எங்கள் மண்

09/08/2018இல் மறைந்தார் இசையமைப்பாளர் யாழ். றமணன்

2 days 7 hours ago
தமிழீழத்தின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான யாழ். றமணன் என எல்லோராலும் அழைக்கப்படும்  இராஜேந்திரன் இராஜேஸ்வரன் அவர்களின் மறைவு எம்மை மிளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. 
 
ராஜன் என்கின்ற பெயருடன் எல்லோராலும் நன்கறியபப்பட்ட இவர்,  இசைக்குழுவில் கிற்றாருடன் தன் திறமைகளை வெளிப்படுத்தியவர்.  பட்டிதொட்டியெங்கும் இசைக்குழுவாகப் பயணித்து, பாடலிசை இசைத்துவந்த திரு. றமணன் அவர்கள் “ ஓ…மரணித்த வீரனே…” என்கின்ற எழுச்சிமிகு புரட்சிப் பாடலுடன் மிகமிகப்பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து தாயகமக்களின் விடுதலைப்பயணத்தில் பெரும்பங்காற்றும் வாய்ப்பு றமணனை வந்தடைந்தது. 1991 நிதர்சனம் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உதயம் என்கின்ற இசைநாடாவின் இசையமைப்பாளராக இவர் பணியாற்றினார். 
 
No photo description available.
 
 
தாயகத்தில் தயாரிக்கப்பட்ட பிஞ்சுமனம் திரைப்படத்தில் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் எண்ணதத்தில் உருவான பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது என்ற உருக்கமான பாடலுக்கும், திசைகள் வெளிக்கும் என்கின்ற பெண்களின் பிரச்சினைகள் குறித்துப்பேசும் படத்துக்கான இசையினையும்  ரமணன் அவர்களே வழங்கியிருந்தார்.  அத்துடன் போராட்டகாலப்பகுதியில் தாயகத்தில் மகளிர்  அணியினரின் இசை உருவாக்கங்களிலும் இவருக்கு பெரும்பங்குண்டு.  
 
ஈழத்தின் மூத்த கவிஞர் முருகையன் அவர்கள் யாத்த மாவீரர் யாரோ என்றால் என்கின்ற பாடல், ஆதிலட்சுமி சிவகுமாரின் புதுயுகம் ஒன்று படைத்திடவேண்டும் புறப்பட்டு வா தோழி என்கின்ற பாடல், கவிஞர் வேலணையூர் சுரேசின் முல்லைமண் எங்களின் வசமாச்சு என்கின்ற பாடல் உட்பட ஏராளமான பாடல்கள் இவரின் இசையில் மலர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.  
தன்னுடைய சிறப்புமிக்க இசைத்திறனால் தமிழீழ தேசியத்தலைவரின் நன்மதிப்பையும் பாராட்டுகளையும் இவர் பெற்றிருந்தவர். இறுதிவரை விடுதலைதாகத்தை தன் நெஞ்சிற்குள் சுமந்திருந்தவர். இத்தகைய சிறப்புகளும், நுண்திறனும், பற்றும் கொண்டுவாழ்ந்த றமணன் அவர்களின் இழப்பு என்றும் ஈடுசெய்ய முடியாததாகும். இவரின் இழப்பினால் துயரடைந்து கலங்கும் இவரின் குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள்,  அனைவருக்கும் எமது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதுடன் நாமும் இவருக்கு எமது இறுதி வணக்கத்தை கொள்கின்றோம். 

https://www.pathivu.com/2018/08/ramanan_14.html

போராட்டப் பாதையில் புகுந்த புலிகளும், விழுந்த துரையப்பாவும் | நெடுந்தொடர்

2 days 8 hours ago

தொடரும் இக்கட்டுரைகள் சம்பந்தப்பட்டவர்களின் நேரடி வாக்குமூலங்களினால் படைக்கப்பட்டதுடன்,  2002ல்  தலைவரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டு வெளியானது.

 

முதன் முதலில் வெளியான ஆண்டு: 2012இற்கு முன்னரே.
மூல வலைத்தளம்: அறியில்லை
மூல எழுத்தாளர்: வர்ணகுலத்தான்

 

1975 சித்திரைமாத முதல்வாரத்தில் தான் முன்னெப்பொழுதும் பழகி இருக்காத நாதன் தன்னைத்தேடி தங்களுடைய தெணியம்பை வீட்டிற்கு வந்ததும் தனதுகையில் வைத்திருந்த சிறுகடதாசித்துண்டில் இருந்தபெயரை கவனமாக வாசித்து தன்னை அழைத்ததும் கலாபதிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இவ்வாறு பெயரை எழுதிவந்து வாசிப்பதென்பது வல்வெட்டித்துறையில் என்றுமே வழக்கமாக இருந்ததில்லை. காரணம் அந்தஊரில் எல்லோரும் எல்லோருக்கும் தெரிந்தவர்கள் என்பதனைவிட எல்லோரும் எல்லோருக்கும் உறவினர்கள் என்பதே சரியானதாகும்.

இந்நிலையில் அயற்கிராமத்தைச்சேர்ந்த நாதன் பெயரை எழுதிக்கொண்டு வந்து தன்னை அழைத்தது கலாபதி எதிர்பாராத ஒன்றே!  நல்லவேளை நாதன் பெயரை எழுதிக்கொண்டு  வரும்வேளையில் கலாபதி வீட்டுவாசலிலேயே நின்றிருந்தமையால் எவ்வித ஆள்மாறாட்டமுமின்றி இருவரும் சந்தித்துக்கொண்டனர்.

நாதன் கூறியசெய்தியோ மீண்டும் ஆச்சரியத்தை அல்ல பேராச்சரியத்தையே கலாபதிக்கு கொடுத்தது. காரணம் தங்களைக் கையுடன் கூட்டிவரச் சொன்ன நபர் ‘பிரபாகரன்’ என்பதைக் கேட்டால் யாருக்குத்தான் ஆச்சரியமாக அமையாதுவிடும். ஆம் இன்றுமட்டுமல்ல அன்றும்கூட அவரைத் தெரியாதவர்களிற்கு சாதாரண இளைஞராக காட்சியளித்த தேசியத்தலைவருடைய செயல்கள் அவரைத் தெரிந்த ஊரவர்களிற்கும் உறவினர்களிற்கும் அசாதரணமாகவும் வியப்பிற்கு உரியதாகவும் அமைந்திருந்தன.

 1970 – 1972 காலப்பகுதிகளில் சிங்களஇனவெறி அரசிற்கெதிராக    கொடும்பாவி பஸ்எரிப்பு குண்டுவீச்சு எனப்பல தீவிரவாதச்சம்பவங்களில் ஈடுபட்டு இறுதியாக வல்வெட்டித்துறை நெற்கொழுவில் நடந்;த கைக்குண்டுத் தயாரிப்பு விபத்தில் முடியவே படுகாயமடைந்தநிலையில் பொலிசாரின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பித்து இந்தியாவிற்குச்சென்ற சின்னச்சோதி நடேசுதாசன் மற்றும் குட்டிமணி தங்கத்துரை என்னும் தன்னைவிட வயதில் கூடிய போராளிகளுடன் இணைந்து செயற்பட்டவர் பிரபாகரன் என்பதும் அவ்வாறு மூத்தோருடன் இணைந்து செயல்ப்பட்டதால்  ‘தம்பி’ என்ற அழைபெயரால் வல்வெட்டித்துறை சமூகத்தில் அன்புடன்  இவர் அழைக்கப்பட்டதும் கலாபதிக்கு தெரிந்ததே! இதனைவிட காயமடைந்தவர்கள் தப்பிச்செல்வதற்கு கலாபதியுடைய உறவினரான சித்திரம் என்பவரே படகினை ஏற்பாடுசெய்ததும் கலாபதியுடைய மூத்தசகோதரன் சிறிபதியும் இந்த ஏற்பாட்டு முயற்சியில் ஈடுபட்டதும் கலாபதிக்கு நன்குதெரிந்தே இருந்தது..1972அக்டோபர் 05இல் நடந்த இக்குண்டு வெடிப்பின் பின் கடந்த இரண்டு வருடங்க ளிற்கு மேலாக இக்குழுவில் இருந்த குட்டிமணியைத்தவிர வேறுயாரையும் ஊர்ப்பக்கங்களில் அதிகமாக காணமுடிவதில்லை.

இதன்தொடராக சில காலங் களின் முன்பு டைனமெற் என்ற வெடிபொருளை வெடிக்கச்செய்யும் கெற்பு எனும் பொருளினை கடல்மார்க்கமாக கொண்டு வரும்பொழுது அவை எதிர்பாராமல் இலங்கை கடற்படையினரிடம் சிக்கியது.  இதனைத் தொடர்ந்த விசாரணைகளின் பின்பு இந்தியஇலங்கைப் பொலிசாரினால் திருச்சியில் கைதுசெய்யப்பட்ட குட்டிமணி கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டு தென்னிலங்கையின் ஏதே ஒரு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதையும் கலாபதி அறிந்தேஇருந்தார்.

இந்நிலையில் இத்தீவிரவாதக் குழுவைச்சேர்ந்த பிரபாகரன் தன்னையும் தனதுநண்பனையும் அழைத்துவரச் சொன்னதாக அறிந்தால் யாருக்குத்தான் ஆச்சரியமாக இருக்காது! எனினும் பிரபாகரன் அழைத்து வரச்சொன்னதாக  நாதன் சொன்னதும் ஏன்?  என விளக்கம் கேட்காமலேயே நாதன் எழுதிக்கொண்டு வந்த அடுத்த பெயருக்குரிய நண்பனின் வீட்டிற்குச்சென்று அவனையும் அழைத்தனர். குறிக்கப்படும் இந்நண்பன் சிலகாலத்திற்கு முன்பு மேற்குறிப்பிட்ட போராளிகளால் இந்தியாவின் வேதாரணியத்தில் அமைக்கப்பட்டிருந்த தளத்திற்கு சென்று ‘தம்பி’பிரபாகரன் உட்பட அனைவரையும் சந்தித்து திரும்பியிருந்தார். இப்போது மூவரும் கதைத்துக்கொண்டு பிரபாகரனை சந்திக்கச் சென்றனர். பிரபாகரனும் கலாபதியும் 1968இல் பொன்னம்பலம் மாஸ்டர் வீட்டில் ஒன்றாகப்படிக்கும் காலத்திலேயே அறிமுகமானவர்கள் என்பதால் கலாபதிக்கு பிரபாகரன் புதியவர் அல்ல என்;பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நெற்கொழு வைரவர்கோவில்வரை இவர்கள் நடந்துவரும் பொழுது அங்கிருந்த வாசிகசாலையில் தமக்காக பிரபாகரன் காத்துநிற்பதைக் கண்டனர். இவர்களைக்கண்டதும் வெளியேவந்த பிரபாகரனும் இவர்களுடன் இணைந்து கொண்டார். நண்பகலான அவ்வேளையில் தனது கடமை முடிந்தது என நாதன் இவர்களைவிட்டு பிரிந்துசென்றார். அருகிலிருந்த மைதானம்வரை தொடர்ந்து நடந்துவந்த மூவரும் அங்கிருந்த புல்வெளியில் அமர்ந்து கொண்டனர். நடந்துவந்த களைப்புத்தீர இவர்கள் தம்மை ஆசுவாசப்படுத்திக்  கொள்ளவும் பிரபாகரன் தான் இவர்களை அழைத்தகாரணத்தை கூறத் தொடங்கினார்.

 இரண்டு வருடங்கள் தமிழ்நாட்டில் பெரியசோதி தங்கத்துரை சின்னச்சோதி நடேசுதாசன் எனும் முன்னோடிகளுடன  இருந்துவிட்டு தான் இப்பொழுது தனியாகவே ஊருக்கு வந்துள்ளதாகவும் அவர்கள் காலம்கனியட்டும் என காத்திருப்பது போல் தோன்றுவதால் இவ்வாறான முடிவிற்கு தான் வந்துள்ளதையும் நியாயப்படுத்திய அவர் ஓய்வின்றி எதையாவது செய்ய வேண்டுமென்ற தனது ஆவலையும் வெளிப்படுத்தினார். 1974ஆம் ஆண்டில் கலாபதியும் அவர் குழுவினரும் மேற்கொண்ட தீவிரவாத முயற்சிகளைக்கேள்விப்பட்டே அவர்களினைத்தான் சந்திக்கவிரும்பிய காரணம் என்பதையும் விளக்கமாக கூறினார். தொடர்ந்து இனத்தின் அடிப்படையில் தேவையின்றி அப்பாவிமக்களை அநாவசியமாக தாக்கும் அரசபடைகளிற்கு எதிராக எதையாவது செய்யவேண்டுமெனவும் அதற்காக அவர்களை தன்னுடன் இணைந்து பணியாற்றவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

1967இல் வல்வெட்டித்துறை சந்தியில் அரசபடைகள் பொதுமக்களிற்கு எதிராக தாக்குதலைநடத்தியது. அத்தாக்குதலில் அப்பாவியான சிவஞானசுந்தரம் கொல்லப்பட்டார். இதுபோன்ற மிலேச்சத்தனமான தேவையற்ற தாக்குதல்களை கண்டும் கேள்விப்பட்டும் சிறுவனானபிரபாகரன் வேதனை யுற்றார். இதனால் தாக்கப்படும் மக்களிற்காக வேதனைப்பட்ட இவர் சிங்களப்படைகளின் மீது வெறுப்புக்கொண்டார்.

1968இல் தனது பதின்நான்கு வயதில் இருந்தே தீவிரவாத போராட்ட உணர்வுடன் செயற்பட்டவர் பிரபாகரன். சிறுவயதிலிருந்தே மாயாவியின் சாகஸக்கதைகளைப் படிப்பதிலும் அவற்றைசேகரிப்பதிலும் பெருவிருப்பம் கொண்டிருந்தார். அதற்கேற்றாப்போல் அக்காலத்தில் கெற்றப்போல் சகிதம் எந்நேரமும் உலாவரும் இவர் தனது பாடசாலைத்தோழர்களுடன் ஒருகுழுவை அமைத்து அதற்கு ‘காட்டுஎல்லைப்படை’ என பெயரும் சூட்டியிருந்தார். (தகவல் சுரேஸ்குமார்;) அதேநேரத்தில் தனதுவீட்டிற்கு அருகாமையில்  விளாம்பத்தை காணியுடன் அமைந்திருந்த  இடிந்து சிதிலமான ஓதுவார் வீட்டினுள் தன்னைவிட மூத்தவர்களான  நடேசுதாசன் ஜெயபால் பாலி மோகன் என்பவர்களுடன் இணைந்து பெற்றோல்க்குண்டுகள் மற்றும் கைக்குண்டுகள் தயாரிப்பதில் ஈடுபட்டார்.

(காலநதிக்கரையில் மீளநினைக்கின்றேன். 1994 ஏப்ரல் மேமாத வெளிச்சம் இதழ்)

1969களில் வேணுகோபால்ஆசிரியர் ஊட்டிய தமிழரின்சுயாட்சிக் கொள்கையினால் உந்தப்பட்டு அவருடன்திரிந்தார். அதேவேளை தனது பாடசாலைத் தோழர்களான சுரேஸ்குமார் குமாரதேவன் என்பவர்களுடன் இணைந்து நெற்கொழு கோழிப் பண்ணையில் சின்னச்சோதியிடம் உடற்பயிற்சி மற்றும்  சைனாபுட்டிங் என அழைக்கப்பட்ட சீன தற்பாதுகாப்பு முறைகளையும் பயின்றுகெண்டார்.

1970டிசம்பரில் கபொத சாதாரணபரீட்சைக்கு முதன்முதலாக தேற்றியஅவர்; பரீட்சைக்கு முன்பாகவே தமிழ் மாணவர் பேரவையுடன் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார்.

1971ஜனவரிமாதத்தில் வல்வெட்டித்துறை வேம்படியில் அன்றைய கல்வி அமைச்சர் பதியுதீன் முகமட்டின் வருகையை எதிர்த்;து பதியுதீன் உடைய கொடும்பாவி கட்டியதுடன் போராட்டப்பாதையில் நேரடியாக களம் இறங்கினார். இவ்வேளையில் இனஉணர்வில் வல்வெட்டித்துறையில் ஒன்றிணைக்கப்பட்ட தமிழர்கூட்டணியின் செயற்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். மார்ச் மாத முதல்வாரத்தில் வல்வெட்டித்துறையில் நடந்த Nஆபெரேரா வருகைக்கெதிரான புறக்கணிப்புப் போரில் முன்னின்றார்.

1972ஆரம்பம்முதலே மாணவர்பேரவை மற்றும் தமிழர்கூட்டணியின் போராட்டப் பாதையில் தனது தீவிரப்போக்கை வளர்த்துக்கொண்டதுடன் குடியரசு அரசியல்யாப்பிற்கு எதிராக தனது இளவயதுத்தோழர்களை இணைத்து 1972 மே 22 குடியரசுநாள் பகிஸ்கரிப்பு மற்றும்  தொண்டைமானாறு பஸ்எரிப்பு (1972 மே 22 இரவு) என்பவற்றை வெற்றிகரமாக செய்துமுடித்தார். அத்துடன் மாணவர் பேரவையினால் நடத்தப்பெற்ற துரையப்பாவின் காணிவேல் குண்டு வெடிப்பை திசைவீரசிங்கத்துடன் இணைந்து (1972செப்டெம்பர்23) நடத்தினார். இக்காலத்தில் குலம் உதயணன் நடேஸ் போன்றோருடன் வல்வெட்டித்துறையின் சிலம்ப வல்லுனரான பிரபுவிடம் தமிழரின் உடற்பயிற்சிக்கலையான தெண்டா சிலம்பம் என்பவற்றையும் கற்றுக்கொண்டிருந்தார்.

இந்நிலையிலேயே இவர் போராட்ட முன்னோடிகளுடன் இணைந்த நெற்கொழு குண்டுவிபத்து (1972அக்டோபர்05) நடைபெற்றது.  இக்காலத்திலேயே  வல்வெட்டித்துறைக்கு  வெளியேயான தனது தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொண்டார்.  செட்டி  ரமேஸ் சிவராசா மற்றும் கண்ணாடி எனும் பத்மநாதன் என்பவர்களுடன் அறிமுகமாகிய இவர்  அவர்களுடன் இணைந்து தாக்குதல்  முன்னேற்பாடாக கல்வியங்காட்டில் வாழ்ந்த சிங்களடொக்டர் ஒருவரின் காரினைக் கடத்தியதடன் (1972டிசம்பர்24) பொலிசாரின் வேட்டையில் இருந்து தப்புவதற்காக அக்காரினை எரித்தது  உட்பட  வேறுபல நிதித்திரட்டல் செயற்பாடுகளிலும் பங்குபற்றியிருந்தார்.

1973ஜனவரி14இல் சாவகச்சேரியில் சத்தியசீலனை சந்திப்பதற்காக மோகனுடன் சென்ற இடத்தில் சிவகுமாரனுடன் அறிமுகமாகிக்கொண்டார். அடுத்தநாள் வேலணைக்கு வந்த குமாரசூரியருக்கு கறுப்புக்கொடி காட்ட முடியாது தோல்வியுடன் ஊர்திரும்பிய வேளையில் தான்கலந்துகொள்ளும் இறுதியான அகிம்சைப்போர் இதுவென தன்னுடன்வந்த நண்பனான இந்திரலிங்கத்திற்கு உறுதியாகக்கூறினார். அன்று நடந்த மண்கும்பான் குண்டுத்தாக்குதல் முயற்சி யினைத் தொடர்ந்து மாணவர் பேரவையினர் மீதான காவல்துறையினரின் தீவிரவேட்டையில் சிறிசபாரத்தினத்தினால் காட்டிக்கொடுக்கப்பட்ட நிலையில் 23மார்ச் இரவில் பஸ்தியாம்பிள்ளையிடமிருந்து சமயோசிதமாக தப்பிக்கொண்டார். 42நாட்களின் பின் மோகனுடன் வேதாரணியம் சென்று தனது முன்னோடிகளுடன் இணைந்து கொண்டார்.

இவர்களுடன் ஏறத்தாள இரண்டு வருடங்கள் வேதாரணியம் திருச்சி, சென்னை என்னும் இடங்களில் கழித்திருந்தார்.இவ்வாறு போராட்ட முன்னோடிகள் மற்றும் மாணவர் பேரவை என்பவற்றுடன் இணைந்து பெற்றுக்கொண்ட நடைமுறை அனுபவங்களின் ஊடாக இடையின்றி இயங்கக்கூடிய ஒருகுழுவை உருவாக்கி ஈழத்தமிழர்களின் உரிமைகளிற்கான ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடிவேடுத்தார். இந்த நோக்கத்தில் 1975மார்ச்மாதத்தில் நடைபெறும் கச்சதீவு உற்சவத்தினூடாக இலங்கை திரும்பியிருந்தார்.

 

 

"விண்ணில் வாழும் வீரன் இவன்!"

2 days 19 hours ago
"விண்ணில் வாழும் வீரன் இவன்!"
 
 
"மொழியில் ஒரு பற்றுக் கொண்டு
விழியில் ஒரு ஏக்கம் கவ்வ
வழியில் வந்த தடை உடைத்து
சுழியில் மூழ்கிய வீரன் இவன்!"
 
"ஒன்று இரண்டு ஆயிரம் கொலை
இன்று நேற்று கண்டு துடித்து
வென்று ஒரு முடிவு காண
சென்று மாண்ட வீரன் இவன்!"
 
"தாயின் தங்கையின் கற்பு காக்க
சேயின் சேர்ந்தோரின் நலம் நாடி
நாயின் வாலை நிமித்த எண்ணி
பேயில் சிக்கிய வீரன் இவன்!"
 
"உண்மை வெல்ல களத்தில் போராடி
கண்ணை இழந்து கையை முறித்து
மண்ணை மீட்க மரணம் தழுவி
விண்ணில் வாழும் வீரன் இவன்!"
 
 
கந்தையா தில்லைவிநாயகலிங்கம், 
அத்தியடி, யாழ்ப்பாணம்
No photo description available. 
 

முள்ளிவாய்க்காலில் வீரச்சாவடைந்த மேதகு வே. பிரபாகரன் அவர்கட்கு வீரவணக்கம்

3 days 6 hours ago

அன்பார்ந்த தமிழீழ மக்களே,

பல பத்தாண்டுகளாக சிங்களவரிடம் அடிவாங்கி ஓடிக்கொண்டிருந்த எம் தேசத்தை நிப்பாட்டி, திருப்பி அடிக்கக் கற்றுக்கொடுத்து, தமிழருக்கு சமமாக சிங்களவரையும் பேச்சுவார்த்தை மேசையில் அமர்த்தி எம்மினத்தையே தலை நிமிர்ந்து நடக்க வைத்த தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மே 18 அன்று முள்ளிவாய்க்காலின் நந்திக்கடல் பரப்பில் சிங்கள வன்வளைப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைப் போரிற்கு எதிரான இறுதி ஆயுதவழிப் போரின் ஒடுவில் சமரில் வீரச்சாவடைந்து ஆகுதியானார்.

அன்னாருக்கு தனியாட்களாக, ஆங்காங்கே சுடர்கள் ஏற்றப்பட்டிருப்பினும் பெருமளவு மக்கள் ஒன்று கூடி ஒருகாலும் சுடர் ஏற்றப்பட்டது நடைபெற்றதில்லை. எனினும், இம்முறை அவ்வாறான நிகழ்வொன்று நடைபெறவுள்ளது என்பதை அறியாதோருக்கு அறியத் தருகிறேன்.

அன்னாருக்கு கடந்த 15 ஆண்டுகளாக உரிய முறையில் வீரவணக்கம் செய்யப்படாத நிலையில் எதிர்வரும் மே 18ம் திகதி அன்று ஐரோப்பிய நேரம் பகல் 14 மணிக்கு டென்மார்க்கில் தலைவரின் தம்பியின் மகனால் உரிய முறையில் வீரவணக்கம்/ இறுதிச் செய்கை நடைபெறுவதாக கேள்விப்பட்டேன். அதற்கு நானும் ஒத்தாசை வழங்குகிறேன் என்பதோடு அதற்கு எனது முழு ஆதரவையும் நல்குகிறேன்.

இதற்கு எம்மக்களும் ஆதரவை வழங்கி தலைவரினதும் குடும்பத்தினரினதும் ஆன்மா சாந்தி அடைய வேண்டுங்கள் என்பதை கோரிக்கையாக வைக்கிறேன்.

நடைபெறுமிடம்:
paladspassagen,
ved analaeget 12C,
7100 Vejle,
Denmark

ஒருவேளை, எதிர்பாராத காரணங்களால், அது நிறுத்தப்பட்டாலும் யாழில் என்னால் அது சரியாக மே 18 அன்று மேற்கொள்ளப்படும் என்பதை பறைந்துகொள்கிறேன்.

நன்றி,

இங்ஙனம்,
நன்னிச் சோழன்.

"தமிழீழமே தமிழர் தாகம்"


 

"எங்கள் தலைவன் போல் இன்றைக்கும் நேற்றைக்கும் நாளைக்கும் எவனும் இல்லை!
எரிமலை மூச்சுக்கும் எழும்புயல் வீச்சுக்கும் ஏதடா எல்லை?"

 

 

மாவீரர் வீரவணக்க இலச்சினை.jpg

தென் தமிழீழத்தில் பல போராளி இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்

3 days 13 hours ago

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டு அம்பாறை மாவட்டத்தில் பஸ் எரிப்பு வங்கிக் கொள்ளை கைக்குண்டு வீச்சு என்று சில சம்பவங்கள் தனிக் குழுக்களாலும் சில தனிமனிதர்களாலும் நடத்தப்பட்டாலும்,

மட்டு அம்பாறை மண்ணில் நாகப்படை என்ற இயக்கம் மாலா இராமச்சந்திரனுக்கு கொடுத்த மரணதண்டனை சம்பவம் ஒன்றும் இருந்தாலும்,

ஈஸ்ரேன் குரூப் என்ற அமைப்பு மட்டக்களப்பு கச்சேரி அறையில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட வேட்டைத் துப்பாக்கிகளையும், மற்றும் பெருந்தெருக்கள் திணைக்களத்திலிருந்து எக்ஸ்ப்லொடெர் என்று அழைக்கப்படும்,  வெடிக்கவைக்கும் கருவியையும், அத்தோடு, மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தில்  விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் இருந்து வெடிகுண்டு தயாரிக்கக் கூடிய பொருட்களையும் கைப்பற்றியதே முதலாவது பாரிய தாக்குதல் சம்பவமாகப் பார்க்கப்படுகின்றது. 

அதனைத் தொடர்ந்து 41 தமிழ் அரசியல் கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து  திட்டம் தீட்டி தப்பியோடிய நிகழ்வும், 
 
அதன் பின்னர் புலிகளால் நிர்மலாவை விடுதலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சிறை உடைப்பும் அதிரடியானவை என்றாலும்,
 
அம்பாறை மாவட்டத்தில் உள்ள மத்திய முகாம் எனும் இடத்தில் அமைந்துள்ள  காவல் நிலையத்தை "தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை" என்ற அமைப்பு வெற்றிகரமாக தாக்கி அங்கிருந்து பல ஆயுதங்களை கைப்பற்றிய நிகழ்வே முதலாவது காவல் நிலைய தாக்குதல் சம்பவமாக மட்டு அம்பாறை வரலாறு பதிவு செய்து இருக்கின்றது.

இவைகளைப் போலவே கொடுவாமடு பகுதியில் ஈரோஸ் இயக்கம் STF  என்ற சிறப்பு அதிரடிப்படை மீது வெற்றிகரமாக நடத்திய கண்ணிவெடித் தாக்குதலே மிகப் பெரிய கரந்தடித் தாக்குலாகும். அதன் விபரம் பின் வருமாறு:

STF என்ற சிறப்பு அதிரடிப் படை பிரிவு என்பது  1983 ஆம் ஆண்டு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்ற இலங்கை காவல்துறையின் சிறப்புப் படையினரைக் கொண்டு ராணுவத் தாக்குதல்களின் அனைத்து அம்சங்களிலும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு இராணுவப் படையாக அல்லாமல் மிகவும் சிறப்பு வாய்ந்த பொலிஸ் பிரிவாக இலங்கை அரசால் உருவாக்கப்பட்டது. இந்த விசேட அதிரடிப்படையினர் முழுமையாக உருமறைப்புச் சீருடையில்  “கோல்ட் கொமாண்டோ” என்று அழைக்கப்பட்ட கோல்ட் ஆட்டோமேட்டிக் ரைபிள் (ஆற்௧5), யூசி மெஷின் கன், க்ளோக் பிஸ்டல் மற்றும் பிரவுனிங் ஹை-பவர் கைத்துப்பாக்கி அத்தோடு அல்டிமேக்ஸ் 100 எல்எம்ஜி, ஹெக்லர்&கோச் பிஎஸ்ஜி ஸ்னைப்பர் ரைபிள்ஸ்  சகிதம் பிரித்தானியாவின் தயாரிப்பான ளன்ட் றொவெர் Dஎfஎன்டெர்  இல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். 

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் வாகனேரி தொடக்கம் திருக்கோவில் வரையான இடங்களில் ஆறு  முகாம்கள் அமைத்து நிலை கொண்ட  இந்த விசேட அதிரப்படையினரது எந்த முகாம்களையும் 1983 ஆம் ஆண்டில் இருந்து 1987 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிவரை எந்த போராளிக் குழுக்களாலும் தாக்க முடியவில்லை என்பதே நிதர்சனமாகும். 

அத்தோடு இந்த  விசேட அதிரடிப்படையின் பலதிற்கு அதன் பொறுப்பதிகாரியாக இருந்த தர்மசிறி வீரக்கோன் மற்றும் விஜயதுங்க போன்றவர்களின் வழி நடத்தலும் ஒரு காரணம் எனலாம்  இவ்வாறு விசேட அதிரடிப் படையினரின் முகாம்களை தாக்கி தகர்க்க முடியாவிட்டாலும்  நாள் தோறும் ரோந்து செல்லும் அந்த விசேட அதிரடிப் படையினர் மீது  தாக்குதல் நடத்தி அவர்களை அழிக்கும் முடிவினை எடுத்த ஈரோஸ் இயக்கப் போராளிகள்  
மிகத்துள்ளியமாக திட்டம் தீட்டி நன்றாக வேவு பார்த்து நன்கு பயிற்றப்பட்ட  பத்துக்கும் மேற்பட்ட போராளிகளை தயார்படுத்தி தாக்குதல் நடத்தும் இடமாக கொடுவாமடுவை தேர்ந்தெடுத்து அந்த தாக்குதலுக்கு 1985 ஆம் ஆண்டு  4 ஆம் மாதம் 3 ஆம் திகதி புதன்கிழமை நாள் குறித்தனர். 

பொன்னன் என்ற பாக்கியராசா பொன்னம்பலம்  தலைமையில், கரண் ,கஜன், முருகன், சாண்டோ, மோகன், விக்கி, சின்னவன், சுரேஷ் ஆகிய போராளிகள் உட்பட மேலும் சில போராளிகள் கண்ணி வெடிகளை புதைத்து தாக்குதலுக்கு தயாராகி இருந்த நிலையில் .

அதிரடிப்படை அதிகாரி வீரதுங்கா தலைமையில் புல்லுமலை கோப்பாவெளிப் பகுதியில் தமது சுற்றி வளைப்பை மேற்கொண்டு விட்டுத் பொது மக்களுக்கு சொந்தமான ஒரு றோஸா Mini Bus, ணிச்சன் Caravan என இரண்டு வாகன சகிதம் திரும்பி வந்து கொண்டிருந்த விசேட அதிரடிப் படை மீது, புதைத்து வைத்து கண்ணிகளை வெடிக்க வைத்து துப்பாக்கி தக்குதலை ஈரோஸ் இயக்கத்தினர் மேற்கொண்டனர்.
 
பொன்னன் என்ற பாக்கியராசா பொன்னம்பலம் தலைமையில் நடை பெற்ற இந்த தாக்குதலில் அதிகாரி வீரதுங்கா உட்பட  பெருந்தொகையான படையினர் கொல்லப்பட்டு, Cold Commando  றிfலெ, AK47 உட்பட ஏராளமான ஆயுதங்கள் ஈரோஸ் அமைப்பினரால் கைப்பற்றப்பட்டன. 

அத்தோடு கோப்பாவெளிச்  சுற்றிவளைப்பில் விசேட அதிரடிப் படையினரால் கைதாகி அவர்களின் வாகனத்தில் இருந்த புலிகள் இயக்க உறுப்பினர்களான தவராசா மற்றும் ராஜன் ஆகியோரும்   இத்தாக்குதலின் போது  கொல்லப்பட்டனர் என்பதோடு  

இதனைத் தொடர்ந்து  புலிபாய்ந்தகல் என்னும் இடத்துக்கு அருகாமையில்  வடமுனை வீதியில்  நடத்தப்பட்ட  மற்றுமொரு கண்ணி வெடித் தாக்குதலிலும் 

துப்பாகிச் சமரிலும் மேலும் பல அதிரடிப்படையினர் ஈரோஸ் இயக்கதினரால் கொல்லப்பட்டனர். 
பிற்காலங்களில் ஈரோஸை போன்று இவ்வாறான வெற்றிகரமான தாக்குதல்கள் பலவற்றை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியது என்பதே  வரலாறாகும்.

என்றாலும் 

PLOTE  இயக்கம் மன்னம்பிட்டியில் ராணுவ காவலரன் மீதான தாக்குதலையும் 

EPRLF அமைப்பு  புல்லுமலை உட்பட வேறு சில இடங்களில் தூரத்தில் இருந்து மோட்டார் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு இருந்தாலும் 

மட்டு அம்பாறை மாவட்டங்களில் TELO அமைப்பு எந்த தாக்குதல்களையும் நிகழ்த்தவில்லை என்பதே நிதர்சனமாகும் 

இவ் அமைப்புக்கள் இவ்வாறு குறிப்பிட்டுக் கூறும்படியான எந்த ஒரு ராணுவத் தாக்குதல்களையும் மட்டு அம்பாறை மாவட்டத்தில் மட்டும் அல்லாது திருகோணமலை மாவட்டம் உட்பட கிழக்கு மாகாணத்தில் எந்த ஒரு இடத்திலும் நடத்தவில்லை என்பதையும் உறுதியாக பதிவு செய்து,
 
ஈரோஸ் இயக்கத்தின் இந்த வெற்றிகரமான தாக்குதலுக்கு தலைமைதாங்கிய போராளி பொன்னன் என்ற பாக்கியராசா பொன்னம்பலம் அவர்கள், 1987 ஆம் ஆண்டு  6ஆம் மாதம் 22ஆம் திகதி மருத்துவமனையில் தங்கி இருந்த வேளையில் விசேட அதிரடிப்படையின் தாக்குதலில் வீரமரணமானார் என்பதோடு, அவரது சகோதரர் விமலநாதன் என்ற பாக்கியராசா ரவியும் விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருக்கும் போது களத்தில் சமராடி வீரமரணமானார் என்பதையும் தெரியப்படுத்துகின்றேன்.

அத்தோடு ,

இந்த தாக்குதல் மட்டும் அல்லாது மட்டு மாவட்டதின் புனானைப் பகுதியிலும்  ஶ்ரீலங்கா ராணுவத்திற்கு எதிராக தாக்குதலைச் செய்து ஆயுதங்களை கைப்பற்றிய ஈரோஸ் இயக்கமே தமிழீழ பிரதேசங்களுக்கு வெளிய முதல் முதலாக குண்டு வெடிப்பு தாக்குதல்களையும் நடத்தி இருந்தது.  

இது இவ்வாறு இருக்க தமிழீழ விடுதலைப் புலிகளால் மற்றைய மக்கள் விரோத இயக்கங்கள் யாவும்  தடை செய்யப்பட்டபோதும், அது தமிழீழ விடுதலைப் புலிகளால் எந்த விதத் தடையும் இன்றி தொடர்ந்தும் இயங்கி வந்தது.

ஆனால் 

முதலாம் கட்ட ஈழப்போரின் பின்னர்  இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பத்தில், ஈரோஸ் இயக்கம் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக  விடுதலைப் புலிகளின் அன்றைய மட்டு அம்பறை சிறப்பு தளபதியான  கருணா ஒரு பொதுக் கூட்டம் ஒன்றில் மக்கள் மத்தியில் பதிவு செய்தார் என்றாலும், 

புலிகளின்  அறிவுறுத்தலின் படி ஆகஸ்ட் மாதம் முதாலாம் திகதி 1990 ஆம் ஆண்டு ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் வே.பாலகுமார் அவர்களால் ஈரோஸ் இயக்கம் உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொள்ளாது  ஈரோஸ் அமைப்பின் ராணுவப் பொறுப்பாளரான சங்கர் ராஜீ அவர்களின் தலைமையில் 
ஈரோஸ் அமைப்பில் சிலர் இயங்க முற்பட்டாலும் அந்த எண்ணம் ஈடேறவில்ல. மாறாக ஈரேஸ் அமைப்பின் ஒரு தலைவர் வே. பால குமார் மற்றும் முக்கிய உறுப்பினரான பரா எனப்படும் பரராஜசிங்கம் மற்றும் சில ஈரோஸ் உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தம்மை இணைத்துக் கொண்டு தமிழீழ விடுதலை புலிப் போராளிகளானார்கள். 

இதன் காரணமாக ஈரோஸ் அமைப்பில் அந்த அமைப்பு கலைக்கப்படும் வரை இருந்து  வீரமரணம் அடைந்த ஈரோஸ் போராளிகள் அனைவருக்கும் மாவீரர் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இடம் வழங்கினார்கள் அந்த வகையில்
விடுதலைப் புலிகளினால் பிரேரிக்கப்பட்ட ஈரோஸ் மாவீரர்கள் பட்டியலில் 
திருகோணமலை மாவட்டதை சேர்ந்த 91 பேரும்
மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 44 பேரும்
அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 43 பேரும் 
முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும் 
வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 8 பேரும் 
கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும் 
யாழ்பாண மாவட்டத்தை சேர்ந்த 25 பேரும் 
மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 25 பேரும்
மேலும் வெளி மாவட்டத்தை சேர்ந்த 8 பேரும் 
அத்தோடு  விபரம் அறிவிக்கப்படாத 9 பேருமாக 
மொத்தம் 266 மாவீரர்கள்  என அறிவித்து விடுதலைப் புலிகளால் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 

அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளால்,
ஈரோஸ் இயக்க முன்னாள் தலைவர் பாலகுமார் அவர்கள் புலிகளின் மத்திய குழு உறுப்பினராகவும்  
பரா எனப்படும் பரராஜசிங்கம் அவர்கள் தமிழீழ நீதித்துறைப் பொறுப்பாளராகவும் உள்வாங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர் என்பதோடு 
விடுதலை புலிகளில் இணைந்து கொண்ட  முன்னாள் ஈரோஸ் போராளிகள் பலருக்கு தரநிலைகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. 

சுவாமி சங்கரானந்தா🙏

முள்ளிவாய்க்காலில் இறுதிவரை போராடி வீரவரலாறான புதியவன் மாஸ்டர்

3 days 14 hours ago

breaking

புதியவன் மாஸ்டர் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை குகநேசன் என இயற்பெயர் கொண்ட புதியவன் என்ற மாவீரரின் போராட்ட வரலாறு என்பது பொறுப்புகள். பதவிகளைக் கடந்த உறுதி தளராத நேர்மையும், தன் அடக்கமும், அர்ப்பணிப்பும் நிறைந்த வாழ்வியல் சகாப்தம்.

யாழ்.மாவட்டம்அரியாலையைச்சேர்ந்தநாட்டுப்பற்றாளர் பண்டிதர் ப.கணபதிப்பிள்ளைக்கும் கனகாம்பிகைக்கும் மகனாக 05.04.1956 ஆம் ஆண்டு பிறந்து குகநேசன் எனும் பெயருடன் வளர்ந்தார். உயர்தரத்தில் விஞ்ஞானபாடரீதியாக நல்ல பெறுபேற்றைப் பெற்றும் சிங்களத் தரப்படுத்தல் மூலம் சிங்களவர் அதே பெறுபேறில் சித்தியடைய அதே பெறுபேறுள்ள தான் தரப்படுத்தல் என்ற போர்வையில் புறக்கணிக்ப்பட்டதை கண்டித்து இனி சிங்களவர்களது இந்த பாடத்திட்டத்தைப் படிக்கமாட்டேன் என மறுத்து தனது கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தபோது பெற்றோரின் வற்புறுத்தலில் தாயகத்தைவிட்டு 1980 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து யேர்மனியில் தஞ்சமடைந்தார்.

 

அங்கு சென்ற காலத்திலேயே தனது விடுதலைக்கான பணியினை ஆரம்பித்து அன்றைய இக்கட்டான நெருக்கடி நிறைந்த சூழ்நிலைகளில் எந்தவித பயமும் இன்றி விடுதலைப் போராட்டத்திற்கான நிதி திரட்டுதல். விடுதலைப் போராட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நோக்கிலான பரப்புரைப் பணிகளையும் துணிச்சலுடன் முன்னெடுத்தார். அன்றைய காலத்தில் யேர்மனியில் சிறிலங்கா கைக்கூலிகளினாலும் மாற்றுக் குழுக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான எதிர்ப்பு நடவடிக்கைகளை முறியடித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை நிலை நிறுத்தியவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர். இதன் விளைவாக யேர்மனிய அரசால் கைது செய்யப்படும் அளவிற்கு இவரது செயற்பாடுகள் மிகக் காத்திரமானதாக அமையப் பெற்றிருந்தது.  பின்னர் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லாததால் சிறையிலிருந்து விடுவித்த போது யேர்மனிய அரசு இவருக்கு வழங்கிய 8000 டொச்மார்க்குகளை அமைப்பின் செயற்பாடுகளுக்கு வழங்கினார் என்பது வரலாறு.

1992ம் ஆண்டு தமிழீழம் திரும்பிய புதியவன் மாஸ்டருக்கு இயக்கத்தில் நேரடிப் பணிகள் காத்திருந்த போதும் அவர் இயக்கத்திடம் வைத்த பிரதான கோரிக்கை தான் இயக்கத்தின் அடிப்படைப் பயிற்சியினை எடுக்கவேண்டும் என்பதாகும். அவரது வயது முதிர்ச்சியை கருத்திற்கொண்ட இயக்கம். அவர் ஒரு முழுமையான போராளியாக அடிப்படைப் பயிற்சி இன்றியே பணியாற்றலாம் என்றபோதும் அவர் அடிப்படைப் பயிற்சி எடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக நின்று பயிற்சியினை எடுத்து இதயபூமி 1 எனப் பெயரிடப்பட்ட மணலாறு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல் நடவடிக்கையிலும் பங்குபற்றினார். கராத்தேயில் கறுப்புப் பட்டியைப் பெற்றிருந்த புதியவன் மாஸ்டர் என்றுமே இயக்கப் பயிற்சிகளில் சளைத்தவர்

அல்ல. புதியவன் மாஸ்டரின் வெளிநாட்டு நிர்வாக அனுபவத்தை தமிழீழத்தில் பயன்படுத்த விரும்பிய இயக்கம். அவரை மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகக் கட்டமைப்பில் செயலாற்ற வழிவகை செய்தது. அரசியல் செயற்பாடுகளையும் சண்டைக் களங்களையும் எதிர்கொள்ளும் ஒரு போராளியே முழுமை பெறுகின்றான் என்ற அடிப்படையில் போரையும் அரசியலையும் போராளிகள் மத்தியில் அனுபவப் படங்களாக்கிப் போராளிகளைப் புடம்போட்டு வளர்க்கும் அனைத்துலகத் தொடர்பகக் கட்டமைப்பில் எதற்கும் தயங்காத போராளியாகத் தனக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பணிகளையும் பொறுப்புகளையும் சண்டைக் களத்திலும் சரி அரசியல், நிர்வாகப் பணிகளிலும் சரி நேர்மையாகச் செய்து முடிப்பவரே புதியவன் மாஸ்டர்.

 1992 இல் அடிப்படைப் பயிற்சியை முடித்து வந்த புதியவன் மாஸ்டர் நந்தவனத்தில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றார். நந்தவனம் என்பது தமிழீழத்தில் இருந்து புலம்பெயர்ந்து மீண்டும் தமிழீழம் வருவோருக்கான வதிவிட அனுமதியை வழங்குவது முதற்கொண்டு அவர்களுக்கான பலதரப்பட்ட தேவைகளையும் நிறைவாக்கிக் கொடுத்து. புலம்பெயர் தமிழர்களின் உறவுப் பாலமாகச் செயலாற்றி நின்ற செயலகமாகும். இத்தகைய நந்தவனத்தின் அடிப்படைப் பொறுப்புகளிலிருந்து அதியுயர்ந்த பொறுப்புகள் வரையில் பலவிதமான செயற்பாடுகளையும் மிகத் திறம்படச் செய்த போராளிகளில் முன்னுதாரணமான ஒருவர் புதியவன் மாஸ்டர். அவர் செயலாற்ற ஆரம்பித்த காலம் முதல் 2009 மே 18 வரையில் நந்தவனக் கட்டுமானத்தின் செயற்பாடுகளிலும் வளர்ச்ச்சியிலும் விரிவாக்கத்திலும் நற்பணிகளிலும் புதியவன் மாஸ்டரின் பங்களிப்பென்பது தவிர்க்கமுடியாது பின்னிப்பிணைந்திருக்கும் மகத்துவம் மிக்கது.

மண்கிண்டி மலைத் தாக்குதலின் பின்னர் நிர்வாகப் பணிகளில் அதிகம் ஈடுபட்டிருந்த புதியவன் மாஸ்டருக்கு 1996 இன் பின்னர் இடையிடையே குட்டிசிறி மோட்டர் படையணியின் சண்டைக் களங்களுக்குச் சென்றுவர வாய்ப்புகள் கிடைத்தபோதும், 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆனையிறவு பரந்தன் கள முனைப்பகுதியில் கனரக கிட்டு ஆட்டிலறிப் படையணியில் மொங்கன் எனப் பெயரிடப்பட்ட ஆயுதத்தில் சண்டையிடும் வாய்ப்புக்கிட்டியது. அதனையும் தனக்கே உரிய பாணியில் திறம்படச் செய்தவர் பின்னைய நாட்களில் 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்லறிப் படையணியில் 130MM ஆட்டிலறி போன்ற பல வகையான ஆட்லறிகளை எதிரிக்கு எதிராக ஏவிச் சண்டையிடும் சமர்க்களப் பணிகளை மிகத்துணிவுடன் செய்தார்.

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தின் தாயகக் கட்டுமானம்  என்பது நந்தவனம், ஆவணக்காப்பகம், மாவீரர் படிப்பகம், இராசன் அச்சகம், அறிவியல் கல்லூரி, அரசறிவியல் கல்லூரி, ஊடக மையம், தொண்டு நிறுவனம், சுற்றுலா விடுதிகள், தொலைத்தொடர்பு நிலையங்கள் எனப் பல கட்டுமானங்களைக் கொண்டது. இக்கட்டுமானங்கள் பலவும் லெப். கேணல் தரப் போராளிகள் பலரினால் நிர்வகிக்கப்பட்டன. இவ்வாறான கட்டுமானங்கள் பலவற்றிலும் அனைத்துலகத் தொடர்பகத்தின் மூத்த போராளிகளில் ஒருவரான புதியவன் மாஸ்டர் செயல் திறன் மிக்க போராளியாகவும், இடைநிலைப் பொறுப்பாளராகவும், ஆவணக் காப்பகம் போன்ற சிலவற்றின் பொறுப்பாளராகவும் செயலாற்றிய காத்திரம் மிக்க பொறுப்பாளர்.

1992ம் ஆண்டு தமிழீழம் வந்த புதியவன் மாஸ்டருக்கு அவரது வயது முதிர்ச்சியின் காரணமாக ஒருசில ஆண்டுகளிலேயே இயக்கத்தின் ஏற்பாட்டில் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. திருமண இணையராகி இருவரும் இணைந்து வயதுவந்த போராளிகளுக்கான திருமண ஏற்பாடுகளைச் சிறப்புடன் செய்துவைப்பதற்குப் புதியவன் மாஸ்டர் ஆற்றிய பங்கென்பதும் அவரது விடுதலை வரலாற்றின் இன்னொரு அத்தியாயமே. விடுதலைக்காக அயராது உழைத்ததன் விளைவாக இவர்களுக்கு குழந்தை வாய்ப்புகள் பலதடவைகள் வந்து கரைந்து போயிற்று. இத்தகைய சூழலில் இயக்கத்தினதும் குடும்ப உறுப்பினர்களினதும் சகபோராளிகளினதும் நண்பர்களினதும் அன்புரிமை கலந்த வேண்டுதல்களுக்கு அமைய செயற்பட்டு அன்புக்குழந்தைச் செல்வத்தினை பெற்றெடுத்தனர். குழந்தை பிறந்து சில ஆண்டுகளிலேயே முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் இறுதிநாள் வந்தது.

போராளிகளும் பொதுமக்களும் சிங்கள இராணுவத்திடம் சரணடைகின்றனர். குழந்தையும் கையுமாகப் போராளி. மனைவி மற்றும் சக போராளிகள் பலரும் தணியாத விடுதலை மீதான தாகத்தைச் சுமந்தபடி கையறு நிலையில் விடுதலைக்காகப் போராட மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வரும் என்ற நம்பிக்கையுடன் சரணடையத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

வாழ்வின் எல்லா இடங்களிலும் தன்னை மறைத்துத் தன் மனைவியை முன்னிறுத்திய புனிதப் போராளி புதியவன் மாஸ்டர் தனது மனைவியால் மகனைப் பாதுகாக்க முடியும் என்ற பூராண நம்பிக்கையுடனும், என்றுமே போராளிகளின் மனதைப் புண்படுத்தாத புதியவன் மாஸ்டர் இராணுவத்திடம் சரணடையத் தீர்மானித்துவிட்ட சக போராளிகளின் மனம் புண்படாத படியும் அவர்களிடம் அவர்களுக்கு ஏற்றவாறான கதைகள் சொல்லிவிட்டு போர்க்களம் நோக்கிப் போகின்றார்.

ஆம்! அவர் மீண்டும் திரும்பி வரவில்லை. எப்போதுமே எவர்மனதையும்

புண்படுத்திவிடாது விடுதலைக்காய் அப்பழுக்கின்றி செயலாற்றிய உறுதியின் வடிவமாகிய அந்த உத்தம வீரர், வாழ்வின் எல்லாக் கால கட்டங்களிலும் சலசலப்புக்காட்டாது தளராத உறுதியுடனும் தன்னடக்கத்துடனும் வாழ்ந்தது போன்றே இறுதிக் கணத்திலும் அப்படியே உறுதியின் வடிவமாகி 18 மே 2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். எம் நினைவெல்லாம் நிறைந்த புதியவன் மாஸ்டர் இன்று எம்முன்னே விடுதலையின் வித்தாகி, தமிழீழத்தின் வீர வரலாறாகி நிற்கின்றார்.

 

 

நன்றி 

சூரியப்புதல்வர்கள் -2023

https://thaarakam.net/news/70226046-07e7-4efc-9a34-aeade4aa04e3

"சங்க காலத்துக் காதல் பிரச்சனை?"

1 week ago
"சங்க காலத்துக் காதல் பிரச்சனை?"
 
 
சங்ககாலம் எதிர்ப்பற்ற காதல் வாழ்வுக்கு மட்டும் உடனாகி இருந்துவிடவில்லை. பல பாடல்கள் காதல் வாழ்வைப் புகழ்ந்து பேசியிருக்கலாம். ஆனால் சங்க காலத்துக் காதலிலும் பிரச்சனைகள் இருந்தன. அவை ஊர்வம்பாய் பேசப்பட்டன. இதை "அம்பல்" என்றும் "அலர்" என்றும் சங்க கால மக்கள் வழங்கி வந்தனர்.
 
"அம்பல்" என்றால் தலைவனும் தலைவியும் கொண்ட களவுக் காதலை பலரும் அறிந்து, பழித்துக் கூறல் என்றும், அலர் என்பது சிலர் மட்டுமே அறிந்து புறங்கூறுதல் என்றும் கருத்து கொள்ளலாம். இது ஒரு வித கிசுகிசு என்று கூட சொல்லலாம். ஊர்வம்பு என்றாலே பொதுவாக பெண்களையே குறிக்கும். "தீ வாய் அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர்" என்று நற்றிணையில் கபிலர் கூறுகிறார். காலையில் ஒரு பெண்ணிடம் ஒரு செய்தியைச் சொன்னால் போதும், மதியத்துக்குள் அச்செய்தி ஊருக்குள் பரவிவிடும் என்று பொதுவான கதை உண்டு. கூடியிருந்து முணுமுணுத்துப் அடுக்களைப் புகையைப் போல அதை பரப்புவார்களாம்.
 
எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையிலே ஒரு காட்சி வருகின்றது. ஒரு பெண் ஆடவன் ஒருவனைக் காதலிக்கின்றாள். அதைத் தெரிந்து கொண்ட அயல் பெண்கள்; அந்தப் பெண்ணின் தாய் தெருவில் போகும் போது கடைக்கண்ணால் பார்த்து தம் மூக்கின் மேல் சுட்டுவிரலை வைத்து அவளை இகழ்ந்து பேசிக் கொள்கிறார்கள். அவமானத்தால் குறுகிப் போன தாய் வீடு திரும்பி வந்து காதலித்து தனக்கு வசை தேடித்தந்த தன் மகளைத் தடி எடுத்து நன்றாக அடித்து விடுகின்றாள். இதுவும் ஒரு சங்க இலக்கியம் தான்!
 
மேலும் இதற்கு ஒரே வழி தலைவனுடன் நீ ஓடி விடுவது தான். ஊரைப் பற்றிக் கவலைப்படாதே.. எப்போதும் அலர் தூற்றும் ஊர்..  அலர் தூற்றும்…. தூற்றட்டுமே அதனாலென்ன என்கிறாள் தோழி!!
 
 
"சிலரும் பலரும், கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச், சுட்டுவிரல் சேர்த்தி
மறுகின் பெண்டிர் அம்பல் தூற்றச்
சிறுகோல் வலந்தனள் அன்னை; அலைப்ப
அலந்தனென்; வாழி தோழி! கானல்
புதுமலர் தீண்டிய, பூநாறு குரூஉச் சுவல்
கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ
நடுநாள் வரூஉம்; இயல்தேர்க் கொண்கனொடு
செலவு, அயர்ந் திசினால் யானே
அலர் சுமந்து ஒழிக, இவ் அழுங்கல் ஊரே!"
[நற்றிணை - 149]
 
 
இன்று எத்தனையோ பெற்றார் காதலித்தவனோடு மகள் ஓடிவிட ஐயோ முதலே தெரிந்திருந்தால் கட்டுப்படுத்தி வைத்திருக்கலாமே என்று கவலைப்படுவதைக் காண்கின்றோம். என்னுடைய அறியாமையால் பிள்ளை போய்விட்டதே என்று தன்னைத்தான் நொந்து கொள்ளும் ஒரு தாயின் அவலத்தை காண்கின்றோம். இது போல மகளை நினைத்து ஏங்கும் தாயை அகநானூற்றிலும் காண்கிறோம்! தலைமயிரும் [கூந்தலும்] சுருண்டு படிந்துள்ளது. முலைகளும் உச்சியிலுள்ள மெல்லிய முகத்தால் சிமிழினுடன் மாறுபட்டன. இவள் பெண் என்னும் இயல்பினை அமைந்தனள் -என்று- என் கண்களே பல முறை பார்த்து எனது நெஞ்சமானது நேற்றும் ஐயுற்றது. அதன் பின்னும் எனது அறியாமையால் யான் என் மகளை வீட்டிற்குள்ளேயே இருக்கச் செய்யாது விட்டேன் என புலம்பும் ஒரு தாயை இங்கு காண்கிறோம். இதுவும் ஒரு சங்க இலக்கியம் தான்!
 
அவள் நடக்கும்போது ஒலிக்கும் தன் காலிலுள்ள சிலம்பைக் கூடக் கழற்றி வைக்காமல் சென்றுவிட்டாள்... என்னை விட்டு நெடுந்தொலைவு சென்றுவிட்டாள்..... இவள், என் மகள்... தரிசு நிலத்திற்கு போனாலோ? ... சுனையில் நீர் இல்லாததால் அங்கே புறா புதிய நெல்லிக்காயை குத்தி சாப்பிடுங்கள், அங்கே வறண்ட தண்டுகள் மற்றும் நெல்லிக்காய்கள் மேற்கு காற்றினால் கீழே விழுந்து  குவிந்து கிடந்தது பளிங்கு போல் தெரியும். அப்படியான வறண்ட நிலத்தைக் கொண்ட  காட்டு வழியில் சென்று கொண்டிருப்பாளோ?.... இல்லை.. கையில் கூர்மையான வேல் வைத்திக்கும் காளை போன்றவனுடன் சென்று கொண்டிருப்பாளோ?.... இல்லை..  காளையின் பொய்யுரையை நம்பிச் சென்று கொண்டிருப்பாளோ?..... இல்லை..  தேக்கின் அகன்ற இலைப்புதர் போல் தோன்றும் குடிசையில் வாழும் கானவர் சிறுகுடி முற்றத்தில் வேகவைத்த புலால் உணவை உண்டு கொண்டிருப்பாளோ?... புலம்புகிறாள் தாய் !!
 
 
"கூழையுங் குறுநெறிக் கொண்டன முலையும்
சூழி மென்முகஞ் செப்புடன் எதிரின
பெண்துணை சான்றனள் இவளெனப் பன்மாண்
கண்துணை ஆக நோக்கி நெருநையும்
அயிர்த்தன்று மன்னே நெஞ்சம்! பெயர்த்தும்
அறியா மையிற் செறியேன் யானே
பெரும்பெயர் வழுதி கூடல் அன்னதன்
அருங்கடி வியனகர்ச் சிலம்புங் கழியாள்
சேணுறச் சென்று வறுஞ்சுனைக்கு ஒல்கி
புறவுக்குயின்று உண்ட புன்காய் நெல்லிக்
கோடை யுதிர்த்த குவிகண் பசுங்காய்
அறுநூற் பளிங்கின் துளைக்காசு கடுப்ப
வறுநிலத் துதிரும் அத்தம் கதுமெனக்
கூர்வேல் விடலை பொய்ப்பப் போகிச்
சேக்குவள் கொல்லோ தானே தேக்கின்
அகலிலை குவித்த புதல்போல் குரம்பை
ஊன்புழுக்கு அயரும் முன்றில்
கான்கெழு வாழ்நர் சிறுகுடி யானே."
[அகநானூறு 315]
 
 
பெண்களைப் பெற்றோர் அவர்களைத் திருமணம் செய்துகொடுக்கும் வரையிலும் தமது வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வாழ்வதாக அடிக்கடிப் புலம்புவது கேள்விப் பட்டிருப்பீர்கள். இதற்கு ஒரு எடுத்துக் காட்டாக இப்பாடல் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
 
 
சங்க காலத்திலே குழந்தைப் பருவம் முதல் பெண்கள் அணிந்திருக்கும் சிலம்பை அவர்களின் திருமணம் நடப்பதற்கு முன்பு அகற்றுவார்கள். அதனைச் சிலம்பு கழிதல் என்பார்கள். இன்றைய வளைகாப்பு போல அந்த நிகழ்வும் விழாவாக நடைபெற்றுள்ளது போலும்.
 
ஒரு வசதியான குடும்பத்துப் பெண் தன் ஏழைக் காதலனோடு ஓடிச் சென்று விடுகிறாள். கணவன் வீட்டிலே அவளின் சிலம்பு அகற்றும் விழா நடக்கின்றது எளிமையாக! அதைப் பெண்ணின் தாய் கேள்விப் படுகின்றாள். ஐயோ என் பிள்ளைக்கு புல்வேய்ந்த குடிசை வீட்டில் வறுமையுடன் விழா நடக்கிறதே! எங்கள் வீட்டில் என்றால் எப்படிச் சீரும் சிறப்புமாகச் செய்திருப்போம் என்று வருந்துகிறாள் அந்தத் தாய்!
 
 
"கண்டிசின் மகளே! கெழீஇ இயைவெனை:
ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு,
மங்கையர் பல பாராட்ட, செந் தார்க்
கிள்ளையும் தீம் பால் உண்ணா; மயில் இயல்
சேயிழை மகளிர் ஆயமும் அயரா;
தாழியும் மலர் பல அணியா; கேழ் கொளக்
காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர்ப்
பாவையும் பலி எனப் பெறாஅ; நோய் பொர,
இவை கண்டு, இனைவதன் தலையும், நினைவிலேன்,
கொடியோள் முன்னியது உணரேன், ''தொடியோய்!
இன்று நின் ஒலி குரல் மண்ணல்'' என்றதற்கு,
எற் புலந்து அழிந்தனள் ஆகி, தற் தகக்
கடல்அம் தானை கை வண் சோழர்,
கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன,
நிதியுடை நல் நகர்ப் புதுவது புனைந்து,
தமர் மணன் அயரவும் ஒல்லாள், கவர்முதல்
ஓமை நீடிய உலவை நீள் இடை,
மணி அணி பலகை, மாக் காழ் நெடு வேல்,
துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின்
அறியாத் தேஎத்து அருஞ் சுரம் மடுத்த 20
சிறியோற்கு ஒத்த என் பெரு மடத் தகுவி,
''சிறப்பும் சீரும் இன்றி, சீறூர்
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில்
ஏதில் வறு மனைச் சிலம்பு உடன் கழீஇ,
மேயினள்கொல்?'' என நோவல் யானே. "
[அகநானூறு 369]
 
 
சீரும் சிறப்பும் இல்லாத அவன் மனை. ஏழைப் பெண்கள் வாழும் புல் வேய்ந்த குடிசை. அதன் முற்றத்துத் தூணில் ஒரே ஒரு பசு மட்டும் கட்டியிருக்கும். ஏதுமில்லாது வறுமையில் வாடும் அந்த மனையில் சிலம்பைக் கழற்றி வைக்கும் திருமணம் நடை பெறுகிறதே என்ற செய்தி அகநானூற்றில் [369] காணப்படுகின்றது.
 
துணிவோடு கல் நெஞ்சத்துடன் நீ அறியாத நாட்டுக்கு, தகைமை இன்றி உன்னை அழைத்துச் செல்லும் சிறுமைக் குணம் படைத்தவனுக்கு ஒத்தவளாகச் சென்றுவிட்டாய். இதுதான் உன் மடமைத் தகுதி என்று ஏசுகிறாள் அந்த தாய் தனது வேதனையில்.. . அது மட்டும் அல்ல, மகளே! என் நிலைமையை எண்ணிப் பார். வளையல் அணிந்த மகளிர் முறை முறையாக வந்து உன்னைப் பாராட்டுவர்... அவர்கள் இப்போது தவிக்கின்றனர்... நீ ஊட்டாததால்... நீ வளர்த்த கிளி பால் உண்ண மறுக்கிறது.... மயில் போல் நடக்கும் உன் தோழிமாரும் விளையாடவில்லை.... நீ நீர் ஊற்றாததால்.... நீ தாழியில் வளர்த்த செடிகளும் பூக்கவில்லை.... அழகு தவழ வயிரம் பதித்து வைதிருக்கும் உன் சுவர் ஓவியத் தெய்வத்துக்கும் படையல் செய்யப்படவில்லை..... இவற்றை யெல்லாம் பார்த்துக் கொண்டு நான் வருந்திக் கொண்டிருக்கிறேன்.....
 
அத்துடன் பழைய நினைவுகள் பல என் நினைவுக்குச் சரியாக வரவில்லை... வளையல் அணிந்தவளே!... “இன்று நீ தலை முழுகும் நாள்” என்றேன் [“This is the day of bathing after your menses”] தன்னைத் தாய் 'தலை முழுகப் போகும் நாள்' என்று தாய் கூறியதாக நினைத்து சினந்து நீ வருந்துகிறாய் என புலம்பும் தாயை காண்கிறோம். இங்கே வறுமைப்பட்ட இடத்திலே வாழ்க்கைப்பட்டு விட்டாளே என்ற எண்ணப்பாடுடைய ஒரு தாயைச் சந்திக்கின்றோம்! மகள் புகுந்த வீட்டை விட தன் வீடே பண வசதியில் சிறந்தது என்ற எண்ண ஏற்றத்தாழ்வை இன்றுபோல அன்றும் பார்க்கின்றோம்.
 
பெரியோரை வியத்தலும் இல்லை. சிறியோரை இகழ்தலும் இல்லை என்ற சங்கப் பண்பு நெறி அடிபட்டுப் போவதை இங்கே காண்கிறோம்.!
 
இதுவும் ஒரு சங்க இலக்கியம் தான்!
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
19598943_10209661603319648_6327591870321169744_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=jHTs3_kMg7AQ7kNvgGp8vQA&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBdQmINvPrusr2DlU6fx2FkldA16pqd7qBnP9DYjEtv6g&oe=6662D0C8 19642295_10209661605679707_959355806057558988_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=XiqdvP0cCeUQ7kNvgEV_aJv&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAvq6aE-qsBfMYmRR4mbuRyZ8vAxjcw8gN6kQH-Qky5fA&oe=6662DF52 19642539_10209661607559754_6055775717698101424_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ipXDNNeK9G4Q7kNvgGXbFNc&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCite062LPw1kwMUULQDUhTQzrO7XStWyGJFD3edd2y_Q&oe=6662C827
 

வீரச்சாவு முதல் வித்துடல் விதைப்பு வரையான நிகழ்வுகள் | ஆவணம்

1 week 3 days ago

"தோற்றிடேல், மீறித்

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 

 

பாகம் - 01

 

தமிழீழ விடுதலைப் போராட்டக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்து வீரச்சாவடைந்த போராளிகளின் சடலங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு அடக்கம் செய்யப்பட்டன என்பது குறித்து இக்கட்டுரையில் அலசப்பட்டுள்ளது.

இந்த அடக்கம் தொடர்பாக பார்பதற்கு முன்னர் இவற்றைக் குறிக்க புலிகளால் பாவிக்கப்பட்ட சில விதப்பான சொல்லாடல்கள் பற்றி முதற்கண் பார்ப்போம்.

 

  • பிடாரச்சொற்கள் (Newly coined terms):

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களானோர் சிறிலங்காப் படைத்துறையுடனோ அல்லது இந்தியப் படைத்துறையுடனோ அல்லது தமிழ் தேசவெறுப்புக் கும்பல்களுடனோ மிண்டி ஏற்படும் அடிபாடுகளால் மரணமடையும் போது அச்சாவானது "வீரச்சாவு" என்று புலிகளாலும் தமிழ் மக்களாலும் சுட்டப்பட்டது.  

இவ்வீரச்சாவானது களத்திடை நிகழும் போது "களச்சாவு" என்றும் களத்தில் விழுப்புண்ணேந்தி மருத்துவமனையில் பண்டுவம் பெற்றுவரும் போது அஃது பலனளிக்காது சாவடைய நேரிட்டால் "காயச்சாவு" என்றும் சுட்டப்பட்டது. எவ்வாறெயினும் வேறுபாடில்லாமல் பொத்தாம் பொதுவாக "வீரச்சாவு" என்ற சொல்லே பாரிய பெரும்பான்மையாக பாவிக்கப்பட்டுள்ளது. "களச்சாவு" என்ற சொல் ஆங்காங்கே இலக்கியத்திலும் இயக்கப்பாடல்களிலும் பாவிக்கப்பட்டுள்ளது. "காயச்சாவு" என்ற சொல்லின் பாவனையோ புலிகள் கால எழுத்துலகில் காணக்கிடைக்கவில்லை! 

வீரச்சாவடைந்த புலிவீரர் "மாவீரர்" (மா+வீரர்) என்று விளிக்கப்பட்டார். பல்பொருளுடைய இந்த மா என்ற ஓரெழுத்துச் சொல்லானது ஒருவரின் நல்ல, கெட்ட குணங்களை மிகுதிப்படுத்தும் பெயரடையாகும். அத்துடன் இக்கூட்டுச்சொல்லானது மிகப் பெரிய பெருமையும் வலிமையும் உடைய வீரர் என்று வீரச்சாவடைந்த அவ்வீரரை குறிக்கிறது. இது ஆகக்குறைந்தது 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் மாவீரர் வாரத்திலிருந்து பாவிக்கப்பட்டு வருகிறது. ஆயினும் இச்சொல்லை சரியாக எப்போதிலிருந்து பாவிக்கத் தொடங்கினர் என்பது தெரியவில்லை.

இம்மாவீரரின் சடலமானது "வித்துடல்" (வித்து + உடல்) என்று சுட்டப்பட்டது. இவ்வித்துடல் "துயிலும் இல்லத்தில்" புதைக்கப்படும் செயலானது "விதைத்தல்" என்று அழைக்கப்பட்டது. இச்சொல்லினை, ஒரு தாவரத்தின் வித்து (உவமை) நாட்டப்படும் போது பெரும்பாலும் முளைக்கிறது என்ற நியதியின்படி தமிழ் விடுதலை வீரர்களின் சடலங்களான (உவமேயம்) வித்துடல்கள் விதைக்கப்படும் போது அதனைக்காணும் தமிழர்களும் புதிதாய் இயக்கத்தில் சேர்வார்கள் என்று பொருள்படும் படியான உவமைச் சொல்லாக உண்டாக்கியிருந்தனர்.

"வீரவணக்கம்" என்ற சொல்லானது 1986ம் ஆண்டு வெளியான விடுதலைப்புலிகள் இதழில் முதன் முதலில் பாவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியப் படைக்குப் பின்னான காலகட்டத்தில் மாவீரர் கல்லறைகளின் தலைப் பகுதியின் மேற்பகுதியிலும் மற்றும் நினைவுக்கற்களின் மேற்பகுதியிலும் 'வீரம் நிறைந்த புலி' என்ற பொருள்படத் தக்கதான சொல்லான "வீரவேங்கை" என்ற சொல் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இச்சொல் தான் தவிபுஇன் அடிப்படைத் தரநிலையும் கூட. இச்சொல்லானது துயிலுமில்லங்களில் பாவிக்கப்பட முன்னர் பொதுமக்களால் பாவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வரலாற்று ஆதரங்களும் உள்ளன.

ஈழநாதம்-Eelanatham-1990.12.20.jpg

இம்மாவீரரின் தரநிலையுடனான இயக்கப்பெயருக்கு மேலே "வீரவேங்கை" என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளதைக் காண்க. படிமப்புரவு: ஈழநாதம் 1990.12.20 | பக்கம் 2

ஆகக்குறைந்தது 20/12/1990 அன்று தொடக்கமாவது "வீரவெனெக்கை" என்ற சொல் பாவிக்கப்பட்ட்டிருப்பதை அற்றை நாளில் வெளியான ஈழநாதம் நாளேடு மூலமாக அறியக்கூடியவாறு உள்ளது. அற்றை நாளேட்டில் 'லெப். சுஜி' என்ற மாவீரரின் 45ம் நாள் நினைவஞ்சலி பதிவில் அவரது தரநிலைக்கு மேலே வீரவேங்கை என்ற இச்சொல் எழுதப்பட்டுள்ளது. அதாவது கல்லறை மற்றும் நினைவுக்கற்களின் மேல் எழுதப்பட்டிருப்பதைப் போன்றே - அதிலும் அவை தோற்றம் பெற முன்னரே - இச்சொல் அவற்றில் பாவிக்கப்பட்டிருந்த விதத்தைப் போல பாவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இச்சொற்களில் மாவீரர் என்ற சொல் மட்டும் 1989 மாவீரர் வாரத்திலிருந்தும் ஏனையவை 1991இற்குப் பின்னரும் புலிகளால் உருவாக்கப்பட்டு மக்கள் நடுவணில் பரவலறியாகி புழக்கத்திற்கு வந்தது. இன்றளவும் புழக்கத்தில் உள்ளது.

 

  • புழக்கச் சொற்களின் பாவனை

அப்படியானால் இதற்கு முன்னரான காலத்தில் எத்தகைய சொற்கள் பாவனையில் இருந்தன என்று உங்கள் மனதில் கேள்விகள் எழலாம். 

இதற்கு முன்னரான காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு என்று மேற்கூறப்பட்டவை போன்ற தனியான பிடாரச் சொற்கள் இருந்ததில்லை. பொதுவாக மக்கள் நடுவணில் புழக்கத்திலிருந்த சொற்களே புலிகளாலும் கையாளப்பட்டன; வீரமரணம், Body (த.உ.: பொடி) அ புகழுடல், தகனம் அ புதைத்தல் ஆகியனவே அவையாகும்.

எடுத்துக்காட்டாக, 1984ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 திகதியில் வெளியான புலிகளின் அலுவல்சார் நாளேடான "விடுதலைப்புலிகள்" இதழில் தமிழீழ விடுதலை போரின் முதல் மாவீரரான லெப். சங்கரின் வீரச்சாவின் இரண்டாம் ஆண்டு நினைவையொட்டி ஓர் சுவரொட்டி வெளியாகியிருந்தது.

Lt. Shankar 2nd year poster - 1984 dec.png

படிமப்புரவு: விடுதலைப்புலிகள் மாத இதழ், 1984 திசம்பர்

இச்சுவரொட்டியில் அன்னாரின் தரநிலையுடன் இயக்கப்பெயருக்குப் பகரமாக முதலெழுத்துடனான இயற்பெயரே வழங்கப்பட்டுள்ளது. இயக்கப்பெயரானது மாற்றுப்பெயராக தரநிலையுடன் கீழே வழங்கப்பட்டுள்ளதைக் காண்க. இம்முறைமையானது, "லெப்டினன்ட்" வரையான தரநிலை உடையோருக்கு மட்டுமே 1987ம் ஆண்டு வரை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிவந்த அனைத்து "விடுதலைப்புலிகள்" இதழ்கள் மூலமாக அறியக்கூடியவாறு உள்ளது. 

எனினும், கப்டன் முதல் லெப். கேணல் ஈறான தரநிலைகளிற்கு பிற்காலத்தில் அவர்களால் கைக்கொள்ளப்பட்டு இறுதிவரை கடைப்பிடிக்கப்பட்ட 'தரநிலையுடனான இயக்கப்பெயர்' என்ற முறைமை செயற்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 1984ம் ஆண்டு சூலை மாதத்தில் வெளியான விடுதலைப்புலிகள் இதழில் "கப்டன் ரஞ்சன் லாலா" என்று ஒரு போராளியின் (அடிக்கற்களில் ஒருவர்) வீரச்சாவு குறிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தான் பிற அடிக்கற்களில் சிலரான லெப். கேணல் விக்ரர், மேஜர் கணேஸ் உள்ளிட்டோரின் விரிப்புகளும் விடுதலைப்புலிகள் இதழில் வெளியாகியுள்ளன. 

மேலும், அச்சுவரொட்டியில் வீரச்சாவு என்ற சொற்பதத்துக்குப் பகரமாக "வீரமரணம்" என்ற சொற்பதத்தையே தொடக்கத்தில் பாவித்துள்ளனர். இச்சொல்லானது 1992 நடுப்பகுதி வரை பாவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரிருந்து "வீரச்சாவு" என்ற சொல் பாவானைக்கு வந்துள்ளது. இருப்பினும் ஆங்காங்கே வீரமரணம் என்ற சொல்லும் சமாந்தரமாக கையாளப்பட்டுள்ளது. இதே காலப்பகுதியிலும் இதற்குப் பின்னான காலப்பகுதியிலும் "களப்பலி" (களச்சாவு என்ற சொல்லுக்கு ஈடான சொல்) பாவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் போரின் தொடக்க காலத்திலிருந்து 1991 இன் ஒரு குறித்த (சரியான காலம் தெரியவில்லை) காலம் வரை போராளிகளின் வித்துடல்கள் "பொடி/Body" என்றுதான் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் விளிக்கப்பட்டுவந்தது. ஆயினும் ஆகக்குறைந்தது எழுத்து வழக்கிலாவது 1991ஆம் ஆண்டின் கார்த்திகை மாதத்திலிருந்து "புகழுடல்" என்ற சொல்லானது போராளிகளின் வித்துடல்களைக் குறிக்க பாவிக்கப்பட்டது என்ற தகவலை 1991ஆம் ஆண்டின் ஐப்பசி – கார்த்திகை விடுதலைப்புலிகள் ஏட்டிலிருந்து அறியமுடிகிறது. பிடாரச்சொல்லான "வித்துடல்" என்ற சொல் புலிகள் அமைப்பில் பாவனைக்கு வந்த காலத்தை அறியமுடியவில்லை. 

தொடக்க காலத்தில் போராளிகளின் வித்துடல்கள் சுடுகாடுகளில் தகனப்பட்டன அ இடுகாடுகளில் புதைக்கப்பட்டன. அதனைச் சுட்ட தகனம் அல்லது எரியூட்டல் மற்றும் புதைத்தல் போன்ற வழக்கமான சொற்கள் பாவிக்கப்பட்டன.

புலிகள் அமைப்பில் வித்துடல்களை விதைக்கும் பழக்கம் ஏற்பட்ட 1991ஆம் ஆண்டிலும் "புதைத்தல்" என்ற சொல்லே இச்செயலைச் சுட்டப் பாவிக்கப்பட்டுள்ளது. விதைத்தல் தொடர்பில் புலிகளால் வெளியிடப்பட்ட முதலாவது அலுவல்சார் கட்டுரை வெளிவந்த ஐப்பசி – கார்த்திகை விடுதலைப்புலிகள் ஏட்டில் கூட "புதைத்தல்" என்ற சொல்லே பாவிக்கப்பட்டுள்ளது! எவ்வாறெயினும் "விதைத்தல்" என்ற சொல்லின் பாவனை தொடங்கப்பட்ட காலத்தையும் அறியமுடியவில்லை.

 

(தொடரும்)

 

ஆக்கம் & வெளியீடு:
நன்னிச் சோழன்

 

"பல வகை நீர் நிலைகள்"

1 week 6 days ago
"பல வகை நீர் நிலைகள்"
 
 
பல வகை நீர் நிலைகளை தமிழ் மொழியில் நாம் காண்கிறோம் அவை:
 
"இலஞ்சி, கண்ணி, எரி, மடு, வாவி, வட்டம், நளினி, குட்டம், குளம், கயம், கோட்டகம், மலங்கன், ஓடை, சலந்தரம், தடாகம், பொய்கை, கிடங்கு, கற்சிறை, கிணறு, கேணி, துரவு. அகழி, அருவி, ஆழிக்கிணறு, ஆறு, உறை கிணறு, ஊருணி, ஊற்று,கட்டு கிணறு, கண்மாய் (கம்மாய்), கலிங்கு, கால், கால்வாய், குட்டை, குண்டம், குண்டு, குமிழி, குமிழி ஊற்று, கூவம், கூவல், வாளி, கேணி, சிறை, சுனை, சேங்கை, தடம், தளிக்குளம், தாங்கல், திருக்குளம், தெப்பக் குளம், தொடு கிணறு, நடை கேணி, நீராவி, பிள்ளைக்கிணறு, பொங்கு கிணறு, மடை, மதகு, மறு கால், வலயம், வாய்க்கால்"
 
என 50 இற்கு மேற்பட்ட சொற்களை காண்கிறோம்.
 
எந்த ஒரு மொழியில் ஆவது இத்தனை சொற்கள் நீர் நிலைக்கு உண்டா?
 
அப்படி என்றால் தமிழில் மட்டும் எப்படி இத்தனை சொற்கள் வந்தன? இது தான் நாம் கவனிக்க வேண்டியது.
 
அதாவது தமிழனின் வாழ்வு, நாகரிகம் ஆதியில் இருந்து இன்றுவரை நீர் வளத்துடன் அமைந்ததே இதற்கு காரணம் என நாம் இலகுவாக கருதலாம். அதனால் தான் நீர்பாசனம் அங்கு முக்கியம் அடைகிறது.
 
அந்த நீர்பாசன முறை, பொறி முறையாக்கப்பட்டது தான் ஆதித் தமிழரின் அதி உன்னத வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது என்பதே உண்மை. அதனால் தான் இத்தனை சொற்கள் போலும்!
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
No photo description available. 

புலிகளின் காலத்திய 212 இயக்கப்பாட்டு இறுவெட்டுகள் | திரட்டு

2 weeks 4 days ago

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 

 

பண்டைய காலத்தில் தமிழ் மக்களின் வாழ்வு எவ்வாறு இலக்கியங்களில் செய்யுள் வடிவத்தில் வடிக்கப்பட்டிருந்ததோ அதே போன்று தற்காலத்திய ஈழத்தமிழர்களின் போர்க்காலத்திய வாழ்வானது பாடல்களின் மூலமாக காட்டப்பட்டுள்ளது.

ஆயிரம் ஆயிரம் மாவீரர்களை ஈர்ந்தும் பல வரலாறுகளையும் சாதனைகளையும் படைத்த தமிழீழ விடுதலைப் போரின் பக்கங்கள் பாடல்களாக புலிகளின் காலத்தில் வெளிடப்பட்டன. இவை புலிகளின் அனுமதிபெற்று அவர்களின் வரமுறைகளுக்கு உட்பட்டு புலிகளின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள்/ வெளிநாட்டுக்கிளைகள் ஊடாக வெளியிடப்பட்டன. பேந்து, நான்காம் ஈழப்போரின் முடிவிற்குப் பிறகு, புலிகளுக்குப் பின்னான காலத்திலும், வெளிவந்துகொண்டுள்ளன. 

இப்பாடல்கள் தொடக்க காலத்தில் இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்தும் பின்னாளில் தமிழீழம், தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் நாடுகள் என எல்லா இடங்களிலிருந்தும் வெளிவந்தன. 1990இற்கு முன்னர் வந்த பாடல்கள் தனிப்பாடல்களாகவும் பின்னாளில் தனிப்பாடல்களாகவும் இறுவெட்டுகளாகவும் வெளியிடப்பட்டன. இப்பாடல் ஆக்கத்திற்கு தமிழ்நாடு மற்றும் தமிழீழத்தைச் சேர்ந்த கலைஞர்கள் பங்களித்திருந்தனர். 

இப்பாடல்கள் யாவும் "இயக்கப்பாட்டு" என்றும் "புலிப்பாட்டு" என்றும் மக்கள் நடுவணில் அறியப்பட்டுள்ளன. இலக்கியங்களில் "விடுதலைப் பாடல்கள்", "போர்க்காலப் பாடல்கள்", "இயக்கப்பாடல்" என்ற பெயர்களால் சுட்டப்படுகின்றன.

இவற்றின் பாடல்வரிகள் போரின் பல பக்கங்களை பல கோணங்களில் விதந்துரைப்பவையாக எழுதப்பட்டிருந்தன. 

தமிழீழ மக்களின் வாழ்வு, புலம்பெயர் ஈழத்தமிழர்களின் வாழ்வு, விடுதலைப் போரிற்கு ஆட்சேர்ப்பித்தல், போராளிகளின் களவாழ்வு, படைத்துறைக் கிளைகள், கரும்புலிகளின் தாக்குதல்கள் மற்றும் அவர்தம் வாழ்க்கை, வலிதாக்குதல் நடவடிக்கைகள், விடுதலைப்போரிற்கு ஆதரவளிக்கும் சிங்கள/இந்திய வன்வளைப்பு வாழ் மக்களின் வாழ்வு, போராளிகளின் வீரச்சாவுகள், துயிலுமில்லங்கள், இடப்பெயர்வு அவலங்கள், படுகொலை அவலங்கள், வழிபாட்டுத் தலப் பாடல்கள் என விடுதலைப்போரின் அனைத்துக் கூறுகளும் பாடல்களாக வடிப்பிக்கப்பட்டிருந்தன. 

இவ்வாறு வெளிவந்த பாடல்களில் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி வரை வெளிவந்த, புலிகளின் காலத்திய, மொத்தம் 209 இறுவெட்டுகளை அடையாளம் கண்டு தொகுத்துள்ளேன். நான் தொகுத்ததைத் தவிர வேறு ஏதேனும் விடுபட்டிருந்தால் அதனைத் தொகுக்க தெரிவித்துதவுமாறு கேட்டுள்கொள்கிறேன்.

இவை எதிர்காலத்தில் புலிகளின் காலத்திய பாடல்களுக்கும் நான்காம் ஈழப்போரிற்குப் பிறகு வெளிவந்த பாடல்களுக்குமான வேறுபாட்டைக் காட்டுவதோடு இருவேறு காலத்திய பாடல்களை இலகுவாக அடையாளம் காண உதவும் என்று நம்புகிறேன்.

 

ஆக்கம் & வெளியீடு 
நன்னிச் சோழன்


*****

 

"வீரனும் அறவழி போரும்"

2 weeks 5 days ago
"வீரனும் அறவழி போரும்"
 
 
உலகில் எந்த ஒரு பெண்ணும் / தாயும் ஒரு கோழையைப் பெற ஒருபோதும், எப்போதும் எந்த நிலையிலும் எந்த காலத்திலும் விரும்ப மாட்டாள், உதாரணமாக கி மு 1700 க்கும் 1100 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்ட ரிக் வேதத்தில் கூட, விவாஹ சுக்தம்- மண்டலம் 10, சுக்தம் 85 பாடல் 44 இல்
 
"Not evileyed-, no slayer of thy husband, bring weal to cattle, radiant, gentle hearted; Loving the Gods, delightful, bearing heroes, bring blessing to our quadrupeds and bipeds."
 
இப்படி கூறுகிறது. அதாவது நீ பொறாமை, எரிச்சல் அற்றவளாக என தொடங்கி, இடையில் நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது. அது மட்டும் அல்ல இந்த நூற்றாண்டு பாரதியும் இன்னும் ஒருபடி மேலே போய்:
 
“வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை
ஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு”
["சத்ரபதி சிவாஜி"/ பாரதியார்]
 
என மலடிக்கு ஒரு புது விளக்கமே கொடுக்கிறார். அப்படிபட்ட வீரத் தாயையும் அவள் பெற்ற அந்த மா வீரர்களையும் புறநானுறு கவிதையில் விரிவாக 2000 / 2500 வருடங்களுக்கு முன்பே வடித்த பெருமை எங்கள் சங்க தமிழர்களுக்கு உண்டு. மேலும் போரில் இறப்பதே வீரர்களுக்கு அழகு என்பதுடன் அப்படி சண்டையிட்டு இறப்பவர்கள் சொர்க்கத்திற்கு போவதாகவும் குறிக்கப்பட்டிருப்பது, சங்கத் தமிழர்கள் ஒரு உண்மையான வீரனை எவ்வளவு தூரம் உயர்வாக மதித்தார்கள் என்பது புலன்படுகிறது. இதைத்தான் பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணன் சொல்கிறான்:
 
"O son of Kuntī, either you will be killed on the battlefield and attain the heavenly planets, or you will conquer and enjoy the earthly kingdom. Therefore, get up with determination and fight."
 
"குந்தியின் மகனே! கொல்லப்பட்டாலோ நீ சொர்க்கத்தை அடைவாய்; ஜெயித்தாலோ பூமியை அனுபவிப்பாய். ஆகையால் போருக்குத் துணிந்தவனாக எழுந்திரு!
(கீதை 2-37)"
 
மேலும் போரில் மடிந்த, பெரும் வீரர்களை புதைத்த இடத்தில், அவர்களின் நினைவாக நடு கல்கள் நாட்டப்பட்டதும், போரில் வெற்றி வேண்டி அங்கு நடு கல் வணக்கம் செய்வதும் ஒரு வழமையாக இருந்ததுள்ளது சங்க பாடல்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதாவது போரில் தன் வீரத்தை நிலை நிறுத்தி, எதிரி படையை கலங்கடித்து, இறுதியில் வீழ்ந்து மடிந்த அந்த மா வீரனை, எம் மூதாதையர்கள், தெய்வமாகவே போற்றி வணங்கினார்கள்.
 
அதாவது வீரத்தை தெய்வமாக கருதி வழிபாடு நிலை அங்கு இருந்துள்ளது. எனினும் அறம் சார்ந்த வீரமே அங்கு பெருமை உடையதாய் கருதப்பட்டது. அந்த நிலை இன்று அருகிப் போயிற்று. இதை நாம் கண்டு, கேட்டு,அனுபவித்தும் உள்ளோம்.
 
சங்க காலம் என்பது கி.மு. 700 ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 300 ஆம் ஆண்டு வரை உள்ள காலப் பகுதி ஆகும். இக்காலத்தில் தோன்றியது தான் புறநானுறு. அந்த புறநானூற்றில் தமிழர் வரலாற்றை எழுதுவதற்குரிய பல முதன்மைச் சான்றுகள் உள்ளன. எனினும், முழுமையான தரவுகள் இல்லை. அதாவது குறிப்புகள் மட்டுமே உள்ளன. சங்கக் காலம் என்பது இனக்குழு வாழ்க்கை மறைந்து, பேரரசர்களின் ஆட்சி தோன்றத் தொடங்கிய காலம் என்று கூறுவார். இதனால், புறநானூற்றில் இனக்குழுத் தலைவர்கள், குறுநில மன்னர்கள், பெருநில மன்னர்கள் ஆகியோரின் தகவல்கள் கிடைக்கின்றன.
 
அதில் அரசர்களின் வீர செயல்கள், தன் நாட்டிற்காக, தன் இனத்திற்காக போரில் சண்டையிட்டு சாவதையே பெருமையாக கருதும் இயல்பு, அப்படி மாண்ட வீரர்களை தெய்வமாக்கிய பண்பாடு, அப்படி போரில் வீர சாவு அடைகிறவர்கள் சொர்க்கத்திற்கு போவார்கள் என்று உற்சாகப்படுத்தும் ஒரு நம்பிக்கை, இவைகளுக்கு மேலாக, எமக்கு கிடைத்த மிக முக்கிய தகவல் அறவழியில் போரை நடத்தும் வழக்கம்.
 
இது இந்த காலத்திற்கும் தேவையான ஒன்று. இப்ப இந்த ஒழுக்கம் போரில் இருப்பதில்லை. போர் விதி முறை அல்லது அனைத்துலக மனிதாபிமான சட்டத்திற்கு முரணாக செயல்படுகிறார்கள். குழந்தைகள், முதியோர்கள், பெண்கள், தாய்மார்கள், அப்பாவிகள் இவர்களை எல்லாம் கண் மூடித்தனமாக தாக்கி அழிக்கிறார்கள். அது மட்டும் அல்ல வைத்தியசாலை, பாடசாலை, பாதுகாப்பு இல்லங்கள் / இடங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்கள் கூட தாக்கப்படுகின்றன. சரண் அடைந்தவர்களும் கொல்லப்படுகிறார்கள். போர் பிணையாளர்களும் கொல்லப்படுகிறார்கள். இது இப்ப உலகில் பல இடங்களில் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன.
 
ஆனால் முறைப்படி போர் சாற்றும் வழக்கம் பழங் காலத்திலேயே தமிழர்களிடம் இருந்தனை என்பதை புறநானுறு 9 கூறிச் செல்கிறது. கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படும் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பவனை புகழ்ந்து, அவன் அறவழியில் போர் நிகழ்த்தும் பண்புடையவன் என்று போற்றி இப் பாடல் பாடப்பெற்றுள்ளது. அது தான் அந்த முக்கிய தகவல்.
 
அதாவது சங்க காலத்தில் அரசர்கள் நிகழ்த்திய போர்கள் அறவழிப்பட்டவை என்றும், தர்மயுத்தம் என்றும் இதனால் அறிகிறோம். இதே போல கி.மு ஏழாம் நூற்றாண்டு சுமேரிய காவியமான கில்கமெஷிலும் (Epic of Gilgamesh) இது காணப்படுகிறது. [Brien Hallett,The Lost Art of Declaring War]. கில்கமெஷ் காப்பியம் என்பது பண்டைக்கால மெசொப்பொத் தேமியாவில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் இதிகாசம் ஆகும். போர் தொடுக்கப்போகிறேன். ஆனிரை [பசுக் கூட்டம்], ஆனிரை போன்ற இயல்புடைய பார்ப்பன மாக்கள் [பிராமணர்], பெண்டிர், பிணியுடையவர், மக்கட்செல்வம் இல்லாதவர், ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள் என முன்கூட்டியே அறிவித்து தமிழர் போரை ஆரம்பித்தார்கள் என அறிகிறோம். இதோ அந்த பாடல்:
 
"ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் ப·றுளி மணலினும் பலவே!"
 
பசுக்களும்,பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும், பெண்களும், நோயுடையவர்களும், இறந்ததன் பின்னர்த் தென்திசையில் வாழ்வோராகிய முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் ["பிதிர்க்கடன்"/ "இறந்தவர்களுக்கு செய்யும் கடன்" ஆற்றுதற்குரிய புதல்வர்களைப் பெறாதாரையும்] பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்! நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப் போகிறோம்’ என்று இந்த பாடல் கூறுகிறது.
 
அதாவது அரசர்கள் போரில் இப்படி பட்ட அப்பாவிகளை கொல்லக்கூடாது. அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவிட்டுத் தான் போரைத் தொடங்க வேண்டும் என்று கூறுகிறது.
 
அதுதான் யுத்த தருமமாகும். பண்டை மன்னர்கள் அவ்வாறுதான் போர்களை நடத்தினார்கள் என்றும் அது தான் அறவழிப்பட்ட போரின் அடையாளமாகும் என்றும் இப்பாடல் இடித்து கூறுகிறது. இப்படி போரை நடத்திய இந்த மன்னன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, "பஃறுளி ஆற்றின் மணலை விட எண்ணிக்கை மிக்க பலகாலம் வாழ்வானாக” என மேலும் அவனை வாழ்த்துகிறது. பஃறுளி என்பது பழந்தமிழ் நாட்டிலிருந்த ஓர் ஆற்றின் பெயர். பல் துளி என்னும் சொற்கள் இணையும்போது பஃறுளி என அமையும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. No photo description available. No photo description available. 
 
 
 

கல்லோயா குடியேற்றத்திட்டத்தின் 75 ஆவது ஆண்டு  நிறைவு: இனிப்பும் கசப்பும் கலந்த நினைவுகள்! 

3 weeks 2 days ago

 

 
கல்லோயா குடியேற்றத்திட்டத்தின் 75 ஆவது ஆண்டு  நிறைவு: இனிப்பும் கசப்பும் கலந்த நினைவுகள்! 
 

 — எம்.எல்.எம். மன்சூர் —

கல்லோயா குடியேற்றத்திட்டத்தின் 75 ஆவது ஆண்டு  நிறைவு: இனிப்பும் கசப்பும் கலந்த நினைவுகள்! 

அமெரிக்காவின் ‘Time’ சஞ்சிகை அதன் 1954 மே 3 ஆம் திகதி இதழில் ‘Ambassadors with Bulldozers’ என்ற தலைப்பில் ஒரு அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டிருந்தது. சிவில் பொறியியல் கட்டுமானப் பணிகளில் 1912 தொடக்கம் உலக அளவில் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த  Morrisons – Knudson International என்ற அமெரிக்க கம்பெனியின் தலைவர் Harry Morrison இன் புகைப்படத்தை அட்டையில் பிரசுரித்து ‘ஆறுகளை மறித்தவர் – மலைகளை நகர்த்தியவர்’ என்ற வாசகங்கள் அதன் கீழ் பொறிக்கப்பட்டிருந்தன. 

அவருடைய கம்பெனி 1949 – 1951 காலப் பிரிவில் பட்டிப்பளை ஆற்றை மறித்து, இரண்டு மலைகளை இணைக்கும்  விதத்தில் உருவாக்கிய கல்லோயா அணைக்கட்டும், 35  சதுர   மைல் பரப்பளவைக் கொண்ட நாட்டின் மிகப் பெரிய நீர்த் தேக்கமான சேனாநாயக்க சமுத்திரமும் இருபதாம் நூற்றாண்டு இலங்கையின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விவசாய – பொறியியல் துறை சாதனைகள்.

1957 டிசம்பர் மாதம் கிழக்கில் இடம்பெற்ற பெரு மழையின்  போது கல்லோயா நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்க முடியும் என்ற விதத்தில் ஒரு பாரிய அச்சம் நிலவியது. அச்சந்தர்ப்பத்தில் கல்லோயா அபிவிருத்திச் சபையின் பணிப்பாளர் சபை  நிலைமையின் தீவிரத்தை விளக்கி,  அக்கம்பெனிக்கு ஓர் அவசரத் தந்தியை அனுப்பி வைத்தது. 

‘Galboard’ என்ற தந்தி முகவரிக்கு உடனடியாக கிடைத்த பதில் இது:  

“அணைக்கட்டின் இருபுறங்களும் இணைக்கப்பட்டிருக்கும் மலைக் குன்றுகளின் வலிமையை பரீட்சித்துப் பார்க்கவும்” (Check the strength of the two rocks to which the dam is connected to).

தம்மால் நிர்மாணிக்கப்பட்ட அணைக்கட்டின் வலிமை குறித்து Morrisons – Knudson   கம்பெனி வழங்கிய மறைமுகமான உத்தரவாதம் அது. 

1949 இல் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு, கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திர இலங்கையின் முதலாவது மிகப் பெரிய பல்நோக்கு அபிவிருத்தித் திட்டமான “கல்லோயா திட்டம்” இவ்வாண்டில் அதன் 75  ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூருகிறது.

நிதி அமைச்சின் செயலாளராக இருந்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிவில் சேவை அதிகாரியான Huxham என்பவர் 1949 – 1952 காலப் பிரிவில் கல்லோயா அபிவிருத்திச் சபையின் (GODB)  தலைவராக இருந்து வந்தார். ஆனால், அத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட வேகத்திற்கும், அதனுடன் சம்பந்தப்பட்டிருந்த பாரிய சவால்களுக்கும் அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை. அந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து பிரதமர் டி எஸ் சேனாநாயக்க (அப்பொழுது காணிகள் ஆணையாளராக பணிபுரிந்து வந்த) கே கனசுந்தரத்தை தனிப்பட்ட முறையில் அழைத்து ‘நீங்கள் கட்டாயமாக இப்பணியை பொறுப்பேற்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். அவ்வாறு செய்வதன் மூலம் தனது அரச சேவை ஓய்வூதியத்தை இழக்க வேண்டி நேரிடும் என்பதனை நன்கு அறிந்திருந்த போதிலும், பிரதமரின் வேண்டுகோளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் கனகசுந்தரம் அப் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். 

அது பிரதமர் டி எஸ் சேனாநாயக்கவின்  அரசியல் தலைமையின் கீழும், கனகசுந்தரம் என்ற தமிழ் சிவில் சேவை அதிகாரியின் நிறைவேற்றுத் தலைமையின் கீழும் முன்னெடுக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான முயற்சி. சிங்களவர், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர் மற்றும் மலே ஆகிய இனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் மட்டுமின்றி, பெருந்தொகையான வெளிநாட்டு சிவில் பொறியியலாளர்கள், அணைக்கட்டு வல்லுனர்கள், வனவளம் தொடர்பான நிபுணர்கள், கட்டடக் கலைஞர்கள், இயந்திரப் பொறியியலாளர்கள் ஆகிய பன்முகத் திறன்களை கொண்டிருந்த  ஓர் அணியின் கூட்டு உழைப்பு அது. 

அத்திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் (அப்போதைய) மட்டக்களப்பு மாவட்டத்தின் கிட்டத்தட்ட 1400  சதுர மைல் நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்ததுடன், அப்பிரதேசம் முழுவதும் நேரடியாக கல்லோயா அபிவிருத்திச் சபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.          அந்நிலப்பரப்புக்குரிய அரசாங்க அதிபரின் அதிகாரங்கள் மட்டுமன்றி, இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என்பவற்றுக்குரிய அதிகாரங்களும், கருமங்களும் இச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. 

அந்த விதத்தில் அச்சபையின் தலைவர் என்ற முறையில் கனகசுந்தரம் அபரிமிதமான அதிகாரங்களைக் கொண்டிருந்தார்.

பாரம்பரியமாக தமிழ் மொழி பேசும் இரு சமூகங்கள் செறிந்து வாழ்ந்து வந்த (அப்போதைய) மட்டக்களப்பு மாவட்டத்தின் குடிசனவியல் தொகுப்பை (Demographic Composition) சிதைத்து, கிழக்கை சிங்களமயமாக்கும் பேரினவாத செயல்திட்டத்தின் ஒரு பாகமாகவே பொதுவாக “கல்லோயா திட்டம்”  சிறுபான்மை சமூகங்களால் நோக்கப்பட்டு வந்திருக்கின்றது. 

1952 இல் ஒரு நாள் கொழும்பு – மட்டக்களப்பு ரெயில் வண்டியில் எஸ் ஜே வி செல்வநாயகம் கே. கனகசுந்தரத்தை தற்செயலாக சந்தித்த பொழுது கூறிய பின்வரும் வார்த்தைகள் அந்தக் கண்ணோட்டத்தின் ஒரு பிரதிபலிப்பாகும்: 

“Young man –  Do you realize that you are driving a dagger into the hearts of the Tamil people?” 

அக்கேள்விக்கு GODB தலைவர் பின்வருமாறு பதிலளித்ததாக கூறப்படுகிறது –

“அப்படி இல்லை…….  நான் கேகாலையில் உதவி அரசாங்க அதிபராக பணியாற்றிய காலத்தில் கண்டிய சிங்களவர்களின் கடும் வறுமையையும், காணிப் பிரச்சினையையும் நேரில் பார்த்திருக்கிறேன். கல்லோயாவில் புதிய குடியேற்றங்கள் அமைக்கப்படவிருக்கும் பிரதேசங்கள் மனித நடமாட்டம் இல்லாத காட்டுப் பிரதேசங்கள். புராதன காணிகள் (Purana Lands) என அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் கிராம விஸ்தரிப்புக்கென தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும்  போதிய நிலப்பரப்புக்கள் இருந்து வருகின்றன.” 

கே கனகசுந்தரத்தின் புதல்வரான அஜித் கனகசுந்தரம் “60 ஆண்டுகளுக்குப் பின்னர்  கல்லோயா திட்டம் குறித்த ஒரு மீள் பார்வை” என்ற தலைப்பில் எழுதியிருக்கும் விரிவான கட்டுரை (சன்டே ஐலன்ட், 2016 செப்டம்பர் 18, 25) பெருமளவுக்கு சர்ச்சைக்குரிய இந்தத் தலைப்பு தொடர்பாக முன்முடிவுகள் எவையுமின்றி, நிதானமான ஒரு பார்வையை முன்வைக்கின்றது –

“அநேகமாக இப்பொழுது எவரும் கல்லோயா திட்டத்தை நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால் சுமார் 20 வருட காலம் அது நவீன சுதந்திர இலங்கையின் முகத்தோற்றத்தை வெளியுலகுக்கு பிரதிபலித்து வந்திருக்கிறது. பின்னர் பல நூறு கோடி ரூபாய் செலவில் அமுல் செய்யப்பட்ட மகாவலி திட்டம் போன்ற பிரமாண்டமான திட்டங்கள் கல்லோயா திட்டத்தின் முக்கியத்துவத்தை மழுங்கடிக்க செய்தன. ஆனால்,  ஏனைய அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் மதிப்பிடப்பட வேண்டிய தர நியமத்துக்கான உரைகல்லாக கல்லோயா திட்டமே இன்னமும் இருந்து வருகின்றது.” 

“………. இலட்சிய ரீதியாக காரியங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான உதாரணம் கல்லோயா திட்டம். அது முழுக்க முழுக்க தேசிய நிதி வளங்களை பயன்படுத்தி, உள்நாட்டு நிர்வாகிகளால் நிறைவேற்றப்பட்ட ஒரு திட்டம். காடுகளை துப்புரவு செய்தல், குடியேற்றவாசிகளை குடியமர்த்துதல், புதிய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை வழங்குதல் என்பன  எல்லாமே திட்டமிட்ட அதே விதத்தில் உரிய காலகெடுவுக்குள் துல்லியமாக நிறைவேற்றப்பட்டன. இங்கு முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விடயம் உபகரணங்களின் கொள்வனவுக்கென பல கோடி ரூபாக்களை செலவிட வேண்டியிருந்த போதிலும் திட்டம் முழுவதிலும் ஊழல், மோசடி, முறைகேடுகள் என்பன குறித்த எத்தகைய குற்றச்சாட்டுக்களும் எழுப்பப்பட்டிருக்கவில்லை என்பதாகும்.”

“………..எனது தந்தை கே கனகசுந்தரம் கல்லோயா அபிவிருத்திச் சபையின் தலைவராக இருந்த காலத்தில் (1952 – 1957)  கொழும்பில் ஒரு வீட்டை கட்டினார். அச்சந்தர்ப்பத்தில் கட்டடப் பொருட்களுக்கான கொள்வனவு கட்டளைகளை அவர் ஒருபோதும் தனது பெயரில் அனுப்பி வைக்கவில்லை. அவ்வாறு செய்தால் வழங்குனர்கள் தனக்கு நியாயமற்ற விலைக் கழிவுகளை பெற்றுத்தர முடியும் என அவர் அஞ்சினார்…….”  

“டி எஸ் சேனாநாயக்க சிங்களவர்களுக்கு சார்பானவர்; ஆனால் தமிழர்களுக்கு எதிரானவர் அல்ல. சரியாக சொல்வதானால் அவரிடமிருந்தது ஒரு விதமான கொவிகம / வெள்ளாளர் சாதி அபிமானம்” என்கிறார் அஜித் கனகசுந்தரம்.

இக்கட்டுரை வரலாற்றாய்வாளர் மைக்கல் ரொபர்ட்சின் “Thuppahi” இணையதளத்தில் மீள் பிரசுரம் செய்யப்பட்ட பொழுது அதற்கு எதிர்வினையாற்றிய பேராசிரியர்கள் சந்திரா விஜேவர்தன  மற்றும்  ஜெரால்ட் பீரிஸ் ஆகியோர் முன்வைத்திருந்த பின்னூட்டங்களும் முக்கியமானவை –

“மலையக தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையை பறிப்பதற்கென 1948 இல் முன்னெடுக்கப்பட்ட நகர்வுகளின் போது ஒரு சில வடபுல தமிழ் அரசியல்வாதிகளும், கண்டிய சிங்கள பிரதானிகளுமே முதன்மையாக காய்களை நகர்த்தினார்கள். அச்சட்ட வரைவின் தயாரிப்பில் (அப்போது பாதுகாப்பு மற்றும்  வெளி விவகார அமைச்சின் நிரந்தரச் செயலாளராக இருந்து வந்த) கந்தையா வைத்தியநாதன் முக்கியமாக  பங்களிப்புச் செய்திருந்தார்.”

“பெருந்தோட்டங்களில் இடதுசாரிகளின் ஊடுருவலை தடுத்து நிறுத்துவதும், குறிப்பாக லங்கா சமசமாஜ கட்சி மலையகத்தில் அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றும் ஒரு நிலை தோன்றுவதை தடுத்து நிறுத்துவதுமே அவர்களுடைய அசல் நோக்கமாக இருந்து வந்தது” – சந்திரா விஜேவர்தன.

கல்லோயா திட்டத்தின் 42 குடியேற்ற அலகுகளில் 9 அலகுகள் இடதுகரை கால்வாய் பகுதியில் (தற்போதைய) மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருந்ததாக கூறிப்பிடும் பேராசிரியர் ஜெரால்ட் பீரிஸ், அப்பிரதேசத்தில் சிங்களவர்களுக்கு காணிகள் எவையும் வழங்கப்படவில்லை எனச் சொல்கிறார்.

கே கே டி சில்வா ” The Galoya Valley Scheme and the People who made it a Reality” (மே 2022) என்ற நீண்ட கட்டுரையில் கல்லோயா திட்டத்தின் சுருக்கமான வரலாற்றை முன்வைப்பதுடன், அதற்குப் பங்களிப்புச் செய்த உள்நாட்டு / வெளிநாட்டு ஆளணியினர் குறித்த தகவல்களை விரிவாக  பதிவு செய்கிறார்.

ஜே எஸ். கென்னடி என்பவர் மட்டக்களப்பு நீர்ப்பாசன பொறியியலாளராக இருந்த பொழுது கல்லோயா நீரேந்து பரப்பில் பட்டிப்பளை ஆற்றின் உள்ளார்ந்த அபிவிருத்தி ஆற்றலை பயன்படுத்திக் கொள்வதற்கென 1936 இல் ஒரு தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் உலகப் போர் காரணமாக இத்திட்டத்தின் அமுலாக்கம் தாமதப்படுத்தப்பட்டது.

நீர்ப்பாசன பணிப்பாளர் பதவியை வகித்த முதலாவது இலங்கையர் (1951) டபிள்யு ரி ஏ அழகரத்தினம். அவர் 1940 களின் தொடக்கத்தில் மட்டக்களப்பு நீர்ப்பாசன பொறியியலாளராக  பணியாற்றிய பொழுது  காடுகளில் நடந்து சென்று,  இங்கினியாகலயில் முகாம் அமைத்து தங்கி நின்று, இது தொடர்பான பூர்வாங்க மதிப்பீட்டாய்வுகளையும், விசாரணைகளையும் மேற்கொண்டிருந்தார்.  

அது தவிர, மட்டக்களப்பு மாவட்டத்தை அரசாங்க சபையில் பிரதிநிதித்துவம் செய்த தமிழ் அரசியல்வாதிகள் பலரும் பட்டிப்பளை ஆற்று வடிநிலத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை குறித்து 1940 கள் நெடுகிலும் தொடர்ந்து குரலெழுப்பி வந்திருக்கிறார்கள். கல்லோயா அபிவிருத்திக்கான விரிவான திட்டங்களும், இங்கினியாகலையில் அமைக்கப்படவிருக்கும் அணைக்கட்டு மற்றும் நீர்த்தேக்கம் என்பன தொடர்பான பொறியியல் வடிவமைப்புக்களும் 1946 லேயே தயாரிக்கப்பட்டிருந்தன. 

இந்தப் பின்புலத்திலேயே இத்திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான முக்கியமான ஒரு அரசியல் தீர்மானத்தை பிரதமர்  டி எஸ் சேனாநாயக்க 1949 இல் மேற்கொண்டார். அவ்வாண்டில்  ஒரு  பாரளுமன்ற சட்டத்தின் மூலம் கல்லோயா அபிவிருத்திச் சபை  ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால், பலர் நம்புவதைப் போல, கல்லோயா திட்டம் டி எஸ் சேனாநாயக்கவின் கற்பனையில்  உருவான ஒரு திட்டம் (Brainchild) அல்ல என்பதனை நிரூபிப்பதற்கு போதுமான விரிவான தகவல்களை தருகிறது கே கே டி சில்வாவின் கட்டுரை.

1956 ஜூன் மாதம் 11 ஆம்  திகதி தொடக்கம் நான்கு நாட்கள்  அம்பாறையிலும், இங்கினியாகலயிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் கல்லோயா திட்டத்தின் தொடக்க கால வரலாற்றில் ஏற்பட்ட ஒரு பெரும் களங்கம். GODB இல் பணியாற்றிய தமிழ் ஊழியர்களை இலக்கு வைத்து இந்த வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. ஜூன் 5-ம் தேதி தமிழரசு கட்சி காலி முகத்திடலில்  நடத்திய சத்தியாகிரகத்தின் போது பலர் தாக்கப்பட்டார்கள். அதனையடுத்து  மட்டக்களப்பில் பத்தாயிரம் தமிழர்கள் கலந்து கொண்ட ஒரு எதிர்ப்புப் பேரணி நடத்தப்பட்டதுடன், அதன் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்தார்கள். பின்னர் மட்டக்களப்பு, காரைதீவு மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் சிங்களவர்களுக்கு எதிரான (சார்பு ரீதியில் சிறு அளவிலான) ஒரு சில வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

இச்சம்பவங்கள் குறித்த செய்திகள் ஊதிப் பெருப்பிக்கப்பட்ட வதந்திகளாக அம்பாறையை வந்தடைந்த பொழுது 11 ஆம் தேதி அங்கு வன்முறை வெடித்தது. புதிய குடியேற்றவாசிகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு வன்முறைக் கும்பல் GODB வாகனங்களையும், வெடிபொருட்களையும் பலவந்தமாக கைப்பற்றி நிகழ்த்திய கொடூரங்களின் போது குறைந்தது 100 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

பெருமளவுக்கு சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த அலுவலக ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆகியோரின் பங்களிப்புக்களுக்கு ஊடாக நிறைவேற்றப்பட்ட ஒரு திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் அந்த ஊழியர் அணியைச் சேர்ந்த சுமார் 100 பேரை கொலை செய்தார்கள் என்பது வரலாற்றின் பெரும் முரண்நகை.

அம்பாறை வாடி வீட்டில் 85 GODB தமிழ் ஊழியர்கள் தமது குடும்பங்களுடன் தஞ்சம் புகுந்திருந்திருந்தார்கள். அவர்களில் கனகசுந்தரமும், அவரது மனைவியும் இருந்தார்கள். பத்மநாதன் என்ற பொலிஸ் அதிகாரி 5 (சிங்கள) பொலிஸ்  உத்தியோகத்தர்களுடன் வன்முறைக் கும்பலைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தார். நிலைமை கைமீறிச் செல்வதை உணர்ந்த கனகசுந்தரம் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு பத்மநாதனுக்கு   கட்டளையிட்டார். அதனையடுத்து சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று நபர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார்கள். ‘அதன் பின்னர் ஒரு சில நிமிடங்களில் அந்தக் கும்பல் மாயமாக மறைந்தது’ என எழுதுகிறார் அஜித் கனகசுந்தரம்.

1956 வன்முறைச் சம்பவங்கள் கல்லோயா பள்ளத்தாக்கு நெடுகிலும் துளிர் விட்டுக் கொண்டிருந்த புதிய நம்பிக்கைகளை சிதைத்ததாக  கூறும் கனகசுந்தரம், கல்லோயா அபிவிருத்திச் சபை ஈட்டிக் கொண்டிருந்த புதிய பொறியியல் திறன்களை பயன்படுத்தி, தமிழ், முஸ்லிம் விவசாயிகளுக்கு பயன்படக்கூடிய விதத்தில் புராதன கிராமங்களில் குறைந்த செலவில் ஒரு அணையை நிர்மாணிப்பதற்கென தயாரிக்கப்பட்டிருந்த திட்டங்களும் அதனுடன் இணைந்த கைவிடப்பட்டதாக  சொல்கிறார்.

அதன் பின்னர் 1983 நிகழ்த்தப்பட்ட இன அழிப்புச் செயல்களுக்கான ஒத்திகையாகவே கல்லோயா வன்முறை இருந்து வந்தது என்பது அவருடைய கருத்து. 1983 வன்முறையின் மூலம் மிக  மோசமாக பாதிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேறியவர்களில் அஜித்  கனசுந்தரமும் ஒருவர்.  அப்பொழுது அவர் இலங்கை மத்திய வங்கியில் பணியில் இருந்தார்.  ஹோகந்தரையில் இருந்த அவருக்குச் சொந்தமான 8 ஏக்கர் பரப்பளவிலான கால்நடைப் பண்ணை முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டதுடன், கால்நடைகளும் கொல்லப்பட்டன. அதன் பின்னர் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த அவர் ஒரு  சர்வதேச வங்கியில் நீண்ட காலம் உயர் பதவிகளை வகித்து வந்துள்ளார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான அஜித் கனகசுந்தரம் “Tale of Two Countries: Sri Lanka and Singapore” (2018) என்ற மிக முக்கியமான நூலின் ஆசிரியர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அப்பொழுது பேராதனை பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக பணியாற்றிய ஸ்டான்லி தம்பையா 33 மாணவர்களை  (26 சிங்கள மாணவர்கள், 7 தமிழ் மாணவர்கள்) அழைத்துக்கொண்டு புதிய குடியேற்றவாசிகள் தொடர்பான சமூக – பொருளாதார ஆய்வொன்றை நடத்துவதற்காக இங்கினியாகலைக்கு சென்றிருந்தார்.  அங்கு நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த துல்லியமான விவரங்களுடன் கூடிய ஓர் அறிக்கையை அவர் உபவேந்தர் ஐவர் ஜென்னிங்சிடம் சமர்ப்பித்திருந்ததுடன், பல்கலைக்கழகத்தின் பழைய ஆவணக் குவியல்களிலிருந்து அந்த அறிக்கை பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

பிற்காலத்தில் அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சமூக மானிடவியல் துறை பேராசிரியராக பணியாற்றிய ஸ்டான்லி தம்பையா (1929 –  2014) எழுதிய “Buddhism Betrayed: Religion, Politics and Violence in Sri Lanka” (1992) என்ற நூல் சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்த நவீன இலங்கை தொடர்பான மிக முக்கியமான ஒரு வரலாற்று ஆவணம். இன்றைய இலங்கையின் சிறுபான்மை சமூகங்களுக்கும், இடதுசாரிகளுக்கும், அதேபோல மிதவாத அரசியல் தலைவர்களுக்கும் பெரும் சவாலாக எழுச்சியடைந்திருக்கும் ‘Political Buddhism’  என்ற எண்ணக் கருவின் தோற்றத்தையும், அதன் பன்முக பரிமாணங்களையும் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவரும் கட்டாயமாக வாசிக்க வேண்டிய நூல் அது.

1956 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து புதிய அரசாங்கத்தின் முன்னுரிமைகளிலும், அணுகு முறையிலும் மாற்றங்கள் நிகழத் தொடங்கின. புதிய அரசாங்கத்தின் காணி, காணி அபிவிருத்தி மற்றும் விவசாய அமைச்சராக சி பி டி சில்வா பதவி ஏற்றார். அந்த அமைச்சின் கீழேயே கல்லோயா அபிவிருத்திச் சபை இருந்து வந்தது. கனகசுந்தரமும், சி பி டி சில்வாவும்  நெருங்கிய நண்பர்கள். 1935 இல் இலங்கை சிவில் சேவைக்கு போட்டிப் பரீட்சையின் மூலம் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட ஒன்பது பேரில் புள்ளிகள் அடிப்படையில் முதலாம் இடத்தில் இருந்தவர் கனகசுந்தரம் (இரண்டாம் இடம் – ஏ எம் ஏ அஸீஸ்; எட்டாவது இடம் –   சி பி டி சில்வா ).  

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அமைச்சர் சி பி டி சில்வாவின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விதத்தில் காரியங்கள் அரங்கேறின. 1957 இல் கனகசுந்தரம் GODB  தலைவர் பதிவியிலிருந்து நீக்கப்படுகிறார். அதன் பின்னணி குறித்த அஜித் கனகசுந்தரத்தின் விளக்கம்  – 

“பல ஆண்டுகளுக்குப் பின்னர்  சி பி டி சில்வா   நோய்வாய்ப்பட்டு, சிகிச்சைக்காக இங்கிலாந்து  வந்திருந்தார். சிகிச்சை முடிந்து எங்கள் லண்டன் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்த பொழுது எனது அப்பாவிடம் இப்படிச் சொன்னார்:

கனகஸ் – என்னால் ஒன்றும் செய்ய  முடியவில்லை. பிலிப் (குணவர்தன) பண்டாவிடம் (பிரதமர்) சொன்னார்: ‘கல்லோயா அபிவிருத்திச் சபை போன்ற உயர் அதிகாரங்களை கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தில் தமிழர் ஒருவர் தலைவராக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் உடனடியாக நீக்கப்படாவிட்டால் அதற்கு எதிராக நான் எனது தொழிற்சங்கங்களை களம் இறக்குவேன்’.  மிகவும் பலவீனமான நிலையில் இருந்து வந்த பண்டாரநாயக்க அதற்கு உடன்பட வேண்டியிருந்தது. அதனால் தான் நாங்கள் உங்களை நீக்கினோம். 

ஆனால், அது தொடர்பாக குற்ற உணர்ச்சியில் இருந்த பண்டாரநாயக்க, பிரிட்டனுக்கான இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராக  கனகசுந்தரத்தை அனுப்பி வைக்கிறார். 

அஜித் கனசுந்தரத்தை போலவே இன்னும் சிலர் – குறிப்பாக கல்லோயா திட்டத்தில் பணியாற்றிய வெளிநாட்டவர்களின் பிள்ளைகள் – 1950 களில் இங்கினியாகலயில் கழிந்த தமது பிள்ளைப் பருவ நாட்களை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்திருக்கிறார்கள். மாதிரிக்காக ஒரு சில நினைவுகள் கீழே –

இரண்டாவது உலகப் போரின் போது  அகதியாக இடம்பெயர்ந்த  உக்ரேயின் நாட்டைச் சேர்ந்த சிவில் பொறியியலாளர் ரோமன் செகோவட்ஸ்கி 1950 – 1961 காலப் பிரிவில் கல்லோயா திட்டத்தில் பணியாற்றினார்.  அலுவலக கட்டடங்களையும், ஊழியர் குடியிருப்புக்களையும் வடிவமைத்தவர் அவர்.

1951 இல் இலங்கையில் பிறந்த அவருடைய மகன் அன்ட்றியாஸ் தொடக்கத்தில் இங்கினியாகல சிங்கள பாடசாலையில் சேர்ந்து படித்தார். பின்னர் கொழும்பு சென்ட் ஜோஸப்  கல்லூரியில் அவர் தனது கல்வியை தொடர்ந்தார். 1950 களில் இங்கினியாகலயில் கழிந்த தனது பிள்ளைப் பருவ நாட்களை நினைவு கூரும் அவர்,  பல்வேறு  சந்தர்ப்பங்களில் தான் தனது அப்பாவுக்கும்,  சிங்கள தொழிலாளர்களுக்கும் இடையில்  உரைபெயர்ப்பாளராக பணியாற்றியதாக சொல்கிறார்.

இலங்கையிலிருந்து வெளியேறி 55 ஆண்டுகளின் பின்னர்  2016 இல் தனது சகோதரியுடன் இங்கு வந்த அவர் இங்கினியாகலைக்குச் சென்று  தனது  பிள்ளைப் பருவ நண்பரான ஜே  பி லயனல் பிரேமசிரியை  சந்தித்தார்.

அமெரிக்கரான Ron Utley  இன் (2008) நினைவுப் பகிர்வு இது-

“மொரிசன் –  நட்சன் கம்பெனியில் வேலை செய்த எனது அப்பா கல்லோயா அணைக்கட்டை நிர்மாணிக்கும் பணியில் பங்கேற்றார். அப்பொழுது எனக்கு வயது 13. அப்பாவுடனும் , ஏனைய அமெரிக்க கட்டுமானத் தொழிலாளர்களுடனும் 18 மாதங்கள் நான் பிரதான முகாமில் தங்கியிருந்தேன். இந்த ஆண்டு எனக்கு 70 வயது நிறைவடைகின்றது. இங்கினியாகலயிலும், உஹனவிலும் கழித்த அந்த இனிமையான நாட்களையும், எனது வாழ்க்கையின் ஒரு பாகமாக இருந்து வந்த நண்பர்களையும் நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன்…….”

கல்லோயா திட்டத்தின் உருவாக்கத்திலும், அமுலாக்கலிலும் இன ரீதியான பாரபட்சம் (Ethnic  Bias ) இருந்து வரவில்லை என அஜித் கனகசுந்தரம் மற்றும் கே கே டி சில்வா போன்றவர்கள் குறிப்பிடுகிறார்கள். அது சரியாக இருக்கலாம். ஆனால், மட்டக்களப்பு / அம்பாறை மாவட்டங்களின் குடிசனவியல் தொகுப்பில் அது எடுத்து வந்த மாற்றத்தையடுத்து, கிழக்கில் இன உறவுகளில் தொடர்ந்து பதற்ற நிலைமைகள் நிலவி வருவது அதன் எதிர்மறையான விளைவுகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. 

கரையோர அம்பாறை மாவட்டம் தொடர்பாக முஸ்லிம் சமூகம் சார்பில் முன்வைக்கப்பட்ட ஒரு கோரிக்கையையடுத்து தென்னிலங்கையில் எழுந்த இனவாத  எதிர்ப்பலை மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்துக்கு புதிய நகர சபை ஒன்றை உருவாக்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு இனவாதச் சக்திகள் தெரிவித்த கடும் ஆட்சேபனை என்பன ‘இலங்கை ஒரு பல்லின, பல் சமய ஜனநாயக நாடு’ என்ற விதத்தில் நிலவி வரும்  பொதுவான நம்பிக்கைக்கு விடுக்கப்பட்ட ஒரு பெரும் சவால். 

‘தனி மாவட்டம் தரவும் முடியாது; சிறுபான்மை சமூகங்கள் பெரும்பான்மையாக  வாழ்ந்து வரும் ஒரு மாவட்டத்திற்கு தமிழ் பேசும் அதிகாரி ஒருவரை அரசாங்க அதிபராக நியமனம் செய்யவும் முடியாது’ என்பதே இத்தரப்பின் நிலைப்பாடு. சிறுபான்மை அதிகாரி ஒருவர் நியமனம் செய்யப்படுவது ஒரு விதத்தில் வெறுமனே ஒரு அலங்காரப் பெறுமதியாக (Ornamental Value) மட்டுமே இருந்து வர முடியும். ஒரு குறியீட்டு மதிப்புக்காக கூட அவ்வாறு செய்வதற்கு அவர்கள் தயாராக இல்லை.

  ‘எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் புதிதாக மலரவிருக்கும் இலங்கையில்’ சிறுபான்மை சமூகங்களின் நியாயமான கோரிக்கைகள் – தர்க்க ரீதியில் நியாயப்படுத்தப்படக்கூடிய கோரிக்கைகள் – எவ்வாறு எதிர்கொள்ளப்படும் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

https://arangamnews.com/?p=10659

 

"Dr. Nagalingam Ethirveerasingam (PhD)" / மகன் அர்ஜுனன்  எதிர்வீரசிங்கத்தின் கடிதம் / தகவல்

3 weeks 3 days ago
"Dr. Nagalingam Ethirveerasingam (PhD)" / மகன் அர்ஜுனன்  எதிர்வீரசிங்கத்தின் கடிதம் / தகவல்
 
On Thursday, 18 April 2024 at 11:55 am Dr. Nagalingam Ethirveerasingam (PhD) passed away peacefully at his home in Los Angeles, California, USA. He was surrounded by his family. He was 89 years old.
 
Nagalingam Ethirveerasingam (Ethir) was born in 1934 in a one-room hut with a palmyrah palm leaf roof and a mud floor in Periyavillan, a small village on the Jaffna Peninsula. He taught himself to high jump in his backyard by analysing pictures in an athletics book he had won as a prize after one of his first meets at Jaffna Central College. He made a silent promise to himself that he would make it to the Olympics after watching a newsreel of the 1948 Olympic Games at a theatre in Jaffna Town. Four years later, at the age of 17, he competed at the 1952 Olympic Games in Helsinki, Finland. His athletics journey continued as he went on to compete at the 1956 Melbourne Olympic Games and won the first Gold Medal in any sport for Ceylon at the 1958 Asian Games in Toyoko, followed by a Silver Medal at the 1962 Asian Games In Jakarta, Indonesia.
 
Ethir broke high jump records at every age while at Jaffna Central College, performing strengthening exercises with homemade weights using old bus axles and other bus parts. After winning the National Meet in Colombo in 1951, he finally acquired a specialist athletics coach, P.E. Rajendra, and a workout regime. He was then selected to be on the team for the 1952 Olympic Games in Helsinki, traveling by ship for over one month to reach Finland. He next participated in the 1954 Asian Games, where he placed fourth despite jumping the same height as the medal winners, setting a new Asian Record that he shared with them. 
 
In 1955 and 1956, Ethir was voted the Ceylon Daily News "Sports Star of the Year." He transferred to St. Joseph's College, Colombo, for his 'A' Levels and to be nearer his coach. In 1956, he was awarded a full athletic scholarship to the University of California, Los Angeles (UCLA). He later earned a Master’s Degree from California Polytechnic University, San Luis Obispo, and a PhD from Cornell University in 1971. 
 
In 1958, despite co-holding the Asian High Jump record, as well as the Ceylon record, he was initially not selected to be on the team for the Asian Games in Tokyo, Japan. However, due to a series of newspaper articles written by Daily News Sports Editor Carlton Seneviratne, the selection committee relented, allowing Ethir to participate. But being selected so late, the committee told him he had to find and pay his own way to Tokyo from Los Angeles. A benefactor, Donavan Andre, donated US$ 5,000 for his travel just a few days before the games. He arrived shortly before the Games began, wearing his UCLA track suit with the Ceylon insignia patch pinned on, as he wasn't provided with a uniform by the association. His fellow teammates then elected him Captain of the team. (YouTube video of Ethir jumping at the Asian Game with his narration: https://youtu.be/LLAXSs67Dpw?si=YFJrfm9pyM6BSfI7)
 
Ethir not only won the Gold Medal but also set a new Asian and Ceylon record of 6 feet 8 inches (2.03 meters). His Ceylon record lasted until 1989. Meanwhile, back in Ceylon, the 1958 Anti-Tamil riots were occurring at the same time that he was competing. He was unaware of the events unfolding in his country until he spoke to his brother upon returning to the USA. 
 
History repeated itself in 1960 and 1962. In 1960, despite being the Asian and Ceylon High Jump record holder, and jumping the qualifying height for the Olympics, he was not selected for the Mexico City Olympic Games. Again, in 1962, a campaign was required for his selection, and he won a Silver Medal at the Asian Games in Jakarta. 
 
Ethir was a witness to several pivotal events in the troubled pre-war history of Ceylon/Sri Lanka. In 1956, he was almost killed when he and two friends went to observe the Federal Party's Satyagraha at the Galle Face esplanade against the "Sinhala Only Bill" that was to be introduced in Parliament. In the attacks against the peaceful protesters that ensued and anti-Tamil riots that spread across the country, Ethir and his two friends were almost killed by rioters. Fortunately, one of the rioters recognised him from the pictures in the newspapers when he won the Ceylon “Sports Star of the Year“ award. This man then took them into a pharmacy and told the pharmacist to let them stay until it was safe. 
 
Another historic event that he witnessed was the 20 February 1961 Satyagraha at the Jaffna Kachcheri by members of the Tamil political parties. This peaceful protest was also met with violence by the state. 
 
After graduating from UCLA with a bachelor’s degree, he returned to Ceylon but struggled to find employment in his field - Agriculture Education. He returned to the United States to earn his Master’s Degree and then attempted to find employment in Ceylon again. However, like many thousands of Tamils, he was unable to do so and instead accepted an offer to teach in Sierra Leone at the University of Njala. Over his academic career, he worked at Universities in Sierra Leone, Nigeria, and Papua New Guinea. He also worked for UNESCO. 
 
It was in 1965 in Sierra Leone that he met and married the love of his life, Juliet Ann Power. She had joined the US Peace Corps after graduating from university and was also posted to Sierra Leone. They had three children and eight grandchildren and would have celebrated their 58th wedding anniversary in May of this year. 
 
In 1994, after retiring at the age of sixty, Ethir wanted to ‘give back’ to his country and people for all the support he had received during his athletics career. He applied for a position at the University of Jaffna, Kilinochchi Campus (Agriculture) at the height of the war. His application was accepted and despite the dangers due to the ongoing war and severe embargoes on fuel, electricity, medicine, and other essential items to most of Northern Sri Lanka, he returned to his homeland to work in the LTTE-controlled Vanni on a one-year contract. 
 
Rather than working for only one year and returning to the US, he stayed on in the Vanni as an unpaid volunteer after his contract ended, working tirelessly on humanitarian, education, and sports projects to aid civilians impacted by the conflict. He was in Kilinochchi in October 1995 when 500,000 civilians were displaced from the Jaffna Peninsula to the Vanni and other areas. He was part of the team in Kilinochchi that received the Internally Displaced Persons and coordinated their emergency food and shelter. 
 
He felt that all his training and academic career had prepared him for this mission and remained an unpaid volunteer for the rest of his life; living and working in the North & East of Sri Lanka for 6 to 10 months of every year from 1994 until the COVID pandemic in 2020. He relied on benefactors in the Tamil Diaspora and the support of his wife, Juliet, to cover his expenses. His work focused on education, sports, and helping the most marginalised communities. All his life he was a forceful opponent of the caste system. 
 
His last trip to Sri Lanka, whose citizenship he never relinquished despite being eligible for US citizenship, was February to April of 2023 when, at the age of 88 and despite contracting COVID while in Jaffna, he gave workshops in Jaffna and Kilinochchi for athletics coaches and athletes on coaching methods and talent recognition. 
 
During the years from 1994 until the end of the war, Ethir worked tirelessly for peace and a negotiated end to the war. He traveled the world, meeting with governments, political leaders, human rights groups, and the Tamil Diaspora to advocate for civilians affected by the war, and later, the 2004 Tsunami. Some of the most important work was what he accomplished after the end of the war in 2009. His sporting achievements and fame ensured that he had access to and was well respected by all sides in the conflict. As a result, he was able to meet with and act as a conduit for unofficial messages between the warring parties aimed at creating the conditions for peace talks. The Harvard Initiative in 1997 was one of these efforts, which like countless others unfortunately failed. 
 
He directly impacted thousands of people through humanitarian and development projects in education and sports for war and tsunami-affected persons, inspiring others to live selflessly and work for the betterment of society. These projects and initiatives spanned various sectors and included the differently-abled for whom he was a lifelong advocate. Notably, after the war ended he co-conceived the SERVE Institute, which made educational videos that were distributed to schools throughout the North and East. Due to the lack of qualified teachers in some of the remote areas of the North and East most severely affected by the war, especially the areas inhabited by marginalised persons due to their caste. The Institute made videos in Tamil of expert teachers teaching lessons in Mathematics, Chemistry, Physics, and other subjects and distributed these to schools throughout the North and East. They were a valuable resource for students when the COVID pandemic made attending school impossible. 
 
Ethir was also the force behind the groundbreaking study of the Northern education system in 2014 that consulted thousand of parents, educators, community leaders, and administrative staff. The resulting Northern Education System Review (NERS) made wide-ranging, revolutionary recommendations to improve the education system. Many of these recommendations were incorporated by the Northern Province Ministry of Education. The National Ministry of Education in Colombo was also impressed and incorporated some of the recommendations and conducted similar studies in other parts of the country. (Link to the report: https://www.edudept.np.gov.lk/reviewreporteng.html)
 
Ethir believed in helping people no matter their ethnicity, religion, or linguistic background. In his travels and coaching throughout Sri Lanka, he identified athletes who he thought could compete at an international level. The first of these was Manjula Kumara Wijesekara, who would go on to be the Sri Lankan record holder in High Jump. Manjula could only speak a little English and Ethir almost no Sinhalese when Ethir invited him to the US to live with his family in Los Angeles. Manjula lived with Ethir’s family for a year during which Ethir coached him and he took intensive English classes. He eventually earned a full scholarship to the University of Southern California (USC). Ethir did the same with current Sri Lankan high jump record holder Ushan Thiwanka Perera, and high jumpers Nalin Priyadarshana, and Purnima Gunarathna who all stayed at his home in LA while he coached them and assisted them in their quest to receive scholarships to US universities. 
 
Sri Lankan Olympic Silver medalist Susanthika Jayasinghe also stayed at his home and was coached by him for three months in 2007 when she made her ‘comeback’ to athletics. She won the Bronze medal at the World Championships in Osaka, Japan that year. Both Susanthika and Manjula helped in post-war coaching clinics that Ethir conducted in Northern Sri Lanka. In 1998, Sri Lankan President Chandrika Kumaratunga Bandaranaike offered him the honorific ‘Deshabandu,’ which he respectfully declined, stating in his letter to her, “I cannot in good conscience accept such a title when my people are suffering and the war is continuing.” He was the last of his six siblings:
 
 brothers Sellathurai Nithiyanantham, Nagalingam Ratnasingam, Nagalingam Rajasingam, Nagalingam Segarajasingam, Nagalingam Pararajasingam, and sister Parameswary Nadarajah. 
 
Nagalingam Ethirveerasingam is survived by his wife of 57 years, Juliet Ethirveerasingam (Power); his children Sakunthala, Nahulan, and Arjunan; 
 
his eight grandchildren Ryan Corsaut, Samantha Quezada, Cassandra Quezada, Benjamin Quezada, Devin Ethirveerasingam, Lila Ethirveerasingam, Hayden Ethirveerasingam, and Nara Ethirveerasingam; 
 
his son-in-law Paul Quezada, and daughters-in-law Jennifer Ethirveerasingam and Nimmi Harasgama. 
 
In lieu of flowers, please make a contribution to a charity of your choice that works in Sri Lanka. 
 
For more information please contact: Arjunan Ethirveerasingam  
US Mobile:       +1 562 881 3502 
SL Mobile/WhatsApp:   +94 (0) 765770395 
Email:        arjunan100@yahoo.com
439770826_10225051233650788_3612320589413855861_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=UM2leS_NRQkAb77QibT&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDVJxa7_asHl4YY0rzx0vr-HsS6_I5ybL_wpjIonwLrtg&oe=662B5261 May be a black-and-white image of 3 people and text May be an image of 3 people May be an image of 2 people and text that says '1958 2021 Commentary by 1958 Asian Games High Jump Gold Medalist: Dr, Nagalingam Ethirveerasingam Ethi 13 13'
 
 
 
 

"இலங்கையின் பூர்வீக குடிகள்"

1 month ago

"இலங்கையின் பூர்வீக குடிகள்" 


இலங்கை அரசன் மூத்தசிவாவின் [Mutasiva] இரண்டாவது மகன்,  சிவனை வழிபாடும் [Siva worshipping] தீசன் [Tissa /தேவநம்பிய தீசன்], கி.மு. 307 இலிருந்து கி.மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த பொழுது, மகிந்த  [Mahinda] துறவியின் தலைமையில், பேரரசன் அசோகனின் தூதர்கள் அவரையும் அவரின் குடி மக்களையும் புத்த மதத்திற்கு மாற்ற முன், இலங்கையில் எந்த பகுதியிலும் புத்த சமயம் என்று ஒன்றும் இருக்கவில்லை. அதே போல, மகா விகாரை துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக் குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், [creating the Sinhala race by integrating all the Buddhists from different tribes / ethnic groups into one race] இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை. இந்த கால பகுதியில் இந்தியாவில் புத்த மதத்தின் செல்வாக்கு சரிந்து வருவதையும் வட இந்தியாவில் வைதீக மதமும், தென் இந்தியாவில்  சிவனை முழு முதற் கடவுளாக வழிபாடும் சைவ மதமும் மீண்டும் வலுப்பெற்று வருவதையும் கேள்விப் பட்ட புத்த மத துறவிகள், புத்த மதத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து, அதற்க்கு காவலனாக சிங்கள இனத்தை உருவாக்கினார்கள் என்பதே உண்மை. எனவே விஜயன் மற்றும் அவனின் கூட்டாளிகளாக தோணியில் நாடு கடத்தப் பட்டு, இலங்கையில் கரை ஒதுங்கிய மொத்தம் 701 பேரின் ஆரிய ரத்தமும் மற்றும் அவர்கள் அனைவரினதும் தமிழ் மனைவிமாரினதும் , அவர்களுடன் அவர்களுக்கு பணி புரிய வந்த தமிழ் கூட்டாளிகள், வேலையாட்களினதும், மற்றும் அவர்கள் வரும் பொழுது ஏற்கனவே அங்கு வாழ்ந்து கொண்டு இருந்த ஆதி தமிழ் குடிகளின் [நாகர், இயக்கர்] தமிழ் அல்லது திராவிட இரத்தமும் சேர்ந்து, சிங்கள வம்சம் ஒரு கலப்பு வம்சமாக பின் உருவாக்கப்பட்டது என்பது மிக மிக தெளிவு. நாகர்கள் தமிழ் பேசிய சாதியார் அல்லது தொல் திராவிடர் என வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.  அதாவது ஆரியர்கள், திராவிடர்கள், என்போரின் கலப்பு மக்களாகச் சிங்கள மக்கள் உருவாகினார்கள். என்றாலும் சிங்கள இனமாக உருவாக்கப்பட்ட, புத்த மதத்தை பின்பற்றுபவர்களை தவிர, அங்கு இன்னும் சிவனை வழிபாடுபவர்களும், வைதீகத்தை பின்பற்று பவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் புது மொழியான சிங்களத்தை ஏற்காது, தமது பண்டைய மொழியையே, அநேகமாக தமிழையே பேசினார்கள். இலங்கையில் தமிழர் என்ற வார்த்தையை குறிக்கும் கல்வெட்டுகள் பிராகிருதம் அல்லது பாளி மொழியில், கி மு 6ம் அல்லது கி மு 5ம் நூற்றாண்டில் இருந்து 'Damela, Dameda, Dhamila and Damila' என பல அடையாளம் இன்று காணப் பட்டுள்ளது [Epigraphic evidence of an ethnicity termed as such is found in ancient Sri Lanka where a number of inscriptions have come to light datable from the 6th to the 5th century BCE mentioning Damela or Dameda persons] அதாவது சிங்களம் என்ற ஒரு இனம் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளிற்கு முன் தமிழர் என்ற வார்த்தை இலங்கை கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது. எனவே மூத்த சிவாவும் அவன் குடி மக்களும் பேசிய மொழி கட்டாயம் சிங்களம் அல்ல. அது தமிழாகவோ அல்லது ஒரு தமிழ் கலந்த மொழியாகவோ இருக்கலாம் என்பது தெளிவு, அது மட்டும் அல்ல அவன் பெயரிலேயே தமிழ் சொல் 'மூத்த' ['elder'] இருப்பது கவனிக்கத் தக்கது.   


மேலும் விஜயனும் அவனது தோழர்களும் மணந்த பெண்கள், பாண்டிய தமிழ் மகளிர்கள். மகாவம்சத்தின் கெய்கரின் மொழி பெயர்ப்பிலும், முதலியார் விஜயசிங்கவின் மீளாய்விலும் ‘தெற்கேயுள்ள மதுரை’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாளி மொழியில் பாண்டியர் என்ற பெயர் பண்டு என வழங்கப்பட்டது. அதனால் தானோ என்னவோ பண்டுவாசுதேவ, பண்டுகாபய முதலிய அரசபெயர்கள் காணப்படுகின்றன. இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையும், தமிழகமும் ஒரே பகுதியாக இருந்தது. இரு பகுதியிலும் 7000 ஆண்டுகளுக்கு முன் ஒரேவித இனக்குழு மக்களே வாழ்ந்தனர். தமிழ் நாட்டின் ஆதிச்சநல்லூர் போன்ற தென்பகுதியிலிருந்து ஆதி இரும்புக்காலப் பண்பாடு இலங்கையின் வடமேற்குக் கரையில் இருந்த பொம்பரிப்புப் பகுதிக்குப் பரவி அதன்பின்னர் அப்பண்பாடு அநுராதபுரம் போன்ற உள்நாட்டுப் பகுதிக்குப் பரவியது எனலாம். உதாரணமாக பொம்பரிப்புப் பகுதி இரும்புப் பண்பாடு அநுராதபுரத்திற்கு காலத்தால் முந்தியது என இலங்கை தொல்லியலாளர் செனவிரத்ன போன்றவர்கள் கருதுவது இதனை உறுதி செய்கிறது. தீபவம்சம் இரண்டாம் பாடத்தில், [Dīpavaṁsa  II. The Conquering of the Nāgas] இருபதாவது பாடலில், இரண்டாவது முறையாக மீண்டும் புத்தர் இரண்டு நாக மன்னர்கள் தமக்குள்ளே போர் புரிவதைத் தடுப்பதற்காக வந்தார் என்கிறது  [The highest of men went to the place where the Nāgas fought their battle; the merciful Teacher (there) stood in the middle of both noble Nāgas] , இதுவும், விஜயன் வந்தேறு குடியாக இலங்கைக்கு வருமுன், கி மு 5ஆம் / 6ஆம் நூறாண்டில் இலங்கையில் நாகர் வாழ்ந்ததையும், அவர்களுக்கு என ஒன்றுக்கு மேற்பட்ட அரசு இருந்ததையும் சுட்டிக்காட்டுகிறது. 


மேலும் நாக நாடு என்பதை நாகப்பட்டினமும் அதை சுற்றியுள்ள பகுதியாகவும், இலங்கை தீவின் வடக்கு முனையாகவும் வகைப் படுத்தப்படுகிறது.[nagapattinam and the surrounding areas and also the northern tip of island]. நாகர்கள் கி மு 3ஆம் நூறாண்டில் தமிழ் பண்பாட்டுடனும் மொழியுடனும் ஓரினமானார்கள் என க இந்திரபாலா கூறுகிறார் [Scholars like K. Indrapala]  பல அறிஞர்களின் கருத்தின் படி இவர்கள் திராவிட இனத்தவர்கள் ஆவார்கள். உதாரணமாக பல சங்க கால புலவர்களை நாக இனத்தவர்களில் காணலாம், உதாரணமாக முரஞ்சியூர் முடிநாகராயரை கூறலாம். பண்டைய தமிழ் காவியமான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கூட யாழ் குடா நாட்டை  நாக நாடு என குறிப்பிடுகிறது. நாக வழிபாடும், ‘நாக’ என்ற சொல் வரும் பெயர்களும், எடுத்துக்காட்டாக நாகநாதன், நாகலிங்கம், நாகமுத்து, நாகபூசணி மற்றும் இலங்கையின் வடபெரும் பகுதி நாகதீபம் என அழைக்கப்பட்டதும், பல வரலாற்று உண்மைகளை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றன. மேலும் கி.மு. முதல் மூன்று நூற்றாண்டுகளில் இலங்கையில் தமிழ் ஒரு பேச்சு மொழியாக விளங்கியமைக்கு ஆதாரமாய் இலங்கையில் கண்டுபிடிக்கப் பட்ட பிராமிச் சாசனங்கள்  [Tamil inscription] அமைகின்றன என பேராசிரியர் சி. பத்மநாதன் தமது இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, இலங்கை திசமகாராமையில் கண்டு பிடிக்கப்பட்ட, 'திசமகாராமை தமிழ் பிராமிச் சாசனம்' என கூறப்படும், கறுப்பு, சிவப்பு மட்பாண்ட தட்டையான தட்டங்களை சொல்லலாம்.  இதில்  தமிழ் பிராமியில் பொறிக்கப்பட்டு உள்ளது.  இது சுமார் கி.மு 200 ஆண்டு காலத்திற்கு உரியது என அகழ்வினை மேற்கொண்ட ஜேர்மன்  அறிவியலாளர் [German scholars] குறிப்பிடுகின்றார். அதே போல பூநகரி, யாழ்ப்பாணத்திலும் [Poonagari, Jaffna,] கி மு 2ஆம் நூறாண்டு தமிழ் கல்வெட்டு கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த. இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட  சங்க புலவர், ஈழத்துப் பூதன்தேவனார் என்னும் புலவரின் ஏழு பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இலங்கையில் கிருஸ்துக்கு முன், தமிழ் மொழி பேசப் பட்டது மட்டும் அல்ல, இலக்கிய மொழியாக அன்றே வளர்ச்சி அடைந்து இருந்ததையும்  இது எடுத்து காட்டுகிறது. அவரின் ஒரு பாடலை கீழே தருகிறேன், இது தமிழின் சொல்வளம் எவ்வளவுக்கு அன்று வளர்ச்சி அடைந்து இருந்தது என்பதை உறுதிப் படுத்துகிறது. 


"அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ்
வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்
திருந்து இழை அல்குல், பெருந் தோட் குறுமகள்
மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ,
கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி 5
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த
இரும் பல் மெல் அணை ஒழிய, கரும்பின்
வேல் போல் வெண் முகை விரியத் தீண்டி,
முதுக் குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை
மூங்கில்அம் கழைத் தூங்க, ஒற்றும் 10
வட புல வாடைக்குப் பிரிவோர்
மடவர் வாழி, இவ் உலகத்தானே!"
[நற்றிணை 366]  


அவள் தன் அல்குல் பகுதியில் திருந்திய மணி கோத்த ஆடை அணிந்திருப்பாள். அது பாம்பு உரித்த தோல் போல் மென்மையான ஆடை. அதன் ஊடே அவள் அல்குல் கண் இமைப்பது போல் அவ்வப்போது தெரியும். அவள் அகன்ற மார்பகத் தோள் கொண்ட சின்னப் பெண் (குறுமகள்). தூசு இல்லாமல் நூய்மையாகக் கழுவி, கருநீல மணி போல் அழகொழுகத் தோன்றும் கூந்தலை உடையவள். குளிர் காலத்தில் பூக்கும் குறுகிய காம்பை உடைய முல்லை மலரை அந்தக் கூந்தலில் சூடிக்கொண்டிருப்பாள். அதில் வண்டுகள் மொய்க்கும். அந்தக் கூந்தல் மெத்தையில் உறங்குவதை விட்டுவிட்டு, வாடைக் காலத்திலும் பொருள் தேடிக்கொண்டிருப்போர் உண்மையில் மடவர் (மடையர்) என்கிறது அந்த பாடல். பேசுவதற்கு முதலில் சைகை தோன்றி, பின் குரல் மூலம் ஒலி எழுப்பி, பின் அது மற்றவர்களால் கேட்டு உணரக் கூடிய, அடையாளப் படுத்த கூடிய, குரல் அல்லது ஒலி மொழியாக மாறி, அதற்கு ஒரு முதல் கட்டமைப்பாக எழுத்து தோன்றி, பின் அதற்கு ஒரு கட்டுப்பாடாக இலக்கணம் வரையறுத்து, அதன் பின் தான் இலக்கியம் மலர்கிறது. சிங்களம் என்ற இனம், மொழி தோன்ற முன், இந்த ஈழத்து புலவர் எப்படி அழகாக, ஆழமாக, கவர்ச்சியாக ஆனால் மறை முகமாக தன் மனக்கிளர்ச்சியை உங்களுடன் பகிர்கிறார் என்று பாருங்கள் !! 


தீபவம்சம், பாடம் 19 இல் [Dīpavaṁsa [The Chronicle of the Island] XIX.], 17 ஆவது பாடல், இந்த அரசனை கொன்று, தட்டிகன் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். கடைசி ஐந்து ஆட்சிகள் தமிழரினதாக [புலகத்தன், பாகியன், பண்டியமாறன், பழையமாறன் மற்றும் தட்டிகன்] மொத்தம் 14 ஆண்டுகள் 7 மாதம்,  கிமு 103 ஆண்டில் இருந்து ஆட்சிசெய்தனர்.என்கிறது [ Having killed this king, a person Dāṭhiya by name reigned two years. These five sovereigns belonging to the Damila tribe governed fourteen years and seven months in the interval between the two parts of Vaṭṭagāmani’s reign] இலங்கை வரலாற்றில் பதிவான முதலாவது தமிழ் ஆட்சி. 22 வருடங்கள் நிலவியது எனவும், சேனன் குத்திகன்(கி.மு  237-கி.மு 215) என்ற இரு தமிழர் ஆட்சி செய்தனர் எனவும் அது மேலும் கூறுகிறது. இதில் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும், தமிழர் என்ற சொற்பதம் பல இடங்களில் மொழியையும் இனத்தையும் குறிக்க இங்கு பிரயோகிக்கப் பட்டுள்ளது, ஆனால் முதலில் கி பி 4ஆம் நூறாண்டில் எழுதப் பட்ட பாளி நூல் தீபவம்சதில் ஒரே ஒரு முறை தான்  சிஹல [‘Sihala' / lion in Pali] என்ற சொல் பாவிக்கப் பட்டுள்ளது. அதுவும் சிங்கத்திற்குப் பிறகு, தீவு  சிஹல என் அறியப்படும் என்று மாத்திரமே குறிக்கப் பட்டுள்ளது [“ The island of Laṅkā was called Sīhala after the Lion (sīha); listen ye to the narration of the origin of the island which I am going to tell.” Dipavamsa IX, Vijaya’s Story]. "குரைகடலோதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே "என்றும்;" கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே " என்றும்;" குடி தனை நெருக்கி பெருக்கமாய் தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே " என்றும்;... திருஞான சம்பந்தர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பாடியுள்ளார். எனவே பாடும் அளவிற்கு பெருமை அடைவதாயின், இந்த சிவ ஆலயம் கட்டாயம் இதற்கு முன்னதாகவே, மிகவும் பழமைவாந்ததாக இருந்திருக்கும். மகாவம்சம் /முப்பத்து ஏழாவது அத்தியாயம் /மகாசேன மன்னன் என்ற பகுதியில்,[40,41] மன்னர் மணிஹிரா-விகாரையும் கட்டினார், மேலும் மூன்று விகாரையும் நிறுவினார். பிராமண கடவுள்கள் அமைந்த ஆலயங்களை அழித்தார்:- கோகன்ன ஆலயம், எரகாவில்லை என்ற இடத்தில் இன்னும் ஒரு ஆலயம், மூன்றாவதாக  பிராமணர்களின் கிராமமான கலந்தனில் இருந்த ஆலயம் என்கிறது. இங்கு கொடுக்கப்பட்ட  துணை-விளக்க உரையின் படி [According to the Tika]  கோகன்ன அல்லது கோகர்ணம் - ஆலயம், கிழக்கு கடலோரம் அமைந்த ஒன்று என விளக்கம் கொடுக்கப்படுகிறது. அது மேலும்  'இலங்ககை தீவு முழுவதும், புத்தரின் கோட்பாட்டை ,  நம்பாதவரர்களின் ஆலயங்களை அழித்த பின் அவர் நிறுவினார் என்கிறது. அதாவது சிவலிங்கம் மற்றும் அது போல் என மேலும் ஒரு  துணை விளக்கம் கொடுக்கப்பட்டும் உள்ளது. எனவே அங்கு குறிக்கப்பட்ட கிழக்கு கரையோரம் அமைந்த சிவன் கோவில் கோணேஸ்வரமாக இருக்க வாய்ப்பு அதிகம் தென்படுகிறது. மற்ற இரண்டிற்கும் விளக்கம் தேவைப் படுகிறது [The king built also the Manihira-vihara and founded three viharas, destroying temples of the brahmanical gods:- the Gokanna vihara, and another vihara in Erakavilla, anda third in the village of the Brahman Kalanda; moreover ...According to the Tika, the Gokanna-vihara is situated on the coast of the 'Eastern Sea', The Tika then adds : evam sabbattha Lankadipamhi kuditthikanamalayam viddhamsetva, Sivalingadayo nasetva buddha- sasanam eva patitthapesi 'everywhere in the island of Lanka he established the doctrine of the Buddha, having destroyed the temples of the unbelievers, i.e. having abolished the phallic symbols of Siva and so forth ']. ஆகவே இலங்கையில் சிவ வழிபாடும், அந்த வழிபாட்டிற்க்கான ஆலயங்களும் மிகவும் பழமை வாய்ந்தது என்று சுட்டிக் காட்டுவதை இங்கு காணலாம். அது மட்டும் அல்ல, ஆலைய உடைப்புகளும் உடைத்த பின் அந்த இடத்தில், விகாரைகள் அமைப்பதும் ஒன்றும் புதிது அல்ல என்பதும் புலப்படுகிறது


ஹென்றி பார்க்கர் [Henry Parker], தனது 1909 இல் எழுதிய பண்டைய இலங்கை [Ancient Ceylon], என்ற புத்தகத்தில், பக்கம் 490 இல், இலங்கையில், அனுராதபுர காலத்தை சேர்ந்த, பிராந்திய எழுத்து வடிவத்தில் ஓம் முத்திரை பொறிக்கப்பட்ட, முதல் நூற்றாண்டிற்கும் நான்காம்  நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட கால நாணயம் கண்டு எடுக்கப் பட்டதாக குறிப்பிடுகிறார் [That the oblong type of coin continued to be issued up to the third or fourth century A.D. is clearly proved by the form of the ' Aum' monogram on the coin nuipbered 47, the m of which is of a type which is found in some inscriptions of that period. I met with a similar letter cut on the faces of two stones inside the valve-pit or ' bisdkotuwa' of a sluice at Hurulla, a tank constructed by King Maha-Sena (277-304 A.D.). Large coins of a circular shape made their appearance at about this time, having a similar ' Aum * monogram on them, and it may be assumed that the issue of the oblong money then either ceased or was of less importance than before] அது மட்டும் அல்ல, மகா சேன  மன்னனுடைய ஆட்சிக் காலத்தில்(கி பி 277-304 ), அவனால் கட்டப்பட்ட  குளத்தின்  அடைப்பான் குழிக்குள் [valve-pit] இரண்டு கற்களில் ஓம் எழுத்து பொறிக்கப் பட்டு இருந்ததாகவும் கூறுகிறார்.  இது அங்கு முன்பு இந்து [சைவ] சமயம் இருந்ததையும் அதனின் தாக்கம் புத்த சமயம் பரப்ப பட்ட பின்பும் தொடர்ந்ததையும் தெளிவாக காட்டுகிறது. 


எனவே சுருக்கமாக ஆதார பூர்வமாக சொல்வதென்றால், விஜயன் என்று ஒரு புராண கதாநாயகன் நாடு கடத்தப்பட்டு வந்தேறு குடியாக 700 தோழர்களுடன் இலங்கை தீவிற்கு வரும் முன்பே சிவ வழிபாடும் தமிழும் அங்கு இருந்துள்ளது. விஜயன் வந்து 250 ~ 300 ஆண்டுகளின் பின்பு தான் புத்த மதம் இலங்கைக்கு வந்தது, மேலும் விஜயன் வந்து 1000 ஆண்டுகளிற்கு பின்புதான் சிங்களம் என்ற இனமோ அல்லது மொழியோ ஒரு கட்டுக் கோப்பிற்குள் உருவாக தொடங்கின. அது மட்டும் அல்ல, மகாவம்சம்  / விஜயனின் பட்டாபிஷேகம்[CHAPTER VII /THE CONSECRATING OF VIJAYA]  46 - 50 இல். அங்கு பல குடியிருப்புகளை ஏற்படுத்திய பிறகு விஜயனுடைய மந்திரிகள் அவனிடம் ஒன்றாக வந்து ‘ஐயனே ! தாங்கள் முடி சூட்டிக் கொள்ள இசைய வேண்டும்" என்கிறார்கள். ஆனால், அவர்கள் வேண்டியும் அவன் மறுத்தான். 'உயர் குல மங்கை ஒருத்தியை', அதே சமயத்தில் அவளை ராணியாகக் கொண்ட பிறகே, பட்டாபிஷேகம் செய்து கொள்ள முடியும்’ என்று கூறி வேண்டுகோளை ஏற்க மறுத்தான். தங்கள் எஜமானனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாக, மந்திரிகள் அதற்கு வழிசெய்வது கஷ்டமாக இருந்த போதிலும், அவ்வகையில் ஏற்பட்ட பயத்தை ஒழித்தவர்களாக, விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள், ஆபரணங்கள், முத்துக்களுடன் சிலரை தென்னிந்தியாவிலுள்ள மதுரை மாநகருக்கு அனுப்பி வைத்தனர்' என்கிறது. [When they had founded settlements in the land the ministers all came together and spoke thus to the prince :  Sire, consent to be consecrated as king But, in spite of their demand, the prince refused the consecration, unless a maiden of a noble house were consecrated as queen (at the same time). But the ministers, whose minds were eagerly bent upon the consecrating of their lord, and who, although the means were difficult, had overcome all anxious fears about the matter, sent people, entrusted with many precious gifts, jewels, pearls, and so forth, to the city of Madhurai in southern (India), to woo the daughter of the Pandu king for their lord,]. இது அன்று, அதாவது கி மு 6ஆம், 5ஆம் நூறாண்டில், தமிழருக்கு உள்ள மதிப்பை பறைசாற்றுகிறது, சிங்கள இனத்தின் முதல் மூதாதையான விஜயன் வாயினூடாகவே 'உயர் குல மங்கை' என மதுரை தமிழ் இளவரிசையை கூற வைத்ததிற்கு, நாம் மகாவம்ச கதையின் நூலாசிரியருக்கு கட்டாயம் நன்றி செலுத்த வேண்டும். 


இலங்கையில் கண்டுபிடிக்கப் பட்ட கிருஸ்துக்கு முற்பட்ட  கல்வெட்டுகளில், 50 மேற்படட இடத்தில் முக்கிய இடத்தை வகுத்த சொல் 'பருமக' [parumaka] ஆகும். இது தென் இந்தியாவில் காணப்பட்ட, தமிழ் சொல் பருமகன் அல்லது  பெருமகன் [perumakan] உடன் ஒன்றிப் போவதாக, ராசநாயகம்,சி பத்மநாதன், ப புஸ்பரத்தினம் போன்ற அறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளார்கள். இதற்கு ராசநாயகம் , தலைவன், கோமான், மன்னன் [chief, lord, and king] மற்றும் பரணவிதான [Paranavitana] இதற்கு அதே பொருள் பட, ஆனால் பொதுப் படையாக இல்லாமல், இந்தோ ஆரியன் தலைவர்கள் [Indo-Aryan chieftains] என விளக்கி உள்ளார். ஆனால் கிருஸ்துக்கு பின் இந்த பெயர் மாற்றப் பட்டு அது மாபருமக [maparumaka / பெரும் பெருமகன்] என பிரதியீடு செய்யப் பட்டுள்ளது. அப்படியான கல்வெட்டு ஒன்று மட்டக்களப்பு, வெல்லாவெளி - தளவாய் என்ற இடத்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த பிராமிச் சாசனம் 'பருமக நாவிக ஷமதய லெணே' என்பதாகும். இதை 'பருமக' [பெருமகன்] என்ற பட்டத்திற்குரிய கப்பல் தலைவன்  ஷமதய என்பவன் கொடுத்த குகை என பொருள் படுத்தப் படுகிறது. எனவே இந்த இடத்தில் கிருஸ்த்துக்கு முன், தமிழ் மொழியையும்  அல்லது வேறு மொழியையும் [பரணவிதான கூறியது போல் இந்தோ ஆரியன்] பேசியோர் வாழ்ந்து உள்ளனர் என்பது உறுதிப் படுத்தப் படுகிறது. எனவே விஜயன் வரும் பொழுது அவனுக்கும் அவன் தோழர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பூர்வீக குடிமக்களில் இவர்களும் ஒருவராகும், எனவே இவர்களை நீங்கள் ஒதுக்க முடியாது ,இவர்களும் இம் மண்ணின் மைந்தர்களே !!  


சக்கரவர்த்தி அசோகன் செய்த தவறா, இல்லை புத்தரின் போதனைகளை பரப்பி தம் கட்டுப் பாட்டில் வைத்திருந்த, வைத்துக் கொண்டிருக்கிற துறவிகள் செய்த தவறா நான் அறியேன் ? ஏன் என்றால் புத்தர் மிக தெளிவாக சொல்கிறார்: 'கடவுளை மையமாகக் கொண்ட சமயங்களில் எது சரியானது, எது தவறானது, என்பதை அறிய அச்சமயவாதிகள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். ஆனால் மனிதனை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தில் எது சரி, எது தவறு என்பதை அறிய நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் வேண்டும். இவ்வாறு நம்மை உணர்ந்து கொள்வதால் எழும் நன்னெறி ஒரு கட்டளையினால் உருவாக்கப்படும் நன்னெறியை விட உறுதியானவையாகவும் பலம் வாய்ந்தவையாகவும் இருக்கும்' என்று அவர் போதித்ததுடன், மற்றவர்களுக்கு உதாரணமாக அவர் நான்கு அடிப்படை பேருண்மைகளையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டினார். இன்று பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் புத்த சமயவாதிகள் என்ன செய்கிறார்கள் ?, எது செய்யப் போகிறார்கள் ? என்ற தவிப்பில், பயத்தில் மற்ற இனம் வாழும் நாடாக மாறுகிறது? காரணம் அந்த புத்தரின் புனிதமான நான்கு பேருண்மைகளை சரியாக உணராமையும் கடைப்  பிடிக்காததும் ஆகும். அப்படியான நடவடிக்கைகளுக்கு சார்பான, சாதகமான வழி அமைத்து கொடுத்தது தான் இந்த மகாவம்சம் என்று சொல்லலாமோ என்று எனக்கும் தோன்றுகிறது ? 


உண்மை முதலில் ஒரு முள் போல வலிக்கும், ஆனால்  முடிவில் அது ரோஜா போல பூக்கும் [The truth hurts like a thorn at first; but in the end it blossoms like a rose] என்ற பொன்மொழியை நாம் மறக்கக் கூடாது. இதையே திருவள்ளுவரும் குறள் 299 இல், "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" என்கிறார். அதாவது, புறத்தில் உள்ள இருளை நீக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு அகத்து இருள் நீக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும் என்கிறார். அந்த அவரின் வழியில் "சத்தியத்தை அறிய, சத்தியத்தை நேசிக்க, சத்தியத்தில் வாழ்வது  மனிதனின் முழு கடமை"  ["To know the Truth, to love the Truth, and to live the Truth is the whole duty of man."] என்பதை உணர்ந்து இந்த சுருக்கத்தை தருகிறேன் 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

'இது பித்தனின் அறிகுறி அல்ல, ஒரு ஆரோக்கியமான திட்டமிடலின் அறிகுறி'

1 month ago
'இது பித்தனின் அறிகுறி அல்ல, ஒரு ஆரோக்கியமான திட்டமிடலின் அறிகுறி'
 
 
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்த வல்லிபுரம் என்னும் வேளாளர் நல்லூரைச் சேர்ந்த பொன்னம்மா என்பாரை மணந்து வேளாண்மை செய்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஆண்கள் இருவரும் பெண்கள் இருவருமாக நான்கு பிள்ளைகள். ஆண்களில் ஒருவரின் பெயர் செல்லப்பா ஆகும்.
 
செல்லப்பா இளமையில் கந்தர்மடத்து சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக்கல்வி கற்றபின், நான் படித்த அதே யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆங்கிலம் கற்று வந்தார். ஓரளவு கல்வி கற்றபின், சூழ்நிலை காரணமாக படிப்பை நிறுத்தி உத்தியோகம் பார்க்க வேண்டியவரானார். யாழ்ப்பாணக் கச்சேரியில் ஆராய்ச்சி [ஆராய்ச்சி / public relations officer] உத்தியோகம் பெற்று வெகுதிறமையாகக் கடமையாற்றினார். என்றாலும் ஞான நாட்டங் கொண்ட செல்லப்பரின் நடையுடை பாவனைகளில் நாளிலும் பொழுதிலும் மாற்றங்கள் உண்டாயின. அவரின் போக்கு பெரிய புதிராகவே இருந்தது. வெளியில் அதை காட்டி கொள்ளாவிட்டாலும் உள்ளுற நாலூர் கந்தசுவாமியாருடன், அதிகமாக அர்த்த சாமத்தின்பின் ஒரு அந்தரங்க தொடர்பை தம்மில் ஏற்படுத்தி, ‘பிதாவே பிதாவே’ என்று பிதற்றியும் வந்தார்.
 
இந்த பித்தம் ஒரு எல்லையை தாண்டிய வேளையில், தமக்குள்ளேயே பேசிக்கொள்ளுதல், ஓமோம் என்று தலையசைத்தல், வலக்கையை மேலே உயர்த்தி விசுக்கி உரத்துப்பேசி, வருவோர் போவோரைத் தம்மை அண்டவிடாது துரத்தியும் வந்தார். அப்பொழுது நல்லூரை வட்டமிட்ட கடையிற் சுவாமிகளின் கடைக்கண் பார்வையும் தீட்சையும் உபதேசமும் அவருக்கு கிடைத்தது. அதன் பின்னர், நல்லூர் தேரடியிற் குந்தியிருந்து சிந்திக்க தொடங்கினார். இதை கண்ட நல்லூர் அடியார்கள் பலர் அவரிடம் ஏதோ அற்புத சக்தியுண்டென்று அனுமானித்து அவரைச் சூழ்ந்தனர். அதே வேளையில் அவர் தமக்குள்ளே முணுமுணுக்கக் கண்ட சிறுவர்கள், விசரன் என்று கல்லெறியவும் தொடங்கினர்.
 
அந்த கால கட்டத்தில், 1905, சிவயோகசுவாமி [1872–1964], இவரை ஒருநாள் அங்கு கண்டார்.
 
அப்பொழுது, சிவயோகசுவாமியை பார்த்து "யாரடா நீ ?" என உலுக்கி
 
"ஒரு பொல்லாப்பும் இல்லை"
"எப்பவோ முடிந்த காரியம்"
"நாம் அறியோம்"
"முழுதும் உண்மை"
 
என செல்லப்பா உறுமினார். இது தான் சிவயோகசுவாமியை சிந்திக்க வைத்தது. அதன் பின் சிவயோகசுவாமி தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு செல்லப்பாசுவாமியை அடுத்த ஐந்து ஆண்டுகள் பின் தொடர்ந்தார், தன குருவான, "தானே பேசிக்கொள்ளும் பழக்கம்" கொண்ட, முழுக்க முழுக்க "பித்தனின் அறிகுறி கொண்ட " செல்லப்பாசுவாமியின் இந்த வரிகளை, "ஆரோக்கியமான திட்டமிடலின் அறிகுறியாக" சிவயோகசுவாமி தனது நற்சிந்தனை பாடல்களில் தெளிவுபடுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் யோகசுவாமியின் அடியார்களால் “மகாவாக்கியங்கள்” என்று அந்த நான்கு வாக்கியங்களும் இன்று வரை மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது
 
"கருத்தில் நினைந்துருகி கைகூப்புந் தொண்டர்
வருத்தமெலாந்த தீர்க்கும் வடிவேல் – திருத்தலத்தில்
தேரடியில் தேசிகனை கண்டு தெரிசித்தேன்
ஆரடாநீ என்றான் அவன்."
[நற்சிந்தனை பாடலில் இருந்து]
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available.
 

'கொண்டாடினான் ஒடியற் கூழ்'

1 month ago
'கொண்டாடினான் ஒடியற் கூழ்'
 
 
பதினெட்டாம் நூற்றாண்டில் ஈழத்திருநாட்டில் வசாவிளான் என்ற ஊரிற் பிறந்த மகா புலவர் கல்லடி வேலுப்பிள்ளையின் (1860 – 1944) வீட்டுக்குப் பக்கத்தில் பெரிய கல் ஒன்று இருந்தது அதனால் எல்லோரும் அவரைக் கல்லடி வேலன் என்று செல்லமாக அழைத்தனர்.
 
சுப்பையா என்பவர் புலவரின் அருமை நண்பர். அவர் நிவிற்றிக்கொல்லை என்னும் ஊரிலுள்ள மருத்துவசாலையில் வைத்தியராகப் பணிபுரிந்தார். நிவிற்றிக்கொல்லை இரத்தினபுரிக்கு அண்மையில் உள்ளது. ஒரு நாள் புலவர் தம் நண்பரைப் பார்க்கப்புறப்பட்டார்; பல அல்லைதொல்லைப்பட்டு இரத்தினபுரியை அடைந்தார். அப்பால், நிவிற்றிக்கொல்லைக்குக் கால் நடையாகவே போனார். நேரமோ பட்டப்பகல். வெயில் நெருப்பாக எறித்தது. புலவர் மிழவும் களைத்துவிட்டார். பசி வயிற்றைக் கிள்ளியது. அவர் இடைவழியிலே தங்காது நடந்தார்; அவ்வாறு நடந்து நண்பரின் வீட்டை அடைந்தார்.
 
புலவரை எதிர்பாராது கண்ட நண்பரையும் மனவியாரும் அவரை வரவேற்று உபசரித்தனர்.; புலவரின் சுகநலங்களை விசாரித்தனர். வைத்தியரின் மனைவியார் புலவர் களைப்பாக இருந்ததை உணர்ந்தார். எனவே, அவர் புலவருடைய களைப்பைப் போக்க எண்ணினார். உடம்பு அலுப்புக்கு உவப்பான உணவு ஒடியற் கூழ் என்பது அவருக்குத் தெரியும். மேலும் புலவருக்கு ஒடியற் கூழில் மிக்க பிரியம் உண்டு என்பதும் அவருக்குத் தெரியும்.
வைத்தியரின் மனைவியார் கூழ் காய்ச்சத் தொடங்கினார். அவர் பானையில் நீரைக்கொதிக்க வைத்தார்; அதனுள் ஒரு சிறங்கை அளவு அரிசியைப் போட்டு வேக வைத்தார். பின்பு மரவள்ளிக்கிழங்கு, பயற்றங்காய் பயறு, பலாச்சுளை, பலாக்கொட்டை, முதலியவற்றையும் போட்டார்.; உப்பையும், புளியையும், அரைத்த மிளகாய்க்கூட்டையும், அளவாய்ப் போட்டார்; ஒடியல் மாவைக் கரைத்து அதனுள் சேர்த்தார்.; இவ்வாறாகக் கூழ் காய்ச்சினார்; பதமாய் இறக்கிய கூழுக்குள் வாழைக்காய்ப் பொரியலையும் இட்டுக் கலக்கினார்.
 
புலவரும் நண்பரும் கூழ் குடிக்க அமர்ந்தனர்; பலா இலையை மடித்துக் கோலினர்; கூழை அள்ளி ஊதி ஊதிக்குடித்தனர். அந்தக்கூழ் மிகவும் சுவையாக இருந்தது. ” என்ன அருமையான் கூழ்” என்று வியந்தார் புலவர். புலவரின் பசியும் பறந்தது; களைப்பும் நீங்கியது. அப்போது புலவரால் பாடாமல் இருக்க முடியவில்லை. ஆசுகவி பாடினார் இப்படி,
 
 
“அல்லையுற்று இரத்தினபுரி அண்டி
அப்பாலே நிவிற்றிக்கொல்லை
அடைந்த அலுப்புக் கொண்டதற்கு
கல்லடியான், வண்டாரும் மாலை அணி
மற்புயற் சுப்பையனுடன்
கொண்டாடினான் ஒடியற் கூழ்”
 
 
ஒடியல் கூழ் என்பது பனங்கிழங்கை நன்றாகக் காயவைத்துக் கிடைக்கும் ஒடியலை மாவாக திரித்து எடுக்கப்பட்ட மாவைக் (ஒடியல் மா) கொண்டு தயாரிக்கப்படும் உணவு. கூழ் பதம் வருவதற்கும், பிரத்தியேகமான கூழ் வாசனைக்கும் ஒடியல் மா கட்டாயம் தேவை. ஒடியல் கூழ் அருந்துவதில் சில நுனுப்பங்கள் இருக்கின்றன, ஒரு சாதாரண பாத்திரத்தில் ஒடியல் கூழை விட்டு குடித்தால் அதன் சரியான சுவை தெரியாது, அதானால் பனை ஓலையில் பிளா தயாரித்து அதில் கூழ் குடிக்கும்போது அதிக சுவயைத் தரும். அடுத்ததாக உறவினர் நண்பர்களோடு சேர்ந்து, அதாவது பலருடன் சேர்ந்து கூழ் குடிக்கும் போது அதன் உணர்வுகள் புரியும்.
No photo description available.
 
 
 

"அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு" - ஒரு விளக்கம்

1 month ago
"அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு" - ஒரு விளக்கம்
 
ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்து கொண்டே இருக்க வேண்டும் என்றும், முட்டாளாகத் திரிய வேண்டும் என்றும், நம் முன்னோர்கள் சொன்னார்கள் என குறிப்பிட்டு ஒரு கட்டுரை எழுதப் பட்டுள்ளதை கவனித்தேன். அது தொடர்பாக நான் ஆராய்ந்த போது எனக்கு மேலும் கிடைத்த தகவலை / விளக்கத்தை கிழே தருகிறேன்.
 
போர்ச் சூழல் நிரம்பிய பழைய காலச் சங்க சமூகத்தில், தொல்காப்பியர், களவியலில், அதாவது திருமணத்துக்கு முன்னுள்ள காதல் கட்டத்தில்,
 
96) "அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப." என்கிறார்.
 
இது களவியலுக்கு மட்டும் தான்! ஒரு காதல் சுவைக்கு என்றும் சொல்லலாம். அச்சம் என்றால் பயம். மடம் என்றால் முட்டால், நாணம் என்றால் வெட்கம், பயிர்ப்பு என்றால் அசுத்தம் - அருவருப்பு, அல்லது கூச்சம். இப்ப ஒரு "காதல் களவியலில்" காட்சி ஒன்றை பார்ப்போம்.
 
தலைவன் தலைவி [அல்லது கணவன், மனைவி] இரண்டு பேர் தனிமையில் இருக்கிறார்கள் என வைப்போம்.
 
"ஐயோ, இப்பவா! யாராயினும் வருங்கள் ... வேண்டாம்". அச்சம். இது ஒரு பொய் அச்சம். இது ஒரு வகை.
 
அடுத்தது சமையலறையில் கரப்பான் பூச்சியைப் பார்த்தால் விளக்குமாறால் ஒரு போடு போடும் அதே தலைவி, இப்ப காதல் களவியலில் அதே கரப்பான் பூச்சியைப் பார்த்ததும் "ஐயோ! கரப்பான்".. என அலறுவது -- பயப்படுவது -- ஒரு மழலை மாதிரி பிதற்றி கண்ணைப் பொத்திக் கொள்வது மற்றொரு வகை.
 
இப்படி ஒரு காதல் களவியல் சம்பவத்தில்: "சரி போதும் -- அலட்ட வேண்டாம் -- இனி காணும் -- எனக்கும் எல்லாம் தெரியும்" என்று கூற மாட்டார்கள். தெரிந்திருந்தாலும் தெரியாதது போல பண்ணும் பாவனை. அது தான் இந்த பொய் மடம்.
 
இன்னும் கொஞ்சம் போக, "சீ போங்கோ .. கொஞ்சமாவது வெட்கம் இருக்கா பாரு ..". இது பொய் நாணம். "எனக்கு இது பிடித்துத் தான் இருக்கிறது" என்று சொல்லும் ஒரு நாணம்.
 
இந்த மூன்றும் பொதுவாக காதலுக்கு சுவை சேர்க்கின்றன. தன் தலைவன் அல்லாத வேறு ஒரு ஆடவன் / அந்நியன் கெட்ட எண்ணத்துடன் தொடும் போது உண்டாகும் இயல்பான அருவருப் புணர்ச்சி பயிர்ப்பு ஆகும். இந்த உணர்ச்சி பொதுவானது. அதாவது ஆணுக்கும் உண்டு என கொள்ளலாம். அதாவது இவையை கலவியல் கவர்ச்சி என்று கூட சொல்லலாம். அவ்வளவுதான்!
 
இது தான் தொல்காப்பியம் களவியலில் சொல்வது! இது பொதுவாக சொல்லப் படவில்லை என்பதையும் காண்க. தமிழ் சொல்வது இதைத்தான் ! இந்த நாலு குணமும் பெண்ணுக்கு வேண்டும் என்றால் எப்போது வேண்டும்? இதை சரியாக புரிய வேண்டாமோ? இது சொல்லப் பட்ட "இடம் பொருள் காலம்" அறிய வேண்டும். அதை விட்டு பொருளைச் சிதைத்து, மாற்றி என்னென்னவோ பொருளெல்லாம் சொல்லி வைத்தனர்.
 
'மண்ணுக் குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்' என்று ஏன் பாரதி கூறினான்?
 
பண்டைக் காலத் தமிழரின் அக வாழ்க்கையின் அம்சங்களைத், தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தினூடாகக் கார்காலப் பின்னணியில் எடுத்துக் கூறுகின்ற நூல் கார் நாற்பது. அதில் ஒரு பாடல் இப்படி சொல்கிறது.
 
"கடல் நீர் முகந்த கமம் சூல் எழிலி
குட மலை ஆகத்துக் கொள் அப்பு இறைக்கும்
இடம் என ஆங்கே குறி செய்தேம் பேதை
மடமொழி எவ்வம் கெட"
 
[நூல்: கார் நாற்பது (#33) / பாடியவர்: மதுரைக் கண்ணங்கூத்தனார்]
 
பல நாள்களுக்கு முன்னால் நான் ஊரில் இருந்து கிளம்பிய நேரம், மடப்பத்தை உடைய வார்த்தைகளைப் பேசுகிற என் காதலி என்னைப் பிரிவதை எண்ணி மிகவும் வருந்தினாள். அவளுடைய வருத்தத்தைப் போக்குவதற்காக, ‘மேற்கு மலை மீது மழை பெய்யும் போது நான் திரும்பி விடுவேன்’ என்று வாக்குறுதி சொல்லி வந்தேன். இப்போது, அந்த நேரம் வந்து விட்டது. நாம் சீக்கிரமாக ஊர் திரும்ப வேண்டும். தேரை வேகமாக ஓட்டு! என்கிறான்.
 
அது என்ன "மடமொழி"? காதலியை ‘மடத்தனமாகப் பேசுகிறவள்’ என்கிறானா இந்தக் காதலன்? பெண்களுக்கான குணங்கள் "அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு" என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். அந்த ‘மடம்' தான் இங்கேயும் வருகிறது. பொதுவாக ‘மடம்’ என்றால் பேதைமை, அழகு, மென்மை என பொருள் படும். அவற்றுள் இங்கே எந்தப் பொருள் பொருந்தும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!
 
இதே மாதிரி அந்த சங்க காலத்தில் குறுந்தொகை 135: "வினையே ஆடவர்க் குயிரே" என்று கூறுகிறது. அதாவது ஆண் மக்களுக்குத் தொழில் தான் உயிர் என்பது இதன் பொருள்.
 
அதாவது "அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு" என்பது காதலின் போது மட்டுமே! வாழ்க்கை முழுக்க இல்லை என்பதை புரிய வேண்டும்.
இதே சங்க காலத்தில் காதல் களவியல் அற்ற சில சம்பவத்தை பார்ப்போம்.
 
ஒரு நாள், காவற் பெண்டு என்பவரின் இல்லத்திற்கு வந்த ஒருவர், அவர் மகன் எங்கு உளன் என்று கேட்டார். அதற்கு, காவற் பெண்டு "இதோ என் வயிற்றைப் பார், என தன் வயிற்றைக் காட்டி, அவனைப் பெற்ற வயிறு இது. புலி இருந்து சென்ற குகை இது". அவள் அச்சம் கொள்ளவில்லை? முட்டாளாக பேசவில்லை? நாணம் கூட பட வில்லை? வீரமாக முழங்கினாள்!
 
இன்னும் ஒருத்தி போர்ப் பறை கேட்டுத் தன் மகனை - ஒரே மகனை இளம் பிள்ளையை அழைத்துக் கையில் வேலைக் கொடுத்துக் களத்திற்கு அனுப்பினாள் என அவளின் மாண்பினைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
 
“புறங்காட்டினான் மகன் என்பது உண்மையானால் அவனுக்குப் பாலூட்டிய மார்பினை அறுப்பேன்” எனச் சூளுரைத்தாள் மற்றும் ஒருத்தி. இங்கு ஒரு வீரத் தாயை காண்கிறோம்.
 
ஆகவே எங்கு சொல்லப்பட்டது, எந்த சூழலில் சொல்லப் பட்டது, ஏன் சொல்லப் பட்டது என்பதை அறிந்து பொருள் கொள்வது மிகவும் சிறந்தது.
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"அத்தியடி, யாழ்ப்பாணம், இலங்கை"

1 month 1 week ago

"அத்தியடி, யாழ்ப்பாணம், இலங்கை"

["சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா? அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக் கீடாகுமா?"-"ஊரு விட்டு ஊரு வந்து" என்று  கேட்ட வரிகள் தான் எனது இந்த கட்டுரையின் வேர்.]


பழமை வாய்ந்த அத்தியடி ஸ்ரீ சிதம்பர நடராஜா வீரகத்திப் பிள்ளையார் கோவிலும்  அதனுடன் அமைந்த வாசிக சாலையும்  நம்ம அத்தியடிக்கு, யாழ் நகரில் உள்ள சிறு இடத்திற்கு, முக்கிய அடையாளமாக இருந்தது. எனினும் இன்று அந்த வாசிகசாலை அங்கு இல்லை. அது ஒரு பெரும் குறையே? ஒரு 5 நிமிஷம் உட்கார்ந்தால் போதும் எப்பேர்ப்பட்ட[எவ்வகையான] கவலையும் தணியும். இதை நான் பெருமையாகவே சொல்வேன்.விடுதலை நாட்களில், ஓய்வு நேரங்களில் கூடும் இடம் அவை இரண்டும் தான். வாசிகசாலை ஊர் புதினம் அறிய ,கோவில் முற்றம் நண்பர்களை சந்தித்து அளவளாவ, பின் ஒன்று சேர்ந்து விளையாட. 


சித்திரைப் புதுவருட  தினத்தில் யாழ் அத்தியடி பிள்ளையார் கோயில் வருடாந்த தேர் உற்சவம் நடைபெறும். கைவிசேசத்துடன் கொண்டாட்டமும் கலை கட்டும். "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது ஔவையாரின் முது மொழி. "ஆலயம்- இது ஆன்மாக்கள் இலயப்படும் அல்லது ஒன்று படும் இடம் என்றும், கோயில்- கோன்(அரசன்) உறையும் இடம் எனவும் பொருள் கூறுவார்கள். எமக்கோ பெரியவர்கள் ஆனபின்பும், இன்று வெளிநாடுகளில் உள்ள மதுக் கடை அல்லது பொது விடுதி [pub] கள்  நண்பர்களை சந்திக்க உதவுவது போல அது  தொடர்ந்து இருந்தது. 


எம்மை  பார்த்து  கொண்டு  யாழ் ரயில் நிலையம் ,எமது ஒரு பக்க எல்லையில் அமைந்துள்ளது ."நாம் "ஊர்விட்டு ஊர் சென்று வாழ்ந்தாலும்  யாழ் மண் வாசம் மனம் விட்டு போகாதே, யாழ் தேவி ரெயில் ஏறுவோம், எங்கள் இதயத்தின் மொழி பேசுவோம்" என்று "கவிஞர் சதீஸ்" எழுதிய  பாடல் வரிகளை இது  நினைவூட்டும். ஒவ்வொரு யாழ்ப்பாண மக்களினதும் வாழ்க்கையுடன் நெஞ்சில் பின்னிப் பிணைந்த யாழ்தேவியின் சத்தத்தையும் ஆரவாரத்தையும் கேட்காத நாட்களே இல்லை .


"ஆறுமுக நாவலன் அடியிணை பரவுதும் தேறு முகவின்பந் திகழ்தரற் பொருட்டே" என "நாவலர் சற்குருமணிமாலை" போற்றும், தமிழும் சைவமும் தந்த நல்லை நகர் ஆறுமுக நாவலர் வீடு, இன்றைய நாவலர் மண்டபம், எமது வீட்டிற்கு பின்னால் உடனடியாக உள்ளது. நாம் சிறுவராக இருந்த  போது அங்கு நாம் விளையாடுவது உண்டு. 


1952, 1956 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளிலும் மூன்று ஆசியப் போட்டிகளிலும்  இலங்கைக்காக விளையாடிய நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் (Dr Nagalingam Ethirveerasingam) அத்தியடியில் வசித்தவர் மட்டும் அல்ல, நான் படித்த அதே யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவனும் கூட. நாவலர் கூட அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில்-இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் - பாடசாலை மாணவராகவும் ஆசிரியர் ஆகவும் இருந்தவரே!


பொதுவாக யாழ்ப்பாண நகர்,யாழ் கோட்டை, சந்தை பகுதியையும் வைத்திய சாலை, பேருந்து, புகையிரத, நிலையத்தையும்  முதன்மை வீதிகளையும் உள்ளடக்கியுள்ளது. வட அமெரிக்கரின் பேச்சுப்பாங்கில் இதை "downtown." எனவும் கூறலாம். இதன் எல்லையில் தான் அத்தியடி உள்ளது. யாழ் நகர் மக்கள் பொதுவாக தாம் யாழ்ப்பாணம் என்றே கூறுவார்கள். கொஞ்சம் யாழில் எங்கே என்று கேட்கும் போதுதான் அத்தியடி, ஆணைப்பந்தியடி, நல்லூர், கந்தர்மடம், .. இப்படி வட்டாரம், இடக்குறிப்பையும்  சேர்த்து கூறுவார்கள். இது ஒரு நல்ல பண்பாடு. மேலும் யாழ்ப்பாணத்திற்கே அணித்தான நெடிந்துயர்ந்த பனை மரங்களை ஆங்ககாங்கே காணாலாம்.


பனை மரம்  புயலுக்கு பயங்கரமாக ஆடி அசைந்தாலும் ,நாணல் போல வளைந்து தப்பிக் கொள்ளாதது .அது வளைவதை விட ,வளையாமல் உடைவதையே விரும்புவது.இன்னல், துன்பம் வரும் போது,யாழ்ப்பான மக்கள்,பனை மரத்தின் இந்த சிறப்பான தன்மையை உதாரணமாக எடுத்து ,தாமும் அது போல் உற்சாகத்துடன் தைரியம், துணிச்சலுடன்  தளர்வுறாத, விடாப்பிடியாய் எதிர்க்கின்ற ஒரு இயல்புக்குணம்/ பண்பை  வளர்த்துள்ளார்கள் .இது பொதுவாக பெருமை படக்கூடிய ஒரு விசேஷ குணமாகும் .


"யாழ்பாணம் போனேனடி பொன்னம்மா யாழ்பாணம் போனேனடி"என்ற அறு[60]வது எழு[70]பதில் எல்லாராலும் முணுமுணுக்கப்பட்ட அந்த பாடல் வரிகளும் எனக்கு இப்ப ஞாபகம் வருகிறது.அப்ப நான் பாடசாலை,பல்கலைக்கழக மாணவன். யாழ்பாணம் பொதுவாக சுவர்க்கம் என்று சொல்லும் அளவிற்கு நேசமான,நட்புணர்வுள்ள மக்களையும் உயர் பண்பாட்டையும் ஆரோக்கியமான காலநிலையையும் ,கண்ணைக் கவருகிற சுற்றுப்புறத்தையும் கொண்டது'   


18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இயற்றப்பட்ட  "யாழ்ப்பாண வைபவமாலை" எனும் நூல், முற்காலத்தில் இலங்கையை ஆண்ட அரசனொருவனால், இந்தியாவிலிருந்து வந்த யாழிசையில் வல்ல குருடனான யாழ்ப்பாணன்[யாழ்+பாணன்] ஒருவனுக்கு வட பகுதியிலிருந்த  மணற்றிடல் எனும் இடம் பரிசாக அழிக்கப்பட்ட தென்றும், அப்பகுதி யாழ்ப்பாணம் என்று பெயர் பெற்றுப்பின்னர் முழுப் பிரதேசத் துக்குமே இப்பெயர் வழங்குவதாயிற்று என்று கூறுகிறது .போர்த்துகேயர் வருகைக்கு பின் காலப்போக்கில் மெல்ல மெல்ல  திரிபு அடைந்து யாழ்ப்பாணம் [Yarlpaanam]- யாப்பாணம்- ஜப்பாணம்- ஜப்பணம்  - ஜவ்வணம் [Jaffanam]- ஜவ்ண [Jaffna] இப்படி பிரித்தானியர் காலத்தில் முற்றுப் பெற்றிருக்கலாம்? என அறிகிறேன். 

      
யாழ்ப்பாணம் எங்கும் சேவல் கூவுகிறது. பொழுது விடிகிறது. சூரியன் சுடுகிறது. குயில்கள் பாடுகின்றன.வெள்ளை மல்லிகையின் நறுமணம் எங்கும் பரவுகிறது இந்த சொர்க்கத்தில் நித்திரை செய்து எழும் போது என்னவொரு சுகம்!மலையில் சூரியன் மேற்கு திசையில் மறைவதை பனை மரங்களின் "நிழல் படம்"[நிழல்வடிவம்] வழியாக பார்ப்பதில் என்ன பேரின்பம்!!அதன் பின் மங்கும் அந்தியொளியில் பனை தந்த அமிர்தத்தை அவசரமாக விழுங்குவதில் காணும் இன்பமோ- சொல்லில் அடங்கா மகிழ்ச்சி!!!  


அத்தியடி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இருக்கும் மதகு, தெரு கம்பம் இவைதான் எங்களின் பாராளுமன்றம்! இதுவே எங்களின் வெள்ளை மாளிகை!!


இறுதியாக, சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் இயற்றிய ஒரு பாடலை முடிவுரையாக இங்கு தருகிறேன்.


"சித்திவரும் புத்திவருஞ் செல்வமொடு கல்விவரும்
பத்திவருங் கீர்த்தி பரம்பிவரும்- அத்தி
அடிவாழ் விநாயகனை யன்போடு நம்பிப்
படிமேல் வணங்கு பவர்க்கு"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

தந்தை செல்வா

1 month 2 weeks ago
 
ஈழத்தமிழ் மக்களின் இதய தெய்வமாக விளங்கிய தந்தை செல்வாவின் பிறந்த நாள் -மார்ச்சு 31- இன்று. அவர் மறைந்த நாள் ஏப்பிரல் 26 – 1977. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தில் நான் பத்திரிகையாசிரியராக (இளங்கதிர்) இருந்தபோது அவர் இறந்தார். அப்போது நடத்தப்பட்ட இரங்கற் கூட்டத்தில் என்னாற் பாடப்பட்ட அஞ்சலிக் கவிதையை இங்கு தருகிறேன்.
 
தந்தை செல்வா மறைவும் அஞ்சலியும்
 
எண்பத்தி நாலு வரை வாழ்வேன் எங்கள்
இனிய தமிழ் ஈழமதைக் காண்பேன் என்றே
புண்பட்டுநொந்திட்ட தமிழர் நெஞ்சம்
புத்துயிர் பெற்றெழுந்திடவே சொன்ன தந்தை
கண்பட்டு வீழ்ந்திட்டான் தமிழர் வேறு
கதியற்றார் துயருற்றார் கலங்கி நின்றார்
எண்பட்ட யாவரையும் கவருமிந்த
இழிகாலன் செய்கையது என்னே! என்னே!
செல்வா என்றோர் வார்த்தை சொன்னால் அங்கோர்
சேனையது தலைதாழ்த்திப் பணிந்து நிற்கும்
செல்வா என்றே சொன்னாற் தமிழ மங்கை
செழு முலையினூடோடி வீரம் சிந்தும்
செல்வா என்றழைத்திட்டாற் தமிழர் வாழும்
தேசமெலாம் அச்சொல்லின் சிறப்புத் தேங்கும்
எல்லாமும் போனதடா ஈழம் சோர்ந்தாள்
இழிகாலன் செய்கையது என்னே என்னே
(வேறு)
தந்தை செல்வாவைத் தானைத் தலைவனாய் ஏற்காதோரும்
சிந்தையில் துயரடைந்தார் சிங்களர் கூடச் சோர்ந்தார்
மந்திரச் சொல்லால் ஈழ மக்களைத் தன்பால் ஈர்த்து
விந்தைகள் புரிந்த செம்மல் விழிகளை மூடிக் கொண்டான்
ஓடியே ஒடுங்கிற்றம்மா உயிரினைத் தமிழுக்காக
வாடியே கொடுத்த அன்னான் வண்டமிழ்த் தென்றல் மூச்சு
பாடியே என்ன கண்டோம் பாடையில் வீழ்ந்த அந்த
நீடிய தமிழ் மரத்தின் நிழலினிக் கிடைக்கப் போமோ?
(வேறு)
கண்ணார் தமிழின் உயர்வுக் குழைத்தே
காற்றால் உதிர்ந்த சருகானாய்
எண்ணார் உன்னை ஏற்காதோரும்
ஏற்றும் தெய்வம் நீயானாய்
விண்ணேகினையோ செல்வா தமிழின்
விழியே உயிரே ஆரீரோ
அண்ணா தூங்கு ஆறத் தூங்கு
ஆரீர் ஆரீர் ஆரீரோ
துன்பஞ் செய்த உடல் நோயோடும்
தூய தமிழிற் குழைத்ததிலே
இன்பங் கண்டாய் செல்வா என்றும்
ஈழத் துயர்வே பேச்சானாய்
என்புந் தோலும் கொண்டாய் எனினும்
எங்கள் தமிழே மூச்சானாய்
அன்பே போதும் ஆறத் தூங்கு
ஆரீர் ஆரீர் ஆரீரோ
கைகால் நடுங்கும் உந்தன் உருவைக்
கண்டார் இரங்கும் படி வாழ்ந்தாய்
மெய்யாய் உணர்விற் தமிழே நினைவாய்
மெலிந்தாய் வாடி மிக நொந்தாய்
பொய்யாகிய இவ்வுலகின் பதவிப்
போரைச் சகியாதுயிர் சோர்ந்தாய்
ஐயா தூங்கு ஆறத் தூங்கு
ஆரீர் ஆரீர் ஆரீரோ
சீரார் தமிழின் சிறப்பிற்காகச்
சிறை சென்றனையே செல்வா நின்
பாரா முகம் ஏன் இழிமைத் தமிழர்
பதவிப் பித்தால் நொந்தாயோ
சோரா மனதிற் துயரச் சுமையாற்
தோள் சோர்ந்தனையோ செல்வா எம்
ஆராவமுதே போதும் தூங்கு
ஆரீர் ஆரீர் ஆரீரோ
 
 
Checked
Thu, 05/16/2024 - 08:53
எங்கள் மண் Latest Topics
Subscribe to எங்கள் மண் feed