அரசியல் அலசல்

அமெரிக்க இந்திய போட்டிக்குள் இலங்கை.

2 weeks 5 days ago

அமெரிக்க - இந்திய போட்டிக்குள் இலங்கை!

- -------------

*சஜித் ஜனாதிபதியாக இருந்தாலும் உதவிகள் கிடைத்திருக்கும்...

*டில்லியின் திட்டத்திற்குள் அநுர வரவில்லையானால்...?

*ஸ்ராலினுக்கு நோகாமல் நடத்தப்படட பேச்சு

*ஜெயலலிதாவின் இன அழிப்புத் தீர்மானத்தை திமுக எதிர்க்கவில்லை அல்லவா?

-- ---- -------

இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பு முறைமை (System) பிழையாகத் தெரிவது தமிழர்களுக்குத் தான். அதில் உண்மை உண்டு.

ஆனால், புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிச் சூழலில் இந்து சமுத்திரத்தில் உள்ள இலங்கைத்தீவு என்ற ஒரு நாடு (அரசு) அமெரிக்க, இந்திய, சீன அரசுகளுக்கு அவசியமானது.

அந்த அடிப்படையில் ஏட்டிக்குப் போட்டியாக ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பில் எவர் ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு இந்த நாடுகள் நான் முந்தி நீ முந்தி என்று உதவியளிக்கும். 2009 இல் கூட இதுதான் நடந்தது.

அதாவது, கட்சி அரசியல் குறிப்பாக அநுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் சாணக்கியம், ரணில் விக்கிரமசிங்கவின் உலக அரசியல் அறிவு, சஜித் பிரேமதாசாவின் அரசியல் நுட்பம் என்ற கோணங்களில் இந்த நாடுகள் உதவியளிப்பதில்லை.

மேலும் அழுத்திச் சொல்வதானால், அநுரகுமார திஸாநாயக்கவின் இடத்தில் இப்போது சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக இருந்திருந்தாலும் உதவிகள் கிடைத்திருக்கும்.

ஆகவே --

டித்வா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு வெளிநாடுகள் உதவியளிப்பதை அநுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் நுட்பம் அல்லது ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தியின் அரசியல் காய்நகர்த்தல் என்றெல்லாம் மிகைப்படுத்திப் பேசுவதை அமைச்சர்கள் நிறுத்த வேண்டும்.

ஆனால், அவ்வப்போது பதவியில் இருக்கும் ஆட்சியாளர்கள் சமகால புவிசார் அரசியல் போட்டிச் சூழலை இனம்காணக்கூடிய ஆற்றல் உள்ளவர்களாக இருப்பது அவசியம்.

குறிப்பாக --

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய புவிசார் அரசியல் பின்னணிகளை சரியாகப் பயன்படுத்தினார். அதாவது, விடுதலைப் புலிகளை அழிக்க அமெரிக்கா தான் பொருத்தமான நாடு என்பதை மகிந்த தெரிந்து கொண்டார். இதனால் 2009 இல் போர் இல்லாதொழிக்கப்பட்டது.

2015 இல் உருவான புவிசார் அரசியல் பின்னணிகளை மையப்படுத்தி ரணில் மேற்கொண்ட நகர்வு ஜெனீவாவில் ஈழத்தமிழர் விவகாரத்தை மீள் நல்லிணக்கம் என்ற சொல்லாடலுக்குள் கொண்டு வந்தது. இனப்பிரச்சினை விவகாரத்தை வெறுமனே மனித உரிமைகள் விவகாரமாக அது மடைமாற்றியது.

2020 கோட்டாபய எடுத்த நகர்வும் 2022 இல் ரணில் ஜனாதிபதியாக வந்த போது மேற்கொண்ட நகர்வுகளும், அமெரிக்க - இந்திய அரசுகளை சமாந்தரமாக கையாளும் அணுகுமுறைக்கு வழி வகுத்தது.

அதேநேரம் --

சீனாவுக்குரிய இடமும் இலங்கையில் சுதந்திரமாக உண்டு. இந்த அரசியல் தேவை, சிறிமா - ஜேஆர் காலம் முதல் உண்டு. இது அமெரிக்க இந்திய அரசுகளுக்கு புரியாத புதிரும் அல்ல.

இதையே தற்போது அநுரகுமார திஸாநாயக்கவும் கையாளுகிறார். ஆகவே இது ஒன்றும் பெரிய இராஜதந்திரம் அல்ல.

குறிப்பாக இலங்கையின் சிஸ்ரம் (System) என்பது எப்போதும் அமெரிக்கச் சார்புத் தன்மை கொண்டது தான்.. அதன் பின்னர் தான் இந்திய, சீன உறவு என்பது.

ஆனாலும், ஈழத்தமிழர் விவகாரங்களில் மாத்திரம் அமெரிக்கா இன்றுவரை கூட இந்திய மத்திய அரசு எடுக்கும் நிலைப்பாட்டோடு ஒத்துழைக்கிறது.

குறிப்பாக --

சீனா - ரசியாவை மையப்படுத்தி அமெரிக்க - இந்திய அரசுகளிடையே பனிப்போர் நிலவினாலும், தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டோடு அமெரிக்கா ஒத்துழைக்கிறது.

அதாவது மோடி இருந்தால் என்ன ராகுல் காந்தி இருந்தால் என்ன 13 ஆவது திருத்தச் சட்டமே தீர்வு என்பது இந்திய அரசின் நிலைப்பாடு என்பது அமெரிக்காவுக்குத் புரியும்.

வடக்கு கிழக்கில் உள்ள இயங்கைத் துறைமுகங்களை பங்கு போடுவதிலும் அமெரிக்க - இந்திய அரசுகள் ஒரு புள்ளியில் நிற்கின்றன.

இதனை அநுரகுமார திஸாநாயக்க நன்கு விளங்கிக் கொண்டு காய்நகர்த்துகிறார். அநுர புரிந்துகொண்டார் என்பதை விடவும் வடக்கு கிழக்கு தமிழர்களை கையாளும் இராணுவப் பொறிமுறை (Military Mechanism) அநுரவுக்கு அறிவுறுத்தியுள்ளதன் பிரகாரம், அநுரவின் தற்போதைய அணுகுமுறையை அவதானிக்க முடியும்.

அதேநேரம்--

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அமெரிக்க பின்புலம் கொண்ட கட்சி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

13 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் அதேநேரம் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை கஜேந்திரகுமார் எதிர்ப்பதில்லை. ஏனெனில் இந்திய - இலங்கை ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு ம் அவசியமான ஒன்று. இது கஜேந்திரகுமாருக்கும் நன்கு தெரியும்.

இப்போது இவர்கள் தமிழ் நாட்டுக்குச் சென்றிருப்பது கூட அமெரிக்க - இந்திய அரசுகளின் புவிசார் தேவையின் அடிப்படைகளை மையம் கொண்டதாகக் கூட இருக்கலாம்.

தற்போது குழப்பமடைந்துள்ள உலக அரசியல் ஒழுங்கு நிலையில் அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளுக்கு இலங்கை போன்ற சிறிய நாடுகள் தேவைப்படுகின்றன.

அந்த அடிப்படையில் இந்தோ - பசுபிக் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு இந்தியாவுடன் அமெரிக்கா முரண்பாட்டில் உடன்பாடாக பயணிக்க வேண்டிய அவசியம் உண்டு.

இந்தியாவின் ரசிய - சீன கூட்டு அமெரிக்காவுக்கு ஒத்துவராத சூழலிலும், இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவுடன் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்து நிற்க வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு உண்டு.

ஆகவே, இலங்கையை மையப்படுத்தி அமெரிக்க - இந்திய உறவு இருக்க வேண்டுமானால், முதலில் வடக்கு கிழக்கில் அமைதி நிலவ வேண்டும். இதனால் புலிகள் இயக்கமும் அழிக்கப்பட்டது.

ஆனாலும் --

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் அந்த அமைதி நிலவாத ஒரு பின்னணியில், இலங்கை ஒற்றை ஆட்சி அரசு என்ற கட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயச் சூழல் அமெரிக்க - இந்திய அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளன.

தமிழரசுக் கட்சி ஏற்கனவே அமெரிக்க இந்திய அரசுகளின் கொள்கைக்கு ஏற்ப இணங்கிச் செல்லக் கூடிய பக்குவத்துக்குள் நுழைந்துவிட்டது .

கஜேந்திரகுமார் சற்று வித்தியாசமாக செயற்பட்டு வருவதால், அமெரிக்க - இந்திய நலன் சார்ந்து செயற்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் அவ்வப்போது வழங்கப்பட்டன.

ஆனாலும் தோ்தல் அரசியலை மையமாக் கொண்டு தூய தமிழ்த் தேசியம் பேசுவது போன்ற தோற்றத்தை கஜேந்திரகுமார் காண்பித்து வருகிறார்.

இதன் பின்னணியில் கஜேந்திரகுமாருக்கும் அவரது கட்சிக்கும் நோகாமல் நகர்த்தப்படும் அரசியல் தான், இந்த தமிழ் நாட்டுப் பயண ஏற்பாடு.

சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக இருந்திருந்தாலும் இந்த அணுகுமுறைக்குள் கஜேந்திரகுமார் சென்றிருக்கத் தான் வேண்டும்.

ஆகவே --

அமெரிக்க இந்திய அரசுகள் தமது புவிசார் அரசியல் போட்டிக்குள் ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பை தங்கள் பிடிக்குள் வைத்திருக்கும் நோக்கில் இந்த காய் நகர்த்தல்களை செய்கிறார்கள் என்பது புரிகிறது.

தமிழ் நாட்டில் ஸ்ராலின் ஆட்சியில் இருந்தால் என்ன விஜய் ஆட்சிக்கு வந்தால் என்ன, ஈழத்தமிழர் விவகாரத்தில் 13 என்ற இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்றுத் தான் ஆக வேண்டும். இவை எல்லாவற்றையும் உள்வாக்கியே கஜேந்திரகுமார் சென்னைக்குச் சென்றிருக்கிறார்.

அதேநேரம் --

அமெரிக்க - இந்திய அரசுகள் தயாரிக்கும் தமிழர் விவகார ஏற்பாடுகளுக்கு அநுரகுமார திஸாநாயக்கவும் ஒரு கட்டத்தில் அடங்கிச் செல்லவில்லை என்றால், அவரது ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டமும் அமெரிக்க - இந்திய அரசுகளிடம் இல்லாமில்லை.

பாகிஸ்தான் - பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் தமக்கு ஏற்றமாதிரியான அரசியலைத்தான் அமெரிக்க - இந்திய அரசுகள் தற்போது கையாண்டு வருகின்றன.

அதேநேரம் --

ரசிய - சீன கூட்டை இந்தியா வளர்த்து வருகின்றது என அமெரிக்கா ஆத்திரப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மையமாக் கொண்டு அநுர அரசாங்கம் கையாளும் அணுகுமுறை, ரணில் என்ற தற்காப்பு அரசியல் சாணக்கியனால் மடைமாற்றப்படக் கூடிய ஆபத்துகளும் இல்லாமலில்லை.

ஆகவே --

சரியான உத்தியுடன் வகுப்படாத அரசியல் வியூகத்துடன் தொடர்ந்தும் பயணிப்பதால், கையாளப்படும் சக்தியாக மாத்திரமே தமிழ்த்தரப்பு கையாளப்பட்டு வருகிறது.

பொறிமுறை ஒன்றின் கீழ் தமிழ்த்தரப்பு ஒருமித்த குரலில் 2009 ஆம் ஆண்டிலிருந்து கட்சி அரசியலுக்கு அப்பால், உரிய முறைப்படி இயங்கியிருந்தால், தற்போதைய புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிச் சூழலில் ஒரு அரசு அற்ற சமூகமாக குறைந்தபட்ச அரசியல் லாபங்களை பெற்றிருக்கலாம்.

இப்போது கூட சஜித்,ரணில், அநுர என்று உள்ளக அரசியல் முரண்பாடுகள் ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டங்கள் சிங்கள அரசியல் பரப்பில் ஆழமாக வேரூன்றி வருகின்றன.

அது சாத்தியமா இல்லையா என்பது வேறு. ஆனால் அந்த அரசியல் பின்னணிகளைக் கூட தமக்குச் சாதகமாக மாற்றும் நுட்பங்கள் எதுவும் தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் இல்லையே!

வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஆட்சி முறையில் ஈழத்தமிழர்களின் சுயநிரிணய உரிமை அங்கீகரிக்கப்படாது. ஏனெனில் சமஸ்டிக் கோட்பாடு பல வகைப்பட்டது. அமெரிக்காவின் உள்ள முழுமையான சம்ஸ்டி ஆட்சியை முறை கஜேந்திரகுமார் கோருகிறாரா அல்லது இந்திய சமஸ்டி முறைமையை கேட்கிறாரா?

எதுவானலும் --

“ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமை“ என்ற கோட்பாட்டில் இருந்து கஜேந்திரகுமார் விலகிவிட்டார் என்பதும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணையை தவிர்த்துள்ளார் என்பதும் இங்கே பட்டவர்த்தனம்.

இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை நடந்தால், சுயநிர்ணய உரிமை என்பது அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எழும்.

ஆகவே “முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும்” என்ற ஆழமான சர்வதேசக் கருத்தியலை கஜேந்திரகுமார் ஏற்றுள்ளார் என்பது இங்கே பகிரங்கமான உண்மை.

குறிப்பாக --

தமிழக சட்ட சபையில் செல்வி ஜெயலலிதா நிறைவேற்றிய இன அழிப்புத் தீர்மானத்தை முன்கொண்டு சொல்ல வேண்டும் என கஜேந்திரகுமார் ஸ்ராலினிடம் கேட்கவில்லை. கட்சி வேறாக இருந்தாலும் தீர்மானம் என்பது தமிழக அரசினுடையது. அத் தீர்மாதை அப்போது ஸ்ராலின் எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

https://www.facebook.com/1457391262/posts/pfbid0XuH6gpXsJhGgEjPcLdTfwb9gPDv5o4sFxA7PNHT4rfSnL5hgxd21uvQqUKXqzngjl/?

இலங்கை ஏன் ‘டித்வா’ சூறாவளிக்கு தயாராக இருக்கவில்லை?

3 weeks ago

இலங்கை ஏன் ‘டித்வா’ சூறாவளிக்கு தயாராக இருக்கவில்லை?

202512asia_sri-lanka_landslide.webp?resi

Eranga Jayawardena/AP Photo

இந்தக் கேள்வி உயிர் தப்பிய ஒவ்வொருவரின் மனதிலும், அன்புக்குரியவரை இழந்த ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் மனதிலும், மிகவும் தாமதமாக வந்த ஒவ்வொரு மீட்புப் பணியாளரின் மனதிலும் எதிரொலிக்கிறது. பேரிடருக்குப் பிந்தைய பகுப்பாய்வுகள் வெளிப்படுத்தும் வலிமிகுந்த உண்மை தெளிவானது: புயல் கண்காணிக்கப்பட்டு, முன்னறிவிக்கப்பட்ட போதிலும், இலங்கையின் எச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு அமைப்புகள் பேரழிவுகரமாகத் தோல்வியடைந்தன, இது 640க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளுக்கும் 1.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவதற்கும் பங்களித்தது.

இது எச்சரிக்கை இல்லாமல் வந்த கடவுளின் செயல் அல்ல. இது தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு சோகம். தகவல் தொடர்பு முறையில் ஏற்பட்ட அமைப்பு ரீதியான தோல்விகள், தகவல்களைப் பரப்புவதில் உள்ள பாகுபாடுகள் மற்றும் உத்தியோகபூர்வ பதிலளிப்பு ஆகியவை பாதிப்புக்குள்ளாகும் சமூகங்களை இயற்கையின் சீற்றத்திற்கு எதிராகப் பாதுகாப்பற்ற நிலையில் வைத்ததால் இந்த நிலைமை மேலும் மோசமடைந்தது.

எவ்வாறாயினும், எந்தவொரு வானிலை ஆய்வு நிறுவனமும் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக எச்சரிக்கை வெளியிடாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஏனென்றால், இத்தகைய நிகழ்வுகள் மிகவும் நிச்சயமற்றவை மற்றும் கணிக்க முடியாதவை. சில சமயங்களில் அவர்கள் ஏழு நாட்களுக்கு முன்னதாக எச்சரிக்கை விடுகிறார்கள். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்வதில் அதிக நிச்சயமற்ற தன்மை உள்ளது. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட துல்லியம் என்பது மூன்று நாட்களுக்கு முன் மட்டுமே. அவுஸ்திரேலியாவிலும் நிலைமை இதுவே.

புயல் கணிக்கப்பட்ட போதும், அதற்கு செவிசாய்த்தவர்கள் யார்?

நவம்பர் 18ஆம் திகதிக்கும் 24ஆம் திகதிக்கும் இடையில், வானிலை ஆய்வு நிறுவனங்கள், டித்வா சூறாவளியாக மாறிய சுழற்சி பிறப்பை அடையாளம் கண்டு கண்காணித்தன. இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) வளர்ந்து வரும் குறைந்த அழுத்த அமைப்பை அதிக அக்கறையுடன் கண்காணித்தது. சூறாவளி நவம்பர் 28 அன்று தரையிறங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே எச்சரிக்கைகள் இருந்தன. பொதுவான வானிலை தரவுகள் இருந்தன. பிராந்திய அவதானிப்புகள் செயல்பாட்டில் இருந்தன.

ஆனால் எப்படியோ, இந்தத் தகவல் திரட்சியை ஒரு பயனுள்ள நடவடிக்கையாக மாற்றத் தவறிவிட்டது. விஞ்ஞான ரீதியாக அறியப்பட்டதற்கும் பொது மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டதற்கும் இடையிலான இந்தத் துண்டிப்பு, நாட்டின் அனர்த்த முகாமைத்துவ வரலாற்றில் மிகவும் சேதத்தை விளைவித்த நிறுவனத் தோல்விகளில் ஒன்றாகும்.

இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் நவம்பர் 24ஆம் திகதி முதல் பொதுவான மழை மற்றும் வெள்ள எச்சரிக்கைகளை வெளியிட்டது. ஆனால், தேவையான அவசரமும், துல்லியமும் அதில் இல்லை. IMD போன்ற சர்வதேச நிறுவனங்கள் ‘சூறாவளி’ மற்றும் “ஆழமான தாழ்வு” பற்றிய விசேட எச்சரிக்கைகள் மற்றும் முக்கியமான முந்தைய நாள் அப்டேட்களை வெளியிட்டுக்கொண்டிருந்தபோது, இலங்கையில் அவை தாமதமாயின அல்லது முழுவதுமாக குறிப்பிடப்படவில்லை.

“அதிக மழை எச்சரிக்கை” மற்றும் “சூறாவளி எச்சரிக்கை” ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடு முக்கியமானது, ஏனெனில், அது மக்கள் தஞ்சம் அடைவதா அல்லது அன்றாட நடவடிக்கைகளைத் தொடர்வதா என்பதைத் தீர்மானிக்கிறது.

இரு மொழியின் கதை: அனர்த்தத்தில் பாகுபாடு

முன்னறிவிப்புத் தோல்வியின் மிகவும் கடுமையான குற்றத்தை உறுதிப்படுத்தும் அம்சம், எச்சரிக்கைகளைப் பரப்புவதில் உள்ள மொழிப் பாகுபாடு ஆகும். சில சமயங்களில் பல மொழிகளில் தொடர்புகொள்வது வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான வித்தியாசத்தைக் குறிக்கக்கூடிய ஒரு நாட்டில், முக்கியமான எச்சரிக்கைகள் பெரும்பாலும் சிங்களத்தில் அல்லது சில சமயங்களில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டன. தமிழ் பேசும் சமூகங்கள், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், நியாயமற்ற தகவல் இடைவெளியை எதிர்கொண்டன.

பெரும்பாலும் சிங்களம் (மற்றும் சில சமயங்களில் ஆங்கிலம்) மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்ட முக்கியமான, அவசர எச்சரிக்கைகள், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் பேசும் சமூகங்களுக்கு பல மணித்தியாலங்கள் தாமதமாகக் கிடைத்தன அல்லது தமிழில் முழுவதுமாக இருக்கவில்லை. இது ஒரு தொழில்நுட்பத் தவறு அல்ல. மக்கள் பேசும் மொழியின் அடிப்படையில், ஒரு குறிப்பிடத்தக்கப் பகுதி மக்களுக்கு உயிர்காக்கும் தகவல்களை வழங்காத ஒரு அமைப்பு ரீதியான தோல்வி அது.

ஒரு சூறாவளி நெருங்கும்போது, நிமிடங்கள் மற்றும் மணிநேரங்கள் எண்ணப்படுகின்றன. தமிழில் எச்சரிக்கைகள் தாமதமானதும் அல்லது இல்லாததும், உயிரிழப்பு விளைவுகளை ஏற்படுத்திய தகவல் சமச்சீரற்ற தன்மையை உருவாக்கியது. மக்கள் தொகையில் சிலர் அவசர எச்சரிக்கைகளைப் பெற்றனர், மற்றவர்கள் முற்றிலும் அறியாத நிலையில் சிக்கினர்.

இது வெறும் செயல்பாட்டுத் தோல்வி மட்டுமல்ல; அனைத்துக் குடிமக்களுக்கும், அவர்கள் பேசும் மொழியைப் பொருட்படுத்தாமல், சமமான பாதுகாப்பையும், உயிர்காக்கும் தகவல்களுக்கான சமமான அணுகலையும் வழங்குவதற்கான அடிப்படைக் கொள்கையின் மீதான மீறலாகும்.

அரசாங்கத்தின் மிகவும் தாமதமான பதிலளிப்பு

அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) மற்றும் தொடர்புடைய அதிகாரிகள், நெருக்கடி விரிவடைந்து கொண்டிருந்தபோது, விவரிக்க முடியாத மந்தநிலையுடன் செயல்பட்டனர். சில குடியிருப்பாளர்கள் எந்த உத்தியோகபூர்வ எச்சரிக்கையும் பெறவில்லை என்று தெரிவித்தனர். பல பகுதிகளில், எல்லாம் மிக வேகமாக நிகழ்ந்தன, மேலும் அவர்களுக்கு விரைவான வெள்ளம் பற்றிய எந்த முன் எச்சரிக்கையும் கிடைக்கவில்லை. தலைநகருக்கு அருகிலுள்ள பகுதிகளில் கூட, பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உத்தியோகபூர்வ வெளியேற்ற உத்தரவுகள் ஒருபோதும் கிடைக்கவில்லை என்ற விடயம் பயங்கரமானது.

சூறாவளி நாடு முழுவதும் பாரிய அழிவை ஏற்படுத்திய பின்னர், நவம்பர் 29 அன்று அவசரகால நிலை அறிவிக்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்னரே எச்சரிக்கைகள் கிடைத்திருந்தால், சூறாவளியின் பாதை உள்ளூர் மட்டத்தில் கண்காணிக்கப்பட்டிருந்தால், பேரழிவு ஏற்கனவே நடந்துகொண்டிருந்த பின்னரே உத்தியோகபூர்வ அவசரகால அறிவிப்புகள் ஏன் வந்தன? வானிலை ஆய்வு நிறுவனங்களுக்கும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் இடையில் ஒருங்கிணைப்பு இல்லாமலிருந்ததாலா அல்லது அச்சுறுத்தலைக் குறைத்து மதிப்பிட்டதாலா அல்லது இரண்டும் சேர்ந்ததாலா இந்தத் தாமதம் ஏற்பட்டது?

உண்மையான அச்சுறுத்தலைக் குறைத்து மதிப்பிடுதல்

முன்னறிவிப்பு தோல்விக்கான மற்றொரு முக்கியமான காரணி, முதன்மை அச்சுறுத்தலைப் பிழையாகப் புரிந்துகொண்டது ஆகும்.

IMD ஒரு தாழ்வு அழுத்த அமைப்பை ஒரு சூறாவளியாகக் கண்காணித்துக்கொண்டிருந்தபோது, இலங்கையில் சுழற்காற்றுப் புயல்களை விட அசாதாரண மழைப்பொழிவு மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளாலேயே முதன்மையான தாக்கம் ஏற்பட்டது. முன்னெப்போதும் இல்லாத மழைப்பொழிவு ஆறுகள் மற்றும் வடிகால் அமைப்புகளை தாங்க முடியாத வேகத்தில் நிரப்பியது. நிலச்சரிவுகள் சமூகங்களை முழுவதுமாகப் புதைத்தன. ஆனால், ஆரம்ப உள்ளூர் தகவல்தொடர்புகள் இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயங்களைக் குறைத்து மதிப்பிட்டு, மிகவும் பொதுவான சூறாவளி எச்சரிக்கைகளில் கவனம் செலுத்தியதாகத் தெரிகிறது.

இது வானிலை முன்னறிவிப்புகளை, இடம்சார்ந்த அபாய மதிப்பீடுகளாக மாற்றுவதில் உள்ள இடைவெளியைக் குறிக்கிறது. சூறாவளி வருகிறது என்பதைப் புரிந்துகொள்வது ஒன்று; அது நிலச்சரிவு அபாயமுள்ள, ஏற்கனவே உயரமான நிலங்களில் சாதனைகளை முறியடிக்கும் மழையைப் பொழியும் என்பதைப் புரிந்துகொள்வது வேறு. பிந்தையதற்கு வானிலை ஆய்வு மட்டுமல்ல, நிலவியல், நீரியல் மற்றும் உள்ளூர் பாதிப்பு நிலைமைகள் பற்றிய நெருக்கமான அறிவும் தேவை. அதிக மழையில் இருந்து பேரழிவு தரும் வெள்ளத்திற்கு விரைவான மாற்றம் பலரை வியப்பில் ஆழ்த்தியது. பல நூற்றாண்டுகள் பழமையான ஆறுகள் திடீரென வீடுகளையும், பாலங்களையும், உயிர்களையும் அடித்துச் செல்லும் நீரோட்டங்களாக மாறின. பல தலைமுறைகளாக இருந்த மலைச்சரிவுகளில் உள்ள சமூகங்கள் புதைக்கப்பட்டன.

அமைப்பு ரீதியான தோல்விகள் மற்றும் அமைப்பு ரீதியான தீர்வுகள்

டித்வா சூறாவளியை போதுமான அளவு முன்னறிவித்து எச்சரிக்கத் தவறியமை, இலங்கையின் அனர்த்தத் தயார்நிலை உள்கட்டமைப்பில் உள்ள ஆழமான அமைப்பு ரீதியான சிக்கல்களை அம்பலப்படுத்துகிறது. இருப்பினும், வானிலை முன்னறிவிப்பு என்பது தொழில்நுட்ப சவால்கள் நிறைந்தது. சூறாவளிப் பாதைகளைக் கண்காணிக்க முடிந்தாலும், குறிப்பாக மழை மற்றும் நிலச்சரிவுகளால் மிக மோசமாக பாதிக்கப்படும் இடங்களைத் துல்லியமாக முன்னறிவிப்பது சிக்கலாகவே உள்ளது. இலங்கைக்கு வானிலை முன்னறிவிப்புகளை நிலவியல் அபாய மதிப்பீடுகளுடன் ஒருங்கிணைக்கும் மேம்படுத்தப்பட்ட மாதிரி திறன்கள் தேவைப்படுகின்றன.

தகவல் தொடர்பு உள்கட்டமைப்பைப் பொறுத்தவரை, எச்சரிக்கை அமைப்புகள் இயல்பு நிலையிலேயே பல மொழிகளில் இருக்க வேண்டும், பின்னர் வந்த சிந்தனையாக இருக்கக்கூடாது. தொலைக்காட்சி, வானொலி, கையடக்கத் தொலைபேசி எச்சரிக்கைகள், சமூக ஊடகங்கள், மத நிறுவனங்கள் மூலம் தகவல்கள் ஒரே நேரத்தில் மற்றும் அனைத்து மொழிகளிலும் பகிரப்பட வேண்டும். தேவையான தொழில்நுட்பம் உள்ளது; தேவைப்படுவது, அந்தத் தொழில்நுட்பத்தை பாரபட்சமின்றிப் பயன்படுத்த நிறுவன விருப்பமும் செயல்பாட்டு கட்டமைப்பும் ஆகும்.

பின்னர் நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு வருகிறது. வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், உள்ளூராட்சி அதிகாரிகள் மற்றும் தகவல் தொடர்பு வலையமைப்புகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பாகச் செயல்பட வேண்டும், எச்சரிக்கைகளை அதிகரிப்பதற்கும் அவசரகால பதிலளிப்பைத் தொடங்குவதற்கும் தெளிவான நெறிமுறைகளுடன் (protocols) செயல்பட வேண்டும்.

இறுதியாக, மிக முக்கியமாக, எச்சரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படும் விதத்தில் ஒரு கலாச்சார மாற்றம் ஏற்பட வேண்டும். அனர்த்த எச்சரிக்கைகள் பெரும்பாலும் சாதாரணமாகக் கருதப்படுகின்றன. உண்மையான அவசரநிலை ஏற்படும்போது, மக்கள் தாங்கள் பெறும் தகவல்களை நம்பிச் செயல்படக்கூடிய ஒரு தயார்நிலைக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு காலப்போக்கில் நிலைத்திருக்கும், தெளிவான மற்றும் நம்பகமான தொடர்பு தேவைப்படுகிறது.

தோல்வியின் விலை

640க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள் மற்றும் 1.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அழிவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பது, இந்தத் தோல்விக்கு நாடு கொடுக்கும் பெரும் விலையாகும். கிராமங்கள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன அல்லது புதைக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. வாழ்க்கைகள் சிதைந்துள்ளன. இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல; அவர்கள் அப்பாக்கள் மற்றும் அம்மாக்கள், மகன்கள் மற்றும் மகள்கள், இழப்பைக் குறைத்திருக்கக்கூடிய சமூகங்கள்.

பேரழிவின் அளவைக் கணிக்கத் தவறியதற்காக அரசாங்கம் விமர்சிக்கப்பட்டுள்ளது. சங்கடமாக இருந்தாலும், சமூகங்கள் கற்றுக்கொள்வதும், அமைப்புகள் மேம்படுவதும், எதிர்கால துயரங்களைத் தடுப்பதும் அவ்வாறுதான் என்பதால் நேர்மறையான மற்றும் கட்டமைப்பு ரீதியான விமர்சனம் அவசியம். பொதுவான வானிலை தரவுகள் பிராந்திய அளவில் கிடைக்கப்பெற்றன. சூறாவளி கண்காணிக்கப்பட்டது. அச்சுறுத்தல் உண்மையானது மற்றும் அறியப்பட்டது. இருப்பினும், துல்லியமாக முன்னறிவிப்பது, அதிகரித்து வரும் அபாயத்தை தெளிவாகத் தொடர்புகொள்வது மற்றும் இலங்கையின் அனைத்துக் குடிமக்களுக்கும் சரியான நேரத்தில் எச்சரிக்கை வழங்குவது தோல்வியடைந்தது.

எதிர்க்கட்சியின் பாசாங்குத்தனம்

எதிர்க்கட்சியின் செயல்பாட்டை பார்க்கும்போது, ஒரு காலத்தில் நாடு நன்கு நிர்வகிக்கப்பட்டது, பொறுப்புடனும் ஊழல் இல்லாமலும் இருந்தது என்ற உணர்வு ஒருவருக்கு வரலாம். இயற்கையாகவே, இதில் எந்த உண்மையும் இல்லை. முன்னர் இருந்த அரசாங்கங்கள், அதாவது இப்போதுள்ள எதிர்க்கட்சிகள், அனர்த்தங்களை எவ்வாறு கையாண்டன என்பதில் இலங்கைக்கு மோசமான அனுபவங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்வது நல்லது. தற்போதைய அரசாங்கத்தின் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டுவது முக்கியமானதாகும். ஆனால், 25 மாவட்டங்களில் குறைந்தது 25 ஆண்டுகளாக இத்தகைய பேரிடருக்கு தேவையான நிலைமைகள் உருவாகி வந்துள்ளன.

உள்நாட்டுப் புவியியலாளர்களும் அனர்த்த நிபுணர்களும் மத்திய மலைப்பகுதிகளின் அபாயங்கள் குறித்து பல ஆண்டுகளாக விவாதித்துள்ளனர். காடழிப்பு, பலவீனமான விவசாயம் மற்றும் கட்டுமான நடைமுறைகள், மாறுபடும் சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் மண்ணின் கலவை ஆகிய அனைத்தும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் அபாயத்தை அதிகரிக்க பங்களிக்கின்றன. கடந்த சில தசாப்தங்களாக, அபாயகரமான சரிவுகளை சுட்டிக்காட்டியும், உடனடியாக வெளியேறுமாறு கோரியும் நிபுணர்கள் மீண்டும் மீண்டும் எச்சரிக்கைகளை (சமீபத்தியது நவம்பர் மாத இறுதியில்) வெளியிட்டுள்ளனர். உண்மையில், அரசாங்கம் செயல்படுவதில் மெதுவாகவே இருந்தது. எவ்வாறாயினும், எதிர்க்கட்சிகள் அதிகாரத்தில் இருந்தபோது இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பல தசாப்தங்கள் கால அவகாசம் இருந்தபோதிலும், அவர்கள் அதைச் செய்யவில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

முன்னோக்கி செல்லும் வழி

டித்வா சூறாவளியை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வாகப் பார்க்கக்கூடாது. இது பரந்த உலகளாவிய காலநிலை வடிவத்தின் ஒரு பகுதியைக் குறிக்கிறது. சீனா முதல் தமிழ்நாடு வரையிலும், வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் இலங்கை வரையிலும் கடந்த சில வாரங்களில் நிகழ்ந்த சம்பவங்கள், வரவிருக்கும் ஆண்டுகளில் நாம் தயாராக இருக்க வேண்டிய காலநிலை அனர்த்தங்களின் அளவு குறித்த ஒரு கூர்மையான எச்சரிக்கையாக அமைகின்றன.

எதிர்க்கட்சிகளின் பாசாங்குத்தனமான கோபம், நாம் தற்போது செய்ய வேண்டிய முக்கியமான பணிகளில் இருந்து நமது கவனத்தை திசை திருப்பக்கூடாது. இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்போது, டித்வா சூறாவளியின் படிப்பினைகளைக் கற்று, ஒவ்வொரு மட்டத்திலும் பேணப்படும் ஒரு அனர்த்தத் தயார்நிலையை இணைக்க வேண்டும். காலநிலை மாற்றம் மேலும் தீவிரமான வானிலை, கடுமையான மழைப்பொழிவு மற்றும் அடிக்கடி ஏற்படும் அனர்த்தங்களை முன்னறிவிக்கிறது. இலங்கைக்கு மற்றொரு டித்வா எதிர்கொள்ள நேரிடுமா என்பது கேள்வி அல்ல. கேள்வி என்னவென்றால், அது நிகழும்போது, எங்கள் பன்முக சமூகத்தில் உள்ள அனைவருக்கும் எச்சரிக்கைகள் சரியான நேரத்தில் சென்றடையுமா; உயிர்களைக் காப்பாற்றும் வகையில், இருக்கும் முன்னறிவிப்புகளுக்கு ஏற்ப, அரசாங்க நிறுவனங்கள் விரைவாகவும், தீர்க்கமாகவும் செயல்படுமா என்பதாகும்.

டித்வா சூறாவளியின் முன்னறிவிப்புத் தோல்வி தவிர்க்க முடியாதது அல்ல. இது கடந்த நிர்வாகத்தால் பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்ட, குறிப்பிட்ட, அடையாளம் காணக்கூடிய அமைப்புரீதியான பலவீனங்களின் விளைவாகும். அந்த பலவீனங்களை நிவர்த்தி செய்ய முடியும். அவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

அரசியல் கட்சிகள், அரசாங்க அதிகாரிகள், ஊடக அமைப்புகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் அரசியல் சண்டைகள் மற்றும் குறை சொல்வதில் ஈடுபடுவதற்குப் பதிலாக, உண்மையில் முக்கியமான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது, இந்த அனர்த்தத்தில் இருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்வதும், எதிர்கால நெருக்கடிகளுக்காக ஒரு வலுவான அனர்த்தத் தயார்நிலையை உருவாக்குவதுமாகும். குற்றம்சாட்டும் காலம் கடந்துவிட்டது. இப்போது கூட்டு நடவடிக்கை மற்றும் மேம்படுத்தப்பட்ட தயார்நிலைக்கு நேரம் வந்துவிட்டது.

Lionel-Bopage-e1748346474550.jpg?resize=லயனல் போபகே

https://maatram.org/articles/12480

டொனால்ட் ட்ரம்பின் போரும் சமாதானமும் — வீரகத்தி தனபாலசிங்கம் —

3 weeks 2 days ago

டொனால்ட் ட்ரம்பின் போரும் சமாதானமும்

December 15, 2025

டொனால்ட் ட்ரம்பின் போரும் சமாதானமும்

— வீரகத்தி தனபாலசிங்கம் —

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கடந்த மே மாதத்தில் மூண்ட போரை நிறுத்தியது தானே என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  இடையறாது கூறிவருகிறார்.  இரு நாடுகளினதும் இராணுவ உயர்மட்டங்களில் இடம்பெற்ற தொடர்பாடல்களை அடுத்தே அன்று மோதல்களை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக புதுடில்லி திட்டவட்டமாக கூறிவருகின்ற போதிலும், ட்ரம்ப் அதைப் பொருட்படுத்துவதாக இல்லை. 

இரு தெற்காசிய நாடுகளுக்கும் இடையிலான மோதலை நிறுத்தியதாக இதுவரையில் அமெரிக்க ஜனாதிபதி சுமார் 70 தடவைகள் கூறியிருப்பதாக  சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.  அவர்  இறுதியாக கடந்த புதன்கிழமை பென்சில்வேனியா மாநிலத்தின் நகரொன்றில் நிகழ்த்திய உரையில் அதை கூறியிருக்கிறார். இரண்டாவது தடவையாக  பதவிக்கு வந்த பின்னரான 10 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியிருப்பதாக அவர் பெருமையுடன் உரிமை கோருகிறார். 

மத்திய கிழக்கில் காசா பள்ளத்தாக்கில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையிலான இரு வருடகாலப் போர், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர், தென்கிழக்காசிய நாடுகளான தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான போர், ஆர்மேனியாவுக்கும் அசர்பைஜானுக்கும் இடையிலான போர், எகிப்துக்கும் எதியோப்பியாவுக்கும் இடையிலான போர், சேர்பியாவுக்கும் கொசோவோவுக்கும் இடையிலான போர் மற்றும் ஆபிரிக்க நாடுகளான  ருவாண்டாவுக்கும் கொங்கோ ஜனநாயக குடியரசுக்கும் இடையிலான போர்  ஆகியவையே ட்ரம்ப் நிறுத்தியதாகக் கூறும் போர்களாகும்.

இந்த போர்களை  பெரும்பாலும் வர்த்தக வரிகளை விதிக்கப் போவதாக அல்லது அதிகரிக்கப்போவதாக  அச்சுறுத்தியதன் மூலமே  நிறுத்தியதாகவும் கூறிய அவர் இந்த சர்வதேச மோதல்களை நிறுத்தி உலகில் சமாதானத்துக்காக பாடுபடுவதற்காக  தனக்கு  2025 நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் தானாகவே கேட்டார். அவருக்கு  அந்த சமாதானப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அதற்கு  நியமனங்களை செய்வதற்கான  காலஅவகாசம் கடந்த ஜனவரியில் முடிவடைந்த பிறகு சிபாரிசு செய்தவர்களில்  போர்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு பிறகு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகுவும் ஒருவர்.

ஆனால், இறுதியில் ட்ரம்பினால் சர்வதேச உதைபந்தாட்ட சங்கங்களின் சம்மேளனத்தின் சமாதானப்பரிசை மாத்திரமே பெறக்கூடியதாக இருந்தது.  அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் உலக உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி தொடர்பாக சில தினங்களுக்கு முன்னர் வாஷிங்டனில் நடைபெற்ற விமரிசையான  நிகழ்வில் வைத்து வழங்கப்பட்ட  அந்த பரிசும் கூட சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. 

அமெரிக்க ஜனாதிபதிக்கு சமாதானப் பரிசை வழங்கியதன் மூலம் அரசியல் நடுநிலை தொடர்பிலான சம்மேளனத்தின் ஆட்சிக்குழுவின்  விதிமுறைகளை மீறியதாக அதன்  தலைவர் கியானி இன்பான்ரினோ மீது  குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அவருக்கு எதிராக  விசாரணை நடத்துமாறு சம்மேளனத்தின் ஒழுங்கு கட்டுப்பாட்டுக் குழுவிடம் கேட்கப்பட்டிருக்கிறது. 

தன்னால் நிறுத்தப்பட்டதாக ட்ரம்ப் கூறிய எந்தவொரு போரிலும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இடையிலான பதற்றநிலை இன்னமும் தணிந்ததாக இல்லை. 

காசாவிலும் சூடானிலும் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைகள், உக்ரெயின் மீது ரஷ்யா தொடர்ந்து மேற்கொண்டுவரும் தாக்குதல்கள், கொங்கோவின் கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெறும் சண்டைகள், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள், மியன்மார் இராணுவத்தின் விமானக்குண்டு வீச்சுக்கள் மற்றும் அமெரிக்காவில் அதிகரித்துவரும் அரசியல் வன்முறைகளை அலட்சியம் செய்தால் மாத்திரமே ட்ரம்ப் உலகில் சமாதானத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று எம்மால் கற்பனை செய்துபார்க்க முடியும்.

 கடந்த ஜூலையில் இராணுவ மோதல்களை நிறுத்திய தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் கடந்த வாரம் மீண்டும் மோதல்கள் மூண்டிருந்தன. ட்ரம்பின் உதவியுடன் பிரகடனம் செய்யப்பட்ட போர் நிறுத்தம் எந்தளவுக்கு சஞ்சலமானதாக இருக்கிறது என்பதை இந்த புதிய மோதல்கள்  வெளிக்காட்டுகின்றன. இரு தென்கிழக்காசிய நாடுகளுக்கும்  இடையில் மீண்டும் சண்டை மூண்டிருப்பது  குறித்து பென்சில்வேனியா உரையில் குறிப்பிட்ட ட்ரம்ப் மோதல்களை நிறுத்துவதற்கு அவற்றின்  தலைவர்களுடன்  தொலைபேசியில் பேசவிருப்பதாக அறிவித்தார். ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் போரை நிறுத்தப் போவதாக வேறு எவரினால் கூறமுடியும் என்றும் அவர் கேட்டார். தன்னைத் தவிர வேறு எவரினாலும் அவ்வாறு செய்ய முடியாது என்று அவர் மார்தட்டுகிறார். 

தனது முதலாவது பதவிக்காலத்தில் உலகின் எந்த பாகத்திலும் போருக்கு அமெரிக்கப்படைகளை அனுப்பவில்லை என்று பெருமையாகக் கூறிய ட்ரம்ப் தற்போது இரண்டாவது பதவிக்காலத்தில் தனது தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் மூலமாக பல பிராந்தியங்களில் பதற்றநிலை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறார். 

டென்மார்க் நாட்டுக்கு சொந்தமான கிறீன்லாந்து தீவைக் கைப்பற்றுவதற்கும் பனாமா கால்வாயை அமெரிக்காவுக்கு சொந்தமாக்குவதற்கும் படைகளை அனுப்புவதற்கான சாத்தியத்தை நிராகரிப்பதற்கில்லை என்று முன்னர் கூறிய அவர், தற்போது எண்ணெய் வளமிக்க  தென்னமெரிக்க நாடான வெனிசூலாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற போர்வையில் இராணுவத் தாக்குதலுக்கு தயாராகிறார். போதைப் பொருளுக்கு எதிரான போரில் மெக்சிக்கோவிற்குள் தாக்குதல் நடத்துவது குறித்தும் அவர் ஏற்கெனவே எச்சரிக்கை செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரானவை என்று கூறிக்கொண்டு கரிபியன் மற்றும் பசுபிக் கடற்பிராந்தியங்களில் கடந்த சில வாரங்களாக  தாக்குதல்களை நடத்துவதன் மூலமாக வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மடுரோ மீது அமெரிக்கா நெருக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. 1989 ஆம் ஆண்டில் பனாமா ஆக்கிரமிப்பிற்கு பிறகு கரிபியன் கடற்பரப்பில் பெருமளவில் அமெரிக்கப் படைக்குவிப்பு தற்போதுதான் இடம்பெற்றிருக்கிறது. 

 வெனிசூலாவின் வான்பரப்பு முற்றாக மூடப்பட்டுவிட்டதாக கருதப்பட வேண்டும் என்று இரு வாரங்களுக்கு முன்னர் ட்ரம்ப் கூறினார். கரிபியன் கடற்பரப்பில்  வெனிசூலா மீது தாக்குதல் நடத்தக்கூடிய தூரத்திற்குள் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தரித்துநிற்கின்றன. போதைப்பொருளை கடத்திச்செல்வதாக கூறப்படும் படகுகள் மீது அமெரிக்கப்படைகள் நடத்திய தாக்குதல்களில் அண்மைய வாரங்களில் பலர்  கொல்லப்பட்டிருக்கிறார்கள். 

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என்று வாஷிங்டனால் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குழுமம் ஒன்றின் தலைவராக ஜனாதிபதி மடுரோ செயற்படுகிறார்  என்று குற்றஞ்சாட்டும் அமெரிக்க அரசாங்கம் அதற்கு  திட்டவட்டமான சான்று எதையும் இதுவரை முன்வைக்கவில்லை. 

வெனிசூலாவுக்கு எதிரான தடைகளை ட்ரம்ப் விரிவுபடுத்தியிருப்பதுடன் ஏற்றுமதிக்கு தடைசெய்யப்பட்ட எண்ணெயை ஏற்றிச் சென்றதாக குற்றஞ்சாட்டி வெனிசூலா கரையோரமாக கப்பல் ஒன்றை அமெரிக்கா டிசம்பர் 10 ஆம் திகதி கைப்பற்றியது. கரிபியனில் ‘கடற்கொள்ளை யுகம்’  ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி  தோற்றுவிக்கிறார் என்று மடுரோ குற்றஞ்சாட்டியிருக்கிறார்.  அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளை நோபல் சமாதானப் பரிசைப் பெற்ற வெனிசூலாவின் வலதுசாரி எதிர்க்கட்சி தலைவியான மரியா கொரினா மச்சாடோ முழுமையாக ஆதரிக்கிறார்.

ஹியூகோ ஷாவேஸின் மறைவைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டில் இருந்து வெனிசூலாவின் ஜனாதிபதியாக பதவியில் இருந்துவரும் (சோசலிசவாதி என்று தன்னைக்கூறிக்கொள்ளும் ) மடுரோ 2024 ஜனாதிபதி தேர்தலில் மோசடிகளைச் செய்து வெற்றிபெற்றதாகக் குற்றச்சாட்டப்படுகிறது. 

அவரது ஆட்சியில் பொருளாதாரம் படுமோசமான பின்னடைவைக் கண்டதையடுத்து இலட்சக்கணக்கில் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள். வெனிசூலாவின் இன்றைய நிலைமைக்கு மடுரோ பொறுப்பு என்ற போதிலும், வாஷிங்டன் விதித்திருக்கும் தடைகளும் அந்த நிலைமைக்கு பெருமளவில் பங்களிப்பைச் செய்திருக்கின்றன.

மடுரோவின் அரசாங்கத்தை மலினப்படுத்தும் ஒரு முயற்சியாக அமெரிக்காவும் பல ஐரோப்பிய நாடுகளும் அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சி முக்கியஸ்தரான ஜுவான் குவாய்டோவையே ஜனாதிபதியாக அங்கீகரித்திருந்தன. 

மடுரோ ஜனநாயக விரோதமாக எதேச்சாதிகார ஆட்சி நடத்துகிறார் என்று குற்றஞ்சாட்டி அவருக்கு எதிரான போராட்டத்தை அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் துணிச்சலாக முன்னெடுக்கிறார் என்பதற்காகவே எதிர்க்கட்சி தலைவி மச்சாடோவுக்கு நோபல்  சமாதானப்பரிசு வழங்கப்பட்டது. கடந்த அக்டோபரில் சமாதானப்பரிசு அறிவிக்கப்பட்ட உடனடியாகவே அதை அமெரிக்க ஜனாதிபதிக்கு  சமர்ப்பணம் செய்வதாக மச்சாடோ அறிவித்தார். மடுரோ ஆட்சிக்கு எதிரான ஜனநாயகப் போராட்ட இயக்கத்துக்கு ட்ரம்ப் தீர்க்கமான ஆதரவை வழங்கிவருவதற்காக அவருக்கு மச்சாடோ நன்றி தெரிவித்தார்.

  கடந்த வருட தேர்தலுக்கு பிறகு மச்சாடோ தலைமறைவாக இருந்து வருகிறார். தனது மறைவிடத்தில் இருந்து இரகசியமாக கடல் மார்க்கமாக  வெளியேறி நோர்வேக்குச் சென்று நோபல் சமாதானப் பரிசை தானே நேரடியாக சர்வதேச மனித உரிமைகள் தினமான  டிசம்பர் 10 ஆம் திகதி  ஒஸ்லோவில் நடைபெற்ற வைபவத்தில் பெறுவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை. 

உரிய நேரத்துக்கு மச்சாடோவினால் ஒஸ்லோவைச் சென்றடைய முடியவில்லை. அதனால் அவரின் மகளே பரிசைப் பெற்றுக்கொண்டார். ஆனால் காலந்தாழ்த்தியேனும் ஒஸ்லோ சென்ற மச்சாடோவுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தனது நாட்டில் இருந்து வெளியேறி  ஐரோப்பாவுக்கு வருவதற்கு அமெரிக்கா செய்த உதவிக்காக அவர் நன்றிகூறினார்.

வெனிசூலாவுக்குள் அமெரிக்க இராணுவத்தை அனுப்பி மடுரோவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ட்ரம்பின் திட்டத்துக்கு அமெரிக்க காங்கிரஸுக்குள் எதிர்ப்பு இருக்கிறது. கடந்த வாரம் எண்ணெய்க்கப்பல் கைப்பற்றப்பட்ட சம்பவத்துக்கு பிறகு கருத்து தெரிவித்த ஜனநாயக கட்சி காங்கிரஸ் உறுப்பினர்கள் ட்ரம்ப் ‘நித்திரையில் போருக்குள் நடந்துசெல்கிறார்’  என்று வர்ணித்திருந்தார்கள்.

கரிபியன் கடற்பரப்பில் அமெரிக்கப்படைகள் நடத்திவரும் தாக்குதல்களில் குடிமக்கள் பலர் கொல்லப்படுவது அப்பட்டமான சர்வதேச சட்டமீறலாகும். மடுரோவின் ஆட்சியில் தன்மை எத்தகையதாக இருந்தாலும், அவருக்கு எதிரான ட்ரம்ப் நிருவாகத்தின் அச்சுறுத்தல்கள் வெனிசூலாவின் சுயாதிபத்தியத்தின் மீதான தாக்குதல்களேயாகும்.

கடந்த காலத் தவறுகளில் இருந்து அமெரிக்கா படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதே இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாகும்.

வியட்நாம் போர்க்காலத்தில் ஒரு கட்டத்தில் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த றொபேர்ட் மக்னமாரா (பிறகு அவர் உலகவங்கியின் தலைவராகவும் பதவி வகித்தார்) ஜேர்மன் தத்துவஞானி ஹெகலின் கூற்று ஒன்றை நினைவு கூர்ந்தார் ; “வரலாற்றில் இருந்து எவரும் படிப்பினைகளைப் பெறுவதில்லை என்பதே வரலாற்றில் இருந்து பெறக்கூடியதாக இருக்கும் படிப்பினையாகும்.”

9/ 11 தாக்குதல்களுக்கு பிறகு 2001 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானுக்குள் படையெடுத்த அமெரிக்கா  இருபது வருடக்களுக்கு பிறகு தலிபானகளுடன் இணக்கப்பாடொன்றுக்கு வந்து வெளியேறுவதை தவிர வேறு மார்க்கம் இருக்கவில்லை. சதாம்ஹுசெயன் பேரழிவுதரும் ஆயுதங்களை குவித்து வைத்திருப்பதாகக் கூறிக்கொண்டு  2003 ஆம் ஆண்டில் ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்த பிறகு இடம்பெற்றவை  உலகில் இடம்பெற்றிருக்கக்கூடிய படுமோசமான மனிதப் பேரவலங்களில் ஒன்றாக அமைந்தது.   

தற்போது பல போர்களை முடிவுக்கு கொண்டுவந்ததாக கூறி நோபல் சமாதானப் பரிசுக்கு ஆசைப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் வெனிசூலாவில் அதே தவறைச்  செய்வதற்கு தயாராகும் அபத்தத்தைக் காண்கிறோம். 

https://arangamnews.com/?p=12529

மலையகத்தை நோக்கிப் போதல் - நிலாந்தன்

3 weeks 4 days ago

மலையகத்தை நோக்கிப் போதல் - நிலாந்தன்

facebook_1765650158563_74056735226632081

டித்வா புயலால் தமிழ்த் தரப்பில் அதிகம் பாதிக்கப்பட்டது மலையகத்  தமிழர்கள்தான். மலையகத்தில் வெள்ளம்,புயல்,மண்சரிவு ஏற்படும்போது அங்கே உறக்கத்திலேயே மண்மூடி இறந்தவர்கள் அதிகமாக ஏழைகள்தான். மேல் நடுத்தர வர்க்கம் அவ்வாறு இறப்பது குறைவு. மலையகத்தில் உள்ள பெரும்பாலான சுற்றுலா விடுதிகள்,தேயிலை பதப்படுத்தும் தொழிற்சாலைகள் போன்றன இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படுவது ஒப்பீட்டளவில் குறைவு. ஏனென்றால் செல்வந்தர்கள் தங்கள் வீடுகளையும் தொழிற்சாலைகளையும் பாதுகாப்பான இடங்களில் கட்டுகிறார்கள். ஆனால் ஏழைகள் மலை விளிம்புகளில்,மண் சரியக்கூடிய இடங்களில் வீடுகளைக்  கட்டுவதனால் இயற்கை அனர்த்தங்களின் போது முதற் பலியாகிறார்கள்.

காலாகாலமாக இயற்கை அனர்த்தங்களின் போது மட்டுமல்ல, இன முரண்பாடுகளின் போதும் உடனடியாகச் சுற்றி வளைக்கப்படும் மக்களாக, இன அழிப்புக்கு உள்ளாகும் மக்களாக அவர்களே கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாகக் காணப்படுகிறார்கள்.

அவர்கள் மலிவான கூலிகளாக இச்சிறிய தீவுக்குள் கொண்டு வரப்பட்ட போதும் ஏறக்குறைய அடிமைகள் போலவே கொண்டுவரப்பட்டார்கள். அடிமைகள் போலவே நடத்தப்பட்டார்கள். அங்கிருந்து தொடங்குகிறது இன அழிப்பு.

அடுத்த கட்டம் மலையகத் தமிழரின் சனத்தொகையானது தென்னிலங்கைக்குள் ஒரு பெரிய தமிழ்ச் சனத்தொகையாகப் பல்கிப் பெருகுவதைத் தடுப்பதும், அதன்மூலம் ஈழத் தமிழர்களோடு அவர்கள் இணைந்து இலங்கைத் தீவில் மொத்தத் தமிழ்ச்  சனத்தொகையைப் பலப்படுத்துவதைத் தடுக்கும் உள்நோக்கத்தோடும், மலையக தமிழர்களுடைய குடியுரிமை பறிக்கப்பட்டது. இப்படிப்பார்த்தால் இலங்கையில்,தமிழ் இனஅழிப்பின் தொடக்கம் மலையகம்தான்.

அதன்பின் காலத்துக்குக் காலம் இடம்பெற்ற இன அழிப்பு நடவடிக்கைகளின் போது முதலில் பலியாவது மலையக மக்கள்தான். அவ்வாறு பாதிக்கப்பட்ட மலையக மக்கள் வடக்கு கிழக்கு நோக்கி வந்திருக்கிறார்கள். வடக்கு கிழக்கில் அவர்கள் கௌரவமாக நடத்தப்பட்டார்கள் என்று கூறமுடியாது. ஏழை மலையகத் தமிழர்கள் வடக்கில் வீட்டு வேலைக்காரர்களாக,கடைகளிலும்ம் வன்னிப் பெருநிலத்தில் வயல்கள் தோட்டங்களிலும் மலிவுக் கூலிகளாக வேலை செய்தார்கள்.

வடக்கு கிழக்குக்கு வந்த மலையக மக்களை ஒப்பீட்டளவில் கௌரவமான நிலைக்கு உயர்த்திய நகரங்கள் இரண்டு.ஒன்று கிளிநொச்சி. மற்றது வவுனியா. அதிலும் கிளிநொச்சிதான் மலையகத் தமிழர்களை ஒப்பீட்டளவில் சமூகத்தில் எல்லா மட்டங்களிலும் உயர் நிலைக்கு உயர்த்தியது. அது ஒரு குடியேற்றப் பட்டினம் என்பதனால், அங்கே மலையகத் தமிழர்கள் ஒப்பீட்டளவில் எல்லா வாய்ப்புகளையும் பெற்றார்கள்.கிளிநொச்சியின் பெரிய வியாபாரிகளாக, மருத்துவர்களாக, ஆசிரியர்களாக, அதிபர்களாக, கல்வி அதிகாரிகளாக, நிர்வாகிகளாக, பொறியியலாளர்களாக, ஊடகவியலாளர்களாக, இன்னபிறவாக.. மலையகத் தமிழர்கள் அங்கே பலமாகக் காணப்படுகிறார்கள். ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்படட உத்தியோகப்பற்றற்ற ஒரு கணக்கெடுப்பின்படி அங்கே மொத்த சனத்தொகையில் அவர்களுடைய சனத்தொகை 40% இற்கும் குறையாது.

வவுனியாவில் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில், அங்கே மலையகத் தமிழர்களைக் குடியமர்த்தும் வேலைகளை “காந்தியம்” ஒருங்கிணைத்தது. இவ்வாறு குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்களில் ஒரு பகுதியினர் எல்லைப்புறங்களில் சிங்கள குடியேற்றவாதிகளுக்கும் தமிழ்மக்களுக்கும் இடையிலான மனிதக் கவசங்களாகக் குடியமர்த்தப்பட்டார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் காந்தியம் அதை அவ்வாறு கருதிச் செய்யவில்லை என்பது,காந்தியத்தின் முக்கியஸ்தர்களை, அவர்களுடைய வாழ்க்கைக்கூடாக அறிந்து வைத்திருக்கும் எவருக்கும் தெரியும்.

இன்று வவனியாவில் தமிழ்ச் சனத்தொகையை, குறிப்பாக தேர்தல்களில் தமிழ் வாக்குகளின் ஒரு பகுதியைக் கட்டியெழுப்புவது மலையகத் தமிழர்கள்தான். அதாவது வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான எல்லையில் தமிழ்ச் சனத்தொகையைப் பாதுகாப்பதில் மலையகத் தமிழர்களுக்குப் பங்குண்டு.

இப்படிப்பட்டதோர் பின்னணியில்,மலையக மக்களுக்கு பாதுகாப்பான காணியுரிமையை வழங்குவதற்கு மறுத்தால் மாற்று யோசனையாக மலையக மக்களை வடக்கு-கிழக்கில் குடியேற்ற வேண்டும் என்று மனோ கணேசன் கூறியிருக்கிறார். அதேசமயம்,பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களை  வடக்குக்கிழக்குக்கு வருமாறு சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகனும் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரனும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

வடக்கு கிழக்கிலிருந்து இவ்வாறு அழைப்பு விடுக்கப்படுவது இதுதான் முதல் தடவையல்ல,புளட் இயக்கத்தில் இருந்தவரும் மூத்த கவிஞரும், இப்பொழுது திரைப்படக் கலைஞராக இருப்பவருமாகிய,வ.ஐ.ச.ஜெயபாலன் இரு தசாப்தங்களுக்கு முன்பு  தென்னிலங்கைப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அதைச் சுட்டிப்பாகக் கூடியிருந்தார். மலையகத் தமிழர்களை வடக்கு கிழக்கில் குடியேற்ற வேண்டும் என்று. அப்பொழுதும் அந்தப் பேட்டிக்கு எதிர் வினைகள் வந்தன. இப்பொழுதும் சுமந்திரன் மற்றும் ஆறு.திருமுருகனின் அழைப்புகளுக்கு அவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

மலையகத் தமிழர்களையும் உள்ளடக்கிய ஈழ வரைபடத்தை வரைந்து வைத்திருந்தது ஈரோஸ் இயக்கம்தான். மலையகத்தையும் உள்ளடக்கிய தமிழீழம் என்பது ராணுவரீதியாக மலையகத்தை முதலில் பலியிடுவதாக முடியும் என்று அப்பொழுது விமர்சிக்கப்பட்டது. ஏனென்றால் மலையகம் நிலத்தால், சிங்களக் கிராமங்களால் சூழப்பட்ட ஒரு தமிழ் நிலப் பரப்பு. எனவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அவர்களையும் ஆயுதமயப்படுத்தினால் அது அந்த சமூகத்தை முதலில் பலியிடுவதாக முடியும் என்று சுட்டிக் காட்டப்பட்டது.

தமிழ் மக்களுடைய சுதந்திரப் போராட்டத்தில் முன்னணித் தளபதிகளாக பல மலையகத் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக கிளிநொச்சியில் இருந்து எழுச்சி பெற்ற பல தளபதிகள், இடைநிலைத் தளபதிகள், அரசியல் பிரிவு முக்கியஸ்தர்கள் உண்டு. ஈழப் போராட்டம் மலையகத் தமிழர்களுக்கு கௌரவமான,மதிப்பு மிகுந்த இடத்தைக் கொடுத்தது.

தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய அறிவு ஜீவிகளில் ஒருவராகிய மு.திருநாவுக்கரசு தன்னுடைய “இலங்கை அரசியல் யாப்பு:டொனமூரிலிருந்து இருந்து சிறுசேன வரை” என்ற நூலில் ஓரிடத்தில் பின்வருமாறு கூறுகிறார்….”மலையகத் தமிழரின் பிரச்சினையில்,அவர்கள் வாழும் மாலையகத்தைச் சார்ந்த புவியியல் பின்னணியில், அவர்களுக்குரிய ஓர் அரசியல் நிர்வாகப் பிரிவைக் கோரும் உரிமை அவர்களுக்கு உண்டு. (உதாரணமாக இந்தியாவில் புதுச்சேரி மாநிலம் இருப்பது போன்ற அமைப்பு). அந்த வகையில் அவர்களுக்கான தீர்வு புதிய யாப்பில் உருவாக்கப்பட வேண்டும்.

அதேவேளை மலையகத் தமிழர் விரும்புமிடத்து, ஈழத்தமிழ் மாநிலத்தின் குடிமக்களாகக் குடியேறும் உரிமை உடையவர் என்பதை ஈழத்தமிழ் மாநிலம் தனது யாப்பில் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் அவ்வாறு ஈழத்தமிழ் மாநிலத்தில் குடியேற விரும்பும் மலையத் தமிழர்களுக்கு காணி மற்றும் வீட்டு வசதிகளை ஈழத்தமிழ் மாநில அரசு செய்து கொடுக்க வேண்டும் என்பதுடன், அவ்வாறு குடியேறிய குடும்பங்களில் ஒருவருக்காவது வேலைவாய்ப்பை வழங்கவேண்டிய பொறுப்பும் ஈழத்தமிழ் மாநில அரசுக்குரியதாகும்.”

மலையகத்  தமிழர்களை ஈழத் தமிழ் நோக்கு நிலையில் இருந்து ஓர் இறுதித் தீர்வில் எவ்வாறு இணைக்க வேண்டும் என்பதற்கு திருநாவுக்கரசு முன்வைக்கும் முன்மொழிவு அது. அதேசமயம் மலையகத்  தமிழர்களை ஒரு தேசிய இனமாக வரையறுத்து இறுதித் தீர்வில் அவர்களுக்கும் ஒரு பொருத்தமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பது,கடந்த 16ஆண்டுகளுக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக தமிழ்த் தேசியத் தரப்பால் முன்மொழிக்கப்பட்ட தீர்வு முன்மொழிவுகளில் கூறப்பட்டுள்ளது.

நிலத்தைத்தவிர அதாவது தாயகத்தைத்தவிர, மற்ற எல்லா விடயங்களிலும் ஒரே பண்புகளைக் கொண்டிருக்கும் இரண்டு மக்கள் கூட்டங்களும் தீர்வு முயற்சிகளில் ஒன்றிணைந்து செயற்படுவதே பலம்.மலையகத் தமிழர் மத்தியில் ஒரு பலமான நடுத்தர வர்க்கம் மேலெழுந்துவிட்டது.ஒரு தேசிய இனமாக மலையகத் தமிழர்களைக் கட்டியெழுப்ப அவர்களால் முடியும். ஓர் இணைத் தேசிய இனமாக,ஈழத்து தமிழர்கள் மலையகத்தை நோக்கிச் செல்ல வேண்டியது ஈழத் தமிழர்களுடைய தவிர்க்கப்பட முடியாத ஒரு தேசியக் கடமை.மலையகத் தமிழரை அவர்களுடைய தாயத்தில் வைத்தே பலப்படுத்த வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் அதை நோக்கி தன்னால் முடிந்த எல்லாவறையும் செய்ய வேண்டும் ஒரு பேரிடர் காலம்  தமிழ் ஐக்கியத்தை, தமிழ் சகோதரத்துவத்தைப் பலப்படுத்தியிருக்கிறது.

https://www.nillanthan.com/8007/

புயல் அனுராசங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறதா ? - நிலாந்தன்

3 weeks 4 days ago

புயல் அனுராசங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறதா ? - நிலாந்தன்

facebook_1765176004288_74036847754923904

புயல் அனுராசங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. அனைத்துலக அளவிலும் உள்நாட்டிலும் அரசாங்கத்தைப் பலப்படுத்தத் தேவையான ஒரு மனிதாபிமானச் சூழல் உருவாகியிருக்கிறது. இந்த மனிதாபிமான அரசியல் சூழல் அல்லது நிவாரண அரசியல் சூழல் எனப்படுவது அதன் தர்க்கபூர்வ விளைவாக அரசாங்கத்தைப் பலப்படுத்தும்.

அனைத்துலக அளவில் பெரும்பாலான நாடுகள் வரிசைகட்டி நின்று உதவி செய்கின்றன. குறிப்பாக முதலில் உதவியதும் இந்தியா. அதிகம் உதவியதும் இந்தியாதான். தவிர வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களும் உதவுகிறார்கள். சில புலம்பெயர்ந்த தமிழர்களும் அரசாங்கத்துக்கு நிதி சேர்த்துக் கொடுக்கிறார்கள். அல்லது தாம் சேர்த்த நிதியை தாம் வாழும் நாட்டின் அரசாங்கத்துக்கு ஊடாகக் கொடுக்கிறார்கள்.

உள்நாட்டில் செழிப்பான ஒரு மனிதாபிமானச் சூழல் மேலெழுந்துள்ளது. தொண்டு நிறுவனங்கள்,மத நிறுவனங்கள், சிறிய சமூக அமைப்புக்கள் என்று பல்வேறு வகைப்பட்ட அமைப்புகளும் தனி நபர்களும் தன்னார்வமாக முன்வந்து உதவிகளைச் சேகரித்து, தேவைப்படும் மக்களுக்குத் கொண்டு சென்று கொடுக்கிறார்கள். நிவாரணத்தைச் சேகரிக்கும்பொழுது உள்ளூர் வணிகர்களும் காசு உள்ளவர்களும் தங்களால் இயன்ற அளவுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள். சிங்களப் பகுதி ஒன்றில் ஒரு முதிய பெண் தன்னுடைய பங்குக்கு தன்னிடம் இருந்த இரண்டு பனடோல் மாத்திரை அட்டைகளை அன்பளிப்பாகக் கொடுத்தது ஒரு நிகழ்ச்சியான சம்பவமாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

அதேசமயம் தமிழ்ப் பகுதிகளில் தன்னார்வமாக இளையவர்களும் தொண்டு நிறுவனங்களும் நிவாரணங்களை சேகரித்துக் கொண்டு மலையகத்தை நோக்கிச் செல்கிறார்கள். புயல் ஓய்ந்த அடுத்தடுத்த நாட்களில் ஒரு பகுதியினர் தனித்துவிடப்பட்டிருக்கும் முல்லைத்தீவை நோக்கியும் வன்னியின் எனைய பகுதிகளை நோக்கியும் சென்றார்கள். அங்கே தங்களால் முடிந்த உதவிகளைச் செய்த பின் மலையையகத்தை நோக்கித் திரும்பினார்கள். வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் மலையகத்தை நோக்கி உதவிகள் செல்கின்றன. புயலுக்குப் பின்னரான மனிதாபிமானச் சூழலானது தமிழ் சகோதரத்துவத்தை மேலும் பலப்படுத்தியிருக்கிறது.

முஸ்லிம்கள் தங்களுடைய மதக் கட்டமைப்புகளுக்கு ஊடாகவும் தொண்டு நிறுவனங்களுக்கு ஊடாகவும் பொருட்களை சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களை நோக்கிச் செல்கிறார்கள். உதாரணத்துக்கு,”கெலி ஓயா அபிவிருத்தி நிதியம்” என்ற அமைப்பு கண்டி மாவட்டத்தில்,உடுநுவர பிரதேச செயலர் பிரிவில்,பள்ளிவாசலை மையமாக கொண்டு இயங்குகிறது. டித்வா புயல் அழிவுகளின் பின் உருவாக்கப்படட அமைப்பு இது.

தென்னிலங்கையில் பாதிக்கப்படாத பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நோக்கி தன்னார்வமாகத் திரண்டு செல்கிறார்கள். அரச கட்டமைப்புகள் உதவிக்கு வரும் அதேவேளை, மக்கள் தாங்களாக முன்வந்து தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார்கள். வெள்ளம் கட்டுக்கடங்காது ஓடிய பகுதிகளில் வீதிகள்,வீடுகள்,பொது இடங்கள் போன்றவற்றில் சேறு கழி போல மூடிக்கிடக்கின்றது. சில இடங்களில் கால் புதையக் கூடிய அளவுக்கு சேறு. அதனை அரச உதவி வரும் வரை பார்த்துக் கொண்டிருக்காமல், அயலில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தாங்களாக முன்வந்து அகற்றுகிறார்கள். தெருக்களிலும் வீடுகளிலும் பொது இடங்களிலும் உள்ள சேற்றைக் கழுவி அகற்றுகிறார்கள். முறிந்து விழுந்த மரங்களையும் குப்பைகளையும் சேகரித்து ஓரிடத்தில் குவிக்கிறார்கள்.

இதுவிடயத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரே சமயத்தில் அரச கட்டமைப்புகள், அரசுசாரா கட்டமைப்புகள்,தன்னார்வலர்கள்,இவர்களோடு உதவிக்கு வந்த நாடுகளின் தொண்டர்கள்,படையினர் மற்றும் வெளிநாட்டவர்கள் என்று எல்லாத் தரப்பும் இணைந்து அந்தப் பகுதியை துப்புரவாக்கும் காட்சி அற்புதமானது. சில இடங்களில் உல்லாசப் பயணிகளாக வந்த வெள்ளைக்காரர்களும் காணப்பட்டார்கள்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களே மக்களுக்கு உதவும் தன்னார்வ தொண்டுச் செயற்பாடுகளில் ஜேவிபியின் அடிமட்ட வலைப்பின்னல் பலமாகச் செயல்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடித்தளமாக இருப்பது ஜேவிபி. அது அடிப்படையில் ஓர் இயக்கம். அடிமட்ட கிராமிய வலைப் பின்னலைக் கொண்ட ஓர் இயக்கம். எனவே அவர்களிடம் உள்ள அடிமட்ட வலையமைப்பு புயலுக்குப் பின்னரான மனிதாபிமானச் சூழலை அரசாங்கத்துக்குச் சாதகமாகக் கட்டமைத்து வருகிறது.

594534022_26570693365864908_637093762434

இவ்வாறாக டித்வா புயலுக்குப் பின்னரான மனிதாபிமானச் சூழல் என்பது ஒரு விதத்தில் அனுரவுக்குச் சாதகமானதாகவே காணப்படுகிறது. ஒருபுறம் நாட்டை நோக்கி உதவிகள் குவிக்கின்றன. இன்னொருபுறம்,ஒரு பேரிடருக்குப் பின்னரான மனிதாபிமானச் சூழல் அதிகம் நெகிழ்ச்சியானதாகவும் உணர்வுபூர்வமானதாகவும் காணப்படுகிறது.

” (நாட்டில் நிலவும் )மிகவும் பலமான ஒரு சகோதரத்துவத்துக்கு நாங்கள் உயர் முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறோம். என்னைப் பொறுத்தவரை இது அசாதாரணமானது. நாடு முழுவதும் மக்களும் மக்கள் அமைப்புகளும் ஒன்றாக திரண்டு ஒருவர் மற்றவருக்கு உதவ முன்வருகிறார்கள். இதுபோன்ற  சகோதரத்துவத்தை என்னுடைய நாட்டில் காண முடியுமா என்பதை என்னால் உறுதியாக கூறமுடியாது என்பதனை நான் இங்கே கூறவேண்டும். சிறீலங்கர்கள் காட்டும் இந்த வகையான  சகோதரத்துவம் அசாதாரணமானது.” இவ்வாறு இலங்கைக்கான ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி அண்மையில் தெரிவித்துள்ளார்.

இது இயற்கைப் பேரிடர் ஒன்றுக்குப் பின்னரான மனிதாபிமானச் சூழல். ஆனால் இங்கு இயற்கை மட்டும் பேரிடரை ஏற்படுத்தவில்லை. மனிதத் தவறுகளும் இதற்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுகின்றன. ரணில் விக்கிரமசிங்க இந்த அரசாங்கம் பதவியேற்ற புதிதில் இது ஓர் “எல்போர்ட்” அரசாங்கம் என்று நக்கலடித்திருந்தார். அனர்த்த காலமொன்றை முகாமை செய்ய இந்த அரசாங்கத்தால் முடியவில்லை என்று நிரூபிப்பதற்கு எதிர்க் கட்சிகள் முயற்சிக்கின்றன.

நுகேகொட பேரணிக்குப் பின் டித்வா புயலானது எதிர்க் கட்சிகள் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு அதிகரித்த வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்துள்ளது வழமைபோல எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை எதிர்ப்பதனை ஒரு மரபாகப் பேணுகின்றன என்று அரசுக்கு ஆதரவான அறிவுஜீவிகள் நியாயம் கற்பிக்கின்றார்கள். ஆனால் அது உண்மை அல்ல. எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் சிலவற்றை ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும். ஏற்கனவே முன்னெச்சரிக்கைகள் கிடைத்த போதிலும் அரசாங்கம் வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையானதுபோல தெரிகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் தொடர்பாக நொவம்பர் 13ஆம் திகதியே எச்சரித்திருந்தது. நவம்பர் 26வரை அனைத்துத் தகவல்களும் இலங்கையுடன் பரிமாறப்பட்டுள்ளன என்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்” இணையத்தளம் கூறுகிறது. அதுபோலவே தமிழக வானிலை முன்னறிவிப்பாளர்களில் ஒருவராகிய செல்வக்குமார், தன்னுடைய யூடியூப் தளத்தில் இதுதொடர்பாக இலங்கையை 24ஆம் திகதி எச்சரித்திருந்தார். குறிப்பாக முன்னெப்பொழுதும் ஏற்பட்டிராத வெள்ளப்பெருக்கும் மண்சரிவும் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். அதைவிடக்குறிப்பாக,இந்தப் பேரிடரின் காரணமாக இலங்கை அரசாங்கம் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்த வேண்டி வரலாம் என்றும் செல்வக்குமார் மிகத்துல்லியமாக எதிர்வு கூறியிருந்தார். அது மட்டுமல்ல தன்னுடைய முன்னெச்சரிக்கையை அரசாங்கத்திடம் கொண்டு சென்று சேர்ப்பிக்குமாறு கேட்டிருந்தார். அவருடைய முன்னெச்சரிக்கை அடங்கிய காணொளி 24 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இலங்கை வானிலை என்ற தலைப்பில் அது வெளியிடப்பட்டது

அதேபோல,யாழ்ப்பாணத்தில் வசிக்கும்,யாழ் பல்கலைக்கழக,புவியியல் துறையின் தலைவராகிய பேராசிரியர் பிரதீபராஜா ஒரு புயலைக் குறித்து ஏற்கனவே எச்சரித்திருந்தார். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்பு அதாவது செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் அவர் அந்த எச்சரிக்கையை விட்டிருந்தார். அவர் வழமையாக தன்னுடைய முகநூல் தளத்தில் வானிலை அறிவிப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

அவர் ஒரு புவியியல் துறை பேராசிரியர். இயற்கை அனர்த்தங்களைக் குறித்து எச்சரிப்பது அவருடைய உத்தியோகபூர்வ கடமை அல்ல. அதைச் செய்ய வேண்டியது வளி மண்டலவியல் திணைக்களம்,அனர்த்த முகாமைத்துவ நிலையம் போன்றனதான். ஆனால் பிரதீபராஜா அதைத் தன்னார்வமாகச் செய்கிறார். இம்முறை பருவ மழையை முன்னிட்டு அவர் முகநூலில் பதிந்த நீண்ட முன்னெச்சரிக்கைகள் அடங்கிய பதிவு ஒன்றில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. அதன்பின் மடமாகாண ஆளுநர் வேதநாயகன் அவரை தன்னுடைய அலுவலகத்துக்கு அழைத்து துறைசார் திணைக்களங்களின் பொறுப்பாளர்களையும் அழைத்து ஒரு கலந்தாலோசனை செய்தார்.

எனவே ஒரு பேரிடரைக் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று அரசாங்கம் கூறமுடியாது. இந்த முன்னெச்சரிக்கைகளை அரசாங்கம் உரிய பாரதூரத் தன்மையோடு உள்வாங்கியிருக்கவில்லை என்பதைத்தான் அது காட்டுகிறது. மேலும் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் கூறியதுபோல திணைக்களங்களுக்கு இடையில் போதிய ஒருங்கிணைப்பு இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அரசாங்கம் அனர்த்தமொன்றை வினைத்திறனுடன் முகாமை செய்யவில்லை என்று பொருள் கொள்ளத்தக்கது.

எதிர்க்கட்சிகள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன. எனினும், பேரிடருக்குப் பின்னரான மனிதாபிமான உதவிகளுக்கான சூழலானது,எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை கூர்மையிழக்கச் செய்கின்றது. அதோடு அரசாங்கம் அறிவித்திருக்கும் இழப்பீட்டுத் தொகையும் மிகப்பெரியது. இதுவரையிலும் இருந்த அரசாங்கங்கள் இதுபோன்ற அனர்த்தங்களின் போது அறிவித்திராத பெரிய தொகை இழப்பீடு அது. இந்த இழப்பீட்டின்மூலம் அரசாங்கம் தன்னை ஏழைகளின் நண்பனாக மீண்டும் ஒரு தடவை நிரூபிக்க முயற்சிக்கின்றது. அரசாங்கம் அறிவித்திருக்கும் பெரிய அளவிலான இழப்பீட்டுத் தொகையானது மக்கள் அபிமானத்தை வென்றெடுப்பதற்கு உதவும். இதனாலும் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

எனவே புயலுக்கு பின்னரான அரசியல் சூழலைத் தொகுத்துப் பார்க்கும்போது, அது மனிதாபிமானத் தேவைகளை முன்னிறுத்தும் சூழலாக மேலெழுகிறது. இதனால் அனுர அரசாங்கம் எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்ததைப் போல பலவீனம் அடையவில்லை, மாறாக பலமடைந்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.

https://www.nillanthan.com/7999/

புயல் ஓய்ந்த பின் சந்தித்த காட்சிகள் – நிலாந்தன்.

3 weeks 4 days ago

ITAK-DTNA.jpg?resize=750%2C375&ssl=1

புயல் ஓய்ந்த பின் சந்தித்த காட்சிகள் – நிலாந்தன்.

நாடு புயலில் சிக்கிச் சின்னாபின்னமாகி அதிலிருந்து முழுமையாக மீண்டெழாத கடந்த வாரம், யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு (டி.ரி.என்.ஏக்கும்) இடையே ஒரு சந்திப்பு இடம் பெற்றிருக்கிறது.

புயலின் அழிவுகளில் இருந்து மக்கள் முழுமையாக மீண்டு எழவில்லை. சிதைந்த வீதிகள் பல இப்பொழுதும் திருத்தப்படவில்லை. உடைந்து தொங்கும் பாலங்கள் பல இப்பொழுதும் முழுமையாகக் கட்டப்படவில்லை.நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்கள் முழுமையாக வீடு திரும்பவில்லை. சேறு படிந்த நகரங்களையும் வீதிகளையும் கட்டிடங்களையும் முழுமையாகத் துப்பரவாக்கி முடியவில்லை. இப்படிப்பட்டதோர் பின்னணியில் மேற்படி கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றிருக்கிறது.

இது எதிர்பார்க்கப்பட்ட ஒரு சந்திப்புத்தான். இப்படி ஒரு சந்திப்புக்கு சுமந்திரன் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார்.அதற்கு சுரேஷ் பிரமச்சந்திரன் பகிரங்கமாகப் பதில் கூறியதோடு சில கேள்விகளையும் எழுப்பியிருந்தார். இப்படிப்பட்டதோர் பின்னணியில்தான் இந்தச் சந்திப்பு இடம் பெற்றிருக்கிறது.

சந்திப்பின் பின் சுரேஷ் பிரேமச்சந்திரனும் சுமந்திரனும் தெரிவித்த தகவல்களைத் தொகுத்துப் பார்த்தால் மாகாண சபைத் தேர்தல்களை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை அங்கே வைக்கப்படுகிறது. எனவே மாகாண சபைத் தேர்தல் ஒன்றை நோக்கி இந்தச் சந்திப்பு இடம் பெற்றிருக்கலாம்.

மாகாண சபைத் தேர்தலை வைக்க வேண்டும் என்று ஈபிஆர்எல்எப் தமிழ்ப் பகுதிகளில் தொடர்ச்சியாக கருத்தரங்குகளை ஒழுங்குப்படுத்திவருகிறது. அவ்வாறான ஒரு கருத்தரங்கு வவுனியாவில் நடந்தபோது அதில் சுமந்திரனும் கலந்து கொண்டார்;பேசினார். மாகாண சபைத் தேர்தலை ஆகக்கூடிய விரைவில் வைக்க வேண்டும் என்று இந்தக் கட்சிகள் கேட்கின்றன.

மேற்படி சந்திப்பில் கலந்து கொண்ட டி.ரி.என்.ஏ ஏற்கனவே தமிழ்த் தேசியப் பேரவை என்ற ஒரு கூட்டுக்குள் காணப்பட்டது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்பின் ஓர் எழுத்துமூல ஆவணத்தில் கையெழுத்திட்டு அந்த கூட்டு உருவாக்கப்பட்டது.அப்பொழுது நடந்த ஒர்ஊடகச் சந்திப்பில் கஜேந்திரக்குமார் பின்வருமாறு சொன்னார் “இந்தக் கூட்டு உடையுமாக இருந்தால் அதைத் தமிழ் மக்கள் தாங்க மாட்டார்கள்” என்று.

அவர் ஏன் அப்படி சொன்னாரோ தெரியவில்லை. ஆனால் நாடு தாங்க முடியாத ஒரு புயலில் சிக்கி மீண்டும் எழுந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது. இதனால் தமிழ் மக்கள் தாங்க முடியாத அந்த உடைவு விரைவில் ஏற்படுமா ?

ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஏற்கனவே மாகாண சபைத் தேர்தல்களை வலியுறுத்தி கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தியபோது அந்தக் கூட்டில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கின.டி.ரி.என்.ஏ ஓர் இலட்சியக்கூட்டு அல்ல.அந்த கூட்டுக்குள் இருப்பவர்கள் அனைவருமே முன்பு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்களைச் சேர்ந்த கட்சிகள்.முன்பு தமிழரசுக் கட்சியோடு இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயல்பட்ட கட்சிகள்.பின்னர் தமிழரசுக் கட்சியின் பெரிய அண்ணன் தனத்தால் அந்தக் கூட்டுக்குள் இருந்து வெளியேறிய அல்லது வெளியேறுமாறு நிர்பந்திக்கப்பட்ட கட்சிகள்.

கடந்த ஆண்டு பொது வேட்பாளரை முன்நிறுத்திய கூட்டுக்குள்ளும் மேற்படி கட்சிகளில் பெரும்பாலானவை காணப்பட்டன.அவர்களுடைய சொந்த வாக்கு வங்கி பலவீனமானது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளை அவர்கள் வெல்லமுடியும்.ஆனால் மாகாண சபைத் தேர்தலிலோ, ஒரு நாடாளுமன்றத் தேர்தலிலோ பெரிய வெற்றிகளைப் பெறத் தேவையான வாக்கு வங்கி அவர்களுக்கு இல்லை.இந்த விடயத்தில் தங்களுடைய உயரம் என்னவென்று அந்த கட்சிகளுக்கும் தெரியும்.சங்குச் சின்னத்தை தங்களுடையதாக்கியதன் மூலம் தமது வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்தலாம் என்று அவர்கள் கண்ட கனவு பலிக்கவில்லை. எனவே வெற்றி பெறக்கூடிய கட்சியோடு இணைவதன் மூலம் தான் அவர்களால் எதிர்காலத்தில் கட்சிகளாக நின்றுநிலைக்க முடியும். அந்த அடிப்படையில் பார்த்தால் மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி இப்போதைக்கு தமிழரசுக் கட்சிதான். எனவே தமிழரசுக் கட்சியோடு ஏதோ ஓர் இணக்கத்துக்கு வர வேண்டிய நிர்ப்பந்தம் இந்தக் கட்சிகளுக்கு உண்டு.

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்ததன்மூலம் அவர்கள் மூன்று உடன் நன்மைகளைப் பெற விரும்பினார்கள். முதலாவது, தங்களைத் துரோகிகள் என்றும் ஒட்டுக் குழுக்கள் என்றும் இந்தியாவின் ஆட்கள் என்றும் பெட்டிகட்டி,முத்திரை குத்திய தீவிர தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட தரப்புகளால் ஆதரிக்கப்படுகின்ற ஒரு கட்சியோடு கூட்டுக்குப் போவதன் மூலம், தமிழ்த் தேசியப் பரப்பில் தங்களைப் பற்றியுள்ள முற்கற்பிதங்களை அகற்றலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு.

இரண்டாவது உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிந்த கையோடு தமிழரசுக் கட்சியோடு நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்திராத ஒரு பின்னணியில், தமது பேரம்பேசும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்வதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு ஓர் இணக்கத்துக்கு போக வேண்டிய தேவை இருந்தது.

மூன்றாவது உள்ளூராட்சி சபைகைளை இயலுமானவரை கைப்பற்றுவது.

இப்பொழுதும் அந்த அடிப்படையில்தான் அவர்களை தமிழரசுக் கட்சியோடு பேச முற்பட்டுள்ளார்.மாகாண சபைத் தேர்தலில் கிடைக்கக்கூடிய வெற்றிகளை உறுதிப்படுத்துவது. இப்பொழுது நடக்கும் பேச்சுக்கள் வெற்றி பெறுமாக இருந்தால் அதன் முதல்விளைவு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தனிமைப்படுத்தப்படும்.அதே சமயம் டி.ரி.என்.ஏ.யும் மதிப்பிறக்கத்துக்கு உள்ளாகும்.

அதாவது தமிழ்த் தேசியப் பரப்பில் அவர்கள் நம்பத்தக்க சக்திகள் அல்ல, இலட்சிய பாங்கான கட்சிகள் அல்ல என்ற அபிப்பிராயம் எண்பிக்கப்படும்.ஏற்கனவே பொது வேட்பாளர் விடையத்தில் சங்குச் சின்னத்தை எடுத்ததன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் சிவில் சமூகங்களோடு இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை பெருமளவுக்கு இழந்து விட்டார்கள். அதற்குப் பின்னர்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு ஓர் எழுத்துமூல ஆவணத்தின் அடிப்படையில் கூட்டாகச் செயல்படச் சம்மதித்தார்கள்.இப்பொழுது தமிழரசுக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியதன்மூலம் அவர்கள் தமிழ்த் தேசியப் பேரவையுடனான தமது உறவைப் பலவீனப்படுத்தியிருக்கிறார்கள்.அதன் மூலம் எதிர்காலத்தில் நம்பிக் கூட்டுச்சேர முடியாத தரப்பு இது என்ற முற்கற்பிதம் மேலும் நிரூபிக்கப்படும். அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சியும் அவர்களைக் கைவிடுமாக இருந்தால்,அல்லது கூட்டமைப்பாக செயற்பட்ட காலகட்டங்களில் மேடைகளில் பகிரங்கமாகவே அவர்களை ஒட்டுக் குழுக்கள் என்று அழைத்தது போல இனிமேலும் அழைப்பார்களாக இருந்தால், டி.ரி.என்.ஏ என்ற கூட்டுக்குள் இருக்கும் கட்சிகளின் எதிர்காலம் என்னவாகும்?

இக்கட்டுரையில் ஏற்கனவே குறிப்பிட்டது போல, கஜேந்திரகுமார் கூறியது போல,தமிழ்த் தேசியப் பேரவையுடனான அவர்களுடைய இணக்கம் உடையுமாக இருந்தால்,அதைத் தமிழ் மக்கள் தாங்குவார்களோ இல்லையோ டி.ரி.என்.ஏ. தாங்குமா என்ற கேள்வி உண்டு.

மாகாண சபைத் தேர்தலை நோக்கி மேற்படி சந்திப்பு நடந்திருக்கலாம். ஆனால் ஒரு மாகாண சபைத் தேர்தல் நடக்குமா இல்லையா என்பது இப்பொழுதும் சந்தேகம்தான். புயலுக்கு பின்னரான அரசியல் சூழலானது ஒரு தேர்தலை வைக்கத் தக்கதாக இல்லை. ஏற்கனவே அரசாங்கம் புயலுக்கு முன்பு மாகாண சபைத் தேர்தலுக்காக நிதியை ஒதுக்கியிருப்பதாக அறிவித்திருந்தது. அதேசமயம் மாகாணங்களின் எல்லைகளை மீள நிர்ணயம் செய்ய வேண்டி இருப்பதனால் அதற்கு கால அவகாசமும் கேட்டது.இப்பொழுது புயலுக்குப் பின்னரான அரசியல் சூழலில் அரசாங்கம் மேலும் கால அவகாசத்தை கேட்க வாய்ப்பு உண்டு.இந்தியாவை திருப்திப்படுத்துவதற்காக வேண்டுமானால் மாகாண சபை தேர்தலை அடுத்த ஆண்டு வைக்கலாம்.

அப்படி ஒரு தேர்தல் நடக்குமாக இருந்தால் அது தமிழ்த்தரப்பின் பாவீனத்தை வெளிப்படுத்துவதாக அமையுமா? இப்போதைக்கு தமிழரசு கட்சிக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகமாக தெரிகின்றன. ஆனால் அதில் அர்ஜுனாவும் களமிறங்கி இளஞ்செழியனும் களமிறங்குவாராக இருந்தால், அவர் தமிழரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கவில்லை என்றால்,அப்பொழுது தமிழரசுக் கட்சியின் வெற்றி வாய்ப்புக்களின் பருமன் குறையும்.அதுமட்டுமல்ல தேசிய மக்கள் சக்தி நம்பிக்கையோடு முன்னேறும்.

எனவே நடக்குமா இல்லையா என்று உறுதியாகத் தெரியாத ஒரு தேர்தலை நோக்கி,ஏற்கனவே இருந்த ஒரு கூட்டை உடைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியோடு இணங்கிப்போவது என்று டி.ரி.என்.ஏ முடிவெடுக்கமாக இருந்தால்,அது கஜேந்திரக்குமார் சொன்னதுபோல, தமிழ்த் தேசியப் பரப்பில் ஏற்கனவே உள்ள மிகப் பலவீனமான ஒரு ஐக்கியத்தின் முடிவாக அமையும். ஆனால் அதை தமிழ் மக்கள் தாங்கிக் கொள்வார்கள். ஏனென்றால் முள்ளிவாய்க்காலை கடந்து வந்த ஒரு மக்கள் கூட்டத்துக்கு இனி எதிர்காலத்தில் தாங்கிக் கொள்ள முடியாத துயரம்; தாங்கிக் கொள்ள முடியாத காயம்; தாங்கிக் கொள்ள முடியாத இழப்பு என்று எதுவும் கிடையாது.

https://athavannews.com/2025/1456314

தமிழ்த்தேசிய அரசியலில்  ஐக்கியம் – ஒற்றுமை – கூட்டணி – கூட்டமைப்பு

3 weeks 6 days ago

தமிழ்த்தேசிய அரசியலில்  ஐக்கியம் – ஒற்றுமை – கூட்டணி – கூட்டமைப்பு

December 11, 2025

தமிழ்த்தேசிய அரசியலில்  ஐக்கியம் – ஒற்றுமை – கூட்டணி – கூட்டமைப்பு

 —   கருணாகரன் —

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்கும் இடையில் சிநேகபூர்வமான சந்திப்பு ஒன்று கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது. எதிர்காலத்தில் தமிழ்த்தேசியத் தரப்புகள் எவ்வாறான அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்வது என்ற அடிப்படையிலேயே இந்தச்சந்திப்பு நடந்ததாக, சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழரசுக் கட்சியின் செயலாளர்எம். ஏ. சுமந்திரனும், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான சுரேஸ் பிரேமச்சந்திரனும் தெரிவித்துள்ளனர். 

இதற்கு முன்பு இந்தத் தரப்புகள் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியை அமைப்பதற்கான புரிந்துணர்வில் இணக்கம் கண்டிருந்தன. இந்த இணக்கம், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி நடத்திவரும் மாகாணசபை முறைமையை வலுப்படுத்துவதற்கான மக்கள் அரங்குகளில் தமிழரசுக் கட்சியும் நட்பின் அடிப்படையில் கலந்து கொள்வதற்கான கதவுகளைத் திறந்தது. 

ஆக இதை படிப்படியாக உருவாகி வந்த ஒரு வளர்ச்சி நிலை என்றே சொல்லலாம். ஆனால் அடுத்த கட்டத்துக்கு இது வளர்ச்சியடைவதில் அல்லது நகர்வதில் பல இடர்ப்பாடுகளும் சிக்கல்களும் உண்டு. அவை கட்சி நலன் – மக்கள் நலன் – பிரமுகர் அல்லது அரசியல் தலைவர்களின் நலன் என்ற முக்கோண வலைப் பின்னல்களுக்குள் சிக்குண்டுள்ளது. இதைக் குறித்துப் பின்னர் பார்க்கலாம்.

அதற்கு முன், இந்தச் சந்திப்பு மீண்டும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உயிர்ப்பிக்குமா? என்று சிலரிடம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் தரப்பின் பலத்தையும் அதற்கான ஐக்கியத்தையும் விரும்புவோர் இத்தகைய எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு இது உள்ளுர மகிழ்ச்சியை அளிக்கிறது. 

அப்படியென்றால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கடந்த காலத்தை நியாயமான முறையில் பரிசீலனை செய்ய வேண்டும். ஏறக்குறைய அது ஒரு போஸ்மோட்டம்தான். இதைச் செய்வதற்கு திறந்த மனதுடன் ஒவ்வொரு தரப்பும் தம்மை விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும். அதற்குத் துணிய வேண்டும். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதும் ஒரு தரப்பின் மீது மறுதரப்பு பழி சுமத்துவதையும் நிறுத்த வேண்டும். மக்கள் நலனை முன்னிறுத்தினால் இது எளிது. இல்லையென்றால் கடிதினம் கடிது.

 ஆனால், அப்படியான ஒரு அவசியம் இன்று தமிழ் அரசியற் தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளது. 

தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியும் அது நாடு முழுவதிலும் பெற்ற வெற்றியும் தமிழ்ப் பரப்பில் அதற்கு உருவாகியுள்ள செல்வாக்கு மண்டலமும் வடக்குக் கிழக்கில் தேசிய மக்கள் சக்தி நிலை கொண்டுள்ள விதமும் தமிழ் அரசியற் தரப்புகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இந்த நெருக்கடி தனியே தமிழ்த்தேசியத்தை அடையாளமாகக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு மட்டுமல்ல, இதுவரையிலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி போன்றவற்றுக்கும் உள்ளது. ஏன் மலையகக் கட்சிகள், முஸ்லிம் கட்சிகளுக்கும் உண்டு. 

தேசிய மக்கள் சக்தி இன அடையாளக் கட்சிகளைச் சவாலுக்குட்படுத்தியுள்ளது. அதன் மீதும் இனரீதியான பார்வை இருந்தாலும் நடைமுறையில் இன அடையாள அரசியலை அது சவாலுக்குட்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது. இந்த நிலையின் வெம்மை தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளை எச்சரிக்கை அடைய வைத்துள்ளது. இப்பொழுது தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகள் இரண்டு வகையான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 

1.   தேசிய மக்கள் சக்தியை, அதனுடைய அரசியல் நகர்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பது. தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் இருப்பதால் அது இரண்டு மடங்கு பலமானதாக உள்ளது. மட்டுமல்ல, அதை எளிதிற் குற்றம் சாட்டுவதற்கு முடியாத ஒரு நிலையும் உண்டு. அதாவது, கடந்த கால ஆட்சியாளர்களைப்போல ஆட்சித் தவறுகள், அதிகாரத் தவறுகள், போர்க்குற்றம் போன்ற குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி அதை எதிர்க்க முடியாது. மட்டுமல்ல, அதை நேரடி இனவாதச் சக்தியாக இப்பொழுது அடையாளப்படுத்தவும் முடியாது. 

கடந்த கால ஜே.வி.பிக்கு அப்படியான ஒரு அடையாளத்தைச் சொல்ல முயற்சிக்கலாம். ஆனால், அதையும் தேசிய மக்கள் சக்தி முறியடித்துள்ளது என்றே சொல்ல வேண்டும். எப்படியென்றால், 2010 க்கு முந்திய ஜே.வி.பி வேறு. இன்றைய ஜே.வி.பி வேறு என்பதை அது நிறுவி வருகிறது. முந்திய ஜே.வி.பியானது இந்திய எதிர்ப்பு, அமெரிக்க எதிர்ப்பு, வடக்குக் கிழக்கு இணைப்புக்கான எதிர்ப்பு, மாகாணசபை மீதான தயக்கம் போன்ற விடயங்களுடன் சம்மந்தப்பட்டது. 

இன்றைய தேசிய மக்கள் சக்தி, இவற்றைச் சாதகமான முறையில் கையாளும் ஒரு நிலைக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அல்லது அதற்கு அமையத் தன்னை மாற்றிக் கொண்டுள்ளது. என்பதால், அதனை இன அடையாளத்துடன் அல்லது இனவாத அடையாளத்துடன் சம்மந்தப்படுத்த முடியாத அளவுக்கு அது தன்னை வேறுபடுத்திக் காட்டுவதற்கு முயற்சிக்கிறது. இதில் அது கணிசமான அளவுக்கு முன்னேறியும் உள்ளது. என்பதால்தான் அது வடக்குக் கிழக்கிலும் மலையகத்திலும் ஏனைய தேசிய அரசியற் கட்சிகள் பெற முடியாத இடத்தை அதனால் பெற முடிந்தது. குறிப்பாக இளைய தலைமுறை தேசிய மக்கள் சக்தியின் பக்கம் ஈர்ப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியை வழமையான தேசிய அரசியற் சக்திகளோடு (சு.க, ஐ.தே.க, பொதுஜன பெரமுன) ஒப்பிட்டு அரசியல் செய்யவும் முடியாது. அவற்றை எதிர்கொண்டதைப்போல தேசிய மக்கள் சக்தியை எதிர்கொள்ளவும் முடியாது. 

எனவே அதற்கு ஒரு புதிய சிந்தனை முறையும் (New Thinking method) அணுகுமுறையும் (Approach) வேலைத்திட்டமும் (Work plan) வேண்டும். இவற்றை வகுத்துக் கொள்ளாமல் தேசிய மக்கள் சக்தியை எதிர்கொள்வது கடினம். ஆகவே கடந்த காலத்தில் இவை மேற்கொண்ட அரசியல் முறைமையையும் இவை பின்பற்றிய அரசியற் கருத்துநிலை  அல்லது கொள்கையையும் இனியும் அப்படியே தொடர முடியாது. சுருக்கமாகச் சொன்னால், ஜே.வி.பியானது எப்படித் தன்னைப் புதிய சூழலுக்கு ஏற்றமாதிரி வடிவமைப்புச் செய்து கொண்டதோ, அவ்வாறு இவையும் தம்மை வடிவமைக்க வேண்டியுள்ளது. 

2.   இந்தத் தரப்புகள் இதுவரையில் எட்டிய – சாதித்த – அரசியல் வெற்றிகள் (அடைவுகள்) என்ன என்ற கேள்வி மக்களிடம் உருவாகியுள்ளது. இன அடிப்படையில் தமது அடையாளத்துக்காகவும் கடந்த கால ஆட்சித்தரப்புகளின் இன ரீதியான நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காகவும் மக்கள் இந்தத் தரப்புகளை நிபந்தனையின்றி ஆதரித்து வந்தனர். அதை இந்தத் தரப்புகள் தமக்கான வாய்ப்பாகவும் கையாண்டு வந்தன. ஆனால், இப்பொழுது உருவாகியிருக்கும் அரசியற் சூழல் வேறு.  என்பதால் இவை புதிய அரசியல் அடையாளங்களை உருவாக்கி, அதை  மக்களிடம் காட்ட வேண்டியுள்ளது. அப்படிக் காட்டவில்லை என்றால், மக்கள் இவற்றைப் பொருட்படுத்த மாட்டார்கள். மக்களுடைய உணர்வுத்தளமும் வாழ்க்கைச் சவால்களும் பிரச்சினைகளும் தேவைகளும் வேறாக விட்டது. அதைப் புரிந்து கொண்டு அரசியல் முன்னெடுப்புகளைச் செய் வேண்டிய தேவை – அவசியம் இந்தத் தரப்புகளுக்கு வரலாற்று நிர்ப்பந்தமாகியுள்ளது. 

இந்தப் பின்னணியில்தான் நாம், தமிழரசுக் கட்சி – ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சந்திப்பையும் அதனுடைய அடுத்த கட்ட நகர்வையும் இதைக்குறித்து இவற்றின் ஆதரவாளர்கள் கொள்ளும் கனவையும் (விருப்பத்தையும்) பார்க்க வேண்டும். 

இப்பொழுதும் தமிழ்த்தேசியச் சக்திகளிடம் தடுமாற்றங்களே அதிகமாக உண்டு. இதற்குக் காரணம், மறுபரிசீலனைக்கான சிந்தனையும் உளநிலையும் இவற்றிடம் இன்னும் ஏற்படாதிருப்தேயாகும். ஏராளமாக விளைந்து போயிருக்கும் தமிழ்த்தேசிய அரசியற் சக்திகளில் ஒன்றிற் கூட இன்னும் புதிய அடையாளத்தை நோக்கிய பயணச் சுவட்டைக் காண முடியவில்லை. இதனால்தான் பட்டும் படாமலும் முட்டியும் முட்டாமலும் ஒரு மாதிரியாக இவை சந்திப்புகளைச் செய்கின்றன; பேசுகின்றன.

இப்பொழுது தமிழ்த்தேசியத் தரப்புகள் மும்முனையில் – மூன்று தரப்புகளாக உள்ளன. 

1.   கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவை. இதில் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசனின் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம், சிவாஜிலிங்கம் – ஸ்ரீகாந்தா இரட்டையர்களின் தமிழ்த்தேசியக் கட்சி மற்றும் சரவணபவன், தவராஜா, அருந்தவபாலன் உள்ளிட்ட ஒரு தரப்பு.  

2.   புளொட், ஈ.பி.ஆர்.எல். எவ், ரெலோ, சமத்துவக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் ஆகியவை இணைந்துள்ள ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி. 

3.   இலங்கைத் தமிழரசுக் கட்சி.

தனிக்கட்சியாக இருந்தாலும் தற்போது தமிழ்ப்பரப்பில் வலுவான சக்தியாக இருப்பது இலங்கைத் தமிழரசுக் கட்சியே. ஏனைய கட்சிகளுக்கு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தலா ஒன்று என்ற அளவிலேயே உண்டு. ஆனால், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்கு வடக்குக் கிழக்கு முழுவதிலும் உள்ளுராட்சி சபைகளில் செல்வாக்குண்டு. 

இந்த மூன்று சக்திகளும் இடைவெளிகளுடன் கூடிய தமிழ்த்தேசிய அரசியலைப் பிரகடனம் செய்துள்ளன. அரசியல் தீர்வு, மக்களுடனான அணுமுறை, தமது அரசியலை முன்னெடுக்கும் விதம், அரசியற் கொள்கை போன்றவற்றில் துலக்கமான வேறுபாடுகளைக் கொண்டுள்ளன.  

இவை ஒன்றும் புதியவையும் இல்லை. கடந்த காலத்தில் தூக்கிச் சுமந்த அதே பழைய சரக்குத்தான். ஆனால், இவற்றை இன்னும் சுமந்து கொண்டேயுள்ளன. பாரம்பரிய அரசியச் சக்திகளையும் பாரம்பரிய அரசியற் சித்தாந்தங்களையும் மீள்பரிசீலனை செய்யுமாறு வரலாறும் சூழலும் வற்புறுத்துகின்றன; நிபந்தனை செய்கின்றன. இருந்த போதும் அதைப்பற்றிய எந்தவிதமான உணர்வுமின்றி, அதே சுமைகளோடு பிடிவாதம் செய்து கொண்டிருப்பதோடு, ஒன்றோடு ஒன்று முரண்பட்டுக்கொண்டும் உள்ளன. சிலவேளைகளில் தமக்குள்ளேயே முரண்பட்டுக் கொள்வதும் உண்டு. இது மக்களுக்குச் சலிப்பையும் ஏமாற்றத்தையுமே அளிக்கின்றன.

தேசிய மக்கள் சக்தி ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு முன், தமிழ்பேசும் சமூகங்களிடம் ஒரு கூட்டுக் கோரிக்கை இருந்தது, தமது அரசியற் சக்தி திரண்டிருக்க வேண்டும். அப்போதுதான் பலமானதாக இருக்கும் என்பதாக. அன்றைய ஆட்சியாளர்களை எதிர்கொள்வதற்கு அப்படியான ஒரு திரண்ட சக்தியின் பலம் தேவையானதாகவும் இருந்தது.

இன்றைய நிலையில் அந்தத் திரட்சி – ஐக்கியம் – ஒற்றுமை – கூட்டணி – கூட்டமைப்பு என்பதெல்லாம் போதுமானதல்ல. அதையும் கடந்து புதிய அரசியல், புதிய முன்னெடுப்பு, புதிய அணுகுமுறை, புதிய வேலைத்திட்டம் போன்றவையே தேவை.

ஆக, மக்களுடைய நலனுக்கான முறையில் யதார்த்த அரசியலை – உலகுடன் பொருத்தக் கூடிய முறையிலான நடைமுறை அரசியலைச் சிந்திக்க வேண்டும். அதுவே மெய்யான பலத்தை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு – விடுதலையை விரும்பும் சமூகத்துக்கு அளிக்கும். அதுவரையில் இவை வெறும் தேநீர்ச் செலவீனத்தையும் பத்திகை – இணையச் செய்திகளுக்கான இடத்தையுமே எடுக்கும். அதற்கு மேல் எதுவுமே இல்லை.

இது சற்றுக் கடுமையான விமர்சனம்தான். ஆனால், தவிர்க்க முடியாதது. தேவையானது.

https://arangamnews.com/?p=12515

உறுதிமொழிகளை நிறைவேற்றுவது அனுரகுமார அரசுக்கு குதிரைக் கொம்பாகவே இருக்கும்

3 weeks 6 days ago

உறுதிமொழிகளை நிறைவேற்றுவது அனுரகுமார அரசுக்கு குதிரைக் கொம்பாகவே இருக்கும்

முருகானந்தம் தவம்

பொருளாதார நெருக்கடிகள், எதிர்க்கட்சிகளின் குடைச்சல்களினால் அனுரகுமார அரசு ‘ஆயுசு நூறு நித்தம் கண்டம்’ என்ற வகையில் ஆட்சியை நகர்த்துகின்ற நிலையில், இயற்கையும் தன் பங்கிற்கு   ‘டிட்வா’ புயலாக இலங்கையர்களை மட்டுமன்றி ஆட்சியாளர்களையும் புரட்டிப்போட்டு மரண அடி கொடுத்துள்ளது.

‘டிட்வா’ புயலும் அதன் விளைவான பெரு மழையும் இலங்கையில் ஆடிய கோரத் தாண்டவத்தினால் ஏற்பட்டுள்ள பேரழிவுகளிலிருந்து நாடும் மக்கள்  மட்டுமன்றி ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான அரசும் தற்போதைக்கு மீண்டெழக்கூடிய வாய்ப்புக்கள் இல்லையென்றே கூறவேண்டியுள்ளது.

இலங்கையில் பதிவான வானிலை வரலாற்றில், மிக மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்திய ஒரு வானிலை சார் அனர்த்தமாக ‘டிட்வா’ புயல் பதிவாகியுள்ளது. 2004இல் சுனாமி ஏற்படுத்திய பொருளாதார ரீதியான அழிவை  விடவும்  பல மடங்கு அதிகமான பொருளாதார அழிவை ஏற்படுத்தி  அனுரகுமார  ஆட்சியாளர்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுத்துள்ளது.

‘டிட்வா’ புயல், மழையால் முழு நாடும்  வெள்ளத்தில் மூழ்கியது, மலைகள் சரிந்தன, ஆறுகள், அணைக்கட்டுகள், குளங்கள் உடைப்பெடுத்தன. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பாலங்கள், வீடுகள், வீதிகள், கட்டிடங்கள், வர்த்தக நிலையங்கள் தகர்ந்தன, பாரிய மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன, பல மாவட்டங்களுக்கான போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டன, இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள்  வெள்ளத்தில்  மூழ்கின.

250க்கும் அதிகமான வீதிகள் பாரிய அழிவுகளைச் சந்தித்தன. 15 பாலங்கள் வரை அழிந்துள்ளன. பல்லாயிரம் தொழில்கள் அழிக்கப்பட்டன. 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தழிந்து போயின.

இந்த ‘டிட்வா’ புயலின்  கோரத் தாண்டவத்தினால் 18 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரையில்  650 வரையிலான உயிரிழப்புகளும் 200க்கு மேற்பட்டவர்கள்  காணாமல்போன சம்பவங்களும் பதிவாகின. நாடு முழுவதும் பல்லாயிரம் கோடி  ரூபாய் சொத்தழிவுகளும் பொருளாதார அழிவுகளும் ஏற்பட்டுள்ளன. 

‘டிட்வா’ புயல் வெள்ளம் ஆகியவற்றின்  இந்தக் கோரத் தாண்டவங்களினால் நாடு எதிர்கொள்ள இருக்கும் நிலைமை  மிகவும் கடினமானது என்றால், அனுரகுமார அரசு எதிர்கொள்ளப்போகும் அரசியல், பொருளாதார ரீதியான நெருக்கடிகள், சவால்கள் மிகப் பயங்கரமானதாக இருக்கப் போகின்றன.  

இலங்கைக்கு இயற்கை ஏற்படுத்திய இந்தப் பேரழிவை, அதன்  விளைவுகளை, அந்தப் பேரழிவிலிருந்து மீண்டெழும் சவாலை ஒரு புதிய அரசாங்கமாக, அனுபவமற்ற அமைச்சர்களைக் கொண்டவர்களாக, சிவப்பு சட்டை அரசியல்வாதிகளாக,

சீன சார்பு கொள்கையுடையவர்களாக, மேற்குலக நாடுகளினால் வேண்டத் தகாதவர்களாக பார்க்கப்படுபவர்களாக, நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகளினால் மிகவும் வெறுக்கப்படுபவர்களாக, ஜே.வி.பி. கட்சித் தலைமை  எடுக்கும் முடிவையே அரசாங்கத்தின் முடிவாக அறிவிக்கும் நிலையில்  இருக்கும் இந்த அனுரகுமார தலைமையிலான ஆட்சியாளர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதே இன்றுள்ள மிகப்பெரும் கேள்வி.

இந்தப்  பேரழிவு நடந்துள்ள தருணத்தில், “நாட்டிற்காக அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் மறப்போம். இனம், மதம், கட்சி அல்லது நிற வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபடுவோம். எமக்கு அரசியல் செய்ய நிறைய நேரம் இருக்கிறது.

பாரிய அனர்த்தத்தை  எதிர்கொள்ள அதிக நேரம் கிடையாது. ஒன்றாக இணைந்து  நாட்டைக் கட்டியெழுப்புவோம். நாட்டைக் கட்டியெழுப்பிய பின்னர், தனித்தனியாக அரசியல் செய்ய முடியும்’’ என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

கடந்த காலத்திலே சுனாமிக்குப் பின்னர் அப்போதைய சந்திரிகா அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து ‘சுனாமி பொதுக் கட்டமைப்பு’ ஒன்றை அமைத்து அதன் மூலம்  சுனாமியால் பேரழிவைச் சந்தித்த வடக்கு, கிழக்கு மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முற்பட்டபோது, இதே ஜே.வி.பி. தான் அதனை அனுமதிக்கக் கூடாது என்று பாராளுமன்றத்திற்குள் போராட்டம் செய்ததுடன்,

நீதிமன்றத்திற்குச் சென்று சுனாமி பொதுக் கட்டமைப்பை  உடைத்தெறிந்தது. அதே ஜே.வி.பி. தான் இன்று ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவைச் சந்தித்த  மக்களுக்கு உதவ எதிர்க்கட்சிகள். பொது அமைப்புக்கள்  ஒத்துழைக்க வேண்டுமென அழைப்பு விடுகின்றது.  

அனுரகுமார அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், அமைச்சுப் பொறுப்புக்களில் இருப்பவர்களில் 90 வீதமானோர் புது முகங்கள். எந்த  அரசியல் அனுபவமும்  அரசியல் அறிவும் அற்றவர்கள். ஜே.வி.பி.யின் தலைமையகமான ‘பெலவத்தை’ அலுவலகம் சொல்வதை  மட்டும் செய்பவர்கள்.

தமது சம்பளத்தையே கட்சிக்கு தானம் செய்பவர்கள் இவர்கள் மூளையை நம்புவதில்லை. தமது வாய் பலத்தையே (ஆவேசப் பேச்சு-பிரசாரம்) நம்புகின்றவர்கள். சர்வதேச நாடுகளின் நன்மதிப்பைப் பெறாதவர்கள்.

இவ்வாறானவர்கள் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரழிவிலிருந்து நாட்டையும் மக்களையும் எவ்வாறு மீட்டெடுப்பார்கள்? ஏற்பட்டுள்ள பொருளாதார பேரழிவை எவ்வாறு  சீர் செய்வார்கள்? என்பதுவே பொதுவாகப்  பல தரப்பட்டவர்களிடமும் எழுந்துள்ள கேள்வி.

ஆனால், எப்போதும் போலவே வாயால் வடை சுடுபவர்களான அனுரகுமார அரசினர் இந்த விடயத்திலும் எதிர்க்கட்சியினரைக் கடுமையாக  விமர்சிப்பதுடன், இயற்கை பேரழிவால் பொருளாதாரத்தில் மூழ்கிய நாட்டை  மிக சுலபமாக மீட்டெடுத்து விடுவோம் என்ற கணக்கில் வாய் சவடால்களை விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், ஏற்கெனவே பொருளாதார ரீதியில் படுபாதாளத்திலிருக்கும் இலங்கையை இந்த ‘டிட்வா’ பேரழிவு இன்னும் அதலபாதாளத்திற்குள் தள்ளியுள்ள நிலையில், அதிலிருந்து விரைவில் மேலெழுந்து வருவதென்பது கற்பனைக் கதையாக 
மட்டுமே இருக்க முடியும்.

இவ்வாறான நிலையில்தான் ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்ட விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில், “அவசர அனர்த்த நிலைமை முடிவுக்கு வந்த நிலையில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களின் வீடுகளைச் சுத்தம் செய்து மீளக்குடியேறுவதற்கு ஏற்றதாக மாற்ற ரூ.25,000 வழங்கப்பட்டுள்ளது.

அந்த தொகையை அனைவருக்கும் வழங்கி வருகிறோம். பாதிக்கப்பட்ட வீடுகளில் மீளக் குடியேறுவதற்கான அத்தியாவசிய சமையலறை உபகரணங்களை வாங்குவதற்கு, உரிமையாளரைப் பொருட்படுத்தாமல், ஒரு முறை வழங்கப்படும் மானியமாக ஒரு வீட்டிற்கு ரூ.50,000வும் நாங்கள் வழங்குகிறோம்.

அத்துடன், மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் இருக்கும் குடும்பங்களுக்கு வீடு திரும்ப 3 மாத காலத்திற்கு ரூ.25,000 வழங்கவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதை 6 மாதங்களுக்கு நீடிக்கவும் எதிர்பார்க்கிறோம்.

அதன் பின்னர், டிசெம்பர், ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு வீடுகளை இழந்த இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வாடகை வீட்டிற்குச் செல்வதற்காக மாதாந்தம் ரூ.50,000 உதவித்தொகை வழங்கப்படும். இது 3 மாதங்களுக்கு வழங்கப்படும். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நெல், தானியங்கள் மற்றும் சோளம் போன்றவற்றுக்கு ஹெக்டெயாருக்கு 1,50,000 உதவித் தொகை வழங்கப்படும்.

சுமார் 1,60,000 ஹெக்டெயார் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரக்கறி விளைச்சலுக்கு ஹெக்டெயாருக்கு ரூ.2 இலட்சம் உதவித்தொகை வழங்கப்படும். பேரிடரால் பாதிக்கப்பட்ட கால்நடை வைத்திய அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு கால்நடை வளர்ப்புப் பண்ணையையும் மீண்டும் தொடங்க தலா ரூ.2 இலட்சம் வழங்க முடிவு செய்துள்ளோம்.

மேலும், பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகமும், தமது வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க ரூ.200,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், பதிவு செய்யப்பட்ட மீன்பிடி படகுகள் முழுமையாகச் சேதமடைந்தால், அந்த படகுகள் ஒவ்வொன்றிற்கும் 4 இலட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்களைப் பெறுவதற்காக திறைசேரியிலிருந்து ரூ.15,000 உதவித்தொகை வழங்கவும், மேலதிகமாக, ஜனாதிபதி நிதியத்திலிருந்து ரூ.10,000 உதவித்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்தத்தின் தாக்கத்தால் சேதமடைந்த வர்த்தகக் கட்டிடங்களுக்கு ஒரு அலகுக்கு அதிகபட்சமாக 50 இலட்சம் வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அனர்த்தத்தின் தாக்கத்தால் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்கு புதிய வீடு கட்ட 50 இலட்சம் வழங்கப்படும். காணி இல்லையென்றால், அரச நிலம் வழங்கப்படும்.

காணி வழங்கக் காணி இல்லையென்றால், வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைக்குக் கூடுதலாக, காணியைப் பெற 50 இலட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும். அனர்த்தத்தின் தாக்கத்தால் பகுதியளவு சேதமடைந்த வீடுகளை புனர்நிரமாணம் செய்ய அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் வழங்க எதிர்பார்க்கிறோம்.  ரூ.10, 15, 20, 25 இலட்சம் என  4 பிரிவுகளின் கீழ் அந்தப் பணத்தை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அனர்த்தத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்புக்காக அவர்களின் உறவினர்களுக்கு ரூ.10 இலட்சம் உதவித்தொகை வழங்கவும் முடிவு செய்துள்ளோம்” என உறுதிமொழிகளாக  அள்ளி விட்டுள்ளார்.

ஆனால், இந்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவது அதுவும் பாதிக்கப்பட்ட மக்களையோ சரியாக இனம் கண்டு, ஊழல் மோசடியற்ற வகையில் நிறைவேற்றுவதென்பது  அனுரகுமார அரசுக்கு குதிரைக் கொம்பாகவே இருக்கும். 

இயற்கைப் பேரழிவைச் சந்தித்துள்ள மக்களை தைரியப்படுத்த, அவர்கள் தமது அரசின் மீது நம்பிக்கை வைக்க அனுரகுமார அரசு அள்ளி விட்டுள்ள இந்த உறுதிமொழிகள் கூட மைத்திரி-ரணில் நல்லாட்சிக்கு முடிவுகட்டிய  ‘உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்’ போல  கோட்டபாய ராஜபக்‌ஷ அரசுக்கு முடிவு கட்டிய  ‘கொரோனா’ போல அனுரகுமார ஆட்சிக்கு இந்த ‘டிட்வா’ இயற்கைப்  பேரழிவும் அரசு வழங்கியுள்ள நிவாரண வாக்குறுதிகளும் முடிவு கட்டினாலும்  ஆச்சரியப்பட முடியாது.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உறுதிமொழிகளை-நிறைவேற்றுவது-அனுரகுமார-அரசுக்கு-குதிரைக்-கொம்பாகவே-இருக்கும்/91-369424

வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் - நிலாந்தன்

1 month ago

வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் - நிலாந்தன்

558241154_10233149357381359_240366287494

அனர்த்த காலங்கள் அவற்றுக்கேயான புதிய பேச்சாளர்களை வெளிக் கொண்டு வரும். இறுதிக்கட்டப் போரின்போது வன்னி கிழக்கில் வாழ்ந்த மக்களின் சார்பாக குரல்தரவல்ல அதிகாரியாக மருத்துவர் சத்தியமூர்த்தி காணப்பட்டார். அப்படித்தான் அண்மை ஆண்டுகளில் இயற்கை அனர்த்தங்களின்போது மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கைகளை விடுக்கும் ஒரு “பப்ளிக் இன்ரலெக்சுவலாக” பேராசிரியர் பிரதீபராஜா மேலெழுந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 03.09.2025 புதன்கிழமை அவர் முகநூலில் எதிர்வரும் மாதங்களுக்கான வானிலை மாற்றங்கள் குறித்து நீண்ட முன்னறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நொவம்பர் மாத நடுப்பகுதியிலும் இறுதிப்பகுதியிலும்  ஏற்படக்கூடிய தாழமுக்கங்கள் தீவிர தாழமுக்கங்கள் ஆகவோ அல்லது புயல்களாகவோ மாறலாம்  என்பதை கிட்டத்தட்ட  மூன்று மாதங்களுக்கு முன்னரே முன்னறிவித்திருந்தார்.

அரச வளிமண்டலவியல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக வானிலை மாற்றங்களை அறிவிக்கும். வரக்கூடிய ஆபத்துக்களையும் முன்கூட்டியே அறிவித்து எச்சரிக்கும். ஊடகங்கள் அவற்றை உடனுக்குடன் அறிவித்து மக்களை எச்சரிக்கை செய்யும். இம்முறை டித்வா புயல் தாக்கப்போவது குறித்து அரச வளிமண்டலவியல் திணைக்களம் பொருத்தமான எச்சரிக்கைகளை முன்னறிவிக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. புயல் அனுராதபுரத்தை அடையும் வரையிலும் அதுதொடர்பான எச்சரிக்கைகள் விடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

ஆனால் தமிழ்ப் பகுதிகளைப் பொறுத்தவரை குறிப்பாக யாழ்ப்பாணத்தில், பிரதீபராஜா இதுபோன்ற இயற்கை அனர்த்தங்களைக் குறித்து ஏற்கனவே சில நாட்களுக்கு அல்லது பல நாட்களுக்கு முன் எச்சரிப்பதுண்டு. அவருடைய எச்சரிக்கைகள் சில சமயங்களில் பிழைக்கலாம். மிகைப்படுத்தலாகவும் இருக்கலாம். அதனால் சில சமயங்களில் மீனவர்களுக்கோ விவசாயிகளுக்கோ அல்லது ஏனைய  துறையினருக்கோ நட்டங்கள் ஏற்படலாம். ஆனால் அவர் எதிர்வு கூறியதுபோல இயற்கை அனர்த்தங்கள் நிகழ்ந்து அதனால் ஏற்படக்கூடிய உயிர்ச் சேதங்களோடு ஒப்பிடுகையில், வருமுன் காக்கும் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய பொருட்சேதம் பொருட்படுத்தத்தக்கது அல்ல.

590284076_25061867350136233_969412489308

மழைக்காலங்களில் மலைகளில் மண் சரிவு ஏற்படுவது வழமை. ஒவ்வொரு பருவ மழைக்கும் மலையக மக்கள் மண் சரிவுகளில் சிக்கி உயிரிழந்து வருகிறார்கள். மழை வீழ்ச்சி அதிகரிக்கும்போது,மண் சரிவு ஏற்படக்கூடிய பிரதேசங்களில் வாழும் மக்களை எச்சரிக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு உண்டு. அந்த மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. இக்கட்டுரையில் முன் கூறியதுபோல வருமுன் காக்கும் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய சிரமங்கள், நட்டங்களை விடவும் அந்த முன்னெச்சரிக்கையின்படி நிகழும் அனர்த்தத்தால் இழக்கும் உயிர்களின் நட்டம் பெரிது. நாடு இப்பொழுது அவ்வாறான உயிர்ச் சேதத்தைத்தான் எதிர்கொண்டிருக்கிறதா?.

ஒரு புயல் தாக்கப் போகிறது என்பதனை பிரதீபராஜா ஏற்கனவே தெளிவாகக் கூறியிருந்தார். அதை அவர் வழமைபோல தனது முகநூல் பக்கத்தில் மட்டும் பகிரவில்லை. இந்தமுறை வடமாகாண ஆளுநர் அவரை தன்னுடைய அலுவலகத்துக்கு உத்தியோகபூர்வமாக அழைத்து உரையாடியுள்ளார். அந்தச் சந்திப்பில் சம்பந்தப்பட்ட துறைசார் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது பிரதீபராஜா தெரிவித்த தகவல்கள் பின்னர் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளிவந்தன. அதன்படி 130 ஆண்டுகளுக்குப் பின் ஒரு பேரிடர் நாட்டை நெருங்கி வருவதனை அவர் முன்கூட்டியே எச்சரித்திருந்தார்.

இந்த விடயத்தில் இப்போதுள்ள வடமாகாண ஆளுநர் வேதநாயகன் பாராட்டப்பட வேண்டியவர். ஏனென்றால் அவருக்கு முன் இருந்த ஒரு பெண் ஆளுநர் பிரதீபராஜாவை பொருட்படுத்தவில்லை. அந்தப் பெண் ஆளுநரின் காலத்தில் நடந்த ஒரு மெய்நிகர் சந்திப்பில் பிரதீபராஜா தனது கருத்தைக் கூற முற்பட்டபோது ஆளுநர் அவரைப் பொருட்படுத்தவில்லை. இதுதொடர்பாக அரச வளிமண்டலவியல் திணைக்களங்கள் தரும் தகவல்களைத்தான் நாங்கள் உத்தியோகபூர்வமாக எடுத்துக்கொள்ள முடியும். உங்களுடைய தகவல்கள் எங்களுக்குத் தேவையில்லை என்ற பொருள்பட அவர் பிரதிபராஜாவை அவமதித்திருக்கிறார்.

ஆனால் இம்முறை டித்வா புயலுக்கு முன்னரே வடமாகாண ஆளுநர் பிரதீபராஜாவுக்கு உரிய கௌரவத்தை கொடுத்து அவரை அழைத்துப் பேசியிருக்கிறார். பிரதீபராஜா எச்சரித்ததை போலவே புயல் பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் பிரதீபராஜாவைப் போலவே சென்னையை மையமாகக் கொண்ட செல்வக்குமார் என்ற வானிலை முன்னறிவிப்பாளரும் இலங்கையை நோக்கி முன்னெச்சரிக்கைகளை விடுத்திருக்கிறார்.

“வானிலை அறிவியல்” என்ற யூடியூப் தளத்தில், செல்வகுமார் இலங்கைக்கான வானிலை அறிக்கை என்ற தலைப்பில் ஒரு காணொளியை 24ஆம் திகதி வெளியிட்டார். நவம்பர் 26 தொடக்கம் 28 வரையிலுமான மூன்று நாட்களில் முன்னப்பொழுதும் காணாத பெருமழை பெய்யும் என்றும் நிலச்சரிவு ஏற்படும் என்றும் எச்சரித்திருந்தார். ( https://youtu.be/p-ayF49Ov7Q?si=lf20WuDgEkL-hr0R )

இந்த இயற்கை அனர்த்தத்தில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு மக்கள் கால்நடைகளையும் முக்கிய ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார். இந்த இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் அவசர கால நிலையை பிரகடனம் செய்ய வேண்டிவரும் என்பதையும் செல்வகுமார் முன்கூட்டியே மிகச்சரியாக ஊகித்திருந்தார். தன்னுடைய எச்சரிக்கையை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் அந்த காணொளியில் அவர் கேட்டிருந்தார். அவர் பயன்படுத்திய வார்த்தைகளில்  மிகைப்படுத்தல்கள் இருந்திருக்கலாம். ஆனால் இழக்க கொடுத்தவர்களின் நோக்குநிலையில் இருந்துபார்த்தால் அவை மிகைப்படுத்தலாகத் தெரியாது.

ccc-1024x596.png

அதாவது நாட்டுக்குள் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு புவியியல் துறை பேராசிரியரும் நாட்டுக்கு வெளியே அயலில் தமிழகத்திலிருந்து ஒரு துறைசார் வல்லுநரும் எச்சரித்த போதும்கூட அந்த எச்சரிக்கைகள் சம்பந்தப்பட்டவர்களின் காதில் விழவில்லை. அதற்குக் காரணம் என்ன?

பொதுவாக சமூக வலைத்தளங்களில் யூடியூப்களில் வரும் செய்திகள், தகவல்கள், எச்சரிக்கைகள் தொடர்பாக பொருட்படுத்தாத ஒரு பொதுப் புத்தி வளர்ந்து வருகிறது. யூடியூப் தலைப்புக்கள் அல்லது எச்சரிக்கைகள் மிகைப் படுத்தப்பட்டவை என்ற அபிப்பிராயம் பரவலாக உண்டு. வியூவர்ஸை கவர்ந்திழுப்பதற்காக கவர்ச்சியான தலைப்புகளைப் போடும் யூடியூப் பாரம்பரியமானது பாரதூரமான விடையங்களின் மீதான சீரியஸான கவனிப்பைக் குறைத்து விடுகிறது. பல யூடியூப்களில் தலைப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் தொடர்பு இருப்பதில்லை. இதனால் தலைப்பைக் கண்டு உள்நுழைந்து ஏமாற்றமடைந்த வியூவர்ஸ் குறிப்பாக அறிவுதெளிந்த, புத்திசாலித்தனமான வியூவர்ஸ் மீண்டும் ஒரு தடவை யூடியூப்களின் கவர்ச்சியான தலைப்புகளை, எச்சரிக்கைகளைக் கண்டு ஏமாற விரும்புவதில்லை. இந்த யூடியூப் பண்பாடு, வானிலை முன்னெச்சரிக்கை போன்ற விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

யூடியூப் பார்வையாளர்கள் மட்டுமல்ல ஏனைய சமூக வலைத்தள நுகர்வோரும் அவ்வாறுதான். எல்லாவற்றையும் ஸ்குரோல் பண்ணிக் கடக்கும் ஒரு சமூக வலைத்தளச் சூழல் வளர்ந்து விட்டது. உண்மையான எச்சரிக்கை எது உண்மையான ஆபத்து எது என்பதனை பகுத்தறிய முடியாத அளவுக்கு சமூக வலைத்தளச் சூழல் மேலோட்டமானதாக,அதிகம் ஜனரஞ்சகமானதாகக் காணப்படுகிறது.

பிரதீபராஜாவையும் செல்வகுமாரையும் தொடர்ந்து அவதானித்துவரும் சீரியசான சமூக வலைத்தளப் பாவனையாளர்கள் அவர்களுடைய எச்சரிக்கைகள் முன்னுணர்த்தும் ஆபத்துக்களை விளங்கிக் கொள்வார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரட்ன கூறுவதுபோல,இலங்கை அரசாங்கம் அல்லது சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் வருமுன் காக்கும் நடவடிக்கைகளை எடுத்திருந்தால், அழிவை ஒப்பீட்டளவில் குறைத்திருக்கலாமா ?

நாடாளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரட்ன,நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, கம்பளை பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுக்கும்,  உயிரிழப்புகளுக்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம் சாட்டினார். அது இயற்கை அனர்த்தம் என்ற போதிலும் உயிரிழப்புகள் இந்தளவுக்கு அதிகரிக்கக் காரணம், உரியநேரத்தில் முன்னெச்சரிக்கை விடுக்கப்படாமையே  என்றும் கூறினார். வழக்கமாக 160 மில்லிமீற்றர் மழை பெய்தாலே மகாவலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உண்டு. ஆனால், இம்முறை 400 மில்லிமீற்றர் மழை பெய்யும் என முன்கூட்டியே தெரிந்திருந்தும், மக்களுக்கு அதுகுறித்து எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை  என்றும், குறிப்பாக, நவம்பர் 27ஆம்திகதி ஏற்படவுள்ள ஆபத்தை உணர்ந்து, 26ஆம் திகதி நடைபெறவிருந்த உத்தியோகபூர்வ கூட்டங்கள் ரத்து செய்யப்பட்ட போதிலும், சாதாரண மக்களுக்கு அந்த ஆபத்துக் குறித்து  அறிவிக்கப்படாததற்கு, சம்பந்தப்பட்ட திணைக்களங்களே பொறுப்பு என்று அவர் குற்றம் சாட்டினார். நாவலப்பிட்டி நீர்ப்பாசனத் திணைக்கள உபஅலுவலகம் நீர்மட்டத்தை அளவிட்டிருந்தும்,அந்தத் தகவலை கம்பளை மக்களுக்குப் பரிமாறத் தவறியதே பல உயிர்கள் பறிபோகக் காரணமாக அமைந்தது என்றும்  அவர் கூறினார். மேலும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கொத்மலை அணை திறக்கப்பட்டமை நிலைமையை மேலும் மோசமாக்கியது என்றும் அவர் குற்றம் சாட்டினார்

புயலுக்கு பின்னரான உரையாடல்கள் அவ்வாறு அரசு திணைக்களங்களின் மீதான விமர்சனங்களாகவே காணப்படுகின்றன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பகுதியினர் அரசு திணைக்களங்களில் பிழை பிடிக்கிறார்கள் என்று அரசாங்கத்துக்கு ஆதரவானவர்கள் கூறுகிறார்கள். எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இயற்கை அனர்த்தங்களை துல்லியமாக எதிர்வுகூற முடியாது என்று அரசாங்கத்துக்கு ஆதரவான தமிழ் விரிவுரையாளர்கள் நியாயம் கூறுகிறார்கள்.

உண்மை. பேரியற்கையோடு ஒப்பிடுகையில் மனிதர்கள் அற்பமானவர்கள். சீனர்களுடைய பாரம்பரிய ஓவியங்களில் வரும் நிலக்காட்சிகளை இங்கு சுட்டிக்காட்டலாம். அந்த நிலக் காட்சிகளில் இயற்கை மிகப் பிரமாண்டமாக வரையப்படும். மனிதர்களோ மிகச் சிறிய,அற்ப புள்ளிகளாக காட்டப்படுவார்கள்.

எனவே பேரியற்கையின் போக்கை துல்லியமாக எதிர்வுகூறுவது கடினம்தான். ஆனால் அவ்வாறு சில துறைசார் நிபுணர்கள் எதிர்வுகூறிய போதிலும் அதை சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்கள்  கவனத்தில் எடுத்திருந்தால் இந்த அளவுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்குமா? முன்னெச்சரிக்கை மிக்க வருமுன் காக்கும் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய நட்டத்தை விடவும் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் இடர் பெரியது.இழப்பு பெரியது. துயரம் பெரியது.

https://www.nillanthan.com/7984/

டித்வா புயல் அனுரவை பலப்படுத்தியிருக்கிறதா? நிலாந்தன்.

1 month ago

Anura.jpg?resize=750%2C375&ssl=1

டித்வா புயல்  அனுரவை பலப்படுத்தியிருக்கிறதா? நிலாந்தன்.

ரணில் விக்கிரமசிங்கவால் “எல்போர்ட்” அரசாங்கம் என்று அழைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு டித்வா புயல் ஒரு சோதனையாக வந்திருக்கிறது. கடந்த 14 மாதங்களாக தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த எதிர்க் கட்சிகள் நுகேகொடவில் ஒர் ஆர்ப்பாட்டப் பேரணியை ஒழுங்குப்படுத்தி மெல்லத் தலைதூக்க முயற்சித்தன.அந்தப் பேரணி திறந்துவிட்ட வாய்ப்புகளைவிட அதிக வாய்ப்புகளை டித்வா புயல் எதிர்க்கட்சிகளுக்கு திறந்து விட்டிருக்கிறது. இது ஒரு எல்போர்ட் அரசாங்கம் என்று நிரூபிப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தை எதிர்க்கட்சிகள்  பயன்படுத்துகின்றன.

எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.முதலாவது குற்றச்சாட்டு, அரசாங்கம் முன்னெச்சரிக்கையோடு நடக்கவில்லை என்பது. இதில் ஓரளவுக்கு உண்மை உண்டு. இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் தொடர்பாக நொவம்பர் 13 ஆம் திகதியே  எச்சரித்திருந்தது. நவம்பர் 26வரை அனைத்துத் தகவல்களும் இலங்கையுடன் பரிமாறப்பட்டுள்ளன என்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்” இணையத்தளம் கூறுகிறது.மேலும் உத்தியோகப்பற்றற்ற  விதத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை தலைவராகிய பேராசிரியர் பிரதீபராஜா நொவம்பர் மாதக் கடைசியில் வரக்கூடிய புயலைக் குறித்து முன்னெச்சரிக்கை விடுத்திருந்தார். அவரைப்போலவே தமிழகத்தைச் சேர்ந்த வானிலை முன்னறிவிப்பாளர் செல்வக்குமார் தன்னுடைய யூடியூப்  தளத்தில் புயலின் வருகையைக் குறித்து எச்சரித்திருந்தார்.ஆனால் இந்த எச்சரிக்கைகளை அரசாங்கமோ அல்லது சம்பந்தப்பட்ட திணைக்களங்களோ ஏன் கவனத்தில் எடுக்கவில்லை? புயல் நாட்டைத் தாக்கப்போகிறது என்பதனை வளிமண்டலவியல் திணைக்களம் உரிய நேரத்தில்,உரிய வேகத்தில் எச்சரித்திருக்கவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

 இரண்டாவது குற்றச்சாட்டு,அரசு திணைக்களங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இருக்கவில்லை என்பது. பாதிக்கப்பட்ட மக்களும் அதனைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இந்த விடயத்தில் முழு அளவுக்கு ஒருங்கிணைப்போடு செயற்பட்டு இருந்திருந்தால் இழப்பின் அளவைக் குறைத்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.குறிப்பாக  வளிமண்டலவியல் திணைக்களம்,நீர்பாசனத் திணைக்களம்,அனர்த்த முகாமைத்துவத் நிலையம் போன்றன இந்த விடயத்தில் மக்களை எச்சரிக்கத் தவறி விட்டதாகவும்,தங்களுக்கிடையில் ஒருங்கிணைப்போடு செயல்படவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜெயரட்ன,ரவூப் ஹக்கீம் போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் வைத்துச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை ஒரே வேளையில் திறக்கப்பட்டதால் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கைக் குறித்து சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மக்களை எச்சரிக்கத் தவறியமை போன்ற பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த விடயத்தில் திணைக்களுங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பு இல்லாதது சேதத்தை அதிகப்படுத்தி இருப்பதனால் வருங்காலத்தில் நதிப் படுக்கைகளுக்கு என்று அதிகார சபை ஒன்றை உருவாக்கும் யோசனையை ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் முன் வைத்திருக்கிறார்.

மூன்றாவது குற்றச்சாட்டு,முன்னெச்சரிக்கை உணர்வோடு வருமுன் காக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து இருந்திருந்தால் சேதத்தின் அளவைக் குறைத்திருக்கலாம் என்பது. பருவ மழையின்போது மண் சரிவு ஏற்படும் பிரதேசங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.மழை வீழ்ச்சி அதிகரிக்கும் போது மண் சரிவு அபாயம் உண்டு என்பது சம்பந்தப்பட்ட எல்லா அரசுக்கு கட்டமைப்புக்களுக்கும் தெரியும் என்பதால் வரக்கூடிய ஆபத்தை முன்கூட்டியே அனுமானித்து பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பிரதேசங்களில் இருந்து மக்களை முன்கூட்டியே இடம்மாற்றி இருந்திருந்தால் சேதத்தின் அளவை குறைத்து இருக்கலாமா என்ற கேள்வி உண்டு. இந்த விடயத்தில் அரசாங்கம் அனர்த்த காலம் ஒன்றை நோக்கி வினைத்திறனோடு செயல்படவில்லை என்றும் அனர்த்தத்தின் போதும் அதன் பின்னரும் நிலைமைகளைச் சரியாக முகாமை செய்யவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றன.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை, அவை வழமையான எதிர்ப்பு அரசியல் என்ற பெட்டிக்குள் தூக்கிப் போட்டுவிட முடியாது. அதே சமயம் நுகேகொட பேரணிக்குப்பின் அரசங்கத்தை விமர்சிப்பதற்கு கிடைத்த அதிகரித்த வாய்ப்பாக புயலுக்கு பின்னரான அரசியற் சூழலை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றன என்பதும் உண்மை.

 எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்திருந்தாலும்,வானிலை மாற்றங்களை மிகத் துல்லியமாக எதிர்வுகூற முடியாது என்று அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ் புத்திஜீவிகள் சமூக வலைத்தளங்களில் எழுதி வருகிறார்கள். தொழில்நுட்பம் அதிகம் வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட இயற்கை அனர்த்தங்களைக் குறித்து மிகச்சரியாகக் கணிக்க முடிவதில்லை என்றும் அவ்வாறு கணிப்பிட்டு இருந்தாலும் அழிவுகளை முழுமையாகத் தடுக்க முடிவதில்லை என்று அவர்கள் வாதிடுகிறார்கள். அதில் உண்மை உண்டு.

ஆனால் இந்திய வானிலை அவதானிப்பு மையம் உரிய காலத்தில்  எச்சரித்திருந்த போதிலும் துறைசார் வல்லுநர்கள் சிலர் உள்நாட்டிலும் அயல் நாட்டிலும் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் இதுதொடர்பாக எச்சரிக்கைகளை விடுத்திருந்த போதிலும் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் ஏன் அதனை கவனத்தில் எடுக்கத் தவறின?

இப்பொழுது அழிவு நடந்து விட்டது.இனி இறந்த காலத்தைப் போஸ்ட் மோர்ட்டம் செய்து கொண்டிருப்பதை விடவும்,மண்ணில் புதைந்திருப்பவர்களை எப்படி மீட்பது? உடைந்து தொங்கும் பாலங்களை எப்படிச் சீரமைப்பது? சிதைந்துபோன வாழ்வை எப்படி மீளக் கட்டியெழுப்புவது? என்பதுதான் முதன்மைச் சவால்.

நாட்டின் முழுக் கவனமும் புயலுக்குப் பின்னரான மனிதாபிமான நிலவரங்களின் மீது குவிந்திருக்கின்றது.நாட்டுக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் அதிகளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்கின்றன.

 தமிழ்ப் பகுதிகளில் உயிர் இழப்பு ஒப்பீட்டளவில் குறைவு.ஆனால் சொத்திழப்பு உண்டு.அடிக்கட்டுமானங்கள் சேதமடைந்துவிட்டன.முல்லைத்தீவு மாவட்டம் சில நாட்கள் துண்டிக்கப்பட்டிருந்தது.மன்னாரில் 15000க்கும் குறையாத  கால்நடைகள் கொல்லப்பட்டு விட்டன.திருகோணமலையிலும் மலையகத்திலும் கால்நடைகள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டிருக்கின்றன.புயலுக்குப்பின் கிட்டத்தட்ட ஒரு கிழமை கழித்து இக்கட்டுரை எழுதப்படுகையிலும்கூட கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை முழுமையாகக் கிடைக்கவில்லை.இது அனர்த்தத்தின்  பாரதூரத் தன்மையைக் காட்டுகின்றது.

அதனால்தான் உலக சமூகம் இலங்கைக்கு உதவ முன் வந்திருக்கிறது முதலில் உதவ வந்தது இந்தியா.அதிகம் உதவியதும் இந்தியா.அதைத் தொடர்ந்து பெரும்பாலான அயல்நாடுகளும் உட்பட உலக சமூகம் தாராளமாக உதவி செய்து வருகிறது.அனர்த்த காலம் இலங்கை மீதான அனுதாபத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.இந்த அனுதாபம் ஒரு விதத்தில் அனுர அரசாங்கத்தைப் பலப்படுத்தக் கூடியது.

 அரசாங்கம் அறிவித்திருக்கும் இழப்பீடுகளின் பருமன் அது மக்களுடைய நம்பிக்கையை வெல்வதற்கு முயற்சிக்கிறது என்பதைக் காட்டுகின்றது. இதற்கு முன்பு ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போது முன்னிருந்த அரசாங்கங்கள் அறிவித்திராத பெருந்தொகை இழப்பீட்டுத் தொகையை அரசாங்கம் அறிவித்திருக்கிறது.அதன் மூலம் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான அபிமானத்தைக் கட்டியெழுப்ப முடியும். இது வெறும் வாக்குறுதிதான் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.நடைமுறையில் அரசாங்கம் எவ்வளவு தொகையைக் கொடுக்கப் போகிறது என்பதனைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனாலும் அறிவிக்கப்பட்டிருக்கும் இழப்பீட்டுத் தொகை ஒப்பீட்டளவில் பெரியது.

மேலும்,சிதைந்த நகரங்களையும் வாழ்வையும் மீளக்கட்டியெழுப்பும் முயற்சியில் அரச நிறுவனங்களோடு பொது மக்களும் தன்னார்வமாக இணைந்து வருகிறார்கள்.பாதிக்கப்படாத பகுதியைச் சேர்ந்த மக்கள், அல்லது ஒப்பீட்டளவில் அதிகம் பாதிக்கப்படாத பகுதியைச் சேர்ந்தவர்கள, தாங்களாகத் திரண்டு,தன்னார்வமாக முன்வந்து,ஏனைய பகுதிகளுக்கு உதவுகிறார்கள். மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் உதவுகிறார்கள்.சேறு படிந்த தெருக்களை,வீடுகளைக் கழுவிச் சுத்தமாக்குகிறார்கள்.பொதுமக்கள் மத்தியில் இருந்து நிவாரணங்களைத் திரட்டி, பாதிக்கப்பட்ட மக்களை நோக்கிக் கொண்டு போகிறார்கள். இந்த மனிதாபிமானத் தன்னார்வச் சூழல் அரசாங்கத்துக்கு அனுகூலமானது.

குறிப்பாக வடக்கிலிருந்து தமிழ் அரசியல்வாதிகளும் தன்னார்வலர்களும் மலையகத்தை நோக்கி உதவிகளோடு போகிறார்கள்.புயல் ஓய்ந்த கையோடு தனித்து விடப்பட்ட அல்லது துண்டிக்கப்பட்ட முல்லைத்தீவை நோக்கி யாழ்ப்பாணத்தில் இருந்து தன்னார்வலர்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் போனார்கள். தங்களால் இயன்ற நிவாரணங்களைக் கொடுத்தார்கள். உதவிகளைச் செய்தார்கள்.இப்பொழுது மலையகத்தை நோக்கிப் போகிறார்கள். அனர்த்த காலம் தமிழ் மக்களுக்கு இடையிலான சகோதரத்துவத்தை உணர்வு பூர்வமாகப் பலப்படுத்தியிருக்கிறது- அது மட்டுமல்ல அனுர அரசாங்கத்தையும் அது பலப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் தான் அதிகமாகத் தெரிகின்றன.

https://athavannews.com/2025/1455496

மாவீரர் நாள்;புயல்;கொலை - நிலாந்தன்

1 month ago

மாவீரர் நாள்;புயல்;கொலை - நிலாந்தன்

595662198_122174169644769546_50017657207

டித்வா புயல் மாவீரர் நாளுக்குப் பின்னரான உரையாடலின் மீதான கவனத்தைத் திசை திருப்பிவிட்டது. அரசாங்கம் இம்முறை மாவீரர் நாளை பெரிய அளவில் உத்தியோகபூர்வமாகத் தடுக்கவில்லை. அதனால் மாவீரர் நாள் தாயகத்தில் பரவலாகவும் செறிவாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. எல்லாத் துயிலும் இல்லங்களுக்கும் இப்பொழுது ஏற்பாட்டுக் குழுக்கள் உண்டு. மேலும் இம்முறை உள்ளூராட்சி சபைகளும் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டின. புதிய உள்ளூராட்சி சபைகள் இயங்கத் தொடங்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகின்றன. இம்முறை மாவீரர் நாளை அனுஷ்டிப்பதில் உள்ளூராட்சி சபைகள் கணிசமான அளவுக்குப் பங்களிப்பை நல்கின. மாவீரர் நாளையொட்டி நகரங்களை அலங்கரிப்பது,தெருக்களை அலங்கரிப்பது, முதலாக பல்வேறு விடயங்களிலும் உள்ளூராட்சி சபைகள் ஆர்வம் காட்டின.

மழை;வெள்ளம் ;புயல் எச்சரிக்கை எனினும் மக்கள் பரவலாக துயிலும் இல்லங்களை நோக்கி வந்தார்கள். பெரும்பாலான துயிலும் இல்லங்களில் மக்கள் குடைகளைப் பிடித்தபடி அஞ்சலி செய்தார்கள். மழை சற்றுக் கடுமையாக இருந்த இடங்களில் சுடருக்குக் குடை பிடித்து அதைப் பாதுகாத்துக் கொண்டு நனைந்தபடி நின்றார்கள். குறிப்பாக ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தில் சுடர் அணையக்  கூடாது என்பதற்காக தமது தலைக் கவசத்தை சுடருக்கு மேல் பிடித்து சுடரைப் பாதுகாத்ததாக ஒருவர் முகநூலில் எழுதியிருந்தார்.

இவ்வாறு பரவலாகவும் செறிவாகவும் பெருமடுப்பிலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டிருந்த ஒரு பின்னணிக்குள், அதுதொடர்பான உரையாடல்களின் மீதான கவனக் குவிப்பை புயல் திசை திருப்பியது. மாவீரர் நாளுக்காக அலங்கரிக்கப்பட்ட சிவப்பு மஞ்சள் கொடிகள் நனைந்து தொங்கிய தெருக்களைக் குறுக்கறுத்து வெள்ளம் பாய்ந்தது. மாவீரர் நாளுக்காக கட்டப்பட்டிருந்த வரவேற்பு வளைவுகள் கழட்டப்படுவதற்கு முன்னரே புயல் நாட்டுக்குள் வந்து விட்டது. புயலின் அகோரம் காரணமாக ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களின் கவனக்குவிப்பு மாவீரர் நாளில் இருந்து புயலை நோக்கித் திரும்பியது.

புயல் வடக்கு கிழக்கில் ஒப்பீட்டளவில் குறைந்த அளவு உயிரிழப்புகளைத்தான் ஏற்படுத்தியது. அதிக உயிரிழப்பு தெற்கில்தான். வடக்கு கிழக்கில் உட்கட்டுமானங்கள் சிதைவடைந்தன. மக்கள் இடம் பெயர்ந்தார்கள். அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டம் துண்டிக்கப்பட்டது; மன்னாரில் ஆயிரக் கணக்கில் மாடுகள் இறந்தன. எனினும் வடக்கில் உயிரிழப்பு என்று பார்த்தால் மொத்தம் நான்கு பேர்தான். ஒருவர் தெற்கு நோக்கி பேருந்தில் சென்ற போது பேருந்து வெள்ளத்தில் சிக்கியதால் உயிரிழந்தவர். மற்றவர் கடற்தொழிலாளி. ஏனைய இருவரும் வவுனியாவிலிருந்து அவர்கள் பயணம் செய்த வாகனம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்கள்.

facebook_1764824140328_74022089510750673

ஒருபுறம் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நோக்கி எதிர்பாராத திசைகளில் இருந்து மனிதாபிமான உதவிகள் கிடைத்தன. இன்னொரு புறம் வணிகர்களில் ஒருபகுதியினர் மனிதாபிமானமாக நடந்து கொள்ளவில்லை. பாதிக்கப்பட்டவர்களை நோக்கிப் பல்வேறு தரப்புகளும் உதவிக்கரம் நீட்டின. உள்ளூர் தொண்டு நிறுவனங்கள்,மத நிறுவனங்கள்,புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் போன்ற பல்வேறு வகைப்பட்டவர்களும் உதவிகளைச் செய்தனர். நாடுகளைப் பொறுத்தவரை முதலில் உதவியது இந்தியா. அதன் பின் அமெரிக்கா, பாகிஸ்தான், மாலை தீவுகள், சீனா உட்பட பெரும்பாலான நாடுகள் உதவி புரிந்தன.

ஆனால் உள்ளூரில், வணிகர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கினார்கள். மரக்கறி,முட்டை போன்றவற்றின் விலைகளை உயர்த்தினார்கள். புயலுக்கு அடுத்தடுத்த நாட்களில் யாழ்ப்பாண நகரத்தின் பெரும்பாலான சிலிண்டர் கடைகளில் மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள். திடீரென்று சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு வந்துவிட்டது. பாதைகள்  அடைபட்ட காரணத்தால் சிலிண்டர்கள் வரவில்லை என்று ஒரு விளக்கம் சொல்லப்பட்டது. அது உண்மையல்ல. ஒவ்வொரு நாளும் தென்னிலங்கையில் இருந்து வரும் சிலிண்டர்களைத்தான் கடைகளில் வைத்து விற்கிறார்கள் என்பது உண்மையல்ல. அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு தேவையான குறிப்பிட்ட தொகை சிலிண்டர்களைச் சேமித்து வைத்திருப்பார்கள். அதுதான் வியாபார வழமை.பாதைகள் அடைபட்டதைச் சாட்டாக வைத்து அவர்கள் செயற்கையாக ஒரு தட்டுப்பாட்டை  உருவாக்கினார்களா?

சிலிண்டர்களுக்கு நிர்ணய விலை உண்டு. விலை கூட்டி விற்க முடியாது. ஆனால் மரக்கறிகளுக்கு அப்படியல்ல. மரக்கறிகளை விரும்பின விலைக்கு விற்றார்ர்கள். கிட்டத்தட்ட ஐந்து மடங்கு  அதிகமான விலைகள். பச்சை மிளகாயில் இருந்து இஞ்சி வரை,  விலை சடுதியாக உயர்ந்தது. வெள்ளம் வடிந்த பின்னரும், புயல் ஓய்ந்த பின்னரும், மரக்கறிகளின் விலை குறையவில்லை. ஒரு பகுதி மரக்கறி வியாபாரிகளின் இதயம்  இளகவில்லை.

மரக்கறிகள் மட்டுமல்ல முட்டை, கோழி இறைச்சி போன்ற பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பெரும்பாலான இறைச்சிக் கடைகளில் பேரண்ட்ஸ் வகை இறைச்சிக் கோழிகள் கிடைக்கவில்லை. ஏன் என்று கேட்டபோது தெற்கில் இருந்துதான் அவை வருகின்றன. பாதைகள் அடைபட்டதால் அவை வரவில்லை என்று சொன்னார்கள். புயலுக்கு முன் முட்டையின் விலை 30 ரூபாய். புயலோடு முட்டை விலை 36ரூபாய். ஏனென்றால் முட்டை ஒவ்வொரு நாளும் வவுனியாவுக்கு அப்பாலிருந்து வருகிறது என்று சொன்னார்கள். ஒரு முட்டை வியாபாரி தெற்கில் தனக்கு வழமையாக முட்டை சப்ளை செய்யும் மொத்த வியாபாரி அனுப்பிய வாட்சப் ஒளிப்படம் ஒன்றைக் காட்டினார். அதில் கோழிப் பண்ணையில் இருந்த கோழிகள் புயலில் அடிபட்டுச் செத்துக் கிடந்தன.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது. புயல் வந்து, வெள்ளம் பெருகி பாதைகள் தடைபட்டதும் மரக்கறிகளின் விலை,முட்டை விலை  உயர்ந்துவிட்டது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு. பேரன்ட்ஸ் வகைக் கோழிகள் கிடைக்கவில்லை. அப்படியென்றால் வடக்கின் பொருளாதாரம் மேற்கண்ட பொருட்களுக்காக தெற்கில் தங்கியிருக்கின்றதா? வடக்கிலிருந்து தெற்குக்கான பாதைகள் அடைபட்டால் யாழ்ப்பாணத்தவர்களுக்கு முட்டை, பச்சை மிளகாய், பேரன்ட்ஸ் கோழி இறைச்சி போன்றவை கிடைக்காதா?

புயல் எழுப்பிய கேள்விகளில் இது முக்கியமானது. மற்றொரு கேள்வி, தொலைத் தொடர்பு தொடர்பானது. தமிழ் மக்களில் அதிகமானவர்கள் குறிப்பாக கிராமப் பகுதி மக்கள் அதிகமாக பயன்படுத்துவது டயலக் தொலைபேசி அட்டைகளைத்தான். ஆனால் புயலின் போதும் புயலுக்குப் பின்னரும் டயலக் சிம்கள் பெரும்பாலும் வேலை செய்யவில்லை. அந்த சிம்களை பயன்படுத்திய பலர் தொடர்புகளை இழந்து தவித்தார்கள். அனர்த்த காலங்களில் தொலைத் தொடர்பும் ஓர் அத்தியாவசிய சேவைதான். தொலைதொடர்பு இல்லையென்றால் ஆபத்தில் இருப்பவர்கள்  தனித்து விடப்படுவார்கள். இது கடந்த புயல் நாட்களில் நடந்தது. அது இயற்கை அனர்த்தம் மட்டுமல்ல தொலைத்தொடர்பு அனர்த்தமும்கூட.

டயலக் கொம்பனி உட்பட பெரும்பாலான தொலைத்தொடர்புக் கொம்பெனிகள் சாதாரண மக்களிடம் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி பணத்தை வசூலிக்கின்றன இந்த குற்றச்சாட்டு பரவலாக உண்டு. சிம்மை விற்கும் பொழுது அல்லது சேவையை தொடங்கும் பொழுது நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி அதன் மூலமே அப்பாவி மக்களிடமிருந்து சிறுகச்சிறுக பணத்தைச் சுரண்டுகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு பரவலாக உண்டு. கேள்வி கேட்காத அப்பாவியான ஒரு வாடிக்கையாளரிடம் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு ரூபாயை சுரண்டினால் கூட லட்சக்கணக்கானவரிடம் இருந்து ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான ரூபாய்களைச் சுரண்ட முடியும். இவ்வாறு ஏற்கனவே குற்றச்சாட்டுகளுக்கும் விமர்சனங்களுக்கும் இலக்காகியிருந்த தொலைதொடர்புக் கொம்பனிகள் குறிப்பாக டயலாக் கொம்பனி இம்முறை புயலோடு அதன் நம்பகத் தன்மையை இழந்துவிட்டது.

இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் டயலக் தொலைத்தொடர்பு சீராகவில்லை. பலருடைய டயலாக் இன்டர்நெட் இணைப்பு மோசமாக இருக்கிறது. உயிரிழந்தவர்கள்,பாதிக்கப்பட்டவர்களில் ஒருபகுதியினர் இவ்வாறு தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதாலும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று கூறமுடியும். டயலக் கொம்பனி அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும். மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

IMG_1918-1024x576.jpeg

புயல் தணிந்த காலையில், யாழ்ப்பாணத்தவர்கள் பொருட்களை வாங்க தெருக்களில் தயங்கித் தயங்கி இறங்கிய வேளையில், திருநெல்வேலியில் ஒரு கொலை நடந்தது. கொலைக்கு காரணம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் அநேகமானவர்கள் இளவயதினர். சம்பவம் நடந்தது அதிகம் சனப்புழக்கமுள்ள ஓரிடம். திருநெல்வேலி சந்தைக்கு அருகே ஆடியபாதம் வீதி. ஒரு நபரை மூன்று பேர் துரத்தி துரத்தி வெட்டுகிறார்கள். அப்பகுதியில் நின்றவர்கள் அதில் சம்பந்தப்படாமல் விலகி விலகி நிற்கிறார்கள். யாருமே கொல்லப்பட்டவரைக் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கவில்லை. அங்கு கிடைத்த சிசிடிவி கமரா பதிவுகளின்படி அங்கு நின்ற அனைவருமே பார்வையாளர்களாக நின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் அதைத் தடுக்கும் சக்தியற்றவர்களாக, அதைத் தடுக்கும் துணிச்சலற்றவர்களாக, தங்களைத் தாங்களே தற்காத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு தப்பிச் செல்பவர்களாகத்தான் அவர்கள் காணப்பட்டார்கள். இத்தனைக்கும் ஒரு காலம் தன் வீரத்துக்கும் தியாகத்துக்குமாக உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு மக்கள் கூட்டம். புயல் தணிந்த வேளை நடந்த கொலை அது. அந்தக் கொலையை விடக் கொடுமையானது, அதை கையாலாகாத சாட்சிகளாகப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் கூட்டம்.

facebook_1764743293174_74018698535367880

அதேசமயம் அதே மக்கள் கூட்டத்தின் மத்தியில் இருந்துதான் இன்னொரு தொகுதி இளையவர்கள் தாங்களாக முன்வந்து வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பிரதேசங்களை நோக்கிப் போனார்கள். ஆபத்தை எதிர்கொண்டு நனைந்து நனைந்து, பாதிக்கப்பட்ட மக்களை, தனித்து விடப்பட்ட மக்களைத் தேடித்தேடி உதவினார்கள்.

இந்த இரண்டுமே ஒரே சமூகத்தில் காணப்படும் ஒன்றுக்கொன்று முரணான காட்சிகள். ஆனால் இதற்குள்தான் இருக்கிறது தமிழ் மக்களின் தற்போதைய அரசியல் யதார்த்தம். ஒருபுறம் தானும் தன்பாடும் என்று கூட்டுப் புழுக்களாகப் பதுங்க முற்படும் கூட்டு மனோநிலை. இன்னொருபுறம் மழை,வெள்ளம்,புயல் என்பவற்றைத் தாண்டி ஆபத்தில் சிக்கியிருக்கும் மக்களைத் தேடிச் செல்லும் இளையோர் கூட்டம். சரியான பொருத்தமான தலைமைகள் இந்த இளையவர்களை ஒருங்கிணைத்து இலட்சிய வேட்கை கொண்டவர்களாக வார்த்தெடுத்தால், அவர்கள் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் என்பதைத்தான் டித்வா புயலுக்கு பின்னரான மனிதாபிமானச் சூழல் நமக்கு உணர்த்துகின்றது.

https://www.nillanthan.com/7971/

வரைபடங்களும் மனிதர்களும் ! உக்ரைன்-ரசிய சமாதான ஒப்பந்த முயற்சி குறித்த அலசல்

1 month ago

வரைபடங்களும் மனிதர்களும் !

sudumanalDecember 1, 2025

உக்ரைன்-ரசிய சமாதான ஒப்பந்த முயற்சி குறித்த அலசல்

peace.webp?w=1024

image: washington times

மூன்று வருடங்களும் எட்டு மாதங்களுமாகிவிட்டதாக சுட்டப்படும் உக்ரைன்-ரசிய போரினை முடிவுக்குக் கொண்டுவர, 28 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் ட்றம்ப் குழாமினால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழாமில் அரச செயலாளர் மார்க்கோ றூபியோ, விசேடதூதுவர் ஸ் ரீவ் விற்கோவ் இருவரும் முக்கியமானவர்கள். இந்த ஒப்பந்தம் ரசியாவுக்கு சார்பானதாக இருப்பதாகவும், உக்ரைனின் இறைமையைப் பாதிப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் விமர்சித்து, இந்த ஒப்பந்தத்தை 19 அம்சங்கள் கொண்டதாக மறுவரைவு செய்து ட்றம் இடம் முன்வைத்திருக்கின்றன. இக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த 19 குறித்து விபரமாக எதுவும் தெரியவில்லை.

போர் எப்போ தோடங்கியது?

உக்ரைன்- ரசியா போர் 2022 பெப்ரவரியில் தொடங்கியதல்ல. உண்மையில் 2014 இல் தொடங்கியது அது. 2010 இல் உக்ரைன் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட யனுகோவிச் (Yanukovych) இன் ஆட்சியை 2014 இல் “மைடான் புரட்சி” என்ற பெயரில் சதி மூலம் அமெரிக்கா கவிழ்த்தது. ரசியாவுடன் நல்ல உறவுநிலையில் இருந்த அவரை இடம்பெயர்த்துவிட்டு, மேற்குலகு சார்பான பொரொசெங்கோவை (Petro Poroshenko) ஆட்சிக்கு கொண்டு வந்தது அமெரிக்கா. (இந்த சதிப்புரட்சி பற்றிய இரகசிய தொலைபேசி உரையாடல் பின்னர் கசிந்து பொதுவெளிக்கு வந்தது). எச்சரிக்கை அடைந்த ரசியா உடடினடியாகவே செயற்பட்டு மூன்று நாட்களுக்குள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததும், பெரும்பான்மை ரசிய மொழி பேசுபவர்களையும் கொண்ட கிரைமியா (Crimea) பகுதியை கைப்பற்றியது. சோவியத் காலத்தில் முக்கிய கடற்படைத்தளம் அங்குதான் இருந்தது. இது நேட்டோவிடம் பறிபோனால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற ஒரே காரணத்துக்காக ரசியா அதை கைப்பற்றியது. எழுந்துள்ள நிலைமைகளையும் நேட்டோவின் தலையீடுகளையும் பார்க்கும்போது இனி ஒருபோதும் ரசியா அதை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்பது நிச்சயமானது.

பொரசெங்கோவின் ஆட்சியில் ரசிய மொழி பேசும் மக்களைக் கொண்ட டொன்பாஸ் இன் 4 மாகாணங்களிலும் ரசிய மொழி தடைசெய்யப்பட்டது. AVOZ என்ற நாசிசப் படைப் பிரிவு உக்ரைன் இராணுவத்தின் ஒரு பகுதியாக செயற்பட்டது. இவர்கள் டொன்பாஸ் க்கு அனுப்பிவைக்கப் பட்டார்கள். இவர்கள் 2014 இலிருந்து தொடக்கி வைத்த படுகொலை 14000 ரசிய மொழி பேசும் டொன்பாஸ் மக்களை கொன்றொழித்தது. துப்பாக்கியை விடவும் வெட்டிக் கொல்லப்பட்டவர்களே பலர். உக்ரைன் அரசின் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்த இயக்கங்களான டொனெற்ஸ்க் மக்கள் குடியரசு (DPR), லுகான்ஸ்க் மக்கள் குடியரசு (LPR) இனை ரசியா ஆதரித்தது. ஆயுத உதவி வழங்கியது.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பின் மூலகாரணம் 2008 இல் தோற்றுவிக்கப்பட்டது. 2008 இல் ‘புக்காரெஸ்ற்’ (ருமேனியா) இல் நடந்த நேட்டோ மாநாட்டில் ஜோர்ஜ் புஷ் இன் அமெரிக்காவானது உக்ரைனையும் ஜோர்ஜியாவையும் நேட்டோவில் இணைக்க தீர்மானம் கொண்டுவந்தது. இதை அப்போதைய ஜேர்மன் சான்சலர் அங்கலா மேர்க்கலும் (Angela Merkel, பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கொலாஸ் சார்க்கோசியும் (Nicolas Zarkozy) எதிர்த்தார்கள். அங்கலா மேர்க்கல் தெளிவாக ஒன்றை முன்வைத்தார். “நேட்டோ விஸ்தரிப்பை உக்ரைனூடாக ரசிய எல்லைவரை கொண்டு போவதை புட்டின் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார். நிச்சயமாக அது போரில் போய் முடியும் ஆபத்தைக் கொண்டது” என்றார். அதன்படி 2022 இல் நடந்திருக்கிறது.

சோவியத் யூனியனின் கடைசி அதிபராக இருந்த கோர்ப்பச்சேவ் இன் (கிளாஸ்நோஸ்ற், பெரஸ்றொய்க்கா) கொள்கைகள் 1989 இல் பேர்லின் சுவர் வீழ்த்தப்பட்டு, 1990 இல் கிழக்கு-மேற்கு ஜேர்மனி இணைக்கப்படுவதற்கும், கிழக்கு ஜேர்மனியில் இருந்த சோவியத் படைகள் படிப்படியாக வெளியேறுவதற்கும் வழிவகுத்தது. இந்த பரபரப்பான காலகட்டத்தில் 1990 பெப்ரவரியில் மொஸ்கோவில் வைத்து கோர்ப்பச்சேவ் க்கு நேட்டோ சார்பில் அமெரிக்க அரச செயலாளர் ஜேம்ஸ் பேர்க்கர் ((James Baker) வழங்கிய முக்கிய வாக்குறுதி “நேட்டோ படையானது ஜேர்மனியிலிருந்து ஓர் அங்குலம் கூட கிழக்கு நோக்கி நகராது” என்பதே. 1955 இல் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் கூட்டாக உருவாக்கிய Warsaw Packt இன் கீழ் இருந்த இராணுப் பிரிவும் 1991 இல் கலைக்கப்பட்டது. சோவியத் யூனியன் என்ற கட்டமைப்பு உதிர்ந்து போனது. அப்போதே நேட்டோவுக்கான தேவையும் இல்லாமல் போனது. இருந்தபோதும் நேட்டோ கலைக்கப்படவில்லை.

ஆனால் நேட்டோ விஸ்தரிப்பு குறித்த வாக்குறுதிகளை நேட்டோ கடைப்பிடிக்காமல் ஏமாற்றியது. சோவியத் இலிருந்து பிரிந்து சென்ற நாடுகளையும் ஒன்றன்பின் ஒன்றாக இணைத்துக் கொண்டது. பின்னாளில் நேட்டோ விஸ்தரிப்புகள் குறித்து கொர்பச்சேவ் ஜேர்மனியில் பேசும்போது “எம்மை ஏமாற்றிவிட்டீர்கள்” என விமர்சித்துப் பேசினார். 2000 ஆண்டு ஜனாதிபதியாக தெரிவான புட்டின் இந்த நேட்டோ விரிவாக்கம் குறித்து எச்சரித்திருந்தார். பின்னர் உக்ரைனை நேட்டோவில் இணைப்பதானது நேட்டோ தனது எல்லை வரை வர வழிசமைக்கும் எனவும், அது தமது நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக வரும் எனவும் பலமுறை சொல்லியுமிருந்தார். “அது சிவப்புக் கோட்டைத் தாண்டுவதாக அமையும், ரசியா பார்த்துக் கொண்டு இருக்காது” என எச்சரித்தார். இந்த எல்லா எதிர்ப்பையும் எச்சரிக்கைகளையும் மீறி ஜேர்மன் எல்லையிலிருந்து ரசிய எல்லைவரை நேட்டோவை படிப்படியாக நகர்த்தி வந்துவிட்டு, ரசியாவால் ஐரோப்பாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என சொல்வது எவளவு கோமாளித்தனமானது. அத்தோடு ரசியாவும் ஐரோப்பாதான் என்பதை மறந்து பேசுவது இன்னொரு கோமாளித்தனம் அல்லது வஞ்சகத்தனமானது.

இவ்வாறாக அமெரிக்கா தனது பரிவாரமான (32) நேட்டோ நாடுகளுடன் செயற்பட்டு உக்ரைனை போர்க்களமாக்கியதுதான் வரலாறு. இப்போ “அது நான் தொடங்கிய போர் அல்ல. பைடன் தொடங்கிய போர்” என ட்றம்ப் சொல்கிறார். “இது எமது போர் அல்ல, உங்கள் போர்” என ஐரோப்பாவுக்குச் சொல்கிறார். உக்ரைன் ரசிய போர் மோசமான நிலையை நோக்கி நகர்ந்திருக்கிறது. இலகுவில் தீர்க்கப்பட முடியாத பிரச்சினை போல் தோற்றமளித்ததற்குக் காரணம் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ என்பவற்றின் தலையீடாக இருந்தது. உண்மையில் இந்தப் போர் ரசியாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான நிழற்போர் என்பதே பொருத்தமானது. அதன் களம் உக்ரைன். பலியாடுகள் உக்ரைன் மக்களும் இராணுமும்.

நேட்டோ/ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கு

  1. நேட்டோ தனது விஸ்தரிப்புவாதத்தை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.

  2. ரசியாவை -இராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும்- பலவீனமாக்குவது அவர்களின் மைய நோக்கமாக இருக்கிறது.

2.1) அதற்கான கதையாடல்களை (narratives) உருவாக்கினார்கள். உக்ரைனின் பாதுகாப்பு என்பது ஐரோப்பாவின் பாதுகாப்பு எனவும், ஐரோப்பாவின் பாதுகாப்பு உத்தரவாதத்துக்கு ரசியா அச்சுறுத்தலாக இருக்கிறது எனவும் கட்டமைத்தார்கள்.

2.2) ரசியாவுக்கு எதிராக 27000 க்கு மேற்பட்ட பொருளாதாரத் தடையை விதித்தார்கள்.

2.3) 300 பில்லியன் வரையான ரசிய நிறுவனங்களின் நிதியை தமது வங்கிகளில் முடக்கினார்கள். அதாவது உறைநிலை ஆக்கினார்கள்.

2.4) ஐரோப்பாவுக்கு ‘Nord Stream-2’ கடலடி குழாய் மூலமாக ரசியா எரிவாயுவை ஏற்றுமதி செய்து பொருளீட்டியது. அந்தக் குழாயை அநாமதேயமாக உடைத்தார்கள். அல்லது உக்ரைன் உதவியுடன் உடைத்தார்கள்.

2.5) ரசியாவிடமிருந்து பெருமளவு கச்சா எண்ணெயை வாங்கும் சீனா, இந்தியா மீது அழுத்தம் கொடுக்க முயற்சித்தார்கள். ஆனாலும் திரைமறைவில் இன்னமும் 40 வீதமான எரிவாயு ஐரோப்பாவுக்குள் வந்து சேர்கிறது என்பது ஒரு முரண்நகை. அத்தோடு இந்தியாவிடமிருந்து (ரசிய) எண்ணெயை வாங்கினார்கள். இந்த வர்த்தகத்தின் மூலம் சீனாவும் இந்தியாவும் ரசியாவின் ஆக்கிரமிப்புப் போருக்கு முதலிடுவதாக குற்றம் சுமத்திப் பார்த்தார்கள். ட்றம்ப் உம் அதே பாட்டைப் பாடினார். (அவர்களது அழுத்தத்தை இந்த இரு நாடுகளும் புறந்தள்ளின)

  1. இந்தப் போரில் தாம் நேரடியாக ஈடுபடாமல் தமது நோக்கம் சார்ந்து உக்ரைனை பலிக்கடாவாக்கினார்கள். போருக்காக பில்லியன் கணக்கிலான நிதியையும், ஆயுதங்களையும் கடனாக வழங்கினார்கள். அத்தோடு இராணுவ தகவல் தொழில்நுட்பத்தையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். உக்ரைன் மக்களும் இராணுவமும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

4. இவளவு அழிவுக்குப் பின்னரும், ட்றம்ப் பின்வாங்கிய பின்னரும், ஐரோப்பா இந்தப் போர் முடிந்துவிடக்கூடாது என்ற நோக்கில் செயற்படுகிறது. மேற்கு ஐரோப்பா அதுவும் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி நாடுகள் தீவிரமாகச் செயற்படுகின்றன. இதற்கு நான்கு காரணங்கள் உள்ளன.

4.1) காலனிய மனக் கட்டமைப்பு (colonial mindset)

அவர்களின் காலனிய மனக் கட்டமைப்பானது ரசியாவிடம் தமது நிழற்போர் தோற்றுவிடக் கூடாது என்ற பதட்டத்தை வழங்கியிருக்கிறது. ரசியாவுக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையானது அவர்கள் கணித்ததுக்கு மாறாக ரசியாவை விட அவர்களையே அதிகம் தாக்கியிருக்கிறது. பொருளாதார நெருக்கடிக்குள் அகப்பட்டு இருக்கிறபோதும் கூட, அந்த காலனிய மனக் கட்டமைப்பானது அவர்களை பின்வாங்கச் செய்ய இலகுவில் விடுவதாக இல்லை.

4.2) போர்ப் பொருளாதாரம்

இந் நாடுகளின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இன்னொரு வகையில் ‘போர்ப் பொருளாதாரம்’ பெரும் பக்கபலமாக இருக்கிறது. ‘உக்ரைன் பாதுகாப்பு என்பது ஐரோப்பாவின் பாதுகாப்பு’ என வசனம் பேசும் அவர்கள் உக்ரைனுக்கு ஆயுதங்களையோ நிதியையோ அன்பளிப்பாகக் கொடுக்கவில்லை. கடனாகவே கொடுத்திருக்கிறார்கள். ஆயுத உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மூலம் அவர்களுக்கு சேரவேண்டிய பணத்தை எதிர்காலத்தில் உக்ரைன் செலுத்தியாக வேண்டும்.

அத்தோடு பொருளாதாரத் தடையால் உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள ரசிய சொத்துகளும் அதன் வட்டியும் அவர்களின் இப்போதைய பொருளாதாரத்துக்கு இன்னொரு பக்கபலமாக உள்ளது. ஐரோப்பிய பெரு நிதிநிறுவனமான Euroclear வெளியிட்டுள்ள கணக்கின்படி, ஐரோப்பிய வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்ட 194 பில்லியன் யூரோக்கள் பெறுமதியான ரசிய சொத்துகள் 2025ம் ஆண்டின் அரைப் பகுதியில் மட்டும் 2.7 பில்லியன் யூரோக்களை வட்டியாக பொரித்துள்ளது. 2024 இல் இதே அரையாண்டு காலத்தில் 3.4 பில்லியன் யூரோக்களை பொரித்துள்ளது.

4.3) தத்தமது நாடுகளில் இயன்றளவு தமது பதவியையும் அதிகாரத்தையும் தக்கவைக்கும் முயற்சி

இஸ்ரேல் பலஸ்தீனப் பிரச்சினையில் இஸ்ரேலை தொடர்ந்து ஆதரிப்பதற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்திய மக்களிடம் முழுமையாக -தத்தமது நாடுகளில்- மேற்கு ஐரோப்பிய நாட்டு அரசாங்கங்கள் அம்பலப்பட்டுப் போயின. நெத்தன்யாகுவுக்கு எதிராக மட்டுமன்றி, தமது தலைவர்களுக்கு எதிராகவும் அவர்கள் போராடியதால் தலைவர்கள் அரசியல் செல்வாக்கு இழந்து போயிருக்கிறார்கள். அத்தோடு தோற்றுப் போகிற உக்ரைன் போருக்கு பில்லியன் கணக்கான நிதியை இப்போதும் வழங்கிக் கொண்டிருப்பதால், உள்நாட்டில் பொருளாதார நெருக்கடியும் வேலைவாய்ப்பின்மையும் வரி அதிகரிப்பும் மக்களின் சகிப்புத் தன்மையை சோதித்துப் பார்த்திருக்கின்றன. அதனால் மேற்கு ஐரோப்பிய தலைவர்களின் அரசியல் எதிர்காலமும், அதிகாரமும் கேள்விக்கு உள்ளாகியிருக்கின்றன. போர் தோல்வியில் முடிந்தால் அவர்கள் தேர்தல்களில் தூக்கி எறியப்படுவர். அதிகார சுகிப்பை இழந்து போய்விடுவர். இந்த அதிகாரத்தை தக்கவைக்க அவர்களுக்கு உக்ரைன் போர் இப்போ சமாதானத்தில் முடியக் கூடாது.

4.4) அவமானம்

ரசியாவை பலவீனப்படுத்தும் நோக்கில் உக்ரைன் மண்ணையும் மக்களையும் பலிகொடுத்து இந்தப் போருக்கு எண்ணெய் ஊற்றி வளர்த்த அந்த நோக்கமும் இதுவரை நிறைவேறவில்லை. அது ஒரு சமநிலையில்கூட முடியாமல் தோல்வியை நோக்கி சரிவது மிகப் பெரும் அவமானமாகவும் ஜீரணிக்க முடியாததாகவும் இருக்கிறது.

அவர்கள் கையாளும் வழிமுறை

ஐரோப்பிய மக்களை போர் அச்சமான சூழல் ஒன்றுக்குள் வைத்திருப்பதன் மூலம் தமது நோக்கங்களை சாதிக்க முயல்கிறார்கள்.

  1. ரசியாவால் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும், உக்ரைன் தோல்வியுற்றால் ரசியா அதனை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றைய ஐரோப்பிய நாடுகளையும் ஆக்கிரமிக்கத் தொடங்கும் எனவும், புட்டினின் இலக்கு பழைய சோவியத் ஒன்றிய கட்டமைப்பை நோக்கிய ஆக்கிரமிப்புத்தான் எனவும் கதையாடல்களை உருவாக்கி மக்களுக்கு தீத்தும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.

  2. டென்மார்க், பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளின் இராணுவ கேந்திர நிலையங்களின் மீது மர்ம ட்றோன்கள் பறந்து உளவு பார்ப்பதாக சொல்லி அச்சமூட்டினர். ட்றோன்களை ஏன் சுடவில்லை என நிருபர்கள் கேட்டதற்கு அதைச் சுட்டால் அதன் உதிரிப் பாகங்கள் மக்களின் தலைகளில் வீழ்ந்துவிடலாம் என்ற காரணத்தை கோமாளித்தனமாக முன்வைத்தனர். தமது நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தக்கூடிய நடவடிக்கையை அவர்கள் இவ்வாறாகவா அணுகுவார்கள். இலங்கையில் கோட்டபாய அரசாங்க காலத்தில் ‘கிறீஸ் பூதம்’ என்ற மர்ம கதாபாத்திரத்தை உருவாக்கி, தமிழ் மக்களை அச்ச நிலையில் வைத்திருந்ததை இந்த மர்ம ட்ரோன்கள் ஞாபகப்படுத்துகின்றன.

  3. அத்தோடு பாதுகாப்புக்கு என அதிகளவு நிதியை இந்த நாடுகள் தமது வரவுசெலவுத் திட்டங்களில் ஒதுக்குகின்றன. ஐரோப்பிய ஒன்றியமும் அதே வேலையைச் செய்கின்றது. நேட்டோ தனது உறுப்பு நாடுகள் தத்தமது GDP இலிருந்து ஒதுக்கும் நிதியை இரண்டு வீதத்திலிருந்து ஐந்து வீதமாக அதிகரிக்கக் கோருகின்றது.

  4. பிரான்சின் மக்ரோனும், பிரித்தானியாவின் ஸ்ரார்மரும் தத்தமது நாடுகளில் இராணுவ உசுப்பேத்தல்களை வேறு ஆரம்பித்திருக்கிறார்கள். போர்ப் பதட்ட உளவியலை மக்களிடம் உருவாக்க முயல்கிறார்கள்.

ஆனால் உக்ரைன்-ரசியா இடையில் நிரந்தரமான சமாதானத்தை முயற்சிக்க அமெரிக்கா விரும்புகிறது. அப்படித்தான் சொல்கிறது. அதன் பேரில் பிரச்சினைகளை தமது ஏகாதிபத்திய அதிகார நிலையில் நின்று அணுகி, நாடுகளை மிரட்டி அல்லது அழுத்தம் கொடுத்து டீல் பண்ணும் வேலையை ட்றம் செய்துவருகிறார். அவருக்கு நேட்டோவின் மானப் பிரச்சினை முக்கியமல்ல. அவர் அமெரிக்கா சார்ந்த பொருளாதார நலனின் அடிப்படையிலும், தூர நோக்கான அரசியல் இராஜதந்திரத்தின் அடிப்படையிலும் இச் சமாதான ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர முயல்கிறார். மற்றபடி அவர் ஒரு சமாதான விரும்பியல்ல. சமாதான நடிகன்.

“நாங்கள் உக்ரைனுக்கு மேலும் பணத்தையும் ஆயுதங்களையும் கொடுப்பதோடு இன்னுமாய் பொருளாதாரத் தடைகளையும் செயற்படுத்தினால் வெற்றி எமது கைகளில் தவழும் என ஒரு ஜனரஞ்சகமான கற்பனை நிலவுகிறது. தோல்வியடைந்த இராஜதந்திரிகளாலோ கனவுலகில் வாழும் அரசியல்வாதிகளாலோ சமாதானம் உருவாகாது. யதார்த்த உலகிலுள்ள ஆளுமையானவர்களால் இதை ஏற்படுத்த முடியும்” என அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் கூறுகிறார். போர்களையே உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் ஒரு நாட்டின் சார்பாக சமாதானம் பற்றிய இந்த தத்துவத்தை பேச வான்ஸ் க்கு என்ன அறம் இருக்கிறதோ தெரியவில்லை. இருந்திட்டுப் போகட்டும்.

trump-put-zel.jpeg?w=680

இந்த சமாதான ஒப்பந்தத்தின் பிரசவம்

புட்டினும் ட்றம்ப் உம் அலாஸ்காவில் சந்தித்த பரபரப்புக் காட்சியின் முன்னரேயே இரு நாட்டு ஆலோசகர்களும் இரகசியமாக சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது. அச் சந்திப்பின் போது புட்டின் தனது தரப்பில் உத்தியோக பூர்வமாக திரைமறைவில் கையளித்த நிபந்தனைகள்தான் ட்றம்ப் இப்போது கொணர்ந்த சமாதான ஒப்பந்தத்தின் அடிக்கல் என அதன் உள்ளடக்கத்தைப் பார்க்கிறபோது தெரிகிறது.

அது இதுவரை காலமும் இரகசியமாக பேணப்பட்டது என்பதை விடவும், அதன் அம்சங்கள் சாத்தியப்பாடற்றவை என ஓரத்தில் வைக்கப்பட்டது என்பதே பொருத்தமானது. அலாஸ்கா பேச்சுவார்த்தையின் பின் ட்றம் புட்டின் கோருவது சாத்தியமில்லாத விடயங்கள் என பேசியதும், புட்டின் மீதான நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தி பத்திரிகையாளாகளின் கேள்விகளுக்கு பதிலளித்ததும் நடந்தது. அதுக்கும் மேலாக ஹங்கேரியில் அந் நாட்டின் தலைவர் விக்ரர் ஓர்பான் அனுசரணையில் நடக்க ஒப்புக்கோண்ட புட்டின்-ட்றம்ப் பேச்சுவார்த்தையை திடீரென ட்றம் இரத்துச் செய்தார். “புட்டினோடு சாத்தியமில்லாதவைகளைப் பேசி பயனில்லை” என்ற காரணத்தையும் முன்வைத்தார். அலாஸ்கா சந்திப்பின் பின்னும் அமெரிக்கா உக்ரைனுக்கு இராணுவ ரீதியில் இராணுவத் தகவல் பரிமாற்றங்களுக்கு உதவியது. பைடன்கூட வழங்க மறுத்த அமெரிக்காவின் சக்தி வாய்ந்த ஏவுகணையான ‘ரோமாஹவ்க்’ (Tomahawk) இனை உக்ரைனுக்கு தருவதாக ட்றம்ப் ஒப்புக்கொண்டார். (பின் மறுத்தார் என்பது வேறு விடயம்). இவையெல்லாம் எதைக் காட்டுகிறது. புட்டினின் நிபந்தனைகளை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என ட்றம் எடுத்த முடிவைத்தான் என்பதை மதிப்பிட முடிகிறது.

அப்படியாயின் ஏன் அதை திரும்ப எடுத்தார்கள்?

  1. உக்ரைன் தோல்வி

அலாஸ்கா சந்திப்பின் பின் ரசியாவின் உக்ரைன் மீதான தாக்குதல் மூர்க்கத்தனமாக இருந்தது. துரிதமான நில ஆக்கிரமிப்பும், உக்ரைனின் தலைநகர் கீவ் உட்பட ஏனைய நகரங்கள் மீதான பெரும் ஏவுகணை மற்றும் ட்றோன் தாக்குதலும், முன்னரங்குகளில் உக்ரைன் இராணுவத்தின் பெருந்தொகை மரணங்களும் சரணடைவுகளும் எல்லாமுமாக தவிர்க்க முடியாமல் புட்டினின் நிபந்தனைகளை பரிசீலிக்க வைத்திருக்கிறது. புட்டின் ஏவிய கொடுந் தாக்குதல்களின் நோக்கமும் இவ்வாறான ஓர் அழுத்தத்தை ட்றம்ப்பிற்குக் கொடுக்கும் நோக்கமாக இருந்திருக்கலாம்.

உக்ரைனை களமாக வைத்து ஆடிய நேட்டோவின் நிழற்போர் தோல்வியில் முடியப் போகிறது என்பதை ட்றம்ப் கணித்துமிருக்கலாம். அதை அவர் செலன்ஸ்கியிடம் ஏற்கனவே ஓவல் அலுவலகத்தில் வைத்து உக்ரைனுக்கு காட்டமாக தெளிவுபடுத்தியிருந்தார். “விளையாட உன்னிடம் கார்ட்ஸ் ஏதும் இல்லை” என திரும்பத் திரும்ப கூறி செலன்ஸ்கியை அவமானப்படுத்தினார். மூன்றாம் உலகப் போரில் கொண்டுபோய் நிறுத்தப் போகிறாய் என வேறு செலன்ஸ்கியை சொற்களால் தாக்கினார். அது நடந்து பல மாதங்களாகி விட்டது.

இப்போ இது தமது போரல்ல. ஐரோப்பாவின் போர். அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என அமெரிக்கா பின்வாங்கியிருக்கிறது. அது தற்காலிகமாகவும் இருக்கலாம். காலம்தான் இந்த சூட்சுமத்தை அவிழ்த்துக் காட்டும்.

2. ட்றம்ப் இன் பொருளாதார நோக்கம்

  1. உக்ரைனுக்கு தாம் ஆயுதம் இனி வழங்க மாட்டோம். வேண்டுமானால் ஐரோப்பா (இன்னொரு வார்த்தையில் சொன்னால், அமெரிக்கா தவிர்ந்த நேட்டோ) தம்மிடம் அதை வாங்கி உக்ரைனுக்கு வழங்கலாம் என ட்றம் சொன்னார். அது நடக்கவும் செய்தது. குறிப்பாக ஜேர்மனி பெருமளவு நிதியை அதற்காகச் செலவிட்டு வாங்கி உக்ரைனுக்குக் கொடுத்தது. அமெரிக்கா இலாபமடைந்தது.

  2. இன்னொரு வழியாலும் அமெரிக்கா வந்தது. நேட்டோ உறுப்பு நாடுகள் தமது GDP இல் 5 வீதத்தை ஒதுக்க வேண்டும் என நிர்ப்பந்தித்ததன் மூலம் இந்தப் பணத்தை தமதாக்க முயற்சித்தார். அதாவது ஐரோப்பாவையும்விட பல மடங்கு உற்பத்தித் திறன் கொண்டதும், தொழில்நுட்ப வளர்ச்சியடைந்ததுமான தமது இராணுவ தளபாடங்களை நேட்டோவுக்கு விற்று காசு பார்க்க ட்றம்ப் திட்டமிட்டார். அது வெற்றிபெறவும் செய்கிறது.

  3. இப்போ சமாதான ஒப்பந்தத்திலும் பொருளாதார நோக்கம் பல தளங்களில் வெளிப்படுகிறது. அதில் பின்வரும் நான்கை சுட்ட முடியும்

3.1) ரசியா மீதான பொருளாதாரத் தடையை முன்வைத்து ரசியாவின் சொத்துக்களை ஐரோப்பா முடக்கியது. ரசிய நிறுவனங்களுக்குச் சொந்தமான பல பில்லியன் டொலர் பெறுமதியான சொத்து மட்டுமல்ல, பணமும் ஐரோப்பிய வங்கிகளில் உறைநிலையில் வைக்கப்பட்டது. பெல்ஜியத்தின் வங்கியில் பெருமளவு உறைநிலை நிதி உள்ளது. இதில் 140 பில்லியனை எடுத்து கடனாக உக்ரைன் அரசாங்கம் தன்னை நிர்வகிக்க இரண்டு ஆண்டு காலத்துக்கான உதவியாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சித்தது. அந்தப் பிரேரணையை பெல்ஜியம், ஹங்கேரி, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் ஏற்றக்கொள்ளவில்லை.

இந்த இழுபறிக்குள்ளால் ட்றம் இன் சமாதான ஒப்பந்தமானது “உறைநிலையில் வைக்கப்பட்டிருக்கும் ரசியாவின் நிதியில் 100 பில்லியன் டொலரை உக்ரைன் அபிவிருத்தி நிதி க்கு ஒதுக்க வேண்டும்” என்ற ஓர் அம்சத்தை உள்ளடக்கியிருக்கிறது. இந்தப் பணத்தை வேகமாக வளர்ச்சியடையும் தொழில்நுட்பம், தரவு வங்கி நிலையங்கள், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் உக்ரைன் முதலிடும் எனவும், அத்தோடு மறுகட்டுமானம், அபிவிருத்தி, எரிவாயு கட்டுமான நவீனமயமாக்கல் என்பவற்றிலும் முதலிடும் எனவும், இவை எல்லாவற்றையும் அமெரிக்காதான் தலைமை ஏற்று செய்யும் எனவும், வரும் இலாபத்தில் 50 வீதம் அமெரிக்காவுக்கானது எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரசியாவின் உறைநிலைப் பணத்தை கையாள நினைத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் முகத்திலறைந்தது போல இது இருக்கிறது.

3.2) யப்பான், அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் Euroclear என்ற பெருநிதி நிறுவன சந்தை போன்றவற்றில் உறைநிலையில் வைக்கப்பட்டிருக்கும் மீதிச் சொத்து அல்லது பணத்தை (300 பில்லியன் வரை வரலாம் என சொல்லப்படுகிறது.) விடுவித்து, அதை வைத்து அமெரிக்கா-ரசியா கூட்டாக முதலீட்டில் ஈடுபடுவது எனவும், அதன் மூலம் இரு நாடுகளுக்குமான நெருக்கம் உண்டாகும் எனவும், அது எதிர்காலத்தில் முரண்பாடுகள் வீரியமாகாமல் தடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்படி எரிசக்தி, இயற்கை வளம், கட்டுமானம், அண்டாட்டிக் (Antatic) இலுள்ள அரியவகை கனிம வள அகழ்வு என்பவற்றில் ரசியாவும் அமெரிக்காவும் கூட்டாக ஈடுபடும் என்பதெல்லாம் ட்றம்ப் இன் சமாதான ஒப்பந்த சூழ்ச்சித் திட்டமாக எழுதப்பட்டுள்ளது. ரசியா இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளுமா எனத் தெரியவில்லை.

3.3) உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை அமெரிக்கா வழங்கும் எனவும் அதற்கான நஷ்ட ஈட்டை உக்ரைன் அமெரிக்காவுக்கு தொடர்ந்து செலுத்த வேண்டும் எனவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3.4) G7 இல் மீண்டும் இணைய ரசியாவுக்கு அழைப்பு விடுகிறது ஒப்பந்தம். அதன் மூலம் (ரசியா உட்பட்ட) பிரிக்ஸ் கூட்டமைப்பின் பொருளாதாப் போட்டியில் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் G7 உடன் ரசியாவின் பொருளாதாரத்தை இணைக்கும் இன்னொரு சூழ்ச்சி ட்றம்ப் இன் ஒப்பந்தத்தில் உள்ளது.

ட்றம்ப் இன் தூர நோக்கு அரசியல்

சீனாவுடனான எதிர்காலப் போர்!. இன்றைய உலக ஒழுங்கு ஒற்றைத் துருவ உலக ஒழுங்கிலிருந்து பல் துருவ உலக ஒழுங்கை நோக்கி முட்டிமோதல்களுக்கு உள்ளாகத் தொடங்கியிருக்கிற காலம். இரண்டாம் உலகப் போர் வரை முதல் உலக சாம்ராஜ்யமாக திகழ்ந் பிரித்தானியாவின் இடத்தை அமெரிக்கா எடுத்த போதும், ஒற்றைத் துருவ நிலையை முழுமையாகப் பேண முடியவில்லை. சோவியத் யூனியன் இன்னொரு வல்லரசாக அமெரிக்காவுக்கு சகல தளங்களிலும் சவாலாக திகழ்ந்தது. இரு துருவ நிலை என அதை சொல்ல முடியும். ஆனால் 1991 இல் சோவியத் உடைவின் பின் அமெரிக்கா ஒற்றைத் துருவ உலக ஒழுங்கை முழுமையாக நிறுவியது. உலகம் முழுவதும் 750 க்கு மேற்பட்ட இராணுத் தளங்களை 80 க்கு மேற்பட்ட நாடுகளில் அது வைத்திருக்கிறது.

பிரேசில், ரசியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆபிரிக்கா என்ற 5 நாடுகளை முதன்மையாகக் கொண்டு எழுந்த பிரிக்ஸ் இன் எழுச்சி அமெரிக்காவுக்கும் G7 பணக்கார நாடுகளுக்கும் சவாலாக எழுந்துள்ளது. அத்தோடு சீனா, ரசியா, இந்தியா என்பவற்றின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பன காலனிய மனக் கட்டமைப்புக் கொண்ட மேற்குலகுக்கு ஜீரணிக்க முடியாத ஒன்று. ரசியா மீதான இவர்களின் அணுகுமுறையில் இந்த மனக் கட்டமைப்பு பெரும் பங்கு வகிக்கிறது. முன்னைய சோவியத் போல, அல்லது அதையும்விட சிறப்பாக கடந்த 30 வருடங்களில் சீனா சகல தளங்களிலும் அமெரிக்காவுக்கு சவாலாக எழுந்துள்ளது. எனவே தனது அதிகார நிலையை மேல்நிலையில் வைத்திருக்கும் வேட்கையானது எதிர்காலத்தில் சீனாவுடன் அமெரிக்கா (நேட்டோவின் துணையுடன்) போர் தொடுக்க வேண்டிய புள்ளியில் கொண்டுவந்து நிறுத்தலாம். அது ஏறத்தாழ 2007 இல் நிகழலாம் என சிஐஏ கணித்திருக்கிறது. அதற்கான இன்னொரு உக்ரைனாக தாய்வானை அது குறிவைத்துள்ளது.

முன்னர் அமெரிக்காவானது சோவியத் யூனியனை எதிர்கொள்ள சீனாவுடன் நட்புறவு பேணி, சீனாவை தூர இருக்க வைக்க மேற்கொண்ட உத்திபோல, சீனாவுடன் போர் ஒன்று உருவாகும் பட்சத்தில், ரசியாவை சீனாவிடமிருந்து தூரப்படுத்த அல்லது தலையிடாமலிருக்க வைக்க வேண்டிய தூர நோக்கு ஒன்று ட்றம்ப் இடம் இருக்கிறது.

இதை ட்றம்ப் க்கும் புட்டினுக்குமான நட்பு என சொல்வது ஓர் அரசியல் பார்வையே அல்ல. அரசியல் காய் நகர்த்தல் என்பதே பொருத்தமானது. எல்லா நாடுகளும் தத்தமது நலனை முன்னிறுத்தியே செயற்படுகின்றன. அதை சாதிக்க இராஜதந்திர அணுகுமுறைகளை ஒரு சதுரங்க ஆட்டமாக ஆடுகின்றன. அவர்களின் முகத்துக்கும் பிடரிக்கும் இடையிலான மொழி ஒன்றாக இருப்பதில்லை. அது அறமற்ற மொழியின் பாற்பட்டது. ட்றம்பின் இந்த அரசியல் சதுரங்கத்தை புட்டின் நன்கு புரிந்தவர் என்பதால், ஆடுகளத்தில் ட்றம்பை வைத்து தனது இலக்கை அடைய அவரும் தன் பங்குக்கு காய் நகர்த்துகிறார்.

அரசியல் சதுரங்கம்

மேற்கூறிய பொருளாதார மற்றும் அரசியல் நலன்களை கருத்தில் கொண்டு ட்றம்பின் ஆலோசகர்கள் 28 அம்ச சமாதான ஒப்பந்தத்தை உக்ரைன்-ரசியா இடையில் முன்வைத்திருக்கிறார்கள். போரில் வெற்றிக்கு அருகாக வந்திருக்கும் ரசியாவுக்கும் தோல்வியை தழுவும் உக்ரைனுக்கும் இடையிலான ஒப்பந்தம் சமச்சீரற்றதாகவே இருக்கும் என்ற யதார்த்தத்தைப் பயன்படுத்தி ட்றம்ப் தனது ஆட்டத்தை ஆடுகிறார்.

உக்ரைன் இனி ஒருபோதும் நேட்டோவில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது என்பது ஒப்பந்தத்தின் ஓர் அம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரசியாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக 2022 பெப்ரவரி வரை புட்டின் அமெரிக்காவிடமும் செலன்ஸ்கியிடமும் கேட்டது “நேட்டோவில் இணையாமல் நடுநிலையாக இருக்க வேண்டும்” என்பதே. இதை மறுத்த செலன்ஸ்கி இன்று எந்த இடத்தில் நிற்பாட்டப்பட்டிருக்கிறார். நேட்டோவில் நிரந்தரமாக சேர முடியாது என்பது மட்டுமன்றி, உக்ரைன் இராணுவத்தை ஆறு இலட்சத்துக்கு மேல் வைத்திருக்க முடியாது, அதி தூர ஏவுகணைகளை உக்ரைன் வைத்திருக்க முடியாது, அணு ஆயுதத்தை உருவாக்க முடியாது என்பனவெல்லாம் ஒப்பந்தத்தினூடு உக்ரைன் வந்து சேர வேண்டிய இடமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. நேட்டோவுக்காக உக்ரைன் இழந்தவைகள் இவை மட்டுமல்ல. உக்ரைன் மக்கள் மற்றும் இராணுவம் என பெரும் மனிதப் பேரழிவுகளும், மனித அலைச்சல்களும், உளவியல் நசிவுகளும், கட்டுமான இழப்புகளும் போன்று துயரங்களும் ஆகும்.

இது மட்டுமா. ரசிய மொழி பேசும் மக்களைக் கொண்ட, உக்ரைன் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய, டொன்பாஸ் பிரதேசங்களில் 90 வீதத்தை செலன்ஸ்கி ரசியாவிடம் பறிகொடுத்தும் இருக்கிறார். ரசியாவால் கைப்பற்றப்பட்டிருக்கும் இப் பிரதேசங்கள் ரசியாவிடம் உத்தியோகபூர்வமாக இணைக்கப்படுவதற்கான வாசலையும் இந்த ஒப்பந்தம் திறந்துவிட்டிருக்கிறது. ஆனாலும் இவை தெளிவான வரையறுப்புகளுக்கு உட்படுவதில் அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் ஒத்த கருத்து இல்லை. மறுபுறத்தில் உக்ரைன் தனது பிரதேசமான டொன்பாஸ் மற்றும் கிரைமியா பிரதேசங்களை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.

2002 பெப்ரவரியில் போர் தொடங்கிய போதும், 2002 ஏப்ரலில் ரசியா உக்ரைனை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இஸ்தான்புல்லில் இது நடைபெற்றது. நேட்டோவின் விஸ்தரிப்புவாதத்துக்கு எதிராக ரசிய பாதுகாப்பு உத்தரவாதத்தை உறுதிப்படுத்த “உக்ரைன் நேட்டோவில் இணையக்கூடாது. நடுநிலையாக இருக்க வேண்டும்” என ரசியா உக்ரைனை வலியுறுத்தியதை செலன்ஸ்கி தான் ஏற்றுக் கொள்வதாக சொல்லி மேசைக்கு வந்தார். அது நடந்திருந்தால் உக்ரைன் இப்படி சின்னாபின்னப்பட்டு இருக்காது. பிரதேசங்களை பறிகொடுத்தும் இருக்காது.

ஆனால் செலன்ஸ்கியை பேச்சுவார்த்தையிலிருந்து இடைமறித்து “நாம் இருக்கிறோம் உனக்கு உதவ. நீ நேட்டோவில் சேருவதை யாராலும் தடுக்க முடியாது பேச்சுவார்த்தையிலிருந்து வெளியே வா” என்றெல்லாம் நம்பிக்கை கொடுத்து அல்லது உசுப்பேத்தி பேச்சுவார்த்தையைக் குழப்பியது பொரிஸ் ஜெல்சனின் பிரித்தானியாவும் பைடனின் அமெரிக்காவும்தான்!. இவர்களே உக்ரைனின் இன்றைய நிலைக்கு மிகப் பெரும் காரணமானவர்கள். இவர்களுக்குப் பின்னால் இழுபட்டுப் போன ஐரோப்பாவானது இப்போ வலையில் சிக்கியுள்ளது. ட்றம்ப் “இது எனது போர் அல்ல. இது பைடன் ஆரம்பித்த போர்… இப்போ உங்களது போர்” என ஐரோப்பாவுக்கு விரல் நீட்டுகிறார். இன்னொரு கோணத்தில் இது ஒரு படம் காட்டலாகக் கூட இருக்கலாம். அதை எதிர்காலம் வெளிச்சமிடும்.

தமது பாதுகாப்பு உத்தரவாதத்தை கோரும் ஐரோப்பாவானது ரசியாவின் பாதுகாப்பு உத்தரவாதத்தை என்றாவது ஒருநாள் ஏற்று பேசியதுண்டா என்றால், ஒருபோதும் இல்லை. ரசிய எல்லைவரை வந்த ‘நேட்டோ ஜக்கற்’ அணிந்த ஐரோப்பாவானது, தனது பாதுகாப்பு உத்தரவாதம் பற்றி உரக்க கத்தும் அதே நேரம், தனது எல்லைக்குள் நின்று தனது பாதுகாப்பு உத்தரவாதம் பற்றி பேச ரசியாவுக்கு இருக்கும் உரிமையை மறுக்கிறது. பலஸ்தீன மக்களின் பாதுகாப்பு உத்தரவாதத்தைப் பற்றிப் பேசாமல், இஸ்ரேலின் பாதுகாப்பு உத்தரவாதம் பற்றி பேசிய இழிநிலைதான் ஐரோப்பாவின் இறைமை பற்றிய வியாக்கியானத்துக்கான தகுதியாக இருக்க முடியும். தனது பாதுகாப்பு உத்தரவாதத்தை மட்டுமன்றி ரசியாவின் பாதுகாப்பு உத்தரவாதத்தையும் கவனத்தில் எடுத்து நேர்மையாக பேச்சுவார்த்தை மேசையில் எல்லோருமாக உட்கார்ந்தால் இப் பிரச்சினையை எப்போதோ முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம்.

ஆக, அமெரிக்கா இன்று பின்வாங்குகிற நிலையில் கூட, ஐரோப்பா பின்வாங்கவில்லை. ஐரோப்பிய நலன் அடிப்படையில் என்பதைவிட ஐரோப்பிய அரசியல் தலைவர்களின் நலன்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. ட்றம்பின் 28 அம்ச சமாதான ஒப்பந்தம் உக்ரைனின் இறைமையைப் பாதிக்கிறது என கூறி, ஐரோப்பா இந்த 28 அம்சங்களையும் பிரித்து மேய்ந்து, 19 அம்ச ஒப்பந்தமாக உருமாற்றி ட்றம் இடம் கையளித்திருக்கிறது. இதை எழுதிக்கொண்டிருக்கும் வரை அவை பற்றிய விபரம் தெரியவில்லை. ஆனால் சமாதானம் வர இவர்கள் இலகுவில் விடப்போவதில்லை. குறிப்பாக மக்ரோன், ஸ்ராமர், மேர்ற்ஸ் போன்ற போர்வெறியர்கள் சமாதானத்துக்கு எதிராகவே நிற்கின்றனர்.

அமெரிக்காவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்ட 32 நாடுகளின் கூட்டணியாக விரிவாக்கம் அடைந்திருக்கும் நேட்டோவுடன் நேரடியாக ரசியா தனியாக போர் புரிவது என்பது முடியவே முடியாத காரியம். நேட்டோவிலுள்ள ஒரு நாட்டைத் தாக்கினால் அது நேட்டோ உறுப்பு நாடுகள் எல்லோரையும் தாக்கியதாக கணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது நேட்டோவின் 5வது சரத்து ஆகும். இந்தவகை பாதுகாப்பு உத்தரவாதம், பெருமளவு கூட்டு இராணுவ எண்ணிக்கை, அமெரிக்காவின் நவீன தொழில்நுட்பங்கள் ஆயுத உற்பத்திகள், நிதி திரட்சி எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு ரசியாவால் ஐரோப்பாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என பேசுவதை நம்ப மக்கள் கேணையர்களாக இருக்க வேண்டும்.

ஐரோப்பாவை புட்டின் ஆக்கிரமிக்கும் ஆபத்து உள்ளதாக அடிக்கடி உச்சரிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘ரசிய ஆக்கிரமிப்பு’ கதையாடலை பலமுறை மறுத்த புட்டின், ஐரோப்பிய தலைவர்கள் மாயையில் வாழ்கின்றனர் என்றார். சென்ற வாரம் அவர் பேசுகிறபோது ரசியா ஒருபோதும் ஐரோப்பாவை ஆக்கிரமிக்காது என எழுத்தில் தரக்கூட தான் தயார் என அறிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை அதுகுறித்து எதுவும் பேசாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது.

யதார்த்தம்

உக்ரைன் வரலாற்றாசிரியரான Marta Havryshko அவர்கள் கூறுகிறபோது, “இலட்சக்கணக்கான உக்ரைன் இராணுவ வீரர்கள் மடிந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோரும் அவர்களின் விருப்பின்றி பலவந்தமாக பிடித்துச் செல்லப்பட்டு முன்னரங்குகளில் விடப்பட்டவர்கள். அவர்களின் குடும்பங்கள் நடுவீதியில் விடப்பட்டிருக்கிறார்கள். ரசியாவின் தாக்குதலில் மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஒவ்வொரு இரவிலும் தூங்கச் செல்லும்போது நாளை உயிருடன் இருப்போமா என்ற ஏக்கம் அவர்களை உயிரோடு கொன்று போடுகிறது. உளவியல் சிதைவுகள் அவர்களை தாக்குகிறது. இளஞ் சமுதாயம் நாட்டைவிட்டு களவாக தப்பியோடி பெருமளவில் புலம்பெயர்ந்திருக்கிறது. தமது எதிர்காலம் குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள்” என்கிறார்.

ரசியாவின் ஆக்கிரமிப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. கடுமையாக எதிர்க்கிறார். ஆனால் “உக்ரைன் அரசாங்கம் ஊழல் நிறைந்த அதிகாரிகளாலும் அமைச்சர்களாலும் ஆனது. அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். போர் வேண்டும் என்பவர்கள் தாமே போய் முன்னரங்கில் நிற்கட்டும்” என்கிறார். அவர் இறுதியாக ஒன்றைச் சொல்கிறார், “இங்கு வரைபடங்கள் அல்ல முக்கியம், மனிதர்கள்தான் முக்கியம். அவர்கள் ஏங்குவது தமது உயிருக்காக, அமைதியான வாழ்வுக்காக” என்கிறார்.

உண்மைதான். நாட்டுப் பற்று என்பது எளிய மக்களின் தியாகத்தைத்தான் வேண்டுகிறது. அதற்கான கதையாடல்களையும் போரையும் உருவாக்குபவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் வசதியைப் பெருக்கி வாழுகிறார்கள். அது உக்ரைனாக இருந்தாலென்ன ரசியாவாக இருந்தாலென்ன, அமெரிக்கா ஐரோப்பாவாக இருந்தாலென்ன!

ட்றம்பின் அமெரிக்கா என்பதும் புட்டினின் ரசியா என்பதும் நிரந்தரமல்ல. அது எதிர்காலத்திலும் தத்தமது நலனுக்கேற்ப ஆடுகளங்களில் நிற்கும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அரசியலில் நிரந்தரமான நண்பருமில்லை பகைவருமில்லை என்பது இதைத்தான். கண்முன்னே இதற்கான உதாரணங்கள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. அதேபோலவே, இன்றைய ஐரோப்பிய ஒன்றியம் வரைவுசெய்யும் எல்லைதான் ஐரோப்பா அல்ல என்பதும், பூகோள ரீதியில் ரசியாவும் ஓர் ஐரோப்பிய நாடுதான் என்பதையும் கவனம் கொள்ள வேண்டும். அதேநேரம் இந்த இரண்டு முகாம்களுக்கும் இடையிலான பகை என்பது இலகுவில் தீர்க்க முடியாதளவுக்கு வரலாற்று ரீதியிலானது என்பதும் அவற்றின் மனக் கட்டமைப்பு ஒன்றல்ல என்பதும், அவை புறந்தள்ள முடியாதளவு இடைவெளியைக் கொண்டது என்பதும் சிந்தனை கொள்ளத் தக்கது. சீனாவை நோக்கி ரசியாவை தள்ளியது மேற்குலகின் அல்லது நாட்டோவின் அணுகுமுறை மட்டுமல்ல, இந்த மனக் கட்டமைப்பு வேறுபாடும்தான் என்பதை கவனம் கொள்ள வேண்டும். இதை பைடனைப் போலன்றி ட்றம்ப் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்.

ஆனாலும் ஐரோப்பாவின் காலனிய மனக் கட்டமைப்பு சமாதானத்துக்கு குறுக்காக வாள் வீசி நிற்கிறது. அதைத் தாண்டி சமாதானம் முகிழ்ப்பது இலகுவானதல்ல என்பது ட்றம்ப் க்கு நன்றாகவே தெரியும். அமெரிக்கா தள்ளி நிற்கிறபோதும், ஐரோப்பாவுடன் இழுபடுகிற செலன்ஸ்கியின் பதவியை கைமாற்றியாவது தனது நோக்கத்தை சாதிக்க ட்றம்ப் தயங்க மாட்டார். அதற்கு ஒத்திசைவாக, செலன்ஸ்கி அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளின் மில்லியன் கணக்கான பண மோசடியும் ஊழலும் பூதமாக வெளிக்கிளம்பியிருக்கிறது. “வரும் ஆனால் வராது, வராது ஆனால் வரும்” என்ற நிலையில் சமாதானம் உக்ரைனின் வாசற்படியில் குந்தியிருக்கிறது!.

https://sudumanal.com/2025/12/01/வரைபடங்களும்-மனிதர்களும/#more-7502

நினைவேந்தல் நிகழ்வுகளும் தமிழர் அரசியலும் — வீரகத்தி தனபாலசிங்கம் — 

1 month ago

நினைவேந்தல் நிகழ்வுகளும் தமிழர் அரசியலும்

December 2, 2025

நினைவேந்தல் நிகழ்வுகளும் தமிழர் அரசியலும் 

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

இலங்கை முழுவதும் இயற்கையின் சீற்றத்தினால்  பேரிடருக்கு  உள்ளாகியிருக்கின்ற  நிலைவரத்துக்கு  மத்தியிலும் கடந்த வாரம் வடக்கு, கிழக்கில் மாவீரர் வாரம் முன்னென்றுமில்லாத வகையில் ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்பட்டிருக்கிறது. இறுதி நாளான நவம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற பிரதான நினைவேந்தல் நிகழ்வுகளில் பெருமளவில் மக்கள் அணிதிரண்டது குறித்து செய்திகளை வெளியிட்ட சில ஊடகங்கள் விடுதலை புலிகளின் காலத்தில் கூட இந்தளவுக்கு பிரமாண்டமானதாக மாவீரர்தின நிகழ்வை காணக்கூடியதாக இருந்ததில்லை என்று கூறியிருந்தன..

விடுதலை புலிகள் இயக்கம் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டிருக்கின்ற போதிலும், அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71 வது பிறந்த தினமான நவம்பர் 26 புதன்கிழமை வடக்கு,  கிழக்கில் பல்வேறு இடங்களில்  அவரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. போரில் பலியானவர்களை நினைவுகூருவதன் பேரில் விடுதலை புலிகளை புகழ்ந்து போற்றும் நிகழ்வுகளுக்கு இடமளிக்க முடியாது என்று அரசாங்கத் தரப்பில் தொடக்கத்தில் கூறப்பட்ட போதிலும், பிரபாகரனின் பிறந்ததினக் கொண்டாட்டங்களை தடுப்பதற்கு பொலிசாரோ அல்லது படையினரோ எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பிறகு இரண்டாவது தடவையாக கொண்டாடப்பட்ட மாவீரர் வாரம் இதுவாகும்.  இலங்கை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஒரு அறையில் இலங்கை தமிழரசு கட்சியின்  கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கார்த்திகைப்பூவின் முன்னால் தீபமேற்றி நினைவேந்தல் செய்து படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தனர்.  முன்னென்றுமில்லாத வகையில் இந்தத் தடவை பாராளுமன்றத்தில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்க் கட்சிகளின்  உறுப்பினர்கள் பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்ற வேளைகளில்  மாவீரர்களை நினைவேந்திய வண்ணமே தங்களது பேச்சுக்களை ஆரம்பித்தையும் பிரபாகரனுக்கு பிறந்ததின வாழ்த்துக் கூறியதையும்  காணக்கூடியதாக இருந்தது. ஆனால், அதற்கு அரசாங்கத் தரப்பில் இருந்தோ அல்லது எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்தோ எவரும் ஆட்சேபம் தெரிவிக்கவுமில்லை. 

கடந்த வருடமும் கூட மாவீரர்வாரக் கொண்டாட்டங்களை அமைதியான முறையில் நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதித்திருந்தது. ஆனால், கடந்த வருடத்தை விடவும் இந்த தடவை கொண்டாட்டங்களில் கூடுதலான அளவுக்கு உத்வேகத்தை காணக் கூடியதாக இருந்தது. வடக்கு, கிழக்கில்  தமிழ் அரசியல் கட்சிகள் குறிப்பாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழரசு கட்சியும் நினைவேந்தல்களில் தீவிரமாக பங்கேற்றன. முன்னர் இத்தகைய நினைவேந்தல்களில் பெருமளவுக்கு அக்கறை காட்டாத தமிழரசு கட்சியின் பொதுச்  செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் போன்றவர்களும் கூட கடந்த வாரம் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான இராமலிங்கம் சந்திரசேகரும் மாவீரர்களை நினைவுகூர்ந்து கருத்துக்களை வெளியிட்டிருந்தார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் போரை முழுவீச்சில் முன்னெடுப்பதற்கு தத்துவார்த்த வழிகாட்டியாகச்  செயற்பட்ட ஜனதா விமுக்தி பெரமுனக்கு  (ஜே.வி.பி.) தமிழ் மக்களின் விமோசனத்துக்காக தங்களது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவேந்தல் செய்வதற்கு எந்த தகுதியும் கிடையாது என்று பாராளுமன்றத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம் செய்தததையும் காணக்கூடியதாக இருந்தது.

எது எவ்வாறிருந்தாலும், முன்னைய அரசாங்கங்களைப் போலன்றி ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க  தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்நாட்டுப்போரில் இறந்தவர்களை  எந்தவிதமான இடையூறுமின்றி சுதந்திரமாக நினைவு கூருவதற்கு தமிழ் மக்களை அனுமதித்தது நிச்சயமாக வரவேற்கத்தக்க ஒரு செயலாகும். 

ஜே.வி. பி.யின் தாபகத் தலைவர் றோஹண விஜேவீர உட்பட அரச படைகளினால் கொல்லப்பட்ட  தங்களது முன்னைய தலைவர்களையும்  இரு ஆயுதக் கிளர்ச்சிகளிலும் பலியான இயக்க உறுப்பினர்களையும் வருடாந்தம் நினைவேந்தல் செய்து வரும் அரசாங்கத் தலைவர்கள் உள்நாட்டுப்போரில் உயிர்தியாகம் செய்த தமிழ்ப் பேராளிகளும் பலியான மக்களும் நினைவுகூரப்படுவதை தடுப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல  என்ற தர்க்கநியாயத்தின் அடிப்படையிலேயே  மாவீரர்தின நிகழ்வுகளை சுதந்திரமாக நடத்துவதற்கு அனுமதிக்க தாங்களாகவே நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் எனலாம்.

ஜே.வி.பி. 1994 ஆம் ஆண்டு தொடக்கம் ‘நவம்பர் வீரர்கள் தினத்தை’ அனுஷ்டித்து வருகிறது. விஜேவீர கொழும்பில் 1989 நவம்பர் 13 ஆம் திகதி கொல்லப்பட்டதால் வருடாந்தம் அன்றைய தினத்தில் அவர்கள் நினைவு நிகழ்வை நடத்திவருகிறார்கள். இறுதியாக இரு வாரங்களுக்கு முன்னர் நவம்பர் 14 கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஜனாதிபதி  அநுர குமார திசநாயக்க தலைமையில் நவம்பர் வீரர்கள் தின நிகழ்வு இடம்பெற்றது. 

அதேவேளை, மாவீரர் தினத்தை விடுதலை புலிகள் 1989 ஆம் ஆண்டு அனுஷ்டிக்கத் தொடங்கினர். அரசாங்க படையினருடனான மோதலில் முதன்முதலாக இயக்கப் போராளி (சங்கர் என்ற சத்தியநாதன்) 1982 நவம்பர் 27 ஆம் திகதி கொல்லப்பட்ட காரணத்தினால் மாவீரர் தினத்தை வருடாந்தம் அனுஷ்டிப்பதற்கு அன்றைய தினத்தை  அவர்கள் தெரிவு செய்தனர். பிரபாகரனின் பிறந்ததினம் நவம்பர் 26 ஆம் திகதியாகும். 

முதலாவது மாவீரர்தினம் முல்லைத்தீவு காட்டுக்குள் அனுஷ்டிக்கப்பட்டபோது வடக்கு, கிழக்கில் இந்திய படையினர் நிலைகொண்டிருந்தனர். அவர்கள் 1990 மார்ச் மாதம் முற்றாக வெளியேறியதை தொடர்ந்து விடுதலை புலிகள் தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்த பகுதிகளில் மாவீரர்தின நிகழ்வுகளை விரிவுபடுத்தினர். அந்த தினத்தில் பிரபாகரன் முக்கியமான உரையை நிகழ்த்துவதும் வழக்கமாக இருந்தது. 

2009 மே மாதம் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பிறகு ராஜபக்சாக்களின் ஆட்சியில் மாவீரர்தின நிகழ்வுகளை பகிரங்கமாக நடத்தக்கூடியதாக இருக்கவில்லை. ஆனால், சில சிவில் சமூக அமைப்புக்களின் உதவியுடன் எளிமையான முறையில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆங்காங்கே இடம்பெற்றன.  ஆட்சிமாற்றங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து படிப்படியாக விரிவான முறையில் அந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுவந்தன. தற்போது பரந்தளவில் மக்களின் பங்கேற்புடன்  நடத்தப்பட்டுவரும் மாவீரர் வார நிகழ்வுகளில் தமிழ் அரசியல் கட்சிகள் தீவிரமான ஈடுபாட்டைக் காண்பிக்கின்றன. 

போரினால் பாதிக்கப்பட்ட மக்களும்  காணாமல் போனோரினதும்  உயிரிழந்த போராளிகளினதும்  குடும்பங்களும் இதுவரையில் தங்களுக்கு நீதி கிடைக்காத நிலையில்  கவலையையும் வேதனையையும் வெளிக்காட்டுவதற்கு  நினைவேந்தல் நிகழ்வுகளில் பெருமளவில் அணிதிரண்டு  பங்கேற்கிறார்கள். 

ஆனால், போரின் முடிவுக்கு பின்னரான காலப்பகுதியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்கள் வேண்டி நிற்பதற்கு ஏற்ற  முறையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாமல் இருக்கும் தமிழ்க் கட்சிகள்  தியாகங்களும் அழிவுகளும் நிறைந்த போராட்டகால நினைவுகளுடன் தமிழ் மக்களைக் பிணைத்து வைத்திருப்பதில் குறியாக இருக்கின்றன. பல தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை, நினைவேந்தல்களே அவை  முன்னெடுக்கின்ற பிரதான அரசியல் செயற்பாடுகளாக இருக்கின்றன. தங்கள் சொந்தத்தில் கொள்கைகளை வகுத்து தமிழ் மக்களை வழிநடத்த முடியாத நிலையில் இருக்கும் இந்த கட்சிகள் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள சில சக்திகளின் உதவியுடன் கடந்த காலப் போராட்டங்களை நினைவுபடுத்துவதில் காலத்தைக் கடத்துகின்றன.

விஜேவீரவோ அல்லது பிரபாகரனோ விட்டுச் சென்ற இடத்திலிருந்து அவர்களின் போராட்டத்தை எவரும்  தொடர முடியாது. அரசியல் யதார்த்தத்தை தெளிவாக விளங்கிக் கொண்ட ஜே.வி.பி.யினர்   ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்து   பாராளுமன்ற அரசியலின் மூலமாக இன்று அதிகாரத்தையும் கைப்பற்றிவிட்டனர். விஜேவீரவை வருடம் ஒருமுறை நினைவு கூருவதை தவிர,  அவரது கொள்கைகளைப் பற்றி அவர்கள் பெரிதாகப் பேசுவதில்லை.

தேசிய மக்கள் சக்தி என்ற புதிய அவதாரத்துடன் இன்று ஆட்சியை நடத்துகின்ற ஜே.வி.பி. தலைவர்கள் பழைய கொள்கைகள் பலவற்றைக் கைவிட்டு உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்களுக்கு இசைவான முறையில் தங்களை மாற்றிக்கொண்டுவிட்டதாக பகிரங்கமாக கூறுகிறார்கள். 

விஜேவீர அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக  இரு  ஆயுதக் கிளர்ச்சிகளை  வெவ்வேறு காலகட்டங்களில்  முன்னெடுத்தார். ஆனால், தோற்கடிக்கப்பட்ட பிறகு புதிய சூழ்நிலைகளில் அரசியலில் எவ்வாறு மீண்டெழுவது என்பதை அவரின் இயக்கத்தில் எஞ்சியிருந்தவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்.

 பிரபாகரன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு தனிநாடொன்றை அமைப்பதற்காக ஆயுதமேந்திப் போராடினார். ஆனால், பிரபாகரனின் இயக்கத்தைப் பொறுத்தவரை, அவ்வாறு மீண்டெழுவதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. விடுதலை புலிகள் இயக்கம்  இலங்கையில் மாத்திரமல்ல, இந்தியா உட்பட பல்வேறு வெளிநாடுகளிலும் தொடர்ந்தும் தடை செய்யப்பட்டிருக்கிறது. விடுதலை புலிகள் இயக்கத்தின் பழைய போராளிகள் சிலர் சேர்ந்து அமைத்த அரசியல் கட்சி ஒன்று தற்போது ஜனநாயக அரசியலில் இருக்கிறது.  ஆனால், அந்த கட்சியைச் சேர்ந்த எவரையும் தமிழ் மக்கள் பிரதேச சபைக்குத் தானும் இதுவரையில் தெரிவு செய்யவில்லை. 

இத்தகைய பின்புலத்தில்,   நினைவேந்தல் அரசியலையே தொடர்ந்து முன்னெடுப்பதன் மூலம் தமிழ் மக்களை எதுவரைக்கும் கொண்டுசெல்ல முடியும் என்பதை தமிழ் அரசியல்வாதிகள் சிந்தித்துப் பார்க்க வேணடும். பிரதேச சபை தொடக்கம் பாராளுமன்றம் வரை நினைவேந்தலை முதன்மைப்படுத்துவதாகவே தமிழர் அரசியல் விளங்குகிறது. 

இந்தக் கருத்துக்களை தமிழர்களின் விமோசனத்துக்காக தங்களது உயிர்களை தியாகம் செய்த போராளிகளை நிந்தனை செய்யும் நோக்கில் முன்வைக்கப்படுபவையாக வியாக்கியானம் செய்யவேண்டியதில்லை.  அவர்களின் தியாகங்களை நினைவுகூருவதை மாத்திரம் முக்கியமான அரசியல் செயற்பாடாக முன்னெடுப்பதன் மூலமாக தங்களது அரசியல் இயலாமையை மறைக்க முயற்சிக்கும் தமிழ் அரசியல்வாதிகளை நோக்கியவையே இந்த கருத்துக்கள். 

இறுதியாக, மாவீரர்வாரத்தை சுதந்திரமாக கொண்டாடுவதற்கு அனுமதித்ததன் மூலமாக தமிழ் மக்களுக்கு பெரியதொரு விட்டுக்கொடுப்பைச் செய்துவிட்டதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்க தலைவர்கள் நினைக்கக்கூடாது. இன்று அரசியலமைப்பில் இருக்கின்ற ஒரேயொரு அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாடான மாகாணசபைகள் முறையை புதிய அரசியலமைப்பில் ஒழித்துவிடப்போவதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆபத்தை உணர்ந்து தமிழ் அரசியல் தலைவர்கள்  செயற்பட வேண்டும். கற்பனையில் காலத்தைக் கடத்தினால் இறுதியில் தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்காமல் போகும்.

https://arangamnews.com/?p=12467

மலையகம்: பேரழிவும் மீட்சியும்

1 month ago

மலையகம்: பேரழிவும் மீட்சியும்

ba83163011046c5f2fdd1eca6f005758d4368226

Photo, Facebook: mariyan.teran

காலநிலை மாற்றம் (Climate Change) என்பது பூகோள ரீதியில் ஒரு நீண்டகால சவாலாக இருந்தாலும், வெப்பமண்டலப் பகுதிகளில் அமைந்துள்ள இலங்கையை பொறுத்தவரை, இதன் தாக்கம் தீவிரமானதாகவும் உடனடியானதாகவும் உள்ளது. புவி வெப்பமடைதல் காரணமாக வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் ஏற்படும் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை அதிகரிப்பு, சூறாவளிகள் (Cyclones) உருவாகும் வீதத்தையும், அதன் தீவிரத்தையும் (Intensity) கணிசமாக உயர்த்தியுள்ளது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையின் நிலப்பரப்பு, அதன் புவியியல் மற்றும் சனத்தொகையின் அடர்த்தி காரணமாக, பருவமழை தொடர்பான வெள்ளப்பெருக்குகள் மற்றும் நிலச்சரிவுகளுக்கு (Landslides) மிக எளிதில் ஆளாகிறது. கடந்த தசாப்தங்களில், நாட்டின் மத்திய மலைப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுப் பேரழிவுகளின் அதிர்வெண் மற்றும் அளவு அதிகரித்துள்ளது. உதாரணமாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) தரவுகள், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகள் ஆண்டுதோறும் நிலச்சரிவு அபாயத்தின் கீழ் உள்ளன என்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்த பின்னணியில், ‘திட்வா’ போன்ற தீவிர இயற்கைப் பேரழிவுகள், இலங்கையின் பொருளாதாரத்தையும், சமூக உட்கட்டமைப்பையும் கடுமையாகச் பாதிக்கும் ஒரு புறச் சக்தியாக எழுந்துள்ளன.

திட்வா சூறாவளி (Cyclone Ditwah), சடுதியான தீவிரமடைந்து, இலங்கையின் மீது நேரடியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, இலங்கை முழுவதும் அசாதாரணமான அளவில் பலத்த காற்று, கடும் மழை மற்றும் பாரிய வெள்ளம் ஏற்பட்டன. அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்ட அதிக மழை வீழ்ச்சியும் பலத்த காற்றும் முக்கியமாக மத்திய மலை நாட்டின் நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களை கடுமையாகப் பாதித்தது. இந்த மாவட்டங்களே இலங்கையின் பெருந்தோட்டங்களை மையப்படுத்திய மலையக சமூகம் செறிந்து வாழும் தோட்டப் பகுதிகளாகும். காலநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட தொடர்ச்சியான மற்றும் அதிக கனமழை, ஏற்கனவே நிலச்சரிவு அபாயத்தில் இருந்த இச்சமூகத்தின் குடியிருப்புகளைத் தாக்கியது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, திட்வாவின் தாக்கத்தினால் சுமார் 11 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டனர், மேலும் 15,000க்கும் அதிகமான வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ சேதமடைந்தன.இந்தப் பேரழிவு பல சமூகங்களை பாதித்தாலும், இலங்கையின் சமூக, பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளில் ஒன்றான மலையகத் தமிழ்ச் சமூகங்களின் மீது திட்வாவின் தாக்கம் அசமத்துவமான அளவில் அதிகமாக இருந்தது.

எனவே, இந்த ஆய்வுக் கட்டுரையின் முதன்மை நோக்கங்கள் பின்வருமாறு அமைகின்றன,

நிலச்சரிவுகளின் தாக்கம்: திட்வா சூறாவளியைத் தொடர்ந்து மத்திய மலைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளின் தீவிரத்தையும், அதனால் ஏற்பட்ட உயிர்ச் சேதம் மற்றும் காயங்களின் அளவையும் ஆவணப்படுத்துதல்.

குடியிருப்புகளின் அழிவு: பாரம்பரிய லயன் அறைகள் (Line Rooms) மற்றும் தோட்டக் குடியிருப்புகள் மீது ஏற்பட்ட அழிவின் அளவை மதிப்பீடு செய்தல்.

இழப்பீட்டுப் பொறிமுறைகள்: அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட நிவாரண மற்றும் இழப்பீட்டுத் திட்டங்களின் (Compensation Schemes) அணுகல், அமுலாக்கம் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்கள் அவற்றை எதிர்கொண்ட சவால்கள் ஆகியவற்றை விரிவாக ஆராய்வது.

நீடித்த தாக்கம்: பேரழிவின் விளைவாக இச்சமூகங்களின் வாழ்வாதாரத்தில் (Livelihood) ஏற்பட்டுள்ள நீண்டகால பாதிப்புகளைப் பகுப்பாய்வு செய்தல்.

இந்த ஆய்வின் முக்கியத்துவமானது பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் நிலையை ஆவணப்படுத்துதல் மற்றும் கொள்கை வகுப்பவர்களுக்கு பரிந்துரைகளை வழங்குதல் என்பனவாகும். அதாவது, திட்வா சூறாவளியால் மலையக சமூகம் எதிர்கொண்ட தனிப்பட்ட துயரங்கள், இழப்பு மற்றும் சேதத்தின் (Loss and Damage) அளவை ஒரு முறையான ஆவணப்படுத்துதல், அதேபோல் காலநிலை மாற்றத்தின் தாக்கம், வரலாற்று ரீதியிலான சமூக, பொருளாதார ஒடுக்குமுறையுடன் எவ்வாறு இணைந்து, பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் மீதான சுமையை அதிகரிக்கிறது என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவருதல், மற்றும் எதிர்காலத்தில் காலநிலை சார்ந்த பேரழிவுகளை எதிர்கொள்வதற்கு, குறிப்பாக அனர்த்த முகாமைத்துவம் (Disaster Management), மீள்குடியேற்றம் (Resettlement) மற்றும் இழப்பீடு வழங்கும் பொறிமுறைகளில் உள்ள இடைவெளிகளைக் களைய, வலுவான மற்றும் சமூகநீதி சார்ந்த பரிந்துரைகளை வழங்குதல் என்பனவாகும்.

வரலாற்று ரீதியிலான பாதிப்பு

மலையகத் தமிழ்ச் சமூகம் என்பது 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போது தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்குத் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் வம்சாவளியினரைக் குறிக்கிறது. இந்த மக்கள் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தபோதிலும், சமூக, பொருளாதார ரீதியில் நீடித்த பாதிப்புக்குள்ளானவர்களாகவே உள்ளனர். இவர்கள் ஆரம்பம் முதலே அடிப்படை மனித உரிமைகள், குடியுரிமை மற்றும் உரிய ஊதியம் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்தனர். 1948 மற்றும் 1949ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட சட்டங்களால் இவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. இது இவர்களை நாடற்றவர்களாகவும், இலங்கையின் சமூக அமைப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்களாகவும் ஆக்கியது. இவர்களின் குடியிருப்பு ‘லயன் அறைகள்’ 150 ஆண்டுகளுக்கும் மேலானவை, மிகக் குறைந்த கட்டமைப்புத் தரம் கொண்டவை, மேலும் அதிக மழை மற்றும் காற்றைத் தாங்கும் வலிமையற்றவை.தோட்டத் தொழிலாளர்கள் இந்த லயன் அறைகளில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்தாலும், இந்த நிலம் பெரும்பாலும் தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமானது. இதனால், இவர்களுக்குத் தங்கள் வசிப்பிடத்தின் மீதான நிரந்தர உரிமையும் (Tenure Rights), நில ஆவணங்களும் (Land Deeds) இல்லை. இந்த வீட்டுரிமைப் பிரச்சினை, பேரழிவுக் காலங்களில் அரசாங்கத்திடம் இருந்து இழப்பீடு மற்றும் மீள்குடியேற்ற உதவியைப் பெறுவதைத் தடுக்கிறது அல்லது தாமதப்படுத்துகிறது. இவர்களின் வரலாற்று வறுமை (ஏனைய சமூகங்களை விடக் குறைவான வருமானம் மற்றும் அதிக வறுமைக் கோட்டின் கீழ் வாழ்தல்), நிரந்தரமற்ற வசிப்பிடம் மற்றும் வீட்டுரிமையின்மை ஆகியவை, திட்வா போன்ற பேரழிவுகளின் போது இவர்களின் பாதிப்பை பன்மடங்கு அதிகரிக்கச் செய்கின்றன.

மலையகத் தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகள், இலங்கையின் மத்திய மலைப் பிரதேசங்களில் குறிப்பாக செங்குத்தான மலைச் சரிவுகளிலும், நீரோடைகள் மற்றும் ஆறுகளுக்கு அருகிலும் அமைந்துள்ளன. இந்த புவியியல் அமைப்பே, அவர்களை இயற்கைப் பேரழிவுகளுக்கு மிகவும் ஆளாக்குகிறது. தேயிலைத் தோட்டங்கள் பெரும்பாலும் மழைநீர் விரைவாக வெளியேற முடியாத பாறைகள் மற்றும் களிமண் கலந்த சரிவுகளில் காணப்படுகின்றன. லயன் அறைகள் அமைக்கப்படும் இடங்கள் நீடித்த குடியிருப்புகளுக்கு உகந்ததாக வடிவமைக்கப்படவில்லை. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர மழைவீழ்ச்சியின் போது, மண் அதிக நீரை உறிஞ்சி, அதன் இறுக்கத்தை இழக்கிறது. இதனால், செங்குத்தான சரிவுகளில் உள்ள லயன் அறைகள் மீது நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் மிக அதிகமாகிறது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பல தோட்டப் பகுதிகளை உயர்ந்த அபாய வலயங்களாக (High-Risk Zones) வகைப்படுத்தியுள்ளது. இந்தப் பகுதிகளில் காணப்படும் முறையற்ற வடிகால் மற்றும் கழிவுநீர் அமைப்புகளும், மழைக்காலங்களில் நீரின் ஓட்டத்தைத் தடுத்து, மண் அரிப்பை (Soil Erosion) விரைவுபடுத்துகின்றன, இது நிலச்சரிவு அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது. திட்வா சூறாவளியின் போது ஏற்பட்ட மழைவீழ்ச்சியின் அளவு (சில பகுதிகளில் 400 மி.மீ.க்கு மேல்), இந்த அபாயங்களை ஒரு பேரழிவாக மாற்றியது.

வாழ்வாதாரத்தின் தன்மை

மலையகத் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வாதாரம் (Livelihood) ஏறத்தாழ தேயிலைத் தோட்டத் தொழிலை சார்ந்தே உள்ளது. இந்த ஒற்றைச் சார்புத் தன்மை, அவர்களைப் பேரழிவுகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களாக ஆக்குகிறது. தொழிலாளர்கள் நாளொன்றுக்கு பறிக்கும் தேயிலை அளவைப் பொறுத்தே பெரும்பாலும் அவர்களின் வருமானம் நிர்ணயிக்கப்படுகிறது. தோட்ட வேலை பாதிக்கப்படும்போது, அவர்களின் அன்றாட வருமானம் உடனடியாக நின்றுவிடுகிறது. திட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் தேயிலைத் தோட்டப் பயிர்கள், தொழிற்சாலைகள், களஞ்சியங்கள் மற்றும் பெருந்தோட்ட வீதிகள் என்பவற்றுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தின. இந்தச் சேதங்கள் நீண்டகாலத்திற்குத் தேயிலைத் தோட்டச் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துகின்றன. தங்கள் வீடுகளை இழந்ததோடு மட்டுமல்லாமல், தங்கள் வேலையையும் இழந்த தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் வேலையில் சேர்வதற்கும், மீண்டு வருவதற்கும் நீண்டகாலம் எடுக்கும். இது இவர்களை ஆழமான வறுமைச் சுழற்சிக்குள் (Deeper Poverty Cycle) தள்ளுகிறது. உதாரணமாக, ஒரு சில நாட்கள் வேலை இழந்தால் கூட, அது குடும்பத்தின் அத்தியாவசிய உணவுத் தேவைகள் மற்றும் குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளை நேரடியாகப் பாதிக்கிறது.

பேரிடர் காலங்களில் சமூகத்தின் தயார்நிலை மற்றும் அணுகல்

பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், மலையகச் சமூகங்களின் தயார்நிலை (Preparedness) மற்றும் உதவிகளை அணுகும் திறன் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க சவால்கள் உள்ளன. தோட்டப் பகுதிகளுக்கான நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் பெரும்பாலும் தேசிய மொழிகளிலோ (சிங்களம், தமிழ்) அல்லது ஆங்கிலத்திலோ வெளியிடப்படுகின்றன. ஆயினும், இந்தத் தகவல் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில், தெளிவான முறையில், அவர்களது உள்ளூர் மட்டத்தில் சென்றடைவதில்லை. தகவல் தொடர்பில் உள்ள இடைவெளிகள் காரணமாக, பலர் அபாயங்களை அலட்சியப்படுத்துகிறார்கள் அல்லது தாமதமாகவே வெளியேற முற்படுகிறார்கள்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயத்தின் போது, தொழிலாளர்கள் தங்கள் லயன் அறைகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால், அருகிலுள்ள பாதுகாப்பான வெளியேற்ற மையங்கள் (Evacuation Centers) பாடசாலைகள், சமூக மண்டபங்கள் பெரும்பாலும் போதிய இடவசதி, அடிப்படைச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளைக் கொண்டிருப்பதில்லை. மனிதாபிமான உதவி வரும்போது, அது பொதுவாக உள்ளூர் அரசியல் மற்றும் நிர்வாகத் தடங்கல்களால் மெதுவாகவே சென்றடைகிறது. நாடற்றவர்களாக வாழ்ந்த வரலாற்றுப் பின்னணி காரணமாக, இச்சமூகத்தினர் அதிகார மட்டத்தில் தங்கள் தேவைகளைக் கோருவதிலும், நிவாரண உதவிகளைப் பெறுவதிலும் உள்ள சவால்கள் அதிகம்.

திட்வா சூறாவளியின் நேரடித் தாக்கம்

திட்வா சூறாவளியின் போது ஏற்பட்ட அசாதாரணமான கனமழை (பல பகுதிகளில் 400 மி.மீ முதல் 500 மி.மீ வரை), இலங்கையின் மத்திய மலைப் பகுதிகளில் பெரும் நிலச்சரிவுகளைத் தூண்டியது. இந்த நிலச்சரிவுகளே, மலையகத் தமிழ்ச் சமூகத்தின் மீதான திட்வாவின் மிகக் கொடூரமான நேரடித் தாக்கமாக அமைந்தது. திட்வா சூறாவளியின் மையப்பகுதிகளில் ஒன்றான நுவரெலியாவில் தலவாக்கலை மற்றும் ஹட்டன் போன்ற தோட்டப் பகுதிகளில் பெரிய நிலச்சரிவுகள் பதிவாகின. இங்குள்ள செங்குத்தான சரிவுகளில் லயன் அறைகள் மீது பாறைகளும், மண்ணும் சரிந்ததால், பல குடும்பங்கள் விடியலுக்கு முன்னர் உயிருடன் புதைக்கப்பட்டன. அதேபோல் ஊவா மாகாணத்தின் அமைந்துள்ள தோட்டப் பகுதிகளில் நிலச்சரிவுகள் மிகவும் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தின. மீரியபெத்தை போன்ற வரலாற்று ரீதியிலான நிலச்சரிவு அபாயப் பகுதிகளில், மீண்டும் பல சிறிய மற்றும் நடுத்தர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பெரும்பாலான உயிரிழப்புகள் நிலச்சரிவுகளின் போது, அதிகாலையில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது நிகழ்ந்தன. இதனால், எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் வெளியேற அவகாசம் கிடைக்கவில்லை. ஒரே குடும்பத்தின் பல உறுப்பினர்கள் உயிரிழந்த சோக நிகழ்வுகள் பல தோட்டப் பகுதிகளில் ஆழமான சமூக வடுவை ஏற்படுத்தின.

திட்வா சூறாவளியின் காற்று மற்றும் வெள்ளம் காரணமாக, மலையக சமூகத்தின் குடியிருப்புகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகள் பாரிய சேதத்தை சந்தித்துள்ளன. நாடு முழுவதும் சுமார் 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக அழிந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், நுவரெலியா, பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள லயன் அறைகளும் அடங்கும். இவை பெரும்பாலும் நிலச்சரிவுகள் அல்லது வெள்ளப்பெருக்கால் முழுமையாக இடிந்து, பயன்படுத்த முடியாதவையாகின. அதிகமான லயன் அறைகள் பகுதியளவில் சேதமடைந்தன. சுவர்கள், கூரைகள், சமையலறைகள் மற்றும் கழிவறைகள் போன்றவை சேதமடைந்ததால், மக்கள் தங்கள் வீடுகளில் தொடர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வீடுகளை இழந்த சுமார் 2 இலட்சம் மக்கள் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட தற்காலிக நிவாரண முகாம்களில் (பாடசாலைகள், சமூக மண்டபங்கள், கோவில் வளாகங்கள்) தங்க வைக்கப்பட்டனர். இந்த முகாம்களில் சுகாதாரம், உணவு மற்றும் தனியுரிமை (Privacy) ஆகியவை பெரும் சவால்களாக அமைந்தன. இவை நிரந்தரத் தீர்வுகள் அல்ல என்பதால், நீண்டகால மீள்குடியேற்றத்தின் அவசியம் உடனடியாக  உணரப்பட்டுள்ளது.

பல தோட்டப் பாடசாலைகள் நிவாரண முகாம்களாகப் பயன்படுத்தப்படுவதால்,மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கும்போது பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் சேதமடைந்த மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் ஆகியவை காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. நிலச்சரிவுகளாலும், வெள்ளத்தினாலும் பிரதான வீதிகள், தோட்ட வீதிகள்  மற்றும் புதையிரத பாதைகள் பெரும் சேதமடைந்துள்ளன. தோட்டங்களுக்குள் உள்ள வீதிகள் மற்றும் கால்வாய்கள் அழிந்ததால், நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதிலும், அத்தியாவசிய சேவைகளை வழங்குவதிலும் பெரும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

வாழ்வாதார மற்றும் பொருளாதார இழப்புகள்

மலையகச் சமூகத்தின் வாழ்வாதாரமான தேயிலைத் தோட்டத் தொழிலில் ஏற்பட்ட இழப்புகள், இந்த பேரழிவின் மிக நீண்டகால விளைவுகளைக் கொண்டிருக்கும். தொடர்ச்சியான வெள்ளப்பெருக்கால், ஆயிரக்கணக்கான ஹெக்டேயர் பரப்பளவிலான தேயிலைத் தோட்டப் பயிர்கள் நிலச்சரிவுகளால் புதைந்து போயின. குறிப்பாக இளம் தேயிலை நாற்றுக்கள் முழுமையாக அழிந்தன. அதேபோல் நீர் மின் உற்பத்தி நிலையங்கள், நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் மற்றும் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள தோட்டக் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. சுமார் 50,000க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தங்கள் வேலைகளை இழந்துள்ளனர் அல்லது வேலையின்றி இருக்க நேரிட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் பெரும்பாலும் அன்றாடத் தேயிலை பறிக்கும் அளவைச் சார்ந்துள்ளது. வேலை நிறுத்தம் செய்யப்பட்டதால், இவர்களின் அன்றாட வருமானம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை உடனடியாகவும், கடுமையாகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரண உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், பலர் பசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இன்றி இன்றும் தவிக்கின்றனர்.

தேயிலை அல்லாத சிறிய அளவிலான உணவுப் பயிர்கள் (உதாரணமாக, மரக்கறிகள், உருளைக்கிழங்கு) மற்றும் தோட்டப் பகுதிகளுக்கு அருகிலுள்ள சிறு விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.பல குடும்பங்களின் சிறிய அளவிலான கால்நடைகள் (மாடுகள், கோழிகள், ஆடுகள்) வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் உயிரிழந்தன. இந்த இழப்புகள், ஏற்கனவே பின்தங்கியுள்ள சமூகத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் சொத்து இருப்பை மேலும் சிதைத்துள்ளன.

இழப்பீடு மற்றும் மீள்குடியேற்றச் சவால்கள்

திட்வா சூறாவளியால் மலையகத் தமிழ்ச் சமூகம் அனுபவித்த பேரழிவுக்குப் பிந்தைய மீட்சி நடவடிக்கைகளில், அரசாங்கத்தின் இழப்பீட்டுப் பொறிமுறைகளை அணுகுவது தற்போது ஒரு பெரும் போராட்டமாக இருக்கிறது. அரசாங்கம் நிவாரணத் திட்டங்களை அறிவித்திருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் இச்சமூகத்தின் பாதிப்பைத் தீவிரப்படுத்துகின்றன. அரசாங்கம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளையும், உயிர் இழந்தவர்களுக்கு இழப்பீடுகளையும் வழங்குவதற்கான பல திட்டங்களை அறிவித்தது. இருப்பினும், இந்தப் பொறிமுறைகள் மலையகத் தமிழ்ச் சமூகங்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வதில் பெரும் சவால்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.பேரழிவைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆரம்பத்தில் நிவாரணமும் இழப்பீடும் அறிவிக்கப்பட்டது. பிரதேச செயலகங்கள் (Divisional Secretariats) மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் மூலமாகவே நிவாரணப் பொருட்கள் மற்றும் ஆரம்ப நிதி உதவிகள் விநியோகிக்கப்படுகின்றன.

மத்திய அரசிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு, மாகாண மற்றும் பிரதேச செயலகங்கள் வழியாக, தோட்டத் தொழிலாளர்களைச் சென்றடையும் இந்தச் சங்கிலி சிக்கலாகவும், காலதாமதம் ஏற்படுத்துவதாகவும் உள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் ஆவணங்களைச் சரிபார்ப்பது, அனுமதி வழங்குவது மற்றும் நிதி விடுவிப்பது ஆகியவை தாமதமாகின்றன. சேதத்தின் அளவு மிக அதிகமாக இருப்பதால், அரசாங்கம் ஒதுக்கிய நிதி ஒட்டுமொத்த தேவைகளை ஈடுசெய்யப் போதாமல் இருக்கிறது. இதனால், உதவிகள் பல குடும்பங்களுக்குக் குறைவான அளவிலேயே  கிடைக்க வாய்ப்பு உள்ளது. உள்ளூர் மட்டத்தில் அரசியல் தலையீடுகள் காரணமாகவும், தோட்ட நிர்வாகத்திற்கும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்புக் குறைபாடுகளாலும் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியைப் பெறுவதில் சவால்கள் உள்ளதாக சமூக அமைப்புகள் ஆரம்ப காலங்களிலும் தொடர்ந்து சுட்டிக்காட்டி உள்ளன. இவ்வாறான சவால்கள் இம்முறையும் ஏற்படலாம்.

இழப்பீட்டை வெற்றிகரமாகப் பெறுவதற்குத் தேவையான சட்ட மற்றும் நிர்வாகத் தேவைகள், இந்தச் சமூகத்திற்கு மிகப்பெரிய தடையாக இருக்கின்றன. பெரும்பாலான லயன் அறைகளில் வசிப்பவர்களுக்கு வீட்டுப் பத்திரங்கள் (Land Deeds) அல்லது சட்டரீதியான நிரந்தர வீட்டுரிமை ஆவணங்கள் இல்லை. இழப்பீடு பெறுவதற்கு வீட்டு உரிமையை நிரூபிக்க வேண்டிய தேவை இருப்பதால், பலரது கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. இழப்பீடு மற்றும் மறுசீரமைப்பு மானியங்களைப் பெற, இறந்தவர்களின் மரணச் சான்றிதழ்கள், குடும்ப உறுப்பினர்களின் பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் சொத்து சேதத்தை நிரூபிக்கும் மதிப்பீட்டு அறிக்கைகள் உள்ளிட்ட பல உத்தியோகபூர்வ ஆவணங்கள் அவசியமாகின்றன. நீண்ட காலமாக ஒதுக்கப்பட்ட நிலையில் வாழும் இந்தச் சமூகத்தில், இந்த ஆவணங்களைப் பெறுவதிலும், அவற்றைத் தயாரித்து சமர்ப்பிப்பதிலும் மிகப் பெரிய சவால்கள் காணப்படுகின்றன. இழப்பீட்டு விண்ணப்பப் படிவங்கள், செயல்முறைகள் மற்றும் அதற்கான வழிகாட்டல்கள் ஆகியவை தமிழ் மொழியில் முழுமையாகவோ அல்லது தெளிவாகவோ தோட்டப் பகுதிகளுக்குச் சென்றடையாதது, விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதில் குழப்பங்களையும் பிழைகளையும் ஏற்படுத்துகிறது.

பேரழிவினால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை நிவர்த்தி செய்வதில் காப்புறுதிப் பாதுகாப்பு (Insurance Coverage) முக்கியப் பங்கை வகிக்கிறது. ஆனால், திட்வாவால் பாதிக்கப்பட்ட மலையகச் சமூகத்தைப் பொறுத்தவரை இது மிகவும் பற்றாக்குறையாகவே உள்ளது. லயன் அறைகள் தோட்டத் தொழிலாளர்களுக்குச் சொந்தமானவை அல்ல; அவை தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமானவை. சொத்தின் மீதான உரிமையின்மை காரணமாக, தொழிலாளர்கள் தனிப்பட்ட முறையில் தங்கள் வசிப்பிடங்களுக்குக் காப்புறுதி செய்ய முடியாது. பெரும்பாலான தோட்டக் கம்பனிகள், தங்கள் தொழில்சார் சொத்துகளுக்கு (தொழிற்சாலைகள், இயந்திரங்கள்) மட்டுமே காப்புறுதி செய்கின்றன. தொழிலாளர்கள் வசிக்கும் லயன் அறைகளைக் காப்புறுதி செய்வதற்கான நிதிப் பொறுப்பை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். இதன் விளைவாக, திட்வாவால் லயன் அறைகள் அழியும்போது, தொழிலாளர்கள் நேரடியாக எந்தக் காப்புறுதிப் பணத்தையும் பெற முடிவதில்லை. மேலும் மலையகத் தமிழ்ச் சமூகத்தின் குறைந்த வருமானம் காரணமாக, தனிப்பட்ட குடும்பங்கள் தனியார் காப்புறுதித் திட்டங்களில் முதலீடு செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

இழப்பீடுகளைக் கடந்து, திட்வாவால் பாதிக்கப்பட்டு, நிலச்சரிவு அபாயத்தில் வாழும் மலையக மக்களுக்கு பாதுகாப்பான நிரந்தர மீள்குடியேற்றத்தை வழங்குவது அரசாங்கத்தின் மிகப்பெரிய பொறுப்பாக இருக்கிறது. பாதுகாப்பான புதிய இருப்பிடங்களைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கலும் கவனத்தில் கொள்ளத்தக்கது. நுவரெலியா, பதுளை போன்ற மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் இல்லாத, பாதுகாப்பான, மற்றும் குடியிருப்புகளுக்கு உகந்த நிலங்கள் குறைவாகவே இருக்கின்றன. புதிய இருப்பிடங்கள் தோட்டத் தொழிலாளர்களின் வேலை செய்யும் இடத்திலிருந்து அதிக தூரத்தில் இருந்தால், அது அவர்களின் அன்றாடப் போக்குவரத்துச் செலவை அதிகரித்து, வருமானத்தைக் குறைக்கிறது. எனவே, பாதுகாப்பையும், பொருளாதார அணுகலையும் இணைக்கும் நிலங்களைத் தேர்ந்தெடுப்பது சிக்கலாக இருக்கிறது. புதிய குடியிருப்புகளுக்கான நிலத்தை ஒதுக்கீடு செய்வதில் அரசியல் தலையீடுகள் மற்றும் பிரதேசவாதக் காரணிகள் செல்வாக்குச் செலுத்துவதாகவும், உரியவர்களுக்குப் பதிலாக அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் நிலங்களைப் பெறுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டிருக்கின்றன.

பரிந்துரைகள் 

பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ்ச் சமூகங்களை மீளக் கட்டியெழுப்புவதில், நீடித்த மற்றும் பாதுகாப்பான மீள்குடியேற்றம் (Sustainable Resettlement) முக்கிய மையமாக இருக்கிறது. அபாயகரமான லயன் அறைகளிலிருந்து அவர்களை மாற்றுவது மிக அவசியமாகிறது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) ஆலோசனையின்படி, நிலச்சரிவு அபாயம் இல்லாத புதிய நிலப் பகுதிகளை அரசாங்கம் உடனடியாக அடையாளம் காண வேண்டும். இந்த நிலங்கள் தோட்டத் தொழிலாளர்களின் வேலை செய்யும் இடங்களுக்கு அணுகக்கூடியதாக இருப்பது இன்றியமையாதது. மீள்குடியேற்றத்தின் போது நிர்மாணிக்கப்படும் புதிய வீடுகளுக்கு முழுமையான வீட்டுரிமைப் பத்திரங்களை (Full Land Deeds) பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்குவது அடிப்படைத் தேவையாக உள்ளது. இது, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு, நிதி மற்றும் சமூகப் பாதுகாப்பையும் வழங்குகிறது. புதிய குடியிருப்புகள் அமையவிருக்கும்போது, இச்சமூகத்தின் கலாசார மற்றும் சமூகப் பிணைப்புகளைக் காக்கும் வகையில், சமூக மையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கூட்டுப் போக்குவரத்து வசதிகளுடன் கூடிய கூட்டு வாழ்க்கைத் திட்டங்களை உருவாக்குவது அவசியம்.

திட்வா போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகளால் ஏற்படும் நிரந்தரமான மற்றும் ஈடுசெய்ய முடியாத இழப்புகளுக்கு (Non-Economic Losses), சர்வதேச காலநிலை நிதியுதவியை அணுகுவது இலங்கைக்கு இப்போது அவசரமாகத் தேவைப்படுகிறது.இந்தச் சூறாவளியால் ஏற்பட்ட இழப்புகளின் அளவு, நாட்டின் உள்நாட்டு வளங்களைக் கொண்டு ஈடுசெய்ய முடியாததாக இருக்கிறது. எனவே, ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டின் (UNFCCC) கீழ் நிறுவப்பட்டுள்ள இழப்பு மற்றும் சேத நிதியிலிருந்து (Loss and Damage Fund) நிதியுதவியைப் பெற அரசாங்கம் வலுவான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இந்த நிதி உதவியைப் பெறும்போது, மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மலையகத் தமிழ்ச் சமூகத்தின் மறுசீரமைப்புத் தேவைகளை இந்த நிதியில் முதன்மைப்படுத்துவது, காலநிலை நீதியை நிலைநாட்டுவதாகும்.

இனிவரும் காலநிலை அபாயங்களை எதிர்கொள்ள, மலையகச் சமூகங்களின் பேரிடர் தயார்நிலையை முழுமையாக மேம்படுத்துவது மிகவும் அத்தியாவசியமாகிறது.தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் உடனடியாக, துல்லியமாக மற்றும் தமிழ் மொழியில் தோட்டப் பகுதி மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். இந்தத் தகவலை உள்ளூர் மட்டத் தலைவர்கள் மூலம் உரிய நேரத்தில் மக்களுக்கு வழங்க புதிய தொழில்நுட்ப வழிமுறைகள் (குறுஞ்செய்தி சேவைகள்) தற்போது பயன்படுத்தப்படுகின்றன. நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது வெளியேறும் வழிகள், தங்குமிடங்கள் மற்றும் சுய-பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சமூகங்களுக்குத் தொடர்ச்சியாகப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு தோட்டப் பிரிவிலும் அனர்த்த முகாமைத்துவப் பணிகளை ஒருங்கிணைக்க, நன்கு பயிற்சி பெற்ற சமூக அடிப்படையிலான குழுக்களை (Community-Based Organizations) உருவாக்குவது அவசியம்.

முடிவுரை

திட்வா சூறாவளியின் நேரடித் தாக்கம் முடிவடைந்திருந்தாலும், அதன் சமூக, பொருளாதார விளைவுகள் மலையகத் தமிழ்ச் சமூகத்தில் தற்போது வரை நீடிக்கின்றன. வீடுகளின் நிரந்தரமற்ற தன்மை, வாழ்வாதாரத்தின் இழப்பு, மற்றும் நிவாரணம் பெறுவதில் உள்ள நிர்வாகத் தாமதங்கள் ஆகியவை, காலநிலை மாற்றம் என்பது சமூக அநீதியுடன் இணைந்த ஒரு நெருக்கடி என்பதை மீண்டும் நிரூபிக்கிறது. அரசு, இந்தச் சமூகத்தின் பாதுகாப்பற்ற தன்மையைப் புறக்கணிப்பதை நிறுத்திவிட்டு, லயன் அறைகள் என்ற பழமையான வசிப்பிட அமைப்பை முற்றிலுமாக மாற்றியமைக்கும் ஒரு வலுவான கொள்கை முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது இருக்கிறது. நீடித்த மீட்சி (Resilience) அடைய, மலையக மக்களின் வீட்டுரிமையை உறுதிப்படுத்துவதுடன், வாழ்வாதாரப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் முழுமையான அணுகுமுறை தற்போது தேவைப்படுகிறது.

Ramesh-Arul-e1764751501850.jpg?resize=10அருள்கார்க்கி

https://maatram.org/articles/12449

பழைய பூங்காவைப் பாதுகாப்பது - நிலாந்தன்

1 month 1 week ago

பழைய பூங்காவைப் பாதுகாப்பது - நிலாந்தன்

Old_Kachcheri_Old_Park_Jaffna-cccc-1024x

“நான் எழுதிய கட்டுரையை நானே மீண்டும் மேற்கோள் காட்ட வேண்டியிருக்கிறது அல்லது நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது” என்று மு.திருநாவுக்கரசு அடிக்கடி கூறுவார். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள மிக மூத்த, தொடர்ச்சியாக எழுதும் ஒரே அரசறிவியலாளர் அவர்தான்.

அவர் மட்டுமல்ல அவரைப் போன்று முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் தமது சமூகத்திற்கான தமது பங்களிப்பை திரும்பத்திரும்ப தாங்களே நினைவூட்ட வேண்டியிருக்கிறது. அரசியல் கைதிகளுக்காக அரசியல் கைதிகள்தான் பெரும்பாலும் போராட வேண்டியிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அவர்களுடைய உறவினர்கள்தான் பெரும்பாலும் போராட வேண்டியிருக்கிறது.

மு.திருநாவுக்கரசு மட்டுமல்ல கடந்த பல தசாப்தங்களாக எழுதிவரும் பலரும் தாங்கள் எழுதியதை நினைவூட்ட வேண்டிய துர்பாக்கியமான ஒரு நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதனை நிரூபிக்கும் விதத்தில் கடந்த வாரம் ஒரு சம்பவம் நடந்தது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் ஓர் உள்ளக விளையாட்டு அரங்கைக் கட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. இது தொடர்பாக  சமூக வலைத்தளங்களில் எழுதிய அனேகர் பழைய பூங்காவின் பல்பரிமாண முக்கியத்துவம் தொடர்பாக இதுவரை வெளிவந்த கட்டுரைகள், உரைகள் தொடர்பாக அறிந்திருக்கவில்லை என்பதைத்தான் அவர்களுடைய கருத்துக்கள் காட்டின.

பழைய பூங்கா ஏற்கனவே சிதைக்கப்பட்டு விட்டது. அதைச் சிதைத்தவர் மஹிந்தவின் காலத்தில் ஆளுநராக இருந்த முன்னாள் படைத் தளபதியாகிய சந்திரசிறீ. இதுதொடர்பாக விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் யாழ்.இந்துக் கல்லூரி சபாபதி மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் நான் பேசியிருந்தேன். யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் பா.அகிலனின் “காலத்தின் விளிம்பு” என்ற நூல் வெளியீட்டு விழா அது. மரபுரிமைச் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான கட்டுரைகளின் தொகுப்பு அது. அபிவிருத்தியின் பெயரால் மரபுரிமைச் சொத்துக்கள் அழிக்கப்படுவது தொடர்பாக அகிலன் ஏற்கனவே பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

காலத்தின் விளிம்பு நூல் வெளியீட்டில் பழைய பூங்காவுக்குள்ள மரபுரிமை முக்கியத்துவம்,சுற்றுச்சூழல் முக்கியத்துவம்,அரசியல்,பண்பாடு முக்கியத்துவம் போன்றவற்றைத் தொகுத்து நான் பேசினேன்.அது ஒரு பண்பாட்டு இன அழிப்பு என்றும் சுட்டிக்காட்டினேன்.

அதன் பின்,சில மாதங்களுக்கு முன்,யாழ்.பல்கலைக்கழகத்தில்,நூலக கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்ட கட்டடப்படக் கலைஞர் மயூரநாதனின் “யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு” என்ற நூல் வெளியீட்டு விழாவின் போதும் நான் அதைச் சுட்டிக்காட்டிப் பேசினேன். அதன் பின்,புதிய வட்டுவாகல் பாலம் தொடர்பாக,ஈழநாட்டில் எழுதிய கட்டுரையிலும் பழைய பூங்காவைப்பற்றிய குறிப்புக்கள் உண்டு.

நமது அரசியல்வாதிகள் எத்தனைபேர் இவற்றை வாசிக்கிறார்கள்? சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விடயங்களை எழுதிக் கொண்டிருக்கும் எத்தனைபேர் அவற்றை வாசிக்கிறார்கள்? தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் விமர்சகர்கள் குறைவு. அதே சமயம் அதை வாசிப்பவர்களும் குறைவு. அரசியல் விமர்சனங்களை அந்த அரசியலை முன்னெடுக்கும் தரப்புகள் அல்லது அந்த அரசியலில் ஆர்வமுடைய தரப்புகள் வாசிக்கவில்லை என்றால் அரசியலில் அறிவும் செயலும் எப்படி இணைய முடியும்? அரசியல் செய்பவர்கள், அரசியலை விமர்சிப்பவர்களை ஒருவித ஒவ்வாமையோடு பார்க்கிறார்கள். அதனாலும் அவர்கள் எழுதுவதை வாசிக்காமல் விடுகிறார்கள்.

சரி.அதை வாசிக்க வேண்டாம். ஆங்கிலத்தில்,சிங்களத்தில் வருபவற்றையாவது வாசிக்கலாம்தானே? தமிழ்த் தேசிய அரசியலில் முன்னணியில் தெரியும்  எத்தனை பேர் தொடர்ச்சியாக வாசிப்பவர்கள்? அவர்களில் பலருடைய உரைகளைப் பார்த்தால் அவர்கள் எதையும் வாசிப்பதாகத் தெரியவில்லையே? குறைந்தபட்சம் அரசியல் ஆழம்மிக்க காணொளிகளைக்கூட பார்ப்பதாகத் தெரியவில்லையே ?

இவ்வாறு தமிழ்த் தேசியப் பரப்பில் அறிவும் செயலும் பிரிந்திருக்கும் ஒரு துப்பாக்கியமான,தோல்விகரமான ஓர் அரசறிவியல்சூழல் காரணமாகத்தான் தமிழ்மக்கள் தமது இறுதி இலக்குகளை வெல்லமுடியாத மக்களாகத் தொடர்ந்தும் காணப்படுகிறார்களா ?

இக்கேள்வியோடு இக்கட்டுரையின் மையப் பகுதிக்கு வரலாம். பழைய பூங்கா. 1800ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜேம்ஸ் கோடினரின் குறிப்பின்படி,கேர்னல். பார்பெட் என்ற பிரிட்டிஷ் நிர்வாகியால் அமைக்கப்பட்ட, சுற்று மதியோடு கூடிய ஒரு தோட்டம் பற்றிக் கூறப்படுகிறது. இந்தத்  தோட்டத்தைத்தான் யாழ்ப்பாணத்தின் முதலாவது அரச அதிபராக இருந்த பி.ஏ.டைக்(1831 -1867 )விலைக்கு வாங்கி ஏற்கனவே காணப்பட்ட பூங்காவை விஸ்தரித்ததோடு,அரச அதிபருக்கான மாளிகையும் உட்பட சில கட்டடங்களைக்  கட்டியதாக கட்டடப்படக் கலைஞர் மயூரநாதனின் நூலில் கூறப்பட்டுள்ளது.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அதாவது பிரிட்டிஷ்காரரின் ஆட்சிக் காலத்தின் பிற்பகுதியில், பழைய பூங்கா அதன் பராமரிப்பை இழந்து விட்டது என்பதை பிரிட்டிஷ் நிர்வாகிகளின் குறிப்புகளில் இருந்து அறியமுடிகிறது. அதிலிருந்து தொடங்கி அது யாழ்பாணத்தின் நகர்ப்புறக் காடாக வளரத் தொடங்கியது. ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் குறிப்பாக முதலாங் கட்ட ஈழப் போரின் தொடக்கத்தில் அது படையினரின் முகாமாக இருந்தது. யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் அது அவர்களுடைய  காவல்துறைத் தலைமையகமாக,பயிற்சி மையமாக இருந்தது. படையினரும் சரி விடுதலைப் புலிகள் இயக்கமும் சரி அங்கிருந்த முதுமரங்களை ஒரு கவசமாக,ஒரு குடையாக, ஒரு விதத்தில் மறைப்பாகப்பயன்படுத்தினார்கள் என்றுதான் கூறவேண்டும்.

ஆனால் நாலாங் கட்ட ஈழப்போரின் பின்,சந்திரசிறீ ஆளுநராக இருந்த காலகட்டத்தில் பழைய பூங்கா சிதைக்கப்பட்டது. அரச திணைக்களங்களின் கட்டடங்கள் அங்கே கட்டியெழுப்பப்பட்டன. ஆளுநர்  சந்திரசிறீ முது மரங்களை மட்டும் வெட்டவில்லை, அந்த மரங்களில் வாழ்ந்த வெளவால்கள் எச்சமிடுவதாகக் கூறி அவற்றைச் சுட்டதாக ஐங்கரன்நேசன் கூறினார். சந்திரசிறி பழைய பூங்காவைச் சிதைக்கும்போது  தமிழ் மக்களின் விருப்பத்தைக் கேட்கவில்லை. அப்போது இருந்த தமிழ் மக்களின்  பிரதிநிதிகள்  அதுதொடர்பாக வலிமையான எதிர்ப்பைக் காட்டியிருக்கவில்லை. ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தின் வேரை அறுக்கும் பண்பாட்டுப் படுகொலை அது. சந்திரசிறீ பழைய பூங்காவின் ஆன்மாவை பெருமளவுக்கு சிதைத்து விட்டார். பின்னர் அதன் மூலையில் ஒரு சிறிய புதிய பூங்காவை உருவாக்கினார்.

20170103_044031535_iOS-1024x768.jpg

பழைய பூங்காவுக்குப் பல் பரிமாண முக்கியத்துவங்கள் உண்டு. முதலாவதாக அது ஒரு மரபுரிமைப் பிரதேசம். குடியேற்றவாத ஆட்சியாளர்களின் காலத்தில், அதாவது பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் யாழ்ப்பாணத்துக்கான நிர்வாகத் தலைமையகமாகவும் அதேசமயத்தில் ஒரு பூங்காவாகவும் அது பராமரிக்கப்பட்டுள்ளது. அதை உருவாக்கிய வடபகுதிக்கான முதலாவது அரச அதிபரான டைக் அதனை ஒரு பூங்காவாக மட்டும் கருதி உருவாக்கவில்லை என்பதனை அதுதொடர்பான குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது. அதனை அவர் ஒரு பூங்கா என்பதற்கும் அப்பால் ஒரு பழத் தோட்டமாகவும் பராமரித்துள்ளார். அங்கிருந்த  பழங்களை யாரும் இலவசமாகச் சாப்பிடலாம் என்றும் அனுமதித்திருக்கிறார்.

பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சி காலம் என்பது தமிழ் மக்களின் நவீன வரலாற்றில் ஒரு காலகட்டம். பழைய பூங்கா பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தின் நிர்வாக மையமாகக் காணப்பட்டது. அங்குள்ள கட்டடங்கள், கட்டுமானங்கள் அனைத்தும் வரலாற்றின் ஒரு காலகட்ட  நினைவுகளை தாங்கி நிற்கும் மரபுரிமை சின்னங்கள் ஆகும். அந்த அடிப்படையில் பழைய பூங்கா ஒரு மரபுரிமைப் பிரதேசம். அதைப் பாதுகாப்பது என்பது தமிழ் மக்களின் வரலாற்றின் ஒரு பகுதியை பாதுகாப்பது. அபிவிருத்தியின் பெயரால் அந்த மரபுரிமைச் சொத்துக்களைச் சிதைப்பது என்பது தமிழ் மக்களுடைய வரலாற்றின் ஒரு பகுதியை இல்லாமல் செய்வதுதான். அது மரபுரிமைப் பிரதேசங்கள் தொடர்பான உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்களுக்கு எதிரானது.

இரண்டாவது பரிமாணம், அது ஒரு நகர்ப்புற காடு. உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகள் நகரங்களின் சுவாசப் பைகளாக நகர மத்தியில் சிறு காடுகளை உருவாக்கிவரும் ஒரு காலகட்டத்தில், ஏற்கனவே  யாழ்ப்பாணத்திலிருந்த, நூற்றாண்டு கால முதிய காடு ஒன்றின் தப்பி பிழைத்த சிறு பகுதியையாவது யார் பராமரிப்பது?

அந்த முதுமரங்களில் வசித்த லட்சக்கணக்கான வௌவால்களும் அந்தக் காட்டின் ஒரு பகுதிதான். மிக அரிதான முதுமரங்களை விதைத்தவை அந்த வௌவால்கள்தான்.  இது பழைய பூங்காவுக்குள்ள சூழலியல் முக்கியத்துவம். இதுதொடர்பாக ஐங்கரநேசன் ஏற்கனவே ஊடகச் சந்திப்பொன்றில் விரிவாகப் பேசியுள்ளார்.

மூன்றாவது தாவரவியல் பரிமாணம். அரிதாகிச் செல்லும் பாரம்பரிய முதுமரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபுரிமை நடைமுறைகளில் ஒன்று. பழைய பூங்காவில் வானளாவ வளர்ந்து நிற்கும் முது மரங்கள் பல யாழ்ப்பாணத்தில் இப்பொழுது உயிருடன் இருக்கும் எல்லாரையும் விட, அவர்களுடைய முப்பாட்டன் முப்பாட்டிகளை விட மூத்தவை. நகரங்களைக் கட்டமைக்கும் போதும் வீதிகளை விசாலிக்கும்போதும் முதுமரங்களைப் பாதுகாப்பது என்பது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுரிமை,தாவரவியல் ,சூழலில் நடைமுறைகளில் ஒன்று.

எனவே பழைய பூங்காவை அதன் முதுமரங்களோடும் வெளவால்களோடும் பாதுகாக்க வேண்டியது தமிழ் மக்களுடைய பொறுப்பு. போர்க் காலத்திலேயே பராமரிக்கப்பட்ட  ஒரு மரபுரிமை பிரதேசத்தை அபிவிருத்தியின் பெயரால் சிதைப்பதற்கு அனுமதிக்கலாமா? இப்பொழுது உயிரோடிருக்கும் எல்லா யாழ்ப்பாணதவர்களை விடவும் அவர்களுடைய  முப்பாட்டன் முப்பாட்டிகளை விடவும் வயதால் மூத்த அந்த மரங்களை வெட்ட அனுமதிக்கலாமா? தனது வேர் களைப் பாதுகாக்க முடியாத ஒரு மக்கள் கூட்டம் ஒரு தேசிய இனமாக நிமிர முடியுமா?

https://www.nillanthan.com/7955/#google_vignette

நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டு நினைவு நாட்கள் - நிலாந்தன்

1 month 1 week ago

நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டு நினைவு நாட்கள் - நிலாந்தன்

590766592_824918727098699_52485070505619

வெள்ளம்,மழை,புயல் எச்சரிக்கை… எல்லாவற்றையும் மீறி மாவீரர் நாள் பரந்த அளவில்,பெரியளவில் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரான 17ஆவது மாவீரர் நாள் இது. நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டாவது தியாகிகளின் நினைவு நாள் இது.

இம்மாதம் 13ஆம் திகதி,ஜேவிபி அதனுடைய  தியாகிகளின் நாளை அனுஷ்டித்தது. அதே மாதத்தில் மாவீரர் நாளும் அனுஷ்டிக்கப்படுவது ஒரு நூதனமான ஒற்றுமை. இச்சிறிய தீவில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த இரண்டு பெரிய அமைப்புகளின் தியாகிகள் தினம் இவ்வாறு ஒரே மாதத்தில் வருவது ஒரு நூதனமான ஒற்றுமைதான்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது மாவீரர் தன் உயிரைத்  தியாகம் செய்த நாள் மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஜேவிபியின் தலைவர் ரோகண விஜயவீர அரச படைகளால் கைது செய்யப்பட்டு, குரூரமாகக் கொல்லப்பட்ட நாள் அந்த அமைப்பின் தியாகிகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

ஜேவிபியின் நினைவு நாள் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவின் வெளியரங்கில் நடந்தது. இலங்கைத் தீவில் இரண்டு ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்து, இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட, இரண்டு தடவைகள் நசுக்கப்பட்ட, ஓர் அரசியல் இயக்கம் ஜேவிபி. ஆனால் தன் சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டெழ முடியும் என்பதற்கு இந்தப் பிராந்தியத்தில்  மட்டுமல்ல முழு உலகத்திலும் மிக அரிதான முன்னுதாரணங்களில் ஒன்று.

அன்றைய நிகழ்வில் விகாரமகாதேவி பூங்காவின் வெளியரங்கம் சிவப்பு நிறச் சட்டைகளாலும் முதிய பெண்களின் கண்ணீராலும் பிரகடனங்களாலும் நிறைந்திருந்தது. பெரும்பாலானவர்கள் சிவப்பு நிற மேலாடைகளோடு வந்திருந்தார்கள். அரங்கின் முன்வரிசையில் வயதான முதிய பெண்கள் சிலர் காணப்பட்டார்கள். மெலிந்த சதைப்பிடிப்பில்லாத முகங்கள். எடுப்பில்லாத உடுப்புகள். மென்மையான சோக இசையின் பின்னணியில் அவர்களில் சிலர் அழுதார்கள். அவர்களுடைய கண்ணீர் உண்மையானது. அன்னையரின் கண்ணீர் பொய்யானது அல்ல. அன்னையரின் கண்ணீர் எல்லா நினைவு நாட்களிலும் ஒன்றுதான். அதில் உள்ள உப்புச் சுவையும் ஒன்றுதான்.

அந்த நிகழ்வின் ஒளிப்படங்களை என்னோடு பகிர்ந்த ஒரு நண்பர், என்னிடம் கேட்டார், “நீங்கள் சொல்வது போல ஜேவிபி அதன் சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டெழுந்த ஓர் இயக்கம். இப்பொழுது அரசாங்கமாக அந்த நிகழ்வை பெருமெடுப்பில் ஒழுங்குப்படுத்தியிருக்கிறது” என்று.

நான் அவரிடம் கேட்டேன் “அது ஒரு அரச நிகழ்வா அல்லது ஒரு இயக்கத்தின் அல்லது கட்சியின் நினைவு நிகழ்வா?” என்று. அதில் நாட்டின் அரசுத் தலைவரும் உட்பட பிரதான அமைச்சர்கள் பங்குபற்றினார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் அது ஒரு அரசு நிகழ்வு போலத் தோன்றும். ஆனால் அது பெருமளவுக்கு ஓர் இயக்க நிகழ்வுதான்; ஒரு கட்சி நிகழ்வுதான். அங்கே அரசுத் தலைவருக்கும் அமைச்சருக்கும் பாதுகாப்பாக படையினர் ஆங்காங்கே காணப்பட்டார்கள். எனினும் வழமையான அரசு நிகழ்வுகளைப்போல சீருடை அணிந்த படையினரின் பிரசன்னம் தூக்கலாக வெளித்தெரியவில்லை. அந்தப் படையினரின் சீருடைக்கும் அங்கு வந்திருந்த பெரும்பாலானவர்களின் சிவப்பு உடுப்புகளுக்கும் பொருந்தவேயில்லை. விறைப்பாக நின்ற அந்தப் படையினரின் துப்பாக்கிகளும் அழுது கொண்டிருந்த முதிய பெண்களின் கண்ணீரும் ஒன்றுக்கொன்று எதிரானவை.

AKD-JVP-commemoration.jpg

இப்பொழுது ஜேவிபி ஆளுங்கட்சி.அதுதான் அரசாங்கம். அப்படிப் பார்த்தால் அரசாங்கத்தின் தியாகிகள் நாட்டுக்கும் தியாகிகள்தானே?அந்த அடிப்படையில் அது ஓர் அரச நிகழ்வாகத்தான் அமைய வேண்டும். ஆனால் அப்படியல்ல.

அங்கே இறந்தவர்களுக்காக மலர்கள் வைக்கப்பட்டன. பாடல்கள் இசைக்கப்பட்டன. உரைகள் நிகழ்த்தப்பட்டன. ஆனால் படையினரின் ராணுவ அணிவகுப்போ,மரியாதை வேட்டுக்களோ தீர்க்கப்படவில்லை. அரசாங்கத்தின் தேசிய தியாகிகளின் நாளில் படையினரின் அணிவகுப்பு இருக்கும்; பீரங்கிகளில் முழங்கும்; முப்படை தளபதிகளும் பிரசன்னமாகியிருப்பர்.

ஆனால் 13-ஆம் தேதி விகார மகாதேவி பூங்காவின் வெளியரங்கில் நடந்தது ஒரு அரச நிகழ்வு அல்ல. நாட்டை ஆளுங்கட்சி அதன் தியாகிகள் நாளை தேசிய விழாவாகக் கொண்டாடவில்லை. அது தனக்கென்று தனியாக ஒரு தியாகிகள் நாளை அனுஷ்டிக்கின்றது. அதிலும் குறிப்பாக, ஜேவிபியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தனித்தனியாக நினைவு நாட்களை அனுஷ்டிக்கிறார்கள். ஜேவிபியின் முதலாவது ஆயுதப் போராட்டம் நடந்த ஏப்ரல் ஐந்தாம் திகதியை ஒரு பகுதியினர் அனுஷ்டிக்கிறார்கள். நவம்பர் 13 ஐ ஜேவிபியிடமிருந்து பிரிந்து  சென்றவர்கள் தனியாக அனுஷ்டிக்கிறார்கள். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கு என்று தனித்தனியாக தியாகிகள் நாளை அனுஷ்டிப்பது போல.

ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டிய வேறுபாடு என்னவென்றால், ஆளுங்கட்சியாக உள்ள ஜேவிபியின் நினைவு நாள் ஒர் அரசு நிகழ்வாக கொண்டாடப்படவில்லை என்பதுதான். சிங்களபௌத்த அரசின் தேசியத் தியாகிகள் நினைவு நாள் வேறாகவும் ஜேவிபி அரசாங்கத்தின் தியாகிகள் நினைவு நாள் வேறாகவும் இருக்கின்றன என்பதுதான்.

சிறிய இலங்கை தீவு தன்னகத்தே பல தியாகிகளின் நாட்களைக் கொண்டிருக்கிறது. படையினரின் தியாகிகள் நாள்,ஜேவிபியின் தியாகிகள் நாள்,விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் நாள், ஏனைய தமிழ் இயக்கங்களின் தியாகிகள் நாள், என்று பல தியாகிகளின் நாட்கள் இச்சிறிய தீவில் உண்டு.

589343022_1305779798257307_1048150586159

ஜேவிபி இப்பொழுது அரசாங்கமாக இருந்த போதிலும், அதன் தியாகிகள் தினம் தனியே கொண்டாடப்படுகிறது. ஜேவிபியின் பிரதானியான அனுர ஒரு ஜனாதிபதியாக, முப்படைகளின் தளபதியாக இருக்கிறார். ஆனால் அவருடைய தோழர்களை நினைவு கூரும் நாளில் முப்படைகளின் அணிவகுப்பு இல்லை. அது இப்பொழுதும் ஓர் அரச நிகழ்வு அல்ல.

விகாரமாதேவி பூங்காவில் கூடிய ஜேவிபியினர் சிவப்புச்சட்டை அணிந்திருந்தார்கள். விகார மகாதேவி பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நினைவுச் சின்னத்திலும்  சிவப்பு நிறம் இருந்தது. ஆனால் அந்த சிவப்பு கம்யூனிச சிவப்பு அல்ல. நாட்டில் தற்பொழுது நடப்பது கம்யூனிச ஆட்சியும் அல்ல. பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்ட ஓர் ஆட்சி.

ஆனால் லண்டனில் உரை நிகழ்த்திய ரில்வின் சில்வா, “வீரர்கள் சிந்திய குருதியை ஏற்று சிவப்பு மலர்கள் மலரட்டும்” என்று கூறினார். அந்தச் சிவப்பு மலர்கள்  நிச்சயமாக மார்க்சிய சித்தாந்தத்தை பிரதிபலிக்கவில்லை. அவ்வாறு ஜேவிபி ஒரு மெய்யான மார்க்சிஸ்ட் அமைப்பாக இருந்திருந்தால் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொண்டிருந்திருக்கும்.

ரில்வின் உரை நிகழ்த்திய அதே கூட்டத்தில் ஜேவிபியின் பிரதித் தலைவராக இருந்த உபதிச கமநாயக்கவின் மனைவி உரை நிகழ்த்தும்போது, மூன்றாவது தலைமுறை ஜேவிபியினர் நாட்டை ஆளும் வளர்ச்சிக்கு வந்திருப்பதை பெருமையோடு சுட்டிக்காட்டினார். சிறு ஓடையாக இருந்த இயக்கம் இப்பொழுது பெரும் நதியாக மாறிவிட்டது என்றும் சொன்னார்.

ரில்வின் சில்வா லண்டனில் சிவப்பு மலர்களைப்பற்றி பேசிய அதே காலப்பகுதியில் கொழும்பில் அவர்களுடைய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் புதிதாக வந்திருக்கும் கனேடிய தூதுவருக்கு என்ன சொன்னார்? கனடாவில் உள்ள தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் இலங்கையில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் கருத்துக்களை முன்னெடுப்பதற்கு எதிராகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சின்னம் போன்றவற்றை பகிரங்கமாக பயன்படுத்துவதற்கு எதிராகவும் கனேடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கனடாவில் வாழும் சில செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள்,இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்குப் பாதகமாக அமைந்துள்ளன என்றும் அமைச்சர் ஹேரத் கூறியுள்ளார்.

அதாவது நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் சின்னங்களை கனடாவில் உள்ள தமிழர்கள் உயர்த்திப் பிடிப்பதை அவர் கனேடியத் தூதுவருக்குச் சுட்டிக்காட்டுகிறார். கனடாவிலும் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட அமைப்பு என்ற அடிப்படையில் மேற்சொன்ன செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆனால்  கடந்த அரை நூற்றாண்டு காலப்பகுதிக்குள் ஜேவிபி நாட்டில் இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்டது. அவ்வாறு இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கம் கனடாவில் தடை செய்யப்பட்ட சின்னங்களை தமிழ் மக்கள் முன்னிறுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று கேட்கின்றது.

தனது இயக்கத்தின் தியாகிகளின் நாளும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் தியாகிகளின் நாளும் ஒன்று அல்ல என்பது தெளிவாகத் தெரியும் ஒர் அரசியல் சூழலில், அமைச்சர் விஜித ஹேரத் கனேடிய தூதுவரிடம் அவ்வாறு கூறியுள்ளார். கார்த்திகை மாதத்தில் நாட்டில் இனரீதியாக இரு வேறு நினைவு தினங்கள் அனுஷ்டிக்கப்படும் ஓர் அரசியல் யதார்த்தத்தை தடைகளின் மூலம் மாற்ற முடியாது.

இந்த நாட்டில் ஏன் இனரீதியாக இரு வேறு நினைவு நாட்கள்? எல்லாத் தடைகளையும் மீறி தமிழ் மக்கள் கடந்த 17 ஆண்டுகளாக ஏன்  மாவீரர் நாளை தொடர்ந்து அனுஷ்டித்து வருகிறார்கள்? இனரீதியாக இரண்டு வேறு தியாகிகள் தினங்களைக் கொண்ட ஒரு  நாட்டின் வெளி விவகார அமைச்சராகிய விஜித ஹேரத்   கனேடிய  தூதுவருக்கு கூறுகிறார், அரசாங்கம் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதாக. விகாரமகாதேவி பூங்காவில் தற்காலிகமாக உருவாக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தில் பூசப்பட்டிருந்த சிவப்பு நிறம் வெளிறும் இடம் இதுதான்.

https://www.nillanthan.com/7959/

இலங்கையின் மத சுதந்திர நிலைப்பாட்டை ஆராய்தல்

1 month 1 week ago

இலங்கையின் மத சுதந்திர நிலைப்பாட்டை ஆராய்தல்

February 11, 2015

sri_lanka_guards.jpg?resize=1200%2C550&s

Photo, AP Photo/Eranga Jayawardena

வரலாற்றை நோக்கினால் சட்ட ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இன, மதக் குழுக்களுக்கு இணக்கமாகவே இலங்கை செயற்பட்டு வருகின்றது. அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 9 இன் கீழ் பௌத்த மதத்திற்கு “முதன்மையான இடம்” அளிக்கப்பட்டாலும், உறுப்புரைகள் 10 மற்றும் 14(1)(உ) ஊடாக மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்திற்கான உரிமை பாதுகாக்கப்படுகின்றது. இலங்கை உச்ச நீதிமன்றம் மத சுதந்திரத்தை முழுமையான உரிமையாக அடையாளம் கண்டுள்ளது (உறுப்புரை 10). மேலும், பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும் கூட அனைவருக்கும் சமத்துவத்தையும் மத சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. மத சுதந்திரத்திற்கு அரசியலமைப்பு உத்தரவாதம் காணப்படுகின்றபோதும், தேசியப் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, பொது சுகாதாரம், ஒழுக்கம் அல்லது மற்றவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் போன்றவை காரணமாக ஒருவர் தனது மதத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமானது (உறுப்புரை 14(1)(உ) பல சட்டக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுகின்றது.

இருப்பினும், நீண்டகாலமாக நிலவிவரும் பல்வேறு போக்குகள் தொடர்ந்தும் மத சுதந்திரத்தைக் குறைத்து மதிப்பிட்டு, சட்டக் கொள்கை, அரச நடவடிக்கை என இரண்டையும் கையாள்கின்றன. சமூகத்தின் பிரச்சினைகளைத் தமது நன்மைக்காகப் பயன்படுத்தும் அரசியல் மற்றும் மத ரீதியான கடும்போக்குவாதக் குழுக்கள் மற்றும் அதிகரித்து வரும் மத உணர்வுகள் போன்றவை அதேயளவு தாக்கம் செலுத்தும் ஏனைய காரணிகளாக உள்ளன. தீவிர தேசியவாத பௌத்த இயக்கங்கள், சுவிசேஷ அமைப்புடன் அடையாளம் காணப்படும் குறிப்பிட்ட கிறிஸ்தவக் குழுக்களின் நடைமுறைகள், தீவிர இஸ்லாமிய மற்றும் இந்து குழுக்கள் மத சுதந்திரத்தையும் பன்மைத்துவத்தையும் குறைத்து மதிப்பிடும் சூழலுக்குக் காரணமாகின்றன. அரச மற்றும் அரசு சாரா பங்காளர்களிடையே வேரூன்றிக் காணப்படும் இத்தகைய போக்குகளின் வடிவங்கள் குறித்த “இலங்கையில் மத சுதந்திரத்தின் நிலைப்பாடு: ஆண்டறிக்கை 2024” என்ற தலைப்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக் கூட்டணியின் அண்மைய அறிக்கையின் முடிவுகளை இக்கட்டுரை சுருக்கமாக முன்வைக்கின்றது. மேலும், இலங்கையில் மத சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கான சூழலை ஆதரிக்கும் அல்லது குறைத்து மதிப்பிடும் சம்பவங்களையும் முன்னேற்றங்களையும் இக்கட்டுரை ஆராய்கின்றது. 2024 முதல் 2025 வரை இடம்பெற்ற முன்னேற்றங்களில் கவனம் செலுத்தும் அதேநேரம் எதிர்காலத்திற்கான கண்ணோட்டத்தையும் தருகின்றது.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மத சுதந்திரத்திற்கு முன்னுரிமை அளித்து, அதன் பாதுகாப்பை நிர்வாகம் மற்றும் கொள்கை முடிவுகளில் ஒருங்கிணைப்பதற்கு முந்தைய நிர்வாகங்களுடன் ஒப்பிடும்போது அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிகின்றது. தீவிரமான குழுக்களால் முன்வைக்கப்படும் தவறான மத விளக்கங்களுக்கு எதிரான ஆலோசனைக் குழுக்களை புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் ஊடாக 2025 அக்டோபரில் அரசாங்கம் நியமித்தது. “நான்கு முக்கிய மதங்கள் பற்றிய திரிவுபடுத்தப்பட்ட மற்றும் தவறாக வழிநடத்தப்படும் கருத்துகளைப் பரப்புவது குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு” பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறான சமீபத்திய முன்னேற்றங்களின் பின்னணியில், தற்போதைய இந்த அரசியல் சூழல் இவ்வாறான விவாதங்களை முன்னெடுப்பதற்குப் பொருத்தமானதாகவும் நேரத்திற்கேற்றதாகவும் உள்ளது என்ற புரிதலுடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

அரசியல் சூழலை மேம்படுத்துதல்

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின்போது பௌத்த மதத்தின் பங்கு குறித்த அரசியல் செய்திகளில் NPP கொண்டிருந்த மாற்று நிலைப்பாடுதான் அதன் மீதான நம்பிக்கை அதிகரிக்கக் காரணமான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். தேர்தலில் ஆதரவைப் பெறுவதற்காக பெரும்பாலும் சிறுபான்மை சமூகங்களின் நலன்களில் கவனம் செலுத்தாமல், மத அடையாளங்களில் பெரிதும் நம்பியிருந்த முந்தைய தேர்தல் பிரச்சாரங்களைப் போலல்லாமல், NPP இன் 2024 பிரச்சாரம் அத்தகைய விமர்சனப் போக்கிலிருந்து விலகிக் காணப்பட்டது. இது அனைவரையும் உள்ளடக்கிய, வரவேற்கத்தக்க அரசியல் கலாச்சாரத்தை நோக்கிய சாதகமான மாற்றத்தைக் குறிக்கின்றது. ஒரு காலத்தில் தேர்தலின்போது வாக்காளர்களைக் கவர்ந்த பிளவை ஏற்படுத்தும் சொற்பிரயோகங்கள் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2024 இல் பெருமளவில் குறைந்து போயிருந்தன.

இந்த மாற்றம் மத சுதந்திரத்திற்கு மிகவும் உகந்த சூழலுக்கான தொனியை அமைக்க உதவியுள்ளதுடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) போன்ற முக்கிய அரச நிறுவனங்கள் சுயாதீனமாகச் செயல்படவும் பயனுள்ள தலையீடுகளை மேற்கொள்ளவும் உதவுகின்றது. HRCSL மத சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்திவருவதுடன் மத சுதந்திரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரச தலையீடுகளையும் கண்காணித்து வருகின்றது. உதாரணமாக, 2024 ஜூன் மாதம் திருகோணமலை சாஹிரா கல்லூரியில் காதுகளை மூடும் வகையில் ஆடை அணிந்திருந்தமை காரணமாக 70 மாணவர்களின் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டதை ஆணைக்குழு விசாரித்தது. கண்காணிப்பாளர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டமை விசாரணையில் தெரியவர முடிவுகளை நிறுத்தி வைக்கும் முடிவு நியாயமற்றது எனத் தெரிவித்தது. மார்ச் 2018 இல் இடம்பெற்ற திகன கலவரம் தொடர்பான விசாரணை குறித்த அறிக்கையையும் 2025 செப்டம்பரில் HRCSL வெளியிட்டது. அந்த நேரத்தில் சமூக ஊடகங்கள் குறிப்பாக/ பேஸ்புக் மூலம் பரப்பப்பட்ட தவறான தகவலும் வெறுப்புப் பேச்சும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வன்முறையைத் தீவிரப்படுத்தியதில் கொண்டிருந்த பங்கினை இந்த அறிக்கை விரிவாகக் குறிப்பிட்டுள்ளது.

சட்டங்கள், கொள்கைகள் மற்றும் மத சுதந்திரம்

நாட்டின் நிர்வாகத்துடன் தொடர்புடைய பல முக்கிய சட்டங்கள் மத சுதந்திரத்தைப் பாதிக்கின்றன அல்லது அதனால் பாதிக்கப்படுகின்றன. அத்துடன், ஏனைய அடிப்படை உரிமைகளிலும் இவை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இத்தாக்கத்தை சட்டம் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது அல்லது அந்தச் சட்டத்தின் விதிகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதில் காணலாம்.

தண்டனைச் சட்டக்கோவை, 2007ஆம் ஆண்டின் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை சட்டம் (ICCPR சட்டம்), 1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA), மற்றும் சமீபத்திய 2024 ஆம் ஆண்டின் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் (OSA) ஆகியவை அத்தகைய சட்டங்களின் ஒரு தொகுப்பாகும். இச்சட்டங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகத் தோன்றினாலும், அவற்றில் உபயோகிக்கப்பட்டுள்ள பரவலான மற்றும் தெளிவற்ற சொற்கள் அவற்றைத் தவறாகப் பயன்படுத்த வழிவகுத்துள்ளன. பெரும்பாலும் சிறுபான்மை சமூகங்களை அநியாயமாகக் குறிவைக்கும் முறையில் அமைகின்றன.

சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையை இலங்கை அங்கீகரித்துடன், தேசியச் சட்டத்தில் இன்னும் அங்கீகரிக்கப்படாத சில ICCPR பிரிவுகளுக்கு உள்நாட்டு சட்டரீதியான அமல்படுத்தலை வழங்கும் நோக்கில் ICCPR சட்டத்தையும் இயற்றியது. தண்டனைச் சட்டக்கோவை மற்றும் ICCPR சட்டத்தில் உள்ள விதிகள் மதத்தை அவமதிப்பதாகக் கருதக்கூடிய வெளிப்பாடுகளைக் குற்றமாக்குவதன் மூலம் மத உணர்வுக்கு சிறப்பு பாதுகாப்பை வழங்குகின்றன என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவை “நிந்தனைக்கு எதிரான நடைமுறைத் தடையை” உருவாக்குவதாக விபரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய கட்டுப்பாடுகளின் பரந்த நோக்கம், தேவை மற்றும் விகிதாசாரத்தின் சர்வதேச அளவுகோல்களைப் பூர்த்திசெய்யாமல் அளவுக்கு மீறிய தணிக்கையை ஏற்படுத்தும் ஆபத்தை விளைவிக்கின்றது. 2024 மே மாதத்தில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ICCPR சட்டத்தின் பிரிவு 3 இன் தவறான பயன்பாட்டைச் சுட்டிக்காட்டியது. திருகோணமலையில் நினைவேந்தல் நிகழ்வொன்றில் ஈடுபட்டதற்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டது மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக அதன் பயன்பாட்டைச் சுட்டிக்காட்டியது. ICCPR சட்டத்தின் தவறான பயன்பாடு குறித்த நிலைப்பாட்டை ஆணைக்குழு மீண்டும் 2025 மே மாதம் வலியுறுத்தியது. மே மாதத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் அமைதியான நினைவேந்தல் நிகழ்வுகளை குற்றமாக்குவதையோ தடுப்பதையோ பொலிஸார் நிறுத்த வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக அவற்றை அரசியலமைப்பு மற்றும் இழப்பீட்டுச் சட்டத்தின் கீழ் தமிழ் சமூகத்திற்குக் கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வ உரிமைகளாக முறையாக அங்கீகரித்து பாதுகாக்க வேண்டும் என்றும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்தது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் OSA ஆகியவை குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பிற்போக்குத்தனமான விதிகளைக் கொண்டிருப்பதாகவும் இன – மதக் குழுக்களைத் தேர்ந்தெடுத்துக் குறிவைப்பதாகவும் நீண்ட காலமாக விமர்சிக்கப்படுகின்றது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கான அரசாங்க உறுதிமொழிகள் இருந்தபோதிலும், அது கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தப்படுவதாக 2025 ஆகஸ்ட் மாதம் ஐ. நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது குறிப்பிட்டார். அதைத் தற்காலிகமாக தடைசெய்யுமாறும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். அதற்கு முன்னர், 2025 ஏப்ரல் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் OSA ஆகிய இரு சட்டங்கள் குறித்து கவலைகளை எழுப்பியிருந்தது. இச்சட்டங்கள் வர்த்தகத்துடன் தொடர்புடைய முடிவுகளில் கவனத்தில் கொள்ளப்படுகின்றன என்பதையும், குறிப்பாக GSP+ வரிச்சலுகை திட்டத்தில் தொடர்ந்து தகுதி பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்திருந்தது. அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, NPP அரசாங்கம் செப்டம்பர் 2025 இல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு நாடாளுமன்றத்திலும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்விலும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தாலும் இதேபோன்ற கேள்விகள் எழுந்துள்ளன. OSA இன் பிரிவு 16 இல் மத உணர்வுகளைச் சீற்றப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு குழுவின் மத நம்பிக்கைகளை அவமதிக்கும் அல்லது அவமதிக்க முயற்சிக்கும் எந்தவொரு தவறான அறிக்கையையும் ஒன்லைனில் வெளியிடுவது குற்றமாக வரையறுக்கப்படுகின்றது. ஆயினும், அந்த நோக்கம் எவ்வாறு நிரூபிக்கப்படும் என்பதற்கான தெளிவான அளவுகோல்களைச் சட்டம் வழங்கவில்லை. அதேபோன்று, பிரிவு 15, தவறான அறிக்கைகள் மூலம் சட்டபூர்வமான மதக் கூட்டங்களுக்கு இடையூறு விளைவிப்பதைக் குற்றமாகக் கருதுகின்றது. இவ்வாறு தெளிவில்லாமல், மிகவும் விரிவாக எழுதப்பட்ட விதிகள், சட்டபூர்வமான கருத்து வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. பிரிவு 16 ஐ ரத்து செய்வது உட்பட சட்டத்தில் திருத்தங்களை NPP அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 2025 இல் பொதுமக்களின் ஆலோசனைக்காக OSA ஐ முன்வைத்துள்ளமை அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைக் குறிக்கின்றது.

பாலின சமத்துவச் சட்டமூலத்தின் சிறப்புத் தீர்மானம் கடந்த ஆண்டு நிகழ்ந்த மற்றொரு முக்கியமான முன்னேற்றம் ஆகும். மத சுதந்திரம் அல்லது நம்பிக்கையை மேம்படுத்துவதாகக் கூறப்படும் சில விதிகள் மற்றும் கொள்கைகள் சில நேரங்களில் கருத்துச் சுதந்திரம் மற்றும் பாலின சமத்துவம் போன்ற பிற உரிமைகளை மீறுவதற்கு எவ்வாறு பங்களித்துள்ளன என்பதை இது நிரூபித்தது. இந்தச் சட்டமூலம் ஏப்ரல் 17, 2024 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சட்டமூலத்தில் மதம் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இது வேகமாக மத சுதந்திரம் குறித்த விவாதங்களின் மையப் புள்ளியாக மாறியது. இது இயற்றப்பட்டால், மதப் பணிகளில் இணைய விரும்புவோரின் சேர்க்கையில் மத நிறுவனங்கள் (சாசனம், மடங்கள், பிக்கு பல்கலைக்கழகங்கள், பிரிவேனாக்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் உட்பட) பாலின அடிப்படையிலான அளவுகோல்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் என்று மனுதாரர்கள் வாதிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பாலினத்திற்கு அப்பாற்பட்டு, ஓரினச்சேர்க்கையைக் குற்றமற்றதாக்குதல் மற்றும் ஒரே பாலினத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்குதல் போன்ற தொடர்புடைய பிரச்சினைகளுக்கும் நீட்டிக்கப்பட்டது. இந்தச் சட்டமூலம் ஏற்கனவேயுள்ள மத போதனைகள் மற்றும் நடைமுறைகளுடன் முரண்படும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இறுதியில், இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் உறுப்புரை 10 (சிந்தனை, மனசாட்சி மற்றும் மத சுதந்திரம்) மற்றும் உறுப்புரை 14(1)(உ) (மதம் அல்லது நம்பிக்கையின் வெளிப்பாடு) ஆகியவற்றை மீறுவதாகக் கூறியது. பௌத்தத்தைப் பொறுத்தவரை, “முதன்மையான இடம்” என்று கூறும் உறுப்புரை 9 ஐ மீறுவதாக நீதிமன்றம் மேலும் கண்டறிந்தது.

தொல்பொருள் பாதுகாப்பிடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சர்ச்சைகள்

அண்மைக் காலங்களில் வவுனியாவில் உள்ள வெடுக்குநாரி மற்றும் முல்லைத்தீவில் உள்ள குருந்தூர்மலை போன்ற மதத் தலங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் உள்ளூர் இந்து சமூகங்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. 2018ஆம் ஆண்டில் இந்த இரண்டு இடங்களும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகக் குறிப்பிடப்பட்டதுடன், அடுத்தடுத்த ஆண்டுகளில் தொல்பொருள் திணைக்களம், இராணுவம் மற்றும் பௌத்தத் துறவிகள் ஆகியோரின் செயல்பாடுகள் இங்கு அதிகரித்தன. தொல்பொருள் கட்டளைச் சட்டம் மற்றும் தொடர்புடைய சட்டங்கள் இது போன்ற சந்தர்ப்பங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்பட்டன. அவை சிறுபான்மை சமூகங்களைக் குறிவைத்து மத சுதந்திரப் பாதுகாப்பைக் குறைத்து மதிப்பிடுகின்றன. வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள காணிகள் அல்லது கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் தொடர்பான பல விதிகள், குறிப்பாக 1940 ஆம் ஆண்டின் 9 ஆம் இல. தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) பிரிவுகள் 6, 8, 18 மற்றும் 31 ஆகியவை இன – தேசியவாத நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுக்க இலக்கு வைக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மார்ச் 2024 இல் வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளில் ஈடுபட முயன்ற பல இந்து பக்தர்கள் மற்றும் பூசாரிகள் கைது செய்யப்பட்டனர். இது அந்த இடத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி, போராட்டங்களுக்கு வழிவகுத்தது. ஜூன் 2025 இல் ஒரு முக்கியமான நீதிமன்றத் தீர்ப்பில், குருந்தூர்மலையைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை முல்லைத்தீவு நீதிமன்றம் விடுவித்தது. வழக்கு விசாரணையின் போது, சர்ச்சைக்குரிய காணி தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமானது என்று அறிவித்து எந்த வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பதை அரசாங்கம் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதன் விளைவாக, விவசாயிகள் மீதான வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டு, அவர்கள் விடுவிக்கப்பட்டனர். பல ஆண்டுகளாக அரசாங்கத்தின் ஆதரவுடன் அந்தப் பகுதியில் தொல்பொருள் தளமாகக் கருதி செயல்பாடுகள் இடம்பெற்று வந்தபோதிலும், சட்டப்பூர்வ அறிவிப்பு இல்லாததால் சர்ச்சைக்குரிய நிலத்தின் குறைந்தபட்சம் ஒரு பகுதிக்கேனும் திணைக்களத்திடம் முறையான உரிமை இல்லை.

இதேபோன்று, அம்பாறையில் உள்ள முள்ளிக்குளம் மலையில் தொல்பொருள் திணைக்களம் 1940ஆம் ஆண்டின் 9ஆம் இல. தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) 15 மற்றும் 16ஆம் பிரிவுகளைப் பயன்படுத்தி நிலத்தை தொல்பொருள் தளமாகக் கோரியது. இதன் மூலம் உள்ளூர் முஸ்லிம் சமூகம் மீண்டும் அப்பகுதியில் விவசாயத்தைத் தொடங்குவதைத் தடுத்தது. தொல்பொருள் கட்டளைச் சட்டத்திற்கு கூடுதலாக நகர்ப்புற மேம்பாட்டுப் பகுதிகளை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கும் 1946ஆம் ஆண்டின் 13ஆம் இல. நகர மற்றும் கிராமிய நிர்மாணக் கட்டளைச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) பிரிவு 6(2) வடக்கு மற்றும் கிழக்கில் புத்த விகாரைகளைக் நிர்மாணிப்பதற்கு உதவும் வகையில் “புனிதப் பகுதிகள்” என்று அறிவிக்கத் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழ்நிலைகளில், இந்த மாகாணங்களில் உள்ள உள்ளூர் நீதிமன்றங்கள், சில சமயங்களில் இத்தகைய இன – தேசியவாத உந்துதல்களைத் தடுக்க முயற்சித்துள்ளன. இருப்பினும், நீதித்துறை அதன் பங்கை நிறைவேற்றினாலும் கூட அமுலாக்கம் நிச்சயமற்றதாகவே உள்ளது. நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவது அரச இயந்திரத்தைப் பொறுத்தது ஆகும். இது பெரும்பாலும் பௌத்த மதகுருமார்கள் மற்றும் இராணுவத்துடன் நெருங்கிய இணக்கத்துடன் செயல்படுகின்றது. இக்குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு அப்பால், 1950ஆம் ஆண்டின் 9ஆம் இல. காணி கையகப்படுத்தல் சட்டம், உயர் பாதுகாப்பு வலயங்களை அறிவிக்க அனுமதிக்கும் அவசரகால விதிமுறைகள், 1979ஆம் ஆண்டின் 23ஆம் இல. மகாவலி அதிகாரசபை சட்டம் மற்றும் 2005ஆம் ஆண்டின் 38ஆம் இல. சுற்றுலாச் சட்டம் போன்ற காணி தொடர்பான சட்டங்களும் இம்முயற்சிகளுக்கு துணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து நிலம் கையகப்படுத்தலுக்கான பொதுவான கட்டமைப்பை உருவாக்குவதுடன், அரசாங்கம் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வகையில் அதிக அதிகாரத்தை வழங்குவதுடன் மக்களுக்கு குறைவான அதிகாரத்தை வழங்கி சமமற்ற நிலையைத் தோற்றுவிக்கின்றது.

இந்த நடவடிக்கை சமூக மட்டத்தில் சாதகமான குழுக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. அங்கு சிறுபான்மை மதக் குழுக்களுக்கு எதிரான விரோதம் பெரும்பாலும் உள்ளூர்வாசிகளால் தூண்டப்பட்டு, மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ அரச அதிகாரிகளால் ஆதரிக்கப்படுகின்றது. சுவிசேஷ மற்றும் சுயாதீன தேவாலயங்கள், அதேபோன்று இந்து சமூகங்கள் அடிக்கடி இலக்கு வைக்கப்படுகின்றன. மத வழிபாட்டுத் தலங்களைப் பதிவு செய்வதைச் சுற்றியுள்ள தெளிவின்மை அதிருப்திக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இலங்கைச் சட்டம் அத்தகைய பதிவைக் கட்டாயப்படுத்தவில்லை என்றாலும், ஒன்றுகூடுவதைத் தடுக்க உள்ளூர் அதிகாரிகள் தெளிவற்ற வரையறுக்கப்பட்ட விதிகளைப் பயன்படுத்தியுள்ளனர். புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள், 2008, 2011 (2012 இல் ரத்து செய்யப்பட்டது) மற்றும் 2022 இல் புதிய மதத் தலங்களை நிர்மாணிப்பதற்கு அமைச்சின் ஒப்புதல் தேவை என்பதை அறிமுகப்படுத்தின. இந்தச் சுற்றறிக்கைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அமுலாக்கம் பெரும்பாலும் கிறிஸ்தவர்களையும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிக்கும் உரிமையையும் கட்டுப்படுத்தியுள்ளது.

இலங்கையில் நிறுவப்பட்ட சபாத் இல்லம் எனப்படும் யூத மத நிலையங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. அவை சர்ச்சையில் சிக்கியிருந்தாலும், அரசாங்கத்தின் பாதுகாப்பால் அவை பயனடைந்துள்ளன. அண்மையில் சுதந்திர பாலஸ்தீன இயக்கத்தின் உறுப்பினர்கள் துன்புறுத்தப்பட்டதுடன் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சூழலில் இது நிகழ்ந்துள்ளது. மேலும் ‘இஸ்ரேலுக்கு எதிரானது’ எனக் கருதப்படும் செயற்பாடுகளில் ஈடுபட்ட பிரஜைகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் இந்து தேசியவாதக் குழுக்களின் செயல்பாடுகள்

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தேசிய அளவில் சிங்கள – பௌத்த தேசியவாத விமர்சனங்கள் குறைந்துள்ள நிலையில், அடிமட்ட அளவில் இந்து கடும்போக்கு குழுக்களின் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதிலும் போராட்டங்களை ஏற்பாடு செய்வதிலும் சிவசேனை மற்றும் ருத்ர சேனா போன்ற அமைப்புகள் தீவிர பங்காற்றியுள்ளன. இக்குழுக்கள் பெரும்பாலும் கட்டாய மதமாற்றம் மற்றும் பசுவதை தொடர்பான பிரச்சினைகளில் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் குறிவைக்கின்றன. இக்குழுக்கள் இந்து வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பில் பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலமும், இந்து இளைஞர்களுடன் கூட்டங்களை நடத்துவதன் மூலமும் உள்ளூர் மக்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றன.

ஊடகங்களில் பிரிவினைவாத விமர்சனங்கள்

கடந்த ஆண்டில் ஊடகங்களில் பிரிவினைவாத விமர்சனம் வீழ்ச்சியின் அறிகுறிகளைக் காட்டியுள்ளது. குறிப்பாகத் தேர்தல்களின்போது இந்நிலைமை காணப்பட்டது. இது இன – மதக் குழுக்களைக் குறிவைக்கும் தீங்கு விளைவிக்கும் விமர்சனம் குறிப்பிடத்தக்களவில் குறைந்திருப்பதைப் பிரதிபலித்தது. இருப்பினும், இந்த ஒட்டுமொத்த சரிவுக்கு மத்தியில், குறிப்பாக முஸ்லிம்களைத் தொடர்ந்து குறிவைக்கும் நிலைப்பாடு தொடர்கின்றது. மதமாற்றம் மூலம் மக்கள் தொகை மாற்றம் குறித்த ஆழமான அச்சங்களைப் ஏற்படுத்தும் கதைகள், இஸ்லாமிய பழக்கவழக்கங்களை அரக்கத்தனமாகச் சித்தரித்தல் மற்றும் இஸ்லாத்தை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்துதல் போன்றவை மூலம் முஸ்லிம் சமூகத்தவர்கள் ஒன்லைனில் அதிகம் குறிவைக்கப்படுகின்றனர். இந்த விமர்சனம், காசா மீதான இஸ்ரேலின் போர் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் நெருக்கடி உள்ளிட்ட உலகளாவிய சம்பவங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை உள்ளூரில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வைத் தூண்டின. 2024ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒன்லைன் விமர்சனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தன. வடக்கு மற்றும் கிழக்கில் வாக்களிக்கும் முறைகள் குறித்த விவாதங்கள் இன – மத அடிப்படையில் வேகமாக வடிவமைக்கப்பட்டன.

மத மாற்றங்கள் குறித்து தொடரும் விவாதம்

இலங்கையில் மதமாற்றம் குறித்து பேச்சிலும் விவாதத்திலும் இரண்டு முக்கியமான கண்ணோட்டங்கள் நீண்டகாலமாக உள்ளன. சமூக மட்டத்தில், மத மாற்றத்திற்கு எதிராக ஆழமாக வேரூன்றிய கலாச்சாரம் மற்றும் சமூகச் சார்பு உள்ளது. குறிப்பாக சில சுயாதீன அல்லது சுவிஷேச கிறிஸ்தவக் குழுக்கள் மதம் மாற்ற முயலும்போது இந்த எதிர்ப்பு மேலும் வலுப்பெறுகின்றது. பிப்ரவரி 2025 இல் NCEASL வெளியிட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் கிறிஸ்தவக் குழுக்களுக்கு எதிராக பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மத மாற்றம் அடிப்படையிலான அச்சங்கள் காரணமாக ஏற்பட்டவை. மதமாற்றம் பெரும்பாலும் கட்டாயப்படுத்தப்பட்டதாகவோ சூழ்ச்சியாகவோ சித்தரிக்கப்படுகின்றது. இது பயத்தை ஏற்படுத்துகின்றது. மத மாற்றம் தொடர்பான இலங்கையின் சட்டப் பாதுகாப்புகளும் தெளிவற்றவை. அரசியலமைப்பின் உறுப்புரை 14(1)(உ)இ தனிப்பட்ட முறையில் அல்லது பொதுவில், தனியாக அல்லது மற்றவர்களுடன் இணைந்து, வழிபாடு, அனுசரிப்பு மற்றும் கற்பித்தலில் ஒருவரின் மதம் அல்லது நம்பிக்கையை “வெளிப்படுத்தும் உரிமையை” உத்தரவாதம் செய்தாலும், இலங்கைச் சட்டம் ஒருவரின் மதம் அல்லது நம்பிக்கையை “பிரச்சாரம் செய்யும் உரிமையை” அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கவில்லை. இருப்பினும், கருவலகஸ்வெவ விதானலேகே ஸ்வர்ண மஞ்சுளா மற்றும் பலர் எதிர் புஷ்பகுமார, கெகிராவா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பலர் (2018) மற்றும் எம். ஏ. எஸ். கல்யாணி டி சில்வா மற்றும் பலர் எதிர் எஸ்.ஜே.பி. சுவாரிஸ் மற்றும் பலர் (2025) ஆகிய சமீபத்திய இரண்டு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பிரச்சாரம் செய்வது குற்றமாகக் கருதப்படமாட்டாது எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

மறுபுறம், சில சுவிசேஷ மற்றும் சுயாதீன கிறிஸ்தவ சமூகங்களிடம் காணப்படும் வற்புறுத்தலான மற்றும் கலாச்சார ரீதியாக உணர்ச்சியற்றதாகக் கருதப்படும் மதமாற்ற நடைமுறைகள் தொடர்ந்து பதற்றங்களைத் தூண்டுகின்றன. சில சந்தர்ப்பங்களில் ஏனைய மதக் குழுக்களுடன் சமூகங்களுக்கு இடையேயான மோதல்களையும் கிறிஸ்தவ சமூகத்திற்குள் சமூகங்களுக்கு உள்ளேயான மோதல்களையும் தூண்டுகின்றன. தேசிய சமாதானப் பேரவையின் 2024 கணக்கெடுப்பின்படி, அதில் பதிலளித்த பௌத்த, இந்து மற்றும் ரோமன் கத்தோலிக்கச் சமூகங்களைச் சேர்ந்தவர்களில் 50% அதிகமானோர் மதமாற்ற நடைமுறைக்கு முதன்மையாக சில கிறிஸ்தவக் குழுக்களே பொறுப்பு என்றும், இந்த நடைமுறை பெரும்பாலும் அவர்களின் மதத்தை எதிர்மறையாகப் பாதிக்கும் விதத்தில் நடைபெறுகின்றது என்றும் அடையாளம் காண்கின்றனர். அவர்களது பிரச்சார முறைகள் சமூகங்களுக்கு இடையேயான மற்றும் சமூகங்களுக்கு உள்ளேயான மோதலுக்கு வழிவகுக்கின்றது என்பதை இது குறிக்கின்றது.

சமீபத்திய ஆய்வுகளும் அதைத் தொடர்ந்துவரும் முன்னேற்றங்களும் நேர்மறையான முன்னேற்றத்தைக் குறிப்பதுடன், தொடர்ந்து வரும் ஆண்டுகளில் மேலும் பல முன்னேற்றங்களுக்கான வாய்ப்பைச் சுட்டிக் காட்டினாலும் பல முக்கியப் பிரச்சினைகளுக்கும் போக்குகளுக்கும் மதச் சமூகங்கள் அரசாங்கம் மற்றும் சிவில் சமூகம் உள்ளிட்ட அனைத்து முக்கிய பங்குதாரர்களின் நெருக்கமான கவனம் தேவைப்படுகின்றது. மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தை மதிக்கும் பன்முகச் சூழலை ஊக்குவிப்பதற்கு சமூக உறுப்பினர்களிடையே நடத்தைகள் மற்றும் அணுகுமுறைகளை வளர்ப்பதில் மதத் தலைவர்கள், மத நிறுவனங்கள் மற்றும் மத அடிப்படையிலான அமைப்புகள் சமூக மட்டத்தில் தனித்துவமான நிலையில் உள்ளன. உதாரணமாக, கலாச்சார ரீதியாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிபாட்டு நடைமுறைகளை ஊக்குவிப்பது சில மதக் குழுக்களின் சர்ச்சைக்குரிய பிரச்சார முறைகள் தொடர்பான கவலைகளைத் தீர்க்க உதவும். கூடுதலாக, ஏனைய மதக் குழுக்களைக் குறிவைக்கும் சித்தாந்தங்களுக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையை ஏற்றுக்கொள்வது சமூகத்தில் கடும்போக்கு மத அமைப்புகளின் எழுச்சியை ஊக்கப்படுத்தாது.

இனங்களுக்கு இடையேயான பதற்றங்களைத் தூண்டிவிட்ட நீண்டகால கவலைகளைத் தீர்க்க NPP விருப்பம் காட்டுவது ஊக்கமளிக்கின்றது. ஆனால், தொடர்ச்சியான சவால்களைத் தீர்க்க இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும். அனைத்து சமூகங்களுக்கும் மத சுதந்திரத்தை வலுப்படுத்துவதற்கு, குறிப்பாக சிறுபான்மையினரைக் குறிவைக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படும் சட்டத்தைச் சீர்திருத்துவதில் முன்முயற்சியுடன் கூடிய நடவடிக்கை தேவைப்படும். இத்தகைய சீர்திருத்தங்கள் மாற்றத்திற்கான உத்வேகத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், பன்மைத்துவத்திற்கு உகந்த நீண்டகால அரசியல் சூழலை உருவாக்கவும் உதவும். சட்டங்களின் பிற்போக்கான பயன்பாடு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடவடிக்கைகளால் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவை ஒரு முக்கியமான முன்னுதாரணத்தைத் தரும். கடந்த கால அரசாங்கங்களின் நடவடிக்கைகளால் பிளவு மற்றும் பாகுபாடு பெரும்பாலும் ஆழமாக வேரூன்றி சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள சமூக மட்டத்தில் இந்த நடவடிக்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியின் மத சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் இந்தப் போக்குகளை மாற்றியமைப்பது அவசியமாகும்.

2024 ஆம் ஆண்டில் இலங்கையில் மத சுதந்திரத்தின் நிலைப்பாடு மற்றும் 2025 ஆம் ஆண்டில் சமூக – அரசியல் முன்னேற்றங்கள் குறித்து இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக் கூட்டணி வெளியிட்ட அறிக்கையை இக்கட்டுரை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

ஜோவிட்டா அருளானந்தம்
யனித்ரா குமரகுரு
அம்மாரா நிலாப்தீன்

https://maatram.org/articles/12431

திருகோணமலை புத்தர்சிலை சர்ச்சையும் எதிரணியின் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் நாட்டமும்   — வீரகத்தி தனபாலசிங்கம் — 

1 month 1 week ago

திருகோணமலை புத்தர்சிலை சர்ச்சையும் எதிரணியின் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் நாட்டமும்

November 24, 2025

திருகோணமலை புத்தர்சிலை சர்ச்சையும் எதிரணியின் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் நாட்டமும்

  — வீரகத்தி தனபாலசிங்கம் — 

திருகோணமலையில் கடந்த வாரம் புத்தர் சிலை தொடர்பாக மூண்ட சர்ச்சையை கையாளுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்  கடைப்பிடித்த அணுகுமுறையும் அதற்கு  எதிரணி அரசியல் கட்சிகள் வெளிக்காட்டிய எதிர்வினையும் இதுகாலவரையில் இனவாத மற்றும் மதவாத அரசியலின் விளைவாக நாடும் மக்களும் அனுபவித்த அவலங்களில் இருந்து தென்னிலங்கை அரசியல் சமுதாயம் எந்தவிதமான படிப்பினையையும் பெறவில்லை என்பதை பிரகாசமாக வெளிக்காட்டியிருக்கிறது.. 

இலங்கையில் இனவாதமும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும்  அனுமதிக்கப்போவதில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு எதிர்நோக்கக்கூடிய சவால்களையும் அரசியலில் மீண்டெழுவதற்கு எதிரணி கட்சிகள் பெரும்பான்மை இனவாத அணிதிரட்லை செய்வதற்கு கிடைக்கக்கூடிய எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தத் தவறப்போவதில்லை என்பதையும்  திருகோணமலை சம்பவம்  எமக்கு உணர்த்தியது. 

திருகோணமலை கடற்கரையோரமாக அமைந்திருக்கும் ஸ்ரீ சம்புத்த போதி ரஜமகா விகாரை வளாகத்தில் நவம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை இரவோடிரவாக வைக்கப்பட்ட புத்தர்சிலையை பிக்குமாரின் எதிர்ப்புக்கு மத்தியில் பொலிசார் அகற்றினர் என்ற போதிலும், மறுநாள் திங்கட்கிழமை நண்பகல் அந்த சிலை அதே இடத்தில் பொலிசாரின் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு பௌத்த மத  நிகழ்வுகள் இடம்பெற்றன. 

இரவில் புத்தர் சிலைக்கு எவராவது சேதம் விளைவித்துவிடக்கூடும் என்ற காரணத்தினாலேயே  பாதுகாப்பு கருதி அதை அகற்றியதாகவும் மீண்டும் அதே இடத்தில் அந்த சிலை வைக்கப்படும் என்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் அன்றைய தினம் முன்கூட்டியே  அறிவித்திருந்தார். 

புத்தர் சிலை அகற்றப்பட்ட வேளையில்  விகாரை வளாகத்தில் இடம்பெற்ற குழப்பநிலையை பயன்படுத்தி இலங்கையில் பௌத்த மதத்துக்கு பேராபத்து ஏற்பட்டிருக்கிறது  என்பதைப் போன்று எதிரணி கட்சிகள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஆவேசமாகக் குரலெழுப்பின. இந்து அல்லது கிறிஸ்துவ சிலை ஒன்று அது வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து பொலிசாரினால் அகற்றப்பட்டிருந்தால் இத்தகைய அமர்க்களம் ஏற்பட்டிருக்குமா என்ற கேள்விக்கான பதிலை நாம் சொல்லித்தான் எவரும் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை.

பாராளுமன்றத்தில் நவம்பர் 18 ஆம் திகதி திருகோணமலை சம்பவங்கள் குறித்து பேசிய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க மத வழிபாட்டுத் தலத்தை அமைப்பது தொடர்பிலானதாக இந்த சர்ச்சை தோன்றுகின்ற போதிலும், வேறு கதையும் அதற்குள் இருப்பதாக கூறினார். சம்பவங்கள் குறித்து பாதுகாப்பு செயலாளரிடம் அறிக்கை ஒன்றைக் கோரியிருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை நியாயப்படுத்துவதற்கு வேறு எந்த விவகாரமும் கிடைக்கவில்லை என்பதால் எதிரணியினர் இனவாதத்தை தூண்டிவிடுவதற்கு புத்தர் சிலை சர்ச்சையை பயன்படுத்துவதில் நாட்டம் காட்டுகிறார்கள் என்றும் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். அவரைப் பொறுத்தவரை, நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்திருக்கும் நிலையில், அந்த சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டது. 

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்று தாங்கள் கருதுகின்ற இடங்களில் மாத்திரமல்ல, பெளத்தர்கள் வசிக்காத இடங்களிலும்  கூட பிக்குமாரில் ஒரு பிரிவினர் புத்தர் சிலைகளை இரவோடிரவாக கொண்டுவந்து வைப்பதும் பிறகு படிப்படியாக அரசாங்கங்களின் அனுசரணையுடன் விகாரைகளை கட்டியெழுப்புவதும்  புதிய ஒரு விடயம் அல்ல. சம்பந்தப்பட்ட பகுதிகளின் மக்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்புகின்ற   வேளைகளில்  அரச இயந்திரம் சட்டவிரோதமானது என்று அந்த மக்கள் குற்றஞ்சாட்டுகின்ற  நடவடிக்கைகளுக்கு  துணைபோவதே நடைமுறையாக இருந்துவருகிறது. 

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட இடத்திலேயே மீண்டும் பொலிசாரின் உதவியுடன் அது  கொண்டு வந்து வைக்கப்பட்ட சம்பவத்தையும்  அதற்கு அரசாங்கத் தரப்பில் அளிக்கப்பட்ட  விளக்கத்தையும் மேற்கூறிய வழமையான நடைமுறையே  தொடருகின்றது என்பதற்கான சான்றாக ஏன் கருதமுடியாது என்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்க தலைவர்களும் மாத்திரமே பதில் கூற வேண்டும். 

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச உட்பட எதிரணி அரசியல்வாதிகள் புத்தர் சிலை சர்ச்சை தொடர்பாக கருத்து வெளியிட்டபோது இலங்கையின் அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முதன்மையான முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பதை  அடிக்கடி  சுட்டிக்காட்டியதை காணக்கூடியதாக இருந்தது. 

ஆனால், அந்த முன்னுரிமையை  பிக்குமாரில் ஒரு பிரிவினர்  அல்லது மதவாத அடிப்படையில் சமூகங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்த முயற்சிக்கும் சக்திகள் தங்களின்  சட்டவிரோதமான அல்லது பௌத்த தர்மத்துக்கு மாறான நடவடிக்கைகளை நியாயப்படுத்த தவறான முறையில் கேடயமாகப்  பயன்படுத்துவதை எவ்வாறு அனுமதிக்க முடியும்?  தாங்கள் எதைச் செய்தாலும் அரசாங்கம் தட்டிக்கேட்க முடியாது என்ற எண்ணத்தை மகாசங்கத்தின் ஒரு கணிசமான பிரிவினர் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெளத்த மதத்துடன் தொடர்புடைய சகல பணிகளையும் முன்னெடுப்பதில் பிக்குமாருக்கு இருக்கும் சுதந்திரத்தில் தலையீடு செய்வதற்கு எவருக்கும் உரிமை கிடையாது என்று கூறும் பிரேமதாச பௌத்த மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணான அடாத்தான நடவடிக்கைகளில் பிக்குமாரில் சில பிரிவினர் ஈடுபட்ட எத்தனை சம்பவங்களை பகிரங்கமாக கண்டனம் செய்தார் என்ற கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை. 

பௌத்த மதத்துக்கு அரசியலமைப்பு வழங்கியிருக்கும்  முன்னுரிமையை சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுக்கக்கூடிய வகையிலான நடவடிக்கைகளுக்கு  பிக்குமாரில் ஒரு பிரிவினர் பயன்படுத்துகிறார்கள் என்பது வெளிப்படையானது. 

கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்முறைகளுக்கு தலைமை தாங்கியவர் என்று அறியப்பட்ட பிரச்சினைக்குரிய  பிக்கு ஒருவர்  புத்தர் சிலை சர்ச்சைக்கு பிறகு  கடந்த வாரம் திருகோணமலைக்கு சென்று சமூகங்களுக்கு இடையில் குரோதங்களை தூண்டும் வகையில் பேசியிருப்பதுடன் அரசாங்கத்துக்கு சாவாலும் விடுத்திருக்கிறார்.  இஸ்லாமிய மதத்தை நிந்தனை செய்யும் விதத்தில் பேசியதாக நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்ட அவர் திருகோணமலை சர்ச்சையில் தன்னை ஈடுபடுத்துவதில் வலிந்து நாட்டம் காட்டுகிறார். 

பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்கள் இத்தகைய பிக்குமாரின் முறைகேடான செயற்பாடுகளை ஆதரிப்பதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அவற்றை அவர்கள்  எதிர்ப்பதுமில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. கெடுதி செய்பவர்களினால் அல்ல, அந்த கெடுதியை தடுக்க எதையும் செய்யாமல் இருப்பவர்களினாலேயே உலகம் ஆபத்தானதாக இருக்கிறது என்ற அறிவியல் மேதை அல்பேர்ட் அயன்ஸ்டீனின் கூற்று நினைவுக்கு வருகிறது. கெட்டவர்களின் வெறுப்பு  பேச்சுக்களுக்கும் செயல்களுக்காகவும் மாத்திரமல்ல, நல்லவர்களின் மௌனத்துக்காகவும் இந்த தலைமுறையில் நாம் பச்சாதபப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று அமெரிக்க கறுப்பின தலைவர் மார்டின் லூதர் கிங் கூறினார்.

சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் இலங்கைக்கு ஒன்றும் புதியதல்ல.  அது இலங்கையின் பெரும்பான்மை இனவாத அரசியலுடன் சமாந்தரமாக வளர்ச்சி கண்ட அருவருக்கத்தக்க ஒரு போக்காகும். ஆனால், சகல சமூகங்களுக்கும் அழிவை ஏற்படுத்திய மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு பின்னரும் கூட, தென்னிலங்கை அரசியல் சமுதாயம் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை ஏற்றுக் கொள்ளத் தவறுவதே  பெரும் கவலைக்குரியதாக இருக்கிறது.

அரசியலில் பெரும் செல்வாக்கைச் செலுத்துவதற்கு பௌத்த மதகுருமார் நாட்டம் காட்டுவதே இலங்கையில் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காணமுடியாமல் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். பிக்குமார் நேரடியாக அரசியலில் ஈடுபட்டு தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள். அவர்களின் செயல்கள் புத்தபெருமானின் அடிப்படைப் போதனைகளுக்கு முரணானதாக இருந்தாலும் கூட, நேரடி அரசியலில் ஈடுபடுவதில் இருந்து அவர்களை தடுக்க மகாநாயக்கர்களினால்  கூட முடியாமல் இருக்கிறது. இலங்கையில் பௌத்தம் நடைமுறையில் ஒரு அரசியல் மதமாக மாற்றப்பட்டுவிட்டது. 

தென்னிலங்கை அரசியல் வரலாற்றில்  பெளத்த மதகுருமாரின் செல்வாக்கு பெருமளவுக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கிறது. இன்று தமிழர்களின் அரசியலிலும் முன்னென்றும் இல்லாத வகையில் மதவாதம் ஊடுருவுகின்ற போக்கை  காணக்கூடியதாக இருக்கிறது. இந்தியாவின் ‘ இந்துத்வா’ அரசியலின் செல்வாக்கே இதற்கு காரணம் எனலாம். சிங்களவர்களாக இருந்தாலென்ன, தமிழர்களாக இருந்தாலென்ன இலங்கைச் சமூகம் அரசியலில் இருந்து மதத்தைப் பிரிக்காவிட்டால் இலங்கைக்கு எதிர்காலம் இல்லை.

ஜனாதிபதி திசநாயக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் வெறுமனே  சகல குடிமக்களையும் சமத்துவமாக நடத்துவதே தங்களின் கொள்கை என்று கூறிக்கொண்டிருந்தால் மாத்திரம் போதாது. கடந்த காலத்தில் அரசாங்கங்கள் கடைப்பிடித்த பாகுபாடான கொள்கைகள் மற்றும் அடக்குமுறைகளின் விளைவாக சிறுபான்மைச் சமூகங்கள் அனுபவிக்கின்ற பிரத்தியேகமான பிரச்சினைகளை  போக்குவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காட்டினால் மாத்திரமே  சமத்துவமான குடிமக்கள் என்ற உணர்வை அந்த மக்கள் மத்தியில்  படிப்படியாக ஏற்படுத்த முடியும். 

சாந்தமே உருவான புத்தர் சிலையை ஆக்கிரமிப்பின் ஒரு கருவியாக சிறுபான்மைச் சமூகங்கள் நோக்குகின்ற துரதிர்ஷ்டவசமான  நிலைவரத்தை மாற்றியமைக்க வேண்டியதும் அரசாங்கம் தீர்வுகாண வேண்டிய அந்த பிரத்தியேகமான பிரச்சினைகளில் ஒன்று. 

அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரங்களுக்கு இனவாதத்தையும் மதவாதத்தையும் பயன்படுத்துவதில் எதிரணி கட்சிகள் கொண்டிருக்கும் நாட்டத்தை திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை வெளிக்காட்டியிருக்கிறது. தங்களது தவறான ஆட்சிமுறையையும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களையும்   மறைப்பதற்காக பெரும்பான்மை இனவாத அணிதிரட்டலை தீவிரமாக முன்னெடுத்த முன்னைய ஆட்சியாளர்கள் பொருளாதார ரீதியில் நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததை நாட்டு மக்கள் மறந்துவிடக்கூடாது. மீண்டும் 

அத்தகைய அணிதிரட்டலை அனுமதித்தால்  தொடர்ந்தும் அதே  பிரச்சினைகளுடனேயே  இலங்கையர்கள் வாழவேண்டியிருக்கும். 

https://arangamnews.com/?p=12455

உலகளவில் 736 மில்லியன் பெண்கள் மீது பாலியல் வன்முறை; பிறப்புறுப்பு சிதைப்பினால் 230 மில்லியனுக்கும் அதிக பெண்கள், சிறுமிகள் பாதிப்பு

1 month 1 week ago

உலகளவில் 736 மில்லியன் பெண்கள் மீது பாலியல் வன்முறை ; பிறப்புறுப்பு சிதைப்பினால்  230 மில்லியனுக்கும் அதிக பெண்கள், சிறுமிகள் பாதிப்பு - பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் அதிர்ச்சித் தகவல்

25 Nov, 2025 | 11:23 AM

image

லகளவில் சுமார் மூன்று பெண்களில் ஒருவர், அல்லது 736 மில்லியன் பெண்கள், பாலியல் வன்முறையை அனுபவித்து வருகின்றனர். உலகில் 230 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகள் பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உட்பட்டுள்ளனர் என்று சமூக செயற்பாட்டாளர் மற்றும் பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் தெரிவித்துள்ளார். 

அத்துடன் அவர், 2023ஆம் ஆண்டின் தரவுகளின்படி, உலகளவில் சுமார் 51,100 பெண்கள் நெருங்கிய துணைவர்களாலோ அல்லது பிற குடும்ப உறுப்பினர்களாலோ வேண்டுமென்றே கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு நவம்பர் 2ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 10ஆம் திகதி வரையான பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்களில் அர்த்தபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் சமூக செயற்பாட்டாளர் மற்றும் பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை தொடர்பில் மேலும் கூறுகையில்,

cfcd29a8-6d20-412c-addd-d5956cf14f89.jpg

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளினால் பொதுவாக மனிதர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பாதிப்படைகின்றனர்.

பால்நிலை  அடிப்படையிலான வன்முறை (GBV) தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும், பேரழிவு தரும் மற்றும்  நீண்ட கால பாதகமான  விளைவுகளைக் கொண்டுள்ளது. இந்த விளைவுகள் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இருக்கலாம். மேலும், கடுமையான சந்தர்ப்பங்களில் மரணத்துக்கும் வழிவகுக்கும்.

பொதுவாக சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட விதிமுறைகள், கட்டுப்பாடுகள், சட்ட திட்டங்கள், அதிகார கட்டமைப்பாட்டுக்கள், சமய சம்பிரதாய நம்பிக்கைகள் மற்றும் பாரபட்சங்கள் இவ்வாறானவை வன்முறைகளுக்கு அடிப்படை காரணங்களாக இருக்கின்றன.

சமூகத்தில் பாதிப்புறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில்  பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

உலகளவில் பால்நிலை  அடிப்படையிலான வன்முறை தொடர்பான சில முக்கிய தரவுகள் குறிப்பிடவேண்டும்.

உலகளவில்  அண்ணளவாக மூன்று பெண்களில் ஒருவர், அல்லது உலகளவில் 736 மில்லியன் பேர் நெருங்கிய துணைவர், துணைவர் அல்லாத  நபரால் அல்லது இருவராலும் உடல் ரீதியான அல்லது பாலியல் வன்முறையை அனுபவித்துள்ளனர். இந்த புள்ளிவிபரம் இரண்டு தசாப்தங்களாக பெரும்பாலும் மாறாமல் உள்ளது.

பெண் கொலை : 2023ஆம் ஆண்டின் தரவுகளின்படி, உலகளவில் சுமார் 51,100 பெண்கள் நெருங்கிய துணைவர்களாலோ அல்லது பிற குடும்ப உறுப்பினர்களாலோ வேண்டுமென்றே கொல்லப்பட்டுள்ளனர். இது சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 5க்கும் மேற்பட்ட பெண்கள் அல்லது சிறுமிகள் தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரால் கொல்லப்படுவதற்கு சமமான தரவாகிறது.

குழந்தை திருமணம்: ஒவ்வோர் ஆண்டும் 18 வயதுக்கு முன்பே 12 மில்லியன் பெண்கள் அல்லது நிமிடத்துக்கு சுமார் 23 பெண்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள் அல்லது திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள். மேலும், இந்த பெண்கள்  வீட்டு வன்முறைக்கு அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.

பெண் பிறப்புறுப்பு சிதைப்பு (FGM) : இன்று உயிருடன் இருக்கும் 230 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகள் பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உட்பட்டுள்ளனர். இது 31 நாடுகளில்  அதிகமாக செய்யப்படுகிறது.

வன்முறையை அனுபவிக்கும் பெண்களில் 40% க்கும் குறைவானவர்களே ஏதாவது சில  வகையான உதவிகளை நாடுகிறார்கள். மிகக் குறைவானவர்களே காவல்துறை அல்லது சுகாதார சேவைகள் போன்ற முறையான நிறுவனங்களை அணுகுகிறார்கள். பெரும்பாலும் பயம் மற்றும் களங்கம் காரணமாக இவர்கள் இதனை யாரிடமும் கூறுவதில்லை.

மோதல், மனிதாபிமான நெருக்கடிகள், காலநிலை மாற்றம் மற்றும் COVID-19 தொற்றுநோய் ஆகியவை பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் அபாயத்தையும் பரவலையும் அதிகப்படுத்தியுள்ளன. இந்த சூழ்நிலைகளில் பெண்கள் அதிக விகிதாசாரத்தில்  பாதிக்கப்படுகின்றனர்.

பால்நிலை அடிப்படையிலான வன்முறை தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் குறிப்பிடத்தக்க செலவுகளை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் ஆண்டு செலவு EUR 366 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விசேட தேவையுடைய பெண்கள், பழங்குடி பெண்கள் மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்கள்  அதிகமாக இத்தகைய வன்முறைக்கு முகங்கொடுக்கின்றனர்.

60%க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்னும் சம்மதத்தின் அடிப்படையில் பாலியல் பலாத்கார  சட்டங்கள் இல்லை. மேலும், உலகின் பெண் சனத்தொகையில் பாதிக்கும் குறைவானவர்கள் சைபர் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டங்களால் பாதுகாக்கப்படுகிறார்கள்.

சமூகத்தின் எல்லா பிரிவினரும் இந்த பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிர்வினை ஆற்றவேண்டியது கட்டாயமாக உள்ளது. விசேடமாக  ஆண்களும் சிறுவர்களும் தீங்கு விளைவிக்கும் ஆணாதிக்க விதிமுறைகள் மற்றும் அமைப்புகளுக்கு சவால்விடுவதன் மூலம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதிலும் முடிவுக்குக் கொண்டுவருவதிலும் சுறுசுறுப்பான மற்றும் பொறுப்புணர்வுள்ள பங்காளிகளாக மாற வேண்டும் என்று நான் எல்லா அன்னைகளுக்கும் சிறுவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

வன்முறை என்பது மனித உரிமைகளை மீறுவதாகும்: பால்நிலை அடிப்படையிலான வன்முறை (GBV) என்பது ஒரு பரவலான மனித உரிமைகள் பிரச்சினை என்றும் அது வாழ்க்கையின் இயற்கையான, இயல்பான அல்லது தவிர்க்க முடியாத பகுதி அல்ல என்றும்; அதை நிறுத்த முடியும், நிறுத்தவேண்டும் என்றும் நாம் நமது நண்பர்கள், சமூக வட்டங்களில், நமது முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் நாம் பிரச்சாரம் செய்வோம் என அழைப்பு விடுக்கின்றேன்.

ஆண்கள் ஒரு அடி முன்வைக்க வேண்டும் : "எல்லா ஆண்களும்" வன்முறையில் ஈடுபடுவதில்லை என்பதை ஒப்புக்கொண்டாலும், பால்நிலை அடிப்படையிலான வன்முறையை  இயல்பாக்கப்பட்ட  நிலையிலேயே உலகில் அனைத்து ஆண்களும் வாழ்கிறார்கள் என்றும், இதனால் இந்த வன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் தீர்வின் ஒரு பகுதியாக இருக்க நம் அனைத்து ஆண்களுக்கும் பொறுப்பு உள்ளது.

நாம் நமக்கும் சமூகத்துக்கும் தீங்கு விளைவிக்கும் ஆண்மைத்துவ சிந்தனைகள், எண்ணக்கருக்கள், நம்பிக்கைகளுக்கு சவால் செய்வோம் : ஆண்மைத்துவம் என்பதே  வன்முறை, ஆதிக்கம் செலுத்தும் மற்றும் கட்டுப்படுத்தும் வரையறைகளை  கொண்டிருப்பதுதான்  என்ற விடயங்களை விமர்சன ரீதியாக ஆராய்ந்து நிராகரித்து, அதற்கு பதிலாக கவனிப்பு, இரக்கம் மற்றும் ஒத்துழைப்பு போன்ற மதிப்புகளைத் தழுவ (உள்வாங்க)வேண்டியதன் அவசியம்  நமது செய்தியின் மையக்கூறு ஆகும்.

பெண்ணிய இயக்கங்களை, சிந்தனைகளை  ஆதரிப்போம் : ஆண்களும் சிறுவர்களும் பாலியல் அடிப்படையிலான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டத்தை வழிநடத்தும் பெண்ணிய அமைப்புகள் மற்றும் பெண்ணிய இயக்கங்களின் பொறுப்புள்ள பங்காளியாக இருக்க நாம் நமது ஆண் நண்பர்கள் மற்றும் பங்காளர்களுடனான  உரையாடலை  ஊக்குவிப்போம்.

அனைத்து மட்டங்களிலும் செயற்படுவோம் : நாம் எம்முடன் தொடர்புபட்ட  தனிநபர், சமூகம் மற்றும் அமைப்பு ரீதியான எல்லா மட்டங்களிலும்  நடவடிக்கை எடுக்க முன்வருவோம்.  இதில்  பாலியல் ரீதியிலான வன்முறைகளில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களுக்கு நீதியை உறுதி செய்யும் மற்றும் வன்முறையின் மூல காரணங்களை நிவர்த்தி செய்யும் வலுவான சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நிறுவனங்களை ஆதரித்து வாதாடலும் அடங்கும்.

பார்த்தும் பாராதிருக்கும், கேட்டும் கேளாதிருக்கும் மௌனத்தைக் கலைப்போம் : துஷ்பிரயோகத்திற்கு எதிராகப் பேசவும், துஷ்பிரயோகம் செய்பவர்களை நிராகரிக்கவும், புகாரளிக்கவும், வன்முறையைத் தவிர்க்கவோ அல்லது சாக்குப்போக்கு சொல்லவோ கூடாது என்று நாம் நமது ஆண் சகாக்கள் மற்றும் நண்பர்களை ஊக்குவிப்போம். இதனூடாக நாம் ஒரு அடி எடுத்து வைத்து பால்நிலை அடிப்படையிலான வன்முறையை முடிவுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/231371

அமைதியை தவிர வேறு வழியில்லை - லக்ஸ்மன்

1 month 2 weeks ago

அமைதியை தவிர வேறு வழியில்லை

லக்ஸ்மன்

இனவாதமும் பௌத்த மேலாதிக்கமுமே ஆரம்பத்திலிருந்து இலங்கையின் இன
முரண்பாடுகளுக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கும் மூல காரணம் என்பது
எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்ததே. இருந்தாலும் அதனை வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதற்கு அவர்களுக்கும் 
துணிச்சல் இல்லை.

அதனாலேயே சுதந்திரமடைந்து 80 வருடங்களாகின்ற போதிலும், நிம்மதியற்ற இலங்கையே இருந்து வருகிறது.கடந்த வாரத்தில் உருவான திருமலை புத்தர் சிலை விவகாரத்தில் கருத்துவெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “பிக்குகளைக் கொண்டே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தமிழ் மக்களுக்கெதிராக அரசியல் செய்தார்.

திருகோணமலைப் பகுதியில் பிரதிஸ்ட்டை செய்யப்பட்ட புத்தர் சிலை
அகற்றப்பட்டமை தேசியப் பிரச்சினை ஆகவே சிலையை அதே இதத்தில்
வைக்கவேண்டும்” என்று தெரிவித்திருந்தார். 

இந்தக் கருத்தைத் தவறான கருத்தாகச் சுட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர், தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என்று கூறியிருந்தார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி
அரசாங்கத்தின் “இந்த நாட்டில் இனிமேலும் இன, மத வாதங்களுக்கு இடமில்லை. இனவாதிகளை சட்டம் சும்மா விடமாட்டாது.

இருக்கின்ற சட்டங்கள் போதாது என்றால் மேலும் சட்டங்களைக் கொண்டு வந்து இனவாதிகளை அடக்குவோம்” என்ற கருத்துக்கு சஜித்தின் கருத்து நேர் எதிரானது. திருகோணமலை புத்தர் சிலை விவகாரமானது தங்களால் சரியாகக் கையாளப்பட்டதாகவும் இனவாதிகளின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாகவும் தற்போது கதைகள் உலாவ விடப்படுகின்றன. 

ஆனால், யார் முயற்சி செய்தாலும் அதன் பலாபலன் தமக்கே கிடைக்க வேண்டும் என்கிற முறைமையைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கையாண்டிருப்பதையே காணமுடிகிறது. 

வடக்கு கிழக்கானது தமது பாரம்பரிய தாயகம் என்று சொல்கின்ற தமிழர்களின் பிரதேசத்துக்குள்ளேயே இருக்கின்ற திருகோணமலையில் இந்த அரசாங்கத்தின் காலத்துக்குள் மாத்திரமல்ல கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களிலும் புத்தர் சிலைகள் பல முளைத்ததும் விகாரைகள் கட்டப்பட்டதும் நடைபெற்றே இருக்கிறது. ஆனால், அவற்றினை மக்கள் விடுதலை முன்னணி எதிர்த்ததில்லை.

அதே நேரத்தில், இந்தச் சிலை விவகாரத்தினைப் பார்த்தால், உள்ளுராட்சிச் சபைகள் அதிகாரத்தில் இருக்கின்ற வேளையில் திருகோணமலை நகர 
சபையின் எல்லைக்குள் இந்தச் சிலை அனுமதியின்றி நிறுவப்பட்டிருக்கிறது.
சட்டத்திற்கு முரணான நடவடிக்கை உள்ளூர் அரசியல்வாதிகள், பொலிஸாரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டபோது  புத்தர் சிலை இரவோடிரவாக அகற்றப்பட்டிருக்கிறது.

அதனை அறிந்த தமிழ் மக்கள் சிறிது மகிழ்ச்சியடைந்தனர்.  அந்த மகிழ்ச்சி திருப்தியாக மாற்றமடைவதற்கு முன்னரே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால பாதுகாப்பு காரணங்களுக்காகவே புத்தர் சிலை அகற்றப்பட்டது. அகற்றியவர்களால் மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்ததும் ஏமாற்றமாகிப் போனது. அவ்வாறானால் இப்போது அச்சிலை சட்டரீதியாகநிறுவப்பட்டிருப்பதாகவே கொள்ளலாம்.

அதே நேரத்தில், புத்தர் சிலை விடயத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்குத் தொடர்பில்லை என்று திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிவர்த்தன விகாரையின் விகாராதிபதி கல்யாண வங்ச திஸ்ஸ தேரர் தெரிவித்திருந்தார்.

இந்தச் சிலை விவகாரத்தில் தமிழ் மக்கள் அக்கறையில்லாமல் இருக்கின்ற வேளையிலும் கூட அவர்களை இதற்குள் இழுத்துவிடும் செயற்பாடு நடைபெற்றிருக்கிறது என்பதனை இது காட்டுகிறது. அதே நேரத்தில், தமிழ் மக்களிடம் இருக்கின்ற ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்துவிட்டோம் அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்கிற அசட்டை மனோநிலை இந்த விடயத்தில் தமிழ் மக்களின் கவனக் குறைவுக்குக் காரணமாக இருக்கலாம்.

அதற்கு ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அல்லது ஜனாதிபதியின் கடந்த கால வார்த்தைகள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக இருக்கலாம். ஆனால் அகற்றப்பட்ட சிலை மீண்டும் சட்ட ரீதியாகவே நிறுவப்பட்டமையானது சிறுபான்மை மக்கள் மத்தியில் கவலையையே ஏற்படுத்தியிருக்கிறது. 

பொலிசாரால் அகற்றப்பட்ட அந்த சிலை  அரசாங்க ஆசீர்வாதத்துடன் மீண்டும் அங்கு நிறுவப்பட்டமையானது எதனையும் சட்டரீதியாகச் செய்யுங்கள் என்று ஒரு தகவலை இனவாதிகளுக்குக்கொடுத்திருக்கிறது எனலாம். எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாசா  அரசியலமைப்பின் இரண்டாவது சரத்தைச் சுட்டிக்காட்டிப் பேசுகிறார். இனவாதம், மதவாதம் இனி இல்லை என்று சொன்ன தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர் பாதுகாப்பு காரணங்களுக்காகவே சிலை அகற்றப்பட்டதாகக் கூறி அதனை மீண்டும் நிறுவச் செய்கிறார்.  

இது சஜித்தின் கருத்தை ஆதரித்து ஏற்றுக் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது.
மற்றொருவகையில் பார்த்தால், சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு அரசாங்கம் அடிபணிந்தே சிலையை மீண்டும் நிறுவியிருக்கிறது என்று கொள்ளமுடியும். அதே நேரத்தில் அரசாங்கத்தின் கொள்கை தோற்றுவிட்டது.

இனவாதிகள் வெற்றிபெற்றிருக்கிறார் என்றும் கொள்ள முடிகிறது. மாறாக, சட்டரீதியற்ற முறையில் நிறுவப்பட்ட சிலையை பொலிஸார் அகற்றினர்.

அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவேண்டிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் வாதாடியிருந்தால் அரசாங்கம் சொன்னதையே செய்கிறது என்று கொள்ள முடியும். ஆனால், நடைபெற்றிருப்பதோ வேறொன்று. 

அத்துடன், மகிந்த கூட்டணியுடன் தொடர்புடையதே இந்த புத்தர் சிலை. அவர்களுடைய தரப்பினரே இந்தக் காரியத்தை நடத்தினர். பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஏற்பாட்டில் நுகேகொடவில் நடைபெறவிருந்த பேரணிக்கு ஆதரவு திரட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அந்தவகையில், எதிர்க்கட்சிகளின் இன, மதவாத சதி அரசியல் இது என்று 
கூறும் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் சரியானதா என்ற கேள்வி சிறுபான்மை மக்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது.

கடந்த காலத்தில் இனவாத அரசியலையே செய்து கொண்டிருந்த ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தியாகத் தன்னை மாற்றிக்கொண்டபோது, முற்று முழுதாக மாறி விட்டது. என்று மனோநிலையை முழுமையாக மாற்றிக்கொள்ள முனைகின்ற தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களும், தமிழ் மக்களின் உரிமை பற்றிச் சிந்திக்கின்ற சிறுதொகைச் சிங்கள மக்களும் இதிலிருந்தேனும் பாடம் 
கற்றுக்கொள்ள வேண்டும். 

அதே நேரத்தில், ஒரு தலைமையின் கீழ் ஒரு கட்டளையாளரின் கீழ் மாத்திரமே தேசிய மக்கள் சக்தி இயங்க, செயற்பட வேண்டும் என்கிற நெறிமுறைக் கட்டுப்பாடுகள் அரசாங்கத்துக்குள் இருக்கிறதா? என்கிற கேள்வியை  அவர்கள் கேட்டுக் கொள்ளவும் வேண்டும்.

அவ்வாறானால், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ள இடதுசாரிச் சிந்தனையாளர்களாக தம்மைக் காட்டிக்கொள்ள முனைகின்ற அரசாங்கம் பௌத்த மேலாத்திக்க வாதத்துக்குள் இருந்து வெளியில் வந்ததாக அறிவித்துக் கொள்வதற்குக் கிடைத்த வாய்ப்பினை தவறவிட்டிருக்கிறது, வீணடித்து விட்டது.

அவ்வாறானால், அது அரசாங்கத்தின் இயலாமையால் நடைபெற்றதா?, பலவீனமானதாக அரசாங்கம் இருக்கிறதா? என்பதே இப்போது ஆராயப்பட வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரையில் பௌத்த 
தேசியவாதம், தமிழ்த் தேசியவாதம், இஸ்லாமியத் தேசியவாதம் என தங்கள் தங்கள் நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்ற சமூகங்கள் ஒவ்வொரு இனத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடவே செய்கின்றனர்.

ஆனால், சிங்களவர்களை அனுசரிக்கின்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால் நாட்டில் வாழ முடியும் தங்களது இனத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்ற கொள்கையை எடுத்துக் கொள்வதில் தமிழர்களுக்கு மனோநிலை இடம் கொடுப்பதில்லை.

இவ்வாறான நிலையில்தான் தங்களது தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்த கொண்டிருக்கின்ற சூழலை உணர்ந்து வெளிப்படுத்தப்பட்ட தோரணைகளைக் கண்ணுற்று தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருந்தனர். எது எவ்வாறானாலும், தமிழ் மக்கள் தங்களது இந்த முடிவினைத் தவறென்று எடுத்துக் கொள்வார்களா?, அப்படியே விட்டுவிடுவோம் என்று கொள்வார்களா? என்பது காலத்தின் கையில் விடப்பட்டதே.

இருந்தாலும், வடக்குக் கிழக்கில் நடைபெற்ற இனப் பரம்பல் குறைப்பு நடவடிக்கைகள், சிங்கள மயமாக்கல் குடியேற்றங்கள், பௌத்த மேலாதிக்க செயற்பாடுகள், தொல்பொருள் ஆதிக்கங்கள் நிறுத்தப்படப் போவதில்லை 
என்பதனை மீண்டும் ஒருமுறை திடமாக உறுதிப்படுத்திய சம்பவமாகத் திருமலை சிலை நிறுவலைக் கொள்ளமுடியும் என்பதே நிச்சயம்.

ஆனாலும், ஆயுதத்தை ஆயுதத்தால் அணுகுகின்ற, இனவாதத்தை, இனவாதத்தால் அணுகுகின்ற நிலைப்பாடுகள் வலுத்துவருகின்ற  இன்றைய சூழலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு வேறுவழியுமில்லை என்று அமைதியடைந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

புத்தர் திருகோணமலையின் கடற்கரையோரப் பாதுகாப்பு வலயத்தில் தற்காலிகமாகக் குடியேற்றப்படவில்லை அவர் நிரந்தரமாகவே அமர்த்தப்பட்டார். அங்கு விரைவில் விகாரையும் அமையும் என்பது உண்மையானாலும், தமிழர்களைப் பொறுத்தமட்டில். இப்போது போன்று அப்போதும் அமைதியாகவே இருப்பர்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அமைதியை-தவிர-வேறு-வழியில்லை/91-368414

Checked
Thu, 01/08/2026 - 23:51
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed