அறிவியல் தொழில்நுட்பம்

பூமிக்கு வெளியே உயிரின் முதல் தடயமா? செவ்வாயின் 'சிறுத்தை' தடத்தில் நாசா தீவிர ஆய்வு

2 days 13 hours ago

செவ்வாய், சிறுத்தை தடம், உயிர் வாழும் சாத்தியம், நாசா

பட மூலாதாரம், NASA/JPL

படக்குறிப்பு, பாறைகள் சிறுத்தைப் புள்ளிகள் போல் தோற்றமளிக்கும் வித்தியாசமான குறிகளால் மூடப்பட்டுள்ளன.

கட்டுரை தகவல்

  • ரெபேக்கா மோரல்

  • அறிவியல் ஆசிரியர்

    13 செப்டெம்பர் 2025, 01:53 GMT

    புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமான பாறைகள், அந்த செந்நிற கிரகத்தில் கடந்த காலத்தில் உயிர்கள் இருந்ததற்கான மிகவும் ஆர்வமூட்டும் ஆதாரங்களை கொண்டிருக்கின்றன.

நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் ஒரு தூசி நிறைந்த ஆற்றுப் படுகையில் கண்டறிந்த மட்ஸ்டோன் பாறைகளுக்கு, 'சிறுத்தை தடம்' (Leopard Spots) மற்றும் 'பாப்பி விதைகள்' (Poppy Seeds) எனப் புனைப்பெயர் சூட்டப்பட்டன.

இந்த அம்சங்கள், பழங்கால செவ்வாய் நுண்ணுயிரிகளுடன் தொடர்புடைய ரசாயன எதிர்வினைகளால் உருவாக்கப்பட்ட தாதுக்களை உள்ளடக்கியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த தாதுக்கள் இயற்கையான புவியியல் செயல்முறைகளால் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த அம்சங்கள் இதுவரை உயிர்கள் இருப்பதற்கு கண்டறியப்பட்ட மிகத் தெளிவான அறிகுறிகளாக இருக்கலாம் என ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நாசா கூறியது.

இந்த கண்டுபிடிப்புகள், நாசாவின் 'சாத்தியமான பயோசிக்னேச்சர்கள்' அதாவது (Potential Biosignatures) என்று அழைக்கப்படும் அளவுகோல்களை பூர்த்தி செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.

இவை உயிரியல் தோற்றம் கொண்டவையா என்பதை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வு தேவை என்பதே இதன் பொருள்.

"இதுவரை இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் பெற்றதில்லை, அதனால் இதுதான் முக்கியமான விஷயம்," என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த கிரக விஞ்ஞானி பேராசிரியர் சஞ்ஜீவ் குப்தா கூறினார். இவர் இந்த ஆய்வின் இணை ஆசிரியர்களில் ஒருவர், இந்த ஆய்வு நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

"நாங்கள் பாறைகளில் கண்டறிந்த அம்சங்களை ஒருவேளை பூமியில் பார்த்தால், உயிரியல் - நுண்ணுயிரி செயல்முறைகளால் விளக்க முடியும். எனவே, நாங்கள் உயிரைக் கண்டறிந்தோம் என்று கூறவில்லை, ஆனால் இது உண்மையிலேயே எங்களுக்கு பின்தொடர வேண்டிய ஒரு விஷயமாக உள்ளது" என்று அவர் கூறினார்.

"இது ஒரு எஞ்சிய புதைபடிவத்தைப் பார்ப்பது போன்றது. ஒருவேளை இது ஒரு எஞ்சிய உணவாக இருக்கலாம், ஒருவேளை நாம் பார்த்தது வெளியேற்றப்பட்ட கழிவாக கூட இருக்கலாம்" என்று நாசாவின் அறிவியல் பணி இயக்குநரகத்தின் இணை நிர்வாகி நிக்கோலா ஃபாக்ஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

செவ்வாய், சிறுத்தை தடம், உயிர் வாழும் சாத்தியம், நாசா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாறைகளுக்கு 'சிறுத்தை தடங்கள்' மற்றும் 'பாப்பி விதைகள்' என புனைப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த தாதுக்கள் நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்டவை என்பதை முழுமையாக உறுதிப்படுத்த ஒரே வழி, பாறைகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்வது மட்டுமே.

நாசாவும் ஈசாவும் (ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்) செவ்வாயிலிருந்து ஒரு மாதிரியை எடுத்து வரும் திட்டத்தை முன்மொழிந்துள்ளன, ஆனால் அதன் எதிர்காலம் மிகவும் நிச்சயமற்றதாக உள்ளது. அதிபர் டிரம்பின் 2026 பட்ஜெட்டில், அமெரிக்க விண்வெளி முகமையின் அறிவியல் பட்ஜெட் மிகவும் குறைவாகவே முன்மொழியப்பட்டுள்ளது. இதனால் மாதிரிகளை எடுத்து வரும் திட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.

இன்று, செவ்வாய் ஒரு குளிர்ந்த மற்றும் வறண்ட பாலைவனமாக உள்ளது. ஆனால் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அது வளிமண்டலத்தையும் நீரையும் கொண்டிருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. இது கடந்த காலத்தில் வாழ்ந்த உயிரைத் தேடுவதற்கு ஒரு நம்பிக்கைக்குரிய இடமாக உள்ளது.

2021இல் செவ்வாய் மேற்பரப்பில் தரையிறங்கிய பெர்சிவரன்ஸ் ரோவர், உயிரியல் அறிகுறிகளைத் தேட அனுப்பப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இது ஜெஸிரோ பள்ளம் என்ற பகுதியை ஆராய்ந்து வருகிறது, இது ஒரு காலத்தில் ஒரு நதி பாயும் ஏரியாகவும் இருந்தது.

கடந்த ஆண்டு பிரைட் ஏஞ்சல் ஃபார்மேஷன் என்ற பகுதியில் ஆற்றால் உருவான ஒரு பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் சிறுத்தை தடம் என்ற பாறைகளை ரோவர் கண்டறிந்தது. இவை சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை மற்றும் களிமண்ணால் உருவான பாறைகளான 'மட்ஸ்டோன்' என்று அழைக்கப்படும் பாறை வகைகள்.

"இந்த பாறைகளில் சில சுவாரசியமான ரசாயன மாற்றம் நடந்திருப்பதை அறிந்தோம், இதனால் நாங்கள் மிகவும் உற்சாகமடைந்தோம்," என்று நியூயார்க்கில் உள்ள ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜோயல் ஹுரோவிட்ஸ் கூறினார். இவர் பெர்சிவரன்ஸ் திட்ட விஞ்ஞானியும், ஆய்வின் முதன்மை ஆசிரியரும் ஆவார்.

செவ்வாய், சிறுத்தை தடம், உயிர் வாழும் சாத்தியம், நாசா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாறைகளில் உள்ள தாதுக்கள் ஆய்வு செய்யப்பட்டன.

ரோவர் அதன் உள்ளக ஆய்வகத்தில் உள்ள பல கருவிகளைப் பயன்படுத்தி பாறைகளில் உள்ள தாதுக்களை ஆய்வு செய்தது. இந்த தரவு பின்னர் விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதற்காக பூமிக்கு அனுப்பப்பட்டது.

"நாங்கள் கண்டறிந்தவை, ஒரு ஏரியின் அடிப்பகுதியில் படிந்த மண்ணில் நடந்த ரசாயன எதிர்வினைகளுக்கான ஆதாரம் என்று நினைக்கிறோம். இந்த ரசாயன எதிர்வினைகள் மண்ணுக்கும் கரிமப் பொருளுக்கும் இடையே நடந்ததாகத் தோன்றுகிறது. இந்த இரண்டு பொருட்களும் எதிர்வினையாற்றி புதிய தாதுக்களை உருவாக்கியுள்ளன," என்று ஹுரோவிட்ஸ் விளக்கினார்.

பூமியில் இதே போன்ற சூழ்நிலையில், தாதுப் பொருட்களை உருவாக்கும் ரசாயன எதிர்வினைகள் பொதுவாக நுண்ணுயிரிகளால்தான் நிகழ்கின்றன.

"இந்த அம்சங்கள் இந்த பாறைகளில் எவ்வாறு உருவாயின என்பதை விளக்க இது ஒரு சாத்தியமான விளக்கமாக இருக்கும்," என்று ஹுரோவிட்ஸ் கூறினார். "நாம் இதுவரை கண்டறிந்தவற்றில் இதுவே வலிமையான மற்றும் மிகவும் உறுதியான பயோசிக்னேச்சர் எனத் தோன்றுகிறது"

விஞ்ஞானிகள் இந்த தாதுக்கள் நுண்ணுயிரிகள் இல்லாமல் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பதையும் ஆய்வு செய்தனர். இயற்கையான புவியியல் செயல்முறைகளும் இந்த ரசாயன எதிர்வினைகளுக்கு பின்னால் இருக்கலாம் என்று முடிவு செய்தனர்.

ஆனால் இவற்றிற்கு மிக அதிக வெப்பநிலை தேவைப்படும், ஆனால் பாறைகள் சூடாக்கப்பட்டவை போல் தெரியவில்லை.

"உயிரியல் அல்லாத சாத்தியங்களுக்கு சில சிரமங்களை நாங்கள் கண்டோம். ஆனால் அவற்றை முற்றிலும் நிராகரிக்க முடியாது," என்று ஹுரோவிட்ஸ் கூறினார்.

செவ்வாய், சிறுத்தை தடம், உயிர் வாழும் சாத்தியம், நாசா

பட மூலாதாரம், NASA/JPL

படக்குறிப்பு, பெர்சிவரன்ஸ் பாறைகளின் அற்புதமான மாதிரிகளை சேகரித்துள்ளது.

பெர்சிவரன்ஸ் செவ்வாய் கிரகத்தை ஆராயும் போது பிரைட் ஏஞ்சல் ஃபார்மேஷனில் கண்டறியப்பட்ட பாறைகள் உள்ளிட்ட மாதிரிகளையும் சேகரித்து வருகிறது. இவை குப்பிகளில் சேமிக்கப்பட்டு, பூமிக்கு திருப்பி அனுப்பக் கூடிய விண்கலத்திற்காக செவ்வாய் மேற்பரப்பில் வைக்கப்படும்.

நாசாவின் இத்தகைய முயற்சிக்கான திட்டங்கள், டிரம்பின் பட்ஜெட் குறைப்பு அச்சுறுத்தலால் நிலுவையில் உள்ளன. அதேநேரத்தில், மாதிரிகளை எடுத்து வரும் ஒரு திட்டத்தை 2028ஆம் ஆண்டில் தொடங்க சீனாவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நாசா பட்ஜெட் குறைப்பு முடிவு விவாதத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில், விஞ்ஞானிகள் இந்த பாறைகளை தங்கள் கைகளில் பெற ஆவலாக உள்ளனர்.

"இந்த மாதிரிகளை நாம் பூமியில் வைத்து பார்க்க வேண்டும்," என்று பேராசிரியர் குப்தா கூறினார்.

"உண்மையான நம்பிக்கையை பெற, பெரும்பாலான விஞ்ஞானிகள் இந்த பாறைகளை பூமியில் பார்த்து ஆய்வு செய்ய விரும்புவார்கள். இது பூமிக்கு எடுத்து வர வேண்டிய மாதிரிகளில் அதிக முன்னுரிமை கொண்ட மாதிரிகளில் ஒன்றாகும்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8xr4vzrkqpo

தக்காளியின் கலப்பு இனப்பெருக்கத்தில் உருளைக்கிழங்கு உருவானது எப்படி? சுவாரஸ்யமான அறிவியல் கதை

5 days 8 hours ago

ஒரு விவசாய சந்தையில் வைக்கப்பட்டிருக்கும் தக்காளிகள் மற்றும் உருளைக்கிழங்குகளின் காட்சி

Getty Images ஒருவகை காட்டு தக்காளியில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்தது உருளைக் கிழங்கு என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கட்டுரை தகவல்

  • டலியா வென்சுரா

  • பிபிசி முண்டோ

    10 செப்டெம்பர் 2025, 04:52 GMT

    புதுப்பிக்கப்பட்டது 10 செப்டெம்பர் 2025, 06:02 GMT

சுமார் 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, பின்னாளில் தென் அமெரிக்கா என்று அழைக்கப்படும் பகுதியில், ஆண்டிஸ் மலைத்தொடர் இன்னமும் உருவாகிக்கொண்டிருந்தபோது, தாவரங்கள் இயற்கையாக வளர்ந்திருந்தன. அப்போது மனிதர்கள் இருந்திருக்கவில்லை.

அப்போது இரண்டு தாவரங்கள் "உண்மையில், இரண்டு தாவர இனங்கள்" அருகருகே வாழ்ந்து வந்தன "அவை இன்று நாம் காணும் தக்காளிகளின் (சோலனம் லைகோபெர்சிகம்- Solanum lycopersicum) முன்னோடிகள் மற்றும் சோலனம் எட்யூபெரோசம்(Solanum etuberosum) எனப்படும் ஒரு தாவர வகையின் முன்னோடிகள். இதன் தற்போதைய மூன்று இனங்கள் சிலி மற்றும் ஜுவான் ஃபெர்னாண்டஸ் தீவுகளில் காணப்படுகின்றன," என்று லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் தாவரவியல் நிபுணர் சாண்ட்ரா நாப் கூறினார்.

