அரசியல் அலசல்

காஸாவின் குழந்தைகள்

2 months 1 week ago

காஸாவின் குழந்தைகள்

sudumanal

The Guardian பத்திரிகையின் பத்தி எழுத்தாளரான Rhiannon Lucy Cosslett அவர்கள் 24.05.2025 எழுதிய பத்தியின் மொழிபெயர்ப்பு இது.

gaza-children-edited.png?w=790

Thanks: Aljazeera

கடந்த சில மாதங்களாக எனது கைபேசித் திரையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்தக் காட்சிகள் எனது வாழ்நாளின் எல்லைவரை என்னை துரத்தித் துரத்தி வேட்டையாடிக் கொண்டே இருக்கப் போகின்றன. காஸாவின் சிறிசுகள், பச்சைக் குழந்தைகள் திரையில் வரும் காட்சிகளைத்தான் குறிப்பிடுகிறேன். மரணித்தவர்கள், காயம்பட்டவர்கள், பசியால் உயிர்பிரிந்து கொண்டிருப்பவர்கள் என்பதான காட்சிகள் அவை. காயம்பட்ட குழந்தைகள் வலியால் கதறுகிறார்கள். தமக்கு பாதுகாப்பாயிருக்கிற தமது அப்பாக்களுக்காக அம்மாக்களுக்காக சகோதரங்களுக்காக என தமது குடும்ப உறவுகளுக்காகவும் சேர்த்து அவர்கள் அச்சப்படுகிறார்கள். குண்டு வீசும் விமானத்தின் பயங்கரம் ஒரு சிறுவனை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. வார்த்தைகளில் சொல்ல முடியாத பயங்கரத்தையும் வன்முறையையும் காவிவரும் இக் காட்சிகள் என்னை சிதைக்கின்றன. சிலவேளைகளில் காணச் சகிக்காமல் படங்களையும் காணொளிகளையும் எனது விரல்கள் கைபேசித் திரையில் வழுக்கிச் செல்ல வைக்கிறது. அடுத்த காட்சியாக எதையெதைப் பார்க்க நேரிடலாம் என்ற அச்சம் எழுகிறது. பெரும்பாலும் இவற்றை சகித்துக் கொள்ள நான் நிர்ப்பந்திக்கப் படுவதாக உணர்கிறேன்.

நான் தனியாக இல்லை என எனக்குத் தெரியும். வசதிவாய்ப்புகளும் பாதுகாப்பு உணர்வும் பெற்று வாழ்கிற நம்மில் பலரும் இந்தக் காஸா குழந்தைகளின் அவலத்தை சமூகவலைத் தளத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பாதுகாப்பாகவும் சிரித்து மகிழ்ந்தும் இருக்கும் மற்றக் குழந்தைகளையும், விளம்பரங்களையும், மீம்களையும் காவிவரும் திரைகளினூடு காஸா குழந்தைகளின் அவலத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது இன்னும் கொடுமை நிறைந்த உணர்வை கிளர்த்துகிறது. அது உங்கள் குழந்தையாக இருந்திருக்கக் கூடும் அல்லது எனதாகவும் இருந்திருக்கக் கூடும் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒரு குழந்தையாகவும் இருந்திருக்கக் கூடும். அந்த கொடுமைக்குள் அகப்படாத, பிறப்பின் அதிர்ஷ்டம் கிடைத்தவர்கள் எமது குழந்தைகள் என சொல்லத் தோன்றுகிறது.

இந்த காஸா குழந்தைகளுக்காகவும் அவர்தம் குடும்பங்களுக்காகவும் பல்லாயிரக் கணக்கான மக்கள் குரலெழுப்பி வருகின்றனர். அரசியல்வாதிகளுக்கு எழுதுகின்றனர். உதவிப் பணி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவு நிதி வழங்குகின்றனர். இந்த அவலத்தை வீதிக்கு கொண்டுவந்து நியாயம் கேட்கின்றனர். ஆனாலும் இப்போதும் குழந்தைகள் மீதான இந்தப் போர் தொடர்கிறது. அவர்களுக்கு உதவ முடியாத நிலையிலுள்ள, எந்த அதிகாரமும் அற்ற மக்களின் திரட்சியான உணர்வலை ஓங்கியிருக்கிறது. இந்த குழந்தைகளின் நிலை இன்னும் எவளவு மோசமாகப் போகிறது என்பதை ஊகிக்க முடியாதிருக்கிறது. ஐநா இன் செய்திப்படி, இந்த வாரம் 14000 குழந்தைகள் ஊட்டச் சத்தின்மையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என தெரியவருகிறது. பட்டினிதான் காரணம். பசி போருக்கான ஓர் ஆயுதமாகப் பாவிக்கப்படுகிறது. அழித்தொழிப்பின் ஓர் ஆயுதமாக பட்டினி ஏவப்படுகிறது என மனித உரிமை அமைப்புகள் சுட்டிக் காட்டுகின்றன.

கற்பனை பண்ணமுடியாத பயங்கரத்தை எதிர்நோக்கும்போது, கவிழ்ந்துகொள்ளும் உணர்வானது மக்களின் கூட்டு உளவியலில் காயத்தை ஏற்படுத்துகிறது. இன்னொரு புறம் உதவிப் பணியாளர்கள் மற்றும் வைத்தியப் பணியாளர்கள் மனித பெறுமதிக்கும் உளக்கட்டமைப்புக்கும் எதிராக செயற்பட வேண்டிய கையறு நிலைக்கு தள்ளப்படும்போது, ஏன் செயற்படாமல் இருக்கும் நிலையிலும்கூட அவர்கள் உளவியல் நெருக்கடிக்கு உள்ளாக நேர்கிறது. கோவிட் தொற்று காலத்தில் வைத்தியர்கள் தாதிகள் பணியாளர்கள் பலர் இந்த நெருக்கடிக்கு உள்ளானார்கள். சிகிச்சை தேவையாயிருந்த நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க போதிய மருந்துகள், உபகரணங்கள், வளங்கள், தலைமைத்துவம் என்பன தடையாக இருந்ததே அதற்குக் காரணம்.

ஆனாலும் இந்தவகையான துன்பம் காஸாவைத் தவிர வேறெங்கும் இவளவு கூர்மையயாக உணரப்பட்டதாக இல்லை. வைத்தியத்துறை பணியாளர்களும் உதவிப் பணியாளர்களும் துயரத்தாலும், குற்றவுணர்வாலும், ஏமாற்றத்தாலும், ஏன் எல்லோருக்குமே உதவிசெய்ய முடியாமலிருக்கிற கையறுநிலையாலும் ஏற்படுகிற மனநெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றனர். உதவுவதற்கும் உணவூட்டுவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் என்றாகிப்போன பணியில் இருக்கும் அவர்கள் அதையெல்லாம் செய்ய முடியாமல் போய்விடுகிறபோது உளநெருக்கடிக்கு ஆளாகிறார்கள்.

காஸா தாய் தந்தையர் தமது குழந்தை பசியில் துடிதுடித்து அழுகிறபோது, தாம் ஒரு பிடி உணவுகூட ஊட்ட முடியவில்லையே என்ற பெருந்துயருள் முழ்கிப் போகிறார்கள். குண்டுவீச்சுக்கு நடுவிலேயும் மருத்துவ மனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் புதிதாய்ப் பிறந்த குழந்தைகளை நினைத்துப் பார்க்கிறேன். அல் ஷீபா மருத்துவமனையில் ஒரே கட்டிலில் கிடத்தப்பட்டிருக்கும் ஏழு பச்சைக் குழந்தைகளை புகைப்படத்தில் பார்க்கிறேன். உயிர் வேண்டி, சூடான கதகதப்பு வேண்டி அவர்கள் அந்த மெத்தையில் கிடத்தப்பட்டிருக்கிறார்கள். வலியைப் போக்கும் மருந்துகளோ மகப்பேற்றுச் சிகிச்சை உபகரணங்களோ வசதிகளோ இன்றி இந்தக் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களை நினைத்து ஆச்சரியப்படுகிறேன். அந்தத் தாய்மார்கள் இப்போ எங்கே? அவர்களில் எத்தனை பேர் தப்பிப் பிழைத்தார்கள்? அவர்களைக் காப்பாற்ற குறைந்த வளங்களுடன் போராடிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்த முயற்சியெல்லாம் எதைப் பரிசளித்திருக்கும்?

அவர்களின் இடத்தில் என்னை பதிலியாக்கி யோசித்துப் பார்க்கிறேன். அவர்கள் அடைந்திருக்கக் கூடிய உளக்காயங்களின் தாக்கங்களை எண்ணிப் பார்க்கிறேன். அதிசயமாக இருக்கிறது. கள அனுபவங்களில் நசிபடும் அவர்களின் இடத்தில் இணையாக நின்று முழுமையாக உணர எனக்கு எந்த வழியுமேயில்லை. ஆனால் அதிகாரமற்ற நிலையினை உணர்கிறேன். இந்தக் குற்றங்களுக்கு எல்லாம் நாமும் உடந்தையாக இருக்கிறோமா என்ற எண்ணப் பாதிப்பை உணர்கிறேன். காஸாவில் என்னதான் நடக்கிறது என அறியத் துடிப்பவர்களிடம் இந்த உணர்வுகள் எதை தொற்றவைக்கும்? காட்சித் திரையினூடாகத் தன்னும் இந்த பெருந்துயரை காண்பவர்களிடம் என்ன பாதிப்பு நிகழும்? இதற்கெதிராக எதையுமே செய்ய முடியாத அல்லது இதற்குக் காரணமாக இருப்பவர்களை நிர்ப்பந்திக்க முடியாத செயலறுநிலை தருகிற உணர்வு எத்தகையது?

சில மனிதர்களிடம் குழந்தைகள் மீதான இரக்கவுணர்வு என்பது அரசியல் எல்லைக் கோடுகளால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான குரூரமான அறிவு ஒருவரது மூளைக்குள் கல்போல் குந்தியிருக்கிறபோது என்ன செய்ய முடியும்? இதற்கான விடையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை!

நான் பிறந்த அந்தக் காலங்களிலே எனது அம்மா செய்திகளை பார்ப்பதை ஏன் நிறுத்திக் கொண்டாள் என்பது இப்போ எனக்குப் புரிகிறது. அவளால் இப்படியானவற்றை சகித்துக் கொள்ள முடிவதில்லை. எனக்கு மகன் பிறந்தபோது நானும்கூட இவ்வாறானவற்றை உள்நுழைந்து பார்க்க முடியாதிருந்தது. எமக்குக் கிடைத்த சலுகைகொண்ட வாழ்வின் சூடான அரவணைப்பும் பாதுகாப்பும் கொண்ட கூட்டினுள் இருக்கவே விரும்பினோம். ஆனால் எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து எமது வாழ்வை துண்டித்து முடங்கிப் போக இணையம் விடவில்லை. செய்திகள் எமது வாழ்வுடன் சமாந்தரமாகவும் தொடர்ச்சியாகவும் பயணிக்கத் தொடங்கின. அது எல்லைக் கோடுகளை இல்லாமலாக்கியது. எனது குழந்தை வயிறார உண்டு, துப்பரவானதும் மென்மையானதுமான உடைகளின் சூட்டில் உறங்குகிற பல இரவுகளில் நான் மௌனமாக அழுதேன். படுக்கைகூட இல்லாத, பசியாற்ற முடியாத மற்றக் குழந்தைகளை நினைத்து அழுகை வந்தது. பால்வேண்டி அதிகாலையில் எழும் எனது மகனுக்காக நான் செய்ய வேண்டி இருந்ததெல்லாம் குளிருட்டி சாதனத்தைத் திறந்து பாலை எடுத்துக் கொடுப்பதுதான். குண்டுச் சந்தங்கள் கேட்பதில்லை. காற்றுவெளியை நிரப்பும் பறவைகளின் கீதத்தை கேட்டபடி நாம் சேர்ந்து இருப்போம்.

அவனை அரவணைத்திருக்கும் பாதுகாப்பும், காஸாக் குழந்தைகளினை சீண்டும் ஆபத்தும் எவளவு முரணாக இருக்கிறது. அது என்னை உலுக்குகிறது. இது உளக் காயத்தின் ஒருவகையா தெரியவில்லை. ஒரு குழந்தையுடன் இணைந்த நாளாந்த வாழ்வானது அப்பாவித்தனம், குளப்படி, குறும்புத்தனம், இயல்பான அன்பு என நடனமாடும் பொழுதுகளாலானது. இவ்வாறான குழந்தைமை உலகின் மீதான மோசமான தாக்குதலை காஸாவில் காணும்போது வலி ஏற்படுகிறது. அதேநேரம் ஒன்றை சொல்லலாம். காஸா குழந்தைகளின் மீது கவிழ்ந்திருக்கும் குரூரத்தை உணர நீங்கள் அவர்களின் பெற்றோராக இருக்க வேண்டிய அவசியமில்லை. மனிதஜீவி என்ற வகையில் இந்தக் குழந்தைகளின் இருத்தல் மீது நாம் ஒரு கூட்டுப் பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருக்கிறோம் என நான் நம்புகிறேன் அல்லது நம்ப முயற்சிக்கிறேன். இந்தக் கூட்டு பொறுப்புணர்வு எல்லைகளைத் தாண்டி விரியக்கூடியது.

இந்த மாதிரியான நீதியற்ற செயல்களின் முன் அதிகாரமற்றவர்களாக நிற்கிறோம் நாம். அது ஏற்படுத்துகிற உணர்வானது உண்மையின்மீதும் நம்பிக்கையின் மீதும் இழப்புகளை ஏற்படுத்தவல்லது. அது அரசாங்கங்கள் மற்றும் அதன் நிறுவனங்களின் மீது மட்டுமல்ல, உலகின் அறவொழுக்கத்தின் மீதும்தான். அதுமட்டுமல்ல இக் குழந்தைகளை காப்பாற்றுவதில் அவர்களது இயலாமையையையும் அது வெளிப்படுத்துகிறது. இது ஏற்படுத்தக்கூடிய தாக்கம்தான் என்ன. சில அரசியல்வாதிகள் சந்தேகமின்றி நம்புவதுபோல, எந்த தாக்கத்தையும் உண்டுபண்ணா மந்தநிலைக்கு இட்டுச் செல்லலாம். இவ்வாறான மந்தநிலையும் உளச்சிதைவு நிலையும் உருப்படியான தாக்கத்தை ஏற்படுத்த தடையாக அமைவதோடு, அதன் வீரியத்தையும் அழித்துவிடக் கூடியது. எனவே மில்லியன் கணக்கான மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும். தமது குரலை உயர்த்த வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களின் நியாயமான கோப உணர்ச்சி வெளிப்படக்கூடிய வாய்ப்பும் இருக்கத்தான் செய்யும்.

பெருமளவுக்கு நம்பிக்கை இழந்த நிலைமையை நான் உணர்கிறேன். இந்த யுத்தத்தில் மனிதநேயம், மனித விழுமியம் எல்லாம் பெயர்த்தெறியப்பட்டிருக்கிறது. நான் அசைக்க முடியாத கனத்த மனதுடன் உலவுகிறேன். காஸாவிலிருந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிறேன். கடந்த 18 மாத காலமும் என்னை மாற்றியிருக்கிறது. நான் கண்டுகொண்டது என்னவெனில், சில மனிதர்களிடம் குழந்தைகள் மீதான இரக்கவுணர்வு என்பது அரசியல் எல்லைக் கோடுகளால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதையே. இவ்வாறான குரூரமான அறிவு ஒருவரது மூளைக்குள் கல்போல் குந்தியிருக்கிறபோது என்ன செய்ய முடியும்? இதற்கான விடையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை!

https://sudumanal.com/2025/07/07/காஸாவின்-குழந்தைகள்/#more-7286

தமிழரசுக்கட்சி எதிர்நோக்கும் புறச்சவால்களும் அகச்சவால்களும் — டி.பி.எஸ். ஜெயராஜ் — 

2 months 1 week ago

தமிழரசுக்கட்சி எதிர்நோக்கும் புறச்சவால்களும் அகச்சவால்களும்

July 9, 2025

— டி.பி.எஸ். ஜெயராஜ் — 

ஒய்வுபெறும் உயர்நீதிமன்ற நீதியரசர்  காமினி அமரசேகர அண்மையில்  நீதிமன்றத்தில் உரையாற்றியபோது முக்கியமான பல கருத்துக்களை வெளியிட்டார். பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் பிரகாரம் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு வருகின்ற வெளி அச்சுறுத்தல்களை கூட்டாக எதிர்த்துநிற்க முடியும் என்கிற அதேவேளை, உள்ளிருந்து வருகின்ற சவால்கள் பெருமளவுக்கு நயவஞ்சகத்தனமான ஆபத்தை தோற்றுவிக்கின்றன. 

” சரியான நம்பிக்கைகளைக் கொண்ட ஒரு நீதிபதியினால் வெளி நெருக்குதல்களை எதிர்த்துநிற்க முடியும். ஆனால், முறைமைக்குள் இருந்தே அச்சுறுத்தல்கள் வரும்போது அவற்றை எதிர்கொள்வது கடடினமானதாக இருக்கும்” என்று மாண்புமிக்க நீதியரசர்  அமரசேகர கூறியதாக தெரிவிக்கப்பட்டது. உள்ளிருந்து வருகின்ற  ஒரு  அச்சுறுத்தல் வெளியில் இருந்து வருகின்ற ஒரு சவாலை விடவும் பெருமளவுக்கு ஆபத்தானது என்று நீதியரசர் தெரிவித்த மிகவும் பொருத்தமான கருத்து பரவலாக பொருந்துவதாகும். அதற்கு பல சந்தர்ப்பங்களை கூறமுடியும். 

இலங்கையில் தற்போது இலங்கை தமிழரசுக்கட்சி  நீதியரசர் வார்த்தைகளில் பொதிந்திருக்கும் மெய்யறிவை அனுபவிக்கின்றது. இலங்கை தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சி தற்போது உள்ளிருந்து வரும் சவால்களையும் வெளியில் இருந்து வரும் சவால்களையும் எதிர்கொள்கிறது. வெளிச்சவால்களை  கட்சியினால் தாக்குப் பிடிக்கக்கூடியதாக இருந்த அதேவேளை, பெருமளவுக்கு ஆபத்தான  தன்மையுடன் கூடிய அச்சுறுத்தல் உள்ளிருந்தே வெளிக்கிளம்புகின்றது போன்றே தோன்றுகிறது. 

கடுமையான அரசியல் சச்சரவுக்கு மத்தியிலும், தேர்தல்களில் அண்மைக் காலங்களில் தமிழரசு சிறப்பான வெற்றிகளை பெற்றிருக்கிறது. 2024 செப்டெம்பர்  ஜனாதிபதி தேர்தலில் பல தமிழ் அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களத்தில் இறக்கிய போதிலும், தமிழரசுக்கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவையே ஆதரித்தது. தேசிய மட்டத்தில் சஜித் பிரேமதாச அநுர குமார திசநாயக்கவுக்கு அடுத்ததாக இரண்டாவதாக வந்தார். ஆனால், ஒரு பிராந்திய மட்டத்தில், தமிழரசுக் கட்சியின் உறுதியான ஆதரவைப் பெற்ற சஜித் பிரேமதாசவே வடக்கு, கிழக்கின் மாவட்டங்களில் கூடுதல் வாக்குகளைப் பெற்று முதலாவதாக வந்தார்.

2024 நவம்பர் பாராளுமன்ற தேர்தலிலில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 225 ஆசனங்களைக் கொண்ட பாசாளுமன்றத்தில் 159 ஆசனங்களை கைப்பற்றியது. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஏழு பேர் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழர்களாவர். மீண்டும் தமிழரசு கட்சியே வடக்கிலும் கிழக்கிலும்  “திசைகாட்டி” கட்சியை உறுதியான முறையில் எதிர்த்து நின்ற ஒரேயொரு இலங்கை தமிழ்க்கட்சியாகும். வடக்கு, கிழக்கில் இருந்து பாராளுமன்றத்துக்கு  செய்யப்பட்ட  தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் (7) தமிழரசு கட்சியில் இருந்துதெரிவான உறுப்பினர்களின் எண்ணிக்கையும் (7) சமமானதாக இருந்தது. தமிழரசு கட்சிக்கு தேசியப்பட்டியலில் இருந்து மேலதிகமாக ஒரு ஆசனமும் கிடைத்தது. அதனால் எட்டு உறுப்பினர்களுடன் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தமிழரசு கட்சி விளங்குகிறது.

அண்மையில் நடைபெற்ற 2025 உள்ளூராட்சி தேர்தல்களில் வடக்கு, கிழக்கில் போட்டியிட்ட உள்ளூராட்சி சபைகளில் (மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகள்) 35 சபைகளில் தமிழரசு கட்சி முதலாவதாக வந்தது. தமிழர்களை பெரும்பான்மையாகக் கொண்ட சுமார் ஒரு டசின் சபைகளில் இரண்டாவதாக வந்த தமிழரசு கட்சி முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் பெரும்பானமையாகக் கொண்ட சபைகளில் பத்து சபைகளில் வட்டாரங்களிலும் 

வெற்றிபெற்றது. மேலும் சில தமிழ் கட்சிகளினதும் முஸ்லிம் கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் உதவியுடன்  தமிழரசு கட்சியினால் 34 உள்ளூராட்சி சபைகளில் ஒப்பேறக்கூடிய நிருவாகங்களை அமைக்கக்கூடியதாகவும் இருந்தது.

தேர்தல் களத்தில் போட்டி தமிழ் அரசியல் கட்சிகளுக்கு எதிராக மெச்சத்தக்க வெற்றிகளை பெற்ற போதிலும், தமிழரசு கட்சி அதன் உள்ளக அரசியல் நிலைவரத்தை பொறுத்தவரை, ஒரு பாதகமான தோற்றத்திலேயே இருக்கிறது. தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அதன் பாராளுமன்றக்குழுவின் தலைவருமான சிவஞானம் சிறீதரனின் சர்ச்சைக்குரிய நடத்தையே இதற்கு பிரதான  காரணமாகும். முன்னாள் பாடசாலை அதிபரான அவர் பொதுவில் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுவுக்கும் குறிப்பாக முக்கியமான நிருவாகிகளுக்கும் எதிராக வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கெடுதி விளைவிக்கக்கூடிய  முறையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றார்.

மிகவும் மூத்த தமிழரசு கட்சி  எம்.பி:

தற்போது பாராளுமன்றத்தில் இருக்கின்ற தமிழரசு கட்சியின் உறுப்பினர்களில் மிகவும் மூத்தவராக சிறீதரன் விளங்குகிறார் என்பது பிரச்சினையை மேலும் கூர்மையானதாக்குகிறது. 57 வயதான அவர் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக 2010 ஆம் ஆண்டில் முதன் முறையாக பாராளுமன்ற பிரவேசம் செய்தார். அன்றிலிருந்து 2015,  2020, 2024 பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்று சிறீதரன் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறூப்பினராக இருந்துவருகிறார். 2015 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழரசு கட்சியின் வீடு சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மத்தியில் மிகவும் கூடுதலான விருப்புவாக்குகளையும் சிறீதரன் பெற்று வந்திருக்கிறார்.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு தொடர்ச்சியாக வெற்றிபெற்று வருகின்ற போதிலும், பிரதானமாக சிறீதரனின் வாக்குவங்கியாக கிளிநொச்சியே விளங்குகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி என்ற இரு நிருவாக மாவட்டங்களை உள்ளடக்கியதாக யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் இருக்கிறது. சிறீதரனும்  அவரது உதவியாளர்களும் விடுதலை புலிகளுக்கு ஆதரவான தமிழ்த் தேசியவாத பேச்சுக்கள், ஆட்களுக்கு உதவிகளைச் செய்கின்ற அரசியல்  மற்றும் வலுக்கட்டாயமான அணுகுமுறைகள் என்று ஒரு கலப்பான தந்திரோபாயத்தின் மூலமாக கிளிநொச்சி வாக்காளர்கள் மீது ஒரு வலிமையான பிடியை வைத்திருக்கிறார்கள். புலம்பெயர்ந்த இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில்  விடுதலை புலிகளுக்கு சார்பான செல்வாக்குமிக்க ஒரு பிரிவினரும் சிறீதரனுக்கு பல வழிகளில் ஆதரவாக இருக்கிறார்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று பிரதேச சபைகளும் அவரின் ஆட்களினாலேயே நிரப்பப்படடிருக்கிறது. கிளிநொச்சியில் அவரின் அரசியல் ஆதிக்கத்தை தமிழ் ஊடகங்களும் ஏற்றுக்கொண்டு அவரை “கிளிநொச்சி ஜமீந்தார்” என்று வர்ணிக்கின்றன. 

தெளிவாகக் காணக்கூடிய திடடம்: 

தற்போதைய இலங்கை அரசியல் விவகாரங்களின் ஆய்வாளர்களும் அவதானிகளும் தமிழரசு கட்சி தொடர்பான சிறீதரனின் செயற்பாடுகளில் தெளிவாகக் காணக்கூடிய ஒரு திட்டத்தை அடையாளம் கண்டிருக்கிறார்கள்.  ஒரு மட்டத்தில், அவரும் அவரது ஆதரவாளர்களும் தமிழரசு கட்சியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்து வருகிறார்கள். இன்னொரு மட்டத்தில், அவரின் உதவியுடனும் ஆதரவுடனும் செயற்படுகின்றவர்கள் கட்சிக்கு பாதகமானதும் கட்சியை மலினப்படுத்தக்கூடியதுமான வெளிப்படையானதும் மறைமுகமானதுமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இந்த இரு அணுகுமுறைகளிலுமே முனானாள் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் தற்போதைய பதில் பொதுச் ஙெயலாளருமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் மீதான சிறீதரனின் கடுமையான வெறுப்பு பொதுவான ஒரு காரணியாக இருக்கிறது.

சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையிலான இந்தத் தகராறு குறித்து கடந்த காலத்தில் நான் அடிக்கடி எழுதியிருக்கிறேன். இந்த விவகாரம் பல்பரிமாணங்களையும் பல அடுக்குகளையும் கொண்டது. புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியிலும் இலங்கையிலும் இருக்கின்ற சுமந்திரனுக்கு எதிரான பிரிவினரிடமிருந்து சிறீதரனுக்கு கிடைக்கின்ற பரந்த ஆதரவு சுமந்திரனுக்கு எதிரான சிறீதரனின் அரசியலில் முக்கியமான ஒரு அம்சமாகும். இது விடயத்தில்  சுமந்திரனுக்கு எதிரான தன்னல அக்கறைச் சக்திகள் தங்களுக்கு வசதியான கருவியாக சிறீதரனைப் பயன்படுத்துவதாக சிலர் உணருகிறார்கள்.

உட்கட்சித் தேர்தல் 

சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையில் நடந்தது சாராம்சத்தில் இதுதான். 2020 பாராளுமன்ற தேர்தலில் இருவரும் ஒன்றுசேர்ந்து பிரசாரம் செய்தார்கள். இருவரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள். ஆனால், இந்த உறவுமுறை தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கு நடைபெற்ற உட்கட்சி தேர்தலுக்கு பிறகு முறிவடைந்தது. தலைவர் பதவிக்கு சுமந்திரனும் சிறீதரனும் போட்டியிட்டார்கள். 2024 ஜனவரி 21 திருகோணமலையில் நடைபெற்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் 321 பொதுச்சபை உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். 184 வாக்குகளைப் பெற்ற சிறீதரன் சுமந்திரனை 47 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சுமந்திரனுக்கு 137 வாக்குகள் கிடைத்தன.  ஜனவரி 27 தமிழரசு கட்சியின் முக்கியமான தீர்மானங்களை எடுக்கும் பொறுப்புடைய மத்திய செயற்குழுவுக்கு தேர்தல் நடைபெற்றது. 

அதை தொடர்ந்து திருகோணமலையைச் சேர்ந்த தமிழரசு கட்சியின் ஒரு உறுப்பினரான பரா. சந்திரசேகரம் கட்சியின் யாப்பின் ஏற்பாடுகளின் பிரகாரம் பொதுச்சபை கொண்டிருக்க வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை விடவும் கூடுதலான உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் தேர்தலில் வாக்களித்தார்கள் என்ற அடிப்படையில் சட்ட நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தார். கட்சியின் யாப்பில் குறித்துரைக்கப்பட்டிருக்கும் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற அடிப்படையில்  கட்சி நிருவாகிகளை தெரிவு செய்வதற்கு நடைபெற்ற தேர்தலின் சட்டபூர்வத்தன்மை சவாலுக்கு உட்டுத்தப்பட்டது. இடைக்காலத்தடை ஒன்றை விதிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரப்பட்டது.

நீதிமற்றத்தின் உத்தரவு 

2024 ஜனவரி 21, 27 ஆம் திகதிகளில் பொதுச்சபை யின் கூட்டங்களில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் எந்தவொரு தீர்மானமும் இடைக்காலத் தடையுத்தரவைக் கோரிய மனுவின் விசாரணை முடிவடையும் வரை  நடைமுறைப்படுத்தப்படுவதை தடைசெய்து திருகோணமலை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பிரச்சினை நீதிமன்றத்தில் தீர்க்கப்படும்வரை, புதிதாக தெரிவு செய்யப்பட்ட தமிழரசு கட்சியின் நிருவாகிகளோ அல்லது மத்திய செயற்குழுவோ செயற்பட முடியாது என்பதே நீதிமன்ற உத்தரவின் அர்த்தமாகும். கட்சி யாப்பின் பிரகாரம் பொதுச்சபையின் 150 — 160 உறுப்பினர்கள் மாத்திரமே கட்சி தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது..ஆனால்,  2024 ஜனவரியில் 321 பேர் வாக்களித்திருந்தார்கள்.

பழைய கரங்களில் 

அதனால், விதிவசமாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட தமிழரசு கட்சியின் தலைவரும் ஏனைய நிருவாகிகளும் பதவியேற்பதில் இருந்து தடுக்கப்பட்டனர். “புதிய” மத்திய செயற்குழுவும் இயங்க முடியவில்லை. “பழைய” மத்திய செயற்குழுவும் நிருவாகிகளுமே  தொடர்ந்து செயற்படுகின்றனர். அதனால் தமிழரசு கட்சி “பழைய” மத்திய குழுவினதும் நிருவாகிகளினதும் கரங்களிலேயே இருக்கிறது.

பத்து வருடங்களாக தமிழரசு கட்சியின் தலைவராக இருந்த “மாவை”சேனாதிராஜா அதற்கு பிறகு தனது பதவியை துறந்தார். கட்சியின் மூத்த துணைத் தலைவரான  சி.வி.கே  சிவஞானம் மத்திய செயற்குழுவினால் பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இன்னொரு நிகழ்வுப் போக்காக கட்சியின் செயலாளர் மருத்துவர் பி.சத்தியலிங்கம் பதவியில் இருந்து விலகவே அவரின் இடத்துக்கு சுமந்திரன் செயலாளராக வந்தார்.

இடைக்கால தடையுத்தரவு கோரும் தமிழரசு கட்சியின் வழக்கு இழுபட்டுக் கொண்டுபோகும் நிலையில், “பழைய” நிரவாகிகளும் மத்திய செயற்குழுவுமே கட்சியின் விவகாரங்களை கவனித்தது. கட்சியை மறுசீரமைத்து அதன் வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்காக தலைவர் சிவஞானமும் செயலாளர் சுமந்திரனும் ஒன்றிணைந்து பணியாற்றினார்கள்.  மத்திய செயற்குழு மற்றும் அரசியல் குழு வின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் அந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டு அவர்கள் இருவருக்கும் ஆதரவை வழங்கினார்கள். கட்சியின் சகல தீர்மானங்களுமே மத்திய செயற்குழுவினதும் அரசியல் குழுவினதும் பெரும்பான்மையான உறுப்பினர்களின் அங்கீகாரத்துடன் எடுக்கப்பட்டன.

செல்வாக்கமிக்க நால்வர் 

தலைவர் சிவஞானம், செயலாளர் சுமந்திரன், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம்  மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகிய நால்வரும் தமிழரசு கட்சிக்குள் செல்வாக்கு மிகுந்தவர்களாக மாறினார்கள். சிறீதரனும்  மத்திய செயற்குழுவில் இருக்கும் சொற்ப எண்ணிக்கையான அவரது ஆதரவாளர்களும் உண்மையில் அதிகாரமற்றவர்களாகவும் பயனற்றவர்களாகவும் போனார்கள்.

கட்சிக்கு எதிராக போட்டித்தனமான தந்திரோபாயங்களை கடைப்பிடிப்பதன் மூலமாக சிறீதரன் மேலும் நிலைவரத்தை பழுதாக்கினார். 2024 ஜனாதிபதி தேர்தல் இதற்கு தெளிவான ஒரு உதாரணமாகும். தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவை வெளிப்படையாக ஆதரித்த அதேவேளை, சிறீதரன் பொது தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் என்று கூறப்பட்ட பாக்கியசெல்வம் அரியநேத்திரனை வெளிப்படையாக ஆதரித்தார். இது கட்சிக்கு எதிரான வெளிப்படையான ஒரு செயலாகும்.

தனியாள் 

2024 நவம்பரில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது சிறீதரன் தமிழரசு கட்சிக்குள் இருந்த அதேவேளை தனியாளாகவே செயற்பட்டார். கட்சியின் ஏனைய வேட்பாளர்களுக்காக பிரசாரக் கூட்டங்களில்  அவர் பங்குபற்றவில்லை. தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண வேட்பாளர்களில் இருவர் மாத்திரமே அவரது மேடைகளில் பங்கேற்பதற்கு இடம் கொடுக்கப்பட்டது. சிறீதரனின் பிரசாரம் தமிழரசு கட்சியின் ஏனைய வேட்பாளர்களுக்கு அல்ல, தனக்கு மாத்திரமே மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர் கொண்டிருந்தார் என்பதை மறைமுகமாக உணர்த்தியது. யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சியில் இருந்து அவர் மாத்திரமே பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்.

 தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுவின் தலைவராகவும் வந்த சிறீதரன் அரசியலமைப்பு பேரவையின் (Constitutional Council) ஒரு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். இவ்வாறாக உயர்ந்த போதிலும், அவரால் கட்சிக்குள் அதிகாரத்தைச் செலுத்த முடியாமல் இருக்கிறது. தமிழரசு கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள்  மத்தியிலும் கூட, இருவர் அவரது ஆதரவாளர்களாகவோ அல்லது எதிராளிகளாகவோ இல்லை. தற்போது சிறீதரனின் ஆதரவாளராக கட்சியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரமே  கருதப்படுகிறார். 37 உறுப்பினர்களைக் கொண்ட தமிழரசு கட்சியின் மத்திய செற்குழுவிலும் 11 உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் குழுவிலும் பெரும்பான்மையானவர்கள் சிறீதரனின் முகாமில் இல்லை.

இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. தமிழரசு கட்சியின் மத்திய செயற் குழுவையும் அரசியல் குழுவையும் சேர்ந்த பெருமளவு உறுப்பினர்கள் தமிழ்த்தேசியவாத இலட்சியங்களை தங்களுடன் வரித்துக் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்கள் தீவிரவாத நிலைப்பாட்டைக் கொண்டவர்களாகவோ அலாலது விடுதலை புலிகளுக்கு சார்பானவர்களாகவோ இல்லை. அதனால் அவர்கள் சிறீதரனின் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான வெற்றுக் கடும்போக்கு ஆரவாரப் பேச்சுக்களுக்கு ஆதரவானவர்கள் இல்லை. சிறீதரனை அறிவாழமும் செயற்திறனும் நேர்மையும் கொண்ட ஒரு அரசியல்வாதியாக பலர் நோக்கவில்லை என்பது மற்றைய காரணமாகும். அவரை அவர்கள் ஒரு வாய்ச்சொல் வீரராகவே பார்க்கிறார்கள். வாக்குகளைப் பெறுவதில் சிறீதரன் கெட்டிக்காரராக இருக்கலாம், ஆனால், ஆக்கபூர்வமானதும் அறிவார்ந்ததுமான தலைமைத்துவத்தை வழங்க இயலாதவராக அவர் விளங்குகிறார்.

தமிழரசு கட்சியை தனது கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவர இயலாதவராக சிறீதரன் கட்சியை மலினப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சிறுபிள்ளைத்தனமான அரசியலில் ஈடுபடுகிறார். அதையும் வெளிப்படையாகச் செய்வதற்கு பதிலாக அவர் தனது ஆட்களையும் ஆதரவாளர்களையும் பயன்படுத்தி எதிர்மறையான காரியங்களைச் செய்ய வைக்கிறார். 

செம்மணி சம்பவம் 

யாழ்ப்பாணத்தில் அரியாலை பகுதியில் செம்மணியில் சித்துப்பாத்தி மயானத்தில் மனித புதைகுழிகளில் தோண்டியெடுக்கப்படும் எலும்புக்கூடுகள் தொடர்பில் உலகின் அனுதாபத்தைக் கவரும் நோக்கில் நடத்தப்பட்ட “அணையா விளக்கு” அமைதிவழிப் போராட்டத்தின்போது இடம்பெற்ற சம்பவம் இதை பளிச்சிட்டுக் காட்டுகிறது. சிறீதரனின் ஆதரவாளர்கள் கிளிநொச்சியில் இருந்து இருபது பஸ்களில் செம்மணிக்கு வந்தனர்.

கிளிநொச்சியில் இருந்து ஜீவராஜா என்று கூறப்படும் ஒருவரின் தலைமையில்  வந்தவர்களில் சிலர் தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் போராட்ட அரங்கில் இருந்து வெளியேறியபோது அவரை எதிர்கொண்டு ஆபாச வார்த்தைகளில திட்டி துரோகி என்று கூச்சல் போட்டனர். எண்பது வயதைக் கடந்தவரான சிவஞானம் எதிர்த்து எதையும் கூறாமல் மிகுந்த நிதானத்துடன் தனது வாகனத்தில் ஏறிச் சென்றுவிட்டார். அந்த சம்பவம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு பெருவாரியான யூரியூப் அலைவரிசைகளில் வெளியானது. தமிழரசு கட்சியின் தலைவர் சிவஞானத்தை பொதுமக்கள் அணிதிரண்டு விரட்டியடித்த ஒரு சம்பவமாக அது தவறான  முறையால் காண்பிக்கப்பட்டது.

‘பாதுகாவலர்’ சி.வி.கே.

சிவஞானம் சம்பந்தப்பட்ட இந்த சம்பவம் தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் ஒரு துரோகச் செயலாகப் பார்க்கப்பட்டது. ஏனென்றால் கட்சிக்குள் சிறீதரனைப் “பாதுகாப்பவராக” சிவஞானமே இருந்து வருகிறார். தமிழரசு கட்சிக்குள் சிவஞானம் ஒரு மத்திய பாதையை கடைப்பிடிக்கிறார். ஒரு புறத்தில்  அவர் சுமந்திரனுடன் கட்சி விவகாரங்களில்  ஒத்துழைத்துச் செயற்படுகின்ற அதேவேளை, மறுபுறத்தில் சிறீதரனைப் பழிவாங்க வேண்டும் என்று கூச்சல்போடுகிறவர்களையும் அடக்கி வைத்திருக்கிறார். அதனால் சிறீதரன் சிவஞானத்துடன் உறவுகளைச் சீர்செய்வதற்கு அவசரப்பட்டு ஓடினார்.

சேனாதிராஜாவின் இறுதிச்சடங்கு 

செம்மணி சம்பவம் இவ்வருடம் பெப்ரவரியில் மாவிட்டபுரத்தில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் முக்கிய தலைவரான மாவை சேனாதிராஜாவின் இறுதிச்சடங்கின்போது இடம்பெற்ற சம்பவங்களை நினைவுக்கு கொண்டுவந்தது. அந்த இறுதிச்சடங்கின் ஏற்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்த சிறீதரன் இரங்கல் உரை நிகழ்வுக்கும் தலைமை தாங்கினார். சேனாதிராஜாவுக்கு தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தி இரங்கலுரை ஆற்றுவதற்கு விரும்பிய சிலரை சிறீதரன் தடுத்ததாகக் கூறப்பட்ட அதேவேளை, தமிழரசு கட்சியின் சில உறுப்பினர்களை பகிரங்கமாக  கண்டனம் செய்வதற்கு அவர் அனுமதித்தார். மேலும் கிளிநொச்சியில் இருந்து வாகனங்களில் கூட்டி வரப்பட்டதாகக் கூறப்பட்ட  கறுப்புச்சட்டை அணிந்த கும்பல் ஒன்று இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் பலரை அச்சுறுத்தியது. அவ்வாறு அச்சுறுத்தப்பட்டவர்களில் பலர் கட்சிக்குள் சிறீதரனை விமர்சிப்பவர்களாக கருதப்படுபவர்கள்.

தமிழரசு குழப்பம் 

 இலங்கையின் பிரதான தமிழ் அரசியல் கட்சியாக தமிழரசு கட்சி இருக்கலாம், ஆனால், அது பிளவுபட்ட ஒரு அமைப்பாக இருக்கிறது என்ற உண்மையை மறுதலிக்க முடியாது. அது உள்ளிருந்து வருகின்ற சவால்களுக்கும்  வெளியில் இருந்து வருகின்ற சவால்களுக்கும் முகங்கொடுக்க வேண்டிய ஒரு கட்சியாக இருக்கிறது. நீதியரசர் அமரசேகர குறிப்பிட்டதைப் போன்று உள்ளிருந்து வருகின்ற சவால்கள் பெருமளவுக்கு கெடுதியை விளைவிக்கக்கூடிய ஆபத்தை தோற்றுவிக்கின்றன.”  யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரன் எவ்வளவு காலத்துக்கு கட்சிக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தொடரப்போகிறார்?  1949 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட அந்த கட்சி அதன் வைரவிழா வருடத்தில் என்ன செய்யப்போகிறது? 

(நன்றி ; வீரகேசரி )

https://arangamnews.com/?p=12147

சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?

2 months 1 week ago

சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?

July 6, 2025

சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா? 

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

 முதுபெரும் தமிழ் அரசியல் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் மரணமடைந்து கடந்த திங்கட்கிழமையுடன் (ஜூன் 30) சரியாக ஒரு வருடம் கடந்துசென்றது. முதலாவது நினைவு தினத்தில் அவரை இலங்கை தமிழச் சமூகம் நினைவுகூருவதற்கு தவறிவிட்டது. வடக்கு,கிழக்கு  மாகாணங்களில் எந்தவொரு இடத்திலும் நினைவு நிகழ்வு  ஏற்பாடு செய்யப்பட்டதாகவோ அல்லது பத்திரிகைகளிலாவது  நினைவஞ்சலி குறிப்பு ஒன்று  வெளியானதாகவோ நாம் அறியவில்லை.  சம்பந்தன் பல வருடங்களாக தலைமை தாங்கிய இலங்கை தமிழரசு கட்சியும்கூட அவரை நினைவு கூருவது குறித்து சிந்திக்கவில்லை.

சம்பந்தன் மீதான சகல  விமர்சனங்களுக்கும் அப்பால்,  சிங்களத் தலைவர்களினதும் சர்வதேச சமூகத்தினதும் மதிப்புக்குரியவராக விளங்கினார். அவரது  மறைவு தமிழ் அரசியல் சமுதாயத்தில் எளிதில் நிரப்பமுடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது என்பதை அவரது அரசியலை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட மறுக்கமாட்டார்கள். ஆறு தசாப்தங்களுக்கும் அதிகமான கால அரசியல் வாழ்வைக் கொண்ட அவரை நினைவு கூருவதற்கு தமிழர்கள் தவறியதை தமிழ் அரசியல் சமுதாயத்தைப் பீடித்திருக்கும் ஒரு பிணியின் வெளிப்பாடாகவே நோக்க வேண்டியிருக்கிறது.

சம்பந்தன் பல தசாப்தகால அரசியல் வாழ்வைக் கொண்டிருந்தாலும், உள்நாட்டுப்போரின் முடிவுக்கு பின்னரான காலப்பகுதியில் தமிழர் அரசியலை முன்னெடுப்பதற்கு அவர் எவ்வாறு தலைமை தாங்கி வழிநடத்தினார் என்பதே அவரின் அரசியல் மரபாக வரலாற்றில் நினைவு கூரப்படும் என்பதில் சந்தேகமில்லை.  முதலாவது நினைவு தினத்தில் கூட நினைவுகூருவது குறித்து எவரும் அக்கறைப்படவேண்டிய  அவசியமில்லாத அளவுக்கு  அவரது மரபு ஒதுக்கி விடப்படக்கூடியதா? 

போரின் முடிவுக்கு பின்னரான காலப்பகுதியில் தமிழர் அரசியலை வழிநடத்துவதில் சம்பந்தன் தலைமையில் பொதுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் குறிப்பாக தமிழரசு கட்சியும் கடைப்பிடித்துவந்த கொள்கைகளுக்கும் அணுகுமுறைக்குமான பொறுப்பை முற்று முழுதாகச் சம்பந்தன் மீது சுமத்திவிட முடியாது. 

விடுதலை புலிகள் இயக்கம் போரில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழ் அரசியல் சமுதாயம் படுமோசமாக பலவீனப்பட்டிருந்த சூழ்நிலைகளின் கீழ் அதுவும் குறிப்பாக பயங்கரவாதத்தை தோற்கடித்ததாக வெற்றிகொண்டாடிய சிங்கள அரசியல் சமுதாயம்  தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றை காண்பதில் அக்கறையற்ற  மனோபாவத்தைக் கொண்டிருந்த ஒரு சூழ்நிலையிலேயே சம்பந்தன் தமிழர் அரசியலின் தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டியிருந்தது

தமிழ் அரசியல் கட்சிகளை ஒற்றுமையாக வைத்திருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை  இலங்கை தமிழர்களின் பலம்பொருந்திய ஒரு ஜனநாயக அரசியல் இயக்கமாக கட்டியெழுப்புவதற்கு  சம்பந்தன் தவறியதனாலேயே இன்று தமிழ் அரசியல் சக்திகள் பல்வேறு கூறுகளாகிக் கிடக்கின்றன  என்பதே அவர் மீதான முக்கியமான குற்றச் சாட்டு. தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை போருக்கு பின்னரான  உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளுக்கு இசைவான முறையில் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவேண்டிய வரலாற்றுப் பொறுப்பைக் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அவரின் முன்னாலேயே சீர்குலைந்தது. அவரால் குறைந்தபட்சம் தனது  தமிழரசு கட்சியையேனும் ஐக்கியமான ஒரு அரசியல் இயக்கமாக வைத்திருக்க முடியாமல் போய்விட்டது. 

 சம்பந்தன் தனது அரசியல் அனுபவத்தையும்  மூப்பையும் பயன்படுத்தி தமிழ் கட்சிகளை ஒன்றுபடுத்தி வைத்திருந்திருக்க முடியும் என்று பரவலான அபிப்பிராயம் இருந்தது.  ஆனால்,  துரதிர்ஷ்டவசமாக, முன்னைய காலத்தைப் போலன்றி அரசியல் கட்சிகளின் தலைவர்களினால் கட்சி உறுப்பினர்களையும் அவற்றின் கட்டமைப்புக்களையும்  முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாத ஒரு விபரீதமான போக்கு வளரத்தொடங்கிய ஒரு காலப்பகுதியிலேயே  சம்பந்தன் தலைமைத்துவப் பாத்திரத்தை வகிக்க வேண்டியிருந்தது.

இன்று இலங்கையில் எந்தவொரு கட்சியின்  தலைவரும்  தனது கட்சியை முழுமையான  கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்று கூறமுடியாது. அண்மைய தேர்தல்களின் பின்னர் உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் கட்சிகள் எதிர்நோக்குகின்ற நெருக்கடி இதை தெளிவாக வெளிக்காட்டுகின்ற பிந்திய உதாரணமாகும். மூன்று வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு பாரம்பரிய அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்ட  பின்புலத்தில், அவர்கள் மத்தியில் குறிப்பிட்ட ஒரு கட்சிமீதான  விசுவாசம் என்பது பெருமளவுக்கு தளர்ந்து போய்விட்டது. ஒரு கட்சிக்கு நிலையான வாக்குவங்கி ஒன்று  இனிமேலும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாத அளவுக்கு அரசியல் சஞ்சலமானதாகிவிட்டது.

தலைவரை ஏகமனதாக தெரிவுசெய்யும் தமிழரசு கட்சியின் பாரம்பரியமான நடைமுறையை  பேணிக் காக்கக்கூடியதாக தனது கட்சியின் மூத்த உறுப்பினர்களைக் கூட வழிக்குக் கொண்டுவர முடியாத அளவுக்கு  ஒரு  கையறு நிலையிலேயே இறுதிக் காலத்தில் சம்பந்தன் இருந்தார். கடந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற தலைவர் தேர்தலுக்கு பின்னர் தமிழரசு கட்சிக்குள் நிலவும் அருவருக்கத்தக்க  உட்பூசல் தமிழர் அரசியலில் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்துவருகிறது.

ஆனால், போரின் முடிவுக்கு பின்னரான  தமிழ் மக்களின் நிலையை உணர்ந்தவராக சம்பந்தன் வெறுமனே  உணர்ச்சிவசமான சுலோகங்களை உயர்த்திப்பிடித்து மீண்டும் நடைமுறைச் சாத்தியமற்ற அரசியல் பாதையைக் காட்டுவதற்கு ஒருபோதும் முயற்சித்ததில்லை. தமிழர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை பொறுத்தவரை, அடிப்படைக் கோரிக்கைகளில் விட்டுக்  கொடுப்பைச் செய்யாமல் தேசிய இனப்பிரச்சினைக்கு  நிரந்தரமான அரசியல் தீர்வு சமஷ்டி அடிப்படையிலான  ஆட்சி முறையாகவே இருக்க முடியும் என்பதில் அவர் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.

அதேவேளை, நிரந்தரத்தீர்வை நோக்கிய பயணத்தில் இடைக்கால ஏற்பாடாக அரசியலமைப்புக்கான 

13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாணசபைகளை இயங்கவைக்க  வேண்டும் என்று அரசாங்கங்களை இடையறாது வலியுறுத்த சம்பந்தன் தவறியதில்லை. சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களிலும்  அந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்த அவர் தவறியதில்லை. உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படாவிட்டால், வெளியக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வொன்றைக் கோருவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்பது இறுதிவரையான அவரது நிலைப்பாடாக இருந்தது.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணும் விடயத்தில் சம்பந்தன் இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கையை வைத்திருந்தார். இலங்கை அரசாங்கம் மீது சர்வதேச சமூகம் நெருக்குதலை பிரயோகிக்க  வேண்டும் என்பதும் அவரது இடையறாத வலியுறுத்தலாக இருந்து வந்தது. சிங்கள மக்களின் ஆதரவு இல்லாமல் அரசியல் தீர்வை காண்பது சாத்தியமில்லை என்பதும் முஸ்லிம் மக்களின் அரசியல்  அபிலாசைகளுக்கு உரிய இடம் கொடுக்கப்பட வேண்டும் என்பதும் சம்பந்தனின் உறுதியான நம்பிக்கையாக இருந்தது.

அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்ற தலைவர்களுடன் ஒப்பிடும்போது சிங்கள சமூகத்தின் கடுமையான வெறுப்புக்கு உள்ளாகாத ஒரு மிதவாத தமிழ்த் தலைவராக சம்பந்தன் இறுதிவரை விளங்கியதை அவருக்குரிய ஒரு ‘தனித்துவமாக’ கூறலாம்.  ஆனால், தனது தலைமுறையைச் சேர்ந்த தமிழ்த் தலைவர்களைப் போன்றே தமிழ் மக்களுக்கு அமைதியானதும் கௌரவமானதுமான வாழ்வை உறுதி செய்யக்கூடிய அரசியல்  தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்க முடியாதவராகவே சம்பந்தனும் இவ்வுலகில் இருந்து விடைபெற்றார்.

பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரைகளிலும்  அரசாங்க தலைவர்களுடனும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளிலும் மற்றைய எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் செய்யாத வகையில் சம்பந்தன் இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பிறகு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள்  குறித்து வரிசைக் கிரமமாக விளக்கம் அளிப்பது சம்பந்தனின் வழக்கமாக இருந்தது வந்தது.

 ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பதவிக்  காலத்தில் 1991 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழு, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பதவியில் இருந்தபோது 2000 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு யோசனைகள், மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில்  நியமிக்கப்பட்ட பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதித்துவ குழுவின் யோசனைகள், மைத்திரிபால சிறிசேன — ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவுச்செயன்முறை ஆகியவற்றை சம்பந்தன் தவறாது குறிப்பிடுவார்.

சமாதான உடன்படிக்கைக்கையை தொடர்ந்து  மாகாண சபைகள் அமைக்கப்பட்ட பின்னரும் கூட,  அரசியல் தீர்வை நோக்கிய அந்த செயன்முறைகளை முன்னெடுத்ததன் மூலமாக 13 வது திருத்தம் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையமுடியாது  என்பதை அரசாங்கங்களே ஏற்றுக் கொண்டிருந்தன என்பதை நிரூபிப்பதே சம்பந்தனின் நோக்கமாக இருந்தது.

ஜனாதிபதிகளுடனும் சிங்கள அரசியல்வாதிகளுடனும் சுமுகமான உறவை சம்பந்தன் கொண்டிருந்தது குறித்து தீவிர தமிழ்த் தேசியவாத சக்திகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. ஆனால், அத்தகைய உறவை அவர் கொண்டிருந்தாலும், தமிழர் பிரச்சினையில் சிங்கள தலைவர்களின் தவறுகளை நேரடியாகவே சுட்டிக்காட்டும் துணிச்சல் அவரிடம் இருந்தது.

சம்பந்தன் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த இரண்டாவது தமிழ் அரசியல் தலைவராவார். முதலில் அமிர்தலிங்கம் 1977 ஜூலை தொடக்கம் 1983 ஜூலை வரையும் பிறகு சம்பந்தன் 2015 டெப்டெம்பர் தொடக்கம் 2019 அக்டோபர் வரையும் அந்த பதவியை வகித்தனர். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த காலப்பகுதிக்கு பிறகு உள்நாட்டுப்போர் மூண்ட அதேவேளை, போர் முடிவுக்கு வந்தததன் பின்னரான காலப்பகுதியில் சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு வந்தார். தமிழ் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் வளர்ந்து கொண்டிருந்த நாட்களில் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்ததும் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் செயலிழந்த பிறகு அந்த பதவியை சம்பந்தன் வகித்ததும் இருவருக்கும் இடையிலான வேறுபாடாகும்.

ஒரு எதிர்க்கட்சி தலைவராக இல்லாமல் சிறிசேன — ரணில் அரசாங்கத்தை ஆதரித்த  ஒருவராகவே சம்பந்தன் நடந்து கொண்டார்  என்ற விமர்சனங்கள் எழுந்தன. அந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பை வரையும் செயன்முறையை முன்னெடுத்த காரணத்தால் அதற்கு ஒத்துழைத்து இனப்பிரச்சினைக்கு உருப்படியான அதிகாரப் பரவலாக்கம் மூலமாக அரசியல் தீர்வொன்றை காணும் நம்பிக்கையில் அவர் அவ்வாறு நடந்து கொண்டிருக்கக் கூடும். ஆனால், அவருக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.  அவரது தலைமைத்துவம் நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வைக் காண்பதற்கு சிங்கள தலைவர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்கியது என்று நம்பியவர்கள் பலர். ஆனால், முன்னைய தமிழ் தலைவர்களுக்கு கிடைத்த கவலைக்குரிய  அனுபவமே சம்பந்தனுக்கும்  கிடைத்தது. 

எது எவ்வாறிருந்தாலும், சம்பந்தனின் மறைவு  தமிழர் அரசியலில் ஏற்படுத்திய வெற்றிடம் அண்மைய எதிர்காலத்தில் நிரப்பப்படக்கூடிய வாய்ப்பு தொடர்பில் நம்பிக்கை வைப்பதற்குரிய அரசியல் சூழ்நிலை தமிழர்கள் மத்தியில் இன்று இல்லை. தமிழ் மக்களின் நலன்களில் அன்றி  தங்களது கட்சி அரசியல் நலன்களிலும் ஆளுமைப் போட்டியிலும் அக்கறை காட்டுவதற்கே இன்றைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு நேரம் போதாமல் இருக்கிறது. 

சர்வதேச ரீதியில் மதிக்கப்பட்ட பல தலைவர்களை ஒரு காலத்தில் கொண்டிருந்த இலங்கை தமிழச் சமுதாயம் இன்று உள்நாட்டிலேயே உருப்படியாக மதிக்கப்படக்கூடிய ஒரு அரசியல் தலைவர் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

https://arangamnews.com/?p=12144

புதைகுழி அரசியலிருந்து விடுபடுதல் — கருணாகரன் —

2 months 1 week ago

புதைகுழி அரசியலிருந்து விடுபடுதல்

July 6, 2025

புதைகுழி அரசியலிருந்து விடுபடுதல்

— கருணாகரன் —

சில மாதங்களுக்கு முன்பு, நிலங்க அலெக்ஸாண்டர் என்ற சிங்கள எழுத்தாளரின் கதைகளுக்கு முன்னுரை எழுத நேர்ந்தது. அவருடைய கதைகளில் ஒன்று, “கொலை நிலத்தில் ஓலமிடும் உள்ளங்கள்”  என்பது. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் அண்மையில் (2024)கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளைப்பற்றிய – மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளைப் பற்றிய கதை. சரியாகச் சொன்னால், அந்தப் புதைகுழிகளை – எலும்புக்கூடுகளை – பகுப்பாய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட துறைசார்ந்த பேராசிரியரின் அரசியல் – உளவியல் பற்றிய கதை. நிலந்த அந்தக் கதையை எழுத்தாளருக்குரிய (மனிதருக்குரிய) நேர்மையான முறையில் எழுதியிருந்தார். அந்தக் கதையில் இடம்பெறுகின்ற பேராசிரியர் பண்டுக என்ற பாத்திரம், தன்னுடைய பொறுப்பை, தான் விரும்புகின்ற அல்லது தான் சார்கின்ற அரசியல் ரீதியாக அணுக முற்படுகிறதே ஒழிய, அறிவியல் ரீதியான அறத்துடன் இல்லை என்பதைக் குறியீடாக்கியிருந்தார் நிலங்க. 

நிலங்கவின் ஏனைய கதைகளும் கூட இதே பண்புடையவையாகவே உள்ளன. அதனால்தான் அதிகாரத்துக்கு எதிரான போர்க்குரலாகமக்களின் தளத்திலிருந்து ஒலிக்கும் வெளிப்பாடாக நிலந்தவின் கதைகள் இயக்கமுறுகின்றன. இதனூடாக நிலங்க அலெக்ஸாண்டரின் விரிந்த மனதைபரந்த சிந்தனையைஅவர் விளையும் புதிய அரசியலைசெழுமையான பண்பாட்டுச் சூழலைபுதிய சமூகத்தை எனப் பலவற்றோடும் அறிமுகமாகிறேன். இப்படி அறிந்து கொண்டு செல்லும்போது நம்முடைய மூளையும் இதயமும் இளகி விடுகிறது‘ என்று  எழுதினேன். 

கொக்குத்தொடுவாயில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளும் அவற்றைக் கொண்டிருக்கும் மனிதப் புதைகுழிகளும் எத்தகைய சேதிகளைச் சிங்களச் சமூகத்திற்கு சொல்ல வேண்டும்? என்பதில் நிலந்தவுக்குத் தெளிவான பார்வையுண்டு. அந்தப் பார்வைக்கு நிகரான இன்னொரு வலுவான சான்று, அந்த மனிதப்புதைகுழிகளை சிங்கள புத்திஜீவிகளில் ஒருதரப்பினரும் அவர்கள் காப்பாற்ற முயற்சிக்கும் அதிகார வர்க்கமும் எப்படிச் சூதான முறையில் மாற்றியமைக்க முற்படுகின்றன; அதற்கான தருக்கங்களை எப்படி உருவாக்குகின்றன  என்பதைத் துணிச்சலோடும் நிதானத்தோடும் நிலங்க கையாண்டிருக்கும் விதம். 

இப்படி எழுதும்போது சிங்களப் பெருந்திரள் சமூகத்தில் அல்லது சிங்கள அதிகாரத் தரப்பிலிருந்து எதிர்ப்போ குறைந்த பட்சம் ஒரு அதிர்வலையோ தனக்கு எதிராக ஏற்படும் என்று நிலந்தவுக்குத் தெரியும். அதைக்குறித்தெல்லாம் நிலந்த கவலைப்படவுமில்லை. தயங்கவுமில்லை. நிலந்தவின் அகத்தில் சுடரும் உண்மையின் ஒளியும் அவருடைய இயத்தில் துடித்துக் கொண்டிருக்கும் உண்மையும் நேர்மையும் (அறமும்) அவரை வரலாற்றில் முன்கொண்டு செல்கின்றன. அதற்காக அவர் கொடுக்கக் கூடிய விலைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் நாம். அதந்தப் புரிதல்தான் அவருக்கான பலமும் மகிழ்ச்சியும் நிறைவுமாகும். 

இதை ஏன் இங்கே இப்பொழுது சொல்கின்றேன் என்றால், யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளும் அங்கே மீட்கப்படும் எலும்புக்கூடுகளும் உண்டாக்கியிருக்கும் அரசியற் குழப்பங்களுக்காகவும் அறவீழ்ச்சிக்காகவுமே. 

செம்மணிப் புதைகுழிகளுக்கு சமாந்தரமாகவோ அல்லது வேறொரு கோணத்திலோ துணுக்காய்ப்புதைகுழி விவகாரமும் முன்னிறுத்தப்பட்டுள்ளது. அங்கே மனிதப் புதைகுழி எதுவும் இன்னமும் கண்டறியப்படவில்லை. எனினும் துணுக்காயில் விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டவர்கள், கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டிருக்கலாம். அல்லது எரியூட்டப்பட்டிருக்கலாம் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.  

இரண்டின் பக்கமாகவும் நின்று கன்னைபிரித்து அடிபடுகிறார்கள் சமூகவலைத்தளப்போராளர்கள். 

இன்னொரு பக்கத்தில் வெருகல் படுகொலை என்றொரு குற்றச்சாட்டும் முன்னிறுத்தப்படுகிறது. 

எல்லாமே துயரத்தினால் நிரம்பியதே. எல்லாம் அநீதிகளால் நிரம்பியதே. எல்லாமே அறவீழ்ச்சியினால் ஏற்பட்டவையே. எல்லாவற்றிலும் நிரம்பிக் கிடப்பது வற்றாத கண்ணீர்…

இப்படிச் சொல்லி, எல்லாவற்றையும் சமப்படுத்தவில்லை. அது என்னுடைய நோக்கமும் இல்லை. அப்படிச் சமப்படுத்தி விடவும் முடியாது. 

அவரவர் தமது துயரங்களை ஆற்றுவதற்கும் தமக்கான நீதியைக் கோருவதற்கும் நிதானமான முறையில் சிந்திப்பதே பொருத்தம் என எண்ணுகிறேன். அந்த நிதானமே நிவாரணத்தையோ,  நீதியையோ, ஆறுதலையோ தரக்கூடியது.

ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்கு நிச்சயமாகத் தீர்வைத் தரமுடியாது. கொல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டவர்களே! அவர்களுடைய உயிர் இனித்திரும்பாது. உடலும் உயிரும் எலும்புக்கூடாகி விட்டது. 

ஆனால், அதையாவது காணக்கூடியதாக – பெறக்கூடியதாக இருக்கிறது. அதுவும் செம்மணியில். துணுக்காயிலோ வேறு எங்குமே இதைப்போல மீண்டால்தான், கண்டறியப்பட்டால்தான் அவற்றையும் காணலாம். 

இந்தக் கொடிய யதார்த்தத்திலிருந்துதான் நாம் இந்த விடயங்களைப் பார்க்கவும் அணுகவும் வேண்டும் எனக் கருதுகிறேன்.

செம்மணிப்புதைகுழியைப் பற்றிப்பேசும்போது அல்லது அதுபோன்ற படைத்தரப்பினால் உருவாக்கப்பட்ட மனிதப்புதைகுழிகளைப் பற்றிப் பேச முற்படும்போது இன்னொரு நிலையில் பாதிக்கப்பட்டோரின் உளத்தில் இயல்பாக ஒரு கேள்வியும் அதனோடிணைந்த உணர்நிலையும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. 

ஒரு அநீதியை, ஒரு தரப்பினால் ஏற்படுத்தப்பட்ட வலியைப்பற்றிப் பேசுகிறீர்களே! அதைப்போல இன்னொரு தரப்பினால் ஏற்படுத்தப்பட்ட அநீதியும் அதனால் விளைந்த வலியும் உண்டே. அதைப்பற்றி ஏன் பேசவில்லை? அல்லது ஏன் பேசத் தயங்குகிறீர்கள்? என்ற கேள்வியும் உணர்நிலையும் அது.

என்பதால்தான் பாதிக்கப்பட்டோர் அனைவருடைய துயரமும் இழப்பும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் கூடிக் குறைந்தவை அல்ல. அவரவருக்கான துயரங்களுக்கும் அவரவர் படுகின்ற வலிகளுக்கும் உரிய மதிப்பு உண்டு. அவற்றை நியாயமாகவும் நிதானமாகவும் புரிந்து கொள்வது அவசியம் என அழுத்தமாகக் கூற வேண்டியுள்ளது. 

இல்லையெனில் நாம் நீதியைப் பற்றிப் பேச முடியாது. அதை மீறிப் பேசினால் – பேச முற்பட்டால் அது நீதியாகவோ, நீதிக்கானதாகவோ இருக்காது. மட்டுமல்ல, அநீதியின் பக்கமாகவே நம்மைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். 

ஆகவே பாதிக்கப்பட்டோரின் உளவியலில் – உளநிலையில் – நின்று இதனை அணுகுவதே பொருத்தமானது. 

நிலங்க அலெக்ஸாண்டர், பாதிக்கப்பட்ட தரப்பின் உணர்நிலையில் நின்று அந்தக் கதைகளை எழுதியபடியால்தான் அவருடைய நீதியுணர்வைக் குறித்து நாம் மகிழ்ந்து, பாராட்டி, நன்றி கூறிப் பேசக்கூடியதாக உள்ளது. 

ஆனால், இங்கே நமது சமூக வலைத்தளப் பதிவர்களிற் பலரும் அப்படியான நீதியுணர்சியைக் கொண்டிருக்காமல், சார்பு நிலைப்பட்ட – தமக்கு இசைவான நீதியைக் குறித்தே சிந்திக்கின்றனர். 

அப்படியொரு நீதி இல்லை. அப்படியொரு நீதியை அவர்கள் எதிர்பார்த்தால், அது நீதியாக இருக்கப்போவதுமில்லை. அதைக் கோருகின்றவர்கள் ஒருபோதும் நீதிக்காகவோ நியாயத்துக்காகவோ எந்தப் பங்களிப்பைச் செய்யவும் முடியாது. அவர்கள் வரலாற்றின் முன் தலைகுனியவே முடியும்.

“நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே..” என்று கூறப்படும் இலக்கியப் பாரம்பரியத்திலிருந்து வந்தவர்களாகச் சொல்லப்படும் சமூகத்தினராகிய நாமே நெற்றிக் கண்ணை (மூன்றாவது கண்ணான அறிவுக் கண்ணை) இழந்து நிற்க முடியுமா? 

குற்றமாக நடந்தவை அனைத்தும் குற்றங்களே! அதில் எந்தச் சமரசங்களும் வேண்டாம். ஒன்றை ஒன்றினால் மறைப்பதும் மறைக்க முற்படுவதும் தவறு. அந்த உள் நோக்கம் இன்னொரு குற்றமாகும். அது இந்தப் புதைகுழிகளை உருவாக்கிய குற்றத்துக்கு நிகர். 

இந்தப் புதைகுழிகளில் மட்டுமல்ல, சுதந்திர இலங்கையில் நாடுமுழுவதிலும் உள்ள புதைகுளிகளில் கொன்று புதைக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பொதுமக்களே! நிராயுதபாணிகளே! இதில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலையக மக்கள் என்ற எந்தப் பேதமும் இல்லை. சிங்களவர்களைச் சிங்களவர்களும் தமிழர்களைத் தமிழர்களும் கூடக் கொன்று புதைத்திருக்கிறார்கள். 

இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியமாகும். 

யாரும் இதில் பெருமைப்படவோ, நமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை, நம்முடைய கை சுத்தமானது என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லவோ முடியாது. நேரடியாக எந்தக் கொலையோடும் எந்தப் புதைகுழியோடும் பலருக்கும் தொடர்பில்லை என்றாலும் அவரவர் சார்ந்த சமூகம், அவரவர் கொண்டிருந்த அரசியல் அல்லது ஆதரவளித்த தரப்புகள் என்பதற்காக இந்தக் கொலைகளுக்கும் புதைகுழிகளுக்கும் எல்லோரும் பொறுப்பாளிகளே! 

இந்தப் புதைகுழிகளைக் குறித்து வெளியாரின் பார்வை எப்படியானது?

‘இலங்கையில் மனிதப்புதைகுழிகள்‘, ‘பல தரப்புகளாலும் உருவாக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் விளைச்சல்கள்‘ என்ற செய்திகள் (தகவல்கள்), இலங்கை பற்றிய – இலங்கையர்களைப் பற்றிய ஒட்டுமொத்தப் பார்வையையே அவர்களுக்கு உருவாக்கும். 

‘ஒரு சின்னஞ்சிறிய தேசத்தில் இத்தனை மனிதப் புதைகுழிகளா? அதுவும் நாடு முழுவதிலும்! அதுவும் சுதந்திர இலங்கையில்!! 

ஆக இலங்கை என்பது எலும்புக்கூடுகளின் தேசமா?‘ என்று அவர்கள் கருதினால் அதில் என்ன தவறு?   

ஆகவே இதொரு கூட்டுத் துக்கம். கூட்டு அவமானம். கூட்டுத் தலைகுனிவு. கூட்டு அநீதி. இதையும் கூட ஒரு வகையான சமப்படுத்தல் அல்லது சதியான – சூதான தர்க்கம் என்றோ யாரும் சொல்ல முற்படலாம். 

நிச்சயமாக அப்படியில்லை. 

இதுதான் உண்மை. மறுக்க முடியாத உண்மை. 

ஆகவே நாம் நாறி மணக்கும் புழுப்பிடித்த இந்தச் சீழான யதார்த்தத்திலிருந்துதான் உண்மையை நோக்கியும் நீதியை நோக்கியும் பயணிக்க வேண்டியுள்ளது. அதுவே நமது குற்றங்களுக்கான தண்டனையைப் பெறுவதோடு, இனிமேலும் இந்தகைய குற்றங்கள் நிகழாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.  

புதிய (NPP) அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்த பிறகு கண்டறியப்படும் மனிதப்புதைகுழிகள் தடைகள், அச்சுறுத்தல்கள் இல்லாத நிலையில் தோண்டப்படுகின்றன. இதொரு நல்ல – நம்பிக்கை அளிக்கக்கூடிய சூழல். இந்த அரசாங்கம் விடயங்களை முன்னோக்கியதாகக் கையாள முற்படுகிறது. சமூக நல்லிணக்கம், நீதிக்கான முன்னாயத்தம் போன்றவற்றிற்கான தொடக்க வாய்ப்புச் சூழல் என்று இதைக் கருதலாம். 

இந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இதைப்போன்ற (பட்டலந்த, சூரியகந்த என்ற) துயரம் மிக்க, கசப்பான ஒரு வரலாற்று அனுபவச் சூழல் உள்ளதால், அவர்கள் இதனை மேலும் மென்னிலையில் – பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சார்பான நிலையில் அணுக முற்படுவதாகவே தெரிகிறது. 

ஆக பாதிக்கப்பட்டோருக்கான நீதிக்கான நற்தருணமாக இதை மாற்றுவதற்கான பொறுமையும் நிதானமும் விவேகமும் நமக்கு வேண்டும். கன்னை பிரித்து அடிபட்டால் எல்லாருக்கும் சினமும் எரிச்சலும்தான் ஏற்படும். அது பாதிக்கப்பட்டோருடைய துக்கத்தையும் அவர்களுக்கான நீதியையும் அவமதிப்பதாகவே அமையும். 

இங்கே பலரும் தமக்குச் சார்ப்பான தரப்புக்கு தாம் நீதியைப் பெற்றுக் கொடுக்கிறோம் என்ற எண்ணத்தில் இன்னொரு தரப்பைக் குற்றப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபடுவதே அதிகமாக உள்ளது. நடந்தவை அனைத்தும் அனைவருக்கும் தெரியும். தெரியாமல் இருப்போர் அவற்றை அறிந்து கொள்ள வேண்டும். அவை கசப்பானவை என்பதற்காகக் கடந்து செல்லக் கூடாது. 

சுதந்திர இலங்கையில்தான் எத்தனை துயரக் கதைகளும் துன்பியல் நாடகங்களும்? 1505 – 1948 க்கு இடைப்பட்ட 443 ஆண்டுகளில் இலங்கையில் அரசியலுக்காகக் கொல்லப்பட்டோரை அல்லது கொலையுண்டோரையும் விட 1948 க்குப் பிந்திய 75 ஆண்டு  காலத்தில் கொல்லப்பட்ட அல்லது கொலையுண்டோரின் தொகை அதிகமாகும். 

அதாவது சுதந்திர இலங்கையில்தான் அரசியல் காரணங்களால் கொல்லப்பட்டோரும் கொலையுண்டோரும் கூடுதல். இதைச் சரியாகச் சொன்னால், வெளியாரினால் – பிறத்தியாரினால் – கொல்லப்பட்டதை விட – கொலையுண்டதை விட நமக்குள் நாமே கொன்று குவித்ததும் கொல்லப்பட்டதுமே அதிகம். விடுதலையின் பேராலும் நாட்டின் பாதுகாப்பின் பேராலும் நடந்த அக்கிரமம், அநீதி, முட்டாள்தனம், நாகரீகக் கேடு இது. 

 இனியாவது நம்முடைய அகவிழிகள் திறக்கட்டும்.  இனியாவது நாம் நிதானமும் நீதியுணர்ச்சி உள்ளவர்களாகவும் வாழ முற்படுவோம். அதற்கு நாம் பொறுப்புக் கூறுவது – பொறுப்பேற்பது அவசியம். அதைச்செய்வோம்..

புதைகுழிகளுக்கு மட்டுமல்ல, அனைத்துப் படுகொலைகளுக்காகவும் அனைத்து நீதியின்மைகளுக்காகவும்தான்.

https://arangamnews.com/?p=12141

புதிய உள்ளூராட்சி சபைகள் பழைய சவால்கள் - நிலாந்தன்

2 months 1 week ago

புதிய உள்ளூராட்சி சபைகள் பழைய சவால்கள் - நிலாந்தன்

facebook_1751724790790_73472662969132918

இன்று கட்டுரையை ஒரு கதையில் இருந்து தொடங்கலாம். புதிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டிருக்கும் பின்னணிக்குள் இந்தக் கதைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.

போர்க்காலத்தில் மல்லாவியில் நடந்த கதை இது. மல்லாவிச் சந்தையில் கனெக்ஸ் என்று அழைக்கப்படும் கனகரட்ணம் மீன் வாங்க வந்திருந்தார். அவர் அப்பொழுது வெற்றிலை சப்பிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் வாய்க்குள் இருந்த வெற்றிலை எச்சிலை அப்படியே நிலத்தில் துப்பினார். அதை அங்கே இருந்த அன்பு மாஸ்டர் கண்டுவிட்டார். அவர் கனெக்ஸை நோக்கிப் பாய்ந்தார். “ஒரு பொது இடத்தில் அதுவும் சாப்பாட்டுப் பொருட்கள் விற்குமிடத்தில் எப்படி சுகாதாரக் கேடான விதத்தில் வெற்றிலையைத் துப்புவாய்” என்று அவர் கனெக்சை நோக்கி கேட்டார். கனக்ஸ் திரும்பிக் கேட்டார் “நான் துப்பியதால் உனக்கு என்ன வந்தது? நான் யாருடைய முகத்திலும் துப்பவில்லை. நிலத்தில் தானே துப்பினேன்? ” என்று. அன்பு மாஸ்டர் விடவில்லை. “நீ துப்பிய நிலம் பொது நிலம். சுற்றி வர மீன்கள், மரக்கறிகள் விற்கப்படும் இடம். உன்னுடைய துப்பலில் மொய்க்கும் இலையான் இங்குள்ள சாப்பாட்டுப் பொருட்களின் மீதும் மொய்க்கும். எவ்வளவு அசுத்தம்? எவ்வளவு ஆரோக்கியக் கெடுதி?… என்று கூறி கனெக்ஸை சண்டைக்கு இழுத்தார்.

இப்படி இரண்டு பேரும் வாக்குவாதப்பட சந்தைக்கு வந்தவர்கள், சந்தை வியாபாரிகள் என்று அனைவரும் இந்த இரண்டு பேர்களையும் சூழ்ந்து விட்டார்கள். இருவருமே ஒரு பொது இடத்தில் எச்சில் துப்புவதில் இருக்கக்கூடிய சுகாதாரக் கேடான விடயங்களை தர்கபூர்வமாக உரையாடத் தொடங்கினார்கள். சூழ்ந்திருந்த மக்கள் இரண்டு பேரையும் விலக்குப் பிடிக்க முயற்சித்தார்கள். அதேசமயம் அந்த உரையாடலில் மக்களும் ஈடுபடத் தொடங்கினார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் எல்லாருக்கும் தெரிந்தது அது ஒரு நாடகம் என்று. சந்தைக்குள் சுகாதார விழிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கனெக்சும் அன்பு மாஸ்டரும் இணைந்து தயாரித்த – நவீன நாடகம் -கட்புலனாகா அரங்கு அது.

அன்பு மாஸ்டர் ஒரு நாடகச் செயற்பாட்டாளரும் அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். போர்க் காலத்திலேயே இறந்து விட்டார். கனெக்ஸ் ஒரு நாடகச் செயற்பாட்டாளரும் அரசியல் செயல்பாட்டாளரும் ஆவார். நாலாங் கட்ட ஈழப்போரில் உயிர் நீத்தார். இருவரும் இப்பொழுது உயிரோடு இல்லை. ஆனால் அவர்கள் இரண்டு பேரும் எதற்காக நாடகமாடினார்களோ அந்த விடயம் இப்பொழுதும், கிட்டதட்ட இரண்டு தசாப்தங்களுக்கு பின்னரும் உண்டு. அதுதான் சந்தைக்குள் சுகாதாரச் சீர்கேடுகள்.

யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய மரக்கறிச் சந்தை திருநெல்வேலியில் உள்ளது. அதற்குப் பின்புறம் உள்ள சிறிய பாதை சில சமயங்களில் கழிப்பறையாகவும் குப்பைக் கூடையாகவும் காணப்படும்.தமது வீட்டுக் கழிவுகளை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்த வீதியில் கொண்டு வந்து போடுகிறார்கள். இத்தனைக்கும் அந்த வீதி வளைவில் ஒரு பாடசாலை உண்டு. சில சமயங்களில் அந்த வேலியோடு நின்று சிறுநீர் கழிப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் சந்தை வியாபாரத்தோடு தொடர்புடையவர்கள்.

இது சந்தைக்கு வெளியே. சந்தைக்கு உள்ளே போனால், அங்கே மரக்கறிகள் பரப்பப்பட்டிருக்கும் அதே தளத்தில்தான் வியாபாரிகள் தமது கால்களைப் பரப்பிக் கொண்டு அமர்ந்திருப்பார்கள்.அதாவது விற்கப்படும் பொருட்களை வைப்பதற்கு உயரமான ஏற்பாடு இல்லை.அதனால் வியாபாரிகள் மரக்கறிகளை பரப்பி வைத்திருக்கும் அதே இடத்தில் சிலசமயம் செருப்புக் கால்களோடு இருப்பார்கள். அதே செருப்போடுதான் அவர்கள் கழிப்பறைக்கும் போகிறார்கள்.

அது மட்டுமல்ல,சந்தையின் மூலை முடுக்குகளில் வெற்றிலைத் துப்பல்களைக் காணலாம்.துப்புவது யார் என்றால் வியாபாரிகளும் அவர்களைச் சேர்ந்தவர்களும்தான். சந்தைக்குப் பொருட்கள் வாங்க வருபவர்கள் அவ்வாறு துப்புவது குறைவு. பொதுச் சுகாதாரச் சட்டத்தின்படி பொது இடங்களில் துப்புவது சட்ட விரோதமானது. ஆனால் அதை சட்டத்தால் மட்டும் திருத்த முடியாது. ஏனென்றால் அது ஒரு பண்பாடு. அவ்வாறு துப்பாமல் விடுவதனை ஒரு பண்பாடாக மாற்ற வேண்டும். யார் மாற்றுவது ?

facebook_1751686233813_73471045772268529

யாழ் நகரப் பகுதியை அண்டியுள்ள சந்தைகளில் கல்வியங்காட்டுச் சந்தை தொடர்பாக முறைப்பாடுகள் அதிகம். அந்த சந்தைக்கு ஒரு சாதிப் பெயர் வேறு வைத்திருக்கிறார்கள். அங்கு வாங்கிய மீனில் ரசாயன வாடை வீசுவதாக திருப்பிக் கொடுத்தவர்கள் உண்டு. பொதுச் சுகாதாரப் பரிசோதர்களிடம் முறைப்பாடு செய்தவர்களும் உண்டு. ஒரு முறை அவ்வாறு முறைப்பாடு செய்த போது பிஎச்ஐ சொன்னார் அந்த ரசாயனத்தை சோதிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் இங்கு யாழ்ப்பாணத்தில் இல்லை. அதனால் அந்த மீனை அனுராதபுரத்துக்கு அனுப்பி எடுக்க வேண்டும். அதுவரை அந்த மீனைக் கெடாமல் வைத்திருக்கவும் வேண்டும் என்று.

கல்வியங்காட்டுச் சந்தையில் வாங்கிய மீனில் ஃபோமலின் வாடை வீசியதாக முறைப்பாடுகள் உண்டு. ஓர் ஆசிரியர் சொன்னார், அவர் வாங்கிய மீனில் அவ்வாறு ஃபோமலின் வாடை வீசியதாகவும்,எனவே அந்த மீனைக் கொண்டு போய் குறிப்பிட்ட வியாபாரியிடம் கொடுத்து “நீ ஏமாற்றி விட்டாய்” என்று ஆத்திரப்பட்ட பொழுது,அந்த வியாபாரி சொன்னாராம் இந்த மீனைத்தான் கூலர் வியாபாரிகள் நூற்றுக்கணக்கான கிலோக்கள் வாங்குகிறார்கள். நீங்கள் ஒரு கிலோ வாங்கி விட்டு இப்படிக் கேட்கிறீர்கள் என்று. இதை இவ்வாறு எழுதுவதன் பொருள் யாழ்ப்பாணத்தின் ஏனைய சந்தைகளில் மீன்களில் ரசாயனம் கலக்கப்படுவதில்லை என்பதல்ல.மேலும் கல்வியங்காட்டுச் சந்தையில் உள்ள எல்லாருமே ரசாயனம் கலந்து மீனை விற்கிறார்கள் என்ற பொருளிலும் அல்ல.

இப்படித்தான் இருக்கிறது பொதுச் சந்தைகளில் சுகாதாரம். இப்பொழுது புதிய உள்ளூராட்சி சபைகள் வந்துவிட்டன. மேற்சொன்ன விடயங்களில் உள்ளூராட்சி சபைகள் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றன ?

குப்பை ஒரு தீராப் பிரச்சனை. சந்தைச் சுற்றுச்சூழலில் மட்டுமல்ல பெரும்பாலான வீதிகளில் குப்பை ஒரு பிரச்சினை. குப்பை அள்ளும் வாகனம் வராத நாட்களில் மதில்களில் குப்பைப் பைகள் தொங்கும். ஏனெனில்,கீழே வைத்தால் கட்டாக்காலி நாய்கள் பைகளைக் குதறி விடும். சில மறைவான வீதித் திருப்பங்களை அந்த ஊர் மக்களே தற்காலிக குப்பைத் தொட்டிகளாகப் பயன்படுத்துகிறார்கள். அங்கு குப்பை கொட்டவேண்டாம் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்புப் பலகைகள் நடப்பட்டிருக்கும். அல்லது அந்த மதிலுக்கு அல்லது வேலிக்குச் சொந்தமான வீட்டுக்காரர்கள் அவ்வாறான அறிவிப்புககளை ஒட்டியிருப்பார்கள்.எனினும், எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு குப்பைகள் கொட்டப்படும்.

இதனால் வெறுப்படைந்த வீட்டுக்காரர்கள் தமது வீட்டு மதிற் சுவரில் அல்லது வேலியில் எழுதி வைத்திருக்கும் வாசகங்கள் அவர்கள் எந்த அளவுக்குக் கோபமாக இருக்கிறார்கள் என்பதை நமக்கு உணர்த்துகின்றன. அந்த வாசகங்கள் வருமாறு…”இங்கே குப்பை போடுகிறவன் உன்னுடைய பெண்டாட்டியையும் கொண்டு வந்து போடு” என்று ஒரு வாசகம். ”இங்கே குப்பை போடுகிறவன் ஒரு மன நோயாளி” இது இரண்டாவது வாசகம். “இங்கே குப்பை கொட்டினால் உன்னைப் பேய் பிடிக்கும்” இது மூன்றாவது வாசகம். “இங்கே குப்பை கொட்டுகிறவன் ஒழுங்காகப் பிறக்காதவன்”…..என்று ஒரு வாசகம். இவைபோல பல்வேறு விகாரமான விபரீதமான அறிவிப்புகளைப் பார்க்க முடியும்.

ஒரு வீட்டுக்கார் தன்னுடைய வீட்டு வெளி மதிற் சுவரில் சுவாமிப் படங்களை ஒட்டி விட்டார். ஆனால் சுவாமிப் படங்களுக்குக் கீழேயும் குப்பைகள் கொட்டப்பட்டன. குப்பைகளைக் கொட்டுபவர்கள் யார் என்று பார்த்தால் அதில் படித்தவர்கள் உண்டு,விவரம் தெரிந்தவர்கள் உண்டு. யாரும் பார்க்காத ஒரு நேரத்தில், யாரும் பார்க்காத விதமாக அவர்கள் குப்பையை அந்த இடத்தில் தட்டி விட்டுப் போவார்கள். அங்கே கமரா பொருத்தினாலும் அதை மீறிக் குப்பை கொட்டப்படுகிறது. மேலும் கமரா பொருத்துவதற்கும் காசு வேண்டுமே?

இவ்வாறான குப்பை கொட்டும் ஒரு சுகாதாரச் சூழலில் அல்லது தன்னுடைய குப்பையை மற்றவர்களுடைய முற்றத்தில் கொட்டும் ஒரு சீரழிந்த கலாச்சாரச் சூழலில், புதிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இப்பிரதேச சபைகள் சந்தைச் சுகாதாரத்தையும் சந்தையில் விற்கப்படும் உணவுகளின் நுகர்வுத் தரத்தையும் உறுதிப்படுத்துவதற்கு புதிய வினைத்திறன் மிக்க திட்டங்களை வகுக்க வேண்டும்.சந்தைகளைச் சுத்தமாக வைத்திருப்பதில் இருந்துதான் ஒரு உள்ளூராட்சி சபையின் வெற்றிகள் அனைத்தும் தொடங்குகின்றன. சந்தைகளைச் சுத்தமாகப் பேணும் ஒர் உள்ளூராட்சி சபை தன் எல்லைக்குட்பட்ட கிராமங்களையும் சுத்தமாகப் பேணும். எனவே சந்தைச் சுகாதாரம் எனப்படுவது ஒரு குறிகாட்டி. புதிய உள்ளூராட்சி சபைகள் இதைக் கவனத்தில் கொள்ளுமா?

உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்ட உடனடுத்த நாட்களிலேயே குப்பைகளைப் பிரித்தெடுத்து எரிக்கும் இடங்களில் முரண்பாடுகள் எழுந்தன. இணுவில்,கல்லுண்டாய் வெளி ஆகிய இடங்களில் குப்பைகள் ஏரிக்கப்படுவதால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்து முறைப்பாடுகள் எழுந்தன.

குப்பைகளை எரிப்பதற்குப் பதிலாக அவற்றை மீள் சுழற்சி செய்வது தொடர்பில் புதிய நவீன சிந்தனைகள் தேவை.உதாரணமாக ஸ்வீடன் நாடானது குப்பைகளை மீள் சுழற்சி செய்வதில் வெற்றியடைந்த நாடாகப் பார்க்கப்படுகிறது. அங்கே ஒரு கட்டத்தில் மீள் சுழற்சி செய்வதற்கு உள்ளூர்க் குப்பைகள் போதிய அளவு இருக்கவில்லை.அதனால் மீள் சுழற்சி மையங்கள் தொடர்ந்தும் இயங்குவதற்காக குப்பைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. எனவே உள்ளூராட்சி சபைகள் இந்த விடயத்தில் நவீனமான, வினைத்திறன் மிக்க முடிவுகளை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக நான் உரையாடிய பொழுது ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்னிடம் கேட்டார்,”அரசியலில் குப்பை கொட்டும் இந்தக் கட்சிகளிடம் பிரதேசசபைகளில் குப்பைகளை அகற்றுங்கள் என்று கேட்பது பொருத்தமானதா” என்று? பிரதேச சபைகளைக் கைப்பற்றுவதற்கான போட்டிகள் அவ்வாறான ஒரு தோற்றத்தை உருவாக்கியிருக்கலாம் என்பதனை புதிய பிரதேச சபை உறுப்பினர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த அபிப்பிராயத்தை மாற்றியமைக்கும் விதத்தில் உள்ளூராட்சிப் பிரதேசங்களை சுத்தமானவைகளாகவும் சுகாதாரமானவைகளாகவும் பசுமைப் பூங்காக்களாகவும் மாற்ற முன் வர வேண்டும்.அன்னை தெரேசா கூறுவார்… “தொண்டு செய்வது என்பது வீட்டிலிருந்து தொடங்குகின்றது”என்று. அப்படித்தான் சுத்தமும் சுகாதாரமும் உள்ளூராட்சி சபைகளிலிருந்து தொடங்கட்டும்.

https://www.nillanthan.com/7506/

காணொளிகளின் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவருக்கான நீதி – நிலாந்தன்!

2 months 1 week ago

Anaivilakku.jpg?resize=750%2C375&ssl=1

காணொளிகளின் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவருக்கான நீதி – நிலாந்தன்!

அணையா விளக்கு போராட்டத்தில் தன்னை நித்திரை கொள்ளவிடாமல் தடுத்த இரண்டு சம்பவங்களைப் பற்றி அதில் அதிகமாக ஈடுபட்ட ஒருவர் சொன்னார்.

முதலாவது சம்பவம், ஒரு முதியவர்-மிக முதியவர்- காணாமல் ஆக்கப்பட்ட ஒரு மகனின் தகப்பன். அவர் அங்கே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வந்து போனபின் அவர் அங்கிருந்தவர்களிடம் கேட்டாராம், “தம்பி இனி எங்களுக்குத் தீர்வு கிடைக்குமா? காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் திரும்பக் கிடைப்பார்களா?” என்று. அவர் நம்புகிறார், ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வந்ததால் ஏதோ தீர்வு கிடைக்கும் என்று. அந்த நம்பிக்கை, அதுவும் அந்த முதிய வயதில் அவருக்கு இருந்த நம்பிக்கை, தன்னைத் துன்புறுத்தியதாக அந்த ஏற்பாட்டாளர் சொன்னார்.

இரண்டாவது சம்பவம், ஒரு முதிய தாய், ஒரு பையனின் படத்தையும் வைத்துக்கொண்டு அங்கே இருந்திருக்கிறார். அவரோடு கதைத்த பொழுது அவர் சொன்னாராம்,”நான் இது போன்ற போராட்டங்களில் இதுவரை பெரும்பாலும் பங்குபற்றியது இல்லை. இது மக்களால் மக்களுக்கு என்று கூறப்பட்டதால் நான் வந்தேன்.இது அரசியல்வாதிகளால் ஒழுங்கு செய்யப்படாத, ஆனால் மக்களால் ஒழுங்கு செய்யப்படுகின்ற ஒரு போராட்டம் என்றபடியால் வந்தேன்.” என்று.மேலும், “இது போன்ற போராட்டங்கள் எதிர்காலத்தில் நடந்தால் நான் அதற்கு வர இருக்கிறேன். யாரோடு கதைக்க வேண்டும்?” என்றும் கேட்டிருக்கிறார். அப்பொழுது அந்த செயற்பாட்டாளர் சொன்னாராம், “நீங்கள் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காகப் போராடும் சங்கங்களோடு தொடர்பில் இல்லையா?” என்று. அவர் கூறினாராம்,” இல்லை” என்று.

அதாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் சங்கங்களோடு தொடர்பில் இல்லாமலேயே ஒரு தொகுதி முதிய பெற்றோர் உண்டு. கட்சி சாரா மக்கள் போராட்டம் என்று வரும்பொழுது அவர்கள் அரங்கினுள் இறங்குகிறார்கள். இது அணையா விளக்குப் போராட்டத்துக்கு இருந்த மக்கள் பரிமாணத்தை காட்டுகிறது.

ஆனால் துயரம் என்னவென்றால், இந்த இரண்டு முதியவர்களையும் அங்கே யாரும் நேர்காணவில்லை. அவர்களைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் அங்கே வந்திருந்திருக்கலாம். செம்மணியில் புதைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை தெரியாது. யாரையெல்லாம் புதைத்தார்கள் என்றும் தெரியாது. ஆனால் தங்கள் பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோர் நூற்றுக்கணக்கில் கிராமங்கள் தோறும் உண்டு. அவர்களிடம் போனால் அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒவ்வொரு கதை வைத்திருப்பார்கள்.அதற்குள் சில சமயம் கிளைக் கதைகளும் இருக்கும். இதில் எத்தனை கதைகள் இதுவரை ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன?

அண்மையில் யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்ற மண்டபத்தில் அவ்வாறு காணாமல் ஆக்கப் பட்டவர்கள் தொடர்பான ஒர் ஆவணம் வெளியிடப்பட்டது. “ஏழுநா” நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணத்தை இயக்கியவர் ஈழத்து சேகுவாரா என்று அழைக்கப்படுகின்ற ராஜ்குமார்.

முதலில் ராஜ்குமாரை பற்றிக் கூற வேண்டும். ஏனென்றால் அவருடைய கதையும் ஒரு துயரக் கதை. சூழ்ச்சிக் கோட்பாடுகளால் சூழப்பட்ட ஒரு கதை. ராஜ்குமார் புனர் வாழ்வு பெற்ற பின் விடுவிக்கப்பட்டவர்.இந்திய வம்சாவளியினரான வறிய தாய்க்கு பிறந்த இரண்டு பிள்ளைகளில் ஒருவர். மூத்த சகோதரர் ஏற்கனவே இயக்கத்தில் இருந்துபோர்க் களத்தில் இறந்தவர்.. தாயும் சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் காரணமாக, போதிய சிகிச்சை இன்றி, அதற்கு வேண்டிய வளமின்றி இறந்து போனார்.

புனர் வாழ்வு பெற்ற பின் ராஜ்குமார் வவுனியா மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோடு வேலை செய்தவர். தவிர வெவ்வேறு ஊடகங்களிலும் வேலை செய்தவர்.எனக்கு ஆண்டு சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் 2015க்கு முன்னர் என்று நினைக்கிறேன். வவுனியாவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டத்தில்,குமார் பொன்னம்பலம் நினைவுப் பேருரை ஆற்றுவதற்காகப் போயிருந்தேன். நிகழ்வு முடிந்த பின் ராஜ்குமார் என்னை சந்தித்தார்.2009க்குப் பின் அவர் என்னை முதன்முதலாக கண்டது அப்பொழுதுதான்.என்னிடம் எனது தொலைபேசி இலக்கம்,மின்னஞ்சல் போன்றவற்றை கேட்டார். அவருக்கு நான் அவற்றை வழங்கிக் கொண்டிருந்த பொழுது,சிறிது தொலைவில் நின்ற ஒரு சிவில் சமூகச் செயற்பாட்டாளர் என்னை பார்த்து அவருக்கு அதை கொடுக்காதே என்று சைகை காட்டினார். அதேபோல ஒரு கட்சிப் பிரமுகரும் அவர் கேட்பதைக்கொடுக்க வேண்டாம் என்று எனக்குச் சைகை காட்டினார். ஆனால் நான் கொடுத்தேன்.

அவர் போனபின் அந்த இருவரிடமும் கேட்டேன், ஏன் கொடுக்கக் கூடாது ?என்று. அவர்கள் சொன்னார்கள், “அவர் இப்பொழுது பச்சையின் ஆள். புனர் வாழ்வின் பின் அவர்களுடைய ஆளாக வேலை செய்கிறார்” என்று. நான் சொன்னேன் “இருக்கலாம்.புனர் வாழ்வு பெற்றவர்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கு புலனாய்வுப்பிரிவு அவர்களோடு தொடர்புகளைப் பேணும்.அதைவிட முக்கியமாக அவர்களுக்கு வேறு ஒரு இலக்கும் உண்டு. என்னவென்றால் புனர் வாழ்வு பெற்றவர்கள் புலனாய்வுத் துறையோடு தொடர்புடையவர்கள் என்று சமூகத்தை நம்ப வைத்தால் சமூகம் அவர்களை நெருங்கி வராது. அவர்களை சந்தேகிக்கும். அவர்களைக் கண்டு பயப்படும்; வெறுக்கும், அவர்களோடு ஒட்டாது. அவர்களை தூர விலக்கி வைத்திருக்கும். இவ்வாறு ஒரு காலம் தமக்காக போராடப் போய் கல்வியை, இளமைச் சுகங்களை ,கை கால்களை, கண்களை இழந்தவர்களை,எந்த சமூகத்துக்காக அவர்கள் போராடப் போனார்களோ அந்த சமூகமே சந்தேகிப்பது அல்லது அந்த சமூகமே அவமதிப்பது என்பது அரசாங்கத்துக்கு வெற்றி.எனவே தன் சொந்த மக்களாலேயே அவர்கள் அவமதிக்கப்பட வேண்டும், நிராகரிக்கப்பட வேண்டும் என்று அவர்களை தோற்கடித்தவர்கள் எதிர்பார்ப்பார்கள்.அந்த எதிர்பார்ப்பை நீங்கள் நிறைவேற்றப் போகிறீர்களா? நாங்கள் அவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. விழிப்பாக இருக்க வேண்டும். ஆனால் அவர்களை அரவணைக்க வேண்டும். என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு என்று சொன்னேன்.

இறக்கும்வரை ராஜ்குமார் சந்தேகிக்கப்பட்டார். அவர் முதலில் வேலை செய்த ஒர் ஊடகத்தின் ஆசிரியர் என்னிடம் கேட்டார்,”அவர் யார்? ஒரு புதிராகவே தெரிகிறார்.அவரைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. நம்பவும் முடியாமல் இருக்கிறது”. என்று.

ஆம்.ஈழம் சேகுவாரா கடைசி வரை சந்தேகிக்கப்படும் ஒருவராகவே இறந்தார். ஆனால் அவர் தயாரித்து இன்று தமிழர் தாயகம் எங்கும் திரையிடப்படுகின்ற அந்தக் காணொளி சந்தேகங்களுக்கு அப்பால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைக் கேட்பது.

அதுபோல பல காணொளிகள் வரவேண்டும். இக்கட்டுரையின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்டதுபோல அந்த இரண்டு முதியவர்களைப்போல ஆயிரம் முதியவர்கள் எல்லாக் கிராமங்களிலும் இருப்பார்கள். அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுடைய கதைகளை வெளியே கொண்டுவர வேண்டும். அது ஒருவிதத்தில் கலையாகவும் இருக்கும்;அரசியலாகவும் இருக்கும்; இன்னொரு விதத்தில் யுத்த சேதங்களைக் கணக்கெடுப்பதாகவும் இருக்கும்.

இதுதொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சிகளோடு பல ஆண்டுகளுக்கு முன் நான் கதைத்திருக்கிறேன். “இதுபோன்ற விவரங்களை அதாவது யுத்தத்தின் சேதங்களைக் கணக்கெடுக்கும் அல்லது புள்ளி விபரங்களைத் திரட்டும் நடவடிக்கைகளை ஒரு அரசியல் செயற்பாடாக, ஒரு போராட்ட வடிவமாக முன்னெடுக்கலாம். கிராமங்கள் தோறும் நடமாடும் அலுவலகங்களை நிறுவி அல்லது கட்சிக் கிளைகளைப் பரப்பி, அங்கெல்லாம் கிராம மட்டத்தில் தகவல்களைத் திரட்டலாம். இது ஒருபுறம் தகவல் திரட்டுவதாகவும் அமையும். இன்னொருபுறம் கட்சியைப் பலப்படுத்துவதாகவும் அமையும்” என்று தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் கூறியிருக்கிறேன்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் தலைவர் சொன்னார்,அதற்கு ஓர் அரசியல் சூழல் வேண்டும் என்று.உண்மை. அதற்குரிய அரசியல் சூழல் இல்லை என்றால் அவ்வாறு திரட்டுபவர்களுக்குப் பாதுகாப்புப் பிரச்சினைகள் வரலாம்.எனவே அதில் உள்ள ஆபத்துக்களை எதிர்கொள்வதற்கு அந்தக் கட்சி அல்லது அமைப்பு தயாராக இருக்க வேண்டும். இதை நான் கேட்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்.அப்போது இருந்ததை விடவும் இப்பொழுது அரசியல் சூழல் தேறியிருக்கிறது. இனிமேல் மக்கள் துணிந்து முன்வந்து சாட்சிக் கூறக்கூடும். சான்றுகளைத் தரக்கூடும்.

தவிர ஐநாவிலும் அவ்வாறான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஓர் அலுவலகம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.எனவே சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பது என்பது கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஓர் அனைத்துலக நடைமுறையாக உள்ளது.எனவே இந்த விடயத்தில் இனி கட்சிகளும் செயற்பாட்டு அமைப்புகளும் துணிந்து இறங்கலாமா?

நிதிக்கான போராட்டத்தின் முதல் படி அதுதான். நீதியைப் பெறுவதற்குத் தேவையான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பது.அதை ஒரு செயற்பாட்டு ஒழுக்கமாகக் கட்சிகள் செய்யலாம். அதன்மூலம் கட்சிகளுக்கும் மக்களுக்கும் இடையில் உயிர்த் தொடர்பு உண்டாகும். அதைவிட முக்கியமாக கட்சிகள் மக்களின் துயரங்களுக்கு மேலும் நெருக்கமாக வரும்.இது கட்சிகளுக்கும் பலம். மக்களுக்கும் பலம்.

அதிலும் குறிப்பாக இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதுபோல அமைப்புகளுக்குள் வராத, இப்பொழுதும் நம்பிக்கைகளோடு காத்திருக்கிற, முதிய பெற்றோருக்கு அது ஆறுதலாக அமையும்.அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் எதிர்காலத்தைக் குறித்த அவநம்பிக்கையோடு இறந்து போய்விட்டார்கள். இருப்பவர்களும் அவ்வாறு அவநம்பிக்கையோடு இறக்காமல் இருப்பதற்கு கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் குறிப்பாக காணொளி ஊடகங்களும் அவர்களை நோக்கிச் செல்ல வேண்டும்.

செம்மணியில் அணையா விளக்கு போராட்டக் களத்தில், சேகரித்திருக்க வேண்டிய காணொளிகள் அவைதான்.தேசத்தை நிர்மாணிக்கும் பொறுப்பை உணர்ந்த எல்லா ஊடகக்காரர்களும் யு டியூப்பர்களும் கிராமங்களை நோக்கி வரவேண்டும். இந்த முதிய பெற்றோரை நேர்காண வேண்டும்.அந்த கதைகளுக்கு அதிகம் வியூவர்ஸ் கிடைக்காமல் போகலாம். அந்த கதைகளை சர்ச்சைக்குரிய காணொளி உள்ளடக்கங்களாக மாற்றுவது கடினமாக இருக்கலாம். ஆனால் இந்த இடத்தில் காணொளி ஊடகங்களும் யூடியூபர்களும் ஒன்றைத் தீர்மானிக்க வேண்டும். தேசத்தைக் கட்டி எழுப்புவதா? அல்லது சர்ச்சைக்குரிய உள்ளடக்கத்தை வலிந்து தேடுவதா? வியூவர்ஸைக் கூட்டுவதற்காக சூடான செய்தியைக் கொடுப்பதா? அல்லது தேசத்துக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதா?

கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞரான ஹெர்பர்ட் மார்க்யூஸ் கூறுவார் “புள்ளி விவரங்கள் குருதி சிந்துவதில்லை” என்று. ஆம். கைது செய்யப்பட்ட பின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? சரணடைந்த பின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? யார் பிடித்தது என்று தெரியாமலே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? போன்ற எல்லா விபரங்களையும் புள்ளி விபரங்களாகவன்றி ரத்தமும் சதையுமாக,கதைகளாக வெளியே கொண்டுவர வேண்டும். அந்தக் கதைகள்தான் இரத்தம் சிந்தும்.அந்தக் கதைகள்தான் தேசத்தைத் திரட்டும்.அந்தக் கதைகள்தான் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும்.நீதிக்காகப் போராடும் தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது அவ்வாறான கதைகளை வெளியே கொண்டு வரும் ஊடகங்கள்தான்.சர்ச்சைகளை உருப் பெருக்கி பார்வையாளர்களின் தொகையைக் கூட்டும் ஊடகங்கள் அல்ல. பிரபலமானவரோடு மோதி அல்லது பிரபலமானவரின் வாயைக் கிண்டி சர்ச்சையை உருவாக்கும் ஊடகங்கள் அல்ல.தேசத்தைக் கட்டியெழுப்பும் ஊடகங்கள்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க உழைக்கும் ஊடகங்கள்.

https://athavannews.com/2025/1438208

ஏகேடிக்கு செம்மணி குறித்து ஒரு வார்த்தை

2 months 1 week ago

ஏகேடிக்கு செம்மணி குறித்து ஒரு வார்த்தை; செவிமடுக்கவும் செயற்படவும் துணிச்சல் உள்ள ஒருவருக்காக நிலத்திற்கடியில் குரல்கள் காத்திருக்கின்றன

Published By: RAJEEBAN

04 JUL, 2025 | 03:09 PM

image

யாழ்ப்பாணம் செம்மணியில் பள்ளிக்கு பெற்றோர்களுடன் சென்ற சிறுவர் சிறுமிகள் கொலைசெய்து புதைக்கப்பட்ட மனித புதைகுழி(அதிக அளவில் புதைக்கப்பட்ட சடலங்கள்) சம்பவம் வெளிவந்த சில நாட்களுக்குப் பிறகு கெஸ்பேவவில் உள்ள அவரது வீட்டில் காமினி லொக்குகே இயற்கை மரணமடைந்தார். 

குற்றவாளிகளை தண்டிக்கும் சட்ட அமைப்பை அமல்படுத்த முடியாமல் போன நாம் வாழும் இந்த சிங்கள பௌத்த சமூகம் காமினி லொக்குகே  தலைமையிலான செம்மணி மனிதபுதைகுழிக்கு முன்பும் பிறகும் வடக்கிலும் தெற்கிலும் காணப்படும் மனித புதைகுழிகளிற்கு காரணமானவர்களிற்கு விதி தண்டனை வழங்கும் என எதிர்பார்த்து காத்திருந்தது. இப்போது லொக்குகே தலைமையிலான அந்தக் குழுவினர் நரகத்திற்கு செல்லும் வரைக்கும் காத்திருக்கும்.

இலங்கையின் மிகவும் துயரமான காலத்தின் முன்னோடிகளும் அதன் காரணமாக உருவான சித்திரவதை கலாச்சாரத்தின் முன்னோடிகளுமான காமினிலொக்குகேகள் இலங்கையின் வரலாற்றிற்கு வேதனையான நினைவுகளை இன்னமும் கொண்டுவருகின்றனர்.

லொக்குகேயின் மரணமும் மனித புதைகுழிகள் மீண்டும் தோண்டப்பட்டதும்  இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் பயன்பாடு  குறித்த  ஒரு முரண்பாடானா உணர்வை எழுப்புகின்றன.

செம்மணி மனித புதைகுழியில் பெரியவர்களின் எலும்புக்கூடுகளுடன் காணப்பட்ட குழந்தையின் மனித எச்சங்கள் நாங்கள் நம்பியதை விட செம்மணியிடம் எங்களிற்கு தெரிவிப்பதற்கு அதிக கதைகள் உள்ளன என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

அவை இழந்த உயிர்களின், சிதைக்கப்பட்ட குடும்பங்களின், இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ள யுத்த குற்றங்களின் கதைகள்.

அவசர அவசரமாக தனிப்பட்ட ரீதியில் அடையாளம் காணப்படமுடியாதபடி பெருமளவு உடல்கள் புதைக்கப்பட்டுள்ள பகுதியே பாரிய மனித புதைகுழி எனப்படுகின்றது. ஆனால் இலங்கையின் சூழமைவில் இதன் அர்த்தம் இன்னமும் ஆழமானது. இது  இலங்கையில் திட்டமிட்ட வன்முறைகள் காணப்பட்டன, அரசதலையீடு காணப்பட்டது, நீதியின் தோல்வி காணப்பட்டது என்பதை இது வெளிப்படுத்துகின்றது.

இது சிறுவர்களின், கொல்லப்பட்டவர்களின் மயானம் மாத்திரம் அல்ல, உண்மை, பொறுப்புக்கூறல், அரசின் மனச்சாட்சியின் மயானமும் ஆகும்.

செம்மணியில் உள்ள உடல்கள் 1990களின் நடுப்பகுதியில் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தை விடுதலைப்புலிகளிடமிருந்து மீளக்கைப்பற்றிய வேளை கொல்லப்பட்ட பொதுமக்களின் புதைகுழிகள் என கருதப்படுகின்றது. இந்த தனிநபர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்து, படுகொலை செய்யப்பட்டார்கள் என குற்றம்சாட்டப்படுகின்றது. சிலர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் - ஏனையவர்களிற்கு இது கூட்டு தண்டனையாக வழங்கப்பட்டது.

செம்மணி கதைகள் தடயவியல் பரிசோதனை மூலமோ அல்லது அரச அமைப்பின் மூலமோ வெளிவரவில்லை. மாறாக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவவீரர் ஒருவர் மூலமே வெளிவந்தது. 1996 இல் கிருஷாந்தி குமாரசுவாமி என்ற தமிழ் பள்ளிமாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தி படுகொலை செய்ததாக லான்ஸ் கோப்ரல் சோமரட்ண ராஜபக்ச ஏற்றுக்கொண்டார். கொல்லப்பட்ட 100க்கும் மேற்பட்ட பொதுமக்களின் உடல்கள் செம்மணியில் புதைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தின் சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் வழமையான  விடயமாக காணப்பட்டன.

இந்த ஒப்புதல் வாக்குமூலம் பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டியது மேலும் அரசாங்கம் அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1999 ஆம் ஆண்டில் தடயவியல் நிபுணர்கள் சர்வதேச பார்வையாளர்கள் மற்றும் இந்த எழுத்தாளர் ஆகியோரால் மேற்பார்வையிடப்பட்ட ஒரு அகழ்வாராய்ச்சியில் 15 எலும்புக்கூடுகளைக் கண்டுபிடித்தனர். 

சிலர் பின்னர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காணாமல் போனவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். ஆனால் பொறுப்பான எந்த மூத்த அதிகாரியும் மீது வழக்குத் தொடரப்படவில்லை.

போருக்குப் பிந்தைய இலங்கையில் உள்ள பல அதிர்ச்சிகரமான இடங்களைப் போலவே யுத்தவீரர்கள் யுத்த பிரச்சார தலைப்புச்செய்திகளிற்கு மத்தியில் ஏனைய புதைகுழிகளை போல செம்மணியும் மௌனத்திற்குள் புதையுண்டது. 

இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு செம்மணியின் கல்லறைகள் மீண்டும் பேசத் தொடங்கியுள்ளன. 

குழந்தைகள் கொல்லப்பட்ட கடந்த காலத்தின் நினைவுகள் இலங்கை சமூகத்திற்கு மீண்டும் நினைவூட்டப்பட்டாலும், காசாவில் பாலஸ்தீன குழந்தைகள் இறக்கும் போது ஏற்பட்ட அதிர்ச்சியையோ அல்லது சமூக பிரதிபலிப்பையோ  ஏற்படுத்தவில்லையா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இருப்பினும் இலங்கையின் தொடர்ச்சியான நல்லிணக்க வாக்குறுதிகளால் ஏற்படுத்தப்பட்ட நீண்ட நிழல்களுக்கு மேலாக இது பெரிதாகத் தெரிகிறது மற்றும் எரியும் கேள்விகளை எழுப்புகிறது: 

நம் காலடியில் இன்னும் எத்தனை கல்லறைகள் உள்ளன? பாதிக்கப்பட்டவர்கள் யார் குற்றவாளிகள் யார்? உண்மை என்றென்றும் புதைக்கப்படுகிறதா?

செம்மணி கல்லறைகளின் கதை வெறும் தொல்பொருள் அல்லது நடவடிக்கை மாத்திரமல்ல.

இலங்கையின் வன்முறை மிகுந்த  கடந்த காலத்தை எதிர்கொள்ளும் தார்மீக மற்றும் அரசியல் விருப்பத்திற்கான ஒரு சோதனை இது.

குழந்தையின் எலும்புக்கூடு வெறும் ஆதாரம் அல்ல - அது தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட ஆழத்திலிருந்து நினைவுகூரவும் நினைவில் கொள்ளவும் செயல்படவும் ஒரு அழுகை.

 இலங்கையின் காணாமல்போதல் வரலாறு 

செம்மணிக்கு நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கியது 1970களில் அரச ஆதரவுடன் நடந்த கடத்தல்கள் மற்றும் கொலைகளின் முதல் அலை அப்போது நிகழ்ந்தது. 1971 ஜேவிபி கிளர்ச்சி. பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்திற்கு எதிரான தோல்வியுற்ற மார்க்சிய எழுச்சி தொடர்பாக கைது செய்யப்பட்ட பின்னர் ஆயிரக்கணக்கான ஏழை மற்றும் கிராமப்புற சிங்கள இளைஞர்கள் காணாமல் போனார்கள். பலர் மீண்டும் ஒருபோதும் காணப்படவில்லை. அவர்களின் உடல்கள் ஆறுகளில் வீசப்பட்டன எரிக்கப்பட்டன அல்லது குறிக்கப்படாத காடுகளில் அழுக விடப்பட்டன. பொது பதிவுகள் எதுவும் இல்லை. நினைவுச் சின்னங்கள் இல்லை. நீதி இல்லை.

இந்தக் காலகட்டத்தில் - 1988-1990 ஜே.வி.பி கிளர்ச்சியின் போது - இதே பாணி மீண்டும் தோன்றியது. இடதுசாரி நடவடிக்கைகள் என்று குற்றம் சாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். பள்ளிக் குழந்தைகள் புதைக்கப்பட்ட சூரியகந்தபோன்ற கூட்டுப் புதைகுழிகள் தெற்கில் ஆட்சி செய்த சட்டவிரோத பயங்கரவாதத்தின் அளவை வெளிப்படுத்தின.

ஆனால் தெற்கு எரிந்து கொண்டிருந்த அதே வேளையில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு ஏற்கனவே அதில் மூழ்கியிருந்தன. 

இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா மற்றும் மன்னார் போன்ற பகுதிகள் கட்டாயமாக காணாமல் போனவர்களின் மையங்களாக இருந்தன. விடுதலைப் புலிகளுக்கு அனுதாபம் காட்டியதாக சந்தேகிக்கப்படும் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் ஊரடங்கு உத்தரவு இராணுவத் தாக்குதல்கள் அல்லது சோதனைச் சாவடிகளின் போது கடத்தப்பட்டனர் - பலர் திரும்பி வரவே இல்லை. சிலர் செம்மணி போன்ற வயல்களில் புதைக்கப்பட்டனர் மற்றவர்கள் நீர்நிலைகளில் வீசப்பட்டனர் அல்லது அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிக்கப்பட்டனர்.

விடுதலைப் புலிகளும் காணாமல் போதல்களையும் கடத்தல்களையும் மேற்கொண்டனர். ஆனால் அரசால் மேற்கொள்ளப்பட்ட காணாமல் போதல்களின் அளவு மற்றும் தண்டனையின்மை ஆகியவை பயம் மற்றும் வன்முறை கலாச்சாரத்தை இயல்பாக்கின. 

மே 2009 இல் துப்பாக்கிகள் அமைதியாகிவிட்ட பிறகும் காணாமல் போதல் நிகழ்வுகள் முடிவுக்கு வரவில்லை. பின்னர் அது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கமாக மாறியது "வெள்ளை வேன்" கடத்தல் சம்பவங்கள் அதிகரித்தன பெரும்பாலும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் பத்திரிகையாளர்கள் அல்லது முன்னாள் தமிழ் கிளர்ச்சியாளர்களை குறிவைத்தன. இவை அமைதி காலத்தில் பெரும்பாலும் தலைநகர் அல்லது அதன் புறநகர்ப் பகுதிகளில் சில நேரங்களில் பட்டப்பகலில் நடத்தப்பட்டன. விசாரணைகள் குறித்த வாக்குறுதிகள் இருந்தபோதிலும் நாம் இன்னும் பொதுமக்களின் நம்பிக்கையை வளர்க்கத் தவறிவிட்டோம்..

ஒரு காலத்தில் தனிநபர் காணாமல் போதல் சம்பவங்கள் அதிகமாக இருந்த நாடாக இருந்த இலங்கையில் 65000 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வ மதிப்பீடு உள்ளது. சூரியகந்த முதல் செம்மணி வரை மன்னார் முதல்  கொக்குத்தொடுவாய் கூட்டுப் புதைகுழிகள் அரச வன்முறைப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

ஆனால் துயரம்  என்னவென்றால் இந்தப் புதைகுழிகள் இருப்பது மட்டுமல்ல - அவை புறக்கணிக்கப்படுகின்றன. கட்டுப்படுத்தப்படுகின்றன அல்லது மறக்கப்படுகின்றன. அகழ்வாராய்ச்சிகள் தாமதமாகின்றன. விசாரணைகள் முடிவில்லாதவை. பொதுமக்களின் நினைவு தேர்ந்தெடுக்கப்பட்டவை. இலங்கையின் கூட்டுப் புதைகுழிகள் ஒரு இருண்ட கடந்த காலத்தின் சான்றுகள் மட்டுமல்ல - அவை அதற்கான ஆதாரங்களும் கூட.

இலங்கையின் காணாமல் போனவர்களின் கதை ஒரு தமிழ் கதையோ அல்லது சிங்களக் கதையோ அல்ல - இது இலங்கையில் நமது கதை. சட்டத்திற்கு மேலே அதிகாரம் செயல்பட அனுமதித்த ஒரு அரசியல் கலாச்சாரத்தின் கதை. இந்த காணாமல் போனவர்கள் பற்றிய முழு உண்மை அறியப்படும் வரை ஒவ்வொரு கல்லறையும் மனிதபுதைகுழியும் ஏற்றுக்கொள்ளப்படும் வரை ஒவ்வொரு பாதிக்கப்பட்டவரின் பெயரும் குறிப்பிடப்படும் வரை ஒவ்வொரு குடும்பமும் செவிமடுக்கப்படும் வரை இலங்கை இறந்தவர்கள் உயிர்த்தெழும் நாடாகவே இருக்கும்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு அசாதாரண திருப்பமாக காணாமல் போன தங்கள் தோழர்களையோ அல்லது கொலைக் குழுவின் பிடியிலிருந்து மயிரிழையில் தப்பியவர்களையோ நினைத்து துக்கம் அனுசரித்த பலர் இப்போது நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் அமர்ந்துள்ளனர். தலைமுறை தலைமுறையாக அரச பயங்கரவாதத்தை நேரடியாகக் கண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் முக்கிய நபர்களுடன் தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணி உருவாக்கப்பட்டது. அவர்கள் நாட்டின் வன்முறையை தொலைதூரத்தில் இருந்து பார்ப்பவர்கள் அல்ல; அவர்கள் அதிலிருந்து  உயிர் பிழைத்தவர்கள்.

இந்த தனித்துவமான நிலைப்பாடு முன்னோடியில்லாத தார்மீக அதிகாரத்தையும் - உயர்ந்த எதிர்பார்ப்புகளையும் கொண்டு வந்துள்ளது. பலவந்தமாக காணாமலாக்கப்பட்டு புதைகுழிகளில் புதைக்கப்பட்டதன் மூலம் மௌனமாக்கப்பட்டவர்களிற்கு அரச ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களின் அரசாங்கத்தினால் நீதியை வழங்க முடியுமா?

தற்போதைய அரசாங்கத் தலைவர்கள் பலர் குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணி  யைச் சேர்ந்தவர்கள் 1988-1990 பயங்கரவாதத்தின் வடுக்களை தாங்கிக் கொண்டனர். அப்போது தெற்கு கிளர்ச்சியை அரசு இரக்கமற்ற திறமையுடன் நசுக்கியது. மாணவர்கள் ஆர்வலர்கள் அப்பாவிகள் என பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனார்கள் பெரும்பாலும் சித்திரவதை செய்யப்பட்டு ரகசிய முகாம்களில் கொல்லப்பட்டனர். சில டயர்களில் எரிக்கப்பட்டன மற்றவை அடையாளம் தெரியாத வயல்களில் புதைக்கப்பட்டனர்.

இந்த அனுபவங்கள் இதுபோன்ற அட்டூழியங்களை மீண்டும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று சபதம் செய்த தலைவர்களின் தலைமுறையை வடிவமைத்துள்ளன. 2024 இல் அவர்கள் அதிகாரத்திற்கு வந்தது ஒரு அரசியல் வெற்றியை விட அதிகம்; பலருக்கு இது வரலாற்றின் கல்லறையிலிருந்து ஒரு குறியீட்டு திரும்புதலாகும். அவர்கள் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் சமூக நீதியை மட்டுமல்ல பொறுப்புக்கூறல் உண்மை மற்றும் நினைவாற்றலையும் உறுதியளித்தனர்.

இந்த தனித்துவமான நிலைப்பாடு முன்னோடியில்லாத வகையில் தார்மீக அதிகாரத்தையும் - உயர்ந்த எதிர்பார்ப்புகளையும் கொண்டு வந்துள்ளது. அரசு அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட முன்னாள் அரசாங்கத்தால் கட்டாயமாக காணாமல் போனவர்களால் அமைதியாகி வெகுஜன புதைகுழிகளில் புதைக்கப்பட்டவர்களுக்கு இறுதியாக நீதி வழங்க முடியுமா?

அரசு இதுவரை என்ன செய்துள்ளது?

புதிய விசாரணைகள்

செம்மணியில் புதிதாக மனித உடற்கூறுகள் குறிப்பாக ஒரு குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த விசாரணையை அரசு மீண்டும் செயல்படுத்தியதைக் குறிக்கிறது.

சுயாதீன கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையுடன் அரசாங்கம் செம்மணி மற்றும் மனித புதைகுழிகள் தொடர்பான கோப்புகளை மீள ஆராய்கின்றது. தடயவியல் பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட முடிவுகளை காணாமல்போனவர்கள் குறித்த விபரங்களுடன் பொருத்தி பார்க்க முயல்கின்றனர். இது சிறியதாக இருந்தாலும் உண்மையை மீட்டெடுக்க எடுத்த முக்கியமான ஒரு முன்னேற்றமாகும்.

காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தை மீண்டும் செயல்படுத்துதல்

முன்னதாக செயலற்றிருந்த காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் தற்போது புதிய பணிக்கட்டளையுடன் அதிக ஊழியர்கள் மற்றும் நிதியுடன் மீளுயர்த்தப்பட்டுள்ளது. இது காணாமல் போனவர்களை தேடுவதோடு மட்டுமல்லாமல் குடும்பங்களின் வேதனையை ஒப்புக்கொள்வது மைய தரவுத்தொகுப்பை பராமரிப்பது எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் பரிந்துரை செய்வது ஆகிய பொறுப்புகளையும் மேற்கொள்கிறது.

கடந்த குற்றங்களை பொது மக்களுக்கு ஒப்புக்கொள்வது

முந்தைய ஆட்சி அமைப்புளைவிட தற்போதைய தலைமைத்துவம் தமிழர் மற்றும் சிங்களர் காணாமற்போனவர்களுக்கு அரசு பொறுப்புள்ளதாக பொது வெளியில் ஒப்புக்கொள்கிறது. 1971 - 1989 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் நடந்த குற்றங்களைப் பற்றிய ஜனாதிபதி உரைகள் மற்றும் பாராளுமன்ற விவாதங்கள் பல தசாப்தங்களுக்கு பின்னர் தமிழ் மற்றும் சிங்களர் ஆகிய இருவரையும் ஒரே தேசிய கதைச்சொல்லலில் இணைத்துப் பேசுகின்றன.

தென் ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள மாதிரிகளின் அடிப்படையில் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கு தேசிய ஆணையம் ஒன்றை உருவாக்க அரசு ஆதரவுடனும் குடிமை சமூகத்தின் கலந்துரையாடல்களுடனும் ஆராயப்பட்டு வருகிறது. இந்த முயற்சிகள் சாட்சியங்களை திரட்டுவது இழப்பீடுகள் பரிந்துரை செய்வது மற்றும் ஒரு தேசிய நினைவகத்தை உருவாக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஆனால் இவ்வளவு முன்னேற்றங்களுடன் கூட நியாயம் இன்னும் தொலைவில்தான்.

காணாமல்போதல் அல்லது படுகொலைகளிற்கு இராணுவத்தின் உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகள் காரணமாகயிருந்தாலும் கூட அவர்களிற்கு எதிரான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை.

மக்களின் பார்வையில் போர் காலத்திலிருந்து வலிமைபெற்ற இராணுவ அமைப்பு இன்னும் குடியரசுச் சட்டத்தைக் காட்டிலும் மேலாக உள்ளது. அதனால் அதன் நடத்தையைக் குறித்த விசாரணைகள் மறைமுக எதிர்ப்பால் அடக்கப்படுகின்றன.

அரசாங்கம் முற்போக்கு சக்திகள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் ஆதரவுடனேயே ஆட்சிக்குவந்துள்ளது..இருந்தபோதிலும் சிங்கள தேசியவாத உணர்வுகள் போர் குற்ற விசாரணைகளை இராணுவத்தின்மீது தாக்குதலாகவே பார்க்கின்றன. இதனால் விசாரணைகள் மெதுவாக எச்சரிக்கையுடன் பெரும்பாலும் விசாரணைகளை முன்னெடுக்கின்றோம் என காண்பிப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்றன. சின்னமாகவே நடைபெறுகின்றன. 

இதுவே உண்மையான துயரம். அதிகாரத்தில் இருப்பவர்கள் தாங்கள் விரும்புவது போல் செயல்பட முடியாத நிலை உள்ளது. பழைய அமைப்புகள் நம்பிக்கையற்ற கூட்டணிகள் மற்றும் அ தண்டனை தவிர்க்கும் கலாசாரம் அவர்களை கட்டுப்படுத்துகிறது.

அரசியல் அதிகாரம் ஒரு புதிய மாற்றத்திற்கான ஆணையில்லை மாறாக பழைய வேதனைகளை மேலும் கடந்து செல்லும் ஊர்தியாகவே மாறுகிறது.

அப்போதுதான் கேள்வி எழுகிறது:

தார்மீக அதிகாரம் சட்ட நடவடிக்கையாக மாறுமா? ஒரு காலத்தில் தங்கள் நண்பர்களை ஆழமற்ற கல்லறைகளில் புதைத்தவர்கள் இப்போது அரசின் குற்றங்களை வெளிப்படுத்த நிர்ப்பந்திக்கப்படுவார்களா?

அதிகார மண்டபங்களில் முன்னாள் பாதிக்கப்பட்டோர் இருப்பது ஒரு வரலாற்று தருணம்.

ஆனால் அவர்கள் இந்த தருணத்தை உண்மை நீதிமன்றம் நல்லிணக்கத்தை நிறுவ பயன்படுத்தாவிட்டால் அந்த வாய்ப்பு மீண்டும்—பல வருடங்கள் அல்லது தசாப்தங்களுக்கு—மூடப்பட்டுவிடும். செம்மணி  மன்னார் ஆகிய இடங்களின் மண் என்றென்றும் அமைதியாக இருக்காது. பூமியின் அடியில் இருக்கும் குரல்கள் காத்திருக்கின்றன… கேட்கவும் செயல்படவும் துணியும் ஒருவருக்காக.

https://www.virakesari.lk/article/219178

செம்மணியும் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையும் : பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுக்கிறார் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் அரச வழக்குரைஞர் பிரசாந்தி மகிந்தரட்ண

2 months 1 week ago

Published By: RAJEEBAN

03 JUL, 2025 | 04:48 PM

image

Kamanthi Wickramasinghe    

Daily mirror

செம்மணிப் புதைகுழியில் நடைபெற்று வரும் உடல்களை தோண்டும் நடவடிக்கைகள் போரின் போது நடந்த கொடூரமான அட்டூழியங்களை வெளிப்படுத்துகின்றன. ஆனால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் அறிக்கை மட்டும் இல்லாவிட்டால் இந்தப் புதைகுழி இலங்கை மண்ணில் புதைக்கப்பட்ட ஒரு ரகசியமாக இருந்திருக்கும். 

கிருஷாந்தி குமாரசாமி வழக்கில் முக்கிய குற்றவாளி 1998 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது செம்மணிப் புதைகுழியை வெளிப்படுத்தினார். சமீபத்தில் இந்த குற்றவாளி மற்றும் பலர் தங்கள் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. 

அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாவிட்டால் அல்லது அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றினால் அவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்.

இந்தப் பின்னணியில் நடந்து வரும் உள்நாட்டுப் போரின் போது தொடரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கிருஷாந்தி குமாரசாமி வழக்கின் அரசு வழக்கறிஞர் பிரசாந்தி மஹிந்தரத்னவுடன் டெய்லி மிரர் ஒரு பிரத்யோக நேர்காணலை மேற்கொண்டது.

குற்றத்தின் கொடூரத்தையும் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றவாளிகளை தண்டிக்க புலனாய்வாளர்கள் சாட்சியங்களை கண்டுபிடித்தனர் என்பதையும் இந்த நேர்காணலின் போது அவர் எடுத்துரைத்தார். பாலியல் வன்கொடுமையை போர் ஆயுதமாகப் பயன்படுத்திய சம்பவங்களில்  ஒன்றாக இது இருந்ததால் குற்றவாளிகள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்வைப்பதில் வழக்கறிஞர்கள் உறுதியாக இருந்தனர்.

ஆரம்ப அறிக்கைகள் 

செப்டம்பர் 7 1996 அன்று யாழ்ப்பாணம் கைதடியில் நான்கு பேர் காணாமல் போனார்கள். அவர்களில் ஒருவர் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமி (18) ஆவார். அவர் அன்றுதான் தான் உயர் தர வேதியியல் பரீட்சையை எழுதியிருந்தார். அவர் ஒரு சிறந்த மாணவி தனது சாதாரண தரத்தில் ஏழு சிறப்புத் தேர்வுகளைப் பெற்றிருந்தார். கிருஷாந்தி தனது தந்தையைஇழந்தவர்.  மேலும் அவர் தனது தாயார் ராசம்மா (59) மற்றும் யாழ்ப்பாணம்  சென்ஜோன்ஸ் கல்லூரியில் படிக்கும் சகோதரர் பிரணவன் (16) ஆகியோருடன் வசித்து வந்தார். அவருக்கு கொழும்பில் உயர்கல்வி பயின்று வந்த பிரசாந்தி என்ற சகோதரியும் இருந்தார். 

250214chemmani.jpg

கிருஷாந்தியும் பிரணவனும் இருவரும் திறமையான மாணவர்கள். அவர்களின் தாயார் கைதடி முத்துகுமரசுவாமி மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் ஆவார். மேலும் அவர் இறக்கும் போது கைதடி மகா வித்தியாலயத்தில் கற்பித்துக் கொண்டிருந்தார். 

அவரது தாயார் பள்ளியிலிருந்து கிருஷாந்தி வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தாலும் மதியம் வரை கிருஷாந்தி வீடு திரும்பாததால் அவர் சங்கடப்பட்டார். 

அதைத் தொடர்ந்து குமாரசாமி குடும்பத்தின் பக்கத்து வீட்டுக்காரரும் நண்பருமான சிதம்பரம் கிருபாமூர்த்தி,  ராசம்மா, மற்றும் பிரணவன் ஆகியோர் ஒரே நாளில் காணாமல் போனார்கள்.

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்தது. 

மோதலின் போது ஆயிரக்கணக்கான கிருஷாந்திகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் கொழும்பிற்கு கதையை கொண்டு வரக்கூடிய ஒருவருடன் தொடர்பு இல்லாததால் அவர்களால் அதைப் பற்றி வெளியே சொல்ல முடியவில்லை. 

ஆரம்பத்தில் சிபிகேயுடன் (சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க)  இந்த விஷயத்தை எழுப்பியவர் ஒரு வழக்கறிஞர். இந்த சம்பவம் பற்றி சிபிகே கேள்விப்பட்டதும் அப்போதைய சட்டமா அதிபர் சரத் சில்வா உடனடியாக வழக்கை விசாரிக்க அறிவுறுத்தப்பட்டார். "இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதியில் அவர்கள் காணாமல் போனதால் சம்பந்தப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்ய சிபிகே விரும்பினார்" என்று டெய்லி மிரருக்கு அளித்த பேட்டியில் பிரசாந்தி மஹிந்தரத்ன கூறினார்.

அந்த நேரத்தில் அவர் 1991 இல்  சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஒரு இளம் வழக்கறிஞராக இருந்தார். "இந்த சம்பவம் 1996 இல் நடந்தது. எனக்கு அழைப்பு வந்து யாழ்ப்பாணம் செல்ல விருப்பமா என்று கேட்டார். அந்த நேரத்தில் வணிக விமானங்கள் எதுவும் இல்லை மேலும் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) அதிகாரிகளும் என்னுடன் இருந்தனர். எனக்கு வழிகாட்டுதல் வழங்குவதற்காக மறைந்த சொலிசிட்டர் ஜெனரல் டி.பி. குமாரசிங்கவையும் சட்டமா அதிபர்  நியமித்தார்" என்று அவர் நினைவு கூர்ந்தார். 

பிரசாந்தி  மஹிந்தரத்ன யாழ்ப்பாணம் 

செம்மணிக்கு சென்றார். அவர் செம்மணி  நீதவான்நீதிமன்றத்திற்குச் சென்று இராணுவ போலீசாருடன் பேசுவதில் ஈடுபட்டிருந்தார். "இப்படித்தான் எல்லாம் தொடங்கியது. நாங்கள் தொடங்கியபோது எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. அந்தப் பகுதி இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதும் காணாமல் போன நான்கு பேர் கைதடியில் வசித்து வந்தனர் என்பதும் செம்மணி சோதனைச் சாவடியில் அவர்கள் காணாமல் போனதாக சில பேச்சுக்கள் இருந்தன என்பதும் மட்டுமே எங்களுக்குத் தெரியும்" என்று பிரசாந்தி மேலும் கூறினார்.

ஆதாரங்களின் பாதையில் 

அடுத்தடுத்த விசாரணைகளில்  கிருஷாந்தி தனது பரீட்சையை முடித்துக்கொண்டு  பிறகு மற்றொரு தோழி சுந்தரம் கௌதமியுடன்  சில நாட்களிற்கு முன்னர்  உயிரிழந்த சக மாணவிக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்றது தெரியவந்தது. “அவர்கள் இருவரும் சைக்கிளில் இருந்தனர் ஒரு கட்டத்தில் அவர்கள் புறப்பட்டுச் சென்றனர் கடைசியாக அவர் கைதடி நோக்கி  சென்றிருந்தார். தனது பள்ளியிலிருந்து கைதடிக்கு வரும்போது செம்மணி பாதுகாப்பு சோதனைச் சாவடியைக் கடக்க வேண்டும். இது அவள் பல ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த பாதை மேலும் சோதனைச் சாவடியில் இருப்பவர்கள் அவளை நன்கு அறிந்திருப்பார்கள்."

"எங்கள் விசாரணையில் அவள் அங்கு நிறுத்தப்பட்டு விசாரணைக்காக சாக்குப்போக்கில் பதுங்கு குழிக்குள் அழைத்துச் செல்லப்பட்டு வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரியவந்தது. யாராவது அவளை அங்கு விசாரிக்கப்படுவதைக் கண்டிருக்கலாம். இந்த கட்டத்தில் அவள் வீடு திரும்பாததால் அவள் தாயார் மிகவும் வருத்தமடைந்து அவள் இருக்கும் இடம் பற்றி மக்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார். "

எனவே அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர் கிருபமூர்த்தி வந்து செம்மணி சோதனைச் சாவடியில் விசாரிக்கப்படுவதாகக் கேள்விப்பட்டதாகக் கூறினார். அவர்  கொல்லப்பட்டதால் அவருக்கு அது எப்படித் தெரிந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று பிரசாந்தி கூறினார்.

chemmani.jpg

கிட்டத்தட்ட உடனடியாக ராசம்மா, பிரணவன் மற்றும் கிருபமூர்த்தி ஆகியோர் இரண்டு சைக்கிள்களில் ஏறினர்; ராசம்மா பிரணவனின் சைக்கிளில் ஏறினார். கிருபமூர்த்தி தனது சைக்கிளில் சோதனைச் சாவடிக்குச் சென்று லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ விடம் (இந்த வழக்கில் முதல் குற்றவாளி) கிருஷாந்தி இருக்கும் இடம் குறித்து விசாரித்தார். “கிருஷாந்தி வீட்டிற்கு வரவில்லை என்றும் அவள் கடைசியாக இங்கே காணப்பட்டதாகவும் என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க விரும்புவதாகவும் அவர்கள் அவரிடம் கூறியிருந்தனர். 

சோமரத்ன பலமுறை தங்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்று கூறியிருந்தார் ஆனால் இந்த மக்கள் அந்தப் பெண்ணைப் பற்றி அதிக அக்கறை கொண்டிருந்ததால் தொடர்ந்து கூறினர். இராணுவத்தினர் பீதியடைந்தனர் என்பது தெளிவாகத் தெரிந்தது பின்னர் இந்த மூவரும் கைது செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டனர்” என்று பிரசாந்தி மஹிந்தரத்ன நினைவு கூர்ந்தார்.

ஆனால் அவர்கள் தங்கள் வாழ்க்கையின் கடைசி சில மணிநேரங்களைத்தான் கழிக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. "அன்றிரவு இராணுவத்தினர் ராசம்மா, பிரணவன் மற்றும் கிருபமூர்த்தி ஆகியோரை கழுத்தை நெரித்து கொன்றது மட்டுமல்லாமல் இரவு முழுவதும் கிருஷாந்தியையும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் அவர்கள் அவளை கழுத்தை நெரித்து கொன்றனர் மேலும் நான்கு உடல்களும் செம்மணியில் உள்ள நீர் தேங்கிய பகுதியில் புதைக்கப்பட்டன. நாங்கள் உடல்களை தோண்டி எடுத்தபோது அவை அழுகிய நிலையில் இருந்தன. அவை கயிறுகளால் கழுத்தை நெரிக்கப்பட்டு இருபுறமும் இழுக்கப்பட்டன" என்று பிரசாந்தி மஹிந்தரத்ன மேலும் விளக்கினார்.

அரசு இயந்திரத்தின் ஆதரவு 

இன்றுவரை மஹிந்தரத்னே இராணுவ பொலிஸாரை முழுமையாக பாராட்டுகின்றார். அவர்கள் இல்லாமல் இந்த சம்பவம் எந்த துப்பும் இல்லாமல் புதைக்கப்பட்டிருக்கும். இராணுவமோ அல்லது இராணுவ காவல்துறையோ விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்திருந்தால் குற்றவாளிகளை தண்டிக்க வழக்கறிஞர்கள் எந்த கணிசமான ஆதாரத்தையும் கண்டுபிடித்திருக்க மாட்டார்கள். 

"பொறுப்புக்கூறல் குறித்து அரசியல் உறுதிப்பாடும் இராணுவத்தினர் உறுதிப்பாடும் காணப்பட்டது. எங்கள் இராணுவம் ஒரு மையப்படுத்தப்பட்ட கட்டளையின் கீழ் செயல்படுகிறது மேலும் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. செம்மணி சோதனைச் சாவடியில் இந்த மக்கள் காணாமல் போவது குறித்து சந்தேகம் எழுந்தபோது சோதனைச் சாவடியில் யார் பணியில் இருந்தார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அந்த நேரத்தில் இராணுவ காவல் பிரிவு வேறு இடத்தில் இருந்தது. எனவே அவர்கள் லான்ஸ் கோப்ரலையும் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த அனைவரையும் அழைத்து விசாரிக்கத் தொடங்கினர். "

நிச்சயமாக குற்றவாளிகள் இராணுவ போலீசாரால் விசாரிக்கப்படுவதால் நிம்மதியாக உணர்ந்தார்கள், அவர்கள் தங்கள் இராணுவத்தை சேர்ந்தவர்கள்  என்பதால்  அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும் அந்த வாக்குமூலங்கள் இராணுவ போலீசாரால் பதிவு செய்யப்பட்டன. பாலியல் பலாத்காரம் உட்பட என்ன நடந்தது  என்று அவர்கள் கூறினர்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எங்களிடம் சூழ்நிலை ஆதாரங்கள் உள்ளன. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவரைத் தவிர வேறு யாருக்கும் என்ன நடந்தது என்பது தெரியாது. ஆனால் இங்கே குற்றம் சாட்டப்பட்டவர்கள் இராணுவ போலீசாரிடம் பேச முடிவு செய்தனர். உடல்கள் எங்கு புதைக்கப்பட்டன என்பதை அவர்கள் இராணுவ போலீசாருக்குக் காட்டினர், பின்னர் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன” என்று மஹிந்தரத்ன மேலும் கூறினார்.

வழக்கின் வழக்கறிஞராக மஹிந்தரத்னே தண்டனை வழங்கப்படுவது குறித்து உறுதியாகயிருந்தார்.

மேலும் அவர்கள் விசாரணையை கையாண்ட விதத்தில் மிகவும் கவனமாக இருந்தனர். "அந்த நேரத்தில்  பொதுமக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் நம்பிக்கை இல்லாததால் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக 'இதயங்களும் மனங்களும்' என்ற பிரச்சாரத்தை இராணுவம் முன்னெடுத்தது. 

"யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ காவல்துறைத் தளபதி கர்னல் கலிங்க குணரத்னவுடன் பொறுப்புக்கூறல் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற உண்மை குறித்து உரையாடியதை நான் நினைவில் கொள்கிறேன். எனவே எல்லாம் நன்றாக வேலை செய்தது மேலும் வழக்கைத் தீர்ப்பதில் சிஐடி ஆர்வமாக இருந்தது. சட்டமா அதிபர் திணைக்களம் முழு வீச்சில் செயற்பட்டது. நான் விமானப்படையால் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். உங்களுக்கு உண்மையிலேயே தேவை அரசியல் விருப்பம் என்பதை இது நிரூபிக்கிறது, மேலும் அந்த மாற்றம் உங்களுக்குத் தேவை ”என்று அவர் மேலும் கூறினார்.

ஒவ்வொன்றாக ஒரு தடயம் 

"காணாமல் போன நாற்பத்தைந்து நாட்களுக்குப் பிறகு 1996 அக்டோபர் மாத இறுதியில் எங்கோ உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டபோது அவை அழுகிய நிலையில் இருந்தன"

கொழும்பில் வசித்து வந்த குடும்பத்தில் உயிருடன் இருந்த ஒரே உறுப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி எலும்புக்கூடுகளை அடையாளம் காண வைப்பதில் புலனாய்வாளர்கள் விரும்பவில்லை. "நாங்கள் அவளை சாட்சியமளிக்க அழைக்கவில்லை. பொதுவாக நாங்கள் குடும்ப உறுப்பினர்களை சாட்சியமளிக்க அழைக்கிறோம் ஆனால் அந்த சூழலில் அவளுக்கு கூடுதல் துயரத்தைத் தவிர்க்க விரும்பவில்லை. சூழ்நிலைகளில் உடல்களை அடையாளம் காண மிகவும் பழமையான வழியை நாங்கள் கொண்டு வந்தோம்.''

1999_chemmani_excavation.jpg

"1996 இல் எங்களிடம் டி.என்.ஏ சோதனை இல்லை அதன் பிறகு நீண்ட காலத்திற்குப் பிறகுதான் இலங்கை டி.என்.ஏ சோதனைகளை மேற்கொள்ளத் தொடங்கியது. இருப்பினும் ஒவ்வொரு வழக்கிலும் டி.என்.ஏ சோதனைகளை மேற்கொள்ள எங்களிடம் இன்னும் முழு வளங்களும் இல்லை."

"உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டபோது அவர்களின் உடைகள் குறிப்பாக கிருஷாந்தியின் உடைகள் ஒரே குழியில் வீசப்பட்டன. ஒவ்வொரு துணியிலும் ஒரு தனித்துவமான சலவைத்தொழிலாளர் அடையாளமொன்று இருப்பதைக் கண்டோம். இந்த  அடையாளம்(சலவைத் தொழிலாளர்கள் மற்றும் பெண்கள்) எந்த ஆடைகளை எந்த வீட்டிற்குச் சொந்தமானது என்பதை அடையாளம் காண்பதற்கானது. இது மிகவும் பழமையான அணுகுமுறை ஆனால் கிருஷாந்தியின் வழக்கில் காணாமல் போன நான்கு பேர் இவர்கள்தான் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டியிருந்தது” என்றுபிரசாந்தி  கூறினார்.

இதையொட்டி பிரசாந்தி மஹிந்தரத்னேவும் அவரது குழுவினரும் கைதடி பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளியை சாட்சியமளிக்க அழைத்தனர். குமாரசாமி வீட்டிற்கு அவர் திருப்பி அனுப்பிய ஆடைகள் ராசம்மா, பிரணவன் மற்றும் கிருஷாந்தியின் ஆடைகள் என்று அவர் அடையாளம் கண்டார். கிருபாமூர்த்தியின் ஆடைகள் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டன. 

ஆடைகளின் அடிப்படையில் உடல்களின் ஆரம்ப அடையாளம் இதுவாகும். கிருஷாந்தியின் ஆடைகள் தனித்துவமானவை - வெள்ளை சீருடை சிவப்பு டை மற்றும் காலணிகள். டையின் நிறத்தைத் தவிர அவரது பள்ளி சீருடையைப் போலவே சீருடையும் இருந்ததால் மஹிந்தரத்னே மிகவும் எரிச்சலடைந்தார்.

 "நீதிமன்றங்கள் அந்த அடையாளத்தை போதுமானதாக எடுத்துக் கொண்டன. கூடுதலாக ராசம்மாவுக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக போரின் உச்சம் என்பதால் பல் பதிவுகள் எதுவும் இல்லை மேலும் அவர்களிடம் சரியான பல் சேவைகள் இல்லை. ஒரு குடலிறக்கத்தில் ஒரு அறுவை சிகிச்சை பதிவு இருந்தது அதை நாங்கள் பொருத்த முடிந்தது அதனுடன் உடல்களை அடையாளம் காண முடிந்தது" என்று அவர் தொடர்ந்தார்.

கதையின் சோகமான பகுதி என்னவென்றால் ஆரம்பத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது கிருஷாந்தி அதனை எதிர்த்தாள். சாட்சியங்களின்படி அவள் ஒரு கட்டத்தில் எதிர்ப்பதை கைவிட்டாள். நான்காவது அல்லது ஐந்தாவது நபர் அவளை பாலியல் வன்கொடுமை செய்யச் சென்றபோது அவள் அவர்களிடம் சிறிது நேரம் கொடுக்கச் சொன்னாள் அவள் தண்ணீர் கேட்டாள். அவர்கள் ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வந்திருந்தார்கள் அவள் அந்த போரில் தான் வெற்றியடையப்போவதில்லை என்பதை உணர்ந்திருந்தாள்.

தனக்கு வேறு வழியில்லை என்பதை ராசம்மா அறிந்தாள் அவள் தன் தாலியைக் கழற்றி முதல் குற்றவாளியிடம் கொடுத்து அதை தன் குடும்பத்தினரிடம் கொடுக்கும்படி சொன்னாள். ஆனால் அவர் அதை தனது சகோதரியிடம் கொடுத்தார், அது பின்னர் விசாரணைகளின் போது மீட்கப்பட்டது. அவர்கள் மூவரும் தங்கள் அடையாள அட்டைகளையும் சோதனைச் சாவடியில் கொடுத்தனர். இருப்பினும் அரசு போரின் போது ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வருவது இதுவே முதல் முறை என்பதால் அரசு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்வைப்பது வழக்கறிஞர்களுக்கு முக்கியமானது. பாலியல் வன்கொடுமையை போர் ஆயுதமாகப் பயன்படுத்திய முதல் சம்பவமும் இதுவே.

வழமைக்கு மாறாக சிந்தித்தல்

krish.jpg

"கிருஷாந்தியின் உடல் அழுகும் நிலையில் இருந்ததால் பாலியல் வன்கொடுமைக்கான தடயவியல் சான்றுகள் எதுவும் இல்லை. “எனவே வழமைக்கு மாறாக சிந்திக்க வேண்டியிருந்தது. "

"இராணுவத்தால் இராணுவ போலீசாரிடம் அளிக்கப்பட்ட வாக்குமூலங்களைப் பயன்படுத்துவோம் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் சாட்சிய கட்டளைச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர் ஒருவர் காவல்துறையிடம் அளிக்கும் எந்தவொரு வாக்குமூலமும் சந்தேக நபருக்கு எதிராக அடுத்தடுத்த விசாரணையில் ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே நாங்கள் இந்திய நீதித்துறையைப் பயன்படுத்தி ஒரு குடிமகன் ஒரு சிவிலியன் போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்கும்போது அந்த பதற்றம் நிலவுகிறது என்று வாதிட்டோம். இராணுவவீரர் இராணுவ பொலிஸிடம் சாட்சியமளிக்கும்போது ஒரே தொழிலில் உள்ளவரிடம் வாக்குமூலம் வழங்குகின்றார் பதற்றம் இல்லை என்று நாங்கள் கூறினோம்"

மேலும் இந்திய நீதித்துறையின் அடிப்படையில் சாட்சிய கட்டளைச் சட்டத்தின் தடை இராணுவ போலீசாரிடம் ஒரு சிப்பாய் அளித்த வாக்குமூலத்திற்கு பொருந்தாது என்று நாங்கள் வாதிட்டோம். இருப்பினும் ட்ரயல்-அட்-பார் அதை உறுதி செய்த போதிலும் உச்ச நீதிமன்றம் அதை நிராகரித்தது. ஆனால் எங்களிடம் வேறு ஆதாரங்கள் இருந்தன. இது ஒரு மேல்முறையீட்டுப் பிரச்சினையாக இருக்கலாம் என்று நாங்கள் கவலைப்பட்டதால் இந்த ஆதாரத்தை மட்டும் நம்பியிருக்கவிரும்பவில்லை நம்ப விரும்பவில்லை ”என்று அவர் தொடர்ந்தார்.

சோதனைச் சாவடியில் ஒன்பது வீரர்களைத் தவிர வேறு இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்கள் இருந்ததை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இராணுவ போலீசாருடனான கலந்துரையாடல்களின் போது காவல்துறைக்கும் இராணுவ போலீசாருக்கும் இடையிலான படிநிலை பதட்டங்களை புலனாய்வாளர்கள் கவனித்தனர். 

இராணுவம் போலீஸ்காரர்களை உடல்களை அடக்கம் செய்ய பயன்படுத்தியது, ஆனால் அத்தகைய கொடூரமான குற்றங்களில் அவர்களை ஈடுபடுத்தவில்லை என்பது கண்டறியப்பட்டது. "இரண்டு போலீஸ்காரர்களும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வதில் ஈடுபடவில்லை, ஆனால் அவர்கள் உடல்களை அப்புறப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர் என்பதை வாக்குமூலங்கள் வெளிப்படுத்தின. எனவே நாங்கள் அவர்களுக்கு 'நிபந்தனை மன்னிப்பு' என்று அழைக்கப்படுவதை வழங்கினோம். 

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ்  சட்டமா அதிபர் ஒரு சந்தேக நபருக்கு நிபந்தனை மன்னிப்பு வழங்கும் திறனைக் கொண்டுள்ளார்.

நிபந்தனை என்னவென்றால் அனைத்தையும் வெளிப்படுத்தி மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்படுவதற்கு எதிராக சாட்சியமளிப்பது. பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை முன்வைக்க நாங்கள் விரும்பியதால் அதைச் செய்யக்கூடிய ஒரே வழி ஒப்புதல் வாக்குமூலங்களுடன் சூதாடுவதுதான். ஆனால் எங்களிடம் எந்த சுயாதீனமான ஆதாரமும் இல்லை மேலும் இவர்கள் நேரில் கண்ட சாட்சிகள். உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வாக்குமூலங்களை நிராகரித்த போதிலும் பாலியல் வன்கொடுமைக்கான தண்டனையை உறுதி செய்தது, ஏனெனில் வழக்குத் தொடுப்பு இன்னும் போதுமான அளவு முன்னேறி பாலியல் வன்கொடுமையை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளது" என்று அவர் விளக்கினார்.

மற்றொரு ஆதாரம் பிரணவனின் சைக்கிள் சங்கிலி உறை. அதில் ஹோண்டா என்ற பெயர் கொண்ட ஒரு என்ற அடையாளம் இருந்தது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள அனைவருக்கும் அது அவருடைய சைக்கிள் என்று தெரியும். பேட்ஜ் அருகிலுள்ள ஒரு சைக்கிள்  திருத்தும் இடத்திலிருந்து இருந்து மீட்கப்பட்டது, மேலும்  இருந்த நபர் தனது சாட்சியத்தில் செம்மணி சோதனைச் சாவடிக்கு அருகில்  அதனை எடுத்ததாக உறுதிப்படுத்தினார்.

தண்டனை மற்றும் மற்றொரு அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடு 

பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர், மேலும் உடல்கள் சட்ட மருத்துவ அதிகாரிகளால் பரிசோதனைக்காக கொழும்புக்கு கொண்டு வரப்பட்டன. உடல்கள் அழுகிய நிலையில் இருந்தபோதிலும் சட்ட மருத்துவ அதிகாரிகளால் மரணத்திற்கான காரணத்தை தீர்மானிக்க முடிந்தது, அது கழுத்தை நெரித்தல். 

வழக்கறிஞர்கள் முதல் குற்றவாளியின் சகோதரியிடமிருந்து ராசம்மாவின் தாலியை மீட்டனர். அனைத்து சூழ்நிலை ஆதாரங்களுடனும் என்ன நடந்தது என்பது குறித்து சாட்சியமளித்த இரண்டு சுயாதீன சாட்சிகளுடனும் வழக்குத் தொடுப்பு நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஆதாரத்திற்கு வழிவகுத்துள்ளது என்று நீதிமன்றங்கள் கண்டறிந்தன. 

பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொலைக் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டனர். உச்ச நீதிமன்றம் இந்த தண்டனையை உறுதிப்படுத்தியது. "இதனால்தான் அவர்கள் 27 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தனர், அவர்கள் நீண்ட காலமாக மரண தண்டனையில் இருப்பதாகவும் அவர்களை விடுவிக்கக் கோரியும்" என்று மஹிந்தரத்ன மேலும் கூறினார்.

இந்த கட்டத்தில்தான் முக்கிய குற்றவாளி மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார். "நமது நீதிமன்றங்களில் நீதிபதிகள் குற்றவாளிகளிடம் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு அவர்களிடம் ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்பது வழக்கம். 

அந்த நேரத்தில் முதல் குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷ "நாங்கள் நான்கு பேரைக் கொன்றதற்காக தூக்கு மேடைக்கு அனுப்பப்படுகிறோம், ஆனால் செம்மணியில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உடல்களை நான் உங்களுக்குக் காட்ட முடியும்" என்று கூறினார். செம்மணி புதைகுழி பற்றிய விவரங்கள் இப்படித்தான் வந்தன. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டவுடன் நான் எனது வழக்கை முடித்தேன். அவர்கள் செம்மணி புதைகுழி குறித்து ஒரு புதிய விசாரணையைத் தொடங்கினர். அந்த நேரத்தில் அவர்கள் சுமார் 15 எலும்புக்கூடுகளை தோண்டி எடுத்தனர்" என்று அவர் மேலும் நினைவு கூர்ந்தார்.

பொறுப்புக்கூறல் மற்றும் முடிவிற்கு கொண்டுவருதலிற்கான ஒரு ஊக்கியாக அரசியல் விருப்பம்

image_28eef8e6c0.jpg

2015 ஆம் ஆண்டு நல்லாட்சியின் போது நிலைமாறுகால நீதி மற்றும் தொடர்புடைய வழிமுறைகள் பற்றிய விவாதம் தொடங்கியது. நல்லாட்சி  அரசாங்கத்தால் ஜெனீவா தீர்மானத்தின் பின்னர்  காணாமல் போனோர் அலுவலகம் இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் உண்மை ஆணையம் ஆகியவை நிறுவப்பட்டன. ஆனால் அடுத்தடுத்த ஆட்சிகள் இந்தத் தீர்மானத்திற்கு இணைந்து அனுசரணை வழங்குவதில் இருந்து விலகி போரின் போது செய்யப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் அட்டூழியங்கள் குறித்து மறுக்கும் போக்கில் இருந்தன.

சில நாடுகளில் நடைமுறையில் உள்ள உலகளாவிய அதிகார வரம்பு பற்றி மஹிந்தரத்ன பேசினார். வரையறையின்படி குற்றம் எங்கு செய்யப்பட்டது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் தேசியம் அல்லது வசிப்பிடத்தைப் பொருட்படுத்தாமல் இனப்படுகொலை போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற கடுமையான குற்றங்களுக்காக தனிநபர்கள் மீது வழக்குத் தொடர மாநிலங்கள் அல்லது சர்வதேச அமைப்புகளை அனுமதிக்கும் ஒரு சட்டக் கொள்கையாகும். 

"உதாரணமாக உள்நாட்டுப் போரின் போது சரணடைந்த காவல்துறையினரை கொலை செய்தமைக்காக முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் மீது ஜெர்மனி வழக்குத் தொடர்ந்தது. இலங்கையில் இலங்கையர்களுக்கு எதிராக குற்றங்களைச் செய்த ஒரு இலங்கையரை உலகளாவிய அதிகார வரம்பின் அடிப்படையில் ஜெர்மனி வழக்குத் தொடர்ந்தது. எனவே இது நிறுவப்பட்டுள்ளது, மேலும் நமக்கு உண்மையான மற்றும் நம்பகமான உள்நாட்டு செயல்முறைகள் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக இவை இலங்கை குடிமக்களுக்கு எதிரான இலங்கை குடிமக்களால் குற்றங்கள்" என்று அவர் மேலும் விளக்கினார்.

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போரினால் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களிற்கு முடிவை காண்பதற்கு அரசியல் உறுதிப்பாடு  சட்டங்களும் வழிமுறைகளும் மிகவும் நடைமுறையில் உள்ளன என்பதையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். 

காணாமல்போனோர் அலுவலக சட்டத்தை இணைந்து வரைவதில் தனது பங்களிப்பைக் குறிப்பிடுகையில் அது ஆணையர்களுக்கு விரிவான அதிகாரங்களை வழங்குவதாக அவர் கூறினார்.  சரியான அமைப்பு இருந்திருந்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களால் சில பதில்களை வழங்க முடிந்திருக்கும். இராணுவம் அனைத்து ஆவணங்களையும் எவ்வாறு பராமரிக்கிறது என்பதை நான் கண்டிருக்கிறேன், எனவே இது என் பார்வையில் ஒரு கடினமான செயல்முறை அல்ல" என்று அவர் மேலும் கூறினார். 

காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை காணாமல்போனோர் அலுவலகம்  நிச்சயமாகக் கண்டுபிடிக்க முடியும் என்று மஹிந்தரத்ன மேலும் கூறினார். இது வடக்கு மற்றும் கிழக்கு பற்றிய விஷயம் மட்டுமல்ல தெற்கைப் பற்றியும் என்ன? ஜேவிபி கிளர்ச்சிகளின் போது காணாமல் போனவர்களைப் பற்றி என்ன? எனவே விடைகிடைக்காமல்  பல குடும்பங்கள் உள்ளன ”என்று அவர் கூறினார்.

அவரது சொந்த வார்த்தைகளில் "நடந்ததை ஒப்புக்கொள்வது நிச்சயமாக நல்லிணக்க செயல்முறையை கொண்டு வருவதற்கான முதல் படியாகும்". "நான் 2018 இல் முன்மொழியப்பட்ட உண்மை ஆணையச் சட்டத்தை இணைந்து வரைவதில் ஈடுபட்டேன். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் சட்டமா அதிபர் திணைக்களம்  அதில் பணியாற்றத் தொடங்கியது. உண்மை ஆணையத்தை அமைக்கும் நோக்கம் இருந்தது.  ஆனால் இந்த விதிகள் நிறைவேற்றப்படுமா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் ஒரு தொடக்கம் இருக்க வேண்டும். இந்தக் குற்றங்கள் நடக்கவில்லை என்று நீங்கள் மறுத்துச் சொல்லும் வரை நீங்கள் எப்படி  நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்??" என்று அவர் மேலும் கேள்வி எழுப்பினார் அதே நேரத்தில் எங்கள் காலடியில்  புதைகுழிகள் இருப்பதை அறிவது வெட்கக்கேடானது என்று கூறினார்.

இருப்பினும் அரசியல் விருப்பம் இருப்பதால் இந்த வழக்குகளில் சிலவற்றிற்கு பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதில் மஹிந்தரத்ன நம்பிக்கை கொண்டுள்ளார். அரசு இயந்திரத்தின் ஆதரவு இல்லாமல் இதைச் செய்ய முடியாது என்று அவர் கூறினார். “ஒவ்வொரு நிறுவனமும் என்னை ஆதரித்ததால் கிருஷாந்தி குமாரசாமியின் வழக்கை என்னால் வெற்றிகரமாக நடத்த முடிந்தது. அந்த நேரத்தில் ஊடகங்களும் எங்களுக்கு உதவியது. இந்த சம்பவம் நடந்தபோது கைதடியில் உள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கை இருந்தது மேலும் இது மற்றொரு கேலிக்கூத்து செயல்முறையாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தனர். அனைத்து சாதாரண சாட்சிகளும் கைதடியில் இருந்தனர் அவர்கள் வர மறுத்துவிட்டனர். தமிழ் பத்திரிகைகள் எங்களை நேர்காணல் செய்தன மேலும் சாதாரண சாட்சிகள் கொழும்புக்கு வர தயங்குகிறார்கள் என்று நாங்கள் அவர்களிடம் கூறினோம்.

கொழும்பில் நீதிமன்றம் தயாராக உள்ளது நீதிபதிகள் சிங்களவர்கள் வழக்கறிஞர்கள் சிங்களவர்கள் சிஐடி மற்றும் மற்ற அனைவரும் சிங்களவர்கள் அவர்கள் வழக்கைத் தொடரத் தயாராக உள்ளனர், ஆனால் தமிழ் பொதுமக்கள் ஒத்துழைக்கவில்லை என பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகள் தெரிவித்தன.” உடனடியாக சாட்சிகள் வர ஒப்புக்கொண்டனர். "அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்த ஒரு தருணம் அது" என்று அவர் மேலும் கூறினார். 

வழக்கின் போது அவர் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கேட்டபோது பொதுமக்களிடமிருந்து வந்த எதிர்ப்பை அவர் நினைவு கூர்ந்தார். "இது 'போர் வீரர்களை' துன்புறுத்துவதற்கான முயற்சி என்று மக்கள் நினைத்ததால் எனக்கு தொல்லை தரும் அழைப்புகள் வந்தன. ஆனால் அதைத் தவிர வழக்கைத் தீர்க்க பல்வேறு பிரிவுகளின் அழுத்தம் தவிர வேறு எந்த சவால்களும் இல்லை" என்று அவர் நினைவு கூர்ந்தார்.

ஒரு இளம் வழக்கறிஞராக, மஹிந்தரத்ன குற்றவாளிகளை சிறையில் அடைக்கத் தீர்மானித்தார். இன்றுவரை குற்றத்தின் கொடூரத்தை அவர் பிரதிபலிக்கிறார். இருப்பினும், மோதல் தொடர்பான குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியதன் அவசியத்தை அவர் ஆதரிக்கிறார். “ஒரு நாகரிக சமூகம் பொறுப்புக்கூறலைக் கொண்டுவர முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்குகளை விசாரித்து, முடிந்தால், இந்த நபர்கள் உயிருடன் இருந்தால் அவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் அல்லது முடிந்தால் அவர்கள் இறந்திருந்தால் எச்சங்களைக் கண்டுபிடித்து குடும்பங்களுக்குத் தெரிவிப்பதற்கும்  காணாமல்போனோர் அலுவலகம்   நிறுவப்பட்டுள்ளது. ஒரு சில வழக்குகளைத் தவிர, ஒரு குடும்பத்திற்கு கூட அவர்களின் உறவினர்கள் குறித்து தெரிவிக்கப்படவில்லை. ஆனால் மீதமுள்ளவற்றைப் பற்றி என்ன?” என்று அவர் முடிவில் கேள்வி எழுப்பினார். 

அரசின் பொறுப்புக்கூறல் செயல்முறையில் பொது விவாதத்தில் செல்வாக்கு செலுத்துவதில் ஊடகங்களின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

https://www.virakesari.lk/article/219110

முஸ்லிம்கள் பக்க நியாயப்பாடுகள் : முஸ்லிம்களின் அவல நிலை என்ன?

2 months 2 weeks ago

முஸ்லிம்களின்/ இஸ்லாமியத் தமிழர்களின்/ சோனகர்களின் பக்க நியாயப்பாடுகளை தமிழர்களாகிய நாம் அறிந்து கொள்ள கீழுள்ள நூலினை வாசித்து அறிதல் இன்றியமையாததொன்றாகும்.

அவர் தம் நியாயப்பாடுகளை அறிய நான் தேடி திரிந்த பொழுதில் நான் கண்டெடுத்த முக்கிய இனவாதமற்ற வரலாற்று நூல் இதுவாகும்.

  • நூலின் பெயர்: ஈழத்தின் இன்னுமொரு மூலை (1992,சம்மாந்துறை வெளியீட்டுப் பணியக வெளியீடு)

  • https://noolaham.net/project/121/12037/12037.pdf

இந்நூலில் 1954 இல் நடந்த தமிழர்களின் வீரமுனை ஊர் எரிப்புத் தொடக்கம் 1991 வரை நடைபெற்ற கெட்ட நிகழ்வுகள் தொடர்பான அவர்தம் பக்க நியாயப்பாடுகள் எழுதப்பட்டுள்ளன.

வீரமுனையை எரித்தமைக்கு நூலாசிரியர் மன்னிப்புக் கோரவில்லையாகினும் அங்கிருந்த முஸ்லிம்கள் அக்காலத்திலேயே அழுது மன்னிப்புக்கோரியுருந்ததாக, எல்லாம் எரித்தழிக்கப்பட்ட பின்னர்(!!), குறிப்பிட்டுள்ளார். மேலும் எரித்தழிக்கப்பட்டமைக்கும் வருத்தமின்றி இதில் நியாயம் எழுதப்பட்டுள்ளது.

இன்னூலில் 1985இல் எரியூட்டப்பட்ட அம்பாறை காரைதீவு பற்றி மன்னிப்போ இல்லை வருத்தமோ தெரிவிக்கப்படவில்லை. எனினும் அது நடப்பதற்கு முன்னர் "தமிழர்கள் செய்த" ஓரிரு நிகழ்வுகள் தொடர்பில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் அத்தாக்குதல் தொடர்பில் மூச்சுக்கூட இல்லை.

பின்னாளில் ரெலோ, புளட், தமிழ் தேசிய ராணுவம் போன்ற இந்திய ஏவல் படைகளின் நாச செயல்களும் இதில் எழுதப்பட்டுள்ளது.

சம்மாந்துறையில் புலிகளால் செய்யப்பட்டதென்று 12 கொலைகளும் (உள்வீட்டுச் சிக்கல்களால் 6 முஸ்லிம் பொதுமக்கள் மற்றும் 6 முஸ்லிம் காவல்துறையினர்) இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதை வாசிப்பதன் மூலம் அக்கலத்திய அவர்தம் நிலைப்பாடுகளை நாம் அறிய முடியும். எனினும் இதில் முஸ்லிம்களால் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட 1985ம் ஆண்டு காரைதீவு அழிப்பு, 1990களிற்குப் பின்னர் சம்மாந்துறையில் நடந்த பல படுகொலைகள் குறித்து கிஞ்சித்தும் மூச்சுக் கூட விடவில்லை. இன்னும் சொல்லப்போல் வீரமுனை ஊரை எரித்தமைக்குக்கூட இதில் நியாயப்பாடுகள் கற்பிக்கப்பட்டுள்ளன என்பது வேதனையான செய்தியாகும்.

சம்மாந்துறையில் 1990இல் நடந்த சில படுகொலைகள்:

  • 21.6.90: 20 தமிழர்கள்‌ சுடப்பட்டனர்‌. பின்‌ வீரமுனையில்‌ கைது செய்யப்‌பட்ட 90 தமிழர்கள்‌ சம்மாந்‌துறை சந்தியில்‌ வைத்து எரிக்கப்பட்டனர்‌. 60 வீடுகள் எரிக்கப்பட்டன.

  • வீரமுனையில்‌ கைதுசெய்‌யப்பட்ட 40 தமிழர்கள்‌ சம்‌மாந்துறை காவல்‌ நிலையத்‌திற்கு அருகில்‌ உள்ள வீதிகளில்‌ எரிக்கப்பட்டனர்‌.

  • 25.6.90 சம்மாந்துறையில்‌ 80 தமிழ்‌ மக்கள்‌ வெட்டியும்‌, சுட்டும்‌ கொல்லப்பட்டனர்‌.

  • 1.7.90 சம்மாந்துறையில்‌ 52 தமிழர்கள்‌ கொல்லப்பட்‌டனர்‌. 40 வீடுகள்‌ எரிக்கப்‌பட்டன.

  • 12.08.90 சம்மாந்துறைப்‌ பகுதியில்‌ உள்ள வீரமுனைக்‌ கிராமத்‌தில்‌ கோயில்‌ ஒன்றில்‌ தஞ்சம்‌ புகுந்திருந்த தமிழ்‌ அகதிகளில்‌ 21 பேரை (ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள்) முஸ்லிம்கள்‌ சிலர்‌ தாக்கிக்‌ கொலைசெய்தனர்‌. மேலும் 140 பேர் படுகாயமடைந்தனர்

  • 19.08.90 வீரமுனைப் பகுதியில் 91 தமிழர்கள் சுட்டுக்கொலை! 125 பேர் வரை காயமுற்றனர். (இவர்களில் அடையாளம் காணப்பட்டோரில் எட்டு வயதுக்கு உட்பட்ட 22 சிறுவர்கள்‌, 16 வயதுக்கும்‌ 18 வயதுக்கும்‌ உட்பட்ட 9 பெண்கள்‌, திருமணமான பெண்கள்‌ 33பேர்‌, மற்றும்‌ வயோதிபர்கள்‌ உட்பட 19 ஆண்கள்‌ இந்தச்‌ சம்பவத்தில்‌ குத்தியும்‌, வெட்டியும்‌, சுட்‌டும் கொல்லப்பட்டிருந்தனர்.)

  • 27.6.90 வீரமுனையில்‌ 360 வீடுகள்‌ எரிக்கப்பட்டன. 69 தமிழர்கள்‌ கொல்லப்பட்‌டனர்‌. 

சம்மாந்துறையில் 1998இல் நடந்த படுகொலைகள்:

  • 06.01.98 வீரமுனையில் இரு தமிழ் இளைஞர்கள் முஸ்லிம்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவற்றை வரலாறாக்கிவிட்டு இரு இனமும் அரசியலுக்கு அப்பாலும் 1960இற்கு முன்பிருந்தது போன்று ஒன்றாக சமயபேதமின்றி தமிழராக வாழ வேண்டும் என்பது எனது அவா.

முஸ்லிம்களின் தமிழர்கள் மீதான படுகொலைகள் பற்றி மேலும் அறிய:

விரட்டப்பட வேண்டியவர்கள் விடுதலைக்கு எதிரான சக்திகளே! — கருணாகரன் —

2 months 2 weeks ago

விரட்டப்பட வேண்டியவர்கள் விடுதலைக்கு எதிரான சக்திகளே!

June 29, 2025

விரட்டப்பட வேண்டியவர்கள் விடுதலைக்கு எதிரான சக்திகளே!

— கருணாகரன் —

யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துபாத்தி மயானப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள மனிதப் புதைகுழி, தமிழ்ச் சமூகத்தை மட்டுமல்ல, மனித விழுமியங்களைக் குறித்துச் சிந்திக்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அங்கே முடிவற்ற நிலையில் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் எத்தனை எலும்புக் கூடுகள் மீட்கப்படும் என்று தெரியவில்லை. உண்மையில் அவை எலும்புக் கூடுகள் அல்ல. உயிருடன் கொல்லப்பட்ட மனிதர்களேயாகும்! 

இதுவரை மீட்கப்பட்டவற்றில் பெண்கள், குழந்தைகள், சிறுவர்களுடைய எலும்புக்கூடுகளும் உள்ளன. இது மேலும் அதிர்ச்சியையும் சமூகக் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இவை அரசியல் ரீதியான படுகொலைகளுக்குள்ளானவை என்றே கருதப்படுகிறது. அரசியல் ரீதியான படுகொலை என்றால், யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பு மோதல்களினால் ஏற்பட்ட கொலையினாலோ அது போன்ற நிகழ்வுகளினாலோ அல்ல. அப்படியிருந்தாலும் அது தவறு. ஏனென்றால், யுத்தத்தின்போது அதில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளுடைய உடல்களை படையினரும் படையினரின் உடல்களை விடுதலைப்புலிகளும் சர்வதேச அமைப்புகளுடாகப் பரிமாறிக் கொண்டனர். 

அப்படியென்றால், இது விதிமுறைகளுக்கு அப்பால், படுகொலை செய்யப்பட்டோரின் உடல்களே. இந்தப் படுகொலைகள் ஏதோ ஒரு வகையில் பழிவாங்கும் அரசியலின் விளைவாக நடந்தவையே!அப்படியென்றாலும் கூட சிறுவர்கள் கொல்லப்படுவதற்கான காரணம் என்ன? என்ற கேள்வி எழுகிறது. இதுதான் கூடிய கவனத்தை இங்கே குவிக்கிறது. 

இதனால் இப்பொழுது கண்டெடுக்கப்பட்டு வரும் இந்த எலும்புக் கூடுகளும் இந்த மனிதப் புதைகுழியும் இதுவரையிலும் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளையும் புதைகுழிகளையும் விட,  அரசியல் ரீதியாக முக்கியத்துவமுடையனவாக மாறக் கூடிய சாத்தியங்கள் உண்டு. 

ஏற்கனவே இதைப்போல வடக்குக் கிழக்கிலும் தெற்கில் சூரியகந்த போன்ற இடங்களிலும் பல எலும்புக் கூடுகளும் புதைகுழிகளும் கண்டறியப்பட்டன. அவை அந்தந்தக் காலகட்டத்தில் அதிர்வையும் அரசியல் ரீதியாகச் சில கவனத் தூண்டல்களையும் ஏற்படுத்தியதுண்டு. 

ஆனால், பிறகு அவையெல்லாம் மெல்ல நீர்த்து, மறைந்து போனதே வரலாறு. சரியாகச் சொன்னால், அவற்றை முன்னிலைப்படுத்தி அரசியல் போராட்டங்களை நடத்தியவர்களே நன்மைகளைப் பெற்றனர். உதாரணமாக சூரியகந்த புதைகுழியைத் தூக்கி, அரசியல் செய்த மகிந்த ராஜபக்ஸ, அடுத்த 20 ஆண்டுகள் அரசியல் அதிகாரத்தைப் பெற்றிருந்தார். அந்த அதிகாரத்தின் மூலம் ராஜபக்ஸ குடும்பத்தையே கட்டியெழுப்பினார். 

ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியோ நிவாரணமோ கிடைக்கவில்லை. அவர்கள் மறக்கடிக்கப்பட்டனர். மகிந்த ராஜபக்ஸ அதிகாரத்துக்கு வந்தபோது, இந்தப் புதைகுழிகளில் எலும்புக்கூடுகளாக்கப்பட்டவர்களுக்கும் அவர்களுடைய உறவினர்களுக்கும் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதை ராஜபக்ஸவினர் செய்யவில்லை. 

அதைப்போல கிளிநொச்சி தொடக்கம் கொக்குத்தொடுவாய் வரையான புதைகுழிகள் – எலும்புக் கூடுகளை வைத்துத் தமிழ்த் தரப்புகள் தாராளமாக அரசியல் ஆதாயங்களைப் பெற்றுக் கொண்டன. அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் மாகாணசபையின் பிரதிநிதிகளாகவும் கட்சிகளின் முக்கியஸ்தர்களாகவும் தம்மை உயர்த்திக் கொண்டனர். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கோ எந்த நீதியும் கிடைக்கவில்லை. 

ஆக தமிழ் – சிங்களம் ஆகிய இரண்டு சூழலிலும் ஒரே நிலைமைதான் நீடிக்கிறது. 

ஆனால், இப்பொழுது கண்டறியப்பட்டு வரும் சிந்துபாத்தி மயான எலும்புக் கூடுகளும் புதைகுழியும் இதையெல்லாம் கடந்த முக்கியத்துவத்தைப் பெறக் கூடிய வாய்ப்புகள் அதிகமுண்டு. அதற்கொரு முக்கிய காரணம், இப்போதுள்ள ஆட்சியாளர்களாகும். 

1.   இப்பொழுதுள்ள NPP ஆட்சியாளர்களும் முன்பு இதேபோன்ற எலும்புக் கூடுகள் – மனிதப் புதைகுழிகளின் துயர வரலாற்றினால் பாதிக்கப்பட்டவர்களே. ஆகவே, அவர்களுக்கு இதனுடைய தாற்பரியம் என்னவென்று – எப்படியானது என்று புரியும். அதனால்தான் இந்தப் புதைகுழி அகழ்வுக்கு அவர்கள் தாராளமாக ஒத்துழைப்பை வழங்குகிறார்கள். மட்டுமல்ல, இதையொட்டி நடைபெறுகின்ற போராட்டத்தைக் குழப்பாமல், இடைஞ்சல்களைச் செய்யாமல், தாங்களும் நேரில் பங்கேற்க விளைகிறார்கள். 

ஆனால், இவ்வாறான சூழலில் முந்திய ஆட்சியாளர்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை. பல்வேறு இடைஞ்சல்களையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தினார்கள். இவ்வாறான விவகாரத்தை முன்னிலைப்படுத்திப் போராடியவர்களையும் நீதி கோரியவர்களையும் அச்சுறுத்தினார்கள்.

ஆனால் NPP அரசாங்கம் இதனை வேறு விதமாக அணுக முற்படுகிறது. அது தன்னை ஒரு நீதிக்குரிய அமைப்பாக உலக அரங்கிலும் வரலாற்றிலும் ஸ்தாபிக்க விரும்புகிறது. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். அதாவது, அரசாங்கமே இந்தப் பிரச்சினையைக் குறித்து கவனம் எடுத்து, குற்றவாளிகளைத் தேடக்கூடிய – தண்டிக்கக் கூடிய ஒரு சூழல் உருவாகியுள்ளது. அவ்வாறு இல்லாது விட்டாலும் இந்தப் புதைகுழி – எலும்புக் கூட்டு விவகாரம் அரசியல் முக்கியத்துவமுடையதாக மாறுவதற்கு அரசாங்கம் ஒத்துழைக்கிறது. இது சர்வதேச ரீதியாகவும் கவனத்தை உருவாக்கும். ஆகவே எந்த வகையிலும் இதொரு நல்வாய்ப்பான விளைவையே தரக்கூடியதாக உள்ளது. 

2.   முந்திய ஆட்சியாளர்களின் காலத்தில் இவ்வாறான புதைகுழி விடயத்தை அவர்கள் கையில் எடுக்கத் துணியவில்லை. அது அவர்களுடைய கையையே சுடக்கூடியது. மட்டுமல்ல, அவர்களே அவற்றோடு சம்மந்தப்பட்டவர்களாகவும் ஏதோ ஒரு வகையில் இருந்தனர். அல்லது அதைக் கண்டிக்க முடியாத நிலையில் இருந்தனர். அவ்வாறானோர் (அத்தகைய தரப்பினர்) ஊழல், அதிகார துஸ்பிரயோகம் போன்றவற்றுக்காகத் தண்டிக்கப்பட்டு வருகின்றனர். அவற்றோடு இந்த விடயங்களும் சேரும்போது, அவர்களின் மீது நடவடிக்கையை எடுப்பதற்கு NPP அரசாங்கத்துக்கு உதவியாக இருக்கும். 

3.   இப்பொழுதுள்ள தேசிய மக்கள் சக்தியினருக்கு இந்தப் புதைகுழிகள் பிரச்சினையில்லை. அவர்கள் இந்த விடயங்களுடன் சம்மந்தமில்லாதவர்கள். மட்டுமல்ல, இதுவரையிலும் அதிகாரத்தில் இருக்காதவர்கள். ஆகவே துணிகரமாக இதனை அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சாதகமாகவே கையாள முற்படுவர். என்பதால் எந்த விதமான அச்சமும் தயக்கமும் இல்லாமல் NPP அரசாங்கம் நேர்மையாக இந்தப் பிரச்சினையைக் கையில் எடுப்பதற்கான சாத்தியங்கள் அதிகமுண்டு. 

வேண்டுமானால் இதனோடு தொடர்புபட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டால், அது படைத்தரப்பினராக இருந்தால் மட்டுமே அரசாங்கத்துக்குச் சற்று நெருக்கடி ஏற்படும். அதுவும் ‘படைத்தரப்பில் கை வைக்கக் கூடாது‘ என்று குற்றவாளிகளைப் பாதுகாக்க விரும்பும் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு இதை ஒரு ஆயுதமாகப் பாவிக்க முற்படலாம். அப்படி எதிர்க்கட்சிகள் பிரச்சினையை திசை திருப்ப முற்பட்டால், அதுவும் NPP அரசாங்கத்துக்கு வாய்ப்பாகவே அமையும். சர்வதேச அரங்கில் அத்தகைய தரப்புகளை அம்பலப்படுத்துவதற்கு. 

இதேவேளை குற்றங்களோடு தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டு,  நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்படுவது தவிர்க்க முடியாதது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாகவும் வெளிப்படைத்தன்மையாகவும் இருந்தால் அந்தப் பிரச்சினையைக்  கூட வெற்றிகரமாகவே கையாளக் கூடியதாக இருக்கும். 

அதற்கு இப்பொழுது இந்த மனிதப் புதைகுழி முழுமையாக அகழப்பட்டு, முழுமையான விவரம் கண்டறியப்பட வேண்டும். அடுத்த கட்டமாக மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டால்தான் இந்தப் படுகொலை எந்தக் காலகட்டத்தில் நடந்தது? அந்தக் காலகட்டத்தில் என்ன நடந்தது என்பதையெல்லாம் கண்டறியக் கூடியதாக இருக்கும். எந்தக் காலகட்டத்தில் நடந்தது என்று கண்டறியப்பட்டால் ஏறக்குறையக் குற்றவாளிகளைக் கண்டு பிடித்து விடலாம். 

அதைக் கண்டறிவதற்கு கண்டெடுக்கப்படும் எலும்புக் கூடுகள் தொடர்பான பகுப்பாய்வுகள் மிக அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அந்த ஆய்வுகளின் முடிவுகள் வரும்போது நிச்சயமாக இப்போதையும் விட மேலும் கொந்தளிப்பான அரசியல் சூழல் உருவாகும். ஏனென்றால், அந்த முடிவுகள் ஓரளவுக்குக் கொலையாளிகளை இனங்காண உதவும் – இனங்காட்டும் என்பதால். 

இப்பொழுதே எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை, அவற்றின் தோற்ற அமைவு போன்றவற்றைச் சரியாகக் கவனித்து, கடந்த கால வரலாற்றைத் தோண்டிப் பார்த்தால் யாருடைய எலும்புக் கூடுகளாக இருக்கும் என்ற ஒரு கணிப்புக்கு வர முடியும். ஆனாலும் பகுப்பாய்வுதான் வலுவானது. சட்டரீதியானது.

இதேவேளை இந்த எலும்புக் கூடுகளையும் மனிதப் புதைகுழிகளையும் நேரில் பார்ப்பதற்கும் இதையிட்டு இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அணையா விளக்குப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்திப்பதற்குமாக ஐ.நா  மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் (OHCHR) பிரதிநிதிகள் குழுநேரில் விஜயம் செய்தது. 

அதொரு முக்கியமான நிகழ்ச்சியே. 

ஆனால், இதையெல்லாம் பாதிக்கப்பட்டோருக்குச் சாதகமாக வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக, இதன்போது அங்கே நடத்தப்பட்ட  முட்டாள்தனமான எதிர்ப்பு நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் பாழடித்துள்ளன. 

நடைபெற்ற போராட்டத்துக்கு தமது ஆதரவைத் தெரிவிப்பதற்காகச் சென்ற அரசியல் தலைவர்களையும் மக்கள் பிரதிநிதிகள் சிலரையும் அங்கே கூடிய சில விசமிகள் எதிர்த்துத் தடுக்கவும் தாக்கவும் முற்பட்டுள்ளனர். தமது அரசியல் உள்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் இப்படித் தவறான முறையில் – குறுக்கு வழியில் செயற்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் சில மணிநேரம் குழப்பங்கள் உருவாகின. 

மட்டுமல்ல, இது இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த நல்ல சக்திகளின் நல் நோக்கத்தையும் பரந்த தன்மையையும் சிதறடித்துள்ளது. நிச்சயமாக இந்தச் செயல் தவறானது. 

இதற்கு அவர்கள் பயன்படுத்த விளைந்தது, தியாகி – துரோகி என்ற பழைய – உளுத்துப்போன அரசியல் முறைமையை. துரோகி – தியாகி என்ற பிரிப்பினால் – அந்த விபரீத விளையாட்டினால் –  ஈழத் தமிழ்ச் சமூகம் பேரழிவைச் சந்தித்துப் பின்னடைந்துள்ளது. இந்த அனுபவ உண்மையை இன்னும் புரிந்து கொள்ளாமல், தங்களைப் புனிதர்களாகக் கட்டமைத்துக் கொள்வதற்காக  எதிர்த்தரப்பைத் துரோகியாக்கும் முட்டாள் வேலையை இன்னும் செய்ய முயற்சிக்கின்றனர் சிலர். இவர்கள் வரலாற்றைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் மூடர்களாகும்.  

பாதிக்கப்பட்ட மக்களுடைய போராட்டத்தில் பங்கேற்பதற்கும் அதற்கு ஆதரவளிப்பதற்கும் அனைத்துத் தரப்புக்கும் உரிமை உண்டு. அதைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஒரு நியாயமான போராட்டத்தில் அனைத்துத் தரப்பும் இணைவது வெற்றியையே அளிக்கும். 

ஆனால், தமிழ்த்தேசியவாத அரசியலில் சில சக்திகள் தமது ஆதிக்கத்தை நிலைப்படுத்திக் கொள்வதற்காக தாமே சுத்தமான தரப்பு என்ற போர்வையில் இத்தகைய ஜனநாயக மறுப்பைச் செய்ய முயற்சிக்கின்றன. ஏனைய சக்திகளின் பங்கேற்பையும் ஆதரவையும் விலக்க முற்படுகின்றன. அதனுடைய உச்ச வெளிப்பாடு செம்மணியில் அரங்கேறியிருக்கிறது. 

இதில் கவனிக்க வேண்டியது –கண்டனத்துக்குரியது  என்னவென்றால், இந்தப்போராட்டத்தில் பங்கேற்பதற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர்சி.வீ.கே. சிவஞானமும் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் சென்றபோது அதே கட்சியைச் சேர்ந்தவர்களிற் சிலர் எதிர்ப்புக் காட்டியுள்ளனர். இந்த எதிர்ப்பை அவர்கள் கட்சிமட்டத்தில் காட்டியிருக்க வேண்டுமே தவிர, இப்படிப் பொது வெளியில் காட்டியிருக்கக் கூடாது. மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட மக்களுடைய போராட்டத்தைப் பலவந்தமாகப் பறித்துத் தங்களுடைய கையில் எடுத்துத் தங்களுடைய அரசியல் லாபநட்டக் கணக்கைப் பார்த்திருக்கக் கூடாது என்ற பொது அபிப்பிராயம் உருவாகியுள்ளது. இது தொடர்பாக தமிழரசுக் கட்சி, குறித்த உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம். அதேவேளை இவர்களைப் பொதுச் சமூகம் கண்டிக்க வேண்டும். 

அதைப்போல இந்தப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் கே. சந்திரசேகர் சென்றிருக்கிறார். கூடவே யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களைப் பிரதிநிதித்துப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களான ரஜீவன், இளங்குமரன் ஆகியோரும் சென்றனர். அவர்களையும் இந்தக் குழப்பிகள் இடைஞ்சற்படுத்தியுள்ளனர்.

இதுவரையில் இவ்வாறு நடைபெறுகின்ற மக்கள் போராட்டங்கள் எதிலும் அரசாங்கத்தரப்பினர் எவரும் கலந்து கொள்வதில்லை. அவர்களுடைய கைகள் சுத்தமில்லை என்பதால் அவர்கள் அதைத் தவிர்த்து வந்தனர். அல்லது அது தமக்கு நெருக்கடியைத் தரும் என்பதால் விலகி நின்றனர்.  வரலாற்றில் முதற்தடவையாக தேசிய மக்கள் சக்தியே ஆட்சியாளர்களாகவும் இருந்து கொண்டு, மக்களுடைய நியாயமான போராட்டத்திலும் கலந்து கொண்டது. 

இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலைக் கொடுப்பதோடு, அவர்களுடைய உணர்வுகளின் அடிப்படையில் நாம் இந்தப் பிரச்சினையை நியாயமான முறையில் கையாள்வோம் என்ற சேதியையும் சொல்வதாக இருந்தது. 

ஆகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதொரு நல்லவாய்ப்பாகவே அமைந்தது. ஆனால், இதைப் புரிந்துகொள்ளாத, புரிந்து கொள்ளமுடியாத, புரிந்து கொள்ளமறுக்கின்ற தமிழ்த்தேசியவாத முத்திரை குத்திய சிலர் இதையும் எதிர்த்தனர். 

அப்படியென்றால் இந்தப்பிரச்சினைக்கு எங்கிருந்து, எவ்வாறான  நீதியை இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டேர்க்கோ இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். அவரைக் கடந்து எந்தத் தரப்பு இவ்வாறான பிரச்சினைகளுக்கு பொருத்தமான – தகுதியான நீதியை வழங்கும்? 

வழமையைப்போல அரசாங்கத்தை எதிர்த்து நின்றால், சர்வதேச சமூகம்தான் நீதியை வழங்க வேண்டும் என்றால், வழமையைப்போல இந்தப் பிரச்சினையும் (இந்த எலும்புக்கூடுகள் மற்றும் மனிதப்புதைகுழிகள் விவகாரமும்) நீர்த்து மறைந்து போகும். இதை வைத்து நாடகமாடும் அரசியல்வாதிகள் சிலர் மட்டும் ஆதாயத்தைப் பெறுவர். 

ஆகவே மக்கள் இதைக்குறித்துத் தெளிவாக இருப்பது அவசியமாகும். போலிகள், நடிகர்கள், நாடகமாடிகளைக் குறித்து எச்சரிக்கை கொள்ள வேண்டும். அவர்களையே விரட்டி அடிக்க வேண்டும். ஏனெனில் விடுதலை என்பது அநீதிக்கு எதிரானது. தவறானவர்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு அதைப் பெறவே முடியாது. 

https://arangamnews.com/?p=12127

அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

2 months 2 weeks ago

Anaivilakku.jpg?resize=750%2C375&ssl=1

அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

செம்மணியில் ஏற்பாடு செய்யப்பட்ட அணையா விளக்கு போராட்டமானது ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்தை ஈர்ப்பதில் வெற்றியைப் பெற்றிருக்கிறது.ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் சித்துப்பாத்தி மயானத்துக்குத்தான் வருகைதர இருந்தார். அவரை அணையா விளக்கை நோக்கி வர வைத்தது கட்சி சாராத மக்கள் திரட்சிதான். சிவில் சமூகங்கள் தான்.

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அணையா விளக்கை வணங்கியதும், அங்கே மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்ததும் அடிப்படை வெற்றிகள்தான். அதேசமயம் கட்சி கடந்த அந்தப் போராட்டத்தில் எல்லாக் கட்சிகளையும் ஒரு மையத்தில் குவித்ததும் வெற்றிதான்.அதைவிட முக்கியமாக,அந்தப் போராட்டத்தை நோக்கி தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு வந்ததும் வெற்றிதான்.

ஆனால் அங்கே வந்த சிவஞானம்,சாணக்கியன்,சந்திரசேகரன் போன்றவர்களை ஒரு தரப்பினர் அவமதித்தமை தவிர்த்திருக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று.அங்கிருந்து வெளியேறிய பின் சந்திரசேகரன் ஊடகச் சந்திப்பின்போது தெரிவித்த கருத்துக்களைத் தொகுத்துப் பார்க்க வேண்டும். அந்த போராட்டத்தின் நியாயத்தை சந்திரசேகரன் உட்பட அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டி வந்தமை என்பது அடிப்படை வெற்றி.அவர்களுடைய வாயாலயே அந்த போராட்டத்தின் நியாயத்தையும் அந்தப் போராட்டக் கோரிக்கைகளின் நியாயத்தையும் ஒப்புக்கொள்ள வைத்திருந்தால் அது மேலும் வெற்றியாக அமைந்திருக்கும்.

அரசியல்வாதிகளை அந்த இடத்திலிருந்து அவமதித்து வெளியேற்றியமை தங்களுடைய கைகளை மீறி நிகழ்ந்த ஒன்று என்ற பொருள்பட ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.மக்கள் செயல் என்று பெயரிடப்பட்ட அந்த ஏற்பாட்டுக் குழு சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது மக்களுக்கு உதவி செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ அமைப்பு ஆகும்.அந்த அமைப்பு செம்மணியில் அரசியல் அடர்த்தி மிக்க ஒரு போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது.

அது ஒரு இறுக்கமான அரசியல் இயக்கம் அல்ல. தளர்வானது. அந்த தளர்வான கட்டமைப்பைப் பயன்படுத்தித்தான் அங்கே அரசியல்வாதிகளை அவமதிக்கும் செயல்கள் இடம்பெற்றிருக்கின்றன.அதுபோலவே அந்தத் தளர்வான கட்டமைப்பைப் பயன்படுத்தித்தான் யுரியூப்பர்களும் இலத்திரனியல் ஊடகங்களும் அந்தப் போராட்டத்தின் நோக்கத்துக்கு வெளியே போய் காணொளி உள்ளடக்கங்களை உருவாக்க முயற்சித்திருக்கிறார்கள்.

செம்மணிப் போராட்டத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் அது. காணொளி ஊடகங்களும் குறிப்பாக யுரியூப்பர்களும் ஒரு போராட்டத்தைத் தமது காணொளி உள்ளடக்கத் தேவைகளுக்காகத் திசை திருப்ப அனுமதிக்கக்கூடாது என்பது.இந்த விடயம் கடந்த 15 ஆண்டுகளிலும் யாழ்ப்பாணத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாக்கள்,மக்கள் சந்திப்புகள்,கருத்தரங்குகள் போன்றவற்றிலும் தொகுத்துக் கவனிக்கப்பட்ட ஒரு விடயமாகும். சில யுரியூப்பர்களும் காணொளி ஊடகக்காரர்களும் சர்ச்சைகளைத் தேடுகிறார்கள். சர்ச்சைகள் இல்லாத இடத்தில் சர்ச்சைகளை வலிந்து உருவாக்குகின்றார்கள். அல்லது ஏற்கனவே உள்ள சர்ச்சை ஒன்றை எப்படிச் சூடான காணொளி உள்ளடக்கமாக மாற்றலாம் என்று சிந்திக்கிறார்கள்.அவர்களுடைய இலக்கு டொலர்கள்தான்.எந்த உள்ளடக்கத்தை விவகாரம் ஆக்கிப்போட்டால் அது அதிகம் பார்வையாளர்களைக் கவருமோ அந்த உள்ளடக்கத்தை அவர்கள் தேடித் திரிகிறார்கள். அல்லது அதனை உருவாக்குகிறார்கள்.

கடந்த 15 ஆண்டுகளிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நடந்த சில புத்தக வெளியீட்டு விழாக்கள்,சில மக்கள் சந்திப்புகள்,கருத்தரங்குகள் போன்றவற்றிலும் இந்த விவகாரம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தன்னியல்பாக அங்கே தோன்றும் முரண்பாடுகளை நோக்கிக் கமராக்கள் குவியத் தொடங்கும். எனவே இது போன்ற நிகழ்ச்சிகளில் ஏற்பாட்டாளர்களின் அனுமதியின்றி சம்பவங்களை படம்பிடிக்க வேண்டாம் என்று ஊடகவியலாளர்களும் யுரியூப்பர்களும் தடுக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. ஒரு அமைப்பு காசைச் செலவழித்து ஏற்பாடு செய்யும் ஒரு நிகழ்வில் உள்ளே வரும் ஊடகவியலாளர்கள் அந்த அமைப்பின் அனுமதியின்றி மோதல்களைப் படம் பிடிக்கிறார்கள். அந்த மோதல்கள் லைஃபில் விடப்படுகின்றன. அல்லது அவை காணொளி உள்ளடக்கங்களாக,விவகாரமாக மாற்றப்பட்டுப் பிரசுரிக்கப்படுகின்றன. எனவே அவை போன்ற நிகழ்வுகளில் காணொளி ஊடகங்களை அனுமதியின்றி படம்பிடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதும் தவிர்க்கமுடியாத ஒன்று.அவ்வாறு கேட்பதற்கு ஏற்பாட்டாளர்களுக்கு உரிமை உண்டு.

அல்லது ஏற்பாட்டாளர்கள் உத்தியோகபூர்வமாக ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை வைத்து அதில் அவர்கள் தெரிவிப்பதுதான் அந்தப் போராட்டத்தின் அல்லது அந்த நிகழ்வின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்பதால்,அந்த ஊடகச் சந்திப்புக்கு மட்டும் ஊடகவியலாளர்களை அனுமதிப்பது என்று முடிவெடுக்கலாம்.

அது ஜனநாயக மீறல் அல்ல. அது ஏற்பாட்டாளருக்கு உள்ள உரிமை. எனவே இது போன்ற சம்பவங்களில் ஊடகவியலாளர்களை அந்த இடத்துக்குள் அனுமதிக்கும் பொழுது அது தொடர்பாக முறையான அறிவுறுத்தல்கள் தேவை என்பதைத்தான் செம்மணியில் நடந்தவை நமக்கு உணர்த்துகின்றன.

மேலும் ஊடகவியலாளர்களை மட்டுமல்ல கட்சிக்காரர்களையும் உணர்ச்சிக் கொதிப்படையும் அரசியல் செயற்பாட்டாளர்களையும் உள்ளே விடும் பொழுதும்கூட அது தொடர்பாக விழிப்பு இருக்க வேண்டும். ஒரு கட்சி நிகழ்வில் கட்சிக்காரர்கள் எதையும் செய்யட்டும்.அதற்கு கட்சி பொறுப்பு. ஆனால் கட்சிசாரா நிகழ்வுகளில் இவ்வாறு கட்சிக்காரர்களும் அந்த நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவோடு சம்பந்தப்படாதவர்களும் அந்த நிகழ்வின் நோக்கத்தை திசை திருப்புவதற்கு அனுமதிக்க முடியாது.

செம்மணியில் இரண்டு குழப்பங்கள் ஏற்பட்டன. ஒரு குழப்பம் தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் உட்கட்சி மோதல்களைப் பிரதிபலித்தது. அதன் பின்னணியில் சிறீதரன் இருப்பதாக சுமந்திரன் அணி குற்றம் சாட்டுகிறது. அண்மையில் புதிய பிரதேச சபை தெரிவு செய்யப்பட்ட பின் கிளிநொச்சிக்குரிய பிரதேச சபைத் தவிசாளர் வட மாகாண ஆளுநரைச் சந்தித்த பொழுது செம்மணியில் குழப்பம் விளைவித்த நபரும் அவருடன் காணப்பட்டார். அதனால் அந்தக் குழப்பம் இயல்பானது அல்ல, திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்ற சந்தேகம் ஏற்பாட்டாளர்கள் மத்தியிலும் இருப்பதாகத் தெரிகிறது.

அப்படித்தான் சந்திரசேகரனை அவமதித்த விடயத்திலும் அந்தக் காணொளியில் சில கட்சிக்காரர்கள் காணப்படுகிறார்கள். அவர்கள் தமிழ்த் தேசிய பேரவையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அந்த இடத்தில் மூன்று நாட்களாகக் காணப்பட்டவர்கள். குறிப்பாக சிவஞானம் அவமதிக்கப்பட்டதை சுமந்திரனின் எதிரணி நியாயப்படுத்துகின்றது. அதற்கு அவர்கள் பின்வரும் விளக்கத்தைக் கூறுகிறார்கள்.அணையா விளக்கு போராட்டத்தில் மூன்று நாட்களும் தொடர்ச்சியாக காணப்பட்ட, காவி உடுப்போடு காணப்பட்ட ஒரு சாமியார் தமிழரசுக் கட்சியை மறைமுகமாகச் சுட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார்.அந்த நேர்காணலில் பெருமளவுக்கு மறைமுகமாகக் குற்றஞ் சாட்டப்படுவது தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணிதான். அந்தக் காணொளிக்கு சிவஞானம் பின்னர் பதில் கூறியிருந்தார்.இந்தப் பதில்தான் சிவஞானம் அங்கே அவமதிக்கப்படுவதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இத்தனைக்கும் அந்தச சாமியார் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரியக்கத்தின் அமைப்பாளர் ஆகும். 2015க்குப் பின் தமிழ்த் தேசிய அரசியலில் காவியோடு துருத்திக் கொண்டு தெரியும் ஒரு சாமியார் அவர். மூன்று நாட்களாக ,தொடர்ச்சியாக அவர் செம்மணியில் இருந்தார். அங்கே தொடர்ச்சியாக மூன்று நாட்களும் காணப்பட்ட நபர்களில் அவரும் ஒருவர். ஆனால் அவர் ஏற்பாட்டுக் குழுவில் ஒருவர் அல்ல.

சுமந்திரன் அணிக்கு எதிரான அவருடைய கருத்துக்கள் வெற்றிடத்தில் இருந்து தோன்றவில்லை. மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னரும் சூழ்ச்சிகளின் மூலம் சுமந்திரன் கட்சிக்குள் தன் முதன்மையை தொடர்ந்தும் பேண முயற்சித்து வருகிறார். இதனால் தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் அவர் மீதான அதிருப்தி மேலும் அதிகரித்திருக்கிறது என்பதுதான் உண்மை. அந்த அதிருப்தியைச் சரி செய்வதற்கு அவர் பல வழிகளிலும் முயற்சிக்கின்றார். அண்மையில்கூட சர்ச்சைக்குரிய காணி வர்த்தமானிக்கு எதிராக அவர் வழக்கு போட்டு அதில் அவர் பெற்ற முதற் கட்ட வெற்றியை அவருடைய விசுவாசிகள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டு உளவியலின் ஒரு பகுதி சுமந்திரனுக்கு எதிராகவே காணப்படுகிறது.அந்த உளவியலின் பிரதிபலிப்பாகத்தான் செம்மணி போன்ற உணர்ச்சிகரமான போராட்டக் களங்களில் அது வெடித்துக் கிளம்புகிறது.

ஆனால் சுமந்திரனுக்கு எதிரானவர்கள் தாங்கள் ஒழுங்குபடுத்தாத ஒரு போராட்டக் களத்தை துஸ்பிரயோகம் செய்ய முடியாது. அவர்கள் ஒரு விளக்கம் கூறுவார்கள், “சுமந்திரன் தமிழ் தேசியத்துக்கு எதிராகச் செல்கிறார், எனவே தமிழ்த் தேசியத்திற்கு நீதியைக் கேட்கும் போராட்டக் களங்களில் அவருடைய அணிக்கு இடமில்லை, அவர்களை அந்தக் களத்திற்குள் விட முடியாது” என்று. ஆனால் அணையா விளக்கை அவர்கள் ஒழுங்குபடுத்தவில்லை. அதை ஒழுங்குபடுத்திய அமைப்பின் அனுமதியின்றி அவர்கள் அதற்குள் புதிய நிகழ்ச்சி நிரலை நுழைக்க முடியாது. அணையா விளக்கு பொது எதிரிக்கு எதிரானது. அது அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்கும் ஒரு போராட்டம். அங்கே உள்ளூர் மோதல்களை வைத்துக் கொள்ளத் தேவையில்லை.

எனவே இனிவரும் காலங்களில் கட்சிசாரா மக்கள் அமைப்புக்கள் போராட்டக் களங்களைத் திறக்கும்பொழுது செம்மணியில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் காணொளிக்காரர்களையும் கட்சிக்காரர்களையும் கட்டுப்படுவதற்கான புதிய பொறிமுறைகளைப் பற்றி யோசிக்க வேண்டும்.

இது ஒரு ஆபத்தான வளர்ச்சி. தமிழ் மக்களை வாக்காளர்களாக, விசுவாசிகளாகப் பிரித்து வைத்திருப்பது கட்சிகள்தான்.மாறாக தமிழ் மக்களை கட்சி சாராது இனமாக,தேசமாக திரட்ட முற்படுவது மக்கள் அமைப்புகள் அல்லது செயற்பாட்டு அமைப்புகள் ஆகும். அவ்வாறான அமைப்புக்கள் கட்சிசாரா போராட்டங்களை ஒழுங்குபடுத்தும் பொழுது கட்சிகள் அல்லது கட்சிகளின் ஆதரவாளர்கள் அந்தப் போராட்டக் களங்களை “ஹைஜாக்” செய்வதற்கு முயற்சிக்கிறார்கள்.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணியிலும் இந்த சர்ச்சை எழுந்தது.தமிழ்ப் பொது வேட்பாளரின் விடையத்திலும் இப்படிச் சர்ச்சைகள் எழுந்தன.

தமிழ்த் தேசியக் கட்சிகள் தாங்களும் ஒன்றுபட மாட்டார்கள். அதேசமயம் தன்னார்வமாக மக்களை ஒன்று திரட்டும் மக்கள் அமைப்புகளின் போராட்டக் களங்களையும் விட்டு வைக்கிறார்கள் இல்லை. ஒரு கட்சி சாரா மக்கள் இயக்கம் பலமடையும் பொழுதுதான் இந்தக் குழப்பத்தைத் தடுக்கலாம்?

https://athavannews.com/2025/1437504

செம்மணிக்கு வந்த ஐநா - நிலாந்தன்

2 months 2 weeks ago

செம்மணிக்கு வந்த ஐநா - நிலாந்தன்

facebook_1750864473051_73436578627796932

2015க்குப் பின் நடந்த ஒரு முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் சம்பந்தர் முள்ளிவாய்க்காலுக்கு வருகை தந்திருந்தார். அங்கு அவரை நோக்கிக் கேள்விகள் கேட்கப்பட்டன. நிலைமை கொந்தளிப்பாக மாறியது. அப்பொழுது ஒரு பெண் உணர்ச்சிவசப்பட்டவராக சம்பந்தரை நோக்கி உரத்த குரலில் ஆவேசமாகக் கேள்விகளைக் கேட்டார். அவர் அப்பொழுது கறுப்பும் சிவப்புமான நிறச் சீலையை உடுத்திருந்தார்.

இது நடந்து சில ஆண்டுகளின் பின் யாழ்ப்பாணம் முத்தவெளியில் வான் படை கண்காட்சி ஒன்று இடம்பெற்றது. இதில் வான்படை உலங்கு வானூர்திகளில் மக்கள் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். அங்கே சம்பந்தரை கேள்வி கேட்ட அதே பெண் தனது வளர்ந்த மகனோடு அந்த உலங்கு வானூர்தியில்  அமர்ந்திருந்து, படமெடுத்து அதை முகநூலில்  பகிர்ந்திருந்தார்.

தமிழ் மக்களின் தலையில் குண்டுகளைப் போட்ட அரச படையின் உலங்கு வானூர்தி ஒன்றில் பிள்ளையோடு அமர்ந்திருந்து அந்த படத்தை போடுகிறார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் முள்ளிவாய்க்காலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சம்பந்தரை பார்த்து ஆவேசமாக கொதித்து எழுந்தார். இதில் எது சரி? சம்பந்தரை நோக்கிக் கொதித்தது சரியா? அல்லது உலங்கு வானூர்தியில் அமர்ந்திருந்து படம் எடுத்தது சரியா? அல்லது இரண்டுமே பிழையா?

அப்படித்தான் கடந்த புதன்கிழமை செம்மணிப் போராட்டக் களத்தில் இருந்து சில அரசியல்வாதிகள் அவமதிக்கப்பட்டவை உணர்ச்சிக் கொதிப்பினால் ஏற்பட்ட விளைவுகள்தான். தமிழரசுக் கட்சிக்குள் உள்ள சுமந்திரன் அணிக்கு எதிராக கட்சிக்கு உள்ளேயும் கட்சிக்கு வெளியேயும் கடுமையான அதிருப்தி உண்டு. இதுபோன்ற உணர்வுபூர்வமான சந்தர்ப்பங்களில் அது வெடித்துக் கிளம்பும்.

ஆனால் அந்த எதிர்ப்பை,கொதிப்பைக் காட்டியிருக்க வேண்டிய களம் செம்மணி அல்ல. குறிப்பாக தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் அதை காட்டியிருக்க வேண்டிய களம் மாட்டின் வீதியில் உள்ள கட்சியின் தலைமையகம் ஆகும். இது கடந்த ஆண்டிலேயே சம்பந்தப்பட்டவர்களுளுக்குச்  சுட்டிக்காட்டப்பட்டது. சுமந்திரன் தந்திரமான வழிகளில் கட்சிக்குள் தன் பிடியைப் பலப்படுத்தி வருகிறார் என்று கொந்தளிப்பவர்கள் மாட்டின் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தை முற்றுகையிடலாம். அங்கே தங்களுடைய எதிர்ப்பை காட்டுவதற்கு அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு.

ஆனால் தன்னார்வமாக ஒரு செயற்பாட்டு இயக்கம் கட்சி கடந்து முன்னெடுத்த ஒரு  நடவடிக்கைக் களம் அதற்குரியதல்ல. அதைக் கட்சிகள் ஒழுங்கமைக்கவில்லை. எனவே அதைக் குழப்புவதற்கும் அவர்களுக்கு உரிமை இல்லை. அப்படிப்பட்ட இடங்களில் சிவஞானத்தை அல்லது சாணக்கியனை அல்லது சந்திரசேகரனை மறித்து வைத்து கேள்விகளை கேட்பது வேறு, அவர்களை  அவமதிப்பது என்பது வேறு.

இது இப்படியே போனால் இனி எதிர்காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் எந்த ஒரு செயற்பாட்டு அமைப்பும்  கட்சி கடந்த அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது கடினமாகிவிடும். ஒரு செயற்பாட்டு அமைப்பு அல்லது மக்கள் அமைப்பு எதையாவது செய்யப் புறப்பட்டால் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து எத்தனை பேர் அதனை ஹைஜாக் பண்ண முயற்சிக்கிறார்கள்?

அணையா விளக்கு போராட்டக் களம் என்பது உள்ளூர் விடயம் ஒன்றுக்காக அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தோடு திறக்கப்பட்டது. எனவே அதற்கு ஓர் அனைத்துலக பரிமாணம் உண்டு. கட்சி சாராத அதுபோன்ற நடவடிக்கைகள் தமிழ் தேசிய பரப்பில் மிகக் குறைவு. ஆனால் அவற்றுக்குத்தான் புனிதம் அதிகம். அங்கேதான் கட்சி கடந்த தேசத் திரட்சி ஏற்படும். மெய்யான  பொருளில் செயல்பூர்வமாக தமிழ் மக்களை ஒரு இனமாக, ஒரு தேசமாகத் திரட்டும் களங்கள் அவை. எனவே அந்த இடத்தில் உட்கட்சிப் பூசல்களுக்கும் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கும் இடமில்லை.

கட்சி அரசியலை முன்னெடுப்பவர்கள் அந்தக் களங்களை கட்சி அரசியல் நோக்கத்தோடுதான் அணுகுவார்கள்; கையாளுவார்கள். அதில் சந்தேகமில்லை. இது தேசிய மக்கள் சக்திக்கும் பொருந்தும். ஆனால் அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்கும் ஒரு போராட்டக் களத்தில் எல்லாத் தரப்புக்களையும் ஒன்று திரட்டுவது அந்தப் போராட்டத்தின் நீதியைப் பலப்படுத்தும். கோழியைத் திருடினவனும் கோழியை வளர்த்தவனும் ஒன்றாகப் போராட முடியாது என்று ஒரு விளக்கம் கூறப்படலாம். இன அழிப்புக்கு மறைமுகமாக உடந்தையாக இருந்தவர்களும் இன அழிப்பை விசாரிப்பதற்கு அனைத்துலக பொறிமுறையை ஏற்றுக் கொள்ளாதவர்களும் இன அழிப்புக்கு எதிரான நீதியைக் கோரிப் போராடும் ஒரு களத்தில் வரக்கூடாது என்றில்லை. அவர்கள் அங்கே வருவது போராட்டத்தின் நியாயத்துக்கு வலுச்சேர்க்கும். அங்கே அவர்களை வரவழைத்ததே வெற்றிதான். அங்கே  வந்தால்தான் அரசியல் செய்யலாம் என்று ஒரு தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தைப் போராட்டம் ஏற்படுத்தியதே ஒரு வெற்றிதான்.

facebook_1750864701906_73436588226663647

மேலும் இன அழிப்பில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களித்தவர்கள் அல்லது தங்களுக்குரிய தார்மீகப் பொறுப்பை நிறைவேற்றாதவர்கள் என்று பார்த்தால் ஈழத் தமிழர்கள் இந்த பூமியில் உள்ள பெரும்பாலான அரசுகளையும் பெரு நிறுவனங்களையும் குற்றம் சாட்ட வேண்டியிருக்கும். தமிழ் மக்களை இன அழிப்பு செய்தவர்கள் என்று பார்த்தால் பிரித்தானிய பேரரசிலிருந்து தொடங்கி  உலகில் உள்ள எல்லாப் பேரரசுகளின் கைகளிலும் தமிழ் மக்களின் ரத்தம் உண்டு. ஏன் ஐநாவின் கைகளிலும்தான்.

எந்த ஐநாவிடம் தமிழ்மக்கள் நீதியைக் கேட்கின்றார்களோ,எந்த மேற்கு நாடுகளிடம் தமிழ் மக்கள் நீதியை எதிர்பார்க்கின்றார்களோ, இந்த மேற்கத்திய ராஜதந்திரக் கட்டமைப்பானது இறுதிக்கட்டப் போரில் தமிழ்  மக்களை கைவிட்டது. ஒருவகையில் அக்கால கட்டத்தில் நடந்த இன அழிப்புக்கு அவர்களும் பொறுப்பு. ஐநாவும் உட்பட.

செம்மணியில் போராட்டம் நடந்து கொண்டிருந்த பொழுதே காசாவில் இன அழிப்பும் நடந்து கொண்டிருக்கிறது. 16 ஆண்டுகளின் பின் மீண்டும் மேற்கு ஆசியாவில் ஒரு முள்ளிவாய்க்கால். 16 ஆண்டுகளுக்கு முன் முள்ளிவாய்க்காலில் எது நடந்ததோ அதுதான் இப்பொழுது காசாவில் நடந்து கொண்டிருக்கிறது. சிறு சிறு வித்தியாசங்கள். 16 ஆண்டுகளுக்கு முன் முள்ளிவாய்க்காலில் நடந்தவற்றை கையாலாகாத சாட்சியாக ஐநா பார்த்துக் கொண்டிருந்தது. இன்றைக்கு காசாவிலும் அதே நிலைமைதான்.

எனவே தமிழ் மக்கள் நீதிமான்ககளிடம்தான் நீதியைக் கேட்க வேண்டும் என்று தீர்மானித்தால் இந்த குரூர உலகிலே யாரிடமும் நீதியை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் அரசியலில் யாருமே சுத்தமான நீதிவான்கள் கிடையாது. அண்மையில், மேற்கு ஆசியாவில் யுத்தம் வெடித்தபோது தமிழ் முகநூல் உலாவிகள் பெரும்பாலும் ஈரானின் பக்கம்தான் நின்றார்கள். அதை ஈரானின் பக்கம் என்று கூறுவதை விடவும் இஸ்ரேலுக்கு எதிராக என்று கூறுவதே தகும். அதாவது காசாவில் இன அழிப்பை செய்யும் இஸ்ரேலுக்கு எதிரான கூட்டுணர்வு அது. அந்த இடத்தில் தமிழ் மக்கள் பெரும்பாலும் இன அழிப்புக்கு எதிராகத் திரண்டு காணப்பட்டார்கள்.

ஆனால் இறுதிக் கட்டப் போரில் ஈரான் யாருடன் நின்றது? ராஜபக்சக்களோடு தான். இஸ்ரேல் யாரோடு நின்றது? ராஜபக்சக்களோடுதான். ஏன் அதிகம் போவான்? 2009க்கு பின் பலஸ்தீன் அதிகார சபையானது மஹிந்தவை ஒரு விருந்தாளியாக அழைத்து நாட்டின் அதி உயர் விருதை அவருக்கு வழங்கியது. அது மட்டுமல்ல அவருடைய பெயரால் ஒரு வீதியையும் திறந்து வைத்தது. இது நடந்தது 2014இல். தமிழ் மக்கள் யாரை இன அழிப்பு செய்தவர் என்று குற்றம் சாட்டினார்களோ அவரை அழைத்து பலஸ்தீனர்கள் கௌரவித்தார்கள். அங்கே பாலஸ்தீனர்கள் நீதியின்  அடிப்படையிலோ அறம் சார்ந்தோ முடிவெடுக்கவில்லை.

பலஸ்தீனியர்கள் மட்டுமல்ல ஈரானியர்கள்,இஸ்ரேலியர்கள் முதலாக இந்த பூமியில் உள்ள எல்லா அரசுடைய தரப்புக்களும் ராணுவ, பொருளாதார, அரசியல் நலன்களின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்கும். அறநெறிகளின் அடிப்படையிலோ நீதி நியாயங்களில் அடிப்படையிலோ அல்ல.

எனவே தமிழ் மக்கள் உலக சமூகத்திடம் நீதியை எதிர்பார்க்கும் பொழுது, நாம் நீதியாகப் போராடுகிறோம், நீதிக்காகப் போராடுகிறோம்,எனவே உலகம் எங்களுக்கு நீதியை வழங்கிவிடும் என்றெல்லாம் அப்பாவித்தனமாக நம்பத் தேவையில்லை. குறிப்பாக ஐநாவை பொருத்தவரை அது முதலாவதாக அரசுகளின் அரங்கம். இரண்டாவதாககத்தான் அரசற்ற தரப்புகளின் அரங்கம். அங்கே அரசுகளின் நீதி தான் உண்டு. அங்கு மட்டுமல்ல இந்த பூமியில் எங்கும் அரசுகளின் நீதிதான் உண்டு. தூய நீதி கிடையாது.

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வரப்போகிறார் என்ற தகவல் கிடைத்ததும் ஒரு தொகுதி தமிழ் சிவில் சமூகங்கள் இணைந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கூட்டாக ஒரு கடிதம் அனுப்பின. கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தில் இயங்கி வருகின்ற ஸ்ரீலங்காவைப் பொறுப்புக்கூற வைப்பதற்கான ஓர் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குள் வருவதற்கு தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கங்கள் விசா வழங்கவில்லை. அந்த அலுவலகமானது சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்குரியது. இலங்கைக்குள் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கு அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு இன்றுவரை விசா வழங்கப்படவில்லை.

IMG-20250627-WA0001-1024x493.jpg

இதைச்  சுட்டிக்காட்டி இப்படிப்பட்ட ஒரு நாட்டுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வருவது என்பது அந்த நாடு செய்வதை அங்கீகரிப்பதாகக் கருதப்படும் என்ற பொருள்பட சிவில் சமூகங்கள் கருத்து தெரிவித்தன. அக்கடிதத்தைத் தொடர்ந்து ஐநா அலுவலர்களுக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையே ஒரு மெய்நிகர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. புதிய இலங்கை அரசாங்கத்தை ஐநாவால் கையாளத்தக்க தூரத்துக்குள் வைத்திருப்பதென்றால் இந்த அரசாங்கத்தோடு “என்கேஜ்” பண்ண வேண்டும் என்று ஒரு விளக்கம் ஐநாவிடம் இருப்பதாக தெரிந்தது. எனவே, தமிழ் சிவில் சமூகங்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளாமல் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வருமிடத்து, அவர் செம்மணிப் புதைகுழியைப் பார்வையிட வேண்டும் என்று சிவில் சமூகங்கள் கோரிக்கை விடுத்தன. ஐநா அதை ஏற்றுக்கொண்டது.

சிவில் சமூகங்களுக்கு ஐநா  கூறியது ஒரு புதிய விளக்கம் அல்ல. கடந்த 16 ஆண்டுகளில் மேற்கு நாடுகள் தமிழ் சிவில் சமூகங்களுக்கு அடிக்கடி கூறி வந்த ஒரு விளக்கம்தான். குறிப்பாக ராஜபக்சக்களை எதிர்நிலைக்கு தள்ளினால் அவர்கள் சீனாவை நோக்கிப் போய்விடுவார்கள்; எனவே அவர்களோடு “என்கேஜ்” பண்ணுகிறோம் என்று பெரும்பாலான நாடுகள் கூறின. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையோடு என்கேஜ் பண்ண வேண்டும் என்று முடிவெடுத்ததற்கு அவர்கள் வெளிப்படையாகக் கூறும் காரணங்களை விட ஆழமான ராஜதந்திர இலக்குகள் உண்டு. இப்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது ஜேவிபியை அடித்தளமாகக் கொண்டது. ஜேவிபி சீன சார்பு இடதுசாரி மரபில் வந்தது. தேசிய மக்கள் சக்தியின் முடிவெடுக்கும் அதிகாரமுடைய தலைவர்களில் ஒருவராகிய ரில்வின் சில்வா அண்மையில் சீனாவில் காணப்பட்டார். சீனாவின் செல்வாக்குப் பொறிக்குள் எளிதாக விழக்கூடிய ஒரு அரசாங்கத்தை தங்களால் கையாளப்படத்தக்க ஒரு எல்லைக்குள் வைத்திருக்க வேண்டும் என்று ஐநாவும் சிந்திக்கின்றது; அமெரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட மேற்கு நாடுகளும் இந்தியாவும் சிந்திக்கின்றன. எனவே இந்த அரசாங்கம் சீனாவை நோக்கிப் போவதை தடுக்கும் நோக்கத்தோடு இந்த அரசாங்கத்தோடு என்கேஜ் பண்ண வேண்டும் என்று மேற்கண்ட தரப்புக்கள் சிந்திக்கின்றன.

இந்த ராஜதந்திர இலக்கை முன்வைத்துத்தான் மனித உரிமைகள் ஆணையர் இலங்கைக்குள் வந்தார். இப்படிப்பட்டதோர் ராஜதந்திரச்  சூழலில், ஐநா தமிழ் மக்களுக்குத் தூய நீதியைப் பெற்றுத் தராது.ஆனால் அதற்காக தமிழ் மக்கள் போராடாமல் இருக்க முடியாது .

அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்கள் ஒரு இனமாக ஒரு தேசமாக திரண்டு போராடினால்தான்-அந்த திரட்சிதான்-அவர்களுடைய பேரத்தை கூட்டும். பேரபலம் அதிகரித்தால்தான் நாடுகளும் உலகப் பொது மன்றங்களும் தமிழ் மக்களை நோக்கி வரும். எனவே ஒரு இனமாக திரள்வதற்காக தமது பேர பலத்தை அதிகப்படுத்துவதற்காக தமிழ் மக்கள் போராட வேண்டும். ஐநா நிலைமாறு கால நீதியைத் தருமா? அல்லது பரிகார நீதியைத் தருமா? என்பதல்ல இங்கு கேள்வி. ஓர் உலகப் பொது மன்றம் என்ற அடிப்படையில் ஐநாவோடுதான் தமிழ் மக்கள் என்கேஜ் பண்ணவும் வேண்டும். நவீன ராஜதந்திரம் எனப்படுவது என்கேஜ் பண்ணுவதுதான்.எனவே தமிழ்மக்கள் உலக சமூகத்துடன் என்கேஜ் பண்ணுவது என்று சொன்னால் முதலில் தங்களை ஒரு தரப்பாக பலப்படுத்திக் கொள்ள வேண்டும். நீதிக்கான போராட்டத்தில் உலகத்தைத் தம்பக்கம் திரட்ட வேண்டுமென்றால் முதலில் தமிழ்மக்கள் தங்களைத் தாங்களே திரட்டிக்கொள்ள வேண்டும்.செம்மணியில் நடந்தது போன்ற போராட்டங்கள் தமிழ் மக்களை அவ்வாறு கட்சி கடந்து ஒரு தேசமாகத் திரட்டக் கூடியவை. போராட்ட நெருப்பை அணைய விடாமல் பாதுகாப்பவை.

https://www.nillanthan.com/7483/#google_vignette

இலங்கை முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் உரிமைகளில் விருத்தசேதனம் ஏற்படுத்தும் தாக்கம்

2 months 2 weeks ago

இலங்கை முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் உரிமைகளில் விருத்தசேதனம் ஏற்படுத்தும் தாக்கம்

21551-35jpg_33312-e1750843553346.jpg?res

Photo, WORLD VISION

“நான் பெண் குழந்தைகளுக்கான விருத்த சேதனம் பற்றிய ஆய்வாளர்களில் ஒருவராக ஆய்வினை மேற்கொண்டேன். இவ்வாய்வினைச் செய்யத் தொடங்கிய பிறகே, இது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று எனவும், அல் குர்ஆன் மற்றும் ஹதீஸிலோ கூறப்பட்டவில்லை என்பதோடு, மூடநம்பிக்கைகள், சமூக வழக்காறுகளிலிருந்து மட்டுமே பரம்பரை பரம்பரையாக இவை பின்பற்றப்படுகின்றன என்ற உண்மையை நான் அறிந்து கொண்டேன். அதனால், நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். கத்னா பற்றிய  விளக்கமின்றி நான் எனது மகளுக்கும் கத்னாவைச்  செய்து அவளுடைய பாலியல் ரீதியான  உணர்வைக் கட்டுப்படுத்தக்  காரணமாக இருந்துள்ளேன் என்பதை நினைக்கும்போது கவலையாக உள்ளது. என்னுடைய மன நிலையினை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இனிவரும் சந்ததிக்கு இவ்வாறான அநீதி இடம்பெறும்போது, அதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பேன்.”

“எனக்குக் கத்னா செய்யப்பட்டது பற்றி நான் முதன் முதலில் அறிந்தபோது, நான் மிகவும் ஏமாற்றப்பட்டதாக உணர்தேன். என்னுடைய அனுமதியின்றி என் உடலில் ஏதோ ஒரு விடயம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்வது மிகவும் கடினமானதாக இருந்தது. நான் யாரின் மீது  கோபப்படுவேன் என்று கூட  எனக்குத் தெரியவில்லை. ஆதலால் நான் என் மீதே கோபமடைந்தேன்.”

இலங்கையில் முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் உடல், உள நலம் மற்றும் உரிமைகளில் விருத்தசேதனம் ஏற்படுத்தும் தாக்கம் (FEMALE GENITAL MUTILATION OR CUT) என்ற தலைப்பில் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இவ்வாய்வின் தலைமை ஆய்வாளராக ஷிறீன் அப்துல் சரூர் செயற்பட்டுள்ளார். அர்ப்பணிப்பு மிக்க ஒன்பது ஆய்வாளர்கள் குழுவின் உதவியுடன் ஷிறீன் சரூன் மேற்கொண்டிருக்கும் இந்த ஆய்வானது, இலங்கையின் ஒன்பது மாவட்டங்களில் முஸ்லிம் சமூகத்தில் கத்னா எனும் பொதுவான பெயரில் செய்யப்படும் பெண்ணுறுப்புச் சிதைப்பு/ வெட்டுதலின் (FGMC) பிடிவாத நிலைப்பாடு குறித்தும் அதன் பாதிப்புப் பற்றியும் விளக்கி நிற்கிறது. ஏறத்தாழ 1000 பங்குபற்றுநர்களை ஈடுபடுத்திய இவ்வாய்வில், இச்செயன்முறையானது கலாசாரம் எனும் பெயரிலும் சமூக அனுசரிப்பிற்காகவும் மதம், நல்லொழுக்கம், துப்புரவு குறித்த கருத்துத் திரிபுகளிலும் ஆழமாக வேரூன்றிக் காணப்படுவது தெரியவந்திருப்பதாக ஷிறீன் குறிப்பிடுகிறார்.

இந்த ஆய்வு குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

“குறிப்பாகச் சிசுக்களையும் சிறுமிகளையும் பாதிப்புக்குள்ளாக்கும் இந்நடைமுறையானது இரகசியமாகவும் வற்புறுத்தப்பட்டும் பிழையான தகவலிலும் முறையான சம்மதம் தெரிவிக்கப்படாமலும் மேற்கொள்ளப்பட்டு வருவதை எமது ஆய்விற் காணக்கூடியதாக இருந்தது. மனவுணர்வு அழுத்தத்தை ஏற்படுத்தி, உடல் ரீதியாகத் தீங்காக அமையும் கத்னா ஆனது பெண் பாலியல்பைக் கட்டுப்படுத்தக் கையாளப்படும் நீண்டகாலப் பாலின விதிகளுடனும் அதிகார சக்திகளுடனும் பின்னிப் பிணைந்துள்ளது.   பாரம்பரியமாகக் கத்னாவைச் செய்யும் பெண்கள் (ஒஸ்தா மாமிகள்) வருமானத்திற்காக இத்தீங்குமிகு நடைமுறையைத் தொடர்ந்தும் செய்கிறார்கள். சில கிளினிக்குகளிலும் வைத்தியசாலையிலும் கத்னாவை மருத்துவ ரீதியாக்கியுள்ளனர். படித்த பெண்கள், இளைஞர்கள் மற்றும் சில முற்போக்கான மத ஆர்வலர்கள் மத்தியில் இதற்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்துள்ள அதேவேளை, சமூக அழுத்தம், மதம்சார் தவறான புரிதல்கள் மற்றும் சட்ட ரீதியான தெளிவின்மை காரணமாக கத்னா இன்னமும் தொடரத்தான் செய்கிறது.

கத்னாவை ஆதரிப்பவர்கள் ஏனைய சத்திர சிகிச்சை நடைமுறைகளுடன் இதனை ஒப்பிட்டு இந்நடைமுறையானது மிகவும் மோசமான ஒரு விடயம் அல்ல எனும் நிலைப்பாட்டினை வலியுறுத்துகிறார்கள். இது வெறுமனே பெண் குறியின் அளவினைக் குறைத்துக் கொள்ளும் தெரிவு செய்யப்பட்டு தோல்  நீக்கு முறையான பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையே என்பது அவர்களது வாதம். அத்துடன், வளர்ந்த பெண்களில் அவர்களின் சம்மதத்துடன் மட்டுமே இதனைச் செய்வதாகக் கூறிக்கொள்கிறார்கள்.

பல ஆண்களும் பெண்களும் இது குறித்து வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பதை இந்த ஆய்வு விளக்குகிறது. விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் கல்வி அறிவு ஊடாக இதனை இல்லதொழிக்கும் முயற்சிகளைச் சிலர் ஆதரிக்கிறார்கள். மற்றவர்கள் பாரம்பரியம் அல்லது மதக் கடப்பாடுகள் குறித்த பொய்யான நம்பிக்கைகள் அடிப்படையில் இதனைப் பாதுகாத்து நிற்கிறார்கள். சமூகம் என்ன சொல்லுமோ, எனும் பயம், பாலியல் குறித்துக் கதைக்கத் தயக்கம், பரம்பரை பரம்பரையாக நிலவும் பதற்றம் என்பவை முற்போக்கான சிந்தனைகளுக்கு மேலும் தடையாகக் காணப்படுகின்றன. ஆயினும், இச்செயற்பாட்டு ஆய்வின் மூலம், மாற்றத்திற்குச் சாத்தியமான முன் புள்ளிகளை நாம் இனங்கண்டு கொண்டோம். நாம் அணி திரட்டிய சுகாதாரப்பணித் தொழில்வல்லுநர்கள், நம்பிக்கைக்குரிய மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், இளம் தாய்மார் மற்றும் மிக முக்கியமாகக் கத்னாவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் இதில் உள்ளடங்கினர்.

சட்ட மறுசீராக்கம், மத விளக்கம், சமூக அடிப்படையிலான விழிப்புணர்வு, உளவியற் சமூக ஆதரவு, சுகாதாரக் கல்வியறிவு ஆகியவை உள்ளடங்கலாகச் சிறுமிகளது பாலியலுடன் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகளில் முக்கிய கவனம் செலுத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட, பல்பிரிவு அணுகுமுறை ஒன்றினை நாம் பரிந்துரைக்கிறோம். கத்னா ஆனது இரகசியமாக, சமூக அங்கீகாரமாகத் தொடர அனுமதிக்கும் சமூக மரபுகளை எதிர்த்து நிற்கும் அதேவேளை, சிறுமிகளின் உடல் தனித்துவம், பாதுகாப்பு, பாலியல் நலன் குறித்த அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதனை முன்னிலைப்படுத்துவது மிக முக்கியம் ஆகும்.

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தில் கத்னா நடைமுறையைச் சுற்றியுள்ள ஆழமான கலாசார மற்றும் சிக்கலான மத நிலைப்பாடுகளை இச்செயற்பாட்டு ஆய்வு வெளிப்படுத்தியுள்ள அதேவேளை, ஒரு விடயத்தைத் தெட்டத் தெளிவாக முன்வைத்துள்ளது. பெண் பிள்ளைகளில் நடைமுறைப்படுத்தும் இச்சடங்கு இஸ்லாமிய மதக் கோட்பாடுகளிலிருந்து வரவில்லை; மாறாக, பாரம்பரியமாக, சமூக நிலைப்பாடாக,   தவறான தகவலாகப் பின்பற்றப்படுகிறது. அவற்றிற்கு விளக்கங்களாக முன்வைக்கப்படும் நம்பிக்கை, ஆரோக்கியம், நல்லொழுக்கம் ஆகியவை குரானிலோ அன்றி ஹதீஸிலோ வலிதாக ஆதாரமளிக்கப்படவில்லை. மாறாக, இந்நடைமுறையானது ஓர் அதிகாரக் கட்டுப்பாடாக, பாலியல் விதிகளை வரையறுப்பதாக, பெண்களின் தனித்துவத்தைக் குறிப்பாக அவரகளது உடல்கள் ஆளுமை மற்றும் பாலியல்பைக் குறுக்கிக் கொள்ளும் ஆணாதிக்க அதிகாரத்தை வலுப்படுத்துவதாக இந்நடைமுறை அமைவது எமது ஆய்வில் அவதானிக்கப்பட்டுள்ளது.

கத்னா குறித்த நிலைப்பாடானது மத நம்பிக்கை, கலாசாரப் பாரம்பரியம், மாறுபட்ட விழிப்புணர்வு  மட்டங்கள் போன்றவற்றால் சமூகத்தில் அழமாக ஊடுருவியுள்ளமையை ஆய்வின் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. இதனை ஆதரிக்கும் பெண்கள் மத விளக்கங்களை ஆதாரப்படுத்தி, ஹதீஸில்  கட்டாயம் எனக் கூறப்படுவதாக வாதிடுகிறார்கள். பெண் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் இதன் பாரதூர விளைவுகளை மறுப்பவர்களாகவோ அன்றி அது குறித்து அறியாதவர்களாகவோ காணப்படுகிறார்கள். மறுபுறத்தே, கத்னாவை எதிர்ப்பவர்கள், குறிப்பாகப் பிரத்தியேக அனுபவமுள்ள அல்லது பாதக அனுபவங்களைக் கண்ட பெண்கள், தொற்று மற்றும் பாலியல் உணர்வு குறைதல் போன்ற உடலியல் சிக்கல்கள் ஏற்பட்டதையும் மனக் காயம், திருமணத்தில் அதிருப்தி, விவாகரத்து நிகழ்ந்தமை உட்பட்ட உளவியற் பாதிப்புகள் குறித்தும் பேசுகிறார்கள். ஆண்களின் நன்மைக்காகத் தமது பாலியல்பு மற்றும் உடல்சார் ஆளுமையினைத் தாம் இழக்கக் காரணமாக கத்னா அமைந்துள்ளதாகப் பெண்கள் கூறுவதும் குறிப்பிடத்தக்களவில் காணப்படுகிறது. தகுதியற்றவர்கள் அதனைச் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பாரம்பரியமாக இதனைச் செய்பவர்களால் பெண் பிள்ளைகளது ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்களை அதிகரிக்க ஏதுவாகிறது.

அத்தோடு, இந்த நடைமுறை பற்றிக் குறிப்பிடத்தக்களவில் ஒரு தெளிவற்ற,  தவறான தகவல்/ புரிதல் காணப்படுவதை இவ்வாய்வு சுட்டிக் காட்டியது. பங்குபற்றுநர்களில் 383 பேர் தமது மகள்களுக்கு இதனைச் செய்ய உத்தேசித்துள்ள அதேவேளை, ஏறத்தாழ அதற்குச் சமனான எண்ணிக்கையினர் தீர்மானிக்க முடியாமலோ அல்லது நடுநிலைமையாகவோ காணப்பட்டார்கள் அல்லது பதிலளிக்க மறுத்தார்கள். இத்தரவினுள் ஒரு முரண்பட்ட நிலைமையானது சமிக்ஞையாகக் காணப்பட்டாலும் ஒரு மாற்றத்திற்கான மறைமுக வழியாகத் தென்பட்டது. மத ரீதியாகக் குழப்பம் ஒன்று நிலவுகிறது. ஏனெனில், 398 பங்குபற்றுநர்கள் அதனை மதக் கடப்பாடாகக் கருதுகின்றனர். ஆனால், இஸ்லாமிய அறிஞர்களும் பின்பற்றுநர்களும் இது குரானிற்கு அமைவான தேவையோ அல்லது ஹதீஸில் நம்பப்படுவதோ இல்லை எனத் தெளிவுபடுத்துகிறார்கள். அத்துடன், சட்ட ரீதியான விழிப்புணர்வு மிகக் குறைவு. பலருக்கு அதன் சட்ட நிலைப்பாடு குறித்துத் தெளிவில்லை. பங்குபற்றுநர்களிற் பலர் கத்னா நடைமுறை நன்மையானது என்பதை விடத் தீங்குமிக்கது எனக் கருதிய போதிலும், சுகாதாரம் குறித்த புரிதலும் வேறுபட்டுக் காணப்படுகிறது. ஆண்களையும் தீர்மானம் எடுக்கும் செயன்முறையாக்கத்தில் ஈடுபடுத்தி, பாரம்பரியமாக ஆழமாக விதைக்கப்பட்டுள்ள கதைகளையும் தவறாக விளக்கப்பட்டுள்ள மதப் போதனைகளையும் நீக்குவதில் கவனம் செலுத்தி விழிப்புணர்வு அதிகரிக்கப்படுதல், உரையாடல், சட்ட சீராக்கம் ஊடாக இந்த நடைமுறையை இல்லாதொழிக்கலாம் என அவர்களிற் பலர் நம்புவது ஊக்கம் தரும் செய்தியாக அமைகிறது.

சமூக வற்புறுத்தலாக மிக வலுவாகப் பாரம்பரியமாகச் சத்தமில்லாமல் நிகழ்ந்தாலும் கூட எதிர்ப்பும் அதிகரித்துள்ளது. இளம் பெண்கள், சில மத அறிஞர்கள், மற்றும் சுகாதார தொழில் வல்லுநர்கள் சமூகத்தில் தற்போதுள்ள நிலைப்பாட்டை எதிர்த்து நிற்க ஆரம்பித்துள்ளனர். அவர்கள் குரல் பெரும்பாலும் தனித்து ஒதுக்கப்பட்டாலும் கூட துணிகரமானது என்பதுடன் கதைக் களத்தைத் திசை திருப்புவதில் முக்கியமானதாக ஒலிக்கிறது. இருப்பினும், மாற்றம் சற்றே மெதுவாகத் தான் நிகழ்கிறது. இதற்குக் காரணம் பிரிவுபட்ட சமூகம், அச்சம், களங்கம், பரம்பரை இடைவெளி முரண்பாடுகள் மற்றும் பலமான சட்டக் கட்டமைப்புகள் இல்லாமை ஆகும்.

இச்செயற்பாட்டு ஆய்வானது எளிமையான தீர்வுகளை முன்வைக்கவில்லை. இதன் அணுகுமுறையும் மட்டுப்படுத்தப்பட்டது. ஆயினும், விழிப்புணர்வு, உரையாடல், நம்பிக்கை ஆகியவற்றைக் கட்டியெழுப்பி முன்னோக்கிச் செல்லககூடிய வழியினைக் காண்பித்துள்ளது. கத்னாவை இல்லாது செய்வது என்பது உண்மையைப் பேசககூடிய மதத் தலைவர்கள்/ அறிஞர்கள், தீங்கான செயற்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கக் கூடிய சுகாதார சேவையாளர்கள், சிறுமிகளதும் பெண்களதும் உரிமைகளை மதிக்கும் சட்ட முறைமைகள் மற்றும் மிக முக்கியமாகக் கத்னாவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் வலுவூட்டப்பட்டுத் தமது கதைகளை அவமதிப்பின்றிப் பொதுவெளியில் பகிரக்கூடியவர்கள் எனச் சமூகத்தில் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய விடயமாகும்.”

முழுமையாக அறிக்கை – https://maatram.org/wp-content/uploads/2025/06/FGMC-Report-Tamil.pdf

https://maatram.org/articles/12147

அரச நிறுவனங்கள் நீதியைப் பாதுகாத்தால் நிறுவன ரீதியான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த முடியும்

2 months 2 weeks ago

25 JUN, 2025 | 09:14 AM

image

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் அண்மைய ஒரு  தீர்ப்பில் சுயாதீனமான அரச நிறுவனங்கள் வகிக்க வேண்டிய பாத்திரத்தை எடுத்துக் கூறியிருக்கிறது. இஸ்ரேல், பாலஸ்தீனம் பற்றிய தனது கருத்துக்களை சுவரொட்டி மூலம் வெளிப்படுத்தியமைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்ட முஹம்மட் லியாவுதீன் முஹம்மட் ருஸ்டியின் வழக்கில்  கோட்பாட்டு அடிப்படையிலான தலையீட்டைச் செய்தமைக்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை தேசிய சமாதான பேரவை வெகுவாக மெச்சுகிறது.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதனாலும் துஷ்பிரயோகம் செய்யப்படுவதனாலும் தோன்றுகின்ற ஆபத்துக்களை இந்த வழக்கு தெளிவாக வெளிக்காட்டுகிறது. ருஸ்டியின் கைது இன, மத அடிப்படையிலேயே இடம்பெற்றிருக்கிறது போன்று தோன்றுகிறது. எந்தவிதமான சான்றும் இல்லாமலேயே ருஸ்டி பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறார்.

அவரின் சுவரொட்டியில் காணப்பட்ட சுலோகம் ஒரு குற்றச்செயலாக அமையவில்லை என்பதை பொலிசார் ஏற்றுக்கொண்டிருக்கின்ற போதிலும், அவர் கைதுசெய்யப்பட்டு, ஒரு மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படாமல் தடுத்துவைக்கப்பட்டார். 

பொலிசாரின் உத்தியோகபூர்வ தகவல்களில் அவர் மனநிலை குழம்பியவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார்.  அவர் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அவரது சுதந்திரத்தை தடுக்கின்றன. 

குறிப்பாக, இன, மத அடிப்படையிலேயே ருஸ்டியின் கைது இடம்பெற்றிருக்கிறது போன்று தோன்றுவது கவலையைத் தருகிறது. ருஸ்டி " தீவிரவாதமயப் போக்கை " கொண்டிருப்பதாக பொதுப்படையான,  பாரபட்சமான கற்பிதத்தின் அடிப்படையிலேயே  பொலிசார் தீர்மானித்திருப்பதை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டறிந்திருக்கிறது.

அவர் ஒரு முஸ்லிமாக இல்லாமல் இருந்திருந்தால், அவ்வாறு அவருக்கு நடந்திருக்காது என்றும் ஆணைக்குழு கூறியிருக்கிறது.   சட்டத்தின் முன் சகலரும் சமம் என்ற ஜனநாயகக் கோட்பாட்டையும் இனம் அல்லது மதத்துக்கு அப்பால் சகல குடிமக்களும் சமத்துவமான பாதுகாப்பை பெறுவதற்கான  அரசியலமைப்பு உத்தரவாதத்தையும் பாரதூரமாக மீறுவதாக இந்தச் அமைந்திருக்கிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை அவசரமாக இரத்துச் செய்ய வேண்டிய தேவையை இந்த வழக்கு மீண்டும் ஒரு தடவை வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறது. பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு அவசியமான ஒரு கருவியாக பயங்கரவாத தடைச்சட்டம் பல தசாப்தங்களாக நியாயப்படுத்தப்படடு வந்திருக்கிறது. ஆனால்,  உண்மையில் எதிர்ப்பை ஒடுக்குவதற்கும் சிறுபான்மைச் சமூகங்களை அச்சுறுத்துவதற்கும் எதேச்சையான தடுப்புக் காவல்களை நியாயப்படுத்துவதற்குமான ஒரு பொறிமுறையாகவே அந்த சட்டம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் நம்பகத் தன்மையான சான்றுகள் இல்லாமல் ஆட்களை தடுத்துவைப்பதற்கு அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  ஆனால், நீதிமன்ற விசாரணைகளின் போது குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல் இறுதியில் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்ட வேண்டும் என்பதுடன் அதன் ஒடுக்குமுறை அம்சங்களை வேறுபட்ட பெயர்களில் மீண்டும் அறிமுகப்படுத்தக்கூடிய ஒரு சட்டத்தினால் பயங்கரவாத தடைச்சட்டம் பதிலீடு செய்யப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டை தேசிய சமாதான பேரவை மீணடும் வலியுறுத்துகிறது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிபாரிசுகளை ஆதரிக்கும் நாம் அவற்றை தாமதமின்றி நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பாக, ருஸ்டியின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருப்பதற்காகவும் அவரது நற்பெயருக்கும் வாழ்வாதாரத்துக்கும  ஏற்பட்ட பங்கத்துகாகவும்  ஆணைக்குழு கேட்டிருப்பதை போன்று அவருக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று நாம் கோருகிறோம். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச அமைப்புக்களினால் ஆட்கள் இன,மத அடிப்படையில் சோதனை செய்யப்படுவதை தடுக்கக்கூடிய தெளிவான உத்தரவாத ஏற்பாடுகள் நிறுவப்பட வேண்டும் என்றும் நாம் கோருகிறோம்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மிகுந்த உன்னிப்பான விசாரணையும் சட்ட நியாயப்பாடும் நிறுவன நேர்மைக்கு ஒரு வகைமாதிரியானதாக விளங்குகின்றன. கடந்த காலத்தில் அரச பொறுப்புக்கூறல் மீதான மக்களின் நம்பிக்கை மிகவும  தாழ்ந்த நிலையிலேயே இருந்தது. தற்போது நிலைவரம் நன்மைக்கு மாறிவருகின்றது.  சுயாதீனமான பொது நிறுவனங்கள் துணிச்சலுடனும் தெளிவுடனும் செயற்படும்போது பயனுறுதியுடைய மேற்பார்வையும் நீதியும் உண்மையில் சாத்தியம் என்பதை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் நிரூபிக்கிறது.

ருஸ்டியின் விவகாரம் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படாத  அதிகாரத்தினாலும் தப்பபிப்பிராயத்தினாலும் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் சகல குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் அரச நிறுவனங்கள் வகிக்கக்கூடிய முக்கியமான பாத்திரத்தையும் உணர்த்தி நிற்கிறது.

https://www.virakesari.lk/article/218382

நாடு அனுரவோடு... வீடு வீணையோடு’

2 months 2 weeks ago

நாடு அனுரவோடு... வீடு வீணையோடு’

முருகானந்தன் தவம்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில்  யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளின் முழு ஆட்சி அதிகாரத்தை தாங்களே கைப்பற்றுவோம், ஆட்சி அமைப்போம் என்று சூளுரைத்த இலங்கை தமிழரசுக் கட்சி யாழ். மாவட்டத்தில் உள்ள முக்கிய சில சபைகளைப் பறிகொடுத்துள்ள நிலையில், தமிழினத் துரோகி என தங்களினாலேயே குற்றம்சாட்டப்பட்ட  ஈ.பி.டி.பி. (வீணை) டக்ளஸ் தேவானந்தாவின் காலடி சென்று மண்டியிட்டதன் மூலம் அவரின் கட்சி ஆதரவுடனேயே சில யாழ். மாநகரசபை உள்ளிட்ட சில சபைகளைக் கைப்பற்றியுள்ளது. 

‘நாடு அனுரவோடு ஊர் எங்களோடு’ என்றார்  தமிழரசின் தலைவர் ஒருவர். ஆனால், இன்று ‘நாடு அனுரவோடு... வீடு வீணையோடு’ என்றவாறாக வடக்கின் குறிப்பாக யாழ். மாவட்டத்தின் பல உள்ளூராட்சி சபைகளைத் தமிழரசு கைப்பற்றியுள்ளது.

தமிழ் தேசியக் கட்சிகளின் தாய் கட்சி என போற்றப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியே வடக்கின் குறிப்பாக யாழ். மாவட்டத்தின்   ஆட்சியை, மேயர், பிரதி மேயர், தவிசாளர், பிரதி தவிசாளர் பதவிகளை தாங்களே கைப்பற்ற  வேண்டுமென்ற அதிகார ஆசையினால் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஆதரவைப் புறக்கணித்து,அவர்களின் சில நிபந்தனைகளை நிராகரித்து விட்டு பேரினவாதிகளினதும் துரோகிகளினதும் ஆதரவோடு சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றி வருகின்றது.  

பேரினவாதக் கட்சிகளான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ரணில் விக்ரமசிங்கன் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழினத் துரோகி என இவர்களினாலேயே குற்றம் சாட்டப்பட்ட டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றே வடக்கின் சபைகளைக் கைப்பற்றி தமிழரசுக் கட்சி கட்சி மிகப்பெரும் காட்டிக்கொடுப்பையும் துரோகத் தனத்தையும் தமிழ்த் தேசியத்திற்கும் தமிழினத்திற்கும் செய்துள்ளது.

வடக்கிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்றவர்கள் ஆட்சியமைக்க நாம் ஆதரவளிப்போம். அதேவேளை, இரண்டாவது இடத்தில் நாம் இருந்தால் எமக்குப் பிரதி மேயர், அல்லது பிரதி தவிசாளர் பதவி தரவேண்டும் என்ற நிபந்தனையை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய பேரவை- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வைத்திருந்தது. அத்துடன், ஒரு சில சபைகளில் தமக்கு பிரதி தவிசாளர் பதவி வேண்டுமென ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் (சங்கு) கோரியிருந்தது. 

ஆனால், யாழ். மாநகரசபையை ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளின் எந்தவொரு ஆதரவுமின்றி, முழுமையாகக் கைப்பற்றத் தமிழரசு   திட்டமிட்டது. அதனால் அவர்களை நிராகரித்து விட்டு ஈ.பி.டி.பியின் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமிழரசு சரணாகதி அடைந்தது. அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றினுடனும் இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டு ஆதரவு கோரியது.

யாழ். மாநகரசபையில் மொத்தமாக 45 ஆசனங்கள் உள்ளன. இந்நிலையில், 2025 மே 6இல் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின்படி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, 1,0370, வாக்குகள் பெற்று 13, ஆசனங்களையும்  தமிழ்த் தேசிய பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 9,124 வாக்குகள் பெற்று, 12, ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி, 7,702, வாக்குகள் பெற்று 10 ஆசனங்களையும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, 3,567 வாக்குகள் பெற்று 4, ஆசனங்களையும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி, 3,076, வாக்குகள் பெற்று 4 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி, 587  வாக்குகள் பெற்று 1 ஆசனத்தையும்  ஐக்கிய மக்கள் சக்தி, 464, வாக்குகள் பெற்று 1 ஆசனத்தையும்  பெற்றிருந்தன.

யாழ். மாநகரசபையில் ஆட்சியமைக்கும் கட்சி 23 ஆசனங்களை பெறவேண்டும்.
 தமிழரசுக் கட்சி மேயர் வேட்பாளராக நிறுத்திய மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளைப் பெற்று  யாழ். மாநகர சபையின் மேயராக தெரிவு செய்யப்பட்டார்.

தமிழரசுக் கட்சி 13  ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்த நிலையில், ஈ.பி.டி.பியின் 4 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் 1 ஆசனம், ஐக்கிய தேசியக் கட்சியின் 1 ஆசனம் என்பவற்றை பெற்றே 19 ஆசனங்களை   பெற்றுக்கொண்டது. எனினும், பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 23 ஆசனங்கள் தேவையென்பதனால், யாழ். மாநகரசபையில் சிறுபான்மை ஆதரவுடனேயே தமிழரசு ஆட்சியமைத்துள்ளது.

அதேவேளை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிறுத்திய மேயர் வேட்பாளர் -தமிழ் மக்கள் பேரவை-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 12 ஆசனங்கள், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் 4 ஆசனங்களுடன் 16 ஆசனங்களைப் பெற்றிருந்த நிலையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களுடன் நடு நிலை வகித்தது.

தமிழ்த் தேசியத்தைக் கைவிட்டு மேயர் பதவியைப் பெற கஜேந்திரகுமார் விரும்பியிருந்தால் தேசிய மக்கள் சக்தியின் 10 ஆசனங்கள் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் 4 ஆசனங்களைப் பெற்று 26 ஆசனங்களுடன் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்திருக்க முடியும். ஆனால், அவர் தமிழ்த் தேசியக் கொள்கைக்காக அதனைச் செய்யவில்லை.

ஆனால், ஈ.பி.டி.பி., ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்க மறுத்திருந்தால் தமிழரசு நிச்சயம் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவைக் கோரியிருக்கும். ஏனெனில், தமிழரசுக் கட்சிக்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எதிரிகளே தவிர, பேரினவாதக் கட்சிகளோ துரோகிக் கட்சிகளோ எதிரிகள் கிடையாது.

தமிழரசின் தலைமைகள் எப்போதும் பேரினவாத கட்சிகளின் தலைவர்கள், எஜமானர்களின் விசுவாசிகளாக, அடிமைகளாகவே இருந்து வந்துள்ளனர். அதன் இறுதி உதாரணமாக, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராகத் தமிழ் தேசியக் கட்சிகள்  அரியநேத்திரனை நிறுத்தியபோது, அவரை தோற்கடிக்க முழு மூச்சாக இந்த தலைவர்கள் சிலர் செயற்பட்டதுடன், அவருக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாதெனவும் கூறியதுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவையே பகிரங்கமாகவே ஆதரித்திருந்தார்கள்.

இவ்வாறாக யாழ். மாநகரசபையை எதிரிகளோடும் துரோகிகளோடும் சேர்ந்து கைப்பற்றிய தமிழரசு இங்கு தமக்குப் போட்டியாக வேட்பாளரை நிறுத்திய தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட சாவகச்சேரி நகரசபையிலும் ஆட்சியைக் கைப்பற்ற சகுனித்தனமாக அக்கட்சியின் இரு வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து அவர்களுக்கு எதிராக இடைக்காலத்தடை உத்தரவைப் பெற்று வாக்களிப்பில்  பங்கேற்க விடாது செய்து அதிகாரத்தைக் கைப்பற்றச் சதி செய்தது.  

சாவகச்சேரி நகர சபையில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 6 ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி 6 ஆசனங்களையும் பெற்றிருந்தன. வாக்குகள் அடிப்படையில், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 2,959 வாக்குகளையும் தமிழரசுத் தரப்பு 2,594 வாக்குகளையும் பெற்றன. இதன்படியே தமிழ் மக்கள்  பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னிலை வகித்தது. இச்சபையில், தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி (சங்கு) இரு ஆசனங்களையும் ஈ.பி.டி.பி. ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தன.

இந்நிலையில், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியுடன் கொள்கை ரீதியில் ஒப்பந்தம் செய்து ஓரணியாகி தமது ஆசனங்களின் எண்ணிக்கையை 8 ஆக அதிகரித்தது. இதேவேளை, தமிழரசுக் கட்சி ஈ.பி.டி.பியிடம் ஆட்சியைக் கைப்பற்ற ஆதரவைக் கோரியிருந்தது.

இந்நிலையில், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி வசம் 8 ஆசனங்களும் தமிழரசு, ஈ.பி.டி.பி. வசம் 7 ஆசனங்களும் இருந்தன. தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களுடன் நடு நிலை வகித்தது.

தமிழ் மக்கள்  பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி ஓர் ஆசனத்தால் முன்னிலை வகித்த நிலையில்தான் இவர்களை வீழ்த்தி ஆட்சியைக்  கைப்பற்றவேண்டுமென்ற அதிகார ஆசை மற்றும் பழிவாங்கும் வெறியில் அவசர அவசரமாக 11ஆம் திகதி தமிழ் மக்கள்  பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  சபை உறுப்பினர் ஒருவருக்கு எதிராக தமிழரசுக் கட்சியினால்   வழக்குப் போடப்பட்டது.

13ஆம் திகதி மாலை சபை கூடவிருந்த நிலையில், அன்று காலை   அந்த உறுப்பினருக்கு நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது.  இதனால், தமிழ் மக்கள்  பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 7ஆகக் குறைந்தது.தமிழரசு - ஈ.பி.டி.பி தரப்புக்கும் ஆசனங்கள் 7ஆக இருந்தன. இதற்கிடையில் ஏற்கனவே, தமிழ் மக்கள்  பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தரப்பின் மற்றொரு பெண் உறுப்பினரை சபைக்குப்  போகக்கூடாது என்று தமிழரசின் எடுபிடிகள் தொலைபேசி மூலம் பலதடவைகள் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தகவல்கள் உண்டு.

அவரையும் சபைக்கு வரவிடாமல் தடுத்து தமிழரசு - ஈ.பி.டி.பி. தரப்பு 7:6 என்ற ஆசனங்கள் அடிப்படையில் சபையைக் கைப்பற்றுவதே சதித் திட்டமாகவிருந்தது.

ஆனாலும், அந்த பெண் உறுப்பினர்  சபைக்கு வந்து விட்டார். இந்நிலையில், தமிழ் மக்கள்  பேரவை -தமிழ் தேசிய மக்கள் முன்னணி தரப்புக்கும் தமிழரசு - ஈ.பி.டி.பி. தரப்புக்குமிடையில் தவிசாளர் - உப தவிசாளர் தெரிவுக்கான வாக்கெடுப்பு நடைபெற்ற போது, இரு தரப்புகளும் தலா 7 வாக்குகளைப் பெற்று சமனிலை பெற்றன.

இதனால் திருவுளச்சீட்டு (குலுக்கல் முறை) முறை மூலம் இரு பதவிகளுக்கும்  தெரிவு இடம்பெற்றது. இரு தடவைகளும்  தமிழ் மக்கள்  பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு  வெற்றி கிடைத்தது. இதற்கமைய தமிழரசின்  சதியை, சகுனித்தனத்தை அதிர்ஷ்டத்தின் மூலம் முறியடித்து  சாவகச்சேரி நகர சபையைத்  தமிழ் மக்கள்  பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றியது.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நாடு-அனுரவோடு-வீடு-வீணையோடு/91-359994

இஸ்ரேல்- ஈரான்: எதைச் சொல்ல?

2 months 3 weeks ago

எதைச் சொல்ல?

sudumanal

இஸ்ரேல்- ஈரான்

iran.jpeg?w=288

கடந்த 13 ம் தேதி முதன்முதலில் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலை இஸ்ரேல் தனித்து எடுத்த முடிவு போல ஊடகங்கள் சித்தரித்திருந்தன. அமெரிக்காவுக்கு தெரியாமல் இஸ்ரேலின் எந்த அணுவும் நகராது என்ற உண்மையை அவைகள் செய்திகளுள் புதைத்து விட்டன. இத் தாக்குதலின் மையப் பாத்திரத்தை அமெரிக்காவே வகித்தது என அரசியல் அறிஞரான ஜெப்ரி ஸாக்ஸ் உட்பட்ட புத்திஜீவிகள் சொல்கிறார்கள். இத் தாக்குதலுக்கு ஒருசில நாட்களுக்கு முன்னரே அமெரிக்கா 300 ஏவுகணைகளை இஸ்ரேலுக்கு கொடுத்திருந்தது என “வோல் ஸ்றீற் ஜேர்ணல்” செய்தி வெளியிட்டிருந்தது. உக்ரைனுக்கு தருவதாக பைடன் காலத்தில் ஒப்புக்கொண்ட 20000 ட்ரோன்களை ஒருசில வாரங்களுக்கு முன்னர் ட்றம்ப் மத்திய கிழக்குக்கு மடைமாற்றிவிட்டதாக செய்திகள் வந்திருந்தன. அது எங்கே போனது என்ற விபரம் இதுவரை தெரியாது.

இஸ்ரேலிய தாக்குதல் தொடங்கப்படுவதற்கு முன்னரே அமெரிக்க ஜெட் போர் விமானங்கள், கடற்படை போர்க் கருவிகள், தரைப்படையின் விமான எதிர்ப்பு கருவிகள் எல்லாமே தயார் நிலையில் வைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவருகின்றன.

ஈரானின் எல்லைக்குள்ளேயே மொசாட் இரகசியமாக ட்ரோன்களை இயக்கும் நிலையமொன்றை உருவாக்கி வைத்திருந்தது என்பதும், அது சம்பந்தமாக 20 க்கு மேற்பட்டோர் கைதானது என்பதும் ஈரான் மீதான விமானத் தாக்குதல் நடந்த பின்னர் ஊடகங்களில் வெளிவந்த செய்திகள். உலகுக்கு மட்டுமல்ல ஈரானுக்குக் கூட இந்த சதி அரங்கேற்றம் அதிர்ச்சியான செய்தியாக அமைந்திருந்தது. ஈரானின் விமான எதிர்ப்பு தளபாடங்களை செயலிழக்கச் செய்யும் வேலையை செய்யவும், முக்கியமான தலைவர்கள் இருந்த இடத்தை அறியவும் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது இஸ்ரேலின் விமானத் தாக்குதலை துல்லியமாக செய்து முடிக்க இத் தொழில்நுட்பம் பாவிக்கப்பட்டிருக்கிறது.

சில வாரங்களுக்கு முன் ரசிய எல்லைக்குள் ஆழ ஊடுருவி ரசிய விமானத் தரிப்புகளில் வைத்து அவற்றை அழித்தொழிக்க இதேவகை திட்டமே செயற்படுத்தப்பட்டது. சுமார் ஒன்றரை வருட காலமாக இத் திட்டமிடல் நடத்தப்பட்டது என செலன்ஸ்கி குறிப்பிட்டிருந்தார். இதில் உக்ரைன் உளவுப்படை மட்டுமல்ல, பிரித்தானிய உளவுப்படையும் (எம்-16) சம்பந்தப்பட்டதாக ரசியா குற்றஞ் சாட்டியிருந்தது. சிஐஏ உம் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்களும் வெளிவந்திருந்தன. இவற்றை வைத்துப் பார்க்கும்போது, பிரதியெடுத்தது போன்ற இந் நிகழ்வில் ஈரானிலும் சிஜஏ யும் மொசாட் உம் சேர்ந்து செயற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

இத் தாக்குதல் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்ன?. ஈரானின் அணுச்சக்தி தளங்களை அழிப்பது, அதன் மூலம் இஸ்ரேலின் பாதுகாப்பை, பிராந்தியப் பாதுகாப்பை, இன்னும் மேலே போய் உலகின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது என்ற விளம்பரப் பலகையை நெத்தன்யாகு தொங்கவிட்டு அமெரிக்காவை இறைஞ்சினார். இதேநேரம் இந்த அணுசக்தி நிலையம் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதை, அதற்கான உயர் யூரேனிய செறிவூட்டலை தடுக்க, ஓர் உடன்பாட்டு ஒப்பந்தத்துக்கு வர ட்றம் ஈரானுடன் 5 சுற்றுகளாக பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்திக் கொண்டிருந்தார் என்பது கவனிக்கத் தக்கது. அது முறிவடையவில்லை. பிறகு எப்படி அந் நிலையங்களை தாக்குகிற முடிவை ட்றம் எடுத்தார் என்ற கேள்வி முக்கியமானது.

அத்தோடு தனக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு தர வேண்டும் எனவும் அந்தக் கோரிக்கையை பாகிஸ்தான் ஊடாக தெரியப்படுத்தியுமிருந்தார். தான் பதவிக்கு வந்து 24 மணி நேரத்துள் ரசிய-உக்ரைன் இடையில் சமாதானத்தை கொண்டு வருவேன் என சமாதானத் தேவனாக படம் காட்டியபடி பதவியேற்றவர் அவர். அப்படியிருக்க, அவர் இஸ்ரேலின் பொறிக்குள் அகப்பட்டுவிட்டார் எனவும், அவரது மாறாட்டமான பேச்சுகள் நிலைப்பாடுகளை வைத்தும் அதைச் சிலர் விளங்கப்படுத்துகின்றனர்.

அதேநேரம் இதை இன்னொரு கோணத்தில் புரிந்துகொள்வதற்கு ‘ஆழ்-அரசு’ (deep state) குறித்த புரிதல் முக்கியமானது. அரசாங்கம் என்பதும் அரசு அல்லது ‘ஆழ்-அரசு’ என்பதும் ஒன்றல்ல. அரசு ஆனது அரசாங்கங்களை ஒரு கருவியாகக் கையாளும் நிலை உள்ளது. இது ஏதோ தலைவர்களை பொம்மையாக வியாக்கியானப் படுத்துவதல்ல. ஜனாதிபதி தனக்கு வழங்கப்பட்டு இருக்கும் அதிகாரத்தை -‘ஆழ்-அரசுடன்’ முரண்படாமல் அல்லது இன்னும் வீரியமாக்கி- செயற்படுத்த முடியும். எனவே ட்றம்ப் க்கும் ஒரு முக்கிய பாத்திரம் இருக்கிறது. அதனால் ட்றம்ப் மீதான பொறுப்புக் கோரல், மற்றும் விமர்சனம் நிச்சயம் இருக்கும். மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நாட்டை ஆள பொறுப்பேற்றவர் என்ற வகையில் அவர் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்.

2017 இல் புட்டின் சொன்ன கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. “அமெரிக்க ஜனாதிபதிகள் பல திட்டங்களோடு பதவிக்கு வருவர். பிறகு என்ன நடக்கும். கறுப்பு நிற உடையுடனும், நீல கழுத்துப்பட்டி (ரை) உடனும், கையில் ஒரு குறுஞ் சூட்கேஸ் உடனும் ஒரு ‘மனிதர்’ வருவார். அவர் புதிய ஜனாதிபதிக்கு நிலவும் யதார்த்தத்தை விளங்கப் படுத்துவார். அதன்பிறகு பதவிக்கு வந்தவர்களின் திட்டங்கள் காணாமல் போய்விடும். பிறகு அதை நீங்கள் காதால் கேட்கக்கூட முடியாமல் போய்விடும்” என்று சுவைபட ‘ஆழ்-அரசு’ குறித்து புட்டின் சொன்னார்.

அமெரிக்க ‘ஆழ்-அரசு’ என்பது சிஐஏ, பென்ரகன், அதி பணக்காரக் குழு (billionare) / மேட்டுக்குடிகள் (elites), இராணுவ தளபாடத் தரகர்கள் என்போரைக் கொண்டது. இந்த அதி பணக்காரர் குழுவுக்குள் சியோனிச லொபியும் அடங்கும். இந்த ‘ஆழ்-அரசுப்’ பங்காளர்களே அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை வழிநடத்துபவர்கள். மக்களால் இவர்கள் தெரிவுசெய்யப் படுவதில்லை. அரசாங்கங்கள் மாறிக் கொண்டிருப்பது போல், இந்த ‘ஆழ்-அரசு’ மாறிக் கொண்டிருப்பதுமில்லை. இந்த ‘ஆழ்-அரசு’ ட்றம்பின் சமாதானத்துக்கான நோபல் பரிசுக் கனவையும் ஈரானின் அணுசக்தி நிலையங்களில் வைத்து பறித்துக் கொண்டுள்ளது.

இவர்களின் கனவு இந்த அணுசக்தி நிலையத் தகர்ப்பு அல்ல. அது மக்களுக்கு சொல்லப்பட்ட காரணமே ஒழிய, உண்மை அதுவல்ல. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பினால் (IAEA) தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. “ஈரான் அணுகுண்டை தயாரிக்கும் நிலைக்கு யுரேனியச் செறிவூட்டலை செய்யவில்லை” என அவர்கள் சான்றிதழ் வழங்கியிருந்தனர். எனவே காரணம் அதுவல்ல. பல வருடங்களாக நெத்தன்யாகு செய்துகொண்டு வந்த பிரச்சாரம் மட்டுமே அது. “இன்னும் இரண்டு வாரத்தில் ஈரான் அணுகுண்டை தயாரித்துவிடும்” என்பது அவரது மந்திரமாக அவருடன் ஒட்டிக் கொண்டுவிட்டது.

இதெல்லாம் ‘ஆழ்-அரசு’ கும்பலுக்கு தெரியாததல்ல. அவர்களின் இலக்கு ஈரானில் தலைமையை மாற்றும் சதி வேலை செய்வதிலேயே இருக்கிறது. 1945 இலிருந்து இன்றுவரை 64 ஆட்சி மாற்றச் சதிப் புரட்சிகளை பல்வேறு நாடுகளில் அங்கேற்றியவர்கள் அவர்கள். இச் சதியின் பட்டியலில் ஈரான் விடயத்தில் நெத்தன்யாகுவும் இணைந்து கொண்டிருந்தார். அதை அவர் உச்சரித்தது செய்திகளாக ஏற்கனவே வந்தவை. சர்வாதிகாரி ஷாவை 1953 இல் சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்குக் கொணர்ந்தவர்கள் ‘ஆழ்-அரசுக்’ கும்பலான சிஐஏ உம் ‘எம்-16’ உம் ஆவர். (எம்-16 என்பது பிரித்தானிய உளவுப்படை). ஷா மேற்குலகின் அடிவருடியாக ஈரானை ஆட்சி புரிந்தார். அவரை தூக்கியெறிந்த ஈரானியப் புரட்சி 1979 இல் நடந்தது.

அதன்பின் ஈரான் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரியாகவே நிலைநிறுத்தப்பட்டது. இப்போதும் ஓர் அடிவருடியை ஈரானினின் ஆட்சி பீடத்தில் நிலைநிறுத்துவதே அவர்களின் நோக்கம். அரசின் இந்தவகை எல்லா நடவடிக்கைகளையும் ஜனாதிபதி காரணங்களை சோடித்து, வரலாறுகளை புனைந்து மக்கள் முன் வைப்பதும், சதி நடவடிக்கைகளுக்கு கையெழுத்து இட்டு அங்கீகரிப்பதுமான ‘ஜனநாயகக்’ கடமையை செய்ய வெண்டியிருக்கும். அவர்கள் பதவிக்கு வர முன் கூவிய திட்டங்களெல்லாம் பிறகு காணாமல் போகும் என்பது இதைத்தான். ஆட்சிக்கு வர முன்னர் சிஐஏ இனை விமர்சித்தவர் ட்றம்ப். ஈராக் யுத்தத்தை விமர்சித்தவர் அவர். இப்போ?

ட்றம் திடீரென தெஹ்ரானிலிருந்து எல்லோரும் வெளியேறிவிட வேண்டும் என அறிவித்தார். 10 மில்லியன் சனத் தொகையைக் கொண்டது இத் தலைநகரம். இந்த பெருந்திரளை அலையவிடுவதன் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைத்து, ஆட்சிமாற்ற சதியை அரங்கேற்றுவதே ‘ஆழ்-அரசின்’ நோக்கமாக இருந்தது. இருக்கிறது. இதற்கும் அணுசக்தி நிலைய தாக்குதலுக்கும் என்ன சம்பந்தம். அவை தெஹ்ரானுக்கு பல காத தூரம் வெளியில் இருப்பவை. ஏன் அந்த மக்கள் வெளியேற வேண்டும்?. அத்தோடு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் “தெஹ்ரான் இன்னொரு பெய்ரூத் ஆக மாற்றப்படும்” என அறிவித்திருந்தார். பெய்ரூத் இல் ஆட்சியை கவிழ்த்ததோடு, லிபிய ஜனாதிபதி கடாபி கேலப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். ஈராக் இலும் இதேவகை குரூர நாடகமே அரங்கேற்றப்பட்டது.

ஈரானின் ஆட்சி மாற்றம் அல்லது சதி என்பது இஸ்ரேலுக்கு தன்னைச் சூழவுள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லா, சற்று தொலைவிலுள்ள ஹவுதி அமைப்புகளை பலமிழக்கச்செய்ய அவசியமானதாக இருக்கிறது. இதன்மூலம் பலஸ்தீனத்தை முழுமையாக கைப்பற்றுவது மட்டுமன்றி, லெபனான் சிரியா என இன்னும் அகலக் கால்வைத்து தனது அகண்ட இஸ்ரேல் கொள்கையை அவர் நடைமுறைப்படுத்துவது இலகுவாக இருக்கும். மற்றைய அயலவர்களாக இருக்கும் அரபுநாடுகளின் தகிடுதத்தம் போல் இல்லாமல், பலஸ்தீனப் போராட்டத்துக்கான விடாப்பிடியான ஆதரவை வழங்கிவரும் ஈரானையும் அதே கும்பலுக்குள் தள்ளி, பலஸ்தீனப் போராட்டத்தை பலவீனப்படுத்தி, தனது ‘ஒற்றை-அரசு’ (one state) கனவை மெய்ப்படுத்த முனைகிறது நெத்தன்யாகு கும்பல்.

ஆனால் அமெரிக்காவுக்கோ நோக்கம் வேறானது. அமெரிக்க பெற்றோ டொலர் உட்பட்ட, டொலர் மைய வர்த்தகத்தை பிரிக்ஸ் நிராகரித்தததாலும், பிரிக்ஸ் பலமான பொருளாதார அமைப்பாக மாறிவருவதாலும் அதை எதிர்கொள்ள, ஈரானின் எண்ணை வளத்தை முடக்க அல்லது தன் பக்கம் மடைமாற்ற ஈரானில் ஓர் எடுபிடி ஆட்சி தேவைப்படுகிறது. எனவே அமெரிக்காவும் இஸ்ரேலும் “ஈரானின் ஆட்சி மாற்றம்” என்ற புள்ளியில் வெவ்வேறு பாதையால் வந்து ஒன்றிணைந்துள்ளனர்.

வெறும் 250 வருட வரலாறு கொண்ட அமெரிக்கா 5000 வருட வரலாறு கொண்ட ஈரானையும் அதன் பண்பாட்டு மனக்கட்டமைப்பையும் புரிந்துகொள்ள முடியாமலிருக்கிறது. அந்த மனக்கட்டமைப்பின் உறுதியோடுதான் ஈரான் 1979 இலிருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், பொருளாதாரத் தடைகளைத் தாண்டியும் தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. உலகமே அதிர்ச்சியடைய வைத்த அவர்களின் ஏவுகணை தொழில்நுட்பத்தின் சூட்சுமம் அங்கிருந்து தோற்றம் பெற்ற ஒன்றுதான்.

ஈராக் காலம் போல் தொழில்நுட்பம் இன்றைய காலத்தை நேர்கோட்டில் வைத்திருக்கவில்லை. இதுவரையான எந்தப் போரிலும் அழிவுகளையும் வெறியாட்டங்களையும் அமெரிக்கா சாதித்ததேயல்லாமல், ஒரு போரில் கூட வெற்றிபெற முடியவில்லை. எந்த நாட்டையும் உருப்படியாக முன்தள்ளிவிடவில்லை. இதுதான் வரலாறு. ஈரான் மீது படையெடுத்தாலும் இறுதியில் இதேதான் முடிவாக இருக்கும். எது எப்படியோ வடகொரியா தன்மீதான மேற்குலகின் நொட்டுதலை அமைதியடையச் செய்ய அணுவாயுத உற்பத்தியை கையிலெடுத்தது போல, ஈரானையும் அதே நிலைக்குத் துரிதமாகத் தள்ளிவிடுவதுதான் நிகழும்.

ஈரானின் தோல்வி பிரிக்ஸ் இன் பொருளாதார வளர்ச்சியின் மீதான தாக்குதலாக அமையும் என்பதால் பிரிக்ஸ் நாடுகள் -குறிப்பாக சீனாவும் ரசியாவும்- இராணுவ ரீதியிலோ இராஜதந்திர ரீதியிலோ கைகட்டி நின்று பார்த்துக் கொண்டிருக்குமா என்ற பெரும் கேள்வி இருக்கிறது. ரசியா கடைசியாக உதிர்த்த வார்த்தைகள் இதைக் காட்டுகின்றன. “ஈரானுக்கு அணுவாயுதங்களை கொடுக்க சில நாடுகள் தயாராக இருக்கின்றன. அத்தோடு ஈரான் அணு ஆயுதங்களை இனி உற்பத்தி செய்யும் செயல்முறைகளை உருவாக்கும்” என்பதே அது.

ஆக மொத்தம் ஒற்றைத் துருவ அதிகாரம் பல் துருவ அதிகாரமாக மாறும் நிலைமாற்றத்தின் பாதையில் (அதாவது இன்னோர் கோணத்தில்) ஈரான் நிலைமையை பார்க்க இடமுண்டு. அதாவது அமெரிக்க சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிப் பாதையின் இன்னோர் அறிகுறியாகவும் இவைகளை பார்க்க முடியும். இஸ்ரேலின் தரப்பில் பார்த்தால், நிராகரிக்கப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நாடாகவும், பாதுகாப்பின்மையை தானே தனக்கு ஏற்படுத்திய அவலம் நிறைந்த நாடாகவும், ஏன் சியோனிசத்தின் வீழ்ச்சிப் பாதையில் செல்லும் நாடாகவும் பார்க்க இடமுண்டு. இந்த சூட்சுமமான பூகோள அரசியலில் தொங்கவிடப்பட்டிருக்கிற பலஸ்தீன மக்களின் தரப்பில் எதைச் சொல்ல?.

https://sudumanal.com/2025/06/23/எதைச்-சொல்ல/

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின்  வரலாற்றுப் பொறுப்பு — கருணாகரன் —

2 months 3 weeks ago

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின்  வரலாற்றுப் பொறுப்பு

June 24, 2025

— கருணாகரன் —

“ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் எதிர்காலச் செயற்பாடுகள் எப்படி இருக்கும்? அதனுடைய அரசியல் எதிர்காலம்?” என்று கொழும்பில் உள்ள மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார்.

“நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்” – அவரிடமே கேள்வியைத் திருப்பினேன்.

“என்னால் மதிப்பிடவே முடியவில்லை. காரணம், எதிரும் புதிருமாக உள்ள கட்சிகள் எல்லாம் திடீரென்று ஒரு கூட்டுக்கு வந்துள்ளன. அதற்காக ஒரு உடன்படிக்கையையும் செய்திருக்கிறார்கள். என்றாலும் இதில் யாருடைய கருத்தை –கொள்கையை – நிலைப்பாட்டை யார் ஏற்பது என்ற தெளிவில்லை. இப்போதைய சூழலில் கஜேந்திரகுமாரின் நிலைப்பாடுதான் வலுப்பெற்றுள்ளது போலிருக்கு… இந்தப் போக்குக்கு ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி எந்தளவுக்குத் தன்னை விட்டுக்கொடுக்கும்?.. என்று கேள்வி உண்டு. அதனால் இந்தக் கூட்டணி எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும்? அல்லது நீடிக்கும் என்று தெரியாமலிருக்கு. அதைப்பொறுத்துத்தான் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் எதிர்காலம் அமையும்” என்றார் அவர். 

ஆகவே, தன்னுடைய கருத்தை – கணிப்பை – சரிபார்த்துக் கொள்வதற்காகவே என்னிடமும் இதைப் பற்றிக் கேட்டிருக்கிறார். ‘என்னிடமும்‘ என்று நான் பிரத்தியேகமாக இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், நிச்சயமாக நண்பர் இந்தக் கேள்வியை வேறு ஆட்களிடத்திலும் கேட்டிருப்பார். 

இதே கேள்வி, இந்தக் கூட்டணியைப் பற்றியும் அது கூட்டுச் சேர்ந்துள்ள ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி – தமிழ்த்தேசியப் பேரவை தொடர்பாகவும் பலரிடத்திலும் உண்டு. ஏன், தமிழ்த் தேசியப் பேரவைக்குள்ளும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்குள்ளும்  கூட இந்தக் கேள்வி உண்டு. 

இந்தக் கேள்வியை நாம் வகைப்படுத்தலாம். 

1.   ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் அதனுடைய எதிர்கால அரசியல் தீர்மானங்களும் செயற்பாடுகளும்.

2.   ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் தமிழ்த்தேசியப் பேரவையும் அதனுடைய அரசியற் தீர்மானங்களும் செயற்பாடுகளும்.

3.   ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்குள்ளிருக்கும் தனி ஒவ்வொரு கட்சியினதும் அரசியலும் அவற்றின் எதிர்காலமும்.

4.   ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் பிற தமிழ் அரசியற் தரப்புகளும் அவற்றுடனான எதிர்கால அரசியல் உறவும்.

5.   தமிழ்த்தேசியப் பேரவையோடு எந்தளவுக்குச் சமரசம் செய்து கொள்வது? அந்த உறவு முறிந்தால் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் அடுத்து என்ன என்ற நிலைப்பாடு. 

இதைவிட மேலும் சில கேள்விகளும் உண்டு. 

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி (DTNA), ஐந்து கட்சிகளின் கூட்டாகும். ஐந்து கட்சிகளுக்கும் தனித்தனியான அரசியற் கட்டமைப்பும் அரசியல் நிலைப்பாடுகளும் உண்டு. கூடவே, அவற்றுக்கான செல்வாக்குப் பிராந்தியங்களும் உள்ளன. உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அவை பெற்றிருந்த வாக்குகள், உறுப்பினர்களின் எண்ணிக்கை, பிரதேச மட்டத்திலான பிரதிநிதித்துவம் போன்றவற்றின் மூலம் இதை மேலும் அறிந்து கொள்ள முடியும்.

இந்த ஐந்து கட்சிகளும் சில அடிப்படைகளில் புரிந்துணர்வோடு ஒரு பொது மையத்தில் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியாக இணைந்துள்ளன. இந்த இணைவுக்காக ஒவ்வொரு கட்சிகளும் சில விட்டுக் கொடுப்புகளையும் சில ஏற்றுக் கொள்ளுதல்களையும் செய்துமுள்ளன. இல்லையெனில் ஐக்கியமோ கூட்டோ சாத்தியமாகியிருக்காது. ஐக்கியம், கூட்டு என்று வரும்போது விட்டுக் கொடுப்பும் ஏற்றுக் கொள்ளுதலும் தவிர்க்க முடியாதது.

இந்த விட்டுக் கொடுப்பும் ஏற்றுக் கொள்ளுதலும் இரண்டு வகையில் பிரதானமாக அமையும்.

அ) தமது (கட்சியின்) இருப்பையும் வெற்றியையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான முறையில் வெளிச் சூழலைக் கையாள்வதற்குத் தேவையான விட்டுக் கொடுப்பையும் ஏற்றுக் கொள்ளலையும் மேற்கொள்ளுதல். இங்கே கட்சியின் நலனே முதன்மை பெற்றிருக்கும்.

ஆ) மக்களின் நலனை முன்னிறுத்திச் சிந்திப்பதால் அமைவது. மக்களுடைய நலன், அவர்களுடைய கோரிக்கைகளுக்குப் பலம் சேர்த்தல், அவர்களுடைய அரசியல், சமூகப் பொருளாதார  எதிர்காலத்தைப் பலப்படுத்துதல், அதை வெற்றியடையச் செய்தலுக்காக பொதுத் தளமொன்றில் அவசியப்படும் விட்டுக் கொடுப்புகளையும் ஏற்றுக் கொள்ளதல்களையும் செய்தல்.

இங்கே ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியில் உள்ள ஐந்து கட்சிகளும் மேற்படி இரண்டின் அடிப்படையிலும் விட்டுக் கொடுப்புகளையும் ஏற்றுக் கொள்ளல்களையும் செய்துள்ளன என்றே கொள்ள முடியும். இந்த விட்டுக் கொடுப்புகளின் – ஏற்றுக் கொள்ளல்களின் எல்லை (வரம்பு) எதுவென்று தெரியாது. அதை அந்தந்தக் கட்சியினரே சொல்ல வேண்டும். அல்லது அதைக் காலமும் சூழ்நிலையுமே தீர்மானிக்கும். 

இதற்கப்பால் சரியான – தீர்க்க தரிசனமுடைய தலைமைத்துவம் இருக்குமானால், தமது அரசியல் உறுதிப்பாட்டுடன் ஐக்கியத்துக்காக – ஒற்றுமைக்காக – முடிந்தளவுக்கு பொறுமையுடன் நெகிழ்ந்து கொடுக்கும். அத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஐக்கியத்தை அல்லது கூட்டை வளப்படுத்தும். 

இந்தப் பின்னணியில், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் அதனுடைய எதிர்கால அரசியல் தீர்மானங்களும் செயற்பாடுகளும் எப்படி அமையவுள்ளன? எப்படி அமைய வேண்டும்? என்று பார்க்கலாம்.

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியில் (DTNA) உள்ள கட்சிகள் ஐந்தும் ஆயுதந் தாங்கிய அரசியல் வழிமுறையின் வழியாக வந்தவை. அதாவது சரிபிழைகளுக்கு அப்பால், செயற்பாட்டு அரசியற் பாரம்பரியத்தைக் கொண்டவை. தமது அரசியல் இலக்கை அடைவதற்கு செயற்பாட்டு அரசியலை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் அதற்கான வழிமுறையையும் கொண்டிருந்தவை. குறிப்பாக நடைமுறை அரசியலை உள்ளடக்கியவை. அதேவேளை உட்கட்சி ஜனநாயகப் பற்றாக்குறையை அகத்தில் கொண்டிருப்பவை என்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.. 

துரதிருஸ்டவசமாகக் கடந்த 15 க்கு மேற்பட்ட ஆண்டுகால அரசியற் சூழலில் இவையும் முற்றுமுழுதாக தமிழ் மிதவாத அரசியலுக்குப் பழக்கப்பட்டவையாகி விட்டன. அதாவது, தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போலாகி விட்டன. ஒரு பொதுமகன் அல்லது இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போன்றவற்றுக்கும் இடையில் எத்தகைய வேறுபாட்டைக் காண முடியும்? அல்லது ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியானது மக்களுக்கு ஏனைய அரசியற் கட்சிகளிலிருந்து தன்னை எப்படி வேறுபடுத்திக் காட்டுகிறது?அதில் உள்ள ஒவ்வொரு கட்சியினதும் தனித்தன்மைகள் என்ன? என அறிய முடியாது.  

இந்த வேறுபாட்டை ஒருவர் அல்லது மக்கள் சமூகம் அறியும் (உணரும்) போதுதான் அவர்கள் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியை நோக்கித் தமது ஆதரவைத் திருப்ப முடியும். ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் வெற்றிக்கான திசையை நோக்கி நகரலாம். ஏனைய தரப்போடு பேரம்பேசும் ஆற்றலைப் பெறலாம். இல்லையெனில் தமிழரசுக் கட்சியும் காங்கிரசுமே தொடர்ந்தும் மேலாதிக்கம் செலுத்தும். இது காலப்போக்கில் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியிலுள்ள கட்சிகளை மங்கச் செய்து இல்லாதொழித்து விடும். 

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியானது, இதுவரையில் தன்னை வேறுபடுத்திக் காட்டக் கூடிய எந்த அடையாளத்தையும் (வேறுபாட்டையும்)உணர்த்தவில்லை. அப்படிச் செய்ய வேண்டுமானால், அதற்கான அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுக் கட்டமைப்பை அது உருவாக்கி, அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அதைச் செய்வதற்கான அனுபவமும் ஆற்றலும் அதற்கு உண்டு. ஆனால், அதை நோக்கி செயற்படுவதற்கு அது ஆர்வம் கொள்ளாமல் இருக்கிறது. இந்த நிலை நீடிக்குமானால், விரைவில் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி காணாமல் போய் விடும். 

தமிழ் மிதவாத அரசியலில் ஈடுபட்டு வரும் தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கட்டமைப்புகள் எதையும் கொண்டவை அல்ல. அதனால் அவற்றுக்கு இதில் அனுபவமும் இல்லை. வெறுமனே சம்பிரதாயமான ‘தமிழ்க்கட்சிகள்‘ என்ற லேபிளை வைத்தே 75 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலை நடத்தியுள்ளன. அவற்றுக்கு அரசியல் முதலீடாக இருந்தது, சிங்கள பௌத்த மேலாதிக்க அரசியலும் அது மேற்கொண்ட தமிழின ஒடுக்குமுறையுமே. இதற்கு மேலும் வாய்ப்பாக இருந்தது, தமிழ்ச்சமூகத்தில் நிலவும் சாதிய மனோபாவமாகும். தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்த்தேசியவாதத்தைக் கூர்ந்து நோக்கினால், அது தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சாதிய உணர்வின் வளர்ச்சியும் நீட்சியுமாகும். 

சாதியத்தில் உள்ள வேறுபாடுகளையும் வேறுபடுத்தல்களையும் தேசியவாதத்தில் அப்படியே பிரயோகித்துத் தன்னை வடிவமைத்துள்ளது தமிழ்த்தேசியவாதம். அதில் ஜனநாயகத் தன்மையோ, ஜனநாயக மயப்படுத்தலுக்கான வெளிகளோ வாய்ப்புகளோ இல்லை. எப்போதும் தன்னை நியாயப்படுத்திக் கொண்டு, எதிர்த்தரப்பின் மீது அனைத்து நீதியின்மைகளையும் தேடிச் சோடித்துப் சேகரித்துப் பட்டியற்படுத்துவதோடு, வெளிப்பரப்பைப் பற்றிய சிந்தனையைக் கொண்டிருப்பதைத் தவிர்ப்பதுமாக உள்ளது. இதை எந்தக் கேள்வியும் இல்லாமல் அப்படியே ஆதரித்துப் பின்பற்றுகிறது தமிழ்ச் சமூகம். தமிழ்ச் சமூகம் என்று இங்கே குறிப்பிடப்படுவது, தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் தமிழ் மேல் மத்தியதரத்தினரும் மத்திய வகுப்பினருமாகும். 

இதை எதிர்க்கக் கூடிய, எதிர்த்து வெற்றியைப் பெறக்கூடிய எத்தகைய பொறிமுறை வடிவத்தையும் மேற்படி இரண்டு கட்சிகளும் கொண்டிருக்கவில்லை. அவை அப்படிச் செயற்படப்போவதுமில்லை. ஏனென்றால், அவை பிரதிநிதித்துவம் செய்வதே அந்த வர்க்கத்தினரையே. என்றாலும் இந்த இரண்டு கட்சிகளும் தமிழ்ப் பெருந்திரள் மக்கள் மத்தியில் இன்னும் செல்வாக்கோடு இருப்பது ஆச்சரியமானது. துக்கத்துக்குரியது.

ஆனால், மேற்படி இரண்டு கட்சிகளின் (தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட) தவறுகளை எதிர்த்தே ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியில் உள்ள கட்சிகள் (முன்பு விடுதலை இயக்கங்கள்) தமது அரசியற் பயணத்தை ஆரம்பித்தன. 1970 களில் விடுதலை இயக்கங்களாகத் தமது அரசியற் பயணத்தைத் தொடங்கிய இந்தத் தரப்பு, தமிழரசுக் கட்சிக்கும் காங்கிரசுக்கும் எதிராகச் செயற்பாட்டு அரசியல் முறைமையை அரங்கில் அறிமுகப்படுத்தியது. அது தனியே ஆயுதம் தாங்கிய நடவடிக்கை மட்டுமல்ல. அப்படி யாரும் வியாக்கியானப்படுத்தக் கூடாது. அதற்குமப்பால், மக்களுக்கான பன்முகத் தன்மையுடைய அரசியல், சமூக, பண்பாட்டு, பொருளாதார அடிப்படைகளில் கரிசனை வைத்து செயற்பாட்டு வடிவங்கள்  உருவாக்கப்பட்டிருந்தன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

அதை இன்றைய சூழலுக்கு ஏற்ற விதமாக மறுவாக்கம் செய்து  மேலும் தொடர்வதே உண்மையில் மாற்று அரசியலாகும். இதற்குரிய (பொருத்தமான) கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு, அவை செயற்பாட்டுக்குச் செல்ல வேண்டும். ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி என்ற பேரமைப்பை விரிவாக்கி, பலப்படுத்தி, வலுவாக்கம் செய்ய வேண்டும் என்றால், இது அவசியமாகும். 

முப்பது ஆண்டுகளுக்கு மேலான போரும் 50 ஆண்டுகளுக்கு மேலான ஒடுக்குமுறையும் ஈழத் தமிழ்ச்சமூகத்தைப் பல வகையிலும் நிலைகுலைவுக்கு உள்ளாக்கியுள்ளன. இலங்கையில் மிஞ்சியிருக்கும் தமிழ் மக்களில் 70 விழுக்காட்டினர் பாதிப்புக்குள்ளாகியவர்களாகும். இவர்களை மீட்டெடுக்கக் கூடிய, இவர்களுக்கு வாழ்வளிக்கக் கூடிய அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகள் அவசியம். அதை ஒருபோதும் தமிழரசுக் கட்சியும் காங்கிரசும் செய்யப்போவதில்லை. அவற்றின் செல்வாக்குப் பிராந்தியம் (வாக்காளர்கள்) அநேகமாக படித்த மேற்தட்டு வர்க்கத்தினர் மற்றும் மத்திய தர வகுப்பினர். அவர்களே அடித்தட்டு மக்களின் மீதும் கருத்தியல் செல்வாக்கைச் செலுத்துகின்றனர். 

இதற்குக் காரணம், அடித்தட்டு மக்கள் அல்லது கீழ் மத்தியதர வர்க்கம் சுய பொருளாதார, சமூக, பண்பாட்டு, அரசியல் தளத்தை வலுவாகக் கொண்டதல்ல. அதனால் அது தனக்கு மேலுள்ள தரப்பின் இழுவிசைக்கு தவிர்க்கமுடியாமல் உட்பட வேண்டியுள்ளது. அதனுடைய இழுவிசைக்கு வெளியிலுள்ள இன்னொரு தொகுதி மக்கள் தென்னிலைங்கைக் கட்சிகளையும் அவற்றோடு உறவான பிராந்தியக் கட்சிகளை நோக்கிச் செல்கின்றனர். 

இந்த உண்மையையும் யதார்த்தத்தையும் ஆய்வு (பரிசீலனை) செய்ய வேண்டியது, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பொறுப்பாகும். கதிரைகளை விட்டுக் களத்துக்குச் செல்ல வேண்டும் என்பதே இதனுடைய பொருள். தன்னுடைய இளைய உறுப்பினர்களைப் புதிய – செயற்பாட்டு அரசியலுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். களம் என்பது மக்கள் மட்டத்தில் என்று பொருள்படும். மக்களுடனான உறவு வலுப்படும்போது செல்வாக்கு மண்டலம் விரிவு பெறும்.

தன்னை வேறுபடுத்திக் காட்டுவது வேலைகளால், நடைமுறைகளால், வித்தியாசங்களால், பயன்பொருத்தமான பெறுமானங்களால் என்பதை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி உணர வேண்டும். அது சரியாக உணர்ந்து செயற்பட்டால், அந்த உணர்கை மக்களிடத்திலும் நிச்சயமாக நிகழும். அதுவே ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியை விரிவாக்கிப் பலப்படுத்தும். இதில் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போன்றவற்றின் அரசியலை ஏற்காத தரப்பினரும் இணைந்து கொள்வர். 

இது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் அரசியலையும் அதனுடைய கட்டமைப்பையும் புத்தாக்கம் செய்வதாக அமையும். மக்களிடத்திலே செல்வாக்கைப் பெறும் தரப்பு ஒன்றுதான்  தன்னுடைய அரசியலை மக்களிடத்திலே துணிச்சலாக அறிமுகப்படுத்த முடியும். ஆனால், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் உள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு ஒரு தடுமாற்றம் உள்ளதைக் காண முடிகிறது. அவர்கள், வெளியே தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், மணிவண்ணன், விக்கினேஸ்வரன் போன்ற தரப்பினரால்  பேசப்படுகின்ற தமிழ்த்தேசியவாத அரசிலையையே தாமும் பேச வேண்டும். அப்படிப் பேசினால்தான் மக்கள் தங்களை அங்கீகரிப்பார்கள் என்ற தவறான எண்ணமுள்ளது. இல்லையென்றால் தமது கடந்தகாலக் குறைபாடுகள் மேலெழுந்து கருந்திரையாக எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் என்று அஞ்சுகிறார்கள்.

இது தேவையற்ற அச்சமாகும். ஈழத் தமிழ் அரசியலில் எவரும் – எந்தத் தரப்பினரும் தங்களை வெற்றிகரமான தரப்பு என்று சொல்ல முடியாது. அனைத்துத் தரப்பும் தோல்விகளையும் பலவீனங்களையும் பாதிப்புகளையும் மக்களுக்குப் பரிசளித்தவையே. எல்லாத் தரப்பும் ஏதோ ஒரு வகையில் சிங்கள மேலாதிக்கத் தரப்பிடம் தோற்றவையே. எல்லாத் தரப்பினரும் ஏதோ சந்தர்ப்பங்களில் இலங்கை – இந்திய அரசுகளோடு ஒத்துழைத்தவை அல்லது சேர்ந்து நின்றவையே. சுருக்கமாக ஒரே வார்த்தையில் சொன்னால், எவரும் சுத்தவாளிகளில்லை. எவரும் வெற்றிவீரர்களில்லை. 

இந்த யதார்த்தத்தை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மக்களிடம் துணிச்சலாக முன்வைப்பது அவசியம். அதற்கு வலுவானதொரு ஊடகக் கட்டமைப்பு தேவை. அது இன்றைய சூழலில் இலகுவானது. அதற்கான தொழில் நுட்பமும் அதில் தேர்ச்சியுள்ளோரும் தாராளமாக உதவுக் கூடிய நிலையில் உள்ளன.

விடுதலைப் புலிகள் களத்தில் இல்லாமற்போய் 15 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும் அவர்களுடைய அரசியல் நினைவலைகளும் அரசியற் தொடர்ச்சியும் அடையாளங்களும் அவர்கள் உருவாக்கிய பண்பாட்டுச் சுவடுகளும் இன்றும் தமிழ் மனங்களிலும் சமூக வெளியிலும் பலமாகவே உள்ளன. இதற்குக் காரணம், 30 ஆண்டுகளாக ஊடகங்களின் வழியாக மக்களிடம் தங்களை வலுப்படுத்திக் கொள்வதற்கு புலிகள் மேற்கொண்ட கரிசனையும் உத்திகளுமே. அதை மேவிச் செல்ல வேண்டுமானால், அல்லது இன்றைய காலகட்டத்துக்குரிய அரசியல் முன்னெடுப்பைச் செய்ய வேண்டுமென்றால், அதற்குரிய ஊடகப் பொறிமுறை அவசியம். இதைப்பற்றி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். 

ஆனால், இன்று வரையில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கோ அதில் உள்ள எந்தவொரு கட்சிக்குமோ திறனுடைய இணையத் தளங்கூட இல்லை. அதிகமேன், சமூக வலைத்தளங்களில் ஊட அதற்கான அடையாளத்தைக் காண முடியவில்லை. இந்த நிலையில் எப்படி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தன்னை ஒரு வலுவான தரப்பாக அரசியல் அரங்கிலும் சமூக வெளியிலும் முன்னிறுத்த முடியும்? இந்தக் குறைபாட்டினால்தான் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் உள்ள இளைய – புதிய முகங்கள் எவையும் பரந்து பட்ட மக்களிடம் சென்று சேரவில்லை. இப்போதுள்ள வெகுஜன ஊடகங்களில் (mainstream media) தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போன்றவற்றுக்கான சார்பு வெளிகளே அதிகமாக உண்டு. இதை இன்னொன்றால்தான் சமப்படுத்தவும் மேலோங்கவும் முடியும்.  

இவ்வாறான ஒரு நிலை உருவாகும்போதுதான் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் தமிழ்த்தேசியப் பேரவையும் அதனுடைய அரசியற் தீர்மானங்களையும் செயற்பாடுகளையும் குறித்து ஒரு தீர்க்கமான – சமனிலைப்படுத்தப்பட்ட உரையாடலைச் செய்வதற்கு வாய்ப்புண்டு. மட்டுமல்ல, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்குள்ளிருக்கும் தனி ஒவ்வொரு கட்சியினதும் அரசியலும் அவற்றின் எதிர்காலமும் பாதுகாக்கப்படுவதும் அது மேற்கொள்ளக் கூடிய புத்தாக்க அரசியலினால்தான் அமையும். அதுதான் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் பிற தமிழ் அரசியற் தரப்புகளும் அவற்றுடனான எதிர்கால அரசியல் உறவையும் தீர்மானிக்கும். 

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் தலைவர்கள் தமது தரப்பை முழுவதுமாகக் கட்டியெழுப்ப வேண்டிய வரலாற்றுச் சூழலில் உள்ளனர். அதாவது புத்தாக்கச் சிந்தனையோடு கடுமையான உழைக்க வேண்டிய நிலையில் – நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். 

மாற்று அரசியலைத் தேடி அலையும் தமிழ்ச்சமூகம் இறுதியாக வந்து சேர்ந்துள்ள இடம் தேசிய மக்கள் சக்தியாகும். நாளை அவர்கள் இன்னொரு சக்தியைத் தேடக் கூடும். மடிக்குள் மருந்திருக்கும்போது மலையெல்லாம் தேட வேண்டிய தேவை என்ன என்று தன்னை மாற்றுச் சக்தியாக உருவாக்கி நிரூபிப்பதே ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் வேலை. இதில் அது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று, கிழக்கின் அரசியல் உணர்வையும் யதார்த்தத்தையும்.  

கிழக்கு மாகாணம் வரவர தமிழ்த்தேசியவாதத் தரப்பின் அரசியலில் இருந்து விடுபடும் – விலகிச் செல்லும் ஒரு யதார்த்தத்தில் உள்ளது. அங்குள்ள பிள்ளையான் – கருணா – வியாழேந்திரன் போன்றோரின் அரசியலோடு மட்டும் சம்மந்தப்படுத்தி இதைக் குறிப்பிடவில்லை. கிழக்கிலுள்ள புத்திஜீவிகள், சமூக அமைப்புகள் போன்ற பிற தரப்புக் குரல்களையும் உணர்வுகளையும் ஏனைய அரசியல் ஈடுபட்டாளர்களையும் கவனித்தே இந்தக் கருத்து இங்கே முன்வைக்கப்படுகிறது.

கிழக்கிற்கென – கிழக்கை மையப்படுத்திய –  ஒரு இணைய ஊடகத்தைக் கூட தமிழ்த்தேசியவாதத் தரப்புகள் இதுவரையில் முன்னெடுக்கவில்லை. அங்குள்ள அரசியல், சமூக, பண்பாட்டு வெளியும் யதார்த்தமும் வேறானது. அதை ஏற்றுக் கொள்ள மறுப்பதன் வெளிப்பாடே இந்த விடுபடலும் விலக்கலுமாகும். இதை ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி புரிந்து செயற்படுவது அவசியமாகும்.

தமிழ்ப் பெருந்திரள் சமூகத்தின் விடுதலைக்கு ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி பங்களிக்க வேண்டிய பொறுப்பு பல வகையிலும் உண்டு. குறிப்பாக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தரப்பினர் என்ற வகையில், தமிழ்ச் சமூகம் கூடுதலான பாதிப்பை சந்திப்பதற்கு இந்தக் கூட்டணியினரும் காரணமாகியுள்ளனர். ஆகவே இதையெல்லாம் கவனத்திற் கொண்டு ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி செயற்பட வேண்டும். வரலாற்றைக் கட்டமைக்க – மாற்றியமைக்க வேண்டும்.

https://arangamnews.com/?p=12114

யாழ். தையிட்டி விகாரை அகற்றப்படாது என்பதே நிச்சயம்

2 months 3 weeks ago

யாழ். தையிட்டி விகாரை அகற்றப்படாது என்பதே நிச்சயம்

‘தையிட்டி’ முடிவு இருக்கும் போதே போராட்டம் நடக்கின்ற விடயமாக இருந்து வருகிறது. அதாவது, கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இராணுவத்தினால் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரை என்கிற தையிட்டி விகாரை ஒருபோதும் இடித்து அழிக்கப்படப்போவதில்லை. வேறு இடத்துக்கு மாற்றப்படப் போவதுமில்லை.

அவ்வாறிருக்கையில் விகாரை அமைக்கப்பட்டிருக்கும் காணியை விடுவிக்கும்படி போராட்டம் நடத்துவதே தேவையற்ற விடயமாகும் என்பதே யதார்த்தமானது.
கடந்த ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள.

தமிழ் மக்களின் காணிகளில் இருந்து ‘விடுவிக்கக்கூடிய’ ஒவ்வொரு அங்குல காணியையும் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அவருடைய பேச்சின் கருத்து என்னவென்று எல்லோருக்கும் புரிந்தாலும் அதற்கு விளக்கம் கொடுப்பதானால் விடுவிக்கக்கூடியவை என அவர்கள் நினைக்கும் அல்லது தீர்மானிக்கும் காணிகள் மாத்திரம்தான் விடுவிக்கப்படும் மற்றையவைகள் அல்ல என்பதாகவே இருக்கிறது.

இந்த நிலையில்தான், தையிட்டி விகாரைக்கு இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட காணிக்குப் பதிலாக ‘மாற்றுக் காணி அல்லது இழப்பீடு’ வழங்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

விகாரை அமைக்கப்பட்ட காணிக்கு உரிமை கோருவோர் தங்களுடைய காணிக்கு மாற்றுக்காணி கோரவும் இல்லை அதற்கு இழப்பீடு வழங்கும்படி  அரசாங்கத்தைக் கேட்கவுமில்லை என்றிருக்கையில் இந்தவிதமான அறிவித்தலொன்று வெளிவந்திருக்கிறது.

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் (ONUR), தையிட்டி விகாரை குறித்த அறிக்கையை நீதி அமைச்சரிடம் ஒப்படைத்ததையடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியின் உரிமையாளர்கள் நடத்திவரும் காணி உரிமைக்கான போராட்டத்தின்போது, அரசாங்கத்தின் மாற்று காணி அல்லது இழப்பீட்டுத் திட்டத்தை முற்றிலுமாக நிராகரித்து, தங்கள் பரம்பரைக் காணியை தங்களிடம் மீள ஒப்படைக்க வேண்டுமென கோரிவருகின்றனர்.

ஜூன் 12ஆம் திகதி, வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தையிட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையின் காணி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையைத்தீர்க்க, பௌத்த விகாரையை காணியில் இருந்து அகற்றுவதற்கான சாத்தியக்கூறு இல்லை. 

விகாரைக்குரிய காணி ஒதுக்கப்படும். தமிழ் மக்களின் காணியில் விகாரை கட்டப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டால், மாற்றுக் காணி அல்லது இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதே நேரம், “தையிட்டி பிரச்சினை இந்த பிரதேசத்தில் பெரிய ஒரு பிரச்சினை.

தையிட்டி பிரச்சினைக்கு இந்த மாதத்திற்குள் தீர்வினை வழங்கத் தீர்மானித்துள்ளோம். ஏனென்றால், தையிட்டி விகாரையை உடைக்க ஏலுமா? ஏலாது?. அப்படியாயின் ஒன்று, விகாரைக்குரிய காணியை ஒதுக்கிவிட்டு, மிகுதிக் காணிகளை விடுவிப்பது. இந்த விடயம் அரச அதிபரிடம் ஒப்படைத்ததன் அடிப்படையில், பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பார்.

பின்னர் போய் பாருங்கள் காணி இருக்கிறதா என்று, காணி இருக்கின்றவர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். மக்களின் காணிக்குள் 
விகாரை அமைந்திருந்தால் அதற்கு மாற்றுக் காணிகள் அல்லது நட்டஈடு 
வழங்க முடியும்” என்றும் தெரிவித்திருந்தார். 

அதன்படியே இந்த மாற்றுக்காணி அல்லது இழப்பீட்டுத் திட்டம் வெளிவந்திருக்கிறது என்பதே நிலைமை. 2023ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் விகாரைக்கு அருகில் போராட்டம் நடத்திவரும் தமிழ் மக்கள், 16 தமிழ் குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 150 பரப்பு காணியை இராணுவம் வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தி திஸ்ஸா விகாரையை அமைத்துள்ளதாகக் குற்றம் சாட்டிவருகின்றனர்.  விகாரை அமைக்கப்பட்ட காணிக்குரிய உரிமையைக் கோருவோரில் ஒருவரான வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பத்மநாதன் சாருஜன், அரசாங்கத்தின் இந்த மாற்றுக் காணி, இழப்பீட்டுத் தீர்மானத்தைக் கடுமையாக நிராகரித்திருக்கிறார்.

காணி  உரிமையை உறுதிப்படுத்தும் மக்களுக்குக் காணி வழங்கப்படும் என, ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது நீதி அமைச்சர் உறுதியளித்த விடயத்தை, வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பத்மநாதன் சாருஜன் சுட்டிக்காட்டுகின்றார்.

திஸ்ஸ விகாரைக்கு காணி கையகப்படுத்தப்பட்டமை காரணமாகக் காணியை இழந்த அனைத்து குடும்பங்களும் கலந்துரையாடலின் போது, காணி மீதான தங்கள் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் சமர்ப்பித்திருக்கிறோம். அமைச்சர் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது.

விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி மக்களுக்குச் சொந்தமானது என்பதை 
நாங்கள் உறுதிப்படுத்தினால், அது மக்களுக்கு வழங்கப்படும் என நீதி அமைச்சர் எங்களுக்கு உறுதியளித்தார். எங்களுக்கு எங்கள்  காணி வேண்டும் என்றும் 
பத்மநாதன் சாருஜன் கூறியிருக்கிறார்.

இந்த இடத்தில்தான், தமிழ் மக்களின் பாரம்பரிய காணி உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியமைக்கு அமைய, திஸ்ஸ விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகள் குறித்து கடற்றொழில் 
அமைச்சர் மற்றும் நீதி அமைச்சரின் கருத்துக்கள் முரண்படுகின்ற விடயம் கவனிக்கப்பட வேண்டும். இருந்தாலும், நடைபெறுவது தமிழ் மக்களுக்கு 
நன்மையாக இருக்கப்போவதில்லை என்பது மட்டுமே நிச்சயம்.

திஸ்ஸ விகாரை காணிப் பிரச்சினை தொடர்பான அனைத்து தரப்பினரையும் யாழ்ப்பாண நாக விகாரை சர்வதேச பௌத்த மையத்திற்கு வரவழைத்து ஏப்ரல் முதல் வாரத்தில் ஒரு மத்தியஸ்த நிகழ்ச்சியை நடத்தியதாக 2025 ஜூன் முதல் வாரத்தில் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் வெளியிட்ட ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.

காங்கேசன்துறையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையில் புனரமைக்கப்பட்ட ஸ்தூபி வைக்கும் பணி 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் திகதி அன்று இடம்பெற்றது என இலங்கை இராணுவம் ஏப்ரல் 29ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. கி.பி. 3ஆம் நூற்றாண்டில் தேவநம்பிய திஸ்ஸ மன்னன் காலத்தில் இந்த விகாரை அமைக்கப்பட்டது என இலங்கை இராணுவம் தெரிவிக்கின்றது.

இதற்கிடையில், பலாலி விமான நிலையத்திற்குத் தேவையான காணிக்கு மேலதிகமாக அந்தப் பகுதியில் இராணுவ முகாமை நடத்திச் செல்லவும் காணி அவசியம் என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடு என, ஜூன் 12ஆம் திகதி வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.

எஞ்சிய காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாதுகாப்புத் தலைவர்களுக்கு அறிவித்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கிறார். 

அதே நேரத்தில், பாதுகாப்புத் தரப்பினருடன் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி பலாலி விமான நிலையம் வருவதனால் அத்தியாவசியமாக அந்த விமான நிலையத்திற்குத் தேவையான காணியைத் தவிர்த்து, அதனைவிட இந்த பிரதேசத்தில் ஏதோ ஒரு இராணுவ முகாம் இருக்கத் தானே வேண்டும்.

அந்த இராணுவ முகாம் தவிர்த்து மற்றைய காணிகள் அனைத்தையும் விடுவிக்குமாறு  மிகத் தெளிவாகச் சொல்லியிருந்தார்.
அதனை நான் சொல்லவில்லை ஜனாதிபதி மிகவும் தெளிவாகப் 
பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டமைக்கமைய, பலாலியில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் தனியார் காணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பலாலியில் விமானப்படைத் தளத்தை விரிவுபடுத்துவதற்காக வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களுக்குச் சொந்தமான 1009.7 ஏக்கர் காணியை விமானப்படை ஏற்கெனவே ஓடுபாதைக்காகப் பயன்படுத்தி வருவதாக ஜனவரி 2025இல் ஜனாதிபதியிடம் தெரிவித்த யாழ். மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், அந்த காணியில் 643 தமிழர்களுக்குச் சொந்தமான காணிகள் இருப்பதாகக் கூறியிருந்தார்.

இவ்வாறிருக்கையில்தான், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளில் இருந்து விடுவிக்கக்கூடிய ஒவ்வொரு அங்குல காணியையும் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஆனால், தையிட்டி விகாரை அகற்றப்படாதிருக்கும் என்ற முடிவும் கிடைக்கும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/யாழ்-தையிட்டி-விகாரை-அகற்றப்படாது-என்பதே-நிச்சயம்/91-359848

விட்டுக்கொடுப்பு அரசியல்  செய்யப்பழகும் தமிழ்க்கட்சிகள் — வீரகத்தி தனபாலசிங்கம் —

2 months 3 weeks ago

விட்டுக்கொடுப்பு அரசியல்  செய்யப்பழகும் தமிழ்க்கட்சிகள்

June 23, 2025

— வீரகத்தி தனபாலசிங்கம் —

உள்ளூராட்சி தேர்தல்களை பொறுத்தவரை, தென்னிலங்கையில்  எதிரணி அரசியல் கட்சிகளுக்கும் வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் மூன்று ஒற்றுமைகளை காணக்கூடியதாக இருந்தது.  இரு தரப்புகளுக்கும்  பொது அரசியல் எதிரியாக ஆளும் தேசிய மக்கள் சக்தி விளங்குகிறது என்பது முதல் ஒற்றுமை. ஆளும் கட்சியை எதிர்த்து இரு முனைகளிலும் கட்சிகளினால்  ஒன்றுபட்டு களமிறங்க முடியாமல் போனமை இரண்டாவது ஒன்றுமை.  தேர்தல்கள் முடிவடைந்து ஒரு மாதத்துக்கும் கூடுதலான காலம் கடந்துவிட்ட நிலையில்,  உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைப்பதற்கு மற்றைய கட்சிகளின் ஆதரவை நாடி பேச்சுவார்த்கைளை நடத்துவது மூன்றாவது ஒற்றுமை. 

தேசிய மக்கள் சக்தியும்  அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றிய  உள்ளூராட்சி சபைகளை தவிர, கூடுதல் ஆசனங்களைப் பெற்ற தனியான கட்சியாக விளங்கும் பெருவாரியான சபைகளில் நிருவாகங்களை அமைப்பதில் தொடர்ந்து பிரச்சினைகளை எதிர்நோக்குகிறது.  கடந்தகால  தவறான ஆட்சிமுறைக்கும் ஊழலுக்கும் பொறுப்பானவை என்று தாங்கள் அடையாளப்படுத்திய கட்சிகளுடன் சேர்ந்து நிருவாகங்களை அமைப்பதில் தேசிய மக்கள் சக்திக்கு பிரச்சினை இருக்கிறது. ஆனால்,  சுயேச்சைக் குழுக்களில் இருந்து தெரிவான உறுப்பினர்களின் ஆதரவை இயன்றவரை நாடுவதில் அவர்களுக்கு எந்த அசௌகரியமும் இல்லை.  தேர்தல் அரசியலில்  ‘பிரத்தியேகமான’ கட்சியாக தங்களைக் காட்டிக்கொள்ளும் பழைய போக்கையே தொடர்ந்து கடைப்பிடிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கலை ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) வின் தலைவர்கள் நாளடைவில் புரிந்துகொள்வார்கள்.

தேசிய மக்கள் சக்தி பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கையை  விடவும் எதிர்க்கட்சிகளும்  சுயேச்சைக் குழுக்களும் கைப்பற்றிய ஆசனங்களின் கூட்டு  எண்ணிக்கை அதிகமானதாக  இருக்கும் உள்ளூராட்சி சபைகளில்  சாத்தியமான அளவுக்கு ஒன்றுபட்டு  நிருவாகங்களை அமைப்பதற்கு முக்கியமான எதிர்க்கட்சிகள் பெரும் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பிடத்தக்க ஒரு அரசியல் நிகழ்வாக, தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகளில் ஒன்றுபட்டு  நிருவாகங்களை அமைப்பதற்கு ஒரு இணக்கப்பாட்டை கண்டிருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன முன்னணி ஆகிய நான்கு கட்சிகள் கடந்த வாரம் அறிவித்தன. 

 கடந்த வியாழக்கிழமை கூட்டாக நடத்திய செய்தியாளர் மகாநாட்டில் இதை தெரிவித்த  ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவாசம், பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் லசந்த அழகிய வண்ண மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துக்கோரள ஆகியோர் நான்கு பிரதேச சபைகளில் ஏற்கெனவே நிருவாகங்களை அமைத்திருப்பதாகவும் எதிர்வரும் நாட்களில் மேலும் பல சபைகளை   தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்போவதாகவும் கூறினர். குறிப்பிட்ட சில உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதற்கு ஆளும் கட்சி நெறிகெட்ட வழிமுறைகளில் முயற்சிகளை முன்னெடுப்பதாக  அவர்கள் குற்றஞ்சாட்டுகிறாார்கள்.  

தேசிய மக்கள் சக்தியை எதிர்த்துநிற்க வேண்டும் என்பதை தவிர,  இந்த நான்கு கட்சிகளுக்கும் இடையில் வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. கொள்கைகளைப் பொறுத்தவரை,  இவற்றுக்கு இடையில் குறைந்தபட்ச ஒற்றுமையாவது இருந்திருந்தால், தேர்தலிலேயே ஒன்றிணைந்து ஆளும் கட்சிக்கு எதிராக களமிறங்கியிருக்க முடியும். உள்ளூராட்சி சபைகளின் ஊடாக தரமான பொதுச்  சேவையை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே ஒன்றிணைந்திருப்பதாக இந்த கட்சிகளின் தலைவர்கள் கூறுவதை மக்கள் நம்பவா  போகிறார்கள்? கூட்டு முயற்சியினால் இவர்களால் எத்தனை சபைகளின் நிருவாகங்களை கைப்பற்ற முடியும் என்பதை எதிர்வரும் நாட்களில் தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். 

இதே போன்றே வடக்கு, கிழக்கிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில் தேசிய மக்கள்  சக்தி எந்தவொரு உள்ளூராட்சி சபையிலும் நிருவாகத்தை கைப்பற்றுவதை தடுப்பதில் தமிழ்க் கட்சிகள் உறுதியாக இருக்கின்றன. தென்னிலங்கையில் எதிரணி கட்சிகளுக்கு உள்ளதைப் போன்றே தேசிய மக்கள் சக்தி தமிழ் கட்சிகளுக்கும் பொது அரசியல் எதிரியாக விளங்குகிறது. ஆனால், அந்த கட்சிகள்  உள்ளூராட்சி  தேர்தல்களில் ஒன்றுபட்டு போட்டியிடுவதை அவற்றுக்கிடையிலான “பாரம்பரியமான” கட்சி அரசியல் வன்மம் தடுத்துவிட்டது. தலைவர்களுக்கு இடையிலான ஆளுமைப் போட்டியும் இதற்கு பங்களிப்பு செய்தது

பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்தி  பெற்ற முன்னென்றும் இல்லாத வகையிலான வெற்றியை தங்களது அரசியல் இருப்புக்கான அச்சுறுத்தலாக நோக்கிய தமிழ்க்கட்சிகள்  உள்ளூராட்சி தேர்தல் பிரசாரங்களின்போது தனித்தனியாக போட்டியிட்டாலும் பிறகு சபைகளின் நிருவாகங்களை அமைப்பதில் ஒன்றுபட்டுச் செயற்படப்போவதாக தமிழ் மக்களுக்கு கூறின.   ஆறு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து இந்த கட்சிகள்  மீண்டு வரக்கூடியதாக அந்த மக்களும் வாக்களித்தார்கள். ஆனால், மக்களுக்கு கூறியதைப் போன்று  உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பதில் பிரதான தமிழ்க் கட்சிகளினால் அரசியல் விவேகத்தையும் பக்குவத்தையும் வெளிக்காட்ட முடியவில்லை. 

உள்ளூராட்சிகளின் நிருவாகங்களை அமைக்கும் செயற்பாடுகளை தமிழ்க்கட்சிகள் இரு முகாம்களாக நின்று ஏட்டிக்குப் போட்டியாக முன்னெடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இலங்கை தமிழரசு கட்சியும் தமிழ் தேசிய பேரவை என்று அழைக்கப்படும் கூட்டணியுமே அந்த இரு முகாம்களுமாகும். 

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இதுவரை காலமும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரிலேயே இயங்கி வந்தது. பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பிறகு தனது பாரம்பரியமான போக்கை மாற்றி பொன்னம்பலம் கூட்டணி அமைப்பதில் நாட்டம் காட்டினார். (அவரது கடந்த கால அரசியலுடன் ஒப்பிடும்போது மற்றைய தமிழ் கட்சிகளுடன் சேர்ந்து இயங்க வேண்டும் என்று அவருக்கு ஏற்பட்ட மனமாற்றத்தில்  வரவேற்கத்தக்க அம்சம் ஒன்று நிச்சயமாக இருக்கிறது)  உள்ளுராட்சி தேர்தல்களுக்கு முன்னர் தமிழ் தேசிய பேரவை என்று அழைக்கப்பட்ட அவர்களின் கூட்டணி தேர்தல்களுக்கு பிறகு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியையும் சேர்த்துக் கொண்டது. 

பொன்னம்பலமும் அவரைச் சார்ந்தவர்களும் இதுநாள்வரை தாங்கள்  படுமோசமாக விமர்சித்து  வந்த (முன்னாள் தீவிரவாத இயக்கங்களின் தலைவர்களின்)  கட்சிகள் சிலவற்றை  அரவணைப்பதில் எந்தவிதமான அசௌகரியத்தையும் எதிர்நோக்கவில்லை.  உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைப்பதற்கு அந்த கட்சிகளின் சார்பில் தெரிவான உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதே நடைமுறை ரீதியான உடனடி நோக்கமாக இருந்த போதிலும், தாங்கள் ஒரு “கொள்கை அடிப்படையிலான கூட்டணியை”  அமைத்திருப்பதாக ஒரு பிரகடனத்தையும் அவர்கள் வெளியிட்டார்கள். 

தமிழரசு கட்சியை பொறுத்தவரை,  அது தற்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் கட்டுப்பாட்டில் இருப்பதை அந்த கட்சிக்குள் அவருக்கு எதிராக இருக்கும் அணியினரால் மாத்திரமல்ல, மற்றைய தமிழ்க் கட்சிகளின் தலைவர்களினாலும் பொறுத்துக்கொள்ள முடியாமல் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம். தமிழரசு கட்சி கூட்டணிகளை அமைப்பதில் அக்கறை காட்டவில்லை.  உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பதற்கு தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானமும் பொதுச் செயலாளர் சுமந்திரனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுடன் மாத்திரமல்ல, பொன்னம்பலத்துடனும் பேச்சுவார்த்தைகளைை  நடத்தினார்கள். ஆனால், எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே அவர்களினால் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரமுடியவில்லை. 

இதையடுத்து தமிழரசு கட்சி முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவை நாடியது. சிவஞானம் தேவானந்தாவைச் சந்தித்துப் பேசுவதற்கு அவரது கட்சியின் அலுவலகத்துக்கு தானே நேரடியாகச் சென்றார். அது ஒரு “பாவச்செயல்” என்பது போன்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

போர்க்காலத்தில் விடுதலை புலிகளுக்கு எதிராக வெவ்வேறு கட்டங்களில்  அரசாங்கங்களின் பக்கமாக நின்று அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் செயற்பட்ட வெவ்வேறு தமிழ்  இயக்கங்களை  (அவை இப்போது அரசியல் கட்சிகள்) “தீண்டத்தகாதவை” என்று அடையாளப்படுத்திய ஒரு அரசியல் கலாசாரத்தில் தற்போது ( அரசியல் அனுகூலங்களுக்காக)  ஒரு மாறுதல் ஏற்பட வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியிருக்கிறது. இவற்றில் எந்த கட்சியுடன் கூட்டுச் சேருவது, எந்தக் கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவுடன் உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பது என்பதில் வேறுபாடுகளைக்  காண்பதற்கான அளவுகோல் என்ன என்ற ஒரு கேள்வி எழுகிறது. 

அவர்கள்  தேசியவாதத்தின்  பக்கம் நிற்கிறார்கள்; இவர்கள் தேசியவாத நீக்க அரசியலை முன்னெடுக்கிறார்கள் என்கின்ற வகையிலான விமர்சனங்களை அல்லது சாக்குப் போக்குகளை  முன்வைப்பவர்கள் தாங்கள் கூறுகின்ற வியாக்கியானமே “உண்மையான தேசியவாதம்” என்று தங்களுக்குள் தாங்களே திருப்திப்பட்டுக்  கொள்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த காலப் போராட்டங்களில் எந்தவிதமான ஈடுபாடும் இல்லாத அரசியல்வாதிகள் போராளிகளின்   தியாகங்களை வெறுமனே உதட்டளவில் போற்றுவதன் மூலம் மாத்திரம்  ‘புடம்போட்ட  தேசியவாதிகளாக’ தங்களை உரிமை  கொண்டாடுவது எவ்வாறு பொருத்தமானதாக இருக்கும்?

தேசியவாதம் என்பது ஒரு தேசத்தின் அரசியல் சுதந்திரத்தின் மீதான நம்பிக்கைதான். அதை அடைவதற்கான வழிமுறைகள் என்று வரும்போது காலகட்டங்களையும் அகச்சூழ்நிலையையும் புறச்சூழ்நிலையையும் கருத்தில் எடுத்தே எந்தவொரு தேசமும்  தேசிய இனமும் அடிப்படை அபிலாசைகளை சமரசம் செய்யாமல் அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

உலகில் அரசியல் சுதந்திரத்தை  அடைந்த  தேசங்களினதும் இனங்களினதும் வரலாறு இந்த உண்மையைப் போதிக்கிறது. சூழவுள்ள நிலைவரங்களை கருத்தில் எடுக்காமல் வெறுமனே கோட்பாடுகளில் வரட்டுப் பிடிவாதமாக நிற்பதும் கடந்தகால நினைவுகளுடன் மாத்திரம் மக்களைப் பிணைத்துவைத்திருக்க முயற்சிப்பதும் எந்தப் பயனையும் தராது என்பதே எமக்கு வரலாறு தந்த படிப்பினையாகும். 

இதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தங்களது  அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு முதலில் மூன்று தசாப்தங்கள் அகிம்சைவழிப் போராட்டத்தையும் அடுத்த மூன்று தசாப்தங்கள் ஆயுதப் போராட்டத்தையும் நடத்திய இலங்கை தமிழ் சமுதாயம் இன்று எந்த இடத்தில் நிற்கிறது என்பதை எமது அரசியல்வாதிகள் புரிந்துகொள்வது அவசியமானது.

 தாங்கள் முன்வைக்கின்ற கோட்பாடுகள்,  கோரிக்கைகளை அடைவதற்கான வழிமுறைகள் பற்றிய எந்தவிதமான நடைமுறைச் சாத்தியமான தந்திரோபாயமும் இல்லாமல், கடந்த நூற்றாண்டின்  பின்னரைப் பகுதியில்  வெறுமனே உணர்ச்சிவசமான அரசியலைச் செய்த மிதவாத தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் தற்போதைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு சிறந்த படிப்பினைகளாகும். அந்த மிதவாத தலைவர்கள் பாராளுமன்றத்திலாவது முன்னுதாரணமான பங்களிப்பைச் செய்தார்கள். 

தற்போது தமிழரசு கட்சி டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியினதும் வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் கட்சியினதும் ஒத்துழைப்புடன் ஒரு முகாமாகவும் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவை இன்னொரு முகாமாகவும் நின்று கொண்டு வடக்கில் உள்ளூராட்சி நிருவாகங்களை கைப்பற்றும் போட்டியில் இறங்கியிருக்கின்றன. 

உள்ளூராட்சி சபைகளில் தலைவர், துணைத் தலைவர் தெரிவுகளை ஏதோ எதிரியின் முகாம்களை சண்டையிட்டுக் கைப்பற்றுவது போன்று அரசியல்வாதிகள் அறிவிப்புகளைச் செய்கிறார்கள். அது மாத்திமல்ல, தமிழ்க் கட்சிகளின் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் ஏட்டிக்குப் போட்டியாக செய்யும் பதிவுகள் தமிழ்த் தேசியவாதம் இணைய வெளியில் எந்தளவுக்கு கொச்சைப்படுத்தப்படுகிறது என்பதை பிரகாசமாக வெளிக்காட்டுகின்றன.

இன்று தமிழ்க் கட்சிகள் உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பதற்காக செய்துவரும் விட்டுக் கொடுப்புக்கள் நாளடைவில் தேசிய இனப்பிரச்சினைக்கான குறுகியகால, நீண்டகால தீர்வுகளை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்த நிலைப்பாடுகளை எடுப்பதற்கு வழிவகுக்குமாக இருந்தால் பயனுறுதியுடையதாக அமையும். 

அரசியலில் விட்டுக்கொடுப்பு (Compromise)  என்பது எதிரெதிரான கட்சிகள் பரஸ்பரம் சலுகைகளைச் செய்வதன் மூலம் இணக்கப்பாடு ஒன்றை அடைவதற்கு தேவையான மிகவும் முக்கியமான செயன்முறையாகும். அது முழுநிறைவான கருத்தொருமிப்பை  சாதிப்பதாக அமையாது. அத்தகைய கருத்தொருமிப்பு மிகவும்  அரிதாகவே சாத்தியமாகும். ஆனால், சம்பந்தப்பட்ட கட்சிகளின்  நலன்களை ஓரளவுக்கேனும் நிறைவு செய்வதற்கு  உதவக்கூடிய சூழ்நிலைக்கு வழிவகுக்கும். மாறுபட்ட  நோக்குகளையும்  முன்னுரிமைகளையும் அங்கீகரித்துக்கொண்டு ஒரு பொதுவான நிலைப்பாட்டுக்கு வருவதே உண்மையான விட்டுக்கொடுப்பாகும்.

உள்ளூராட்சி நிருவாகங்களை அமைக்கும் விடயத்தில் தமிழ்க்கட்சிகள் அவற்றின் தனித்தனியான  நலன்களை மனதிற் கொண்டுதான்    விட்டுக்கொடுப்பு  அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்த விட்டுக்கொடுப்பு தற்போது தெரிவாகியிருக்கும் புதிய உள்ளூராட்சி சபைகளின் நான்கு வருட பதவிக்காலம்  நிறைவு பெறும் வரை  நீடித்து தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை  பயனுறுதியுடைய முறையில் நிறைவேற்றுவதற்கு உதவினால் அதுவே பெரிய விடயமாக இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம். எமது தமிழ் அரசியல்வாதிகள் இப்போதுதானே விட்டுக்கொடுப்பு அரசியலை பழகத் தொடங்கியிருக்கிறார்கள். 

https://arangamnews.com/?p=12111

இலங்கையில் இதுவரை 20 மனித புதைகுழிகள் : செம்மணி புதைகுழியின் மர்மம் துலங்குமா?

2 months 3 weeks ago

Published By: PRIYATHARSHAN

19 JUN, 2025 | 04:06 PM

image

வீ. பிரியதர்சன்

உங்கள் பிள்ளை, உடன்பிறந்தவர், கணவன், மனைவி அல்லது பெற்றோர் என ஒரு அன்புக்குரியவர் காணாமல்போனதை கற்பனை செய்து பாருங்கள், அவர்களை  மீண்டும் கொண்டுவர அல்லது குறைந்தபட்சம் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிய நீங்கள் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள், அதற்குப் பதிலாக உங்கள் வேண்டுகோள்கள் செவிடர் காதுகளில் விழுகின்றன. அரசாங்கங்களும் புரட்சிகளும் வந்துபோயின. அனைத்தும் நீதியை உறுதியளித்தன. ஆனால் இறுதியில் அந்த நீதியை வழங்கத் தவறிவிட்டன. ஆயினும் இலங்கையின் வடக்கு, கிழக்கில் 3 மூவாயிரம் நாட்களுக்கு மேலாக காணாமல்போனவர்களின் உறவினர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர் நீதிக்காக. 

IMG_20250605_103810.jpg

ஆம், இந்நிலையிலேயே 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி பாரிய மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணத்தின் அரியாலைப் பகுதியிலுள்ள செம்மணி - சிந்துப்பாத்தி பகுதி அறிவிக்கப்பட்டது. அங்கு 19 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீண்டும் அங்கு அகழ்வாராய்ச்சி தொடங்கும் போது மேலும் பல எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

1000046433.jpg

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட  19 எலும்புக்கூடுகளில் 3 பிறந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அல்லது பத்துமாதத்திற்கும் குறைவான குழந்தைகளின் எலும்புக்கூடுகள், மனித புதைகுழிகளின் 40 வீதத்தினை மாத்திரமே இதுவரை அகழ்ந்துள்ளோம். செயற்கோள் படங்கள் மற்றும் ஆளில்லா விமான படங்கள் மூலம்  இரண்டாவது மனித புதைகுழி இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்கும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர்  ராஜ்சோமதேவ கூறுகிறார்.

1996 ஆம் ஆண்டில் கிருஷாந்தி குமாரசாமி வழக்கில் தண்டனை பெற்ற ஒரு இராணுவ சிப்பாயால் 1998 ஆம் ஆண்டில் முதன் முதலில் அம்பலப்படுத்தப்பட்டது செம்மணி புதைகுழி. இதையடுத்து 1999 ஆம் ஆண்டு அங்கு இடம்பெற்ற ஆகழ்வின்போது 15 எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவற்றில் சில எழும்புக்கூடுகள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. இருப்பினும் அந்தக்காலப்பகுதியில் நீதி நிறுத்தப்பட்டது.

பல ஆண்டுகளாக வடக்கு, கிழக்கைச் சேர்ந்த குடும்பங்கள் முக்கியமாக தாய்மார்கள் மற்றும் கணவனை தொலைத்த மனைவிமார்கள் தங்கள் காணாமல்போன அன்புக்குரியவர்களின்  புகைப்படங்களை ஏந்தி நீதி கோரி தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அண்மையில் செம்மணியில் உள்ள சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் முன் போராட்டத்தை நடத்திய வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினர், சர்வதேச மேற்பார்வை மற்றும் சர்வதேச தரநிர்ணயங்களுக்கு அமைய மனிதப் புதைகுழியின் அகழ்வினை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியதுடன் இது ஒரு தனியான சம்பவமல்ல. இது குறித்த விசாரணைகள் மற்றும் அகழ்வுகள் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய முழு உண்மையையும் வெளிக்கொணர உதவும்" என கூறினர்.

43__4_.jpg

இந்நிலையில், “ செம்மணி மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகள் சர்வதேச நடைமுறைகளை பின்பற்றி இடம்பெறுவது அவசியம் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தவர்களுக்கு நீதியையும் உண்மையையும் வழங்கும் நோக்கமாக அமைய வேண்டுமென்று சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

JDS1.png

மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டு மையம் (CHRD), காணாமல் போனவர்களின் குடும்பங்கள் (FoD), இலங்கை ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள்  (JDS), கொழும்பு சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் - இலங்கை (ITJP) ஆகியன இணைந்து கடந்த 2023 இல் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்களில், உடல்கள் புதைக்கப்பட்ட பல மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளதாகவும் ஆனால் இதுவரை 20 இடங்களில் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் இருந்து பகுதியளவில் மனித எச்சங்கள், எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இன்றுவரை தங்கள் அன்புக்குரியவர்களை தொலைத்த எந்தவொரு குடும்பமும் மனித எச்சங்களை பெறவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.

JDS2.png

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து அரசாங்கமும் தென்னிலங்கை ஊடகங்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரும் மௌனமாக இருக்கின்றமை வலிகளை ஆழமாக்குவதுடன் இலங்கையின் ஒற்றுமை மற்றும் அமைதிக்கான வாய்ப்பை அச்சுறுத்துவதாக அமைகின்றது. எனவே அரசாங்கம் செம்மணி புதைகுழி அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கி, சர்வதேச தடயவியல் தரங்களை உறுதிப்படுத்த வேண்டும். காணாமல்போனோருக்கான அலுவலகம் போன்ற நிறுவனங்களை இயங்க வைப்பதன் மூலம் உண்மைகளை ஏற்றுக்கொண்டு நம்பிக்கையை கட்டியெழுப்பி, கடந்த காலத்தில் விட்ட தவறுகளை மீண்டும் நிகழாமல் தடுக்கலாம்.

கடந்த 1971 மற்றும் 1987, 1989 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஜே.வி.பி. கிளர்ச்சிகளின் போது, தெற்கிலுள்ள சிங்களக் குடும்பங்கள் சூரியகந்த மற்றும் மாத்தளை புதைகுழிகளில் இழந்த அன்புக்குரியவர்களை நினைத்து வேதனையையை எதிர்கொண்டனர். அண்மையில் சர்வதேச தொலைக்காட்சி நேர்காணல் மூலம் வெளிச்சத்துக்கு வந்த படலந்த விவகாரம் பொதுமக்களின் சீற்றத்தை தூண்டியது. ஆனால் இடம்பெற்ற அட்டூழியங்களுக்கு எந்தப்பொறுப்பும் அளிக்கப்படவில்லை. 

1000046438.jpg

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என நாம் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அழுதோம். அப்படியானால் நாம் ஏன் செம்மணியிலிருந்து விலகிச்செல்கின்றோம் ? கடந்த காலத்தை எதிர்கொள்வது பிரிவினை அல்ல, அது ஒற்றுமைக்கான பாதையாகும். நல்லிணக்கம் என்பது எமது கடந்த காலத்தின் கொடூரங்களை மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான எமது கேடயம், மேலும் பொருளாதார மீட்சிக்கான பாதையும் கூட. நல்லிணக்கம் தான் முன்னோக்கிச் செல்லும் பாதை, அத்துடன் கடந்த கால தவறுகளுக்கு பொறுப்பேற்பது உண்மையைத் தேடுவதற்கும் உண்மையான குணப்படுத்தலுக்கும் இன்றியமையாதது.

https://www.virakesari.lk/article/217915

Checked
Wed, 09/17/2025 - 10:49
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed