பெறவில்லை என்று கவலை தெரிவிக்கிறது. தீர்வுக்கான அரசியல் வரைவை உருவாக்குவதில் அனைத்து ஆட்சியாளர்களுக்கும் உள்ள தடுமாற்றத்தையும் அர்ப்பணிப்பற்ற தன்மையையும் சொல்கிறது.

முக்கியமாக 1983 இல் நடைபெற்ற வன்முறைச் சூழலை, அன்றைய அரசியல் சக்தியாக இருந்த UNP யும்  அதனுடைய தலைமையான ஜே. ஆர். ஜெயவர்த்தனாவும்  மேற்கொண்ட அரசியல் தவறுகளை – மேலாதிக்கச் செயற்பாடுகளை – இனவாத அணுகுமுறையை தனபாலசிங்கம் ஆதாரபூர்வமான எடுகோள்களோடு முன்வைத்துள்ளார். இது மூத்தவர்களுக்கு நினைவூட்டலையும் இளைய தலைமுறையினருக்கு கடந்த கால வரலாற்றுச் சூழலைப் பற்றிய புரிதலையும் ஏற்படுத்துகிறது. 

2.   13 ஆவது திருத்தத்தை தமிழர்கள் என்ன  செய்யப்போகிறார்கள்? என்பது பற்றிய கட்டுரை சற்றுச் சுவாரசியமானது. அத்துடன் நியாயமான கேள்வியையும் எழுப்புகிறது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைக்கும் இடையில் சிக்குப்பட்டிருப்பது 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான  மாகாணசபை முறைமை ஆகும். ஆனால், தற்போதுள்ள சூழலில் மட்டுமல்ல, அரசியல் தீர்வுக்காக முன்னெடுக்கப்பட்ட அல்லது உரிமைக்கான போராட்டத்தின் பின்னர் மிஞ்சியிருப்பது இது ஒன்றேயாகும். இது தொடர்பாக சிங்களத் தரப்பிலும் ஏற்பும் மறுப்புமான நிலைப்பாடுகள் உண்டு. தமிழ்த்தரப்பிலும் அப்படித்தான் நிலைமை. இந்த நிலையில் இதை ஏற்றுக் கொள்வதில் தமிழ் மக்கள் எத்தகைய நிலைப்பாட்டுடன் உள்ளனர்? என்பதே தனபாலசிங்கத்தின் கேள்வியாகும். இந்தக் கேள்வியை அவர் இந்தியாவினதும் சர்வதேச சமூகத்தினதும் இலங்கை இனப்பிரச்சினையின் அணுமுறை தொடர்பான ஈடுபாட்டு எல்லைகளின் அனுபவங்களை முன்வைத்தே எழுப்புகிறார். என்பதால் இது முதன்மையான உரையாடலுக்கு உரிய ஒன்றாக உள்ளது. 

3.   தமிழ்த்தேசியவாத அரசியலின் எதிர்காலம் பற்றிய கேள்வியை எழுப்பும் மையக்கட்டுரை இது. தேசிய மக்கள் சக்தி (NPP) யின் எழுச்சியும் அது ஆட்சியைக் கைப்பற்றியதும் வடக்குக் கிழக்கில் அதற்கு ஏற்பட்டுள்ள செல்வாக்கும் இன்னும் அதற்கு இந்தப் பிராந்தியத்தில் உள்ள கவர்ச்சியும் அல்லது ஈர்ப்பும் தமிழ்த் தேசியவாத அரசியலை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதா? என்பதே கட்டுரையின் சாரம். தேசிய இனப்பிரச்சினைக்கு NPP யிடம் உருப்படியான – வெளிப்படையான தீர்வைக் காண முடியவில்லை என்றாலும் சனங்கள் (தமிழ் மக்கள்) NPP யையும் அநுரகுமார திசநாயக்கவையும் தமக்கு நெருக்கமாகவே உணர்கிறார்கள். இதனை எதிர்கொள்வதற்கு தமிழ்த்தேசியக் கட்சிகள் தவிக்கின்றன. இவ்வளவுக்கும் NPP இனப்பிரச்சினைக்கு எத்தகைய தீர்வை, எந்தக் காலப்பகுதிக்குள் முன்வைப்பது என்பதைப் பற்றி எந்தப் பதிலும் சொல்லாமலே NPP தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதனால்  கடுமையானதொரு நிலைப்பாட்டை தமிழ்க்கட்சிகள் இனவாதப் போக்கில் எடுத்திருக்கின்றன என்கிறார் தனபாலசிங்கம். இது மேலும் நெருக்கடிகளைக் கொடுக்கும் ஒன்றாகவே மாறும். உண்மையான காரணம், தமிழ்த்தேசியவாதக் கட்சிகளில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட நிறைவின்மையே காரணம். அதைக் கண்டறிவதுதான் முக்கியமானது என்பது அவருடைய வாதம். இந்தக் கட்டுரையாளரின் கருத்தும் அதுதான். முக்கியமாக ‘பெரும்பான்மைச் சிங்கள மக்களின் 

ஒத்துழைப்பு இல்லாமல் இலங்கைக்குள் அரசியல் தீர்வு சாத்தியமில்லை என்ற உண்மையை தமிழ் மக்களுக்குப் புரிய வைப்பதில் தமிழ் அரசியல்வாதிகள் அக்கறைப்படவில்லை என்ற கவலைய்யும் – குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார் தனம்.

4.   இலங்கைத் தமிழர் அரசியலில் சம்பந்தனின் வகிபாகத்தைப் பற்றிய கட்டுரை இது. சம்பந்தன், தமிழ்த் தலைவராகவும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தவர். இரண்டு நிலையிலும் அவருடைய பாத்திரம் எவ்வாறிருந்தது? எத்தகைய பங்களிப்பைக் கொண்டிருந்தார் என்பதைப் பற்றி ஆராயப்படுகிறது. ஏறக்குறைய 60 ஆண்டுகாலம் அரசியலில் அனுபவமுடையவரான சம்பந்தன், 15 ஆண்டுகள் தமிழ்த் தலைவராகவும் ஐந்து ஆண்டுகள் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறார். சம்பந்தனுடைய தலைமைத்துவக் காலகட்டமானது, தமிழர்கள் ஆயுதந்தாங்கிய விடுதலைப்போராட்டத்தில் தோல்வியைத் தழுவிய சூழலைக் கொண்டது. அதாவது மிகக் கடினமான காலத்தில் – வெற்றிக் களிப்போடு இருந்த சிங்களத் தலைமைகளோடு, தமிழ் மக்களின் உரிமைசார் அரசியலைக் கையாள வேண்டியிருந்தது என்கிறார் தனபாலசிங்கம். ஒரு பத்திரிகை ஆசிரியராக தனக்கு வாய்த்த அரசியல் உறவுகளை அடிப்படையாக வைத்து இந்த விடயங்களை அவர் நோக்குகின்றார். 

சம்பந்தனுடைய அரசியற் தலைமைத்துவத்தை தமிழ் மக்களில் ஒருசாரார் நிறைவின்மையாகப் பார்க்கின்றபோதும், அவர் தன் வாழ்நாளில் பாராளுமன்றத்திலும் வெளியிலும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடத்திலும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளையும் இலங்கை அரசின் தவறான போக்குகளையும் எந்தச் சமரசமும் இல்லாமலே வெளிப்படுத்தி வந்திருக்கிறார். சில சந்தர்ப்பங்களில் அவர் கடுந்தொனியில் கூட அவற்றைச் சொல்லியிருக்கிறார். ஒரு மிதவாத தலைவர் என்ற அடிப்படையில் அவருடைய எல்லைகள் மட்டுப்பட்டன என்பதை நினைவூட்டுகிறார் தனபாலசிங்கம். ஆனால், என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தன் இருந்தவரையில் அவர் தமிழர்களின் தலைவர் என்ற ஒரு அடையாளத்தையும் உணர்வையும் ஏற்படுத்தியிருந்தார். சம்பந்தனுக்குப் பிறகு அப்படி ஒரு அடையாளம் தமிழ் அரசியற் பரப்பில் இல்லாமற் போயுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டி, சம்பந்தனுடைய முக்கியத்துவத்தை – அவருடைய இருப்பின்மையை உணர்த்துகிறார். 

5.   இது மிகச் சவாலுக்குரிய – இன்றைய சமகால ஆட்சியாளர்களுடைய அரசியல் யாப்பு, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்ததாக உள்ளது. இனப்பிரச்சினையைக் கையாளும் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையென்றால், புதிய அரசியல் கலாச்சாரம் என்பது அர்த்தமற்றது என்பதை ஆராய்ந்து நிறுவுகிறது இந்தக் கட்டுரை. NPP அதிகாரத்தில் இருப்பதால் ‘இனவாத அரசியல்வாதிகள் தேர்தல்களில் போட்டியிடாமல் அரசியலில் இருந்தே ஒதுங்கியிருப்பதாகக் கருதக் கூடாது. அப்படிக் கருதவும் முடியாது. இதை இனவாத அரசியலின் முடிவாகவும் அமைந்து விடப்போவதில்லை.  பதிலாக பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு எதிராக விதைக்கப்பட்டிருக்கும் நச்சுத்தனமான சிந்தனைகள் தோற்கடிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஒரு சரியான அரசியல் யாப்பும் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய செயற்பாட்டுத் துணிவும் ஏற்படும் என நிறுவப்படுகிறது. இது அதற்குப் பொருத்தமான – வாய்ப்பாக அமைந்த காலம். இதனை அரசாங்கமும் பிற சக்திகளும் தமிழ்ச் சமூகமும் இழக்கக் கூடாது என்பதே கட்டுரையின் தொனியாகும். 

6.   சமகால நிலவரத்தை முன்வைத்து, தமிழ்த்தேசியவாத சக்திகள் எத்தகைய முடிவுகளை – தீர்மானங்களை எடுக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தி குறுகிய கால ஆட்சிக்குள் படித்துக் கொண்ட பாடங்கள் என்ன? என்பனவற்றை நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலை அடிப்படையாக வைத்து, ஒரு கண்ணோட்டமாக எழுதப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழரசுக்கட்சி கவனிக்க வேண்டிய விடயங்கள் அழுத்தம் கொடுத்து எழுதப்பட்டுள்ளன. பாராளுமன்றத் தேர்தலை விட உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ்த்தேசியவாத சக்திகளின் இருப்புச் சற்று உறுதிப்படுத்தப்பட்டாலும் தலைக்கு மேலே தொங்கும் கத்தி அகலவில்லை. தேசிய மக்கள் சக்தி உள்ளுராட்சித் தேர்தலிலும் வலுவான இடத்தில் – இரண்டாவது இடத்தில்தான் உள்ளனது என்பதை ஆதாரப்படுத்தி, நிலைமைகளைப் புரிந்து கொள்ளுங்கள் என்று தமிழ்த் தரப்பை எச்சரிக்கிறார். 

7.   இதுவும் சமகாலத்தையொட்டியதொரு கட்டுரையே. சுமந்திரன் (தமிழரசுக் கட்சி) ஏற்பாடு செய்த ஆகஸ்ட் 2025 ஹர்த்தாலின் சாதக பாதகத்தை ஆராய்ந்து பார்க்கும் தனபாலசிங்கம், ஒரு பொதுக்கோரிக்கை எப்படி அமைய வேண்டும். ஒரு போராட்ட முன்னெடுப்பு எப்படி இருக்க வேண்டும். வெற்றியைப் பெற வேண்டும் என்றால் அதற்கு ஏனையோருடைய பங்களிப்புகள் என்ன? அவற்றை எப்படிக் கோருவது? பலவீனப்பட்டுள்ள தரப்பை (தமிழ் மக்களை) மேலும் பலவீனப்படுத்தும் அடிப்படையிலான போராட்ட அறிவிப்பு – போராட்ட எதிர்ப்பு நிலைப்பாடுகள் விரும்பத்தகாதவை என்று வலியுறுத்திப் பேசுகிறார். ஒரு ஊடகவியலாளரின் கோபமும் நிதானமும் இதில் தெளிவாகவே புலப்படுகிறது.

8.   இறுதிக் கட்டுரை முக்கியமானது, புதிய அரசியலமைப்பின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? என்ற கேள்வியை எழுப்பி ஆரம்பிக்கிறது. இது அநேகமாக அரசாங்கத்தரப்பையே கூடுதலாகக் கவனத்தில் எடுத்துப் பேசுகிறது. முக்கியமாக ஆட்சியிலிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொறுப்புகளைப் பற்றிச் சொல்லப்படுகிறது. கடந்த கால ஆட்சியாளரின் தடுமாற்றங்கள்,  இனத்துவ நோக்கு, அரசியல் வறுமை, ஊழல் போன்று இந்த ஆட்சித் தரப்பும் தவறுகளையே பராமரிக்குமாக இருந்தால், அது நாட்டை மேலும் பலவீனப்படுத்திப் பாதிப்பை உண்டாக்கும் என்று சொல்கிறது. ‘அதிகாரப் பரவலாக்கம் ஆட்சி முறையில் சகல சமூகங்களின் பங்கேற்பையும் உறுதி செய்வதற்கான ஒரு வழிமுறையே தவிர, தேசிய ஒருமைப்பாட்டுக்கான அச்சுறுத்தல் இல்லை‘ என்று மிக ஆழமான ஒரு உண்மையை எடுத்துரைத்துள்ளார் தனபாலசிங்கம். ‘இலங்கையில் அமைதியும் சமூகங்கள் பரஸ்பர மதிப்புடன் வாழ்கின்ற சூழ்நிலையும் ஏற்பட வேண்டுமானால், நாட்டின் பன்முகத் தன்மையைப் பிரதிபலிக்கக் கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். இது தொடக்கத்துக்கான நேரம். அதை வீணாக்கக் கூடாது‘ என்று முடிக்கிறார்.

எனவே மேற்படி எட்டுக் கட்டுரைகளும் இனமுரண் அரசியலின் தீய விளைவுகள், இனப்பிரச்சினைக்கான தீர்வின் அவசியம், அதற்கான வழிமுறைகள், அவற்றை முன்னெடுக்கும் பொறுப்புகள், சமூகங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள், இந்தியாவின் நிலைப்பாடு, அதன் எல்லை அல்லது மாறிவரும் பிராந்திய அரசியற் சூழல், தமிழ் மக்களின் சர்வதேசக் கற்பனை, ஒரு நாடு இரு தேசம் என்ற மிகுவிருப்பம், யதார்த்தத்துக்கும் கற்பனைக்கும் இடையில் தத்தளிக்கும் தமிழ் மக்கள், தமிழ்த்தேசியவாத அரசியற் சக்திகளின் பலவீனம், அதைக் களைய வேண்டிய அவசியம், இனவாத அரசியலில் இதுவரையில் மன்னிப்பே கோராத ஐ.தே.க மற்றும் அதனுடைய தலைமைகள், தமிழ்க் கட்சிகளின் ஐக்கியமும் பலவீனங்களும், புலம்பெயர் தமிழர்களின் அரசியல் ஈடுபாடும் யதார்த்தமும், தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் தரப்பின் அறிவாற்றல், விவேகம், செயற்றிறன், கோட்பாட்டுப் பயில்கை – கோட்பாட்டு வலிமை, ஜனநாயக அடித்தளம் எனப் பலவற்றை இந்த எட்டுக் கட்டுரைகளிலும் வைத்துப் பேசப்படுகிறது. முக்கியமாகத் தேர்வு செய்யப்பட வேண்டிய – தேவையான விடயங்களை அழுத்தம் கொடுத்துப் பேசுகிறது இந்த நூல். அதேவேளை சிறுபிள்ளைத்தனமான அரசியல் புரிதல்களையும் விமர்சிக்கிறது. குறிப்பாக புலம் பெயர் தமிழர்களுடைய முதலீடுகளுக்கு அரசாங்கம் இடமளித்தால், இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்ற எளிய சூத்திரத்தைத் தமிழ்த் தரப்பு வைத்திருக்கிறது என்பது சிரிப்புக்குரிய சங்கதி அல்லவா! புலம்பெயர் மக்களுடைய முதலீடுகளுக்கு இடமளிக்கப்பட வேண்டும். ஆனால், அதனால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீரும் என்ற கற்பனைகள் செல்லுபடியற்றவை. அதைப்போலவே, மக்களுடைய தேவைகள் என்பது அரசியல் உரிமைப் பிரச்சினை மட்டுமல்ல, பல்வேறுபட்ட தேவைகளுக்குரியது. குறிப்பாக மேல் வர்க்கத்தின் பிரச்சினையும் உணர்தலும் வேறு. அதனால் அதற்குரிய நிலைப்பாடுகளும் வேறாகவே இருக்கும். அடிநிலை மக்களின் உணர்வும் தேவைகளும் பிரச்சினைகளும் வேறு. அவர்களுடைய நிலைப்பாடுகளும் வேறானவை. இதைப் புரிந்து கொள்ள  வேண்டும். 

ஆகவே எல்லாவற்றையும் தொகுத்து நோக்கினால், சமகால அரசியல் முன்னெடுப்பாளர்களுக்குரியதொரு கையேடு. பொதுமக்கள் நிதானமான முறையில் சமகால – எதிர்கால அரசியலைத் தெளிவு கொள்வதற்கொரு வழிகாட்டி ஏடு. 

ஒரு ஊடகவியலாளராகவும் அரசியல் நோக்கராகவும் நேர்நிலை நின்று பகுப்பாய்வைச் செய்திருக்கிறார் தனபாலசிங்கம், பொருத்தமான முன்வைப்புகளையும் வைத்துள்ளார். ஆனால், இலங்கைத்தீவில் முஸ்லிம்களும் மலையகத் தமிழர்களும் உள்ளனர். அனைத்துத் தீர்வும் அவர்களையும் உள்ளடக்கியதே. அவற்றையும் இணைத்துப் பேசியிருக்க வேண்டும். பன்மைத்துவத்தைப் பற்றிப பேசுவதென்பது, அனைவரையும் உள்ளடக்கியதே. யாரையும் விட்டு விடுவதல்ல. 

https://arangamnews.com/?p=12433

மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?

1 week 5 days ago

மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?

லக்ஸ்மன்

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் தங்களை அறிவித்திருந்த காலத்திலேயே அவர்கள் தாங்கள் செய்த தவறுகளுக்கா மன்னிப்புக்கள் கோரியிருந்தனர்.

அவற்றுக்கான காரணங்களையும் கூறியிருந்தனர். அதை அடையாளம் காண்பதில் தவறுகள் நிகழ்ந்தனவா? அதே நேரத்தில், பிராயச் சித்தங்களையும் செய்திருந்தனர் என்றே கொள்ள வேண்டும். ஆனால், அரசாங்கமோ, ஏனைய தரப்புகளோ தங்களால் கவனமாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தவறுகளுக்காக கூட இதுவரை மன்னிப்புக் கோரவில்லை.

அதற்குப் பதிலாக நியாயப்படுத்தல்களை செய்து வருகின்றனர். அத்துடன், மூடி மறைக்க முயல்கின்றனர். மௌனமாக இருந்திருக்கின்றனர். இந்த நேரத்தில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு தமிழர்களின் மன்னிப்புக் கோரல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமராக இருந்த காலத்தில் அவருக்கும் 
இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தினால்  அமைதிப்படையாக நாட்டுக்குள் வந்த இந்திய இராணுவம் வடக்கு - கிழக்கில்  மேற்கொண்ட அட்டூழியங்கள் கணக்கிலடங்காதவை.

அவை தொடர்பில் இந்திய அரசாங்கம் மன்னிப்பு கோருவதை விடுத்து மீண்டும் வடக்கு கிழக்குக்கு இராணுவத்தை அனுப்பி இலங்கை அரசாங்கத்திற்கு உதவி செய்யவே ராஜீவ் காந்தி திட்டமிட்டிருந்தார். 

அதனால் அவர் தமிழ்நாட்டின் சிறிபெரும்புத்தூரில் தேர்தல் பிரசாரத்தில் இருந்தபோது, விபரீதம் நிகழ்ந்தது.நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்திய ஊடகவியலாளர் ஒருவர் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பாக கேட்ட கேள்விக்குப் பதிலளித்த  பிரபாகரன் அது ஒரு துன்பியல் சம்பவம் எனக் கூறியிருந்தார்.

இந்தப் பதிலை அதற்கான மன்னிப்புக் கோரலாகவே அவர் வெளிப்படுத்தியிருந்தார் எனலாம்.விடுதலைப் புலிகள் சகோதர இயக்கங்கள் மீதான விரோத, எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்த காலங்களில் சகோதரப் படுகொலைகள் உள்ளிட்ட  பல பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன. இதனால் பல கொடுமைகளும் நிகழ்ந்தன. ஆனால், 
2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கொள்கையுடன் இருந்த சகோதர இயக்கங்கள், அமைப்புகளை இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியிருந்தனர்.

அந்தக் கூட்டமைப்பினை தமிழ் மக்களின் அரசியல் தரப்பாகவும்  வெளிப்படுத்தியிருந்தனர். அந்தக் கூட்டமைப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சி கவனமாகத் திட்டமிட்டுக் குலைத்து விட்டிருப்பது வேறு கதை. அதன் பின்னர் முஸ்லிம் மக்கள் தொடர்பான விடயத்தில், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை குறித்து. 

இருந்த பிரச்சினைகள், குழப்பங்கள்,  தவறுகளுக்காகச் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் பேச்சுக்களை நடத்தி உடன்பாடுகளை ஏற்படுத்தி அதற்கான பரிகார நடவடிக்கைகள் எடுத்திருந்தார்.

இப்போது வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தை தூக்கிப்பிடித்து பெரிதாக்கி நாட்டில் இருக்கின்ற தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவு நிலையினைக் குழப்பி நல்லிணக்கத்திற்குப் பங்கத்தினை ஏற்படுத்த முனையும் சிலர் தேவையானவற்றை விடுத்து வேறு விடயங்களைத் தூக்கிப்பிடித்து  பிழைகளை மூடி மறைக்க முனைவதாக சொல்லாம்.

இலங்கை அரசாங்கங்களைப் பொறுத்தவரையில் இதுவரை ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும் தங்களது பிழைகள் குறித்து எந்த இடத்திலும் மன்னிப்புக் கோரவில்லை. அதே நேரத்தில், அதற்கான நியப்படுத்தல்களையும் மூடி மறைத்தல்களையுமே மேற்கொண்டு வந்திருக்கிறது.

இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் தங்களுக்கான சுயநிர்ணய உரிமைக்காக 
அறம், அகிம்சை, ஆயுதம், இராஜதந்திர ரீதியாக போராடி வருகின்ற இனத்திற்கு 
எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற தோரணையில் அரசாங்கம் நடந்து வருகிறது.
இது உண்மையில் பாரபட்சமே. உலகின் அனைத்து நாடுகளும் பாராமுகமாகவும், அறியாத விடயம் போலவும் இருப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் பிரதிபலிப்புகளும் வெளிப்படுத்தல்கள் மட்டும் காரணமல்ல. அவர்கள் தங்களது நாட்டுக்கான இராஜதந்திர செயற்படுத்தலைச் சிறப்பாக மேற்கொள்கின்றனர் என்பதே முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடர்கள்  நடைபெறுவதும், மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் நடப்பதும். மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கைகளை வெளியிடுவதும் ஏதோ கண் துடைப்புகள் போலவே இருந்து வருகின்றன. இறுதியில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் அவற்றினால் எதுவும் நிகழ்வதில்லை என்றே கொள்ள முடிகிறது.

கால இழுத்தடிப்பு மாத்திரமே நடைபெற்று வருகிறது.யுத்தம் முடிவுக்கு வந்து 16 வருடங்கள் கடந்த பின்னரும் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும் என்ற காட்சிப்படுத்தல்கள் மட்டுமே வெளிப்படுத்தப்படுகின்றன. இருந்தாலும் அதற்கான பெறுபேறுகளைக் காணவில்லை.

இதற்கிடையில் சர்வதேச நிறுவனங்கள் நாட்டுக்குள் வேறு குழப்பங்களையும் ஏற்படுத்துவதற்கான வேலைகளைச் செய்து வருகின்றன. அதே நேரத்தில், நாட்டிற்குள் நிலை பேறான அபிவிருத்தி, சமூக நல்லிணக்கம், சமாதானத்தை மேம்படுத்தல், சமூகங்களை வலுப்படுத்தல், நிலை பேறான மீள்குடியேற்றம் போன்ற  பல செயற்திட்டங்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களால்  நடைமுறைப்படுத்தப்பட்டு  வருகின்றன. ஆனால், இன்னமும் அவை நிறைவுக்கு வராதவைகளாகவே இருக்கின்றன.

நல்லிணக்கம், இனங்களுக்கு இடையிலான நல்லுறவு, மத ரீதியான முரண்பாடுகள் 
பற்றிய எண்ணக்கருக்கள் போன்றே  சமாதானம் மற்றும் மோதல் தீர்வு பற்றிய தலைப்புகள் என்பன அரச சார்பற்ற நிறுவனங்கள் மட்டத்தில் உள்ள ஜனரஞ்சகமான பிரகடனங்கள் மற்றும் செயற்றிட்டங்களாக அமைகின்றன.
ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிகாரத்துக்கு வரும் அரசுகள் மூலம் இவ்வாறான விடயங்கள் முன்னிலைக்கு எடுத்து விடப்படுகின்றன.

இருந்தாலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தாமதங்களே ஏற்படுகின்றன. அதற்குத் தொடர்ச்சியற்ற தன்மையும், இடையீடுகளுடனான சிக்கல்களும் காரணமாகும்.

இந்த நிலையில்தான், வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 35ஆம் ஆண்டு நினைவாக, தமிழ்மு ஸ்லிம் நல்லிணக்கம் மற்றும் இணைந்த வாழ்வை வலியுறுத்தும் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்துக்கான நிகழ்வுகள் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடத்தப்பட்டிருக்கின்றன.

நல்லிணக்கத்தை மீளக் கட்டியெழுப்பும் வரலாற்றுப் பொறுப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த வகையான நிகழ்வுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

யூத அமைப்பொன்றிடமிருந்தும் நிதியைப் பெற்று வரும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவானது அவ் அமைப்பின் அறிவுறுத்தலின் அடிப்படையில், இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருப்பதாகவே அறியமுடிகிறது. 

இந் நிகழ்வுகள் வடக்கில் மன்னிப்புக் கோரலாகவும் கிழக்கில் நீதிக்கும் மனித உரிமைக்கான குரலை இணைக்கும் வகையில் கலந்துரையாடலாகவும் நடத்தப்பட்டிருக்கின்றன.

இவ்வாறான செயற்பாடுகளை ஏன் இந்த வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு 
இந்த வேளையில் மேற்கொள்ள வேண்டும் என்ற கேள்வி இந்த இடத்தில் உருவாகிறது. இதற்கு நிதி வழங்கும் நிறுவனத்தின் அறிவுறுத்தலே காரணமாகும்.
இலங்கையின் கிழக்கின் அம்பாறை மாவட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம்கள் எதிர்ப்பு நிலைப்பாட்டுடன் இருந்து வருகின்றனர்.

இந்தச் சிக்கலைத் தனித்து வேறு ஒரு திசையில் அவர்களைத் திருப்பி விடுவதற்காகத் தமிழர்கள் பக்கமாகத் திசை திருப்பிவிடுவது முதல் காரணமாக இருக்கலாம். அத்துடன், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மனித உரிமைகள் பேரவை தீர்மானத்திற்கு மாற்றான சர்வதேச தலையீடற்ற செயற்பாட்டை ஊக்குவிப்பதற்கான உதவி முயற்சியாகவும் இருக்கலாம்.

சிலவேளைகளில் அரசாங்கத்தை இஸ்‌ரேலியர்களின் செயற்பாடுகளுக்கு உதவக்கூடியதாக மாற்றுவதற்காக இருக்கலாம் என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
உண்மையில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் இந்த வெளியேற்றத்தில் உள்ள நல்லவை, கெட்டவை என ஆரம்பத்திலிருந்து ஆராய்ந்து பார்த்தே அதற்கான முடிவுக்கு
வந்தாக வேண்டும்.

வெறுமனே எழுந்தமானமாக நிகழ்ச்சித்திட்டங்கள் தேவை, நிதிகள் தேவை என்பதற்காக அரச சார்பற்ற அமைப்புகள் இவ்வாறான விடயங்களை கையிலெடுப்பது தவறாகும்.

இலங்கையில் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட தமிழர்களும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும், அவர்களின் அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும், சிவில் செயற்பாட்டாளர்களும் எதிர்பார்க்கின்ற தீர்வானது நல்லிணக்கமாகவும் நீதியாகவும் அமைய வேண்டும். இல்லாது போனால், இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக வெளிப்படுத்திவருகின்ற உள்ளகப் பொறிமுறை ஏற்பாட்டை அனைவரும் ஏற்க வேண்டிய நிலையே அனைவருக்கும் ஏற்படும். அதனைத் தவிர ஒன்றுமில்லை.

இவ்வாறிருக்கையில் தான் மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதா அல்லது பாதிக்கப்பட்ட, அடக்கப்பட்ட தரப்புக்கானதா? என்ற கேள்வி தோன்றும். அது மன்னிப்பு கோர வேண்டியவர்கள் அதற்குத் தயாரா? இல்லையானால் இந்தக் கேள்விக்கான பதிலை யாரிடமிருந்து எதிர்பார்ப்பது என்பதாக தமிழர்கள் பக்கம்தான் மாறி நிற்கும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மன்னிப்புக்-கோரல்-எல்லோருக்கும்-பொதுவானதுதானா/91-367720

ஓய்வூதியர்களின் அரசியல் : பாகம்-இரண்டு ? - நிலாந்தன்

2 weeks ago

ஓய்வூதியர்களின் அரசியல் : பாகம்-இரண்டு ? - நிலாந்தன்

facebook_1762519611901_73925430582753226

ஓய்வு பெற்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு லண்டனில் கிடைத்த வரவேற்பும் அங்கு அவர் ஆற்றிய உரைகளும் சமூகவலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்படுகின்றன. மாகாண சபைத் தேர்தல்கள் நடக்கலாம் என்ற சந்தேகம் கலந்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் ஒரு சூழலில், இளஞ்செழியனைப் போன்ற ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று விரும்பிய பலரும் இப்பொழுது  உற்சாகமாகக் காணப்படுகிறார்கள்.

இளஞ்செழியனுக்கு அப்படி ஒரு விருப்பம் இருக்கிறதா இல்லையா என்று தெரியாது. ஆனால் அவருடைய சகோதரர்-அவர் ஏற்கனவே தமிழரசுக் கட்சியின் தீவுப்பகுதிக் கிளையில் பொறுப்பில் இருப்பவர்-தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கு ஊடாக தமையனை முதலமைச்சராக்கி விட வேண்டும் என்ற கனவோடு செயல்படுவது யாழ்ப்பாணத்தில் எல்லாருக்கும் தெரிந்த விடயம்.

ஆனால் தமிழரசுக் கட்சி இந்த விடயத்தில் இளஞ்செழியனுக்கு சாதகமாகச் சிந்திக்கும் வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால் முதலாவதாகவும் முக்கியமானதாகவும் சுமந்திரன் செழியன் உள்ளே வருவதை விரும்பவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒரு துறைசார் போட்டி இருக்க முடியும். விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்ட பொழுது மன்னாரைச் சேர்ந்த தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் அப்பொழுது  கட்சிக்காரர்களிடம் சொன்னார் “அவரைக் கொண்டு வராதீர்கள். அவர் ஒரு நீதிபதி. நீங்கள் எல்லாம் வழக்கறிஞர்கள். அவர் உங்களுடைய சொல்லைக் கேட்க மாட்டார்” என்று. இது இளஞ்செழியனுக்கும் பொருந்துமா?

இளஞ்செழியன் தன்னை உணர்ச்சி வசப்படும் ஒருவாராகவே எப்பொழுதும் வெளிக்காட்டி வந்திருக்கிறார். அவருடைய மெய்க்காவலர் நல்லூர் சந்தியில் சுட்டுக் கொல்லப்பட்ட போதும், மேடைகளில் அவர் பேசும்போதும் அவர்  உணர்ச்சிவசப்படுகின்ற, தன் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாத ஒருவராகத்தான் வெளித்தெரிய வந்திருக்கிறார். இப்படி உணர்ச்சிவசப்படும் ஒருவரை ஒரு பொறுப்பான பதவியில் நிறுத்துவது சரியா என்ற கேள்வி தமிழரசுக் கட்சிக்குள் மட்டுமல்ல அக்கட்சிக்கு வெளியேயும் உண்டு. நீதியானவர்கள் தலைவர்களாக வருவது நல்லது. ஆனால்,எல்லா நீதிபதிகளும் தலைவர்கள் அல்ல.

தமிழரசுக் கட்சி அவரை உள்ளே கொண்டு வர விரும்பவில்லை என்றால் சில சமயம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உருவாக்கி வைத்திருக்கும் அணி அதை விரும்புமா? கஜேந்திரகுமார் இதுதொடர்பில் இளஞ்செழியனோடு கதைத்தாகத் தெரிகிறது. இளஞ்செழியன் விரும்பவில்லை என்றும் கூறப்படுகின்றது.

அதேசமயம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ் தேசியப் பேரவைக்குள் தவராசா அணி உண்டு. ஜனாதிபதித் தேர்தலில், பொது வேட்பாளரை நிறுத்தும்போது தவராசா அணியானது தீவுப்பகுதி ஆளை-தவராசாவைக்- கொண்டு வரவேண்டும் என்று கேட்டது. இளஞ்செழியன் தீவுப் பகுதியைச் சேர்ந்தவர். அவரை முதலமைச்சராகக் கொண்டுவர வேண்டும் என்ற விருப்பமும் உழைப்பும் தவராசா அணியிடந்தான் அதிகம் உண்டு. இதில் வெளிப்படையான பிரதேசப் பற்று உண்டு. ஆனால் அந்த அணி தமிழரசுக் கட்சியிலிருந்து விலகியபோது இளஞ்செழியனின் சகோதரர் அந்த அணியுடன் இணைந்து வெளியே வரவில்லை என்பதை இங்கு உற்றுக்கவனிக்க வேண்டும்.

லண்டனில் உரை நிகழ்த்தும்போது, இளஞ்செழியன் குமார் பொன்னம்பலத்தைப் போற்றிப் பேசியிருக்கிறார். அதில் உண்மை உண்டு. அவர் நீதிபதியாக வருவதற்கு முன்பு ரவிராஜும் அவரும் அரச படைகளின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான வழக்குகளில் ஈடுபட்டவர்கள் என்பது உண்மை. அனைத்துலக மன்னிப்புச் சபை போன்ற அமைப்புக்களோடும் குமார் பொன்னம்பலம் போன்ற செயற்பாட்டாளர்களோடும் இணைந்து காசு வாங்காமல் வழக்காடியவர்களில் இளஞ்செழியனும் ஒருவர். லண்டனில் குமார் பொன்னம்பலத்தை உயர்த்திப் பேசியதன்மூலம் செழியன் ஏதாவது அரசியல் சமிக்ஞயை  வெளிப்படுத்துகிறாரா?

கட்சிகளின் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் இளஞ்செழியன் தமிழரசுக் கட்சிக் கூடாக வருகிற வாய்ப்புகள் குறைவு. முன்னணியும் வெளிப்படையான சமிக்ஞய்களைக் காட்டவில்லை. எனினும்,இந்த விடயத்தில் கட்சி நோக்கு நிலைகளுக்குமப்பால் பொதுவான தமிழ்த்தேசிய நோக்குநிலையில் இருந்து சில விடயங்களை ஆழமாகப் பார்க்க வேண்டியுள்ளது.

கட்சிகள் முதலமைச்சர் பதவிக்கு ஏன் கட்சிக்கு வெளியே போய் ஆட்களைத் தேட வேண்டி வருகிறது? ஏனென்றால் கட்சிக்குள் பொருத்தமான ஆட்கள் இல்லை என்று கட்சிகள் நம்புகின்றனவா? கட்சிக்குள் ஏன் பொருத்தமான ஆட்கள் இல்லாமல் போனார்கள்? ஏனென்றால் கட்சிகள்,கட்சிகளுக்கு இருக்க வேண்டிய கட்டுக்கோப்பான கட்டமைப்புகளோடு இல்லை என்பதால்தான். குறிப்பாக உள்ளதில் பெரிய கட்சியான தமிழரசுக் கட்சி இப்பொழுதும் நீதிமன்றத்தில் தான் நிற்கின்றது. பதில் தலைவரும் பதில் செயலாளரும்.

கட்சிக்கு வெளியிலிருந்து ஆளுமைகளை பரஸூட்டில் இறக்குவது என்பது  சம்பந்தரின் காலத்திலிருந்து தொடங்கியது. சம்பந்தர் கடந்த வடமாகண சபைத் தேர்தலின்போது கட்சிக்குள் இருந்து ஒருவரைக் கொண்டுவர முடியவில்லை. விக்னேஸ்வரனைக் கொண்டு வந்தபோது சம்பந்தர் சொன்னார் “அவர் ஒரு ஹை ப்ரொபைல்” என்று. மாகாண முதலமைச்சர் பதவி என்பது ஒரு சட்ட மன்றத்துக்குப் பொறுப்பான பதவி. அதில் இருப்பவர் தூதரகங்களையும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். அந்த மாகாணத்தின் அரசியல் அதிகார முகம் அவர். அதற்கு விக்னேஸ்வரனைப் போன்ற ஒரு ஹை ப்ரொபைலைத்தான் கொண்டுவர வேண்டும் என்று சம்பந்தர் நியாயம் சொன்னார்.

ஆனால் விக்னேஸ்வரன் சம்பந்தர் எதிர்பார்த்ததுபோல அவருக்கு விசுவாசமான ஒரு ப்ரொபைல் ஆக இருக்கவில்லை. மாறாக அவர் சம்பந்தருக்கு எதிராகத் திரும்பினார். அதனால் மாகாண சபைக்குள் அவரைச் சுமந்திரன் சுற்றி வளைத்தார். எனினும் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர சுமந்திரன் அணி முயற்சித்தபோது,சம்பந்தர் சித்தார்த்தனை அழைத்து பின்வரும் பொருள்படச் சொன்னார் “அங்கு போய் சமரசம் செய்யுங்கள். தமிழரசுக் கட்சியும் தோக்கக் கூடாது; விக்னேஸ்வரனும் தோக்கக் கூடாது” என்று.

எனினும் விக்னேஸ்வரன் ஒரு கட்டத்தில் கட்சியை விட்டு நீங்கி புதிய கட்சியைத் தொடக்கி தன்னால் ஒர் ஆசனத்தையாவது வெல்ல முடியும் என்று நிரூபித்தார். ஆனால் தமிழ் அரசியலில் தமிழரசுக் கட்சிக்கு நிகரான ஒரு மாற்று ஏற்பாடாக அவரால் மேலுயர முடியவில்லை. சம்பந்தரின் “ஹை ப்ரொபைல்”  எதிர்பார்த்த உச்சியை அடையவில்லை. சம்பந்தரும் ஒரு தோல்வியுற்ற தலைவராக,மக்கள் மத்தியில்  “லோ புரோபைலாக” இறந்து போனார்.

இந்த விடயத்தில் சம்பந்தரின் ஆவி பேசினால், ஒரு விளக்கத்தைக் கூறக்கூடும். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான ஒரு காலகட்டத்தில், ஆயுதப் போராட்டமானது மிதவாதக் கட்சிகளை அரங்கில் இருந்து அகற்றியிருந்த ஒரு பின்னணிக்குள்,மிதவாதக்கட்சி ஒன்றை மீளக்கட்டி எழுப்புவதில் இருக்கக்கூடிய சவால்களின் அடிப்படையில் வெளியில் இருந்து பிரமுகர்களை உள்ளே கொண்டுவர வேண்டிய ஒரு தேவை தனக்கு இருந்தது என்று சம்பந்தர் தனது செயலை நியாயப்படுத்தியிருக்கக்கூடும். ஆனால் சம்பந்தருக்குப் பின்னரும் தமிழ் மக்கள் கட்சிக்கு வெளியில் தலைவர்களைத் தேடும் ஒரு போக்கில் மாற்றம் ஏற்படவில்லையா? கடந்த 10 ஆண்டுகளுக்குள்ளே தமிழ் அரசியலில் திருப்பகரமான மாற்றங்கள் எவையும் ஏற்படவில்லை என்பதனை அது காட்டுகின்றதா?

Screenshot-2025-11-08-222543-c-e17626212

தமிழரசுக் கட்சி அவ்வாறு தேடவில்லை என்று இப்பொழுது அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் சொல்லலாம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அவ்வாறு சொல்லலாம். ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் அவ்வாறான ஒர் எதிர்பார்ப்பு உண்டு என்ற உண்மையை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் ஏன் கட்சிகளுக்கு வெளியிலிருந்து பிரபல்யங்களை பரசூட்டில் இறக்க ஆசைப்படுகிறார்கள்? கட்சிகளுக்குள் இருக்கும் ஆளுமைகளை அவர்கள் தகுதியானவர்களாகக் கருதவில்லையா? கட்சிக்குள் கடந்த பல தசாப்தங்களாக மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்தவர்களைத் தலைவர்கள் ஆக்கிப்பார்க்க வேண்டும் என்று ஏன் தமிழ் மக்கள் விரும்பவில்லை? அரசியலில் மிக ஆபத்தான காலகட்டத்தில், அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளை வகித்து,அரசாங்கத்தின் பாதுகாப்பில் வாழ்ந்து, ஓய்வுபெற்ற பின் தமிழ் மக்களின் வாக்குகளால் தலைவர்களாக தெரிவு செய்யப்படுவது என்பது சரியானதா? அப்படியென்றால் தமிழ் மக்களுக்காக தங்களை இழந்து,தங்களை ஒறுத்து,அர்ப்பணித்து,தியாகம் செய்து கட்சிக்குள்ளேயே இருந்து தேய்ந்து போனவர்கள் அனைவரும் பிழைக்கத் தெரியாதவர்களா? அல்லது அதிர்ஷ்டம் இல்லாதவர்களா?

பாதுகாப்பான இறந்த காலத்தை பெற்றவர்கள்தான் நிகழ்காலத்தில் தமிழ் மக்களின் பேச்சாளர்களாகவும் தலைவர்களாகவும் வரமுடியுமா? அவர்களுக்குப் பாதுகாப்பான இறந்த காலம் எப்படிக் கிடைத்தது? அவர்கள் தமது மக்களுக்காக தம்மை இழக்க, அர்ப்பணிக்கத் தயாராக இல்லாதபடியால் தானே? அப்படியென்றால், இப்பொழுது தமிழ்த்தேசிய அரசியலில் தலைமை தாங்கத் தேவையான தகுதி எது?

ஆயுதப் போராட்டம் தொடங்கியபோது படித்த நடுத்தர வர்க்கத் தமிழர்கள் அதை எடுத்த எடுப்பில் ஏற்றுக்கொள்ளவில்லை. “சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது” என்று ஒருவித சந்தேகத்தோடுதான் அதை அணுகினார்கள். பட்டப் படிப்பு குறைந்த இயக்கத் தலைவர்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அல்லது அங்கீகரிக்கவில்லை. ஆனால் ஆயுதப் போராட்டம் தனது தியாகங்களின் மூலமும் வீரச்செயல்களின் மூலமும் வெற்றி நடை போடத் தொடங்கியபோது, படித்த, நடுத்தர வர்க்கம் அதற்குப் பணிந்தது. அதாவது தமிழ் மக்கள் பலங்கண்டு பின் சென்றார்கள்.

எனவே படித்த தமிழ் நடுத்தர வர்க்கம் எப்பொழுதும் எதோ ஒருவிதத்தில் பலமானவர்களை, அதாவது, படித்தவர்களை, பெரிய பதவிகளில் இருப்பவர்களை, ஆங்கிலம் பேசுகின்றவர்களை, பிரபல்யமானவர்களைத்தான் எதிர்பார்ப்போடு பார்க்கும். தமிழரசியலில் இடையில் வந்த ஆயுதப் போராட்டமானது தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னரான கடந்த 16 ஆண்டுகால மிதவாத அரசியல் எனப்படுவது, அதன் பழைய தடத்துக்கே திரும்பிச் சென்று கொண்டிருக்கிறதா?

இளஞ்செழியனை தமிழ்க் கட்சிகள் ஒரு முதன்மை வேட்பாளராக ஏற்கலாம் ஏற்காமல் விடலாம். ஆனால் ஒரு பகுதி தமிழ் மக்கள் மத்தியில் அப்படி ஒர் எதிர்பார்ப்பு காணப்படுகிறது என்று சொன்னால் அதற்கும் தமிழ்க் கட்சிகள்தான் பொறுப்பு. கீழிருந்து மேல் நோக்கி,உள்ளூர் தலைவர்களை, மாவட்ட மட்டத் தலைவர்களை, மாகாண மட்டத் தலைவர்களை, தேசிய மட்டத் தலைவர்களை, மிகக் குறிப்பாக ஜனவசியம் மிக்க தலைவர்களைக்  கட்டியெழுப்பத் தமிழ்க் கட்சிகளால் முடியவில்லையா?

கடந்த 16 ஆண்டுகால தமிழ்த் தேசிய அரசியலில், கட்சிகளுக்குள் ஜனக்கவர்ச்சி மிக்க, ஜனவசியம் மிக்க தலைவர்களைப் போதியளவு உருவாக்க முடியவில்லை என்பது ஓர் அடிப்படைத் தோல்வி. இந்த வெற்றிடத்தில்  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு 7 ஆசனங்கள் கிடைத்தன. அர்ஜுனாவுக்கு ஓர் ஆசனம் கிடைத்தது.

அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை  வைக்குமா இல்லையா என்பது நிச்சயமாகத் தெரியாது. ஆனால் அப்படி ஒரு தேர்தல் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் தமிழ்த்தேசிய அரசியல் பரப்பில் மீண்டும் ஓர்  ஓய்வுபெற்ற நீதிபதியைச்சுற்றி உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் கட்சிகளுக்கு வெளியே மீட்பர்களைத் தேடுகிறார்களா? அது தமிழ்த்தேசிய அரசியலின் போதாமையை, இயலாமையைக்  காட்டும் ஆகப்பிந்திய குறிகாட்டியா ?

https://www.nillanthan.com/7910/

துயிலுமில்லங்களும் என்பிபியும் – நிலாந்தன்.

2 weeks ago

MM.jpeg?resize=310%2C163&ssl=1

துயிலுமில்லங்களும் என்பிபியும் – நிலாந்தன்.

கார்த்திகை மாதம்.மாவீரர் நாளைப்  போன தடவை அரசாங்கம் ஒப்பீட்டளவில் அனுமதித்தது. ஆங்காங்கே போலீசார் சில தடைகளை ஏற்படுத்தினாலும் மாவீரர் நாள் அமைதியாக அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த முறை தாயகத்திலும் புலம்பெயர்ந்த பரப்பிலும் ஒப்பீட்டளவில் அதிக தொகை மக்கள் கூடிய நிகழ்வுகளாக இரண்டைக்  குறிப்பிடலாம். ஒன்று தாயகத்தில், கிளிநொச்சியில். மற்றது,கனடாவில்.தாயகத்துக்கு வெளியே அதிகதொகை மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடாக கனடா காணப்படுகிறது. எனவே அங்கே ஒப்பீட்டளவில் மிகப்பெரிய அளவில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது.

கடந்த வாரம் அமைச்சர் சந்திரசேகரன் பேசும்போது அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படும் என்று தெரிவித்தார். மாவீரர் மாதத்தையொட்டி அவர் அவ்வாறு சொன்னாரா? அல்லது விசுவாசமாகவே அரசாங்கம் அப்படி ஒரு நிலைப்பாட்டோடு இருக்கிறதா? ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கப் போவதாக அரசாங்கம் கூறியது. ஆனால் இன்றுவரையிலும் அவ்வாறு நடக்கவில்லை. இப்பொழுது பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக வேறு ஒரு சட்டத்தைக் கொண்டு வரப் போவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு கூட்டத் தொடர் தொடங்க முன்பு அரசாங்கம் அவ்வாறு அறிவித்தது.அப்படித்தான் இப்பொழுது மாவீரர் நாளையொட்டி உணர்ச்சிகரமான அரசியற் சூழலில் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள துயிலுமில்லங்களை விடுவிக்கப் போவதாக சந்திரசேகர் கூறுகிறாரா?

தேசிய மக்கள் சக்தியின் இதயமாகக் காணப்படும் ஜேவிபி இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஓர் அமைப்பு.இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட, இரண்டு தடவைகள் நசுக்கப்பட்ட ஓர் அமைப்பு. பிரேமதாசவின் காலத்தில் இரண்டாவது தடவை அவர்கள் நசுக்கப்பட்டபோது இறந்த தமது தியாகிகளை நினைவு கூர்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் குறிப்பாக திருமதி சந்திரிகாவின் காலகட்டத்தில் அவர்கள் நினைவு கூர்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். இடைப்பட்ட காலகட்டத்தில் ஜேவிபி தன் தோழர்களை ரகசியமாக நினைவு கூர்ந்தது. அந்நாட்களில் அந்த நிகழ்வுக்கு ஒரு அர்த்தம் இருந்தது; ஆழம் இருந்தது;புனிதம் இருந்தது என்றும் ஆனால் பின்னர் சந்திரிக்கா தடைகளை நீக்கியபின் அது ஒரு சடங்கு போல் ஆகிவிட்டது என்றும் ஒரு மூத்த ஜேவிபி உறுப்பினர்  பல ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு சொன்னார்.தடைகள் இருக்கும் வரையிலும்;ரகசியமாக நினைவு கூரப்படும் வரையிலும் அந்த நாளுக்கு ஒரு ஆன்மா இருந்தது.ஆனால் தடைகள் நீக்கப்பட்டபின் அது ஒரு பெருமெடுப்பிலான சடங்காக மாறி முடிவில் அதன்  ஆன்மாவை இழந்து விட்டது என்றும் அவர் சொன்னார்.

இப்பொழுது ஜேவிபி ஆளுங்கட்சி ஆகிவிட்டது.நினைவு நாட்களுக்குள்ள உணர்வுபூர்வமான முக்கியத்துவத்தை அவர்களுக்கு யாரும் விளங்கப்படுத்தத் தேவையில்லை.இப்பொழுது இருக்கும் அரசுத் தலைவர் தன் சொந்தச் சகோதரனைப் பறிகொடுத்தவர்.தன் உறவினர்களையும் பறிகொடுத்தவர். எனவே அவர்களுக்கு நினைவு நாட்களின் முக்கியத்துவம்,புனிதம் விளங்கும். இந்த அடிப்படையில் பார்த்தால்  துயிலும் இல்லங்களை விடுவிக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்துக்குத்தான் அதிகம். பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஆனால் படைத்தரப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் துயிலும் இல்லங்களை விடுவிப்பது என்பதை முக்கியமாக இரண்டு அம்சங்கள் தீர்மானிக்கின்றன. ஒன்று,எதிர்க்கட்சிகள் அதனை இனவாதமாக மாற்றக்கூடாது. இரண்டாவது,படைத்தரப்பு அதற்குச் சம்மதிக்குமா என்பது.

எதிர்க்கட்சிகள் பலமான ஒரு கூட்டை உருவாக்கும் முயற்சிகளில் தீவிரமாக முயற்சிக்கும் ஒரு பின்னணியில்,அரசாங்கம் ஏறக்குறைய அதே காலப்பகுதியில் மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிக்கும் முடிவை உத்தியோகபூர்வமாக எடுக்குமா என்பது சந்தேகம்தான்.

தென்னிலங்கையில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரளத் தொடங்கிவிட்டன. போதைப் பொருளுக்கு எதிராகவும் பாதாள உலகக் கும்பல்களுக்கு எதிராகவும் அரசாங்கம்  விட்டுக்கொடுப்பற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.இதன் விளைவாக எதிர்க்கட்சிகள் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

போதைப் பொருள் கும்பல்களுக்கு எதிராகவும் பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு எதிராகவும் அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள்,ஒருபுறம் அரசாங்கத்திற்கு சிங்கள மக்கள் மத்தியில் அபிமானத்தைக் கூட்டியிருக்கின்றன.இன்னொருபுறம்,எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளியிருக்கின்றன.ஏனென்றால் இந்தக் குற்றக்  கும்பல்களோடு எங்கேயோ ஓரிடத்தில் அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருக்கிறது என்பது இப்பொழுது நிரூபிக்கப்பட்டு வருகிறது.அந்த அரசியல்வாதிகள் பெருமளவுக்கு எதிர்க்கட்சிகளைச் செய்தவர்களாகத்தான் காணப்படுகிறார்கள்.அல்லது முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது இப்பொழுது தெரிய வருகிறது.

அதேசமயம், அண்மையில்  போதைப் பொருளை வைத்திருந்ததற்காகக் குற்றம் சாட்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதில் ஒரு சிறந்த முன்னுதாரணம் உண்டு.நாட்டை இதற்கு முன்பு ஆட்சி செய்த ஏனைய கட்சிகளிடம் அவ்வாறான சிறந்த முன்னுதாரணங்கள் இல்லை என்று மக்களை நம்பச் செய்யும் விதத்தில் தேசிய மக்கள் சக்தியின் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளும் பாதாள உலகம் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் திட்டமிட்டுக் கட்டமைக்கப்படுகின்றன.இதனால் எதிர்க்கட்சிகள் பெருமளவுக்கு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன.

அதேசமயம் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக ஒன்றிணைய வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.அவ்வாறு ஒன்றிணைந்து எதிர்க்கட்சிகள் விரைவில் அரசாங்கத்திற்கு எதிராகக் கூட்டு நடவடிக்கைகளில் இறங்கலாம் என்று தெரிகிறது. ஆனால் அரசாங்கம் அதைக் குறித்து அலட்டிக் கொள்ளவில்லை.அதுமட்டுமல்ல,குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை குழப்புவதற்காகவே எதிரணிகள் ஒன்று திரள்கின்றன என்று சிங்கள மக்களை நம்ப வைக்கும் நோக்கத்தோடு அரசாங்கம் சிந்திக்கின்றது;செயல்படுகின்றது.

இவ்வாறு தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள எதிர்க்கட்சிகள் தங்களைப் பலப்படுத்திக் கொள்வதற்காக அரசாங்கத்துக்கு எதிராக கையில் எடுக்கக் கூடிய ஒரே ரெடிமேட் ஆயுதம் இனவாதம்தான்.

ஐநா கூட்டத்தொடரில் அதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.அரசாங்கம் படைத்தரப்பை பாதுகாக்கும் முடிவுகளை எடுத்ததோடு பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவும் இல்லை. பன்னாட்டு விசாரணைப் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவும் இல்லை.

இப்பொழுது மாவீரர் மாதத்தை முன்னிட்டு  படைத் தரப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் துயிலுமில்லங்களை விடுவிக்கப்போவதாக சந்திரசேகரன் கூறியிருப்பதை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்க முடியும். ஐநா கூட்டத் தொடரின் பின்னணியில் இனவாதிகளுக்கு வாய்ப்பளிக்காத விதத்தில் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிரான முடிவுகளை எடுத்ததுபோல, துயிலும் இல்லங்களின் விடயத்திலும் எதிர்க் கட்சிகளுக்கு வாய்ப்புக்களை வழங்காத முடிவுகளையே எடுக்குமா?

மேலும் இந்த விடயத்தில் துயிலுமில்லங்களில் காணப்படும் படைத்தளங்களை அகற்றுவது உடனடிக்குச் சாத்தியமானது அல்ல.முதலாவதாக படைத்தரப்பு அதற்கு ஒத்துழைக்க வேண்டும். இரண்டாவதாக சில துயிலும் இல்லங்களில் காணப்படும் படைத்தளங்கள் அப்பகுதியைச் சேர்ந்த படைத்தரப்பின் தலைமை மையங்களாகக் காணப்படுகின்றன.உதாரணம், கோப்பாய் துயிலும் இல்லம். அங்கிருந்து படைத்தரப்பை அகற்றுவது என்றால் குறுகிய காலத்துக்குள் அதைச் செய்யமுடியாது.கோப்பாயில் உள்ள போலீஸ் நிலையத்தை இடம் மாற்றுவதற்கே எவ்வளவு காலம் எடுத்தது?

சில நாட்களுக்கு முன் வெளியான அடுத்த நிதி ஆண்டுக்கான நிதி அறிக்கையில், பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கும் சிங்கள பௌத்த அரச பாரம்பரியத்தை மீறாத என்பிபி அரசாங்கம், படையினர் சம்பந்தப்பட்ட விடயங்களில் எப்படிபட்ட முடிவை எடுக்கும்?

எனவே துயிலுமில்லங்களில் முகாம்களை அமைத்திருக்கும் படையினரை அங்கிருந்து அகற்றும் முடிவை உடனடியாக அமல்படுத்த அரசாங்கத்தால் முடியுமா? ஜெனிவா கூட்டத் தொடரை முன்னிட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கப் போவதாக அரசாங்கம்  அறிவித்ததைப் போன்றதா இதுவும்?

https://athavannews.com/2025/1452330

மீண்டுமொரு சதி, குழி பறிப்பு

2 weeks 2 days ago

மீண்டுமொரு சதி, குழி பறிப்பு

முருகானந்தம் தவம்

இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து அதன் முக்கியஸ்தரும் தமிழ் தேசியப்பற்றாளருமான  சிவஞானம் சிறீதரனை வெளியேற்றி விட வேண்டும் என 
பல்வேறு சதி நடவடிக்கைகளில் இறங்கிய  தமிழரசுக்கட்சியின் முக்கிய 
சில கறுப்பு ஆடுகள் அதில் தோல்வி கண்ட நிலையில்,

பாராளுமன்றத் தேர்தலில் அவர் வெற்றி பெற்று விடக்கூடாதென மீண்டும் குழிபறிப்புக்களில்  இறங்கி அதிலும் தோல்வி கண்டும் அடங்காது தற்போது அரசியலமைப்பு பேரவையில் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாகவுள்ள சிறீதரனை அதிலிருந்தாவது அகற்றி ஆறுதல் வெற்றியையாவது பெற்று விட வேண்டுமென நினைத்து  மீண்டுமொரு  சதி, குழி பறிப்பு  நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இந்த தமிழரசுக் கட்சியின் சில முக்கிய கறுப்பு ஆடுகளின்  சதியின்  ஒரு நடவடிக்கையாகவே  அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினராகவுள்ள சிறீதரனை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்  பதவியிலிருந்து நீக்க வேண்டும்  என்ற சிறப்புரிமை மீறல் பிரச்சினையை புதிய  ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட சிங்கள எம்.பியான சாமர சம்பத் தசநாயக்க  அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை இந்த பிரேரணையை அவர் முன்வைத்த  போது, “இது சிறப்புரிமை மீறல் பிரச்சினையில்லை. அதற்கான போதிய விபரங்கள் இதில் இல்லை” என கூறி சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நிராகரித்த நிலையில்  அந்த பிரேரணையை ஏற்றுக் கொள்ள வேண்டுமென தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பியான. இரா.சாணக்கியன் போர்க்கொடி தூக்கியமை அந்தப் பிரேரணையின் பின்னணியை வெளிப்படுத்தியது.

இரா.சாணக்கியனதும்   சாமர சம்பத்  தசநாயக்கவினதும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இதில்  எவ்வித ஒழுங்குப் பிரச்சினையும் இல்லை. சாமர சம்பத் தசநாயக்க முன்வைத்த சிறப்புரிமை மீறல் பிரச்சினையில், அவரது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை முறையாகக் குறிப்பிடப்படவில்லை.

அவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டு சிறப்புரிமை  மீறல் பிரச்சினையை மீண்டும் சமர்ப்பிக்கலாம் என்று அறிவித்தார். இதனையடுத்து, மிகச் சிறந்ததொரு சட்டத்தரணியால் சட்ட வியாக்கியானங்களோடு  இருவிரவாகத் தயாரிக்கப்பட்ட சிறீதரனுக்கு எதிரான சிறப்புரிமை மீறல் பிரச்சினையை மறுநாள்  சாமர சம்பத் தசநாயக்க எம்.பி. முன்வைத்தார்.

அதனை சபாநாயகரும் ஏற்று  பாராளுமன்ற சிறப்புரிமைக் ரிமைக்குழுவுக்கு ஆற்றுப் படுத்தினார்.  புதிய  ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட  எம்.பியான சாமர சம்பத் தசநாயக்க முன்வைத்த சிறப்புரிமை மீறல் பிரச்சினையில்,   “அரசியலமைப்பு பேரவைக்குச் சிறுபான்மை எதிர்க்கட்சிகளால் சிறீதரன் பரிந்துரைக்கப்பட்ட போதிலும்,

அரசாங்க தரப்புகளுடன்  அவர் இணைந்து செயல்படுவது அவர் மீது வைக்கப்பட்டுள்ள கூட்டு நம்பிக்கையை குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது மற்றும் அவர் பிரதிநிதித்துவப்படுத்த நியமிக்கப்பட்டவர்களின் விருப்பத்தைக் காட்டிக் கொடுக்கிறது.

தமக்கு எதிரான இலஞ்சக் குற்றச்சாட்டுகளை மறைத்து,விசாரணையின் கீழ் இருக்கும்போது அரசாங்கத்துடன் இணைந்து வாக்களிப்பதன் மூலம் சிறீதரன் தனது அரசமைப்புப் பொறுப்பை தனிப்பட்ட பாதுகாப்பாக மாற்றியுள்ளார்.

பொறுப்புக்கூறல் நிறுவனத்தைத் தனது சொந்த தவறான நடத்தைக்கான கேடயமாக மாற்றியுள்ளார். தன்னை பரிந்துரைத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த கருத்துக்கு மாறாக வாக்களித்த சிறீதரன்  அரசியலமைப்பை வேண்டுமென்றே மீறியுள்ளார், சிறுபான்மை எதிர்க்கட்சி பிரதி நிதித்துவத்தை காட்டிக் கொடுத்துள்ளார்.

எனவே, அரசியலமைப்பு பேரவையிலிருந்து சிறீதரன் நீக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.ஜனாதிபதி அனுரகுமார  திசாநாயக்கவின் ஆட்சியில் அரசியலமைப்பு பேரவைக்கு சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக இரகசிய வாக்கெடுப்பின் மூலம் இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி.யான சிவஞானம் சிறீதரன் நியமிக்கப்பட்டார்.

ஆனால், அரசியலமைப்பு பேரவைக்கு சிறீதரன் எம்.பி. தெரிவாகிவிடக்கூடாது என்பதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின்  வாரிசான நாமல் ராஜபக்‌ஷவும் தமிழ்த் தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு ‘கறுப்பு ஆடு’களும் சதி செய்த போதும், அது அப்போது வெற்றியளிக்கவில்லை.

அரசியலமைப்பு பேரவையில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர். இதன் தலைவராக சபாநாயகர்  செயற்படுவார்.  பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இதில் நிரந்தர உறுப்புரிமையை பெற்றிருப்பர்.

ஜனாதிபதியின் பிரதிநிதியாக தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் 
எம்.பியான ஆதம்பாவா  நியமிக்கப்பட்டார்.  எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட எம்.பியான அஜித் பி.பெரேரா  நியமிக்கப்பட்டார்.

பிரதமரும் தனது பிரதிநிதியாக ஒருவர் நியமிக்க முடியும். பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சாராத கட்சி உறுப்பினர் ஒருவருக்கும் இடமளிக்க வேண்டும். இதற்கு மேலதிகமாக  கட்சி சாராத மூன்று சிவில் பிரதிநிதிகளும் நியமிக்கப்படுவார்கள்.

இவ்வாறான நிலையில்தான் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக ஒருவரை  தெரிவு செய்ய வேண்டிய நிலையில் அரசியலமைப்பு பேரவையின் சிறிய கட்சிகளின்  பிரதிநிதியாக இலங்கைத்தமிழரசுக்கட்சியை சேர்ந்த யாழ்  மாவட்ட எம்.பியான சிவஞானம் சிறிதரனின் பெயரை  அதேகட்சியை சேர்ந்த அம்பாறை மாவட்ட எம்.பியான கவீந்திரன் கோடீஸ்வரன் முன்மொழிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  தலைவரும் யாழ். மாவட்ட எம்.பியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழிமொழிந்தார்.

இதனையடுத்து, சிறீதரன் நியமிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக செயற்பட்ட நாமல் ராஜபக்‌ஷ எம்.பி. சிறீதரனை தோற்கடிக்க வேண்டும். அதேவேளை, மலையகத்தமிழர்களுடன் தமிழர்களை மோதவிட வேண்டும் என்ற  இனவாத சிந்தனையில் அரசியலமைப்பு பேரவையின் சிறிய கட்சிகளின்  பிரதிநிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்  செயலரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட எம்.பியுமான ஜீவன் தொண்டமானின் பெயரை  முன்மொழிய ரணில் விக்ரமசிங்கவின் புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட எம்.பியான  சாமர சம்பத் வழிமொழிந்தார்.

இவ்வாறான நிலையில், அரசியலமைப்பு பேரவையின் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக இலங்கை தமிழரசுக்கட்சியின் எம்.பியான சிறீதரனை தெரிவு  செய்வதா அல்லது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமானை தெரிவு செய்வதா என்பதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்த இரகசிய வாக்கெடுப்பில் 25 எம்.பிக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது,  சிறீதரன் எம்.பி. 11 வாக்குகளையும் ஜீவன் தொண்டமான் எம்.பி. 10 வாக்குகளையும் பெற்ற நிலையில் சிறீதரன் எம்.பி. அரசியலமைப்பு பேரவையின் சிறியகட்சிகளின்  பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய ரோஹித அபேகுணவர்தன், அனுராத ஜயரத்ன மற்றும் இரு எம்.பிக்கள் பங்கேற்கவில்லை. அதேவேளை, இந்த வாக்களிப்பில் தமிழ் தேசியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய இரு ‘கறுப்பு ஆடுகள்’ ஜீவன் தொண்டமானுக்கு வாக்களித்துள்ள தகவல்   பின்னர் வெளியே கசிந்தது. அதாவது, சிறீதரன் எம்.பி. தெரிவாகிவிடக் கூடாது என்பதில் இந்த இரு தமிழ்த் தேசிய கறுப்பு ஆடுகளும் உறுதியாகவிருந்த நிலையில், இரு முஸ்லிம் எம்.பிக்களின் ஆதரவுடனேயே சிறீதரன் எம்.பி. வெற்றிபெற்றார்  என்ற தகவல்களும் அப்போது   வெளிவந்தன .

அரசியலமைப்பு பேரவைக்கு  ஆளும் தரப்பு மற்றும் பிரதான எதிர்க்கட்சி ஆகியவற்றைச் சாராத 24 எம்.பிக்களின் சார்பாகவே சிறீதரன் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 

“இந்த 24 எம்.பிக்களில் தமிழரசுக் கட்சியின் 8 எம்.பிக்கள் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செல்வம் அடைக்கலநாதன் ஆகிய 2 எம்.பிக்கள் உட்பட 10 தமிழ் 
எம்.பிக்களைத் தவிர்ந்த மற்றைய 14 பேரும் தங்கள் சார்பில் அரசமைப்பு பேரவையை  பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிதரன், அங்கு பெரும்பாலும் ஆளும் தரப்பின் நிலைப்பாட்டையே ஆதரித்துச் செயற்படுகின்றார்.

என்ற  குற்றச்சாட்டை முன்வைப்பதாகச் சிலர் கூறுகின்றனர். அரசியலமைப்பு பேரவையைப் பொறுத்தவரை, 2 முக்கிய முடிவுகளில் சிறீதரனின் பங்களிப்பு, அரசுத் தரப்புக்கு இயைவாகச்செயற்பட்டார் என்ற ரீதியில்,  சர்ச்சைக்குரியதாகி உள்ளதாம்.

ஒன்று, இலஞ்ச, ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட விடயம்.

அரசுத் தரப்புடன் சேர்ந்துசிறிதரன் அளித்த ஒரு மேலதிக வாக்கின் மூலம் அவரது பெயர்  அரசியலமைப்பு  பேரவையால் பிரேரிக்கப்பட்டுள்ளமை . இந்தப் பதவிக்குப் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மாதவ தென்னக்கோன் ன் போட்டியிட்டிருந்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தமிழ் இளைஞர்களுக்கு எதிரான வழக்குகளில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஓரளவு நேர்மையோடு செயல்பட்டவர் மாதவ தென்னக்கோன். அத்தகைய மாதவ தென்னக்கோனை இப்பதவிக்குப் பரிந்துரைக்க முடியாமல்போன மைக்கு சிறிதரன் மீது  அவரது கட்சியினரே குற்றம்சாட்டுகின்றனர்.

அடுத்தது  இழப்பீடுகள் தொடர்பான அலுவலகத்துக்கு உறுப்பினர்களாக படைத்தரப்பு பின்னணி  கொண்டவர்கள் நியமிக்கப்பட்டமைக்கு சிறீதரன்  ஆதரவு வழங்கியுள்ளார்.

படைத்தரப்பு நடவடிக்கைகளால்பாதிக்கப்பட்ட  தமிழ்மக்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் பிரேரிக்கும்  ஐவர் குழுவில் மூவர் படைத் தரப்பினராக அமைகின்ற வாய்ப்பை அரசியலமைப்பு பேரவை  உறுப்பினராக இருந்து கொண்டு சிறீதரனும் சேர்ந்து ஒத்துழைத்துவழி செய்தார்  என்றும் அவரது கட்சியினரே குற்றஞ்சாட்டுகின்றனர்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மீண்டுமொரு-சதி-குழி-பறிப்பு/91-367449

இலகுகாத்த கிளிகளாக புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள்

2 weeks 3 days ago

இலகுகாத்த கிளிகளாக புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள்

மொஹமட் பாதுஷா

விடுதலைப் புலிகளால் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு 35 வருடங்களாகியுள்ள நிலையில், இன்னும் அந்த மக்கள் முழுமையாக தங்களது பூர்வீக இடங்களில் மீள் குடியேற்றப்படவில்லை.

நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள்,  இன அழிப்பு பற்றி மட்டுமன்றி, 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற இடம்பெயர்வுகள் பற்றியெல்லாம் உலக அரங்கில் பேசப்படுகின்றது. 

ஆயினும்; கூட, 1990ஆம் ஆண்டு, ஒரு இனக் குழுமத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது வாழ் நிலத்தில் இருந்து ஒரு சில மணித்தியாலங்களுக்குள் இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படவும் இல்லை. அங்த மக்களுக்குத் தீர்வு கிடைக்கவும் இல்லை.

முஸ்லிம் மக்கள் மொழியால் மட்டுமன்றி, வேறு பல விடயங்களாலும் தமிழ்ச் சமூகத்தோடு பின்னிப் பிணைந்ததாக வாழ்ந்தார்கள். இன்றும் இதன் சாயல்கள் உள்ளன.  குறிப்பாக, முஸ்லிம்களின் அரசியல் எந்தளவுக்கு பெருந்தேசியக் கட்சிகளைச் சார்ந்திருந்ததோ அந்தளவுக்கு வடக்கு, கிழக்கில் தமிழ்க் கட்சிகளையும் சார்ந்திருந்தது.

எம்.எச்.எம்.அஷ்ரப் வரை பல முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழரசுக் கட்சியோடு இணைந்து அரசியலில் பயணித்தனர்.  இப்போதுள்ள சிறிதரன் போன்ற ஒரு சில அரசியல்வாதிகளைப் போலல்லாமல், மூத்த தமிழ்த் தலைவர்கள் முஸ்லிம்கள் தனியொரு இனம் என்பதையும், இனப் பிரச்சினை தீர்வில் அவர்களுக்கும் ஒரு பங்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொண்டிருந்தனர்.

முஸ்லிம்களுக்குத் தனிநாடு தேவைப்படவும் இல்லை, அவர்கள் போராடவும் இல்லை. ஆனால், தமிழர்களின் தாகத்திற்காக முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்களில் இணைந்து போராடிய வரலாற்றைத் தமிழ்த் தேசியம் என்று மறக்கக் கூடாது.

புலிகளும் ஏனைய பல ஆயுதக் குழுக்களும் முஸ்லிம்களை நோக்கி ஆயுதங்களைத் திருப்பத் தொடங்கிய பிறகு, தமிழ்க் கட்சிகளைப் புலிகள் இயக்கம் கட்டுப்படுத்த தொடங்கிய பிறகு, முஸ்லிம்கள் இந்த போக்கில் இருந்து விலகினர்.

விடுதலைப் போராட்டத்தை முஸ்லிம்களை வெறுப்பதற்கும், முஸ்லிம் தலைவர்கள் தமிழர் அரசியலோடுடனான உறவைத் துண்டிப்பதற்கும் தமிழ் 
ஆயுதக் குழுக்கள் செய்த அட்டூழியங்களும் தமிழ் அரசியல்வாதிகளின் மௌனமும் முக்கிய காரணமானது.

அப்படியான சம்பவங்களில் மிக முக்கியமானதுதான் வடக்கில் 
வாழையடி வாழையாக வாழ்ந்த ஒரு இலட்சம் முஸ்லிம்கள் உடுத்த 
துணியோடு அங்கிருந்து விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட கறைபடிந்த நிகழ்வாகும்.

மேற்படி ஆயுதக் குழுக்கள் கிழக்கில் பள்ளிவாசல் படுகொலைகள், குருக்கள்மடம் படுகொலை,  வயல்வெளிகளிலான பலியெடுப்புக்களை நடத்தியது போல, வடகிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களைக் கடத்துதல், கப்பம் கோருதல், சொத்துக்களைப் பறித்தல் என, ஒரு விடுதலை இயக்கத்தின் கோட்பாடுகளுக்கு மாற்றமான பல அட்டூழியங்களை அரங்கேற்றியதை மறக்க முடியாது.

இந்தப் பின்னணியில்தான், 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி, வடக்கின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களைப் பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் ஆயுத முனையில் வெளியேற்றினர். 

தங்களது சொத்துக்களையோ, நகைகளையோ அல்லது பணத்தையோ கொண்டு செல்ல விடாமல், சில மணிநேர அவகாசத்தில் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது. இத்தனை காலமும் உழைத்த சொத்துக்களை, வீடுவாசல்களை மட்டுமன்றி பூர்வீக நிலத்தையே விட்டு, துரத்தியடிக்கப்படுவது எவ்வளவு கொடுமை?

90 ஆயிரத்திற்கும் ஒரு இலட்சத்திற்கும் இடைப்பட்ட முஸ்லிம்கள் உடுத்த உடுப்போடு தமது வாழிடங்களை விட்டு வெளியேறினர். அவர்கள் தமக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களைக் கூட கொண்டு செல்வதற்கு இடமளிக்கப்படவில்லை.

முஸ்லிம்கள் வெளியேறும் போது, புலிகள் அவர்களைச் சோதனையிட்டு, பணம், நகை மட்டுமன்றி மேலதிக ஆடைகள் போன்ற உடமைககளையும் பறித்தெடுத்ததாக சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் சொல்லியிருக்கின்றனர்.

ஒரு இனத்தின் நில உரிமைக்காக, விடுதலைக்காக போhடிய ஆயுத இயக்கம், முஸ்லிம்களும் தமிழ் பேசும் மக்கள் என்று கூறிவந்த சமூகத்தின் விடுதலை வீரர்கள்தான் இந்த இந்த செயலைச் செய்திருந்தனர். 

உலகில் வேறு எந்த மக்களும் இப்படி வெளியேற்றப்பட்டிருப்பார்களோ தெரியாது.
உண்மையில் இது ஒரு இனச் சுத்திகரிப்பாகும். ஏனெனில் வடகிழக்கு இணைந்த அவர்களது தனியீழ கனவில் வடக்கு என்பது மையப் புள்ளியாகும்.

அங்கு இன்னுமொரு இனத்தை வைத்திருப்பது தமது கோட்பாட்டை வென்றெடுப்பதற்குத் தடையாக அமையும் என்பதைப் புலிகளின் தலைமை அறிந்திருக்கும்.

மறுபுறத்தில், முஸ்லிம்கள் காட்டிக் கொடுக்கின்றார்கள் என்றும் வடக்கில் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் வேறு பல கதைகளும் சொல்லப்பட்டன. 

காட்டிக் கொடுப்பவர்களை வெளியேற்றுவதாயின் சம்பந்தப்பட்ட ஆட்களைத் தெரிவு செய்து வெளியேற்றியிருக்கலாம். அதுமட்டுமன்றி, காட்டிக் கொடுப்பவர்கள் என்றால் முஸ்லிம்கள் மட்டும்தானா? தமிழர்களில் இருந்த காட்டிக் கொடுப்பவர்கள் ஏன் வெளியேற்றப்படவில்லை?

வடக்கில் இராணுவத்தினால் முஸ்லிம்களுக்கு ஆபத்து வருவதற்கு வாய்ப்பில்லை. ஒரு இனக் குழுமத்தைச் சேர்ந்த மக்களை விரட்டியடிக்குமளவுக்கு பலம் பெற்றிருந்த புலிகளுக்கு அச்சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியவில்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய கதையா? 

வடக்கில் முஸ்லிம்களை விட அதிகமான தமிழர்களுக்குப் 
பாதுகாப்பு வழங்க முடியுமாக இருந்தால், அதே பாதுகாப்பை ஏன் முஸ்லிம்களுக்கு வழங்க முடியாமல் போனது? இதுவெல்லாம் வெறும் கற்பிதங்களே ஆகும்.

உண்மையில், இது விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகப் பெரிய கறைபடிந்த சம்பவம் ஆகும். தார்மீகமாகப் பார்த்தால் புலிகள் இயக்கத்தின் தோல்வி ஆரம்பித்த புள்ளி இது என்றும் சொல்ல முடியும்.

ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் தீவிர போக்கற்ற தமிழ் மக்கள் இந்த செயலை மனதால் வெறுக்கவே செய்தனர். அதனையும் மீறி பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய தமிழ் செயற்பாட்டாளர்கள் புலிகளை இது விடயத்தில் பகிரங்கமாக எதிர்த்தார்கள் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டியிருக்கின்றது.

முதலாவது விடயம் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியது மிகப் பெரும் தவறும் அநியாயம் இழைப்புமாகும். அவர்கள் நல்ல நோக்கத்தில் வெளியேற்றியிருந்தால், முஸ்லிம்களின் நகைகள், வாகனங்கள், வீடுகள், சொத்துக்களைப் பாதுகாத்து பத்திரமாக மீள ஒப்படைத்திருக்க வேண்டும்.

அத்துடன், இதற்கான விளக்கத்தைத் தெளிவாகக் கூறி பகிரங்கமான மன்னிப்பொன்றைக் கேட்டிருக்க வேண்டும். மட்டுமன்றி, அந்த மக்களை மிக விரைவாக மீளக் குடியேற்றுவதற்கான நடவடிக்கையை தம்பக்கத்தில் இருந்து புலிகள் மேற்கொண்டிருக்க வேண்டும்.  

ஆனால், இது எதுவுமே இன்று வரை நடக்கவில்லை. முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பிறகு, உள்நாட்டில் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மீளக் குடியேற்றப்பட்டு விட்டாலும் வடக்கு முஸ்லிம்களின் அகதி வாழ்வுக்கு இன்னும் விடிவு கிடைக்கவில்லை.

யுத்தத்தின் காரணமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள், வெளிநாடுகளில் தஞ்சம் கோரி வதிவிட உரிமை எடுத்தவர்கள் இப்போது சிறப்பான சூழலில் வாழ்கின்றார்கள் என்பதற்காக அவர்களது பூர்வீக நிலத்தில் வாழ்வதற்கான மறுதலிக்க முடியாது.

அதுபோலத்தான் வடக்கு முஸ்லிம்களும் பார்க்கப்பட வேண்டும். புலிகள் துரத்திய போது உழவு இயந்திரங்களிலும், வள்ளங்களிலும், கால்நடையாகவும் வந்த முஸ்லிம்கள் நாட்டின் பல பாகங்களில் குடியேறினர். புத்தளத்திலேயே பெருமளவானோர் தஞ்சம் புகுந்தனர்.  

இன்று அவர்கள் சனத்தொகை பல்கிப் பெருகிவிட்டாலும் மீள் குடியேற்றப்படவில்லையே என்ற ஏக்கம் அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கின்றது. ஆனால், அரசாங்கங்களும் முஸ்லிம் தலைவர்களும் இதுவிடயத்தில் வினைத்திறனாக செயற்படவில்லை.

எனவே, அரசாங்கமும் முஸ்லிம் எம்.பிக்களும் இது விடயத்தில் விரைந்து செயற்படுவதுடன், வடக்கு தமிழர்களை மீள் குடியேற்றுவதில் காட்டுகின்ற அக்கறையை வடபுல தமிழ் அரசியல்வாதிகள், அதிகாரிகள் புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் விடயத்திலும் காட்ட வேண்டும். இல்லாவிட்டால் புலிகளின் தவறை நியாயப்படுத்துபவர்களாகவே அவர்கள் கருதப்படுவார்கள்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலகுகாத்த-கிளிகளாக-புலிகளால்-வெளியேற்றப்பட்ட-முஸ்லிம்கள்/91-367347

இலங்கையில் நிழலுலக குழுக்களிடம் ராணுவ துப்பாக்கிகள் சென்றது எப்படி?

2 weeks 5 days ago

ஸ்ரீலங்கா, இலங்கை, துப்பாக்கி , ராணுவம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (சித்தரிப்புப்படம்)

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் அண்மைக் காலமாக துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளன. போதைப்பொருள், நிழலுலக செயற்பாடுகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களை மையப்படுத்தி இந்த துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, இந்த ஆண்டில் (2025) இதுவரையான காலம் வரை 105 துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் அரசு குற்ற ஆவணங்களில் பதிவாகியுள்ளன.

இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் 53 பேர் உயிரிழந்ததுடன், 58 பேர் காயமடைந்துள்ளனர்.

அரசியல் மற்றும் நிழலுக நபர்களை குறிவைக்கும் துப்பாக்கிகள்

நிழலுலக செயல்பாடுகளில் ஈடுபடுவோரை இலக்கு வைத்து அண்மை காலமாக அதிகளவான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியிருந்தன என்கிறது காவல்துறை.

இதில் பிரபல நிழலுலக தலைவர் கனேமுல்ல சஞ்ஜீவ என அழைக்கப்படும் சஞ்ஜீவ குமார சமரரத்னவின் கொலை பேசு பொருளாக மாறியது. கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்ற விசாரணை கூண்டில் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 19-ஆம் தேதி கனேமுல்ல சஞ்ஜீவ கொலை செய்யப்பட்டார்.

வழக்கறிஞர் வேடமிட்டு வந்திருந்த துப்பாக்கித்தாரி, இந்தக் கொலையை மேற்கொண்டு, நீதிமன்ற வளாகத்தை விட்டு தப்பியோடினார். சந்தேக நபரை போலீஸார், 8 மணிநேரத்தில் கைது செய்தனர்.

இந்தச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக போலீஸார் சுட்டிக்காட்டும் இஷாரா செவ்வந்தி என்ற பெண், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீலங்கா, இலங்கை, துப்பாக்கி , ராணுவம்

பட மூலாதாரம், ANANATHA WIJAYAPALA FB

படக்குறிப்பு, பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால

மாத்தறை வரலாற்று சிறப்பு மிக்க தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு முன்பாக மார்ச் 21-ஆம் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கி பிரயோக சம்பவம் நாட்டில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்தது. பௌத்த மக்களின் புனித ஆலயத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோக சம்பவமும் அதிகளவில் பேசப்பட்ட ஒரு சம்பவமாக பதிவாகியிருந்தது.

இதேவேளை, வெலிகம பிரதேச சபையின் தவிசாளராக கடமையாற்றிய லசந்த விக்ரமசேகர துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடந்த 22-ஆம் தேதி உயிரிழந்தார்.

வெலிகம பிரதேச சபை வளாகத்திற்குள் வந்த துப்பாக்கித்தாரிகள், பிரதேச சபையின் தவிசாளரின் அறைக்குள் சென்று துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த லசந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

லசந்த, இலங்கையின் பிரதான எதிர்கட்சியாக விளங்கும் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவாகியிருந்தார்.

உயிரிழந்த லசந்த விக்ரமசேகர, "நிழலுலக செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒருவர்" என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

''கடந்த காலங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களின் ஊடாக தேசிய பாதுகாப்புக்கு எந்த வித அச்சுறுத்தலும் கிடையாது. வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர என்ற வெலிகம லசா மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவர் நிழலுலக குற்றவாளி. மாத்தறை, குருநாகல் போன்ற மேல் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழக்கப்பட்டுள்ளது. நிழலுலக செயற்பாடுகளும் அவர் தொடர்புடையவர்.'' என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறினார்.

ஸ்ரீலங்கா, இலங்கை, துப்பாக்கி , ராணுவம்

பட மூலாதாரம், pmd sri lanka

ராணுவ ஆயுதங்கள் பயன்பாடு

நாட்டில் இடம் பெறுகின்ற துப்பாக்கி பிரயோகங்கள் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாகவே காணப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கிறார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக முழு நாட்டையும் ஒன்றிணைக்கும், தேசிய செயற்பாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 30-ஆம் தேதி கொழும்பில் இடம்பெற்ற போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

''கருப்புப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வர்த்தகமாக போதைப்பொருள் மாறியுள்ளது. அதனால் அவர்களிடையே சந்தையை பங்கு போடுவதில் மோதல் காணப்படுகிறது. ஒவ்வொரு குழுக்களுக்கிடையில் துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரதேச எல்லைகளுக்கு மற்றைய தரப்பு நுழைய முடியாது. போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டதாகவே இந்த கொலைகள் நடைபெறுகின்றன. பொதுச் சமூகத்தின் பாதுகாப்பிற்காவே அரச பொறிமுறையொன்று உள்ளது. ஆனால் அவர்களிடமுள்ள பண பலத்தினால் அரச பொறிமுறை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இனிமேலும் இதனை மறைத்து இந்தப் பிரச்னைக்கு முகங்கொடுக்க முடியாது." என ஜனாதிபதி கூறினார்.

ராணுவத்தினர் பயன்படுத்தும் ஆயுதங்கள் குழுக்களிடமும் இருப்பதாக ஜனாதிபதி குற்றம் சாட்டினார்.

"அரசிடம் இருக்க வேண்டிய ஆயுதங்கள் எவ்வாறு அவர்கள் கைகளுக்குச் சென்றது? சில ராணுவ முகாங்களில் இருந்து 73 ரீ56 ரக துப்பாக்கிகள் அவர்களின் கைகளுக்குச் சென்றுள்ளன. அதில் சுமார் 35 துப்பாக்கிகள் மீளப் பெறப்பட்டுள்ளன. அதற்குப் பயன்படுத்தும் ரவைகள் பிடிபட்டுள்ளன. ராணுவ கேர்னல் ஒருவர்தான் இவற்றை வழங்கியுள்ளார். அதற்காக அவரின் வங்கிக் கணக்கிற்கு பணம் கிடைத்துள்ளது. ஒரு பொலிஸ் அதிகாரி தனது ஆயுதத்தை விற்பனை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். அந்த ஆயுதக் குழுக்களிடமுள்ள பண பலத்தினால் இவை நிகழ்ந்துள்ளன.'' என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

ஸ்ரீலங்கா, இலங்கை, துப்பாக்கி , ராணுவம்

பட மூலாதாரம், pmd sri lanka

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறிய பின்னர், அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

"பாதுகாப்பு இல்லாததால் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் மாஅதிபர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளனர்," என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

போலீஸ் மாஅதிபர் பங்கு பெற்ற இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக எதிர்கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2lpvrr48dyo

எதிர்க்கட்சிகளின் ஒன்றிணையும் முயற்சி அரசாங்கத்துக்கு சவாலாக அமையுமா?

2 weeks 5 days ago

எதிர்க்கட்சிகளின் ஒன்றிணையும் முயற்சி அரசாங்கத்துக்கு சவாலாக அமையுமா?

Veeragathy Thanabalasingham

on November 4, 2025

250822-ranil-arrest-2.jpg?resize=1200%2C

Photo, GETTY IMAGES

மிகப் பெரிய வாக்கு வங்கியைக் கொண்ட தனியொரு அரசியல் கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மற்றைய கட்சிகள் குறிப்பாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தல்களில் போட்டியிட்ட காலம் ஒன்று இருந்தது. எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க தொடக்கம் அவரது மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்க, மகள் சந்திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் தலைமையில் சுதந்திர கட்சி இருந்த வரை ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான இந்தக் கூட்டணி அரசியல் தொடர்ந்தது.

கடந்த நூற்றாண்டில் சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணிகள் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்த சில பொதுத் தேர்தல்களில் கூட  நாடுபூராகவும் பெற்ற மொத்த வாக்குகளைப் பொறுத்தவரை ஐக்கிய தேசிய கட்சியே முன்னணியில் இருந்ததுண்டு.

ஆனால், இன்று அதே ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்கிரமசிங்கவின் 30 வருட கால தலைமைத்துவத்தின் கீழ் படுமோசமாக பலவீனமடைந்த நிலையில், இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன் முறையாக ஜனநாயக தேர்தல் மூலம் அதிகாரத்துக்கு வந்த இடதுசாரிக் கட்சி கூட்டணி என்ற சாதனையைப் படைத்த  ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு எதிராக கட்சிகளை அணிதிரட்டும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது.

பெரிய வாக்கு வங்கியைக் கொண்ட தனியொரு கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி முன்னர் விளங்கியதால் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதை நோக்கமாகக் கொண்டுதான் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையை அறிமுகப்படுத்தினார் என்று கூறப்பட்டதுண்டு. ஆனால், அதே தேர்தல் முறையின் கீழ் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினர் கூட நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படாத பொதுத் தேர்தலையும் நாம் கண்டோம்.

அதேவேளை, சில வருடங்களுக்கு முன்னர் வெறுமனே மூன்று சதவீத வாக்கு வங்கியைக் கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தி விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றக்கூடியதாக அரசியல் நிலைவரங்கள் மூன்று வருடங்களுக்கு முன்னர் முற்றுமுழுதாக மாற்றம் கண்டன.

கடந்த ஒரு வருடமாக பதவியில் இருந்துவரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக  தற்போது மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் பிரதான பாரம்பரிய அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சி மற்றும் ஒப்பீட்டளவில் புதிய கட்சியான ராஜபக்‌ஷர்களின் பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. இந்த பழைய கட்சிகளில் எந்த ஒன்றுமே கட்டுறுதியான கட்டமைப்புக்களை கொண்டவையாக இன்று இல்லை. ஆனால், கடந்த வருடத்தைய தேசிய தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்தக் கட்சிகள் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அவற்றுக்கு ஒரு பொருத்தப்பாட்டை தேடிக்கொள்ள வேண்டிய அரசியல் நிர்ப்பந்தத்தில் இருக்கின்றன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய பெருவாரியான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது என்பதும் அதன் விளைவான மக்களின் வெறுப்பை கடந்த உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சி வெளிக்காட்டியது என்பதும் உண்மை.

ஆனால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முன்னெடுக்கும் முயற்சிகள் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துவனவாக இல்லாமல் முன்னைய அரசாங்கங்களில் முக்கிய பொறுப்புக்களை வகித்த அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக தற்போது முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளை மையப்படுத்தியவையாகவே இருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதிகள் அரச பணத்தில் அனுபவித்துவந்த வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் சட்டத்தைக் கொண்டுவந்த வேளையிலும் கூட எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்துவதற்கு முயற்சிக்கப்பட்டது.

ஜனாதிபதியாகப் பதவி வகித்தபோது விக்கிரமசிங்க தனிப்பட்ட வெளிநாட்டு பயணத்துக்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கடந்த ஆகஸ்ட் பிற்பகுதியில் கைது செய்யப்பட்டபோது அவருக்கு ஆதரவையும் ஒருமைப்பாட்டையும்  வெளிக்காட்டிய எதிர்க்கட்சிகள் பிறகு நாளடைவில் அரசாங்கத்துக்கு எதிராக அணிதிரளுவதற்கான முயற்சிகளில் இறங்கின. முன்னைய அரசாங்கங்களில் பதவிகளை வகித்த அரசியல்வாதிகளில் பலர் எந்த நேரத்திலும் தாங்கள் ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் கைதுசெய்யப்படக்கூடும் என்ற பீதியில் இருக்கிறார்கள் என்பது ஒன்றும் இரகசியமானது அல்ல.

முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு மற்றும் சில அரசியல்வாதிகளுக்கு எதிராக இதுவரையில் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளை ‘அரசியலமைப்பு சர்வாதிகாரம்’ என்று வர்ணிக்கும் எதிர்க்கட்சிகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிராக போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்திருக்கின்றன.

செப்டெம்பர் முற்பகுதியில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 79ஆவது வருடாந்த மகாநாட்டை விக்கிரமசிங்க எதிர்க்கட்சிளை ஓரணியில் கொண்டு வருவதற்கான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்துவதில் அக்கறை காட்டினார். அந்த மகாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல்வாதிகளை விடவும் மற்றைய கட்சிகளின் அரசியல்வாதிகளே கூடுதல் எண்ணிக்கையில் காணப்பட்டார்கள்.

நவம்பர் 21ஆம் திகதி தலைநகர் கொழும்புக்கு வெளியே நுகேகொடையில் அரசாங்கத்துக்கு எதிரான பிரமாண்டமான பேரணியொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எதிர்க்கட்சிகள் செய்து வருகின்றன. இந்த பேரணியில் ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன, சுதந்திர கட்சி, சந்திரிகா தலைமையில் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மக்கள் முன்னணியின் பெயரில் தங்களை அடையாளப்படுத்தும் சில அரசியல்வாதிகள் மற்றும் பிவிதுறு ஹெல உறுமய ஆகியவை பங்கேற்கவிருப்பதாக இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இதில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று திட்டவட்டமாக  அறிவித்திருக்கிறது.

2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி கண்ட மகிந்த ராஜபக்‌ஷவின் அரசியல் மீள் எழுச்சிக்கு வழிவகுப்பதற்கு நேசக்கட்சிகளின் தலைவர்கள் ‘மகிந்த காற்று’ என்ற பெயரில் சில வாரங்களிலேயே நுகேகொடையில்தான் மிகவும் வெற்றிகரமான பேரணியொன்றை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட அரசியல் பிரசாரங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற புதிய அரசியல் கட்சி தொடங்கப்படுவதற்கும் ராஜபக்‌ஷர்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வழிவகுத்தன. அதனால் நுகேகொடையில் முதல் பேரணியை நடத்துவதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்தால் வெற்றிகரமாக அமையும் என்று எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நம்புகிறார்கள் போலும்.

2015 ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மைச் சமூகங்களின் அதிகப் பெரும்பான்மையான வாக்குகளை பெற்றதன் காரணத்தினாலேயே மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறக்கூடியதாக இருந்தது. சிங்கள மக்களின் வாக்குகள் பெருமளவில் மகிந்த ராஜபக்‌ஷவுக்கே கிடைத்தன. சிறிசேனவுக்கு கிடைத்தவை ‘ஈழம் வாக்குகள்’ என்று ராஜபக்‌ஷ கூறவும் தவறவில்லை. இலங்கை அரசியலில் இரு துருவங்களாக இருந்து வந்த ஐக்கிய தேசிய கட்சியும் சுதந்திர கட்சியும் முதல் தடவையாக  கூட்டுச் சேர்ந்து அமைத்த ‘நல்லாட்சி’ அரசாங்க பரீட்சார்த்தம் படுதோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து இனவாத அணிதிரட்டலை முன்னெடுத்து ராஜபக்‌ஷர்களினால் மீண்டும் அதிகாரத்துக்கு வரக்கூடியதாக இருந்தது. அதற்குப் பிறகு இடம்பெற்றவை அண்மைக்கால வரலாறு.

ஆனால், அதைப் போன்றதொரு சூழ்நிலை இன்று இல்லை. முன்னென்றும் இல்லாத நாடாளுமன்ற பெரும்பான்மைப் பலத்துடன் தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்து ஒரு வருடம் மாத்திரமே கடந்திருக்கிறது. மகிந்த ராஜபக்‌ஷவை மையப்படுத்தி அன்று ‘நல்லாட்சி’ அரசாங்கத்துக்கு எதிராக வெற்றிகரமான பிரசாரங்களை முன்னெடுக்கக் கூடியதாக இருந்ததைப் போன்று இன்றைய அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரங்களுக்கு மக்களை அணிதிரட்டக்கூடிய ஒரு பலம்பொருந்திய அரசியல் தலைவர் எதிர்க்கட்சிகள் மத்தியில் இல்லை.

ஒரு வருட காலத்திற்குள் நடைபெற்ற மூன்று தேர்தல்களின் முடிவுகளின் அடிப்படையில் நோக்கும்போது எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரிய வாக்கு வங்கியைக் கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தியே விளங்குகிறது. மக்கள் ஆதரவை இழந்த மற்றைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதன் மூலமாக பெரிய அரசியல் அனுகூலம் தங்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்ற அபிப்பிராயத்தை அந்தக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச கொண்டிருக்கிறார் போன்று தெரிகிறது. அத்துடன், எதிர்க்கட்சிகள் கூட்டாக ஏற்பாடு செய்கின்ற பேரணியில் தனது தலைமைத்துவ ஆளுமைக்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்தும் அவர் சந்தேகத்தைக் கொண்டிருக்கிறார் போன்று தெரிகிறது.

ரணில் விக்கிரமசிங்கவுடனும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷவுடனும் ஒரே மேடையில் தோன்றுவதில் பிரமேதாசவுக்கு அசௌகரியம் இருக்கும் என்பது நிச்சயம். அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியையும் தனது கட்சியையும் இணைப்பதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகளையும் அவர் விரும்பவில்லை. அத்தகைய ஒரு இணைவு தனது அரசியல் வாழ்வுக்கு முடிவுகட்டி விடக்கூடும் என்று அவர் அஞ்சுகிறார். தனது எதிர்கால அரசியல் வாய்ப்புக்களை மனதிற்கொண்டே நகர்வுகளைச் செய்வதில் அக்கறை கொண்டிருக்கிறார்.

அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று அறிவித்திருக்கும் பிரேமதாச, கூட்டணிகளில் இணைந்து கொள்வதை தவிர்கிறார். அதனால் கணிசமானளவுக்கு மக்கள் ஆதரவைக் கொண்ட பெரிய எதிர்க்கட்சி இல்லாமல் எதிர்க்கட்சிகளின் முயற்சிகள் எந்தளவுக்கு வெற்றிகரமானதாக அமையும் என்ற கேள்வி எழுகிறது.

அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள் மத்தியில் கொள்கை ரீதியில் பெருமளவுக்கு ஒற்றுமையும் கிடையாது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மைச் சமூகங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகள் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணையும் முயற்சிகளில் பங்கேற்பதிலும் சிக்கல் இருக்கிறது. சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் குறைந்தபட்சமானவற்றைக் கூட ஆதரிக்காத உதய கம்மன்பில போன்ற அரசியல்வாதிகளின் ஈடுபாடு இதற்கு ஒரு முக்கியமான காரணம்.

தற்போதைய நிலைவரம் காரணமாக ஒன்றிணைந்து செயற்படவேண்டிய நிர்ப்பந்தத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. ஆனால், தேர்தல் ஒன்று வரும்போது இந்தக் கட்சிகள் ஒரு கூட்டணியாகச் செயற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு.

ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் பேரில் அரசியல்வாதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளை அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கு என்றும் ஜனநாயக விரோதமானது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதை மக்கள் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகும்.

அதேவேளை, அரசியலமைப்பு சர்வாதிகாரம் தொடர்பில் அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டும் இந்தக் கட்சிகள் அதற்கு அடிப்படைக் காரணமான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை (புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் வரை காத்திராமல்) அரசாங்கம் அதற்கு இருக்கும் நாடாளுமன்ற பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி அரசியலமைப்பு திருத்தம் ஒன்றின் மூலமாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மைப்படுத்தும் இயக்கத்தை முன்னெடுப்பதில் அக்கறை காட்டலாமே.

வீரகத்தி தனபாலசிங்கம்

https://maatram.org/articles/12394

Checked
Sun, 11/23/2025 - 16:56
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed