அரசியல் அலசல்

இலகுகாத்த கிளிகளாக புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள்

8 hours 56 minutes ago

இலகுகாத்த கிளிகளாக புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள்

மொஹமட் பாதுஷா

விடுதலைப் புலிகளால் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு 35 வருடங்களாகியுள்ள நிலையில், இன்னும் அந்த மக்கள் முழுமையாக தங்களது பூர்வீக இடங்களில் மீள் குடியேற்றப்படவில்லை.

நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள்,  இன அழிப்பு பற்றி மட்டுமன்றி, 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற இடம்பெயர்வுகள் பற்றியெல்லாம் உலக அரங்கில் பேசப்படுகின்றது. 

ஆயினும்; கூட, 1990ஆம் ஆண்டு, ஒரு இனக் குழுமத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது வாழ் நிலத்தில் இருந்து ஒரு சில மணித்தியாலங்களுக்குள் இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படவும் இல்லை. அங்த மக்களுக்குத் தீர்வு கிடைக்கவும் இல்லை.

முஸ்லிம் மக்கள் மொழியால் மட்டுமன்றி, வேறு பல விடயங்களாலும் தமிழ்ச் சமூகத்தோடு பின்னிப் பிணைந்ததாக வாழ்ந்தார்கள். இன்றும் இதன் சாயல்கள் உள்ளன.  குறிப்பாக, முஸ்லிம்களின் அரசியல் எந்தளவுக்கு பெருந்தேசியக் கட்சிகளைச் சார்ந்திருந்ததோ அந்தளவுக்கு வடக்கு, கிழக்கில் தமிழ்க் கட்சிகளையும் சார்ந்திருந்தது.

எம்.எச்.எம்.அஷ்ரப் வரை பல முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழரசுக் கட்சியோடு இணைந்து அரசியலில் பயணித்தனர்.  இப்போதுள்ள சிறிதரன் போன்ற ஒரு சில அரசியல்வாதிகளைப் போலல்லாமல், மூத்த தமிழ்த் தலைவர்கள் முஸ்லிம்கள் தனியொரு இனம் என்பதையும், இனப் பிரச்சினை தீர்வில் அவர்களுக்கும் ஒரு பங்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொண்டிருந்தனர்.

முஸ்லிம்களுக்குத் தனிநாடு தேவைப்படவும் இல்லை, அவர்கள் போராடவும் இல்லை. ஆனால், தமிழர்களின் தாகத்திற்காக முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்களில் இணைந்து போராடிய வரலாற்றைத் தமிழ்த் தேசியம் என்று மறக்கக் கூடாது.

புலிகளும் ஏனைய பல ஆயுதக் குழுக்களும் முஸ்லிம்களை நோக்கி ஆயுதங்களைத் திருப்பத் தொடங்கிய பிறகு, தமிழ்க் கட்சிகளைப் புலிகள் இயக்கம் கட்டுப்படுத்த தொடங்கிய பிறகு, முஸ்லிம்கள் இந்த போக்கில் இருந்து விலகினர்.

விடுதலைப் போராட்டத்தை முஸ்லிம்களை வெறுப்பதற்கும், முஸ்லிம் தலைவர்கள் தமிழர் அரசியலோடுடனான உறவைத் துண்டிப்பதற்கும் தமிழ் 
ஆயுதக் குழுக்கள் செய்த அட்டூழியங்களும் தமிழ் அரசியல்வாதிகளின் மௌனமும் முக்கிய காரணமானது.

அப்படியான சம்பவங்களில் மிக முக்கியமானதுதான் வடக்கில் 
வாழையடி வாழையாக வாழ்ந்த ஒரு இலட்சம் முஸ்லிம்கள் உடுத்த 
துணியோடு அங்கிருந்து விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட கறைபடிந்த நிகழ்வாகும்.

மேற்படி ஆயுதக் குழுக்கள் கிழக்கில் பள்ளிவாசல் படுகொலைகள், குருக்கள்மடம் படுகொலை,  வயல்வெளிகளிலான பலியெடுப்புக்களை நடத்தியது போல, வடகிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களைக் கடத்துதல், கப்பம் கோருதல், சொத்துக்களைப் பறித்தல் என, ஒரு விடுதலை இயக்கத்தின் கோட்பாடுகளுக்கு மாற்றமான பல அட்டூழியங்களை அரங்கேற்றியதை மறக்க முடியாது.

இந்தப் பின்னணியில்தான், 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி, வடக்கின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களைப் பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் ஆயுத முனையில் வெளியேற்றினர். 

தங்களது சொத்துக்களையோ, நகைகளையோ அல்லது பணத்தையோ கொண்டு செல்ல விடாமல், சில மணிநேர அவகாசத்தில் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது. இத்தனை காலமும் உழைத்த சொத்துக்களை, வீடுவாசல்களை மட்டுமன்றி பூர்வீக நிலத்தையே விட்டு, துரத்தியடிக்கப்படுவது எவ்வளவு கொடுமை?

90 ஆயிரத்திற்கும் ஒரு இலட்சத்திற்கும் இடைப்பட்ட முஸ்லிம்கள் உடுத்த உடுப்போடு தமது வாழிடங்களை விட்டு வெளியேறினர். அவர்கள் தமக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களைக் கூட கொண்டு செல்வதற்கு இடமளிக்கப்படவில்லை.

முஸ்லிம்கள் வெளியேறும் போது, புலிகள் அவர்களைச் சோதனையிட்டு, பணம், நகை மட்டுமன்றி மேலதிக ஆடைகள் போன்ற உடமைககளையும் பறித்தெடுத்ததாக சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் சொல்லியிருக்கின்றனர்.

ஒரு இனத்தின் நில உரிமைக்காக, விடுதலைக்காக போhடிய ஆயுத இயக்கம், முஸ்லிம்களும் தமிழ் பேசும் மக்கள் என்று கூறிவந்த சமூகத்தின் விடுதலை வீரர்கள்தான் இந்த இந்த செயலைச் செய்திருந்தனர். 

உலகில் வேறு எந்த மக்களும் இப்படி வெளியேற்றப்பட்டிருப்பார்களோ தெரியாது.
உண்மையில் இது ஒரு இனச் சுத்திகரிப்பாகும். ஏனெனில் வடகிழக்கு இணைந்த அவர்களது தனியீழ கனவில் வடக்கு என்பது மையப் புள்ளியாகும்.

அங்கு இன்னுமொரு இனத்தை வைத்திருப்பது தமது கோட்பாட்டை வென்றெடுப்பதற்குத் தடையாக அமையும் என்பதைப் புலிகளின் தலைமை அறிந்திருக்கும்.

மறுபுறத்தில், முஸ்லிம்கள் காட்டிக் கொடுக்கின்றார்கள் என்றும் வடக்கில் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் வேறு பல கதைகளும் சொல்லப்பட்டன. 

காட்டிக் கொடுப்பவர்களை வெளியேற்றுவதாயின் சம்பந்தப்பட்ட ஆட்களைத் தெரிவு செய்து வெளியேற்றியிருக்கலாம். அதுமட்டுமன்றி, காட்டிக் கொடுப்பவர்கள் என்றால் முஸ்லிம்கள் மட்டும்தானா? தமிழர்களில் இருந்த காட்டிக் கொடுப்பவர்கள் ஏன் வெளியேற்றப்படவில்லை?

வடக்கில் இராணுவத்தினால் முஸ்லிம்களுக்கு ஆபத்து வருவதற்கு வாய்ப்பில்லை. ஒரு இனக் குழுமத்தைச் சேர்ந்த மக்களை விரட்டியடிக்குமளவுக்கு பலம் பெற்றிருந்த புலிகளுக்கு அச்சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியவில்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய கதையா? 

வடக்கில் முஸ்லிம்களை விட அதிகமான தமிழர்களுக்குப் 
பாதுகாப்பு வழங்க முடியுமாக இருந்தால், அதே பாதுகாப்பை ஏன் முஸ்லிம்களுக்கு வழங்க முடியாமல் போனது? இதுவெல்லாம் வெறும் கற்பிதங்களே ஆகும்.

உண்மையில், இது விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகப் பெரிய கறைபடிந்த சம்பவம் ஆகும். தார்மீகமாகப் பார்த்தால் புலிகள் இயக்கத்தின் தோல்வி ஆரம்பித்த புள்ளி இது என்றும் சொல்ல முடியும்.

ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் தீவிர போக்கற்ற தமிழ் மக்கள் இந்த செயலை மனதால் வெறுக்கவே செய்தனர். அதனையும் மீறி பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய தமிழ் செயற்பாட்டாளர்கள் புலிகளை இது விடயத்தில் பகிரங்கமாக எதிர்த்தார்கள் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டியிருக்கின்றது.

முதலாவது விடயம் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியது மிகப் பெரும் தவறும் அநியாயம் இழைப்புமாகும். அவர்கள் நல்ல நோக்கத்தில் வெளியேற்றியிருந்தால், முஸ்லிம்களின் நகைகள், வாகனங்கள், வீடுகள், சொத்துக்களைப் பாதுகாத்து பத்திரமாக மீள ஒப்படைத்திருக்க வேண்டும்.

அத்துடன், இதற்கான விளக்கத்தைத் தெளிவாகக் கூறி பகிரங்கமான மன்னிப்பொன்றைக் கேட்டிருக்க வேண்டும். மட்டுமன்றி, அந்த மக்களை மிக விரைவாக மீளக் குடியேற்றுவதற்கான நடவடிக்கையை தம்பக்கத்தில் இருந்து புலிகள் மேற்கொண்டிருக்க வேண்டும்.  

ஆனால், இது எதுவுமே இன்று வரை நடக்கவில்லை. முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பிறகு, உள்நாட்டில் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மீளக் குடியேற்றப்பட்டு விட்டாலும் வடக்கு முஸ்லிம்களின் அகதி வாழ்வுக்கு இன்னும் விடிவு கிடைக்கவில்லை.

யுத்தத்தின் காரணமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள், வெளிநாடுகளில் தஞ்சம் கோரி வதிவிட உரிமை எடுத்தவர்கள் இப்போது சிறப்பான சூழலில் வாழ்கின்றார்கள் என்பதற்காக அவர்களது பூர்வீக நிலத்தில் வாழ்வதற்கான மறுதலிக்க முடியாது.

அதுபோலத்தான் வடக்கு முஸ்லிம்களும் பார்க்கப்பட வேண்டும். புலிகள் துரத்திய போது உழவு இயந்திரங்களிலும், வள்ளங்களிலும், கால்நடையாகவும் வந்த முஸ்லிம்கள் நாட்டின் பல பாகங்களில் குடியேறினர். புத்தளத்திலேயே பெருமளவானோர் தஞ்சம் புகுந்தனர்.  

இன்று அவர்கள் சனத்தொகை பல்கிப் பெருகிவிட்டாலும் மீள் குடியேற்றப்படவில்லையே என்ற ஏக்கம் அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கின்றது. ஆனால், அரசாங்கங்களும் முஸ்லிம் தலைவர்களும் இதுவிடயத்தில் வினைத்திறனாக செயற்படவில்லை.

எனவே, அரசாங்கமும் முஸ்லிம் எம்.பிக்களும் இது விடயத்தில் விரைந்து செயற்படுவதுடன், வடக்கு தமிழர்களை மீள் குடியேற்றுவதில் காட்டுகின்ற அக்கறையை வடபுல தமிழ் அரசியல்வாதிகள், அதிகாரிகள் புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் விடயத்திலும் காட்ட வேண்டும். இல்லாவிட்டால் புலிகளின் தவறை நியாயப்படுத்துபவர்களாகவே அவர்கள் கருதப்படுவார்கள்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலகுகாத்த-கிளிகளாக-புலிகளால்-வெளியேற்றப்பட்ட-முஸ்லிம்கள்/91-367347

இலங்கையில் நிழலுலக குழுக்களிடம் ராணுவ துப்பாக்கிகள் சென்றது எப்படி?

2 days ago

ஸ்ரீலங்கா, இலங்கை, துப்பாக்கி , ராணுவம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (சித்தரிப்புப்படம்)

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் அண்மைக் காலமாக துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளன. போதைப்பொருள், நிழலுலக செயற்பாடுகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களை மையப்படுத்தி இந்த துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, இந்த ஆண்டில் (2025) இதுவரையான காலம் வரை 105 துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் அரசு குற்ற ஆவணங்களில் பதிவாகியுள்ளன.

இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் 53 பேர் உயிரிழந்ததுடன், 58 பேர் காயமடைந்துள்ளனர்.

அரசியல் மற்றும் நிழலுக நபர்களை குறிவைக்கும் துப்பாக்கிகள்

நிழலுலக செயல்பாடுகளில் ஈடுபடுவோரை இலக்கு வைத்து அண்மை காலமாக அதிகளவான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியிருந்தன என்கிறது காவல்துறை.

இதில் பிரபல நிழலுலக தலைவர் கனேமுல்ல சஞ்ஜீவ என அழைக்கப்படும் சஞ்ஜீவ குமார சமரரத்னவின் கொலை பேசு பொருளாக மாறியது. கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்ற விசாரணை கூண்டில் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 19-ஆம் தேதி கனேமுல்ல சஞ்ஜீவ கொலை செய்யப்பட்டார்.

வழக்கறிஞர் வேடமிட்டு வந்திருந்த துப்பாக்கித்தாரி, இந்தக் கொலையை மேற்கொண்டு, நீதிமன்ற வளாகத்தை விட்டு தப்பியோடினார். சந்தேக நபரை போலீஸார், 8 மணிநேரத்தில் கைது செய்தனர்.

இந்தச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக போலீஸார் சுட்டிக்காட்டும் இஷாரா செவ்வந்தி என்ற பெண், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீலங்கா, இலங்கை, துப்பாக்கி , ராணுவம்

பட மூலாதாரம், ANANATHA WIJAYAPALA FB

படக்குறிப்பு, பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால

மாத்தறை வரலாற்று சிறப்பு மிக்க தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு முன்பாக மார்ச் 21-ஆம் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கி பிரயோக சம்பவம் நாட்டில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்தது. பௌத்த மக்களின் புனித ஆலயத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோக சம்பவமும் அதிகளவில் பேசப்பட்ட ஒரு சம்பவமாக பதிவாகியிருந்தது.

இதேவேளை, வெலிகம பிரதேச சபையின் தவிசாளராக கடமையாற்றிய லசந்த விக்ரமசேகர துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடந்த 22-ஆம் தேதி உயிரிழந்தார்.

வெலிகம பிரதேச சபை வளாகத்திற்குள் வந்த துப்பாக்கித்தாரிகள், பிரதேச சபையின் தவிசாளரின் அறைக்குள் சென்று துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த லசந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

லசந்த, இலங்கையின் பிரதான எதிர்கட்சியாக விளங்கும் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவாகியிருந்தார்.

உயிரிழந்த லசந்த விக்ரமசேகர, "நிழலுலக செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒருவர்" என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

''கடந்த காலங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களின் ஊடாக தேசிய பாதுகாப்புக்கு எந்த வித அச்சுறுத்தலும் கிடையாது. வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர என்ற வெலிகம லசா மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவர் நிழலுலக குற்றவாளி. மாத்தறை, குருநாகல் போன்ற மேல் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழக்கப்பட்டுள்ளது. நிழலுலக செயற்பாடுகளும் அவர் தொடர்புடையவர்.'' என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறினார்.

ஸ்ரீலங்கா, இலங்கை, துப்பாக்கி , ராணுவம்

பட மூலாதாரம், pmd sri lanka

ராணுவ ஆயுதங்கள் பயன்பாடு

நாட்டில் இடம் பெறுகின்ற துப்பாக்கி பிரயோகங்கள் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாகவே காணப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கிறார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக முழு நாட்டையும் ஒன்றிணைக்கும், தேசிய செயற்பாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 30-ஆம் தேதி கொழும்பில் இடம்பெற்ற போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

''கருப்புப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வர்த்தகமாக போதைப்பொருள் மாறியுள்ளது. அதனால் அவர்களிடையே சந்தையை பங்கு போடுவதில் மோதல் காணப்படுகிறது. ஒவ்வொரு குழுக்களுக்கிடையில் துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரதேச எல்லைகளுக்கு மற்றைய தரப்பு நுழைய முடியாது. போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டதாகவே இந்த கொலைகள் நடைபெறுகின்றன. பொதுச் சமூகத்தின் பாதுகாப்பிற்காவே அரச பொறிமுறையொன்று உள்ளது. ஆனால் அவர்களிடமுள்ள பண பலத்தினால் அரச பொறிமுறை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இனிமேலும் இதனை மறைத்து இந்தப் பிரச்னைக்கு முகங்கொடுக்க முடியாது." என ஜனாதிபதி கூறினார்.

ராணுவத்தினர் பயன்படுத்தும் ஆயுதங்கள் குழுக்களிடமும் இருப்பதாக ஜனாதிபதி குற்றம் சாட்டினார்.

"அரசிடம் இருக்க வேண்டிய ஆயுதங்கள் எவ்வாறு அவர்கள் கைகளுக்குச் சென்றது? சில ராணுவ முகாங்களில் இருந்து 73 ரீ56 ரக துப்பாக்கிகள் அவர்களின் கைகளுக்குச் சென்றுள்ளன. அதில் சுமார் 35 துப்பாக்கிகள் மீளப் பெறப்பட்டுள்ளன. அதற்குப் பயன்படுத்தும் ரவைகள் பிடிபட்டுள்ளன. ராணுவ கேர்னல் ஒருவர்தான் இவற்றை வழங்கியுள்ளார். அதற்காக அவரின் வங்கிக் கணக்கிற்கு பணம் கிடைத்துள்ளது. ஒரு பொலிஸ் அதிகாரி தனது ஆயுதத்தை விற்பனை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். அந்த ஆயுதக் குழுக்களிடமுள்ள பண பலத்தினால் இவை நிகழ்ந்துள்ளன.'' என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

ஸ்ரீலங்கா, இலங்கை, துப்பாக்கி , ராணுவம்

பட மூலாதாரம், pmd sri lanka

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறிய பின்னர், அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

"பாதுகாப்பு இல்லாததால் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் மாஅதிபர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளனர்," என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

போலீஸ் மாஅதிபர் பங்கு பெற்ற இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக எதிர்கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2lpvrr48dyo

எதிர்க்கட்சிகளின் ஒன்றிணையும் முயற்சி அரசாங்கத்துக்கு சவாலாக அமையுமா?

2 days 9 hours ago

எதிர்க்கட்சிகளின் ஒன்றிணையும் முயற்சி அரசாங்கத்துக்கு சவாலாக அமையுமா?

Veeragathy Thanabalasingham

on November 4, 2025

250822-ranil-arrest-2.jpg?resize=1200%2C

Photo, GETTY IMAGES

மிகப் பெரிய வாக்கு வங்கியைக் கொண்ட தனியொரு அரசியல் கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மற்றைய கட்சிகள் குறிப்பாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தல்களில் போட்டியிட்ட காலம் ஒன்று இருந்தது. எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க தொடக்கம் அவரது மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்க, மகள் சந்திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் தலைமையில் சுதந்திர கட்சி இருந்த வரை ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான இந்தக் கூட்டணி அரசியல் தொடர்ந்தது.

கடந்த நூற்றாண்டில் சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணிகள் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்த சில பொதுத் தேர்தல்களில் கூட  நாடுபூராகவும் பெற்ற மொத்த வாக்குகளைப் பொறுத்தவரை ஐக்கிய தேசிய கட்சியே முன்னணியில் இருந்ததுண்டு.

ஆனால், இன்று அதே ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்கிரமசிங்கவின் 30 வருட கால தலைமைத்துவத்தின் கீழ் படுமோசமாக பலவீனமடைந்த நிலையில், இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன் முறையாக ஜனநாயக தேர்தல் மூலம் அதிகாரத்துக்கு வந்த இடதுசாரிக் கட்சி கூட்டணி என்ற சாதனையைப் படைத்த  ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு எதிராக கட்சிகளை அணிதிரட்டும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது.

பெரிய வாக்கு வங்கியைக் கொண்ட தனியொரு கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி முன்னர் விளங்கியதால் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதை நோக்கமாகக் கொண்டுதான் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையை அறிமுகப்படுத்தினார் என்று கூறப்பட்டதுண்டு. ஆனால், அதே தேர்தல் முறையின் கீழ் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினர் கூட நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படாத பொதுத் தேர்தலையும் நாம் கண்டோம்.

அதேவேளை, சில வருடங்களுக்கு முன்னர் வெறுமனே மூன்று சதவீத வாக்கு வங்கியைக் கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தி விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றக்கூடியதாக அரசியல் நிலைவரங்கள் மூன்று வருடங்களுக்கு முன்னர் முற்றுமுழுதாக மாற்றம் கண்டன.

கடந்த ஒரு வருடமாக பதவியில் இருந்துவரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக  தற்போது மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் பிரதான பாரம்பரிய அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சி மற்றும் ஒப்பீட்டளவில் புதிய கட்சியான ராஜபக்‌ஷர்களின் பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. இந்த பழைய கட்சிகளில் எந்த ஒன்றுமே கட்டுறுதியான கட்டமைப்புக்களை கொண்டவையாக இன்று இல்லை. ஆனால், கடந்த வருடத்தைய தேசிய தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்தக் கட்சிகள் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அவற்றுக்கு ஒரு பொருத்தப்பாட்டை தேடிக்கொள்ள வேண்டிய அரசியல் நிர்ப்பந்தத்தில் இருக்கின்றன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய பெருவாரியான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது என்பதும் அதன் விளைவான மக்களின் வெறுப்பை கடந்த உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சி வெளிக்காட்டியது என்பதும் உண்மை.

ஆனால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முன்னெடுக்கும் முயற்சிகள் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துவனவாக இல்லாமல் முன்னைய அரசாங்கங்களில் முக்கிய பொறுப்புக்களை வகித்த அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக தற்போது முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளை மையப்படுத்தியவையாகவே இருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதிகள் அரச பணத்தில் அனுபவித்துவந்த வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் சட்டத்தைக் கொண்டுவந்த வேளையிலும் கூட எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்துவதற்கு முயற்சிக்கப்பட்டது.

ஜனாதிபதியாகப் பதவி வகித்தபோது விக்கிரமசிங்க தனிப்பட்ட வெளிநாட்டு பயணத்துக்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கடந்த ஆகஸ்ட் பிற்பகுதியில் கைது செய்யப்பட்டபோது அவருக்கு ஆதரவையும் ஒருமைப்பாட்டையும்  வெளிக்காட்டிய எதிர்க்கட்சிகள் பிறகு நாளடைவில் அரசாங்கத்துக்கு எதிராக அணிதிரளுவதற்கான முயற்சிகளில் இறங்கின. முன்னைய அரசாங்கங்களில் பதவிகளை வகித்த அரசியல்வாதிகளில் பலர் எந்த நேரத்திலும் தாங்கள் ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் கைதுசெய்யப்படக்கூடும் என்ற பீதியில் இருக்கிறார்கள் என்பது ஒன்றும் இரகசியமானது அல்ல.

முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு மற்றும் சில அரசியல்வாதிகளுக்கு எதிராக இதுவரையில் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளை ‘அரசியலமைப்பு சர்வாதிகாரம்’ என்று வர்ணிக்கும் எதிர்க்கட்சிகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிராக போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்திருக்கின்றன.

செப்டெம்பர் முற்பகுதியில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 79ஆவது வருடாந்த மகாநாட்டை விக்கிரமசிங்க எதிர்க்கட்சிளை ஓரணியில் கொண்டு வருவதற்கான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்துவதில் அக்கறை காட்டினார். அந்த மகாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல்வாதிகளை விடவும் மற்றைய கட்சிகளின் அரசியல்வாதிகளே கூடுதல் எண்ணிக்கையில் காணப்பட்டார்கள்.

நவம்பர் 21ஆம் திகதி தலைநகர் கொழும்புக்கு வெளியே நுகேகொடையில் அரசாங்கத்துக்கு எதிரான பிரமாண்டமான பேரணியொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எதிர்க்கட்சிகள் செய்து வருகின்றன. இந்த பேரணியில் ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன, சுதந்திர கட்சி, சந்திரிகா தலைமையில் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மக்கள் முன்னணியின் பெயரில் தங்களை அடையாளப்படுத்தும் சில அரசியல்வாதிகள் மற்றும் பிவிதுறு ஹெல உறுமய ஆகியவை பங்கேற்கவிருப்பதாக இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இதில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று திட்டவட்டமாக  அறிவித்திருக்கிறது.

2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி கண்ட மகிந்த ராஜபக்‌ஷவின் அரசியல் மீள் எழுச்சிக்கு வழிவகுப்பதற்கு நேசக்கட்சிகளின் தலைவர்கள் ‘மகிந்த காற்று’ என்ற பெயரில் சில வாரங்களிலேயே நுகேகொடையில்தான் மிகவும் வெற்றிகரமான பேரணியொன்றை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட அரசியல் பிரசாரங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற புதிய அரசியல் கட்சி தொடங்கப்படுவதற்கும் ராஜபக்‌ஷர்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வழிவகுத்தன. அதனால் நுகேகொடையில் முதல் பேரணியை நடத்துவதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்தால் வெற்றிகரமாக அமையும் என்று எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நம்புகிறார்கள் போலும்.

2015 ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மைச் சமூகங்களின் அதிகப் பெரும்பான்மையான வாக்குகளை பெற்றதன் காரணத்தினாலேயே மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறக்கூடியதாக இருந்தது. சிங்கள மக்களின் வாக்குகள் பெருமளவில் மகிந்த ராஜபக்‌ஷவுக்கே கிடைத்தன. சிறிசேனவுக்கு கிடைத்தவை ‘ஈழம் வாக்குகள்’ என்று ராஜபக்‌ஷ கூறவும் தவறவில்லை. இலங்கை அரசியலில் இரு துருவங்களாக இருந்து வந்த ஐக்கிய தேசிய கட்சியும் சுதந்திர கட்சியும் முதல் தடவையாக  கூட்டுச் சேர்ந்து அமைத்த ‘நல்லாட்சி’ அரசாங்க பரீட்சார்த்தம் படுதோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து இனவாத அணிதிரட்டலை முன்னெடுத்து ராஜபக்‌ஷர்களினால் மீண்டும் அதிகாரத்துக்கு வரக்கூடியதாக இருந்தது. அதற்குப் பிறகு இடம்பெற்றவை அண்மைக்கால வரலாறு.

ஆனால், அதைப் போன்றதொரு சூழ்நிலை இன்று இல்லை. முன்னென்றும் இல்லாத நாடாளுமன்ற பெரும்பான்மைப் பலத்துடன் தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்து ஒரு வருடம் மாத்திரமே கடந்திருக்கிறது. மகிந்த ராஜபக்‌ஷவை மையப்படுத்தி அன்று ‘நல்லாட்சி’ அரசாங்கத்துக்கு எதிராக வெற்றிகரமான பிரசாரங்களை முன்னெடுக்கக் கூடியதாக இருந்ததைப் போன்று இன்றைய அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரங்களுக்கு மக்களை அணிதிரட்டக்கூடிய ஒரு பலம்பொருந்திய அரசியல் தலைவர் எதிர்க்கட்சிகள் மத்தியில் இல்லை.

ஒரு வருட காலத்திற்குள் நடைபெற்ற மூன்று தேர்தல்களின் முடிவுகளின் அடிப்படையில் நோக்கும்போது எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரிய வாக்கு வங்கியைக் கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தியே விளங்குகிறது. மக்கள் ஆதரவை இழந்த மற்றைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதன் மூலமாக பெரிய அரசியல் அனுகூலம் தங்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்ற அபிப்பிராயத்தை அந்தக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச கொண்டிருக்கிறார் போன்று தெரிகிறது. அத்துடன், எதிர்க்கட்சிகள் கூட்டாக ஏற்பாடு செய்கின்ற பேரணியில் தனது தலைமைத்துவ ஆளுமைக்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்தும் அவர் சந்தேகத்தைக் கொண்டிருக்கிறார் போன்று தெரிகிறது.

ரணில் விக்கிரமசிங்கவுடனும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷவுடனும் ஒரே மேடையில் தோன்றுவதில் பிரமேதாசவுக்கு அசௌகரியம் இருக்கும் என்பது நிச்சயம். அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியையும் தனது கட்சியையும் இணைப்பதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகளையும் அவர் விரும்பவில்லை. அத்தகைய ஒரு இணைவு தனது அரசியல் வாழ்வுக்கு முடிவுகட்டி விடக்கூடும் என்று அவர் அஞ்சுகிறார். தனது எதிர்கால அரசியல் வாய்ப்புக்களை மனதிற்கொண்டே நகர்வுகளைச் செய்வதில் அக்கறை கொண்டிருக்கிறார்.

அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று அறிவித்திருக்கும் பிரேமதாச, கூட்டணிகளில் இணைந்து கொள்வதை தவிர்கிறார். அதனால் கணிசமானளவுக்கு மக்கள் ஆதரவைக் கொண்ட பெரிய எதிர்க்கட்சி இல்லாமல் எதிர்க்கட்சிகளின் முயற்சிகள் எந்தளவுக்கு வெற்றிகரமானதாக அமையும் என்ற கேள்வி எழுகிறது.

அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள் மத்தியில் கொள்கை ரீதியில் பெருமளவுக்கு ஒற்றுமையும் கிடையாது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மைச் சமூகங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகள் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணையும் முயற்சிகளில் பங்கேற்பதிலும் சிக்கல் இருக்கிறது. சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் குறைந்தபட்சமானவற்றைக் கூட ஆதரிக்காத உதய கம்மன்பில போன்ற அரசியல்வாதிகளின் ஈடுபாடு இதற்கு ஒரு முக்கியமான காரணம்.

தற்போதைய நிலைவரம் காரணமாக ஒன்றிணைந்து செயற்படவேண்டிய நிர்ப்பந்தத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. ஆனால், தேர்தல் ஒன்று வரும்போது இந்தக் கட்சிகள் ஒரு கூட்டணியாகச் செயற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு.

ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் பேரில் அரசியல்வாதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளை அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கு என்றும் ஜனநாயக விரோதமானது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதை மக்கள் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகும்.

அதேவேளை, அரசியலமைப்பு சர்வாதிகாரம் தொடர்பில் அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டும் இந்தக் கட்சிகள் அதற்கு அடிப்படைக் காரணமான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை (புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் வரை காத்திராமல்) அரசாங்கம் அதற்கு இருக்கும் நாடாளுமன்ற பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி அரசியலமைப்பு திருத்தம் ஒன்றின் மூலமாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மைப்படுத்தும் இயக்கத்தை முன்னெடுப்பதில் அக்கறை காட்டலாமே.

வீரகத்தி தனபாலசிங்கம்

https://maatram.org/articles/12394

மீண்டும் உருவாகும் தமிழீழ அச்சம்

2 days 10 hours ago

மீண்டும் உருவாகும் தமிழீழ அச்சம்

லக்ஸ்மன்

அரசாங்கம் நாட்டுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது பற்றிப் பேசிக்கொண்டு அதற்கான எதனையும் செய்யாமல் பாராமுகமாக இருந்து வருகின்றது. இருந்தாலும், தங்களது திட்டமிட்ட செயற்பாடுகளை நகர்த்துகிறது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தின் பின்னர் தமிழீழத்தைப் பற்றியும் பிரிவினை பற்றியும் தமிழர்களைவிடவும் சிங்களத் தரப்பினரே பேசிவருகின்றன.

கடந்த வாரத்தில், ஐ.நாவில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான பழிவாங்கல் தொடர்பாக ஒரு நிகழ்வு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பேசிய முன்னாள் கடற்படை அதிகாரி ஓய்வு பெற்ற ரியர் அத்மிரல் டி.கே.பி.தசநாயக்க, இலங்கையில்  அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி வடக்கு, கிழக்கை வேறாக்குவதே ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கம் என்று தெரிவித்திருக்கிறார்.

அதே நேரத்தில் தமிழீழம் என்ற வார்த்தையையும் பயன்படுத்தியிருக்கிறார். இவர்களுடைய நிகழ்வின் நோக்கம் இராணுவத்தினர், பாதுகாப்புத் தரப்பினருடைய நெருக்கடிகளுக்கானதாக இருந்தாலும் தமிழர்கள் அதிகாரம் பெறுவதைத் தடுப்பது தொடர்பிலேயே இருந்துள்ளது.

அதே நேரத்தில், தனியார் தொலைக்காட்சி ஒன்றின் கலந்துரையாடலில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் திலும் அமுனுகம  புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கையில் தனி இராச்சியம் ஒன்றை உருவாக்குவதற்காகவே நிதி சேகரித்துவருவதாகவும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் கட்டளைக்கமைய அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நிச்சயம் நடத்தும் என்றும் கூறியிருக்கிறார். 

இவர்கள் இருவருடைய கருத்துக்களின் அடிப்படையில், மாகாணசபைத் தேர்தல், 13ஆவது அரசியலமைப்புத் ஆகியவை உள்ளடங்கியிருந்தன. கடந்த வருடத்தில் நடைபெற்ற தேர்தல்களில் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் பேராதரவு தேசிய மக்கள் சக்திக்குக் கிடைத்திருந்தது. தமது பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வுகாணும் என்ற நம்பிக்கையிலேயே தமிழ் மக்கள் இந்த ஆதரவை வழங்கியிருந்தார்கள். 

பொறுப்புக்கூறல் விடயத்திலும் ஏதோ ஒரு வகையில் இந்த அரசாங்கம் நீதியை பெற்றுத் தரும் என்றும் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திச் செய்யும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் இதுவரை அமைந்திருக்கவில்லை.

ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளால் கொண்டுவரப்பட்ட பிரேரணையிலும் பல திருத்தங்களை மேற்கொண்ட அரசாங்கம் இறுதியில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை ஏற்க மாட்டோம் என்றே தெரிவித்திருந்தது.

தமிழர் தரப்பால் முழுமையான ஆதரவு பெற்ற தீர்மானமாக இல்லாத போதிலும் இந்தத் தீர்மானத்தினை தமிழீழம் அமைத்துக் கொடுக்கவிருக்கும் தீர்மானமாகவே பெரும்பான்மை சமூகம் பார்க்கிறது என்பதற்கான சில உதாரணங்களே அதிலும் அமுனுகம மற்றும் தசநாயக்க ஆகியோரது கருத்துக்களைக் கொள்ளலாம். 
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றார்.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரின்போது, 2022ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிப்பதற்கான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டபோது, அதனைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது உடனடியாகவே கடுமையாக எதிர்த்திருந்தது.

அது மாத்திரமல்லாமல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சாட்சியங்களைத் திரட்டும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் கட்டமைப்பையும் கடுமையாக எதிர்த்திருந்தது. பிரேரணை ஒரு வருட காலம் நீடிக்கப்படக் கூடாதென்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருந்தது.

ஏனெனில், தேர்தல் பிரசாரத்திலும் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இராணுவத்திற்கெதிரான நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளியோம் என்பதே அவர்களது உறுதிமொழியாகும்.

இந்த உறுதிமொழியில் பிழை ஏற்படுவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருபோதும் இடங்கொடுக்காது. பொறுப்புக்கூறல் விடயத்தில் எதிர்மறையான செயற்பாட்டையும் நிலைப்பாட்டையும் அரசாங்கம் கொண்டிருக்கிறது.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமல்போனோருக்கான அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் என்பவற்றின் செயற்பாடுகள் இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இப்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் ஒருபக்கம் வைக்கப்பட்டபடி அரசாங்கம் தன்னுடைய வேலைகளை நகர்த்திக் கொண்டிருக்கிறது. ஆனாலும், சிங்கள அடிப்படைவாதிகள் தங்களுடைய வேலைகளை முன்னெடுக்கின்றனர்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் நல்லிணக்கத்தினை கடந்த அரசாங்கங்கள் திணிக்க முயன்றது போன்றே காணப்படுகிறது. இவ்வாறான நிலையில், 13ஐ அமுல்படுத்துவதும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதும் தமிழ் மக்களுக்கு நிம்மதியை கொடுத்துவிடப் போவதில்;லை. இதனை உணர்ந்து கொள்ளத் தொடங்கியிருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் உருவாகிவருகிறது எனலாம்.

இந்த இடத்தில், நாட்டுக்குள் புலிகளின் மீளுருவாக்கம் என்ற சிங்களவர்களிடமுள்ள அச்சம் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையில் காலத்துக்குக் காலம் தூண்டிவிடப்படுவது வழமையாகும்.

ஒரு காலத்தில் தமிழர்கள் அனைவரையும் புலிகளாகவே சிங்களவர்கள் பார்க்கின்ற சூழல் ஏற்படுத்தப்பட்டிருந்தது, அது அச்சத்தின் பயனாக உருவானதே. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், அந்த அச்சம் ஓரளவுக்குத் தணிந்திருந்தாலும் முழுமையாக இல்லாமல் போய்விட்டதாக யாரும் கொள்ள வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுகிறன.

ஜே.வி.பி. தலைமையிலான ஆட்சி இலங்கையில் உருவானவுடன் போராட்ட இயக்கம் ஒன்றின் ஆட்சி தமிழர்கள் போராட்ட குணம் கொண்டவர்கள் அவர்களுடைய மனோநிலையைப் புரிந்து கொள்வார்கள் என்றே தமிழர் தரப்பு நம்பியிருந்தது.

குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில்  புலிகளின் மீளுருவாக்கம் குறித்தும் போராட்டம் பற்றியும் தெற்கில் கருத்துக்கள் உருவாக்கப்படுவது வழமையானதாகக் காணப்பட்டது. தற்போது நாட்டுக்குள் உருவாக்கப்படுகின்றவற்றுக்கு அப்பால் புலம்பெயர் நாடுகள் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் நகர்த்திவிடப்படுகின்றன.

திலும் அமுனுகமவின் கருத்து அவ்வாறானதொன்றே. பல தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தினால் அனுபவித்த கொடுமைகள் சிங்கள மக்களின் மனோநிலையில் அச்சத்தை விதைத்தே வைத்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது.

இந்த அச்சத்தைப் பயன்படுத்த அரசியல் தரப்பினர் வீருப்பங்கொள்வதில் தவறில்லை. என்றாலும், வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் நடைபெற்று வருகின்ற தமிழர்களின் அரசியல் ரீதியான முயற்சிகளுக்குத் தடையை ஏற்படுத்தும் வகையில் தற்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் பின்னப்படுகின்ற தவறான கற்பிதங்களில் ஒன்றாக திலும் அமுனுகம மற்றும் தசநாயக்க ஆகியோருடைய கருத்துக்கள் இருக்கலாம்.

இலங்கையின் சுதந்திரத்தையடுத்தே உருவான பாகுபாடு, பாரபட்சம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கையில் நல்லிணக்கம் சாத்தியத்துக்குட்படுத்தக் கூடியதா என்பதுதான் இந்த இடத்தில் கேள்வி.

2022ஆம் ஆண்டில். பௌத்த பிக்குகள் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எரித்தார்கள். அவர்களது அந்த எரிப்பானது 13ஐஅல்ல, ஒட்டுமொத்த நாட்டையே எரித்ததாகப் பேசப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்திய அக்கிராசன உரையில் பொலிஸ் அதிகாரமற்ற, ஒற்றையாட்சிக்குள்ளே அதிகாரப் பரவலாக்கல் என்ற அடிப்படையில், அதிகாரங்களைப் பரவலாக்கிப் புரையோடிப்போயுள்ள இந்த இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக்காண வேண்டும்.

2023 சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழர்களது இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று அறிவித்தார் ஆனால், அதனை நடத்தி முடிக்காமலே அவர் பதவி முடிந்து வீட்டுக்குச் சென்றார். தற்போது நிதிக் குற்ற விசாரணையில் இருக்கிறார்.

அதிகாரப் பரவலாக்கம் நடைபெறவில்லை. அரசியலமைப்பு சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. தேர்தல்கள் ஒழுங்கான நடைமுறையில் நடைபெறவில்லை. தமிழர்களின் புரையோடிப்போன பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வழி கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால், மீண்டும் மீண்டும் நாட்டுக்குள்ளும் புலம் பெயர் நாடுகளிலும் தமிழீழத்தை உருவாக்க முயற்சிகள் நடைபெறுகிறது என்ற கருத்துக்கள் மாத்திரம் பரப்பப்படுகின்றன.

இதற்கான காரணங்கள் சரியான முறையில் கையாளப்பட்டாலே தவிர இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படாது என்பது மாத்திரமே நிதர்சனமானது.

1948முதல் 30 ஆண்டுகள் அகிம்சை ரீதியான போராட்டம். 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுத ரீதியாக போராட்டம். 2009 மே மாதத்துக்குப் பின்னர் இராஜதந்திர ரீதியான முயற்சிகள் என நகர்ந்து கொண்டிருப்பதைத் தவிர, 
வேறு ஒன்றும் நடைபெறவில்லை.

1956ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம். அதன்மூலம் சிறி கொண்டுவரப்பட்டது.  1958, 1978, 1983களில், பாரிய இனக் கலவரங்கள் உருவாக்கப்பட்டன. 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக் கலவரத்தின்போது, தமிழர்கள் கடல் வழியாகத் தப்பிச் செல்லவேண்டிய நிலையும் உருவாகியிருந்தது. 

1983 இனக் கலவரத்தைத் தொடர்ந்தே ஆயுதப் போராட்டம் உருக்கொண்டது. வடகிழக்கில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்தார்கள். உக்கிரமடைந்த போர் நிலைமையில், 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டு 13வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு மாகாணசபை அதிகாரம் உருவாக்கப்பட்டது.

ஆனால், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் இன்றுவரை தயாராக இல்லை.இந்த நிலையில் தமிழர் தரப்பின் அரசியலில் வெறுத்துப் போன தமிழர்கள் ஆட்சியை மாற்றியும் அடிப்படையில் மாற்றம் ஏற்படாத நாட்டில் தமிழீழ அச்சம் விதைக்கப்படுவதில் எந்தத் தவறுமில்லை என்ற முடிவுக்கே வரமுடியும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மீண்டும்-உருவாகும்-தமிழீழ-அச்சம்/91-367277

ஐந்து நூற்றாண்டுகளுக்குள் மூன்று தடவைகள் பிடுங்கி எறியப்பட்ட சமூகம் – நிலாந்தன்.

4 days 5 hours ago

Muslims.jpg?resize=750%2C375&ssl=1

ஐந்து நூற்றாண்டுகளுக்குள் மூன்று தடவைகள்  பிடுங்கி எறியப்பட்ட சமூகம் – நிலாந்தன்.

கடந்த செப்டம்பர் மாதம் சுவிற்சலாந்தில் ஏற்பாடு செய்யப்பட்ட,இலங்கைத் தீவில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட சந்திப்பின்போது நடந்த ஒரு விடயத்தைப்பற்றி ஒரு தமிழ்க் கட்சிப் பிரமுகர் என்னிடம் சொன்னார்.அந்தச் சந்திப்பில் அரசுசார்பு பிரதிநிதியாக கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் ஒரு கட்டத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரித்து உண்மை காணப்பட வேண்டும் என்ற பொருள்படப் பேசியுள்ளார்.அப்பொழுது அங்கு அவரோடு வந்திருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளராகிய ஒரு தமிழர் சொன்னாராம்,பழைய காயங்களை திரும்பத்திரும்ப கிண்டிக்  கொண்டிருக்கக்கூடாது. அப்படிக் கிண்டினால் அவை ஆறாது என்ற பொருள்பட.

அவர்  தேசிய மக்கள் சக்திக்குள் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர்தான் இணைந்தவர்.அக்கட்சியின் சிங்களப் பிரதிநிதி உண்மையை விசாரிக்க வேண்டும் என்று கூற அவரோ,பழைய காயங்களைக்  கிண்டக் கூடாது என்று கூறுகிறார். அதன்மூலம் கட்சிக்குத் தன்னுடைய விசுவாசத்தை நிரூபிப்பதற்கு அந்தச் சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது அரசாங்கமே ஒரு தமிழ்ப் பிரதிநிதியூடாக அதைச் சொல்ல வைத்திருக்கலாம்.

இவ்வாறு தமது பழைய காயங்களை நினைவுகூர வேண்டும்;அவற்றுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் கேட்பதைப் போலவே முஸ்லிம் மக்களும் தங்களுடைய பழைய காயங்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்பதில் தவறு ஏதும் உண்டா ?

கடந்த 31 ஆம் திகதி யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில், வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வலிந்து அகற்றப்பட்டதை நினைவு கூரும் ஒரு நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டது.தந்தை செல்வா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கான அழைப்பிதழில் முஸ்லிம்கள் இடம்பெயர்ந்தார்கள் என்ற பொருள்பட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் வாதப்பிரதிவாதங்கள் நடந்தன.அந்தச் சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்த ஒரு தரப்பு இந்த வார்த்தைக் குழப்பம் காரணமாக அங்கு வரவில்லை.

அதேசமயம் நிகழ்வின் தொடக்கத்தில் உரை நிகழ்த்திய அந்த நிகழ்வை ஒழுங்குபடுத்திய தந்தை செல்வா அறக்கட்டளையின் தலைவராகிய இளங்கோவன்-இவர்  செல்வாவின் பேரன்-அவ்வாறு பொருத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு  தான் பயப்பட்டார் என்ற பொருள்பட பேசினார்.அந்த நிகழ்வை ஒரு விவகாரமாக மாற்றி அதனாலேயே சர்ச்சைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அவர்  கூர்மையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கலாம்  என்று  ஊகிக்கக் கூடியதாக இருந்தது.

அந்த நிகழ்வில் பேசிய யாழ் மாநகர சபையின் முஸ்லிம் பிரதிநிதி, முஸ்லிம்கள் அவ்வாறு அகற்றப்பட்டது இனச்சுத்திகரிப்பு  என்று கூறினார். அந்த வார்த்தையைத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் மத்தியில் சுமந்திரன் மட்டுமே பயன்படுத்தியிருப்பதாகவும் அங்கு சுட்டிக்காட்டினார்.

அதேசமயம் முஸ்லிம்களை மீளக் குடியமர்த்தும் விடயத்தில் தமிழ் அதிகாரிகளும் தமிழ் அரசியல்வாதிகளும் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள் என்று பொருள் கொள்ளத்தக்க விதத்தில் அவருடைய உரை அமைந்திருந்தது.

மேலும் அங்கு பேசிய மௌலவி சுபியான் முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்படுகையில் கிட்டத்தட்ட 650 கடைகள் முஸ்லிம்களிடம் இருந்தது என்றும், நகரப் பகுதியில் வணிகம் பெருமளவுக்கு முஸ்லிம்களின் கையில் தான் இருந்தது என்றும் கூறினார்.ஆனால் தாங்கள் மீளக்குடியமர்ந்த பொழுது தாங்கள் முன்பு குடியிருந்த கடைகள் பல கிடைக்கவில்லை என்றும் குறைபட்டுக் கொண்டார்.முன்பு முஸ்லிம்கள் வாடகைக்கு வைத்திருந்த கடைகளில் பல கோவில் அறக்கட்டளைகளுக்கு சொந்தமானவை.மீளக் குடியமர்ந்தபின் மீண்டும் அதே கடைகளை தாங்கள் கேட்டபோது அவை தங்களுக்குத் தரப்படவில்லை என்றும் அவர் குறைபட்டுக் கொண்டார்.

மேற்சொன்ன இருவருடைய கருத்துக்களையும் தொகுத்துப் பார்த்தால்,கடந்த 16 ஆண்டுகளிலும்  பௌதிகரீதியாக மீளக் குடியமற்றப்பட்டாலும்கூட மனோ ரீதியாக முஸ்லிம்கள் மீளக் குடியமரவில்லை என்பது தெரிந்தது.

அதுபோலவே முகநூலில் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு பகுதியினருடைய வாதப் பிரதிவாதங்களைப் பார்க்கும்போதும் இரண்டு சமூகங்களுக்கும் இடையே உள்ள இடைவெளி தெரிகிறது.

வடக்கில்,குறிப்பாக யாழ்ப்பாணத்தில்,முஸ்லிம்கள் தமது வாழிடங்களில் இருந்து அகற்றப்பட்டமை என்பது கடந்த ஐந்து நூற்றாண்டு காலப் பகுதிக்குள் மூன்று தடவைகள் இடம்பெற்றிருக்கிறது. முதலாவது தருணம் போத்துக்கீசர் காலம். 1614ஆம் ஆண்டு. போர்த்துக்கீசர்கள் இப்பொழுது யாழ்ப்பாண கோட்டை அமைந்திருக்கும் பகுதியில் ஒரு தேவாலயத்தை அமைக்க முற்பட்டார்கள். அந்தத் தேவாலயத்துக்கு முதலில் வெற்றி மாதா தேவாலயம் என்று பெயர் வைக்கப்பட்டது.பின்னர் அது புதுமை மாதா தேர்வாலயம் என்று அழைக்கப்பட்டது.அந்தத் தேவாலயத்தை அங்கே அமைக்க முற்பட்ட பொழுது அங்கு ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்களை போத்துக்கீசர்கள் அங்கிருந்து கட்டாயமாக அகற்றினார்கள்.

அடுத்த வெளியேற்றம் நல்லூரில் நிகழ்ந்தது. “யாழ்ப்பாண வைபவ மாலை”யில் அது தொடர்பான விபரங்கள் உண்டு. அந்த நூலின் 91ஆம் பக்கத்தில் அது கூறப்பட்டுள்ளது.நல்லூர் பகுதியில் வசித்து வந்த முஸ்லிம்களை அங்கிருந்து போகுமாறு இந்துக்கள் நிர்பந்தித்தார்கள்.காணிகளை தங்களுக்கு விற்குமாறு இந்துக்கள் நிர்பந்தித்தார்கள்.முஸ்லிம்கள் அசையவில்லை.இந்துக்கள் முஸ்லிம்களுடைய கிணறுகளில் பன்றி மாமிசத்தை போட்டார்கள். முஸ்லிம்கள் அந்த இடத்திலிருந்து வெளிக்கிட்டு நாவந்துறைக்கு அப்பால் சென்று குடியேறியதாக யாழ்ப்பாண வைபவ மாலையில் கூறப்பட்டுள்ளது. அதை ஒரு வரலாற்று நூலாக எடுத்துக் கொண்டு இந்த தகவலை நம்பலாமா என்ற கேள்வி உண்டு.ஆனால் அந்தப் பகுதியில் முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு. குறிப்பாக இப்போது இருக்கும் நல்லூர் கோவில் வளாகத்துக்குள் ஒரு முஸ்லிம் ஞானியின் சமாதி உண்டு.

மூன்றாவது சந்தர்ப்பம்,ஈழப் போராட்டத்தில் நிகழ்ந்தது.1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்30ஆம் திகதி,முஸ்லிம்கள் வடக்கிலிருந்து அகற்றப்பட்டார்கள். அந்தத் துயரத்தைத்தான் இப்பொழுது அவர்கள் நினைவு கூர்கிறார்கள்.

இங்கு கூறப்பட்ட மூன்று சந்தர்ப்பங்களிலும் முதலாவதாக போத்துக்கீசர்கள் முஸ்லிம்களை அகற்றினார்கள்.அதில் தமிழர்களுக்குப் பொறுப்பில்லை. இரண்டாவதாக இந்துக்கள் அகற்றினார்கள். மூன்றாவதாக விடுதலைப் புலிகள் இயக்கம் அகற்றியது. இதில் முதலிரு சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம்கள் இடமாறி வேறு இடத்தில் யாழ்ப்பாணத்துக்குள்ளேயே குடியேறினார்கள்.ஆனால் மூன்றாவது சந்தர்ப்பத்தில் அவர்கள் வேரை அறுத்துக்கொண்டு வடக்குக்கு வெளியே சிதறிப் போனார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கம் அந்த முடிவைப் பின்னர் மறு பரிசீலனை செய்து முஸ்லிம்களை வடக்குக்குள் வர அனுமதித்தது.அப்பொழுது முஸ்லிம்களின் தெரிந்தெடுக்கப்பட்ட தலைவராக இருந்த ரவுப் ஹக்கீமோடு விடுதலைப்புலிகள் இயக்கம் ஓர் உடன்படிக்கையை எழுதிக்கொண்டது. அந்த உடன்படிக்கைக்குப் பின் ஈழப் போர் பரப்பிற்குள் தமிழ் தரப்பினால் முஸ்லிம்கள் அநேகமாகக் கொல்லப்படவில்லை.

தமிழ் மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக சிங்கள அரசியல் சமூகம் பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்கின்றார்கள். முஸ்லிம்களும் அவ்வாறு தமிழ் மக்களிடம் கேட்பதில் தவறில்லை.

முஸ்லிம்களை வடக்கிலிருந்து வெளியேற்றிய அமைப்பு அந்த முடிவை மீளப் பரிசீலித்து மாற்றிக் கொண்டது.ஒருவிதத்தில் அங்கிருந்து பொறுப்புக்கூறல் தொடங்குகின்றது. இப்பொழுது உள்ள தமிழ் அரசியல் சமூகம் அந்தப் பொறுப்புக் கூறலை அடுத்தடுத்த கட்டத்துக்கு வளர்த்துச் செல்ல வேண்டும்.

வடக்கில் முஸ்லிம்கள் அகற்றப்பட்டமை என்பது வெற்றிடத்தில் நிகழவில்லை. அது கிழக்கில் நடந்தவைகளின் விளைவு. தந்தை செல்வா கலையரங்கில் 31 ஆம் திகதி நடந்த நிகழ்வில் ஒளிப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.அந்த ஒளிப்படங்கள் ஈழப் போர்க்களத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட துயரமான அனுபவங்களைச் சித்தரிப்பவை. ஆனால் கிழக்கில் போய்க் கேட்டால்,தமிழ் மக்களும் அதுபோல ஆயிரக்கணக்கான ஒளிப்படங்களை காட்சிக்கு வைப்பார்கள்.

இங்கே உற்றுக்கவனிக்க வேண்டிய வேறுபாடு  ஒன்று உண்டு.தமிழ் முஸ்லிம் உறவுகளைப் பொறுத்தவரை வடக்கின் களயதார்த்தம் வேறு.கிழகின் களயதார்த்தம் வேறு.ஆனால் கிழக்கில் நடப்பவற்றின் விளைவுகள்தான் வடக்கைப் பாதிக்கின்றன.கிழக்கில் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட  முஸ்லிம் துணைப் படைகளின் செயற்பாடுகளைக் குறித்து தமிழ் மக்களிடம் ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் உண்டு.

தமிழ் முஸ்லிம் ஐக்கியம் எனப்படுவது வடக்கிலிருந்து அல்ல,கிழக்கிலிருந்து தான் கட்டியெழுப்பப்பட வேண்டும்.வடக்கில் மட்டும் அதனைக் கட்டியெழுப்ப முடியாது. தமிழ்மக்கள் தமது தாயகம் என்று கருதும் நிலப்பரப்பிற்குள் தமிழ் முஸ்லிம் உறவுகள் என்று வரும்பொழுது ஒப்பீட்டளவில் வடக்கை விடவும் கிழக்கில்தான் சவால்கள் அதிகம்.கிழக்கில்தான் இடைவெளிகள் அதிகம். இப்பொழுதும் கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் வாக்கு வங்கிக்குள்ளும் தமிழ் தேசியத்துக்கு எதிராகவும் வடக்கிற்கு எதிராகவும் கிழக்குமைய அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளின் வாக்கு வங்கிக்குள்ளும் கணிசமான தொகை முஸ்லிம் எதிர்ப்பு வாக்குகள் உண்டு. எனவே தமிழ்-முஸ்லிம் ஐக்கியம் எனப்படுவது கிழக்கில் எப்பொழுதும் சவால்கள் மிகுந்ததுதான். கடந்த 31 ஆம் திகதி தந்தை செல்வா கலையரங்கில் நடந்த நிகழ்வில் கருத்துரைகளுக்கு பின் நடந்த கலந்துரையாடலுக்கு வசதிப்படுத்தினராகச் செயற்பட்ட, கிழக்கிலிருந்து வந்த ஒரு தமிழ்ச் செயற்பாட்டாளர் அதைச் சுட்டிக்காட்டினார்.

எனவே தமிழ் முஸ்லிம் உறவுகளைப் பொறுத்தவரை இரண்டு தரப்புமே கடந்த காலத்துக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.குறிப்பாக, அனைத்துலக  சமூகத்தையும் சிங்கள சமூகத்தையும் தமக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்கும் தமிழ்மக்கள்,தமது தாயகப் பரப்பிற்குள் வாழும் எண்ணிக்கையால் சிறிய சமூகத்துக்குப் பொறுப்புக்கூற வேண்டும். பண்பாட்டுச் செழிப்பு மிக்க தமிழ் இனத்தின் அரசியல் நீதி எது என்பதை தமிழ் மக்கள் முதலில் காட்டவேண்டிய இடம் அது.

https://athavannews.com/2025/1451821

கட்புலனாகா அரங்கு கட்புலனாகாத போர்? - நிலாந்தன்

4 days 5 hours ago

கட்புலனாகா அரங்கு கட்புலனாகாத போர்? - நிலாந்தன்

facebook_1761847357963_73897234208973097

facebook_1761844014642_73897093979917404

கடந்த 30ஆம் திகதி சுகததாச உள்ளரங்கில் அரசாங்கத்தின் போதைப் பொருளுக்கு  எதிரான ஒரு செயல்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரமுகர்கள் அமர்ந்திருந்த அரங்கிற்குள் திடீரென்று ஒருவர் மேடையை நோக்கி வேகமாக நகரத் தொடங்கினார். அங்கிருந்த பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரிகள் அவரைத் தடுக்க முயற்சித்தாலும் அவர் மேடையில் ஏறி விட்டார். உணர்ச்சிக் குழம்பாக காணப்பட்ட அந்த நபர் மேடையில் நின்று அரங்கில் இருந்தவர்களை நோக்கி அழுதழுது கதைக்கத் தொடங்கினார். இல்லை,நடிக்கத் தொடங்கினார் என்றுதான் சொல்லலாம். ஏனென்றால்,அது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒரு நாடகம். கண்ணுக்குப் புலனாகாத அரங்கு “இன்விசிபிள் தியட்டர்” என்று அதை அழைப்பார்கள். போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்ட தனிநபர் நாடகம் அது. அதில் நடித்தவர் பிரேம் ஜெயந்த கபுகே என்ற கலைஞர்.

நல்ல விஷயம். நாடு முழுவதுக்குமான ஒரு முக்கியமான வேலைத் திட்டத்தை அவ்வாறு கலை உணர்வோடு அணுகியதும் அரங்கில் கூடியிருந்தவர்கள் எதிர்பாராத விதத்தில் அதிர்ச்சியூட்டும் ஒரு கலை நிகழ்ச்சி மூலம் விழிப்பை ஏற்படுத்தியதும் பாராட்டத்தக்கவை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இதயமாக இருக்கும் ஜேவிபி ஓர் அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில் அது மக்கள் மத்தியில் எப்படிக் கருத்தை கொண்டுபோக வேண்டும் என்ற விடயத்தில் தெளிவாகச் செயல்படுகிறது.

போதைக்கு எதிரான போரை அனுர கலை உணர்வோடு தொடங்கியிருக்கிறார். ஆனால் போதைக்கு எதிரான யுத்தம் ஒரு கலையா?

நிச்சயமாக இல்லை. அது ஈவிரக்கம் இல்லாத ஒரு கொலை நிகழ்ச்சிச் திட்டம் என்பதற்கு அகப்பிந்திய உதாரணம் பிரேசில். பிலிப்பைன்ஸ்,சில லத்தீன் அமெரிக்க நாடுகள் போன்றவற்றிலும் நிலைமை அதுதான். ஏனென்றால் போதையை ஒழிப்பது என்பது ஒரு வகையில் போர்தான். நிச்சயமாக அது இன்விசிபில் தியட்டர் அல்ல.

அப்படி ஒரு போரைச் செய்ய அனுர தயாரா? அந்தத் தொடக்க நிகழ்வில்  அவர் கூறுகிறார்… “நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன், நாடே ஒன்றுபட்டு. இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக, தனிப்பட்ட ஒருவருக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்தாலும், தனியாக முடியாது. அரசாங்கத்தால் மட்டும் முடியாது. பொலிஸால் மட்டும் முடியாது. அரச கட்டமைப்பால் மட்டும் முடியாது. அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதுதான் சந்தர்ப்பம்…..”

அவருடைய உரையின்படி  போதைக்கு எதிரான போராட்டத்தை  முழு நாட்டுக்கும் உரியதாக அவர் வர்ணிக்கிறார். அதாவது தமிழ்ப் பகுதிகளையும் இணைத்து நாட்டை ஒரு முழு அலகாகக் கருதி அந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

ஆனால்,கடந்த 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய கஜேந்திரக்குமார் தமிழ்ப் பகுதிகளில் உள்ள வேறு ஒரு யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் வடக்கில் விதைத்ததை தெற்கில் அறுவடை செய்கிறது என்ற பொருள்பட அவர் உரையாற்றினார். அதாவது தமிழ் மக்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனையை ஊக்குவித்து, போதைப்பொருள் வலையமைப்பை உருவாக்கி, தமிழ் மக்களைப் போதையில் மிதக்க விடுவது என்பது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் ஒரு நிகழ்ச்சி நிரல் என்று கஜேந்திரக்குமாரும் உட்பட பெரும்பாலான தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் கடந்த 16 ஆண்டுகளாகக் கூறிவருகிறார்கள்.

2009க்குப்பின் தமிழ் இளையோர் இலட்சியவாதத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டு திரளாக மாறுவதை தடுப்பதற்கு அவர்களைப் போதையால் திசைதிருப்பி போதையில் மூழ்கடிப்பதே அந்த அரசியல் நிகழ்ச்சி நிரல் ஆகும். அதன்மூலம் ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் இனிமேலும் தலையெடுக்க முடியாதபடிக்கு அரசியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்படும். அந்த அடிப்படையில் பார்த்தால் வடக்கு கிழக்கில் போதைப் பொருள் வலையமைப்பு எனப்படுவது  ஒரு வகையில் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் இன்விசிபிள் யுத்தத்தின்-கட் புலனாகா யுத்ததின் ஒரு பகுதி தான்.

facebook_1761922821305_73900399370925124

கஜேந்திரக்குமார் அதனைத் தனது நாடாளுமன்ற உரையிலும் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்களிலும் தெரிவித்திருக்கிறார். ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கூறியதாக ஒரு தகவலை அவர் சுட்டிக்காட்டுகிறார். பெருமளவு போதைப் பொருட்கள் வடக்குக்கிழக்கு கடல் வழியாகவே நாட்டுக்குள் வருவதாக அந்த மேஜர் ஜெனரல் கூறியிருக்கிறார்.

ஆனால் வடக்கு கிழக்கின் நீண்ட கடல் எல்லைகளை முழுக்க முழுக்க ஸ்ரீலங்கா கடற்படை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது. அப்படியிருக்க அவர்களை மீறி எப்படிப் போதைப் பொருள் உள்ளே வருகிறது? அதுபோலவே போதைப்பொருள் குற்றவாளிகளைப் பற்றிய தகவல்களை மக்கள் போலீசாருக்கு வழங்கும்பொழுது அத்தகவல் உடனடியாகவே குற்றவாளிகளுக்குச் சென்றுவிடுகிறது. கைது செய்யப்படுகின்ற குற்றவாளிகள் பின்னர் விடுவிக்கப்படுகிறார்கள். போன்ற குற்றச்சாட்டுக்கள் தமிழ் பகுதிகளில் நடக்கின்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன. முன்னாள் வடமாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ், இந்நாள் ஆளுநர் வேதநாயகன் போன்றவர்கள் அதைக் குறித்து ஏற்கனவே பிரஸ்தாபித்திருக்கிறார்கள்.

அண்மையில் மாற்றம் அறக்கட்டளை நடத்திய ஒரு நூல் வெளியீட்டு விழாவிலும் ஆளுநர் வேதநாயகன் அதைச் சுட்டிக்காட்டி பேசியிருந்தார். மாற்றம் அறக்கட்டளை எனப்படுவது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரேயொரு அரசு சாராத போதைப்பொருள் புனர் வாழ்வு மையம் ஆகும்.

நீங்கள் வடக்கு கிழக்கில் விதைத்தவற்றைத்தான் தெற்கில் அறுவடை செய்கின்றீர்கள் என்ற பொருள்பட கஜேந்திரக்குமார் கடந்த 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் உரை ஆற்றினார். அதைத்தான் முகநூலில் ஒரு மருத்துவர் எழுதினார் “வினை விதைத்தவன் வினையை அறுக்கிறான்” என்று.

எனவே தமிழ்ப் பகுதிகளில் உள்ள அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், அரசாங்கத்தின்  ஆளுநர்கள், போதையில் மூழ்கிய நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள்,ஊடகவியலாளர்கள்…போன்றவர்கள் தரும் தகவல்களின்படி தமிழ்ப்பகுதிகளில் போதைப் பொருள் வலையமைப்பு எனப்படுவது கட்டமைப்புசார் இன அழிப்பின் ஒரு பகுதிதான். இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு இன்விசிபிள் போர்.

இந்தப் போரை அனுரவால் முடிவுக்கு கொண்டு வர முடியுமா? எந்தப் படைக் கட்டமைப்பையும் போலீஸ் கட்டமைப்பையும் வைத்துக்கொண்டு தெற்கில் அவர் போதையை ஒழிக்கப்போவதாக கூறுகிறாரோ,அதே கட்டமைப்புகள்தான் தமிழ்ப் பகுதிகளில் போதைப் பொருள் வலையமைப்பைப் பேணுகின்றன என்று தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே முழுநாட்டையும் இந்த விடயத்தில் ஒர் அலகாகக் கருதி தெற்கில் போதை வலை பின்னலை முறியடிப்பது போல வடக்கிலும் அதை முறியடிக்க முடியுமா?

வடக்கில் அவ்வாறு செய்வது என்று சொன்னால் அனுர முப்படைகளின் தளபதியாக எந்தெந்தக் கட்டமைப்புகளுக்குத் தலைமை தாங்குகின்றாரோ அதே கட்டமைப்புகளுக்கு எதிராக அந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியிருக்கும். அப்படிப்பார்த்தால் தேசிய மக்கள் சக்தி  வாக்களித்த மாற்றத்தை அதன் மெய்யான பொருளில் தமிழ் மக்களுக்குக் காட்டுவதற்குரிய ஒரு சோதனைக் களமாக அது அமையுமா?

அல்லது இது எதிர்க்கட்சிகளைத் தலையெடுக்க விடாமல் முடக்கும் அல்லது தற்காப்பு நிலைக்குத் தள்ளும் ஒரு நடவடிக்கையாக முடிந்து விடுமா?

facebook_1761844014642_73897093979917404

கடந்த சில மாதங்களாக அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம், பாதாள உலகக் குழுக்களைக் கைது செய்யும் நடவடிக்கை போன்றன எதிர்க்கட்சிகளைப் பெருமளவுக்கு தற்காப்பு நிலைக்கு தள்ளிவிட்டுள்ளன. ஒருபுறம் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதியும் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள்,அரச அதிகாரிகள்,முன்னாள் அமைச்சர்கள் என்று உயர் பதவி நிலைகளில் இருந்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தியிருக்கிறது. இன்னொருபுறம் பாதாள உலகக் குற்றவாளிகள், போதைப்பொருள் குற்றவாளிகள் என்று பெருந்தொகையானவர்களைக் கைது செய்து வருகிறது.

பாதாள உலகம் எங்கேயோ ஓரிடத்தில் அரசியல்வாதிகளோடும் கட்சிகளோடும் தொடர்புற்றிருப்பதாகவே தெரிகிறது. எனவே இந்த நடவடிக்கைகள் யாவும் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு கட்சிக்கு அல்லது அரசியல்வாதிக்கு எதிரானவைகளாகத்தான் தெரிகின்றன. இதன்மூலம் ஏனைய கட்சிகள் யாவும் எங்கேயோ ஓரிடத்தில் குற்றக் கும்பல்களோடு தொடர்புடையவை என்ற ஒரு தோற்றம் மிகவும் கச்சிதமாகக் கட்டியெழுப்பப்படுகின்றது. இது அதன் தர்க்கபூர்விளைவாக தேசிய மக்கள்சக்தி அரசாங்கமானது சுத்தமானது, ஆனால் அதற்கு எதிரான எதிர்க்கட்சிகள் பெரும்பாலானவை குற்றக் கும்பல்களோடு தொடர்புடையவை என்ற ஒரு அரசியல் தோற்றத்தை கட்டியெழுப்புவதற்கு உதவுகின்றது. இதனால் எதிர்க்கட்சிகள் பதட்டம் அடைகின்றன; பெருமளவுக்குத் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன.

இவ்வாறு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்ட எதிர்க்கட்சிகள் தவிர்க்க முடியாமல் ஒன்றுசேர வேண்டிய ஒரு தேவை; நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. “கூட்டு எதிரணியினரின் நுகேகொடைக் கூட்டம் வெற்றியளிக்கவேண்டும் எனப் பிராத்திக்கிறேன். ஏனெனில், பொதுமக்களுக்கு பயனற்ற ஒன்றாக அது உள்ளது. மேற்படி கூட்டத்தை நடத்துவதால் பாதாள உலகக் கோஷ்டியையோ அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தையோ தடுக்க முடியாது. எனவே அது பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் ஒரு விடயமாக இருக்காது” என்று அமைச்சர் லால்காந்த கூறியிருப்பதும் அதைத்தான். எனவே அரசாங்கம் போதை விலையமைப்பையும் பாதாள உலகம் வலையமைப்பையும் முழுமையாக ஒடுக்குமோ இல்லையோ இப்போதைக்கு எதிர்க்கட்சிகளைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளியிருக்கின்றது.

ஆனால் தமிழ்ப் பகுதிகளில் அரசியல் யதார்த்தம் அதுவல்ல. சுகததாஸ உள்ளரங்கில் போதை ஒழிப்புத் திட்டத்தை கட்புலனாகா அரங்கின்மூலம் கவர்ச்சியாகத் தொடக்கி வைப்பது வேறு. தமிழ்ப் பகுதிகளில் தமிழ் அரசியல்வாதிகள் குற்றஞ்சாற்றுவதுபோல கட்டமைப்பு சார் இன அழிப்பின் ஒரு பகுதியாகத் தொடரும் கட்புலனாகாப் போரை நிறுத்துவது வேறு. ஏனென்றால் இங்கு அனுர போர் புரிய வேண்டியது முப்படைகளின் தளபதியாக தான் தலைமை தாங்கும் கட்டமைப்புக்கும் எதிராகத்தான்.

https://www.nillanthan.com/7885/

'பலவீனமான நிர்வாகமே' பங்களாதேசம், நேபாளம், இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்குக் காரணம் - இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்

4 days 6 hours ago

02 Nov, 2025 | 12:20 PM

image

(லியோ நிரோஷ  தர்ஷன் )

ஒரு நாட்டின் கட்டமைப்பிலும், பாதுகாப்பிலும், அதன் இலக்குகளை அடைவதிலும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதிலும் அரச நிர்வாகம் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது  என தெரிவித்த  இந்திய தேசிய பாதுகாப்பு  ஆலோசகர் அஜித் தோவல்,  பலவீனமான அரச நிர்வாகமே இலங்கை, பங்களாதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் ஆட்சி மாற்றத்திற்கு காரணம் என்றும் குறிப்பிட்டார். 

ராஷ்டிரிய ஏக்தா திவாஸ் (தேசிய ஒருமைப்பாட்டு தினம்) நிகழ்வை முன்னிட்டு  நேற்று உரையாற்றிய அஜித் தோவல், நிர்வாகத்தில் வளர்ந்து வரும் சவாலாக, பொதுமக்களைத் திருப்திப்படுத்த வேண்டியதன் அவசியம் அதிகரித்து வருவதை எடுத்துரைத்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடனும், இலட்சியத்துடனும் உள்ளனர். அவர்கள் அரசிடம் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர், மேலும் அவர்களைத் திருப்திப்படுத்துவதில் அரசுக்கு முக்கிய அக்கறை உள்ளது.   

பலவீனமான நிர்வாகமே ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியமான காரணம் என்று விவரித்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், வங்கதேசம், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் நிறுவன ரீதியற்ற வழிமுறைகள் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை உதாரணமாகக் குறிப்பிட்டார்.

"ஒரு தேசத்தின் வலிமை அதன் நிர்வாகத்தில் உள்ளது. அரசு நிறுவனங்கள் மூலம் செயல்படுகிறது, மேலும் தேசத்தைக் கட்டமைக்கும் பணியில், இந்த நிறுவனங்களை உருவாக்கி, வளர்ப்பவர்களே மிக முக்கியமானவர்கள்," என்று அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாக மாதிரியைப் பாராட்டிய அவர், "இந்தியா ஒரு குறிப்பிட்ட வகையான நிர்வாகம், ஒரு குறிப்பிட்ட வகையான அரசு மற்றும் சமூக அமைப்பிலிருந்து, உலகளாவிய ஒழுங்கில் அதன் இடத்திலும் கூட ஒரு சுற்றுப்பாதை மாற்றத்தைக் கண்டு வருகிறது," என்றார்.

மேலும், தற்போதைய அரசாங்கம் நிறுவனமயமாக்கப்பட்ட ஊழலைக் கட்டுப்படுத்த கொண்டு வந்த நிறுவன மாற்றங்களையும் அவர் எடுத்துரைத்தார், மேலும் அதிக நடவடிக்கைகள் வரலாம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஒரு மாற்றம் வரும்போதெல்லாம், மிக முக்கியமான விஷயம், உங்களின் பார்வையில் தெளிவு இருக்க வேண்டும். தூசியினாலும் புயல்களினாலும் கண்மூடித்தனமாகிவிடாமல், சத்தத்தினாலும் அச்சுறுத்தல்களினாலும் அச்சுறுத்தப்படாமல், துன்பங்களினால் அடங்கிவிடாமல் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

வல்லபாய் படேலின் வாழ்க்கையை இதற்கு உதாரணமாகக் காட்டிய அவர், சுதந்திரப் போராட்ட வீரராக மகாத்மா காந்திக்கும் அவரது அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவளித்ததுடன், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து நாட்டை ஒன்றிணைப்பதில் படேல் ஆற்றியப் பங்கை எடுத்துரைத்தார்.

நல்லாட்சியின் முக்கிய பகுதியாக, பாதுகாப்பு, பாதுகாப்பு உணர்வு, மற்றும் பெண்களுக்குச் சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல் உணர்வை வழங்குவதன் அவசியத்தை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எடுத்துரைத்தார்.

"நவீன புதிய உலகில் நல்லாட்சிக்கு பெண்களுக்கு அதிகாரமளித்தல் அவசியம். மேலும், நல்ல சட்டங்கள், நல்ல கட்டமைப்புகள் மற்றும் நல்ல அமைப்புகள் இருப்பது மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, அவற்றை பயனுள்ள முறையில் செயல்படுத்துவதும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார்.

மேலும், நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் அவசியத்தை தோவல் வலியுறுத்தினார். "அதிகரித்த வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்களுக்குச் சேவை வழங்குதலை உறுதி செய்யும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும், பின்னர் இணைக்க வேண்டும்."

"சைபர் அச்சுறுத்தல்கள் அல்லது தொழில்நுட்பத்தால் ஏற்படும் பல அச்சுறுத்தல்கள் போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/229278

எதிர்க்கட்சிகளின் பலவீனமும் அரசாங்கத்தின் அணுகுமுறையும்!

4 days 16 hours ago

எதிர்க்கட்சிகளின் பலவீனமும்

அரசாங்கத்தின் அணுகுமுறையும்!

*தமிழ்த்தேசியக் கட்சிகளை தவிர்த்து, தமிழர் தரப்பில் வேறு பிரதிநிதிகளுடன் பேசும் திட்டம் வகுக்கப்படுகிறதா?

*எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு போராட்டம் பிசுபிசுத்தால், அநுரவின் நகர்வு மேலோங்கும்

*ரணில் – மகிந்த ஊழல் - மக்கள் போராட்ட முன்னணியின் கருத்து நியாயமானது...

------ -----

அநுர அரசாங்கத்துக்கு எதிராக கருத்திட்டு வரும் பிரதான எதிர்க்கட்சிகள் பலவீனம் அடைந்துள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு நுகேகொடை நகரில் நடைபெறவுள்ளது.

இந்த எதிர்ப்பு போராட்டத்தில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பங்கெடுக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா அறிவித்திருந்தார்.

அதேபோன்று --

மக்கள் போராட்ட முன்னணியும் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் பங்குகொள்ள முடியாது என்று அறிவித்துள்ளது.

அதாவது --

இலங்கைத்தீவை ஊழல் மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்களுக்கு உள்ளாக்கிய முன்னாள் ஆட்சியாளர்களுடன் இணைந்து பயணிக்க முடியாது என்பது அவர்களின் வாதமாக உள்ளது.

மக்கள் போராட்ட முன்னணியின் மறுப்பில் நியாயம் உள்ளது.

ஏனெனில் --

ரணில், சஜித், ராஜபக்ச என்ற அரசியல் தலைவர்களின் கீழ் செயற்படும் கட்சிகள் முன்னர் ஆளும் கட்சியாக இருந்தபோது ஒட்டுமொத்த இலங்கைத்தீவின் அரசியல் - பொருளாதாரம் ஆகியவற்றுக்கு கேடுவிளைவித்தனர்.

பொருளாதார நெருக்கடி எழுவதற்கும் இவர்களது கட்சிகளின் 76 வருட ஆட்சிதான் காரணம். இன முரண்பாட்டுக்கு உரிய தீர்வு ஏற்படாமல் வெறுமனெ இனவாதம் பரவுவதற்கும் இவர்கள் தான் காரணம்...

இப் பின்னணியில் ---

மக்கள் போராட்ட முன்னணி அவர்கள் நடத்தும் எதிர்ப்பு போராட்டத்தில் பங்குகொள்ள முடியாது என்பது நியாயமானது. அவர்களுடைய அரசு எதிர்ப்பு போராட்டமும் தனித்துவமானது.

ஆனால் --

சஜித், ரணில், ராஜபக்ச என்ற தலைவர்களின் கீழ் செயற்படும் கட்சிகள், தமக்குள் முரண்பட்டுக் கொண்டு அநுர அரசாங்கத்தை எதிர்க்க முடியாது. மக்களுக்கும் இக் கட்சிகளின் கடந்தகால அரசியல் சூழ்ச்சிகள் - ஊழல்கள் தெரியும்.

இப் பின்னணிகளை தமக்குச் சாதகமாக்கி, 2015 இல் மைத்திரி - ரணில் அரசாங்கத்தில் தயாரிக்கப்பட்ட 'ஏக்கிய இராச்சிய' என்ற புதிய அரசியல் யாப்பு மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதா இல்லையா என்ற இரு வகையான அணுகுமுறைகளுடன் அநுர அரசாங்கம் புதிய வியூகம் ஒன்றை வகுத்து வருகின்றது.

இந்த நிலையில் --

பிரதான எதிர்க்கட்சிகள் தமது பலவீனத்தை மீண்டும் வெளிப்படுத்தி வருகின்றன.

ஆனாலும், மாகாண சபைத் தேர்தல்கள் பற்றிய விடயத்தில் எதிர்க்கட்சிகள் குறிப்பாக சஜித், ரணில், மகிந்த ஆகியோர் ஏறத்தாள அநுர அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் ஒத்துப் போகும் தன்மை உண்டு.

ஆனால் சில நாட்களுக்கு முன்னர், மாகாணசபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகள் கடந்த வாரம் முதல் கோர ஆரம்பித்துள்ளன.

ஆனாலும் ---

இந்தக் கோரிக்கை பலமானதாக இல்லை.

கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர, ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளை தம் பக்கம் எடுக்கக் கூடிய முறையில் சும்மா ஒப்பாசாரத்துக்காக விடுக்கப்படுகின்ற கோரிக்கையாகவே இதனை அவதானிக்க முடியும்.

இப்பின்னணியில் --

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான மையமாக விளங்கும் ஜேவிபி கொழும்பில் தொடராக நடத்தி வரும் உரையாடலில், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவெடுத்திருப்பதாக தெளிவாக தெரிகிறது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் 13 ஆவது திருத்தச் சட்டம் மூலமான மாகாணசபைத் தேர்தல்களை நடத்துமாறு கோரினாலும், கொழும்பை மையமாக் கொண்ட, எதிர்தரப்பு சிங்கள அரசியல் கட்சிகள் அதற்கு பெரிய அளவில் ஆதரவு வழங்கும் சாத்தியம் இல்லை என்பது, ஜேவிபிக்கும் தெரியாமல் இல்லை.

புதிய அரசியல் யாப்பின் ஊடாகவே இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காண முடியும் என ஜேபிவி பலமாக நம்புகிறது.

அநுர அரசாங்கத்தின் அடுத்த வருடத்துக்கான செயற்பாடுகள் குறித்து ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள், குறிப்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத தேசிய சபை உறுப்பினர்கள் தீவிரமாக பரிசீலித்து வரும் அதேநேரம், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு போராட்டங்கள் பற்றி பெரிய அளவில் அவர்கள் அச்சம் கொண்டதாக கூற முடியாது.

ஆனால் --

மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் மேலும் ஒத்திவைப்பது குறித்தே அதிகளவில் அவர்கள் சிந்திக்கின்றனர்.

இந்த விவகாரங்கள் உள்ளிட்ட ஒரு வருட ஆட்சியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், எதிர்கொண்ட சவால்கள், எதிர்காலத்தில் நகர்த்தவுள்ள அரசியல் வியூகங்கள் பற்றி ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையில் தேசிய சபை உறுப்பினர்கள் மிகத் தீவிரமாக உரையாடுகின்றனர்.

அதேநேரம் --

தமிழ்த்தேசிய கட்சிகள், குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வகுக்கும் தமிழர் தரப்பு நிலைப்பாடுகள் பற்றியும் ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்திருக்கின்றனர்.

குறிப்பாக -

தமிழ்த் தேசியக் கட்சிகள் தவிர்ந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள சிவில் சமூக பிரதிநிதிகள், கல்வியாளர்கள் போன்றவர்களை அழைத்து இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேசும் திட்டம் ஒன்று ஜேவிபியிடம் இருப்பதாக தெரிகிறது.

அதேநேரம் --

கடந்த செப்ரெம்பரில் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற உரையாடலின் தொடர்ச்சியாக மற்றொரு உரையாடலை நடத்தி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தமிழர் பிரதிநிதிகள் என்ற ஒரு கட்டமைப்பை தமக்கு ஏற்ற மாத்திரி உருவாக்கும் திட்டமும் இருப்பதாக அறிய முடிகிறது.

ஆனாலும் --

சுவிஸ்லாந்தில் நடந்த உரையாடலில் பங்குபற்றிய தமிழ்த்தரப்பின் கருத்துக்களுடன் ஒத்துப்போக முடியாது என ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் தெளிவாக கூறுகின்றனர்.

இதன் காரணமாக சுவிஸ்லாந்திலோ அல்லது வேறொரு நாட்டிலோ மற்றொரு சந்திப்புக்கு அதாவது விரிவான உரையாடலுக்கு அநுர அரசாங்கம் இணங்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூற முடியாது.

ஆனாலும் --

மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல், புதிய யாப்பு எனவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றி நாடாளுமன்ற ஆட்சி முறையை கொண்டு வரும் ஏற்பாடும் அடுத்த ஆண்டு சூடு பிடிக்கும் என ஜேபிவி தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டம் வெற்றியளிக்காமல் பிசுபிசுக்குமானால், அநுர அரசாங்கத்தின் மேற்படி இரண்டு அணுகு முறைகளும் 2026 ஆம் ஆண்டு வெற்றியளிக்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாகவே உள்ளன.

குறிப்பாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் புதிய யாப்பு அதாவது 'ஏக்கிய இராச்சிய' என்ற அந்தக் கதை நீடித்துச் செல்லக் கூடிய சூழலும், அதன் மூலம் தமிழரசுக் கட்சி தமது செல்வாக்கை நிலை நிறுத்தக் கூடிய வாய்ப்பும் உண்டு.

புதிய யாப்பு விவகாரம் குறித்து தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அத்துடன் --

வடக்கு கிழக்கு இணைப்பு, சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்றெல்லாம் தமிழர் தரப்பு பேசி வருவதை தடுக்கும் திட்டங்களும் வடக்கு கிழக்கில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தமிழ் உறுப்பினர்கள் மூலம் காய் நகர்த்தப்பட்டு வருகிறது.

ஜெனிவா மனித உரிமை சபையின் தீர்மானத்தில் உள்ள பல விடயங்களை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே நிறைவேற்றி வருவதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பில் உள்ள சுவிஸ்லாந்தில் உள்ள தூதுவரை சந்தித்து உரையாடியுள்ளார்.

தமது கட்சி சார்பில் வடக்கு கிழக்கில் எட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும், ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் செல்வாக்கு இழந்து வருவதாகவும் இலங்கை வெளியுறவு அமைச்சு கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களுக்கு விளக்கம் கொடுத்து வருகிறது.

சர்வதேச மட்டத்தில் இப் பிரச்சாரம் மிக நுட்பமாக முன்னெடுக்கப்படுகிறது. வத்திக்கான வெளியுறவு அமைச்சர் பேராயர் பவுல் றிச்சார்ட் கல்லேகர் (Paul Richard Gallagher) எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்புக்கு வருகை தரவுள்ள இரகசியத்தின் பின்னணியும் இதுதான்.

அதாவது --

இலங்கைத்தீவு மக்கள் ஒற்றுமையாக ஓர் அணியில் நிற்கிறார்கள், போருக்குப் பின்னரான சூழலில் மீள் நல்லிணக்கம் உறுதியாகிவிட்டது என்ற இறுதிச் செய்தி உலகத்துக்குப் போய் சேரும்.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

உடைந்த வாக்குறுதிகளும் மையப்படுத்தப்பட்ட அதிகாரமும்: மாகாண சபை விவகாரத்தில் NPPயின் தவிர்ப்பு

6 days 8 hours ago

உடைந்த வாக்குறுதிகளும் மையப்படுத்தப்பட்ட அதிகாரமும்: மாகாண சபை விவகாரத்தில் NPPயின் தவிர்ப்பு

October 31, 2025

உடைந்த வாக்குறுதிகளும் மையப்படுத்தப்பட்ட அதிகாரமும்: மாகாண சபை விவகாரத்தில் NPPயின் தவிர்ப்பு

— ராஜ் சிவநாதன் —

சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பெயரில் வெளியான ஒரு பதிவு பலரிடமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் நம்பகத்தன்மை சந்தேகத்திற்குரியதாக இருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்ட சில கருத்துகள் உண்மையை பிரதிபலித்தன. அவர் வடக்கில் மீண்டும் ஒரு போர் தேவையில்லை என்றும், மாகாண சபை (PC) அமைப்பு தமிழர்கள் தாமே விரும்பிய ஒன்றாகும் என்றும் கூறியதாக தெரிகிறது. மேலும், அந்த அமைப்பில் குறைகள் இருந்தால் அவை திருத்தப்பட வேண்டும் என்றும், தேவையான முன்னேற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

தனது ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது, அநுரகுமார திசநாயக்க தெளிவாகவே 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்துவேன் என்று உறுதியளித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனை மறுபடியும் வலியுறுத்தினார். வெளிநாடுகளில் உரையாற்றும் போதும், “மாகாண சபை அமைப்பு தமிழர்களின் இரத்தத்தால் பெற்றது” என்றும் தெரிவித்தார்.

ஆனால் இன்று அந்த வாக்குறுதிகள் வெற்று ஒலிகளாக மாறிவிட்டன. 

1987ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு அரசும் போல, மாற்றத்தின் பெயரில் மறைமுகமான அரசியல் மந்தநிலை மீண்டும் தோன்றியுள்ளது. அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான வாக்குறுதிகளை வழங்கியபோதிலும், NPP நிர்வாகம் அவற்றை அமைதியாக அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.

தவிர்ப்பின் முறைமை:

ஜனாதிபதி மற்றும் அவரது அரசு உண்மையில் தமிழ் பிரச்சினையைத் தீர்க்க விரும்பியிருந்தால், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். சட்ட வடிவம் உள்ளது, முன்னுதாரணங்கள் உள்ளன, தேவையும் மிகுந்தது. ஆனால் பதவியேற்று பதினைந்து மாதங்கள் ஆன பிறகும், அரசு காரணங்களையே கூறுகிறது. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் குறைந்தபட்சம் இரண்டு மாகாண சபைகளை மீண்டும் செயல்படுத்தும் வாய்ப்பு இருந்தபோதும், “வரையறைச் சிக்கல்கள்” மற்றும் “அமைவுச் சட்ட திருத்தம்” போன்ற காரணங்களின் பெயரில் தப்பித்துக் கொண்டது.

இதன்மூலம் மைய அரசு, புறநிலப் பகுதிகளுடன் நம்பிக்கையை மீண்டும் உருவாக்கும் அரிய வாய்ப்பை இழந்துவிட்டது. மாகாண மட்டத்தில் அதிகாரத்தை வழங்கியிருந்தால், அது ஜனநாயகப் பங்குபற்றலை உண்மையில் ஊக்குவித்திருக்கும். ஆனால் தாமதம், NPPயின் அரசியல் நடைமுறை முன்னோடிகளிடமிருந்து வேறுபடவில்லை என்பதையே நிரூபித்துள்ளது.

மறைந்திருக்கும் அமைவுச் சட்ட நோக்கம்:

அரசின் தயக்கத்திற்குப் பின்னால் இன்னொரு காரணம் மறைந்திருக்கலாம். NPP மற்றும் JVP வட்டாரங்களில் புதிய அமைவுச் சட்டம் உருவாக்கப்படுவது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. அந்த அமைவுச் சட்டம் 13ஆம் திருத்தத்தை நீக்கவோ அல்லது அதன் அதிகாரங்களை குறைக்கவோ வாய்ப்புள்ளது.

அதன் அரசியல் தர்க்கம் எளிமையானது, ஆனால் சூழ்ச்சியானது: தற்போதைய 13A சட்டத்தின் கீழ் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டால், அந்த அமைப்பு சட்டபூர்வமாக வலுப்பெறும்; பின்னர் அதை ரத்து செய்வது கடினமாகிவிடும்.

ஆகையால் தேர்தல்களை தவிர்ப்பது அரசின் திட்டமிட்ட அரசியல் உத்தி. 13A அமைப்பை செயலிழந்த நிலையிலேயே வைத்திருந்து, புதிய அமைவுச் சட்டத்தின் கீழ் அதிகாரத்தை கொழும்பில் மையப்படுத்தும் வாய்ப்பை உருவாக்குகிறது. இதன்மூலம் NPP, “பகுத்தறிவான நிர்வாக முறைமை” என்ற பெயரில் அதிகாரப் பகிர்வை குறைக்கும் நடவடிக்கையை நியாயப்படுத்துகிறது. 

JVPயின் நெறி சுமை:

இந்த முரண்பாடு JVPயின் அரசியல் வளர்ச்சியின் மையத்தையே வெளிப்படுத்துகிறது. ஒருகாலத்தில் மாகாண சபை அமைப்பை “வெளிநாட்டு தலையீடு” என்று குற்றம்சாட்டிய அதே இயக்கம், காலப்போக்கில் அதிலிருந்தே அரசியல் பலன் பெற்றது. அதன் பல தலைவர்கள் 13A மூலம் உருவாக்கப்பட்ட மாகாண அரசியல் அமைப்புகளின் வழியே உயர்ந்தனர்.

இப்போது அதே அமைப்பை தகர்ப்பது, அவர்கள் சொந்த வரலாற்றையும், சமாதானத்திற்காக போராடியவர்களின் தியாகத்தையும் மறுப்பதாகும்.

தெற்கு மாகாணங்கள் மாகாண சபை அமைப்பை நிராகரிக்க விரும்பினாலும், வடக்கு மற்றும் கிழக்கில் அந்த அமைப்பு செயல்படுவதற்கான அரசியல் மற்றும் நெறி பொறுப்பு JVPக்கு உண்டு. உண்மையான சமரசம் சமநிலையற்ற முடிவுகளை வேண்டுகிறது — அரசியல் சுகமான இடங்களில் அல்ல, மிகத் தேவையான இடங்களில் சுயாட்சியை வழங்கும் தைரியம் தேவை.

ஒருமைப்பாட்டுக்கான தவறவிட்ட வாய்ப்பு:

அதிகாரப் பகிர்வு என்ற கருத்து இலங்கைக்கே புதிதல்ல. உலகின் பல ஜனநாயக நாடுகளில், ஐரோப்பாவிலிருந்தும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் தொடங்கி, உள்ளூராட்சி நிர்வாகமே திறம்பட செயல்படும் ஆட்சியின் முதுகெலும்பாக உள்ளது. ஆனால் இலங்கை, ஒவ்வொரு முடிவையும் மையத்திலிருந்து கட்டுப்படுத்த முயல்வதன் மூலம் செயற்திறனையும் நம்பிக்கையையும் இழந்துவிட்டது.

NPPக்கு அந்த கதைநடையை மாற்றும் வாய்ப்பு இருந்தது, இடதுசாரி அரசு கூட பொறுப்பான, அனைவரையும் உள்ளடக்கிய, சட்டப் பூர்வ வாக்குறுதிகளை மதிக்கும் ஆட்சியை உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்க. ஆனால் அது சீர்திருத்தத்தின் சவாலை விட கட்டுப்பாட்டின் வசதியையே தேர்ந்தெடுத்தது.

முடிவுரை:

தமிழ் சமூகமும் அரசும் இடையிலான நம்பிக்கையின் சிதைவு ஒரே இரவில் நிகழவில்லை. அது பல தசாப்தங்களாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் மீறலாலும் அரசியல் சூழ்ச்சிகளாலும் உருவானது. இப்போது NPP அதே பட்டியலில் தன்னைச் சேர்த்துக் கொள்வதற்கான அபாயத்தில் உள்ளது.

மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைத்து, 13ஆம் திருத்தத்தை குறைக்கும் புதிய அமைவுச் சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம், அரசு ஆட்சியை நவீனப்படுத்துவது அல்ல, நம்பிக்கையின்மையை மேலும் உறுதிப்படுத்துகிறது.

உண்மையான தலைமையேனும் கடந்த வாக்குறுதிகளை மதித்து, நிலவும் சட்டத்தின் கீழ் தேர்தல்களை நடத்தி, உரையாடலின் வழியே ஒருங்கிணைந்த நிர்வாகத்தை உருவாக்குவதாக இருக்கும். அது நிகழும்வரை, “புதிய அரசியல் பண்பாடு” என்ற வாக்குறுதி இலங்கையின் நிறைவேறாத சீர்திருத்த வரலாற்றில் இன்னொரு வெற்று கோஷமாகவே இருக்கும்.

https://arangamnews.com/?p=12407

மன்னார் தீவின் மக்களும், உயிரியல் சமூகமும் பெரும் ஆபத்தில்…

1 week 1 day ago

மன்னார் தீவின் மக்களும், உயிரியல் சமூகமும் பெரும் ஆபத்தில்…

1.jpg?resize=1200%2C550&ssl=1

இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை, இலங்கை மின்சார சபை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஒன்றிணைந்து தயாரித்துள்ள காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்தினால் மன்னார் தீவின் மக்களும் அதன் உயிரியல் சமூகமும் இன்று பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன என்பதை எங்கள் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட அனைத்து காற்றாலை திட்டங்களும்  மின்வலு உற்பத்தியை இலக்காகக் கொண்ட ஆய்வுகளை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளன. மன்னார் தீவில் வாழும் மக்களின் எதிர்கால இருப்பு அல்லது உயிரியல் சமூகத்தின் இருப்பு, போன்று மன்னார் தீவிலுள்ள  நிலப்பரப்பின் இயற்கையான தன்மை அல்லது அதன் தற்போதைய தேசிய திட்டங்களின் தன்மை குறித்து எந்தக் கவனமும் செலுத்தப்படவில்லை.

கடன் உதவி வழங்குவதை முன்னுரிமையாகக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி மன்னார் தீவை பசுமை எரிசக்தியின் மையமாக மாற்றுவதற்குத் தேவையான ஆராய்ச்சி அறிக்கைகளை தயாரித்தது. மேலும், மன்னார் தீவின் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களில் நிறுவனங்களுக்கு முதலீட்டு வாய்ப்புகளை திறந்து விடுவதே இதன் முக்கிய நோக்கமாகும். இங்கே நிலையான எரிசக்தியைப் பொறுத்தவரை ஆசிய அபிவிருத்தி வங்கி நீதியான நிலைமாற்றம் என்ற கொள்கையில் (Just transition) எவ்வித கவனமும் செலுத்தவில்லை என்பது ஒரு பெரிய குறையாகும். எனவே, மன்னார் தீவானது காற்றாலை மின்சக்தி மூலம் நிலைபெறுதகு வலு மையமாக மாற்றப்படும்போது, அங்கு வசிக்கும் மீனவ சமூகங்களுக்கு, மீன்பிடி வளங்களுக்கு,விவசாய சமூகத்திற்கு, விவசாய நிலங்களுக்கு மற்றும் அதன் இயற்கை தொகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை. அதுமட்டுமன்றி, மன்னார் தீவின் உயிரியல் சமூகம் குறித்த சர்வதேச உடன்படிக்கைகளுக்கு எவ்வித கவனமும் செலுத்தாமல், மன்னார் தீவை நிலைபெறுதகு வலு மையமாக மாற்ற ஆசிய அபிவிருத்தி வங்கி பல திட்டங்களை தயாரித்துள்ளது.

நிலைபெறுதகு வலுவுடன் தொடர்புடைய நீதியான நிலைமாற்றுக்கொள்கையை மீறுதல்

நிலைபெறுதகு வலு மற்றும் அதோடு இணைந்த நியாயமான மாற்றம் என்பது நிலைபெறுதகு வலுவிற்காக மாற்றம் பெறும்போது, பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படும், இடம்பெயர்விற்கு உட்படும் மற்றும் உரிமைகள் மீறப்படும் சமூகங்கள் மீது கவனம் செலுத்துவதன் மூலம், நியாயம் மற்றும் நீதியை உறுதி செய்வதும், வழமைக்கு மாறான மற்றும் பாதகமான தாக்கங்களைத் தவிர்ப்பதுமாகும். மேலும், முடிவெடுக்கும் பொறிமுறையின் மையத்தில் பாதிக்கப்படும் அனைத்து தரப்பினரும் பிரதிநிதித்துவப்படுத்தப்படல் வேண்டும்.

இது பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு எண்ணக்கருவாகும். 2015 டிசம்பர் 12ஆம் திகதி பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் 21ஆவது மாநாட்டில் 196 உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தை 2016 செப்டம்பர் 21ஆம் திகதி அங்கீகரித்த ஒரு நாடு என்ற வகையில், அதில் குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ள இந்த நீதியான நிலைமாற்றத்திற்கான கருத்தியல் கொள்கைக்கு இலங்கை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைக்கப்பட்ட மாநாட்டின் 26ஆவது மாநாட்டில், பாரிஸ் ஒப்பந்தத்திற்கு இணங்க, நீதியான நிலைமாற்றத்திற்கான பொதுவான கொள்கைகளின் தொகுப்பு  வெளியிடப்பட்டது. அதன்படி, ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட பல தரப்பு அபிவிருத்தி வங்கிகள், காலநிலை மாற்றத்தைக் குறைத்தல் மற்றும் நீதியான நிலைமாற்றத்திற்கான கொள்கைகளை நிலைநிறுத்துவதாக உறுதியளித்துள்ளன.

ஆனால், இலங்கை நிலைபெறுதகு வலுவை நோக்கி நகரும் போது, நிலைபெறுதகு வலு அதிகார சபையோ அல்லது மின்சார சபையோ இதில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. மேலும், மன்னார் தீவை நிலைபெறுதகு வலு மையமாக மாற்றுவதற்கு கடன் உதவி வழங்கும் போது ஆசிய அபிவிருத்தி வங்கி இதில் கவனம் செலுத்தவில்லை. இதன் விளைவாக, மன்னார் தீவு மக்கள் தற்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

மன்னார் தீவின் வாழ்வியல் மற்றும் இயற்கை வளங்களை அழிக்கும் நிலைபெறுதகு வலு அதிகார சபையின் திட்டம்

நிலைபெறுதகு வலு அதிகார சபை மன்னார் தீவை ஒரு சக்தி மேம்பாட்டுப் பிரதேசமாக அறிவித்தன் பின்னர், இந்த மக்களைப் பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்துவதில் முதலீட்டாளர்களின் கவனம் ஈரக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு 35ஆம் இலக்கத்துடைய இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை சட்டத்தின் துணைப் பிரிவு 12(1) இன் படி வெளியிடப்பட்ட 2014 ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதியிட்ட இலக்கம் 1858/2 வர்த்தமானி அறிவிப்பின் மூலம், மன்னார் மாவட்டத்தின் மன்னார் நகரப் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மன்னார் தீவின் 76.11 சதுர கிலோமீட்டர்கள் சக்தி மேம்பாட்டுப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் தீவின் மொத்த நிலப்பரப்பு சுமார் 143.21 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். அதன்படி, தீவின் மொத்த நிலப்பரப்பில் 53 சதவீதம் சக்தி மேம்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில், மன்னார் தீவை ஒரு சக்தி மேம்பாட்டுப் பிரதேசமாக அறிவிப்பதில், நிலைபெறுதகு வலு அதிகார சபை இந்தத் தீவைப் பற்றிய பல உண்மைகளைத் தவிர்த்துவிட்டது. மன்னார் தீவின் மக்கள் தொகை சுமார் 66,087 ஆகும். இங்கு 1,7835 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதுடன், சுமார் 12,840 வீடுகள் உள்ளன. பெரும்பாலான தீவுவாசிகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஏராளமான மக்கள் விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் இரண்டிலும் ஈடுபட்டுள்ளனர். மன்னார் தீவு வட மாகாணத்தில் இரண்டாவது பெரிய மீன்பிடிப் பிரதேசமாகக் கருதப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு சராசரி மீன் அறுவடை சுமார் 17,500 மெட்ரிக் டொன் ஆகும்.

மன்னார் தீவின் மக்களைத் தவிர சதுப்புநில காடுகள், உப்பு சதுப்பு நிலங்கள், முட்கள் நிறைந்த காடுகள், கடலோர தாவர சமூகங்கள் மற்றும் மணல் திட்டுக்கள் போன்ற பல இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகள் இங்கு காணப்படுகின்றன. இந்த இயற்கை சுற்றுச்சூழல் தொகுதிகள் வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், மன்னார் தீவுடன் தொடர்புடைய ஆழமற்ற கடல் பகுதியில் உள்ள கடல் புற் தரைகள், சேற்றுப் படுகைகள், பவளப்பாறைகள், மணல் கரைகள் மற்றும் பாறை சுற்றுச்சூழல் தொகுதிகள் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மன்னார் தீவின் தென்கிழக்கு விளிம்பில் உள்ள உப்புச் சதுப்பு நிலம் மற்றும் சதுப்புநில சுற்றுச்சூழல் தொகுதிகள் வங்காலை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 4839 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட இந்த சரணாலயம், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் துணைப்பிரிவு 2(2) இன் படி, 2008 செப்டம்பர் 8ஆம், திகதியிட்ட 1566/2008 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவிப்பு மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஈரநில சரணாலயத்தின் சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் தொகுதிகளின் பெறுமதி காரணமாக,1971 பிப்ரவரி 2ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட, 1990 ஜூன் 15ஆம் திகதி அன்று பங்குதாரரான இலங்கை, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் மற்றும் நீர்ப்பறவைகள் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான ரம்சார் மாநாட்டின்படி, 2010 ஜூலை 10ஆம் திகதி அன்று 4839 ஹெக்டேயர் கொண்ட வங்காலை சரணாலயம் நாட்டின் 4ஆவது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ரம்சார் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

9.jpg?resize=665%2C481&ssl=1

மஞ்சல் நிறத்தில் – புலம்பெயர்ந்த பறவைகள் மன்னாருக்குள் உள்நுழைந்து பறக்கும் பாதை (பறவைகளின் வலசை).

இந்த சரணாலயத்துடன் தொடர்புடைய மன்னார் தீவின் களப்பு மற்றும் பாரிய ஆழமற்ற கடல் பிரதேசம், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் துணைப்பிரிவு 2(1) துணைப்பிரிவிற்கமைய 2016 மார்ச் 1ஆம்,  திகதியிடப்பட்ட 1956/13 என்ற வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 29180 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட விடத்தல்தீவு இயற்கை வனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் தீவின் வடமேற்கு முனையில் கண்டல் தாவரம், சதுப்பு நிலங்கள், முட்கள் நிறைந்த புதர்க்காடுகள், மணல் திட்டுகள் மற்றும் ஆழமற்ற கடல் கடற்கரை ஆகியவற்றின் ஒரு பெரிய பிரதேசம், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2(2) துணைப்பிரிவுக்கு அமைய 2015  ஜூன் 22ஆம், திகதியிட்ட1920/03 என்ற வர்த்தமானி அறிவிப்பின்படி 18,990 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட ஆதாமின் பாலம், கடல்சார் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது,

இந்த கடல்சார் தேசிய பூங்கா மற்றும் இயற்கை வனமானது 2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் வேலைத்திட்டங்களின் நிதி உதவியுடன் கீழ் வட மாகாணத்திற்காக தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் (Integrated Strategic Environmental Assessment the Northern Province of Sri Lanka) அறிவிக்கப்பட்டுள்ளது.

நில பயன்பாட்டுக் கொள்கை மற்றும் திட்டமிடல் திணைக்களத்தின் 2019 அறிக்கையின்படி, மன்னார் தீவில் 914 ஹெக்டேயர் உப்பு சதுப்பு நிலங்களும், 25 ஹெக்டேயர் சதுப்பு நிலக் காடுகளும் உள்ளன. மேலதிகமாக, சுமார் 1050 ஹெக்டேயர் முற் காடுகள் உள்ளன. இவற்றுடன், உப்பு சதுப்பு நிலங்கள் மற்றும் சதுப்பு நிலக் காடுகள் ஆழமற்ற கடலில் வாழும் மீன், நண்டுகள் மற்றும் இறால் இனங்களின் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாகும். மீன்பிடி சமூகம் மற்றும் மீன்பிடித் தொழிலின் வாழ்வாதாரம் இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சார்ந்துள்ளது.

மன்னார் தீவைச் சுற்றியுள்ள கடற்கரையில் சுமார் 20 கரவலை மீன்பிடித் துறைமுகங்கள் அமைந்துள்ளன. இந்தத் துறைமுகங்கள் அனைத்தும் மீன்வள மற்றும் நீர்வளச் சட்டத்தின் கீழ் எரிசக்தி மேம்பாட்டுப் பிரதேசமாக அறிவிக்கும்போது இது தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை.

மீன்பிடி தொழிலுடன் மேலதிகமாக, விவசாயமும் இந்தத் தீவில் நடைமுறையில் உள்ளது. காய்கறிகள், வேர்க்கடலை மற்றும் வெங்காயம் உள்ளிட்ட குறுகிய கால பயிர் சாகுபடி இந்தத் தீவில் பரவலாக உள்ளது. அதனைத் தவிர தீவுவாசிகள் பனை தொழில் தொடர்பான பல வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வகையில், மக்களின் வாழ்வியல் கட்டியெழுப்பியுள்ள மன்னார் தீவு மக்களுக்கு, திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தை வழங்குவதற்காக பல நீண்டகால திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்காக, 1978ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட நகர்ப்புற அபிவிருத்திச் சட்டத்தின் இலக்கம் 41 இன் படி, 1993 மார்ச் 22ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இலக்கம் 759/1 இல், முழு மன்னார் தீவையே நகர்ப்புற மேம்பாட்டுப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தச் சட்டத்தின் துணைப் பிரிவு 8(அ)இன் படி, மன்னார் மேம்பாட்டுத் திட்டம் 2021 – 2030 தயாரிக்கப்பட்டுள்ளதுடன், 2021 ஜூலை 13ஆம்  திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பு இலக்கம் 2236/24  ஊடாக இந்தத் திட்டம் அங்கீகரிக்கப்பட்ட திட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, மன்னார் தீவு வலயப்படுத்தப்பட்டு, தெற்கு கடற்கரை நிலைபேறுதகு வலு திட்டங்களுக்காகவும், வடக்கு கடற்கரை மீன்பிடித் தொழிலின் மேம்பாட்டிற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த வகையிலான பயன்பாடுகளைக் கொண்ட மக்களின் எதிர்கால பொருளாதார மேம்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுடன் கூடிய ஒரு தீவில், பெரிய நிலப்பரப்பை காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதன் மூலம், அதன் இயற்கை தொகுதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மக்களின் வாழ்வாதாரம் வீழ்ச்சியடைவதுடன், மக்களின் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சித் திட்டங்கள் சரிவதால் வறுமை அதிகரிக்கும் என்பதையும் நிலைபெறுதகு வலு அதிகாரசபை உணரவில்லை என்பது வருந்தத்தக்கது. காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்வது மிகவும் சரியான முறை என்பதை முழு சமூகமும் அறிந்த உண்மையாக இருப்பினும், அதை நடைமுறைப்படுத்தும் போது ஒட்டுமொத்த தொகுதியும் சேதமடைந்து பாதிக்கப்பட்டால், அந்த நிலைபெறுதகு எரிசக்தியை உருவாக்குவதில் எந்தப் பயனும் இல்லை என்பதை நிலைபெறுதகு வலு அதிகார சபை உணரவில்லை. எனவே, அதிகார சபை இந்தத் தீங்கு விளைவிக்கும் நிலையான எரிசக்தி உற்பத்தித் திட்டங்கள் காரணமாக, மன்னார் தீவு மக்களும் அதன் உயிரியல் சமூகமும் பாதகமான விளைவுகளை அனுபவிக்க வேண்டியுள்ளது.

சர்வதேச உடன்படிக்கைகளை மீறி மன்னார் தீவின் மக்களின் வாழ்வியலையும், வாழ்வாதாரத்தையும்  அழித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்கள்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பசுமை எரிசக்தி மேம்பாடு மற்றும் எரிசக்தி திறன் முதலீட்டு திட்டத்தின் (Green Power Development and Energy Efficiency Improvement Investment Program)கீழ் 2012ஆம் ஆண்டு தயாரித்து முன்மொழியப்பட்ட மன்னார் தீவு காற்றாலைப் பூங்கா (Proposed Wind Park in Mannar Area) அறிக்கை ஊடாக மன்னார் தீவு முழுவதும் காற்றாலைப் மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு 375 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில், மன்னார் தீவின் தெற்கு கடற்கரையில் 100 மெகாவாட்டை கொண்ட ‘தம்பபவனி’ காற்றாலை திட்டத்தை நிர்மாணிப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 157 மில்லியன் டொலர் பணத்தை கடனாக வழங்குவதற்காக 2017ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, மன்னார் தீவில் 375 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் வலியுறுத்தியது.

இந்த அறிக்கைகளைத் தயாரிப்பதில், ஆசிய அபிவிருத்தி வங்கி பல சர்வதேச உடன்படிக்கைகளை மீறியுள்ளது. 1971 பெப்ரவரி 2ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் மற்றும் நீர்ப்பறவைகளைப் பாதுகாப்பதற்கான ராம்சார் உடன்படிக்கை, 1979 ஜூன் 23ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட புலம்பெயர்ந்த உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான ‘பொன்’ மாநாடு மற்றும் 2015 டிசம்பர் 12ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட காலநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தம் ஆகியவை அனைத்தும் மீறப்பட்டுள்ளன. மேலும், சர்வதேச சட்டக் கொள்கையான முன்னெச்சரிக்கை கொள்கையை (Precautionary Principle) கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஆசிய அபிவிருத்தி வங்கியின் முதற்கட்ட ஆய்வுகள், சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் கடன் உதவி ஆகியவற்றின் உதவியுடன் செயல்படுத்தப்பட்ட ‘தம்பபவனி’ காற்றாலைப் மின் நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான உயர் மின்னழுத்த மின் பரிமாற்றக் கம்பி அமைப்பு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒப்பந்தங்களின்படி வங்காலை சர்வதேச ரம்சார் ஈரநிலம் ஊடாக அமைக்கப்பட்டுள்ளது.

1983 முதல் இதுவரை இலங்கை பறவைகள் சங்கம் நடத்திய ஆய்வுகளின்படி, மன்னார் தீவின் தென்கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள வங்காலை சரணாலயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடத்தல்தீவு இயற்கை வனம் மற்றும் மன்னார் தீவின் முழு ஈரநில அமைப்பிலும் சுமார் 2 மில்லியன் கடலோர புலம்பெயர்வு ஈரநில பறவைகள் (Shorebirds) உள்ளன.

சர்வதேச ஈரநில அமைப்பு (Wetland iInternational) ஊடாக 2009ஆம் ஆண்டில் வெளியிட்ட “Status of Waterbirds in Asia, Results of the Asian Waterbirds Census, 1987-2007” அறிக்கையின்படி,  நாட்டில் அதிக எண்ணிக்கையிலான ஈரநிலப் பறவைகளைக் கொண்ட முக்கிய பிரதேசங்களில் ஒன்றாக மன்னார் தீவு அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு சைபீரியாவிலிருந்து மில்லியன் கணக்கான குளிர்கால புலம்பெயர்வு பறவைகள் மத்திய ஆசிய கண்டத்தை நோக்கி பறக்கும் பாதையான (Central Asian Flyway) வழியாக இலங்கைக்கு வருகின்றன, மேலும் அவற்றில் ஏராளமானவை மன்னார் தீவு வழியாக நாட்டிற்குள் நுழைகின்றன, இது இந்த புலம்பெயர்ந்த பறவைகள் தொடர்ச்சியாக பறக்கும் போது முதல்  நிறுத்தமாகும். இத்தகைய தனித்துவமான தீவில் ஒரு காற்றாலை மின் நிலைய அமைப்பின் கட்டுமானம் இந்த புலம்பெயர்ந்த பறவைகளின் பாதைகளை முற்றிலுமாகத் தடுத்து, அவற்றின் உணவுத் தளங்களைச் சீரழித்துள்ளது. குளிர்காலத்தைத் தவிர்க்க மில்லியன் கணக்கான ஆண்டுகளாக ஆர்க்டிக்கிலிருந்து அண்டார்டிக்கிற்கு இடம்பெயர்ந்த இந்தப் பறவைகள், காற்றாலைகள் காரணமாக மிகக் குறுகிய காலத்தில் தங்கள் தாயகத்தை இழந்துவிட்டன. இவ்வளவு பாரிய அழிவுகரமான திட்டத்தை தயாரித்து செயல்படுத்துவதற்கும், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் மற்றும் நீர்ப்பறவைகளைப் பாதுகாப்பதற்கான ரம்சார் உடன்படிக்கைகளை மீறுவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி பொறுப்பிலிருந்து விடுபட முடியாது.

3.png?resize=490%2C333&ssl=1

வடக்கு சைபீரியாவிலிருந்து மத்திய ஆசிய பறவைகள், புலம்பெயர் பாதை வழியாக குளிர்கால புலம்பெயர்வுப் பறவைகள் இலங்கைக்கு வரும் விதம்

4.jpg?resize=665%2C404&ssl=1

இலங்கைக்கு மேற்கு பாதை வழியாக பறந்து வரும் புலம்பெயர்ந்த பறவைகள் மன்னார் தீவு வழியாக நாட்டிற்குள் நுழைகின்ற விதம்.

அதனைத்தவிர உலகின் எட்டு வகையான கடல் ஆமைகளில் மூன்று வகைகள், மன்னார் தீவைச் சுற்றியுள்ள கடலோர பிரதேசத்தில் முட்டையிடும். அதாவது, தோணி ஆமை அல்லது பச்சைக் கடல் ஆமை (Chelonia Mydas), அழுங்கு ஆமை (Eretmochelys Imbricata) மற்றும் ஒலிவநிறச்  சிற்றாமை (Lepidochelys Olivacea) ஆகும். ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இந்தத் தீவின் தெற்கு கடற்கரையில் 12.5 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் கட்டப்பட்டுள்ள ‘தம்பபவனி’ மின் உற்பத்தி நிலையத் திட்டம், இந்த கடற்கரைக்கு முட்டையிட வரும் ஆமைகளின் எண்ணிக்கையில் விரைவான சரிவுக்கு வழிவகுத்துள்ளது. இதற்கு பல காரணங்கள் பங்களித்துள்ளதாக எங்கள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரவு முழுவதும் காற்றாலைகளின் தொடர்ச்சியான இரைச்சல் மற்றும் இந்தப் பிரதேசத்தின் வெளிச்சம் போன்றவையுடன், காற்றாலைகளை அணுக கடற்கரையோரத்தில் உள்ள 14 கி.மீ நீளமான வீதிகளின் காரணத்தால் ஆமைகள் முட்டையிடும் பிரதேசங்களைக் தடுத்து துண்டு துண்டாகப் பிரிக்கின்றன. இந்த நிலைமைகள் காரணமாக, ஆமைகள் முட்டையிட இந்தக் கடற்கரையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குளிர்காலத்தைத் தவிர்க்க புலம்பெயர்ந்து செல்லும் பறவைகள் மற்றும் முட்டையிட வரும் ஆமைகளின் வாழ்விடத்தை இழக்க காரணமாக அமையும் காற்றாலைப் மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கும், செயற்படுத்துவதற்குமான கடன் உதவியைத் தயாரித்து வழங்குவதன் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கி, புலம்பெயர்ந்த காட்டு விலங்குகளின் பாதுகாப்பு குறித்த ‘பொன்’ உடன்படிக்கையை மீறியுள்ளது.

‘தம்பபவனி’ காற்றாலைத் திட்டத்தை செயல்படுத்துவதில், காற்றாலை டர்பைன்கள் மற்றும் அவற்றை இணைக்கும் பாதை அமைப்பை உருவாக்க உப்பு சதுப்பு நிலங்கள் மற்றும் கழிமுகங்களைக் கொண்ட தடாகங்கள், அத்துடன் அவற்றை கடலுடன் இணைக்கும் 26 கால்வாய்கள் ஆகியவை நிரப்பப்பட்டு, தடுக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, வட கிழக்கு பருவமழைக் காற்று டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மன்னார் தீவு அதிக மழையைப் பெறும் போது கால்வாய்கள் மற்றும் களப்புகள் வழியாக மழைநீரின் இயற்கையான ஓட்டம் தடைப்படுவதால், சுற்றியுள்ள கிராமங்கள் முழுமையாக நீரில் மூழ்கும். கடந்த சில ஆண்டுகளில், 400க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் தொடர்ச்சியான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தீவுவாசிகள் குடிநீர் உள்ளிட்ட அன்றாட நீர் தேவைகளுக்கு கிணறுகளையே நம்பியுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பிறகு இந்தக் கிணறுகளை மீட்டெடுப்பதற்கான செலவுகள் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த அழுத்தங்களுக்கு மேலதிகமாக, காற்றாலைகள் காரணமாக மன்னார் தீவின் தெற்கு கடற்கரையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து மீனவ சமூகத்தினரை தடுக்கின்றன என்பதையும் எங்கள் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

அதற்கமைய, ‘தம்பபவனி’ காற்றாலை திட்டம் மன்னார் தீவு மக்கள் தங்கள் விருப்பமான இடத்தில்  வாழ்வதற்கும், எந்த பாதிப்பும் இல்லாமல் ஒரு தொழிலில் ஈடுபடுவதற்கும் உள்ள சுதந்திரத்தை பறித்துள்ளது. இது பாரிஸ் காலநிலை மாற்றம் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளபடி, நிலைமாற்றுக் கொள்கையை மீறுவதாகும். ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு இந்தப் பொறுப்பிலிருந்தும் விலக முடியாது.

புலம்பெயர்ந்த பறவைகளின் புலம்பெயர்வுப் பாதைகளில் காற்றாலைகள் ஏற்படுத்தும் சாத்தியமான தாக்கங்கள், கடலோர ஈரநிலப் பறவைகளின் உணவுப் பரப்பில் ஏற்படும் தாக்கம் மற்றும் தீவு மக்களின் வாழ்வியலில் ஏற்படும் தாக்கம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி தயாரித்த சாத்தியக்கூறு ஆய்வுகளில் இருந்து ‘தம்பபவனி’ திட்டம் விடுபட்டுள்ளது. சுற்றுச்சூழலின் தொடர்ச்சியான இருப்பைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு அபிவிருத்தி செயல்முறையின் பாதகமான தாக்கங்களையும் கணிப்பதிலும், அவற்றுக்கான மாற்று அல்லது தணிப்பு முறைகள் அல்லது இழப்பீட்டு முறைகளைத் தயாரிப்பதிலும் முன்னெச்சரிக்கை கொள்கை முக்கியமானது. இந்தக் கொள்கையை 1992ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு குறித்த ரியோ மாநாட்டில் ரியோ பிரகடனத்தின் கொள்கை 15 என ஐக்கிய நாடுகள் சபை விளக்கியுள்ளது.

கடுமையான அல்லது மீளமுடியாத தாக்கங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், சுற்றுச்சூழல் சேதத்தைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதைத் தாமதித்தல், மூலதனப் பற்றாக்குறை, முழு அறிவியல் தீர்ப்பு இல்லாமை அல்லது தகவல் இல்லாமை ஆகியவற்றின் அடிப்படையில் எந்தத் தணிப்பு நடவடிக்கைகளையும் தவிர்க்கக்கூடாது என்று அது கூறுகிறது, ஏனெனில், அவை 1998ஆம் ஆண்டு முன்னெச்சரிக்கை கொள்கை குறித்த விங்ஸ்ப்ரெட் மாநாட்டில் இந்தக் கொள்கைக்கு ஒரு பரந்த விளக்கம் அளிக்கப்பட்டது.

அந்த விளக்கத்தின்படி, ஒரு செயல்பாடு மனித ஆரோக்கியத்திற்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்போது, காரண-விளைவு உறவு அறிவியல் ரீதியாக முழுமையாக நிறுவப்படாவிட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த சூழலில், ஒரு செயல்பாட்டின் ஆதரவாளர் பொதுமக்களை விட ஆதாரத்தின் சுமையைச் சுமக்க வேண்டும். முன்னெச்சரிக்கை கொள்கையை செயல்படுத்தும் செயல்முறையில் திறந்த தகவல் அமைப்புடன்  ஜனநாயகமாக இருக்க வேண்டும், மேலும் பாதிக்கப்படக்கூடிய தரப்பினரின் பங்கேற்பையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். கொடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு முழு அளவிலான மாற்று வழிகளையும் ஆராய்வதும் இதில் அடங்கும். இதைத் தவிர்ப்பதன் மூலம், ஆசிய அபிவிருத்தி வங்கி இயற்கை அமைப்புகளின் உயிர்வாழ்வையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் ஆபத்தில் ஆழ்த்துவதன் மூலம் ஒரு வரலாற்றுத் தவறைச் செய்துள்ளது.

1966 ஆம் ஆண்டு முதல் இந்நாட்டிற்கு கடன்களை வழங்கி வரும் ஆசிய அபிவிருத்தி வங்கி, அதன் தொடக்கத்திலிருந்து 2024ஆம் ஆண்டு இறுதி வரை 522 திட்டங்களுக்கு சுமார் 12.7 பில்லியன் டொலர் மதிப்புள்ள கடன்களை வழங்கியுள்ளது, மேலும், எரிசக்தி துறையில் 57 திட்டங்களுக்கு கடன்களை வழங்கிய ஒரு அபிவிருத்தி வங்கியாக, ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கையின் எதிர்கால இருப்புக்கு சிறப்புப் பொறுப்பைக் கொண்டுள்ளது. நாட்டின், மக்களின் எதிர்கால இருப்பையும் இயற்கை வளங்களையும் அழிக்க இதுபோன்ற தவறுகளைச் செய்ய அவர்களால் முடியாது. காரணம், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிலையான இருப்பு இந்த நாட்டு மக்களின் உழைப்பு, வரிகள் மற்றும் இயற்கை வளங்களின் இருப்பைப் பொறுத்தது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்களின்படி மன்னார் தீவு மக்களின் வாழ்வியலை காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கு பணயம்வைத்தல்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ், மன்னார் தீவில் முதல் காற்றாலை மின் நிலைய திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, 2017ஆம் ஆண்டில் பொதுமக்களின் கருத்துகளுக்காக திறக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, மன்னார் தீவின் தெற்கு கடற்கரையில் 56 காற்று டர்பைன் நிறுவப்பட உள்ளன.  இருப்பினும், இலங்கை பறவைகள் சங்கம், சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் உள்ளூர்வாசிகளின் அழுத்த செயன்முறைகளும், தொழில்நுட்ப கருத்துகளின் அடிப்படையில், தோட்டவெளி முதல் பாலாவி வரையிலான 12.5 கி.மீ நீள கடற்கரையில், கடற்கரையிலிருந்து 150 முதல் 160 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள, தலா 3.45 மெகாவாட் திறன் கொண்ட 30 காற்றாலை டர்பைன்கள் மூலம் 103.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மன்னார் தீவில் தோட்டவெளி, துள்ளுக்குடியிருப்பு மற்றும் கட்டுகாரன்குடியிருப்பு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கான கடன் ஒப்பந்தம் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் 2017 நவம்பர் 22ஆம் திகதியன்று கையெழுத்தானது. இந்தத் திட்டத்தின் மொத்த செலவு டொலர் மில்லியன் 256.7 ஆகும். இது ஆரம்ப திட்டத்தை விட அதிகம். எனவே, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் டொலர் கடனும், மீதமுள்ள 56.7 டொலர் மில்லியன் இலங்கை மின்சார சபையிலிருந்தும் வழங்கப்பட்டு இந்தத் திட்டத்தின் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ‘தம்பபவனி’ என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம் 2020ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதியன்று திறக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான காற்றாலை டர்பைன்கள் டென்மார்க் காற்றாலை உற்பத்தி நிறுவனமான வெஸ்டாஸால் வழங்கப்பட்டது.

1.jpg?resize=665%2C354&ssl=1

மன்னார் தீவின் தெற்கு கடற்கரையில் கட்டப்பட்ட ‘தம்பபவனி’ காற்றாலை திட்டத்தின் டர்பைன்கள்

ஆரம்பத்தில், ஒரு காற்றாலை டர்பைனை நிறுவ சுமார் 1.5 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படும் என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் நேரத்தில், ஒரு காற்றாலை டர்பைனை நிறுவ 6 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்தக் காற்றாலை டர்பைன்கள் அணுக 14 கிலோமீட்டர் நீளமுள்ள பிரதான வீதியை அமைப்பதற்காக தீவின் தெற்கு கடற்கரையில் ஒரு பெரிய நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும், கட்டுமானத்தின் போது களப்பை (சிறு கடல்)  கடலுடன் இணைக்கும் 26 கால்வாய்கள் தடுக்கப்பட்டுள்ளன. இது மழைநீர் வடிகால் பொறிமுறையை முழுமையாக அடைத்து வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தலுக்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், ஆழமற்ற கடலில் இருந்து முட்டையிடுவதற்காக களப்புக்கு வரும் மீன் இனங்கள், நண்டுகள் மற்றும் இறால் இனங்களின் இனப்பெருக்க செயல்முறையையும் மோசமாகப் பாதித்துள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதன் மூலம் ஆழமற்ற நீரில் மீன் அறுவடை கணிசமாகக் குறைந்துள்ளதாக தீவில் உள்ள சிறு மீன்பிடி சமூகத்தினர் குறிப்பிட்டனர்.

காற்றாலை டர்பைன்களை உருவாக்குதல், பாதை அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் தேசிய கட்டமைப்புடன் மின்சாரத்தை இணைக்கும் உயர் மின்னழுத்த மின் இணைப்பு அமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றிற்காக மன்னார் தீவின் மக்கள் தெற்கு கடற்கரையின் பெறுமளவு நிலத்தை  இழந்துள்ளனர். இதன் காரணமாக, மக்களின் தற்போதைய மற்றும் எதிர்கால வாழ்வியல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல், ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்களின் அடிப்படையில் வேறு பல திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

“மன்னார் காற்றாலை மின் திட்டம் – கட்டம் 1 – தொடர்ச்சி”க்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை, பொதுமக்களின் கருத்துகளுக்காக 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முன்வைக்கப்பட்டது. அந்த அறிக்கையின்படி, 21 காற்றாலை டர்பைன்களை நிர்மாணிப்பதற்காக ஒவ்வொரு காற்றாலை டர்பைனுக்கும் 6.63 ஏக்கர் என்ற வகையில் 139 ஏக்கர்  நிலமும், காற்றாலை டர்பைன்களை இணைக்க 11.5 கிலோ மீற்றரும், வீதிகளை நிர்மாணிப்பதற்காக 43 ஏக்கர் நிலமுமாக மொத்தம் 182 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தீர்மானானது.  இந்தத் திட்டத்திற்காக மன்னார் தீவின் தெற்கு கடற்கரையின் தென்கிழக்கு கடற்கரையையும், கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாட்டின் உள்நாட்டுப் பகுதியையும் பயன்படுத்த உள்ளது.

அதைனைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் “முன்மொழியப்பட்ட 250 மெகாவாட் காற்றாலை எரிசக்தி திட்டம் மன்னார் – கட்டம் 111” என்ற பெயரில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பொதுமக்களின் கருத்துகளுக்காக முன்வைக்கப்பட்டது. அந்த அறிக்கையின்படி, அதானி பசுமை எரிசக்தி இலங்கை லிமிடெட் எனும் நிறுவனத்தால் 420 மில்லியன் டொலர் முதலீட்டு திட்டமாக செயல்படுத்த திட்டமிட்டது.

தலா 5.2 மெகாவாட் திறன் கொண்ட 52 காற்றாலை டர்பைன்கள் மூலம் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்ததுடன், இந்தத் திட்டத்தின் காற்றாலை டர்பைன்கள் மன்னார் தீவின் மையத்திலும் வடக்கு கடற்கரையிலும் நிறுவப்பட  திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, ஒரு டர்பைனை நிறுவ தோராயமாக 7 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டது.  அதன்படி, இந்த முழு திட்டத்திற்கும் 500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் முதலீட்டு நிறுவனம் கடந்த காலங்களில் கடுமையான சர்ச்சைக்கு உள்ளானது. ஆனாலும், அந்த வேலைத்திட்டத்தை இன்னும் பட்டியலில் இருக்கிறது.

இதற்கிடையில், மன்னார் தீவில் 4 காற்றாலை டர்பைன்கள் மூலம் 20 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. மன்னார் தீவில் இந்தக் காற்றாலைகள் ஏற்படுத்தும் பாரிய தாக்கம் காரணமாக, சமீபத்திய நாட்களில் இதற்கெதிராக பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது.

இந்தத் திட்டம், ராஜகிரிய, நாவல, கல்பொத்த பாதை, எண் 66 இல் அமைந்துள்ள லீஜ் கேபிடல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் (Liege Capital Holding Pvt Ltd) முதலீட்டுத் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இது Ceylex Renewables Pvt Ltd என்று அழைக்கப்படும் நிறுவனத்தின் தொடர்புகளுடன் Windscape Mannar எனும் துணை நிறுவனத்தால் செயல்படுத்துகிறது. இதற்காக, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் கொமர்ஷல் வங்கியிடமிருந்தும் 6.5 பில்லியன் ரூபாய் கடனாகப் பெறப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் தொடர்பான அமைச்சரவை ஒப்புதல்கள், சுற்றுச்சூழல் ஒப்புதல்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை, மேலும், அரச நிறுவனங்களால் இது குறித்த தகவல்களையும் பெற முடியவில்லை. எனினும் தொடர்புடைய வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

துரிதப்படுத்தப்படும் ஹேலிஸ் நிறுவனத்தின் சட்டவிரோத காற்றாலை திட்டம்

இதற்கிடையில், ஹேலிஸ் பென்டன்ஸ் நிறுவனம் (Hayleys Fentons Limited) மன்னார் தீவில் 50 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறது. இது 50 மில்லியன் டொலர் முதலீட்டுத் திட்டம் என்றும், மின்சார சபைக்கு ஒரு யூனிட் மின்சாரம் 4.65 சதம் டொலருக்கு வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு மே 28ஆம் திகதியன்று எரிசக்தி அமைச்சகத்தில் கையெழுத்தானது என்றும், 2025ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறி, சம்பந்தப்பட்ட நிறுவனம் திட்டத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு தயாராகி வருகிறது. இதற்காக, ஹேலிஸ் பென்டன்ஸ் நிறுவனத்தின் கீழ் நிறுவப்பட்ட புதிய நிறுவனமான ஹேவிண்ட் வன் கம்பெனி லிமிடெட் (HayWind One Limited) திட்டத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளத் தயாராகி  வருகிறது. இது ஹேலிஸ் (Hayleys PLC) நிறுவனத்திற்கு முழு உரித்துமுள்ள துணை நிறுவனமாகும். இந்தத் திட்டம் 10 காற்றாலை டர்பைன்களைக் கொண்டுள்ளதுடன், கட்டுமானம் தொடங்கிய 18 மாதங்களுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான காற்றாலை டர்பைன்களை நிர்மாணிப்பதற்காக மன்னார் தீவில் சுமார் 70 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியேற்படும். மேலும், நுழைவாயில் வீதிகளை தயார் செய்வதற்காக  30 ஏக்கருக்கும் அதிகமான நிலமும் கையகப்படுத்தப்பட நேரிடும்.

6.jpeg?resize=665%2C263&ssl=1

காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தால் உற்பத்தி செய்ய முன்மொழியப்பட்ட மின்சாரத்தை வாங்குவதற்கு ஹேலிஸ் நிறுவனமும் இலங்கை மின்சார சபையும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ஆனால், இந்தத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையோ அல்லது சுற்றுச்சூழல் ஒப்புதலோ வெளியிடப்படவில்லை. அமைச்சரவை முடிவுகள் தொடர்பான அறிக்கைகளை ஆராயும்போது அத்தகைய ஒப்புதல் வழங்கப்பட்டதற்கான எவ்வகையான ஆதாரமும் இல்லை. இவ்வாறு இருக்கும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்த அடிப்படையில் மின்சார சபையுடன் மின் கொள்முதல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம், மன்னார் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்களுடன் காற்றாலை மின் உற்பத்தி நிலையப் பிரச்சினை குறித்து ஜனாதிபதி கலந்துரையாடியதுடன், காற்றாலை மின் உற்பத்தி நிலையத் திட்டத்தை ஒரு மாத காலம் தாமதப்படுத்தியதுடன், பிரச்சினைகளைத் தீர்க்கவும் முயற்சி செய்யப்பட்டது. இந்நடவடிக்கையானது இந்தத் திட்டம் சட்டவிரோதமாக செயல்படுத்தப்படுவதைக் குறிக்கிறது. அது மட்டுமல்லாது, அவர்கள் சரியான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அல்லது ஒப்புதல் இல்லாமல் அதை செயல்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிகிறது. மேலும், இந்தத் திட்டத்திற்கான அமைச்சரவை ஒப்புதலை பொதுமக்களிடமிருந்து மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிகிறது. இந்த உண்மைகள் அனைத்திலும் இந்தத் திட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது என்பதையே குறிக்கிறது.

2.jpg?resize=665%2C469&ssl=1

மன்னார் தீவை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள காற்றாலைப் மின் நிலையங்கள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள காற்றாலை மின் நிலையங்கள் (தீவின் தெற்கு கடற்கரையில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.)

மன்னார் தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்பான சட்ட கட்டமைப்பு

மன்னார் தீவைச் சுற்றி பெரிய கடலோரப் பிரதேசத்தைக் கொண்டிருப்பதன் காரணத்தால், காற்றாலைப் மின் நிலைய கட்டுமானத்தை மேற்கொள்ளும்போது 2011ஆம் ஆண்டின் 49ஆம் இலக்கச் சட்டத்தின்  இறுதி திருத்தமான, 1981ஆம் ஆண்டின் 57ஆம் இலக்க கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவச் சட்டமும் ஒரு முக்கிய காரணியாகும். இந்தச் சட்டத்தின்படி, கடலோர பிரதேசத்தில் காற்றாலை மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கு கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் துறையின் ஒப்புதல் அவசியம். இந்தச் சட்டத்தின்படி, கடலோரப் பிரதேசம் என்பது நிலத்தை நோக்கிய சராசரி உயர் அலைக் கோட்டிலிருந்து 300 மீட்டர் வரம்பிற்கும், கடல் நோக்கிய சராசரி குறைந்த அலைக் கோட்டிலிருந்து 2 கிலோமீட்டர் வரம்பிற்கும் உள்ள பிரதேசத்தைக் குறிக்கிறது. ஒரு நதி, வாய்க்கால், களப்பு அல்லது கடலுடன் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இணைக்கப்பட்ட வேறு எந்த நீர்நிலையின் விடயத்திலும் நிலத்தை நோக்கிய வரம்பு அவற்றின் இயற்கையான நுழைவுப் புள்ளிக்கும் அத்தகைய நதி வாய்க்கால் மற்றும் குளம் அல்லது கடலுடன் இணைக்கப்பட்ட வேறு எந்த நீர்நிலைக்கும் இடையில் வரையப்பட்ட நேரான அடித்தளத்திற்கு செங்குத்தாக அளவிடப்படும் 2 கிலோமீட்டர் வரம்பிற்கும், மேலும் எல்லை பூஜ்ஜிய சராசரி கடல் மட்டத்திலிருந்து எல்லையில் நிலத்தை நோக்கி நூறு மீட்டர் நீடித்து மேலதிகமான வரம்பு உள்வாங்கப்படும்.

இந்தச் சட்டத்தின் துணைப் பிரிவு 14(1)க்கு அமைவாக, இந்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அனுமதிக்கு உட்பட்டதை தவிர, கடலோர பிரதேசத்தில் எந்த அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளப்படக்கூடாது.  துணைப்பிரிவு 16(1)க்கு அமைவாக  துணைப்பிரிவு 14(1)க்கு கீழ் அனுமதிகளை வழங்குவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறையைப் பார்ப்பதற்கு வலியுறுத்தும் அதிகாரம் உள்ளது.

26 அ உறுப்புரைக்கு அமைய, கடலோரப் பிரதேசம் அல்லது அதன் வளங்களுக்கு சேதம் விளைவிக்கும் அல்லது சேதத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கையையும் நிறுத்த அதிகாரம் உள்ளது. மேலும், அது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால், ஒரு நீதவான் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்படும் விண்ணப்பத்தின் பேரில் தொடர்புடைய செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரமும் அதற்கு உள்ளது. அந்த உத்தரவை பின்பற்றத் தவறினால், ஒரு நாளைக்கு ரூ. 10,000 அபராதம் மற்றும் நீதிமன்ற அவமதிப்புக்கு பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படலாம்.

மேலும், மன்னார் தீவின் கடலோர பிரதேசத்திற்கு வெளியே உள்ள நிலப்பரப்பில் காற்றாலை மின் நிலையங்களை நிர்மாணிக்கும்போது,  2000ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்ட 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின்படி சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறப்படல் வேண்டும். இந்தச் சட்டத்தின் பிரிவு 23ஆவது உறுப்புரையின் கீழ் வெளியிடப்பட்ட 1993 ஜூன் 24 திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பு இலக்கம் 772/22 இன் படி, ஒரு ஹெக்டேயருக்கு மேல் பரப்பளவிலான வன நிலத்தை வனம் அல்லாத நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதற்கு முன்பு அல்லது 50 மெகாவாட்டுக்கு மேல் மின் உற்பத்தி நிலையங்கள் கட்டுவதற்கு முன்பு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்பட்டு சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறப்படல் வேண்டும். மேலும், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட வங்காலை சரணாலயம், மன்னார் தீவின் தென்கிழக்கு எல்லையில் அமைந்திருப்பதால், தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் பிரிவு 23ஆவது உறுப்புரையின்படி வெளியிடப்பட்ட 1995ஆம் ஆண்டு பெப்ரவரி 23ஆம் திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பு இலக்கம் 859/14 இற்கு அமைவாக, ஒரு சரணாலயத்தின் எல்லைக்குள் அல்லது அதற்குள் உள்ள எந்தவொரு மேம்பாட்டுத் திட்டமும் முதலில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்பட்டு சுற்றுச்சூழல் ஒப்புதலைப் பெற வேண்டும்.

தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் துணைப்பிரிவு 23அஅ இன் கீழ் ஒப்புதல் பெறாமல் சட்டவிரோதமாக ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டால், முறையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்பட்டு, ஒரு நபர், சட்டத்தின் பிரிவு உறுப்புரை 31 இன் கீழ் ஒரு நீதிவான் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ரூ. 15000 க்கு குறையாத அபராதம் அல்லது 2 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட இரண்டு தேசிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான விடத்தல்தீவு இயற்கை வனம் மற்றும் ஆதாம் பாலம் கடல்சார் தேசிய பூங்கா ஆகியவை மன்னார் தீவின் தென்கிழக்கு மற்றும் வடமேற்கு விளிம்புகளில் அமைந்துள்ளதால், காற்றாலை மின் நிலையங்களை நிறுவுவதில் இந்தச் சட்டத்தின் சட்ட விதிகளும் கவனத்தில் கொள்வது முக்கியமானவை. 2022ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க சட்டத்தால் கடைசியாகத் திருத்தப்பட்ட, 1937ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க இந்தச் சட்டத்தின் துணைப் பிரிவுகள் 9அ (1) மற்றும் (2) இன் படி, தேசிய வனத்தின் எல்லையிலிருந்து ஒரு மைலுக்குள் எந்தவொரு மேம்பாட்டு நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு முன் வனவிலங்கு பணிப்பாளரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெறப்படல் வேண்டும். அவ் ஒப்புதலானது  தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறை மூலம் பெறப்படல் வேண்டும்.

5.png?resize=665%2C854&ssl=1

அதிக எண்ணிக்கையிலான கரையோரப் பறவைகளைக் கொண்ட பிரதேசங்கள்

இந்தக் கட்டளைகளுக்கு மேலதிகமாக, திருத்தப்பட்ட 1940ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் பிரிவுகள் 43அ மற்றும் 47 இன் உறுப்புரைகளுக்கு அமைய, 2000ஆம் ஆண்டு அக்டோபர் 04ஆம் திகதியிட்ட 1152/14 ஆம் இலக்க வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்ட 2000ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க திட்ட நடைமுறைகளின் ஆணைக்கு இணங்கவும், ஒரு ஹெக்டேயருக்கு மேல் உள்ள பிரதேசங்களின் அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன் தொல்பொருள் சேத மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டியதுடன் தொல்பொருள் ஒப்புதலும் பெறப்படல் வேண்டும்.

இந்தச் சட்டத்திட்டங்களையும் கட்டளைகளையும் மீறி காற்றாலைகள் அமைப்பது பல சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்கு வழிவகுத்துள்ளது. மேலும், சட்டத்தின் ஆட்சியையும் மன்னார் தீவு மக்களின் அடிப்படை உரிமைகள் பலவற்றையும் மீறியுள்ளது.

காற்றாலைகள் மன்னார் மக்களின் உரிமைகளைப் பறிக்கின்றன

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் VI ஆம் அத்தியாயத்தில் உள்ள கொள்கைகள் மற்றும் அடிப்படைக் கடமைகளை நிர்வகிக்கும் அரசின் கொள்கையின் துணைப் பிரிவின் உறுப்புரை 27(14) இன் படி, “அரசாங்கம் மக்களின் நலனுக்காக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன், அதனை மேம்படுத்த வேண்டும்.” அதன்படி, அனைத்து அரசு நிறுவனங்களும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை செயல்படுத்தவும், சுற்றுச்சூழலின் உயிர்வாழ்வைப் பாதிக்காத முடிவுகளை எடுக்கவும் கடமைப்பட்டுள்ளன. மேலும், இந்த அத்தியாயத்தின் கீழ் துணைப்பிரிவு 28(ஈ) இன் படி, இயற்கையையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பது ஒவ்வொரு இலங்கையரினதும் கடமையாகும். அதன்படி, ஒவ்வொரு குடிமகனும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தலையிடவும், அந்த நோக்கத்திற்காக சட்டங்கள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்த அரசு நிறுவனங்களை வழிநடத்தவும், பாதுகாப்பிற்கான சட்டங்களை அமுல்படுத்தவும், சேதத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் உள்ளது.

இருப்பினும், மன்னார் தீவில் காற்றாலை மின் திட்டங்களை செயல்படுத்தும்போது நிலையான எரிசக்தி அதிகார சபையோ  அல்லது மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையோ அல்லது கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களமோ அரசியலமைப்பில் உள்ள இந்த விடயங்களில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. அப்படி இருந்திருந்தால், இந்தக் காற்றாலை மின் நிலையங்களால் ஈரநில அமைப்புகளும் மன்னார் தீவின் மக்களும் இவ்வளவு துயரமான விதியை சந்தித்திருக்க மாட்டார்கள்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 12ஆவது பிரிவுக்கு அமைய, அத்தியாயம் மூன்றின் கீழ் அடிப்படை உரிமைகளைக் கையாள்கிறது, சட்டத்தின் பிரகடனம் மற்றும் செயல்படுத்தல் மற்றும் சட்டத்தின் பாதுகாப்பு அனைவருக்கும் நியாயமானதாக இருக்க வேண்டும். 14ஆவது யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கருத்துச் சுதந்திரம், தகவல் அறியும் உரிமை, அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரம், சட்டபூர்வமான வேலை வாய்ப்பில் ஈடுபடும் சுதந்திரம், தொழில் அல்லது வர்த்தகத்தில் ஈடுபடும் சுதந்திரம் மற்றும் ஒருவர் விரும்பும் இடத்தில் வசிக்கும் சுதந்திரம் ஆகிய அடிப்படை உரிமைகள் காற்றாலைத் திட்டங்களால் மன்னார் தீவின் மீனவ சமூகத்தினரிடமிருந்தும் அதன் மக்களிடமிருந்தும் பறிக்கப்பட்டுள்ளது. இந்தக் காற்றாலைகள் தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கைகளைத் தயாரிப்பதில், பொதுமக்களுக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன, உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன, இந்தத் திட்டங்களுக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன, கடற்கரை நுழைவாயில்கள் தடைபட்டதால் சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபடும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன, காற்றாலைகள் சுழற்சியால் உருவாக்கப்பட்ட சத்தம், அதிர்வு மற்றும் தொடர்ச்சியான நிழல்கள் காரணமாக அவர்கள் விரும்பும் இடத்தில் வசிக்கும் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. மேலும், மழைக்காலத்தில் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளால் தீவு வெள்ள அபாயத்தை எதிர்கொள்கிறது, இது அவர்கள் விரும்பும் இடத்தில் வசிக்கும் சுதந்திரத்தையும் இழக்க வழிவகுத்துள்ளது.

1955ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை உள்ள ஒரு நாடாக, நமது நாடு 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் பொறுப்புடமை கொண்டுள்ளது. அந்தப் பிரகடனத்தின் 3ஆவது உறுப்புரைக்கு அமைய அனைவருக்கும் உயிர்வாழ்வதற்கான உரிமை உண்டு என்று கூறுகிறது. 7ஆவது உறுப்புரைக்கு அமைய சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், எந்த பாகுபாடும் இல்லாமல் சட்டத்தின் பாதுகாப்பிற்கு உரிமை உண்டு என்றும் கூறுகிறது. 13ஆவது உறுப்புரைக்கு அமைய ஒவ்வொருவருக்கும் தங்கள் நாட்டின் எல்லைக்குள் வசிப்பதற்கான உரிமை உண்டு என்று கூறுகிறது. 17ஆவது உறுப்புரைக்கு அமைய, ஒவ்வொருவருக்கும் தனியாகவும் மற்றவர்களுடன் கூட்டாகவும் சொத்துக்களை வைத்திருக்கவும் உரிமை உண்டு. மேலும், யாருடைய சொத்தையும் வலுக்கட்டாயமாகப் பறிக்க முடியாது. 19ஆவது உறுப்புரைக்கு அமைய, அனைவருக்கும் குறுக்கீடு இல்லாமல் கருத்துக்களை வைத்திருக்கவும் வெளிப்படுத்தவும், தகவல்களைப் பெறவும் வழங்கவும் உரிமை உண்டு. இருப்பினும், காற்றாலை மின் நிலையத் திட்டங்களால் தீவுவாசிகளின் வாழ்வாதாரம், மீன்பிடித் தொழில் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, வெள்ள அச்சுறுத்தல் மற்றும் காற்றாலை மின் நிலையத் தாக்கங்கள் காரணமாக, தீவுவாசிகள் தங்கள் வாழ்வதற்கான உரிமையையும், வசிக்கும் உரிமையையும் இழந்துள்ளனர். இதன் விளைவாக, தீவுவாசிகள் தங்கள் சொத்துரிமைகளையும் இழந்துள்ளர். ஒப்புதல், செயல்படுத்தல், நில பரிமாற்றம், இந்தத் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிபந்தனைகள், அமைச்சரவை ஒப்புதல்களைப் பெறுதல் போன்ற எந்தவொரு தகவலையும் பொதுமக்கள் அணுகுவது தடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் குறித்து எந்தவொரு அரசு நிறுவனமும் துல்லியமான தகவல்களைப் பொதுமக்களுக்கு வழங்கவில்லை.மேலும் இந்த நிபந்தனைகளை எதிர்த்தவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவையெல்லாம் காற்றாலைகள் காரணமாக மக்கள் சந்திக்க வேண்டிய அவலங்கள். இதனால், காற்றாலைகள் காரணமாக மன்னார் தீவு மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் இரண்டையும் இழந்துள்ளனர்.

உலகத்தின் நிலையான எரிசக்தி, உலக வங்கி மற்றும் இலங்கையின் எதிர்கால விதி

எரிசக்தி அமைச்சின் 2024ஆம் ஆண்டின் தேர்ச்சி அறிக்கையின்படி, இலங்கையின் மொத்த மின்சார உற்பத்தி திறன் 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் 5841 மெகாவாட்டாகும். இதனூடாக நீர் மின்சாரம், காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி, மர எரிபொருள், உயிரியல் எரிபொருள்கள் மற்றும் நகராட்சி கழிவுகள் போன்ற நிலையான எரிசக்தி மூலங்களால் உருவாக்கப்படும் மின்சார திறன் 3658 மெகாவாட் ஆகும். இது மொத்த மின்சார உற்பத்தியில் 63 சதவீதத்தை எட்டுகிறது. இலங்கை மின்சார சபையின் 2018-2037 வரையான நீண்டகால மின் உற்பத்தி விரிவாக்கத் திட்டத்திற்கமைய (Long Term Generation Expansion Plan 2018-2037) காற்றாலை மின்சாரம் மற்றும் சூரிய மின் உற்பத்தி ஆகியவை 2037ஆம் ஆண்டு வரை நிலையான எரிசக்தித் துறையில் முக்கிய அபிவிருத்தி இயக்கிகளாக கட்டமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போதுதான், காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, எரிசக்தித் துறையில் கார்பனீரொக்சைட் வெளியேற்றத்தை 20 சதவீதம் குறைக்கும் இலக்கை எளிதாக அடைய முடியும்.

1990ஆம் ஆண்டில் 29 சதவீதமாக இருந்த தேசிய மின்சார விநியோகம், 2018ஆம் ஆண்டளவில் 99.58 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மின் உற்பத்திக்காக ஆண்டுதோறும் வெளியேற்றப்படும் கார்பனீரொக்சைட்டின் அளவு சுமார் 7 மில்லியன் மெட்ரிக் டொன் ஆகும். நாட்டில் எரிபொருள் பாவனையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் 16.7 மில்லியன் மெட்ரிக் டொன் கார்பனீரொக்சைட்டில், 44 சதவீதம் மின்சார உற்பத்தி காரணமாகவே வெளியிடப்படுகிறது.  இது உலகின் அனைத்து நாடுகளாலும் வெளியிடும் கார்பனீரொக்சைட்டின் அளவோடு ஒப்பிடும்போது 0.05 சதவீதம் என்ற மிகக் குறைந்த அளவாகும். சீனா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் ஒருவருடத்திற்கு கார்பனீரொக்சைடு வெளியேற்றம் முறையே சுமார் 9135, 5176 மற்றும் 1187 மில்லியன் மெட்ரிக் டொன் ஆகும்.

உலகில் இன்று நிலையான எரிசக்தியானது சூரிய சக்தி, உயிரியல் எரிபொருள்கள், புவிவெப்ப ஆற்றல், கடல் அலைகள், காற்றாலை மின்சாரம் மற்றும் நீர் மின்சாரம் போன்ற ஆறு மூலங்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. சர்வதேச எரிசக்தி அமைப்பின் 2025 புள்ளிவிவரங்களின்படி, உலகின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 4.45 மில்லியன் மெகாவோட்டாகும். இதில், 1.13 மில்லியன் மெகாவோட் காற்றாலை மின் நிலையங்கள் மூலமும், 1.87 மில்லியன் மெகாவோட் சூரிய மின் நிலையங்கள் மூலமும் உற்பத்தி செய்யப்படுகிறது 2030ஆம் ஆண்டாகும்போது காற்றாலை மின் நிலையங்கள் மூலம் 2.2 மில்லியன் மெகாவோட் மின்சாரத்தையும், சூரிய மின் நிலையங்கள் மூலம் 7 மில்லியன் மெகாவோட் மின்சாரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, இந்த எரிசக்தி மூலங்கள் விரைவான வளர்ச்சியை அடைந்து வருவதாகத் தெரிகிறது. இதனூடாக புதைபடிவ எரிபொருட்களின் எரிப்பிலிருந்து வளிமண்டலத்தில் பசுமையற்ற வாயுக்களை வெளியிடுவதைக் குறைப்பதுடன், இதன் ஊடாக காலநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

இது உண்மையாக இருப்பினும், இந்த நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையங்களானது காடுகள், ஈரநிலங்கள் மற்றும் ஆழமற்ற கடல்களில் உள்ள மிகவும் உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகளின் இழப்பில் இருந்தே  நிறுவப்படுகிறது. இதனூடாக எதிர்பார்த்த பலன்களை அடைய முடியுமா என்பதுவும் கேள்விக்குறியாகவே உள்ளது. இது காலநிலை மாற்றத்திற்கான களத்தை அமைப்பது மட்டுமல்லாமல், இயற்கை அமைப்புகளின் அழிவு காரணமாக விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல உணவு உற்பத்தித் துறைகளைப் பாதிப்பதன் மூலம் நாட்டின் உணவு இறையாண்மை வீழ்ச்சி நிலைக்கு உட்படுத்துகிறது. அதற்கு ஒரு தீர்வாக, உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், பயிர் நிலத்தை அதிகரிப்பதற்காகவும், உணவு இறக்குமதியை அதிகரிப்பது அல்லது காடுகள் மற்றும் ஈரநிலங்களை அழிப்பது போன்ற நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்கின்றனர். இது ஒரு சுழற்சியாகத் தொடர்ந்து வளர்ச்சியடைந்து, நாடு கடுமையான பேரழிவைச் சந்திக்க வழிவகுக்கிறது.

உலக வங்கியின் கடல் கடந்த காற்றாலை மின் அபிவிருத்தி திட்டத்தின் (Offshore Wind Development Program – World Bank Group) கீழ் இலங்கைக்கான கடல் கடந்த காற்றாலை மின் நிலையத்தின் பாதை வரைபடம் என்ற (Offshore Wind Roadmap for Sri Lanka) தலைப்பிலான அறிக்கை 2023 ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி, இலங்கையின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளின் ஆழமற்ற கடல்களில் சுமார் 14,195 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காற்றாலை மின் நிலையங்களை நிறுவி 56 கிகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று உலக வங்கி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆனால், இந்த ஆழமற்ற கடற்பரப்பு கடல் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த ஒரு பிரதேசமாகும். பவளப்பாறைகள், மணல் திட்டுக்கள், கடல்புற் படுகைகள் மற்றும் சேற்றுப் படுகைகள் போன்ற ஏராளமான கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட பிரதேசங்களாகும். இந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் கடல் மீன் இனங்கள், ஆமைகள் மற்றும் இறால் மற்றும் நண்டுகள் போன்ற கடல் முதுகெலும்பில்லாத உயிரினங்கள் போன்ற கடல் உயிரினங்களின் இனப்பெருக்கம் மற்றும் உணவளிக்கும் இடங்களாகச் செயல்படுகின்றன. மீன்பிடித் தொழில் மற்றும் அதைச் சார்ந்திருக்கும் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரம் அத்துடன், நாட்டின் உணவு இறையாண்மை ஆகியவை இந்தச் சுற்றுச்சூழல் அமைப்புகளின் தொடர்ச்சியான இருப்பைப் பொறுத்தது. இவையனைத்தும் இந்தத் திட்டங்களால் சரிந்துவிடும் அபாயத்தில் உள்ளன.

ஆசிய அபிவிருத்தி வங்கி மட்டுமல்ல, உலக வங்கியும் கூட நமது நாட்டை காற்றாலை மின்சார சந்தையின் பிடிக்குள் வேகமாகக் கொண்டு வருகின்றது. நீர் மின்சார உற்பத்திக்கான தற்போதைய நிலையான எரிசக்தி மூலத்தைப் பாதுகாக்க, தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் வண்டல் படிவதைத் தடுப்பதும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளை மேம்படுத்துவது போன்ற செலவு குறைந்த முறைகளைப் பின்பற்றுவதும் அவசியம். இதன் மூலம் மின்சாரம் மட்டுமல்ல, விவசாயத்திற்கும் மக்களுக்கும் நீர் பாதுகாப்பையும் உறுதி செய்வதுடன், அதனூடாக காலநிலை மாற்றத்தைத் தணித்தல், மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதன் மூலம் உயிரியல் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். ஆனால், ஆசிய அபிவிருத்தி வங்கியும், உலக வங்கியும் நம்மை எரிசக்தி சந்தையில் அடைத்து வைப்பதன் மூலம் இதையெல்லாம் நம்மிடமிருந்து பறிப்பதற்கான வேலையை செய்கின்றன. அதிகாரிகள் மட்டுமல்ல, இந்த அனைத்து தரப்பினரும் தற்போதைய அரசாங்கத்தையும் தன் பிடியில் வைத்துள்ளனர். ஆனால், அவர்கள் அதை உணரவில்லை. காரணம் நிலையான எரிசக்தி சந்தையை ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் நிலையான எரிசக்தி நிறுவனங்கள் மிகக் கவனமாக நிர்வகிக்கின்றன. இதனூடாக நாட்டின் எரிசக்தி இறையாண்மையைப் பறித்து, அனைத்து முடிவுகளையும் சந்தை நிறுவனங்களிடம் விட்டுவிடும் ஒரு பொறிமுறையை உருவாக்கும் முயற்சியாகும். ஒரு நாடாக நாம் இதை உடனடியாகக் கடக்க முயற்சிக்க வேண்டும்.

இதற்காக, பழைய மற்றும் காலாவதியான தொழில்நுட்பங்களில் இயங்கும் நாட்டின் தற்போதைய நீர் மின் நிலைய அமைப்பை மிகவும் திறமையாக புதுப்பிக்க வேண்டும். அதுமட்டுமன்றி, காற்றாலை மின் நிலையங்கள் குறைந்த தாக்கத்துடன் பொருத்தமான இடங்களில் மட்டுமே நிறுவப்பட வேண்டும், மேலும், மண் மற்றும் பாறை குவாரி பகுதிகளிலும், வீடுகள் மற்றும் கட்டடங்களிலும் சூரிய மின் நிலையங்கள் நிறுவப்பட வேண்டும்.  காடுகளில் உள்ள ஈரநிலங்கள், குளங்கள் அல்லது நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகளில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதை நிறுத்த வேண்டும். மேலும், பொருத்தமான இடங்களில் இத்தகைய திட்டங்களை நிறுவுவதன் மூலம் பெறக்கூடிய நன்மைகளை, வளர்ந்த அமைப்புகளில் நிலையான எரிசக்தி திட்டங்களை செயல்படுத்துவதன் மூலமும், அந்தத் திட்டங்களுக்கும் மக்களுக்கும் இடையே மோதல்களை உருவாக்குவதன் மூலமும் இழக்கக்கூடாது.

Sajeewa-Chamikara-e1761567449104.jpg?resசஜீவ சாமிக்கர
காணி மற்றும் விவசாய சீர்திருத்த இயக்கம்

https://maatram.org/articles/12376

முளையில் கிள்ளாததை வெட்டிவிடுதல் - லக்ஸ்மன்

1 week 2 days ago

முளையில் கிள்ளாததை வெட்டிவிடுதல் - லக்ஸ்மன்

முளையிலேயே கிள்ளப்படாத விடயங்களான இனத்துவேசம், பேரினவாதம்,  பாரபட்சம், அடக்குமுறைகள், ஆதிக்கத்தன்மை போன்றவற்றினை நன்றாக வளர்ந்துவிட்ட பின்னர் சரிசெய்து விடலாம் என்று எண்ணங்கொள்வது சாத்தியத்துக்குட்படுத்த முடியாதது என்பதே யதார்த்தம்.

இந்த யதார்த்தத்தைக் கடந்து செல்ல நினைப்பது குதிரைக் கொம்பானது. இதனையே மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான  தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செய்ய நினைக்கிறது. 

காலம் கடந்த பின்னர் அதனையும் பூசி மெழுக நினைப்பதல்ல, முனைவது, நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்வது எந்த அடிப்படையில் நாட்டில் இலங்கையர் என்ற உணர்வை ஏற்படுத்தும் என்பதுதான் இந்த இடத்திலுள்ள கேள்வி. 

மக்கள்  விடுதலை முன்னணியினர் இவ்வாறான கொள்கையை தேர்தல் காலத்திலோ அதற்கு முன்னரோ வெளிப்படையாக முன்வைத்திருக்கவில்லை. கொள்கையை வெளிப்படுத்தாமல், முன்வைக்காமல் தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்தபின்னர் வெளிப்படுத்துவது இவர்களுடைய இதய சுத்தியை அல்லது உள் மனச்செயற்பாட்டை சந்தேகத்துக்கே உட்படுத்துகிறது எனலாம். 

பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கை தொடர்பான வெளிப்புற முயற்சிகள் தற்போதைய தேசிய செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கையாக அமையும் என்பதுடன், சமூகங்களை தேவையில்லாமல் துருவப்படுத்தும் தலையீடு தொடர்பாக மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் உள்ள முடிவுகள் மற்றும் பரிந்துரைகளுடன் அரசாங்கம் உடன்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார். 

இது ஒரு வெறும் கருத்து என்ற கணக்கில் விட்டுவிடக்கூடிய கருத்தல்ல. அதே நேரத்தில் வெறுமனே இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மாத்திரமே நடைபெற்றிருக்கின்றன. அவற்றினை விசாரித்துவிட்டால் நாட்டிலுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துவிடும் போன்றதான கருத்துநிலையில் பிரதமருடைய உரை அமைந்திருந்தது. 

திட்டமிட்டவகையிலான குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல் செயற்றிட்டங்கள், கல்வியில் தரப்படுத்தல், விகிதாசார முறைப்படுத்தல் என கட்டமைக்கப்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் இலங்கையில் நடைபெற்றன. இப்போதும் இச் செயற்பாடுகள் முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டுவிட்டன என்று உறுதியாக கூறமுடியாத நிலைமையே தொடர்கிறது. 

ஆயுத யுத்தம் தொடங்கப்பட்டது முதல் வெவ்வேறு வழிமுறைகள் மூலம் இவ்வாறான செயற்றிட்டங்கள் நகர்த்தப்பட்டிருக்கின்றன. யுத்த ஓய்வுக்குப் பின்னரும் வேறு பல வடிவங்களாக நடைபெற்றன. அந்த வகையில்தான் இப்போதும் இலங்கையின் அரசாங்கத்தில் நம்பிக்கையற்ற தமிழர்கள் சர்வதேச பிரசன்னம், சர்வதேச போர்க்குற்ற விசாரணை, சர்வதேச நீதி வழங்கலைக் கோருகின்றனர்.

இதனை தவறென்றோ, பிழையென்றோ யாரும் கூறுவார்களானால் அவர்கள் கடந்தகால அனுபவத்தில் இதுவரை எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்ற முடிவுக்கே வரமுடியும்.  அதனால்தான், பௌத்த மயமாக்கல் நிறுத்தப்படவேண்டும் என்ற அடிப்படையில் பௌத்த மயமாக்கல் எதிர்ப்பைத் தமிழ்த் தரப்பு கையில் வைத்திருக்கிறது.

அதே போன்றுதான் இலங்கையின் பேரினவாதத் தரப்பில் நம்பிக்கையற்றுப் போனமையினாலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு சர்வதேசத்தின் பிரசன்னத்தையும் சர்வதேச நடைமுறைகளைகளையும் கோருகின்றனர். இதனைக் கைவிடுமாறு கோருவது எந்தவிதத்திலும் நியாயமாகாது என்பதும் நிலைப்பாடு.

அத்துடன் அதற்கான உரிமையும் யாருக்குமில்லை என்பது தமிழர்களின் நிலைப்பாடு. காலம் கடத்தல்களையே ஒவ்வோர் அரசாங்கமும் கைக்கொள்வதற்குக் காரணம் எதிர்கால சந்ததியினை இலக்காகக் கொண்டது என்பது வெளிப்படையானதாக இருக்கின்ற நிலையில், யதார்த்தத்தை மறந்து தமிழர்கள் தங்களது நிலைப்பாடுகளைக் கைவிட்டு யதார்த்த அரசியலைப் பேச வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் ஜே.வி.பி. இருப்பது கவலைக்குரியது.

அதற்காக அவர்கள் முன்வைப்பது புதிய அரசியல் யாப்பாக இருக்கிறது. இருந்தாலும் அது தமிழ் மக்களுக்கு சமத்துவமான நடைமுறையை ஏற்படுத்துவது எந்த அடிப்படையைக் கொண்டிருக்காது என்பது வெளியே வராத ஒன்றாக இருந்து வருகிறது. 

புதிய அரசியல் யாப்பின் ஊடாக இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை காணமுடியும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்ற ஜே.வி.பி.யினர் இது தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

இந்தக் கலந்துரையாடல்களின் தீர்மானமானது எந்தவகையிலும் தமிழர்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களைத் தொட்டுவிடவில்லை என்பதே உண்மை.
கடந்த ஒரு வருட கால ஆட்சியில் இதுவரையில் எட்டிவிட்ட விடயங்கள் என்று முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை அகற்றியது, போதைப்பொருள் மீட்புகள், அது தொடர்பான கைதுகளை மாத்திரமே பட்டியலிட முடியும்.

ஆனால், நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றே நாட்டின் முன்னேற்றத்துக்குரியதாக அமையும் என்பது மறக்கப்பட்டதாக இருந்து வருகிறது. 

நாட்டின் எதிர்காலத்துக்காக கொண்டுவரப்பட வேண்டிய முன்னேற்றங்கள் எதிர்காலத்தில் நகர்த்தப்படவுள்ள அரசியல் வியூகங்களில் தங்கிருக்கிறது என்பதனை இதுவரையில் உணர்ந்து கொள்ளாத ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான தேசிய சபை புதிய அரசியல் யாப்பு என்பதற்குள் மாத்திரம் நின்றுகொண்டிருக்கிறது.

அதில், தீர்வின்றி நீண்டுகொண்டிருக்கின்ற வடக்கு கிழக்குத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சகல இன, மத மக்களையும் பொதுமைப்படுத்தும் வகையிலேயே நகர்வுகள் காணப்படுகின்றன.

ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதும் அடங்கியிருக்கிறது. இருந்தாலும் இப்போதிருக்கின்ற ஜனாதிபதி அதிகாரத்தை மாற்றுவதற்கு ஜே.வி.பி. விரும்புமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால், 2029 ஆம்ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்படுமா? என்பது புரியா புதிரே. 

இலங்கை சுதந்திரமடைந்தது முதலே தொடர்ந்து கொண்டிருக்கின்ற இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்த்துவிடுவதில் அக்கறையற்றிருந்த இலங்கையின் அரசாங்கங்கள் தங்களது ஆட்சிகளை நகர்த்துவதிலேயே அக்கறை கொண்டிருந்தனர். சிறுபான்மையினரான தமிழ் மக்களின் உரிமைக்கான கோரிக்கையை மலினப்படுத்தும் செயற்திட்டங்களே திட்டமிடப்பட்டவகையில் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இதனை மறுப்பவர்களும் மறந்தவர்களும் இலங்கையர்கள் என்று மக்களை ஒருநிலைப்படுத்துவதைப்பற்றி சிந்திப்பது வேடிக்கையானது. 
இலங்கையில், 1833இல் கோல்புறுக் - கமரன், 1929இல் மனிங், 1924இல் மனிங் - டெவன்சியர், 1931இல் டொனமுர், 1947இல் சோல்பரி என அரசியலமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

1948இல் பிரித்தானியரால் சுதந்திரம் வழங்கப்பட்ட பின்னரும் டொமினியன் அந்தஸ்திலேயே நாடு இருந்துவந்தது. பின்னர் 1972இல் குடியரசாக மாறியது. 1978இல் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது. 22 திருத்தங்களைக் கண்ட இலங்கையின் அரசியலமைப்பு கண்டிருக்கின்ற திருத்தங்கள் யாவும் அரசாங்கங்களின் தேவைகளுக்கும், நோக்கங்களுக்குமாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தன.

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டபோது புதிய அரசியலமைப்பை உருவாக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டினால் அது இடைநடுவில் கைவிடப்பட்டிருந்தது. அதற்கு பேரினவாதத் தரப்பினருடைய செயற்பாடே காரணமாக இருந்தது. 

ஆட்சியிலிருக்கின்ற தேசிய மக்கள் அரசாங்கம் அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வதனை விடுத்து புதிய அரசியலமைப்பையே உருவாக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது. இலங்கையின் அரசியலமைப்பானது மக்களது நலனைக் கருத்தில் கொண்டா? அரசியல் நலனை நோக்காகக் கொண்டா? மேற்கொள்ளப்படப்போகிறது என்பது முக்கியமாக கவனத்திலெடுக்கப்பட வேண்டும். 

குடியரசு அரசியல் யாப்பானது நாட்டில் ஆட்சி நடத்துபவர்களுக்கும் நாட்டு மக்களுக்குமான வழிகாட்டியாகும். ஆனால், அந்த வழிகாட்டியை தாங்கள் நினைத்த வேளைகளிலெல்லாம் ஆட்சியாளர்கள் தமக்கேற்றால் போன்று, தமது அரசியல் தேவைகளுக்காக மாற்றியமைப்புதுதான் இலங்கையில் நடைபெற்று வந்திருக்கிறது.

அரசியலமைப்பையே தமக்Nகுற்றாற்போல மாற்றியமைக்கின்ற, நடைமுறைப்படுத்துகின்ற அரசாங்கங்களையுடைய நாட்டில் புரையோடிப்போயிருக்கின்ற இனப்பிரச்சினைக்கும், யுத்தத்தில் நடைபெற்ற குற்றங்களுக்கும், நியாயமான நடைமுறைகள் கைக்கொள்ளப்படுமா என்பது சந்தேகமானதே. 

அந்தவகையில்தான் முளையிலேயே கிள்ளப்படாததற்காக  மரத்தை வெட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைப்பாட்டைக் கைக் கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்ற முடிவு கிடைக்கும்.

உள்ளகப் பொறிமுறையை கொண்டுவருதல் என்கிற நிலைமை அரசியலமைப்புக்கு வெளியே பயங்கரவாதத் தடைச்சட்டம் இருப்பது போன்று இல்லாத நிலைமையை, ஏம்மாற்றங்களை தமிழர்களுக்குத் தராது என்று நம்புவோம்.

ஏமாற்றங்களையே கடந்து வந்திரக்கின்ற தமிழர்களிடம் கொண்ட கொள்கையை கைவிடும்படி கூறும் ஜே.வி.பி. நாட்டின் கடந்தகால அனுபவங்களுக்குள் சென்றுவருதலே கட்டாயமாகும்.  

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முளையில்-கிள்ளாததை-வெட்டிவிடுதல்/91-366933

செவ்வந்தியின் மீது ஈர்ப்பா வெறுப்பா? நாட்டின் அரசியல் எப்படிக் குற்றமயப்பட்டது? - நிலாந்தன்

1 week 4 days ago

செவ்வந்தியின் மீது ஈர்ப்பா வெறுப்பா? நாட்டின் அரசியல் எப்படிக் குற்றமயப்பட்டது? - நிலாந்தன்

Sew.jpeg

செவ்வந்தியோ சூரியகாந்தியோ  அவர் பாதாள உலகங்களோடு சம்பந்தப்பட்டதற்காகத் தேடப்பட்டவர். குற்றம் நிகழ்ந்த பின் நாட்டை விட்டுச் தப்பிச் சென்ற அவரைக் கைது செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. நேபாளத்தில் அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்ததும் கைது செய்ததும்  சாகச்செயல்களோ வீரச்செயல்களோ அல்ல. அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் நேபாள அரசாங்கத்தோடு தொடர்புகொண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தது. இதில் என்ன சாகசம் இருக்கிறது? குற்றம் நடந்த பின் நாட்டை விட்டுத்  தப்பிச் சென்ற ஒருவரைக் கைது செய்வதுதானே போலீசாரின் கடமை? அதைச் செய்த போலீஸ் அதிகாரியை ஏன் ஒரு சாகச வீரனாகப் போற்றி,உயர்த்த வேண்டும்? அவர்  தன்னுடைய தொழிலைத்தானே செய்தார்?

ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அதன் டிஜிட்டல் புரோமோஷன் அணியும் அதனை வீர தீரமான,ஆபத்துக்கள் மிகுந்த ஒரு சாகச நடவடிக்கையாகச் சித்தரிக்கின்றன. அதற்குத் தலைமை தாங்கிய போலீஸ் அதிகாரியை ஒரு கதாநாயகன் அளவுக்கு உயர்த்துகின்றன. இங்கே எந்த வீரமும் கிடையாது சாகசமும் கிடையாது. அரசியல் குற்ற மயப்பட்டிருக்கும் ஒரு நாட்டில், அரசியல்வாதிகள் பாதாள உலகங்களோடும் போதைப் பொருள் வலைப் பின்னலோடும் தொடர்புடையவர்களாகக் காணப்படும் ஒரு நாட்டில், பாதாள உலகக் குற்றவாளிகளால் விலைக்கு வாங்கப்பட முடியாத சில போலீஸ் அதிகாரிகள் வீரர்களாகத் தெரிகிறார்கள் என்பதுதான் இங்குள்ள ஒப்பீடு.

நாட்டின் பொதுமக்கள் மத்தியில் நம்பகத்தன்மை இழந்த,ஊழல் மிகுந்தபத்து நிறுவனங்களில் முதலாவதாக போலீஸ் நிறுவனம் காணப்படுகிறது. இந்த தகவலை சொன்னது அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட லஞ்சம் ஊழல் என்பவற்றை விசாரிப்பதற்கான ஆணைக் குழுவின் தலைவர் நீல் இடாவெல ஆகும். நாட்டின் காவல்துறை இவ்வாறு நாட்டில் மக்கள் மத்தியில் மதிப்பிழந்த பத்து நிறுவனங்களில் முதலாவதாக காணப்படும் ஒரு நாட்டில் அப்படி சில போலீஸ் அதிகாரிகள் துணிச்சலாக நடவடிக்கை எடுப்பதை ஒரு சாகசச் செயலாகக் காட்ட வேண்டிய ஒரு நிலைமை.

ஆனால் நாட்டின் அரசியல் எப்படிக் குற்றமையப்பட்டது அந்த கேள்விக்கு விடை தேடிப் போனால் அதற்கு ஜேவிபியும் ஒருவிதத்தில் பொறுப்பு. இன முரண்பாடுகள்தான் அதற்குக் காரணம். சிங்கள அரசியல்வாதிகள் எல்லாக் குற்றச் செயல்களையும் செய்துவிட்டு இனவாதத்துக்குள் பதுங்கிக் கொள்வார்கள். செவ்வந்தி கைது செய்யப்பட்ட நடவடிக்கையை விமர்சித்த விமல் வீரவன்ச கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனைக் கைது செய்த நடவடிக்கையோடு ஒப்பிட்டுத்தான் அரசாங்கத்தை அண்மையில் விமர்சித்திருந்தார். எனவே இலங்கைத்தீவில் எல்லாக் குற்றங்களையும் செய்துவிட்டு சிங்கள அரசியல்வாதிகள் இனவாதத்தின் பின் பதுங்க முடியும் என்ற நிலைமை கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக ஒரு தீய அரசியல் கலாச்சாரமாக இருந்து வருகிறது.

இவ்வாறு அரசியல் குற்றமயப்பட்ட ஒரு நாட்டில் அரசியல்வாதிகள் பாதாள உலகத் தலைவர்களோடு உறவுகளை வைத்திருப்பார்கள். சில நாட்களுக்கு முன் கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் மீதும், அவ்வாறான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

இப்பொழுது அரசாங்கம் பாதாள உலகக் குற்றவாளிகளையும் போதைப்பொருள் வலை பின்னலையும் முடக்க முயற்சிக்கின்றது. இதில் போதைப் பொருளுக்கு எதிரான போராட்டம் என்பது ஏற்கனவே முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் தொடங்கியது. ”யுக்திய” என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட அந்த நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதில் சில என்கவுண்டர்கள் நடந்ததாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின. அந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக அந்த நடவடிக்கைகளின் கனிகளை இப்பொழுது தேசிய மக்கள் சக்தி அறுவடை செய்கிறது என்பதே உண்மை. ஆனால் ஒப்பீட்டளவில் உயிர்ச் சேதம் குறைவு.

இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் திட்டமிட்டு மக்கள் முன் காட்சி மயப்படுத்துகின்றது. அரசாங்கத்தின் டிஜிட்டல் புரமோஷன் அணியானது கைது நடவடிக்கைகளை, போதைப்பொருள் கிடங்குகளை முற்றுகையிடும் நடவடிக்கைகளை, விலைக்கு வாங்கப்பட முடியாத போலீஸ் அதிகாரிகளின் நேர்மையான நடவடிக்கைகளை பிரச்சார நோக்கத்தோடு உருப்பெருக்கி காட்டி வருகிறது.

ஆனால் கடந்த ஓராண்டுக்கு மேலாக அனுர அரசாங்கம் கைது செய்தவர்களில் யார் மீதும் போர் குற்றச் சாட்டுக்களோ அல்லது இன அழிப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகளோ முன்வைக்கப்படவில்லை.

அரசாங்கம் இப்பொழுது கட்டுப்படுத்த முயற்சிக்கும் குற்றங்களுக்கெல்லாம் தாய்க் குற்றம் எது? பேரினவாதம்தான். தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இன்றுவரை நீதிக்குமுன் நிறுத்தப்படவில்லை. கைது செய்யப்பட்டிருக்கும் சில படை அதிகாரிகள் இனமுரண்பாடு சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களோடும் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகம் உண்டு. ஆனால் அவர்களுக்கு எதிராக இனமுரண்பாடு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இல்லை.

எனவே இலங்கைத்தீவில் குற்றங்களுக்கெல்லாம் தாய்க் குற்றமாகக் காணப்படும் குற்றத்தில் கை வைக்காமல் குற்றமில்லாத இலங்கையை உருவாக்கப் போகின்றோம்; பாதாள உலகங்களை ஒடுக்கப் போகிறோம் என்று அரசாங்கக் கூறிவருகின்றது. உண்மையில் அரசாங்கம் செய்வது என்னவென்றால் எதன் மீது கவனத்தை குவிக்க வேண்டுமோ,எது தாய்க் காயமோ அதைச் சுகப்படுத்தாமல் அதன்  விளைவுகளுக்கு சத்திர சிகிச்சை செய்து கொண்டிருக்கிறது.

நாட்டின் அரசியல்வாதிகளில் ஒரு தொகுதியினர் குற்றப்பின்னணியைக் கொண்டவர்கள்,பாதாள உலகக் குழுக்களோடு தொடர்புடையவர்கள் என்பது பரவலான சந்தேகம். இவ்வாறு சந்தேகப்படும் அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் பாதாள உலகங்களில் தங்களுக்கென்று  அடியாட்களை வைத்திருக்கிறார். இந்த நிழல்களை இப்பொழுது அரசாங்கம் நசுக்கத் தொடங்கிவிட்டது. அதனால் நிஜங்கள் பதட்டமடைகின்றன. நாமல் ராஜபக்ச…… “எந்தவித குற்றங்களோடும் தொடர்பில்லாதவர்களுக்கு மட்டுமே எமது பொதுஜன பெரமுனவில் எதிர்வரும் தேர்தல்களில் வேட்பு மனு வழங்கப்படும்”என்று கூறியிருப்பது அதைத்தான் காட்டுகின்றது. ராஜபக்சக்கள் அவ்வாறு கூறவேண்டிய அளவுக்கு தென்னிலங்கையில் நெருக்கடி வந்திருக்கிறது என்பது நல்ல முன்னேற்றம்.

ஆனால் அது ஒரு பாதியளவு முன்னேற்றம்தான். இந்த நடவடிக்கைகளின் மூலம் தேசிய மக்கள் சக்தி தெற்கில் தனது வாக்கு வங்கியைப் பாதுகாக்கலாம். அடுத்த தேர்தலிலும் தனது வெற்றியை உறுதிப்படுத்தலாம். ஆனால் இந்த குற்றங்களுக்கு எல்லாம் தாய் குற்றமான இனவாதத்தை வெற்றிகொள்ளாத வரை இப்பொழுது கிடைக்கும் வெற்றிகள் யாவும் தற்காலிகமானவைதான்.

2009 ஆம் ஆண்டு இலங்கை தீவில் தோற்கடிக்கப்பட்டது தமிழ் மக்களின் ஆயுத போராட்டம்தான். இனவாதம் அல்ல. ஆயுதப் போராட்டம் ஒரு விளைவு. அது மூலகாரணம் அல்ல. மூல காரணம் இனவாதம்தான். ஆயுதப் போராட்டத்தில் வெற்றி பெற்ற இனவாதம் ராஜபக்சக்களின் தலைமையில் யுத்த வெற்றிவாதமாக தன்னை அடுத்த கட்டத்திற்கு வளர்த்துக் கொண்டது. ஆனால் பொருளாதார நெருக்கடிகளின் விளைவாக யுத்த வெற்றி வாதம் தற்காலிகமாக பதுங்கியிருக்கிறது.

அவ்வாறு இனவாதம் அப்படியே இருக்கத்தக்கதாக அந்த இனவாதத்தின் விளைவாக உருவாக்கிய ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்ததை ஒரு நிலை மாற்றமாக கருதி 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலைமாறு கால நீதியை ஐநா இலங்கைக்கு முன்மொழிந்தது. நிலைமாற்றம் ஏற்படாத ஒரு நாட்டில் நிலை மாறு கால நீதியை ஸ்தாபிக்க முடியாது என்பதை தான் 2018 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்த யாப்புச் சதி முயற்சி நிரூபித்தது. மைத்திரி யார்?நிலை மாறுகால நீதியின் பெற்றோரில் ஒருவர். ஆனால் அவரே தன் குழந்தையைத் தோற்கடித்தார்.

இப்பொழுது சுமந்திரன் அவரை மேற்கோள் காட்டுகிறார். அந்த மேற்கோள் யாப்புருவாக்க முயற்சியின்போது மைத்திரி சொன்னது. தமிழ் மக்களையும் பயமுறுத்தாத சிங்கள மக்களையும் பயமுறுத்தாத வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று மைத்திரி சொல்லியிருக்கிறார். அப்படி ஒரு வார்த்தைதான் “ஏக்கிய ராஜ்ய” என்று சுமந்திரன் இப்பொழுது விளக்கம் தருகிறார். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் பயப்படும் ஒரு நிலைமை என்பது எதைக் காட்டுகிறது? நாட்டில் இனமுரண்பாட்டு அரசியலில் நிலை மாற்றம் ஏற்படவில்லை என்பதைத்தானே? சமாதானத்துக்கான கூட்டு உளவியல் சூழல் உருவாகவில்லை என்பதைத்தானே? தமிழ் மக்களைத்  தோற்கடித்ததால் இனப் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று நம்புவதே இனவாதம்தான். தோற்கடிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வெளிப்படையாக சமஸ்டி என்று கூறி ஒரு தீர்வைக் கொடுக்க முடியாத ஒரு நிலை நாட்டில் இப்பொழுதும் உண்டு என்றால் அது இனவாதம் தான். வெளிப்படைத் தன்மையற்ற ஒரு சமஸ்டியைத்தான் தீர்வாக வைக்க முடியும் என்றால் அதுவும் இனவாதம்தான். எனவே எக்கிய ராஜ்ய என்ற அந்த வார்த்தையே நாட்டில் நிலைமாற்றம் ஏற்படாததன் விளைவாக உபயோகிக்கப்பட்ட ஒன்றுதான்.

அதே நிலைமைதான் இப்பொழுதும் உண்டு. கடந்த ஓராண்டுக்கு மேலான தேசிய மக்கள் சக்தியின் கைது நடவடிக்கைகள் எவையும் இன முரண்பாடு சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களில் கைவைப்பவைகளாக இல்லை என்பதைச் சுமந்திரனும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே நிலைமாற்றம் ஏற்படாத ஒரு நாட்டில் நிலைமாறு கால நீதியை ஸ்தாபிக்க முற்பட்டதால்தான் அது தோற்கடிக்கப்பட்டது. அதைத் தோற்கடித்தது சிங்களத் தரப்புத்தான். தமிழ்த்தரப்பு அல்ல. இப்பொழுது தோல்வியுற்ற நிலைமாறு கால நீதியின் குழந்தையாகிய எக்கிய ராஜ்யவை மீண்டும் மேசையில் வைக்கிறார்களா?.

கடந்த செப்டம்பர் மாதம் சுவிற்சலாந்து ஒழுங்குபடுத்திய சந்திப்பில் கலந்து கொண்ட அரச தரப்பு பிரதிநிதி  எக்கிய ராஜ்யவை ஒரு தீர்வாக மேசையில் முன்வைத்ததாக  கஜேந்திரக்குமார் குற்றம் சாட்டுகிறார். அதாவது நிலைமாற்றம் ஏற்படாத ஓர் அரசியல்,ராணுவச் சூழலில் தயாரிக்கப்பட்ட புதிய யாப்புக்கான இடைக்கால வரைபை அரசாங்கம் மேசையில் வைத்திருக்கிறது என்று கஜேந்திரக்குமார் எச்சரிக்கின்றார்.

அரசாங்கம் ஒரு புதிய யாப்பைக்  கொண்டு வருமா? அல்லது மாகாண சபைத் தேர்தல்களை முதலில் வைக்குமா?என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு புதிய யாப்பை உருவாக்கத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை இப்பொழுது அரசாங்கத்திடம் உண்டு. மேலும் எக்கிய ராஜ்ஜியவுக்கு தமிழ் மக்களின் ஆணை உண்டு என்று அரசாங்கம் கூறுகிறது. ஏனென்றால் யாப்புருவாக்க முயற்சியில் 2015 இலிருந்து 2018 வரையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்தோடு சேர்ந்து உழைத்தது. ஜேவிபியும் சேர்ந்து உழைத்தது. எனவே அந்த இடைக்கால வரைபுக்கு தமிழ் மக்களின் ஆணை உண்டு என்று அரசாங்கம் இப்பொழுது கூறமுடியும். அதுமட்டுமல்ல கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் தங்களுக்கும் ஆணை வழங்கியிருக்கிறார்கள் என்று அரசாங்கம் கூறுவதால் அவர்கள் ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்க முடியும் என்று கஜேந்திரகுமார் எச்சரிக்கிறார்.

ஆனால் கடந்த வாரம் வரையிலும் அவருடன் உறவாக இருந்த டிரிஎன்ஏ நம்புகின்றது, முதலில் மாகாண சபைத் தேர்தல்தான் நடக்கும் என்று. மாகாண சபைத் தேர்தல்களை நோக்கி டிரிஎன்ஏ உழைத்துவருகிறது. மாகாண சபைத்தேர்தலை நோக்கிக் கருத்தரங்குகளை ஒழுங்கமைத்து வருகிறது. அது காரணமாக டிரிஎன்ஏக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான நெருக்கம் பெருமளவுக்குக் குறைந்து வருகிறது. அதாவது தமிழ்த்தேசியப் பேரவை ஈடாடத் தொடங்கிவிட்டது.

டிரிஎன்னே நம்புவதுபோல மாகாண சபைத் தேர்தல் முதலில் நடந்தால் அதில் முன்னணியைத் தனிமைப்படுத்தும் நோக்கத்தோடு புதிய சேர்க்கைகள் உருவாக வாய்ப்புகள் உண்டு. டிரிஎன்ஏ மாகாண சபைத் தேர்தலில் யாரோடு நின்றால் வெல்லலாம் என்று சிந்திக்கும். அந்த அடிப்படையில் அவர்கள் வீட்டை நோக்கி நகரக்கூடும். மணிவண்ணன் அணியும் சுமந்திரனை நோக்கிச் சாயும் ஏதுநிலைகள் தெரிகின்றன. அதாவது அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை முதலில் வைக்குமாக இருந்தால் அது தமிழ் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளைப் பிரதிபலிக்கும் ஒரு வாக்கெடுப்பாக அமையும். தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் மேலும் விகாரமடையக்கூடும். அது  வட,கிழக்கு மாகாண சபைகளில் அரசாங்கம் பலமாகக் காலூன்றுவதற்குத் தேவையான வழிகளை இலகுவாக்கிக் கொடுக்கும்.

மாறாக,அரசாங்கம் புதிய யாப்புருவாக்க முயற்சியை முதலில் தொடங்கினால், அங்கேயும் தமிழ்க் கட்சிகள் ஐக்கியப்படும் வாய்ப்புகள் குறைவாகவே தெரிகின்றன. ஏனென்றால் ஏற்கனவே கஜன் யாப்புருவாக்க நோக்கி முன்னெடுத்த ஐக்கிய முயற்சிகளை தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி தோற்கடித்து விட்டது. சுமந்திரன் எக்கிய ராஜ்யவை தன்னுடைய உழைப்பின் விளைவு என்று கருதுவதாகத் தெரிகிறது. எனவே யாப்புருவாக்க முயற்சிகளிலும் தமிழ்த்தரப்பு ஒருமுகமாக ஒரே நிலைப்பாட்டை எடுக்கத் தவறினால் என்ன நடக்கும்?

புதிய யாப்பின் முழுமைப்படுத்தப்பட்ட வரைவு முதலில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டும். அதன்பின் ஒரு வெகுசன வாக்கெடுப்புக்கு அது விடப்பட வேண்டும். ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வில் இக்கட்டுரையில் ஏற்கனவே கூறப்பட்டதுபோல  வெளிப்படைத் தன்மைமிக்க ஒரு கூட்டாட்சிக்கு ஆதரவாக சிங்கள மக்கள் வாக்களிப்பார்களா? சிங்கள மக்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்பதற்காக அரசாங்கம் வெளிப்படைத் தன்மை குறைந்த ஒரு புதிய யாப்பைத்தான் மேசையில் வைக்கும். எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால்  இப்போதுள்ள தமிழ்த் தேசிய அரசியல் சூழலில், மாகாண சபைத் தேர்தலோ அல்லது  புதிய யாப்புருவாக்க முயற்சியோ எது முதலில்  நடந்தாலும் இறுதியிலும் இறுதியாகத் தோற்கப்போவது தமிழ் மக்களா?

https://www.nillanthan.com/7865/

தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும்  கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்

1 week 4 days ago

தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும்  கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்

October 26, 2025 1:00 am

தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும்  கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்

*சர்வதேச போர்க்குற்ற விசாரணை, பௌத்த மயமாக்கல் எதிர்ப்பு போன்றவற்றை கைவிட்டு யதார்த்தமாக பேச வேண்டும் என்கிறார் நிஹால் அபேசிங்க…

*மாகாண சபைத் தேர்தல்கள தற்போதைக்கு இல்லை…

*கடந்தகால பௌத்த மயமாக்கல் பற்றி கஜேந்திரகுமார் பேசுவதை தவிர்க்க வேண்டும்…

அ.நிக்ஸன்-

புதிய அரசியல் யாப்பின் ஊடாகவே இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை காண முடியும் என ஜேபிவின் விசேட கலந்துரையாடல் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் இது பற்றி கடந்த சில வாரங்களாக தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.

அநுர அரசாங்கத்தின் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து ஜேவிபியின் பிரதான சபையான தேசிய சபை உறுப்பினர்கள், குறிப்பாக அரசாங்கத்தின் அங்கம் வகிக்காத தேசிய சபை உறுப்பினர்கள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.

கடந்த ஒரு வருட கால ஆட்சியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், எதிர்கொண்ட சவால்கள், எதிர்காலத்தில் நகர்த்தவுள்ள அரசியல் வியூகங்கள் பற்றி ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையில் தேசிய சபை உறுப்பினர்கள் இந்த உரையாடல்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

புதிய அரசியல் யாப்பு என்பதற்குள் வடக்கு கிழக்குத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்காமல், சகல இன மத மக்களின் பிரச்சினைகளையும் இலங்கையின் தேசிய விவகாரமாக எடுத்து கையாள வேண்டும் என்ற வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

புதிய அரசியல் யாப்பில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது உள்ளிட்ட பல விடங்களை தேசிய சபை உறுப்பனர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதல் பதவிக் காலத்தின் இறுதி ஆண்டில்தான், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து நாடாளுமன்ற ஆட்சி முறையை கொண்டு வரும் திட்டம் இருப்பதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

அதாவது, 2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கப்பதற்கான தயார்படுத்தல்களை தேசிய சபை உறுப்பினர்கள் ஆரம்பித்துள்ளனர்.

அதேவேளை, கடந்த செப்ரெம்பர் மாதம் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில், தமிழ்த்தரப்புடன் போசப்பட்ட விடயங்கள் குறிப்பாக பௌத்த மயமாக்கல் குறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அங்கு கடும் தொனியில் கூறிய கருத்துக்கள் தொடர்பாகவும் ஜேவிபியின் மூத்த உறுப்பினர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடனும் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபேசிங்க பங்குபற்றியிருக்கின்றனர்.

இக் கலந்துரையாடலில் கஜேந்திரகுமார் இனப்பிரச்சினைத் தீர்வுக்குரிய முறைமைகள் பற்றிக் கூறிய கருத்துக்கள், சுவிஸ்லாந்து தமிழ் இளையோர் வெளியிட்ட கருத்துக்கள் பற்றியெல்லாம், நிஹால் அபேசிங்க, ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினர்களுக்கு எடுத்து விளக்கியிருக்கிறார்.

இது பற்றியும் ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் கொழும்பில் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

அதேநேரம், மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என ஈபிஆர்எல்எஃப், ரெலோ, புளொட் ஆகிய முன்னாள் விடுதலை இயக்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை பற்றியும், புதிய அரசியல் யாப்பில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் சில சரத்துகளை உட்புகுத்தி இனப்பிரச்சினைக்குரிய தீர்வை காண்பது பற்றியும் தேசிய சபை உறுப்பினர்கள் உரையாடியுள்ளனர்.

இந்த உரையாடலின் போது, மாகாண சபைத் தேர்தல்களை தற்போதைக்கு நடத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும், புதிய அரசியல் யாப்புக்காக வரைபைத் தயாரித்து அதனை நிறைவேற்றுவது மாத்திரமே அநுர அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், 2026 ஆம் ஆண்டு முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவிப்பார் எனவும் கொழும்பில் இருந்து வெளிவரும் சில தமிழ் நாளிதழ்களில் மாத்திரம் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தல்களை தற்போதைக்கு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என ஜேபிவியின் தேசிய சபை முடிவெடுத்துள்ளதாக, அதாவது புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என சில உறுப்பினர்கள் அழுத்தம் திருத்தமாக பரிந்துரைத்துள்ளதாக அறிய முடிகின்றது.

அதேநேரம், தமிழ்த்தேசிய கட்சிகள், குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது வடக்கு கிழக்கில் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளமை, சிங்கள பௌத்த மயமாக்கல்கள் என்று பேசியிருந்ததை ஏற்க முடியாது என கூறிய நிஹால் அபேசிங்க, கஜேந்திரகுமார் அந்த சந்திப்பில் யதார்த்தமாக பேசவில்லை எனக் குற்றம் சுமத்தியிருந்தமை பற்றியும் ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்திருக்கின்றனர்.

கடந்த அரசாங்கங்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் செய்த தவறுகளையும் இழைத்த அநீதிகளையும் தமது அரசாங்கம் உடனடியாக நிவர்த்தி செய்ய முடியாது எனவும், குறிப்பாக யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை விவகாரத்தில் உடனடியாக அரசாங்கம் முடிவெடுக்க முடியாது என்றும், நிஹால் அபேசிங்க சுவிஸ்லாந்து சந்திப்பில் கஜேந்திரகுமாருக்கு எடுத்துச் கூறிய விடயங்களைப் பகிரங்கப்படுத்தி, அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுதான் என்பதை ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ஜேவிபியின் தேசிய சபை  தீர்மானித்துள்ளது.

குறிப்பாக தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசிய கட்சிகளிடம் இந்த விடயத்தை அழுத்தம் திருத்தமாக புரியவைத்து, ‘இலங்கை இறைமை’ ‘இலங்கை ஒற்றையாட்சி அரசு’ என்ற அடிப்படை நிலைப்பாட்டை ஏற்று அனைத்து இனங்களும் சமத்துவமாகவும் சகோதரத்துவமாகவும் வாழும் சூழலை உருவாக்கக்கூடிய புதிய அரசியல் யாப்புக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற சிந்தனையை வடக்கு கிழக்கில் ஏற்படுத்த வேண்டும் என ஜேவிபியின் தேசிய சபை வற்புறுத்தியுள்ளது.

அத்துடன் வடக்கு கிழக்கு இணைப்பு, சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்றெல்லாம் தமிழர்தரப்பு பேச முடியாது எனவும், அதனை அநுர அரசாங்கம் ஏற்காது என்பதையும் தமிழர்தரப்புக்கு இறுதி முடிவாக எடுத்துக் கூற வேண்டிய அவசியம் பற்றியும் தேசிய சபை தீர்மானித்திருப்பதாக ஜேவிபி தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று விரும்பினாலும், ஜேவிபியின் தேசிய சபை, அதற்கு உடன்பட மறுப்பதாகவும், குறிப்பாக செயலாளர் ரில்வின் சில்வா முற்றாக மறுப்பதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. இது பற்றி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் ரில்வின் சில்வா பேசியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஆகவே, மாகாண சபைத் தேர்தல்கள் தற்போதைக்கு நடைபெறும் வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

அதாவது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அங்கம் வகித்துள்ள ஜேவிபி அல்லாத உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய தேவை இல்லை எனவும் இரண்டு நிலைப்பாடு உள்ளமை தெரிகிறது.

ஆனாலும், ஜேவிபியின் முடிவுதான் இறுதி முடிவாக இருக்கும் என்றும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜேவிபியின் தமிழர் நிலைப்பாடு தொடர்பான விடயங்களை ஏற்று செயற்படுத்துக் கூடிய முறையில் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

அதேவேளை, 13 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என சர்வதேச பயங்கரவாத தடுப்பு பற்றிய இலங்கைச் செயற்பாட்டாளர் பேராசிரியர் ரெஹான் குணவர்த்தன வலியுறுத்தி எழுதும் ஆங்கிலக் கட்டுரைகள் பற்றியும், இந்தியாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட 13 பற்றிக் கூறிய விடயங்கள் அனைத்தும் அரசாங்கத்தினால் ஆராயப்பட்டு வருகின்றன.

இந்த ஆராய்வுகளின் பிரகாரம், சோஷலிசம் – சமத்துவம் என்ற ஜேவிபியின் பிரதான கொள்கைகளின் பிரகாரம் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்புக்கு ஏற்ப அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற வலுவான செய்தி ஒன்றை ஜேவிபி வெளியிடும் என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

13 ஐ தவிர்த்து, 2015 இல் உருவாக்கப்பட்ட ‘ஏக்கிய இராஜ்ஜிய’என்ற அரசியல் யாப்பு வரைபில் உள்ள  சில பரிந்துரைகளை மாத்திரம் மீள் பரிசீலனைக்கு எடுப்பது என அநுர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜேவிபி தகவல்கள் கூறுகின்றன.

https://oruvan.com/restrictions-and-conditions-imposed-by-jvp/

இலங்கை அரசியலும் போதைப் பொருள் பிரச்சினையும்- பா.உதயன்

1 week 4 days ago


இலங்கை அரசியலும் போதைப் பொருள் பிரச்சினையும்-
பா.உதயன்


இலங்கையில் போதைப்பொருள் பிரச்சனை இன்று பெரும் பேசுபொருளாக நாட்டின் தேசிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக சமூகத்தின் அனைத்திலும் ஒரு பெரும் புற்று நோய் போலவே இது ஆழமாகவே எங்கும் பரவியுள்ளது. குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் இந்த நோய் பரவியுள்ளது. போதைப்பொருள் என்கிற இந்த நஞ்சு விதை வட பகுதி தமிழர் பிரதேசத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது இதன் விளைவாக குடும்பங்கள் சிதைந்து, வன்முறைகள் அதிகரித்து கல்வி பாதிக்கப்பட்டு, வருகின்றது. ஆனால் இதன் வேரைத் தேடினால் இது எங்கே தொடர்புடையது என்றும் அரசியலோடு தொடர்பு பெற்ற ஒரு குற்ற வலையமைப்பாக வெளிப்படுகிறது. நீதித்துறை நிர்வாகம் மற்றும் சட்ட ஒழுங்கு அமைப்புகள் அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று பிரிந்த சக்திகளாக இல்லாமல் அரசியல் வாதிகளில் கைகளில் அகப்பட்டு ஊழலோடு சிக்ககி பலவீனமடைந் திருக்கிறது.

போதைப்பொருள் பயன்பாடு குறித்த சமூகவியல் பார்வையில் நாம் இதை பார்க்கும் போது அரசியல் பொருளாதார கலாச்சார ரீதியிலால பின்னணியைக் கொண்டதாகவே இது இருக்கும் இனங்களுக்கு இடையிலான அரசியல் ஏற்றத் தாழ்வுகள, சமூக அநீதி, நாடு எதிர்கொள்ளும் பொருளாதார பின்னடைவுகள், சட்டம் சமத்துவமாக இல்லாமல் அது தனித்துவமாக இயங்காமல் சட்டத்தின் கைகள் அரசியல்வாதிகளால் கட்டுப்படுத்தப்படுவதும், தேசிய இனங்களுக்கு இடையிலான அரசியல் தீர்வுகளை சரியான முறையில் நடை முறைப் படுத்தாமல் சமூகப் பிளவுகளை ஏற்படுத்தல், போதை பொருட்களின் பயன் பாட்டை ஊக்குவிற்பதன் மூலம் சமூக சீரழிவுகளை ஏறபடுத்தி இளைய சமுதாயத்தை கல்வி அறிவு மூலம் சிந்திக்க விடாமல் சிதைத்து ஒரு கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்தல், ஆட்சி அதிகார சக்திகள் தமது நலன் கருதி போதைப் பொருள் வியாபாரிகளுடன் தொடப்புகளை பேணுதல் இப்படி பல காரணிகளை சமூகவியல் ரீதியில் பார்க்க முடியும். இதை முழுமையாக நோக்கும் போது இலங்கையின் போதைப்பொருள் பிரச்சனை என்பது சமூக மற்றும் அரசியல் பொருளாதார கலாச்சார அமைப்பின் குறைபாடுகள் என்பதை விளக்கிக் கொள்ள முடியும். எனவே இந்த சிக்லானான பெரும் சமூக அழிவை ஏற்படுத்தும் இந்த நச்சு விதைகளை சரியாக விளங்கி இதனை சமூகவியல் தத்துவார்த்த கோட்பாடுகள் வழியாகப் புரிந்து தீர்வு வழிகளை ஏற்படுதினால் மட்டுமே சரியானதோர் சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் பாதையாகும் என்பதை எல்லா அமைப்புகளும் ஆட்சியாளரும் புரிந்து கொள்ள வேண்டும்.

சமூகவியலாளர் எமில் டர்க்கெய்ம் (Emile Drrkheim ) பல சமூகவியல் கோட்ப்பாடுகளை நிறுவியவர். கையில் அதிகாரம் என்ற படகை வைத்துக் கொண்டு ஆட்டுகிறார்கள் இதனால் மக்கள் சமூகத்தில் தங்களுக்குரிய இடத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள் குடும்பம் என்ற அமைப்பில் ஏற்படும் பொருளாதார பிரச்சினை வேலை இன்மை இப்படி பல பிரச்சினைகளால் சமூகம் நிலையாக இல்லாமல் அநீதி நிறைந்த குழப்பமான நிலையாக மாறிவிடும் இதனால் இங்கு சமூக சீர்கேடுகளும் சூழ்நிலையையும் உருவாக்குகின்றன என சமூகவியலாளர் எமில் டர்க்கைம் (Émile Durkheim) விளக்குகிறார் இந்த நிலையை “அனோமி” (Anomie) என்று அழைத்தார். இதன் பொருள் சமூகம் பின்பற்ற வேண்டிய விதிகள், நெறிமுறைகள் குழப்பமாகவோ இல்லாமலோ இருப்பது. அனோமி கோட்பாட்டை மேலும் ஆழமாக ஆய்வு செய்து, சமூகத்தில் குற்றம் எவ்வாறு உருவாகிறது என்பதை விரிவாக விளக்கினார். அனோமி என்ற இந்தக் கோட்பாட்டை எல்லோரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு நன்றாக ஆழமாக ஆய்வு செய்து, சமூகத்தில் குற்றம் எவ்வாறு உருவாகிறது என்பதை விரிவாக விளக்கினார்.

இலங்கை தேசம் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இனமுரண்பாடுகளையும் இனவாதத்தையும் ஊக்குவித்ததே தவிர எவருமே சரியானதோர் அரசியல் பாதையில் செல்லவில்லை இதன் பயனை இன்று தொடக்கம் இந்த தேசம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. நாட்டை நேசிக்கிறோம் என்று ஊழல் அரசியல் வாதிகளாலும் பொய்மையோடு கலந்த இன வாதிகளாலும் போலி இடது சாரிகளாலும் இந்த நாட்டின் அனைத்து நீதி நிர்வாகங்களும் இவர்களை கையில் சிக்கி ஒரு நாடே நாசமாக போகும் அளவுக்கு காரணமாக இருந்திருக்கிறார்கள். இது மாத்திரம் இன்றி பாதுகாப்பு படைகள் கூட இந்த அழிவுக்கு ஒரு காரணமாகவும் இருந்திருக்கிறார்கள். வடக்கு கிழக்கு ஒரு காலம் படிப்போடு இருந்தது இப்போ ஐசோடு இருக்கு அப்போதெல்லாம் கேட்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று ஒரு தலைமை இருந்தது. ஒரு பெண் இரவு சாமத்தில் கூடவே தனியே போகும் காலம் ஒன்றிருந்தது. ஆனால் அந்தத் தமிழர் தலைமை அரசுகளாலும் நம்மோடு இருந்தவர்களாலுமே அளிக்கப்பட்டது. ஆதலால் அரசு படையில் மட்டுமின்றி நாமும் நம் இனத்தின் அழிவுக்கும் துணை நின்றிருக்கின்றோம். போதையை கொடுத்து ஒரு சமூகம் புடுங்கி எறியப்படுகிறது யாரால் என்பது எல்லாம் தெரியும்.

இந்தத் தலைமையை அழித்து இன்று இந்தத் தமிழ் மக்களை சமூகச் சீரழிவுக்குள் சிக்க வைத்த பெரும் பெறுப்பு இலங்கை இராணுவப் படைகளுக்கு மாத்திரம் இன்றி எம்மவர் கூட இந்த அழிவுக்கு துணை நின்றிக்கிறார்கள். பாலியல் கொடுமைகள், களவு கொள்ளை, கொலை போதைப் பொருள் பாவனை, வன்முறைகள் என்று இன்று பெரும் சமூக சீரழிவுகளுக்கு உள்ளாகி இருக்கிறது தமிழ் சமூகம். அன்று இருந்த தமிழ் தலைமையினால் இந்த வகையிலான சமூகச் சீரழிவுகள் வன்முறைகள் எதுவும் தமிழ் சமூகத்தில் அவர்கள் பிரதேசத்தில் இல்லாமல் இருந்தது. எனவே இன்று இருக்கும் இந்த நிலைமைக்கு அரச படைகளும் அன்று இருந்த தலைமையை எதிர்த்தவர்களாலும் காட்டிக் கொடுப்பு துரோகம் இப்படி பல வழிகளால் இந்த தமிழர் தலைமை இல்லாமல் போவதற்கு துணை நின்றவர்களாலும் இன்று இந்த சமூக சீரழிவுக்கு பெரும் காரணமாக இருக்கிறார்கள். சர்வதேசம் கூடவே பெரும் யுத்தத்திற்கு துணை நின்றது பெரும் துன்பத்தை இனப் படுகொலையை எதிர் கொண்ட தமிழ் சமூகத்துக்கு யுத்தம் முடிவடைந்த பின்பும் ஒரு நீதியான தீர்வை தமிழர்க்கு பெற்றுத் தர உதவவில்லை.

தமிழர் தங்களை தாங்களே பாதுகாக்க கூடிய ஒரு தீர்வை இன்று வரை எந்த அரசும் வழங்கவில்லை. இந்தியா கூடவே தனது அதிகாரத்தை பயன் படுத்தி ஈழத் தமிழ் மக்களுக்கு சரியான தீர்வை பெற்றுத் தரவில்லை. இன்று இறுதியில் ஒரு சமூகச் சீரழிவுடனும் இராணுவ ஆக்கிரமிப்புடனும் எந்த வித தீர்வும் இன்றி இருப்பது பெரும் அவலமே. இலங்கை தேசமானது இன்னும் மாற்றமடைய போக வேண்டிய பாதை இன்னும் தூரமே. சரியான பாதையில் போக சிந்திக்காத வரையிலும் இலங்கை இன்னும் எதிர் காலாத்தில் பெரும் அரசியல் பொருளாதாரப் பிரசினைகளை தான் எதிர் கொள்ள வேண்டி வரலாம்

உண்மையான இந்த பெரும் தொற்று நோயான போதைத் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டுமானால் மாற்றங்களோடு கூடிய அரசியல் சீர்திருத்தத்தாலும், நேர்மையான உண்மையான சமத்துவ ரீதியில் சிந்திக்கக் கூடிய ஆட்சியாளர்களாலும், சமூகவியல் சரியான பார்வையிலும், இந்த நாட்டில் புரையோடிப் போய் உள்ள பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை நடை முறைப் படுத்தி மற்றும் இளைய தலைமுறைக்கு கல்வி, வேலை வாய்ப்பு, மற்றும் மனநலம் சார்ந்த விழிப்புணர்வு வழங்கப்படுவது அவசியம். இந்தப் போதை காலாச்சாரத்தை ஒழிக்க எல்லோரும் சேர்ந்து உழைக்க வேண்டும். பாடசாலைகள், சமூக ஊடகங்கள், மத நிறுவனங்கள், மற்றும் சமூக இயக்கங்கள் அனைவரும் இணைந்து இதற் காக உழைக்க வேண்டும் பேச வேண்டும் எழுத வேண்டும் ஒரு சமூக விழிப்புணர்வை இளையர் மத்தியில் உருவாக்க வேண்டும். இந்த நச்சு விதையை ஒழிக்க வேண்டும். அழகான ஒரு வாழ்வை எல்லா இனங்களும் தமது உரிமையோடும் கடமையோடும் வாழும் வழியை ஏற்படுத்த வேண்டும்.

பா.உதயன் ✍️


தமிழ் இனப்படுகொலையை அங்கீகரித்தது ஸ்கொட்லாந்து நாடாளுமன்று

1 week 5 days ago

தமிழ் இனப்படுகொலையை அங்கீகரித்த முதல் நாடாளுமன்றானது ஸ்கொட்லாந்து. மேலும் வடகிழக்கில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆதரவையும் நல்கியது. இந்த தீர்மானம் ஒக். 9, 2025 அன்று நிறைவேறியது.

http://www.nanechozhan.com/

Recognition of the Tamil Genocide and Support for Self-determination

  • Submitted by: Bill Kidd, Glasgow Anniesland, Scottish National Party.

  • Date lodged: Thursday, 09 October 2025

  • Motion type: Standard Motion

  • Motion reference: S6M-19300

That the Parliament recognises the reported mass atrocities committed against the Tamil people in Sri Lanka, particularly during the final stages of the armed conflict in May 2009, which resulted in the deaths of an estimated 70,000 to 146,000 Tamil civilians, as documented by the UN and international human rights organisations; acknowledges the findings of the UN panel of experts' report on accountability in Sri Lanka in 2011, the Office of the United Nations High Commissioner for Human Rights (OHCHR) Investigation on Sri Lanka (OISL) in 2015, and successive UN Human Rights Council resolutions highlighting credible allegations of war crimes, crimes against humanity and systemic persecution against Tamils; notes the continuing calls from the Tamil diaspora and civil society for an international investigation into the genocide and for recognition of the Tamil people’s right to determine their political future through a referendum, and calls on the UK Government to advocate at the UN for a UN-monitored referendum on Tamil self-determination in the north-east of Sri Lanka, in line with international legal standards and past UN resolutions recognising peoples’ rights to self-determination in post-conflict contexts.

Supported by: Karen Adam, Clare Adamson, Stephanie Callaghan, Bob Doris, Gordon MacDonald, Fulton MacGregor, Stuart McMillan, Carol Mochan, Kevin Stewart, Mercedes Villalba

https://www.parliament.scot/chamber-and-committees/votes-and-motions/S6M-19300

கேள்விகளுடன் உயிர்த்த ஞாயிறு

1 week 6 days ago

கேள்விகளுடன் உயிர்த்த ஞாயிறு

லக்ஸ்மன்

ஒன்றை மறைப்பதற்காக இன்னொன்றைக் கொண்டுவருதல் அல்லது உருவாக்குதல் என்பது எல்லா விடயங்களிலும் நடக்கின்ற ஒன்றே. மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசாங்கம் அட்சியை ஏற்பதற்கு முன்னர் சொன்னவற்றைச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு வெளிவருவதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறது என்றே கொள்ளலாம்.

இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் திடீர் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு காரணமாக இருந்தது. அதேபோன்று, இப்போதிருக்கின்ற அரசாங்கம் உருவாவதற்கும் காரணமாக இருந்தது. ஆனால், மீண்டும் ஒரு ஆட்சி மாற்றத்துக்குக் காரணமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டதாக இருந்தாலும், தொடர்கிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படுவது கட்டாயம் என்கிற தோரணையில் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை அரசுக்கு மிரட்டல்களை விடுத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் இப்போது சத்தமின்றி இருக்கிறார்.

சூத்திரதாரியைக் கைது செய்வோம். தண்டனை வழங்குவோம் என்று கூறிய ஜனாதிபதியும் அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும்
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், முன்னாள் இராஜாங்க அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை விசாரணைக்குட்படுத்தியது.

பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி ரவீந்திரநாத்தின் கொலையுடன் சம்பந்தப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.இருந்தாலும், அவரது கைதின் பின்னர் அவ்விடயம் எதுவுமற்றதாக அமைதியடைந்து விட்டதாகவே தெரிகிறது.

பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் 8 பேர் உட்பட 275க்கும் அதிகமானவர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ராஜபக்‌ஷக்களுக்கு விசுவாசமாக செயற்பட்டவர்கள், இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் குண்டுத் தாக்குதல் நடைபெற்ற காலம் முதலே வெளிவந்திருந்தன.

பிரித்தானியாவின் செனல் 4 கூட இராஜாங்க அமைச்சராக
இருந்த பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் உள்ளிட்டோரின் சம்பந்தம் குறித்து அவருடைய செயலாளராக இருந்த அசாத் மௌலானாவின் தகவல்களை உள்ளடக்கியதாக ஆவணப்படம் வெளியிட்டிருந்தது.

சூத்திரதாரி, சம்பந்தப்பட்டவர்கள், ஒத்தாசையாக இருந்தவர்கள், குற்றவாளிகள், தகவல் வழங்கியவர்கள் என இக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஆனால், இதுவரையில் உண்மையானவர்கள் என்று யாரும் தண்டனைக்குட்படுத்தப்படவில்லை. ராஜபக்‌ஷக்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்காக, இஸ்லாமிய அரசு அமைப்புடன் தொடர்புடைய குண்டுதாரிகள் இத்தாக்குதல்களை மேற்கொண்டனர் என்பதுதான் இப்போது வரையில் பொதுவான கருத்தாக இருந்து வருகிறது.

இருந்தாலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ராஜபக்‌ஷக்களின் திட்டமே. இலங்கை என்ன சொல்கிறது? என்ற செனல் 4 இன் கேள்வியுடனேயே 
இருக்கும் விடயமாக உயிர்த்த ஞாயிறு விவகாரம் முடிவின்றி இருக்கிறது.
உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைத் தாக்குதல்கள் நடைபெற்ற பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித ஜயசுந்தர உள்ளிட்டோர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

தேசிய தௌகீத் ஜமாத் அமைப்பு சேர்ந்து பலரும் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். இந்த அமைப்பினருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்பிருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

சஹ்ரானின் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே புலனாய்வுப் பிரிவினர் அறிந்திருந்தும், தடுப்பதற்குரிய கால அவகாசம் இருந்தும் ஏன் முன்கூட்டியே தடுக்கப்படவில்லை? என்று குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டன. ஆனால், பின்னர் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது.

கடந்த வாரத்தில், பாராளுமன்ற உயர் பதவிகள் தொடர்பான குழுவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரவி செனிவிரத்ன உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதாகத் தெரிவித்ததாக ஒரு சலசலப்பு ஏற்பட்டது.

அதன் பின்னர் பாராளுமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்து முடிந்திருந்தன. பாராளுமன்றத்தில் இவ்விடயம் குறித்துப் பேசிய 
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதாகவும், இந்தியாவே பிரதான சூத்திரதாரி என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்ன எவ்விடத்திலும் கூறவில்லை.

போலியான விடயங்களை சமூக மயப்படுத்துபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், எதற்காக இந்தியாவின் பெயர் இதற்குள் கொண்டுவரப்பட்டது என்பது பற்றியோ, இத் தகவல் எவ்வாறு வெளியே வந்தது என்பது பற்றியோ அவர் கருத்து வெளியிடவில்லை.

இது ஆராயப்பட வேண்டியதே. ஆனால், இத்தகவல் வெளியானதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரவி செனிவிரத்ன அத் தகவலை மறுத்து பொலிஸ் தலைமையகத்தினால் ஊடகங்களுக்குச் செய்திகள் அனுப்பப்பட்டிருந்தன.

அத்துடன், அது காணாமல்போனது. அதே நேரத்தில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இத்தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்திருந்தபோதிலும்,  பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரும் ரீட் மனு ஒன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சமூக மற்றும் சமய மையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை ரொஹான் சில்வா மற்றும் தாக்குதலுக்கு ஆளானதாகக் கூறப்படும் சுராச் நிலங்க ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை கடந்த 14ஆம் திகதி பரிசீலித்த மேன் முறையீட்டு நீதிமன்றின்மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லாவ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த ரிட் மனுவை எதிர்வரும் 2026ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்று இதுவரையில் ஆறு வருடங்கள் கடந்திருக்கின்றன. ஆனால், அதற்குள் மூன்று ஜனாதிபதிகள் பதவிக்கு வந்திருக்கின்றனர்.

ஒருவர் தாக்குதல் நடத்தப்பட்டமையைக் காரணம் காட்டி ஆட்சிக்கு வந்தவர். அடுத்தவர் மக்கள் போராட்டத்தின் காரணமாக அந்த ஜனாதிபதி நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற பின்னர் ஆட்சிக்கு வந்தவர். தற்போதிருப்பவர் தாக்குதலை நடத்துவதற்குக் காரணமானவர்களைப் பாதுகாத்தார் எனப் பல குற்றச்சாட்டுக்களை அடுக்கித் தான் சூத்திரதாரிகளுக்குத் தண்டனை வழங்குவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்.

எவ்வாறானாலும், வாய் வார்த்தைகளை மாத்திரமே எல்லோராலும் அடுக்கி விட முடியும். செயலில் நடத்திமுடிப்பதென்பது சாதாரணமானதல்ல என்பதுதான் இப்போது நிரூபிக்கப்பட்டுவருகிறது. போதைப்பொருள் ஒழிப்பில் ஈடுபட்டுள்ள அரசாங்கம் நேபாளம் சென்று குற்றவாளிகளைக் கைது செய்து வந்துள்ளதாக பெருமைப்பட்டுக் கொள்கிறது.

ஆனால், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்திரதாரிகளைக் கண்டுபிடிக்க, அறிவிக்க முடியாத நிலையிலேயே இருந்து வருகிறது.
விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றாலும், 
கர்தினால் மல்கம்ரஞ்சித் ஆண்டகை ஆணைக்குழுவின் விசாரணையில் திருப்தியில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார்.

சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் என்றுகோரிவந்தார். அன்றைய அரசாங்கத்தின் செயற்பாட்டில் நம்பிக்கையில்லாமலேயே அவர் இந்த நிலைப்பாட்டுடன் இருந்து வந்தார். புதிய அரசாங்கத்தினை உருவாக்குவதில் பலரும் பங்கு அவருக்கும் இருக்கிறது என்றே கொள்ளலாம்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை அறிவித்த பின்னர் தேசிய மக்கள் சக்தி முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் பெருந்தொகையானவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு விடுவார்கள் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற நம்பிக்கையும் காணப்பட்டது.

ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் நீர்கொழும்பு சென்று நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்தார். இருந்தாலும், எதுவுமே நடைபெறாது நீண்டுகொண்டே செல்வதானது 
ஏன், எதனால் என்பது வெளியாகவில்லை.

ஆரம்பத்திலிருந்து பல்வேறு வினாக்களுடனேயே இருக்கும் விடயம் இப்போதும் 
தொடர்கிறது என்றால், அரசின் இயலாமையா, பாதுகாப்பு,  விசாரணைத் தரப்பின் குறைபாடா? என்றும் கேள்வியை எழுப்புகிறது. அந்தவகையில், வினாக்களுக்கான பதில்கள் தற்போதைய அரசிடம் இருந்து கிடைக்குமா? என்பதும் கேள்விதான்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கேள்விகளுடன்-உயிர்த்த-ஞாயிறு/91-366740

பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதில் தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை  காரணிகள் — வீரகத்தி தனபாலசிங்கம் — 

2 weeks 1 day ago

பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதில் தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை  காரணிகள்

October 22, 2025

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

திருகோணமலை கடற்கரையில் 2006 ஜனவரி 2 ஆம் திகதி  விசேட அதிரடிப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ்  மாணவர்களில் ஒருவரான ரஜிஹரின் தந்தையார் வைத்தியக் கலாநிதி காசிப்பிள்ளை மனோகரன் செப்டெம்பர் பிற்பகுதியில்  லண்டனில் காலமானார். மகனின் கொலைக்கு நீதி கோரி தனது இறுதிமூச்சு வரை போராடிய அவரையும் இதுவரையில் நீதி மறுக்கப்பட்ட சகலரையும் நினைவுகூருவதற்கு ‘மக்கள் செயல்’ என்ற அமைப்பு அக்டோபர் 6 ஆம் திகதி   ‘கானல் நீதி’ என்ற தொனிப் பொருளில் யாழ்நகரில் தந்தை செல்வா கலையரங்கில்  நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. 

அந்த நிகழ்வில்  உரையாற்றியவர்களில்   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  நிகழ்த்திய உரைக்கு தமிழ் ஊடகங்கள் குறிப்பாக பத்திரிகைகள் பெரும் முக்கியத்துவத்தைக் கொடுத்திருந்தன.  உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள்,  சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும்  போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரசை பொறுப்புக்கூற வைப்பதற்கு சர்வதேச சமூகத்தின் உதவியை நாடி தமிழர்கள் இதுகாலவரையில் முன்னெடுத்த முயற்சிகளின் இன்றைய நிலை குறித்து அவர் விளக்கிக் கூறியதே  பிரதான காரணமாக இருந்தது எனலாம். 

பொன்னம்பலம் தனது  உரையில்  தமிழர்களின் நீதி தேடலின் இன்றைய இக்கட்டான  நிலையை தெளிவுபடுத்தியதுடன் நீதியைப் பெறுவதற்கு தமிழர்கள் பயணிக்க வேண்டிய பாதை மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் தொடர்பிலான தனது நிலைப்பாட்டையும் விளக்கிக்கூறினார். 

பொறுப்புக்கூறல் விவகாரம் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்கப்பட்டிருக்கும் வரை தமிழர்களுக்கு ஒருபோதுமே நீதி கிடைக்கப்போவதில்லை என்றும் தற்போதைய சூழ்நிலையில் எந்தவொரு வெளிநாட்டு அரசுமே இலங்கையை எந்தவொரு நீதிமன்றத்தின் முன்பாகவும்  நிறுத்துவதற்கு தயாராயில்லை என்றும் கூறிய பொன்னம்பலம்,   மனித உரிமைகள் பேரவையில் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையில் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கும் தீர்மானங்கள் சகலதுமே சர்வதேச வல்லரசுகளின் புவிசார் அரசியல் நலன்களை அடைவதை நோக்கமாகக் கொண்ட கருவிகளாக  இருந்தனவே தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்யக்கூடியவையாக  இருக்கவில்லை என்ற தனது கட்சியின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திக் கூறினாார். 

ஜெனீவா செயன்முறைகள் தமிழர்களுக்கு நடந்ததை வெறுமனே போர்க் குற்றங்கள் மற்றும்  மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாக  குறுக்குவதாக  அமைந்திருப்பதாக குற்றஞ்சாட்டிய பொன்னம்பலம் இலங்கையில் இடம்பெற்றது தமிழின அழிப்பு (Genocide)  என்று  உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்.  மனித உரிமைகள் பேரவையின் ஊடாக இன அழிப்புக்கு இலங்கை அரசைப் பொறுப்புக்கூற வைப்பது ஒருபோதும் சாத்தியமில்லை என்பது அவரது உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது. 

அவரின் கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 கூட்டத் தொடரின்போது இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பாக அக்டோபர் 6  ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பின்புலத்தில் நோக்க வேண்டியிருக்கிறது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்  ஆணையை மேலும் இரு வருடங்களுக்கு புதிய  தீர்மானம்  நீடித்திருக்கிறது.  அதன்  மூலமாக  மனித உரிமைகள் அலுவலகத்தில் ஏற்கெனவே  நிறுவப்பட்டிருக்கும் ‘இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தினால் (Sri Lanka Accountability Project) முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்படுகிறது.  இதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது. 

மனித உரிமைகள் பேரவையின் 60 வது கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும்  வேறு சில தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக  அமைப்புக்களையும் உள்ளடக்கிய தமிழ் தேசிய பேரவையும் இலங்கை தமிழரசு கட்சியும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கும் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் தனித்தனியாக கடிதங்களை அனுப்பியிருந்தன. அந்தக்கடிதங்களில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்படவிருந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட  வேண்டியவை என்று அவர்கள் கருதும்  விடயங்களை இரு தரப்பினரும் குறிப்பிட்டிருந்தனர். 

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஆணை நீடிக்கப்படுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்த தமிழ் தேசிய பேரவை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அதன் செயற்பாடுகள் நிறைவு செய்யப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. அத்துடன் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (International Criminal Court ) பாரப்படுத்த வேண்டும் என்று  ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர்,  பொதுச்சபை மற்றும் பாதுகாப்புச்சபையை வலியுறுத்தும் முன்மொழிவு புதிய தீர்மானத்தில் இடம் பெறவேண்டும்  என்றும் தமிழ் தேசிய பேரவை வேண்டுகோள் விடுத்திருந்தது.

அதேவேளை, தமிழரசு கட்சி ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில்  தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் செயன்முறை  ஊடாக இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்வது  பெரும்பாலும் நடைமுறைச் சாத்தியற்றது என்ற போதிலும், அந்த நீதிமன்றத்தை தாபித்த றோம் சாசனத்தை (Rome Statute )  ஏற்றுக்கொள்வதற்கு  இலங்கையை இணங்க வைப்பதற்கான முன்மொழிவை தீர்மானம் முன்வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது. றோம் சாசனத்தை இலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏற்கெனவே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் ஐக்கிய நாடுகள் மனித  உரிமைகள் உயர்ஸ்தானிகரும் யோசனை கூறியிருந்ததையும் தமிழரசு கட்சி கடிதத்தில் சுட்டிக்காட்டியது.

அந்த வேண்டுகோள்களை மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வந்த பிரிட்டன், கனடா உட்பட மையநாடுகள் கவனத்தில் எடுத்ததற்கான தடயம் எதையும் தீர்மானத்தில் காணவில்லை.  முன்னைய தீர்மானங்களை விடவும் புதிய தீர்மானம் கடுமையானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த தமிழ்த் தரப்புகளுக்கு பலத்த ஏமாற்றமாகப் போய் விட்டது. இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பு  மேலும்  இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டதை தமிழரசு கட்சி வரவேற்றது. 

“இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2012 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்ற போதிலும், 16 வருடங்களாக முன்னேற்றம் இல்லாதிருப்பது குறித்து அதிருப்தியடைந்திருந்தாலும், இலங்கை மீதான  சர்வதேச கண்காணிப்பு இன்னொரு இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டிருப்பதை நாம் வரவேற்கிறோம்”  என்று தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் செய்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். 

புதிய தீர்மானத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிராகரித்த போதிலும்,  வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து  அதை  சவாலுக்கு உட்படுத்தவில்லை. சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறை மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டிருப்பதே அடிப்படைப் பிரச்சினை என்று அரசாங்கம் கூறியது. அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து பாராளுமன்றத்தில் விளக்கமளித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் , ” போர் முடிவுக்கு வந்த உடனடியாகவே நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு தேசியப் பொறிமுறை அமைக்கப்பட்டிருந்தால், 16 வருடங்களாக ஜெனீவாவில் இலங்கையின் பொறுப்புக்கூறல் பிரச்சினை நீடித்திருக்காது.  பிரச்சினை  சர்வதேச மயப்படுத்தப்பட்டதற்கு முன்னைய தலைமைத்துவத்தின் குறுகிய அரசியல் குறிக்கோள்களும்  தொலை  நோக்கின்மையுமே காரணம்” என்று குற்றஞ்சாட்டினார்.

இலங்கையின் பொறுப்புக்கூறல்,  நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் நிலைவரத்தின் முன்னேற்றம் குறித்து முதலில் ஒரு எழுத்துமுல  அறிக்கையை மனித உரிமைகள் பேரவையின் 63 வது கூட்டத் தொடரிலும் விரிவான அறிக்கையை 66 வது கூட்டத்தொடரிலும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தீர்மானம் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை கேட்டிருக்கும் நிலையில், இரு வருடங்களுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் எந்தளவுக்கு அக்கறை காட்டும் என்ற கேள்வி எழுகிறது. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்கள் தொடங்குவதற்கு  முன்னதாக மாத்திரமே அரசாங்கங்கள் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் நோக்கில் சில அறிவிப்புக்களைச் செய்வதே  வழமையாக இருந்து வந்தது. 

அந்த போக்கில் இருந்து மாறுபட்டு செயற்படுவதற்கு தேவையான அரசியல் துணிவாற்றலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிக்காட்டும் என்று நம்பக்கூடியதாக இனப்பிரச்சினையில் அதன் அணுகுமுறைகள் அமையவில்லை. பொறுப்புக்கூறல் விவகாரம் சர்வதேசமயப்பட்டதற்கு முன்னைய தலைமைத்துவத்தின் குறுகிய அரசியல் குறிக்கோள்களே காரணம் என்று கூறும் வெளியுறவு அமைச்சரினால்  காலங்கடந்த நிலையிலாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு  ஓரளவுக்கேனும் நம்பிக்கையைத் தரக்கூடிய  உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை நிறுவுவதற்கு தனது அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வரமுடியுமா?

இந்த நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது சிந்தனையில்  இலங்கை அரசாங்கம் மீது நெருக்குதல்களை பிரயோகிப்பதற்கு  தமிழர்களுக்கு இருக்கக் கூடிய மார்க்கங்கள் குறித்து யாழ்நகர் உரையில் தெரிவித்த கருத்துக்களை நோக்குவோம்.

பொறுப்புக்கூறல் விவகாரத்தை கையாளுவதற்கு அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் பொதுக்கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று முன்வைக்கப்படுகின்ற கோரிக்கையை ஆதரிக்கும் அவர் அத்தகைய கட்டமைப்பு தொடர்பில் தீர்மானத்தை எடுக்கின்றபோது சில உண்மைகளை விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறுகிறார். 

தற்போதைய சர்வதேச கட்டமைப்புக்களில் இலங்கை தமிழர்கள் பொறுப்புக்கூறலுக்காக அணுகக்கூடியதாக இருப்பது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மாத்திரமே என்று கூறும் பொன்னம்பலம் அந்த நீதிமன்றத்தினால் ஒரு அரசை அல்ல, தனிநபர்களையே விசாரணை செய்ய முடியும் என்பதை ஒத்துக் கொள்கின்ற  அதேவேளை, ஒரு அரசை நீதிமன்றத்தில் நிறுத்தக்கூடிய கட்டமைப்பாக விளக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of  Justice )  ஒரு அரசினால் மாத்திரமே வழக்குத் தொடரமுடியும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். 

றோம் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திடாவிட்டாலும் கூட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு இலங்கையை உட்படுத்துவதற்கு மியன்மார் விவகாரத்தை உதாரணமாக அவர் காட்டுகிறார்.  சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக ஒரு அரசினால் இயலாமல் இருக்குமானால் அல்லது அந்த அரசுக்கு விருப்பமில்லாமல் இருக்குமானால் மாத்திரமே சர்வதேச  குற்றவியல் நீதிமன்றத்தினால் தலையீடுசெய்ய முடியும்.

மியன்மார் அரசு றொஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக இழைத்துவரும் கொடுமைகள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குத்தொடுநர் அலுவலகமே முறைப்பாட்டைச் செய்து விசாரணை முன்னெடுக்கப்படுவதற்கு வழிவகுத்திருக்கிறது. மியன்மாரும்  றோம் சாசனத்தில் கைச்சாத்திடவில்லை. ஆனால், மியன்மார் அரசின் கொடுமைகளில் இருந்து தப்பியோடி இலட்சக்கணக்கான றொஹிங்கியா மக்கள் தஞ்சமடைந்திருக்கும் பங்களாதேஷ் அந்த சாசனத்தில் கைச்சாத்திட்ட காரணத்தினால் அந்த மக்களுக்கு எதிரான வன்முறைகள் பங்களாதேஷிலும் இடம்பெற்றது என்ற  அடிப்படையிலேயே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதன் நியாயதிக்கத்தைப் பயன்படுத்துகிறது. 

றொஹிங்கியா மக்களுக்கு எதிராக மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்ததற்காக மியன்மார் இராணுவத் தலைவரைக்  கைதுசெய்வதற்கான பிடியாணையைப் பிறப்பிக்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத்தொடுநர் நீதிமன்றத்தை கேட்டிருக்கிறார். இது அந்த விசாரணையின் தற்போதைய நிலைவரம்.

இது இவ்வாறிருக்க, றொஹங்கியா மக்கள்  இன அழிப்புச் செய்யப்படுவதை தடுக்கவில்லை என்றும் இன அழிப்புக்கு பொறுப்பானவர்களை தண்டிக்கவில்லை என்றும்  மியன்மார் அரசுக்கு எதிராக குற்றஞ்சாட்டி  சிறியதொரு ஆபிரிக்க நாடான காம்பியா 2019 ஆம் ஆண்டில் தொடுத்த வழக்கை சர்வதேச நீதிமன்றமும் தற்போது விசாரணை செய்து வருகிறது.  இன அழிப்பைத் தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க  மியன்மாரை நிர்ப்பந்திக்கும் உத்தரவை அந்த நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டில் பிறப்பித்தது. 

தனது  தீர்ப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்கான முறைப்படியான பொறிமுறை எதுவும் சர்வதேச நீதிமன்றத்திடம் கிடையாது.  இறுதியில் அவற்றின்  நடைமுறைப்படுத்தலும் கூட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் வீட்டோ அதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் சம்பந்தப்பட்ட ஒரு அரசியல் விவகாரமாகவே மாறிவிடுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை றோம் சாசனத்தில் கைச்சாத்திட்ட அரசுகளே நடைமுறைப்படுத்த வேண்டும். இதுவரையில் அந்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை எத்தனை அரசுகளினால் உருப்படியாக நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருந்தது என்பது இன்னொரு கேள்வி.

இலங்கை அரசை பொறுப்புக்கூற வைப்பதற்கு கடந்த 16 வருடங்களாக சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதற்கு தமிழர் தரப்பு முன்னெடுத்த முயற்சிகளின் அனுபவங்களின் அடிப்படையிலேயே அடுத்த நகர்வைப் பற்றி சிந்திக்க முடியும்.  பொறுப்புக்கூறல் விடயத்தில் தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் மீது நெருக்குதல்களை பிரயோகிப்பதில் சர்வதேச நாடுகளுக்கு பெரிய அக்கறை இல்லை என்பதையே அக்டோபர்   6  ஜெனீவா தீர்மானம் தெளிவாக வெளிக்காட்டியிருக்கினது. 

இத்தகைய சூழ்நிலையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பது தொடர்பிலும் போரின் இறுதிக் கட்டங்களின் குற்றங்களுக்கு பொறப்புக்கூறலை கோருவது தொடர்பிலும் இதுவரையில் கடைப்பிடித்த அணுகுமுறைகளை தமிழர்கள் மீள்பரிசீலனை செய்யவேண்டிய தருணம் வந்துவிட்டது. 

https://arangamnews.com/?p=12393

NPP யின் நிகழ்ச்சி நிரலும் தமிழ்த்தேசியத் தரப்பின் எதிர்காலமும் — கருணாகரன் —

2 weeks 1 day ago

NPP யின் நிகழ்ச்சி நிரலும் தமிழ்த்தேசியத் தரப்பின் எதிர்காலமும்

October 18, 2025

NPP யின் நிகழ்ச்சி நிரலும் தமிழ்த்தேசியத் தரப்பின் எதிர்காலமும்

— கருணாகரன் —

ஆட்சிக் காலத்திற்கும் அப்பால் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு NPP, பல விதமாக வியூகங்களை வகுத்துச் செயற்படுகிறது. பிரதேச ரீதியாக அபிவிருத்திக் குழுக்களை உருவாக்குதல், கிராம மட்டத்தில் அபிப்பிராயக் குழுக்களை அமைத்தல், மாவட்ட ரீதியாக துறைசார்ந்தோரைக் கொண்ட கட்டமைப்புகளை நிறுவுதல், தேசிய மட்டத்தில் வல்லுனர்களின் பங்கேற்புகளை அதிகரிக்கும் வகையிலான நிகழ்ச்சிகளை உருவாக்குதல் எனப் பல வகையில் இந்த வியூகங்கள் அமைகின்றன. 

எதிர்த்தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்வது, முறியடிப்பது ஒருவகையான வியூகம். எதிர்த்தரப்பினர் மக்களின் செல்வாக்கைப் பெறக்கூடாது, மக்களைத் தம்வசப்படுத்தி வைத்திருப்பது என்ற அடிப்படையில் செயற்படுவது இன்னொரு வகையான வியூகம். இரண்டையும் மிகக் கச்சிதமாகச் செய்கிறது NPP. 

“இதில் என்ன புதுமை உண்டு?எந்த அரசியற் கட்சிகளுக்கும் உள்ள பொதுவான இயல்புதானே இது? முன்பு ஆட்சியிலிருந்தவர்களும் தங்களுக்குத் தெரிந்த வித்தைகளையெல்லாம் காட்டினார்கள். ‘நிலையான அபிவிருத்தி‘, ‘அரசியற் தீர்வுக்கான முயற்சி‘, ‘புதிய அரசமைப்பு உருவாக்கம்‘ என்றெல்லாம் எத்தனையோ படங்கள் காட்டப்பட்டது. இப்பொழுது NPP தன்னுடைய வேலையைச் செய்கிறது. அது அப்படிச் செய்யும் என்பது எதிர்பார்க்கக் கூடியதுதான். சனங்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக் கூடியவர்கள். அவர்கள் தீர்மானித்துக் கொள்வர்“ என்று சிலர் சொல்கிறார்கள்.

அவர்கள் சொல்வதில் உண்மை உண்டு. ஆனால், அதற்காக ஏனைய தரப்புகளோடு NPP யை சமப்படுத்திப் பார்க்க முடியாது. NPP வேறான ஒன்று. அதனுடைய அடித்தளமும் செயற்பாட்டு முறையும் அதற்கான நுட்பங்களும் வேறு. ஏனைய கட்சிகளிலிருந்தும் முந்திய ஆட்சித் தரப்புகளிடமிருந்தும் அவற்றின் உபாயங்களிலிருந்தும் NPP வேறுபட்டது. மட்டுமல்ல, NPP யைப் பற்றிய பொது மக்களின் அபிப்பிராயம் ஏனைய ஆட்சித் தரப்பினரைப் பற்றியதைப்போல அல்ல. அது வேறானது. ‘ஏனையவற்றை விடப் பரவாயில்லாத தரப்பு‘. ‘நம்பிக்கைக்குரிய சக்தி‘. ‘முற்போக்கானது‘. ‘ மாற்றங்களைச் செய்யக் கூடியவர்கள்‘. ‘நேர்மையானவர்கள்‘, ‘குற்றங்களோடும் ஆட்சித் தவறுகளோடும் சம்மந்தப்படாதவர்கள்‘, ‘முந்திய ஜே.வி.பியும் இன்றைய NPP யும் ஒன்றல்ல‘ என்ற அபிப்பிராயம் அல்லது அவ்வாறானதொரு பார்வை பொதுமக்களிடத்தில் NPP யைப் பற்றி உண்டு. 

இனப்பிரச்சினையைப் பற்றிய புரிதல், அரசியலமைப்பு உருவாக்கம், பன்மைத்துவம் குறித்த அணுகுமுறை, பல்லினத் தேசியத்தை ஏற்றுக் கொள்வதில் உள்ள தயக்கம் போன்றவற்றில் ஏனைய சக்திகளோடு பெரிய வேறுபாடுகளில்லை என்றாலும் அந்த வேறுபாட்டை உணர முடியாதவாறு NPP நடந்து கொள்கிறது. 

இதனை யாரும் மறுக்க முடியாது. அப்படி மறுத்தால், அவர்கள் NPP யைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தமாகும். என்பதால்தான் தமிழ்பேசும் மக்களிடம் NPP க்கும் அநுரகுமார திசநாயக்கவுக்குமான ஆதரவுத் தளம் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தலை விட உள்ளுராட்சித் தேர்தலில் NPP க்குச் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று யாரும் சமாதானம் சொல்லி ஆறுதலடையக் கூடும். ஆனால், தற்போதைய நிலவரம் அப்படியில்லை. அந்த இறக்கத்தை ஏறுமுகமாக்குவதற்கு NPP தீவிரமாகச் செயற்படுகிறது. அதற்கே ஏற்கனவே சொல்லப்பட்ட கட்டமைப்புகளை உருவாக்குவதும் தொடர்பாடல்களை விரிவாக்குவதுமாகும். அதாவது NPP மிகச் சுறுசுறுப்பாகவும் மிகத் தீவிரமாகவும் வேலை செய்கிறது. இதனை எதிர்த்தரப்புகள் புரிந்து கொள்வது அவசியம். குறிப்பாகத் தமிழ்பேசும் சமூகத்தினர் இந்த விடயத்தில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியமாகும். 

ஏனென்றால், NPP யின் அடிச்சட்டம் JVP யே. JVP அடிமட்டத்தில், மக்களுடன் நெருக்கமான உறவைப் பேணுவதிலும் மக்களைப் பங்கேற்பாளர்களாக்குவதிலும் திறன்வாய்ந்தது. எத்தகைய தோல்விகளுக்குள்ளும் திறன் குன்றாமல் வேலை செய்யக் கூடியது. ஆயுதப் போராட்ட காலத்தில் JVP யின் முதுகெலும்பு ஒன்றுக்கு இரண்டு தடவை முறிக்கப்பட்டது. அரசியற் கட்சியாகச் செயற்பட்ட காலத்தில்,  அரசியல் ரீதியாக பல துண்டுகளாக உடைந்தது அல்லது ஆட்சியாளர்களால் அவ்வாறு உடைக்கப்பட்டது. ஆனாலும் அதனுடைய அடித்தளம் சிதையவில்லை. 

இரண்டாவது, இடதுசாரி முகத்தைக் கொண்டதாக இருந்தாலும் அதற்கு மாறாக தீவிர இனவாதத்தை வரலாறாகப் பெற்றது. மலையக மக்களை வேற்றாளர்களாகப் பார்ப்பது தொடக்கம், தமிழ், முஸ்லிம் சமூகத்தினரை இரண்டாம் நிலையில் வைத்துப் பார்க்கும் உளத்தைக் கொண்டது. தற்போது கூட அதில் பெரிய அளவில் மாற்றங்களை அவதானிக்க முடியவில்லை.

இதையெல்லாம் மறைப்பதற்கே ‘அனைவரும் இலங்கையர்கள். அனைவரும் இலங்கையர்களாகவே கொள்ளப்படுவார்கள்‘ என்ற பெருங்கதையாடல்கள் NPP யினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அனைவரும் இலங்கையர்கள்தான் என்ற அடிப்படையில் அனைத்துச் சமூகத்தினரையும் சமனிலையில் NPP நோக்கினால் அது மகிழ்ச்சியே. ஆனால், அது உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். அதாவது நடைமுறையாக இருக்க வேண்டும். 

அப்படியென்றால், அதற்கான நடவடிக்கைகளை NPP படிப்படியாக ஆரம்பித்து நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறான நடவடிக்கை எதுவும் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால், இந்தக் கட்டுரையாளர் உட்பட பெரும்பாலான தமிழ்பேசும் மக்கள் அவ்வாறான எதிர்பார்ப்போடும் தேடல்களோடும்தான் உள்ளனர். குறிப்பாக ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க, பிரதமர் ஹரிணி ஜெயசூரிய போன்ற சற்றுப் பன்முகத் தன்மையோடு  விடயங்களை நோக்கக் கூடியவர்களின் மீதான நம்பிக்கையோடு  உள்ளனர். அதை அவர்கள் பாதுகாக்க வேண்டும். அப்படியே அடுத்த கட்டமாக உருவாக்கப்படவுள்ளதாகச் சொல்லப்படும் அரசியலமைப்பை பல்லின சமூகங்களின் தேசம் என்ற வகையில் உருவாக்க வேண்டும். அதை உறுதிப்படுத்தப்படுவது அவசியம்.

அரசியமைப்பில் எந்தக் காரணம் கொண்டும் சிங்களத்துக்கும் பௌத்தத்திற்கும் முன்னுரிமை அளிக்கக் கூடாது. பௌத்தத்துக்கு முன்னுரிமை அளித்தால், அது சிங்களத்துக்கு முன்னுரிமை அளித்தலாகவே அமையும்.

“பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்காமல் விட்டால், சிங்களத்தரப்பின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாது. ஆட்சியைக் கவிழ்ப்பதற்கே முயற்சிகள் நடக்கும்“ என்ற கதைவிடல்கள் இங்கே அவசியமற்றவை. அப்படியென்றால், அது இதற்குமுன் ஆட்சியிலிருந்த தரப்புகள் சொன்னதையே தேசிய மக்கள் சக்தியும் வெட்கமில்லாமல் சொல்கிறது என்று அர்த்தமாகும். 

குறிப்பாக1970 களில் இனவன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு, ஜே.ஆர். ஜெயவர்த்தன சொன்னதைப்போல, ‘சிங்கள மக்கள் விரும்புவதையே தன்னால் செய்ய முடியும். அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாகச் செய்வது அவர்களுடைய நம்பிக்கைக்கு இழைக்கப்படும் செயலாகும் என்பதைப்போலாகும். 

ஆக, கட்சிக்குள்ளே அடிப்படையான மாற்றங்களுக்கு எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்காமல், வெளியே பெருங்கதையாடல்களைச் செய்யும் ஒரு ஆட்சித்தரப்பாகவே தேசிய மக்கள் சக்தியும் செயற்பட விளைகிறது என்றே கொள்ள வேண்டியுள்ளது. கடந்த கால ஆட்சியாளர்களின் தவறுகளைத் திருத்தம் செய்வதாகச் சொல்லப்பட்டாலும் அதில் இனப்பிரச்சினையைக் கையாண்ட தவறான அணுகுமுறை போன்ற பெரிய விடயங்கள் திட்டமிட்டு விலக்கப்படுகின்றன. அதாவது,தேர்வு செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரல்களே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்டு அவசியமானவை புறக்கணிக்கப்படுகின்றன (Only selected agendas are implemented. Selected and necessary ones are ignored).     

ஆட்சியிலிருக்கும் தரப்பு, தொடர்ந்தும் அதிகாரத்தைப் பெறுவதற்கே விரும்பும்; முயற்சிக்கும் என்பதால் இந்த மாதிரியான விளையாட்டுகளை, தந்திரோபாயங்களாகச் செய்யும் என்று இதற்கும் யாரும் நியாயப்படுத்தல்களைச் செய்யக் கூடும். அப்படியெல்லாம் நியாயப்படுத்தி, NPP யைப் பிணையெடுக்க முற்பட்டால், அவர்கள் இந்த நாட்டையே புதைகுழிக்குள் தள்ளி விடுகிறார்கள் என்றே அர்த்தமாகும். 

இங்கே NPP யை வழமையான தமிழ் நோக்குநிலையில் வைத்து இந்தச் சொற்களைக் கூறவில்லை. தேசிய மக்கள் சக்தியை ஆதரவுக் கண்ணோட்டத்தில் அணுகுவதனால், அதனுடைய முக்கியத்துவத்தையும் வரலாற்றுப் பொறுப்பையும் உணர்த்துவதற்கே இவை அழுத்தமாகக் கூறப்படுகின்றன. இன்னும் சரியாகச் சொன்னால், மாற்றங்களுக்கான ஒரு சக்தி(தரப்பு) என்ற அடிப்படையில் நம்பிக்கையோடு நோக்கப்படுவதால் தேசிய மக்கள் சக்தியின் பொறுப்புகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. 

இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்கவே முடியாது என்பதையே வரலாறு திரும்பத்திரும்ப நிரூபித்திருக்கிறது. ”இல்லை, நாங்கள் அதைப் புதிய முறையில் செய்துவெற்றியடைவோம்“         என்று NPP சொல்ல முற்பட்டால், எல்லோரும் ஏறி விழுந்த நொண்டிக் குதிரையில்தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஏறி விழப்போகிறது. மறுபடியும் காதில் துளையிட்டு ஒரு பூச்சூடல்.  

இனவாத அடிப்படையில் விடயங்களை அரசாங்கம் நோக்க முற்பட்டால் நாடு பிளவுண்டதாகவே இருக்கும். ஒருபோதும் ஒற்றுமைப்படாது. பிளவுண்ட நிலையில் இருக்கும் நாட்டில் முன்னேற்றத்தை எட்டவே முடியாது. குறிப்பாக வடக்குக் கிழக்கில் முதலீடுகளுக்கான வாய்ப்பும் சீரான அபிவிருத்தியும் நடக்காது. மலையகத்தில் உள்ள தமிழ் மக்கள் அபிவிருத்தியில் பங்களிக்கவும் பங்குபெறவும் முடியாமல் போய் விடும். இதெல்லாம் ஏற்கனவே சொல்லப்பட்டவாறு தேர்வு செய்யப்படும் அடிப்படையில் ஏற்பும் புறக்கணிப்புமான ஒரு அரசியல் வேலைத்திட்டமாகவே மாறும். அப்படி மாறினால் அது சமூகக் கொந்தளிப்புகளையே உருவாக்கும். அதன்பிறகு எப்படி அனைவரும் இலங்கையர்களாக முடியும்?

முந்திய ஆட்சியாளர்கள் மீளவும் அதிகாரத்தைப் பெற முடியாதவாறு தேர்வு செய்யப்பட்ட நடவடிக்கைகள் NPP யினால் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படியேதான் ஊழல்வாதிகளின் மீதான நடவடிக்கைகள் தொடக்கம் அனைத்து அரசியல் நிகழ்ச்சி நிரல்களும் அமைகின்றன. இதையே தம்மீதான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் என்று எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. ஆனால், அப்படி அவை சொல்வதற்குரிய தகுதி அவற்றுக்கு இல்லை. அப்படிச் சொல்லித் தங்களுடைய தவறுகளை மறைத்து விடவும் முடியாது. 

இத்தகைய பின்னணியில் தமிழ், முஸ்லிம், மலையக அரசியல் சமூகங்கள் எப்படித் தங்களுடைய பிரச்சினைக்கான தீர்வை  எதிர்கொள்ளப்போகின்றன? அந்தச் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியற் கட்சிகள் என்ன செய்யப்போகின்றன? என்ற கேள்விகள் எழுகின்றன. அரச எதிர்ப்பு, NPP யும் இனவாதக் கட்சிதான் என்று வழமையான எதிர்ப்பு அரசியலை மட்டும் செய்வதால் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை. அத்தகைய அணுகுமுறை நிச்சயமாக அவற்றுக்குக் கைகொடுக்கப்போவதில்லை. மக்களுக்கும்தான். ஆகவே NPP யும் புதிதாகச் சிந்திக்க வேண்டும். ஏனைய தரப்புகளும் புதியனவாகச் செயற்பட வேண்டும்.  நாட்டைக் கட்டியெழுப்புவதென்பது பிரச்சினைகளுக்கு நியாயமான முறையில் தீர்வுகளைக் காண்பதிலிருந்தே ஆரம்பிக்கப்படுவதாகும். 

https://arangamnews.com/?p=12391

தமிழ் மக்களுக்கு இந்தியா அளித்துள்ள உறுதிப்பாட்டை நிறைவேற்ற தவறியுள்ளது - கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவிப்பு

2 weeks 4 days ago

Published By: Digital Desk 3 19 Oct, 2025 | 12:40 PM

image

ஆர்.ராம்

40ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்காகத் திறந்துவிட்ட மாகாண அரசியல் வெளியை இந்திரா காந்தியின் சிறப்புத் தூதர் ஜி.பி. பார்த்தசாரதியின் இளம் உதவியாளராக இருந்த தற்போதைய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. சுப்ரமணியம் ஜெய்சங்கர் உள்ளிட்ட அரசாங்கம் ஆதரிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிர்வாகத்தால் முடக்கப்படுவது இந்திய இராஜதந்திரத்தின் முரணாகும் என்று கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ச்சியாக தாமதிக்கப்பட்டு வரும் நிலைமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம், அதன் முகப்புரையில் அரசியல் அதிகாரப் பரவலாக்கல் குறித்த தனது உறுதிப்பாடுகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டுள்ளது. அது நல்லிணக்கம் மற்றும் மக்கள் அனைவரும் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது உட்பட, உள்ளூர் நிர்வாகத்தை மதிக்குமாறு அரசாங்கத்தை ஊக்குவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

மாகாண சபைத்தேர்தல்களை நடத்தவும் அத்தேர்தல் தடைப்பட்டிருப்பதற்கு காரணமாக இருக்கும் சட்ட விடயத்தினை தீர்க்கவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான நிர்வாகம் உறுதியளித்துள்ளது. 

தற்போதுகூட, தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் தனிநபர் தீர்மானத்தின் மூலம் சட்டச் சிக்கலுக்கான தீர்வினைக் காணமுடியும். 

அதுமட்டுமன்றி, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதால் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடிகள் ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காணப்படலாம். ஆனால் அரசியல் ரீதியாக மிகவும் விலையுயர்ந்ததாகவும், சர்வதேச ரீதியாக அழுத்தங்கள் ஏற்படுத்தக்;கூடிய போர்க்காலப் பொறுப்புக்கூறல் பிரச்சினைகளில் காணப்படுகின்ற நெருக்கடிகளை குறைப்பதற்கு அதுவழிவகுக்கும். உதாரணமாக கூறுவதாக இருந்தால் அயர்லாந்தின் வெற்றிகரமான தேர்தல் முன்னெடுப்புக்களால் வெள்ளிக்கிழமை ஒப்பந்தத்தில் பொறுப்புக்கூறல் அம்சம் எதுவும் இருக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இதேவேளை, சிங்கள மொழி ஊடகவியலாளர் சம்பத் தேசப்பிரிய, பெலவத்தையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஜே.வி.பி. தலைவர்கள் 13ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபைகளை ஒழிப்பதற்காக ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கான யோசனையைப் முன்னெடுப்பதாகவும் அதற்காகவே  மாகாணங்களுக்கான தேர்தலைத் தவிர்ப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதேநேரம், வடக்கு மற்றும் கிழக்கில் இந்திய முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட பெரிய பொருளாதார வாய்ப்புக்களைப் பயன்படுத்தி, இந்தியாவின் எதிர்ப்புகளை, தவிர்க்கலாம் என்றும் அதன் ஊடாக மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்புகளையும் நடுநிலையாக்க முடியும் என்றும் ஜே.வி.பி. நம்பலாம்.

ஆனால் உண்மையில் ஆட்சியாளர்களுக்கு உடனடியாக மாகாண தேர்தல் நடத்துவவதானது, தாமதமாக நடப்பதை விடச்சிறந்ததாக இருந்தாலும், சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அக்கட்டமைப்பை ஒழிப்பதானது, தேசிய மக்கள் சக்திக்கு கணிமான செல்வாக்கு இழப்பையே ஏற்படுத்தும்.

40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்காக திறந்துவிட்ட மாகாண அரசியல் வெளி இந்திரா காந்தியின் சிறப்புத் தூதுவராக இருந்த ஜி.பி. பார்த்தசாரதியின் இளம் உதவியாளராக இருந்த தற்போதைய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்ரமணியம் ஜெய்சங்கர் உட்பட இந்திய அரசாங்கம் ஆதரிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிர்வாகத்தால் மூடப்படுவது இந்திய இராஜதந்திரத்தின் முரணாகும். 

ஒருவேளை தமிழ் மக்களுக்கான அரை-சுயாட்சி அரசியல் வெளியான மாகாண சபை முறைமையானது, இந்தியா, மற்றும் அநுரகுமார அரசாங்கத்தின் கூட்டு இலாபங்களை அடைவதற்காகவும் மூலோபாயத் தடயத்திற்காகவும் பண்டமாற்று செய்யப்பட்டிருக்கலாம். 

ஆனால் சீனா எப்போதும் இலங்கைக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றியே உள்ளது. ஆனால் இந்தியா வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கல் குறித்த அளித்த உறுதிப்பாட்டை நட்புரீதியான, நன்றியுள்ள அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோதிலும், அதனை நிறைவேற்றுவதற்கு தவறவிட்டதாகத் தெரிகிறது.

ஆகவே, தமிழர்களின் நகர்வு டெல்லி மற்றும் கொழும்பை விடுத்து துணைப்பிராந்திய அல்லது அதற்கும் அப்பாலாகச் செல்லும் போது, அநுரகுமாரவால் உருவாக்கப்பட்ட இந்திய இராஜதந்திரத்தால் புறக்கணிக்கப்பட்ட அரசியல் வெற்றிடத்தின் அபாயங்கள் வெளிப்படையாகத் தெரியும், அச்சமயத்தில் அதனை மாற்றியமைப்பதற்கான நிலைமை மிகவும் தாமதமாகியதாகவே இருக்கும்.

மேலும், தற்போதைய நிலையில் மாகாண சபைகள் அரச நிலங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தாவிட்டாலும், மாகாண சபைகளின் முடக்கம், திருகோணமலையில் இனக்குழுக்களை இடம்பெயரச்செய்வது, பொருளாதார வாழ்வாதாரங்கள் பாதிப்படைச்செய்வது, மன்னாரில் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்பு உள்ளிட்ட விடயங்;கள் குறித்து இன, மத போராட்டங்கள் மாகாண சபைகளில் விவாதத்திற்கு வரவில்லை என்பதைக் குறிக்கிறது. 

மாகாண சபைகள் தொடர்ந்து 'காணாமல் போனதால்' ஏற்பட்ட வெற்றிடம், தீவு முழுவதும் சமூகங்களின் மீது வெளிநாட்டு மற்றும் உள்ளுர் கூட்டு நிறுவனங்கள் நடத்தும் கொள்ளையை தடுத்து நிறுத்துவதற்கான இயலாமையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/228132

ஐநா தீர்மானமும் தமிழகமும்: தமிழகம் ; புது டில்லி ; ஜெனிவா - நிலாந்தன்

2 weeks 4 days ago

ஐநா தீர்மானமும் தமிழகமும்: தமிழகம் ; புது டில்லி ; ஜெனிவா - நிலாந்தன்

535635095_1334892528194429_5733989210523

“சிறிலங்கா தொடர்பான ஐநா மனிதவுரிமை பேரவையின் 60/1 தீர்மானம்  நீதியைப் பெற்றுத் தராது! தமிழர்கள் தம்மை ஒருங்கிணைத்துக் கொள்வதே முதல் பணி!’ இது ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையின் தலைப்பாகும். ஈழப் போராட்டத்திற்காகத் தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஈழ உணர்வாளர்கள் இணைந்து உருவாக்கிய கட்டமைப்பே ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பாகும். கடந்த 13ஆம் திகதி அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணி கையெழுத்திட்டு வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையின் ஒரு பகுதி கடைசியாக நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானம் தொடர்பாக பின்வருமாறு கூறுகிறது.

“இந்த தீர்மானம் முந்தைய தீர்மானங்களில் இருந்து ( 30/1 (2015),  46/1 (2021) 51/1 (2022), 57/1 (2024)  )   ஒருபடி கீழே இறங்கிவிட்டது.  இந்த தீர்மானத்தில் முதல் முறையாக “பன்னாட்டு” என்ற சொல் அடியோடு நீக்கப்பட்டுள்ளது. இது பன்னாட்டு உதவியுடனான பொறுப்புக்கூறல் பொறிமுறை என்ற பேரவையின் முந்தைய உறுதிப்பாட்டிலிருந்து பின்வாங்கியதைக் குறிப்பதாகும். 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீரமானம் பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான கலப்பு பொறிமுறை ஒன்றை முன்வைத்தது. ஆனால், பத்தாண்டுகள் கழித்து அதே பேரவையில் முந்தைய நிலைப்பாட்டை மறுத்து உள்நாட்டுப் புலனாய்வு என்று பேசுகிறது”

கடந்த 16 ஆண்டு கால ஜெனிவா மைய அல்லது மேற்கு நாடுகளை நோக்கிய ஈழத் தமிழ்த் தேசிய அரசியலின் தற்போதைய நிலை குறித்து தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு செயற்பாட்டாளர்களின் கருத்து அது.

தமிழகத்திலிருந்து வரும் கருத்துக்களுக்கு ஒரே சமயத்தில் இனப்பரிமாணமும் பிராந்தியப் பரிமாணமும் ராஜதந்திரப் பரிமாணமும் உண்டு. ஏனென்றால் இந்தியப் பேரரசின் அரசியல் தீர்மானங்களின் மீது தாக்கம் செலுத்தக்கூடிய ஒரே சாத்திய வெளி தமிழகம்தான். ஈழத்தமிழர்கள் நொதிக்கச் செய்ய வேண்டியது தமிழகத்தைத்தான். தமிழகத்தைத் தவிர்த்துவிட்டு ஈழத்தமிழர்கள் நீதிக்கான போராட்டத்தில் நிர்ணயகரமாக முன்னேற முடியாது.

ஈழத் தமிழர்களுக்காக இதுவரை தமிழகத்தில் 19பேர் தீக்குளித்திருக்கிறார்கள். ஈழத்தில் இடம்பெற்ற இனஅழிப்புக்கு எதிராக முதலாவது தீர்மானத்தை நிறைவேற்றியது தமிழகந்தான். உலகில் உள்ள ஆகப்பெரிய தமிழ் சட்ட மன்றம் அது. எட்டுக் கோடி மக்களைப் பிரதிநித்துவப்படுத்துவது. அங்கே நிறைவேற்றப்படட இனஅழிப்புக்கு எதிரான தீர்மானத்துக்கு அரசியல் மற்றும் ராஜதந்திர முக்கியத்துவம் உண்டு. அதுபோல  முதலாவதாக இனஅழிப்பு நினைவுத் திடலை தஞ்சாவூரில் கட்டியெழுப்பியதும் தமிழகந்தான்.

ஆனால் கடந்த 16ஆண்டுகளாக தமிழகத்தின் பரந்தளவிலான கவனக் குவிப்புக்குள் ஈழத்தமிழர்கள் இல்லை. ஈழத் தமிழர் விவகாரம் தமிழகத்தில் நொதிப்பை,கொந்தளிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இல்லை.

செம்மணிப் புதைகுழி  திறக்கப்பட்டிருந்த பின்னணிக்குள், கடந்த யூலை மாதம் 26 ஆம்திகதி  நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் சுவாமி சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. கடந்த ஒகஸ்ற் 19ஆம் திகதி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஏற்பாட்டில் சென்னை,சுவாமி சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டப் பேரணி  நடைபெற்றது. இப்பேரணியில்,”ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சாட்சியாக விளங்கும் செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி விசாரணை நடத்தக் கோரி ஐநா மன்றத்தை வலியுறுத்தியும்,  தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த கோரும் தீர்மானத்தை நிறைவேற்றி ஒன்றிய அரசிற்கு அனுப்பி ஒன்றிய அரசை வலியுறுத்தக் கோரியும்” கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இப்பேரணிகள் பற்றியும் அவற்றில் பேசப்பட்ட விடயங்கள் பற்றியும் ஈழத் தமிழர்களுடைய பிரதான ஊடகங்களில் பெரிய அளவுக்குக்குப் பேசப்படவில்லை.

திபெத்தியர்களின் சுதந்திரப் போராட்டத்தில் இதுவரையிலும் நூற்றுக்கும் அதிகமானவர்கள்  திபெத்துக்காக தீக்குளித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே திபெத்தவர்கள்தான். பிற இனத்தவர்களோ பிற நாட்டவர்களோ கிடையாது. ஆனால் ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்காக இதுவரை தமிழகத்தில் 19 தியாகிகள் தீக்குளித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தமிழகத்தவர்கள். இவர்களில் யாருமே இந்தியப் பேரரசின் ராஜதந்திர இலக்குகளை முன்வைத்துத் தீக்குளிக்கவில்லை. திருகோணமலையில் உள்ள எண்ணைக் குதங்களைக் கேட்டோ,அல்லது பலாலி விமான நிலையத்தை விஸ்தரிக்க வேண்டும் என்று கேட்டோ, அல்லது காங்கேசன் துறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு பயணிகள் சேவையைத் தொடங்க வேண்டும் என்று கேட்டோ,அல்லது 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டோ அவர்கள் தீக்குளிக்கவில்லை. ஈழத் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும்;நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்டுத்தான் தீக்குளித்தார்கள்.

உலகிலேயே கடலால் பிரிக்கப்படும் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் கடலின் மறுபுறத்தில் இருக்கும் மக்களுக்காகத் தீக்குளித்தமை என்பது நவீன வரலாற்றில் முன்னெப்பொழுதும் இடம்பெற்றிராத ஓர் அரசியல் தோற்றப்பாடு. அந்த  19 தியாகிகளுக்காக ஈழத் தமிழர்கள் என்றென்றும் தமிழகத்துக்குத் தலை வணங்க வேண்டும். அரசியல்வாதிகள் தங்களுடைய கட்சி அரசியலைத்தான் செய்வார்கள். ஆனால் அந்த 19பேரும் அவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கட்சிமைய அரசியலுக்காகத் தீக்குளிக்கவில்லை.

நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பின் பிரச்சாரக் கூட்டங்களை படிப்படியாக ஒழுங்குப்படுத்தி வந்த ஒரு பின்னணிக்குள், ஈழத்தமிழர்களைப் பற்றியும் பேச வேண்டி வந்தது. ஈழத் தமிழ் அரசியலை அங்கே பேச வேண்டிய ஒர் அரசியல் தேவை இருப்பதைத்தான் அது காட்டுகின்றது. தமிழகத்தைத் தவிர்த்துவிட்டு ஈழத்தமிழர்கள் நீதிக்கான போராட்டத்தில் நிர்ணயகரமாக முன்னேற முடியாது.

535385942_1336136231403392_6534551534092

நீதிக்கான போராட்டத்தில் இம்முறை ஜெனிவா தீர்மானமானது தமிழ் மக்களின் நோக்கு நிலையில் பின்னடைவுதான். ஆனால் அந்தப் பின்னடைவு கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தொடங்கிவிட்டது. அந்தத் தேர்தலில் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் அரசாங்கத்துக்கு வாக்களித்தார்கள். அரசாங்கத்திற்கு ஏழு ஆசனங்கள். தமிழ்த் தேசிய கட்சிகளில் பெரியது ஆகிய தமிழரசுக் கட்சிக்கும் ஏழு ஆசனங்கள். இதனால் அரசாங்கம் தமிழ் மக்கள் தனக்கு ஆணை வழங்கியிருப்பதாக உலகம் முழுவதும் கூறித் திரிகின்றது. எனவே ஐநாவில் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் பின்னடைவு கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்டுவிட்டது.

வாழ்வுரிமை இயக்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதுபோல ஐநாவின் முன்னய தீர்மானங்களில் இருந்தும் புதிய தீர்மானம் வழுக்கத் தொடங்கிவிட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்காவை பொறுப்பு கூற வைப்பதற்கான அலுவலகம் ஒன்று மனித உரிமைகள் பேரவையில் உருவாக்கப்பட்டது. இப்பொழுது நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய தீர்மானமானது அந்த அலுவலகத்தின் பணியை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கின்றது. அந்த அலுவலகமானது சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்குரியது. அது ஒரு பன்னாட்டு அலுவலகம். அதாவது சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் ஏற்பாடு ஏற்கனவே சர்வதேசப் பரிமாணத்தைப் பெற்றுவிட்டது. அந்த அலுவலகத்தைச்  சேர்ந்தவர்கள் இலங்கைக்குள் வருவதற்கு இன்றுவரை விசா இல்லை. அனுர ஜனாதிபதியாக வந்த பின்னரும் விசா இல்லை. மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வந்து போன பின்னரும் விசா இல்லை.

இவ்வாறு ஏற்கனவே சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும்  விடயம் சர்வதேச மயப்பட்ட பின்னரும்,புதிய தீர்மானமானது உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை அமைத்துலக உதவிகளோடு பலப்படுத்த வேண்டும் என்று கூறுகின்றது. உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை பலப்படுத்துவதென்றால் பிறகு எதற்கு சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு பன்னாட்டுக்  கட்டமைப்பு? சில சமயம் ஐநா கூறக்கூடும் அது ஒர் அழுத்தப் பிரயோக உத்தி என்று.அப்படிச் சொன்னாலும் ஒரு கேள்வி உண்டு.அது எதற்கான அழுத்தம்? இலங்கையைப் பொறுப்புக்கூற வைப்பதற்கான அழுத்தமா? அல்லது இலங்கை சீன விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக மாறுவதில் அதற்குள்ள வரையறைகளை உணர்த்துவதற்கான ஓர் அழுத்தமா?

எனவே ஐநா தீர்மானத்தில் இருந்து தமிழ்மக்கள் படிக்க வேண்டியது என்னவென்றால்,மேற்கத்திய நாடுகளை நோக்கிய ஈழத் தமிழ் அரசியலானது அதாவது குறிப்பாகச் சொன்னால் ஐநாவை நோக்கிய ஈழத் தமிழ் அரசியலானது புதிய மாற்றங்களையும் புதிய வியூகங்களையும் வேண்டி நிற்கிறது என்பதுதான்.

முதலில் ஈழத் தமிழர்கள் தங்களை ஒரு தேசமாகத் திரட்டிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ருசி கண்ட அரசாங்கம் இனி வரக்கூடிய  தேர்தல்களிலும் தமிழ் மக்களின் ஆணையைப் பெற முயற்சிக்கும். எனவே முதலில் ஈழத் தமிழர்கள் தங்களை ஒரு தேசமாகத் திரட்டிக் கொள்ளவேண்டும். அதன்பின் உலகத்தில் தமக்கு ஆதரவான சக்திகளைத் திரட்டிக் கொள்ள வேண்டும். தங்களை ஒரு தேசமாகத் திரட்டிக் கொண்டால்தான் ஓர் அரசைப்போல சிந்திக்கலாம்;செயற்படலாம். இந்தக் கட்டுரை எந்த ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கையில் தொடங்கியதோ அதே அறிக்கையின் இறுதிப் பகுதியை இங்கு கூறி முடிக்கலாம்…

“தமிழ்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஈழ ஆதரவு ஆற்றல்கள் தத்தமது அரசுகளை  ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக திருப்புவதில் முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு அரசியல் வலுப்பெற்றால்தான் இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்றியமைக்க முடியும். இந்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாமல் மேற்குலக நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம் வந்துவிடப் போவதில்லை.

https://www.nillanthan.com/7847/

Checked
Thu, 11/06/2025 - 15:04
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed