அரசியல் அலசல்

தமிழ் இனப்படுகொலை பற்றிய ஓர் ஆவணப்படம் | French

22 hours 43 minutes ago

புலம்பெயர் வாழ் இளந்தலைமுறையினரின் முயற்சியால் வெளிவந்துள்ள ஓர் ஆவணப்படம். ஆதரவளிப்பீர்!

வெறுமனே பாராட்டாமல், நல்ல உருப்படியான கருத்துக்கள் இடுங்கள். அப்போது தான் பலரைச் சென்றடையும்.

The Tamil Genocide that no one talks about

வெளிநாட்டில் வாழுவோரும் வாக்களிக்க முடியும்!

1 day 10 hours ago

அமைச்சரவைத் தீர்மானம்.

வெளிநாட்டில் வாழுவோரும் வாக்களிக்க முடியும்!

--- --- ---

*வாக்களிக்கத் தகுதியானோர் பற்றிய விபரங்கள் தெளிவில்லை...

*ஐரோப்பிய, மேற்கு நாடுகளில் வாழ்வோர் வாக்களிக்க முடியுமா?

*மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிவோர் மாத்திரமா?

*முடிவுத் திகதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் அனுப்பிய கடிதம்...

-- -- ---

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு, தேர்தல் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்வது தொடர்பாக. 23 /09 /2025 இல் இடம்பெற்ற அமைச்சவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

நடவடிக்கை குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் --

26/1 என்று மாத்திரம் குறிப்பிட்டு திகதியிடப்படாமல், ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் கடிதத்தை குறித்த குழு அனுப்பியுள்ளது.

அதாவது --

தங்கள் பிரதேசங்களில் இருந்து, வெளிநாடுகளில் வாழ்வோர் பற்றிய விபரங்களை வழங்கமாறு கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. முடிவுத் திகதி ஜனவரி 31

ஆனால் --

இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை கூட்டம் முடிவடைந்து, இரண்டரை மாதங்களின் பின்னர் அதுவும், முடிவுத் திகதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் தான், கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் கடிதங்களை குறித்த குழு அனுப்பியிருக்கிறது.

கோரப்பட்டுள்ள நான்கு அம்சங்களும் வருமாறு ---

1) வெளிநாடுகளில் இருக்கிற தேருநர்களை தேர்தல் இடாப்பில் பதிவு செய்தல்.

2) தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்.

3) வாக்களித்தல்

4) வாக்கெண்ணுதல்.

என்ற நான்கு அம்சங்கள் பற்றியும் கட்சிகளின் கருத்துகள் குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளன.

ஆனால், கடிதத்தில் கோராப்பட்டுள்ள முதலாவது அம்சம் தொடர்பாக கேள்விகள் எழுகின்றன.

A) “வெளிநாடுகளில் வாழ்வோர்” என்றால், ஐரோப்பிய மற்றும் மேற்கு நாடுகளில், இலங்கைக் கடவுச் சீட்டுடன் வாழ்வோரும் உள்ளடக்கமா?

B) அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பெண்கள் மற்றும் பொறியியலாளர்கள், போன்ற உத்தியோகஸ்த்தர்களாக பணிபுரியும் இலங்கையர்கள் மாத்திரம் வெளிநாடுகளில் வாழ்வோர் என்று அர்த்தப்படுத்தப்படுகிறதா?

ஆகவே --

இந்த விடயங்கள் செயலாளர்களுககு அனுப்பியுள்ள கடிதத்தில் விபரமாக இல்லை.

அதாவது வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வாக்களிக்க முடியும் என்ற அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானம் விளக்கமாக கடிதத்தில் இல்லை.

இவை பற்றி தமிழ்த்தேசியக் கட்சிகள் உள்ளிட்ட வேறு எந்தவொரு சிங்களக் கட்சியும் இதுவரை விளக்கம் கோரவுமில்லை.

குறிப்பாக --

வடக்கு கிழக்கு தமிழர்கள் அதுவும் யாழ்ப்பாண தமிழர்கள் பலர், ஐரோப்பிய, ஸ்கண்டிநேவிய மற்றும் மேற்கு நாடுகளில், இலங்கைக் கடவுச்சீட்டுடன் வாழ்கின்றனர். வேறு சிலருக்கு இரட்டைப் பிரஜாவுரிமையும் உண்டு...

ஆகவே, வாக்களிக்கத் தகுதியான வெளிநாட்டவர்கள் யார் என்பது பற்றி விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சு அல்லது வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு தெளிவுபடுத்த வேண்டும்.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

https://www.facebook.com/1457391262/posts/pfbid0sy9i7wSuEkL3QrrHoM3vE75bMhAMhLtm8YvAKXu4e8zTumtqAe3YfC3PQ33c9b2cl/?

வெறுப்புணர்வின் வெளிப்பாடு

1 day 17 hours ago

வெறுப்புணர்வின் வெளிப்பாடு

லக்ஸ்மன்

அனுராதபுரம் ஸ்ரீ மகா போதியைக் கடந்து வழிபாட்டிற்காக யாழ்ப்பாணத்திற்கு வருவது 'வெறுப்பு' காரணமாகவே, ஒவ்வொரு 'போயா' தினத்திலும் யாழ்ப்பாணத்தின் ஓரிடத்தில் கூடிக் காணி கேட்டுப் போராடுவதும் வெறுப்புணர்வினாலேயே, இவ்வாறு போராடுபவர்களுக்கு அந்த இடத்தில் உண்மையில் காணிகள் இருக்கிறதா என்று ஆராயுமாறு புலனாய்வுப் பிரிவினருக்குத் பணிப்புரை விடுத்துள்ளேன் என்று ஜனாதிபதி அனுர யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தார். இதிலுள்ள மூன்று விடயத்தையும் ஒன்றாகவும் பார்க்கலாம். வெவ்வேறாகவும் விளக்கத்துக்குட்படுத்தலாம். ஆனால் இது தையிட்டி விகாரையை மையப்படுத்தியதாக மட்டுமே நகர்த்தப்பட்டு வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கொழும்பில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவைத் தவிர்த்து வடமாகாண பொங்கல் விழாவுக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்தமை பெரும் விமர்சனத்துக்குரியதாக இருந்தது.  அங்கு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய வெறுப்புணர்வு தொடர்பான விடயம்  நாட்டில் களேபரமாக மாறி வருகிறது. பௌத்தமே முதன்மையான நாட்டில், விகாரைகளுக்கு வழிபாட்டிற்காக  வருகை தரும் பௌத்தர்கள் மனதில் குரோத்துடன்  வருகிறார்கள் என்ற கருத்துப்பட பேசியிருந்தார். அவர் இந்தக் கருத்தை வாபஸ் பெறுவாரா? இல்லையா? என்பது ஒருபுறம் இருக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர்  உட்பட பல அரசியல் தலைவர்களும் ஜனாதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் நிலை உருவாகி வருவதனை அவதானிக்க முடிகிறது. ஆனால்,ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது மாத்திரம் வெளிப்படை. அதேநேரத்தில், அவருடைய கருத்துக்கு ஆதரவான கருத்துக்களும் வெளிவராமலில்லை. அது அவர்களுடைய அரசியலாகவும் இருக்கலாம்.

ஆனால், பௌத்தம் என்பது மனித குலத்துக்கு, அதன் வாழ்வியலுக்குத் தேவையான பல்வேறு நல்ல விடயங்களைக் கற்பிக்கின்ற ஒருமார்க்கம் என்ற அடிப்படையில் ஜனாதிபதி தனது கருத்தை முன்வைத்திருக்கலாம் என்ற அளவீட்டில் கடந்து போய்விட யாரும் தயாரில்லாத நிலை காணப்படுகிறது. இது மிக மோசமானதே.

இலங்கையின் கடந்த கால  வரலாறு ஜே.வி.பியின் இரண்டு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளுக்கும். தமிழ் மக்களின்  சுய நிர்ணயப் போராட்டத்துக்கும் உட்பட்டிருக்கிறது. ஜே.வி.பி. தமது போராட்டத்தில் தோற்று, மண்டியிட்டு தற்போது அரசியல் ரீதியாக நாட்டைக் கைப்பற்றியிருக்கிறது. அதே நேரத்தில், தமிழ் மக்களின் ஆயுத ரீதியான போராட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையுடன் அரசியல் ரீதியான போராட்டம் தொடர்ந்த வண்ணமிருக்கிறது. இந்த நிலையில் ஜே.வி.பி. தலைமையில் நடைபெறுகின்ற தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் தலைவரான ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளியிடும் கருத்துக்கள் அரசாங்கத்தின் கருத்துக்களே என்ற வகையில் யாழ்ப்பாணத்தில் அவர் வெளியிட்ட கருத்தும் அரசின் கருத்தே என்பது மாத்திரம் உறுதியானது. அந்த வகையில்தான், ஜனாதிபதிக்கு எதிரான கருத்துக்கள் வெளியாவது, அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கும்படி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்வதும் நடைபெற்று வருகின்றன.

நாட்டில் நடைபெற்ற 'அரகலய' போராட்டம் ஒரு ஜனாதிபதியைப் பதவியிலிருந்து தப்பியோட வைத்திருந்தது. அதன்பின்னர் இலங்கை வரலாற்றில் நடைபெறாத பாராளுமன்றத் தெரிவுமூலம் நாட்டுக்கு ஜனாதிபதி ஒருவர் தெரிவானார்.

பின்னர் யாரும் எதிர்பார்த்திராத வகையில் பெரும்பான்மை தேசியக் கட்சிகளை மேவியவகையில் ஜனாதிபதியாக ஜே.வி.பியின் தலைவரான அனுரகுமார திசாநாயக்க தெரிவானார். அவர் பெரும்பான்மையற்ற வகையில் தெரிவானார் என்பது வேறுகதை. அதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சியே பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்திருக்கிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம், புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம். ஊழலற்ற நாட்டை உருவாக்குவோம். போதையற்ற நாட்டை எதிர்கால சந்ததிகளிடம் கையளிப்போம் என பல கோசங்களுடன் ஆட்சியைப் பொறுப்பேற்ற தேசிய மக்கள் சக்தி ஒருவருடத்தைக் கடந்த ஆட்சியில் சற்றுத் தீவிரமாகச் செயற்படுவதாகவே மக்கள் உணரத் தொடங்கியிருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அதிகாலையில் எழுந்து யாழ்ப்பாணத்தின் பிரதான வீதியில் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டார். சாதாரண மக்களுடன் உரையாடினார். இவையெல்லாம் சாதாரணமான செயற்பாடுகளாகப் போயின. அங்கு அவர் பேசிய பேச்சு விமர்சனத்துக்குள்ளானது. உண்மையில் ஜே.வி.பியின் செயற்பாடுகள்  விமர்சிப்பதற்கும், ஆராய்வதற்கும் ஏற்ற வகையில் இருந்தாலும், சற்று வித்தியாசமுடனேயே இருக்கிறது என்று மக்கள் சிந்திக்கின்றனர். இருந்த போதிலும், ஏற்கெனவே அமைச்சுப் பொறுப்புக்களுடன் சிறிது காலம் இருந்த அனுபவம் உள்ளதாக ஜே.வி.பி. இருந்தாலும்,  தற்போதைய ஆட்சி சற்று வித்தியாசமானது என்பதனை அவர்கள் மறந்து விடுகிறார்களாக என்று எண்ணத் தோன்றுகிறது.

அந்த ஒழுங்கில்தான், பௌத்தத்தை முதன்மைப்படுத்தியதான நாட்டில் ஜனாதிபதியும், அரசாங்கமும் அதனை அவமதிக்கிறது என்ற அரசியல் தரப்பினரது முன்வைப்புக்கள் தவறல்ல. ஆனால், இனவாதமற்ற, மத வாதமற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கம் கொண்ட இந்த அரசாங்கத்தின் செயற்பாட்டில் இந்த விமர்சனங்கள் பட்டை தீட்டலாக அமையக்கூடும். ஆனால்,  வங்குரோத்தாகியிருந்த நாட்டை, ஆட்சிக்கு வந்தவுடன்  ஜனாதிபதி மீட்டெடுத்துவிட்டார் என்று கூறுமளவிற்கு நாடு மீட்சி பெறவில்லை என்பது மாத்திரம் உண்மை.

காங்கேசன்துறை தையிட்டி திஸ்ஸ விஹாரைப் பிரச்சினை இன்னமும் முடிவுக்கு வரவில்லை. திருகோணமலையில் விகாரை அமைக்க முயன்ற பிக்குகள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் தொல்பொருள் தரப்பினர் தமது அடையாளங்களை நிறுவி வருகின்றனர். அது பிரச்சினையாகிக் கொண்டும் இருக்கிறது. தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் இப்போது தொடங்கியதல்ல. இது கடந்த ஆட்சிக்காலத்திலேயே தொடங்கி விட்டது. தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிக்குள் அடாத்தாக அமைக்கப்பட்டதே அந்த விகாரை என்பது அம் மக்களது போராட்டம். அதேபோன்று, தொல்பொருள் சின்னங்கள் நிறுவுதலும் நாட்டின் அடிப்படைச் சட்டத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது. பல்வேறு இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டதும் கடந்த ஆட்சிக் காலங்களிலேயே ஆகும். இருந்தாலும் பிரச்சினைகள் இந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்த இடத்தில்தான், வடக்கு கிழக்கில் பௌத்தத்தை நிலைநாட்டத் துடிக்கும் பிக்குகளினதும் பௌத்த மதவாதச் சிந்தனையும் தமிழ் மக்களது விடயத்துக்குள் உரசிக் கொள்கின்றன என்று கூறலாம். திஸ்ஸ விஹாரை என்பது கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம் வரை செல்லும் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு பௌத்த விகாரையாகும். தேவநாம்பியதிஸ்ஸ மன்னன் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த விகாரை, கனிஷ்டதிஸ்ஸ, வோஹாரிகதிஸ்ஸ போன்ற மன்னர்களால் அபிவிருத்தி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொன்மை வாய்ந்த புனிதத்தலம் வடக்கின் யுத்த காலத்தில் பாழடைந்து போனது என்ற நிலைமையொன்று உருவாகிறது.

இந்த விகாரை யுத்தக் காலத்திற்கு முன்னர் செயற்பாட்டில் இருந்ததா? என்ற கேள்வியும் இருக்கிறது. இருந்தாலும். இதற்கென ஒதுக்கப்பட்ட நிலம் ஒன்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திஸ்ஸ விஹாரைக்குச் சொந்தமான காணி தொடர்பான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் நாகதீப விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய நவந்தகல பதுமகித்தி ஹிமி தெரிவித்திருக்கிறார். ஆனால், அவரே தற்போது வாகாரை அமைந்திருக்கும் இடம் அதற்குரிய இடமல்ல என்றும் கூறியிருக்கிறார்.

எவ்வாறானாலும், போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன திஸ்ஸ விகாரை விவகாரம் அரசாங்கத்தால் சுமுகமாகத் தீர்க்கப்பட்டேயாகவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றாலும், நாட்டில் பௌத்த மத்துக்கெதிராக ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருப்பதாக உருவாகியிருக்கும் பிரச்சினை திஸ்ஸ விகாரையால்தான் உருவானதென்று மட்டுப்படுத்திவிட முடியாது. இது காலங்காலமாக இருந்து வருவதேயாகும். அடிப்படையில் ஊட்டப்பட்டதாக இருக்கின்ற இந்த மனோநிலையை மாற்றியமைப்பதானது சிறு முயற்சியால் குறிப்பிட்ட காலத்தில் களைந்துவிடக்கூடியதல்ல என்பது உண்மையானதே.

இருந்தாலும், வடக்கைப் பிரதானமாக மையப்படுத்தியதாகவே நகரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியல் செயற்பாட்டில் வடக்கு மக்களின் மனங்களை வென்றால் தமிழ் மக்களின் மனங்களையும் வென்றுவிடலாம் என்பது ஒரு எடுகோளாகும். அந்தவகையில், நடைபெறும் ஒரு அரசியலாக ஜனாதிபதியின் இந்த பௌத்த்துக்கு எதிரான என்று சொல்கின்ற கருத்தையும் நாம் கடந்துவிட முயலவேண்டும்.

எவ்வாறானாலும், 2009இல் யுத்தம் முடிவடைந்த கையோடு இராணுவ முகாம் இருந்த காணியில் இராணுவத்தினரால் தையிட்டி  திஸ்ஸ விஹாரை கட்டப்பட்டது. பௌத்த பிக்கு ஒருவரை அழைத்து வந்து அங்கே தங்க வைக்க இராணுவம் நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கை தேசிய ரீதியில் முக்கியமானது. திஸ்ஸ விஹாரையை மீண்டும் நிறுவுவது இராணுவத்தின் ஒரு தேசியப் பணியே தவிர, அது ஒரு வெறுப்புணர்வுச் செயலல்ல என்ற சிந்தனை பெரும்பான்மை மக்களிடம் இருக்கையில்  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கருத்து அவருடைய அரசியலாலேயே முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும். இருந்தாலும் அந்தக் கருத்துக்கெதிராக உருவாகிவருகின்ற எதிர்ப்பலையானது வெறுப்புணர்வின் வெளிப்பாடென்றே முடிவுக்கு வரவும் வேண்டும். ஜனாதிபதி தனது கருத்தை வாபஸ் பெறுவாரா என்பதைப் பொறுத்தே அதற்கான முடிவும் கிடைக்கும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வெறுப்புணர்வின்-வெளிப்பாடு/91-371589

யாழ்ப்பாணத்தில் பொங்கிய அனுர: தேசிய மக்கள் சக்தியின் வியூகம் என்ன? - நிலாந்தன்

3 days 4 hours ago

யாழ்ப்பாணத்தில் பொங்கிய அனுர: தேசிய மக்கள் சக்தியின் வியூகம் என்ன? - நிலாந்தன்

facebook_1768555048047_74178575122456425

யாழ்ப்பாணத்துக்கு வந்த அனுர குமார காலால் நடந்தார்; கைகளால் உணவை எடுத்தார்; வாயால் சாப்பிட்டார்; கண்களால் பார்த்தார்; வாயால் சிரித்தார்… என்று சமூக வலைத்தளங்களில் அரசியல் விமர்சனப் பதிவுகள் உலாவுகின்றன. ஏன் இந்தப் பதிவுகள் என்றால், ஜனாதிபதியின் ஒவ்வொரு அசைவையும் அசாதாரணமானதாக, அபூர்வமானதாக, எளிமையானதாகச் சித்திரித்து, அவருடைய ஊடகப்பிரிவு குறிப்பாக டிஜிட்டல் புரோமோஷன் அணி கவர்ச்சியான காணொளிகளாக கவர்ச்சியான காணொளிகளாக வெளியிட்டு வருகிறது. ரிக்ரொக் தலைமுறையின் ஒருபகுதி அதனை ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் பார்க்கின்றது. அனுர பலாலியில் நடந்ததால் அவருக்குப் பிறஷர் குறைந்ததோ இல்லையோ, தமிழ் அரசியற் பரப்பில் ஓர் பகுதியினருக்குப் பிறஷர் ஏறுகிறது.

அனுரவை கதாநாயகராக கட்டமைக்கும் காணொளிகள் அரசாங்கத்தின் திட்டமிட்ட பிரச்சார விளம்பரங்கள்தான். எல்லாரும் செய்வதைத்தான் அனுரவும் செய்கிறார். ஆனால் அவருடைய ஊடகப் பிரச்சார அணி அதனை ஒரு செயற்கரிய செயலாக சித்திரிக்கின்றது. அதைத்தான் மேற்கண்டவாறு தமிழ் தேசிய ஆர்வலர்கள் விமர்சிக்கிறார்கள். தமிழ்த் தேசிய தரப்புகள் குறிப்பாக மேற்கண்ட பதிவுகளைப் போடுபவர்களும் உட்பட பெரும்பாலானவர்கள், ஒருவர் மற்றவரை அல்லது ஒரு கட்சி மற்றக் கட்சியை வில்லன் ஆக்கி, துரோகி ஆக்கி ஒருவர்  மற்றவர்  மீது மலத்தை அள்ளி வீசும்போது. இரண்டு தரப்பிலும் மலம் படுகிறது. இரண்டு தரப்புமே நாறுகின்றன. இதனால் தமிழ்த் தேசியப் பரப்பில் யாருமே கதாநாயகராக எழ முடியவில்லை. இந்த வெற்றிடத்திற்குள் அனுர ஒரு கதாநாயகராக இறக்கப்படுகிறார். தமிழ்த் திரை நாயகர்களின் எழுச்சியான பாடல்களின் பின்னணியில் அவர் நாயக நடை போடுகிறார். இது தமிழ்த் தேசியக் கட்சிகள் விட்ட வெற்றிடத்தை அரசாங்கம் திட்டமிட்டு நிரப்பும் ஒரு பிரச்சார உத்தி.

ஆனால் இது தனிய ஒரு பிரச்சார உத்தி மட்டுமல்ல, அதைவிட ஆழமான ஆபத்தான ஓர் அரசியல் வியூகம் அங்கே உண்டு. அனுர கடந்த வாரம், யாழ்ப்பாணத்தில் வைத்து பின்வருமாறு கூறினார் ”முன்னர் வடமாகாணத்துக்கு தனி ஆட்சி தேவை என்று வடமகாண மக்கள் கூறினார்கள்.. ஆனால் முதன் முதலாக யாழ் மக்கள் இன்று எங்களுடைய ஆட்சியை தங்களுடைய ஆட்சி என்று நம்புகிறார்கள்.. அவர் பயன்படுத்திய சொற்களுக்கு அரசியல் பரிமாணம் உண்டு என்று எடுத்துக் கொண்டால், அவர் தமிழ் மக்களின் போராட்டத்தை வடக்குக்குள் மட்டும் சுருக்குகிறார். அது வடக்கின் பிரச்சினை என்று காட்டப் பார்க்கிறார். கிழக்கில் அந்தப் பிரச்சினை இல்லை என்றும் அங்கே பொருள் கொள்ளலாம்.

அவர் மட்டுமல்ல கோத்தபாய ராஜபக்சவும் இனப்பிரச்சினையை வடக்குக்கு மட்டுமான பிரச்சினையாக, ஒரு பொருளாதாரப் பிரச்சினையாகச் சுருக்கப் பார்த்தார். இது ஒரு தெளிவான நிகழ்ச்சி நிரல். கிழக்கில் பிரச்சினை இல்லை என்று காட்டுவது. அல்லது வடக்கை மட்டும் ஃபோக்கஸ் பண்ணுவதன்மூலம் வடக்கையும் கிழக்கையும் தெளிவாகப் பிரிப்பது.

இங்கு மேலும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் உண்டு. ஒரு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் குறுகிய காலகட்டத்துள் வடக்கிற்கு அதிகம் வருகை தந்தவர் அனுரதான். அதுமட்டுமல்ல, அவருடைய வருகைகளின்போது அவரை நோக்கித் திட்டமிட்டு மக்கள் குவிக்கப்படுகிறார்கள். அது தானாகத் திரண்ட கூட்டம் என்று அவருடைய ஊடகப்பிரிவு சொல்லலாம். ஆனால் அரச பேருந்துகள் அதற்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பது பொங்கல் விழாவின்போது அவதானிக்கப்பட்டது. ஆனால் இதேயளவு கவனக்குவிப்பு கிழக்கை நோக்கி இல்லை. வடக்கோடு ஒப்பிடுகையில் கிழக்கில் “செல்பி அரசியல்” பெரிய அளவில் இல்லை.

facebook_1768564718790_74178980742803419

கடந்த வாரம் பொங்கல் விழாவில் அனுர பின்வருமாறும் பேசினார்… ”பார்க்காத பழகாத எங்களை நம்பினீர்கள். உங்களை நாங்கள் கைவிட மாட்டோம்” இது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றியை அவர்களே எதிர்பார்க்கவில்லை என்பதைக் காட்டுகிறது. அது எதிர்பாராமல் கிடைத்த வெற்றி. ஆனால் உள்ளூராட்சி சபைகளில் அவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தமிழரசுக் கட்சி குறிப்பாக சுமந்திரன் கடுமையாக உழைத்து தேசிய மக்கள் சக்தியின் வெற்றியின் பருமனைக் குறைத்தார். ஆனால் மாகாண சபையில் மீண்டும் தன் மேலாண்மையை நிலைநாட்ட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி கருதுகின்றது. அதை நோக்கி அவர்கள் ஏற்கனவே உழைக்கத் தொடங்கி விட்டார்கள்.

ஜனாதிபதியும் அமைச்சர்களும் வடக்கை நோக்கி அதிகமாக வருவது அந்த நோக்கத்தோடுதான். ஜனாதிபதியை தமிழ்மக்கள் மத்தியில் ஒரு கதாநாயகனாகக் கட்டியெழுப்புவதும் அந்த நோக்கத்தோடுதான். தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையே காணப்படும் பிடுங்குப்பாடு அரசாங்கத்துக்கு அனுகூலமானது. தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகளையும் குறிப்பாக தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் குழு மோதல்களையும் சுட்டிக்காட்டி அமைச்சர் சந்திரசேகரன் அண்மைக் காலங்களில் பேசி வருகிறார். அதற்கு சிவஞானம் பதில் சொல்லுகிறார். சிவஞானத்தின் பதில் ஒலிவாங்கிகளுக்கு முன்னுக்கு கூறப்படுவதாக இருக்கக் கூடாது. அது செயலில் காட்டப்பட வேண்டும்.

அடுத்த மாகாண சபைத் தேர்தலை ஆகக்கூடிய விரைவில் வைப்பதை இந்தியா விரும்புகிறது என்பது எல்லாருக்கும் தெரிகிறது. எனவே மாகாண சபைத் தேர்தலில் தன்னுடைய வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் கடுமையாக உழைக்கின்றது. ஏற்கனவே கிராம மட்டங்களில் அவர்கள் உருவாக்கி வரும் “பிரஜா சக்தி” என்ற கட்டமைப்புக்கு அவர்கள் வறுமை ஒழிப்பு என்ற கவர்ச்சியான நிறத்தைப் பூசலாம். ஆனால் நடைமுறையில் அது பிரதேச சபைகளுக்குச் சமாந்தரமானது. பிரதேச அதிகாரங்களைக் கவரும் நோக்கிலானது. அதைவிட முக்கியமாக அரச கட்டமைப்பு ஒன்றுக்கூடாக, அரச வளங்களைப் பயன்படுத்தி ஆளுங்கட்சியின் அடிமட்ட வலையமைப்பைப் பலப்படுத்தும் கட்சி அரசியல் உள்நோக்கம் அங்கே உண்டு என்று சந்தேகிக்கப்படுகிறது. அதுதொடர்பாக அண்மையில் நல்லூர், திவ்வியஜீவன சங்க மண்டபத்தில் நடந்த கருத்தரங்கில் ஐங்கரநேசசன் பேசினார், பிரஜா சக்திக்கு எதிராகத் தான் நீதிமன்றம் செல்லப்போவதாக சுமந்திரன் கூறியிருக்கிறார்.

அதாவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அடுத்த மாகாண சபையை இலக்கு வைத்து இயங்குகின்றது. ஆனால் வடக்கை அவர்கள் குறிவைப்பது அதற்காக மட்டும் அல்ல.அது அதைவிட ஆழமானது. வடக்கை வென்றெடுத்தால், கிழக்கு தானாக விழுந்துவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். வடக்குத்தான் பிரச்சனை. எனவே அங்கே அடிக்க வேண்டும். அங்கே வெல்ல வேண்டும். என்று அவர்கள் திட்டமிடுகிறார்கள்.

இது ஒருவிதத்தில் முதலாம் கட்ட ஈழப்போரின் போது ஜெயவர்த்தன வகுத்த வியூகத்தின் மறுவளமான வடிவம் ஆகும். ஜெயவர்த்தனாவின் தளபதியாக இருந்த சிறில் ரணதூங்க ஒரு நேர்காணலில் கூறியதுபோல, வடக்குக் கிழக்கு இணைப்பைத் துண்டித்து விட்டால், அதாவது வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் பிரதேசத்தை குடியேற்றங்களின் மூலம் துண்டித்து விட்டால், தாயகக் கோட்பாடு புவியியல் ரீதியாக சிதைக்கப்படும். அடுத்ததாக கிழக்கை படை நடவடிக்கைகள், திட்டமிட்ட அரச குடியேற்றங்கள் மூலமும் தமிழ் -முஸ்லீம் முரண்பாடுகளை, வடக்குக்-கிழக்கு முரண்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலமும் தோற்கடித்து விட்டால்,தாயகம் நடைமுறையில் பலவீனமடைந்துவிடும். கிழக்கை வென்றெடுத்தால், வடக்கு மட்டும் தாயகமாக நின்று பிடிக்காது என்று ஜெயவர்த்தன கணக்குப்  போட்டார்.

இப்பொழுது தேசிய மக்கள் சக்தியானது அந்த வியூகத்தின் அடுத்த கட்டத்தைப்  பரிசோதிக்கின்றதா? வடக்கை வீழ்த்தினால், கிழக்கு தானாக விழுந்துவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஏற்கனவே ஒரு வழக்கின்மூலம் வடக்கையும் கிழக்கையும் சட்டரீதியாகப்  பிரித்தது ஜேவிபி என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். எனவே வடக்கு-கிழக்கு அதாவது தாயகத்தைத்  துண்டாடும் வியூகம் இதில் உண்டு. இந்த வியூகத்தை எதிர்கொள்ள வேண்டும். பிரஜா சக்திக்கு எதிராக வழக்குப்  போடுவதால் மட்டும் இந்த வியூகத்தைத்  தோற்கடித்துவிட முடியாது. பலமான தமிழ்த் தேசியப்  பதில் வியூகம் ஒன்று வேண்டும்.

https://www.nillanthan.com/8091/

பயங்கரவாதத்திலிருந்து  – அரசைப் பாதுகாப்பது: NPP தமிழ்மக்களுக்கு காட்டும் மாற்றம்? - நிலாந்தன்

3 days 4 hours ago

பயங்கரவாதத்திலிருந்து  – அரசைப் பாதுகாப்பது: NPP தமிழ்மக்களுக்கு காட்டும் மாற்றம்? - நிலாந்தன்

பயங்கரவாதத்திலிருந்து  – அரசைப் பாதுகாப்பது: NPP தமிழ்மக்களுக்கு காட்டும் மாற்றம்?

கடந்த செவ்வாய்க்கிழமை, யாழ்ப்பாணம்,தந்தை செல்வா கலையரங்கில், ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான யாழ்ப்பாண கற்கை நிலையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில், அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக ஒரு புதிய சட்டத்தை கொண்டு வர இருக்கும் பின்னணியில் அந்த சட்டமூலத்தின் வரைவை குறித்த ஒரு கலந்துரையாடலாக அது அமைந்திருந்தது.

சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான யாழ்ப்பாண கற்கை நிலையத்தின் பணிப்பாளர், குருபரன், ”பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும்” புதிய சட்ட வரைபை அதன் ஒவ்வொரு பகுதியாக விரிவாக எடுத்துக் கூறினார். அதன்பின் அது தொடர்பாக அங்கு வந்திருந்தவர்கள் கருத்து தெரிவித்தார்கள். அரசாங்கம் புதிய சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிக்கும் பின்னணியில், அது தொடர்பான குடிமக்கள் சமூகங்களின் கருத்தை கேட்டு தொகுத்து அனுப்புவதும் அக்கருத்தரங்கின் நோக்கங்களில் ஒன்று என்று கூறப்பட்டது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை அகற்ற வேண்டும் என்றுதான் தமிழ் மக்கள் பல தசாப்தங்களாக கூறி வருகிறார்கள்; போராடி வருகிறார்கள். அதற்கு பதிலாக ஒரு புதிய சட்டத்தை கொண்டு வருமாறு கேட்கவில்லை. இன்று இக்கட்டுரையானது புதிய சட்ட வரைபில் உள்ளடக்கப்பட்ட சட்ட ரீதியிலான ஏற்பாடுகளை ஆராயப்போவதில்லை. மாறாக, இக்கட்டுரையின் நோக்கம் என்னவென்றால், ஒரு புதிய சட்டம் ஏன் அரசாங்கத்துக்குத் தேவையாக இருக்கிறது? அதிலும் குறிப்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஏன் தேவையாக இருக்கிறது? என்பதைச் சற்று ஆழமாகப் பார்ப்பதுதான்.

சட்டம் என்பது தேவ சபையில் நிறைவேற்றப்படும் புனிதமான ஆவணம் அல்ல. அதை மனிதர்கள்தான் உருவாக்குகிறார்கள். யார் அந்த மனிதர்கள் என்றால்,ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தில் யார் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அவர்கள்தான். இதை இன்னும் நடைமுறை வார்த்தைகளில் சொன்னால், அந்த நாட்டை ஆட்சி செய்யும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஒரு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுகிறார்கள். எனவே அரசாங்கத்தின் கொள்கை எதுவோ அதுதான் சட்டமாக நிறைவேற்றப்படும். அரசு நிரந்தரமானது. அரசாங்கம் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை தெரிவு செய்யப்படுவது. இதில் அரசுக் கொள்கையை மீறி அரசாங்கம் போக முடியாது. எனவே அரசின் கொள்கை எதுவோ அதை அரசாங்கம் தன்னுடைய புதிய நிலைமைகளுக்கு ஏற்ப சட்டமாக நிறைவேற்றுகின்றது. அல்லது ஏற்கனவே இருக்கும் சட்டங்களைத் திருத்துகின்றது.

இலங்கைத் தீவின் அரசுக் கட்டமைப்பு எனப்படுவது சிங்கள பௌத்த உணர்வுகளை அதிகம் பாதுகாக்கும் ஒரு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு என்பது உலகம் முழுவதற்கும் தெரியும். அந்த சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் கொள்கைகள் எவையோ அவைதான் சட்டமாக்கப்படும். இந்த அடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டத்தின் பின்னால் உள்ள அரசாங்கத்தின் உளவியலை விளங்கிக் கொள்ள வேண்டும்.

பயங்கரவாத தடைச் சட்டம் கடந்த பல தசாப்தங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை நசுக்கும் அரச நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகத்தான் பயங்கரவாத தடைச் சட்டம் உருவாக்கப்பட்டது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்திரித்து அதனை ஓடுக்குவதற்கு உரிய ஏற்பாடுகள் அங்கே உண்டு. எனினும் பின்னர் அது சிங்கள,முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் பிரயோகிக்கப்பட்டது. ஜேவிபியின் இரண்டாவது ஆயுதப் போராட்டத்தின்போது, ஜனாதிபதியாக இருந்த ஜெயவர்த்தன, தமிழ் ஆயுதப் போராளிகளை “பயங்கரவாதிகள்”என்று அழைத்தார். ஆனால் ஜேவிபியினரை “நாசகார சக்திகள்”என்று அழைத்தார். வார்த்தைகளுக்குள்ளும் நுட்பமாக இன முரண்பாடு?

கடந்த முக்கால் நூற்றாண்டுக்கு மேலாக தமிழ் மக்கள் காலத்துக்கு காலம் வெவ்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வெவ்வேறு வடிவங்களில் போராடி வந்திருக்கிறார்கள். போராடி வருகிறார்கள். தொடக்கத்தில் கடந்த நூற்றாண்டில் தமிழ் மக்கள் சத்யாக்கிரக வழியில் போராடினார்கள். ஆனால் அப்போது இருந்த அரசாங்கம் அதனை அரச வன்முறைகளின் மூலம் தோற்கடித்தது. அறவழிப் போராட்டத்தை தமிழ் தலைவர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் முன்னெடுக்கவில்லை. ஆனால் மேற்படி தலைவர்களால் உருவேற்றப்பட்ட தமிழ் இளையவர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். அதுவும் பின்னர் 2009இல் தோற்கடிக்கப்பட்டது. இப்பொழுது கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்கள் வெவ்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீண்டும் அறவழியில் போராடி வருகிறார்கள்.

தமிழ் மக்கள் அறவழியில் போராடியபோது அதை சிங்கள பௌத்த அரச கட்டமைப்பு தன் போலீசார் மற்றும் படையினரின் மூலம் நசுக்கியது. அவசர காலச் சடடத்தைக் கையில் எடுத்து பின்னர் ஆயுதம் போராட்டம் தொடங்கிய பொழுது அதனை நசுக்குவதற்கு சட்டரீதியாக பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வந்தது. பயங்கரவாத தடை சட்டத்தைக் குறித்த விமர்சன பூர்வமான கட்டுரைகளை தொகுத்து “மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் (CHRD)” 2009ஆம் ஆண்டு ஒரு நூலை வெளியிட்டது. இந்நூலின் அறிமுக உரையில்,பேராசிரியர். ஜெயதேவா உயாங்கொட பின்வருமாறு கூறுகிறார்….

“இலங்கையின் காலனித்துவத்திற்குப் பிந்தைய அரசியல் வரலாறு ஒரு தனித்துவமான பரிமாணத்தைக் கொண்டுள்ளது. 1971 முதல் பெரும்பாலான ஆண்டுகளில் நாடு ஏதேனும் ஒரு வகையான விதிவிலக்குச் சட்டதின் கீழ் – அவசரகாலச் சட்டம் அல்லது பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ்- ஆளப்பட்டுள்ளது. 1971மார்ச்சில் அவசர நிலை அமலுக்கு வந்தது. அது 1976 வரை தொடர்ந்தது. ஒரு குறுகிய கால இடைவெளிக்குப் பிறகு, 1978 இல் அவசரநிலை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு PTA அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில்,இலங்கை மக்கள் அவசரகாலச் சட்டம் அல்லது PTA இல்லாமல், அவ்வப்போது, மிகக்குறுகிய காலத்திற்கு மட்டுமே சாதாரண சட்டத்தின் கீழ் வாழ வாய்ப்புக் கிடைத்தது, இவ்வாறு,சாதாரண சட்டம் விதிவிலக்காக இருந்து வருகிறது. இந்தக் கதையை சற்று நாடகத்தனமான மொழியில் மீண்டும் கூறினால், 1971 முதல். இலங்கையில் அவசரகாலச் சட்டம் ‘சாதாரண’ சட்டமாக இருந்துவருகிறது. மேலும் சாதாரண சட்டமானது,’அவசரகாலச் சட்டத்தின்’நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது”.

இது எதைக் காட்டுகிறது? சாதாரண சட்டங்களின் மூலம் இந்த நாட்டை ஆள முடியாத ஓர் அரசியல் சூழல் தொடர்ந்து நிலவிவருகிறது என்பதைத்தான். அசாதாரண சட்டங்களே சாதாரண சட்டங்களைப்போல தொடர்ச்சியாக பிரயோகிக்கப்படுவது, இந்த நாட்டின் சட்டச் சூழலை, ஜனநாயகச் சூழலை கேள்விக்கு உள்ளாக்குவது.

குறிப்பாக 2009இல் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு விட்டது என்று கூறிக்கொள்ளும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பானது, தொடர்ந்து எதற்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை வைத்திருக்க வேண்டும்? ஏனென்றால் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற ஒரு சட்டத்தை தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களின் தலைக்கு மேல் தொங்க விடுவதன் மூலம், அவர்களைத் தொடர்ந்தும் ஒரு கட்டத்துக்கு மேல் போராட விடாமல் தடுக்கலாம். தமிழ் மக்களின் அரசியல் எதிர்ப்பை பயங்கரவாதமாக சித்தரிக்கக் கூடிய சட்ட  வாய்ப்புகளை அது எப்பொழுதும் பேணும். எனவே இங்குள்ள அரசியல், இராணுவ நோக்கம் எதுவென்றால், தமிழ் மக்களை போராட முடியாத மக்களாகத்  தொடர்ந்து பேணுவதுதான்.

தமிழ் மக்களைப் போராடாமல் வைத்திருப்பதற்கு காலத்துக்கு காலம் பொருத்தமான சட்டங்களை அவர்கள் பயன்படுத்துவார்கள் என்பதற்கு இங்கு மற்றொரு உதாரணத்தை சுட்டிக்காட்ட வேண்டும். கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்ட காலகட்டத்தில், அரசாங்கத்திற்கு எதிராகப் போராடிய தமிழ்ச்  செயற்பாட்டாளர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டம் பயன்படுத்தப்பட்டது.

காலத்துக்கு காலம் அவர்களுக்கு தமிழ் மக்களை அச்சுறுத்த, போராட விடாமல் தடுக்க ஏதாவது ஒரு சட்டம் தேவை. பல தசாப்தங்களாக தொடர்ச்சியாக பேணப்பட்டு வரும் இந்த அரசியல் பாரம்பரியத்தில் அனுரவும் மாற்றங்களை செய்யத் தயார் இல்லை என்பதைதான் புதிய சட்ட வரைபு காட்டுகின்றது.

கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு முன்பு மாற்றத்தை வாக்களித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கமானது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விடயத்தில் அதாவது தமிழ் மக்களை ஒடுக்கும் சட்ட ஏற்பாடுகளின் விடயத்தில் திருப்பகரமான மாற்றம் எதையும் செய்யத் தயாரில்லை என்பதைத்தான் புதிய சட்ட வரைபு காட்டுகின்றது.

இத்தனைக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடித்தளமாக இருப்பது ஜேவிபி. அதுவும் இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டம் நடத்திய இயக்கம். இரண்டு தடவைகள் கொடூரமான விதங்களில் நசுக்கப்பட்ட ஓர் இயக்கம். 75 ஆயிரத்திற்கும் குறையாத அதன் தோழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். மிகக் கொடூரமான, மனித குலத்தை அவமானப்படுத்தும் சித்திரவதைகளின் மூலம் அவர்கள் விசாரிக்கப்பட்டு, கொல்லப்பட்டார்கள். எனவே பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற சட்டங்களின் ருசி எத்தகையது என்பது ஜேவிபிக்கு நன்கு விளங்கும்.

அதுமட்டுமல்ல,சில ஆண்டுகளுக்கு முன்பு அதாவது ஜேவிபி எதிர்க்கட்சியாக இருந்த காலகட்டத்தில், பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக தமிழரசு கட்சி முன்னெடுத்த போராட்டங்களில் ஜேவிபியும் பங்குபற்றியிருக்கிறது. அப்பொழுதெல்லாம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தியும் இருக்கிறார்கள். ஆனால் ஆளுங்கட்சியாக வந்ததும் அவர்கள் தங்களுடைய முன்னைய வாக்குறுதிகள் அனைத்தையுமே கைவிட்டு விட்டார்களா?

இந்த அரசாங்கம் அரகலய போராட்டத்தின் விளைவு. அந்தப் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புகள் அண்மையில் ஒன்று கூடி பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. ஆனால் அந்தப் போராட்டத்தின் கனிகளை தேர்தல் வெற்றியாக மாற்றிய தேசிய மக்கள் சக்தியானது, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றது.

மாற்றம் என்பது, ஜனாதிபதி அரைக்கால் சட்டையோடு யாழ்ப்பாணத்தின் தெரு ஒன்றில் உடற்பயிற்சி செய்வதோ, அல்லது தமிழ் மக்களோடு செல்பி எடுப்பதோ அல்ல. மாறாக தமிழ் மக்களை தொடர்ந்து அச்சுறுத்தலின் கீழ் வைத்திருக்கும் விடயங்களில் நிர்ணயகரமாக அரசியல் தீர்மானங்களை எடுப்பதுதான்.

https://athavannews.com/2026/1461419

"இலங்கை ராணுவ முகாமில் பாலியல் வன்கொடுமை" - பாதிக்கப்பட்ட பெண்ணும் சர்வதேச அமைப்புகளும் கூறுவது என்ன?

3 days 7 hours ago

"இலங்கை ராணுவ முகாமில் பாலியல் வன்கொடுமை" - பாதிக்கப்பட்ட பெண்ணும் சர்வதேச அமைப்புகளும் கூறுவது என்ன?

இலங்கை, பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம்,UNHR

கட்டுரை தகவல்

  • ஆர்.யசிஹரன்

  • பிபிசி தமிழுக்காக

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

(எச்சரிக்கை: இக்கட்டுரையில் தற்கொலை குறித்த விவரணைகள் உள்ளன)

"இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற ஆயுதமோதலின்போதும், அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் வெறுமனே சாதாரண குற்றங்களாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல. மாறாக, அவை வேண்டுமென்றே, திட்டமிட்டு பரந்துபட்ட ரீதியில் நிகழ்த்தப்பட்ட முறையாகக் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளின் ஓரங்கமாகும்" என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

ஆனால், ராணுவம் மீது சுமத்தப்படும் பாலியல் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்கின்றோம் என, ராணுவ ஊடகப்பேச்சாளர் வருண கமகே தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, ராணுவம் இத்தகைய குற்றங்களில் ஒருபோதும் ஈடுபடவில்லை என, இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் கூறுவது என்ன?

"இறுதிக்கட்ட போரின்போது ராணுவத்தில் சரணடைந்த பின்னரே பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன். ராணுவத்தினரால் நேரடியாக பாலியல் கொடுமைக்கு உள்ளாகிய நான் பின்னர் எனது சமூகத்தினாலும் ஓரங்கட்டப்பட்ட ஒருவராக நடத்தப்பட்ட போது அந்த வேதனையில் பல தடவைகள் தற்கொலை செய்துகொள்ள முயன்றேன் " என, இறுதிக்கட்ட போரின் பின்னர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான முன்னாள் போராளி ஒருவர் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் போராட்ட அமைப்புடன் இணைந்து மருத்துவ போராளியாக செயற்பட்ட பெண்ணொருவர் பிபிசி தமிழுக்கு வழங்கிய பேட்டியில் இந்த விடயங்களை பகிர்ந்துகொண்டார். அக்காலகட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இந்த வேதனையான சம்பவத்தால் பல ஆண்டுகள் நான் மீள முடியாத அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்" என்றார்.

ராணுவத்தினரால் நேரடியாக பாலியல் கொடுமைக்கு உள்ளானதாக குற்றச்சாட்டும் அவர், தமது சமூகத்தினாலும் ஓரங்கட்டப்பட்ட ஒருவராக நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

உயர்தரம் படிக்கும்போது வடக்கு கிழக்கில் அப்போது நிகழ்ந்த போர்க்கால சூழ்நிலைகள் காரணமாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மருத்துவ போராளியாக இணைந்துகொண்டதாக தெரிவித்தார். நேரடியாக போராட்ட களத்தில் இருக்காவிட்டாலும் போராளிகளுக்கு மருத்துவ உதவிகளை செய்து தன்னை ஒரு மருத்துவ போராளியாக மாற்றிக்கொண்டதாக கூறுகிறார் அவர். பின்னர் இறுதிக்கட்ட போர் முடிவில் ராணுவத்திடம் சரணடைந்தபோது பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்ததாக தெரிவித்த அவர், வாழ்நாளில் முகங்கொடுக்க முடியாத வேதனையான நாட்களை ராணுவ முகாமில் கடத்தியதாகவும் கூறினார்.

"புனர்வாழ்வின் பின்னர் வெளியில் வந்தபோதும் பல்வேறு இன்னல்களை சந்தித்தேன், பின்னர் உறவினரின் உதவியுடன் லண்டனுக்கு வந்த பின்னர் நீண்ட நாட்களாக இந்த மன வேதனையுடன் காலத்தை கடத்திய நிலையில், இப்போது எனக்கான வாழ்க்கையை வாழ ஆசைப்படுகின்றேன்" என கூறினார்.

"வடக்கு-கிழக்கில் திட்டமிட்டே பாலியல் வன்கொடுமைகள்" - ஐ.நா

ஐநா மனித உரிமைகள்

பட மூலாதாரம்,Getty Images

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற ஆயுதமோதலின்போதும், அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளது.

"அக்காலகட்டத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகள் வெறுமனே சாதாரண குற்றங்களாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல. மாறாக, அவை வேண்டுமென்றே, திட்டமிட்டு பரந்துபட்ட ரீதியில் நிகழ்த்தப்பட்ட முறையாகக் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளின் ஓரங்கமாகும். இந்த நடவடிக்கைகள் போர்க்குற்றங்கள் அல்லது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களாக அடையாளப்படுத்தப்படக்கூடியவையாகும்" என அதில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில், இவை அந்தந்த நபர்களின் ஊடாக தகவல்களைத் சேகரிப்பதற்கும், மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கும், தனிநபர்கள் மற்றும் சமூகங்களை ஒடுக்குவதற்கும், பரவலான அச்ச மற்றும் அவமான உணர்வை அந்த சமூகத்திடையே வேரூன்றச் செய்வதற்குமான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான வன்முறை சம்பவங்கள் கட்டமைப்பு ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், மோதலினால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் அதனூடாக வேண்டுமென்றே இலக்குவைக்கப்பட்டன எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

"இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான பதிவுகள் நீண்டகாலமாகப் பேணப்பட்டாலும், இலங்கை அரசாங்கங்கள் மோதலின் போதான பாலியல் வன்முறைகள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு, வழக்குத் தாக்கல் செய்வதற்குத் தவறியிருப்பதுடன், வன்முறைகளின் தீவிரத்தன்மையைக் குறைத்துக்கூறி அல்லது மறுத்து வந்திருக்கின்றன." எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச சமூகம் இதுபற்றி தீவிர கரிசனையை வெளிப்படுத்தி, நம்பத்தகுந்த பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி வந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் நீதியை அணுகுவதற்கான வாய்ப்பு தொடர்ந்து மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது எனவும் அவ்வறிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், "மோதலின் போதான பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மிக மோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டனைகளில் இருந்து விடுபடும் போக்கு இந்த ஆட்சியிலும் தொடர்வதுடன், இந்த விவகாரங்களில் இன்னமும் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் எட்டப்படவில்லை. இந்த மீறல்களிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களில் பெரும் எண்ணிக்கையானோருக்கு நீதி மறுக்கப்பட்டிருப்பதுடன், அத்தகைய மீறல்களுக்கு இடமளித்த கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் இன்னமும் தொடர்கின்றன" எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் கரிசனை வெளியிட்டுள்ளது.

மிக மோசமான பாலியல் வன்முறை சம்பவங்கள் தற்போது வரை கவனத்தில்கொள்ளப்படாமலும், பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாமலும் இருப்பதானது பாதிக்கப்பட்ட சமூகங்கள் மத்தியில் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், அவர்களைப் பெரிதும் நலிவடையச் செய்திருக்கிறது என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

போர்க்கால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அதன் பின்னர் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் தவறியிருப்பது பாலியல் வன்முறைகளிலிருந்து நலிவுற்ற சமூகப்பிரிவினரைப் பாதுகாப்பதில் அரசுகள் அடைந்திருக்கும் தோல்வியையும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்வதையுமே பிரதிபலிக்கின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

"அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்காக, 'கடந்த காலங்களில் அரச படையினர் மற்றும் ஏனைய தரப்பினரால் பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன' என்ற விடயத்தை அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு, பொறுப்புக்கூறலை இலக்காகக்கொண்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

மோதல்கால பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டோர் முகங்கொடுத்துவரும் துன்பத்தைப் புரிந்துகொண்டு, அவர்களை மேலும் மன உளைச்சலுக்குள் தள்ளுவதைத் தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் வாழும் இடங்களில் நிறுவப்பட்டுள்ள யுத்த வெற்றிச்சின்னங்களை அகற்ற வேண்டும்" என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

"குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரம்"

பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

இது குறித்து கருத்து தெரிவித்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் பேச்சாளர் ஜெரெமி லோரன்ஸ், "யுத்த காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல், அந்த உண்மையை அங்கீகரித்தல் மற்றும் இழப்பீடு வழங்கல் என்பன உறுதி செய்யப்படாமையானது, இந்த மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்தை உருவாக்கியுள்ளது" என குறிப்பிட்டிருந்தார்.

2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டு வரப்பட்ட மோதலினால் பாதிக்கப்பட்ட பலர் தற்போதும் நாற்பட்ட உடலியல் உபாதைகள், உளவியல் தாக்கங்கள், தற்கொலை எண்ணங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், பல்வேறு சர்வதேச சட்டங்கள் மற்றும் பிரகடனங்களின்படி மோதல்களின் போதான பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கும், அவை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும், குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கும், பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டை வழங்குவதற்குமான சட்டக்கடப்பாடு இலங்கைக்கு இருக்கிறது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

"தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட அநீதி"

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கை, மோதல் கால பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கான நீதியையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு விடுக்கும் தெளிவான அழைப்பாக அமைய வேண்டும் என, சர்வதேச மன்னிப்புச்சபையும் வலியுறுத்தியுள்ளது.

மோதலின்போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பதற்கான தூண்டுதலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அறிக்கை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார், சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் ஸ்மிரிதி சிங்.

"தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் வேண்டுமென்றே, பரந்துபட்டளவில், திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவை என்ற யாவரும் அறிந்த உண்மை இவ்வறிக்கையில் மீளுறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு இவற்றில் சில சம்பவங்களை போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களாக வகைப்படுத்த முடியும்" எனவும் ஸ்மிரிதி சிங் தெரிவித்துள்ளார்.

"நம்பகமான சர்வதேச பொறுப்புக்கூறல் அவசியம்"

பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

இந்நிலையில், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் (ITJP) வெளியிட்டுள்ள அறிக்கையிலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் போர்க்கால சூழலில் பாதிக்கப்பட்ட பின்னர் அகதிகளாக லண்டனில் வசிக்கும் தமிழர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுக்கு அமைய சில தகவல்களை வெளியிட்டுள்ளது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிர்தப்பிய தமிழர்களுடன் இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட கலந்தாய்வுகளின் முடிவுகளே இந்த அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை, பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு ஆய்வு செய்கிறது. அத்துடன் இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களில் பலர், போர் முடிந்த பிறகு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இலங்கையில் வாழ்ந்தவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவர்கள் தங்களுக்குத் தேவையான ஆதரவுகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும், முழுமையான உளவியல் மற்றும் மருத்துவ ஆதரவு, பாதுகாப்பான குடியிருப்பு, சமூகத்தில் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள், சட்ட ரீதியான தீர்வுகள், குற்றவாளிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பது போன்றவை இதில் அடங்குவதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது.

இலங்கையில் இருந்தபோதும் அல்லது வெளிநாட்டில் அகதியாக வாழ்ந்தபோதும், பயம், அவமானம், தனிமை ஆகியவை தங்கள் வாழ்க்கையை ஆட்கொண்டதாக சாட்சியமளித்த நபர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், பலர் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப போராடி வருகின்றதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வன்முறைகள் தமிழர்களின் தனித்துவம், கலாசாரம், மனநிலை ஆகியவற்றை அழிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை, பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம்,SALP

படக்குறிப்பு,பாதிக்கப்பட்ட ஒருவர் நெருக்கடிக்கு முன்பாகவும், நெருக்கடி காலகட்டம் மற்றும் அதற்கு பின்பு தன் வாழ்க்கை எப்படி மாறியுள்ளது என்பதை வரைந்துள்ளார்.

தன் உடலில் உள்ள காயங்களைப் பற்றி குழந்தை கேட்டபோது என்ன பதில் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை என ஒரு தந்தை வேதனையுடன் பகிர்ந்தார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், "இந்த கலந்தாய்வில் கலந்துகொண்ட பிறகு, பாலியல் வன்முறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்தேன். இது மிக முக்கியமான உண்மை," என ஒருவர் கூறியுள்ளார் என பல சாட்சியங்களை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் அடிக்கோடிட்டு காட்டியுள்ளது.

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பகமான சர்வதேச பொறுப்புக்கூறல் அமைப்புகள், முழுமையான இழப்பீட்டு திட்டங்கள், நீடித்த மனநல ஆதரவு ஆகியவை அவசியம் என வலியுறுத்தியுள்ளது.

"தொடர் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகின்றனர்"

அம்பிகா சற்குணநாதன்

பட மூலாதாரம்,AMBIKA

படக்குறிப்பு,அம்பிகா சற்குணநாதன்

இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதன் தெரிவிக்கையில், "இலங்கையில் யுத்த காலத்தில் பாலியல் வன்முறைகள் இடம்பெற்றமையும், அம்மீறல்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கை ஊடாக மீளுறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுளார்.

மேலும், " மீறல்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாமல் இருப்பது ஒருபுறமிருக்க குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. இதனை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது?" எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, செம்மணி மனிதப்புதைகுழி பற்றியும், அதற்கு அப்பாலும் பல உண்மைகளை வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ள போதிலும், அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு, உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு அரசாங்கம் இதுவரையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று தெரிவித்தார் அம்பிகா.

"யுத்த காலத்தில் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளானவர்கள் அதன் நீட்சியாக தற்போதுவரை பல்வேறு உளவியல் தாக்கங்களுக்கு முகங்கொடுத்துவருவதாகவும், அம்மீறல்கள் பற்றி முறைப்பாடு அளிப்பவர்கள் காவல்துறை மற்றும் ராணுவத்தினரின் தொடர் கண்காணிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு இலக்காவதாகவும்" அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் 'இப்புதிய அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகிறது என்பது பற்றி தெளிவுபடுத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் அரசாங்கம் உண்மையாகவே ஒரு நியாயமான தன்முனைப்பைக் கொண்டிருக்குமாயின், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் அதிகாரிகள் இலங்கைக்கு வருவதற்கும், இங்கு அவர்களது பணியை முன்னெடுப்பதற்கும் இடமளிக்கப்பட வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

"இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்னிலையில் பாரப்படுத்தப்போகிறோமா?"

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி

படக்குறிப்பு,வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி

'இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மிக மோசமான அட்டூழியங்கள் இடம்பெற்றதாக நாம் கூறியபோது, அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை எனப் பலரும் மறுத்துவந்தார்கள். ஆனால், இப்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையின் மூலம் நாம் கூறிய அனைத்து விடயங்களும் உண்மை என்பது உறுதியாகின்றது,' என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் பல்வேறு தரப்பினரால் மறுக்கப்பட்டுவந்த பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மீறல்கள் உண்மையிலேயே நிகழ்ந்திருக்கின்றன என்ற உண்மை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கை மூலம் நிரூபணமாகியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியதுடன், இந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஆராய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதேவேளை, "இந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு அடுத்தகட்டமாக எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போகிறோம்? இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்தப் போகிறோமா? அப்படி என்றால் அதனை எவ்வாறு செய்வது என்பன தொடர்பில் ஆராய வேண்டும்" எனவும் லீலாதேவி குறிப்பிட்டார்.

'ராணுவம் ஒருபோதும் குற்றங்களில் ஈடுபடவில்லை' - ஜெனரல் சவேந்திர சில்வா

ஜெனரல் சவேந்திர சில்வா

படக்குறிப்பு,ஜெனரல் சவேந்திர சில்வா

தமிழீழ விடுதலை புலிகளுடனான யுத்தத்தின் போது, 53ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியாக செயற்பட்டிருந்தவரும் முன்னாள் ராணுவத் தளபதியும், பின்னர் பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக கடமையாற்றிய ஜெனரல் சவேந்திர சில்வா இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

"இலங்கையில் மிக நீண்டகாலமாக நிலவிய யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததில் இருந்தே இலங்கை அரசாங்கம் மீதும், ராணுவம் மீதும் தொடர்ச்சியாக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவது புதிதல்ல. இலங்கை ராணுவம் மீதான போர் குற்றச்சாட்டுகள் இன்னமும் நீங்கவில்லை என தெரிவித்த அவர், ராணுவம் ஒருபோதும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என்றார்.

புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்காகவும், வேறு சில செயற்பாடுகளுக்காகவும் தொடர்ச்சியாக முன்வைக்கும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை கண்டித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். அதேபோல், ராணுவம் மீது களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக இவ்வாறான பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதை தான் முழுமையாக நிராகரிக்கின்றேன் என்றும் எப்போதும் தான் ராணுவத்தின் பக்கம் நின்று குரல் கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

"குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்கின்றோம்" - ராணுவ ஊடகப்பேச்சாளர்

ராணுவ ஊடகப்பேச்சாளர் வருண கமகே

படக்குறிப்பு,ராணுவ ஊடகப்பேச்சாளர் வருண கமகே

ராணுவம் மீது சுமத்தப்படும் பாலியல் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்கின்றோம் என, ராணுவ ஊடகப்பேச்சாளர் வருண கமகே தெரிவித்துள்ளார்.

"இதுவொரு பாரதூரமான குற்றச்சாட்டாகும், ஆனால் எந்தவித அடிப்படையும் இல்லாத முழுக்க முழுக்க போலியாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றே நாம் கூறுவோம். முதலில் இந்த குற்றச்சாட்டை இலங்கை ராணுவம் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றது" என்றார் ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே.

இலங்கையில் இடம்பெற்ற யுத்த காலகட்டத்தில் ராணுவத்தினால் திட்டமிடப்பட்டு இவ்வாறான பாலியல் கொடுமைகள் இடம்பெற்றதாக எந்தவித வழக்கு விசாரணைகளும் இதுவரை இடம்பெறவில்லை என்றார்.

"சர்வதேச நாடுகளில் உள்ள புலம்பெயர் அமைப்புகளின் நோக்கங்களுக்காக தொடர்ச்சியாக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன, அவற்றை நாம் கருத்தில் கொள்ளப்போவதில்லை, அதேநேரம் இலங்கைக்குள் தற்போது அமைதியான சூழல் காணப்படுகின்ற நிலையில் அதனை குழப்பவும் நாம் இடமளிக்க மாட்டோம்" என தெரிவித்த ராணுவ பேச்சாளர் வருண கமகே இவ்வாறான திட்டமிடப்பட்ட செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார்.

முக்கிய குறிப்பு

தற்கொலை செய்துகொள்ளும் மனநிலை உருவாகுமேயானால், உடனடியாக தொடர்புகொள்ளும் தொலைபேசி இலக்கங்கள் இலங்கையில் தற்போதும் நடைமுறையில் உள்ளன.

707 308 308, 1333, 1926 போன்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்வதன் ஊடாக, தமது மனநிலையை சரி செய்துகொள்ள முடியும்.

இந்த இலக்கங்களை தொடர்புகொள்வதன் ஊடாக தற்கொலைகளை தடுக்க முயற்சி செய்ய முடியும்.

இந்தியாவில் உதவியை நாடுபவர்கள்

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5y5731rdpeo

புதிய பயங்கரவாத தடைச் சட்டம்.

5 days 5 hours ago

பயங்கரவாத சட்டத்தை நீக்க வேண்டுமென போராடிய ஜேவிபி

இப்போது இருப்பதை விட கூடுதலான இறுக்கமான சட்டங்களுடன்

புதிய பயங்கரவாத சட்டம் நடைமுறைக்கு வருகிறது.

குற்றத்தை கண்டும் முறையிடாமல் போவோருக்கு 7 வருடம்.

ஜே.வி.பியின் அரசியல் வித்தை

6 days 17 hours ago

ஜே.வி.பியின் அரசியல் வித்தை

லக்ஸ்மன்

அரசியல் தலைவர்கள், கட்சிகள் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்வர். சில வேளைகளில் தாமாகவும் சந்தர்ப்பங்கள் உருவாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்துவதில் சாதக பாதகங்கள் இருந்து விடுகின்றன. ஈஸ்ட்ர் குண்டுத் தாக்குதல்கள், விவசாயத்தில் இயற்கை உரப் பாவனை போன்றவைகள்  உருவாக்கிக் கொண்டவைகள். கொவிட் பெருந்தொற்று உலகளவில் தானாக ஏற்பட்டது. அவற்றினால் இலங்கை அரசியலில் ஏற்பட்ட சாதக பாதகங்களை அனைவரும் அறிவோம். ஆனால் தற்போது கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளி அனர்த்தம்கூட சாதக பாதகங்களையே கொடுத்திருக்கிறது.

ஒருவகையில் சொன்னால்,  அரசியல் என்பது மக்களை ஏமாற்றும் வித்தையே. இதனை அரசியல்வாதிகள்  ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக விளக்கத்துக்குட்படுத்துவர்.  தமிழர்கள், உழவர்கள் வாழும் நாடுகளில் கடந்த வாரம் தைப்பொங்கல் வாரம். இலங்கையைப் பொறுத்தவரையில் அந்த வாரம் பெரும் களேபரமான வாரமாகத்தான் கழிந்திருக்கிறது.

கடந்த வருடத்தின் இறுதியில் தித்வா சூறாவளியால் நாடு அல்லோல கல்லோலத்துக்குட்பட்டது. இன்னமும் மலையகத்தின் பல பகுதிகளில் சரியான அடிப்படைவசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. மக்களுக்கு பெரும் நெருக்கடிகள் காணப்படுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து ஆராய வருகை தரவுள்ளனர். உலகின் பல நாடுகளின் உதவிகள் இன்னமும் சரியாக வந்து சேரவில்லை. இவ்வாறிருக்கையில் அதற்குள் ஒரு அரசியலைச் செய்து கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் இலங்கையில் நடந்தேறியிருக்கின்றன. இதனை அரசியல் தெரிந்த, கலாசாரம் தெரிந்த, இலங்கை அரசாங்கத்தின் சம்பிரதாயம், வழமையான பாரம்பரியம் தெரிந்த, யாருமே மறுக்கமாட்டார்கள்.

தித்வா சூறாவளியினால் நாடு பட்ட துயரத்தின் வலியை வெளிப்படுத்தும் வகையில் நாட்டிலுள்ள கிறிஸ்தவர்கள் தங்களது கிறிஸ்து பிறப்பு, நத்தார் ஒளி விழாக்களைக் கோலாகலமாக நடத்தவில்லை. புதுவருடப் பிறப்பினை களியாட்டமாகக் கொண்டாடவில்லை. வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கொண்டாட்டங்களுக்கு உள்ளூராட்சி சபைகள் கூட அனுமதிகளை மறுத்திருந்தன. அதனால் உள்ளூராட்சி மன்றங்களின்  முதல்வர்கள், தவிசாளர்கள், உறுப்பினர்கள் என  அரசியல்வாதிகள் எதிர்ப்புகளைச் சம்பாதித்திருந்தனர். ஆனால், நாட்டில் தலைவர் தைப் பொங்கல் விழாவை தமக்கான, மக்கள் விடுதலை முன்னணிக்கான(ஜே.வி.பி.) தேசிய மக்கள் சக்திக்கான அரசியல் நடத்துவதற்காக வடக்கு மாகாணத்தில் கோலாகலமாக ஏற்பாடு செய்திருந்தார். (இது பொதுவான கருத்து)

புத்தசாசன காலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக தேசிய தைப் பொங்கல் விழா பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற ஏற்பாடாகியிருந்த நிலையில், வட மாகாண தைப் பொங்கல் விழாவில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டிருக்கிறார். இது ஒரு தற்செயலான நிகழ்வல்ல. தேசிய பொங்கல் விழாவில் பங்குபெறாமல் ஜனாதிபதி ஏன் வடக்கு சென்றார் என்பதில்தான் அரசியல் இருக்கிறது. ஆனால், வடக்கு விஜயத்திற்குரிய  திட்டமிடல்கள் ஏற்கெனவே முடிந்திருக்கின்றன. வடமாகாணத் தைப் பொங்கல் விழாவுக்கு மறுநாள் முழு நாடுமே ஒன்றாகத் தேசிய வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார். போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையானது, அரச அதிகாரிகளாலும், பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினராலும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டே வந்தது. ஆனால், தற்போது சற்று அதிகமாக மேற்கொள்ளப்படுவதையே இந்த தேசிய வேலைத் திட்டமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காண்பிக்க முயற்சிக்கிறது என்கிற விமர்சனங்கள் உருவாகிவருகின்றது. அதே நேரத்தில்,  நாட்டில் இருக்கின்ற போதைப்பொருள் பிரச்சினைகளைத் தவிர, வேறு விடயங்கள் இல்லை போலும் என்ற மாயை ஒன்றும் உருவாக்கப்படுவதாகவும் உணரமுடிகிறது. இந்த மாயையானது மக்களுக்கு இருக்கின்ற அடிப்படையான பிரச்சினைகளை மறைத்து மேலோட்டமாக மக்களை நகர்த்தி தங்களது அரசியலை நிலை நிறுத்திக்கொள்ள ஜே.வி.பி. முனைந்து வருவது தெரிகிறது.

மற்றொன்று வறுமை ஒழிப்பு என்ற போர்வையில் பிரஜா சக்தி என்ற ஒரு திட்டத்தினை ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்தப் பிரஜா சக்தி செயற்பாடுகளுக்காக தமது கட்சியின் நேரடி உறுப்பினர்கள் மற்றும் விசுவாசிகள் நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களின்  வட்டாரங்களிலும் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற இந்த நடவடிக்கையானது, இவ்வருடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள  மாகாண சபைத் தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்கள் இலக்காக் காணப்படுகின்றன. மற்றைய கட்சிகளைப் போலல்லாமல் கட்சியின் செயலாளர் அரசியலை மாத்திரம் மேற்கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள ஜே.வி.பி. நீண்டகாலமாக மேற்கொண்டுவந்த தீவிர அரசியலை அரச அதிகாரத்துடன் தற்போது மேற்கொள்கின்றது என்றே சொல்லமுடிவதாக அரசியல்வாதிகள் கருத்துத் வெளியிடத் தொடங்கியிருக்கின்றனர்.

தங்களது கட்சியை   வளர்ப்பதை நோக்காகக் கொண்டு ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டுள்ள  பிரஜா சக்தியானது  நாட்டின் பிரதேச செயலகங்களின் கீழுள்ள கிராம சேவகர்களே  மேற்கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்டிருந்த  கிராமத்திற்குத் தேவைகளான வீடு, காணி, உணவுத் தேவை, வறுமை, வாழ்வாதாரம் போன்ற விடயங்கள் இனிவரும் காலங்களில்  பிரஜா சக்தி மேற்கொள்ளும். இது மிகவும் கட்டமைக்கப்பட்ட அரசியல் என்பது விமர்சனமாக இருக்கிறது. அரச கட்டமைப்புக்கு நிகரான இன்னுமொரு கட்டமைப்பாக பிரஜா சக்தியை உருவாக்கி அரசாங்க கட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் செயல்பாடாகவும் சொல்லப்படுகிறது. இந்த வகையில்தான் பிரஜா சக்தியை வடக்கு - கிழக்கில்  அனுமதிக்க முடியாது என்கிற கோசம் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. அந்தவகையில்தான் இலங்கை தமிழரசுக் கட்சி பிரஜா சக்திக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ள சந்தர்ப்பம் உருவாகியிருக்கிறது எனலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சுனாமி ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கைச் சீர் செய்வதற்காக  விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும்  முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகாவுக்குமிடையில்  சுனாமி கட்டமைப்பு உருவாக்கம் தொடர்பில்  பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற வேளையில்,  ஜே.வி.பியினர்  ஒப்பந்த உருவாக்கத்திற்கு எதிராக  உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இதன்மூலம் சுனாமி கட்டமைப்பு உருவாக்கத்தினை தடுத்திருந்தனர். தடை செய்யப்பட்ட அமைப்பாக விடுதலைப் புலிகளை வடக்கு கிழக்கில் ஒரு அங்கீகாரத்துக்கான வாய்ப்பை வழங்குவதற்கு எதிராக இருந்த ஜே.வி.பி. தற்போது வடக்கு மக்களிடம் தமது அரசியலைச் செய்ய முனைவது அவர்களது அரசியலுக்காக என்பதனைக்கூட புரிந்து கொள்ளமுடியாத நிலை காணப்படுவதானது தமிழ் மக்களின் அரசியல் வறட்சியையே காட்டுகிறது.

இந்த இடத்தில்தான், 75 வருடங்களாக ஆயுத ரீதியிலும், அகிம்சை ரீதியிலும் போராடிய தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் புதைத்துவிட்டு நாட்டையே கைப்பற்றிக் கொள்வதற்காக  ஆயுத ரீதியாக போராடிய ஜே.வி.பியினரின் ஏமாற்று அரசியலில் வீழ்ந்து ஒன்றுமில்லாதவர்களாக, நிலைப்பாடுகளை மறந்தவர்களாக, சுயநிர்ணய உரிமைக்  கோரிக்கையைக் கைவிட்டவர்களாகப் புதைந்து போன பின்னர் கவலையை மாத்திரம் மிகுதியாகப் பாதுகாக்கப்போகிறோமா என்பதே தமிழர்களின் கேள்வியாக இருக்கிறது.

ஆனால், ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு கட்சியினரும் தங்களுக்காக தங்களது எதிர்கால அதிகாரத்துக்காக அரசியலைச் செய்வதொன்றும் புதிதல்ல என்ற வகையில்  போதைப் பொருள் தடுப்பு என்றவகையில் நடைபெறும் முழு நாடும் ஒன்றாகத் தேசிய வேலைத்திட்டம், திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்படும் பிரஜா சக்தி வேலைத்திட்டம் வரவுள்ள இன்னும் பல வேலைத்திட்டங்களும் கண்டும் காணாமல் விடப்பட வேண்டியவைகளே.

எவ்வாறானாலும், மக்களுக்காகக் கடந்த காலங்களில் சரியான அரசியலைச் செய்ய மறந்தவர்கள் தற்காலத்தில் கவலைகொள்வதும் எதிர்ப்பு வெளியிடுவதும் வழக்கு தாக்கல் செய்வதும் இயலாதவர்களின் செயற்பாடு என்ற மக்களின் எதிர்வினையால் ஜே.வி.பிக்கே சாதகமாக மாறிப்போகும் என்பதே வெளிப்படை. அந்தவகையில், எல்லோரும் சொல்லும் மக்களை ஏமாற்றும் வித்தையான அரசியலைக் கவனமாக செய்யும் ஜே.வி.பியைப் பாராட்டத்தான் வேண்டும்.

ஜே.வி.பியின் அரசியல் வித்தை தொடரட்டும். அதில் சிக்கும் அரசியல் கட்சிகளின் பாடுகளை நாம் பார்க்கலாம்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜே-வி-பியின்-அரசியல்-வித்தை/91-371359

"வணக்க தலங்களில் மோதல்": பௌத்த விகாரைகள், தமிழர்கள் பற்றி இலங்கை ஜனாதிபதி கூறியது என்ன?

1 week ago

"வணக்க தலங்களில் மோதல்": பௌத்த விகாரைகள், தமிழர்கள் பற்றி இலங்கை ஜனாதிபதி கூறியது என்ன?

இலங்கை போராட்டம்

பட மூலாதாரம்,PATHMANATHAN SARUJAN

படக்குறிப்பு,தையிட்டி பௌத்த விகாரைக்காக காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறி நடந்த போராட்டம்

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • 20 ஜனவரி 2026

இலங்கையின் பௌத்த விகாரைகள் முன்பாக நடைபெறும் போராட்டங்கள் மற்றும் இனவாதம் ஆகியவற்றைக் குறிப்பிடும் பொருளில் பேசியுள்ளார், அந்நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க. ஆனால் இவரது கருத்து தெளிவற்றதாக இருப்பதாக தமிழர்களின் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்காக போராட்டம் நடத்துவோர் கூறுகின்றனர்.

மற்ற விகாரைகளைக் கடந்து யாழ்ப்பாணத்திலுள்ள பௌத்த விகாரைகளுக்கு மக்கள் செல்வது, "வழிபாடுகளை மேற்கொள்வதற்காக அல்ல" எனவும், மாறாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடு எனவும் நாட்டின் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.

''அங்காங்கே இனவாத செயற்பாடுகள் சிறு சிறு அளவில் காணப்படுவதை நான் அறிவேன். வணக்க தலத்தை மையமாகக் கொண்டு மோதல்கள் இடம்பெறுகின்றன. '' என்று ஜனாதிபதி பேசியுள்ளார்.

அத்தோடு ''ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் விகாரையை சூழ்ந்து இருக்கின்றார்கள். அது காணிக்காக அல்ல. இனவாதத்திற்காகவே சூழ்கின்றார்கள். மீண்டும் இனவாதத்தை தலைதூக்க முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இனவாத செயற்பாடுகள் தலைதூக்குவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.'' என்றும் திஸாநாயக்க குறிப்பிடுகின்றார்.

பௌத்த விகாரைகளை ஸ்தாபிப்பதற்கு எதிராக போராட்டங்கள்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் பௌத்த விகாரைகளை ஸ்தாபிப்பதற்கு எதிராக அந்த பகுதி மக்கள் பல வருட காலமாக எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பௌத்தர்களின் புனித தினமாக அனுஷ்டிக்கப்படும் பௌர்ணமி தினங்களில் யாழ்ப்பாணம் தையிட்டி பௌத்த விகாரையில் விசேட வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் தமிழர்கள் தமது காணி உரிமையை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி தையிட்டி விகாரை வளாகத்தில் போராட்டங்களை முன்னெடுத்து வருவதை கடந்த சில வருடங்களாகவே காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்த விகாரை அமைந்துள்ள காணி பொதுமக்களுக்கு சொந்தமானது என போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், மாறி மாறி வந்த அரசாங்கங்கள் இதுவரை இறுதியாக தீர்மானத்தை எடுக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பில் மாவட்ட ரீதியிலும், மத்திய அரசாங்கத்தின் மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், அது தொடர்பில் இறுதி தீர்மானம் இதுவரை எட்டப்படவில்லை.

இலங்கை, பௌத்தம்

படக்குறிப்பு,குருந்தூர்மலை முழுமையாக பௌத்தர்களுக்கு சொந்தமான இடம் என கோரி கடந்த காலங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பேசுகையில் முன்வைத்த கருத்துக்கள் தமது பிரச்னையை அடிப்படையாகக் கொண்டே முன்வைத்தார் என யாழ்ப்பாணம் - தையிட்டி காணி பிரச்னையை எதிர்நோக்கியுள்ள மக்கள் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி தையிட்டி விகாரை பிரச்னையை அடிப்படையாகக் கொண்டே கருத்து வெளியிட்ட போதிலும், அதில் போதிய தெளிவின்மை காணப்படுகின்றது என தையிட்டி காணி பிரச்னையை முன்னிறுத்தி வரும் பத்மநாதன் சாருஜன் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

பௌர்ணமி தினங்களில் தாமே போராட்டங்களை நடத்தி வருவதாகவும், அதனை அடிப்படையாக் கொண்டே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

''குறிப்பாக அவர் நேற்றைய தினம் பேசிய விடயம் தையிட்டியை பற்றி தான். ஏனென்றால், போயாவிற்கு (பௌர்ணமி தினம்) போராட்டம் செய்யும் இடம் தையிட்டி தான். போயாவிற்கு ஆர்ப்பாட்டம் செய்வதை பிழையாக நினைக்கக்கூடாது. போயாவிற்கு அங்கு வரும் மக்களை தெளிவுப்படுத்தி அனுப்புவதற்காக தான் போயா தினத்தில் போராட்டங்களை செய்கின்றோம். நாங்கள் குழப்பத்திற்கு போகவில்லை. எங்களுடைய உரிமைகளை எங்களுடைய ஆதங்கங்களை வெளியில் கொண்டு வருவதற்காகவே அந்த போராட்டங்கள் தொடங்கப்பட்டது,' என அவர் குறிப்பிடுகின்றார்.

''ஜனாதிபதி, தென் பகுதியிலிருந்து பல பௌத்த ஆலயங்களைத் தாண்டி இங்கு வந்து வழிபடுவது இனவாதம் என்று சொல்கின்றாரா?. போயா தினங்களில்; போராடுவது பிழை என்று சொல்கின்றாரா? என்று எங்களுக்கு தெரியவில்லை." என்கிறார்.

"'போராடுபவர்களின் காணிகள் அந்த இடத்தில் இருக்கின்றதா என்று புலனாய்வு துறையிடம் சொல்லி விசாரணை செய்ய வேண்டும்' என்றும் ஜனாதிபதி கூறியிருக்கும் நிலையில், இது மக்களுடைய காணி என்பதை எங்களுடைய அரச அலுவலகங்களில் உறுதிப்படுத்தியுள்ளோம்." என பத்மநாதன் குறிப்பிடுகின்றார்.

தையிட்டி பௌத்த விகாரை, இலங்கை குருந்தூர் மலை

படக்குறிப்பு,குருந்தூர் மலை

இந்த காணி பிரச்னை நிலவும் பகுதியில் பௌத்த பிக்கு ஒருவரின் காணி காணப்படுகின்ற போதிலும், அதையும் தாண்டி மக்களின் காணிகளை ஆக்கிரமித்தே இந்த விகாரை விஸ்தரிக்கப்பட்டு வருவதாக பத்மநாதன் கூறுகின்றார்.

''அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளோம். நீதி அமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சு ஆகியன தலையீடு செய்திருந்தன. அவர்களின் குழுக்கள் இது பொது மக்களின் காணி என உறுதிப்படுத்தியிருந்தன.'' என அவர் தெரிவிக்கின்றார்.

இந்த காணி பிரச்னைக்கு இறுதி தீர்மானம் கிடைக்கப் பெறும் வரை பௌர்ணமி தினங்களில் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என காணி உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தையிட்டி பௌத்த விகாரை, இலங்கை

பட மூலாதாரம்,KOGULAN

படக்குறிப்பு,வெடுக்குநாறி மலையில் சைவ அடையாளங்கள் காணப்பட்ட பகுதியில் பௌத்த சின்னங்கள் நிறுவ முயற்சி மேற்கொள்ளப்பட்டது

சமூக செயற்பாட்டார்களின் பார்வை?

வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்புக்களில் ஈடுபடுவோரின் பின்னணியில் அரசாங்கத்தின் அனுமதி இருக்கின்றது என சமூக செயற்பாட்டாளர் மாணிக்கம் ஜெகன் தெரிவிக்கின்றார்.

''ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட விகாராதிபதியை தான் முன்வரிசையில் அமர்த்தி அழகு பார்த்தீர்கள். தமது இடம் பறி போகின்றது. இது நாங்கள் வாழ்ந்த இடம் என்று போராடிக் கொண்டிருக்கின்ற எந்தவொரு குடும்பத்தையாவது ஜனாதிபதி இம்முறை சந்தித்தாரா?" என மாணிக்கம் ஜெகன் கேள்வி எழுப்புகிறார்.

"நீங்கள் ஆக்கிரமிக்கும் ஆட்கள், நாங்கள் பாதிக்கப்படும் ஆட்கள். கடந்த கால ஆட்சியாளர்கள் செய்த அதேவேலையை தான் இந்த அரசாங்கமும் செய்து வருகின்றது.'' எனவும் ஜெகன் கூறகிறார்.

ஜனாதிபதியின் பேச்சை பத்திரிகையாளர் எவ்வாறு பார்க்கின்றார்?

வடக்கு, கிழக்கில் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதே தவிர, பௌத்தத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என மூத்த பத்திரிகையாளர் என்.வித்தியாதரன் தெரிவிக்கின்றார்.

''தமிழ் இந்துக்கள் ஏன் பௌத்த அடையாளங்களை எதிர்க்கின்றார்கள் என்ற ஒரு கேள்வி வருகின்றது, போராட்டங்கள் ஆக்கிரமிப்பின் அடையாளமாக செய்வது தான். யாழ்ப்பாணத்தில் நாகவிகாரை இருக்கின்றது, நாகவிகாரை புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது வேறு கோவிலாக கட்டினார்களா?'' என வித்தியாதரன் கேள்வி எழுப்புகிறார்.

''இது பௌத்தத்திற்கு எதிராக எதிர்ப்பு அல்ல. ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்ப்பு. பௌத்தத்தை எதிர்க்க போவதில்லை. ஆனால் எங்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு குறியீடாக தான் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன,'' என அவர் கூறுகின்றார்.

பௌத்த விகாரை

பட மூலாதாரம்,VITHIYADARAN

படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் என்.வித்தியாதரன்

தமிழர்கள் இனி ஆயுதம் ஏந்த மாட்டார்கள் என்பதை அநுர குமார திஸாநாயக்க நன்கறிந்தமையினாலேயே யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டார் என தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் என்.வித்தியாதரன், அவ்வாறு பாதுகாப்பு பிரச்னை இல்லை என உறுதியாக தெரிந்த அவருக்கு ஏன் தமிழர்களின் காணிகளை விடுக்கவிக்க முடியாது எனவும் கேள்வி எழுப்புகின்றார்.

''வடக்கில் அப்படி நடக்காது என்று அவருக்கு தெரியும். தமிழர் மக்கள் இன்னுமொரு 100 வருடங்களுக்கு ஆயுதம் ஏந்த போவதில்லை என்பதை நூற்றுக்கு இருநூறு விகிதம் அவருக்கு தெரியும். அதை தெரிந்தவர் காணிகளை விடுவிக்க வேண்டும். அதிகாரத்தை வழங்க வேண்டும். சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும். அதையெல்லாம் செய்யவில்லை,'' என அவர் வினவுகிறார்.

இலங்கை யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை முன்பு நடந்த போராட்டத்தில் பங்கேற்ற தமிழர்கள்

பட மூலாதாரம்,PATHMANATHAN SARUJAN

படக்குறிப்பு,யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை முன்பு நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள்

ஆனால் விகாரை பிரச்னை யாழ்ப்பாணத்துடன் முடிந்துவிடவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் பெறுமதியாக இடமாக குருந்தூர்மலை காணப்படுகின்றது,

இந்த குருந்தூர்மலையில் பௌத்த விகாரை மற்றும் சிவன் ஆலயம் இருந்தமைக்கான அடையாளங்கள் காணப்படுகின்ற போதிலும், இது முழுமையாக பௌத்தர்களுக்கு சொந்தமான இடம் என கோரி கடந்த காலங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த பிரச்னையும் இறுதி தீர்மானம் இன்றி இன்றும் சர்ச்சையை தோற்றுவிக்கும் விடயமாக காணப்படுகின்றது.

வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறி மலையில் தொல்லியல் பெறுமதியாக சைவ அடையாளங்கள் காணப்பட்ட இடத்தில், புத்தர் சிலையொன்றை பிரதிஷ்டை செய்ய பௌத்த தேரர்கள் தலைமையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்கு எதிராகவும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறான பிரச்னைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj9rzw210ndo

இலங்கையில் புதிய அரசியலமைப்பு முயற்சிகள்  துரிதப்படுத்தப்படுவதாக ஸ்ராலினுக்கு யார் சொன்னது?  — வீரகத்தி தனபாலசிங்கம் —

1 week ago

இலங்கையில் புதிய அரசியலமைப்பு முயற்சிகள்  துரிதப்படுத்தப்படுவதாக ஸ்ராலினுக்கு யார் சொன்னது?

January 20, 2026

இலங்கையில் புதிய அரசியலமைப்பு முயற்சிகள்  துரிதப்படுத்தப்படுவதாக ஸ்ராலினுக்கு யார் சொன்னது?

 — வீரகத்தி தனபாலசிங்கம் —

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசியப் பேரவை தூதுக் குழுவினர் தன்னைச் சந்தித்த  ஒரு மாத காலத்திற்குள், தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின்  “இலங்கை தமிழர்களின் மனக்குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய அரசியலமைப்புச் செயன்முறையை  முன்னெடுக்குமாறு  இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுப்பதற்கு இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்”  என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு  கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 

தன்னை சந்தித்த இலங்கை தமிழ் அரசியல்  தலைவர்கள் தற்போது தங்களது நாட்டில் முன்னெடுக்கப்படும்  அரசியலமைப்பு சீர்திருத்தங்கள்  தமிழர்களுக்கு தோற்றுவிக்கப்போகும்  ‘பாரதூரமான ஆபத்துக்களை’ சுட்டிக் காட்டியதாக கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும்  முதலமைச்சர்,  சிறுபான்மை இனத்தின்  உரிமைகளைப் பாதுகாப்பதுடன்  பன்முகத்தன்மை மற்றும் சமத்துவ கோட்பாடுகளை  பேணிப்பாதுகாக்கவும்  மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கும் கூட்டாட்சி ஏற்பாடுகளை புதிய அரசியலமைப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும்  என்று கேட்டிருக்கிறார். 

அத்தகையதொரு அணுகுமுறையை புதுடில்லி  கடைப்பிடித்தால்  அது பிராந்திய அமைதியை உத்தரவாதம் செய்யும் நாடு என்ற இந்தியாவின் வகிபாகத்தை  கௌரவிப்பதாக  மாத்திரமல்ல,  கூட்டாட்சியையும்  மொழி  மற்றும் இனத்துவ சிறுபான்மையினங்களையும் பாதுகாக்கும் இந்தியாவின் அரசியலமைப்பு விழுமியங்களுக்கு இசைவானதாகவும்  அமையும் என்று கூறியிருக்கும்  ஸ்ராலின், ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தலைமையிலான  அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பது என்ற போர்வையில் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் முயற்சிகளை  துரிதப்படுத்தியிருக்கின்றது என்றும் உத்தேச கட்டமைப்பு அரசியல் சுயாட்சிக்கான தமிழர்களின் அபிலாசைகளை அலட்சியம் செய்வதன் மூலம் அவர்கள் மேலும் ஓரங்கட்டப்பட்டக்கூடிய  அச்சுறுத்தலை தோற்றுவிக்கும் ஒற்றையாட்சி  முறையை (ஏக்கியராஜ்ய)  வலுப்படுத்துவதாக தோன்றுகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவின் அனுசரணையுடன் 1985  ஓகஸ்டில்  பூட்டானில் அன்றைய இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்க் கட்சிகள் மற்றும் ஆயுதப்போராட்ட இயக்கங்களுக்கும் இடையில் ஏற்பாடு செய்யப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தமிழ்ப் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட  ‘திம்புக் கோட்பாடுகள்’  தற்போதைய பின்புலத்தில் தொடர்ந்தும் பொருத்தமானவையாக இருப்பதாக தன்னைச் சந்தித்த தமிழ்த்  தலைவர்கள் வலியுறுத்தியதை  பிரதமர் மோடிக்கு சுட்டிக் காட்டியிருக்கும்  முதலமைச்சர் அந்த கோட்பாடுகளில் அடங்கியிருக்கும் அம்சங்களை உள்ளடக்காமல் கொண்டுவரப்படும்  எந்தவொரு புதிய அரசியலமைப்பும் அநீதி மற்றும் உறுதிப்பாடின்மையை தொடரச் செய்யும்  என்பதுடன் மீண்டும் மோதல்களுக்கும் மனிதாபிமான நெருக்கடிக்கும் வழிவகுக்கும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

1987  இந்திய  —  இலங்கை சமாதான உடன்படிக்கை உட்பட வரலாற்று ரீதியாக இலங்கையுடன் கொண்டிருக்கும் நட்புறவின் காரணமாக இலங்கையில் அமைதிக்கும் நீதிக்குமாக நீண்டகால அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய தார்மீகக் கடமையை இந்தியா கொண்டிருக்கிறது என்றும் ஸ்டாலின் எழுதியிருக்கிறார்.

ஸ்டாலினின் இந்த கடிதத்தை இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வைக் காணும் முயற்சிகளில் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு தமிழ்நாடு மூலமாக  நெருக்குதலை பிரயோகிப்பதற்கு  தங்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு  கிடைத்த முக்கியமான ஆரம்பக்கட்ட வெற்றியாக தமிழ் தேசிய பேரவை கருதுகிறது. கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்த அரசியல் கருத்தரங்கில் கஜேந்திரகுமார் நிகழ்த்திய உரை இதை தெளிவாக உணர்த்துகிறது. 

தங்களது தமிழ் தேசியவாத நிலைப்பாட்டுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு அலையொன்று ஏற்படும் என்பதில் நம்பிக்கையைக் கொண்டிருக்கும் கஜேந்திரகுமார்,  இலங்கை தமிழரசு கட்சியையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியையும் இணைத்துக்கொண்டு இந்த முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்று கூறுகிறார்.  தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் வரைக்கும் அந்த இரு கட்சிகளும் தமிழ் தேசிய நிலைப்பாட்டுக்கு  தமிழ்நாட்டின் ஆதரவைப் பெறுவதில் தவிர்க்க முடியாத சக்திகள் என்பது அவரது நிலைப்பாடாக இருக்கிறது. 

தனியொரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்ட தமிழ் தேசிய பேரவை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் மூலமாக இத்தகைய முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது என்றால், ஒற்றையாட்சியை நிராகரிக்கும்  தமிழ் தேசியவாத நிலைப்பாட்டைக் கொண்ட ஏனைய தமிழ்க் கட்சிகளின்  பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  கூட்டாக செயற்படும்  பட்சத்தில் தமிழ்நாட்டில் ஆதரவு அலையை உருவாக்குவதில் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்த முடியும் என்பது  அவரது நம்பிக்கையாக இருக்கிறது. 

தமிழ்நாட்டுக்கு சென்று அரசியல் கட்சிகளை சந்தித்த பிறகு  இதைக் கூறுகின்ற  கஜேந்திரகுமார், முன்கூட்டியே தமிழரசு கட்சியுடனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடனும் கலந்தாலோசித்து ஒரு கூட்டு நிலைப்பாட்டை எடுப்பதற்கு ஏன் முயற்சிக்கவில்லை என்று தெரியவில்லை. தமிழ் தேசியவாத அணிகளைப்  பொறுத்தவரை,   அவர்கள் தாங்களாக ஒரு நிலைப்பாட்டை எடுத்த பிறகு மற்றைய அணியினர் தங்களுடன் இணைந்துசெயற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற வழமையான    நடைமுறையின் தொடர்ச்சியாகவே இதை நோக்க வேண்டியிருக்கிறது. 

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியவாத கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்றென்றைக்குமே கானல் நீராகவே இருக்கும் போன்று தெரிகிறது. 

தமிழ்நாட்டு முதலமைச்சர் தனது கடிதத்தில் ‘ஏக்கியராஜ்ய’  என்ற பதத்தைப் பயன்படுத்தியிருப்பது  கவனிக்கத்தக்கது. 2015 – 2019  காலப்பகுதியில்  அன்றைய அரசாங்கத்தினால்  முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைக்கு பிறகு சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில்  இலங்கை அரசின் தன்மை ‘ஏக்கியராஜ்ய’ வாக அமையும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  

கைவிடப்பட்ட இடத்தில் இருந்து அந்த அரசியலமைப்புச் செயன்முறை முன்னெடுக்கப்பட்டு தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்  என்று அநுர குமார திசநாயக்க 2024 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியதை அடிப்படையாக வைத்துக் கொண்டு கஜேந்திரகுமார் ‘ஏக்கியராஜ்ய’ அரசியலமைப்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டுவந்துவிடும் என்று நம்புகிறார் போலும்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதைக் குறிப்பிட்ட ஜனாதிபதி திசநாயக்க பிறகு கடந்த ஒரு வருடத்துக்கும் அதிகமான காலமாக பதிய அரசியலமைப்பு குறித்து எதையும் பேசவில்லை. மூன்று வருடங்களுக்கு பிறகு அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என்று பதவிக்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் கூறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது அதைப் பற்றி பெருமளவுக்கு மௌனத்தைச்  சாதிக்கிறது. 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து அண்மையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய புதிய அரசியலைமைப்பின் மூலமாக மாத்திரமே ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படும் என்று கூறினார். ஆனாலும்,  அவர்  காலவரையறை எதையும் கூறவில்லை. இலங்கையில் நிலைவரம் இவ்வாறு இருக்கும்போது தமிழ்நாடு முதலமைச்சர் இலங்கையில் புதிய  அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் செயன்முறைகள் துரிதப்படுத்தப்படுவதாக கூறியிருக்கிறார். அதனால், இலங்கை அரசியல் நிலைவரம் தொடர்பான ஸ்ராலினின் புரிதல் குறித்து சந்தேகம் எழுகிறது. 

எது எவ்வாறிருந்தாலும்,  இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து மீண்டும் அவர் அக்கறை காண்பிக்க தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அதேவேளை, தமிழ்நாடு சட்டசபை தேர்தல்கள் நெருங்கும் நிலையில், தனது மாநிலத்தின் மற்றைய அரசியல் கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை கையிலெடுப்பதற்கு முன்னதாக பிரதமருக்கு கடிதம் எழுதியதன் மூலம் ஸ்ராலின் முந்திக் கொண்டார் என்ற விமர்சனமும் உண்டு.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மைப் பலம் இருக்கின்ற போதிலும்,  அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு கிடைத்த வாய்ப்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரயம்  செய்கிறது என்ற அபிப்பிராயம் தற்போது அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக குரல்கொடுத்து வந்த ஜனதா விமுக்தி பெரமுன  (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசியலமைப்பு சீர்திருத்தங்களை தாமதமின்றி முன்னெடுத்திருக்க வேண்டும்  என்பதே பரந்தளவில் சிவில் சமூக அமைப்புக்களின் கருத்தாக இருக்கிறது. புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கு  சர்வஜன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அரசாங்கத்தின் பதவிக் காலத்தின் முதல் வருடங்களே பாதுகாப்பான காலப் பகுதியாகும்.

அரசியலமைப்பை மாற்றுவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து உற்சாகமான பிரதிபலிப்பு வெளிப்படாமல் இருப்பது  அரசியலமைப்பு ரீதியான அல்லது ஒரு கட்சி சர்வாதிகாரத்தை நிறுவும் திசையில்  அது நகரத் தொடங்கியிருக்கிறது என்ற விமர்சனம் ஏற்கெனவே எதிரணியினால்  முன்வைக்கப்பட்டிருக்கிறது. 

 இலங்கையின் முன்னணி அரசறிவியல் நிபுணர்களில் ஒருவரான  பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒரு வருட ஆட்சி குறித்து அண்மையில் எழுதிய ஆய்வு ஒன்றில் இந்த அரசியலமைப்பு மாற்ற விவகாரம் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார் ;

”  இலங்கையின் அரசியல் புதிய வருடத்திலும் அதற்கு பின்னரும் பெரும்பாலும் மிகவும் சர்ச்சைக்குரியதாகவும் பதற்றம் நிறைந்ததாகவும் இருக்கப்போகிறது என்பதற்கான சகல அறிகுறிகளும் தெரிகிறது. முக்கியமான எந்தவொரு அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கும் இது உண்மையில் நல்ல செய்தி அல்ல. நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம்  அரசியலமைப்பு சீர்திருத்தங்களை முன்னெடுப்பதை தாமதிப்பது தேசிய மக்கள் சக்தியின் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு குறிப்பாக,  அதன் நம்பகத்தன்மைக்கு பாதகமானது.

”  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதுடன் பாராளுமன்ற  —  அமைச்சரவை எதேச்சாதிகாரத்தை தடுப்பதற்கு அவசியமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய பாராளுமன்ற ஜனநாயகத்தை கொண்டுவருவதற்கு தேசிய மக்கள் சக்தி தவறுமானால், இலங்கை ஜனநாயகத்தின் எதிர்காலத்துக்கு இன்னொரு மக்கள் கிளர்ச்சி தேவையாக இருக்கலாம்.”

https://arangamnews.com/?p=12614

தமிழகத்தை நொதிக்கச் செய்தல்: தமிழக நீக்கம்=தமிழ்த் தேசிய நீக்கம் ? - நிலாந்தன்

1 week 3 days ago

தமிழகத்தை நொதிக்கச் செய்தல்: தமிழக நீக்கம்=தமிழ்த் தேசிய நீக்கம் ? - நிலாந்தன்

facebook_1768395615458_74171888035009062 

தமிழ் நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஈழத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கடிதம் எழுதியுள்ளார். “இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி” எழுதப்பட்ட அக்கடிதத்தில், 1985இல் முன்வைக்கப்பட்ட திம்புக் கோட்பாடுகளின்  “கூறுகளை உள்ளடக்காமல் கொண்டுவரப்படும் எந்த ஒரு புதிய அரசியலமைப்பும் அநீதி மற்றும் நிலையற்ற  தன்மை தொடர வழிவகுக்கும் என்றும் இது மீண்டும் மோதல்களுக்கும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கும் வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்” என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழ் நாட்டு முதலமைச்சர் அவ்வாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியமை என்பது தமிழ் தேசிய பேரவையைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கடந்த மாதம் மேற்கொண்ட தமிழக விஜயத்தின் விளைவு என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவை மீறி இலங்கை இனப் பிரச்சினைக்கு எந்தவோர் வெளியேரசோ அல்லது பன்னாட்டு நிறுவனமோ தீர்வை தர முடியாது என்பதற்கு கடந்த 42 ஆண்டுகள் சான்று. இந்திய மத்திய அரசை அசைக்க வேண்டும் என்றால் தமிழகம் நொதிக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. எனவே இந்தியாவை கையாள்வது என்பது ஈழத்தமிழ் நோக்கு நிலையில் முதலில் தமிழகத்தை வெற்றிகரமாக கையாள்வது தான். மிகக்குறிப்பாக கட்சி பேதங்களைக் கடந்து தமிழகத்தை கையாள்வதுதான்.

தமிழ்நாட்டில் 8 கோடி தமிழர்கள் இருக்கத்தக்கதாக ஈழத் தமிழர்கள் அனாதைகளாக கை விடப்பட்டிருக்கும் ஒரு நிலைமை காணப்படுகிறது என்று அண்மையில் கஜேந்திரக்குமார் ஆற்றிய உரை ஒன்றில் தெரிவித்திருந்தார். கடந்த 13 ஆம் தேதி நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடந்த ஒரு அரசியல் கருத்தரங்கில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

ஆனால் இந்தியாவைக் கையாள வேண்டும் என்று கூறிய விமர்சகர்களையும் செயற்பாட்டாளர்களையும் சிறுமைப்படுத்திய ஒரு கட்சியின் தலைவர், இப்பொழுது இந்தியாவைக் கையாள வேண்டும்; தமிழகத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற ஒரு முடிவுக்கு வந்திருப்பது திருப்பகரமான மாற்றம்தான். ஆனால் இந்த மாற்றம் ஏற்படுவதற்கிடையில் கடந்த 16 ஆண்டுகளுக்குள் எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன? அந்த மாற்றங்களின் விளைவாக தமிழ்த் தேசிய அரசியலானது அதன் பேர பலத்தை இழந்துவருகிறது. அனைத்துலக அளவிலும் அது பலமாக இல்லை; உள்நாட்டிலும் பலமாக இல்லை. அதன் விளைவாக தனக்கு தமிழ் மக்களின் ஆணை உண்டு என்று கூறும் தேசிய மக்கள் கட்சி அரசாங்கமானது தான் விரும்பிய ஒரு தீர்வை தமிழ் மக்களின் மீது திணிக்க கூடிய ஆபத்து அதிகமாக உள்ள ஒரு காலகட்டம் இது என்பதை தனது மேற்படி மேற்படி உரையில் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டினார்.

அதாவது ஈழத் தமிழர்கள் ராஜதந்திரத்தை கற்றுக் கொள்வதற்கிடையில் தாயகத்தில் தமிழ் மக்கள் தமது பேர சக்தியை பெருமளவுக்கு இழந்து விட்டார்கள்  என்பதுதான குரூரமான கள யதார்த்தம் ஆகும். இந்த யதார்த்தத்தின் பின்னணியில்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை தமிழகத்தைக் கையாள்வது என்ற முடிவை எடுத்திருக்கிறது. ஆனால் ஒப்பீட்டளவில் அதிகளவு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சியானது அவ்வாறான முடிவை எடுத்திருக்கிறதா?

சிறீதரன் தமிழகத்தை நோக்கித் தொடர்ச்சியாகச் சென்று வந்திருக்கிறார். அயலகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுமந்திரன் போயிருக்கிறார். சாணக்கியன் போயிருக்கிறார். ஆனால் இவர்கள் தமிழகத்தில் உள்ள கட்சிகளின் தலைவர்களையும் முக்கியஸ்தர்களையும் பெருமளவுக்கு சந்தித்ததில்லை. அல்லது அவ்வாறு தமிழகத் தலைவர்களை சந்திக்க வேண்டும் என்ற கொள்கை முடிவின் அடிப்படையில் கட்சியின் தூதுக்குழு ஒன்று தமிழகத்திற்குச் செல்லவில்லை.

தமிழகத்தை நீக்கும் ஓர் அரசியல் அணுகுமுறை தமிழரசுக் கட்சியிடம் இருந்தது என்ற பொருள்பட திவ்ய ஜீவனத்தில் நடந்த கருத்தரங்கில் கஜேந்திரக்குமார் உரையாற்றினார். நாடாளுமன்றத்தில் இப்போதுள்ள தமிழ்ப் பிரதிநிதிகள் பெரும்பாலானவர்கள் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டவர்கள். அவர்கள் தங்களுடைய வாக்குறுதிகளை மீறிப் போகாமல் இருப்பதற்கு தமிழகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பொருள்கொள்ளத்தக்க விதத்தில் கஜனின் உரை அமைந்திருந்தது.

facebook_1766143770448_74077438809674807

இனப்பிரச்சினைக்கு ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட தீர்வைப் பெறுவதற்கு தமிழகம் தேவையில்லை. இதை கஜனின் வார்த்தைகளில் சொன்னால், தமிழ்த் தேசிய நீக்கம் செய்ய விரும்பும் சக்திகளுக்குத் தமிழகம் தேவையில்லை. தமிழ்த் தேசிய நீக்கம் என்பது இனப்பிரச்சினை அரசியலைப் பொறுத்தவரை தமிழக நீக்கமும்தான்.

கடந்த 16 ஆண்டுகளில் குறிப்பாக சம்பந்தரின் காலத்தில் அவரிடம் இனப் பிரச்சினையை அனைத்துலக மயநீக்கம் செய்யும் ஒரு கொள்கை முடிவு இருந்தது. வெளித்தரப்புகளின் அழுத்தமானது சிங்கள மக்களை பயமுறுத்துவது. அதனால் உள்நாட்டுத் தீர்வு ஒன்றைப் பெற முடியாது என்றும் சம்பந்தர் நம்பினார்.

ஆனால் இனப்பிரச்சினை எனப்படுவது சாராம்சத்தில் ஓர் அனைத்துலக பிரச்சினைதான். அதற்கு அனைத்துலக தீர்வுதான் உண்டு என்ற மிக அடிப்படையான ஓர் உண்மையை,சமன்பாட்டை சம்பந்தர் விளங்கிக் கொள்ளவே இல்லை. அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை. நிலை மாறு கால நீதியின் கீழான யாப்புருவாக்க முயற்சிகளில் அவருடைய நடவடிக்கைகள் அதை நிரூபித்தன. அந்த நடவடிக்கைகளை அவர் முழுக்க முழுக்க நம்பினார். அந்த நம்பிக்கையினால்தான் அவர் ஒவ்வொரு நல்ல நாள் பெருநாளுக்கும் தீர்வு வரும் என்று தீர்க்கதரிசனம் உரைத்தார்.

ஆனால் மூன்றாவது தரப்பொன்றின் அழுத்தம் இல்லாமல் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒரு தீர்வுக்கு வர முடியாது என்ற கசப்பான யதார்த்தம் அவருடைய முகத்தில் அறைந்த பொழுது ஒரு தோல்வியுற்ற தலைவராக அவர் இறந்தார். அவருடைய யாப்புருவாக்க முயற்சியின் பங்காளிகளில் ஒருவராகிய மைத்திரியே அந்த முயற்சியை காட்டிக் கொடுத்தார். ஏனென்றால் மூன்றாவது தரப்பு ஒன்றின் அழுத்தமோ கண்காணிப்போ அங்கே இருக்கவில்லை. நிலைமாறு கால நீதியின் கீழ் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையானது அவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடிய ஒரு தரப்பாக இருக்கவில்லை.

எனவே ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட ஒரு தீர்வை பெறுவதற்கான தமிழ்த் தேசிய நீக்க அரசியல் என்பது அதன் நடைமுறை அர்த்தத்தில் தமிழக நீக்கமும்தான். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்டு ஒரு நாடாளுமன்றம் தரக்கூடிய எந்த ஒரு தீர்வும் வெளிப்படையான சமஸ்டியாக இருக்காது என்பதே கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலான அனுபவம். அதை இன்னொரு விதமாகச் சொன்னால் தன்னை “சமஷ்டிக் கட்சி” என்று அழைத்துக் கொள்ளும் தமிழரசுக் கட்சியின் அனுபவம் என்றும் கூறலாம்.

எனவே இனப்பிரச்சினைக்கு நாடாளுமன்றத்துக்கு ஊடாக கிடைக்கும் எந்த ஒரு தீர்வும் அப்படித்தான் இருக்கும். நாடாளுமன்றத்துக்கு வெளியே மூன்றாவது தரப்பொன்றின் அழுத்தம் இருக்க வேண்டும். அவ்வாறு மூன்றாவது தரப்பு ஒன்றும் அழுத்தம் இருந்த காரணத்தால்தான் இந்திய இலங்கை உடன்படிக்கை சாத்தியமாகியது. ரணில்- பிரபாகரன் உடன்படிக்கை சாத்தியமாகியது.

மூன்றாவது தரப்பு உள்ளே வர வேண்டும் என்றால் தமிழ் மக்கள் போராட வேண்டும். தமிழ் மக்கள் போராடினால்தான் ஒரு மூன்றாவது தரப்பை தமக்குச்  சாதகமாக அரங்கில் இறக்கலாம். தமிழகத்தைக் கையாள்வதற்கும் அதுதான் முன் நிபந்தனை. தமிழ் மக்கள் தாங்கள் கொந்தளிக்காமல்,தமிழகம் தங்களுக்காகக் கொந்தளிக்கவில்லை என்று கேட்பது பொருத்தமில்லை. தமிழ்த் தேசிய அரசியலை தமிழ்க் கட்சிகள் நொதிக்க வைக்கவில்லை என்றால் தமிழகம் எப்படி நொதிக்கும்?

எனவே முதலில் தமிழ்த் தேசிய பேரவையும் உட்பட தமிழ்க் கட்சிகள் அனைத்தும் தமிழரசியலை நொதிக்க வைக்கவேண்டும். பொங்கல் கொண்டாட்டத்துக்கு வந்த அனுரவோடு செல்பி எடுக்க முண்டியடித்த ஒரு பகுதி தமிழ் மக்களையும் நொதிக்கச் செய்ய வேண்டும். ஒவ்வொரு பௌர்ணமி நாளும் தையிட்டியில் நொதிப்பதால் மட்டும் தமிழரசியலை தொடர்ச்சியாக நொதிக்க வைக்க முடியாது. அதற்குமப்பால் தமிழ்த் தேசிய அரசியலை தேர்தல் அரசியலுக்கு வெளியே போராட்ட அரசியலாக நொதிக்க வைத்தால் மட்டும்தான் தமிழகம் நொதிக்கும். தமிழகம் நொதித்தால்தான் பிராந்தியம் நொதிக்கும். அப்பொழுதுதான் இந்திய மத்திய அரசின் வெளியுறவு முடிவுகளில் அது தாக்கத்தைச் செலுத்தும்.

இந்த ஆண்டு பிறந்தபோது அனைத்துலக அரசியலில் இரண்டு செய்திகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. ஒன்று,உக்ரைன் பற்றியது. மற்றது,வெனிசுலா பற்றியது. கடந்த மாதம் 15ஆம் திகதி,உக்ரைன் நேட்டோவில் இணைவைதென்ற அதன் முன்னைய முடிவைக் கைவிடுவதாக அறிவித்திருந்தது. உக்ரைன் போர் எனப்படுவது பிராந்திய யதார்த்தத்தை மீறி உக்ரைன் நேட்டோவில் இணைய முற்பட்டதால் ஏற்பட்டது. அது ரஷ்யாவின் பிராந்தியம். ரஷ்யாவின் செல்வாக்கு மண்டலத்தில் காணப்படும் உக்ரைன் அந்த பிராந்திய யதார்த்தத்தை மீறி நேட்டோவுடன் இணைவது என்று முடிவெடுத்ததன் விளைவுதான் யுத்தம். இப்பொழுது உக்ரைன் பிராந்திய யதார்த்தத்தைச் சுதாகரித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைனின் முடிவை மாற்றியதில் அமெரிக்காவுக்கும் பங்குண்டு.

இது நடந்து கிட்டத்தட்ட இரு கிழமைகளின் பின்  இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா தனது செல்வாக்கு மண்டலத்தில் காணப்படும் வெனிசுலாவின் மீது தாக்குதல் நடத்தி அதன் அதிபரைக் கைது செய்து கடத்திச் சென்றிருக்கிறது. ஒரு பேரரசின் செல்வாக்கு மண்டலத்துக்குள் வாழும் பலவீனமான ஒரு நாடு அனுபவிக்க கூடிய இறையாண்மை மற்றும் சுதந்திரத்தின் அளவைக் குறிக்கும் ஆகப்பிந்திய உதாரணம் இது.

இவ்வாறு மிகக்குறுகிய காலத்துக்குள் இரண்டு வேறு பிராந்தியங்களில் பேரரசுகளின் செல்வாக்கு மண்டலத்தில் வாழும் பலவீனமான மக்கள் கூட்டங்களுக்குள்ள வரையறைகளை உணர்த்திய இரண்டு ஆகப்பிந்திய உதாரணங்கள் இவை.

இந்தியப் பேரரசின் செல்வாக்கு மண்டலத்துள் வாழும் சிறிய அரசற்ற மக்கள் கூட்டமாகிய ஈழத் தமிழர்கள், தமது விடுதலையை வென்றெடுப்பதற்கான தீர்க்கதரிசனம் மிக்க உபாயங்களை வகுக்கவேண்டிய அவசியத்தை உணர்த்தும் இரண்டு ஆகப்பிந்திய உதாரணங்கள் இவை. இந்த உதாரணங்களின் பின்னணியில்தான்,தமிழ் நாட்டின் முதலமைச்சர் இந்திய மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு உள்ள முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ள வேண்டும்.

https://www.nillanthan.com/8072/

சிங்கத்தின் தோட்டத்தில் சிக்கிய தமிழ்ப் பட்டம்? - நிலாந்தன்

1 week 3 days ago

சிங்கத்தின் தோட்டத்தில் சிக்கிய தமிழ்ப் பட்டம்? - நிலாந்தன்

00-1024x767.jpg

வல்வெட்டித் துறை பட்டத் திருவிழா ஒரு பருவ காலப் பொழுதுபோக்குப் போட்டி மட்டுமல்ல. அது ஒரு பண்பாட்டுப் பெருவிழா. தமிழ் மக்களின் தேசிய ஆன்மாவை பிரதிபலிக்கும் ஒரு பெரு விழா.

பட்டத் திருவிழாக்களின் தொடக்கம் பண்டைய சீனாவாகும். அங்கே பட்டங்கள் விவசாயச் சடங்குகளோடும் யுத்தத் தேவைகளோடும் இணைக்கப்பட்டிருந்தன. சீனாவில் இருந்து ஆசியாவுக்குப் பட்டங்கள் பரவின. யப்பானிலும் கொரியாவிலும் அவை திருவிழாக்கள்,பொழுதுபோக்குக் கொண்டாட்டங்கள் என்ற வளர்ச்சியைப் பெற்றன. இந்தியாவில் “மகர் சங்கராந்தி” என்ற இந்துப் பெருவிழாவோடு பட்டத் திருவிழாவும் இணைத்துக் கொண்டாடப்படுகின்றது.

ஒரு மக்கள் கூட்டத்தை தேசமாக வனையும் அம்சங்களில் ஒன்று பொதுப் பண்பாடு ஆகும். ஒரு மக்கள் கூட்டத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடைத் திருவிழாக்கள், உணவுத் திருவிழாக்கள்,பட்டத் திருவிழாக்கள்… போன்றன அம்மக்கள் கூட்டத்தை ஒரு தேசமாக, உணர்வுபூர்வமாகப் பிணைக்கின்றன.

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவானது, தமிழ் மக்களின் மகிழ்ந்திருக்கும் இயல்பை,கொண்டாட்ட உணர்வை, அழகுணர்ச்சியை, கலையுணர்வை, பட்டம் கட்டும் தொழில்நுட்பத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை. அதைவிட ஆழமான பொருளில் தமிழ் மக்களின் வீரத்தை, அரசியல் உட்கிடக்கைகளை வெளிப்படுத்துகின்றது. அந்தப் பட்டங்களில் சமூக விமர்சனம் உண்டு, போர் உண்டு, போர்க்கால நினைவுகள் உண்டு. பொழுதுபோக்கு உண்டு. சிங்கக் கொடியும் உண்டு. தமிழ்ப் போர்க் கப்பலும் சில ஆண்டுகளுக்கு முன்பு பறக்க விடப்பட்டது. ஈழத் தமிழ்ப் பட்டத் திருவிழாக்களில், பருவக்காற்றில் பறக்க விடப்படுவது, தனிய பொழுதுபோக்குப் பட்டங்கள் மட்டுமல்ல. ஈழத் தமிழர்களின் கூட்டு உளவியலுக்குள் பதுங்கியிருக்கும் அரசியல் உணர்வுகளை வெளிப்படுத்தும் பட்டங்களும் உண்டு.

அந்த அரசியல் விருப்பங்களை கலையாக,விளையாட்டாக,போட்டியாக தமிழ் மக்கள் வெளிப்படுத்துகிறார்கள். பாடசாலைப் பிள்ளைகள் தங்களுடைய வினோத உடைப் போட்டிகளின் போதும் அல்லது விளையாட்டுப் போட்டிகளில் இல்லங்களைச் சோடிக்கும்போதும் அங்கேயும் சிலசமயம் அரசியல் வாடை வீசும். அதன் பின் அங்கே புலனாய்வுத்துறை வந்து நிற்கும். கடைசியாக நடந்த சூரன் போரிலும் அந்த அரசியல் இருந்தது.

கடைசியாக நடந்த பட்டத் திருவிழாவுக்கு சில நாட்களுக்கு முன்பே ஒரு புலிமுகப் பட்டம் சமூகவலைத் தளங்களில் வலம் வந்தது. ஆனாலது வல்வெட்டித்துறையில் பறக்க விடப்படவில்லை. பதிலாக மண்டான் வெளியில் அன்று பகல் பறக்க விடப்பட்டது என்றும் பின்னர் அதைப் படைத்தரப்பு தடுத்து கீழிறக்கி வடடதாகவும் தகவல் உண்டு. பறக்க முடியாத பட்டங்களும் உண்டு?

தமிழ் மக்கள் இவ்வாறு விளையாட்டுக்களிலும்,விழாக்களிலும்,போட்டிகளிலும், கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தங்களுடைய அரசியல் பெரு விருப்பத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஒருபுறம் ஜனாதிபதி தமிழ்ப் பகுதிகளுக்கு வருகை தரும் போது அவரோடு செல்பி எடுக்க அவரைப் பார்க்க, கைகுலுக்க ஒரு தொகுதி தமிழர்கள் வருகிறார்கள். அல்லது அழைத்து வரப்படுகிறார்கள். அவர்கள் ஜனாதிபதியை நெருங்க முண்டியடிக்கும் காட்சிகளை அரசாங்கத்தின் டிஜிட்டல் புரோமோஷன் அணியும் சில யுடியூப்பர்களும் “வைரல்” ஆக்குகிறார்கள். இதே மக்கள் மத்தியில் இருந்துதான் பட்டத் திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், சூரன் போர் போன்ற விழாக்களில் அரசியல் விருப்பம் வெளிப்படக் காண்கிறோம்.

facebook_1768564718790_74178980742803419

facebook_1768499124865_74176229534212392

facebook_1768555048047_74178575122456425

சிறுவயதில் பழைய பாடத்திட்டங்களில் படித்த ஒரு பாடல். பண்டிதர் சச்சிதானந்தம் எழுதியது. 50 வயது கடந்த அநேகருக்கு ஞாபகத்தில் இருக்கும். “சிங்கத்தின் தோட்டத்தில் சிக்கிவிட்டது எங்கள் பட்டம்.தொங்கும் அதை எடுத்து வர தூரப்போகும் புறாவாரே…” என்ற தொடரும் ஒரு பாடல் அது.

சின்னப் பிள்ளைகள் பட்டம் ஏற்றி விளையாடும்போது காற்றில் அசைந்த பட்டம் தவறுதலாக சிங்கம் படுத்திருந்த தோட்டத்தின் மரக்கிளையில் சிக்கிவிடும். அதை எடுப்பதற்கு சின்னப் பிள்ளைகள் ஒவ்வொரு மிருகத்திடமும் உதவி கேட்பார்கள். முடிவில் ஒட்டகச்சிவிங்கி மட்டும் உதவிக்கு வரும். அதன் நீண்ட கழுத்தில் ஏறி பட்டத்தை மீட்பார்கள்.

அது குழந்தைப் பிள்ளைகள் வானில் ஏற்றிய பட்டம். ஆனால் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக தமிழ் மக்கள் அரசியல் வானில் ஏற்றிய பட்டங்கள் யாவும் வாள் ஏந்திய சிங்கத்தின் தோட்டத்தில்தான் வீழ்ந்து விட்டன. அகிம்சைப் போராட்டத்திலும் ஆயுதப் போராட்டத்திலும் ஏற்றிய எல்லாப் பட்டங்களும் அப்படித்தான். வாள் ஏந்திய சிங்கத்தின் தோட்டத்தில் வீழ்ந்துவிட்டன.

2009க்குப் பின்னரான கடந்த 16 ஆண்டுகளாக சிங்கத்தின் தோட்டத்தில் சிக்கிய தமது பட்டத்தை மீட்க தமிழ் மக்களால் முடியவில்லை. ஒருபுறம் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொருபுறம், தமிழ்க் கட்சிகள் வாலறுந்த பட்டங்களை ஏற்றிக் கொண்டிருக்கின்றன. தமிழ்மக்கள் அரசியல் நீக்கம் செய்யப்படுகிறார்கள். ஒரு பகுதி தமிழர்கள் அரசியலில் சலிப்பும் வெறுப்புமடைந்து வருகிறார்கள். புதிய ஆண்டின் தொடக்கமே ஆபாச அரசியல் காணொளியாக இருந்தது.

உள்ளதில் பெரிய தமிழ்க் கடைசிக்குள் காணப்படும் இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மற்றவரை வில்லனாக்குகிறார்கள். பொங்கல் விழாவில், ஜனாதிபதியோடு கைகுலுக்க,செல்ஃபி எடுக்க ஒரு பகுதி தமிழர்கள் முண்டியடிக்கிறார்கள். செல்ஃபி யுகத்தில், சிங்கத்தின் தோட்டத்தில் சிக்கிய பட்டத்தைக்  கிழியாமல் எடுக்க இப்படிப்பட்ட கட்சிகளால் முடியுமா? ஒட்டகச் சிவிங்கி எங்கிருந்து வரும்?அல்லது ஒட்டகச்சிவிங்கியாய் உயரப்போவது யார்?

https://www.nillanthan.com/8075/

வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.

1 week 3 days ago

Anura-3.jpg?resize=750%2C375&ssl=1

வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.

“முன்னர் வடமாகாணத்துக்கு தனி ஆட்சி தேவை என்று வடமகாண மக்கள் கூறினார்கள். ஆனால் முதன்முதலாக யாழ் மக்கள் இன்று எங்களுடைய ஆட்சியை தங்களுடைய ஆட்சி என்று நம்புகிறார்கள்..”

இது, அனுர யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறியது. அவர் அவருடைய பேச்சின் போக்கில் வடக்கு,யாழ்ப்பாணம் போன்ற வார்த்தைகளை அவற்றுக்குரிய அரசியல் அடர்த்தி விளங்காமல் கதைத்துவிட்டுப் போகிறார் என்று எடுத்துக் கொள்வதா?அல்லது அரசாங்கம் திட்டமிட்டு வடக்கில் தன் கவனத்தைக் குவிக்கிறது என்பதனை இது காட்டுகிறது என்று எடுத்துக்கொள்வதா?

ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின் வடக்கிற்கு மிகக்குறுகிய காலத்தில் அதிக தடவை விஜயம் செய்த ஒரே ஜனாதிபதி அனுரதான்.அப்படித்தான் அவருடைய அமைச்சர்களும். அரசாங்கம் வடக்கை நோக்கி தன்னுடைய முழுக் கவனத்தையும் குவிப்பதை இது காட்டுகிறது.

இது இயல்பானது அல்ல. ஒப்பிட்டுப் பார்த்தால் இதே அளவு கவனக்குவிப்பு கிழக்கில் இல்லை.வடக்கின் விவகாரங்களைக் கையாள்வதற்கு என்று அமைச்சர் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.பெரும்பாலான அமைச்சர்கள் அடிக்கடி வடக்குக்கு வருகிறார்கள்.அமைச்சர்கள் அல்லது அரச பிரதானிகள் கலந்துகொள்ளும் அரச நிகழ்வுகள் அடிக்கடி வடக்கில் நடக்கின்றன.இவை யாவும் அரசாங்கம் வடக்கை நோக்கி அதன் கவனத்தைத் திட்டமிட்டுக் குவிக்கிறது என்பதைத்தான் காட்டுகின்றன.

“பார்க்காத,பழகாத எங்களை நம்பினீர்கள்.உங்களை நாங்கள் கைவிட மாட்டோம்” இதுவும் யாழ்ப்பாணத்தில் வைத்து அண்மையில் ஜனாதிபதி கூறிய வார்த்தைகள்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வெற்றியை அவர்களே எதிர்பார்க்கவில்லை என்பதனை அது காட்டுகிறது.அந்த வெற்றியை தொடர்ந்து தக்கவைப்பதற்கும்,அடுத்த மாகாண சபையில் அந்த வெற்றியை மேலும் விஸ்தரிப்பதற்கும் திட்டமிட்டு அரசாங்கம் தன் முழுக் கவனத்தையும் வடக்கின் மீது குவிக்கின்றது.

அண்மையில் உத்தியோகப்பற்றற்ற விதமாக கிராமமட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின்படி,தேசிய மக்கள் சக்திக்கு கிட்டத்தட்ட முப்பது விகிதமான வாக்கு வங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக கைபேசி செயலிகளின் கைதிகளாகக் காணப்படும் தலைமுறையினர் மத்தியில் அனுரவுக்கு அதிகம் ஆதரவு காணப்படுகிறது. அந்த ஆதரவைத் தக்கவைக்கும் விதத்தில் அரசாங்கத்தின் டிஜிட்டல் புரோமோஷன் அணியானது அனுரவை தொடர்ந்தும் தமிழ்ப் பாடல்களின் பின்னணியில் கதாநாயகராகக் கட்டியெழுப்பி வருகிறது.

தற்பொழுது அதிகம் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் “பிரஜா சக்தி” என்ற கிராமமட்ட செயல்திட்டமும் அரசாங்கம் அதன் வாக்கு வங்கியை வளர்க்கும் நோக்கிலானது என்று சந்தேகிக்கப்படுகிறது.இதுதொடர்பாக அண்மையில் சுமந்திரன் ஒரு காணொளியில் அரசாங்கத்தை குற்றம் சாட்டுகிறார். அரசாங்கம் அதன் அரச வளங்களை பயன்படுத்தி கிராம மட்டத்தில் பிரஜா சக்தி என்ற கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.ஆனால் அக்கட்டமைப்பு இறுதியிலும் இறுதியாக தேசிய மக்கள் சக்தி என்ற கட்சிக்கு சேவகம் செய்கின்ற,அந்தக் கட்சியின் ஆதரவுத் தளத்தைக் கட்டிஎழுப்புகின்ற ஒன்றுதான் என்று அண்மையில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன், நல்லூர் திவ்யஜீவன சங்க மண்டபத்தில் ஆற்றிய உரை ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இது ஏறக்குறைய மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில்,பசில் ராஜபக்ஷவின் பொறுப்பின் கீழ் காணப்பட்ட அரச கட்டமைப்புகளைப் போன்றது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் உட்பட ஏழு வெவ்வேறு அரசு அலுவலர்கள், அரச சேவை என்ற பெயரில் தாமரை மொட்டுக் கட்சிக்காக கிராம மட்டங்களில் வேலை செய்தார்கள் என்பது பின்னர் தெரியவந்தது. அரச வளங்களைப் பயன்படுத்தி, அரச செலவில், அரச காரியம் என்ற போர்வையில், அவர்கள் கட்சி வேலையைச் செய்தார்கள். கட்சியைக் கட்டியெழுப்ப முயற்சித்தார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரஜா சக்தியும் அத்தகைய நோக்கத்தைக் கொண்டது என்று தமிழ்க் காட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

அதாவது அரசாங்கம் வடக்கில் அதன் வாக்கு வங்கியைப் பலப்படுத்தும் நோக்கத்தோடு திட்டமிட்டு உழைக்கின்றது.இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டி வரலாம் என்று அவர்களுக்குத் தெரிகிறது.தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுக்கு இடையே ஐக்கியப்படும் வாய்ப்புகள் குறைவு என்பதையும் அவர்கள் ஊகிக்கின்றார்கள்.

குறிப்பாக,உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி இரண்டாக நிற்கின்றது. கட்சிக்குள் காணப்படும் இரண்டு அணிகளும் பகிரங்கமாக ஒருவர் மற்றவரைத் தாக்கி விமர்சித்து வருகின்றன.அரசியலமைப்பு பேரவையில் சிறீதரன் அரசாங்கத்திற்கு ஆதரவாக எட்டு தடவைகள் வாக்களித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மைகள் உண்டு. கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஒரு படைப்பிரதானியை நியமிக்க அரசாங்க முயற்சித்தபோது அவர் அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார் என்பதும் உண்மை என்று தெரிகிறது. அதுதொடர்பாக அவர் பகிரங்கமாக தன்னிலை விளக்கம் எதையும் இதுவரை தரவில்லை.தனக்கு எதிராக எழுதும் ஊடகங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதாகவுந் தெரியவில்லை.

ஆனால் இந்த விடயத்தை குவிமயப்படுத்தி சிறீதரனை கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் மதிப்பிறக்கம் செய்யும் வேலைகளை சுமந்திரன் அணி மிகவும் கச்சிதமாகச் செய்துவருகிறது. கட்சிக் கட்டுப்பாட்டை மீறி சிறீதரன் செயற்படுகிறார் என்று சொன்னால் அதற்கு எதிராக கட்சி உரிய ஒழுங்காற்று நடவடிக்கையை எடுக்கலாம். அது கட்சி விவகாரம். அதனை கட்சிக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். அதுதொடர்பான விடயங்களை ஊடகவியலாளர்களைக் கூட்டிப் பகிரங்கமாகக் கதைக்கவேண்டிய தேவை என்ன? கட்சி விவகாரத்தை கட்சிக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். கட்சிக்குள்ளேயே ஒழுங்காற்று நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.அதைச் செய்யாமல் கட்சிக்கு வெளியே ஊடகங்கள் மத்தியில் அதைச்சொல்ல வேண்டிய தேவை ஏன் வந்தது?

ஏனென்றால், கட்சி ஒரு கட்டமைப்பாக பலமாக இல்லை என்பதைத்தான் அது காட்டுகிறது.வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டால், வெல்லலாம் என்ற நம்பிக்கையில்தான் பலரும் கட்சிக்குள் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது கட்சி உயர் மட்டத்தோடும் முரண்படாமல் விசுவாசத்தை வெளிக்காட்டாமல் தந்திரமாக நடந்து கொள்கிறார்கள்.வெல்லக்கூடிய குதிரை என்ற ஒரே ஒரு பலம்தான் இப்பொழுது தமிழரசுக் கட்சிக்கு உண்டு.ஆனால் சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையிலான முரண்பாடுகள் மேலும் கூர்மையடைந்தால், அது கட்சியைப் பாதிக்கும்.இப்போதுள்ள நிலைமைகளின்படி,சுமந்திரன் சிறீதரனை பெருமளவுக்கு கிளிநொச்சிக்குள்ளே முடக்கி விட்டார். ஆனால் கிளிநொச்சியில் சிறீரனின் இடத்தை நிரப்ப வேறு யாரும் கட்சிக்குள் இல்லை. அதுமட்டுமல்ல சிறுதரனை தோற்கடிக்கும் முயற்சியில் கட்சி மேலும் பலவீனமடையும் வாய்ப்புக்களே அதிகமாகத் தெரிகின்றன.மாகாண சபைத் தேர்தல் நடந்தால் அதில் தமிழரசுக் கட்சியின் வெற்றியின் பருமனை அது நிச்சயமாகப் பாதிக்கும்.

தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி இவ்வாறு தானே தனக்குள் பிடுங்குபடுவது, தனக்கு அதிகரித்த வெற்றி வாய்ப்புகளைத் திறந்து விட்டிருப்பதாக தேசிய மக்கள் சக்தி நம்புகின்றது.அதனால்தான் தமது கிராமமட்டக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதன் முலமும் வடக்கை குவிமயப்படுத்தித் திட்டமிட்டு உழைப்பதன் மூலமும் வடமாகாண சபையில் பலமான வெற்றி வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

வடக்கை வெற்றிகொண்டால் கிழக்கு தானாக விழுந்து விடும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். தமிழ்த் தேசிய கோரிக்கையின் தலை வடக்கில்தான் இருக்கிறது என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.எனவே தலையை நசுக்கி விட்டால், தமிழ்த் தேசியக் கோரிக்கை வலுவிழந்து விடும் என்றும் அவர்கள் நம்பக்கூடும். அந்த நோக்கத்தோடுதான் அவர்கள் வடக்கை குவிமயப்படுத்தி உழைக்கிறார்கள்.

இது சில தசாப்தங்களுக்கு முன்பு அதாவது 1980களின் தொடக்கத்தில் ஜெயவர்த்தன தமிழ்த் தேசியக் கோரிக்கையை தோற்கடிப்பதற்கு வகுத்த திட்டத்தின் மறுவளமான  வியூகந்தான். தமிழ் மக்களின் தாயகத்தை துண்டித்து விட்டால் தமிழீழக் கோரிக்கை தோல்வி அடைந்து விடும் என்று ஜெயவர்த்தன நம்பினார்.அதற்கு கிழக்கை,திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலம் பலவீனப்படுத்துவது, வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் பிரதேசங்களைத் திட்டமிட்ட குடியேற்றங்களின்மூலம் சிங்களபௌத்த மையப்படுத்துவது, அதன் மூலம் வடக்கைத் தனிமைப்படுத்துவது. கிழக்கை இழந்தால் அதாவது தாயகம் துண்டிக்கப்பட்டால், தாயகத்தின் ஒரு பகுதி வெற்றி கொள்ளப்பட்டு விட்டால், தாயகக் கோரிக்கை தோல்வி அடைந்து விடும்.அது இறுதியிலும் இறுதியாக தமிழ்த் தேசிய அரசியலையும் தோற்கடித்துவிடும். முதலாம் கட்ட ஈழப்போரில் இந்த வியூகத்தை வைத்துத்தான் ஜெயவர்த்தன படை நடவடிக்கைகளையும் திட்டமிட்ட குடியேற்றங்களையும் முன்னெடுத்தார்.இந்த வியூகத்தில் கிழக்கை வெற்றிகொள்வதே முதல் இலக்காக இருந்தது.

ஆனால் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களின் பின் தேசிய மக்கள் சக்தியானது அந்த வியூகத்தை மறுவளமாகப் பயன்படுத்துகின்றது. வடக்கை வெற்றி கொண்டால் கிழக்குத் தானாக விழுந்துவிடும். தமிழ்த் தேசியக் கோரிக்கை பலமிழந்து விடும் என்று தேசிய மக்கள் சக்தி திட்டமிடுகின்றதா?அந்த அடிப்படையில்தான் வடக்கை நோக்கி ஜனாதிபதி அடிக்கடி வருகிறாரா? தமிழ் மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கைகளை வடக்கின் கோரிக்கைகளாகச் சுருக்கிக் கூறுவதும் அதனால்தானா? இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பின் தற்காலிகமாக இணைக்கப்பட்டு இருந்த வடக்குக்கிழக்கை,ஒரு  வழக்கின் மூலம் பிரித்தது ஜேவிபி. இப்பொழுது கேவிபியை அடித்தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியானது,அந்த வியூகத்தின் இறுதிக்கட்டத்தை நிறைவேற்றுவதற்காக வடக்கை நோக்கி உழைக்கின்றதா?

உட்கட்சிச் சண்டைகளை ஊடகங்கள் முன் பகிரங்கமாக விவாதிக்கும் தமிழரசுக் கட்சியும் உட்பட தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்த ஆபத்தை அதற்குரிய முழுப் பரிமாணத்தோடு விளங்கி வைத்திருக்கின்றனவா?

https://athavannews.com/2026/1460334

செயற்திட்டம் இல்லாமல் வெறுமனே  கோரிக்கைகளை முன்வைக்கும் தமிழ்த் தேசியவாத அரசியல் பாரம்பரியம் (நூல் விமர்சனத்தின் வழியாக ஒரு அரசியல் பார்வை) — ஷோபாசக்தி —

1 week 4 days ago

செயற்திட்டம் இல்லாமல் வெறுமனே  கோரிக்கைகளை முன்வைக்கும் தமிழ்த் தேசியவாத அரசியல் பாரம்பரியம் (நூல் விமர்சனத்தின் வழியாக ஒரு அரசியல் பார்வை)

January 14, 2026

செயற்திட்டம் இல்லாமல் வெறுமனே  கோரிக்கைகளை முன்வைக்கும் தமிழ்த் தேசியவாத அரசியல் பாரம்பரியம்                     (நூல் விமர்சனத்தின் வழியாக ஒரு அரசியல் பார்வை)

— ஷோபாசக்தி —

மகாகவி பாரதியின் ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’ என்ற கவிதை வரியைத் தலைப்பாகக் கொண்டு, மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் பல வருடங்களுக்கு முன்பு தனது ஆசிரிய தலையங்கங்களின் தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டார்.  அந்த  கவிதையின் அடுத்த வரி ‘எனக்குண்மை தெரிந்தது சொல்வேன்’. இந்த வரிக்குப் பொருத்தமாகத் அவர்  எழுதி அண்மையில்  வெளிவந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பே ‘தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்’. 

இலங்கையிலுள்ள ‘மார்க்ஸியக் கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையத்தின்’  வெளியீடாக வந்திருக்கும் 

இந்த நூலில் எட்டுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.  இவை இன்றைய இலங்கையில்  வலுவாக நிலைகொண்டிருக்கும் பவுத்த சிங்களப் பேரினவாத அரசியலையும் சிதறிச் சீரழிந்து கிடக்கும் தமிழ்த் தேசியவாத அரசியலையும் விசாரணை செய்கின்றன. இந்த விசாரணைகளுக்கு ஊடாக, இன்றைய தமிழ்த் தேசியவாதத்தின் நிலை குறித்துத் தன்னுடைய கருத்துகளையும் கணிப்புகளையும் தனபாலசிங்கம்  முன்வைத்திருக்கிறார். 

நாற்பது வருடங்களுக்கும் அதிகமான காலமாக பத்திரிகைத்துறையில் தீவிரமாகப் பணியாற்றிய ஊடக அறிவையும் களத்திலேயே இருந்து அரசியல் நிலவரங்களை நேரடியாக எதிர்கொண்டதால் ஏற்பட்ட பட்டறிவையும் ஒருங்கே திரட்டி இந்தக் கட்டுரைகளை அவர் எழுதியிருக்கிறார்.

செயற்திட்டம் இல்லாத தமிழர் அரசியல்:

இலங்கையில் தமிழ்த் தேசியவாத அரசியலின் முன்னோடிகளில் ஒருவரான ஜி.ஜி. பொன்னம்பலத்தின் புகழ்பெற்ற ‘ஐம்பதுக்கு ஐம்பது’  மற்றும் தமிழரசுக் கட்சியின் ‘சமஷ்டி’ ஆகிய இரு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு முக்கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டையில் முன்வைத்த தமிழீழத் தீர்மானத்திற்கு வயது அரை நூற்றாண்டு. தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்து பதினாறு வருடங்கள். 

மேற்சொன்னவற்றின் தொடர்ச்சியில், தமிழர்களுக்குத் தனிநாடு, தனிநாட்டுக்கான பொது வாக்கெடுப்பு, போர்க் குற்ற விசாரணை, இனப்படுகொலை விசாரணை, சுயாட்சி, கூட்டாட்சி, முழுமையான அதிகாரமுள்ள மாகாண சபைகள் என்றெல்லாம் தருணத்திற்கும் தமது விருப்புக்கும் ஏற்றவாறு தமிழ்த் தேசியவாதக் கட்சிகளாலும் குழுக்களாலும் புலம்பெயர்ந்த அமைப்புகளாலும் விதம்விதமான கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இவற்றில் ஏதாவதொன்றை அடைவதற்கான ஆக்கபூர்வமான, சாத்தியமான அரசியல் செயற்திட்டம் என எதையுமே இவர்கள் ஒருபோதும் மக்கள் முன்பு வைத்ததில்லை.

1974-இல் இருந்தே தனிநாடு என்ற கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கிய இலங்கை தமிழரசுக் கட்சியுடைய நாடாளுமன்ற உறுப்பினரான வி.தர்மலிங்கத்திற்கும் கம்யூனிஸ்ட் தலைவர்  நா. சண்முகதாசனுக்கும் இடையே 1975 ஆம் ஆண்டு  சுன்னாகத்தில் ஒரு பகிரங்க அரசியல் விவாதக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விவாதத்தில் ‘தனிநாட்டை அடைவதற்கான தமிழசுரக் கட்சியின் செயற்திட்டம் என்ன?’ என்று சண்முகதாசன் கேள்வி எழுப்பியபோது, தர்மலிங்கம் ‘அது கட்சியின் உயர்மட்ட இரகசியம்’ என்று பதிலளித்து நழுவிக் கொண்டார். தனிநாட்டை அடைவதற்கான அந்த ‘உயர்மட்ட இரகசியம்’ என்னவென்று இன்று வரை  யாருக்குமே தெரியாது. 

இப்போது பலவிதமான அரசியல் கோரிக்கைகளை எழுப்பிக்கொண்டிருக்கும்  தமிழ்த் தேசியவாத அரசியல்வாதிகளும்  அவற்றை அடைவதற்கான செயற்திட்டம் எதுவென மக்களுக்குத் தெளிவுபடுத்தாமலேயே தேர்தல்களில் வாக்குகளைச் சேகரித்து நாடாளுமன்றம் சென்று, ஒற்றையாட்சிக்கு விசுவாசமாகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டு சுகமாகக் காலத்தைக் கழித்து வருகின்றனர். இந்த நாற்காலிச் சுகவாசமும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியாது. 

தமிழ் மக்களின் சலிப்பு:

தமிழ்த் தேசியவாதக் கட்சிகளின் வெற்று முழக்கங்களாலும் செயலின்மையாலும் தமிழ் மக்கள் சலிப்படைந்துவிட்டார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ப் பகுதிகளில் அவர்களின் கணிசமான வாக்குகள் தமிழ்த்  தேசியவாதத்திற்கு முற்றிலும் எதிர்த் திசையில் நிற்கும் ‘தேசிய மக்கள் சக்தி’ வேட்பாளர்களுக்குக் கிடைத்தன. தனித் 

தமிழீழத்திற்கான தங்களுடைய செயற்திட்டத்தை உறுதியோடு மக்கள் முன்பு வைத்ததுடன் அதற்காக முனைப்போடும் அர்ப்பணிப்போடும் செயற்பட்டவர்கள் தமிழீழ ஆயுதப் போராட்ட இயக்கங்கள் மட்டுமே. 

தனிநாட்டை அடைவதற்கான வழி ஆயுதப் போராட்டமே என அறிவித்து 1970-களின் நடுப்பகுதியிலிருந்து அவர்கள் இயங்கத் தொடங்கினார்கள். ஏறத்தாழ முப்பது வருடங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் 2009-இல் விடுதலைப் புலிகளின் தோல்வியோடு முடிவுக்கு வந்தது. 

புலிகளுக்குப் பின்னான காலத்தில், சீமான் போன்ற தமிழகத்து நண்டுசிண்டுகளைத் தவிர வேறு யாருமே ஆயுதப் போராட்டம் குறித்துப் பேசுவதில்லை. முக்கியமாக, இலங்கைத் தமிழ்த் தேசியவாத அரசியல் பரப்பில் எந்தக் கட்சியோ, எந்தக் குழுவோ ஆயுதப் போராட்டம் குறித்துப் பேசுவதில்லை. இதுவொரு நல்ல விஷயமும்தான். இனி ஒரு போர் வேண்டாம்.

போருக்குப் பின்னரான காலத்தில், தமிழ்த் தேசியவாத அரசியல் கட்சிக்காரர்கள் தேர்தல் அரசியலில் பதவி நாற்காலிகளைக் கைப்பற்றத் தங்களுக்கிடையே மோதியவாறும் குழி பறித்தவாறும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். தருணத்திற்குத் தக்கவாறு ‘ஒரு நாடு இரு தேசங்கள்’ என்றோ ‘பதின்மூன்றாவது திருத்தச் சட்ட அமலாக்கம்’ என்றோ ஆளுக்கொரு இலட்சியத்தை முழங்குகிறார்கள்.  ஆனால், இவர்கள் முழங்கும் இந்த இலட்சியங்களை அடைய இவர்களிடம் எந்தச்  செயற்திட்டமும் கிடையாது என்பது மட்டுமின்றி இவர்கள் முழங்கும் இலட்சியங்களை அடைவதற்கு இவர்கள் உழைப்பதும் கிடையாது. 

விடுதலை இயக்கங்களின் ஆயுதப் போராட்ட வரலாற்றில் செய்யப்பட்ட தியாகங்களில் கோடியில் ஒரு பங்கையாவது இன்றைய தமிழ்த் தேசியவாத அரசியல்வாதிகள் செய்யப் போவதில்லை. மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களிலும் பொது நிகழ்வுகளிலும் இவர்களில் பலர் தமக்குள்ளேயே கெட்ட வார்த்தைகளில் திட்டிச் சண்டை போடுகிறார்கள். எதிராளியைத் திட்டும்போது சாதிய வசவுகளை வீசுகிறார்கள். எதிராளியின் குடும்பத்துப் பெண்களைக் கொச்சையாகப் பேசித் தூசணங்களைத் துப்புகிறார்கள். இவற்றுக்காக இவர்கள் ஒருபோதும் மன்னிப்புக் கேட்டதில்லை. இவர்கள் மீது கட்சிசார் ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதில்லை. தமிழ்த் தேசியவாத அரசியல் இன்று இத்தகைய அநாகரிகமானவர்களிடமும் அறிவிலிகளிடமும் சிக்கி மானபங்கப்படுகிறது. 

கேடுகெட்ட நிலை:

இலங்கை அரசியலில் தமிழ்த் தேசியவாதத்தை முன்னிறுத்திய முதலாவது அமைப்பான  ‘தமிழ் மகாஜன சபை’ 1921-இல் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கடந்துவந்த நூறாண்டு தமிழ்த் தேசியவாதக் கட்சி அரசியலில் இத்தகையை கேடுகெட்ட நிலை இதுவரை இருந்ததில்லை. 

இந்தக் கையறு நிலையில்தான்  தனபாலசிங்கம் தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம் குறித்துத் தனது நூலில் கேள்விகளை எழுப்புகிறார்.  இந்தக் கேள்விகளை வலிந்து தமிழ்த் தேசியத்திற்கு எதிர்நிலையில் நின்று அவர்  எழுப்பவில்லை. இடதுசாரி அரசியலின் வழியே தனபாலசிங்கம் உருவாகிவந்தவர். அவரது ஆதர்சமான  சண்முகதாசன் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தவர். 1989-இல் சண்முகதாசன் எழுதி வெளியிட்ட ‘ஒரு கம்யூனிஸ்டின் அரசியல் நினைவுகள்’ என்ற நூலில் ‘தமிழ் மக்களுக்குச் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பது ஶ்ரீலங்காவின் ஜனநாயகப் புரட்சியின் ஓர் அங்கமாகும்’ என்று சண்முகதாசன் எழுதினார். 

தேசம், தேசியவாதம் குறித்தெல்லாம் இன்றைய பின்நவீனத்துவ அறிதல் காலத்தின் எடுத்துரைப்புகள் தேசியவாதிகளின் கோட்பாடுகளிலிருந்து மட்டுமல்லாமல்  இடதுசாரிகளின் தேசியம் குறித்த கோட்பாடுகளிலிருந்தும் முற்றிலும் வேறானவை. முற்போக்குத் தேசியவாதம் என்றெல்லாம் ஏதும் கிடையாது .மாறாக, தேசியவாதமானது மற்றவைகளை விலக்கி வைக்கும் அல்லது எதிராக நிறுத்தும் கருத்தாக்கம் என்பது பின்நவீனத்துவ அணுகுமுறை. இவற்றையெல்லாம் மனதில் இருத்திக் கொண்டு நாங்கள்  தனபாலசிங்கத்தின் நூலுக்குள் நுழையலாம்.

 தமிழர்களின் தற்காப்பு  போராட்டங்கள்:

சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில், சிங்களப் பேரினவாதத்தை முன்னிறுத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தமிழ் மக்கள்  நடத்திய போராட்டங்கள் 1970-களின் நடுப்பகுதி வரை நாட்டுப் பிரிவினைக்கான போராட்டங்கள்  அல்ல. அவை சிறுபான்மை இனங்களின் உரிமைகளைத் தற்காத்துக் கொள்வதற்கான போராட்டங்கள் மட்டுமேயாகும்.

மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது, தனிச் சிங்களச் சட்டம், சிறுபான்மையினர் மீதான தொடர் இன வன்செயல்கள்  மற்றும்  1947 சோல்பரி அரசியலமைப்புச் சட்டத்தில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த 29 (2) சரத்து 1972-இல் இலங்கையின்  குடியரசு அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது அகற்றப்பட்டுச் சிங்கள மொழிக்கும் பவுத்த மதத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டது போன்ற பல்வேறு சிங்களப் பேரினவாதத் தாக்குதல்களிலிருந்து தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் தங்களைப் பாதுகாக்கத் தொடர் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. 

தொடர் தோல்விகள்:

உண்மையில் இந்தத் தொடர் போராட்டங்கள் தொடர் தோல்விகளாகவே சிறுபான்மை இனங்களுக்கு அமைந்தன. சிங்களப் பவுத்தப் பேரினவாதத்தின்  இருப்பையும் காட்டுத்தனமான வளர்ச்சியையும் சிறுபான்மை இனங்களாலோ அற்ப சொற்பமாயிருந்த சிங்கள முற்போக்கு இடதுசாரிகளாலோ தடுக்க முடியவில்லை. இன்றுவரை இதுவே நிலை. இவ்வாறு கெட்டி தட்டிப் போயிருக்கும் சிங்களப் பேரினவாத நிலையைத் தோலுரித்துக் காட்டும் கட்டுரையாகத் தொகுப்பு நூலின் முதலாவது கட்டுரையான ‘கறுப்பு ஜூலைக்கு பிறகு கடந்துவிட்ட 42 வருடங்கள் ‘ அமைந்துள்ளது.

1983 ஜூலையில், விடுதலைப் புலிகள் திருநெல்வேலியில் நடத்திய கெரில்லாத் தாக்குதலில் 13 இலங்கை இராணுவத்தினர் பலியான சம்பவத்தின் உடனடி எதிர்வினையே தமிழர்களுக்கு எதிரான ஜூலை வன்செயல்கள் என்ற கதையாடலைத் தனபாலசிங்கம் மறுக்கிறார்.  “13 இராணுவத்தினர் பலியான சம்பவம் அன்றைய அரசாங்கத்திற்குள் ஆதிக்கம் செலுத்திய சிங்கள இனவாதச் சக்திகள் நாடு பூராவும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்வதற்கு ஏற்கனவே திட்டமிட்டு  வைத்திருந்த வன்செயல்களைக் கட்டவிழ்த்துவிடுவதற்கு வாய்ப்பாக அமைந்தது” என்கிறார்  அவர். இதற்கான சான்றாதாரங்களையும், ஜூலை வன்செயல்களை நியாயப்படுத்தியது மட்டுமல்லாமால் அதை ஊக்குவிப்பது போலவும் அன்றைய அரசு செயற்பட்டதையும் எடுத்துக்காட்டுகளோடு தனபாலசிங்கம்  விவரிக்கிறார்.

ஜே.வி.பி.யும் இனப்பிரச்சினையும்:

1983-க்குப் பிறகு இலங்கையில் சிங்கள இனவாதம் மேலும் எவ்வாறெல்லாம் வளர்ந்து சென்றது என்பதைப் பேசும் தனபாலசிங்கம் கட்டுரையின் இறுதிப் பகுதியில், இன்றைய ‘தேசிய மக்கள் சக்தி’ அரசாங்கம் தேசிய இனப் பிரச்சினையைப் பற்றிப் பேசத் தயங்குவதை போலி முற்போக்காளர்கள் போன்று மவுனமாகக் கடக்காமல் உடைத்துப் பேசிவிடுகிறார். 

அவர் எழுதுகிறார் : “ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேசிய இனப் பிரச்சினை பற்றிப் பேசுவதற்குத் தயங்குகிறது. சகல சமூகங்களையும் இலங்கையர்களாக, சமத்துவமானவர்களாக நோக்கும் ஒரு அணுகுமுறையைப் பற்றி ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவும் அவரது அரசாங்கத் தலைவர்களும் பேசுகிறார்களே தவிர, உண்மையான பிரச்சினைக்கு முகங்கொடுக்கவோ அல்லது அதிகாரப் பரவலாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வைக் காண்பதில் நாட்டம் காட்டவோ அவர்கள் தயாராயில்லை. அவர்களும் இனவாதத்தின் கைதிகளாகவே இருக்கிறார்கள். புதிய அரசியலமைப்புக் கொண்டுவரப்படும் வரை தற்போதைய மாகாண சபைகள் முறை நடைமுறையில் இருக்கும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறுகின்றதே தவிர, அத்தகைய ஒரு புதிய அரசியலமைப்பபைக் கொண்டு வருவதற்கு முன்னதாக  13-வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாண சபைகளையாவது உருப்படியாகச் செயற்படவைக்கும் எண்ணம் அவர்களிடம் இல்லை. புதிய கலாசாரம், முறைமை மாற்றம் எல்லாமே வெற்றுச் சுலோகங்கள்தான்.”

நூறாண்டுகளாக விஷ விருட்சமாக வளர்ந்து நிற்கும் சிங்கள இனவாதத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் வீழ்த்த முடியாவிட்டாலும், இந்த அரசாங்கம் இனவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளாது என்று கணிசமான தமிழ் மக்களிடம் நம்பிக்கையுள்ளது. அந்த நம்பிக்கையைக் குறித்தும் தனபாலசிங்கம் கேள்வி எழுப்புகிறார். 

“வடக்கு, கிழக்கில் போரின் விளைவான அவலங்களிலிருந்து இன்னமும் விடுபட முடியாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடர்பாடுகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. போரின் முடிவுக்குப் பின்னரும் தமிழ்ப் பிரதேசங்களில் இராணுவமயத்தை வலுப்படுத்துவதிலேயே அரசாங்கங்கள் அக்கறை காட்டுகின்றன. தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகத்தில் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் அரசாங்க அனுசரணையுடன் திட்டமிட்ட குடியேற்றங்கள் மதவாதச் சக்திகளின் துணையுடன் தீவிரப்படுத்தப்படுவதையே காணக்கூடியதாக இருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சி, வனப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்புத் தேவைகள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு நடவடிக்கைகள் இன்று வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பாரதூரமான உடனடிப் பிரச்சினையாக இருக்கிறது” என்கிறார் தனபாலசிங்கம்.

இந்தக் கட்டுரையை அவர் இவ்வாறு முடிக்கிறார் : “கறுப்பு ஜூலைக்கும் உள்நாட்டுப் போருக்கும் வழிவகுத்த இனப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண வேண்டிய அவசியம் இருப்பதாகத் தென்னிலங்கை அரசியல் சமுதாயம் உணருவதாக இல்லை. தீர்வு முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாடு, இன்று மூன்றரை தசாப்தங்களுக்கும் கூடுதலான காலமாக அரசியலமைப்பில் இருந்துவரும் ஒரு  திருத்தத்தைக் கூட (13-ஆவது திருத்தச் சட்டம்) கைவிட வேண்டும் என்று தென்னிலங்கையில் போர்க்கொடி தூக்குகின்ற அளவுக்கு வலுவடைந்திருக்கிறது.”

13  வது திருத்தம்:

நூலின்  ஐந்தாவது கட்டுரையில், பதின்மூன்றாவது சட்டத் திருத்தம் குறித்து ஜே.வி.பி-யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியிருப்பதைத் தனபாலசிங்கம் சுட்டிக் காட்டுகிறார் : “13-ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தமிழ் மக்களுக்கு அவசியமில்லை. அவர்களுக்குப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கே தீர்வு அவசியமாகிறது. தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமே தங்களது அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக 13-ஆவது திருத்தத்தையும் அதிகாரப் பரவலாக்கத்தையும் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் ரில்வின் சில்வா. அவரின்  கருத்துத்தான் தென்னிலங்கை அரசியலாளர்களின் பெரும்பான்மையான கருத்தாக இருக்கிறது. தென்னிலங்கையின் முற்போக்குகளும் கலைஞர்களும் கூட விதிவிலக்கில்லை. 

நான் ஜே.வி.பி. உறுப்பினர்களுடனும் ஆதரவாளர்களுடனும் தனிப்பட விவாதித்த பல்வேறு தருணங்களிலும் அவர்கள் இதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். பொருளாதாரப் பிரச்சினையே முதன்மைப் பிரச்சினை என்கிறார்கள். இனங்களுக்கு இடையேயான அதிகாரப் பரவலாக்கத்தை மூர்க்கமாக மறுக்கிறார்கள்.

பொருளாதாரப் பிரச்சினை இலங்கையில் எப்போதும்தான் இருந்தது. இனியும் இருக்கத்தான் போகிறது. 

குறிப்பாக, இன்றைய உலகமயமாக்கல் பொருளியல் சூழலில் இலங்கையைப் போன்ற அனைத்து மூன்றாம் உலக நாடுகளும் கடுமையான பொருளாதாரப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாட்டின் தேசிய வருவாயையும் பொதுத் துறைகளையும்  பன்னாட்டு நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு, உலக வங்கியிடமும் சர்வதேச நாணய நிதியத்திடமும் கையேந்தித்தான் நிற்க வேண்டும். அவற்றின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு மக்கள்மீது வரிச் சுமையை ஏற்ற வேண்டியிருக்கிறது. மானியங்களையும் சமூக நலத் திட்டங்களையும் இலவசங்களையும் இல்லாமல் செய்ய வேண்டியிருக்கிறது. 

இந்த உலகமயமாக்கல் பொருளாதாரச் சுழலிலிருந்து இலங்கையைப் போன்ற மூன்றாம் உலக நாடுகள் மீள்வது எப்போது என்ற கேள்விக்கு யாருக்குமே விடை தெரியாது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் தெரியாது. இந்தப் பொருளாதாரப் பிரச்சினையைக் காரணமாகக் காட்டி, சிறுபான்மை இனங்களின் உரிமைப் பிரச்சினைகளைப் பேச மறுப்பதும் தட்டிக் கழிப்பதும் சிங்கள இனவாதத்தின் இன்னொரு பரிமாணமேயாகும். நீண்ட காலமாகச் சிறுபான்மை மக்கள் எழுப்பிவரும் நீதியான சமவுரிமைக் கோரிக்கைகளை பேரினவாத நிலைப்பாட்டோடு நிராகரிப்பதாகும்.

நூலின் இரண்டாவது கட்டுரையின் தலைப்பு ‘பதின்மூன்றாவது திருத்தத்தைத் தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?’ என்பதாகும். 1987-இல் உருவாக்கப்பட்ட இலங்கை – இந்திய சமாதான  ஒப்பந்தத்தை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டு, இலங்கை அரசியலமைப்பில் செய்யப்பட்ட திருத்தமே 13-ஆவது திருத்தச் சட்டமாகும். இது அரசியல் அதிகாரங்களை இலங்கையிலுள்ள ஒன்பது மாகாண சபைகளுக்கும் பகிர்ந்தளிக்கும் அரசியலமைப்புச் சட்டமாகும். இந்தச் சட்டம் காணி – காவல்துறை அதிகாரம் இன்றி அரைகுறையாகவே இலங்கை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. முழுமையான அதிகாரங்கள் இன்றியே மாகாண சபைகள் இயங்கின. 

13-வது திருத்தச் சட்டத்தில் உள்ளபடி மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்களைத் தமிழ் தேசியவாத அரசியலாளர்களில் ஒரு பகுதியினர் கோருகிறார்கள்.  நூலாசிரியர் தனபாலசிங்கத்தின் கோரிக்கையும் இதுவாகவே இருக்கிறது. அவர் எழுதுகிறார்: “13-ஆவது திருத்தம் போதுமானது என்று யாருமே வாதிடவில்லை. தமிழர் அரசியல் சமுதாயம் அதன் வரலாற்றில் மிகவும் மோசமாகப் பலவீனமடைந்து சிதறுப்பட்டிருக்கும் நிலையில் அதுவும் இல்லாமல் போனால் நிலைமை என்ன? அந்தத் திருத்தத்தைக் காப்பாற்றாமல் மேலும் கூடுதலான அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடுகளைப் பற்றியோ அல்லது சமஷ்டித் தீர்வு பற்றியோ பேசுவதில் உண்மையில் அர்த்தமில்லை.”

மாகாண சபை முறைமையை விடுதலைப் புலிகள் மூர்க்கமாக நிராகரித்தார்கள் என்பது உண்மை. அதற்குப் பதிலாக அவர்கள் தனிநாடு என்ற இலக்கை முன்வைத்தார்கள். அந்த இலக்கை அடைவதற்கு அவர்கள் ஆயுதப் போராட்டத்தை நடத்தினார்கள். ஆனால், இன்று மாகாண சபை முறைமையை நிராகரிக்கும் ஒருசில தமிழ்த் தேசியவாதத் தரப்புகள் அதற்கு மாற்றாக முன்வைக்கும் தீர்வுகளை அடைவதற்கான செயற்திட்டமாகவும் போராட்ட வழியாகவும் எவற்றைத்தான் முன்னிறுத்துகிறார்கள்? எதுவுமே இல்லை. 

ஐக்கிய நாடுகள் சபை  அல்லது சர்வதேசச் சமூகம் இலங்கையில் தலையீடு செய்து தமிழர்களுக்குத் தீர்வைப் பெற்றுத்தரும் என்பது போன்ற பேச்சுகள்  அப்பாவித்தனமான கற்பனாவாதம் மட்டுமே.ஐ.நா. சபையோ  அல்லது சர்வதேசச் சமூகமோ  ‘மனிதவுரிமைகள் கண்காணிப்பு’ என்பதைத் தாண்டி இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கான அரசியல் உரிமைகள் குறித்த பிரச்சினைகளில் தலையீடு செய்யப் போவதில்லை. அதற்கான எந்தச் சிறு அறிகுறியும் கடந்த 16 வருடங்களில் தெரியவில்லை.

இந்தியாவின் நிலை:

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முன்னின்று உருவாக்கிய இந்திய அரசு 13-ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கடந்த காலங்களில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்தது உண்மைதான். எனினும், கடந்த முப்பத்தெட்டு வருடங்களாக அந்த அழுத்தம் வெற்றியளிக்கவில்லை. இன்று இந்தியா 13-ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு   இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதில்லை என்பதைத் தனபாலசிங்கம் நூலில் விரிவாகவே விளக்குகிறார். “இலங்கையில் தனது பொருளாதார மற்றும் மூலேபாய நலன்களைப் பேணிக் காப்பதற்கு பயன்படுத்தக் கூடிய ஒன்றாக தமிழர் பிரச்சினையைக் கருதும் நிலையில் இந்தியா இனிமேலும் இல்லை” என்கிறார் அவர். 

முழுமையான அதிகாரங்களை உள்ளடக்கிய மாகாண சபைகள் முறைமை  வேண்டும், அதுவே இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் சாத்தியமான முதற்படி என்பதை நூலின் பல இடங்களிலும் தனபாலசிங்கம் அழுத்தமாக எழுதிச் செல்கிறார். “அரசாங்கம் கொண்டு வரவிருப்பதாகக் கூறுகின்ற புதிய அரசியலமைப்பில் 13-ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களும் உள்ளடக்கப்பட வேண்டுமானால் முதலில் தமிழர் அவை தங்களுக்கு வேண்டுமென்று உறுதியாக நிற்க வேண்டும். தற்போதைய நிலவரம் வேண்டி நிற்பதற்கு இணங்க நிதானமாகச் சிந்தித்துச் செயற்படுவதற்கு இனிமேலும் தவறினால், இறுதியில் இலங்கைத் தமிழ் மக்கள் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாத இழப்புகள், தியாகங்களுக்குப் பின்னரும் கூட எதையுமே பெற முடியாத ஒரு மக்கள் கூட்டமாக விடப்படும் ஆபத்து இருக்கிறது” என்கிறார்.

மாகாண சபைகளை விடுதலைப் புலிகள் மட்டும் நிராகரிக்கவில்லை. இன்றைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய சக்தியான ஜே.வி.பியும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையும் மகாண சபைகளையும் கடுமையாக எதிர்த்தது. இவற்றை எதிர்த்துத்தான் ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சி  1987-இல் தொடங்கி இரத்த ஆறு ஓடியது. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையும் மாகாண சபைகளையும் ஏற்றுக்கொண்ட பல சிங்கள அரசியல்வாதிகளை ஜே.வி.பி. படுகொலை செய்தது. படுகொலை அரசியலிலிருந்து பின்பு ஜே.வி.பி. மீண்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்பினாலும் 13-ஆவது திருத்தச் சட்டம் குறித்த அவர்களது எதிர்ப் பார்வைகள் இன்றுவரை மாறவில்லை. 

எனவே, முழுமையாக அதிகாரமளிக்கப்பட்ட மாகாண சபைகளை இன்றைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்றே நான் கருதுகிறேன்.  அரசாங்கம் சொல்வது போன்று புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும், இனங்களுக்கிடையே அதிகாரப் பரவலாக்கல் சாத்தியமில்லை என்பதற்கான அறிகுறியே ரில்வின் சில்வாவின் பேச்சிலிருந்து தெரிகிறது. 

இனவாதமும் மதவாதமும்:

நூலின் மூன்றாவது கட்டுரையில் தனபாலசிங்கம் “இலங்கையில் இனவாத அரசியலும் மதத் தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று இடையறாது சூளுரைத்துவரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத் தலைவர்கள் அதே இனவாதமும் மதவாதமும் தோற்றுவித்த நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணாமல் ஒருபோதும் அந்த இலட்சியத்தை அடைய முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார். 

அரசாங்கத் தலைவர்கள் மட்டுமல்லாமல் முழு இலங்கை மக்களும் இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். 13-வது திருத்தச் சட்டம் என்பது இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அதை முழுமையாக  நடைமுறைப்படுத்துவது   நீண்டகால இனப் பிரச்சினையைத்  தீர்ப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் என்பதை இன்றைய அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். உருவாக்கப் போவதாகச் சொல்லப்படும் புதிய அரசியலமைப்பில் இதைவிடச் சிறப்பான தீர்வு ஒன்றிருந்தால் நல்லதே. ஆனால், அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

நூலின் கடைசிக் கட்டுரையில் தனபாலசிங்கம் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஜே.வி.பி.யின் முன்னாள் பொதுச் செயலாளர்  லயனல் போபகேயை மேற்கோள்காட்டி  இவ்வாறு எழுதுகிறார் : “அதிகாரப் பரவலாக்கம், ஆட்சிமுறையில் சகல சமூகங்களின் பங்கேற்பையும் உறுதி செய்வதற்கான ஒரு வழிமுறையே தவிர, தேசிய ஒருமைப்பாட்டுக்கான அச்சுறுத்தல் அல்ல. அதிகாரப் பரவலாக்கத்தைப் பிரிவினைவாத நோக்கம் கொண்டதாகச் சிங்களப் பகுதிகளில் பலர் கருதுகிறார்கள். ஆனால், உண்மையில் அது கல்வி, சுகாதாரம், நிலம், மற்றும் நிருவாகம் போன்ற துறைகளில் மக்கள் தாங்களாகவே தீர்மானங்களை எடுக்க வழிவகுக்கும் ஒரு ஏற்பாடாகும்.”

அதிகாரப் பரவலாக்கமானது பிரிவினைவாத நோக்கம் கொண்டது எனச் சிங்களப் பகுதிகளில் மட்டுமல்ல, தமிழ்ப் பகுதிகளிலும் கருதும் சிந்தனைச் சிற்பிகள் உண்டு. மையத்திலிருக்கும் அதிகாரம் விளிம்புகளுக்குப் பகிரப்பட வேண்டும் என்றெல்லாம் நுண் அரசியல் பேசிக் கிழிக்கும் இவர்கள் சிறுபான்மை இனங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்றால் மட்டும் முகத்தைச் சுழிக்கிறார்கள். காஸாவுக்காகக் கண்ணீரும் முள்ளிவாய்க்காலுக்காக ராஜபக்சக்களுக்கு நன்றியும் தெரிவிக்கும் இரட்டை நாக்குப் பேர்வழிகள் இவர்கள்.

நூலில் தமிழ்த் தேசியவாதக் கட்சிகளைப் பல்வேறு இடங்களிலும் தயவு தாட்சணியமின்றித் தனபாலசிங்கம் கண்டித்திருக்கிறார். அவர்களது தவறான அரசியல் நோக்குகளையும் செயலின்மையையும் கடுமையாகச் சாடுகிறார். “தமிழ் அரசியல்வாதிகளில் பலர் மக்களிடமிருந்து தாங்கள் தனிமைப்பட்டதைப் பற்றிச் சிந்திக்காமல் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள குறிப்பிட்ட சில சக்திகளைத் திருப்திப்படுத்தும் அரசியல் வழிமுறைகளில் அக்கறை காட்டுகிறார்கள்” என மிகச் சரியாகவே அவர்  குறிப்பிடுகிறார்.

புலம்பெயர் தமிழர்களின் அரசியல்: 

தமிழ்த் தேசியவாத அரசியல் என்னும்போது, புலம்பெயர் தமிழ்த் தேசியவாத அரசியலைக் குறித்தும் பேசாமல் இருக்க முடியாது. ஏனெனில், அந்த அரசியல் அவ்வளவுக்கு அநியாயங்களையும் நகைச்சுவைகளையும் செய்திருக்கிறது. ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ போன்ற பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியுள்ளது. கள நிலவரம் அறியாது தங்களது விருப்புகளை இலங்கையிலுள்ள தமிழ் மக்கள்மீது சுமத்த அது  முயற்சிக்கிறது. மேற்கு நாடுகள் முன்வந்து ஈழத் தமிழர்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என்ற கற்பனை அரசியலைச் செய்கிறது. 

இந்த மேற்குசார் அரசியலில் அதிருப்தி அடைந்த ஒருபகுதிப் புலம்பெயர் தமிழ்த் தேசியவாதிகள் கிழக்கு நோக்கி நகர்ந்து ‘நாம் தமிழர்’ கட்சி தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றி விட்டால் ஈழம் மலர்ந்துவிடும் என்றெண்ணித் திரள்நிதி அளித்துக்கொண்டிருக்கிறார்கள். 

நூலில் தனபாலசிங்கம் முத்தாய்ப்பாக எழுதுகிறார்:

“உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னான இன்றைய காலப்பகுதியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலவரங்களுக்கு இசைவான முறையில் நடைமுறைச் சாத்தியமான கொள்கைகளுடனும் அணுகுமுறைகளுடனும் தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை விவேகமான முறையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தக் கூடிய அரசியல் தலைமைத்துவம் தமிழர்கள் மத்தியில் இன்று இல்லை என்பது பெரும் கலைக்குரியது.”

நீண்டகாலப் பத்திரிகை அனுபவத்தினூடே தனபாலசிங்கம் வசப்படுத்திக்கொண்ட எளிமையும்  துல்லியமும் இயைந்த மொழி இத்தொகுப்பைத் தங்குதடையின்றி வாசிக்க வைக்கின்றது. தேவையற்ற ஒரு சொல் கூட இல்லாமல் மிகக் கச்சிதமாகக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நூல் வெளியீட்டுக் கூட்டத்தில் நூலாசிரியர்  தனபாலசிங்கம் பேசும்போது “நான் இந்த நூலில் சித்தாந்தம் எதுவும் பேசவில்லை. எனது ஆதங்கத்தையும் துயரையும் தெரிவிக்கவே இதை எழுதினேன்” என்றார். இலங்கைத் தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் எதிர்காலத்தைக் குறித்து நேர்மையான அக்கறையுள்ள எவரையும் நூலின் வழியே தனபாலசிங்கத்தின் ஆதங்கமும் துயரும் தொற்றவே செய்யும்.

https://arangamnews.com/?p=12592

கேள்விக்கு உள்ளாகியிருக்கும் உலக நாடுகளின் பாதுகாப்பும் இறைமையும்

1 week 4 days ago

கேள்விக்கு உள்ளாகியிருக்கும் உலக நாடுகளின் பாதுகாப்பும் இறைமையும்

January 15, 2026

கேள்விக்கு உள்ளாகியிருக்கும் உலக நாடுகளின் பாதுகாப்பும் இறைமையும்

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

தனது முதலாவது பதவிக் காலத்தில் (2016 — 2020) வெளிநாடுகளில் சண்டையிடுவதற்காக  ஒரு அமெரிக்கப் படைவீரனைக் கூட அனுப்பவில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் பெருமைப்பட்டதை எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. இரண்டாவது தடவையாக வெள்ளை மாளிகைக்குள் 2025   ஜனவரியில் பிரவேசித்த பிறகு பத்துமாத காலத்திற்குள் உலகில்  எட்டுப் போர்களை தடுத்து நிறுத்தியதற்காக தனக்கு நோபல் சமாதானப்பரிசு வழங்கப்பட வேண்டும் என்று  அவர் தானாகவே கேட்டார். அந்தப் பரிசு தனக்கு கிடைக்காது என்பதும் அவருக்கு தெரிந்திருந்தது.  

இரண்டாவது பதவிக் காலத்தின் தொடக்கத்தில் இருந்தே அவர் நாடுகளை ஆக்கிரமிப்பது குறித்து பேசிவந்திருக்கிறார்.  எந்தவிதமான  பிரச்சினையையும்  தோற்றுவிக்காத அயல் நாடான  கனடாவை அமெரிக்காவின் 51 வது மாநிலமாக்குவது குறித்தும் டென்மார்க்கிற்கு சொந்தமான  கிறீன்லாந்து தீவையும் பனாமா கால்வாயையும் கைப்பற்றுவது குறித்தும்  அவர் பேசினார்.  இஸ்ரேல் பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்வதை ஆதரித்த ட்ரம்ப்  காசாவில் இருந்து மக்களை வெளியேற்றிவிட்டு அந்தப் பள்ளத்தாக்கை உல்லாசக் கடற்கரையாக மாற்றுவதற்கான தனது விருப்பத்தையும்  வெளிப்படுத்தினார். 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதில் ட்ரம்புக்கு எந்த தொடர்பும்  கிடையாது என்று புதுடில்லி திட்டவட்டமாக மறுத்த போதிலும், இதுவரையில் அவர் எழுபதுக்கும் அதிகமான  தடவைகள் தெற்காசியாவின்  இரு அணுவாயுத நாடுகளும் போரை கைவிட்டதற்கு தானே காரணம் என்று கூறியதாக  சர்வதேச ஊடகங்கள் அறிவித்தன. தன்னை ஒரு சமாதான விரும்பி என்று காண்பித்த அதேவேளை,  ட்ரம்ப் நைஜீரியா, சோமாலியா, ஈராக், சிரியா, யேமன்  மற்றும் ஈரான் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தினார். 

தற்போது புத்தாண்டு பிறந்து மூன்று நாட்களில்  தென்னமெரிக்க நாடான வெனிசூலாவில் இரவோடிரவாக குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்திய ட்ரம்ப்,  ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் அமெரிக்காவுக்கு கடத்திச் சென்று தடுத்து  வைத்திருக்கிறார்.      ‘போதைப்பொருள் பயங்கரவாத இயக்கம்’ ஒன்றுக்கு தலைமை தாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு மதுரோ நியூயோர்க் நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டிருக்கிறார். 

வெனிசூலாவில் தலையீடு செய்வதற்கு தன்னை அமெரிக்காவின் அரசியலமைப்பு அனுமதிப்பதாக கூறியிருக்கும் ட்ரம்ப், அமெரிக்க படைகளின் பிரதம தளபதி என்ற வகையில் அமெரிக்கர்களை பாதுகாப்பது தனது கடமை என்று வாதிடுகிறார். ஆனால்,  அமெரிக்காவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை வெனிசூலா தோற்றுவித்தது என்று புத்திசுவாதீனமான எவரும் கூறமாட்டார்கள். அத்துடன் மதுரோ போதைப்பொருள் கடத்தல் குழுமம் ஒன்றை நடத்திவந்தார் என்பதற்கு ட்ரம்ப் நிருவாகம் நம்பகத்தன்மையான சான்று எதையும் உலகின் முன் வைக்கவுமில்லை. 

வெனிசூலா மீது ட்ரம்ப் தனது முதலாவது பதவிக்காலத்திலேயே  கண்வைத்தார். ஜனாதிபதி மதுரோவுக்கும் அவரது உயர்மட்ட உதவியாளர்களுக்கும் எதிராக  முதலில் 2019 ஆம் ஆண்டில்  போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அமெரிக்காவில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. எதிர்க்கட்சி அரசியல்வாதியான பாராளுமன்ற சபாநாயகர் ஜுவான் குவாய்டோவையே வெனிசூலாவின் பதில் ஜனாதிபதியாக அமெரிக்காவும் அதன் மேற்குலக நேசநாடுகளும் அங்கீகரித்தன.

ட்ரம்ப் கடந்த வருடம் ஜனவரியில் மீண்டும் அதிகாரத்துக்கு வந்த பிறகு அவரது வெளியுறவுக் கொள்கையில் வெனிசூலாவுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. மதுரோவை உலகில் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் மன்னர்களில் ஒருவர் என்று குற்றஞ்சாட்டிய அமெரிக்கா  ‘போதைப் பொருளுக்கு எதிரான  போர்’ ஒன்றைப் பிரகடனம் செய்தது. மதுரோவை கைது செய்வதற்கு உதவக்கூடிய தகவல்களை தருவோருக்கு  50  மில்லியன் அமெரிக்க டொலர்கள்  சன்மானம் வழங்கப்படும் என்றும் ட்ரம்ப் நிருவாகம் அறிவித்தது. 

 கரிபியன் பிராந்தியத்துக்கு ஆயிரக்கணக்கான துருப்புக்களையும் போர்க் கப்பல்களையும் அனுப்பிய ட்ரம்ப் நிருவாகம் போதைப் பொருளைக் கடத்திச் செல்லும் படகுகள் மீது விமானத்  தாக்குதல் நடத்தியதாக கூறிய போதிலும்,  உண்மையில் நூற்றுக்கணக்கான குடிமக்களே கொல்லப்பட்டார்கள். 

வெனிசூலாவுக்குள் இரகசிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ.க்கு அதிகாரமளித்த ட்ரம்ப் அந்த நாட்டில் இருந்து எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்துக்கு தடை விதித்தார். தடை செய்யப்பட்ட எண்ணெயை ஏற்றிச் சென்றதாக கடந்த வெள்ளிக்கிழமை வரை ஐந்து கப்பல்களை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியதாக அறிவிக்கப்படுகிறது. 

தனக்கு வரப்போகின்ற ஆபத்தை உணர்ந்து கொண்ட மதுரோ அமெரிக்காவுடன் ‘அக்கறையுடனான பேச்சுவார்த்தைகளை’ நடத்த  விரும்புவதாக அறிவித்ததற்கு மறுநாளான ஜனவரி 3  வெனிசூலாவின் தலைநகர் மீது   கடுமையான குண்டுத் தாக்குதல்களை நடத்திய அமெரிக்கப் படைகள்   மதுரேவையும் மனைவியையும் கைது செய்து நியூயோர்க்கிற்கு கடத்திச் சென்றன. 

ஆனால், பரவலாக எதிர்பார்க்கப்பட்டதை போன்று வெனிசூலாவின் இராணுவக் கட்டமைப்புக்களோ அரச இயந்திரமோ நிலை குலையவில்லை இராணுவ ஆக்கிரமிப்பை கண்டனம் செய்த அரசாங்கம் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தது. கடந்த வருடத்தைய நோபல் சமாதானப் பரிசைப் பெற்றவரான வெனிசூலாவின் வலதுசாரி எதிர்க்கட்சி தலைவியான மறியா கொறினா மச்சாடோ அமெரிக்க ஜனாதிபதியின் கொள்கைகளை முற்று முழுதாக ஆதரித்து வருகின்ற  போதிலும், அவர் நாட்டை ஆட்சி செய்வதற்கு தேவையான மக்கள்  ஆதரவையும் மதிப்பையும்  கொண்டவரல்ல என்று அமெரிக்க ஜனாதிபதி நிராகரித்துவிட்டார். 

வெனிசூலா உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் துணை ஜனாதிபதி டெல்சி றொட்ரிக்கஸ் மறுநாளே பதில் ஜனாதிபதியாக பதவியேற்றார். அமெரிக்காவுடன் ஒத்துழைக்க மறுத்தால் டெல்சி பாரிய விலையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று ட்ரம்ப் உடனடியாகவே எச்சரிக்கை செய்தார்.  பொருளாதார நெருக்கடி மற்றும் எதேச்சாதிகார ஆட்சிமுறை காரணமாக மதுரோவின் அரசாங்கம் மீது வெனிசூலா மக்களில் பெரும்பாலானவர்கள்  வெறுப்புக் கொண்டிருந்தார்கள்  என்பது உண்மை. 

ஆனால், இறைமையுடைய ஒரு  நாட்டின் தலைவரை கடத்திச் செல்வதற்கு அமெரிக்காவுக்கு எந்த அருகதையோ அல்லது அதிகாரமோ கிடையாது.  தவறான ஆட்சி மற்றும்  அடக்குமுறைக்காக  வெளிநாட்டுத் தலைவர்களை கடத்திச் சென்று சிறைவைப்பதே ட்ரம்பின் வேலையாக இருக்குமானால், அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ ஆதரவுடன் அதிகாரத்தில் இருக்கும் சிலர்  உட்பட அத்தகைய  ஆட்சியாளர்களின்  நீண்ட பட்டியலில் இருந்து அவர் தெரிவுகளைச் செய்ய வேண்டியிருக்கும். 

 தான் விரும்பும்வரை வெனிசூலாவை அமெரிக்கா  நிருவகிக்கும் என்றும் அதன் பாரிய எண்ணெய் வளங்களைப் பயன்படுத்தப் போவதாகவும்  ட்ரம்ப் வெளிப்படையாகவே பிரகடனம் செய்கிறார்.  சிறையில் இருக்கும் மதுரோவின் விசுவாசிகளினால் நிருவகிக்கப்படும் இடைக்கால அரசாங்கம் அமெரிக்கா தனக்கு அவசியமானது என்று உணருகின்ற சகலதையும் தருகிறது. வெனிசூலாவின் எண்ணெய்த் தொழிற்துறையை அமெரிக்கா இலாபகரமாக மீளக்கட்டியெழுப்பும்  என்றும் அந்த நாட்டுக்கு அவசியமாகத் தேவைப்படுகின்ற பணம் வழங்கப்படும் என்றும் அவர் கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நியூயோர்க் ரைம்ஸுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருக்கிறார். 

தென்னமெரிக்காவிலும் கரிபியன் பிராந்தியத்திலும் இரு நூற்றாண்டுகளுக்கும் அதிகமான காலமாக தலையீடுகளைச் செய்த நீண்ட வரலாற்றை அமெரிக்கா கொண்டிருக்கிறது. ஆனால்,  வெனிசூலா மீது ஜனவரி 3  நடத்தப்பட்ட விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்களே தென்னமெரிக்க நாடொன்றின் மீதான  அமெரிக்காவின் முதன் முதலான நேரடியான  இராணுவ தாக்குதலாகும்.  19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து அமெரிக்க கண்டத்தின் அயல்நாடுகளில் அமெரிக்கா பொருளாதார நெருக்குதல்கள் ஊடாக மாத்திரமல்ல,  படையெடுப்புக்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்கள் என்று இராணுவ ரீதியாகவும் தலையீடுகளைச் செய்து வந்திருக்கிறது. 

வெனிசூலாவில் கடந்தவாரம் அமெரிக்கா  மேற்கொண்ட இராணுவ  நடவடிக்கை 1989  ஆம் ஆண்டில் பனாமா நாட்டின் சர்வாதிகாரி மனுவேல் நொறீகாவைக் கைதுசெய்த நடவடிக்கையை நெருக்கமாக ஒத்ததாக இருக்கிறது.  முன்னர் சி.ஐ.ஏ.யின்  நண்பராக  விளங்கிய நொறீகாவை கைது செய்வதற்காக பனாமாவை ஆக்கிரமிப்பதற்கு அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்  சுமார் 27 ஆயிரம் துருப்புக்களை அனுப்பினார். அவரைக் கைதுசெய்து அமெரிக்காவுக்கு கொண்டுசென்று  இன்று மதுரோவுக்கு  ட்ரம்ப்  செய்ததைப் போன்று போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றங்களில்  புஷ் நிருவாகம் நிறுத்தியது. 

 பிரேசில், சிலி மற்றும் ஆர்ஜன்டீனா போன்ற நாடுகளில் ஜனநாயக ரீதியாக  மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்களை பதவி கவிழ்த்து இராணுவ சர்வாதிகாரிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு  அமெரிக்கா உதவிய போதிலும்,  தென்னமெரிக்காவிலும் கரிபியனிலும் வெளிப்படையான இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா  வரலாற்று ரீதியாக அதன் நெருங்கிய அயல் நாடுகளுடன் மாத்திரம்  மட்டுப்படுத்தியே வந்திருக்கிறது.   ஆனால்,  தற்போது தென்னமெரிக்க நாடொன்றின் மீது  நடத்தப்பட்ட நேரடியான  இராணுவத் தாக்குதல் அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளில் ஏற்பட்டிருக்கும் முக்கியமான மாற்றத்தைக் குறித்து நிற்கிறது எனலாம்.

அமெரிக்காவுக்கு பாரதூரமான எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தலையும் தோற்றுவிக்காத வெனிசூலாவில் எதற்காக ஆட்சி மாற்றத்தை ட்ரம்ப் விரும்புகிறார்?  அந்த நாடு  பெரியளவில் போதைப்பொருட்களை உற்பத்தி செய்கின்ற ஒரு நாடுமல்ல. அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு மூன்று முக்கிய காரணங்களை  சர்வதேச அரசியல் அவதானிகள் அடையாளம் காண்கிறார்கள். 

முதலாவதாக,  உலகின் மேற்கு அரைக் கோளத்தில் (Western Hemisphere) அமெரிக்காவின் முதன்மையை  மீண்டும் திணிப்பதற்கு ட்ரம்ப் விரும்புகிறார். அமெரிக்காவின் ஐந்தாவது ஜனாதிபதியான ஜேம்ஸ் மொன்றோ அமெரிக்க கண்டத்தின் நாடுகளில் எதிர்காலத்தில்  ஐரோப்பிய வல்லரசுகள் தலையீடுகளைச் செய்யாமலும் காலனித்துவ ஆதிக்கத்தைச் செலுத்தாமலும்  இருப்பதை உறுதிசெய்வதற்காக ஐரோப்பிய விவகாரங்களில் அமெரிக்கா தலையிடாது என்று 1823  ஆம் ஆண்டில் உறுதியளித்து  பிரகடனம் ஒன்றைச் செய்தார். அதுவே மொன்றோ கோட்பாடு (Monroe Doctrine) என்று அழைக்கப்பட்டது. 

அந்த கோட்பாட்டின் வழியில் தற்போது அமெரிக்க நாடுகளை அமெரிக்காவின் செல்வாக்குப் பிராந்தியமாக வைத்திருப்பதில் ட்ரம்ப் நாட்டம் கொண்டிருக்கிறார். அண்மையில் அவரது நிருவாகத்தினால் வெளியிடப்பட்ட ‘தேசிய பாதுகாப்பு கோட்பாடு’ (National Security Doctrine) லத்தீன் அமெரிக்காவையும் கரிபியன் பிராந்தியத்தையும் மூலோபாய முன்னுரிமைக்குரியவையாக அடையாளம் காண்கிறது. இதற்கு  அமெரிக்க ஊடகங்கள் ‘டொன்றோ கோட்பாடு’ (Donroe Doctrine) என்று வேடிக்கையாக பெயர் சூட்டியிருக்கின்றன. 

லத்தீன் அமெரிக்காவில் வெளிப்பிராந்தியத்தைச் சேர்ந்த வல்லரசுகளின் (பிரதானமாக  சீனா) செல்வாக்கை அல்லது கட்டுப்பாட்டை அமெரிக்கா நிராகரித்து அதன்  அரசியல்,  பொருளாதார மற்றும் இராணுவச் செல்வாக்கின் கீழ் மேற்கு அரைக்கோளத்தை வைத்திருக்க  வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு கோட்பாட்டு ஆவணம் வலியுறுத்துகிறது.

இரண்டாவதாக,  அமெரிக்காவின் முதன்மைக்கு வலுவூட்டுகின்ற அதேவேளை, மேற்கு அரைக்கோளத்தில் சீனாவினதும் ரஷ்யாவினதும் செல்வாக்கை தடுக்கவும் ட்ரம்ப் நிருவாகம் விரும்புகிறது. சீனா ஏற்கெனவே அதன் மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் ஊடாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் பாரிய முதலீடுகளைச் செய்திருக்கிறது. பிராந்தியத்தின் பெரும்பாலான நாடுகளின் மிகப்பெரிய அல்லது  இரண்டாவது பெரிய  வர்த்தகப் பங்காளியாகவும்  சீனா விளங்குகிறது 

மூன்றாவதாக, லத்தீன் அமெரிக்காவின் பெரும்பாலான நாடுகளில் ஆட்சியில் இருக்கும் இடதுசாரிப் போக்குடைய தலைவர்களுக்கு  பதிலாக தீவிர வலதுசாரிகளை அதிகாரத்துக்கு கொண்டுவருவதற்கும் அமெரிக்கா விரும்புகிறது.  மதுரோவின் கைதுக்குப் பிறகு செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய ட்ரம்ப் ‘மேற்கு அரைக் கோளத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கம் மீண்டும் ஒருபோதும் கேள்விக்கு உட்படுத்தப்படமாட்டாது’  என்று கூறியது கவனிக்கத்தக்கது.

வெனிசூலா மீது மேற்கொண்ட தாக்குதல் மூலமாக அமெரிக்கா மற்றைய நாடுகளின் இறைமையையும் பாதூகாப்பையும்  கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. அரசுகள் அவற்றின் நிலப்பரப்பு உரிமைக் கோரிக்கைகளுக்காகவோ அல்லது அரசியல் கோரிக்கைகளுக்காகவோ படைபலத்தைப் பிரயோகிக்கக்கூடாது என்று கடந்த நூற்றாண்டில் இரு உலகப்போர்களின் பயங்கரங்களுக்கு பிறகு இணங்கிக்கொள்ளப்பட்ட  சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டை  அமெரிக்கத் தாக்குதல் வலுவிழக்கச் செய்திருக்க்கிறது என்றும்  மோதல்களைத் தவிர்ப்பதற்காக உலகிடம் இருக்கும் ஒரேயொரு பொறிமுறையான ஐக்கிய நாடுகளை அமெரிக்காவின் நடவடிக்கை மோசமாகப்  பலவீனப்படுத்தியிருக்கிறது என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க் கவலை தெரிவித்திருக்கிறார். சட்டத்தின் ஆட்சிக்காக சர்வதேச சமூகம் துணிச்சலுடன் குரல்கொடுக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

வெனிசூலாவையடுத்து ட்ரம்ப் கொலம்பியா,  கிறீன்லாந்து,  மெக்சிக்கோ,  கியூபா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளையும் அச்சுறுத்துகிறார். 

மதுரோ அரசாங்கத்தைக் கண்டனம் செய்வதில் முன்னர் காட்டியதைப் போன்ற  உத்வேகத்தை  அந்த நாட்டின் இறைமையை மீறிய ட்ரம்பின்  ஆக்கிரமிப்பைக் கண்டனம் செய்வதில் ஐரோப்பிய நாடுகள்  காண்பிக்கவில்லை. 

இலாபத்துக்காகவும் அரசியல் மேலாதிக்கத்துக்காகவும் அமெரிக்காவின் வல்லமையை தொடர்ந்தும் பயன்படுத்துவதில் ட்ரம்ப் உறுதியாக இருக்கிறார் என்பதை அவரின் நியூயோர்க் ரைம்ஸ் நேர்காணல் பிகாசமாக அம்பலப்படுத்துகிறது.

சர்வதேச சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் கட்டுப்பட்டுச் செயற்படவேண்டும் என்று தான் உணரவில்லை என்று கூறிய அவரிடம் அமெரிக்க இராணுவ வல்லமையைப் பயன்படுத்துவதுவதற்கான ஆற்றலில் ஏதாவது மட்டுப்பாடுகள் இருக்குமா என்று கேட்கப்பட்டபோது தனது சொந்த மனத்தினால் மாத்திரமே அதை நிறுத்த முடியும் என்று பதிலளித்தார். 

 சர்வதேச சட்டம் தனக்கு  தேவையில்லை என்றும் இரண்டாவது உலகப் போருக்கு பின்னரான காலப்பகுதியில் அமெரிக்காவின் உதவியுடன் நிறுவப்பட்ட உலக ஒழுங்கு இன்று அநாவசியமான ஒரு சுமையாக இருக்கிறது என்றும் ட்ரம்ப் கூறிய  வார்த்தைகள் உலகம்  வரும் நாட்களில்  எதிர் நோக்கப்போகும் ஆபத்துக்கு கட்டியம் கூறுகிறது. 

https://arangamnews.com/?p=12595

2048 இலக்கை நோக்கிய இலங்கையின் கல்விப் பயணம்

1 week 4 days ago

2048 இலக்கை நோக்கிய இலங்கையின் கல்விப் பயணம்

image_954081ccb6.jpeg

 விக்னேஸ்வரன் கோபிகா,
கல்வியில் சிறப்பு கற்கை

இலங்கையின் கல்வி வரலாற்றில் 1943ஆம் ஆண்டு சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முறைமை ஒரு புரட்சிகரமான மைல்கல்லாகும். எனினும், தசாப்தங்கள் கடந்த நிலையில், தற்போதைய பரீட்சை மையக் கல்வி முறைமை மாணவர்களின் படைப்பாற்றலை முடக்குவதாகவும், உலகளாவிய சவால்களுக்கு அவர்களை தயார்ப்படுத்தத் தவறுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில், 'தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பு 2023-2033' (NEPF) இன் கீழ் 2026ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள், இலங்கையின் கல்வி வரலாற்றில் இரண்டாவது பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகின்றன.

சீர்திருத்தத்தின் பின்னணியும் நோக்கமும் 2048 ஆம் ஆண்டில் இலங்கை ஒரு முழுமையான அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் என்ற தேசிய இலக்கை நோக்கியே இச்சீர்திருத்தங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தரம், சமத்துவம் மற்றும் சிறந்து விளங்குதல் ஆகிய மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்ட இத்திட்டம், வெறும் பாடத்திட்ட மாற்றம் மட்டுமல்லாது, ஒரு சமூக-பொருளாதார மறுசீரமைப்பாகும். 2026 ஜனவரி முதல் தரம் 1 மற்றும் தரம் 6 ஆகிய வகுப்புகளுக்கு முதற்கட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஐந்து பிரதான தூண்கள் புதிய மாற்றங்கள் ஐந்து முக்கிய பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன:

1.            கலைத்திட்ட மறுசீரமைப்பு: பாடங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, 21ஆம் நூற்றாண்டின் திறன்களான டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் நிலைபேறான அபிவிருத்தி ஆகியவற்றை உள்ளடக்குதல்.

2.            ஆசிரியர் பயிற்சி: புதிய கற்பித்தல் முறைகளுக்காக 10,000 முதன்மைப் பயிற்றுவிப்பாளர்கள் மூலம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல்.

3.            உட்கட்டமைப்பு மேம்பாடு: பாடசாலைகளுக்கிடையிலான வள ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, வகுப்பறை மாணவர் எண்ணிக்கையை 35 ஆகக் குறைத்தல்.

4.            மதிப்பீட்டு முறைகள்: பரீட்சை மைய முறையிலிருந்து விலகி, 'தொடர்ச்சியான மதிப்பீடு' (Continuous Assessment) மற்றும் GPA முறையை அறிமுகப்படுத்துதல்.

5.            சமூக பங்களிப்பு: பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே புதிய முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

பாடசாலை நேர மாற்றமும் சவால்களும் செயற்பாடு சார்ந்த கற்றலுக்காகப் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2.00 மணி வரை நீடிக்க எடுக்கப்பட்ட முடிவு, ஆசிரியர் சங்கங்களின் எதிர்ப்பு மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் காரணமாகப் பல விவாதங்களை ஏற்படுத்தியது. இறுதியில், மாணவர் நலன் கருதி பாடசாலை நேரம் 1.30 மணி வரை எனத் தீர்மானிக்கப்பட்டது. இது மாணவர்களின் சோர்வைக் குறைக்கும் அதேவேளை, மேலதிக செயற்பாடுகளுக்கான நேரத்தையும் உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி மாற்றங்கள் ஆரம்பக் கல்வியில் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக 'செயற்பாட்டுப் புத்தகங்கள்' அறிமுகப்படுத்தப்படவுள்ளன. தரம் 6 முதல் 9 வரையிலான மாணவர்களுக்கு 'கடன்' (Credit) அடிப்படையிலான கற்றல் மற்றும் நிதிசார் கல்வியறிவு, தொழில்முனைவு போன்ற பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுவது ஒரு முக்கிய நகர்வாகும்.

தற்போதைய சாதாரண தரப் பரீட்சை முறையானது மாணவர்கள் ஒன்பது பாடங்களைக் கற்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது. இது மாணவர்களுக்குக் கடும் மன அழுத்தத்தையும், பாடசாலை நேரத்திற்கு அப்பால் மேலதிக வகுப்புக்களை (Tuition) நாடிச் செல்லும் சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.

இதைக் கருத்திற் கொண்டு 2029 இல் முதன்முறையாக நடத்தப்படவுள்ள புதிய சாதாரண தரப் பரீட்சையில் புரட்சிகரமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

1. பாடங்களின் எண்ணிக்கை குறைப்பு

புதிய முறைமையின் கீழ், ஒரு மாணவர் தோற்ற வேண்டிய பாடங்களின் எண்ணிக்கை 9 இலிருந்து 7 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களின் பாடச் சுமையைக் குறைப்பதோடு, அவர்கள் கற்கும் விடயங்களை ஆழமாகவும் செய்முறை ரீதியாகவும் உள்வாங்க வழிவகுக்கும்.

2. பாடக் கட்டமைப்பு (Core & Electives)

மாணவர்களின் அடிப்படை அறிவை உறுதி செய்யவும், அதேவேளை அவர்களின் தனிப்பட்ட ஆர்வத்தை ஊக்குவிக்கவும் பாடங்கள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

•  கட்டாயப் பாடங்கள் (Common Core Curriculum - 5):

1.            தாய்மொழி (சிங்களம் அல்லது தமிழ்)
2.            ஆங்கில மொழி
3.            கணிதம்
4.            விஞ்ஞானம்
5.            சமயமும் விழுமியக் கல்வியும்

• விருப்பப் பாடங்கள் (Elective Subjects - 2): மாணவர்கள் தங்களின் எதிர்கால இலக்குகளுக்கு ஏற்ப பின்வரும் தொகுதிகளில் இருந்து இரண்டு பாடங்களைத் தெரிவு செய்யலாம்:

*           சமூக அறிவியல்: வரலாறு, புவியியல்.

*           தொழில்நுட்பம்: தகவல் தொழில்நுட்பம் (ICT), விவசாயம், உணவுத் தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம்.

*           கலை மற்றும் ஆரோக்கியம்: அழகியல் பாடங்கள் (சங்கீதம், நடனம், சித்திரம்), சுகாதாரம் மற்றும் உடற்கல்வி.

3. மதிப்பீட்டு முறையில் மாற்றம் (GPA அறிமுகம்)

இதுவே இந்தப் புதிய சீர்திருத்தத்தின் மிக முக்கியமான பகுதியாகும். இதுவரை நடைமுறையிலிருந்த ஏ (A), பி (B), சி (C), எஸ் (S), எஃப் (F) என்ற தரப்படுத்தல் முறை நீக்கப்பட்டு, தரப் புள்ளிச் சராசரி (GPA) முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

•  தோல்வி (Fail) என்ற நிலை இல்லை: புதிய முறைமையின் கீழ் எந்தவொரு மாணவரும் 'தோல்வியடைந்தார்' எனக் கருதப்பட மாட்டார்கள்.

•  தொடர்ச்சியான மதிப்பீடு (70:30 விகிதம்): இறுதிப் பரீட்சைக்கு மாத்திரம் 100% புள்ளிகளை வழங்காமல், 70% புள்ளிகள் இறுதிப் பரீட்சைக்கும், 30% புள்ளிகள் பாடசாலையில் நடத்தப்படும் 'தொடர்ச்சியான மதிப்பீடுகளுக்கும்' (Assignments, Projects, Attendance) வழங்கப்படும்.

•             மன அழுத்தக் குறைப்பு: ஒரு மாணவர் ஒரு பாடத்தில் குறைவான புள்ளிகளைப் பெற்றாலும், அது அவருடைய ஒட்டுமொத்த GPA புள்ளிகளைப் பாதிக்காது என்பதோடு, அவர் அடுத்த கட்டத்திற்கு (உயர்தரம் அல்லது தொழிற்கல்வி) செல்வதற்குத் தடையாக இருக்காது.

உயர்தரம் மற்றும் திறனாய்வுத் தேர்வுகள் 2027 முதல் உயர்தரப் பிரிவில் 'இரட்டைப் பாதை' (Dual Pathway) முறை அறிமுகமாகிறது. பல்கலைக்கழகம் செல்ல விரும்புவோருக்கு 'கல்விப் பாதை'யும், விரைவாக வேலைவாய்ப்பைப் பெற விரும்புவோருக்கு 'திறன் பாதை'யும் (NVQ சான்றிதழுடன்) வழங்கப்படும். மேலும், தரம் 9 இல் அறிமுகப்படுத்தப்படவுள்ள 'உளவியல் தேர்வு' (Psychometric Test), மாணவர்கள் தங்களின் இயல்பான திறமைகளைக் கண்டறிந்து சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க உதவும்.

தொழில்நுட்பம் மற்றும் ஒழுக்க விழுமியங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கோடிங் (Coding) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், மாணவர்களின் ஆளுமையைச் செதுக்க 'ABCDE' (Attendance, Belongingness, Cleanliness, Discipline, English) என்ற புதிய கட்டமைப்பு முன்மொழியப்பட்டுள்ளது. இது கல்வியுடன் ஒழுக்கத்தையும் இணைக்கும் ஒரு முயற்சியாகும்.

வரப்பிரசாதமா அல்லது சுமையா? இப்புதிய சீர்திருத்தம் பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும், சில சவால்களையும் கொண்டுள்ளது:

•             வரப்பிரசாதங்கள்: பரீட்சை பயம் குறைதல், தொழில்சார் திறன்கள் மேம்படுதல், பாடச் சுமை குறைதல் மற்றும் நெகிழ்வான கற்றல் சூழல்.

•             சுமைகள்: கிராமப்புற பாடசாலைகளில் நிலவும் உட்கட்டமைப்பு மற்றும் இணைய வசதி குறைபாடுகள், ஆசிரியர்களுக்கான போதிய பயிற்சி கால அவகாசம் இல்லாமை மற்றும் தொகுதி நூல்களில் (Modules) காணப்படும் தொழில்நுட்பத் தவறுகள்.

2026 புதிய கல்விச் சீர்திருத்தம் என்பது ஒரு மாற்றத்தின் ஆரம்பமே. இது வெற்றியடைய வேண்டுமாயின், வளங்கள் சமமாகப் பகிரப்பட வேண்டும் மற்றும் ஆசிரியர்கள் இத்திட்டத்தின் உண்மையான பங்காளிகளாக மாற்றப்பட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு, மாணவர்களின் எதிர்காலத்தை மட்டும் கருத்திற்கொண்டு இதை நடைமுறைப்படுத்தினால், இது இலங்கையின் எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு மாபெரும் 'வரப்பிரசாதமாக' அமையும் என்பதில் ஐயமில்லை.

image_a0b6e4f2d0.jpg

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/2048-இலக்கை-நோக்கிய-இலங்கையின்-கல்விப்-பயணம்/91-371129

சிரியாவில் அசாத் போல் இரானில் காமனெயி அரசு வீழுமா? ஒரு விரிவான அலசல்

2 weeks ago

சிரியாவில் அசாத் போல் இரானில் காமனெயி அரசு வீழுமா? ஒரு விரிவான அலசல்

இரானில் போராட்டம், ஆட்சி மாற்றம், ஆயதுல்லா அலி காமனெயி, அமெரிக்கா, டிரம்ப்

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • ஜெர்மி போவன்

  • சர்வதேச ஆசிரியர்

  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒரு சர்வாதிகார ஆட்சி எப்படி முடிவுக்கு வரும்?

எர்னஸ்ட் ஹெமிங்வே கூறிய பிரபல கருத்தைப் போல, படிப்படியாகச் சென்று பின்னர் திடீரென உடைந்து விழும்.

இரானில் நடைபெறும் போராட்டங்களில் ஈடுபட்டவர்களும் வெளிநாடுகளில் உள்ள அவர்களுடைய ஆதரவாளர்களும், டெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய ஆட்சி திடீரென வீழ்ச்சியடையும் கட்டத்தை எட்டியுள்ளதாக நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் அந்த ஆட்சி வீழ்ச்சியடைவதாக இருந்தாலும், அது இன்னும் மெதுவான, படிப்படியான நிலையிலேயே நடைபெறுகிறது என்பதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன.

இரானில் கடந்த இரண்டு வாரங்களாக நிலவும் அமைதியற்ற சூழல், அந்நாட்டு ஆட்சிக்கு ஒரு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இரானியர்களின் கோபமும் விரக்தியும் இதற்கு முன்பும் வீதிகளில் போராட்டங்களாக வெடித்திருக்கின்றன. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் இரான் மீது தொடுக்கப்பட்ட ராணுவத் தாக்குதல்களுக்கு பிறகு தற்போதைய இந்த எழுச்சி ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்கப் போராடும் இரானியர்களுக்கு, பொருளாதாரத் தடைகளின் தாக்கம் மிக முக்கியமானதாக இருக்கிறது.

இரானியப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட சமீபத்திய பின்னடைவாக, 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் நீக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் அனைத்து தடைகளையும் பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் செப்டம்பர் மாதம் மீண்டும் விதித்தன.

2025-ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் 70 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. அந்நாட்டு நாணயமான 'ரியால்' மதிப்பு கடந்த டிசம்பரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.

இரானிய ஆட்சி பெரும் அழுத்தத்தில் இருந்தாலும், அது இப்போதைக்கு வீழ்ந்துவிடாது என்பதையே சான்றுகள் காட்டுகின்றன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

முக்கியமாக, பாதுகாப்புப் படைகள் இன்னும் அரசுக்கு விசுவாசமாகவே உள்ளன. 1979-ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, இரானிய ஆட்சியாளர்கள் அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறைக்கான ஒரு விரிவான மற்றும் இரக்கமற்ற அமைப்பை உருவாக்குவதற்காகப் பெரும் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டுள்ளனர்.

இரானில் போராட்டம், ஆட்சி மாற்றம், ஆயதுல்லா அலி காமனெயி, அமெரிக்கா, டிரம்ப்

பட மூலாதாரம்,West Asia News Agency via Reuters

படக்குறிப்பு,கலகக்காரர்களுக்கு 'விரைவான மற்றும் கடுமையான' தண்டனை வழங்கப்படும் என இரானின் நீதித்துறை தலைவர் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில், வீதிகளில் இறங்கிய சக குடிமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும்படி வந்த உத்தரவுகளை பாதுகாப்புப் படைகள் நிறைவேற்றின. இதன் விளைவாக, கடந்த சில வாரங்களாக நடந்த போராட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன. தகவல் தொடர்பு தடையை விதித்துள்ள ஒரு நாட்டில் நம்மால் இவ்வளவுதான் அறிந்துகொள்ள முடிகிறது.

இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதில் முன்னணியில் இருப்பது இரானிய புரட்சிகர காவல்படை (IRGC) ஆகும். இது நாட்டின் மிக முக்கியமான அமைப்பாகக் கருதப்படுகின்றது.

1979-ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சியின் சித்தாந்தம் மற்றும் ஆட்சி முறையைப் பாதுகாக்கும் குறிப்பிட்ட பணியைக் கொண்டுள்ள இந்த அமைப்பு, நேரடியாக உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயிக்கு பதில் சொல்ல கடமைப்பட்டது.

இரானிய புரட்சிகர காவல்படை அமைப்பில் சுமார் 1,50,000 ஆயுதம் ஏந்திய வீரர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இரானின் வழக்கமான ராணுவத்திற்கு இணையாகச் செயல்படும் இந்தப் படை, இரானியப் பொருளாதாரத்திலும் முக்கியப் பங்காற்றுகிறது.

அதிகாரம், பணம், ஊழல் மற்றும் சித்தாந்தம் ஆகியவற்றின் சக்திவாய்ந்த கலவையானது, அமைப்பைப் பாதுகாக்க அதற்கு எல்லா காரணங்களையும் கொண்டுள்ளது.

இரானில் போராட்டம், ஆட்சி மாற்றம், ஆயதுல்லா அலி காமனெயி, அமெரிக்கா, டிரம்ப்

பட மூலாதாரம்,Getty Images

ஐஆர்ஜிசி அமைப்பிற்கு துணை படையாக பாசிஜ் மிலீஷியா எனப்படும் தன்னார்வ துணை ராணுவ அமைப்பு உள்ளது. இதில் கோடிக்கணக்கான உறுப்பினர்கள் இருப்பதாக அந்த அமைப்பு கூறுகிறது.

மேற்கத்திய நாடுகளின் சில மதிப்பீடுகளின்படி, இதில் செயற்பாட்டுப் பணியில் இருக்கும் வீரர்கள் பல லட்சங்களாக உள்ளனர். அது மிகப் பெரிய எண்ணிக்கையாகவே கருதப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களை ஒடுக்குவதில் இந்த பசிஜ் படையினர் முன்னணியில் உள்ளனர்.

2009-ஆம் ஆண்டு டெஹ்ரானில் சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலைத் தொடர்ந்து நடந்த பிரமாண்டமான போராட்டங்களை ஒடுக்க ஐஆர்ஜிசி மற்றும் பசிஜ் படையினர் நடவடிக்கை எடுத்ததை நான் நேரில் பார்த்தேன். பசிஜ் தன்னார்வலர்கள் ரப்பர் லத்திகள் மற்றும் மரத்தடிகளுடன் வீதிகளில் வரிசையாக நின்றிருந்தனர்.

அவர்களுக்குப் பின்னால் தானியங்கி ஆயுதங்களை ஏந்திய சீருடை அணிந்த ஆண்கள் இருந்தனர். மோட்டார் சைக்கிள் குழுக்கள் டெஹ்ரானின் அகலமான சாலைகளில் சீறிப்பாய்ந்து, போராட்டம் நடத்த முயன்ற குழுக்கள் மீது பாய்ந்தன. இரண்டு வாரங்களுக்குள், வீதிகளை ஆக்கிரமித்திருந்த போராட்டங்கள், கோஷங்களை எழுப்பும் மற்றும் குப்பைத் தொட்டிகளுக்குத் தீ வைக்கும் சிறிய மாணவர் குழுக்களாகக் குறைக்கப்பட்டன.

மாலை வேளையில் மக்கள் தங்கள் பால்கனிகளுக்கும் மாடிகளுக்கும் சென்று, ஷாவுக்கு எதிராக அவர்களுடைய பெற்றோர் முழங்கியதுபோல 'கடவுள் மிகப் பெரியவர்' என முழக்கமிட்டனர். ஆனால் அந்த முழக்கங்களும் காலப்போக்கில் மெல்ல மங்கிப் போயின.

இரானில் போராட்டம், ஆட்சி மாற்றம், ஆயதுல்லா அலி காமனெயி, அமெரிக்கா, டிரம்ப்

பட மூலாதாரம்,Getty Images

உள்நாட்டு பாதுகாப்புப் படைகளின் வெளிப்படையான உறுதித்தன்மை, உச்ச தலைவர் அல்லது அவருடைய நெருங்கிய கூட்டாளிகள் நிம்மதியாக இருக்க முடியும் அல்லது இருப்பார்கள் என்பதைக் குறிக்கவில்லை.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்னும் நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தி வருகிறார். ஆட்சி வீழ்ச்சியடைய வேண்டும் என்று விரும்பும் லட்சக்கணக்கான இரானியர்கள் மிகுந்த ஆத்திரத்திலும் கோபத்திலும் இருக்கக்கூடும்.

டெஹ்ரானில், தாங்கள் எதிர்கொண்டு வரும் அழுத்தங்களில் ஒரு பகுதியையாவது குறைக்கும் வழிகளை அரசு மற்றும் உச்ச தலைவர் தேடிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. கடுமையான, அதிகாரப்பூர்வ பேச்சுகள் ஒருபுறம் தொடர்ந்தாலும், மறுபுறம் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கத் தயாராக இருப்பதாக முன்மொழிவும் முன்வைக்கப்படுகிறது.

இரானின் அணுசக்தித் திட்டங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்கள் தொடர்பாக இரு தரப்பினரும் எவ்வாறு ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்பதைப் புரிந்துகொள்வது கடினம், ஏனெனில் இவை முந்தைய பேச்சுவார்த்தைகளைத் தோல்வியடையச் செய்துள்ளன. ஆனால் பேச்சுவார்த்தைகள் இரானுக்கு நேரத்தை கொடுக்கக்கூடும், குறிப்பாக ஒரு ஒப்பந்தம் சாத்தியம் என்று டிரம்பை நம்ப வைக்க முடிந்தால் அது நடக்கலாம்.

அழுத்தத்தை அதிகரிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இரானுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாட்டின் பொருட்கள் மீதும் 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறுகிறார். இது எவ்வாறு செயல்படும் என்பதைப் பார்ப்பது கடினம். சீனா இரானின் பெரும்பாலான எண்ணெயை வாங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இலையுதிர் காலத்தில் டிரம்பும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் தங்களது வர்த்தகப் போரில் ஒரு தற்காலிக உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் மாதம் பெய்ஜிங்கில் ஒரு உச்சிமாநாடு நடைபெற உள்ளது.

உலகின் இரண்டு வல்லரசுகளும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னைகள் குறித்து இந்த உச்சிமாநாடு விவாதிக்கும். இரான் மீதான அழுத்தத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டும், டிரம்ப் இந்த உச்சிமாநாட்டை ஆபத்தில் தள்ளவோ அல்லது சீர்குலைக்கவோ விரும்புவாரா?

டெஹ்ரானில், உச்ச தலைவர் ஆயதுல்லா காமனெயியின் மிகப்பெரிய முன்னுரிமை இஸ்லாமியக் குடியரசின் ஆட்சி முறையைப் பாதுகாப்பதாகும். மீண்டும் போராட்டங்கள் வெடித்தால், அவை கடுமையான பதிலடியைச் சந்திக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஆட்சிக்கு இருக்கும் ஒரு சாதகமான அம்சம் என்னவென்றால், போராட்டக்காரர்கள் இடையே ஒரு ஒருங்கிணைந்த தலைமை இல்லாததுதான். ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு முன்பு புரட்சியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷா மன்னரின் மூத்த மகன், போராட்டக்காரர்களுக்குத் தேவையான தலைவராக மாற முயற்சித்து வருகிறார்.

ஆனால் அவரது குடும்ப வரலாறு மற்றும் இஸ்ரேலுடனான அவரது நெருங்கிய தொடர்புகள் காரணமாக, அவருக்குக் கிடைக்கும் ஆதரவு ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்டதாகவே தெரிகிறது.

டெஹ்ரானில் உள்ள மதகுருமார்களையும் ராணுவ வீரர்களையும் கவலையடையச் செய்யக்கூடிய ஒரு பாடம், அவர்களின் முன்னாள் கூட்டாளியான சிரியாவின் முன்னாள் அதிபர் பஷர் அல்-அசாத்திடமிருந்து கிடைக்கிறது. அவர் தனது போரில் வெற்றி பெற்றது போலத் தோன்றியதுடன், சௌதி அரேபியா மற்றும் அரபு லீக் அமைப்புகளால் மெதுவாக மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் வந்தார்.

ஆனால் 2024-ஆம் ஆண்டின் இறுதியில், நன்கு திட்டமிடப்பட்ட கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அவரது மிக முக்கியமான இரண்டு கூட்டாளிகளான ரஷ்யாவும் இரானும் அவரைப் பாதுகாக்க விரும்பவில்லை அல்லது ஒருவேளை அவர்களால் முடியாமல் போயிருக்கலாம். சில நாட்களுக்குள்ளேயே, அசாத்தும் அவரது குடும்பத்தினரும் மாஸ்கோவிற்கு தப்பிச் சென்றனர்.

ஒரு சர்வாதிகார ஆட்சி படிப்படியாகச் சிதைந்து, திடீரென வீழும். அசாத்தின் ஆட்சி சிரியாவில் வீழ்ந்த போது, அந்த செயல்முறை மிக வேகமாக நடந்தது.

டெஹ்ரானில் ஆய்வு செய்யப்பட வேண்டிய மற்றொரு உதாரணம், 2011-இல் துனீசிய அதிபர் பென் அலியின் வீழ்ச்சியாகும்.

பென் அலியின் வீழ்ச்சி, எகிப்தின் ஹோஸ்னி முபாரக் ராஜினாமாவிற்கு வழிவகுத்தது. அவர் மிகப்பெரிய போராட்டங்களைத் தாண்டி பதவியில் நீடித்திருக்கக் கூடும்.

ஆனால் தங்களது நிலையைப் பாதுகாக்க வேண்டும் என்று ஆயுதப்படைகள் முடிவு செய்ததால், அவர் பதவியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதே போல் இரானில் நடக்க வாய்ப்புள்ளதா? ஒருவேளை நடக்கலாம். ஆனால் இப்போதைக்கு இல்லை.

இஸ்லாமிய ஆட்சி முறையை எதிர்ப்பவர்கள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கூடுதல் அழுத்தம் ஏற்படுவதையும், ஒரு நம்பகமான தலைமை உருவாவதையும் எதிர்பார்ப்பார்கள். இதன் மூலம் அந்த ஆட்சி சிதைவுறும் செயல்முறை வேகமெடுத்து, 'படிப்படியானது' என்பதிலிருந்து 'திடீரென' நடப்பதாக மாறலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwy8e5xzqqjo

வெனிசுலா விவகாரமும் இடதுசாரிகளும்.

2 weeks 3 days ago

*வெனிசுலா விவகாரமும் இடதுசாரிகளும்

*ஆங்கில பாடநூல் தவறுக்காக பிரதமர் ஹரிணிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இடதுசாரிகள், தமிழ் வரலாற்று பாடநூல்களில் பௌத்த சமய திணிப்பு மற்றும் சிங்கள மொழிபெயர்ப்பு பாடநூல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லையே!

*இடதுசாரி நாடுகளில் புலிகளை அமெரிக்க கைக் கூலி என்று பொய்ப் பிரச்சாரம் செய்த தயான் ஜயதிலக.

*சுயநிர்ணய உரிமையை மறுத்து ”ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம்” என்று மட்டுப்படுத்தும் இடதுசாரிகள்...

-- --- -----

வகுப்பு ஆறுக்குரிய கல்விச் சீர்திருத்தத்தில் ஏற்பட்ட சில தவறுகளுக்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை மையப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் மற்றும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோசம் எழுப்புகின்றனர்.

ஆக, இது பலவீனமாக இருக்கும் எதிர்க்கட்சிகளின் அரசியல் நாடகம் என்பது கண்கூடு. அதாவது, மாணவர்களின் எதிர்கால நலன் நோக்கில், இந்த எதிர்க்கட்சிகள் செயற்படவில்லை. மாறாக அடுத்த ஆட்சியை கைப்பற்றும் நோக்கம் கொண்டவை என்பது பகிரங்கமானது.

ஆனால், கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள இடதுசாரிகள், சில கம்யூனிசிட்டுகள் ஹரிணிக்கு ஆதரவாக பேசுவது தான் இங்கே வேடிக்கை. குறிப்பிட்ட சில தமிழ் இடதுசாரிகளும் இதில் அடங்குகின்றனர்.

குறிப்பாக, ஆங்கில பாடநூலில் அச்சிடப்பட்டுள்ள, இயற்கைக்கு மாறான LGBTO எனப்படு்ம் ஓரினச் சேர்க்கை முறையை முற்போக்கான சிந்தனை என்றும் சில இடதுசாரிகள் வாதிடுகின்றன.

அத்துடன், வெனிசுலா ஜனாதிபதியை அமெரிக்கா கைது செய்தமைக்கு எதிராகவும் இந்த இடதுசாரிகள் சில தமிழ் இடதுசாரி இயக்கங்களுடன் சேரந்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர்.

ஆனால், இந்த குறிப்பிட்ட இடதுசாரிகள், கம்யூனிஸ்ட் வாதிகள் ஏன் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க மறுக்கின்றனர்?

குறிப்பாக, 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னரான சில சம்பவங்கள் பின்வருமாறு-

(1) தமிழ்மொழி, சைவ சமயம் ஆகிய இரண்டு பாடநூல்களையும் தவிர, ஏனைய அனைத்துப் பாடநூல்களும் சிங்கள மொழியில் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இதனால் சிங்கள மொழிச் சொல்லாதிக்கங்கள் பாடநூலில் காணப்படுகின்றன.

பாடநூல் தயாரிப்பு பற்றிய சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப, ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு பாடநூல்கள் மொழியெர்க்க முடியாது என வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம் பல கூட்டங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

(2) வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த மயமாக்கல். அதுவும் தையிட்டடி விகாரை தொடர்பாக பல எதிர்ப்பு போராட்டங்கள் தொடராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

(3) 2019 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மொழி மூல வரலாற்று பாடநூலில் முற்று முழுதாக பௌத்த சமய வரலாறுகளும் யாழ்ப்பாண இராஜ்ஜியம் உள்ளிட்ட தமிழ் மன்னர் வரலாறுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

(4) 1978 ஆம் ஆண்டில் இருந்து அதாது ஈழப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அத்தனை சம்பவங்களும் புதிய மகாவம்சமாக தொகுக்கப்பட்டுள்ளன.

அதில் தமிழர்கள் இலங்கையில் வந்தேறு குடிகள் என்றும், பௌத்த சமயம் பற்றிய திரிபுபடுத்தல்களும், வடக்கு கிழக்கு பௌத்த பிரதேசம் எனவும் மிகைப்படுத்தப்பட்டுள்ளது.

(5) தற்போது நடைமுறையில் உள்ள வரலாற்று பாடநூலுக்குரிய ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் கை நூலில், 1978 இல் இருந்து 2010 ஆம் ஆண்டு காலப் பகுதி, அதாவது போர் நடைபெற்ற கால சம்பவங்கள் மகாவம்சம் என மேற்கோள் காண்பிக்கப்பட்டுள்ளது.

(6) தமிழர்களின் ஆயுதப் போராட்டம் பயங்கரவாதம் என்றும், சீனா, கொரியா போன்ற நாடுகளின் கப்பல்களை புலிகள் கடலில் மூழ்கடித்ததால் புலிகள் அழிக்கப்பட்டார்கள் என்றும் கற்பனையில் பொய்யான வரலாறுகள் புதிய மகாவம்சத்தில் எழுதப்பட்டுள்ளன.

((7) கொழும்பை மையப்படுத்திய அரச தொல்லியல் திணைக்கள பிரதான இணையத் தளத்தில் ஈழத்தமிழர்கள் பற்றிய வரலாற்று ஆவணச் சின்னங்கள் இல்லை. அத்துடன் இலங்கைத்தீவு பற்றிய சிங்கள மயப்பட்ட வரலாறுகள் அத்தனையும் சிங்களம், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மாத்திரமே உண்டு.

இவ்வாறு தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு வருகிற அநீதிகள் பற்றிய பல ஆதாரங்கள் உண்டு. ஆனால், இவை பற்றியெல்லாம் கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் - சிங்கள இடதுசாரிகள் பேசுவதில்லை.

ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட வீரர்களாக தங்களை காண்பிப்பர். சிங்களவர்கள், ஈழத்தமிழர், முஸ்லிம்களுக்கு எதிராக அரசாங்கத்தால் இழைக்கப்பட்டு வரும் அநீதி என்ற பொதுச் சொல்லாடலில், இந்த இடதுசாரிகள், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்கையை மழுங்கடித்து வருகின்றனர்.

ஆனால் சிங்கள இடதுசாரிகள், இடதுசாரி சோசலிச கொள்கையுடைய தென் அமெரிக்க, நாடுகளுக்குச் சென்று, இலங்கைத்தீவு ஒரு சோசலிச நாடு என்றும், விடுதலைப் புலிகள் அமெரிக்க சிஐஏயின் கைக் கூலிகள் எனவும் பிரச்சாரம் செய்து, அந்த அரசுகளை இலங்கைக்குச் சாதகமாக மடைமாற்றியிருந்தன.

வெனிசுலா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹுகோ சாவேஸ் (Hugo Chávez) விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதற்கு, இடதுசாரித் தன்மை கொண்ட, இலங்கை இராஜதந்திரியான தயான் ஜயதிலக பிரதான காரணமாவார்.

அமெரிக்க இடதுசாரியான வழக்கறிஞர் ஈவா கொலிங்கர் (Eva Golinger) விடுதலைப் புலிகளை அமெரிக்க கைக் சூலி என்று விமர்சனம் செய்து வெனிசுலா, கியூபா போன்ற நாடுகளை புலிகளின் அரசியல் விடுதலை போராட்டத்திற்கு எதிராக திசை திருப்பினார்.

அதற்கு தயான் ஜயதிலக கியூபாவில் இலங்கைக்கான தூதுவராக இருந்த தமரா குணரெட்னம் ஆகியோர் காரணமாக இருந்தனர்.

ஆனால், 1997 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தை அமெரிக்கா தடை செய்திருந்தது. செய்திருந்தது. ஆனால், அமெரிக்கா தனது லாப நோக்கில் புலிகளை தடை செய்தது என்ற பிரச்சாரங்களை இவர்கள் முன்னெடுத்து, தென் அமெரிக்க இடதுசாரி கொள்கை கொண்ட நாடுகளை புலிகளுக்கு எதிராகத் திருப்பினர்.

வெனிசுலா ஜனாதிபதி ஹுகோ சாவேஸ் 2013 ஆம் ஆண்டு மே மாதம், 58 வயதில் உயிரிழந்ததும், நிக்கோலஸ் மதுரோ வெனிசுலாவின் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். ஆனால் ஹகோ சாவேஸ், தமிழர்களுக்கு எதிராக கையாண்டு வந்த அதே உத்தியை தான், மதுரோவும் கையாண்டார்.

இப் பின்புலம் தெரியாத காரண காரியத்தாலேயே, ஈழத்தமிழர்கள் பலர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவினால் கைது செய்யப்பட்டபோது, அவருக்கு எதிரான பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கின்றனர்.

ஆகவே, தயான் ஜயதிலக போன்ற இராஜதந்திரிகள் இடதுசாரித் தன்மை கொண்ட நாடுகளில் இலங்கையை, சோசலிச நாடாகவும் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவ கொள்கை மற்றும் கலப்புமுறை பொருளாதார தன்மை கொண்ட நாடு என்ற முறையிலும் கற்பிதம் செய்து புலிகளுக்கு எதிராக பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலிலும் இப் பிராச்சாரம் தொடராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது பற்றி தமிழ் இடதுசாரிகளுக்கும் நன்கு புரியும்.

தங்களை தூய இடதுசாரிகளாக காண்பித்துக் கொண்டும், ”அநீதி”, ”ஒடுக்குமுறை” ஆகியவற்க்கு மாத்திரம் எதிரான போராட்டகளை நடத்தி, அதன் ஊடாக சிங்கள இடதுசாரிகள் எவ்வளவு நுட்பமாகத் தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையின் தரத்தைக் குறைத்து மதிப்பிடுகின்றனர் என்பதையும், தமிழ் இடதுசாரிகள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் மற்றும் யதார்த்த அரசியல் பற்றி பேசுவோம் என்று வாதிடும் தமிழர்கள் மூடி மறைக்கின்றனர்.

இந்த இடதுசாரிகளின் நேர்மையற்ற அரசியல் செயற்பாடுகள் பற்றி தமிழர்கள் வெளிப்படுத்த வேண்டும்.

அதேவேளை, முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரில் பல உயிர்கள் துடிக்கத் துடிக்க கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஐக்கிய நாடுகள் சபை அமைதிகாத்தது. ஆனால் கவலை வெளியிட்டது.

அத்துடன் ஏதோ ஒரு மனட்சாட்சியின் பிரகாரம், ஐநா பாதுகாப்புச் சபையை கூட்ட முற்பட்டபோது, அமெரிக்க - இந்திய அரசுகள் அதனைத் தடுத்தன. இது பற்றியெல்லாம் கண்டித்து, கொழும்பை மையமாகக் கொண்ட இடதுசாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை.

(அமரர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன, சிறிதுங்க ஜயசூரிய மற்றும் செந்திவேல் ஆகியோரை மையப்படுத்திய இடதுசாரிகள் பலமாகக் கண்டித்தார்கள். சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி வருகின்றனர்)

அதேவேளை, 2009 இல் போர் முடிவடைந்து, 2010 இல் ஐநா நியமித்த நிபுணர்குழு, முள்ளிவாய்காலில் பொதுமக்கள் கொல்லப்பட்ட போது, ஐநாவும் சர்வதேசமும் தடுக்கத் தவறியதாக அறிக்கையில், சுட்டிக்காட்டியிருந்தது.

அதேபோன்று, காசாவில் இஸ்ரேல் படுகொலைகளை செய்தபோதும், ஐநா அமைதிகாத்தது. நிவாரண உதவிகளை மாத்திரம் அனுப்பியது. கவலை வெளியிட்டது. ஆனால் கண்டனம் தெரிவிக்கவில்லை.

ஆனால், ஹமாஸ் இயக்கம், இஸ்ரேல் மீது 2023 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 7 ஆம் திகதி நடத்திய தாக்குதலை ஐநா பலமாக கண்டித்திருந்தது.

இப் பின்னணியில் தான்--

வெனின்சுலா நாட்டின் ஜனாதிபதியை அமெரிக்கா , சர்வதசச் சட்டங்கள் - நியமங்களுக்கு மாறாக கைது செய்து, தமது நாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தியமை, ஏனைய சிறிய நாடுகளுக்குப் பாரிய அச்சுறுததல் என்று உரக்கக் கூற வேண்டும். அத்துடன், இது அரசு அற்ற ஏனைய தேசிய இனங்களுக்கும் பாரிய அச்சுறுத்தல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஒடுக்குமுறையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இலங்கை - இஸ்ரேல் போன்ற அரசுகள், தமது ஆட்சிக்கு உட்பட்ட தேசிய இனங்களை மேலும் ஒடுக்கவும், ’ஐநா விதிகள், சர்வதேசச் சட்டங்கள் போன்றவற்றை மீறி, தமது அரசு என்ற கட்டமைக்குள் அந்த தேசிய இனங்களை மேலும் அடக்கி ஆளவும் அமெரிக்கச் செயற்பாடு வழிவகுத்துள்ளது.

உதாரணமாக --

2012 ஆம் ஆண்டில் இருந்து, ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானங்கள் எதனையும் இலங்கை அரசு உரிய முறையில் நடைமுறைப்படுத்தவில்லை.

2024 ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச நீதிமன்றத்தின் எந்த ஒரு உத்தரவுகளையும் இஸ்ரேல் அரசு அமல்படுத்த விரும்பவில்லை. மாறாக காசா மீது தொடர்ந்து இன அழிப்பு போரை இஸ்ரேல் நடத்துகிறது.

ஆகவே, இலங்கை - இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு மேலும் ஒரு துணிச்சலை அமெரிக்கச் செயற்பாடு கொடுத்துள்ளது.

ஆகவே, இடதுசாரிகள் காசா, வெனிசுலா போன்ற வெளிநாடுகளில் நடக்கும் இன ஒடுக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது போன்று. ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை 1920 ஆம் ஆண்டில் இருந்து நடத்தி வரும் அநீதிகளுக்கு எதிராகவும் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் குரல் எழுப்ப வேண்டும்.

அதற்கு தமிழ் இடதுசாரிகள்-

கம்யூனிஸ்ட்வாதிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0S9YX23yRiTie8nJocaEhSyuDPbvraEZb4Nh6QHvVdEre9f92aowoeot6QXtDQ2iAl&id=1457391262

நுகர்வுத் தாகத்துக்கு நோ லிமிட் - நிலாந்தன்

2 weeks 3 days ago

நுகர்வுத் தாகத்துக்கு நோ லிமிட் - நிலாந்தன்

image_7629c06ae3.jpg

புத்தாண்டு பிறந்த பின் நடந்த முதலாவது போராட்டம்  தையிட்டியில் நடந்தது. அது நடந்த அதே நாளில் யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் “நோ லிமிட்” பெருமெடுப்பில் திறக்கப்பட்டது. தையிட்டிக்கு வந்த ஜனத்தையும் நோ லிமிட்டுக்கு வந்த ஜனத்தையும் ஒப்பிட்டு சமூகவலைத்தளங்களில் பரவலாக குறிப்புகள் வெளிவந்தன. போராட்டத்துக்குப் போன மக்களை விடவும் நோ லிமிட்டுக்குப் போன மக்கள்தான் அதிகம். ஆனால் அதுதான் சமூக யதார்த்தம். உலக யதார்த்தம்.

மகாஜனங்கள் எப்பொழுதும் நுகர்வுத் தாகத்தோடு இருப்பார்கள். இப்போதுள்ள சமூக வலைத்தளச் சூழலில்,காணொளி யுகத்தில்,காசு கொடுத்துச் செய்யப்படும் விளம்பரங்கள் மக்களின் பசியை, தாகத்தை,விடுப்புணர்வை மேலும் அதிகப்படுத்தும். அந்த டிஜிட்டல் விளம்பரங்களால் ஆட்கொள்ளப்பட்டு அங்கே என்ன இருக்கிறது என்று பார்க்க மக்கள் வருவார்கள்.

பெரு வணிக நிறுவனங்கள் திட்டமிட்டு சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் நுகர்வு அலையை,நுகர்வுப் பசியை உற்பத்தி செய்யும். அந்த அலைக்குள் அள்ளுபட்டு மக்கள் வருவார்கள். யாழ்ப்பாணத்தின் உயர்தர உணவு விடுதிகளுக்கு இரவுகளில் சென்றால் தெரியும். அங்கு குடும்பமாக வந்து சாப்பிடுவது புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டும் அல்ல அவர்களைவிட அதிக தொகையில் உள்ளூர் மக்கள் வருவார்கள். உயர்தர உணவகங்களில் சாப்பிடுவது என்பது ஒரு பொதுப் போக்கு. ஒரு விடுப்பார்வம். ஒரு வித எடுப்பு. சமூகத்தில் அதிகமாக உழைக்கும் அனேகரை அங்கே காண முடியும்.

ஆனால் எல்லா அலைகளைப் போலவே இந்த அலையும் ஒரு நாள் தணிந்து விடும். ஹீல்ஸ்,நதியாஸ்,நோ லிமிட் போன்றவற்றுக்கு எப்பொழுதும் மக்கள் வெள்ளம் அலைமோதுவதில்லை. பண்டிகை நாட்களைத் தவிர.

அதுபோலவே பேர்க்கர் கிங்,காலித் பிரியாணி போன்ற உயர்தர உணவகங்களில் எல்லா ஆசனங்களும் என்றென்றும் நிரம்பி இருப்பதில்லை. டிஜிட்டல் ப்ரோமோஷன் மூலம் துண்டப்பட்ட,உற்பத்தி செய்யப்பட்ட எந்த ஓர் அலையும் நிரந்தரமானது அல்ல. அலைகள் நிரந்தரமானவை அல்ல.

613102436_1300416955452671_6344447495577

மனிதர்கள் அரசியல் விலங்குகள் மட்டுமல்ல, இலத்திரனியல் வலைக்குள் சிக்கிய இரண்டு கால் பூச்சிகளுந்தான். அரசியலுக்கும் அப்பால் அவர்களுக்கென்று தெரிவுகள், ஈடுபாடுகள்,பசி,தாகம் இருக்கும். போர்க் காலங்களில் சமூகம் மூடப்பட்டிருக்கும்போது தெரிவுகள் குறையும். நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். அப்பொழுது ஒரு மக்கள் கூட்டத்தை அரசியல் பயப்படுத்துவது இலகுவானது. போர், அடக்குமுறை போன்றன ஒரு சமூகத்தை உணர்வுபூர்வமாக நொதிக்க வைக்கும்போது அங்கே மக்களை அரசியலில் உணர்திறன் அதிகமுடையவர்களாக இருப்பதுண்டு.

கடல் அமைதியாக இருக்கும்போது மீன் அதிகம் படாது. கடல் கொந்தளிக்கும் நாட்களில் மீன் அலைக்குத் தப்பி வலைக்குள் விழும். எனவே ஒரு மக்கள் கூட்டத்தைத் திரட்டுவதற்கு,நொதிக்க வைப்பதற்கு ஒரு கூட்டு உளவியல் சூழல் இருக்க வேண்டும். அது இல்லையென்றால் அல்லது ஏற்கனவே உள்ள காரணங்களை உணர்வுபூர்வமானவைகளாக மாற்ற முடியவில்லை என்றால் அரசியல் விலங்குகள் திட்டமிட்டு உருவாக்கப்படும் வணிக நுகர்வு அலைகளால் அடித்துச் செல்லப்படும்.

தையிட்டி ஓர் உதாரணம். அங்கே போராட வேண்டிய தேவை இருக்கிறது. போராடும்போது அதைத் தடுப்பதற்கு போலீஸ் வருகிறது. அதாவது போராட்டம் தீவிரம் அடைந்தால் ஒடுக்குமுறை அதிகரிக்கும். ஒடுக்கு முறை அதிகரித்தால் அதற்கு எதிரான போராட்ட உணர்வும் தூண்டப்படும். இது ஒரு சமன்பாடு.தமிழ் மக்கள் மத்தியில் வாழ்ந்த கவிஞர் மு.பொன்னம்பலத்தின் கவிதை ஒன்று உண்டு.”அதிகாரம் புரியாத சமன்பாடு” என்ற அந்தக் கவிதையில்….

“சர்வாதிகாரம் என்பது

விடுதலையை ஒடுக்குவதாகக் கூறிக்கொண்டு,

தன்னை அறியாமலே அதைப் பிறப்பிக்க

யோனிவாயிலில் காத்திருக்கும் மருத்துவச்சி”

என்றும் ,அது அதிகாரம் புரியாத ஒரு சமன்பாடு என்றும்  மு.பொ கூறுவார்.

பொருளாதார நெருக்கடி சிங்கள மக்களை வீதிக்குக் கொண்டு வந்தது; காலி முகத்திடலில் கிராமம் அமைத்துப் போராட வைத்தது. ராஜபக்ஸக்களுக்கு வாக்களித்த மக்கள் 21 மாதங்களில் அவர்களை விரட்டினார்கள். பொருளாதார நெருக்கடியின் விளைவுகளைப் பயன்படுத்தி தேசிய மக்கள் சக்தி அனுர அலையை உற்பத்தி செய்தது,வெற்றியும் பெற்றது.

எனவே அலைகளை உற்பத்தி செய்வதற்கு அதற்குரிய அரசியல்,சமூகப் பொருளாதாரக் காரணிகள்  இருக்க வேண்டும். கூட்டு உளவியல் இருக்க வேண்டும்.தென்னிலங்கையில் ஏற்பட்ட ராஜபக்சங்களுக்கு எதிரான வெறுப்பு அலையை,தேசிய மக்கள் சக்தி அனுர அலையாக மாற்றியது. கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்க் கட்சிகள் வாக்களிப்பு அலைகளைக் கூட உற்பத்தி செய்ய முடித்தவைகளாக மெலிந்து வருகின்றன. தமிழ்க் கட்சிகள் அலைகளுக்காகக் காத்திருக்க போகின்றனவா? அல்லது பொருத்தமான தருணங்களில் அலைகளை உற்பத்தி செய்யப் போகின்றனவா? அல்லது அலைகள் ஓய்வதில்லை என்று கூறி பழைய பெருமைகளை இரைமீட்டுக் கொண்டிருக்கப் போகின்றனவா?

https://www.nillanthan.com/8044/

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2 weeks 3 days ago


புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

பிரதமர் ஹருணி மீதான தாக்குதல்கள்,முதலாவதாக கட்சி அரசியல் வகைப்பட்டவை. இரண்டாவதாக, பண்பாட்டு வகைப்பட்டவை. மூன்றாவதாக பெண்களுக்கும் பாலியல் சிறுபான்மையினருக்கும் (LGBTQ) எதிரானவை.

ஜேவிபியை தேசிய மக்கள் சக்தியாக வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தியதில் ஹரிணிக்குப் பெரிய பங்குண்டு.தேசிய மக்கள் சக்தியின் பிரகாசமான லிபரல் முகமாக அவர்தான் வெளியே தெரிய வந்தார்.அதனால் அவருக்கு இரண்டு முனைகளில் எதிர்ப்பு இருந்தது.

முதலாவது முனை, அவருடைய சொந்தக் கட்சிக்குள்ளேயே உண்டு. கட்சியின் அடித்தளமாக இருக்கும் ஜேவிபியின் கடும்போக்காளர்கள் அவருடைய பிரபல்யத்தையும் எழுச்சியையும் ரசிக்கவில்லை.அவர்கள் அவருடைய இடத்துக்கு ஒரு ஜேவிபியின் கடும்போக்கு உறுப்பினரை அமர்த்துவதற்கு விரும்புகிறார்கள்.இரண்டாவது முனை எதிர்க்கட்சிகள்.நுகேகொட ஆர்ப்பாட்டத்தின் பின் எதிர்க்கட்சிகள் கொஞ்சம் தலையைத் தூக்கலாம்  என்ற நம்பத் தொடங்கின. ஆனால் புயல் வந்து அரசாங்கத்தை எதிர்பார்த்ததை விட அதிகமாகப் பலப்படுத்தி விட்டது. இதனால் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராகத் தலையெடுப்பதற்கு வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தன.

ஆறாம் ஆண்டு ஆங்கில பாடக் கையேட்டில்  காணப்பட்ட இணையத் தொடுப்பு ஒரு தவறுதான்.அது பாடசாலைகளால் பயன்படுத்தப்பட முன் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தவறு.எனவே அதைச் சரி செய்யலாம்.கல்வி அமைச்சர் என்ற அடிப்படையில் ஹரிணி அதனை வேண்டுமென்று செய்திருப்பார் என்று கருதத்தக்க ஓர் இறந்த காலம் அவருக்கு இல்லை.ஆனால் அந்த இணையத் தொடுப்பு தன்பாலுறவு சம்பந்தப்பட்டது என்பதை வைத்து ஹரிணியை தாக்குவதற்கு எதிர்க்கட்சிகள் அந்த விவகாரத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றன.

ஹரிணி திருமணம் செய்யாதவர் என்பதை வைத்தும், அவருடைய பெண்ணிய நிலைப்பாடுகளை வைத்தும்,அவர் பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளைப்(LGBTQ) பாதுகாப்பவர் என்ற அடிப்படையிலும், அவரை ஒரு லெஸ்பியன் என்று முத்திரை குத்தி எதிர்க்கட்சிகளும் அவரைப் பிடிக்காதவர்களும் அவருக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

இது போன்ற ஒரு பாலினச் சேர்க்கை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் ரணில் விக்ரமசிங்க,மங்கள சமரவீர,பண்டாரநாயக்க…முதலாய் பல ஆண் தலைவர்கள் மீது ஏற்கனவே இருந்த ஒன்றுதான்.ஆனால் ஹரிணி ஒரு பெண் என்பதனாலும்,அவர் திருமணம் செய்யவில்லை என்பதை முன்வைத்தும் அவருடைய ஆடைகள் பொதுவெளியில் பெருமளவுக்கு சிங்கள பௌத்த பண்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்பதை வைத்தும் அவர் மீதான தாக்குதல்கள் வக்கிரமானவைகளாகவும் விகாரமானவைகளாகவும் காணப்படுகின்றன.

“உங்களுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை ஏற்பாடு செய்து தருகிறேன். கல்யாணம் செய்து பிள்ளை குட்டிகள் பெற்று வாழுங்கள்” என்று கூறுகிறார் பத்தரமுல்லே சீலரத்ன தேரர். “பெண்கள் திருமணம் செய்யாமல் வாழக் கூடாது”என்று அவர் கூறுகிறார்.

ஹரிணி கண்டிச் சிங்கள பௌத்த சமூகக் கட்டமைப்புக்குள் இருந்து வந்தவர் அல்ல.ஆனால் மிகப்பலமான செல்வாக்கான குடும்பப் பின்னணியை கொண்டவர்.அவருடைய ஆடைத் தெரிவுகளும் சிங்கள பௌத்த பாரம்பரியத்தை பெருமளவுக்கு பிரதிபலிக்கவில்லை. இதுவும் சிங்கள பௌத்த கடும் போக்காளர்களின் கண்ணை உறுத்துகிறது.

எதிர்க்கட்சிகளுக்கு அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு உணர்ச்சிகரமான விடையப் பரப்புகள் தேவை.குறிப்பாக பண்பாடு சார்ந்த, மதம் சார்ந்த,பாலுறவு சார்ந்த விமர்சனங்களை கையில் எடுத்தால் அவை சிங்கள பௌத்த கூட்டு உளவியலில் அதிகம் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். ஹரிணி மீதான தாக்குதல் ஒரு விதத்தில் எதிர்க்கட்சிகளின் இயலாமையைக் காட்டுகிறது.

இத்தனைக்கும் ஹரிணியோ அல்லது அவர் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தியோ இலங்கைத் தீவில் சிங்கள பௌத்த நம்பிக்கைகளை தலைகீழாகப் புரட்டிப்போடும் விதத்தில் புரட்சிகரமான மாற்றங்கள் எதையும் இதுவரை முன்னெடுத்திருக்கவில்லை.

தன் மீதான சர்ச்சைகளின் பின்னணியில் சில நாட்களுக்கு முன்பு ஹரிணி மகா நாயக்கர்களை சந்தித்தார். மகாநாயக்கர்களை ஹரிணி சந்திப்பதற்கு சில நாட்களுக்கு முன் அனுர சந்தித்தார். அவரும் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாக மகா நாயக்கர்களுக்கு விளக்கம் அளித்தார்.அதாவது மகா நாயக்கர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய ஒரு நிலையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியும் பிரதமரும் காணப்படுகிறார்கள் என்று பொருள். அப்படியென்றால் அவர்கள் சிங்கள பௌத்த அரச கட்டமைப்பின் வழமைகளை புரட்சிகரமான விதங்களில் மீறவில்லை என்று பொருள்.

ஹரிணி கல்வி அமைச்சராக இருக்கிறார். ஆனால் அவர் கொண்டுவரும் கல்வி மறுசீரமைப்புக்குள் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நீக்கப்படவில்லை.சின்னப் பிள்ளைகளை,10 வயதுப் பிள்ளைகளை சித்திரவதை செய்யும் ஒரு பரீட்சையை அகற்றவேண்டும் என்று எல்லாக் கல்வி உளவியலாளர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்.ஆனால் மாற்றத்தை வாக்களித்து வந்த இந்த அரசாங்கம்,சின்னப் பிள்ளைகளின் உளவியலைப் பாதிக்கும் அந்த விடயத்தில் மாற்றங்களைச் செய்யத் தயங்குகிறது. இந்த ஒர் உதாரணமே போதும் இந்த அரசாங்கம் எதுவரை மாற்றங்களைச் செய்யலாம் என்பதற்கு.

அடுத்தது பெண்ணிய நோக்கு நிலையில் இருந்து ஓர் உதாரணம். கல்வி அமைச்சின் கீழ்வரும், நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் பெண்கள் பண்பாட்டு உடுப்புகளையே உடுக்க வேண்டும் என்று கண்டிப்பான ஒரு நடைமுறை பல தசாப்தங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது. தனிமனித உரிமைகளை,பெண்ணுரிமைகளை நிராகரிக்கும் இந்த விடயத்தில், பெண் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான ஆடைகளை அணிவதற்கு கல்வி அமைச்சும் அனுமதிக்கவில்லை; மகா சங்கமும் அனுமதிக்கவில்லை.

ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்டுபவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் தமது ஆடைத் தெரிவில் பண்பாட்டின் முன் உதாரணங்களாக அமைய வேண்டும் என்று கல்வி அமைச்சும் மகா சங்கமும் கூறுகின்றன.அப்படி ஆசிரியர்கள் பண்பாட்டு அடைகளத்தான் உடுக்க வேண்டும் என்று சொன்னால்,அது ஆண் ஆசிரியர்களுக்கும் பொருந்தும்;பெண் ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.ஆனால் நாட்டில் உள்ள பாடசாலைகளில் பெரும்பாலான ஆண் ஆசிரியர்கள் பண்பாட்டு உடுப்புகளை அணிவதில்லை. அவர்கள்மேற்கத்திய சேர்ட்டையும் நீளக் காற் சட்டைகளையும்தான் அணிகிறார்கள்.ஆனால் பெண் ஆசிரியர்களை மட்டும் பண்பாட்டின் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.இங்கே அறிவுக்குப் பொருந்தாத பால் அசமத்துவம் உண்டு.பிள்ளைகளுக்கு கல்வியூட்டி விழுமியங்களைக் கற்பிக்கும் கல்விக் கட்டமைப்புக்குள்ளேயே அறிவுக்கொவ்வாத பால் அசமத்துவம் உண்டு.ஆயின், சமூக அசமத்துவம் தொடர்பில் இலங்கைத் தீவின் கல்விக் கட்டமைப்பு பிள்ளைகளுக்குக் கற்பிக்கும் முன்னுதாரணம் எது?

ஹரிணி கல்வி அமைச்சராக வந்த பின்னரும் பெண் ஆசிரியர்கள் பண்பாட்டின் காவிகளாகத்தான் இருக்கிறார்கள்.அதில் சிறு மாற்றத்தைக் கூடச் செய்ய அவரால் முடியவில்லை.எனவே ஹரிணியோ அல்லது தேசிய மக்கள் சக்தியோ சிங்கள பௌத்த பண்பாட்டை புரட்சிகரமான விதங்களில் மாற்றுவார்கள் என்று நம்பத்தக்கதாக கடந்த 15 மாதகால அவர்களுடைய ஆட்சி அமையவில்லை.

ஆனால் எதிர்க்கட்சிகள் தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதற்கு வேறு வழி இல்லை என்பதனால்,ஹரிணியை மையப்படுத்தி தாக்குதலைத் தொடங்கியிருக்கின்றன. அவர் ஒரு பெண் என்பதனாலும் ஜேவிபியை தேசிய மக்கள் சக்தியாக உருமாற்றுவதில் அதிகம் பங்காற்றியவர் என்பதனாலும் அவர் வக்கிரமாகத் தாக்கப்படுகிறார்.

இத்தாக்குதலில் முன்னணியில் நிற்கும் பிக்குக்கள் எத்தனை பேர் ஹரிணியை விமர்சிக்கும் தகுதி உடையவர்கள்? ஹரிணியின் ஆடையை விமர்சிக்கும் பௌத்த பிக்குகள் பலர் அணியும் காவிக்கு அவர்களே முன்னுதாரணங்களாக இல்லை. சிங்கள பௌத்த மதகுருக்களின் காவிக்குள் சாதி உண்டு. அதைவிட, காவி என்பது பற்றின்மையின் உடுப்பு. காவியை அணிந்திருக்கும் எத்தனை பிக்குகள் அவ்வாறு முற்றும் துறந்த சன்னியாசிகளாக இருக்கிறார்கள்? சன்னியாசிகளைப் போலவா அவர்கள் கதைக்கிறார்கள்?

ஹரிணிக்கு எதிரான வன்மம் மிகுந்த அவதூறுகளை எதிர்த்து 58 பேர் கையெழுத்திட்டு ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.அதில் அரசியல்வாதிகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள்.அவர்களுக்குள் தமிழர்கள்,சிங்களவர்கள், முஸ்லிம்கள் உண்டு. தமிழரசுக் கட்சியின் சுமந்திரனும் உண்டு.

கஜேந்திரக்குமாரும் ஹரிணி மீதான வன்மமான விமர்சனங்களைக்  கண்டித்திருக்கிறார்.ஹரிணியின் அரசியல் மீது தனக்கு உடன்பாடு இல்லை என்றபோதிலும் அவர் மீதான, அவதூறுப் பிரச்சாரங்களை தான் எதிர்ப்பதாக கஜன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளின் முக்கியஸ்தர்கள் அவ்வாறு ஹரிணிக்கு எதிரான விமர்சனங்களை எதிர்த்திருப்பது என்பது ஒரு முக்கியமான விடயம்.ஹரிணி மீதான தாக்குதல்களில் முன்னணியில் நிற்பவர்கள் பெரும்பாலும் சிங்கள பௌத்த கடும்போக்காளர்களே.பழமை வாதிகளே இக்கடும்போக்காளர்களுக்கு எதிராக தமிழ்ப் பரப்பில் உள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்திருப்பது ஒரு நல்ல மாற்றம்.ஹரிணியை அகற்றி ஒரு கடும் போக்குள்ள ஜேவிபி உறுப்பினரை அவருடைய இடத்துக்கு நியமிக்க வேண்டும் என்று உள்ளூர விரும்பும் ஜேவிபிக்காரர்களுக்கும் அங்கே ஒரு செய்தி இருக்கிறது.

https://athavannews.com/2026/1459414

Checked
Thu, 01/29/2026 - 00:31
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed