அரசியல் அலசல்

தமிழரசுக் கட்சியின் தலைவராகச் சிறிதரன் - விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்?

2 months ago
விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்?

— கருணாகரன் —

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகச் சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்திருப்பதை அடுத்து அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறு கருத்துகள் முன்வைக்கப்படுவதொன்றும் புதியதுமல்ல. பெரியதுமல்ல. அரசியற் கட்சிகளின் விடயங்கள் என்றால் பொதுப்பரப்பில் அதைப்பற்றிய உரையாடல்கள் நிகழ்வதுண்டு. ஆகவே இதொரு சாதாரணமான விடயம். ஆனால், இதைக் கடந்து இந்தக் கருத்துகளின் பின்னால் செயற்படுகின்ற உளநிலையும் அரசியற் காரணங்களும் முக்கியமானவை. இதற்கு அடிப்படையாகச் சில காரணங்கள் உண்டு.

1.        இதற்கு முன்னெப்போதும் தமிழரசுக் கட்சியின் தலைமைக்கான போட்டி  இப்படிப் பகிரங்க வெளியில் நடந்ததில்லை. இப்போதுதான் அது முதற்கடவையாக இந்த நிலைமையைச் சந்தித்திருக்கிறது. அதற்குக் கட்சிக்குள் நிலவும் உட்பலவீனங்கள் காரணமாகும். ஆனாலும் இதொரு சாதாரணமான உட்கட்சி விடயமே. இதைப்போல, தமிழ்நாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், இலங்கையில் ஐ.தே.க, சு.க போன்ற பெருங்கட்சிகளுக்கும் தலைமைப் போட்டிகள் நடந்ததுண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைமைப் போட்டியில் நீதி மன்றம் வரையில் சென்றது. அப்படிச் சில கட்சிகளுக்குள் சில சந்தர்ப்பங்களில் நிகழ்வது வழமை. கட்சியின் அரசியல் யாப்பே இதை உரைக்கிறது. இதையெல்லாம் உணர்ந்து கொள்ளாமல் அல்லது இதைத் தெரிந்து கொண்டும் இந்தப் போட்டியை ஏதோ தேசிய அளவிலான ஒரு போட்டிபோலக் காட்டியதால் – ஊதிப்  பெருப்பித்ததால் ஏற்பட்டதே இந்தப் பரபரப்பு.

2.        இதைப் பெரிய விவகாரமாக்கி, ஊதிப்பெருப்பிக்கக் காரணமாக இருந்த தரப்புகள்,  ஊடகங்களும் தமிழ்ப் பத்தியாளர்களுமாகும். காரணம், ஏற்கனவே இருக்கின்ற தமிழ்த்தேசிய அரசியற் கட்சிகளிடத்தில் காணப்படுகின்ற போதாமை உணர்வே இந்தத் தரப்புகளை தமிழரசுக் கட்சியின் தலைமைப் போட்டியின்மீது கவனத்தை உண்டாக்கியது. ஏற்கனவே தலைமைப் பொறுப்பிலிருந்த மாவை சேனாதிராஜாவும் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் திரு. சம்மந்தனும்  முதுமை மற்றும் செயலின்மை காரணமாக கட்சியையும் அரசியலையும் மந்த நிலைக்குள்ளாக்கி விட்டனர் என்று பலராலும் கருதப்பட்டது. மறுபக்கத்தில் கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோர்  தமிழ்த்தேசியவாத அரசியலைத் தீவிரமாகப் பேசினாலும் அதற்கான கட்டமைப்பு – செயற்பாட்டு விளைவு போதாதிருக்கிறது என்ற உணர்வு பலரிடத்திலும் காணப்பட்டது.                            அந்தப் போதாமை உணர்வென்பது எதிர்ப்பரசியலின் மீதான நாட்டத்தினால் ஏற்பட்டது. ஆக இன்று ஈழத்தமிழ் அரசியல் வெளியானது எதிர்ப்பரசியலிலேயே மையம் கொண்டுள்ளது. அதனுடைய விளைவே இதுவாகும்.

3.        இன்னொரு நிலையில் இன்னொரு சாரார், தீவிர எதிர்ப்பரசியலுக்குப் பதிலாக மென்போக்கான முறையில் பலரோடும் பேசக்கூடியவாறு தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அவர்களே சம்மந்தன், சுமந்திரன், சாணக்கியன் போன்றோரை ஆதரிக்கின்றனர். ஆனாலும் அந்தத் தரப்பு பொதுவெளியில் இன்னும் பலமடையவில்லை.

4.        ஆகவே மென்போக்கான முறையில் பன்மைத்துவத்தோடு கட்சியின் கொள்கையைக் கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு சாராரும் (சுமந்திரனை ஆதரிப்போர்) அப்படியல்ல, தமிழரின் அரசியலை, விட்டுக் கொடுப்புகளற்ற முறையில் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்று மறுசாராரும் (சிறிதரனை ஆதரிப்போரும்) கருதுவதால் ஏற்பட்டுள்ள எதிரெதிர் முனைப்புகளால் இந்தப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

5.        எப்போதும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாகவே சிறிதரன் இருப்பதாகும். மட்டுமல்ல, கட்சிக்கு உள்ளும் வெளியிலும் ஒரு தொகுதியினரின் எதிர்ப்புகள் அவருக்கு  உண்டு என்பதால் ஏற்பட்ட அலைகள். அதைப் போல அவரைத் தீவிர நிலையில் ஆதரிப்போரும் உண்டு. இதனால் உண்டாகும் உள் – வெளி முரண்கள் வெளித்தெரிகின்றன.

6.        சிறிதரன் முன்னெடுக்க முயற்சிக்கின்ற அரசியலானது,  கஜேந்திரகுமார் முன்னெடுத்து வரும் அதிதீவிரவாத அரசிலை ஒத்திருப்பதால், இரண்டு அரசியற் தரப்புகளுக்குமிடையில் முன்னரைப்போல (இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் – இலங்கைத் தமிழரசுக் கட்சி மோதல் அல்லது ஜீ.ஜீ.பொன்னம்பலம் – எஸ்.ஜே.வி. செல்வநாயகம் மோதல்) இரு தரப்புப் போட்டிகள், உரசல்கள், மோதல்களைக் கொண்டிருக்கும் என்பது. இதனுடைய விளைவுகள் அவ்வளவு நல்லதாக அமையாது என்ற உணர்வினால் எழும் அச்சம் இந்த விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

7.        சிறிதரன் முன்னெடுக்க விரும்பும் அரசியலானது, தமிழரசுக் கட்சியின் காலாவதியாகப் போன அரசியல் மட்டுமல்ல, விடுதலைப் புலிகளின் தொடர்ச்சி போன்ற பாவனையைக் கொண்டிருக்கிறது என்ற தோற்றப்பாட்டைக் கொண்டது என்பதால் இரண்டும் நிகழ்காலத்திற்கோ எதிர்காலத்திற்கோ உரியதல்ல என்பதால் எழுந்துள்ள கருத்துகள்.

8.        புலிகளைப் போற்றிப்பாடித் தன்னுடைய அரசியல் வழிமுறையை முன்னெடுப்பதாகக் காட்டிக் கொண்டாலும் புலிகள் மேற்கொண்ட அரசியற் கொள்கை, அவர்களுடைய செயற்பாடுகள், அவர்கள் உருவாக்கிய நடைமுறை போன்றவற்றுக்கு அப்பாலேயே சிறிதரன் நிற்கிறார் என்பது. அதாவது அவர் புலிகளின் பிரதிநிதிபோல நாடகமாடுகிறார் என்பது. இல்லையென்றால் குறைந்த பட்சம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்ளாள் உறுப்பினர்கள், அவர்களுடைய இயக்கத்தைச் சேர்ந்த மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கான இடம் இனி அளிக்கப்படுமா என்று எழுகின்ற கேள்வி.

9.        விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியைப் பேணும் அரசியலுக்கு தென்னிலங்கையிலும் பிராந்திய ரீதியாக இந்தியா, சீனா மற்றும் சர்வதேச ரீதியில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் அங்கீகாரமும் கிடைக்குமா என்ற கேள்விகள்.

இவ்வாறு பல கேள்விகளும் அடிப்படைக் கருத்து நிலைகளும் தமிழரசுக் கட்சியின் மீதும் அதனுடைய தலைமை (சிறிதரனின்) மீதும் முன்வைக்கப்படுகின்றன.

ஈழத் தமிழரின் அரசியல், ஆயுதப் போராட்டத்துக்கு முன்பும் ஆயுதப் போராட்டத்துக்குப் பின்பும் தமிழரசுக் கட்சியின் கைகளில்தான் இருந்தது, இருக்கிறது. அதற்கான தகுதி அதற்கு இருக்கிறதோ இல்லையோ வரலாற்றுச் சூழல் அப்படித்தான் அமைந்துள்ளது. இதற்கு இன்று தமிழ் அரசியல் பரப்பிலுள்ள ஏனைய சக்திகளின் பலவீனமும் ஒரு காரணமாகும்.

விடுதலைப் புலிகளால் பல கட்சிகளையும் இயக்கங்களையும் இணைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டாலும் அதற்குத் தமிழரசுக் கட்சியே தலைமை தாங்கும் நிலை வளர்ந்தது. இதற்கு மாறாக தமிழரசுக் கட்சியின் திமிர்த்தனத்தினால் (ஜனநாயக முரண்பாடுகளால்) ஏனைய கட்சிகள் வெளியேறினாலும் அவற்றினால் தமிழரசுக் கட்சியை மீறி நிற்க முடியவில்லை. இவ்வளவுக்கும் தமிழரசுக் கட்சியின் பாராம்பரியத் தொடர்ச்சியைக் கொண்டவர்கள் இன்றில்லை. புதியவர்களே அதற்குத் தலைமை ஏற்றுள்ளனர். இருந்தும் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களால்  (அவர்களுக்கு நீண்டதொரு செயற்பாட்டு அரசியற்பாரம்பரியம் – விடுதலை இயக்க அரசியல் வழித் தொடர்ச்சி இருந்தாலும்)  தமிழரசுக் கட்சியின் இந்தப் புதிய முகங்களை எதிர்கொள்ள முடியாமலே உள்ளனர்.

இவ்வளவுக்கும் தமிழரசுக் கட்சி செயற்பாட்டுத் தளத்தில் மிகப் பலவீனமானது. அதற்கு  75 ஆண்டுகாலப் பாரம்பரியமிருந்தாலும் அதனால் நிகழ்கால அரசியலையோ எதிர்காலத்துக்கான அரசியலையோ முன்னெடுக்கக் கூடிய சிந்தனைத் திறன் (கொள்கை), செயற்பாட்டுத் திறன் எதுவும் இல்லை. தமிழ் மக்களுடைய அரசியல் விடுதலைக்கும் சமூக மேம்பாட்டுக்கும் எந்த வகையிலும் பயன்தராத, பங்களித்திருக்காத, பங்களிக்கவே முடியாத நிலையில்தான் அது இன்னமும் உள்ளது. உண்மையில் திரு. S.J.V.செல்வநாயகம் காலத்துக்குப் பிறகு அது தேவையற்ற ஒன்றாக ஆகி விட்டது.

அதாவது அது காலாவதியாகி (Expired) விட்டது. அதைச் செல்வநாயகமே “தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று பகிரங்கமாக வெளிப்படுத்தியுமிருந்தார். அதைச் சற்று வேறுவிதமாக்கி தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய லேபிளில் வைத்திருந்தார் திரு. அ. அமிர்தலிங்கம். அதுவும் பின்னர் செல்லாக்காசாகி விட்டது.

விடுதலைப்புலிகள் தம்முடைய அரசியல் தேவைக்காக தாம் ஏற்றுக்கொள்ளாமல் வெளியே தள்ளி வைத்திருந்த தமிழ்க்கட்சிகளையும் இயக்கங்களையும் தற்காலிகமாகப் பயன்படுத்த விளைந்ததன் விளைவாக மீண்டும் செயற்கைச் சுவாசமளிக்கப்பட்டு அரங்குக்குக் கொண்டு வரப்பட்டதே தமிழரசுக் கட்சி.

அவர்கள் கூட முதலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தையே பயன்படுத்தினார்கள். திரு. வீ. ஆனந்தசங்கரியுடன் ஏற்பட்ட பிணக்கையடுத்தே தமிழரசுக் கட்சியின் வீடு சின்னம் புலிகளால் பயன்படுத்தப்பட்டது.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அரசியல் செய்து வருகிறது தமிழரசுக் கட்சி.

ஆயினும் அதனுடைய பலவீனங்கள் அதை வளர்த்துப் புதிய – காலப் பொருத்தமுடைய அரசியல் இயக்கமாக மாற்றவில்லை. அதற்கான அனைத்து வாய்ப்புகளும் அதற்கிருந்தன.

பதிலாக அந்தப் பலவீனங்கள் இன்றைய சீரழிவுக்கும் தலைமைப் போட்டிக்கும் அதைக் கொண்டு வந்து விட்டுள்ளது. அதாவது அதைச் சேற்றுக்குள் தள்ளி விட்டுள்ளது.

உண்மையில் இப்பொழுது தன்னுடைய மனச்சாட்சியின்படி தமிழரசுக் கட்சி அரசியல் அரங்கிலிருந்தே விலகுவதே தமிழ் மக்களுக்கும் இந்தக் காலத்துக்கும் செய்கின்ற பெரும்பணியாக இருக்கும்.

நல்லதைச் செய்ய முடியாது விட்டால் பரவாயில்லை. நல்லன நிகழ்வதற்கு முட்டுக்கட்டையாக இருக்காது விட்டாலே அது ஒரு பெரிய பணியும் பங்களிப்பும்தான். ஏனென்றால் சரி பிழைகளுக்கு அப்பால் புலிகள் உருவாக்கியளித்த கூட்டமைப்பு என்பதைக் கூட தமிழரசுக் கட்சியினால் தக்க வைக்க முடியவில்லை.

புலிகளுக்குப் பிறகு காலம் அளித்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழ்ச்சமூகத்தின் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு அடிப்படைகளைக் கூட அது நிர்மாணம் செய்யவில்லை. ஆனால் அதற்கான கடப்பாடும் பொறுப்பும் அதற்கிருந்தது. அதைச் செய்யாமல் பதிலாக எல்லாவற்றையும் சிதைத்து, இறுதியில் தன்னையே அழிக்கும் நிலைக்கு வந்துள்ளது.

இதற்குத் தனியே தமிழரசுக் கட்சியினர் மட்டும் பொறுப்பில்லை. அதை ஆதரித்தும் அனுசரித்தும் நின்ற, நிற்கின்ற அனைவருக்கும் இந்தப் பொறுப்பும் பழியும் உண்டு. வரலாறு நிச்சயம் இவர்களை நிந்திக்கும்.

இப்பொழுது சிவஞானம் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தலைவராகியவுடன் சிறிதரன் சென்றது கிளிநொச்சியில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்துக்கு. இது  ஏற்கனவே கூறப்பட்டுள்ளதைப்போல அவர் தன்னைப் புலிகளின் அரசியல் தொடர்ச்சியாகக் காட்ட முற்பட்டதற்காகவாகும். ஆனால், இதை தென்னிலங்கைச் சக்திகள் நற்சமிக்ஞையாகப் பார்க்கப் போவதில்லை. ஏன் முஸ்லிம்கள் கூட இதை எதிராகவே பார்ப்பார்கள். அவ்வாறே இந்தியாவும் மேற்குலகும் எதிர்நிலை நின்றே நோக்கும்.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு என்ற பேர் இருந்தாலும் சம்மந்தன் அதனைக் கடந்து பல்வேறு தரப்பினருடைய கவனத்தையும் கோரக் கூடிய அரசியலை முனனெடுத்து வந்தார். இந்த நிலைப்பாடு சர்வதேசப் பரப்பிலும் தமிழ்த் தரப்பின் தலைவர் என்ற அடையாளத்தைச் சம்மந்தனுக்குக் கொடுத்தது, அவர் மேற்கொண்ட பன்மைத்துவத்தை நோக்கிய அரசியலாகும். ஆனால், அதுதான் தமிழ்த்தரப்பில் சம்மந்தனுக்கும் அவரைத் தொடர்ந்த சுமந்திரனுக்கும் எதிரான விமர்சனங்களையும் கடந்த காலத்தில் உருவாக்கியிருந்தது. சுமந்திரன் தலைமைக்கு வர முடியாமல் போனதற்குக் காரணமும் இதுதான்.

ஆனால் போருக்குப் பிந்திய அரசியலை தனியே எதிர்ப்பு அரசியலாக முன்னெடுக்க முடியாது. இன்றைய  யதார்த்தம் வேறு. இதைத் தெளிவாகவே சர்வதேச சமூகமும் இந்தியாவும் இலங்கையும் பொதுவாக உலகப் போக்கும் சொல்கின்றன. இப்படியான நிலைக்குப் பிறகும் தமிழ் மக்கள் (இங்கே மக்கள் என்பது அவர்களுக்காகச் சிந்திப்பதாகக் கருதப்படும் ஊடகவியலாளர்கள், அரசியற் பத்தியாளர்கள், தமிழர்களின் கல்விசார் துறையினர், சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்பட எனப் பொருள்படும) தமிழரசுக் கட்சியை தமக்கான மீட்புப் படகாகக் கருதினால் அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியுள்ளது. அவர்களைக் குறித்தே கேள்வி எழும்புகிறது.

விடுதலைக்காக ஒரு சிறிய மக்கள் கூட்டம் தன்னுடைய சக்திக்கு அப்பால், மாபெரும் தியாகங்களைச் செய்துள்ளது. அளவுக்கு அதிகமான  இழப்புகளைச் சந்தித்திருக்கிறது. இந்த இழப்புகள் சாதாரணமாகக் கடந்து போகக் கூடியவையல்ல. மட்டுமல்ல, உள் நாட்டிலும் நாட்டிற்கு வெளியேயும் தொடர் அலைச்சல்களில்  சந்தித்த பிறகும் திக்குத் தெரியாத காட்டில் தடுமாறுவதைப்போலிருந்தால்,

ஈழத்தமிழரின் ஊடக, அரசியல், அதுசார் அறிவு நிலையைப் பார்த்தால் சிரிப்பு வரும். சற்று ஆழமாகச் சிந்தித்தால் கடுமையான கோபமே ஏற்படும். தங்களுடைய சொந்த அனுபவத்திலிருந்து கூட எதையும் கற்றுக் கொள்ள முடியாத சமூகமாக ஈழத்தமிழர்கள் சீரழிந்துள்ளனர். இல்லையென்றால் நாற்பது ஆண்டுகளாகப் போராடிய பட்டறிவைக் கூட நினைவில் வைத்துப் பரிசீலிக்க முடியாத அளவுக்கு, எல்லாவற்றையும் மறந்து போய், நாற்பது ஆண்டுகளுக்கு முன்னான அரசியல் குழிக்குட் போய்க் கண்மூடித்தனமாக விழுவார்களா? 

“விதியே விதியே, தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்?” என்று பாரதியார் பாடியதை இங்கே நினைவிற் கொண்டு பேச வேண்டியதாக உள்ளது.

பாரதியார் மனம் வருந்தி இதைச் சொன்னது, இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலாகும். அப்போது வரலாற்றுச் சிறப்பெல்லாம் இருந்தும் கூட தமிழர்கள் உள்நாட்டிலும் உலகம் முழுவதும் கூலிகளாகவும் ஏதிலிகளாகவும் சிதறிப் பரந்து அல்லலுற்றுக் கிடந்தனர். அதைப் பார்த்து வெம்பித் துயரடைந்தார் பாரதி. கவிஞரின் மனம் சிறுமை கண்டு, கொடுமை கண்டு கொதிப்பதைப்போல, அறியாமையைக் கண்டும் கொதிப்படைவது.

காலம் கடந்தாலும், சூழல் மாறினாலும் ஈழத்தமிழரின் நிலையில் மாற்றமில்லை. வரவர நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது.
 

https://arangamnews.com/?p=10397

உலக நீதி : காசாவும் முள்ளிவாய்க்காலும் - நிலாந்தன்

2 months 1 week ago

 

உலக நீதி : காசாவும் முள்ளிவாய்க்காலும் - நிலாந்தன்

spacer.png

“அனைத்துலக நீதியின் மாண்பு தராசில் தொங்கிக்கொண்டிருக்கிறது” இவ்வாறு அனைத்துலக நீதிமன்றத்தில் வைத்துக் கூறியிருப்பவர் தென்னாபிரிக்காவின் பிரதிநிதி. காசாவில் இஸ்ரேல்  புரியும் இனப்படுகொலைக்கு எதிராகத் தென்னாபிரிக்கா உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறது. அந்த வழக்கின் தொடக்கத்தில் மேற்கண்டவாறு கூறப்பட்டிருக்கிறது. உலக நீதி மட்டுமல்ல மேற்கு நாடுகளின் அரசியல் அறமும் கூட தராசில் வைக்கப்பட்டிருக்கிறது. முழு உலகத்துக்கும் ஜனநாயகம் மனித உரிமைகள் போன்றவற்றின் மாண்பைக் குறித்து வகுப்பெடுக்கும் மேற்கு நாடுகளின் அரசியல் அறத்தை மிக இளைய ஜனநாயகங்களில் ஒன்று ஆகிய தென்னாபிரிக்கா கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. காசாவில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கும் பொழுதே, ரத்தம் காய முன்பே, தென்னாபிரிக்கா வழக்குத் தொடுத்திருக்கின்றது. அதுபோல ஏற்கனவே மற்றொரு ஆபிரிக்க நாடாகிய காம்பியா மியான்மரில் ரோஹிங்கா முஸ்லிம்களுக்காக நீதி கேட்டு 2019 ஆம் ஆண்டு அனைத்துலக நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது.

அனைத்துலக நீதிமன்றம் எனப்படுவது ஐநாவின் ஆறு பிரதான உறுப்புகளில் ஒன்று. ஐநாவின் நீதி பரிபாலனக் கட்டமைப்பு அது. ஐநாவின் ஏனைய உறுப்புக்கள் நியூயோர்க்கில் உள்ளன. ஆனால் அனைத்துலக நீதிமன்றம் நெதர்லாந்தின் தலைநகரமான ஹேக்கில் அமைந்துள்ளது. ஐநாவின் சுயாதீனமான உறுப்பாக அது கருதப்பட்டாலும் அதன் தீர்ப்புக்களின் அடுத்தடுத்த கட்டங்களைத் தீர்மானிப்பது ஐநா பொதுச் சபையும் பாதுகாப்புச் சபையுந்தான். பாதுகாப்புச் சபையில் சக்திமிக்க நாடுகளுக்கு வீற்ரோ அதிகாரம் உண்டு. எனவே அங்கு விவாதிக்கப்படும் தீர்ப்புகளின் மீது சக்தி மிக்க நாடுகள் வீற்ரோ வாக்கைப் பிரயோகிக்க முடியும். ரோஹியங்கா முஸ்லிம்களின் விடயத்தில் மியான்மருக்குச் சார்பாக சீனா அவ்வாறு வீற்ரோ வாக்கைப்  பிரயோகித்திருக்கிறது. அதுபோலவே இஸ்ரேலுக்கு எதிரான ஐநா தீர்மானங்களின் போதும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக தன்னுடைய வீற்ரோ அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கிறது. ஐநாவின் வரலாற்றிலேயே அமெரிக்கா அதிகம் எண்ணிக்கையிலான வீற்ரோ வாக்குகளைப் பிரயோகித்தது இஸ்ரேலுக்கு ஆதரவாகத்தான் என்று ஒரு கணக்கு உண்டு.

எனவே ஐநாவின் உறுப்புக்களில் ஒன்று என்ற அடிப்படையில் அனைத்துலக நீதிமன்றம் ஐநாவுக்குள்ள எல்லா வரையறைகளையும் பலவீனங்களையும் இயலாமைகளையும் கொண்டிருக்கும். இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்தே, குறிப்பாக மியான்மருக்கு எதிராக கம்பியா தொடுத்த வழக்கின் கடந்த நான்கு ஆண்டுகால அனுபவத்தின் பின்னணியில் வைத்தே தென்னாபிரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக தொடுத்திருக்கும் வழக்கையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ரோஹியங்கா முஸ்லிம்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக பொருத்தமான நீதி வழங்கப்படவில்லை. ஐநா உருவாக்கப்பட்டதிலிருந்து அது பெருமளவுக்கு இனப்படுகொலைகளின் பார்வையாளராகத்தான் இருந்து வந்துள்ளது. ஐநாவின் இயலாமையை,கையாலாகத்தனத்தை நிரூபிக்கும் ஆகப்பிந்திய இனப்படுகொலைக் களந்தான் காசா. தென்னாபிரிக்கா தொடுத்திருக்கும் வழக்கின்மூலம் பலஸ்தீனர்களுக்கு நீதி கிடைக்குமா? அல்லது அந்த வழக்கு ஐநாவின் கையாலாகத்தனத்தை மீண்டும் ஒரு தடவை நிரூபிக்குமா ?

spacer.png

ஏனெனில், உலகில் தூய நீதி என்று எதுவும் கிடையாது இருப்பதெல்லாம் அரசியல் நீதிதான். நீதிபதிகள் தனிப்பட்ட முறையில் நீதியாக நடக்கலாம். ஆனால் அந்த நீதியை நடைமுறைப்படுத்தப் போவது அரசுகள்தான். அரசுகள், நலன்களின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்கும். அரசியலில் அறம் நீதி என்பவையெல்லாம் கிடையாது. நிலையான ராணுவப் பொருளாதார நலன்கள்தான் உண்டு. அது சார்ந்த முடிவுகள்தான் உண்டு. அதனால்தான் அமெரிக்க அறிஞராகிய நோஆம் சொம்ஸ்கி பின்வருமாறு சொன்னார். அரசியல் அறத்தைக் கடைப்பிடிக்கும்  காலம் வரும்வரை இனப்படுகொலை என்ற சொல்லை அகராதியில் இருந்து எடுத்துவிடுவதே நல்லது என்று.

தென்னாபிரிக்கா தொடுத்திருக்கும் வழக்கு இஸ்ரேலுக்கு மட்டும் எதிரானது அல்ல. இஸ்ரேலை ஆதரிக்கும் எல்லா மேற்கு நாடுகளுக்கும் எதிரானதுதான். அனைத்துலக நீதிமன்றத்தை ஸ்தாபிக்கும்பொழுது அதில் முக்கிய பங்களிப்பை நல்கியது அமெரிக்காவும் பிரித்தானியாவுந்தான். அதே நாடுகள் இப்பொழுது தென்னாபிரிக்காவின் நகர்வை ஆதரிக்கவில்லை. எந்த ஒரு மேற்கத்திய நாடும் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் அனைத்துலக நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா தொடுத்திருக்கும் வழக்கை ஆதரிக்கவில்லை.

ஆனால் அதே மேற்கு நாடுகள்தான் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றன. இதை எப்படி விளங்கிக் கொள்வது?

spacer.png

இஸ்ரேலுக்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்கும் தென்னாபிரிக்காவும் மியான்மருக்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்கும் காம்பியாவும் ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ளன. இந்த நாடுகள் எவையும் உக்ரைனில் ரஷ்யா முன்னெடுக்கும் ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து வழக்கு தொடுக்கவில்லை. அது மேற்கு நாடுகளுக்கு எதிரான ஆபிரிக்க நிலைப்பாடு. ரஷ்யா ஆபிரிக்க கண்டத்தை அதிகம் அரவணைத்து வைத்திருக்கின்றது. அங்குள்ள முன்னால் பிரெஞ்சுக் கொலனிகளில் நடக்கும் ராணுவச் சதிப் புரட்சிகளின் பின்னணியில் ரஷ்சியாவின் மறைகரங்கள் இருப்பதாக ஊகங்கள் உண்டு.

அதேசமயம் காசாவில் நடப்பது இனப்படுகொலை என்று சொல்லாத மேக்கு நாடுகள், அதற்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கும் தென்னாபிரிக்காவை ஆதரிக்காத மேற்கு நாடுகள், ரஷ்ய-உக்ரைன் போரில் ரஷ்யா இனப்படுகொலை செய்வதாகக் குற்றம் சாட்டின. போர் தொடங்கிய குறுகிய காலத்துக்குள்ளேயே அமெரிக்கா அதை இனப்படுகொலை என்று சொன்னது. அது ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாடு.

பேரரசுகள் மட்டுமல்ல சிறிய அரசுகளும்கூட அறம் சார்ந்து அரசியல் முடிவுகளை எடுப்பதில்லை. உதாரணமாக தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகிய பொழுது, பலஸ்தீனம் தமிழ் மக்களுடன் நிற்கவில்லை. பாலஸ்தீன அதிகார சபையானது மஹிந்த ராஜபக்சவின் நண்பனாகத்தான் காணப்படுகின்றது. 2009க்கு பின்னர் 2014ஆம் ஆண்டு பாலஸ்தீனம் மகிந்தவிற்கு அந்த நாட்டின் உயர் விருதாகிய “பலஸ்தீன நட்சத்திரம்” என்ற விருதை வழங்கியது. அங்குள்ள வீதி ஒன்றுக்கும் அவருடைய பெயரைச் சூட்டியது. அதாவது ஈழத் தமிழர்களால் இனப்படுகொலை தெரிந்தவர் என்று குற்றச்சாட்டப்படும் ஒருவருக்கு பலஸ்தீனம் நாட்டின் உயர் விருதை வழங்கியிருக்கிறது. இதை எப்படி விளங்கிக் கொள்வது?

spacer.png

அப்படித்தான் கியூபாவும். ஒரு காலம் போராடும் இயக்கங்களுக்கு அது முன்மாதிரியாக இருந்தது. ஈழப் போராட்ட இயக்கங்கள் சில தமது பொறுப்பாளர்களுக்கு கஸ்ட்ரோ என்று பெயர் வைத்தன. ஆனால் 2009க்கு முன்னரும் பின்னரும் குறிப்பாக ஐநாவில் கியூபா யாருடைய பக்கம் நிற்கின்றது? ஐநா தீர்மானங்களின் போது கியூபா அரசாங்கத்திற்கு ஆதரவாகத் தான் வாக்களித்து வருகின்றது. இதை எப்படி விளங்கிக் கொள்வது?

அதாவது மேற்கண்டவைகளைத் தொகுத்துப் பார்க்கும்போது தெளிவாக தெரிவது என்னவென்றால், சக்தி மிக்க நாடுகளோ அல்லது சிறிய நாடுகளோ எவையானாலும் அறத்தின் பாற்பட்டோ நீதியின் பாற்பட்டோ முடிவுகளை எடுப்பது குறைவு. பெருமளவுக்கு நிலையான அரசியல் நலன்களின் அடிப்படையில்தான் அவை முடிவுகளை எடுக்கின்றன. இப்படிப்பட்டதொரு குரூர உலகில் பலஸ்தீனர்களுக்கு அனைத்துலகை நீதிமன்றம் எப்படிப்பட்ட ஒரு நீதியை வழங்கும்?

தென்னாபிரிக்காவின் நகர்வை, ஆபிரிக்கக் கண்டத்தில் தற்பொழுது மேலோங்கிக் காணப்படும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான உணர்வுகளின் பிரதிபலிப்பாகவும் விளங்கிக் கொள்ளலாம். எனினும் எல்லாவிதமான வாதப்பிரதிவாதங்களுக்கும் அப்பால் அது இனப்படுகொலைக்கு உள்ளாக்கி கொண்டிருக்கும் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவது. தாங்கள் தனித்துவிடப்படவில்லை என்ற உணர்வை அது அவர்களுக்கு கொடுக்கும். இந்த விடயத்தில் பலஸ்தீனர்கள் ஈழத் தமிழர்களை விடவும் பாக்கியசாலிகள் என்று கூறலாமா?

ஏனெனில், இறுதிக்கட்டப் போரில் வன்னி கிழக்கில் தமிழ்மக்கள் சுற்றி வளைக்கப்பட்டிருந்தார்கள். யாரும் உதவிக்கு வரவில்லை. எந்த ஒரு நாடும் உத்தியோகபூர்வமாக அவர்களை ஆதரிக்கவில்லை. தென்னாபிரிக்கா ஆதரிப்பதாகக் கூறப்பட்டாலும் நடைமுறையில் எதுவும் நடக்கவில்லை. தனது சேவைக் காலத்தில் தான் கண்ட மிக மோசமான நரகம் அதுவென்று அப்பொழுது ஐ.சி.ஆர்.சியின் தென்னாசியாவுக்குப் பொறுப்பான அதிகாரி கூறினார். உதவிக்கு யாரும் வராத அந்த ஒடுங்கிய கடற்கரையில் தனித்து விடப்பட்டிருந்த தமிழ் மக்களுக்கு எதிராக உலகின் பெரும்பாலான நாடுகள் ஒன்றாக நின்றன. அல்லது ஈழத் தமிழர்களுக்கு எதிரான தரப்புக்களோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டுச் சேர்ந்திருந்தன. ஐநா போரில் நேரடியாகத் தலையிடாமல் விட்டதன்மூலம் இனப்படுகொலையை மறைமுகமாக அங்கீகரித்தது.

இந்தியாவும் சீனாவும் பிராந்தியத்தில் ஒன்றுக்கொன்று நட்பு நாடுகள் அல்ல. ஆனால் இரண்டு நாடுகளுமே ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஒரே கோட்டில் நின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் பிராந்தியத்தில் எதிரிகள். ஆனால் ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஒரே கோட்டில் நின்றன. சீனாவும் அமெரிக்காவும் உலக அளவில் நடப்பு நாடுகள் அல்ல. ஆனால் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இரண்டும் ஒன்றாக நின்றன. உலகில் பிராந்திய மட்டத்திலும் உலகளாவிய மட்டத்திலும் தங்களுக்கு இடையே பகைவர்களாகக் காணப்படும் நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஒன்றாக நின்றன. அப்பொழுது எந்த ஒரு நாடும் அதை இனப்படுகொலை என்று கூறவில்லை. இப்பொழுதும் எத்தனை நாடுகள் கூறுகின்றன? அனைத்துலக நீதியின் மீது நம்பிக்கையிழந்த பின்னரும்கூட கடந்த 15 ஆண்டுகளாக விடாமல் போராடும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வழக்குத் தொடுக்க இக்கொடிய உலகில் யாருண்டு?

https://www.nillanthan.com/6487/

வடக்குக் கிழக்கில் பட்டிப் பொங்கல் எப்படிக் கொண்டாடப்பட்டது? நிலாந்தன்.

2 months 1 week ago
Paddi-Pongal-1.jpg?resize=665,375&ssl=1 வடக்குக் கிழக்கில் பட்டிப் பொங்கல் எப்படிக் கொண்டாடப்பட்டது? நிலாந்தன்.

இம்முறை வடக்குக் கிழக்கில் பட்டிப் பொங்கல் ஒரு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.கிழக்கில் விவசாயிகள்,பெண்கள்,பண்ணையாளர்கள் அரசியல்வாதிகள், செயல்பாட்டாளர்கள் ஆகியோர் இணைந்து தலைகளில் பொங்கல் பானையை வைத்துக்கொண்டு ஊர்வலமாகப் போனார்கள். தமிழரசுக்ககட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கே காணப்பட்டார்கள். மேச்சல் தரையை சிங்கள விவசாயிகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில்; நாட்டு மாடுகள் சுட்டும் வெட்டியும் வெங்காய வெடி வைக்கும் கொல்லப்படும் ஒரு பின்னணியில்; நாட்டு மாடுகளை சுருக்குத் தடம் போட்டு பிடித்து செல்பவர்கள் யார் என்று தெரிந்திருந்தும் போலீசார் மற்றும் அரச அதிகாரிகள் அவர்களைத் தடுக்காத ஒரு பின்னணியில்; பட்டிப் பொங்கலை சந்தோஷமாகக் கொண்டாட முடியாது என்று கூறி கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் விவசாயிகளும் பண்ணையாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள்.

மேச்சல் தரையை மீட்பதற்கான போராட்டம் ஏற்கனவே 130 நாட்களைகக் கடந்துவிட்ட ஒரு பின்னணியில்; அண்மையில் பெருகிய மழை வெள்ளத்தில் போராட்டக்காரர்களின் கொட்டில் மிதக்கத் தொடங்கிவிட்டது. முழங்கால் அளவு நீரில் நின்றபடி போராடிய விவசாயிகள் பட்டிப் பொங்கலை ஒரு எதிர்ப்பு போராட்டமாக முன்னெடுத்திருக்கிறார்கள்.

கிழக்கு விவசாயிகளுக்கு ஆதரவாக வடக்கிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நல்லை ஆதீனச் சூழலில், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் குடிமக்கள் சமூகங்களைச் சேர்ந்தவர்களும் செயற்பாட்டாளர்களும் கூடி நின்று தமது எதிர்ப்பைக்காட்டினார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கே காணப்பட்டார்கள். வெவ்வேறு மதப் பிரிவுகளைச் சேர்ந்த மதத் தலைவர்களும் அங்கு காணப்பட்டார்கள்.

இது நடப்பதற்குச் சில நாட்களுக்கு முன்,பொங்கல் திருநாளை முன்னிட்டு கிழக்கில் பெருமெடுப்பில் ஒரு பண்பாட்டு விழா ஒழுங்கு செய்யப்பட்டது. கிழக்கு மாகாணத்தின் ஆளுநராகிய செந்தில் தொண்டமான் அப் பண்பாட்டுப் பெருவிழாவை ஒழுங்குபடுத்தியிருந்தார். படகோட்டப் போட்டி; ஜல்லிக்கட்டு அல்லது ஏறு தழுவுதல் போட்டி போன்றவற்றை ஒழுங்கு படுத்தியிருந்தார். நூற்றுக் கணக்கில் பொங்கல் பானைகளை வைத்து பெருமெடுப்பில் மெகா பொங்கல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது.நூற்றுக்கணக்கான பெண்கள் ஒரே மைதானத்தில் நடனம் ஆடினார்கள். திருமலையில் அண்மைய தசாப்தங்களில் அதுபோன்ற ஒரு பண்பாட்டு விழா அதற்கு முன் நடந்ததில்லை என்று கூறப்படுகின்றது. அதாவது அந்த அளவு பெரிய ஒரு பண்பாட்டு விழா அதற்கு முன் நடந்தது இல்லை என்று கூறப்படுகிறது.

கிழக்கில் சிங்கள பௌத்த மயமாக்கல் பெருமளவுக்கு வெற்றி பெற்றிருக்கும் ஒரு மாவட்டம் திருக்கோணமலை. அங்கே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் ஒளிப்படம் தாங்கிய வாகனத்தை எடுத்துச் சென்றபோது இடையில் தாக்கப்பட்டார்.அந்தளவுக்கு தமிழ் மக்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு மாவட்டத்தில் ஆளுநர் செந்தில் தொண்டமான் அப்படி ஒரு பிரம்மாண்டமான பொங்கல் விழாவை ஒழுங்குபடுத்தியது ஒரு பகுதி தமிழர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.

நமது பண்பாட்டைப் பாதுகாப்பதற்கு ஒரு ஆளுநர் வந்துவிட்டார் என்று அதை கொண்டாடியவர்கள் பலர் உண்டு.ஆனால் அவ்வாறு பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன் பெரும் எடுப்பில் ஒரு பண்பாட்டு விழா நடத்தப்பட்ட அதே மாகாணத்தில்தான், அதன் இன்னொரு பகுதியில் மட்டக்களப்பில் மேய்ச்சல் தரை அபகரிக்கப்படுகின்றது. அந்த மாவட்டத்தின் செல்வம் என்று வர்ணிக்கப்படும் நாட்டு மாடுகள் உணவின்றித் தவிக்கின்றன. சுருக்குத் தடம் போட்டு பிடிக்கப்படுகின்றன.அல்லது சுட்டும் வெட்டியும் கொல்லப்படுகின்றன. அல்லது வெங்காய வெடி என்ற வெடி வைத்து மாடுகளின் வாய் சிதைக்கப்படுகின்றது.இது தொடர்பான ஒளிப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இவ்வாறு கோமாதா என்று தமிழ் பண்பாட்டில் அழைக்கப்படும் மாடுகளையும் மேச்சல் நிலத்தையும் பாதுகாக்க முடியாத கிழக்கு மக்கள் பட்டிப் பொங்கலை ஒரு போராட்டமாக முன்னெடுத்தார்கள்.

அப்போராட்டம் வடக்கையும் கிழக்கையும் ஒப்பிட்டு அளவில் ஒருங்கிணைத்து வருகின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான போராட்டத்திற்கு பின் வடக்குக் கிழக்கும் இணைந்த ஒரு போராட்டமாக அது காணப்படுகின்றது. கிழக்கைப் போன்று வடக்கில் அது பேரெழுச்சியாக இருக்கவில்லைத்தான்.எனினும் மேச்சல் தரை விவகாரம் வடக்கையும் கிழக்கையும் இணைத்திருக்கின்றது.

சில கிழமைகளுக்கு முன்பு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அப்போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்புக்குச் சென்றார்கள். போராட்டத்தில் ஈடுபடும் பண்ணையாளர்களோடு அமர்ந்திருந்து தனது சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினார்கள்.போராட்டத்தில் ஈடுபட்ட பின் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வரும் வழியில் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். போராடப் போன மாணவர்களைக் கைது செய்த போலீஸ் அவர்களைத் தடுத்து வைத்திருந்தது.ஆனால் நிலத்தை அபகரிக்கும் விவசாயிகளில் யாரையும் போலீஸ் கைது பண்ணியதாகத் தெரியவில்லை. மாடுகளைப் பிடிப்பவர்களையும் கொல்பவர்களையும் போலீஸ் கைது பண்ணியதாகத் தெரியவில்லை. அந்த விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ஆன்ம பலமாகவும் காணப்படும் பௌத்த மத குருக்களை போலீஸ் கைது செய்வதாகவும் தெரியவில்லை.

மேச்சல் தரையை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகள் தனியாக சட்டத்தை மீறிவரும் விவசாயிகளால் மட்டும் முன்னெடுக்கப்படவில்லை. இதில் திணைக்களங்கள்,அரசு அதிகாரிகள்,அரச படைகள்,போலீசார் போன்றவர்களின் மறைமுக ஒத்துழைப்பு உண்டு என்று பண்ணையாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.அங்கு நீதிமன்றத்தின் உத்தரவுகள் வெளிப்படையாக மீறப்படுகின்றன. ஆனால் அதற்காக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. அதைத்தான் திருமலை மறை மாவட்ட ஆயர் ஒரே நாடு இரண்டு சட்டங்கள் என்று வர்ணித்தார்.

இப்படிப்பட்டதோர் பின்னணியில், கிழக்கில் பட்டிப்பொங்கலை ஒரு போராட்டமாக முன்னெடுத்தமை என்பது அங்கே ஆளுநரின் பண்பாட்டு பெருவிழாவை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது.நாட்டு மாடுகளை பாதுகாக்க முடியாத ஓர் ஆளுநர் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி வருகிறார். தமிழ் பண்பாட்டில் அதிகம் மதிக்கப்படும் ஒரு வளர்ப்பு விலங்கு மாடுதான். தமிழ் மக்களின் வாழ்க்கையில் அது கோமாதா என்று அழைக்கப்படுகின்றது. அது வணங்கப்படுகின்றது. ஆனால் கிழக்கில் கோமாதாவுக்கு உணவும் இல்லை பாதுகாப்பும் இல்லை.மேய்ச்சல் தரைக்காகப் போராடத் தொடங்கிய பின் 124 நாட்களுக்குள் இதுவரை 252 மாடுகள் வரை கொல்லப்பட்டு விட்டதாக பண்ணையாளர்கள் கூறுகிறார்கள்.

அண்மையில் சாணக்கியன் தெரிவித்த ஒரு தகவலின்படி ஜனாதிபதி கேட்டாராம் ஏன் அந்த மாடுகளுக்கு புற்களை வேறு எங்கிருந்தாவது கொண்டு வந்து கொடுக்க முடியாதா என்று. இப்படித்தான் மேச்சல் தரை விவகாரத்தை ஒரு ஜனாதிபதி விளங்கி வைத்திருப்பார் என்றால்,இந்த விவகாரத்துக்கு இப்போதைக்கு தீர்வு கிடைக்காது என்று பொருள்.

அண்மையில் குடிமக்கள் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள போலீஸ் உயர் மட்டத்தோடு ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள். அச்சந்திப்பு தமக்கு நம்பிக்கை ஊட்டுவதாக பண்ணையாளர்கள் கூறுகிறார்கள். சந்திப்பின் பின் திருப்பகரமான மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. போலீசார் இந்த விடயத்தில் அத்துமீறி வரும் சிங்கள விவசாயிகளின் பக்கம் நிற்பதாக தமிழ் விவசாயிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறார்கள். ஆனால் போலீஸ் உயரதிகாரிகள் அதை மறுக்கின்றார்கள். மேற்படி சந்திப்பின் போது, அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த விடயத்தில் ஏற்கனவே ஜனாதிபதி வாக்குறுதி வழங்கினார். எதுவும் நடக்கவில்லை. ஆளுநர் வாக்குறுதி வழங்கினார். எதுவும் நடக்கவில்லை. இப்பொழுது போலீசார் வாக்குறுதி வழங்கியிருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்க்கலாம்

இதில் தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் தலைமைத்துவப் போட்டியும் பட்டிப் பொங்கலில் பிரதிபலித்தது.தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கான வேட்பாளர்களில் ஒருவராகிய சுமந்திரன் மட்டக்களப்பில் தலையில் பொங்கல் பானையை வைத்துக் கொண்டிருக்கக் காணப்பட்டார். மட்டக்களப்பில் சிறீதரனுக்கு ஆதரவு அதிகம் என்ற ஒரு கணக்கு முன் வைக்கப்படுகின்றது. இந்நிலையில் சுமந்திரன் அங்கே மேய்ச்சல் தரைக்கான போராட்டத்தில் முன்னிப்பதன் மூலம் தன்னுடைய ஆதரவாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புகிறார்.கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைத்துவ போட்டி அவரை அவ்வாறு தலையில் பானையோடு நடக்க வைத்திருந்தாலும் அது நல்லதே.

தேர்தலில் யாரும் வெல்லலாம்.73 வயதான தமிழரசுக் கட்சி தனக்கு உரிய தலைவர் யார் என்பதை ஒரு தேர்தல் மூலம் தெரிந்து எடுப்பது ஜனநாயகமானது. உள்ளதில் பெரிய கட்சி அது. நிகழக்கூடிய தலைமைத்துவ மாற்றம் கட்சியின் எதிர்காலப் போக்கைத் தீர்மானிக்குமா?.

ஆனால் யார் தலைவராக வந்தாலும், கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூறப்பட்டது போல சமஸ்டியை அடைவதற்கான வழி எது என்பதனை தெளிவாக முன்வைக்க வேண்டும். அதேசமயம் உடனடிப் பிரச்சினைகளாக உள்ள நிலப் பறிப்பு,சிங்கள பௌத்த மயமாக்கல்,காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம்,அரசியல் கைதிகளுக்கான போராட்டம்…உள்ளிட்ட அனைத்து விவகாரங்களுக்குமாகாகப் போராடுவதற்கென்று உரிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

மேச்சல் தரைக்கான ஒரு போராட்டம் ஊடகங்களின் குவி மையமாகக் காணப்படும் ஒரு காலகட்டத்தில், தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சிக்குள் ஒரு தேர்தல் வந்திருக்கிறது.தேர்தலின் முடிவு, மேச்சல் தரைப் போராட்டமும் உள்ளிட்ட எல்லா போராட்டங்களுக்குமான அடுத்த கட்டத்தைத் தீர்மானிப்பதாக அமையுமா? அல்லது,அடுத்த பட்டிப்பொங்கலும் ஒரு போராட்டமாகத்தான் அமையுமா?

https://athavannews.com/2024/1366684

தமிழ்த் தேசியமும் தமிழரசுக் கட்சியின் தலைமையும்

2 months 1 week ago
தமிழ்த் தேசியமும் தமிழரசுக் கட்சியின் தலைமையும்

லக்ஸ்மன்

தமிழ்த் தேசிய அரசியலானது தமிழர்களுடைய  அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காகவேயன்றி, ஒரு அரசியல் கட்சியின், தனிப்பட்ட அரசியல்வாதிகளின் நலன் பேணுவதற்கானல்ல என்பதுடன் அவ்வாறானதாக இருக்கக்கூடாது  என்பது அடிப்படை.

தேர்தல்கள் வரும்போதும் ஆண்டுகள் பிறக்கும்போதும் வாக்குறுதிகள் பறக்க விடப்படுவதும் உறுதிகள் வழங்கப்படுவதும் தேசிய அரசியலிலும், தமிழர்களுடைய அரசியலிலும் புதிய விடயமல்ல. ஆனாலும், இந்த 2024இல் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான சுயநிர்ணய போராட்டத்திற்குச் சிறப்பானதொரு முடிவினை தருகின்ற ஆண்டாக இருக்கவேண்டும் என்று மாத்திரமே எதிர்பார்க்க முடிகிறது.

ஏனெனில் எதிர்பார்ப்புகளுடனேயே வருடங்களைக் கடக்க வேண்டியதாகிப்போனது.

வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியல் உரிமைக்கான போராட்ட வரலாறு ஆயுதப் போராட்டத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதா என்று எல்லோரும் சந்தேகம் கொள்ளும் அளவுக்கான செயற்பாடுகளே அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்படுகின்றன.

ஜனநாயக உரிமையைப் பெற்றுக் கொள்வதில் காலத்துக்குக் காலம் முன்னெடுக்கப்பட்ட போராட்ட முறைகள் மாற்றம் பெற்று ஜனநாயக வழி சாத்தியமற்றது என்ற முடிவின் பலனாகவே ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தோற்றம் பெற்றன.

இந்தியாவினுடைய உள் வருகையுடன் நடைபெற்ற திம்பு பேச்சுவார்த்தை, இதனையடுத்து, ஏற்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தம் காரணமாகப் போராட்ட இயக்கங்கள் பல அரசியல் கட்சிகளாக மாறிப் போயின.

ஆனால், தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிடாக் கொள்கையை தொடர்ந்தும் கடைப்பிடித்தனர். ஆனாலும், 2009 மே மாதம் அதனையும் மௌனிக்கச் செய்த மாதமாகப் போனது.

தமிழர்களுடைய அரசியல் உரிமைக்கான பிரச்சினை இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து இதுவரையில் தீர்வை எட்டுவதற்கு முடியாததாகவே தொடர்கிறது.  இலங்கை அரசியலமைப்பின் 22 திருத்தங்களில் எதுவும் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷையை நிறைவேற்றவில்லை.

அவற்றில் 13ஆவது திருத்தம் தவிர ஏனையவை இனப்பிரச்சினை கூர்மையடையவே வழி செய்திருக்கின்றன. 

1987 இந்திய - இலங்கை அரசாங்கங்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தம் நாட்டின் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் அது இதுவரையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக இல்லாது விட்டாலும் ஒரு ஆரம்பப்புள்ளியாக எடுத்துக் கொள்ளப்பட்டு நிரந்தரத் தீர்வுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று தற்போதும் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட வண்ணமுள்ளன. ஆனாலும், அதற்கு எதிராகச் செயற்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

13ஆவது திருத்தச் சட்டம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக ஏற்பட்டிருந்தாலும் அதனைக்கூட இலங்கையின் ஆளும் அரசாங்கங்கள் மற்றும் பெரும்பான்மைச் சமூகம் முழுமையாக அமுல்படுத்துவதற்கான மனநிலையற்றவர்களாகவே இருக்கின்றனர்.

பல்வேறு கருத்துக்கள் காணப்பட்டாலும்  கடந்த கால கசப்புணர்வுகள், முரண்பாடுகளை மறந்து தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுப்பதற்காகத் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரால் 2001ஆம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழர்களின் ஏகோபித்த அரசியல் தரப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே  அம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

தமிழ் மக்களுடைய அரசியல் நிலைப்பாடுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் அனைத்துத் தரப்பினரிடமும் பலமாக இருந்தது.

ஆனால், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக 2009 மே 18க்குப் பின்னர் ஒவ்வொரு கட்சியாகக் கழன்று இப்போது சின்னத்தை வழங்கியிருந்த தமிழரசுக்கட்சி கடந்த வருடத்தில் தனித்துச் செயற்படும் முடிவை எடுத்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டு முதல் தேர்தலின் பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணியின் உதய சூரியன் சின்னம் இல்லை என்றானது.

அதன் பின்னர், கடந்த வருடத்தில் தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னம் எடுத்துச் செல்லப்பட்டதால், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் குத்துவிளக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்ற ஒன்று இருக்கிறதா என்று வினவ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

தந்தை செல்வாவினால் தமிழரசுக் கட்சி கிடப்பில் போடப்பட்டே தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டது. அதன்படி, இயக்கமின்றி இருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாக்கப்பட்டது என்பதே உண்மை. 

அது தமிழர்களின் அரசியல் சின்னமாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் அரசியல் கட்சியாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்த போதிலும், தமிழரசுக் கட்சியின் ஏகாதிபத்திய, மேட்டுக்குடி நிலைப்பாடு காரணமாகக் கூட்டாக இருந்த கட்சிகள் பல வெளியேறும் நிலை ஏற்பட்டிருந்தது.

இதனை யாரும் மறுப்பதற்கில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனற்றுப்போனதும் அதற்குக் காரணம் எனலாம்.
தமிழர்களின் அரசியலைப் பலவேறு கட்சிகளாகி, தனித்து நின்று மேற்கொள்ள முடியாது என்பதனைப் புரிந்து கொண்டமையினால் உருவான கூட்டமைப்பு  சிதைந்து போயிருக்கின்றது. ஆனாலும், தமிழ்த் தேசிய நலனைக் கருத்தில் கொள்ளாத அரசியலை நடத்துவதில் பயன் ஏதும் விளையாதென்பது புரிந்து கொள்ளப்படவில்லை. இருந்தாலும்,  தமிழ்த் தேசிய நலனும், அதன் நிலைப்பாடும் மாற்றமுறா வகையில் அரசியல் பயணம் தேவையாக இருக்கிறது என்ற கோரிக்கை இருந்து கொண்டே இருக்கிறது.

வடக்கு, கிழக்கு தமிழர்களுடைய அரசியல் வரலாறென்பது கொள்ளை ரீதியாகவும், கோட்பாடு மற்றும் நிலைப்பாடு ரீதியாகவும் சீராகக் கட்டமைக்கப்பட்டது. அவ்வாறே இதுவரை காலமும் முன்கொண்டு செல்லப்பட்டிருக்கிறது எனக் கொண்டால் அதனை வழிப்படுத்துவதற்கான அரசியல் சரியான முறையில் இனிவரும் காலங்களிலும் செய்யப்பட்டாக வேண்டும்.

அந்த ஒழுங்கில்தான், தமிழர்களுடைய உரிமைகளுக்கான, அவர்களுடைய கோரிக்கைகளுக்கான அரசியலை தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் செய்கின்றனவா என்ற கேள்வி தோன்றும். அவ்வாறில்லையானால், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தங்களை இந்த வரன் முறைகளுடன் முன் நகர்த்த வேண்டியது காலத்தில் கட்டாயமாகும்.

தமிழ் மக்களின் இன முரண்பாட்டுச் சிக்கல் தோற்றம் பெற்றமை முதல் பேரினவாதிகளுடன் கொள்கை ரீதியான பல விடயங்களில் உடன்பாடுகள், இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தாலும் ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகளின் ஊடாக இதுவரையில் சீர்படுத்தப்படவில்லை என்பதே வரலாறு. ஆனால், தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டதும், ஏமாந்ததும் காலங்காலமாக நடைபெற்று வந்திருக்கிறது.

ஆயுத யுத்தம் மௌனிக்கச் செய்யப்பட்டுவிட்டது. அதனால் தமிழர்கள் தங்கள் போராட்டத்தை இராஜதந்திர ரீதியில் முன் நகர்த்தவேண்டிய கட்டாயத்துக்குப்படுத்தப்பட்டனர். ஆனால், அதனை யார் சரியாகச் செய்கிறார்கள் மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களா என்பது சந்தேகம்.

ஏனெனில் அரசியலைத் தமிழ் மக்கள் வெறுக்கும் அல்லது வேறு நிலைப்பாடுகளுக்குள் உள்வாங்கப்படுகின்ற நிலைமை உருவாகி வருகிறது. இதற்கு தமிழர்களின் அரசியல் தரப்பினரே பொறுப்பாகவேண்டும்.

தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசுக்கட்சி என மிதவாத அரசியலுடனும், ரெலோ, புளொட், ஈரோஸ், ஈ.பி.ஆர்எல்எவ், ஈ.என்.டி.எல்.எவ். என ஆயுத அரசியலுடனும்  என தொடர்ந்த தமிழர்களுடைய விடுதலைக்கான முயற்சிகள் பலனற்றுப் போனதாகவே இருக்கின்றன என்றே சொல்லவேண்டும்.

இந்த இடத்தில்தான் தமிழர்களுடைய அரசியலை மக்களது அரசியலுரிமைக்கான அரசியலை யார் முன்கொண்டு செல்வது. சுயநலன்களுக்கு அப்பால், மக்களை அரசியல் மயப்படுத்துவதன் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற செயற்திட்டம் முன்னிற்கிறது. பூனைக் கண்ணை மூடிக்கொண்டிருப்பது பயனற்றதே.

அந்தவகையில், தமிழர் அரசியலில் வெறுப்பு அரசியலை மேற்கொள்ளும் நிலைப்பாட்டிலிருந்து தமிழர் அரசியல் தரப்பினர் விடுபட்டு ஒன்றிணைந்த தமிழ்த் தேசிய அரசியல் உருவாவதற்கான வழிவகைகள் ஏற்படுத்த வேண்டும்.

அதன் ஒரு படியாக, தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் தெரிவு வெறுமனே, சர்வதேச தொடர்புகளைக் கொண்ட, மொழி அறிவு என்பவைகளுக்கப்பால், தமிழ் மக்களின் அரசியலுரிமைகளை வென்றெடுப்பதற்காகச் சுயநலம் மறந்து  ஒன்றிணைந்த அரசியலுக்கான, தமிழர்களை ஒன்றிணைப்பதாகத் தமிழ்த் தேசியத்தின் பாற்பட்டதாக இருக்கவேண்டும்.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசியமும்-தமிழரசுக்-கட்சியின்-தலைமையும்/91-331602

சர்வதேச நீதிமன்ற விவகாரம் நுட்பமாக கையாளும் இலங்கை

2 months 1 week ago
சர்வதேச நீதிமன்ற விவகாரம் நுட்பமாக கையாளும் இலங்கை

சர்வதேச நீதி என்பது உலக நாடுகளின் புவிசார் அரசியல் நலன்களில் தங்கியுள்ளது. ரோஹிகின்ய முஸ்லிம்களுக்கு நடப்பது இன அழிப்பு என்பதை ஏற்கும் பிரித்தானியா, காசாவில் நடப்பது இன அழிப்பு என்பதை ஏற்கத் தயங்கும் காரணம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு சர்வதேச அரசியலை இலங்கை நன்கு கையாளுகின்றது, காய் நகர்த்துகின்றது. ஆனால் தமிழ்த்தரப்பு?

அ.நிக்ஸன்

காசாவில் நடப்பது இன அழிப்பு என்று தென்னாபிரிக்க அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்துள்ளதை அமெரிக்கா கண்டித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் அமைதியாக இருக்கின்றன. ஆனாலும் அமெரிக்காவை விடவும் ஐரோப்பிய நாடுகள் காசாவில் நடக்கும் மனிதப்படுகொலைகளை கண்டிப்பதுடன் இஸ்ரேல் அரசு மீதும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. காசாவில் தொடரும் உயிரிழப்புகள் ஏற்க முடியாதவை என நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தில் இந்தியா அறிவித்துள்ளது.

பலஸ்தீன காசா பகுதியில் நிலவும் சூழல் குறித்து இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டை தெரிவித்து உரையாற்றும் போது இந்தியாவின் ஐ.நாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் இவ்வாறு கூறியிருக்கிறார்.

ஆனாலும் இஸ்ரேல் அரசுடன் இந்திய மத்திய அரசு கொள்கையளவில் கைகோர்த்திருக்கிறது. தென்னாபிரிக்க அரசு இன அழிப்பு என்று வழக்குத் தாக்கதல் செய்திருப்பதை இந்திய மத்திய அரசு இதுவரையும் பகிரங்கமாக வரவேற்கவில்லை. மதில்போல் பூனை போன்று உள்ளது.

ஆகவே அமெரிக்க – இந்திய அரசுகள் இஸ்ரேலுடன் நிற்பதை அறிந்தே தென்னாபிரிக்கா தாக்கல் செய்த வழக்கை தமிழ்த்தேசிய அரசியலில் ஈடுபடும் தமிழ்க் கட்சிகளும் பகிரங்கமாக வரவேற்கவில்லை என்பது தெரிகிறது. தமிழ் சிவில் சமூக அமைப்புகளும் பாராட்டவில்லை.

இஸ்ரேலுடன் இணைந்து கமாஸ் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்பதில் அமெரிக்க இந்திய அரசுகள் ஓரணியில் நிற்கின்றன. தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் வல்லரசுகளிடையே எழுந்துள்ள அரசியல் போட்டியில் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா முற்று முழுதாக மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பாளனாக மாறியிருக்கிறார்.

அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளின் எதிராலியாக தென்னாபிரிக்கா, சர்வதேச நீதிமன்றத்தில் பலஸ்தீன மக்கள் சார்பில் காசாவில் நடப்பது இன அழிப்பு என்று பகிரங்கப்படுத்தி வழக்கும் தாக்கதல் செய்திருந்தாலும் அதனை பலஸ்த்தீன புலம்பெயா் அமைப்புகள் நன்கு பயன்படுத்தி வருகின்றன.

சென்ற வியாழக்கிழமை ஆரம்பித்த முதல் நாள் விசாரணையில் தனது தரப்பு வாதங்களை தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது. காசாவில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தென்னாபிரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க மாநில அரசுகளின் உறுப்பினர்கள் இருநூறு பேர் காசாவில் போர் போர்நிறுத்தம் செய்ய வலியுறுத்தி ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

சென்ற ஒக்ரோபர் ஏழாம் திகதி போர் ஆரம்பிக்கப்பட்ட நான்கு மாதங்களுக்கும் குறைவான நிலையில் காசாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தையும் கடந்துள்ளதாகவும் இதனால் போரை நிறுத்துமாறும் அமெரிக்க உள்ளூர் பொது அமைப்புகளும் ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியிருக்கின்றன.

சர்வதேச நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க எழுநூறு இஸ்ரேல் மக்கள் விரும்பம் தெரிவித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்களே செய்தி வெளியிட்டிருக்கின்றன. இஸ்ரேலிய மக்களின் எழுபத்து ஐந்து சதவீதமான மக்கள் காசாவில் போர் நடப்பதை விரும்புகின்றனர் என்றும் இந்த நிலையில் எழுநூறு பொது மக்கள் பலஸ்தீன மக்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் கூறுகின்றன.

இன அழிப்பு என்று தென்னாபிரிக்கா வழக்குத் தாக்கதல் செய்துள்ளதால் கணிசமான அளவு இஸ்ரேலிய மக்களுக்கு அச்சம் ஏற்பட்டு விட்டதாக அரபு ஊடகமான நியுஅரப் (newarab) என்ற ஆங்கில செய்தி இணையத்தளம் கூறுகின்றது.

மியன்மாரில் ரோகின்கிய முஸ்லிம் மக்களுக்கு நடப்பது இன அழிப்பு என்று சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழக்கு விசாரணைக்கு முழுமையான ஆதரவு வழங்கி வரும் பிரித்தானியா, காசாவில் நடப்பது இன அழிப்பு என்று தென்னாபிரிக்கா தாக்கல் செய்துள்ள வழக்குத் தொடர்பாக அமைதியாக இருக்கின்றது.

சட்ட ஆதாரங்களை தேட வேண்டும் என்று மாத்திரம் பிரித்தானியா கூறியிருக்கிறது. அதேபோன்று கனடாவும் கூறுகின்றது. காசாவில் நடப்பது இன அழிப்புத் தொடர்பான சா்வதேசச் சட்டங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கனடா வலியுறுத்தியிருக்கிறது.

தென்னாபிரிக்க அரசு மேற்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது என்பதால், பிரித்தானிய, கனடா போன்ற நாடுகள் தென்னாபிரிக்க அரசு சர்வதேச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குக்கு ஆதரவு வழங்கத் தயங்குகின்றன.

ஆகவே ரசிய – உக்ரெயன் போர்ச் சூழலில் குழப்பியிருந்த உலக அரசியல் ஒழுங்கு தற்போது இஸ்ரேல் – கமாஸ் போர் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து மேலும் குழப்பமடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

தென்னாபிரிக்கா வழக்குத் தாக்கல் செய்த பின்னர் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளிடையேயான உலக அரசியல் அணுகுமுறையில் முன்னுக்குப் பின்ன முரணான வாதங்கள் எழுந்துள்ளதையும் அவதானிக்க முடியும்.

இந்த அரசியல் சூழ்நிலையை இலங்கை நன்கு பயன்படுத்துகிறது குறிப்பாக முள்ளிவாய்க்கால் போரில் சுமார் நாற்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டும் ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் காணாமல் போயிருப்பதாகவும் 2010 இல் வெளியான ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஆனாலும் இன அழிப்பு என்று எந்த ஒரு நாடும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முன்வரவில்லை. இதற்கு அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச இந்தியாவைக் கையாண்ட அணுகுமுறையே காரணம் என்பது வெளிப்படை.

நான்கு மாதங்களில் 23 ஆயிரும் மக்கள் கொல்லப்பட்ட பின்னர் காசாவில் நடப்பது இன அழிப்பு என்று தென்னாபிரிக்கா வழக்குத் தாக்கல் செய்ததை உணர்ந்தும் அச்சமடைந்த நிலையிலும் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. சர்வதேசத்தை நுட்பமாகக் கையாள ஆரம்பித்திருக்கிறார்.

spacer.png

தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதை மத்திய கிழக்கு நாடுகள் வரவேற்றுள்ளன. இப் பின்னணியில் மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களுடன் ரணில் விக்கிரமசிங்க சென்ற புதன்கிழமை பேச்சு நடத்தியிருக்கிறார். தூதுவர்களுடன் பேசப்பட்ட விடயங்கள் எதுவும் ஊடகங்களில் வெளிவரவில்லை.

ஆனால் மத்திய கிழக்கு பிராந்தியம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்பாக ரணில் தூதுவர்களிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஏனைய கொழும்பில் உள்ள மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் அல்லாத நாடுகளின் தூதுவர்களையும் ரணில் சந்தித்துக் கலந்துரையாடுவார் என்று கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

ஏனெனில் குழப்பியுள்ள உலக அரசியல் ஒழுங்குச் சூழலில் எந்த ஒரு சிறி நாடுகளின் ஒத்துழைப்புகளும் அமெரிக்கா போன்ற வல்லரசுகளுக்கு தேவைப்படுகின்றன. அதேபோன்று சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் ஏதாவதொரு சிறிய நாடுகளைப் பயன்படுத்தக் கூடும் என்ற அச்ச நிலை இலங்கைக்குத் தற்போது உருவாகியுள்ளது.

குறிப்பாக கனடா, இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்று கூறி வருகின்றது. அதுவும் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் ஏட்டிக்குப் போட்டியாக கனடா புலம்பெயர் தமிழர்களின் வாக்குகளை மையமாகக் கொண்டு பேசி வருகின்றன.

சில சமயங்களில் கனடாவின் வெளியுறவுக் கொள்கையில் தமிழ் இனஅழிப்பு என்பது இணைக்கப்பட்டால் அதனை மையமாகக் கொண்டு வேறு சில சிறிய நாடுகளைப் புலம்பெயர் தமிழர்கள் பயன்படுத்துவார்கள் என்று கருதியே அதனைத் தடுக்கும் முன்னேற்பாடுகளில் இலங்கையின் வெளியுலக இராஜதந்திர சேவை அதிகளவு கவனம் செலுத்துகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளைச் சந்தித்து பலஸ்தீன மக்களுக்கு இலங்கை முழு ஆதரவு என்று ரணில் உறுதியளித்திருந்தாலும், அமெரிக்க – இந்திய அரசுகளைப் பகைத்துகொள்ளாத முறையில் இஸ்ரேல் அரசுடன் இலங்கை முழு அளவில் மறைமுகமாகக் கைகோர்த்திருக்கிறது என்பதுதான் உண்மை.

1983 இல் ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் வடக்குக் கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து இஸ்ரேல் ஆலோசனை வழங்கியிருந்தமையும் தற்போது ஆதரவு வழங்கக் காரணம்.

இலங்கையைப் பொறுத்தவரை தற்போதைக்குச் சீனாவை ஓரளவுக்குத் தூரத் தள்ளிவைப்பது போன்றதொரு தோற்றத்தைக் காண்பித்தாலும், சீனாவுக்குத் தாக்கம் எழாத முறையில் அமெரிக்க – இந்திய அரசுகளை இலங்கை அரவனைத்துக் கொண்டிருக்கிறது.

அதற்கான காரண – காரியம் என்பது குழப்பியுள்ள உலக அரசியல் ஒழுங்கு நிலைமைக்குள் கனடா ஊடாக வேறு சிறிய நாடுகளை புலம்பெயர் தமிழர்கள் நாடிவிடக் கூடும் என்ற அச்சமே.

இலங்கையும் முற்று முழுதாகச் சீனாவின் பக்கம் செல்வதைத் தடுக்கும் நோக்கிலேயே ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்பதைக் கனடாவின் பிரதான அரசியல் கட்சிகள் மூலமாக அமெரிக்கா சொல்ல வைக்கிறது என்ற அவதானிப்புகளும் இல்லாமில்லை.

அதேநேரம் காம்பியா என்ற ஆபிரிக்காவின் சிறிய நாடு ஒன்றுதான் ரோஹின்கிய முஸ்லிம் மக்களுக்கு நடப்பது இனஅழிப்பு என்று சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கிறது. இதனை பிரித்தானியா முழுமையாக ஆதரித்து வருகின்றது.

ஆகவே இவ்வாறான ஒரு பின்னணி புலம்பெயர் அமைப்புகளுக்கு வந்துவிடும் என்ற அச்சம் மற்றும் எதிர்வுகூறல் இலங்கைக்கு உண்டு. இதற்கு ஏற்ப பல அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இலங்கைத்தீவுக்குள்ளும் வெளியுலகத்திலும் ஆரம்பிக்கப்பட்டு அரங்கேறி வருகின்றன.

இலங்கையின் இத் திட்டத்திற்கு ஜேர்மன், சுவிஸ்லாந்து போன்ற நாடுகளும் ஒத்துழைகை்கின்றன.

ஆனால் தமிழ்த்தரப்பில் இந்த உத்திகள் எதுவுமே இல்லை. தமிழரசுக் கட்சியின் தலைவர் போட்டி, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவது மற்றும் போலித் துவாரகா பற்றிய ஆய்வுகளையே தமிழ்த்தரப்பு செய்து கொண்டிருக்கிறது. பல தமிழ் ஊடகங்களும் இதற்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கின்றன.

குறைந்தபட்சம் தென்னாபிரிக்க அரசைப் பாராட்டி ஜனாதிபதி சிறில் ரமபோசாவுக்குக் தமிழ்த்தேசியக் கட்சிகள் கடிதம் எழுதியிருக்கலாம். இன அழிப்பு என்று கூறிவரும் கனடாவின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளான கென்சர்வேற்டீவ், லிபரல் கட்சி ஆகியவற்றின் தலைவர்களுக்குக் கடிதத்தின் மூலம் பாராட்டிருயிருக்கலாம்.

ஆகவே அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகவும் இந்தியாவின் வஞ்சக அரசியல் செயற்பாட்டுக்குள்ளும் தமிழ்த்தேசியக் கட்சிகள் முடங்கியுள்ளன என்பதையே இது பகிரங்கப்படுத்துகின்றது.

2006 இல் விடுதலைப் புலிகளைத் தடை செய்த கென்சர்வேற்றீவ் கட்சி ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்புத்தான் என்று கூறுவதுடன், பதவிக்கு வந்தால் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆகவே பலஸ்த்தீன மக்களை ஆதரிப்பதாகக் காண்பித்துக் கொண்டு இஸ்ரேல் அரசின் பக்கம் இலங்கை நிற்பது போன்று அமெரிக்க இந்திய அரசுகளுக்குக் இரட்டை வேடம்போடுகின்றது. ஆனால் அரசு அற்ற சமூகமாகக் கடந்த எண்பது வருடங்கள் அரசியல் போராட்டம் நடத்தி வரும் ஈழத்தமிழ்த் தரப்பு, 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஏன் அமெரிக்க – இந்திய அரசுகளுக்கு மாத்திரம் விசுவாசமாக இருக்கின்றன?

2014 வரையும் தென்னாபிரிக்க அரசு ஈழுத்தமிழர் பக்கம் நின்றது. ஆனால் அதனைத் தமிழர் தரப்பு உரிய முறையில் கையாளவில்லை. பிரதிதி ஜனாதிபதியாக இருந்த சிறில் ரமபோசா 2020 இல் தென்னாபிரிக்க ஜனாதிபதியாக வரக்கூடும் என்று கணித்து அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச சிறிரமபோசவை இலங்கைக்குப் பல தடவைகள் அழைத்துப் பேசியிருக்கிறார்.

ஈழத்தமிழர் பிரச்சினை 2009 இல் முடிவடைந்து விட்டது என்றும் இலங்கையில் இன நல்லிணக்கமே அவசியம் என்றும் போதித்திருக்கிறார். இன்று இமாலயப் பிரகடனத்துக்கு தென்னாபிரிக்கா முழு ஆதரவு வழங்குவதுடன் ஈழத்தமிழர்கள் இலங்கையர்களாக வாழ முடியும் என்றும் கூற ஆரம்பித்துள்ளது.

ஆகவே உல அரசியல் விவகாரங்களை அறிந்து நுட்பமாகக் கையாள்வதற்குரிய புதிய இளம் தலைமை ஒன்று ஆங்கில அறிவுடன் உருவாக வேண்டும்.

இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் வல்லரசாகத் தன்னைக் காணிப்பிக்க முற்படும் இந்தியா, சர்வதேச விவாகாரங்களில் இரட்டை வெளியுறவுக் கொள்கைகளோடு எவ்வாறு பயணிக்கிறது என்பதற்கும், சிறிய நாடான இலங்கை ஈழத்தமிழர் விவகாரத்தைச் சர்வதேச அரங்கில் இருந்து முற்றாக நீக்கம் செய்ய, மேற்கு மற்றும் ஐரேப்பிய நாடுகளையும் இந்தியாவையும் அதேநேரம் பொருளாதார உதவிகளைப் பெற சீனாவையும் எவ்வாறு நுட்பமாகக் கையாள்கின்றது என்பதற்கும் கண்முன்னே பல உதாரணங்கள், படிப்பினைகள் உண்டு.

சர்வதேச நீதி என்பது உலக நாடுகளின் புவிசார் அரசியல் நலன்களில் தங்கியுள்ளது. ரோஹிகின்ய முஸ்லிம்களுக்கு நடப்பது இன அழிப்பு என்பதை ஏற்றுக்கொள்ளும் பிரித்தானியா, காசாவில் நடப்பது இன அழிப்பு என்பதை ஏற்கத் தயங்கும் காரணம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு சர்வதேச அரசியலை இலங்கை நன்கு கையாளுகின்றது, காய் நகர்த்துகின்றது.

ஆனால் தமிழ்த்தரப்பு?

http://www.samakalam.com/சர்வதேச-நீதிமன்ற-விவகாரம/

பேக்கும் பிசாசுக்குமான போட்டி.

2 months 1 week ago

தமிழ் அரசியலை கட்டமைக்கக் கூடிய சக்தி யாரிடம்?

தமிழ் அரசியல்வாதிகளை தோய்த்து தொங்க போடும் கந்தையா பாஸ்கரன்.

இதன் தலைப்பை எனது விருப்பத்துக்கு மாற்றியுள்ளேன்.

ஜனாதிபதியின் வடக்கு விஜயம்! நிலாந்தன்.

2 months 2 weeks ago
spacer.png ஜனாதிபதியின் வடக்கு விஜயம்! நிலாந்தன்.

ஜனாதிபதி ஒரு தேர்தல் ஆண்டைத் தமிழ்மக்கள் மத்தியிலிருந்து தொடங்கியிருக்கிறார். நான்கு நாட்கள் வடக்கில் தங்கியிருந்து பல்வேறு வகைப்பட்டவர்களையும் சந்தித்து உரையாடியிருக்கிறார்.

வடக்கில் உள்ள தொழில் முனைவோர், புத்திஜீவிகள், குடிமக்கள் சமூகங்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள், பல்கலைக்கழக சமூகம் ,வடக்கில் இருந்து நாட்டுக்குள்ளும் நாட்டுக்கு வெளியே சென்று சாதனை புரிந்தவர்கள்… போன்ற பலரையும் அவர் சந்தித்துப் பாராட்டிப் படமெடுத்துக் கொண்டார். நல்லூரில் அமைந்திருக்கும் ரியோ க்ரீம் ஹவுஸ்சில் ஐஸ்கிரீம் அருந்தினார். அப்பொழுது வடக்கின் சாதனையாளர்கள் பலரை அழைத்துப் பாராட்டிப் படம் எடுத்துக் கொண்டார்.

அவர் அழைத்த எல்லாத் தரப்புக்களும் அவரை சந்தித்தன.அவருடைய அழைப்பை ஏற்றுக் கொள்ளாத ஒரே ஒரு தரப்பு நல்லை ஆதீனம்தான். வழமையாக அரசியல் தலைவர்களும் ராஜதந்திரிகளும் நல்லை ஆதீனத்தை அவருடைய இடத்துக்குச் சென்று சந்திப்பார்கள். அப்படித்தான் யாழ் மறை மாவட்ட கத்தோலிக்க ஆயரையும் தேடிச் சென்று சந்திப்பார்கள்.

ஆனால் இம்முறை நல்லை ஆதீனத்தைச் சேர்ந்தவர்களை குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனை ஆதீனம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்கனவே ரணில் வழங்கிய வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை என்றும் ஆதீனம் குற்றம் சாட்டியது. அதனால் சந்திப்பில் ஆதீனம் கலந்து கொள்ளவில்லை. மட்டுமல்ல, ஒரு விளக்க அறிக்கையையும் வெளியிட்டது. ஒரு இந்து ஆதீனம் ஜனாதிபதியை சந்திக்க மறுத்திருக்கிறது.

அதேசமயம் கச்சேரியில் ஜனாதிபதிக்கு எதிராக காட்டப்பட்ட எதிர்ப்பில் ஒரு இந்துச் சாமியார் காவி உடையோடு காணப்படுகிறார். அவரோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் காணப்பட்டது.யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் காணவில்லை.அது ஒரு சிறிய எதிர்ப்பு என்ற போதிலும், யாழ்ப்பாணத்தில் அவருக்கு காட்டப்பட்ட ஒரே எதிர்ப்பு அதுதான்.

ஜனாதிபதி யூஎஸ் ஹோட்டலில் புத்திஜீவிகள் மற்றும் குடிமக்கள் சமூகம் என்று அழைக்கப்பட்ட ஒரு பகுதியினரைச் சந்தித்தார்.அதில் அதிகளவு அரசு அதிகாரிகளும் காணப்பட்டார்கள். சந்திப்பின் போது அவர் 13ஆவது திருத்தத்தை வலியுறுத்திப் பேசினார்.மேல் மாகாணத்தில் இருப்பது போல பிராந்திய பொருளாதார வலையங்களை வடக்கிலும் கட்டி எழுப்பலாம் என்று ஆலோசனை கூறினார் .13ஆவது திருத்தத்துக்குள் எல்லாமே இருக்கிறது, நீங்கள் அதைப் பயன்படுத்தலாம், நாங்கள் அதற்கு வேண்டியதைச் செய்வோம் என்றும் உறுதியளித்தார். தென்கொரியா,யப்பான்,பிரித்தானியா போன்ற நாடுகளை உதாரணமாகக் காட்டி, அங்கெல்லாம் கூட்டாட்சி கிடையாது, ஆனாலும் அபிவிருத்தி உண்டு, பொருளாதார வளர்ச்சி உண்டு என்று பேசினார். 13ஆவது திருத்தத்திற்குள் போதிய அதிகாரங்கள் உண்டு அதைப் பயன்படுத்துங்கள் என்று கூறினார் .

பல்கலைக்கழக சமூகத்தின் மத்தியில் உரையாற்றும்போது, புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து உதவிகளைப் பெறலாம் என்று ஆலோசனை கூறியிருக்கிறார். பல்கலைக்கழக பேராசிரியர்கள் பல கேள்விகளோடு அங்கு சென்றிருக்கிறார்கள். ஆனால் மருத்துவ பீடத் தலைவர் கேட்ட கேள்விக்கு முதலில் பதில் கூறிய ஜனாதிபதி அப்பேராசிரியர் மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்டபோது, நான் முதலில் சொல்வது உங்களுக்கு விளங்கவில்லையா என்று கேட்டிருக்கிறார். அதன்பின் எனைய பேராசிரியர்கள் அந்த இடத்தில் கேள்வி கேட்பதற்கு விரும்பவில்லை என்றும் ஒரு தகவல் உண்டு.

அவருடைய பயண ஏற்பாடுகளையும் சந்திப்பு ஏற்பாடுகளையும் வடக்கில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி செய்ததாகத் தகவல்.அதனால் வடக்கில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் மத்தியில் ஒருவித போட்டி உணர்வு ஏற்பட்டிருக்கிறது.அவர்கள் தங்களுடைய வல்லமையைக் காட்டுவதற்காக யாழ். கிரீன் கிராஸ் ஹோட்டலில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பெருந்தொகையான ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.சுமார் 800க்கும் குறையாத ஆதரவாளர்கள் அந்தச் சந்திப்பில் பங்கு பற்றியதாக ஒரு தகவல். அதில் பங்குபற்றிய எல்லாருமே கட்சிக்காரர்களா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் அவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்து ரணில் வியந்ததாகவும் ஒரு தகவல்.

வவுனியாவில் அவர் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளையும் குடிமக்கள் சமூகங்களைச் சேர்ந்தவர்களையும் சந்தித்திருக்கிறார்.வன்னியில் உள்ள தொழில் முனைவோர்களைக் கண்டு கதைத்து, ஊக்கப்படுத்தி அவர்களோடு படம் எடுத்துக் கொண்டார்.

அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின் வடக்கிற்கு வந்து இவ்வளவு நாட்கள் தங்கியிருந்தமை என்பது இதுதான் முதல் தடவை. இவ்வளவு தொகையான தரப்புகளைச் சந்தித்தமையும் இதுதான் முதல் தடவை.

இது ஒரு தேர்தல் ஆண்டு. ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடலாம் என்று எதிர்பார்ப்பு உண்டு. அப்படி என்றால் அவர் தமிழ் மக்களின் ஆதரவை எதிர்பார்க்கிறாரா?

தமிழ் அரசியலில் பொதுவாக தமிழரசுக் கட்சியானது ஐக்கிய தேசியக் கட்சியோடுதான் இணக்கத்துக்கு வரும். இதற்கு முந்தைய ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் அப்படித்தான் நடந்திருக்கின்றது. ஆனால் இந்தத் தடவை யு. என். பி இரண்டாக உடைந்திருக்கிறது. அதன் ஒரு பகுதி தாமரை மொட்டுக்கட்சி அதாவது ராஜபக்சகளின் கட்சியின் தயவில் தங்கியிருக்கின்றது. மற்றொரு பகுதி சஜித் பிரேமதாசவால் தலைமை தாங்கப்படுகின்றது.இதில் சஜித் பிரேமதாசாவைத்தான் தமிழரசுக் கட்சி ஆதரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.ஏனென்றால்,ரணில் விக்ரமசிங்க ராஜபக்சக்களின் பதில் ஆளாகத் தேர்தலில் முன்னிறுத்தப்படும் வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகின்றன. இப்பொழுது ராஜபக்சக்கள் தம்மிக்க பெரேராவைக் களமிறக்கப் போவதாகக் கூறிவருகிறார்கள். ஆனால் அது ரணிலோடான தங்களுடைய பேரத்தை அதிகப்படுத்தும் நோக்கிலான ஒரு உத்தி என்று சந்தேகிக்கப்படுகின்றது. கடைசிக்கட்டத்தில் அவர்கள் ரணிலைத் தமது பொது வேட்பாளராக நிறுத்தம் கூடும் என்ற ஊகங்கள் அதிகம் உண்டு.

அவ்வாறு ராஜபக்சங்களில் தங்கியிருக்கும் பட்சத்தில் தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களிக்க மாட்டார்கள். கடந்த 15 ஆண்டுகளாக நடந்த எல்லா ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக நின்ற இடம் அதுதான். ராஜபக்சக்களுக்கு எதிராக வாக்களிப்பது. இந்த முறையும் அதே வாக்களிப்பு நடைமுறை தொடருமாக இருந்தால், ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சகளின் ஆளாகக் களமிறங்குவாராக இருந்தால்,அவருக்குத் தமிழ் வாக்குகள் கிடைப்பது சவால்களுக்கு உள்ளாகும்.அது அவருக்கும் தெரியும்.தெரிந்துகொண்டுதான் அவர் நிலப்பறிப்பையும் சிங்கள பௌத்த மயமாக்கலையும் முடுக்கி விட்டுள்ளார்.

மேலும் தமிழரசுக் கட்சி சஜித்தை ஆதரிக்கும் முடிவை வெளிப்படையாகத் தெரிவித்தால்,அங்கேயும் தமிழ் வாக்குகள் ரணிலுக்குக் கிடைப்பது சவால்களுக்கு உள்ளாகும்.

தமிழரசுக் கட்சி தனது தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தலில் மூழ்கியிருக்கின்றது.சுமந்திரன் அக்கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டால்,பெரும்பாலும் சஜித்தை ஆதரிக்கும் முடிவு மேலும் உறுதிப்படுத்தப்படும்.ஏனென்றால் சுமந்திரன் நெருங்கிய சகாவாகிய சாணக்கியன் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராகத் தெரிவித்து வரும் கருத்துக்கள் அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன. தமிழ் பொது வேட்பாளர் எனப்படும் தெரிவு ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் நோக்கமுடையது என்று சாணக்கியன் கூறுகின்றார். தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தினால், அதற்காகக் கட்சிகள் கூட்டாக உழைத்தால், அது சஜித்துக்கு கிடைக்கக் கூடிய வாக்குகளை அப்பொது வேட்பாளரை நோக்கி மடை மாற்றி விடும்.அதைத் தமிழரசு கட்சிக்குள் சுமந்திரன் அணி விரும்பவில்லை என்று தெரிகிறது. அதைத்தான் சாணக்கியனின் கூற்று வெளிப்படுத்துகின்றது.

ஆனால் அக்கட்சி தனது தலைவர் யார் என்பதை தெரிந்து எடுத்த பின்னர்தான் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கையை மதிப்பிடலாம். சில வாரங்களுக்கு முன்புவரை சுமந்திரனே கட்சியின் தலைவராக வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. அதற்கு வேண்டிய வேலைகளை அவர் பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார். அதை நோக்கி ஒரு பலமான வலைப் பின்னலையும் அவர் உருவாக்கி வைத்திருக்கிறார்.ஒரு தேர்தலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலிமையாக வைத்ததும்,அதை நோக்கிக் காய்களை நகர்த்தியதும் அவர்தான். ஆனால் அண்மை வாரங்களாக நடக்கும் உட்கட்சித் தேர்தல் பிரச்சாரங்களை வைத்து பார்த்தால், சிறிதரன் சுமந்திரனுக்குக் கடுமையான போட்டியைக் கொடுப்பது தெரிகின்றது.கடைசி நேரத்தில் சிறீதரனின் பிரச்சாரம் சுமந்திரனுக்கு மேலும் நெருக்கடியைக் கொடுக்கலாம். அப்பொழுது வெல்பவரின் பக்கம் சாய்வதற்காகக் காத்திருக்கும் தரப்புக்கள், தளம்பக்கூடிய தரப்புகள், சிறிதரனை ஆதரிக்கலாம். அதனால் சிறீதரனுக்கு வெற்றி வாய்ப்புகள் இப்போதிருப்பதைவிட மேலும் அதிகரிக்கலாம். எனவே தமிழரசுக் கட்சிக்குள் யார் தலைவராகத் தெரிவு செய்யப்படுவார் என்பதிலும் அதன் அடுத்த கட்ட முடிவு தங்கியிருக்கின்றது.

சிறீதரன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டால், தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கூறும் தரப்புகள் அவர் மீது செல்வாக்கு செலுத்துவதற்குரிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.

இப்படிப்பட்டதோர் தமிழ் அரசியல் சூழலில், தமிழ் வாக்குகளைக் கவர்வது தான் ஜனாதிபதியின் நோக்கம் என்று எடுத்துக் கொண்டால் அவருடைய வடக்கு விஜயம் அந்த விடயத்தில் அவருக்கு உதவி புரிந்திருக்குமா?

அல்லது ஐநாவுக்கு அவர் செய்ய வேண்டிய வீட்டு வேலைகளின் பிரகாரம் நல்லிணக்க நாடகத்தை அரங்கேற்ற அது அவருக்கு உதவுமா?

அல்லது பதிமூன்றாவது திருத்தத்தை ஒரு தீர்வாக முன்வைப்பதன் மூலம் அவர் இந்தியாவை நெருங்கிச் செல்ல அது உதவுமா?

https://athavannews.com/2024/1365972

உலகின் மிகப்பெரிய பொய்யர்கள்- -பா.உதயன் 

2 months 2 weeks ago

 


சர்வதேச அரசியலில் பூகோள அரசியல் சார்ந்து அதிகாரம் மிக்க நாடுகள் இராஜதந்திர ரீதியாக தமது சுய நலன் சார்ந்தோ அல்லது அவர்கள் மூலோபாயம் சார்ந்தோ சர்வதேச அரசியலில் பொய் சொல்லி வருவதை பார்க்கிறோம். Selfish lies and strategic lies அரசுகள் கூறும் இப்படியான பொய்கள் அவர்களுக்கு நன்மையாகவும் முடிகின்றன அதே வேளையில் தோல்வியாகவும் முடிகின்றன. அரசுகளுக்கு இடையிலான யுத்தங்களுக்கும் குறிப்பாக சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பனிப் போர் காலத்தில் அமெரிக்காவால் சொல்லப்பட்ட அனைத்து பொய்களும் இறுதியில் அவர்களுக்கு வெற்றியை கொடுத்தது. ஆனால் எல்லா நேரத்திலும் அது வெற்றி அளிக்காததற்கான பல காரணங்களும் உண்டு. அதிகாரம் கொண்ட இந்த அரசுகளின் பொய்கள் குறித்து அரசியல் வெளியுறவு ஆய்வாளர்கள் இப்படியான தமது தர்க்கங்களை முன் வைக்கிறார்கள். 

ஈராக்கில் இரசாயன ஆயுதங்கள்  உள்ளதாகவும் அங்கு ஓர் ஆட்சி கவிழ்ப்புக்காக அமெரிக்காவின் நலன் சார்ந்து பொய்கள் பல சொல்லப்பட்டது. இது இவ்வாறு இருக்க இப்படி எத்தனையோ ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட எத்தனையோ நாடுகளை அமெரிக்கா கவிழ்த்திருக்கிறது. இன்று உலகில் நடக்கும் யுத்ததங்களை பார்க்கும் போது இதை அவதானிக்க முடிகிறது. அமெரிக்க சொல்லும் பொய்களை அப்படியே ஏற்றுக் கொண்டு எல்லா உண்மைகளையும் சொல்ல மறுக்கிறார்கள் ஐரோப்பிய தலைவர்கள் இது தான் அவர்கள் ஜனநாயகம். இன்னும் எத்தனை யுத்தங்களை எவ்வளவு காலம் கொண்டு நடத்தப் போகிறார்கள் அமெரிகாவும் ஐரோப்பாவும் இன்னும் எத்தனை விடுதலைப் போராட்டங்களை தம் நலன் சார்ந்து அழிக்கப் போகிறார்கள் இன்னும் எத்தனை மனிதப் படுகொலைக்கு உதவப் போகிறார்கள். 

பொய் சொல்லுவதில் அமெரிக்காவை அடிக்க யாரும் இல்லை. அந்தப் பொய்களை எல்லாம் மூடி மறைப்பதில் ஐரோப்பாவை வெல்ல யாரும் இல்லை. உண்மைகளை உலகுக்கு சொல்ல மறுக்கிறார்கள் பெரிய அண்ணனும் தம்பிமாரும். சிரியாவில் சொன்னது பொய், ஈராக்கில் சொன்னது பொய், ஆப்கானிஸ்தானில் சொன்னது பொய், கியூபாவில் சொன்னது பொய், லிபியாவில் சொன்னது பொய், ஐ. நா. சபையில் அனைத்து தேசங்களுக்கும் சொல்லுவது பொய், ஏன் ஈழத் தமிழர் போரட்டத்திலும் சொன்னது பொய் இப்படி எத்தனை பொய்கள் அமெரிக்க சொன்ன பொய்கள் அதை ஆமோதித்து ஐரோப்பா சொன்ன பொய்கள் எத்தனை. 

இன்று இஸ்ரேலுடன் சேர்ந்து பாலஸ்தீனத்தில் பொய் சொல்லிக் கொண்டு பெரும் இனஅழிப்புக்கு துணை போய்க் கொண்டு பல்லாயிரக் கணக்கான குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவித்து வருகிறார்கள். மனிதாபிமானத்தை தொலைத்துவிட்டு இன்று உலகம் கண்ணை மூடி பார்த்துக் கொண்டு இருக்கிறது. பல அரபு நாடுகள் உட்பட ஐரோப்பிய நாடுகளும் அமைதியாய் இருக்க இன்று தென்னாபிரிக்கா இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்ததாக இஸ்ரேல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது. இனப்படுகொலை வழக்கின் மீதான விசாரணையை சர்வதேச நீதிமன்றில் (ICJ) தென்னாபிரிக்கா வாதாடி வருகிறது. 

அடுத்தவர்களின் துன்பத்தை மனிதாபிமானம் கொண்டு பார்க்க வேண்டும் முதலில் மனிதாபிமானம் பேசும் மானிடர்களாக வாழ வேண்டும். அன்பும் கருணையும் தான் ஆண்டவன் மொழி என்பதை மானிடம் உணர வேண்டும். மத அடிப்படை வாதிகளினதும் காலனித்துவவாதிகளினதும் ஏகாதிபத்திய வாதிகளினதும் அடிப்படை சிந்தனைகளிலோ அல்லது அவர்கள் நலன் சார் வெளியுறவுக் கொள்கைகளிலோ இன்னும் மாற்றம் ஏற்படாத வரை யுத்தங்கழும் மனித அழிவுகளும் அகதிகள் பிரச்சனைகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். இன்று உலகம் பெரும் அச்சுறுத்தக்குக்கு உள்ளாகி இருக்கிறது இன்றைய மோதல்கள் நாளை ஒரு பிராந்தியங்களுக்கு இடையிலான மோதலாக வெடிக்குமா என உலகம் அச்சத்தில் உறைந்துள்ளது.

Leaders believe lying is wrong but do it anyway.

பா.உதயன் ✍️

ஈழத்தமிழர் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய மாற்றம்,பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்.

2 months 2 weeks ago

 

தமிழருக்காக தனியே முதலீடு மாத்திரம் போதாது.

கூடவே அரசியலும் பேரம் பேசணும் என்று சொல்லுவேன்.

பேராசிரியர் கணேசலிங்கமும் அதையே வலியுறுத்துகிறார்.

அரகலய, ஒரு வருடம் கழிந்த நிலையில் - பகுதி I

2 months 2 weeks ago

Published By: VISHNU   09 JAN, 2024 | 02:43 PM

image

சத்திய மூர்த்தி

ஒரு வருடத்திற்குப் பிறகு, கடந்த ஆண்டின் அரகலய சமூகப் புரட்சியின் ஆரம்பமா அல்லது குறிப்பாக ஆயுதப் படைகள் (வேண்டுமென்றே?!) தங்களின் கடமையைச் செய்யத் தவறியதால் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடா என ஒரு பொது விவாதம் உருவாக ஆரம்பித்துள்ளது.

ஒரு வகையில், இது ஓர் கல்விசார் பயிற்சி அல்லது நிகழ்வுக்கு பின்னரான அறிக்கை மட்டுமே, ஆனால் அத்தகைய பயிற்சியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் உள்ளதுடன், அதை ஊக்கப்படுத்தாமல் விடக்கூடாது.

பாராளுமன்றத்தில் அண்மையில், "ஆளும்" பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் ஒரு தடவை உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சராகவிருந்த ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, 9 மே 2022 அன்று மாலை இடம்பெற்ற தீவைப்பு சம்பவங்கள் குறித்து பிரத்தியேகமாக கவனம் செலுத்தினார்.

அந்தச் சம்பவத்தில், வடக்கைத் தவிர்த்து நாடு முழுவதிலும் பல இடங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களுக்குச் சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட சொத்துக்களுக்குச் ஒன்று முதல் இரண்டு மணித்தியாலங்கள் வரை நீடித்த, நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையின் மூலமாக தீவைக்கப்பட்டிருந்தது.

வீரசேகர, அரகலய போராட்டத்தைப் போலவே முன்னெப்போதும் இல்லாத மே 9 தீவைப்புக்கு முந்தைய இரண்டு சம்பவங்களை சுட்டிகளாகக் குறிப்பிட்டார். முதலாவது சம்பவம் ஏப்ரல் 19 அன்று, எரிபொருள் பவுசருக்கு தீ வைக்கும் கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு தனது உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியை கைது செய்வதற்கு அரசாங்கம் உத்தரவிட்டமையாகும்.

உதவிக்காக பொலிஸார் முறையிட்ட போதிலும் அருகில் நின்ற ஆயுதப்படைகள் தலையிட மறுத்துவிட்டதாக அவர் கூறினார். இராணுவம் தலையிட மறுப்பதும், கடமைக்கு கட்டுப்பட்ட  அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கும்பல்களின் அழைப்புக்கு அரசாங்கம் செவிசாய்த்தமையும் முழு பொலிசாரையும் மனச்சோர்வடையச் செய்தது என்று அவர் வாதிட்டார்.

SLPP பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பொலிஸ் மெய்க்காப்பாளர் கொல்லப்பட்டதுடன் தொடர்புடைய இரண்டாவது சம்பவத்தை வீரசேகர நினைவு கூர்ந்ததுடன், அது நாடு தழுவிய ரீதியில் தீவைக்கப்பட்ட காலையிலேயே, இடம்பெற்றது. 

நிச்சயமாக, உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்றத்தின் மேற்பார்வைக் குழுவின் தலைவரான வீரசேகர, ஒரு விவரத்தை விட்டுவிட்டதாகத் தெரிகிறது, அது ஒருங்கிணைந்த தீவைப்பின் காலையில், டசின் கணக்கான பேருந்துகளில் தலைநகர் கொழும்புக்கு வந்த அவரது கட்சியினர், பிரதமர் மகிந்த ராஜபக்சவை ராஜினாமா செய்வதிலிருந்து தடுக்க, இளைய சகோதரரும் ஜனாதிபதியுமான கோட்டாவின் கோரிக்கையின்படி, தங்களது கோபத்தையும் விரக்தியையும் வெளிக்கொணருவது போல், கண்ணில் தென்பட்ட அனைவரையும் அடித்து நொருக்கியதாகும்.

அதற்குப் பதிலாக நகரம் முழுவதும் அவர்கள் அடி வாங்கினார்கள் என்பது வேறு விடயம். தங்களது பேருந்துகளில் "வெளியாட்களை" தாக்கியவர்கள், அன்று காலை சென்ற அந்த வாகனங்களின் பதிவு இலக்கங்களின் நீண்ட பட்டியலை வைத்திருந்தமை நினைவுகூரத்தக்கதாகும். மீண்டும், ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையா அல்லது சில மணிநேரங்களுக்கு மட்டுமான அவர்களுக்கும் அவர்களின் தலைவர்கள் அனைவருக்கும் காத்திருந்த ஓர் வெள்ளோட்ட நடவடிக்கையா?

தீவிரமான சிங்கள-பௌத்த பெரும்பான்மையின் சமகால அடையாளமான வீரசேகர உண்மையில் குறிப்பிடவில்லை என்றாலும், அந்த கடினமான நாட்களில் பொலிஸாரின் மன உறுதியை அரசாங்கம் உயர்த்தத் தவறியதுடன் இராணுவம் உதவிக்கு விரைந்து செல்லத் தவறியமை இதனை விளைவாக்கியதுடன், பொலிஸாரிற்கான உதவி கிடைத்திருப்பின், அரகலய முன்னணியில் விடயங்கள் வேறுபட்டிருக்கலாம்.

நிச்சயமாக, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை "கும்பலாக ஆக்கிரமித்தமையையும்" பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தை எரித்தமையையும் அவர்கள் நிறுத்தியிருக்கலாம். சிலநாட்களாக ஜனாதிபதி செயலகத்தின் பொதுமக்களின் முற்றுகைக்கு ஜனநாயக அங்கீகாரம் கிடைத்ததைக் கூட வழங்குவது இதுதான்.

இலக்கு மற்றும் நோக்கம்

அரகலயவின் போது கூட, தாமதமாக ஆனால் ஒரே இரவில் ஜனாதிபதி கோட்டா முதலில் நாட்டை விட்டு வெளியேறியதும், அதனைத் தொடர்ந்து அவரது ராஜினாமா என்பதை மக்கள் போராட்டம் உண்மையில் அடைந்ததை, இராணுவ எல்லையின் கவனமற்ற மெத்தனப் போக்குடனான கடமையின் அலட்சியமே அடையவைத்ததாக பலவீனமான குரல்கள் இருந்தன.

சில வாரங்களுக்குப் பிறகு அவர் நாடு திரும்பியபோது மக்கள் நடந்துகொண்ட விதம் அல்லது தவறாக நடந்துகொள்ளாத தன்மை (!) மக்கள் போராட்டம் என்பது கோத்தாவைத் தாக்குவதற்காக அல்ல, ஆனால் அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்காக மட்டுமே என்பதைக் காட்டுகிறது. இது போராட்டத்தின் குறிக்கோள் மற்றும் நோக்கம் குறித்து சில வினாக்களை எழுப்பியது. அந்த வினாக்களுக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை.

இது தற்செயல் நிகழ்வாயினும் அல்லது என்னவாக இருப்பினும், ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார திஸாநாயக்க, தெஹிவளையின் புறநகர் பகுதியில் நடைபெற்ற அரசியல் பேரணியில் உரையாற்றும் போதே, அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேசிய அரசியல்-தேர்தல் உரையாடலில் "சமூகப் புரட்சியை" மீண்டும் புகுத்தலாம் என்று நினைத்திருக்கலாம்.

செய்தி அறிக்கைகளின்படி, AKD, என பிரபலமாக அறியப்பட்ட அவர், ஒவ்வொரு நாளிலும், நாட்டின் "அரசியல் ஒரு சமூகப் புரட்சியை நோக்கி விரைவாக முன்னேறுகிறது" என்று கூறினார். “அரசாங்கத்தை மாற்றுவதன் மூலம் சமூகப் புரட்சிகளை அடைய முடியாது. சமூகப் புரட்சியின் மாற்றத்திற்காக மக்கள் ஏங்குகிறார்கள்” என்று கூறினார்.

ஏற்கனவே மறக்கப்பட்ட அரகலய போராட்டத்தின் நீண்ட வாரங்களில் என்ன நடைபெற்றது மற்றும் இன்னும் சொல்லப்பட்டவை அனைத்தின் மறைந்துபோகும் நினைவுகளை மீளப்பெறவும், புதுப்பிக்கவும், ஜே.வி.பி மற்றும் AKD ஆகியவை வெகுசன இயக்கத்தை அமைப்பு மாற்றத்திற்கான ஓர் "சமூகப் புரட்சி" என்று குறிப்பிட்டு பேசின. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இறுதியில் ஜனாதிபதி கோட்டாபாய ஆகியோர் அடுத்தடுத்து ராஜினாமா செய்த பின்னரும், அவர்கள் "சமூகப் புரட்சி" என்ற கோஷத்தை தொடர்ந்து முழங்கினர். கோட்டாவின் இடத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றம் கூடியபோதும், பிரதமர் மற்றும் பதில் ஜனாதிபதியான விக்கிரமசிங்கவின் SLPP-UNP வேட்புமனுவை அங்கீகரித்த போதும், அவர்கள் மட்டும் கடந்த காலத்தில் செய்ததைப் போலவே, தங்களது துப்பாக்கிகளுடன் தொடர்ந்தும் விடாப்பிடியாகவும் சிக்கிக்கொண்டதுடன், ஜே.வி.பி. கடந்த 60 வருடங்களாக கட்சியாக முதலில் ஒரு பிரத்தியேக-கிளர்ச்சிக் குழுவாகவும் பின்னர் ஒரு சராசரியான, மெலிந்த ஜனநாயகப்படுத்தப்பட்ட பதிப்பாகவும் இருப்பில் இருந்து வந்துள்ளது.

நாட்டின் அரசியல் சம்பந்தப்பட்ட ஒரு "சமூகப் புரட்சி" தொடர்பான திசாநாயக்கவின் புத்துயிர் பெற்ற குறிப்பு அதிக கவனத்தை கோருகின்றது. வெளியிடப்பட்ட சில தனியார் உளஎண்ணம் தொடர்பான தேசிய கருத்துக்கணிப்பின்படி, அவர் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைகளில் புதிய உயரங்களை எட்டியுள்ளார்.

நாட்டின் வாக்காளர்களில் 51 சதவீதம் பேர் இப்போது AKD அடுத்த ஜனாதிபதியாக வருவதை விரும்புகிறார்கள் என்று ஒரு கருத்துக்கணிப்பாளர் கூறியுள்ளார். இந்த எண்ணிக்கை கணிசமானதாகும், ஏனெனில் அது தனித்த பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் முதல் முழு அளவிலான சோசலிச ஜனாதிபதியாக ஆவதற்கான குறைந்தபட்சமான 50%+1 வாக்குகளை விட இந்த எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது. ஜே.வி.பி.யின் மற்ற தோல்விகள் எதுவாக இருந்தாலும், குறைந்தபட்சம் இப்போதைக்கு, சோசலிச சித்தாந்தத்தில் முற்றுமுழுதாக வளர்ந்த ஒரே அரசியல் கட்சி அவர்களுடையது தான்.

நிச்சயமாக, இந்த குறிச்சொல் ஒரு காலத்தில் SLFP க்கு சொந்தமானது என்பதுடன், பின்னர் பிரிந்த SLPP க்கு சொந்தமானது, ஆனால் பாதையில் நீண்ட காலமாக, அவர்களின் சோசலிச நிலைகள் நீர்த்துப்போயின. இது அவ்வப்போது நிதியியல் உதவிக்காக கடந்த IMF நிபந்தனைகளை ஏற்கும் தவிர்க்க முடியாத தன்மையை குறிப்பிடவில்லை அல்லது தொடர்புபடுத்தவில்லை - அல்லது, மாறாக, அங்கேயே முடிவடைகிறது.

நிச்சயமாக, ஜே.வி.பி.யும், கடந்த காலத்தில் SLFP தலைமையிலான ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க-குமாரதுங்க, சி.பி.கே, மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் ஆட்சியின் ஒரு பகுதியாக, சில கருத்தியல் விழுமியங்களில் சமரசம் செய்து கொண்டது, ஆனால் அவை முற்றிலும் "மாசுபடுத்தப்படுவதற்கு" முன்பே வெளியேறியது.

இன்றைய வினா என்னவெனில், அதன் பாரம்பரியமான 3-5 சதவீத வாக்குப் பங்கை 50-க்கும் மேற்பட்ட சதவீதத்திற்கு கொண்டு செல்லுகின்ற சாத்தியமற்ற உயரத்தை எட்டும் முயற்சியில், ஜே.வி.பி, அவர்களின் அடிப்படைக் கொள்கைகளை இல்லையென்றால் சித்தாந்தத்தை அதற்க்கு நடுநிலைப்படுத்த வேண்டும் அல்லது சமரசம் செய்ய வேண்டும். 

நாட்டின் தேர்தல் கடந்த காலம் வெளிப்படுத்தியபடி, நடுத்தரப் பாதையில் செல்வதன் மூலம் மட்டுமே அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்கள் ஜனநாயக அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். நிச்சயமாக, ஒரு தொலைதூர முன்மாதிரி உள்ளது. 1956 ஆம் ஆண்டு SLFP தலைமையிலான முதலாவது அரசாங்கம், அங்கு அனைத்து இடதுசாரி சார்புக் கட்சிகளும் --- ஜேவிபியினதும் உருவாக்கம் ஒரு தசாப்த தூரத்தில் இருந்த நிலையில், ஜனாதிபதி S. W. R. D. பண்டாரநாயக்கா, அதனை ஒரு நீல இரத்தம் கொண்ட சோசலிச ஆட்சி என்று அழைத்தார். மிகவும் வழமையான இடதுசாரி/சோசலிச கடந்த காலத்தைக் கொண்ட அவரது SLFP யின் சக பயணிகளில் சிலர் சர்வதேச கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து விலகி, "சிங்களம் மட்டும்" சட்டம் என்ற மேலாதிக்க காரணத்துடன் அடையாளம் காணப்பட்டதைக் கருத்தில் கொண்டு, அங்கு "சோசலிசப் புரட்சி" ஏற்கனவே அதன் தூய்மையை இழந்துவிட்டது.

அழகு அல்லது பரிதாபம் என்னவென்றால், அந்த பாரம்பரிய இடதுசாரிகள், அவ்வப்போது, மூன்று மொழி கொள்கை போன்றவற்றைப் பற்றி பேசுகிறார்கள். SLFP/SLPP அரசாங்கத்திற்கு அவர்களில் யாரேனும் அல்லது அனைவரும் கையொப்பமிட்ட போதெல்லாம், அவர்கள் ஒரு கருத்தை நிரூபிப்பது போல உத்தியோகபூர்வ மொழிகள் அமைச்சு அவர்களில் ஒருவரின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதை உறுதிசெய்தனர். இலங்கை வாக்காளர்கள் இப்போதும், வாக்களிக்கும் நாளுக்கும் இடையில் புதிய ஜனாதிபதிக்காக வேறு எங்கு தேடினாலும், வரவிருக்கும் வாரங்கள், மாதங்கள் மற்றும் சில ஆண்டுகளில் AKD மற்றும் JVP பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே இருவேறுபட்ட கருத்தாகும்.

ஒன்று அவர்கள் தங்கள் வேரூன்றிய இடதுசாரி நிலையிலிருந்து விலகி, குறிப்பாக பொருளாதாரப் பிரச்சினைகளில் மிதமான நடுத்தர பாதைக்கு நகர்கிறார்கள் அல்லது பெரிய வாக்காளர்களை குறுகிய மற்றும் நடுத்தர பாதையில் தங்கள் சிந்தனைக்கு மாற்றுவதுடன், சுயமாக பேச்சுவார்த்தை நடாத்த அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். எது அதிகமாக எவ்வாறு அடையக்கூடியது என்பதை அவர்கள் மதிப்பீடு செய்ய வேண்டும்.

வேறொன்றுமில்லை என்றாலும், "முதலாளித்துவ, வலது பிற்போக்குத்தனமான" அமெரிக்காவிற்குச் செல்வதற்கான AKDயின் விருப்பம், அமெரிக்கத் தூதர் ஜூலி சுங்கைச் பலமுறை சந்திப்பதற்கான அவரது ஆர்வம் மற்றும், IMF உடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் வெளிப்படுத்திய விருப்பத்திற்கு அப்பால் (நிபந்தனைகளை மறு வரைவு செய்வது) ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், ஜே.வி.பி.யின் தலைமை ஒரு கட்டம் வரையில் கூட பேச்சுவார்த்தை நடத்த மற்றும்/அல்லது முன்னெடுக்கத் தயாராக இருக்கும் எதிர்காலப் போக்கைக் குறிக்கிறது.

யோசனைகள், சித்தாந்தங்கள் மற்றும் விவரங்கள் ஆகியன கலந்துரையாடப்பட்டு தீர்மானமெடுக்கப்பட வேண்டியிருக்கும் போது, பல தடைகள் இருக்கலாம், ஆனால் அவை அனைத்தும் மறைக்கப்பட்ட தீர்வுகள், விபரிப்புகள் மற்றும் நியாயப்படுத்தல்களை கொண்டு வரலாம், இருப்பினும் கட்சியின் கடந்தகால ஒருதலைப்பட்ச விருப்பத்தால் நம்பத்தகாததாகும்.

வெற்றி அல்லது தோல்வி?

இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்கு அப்பால் உள்ள ஜே.வி.பி.யின் உருவாக்கம், சித்தாந்தம் மற்றும் செயன்முறை ஆகியவை ஒரு தேசத்திற்கு அவர்களால் உருவகப்படுத்தப்பட்ட மற்றும் குறிப்பிடப்பட்ட (இருப்பதற்கு) "சோசலிச இலங்கைக்கு" உரியவை உட்பட, அதன் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் இன்னமும் ஜேவிபிக்கு மட்டுமே பொருந்துகிறது.

பிந்தையது, இலங்கை அரசு அவர்களின் இரண்டாவதும் இறுதியுமான கிளர்ச்சியை நசுக்கியதுடன் கட்சி மிக நீண்ட காலத்திற்கு முன்பே கைவிட்டதுடன், இது கட்சி / இயக்கத்தின் ஸ்தாபகரான ரோஹன விஜேவீரவின் மரணத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

கட்சியானது அதன் இடத்தை மிதவாதிகள் கைப்பற்ற அனுமதித்ததுடன், உள்ளடக்கலான ஜனநாயக அரசியல் மற்றும் தேர்தல்கள் எப்பொழுதும், ஒரு புதிய முகமான ஜேவிபிக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களாக, ஜே.வி.பி ஜனநாயக மிதவாதம் அல்லது மிதவாத ஜனநாயகத்தின் பயனையும் பொருத்தப்பாட்டையும் கண்டறிந்துள்ளதுடன், இல்லாவிடின், தமிழ் இன முன்னணியில் புலிகளுக்கு நடந்தது போல், 2009 ஆம் ஆண்டு மே மாதம் போருக்குப் பின்னராக, நிறுவுனர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒழிப்புடன், நூற்றுக்கணக்கான, இல்லாவிடின் ஆயிரக்கணக்கான அவரது கடைசிக் குழு உறுப்பினர்களும் அழிக்கப்பட்டது போல கிளர்ச்சிக்குப் பின்னராக இயக்கம் அழிக்கப்பட்டிருக்கும்.

உரையாடல் இன்னும் அரகலயவைப் பற்றியதாக இருக்கும்போது, அது வெற்றியடைந்ததா அல்லது தோல்வியடைந்ததா, அல்லது அது அடைய விரும்பியதை அடைந்ததா என்ற வினா இன்னமும் உள்ளது. இது அரகலயாவின் நோக்கங்கள் மற்றும் இலக்குகள் பற்றிய முதன்மையான மற்றும் ஆரம்பநிலை வினாவிற்கு இட்டுச் செல்கிறது.

இது இன்னமும் ஓர் அடிப்படையான வினாவிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது: அரகலயவின் ஒழுங்கமைப்பாளர்கள் யார்? அரகலய ஒரு சுய-தீர்க்கதரிசனமும், சுய-உந்துதலும் கொண்ட வெகுசன இயக்கம் மற்றும் அது தானே உருவானது என்பது இப்போது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் 'அரபு வசந்தம்", "ஆரஞ்சுப் புரட்சி" போன்றவற்றில் சமீபத்திய உதாரணங்களை மேற்கோள் காட்டலாம், ஆனால் அவற்றின் வெற்றிகள் (அல்லது, சில சந்தர்ப்பங்களில் தோல்வி) மேற்கத்திய நாடுகளின் கூற்றுகளால் தகுதி பெற்றதுடன், குறிப்பாக அமெரிக்கா மற்றும் அதன் புலனாய்வு அமைப்புகள் ஜனநாயகக் காரணத்தை நிறுவுதல் அல்லது மீட்டெடுப்பதற்கான தங்களது அர்ப்பணிப்புடன் திரைக்குப் பின்னால் இருந்தன (முந்தைய நூற்றாண்டில் நடந்த இரண்டு பெரும் போர்களுக்குப் பிறகு பல தசாப்தங்களில் மேற்குலகம் புரிந்துகொண்டு பிரச்சாரம் செய்தது போல).

இலங்கையைப் பொறுத்தவரை, அரகலய என்பது தலைநகரின் "நகர்ப்புற நடுத்தர வர்க்கம்" மற்றும் நகரத்தின் "படித்த உயரடுக்கினரால்" வீட்டுக்கு வீடு, தெருவுக்குத் தெரு ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்ததுடன், அவர்கள் கடந்த பல தசாப்தங்களாக, மற்றும் பல நூற்றாண்டுகளாக காலனித்துவ அதிகாரத்தின் கீழ் இருந்ததுடன், உள்ளூர் விடயங்களைப் பற்றிய இழிவான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொண்டனர். அரசியல் மற்றும் பொது நிர்வாகம் அவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. அவ்வப்போது, முக்கியமாக மேற்கத்திய நாடுகளால் நிதியளிக்கப்பட்ட INGOக்கள் மற்றும் NGOக்கள் அவர்களின் வெறுப்பு மனப்பான்மையை தூண்டிவிட்டன.

உள்ளூர் ஊடகங்களின் ஒரு பகுதியும் சேர்ந்து செயற்பட்டது. இவை அனைத்தும் ஒருபுறம் நகர்ப்புற உயரடுக்கலும் மறுபுறம் கிராமப்புற வெகுசனங்களின் நடத்தையிலும் அணுகுமுறையிலும் ஆழமான பிளவை பிரதிபலித்தது.

கடந்த கால அரசாங்கங்களாக இருந்தாலும் சரி, அது முதலாளித்துவமாகவோ அல்லது சோசலிசமாக இருந்தாலும், நாட்டின் அபிவிருத்திப் பாதையில், குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத்தில், கிராமப்புற மக்களுக்கு பகுதியளவான திறனுடைய வேலை வாய்ப்புகளை வழங்கல் மற்றும் அடுத்தடுத்த தலைமுறைகளில் வாழ்க்கை முறை மேம்பாடு ஆகியவற்றில் அவர்கள் செய்த பங்களிப்புகளில் அவர்கள் அனைவரும் குறிப்பாக அரசியல் வர்க்கம் அதை கவனிக்காமல் கடந்த பத்தாண்டுகளில் ஒரு புதிய "கிராமப்புற நடுத்தர வர்க்கத்தை" உருவாக்குவதற்கு பங்களித்துள்ளனர். தகவல் தொடர்பாடல் என்பது சாதனைகளுக்கு மட்டுமல்லாது, அபிலாஷைகளுக்கும் முக்கியமாகவுள்ள இந்த தகவல் தொழில்நுட்ப சகாப்தத்தில், ஒரு எண்கணித முன்னேற்றமாக ஆரம்பித்து வடிவியல் நிலைகளை அடைந்தது.

எவ்வாறு வீதிகளில் இருந்த போராட்டக்காரர்கள், பசுமையான காலி முகத்திடல் கடற்பரப்பிற்குச் சென்று ஜனாதிபதி செயலகத்தைச் சுற்றி வளைத்தார்கள் என்பதுதான் வினாவாகும். இத்தகைய செயற்பாட்டின் ஆரம்ப நாட்களில் கூட, பல போராட்டக்காரர்கள் இரவு முழுவதும் தங்கியதாக எந்த அறிக்கையும் இருக்கவில்லை.

உண்மையில், சில சமூக ஊடகப் பதிவுகள் குடும்பங்களுக்கான கடற்கரை முகப்பில் உல்லாசப் பயணம் என்று கூட விவரித்தன, ஏனெனில் அவர்கள் தங்களின் பிள்ளைகளையும், ஏன் கைக்குழந்தைகளையும் கூட, வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் கொண்டு வந்தனர். இது இன்னுமொரு முன்னணியில் இலங்கை அரசின் முழுமையான தோல்வியில், அனைவரும் ஒன்றாக ஒன்றிணைந்த நிலையில் கோபம், வேதனை மற்றும் எரிச்சல் ஆகியவற்றின் உண்மையான வெளிப்பாட்டை காட்டும் ஒரு மோசமான, மாறாக மதிப்பற்ற முறையாகும்.

ஏற்கனவே, கொழும்பு நடுத்தர வர்க்கத்தினர் அரசியல் வர்க்கத்தை பல காரணங்களுக்காக முற்றிலுமாக வெறுக்கிறார்கள்  அல்லது, இல்லையெனில், அவர்களுக்கெதிராக  முறையிடுகிறார்கள். ஆயினும்கூட, சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை உணவு மற்றும் எரிபொருள் விநியோகம் அவர்களின் நிரல்களில் இல்லை, இருப்பினும் எப்போதும் அதிகரித்து வரும் விலைகள் குறித்து முணுமுணுப்புகள் இருந்தன. அவர்கள் தினசரி இரவு உணவு-மேசை கலந்துரையாடல்களில் அல்லது உள்ளக உரையாடலின் நோக்கத்தை விரிவுபடுத்துவதன் மூலம் அது "எப்படியும் ஒரு உலகளாவிய நிகழ்வு" என்றும், அவர்களும் "அதனுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்... மற்றும் வரும் ஆண்டுகளில் இன்னும் மோசமாகலாம்" என்று தீர்மானிக்கும் கல்வி வெளிப்பாடுகளின் மூலமும் திருப்திப்படுவார்கள்.

ஆரம்பத்தில், அறிக்கைகளின்படி, நகர்ப்புற நடுத்தர வர்க்கம் இறக்குமதி செய்யப்பட்ட பால் பக்கற்றுக்கள் மற்றும் பின்னர் அவர்களின் காலை உணவான பாண் மற்றும் பிற கோதுமை பொருட்கள், கடை அலமாரிகளில் இருந்து மறையத் தொடங்கிய போது பீதியடைந்தது. தீவின் பிரதான உணவாக அரிசி இருந்த போது கொழும்பின் மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஐரோப்பிய காலை உணவை எவ்வாறு, எப்போது தங்களது சொந்த உணவாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர் என்பது அனைவரும் யூகிக்கக்கூடியதாகவுள்ளது. 

சுதந்திரத்திற்கு உடன் முன்னாகவும் பின்னரும் சில வருடங்களில், லண்டனில் குளிர்காலமாக இருக்கும் போது, கொழும்பு மேல்தட்டு மக்கள் தங்களது கம்பளிகளை வெளியே எடுப்பார்கள் என்று சொல்லப்படுவது வழக்கமாகும். பிந்தைய தசாப்தங்களில், அவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுடன், அவர்கள் அட்லாண்டிக் முழுவதும், வாஷிங்டனிலும் குளிர்காலமாக இருக்கும் போது தங்களது கம்பளிகளை தூசி தட்டி உலர்த்துவார்கள்.

அந்தளவிற்கு, அவர்களின் பிரதான உணவின் திடீர் வெளியேற்றத்தின் போதான அவர்களின் பீதி புரிந்துகொள்ளத்தக்கது. சமைப்பதற்கும் வாகனம் ஓட்டுவதற்கும் எரிபொருள் முதலில் பற்றாக்குறையாகத் தொடங்கியதும், பின்னர் உடனடியாக கிடைக்காமல் போன போது அவர்களின் அவல நிலையும் அப்படித்தான் இருந்தது.

இலங்கை மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் கூற்றுப்படி, பாரம்பரிய உணவுகளான புட்டு, அப்பம் மற்றும் இடியப்பம் மற்றும் உள்நாட்டு தேநீர் (பாலுடன் அல்லது பால் இல்லாமல்) நாட்டின் தெற்கு மற்றும் வடக்கில், எந்த விலை உயர்வும் இல்லாமல் மிக அதிகமாகக் கிடைக்கும் என்பது அவர்கள் நாடு முழுவதும் சென்றமையால், கடந்த கால வருகை மற்றும் அறிக்கையிடல் மூலம் அவர்களில் பலருக்கு நன்கு தெரிந்திருந்தது. உண்மையில், கொழும்பு கடற்கரை முகப்பில் நாளாந்த கூட்டங்கள் ஒவ்வொரு நாளும் பெரிதாகவும், அதிக நோக்குடையதாகவும், உறுதியாகவும் ஆரம்பித்தமையால், "மோசமான விடயம்" கூரையைத் தாக்கும் என்று காத்திருந்தனர்.

அப்போது எங்கிருந்தோ “கோட்டாகோகம” எதிர்ப்பு தளம் தோன்றியதுடன், அது பொதுவாக "கம" அதாவது "கிராமம்"என்ற சிங்கள வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. அவர்கள் தங்களுடைய இலக்குகளை அடையும் வரை இங்கேயே இருந்தார்கள். கொழும்பின் தெருக்களில் தமக்கு அறிமுகம் இல்லாத, தமக்குத் தெரியாத மனிதர்களால் தாங்கள் மூழ்கியிருப்பதாக நகரவாசிகள் உணர ஆரம்பித்ததும் அப்போதுதான்.

அவர்களில் சிலர் பின்வாங்கினர், மற்றவர்கள் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை, இன்னும் சிலர் நிலைமை கட்டுப்பாட்டை மீறுவதற்கு சாட்சியாவதால் மிகவும் பயந்து தங்களது இருப்பு நடவடிக்கைகளை மிதப்படுத்தும் என்று நம்புவதற்கு குறைந்தபட்சம் தேவை ஏற்பட்டது. தேசத்தின் பிரதான பேரணித் தளமாக விளங்கும் காலி முகத்திடலில் மக்களின் கோபத்தின் வெளிப்பாட்டிலிருந்து, ஜனாதிபதி செயலகத்தின் "ஏற்றுக்கொள்ளக்கூடிய" முற்றுகை வரை வன்முறை மற்றும் தீ வைப்பு வரை, அவர்கள் ஏதோ தவறாக இருப்பதையும், தங்களது கைகள் முற்றிலுமாகப் பிடித்துக் கொள்ளப்பட்டிருப்பதையும் கண்டறிய ஆரம்பித்தனர்.  

இவர்கள் யார், அவர்களை வழிநடாத்தியது யார்? அவர்களுக்கு யார் என்ன செய்தி(களை) கொடுத்தனர், ஏன், எவ்வாறு? என்பதுதான் வினாவாகும். நகரவாசிகள், ஆரம்ப கட்டங்களில், தங்கள் கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்துவதைத் தவிர வேறு எந்த அடையாளம் காணக்கூடிய குறிக்கோளையும் கொண்டிருக்கவில்லை, இது சுமார் ஒரு வாரம் அல்லது இரு வாரமாக முற்றிலும் உதவியற்றதாக காணப்பட்டது. அவர்களின் தலைமுறை தலைமுறையாக நன்கு வளர்க்கப்பட்ட ஜனநாயக விழுமியங்களுக்கும், ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் நாடு தழுவிய தேர்தல்கள் மூலம் மட்டுமே அரசாங்கங்களையும் ஜனாதிபதிகளையும் மாற்றும் செயன்முறைக்கும் வெளிச் சென்று, யாரேனும் அவர்களிடம் கோத்தா இப்போது இங்குதான் போக வேண்டும் என்று அவர்கள் காதுகளில் சொன்னாலோ அல்லது கிசுகிசுத்திருந்தாலோ கூட அவர்கள் அதை ஏற்கத் தயாராக இருக்கிறார்கள். இந்த விடயம் வேறுவிதமாக போய்க்கொண்டிருந்தது.

https://www.virakesari.lk/article/173504

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும் இஸ்ரேலின் உருவாக்கம்

2 months 2 weeks ago

Published By: VISHNU   12 JAN, 2024 | 11:32 AM

image

வினோத் மூனசிங்க

நவம்பர் 2, 1917 இல், பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலரான ஆர்தர் பால்ஃபோர் ரோத்ஸ்சைல்ட் அரசருக்கு பாலஸ்தீனத்தில் யூத தேசிய இல்லத்தை உருவாக்குவதற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்து ஓர் கடிதத்தை எழுதினார்.

ஒரு வாரம் கழித்து, அரசாங்கம் இந்த பால்ஃபோர் பிரகடனத்தை பகிரங்கப்படுத்தியதுடன், இது சியோனிச நோக்கத்திற்கான ஆதரவின் முதலாவது பொது வெளிப்பாடாக அமைந்தது. இது குறிப்பாக பால்ஃபோர் ஒரு யூத-விரோதியாக அறியப்பட்டதால், பாலஸ்தீனியர்களிடையே மட்டுமல்லாது, பிரிட்டிஷ் யூத சமூகத்தினரிடையேயும் கவலையை ஏற்படுத்தியது.

செப்ரெம்பர் 5, 1918 அன்று, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன் அமெரிக்க சியோனிஸ்ட் அமைப்பின் துணைத் தலைவரான ரப்பி ஸ்டீபன் S.வைஸுக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டதுடன், அதில் அவர் சியோனிச திட்டத்தை வலியுறுத்தி பால்ஃபோர் பிரகடனத்தை முனைப்பாக ஆதரித்தார். உண்மையில், அவர் பால்ஃபோர் பிரகடனத்திற்கு தனது முன் அனுமதியை வழங்கியிருந்ததுடன், ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடமாக அதனை ரகசியமாக வைத்திருந்தார்.

பால்ஃபோர் பிரகடனத்திற்கு, வெளியுறவுத் திணைக்களங்கள் மற்றும் அமெரிக்க யூத சமூகத்தினரிடையே கடும் எதிர்ப்பு நிலவியது. அமெரிக்க வெளியுறவு அமைச்சரான ராபர்ட் லான்சிங் வில்சனிடம் அமெரிக்கா ஜெர்மனியுடன் போரில் ஈடுபட்டது ஆனால் பாலஸ்தீனத்தை ஆண்ட ஒட்டோமான் பேரரசுடன் அல்ல என்றும் பல யூதர்கள் அதை எதிர்த்தனர்; மேலும் பல கிறிஸ்தவர்களும் அதனை எதிர்ப்பார்கள் என்று சுட்டிக்காட்டினார்.

ஓர் பிரதான யூத வில்சன் ஆதரவாளரும், ஒட்டோமான் பேரரசின் முன்னாள் தூதுவருமான ஹென்றி மோர்கெந்தாவ் பால்ஃபோர் பிரகடனத்தைப் பற்றி பின்வருமாறு எழுதினார்:

"யூத மக்களின் உலகிற்கும் அவர்களின் மதத்திற்கும் முதன்மையான செய்தி சமாதானம், சகோதரத்துவம் மற்றும் சர்வதேச மனப்பான்மையாக இருக்கும்போது, ஒரு வரையறுக்கப்பட்ட தேசியவாத அரசை அமைத்து அதன் மூலம் அவர்களின் மதச் செல்வாக்கிற்கு ஒரு பௌதீக எல்லையை உருவாக்குவது போல் தோன்றுவதில் என்ன தவறு இருக்கின்றது”.

அமெரிக்க யூத மதத்தலைவர்களின் மத்திய மாநாடு தீர்மானத்தின் மீதான தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், யூத இலட்சியம் "யூத அரசை நிறுவுவது அல்ல - நீண்டகாலமாக வளர்ந்த யூத தேசியத்தை மீண்டும் வலியுறுத்துவது அல்ல" என்று உறுதியாக கூறியது.

பல யூத மதத்தலைவர்கள் "சியோனிசத்தை எதிர்க்கும் யூத மதத்தலைவர்களின் தேசியக் குழுவை" உருவாக்கியதுடன், அவர்களில் ஒருவரான ரபி சாமுவேல் ஷுல்மேன், "யூதர்களின் விதி பாலஸ்தீனத்தில் சிறிய மக்களாக உருமாறக்கூடாது" என்று கூறினார். 

இந்த உணர்வானது, பாலஸ்தீனத்தில் ஒரு யூத தாயகத்தை நிறுவுவதற்கான முயற்சியானது, "விரும்பத்தகாத" குடித்தொகையிலிருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்வதற்கான யூத-விரோதவாதிகளின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது என்ற அவர்களின் (சரியான) பகுப்பாய்வை பிரதிபலித்தது. 1921 ஆம் ஆண்டில் அமெரிக்க காங்கிரஸ் அவசரகால ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றியதுடன், இது யூத குடியேற்றத்தை (மற்றும் பொதுவாக கிழக்கு மற்றும் தெற்கு ஐரோப்பிய குடியேற்றம்) கணிசமாகக் குறைத்ததுடன், 1924 குடியேற்றச் சட்டத்தின் மூலம் அதை மேலும் குறைத்தது.

கிங்-கிரேன் ஆணைக்குழு

ஆயினும்கூட, காஸ்மோபாலிட்டன் ரோத்ஸ்சைல்ட் வங்கிக் குடும்பம் மற்றும் பிற யூத வங்கியாளர்களிடமிருந்தும், உச்ச நீதிமன்ற நீதிபதி லூயிஸ் டி. பிராண்டீஸ் போன்ற முக்கிய யூத தாராளவாதிகள் மற்றும் தொழிலதிபர் வில்லியம் இ பிளாக்ஸ்டோன் போன்ற கிறிஸ்தவ சியோனிஸ்டுகளிடமிருந்தும் பெற்ற ஆதரவின் காரணமாக சியோனிச சிறுபான்மையினர் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

இதன் விளைவாக, கிங்-கிரேன் ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் சியோனிச சார்பு யோசனைகளுடன் ஆரம்பித்தார்கள். 1919வது பாரிஸ் சமாதான மாநாட்டிலிருந்து உருவான உத்தியோகபூர்வமாக "துருக்கியில் உள்ள ஆணைகளுக்கான 1919 நேச நாடுகளுக்கிடையிலான ஆணைக்குழு" எனப்படும் இந்த ஆணைக்குழுவானது, முன்னாள் ஒட்டோமான் மாகாணங்களுக்குள் தங்களது பேரரசுகளை விரிவுபடுத்த முயன்ற பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் மற்றும் அவர்களின் நோக்கங்களில் சந்தேகம் கொண்ட அமெரிக்காவின் நிலைகளை சமரசம் செய்யும் முயற்சியாகும்.

ஜனாதிபதி வில்சன் இறையியலாளரான ஹென்றி சர்ச்சில் கிங் மற்றும் தொழிலதிபர் சார்லஸ் ரிச்சர்ட் கிரேனை ஆணைக்குழுவுக்கு நியமித்ததுடன், பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் ஆணையாளர்களை நியமிக்க மறுத்ததுடன் அவர்களை மட்டுமே உறுப்பினர்களாக விட்டுவிட்டனர்.

அனைத்து தரப்பினருடனும் விரிவான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, ஆணைக்குழு, "பாலஸ்தீனத்தின் தற்போதைய யூதர்கள் அல்லாத குடிமக்களை நடைமுறையில் முழுமையாக அகற்றுவதை சியோனிஸ்டுகள் எதிர்பர்த்துள்ளனர்" என்று குறிப்பிட்டதுடன், "யூத நோக்கத்திற்கான ஆழ்ந்த அனுதாப உணர்வு" இருந்தபோதிலும், பின்வருமாறு பரிந்துரைத்தது:

"... பாரியளவில் குறைக்கப்பட்ட சியோனிச நிகழ்ச்சித் திட்டம் மட்டுமே சமாதான மாநாட்டின் மூலம் முயற்சிக்கப்படுவதுடன், அதுவும் கூட, மிக படிப்படியாகத்தான் ஆரம்பிக்கப்பட்டது. இது யூதர்களின் குடியேற்றம் கண்டிப்பாக மட்டுப்படுத்தப்பட வேண்டியதுடன், பாலஸ்தீனத்தை யூதர்களின் பொதுநலவாய நாடாக மாற்றும் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்றும் அர்த்தப்படுத்துகிறது.

ஆணைக்குழுவின் கண்டறிவுகள் பல ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டன, அத்துடன் துருக்கிய கொள்ளைகளை அவர்களுக்கு இடையே பிரிப்பதற்கான ஆங்கில-பிரெஞ்சு திட்டங்களுடன் முன்னேறிய பாரிஸ் சமாதான மாநாட்டால் புறக்கணிக்கப்பட்டன. அமெரிக்காவில், 1922ல் பாலஸ்தீனத்தில் யூத தாயகம் அமைப்பதற்கு ஆதரவாக காங்கிரசு வாக்களித்த பிறகுதான் இந்த அறிக்கை வெளிச்சத்திற்கு வந்தது.

சியோனிஸ்டுகளின் தீவிர பரப்புரையைத் தொடர்ந்து, குடியரசுக் கட்சியின் மாசசூசெட்ஸ் செனட்டர் ஹென்றி கபோட் லாட்ஜ் மற்றும் குடியரசுக் கட்சியின் நியூயோர்க் பிரதிநிதி ஹாமில்டன் ஃபிஷ் III அமெரிக்க காங்கிரஸின் கூட்டுத் தீர்மானத்தை "யூத இனத்தின் தேசிய வீடாக பாலஸ்தீனத்தை மீண்டும் உருவாக்குவதற்கு ஆதரவாக" அறிமுகப்படுத்தினர்.

அதன் நிறைவேற்றம் முன்கூட்டியே நிறைவடைந்திருந்தாலும், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரக் குழு இந்த விடயத்தில் ஒரு விசாரணையைக் கூட்டியது. தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் பாலஸ்தீனியர்களை நாகரிகமற்றவர்கள் என்று இழிவுபடுத்தியதுடன் பாலஸ்தீனத்தை "அபிவிருத்தியற்ற மற்றும் குறைந்த குடித்தொகை கொண்ட" "பாலைவனமான நாடு" என்று அழைக்கிற காலனித்துவ வாதத்தை பயன்படுத்தினர். சில அரசியல்வாதிகள் யூத குடியேற்றவாதிகளை வட அமெரிக்காவின் வெள்ளையின குடியேற்றக்காரர்களுக்கும், "நாடோடி" பாலஸ்தீனியர்களை அமெரிக்க இந்தியர்களுடனும் ஒப்பிட்டு “Manifest Destiny” என்று அழைத்தனர்.

இருப்பினும், சீர்திருத்தப்பட்ட யூத மதத்தின் உலகளாவிய மனிதநேயக் கண்ணோட்டத்தில் நீள் தீவின் ரப்பிஸ் ஐசக் லேண்ட்மேன் மற்றும் சின்சினாட்டியின் டேவிட் பிலிப்சன் ஆகியோர் சியோனிசத்தை எதிர்த்தனர். யூத சமூகம் இவ்விடயத்தில் ஆழமாகப் பிளவுபட்டிருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டினார்கள் ((லாபி சூழ்ச்சியைப் போல தேர்தல் அரசியல் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதற்கான மேலதிக சான்றாகும்).

இரண்டு பாலஸ்தீனிய பிரதிநிதிகளும் முன்னாள் யூதரான ஆங்கில இலக்கியப் பேராசிரியர் எட்வர்ட் பிளிஸ் ரீட்டும், பாலஸ்தீனியர்களைப் பற்றிய எதிர்மறையான பிரச்சாரத்தை மறுத்து, உண்மையான களமட்ட நிலைமையை முன்வைத்தனர். பாலஸ்தீனத்தில் இருந்த ரீட், கிங்-கிரேன் ஆணைக்குழு அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டமை தொடர்பில் பாலஸ்தீனியர்களின் எண்ணங்களை குறிப்பிட்டார். அவர்களின் முயற்சிகள் சியோனிச சார்பு உணர்வை சமாளிக்க போதுமானதாக இருக்கவில்லை, ஆனால் "யூத மக்களுக்கான ஓர் தேசிய இல்லத்தை பாலஸ்தீனத்தில் நிறுவுவதற்கு ஆதரவானதாக" தீர்மானத்தை மாற்ற முடிந்தது.

எண்ணெய் மற்றும் கொள்கை

கிங்-கிரேன் ஆணைக்குழுவும் (ஆச்சரியமற்ற வகையில்) "முழு சிரியாவிற்கும் ஒரே ஆணையை மேற்கொள்ளுமாறு அமெரிக்காவிடம் கேட்கப்பட வேண்டும்" என்று பரிந்துரைத்தது. ஆணையாளர்கள் நேர்மையானவர்களாகவும் அவர்கள் தீர்மானங்களை எடுப்பதில் தார்மீகக் கண்ணோட்டத்தை எடுத்ததாகவும் தெரிகிறது, ஆனால் புவிசார் அரசியல் பரிசீலனைகள் அவர்களின் மனசாட்சியின் மீது தடையாக இருக்கவில்லையா என்று ஆச்சரியப்படுத்துகின்றது.

1919 ஆம் ஆண்டில், நியூயோர்க் ஸ்டாண்டர்ட் ஆயில் (சோகோனி, பின்னர் மொபில்) மற்றும் நியூ ஜெர்சி ஸ்டாண்டர்ட் ஆயில் (எஸ்ஸோ, பின்னர் எக்ஸான்) ஆகிய நிறுவனங்கள் "மெசப்பதேமியா-பாலஸ்தீனம்" பகுதியில் பெட்ரோலிய சலுகைகளுக்கு உரிமை கோர முயன்றன, ஆனால் பிரிட்டன், மத்திய கிழக்கில் முக்கிய சக்தியாக இருந்ததுடன், இரண்டாம் உலகப் போரின் இறுதி வரை அவர்களைத் தடுத்தது. சோகோனி, எஸ்ஸோ, கல்வ் ஆயில் மற்றும் கலிபோர்னியா ஸ்டாண்டர்ட் ஆயில் (சோகல்) ஆகிய நிறுவனங்கள் ஈராக், குவைத் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் களங்களை சுரண்ட ஆரம்பித்தமையால், 1928 வரை அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் மத்திய கிழக்கில் ஊடுருவத் தொடங்கவில்லை.

பல்வேறு அரபு நாடுகளின் ஆட்சியாளர்களின் நல்லெண்ணத்தில் தங்கியிருந்த இந்த பெட்ரோலிய நலன்கள், இப்பகுதிக்கான வெளியுறவுத்துறையின் நிகழ்ச்சி நிரலை வகுத்தன. எனவே, யூத தாயகம் அமைப்பதற்கு எதிராக வெளியுறவுத் திணைக்களம் ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. இந்த நிலைப்பாடு பாலஸ்தீனத்தில் பிரிட்டிஷ் ஆணை முடியும் வரை காணப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டன், மிகவும் பலவீனமடைந்து, போர்க் கடன்களின் சுமையால், வெளிநாட்டு இராணுவப் பிரசன்னத்தைத் தக்கவைக்க முடியாமல், மத்திய கிழக்கில் தனது "பொறுப்புகளை" அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஆரம்பித்தது.

1939 காலப்பகுதியில், பாலஸ்தீனிய புரட்சியைத் தொடர்ந்து, பிரித்தானியர்கள் பாலஸ்தீனியர்களின் நியாயமான கரிசனங்களை ஆராயத் தொடங்கியதுடன், யூத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர். அதிகரித்த நாஜி பாகுபாடு மற்றும் வன்முறையை எதிர்கொண்டாலும், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட குடியேற்றச் சட்டங்களால் விலக்கப்பட்ட யூத அகதிகள் பாலஸ்தீனத்திற்குள் வெள்ளமாக புகுந்ததுடன், 1946 ஆம் ஆண்டில் யூத குடித்தொகையை 500,000 ஆக உயர்த்தியது.

இர்குன் த்ஸ்வாய் லியூமி (Etzel) மற்றும் லெஹுமெய் ஹெருட் யிஸ்ரேல் (Lehi) போன்ற சியோனிச போராளிக் குழுக்கள் பாலஸ்தீனியர்களுக்கும் பிரித்தானியர்களுக்கும் எதிராக பயங்கரவாத பிரச்சாரங்களை  ஆரம்பித்ததுடன், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பெரும்பான்மையான ஹகனா பிரிவினர் இணைந்தனர். பயங்கரவாதிகள் அமெரிக்கப் போர் உபரிப் பொருட்களைக் கொள்வனவு செய்வதால் (அமெரிக்க நட்பு நாடுகளுக்கு எதிராக இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும்), பிரித்தானியர்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கும், பிராந்தியத்தைக் கைவிடுவதற்கு அவர்களை உந்துவதற்கும் இயலுமாகவிருந்தது.

இது பிரிட்டிஷ் மூலோபாய நலன்களுக்கு இன்றியமையாத அரபு நாடுகளின் மக்களுடன் மோதலை ஏற்படுத்தாது என்பதால், ஒன்றிணைந்த ஒரே பாலஸ்தீனிய-யூத அரசை நிறுவுவதற்கு பிரித்தானியர்கள் விரும்பினர். அவர்கள் அரபு-யூத சகவாழ்வில் செல்வாக்கு செலுத்தும் நம்பிக்கையில், பாலஸ்தீனத்தை மேற்பார்வையிடுவதற்கு அமெரிக்க நிதி மற்றும் இராணுவ ஆதரவு அவசியம் என்று நம்பினர்.

எவ்வாறாயினும், யூத அகதிகள் பிரச்சினையை ஆராய்ந்த அமெரிக்க வழக்கறிஞர் ஏர்ல் G. ஹாரிசனின் பரிந்துரைகளை பின்பற்றி அமெரிக்க அரசாங்கம், மேலும் 100,000 நாஜி இனப்படுகொலையில் தப்பிப் பிழைத்த யூதர்களை பாலஸ்தீனத்திற்குள் அனுமதிக்குமாறு பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தது. 

இந்த அகதிகளில் குறைந்தபட்சம் ஒரு பகுதியையாவது எடுத்துக் கொள்ளுமாறு அமெரிக்காவை வற்புறுத்த பிரிட்டிஷ் முயற்சித்தாலும் ஆனால் பலனளிக்கவில்லை. யூத தாயகத்தை நிறுவுவதற்கு நாஜி இனப்படுகொலையை பேரம் பேசும் பொருளாகப் பயன்படுத்திய சியோனிஸ்டுகள், அமெரிக்காவில் அவர்களை மீள்குடியேற்றுவதை விட அவர்களின் இடமாற்றத்தை தாமதப்படுத்த விரும்பினர். போருக்கு முன்னர் சியோனிசத்தை எதிர்த்த அமெரிக்காவின் யூதர்கள் தொடர்பான அபிப்பிராயம், நாஜி இனப்படுகொலை காரணமாக கடினமாகி, பாலஸ்தீனத்தில் யூத தாயகத்திற்கு மிகவும் இணக்கமானது.

சுயாட்சி அல்லது பிரிவினை

பாலஸ்தீனக் கொள்கைக்காக அமெரிக்காவுடன் பகிரப்பட்ட பொறுப்பை நிலைநாட்டும் முயற்சியில் மற்றும் பாலஸ்தீனத்திற்குள் யூத குடியேற்றவாசிகளின் அதிகரித்த ஊடுருவலுக்கு அரேபிய எதிர்ப்பை எதிர்பார்த்து, பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு கூட்டு விசாரணையை முன்மொழிந்தது. இந்த விசாரணைக்கு தலைமை தாங்குவதற்கான அமெரிக்க தீர்மானம், நிலைமையை ஒரு பரந்த யூத அகதிகள் பிரச்சினையாக வடிவமைத்து அரசியல் சியோனிசத்தின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான ஒரு மூலோபாய நடவடிக்கையாகக் கருதப்படலாம்.

பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஆங்கில-அமெரிக்க விசாரணைக் குழு 1946 ஜனவரியில் வாஷிங்டனில் கூடியது. 

கட்டாய பாலஸ்தீனத்தின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை ஆராய்வதுடன், பிராந்தியத்தில் வசிப்பவர்களின் நல்வாழ்வை மதிப்பீடு செய்தல், அரேபிய மற்றும் யூத சமூகங்களின் பிரதிநிதிகளுடன் ஈடுபடுதல் மற்றும் கையில் உள்ள சவால்களுக்கான இடைக்கால நடவடிக்கைகள் மற்றும் நீடித்த தீர்வுகள் ஆகிய இரண்டிற்கும் முக்கியமான பரிந்துரைகளை வழங்குதல் ஆகியவற்றிற்கு அதன் பொறுப்புகள் நீட்டிக்கப்பட்டன.

ஆங்கில-அமெரிக்க ஆணைக்குழு 100,000 யூத அகதிகளை உடனடியாக பாலஸ்தீனத்திற்குள் அனுமதிக்க பரிந்துரைத்ததுடன், இதனை அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் வரவேற்றார். எவ்வாறாயினும், அவர் யூதர்களோ அல்லது பாலஸ்தீனியர்களோ ஆதிக்கம் செலுத்தாத, ஆனால் அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு சுதந்திர அரசை பாலஸ்தீனத்தில் நிறுவுவது உள்ளிட்ட பிற பரிந்துரைகளை வரவேற்கவில்லை.

பிரிட்டிஷ் துணைப் பிரதம மந்திரி ஹெர்பர்ட் மோரிசன் மற்றும் அமெரிக்க இராஜதந்திரி ஹென்றி எஃப் கிரேடி ஆகியோர் அடங்கிய புதிய கூட்டுக் குழு, பரிந்துரைகள் எவ்வாறு செயற்படுத்தப்பட வேண்டும் என்பதை ஆய்வு செய்தது. ஜூலை மாதம், அவர்கள் மாகாண சுயாட்சி திட்டம் என்று அழைக்கப்படுகின்ற மோரிசன்-கிரேடி திட்டத்தை அறிவித்ததுடன், இது ஐ.நா-வால் நியமிக்கப்பட்ட அறங்காவலரின் கீழான ஒரு சமஷ்டி பாலஸ்தீனத்தை உருவாக்குவதற்கும், சுயாட்சியான யூத மற்றும் பாலஸ்தீனிய பிராந்தியங்கள் மற்றும் ஜெருசலேம், பெத்லஹேம் மற்றும் நெகேவ் ஆகியவற்றுடன் அமைந்திருந்தது 

பாலஸ்தீனியர்கள் இந்த திட்டத்தை நிராகரித்தனர், அதற்கு பதிலாக யூத சிறுபான்மையினரின் உரிமைகள் உறுதி செய்யப்படும் ஓர் ஒற்றை பாலஸ்தீனம் உருவாக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்தனர். சியோனிஸ்டுகள் அதை முற்றிலுமாக நிராகரித்து, பாலஸ்தீனத்தைப் பிரிவிடுவதற்கான புதிய திட்டத்தை விரும்பினர்.

ஜனாதிபதி ட்ரூமன் ஆரம்பத்தில் வெளியுறவுத் திணைக்களம் ஆதரவளித்த இந்த திட்டத்தை வரவேற்றார், ஆனால் சியோனிச உரையாடல் அதற்கு எதிராக ஒரு ஆவேசமான பிரச்சாரத்தை மேற்கொண்டது. ட்ரூமன் மோரிசன்-கிரேடி தீர்வைத் தான் விரும்புவதாக தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டாலும், அவர் சியோனிச உரையாடலை எதிர்த்துப் போராடுவதை வெளியுறவுத் திணைக்களத்திற்கு விட்டுட்டு பாலஸ்தீனப் பிரச்சினையிலிருந்து பின்வாங்கினார்.

அவரது நிலைப்பாட்டை பாதித்த ஒரு பிரச்சினை வளர்ந்து வரும் பனிப்போரின் மத்தியில், அமெரிக்கா ஐரோப்பிய பாதுகாப்பில் கவனம் செலுத்தியதுடன், பாலஸ்தீனத்திற்காக பணத்தை செலவிடலாம் ஆனால் படையினரை அல்ல என்ற புவிசார் அரசியலில் இருந்து உருவாகியிருந்தது. மோரிசன்-கிரேடி தீர்வுக்கு பாலஸ்தீனியர்களோ அல்லது சியோனிஸ்டுகளோ உடன்பட மாட்டார்கள் என்பதால், படையினரே அதனைச் செயற்படுத்த வேண்டும், குறிப்பாக சியோனிச பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும்.

பிரிவிடல்

இப்போது பிரிட்டன் சியோனிசப் படைகளுடனான மோதலில் இருந்து படையினரை அகற்றுவதற்கு வசதியாக பாலஸ்தீனப் பிரச்சினையை ஐ.நா.வுக்கு இடம்மாற்றுவதற்கு முயன்றது. அமெரிக்க அரசாங்கம் ஓர் பிரிவிடல் திட்டத்தை ஆதரித்ததுடன், 181 தீர்மானத்தை நிறைவேற்றுமாறு ஐ.நா உறுப்பினர்களை வற்புறுத்தியது, இது குடித்தொகையில் 31%ஆக இருந்த யூதர்களுக்கு  55% பாலஸ்தீனத்தை வழங்கியது.

மே 14, 1948 இல், ட்ரூமன் அதன் சுதந்திரப் பிரகடனத்திற்கு சில நிமிடங்களுக்குப் பிறகு புதிய இஸ்ரேல் அரசை அங்கீகரித்தார். சியோனிச அரசு பாலஸ்தீனத்தின் மேலும் 22% பகுதியை இணைத்துக்கொண்டு, 750,000 பாலஸ்தீனியர்களை இனச்சுத்திகரிப்பு செய்த போதிலும், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் யூத நிறவெறி அரசை தொடர்ந்து ஆதரித்தன.

அந்த நேரத்தில், இஸ்ரேலின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) சுமார் USD 323 மில்லியனாகும் (இன்று 4.0 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமனானது). புதிய அரசாங்கம் பாலஸ்தீனியப் பகுதிகளைக் கைப்பற்றியதன் மூலமும், பாலஸ்தீனியச் சொத்துக்களை அபகரித்ததன் மூலமும் கணிசமான செல்வத்தைப் பெற்றது. 2008 இல், McMaster பல்கலைக்கழகத்தின் அதிஃப் கபுர்சி, பாலஸ்தீனியர்களிடம் இஸ்ரேல் கொள்ளையடித்த்த 1948 மதிப்பில் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது 2008 மதிப்பில் கிட்டத்தட்ட 300 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிட்டார்.

ஆயினும்கூட, அமெரிக்கா இஸ்ரேலுக்கு 135 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இன்று 1.684 பில்லியன் டொலர்களுக்கு சமனானது) மூன்று ஆண்டுகளுக்கு உதவியாக வழங்குவதற்கு உத்தரவாதமளித்தது. இது வாஷிங்டனில் இருந்து டெல் அவிவ் வரை பாய்ந்த பண உதவி வெள்ளத்தில் முதல் துளிகள் என்பதை நிரூபித்தது. அடுத்த 72 ஆண்டுகளில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு 318 பில்லியன் அமெரிக்க டொலர்களை (பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்டது) உதவியாக வழங்கியது. 2023 ஆம் ஆண்டளவில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை இராணுவ உதவியாக வழங்குகிறது.

இஸ்ரேலின் உருவாக்கத்திற்கு அமெரிக்க ஆதரவு பின்ணனி இன்றியமையாததாக நிரூபிக்கப்பட்டது. உடைக்கப்படாத அமெரிக்க பொருளாதார, இராஜதந்திர மற்றும் இராணுவ ஆதரவு அதன் இருப்புக்கும், அதன் இராணுவ சாகசங்கள் மற்றும் பாலஸ்தீனத்தில் எஞ்சியிருக்கும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு, அத்துடன் சிரிய மற்றும் லெபனான் பிரதேசங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பிற்கும் உத்தரவாதம் அளித்துள்ளது.

இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் என்பதுடன் நிறுவனத்தின் பிரதிபலிப்புக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

https://www.virakesari.lk/article/173761

Checked
Fri, 03/29/2024 - 04:26
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed