அறிவியல் தொழில்நுட்பம்

"பூமியை நெருங்கும் 6வது பேரழிவு" : அழிந்து போன உயிர்களை மீண்டும் கொண்டு வருவது சாத்தியமா?

2 days 21 hours ago

அழிந்துபோன விலங்குகள்

பட மூலாதாரம்,UNIVERSAL IMAGES GROUP VIA GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

7 ஜூன் 2025

ஏப்ரல் 2025 இல், ஒரு தனியார் அமெரிக்க நிறுவனமான கொலோசல் பயோசயின்சஸ், சின்னஞ்சிறு ஓநாய் குட்டிகளைக் காட்டும் 17 வினாடி வீடியோவை வெளியிட்டது.

கொலோசல் பயோசயின்சஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஓநாய் குட்டிகளுக்கு ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் என்று பெயரிடப்பட்டன.

ரோமானிய புராணங்களின்படி, ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் இரட்டை சகோதரர்கள், ரோம் நகரத்தை நிறுவினார்கள், இவர்கள் ஒரு பெண் ஓநாயால் காப்பாற்றப்பட்டனர் என சில கதைகள் சொல்கின்றன. இந்த இரட்டைச் சகோதரர்களின் பெயர், புதியதொரு விஞ்ஞான முயற்சியில் உருவான ஓநாய் குட்டிகளுக்கு வைக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன ஓநாய் இனமான டயர் ஓநாய் இனத்தின் டிஎன்ஏவைப் பயன்படுத்தி, மரபணு பொறியியல் நிறுவனமான கொலோசல் பயோசயின்சஸ் இந்த ஓநாய் குட்டிகளை உருவாக்கியுள்ளது.

குளோனிங் மற்றும் மரபணு மாற்றம் தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றியடைந்த பிறகு, இது குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. இது அவசியமா என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

கொலோசல் பயோசயின்சஸின் தலைமை அறிவியல் அதிகாரி டாக்டர் பெத் ஷாபிரோ, 2015 இல் தான் எழுதிய ஒரு புத்தகத்தில் குளோனிங் பற்றி விவாதித்ததைக் குறிப்பிடுகிறார். அழிந்துபோன எந்த உயிரினத்தையும் குளோனிங் செய்ய முடியாது என அவர் அன்று தெரிவித்திருந்தார். ஆனால் இந்த புதிய சாதனை அவரது கருத்தை மாற்றியுள்ளதாக அவர் கூறுகிறார்.

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' என்ற தொலைக்காட்சி தொடரில் டயர் ஓநாய்கள் முக்கியக் கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டிருந்தன. டாக்டர் பெத் ஷாபிரோவின் கருத்துப்படி, டயர் ஓநாய் என்பது நரிகள் மற்றும் நாய்களுடன் தொடர்புடைய ஒரு இனமாகும்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, டயர் ஓநாய் இனத்தின் ஆரம்பகால புதைபடிவம் சுமார் 2.5 லட்சம் ஆண்டுகள் பழமையானது. இந்த விலங்குகள் வட அமெரிக்காவில் காணப்பட்டன. கடந்த பனி யுகத்தில், அதாவது சுமார் பன்னிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டயர் ஓநாய் அழிந்துவிட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது நிறுவனத்தின் கூட்டத்தில், எந்த உயிரினத்தை மீண்டும் உருவாக்கலாம் என்பது பற்றிய விவாதம் நடந்ததை டாக்டர் பெத் ஷாபிரோ நினைவு கூர்கிறார்.

உயிரினத்தை மீண்டும் உருவாக்குவதில், தொழில்நுட்பம், சூழலியல் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான சவால்களும் விவாதிக்கப்பட்டன. ரோமியோலஸ் மற்றும் ரெமுஸ் ஆகிய இரு டயர் ஓநாய் குட்டிகள், மரபணு மாற்ற செயல்முறை தொடங்கிய 18 மாதங்களுக்குள் பிறந்துவிட்டன.

ஒரு உயிரினத்தின் அனைத்து டிஎன்ஏக்களின் முழுமையான தொகுப்பே மரபணுத் தொகுப்பு ஆகும். இதற்காக, கொலோசஸ் பயோசயின்சஸுக்கு டயர் ஓநாயின் டிஎன்ஏ தேவைப்பட்டது.

"72,000 ஆண்டுகள் பழமையான டயர் ஓநாயின் மண்டை ஓடு மற்றும் 13,000 ஆண்டுகள் பழமையான பல் ஒன்றும் கிடைத்தது. அதிலிருந்து டிஎன்ஏ கிடைத்தது. அதைப் பயன்படுத்தி இந்த இரு டயர் ஓநாய்களின் முழுமையான மரபணு வரிசையை உருவாக்கினோம்" என்று டாக்டர் பெத் ஷாபிரோ கூறினார்.

இந்த மரபணு வரிசை, டயர் ஓநாய் இனத்தின் நெருங்கிய இனமான சாம்பல் ஓநாய் இனத்துடன் ஒப்பிடப்பட்டது. பண்டைய டயர் ஓநாய் இனத்துடன் ஒத்த ஒரு இனத்தை உருவாக்க இந்த மரபணுவில் சில மாற்றங்களைச் செய்ததாக டாக்டர் பெத் ஷாபிரோ கூறினார்.

இந்தப் பரிசோதனையின் இறுதிக் கட்டத்தில், டயர் ஓநாயின் டிஎன்ஏவில் சாம்பல் ஓநாயின் ஜீன்கள் இணைக்கப்பட்டு கரு உருவாக்கப்பட்டது.

கருவை வளர்க்க, வளர்ப்பு நாய்கள் வாடகைத் தாய்களாக பயன்படுத்தப்பட்டன. நாய்களின் கருப்பையில் கரு செலுத்தப்பட்டது.

கருவுற்ற நாய்கள் அறுவை சிகிச்சை மூலம் ஓநாய்களை பிரசவித்தன. ஆனால், ஏன் சாம்பல் ஓநாய்களை வாடகைத் தாயாக பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுகிறதா?

நாய்களை, வாடகைத் தாய்களாகப் பயன்படுத்துவதில் தங்களுக்கு அதிக அனுபவமும் அறிவும் இருப்பதால் இது செய்யப்பட்டது என்று கூறும் டாக்டர் பெத் ஷாபிரோ, நாய்கள் உண்மையில் சாம்பல் ஓநாய்களின் மற்றொரு வடிவம் என்று சொல்கிறார்.

கடந்த காலத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள்

அழிந்துபோன விலங்குகள்

பட மூலாதாரம்,COLOSSAL BIOSCIENCES

இப்போது, இந்த 'டயர் ஓநாய் குட்டிகள்' உண்மையில் என்ன என்றும் என்னவாக இல்லை என்றும் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

"அவை டயர் ஓநாய்கள் இல்லை என்பது உண்மைதான். நாங்கள் அவற்றை டயர் ஓநாய்கள் என்று அழைக்கிறோம், ஆனால் நீங்கள் அவற்றை Proxy Direwolf அல்லது Colossal Direwolf என்றும் அழைக்கலாம். நாங்கள் அவற்றுடன் சாம்பல் ஓநாயின் பண்புகளையும் சேர்த்துள்ளோம்" என்று டாக்டர் பெத் ஷாபிரோ கூறுகிறார்.

குளோனிங் தொழில்நுட்பத்தில் இரண்டு ஓநாய் குட்டிகள் அக்டோபர் 2024 இல் பிறந்தன, மூன்றாவது இந்த ஆண்டு ஜனவரியில் பிறந்தது. நிறுவனம் அவற்றை காட்டுக்குள் விட விரும்பவில்லை என்றும், இந்த குட்டிகள் பாதுகாக்கப்பட்ட இடத்தில் வைத்து பராமரிக்கப்படும் என்று டாக்டர் பெத் ஷாபிரோ கூறினார்.

இனப்பெருக்கம் செய்வதற்கு இவற்றைப் பயன்படுத்த தனது நிறுவனம் விரும்பவில்லை என்று அவர் கூறுகிறார். இந்த விலங்குகள் பாதுகாக்கப்பட்ட சூழலில் எவ்வாறு வளர்கின்றன என்பதைப் புரிந்துகொண்டு அவற்றை ஆரோக்கியமாக வைத்திருப்பதே நிறுவனத்தின் குறிக்கோள் என்றும் அவர் கூறுக்றார்.

இந்த செயல்முறையைப் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தவே நிறுவனம் விரும்புகிறது. பல அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்கவும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது.

அழிந்துபோன விலங்குகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உயிரினங்கள் எவ்வாறு அழிந்து போகின்றன?

இங்கிலாந்தின் பெல்ஃபாஸ்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் பரிணாம உயிரியல் பேராசிரியர் டாக்டர் டேனியல் பின்சேரா டோனோசோ கூறுகையில், வாழ்க்கையின் வரலாற்றைப் பார்த்தால், 3.7 பில்லியன் ஆண்டுகளில் பூமியில் இருந்த உயிரினங்களில் 99 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிந்துவிட்டன.

"மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பூமியில் இருக்கும் 48 சதவீத விலங்கு இனங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் பொருள், இன்று பாதுகாப்பாக இருக்கும் அந்த உயிரினங்கள் அருகிக் கொண்டே வந்தால் சில தசாப்தங்களில் அழிந்துவிடும்."

அழிவு என்பது பகுதியளவு நிகழ்வாகவும் இருக்கலாம், அதாவது ஒரு இனம் உலகின் ஒரு பகுதியில் அழிந்துவிடும், ஆனால் மற்றொரு இடத்தில் உயிர்வாழலாம். இருப்பினும் அந்த இனம் எல்லா இடங்களிலும் அழிந்து போகும்போது, அந்த உயிரினம் அழிந்துவிடும்.

உயிரினங்கள் அழிவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று டாக்டர் டேனியல் பின்சேரா டோனோசோ சொல்கிறார். உதாரணமாக, வேட்டையாடுதல், அல்லது அவற்றை அழிக்கும் உயிரினங்களை அவற்றின் பிரதேசத்தில் குடியேற்றுதல் மற்றும் அந்த இனங்களின் மெதுவான இனப்பெருக்க விகிதம் என ஒரு உயிரினம் அழிவதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம்.

பூமியில் உயிரினங்கள் அழிவதற்கு வழிவகுத்த பெரிய அளவிலான ஐந்து சம்பவங்களை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். அதாவது, வெகுஜன அழிவுக்கு (பெரும்பாலான உயிரினங்களின் அழிவுக்கு) காரணமான சம்பவங்கள் இவை.

"இதற்கு முன்னர் நடந்த ஐந்து பேரழிவு நிகழ்வுகள், எரிமலை வெடிப்புகள், பூமியைத் தாக்கும் விண்கற்கள் அல்லது பிற இயற்கை காரணங்களால் ஏற்பட்டவை என்பதை நாம் அறிவோம். உதாரணமாக, மெக்சிகோவை விண்கல் தாக்கியதால் டைனோசர்கள் அழிந்தன" என்று டாக்டர் டேனியல் பின்செரா டோனோசோ கூறினார்.

அந்த சம்பவம் சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதேபோன்ற நிகழ்வுகள் 205 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் 90 சதவீத உயிரினங்களை அழித்தன.

இந்த ஐந்து பேரழிவு சம்பவங்களுக்கான காரணங்கள் அறியப்படவில்லை. ஆனால் தற்போது ஆறாவது பேரழிவு நம்மை நெருங்கிவிட்டது. டாக்டர் டேனியல் பின்சேரா டோனோசோவின் கூற்றுப்படி, பூமியில் உள்ள உயிரினங்களில் குறைந்தது 70 சதவீதமாவது அழிக்கப்படும்போதுதான் வெகுஜன அழிவு ஏற்படுகிறது.

அழிந்த விலங்குகளை மீட்டல்

அழிந்துபோன விலங்குகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாம் இன்னும் அந்த நிலையை எட்டவில்லை என்றும், ஆனால் பல்லுயிர் பெருக்கம் வேகமாகக் குறைந்து வருவதாகவும், இப்போது நாம் பெருமளவில் அழிந்து வரும் காலகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் அவர் கூறுகிறார். வெகுஜன அழிவுக்குப் பிறகு, பூமியில் வாழ்க்கை மாறும் என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால் எந்த இனங்கள் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன?

பல பெரிய பாலூட்டிகள் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன என்று டாக்டர் டேனியல் பின்சேரா டோனோசோ கருதுகிறார். அவற்றில் திமிங்கலங்களில் சில வகை மற்றும் பெரிய ஆப்பிரிக்க பாலூட்டிகள் அடங்கும். ஆனால் தவளை இனங்களுக்குத்தான் மிகப்பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக அவர் கூறுகிறார். காலநிலை மாற்றம், நில இழப்பு மற்றும் நோய்கள் காரணமாக, தவளைகள் போன்ற நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்கள் பிற உயிரினங்களை விட மிக வேகமாக அழிந்து வருவதாக அவர் கூறுகிறார்.

அவற்றின் பல இனங்கள் அழிந்துவிட்டன, மேலும் பல அழிவின் விளிம்பில் உள்ளன. ஒரு இனத்தின் அழிவு என்பது சங்கிலித் தொடர் எதிர்வினையைத் தொடங்குகிறது. அத்துடன், அவற்றுடன் தொடர்புடைய உயிரினங்கள் பலவும் அழிந்து போகத் தொடங்குகின்றன. இதைப் பல பாகங்களைக் கொண்ட ஒரு காரின் எஞ்சினுடன் ஒப்பிடலாம். எஞ்சினில் இருந்து ஒரு சிறிய திருகு கழன்று விழுந்தால், முழு எஞ்சினுமே வேலை செய்வதை நிறுத்திவிடும். இதைப் போலவே, ஒரு உயிரினம் அருகும்போதும், அழியும்போதும் அதன் சங்கிலித் தொடர் விளைவாக பல உயிரினங்களின் இருப்பும் பாதிக்கப்படும்.

அழிந்துபோன உயிரினங்களின் மீட்சி

மரபணு எடிட்டிங் குறித்த புத்தகங்களை எழுதிய அறிவியல் பத்திரிகையாளரான டோரில் கோர்ன்ஃபெல்ட், மரபணு திருத்தம் மூலம் அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உருவாக்கும் குறைந்தது பத்து திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன மாமூத் யானை போன்ற விலங்குகளை மீண்டும் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன அல்லது இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளை உருவாக்கும் சில திட்டங்களும் தற்போது செயலில் உள்ளன.

"மீண்டும் விலங்குகள் உருவாக்கப்படும் முயற்சிகளால் மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, மாமூத், டயர் ஓநாய், டோடோ பறவை மற்றும் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கும் வட வெள்ளை காண்டாமிருகம் ஆகியவற்றைச் சொல்லலாம். ஆனால் அறிவியலின் உதவியுடன், ஒரு லட்சம் வெள்ளை காண்டாமிருகங்கள் உருவாக்கப்பட்டு அவை காட்டில் விடப்பட்டால், வேட்டைக்காரர்கள் ஒரே வாரத்தில் அவற்றைக் கொன்றுவிடுவார்கள். உண்மையில், இதுபோன்ற விலங்குகளின் அழிவுக்கு காரணம் வேட்டை தான். இந்தப் பிரச்னை இன்னும் தீர்க்கப்படவில்லை."

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றங்கள் மூலம் அசாத்தியங்களும் சாத்தியமாகின்றன என்றாலும், வேலை எளிதானது அல்ல.

பனியில் உறைந்து இருக்கும் மாமூத் ஒன்று கண்டறியப்பட்டதாகவும், ஆனால் அதன் டிஎன்ஏ கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் டோரில் கோர்ன்ஃபெல்ட் கூறுகிறார்.

"கடுமையாக சேதமடைந்துள்ள டிஎன்ஏவை மறுகட்டமைப்பது என்பது ஆயிரக்கணக்கான கிழிந்த பக்கங்களை ஒன்றாக இணைத்து ஒரு நாவலைப் படிக்க முயற்சிப்பது போன்றதாகும்" என்று அவர் விளக்குகிறார்.

1980களில், டிஎன்ஏவை மறுகட்டமைத்து ஆய்வு செய்யக்கூடிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. 1990களில், குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட டோலி என்ற செம்மறி ஆடு பிறந்தது மிகப் பெரிய சாதனையாக நிரூபிக்கப்பட்டது. அதாவது ஒரு உயிரினத்தின் சரியான நகல் உருவாக்கப்பட்டது. இதைச் செய்வதற்கு உயிருள்ள செல்கள் தேவை.

2012 ஆம் ஆண்டில், மரபணு திருத்தத்திற்கான ஒரு புதிய கருவி 'CRISPER Cas9' கண்டுபிடிக்கப்பட்டது. அதன் உதவியுடன், கொலோசல் பயோசயின்சஸ் டயர் ஓநாய் குட்டிகளை உருவாக்கியுள்ளது.

என்னென்ன சந்தேகங்கள் உள்ளன?

அழிந்துபோன விலங்குகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தக் கருவியின் காரணமாக, மரபணு திருத்தம் மிகவும் துல்லியமானது, புரட்சிகரமான மாற்றங்கள் சாத்தியமானது என்று கூறும் டோரில் கோர்ன்ஃபெல்ட், 'CRISPR Cas 9' விவசாய அறிவியலிலும் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்.

இதுபோன்ற தொழில்நுட்பங்கள் மற்றும் முயற்சிகளால் அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் கனவு நனவாகும். ஆனால் அழிந்துபோன விலங்குகளை மீண்டும் உருவாக்க முயற்சிப்பது ஏன்?

"இதற்கு முக்கிய காரணம் அறிவியல் ஆர்வம் என்று நினைக்கிறேன். விஷயங்களைப் பரிசோதித்து உலகை நன்கு புரிந்துகொள்ளும் ஆர்வத்தின் காரணமாக, உலகில் பல நல்ல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவை நமக்கு பயனளித்துள்ளதும் கண்கூடான விஷயம் தான். ஆனால் பல நெறிமுறை கேள்விகளும் இந்த சோதனைகளுடன் தொடர்புடையவை" என்று டோரில் கோர்ன்ஃபெல்ட் கருதுகிறார்.

அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உருவாக்குவதால் என்னென்ன சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்?

அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள லூயிஸ் & கிளார்க் கல்லூரியின் தத்துவப் பேராசிரியர் டாக்டர் ஜே. ஓடென்போ, மரபணு திருத்தம் நிச்சயமாக ஒரு முக்கியமான தொழில்நுட்பம் என்று கூறுகிறார், ஆனால் அழிவு நீக்கம் செய்வதன் மூலம், அதாவது அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உருவாக்குவதன் மூலம், நாம் கடவுளாக மாற முயற்சிக்கவில்லையா? என்ற கேள்வியை அவர் முன்வைக்கிறார்.

"தத்துவார்த்த ரீதியில், அதன் நன்மைகள், தீமைகளை விட அதிகமாக உள்ளதா என்பதை நாம் ஆராய வேண்டும். மேலும், அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் வைக்கப்படும் வாதங்களை நாம் மதிப்பீடு செய்ய வேண்டும். அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உருவாக்குவதில் நெறிமுறை சிக்கல்களும் உள்ளன. இதில் பக்க விளைவுகளும் உள்ளன" என்று அவர் கூறுகிறார்.

இந்த விஷயத்தில் வெளிப்படுத்தப்படும் முக்கியமான கவலை என்னவென்றால், அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு பொதுமக்களின் ஆதரவு குறையக்கூடும்.

"ஒரு இனம் அழிந்துவிட்டாலும், அதை மீண்டும் உருவாக்க முடியும் என்று மக்கள் நம்பத் தொடங்குவார்கள், இதுவொரு கவலை. அழிவு என்பது நிரந்தரமானது என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அந்தக் கருத்து மாறக்கூடும். எனவே அழிவு நிலையில் இருக்கும் உயிரினங்களை பாதுகாக்கும் முயற்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று மக்கள் உணரத் தொடங்குவார்கள்" என்று டாக்டர் ஜே. ஓடன்போ கூறுகிறார்.

எந்த இனத்தை மீண்டும் உலகில் அறிமுகப்படுத்துவது என்பதை தீர்மானிப்பதும் முக்கியமான கேள்வி.

மாமூத் போன்ற உயிரினங்களை மீண்டும் உருவாக்கலாம் என்றால் அதற்கான காரணம், அவை பனி உருகுவதைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் என்பதாக இருக்கும் என டாக்டர் ஜே. ஓடன்போ கூறுகிறார்.

ஆனால் அழிவு தொடர்பான அடுத்த கேள்வி என்னவென்றால், மீண்டும் உருவாக்கப்படும் விலங்குகளின் இனங்கள் அசலானதாக இருக்காது, மாறாக அவற்றை ஒத்தது போலவே இருக்கும்.

இந்த நிலையில் உயிரினங்களை மீட்டெடுப்பதன் அடிப்படை நோக்கம் நிறைவடையாது என்று டாக்டர் ஜே. ஓடென்போ நம்புகிறார். மேலும், அத்தகைய உயிரினங்களின் வாழ்க்கையும் தனிமைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம்.

மரபணு திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த உயிரினங்கள் அசல் உயிரினங்களைப் போன்றவையா இல்லையா என்பதை அறிய மக்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்று டாக்டர் ஜே. ஓடன்போ கூறினார். அவை பாதுகாக்கப்பட்ட கூண்டுகளில் வைக்கப்படும். இனப்பெருக்கம் செய்ய முடியாவிட்டால், அவை மீண்டும் அழிந்துவிடும்.

"இந்தத் திட்டம் பாதுகாப்பிற்காக அல்ல, ஆர்வத்திற்காக மட்டுமே நடத்தப்படுகிறது என்பதையே இது குறிக்கிறது. இந்தப் பணியை மேற்கொள்வது தனியார் நிறுவனங்கள் என்பதால், பிற விஞ்ஞானிகளால் இதைப் பார்க்க முடியவில்லை."

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், கொலோசல் பயோசயின்சஸ், டயர் ஓநாய் மீளுருவாக்கம் பரிசோதனை குறித்த தனது ஆராய்ச்சியை மதிப்பாய்வுக்காக ஒரு கல்வி இதழில் சமர்ப்பித்ததாகக் கூறியது. ஆனால் அது வெளியாக பல மாதங்கள் ஆகும்.

சரி, உயிரினங்களை மீட்டெடுப்பது சுலபமானதா? அவை அழிந்து போன உயிரினங்களாவே இருக்குமா? இந்தக் கேள்விக்கான பதில் இல்லை என்பதாகவே இருக்கும்.

தற்போது, Colossal Biosciences உருவாக்கி வளர்த்துவரும் ஓநாய்கள் முழுமையான டயர் ஓநாய்கள் அல்ல. இருப்பினும், இது அழியாத்தன்மையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் நிச்சயமாக முக்கியமானது என்று சொல்லலாம்.

ஒருவேளை, இதுவும் பாதுகாப்பிற்கான ஒரு புதிய ஊடகமாக மாறக்கூடும். ஆனால் அழிந்துபோன உயிரினம் ஒன்றை மீண்டும் உருவாக்குவதற்கு கடின உழைப்பும் தொழில்நுட்பமும் மட்டுமல்ல அதிக பணமும் தேவை.

அதுமட்டுமல்ல, சரியா தவறா என பல தார்மீகப் பிரச்னைகளும் இத்துடன் இணைத்து பார்க்கப்படும். அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என்றும், ஆனால் இந்த அறிவியலைப் பாதுகாப்போடு பயன்படுத்துவது உலகில் பல்லுயிர் பெருக்கத்தைப் பராமரிக்க உதவும் என்றும் டாக்டர் பெத் ஷாபிரோ கூறுகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c39xjl8zk03o

விஞ்ஞானிகள் விளக்க முடியாமல் தவிக்கும் வினோதமான விண்வெளி வெடிப்புகள்

1 week 4 days ago

விண்வெளி வெடிப்புகள், அரிய வெடிப்புகள், கருந்துளை

பட மூலாதாரம்,PHILIP DRURY/ UNIVERSITY OF SHEFFIELD

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜானத்தன் ஓ கல்லகன்

  • பதவி,

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

வானியலாளர்கள் விசித்திரமான, அரிய வகை வெடிப்புகள் பலவற்றைக் கண்டறிந்துள்ளனர். அவை சிறந்த கருந்துளை வகைகளின் அறிகுறிகளாக இருக்க முடியுமா?

வானியலாளர்கள் இதுபோன்ற ஒன்றை முன்னெப்போதும் கண்டதில்லை. விண்வெளியின் ஆழத்தில் இருந்த ஒரு பெரிய பொருள் திடீரென வெடித்தது.

அதைத் தொடர்ந்து, பூமியில் உள்ள தொலைநோக்கிகள் 2018ஆம் ஆண்டு வியக்கத்தக்க வகையில் பிரகாசமாகவும் விசித்திரமாகவும் காணப்பட்ட வெடிப்பைக் கண்டுபிடித்தன. இந்த வெடிப்பு 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் எவ்வாறு நடந்தது என்பதை வானியலாளர்கள் உற்று நோக்கினர்.

அந்த வெடிப்பு ஒரு சாதாரண நட்சத்திர வெடிப்பைவிட வேகமாகவும் பிரகாசமாகவும் இருந்தது. அது சூப்பர்நோவாவாக இருக்கும் எனக் கருதப்பட்டாலும், அதன் தன்மை மிகவும் வித்தியாசமாக இருந்தது.

இந்த அதிநவீன விண்மீன் வெடிப்பு AT2018cow என அழைக்கப்பட்டது. இதில் உள்ள "cow" என்பது ஒரு சீரான குறியீட்டின் ஒரு பகுதி மட்டுமே. அதற்கும் பசுவைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான 'cow' என்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எளிய பயன்பாட்டிற்காக மட்டுமே இது உலகமெங்கும் சுருக்கமாக "தி கௌ" (The Cow) என அறியப்படுகிறது.

இந்த பிரமிக்க வைக்கும் நிகழ்வுக்குப் பிறகு, வானியலாளர்கள் பேரண்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதே போன்ற சில வெடிப்புகளைக் கண்டறிந்துள்ளனர்.

இவை "ஒளிரும் வேகமான நீல ஒளியியல் நிலையற்ற வெடிப்புகள்" (Luminous Fast Blue Optical Transients - LFBots) என விவரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஒரே மாதிரியான தன்மைகளைக் கொண்டுள்ளன.

"அவை மிகவும் பிரகாசமாக இருக்கின்றன" என்கிறார் நியூயார்க்கின் கார்னெல் பல்கலைக்கழக வானியலாளர் அன்னா ஹோ.

அதனால்தான் LFBot எனும் சுருக்கத்தில் உள்ள 'L' என்பது 'luminous' (ஒளிர்வான) என்பதைக் குறிக்கிறது.

இந்த வெடிப்புகளின் நீல நிறம், சுமார் 40,000°C (72,000°F) என்ற அதீத வெப்பத்தால் ஏற்படுகிறது. இந்த வெப்பம் ஒளியை நிறமாலையின் நீல நிறப் பகுதிக்கு மாற்றுகிறது. அந்த LFBot எனும் சுருக்கத்தின் கடைசி எழுத்துகளான 'O' மற்றும் 'T' என்பவை இந்த நிகழ்வுகள் கண்ணுக்குத் தெரியும் ஒளி நிறமாலையில் (optical) தோன்றி, மிகக் குறுகிய நேரத்தில் மறையும் (transient) தன்மையைக் குறிக்கிறது.

வெற்றிகரமாக வெடித்துச் சிதறாத சூப்பர் நோவாக்களா இந்த LFBots?

தொடக்கத்தில், LFBots என்பது வெற்றிகரமாக வெடிக்க முடியாமல் போன சூப்பர்நோவாக்களாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதினர்.

அதாவது, வெடிக்க முயன்ற நட்சத்திரங்கள், உட்புறமாக வெடித்து, அவற்றின் மையத்தில் ஒரு கருந்துளையை உருவாக்கி, பின்னர் அதன் வெளிப்புறத்தை உள்நோக்கி விழுங்கும் செயல்முறை.

இருப்பினும், இவை குறித்த மற்றொரு கோட்பாடு தற்போது பிரபலமடைந்து வருகிறது. இடைநிலை நிறை கருந்துளைகள் (intermediate mass black holes) எனப்படும் நடுத்தர அளவிலான கருந்துளைகளின் கண்டுபிடிக்கப்படாத ஒரு வகை, அவற்றுக்கு மிக அருகில் செல்லும் நட்சத்திரங்களை விழுங்கும்போது "கௌ" (Cow) எரிப்புகள் தூண்டப்படுகின்றன.

கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான ஒரு புதிய ஆய்வுக் கட்டுரை, இந்தக் கோட்பாட்டுக்குப் புதிய ஆதாரங்களை விவரித்தது.

இது இப்போது பொருந்தக்கூடிய விளக்கமாகக் கருதப்படலாம். "பொதுவான நிலைப்பாடு இப்போது அந்தத் திசையை நோக்கி நகர்கிறது" என்று லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் வானியலாளர் டேனியல் பெர்லி கூறுகிறார்.

இது சரியானது என நிரூபிக்கப்பட்டால், பிரபஞ்சத்தில் காணப்படும் மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய கருந்துளைகளுக்கு இடையே காணாமல் போன இணைப்புக்கும், பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றான இருண்ட பொருள் (dark matter) குறித்துப் புரிந்து கொள்வதற்கும் ஒரு முக்கியமான ஆதாரங்களை இது வழங்கக்கூடும்.

எப்போது இத்தகைய வெடிப்பு பதிவு செய்யப்பட்டது?

விண்வெளி வெடிப்புகள், அரிய வெடிப்புகள், கருந்துளை

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,வெடிப்பதற்காக முயன்ற நட்சத்திரங்கள் வெடிக்காமல், மையத்தில் ஒரு கருந்துளையை உருவாக்கி, பின்னர் அவற்றை வெளிப்புறத்தை உள்நோக்கி இழுத்து விழுங்குகின்றன.

கடந்த 2018ஆம் ஆண்டு நிகழ்ந்த முதல் "தி கௌ" (The Cow) வெடிப்பு, ரோபோ ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு, பூமியை அடிப்படையாகக் கொண்ட தொலைநோக்கியான அட்லஸ் (Asteroid Terrestrial-impact Last Alert System) மூலம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வெடிப்பு, பூமியிலிருந்து சுமார் 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள ஒரு விண்மீன் மண்டலத்தில் பதிவானது. வழக்கமான சூப்பர்நோவாவைவிட இது 100 மடங்கு அதிகமாகப் பிரகாசித்தது. மேலும், தோன்றிய சில நாட்களிலேயே மறைந்தும்விட்டது.

சாதாரண சூப்பர்நோவாக்கள் முழுமையாக நிகழச் சில வாரங்கள் அல்லது மாதங்கள்கூட ஆகும். இத்துடன், பிரிட்டனில் உள்ள ஷெஃபீல்ட் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட அவதானிப்புகளின்படி, இந்த வெடிப்பு ஒரு விசித்திரமான மற்றும் தட்டையான வடிவமைப்பைக் கொண்டிருந்தது என்பதையும் வெளிப்படுத்துகின்றன.

அதன் பிறகு, வானியலாளர்கள் இதேபோன்ற சுமார் 12 நிகழ்வுகளைக் கண்டறிந்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை அவற்றை முதலில் கண்டறிந்த வானியல் ஆய்வுகளின் விளைவாகத் தரப்படும் எழுத்துக் குறியீடுகளின் அடிப்படையில், விலங்குகளை மையமாகக் கொண்ட புனைப்பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அவை,

  • ZTF18abvkwla, 2018-ல் கண்டறியப்பட்டது – இது "கோலா" என அழைக்கப்படுகிறது.

  • ZTF20acigmel, 2020-ல் கண்டறியப்பட்டது – "ஒட்டகம்" எனப்படுகிறது.

  • AT2022tsd, 2022-ல் கண்டறியப்பட்டது – "டாஸ்மேனிய டெவில்" என்று அழைக்கப்படுகிறது.

  • AT2023fhn, 2023-ல் கண்டறியப்பட்டது – "ஃபின்ச்" அல்லது "ஃபான்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

இத்தகைய வெடிப்புகளைத் தேடும் முயற்சியில் வானியலாளர்கள் தொலைநோக்கியின் மூலம் செய்யப்பட்ட ஆய்வுகளைப் பயன்படுத்தி வானத்தின் பெரிய பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த வகையான நிகழ்வுகளைக் கண்டறிய வானியலாளர்கள் தற்போது விண்வெளியின் பரந்த பகுதிகளை ஆய்வு செய்யும் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். இத்தகைய ஒரு வெடிப்பு எப்போது நிகழ்ந்தாலும், அதைப் பற்றி மற்ற வானியலாளர்களுக்குத் தகவல் தெரிவிக்க Astronomer's Telegram எனப்படும் ஆன்லைன் தளத்தில் அவர்கள் தகவல் அனுப்புகின்றனர். இது மற்ற தொலைநோக்கிகளை உடனடியாக அந்த நிகழ்வை உற்றுநோக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நவம்பரில், ஹோ மற்றும் பெர்லி மற்றொரு புதிய LFBot வெடிப்பைக் கண்டறிந்தனர். இது AT2024wpp என அழைக்கப்படுகிறது. ஆனால் இதுவரை இதற்குப் புனைப்பெயர் வைக்கப்படவில்லை. "நாங்கள் இதற்கு 'குளவி' (Wasp) என்ற பெயரை யோசித்தோம்," என்கிறார் ஹோ.

இந்த வெடிப்பு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஏனெனில் இது "தி கௌ" வெடிப்புக்குப் பிறகு கண்டறியப்பட்ட மிகவும் பிரகாசமான LFBot.

மேலும், இது தனது பிரகாச நிலையின் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியப்பட்டதால், வானியலாளர்கள் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி உள்படப் பல தொலைநோக்கிகளை அதை நோக்கித் திருப்பி, அதிகமாகக் கவனிக்க முடிந்தது. "தி கௌ வெடிப்புக்குப் பிறகு இதுவே சிறந்தது" என பெர்லி கூறுகிறார்.

'இவை அனைத்தும் ஆரம்பக் கால கண்டுபிடிப்புகளே'

விண்வெளி வெடிப்புகள், அரிய வெடிப்புகள், கருந்துளை

பட மூலாதாரம்,PERLEY ET AL

படக்குறிப்பு,பூமியில் இருந்து சுமார் 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நிகழ்ந்த "தி கௌ" வெடிப்பு 2018இல் கண்டறியப்பட்டது

ஆரம்பக்கால கண்டுபிடிப்புகள், 'குளவி' வெடிப்பு என்பது தோல்வியடைந்த சூப்பர்நோவாவால் ஏற்படவில்லை என்பதைக் குறிக்கின்றன.

அந்தக் கோட்பாட்டின்படி, ஒரு நட்சத்திரம் வெடிக்க முயலும்போது தானாகவே சரிந்துவிடும். அதன் வெளிப்புற ஓட்டுக்குள் ஒரு கருந்துளை அல்லது அடர்த்தியுள்ள நியூட்ரான் நட்சத்திரம் உருவாகி, அந்த ஓட்டைக் கிழித்து வெளியில் கதிர்வீச்சுகளைச் சுழற்றும். இதுதான் மைய இஞ்சின் எனப்படும் நிலையை உருவாக்கும்.

இது பூமியில் காணக்கூடிய சுருக்கமான 'கௌ' வெடிப்பை விளக்குகிறது. ஆனால் அந்த வெடிப்பில் இருந்து பொருட்கள் வெளியே செல்லும் எந்தத் தடயமும் 'குளவி'யில் காணப்படவில்லை என்று பெர்லி கூறுகிறார். இதுபோன்ற நிகழ்வுகளில் அப்படிப்பட்ட தடயங்கள் இருக்குமென விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பார்கள்.

இருந்தாலும், இப்போது கிடைத்துள்ள தகவல்கள் அனைத்தும் ஆரம்ப காலகட்டத்தைச் சேர்ந்தவை மட்டுமே. "நாங்கள் இன்னும் அந்தத் தரவுகளை விரிவாக ஆய்வு செய்து வருகிறோம்," என்கிறார் பெர்லி.

கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பரில், நெதர்லாந்து விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஜெங் காவ் மற்றும் அவரது குழுவினர் முதன்முதலில் கண்டறியப்பட்ட LFBot வெடிப்பை மீண்டும் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், தோல்வியடைந்த சூப்பர்நோவா என்ற கோட்பாட்டை சவால் செய்யும் புதிய ஆதாரங்களை அவர்கள் கண்டுபிடித்தனர்.

அந்த நிகழ்வின் எக்ஸ்-கதிர் தரவுகளை ஆய்வு செய்ததில், வெடிப்பைச் சுற்றி வட்டத்தட்டு வடிவில் பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். அதன் பின்னர், அந்த வெடிப்பின் கணினி மாதிரியை உருவாக்கிப் பார்த்தனர். அதில், அது இடைநிலை நிறை கருந்துளையால் விழுங்கப்படும் நட்சத்திரத்தின் எச்சங்கள் போல் இருப்பதாகத் தெரிந்தது.

அந்த வகையான கருந்துளைகள், நமது சூரியனின் நிறையைவிட நூறு முதல் ஒரு லட்சம் மடங்கு வரை அதிகமாக இருக்கக்கூடும். மற்றொரு பக்கம், சில பெரிய கருந்துளைகள் சூரியனைவிட மில்லியன் கணக்கிலும, பில்லியன் கணக்கிலும் அதிக நிறை கொண்டதாக இருக்க முடியும்.

நட்சத்திரம், கருந்துளையால் உண்ணப்படும்போது, அதன் பெரிய துண்டுகள் கருந்துளையைச் சுற்றி விழுந்து, கருந்துளையின் பிரகாசத்தை திடீரென அதிகரிக்கச் செய்யும். இதனால் பூமியில் வானியலாளர்கள் கண்ட 'கௌ எரிப்புகள்' நிகழ்கின்றன.

"எங்கள் ஆய்வு AT2018cow மற்றும் அதேபோன்ற LFBots வெடிப்புகளின் இடைநிலை நிறை கருந்துளைகளின் தன்மையை ஆதரிக்கிறது என்று நான் நம்புகிறேன்," என்கிறார் ஜெங் காவ்.

LFBots பற்றி நிலவும் மற்றொரு கருத்து

விண்வெளி வெடிப்புகள், அரிய வெடிப்புகள், கருந்துளை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சூப்பர்நோவா வெடிப்பு

மற்றொரு கருத்து என்னவெனில், LFBots என்பவை உண்மையில் வுல்ஃப்-ரேயெட் (Wolf-Rayet) எனப்படும் ராட்சத நட்சத்திரங்களின் ஒரு வகை. அவை நமது சூரியனோடு ஒப்பிடும்போது 10 முதல் 100 மடங்கு குறைவான நிறையுள்ள சிறிய கருந்துளைகள் மூலம் உடைக்கப்படுகின்றன.

நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தத்துவார்த்த வானியற்பியல் வல்லுநரான பிரையன் மெட்ஸ்கர் இந்த யோசனையை ஆதரிப்பவர்களில் ஒருவர். இவை உருவாகும் விதம், ஈர்ப்பு அலைகளை உண்டாக்கி கண்டறியப்பட்ட ஜோடி கருந்துளைகள் உருவாகும் முறைக்கு ஓரளவு ஒத்ததாக இருக்கலாம். ஆனால் இங்குள்ள முக்கிய வித்தியாசம் என்னவெனில், இதில் பல நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றுதான் கருந்துளையாக மாறுகிறது.

இடைநிலை நிறை கருந்துளைகள் பற்றிய கோட்பாடு தற்போதைய நிலையில் மிகவும் கவர்ச்சிகரமாகவும், விரும்பத்தக்க கருத்தாகவும் இருக்கலாம். இது உண்மையாக இருந்தால், LFBots நமக்கு மர்மமான நடுத்தர அளவிலான கருந்துளைகளை ஆய்வு செய்யும் ஒரு தனித்துவமான வாய்ப்பாக இருக்கும். பிரபஞ்சத்தில் இடைநிலை நிறை கருந்துளைகள் இருப்பதாக வானியலாளர்கள் பெரும்பாலும் நம்புகின்றனர். ஆனால் அவற்றுக்கான உறுதியான ஆதாரம் இதுவரை எவராலும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இவை மிகவும் முக்கியமானவையாக இருக்கலாம், ஏனெனில் இவை அண்டத்தில் உள்ள சிறிய கருந்துளைகளுக்கும், நமது விண்மீனின் மையத்தில் உள்ள பெரிய கருந்துளைகளுக்கும் இடையில் காணாமல் போன இணைப்பாகச் செயல்படுகின்றன. LFBots மூலம் இடைநிலை நிறை கருந்துளைகள் எங்கே இருக்கின்றன மற்றும் அவை எவ்வளவு பரவலாக உள்ளன என்பதை அறிய முடியும்.

"இடைநிலை நிறை கருந்துளையின் மாதிரி மிகவும் சுவாரஸ்யமானது" என்கிறார் பெர்லி. "இடைநிலை நிறை கருந்துளைகள் உண்மையில் உள்ளதா என்பது ஒருவித விவாதமாகவே உள்ளது. இதற்கு ஆதாரங்கள் இன்னும் வரையறுக்கப்படவில்லை."

LFBots என்றால் உண்மையில் என்ன என்பதை உறுதியாக அறிய, அவற்றின் மாதிரிகள் அதிக எண்ணிக்கையில் நமக்குத் தேவை. "துரதிர்ஷ்டவசமாக, அவை மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன," என்று பெர்லி கூறுகிறார். "அவற்றில் குறைந்தது 100 மாதிரிகள் குறித்த தரவுகள் கிடைத்தால், அது எங்களுக்கான அடுத்த முக்கியப் படியாக இருக்கும்," என்றும் அவர் கூறுகிறார்.

அடுத்த ஆண்டு இஸ்ரேலிய சுற்றுப்பாதை தொலைநோக்கி அல்ட்ராசாட் (அல்ட்ரா வயலட் டிரான்சியன்ட் வானியல் செயற்கைக்கோள்) ஏவப்பட உள்ளதால், தோராயமாக நூறு மாதிரிகளின் தரவுகள் கிடைக்கக்கூடும்.

தொலைநோக்கியின் பார்வை பரப்பளவு 204 சதுர டிகிரியாக இருக்கும். இது ஒரே நேரத்தில் 1,000 முழு நிலவுகளைப் பார்ப்பதற்குச் சமம். எனவே, இது விண்வெளியில் நடைபெறும் பிற நிகழ்வுகளுடன் சேர்த்து, மேலும் பல LFBots வெடிப்புகளைக் கண்டறியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி (JWST) போன்ற தொலைநோக்கிகளால், LFBot வெடிப்பு பிரகாசமாகும் தருணத்தில் அதன் திசையில் கவனம் செலுத்த முடிந்தால், அந்த நிகழ்வைப் பற்றிய மேலதிக தகவல்களைச் சேகரிக்க உதவக்கூடும்.

"ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி (JWST) இதற்காக மிகச் சிறந்ததொரு கருவியாக இருக்கும்," என்கிறார் மெட்ஸ்கர். ஆனால், இதுபோன்ற அவதானிப்புகளைச் செய்ய நேரம் கிடைப்பது சுலபமல்ல.

"நான் இருமுறை முயன்றேன், ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை, இந்த ஆண்டில் மீண்டும் முயலப் போகிறேன்" என்று ஹோ கூறுகிறார்.

கூடுதல் தரவுகள் கிடைக்கும் வரை, இந்த விசித்திரமான வெடிப்புகள் பற்றிய மர்மம் தொடரும். LFBots யாரும் எதிர்பார்த்ததைவிட மிகவும் அசாதாரணமானது என்பது தெளிவாகிறது.

"இதுவொரு சுவாரஸ்யமான, ஒருமுறை நிகழும் சம்பவம் என நினைத்திருந்தேன். ஆனால் இது முற்றிலும் வேறு வகையான நிகழ்வாக மாறியது. மேலும் இவை நாளுக்கு நாள் இன்னும் சுவாரஸ்யமானதாகவே மாறிகொண்டிருக்கின்றன," என்கிறார் பெர்லி.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cdr531z8md3o

ஆக்ஸியம் 4: 41 ஆண்டுகள் கழித்து விண்வெளிக்கு செல்லும் 2வது இந்தியர் அங்கு என்ன செய்வார்?

1 week 5 days ago

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு,'ஆக்ஸியம் 4' திட்டத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரியை சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவுள்ளார்கள்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சிராஜ்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அமெரிக்காவின் நாசா தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 'ஆக்ஸியம் ஸ்பேஸ்' எனும் தனியார் நிறுவனத்தின் 'ஆக்ஸியம் 4' திட்டத்தின் கீழ் அமெரிக்கா, இந்தியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள், ஜூன் 8ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவுள்ளார்கள்.

இதன்மூலம், 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் நுழையப் போகும் முதல் இந்தியர் என்ற பெருமையை உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார்.

கடந்த 1984ஆம் ஆண்டு, ஏப்ரல் 3ஆம் தேதி, இந்தியாவை சேர்ந்த ராகேஷ் ஷர்மா, சோயுஸ் டி-11 எனும் சோவியத் விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்றார். விண்வெளியில் அப்போது இயங்கிக் கொண்டிருந்த சல்யூட் 7 (Salyut 7) எனும் சோவியத் விண்வெளி நிலையத்தில் 7 நாட்கள், 21 மணிநேரம் தங்கியிருந்து அவர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

அதன் பிறகு, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், ராஜா சாரி உள்ளிட்ட சில இந்திய வம்சாவளியினர் விண்வெளிக்குச் சென்றிருந்தாலும், ஒரு இந்திய குடிமகன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்வது இதுவே முதல்முறை.

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு,'ஆக்ஸியம் நிலையம்' நிறுவத் தேவையான மாட்யூல்கள் பல கட்டங்களாக விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்படும்.

ஆக்ஸியம் 4

பூமியின் கீழ்வட்டப் பாதையில் (Low earth orbit - பூமியிலிருந்து 160-2000 கிமீ வரையிலான உயரம்), மனிதர்கள் தற்காலிகமாகத் தங்கி விண்வெளி ஆய்வுப் பணிகள் மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டதே சர்வதேச விண்வெளி நிலையம்.

இந்த விண்வெளி நிலையம் 2031இல் செயலிழந்து, பூமியில் விழுந்து நொறுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வளிமண்டல மறுநுழைவின்போது அதீத வெப்பத்தின் காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தின் பெரும்பாலான பகுதிகள் பூமியில் விழும் முன்பே எரிந்துவிடும்.

அதற்கு மாற்றாக ஒரு புதிய விண்வெளி நிலையத்தை தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நிறுவ நாசா விரும்புகிறது. அதன் ஒரு பகுதியே 'ஆக்ஸியம் நிலையம்'.

அதை நிறுவத் தேவையான 4 மாட்யூல்கள் (Modules) பல கட்டங்களாக விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்படும். பின்னர் ஐஎஸ்எஸ் செயலிழக்கும்போது இந்த மாட்யூல்கள் பிரிந்து, ஒரு புதிய விண்வெளி நிலையமாகச் செயல்படும். ஆனால், 2031 வரை காத்திருக்காமல், 2028ஆம் ஆண்டுக்குள் இதைச் செயல்படுத்த ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் விரும்புகிறது.

அடுத்த ஆண்டில்(2026), முதல் மாட்யூல் விண்வெளிக்கு அனுப்பப்படும் என நாசா கூறுகிறது. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், 'ஆக்ஸியம் நிலையம்' உலகின் முதல் வணிக நோக்கிலான விண்வெளி நிலையமாக இருக்கும்.

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு,பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் ஆக்ஸியம் 4 குழுவினர்

இந்தப் புதிய விண்வெளி நிலையத்தை நிறுவுவது தொடர்பான பணிகளுக்கு மட்டுமல்லாது, எதிர்காலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மாற்றாகவும், வணிக விண்வெளி நிலையமாகவும் செயல்பட வேண்டியிருக்கும் என்பதால், அதற்கு முன்னோட்டமாக 2022இல் இருந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிவருகிறது ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம்.

அதன் நான்காவது கட்ட மிஷன் தான் இந்த ஆக்ஸியம் 4. இதில் பயணிக்கப் போகும் நால்வர் யார்?

  • அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனையும், இந்த 'ஆக்ஸியம் 4' திட்டத்தின் கமாண்டருமான பெக்கி விட்சன்

  • இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா, இவர் 'ஆக்ஸியம் 4' திட்டத்தின் விமானி

  • போலந்து நாட்டைச் சேர்ந்த ஸ்லாவோஷ் உஸ்னான்ஸ்கி-விச்நியெவ்ஸ்கி, இவர் 'ஆக்ஸியம் 4' திட்ட நிபுணர்

  • ஹங்கேரியை சேர்ந்த டிபோர் கபு, இவர் 'ஆக்ஸியம் 4' திட்ட நிபுணர்

இந்தியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுப் பணிகளில் கலந்துகொள்வது இதுவே முதல்முறையாக இருக்கும்.

யார் இந்த சுபான்ஷு சுக்லா?

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு,சுபான்ஷு சுக்லா, 2006ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைந்தார்.

அக்டோபர் 10, 1985, உத்தர பிரதேசத்தின் லக்னௌவில் பிறந்தவர் சுபான்ஷு சுக்லா. நேஷனல் டிஃபன்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற பிறகு, 2006ஆம் ஆண்டு இந்திய விமானப் படையின் 'ஃபைட்டர் விங்' பிரிவில் (Fighter Wing- போர் விமானப் பிரிவு) இணைந்தார்.

சுபான்ஷு, 2000 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவர். இதில் இந்திய விமானப் படையின் சுகோய் எஸ்யு-30 எம்கேஐ, மிக்-21, மிக்-29, ஜாகுவார், ஹாக், டோர்னியர், ஏஎன்-32 போன்ற போர் விமானங்களை ஓட்டிய அனுபவமும் அடங்கும்.

கடந்த 2019ஆம் ஆண்டு, இஸ்ரோவில் இருந்து வந்த ஒரு முக்கியமான அழைப்பு சுபான்ஷுவின் வாழ்க்கையை மாற்றியது. அதன் பிறகு, ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள யூரி ககாரின் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் ஓர் ஆண்டு பயிற்சி பெற்றார். பின்னர் 2024இல், இந்திய விமானப் படையின் குரூப் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார்.

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு,கேரளாவை சேர்ந்த பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது திட்டத்திற்கு ககன்யான் எனப் பெயரிட்டுள்ளது.

அதற்கு சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இந்த நால்வரில் இருந்து சுபான்ஷு சுக்லா மற்றும் கேரளாவை சேர்ந்த பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் 'ஆக்ஸியம் 4' திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் 'ஆக்ஸியம் 4' திட்டத்தின் பேக்-அப் குழுவில் இருக்கிறார். அதாவது, ஆக்ஸியம் 4 திட்டத்தின் பிரதான 4 உறுப்பினர்களைப் போலவே இந்த பேக்-அப் குழுவின் உறுப்பினர்களுக்கும் அனைத்துப் பயிற்சிகளும் அளிக்கப்படும்.

ஒருவேளை, இறுதிக் கட்டத்தில் பிரதான உறுப்பினர்களில் யாரேனும் ஒருவரால் விண்வெளிப் பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்றால், அவரது இடத்தை இந்த பேக்-அப் குழு உறுப்பினர் ஒருவர் நிரப்புவார்.

விண்வெளியில் என்ன பணிகளை மேற்கொள்வார்கள்?

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,ஆக்ஸியம் 4 குழுவினர், 14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.

வரும் ஜூன் 8ஆம் தேதி, இந்திய நேரப்படி மாலை 6.41 மணிக்கு, ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் உந்தப்படும் டிராகன் விண்கலத்தில் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நால்வர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணிக்க உள்ளனர்.

ஃப்ளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து தொடங்கும் இந்தப் பயணம், 14 நாட்களுக்கு நீளும்.

'ஆக்ஸியம் 4' திட்டத்தின் நோக்கம் "அமெரிக்கா, இந்தியா, போலந்து, ஹங்கேரி, சௌதி அரேபியா உள்பட 31 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 60 விண்வெளி ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது" என்று ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் கூறுகிறது.

அவற்றில் முக்கியமானவை,

  • குறுகிய கால விண்வெளிப் பயணங்களின்போது இன்சுலினை சார்ந்திருக்கும் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட விண்வெளி வீரர்களுக்கு எந்தெந்த வழிகளில் உதவலாம் என்பது குறித்து ஆய்வு செய்தல்.

  • விண்வெளியில் நிலவும் குறைவான ஈர்ப்பு விசையே மைக்ரோகிராவிட்டி எனப்படுகிறது. அத்தகைய சூழல் மனித மூளையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்தல்.

  • மனிதர்கள் விண்வெளிக்கு ஏற்றவாறு எவ்வாறு தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள விண்வெளி வீரர்களிடம் இருந்து உடலியல் மற்றும் உளவியல் தரவுகளைச் சேகரித்தல்.

  • குறுகிய விண்வெளிப் பயணங்கள் மூட்டுகள் மற்றும் ரத்த ஓட்டத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை ஆய்வு செய்தல்.

  • விண்வெளியில் புற்றுநோய் வளர்ச்சியை ஆராய்தல், குறிப்பாக டிரிபிள்-நெகட்டிவ் மார்பக புற்றுநோயை ஆராய்தல்.

  • விண்வெளிப் பயணத்தின்போது ரத்த ஸ்டெம் செல்களில் ஏற்படும் விளைவுகளைப் புரிந்துகொள்வது.

'ஆக்ஸியம் 4' திட்டத்தில் இஸ்ரோவின் ஆய்வுப் பணிகள்

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட சில இந்திய வம்சாவளியினர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றிருந்தாலும், ஒரு இந்திய குடிமகன் அங்கு செல்வது இதுவே முதல்முறை.

ஆக்ஸியம் திட்டத்தில், நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து இஸ்ரோ தலைமையிலான ஆராய்ச்சிப் பணிகளும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்படும். அவை பின்வருமாறு:

  • கணினித் திரைகள் மீது மைக்ரோகிராவிட்டி சூழல் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்தல்.

  • மைக்ரோகிராவிட்டி சூழலில் மூன்று நுண்பாசி திரிபுகளின் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் மற்றும் மரபியல் ஆகியவற்றை ஆய்வு செய்தல். பிறகு அதை பூமியில் கிடைத்த தரவுகளுடன் ஒப்பிடுவது.

  • மைக்ரோகிராவிட்டி சூழலில் எலும்புத்தசை செயலிழப்பு (Skeletal muscle dysfunction) குறித்தும் அதற்கான சிகிச்சைகள் குறித்தும் ஆய்வு செய்வது.

  • ஆறு வகையான பயிர் விதைகளில் விண்வெளிப் பயணத்தின் தாக்கங்களை ஆராய்தல்.

  • பயிர் விதைகளின் முளைத்தல் செயல்முறை மற்றும் வளர்ச்சியில் விண்வெளிப் பயணத்தின் தாக்கங்களை ஆராய்தல்.

இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியா, விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காண்பதோடு, இது அடுத்த தலைமுறை இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு ஊக்கமளிக்கும் என ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் கூறுகிறது.

ராகேஷ் ஷர்மா கூறுவது என்ன?

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ராகேஷ் ஷர்மா

கடந்த 25 ஆண்டுகளில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 270க்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் சென்றிருந்தாலும், அதில் ஒருவர்கூட இந்திய குடிமகன் கிடையாது.

ஒரு இந்தியர் மீண்டும் விண்வெளிக்குச் செல்வது குறித்த செய்திக்காகவே தான் 41 வருடங்களாகக் காத்திருந்ததாகக் கூறுகிறார் முன்னாள் இந்திய விமானப் படை விமானியும், விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியருமான ராகேஷ் ஷர்மா.

அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய விண்வெளித் துறைக்கு இது மிக முக்கியமான தருணம்" என்றார்.

மேலும், "நான் விண்வெளிக்குச் சென்றபோது எல்லாமே புதிய விஷயமாக இருந்தது. உலகின் கவனம் எங்கள் மீது இருந்தது, குறிப்பாக மொத்த இந்தியாவின் கவனமும்.

இப்போது தொழில்நுட்பம் அதீத வளர்ச்சியடைந்துள்ள காலத்தில், விண்வெளிப் பயணத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் சவால்கள் இல்லாமல் இல்லை" என்று கூறினார்.

கடந்த 1984இல், ராகேஷ் ஷர்மா மற்றும் இரு சோவியத் விண்வெளி வீரர்கள் கொண்ட மூவர் குழு கிட்டத்தட்ட 8 நாட்கள் சோவியத் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளை நடத்தியது.

குறிப்பாக உயிரி மருத்துவம் மற்றும் ரிமோட் சென்சிங் சார்ந்த ஆய்வுகளை ராகேஷ் ஷர்மா மேற்கொண்டார்.

அந்தப் பயணத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய 14வது நாடாக இந்தியா மாறியது. இப்போது 41 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு இந்தியர் விண்வெளிக்குச் செல்லவுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn5ylklrgklo

எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ரொக்கெட் இந்திய பெருங்கடலில் வீழ்ந்தது விபத்து!

1 week 6 days ago

space.jpg?resize=750%2C375&ssl=1

எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ரொக்கெட்  இந்திய பெருங்கடலில் வீழ்ந்தது விபத்து!

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனதத்தின்  ஸ்டார்ஷிப் ரொக்கெட்டின் ஒன்பதாவது முயற்சியும் தோல்வியடைந்துள்ளது. 

பிரபல தொழிலதிபரும் Tesla மற்றும் SpaceX நிறுவனங்களின் தலைவருமான எலோன் மஸ்க் தனது   ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஊடாக விண்வெளி சார்ந்த பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.

2.jpg?resize=600%2C355&ssl=1

அந்தவகையில் அமெரிக்காவின் டெக்சாஸில் இருந்து நேற்றைய தினம் விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் ரொக்கெட்டானது  விண்ணில் ஏவப்பட்டு 30 நிமிடங்களுக்குள் நுழைவுத் தொடர்பு துண்டிக்கப்பட்டு இந்தியப் பெருங்கடலில் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எரிபொருள் கசிவே இத்தோல்விக்கு முக்கிய காரணமாகும்  என ஸ்பேஸ்எக்ஸ் செய்தித்துறை அதிகாரி டான் ஹவுட் உறுதிப்படுத்தியுள்ளார்.

33.jpg?resize=600%2C335&ssl=1

இதேபோன்று, கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற ஏழாவது முயற்சி மற்றும் மார்ச் 6 ஆம் திகதி நடைபெற்ற எட்டாவது முயற்சிகளும் வெற்றியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியான இத்தகைய தோல்விகள், ஸ்பேஸ்எக்ஸின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், எதிர்கால விண்வெளி பயணங்களை துல்லியமாக திட்டமிட உதவும் என்றும் விண்வெளி நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1433527

ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு ஃபீலிங்... பறவைகளின் உள்ளுணர்வும், சில சுவாரஸ்யங்களும்!

2 weeks 1 day ago

1363065.jpg

அங்குமிங்கும் ஆர்ப்பரித்துப் பறக்கும் பறவைகள், வேலையும் இல்லை; நிற்க நேரமுமில்லை என்பதுபோல் பரபரப்பாகத் திரியும் நாய்கள், அசைபோட்டுக் கொண்டே அமர்ந்திருக்கும் கால்நடைகள், பொழுதுக்கும் தூங்கும் பூனைகள் இவையெல்லாம் இரை தேடுதலைத் தாண்டி தம் மனதில் என்ன யோசிக்கும் என்று எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்து சிரித்துச் சென்றிருப்போம். சில நேரங்களில் விளையாட்டாக அதற்கு ‘வாய்ஸ் ஓவர்’ கொடுத்து கிண்டலும்கூட செய்து மகிழ்ந்திருப்போம். இப்போதைய ஏஐ உலகில், பூனை, நாய்கள் பேசுவது போல் ரீல்ஸ் கூட நாம் டூம்ஸ்க்ரால் செய்யும்போது பார்த்து அடடே நல்லாயிருக்கே என்று லைக்ஸ் போட்டுக் கடந்திருப்போம்.

ஆனால், உண்மையிலேயே பறவைகள் என்ன நினைக்கின்றன என்பதை, அவற்றின் உணர்வு நிலை எத்தகையது என்பதை முழுவீச்சில் ஆராய்ச்சியாக செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர் விஞ்ஞானிகள். அதுமட்டுமல்லாது, 1980-களில் தொடங்கி 2003-ம் ஆண்டில் தனது இறப்பு வரை டொனால்டு க்ரிஃபின் என்ற விஞ்ஞானி, விலங்குகளின் உணர்வு நிலை (Animal Consciousness ) பற்றி ஆய்வு செய்துள்ளார்.

இந்தத் துறையில் டொனால்டு க்ரிஃபினை ஒரு முன்னோடி என்றே துறையினர் விதந்தோதுகின்றனர். அவர் தனது இறுதி மூச்சு வரை வலியுறுத்தியது, பறவைகள், விலங்குகளின் உணர்வு நிலை பற்றி அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகள் பெரியளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே. அதை சுட்டிக்காட்டி இந்தக் கட்டுரையில், சில வாதங்களை, சுவாரஸ்யமான ஆய்வு விவரங்களைப் பகிர்ந்துள்ளனர் இரண்டு பேராசிரியர்கள். ஹீதர் பிரவுனிங், பேராசிரியர், சதாம்ப்டன் பல்கலைக்கழகம் மற்றும் வால்டர் வெய்ட், பேராசிரியர் ரீடிங் பல்கலைக்கழகம் ஆகிய இருவரும் ‘தி கான்வர்சேஷன்’ தளத்தில் எழுதியுள்ள கட்டுரையின் சாரம்சம் வருமாறு:இந்த உலகை ஒரு தத்துவ ஞானி பார்க்கும் பார்வை இருக்கும், அது சமூக நலன் சார்ந்ததாக இருக்கும். அதுவே இந்த உலகை பறவைகளும், விலங்குகளும் எப்படிக் காண்கின்றன, அணுகுகின்றன என்ற பார்வையும் இருக்கும் அல்லவா? அது சூழழியல் சார்ந்ததாக இருக்கும். அந்தப் பார்வையை அறிந்து கொள்வது சூழலைப் பேணுவதில் அவசியமானது என்கின்றனர் இத்தகைய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோர்.

ஆற்றலில் தனித்து நிற்கும் காக்கை இனம்: காகம், மனிதர்கள் மத்தியில் வாழும் மிகப் பொதுவான ஒரு பறவை இனம். காக்கை இனத்துக்குள் அடங்கும் ரேவன்ஸ், க்ரோஸ், ஜேஸ், மேக்பைஸ் போன்ற பறவையினங்கள் மத்தியில் மேற்கூறிய ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. பொதுவாக புத்திசாலித்தனம் குறைவாக இருப்பவர்கள் பறவை மூளைக்காரன் என்று வசைபாட அடைமொழியாக்குவதுண்டு. நம்மூரில் வாத்துமூளைக் காரன், மடையன் என்றெல்லாம் வசவு மொழிகள் உண்டு. ஆனால் காக்கை வகையறாக்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், அவற்றை ‘ஃபெதர்ட் ஏப்ஸ்’ (feathered apes), அதாவது நமக்கான முன்னோடி என்று அழைக்கின்றனர்.

காக்கை இனத்தைச் சேர்ந்த பறவைகளுக்கு கூர்மையான பார்வைத் திறன் உண்டு. வேகமாகப் பறக்கும்போது கூட அதன் இரையை கூர்மையாக கவனித்துவிடும் திறன் கொண்டவை. அவற்றின் செவித்திறன் அபாரமானது. ஓசைகளில் இருந்தே எச்சரிக்கையாக இருந்து கொள்ளக் கூடியவை. அதேபோல் அவற்றிற்கு நினைவாற்றலும் அதிகம். இந்த வகைப் பறவைகள் தாங்கள் சேகரிக்கும் உணவை பதுக்கிவைக்கும் திறன் கொண்டவை. இதை ஆங்கிலத்தில் கேச்சிங் (caching) என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எந்த உணவை எங்கு பதுக்கி வைத்தோம் என்பது மட்டுமல்லாது, அதை எப்போது பதுக்கிவைத்தோம் என்பது வரை அவை நினைவில் கொள்கின்றன. அதன்மூலம் புழு, பூச்சிகள் போன்ற சீக்கிரம் அழுகிப்போகும் உணவை எங்கு, எப்போது வைத்தோம், நீண்டகாலம் இருக்கக் கூடிய தானியங்களை எங்கே வைத்தோம் என்று நினைவில் கொண்டு பயன்படுத்திக் கொள்கின்றன. அதுமட்டுமல்லாது ஒருவேளை அந்த உணவுப் பொருளை வேறொரு பறவையிடமிருந்து திருடியிருந்தால் ஒளித்து வைத்த இடத்தையும் அவ்வப்போது மாற்றிக் கொள்கின்றன.

அதேபோல் பறவைகளுக்கு ஆழமான நுகர்ச்சியுணர்வும் இருக்கிறது. அதைப் பயன்படுத்தியும் மறைத்துவைத்த உணவை கண்டு கொள்கின்றன.இது மட்டுமல்லாது இந்த வகைப் பறவைகள் மனிதர்களைப் போல் உணர்ச்சிகளையும் கொண்டுள்ளன. உதாரணத்துக்கு எதிர்மறை எண்ணங்கள் இவற்றிற்கு எழுகின்றன. சக பறவை வாட்டமாக இருந்தால் அதையே தானும் பிரதிபலிக்கக் கூடியவையாக இருக்கின்றன. மனிதர்களைப் போலவே புதிய பொருட்களிடம் எச்சரிக்கையாக இருக்கின்றன. அறிமுகமில்லாத மனிதர்கள் ஏதேனும் உட்கொள்ள கொடுத்தால் அதைப் பெறுவதில் தயக்கம் காட்டுவதும் இந்த நியோஃபோபியாவால் தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பொதுவாக பாலூட்டி விலங்குகளிடம் இதுபோன்ற உணர்வுகள் இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் காக்கை வகை பறவைகளில் காணப்படும் இந்த வகையிலான உணர்ச்சிகள் பறவைகளின் உணர்வுகள், மனம் பற்றி மேலும் ஆராய்ச்சிகளைத் துண்டுவதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஜே (jay bird) என்ற காக்கை வகையறா பறவைகளில் ஆண் பறவை தன் இணையைத் தேர்வு செய்ய பெண் பறவையின் உணவுப் பழக்கவழக்கத்தை கூர்ந்து கண்காணித்து, அதற்குப் பிடித்தமான உணவை சேகரித்துச் சென்று கொடுத்து அத்துடன் இணையும் வழக்கத்தைக் கொண்டுள்ளது. இதுபோன்ற சமூக திறன்கள் பாலூட்டி விலங்குகளிடமே பெரும்பாலும் தென்படும் நிலையில் ஜே பறவைகள் ஆச்சர்யப்பட வைக்கின்றன.

இதுபோன்ற ஆராய்ச்சிகள் கோர்விட் (Corvidae) இன பறவைகளின் நலனைப் பேண உதவும் என்கின்றனர் விஞ்ஞானிகள். அவற்றுக்கு எது உகந்தது, எது ஒப்பாதது என்பதை அறிந்து கொள்வது அவற்றிற்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் நலன் சேர்க்கும் என்கின்றனர் கட்டுரையாளர்கள்.

இயற்கையின் சமநிலைக்காகவே...! - இந்தக் கட்டுரை குறித்த பார்வையை ‘இறகுகள் அம்ரிதா இயற்கை’ அறக்கட்டளை நிறுவனரான ரவீந்திரன் நடராஜன் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். பறவைகள் ஆய்வாளரான அவர் கூறுகையில், “பறவைகளின் அறிவுத்திறன் என்பது அதன் உயிர்வாழ்தலை உறுதி செய்து கொள்வதற்கானதும், அதன் அடுத்த தலைமுறைக்காக தான் வாழும் சூழலை சரியாக தகவமைத்துக் கொள்வதற்குமாகவே இருக்கிறது.

காகங்களின் வாழ்க்கை அதை நமக்கு தெளிவாக உணர்த்தும். காகங்கள் நம் மத்தியில் சர்வ சாதாரணமாக, மிக அதிகமான அளவில் இருக்கக் கூடியவை. அவற்றின் உயிர்வாழ்தலும் பாதிக்கப்படக் கூடாது, அதே வேளையில் அவற்றின் இனப்பெருக்கமும் அதிகமாகிவிடக் கூடாது. ஏனெனில் காகங்கள் மிக வேகமாக இனப்பெருக்கும் செய்து கொண்டே இருக்கக் கூடிய பறவைகள்.

அப்படியிருக்க, இயற்கையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த இயற்கையே அதற்கு ஒரு வழியும் செய்து வைத்திருக்கிறது. அதுதான் குயில்கள். குயிலினங்கள் கூடு கட்டாது, காக்கைக் கூட்டில் முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கச் செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன் பின்னணியில் இந்த இயற்கை சமநிலையைப் பேணும் தன்மை தான் மறைந்திருக்கிறது என்பதே பலரும் அறியாதது.

17482641872027.jpeg

காகங்கள் கூடு கட்ட குச்சிகள் சேர்க்கும் போதே, குயில்கள் இணை சேர திட்டமிட்டு சேர்ந்துவிடும். காகம் கூடு கட்டி முட்டையிட்டதும், ஆண் குயில் அந்தக் கூட்டிலிருந்து முட்டையை தள்ளிவிட்டு உடைத்துவிடும். பொதுவாகவே கூட்டில் முட்டையிட்டுவிட்டால் ஆண், பெண் காகங்கள் மாற்றி மாற்றி அதற்கு காவலாக இருக்கும். ஆனால் அதையும் தாண்டி அந்தக் கூட்டில் பெண் குயில் முட்டையிட ஆண் குயில் மிகப் பெரிய வேலைகளைச் செய்யும்.

விளையாட்டாகச் சொல்வதென்றால் கில்லாடி வேலைகளைச் செய்யும். ஆண் குயில் காகங்களிடம் வேண்டுமென்றே சண்டையிழுத்து அவற்றை அங்குமிங்கும் அலைக்கழித்து அவற்றின் கவனத்தை திசை திருப்பிவிடும். அந்த நேரத்தில் பெண் குயில் வந்து முட்டையிட்டுச் சென்றுவிடும். இப்படி அந்த முட்டையை வளர்க்கும் காகம் ஒரு கட்டத்தில் அது தன்னுடையது அல்ல என்பதைத் தெரிந்தவுடன் கூட்டிலிருந்து விரட்டிவிடும்.

17482637682027.jpg

பறவைகள் ஆய்வாளர்/ ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன்

இப்படித்தான் பல்கிப் பெருகக்கூடிய ஒரு பறவையினத்தை, கூடுகட்டும் திறனில்லாத இன்னொரு பறவையினம் சர்வைவலுக்காக கட்டுப்படுத்துகிறது. இதைத்தான் இயற்கை சமநிலைக்கு இயற்கையே அளித்த திறமைகள் என்று கூறுகின்றேன்.

காகங்கள் அனைத்துண்ணிகளாக இருந்து நகரத் தூய்மையைப் பண்ணுவதாக இருந்தாலும் கூட அவற்றின் எண்ணிக்கை அதிகமானால் மனிதர்களுக்கு தொல்லையாகிவிடும். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் காகங்களை தீங்கினமாகவே காண்கின்றனர். அங்கே காகங்களை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆய்வுகளை செய்துள்ளனர். அதன்படி சில வழிமுறைகளையும் பின்பற்றி காகங்களின் எண்ணிக்கையை கட்டுக்குள்ளும் வைத்திருக்கின்றனர்.

காகங்கள், குயில்களின் நெஸ்டிங் முறையை கூர்ந்து கவனித்து ஆய்வு செய்ததுபோல், வாத்துகளையும் நான் உற்று நோக்கி ஆய்வு செய்துள்ளேன். வாத்துகளை அறிவற்ற பறவைகள் என்று நாம் சொல்வதுண்டு. மடை எனப்படும் குறுகிய நீரோட்டங்களில் வாழும் சின்ன அளவிலான வாத்துகளை மடை வாத்து என்றழைப்போம். அதுவே மருவி மடவாத்து என்ற வார்த்தையாகிவிட்டது. அவை எப்போதும் கூட்டமாக வாழக்கூடியவை.

சம்பை புல்களுக்கு இடையே வாழும் ஸ்பாட் பில்ட் டக்ஸ் என்ற வாத்துகளை ஒருமுறை நெருங்கி ஆய்வு செய்ய முடிந்தது. அப்போது அருகிலிருந்து வயலில் பறவைகள் வந்து பயிர்களை நாசம் செய்யக்கூடாது என்று வெடி வெடித்துக் கொண்டிருந்தனர். அதற்கு பயந்துபோன சம்பை வாத்து ஒன்று தனது குஞ்சுகளுடன் வெளியே வந்தது. வெளியே வந்ததும் அந்த வாத்து குஞ்சுகளை சுற்றிச்சுற்றி வந்தது. அது எத்தனை வாத்துகள் இருக்கின்றன என்று எண்ணுவதுபோலவே இருந்தது.

பின்னர் மீண்டும் அந்த புல் பகுதிக்குச் சென்று சத்தமிட்டுக் கொண்டே இருந்தது. நீண்ட நேரத்துக்குப் பின் வெடிச்சத்ததால் பயந்து பதுங்கியிருந்த இன்னொரு வாத்துக் குஞ்சு வெளியே வந்தது. உடனே மற்ற வாத்துகளுடன் அதையும் சேர்த்துக் கொண்டு வேறிடத்துக்குச் சென்றது அந்த வாத்து. இப்படி, வெளிநாடுகளிலும் கூட வாத்துகளின் எண்ணும் திறனை ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர்.

17482641012027.jpg

கடல் ஆலா பறவைகள் பல மைல்கள் கடந்து ஆர்க்டிக், அண்டார்டிக் பகுதிகளில் இருந்து எப்படி இடம்பெயர்ந்து வருகிறது என்ற சூட்சமம் இன்றுவரை முழுமையாக ஆராய்ச்சிகளால் கண்டு கொள்ள முடியாததாகவே இருக்கிறது. குறிப்பிட்ட கழுகு வகைகள் அதன் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு இணையோடு மட்டுமே வாழும், இன்னொரு பறவையினம் தனது இணை இறந்துவிட்டால், பட்டினியிருந்து அதுவும் உயிர் துறந்துவிடும். இப்படி இயற்கை நிறைய சுவாரஸ்யங்களை உள்ளடக்கியுள்ளது.

இவையெல்லாம் இயற்கையின் சமநிலையைப் பேணவே நடைபெறுகிறது. பறவைகள் தம் உயிர் வாழ்தலை உறுதி செய்து கொள்ள சமநிலையைப் பேண ஒவ்வொரு விதமான உணர்வு நிலைகளுடன் இயங்குகின்றன. பறவைகளின் உணர்வு நிலைகளை, உள்ளுணர்வுகளை ஆய்வு செய்தல் சுவாரஸ்யமானதே.” என்றார்.

ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு ஃபீலிங்... பறவைகளின் உள்ளுணர்வும், சில சுவாரஸ்யங்களும்! | What’s going on inside the mind of an animal or a bird explained - hindutamil.in

ஒரே இடத்தில் இறந்து புதைந்த ஆயிரக்கணக்கான டைனோசர்கள் - ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யப்பட வைத்த வரலாற்று நிகழ்வு

2 weeks 4 days ago

டைனோசர்கள், ரிவர் ஆஃப் டெத், கனடா

பட மூலாதாரம், KEVIN CHURCH / BBC

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரெபாக்கா மொரெல்லே & ஆலிசன் ஃப்ரான்சிஸ்

  • பதவி,

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

கனடாவின் அல்பெர்டாவில் அமைந்துள்ள ஒரு பசுமையான காட்டின் சரிவில் அதிகளவில் டைனோசர்கள் புதைந்து போன இடம் ஒன்று இருக்கிறது.

ஒரு நாள் நடந்த மோசமான நிகழ்வில், ஆயிரக்கணக்கான டைனோசர்கள் கொல்லப்பட்டு அங்கே புதைந்து போயின.

தற்போது புதைப்படிவ பொருட்களை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், ரிவர் ஆஃப் டெத், என்று அழைக்கப்படும் பைப்ஸ்டோன் க்ரீக்குக்கு ஆராய்ச்சி செய்ய வந்துள்ளனர்.

டைனோசர்கள் எவ்வாறு இறந்தன என்ற 7.2 கோடி ஆண்டுகால புதிருக்கு பதில் தேட அங்கே தற்போது முகாமிட்டுள்ளனர்.

கனமான சுத்தியலின் உதவியைக் கொண்டு, தொல்பொருட்கள் மீது படிந்திருக்கும் மண்ணைத் தட்டி ஆராய்ச்சி மேற்கொள்ளும் அவர்கள், இந்த டைனோசர்கள் எப்படி இறந்தன என்பதை ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்த ஆராய்ச்சியை வழிநடத்தும் பேராசிரியர் எமிலி பாம்ஃபோர்த் இந்த படிமப் பொருளை 'தொன்மத் தங்கம்' (Palaeo Gold) என்று அழைக்கிறார். ஆனால் இதில் இருக்கும் சவால் என்னவென்றால், இந்த டைனோசர்களின் படிமங்களை ஆய்வு செய்ய அதன் மீது இருக்கும் கடினமான பாறைகளை உடைக்க வேண்டும்.

அவருடைய குழு கொஞ்சம் கொஞ்சமாக அங்கே இருக்கும் மண்ணை, அடுக்கடுக்காக அப்புறப்படுத்த, அந்த டைனோசர்களின் எலும்புகள் மேலே தெரிய ஆரம்பித்தன.

டைனோசர்கள், ரிவர் ஆஃப் டெத், கனடா

பட மூலாதாரம்,KEVIN CHURCH / BBC

படக்குறிப்பு,பைப்ஸ்டோன் சிற்றோடை அருகே கண்டுபிடிக்கப்பட்ட பேச்சிரினோசரின் இடுப்பெலும்பு

ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி, இந்த ஆய்வில் எமிலியின் நாயான ஆஸ்டரும் இணைந்துள்ளது. ஆஸ்டர் எங்கேனும் எலும்பு இருப்பதை கண்டுபிடித்தால் உடனே குரைக்க வேண்டும். அதற்கு அது தான் வேலை. அந்த நாயைப் பார்த்துக் கொண்டு பிபிசியிடம் பேசிய பேராசிரியர் எமிலி, "அங்கே ஒரு பெரிய எலும்பு உள்ளது. இடுப்பு எலும்பின் ஒரு பகுதி என்று நாங்கள் நினைக்கின்றோம்," என்று கூறினார்.

"இங்கே நீளமான, ஒல்லியான எலும்புகளையும் பார்க்கின்றோம். இவை மார்புக்கூட்டில் காணப்படும் எலும்புகள். இது கால் பாதத்தில் காணப்படும் எலும்பு. இந்த எலும்பு என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை," என்று ஒவ்வொரு எலும்பாக சுட்டிக்காட்டி அதுகுறித்து விளக்கம் அளிக்கும் எமிலி, "இது தான் பைப்ஸ்டோன் சிற்றோடையின் பின்னே மறைந்திருக்கும் மர்மம்," என்று கூறுகிறார்.

கனடாவின் பைப்ஸ்டோனுக்கு சென்ற பிபிசி, அங்கே உள்ள வரலாற்றுக்கு முந்தைய புதைகாட்டின் அளவு மற்றும் அங்கே ஆராய்ச்சியாளர்கள் டைனோசரின் அழிவு குறித்து தெரிந்து கொண்ட ஒவ்வொரு தகவலையும் இணைக்கின்றனர் என்று நேரில் கண்டது.

ஆயிரக்கணக்கான புதைப்படிமங்கள் அங்கிருந்து எடுக்கப்பட்டுள்ளன. அது இந்த பெரியளவிலான டைனோசர்களின் இறப்பு குறித்து புதிய புதிய தகவல்கள் கிடைத்து வருகின்றன.

டைனோசர்கள், ரிவர் ஆஃப் டெத், கனடா

பட மூலாதாரம்,KEVIN CHURCH/BBC NEWS

படக்குறிப்பு,பேராசிரியர் எமிலியும் அவருடைய நாய் அஸ்டரும்

2 டன் எடை கொண்ட ராட்சத விலங்கு

இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்புகள் அனைத்தும் பேச்சிரினோசரஸ் வகை டைனோசரை சார்ந்தது. பேராசிரியர் எமிலியின் அகழ்வாராய்ச்சி, பிபிசியின் 'வாக்கிங் வித் டைனோசரஸ்' என்ற தொடரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கையை காட்சிப்படுத்த அறிவியலையும், காட்சி தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வகை டைனோசர்கள் கடைசி கிரிடேசியஸ் காலத்தில் வாழ்ந்துள்ளன. இவை ட்ரைசெராடாப்ஸ் (Triceratops) வகை டைனோசர் இனத்தோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டவை. ஐந்து மீட்டர் நீளமும், 2 டன்கள் எடையும் கொண்ட இந்த தனித்துவமான போனி ஃப்ரில்கள் மற்றும் மூன்று கொம்புகளைக் கொண்ட நான்கு கால் மிருகமாகும். போனி ஃப்ரில்கள் என்பது தலைக்குப் பின்னால் கழுத்துப் பகுதியில் எலும்புகளோடு மயில் தோகை போன்று இருக்கும் உடல் பகுதியாகும்.

மற்றொரு தனித்துவமான ஒரு அம்சம் என்பது அதன் மூக்குப் பகுதியில் அமைந்திருக்கும் கட்டி போன்ற அமைப்பாகும். இது 'பாஸ்' என்று அழைக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இலையுதிர் காலத்தில் இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பமாகின. தற்போது ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றிவரும் சிறிய அளவிலான நிலப்பரப்பில் புதைப்படிமங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கின்றன. ஒவ்வொரு சதுர மீட்டரிலும் 300 எலும்புகள் உள்ளன என்று பேராசிரியர் எமிலி கணித்துள்ளார்.

ஒரு டென்னிஸ் மைதானம் அளவிலான பகுதி தற்போது வரை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த எலும்புகளின் படுகையானது கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் அளவுக்கு மலைப்பகுதியில் நீண்டுள்ளது.

மிகவும் ஆச்சர்யப்படுத்தும் முக்கிய அம்சம் இதில் என்னவென்றால், இந்த எலும்புகளின் அடர்த்தி என்று எமிலி கூறுகிறார்.

"வட அமெரிக்க பிராந்தியத்தில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய எலும்புப்படுகை இது என்று நாங்கள் நினைக்கின்றோம். இதுவரை கண்டறியப்பட்ட டைனோசர்கள் வகைகளில் பாதிக்கும் மேலானவை, ஆங்காங்கே கிடைத்த ஒரே ஒரு டைனோசரின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரியைக் கொண்டு வகைப்படுத்தப்பட்டவை. ஆனால், இங்கே ஆயிரக்கணக்கான பேச்சிரினோசரஸ் இருக்கின்றன," என்றும் விவரிக்கிறார் அவர்.

டைனோசர்கள், ரிவர் ஆஃப் டெத், கனடா, பைப்ஸ்டோன்

பட மூலாதாரம்,KEVIN CHURCH/BBC NEWS

படக்குறிப்பு,பைப்ஸ்டோன் ஓடையில் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியாளர்கள்

குளிர்காலத்தில் தென் அமெரிக்காவுக்கு வலசை சென்ற இந்த டைனோசர்கள், கோடை காலத்தை கழிப்பதற்காக, பிரமாண்ட அணியாக நூற்றுக்கணக்கான மைல்கள் வலசை மேற்கொண்டு வடக்கு நோக்கி வந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

தற்போது இருப்பதைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதலாக வெதுவெதுப்புடன் இருந்த இப்பகுதி பசுமைப் போர்த்தியதாக இருந்திருக்க வேண்டும். தாவர உண்ணிகளாக இந்த பெரிய டைனோசர்களுக்கு தேவையான உணவை வழங்கக்கூடிய அளவுக்கு அது பசுமையாக இருந்திருக்க வேண்டும்.

"இது ஒரே இனத்தைச் சேர்ந்த விலங்கின் ஒரே கூட்டம். இது மிகப்பெரிய மாதிரி அளவு. தொன்ம ஆராய்ச்சியில் இது போன்ற பதிவு இதற்கு முன்பு நடந்ததில்லை," என்று பேராசிரியர் எமிலி பாம்ஃபோர்த் தெரிவிக்கிறார்.

டைனோசர்கள், ரிவர் ஆஃப் டெத், கனடா, பைப்ஸ்டோன் ,பேச்சிரினோசரஸ்

பட மூலாதாரம்,WALKING WITH DINOSAURS/BBC STUDIOS

படக்குறிப்பு,கணினி மூலம் உருவாக்கப்பட்ட பேச்சிரினோசரஸின் தோற்றம்

ஆச்சர்யங்களை வாரி வழங்கும் ஆராய்ச்சி

அல்பெர்டாவின் வடமேற்கில் அமைந்திருக்கும் இந்த பகுதி பேச்சிரினோசரஸ்களின் வீடு மட்டும் அல்ல. இவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய அளவிலான டைனோசர்கள் இங்கே உலவிக் கொண்டிருந்தன. பேச்சிரினோசரஸ்களைப் பற்றி அறிந்து கொள்வது என்பது பழங்கால சுற்றுச்சூழல் எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள உதவும் முக்கிய அம்சமாகும்.

இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு நாங்கள் டெட்ஃபால் மலைத்தொடரை அடைந்தோம். அங்கே செல்வது என்பது அடர்ந்த காட்டுக்குள் நடந்து, அலைந்து, ஆஸ்டர் இருந்தால் அதனையும் பாதுகாத்து, நதியைக் கடந்து, வழுக்கும் பாறைகளில் பாதுகாப்பாக நடப்பது என்று ஆயிரம் சவால்களை உள்ளடக்கியது.

இங்கே எதையும் தோண்ட வேண்டாம். கரையை ஒட்டியே பெரிய அளவிலான எலும்புகளைக் காண இயலும். பாறைகளால் இழுத்துவரப்பட்டு, ஆற்று நீரால் கழுவப்பட்ட இந்த எலும்புகள் நாம் கண்டுப்பிடிப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன.

அங்கே சென்றதும் ஒரு முதுகெலும்பின் (Vertebra) ஒரு கண்ணியைக் கண்டறிந்தோம். மார்புக் கூட்டின் சில பகுதிகளும், பற்களும் ஆங்காங்கே சேற்றில் சிதறிக் கிடந்தன.

டைனோசர்கள், ரிவர் ஆஃப் டெத், கனடா, பைப்ஸ்டோன் ,பேச்சிரினோசரஸ் , பைப்ஸ்டோன் க்ரீக்

பட மூலாதாரம்,KEVIN CHURCH/BBC NEWS

படக்குறிப்பு,எட்மோண்டோசரஸ் உயிர்வாழ்ந்த பகுதியான டெட்ஃபால் மலைத்தொடரில் காணப்பட்ட டைனோசரின் பாத எலும்பு

புதைப்படிம ஆராய்ச்சியாளர் ஜாக்‌சன் ஸ்வேடருக்கு ஆர்வத்தை அளிப்பது என்னவென்றால், பார்ப்தற்கு டைனோசரின் மண்டையோட்டைப் போல காட்சியளிக்கும் எலும்புகளின் குவியல்.

"எங்களுக்கு இங்கே கிடைத்த புதைப்படிமங்களில் பெரும்பாலானவை எட்மோண்டோசரஸ் (Edmontosaurus) வகையைச் சேர்ந்தது. தற்போது நாங்கள் ஆய்வுக்கு உட்படுத்தி வரும் பகுதியானது மண்டையோடு என்பது உறுதியானால், இந்த டைனோசரஸ் 10 மீட்டர் நீளம் கொண்ட தலையைக் கொண்டது என்று கூற இயலும்," என்று தெரிவிக்கிறார் ஜாக்சன்.

எட்மோண்டோசரஸ் என்பது மற்றொரு தாவர உண்ணி. பேச்சிரினோசரஸைப் போன்றே காடுகளில் வலம் வந்த வகை. இந்த புதிய ஆய்வு முடிவுகள், பூமியின் தொன்மையான நிலம் எப்படி இருந்திருக்கக் கூடும் என்பதை கற்பனை செய்து பார்க்க ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது.

கிராண்டே ப்ரேரீயில் செயல்பட்டு வரும் பிலிப் ஜே க்யூரி டைனோசர் அருங்காட்சியகத்தில் ஸ்வேடர் 'கலக்‌ஷன்' மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.

அகழ்வாய்வு செய்யப்பட்டு பெறப்பட்ட இந்த இரண்டு டைனோசர்களின் மிகப்பெரிய எலும்புகளும் இங்கே தான் சுத்தம் செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

தற்போது ஸ்வேடர், 1.5 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய பேச்சிரினோசரஸ் மண்டையோட்டை ஆய்வு செய்து வருகிறார். அந்த டைனோசருக்கு அவருக்கு, "பிக் சாம்" என்று பெயரிட்டுள்ளார் ஸ்வேடர்.

டைனோசர்கள், ரிவர் ஆஃப் டெத், கனடா, பைப்ஸ்டோன் ,பேச்சிரினோசரஸ் , பைப்ஸ்டோன் க்ரீக்

பட மூலாதாரம்,KEVIN CHURCH/BBC NEWS

படக்குறிப்பு,பண்டைய உலகம் குறித்து அறிந்துகொள்ள ஜாக்சன் ஸ்வேடர் அருங்காட்சியகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்

ஃப்ரிலின் எந்த பகுதியில் மூன்று கொம்புகளும் இடம்பெறும் என்பதை சுட்டிக்காட்டிய அவர், அதில் ஒன்று காணவில்லை என்பதை தெரிவித்தார். "அனைத்து மண்டையோடுகளிலும் முழுமையான கொம்புகள் அந்த இடத்தில் இருந்தன. ஆனால், இந்த ஒற்றைக்கொம்பு மட்டும் அங்கே இல்லை," என்றார் ஸ்வேடர்.

பல ஆண்டுகளாக களத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் அருங்காட்சியகக் குழு இதுவரை 8 ஆயிரம் டைனோசர் எலும்புகளை சேகரித்துள்ளது. அதன் ஆய்வகம் முழுவதும் புதைப்படிமங்களால் நிறைந்துள்ளது.

டைனோசரின் பல இனங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள், டைனோசரின் உயிரியல் குறித்து அறிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது. மேலும் இந்த விலங்குகள் எப்படி வளருகின்றன, அவை எப்படி ஒரு குழுவாக இணைந்து செயல்படுகின்றன என்பதைப் பற்றியும் அறிந்துகொள்ள உதவுகிறது.

ஒரு பெரிய கூட்டத்தில் விலங்குகள் தனித்து தெரிவதற்கு தேவையான வித்தியாசங்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். பிக் சாம் விவகாரத்தில் இல்லாமல் இருக்கும் ஒற்றைக் கொம்பை ஒரு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

டைனோசர்கள், ரிவர் ஆஃப் டெத், கனடா, பைப்ஸ்டோன் ,பேச்சிரினோசரஸ் , பைப்ஸ்டோன் க்ரீக்

பட மூலாதாரம்,WALKING WITH DINOSAURS/BBC STUDIOS

படக்குறிப்பு,இயற்கைப் பேரிடரின் காரணமாக இந்த விலங்குகள் கொல்லப்பட்டிருக்கலாம்

அழிவுக்குக் காரணம் என்ன?

அருங்காட்சியம் மற்றும் இரண்டு தளங்களில் நடத்தப்படும் இந்த ஆராய்ச்சிகள், முக்கியமான இந்த ஒரு கேள்விக்கான பதிலைப் பெற உதவுகின்றன: ஒரே நேரத்தில், பைப்ஸ்டோன் க்ரீகில், அளவுக்கு அதிகமான டைனோசர்கள் உயிரிழந்தது எப்படி?

"வலசை சென்ற பெரிய குழு ஒன்று மோசமான பேரிடரை சந்தித்து அதன் மூலம் இறந்திருக்கக் கூடும் என்று நாங்கள் நம்புகின்றோம். முழுமையான குழு இல்லையென்றால் அதில் பாதி அந்த பேரிடரில் இறந்திருக்கலாம்," என்று பேராசிரியர் எமிலி கூறுகிறார்.

திடீரென ஏற்பட்ட வெள்ளத்தினாலோ, அல்லது மலையின் மேலே ஏற்பட்ட ஏதோ ஒரு நிகழ்வின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் விளைவாகவோ இது ஏற்பட்டிருக்கலாம். தடுத்து நிறுத்த இயலாத நீர்ப்பெருக்கு, அடித்துவரப்பட்ட மரங்கள், பாறைகள் இவை அனைத்தும் ஒன்றாக அந்த விலங்கினத்தின் மறைவுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்பதை ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அப்படி நிகழ்ந்திருந்தால் பேச்சிரினோசரஸ் உயிர் பிழைத்திருக்க வாய்ப்புகள் குறைவு என்று கூறுகிறார் பேராசிரியர் எமிலி. "இவை அனைத்தும் முதலில் கூட்டமாக வலசை வந்திருக்கின்றன. மேலும், அவை அதிக எடை கொண்டவை. அந்த இனத்தினால் நன்றாக நீச்சல் அடிக்க முடியாது. இது போன்ற காரணங்களால் அவை வேகமாக நகர முடியாமல் இருந்திருக்கலாம்," என்று கூறுகிறார் அவர்.

ஆய்வு நடக்கும் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாறைகளில், வேகமாக பாய்ந்து வரும் நீரில் சுழலும் வண்டல் மண் படிமங்களைக் காண இயலும். அழிவை அப்படியே உறைய வைத்தால் எப்படி இருக்குமோ அது போன்று கல்லில் அலை அலையாக அவை படிந்துள்ளன.

டைனோசர்கள், ரிவர் ஆஃப் டெத், கனடா, பைப்ஸ்டோன் ,பேச்சிரினோசரஸ் , பைப்ஸ்டோன் க்ரீக்

பட மூலாதாரம்,KEVIN CHURCH/BBC NEWS

படக்குறிப்பு,ஆய்வு செய்யப்படும் இடத்தில் இருந்து பெறப்பட்ட பாறையில் காணப்படும் அலையோட்டம்

அந்த டைனோசர்களுக்கு மோசமாக இருந்த நாள் ஒன்று புதைபடிம ஆராய்ச்சியாளர்களின் கனவு ஆராய்ச்சிகளில் ஒன்றாக இருக்கிறது.

"நாங்கள் இங்கே வரும்போதெல்லாம், இங்கே நாங்கள் எலும்புகளை கண்டுபிடிப்போம் என்று 100% உத்தரவாதத்தோடு வருவோம். ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் இந்த விலங்கினம் குறித்து புதிதாக அறிந்து கொண்டிருக்கிறோம்," என்று எமிலி கூறுகிறார்.

"நாங்கள் ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக தகவல்களை இங்கே கண்டறிகின்றோம் என்பதால் அடிக்கடி நாங்கள் இங்கே வருகிறோம்," என்று கூறுகிறார் அவர்.

டைனோசர்கள், ரிவர் ஆஃப் டெத், கனடா, பைப்ஸ்டோன் ,பேச்சிரினோசரஸ் , பைப்ஸ்டோன் க்ரீக்

பட மூலாதாரம், WALKING WITH DINOSAURS/BBC STUDIOS

படக்குறிப்பு, கூட்டமாக வலசை சென்ற பேச்சிரினோசரஸின் குழு

தங்களின் கருவிகளை எடுத்துக்கொண்டு மற்றொரு நாள் வரத் தயாராகும் போது, இன்னும் பார்ப்பதற்கு பல வேலைகள் இருக்கின்றன என்று அவர்களுக்குத் தெரியும்.

இங்கும் அங்கும் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள இதுவரை மேற்பரப்பை மட்டுமே ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர். ஆனால், வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் ரகசியத்தை வெளிப்படுத்த பல முக்கிய அம்சங்கள் அங்கே காத்திருக்கின்றன.

வாக்கிங் வித் டைனோசரஸ் (Walking With Dinosaurs) இந்த மாதம் 25-ஆம் தேதி அன்று ஞாயிறு பிபிசி ஒன் - இல் ஒளிபரப்பப்பட உள்ளது. பிபிசி ஐப்ளேயரில் அனைத்து எபிசோட்களையும் காண இயலும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3e5v098knno

பிரபஞ்சம் ஏன் இருக்கிறது? விடையை கண்டுபிடிக்க போட்டி போடும் உலக விஞ்ஞானிகள்

2 weeks 5 days ago

நியூட்ரினோ, பிரபஞ்சம்

பட மூலாதாரம்,MATTHEW KAPUST / SURF

படக்குறிப்பு,தெற்கு டகோடாவில் விஞ்ஞானிகள் அமைத்த இந்த பெரிய குகை, வெளியுலகத்திலிருந்து முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது. நியூட்ரினோ துகள்களில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வதற்கான டிடெக்டர் கருவி இங்கு பொருத்தப்படும்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பல்லப் கோஷ்

  • பதவி, அறிவியல் செய்தியாளர்

  • 22 மே 2025, 05:38 GMT

தெற்கு டகோடாவின் காடுகளின் மூடுபனிக்கு மேலே அமைந்துள்ள ஆய்வகத்துக்குள்ளே, விஞ்ஞானிகள் அறிவியலின் மிகப்பெரிய கேள்வி ஒன்றுக்கான விடையை தேடி வருகின்றனர்: இந்த பிரபஞ்சம் ஏன் இருக்கிறது?

அவர்களை விட இந்த ஆராய்ச்சியில் பல ஆண்டுகள் முன்னிலையில் உள்ள ஜப்பானிய விஞ்ஞானிகள் அடங்கிய குழுவுக்கும் இந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் ஏன் தோன்றின என்பன குறித்து தற்போதுள்ள வானியல் கோட்பாடுகளால் விளக்க முடியாது. இந்த கேள்விக்கான விடையை கண்டறியும் நம்பிக்கையில் நியூட்ரினோ எனப்படும் துணை அணுத் துகள்கள் (sub-atomic particle) குறித்து ஆராயும் டிடெக்டர் (detector) கருவியை இரு குழுக்களும் உருவாக்கி வருகின்றன.

இதற்கான விடை நிலத்துக்கடியில் அதிக ஆழத்தில் இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் நம்புகின்றனர், நிலத்துக்கடியில் நியூட்ரினோ குறித்து ஆராயும் இந்த ஆய்வுக்கு டியூன் (Dune - டீப் அண்டர்கிரவுண்ட் நியூட்ரினோ எக்ஸ்பிரிமெண்ட்) என பெயரிடப்பட்டுள்ளது.

நிலத்தின் மேற்பரப்பிலிருந்து சுமார் 1,500 மீட்டர் ஆழத்தில், மூன்று பரந்துவிரிந்த குகைகளுக்கு விஞ்ஞானிகள் பயணித்துள்ளனர். இதில் ஈடுபடும் கட்டுமான குழுக்களும் அதன் புல்டோசர்களும் சிறிய பிளாஸ்டிக் பொம்மைகள் போன்று தெரியும் அளவுக்கு இந்த குகைகள் மிகப்பெரியவை.

டியூனின் அறிவியல் இயக்குநர் முனைவர் ஜேரெட் ஹெயிஸ், இந்த பிரம்மாண்ட குகைகள் எந்தளவுக்கு அளவில் பெரியவை என்பதை விளக்கும் பொருட்டு, அவை "அறிவியலின் தேவாலயங்கள்" (cathedrals to science) போன்றவை என்றார்.

பிரபஞ்சம் குறித்த புரிதலை மாற்றும் முயற்சி

இந்த குகைகளின் கட்டுமான பணியில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஹெயிஸ் ஈடுபட்டு வருகிறார். நிலத்துக்கு மேலேயிருந்து இரைச்சல் மற்றும் கதிர்வீச்சை தடுக்கும் பொருட்டு டியூன் அமைப்பை முழுவதுமாக அவர்கள் மறைத்துள்ளனர். தற்போது அதன் அடுத்த கட்டத்துக்கு செல்ல டியூன் தயாராக உள்ளது.

"பிரபஞ்சம் குறித்த நம் புரிதலை மாற்றும் வகையில், (நியூட்ரினோவை ஆராய்வதற்கான) டிடெக்டர் கருவியை வடிவமைப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். நாம் ஏன் பிரபஞ்சத்தில் இருக்கிறோம் என்ற கேள்விக்கான விடையை கூறுவதற்கு ஆர்வமாக உள்ள 1,500 விஞ்ஞானிகள் இணைந்து பல்வேறு கருவிகளை பயன்படுத்தி இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன," என்றார் அவர்.

பிரபஞ்சம் உருவானபோது இருவிதமான துகள்கள் உருவாகின: நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் நம்மை சுற்றியுள்ள எல்லாமும் உருவான பருப்பொருள் மற்றும் பருப்பொருளுக்கு நேரெதிரான எதிர்ப்பொருள் (antimatter).

கோட்பாட்டு ரீதியாக இரண்டும் பரஸ்பரம் அதன் திறனை இழக்கச் செய்திருக்க வேண்டும், அப்படி செய்யும்போது பெரும் ஆற்றல் வெடிப்பு மட்டுமே மிஞ்சியிருக்கும். எனினும், பருப்பொருள் இன்னும் மிச்சம் இருக்கிறது.

எதனால் பருப்பொருள் வெற்றியடைகிறது மற்றும் நாம் எப்படி இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்வதற்கான பதில், நியூட்ரினோ துகள் மற்றும் எதிர் நியூட்ரினோ (anti-neutrino) ஆகியவற்றை ஆராய்வதில் தான் இருக்கிறது என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இல்லினாய்ஸின் ஆழமான நிலத்தடியிலிருந்து விஞ்ஞானிகள் இரு விதமான துகள்களின் கற்றைகளையும் 800 மைல்கள் தொலைவில் உள்ள தெற்கு டகோட்டாவுக்கு அனுப்புகின்றனர்.

ஒரு மாபெரும் ஆய்வு திட்டம்

ஏனெனில், நியூட்ரினோ மற்றும் எதிர் நியூட்ரினோக்கள் பயணிக்கும் போது சிறிதளவு மாற்றங்களுக்கு உட்படுகின்றன.

இந்த மாற்றங்கள் நியூட்ரினோக்களுக்கும் எதிர் நியூட்ரினோக்களுக்கும் வெவ்வேறானதாக உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க விரும்புகின்றனர். அப்படி இரண்டுக்கும் வித்தியாசங்கள் இருந்தால், பருப்பொருளும் எதிர்பொருளும் ஏன் ஒன்றையொன்று அதன் திறனை இழக்கச் செய்வதில்லை என்பதற்கான விடைக்கு அவர்களை இட்டுச் செல்லும்.

30 நாடுகளைச் சேர்ந்த 1,400 விஞ்ஞானிகள் இணைந்த ஒரு சர்வதேச ஆய்வுத் திட்டமாக டியூன் உள்ளது. அவர்களுள் ஒருவர் தான் சசக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் கேட் ஷா. பிரபஞ்சம் மற்றும் மானுடம் குறித்த நம்முடைய புரிதலை, இந்த ஆய்வில் இதுவரையில் தெரிந்த தகவல்கள் மாற்றக்கூடியதாக உள்ளன என அவர் என்னிடம் தெரிவித்தார்.

"இப்போது தொழில்நுட்பம், பொறியியல், கணினி மென்பொருள் திறன் ஆகியவற்றின் மூலமாக இத்தகைய பெரிய கேள்விகளை தீர்க்க முடிவது உண்மையில் உற்சாகமளிக்கிறது," என அவர் தெரிவித்தார்.

நியூட்ரினோ, பிரபஞ்சம்

பட மூலாதாரம்,KAMIOKA/ICRR/TOKYO UNIVERSITY

படக்குறிப்பு,ஜப்பானில் ஏற்கெனவே உள்ள சூப்பர் கே நியூட்ரினோ ஆய்வகத்தை விட பெரிய மற்றும் சிறந்த ஆய்வகமாக ஜப்பானின் புதிய ஆய்வகம் இருக்கும்

ஜப்பான் விஞ்ஞானிகளின் ஆய்வு

இதே கேள்விக்கான பதிலை பெரும் தொலைவில் உள்ள ஜப்பானிய விஞ்ஞானிகள் மின்னும் தங்க நிற உலக உருண்டையில் (நியூட்ரினோ ஆய்வகம்) தேடுகின்றனர். இது, 'அறிவியலின் கோவில்' போன்று பிரகாசிக்கிறது. இந்த விஞ்ஞானிகள் ஹைப்பர் கே எனும் நியூட்ரினோ ஆய்வகத்தை வடிவமைத்து வருகின்றனர், இது, ஏற்கெனவே ஜப்பானில் உள்ள நியூட்ரினோ ஆய்வகமான சூப்பர் கே-வை விட மிகப்பெரியதும் சிறந்ததும் ஆகும்.

இன்னும் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்குள் நியூட்ரினோ கற்றையை ஜப்பானிய விஞ்ஞானிகள் குழு செயல்படுத்த உள்ளது, இது அமெரிக்காவின் திட்டத்தை விட முன்னிலையில் உள்ளது. லண்டன் இம்பெரியல் கல்லூரியின் முனைவர் மார்க் ஸ்காட், தன்னுடைய குழு பிரபஞ்சம் குறித்த இதுவரையிலான கண்டுபிடிப்புகளில் மிகப்பெரியதை நிகழ்த்துவதற்கு சாதகமான நிலையில் உள்ளதாக நம்புகிறார்.

"நாங்கள் முன்னதாகவே இதை கண்டுபிடிப்போம், எங்களிடம் மிகப்பெரிய டிடெக்டர் கருவி உள்ளது, எனவே டியூன் திட்டத்தை விட எங்களிடம் அதுகுறித்து அதிக தகவல்களை விரைவிலேயே பெறுவோம்," என்றார் அவர்.

இரண்டு சோதனைகளை ஒன்றாக நடத்தும்போது, ஒரு சோதனை மூலமாக கிடைப்பதை விட அதிகளவில் விஞ்ஞானிகளுக்கு தகவல் கிடைக்கும். ஆனாலும், "நான் தான் அதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என விரும்புகிறேன்!" என்றார் அவர்.

நியூட்ரினோ, பிரபஞ்சம்

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,நமது தற்போதைய புரிதலின்படி, நமது பிரபஞ்சம் கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களாக உருவாகியிருக்கக் கூடாது.

மர்மம் நீடிக்கிறது

ஆனால், அமெரிக்காவின் ஆய்வுத்திட்டத்தில் பணியாற்றும், லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகத்தின் முனைவர் லிண்டா கிரெமோனெசி, முதலில் அந்த இடத்தை ஜப்பானிய குழு அடையும்போது, என்ன நடக்கிறது என்பது தொடர்பான முழு தகவல்களை அவர்களுக்கு அளிக்காமல் போகலாம் என்கிறார்.

"இதில் போட்டி இருக்கிறது, ஆனால் நியூட்ரினோக்களும் எதிர் நியூட்ரினோக்களும் வித்தியாசமாக செயலாற்றுகிறதா என்பதை புரிந்துகொள்வதற்கான அனைத்து விஷயங்களும் ஹைப்பர் கே திட்டத்தில் இல்லை".

விஞ்ஞானிகளுக்குள் போட்டி இருக்கலாம், ஆனால் முதல்கட்ட முடிவுகள் கிடைக்க இன்னும் சில ஆண்டுகாலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் நாம் இருப்பதற்கு முன்பான ஆரம்பகாலத்தில் என்ன நடந்தது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce80nk9wgzpo

தோல்வியில் முடிந்தது இஸ்ரோவின் 101ஆவது விண்கல திட்டம்!

3 weeks 2 days ago

New-Project-81-1.jpg?resize=600%2C300&ss

தோல்வியில் முடிந்தது இஸ்ரோவின் 101ஆவது விண்கல திட்டம்!

இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று (18) அதிகாலை 5:59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட PSLV C-61 விண்கலத் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ (ISRO), இன்று PSLV-C61 மூலம் EOS-09 என்ற 101ஆவது
விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

குறித்த விண்கலம் 4 கட்டங்களாக செலுத்தப்படும் நிலையில், 3ஆவது அடுக்கு பிரிந்தபோது அதில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக திட்டம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

232 வது கிலோமீட்டர் தொலைவில் விண்கலம் சென்று கொண்டிருக்கும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் அதனால் சரியான பாதையில் பயணிக்க முடியவில்லை எனவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இது தொடர்பான ஆய்வுக்கு பின்னர் விரிவான அறிக்கை வழங்கப்படும் என இஸ்ரோவின் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த விண்கலத்தில் சரியாக 8 நிமிடம் 13 செக்கன்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1432197

தங்கத்தை விடவும் அரிதான, மதிப்பு மிக்க பொருளை கடனாக கொடுத்த சீனா

4 weeks 1 day ago

சீனா, பிரிட்டன், விண்வெளி, சந்திரன், அறிவியல்

பட மூலாதாரம்,TONY JOLLIFFE/BBC NEWS

படக்குறிப்பு,பூமியின் எந்த கலப்படமும் இல்லாமல் இந்த தூசிக் குப்பியை வைத்திருக்க வேண்டும்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜார்ஜினா ரணார்ட், கேட் ஸ்டீஃபன்ஸ் மற்றும் டோனி ஜாலிஃப்

  • பதவி, பிபிசி நியூஸ்

  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

நிலவின் முதல் கல் துகள் மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவிடம் இருந்து நிலவின் துகள் மாதிரிகள் பிரிட்டனுக்கு கடனாக வந்து சேர்ந்துள்ளன.

மில்டன் கீன்ஸ் பகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு கட்டடம் ஒன்றில் உள்ள பாதுகாப்புப் பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்த இந்த தூசித் துகள்களை நாங்கள் முதன்முதலாகப் பார்த்தோம்.

பேராசிரியர் மகேஷ் ஆனந்த் தான் இந்த அரிதினும் அரிதான பொருளைக் கடனாகப் பெற்றிருக்கும் ஒரே பிரிட்டன் விஞ்ஞானி. 'தங்கத் துகள்களை விட மதிப்பு மிக்க பொருள் இது' என்கிறார் அவர்.

"சீனாவின் மாதிரிகளை உலகில் யாரும் நெருங்க முடியாது. அவை இங்கு வந்தது பெருமைக்குரிய விஷயம்," என்கிறார் அவர்.

சீனா, பிரிட்டன், விண்வெளி, சந்திரன், அறிவியல்

பட மூலாதாரம்,MAHESH ANAND

படக்குறிப்பு,இந்த மாதிரிகளைப் பெற்று வர சீனா வரை சென்றார் பேராசிரியர் மகேஷ் ஆனந்த்

'புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி பிறக்கும்'

லேசர் மூலம் இந்த துகள்களை ஆராய்ச்சி செய்து வரும் பேராசிரியர் ஆனந்தின் குழு, நிலவு எப்படி உருவானது, பூமியின் ஆரம்ப காலகட்டம் எப்படி இருந்தது போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தை ஒத்த அளவில் இருந்த கிரகம் ஒன்று பூமி மீது மோதிய பிறகு அதன் இடிபாடுகளில் இருந்து பிறந்ததுதான் நிலவு என்னும் விஞ்ஞானிகளின் கோட்பாட்டுக்கான ஆதாரம் இந்த தூசித் துகளின் உள்ளே கிடைக்கலாம்.

2020இல் சீனாவின் சேங்'இ 5 (Chang'e 5) விண்வெளிப் பயணத்தின் மூலமாக, மான்ஸ் ரும்கெர் எரிமலைப் பகுதியில் இருந்து இந்தக் கற்களை சேகரித்து வந்திருக்கிறது சீனா.

கிட்டத்தட்ட 2 கிலோவுக்கும் அதிகமான பொருளை ஒரு எந்திரக் கை மூலம் தோண்டி எடுத்து, பூமிக்கு ஒரு கலம் மூலமாக எடுத்து வந்தது சீனா. அந்த விண்கலம் மங்கோலியாவின் உட்பகுதியில் தரையிறங்கியது.

1976இல் சோவியத் விண்வெளிப் பயணங்களில் நிலவின் துகள் மாதிரிகள் கொண்டு வரப்பட்ட பிறகு சீனா 2020இல் எடுத்து வந்தது தான் அடுத்த மாதிரி. இந்தச் செயல்பாடு சீனாவை நவீன விண்வெளிப் பந்தயத்தில் முன்வரிசைக்கு உந்தியது.

உலகம் முழுவதும் இருக்கும் விண்வெளி விஞ்ஞானிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் நீண்ட பாரம்பரியம், உலகம் முழுவதும் உள்ள 7 ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த மாதிரிகள் கிடைக்க வழி செய்திருக்கிறது. அதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி பிறக்கும்.

சீனா, பிரிட்டன், விண்வெளி, சந்திரன், அறிவியல்

பட மூலாதாரம்,MAHESH ANAND

படக்குறிப்பு,துகள்கள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள்

பெய்ஜிங்கில் சென்ற வாரம் நடைபெற்ற விழாவில் பேராசிரியர் ஆனந்துக்கு நிலவின் துகள் நிரம்பிய குப்பி வழங்கப்பட்டது. அங்கு அவர் தன்னைப் போலவே இந்தத் துகள்களைப் பெறுவதற்காக ரஷ்யா, ஜப்பான், பாகிஸ்தான், ஐரோப்பாவிலிருந்து இருந்து வந்திருந்த சக விஞ்ஞானிகளைச் சந்தித்தார்.

"அது ஏதோ வேறு உலகம் போல இருந்தது - விண்வெளி திட்டங்களைப் பொருத்தவரை சீனா, பிரிட்டனைவிட பல மடங்கு முன்னேறியுள்ளது," என்றார் அவர்.

தனக்கு கிடைத்த விலைமதிப்பில்லாத பரிசை, தன்னுடைய கைப்பையிலேயே மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு பிரிட்டன் வந்தார் அவர்.

மில்டன் கீன்ஸ் பகுதியில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது பரிசோதனைக் கூடத்திற்கு நாம் சென்றதும் அங்கிருக்கும் காலணிகளை நன்றாகத் துடைத்து பிளாஸ்டிக் கையுறைகள், மேலுடைகள், தலையை மூடும் வலைகள் எனப் பலவற்றைப் போட்டுக் கொண்டோம்.

இந்த உயர் பாதுகாப்பு அறை மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது.

பூமிக்கு அப்பாற்பட்ட பகுதியில் இருந்து வந்திருக்கும் இந்தத் துகள்களுடன் பூமியைச் சேர்ந்த பொருள் ஏதாவது கலந்தால், அது பேராசியர் ஆனந்த் குழு செய்யும் ஆய்வை நிரந்தரமாகக் சீர்குலைத்துவிடக் கூடும்.

சீனா, பிரிட்டன், விண்வெளி, சந்திரன், அறிவியல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சந்திரன்

நிலாவின் தூசி

வரிசையாக வைக்கப்பட்டிருந்த பெட்டகங்களின் முன் நாங்கள் கீழே தரையில் அமர்ந்தோம். அவற்றில் ஒன்றைத் திறந்த பேராசிரியர் ஆனந்த் அதன் உள்ளே இருந்து ஸிப்லாக் பையை எடுத்தார். ஒரு நெக்லெஸ் வைக்கும் அளவிலான மூன்று பெட்டிகளை அதனுள் இருந்து எடுத்தார் அவர்.

ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு குப்பி இருந்தது. அவற்றுக்குள் கருஞ்சாம்பல் நிறத்தில் உள்ள துகள்களைக் காண முடிந்தது.

அவை நிலாவின் துகள் மாதிரிகள்

பார்ப்பதற்கு பெரிதாகத் தெரியாவிட்டாலும், அதன் விண்வெளிப் பயணத்தை நினைத்துப் பார்த்தால் நமக்கு பிரமிப்புதான் ஏற்படுகிறது. மொத்தமாக 60 மில்லிகிராமுக்கு மேல் தங்களுக்குத் தேவைப்படாது என்கிறார் அவர்.

"இங்கே சிறியதுதான் மிக அதிகமானது. எங்களது பல வருட ஆய்வுப் பணிகளுக்கு இது போதுமானது. நாங்கள் நுண்துகள்களில் வேலை செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்," என்கிறார் அவர்.

சீனா, பிரிட்டன், விண்வெளி, சந்திரன், அறிவியல்

பட மூலாதாரம்,TONY JOLLIFFE/BBC NEWS

படக்குறிப்பு,தொழில்நுட்ப வல்லுநர் கே நைட்

கே நைட் என்பவர் மற்றொரு ஆய்வுக்கூடத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர் . இந்தக் குப்பிகள் திறக்கப்பட்டதும் நிலவின் துகள்களில் வேலை செய்யப்போகும் முதல் நபர் அவர்தான்.

அவர் கடந்த 36 வருடங்களாக பாறைகளை அறுத்து, துகள்களாக மாற்றும் பணியைச் செய்து வருகிறார். ஆனால் நிலாவின் மேற்பரப்பில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்ட ஒன்றில் அவர் வேலை செய்யப்போவது இதுதான் முதல் முறை.

"நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்," என்ற அவர் ஒரு வைர பிளேடை வைத்து விண்கற்களை எப்படி அறுப்பார் என்று எங்களுக்கு செய்து காட்டினார்.

"ஆனால் எனக்குக் கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது, காரணம் நம்மிடம் அதிக அளவிலான துகள்கள் இல்லை. திரும்பப் போய் எடுத்துவர முடியாது. அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்," என்று கூறினார் அவர்.

இன்னும் இரண்டு ஆய்வுக்கூடங்களுக்கு அவை எடுத்துச் செல்லப்படும் என்கிறார் அவர்.

சீனா, பிரிட்டன், விண்வெளி, சந்திரன், அறிவியல்

பட மூலாதாரம்,BBC NEWS

படக்குறிப்பு,தான் சொந்தமாக தயாரித்த கருவியான Finesse உடன் ஷாஷா வெர்சோவ்ஸ்கி

அப்படிப்பட்ட ஆய்வுக்கூடம் ஒன்றில் எண்ணற்ற குழாய்கள், வால்வுகள், வயர்களுடன் மிக நுணுக்கமான வலைப்பின்னலைக் கொண்டிருந்த ஒரு கருவியைக் கண்டோம்.

கிட்டத்தட்ட 1990களில் இருந்து இந்தக் கருவியை உருவாக்கி வருகிறார் தொழில்நுட்ப வல்லுநர் ஷாஷா வெர்சோவ்ஸ்கி. அதில் இருக்கும் ஒரு சிறிய சிலிண்டரை நம்மிடம் காட்டுகிறார்.

அதில் இந்தத் துகள்களை 1400 டிகிரி செல்சியஸ் வரை சூடாக்க முடியும். இதில் இருந்து கார்பன், நைட்ரஜன் மற்றும் சில வாயுக்களை பிரித்தெடுக்க முடியும்.

இது மிகவும் தனித்தன்மை வாய்ந்த கருவி. தன்னுடைய ஆய்வகத்திற்கு இந்த அரிதான மாதிரிகள் கிடைக்க இந்தக் கருவியும் ஒரு காரணம் என்று நம்புகிறார் பேராசிரியர் ஆனந்த்.

சீனா, பிரிட்டன், விண்வெளி, சந்திரன், அறிவியல்

பட மூலாதாரம்,TONY JOLLIFFE/BBC NEWS

படக்குறிப்பு,நிலாவின் துகள்களைப் பரிசோதனை செய்யப் பயன்படுத்தும் இன்குபேட்டர் போன்ற கருவி

ஆய்வாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநரான ஜேம்ஸ் மாலி, இந்தத் துகள்களுக்குள் எவ்வளவு ஆக்ஸிஜன் இருக்கிறது என்று கண்டுபிடிக்கும் கருவியை இயக்கப் போகிறார்.

தான் செய்யப் போவதை நமக்கு பரிசோதனை ஓட்டமாகச் செய்து காட்டினார் அவர்.

"இந்த தட்டில் துகள்களை வைத்து அதில் லேசரைப் பாய்ச்சுவேன்," என்ற அவர், அந்தக் காட்சி கணினித் திரையில் பெரிதாவதைக் காட்டினார்.

"அது மெல்லமெல்ல ஒளிர ஆரம்பித்து பின்னர் உள்ளூர உருகத் தொடங்குவதைப் பார்க்கலாம்," என்றார் அவர்.

சீனா, பிரிட்டன், விண்வெளி, சந்திரன், அறிவியல்

பட மூலாதாரம்,TONY JOLLIFFE/BBC NEWS

படக்குறிப்பு,சீனா எடுத்து வந்துள்ள நிலவின் துகள் மாதிரிகள் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக் வழிவகுக்கும் என நம்புகிறார்

இந்த ஆய்வை செய்வதற்கு இந்தக் குழுவிடம் ஒரு வருடம் இருக்கிறது. அது முடியும் சமயத்தில் அவர்களிடம் இருக்கும் மாதிரிகள் மொத்தமும் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் சேங்'இ 5 திட்டத்திற்குப் பிறகு சீனா அதிக தூரம் சென்றுவிட்டது.

2024ஆம் வருடம் சேங்'இ 6 நிலவின் அடுத்த பக்கத்தில் இருந்து மாதிரிகளை எடுத்து வந்தது. நிலவில் முன்பு எரிமலைக் குழம்பு ஓடியதற்கான ஆதாரம் இந்த ஆழமான மர்மமான பகுதியில் கிடைக்கலாம்.

"சீனா மற்றும் சர்வதேச விஞ்ஞானிகளுக்கு இடையிலான நெடுநாள் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கான ஆரம்பமாக இது இருக்கும்," என்று கூறுகிறார் பேராசிரியர் ஆனந்த்.

"அப்போலோ பயணங்களில் கொண்டு வரப்பட்ட நிலவின் துகள் மாதிரிகளில் இருந்துதான் எங்களில் பலர் தங்கள் தொழில்வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொண்டார்கள். இது ஒரு அருமையான பாரம்பரியம். மற்ற நாடுகளும் இதே விஷயத்தைப் பின்பற்றும் என்று நம்புகிறேன்," என்றார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c20npxldy49o

'பாய்ப் படகு'

1 month ago

'பாய்ப் படகு'

ஒரு நாகரிகம் அதனின் வர்த்தகம் மற்றும் வணிகத்தின் அடிப்படையில் தழைத்து ஓங்குகிறது. இதற்கு மெசொப்பொத்தேமியா விதி விலக்கல்ல. அவர்கள் தமக்கு அருகில் உள்ள நகரங்களுடனும் நாடுகளுடனும் வர்த்தக தொடர்புகள் ஏற்படுத்த விரும்பினார்கள். இது போக்கு வரத்துக்கான வீதி பாதைகள் அமைக்கப்பட முன்பு என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே பொதுவாக நில பாதை மிகவும் கடினமாகவும் இடர்ப்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்தன. இதனால் சுமேரியர்கள் வேறு ஒரு மாற்று போக்குவரத்து வசதியை பொருட்கள் மற்றும் மக்களை கொண்டு செல்ல கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. அது, அந்த மாற்று வழி, நீர் போக்கு வரத்தாக வடிவம் பெற்றது. அதாவது முதலாவது படகு சுமேரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அது ஒரு மிக எளிமையான மரப் படகாக அமைந்தது. ஓவியன் ஒருவனின் சுமேரிய பாய்ப் படகின் உருவிளக்க படம் இங்கு தரப்பட்டுள்ளது. இதில், கொடிக்கம்பத்தில் எங்கு பாய் தொங்க விடப்படும் என்பதை கயிறு சுட்டிக்காட்டுகிறது. மேலும் இரு முன்னைய பாய் படகின் படங்கள் படகோட்டிகளுடன் இணைக்கப் பட்டுள்ளது. அந்த சுமேரிய படகின் பாய் [sails] சதுரமாக துணியால் செய்யப்பட்டதாக இருந்தது. அனால் அதன் கோணத்தையோ திசையையோ மாற்ற முடியவில்லை. உதாரணமாக படகு போக வேண்டிய திசையில் காற்று வீசினால், பயணம் நன்றாக அமைந்தது. ஆனால் அப்படி இல்லை என்றால், அவர்கள் தங்களுக்கு சாதகமாக காற்று அடிக்கும் மட்டும் காத்து இருக்க வேண்டி இருந்தது. அதாவது இந்த நீர் போக்கு வரத்து சாதகமான காற்று வீசலில் தங்கி இருந்தது. இந்த படகுகள் பழமையான வடி வமைபாக primitive in design] இருந்தது. எப்படியாயினும் இந்த பாய்ப் படகுகள் மெசொப்பொத்தேமியா மக்களுக்கு வர்த்தகம் மற்றும் வணிகத்திற்கு உதவி செய்தது. அது மட்டும் அல்ல நீர்பாசனத்திற்கும் மீன் பிடித்தலுக்கும் கூட இது உதவி செய்தது. உதாரணமாக நீர் ஓட்டத்துடன் அதன் திசையில் [downstream] பாய்ப் படகில் சென்று தமது வலைகளை வீசுகிறார்கள். அதன் பின் அங்கு தங்கி காத்து இருந்து தமது பிடித்த மீன்களுடன் கரை திரும்புகிறார்கள். அவர்களால் ஒரு அளவிற்கு அதிகமாக பொருட் களையோ அல்லது மக்களையோ கையாள முடியா விட்டாலும், அந்த அவர்களின் படகு அமைப்பு [boat design] வருங்கால படகின் வளர்ச்சிக்கு, ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு கூட , இன்னும் மூல /அடிப்படை கருவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை பார்க்கும் போது புறநானூறு - பாடல் 66 நினைவிற்கு வருகிறது. இங்கு வெண்ணிக் குயத்தியார் என்ற பெண் புலவர் கரிகால் பெருவளத்தானைப் புகழ்ந்து, காற்றின் சக்தியால் தமிழர்கள் கலம் (கப்பல்) செலுத்தியதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டு கிறார். அந்தப் பாடல் வரிகள் கரிகாலன் ஆண்ட காலத்தைப் பற்றிக் கூடப் பேசவில்லை. அவனுடைய முன்னோர்களின் காலத்திலேயே காற்றின் விசையால் கப்பல்கள் விடப்பட்டதைப் புகழ்ந்து பேசுகிறது. அந்த வரிகள்,

''நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி

வளிதொழில் கண்ட உரவோன் மருக!

களிஇயல் யானைக் கரிகால் வளவ!" ஆகும்.

(முக்கியச் சொற்களின் பொருள்: வளி -காற்று, முந்நீர் - கடல், நாவாய் - கப்பல்)

''வளவனே! உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான பொறிமுறைகளைப் பொருத்திக் கப்பல் செல்லுமாறு செய்த அறிவாற்றல் உடையவர்கள். மதயானை மிகுந்த படைகளை உடைய கரிகால் வளவ!''

என்று உரையாசிரியர்கள் இப்பாடல் வரிகளுக்கு பொருள் எழுதி வைத்துள்ளனர். அந்த தமிழர்களின் முனோர்களே இந்த சுமேரியர்கள் ஆகும் !

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

465796309_10227025659410198_889367013207

466128502_10227025659690205_300079355692

465774646_10227025659570202_777760613344

பிரபஞ்சம் குறித்த புரிதலை புரட்டிப் போடும் புதிய தகவல்களை வழங்கிய இருண்ட ஆற்றல் ஆய்வு

1 month 2 weeks ago

இருண்ட ஆற்றல்- பிரபஞ்சத்தின் கோட்பாட்டை மாற்றியமைக்குமா?

பட மூலாதாரம்,ESA

படக்குறிப்பு,வழக்கத்துக்கு மாறாகச் செயல்படும் ஒரு விசை, விண்மீன் திரள்களை ஒன்றிடம் இருந்து ஒன்றைத் தள்ளிவிடுகின்றது.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பல்லவ் கோஷ்

  • பதவி, அறிவியல் செய்தியாளர்

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

இருண்ட ஆற்றல் (Dark Energy). இது மிகவும் மர்மமான ஆற்றல். இதுதான் இந்தப் பிரபஞ்சம் விரிவடையக் காரணமாக இருக்கிறது. விஞ்ஞானிகள் இதை டார்க் எனர்ஜி என்று அழைக்கின்றனர். நாம் இவ்வளவு ஆண்டுகளாக நேரம், விண்வெளி ஆகியவற்றின் மீது கொண்டிருந்த புரிதலின் கோணத்தையே இந்த ஆற்றல் மாற்ற வாய்ப்பு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வானியலாளர்கள் வானியலில் தாங்கள் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தக் கூடிய கண்டுபிடிப்பை நெருங்கிக்கொண்டிருப்பதாக நினைக்கின்றனர். ஆனால், இந்தக் கண்டுபிடிப்பு வானியல் தொடர்பான நமது அடிப்படைப் புரிதலைக்கூட மீண்டும் ஒருமுறை கேள்வி கேட்க வைத்துவிடும்.

இந்த ஆய்வின் முதல்கட்ட கண்டுபிடிப்பு, தற்போது அனைவரும் பின்பற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கோட்பாட்டிற்கு முரணாக உள்ளது.

இதன் முடிவுகளை உறுதி செய்வதற்கு இன்னும் நிறைய தரவுகளும் ஆதாரங்களும் தேவைப்படுகிறது. ஆனால் மிகவும் மதிக்கத் தகுந்த ஆய்வாளர்களான லண்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஓபர் லஹவ் போன்றோர்கூட கிடைக்கும் தரவுகளைக் கண்டு அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் மூழ்கியுள்ளனர்.

பேராசிரியர் ஓபர் லஹவ், "இதுவொரு வியத்தகு தருணம்," என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

இருண்ட ஆற்றல் என்பது என்ன?

பிரபஞ்சம் பற்றிய புரிதலை புரட்டிப் போடும் புதிய தகவல்களை வழங்கிய இருண்ட ஆற்றல் ஆய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

ஓபர் லஹவின் கருத்துப்படி, "இதுவரை பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள முன்மாதிரியாக இருந்த புரிதலில் மிகப்பெரிய மாற்றத்தை நாம் எதிர்பார்க்கலாம்."

இருண்ட ஆற்றல் என ஒன்று இருப்பது கடந்த 1998ஆம் ஆண்டில் தெரிய வந்தபோது, அந்தக் கண்டுபிடிப்பே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதுவரை, இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கியதாகக் கூறப்படும் பெருவெடிப்பு (Big Bang) நிகழ்வுக்குப் பிறகு ஈர்ப்பு விசையின் காரணமாக பிரபஞ்சம் விரிவடையும் வேகம் குறையும் என்றே நம்பப்பட்டது. பெருவெடிப்புக் கோட்பாடு, பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்பதை விளக்க முயல்கிறது.

ஆனால், அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் கணிப்புப்படி இதன் விரிவாக்கம் மேலும் வேகமடைந்து வருகிறது.

இது ஏற்படக் காரணமாக இருக்கும் ஆற்றல் என்னவென்று தெரியாததாலும், அதைப் பற்றிய புரிதல் இல்லாததாலும் அதற்கு இருண்ட ஆற்றல் (டார்க் எனர்ஜி) என்று பெயர் சூட்டினர்.

'வலுவான ஆதாரம்'

இருண்ட ஆற்றல்- பிரபஞ்சத்தின் கோட்பாட்டை மாற்றியமைக்குமா?

பட மூலாதாரம்,DESI

படக்குறிப்பு,5,000 ஒளியியல் இழைகளைக் கொண்டுள்ள ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் கருவி

இருண்ட ஆற்றல் என்ன என்பது நமக்குத் தெரியாமல் இருப்பதால் அறிவியலில் இருக்கக்கூடிய மிகப்பெரிய மர்மமாக அது இருக்கிறது.

இதற்கான விடையைக் கண்டுபிடிக்கும் நோக்கில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. டார்க் எனர்ஜி ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் கருவியின் உருவாக்கம் அத்தகைய முயற்சிகளில் ஒன்று. இது அரிசோனாவில் உள்ள டூசான் நகரத்தில், கிட் பீக் தேசிய கண்காணிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருவி, 5,000 ஒளியியல் இழைகளைக் (optical fibres) கொண்டுள்ளது. ஒவ்வொரு ஒளியியல் இழையும் ரோபோட்கள் மூலம் கேலக்ஸிகளை அதிவேகத்தில் கண்காணிக்கின்றன.

கடந்த ஆண்டு, இந்தக் கருவியில் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, இருண்ட ஆற்றல் வெளிப்படுத்திய ஆற்றல் காலப்போக்கில் மிகவும் மாறுபட்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். முதலில், சராசரியாகக் கிடைக்கும் தரவுகளில் ஏற்பட்ட சிறு பிசகல் என்றே இதை அவர்கள் கருதினர். ஆனால், அந்தப் "பிசகல்" மேலும் வளர்ந்துள்ளது ஓர் ஆண்டுக்கால ஆய்வில் தெரிய வந்துள்ளது.

"முன்பு இருந்ததைவிட இப்போது ஆதாரம் வலுவாக உள்ளது" என்று போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழகத்தின் பேரசிரியரான சேஷாத்ரி நடத்தூர் தெரிவித்தார்.

"கடந்த ஆண்டு நடைபெற்ற சோதனைகளைவிட அதிகளவிலான சோதனைகளைச் செய்துள்ளோம். அவற்றில் கிடைத்த ஆதாரங்கள் எல்லாம் நமக்குக் கிடைத்த மாறுப்பட்ட தரவுகள் அனைத்தும் உண்மை என்றும், எங்களால் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் ஏற்படும் தரவுப் பிசகல் இல்லை என்ற நம்பிக்கையையும் வலுவாக்கியுள்ளது," என்றார் அவர்.

விசித்திரமான முடிவுகள்

இதுவரை கிடைத்த தரவுகள், இதை ஒரு கண்டுபிடிப்பாக முன்வைக்கும் அளவுக்குப் போதுமானதாக இல்லாவிட்டாலும், ஸ்காட்லாந்து முன்னணி வானியலாளரும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கேத்தரின் ஹேமன்ஸின் கவனத்தை இதன் பக்கம் ஈர்த்துள்ளது.

"நாம் நினைத்ததைவிட இந்த இருண்ட ஆற்றல் மிகவும் விசித்திரமானதாக இருக்கிறது," என்று அவர் தெரிவித்தார்.

"கடந்த 2024ஆம் ஆண்டு கிடைத்த தரவுகள் மிகவும் புதிதாக இருந்ததால், இது தொடர்பாக இன்னும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், இப்போது நம்மிடம் நிறைய தரவுகள் உள்ளன. நமக்குக் கிடைத்த தரவுகளில் இருக்கும் விலகல் சரியாகின்றதா அல்லது மிகப்பெரிய வானியல் கண்டுபிடிப்பை நோக்கி நமது பயணம் நெருங்கிக் கொண்டிருக்கின்றதா என்பதை இனி வரும் நாட்களில் தெரிந்துகொள்ளலாம்" என்றும் கேத்தரின் ஹேமன்ஸ் குறிப்பிட்டார்.

மாறுபட்ட தரவுகள் கிடைக்கக் காரணம் என்ன என்று கேட்டதற்கு, அது "யாருக்கும் தெரியாது" என்று புன்னகையுடன் ஒப்புக்கொண்டார்.

யூக்லிட் மிஷன்

பட மூலாதாரம்,ESA

படக்குறிப்பு,இருண்ட ஆற்றல் தொடர்பாக இன்னும் நிறைய தரவுகளை ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் யூக்லிட் மிஷன் வழங்கும்.

"புதிதாகக் கிடைத்த முடிவுகள் சரியானவை என்றால், இதை ஏற்படுத்தும் ஆற்றலைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் புத்தம் புதிய கோட்பாடு ஒன்று உருவாகலாம், இது மிகவும் உற்சாகமளிக்கக் கூடியதாக இருக்கும்."

மேற்கூறிய டார்க் எனர்ஜி ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் இன்ஸ்ட்ரூமென்ட் (DESI) அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தோராயமாக 5 கோடி கேலக்ஸிகளையும் மற்ற ஒளி நிறைந்த பொருட்களையும் கணக்கிடும். இதன் மூலமாக அவர்களின் கணக்கீடுகள் சரியா இல்லையா என்பதைக் கண்டறிய முடியும்.

"இந்தப் பிரபஞ்சமே அது செயல்படும் வழிமுறையை நம்மிடம் சொல்லும். ஒருவேளை நாம் நினைத்ததைவிட அதன் செயல்பாடு மிகவும் சிக்கலானதாக இருக்கிறது என்பதை அது நமக்கு உணர்த்துகிறதா என்பதை நாம் அறிய வேண்டும்," என்கிறார் கலிஃபோர்னியாவின் லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வகத்தைச் சேர்ந்த முதுமுனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரே குயூ.

இருண்ட ஆற்றல் தொடர்பாக இன்னும் நிறைய தரவுகளை ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் யூக்லிட் மிஷன் வழங்கும். யூக்லிட் என்பது ஒரு விண்வெளி தொலைநோக்கி. இது DESI-ஐ விட இன்னும் நுணுக்கமான கணக்கீடுகளைக் கொடுக்கக்கூடியது. 2023ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்தத் தொலைநோக்கி புதிய புகைப்படங்களை அனுப்பியுள்ளது.

டார்க் எனர்ஜி ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் கருவியில் ஆய்வு செய்வதற்கான திட்டத்தில் டர்ஹாம், யு.சி.எல். மற்றும் பிரிட்டனின் போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகம் உள்பட 70க்கும் மேற்பட்ட நிறுவங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c89yzqvqnz5o

கனடாவிற்கும் கிரீன்லாந்துக்கும் இடையே புதிய மைக்ரோ கண்டம் கண்டுபிடிப்பு!

1 month 2 weeks ago

micro-continent-1.webp?resize=750%2C375&

கனடாவிற்கும் கிரீன்லாந்துக்கும் இடையே புதிய மைக்ரோ கண்டம் கண்டுபிடிப்பு!

கனடாவிற்கும் கிரீன்லாந்துக்கும் இடையே புதிய மைக்ரோ கண்டமொன்று  (Micro Continent) கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுவீடன் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய ஆய்விலேயே கடலின் அடியில் புதைந்து கிடக்கும் Proto Microcontinent  எனப்படும் இந்த புதிய நிலப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கிரீன்லாந்துக்கும் கனடாவின் பாபின் தீவிற்கும் இடையே உள்ள Davis Strait  எனும்  பகுதியில் இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலப்பகுதி சுமார் 19 முதல் 24 கிலோமீற்றர் வரை அகலமுள்ளதும், சாமான்ய நிலப்பரப்பை விட அடிக்கடி அடர்த்தியுடைய கொண்டதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப் புது மைக்ரோகண்டம், கிரீன்லாந்தும் வட அமெரிக்காவும் பிரிந்த போது முழுமையாக பிரியாமல் ஒரு பகுதி இணைந்தே இருந்திருக்கலாம் எனவும்  தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கிரீன்லாந்து பிரிதல் ஆரம்பமான நிலையில், 56 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த புதிய மைக்ரோகண்டம் உருவாகத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 33 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கிரீன்லாந்து  Ellesmere  தீவுடன் மோதியதனால் அப்பகுதி தற்போது நிலையானதாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது போன்ற மைக்ரோகாண்டினெண்ட்கள் பிற இடங்களிலும் (Jan Mayen, Tasman Rise) காணப்பட்டுள்ளன. பூமியின் உள் கட்டமைப்பு நிலப்பலகைகள் இயக்கத்தில் முக்கிய பங்காற்றுவதை இது வெளிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1429088

அறிவியல் மாமேதை ஐன்ஸ்டீன் செய்த 3 'தவறுகள்' உலகையே மாற்றிய கதை

1 month 3 weeks ago

ஐன்ஸ்டீன், இயற்பியல், புவியீர்ப்பு, சார்பியல் கோட்பாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், எல்லன் சாங்

  • பதவி, பிபிசி உலக சேவை

  • 18 ஏப்ரல் 2025, 01:12 GMT

மாபெரும் மேதைகள்கூட சாதாரண மனிதர்கள்தான். சார்பியல் கோட்பாட்டின் தந்தையாக, ஈர்ப்பு விசை மற்றும் ஒளியை ஆராய்ந்து விளக்கிய இயற்பியலாளராக ஐன்ஸ்டீன் இருக்கலாம்.

ஆனால் மாமேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்கூட சில நேரங்களில் தனது சொந்தக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாமல் இருந்துள்ளார்.

தன் மீதான இந்த 'சுய சந்தேகம்', அவர் சில தவறுகளைச் செய்யவும் வழிவகுத்தது.

'மிகப் பெரிய தவறு'

பொது சார்பியல் கோட்பாட்டு (General relativity) குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, ஈர்ப்பு சக்தி பிரபஞ்சத்தை சுருங்கச் செய்யும் அல்லது விரிவடையச் செய்யும் என ஐன்ஸ்டீனின் கணக்கீடுகள் சுட்டிக்காட்டின.

ஆனால் அந்தக் காலகட்டத்தில், 'பிரபஞ்சம் நிலையானது' என்ற கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

எனவே, 1917ஆம் ஆண்டு வெளியான பொது சார்பியல் பற்றிய தனது ஆய்வறிக்கையில், ஈர்ப்பு விசையின் தாக்கத்தைச் சமநிலைப்படுத்த ஐன்ஸ்டீன் "அண்டவியல் மாறிலி" (cosmological constant) என்ற ஒன்றைத் தனது சமன்பாடுகளில் சேர்த்தார். இதன் மூலம் பிரபஞ்சம் நிலையானதாக இருக்க வேண்டும் என்று பரவலாக இருந்த கருத்தை அவர் ஏற்றுக்கொண்டார்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, விஞ்ஞானிகள் பிரபஞ்சம் நிலையானது அல்ல என்பதற்கான புதிய ஆதாரங்களை சேகரிக்கத் தொடங்கினர்.

உண்மையில், பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருந்தது. பின்னர், இயற்பியலாளர் ஜார்ஜ் காமோவ் 'My World Line: An Informal Autobiography' என்ற தனது நூலில் "அண்டவியல் மாறிலியின் அறிமுகம் அவர் வாழ்க்கையில் செய்த பெருந்தவறு" என்று ஐன்ஸ்டீன் குறித்து எழுதினார்.

ஐன்ஸ்டீன், இயற்பியல், புவியீர்ப்பு, சார்பியல் கோட்பாடு

பட மூலாதாரம்,NASA/ESA/J MERTEN/D COE

படக்குறிப்பு,அந்தக் காலத்தில், 'பிரபஞ்சம் நிலையானது' என்ற கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தது

ஆனால், இதற்கு இன்னொரு சுவாரஸ்யமான திருப்புமுனையும் உள்ளது.

ஒரு மர்மமான "இருண்ட ஆற்றலின்" காரணமாக பிரபஞ்சத்தின் விரிவாக்கம் வேகப்படுத்தப்படுகிறது என்பதற்கான வலுவான ஆதாரங்களை விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர்.

தொடக்கத்தில் ஈர்ப்பு விசையைச் சமன்படுத்துவதற்காகத் தனது சமன்பாடுகளில் ஐன்ஸ்டீன் அறிமுகப்படுத்திய "அண்டவியல் மாறிலி" தான், உண்மையில் இந்த இருண்ட ஆற்றலுக்குச் சிறந்த விளக்கமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

எனவே, அது தவறு அல்ல என்று சிலர் கருதுகிறார்கள்.

தொலைதூர விண்மீன் குழுக்களின் அறிமுகம்

ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு மற்றொரு நிகழ்வையும் கணித்தது.

நட்சத்திரம் போன்ற ஒரு மிகப்பெரிய பொருளின் ஈர்ப்பு புலம், அதன் பின்னால் உள்ள தொலைதூர பொருளில் இருந்து வரும் ஒளியை வளைத்துவிடும். இதன் மூலம் அந்தப் பெரிய பொருள் ஒரு சக்திவாய்ந்த பூதக்கண்ணாடி போல (பெரிதாகக் காட்டும் கண்ணாடி - magnifying lens) செயல்படுகிறது.

'ஈர்ப்புப் புல ஒளிவிலகல் - Gravitational lensing' (ஒரு பொருளிலிருந்து வரும் ஒளி, ஒரு பெரிய பொருளின் அருகே செல்லும்போது, அந்தப் பொருளின் ஈர்ப்புப் புலம் ஒளியின் பாதையை வளைத்து, பார்வையாளருக்கு அது வேறு இடத்தில் இருந்து வருவது போலத் தோற்றமளிக்கும்) எனப்படும் விளைவு, பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக இருக்கும் என்று ஐன்ஸ்டீன் நினைத்தார்.

அதனால், அவர் தனது கணக்கீடுகளை வெளியிடவே விரும்பவில்லை. ஆனால் செக் குடியரசைச் சேர்ந்த பொறியாளரான ஆர்.டபிள்யூ. மாண்டல் அதை வெளியிடுமாறு ஐன்ஸ்டீனை வற்புறுத்தினார்.

பின்னர் 1936ஆம் ஆண்டு சயின்ஸ் இதழில் வெளியான தனது சொந்த கட்டுரையை மேற்கோளிட்டு, "மாண்டல் என்னை வற்புறுத்தி வெளியிட வைத்த இந்தச் சிறிய கட்டுரையை, நீங்கள் வெளியிட உதவியதற்கு நன்றி கூற விரும்புகிறேன். இது பெரிதாக மதிக்கத்தக்கது அல்ல, ஆனால் இந்த ஏழைக்கு மகிழ்ச்சியளிக்கிறது," என ஐன்ஸ்டீன் அதன் பத்திரிக்கை ஆசிரியருக்கு கடிதம் எழுதினார்.

அந்தக் கட்டுரையில் உள்ள கண்டுபிடிப்பின் மதிப்பு வானியலுக்கு மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. இது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் ஹப்பிள் தொலைநோக்கிக்கு, பூமிக்குக் அருகிலுள்ள பெரிய விண்மீன் குழுக்கள் மூலம் பெரிதாக்கப்பட்ட, தொலைதூர விண்மீன் குழுக்களின் விவரங்களைத் திரட்ட உதவுகிறது.

ஐன்ஸ்டீன், இயற்பியல், புவியீர்ப்பு, சார்பியல் கோட்பாடு

பட மூலாதாரம்,NASA/ESA

படக்குறிப்பு,ஈர்ப்புப்புல ஒளிவிலகல், ஹப்பிள் டெலஸ்கோப்புக்கு 'ப்ளூ ஹார்ஸ்ஷு' விண்மீன் குழுவை படம்பிடிக்க உதவியுள்ளது

'குவாண்டம் இயக்கவியலில் சீரற்ற தன்மை கிடையாது'

அலைகளும் துகள்களும் என ஒளியை விவரிக்கும் ஐன்ஸ்டீனின் 1905ஆம் ஆண்டின் கட்டுரை உள்பட, அவரது பணி இயற்பியலின் வளர்ந்து வரும் அந்தத் துறைக்கு அடித்தளம் அமைக்க உதவியது.

குவாண்டம் இயக்கவியல், மிகச் சிறிய துகள்கள், அதாவது (அணுக்கள் மற்றும் எலக்ட்ரான்கள்) போன்றவற்றின் விசித்திரமான உலகத்தை விளக்குகிறது.

எடுத்துக்காட்டாக, ஒரு குவாண்டம் பொருளால் ஒரே நேரத்தில் பல நிலைகளில் இருக்க முடியும் ('சூப்பர்பொசிஷனில்'). அதாவது ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்க முடியும்.

ஆனால் நாம் அதை அளவிடும்போது, அது ஒரு குறிப்பிட்ட மதிப்புக்கு (நிலைக்கு) கொண்டு வரப்படுகிறது. இதற்கான பிரபலமான விளக்கம் இயற்பியலாளர் எர்வின் ஷ்ரோடிங்கரால் அளிக்கப்பட்டுள்ளது.

'ஒரு பெட்டியில் உள்ள பூனையை யாரோ ஒருவர் அந்தப் பெட்டியின் மூடியைத் திறந்து சரிபார்க்கும் வரை ஒரே நேரத்தில் அது உயிருடனும் இருப்பதாகவும், இறந்து விட்டதாகவும் கருதப்படலாம்' என்பதுதான் அந்த விளக்கம்.

ஐன்ஸ்டீன், இயற்பியல், புவியீர்ப்பு, சார்பியல் கோட்பாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,எர்வின் ஷ்ரோடிங்கரின் முரண்பாடு ஒரு பெட்டியில் பூனை என்ற கருத்தைப் பயன்படுத்தி விளக்கப்பட்டது.

ஆனால் குவாண்டம் இயக்கவியலின் நிச்சயமற்ற தன்மையை ஐன்ஸ்டீன் நிராகரித்தார். 1926இல், அவர் இயற்பியலாளர் மாக்ஸ் பார்னுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் "குவாண்டம் இயக்கவியலில் சீரற்ற தன்மை கிடையாது (God does not play dice)" என்று கூறித் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

விஞ்ஞானிகளான போரிஸ் பொடோல்ஸ்கி மற்றும் நேதன் ரோசனுடன் இணைந்து ஐன்ஸ்டீன் 1935ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில், சூப்பர் பொசிஷனில் உள்ள இரண்டு பொருள்கள் ஏதேனும் ஒரு வகையில் இணைக்கப்பட்டு, பின்னர் பிரிக்கப்பட்டால், ஒருவர் முதல் பொருளைக் கவனித்து அதற்கு மதிப்பை அளிக்கும்போது, இரண்டாவது பொருளைக் கவனிக்காமலே, அதன் மதிப்பு உடனடியாக நிர்ணயிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

இந்த யோசனை, குவாண்டம் சூப்பர்பொசிஷனுக்கு மறுப்பு தெரிவிக்கும் நோக்கம் கொண்டதாக இருந்தாலும், அது பல ஆண்டுகளுக்குப் பிறகு குவாண்டம் இயக்கவியலில் ஒரு முக்கியமான சிந்தனை வளர்ச்சிக்கு வித்திட்டது. அதை நாம் இப்போது குவாண்டம் பின்னல் (Entanglement) என்று அழைக்கிறோம்.

இது, இரண்டு பொருள்கள் வெகுவாக தொலைவில் இருந்தாலும் அவற்றை ஒன்றாக இணைக்க முடியும் எனக் கூறுகிறது.

இதன் மூலம், ஐன்ஸ்டீன் புத்திசாலித்தனமாகத் தனது கோட்பாடுகளை விளக்கியுள்ளதையும், சில நேரங்களில் அவர் தவறு செய்திருந்தாலும், அந்தத் தவறுகளும் புதிய சிந்தனைகளை உருவாக்க உதவியுள்ளன, நவீன உலகில் பல தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு வித்திட்டுள்ளன என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgqvl2ng1z1o

உயிரினங்கள் வாழும் சாத்தியங்களுடன் புதிய கோள் கண்டுபிடிப்பு

1 month 3 weeks ago

17 Apr, 2025 | 04:24 PM

image

பூமியிலிருந்து தொலைதூரத்திலுள்ள  நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கோளொன்றில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கே2-18பி (K2-18b) என அழைக்கப்படும் கோளோன்று தொடர்பில் ஆராய்ச்சிகளை நடத்தும்  கேம்பிரிஜ் பல்கலை கழக குழுவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

பூமியிலுள்ள உயிரினங்களால் மாத்திரம் உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறுகள்  இந்த கோளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

இந்த முடிவுகளை உறுதிப்படுத்துவதற்கு மேலதிக தரவுகள் அவசியம் என  ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் குழுவினரும் வானியல் வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர்.

உயிரினங்கள் வாழும் சாத்தியங்களுடன் புதிய கோள் கண்டுபிடிப்பு  | Virakesari.lk

முழுவதும் பெண்களே நிரம்பிய குழு நாளை விண்வெளிக்கு பயணம் - 6 பேரும் என்ன செய்வார்கள்?

1 month 3 weeks ago

நியூஷெப்பர்ட்-31, ப்ளூ ஆரிஜின், ஜெப் பெசோஸ், பெண்கள் விண்வெளிப் பயணம்

பட மூலாதாரம்,TWITTER/BLUE ORIGIN

படக்குறிப்பு,நியூஷெப்பர்ட்-31 குழு

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.சுபகுணம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 13 ஏப்ரல் 2025, 01:53 GMT

பாப் பாடகி, பத்திரிகையாளர், விஞ்ஞானி, திரைப்படத் தயாரிப்பாளர் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் அடங்கிய ஒரு குழு ஏப்ரல் 14ஆம் தேதி விண்வெளிப் பயணம் மேற்கொள்ளப் போகிறார்கள்.

முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே உள்ளடக்கிய இந்த குழு விண்வெளிக்குச் செல்லப் போகிறது. ஆறு பெண்கள் உள்ள இந்தக் குழுவை, ஜெஃப் பெசோஸால் நிறுவப்பட்ட விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின், அதன் நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த 1963ஆம் ஆண்டில் சோவியத் விண்வெளி வீராங்கனையான வாலன்டினா தெரெஷ்கோவ் தனியாக விண்வெளிக்குச் சென்று வந்த பிறகு, பெண்கள் மட்டுமே விண்வெளிப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. இந்தப் பயணத்தை ப்ளூ ஆரிஜின் நிறுவனம் ஏப்ரல் 14ஆம் தேதி திட்டமிட்டுள்ளது.

இந்தக் குழுவில், பாப் பாடகியான கேட்டி பெர்ரி, செய்தியாளர் கேல் கிங், சிவில் உரிமைகள் வழக்கறிஞர் அமாண்டா நுயென், நாசாவின் முன்னாள் ராக்கெட் விஞ்ஞானி ஆயிஷா போவே, திரைப்பட தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் ஆறாவது பெண்ணாக, இந்தக் குழுவை வழிநடத்தப் போகிறவரும் ஜெஃப் பெசோஸின் காதலியுமான லாரன் சான்செஸ் பயணிக்கவுள்ளார்.

இவர்கள் பூமிக்கும் விண்வெளிக்கும் இடையே பூமியின் வளிமண்டலத்துக்கு அப்பால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஒரு கற்பனை எல்லைக்கோடான கார்மன் கோட்டைக் கடந்து செல்வார்கள்.

விண்வெளிக்கு ஒரு சிறு பயணம்

நியூஷெப்பர்ட்-31, ப்ளூ ஆரிஜின், ஜெப் பெசோஸ், பெண்கள் விண்வெளிப் பயணம்

பட மூலாதாரம்,BLUE ORIGIN

படக்குறிப்பு,ஏப்ரல் 14ஆம் தேதி ப்ளூ ஆரிஜின் விண்கலத்தில் விண்வெளிக்குச் செல்லப்போகும் பெண்கள்

நியூ ஷெப்பர்ட்-31 என இந்தப் பயணத் திட்டத்தில், ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டில் இந்த ஆறு பெண்களும் பயணிக்கப் போகிறார்கள்.

அதனுள் இருக்கும் விண்கலம் முற்றிலுமாக தானியங்கி முறையில் செயல்படக்கூடியது. அதாவது, விண்கலத்தை இயக்குவதற்கென அதனுள்ளே யாரும் இருக்க மாட்டார்கள்.

இந்த விண்கலம், ஆறு பெண்களையும் பூமியின் வளிமண்டலத்துக்கு அப்பால் இருக்கும் கார்மன் எல்லைக் கோடு வரை அழைத்துச் செல்லும்.

இந்த பயணம் தோராயமாக 11 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். கார்மன் எல்லைக் கோடு பகுதியில் சில நிமிடங்களுக்கு ஈர்ப்பு விசையின்மை மற்றும் எடையின்மையை உணர்ந்த அவர்கள், விண்வெளியில் இருந்து பூமியின் அற்புதமான காட்சியைக் கண்டு களித்த பிறகு பூமியை நோக்கிய பயணத்தை தொடங்குவார்கள்.

பாப் பாடகி கேட்டி பெர்ரியின் இசை சுற்றுப்பயணம் ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக ஏப்ரல் 14ஆம் தேதியன்றே இதைச் செய்து முடிக்க ப்ளூ ஆரிஜின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இவர்களை ஏற்றிச் செல்லப்போகும் நியூ ஷெப்பர்ட் ராக்கெட், ஏப்ரல் 14ஆம் தேதியன்று அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸில் உள்ள அந்த நிறுவனத்தின் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும்.

நியூஷெப்பர்ட்-31, ப்ளூ ஆரிஜின், ஜெப் பெசோஸ், பெண்கள் விண்வெளிப் பயணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கார்மன் கோட்டை அடைந்ததும் ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்ற கேப்சூல் (சித்தரிப்புப் படம்)

லாரன் சான்செஸ் கடந்த 2023ஆம் ஆண்டு வோக் பத்திரிகை நேர்காணலில், முழுமையாகப் பெண்கள் மட்டுமே விண்வெளிக்குப் பயணிக்கும் இத்தகைய கனவுப் பயணம் குறித்து விவரித்திருந்தார்.

"இது வெறுமனே ஒரு விண்வெளிப் பயணம் மட்டுமல்ல. இது மக்களின் மனநிலையை மாற்றுவது, எதிர்கால சந்ததிகளை ஊக்குவிப்பது போன்ற நோக்கங்களை உள்ளடக்கிய பயணம்," என்று ப்ளூ ஆரிஜின் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கார்மன் எல்லைக்கோடு என்றால் என்ன?

கார்மன் கோடு என்பது ஒரு கற்பனையான எல்லைக்கோடு. இது பூமியின் கடல் மட்டத்தில் இருந்து 100 கி.மீ உயரத்தில் இருப்பதாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதுவே, பூமியில் இருந்து பயணித்தால் விண்வெளியை அடைந்துவிட்டதாகக் கருதப்படும் இடம் எனப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, புவி வளிமண்டலத்தின் முடிவாகவும், விண்வெளியின் தொடக்கமாகவும் இந்தப் புள்ளி கருதப்படுகிறது.

கார்மன் கோடு, விமானவியல் மற்றும் வானியலுக்கு இடையே ஒரு வேறுபாட்டைக் குறிப்பதற்காக, ஃபெடரேஷன் ஏரோநாடிக் இன்டர்நேஷனல் என்ற அமைப்பால் தீர்மானிக்கப்பட்டது. இந்த உயரத்தை அடைவது, விண்வெளி ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாகக் கருதப்படுகிறது.

"சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளின்படி, இதுதான் விண்வெளி என்று ஒரு வரையறை உருவாக்கப்பட்டுள்ளது. அதுவே இந்த கார்மன் எல்லைக்கோடு," என்கிறார் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரும் முன்னாள் விஞ்ஞானியுமான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.

நியூஷெப்பர்ட்-31, ப்ளூ ஆரிஜின், ஜெப் பெசோஸ், பெண்கள் விண்வெளிப் பயணம்

பட மூலாதாரம்,BLUE ORIGIN

படக்குறிப்பு,ஆறு பெண்களும் விண்வெளியில் வரையறுக்கப்பட்டுள்ள கார்மன் எல்லைக் கோட்டுக்கு சற்று மேலே சென்றுவிட்டு மீண்டும் பூமிக்குத் திரும்புவார்கள்.

அவரது கூற்றுப்படி, கார்மன் எல்லைக்கோடு எனத் தீர்மானிக்கப்பட்டு இருக்கும் 100 கி.மீ என்ற உயரத்துக்குக் கீழேதான் 99.9% வரையிலான வளிமண்டலம் உள்ளது. ஆகையால்தான் அதற்கு மேலே இருக்கும் பகுதி விண்வெளி என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த எல்லைக் கோட்டைத் தாண்டிப் பயணிப்பவர்கள் "விண்வெளிக்குச் சென்றவர்கள்" என்ற அந்தஸ்தை பெறுகிறார்கள். அதனால்தான் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் விண்வெளிப் பயணங்களும் இந்தக் கோட்டுக்கு மேலே சென்று, அதன் பயணிகளுக்கு உண்மையான விண்வெளி அனுபவத்தை வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

'விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிப்பதே நோக்கம்'

விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.

"இத்தகைய விண்வெளிச் சுற்றுலா பயணங்களை இந்த நிறுவனம் பலமுறை மேற்கொண்டுள்ளது. ஆனால், இந்தப் பயணம் குறித்துக் கேள்விப்பட்டதும், சுனிதா வில்லியம்ஸ் சென்றதைப் போன்றதொரு பயணமோ எனக் கருதிவிடக்கூடாது," என்கிறார் அவர்.

சுனிதா வில்லியம்ஸ் சுமார் 400 கி.மீ உயரத்தில் இருக்கக்கூடிய விண்வெளிப் பகுதிக்குச் சென்றிருந்தார். ஆனால், இது அப்படியான பயணமல்ல என்கிறார் வெங்கடேஸ்வரன்.

நியூஷெப்பர்ட்-31, ப்ளூ ஆரிஜின், ஜெப் பெசோஸ், பெண்கள் விண்வெளிப் பயணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,விண்வெளி சுற்றுலா துறையை பிரபலப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்

பல்வேறு துறைகளைச் சேர்ந்த மகளிர் மட்டுமே செல்லும் இந்த விண்வெளிப் பயணம் குறித்து விளக்கிய அவர், "விண்வெளி தொடங்கும் இடமான கார்மன் எல்லைக் கோட்டுக்குச் சற்று மேலே சென்றுவிட்டு, ஒரு சில நிமிடங்களில் மீண்டும் திரும்பி விடுவார்கள்," என்றார்.

அதுகுறித்து விரிவாக விளக்கிய வெங்கடேஸ்வரன், "இந்தப் பயணத்தின் மொத்த நேரமே சுமார் 11 நிமிடங்கள்தான் இருக்கும். ஏழு நிமிடங்களுக்கு ராக்கெட்டில் பயணிப்பார்கள். சுமார் 48 கி.மீ வரை அதில் பயணித்த பிறகு, அங்கிருந்து ஒரு கல் மேல்நோக்கி வீசப்படுவதைப் போல, ராக்கெட்டில் இருந்து பயணிகள் இருக்கும் விண்கலம் விண்வெளி நோக்கி வீசப்படும்.

ராக்கெட்டில் இருந்து வீசப்படும் விண்கலம், கார்மன் கோட்டுக்குச் சற்று மேலே வரை சென்றுவிட்டு பின்னர் மீண்டும் பூமிக்குத் திரும்பிவிடும்," என்று விவரித்தார்.

விண்வெளி சுற்றுலாத் துறைக்கு மக்களை ஈர்க்க வேண்டும் என்பதும் இதன்மூலம் ஒரு புதிய தொழிலை உருவாக்கலாம் என்பதும்தான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று கூறுகிறார் அவர். அதே நேரத்தில், இத்தகைய முயற்சி "பெண்கள் முன்னேற்றம் மீதான கவனத்தையும் எதிர்கால சந்ததிகளுக்கு ஓர் உத்வேகத்தையும்" ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

விண்வெளிக்குச் செல்லப்போகும் பெண்களின் பின்னணி என்ன?

இந்தப் பயணத்தில் விண்வெளி எல்லைக் கோடான கார்மன் கோட்டுக்குச் செல்லப் போகும் ஆறு பெண்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன?

லாரன் சான்செஸ்

நியூஷெப்பர்ட்-31, ப்ளூ ஆரிஜின், ஜெப் பெசோஸ், பெண்கள் விண்வெளிப் பயணம்

பட மூலாதாரம்,LAUREN SÁNCHEZ/IG

படக்குறிப்பு,லாரன் சான்செஸ்

எம்மி விருது பெற்ற பத்திரிகையாளரான இவர், நியூயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையான படைப்புகளைக் கொண்ட எழுத்தாளர், விமானி, பெசோஸ் எர்த் ஃபண்ட் அமைப்பின் துணைத் தலைவர் எனப் பன்முகம் கொண்டவர். மூன்று குழந்தைகளுக்குத் தாயான, உரிமம் பெற்ற ஹெலிகாப்டர் விமானியான சான்செஸ் கடந்த 2016ஆம் ஆண்டில் ப்ளாக் ஆப்ஸ் ஏவியேஷன் என்ற நிறுவனத்தை நிறுவினார். இது, முழுவதும் பெண்களால் நிறுவப்பட்டு, நிர்வகிக்கப்படும் முதல் வான் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும்.

ஹெலிகாப்டர் விமானியாகவும் விமானப் பணி சார்ந்த தொழிலதிபராகவும் அவர் செய்த பணிக்காக, 2024இல் எல்லிங் ஹால்வர்சன் வெர்டிகல் ஃப்ளைட் ஹால் ஆஃப் ஃபேம் என்ற விருதைப் பெற்றார்.

ஆயிஷா போவே

நியூஷெப்பர்ட்-31, ப்ளூ ஆரிஜின், ஜெப் பெசோஸ், பெண்கள் விண்வெளிப் பயணம்

பட மூலாதாரம்,AISHA BOWE/IG

படக்குறிப்பு,ஆயிஷா போவே

ஆயிஷா போவே பஹாமாவை பூர்வீகமாகக் கொண்டவர். நாசாவின் முன்னாள் ராக்கெட் விஞ்ஞானி மற்றும் தொழில்முனைவோரான ஆயிஷா, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதவியல் ஆகியவற்றை ஊக்குவிப்பவராகவும் இருக்கிறார்.

அமெரிக்காவின் வேகமாக வளர்ந்து வரும் தனியார் நிறுவனங்களின் பட்டியலான இங்க் 5000-இல் இரண்டு முறை இடம்பிடித்த பொறியியல் நிறுவனமான ஸ்டெம்போர்டின் (STEMBoard) தலைமை செயல் அதிகாரியாகவும் ஆயிஷா இருக்கிறார். மேலும், பத்து லட்சம் மாணவர்களுக்கு அத்தியாவசிய தொழில்நுட்ப திறன்களைப் பயிற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்ட லிங்கோ (LINGO) என்ற நிறுவனத்தையும் இவர் நிறுவியுள்ளார்.

அமாண்டா இங்குயென்

நியூஷெப்பர்ட்-31, ப்ளூ ஆரிஜின், ஜெப் பெசோஸ், பெண்கள் விண்வெளிப் பயணம்

பட மூலாதாரம்,AMANDA NGUYỄN/IG

படக்குறிப்பு,அமாண்டா இங்குயென்

அமாண்டா, ஓர் உயிரி விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி. அவர் ஹார்வர்டில் பட்டம் பெற்றார். மேலும், ஹார்வர்ட் வான் இயற்பியல் மையம், எம்ஐடி, நாசா, சர்வதேச வானியல் அறிவியல் நிறுவனம் ஆகியவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 1981 முதல் 2011 வரை நாசா முன்னெடுத்த மறுபயன்பாட்டு விண்கலத் திட்டத்தின் கடைசி விண்வெளிப் பயணத் திட்டத்தில் அமாண்டா பணியாற்றியுள்ளார். அவர் கெப்லர் புறக்கோள் திட்டத்திலும் பணியாற்றியுள்ளார்.

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு பிழைத்தவர்களுக்காகக் குரல் கொடுத்து வருவதால் அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். கடந்த 2022ஆம் ஆண்டில் டைம் இதழின், ஆண்டின் சிறந்த பெண் என்ற விருதையும் அவர் பெற்றுள்ளார்.

கேல் கிங்

நியூஷெப்பர்ட்-31, ப்ளூ ஆரிஜின், ஜெப் பெசோஸ், பெண்கள் விண்வெளிப் பயணம்

பட மூலாதாரம்,GAYLE KING/IG

படக்குறிப்பு,கேல் கிங்

கேல் கிங் ஒரு விருது பெற்ற பத்திரிகையாளர். சிபிஎஸ் மார்னிங்ஸின் இணை தொகுப்பாளராகவும் ஓப்ரா டெய்லியின் ஆசிரியராகவும் இருக்கும் இவர் சிரியஸ்எக்ஸ்எம் வானொலியில் கேல் கிங் இன் தி ஹவுஸ் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் உள்ளார்.

தனது பல்லாண்டுக்கால பத்திரிகை அனுபவத்தில் நேர்காணலில் அர்த்தமுள்ள உரையாடல்களை உருவாக்குவதில் திறமை படைத்தவராக கேல் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

கேட்டி பெர்ரி

நியூஷெப்பர்ட்-31, ப்ளூ ஆரிஜின், ஜெப் பெசோஸ், பெண்கள் விண்வெளிப் பயணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கேட்டி பெர்ரி

கேபிடல் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் வரலாற்றில் அதிகம் விற்பனையாகும் பெண் கலைஞராக கேட்டி பெர்ரி அறியப்படுகிறார். பாப் பாடகியான இவர், 115 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட, அனைத்து காலகட்டத்திலும் அதிகமாக விற்பனையாகும் இசைக் கலைஞர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.

உலகளாவிய பாப் சூப்பர் ஸ்டாராக அறியப்படும் கேட்டி, பல மனிதநேய நோக்கங்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். அதில், யுனிசெஃப் நல்லெண்ண தூதராக, ஒவ்வொரு குழந்தையின் சுகாதாரம், கல்வி, சமத்துவம், பாதுகாப்புக்கான உரிமையை உறுதி செய்வதற்காக அவர் குரல் கொடுத்து வருகிறார்.

கேரியன் ஃப்ளின்

நியூஷெப்பர்ட்-31, ப்ளூ ஆரிஜின், ஜெப் பெசோஸ், பெண்கள் விண்வெளிப் பயணம்

பட மூலாதாரம்,KERIANNE FLYNN/IG

படக்குறிப்பு,கேரியன் ஃப்ளின்

ஃபேஷன் மற்றும் மனித வளத்துறையில் சிறந்து விளங்கிய பிறகு, கேரியன் ஃப்ளின், கடந்த பத்து ஆண்டுகளாக தி ஆலன்-ஸ்டீவன்சன் பள்ளி, தி ஹை லைன், ஹட்சன் ரிவர் பார்க் ஆகியவற்றுடன் இணைந்து லாப நோக்கமற்ற தன்னார்வப் பணிகளைச் செய்து வருகிறார்.

கதை சொல்லலுக்கு இருக்கும் ஆற்றலின் மீது அதீத ஆர்வமுள்ள கேரியன், ஹாலிவுட்டில் பெண்களின் வரலாற்றை ஆராயும் திஸ் சேஞ்சஸ் எவ்ரிதிங்(2018), லில்லி லெட்பெட்டர் என்ற வழக்கறிஞர் குறித்தான லில்லி(2024) போன்ற சிந்தனையைத் தூண்டும் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx25n4nw1zqo

12,500 ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோன விலங்கு இனத்தை மீண்டும் உயிர்ப்பித்த விஞ்ஞானிகள்; எப்படி சாத்தியம்?

1 month 4 weeks ago

Published By: DIGITAL DESK 3 09 APR, 2025 | 03:40 PM

image

சுமார் 12,500 ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் இருந்து அழிந்துபோன ஓநாய் இனத்திற்கு விஞ்ஞானிகள் உயிர் கொடுத்துள்ளனர். 

டையர் ஓநாய்

உலகில் வாழ்ந்த வலிமையான வேட்டையாடும் திறன்கொண்ட விலங்குகளில் ஒன்று Aenocyon dirus எனப்படும் ஒரு வகை ஓநாயாகும்.

இது கடந்த 10,000 - 12,500 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போனது. அதன் பிறகு இத்தனை ஆண்டுகளாக அப்படியொரு உயிரினமே பூமியில் இல்லாத சூழலே இருந்தது. ஆனால், அதிநவீன டிஎன்ஏ அனாலிசிஸ், குளோனிங் மற்றும் மரபணு திருத்தம் தொழில்நுட்பங்களை (cloning and gene-editing technology)பயன்படுத்தி அந்த ஓநாயை மீண்டும் விஞ்ஞானிகள் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர்.

கோலஸ்ஸால் பயோசயின்சஸ் என்ற நிறுவனம் இந்த சாதனையைப் படைத்துள்ளது. உலகில் அழிந்து போன உயிரினம் ஒன்று மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் ஏனைய அழிந்துபோன உயிரினங்களையும் கூட நாம் மீண்டும் பூமிக்குக் கொண்டு வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அறிவியல் துறையில் இது மிக முக்கியமான ஆய்வாகக் கருதப்படுகிறது.

Gn8tofCWsAAPQWt.jpg

எப்படி சாத்தியம்?

இதற்காக விஞ்ஞானிகள் குழு அழிந்துபோன டையர் ஓநாய் புதைபடிவங்களிலிருந்து மரபணுவைப் பிரித்தெடுத்துள்ளனர். அமெரிக்காவின் ஓஹியோவிலிருந்து 13,000 ஆண்டுகள் பழமையான டையர் ஓநாயின் பல் மற்றும் இடாஹோவிலிருந்து 72,000 ஆண்டுகள் பழமையான டையர் ஓநாயின் மண்டை ஓட்டில் இருந்து டிஎன்ஏவை விஞ்ஞானிகள் பிரித்து எடுத்துள்ளனர்.

இத்தனை ஆண்டுகள் ஆனாலும் கூட இந்த மரபணு சிதையாமல் பத்திரமாக இருந்துள்ளது. இதனால் அந்த டிஎன்ஏவை எடுத்து விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளனர்.

ஓநாய் இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எண்டோடெலியல் செல்களை (EPCs) பயன்படுத்தி குளோனிங் செய்துள்ளனர். இந்த செல்கள் டையர் ஓநாய் வகைகளுக்கு ஏற்ப திருத்தம் செய்யப்பட்டு, அணுக்கரு நீக்கப்பட்ட சாம்பல் ஓநாய் முட்டைகளில் அவை பொருத்தப்பட்டன. பின்னர் அந்த கருக்கள் நாய்களுக்கு மாற்றப்பட்டன. அந்த நாய் தான் இப்போது மூன்று ஆரோக்கியமான டையர் ஓநாய் குட்டிகளான ரோமுலஸ், ரெமுஸ் மற்றும் கலீசி ஆகியவற்றை ஈன்றுள்ளது.

இது அறிவியல் உலகில் மாபெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.  மேலும், இது வெறும் தொடக்கம் தான் என்றும் வரும் காலத்தில் மேலும் பல விலங்குகளுக்கு இதுபோல உயிர் கொடுக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/211592

இலங்கையில் ஏப்ரல் 5 முதல் 15 வரை நிகழவுள்ள அரிய நிகழ்வு

2 months 1 week ago

02 APR, 2025 | 11:13 AM

image

ஏப்ரல் 5 முதல் 15 வரை நிழல் சிறிது நேரம் மறையும் அரிய நிகழ்வு நிகழவுள்ளதாக  வானியலாளர் அனுர சி.பெரேரா தெரிவித்துள்ளார். 

வானியலாளர் அனுர சி.பெரேரா மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சூரியன் நம் நாட்டின் மேல் அதன் உச்சத்தில் இருக்கும். இந்த உச்சநிலை ஏப்ரல் 5 முதல் 15 வரை நீடிக்கும். கொழும்பில் சூரியன் உச்சம் பெறுவது ஏப்ரல் 7 ஆம் திகதி நிகழ்கிறது. 

அன்று மதியம் 12:12 மணிக்கு யாராவது வெளியே இருந்தால், அவர்களின் நிழல் ஒரு கணம் மறைந்துவிடும். அவர்களால் தங்கள் சொந்த நிழலைப் பார்க்க முடியாது. வேறு யாராவது அதைப் பார்க்கலாம். "இந்த நிலைமை 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நீடிக்கும்." 

"4 ஆம் திகதி சூரியன் நம் நாட்டிற்குள் நுழைகிறது. அதாவது இந்த உச்சம் பெறுதல் பருத்தித்துறை முனையில் ஆரம்பமாகிறது. ஏப்ரல் 5 ஆம் திகதி எலமல்தெனிய, ஏப்ரல் 6 ஆம் திகதி களுத்துறை, ஏப்ரல் 7 ஆம் திகதி கொழும்பு - களனி, ஏப்ரல் 8 ஆம் திகதி மஹியங்கனை போன்ற பகுதிகளில் சூரியன் உச்சத்தை அடையும் என்றார்.

https://www.virakesari.lk/article/210889

பிளாட்டினம் போன்ற மதிப்பு மிக்க உலோகங்களை சிறுகோள்களில் இருந்து பிரித்தெடுத்து வர முடியுமா?

2 months 1 week ago

சிறுகோள் சுரங்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜாஷ் சிம்ஸ்

  • பதவி,

  • 31 மார்ச் 2025, 07:26 GMT

ஒரு சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பணி சிக்கலில் உள்ள நிலையில், ஜாஷ் சிம்ஸ் நமக்கு மேலே உள்ள பல விண்வெளி பொருட்களின் அரிய தாதுக்களை பிரித்தெடுக்கும் முயற்சியில் நாம் உண்மையில் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்பதை விவரிக்கிறார்.

2025 ஆம் ஆண்டுக்குள் உலகம் எப்படி இருக்கும் என்பது குறித்து 30 ஆண்டுகளுக்கு முன்பு பிபிசியின் அறிவியல் நிகழ்ச்சியான டுமாரோஸ் வேர்ல்ட் சில கணிப்புகளை வெளியிட்டது. தொழில்நுட்ப உலகின் எதிர்காலத்தை கணிப்பது எவ்வளவு கடினம் என்பதற்கு இது ஒரு சான்றாகும். நமது வீடுகளில் ஹாலோகிராஃபிக் உதவியாளர்களுடன் பேசுவோம், இணைய வசதி அணுகல் தொடர்பாக பிரச்னைகள் ஏற்படும் என்று அந்த நிகழ்ச்சி கணித்திருந்தது.

அந்த நிகழ்ச்சியில் இந்த 2025 ஆம் ஆண்டு நாம் விண்கற்களிலிருந்து தாதுக்களை எடுத்துக் கொண்டிருப்போம் என்றும் கூறியிருந்தது. நாம் இன்னும் அதை செய்யவில்லை என்றாலும், சில சிறிய நிறுவனங்கள் பலர் கற்பனை செய்ததை விட விரைவில் நடக்கும் என்று கூறுகின்றன.

அமெரிக்க நிறுவனம் தீவிர முயற்சி

கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட நிறுவனமான ஆஸ்ட்ரோஃபோர்ஜின் நிறுவனர், தங்கள் நிறுவனம்தான் அதை முதலில் செய்யும் என்று நம்புகிறார்.

இதற்கான முதல் படிகளை இந்த நிறுவனம் ஏற்கனவே எடுத்து வைத்துள்ளது. 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று, புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட்டில் $6.5 மில்லியன் (£5.1 மில்லியன்) மதிப்பிலான ஒடின் என்ற அதன் முதல் ஆளில்லா விண்கலத்தை ஆஸ்ட்ரோஃபோர்ஜ் ஏவியது.

சுமார் ஒன்பது நாட்களுக்குப் பிறகு, ஒடின் விண்கலம் திட்டமிட்டபடி சந்திரனைத் தாண்டி விண்வெளியில் பயணம் செய்வதாக ஆஸ்ட்ரோஃபோர்ஜ் நம்புகிறது.

இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக, ஓடினுடன் பெரிய தகவல் தொடர்பு சிக்கல்களை ஆஸ்ட்ரோஃபோர்ஜ் எதிர்கொண்டுள்ளது. இந்த கட்டுரை எழுதப்படும் நேரம் வரை அந்த தகவல் தொடர்பு சிக்கல் சரி செய்யப்படவில்லை. ஓடின் இப்போது அதன் 9 மாத கால பயணத்தின் இலக்கை அடைந்திருக்கலாம் என்று அந்நிறுவனம் நம்புகிறது.

பூமியிலிருந்து சுமார் 8 மில்லியன் கி.மீ. (ஐந்து மில்லியன் மைல்கள்) தொலைவில் உள்ள, முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட 2022 OB5 என்ற சிறுகோளை ஓடின் சுற்றி வந்து, தனது சென்சார்கள் மூலம் அந்த சிறுகோளில் என்னென்ன தாதுக்கள் இருக்கும் என மதிப்பிடும்.

"வேகமாக நகர்ந்து பாறைகளை உடைக்க வேண்டும்" என்பது ஆஸ்ட்ரோஃபோர்ஜ் நிறுவனர் மாட் கியாலிச்சின் தாரக மந்திரமாக இருக்கலாம். அவர் தீர்க்க முடியாத தொழில்நுட்ப சிக்கல்களால் அசர போவதில்லை.

ஆஸ்ட்ரோஃபோர்ஜ் இந்த தடைகளை எதிர்பார்த்தே இருந்தது. விண்கலத்துடன் மீண்டும் தொடர்பு கொள்ளாவிட்டாலும் நிறைய கற்றுக்கொண்டதாக அவர் கூறுகிறார். "ஆம், இன்னும் நிறைய சிறிய படிகளை எடுத்து வைக்க வேண்டும்," என்று அவர் ஒப்புக்கொள்கிறார். "ஆனால் நாங்கள் உண்மையில் அதை செய்ய ஆரம்பிக்க போகிறோம்".

அடுத்த ஆண்டு, சில மதிப்புமிக்க, செறிவூட்டப்பட்ட உலோகங்களை பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்களில் வெட்டியெடுக்கும் வழிகளை உருவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக நமது எரிபொருள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பத்திற்கு அவசியமான பிளாட்டினம் வகை சார்ந்த உலோகங்களை எடுக்க திட்டமுள்ளது. இவற்றை பூமிக்கு அடியில் தோண்டி எடுப்பதற்கு, பொருளாதார ரீதியாகவும், சுற்றுச்சூழல், சமூக ரீதியாகவும், புவிசார் அரசியல் ரீதியாகவும் அதிக செலவாகும் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், விண்வெளியில் இருந்து இந்த உலோகங்களை பூமிக்குக் கொண்டு வருவது, குறிப்பாக குறுகிய காலத்தில், உண்மையில் சாத்தியமானதா என்றும், இது சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துமா என்றும் மற்றவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சிறுகோள் சுரங்கம்

பட மூலாதாரம்,SPACEX

படக்குறிப்பு,ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட்டில் தனது முதல் ஆளில்லா விண்கலத்தை ஆஸ்ட்ரோஃபோர்ஜ் ஏவியது.

சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுப்பது சாத்தியமே

அடுத்த பத்து ஆண்டுகளில் அடுத்தடுத்த சோதனை ஏவுதல்களில், ஆஸ்ட்ரோஃபோர்ஜ் சிறிய அளவிலான உலோகத்தை மட்டும் வெட்டி எடுக்கும் என்று கியாலிச் நம்புகிறார், ஆரம்பத்தில் சில கிராம்கள், அடுத்தடுத்து திட்டம் முன்னேறும் போது சில கிலோகிராம்களை கூட எடுக்க முடியும் என்பது அவரது நம்பிக்கை.

இவை சில மீட்டர் முதல் அரை கிலோமீட்டர் வரை விட்டம் கொண்ட சிறுகோள்களை இலக்காக கொண்டு செய்ய முடியும். ஆரம்பகால பயணங்கள் வணிகரீதியாக இருக்காது, ஆனால் வெட்டி எடுக்கப்படும் உலோகங்களைப் பொறுத்து, அவற்றை வணிகமயமாக்கலுக்கு உட்படுத்த முடியும் என்று கியாலிச் கூறுகிறார். உதாரணமாக, ஒரு கிலோ ரேடியத்தின் விலை தற்போது $183,000ஆகும்.

ஆனால் நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்களில் ஒருவரும், 2019 ஆம் ஆண்டில் ஐந்து பெருங்கடல்களின் அடிப்பகுதியைப் பார்வையிட்ட முதல் நபராக நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கிய ஆய்வாளருமான விக்டர் வெஸ்கோவோ, தொழில்நுட்ப சவால்கள் "கருவிகளை உருவாக்கும் வரைதான்" என்று கூறுகிறார்.

"அதைச் செய்ய முடியும் என்பதைக் காட்ட சில மைக்ரோகிராம்களை சிறுகோள்களிலிருந்து கொண்டு வர வேண்டும், பின்னர் அதையே பெரிய அளவில் செய்ய வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.

"சிறுகோள்களில் இருந்து உலோகங்களை எடுப்பதை முழுமையாக செயல்படுத்துவது பல தசாப்த கால திட்டமாக இருக்கலாம். ஆனால் இது அளவு ரீதியான சிக்கல் மட்டுமே. இது ஒரு பெரிய பொறியியல் சாதனை என்பதில் சந்தேகமில்லை என்றாலும், சிறுகோள்களில் இருந்து நேரடியாக பொருட்களின் மாதிரிகளை எடுப்பது ஏற்கனவே அரசு விண்வெளி மையங்களால் செய்யப்பட்டுள்ளன" என்கிறார்.

2005 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஹயபுசா 1 மற்றும் 2 திட்டத்தின் போது ஜப்பானும் 2020 ஆம் ஆண்டில் ஒசைரிஸ்-ரெக்ஸ் திட்டத்தின் போது நாஸாவும் இதை செய்துள்ளன என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சிறுகோள் சுரங்கம்

பட மூலாதாரம்,ASTROFORGE

படக்குறிப்பு,ஓடின் விண்கலத்தின் முன்பாக நிற்கும் ஆஸ்ட்ரோஃபோர்ஜ் குழு

சவால்கள் என்ன?

சிறுகோள்களில் இருந்து உலோகங்களை எடுக்கும் யோசனை விசித்திரமாகத் தோன்றினால், ரைட் சகோதரர்களின் மனிதர்களை ஏந்தி சென்ற முதல் விமானம் போன்ற பல தொழில்நுட்ப முன்னேற்றங்களும் அதே சுமையைக் கொண்டிருந்தன என வெஸ்கோவோ வாதிடுகிறார். அதாவது, அவை உண்மையில் நடக்கும் வரை அப்படிதான் தோன்றும் என்கிறார் அவர்.

விண்வெளி வளத் திட்டத்தைக் கொண்ட பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமான கொலராடோ ஸ்கூல் ஆஃப் மைன்ஸின் இணை பேராசிரியர் இயன் லாங்கே, தற்போது சிறுகோள்களில் இருந்து உலோகங்களை எடுக்கும் தொழில்நுட்ப தடைகளை மட்டுமே நம்மால் மதிப்பிட முடியும் என்று வலியுறுத்துகிறார்.

ஒரு விண்கலம் ஒரு சிறுகோளை சந்திப்பது மற்றொரு விண்கலத்துடன் அவ்வாறு செய்வதை விட சற்றே சிக்கலானதாக இருக்கலாம் என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால், உதாரணமாக, ஈர்ப்பு விசையின் நிலைப்படுத்தும் சக்தி இல்லாமல் வளங்களை எவ்வாறு பிரித்தெடுக்க முடியும்?

"சிறுகோள்களில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணி ஒப்பீட்டளவில் நேரடியானது, ஆனால் நாம் விரும்புவதிலிருந்து நாம் விரும்பாததை பிரிக்க ஒருவித வேதியியல் அல்லது வெப்ப செயல்முறை மற்றும் ஈர்ப்பு விசை தேவைப்படுகிறது" என்று லாங்கே கூறுகிறார்.

"விண்வெளியில் அதை உருவாக்குவது மிகவும் கடினமாக இருக்கும். இந்த கட்டத்தில், ஏற்கெனவே நிறுவப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடியுமா அல்லது சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் தொழில் முற்றிலும் புதியவற்றை உருவாக்க வேண்டுமா என்று சொல்வது கடினம்." என்கிறார்.

சிறுகோள் சுரங்கம்

பட மூலாதாரம்,ASTROFORGE

படக்குறிப்பு, 1967-ம் ஆண்டு ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட விண்கல் மாதிரி.

தனியார் விண்வெளி வணிகத்தின் விளைவுகள் என்ன?

விண்வெளி வளங்களை எவ்வாறு சேகரிக்கலாம் என்பது குறித்த யோசனைகளை நாசா உருவாக்கத் தொடங்கிய 1980கள் வரை சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுப்பது பற்றிய யோசனை பெரும்பாலும் அறிவுசார் ஆர்வத்தின் விஷயமாக இருந்தது என்று லாங்கே கூறுகிறார். இந்த யோசனைகள் 1990களில் அதிகரித்த சுற்றுச்சூழல் பிரச்னைகளுடன் வேகமெடுத்தன என்று அவர் மேலும் கூறுகிறார்.

சிறுகோள்களில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட மூன் எக்ஸ்பிரஸ், பிளானட்டரி ரிசோர்சஸ், டீப் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற பல தனியார் நிறுவனங்கள் இதற்காக அதிக செலவுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 2010களின் இறுதியில், பிளானட்டரி ரிசோர்சஸ், டீப் ஸ்பேஸ் மற்றொரு நிறுவனத்தால் வாங்கப்பட்டு, பிற திட்டங்களை நோக்கி இயக்கப்பட்டது. வணிக மற்றும் தொழில்நுட்ப சவால்களின் காரணமாக சிறுகோள்களில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணிகள் இன்னும் 30 ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்று லாங்கே நம்புகிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம்தான் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தியதாக வெஸ்கோவோ வாதிடுகிறார். சிலியில் கிட்டத்தட்ட நிறைவுபெற்றுள்ள வேரா சி ரூபின் ஆய்வகம் போன்ற புதிய ஆய்வகங்கள், விரைவில் சிறுகோள்களின் சிறந்த கண்காணிப்பை வழங்கும். ஒளியியல் மற்றும் ஸ்பெக்ட்ரோகிராஃபிக் பகுப்பாய்வு உலோகங்களை எடுப்பதற்கு தகுதியான சிறுகோள்களை அடையாளம் காண உதவுகின்றன, இவற்றில் எத்தனை சிறுகோள்களில் அது சாத்தியம் என்பது விவாதத்துக்கு உட்பட்டது என்றாலும் கூட. சக்தி வாய்ந்த கணினி தொழில்நுட்பம் மிகவும் பரவலாகக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. விண்கலத்தை குறைந்த செலவில் உருவாக்க மிகவும் மலிவான பொருட்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.

"அரசாங்கங்கள் மட்டுமே இந்த வகையான காரியத்தைச் செய்ய முடியும் அல்லது தொழில்நுட்பத்தை அணுக முடியும் என்பதுதான் சற்று காலம் முன்பு வரை இருந்த நிலை. அவர்கள் அதை ஒருபோதும் திறம்பட செய்யவில்லை" என்று லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட டிரான்ஸ் ஆஸ்ட்ராவின் நிறுவனர் ஜோயல் செர்செல் கூறுகிறார்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையில் உள்ள கழிவுகளை சேகரிப்பதற்காக டிரான்ஸ்ஆஸ்ட்ரா நிறுவனம் ஊதி பெரிதாக்கக்கூடிய வகையிலான பை ஒன்றை எப்படி பயன்படுத்துவது என்பது செய்து காட்டும்.

"இப்போது நம்மிடம் ஒரு துடிப்பான தனியார் விண்வெளி வணிகம் உள்ளது, இது சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுப்பது மக்கள் கணிப்பதை விட மிக விரைவாக சாத்தியமாக்கப் போகிறது" என்கிறார்.

குறைந்துவரும் விண்வெளித் திட்டங்களின் செலவுகள்

விண்வெளித் துறையின் தனியார்மயமாக்கல் மற்றும் மறு பயன்பாட்டு ராக்கெட்டுகளின் வளர்ச்சி காரணமாக, சுற்றுவட்டப்பாதையில் ஒரு விண்கலத்தை நிறுவுவது முன்பை போல் அல்லாமல் மிகவும் எளிதானது மற்றும் மலிவானது.

"15 ஆண்டுகளுக்கு முன்பு 1 பவுண்டு (450 கிராம்) எடை கொண்டவற்றை விண்வெளியில் செலுத்த 10,000 டாலர்கள் செலவாகும் நிலையில், இப்போது சில ஆயிரங்களாக அது குறைந்துள்ளது" என்று வெஸ்கோவோ கூறுகிறார். "ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் போன்ற திட்டங்களுடன் , எதிர்காலத்தில் சில நூறு டாலர்கள் மட்டுமே செலவாகும் என்ற எதிர்பார்க்கலாம்" என்கிறார்.

வானியற்பியலாளரும் அறிவியல் தொடர்பாளருமான நீல் டிகிராஸ் டைசன், உலகின் முதல் டிரில்லியனர் சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணிகளை மேற்கொள்வதன் மூலம் வருவார் என்று கூறினார், "நீல் டிகிராஸ் டைசனின் கருத்து தவறல்ல என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவிக்கிறார் வெஸ்கோவோ. எப்படியிருந்தாலும், உலோக எடுப்பின் மூலம் பூமி எதிர்கொள்ளும் தொடர்ச்சியான அழிவைத் தடுக்க சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுப்பது அவசியம் என்று அவர் நம்புகிறார்.

ஆஸ்ட்ரோஃபோர்ஜின் திட்டங்களைப் பற்றி லாங்கேவுக்கு சந்தேகங்கள் உள்ளன. சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமாகலாம் என்று கூறும் அவர் ஆஸ்ட்ரோஃபோர்ஜின் பிளாட்டினம் குழு-மையப்படுத்தப்பட்ட வணிக மாதிரியைப் பற்றி அவர் மிகுந்த நம்பிக்கை கொள்ளவில்லை. "கடலின் அடிப்பகுதி உட்பட பூமியில் இந்த வளங்கள் அதிகமாக இருக்கும் போது, விண்வெளியில் இருந்து அவற்றை சேகரிப்பதை விட பூமியிலிருந்து எடுப்பதே எளிதானதாக இருக்கும். நாம் அந்த வளங்களை எடுக்க நம்மை நாமே அனுமதித்தால், இதற்கான பல சாத்தியக்கூறுகள் உள்ளன" என்றார்.

ஆழ்கடலில் உலோகங்களை எடுக்கும் பணிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததா?

ஆனால் லான்காஸ்டர் பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சூழல் விஞ்ஞானி கேத்ரின் மில்லர், விரைவில் ஒழுங்குப்படுத்தப்படவுள்ள ஆழ்கடலில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணிகளை விட சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணிகள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் கவர்ச்சிகரமான விருப்பமாக இருக்கும் என்று வாதிடுகிறார் . நிலத்தடி சுரங்கமும் "சரியானது இல்லை தான்... வாழ்விட அழிப்பு, சமூக நீதி பிரச்னைகள் என பல சிக்கல்கள் உள்ளன. கடற்பரப்பில் இருந்து கோபால்ட் மற்றும் தாமிரம் சேகரிப்பது வளங்களை எடுப்பது மட்டுமில்லை, கடற்பரப்பை அழிப்பதாகும், "என்று மில்லர் கூறுகிறார்.

நிச்சயமாக, ராக்கெட்டுகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்வது மிகவும் மாசு ஏற்படுத்தும், அதிக ஆற்றல் தேவைப்படும் செயலாகும். ஆனால் சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணியும் அவ்வாறானதே. பாரிஸ்-சாக்லே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் 2018 ஆம் ஆண்டு ஆய்வில், பூமியில் பிளாட்டினத்தை எடுக்க தோண்டுவதை சிறுகோள்களிலிருந்து உலோகங்களை எடுக்கும் பணி திட்டத்துடன் ஒப்பிட்டது. ஒரு சிறுகோளில் இருந்து வெட்டியெடுக்கப்படும் ஒவ்வொரு கிலோ பிளாட்டினத்திற்கும் 150 கிலோ கார்பன் டை ஆக்சைடு பூமியின் வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். தற்போதைய நடைமுறைகளைப் பயன்படுத்தி பூமியில் 1 கிலோ பிளாட்டினத்தை எடுக்கையில் 40,000 கிலோ கார்பன் டை ஆக்சைடு உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு காரணம் பூமியில் பிளாட்டினம் மிக அரிதாக கிடைப்பதாகும். பூமியின் மேலோட்டில் ஒரு மில்லியனில் 0.0005 பகுதிகள் மட்டுமே பிளாட்டினம் உள்ளது. அதிக உற்பத்தி செய்யும் சுரங்கங்கள் கூட தற்போது மில்லியனுக்கு ஐந்து முதல் 15 பகுதிகள் என்ற அளவிலேயே செயல்படுகின்றன.

சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் நிறுவனமான கர்மன்+ என்ற நிறுவனத்தின் நிறுவனர் டேனன் க்ரூல், சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுப்பதானது எதிர்காலத்தில் விண்வெளியில் ஒரு பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான வளங்களைத் தேடுவதில் உள்ளது என்று நினைக்கிறார். 2035 ஆம் ஆண்டில் விண்வெளி பொருளாதாரம் 1.8 டிரில்லியன் டாலர் (£ 1.4 டிரில்லியன்) மதிப்புள்ளதாக இருக்கும் என்று உலக பொருளாதார மன்றம் கணித்துள்ளது.

சிறுகோள் சுரங்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையிலான சமநிலை குலையலாம்

விண்வெளியில் உலோகங்களை எடுக்க தோண்டுவது இயற்கையாகவே கனிமங்கள் நிறைந்த வளரும் நாடுகளுக்கும், விண்வெளியில் அவற்றை அறுவடை செய்யத் தேவையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடிய வளர்ந்த நாடுகளுக்கும் இடையிலான அதிகார சமநிலையை மாற்றக்கூடும் என்று ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழக விண்வெளி கொள்கை நிறுவனத்தின் அறிஞர் டெகனிட் பைகோவ்ஸ்கி வாதிடுகிறார்.

"விண்வெளியில் பயன்படுத்த விண்வெளியில் வளங்களை சுரங்கப்படுத்துவது ஒரு விஷயம் - இப்போது முன்னணி விண்வெளி பயண நாடுகளைப் பாருங்கள், அவை விண்வெளியில் ஒரு நீடித்த மனித இருப்பை உருவாக்க முயன்று வருகின்றன, அதற்காக பொருட்களை சுரண்டுவது தர்க்க ரீதியானது," என்று அவர் கூறுகிறார். "ஆனால் [நிறுவப்பட்ட] பூமியின் பொருளாதாரத்தில் பயன்படுத்த அந்த வளங்களை மீண்டும் பூமிக்கு கொண்டு வருவது மற்றொரு விஷயம். இது பல்வேறு பங்குதாரர்களை பல வழிகளில் பாதிக்கும்" என்கிறார்.

சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணி என்று வரும்போது, பிளாட்டினம் சுரங்கப் பணிகள்தான் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றன. அதனுடன் சேர்த்து அரிய வகை உலோகங்கள், அணுக்கரு இணைவுக்குத் தேவையான ஹீலியம் -3 போன்ற பிற வளங்களுடன் வெட்டி எடுக்கப்படலாம். ஆனால், உயிர் காக்கும் ஆக்சிஜன் மற்றும் ராக்கெட் உந்துசக்தியான ஹைட்ரஜனுக்காக தண்ணீரை எடுப்பது, விண்வெளி வாழ்விடங்கள் அல்லது சூரிய ஆற்றல் சேகரிப்பான்களை உருவாக்க பயன்படும் மட்பாண்டங்களின் 3டி அச்சிடலுக்கான களிமண் ஆகியவற்றை சுரங்கத்தின் மூலம் எடுப்பதை யோசித்துப் பாருங்கள் என அவர் கூறுகிறார். சுரங்கத் தொழில் இவற்றை பூமியிலிருந்து முழுவதுமாக விண்வெளிக்கு கொண்டு செல்வதற்கான செலவுகளில் பெரும்பகுதியை குறைத்துவிடும்.

"சிறுகோள் வளங்களை மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் ஆராய்ந்தோம், ஆனால் அது தெளிவற்றதாகத் தெரிகிறது" என்று க்ரல் கூறுகிறார். அதற்கு பதிலாக, கர்மன்+ நிறுவனம் விண்வெளியில் உள்ள வளங்களை எடுத்து, விண்வெளியிலேயே பயன்படுத்த திட்டமிடுகிறது. விண்வெளி வாழ்விடங்களை உருவாக்க அல்லது செயற்கைக்கோள்களை பராமரிப்பதற்கு அவை பயன்படலாம். கர்மன்+ நிறுவனம் சமீபத்தில் $20மில்லியன் முதலீட்டை திரட்டியுள்ளது. அதன் முதல் விண்கலத்திற்கான ஏவுதல், மாதிரிகள் சேகரிக்கும் அதன் திறன்களை சோதிக்க பிப்ரவரி 2027 க்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விண்வெளி வளங்கள் யாருக்கு சொந்தம்?

இது இன்னும் பல பதிலளிக்கப்படாத கேள்விகளை இங்கே உள்ளன. இது ஒரு வகையான சுற்றுச்சூழல் சேதத்தை குறைத்து மற்றொன்றை உருவாக்குகிறதா? தோண்டப்பட்டவுடன் அவற்றிலிருந்து எஞ்சியிருக்கும் கழிவுகள் குறித்து சிலர் கவலை தெரிவித்துள்ளனர். இந்த கழிவுகளை எவ்வாறு அகற்றுவது என்ற சிக்கலைப் பற்றி அவர்கள் கவலைப்படுகிறார்கள், மற்ற விண்வெளி கழிவுகளைப் போலவே, இதுவும் இறுதியில் பூமியில் விழக்கூடும். இங்கிலாந்தில் உள்ள தி ஓபன் பல்கலைக் கழகத்தின் கிரக மற்றும் விண்வெளி அறிவியல் பேராசிரியர் மோனிகா கிரேடி போன்ற விஞ்ஞானிகள், விண்வெளியின் பரிசுத்தமான சூழலை களங்கப்படுத்தக் கூடாது என்று வாதிட்டனர், அதற்கு பதிலாக மனிதர்கள் " அவ்வப்போது சுத்தம் செய்ய" கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்.

ஆனால் இதற்கு மாறான கருத்துகளும் நிலவுகின்றன. விண்வெளியில் உள்ள வளங்கள் பூமியில் உள்ளவர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக பார்க்கப்பட வேண்டும் என்று கியாலிச் வாதிடுகிறார். "அங்கு எல்லையற்ற விண்வெளி, எண்ணற்ற விண்கற்கள் உள்ளன, ஆனால் ஒரே ஒரு பூமி மட்டுமே உள்ளது," என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும், இந்த நிறுவனங்களால் தோண்டப்பட்ட சிறுகோள் வளங்களை வாங்கத் தொடங்குவதற்கு முன்பு பதிலளிக்க வேண்டிய இன்னும் ஒரு கேள்வி உள்ளது. உண்மையில் அவற்றை விற்க அந்த வளங்கள் அவர்களுடையதா? இது முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்று என்று இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விண்வெளி சட்ட பேராசிரியரும், லண்டனை தளமாகக் கொண்ட விண்வெளியில் இருந்து உலோகங்களை எடுக்கும் நிறுவனமான ஆஸ்டிராய்ட் மைனிங் கார்பரேஷனின் ஆலோசகருமான ரோசன்னா டெப்லானோ கூறுகிறார்.

115 நாடுகளால் கையெழுத்திடப்பட்ட சர்வதேச விண்வெளி சட்டம் குறித்த மிகப் பழமையான ஆனால் மிகவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தமான 1967 வெளிப்புற விண்வெளி ஒப்பந்தம், நாம் விண்வெளியை பொதுவானதாக கருத வேண்டும் என்று கூறுகிறது, ஆனால் அதன் வளங்களைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. "எனவே [சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுப்பது] தடை செய்யப்படவில்லை" என்று டெப்லானோ கூறுகிறார்.

இதற்கிடையில், 1979 மூன் (சந்திரன்) ஒப்பந்தம், சந்திரனின் இயற்கை வளங்கள் யாருடைய சொத்தாகவும் மாறக்கூடாது என்று கூறுகிறது - ஆனால் இது சிலி, நெதர்லாந்து, மொராக்கோ உள்ளிட்ட 7 நாடுகளால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அவற்றில் எந்த நாடும் இன்றுவரை தங்கள் சொந்த மனிதர்களைக் கொண்ட விண்வெளிப் பயணத் திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை. விண்வெளி வளங்களைப் பயன்படுத்துவது குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புக் குழு 2027-ல் கூடவுள்ளது, ஆனால் எந்தவொரு அறிவிப்பும் சட்டப்பூர்வமாக கட்டுப்பாட்டைக் கொண்டிருக்காது.

உண்மையில், யுக்ரேனின் கனிம வளங்கள் மீதான சாத்தியமான உடன்பாடு குறித்து அமெரிக்காவிற்கும் யுக்ரேனுக்கும் இடையிலான விவாதங்கள் சுட்டிக்காட்டியுள்ளபடி, தேசிய நலன்கள் முன்னுரிமை பெறக்கூடும்.

"சிறுகோள்களிலிருந்து பிரித்தெடுப்பது அறிவியல் ஆராய்ச்சிக்காக இருந்தால், அது மிகவும் சிக்கலாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை" என்று டெப்லானோ கூறுகிறார். ஆனால், வணிகமயமாகும்போது அரசியல் மட்டத்தில் பிரச்னை எழுகிறது.

நாடுகள் ஏற்கனவே தங்கள் சொந்த தேசிய கண்ணோட்டத்தில் இருந்து இந்த விவகாரம் குறித்த விளக்கங்களை வழங்குகின்றன என்று அவர் மேலும் கூறுகிறார். "இது வணிகமயமாக்கலை ஊக்குவிப்பதாகும். அது நடக்கப் போகிறது."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cvgeddvvyd1o

'நெஞ்சை நோக்கி நேராக சுடுவது போல' பூமியை நோக்கி கதிர்களை வீசும் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு - முக்கியத்துவம் என்ன?

2 months 1 week ago

ராட்சச கருந்துளை கண்டுபிடிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன்

  • பதவி, பேராசிரியர், இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், மொஹாலி

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சுமார் 12.9 நூறு கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கேலக்ஸி ஒன்றின் மையத்தில் 700 பத்து லட்சம் சூரியன் நிறையைக் கொண்ட ஒரு ராட்சத கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த 'பிளேசர்' வகை ராட்சத கருந்துளை நெஞ்சை நோக்கி நேராகச் சுடுவது போலப் பூமியை நோக்கி ஆற்றல் வாய்ந்த கதிர்களை வீசுகிறது. இந்தக் கண்டுபிடிப்பின் தொடர்ச்சியாக வானியலாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

பிக் பாங் எனும் பிரபஞ்சம் தோன்றிய பின்னர் வெறும் 800 பத்து லட்சம் ஆண்டு இளம் வயதாக இருந்தபோதே VLASS J041009.05-013919.88 என்கிற (சுருக்கமாக J0410-0139 ) இந்த வினோதப் பெயர் கொண்ட கருந்துளை உருவாகியுள்ளது.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 'பிளேசர்' வகை ராட்சத கருந்துளைகளில் இதுதான் ஆகத் தொன்மை வாய்ந்தது, ஆகத்தொலைவில் உள்ளதும் கூட.

மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் அஸ்ட்ரோனமியின் குழுத் தலைவரான எடுவார்டோ பனாடோஸ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, டிசம்பர் 2024இல் 'தி அஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் லெட்டர்ஸ் அண்ட நேசர் அஸ்ட்ரோனமியில்' தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

அட்டகாமா லார்ச் மில்லிமீட்டர் அர்ரே, மாமல்லன் தொலைநோக்கிகள் மற்றும் சிலியில் அமைந்துள்ள ஐரோப்பியத் தெற்கு ஆய்வகத்தின் மிகப் பெரிய தொலைநோக்கி மற்றும் பூமியின் சுற்றுப்பாதையில் உள்ள நாசாவின் சந்திரா விண்வெளி தொலைநோக்கி உள்ளிட்ட பல தொலைநோக்கிகளின் தரவுகளை ஆராய்ச்சிக் குழு பயன்படுத்தியது.

இந்தத் தரவுகளின் அடிப்படையில் இந்த வான் பொருளின் தொலைவு உட்படப் பல்வேறு தரவுகளை இனம் கண்டனர்.

கடந்த காலம்

ராட்சச கருந்துளை கண்டுபிடிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

ஆகப் பெரிய தொலைநோக்கிகள் உள்ளபடியே கடந்தகாலத்தைக் காட்டும் மாயக்கண்ணாடி போலத்தான். நொடிக்குச் சுமார் மூன்று லட்சம் மீட்டர் என ஒளி பயணம் செய்கிறது. எனவே ஒரு பொருளிலிருந்து நம் கண்களுக்கு ஒளி வந்து சேர குறிப்பிட்ட கால இடைவெளி ஏற்படும்.

எடுத்துக்காட்டாக இப்போது சூரியனைப் பார்த்தல் அது எட்டு நிமிடம் முன்பு இருந்த சூரியன். இப்போது காட்சி தரும் நிலவு 1.3 நொடிக்கு முன்பு இருந்த நிலவு. இரவு வானில் மிகப் பிரகாசமான விண்மீன் சிரியஸ் சுமார் 8.6 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையில்தான் காட்சி தரும். அதாவது தொலைவில் உள்ள பொருளைக் காணும்போது கடந்த காலத்தைக் காண்கிறோம்.

ஐம்பது அறுபது வயதில் தலைமுடி நரைப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால் பிறந்த கைக்குழந்தையின் தலைமுடி நரைக்கிறது என்றால் நாம் அதிர்ச்சி அடைவோம் அல்லவா? அதுபோலத் தான் இந்தக் கண்டுபிடிப்பு என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை பிக் பாங் நிகழ்வுக்குப் பிறகு 800 பத்து லட்சம் ஆண்டுகள் என்பது சிறு கைக்குழந்தை நிலை. பிரபஞ்சத்தின் இளம் வயதிலேயே இவ்வளவு நிறை கொண்ட குண்டு ராட்சத கருந்துளை எப்படி ஏற்பட்டு இருக்க முடியும் என விஞ்ஞானிகள் மலைத்து நிற்கின்றனர்.

'பிளேசர்' வகை ராட்சத கருந்துளை

கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் சிலர் யானையின் வாலை தடவி கயிறு என்றும், காலை பிடித்துப் பார்த்து தூண் போல என்றும், காதை தடவிப் பார்த்து முறம் போல என்றும் தந்ததைப் பிடித்துப் பார்த்து ஈட்டி போல என்றும் தவறாகக் கருதுவது போல இதுகாறும் பிளேசர் குவாசர் மற்றும் துடிக்கும் ரேடியோ கேலக்ஸி முதலியவற்றைத் தனித்தனியான மூன்று வகை வான் பொருள்கள் எனத் தவறாகக் கருதி இருந்தனர்.

இவை மூன்றும் சூரிய நிறைபோல பத்து லட்சம் நூறு கோடிக் கணக்கில் நிறை கொண்ட குண்டு ராட்சச கருந்துளை கொண்ட உயிர்ப்புள்ள கோலடி கருக்கள் தாம்.

பெரும் அளவு நிறை அடர்த்தியாகச் சிறு வெளியில் சுருங்கும்போது கருந்துளை உருவாகிறது. கருந்துளையின் ஈர்ப்பு ஆற்றல் மிக வலுவானது. ஒளி கூட கருந்துளையிலிருந்து வெளியே வரமுடியாது.

சூரியனைப் போலப் பத்து இருபது மடங்கு நிறைகொண்ட குட்டி கருந்துளை முதல் சூரியனைப் போல பத்து லட்சம்- நூறு கோடி நிறை கொண்ட ராட்சத கருந்துளைகள் வரை இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளன.

சூரியனைப் போலப் பல பத்து லட்சம் நிறை கொண்ட குண்டு ராட்சத கருந்துளைகள் அவற்றின் மீ நிறையின் காரணமாக ஈர்ப்பு புலம் வலுப் பெற்று அருகில் உள்ள பொருள்களைக் கவர்ந்து இழுக்கும். வாயு தூசு நிரம்பிய இந்தப் பொருள்கள் கருந்துளையை மிக வேகமாகச் சுற்றிச் சுழலும்.

தலைச்சுற்றும் வேகத்தில் இவை சுழலுவதால் ரேடியோ அலைகள், காமா கதிர்கள், எசஸ் கதிர்கள் எனப் பல்வேறு வகை மின்காந்த அலைகளை உமிழும்.

சுழலும் இந்தக் கருந்துளையைச் சுற்றி உருவெடுக்கும் காந்தப் புலத்தின் காரணமாகக் கருந்துளையின் இரண்டு துருவங்கள் அருகே ஜெட் போல மீ ஆற்றல் வாய்ந்த கதிர்கள் வெளிப்படும்.

கருந்துளை சுழல்வதால், கலங்கரை விளக்கு சுழல்வது போல் இந்த ஜெட் கதிர் சுழலும். சுழலும் இந்தச் சமதளத்தில் தற்செயலாகப் பூமி அமைந்தால் சுழலும் ஜெட் கதிர் பல்ஸ் துடிப்பு போலப் பூமியில் படும். இதுவே 'பிளேசர்' வகை ராட்சச கருந்துளை.

இதே கருந்துளையின் ஜெட் பூமி நோக்கி இல்லை என்றால் அதை குவாசர் என்றும் மைய கருந்துளை தூசியினால் மறைக்கப்பட்டால் ரேடியோ கேலக்ஸி என்றும் மயங்கிவிடுகிறோம் எனச் சமீபத்தில் விஞ்ஞானிகள் புரிந்து தெளிந்துள்ளனர்.

ராட்சச கருந்துளை கண்டுபிடிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

என்ன பெயர் வைக்கலாம்?

இந்தக் கருந்துளையின் பெயரில் உள்ள VLASS என்பது "வெரி லார்ச் அர்ரே ஸ்கை சர்வே" (The Very Large Array Sky Survey) என்பதன் சுருக்கம் ஆகும்.

செப்டம்பர் 2017 முதல் வாகனத்தில் ஜி. ஜான்ஸ்கி வெரி லார்ச் அர்ரே வானொலி தொலைநோக்கி கொண்டு வானில் உள்ள வானொலி அலைகளை உமிழும் வான் பொருட்களின் கணக்கெடுப்பு செய்கிறனர்.

இதில் இனம் காணும் வான் பொருள்களைப் பட்டியல் செய்கின்றனர். எனவே இந்தக் கருந்துளை VLASS பட்டியலில் உள்ள வன்பொருள் என நாம் புரிந்துகொள்ளலாம்.

ஆங்கில எழுத்து J என்பது 2000 ஆண்டு சம இரவு பகல் புள்ளியிலிருந்து கணிதம் செய்து இந்த வான் பொருளின் இடத்தை நிர்ணயம் செய்துள்ளார் என்று பொருள். பூமியில் ஒவ்வொரு புள்ளியையும் அட்சரேகை தீர்க்கரேகை கொண்டு அடையாளப்படுத்துவது போல வான் மண்டல அட்சரேகை தீர்க்கரேகை தான் 041009.05-013919.88 என்கிற எண்கள். இதைப் பார்த்ததுமே வானவியலாளர்கள் இந்த வான் பொருளின் இருப்பிடம் என்ன என எளிதில் அறிந்துகொள்வார்கள்.

வானில் தோன்றிய ஒளிரும் சுழல் - ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் காரணமா?

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் வளர்த்த செடி எது? பூமியை விட அங்கே வேகமாக வளர்வது ஏன்?

சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனிதர்கள் போடும் குப்பைகள் என்ன ஆகும்?

மோதியை விமர்சிப்பவர்கள் விரும்பும் ஈலோன் மஸ்கின் 'க்ரோக்' எவ்வாறு இயங்குகிறது?

ஆகத்தொலைவான பிளேசர்

ராட்சச கருந்துளை கண்டுபிடிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

VLASS கணக்கெடுப்பை சாடையாகத் தேடியபோது சுமார் இருபது இடங்களில் பிளேசர் வகைக் கருந்துளை இருக்கலாம் என முதற்கட்டத் தகவல் கூறியது.

இவற்றைக் கூர்ந்து ஆய்வு செய்தபோது J0410−0139 என்கிற ரேடியோ அலைகளை உமிழும் வான் பொருள் பிளேசர் வகைக் கருந்துளை எனவும், இது பிரபஞ்சத்தின் குழந்தைப் பருவத்தைச் சார்ந்தது எனவும் புலனாகியது.

இதுவரை பல்லாயிரக்கணக்கான உயிர்ப்புள்ள கோலடி கருக்களை இனம் கண்டிருந்தாலும் அதில் வெறும் 3000 சொச்சம் மட்டுமே பிளேசர் வகை சார்ந்தது. எனவே ஒரு பிளேசர் கண்டால் பல ஆயிரம் உயிர்ப்புள்ள கோலடி கருக்கள் இருக்கலாம் என முடிவுக்கு வரமுடியும்.

இவற்றில் 2020இல் இனம் காணப்பட்ட SO J0309+27 என்கிற வான்பொருள்தான் இதுவரை ஆகலின்மையான பிளேசர் வகைக் கருந்துளையாக அறியப்பட்டது. இது பிரபஞ்சம் தோன்றி 800-900 பத்து லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு உருவானது.

பிரபஞ்சம் தோன்றி 800-900 பத்து லட்சம் ஆண்டுக்காலத்தில் மீ நிறை கொண்ட ராட்சச கருந்துளை வளரமுடியும், ஆனால் வெறும் 700 பத்து லட்சம் ஆண்டுகளில் இப்படிப்பட்ட ராட்சத கருந்துளை வளர்ந்தது மர்மமே. கருந்துளைகள் குறித்தும் அவை எப்படி சடசடவென உருவாக்கி வளர்கின்றன என்பது குறித்தும் ஏற்கனவே நமக்கு இருந்த கருதுகோள்களை நீக்கி புத்தாக்கம் செய்யவேண்டும் என்கின்றார் சிலர்.

ராட்சத கருந்துளையின் ஜெட் திசை எதுவாகவும் இருக்கலாம். எனவே நம்மை நோக்கி நேராக ஜெட் திசை அமைவது என்பது பரிசுச்சீட்டு பரிசு போல. பல கோடி பேர் பரிசுச்சீட்டு சீட்டு வாங்கி இருந்தால் தானே பத்து கோடி பரிசுச்சீட்டு பரிசு ஒருவருக்குக் கிடைக்கும். எனவே பிரபஞ்சத்தின் குழந்தை நிலையில் நம்மை நோக்கி ஜெட் உள்ள பிளேசர் இருந்தால் வேறு திசை நோக்கி ஜெட் கொண்ட பல லட்சம் ராட்சத கருந்துளைகள் இருக்கவேண்டும்.

எனவே குழந்தைப் பருவப் பிரபஞ்சத்தின் தற்போதைய புரிதலை இந்தக் கண்டுபிடிப்பு கேள்விக்குள்ளாக்குகிறது. குறிப்பாகக் கருந்துளைகளின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி; அவை எவ்வளவு பெரியதாக இருக்கும், எவ்வளவு விரைவாக வளர்ச்சியடையும், எத்தனை இருந்திருக்கலாம் முதலிய குறித்த நம்முடைய அனுமானங்கள் அனைத்தும் சவால் செய்யப்பட்டுள்ளன.

(த வி வெங்கடேஸ்வரன், முன்னாள் முதுநிலை விஞ்ஞானி, அறிவியல் எழுத்தாளர், தற்போது மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வருகை பேராசிரியராகப் பணியாற்றுகிறார்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8x407d9z4no

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் வளர்த்த செடி எது? பூமியை விட அங்கே வேகமாக வளர்வது ஏன்?

2 months 2 weeks ago

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி, தாவரங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், அம்ரிதா பிரசாத்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 24 மார்ச் 2025, 05:44 GMT

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் 286 நாட்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் 19 ஆம் தேதி பூமிக்கு திரும்பினார். அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த போது, விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார்.

'பிளான்ட் ஹேபிடட் -07' என்ற திட்டத்தின் கீழ், புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் அவர் 'ரோமெயின் லெட்யூஸ்' எனப்படும் ஒரு வகை கீரைச் செடியை வளர்த்தார்.

விண்வெளியில் தங்கும் வீரர்கள், தங்களுக்கான உணவை பூமியில் இருந்து எடுத்துச் செல்லும் போதிலும், விண்வெளியில் தாவரங்களை வளர்க்க ஏன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன? விண்வெளியில் தாவரங்கள் வளருமா?

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி, தாவரங்கள்

பட மூலாதாரம்,NASA

விண்வெளியில் தாவரங்களை வளர்க்கும் ஆய்வு ஏன்?

விண்வெளியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆராய்ச்சி திட்டங்களில் விண்வெளி விவசாயமும் ஒன்று. சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) விவசாயம் குறித்த பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விண்வெளி வீரர்களுக்காக, பூமியில் இருந்து வரும்போதே அவர்களுக்கு தேவையான உணவுகள் முன்கூட்டியே பதப்படுத்தப்பட்டு அனுப்பப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தீர்ந்துவிடும்.

பிற கோள்கள் மற்றும் பூமியில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ள விண்வெளிப் பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வாரங்கள், மாதங்கள் மற்றும் பல வருடங்கள் கூட ஆகலாம். அது போன்ற சூழலில்தான் இந்த விண்வெளி விவசாயம் கைகொடுக்கும்.

நாசாவின் கூற்றுப்படி, நீண்ட கால விண்வெளிப் பயணங்கள் மற்றும் பிற கோள்களில் மனிதர்கள் குடியேறுவதற்கு தேவையான தொழில்நுட்பங்களை வளர்ப்பதில் விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பது ஒரு நிலையான உணவு ஆதாரமாக இருக்கும்.

விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களில் ஆக்ஸிஜன் மற்றும் நீரை மறுசுழற்சி செய்வதற்காகவும் அங்கே தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி, தாவரங்கள்

பட மூலாதாரம்,NASA

தாவரங்கள் எவ்வாறு வளர்க்கப்படுகின்றன?

ஒரு தாவரம் வளர, சூரிய ஒளி, நீர், ஆக்ஸிஜன், மண் ஆகியன தேவைப்படுகின்றன. அதை விட முக்கியமாக புவியீர்ப்பு விசை தேவைப்படும். இந்த புவியீர்ப்பு விசைதான் வேர்களை கீழ்நோக்கி வளரச் செய்கிறது. இது தாவரங்கள் மண்ணில் உறுதியாக நிற்க உதவுகிறது. நிலத்திற்கு அடியில் இருந்து உறிஞ்சப்படும் நீர் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் தாவரத்தின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில், தாவரங்கள் எவ்வாறு வளர்க்கப்படுகின்றன?

நாசாவின் முயற்சிகள்

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பதில் முன்னோடியாக உள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) பல்வேறு பிரத்யேக ஆய்வுகளை நாசா செய்துள்ளது. அதன் மூலம், விண்வெளியில் பல்வேறு வகையான தாவரங்களை நாசா வெற்றிகரமாக வளர்த்துள்ளது.

இந்த ஆராய்ச்சியின் முதல்படியாக, நாசா 2015 ஆம் ஆண்டு விண்வெளியில் எந்தெந்த மாதிரியான தாவரங்களை வளர்க்க முடியும் என்று சோதனை செய்ய தொடங்கியது. அமெரிக்காவின் ஃபேர்சைல்ட் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து 'கிரோயிங்க் பியாண்ட் எர்த்' என்ற திட்டத்தை நாசா தொடங்கியது.

இந்த திட்டத்தின் கீழ், விண்வெளி நிலையத்தில் உள்ளதைப் போன்ற ஒரு சூழலில் வெவ்வேறு தாவரங்களின் விதைகளை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

புவி ஈர்ப்பு இல்லாத சூழலில் தோட்டங்களை அமைக்கவும் நாசா சோதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 'வெஜ்ஜி' என்று அழைக்கப்படும் காய்கறி உற்பத்தி அமைப்பு, விண்வெளியில் தாவரங்களை வளர்க்க உதவும் ஓர் அறையாகும்.

பூமியில் ஒரு தோட்டத்தைப் போலவே இங்கும் தாவரங்கள் விதையில் இருந்து தலையணை போன்ற ஒரு சிறிய அமைப்பில் வளர்க்கப்படுகின்றன. இந்த அமைப்பில் தாவரங்கள் வளர தேவையான மண் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருக்கும். இதற்கு தேவையான தண்ணீர் மட்டும் பரமரிப்பாளர்களால் ஊற்றப்படும். இந்த அமைப்பின் மூலம் , கீரை, தக்காளி உள்ளிட்ட பல வகை பயிர்களை நாசா வெற்றிகரமாக வளர்த்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி, தாவரங்கள்

பட மூலாதாரம்,NASA

வெஜ்ஜி திட்டத்துடன் இணைந்த எக்ஸ்-ரூட்ஸ் என்ற திட்டத்தின் மூலம் தாவரங்கள் வளர தேவையான மண் மற்றும் பிற காரணிகள் இல்லாமல் ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics) அல்லது ஏரோபோனிக்ஸ் (Aeroponics) முறைப்படி விண்வெளியில் தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.

ஹைட்ரோபோனிக்ஸ் முறைப்படி, தாவரங்கள் மண்ணில் இல்லாமல், நீர் மற்றும் ஊட்டச்சத்து கரைசலில் வளர்க்கப்படுகின்றன. ஏரோபோனிக்ஸ் முறையில், தாவரங்களின் வேர்கள் காற்றில் தொங்கவிடப்பட்டு, நீர் மற்றும் ஊட்டச்சத்துகள் தெளிக்கப்படுகின்றன.

மேம்பட்ட தாவர வாழ்விடம் எனப்படும் Advanced Plant Habitat என்ற மற்றொரு திட்டத்தின் மூலமாகவும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தாவரங்களை நாசா வளர்த்து வருகிறது. இந்த அமைப்பில், தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து சூழல்களும் சென்சார் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.

வெப்பநிலை, ஈரப்பதம், ஒளி, கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகள் போன்ற தாவர வளர்ச்சிக்கு தேவையான உகந்த சூழல் இந்த அமைப்பில் உருவாக்கப்படுகிறது. LED விளக்குகள், நீர்ப்பாசன அமைப்பு போன்ற வசதிகள் கொண்ட இந்த அமைப்பில் குறைந்த அளவிலான பராமரிப்பே தேவைப்படும். விண்வெளி வீரர்கள் இதற்கென அதிக உழைப்பையும், நேரத்தையும் செலவிட வேண்டியதில்லை. இந்த அமைப்பின் மூலம் சிலி பெப்பர்ஸ் எனப்படும் குடை மிளகாயையும், முள்ளங்கியையும், சில பூக்களையும் நாசா விளைவித்துள்ளது.

இந்தியாவின் பங்கு

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) இந்த ஆண்டின் தொடக்கத்தில் PSLV-C60 POEM-4 என்ற ராக்கெட்டில் "CROPS" எனப்படும் Compact Research Module for Orbital Plant Studies எனப்படும் விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டது.

இந்த சோதனைக்காக, தாவரங்கள் வளர உகந்த சூழலில் 8 காராமணி விதைகள் முளைப்பதற்காக வைக்கப்பட்டிருந்தன. நான்காவது நாளில், இந்த விதைகள் முளைப்பது காணப்பட்டது. ஐந்தாவது நாளில், முளைத்த விதைகளில் இரண்டு இலைகள் தெரிந்தது. இதுவே இஸ்ரோவின் வெற்றியாக கருதப்பட்டது.

விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பதற்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும், புதிய பயிர் வகைகளை உருவாக்குவதிலும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ESA) மற்றும் மற்ற நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளும் முயற்சி செய்து வருவதாக இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குநர் பாண்டியன் கூறுகிறார்.

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி, தாவரங்கள்

பட மூலாதாரம்,ISRO

படக்குறிப்பு,இஸ்ரோவின் CROPS திட்டத்தில் விண்வெளியில் முளைத்த காராமணி பயிர்கள்

பூமியை விட விண்வெளியில் தாவரங்கள் வேகமாக வளர்வது ஏன்?

"விண்வெளி வீரர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து மிக்க ஃபிரெஷ் உணவுகளை இதன் மூலம் வழங்க முடியும். விண்வெளி வீரர்கள் சுவாசிப்பதற்கான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய இந்த தாவரங்கள் உதவும். இவை குறைவான அளவே இருந்தாலும் இயற்கையான முறையில் இருப்பதால் அவர்களின் உடல்நலனுக்கு நன்மை மற்றும் ஊட்டச்சத்து கிடைக்கும்", என்கிறார் பாண்டியன்.

விண்வெளியில் தாவரங்களை விரைவாக விளைவிக்க முடியும் என்று தெரிவிக்கிறார் அவர்.

"உதாரணமாக பூமியில் பயிரிடும் போது, தாவரங்களுக்கு வைக்கப்படும் உரம் மழை போன்ற காரணிகளால் அடித்து செல்லப்படலாம் அல்லது தாவரங்கள் அதனை உறிஞ்ச நீண்ட நேரம் எடுக்கலாம். ஆனால் விண்வெளியில் தாவரங்களை வளர்க்க உதவும் திட்டங்களின் மூலம், தாவரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நேரடியாக செலுத்தப்படுகின்றன. இதனால் தாவரங்கள் அவற்றை வேகமாக உறிஞ்சி இயல்பைவிட விரைவாகவே அவை வளர்கின்றன", என்று விளக்கினார் பாண்டியன்.

இந்த திட்டங்கள் மூலம் பூமியில் உள்ள விவசாய முறைகளை மேம்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். Spin-off technology முறையில் விண்வெளியில் தாவரங்களை வளர்க்க உதவும் புதுவித முயற்சிகளை பூமியில் செய்யப்படும் விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் விவசாயத்தை மேம்படுத்தலாம் மற்றும் விளைச்சலை பெருக்கலாம் என்றும் பாண்டியன் கூறினார்.

Spin-off technology என்பது குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக வகுக்கப்பட்ட ஒரு திட்டம், பின்னர் மற்ற துறைகளிலும் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பமாகும். உதாரணமாக நாசாவால் விண்வெளி வீரர்களின் இருக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட "மெமரி ஃபோம்" (Memory Foam) தொழில்நுட்பம், இன்று மெத்தைகள் மற்றும் தலையணை தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி, தாவரங்கள்

பட மூலாதாரம்,NASA

"எப்போதும் இயந்திரங்களைச் சுற்றியே இருக்கும் விண்வெளி வீரர்களுக்கு, ஆராய்ச்சி செய்வதைத் தவிர இந்த தாவரங்களை பராமரிப்பது மனதை அமைதிப்படுத்த உதவும். விண்வெளி வீரர்களின் பணிச் சுமை, மற்றும் தனிமை உணர்வை குறைத்து அவர்கள் மகிழ்ச்சியடைய இது ஒரு காரணியாக இருக்கும்" என்று உளவியல் ரீதியாகவும் விண்வெளி வீரர்களுக்கு இது பலன் தருவதாக கூறுகிறார் பாண்டியன்.

தற்போது வெறும் சோதனைக்காக சிறிய அளவிலே விண்வெளியில் தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

"இந்த திட்டங்கள் இன்னும் முழு வீச்சில் செயல்படுத்தப்படவில்லை. அவ்வாறு முழு வீச்சில் இது நடந்தால் விண்வெளிக்கு செல்லும் போது, அதிக அளவிலான உணவு பொருட்களை எடுத்துச் செல்வதை குறைக்க முடியும். மனிதர்கள் விண்வெளியிலும், மற்ற கோள்களிலும் வாழ்வதற்குத் தேவையான தொழில்நுட்பங்களை முழுமையாக சோதனை செய்து செயல்படுத்த முடியும்", என்று பாண்டியன் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c0jg3zl6zx6o

Checked
Wed, 06/11/2025 - 01:54
அறிவியல் தொழில்நுட்பம் Latest Topics
Subscribe to அறிவியல் தொழில்நுட்பம் feed