அவற்றின் பெயர்களில் இருந்து அவை தொடர்புடையவை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம், அவை ஒன்றோடொன்று கலந்து இனப்பெருக்கம் அடைந்தன. "இவ்வாறு உருவாகியது புதிய தாவரம் ஒன்றை உருவாக்கிய மரபணுக்களின் மறுசீரமைப்பு," என்றும் இது "அந்த தாவரத்தை குளிர் மற்றும் வறண்ட ஆண்டிஸ் மலைப்பகுதிகளில் செழித்து வளர அனுமதித்தது" என்றும் நாப் கூறுகிறார்,

நிபுணர்கள் இதை இனங்களுக்கு இடையிலான கலப்பு இனப்பெருக்கம்( இன்டர்ஸ்பெசிஃபிக் ஹைப்ரிடைசேஷன் - interspecific hybridisation) என்று அழைக்கிறார்கள், இவ்வகை இனப்பெருக்கம் அடிக்கடி நிகழ்கிறது, சில சமயங்களில் இதன் விளைவுகள் துரதிர்ஷ்டவசமாக இருந்தன.

உதாரணமாக, பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் இடையிலான இனச்சேர்க்கை காரணமாக கோவேறு கழுதை பிறக்கிறது. இது வெற்றிகரமான கலப்பினமாக இருந்தாலும், பழங்காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அதற்கே தம்மை இனப்பெருக்கம் செய்யும் திறன் இல்லை.

தாவர உலகில், இனங்களுக்கிடையேயான கலவைகள் அடிக்கடி நிகழ்கின்றன என்று நாப் கூறுகிறார் - இப்படித்தான் நாம் தோட்டத் தாவரங்களைப் பெரும்பாலும் பெற்றுள்ளோம். இந்த கலப்பு இயற்கையாகவோ அல்லது மனிதர்களின் தலையீட்டாலோ நடக்கலாம், இரண்டு வகை பெற்றோரின் கலவையான தாவரங்களை உருவாக்குகிறது.

"சில சமயங்களில் அவை மலட்டுத்தன்மை கொண்டவையாக இருக்கும், எனவே அவை ஒரு புதிய இனமாக உருவாகாது," என்று அவர் கூறுகிறார்.

ஆனால் சூழ்நிலைகளின் சேர்க்கைக்கு பொருத்தமாக இருக்கும்போது, அந்த கலவையின் விளைவு எதிர்பார்ப்புகளை விஞ்சுவதாக அமையும்.

அப்படித்தான் அன்று நடந்தது. லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சோலானேசியே (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இனங்களுக்கு இடையிலான தற்செயலான கலப்பில் இருந்து உருளைக்கிழங்கு பிறந்தது.

ஒரு சோலனம் எட்யூபெரோசம் (Solanum etuberosum) தாவரம் அருகே ஒரு சோலனம் லைகோபெர்சிகம் (Solanum lycopersicum) தாவரத்தின் விளக்கப்படம்

LOC/Biodiversity Heritage Library சோலனம் லைகோபெர்சிகம்(இடது) மற்றும் சோலனம் எட்யூபெரோசம் (வலது), இவை உருளைக்கிழங்கை உருவாக்கின.

"நம் அன்றாட வாழ்வில் மிகவும் முக்கியமாக உள்ள உருளைக்கிழங்குக்கு இப்படி ஒரு பழமையான, அசாதாரணமான துவக்கம் இருப்பது மிகவும் சுவாரஸ்யமானது," என்று நாப் கூறுகிறார்.

"தக்காளி அதன் தாய், எடூபரோசம் தந்தை" என்று சீன வேளாண் அறிவியல் அகாடமியின் பேராசிரியர் சான்வென் ஹுவாங் அறிவித்தார், அவர் ஜூலை மாதம் செல் (Cell) இதழில் வெளியிடப்பட்ட சர்வதேச ஆய்வுக்கு தலைமை தாங்கினார்.

நீண்டகால மர்மம் எப்படி அகன்றது?

சந்தையில் பார்க்கும்போது, கடினமான, மாவுத்தன்மை கொண்டதாக அமைந்த உருளைக்கிழங்கு, சிவப்பான, சாறுள்ள தக்காளியைப் போன்று தெரியவில்லை என்றாலும், "அவை மிகவும், மிகவும் ஒத்தவை," என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நாப் கூறுகிறார்.

அந்த விஞ்ஞானியின் கூற்றுப்படி, இரண்டு தாவரங்களின் இலைகளும் பூக்களும் மிகவும் ஒத்தவை, மேலும் உருளைக்கிழங்கு தாவரத்தின் பழம் கூட ஒரு சிறிய பச்சை தக்காளி போலத் தெரிகிறது. எனவே, இந்த ஆராய்ச்சியின் தொடக்கத்திலேயே இது எதிர்பார்க்கப்பட்டதுதான்.

"நாம் பார்ப்பதைத் தாண்டி, உருளைக்கிழங்குகள், தக்காளிகள் மற்றும் எடூபரோசம் ஆகியவை நெருங்கிய தொடர்புடையவை என்று நமக்கு நீண்ட காலமாகத் தெரியும்," என்று அவர் கூறுகிறார். "ஆனால் உருளைக்கிழங்குக்கு எது மிக நெருக்கமானது என்பது நமக்குத் தெரியாது, ஏனென்றால் வெவ்வேறு மரபணுக்கள் நமக்கு வெவ்வேறு தகவல்களைக் கூறின."

ஒரு நீளமான டாம்டேடோ தாவரம், அதன் மேல் தக்காளிப் பழங்களும், கீழே உருளைக்கிழங்குகளும் உள்ளன.

Thompson & Morgan உருளைக்கிழங்குகளும் தக்காளிகளும் மிகவும் ஒத்தவை, அவற்றை ஒட்டுவதால், இந்த டாம்டேடோ (TomTato) என்று அழைக்கப்படும் தாவரம் போன்ற இரண்டையும் உருவாக்கும் ஒரு தாவரம் பிறக்கிறது. இதை தாம்சன் & மோர்கன் என்ற தோட்டக்கலை நிறுவனம் உருவாக்கியது.

பிரபலமான உருளைக் கிழங்கின் தோற்றம் குறித்த புதிரை அவிழ்க்க விஞ்ஞானிகள் பல தசாப்தங்களாக முயற்சித்துள்ளனர், ஆனால் அவர்கள் ஒரு சிக்கலை எதிர்கொண்டனர்.

உருளைக்கிழங்கின் மரபியல் அசாதாரணமானது. மனிதர்கள் உட்பட பெரும்பாலான உயிரினங்களுக்கு ஒவ்வொரு செல்லிலும் இரண்டு குரோமோசோம்களின் நகல்கள் இருக்கும் நிலையில், உருளைக்கிழங்குக்கு நான்கு உள்ளன.

எனவே, இந்த முரண்பாட்டைத் தீர்க்க, ஆராய்ச்சியாளர்கள் குழு, உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் எடூபரோசம் உட்பட டஜன் கணக்கான இனங்களிலிருந்து 120க்கும் மேற்பட்ட மரபணுக்களை (ஒரு செல்லில் உள்ள மரபணுக்களின் முழுமையான தொகுப்பு) பகுப்பாய்வு செய்தனர். அவர்கள் வரிசைப்படுத்திய உருளைக்கிழங்கு மரபணுக்கள் கிட்டத்தட்ட அதே தக்காளி-எடூபரோசம் பிளவைக் காட்டின.

உருளைக் கிழங்கின் முன்னோடி "இதுவும் இல்லை, அதுவும் இல்லை: அது இரண்டும்," என்று நாப் வலியுறுத்துகிறார்.

அப்படியாகத்தான், தென் அமெரிக்க மலைகளின் அடிவாரத்தில் லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த காதல் உறவை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

"இது ஒரு வெற்றிகரமான கலவையாகும், ஏனென்றால் இது ஆண்டிஸ் மலைத்தொடரின் புதிதாக உருவாக்கப்பட்ட உயரமான வாழ்விடங்களில் இந்த புதிய இனம் செழிக்க அனுமதித்த மரபணு சேர்க்கைகளை உருவாக்கியது" என்று நாப் விளக்குகிறார்.

உருளைக்கிழங்கு தாவரத்தின் தரைக்கு மேல் இருக்கும் பகுதி அதன் பெற்றோரை ஒத்திருந்தாலும், அதில் ஒரு அம்சம் மறைந்திருந்தது, அது வேறு எந்த தாவரத்திற்கும் இல்லை: அதுதான் கிழங்குகள்.

கிழங்குகள் இருப்பது என்பது எப்போதும் கைவசமாக ஒரு உணவுக் கூடை வைத்திருப்பது போன்றது: அவை ஆற்றலைச் சேமித்து, குளிர்காலம், வறட்சி அல்லது வேறு எந்தச் சாதகமற்ற சூழ்நிலைகளிலும் உயிர்வாழ உதவுகிறது.

சிறிய தக்காளி போன்ற பழங்களைக் கொண்ட ஒரு Solanum tuberosum (உருளைக்கிழங்கு) தாவரத்தின் விளக்கப்படம்.

Getty Images வரைகலையில் உள்ள "c" எழுத்து, சிறிய தக்காளிகள் போன்ற உருளைக்கிழங்கின் பழங்களைக் காட்டுகிறது.

நடந்திருக்கும் மரபணு குலுக்கல்

விஞ்ஞானிகள் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் கண்டுபிடித்தனர்: கிழங்குகளை உருவாக்கிய தாவரம், ஒரு மரபணு குலுக்களில் வென்றதன் மூலம் அவ்வாறு செய்தது.

அவற்றின் முன்னோடிகளில் ஒவ்வொன்றும் கிழங்குகள் உருவாக முக்கியமான ஒரு மரபணுவைக் கொண்டிருந்தன.

ஆனால் அவற்றில் எதுவுமே தனியாகப் போதுமானதாக இல்லை, எனவே அவை இணைந்தபோது, அவை நிலத்தடி தண்டுகளை சுவையான உருளைக்கிழங்குகளாக மாற்றுகிற செயல்முறையைத் தூண்டின.

நாப் உடன் பணிபுரிந்த சீனக் குழுவால் இதை நிரூபிக்கவும் முடிந்தது.

"அவர்கள் தங்கள் கருதுகோளை உறுதிப்படுத்த இந்த மரபணுக்களை நீக்கி, பல நேர்த்தியான பரிசோதனைகளைச் செய்தனர்," என்று அவர் கூறுகிறார், "அவை இல்லாமல், கிழங்குகள் உருவாகவில்லை."

உருளைக்கிழங்கை உருவாக்கிய இனக்கலப்பு ஒரு மகிழ்ச்சியான விபத்தை விடவும் கூடுதலானதாகும். அது ஒரு புதிய உறுப்பையே உருவாக்கியது. உருளைக்கிழங்கு என்ற இந்த உறுப்பு ஒரு பரிணாம சாதனையாகக் கருதப்படுகிறது.

அந்த கிழங்கின் இருப்பு காரணமாக விதை அல்லது மகரந்தச் சேர்க்கைகளின் தேவை இல்லாமல் தாவரம் இனப்பெருக்கம் செய்துகொள்ள அனுமதித்தது.

பல்வேறு உயரங்களுக்கும், சூழ்நிலைகளுக்குத் தகவமைத்துக் கொள்ள முடிந்தது, இது பன்முகத்தன்மையில் ஒரு அதிரடிக்கு வழிவகுத்தது.

இன்றும், "அமெரிக்காவில் மட்டுமே தென்மேற்கு ஐக்கிய மாகாணங்கள் முதல் சிலி மற்றும் பிரேசில் வரை 100க்கும் மேற்பட்ட காட்டு இனங்கள் காணப்படுகின்றன" என்று நாப் கூறுகிறார்.

எடூபரோசம் மற்றும் டியூபரோசம் தாவரங்கள் அருகருகே உள்ள ஒரு புகைப்படம்.

Shenzhen Institute of Agricultural Genomics, Chinese Academy of Agricultural Sciences மேலோட்டமாகப் பார்த்தால், எடூபரோசம் (இடது) மற்றும் டியூபரோசம் (வலது) ஆகியவை ஒத்ததாகத் தோன்றலாம், ஆனால் பிந்தையதின் மாவுத்தன்மை கொண்ட கிழங்குகள்தான் உருளைக்கிழங்கை மிகவும் பிரபலமான பயிராக மாற்றுகின்றன.

மரபணுவால் ஏற்படும் பலவீனங்கள்

இருப்பினும், பாலின தொடர்பு இல்லாமல் இனப்பெருக்கம் செய்யும் இந்த திறன் உருளைக்கிழங்கிற்கு தீங்கையும் விளைவித்துள்ளது.

"அவற்றை வளர்க்க, நீங்கள் ஒரு உருளைக்கிழங்கின் சிறிய துண்டுகளை நடவு செய்கிறீர்கள், அதாவது நீங்கள் ஒரே வகையை கொண்ட ஒரு வயலை வைத்திருந்தால், அவை அடிப்படையில் பிரதிகள்," என்று டாக்டர் நாப் விளக்குகிறார்.

மரபணு ரீதியாக ஒரே மாதிரியாக இருப்பதால், உருளைக்கிழங்கு தாவரங்களில் புதிய நோய்க்கு எதிராக எந்தத் தடுப்பு சக்தியும் இருக்காது.

இது விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியை நடத்தியதற்கான காரணத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

நாப்பின் கூற்றுப்படி, சீனக் குழு, விதைகளிலிருந்து இனப்பெருக்கம் செய்யக்கூடிய மற்றும் மரபணு ரீதியாக மாற்றியமைக்கப்படக்கூடிய உருளைக்கிழங்குகளை உருவாக்க விரும்புகிறது.

காட்டு இனங்களிலிருந்து மரபணுக்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழல் சவால்களை சிறப்பாகத் தாங்கக்கூடிய வகைகளை உருவாக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

"இந்த ஆய்வில் ஈடுபட்ட மற்ற பரிணாம உயிரியலாளர்களும் நானும், உருளைக்கிழங்குகளின் மிக நெருங்கிய உறவு எது என்பதையும், அவை ஏன் இவ்வளவு பன்முகத்தன்மை கொண்டவை என்பதையும் கண்டறிய விரும்பினோம்," என்று அவர் கூறுகிறார்.

"எனவே, நாங்கள் மிகவும் மாறுபட்ட கண்ணோட்டங்களில் இருந்து ஆராய்ச்சியை அணுகினோம், மேலும் எங்கள் ஒவ்வொரு கண்ணோட்டத்திலிருந்தும் கேள்விகளைக் கேட்க முடிந்தது, இது ஆய்வில் பங்கேற்கவும் பணியாற்றவும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1dq30qlzreo

விக்ரம் 3201 சிப் இஸ்ரோவின் ராக்கெட் மற்றும் விண்கலங்களில் எவ்வாறு பயன்படும்?

1 week 3 days ago

VIKRAM 3201

பட மூலாதாரம், ISRO

கட்டுரை தகவல்

  • த.வி. வெங்கடேசுவரன்

  • பேராசிரியர், ஐஐஎஸ்இஆர் மொஹாலி

  • 4 செப்டெம்பர் 2025

    புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

இஸ்ரோ வடிவமைத்து உருவாக்கியுள்ள 32-பிட் (32-bit) விக்ரம் 3201 கணிப்பி செயலி (processor) ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

அடுத்த தலைமுறை மடிக்கணினிகள் (laptops), திறன்பேசிகள், உயர்-செயல்திறன் கொண்ட மெய்நிகர் விளையாட்டு கணினிகளில் இந்த கணிப்பி செயலி பயன்படுத்தப்படாது என்றாலும், செமி-காண் இந்தியா 2025 (Semicon India 2025) கண்காட்சியில் பிரதமர் மோதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட விக்ரம் 3201 கணிப்பி செயலி இனிவரும் இஸ்ரோவின் ஏவுகணைகள் மற்றும் விண்கலங்களில் பொருத்தப்படும். இந்தியாவில் வரவிருக்கும் லட்சிய விண்வெளி திட்டங்களான சந்திரனை நோக்கிய அடுத்த பயணம், ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் மின்னணு (electronics) கருவிகளின் இருதயமாக இந்த 'சிப்' (chip) தான் அமையும்.

இந்திய விண்வெளித் திட்டத்தின் நிறுவனரான விக்ரம் சாராபாயின் பெயரிடப்பட்ட விக்ரம் 3201 செயலி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (இஸ்ரோ) வடிவமைக்கப்பட்டு, சண்டிகரில் அமைந்துள்ள அரைக்கடத்தி ஆய்வகத்தால் (Semi-Conductor Laboratory - SCL) உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் விண்வெளி இணைப்பு சோதனை (Space Docking Experiment - SpaDeX) தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய 30 டிசம்பர் 2024 இல் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி-சி60 (PSLV-C60) திட்டத்தில் இந்த கணிப்பி பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

விண்வெளிச் சூழலில் இந்த 'சிப்' சிறப்பாக செயல்படுவதை உறுதிப்படுத்திக் கொண்ட இஸ்ரோ, 2009 முதல் அதன் விண்கல இயக்க மின்னணு கருவிகளில் பயன்பட்டு வந்த 16-பிட் கணிப்பி விக்ரம் 1601க்கு பதிலாக, இனி வரும் திட்டங்களில் மேம்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விக்ரம் 3201 செயலியைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

VIKRAM 3201

பட மூலாதாரம், X/@DrLMurugan

செல்போன் சிப்பை விட குறைந்த திறன் கொண்ட விக்ரம் 3201

நவீன ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் கணிப்பி செயலிகளுடன் மேலோட்டமாக ஒப்பிட்டுப் பார்த்தால், விக்ரம் 3201 செயலி மிகவும் பழைய தொழில்நுட்பம் என்று தான் கருதத் தூண்டும்.

எடுத்துக்காட்டாக, விக்ரம் 3201 ஒரு 32-பிட் செயலி, அதே நேரத்தில் சமீபத்திய மடிக்கணினிகள் பெரும்பாலும் 64-பிட் செயலிகள் (64-bit processors) கொண்டு இயங்கும். எளிய சொற்களில் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், 32-பிட் அமைப்பு 2^32 நினைவக முகவரிகளை (memory addresses) ஒரே கணத்தில் அணுக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திறன் கொண்ட கணிப்பியைப் பொருத்திய கணினிகளில் 4 ஜிபி ரேம் (RAM) வரை கையாளும் திறன் கொண்டு இயங்கும். மாறாக, 64-பிட் செயலி 2^64 நினைவக முகவரிகளைக் கையாளும்; எனவே 8 ஜிபி முதல் 16 ஜிபி ரேம் வரை அல்லது அதற்கும் மேற்பட்ட ரேம் நினைவகத்தைக் கையாளும் திறன் படைத்ததாக அமையும்.

64-பிட் செயலி கொண்டு இயங்கும் கணினியில் வாழைப்பழத்தில் ஊசி நுழைவது போல லாவகமாக அனிமேஷன் படங்கள் கொண்ட கேமிங் செயல்படும்; ஆனால் 32-பிட் அமைப்பில் அதே கேமிங் திரையில் காட்சிகள் விட்டுவிட்டுத் தென்படும். நவீன 64-பிட் செயலி, 32-பிட் செயலியை விட சந்தேகத்துக்கு இடமின்றி அதிக திறன் கொண்டது தான்.

மேலும், விக்ரம் 3201 ஒரு 180 நானோமீட்டர் (180nm) நுணுக்கத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 'சிப்'. இது 1990களின் பிற்பகுதி முதல் 2000களின் தொடக்கம் வரை புழக்கத்தில் இருந்த பழைய தொழில்நுட்பமாகும். இந்தக் கட்டுரையைத் தட்டச்சு செய்யும் தனது எளிய மற்றும் மலிவான நவீன கணினியில் உள்ள 11-ஆம் தலைமுறை இன்டெல் கோர் i5 (11th-generation Intel Core i5) செயலி மேம்பட்ட 10 நானோமீட்டர் (10nm) நுணுக்கம் கொண்டது.

'நானோமீட்டர்' (nm) என்பது ஒரு மீட்டரின் பில்லியனில் ஒரு பங்கைக் குறிக்கிறது. சிப் உற்பத்தி (chip manufacturing) சூழலில், எவ்வளவு நுணுக்கமாக சிலிக்கான் சிப்பில் (silicon chip) நுண்ணளவு கொண்ட டிரான்சிஸ்டர்களை (transistors) எவ்வளவு அடர்த்தியாக (density) வடிவமைத்து உற்பத்தி செய்கிறோம் என்பதைக் குறிக்கும். குறைவான nm என்றால் அதே அளவு திறன் கொண்ட கணிப்பியின் அளவு மேலும் சிற்றளவாக்கம் (miniaturisation) கொண்டிருக்கும் என்று பொருள்.

சிலிக்கான் சிப்பின் கூடுதல் அடர்த்தி கணிசமான நன்மைகளை வழங்குகிறது. அருகருகே டிரான்சிஸ்டர்கள் உள்ளதால் எலக்ட்ரான்கள் (electrons) குறுகிய தொலைவு பயணம் செய்தால் போதும்; எனவே கணினியின் வேகம் கூடும். சிறிய நுணுக்கமான டிரான்சிஸ்டர்கள் செயல்படுவதற்குக் குறைவான மின் ஆற்றல் போதும்; எனவே மின்கலங்களில் உள்ள மின்னாற்றல் நீண்ட காலத்துக்கு இயங்கும். அடர்த்தி கூடுதல் என்றால் அந்த மின்னணுக் கருவியின் அளவும் கூடுதல் சிற்றளவாக்கம் கொள்ளும்; எனவே, மேலும் கையடக்க கருவிகள் சாத்தியம் ஆகும்.

வணிகப் பயன்பாட்டுக்கு இன்னும் வரவில்லை என்றாலும், இன்று அதிநவீன தொழில்நுட்பம் வழியே ஆய்வகத்தில் 3nm முதல் 2nm சிப்பு வடிவாக்க தொழில்நுட்ப நிலையை உலகம் அடைந்துவிட்டது. இந்தச் சூழலில் 180nm என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போலதான் தென்படும்.

VIKRAM 3201

பட மூலாதாரம், @GoI_MeitY

ஆனால் ஸ்மார்ட்போன்களின் தேவைகளிலிருந்து விண்வெளி மின்னணுவியலின் (space electronics) தேவைகள் அடிப்படையில் மாறுபடுகின்றன. விண்ணை நோக்கி ஏவூர்தி சீறிப் பாயும்போது பெருமளவில் அதிர்வுகள் ஏற்படும். புவியின் வளிமண்டலத்தைக் கடந்து விண்வெளிக்குச் சென்றால் அங்கே கதிரியக்கம், வெப்பத் தாக்கம் போன்ற பல்வேறு இடர்களைச் சமாளிக்க வேண்டிவரும். இந்த இடர் மிகு சூழலில் விண்வெளித் தொழில்நுட்ப மின்னணுக் கருவிகள் நம்பகமாக செயல்படவேண்டும்.

விண்வெளியில் விண்கலங்கள் மீது வெகு தொலைவில் உள்ள விண்மீன்கள், கருந்துளைகள் போன்ற விண்பொருள்களிலிருந்து வேகமாகப் பாய்ந்து வரும் மின்னேற்றம் கொண்ட காஸ்மிக் கதிர்கள், சூரியன் உமிழும் சூரியக் காற்று போன்ற கதிரியக்கத் துகள்கள் அடைமழை போல விழுந்துக்கொண்டே இருக்கும். டிரான்சிஸ்டர்களுக்குள் நுண்ணளவில் மின்னேற்றம் உள்ள நிலை, ஏற்றம் அற்ற நிலை என்பதே பூச்சியம் அல்லது ஒன்று என்கிற டிஜிட்டல் தரவாக (digital data) பதிவு ஆகும். மீஉயர் ஆற்றல் கொண்ட கதிர்கள் விழும்போது, மழைத்துளி பட்டு நுண்மண்துகள் தெறிப்பது போல, டிரான்சிஸ்டர்களுக்குள் உள்ள மின் ஏற்ற நிலையை மாற்றிவிட முடியும்.

அதன் தொடர்ச்சியாக பூஜ்ஜியம் இருந்த இடத்தில் ஒன்று அல்லது ஒன்று இருந்த இடத்தில் பூஜ்ஜியம் என மாறுதல்கள் இயல்பில் ஏற்படும். இந்த நிகழ்வு தனி-நிகழ்வு நிலைகுலைவு (Single-Event Upset - SEU) என அழைக்கப்படுகிறது, இது ஒரு சிறிய, சீரற்ற மாற்றம் (random change). இதன் விளைவாக விண்கலத்தின் கணினியில் உள்ள டிஜிட்டல் தரவு சலனம் அடையும்.

இயல்பில் ஏற்படும் இத்தகைய SEU தனி-நிகழ்வு நிலைகுலைவுகளைச் சமாளிக்க செக்சம் போன்ற சரிகாண்-சரிசெய் தொழில்நுட்பங்கள் (error correction techniques) உள்ளன. ஆயினும், குறிப்பிட்ட அளவு தரவு நிலைகுலைவை மட்டுமே நம்பகமாக சீர் செய்யமுடியும்.

VIKRAM 3201

பட மூலாதாரம், PTI

படக்குறிப்பு, செமிகான் இந்தியா 2025 நிகழ்வில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விக்ரம் 3201 சிப்பை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பிரதமர் மோதியிடம் வழங்கினார்.

டிரான்சிஸ்டர்களின் அளவு சுருங்கும்போது அவற்றில் நிலைப்படுத்தப்படும் மின்னேற்ற அளவு குறையும்; எனவே சற்றே ஆற்றல் குறைவான காஸ்மிக் கதிர்கள் கூட இந்தச் சூழலில் தனி-நிகழ்வு நிலைகுலைவுகளை ஏற்படுத்த முடியும். எனவே, கூடுதல் தரவு நிலைகுலைவுகளைச் சமாளிக்க வேண்டும்; இதன் விளைவாக கணிப்பின் நம்பகத்தன்மை இயல்பில் குறையும். அடர்த்தி குறைவான, அளவில் கூடுதலான சிப்பு ஏற்பாட்டில், தரவு நிலைகுலைவு வாய்ப்பு குறைவாக அமையும்; எனவே கணிப்பின் நம்பகத்தன்மை கூடும். எனவேதான் இஸ்ரோ தற்போது பழைய 180nm சிப்பு வடிவமைப்பையே பயன்படுத்தி வருகிறது.

மேலும், விண்கலம் பூமியைச் சுற்றிவரும்போது ஒருசமயம் பளீர் என்ற சூரிய ஒளியிலும், பூமிக்கு மறுபுறம் செல்லும்போது பூமியின் நிழலில் கும்மிருட்டையும் சந்திக்கும். சூரிய ஒளி படரும் தருணத்தில் சுட்டெரிக்கும் +125°C வெப்ப நிலையும், பூமியின் நிழலில் புகும்போது விறைப்பான -55°C உறைகுளிர் நிலையையும் சந்திக்கும். மேலும் கணநேரத்தில் இந்த வெப்ப மாறுதல் ஏற்படும். விண்வெளிக்குச் செல்லும் மின்னணுக் கருவிகள் இந்த வெப்ப அதிர்வைத் தாங்கிச் செயல்படும் வகையில் அமையவேண்டும். -55°C முதல் +125°C வெப்ப நிலையில் இயங்கும் திறன் கொண்டதாக விக்ரம் 3201 சிப் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்யும் விண்கலத்தில் 1.8V முதல் 5V மின்னழுத்த நிலையில் வேலை செய்யும் படியும் இந்தச் 'சிப்' உள்ளது.

கூடுதல் வேகம், மேலும் சிற்றளவு என்பது பூமியில் பயன்படுத்தப்படும் கையடக்க மின்னணுக் கருவிகளின் தேவை. வெப்பம், கதிரியக்கம் முதலியவற்றால் பாதிப்பு அடையாத, நினைவகத்தில் நிலைகுலையாத, நம்பகமான தரவு சேமிப்புத் திறன் தான் விண்வெளி மின்னணுக் கருவிகளின் அடிப்படைத் தேவை. நமது திறன்பேசிகளில் உள்ள அதிநவீன 'சிப்'கள் விண்வெளி நிலையில் சட்டென்று செயலிழந்துவிடும், ஆனால், விண்வெளிப் பயனுக்கு உகந்த மின்னணு கணிப்பியாக விக்ரம் 3201 அமைகிறது.

2009 இல் விண்ணில் ஏவப்பட்ட CARTOSAT-3 செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவிய PSLV-C47 திட்டத்தில் தான் இந்தியா சுயமாகத் தயாரித்த விக்ரம் 1601 சிப்பு முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. அதுமுதல் இன்று வரை இந்தச் சிப்பு தான் இஸ்ரோ ஏவூர்திகளிலும் விண்கலங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

விக்ரம் 3201 அதன் முன்னோடியான விக்ரம் 1601 இலிருந்து ஒரு கணிசமான வகையில் முன்னேற்றம் கொண்ட கணிப்பி ஆகும். மிதவை-புள்ளி ஆதரவு, Ada போன்ற உயர்-நிலை மொழிகளுடனான இணக்கத்தன்மை உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களை இது உள்ளடக்கியது. மேலும், நவீன 70nm சிப்பு வடிவமைப்பில் இஸ்ரோ ஆய்வைத் துவங்கியுள்ளது.

இஸ்ரோ வடிவமைத்து சண்டிகரில் அமைந்துள்ள அரைக்கடத்தி ஆய்வகம் உற்பத்தி செய்யும் இந்தச் சிப்புகள் விண்வெளித்துறைக்கு மட்டுமல்ல, ரயில்வே போன்ற பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. மின்சார ரயில்களை இயக்கப் பயன்படும் மின்னணுக் கருவிகள், மெட்ரோ ரயில்களில் பயன்படுத்தப்படும் தன்னிறைவு தானியங்கி ரயில் மேற்பார்வை (indigenous Automatic Train Supervision - i-ATS) நுட்பக் கருவிகள் போன்ற பல்வேறு துறைகளிலும் விக்ரம் 1601 சிப்பு பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், விக்ரம் 3201இன் வருகை காரணமாக பல்வேறு உள்நாட்டு தொழில்நுட்பங்கள் மேலும் மேம்படும்.

விக்ரம் 1601 தயாரிப்புக்கு முன்னர் மோட்டரோலா, இன்டெல் போன்ற நிறுவனங்களிடமிருந்து தனக்கு வேண்டிய கணிப்பி சிப்புகளை இஸ்ரோ இறக்குமதி செய்து வந்தது. இறக்குமதியை நம்பி இருந்த இந்தியா விநியோகச் சங்கிலி அபாயங்கள் (supply chain risks), ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் (export restrictions), தேசிய பாதுகாப்புச் சவால்களை (national security challenges) சந்தித்தது. 1998 போக்ரான் சோதனைகளைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட தடைகள் (sanctions), நீண்டகால முக்கியத்துவம் வாய்ந்த அதிநவீன தொழில்நுட்பங்களை (home-grown strategic tech) சுயமாக உருவாக்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டின. இதைத் தொடர்ந்துதான் விக்ரம் வரிசை சிப்வடிவமைப்பு உற்பத்தி எனும் தற்சார்பு நிலையை இஸ்ரோ கைக்கொண்டது. அதன் முதிர்ந்த நிலையே விக்ரம் 3201 உருவாக்கம்.

செமிகாண் இந்தியா 2025 கண்காட்சியில் பிரதமர் மோதியிடம் அளிக்கப்பட்ட விக்ரம் 3201 சிப், தடைகளை முறியடித்துத் தன்னிறைவுக்கு எடுத்துச் சென்ற இந்திய அறிவியல் தொழில்நுட்பச் சாதனையைப் பறைசாற்றுகிறது எனலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy8r4jz0dgmo

டைனோசர்களை அழித்தொழித்த விண்கல் மோதல் - மீண்டும் பூமியில் நிகழுமா?

2 weeks 1 day ago

பூமியில் டைனோசர்களின் பேரழிவுக்கு வித்திட்ட விண்கல் மோதல் மீண்டும் நடக்குமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்

  • முன்னாள் விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று, குஜராத்தில் உள்ள கட்ச் பகுதியின் மேலே நாசாவின் செயற்கைக்கோளான லான்சாட் 8 பறந்தது. அப்போது அதில் திகைக்க வைக்கும் ஒரு காட்சி பதிவானது.

அங்கு 1.8 கி.மீ விட்டம், 6 மீட்டர் ஆழம் கொண்ட, கின்னம் போன்ற ஒரு பள்ளம் இருப்ப அந்த செயற்கைக்கோள் பதிவு செய்தது. கிட்டத்தட்ட துல்லியமான வட்ட வடிவில் இயற்கையான பள்ளம் உருவாகாது.

பின்னர் அது எப்படி ஏற்பட்டது என்பதை ஆராய்ந்தபோது, சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கு வந்து விழுந்த ஒரு விண்கல் ஏற்படுத்திய குழியே அந்தப் பள்ளம் என்பது தெரிய வந்தது.

இத்தகைய விண்கல் மோதல்கள் பூமியில் எவ்வளவு அதிகமாக நிகழ்கின்றன? அவற்றால் என்ன ஆபத்து? பூமியில் டைனோசர்களின் இருப்பை அழித்த அளவுக்குப் பேரழிவை ஏற்படுத்தவல்ல விண்கல் மோதல் மீண்டும் நிகழுமா?

ரஷ்யாவை நிலைகுலைய வைத்த விண்கல் வெடிப்பு

Play video, "பூமியில் மீண்டுமொரு பேரழிவை உண்டாக்கும் விண்கல் மோதல் நிகழ வாய்ப்புள்ளதா?", கால அளவு 7,57

07:57

p0lzy0fz.jpg.webp

காணொளிக் குறிப்பு,

கடந்த 2013ஆம் ஆண்டு ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் பகுதியில் திடீரென வானத்தில் பிரகாசமான நெருப்புக் கோளம் தெரிந்தது.

அதை மக்கள் அனைவரும் வியப்பாகப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், பூமியின் வளிமண்டலத்திற்குள் பறந்து வந்த அந்த நெருப்புக் கோளம் சுமார் 30கி.மீ உயரத்தில் வெடித்தது.

அந்த வெடிப்பினால் காற்று விரிவடைந்து, அதிர்வலைகள் உருவாகிப் பரவின. சுமார் பல கிலோமீட்டர் பரப்பளவில் 8,000 வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த கண்ணாடிகள் உடைந்து சிதறின, கட்டடங்கள் அதிர்ந்தன, கூரைகள் பிய்ந்து பறந்தன.

உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், 1,500 பேர் கடுமையாகக் காயமடைந்தனர். இதன் பின்னணியை ஆராய்ந்தபோது, சுமார் 9,000 டன் எடைகொண்ட, 20 மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல் பூமியை நோக்கி வந்துள்ளது.

சுமார் 100கி.மீ சுற்றளவில் இருந்தவர்களுக்கு இந்தக் காட்சி தெளிவாகத் தென்பட்டுள்ளது. அதில் சிலர் சூரியனைவிட அதிக பிரகாசத்தில் அது தெரிந்ததாக தெரிவித்தார்கள். அதன் பாதைக்கு அருகில் இருந்த சிலர், அது கடந்து சென்றபோது வெப்பமாக உணர்ந்ததாகக் கூறினார்கள்.

அந்தப் பகுதியில் பிறகு தேடிப் பார்த்தபோது, கோழிகுண்டு அளவிலான, வெடிப்பில் சிதறிய அந்த விண்கல்லின் சிறுசிறு துண்டுகள் கிடைத்தன.

பூமியில் டைனோசர்களின் பேரழிவுக்கு வித்திட்ட விண்கல் மோதல் மீண்டும் நடக்குமா?

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, ரஷ்யாவில் 2013ஆம் ஆண்டு 100 கி.மீ பரப்பளவுக்கு இந்த விண்கல் வெடிப்பு தெளிவாகத் தெரிந்தது

வியாழன், செவ்வாய் ஆகிய கோள்களுக்கு இடையே சுற்றிக்கொண்டிருந்த ஒரு விண்கல்தான் பாதை மாறி பூமியை நோக்கி வந்தது என்றும், அதுவே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

வியாழன் கோளின் ஈர்ப்புவிசையால் சிறிதளவு தள்ளப்பட்ட அந்தப் பெரிய விண்கல், பாதை விலகி பூமியை நோக்கிய திசையில் பயணிக்கத் தொடங்கியது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

பூமியின் மேற்பரப்பில் இருந்து 30கி.மீ தொலைவில் இந்த விண்கல் வெடித்த நிகழ்வில், கிட்டத்தட்ட 400-500 கிலோ டன் டி.என்.டி வெடிபொருட்களுக்கு நிகரான ஆற்றல் இதிலிருந்து வெளிப்பட்டதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.

இதேபோல, 1908ஆம் ஆண்டில் சைபீரிய பகுதியில் உள்ள துங்குஸ்கா என்ற இடத்தில் ஒரு சம்பவம் நடந்ததாகக் கருதப்படுகிறது.

துங்குஸ்காவில் மோதிய விண்கல் 65 மீட்டர் விட்டம் கொண்டது. செல்யாபின்ஸ்க் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்திய விண்கல் 20 மீட்டர் விட்டமுள்ளது.

இவை, நியுயார்க் நகரின் 443 மீட்டர் உயரமுள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடம், பாரிஸில் உள்ள 324 மீட்டர் உயரமான ஐபில் டவர் ஆகியவற்றைவிடச் சிறிதாகத் தெரியலாம்.

ஆனால், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு ஏற்ப, மிக அதிக அளவிலான ஆற்றலை வெளிப்படுத்தி, சேதங்களை விளைவித்தன.

பூமியில் டைனோசர்களின் பேரழிவுக்கு வித்திட்ட விண்கல் மோதல் மீண்டும் நடக்குமா?

படக்குறிப்பு, வியாழன், செவ்வாய் ஆகிய கோள்களுக்கு இடையே சுற்றி வந்த ஒரு விண்கல் பாதை மாறி பூமியை நோக்கி வந்ததே 2013 ரஷ்யா நிகழ்வுக்குக் காரணம்

டைனோசர்களின் பேரழிவுக்கு வித்திட்ட சம்பவம்

பூமியில் பல்வேறு காலகட்டங்களில் அவ்வப்போது இவ்வாறான விண்கற்கள் விழுந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படித்தான் சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பும் ஒரு சம்பவம் நடந்தது.

அப்போது, மெக்சிகோவின் கிழக்கு கடல் பகுதியில் 10-15கி.மீ விட்டம் கொண்ட ஒரு மிகப் பிரமாண்டமான விண்கல் பூமியில் மோதியது. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட பிரளயத்தில் அதுவரை கோலோச்சி வந்த டைனோசர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.

அவை மட்டுமல்ல, 25 கிலோவுக்கும் மேல் எடை இருக்கக்கூடிய நீர், நிலவாழ் பெரிய உயிரினங்கள் அனைத்துமே அழிக்கப்பட்டன. ஆனால், விண்கல் மோதலால் இதுபோன்ற பிரளயங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிக மிக அரிது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் கூறிய குஜராத் பள்ளத்தைப் போல பூமியில் சுமார் 200 இடங்களில் விண்கல் விழுந்தமைக்கான வடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவற்றை ஆராய்ந்து, பூமியில் விண்கல் விழுவதற்கான வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.

பல தருணங்களில் வானத்தில் எரிகல் நிகழ்வுகளைக் கண்டிருப்போம். அதாவது வானில் நிறைய ஒளிக்கீற்றுகள் தென்படுவதைப் பார்த்திருப்போம். அவை எரிகல் பூமியில் விழும் நிகழ்வின் விளைவு.

சின்னச் சின்ன அளவிலான எரிகற்கள் பூமியில் வந்து விழுவதையே எரிகல் நிகழ்வு என்று குறிப்பிடுகிறார்கள். இப்படியான எரிகற்கள் ஒரு நாளைக்குப் பல வந்து விழும். ஆனால், புவி வளிமண்டலத்தில் உள்ள காற்றின் மீது உராயும்போது அவை எரிந்துவிடுகின்றன.

எடுத்துக்காட்டாக, உங்கள் இரு கைகளையும் சேர்த்து நன்கு தேய்த்துப் பாருங்கள். கை சூடாவதை உணர்வீர்கள் அதுதான் உராய்வு. அதேபோல எரிகற்கள் காற்றுடன் உராய்கின்றன. அப்போது ஏற்படும் வெப்பம் அவற்றை எரித்து விடுகின்றன. அப்படி எரிவதுதான் ஒளிக்கீற்றாக வானில் தென்படுகிறது.

பூமியில் டைனோசர்களின் பேரழிவுக்கு வித்திட்ட விண்கல் மோதல் மீண்டும் நடக்குமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டைனோசர்களின் பேரழிவுக்கு வித்திட்ட அளவிலான விண்கல் சில கோடி ஆண்டுகளில் ஒருமுறை என மிக மிக அரிதாகவே நடப்பதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

பூமியில் தினசரி விழும் விண்கற்கள்

ஒரு நாளைக்கு 44,000 கிலோ விண்கற்கள் பூமியில் வந்து விழுகின்றன. சின்னச் சின்ன மணல், கல் போன்ற எரிகற்கள் பூமியில் தினசரி வந்து விழுகின்றன.

ஆனால், 50 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு விண்கல் பூமியை நோக்கி வந்தாலும்கூட, அது வளிமண்டலத்திலேயே எரிந்து சாம்பலாகிவிடும். அதுதான் ரஷ்யாவிலும் நடந்தது.

ஒருவேளை சுமார் 75மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல் பூமியில் மோதினால், அதனால் ஒரு சிறிய நகரை தரைமட்டமாக்க முடியும். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழக்கூடும்.

அதேநேரம், நூறு முதல் ஆயிரம் மெகாடன் ஆற்றலை வெளிப்படுத்தவல்ல சுமார் 160 மீட்டருக்கும் அதிகமான விட்டத்தைக் கொண்ட ஒரு விண்கல் பூமியில் மோதினால், சென்னை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களே தரைமட்டமாகிவிடும்.

இருப்பினும் கணிப்புகளின்படி, இத்தகைய சம்பவங்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடக்க வாய்ப்புள்ளது.

பூமியில் விழுந்தால் ஒரு மாவட்டத்தையே அழித்துவிடும் அளவிலான, சுமார் ஆயிரம் முதல் பத்தாயிரம் மெகாடன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டுமெனில், ஒரு விண்கல் 350 மீட்டருக்கும் மேல் பெரிதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடப்பதற்கான வாய்ப்பு 15,000 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் என்று கணிப்புகள் கூறுகின்றன.

பூமியின் அரணாகச் செயல்படும் நிலா

இதுபோன்ற விஷயங்களில் பூமியின் பாதுகாப்பு அரணாக நிலா செயல்படுகிறது. பூமிக்கு வரும் அடிகளைத் தாங்கிக் கொள்வதன் மூலம் பெரும் பகுதி விண்கல் மோதல்கள் நிகழாமல் அது தடுக்கிறது.

பூமியின் பக்கமாக வரக்கூடிய விண்கற்களைத் தன் பக்கம் ஈர்த்து, அந்த அடிகளைத் தானே தாங்கிக் கொள்கிறது. அதனால்தான் நிலவில் விண்கல் மோதல்களால் உருவான கின்னக் குழிகள் இருக்கின்றன.

புவியில் இருந்து பார்த்தால் தெரியாத நிலாவின் மறுபக்கத்தில் பார்த்தால் பிரமாண்டமான கின்னக் குழிகள் இருக்கின்றன. அவையெல்லாம் பூமியில் மோதிவிடாமல் நிலா பாதுகாத்து நிற்கிறது.

இந்தக் காரணத்தால், டைனோசர்களையே அழித்த 10-15கி.மீ விட்டம் கொண்ட பிரமாண்ட விண்கல் பூமியின் மீது மோதுவதற்கான வாய்ப்புகள் சில கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறைதான்.

ஆனாலும், அப்படிப்பட்ட ஓர் ஆபத்து வர வாய்ப்புள்ளதா என்பதை முன்னமே தெரிந்துகொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் விஞ்ஞானிகள் உள்ளனர்.

அதற்காக, பூமிக்கு அருகிலுள்ள விண்கற்கள் அனைத்தும், எந்தத் திசையில் நகர்கின்றன, பூமியில் மோத வாய்ப்புள்ளதா என்பனவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czxplqyk096o

உயிர்கள் வாழ இன்னொரு இடம்? - பூமிக்கு அருகே வாயு கோளத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்

3 weeks 4 days ago

புதிய கோள் கண்டுபிடிப்பு, விண்வெளி ஆராய்ச்சி, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி

பட மூலாதாரம், NASA, ESA, CSA, STSCI, R. HURT (CALTECH/IPAC)

படக்குறிப்பு, ஆல்ஃபா சென்டாரி ஏ-வைச் சுற்றி வரும் ஒரு வாயு கோளின் மாதிரி படம். வலது மற்றும் இடது புறம் உள்ள இரு பிரகாசமான நட்சத்திரங்களின் மத்தியில் புள்ளியாக உள்ள சிறிய ஒளி தான் நமது சூரியன்

கட்டுரை தகவல்

  • ஜார்ஜினா ரன்னார்ட்

  • அறிவியல் செய்தியாளர்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

நமது சூரிய மண்டலத்திற்கு அருகிலுள்ள நட்சத்திர அமைப்பில் ஒரு பிரம்மாண்ட வாயு கோள் இருப்பதற்கான வலுவான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நான்கரை ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த உயிரற்ற கோள், வானியல் அடிப்படையில் பூமிக்கு நெருக்கத்தில் உள்ள அண்டை கோளாக இருக்கும் என்பதுடன் உயிரைத் தாங்கக்கூடிய நிலவுகளைக் கொண்டிருக்கலாம்.

இந்த அறிகுறிகள், ஆல்ஃபா சென்டாரி நட்சத்திர அமைப்பில், சக்திவாய்ந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டன.

இந்த சாத்தியமான கோள் கடந்த ஆண்டு (2024 ஆகஸ்ட்) கண்டறியப்பட்டது, ஆனால் அதன் பின்னர் பார்வையிட்டபோது அது மறைந்துவிட்டது. இந்தக் கோள் நிச்சயமாக இருப்பதை உறுதிபடுத்த வானியலாளர்கள் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

சூரிய குடும்பத்தைச் சேராத இந்தக் கோளின் நட்சத்திரத்திற்கும் நமது சூரியனுக்கும் ஒற்றுமைகள் இருப்பதால், இந்த கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.

"நான்கு ஆண்டுகள் என்பது நீண்ட தூரம், ஆனால் பால்வெளி அளவில் இது மிக அருகில் உள்ளது - இது நமது அண்டைப் பகுதியில் உள்ளது," என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் விண்வெளி கருவிகள் இணைப் பேராசிரியர் டாக்டர் கார்லி ஹோவெட் கூறினார்.

புதிய கோள் கண்டுபிடிப்பு, விண்வெளி ஆராய்ச்சி, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, வியாழனின் நிலவான யூரோப்பாவின் சித்தரிப்புப்படம், இதன் கடல் பகுதியில் உயிரின் அறிகுறிகள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்

மேலும் அவர், "இது சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி உள்ளது, அதே வெப்பநிலையும் பிரகாசமும் கொண்டது. வாழக்கூடிய உலகங்களைப் பற்றி நாம் சிந்திக்க விரும்பினால் இது மிகவும் முக்கியமானது," என்று தெரிவித்தார்.

இந்தக் கோள், நமது சூரிய மண்டலத்தின் வாயு கோள்களான சனி மற்றும் வியாழனைப் போன்று இருக்கும், மேலும் அடர்த்தியான வாயு மேகத்தால் சூழப்பட்டிருக்கும்.

அதாவது, இந்தக் கோளில் உயிர்கள் இருக்க முடியாது. ஆனால் அதைச் சுற்றி வரும் நிலவுகள் உயிர்கள் வாழக்கூடியவையாக இருக்கலாம்.

நமது சூரிய மண்டலத்தில் உள்ள வியாழன் மற்றும் பிற கோள்களில் பனியால் ஆன நிலவுகள் உள்ளன, அவை உயிரைத் தாங்கக்கூடியவை என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இந்த சாத்தியத்தை தற்போது யூரோப்பா கிளிப்பர் மற்றும் ஜூஸ் என்கிற விண்வெளி ஆய்வு திட்டங்களின் மூலம் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த கோள்கள் நமது சூரியனிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. ஆனால், இந்த "புதிய" கோள் ஒப்பீட்டளவில் அதன் நட்சத்திரத்திற்கு அருகில் உள்ளது.

புதிய கோள் கண்டுபிடிப்பு, விண்வெளி ஆராய்ச்சி, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (கோப்புப்படம்)

தொலைதூரப் பொருட்களை புகைப்படம் எடுப்பதற்கு தற்போது விஞ்ஞானிகள் வசம் இருக்கும் கருவியான ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் நேரடி படமாக்கல் மூலம் இந்த அறிகுறிகள் கண்டறியப்பட்டன.

"இந்த நட்சத்திரங்கள் மிகவும் பிரகாசமாகவும், அருகிலும் வானத்தில் வேகமாக நகரக்கூடியவையாகவும் இருப்பதால், உலகின் மிக சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தினாலும் இந்த அவதானிப்புகளை மேற்கொள்வது மிகவும் சவாலானது," என்று நாசாவின் ஜெட் ப்ரொபல்ஷன் ஆய்வகத்தைச் சேர்ந்தவரும் இந்த புதிய கண்டுபிடிப்புகளின் இணை ஆசிரியருமான சார்லஸ் பைச்மேன் கூறினார்.

இந்த நட்சத்திரங்கள் பெருமளவு பிரகாசமான ஒளியை உருவாக்குகின்றன, இது அருகிலுள்ள பொருட்களை மறைக்கக்கூடும்.

அதனால் தான் இந்தக் கோள் 2024 ஆகஸ்டில் ஒரு முறை கண்டறியப்பட்ட பிறகு மீண்டும் தேடியபோது மறைந்துவிட்டதாகத் தோன்றியிருக்கலாம்.

"ஒருவேளை அந்த கோள் நட்சத்திரத்தின் பின்னால் இருந்திருக்கலாம் அல்லது பார்க்க முடியாத அளவுக்கு அருகில் இருந்திருக்கலாம். இதற்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை," என்று டாக்டர் ஹோவெட் கூறினார்.

வானியலாளர்கள் இப்போது இந்தக் கோளை பற்றிய புதிய அறிகுறிகளைத் தேடுவார்கள். இதற்கு, 2027இல் செயல்பாட்டிற்கு வரவிருக்கும் புதிய நாசா தொலைநோக்கியான கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கியை பயன்படுத்த முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் எதிர்கால ஆய்வுகள், ஸ்பெக்ட்ரல் இமேஜிங் என்கிற முறை மூலம் இந்த கோள் எதனால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி நமக்கு தெரிவிக்க முடியும்.

இது, கோளின் தோற்றம் மற்றும் அதைச் சுற்றி வரும் நிலவுகளின் வாழக்கூடிய தன்மை பற்றி மிகவும் விரிவான தகவல்களை வழங்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0j9vygzn60o

விளையாட்டுகள் பெண் உடலில் தனித்துவமான வகையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் குழுக்கள் ஆய்வு

1 month 1 week ago

வீராங்கனைகளின் மார்பகங்களும் மாதவிடாயும் விளையாட்டு திறனை எப்படி பாதிக்கின்றன?

யூரோ 2022 இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் பிரிட்டன் வீராங்கனை

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, UEFA மகளிர் யூரோ 2022 இறுதிப் போட்டியில் தனது கோலை கொண்டாடுகிறார் பிரிட்டன் வீராங்கனை க்ளோய் கெல்லி

5 மணி நேரங்களுக்கு முன்னர்

பெண்கள் விளையாட்டில் ஒரு முக்கிய கோடையில் யூரோ கோப்பை போட்டிகள் முடிவை எட்டிக்கொண்டிருக்கின்றன.

ஆனால், ஆடுகளத்தின் உணர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் உற்சாகத்திலிருந்து விலகி, ஒரு அறிவியல் புரட்சியும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

உயர் அளவில் விளையாடப்படும் விளையாட்டுகள் பெண் உடலில் தனித்துவமான வகையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. மார்பகங்கள் ஒருவர் ஓடும் விதத்தை எப்படி மாற்றுகின்றன, ஆனால் சரியான ஸ்போர்ட்ஸ் பிரா உங்களுக்கு சற்று சாதகத்தை தரலாம்; செயல்திறன் மீது மாதவிடாய் சுழற்சியின் தாக்கம், மாதவிடாய் கண்காணிப்பு கருவிகள் என்ன பங்காற்றமுடியும்; சில காயங்கள் ஏற்படுவதற்கான அபாயம் கூடுதலாக இருப்பதற்கு காரணம் என்ன, அவற்றை தவிர்க்க என்ன செய்யலாம்?

தொழில்முறை விளையாட்டு வீராங்கனைகள் தாங்கள் "மினி ஆண்களாக" கருதப்பட்டதாக என்னிடம் கூறிய காலத்திலிருந்து இது மிகவும் வேறுபட்டது.

மார்பக இயங்கியல் (Breast biomechanics)

கால்பந்தாட்ட வீராங்கனைகள் கொண்டாட்டம்

பட மூலாதாரம், GETTY IMAGES

2022ஆம் ஆண்டு நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியின் பிரபலமான காட்சியை நினைவுகூருங்கள்.

வெம்ப்லி மைதானத்தில் போட்டியின் கூடுதல் நேரத்தில் பிரிட்டன் வீராங்கனை க்ளோய் கெல்லி ஜெர்மனிக்கு எதிரான வெற்றி கோலை அடித்தார்.

இதைத் தொடர்ந்த வெற்றிக்கொண்டாட்டத்தில், அவர் தனது பிரிட்டன் சட்டையை கழற்றி தனது ஸ்போர்ட்ஸ் பிராவை உலகுக்கு காட்டினார்.

இதை வடிவமைத்தவர் "பிரா ப்ரொஃபசர்" என்ற புனைப்பயரால் அழைக்கப்படும் போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜோனா வேக்ஃபீல்ட்-ஸ்கர்.

இதோ மார்பகங்கள் பற்றிய அவரது தகவல்கள்

  • ஒரு கால்பந்தாட்ட போட்டியின் போது மார்பகங்கள் சராசரியாக 11,000 முறை மேலும்கீழுமாக அசையக்கூடும் (bounce)

  • உரிய ஆதரவு இல்லாவிட்டால் ஒரு பவுன்ஸின் சராசரி அளவு 8 சென்டிமீட்டர் (3 அங்குலம்)

  • அவை 5ஜி விசையுடன் (புவியீர்ப்பு விசையைவிட ஐந்து மடங்கு அதிகம்) நகர்கின்றன. இது ஃபார்முலா 1 கார் ஓட்டுநரின் அனுபவத்துக்கு ஒப்பானது.

மார்பின் மீது நகர்வுகளை அளவிடும் மோஷன் சென்சார்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வக சோதனைகள், நகரும் மார்பக திசுக்களின் எடை உடலின் மற்ற பாகங்களின் செயல்பாட்டை எப்படி மாற்றுகின்றன என்பதையும், அவ்வாறு மாற்றப்படும் செயல்பாடு விளையாட்டு திறனை எப்படி பாதிக்கிறது என்பதையும் காட்டியுள்ளன.

"சில பெண்களுக்கு அவர்களது மார்பகம் அதிக எடையுள்ளதாக இருக்கலாம், அவை நகர்ந்தால், அது அவர்களது உடல் நகர்வை மாற்றக்கூடும், களத்தில் அவர்கள் வெளிப்படுத்தும் விசையின் அளவைக் கூட அது மாற்றக்கூடும்," என வேக்ஃபீல்ட்-ஸ்கர் என்னிடம் தெரிவித்தார்.

போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகம், உடற்பயிற்சியின் போது மார்பக திசு இயக்கத்தைக் கண்காணிக்க மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

பட மூலாதாரம், UNIVERSITY OF PORTSMOUTH

படக்குறிப்பு, போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகம், உடற்பயிற்சியின் போது மார்பக திசு இயக்கத்தைக் கண்காணிக்க மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

உடலின் மேற்பகுதி நகர்வுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் மார்பகங்கள் மேலும்கீழுமாக அசைவைதை ஈடுகட்டுவது, இடுப்பு இருக்கும் நிலையை மாற்றி, எடுத்துவைக்கும் ஒவ்வொரு எட்டின் நீளத்தை குறைக்கிறது. அதனால்தான் ஸ்போர்ட்ஸ் பிராக்கள் வசதிக்கும், ஃபேஷனுக்கும் மட்டுமல்லாது செயல்திறனை அதிகரிக்கும் ஒரு கருவியாகவும் இருக்கின்றன.

"மார்பகங்களுக்கு குறைவான ஆதரவு இருந்தால், அது எடுத்துவைக்கும் அடியின் நீளத்தை நான்கு சென்டிமீட்டர் குறைத்ததை நாங்கள் பார்த்தோம்," என விளக்குகிறார் வேக்ஃபீல்ட்-ஸ்கர்.

"ஒரு மாரத்தானில் நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் நான்கு சென்டிமீட்டரை இழந்தால் அது மொத்தமாக ஒரு மைலாக கணக்காகிறது."

ஸ்போர்ட்ஸ் பிராக்கள் மார்பின் உள்ளே இருக்கும் மென்மையான அமைப்புகளையும் பாதுகாக்கின்றன, "நாம் அவற்றை நீட்டினால் அவை நிரந்தரமாகிவிடும்," என்கிறார் அந்த பேராசிரியர், எனவே "இது குணப்படுத்துவதைவிட, நிகழாமல் தடுப்பதில் இருக்கிறது."

மாதவிடாய் சுழற்சியும், செயல்திறனில் அதன் தாக்கமும்

காலி ஹாகர்-தாக்கரி, பிரிட்டன் தொலைதூர ஓட்ட வீராங்கனை

பட மூலாதாரம், CALLI HAUGER-THACKERY

படக்குறிப்பு, காலி ஹாகர்-தாக்கரி, பிரிட்டன் தொலைதூர ஓட்ட வீராங்கனை

மாதவிடாய் சுழற்சி உடலின் மீது தெளிவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது உணர்வுகளையும், மனநிலையையும், தூக்கத்தையும் பாதிக்கக்கூடும் என்பதுடன் களைப்பு, தலைவலி மற்றும் பிடிப்புகளை (cramps) உண்டாக்கலாம்.

ஆனால், விளையாட்டின் மீது மாதவிடாயின் தாக்கத்தை பற்றி பேசுவது "இன்னமும் விலக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், இன்னமும் அதனுடன் போராடிக்கொண்டிருப்பதால் அதை பற்றி பேசுவது விலக்கிவைக்கப்பட்டதாக இருக்கக்கூடாது," எனவும் ஒலிம்பிக்கில் கிரேட் பிரிட்டன் சார்பாக பங்கேற்ற தொலைதூர ஓட்ட வீராங்கனை காலி ஹாகர்-தாக்கரி சொல்கிறார்.

மாதவிடாய் நெருங்கும்போது தனது உடலில் ஏற்படும் மாற்றங்களை எப்போதும் உணர்வதாக சொல்கிறார் காலி.

"நான் சோர்வாக உணர்கிறேன், கால்கள் கனமாக இருக்கின்றன, சில நேரங்களில் கிட்டத்தட்ட சேற்றில் ஓடுவதைப் போல் உணர்கிறேன், எல்லாமே வழக்கத்தை விட கூடுதல் முயற்சி தேவைப்படுவதாக இருக்கின்றன," எனகிறார் அவர்.

தனது மாதவிடாய் கண்காணிப்பு கருவியின் அடிப்படையில் தனது வாழ்க்கையை வாழ்வதாகவும், மாதவிடாய் நேரம் "குறிப்பாக பெரிய பந்தயங்கள் வரும்போது" தனக்கு கவலையளிப்பதாகவும் உணர்கிறார்.

அப்படி ஒரு பெரிய பந்தயம், பாஸ்டன் மாரத்தான், ஏப்ரலில் நடைபெற்ற போது அவரது மாதவிடாய் காலம். அப்போட்டியில் அவர் ஆறாவது இடத்தை பிடித்தார். "அதிர்ஷ்டவசமாக அதை கடந்ததாக" நினைவுகூரும் அவர், அதே நேரம் தன்னால் இதைவிட சிறப்பாக செய்திருக்க முடியுமா என்பதை சிந்திக்காமல் இருக்க முடியவில்லை என கூறுகிறார்.

மாதவிடாய் சுழற்சி. இரண்டு ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் ஆகியவற்றின் ஏற்ற இறக்கங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது விளையாட்டு செயல்திறன் மீது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்?

"அது தனிநபர் சார்ந்தது என்பதுடன் இதில் பல நுணுக்கங்கள் உள்ளன. மாதவிடாய் சுழற்சி செயல்திறனை பாதிக்கிறது என வெறுமனே சொல்லிவிடும் அளவு எளிதானது அல்ல," என்கிறார் மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தில் பெண் உட்சுரப்பியல் மற்றும் உடற்பயிற்சி உடலியல் நிபுணரான பேராசிரியர் கிர்ஸ்டி எலியட்-சேல்.

"போட்டிகள், தனிப்பட்ட சிறந்த செயல்பாடு, உலக சாதனை, எல்லாம் படைக்கப்பட்டுள்ளன, மாதவிடாய் காலத்தின் ஒவ்வொரு நாளிலும் வெல்லப்பட்டு, இழக்கப்பட்டுள்ளன," என்கிறார் அவர்.

இதில், 2022 சிகாகோவில் நடைபெற்ற மாரத்தானில் மாதவிடாயால் ஏற்பட்ட பிடிப்புகளுடன் ஓடி உலக சாதனையை முறியடித்த பவுலா ராட்கிளிஃப்பும் அடங்கும்.

மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிர்ஸ்டி எலியட்-சேல்

படக்குறிப்பு, மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிர்ஸ்டி எலியட்-சேல்

மாதவிடாய் சுழற்சி விளையாட்டு திறனை பாதிக்கிறதா என்பதை அறிய, ஹார்மோன்களால் உடல் முழுவதும் ஏற்படும் உடலியல் மாற்றங்கள், மாதவிடாய் அறிகுறிகளுடன் செயல்படுவதிலுள்ள சவால், மாதவிடாய் நேரத்தில் போட்டியிடும் மன உளைச்சல் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் இவை அனைத்தைப் பற்றிய பார்வைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

"ஒருவர் வலுவாகவோ அல்லது பலவீனமாகவோ இருக்கும் ஒரு கட்டமோ, அவர் வெல்வார் அல்லது தோல்வியடைவார் என்ற கட்டமோ கிடையாது என பேராசிரியர் எலியட்-சேல் சொல்கிறார். ஆனால் கோட்பாட்டு அடிப்படையில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் எலும்பு, தசை அல்லது இதயம் போன்ற உடல் பகுதிகளை மாற்றலாம்.

"நாம் இன்னமும் புரிந்துகொள்ளாதது இதுதான்: இது உண்மையில் செயல்திறனை பாதிக்கும் அளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறதா?," என்கிறார் அவர்.

"தூக்கமின்மை, களைப்பு மற்றும் பிடிப்புகள் செயல்பாட்டை பாதிக்கும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முடிவு, தங்கள் மாதவிடாயின்போது ஒரு பெரிய கூட்டத்தின் முன் விளையாடவுள்ள வீராங்கனைகளுக்கு ஏற்படும் பயமும் கவலையும் "முற்றிலும் உணரக்கூடிய நிலையில் உள்ள ஒன்று என அந்த பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

கசிவு அபாயம் மற்றும் அதனால் ஏற்படும் சங்கடங்களை தவிர்க்க மும்மடங்கு மாதவிடாய் உள்ளாடைகளை அணிந்துகொள்ளும் வீராங்கனைகளுடன் பேசியிருக்கும் அவர், "அது ஒரு பெரிய மன பாரம்." என கூறுகிறார்.

கேட்டி டேலி-மெக்லீன், பிரிட்டனின்  மிக அதிக புள்ளிகளைப் பெற்ற ரக்பி வீராங்கனை

படக்குறிப்பு, கேட்டி டேலி-மெக்லீன், பிரிட்டனின் மிக அதிக புள்ளிகளைப் பெற்ற ரக்பி வீராங்கனை

சேல் ஷார்க்ஸ் வுமென் ரக்பி அணி, மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

நான் முன்னாள் பிரிட்டன் ரக்பி கேப்டனும், இங்கிலாந்து அணியின் மிக அதிக புள்ளிகளை குவித்தவருமான கேட்டி டேலி-மெக்லீனை சந்தித்தேன்.

மாதவிடாய் ஏற்படுத்த வாய்ப்புள்ள தாக்கத்தைப் பற்றியும் அதற்கு எப்படி திட்டமிடுவது என்பது பற்றியும் அவர்கள் புரிந்துகொள்ள அணி வெளிப்படையான ஆலோசனைகளை நடத்திவருகின்றன. "இதைப்பற்றி நான் செய்வதற்கு ஒன்றுமில்லை." என நினைப்பதற்கு பதிலாக மூன்று நாட்களுக்கு முன்பே இப்யூபுரூஃபன் மாத்திரிகளை எடுத்துக்கொள்வது இதில் அடங்கும்." என்கிறார் டேலி-மெக்லீன்.

"இந்த புரிதல் மற்றும் தகவல் மூலம்தான் நாம் இதைப் பற்றி பேசமுடியும், திட்டங்களை வகுத்து, ஒருவரை மேலும் சிறந்த ரக்பி வீரராக மாற்ற அவரது நடத்தையை மாற்றலாம்," என அவர் சொல்கிறார்.

காயங்களை தவிர்ப்பது எப்படி?

பெண்கள் விளையாட்டுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுவதால் தெரியவந்திருக்கும் ஒரு விஷயம் சில காயங்கள் ஏற்படுவதற்கான் வாய்ப்பில் ஏற்பட்ட மாற்றம்.

காலின் மேல் மற்றும் கீழ் பகுதியை இணைக்கும் பகுதியான முன்புற சிலுவை தசைநார் (ACL) மீதுதான் பெரும்பகுதி கவனம் செலுத்தப்படுகிறது. இதில் ஏற்படும் காயங்கள் மிகவும் மோசமானதாக இருப்பதுடன், இவற்றிலிருந்து மீண்டுவருவதற்கு ஓராண்டு ஆகலாம்.

பங்கேற்கும் விளையாட்டைப் பொறுத்து இந்த காயங்கள் ஏற்படுவதற்கான அபாயம் ஆண்களை விட பெண்களுக்கு எட்டு மடங்கு அதிகம் என்பது மட்டுமல்லாமல், அவை மிகவும் சாதரணமாகி வருகின்றன என்கிறார், மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு இயங்கியல் ஆய்வாளர் தாமஸ் டாஸ்'சான்டோஸ்.

ஆனால், பெண்களுக்கு அதிக அபாயம் ஏற்படுவதை விளக்க "எளிதான விளக்கம்," ஏதும் இல்லை, என்கிறார் அவர்.

உடற்கூற்றில் இருக்கும் வேறுபாடுகள் இதற்கு காரணமாக இருக்கலாம். பெண்களுக்கு பெரிய இடுப்புகள் இருப்பதால், தொடை எலும்பின் மேற்பகுதி மேலும் அகலமான ஒரு நிலையிலிருந்து தொடங்குவதால் முழங்காலில் காலின் கீழ்பகுதியுடன் இணையும் கோணத்தை மாற்றுகிறது, இது காயங்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

பெண்களில் ACL சற்றே சிறியதாக இருக்கிறது, எனவே அது சற்றே பலவீனமாக இருக்கலாம்," என முனைவர் டாஸ்'சான்டோஸ் விளக்குகிறார்.

முனைவர் தாமஸ் டாஸ்’சான்டோஸ், மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம்

படக்குறிப்பு, முனைவர் தாமஸ் டாஸ்'சான்டோஸ், மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம்

ACL காயங்கள் மாதவிடாய் சுழற்சியின் அனைத்து கட்டத்திலும் ஏற்படலாம், ஆனால், உலக அளவில் கால்பந்தாட்டத்தை நிர்வகிக்கும் ஃபிஃபா நிதியுதவியுடன் நடத்தப்படும் ஆய்வு உட்பட பல ஆய்வுகளால் ஹார்மோன் மாற்றங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

மாதவிடாய்க்கு முன் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருப்பது தசைநார்களின் பண்புகளை மாற்றலாம். இது அவற்றின் நீட்டிக்கப்படக்கூடும் தன்மையை அதிகரிக்கிறது, அதனால் காயமடையும் அபாயம் கோட்பாட்டளவில் அதிகமாக இருக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.

ஆனால், ஆண்களுக்கு இணையான தரத்தில் ஆதரவும், வலுப்படுத்தும் பயிற்சிகளையும் பெண்கள் இன்னும் பெறுவதில்லை என்பதால் தூய உடற்கூறியலைத் தாண்டி சிந்திப்பது முக்கியம் என்று டாஸ்'சான்டோஸ் வாதிடுகிறார்.

அவர் அதை நடன கலைஞர்கள் தரமான பயிற்சியை பெறும் பாலே நடனத்துடன் ஒப்பிடுகிறார், "ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான காய விகிதத்தில் இருக்கும் வேறுபாடு அடிப்படையில் பொருட்படுத்தத்தக்கதல்ல," என்று டாஸ்'சான்டோஸ் கூறுகிறார்.

சற்றே வித்தியாசமான முறைகளில் நகர விளையாட்டு வீராங்கனைகளுக்கு பயிற்சியளிப்பதன் மூலம் ACL காயங்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க முடியுமா என்பது பற்றிய ஆய்வுகள் இருக்கின்றன.

ஆனால், இதன்மூலம் செயல்திறன் குறையும் அபாயம் உள்ளது. தடுப்பாட்டக்காரரை ஏமாற்ற தோளை தாழ்த்திவிட்டு பிறகு வேறொரு திசையில் பாய்வது கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளில் அவசியமானது. இதைப் போன்ற நுட்பங்கள் ACL மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

"நாம் அவற்றை மறைத்துவிட்டு விளையாட்டு விளையாடுபவரை தவிர்க்க வேண்டும் என சொல்ல முடியாது," என்கிறார் டாஸ்'சாண்டோஸ்.

"அந்தச் சுமைகளை தாங்குமளவு அவர்கள் வலிமையாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்வதுதான் நாம் செய்யவேண்டியது, நாம் 100% ACL காயங்களை நீக்கிவிடலாம் என சிலர் சொல்வதைப்போல் அது அவ்வளவு எளிதானதல்ல, நம்மால் முடியாது."

இனியும் 'மினி ஆண்கள் அல்ல'

இன்னமும் பதில் இல்லாத பல கேள்விகள் இருந்தாலும், சேல் ஷார்க்ஸ் வுமென் அணியை சேர்ந்த கேட்டி டேலி-மெக்லீனுக்கு இதுவே ஒரு மிகப்பெரிய மாற்றமாகும்.

2007-ல் அவர் அணிக்காக முதல்முறையாக விளையாட தொடங்கியபோது, அவரது உடல் எப்படி செயல்படும் என்பது பற்றிய அனைத்து அனுமானங்களும் ஆண் ரக்பி வீரர்களின் தரவுகளின் அடிப்படையில் அமைந்திருந்தன என்பதை நினைவுகூருகிறார்.

"நாங்கள் மினி-ஆண்களாகவே நடத்தப்பட்டோம்." என்கிறார் டேலி மெக்லீன்.

இப்போது சிறுமியரும், பெண்களும் விளையாட்டில் வெளிநபர்கள் போன்று உணருவதில்லை என்கிறார் அவர். விளையாட்டு உயர்மட்ட அளவில் திறனை அதிகரிப்பதுடன் மேலும் அதிக பெண்களை விளையாட்டில் வைத்திருக்க உதவுகிறது.

"இது அற்புதமானது, இதை கொண்டாட வேண்டிய ஒன்று, புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இளம்பெண்கள் விளையாட்டை விட்டு வெளியேறுவதற்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்று உடல் தோற்றம், இது மாதவிடாயை சார்ந்தது மற்றும் சரியான ஸ்போர்ட்ஸ் பிரா இல்லாதது, இவை மிக எளிதாக தீர்க்கப்படக்கூடியவை."

ஜெரி ஹோல்ட் தயாரித்த பிபிசியின் 'இன்சைட் ஹெல்த்' நிகழ்ச்சியிலிருந்து

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3v3xql41weo

நிலவில் அணு உலை அமைக்கும் நாசா – சந்திரனை சுற்றி வல்லரசு நாடுகள் போட்டி

1 month 1 week ago

நாசா, நிலவு, அணு உலை, நாசா ஆராய்ச்சி, நிலாவில் மனிதர்கள்

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, நாசா ஃபிஷன் பரப்பு ஆற்றல் திட்டத்தின் மாதிரி புகைப்படம்

கட்டுரை தகவல்

  • ஜார்ஜினா ரானார்ட்

  • அறிவியல் செய்தியாளர்

  • 7 ஆகஸ்ட் 2025, 02:11 GMT

நாசா நிலவில் அணு உலை அமைக்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. நிலவில் மனித குடியேற்றத்துக்கான அடிப்படையாக இது பார்க்கப்படும் நிலையில் வல்லரசு நாடுகளில் போட்டிகளமாக நிலவு மாறிவிடுமோ என ஒரு தரப்பினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஏனென்றால் இதே போன்றதொரு அறிவிப்பை ரஷ்யாவும் சீனாவும் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, 2030 ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு உலை அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த உள்ளது என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான ஒரு நிரந்தர தளத்தை உருவாக்குவது அமெரிக்காவின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக உள்ளது.

மறுபுறம் சீனாவும், ரஷ்யாவும் நிலவில் மனிதர்கள் வாழும் நிரந்தர தளங்களை உருவாக்கும் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக நாசாவின் செயல் தலைவர் பொலிடிகோ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அந்த நாடுகள் நிலவில் 'தடைசெய்யப்பட்ட மண்டலம்' ஒன்றை அறிவிக்கக்கூடும் என்றும் பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், சமீபத்தில் நாசாவுக்கான நிதி ஒதுக்கீடு கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதனைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த இலக்கும் காலக்கெடுவும் நடைமுறையில் எந்தளவுக்குச் சாத்தியமானது என்பது பற்றிய கேள்விகள் இன்னும் உள்ளன.

மேலும், இந்தத் திட்டங்கள் புவிசார் அரசியல் நோக்கங்களால் தூண்டப்படுகின்றன என்று சில விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நிலவின் மேற்பரப்பை ஆராய விரைந்து செயல்படுகின்றன. அதேபோல் அங்கு நிரந்தர மனித குடியிருப்புகளை உருவாக்கவும் சில நாடுகள் திட்டமிடுகின்றன.

நாசா, நிலவு, அணு உலை, நாசா ஆராய்ச்சி, நிலாவில் மனிதர்கள்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, இந்தியாவின் நிலவு ஆராய்ச்சி

"எதிர்கால நிலவு பொருளாதாரத்தையும், செவ்வாயில் அதிக ஆற்றல் உற்பத்தியையும், விண்வெளியில் அமெரிக்காவின் பாதுகாப்பையும் வலுப்படுத்த வேண்டுமெனில், இந்த முக்கிய தொழில்நுட்பத்தை விரைவாக மேம்படுத்த வேண்டும்," என நாசாவுக்கு அமெரிக்க போக்குவரத்து செயலாளர் சீன் டஃபி எழுதியதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரை நாசாவின் தற்காலிக தலைவராக நியமித்துள்ளார்.

குறைந்தபட்சமாக, 100 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய அணு உலையை உருவாக்கும் வகையிலான திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு வணிக நிறுவனங்களுக்கு டஃபி அழைப்பு விடுத்துள்ளார்.

இது ஒப்பீட்டளவில், குறைந்த அளவிலான ஆற்றல்தான். ஒரு வழக்கமான கரையோர காற்றாலை 2 முதல் 3 மெகாவாட் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

ஆனால், சந்திரனில் மின்சாரத்துக்காக அணு உலையைக் கட்டும் யோசனை என்பது புதிதல்ல. 2022இல், அணு உலையின் வடிவமைப்புக்காக நாசா மூன்று நிறுவனங்களுக்கு தலா 5 மில்லியன் டாலர் மதிப்பில் ஒப்பந்தங்களை வழங்கியது.

2035-க்குள் நிலவில் தானியங்கி அணு மின் நிலையம் ஒன்றை உருவாக்கும் திட்டத்தை சீனாவும் ரஷ்யாவும் இந்த ஆண்டு மே மாதம் அறிவித்திருந்தன.

நிலவின் மேற்பரப்பில் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கான சிறந்த வழியாகவோ அல்லது ஒரே வழியாகவோ இது இருக்கலாம் எனப் பல விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

ஒரு நிலவு நாள் என்பது பூமியில் நான்கு வாரங்களுக்கு சமம். இதில் இரண்டு வாரங்களுக்கு சூரிய ஒளி கிடைக்கும், மற்ற இரண்டு வாரங்கள் இருள்சூழ்ந்து இருக்கும். அதனால் சூரிய சக்தியை மட்டும் நம்பி இயங்குவது மிகவும் கடினமாகிறது.

"ஒரு சிறிய குழுவினரை தங்க வைக்கும் வகையில், சாதாரணமான ஒரு இருப்பிடத்தைக் கட்டுவதற்குக் கூட மெகாவாட் அளவிலான மின்சாரம் தேவைப்படும். சூரிய மின்கலங்கள் மற்றும் பேட்டரிகளால் மட்டுமே இந்தத் தேவையைத் தொடர்ந்து பூர்த்தி செய்ய முடியாது" என்கிறார் சர்ரே பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு மற்றும் கருவிகள் துறையின் மூத்த விரிவுரையாளரான முனைவர் சங்வூ லிம்.

"அணுசக்தி விரும்பத்தக்க ஒன்றாக மட்டுமில்லாமல் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் ஆகிவிட்டது" என்றும் அவர் கூறுகிறார்.

நாசா, நிலவு, அணு உலை, நாசா ஆராய்ச்சி, நிலாவில் மனிதர்கள்

பட மூலாதாரம், CNSA/CLEP

படக்குறிப்பு, 2020-இல் சான்ஜ்-இ திட்டத்தில் சீனா தனது கொடியை நிலவில் நிறுவியது.

லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் பூமி மற்றும் கோள் அறிவியல் பேராசிரியராக உள்ள லியோனல் வில்சனைப் பொருத்தவரை, "போதுமான நிதி ஒதுக்கப்பட்டால்" 2030ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு உலைகளை அமைப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானது ஒன்று தான்.

வில்சனின் கூற்றுப்படி, சிறிய அணு உலைகளுக்கான வடிவமைப்புகள் ஏற்கெனவே உள்ளன.

"அந்த நேரத்துக்குள் நிலவில் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு, நாசா போதுமான 'ஆர்ட்டெமிஸ்' ஏவுதல்களைச் செய்தால் அது முடியும்," என்கிறார்.

ஆர்ட்டெமிஸ் என்பது நாசா செயல்படுத்தும் சந்திரவெளிப் பயண திட்டம். இது மனிதர்களையும், உபகரணங்களையும் நிலவுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆனால் இவ்வகை அணு உலை ஏவுதல்களில் பாதுகாப்பு குறித்தும் சில கேள்விகள் எழுகின்றன.

"பூமியின் வளிமண்டலம் வழியாக கதிரியக்கப் பொருட்களை விண்ணுக்கு அனுப்புவது பாதுகாப்பு பிரச்னைகளை எழுப்புகிறது. அதற்கு சிறப்பு உரிமம் தேவை, ஆனால் அது ஒன்றும் முடியாத காரியம் இல்லை," என்கிறார் ஓபன் பல்கலைக்கழகத்தின் கிரக அறிவியல் நிபுணரான முனைவர் சிமியோன் பார்பர்.

2026ஆம் ஆண்டில் நாசாவின் நிதி ஒதுக்கீட்டில் 24% குறைக்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் அறிவித்த பிறகு, நாசாவில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து டஃபியின் உத்தரவு எதிர்பாராதவிதமாக வந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து பூமிக்கு மாதிரிகளைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட 'மார்ஸ் சாம்பிள் ரிட்டர்ன்' போன்ற பல முக்கியமான அறிவியல் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நிலவை அடைவதற்கான போட்டி சூடுபிடித்துள்ள நிலையில், இந்த முடிவு அரசியல் நோக்கத்துடன் எடுக்கப்பட்டது என விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.

நாசா, நிலவு, அணு உலை, நாசா ஆராய்ச்சி, நிலாவில் மனிதர்கள், சீனா

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, சீனாவின் நிலவு ஆராய்ச்சி

"விண்வெளிக்குச் செல்வதில் போட்டி நிலவிய பழைய காலத்துக்கு, நாம் மீண்டும் திரும்புவது போல் தெரிகிறது. இது அறிவியல் ரீதியாக சற்று ஏமாற்றத்தையும் கவலையையும் உண்டாக்குகிறது," என முனைவர் பார்பர் கூறுகிறார்.

"போட்டி, புதுமைகளை உருவாக்கலாம். ஆனால் தேசிய நலன்கள் மற்றும் உரிமையை நிலைநாட்டுவது என்கிற குறுகிய நோக்கம் இருந்தால், சூரிய மண்டலம் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள பகுதிகளை ஆராயும் பெரிய நோக்கத்தை நீங்கள் மறந்து விடுவீர்கள்," என்றும் தெரிவித்தார்.

சீனாவும் ரஷ்யாவும், சந்திரனில் "ஒரு தடை மண்டலத்தை அறிவிக்க" வாய்ப்புள்ளது என்பது குறித்த டஃபியின் கருத்துக்கள், ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தம் எனப்படும் ஒப்பந்தத்தைப் பற்றி குறிப்பிடுவதாகத் தெரிகிறது.

2020 ஆம் ஆண்டில், நிலவின் மேற்பரப்பில் நாடுகள் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும் என்பது குறித்த கொள்கைகளை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் ஏழு நாடுகள் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தத்தில், நாடுகள் நிலவில் உருவாக்கும் தளங்கள் மற்றும் சொத்துக்களைச் சுற்றி 'பாதுகாப்பு மண்டலங்கள்' அமைப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"நீங்கள் சந்திரனில் ஒரு அணு உலையையோ அல்லது வேறு எந்த தளத்தையோ கட்டினால், அதைச் சுற்றி பாதுகாப்பு மண்டலம் இருக்கிறது என்று சொல்லலாம். ஏனெனில் அங்கு உங்களுடைய உபகரணங்கள் இருக்கும்," என்கிறார் முனைவர் பார்பர்.

"சிலருக்கு இது, 'நாங்கள் நிலவின் இந்தப் பகுதியை சொந்தமாக வைத்திருக்கிறோம். இங்கே நாங்கள் செயல்படப் போகிறோம், நீங்கள் வர முடியாது' என்று சொல்வதற்கு சமமாகத் தோன்றும்," என்றும் அவர் விளக்குகிறார்.

மனிதர்கள் பயன்படுத்தும் நோக்கில் நிலவில் அணு உலை அமைப்பதற்கு முன் பல சவால்களை கடக்க வேண்டியிருக்கும் என்று முனைவர் பார்பர் குறிப்பிடுகிறார்.

நாசாவின் ஆர்ட்டெமிஸ் 3 திட்டம் 2027 ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவில் அனுப்புவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், இது பல தடைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான குழப்பங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு தளத்திற்கு அணுசக்தி இருந்தாலும், அங்கு மனிதர்களையும் உபகரணங்களையும் கொண்டு செல்ல வழியில்லை என்றால், அது பயனுள்ளதாக இருக்காது என்று கூறிய பார்பர், தற்போது இந்த திட்டங்கள் ஒருங்கிணைந்த முறையில் நடப்பதாக தோன்றுவில்லை என்றும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crm4301jp79o

கரு உருவாகி 30 ஆண்டு கழித்து பிறந்த குழந்தை - மருத்துவ உலகில் புதிய ஆச்சர்யம்

1 month 1 week ago

கரு தத்து கொடுக்கும் திட்டங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்பு படம்

கட்டுரை தகவல்

  • டானாய் நெஸ்டா குபெம்பா

  • பிபிசி செய்திகள்

  • 3 ஆகஸ்ட் 2025, 07:20 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

30 ஆண்டுகளுக்கும் மேலாக உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட கருவில் இருந்து அமெரிக்க தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தை, புதிய உலக சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

35 வயதான லிண்ட்சே மற்றும் 34 வயதான டிம் பியர்ஸ் தம்பதிக்கு 2025 ஜூலை 26 சனிக்கிழமையன்று ஆண் குழந்தை பிறந்தது. தாடியஸ் டேனியல் பியர்ஸ் என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.

பியர்ஸ் தம்பதியினர் ஏழு ஆண்டுகளாக குழந்தை பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். எம்ஐடி டெக்னாலஜி ரிவியூவிடம் பேசிய டிம் பியர்ஸ், "இது அறிவியல் புனைக்கதை திரைப்படத்தில் நடைபெறும் சம்பவத்தைப் போல் இருக்கிறது" என தனது குடும்பத்தினர் நினைப்பதாகக் கூறினார்.

கருவை உறைய வைத்து பின்னர் அதை பயன்படுத்தி குழந்தை பெறும் தொழில்நுட்பத்தில், நீண்ட காலமாக உறைநிலையில் இருந்து, நேரடி பிரசவம் மூலம் வெற்றிகரமாக பிறந்த குழந்தை இது என்று நம்பப்படுகிறது.

இதற்கு முன்பு 1992 ஆம் ஆண்டு உறைய வைக்கப்பட்ட கருவிலிருந்து 2022 ஆம் ஆண்டு பிறந்த இரட்டைக் குழந்தைகள்தான் நீண்ட காலமாக உறைநிலையில் இருந்த கருவில் இருந்து பிறந்த குழந்தைகள் என்ற சாதனையை படைத்திருந்தனர் .

1994ஆம் ஆண்டில் லிண்டா ஆர்ச்சர்டு என்பவர் தனது கணவருடன் இணைந்து உருவாக்கிய கரு இது. தற்போது 62 வயதாகும் லிண்டா ஆர்ச்சர்டு, தனது அப்போதைய கணவருடன் இணைந்து ஐ.வி.எஃப் IVF மூலம் குழந்தை பெறும் முயற்சியில் நான்கு கருக்களை உருவாக்கினார்.

அதில் ஒன்றை பயன்படுத்தி பெண் குழந்தை பெற்றெடுத்தார். அந்த குழந்தை வளர்ந்து தற்போது 30 வயது அடைந்துவிட்டது. மற்ற மூன்று கருக்கள் சேமிப்பிலேயே இருந்தன.

கருவுறுதல், ஐவிஎஃப்

பட மூலாதாரம், Reuters

லிண்டா ஆர்ச்சர்டுக்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து ஆன பிறகும், அவர் தனது கருக்களை அகற்றவோ, ஆராய்ச்சிக்காக தானம் செய்யவோ அல்லது பெயர் குறிப்பிடாமல் வேறு குடும்பத்திற்கு கருவை தானமாக கொடுக்கவோ விரும்பவில்லை.

ஏனென்றால், உறைநிலையில் இருக்கும் கரு, குழந்தையாக பெற்றெடுக்கப்பட்டாலும், அந்தக் குழந்தையுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று விரும்பினார். ஏனெனில் தன்னுடைய மகளுடன் அந்தக் குழந்தைக்கு தொடர்பு இருக்கவேண்டும் என்று விரும்பினார்.

நைட்லைட் கிறிஸ்டியன் அடாப்ஷன்ஸ் என்ற கிறிஸ்தவ கரு தத்தெடுப்பு நிறுவனத்துடன் தொடர்பு ஏற்படும் வரை, லிண்டா ஆர்ச்சர்ட், தனது கருக்களை சேமிப்பதற்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டாலர்களை கட்டணமாக செலுத்தி வந்தார்.

லிண்டா ஆர்ச்சர்ட் தேர்ந்தெடுத்த ஸ்னோஃப்ளேக்ஸ் என்ற திட்டம், நன்கொடையாளர்கள் கருவை தத்தெடுக்கும் ஒரு ஜோடியைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது. அதாவது, கருவை நன்கொடையாக கொடுப்பவர், தத்தெடுப்பவர்களின் மதம், இனம் மற்றும் எந்த நாட்டவராக இருக்கவேண்டும் என்று தங்கள் விருப்பத்தின்படி நன்கொடை பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

திருமணமான, காகேஸியன், கிறித்தவ தம்பதிக்கு தனது கருவை தத்துக் கொடுக்க லிண்டா ஆர்ச்சர்டு விரும்பினார். அந்த தம்பதியினர் அமெரிக்காவில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார். ஏனெனில் தனது குழந்தை "நாட்டை விட்டு வெளியே செல்வதில்" தனக்கு விருப்பமில்லை என்று அவர் எம்ஐடி டெக்னாலஜி ரிவியூவிடம் தெரிவித்தார்.

லிண்டா ஆர்ச்சர்டின் விருப்பப்படியே நன்கொடையாளர்களாக லிண்ட்சே மற்றும் டிம் பியர்ஸ் தம்பதியர் தத்தெடுக்க முன்வந்தனர். லிண்டா ஆர்ச்சர்டின் கருவை தத்தெடுக்க முடிவு செய்வதற்கு முன்பு, பியர்ஸ் தம்பதியினர் ஏழு ஆண்டுகளாக குழந்தை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த தம்பதியர் குழந்தை பெறும் மருத்துவ நடைமுறையை மேற்கொண்ட டென்னசியில் உள்ள ரிஜாய்ஸ் கருத்தரித்தல் மையம் (Rejoice Fertility) என்ற ஐவிஎஃப் மருத்துவமனை, கரு எத்தனை ஆண்டுகளாக உறைநிலையில் இருந்தது அல்லது அதன் நிலைமையை பொருட்படுத்தாமல், கிடைத்த எந்தவொரு கருவையும் பயன்படுத்தி தம்பதிக்கு வெற்றிகரமாக குழந்தை பெறச் செய்வதே தங்களது நோக்கம் என்று கூறியது.

தானும் தனது கணவரும் "எந்தவொரு சாதனையையும் முறியடிக்க" விரும்பவில்லை, மாறாக "ஒரு குழந்தையைப் பெறவே விரும்பினோம்" என்று லிண்ட்சே பியர்ஸ் கூறினார்.

தனது கருவிலிருந்து உருவான குழந்தையை இன்னும் நேரில் சந்திக்கவில்லை என்றும், ஆனால் தனது மகளைப் போலவே இருப்பதை காண முடிந்தது என்றும் லிண்டா ஆர்ச்சர்ட் எம்ஐடி டெக்னாலஜி ரிவியூவிடம் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn47zq2p8wko

விண்ணில் செலுத்தப்பட்டு 14 செக்கன்களில் வெடித்து சிதறிய ரொக்கெட்; அவுஸ்திரேலியாவில் சம்பவம் விண்ணில் செலுத்தப்பட்டு 14 செக்கன்களில் வெடித்து சிதறிய ரொக்கெட்; அவுஸ்திரேலியாவில் சம்பவம்

1 month 2 weeks ago

images-7.jpg?resize=299%2C168&ssl=1

விண்ணில் செலுத்தப்பட்டு 14 செக்கன்களில் வெடித்து சிதறிய ரொக்கெட்; அவுஸ்திரேலியாவில் சம்பவம்.

அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட எரிஸ் (Eris)  எனப்படும் ஓர்பிடல் ரொக்கெட் (orbital rocket) தனது முதலாவது சோதனை முயற்சியில் தேல்வியடைந்துள்ளமை அந்நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கில்மோர் ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் (Gilmour Space Technologies ) நிறுவனம், தயாரித்த குறித்த விமானம் குவீன்ஸ்லாந்தில் உள்ள போயன் ஓர்பிடல் ஸ்பேஸ் போர்டிலிருந்து  (Bowen Orbital Spaceport in North Queensland) விண்ணை நோக்கி செலுத்தப்பட்டிருந்த நிலையில்  14 செக்கன்களில் கீழே விழுந்து வெடித்து சிதறியது.

இதன் காரணமாக குறித்த பகுதியை புகை மண்டலம் சூழ்ந்து கொண்டது. இது குறித்து அந் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”  இந்த சோதனை, நாட்டின் விண்வெளி துறையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய முன்னேற்றமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ”இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும், இரண்டாவது சோதனை ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் நடைபெறும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓர்பிடல் ரொக்கெட் சோதனை முயற்சி, அவுஸ்திரேலியாவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1441284

வான்பொருள்களை கருந்துளை விழுங்குவது எப்படி? - ஆய்வில் புதிய மைல்கல்லை எட்டிய இந்திய விஞ்ஞானிகள்

1 month 2 weeks ago

கருந்துளை ஒரு வான்பொருளை விழுங்கும்போது என்ன நடக்கும்? கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்

பட மூலாதாரம், NASA/CXC/A.HOBART

கட்டுரை தகவல்

  • க. சுபகுணம்

  • பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கருந்துளை. விண்வெளியில் இருக்கும் மர்மமான வான்பொருள்களில் ஒன்று. அவற்றைப் புரிந்துகொள்வது பேரண்டத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் என்று வானியல் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு கருந்துளையை இஸ்ரோவின் ஆஸ்ட்ரோசாட் என்ற விண்வெளித் தொலைநோக்கி மூலம் இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.

GRS 1915+105 எனப்படும் அந்தக் கருந்துளை, பால்வீதி கேலக்சியில், பூமியில் இருந்து சுமார் 28,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.

GRS 1915+105 கருந்துளை பூமியில் இருந்து சுமார் 28,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது சூரியனைவிட 12 மடங்கு அதிக நிறைகொண்டது.

ஆஸ்ட்ரோசாட் மூலம் இந்திய விஞ்ஞானிகள் அந்தக் கருந்துளையை ஆய்வு செய்து வந்தனர். அப்போது அதிலிருந்து வெளியான சமிக்ஞைகளைப் பதிவு செய்ததன் மூலம், அதைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஐஐடி கௌஹாத்தி, ஹைஃபா பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரோவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வு, கருந்துளைகள் பற்றி ஆழமான புரிதலை ஏற்படுத்துவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கி மூலம் இந்திய விஞ்ஞானிகள் GRS 1915+105 கருந்துளையில் கண்டுபிடித்தது என்ன?

இந்திய விஞ்ஞானிகள் உணர்ந்த கருந்துளையின் சமிக்ஞைகள்

ஒரு நட்சத்திரத்தின் வாழ்நாள் முடியும்போது அது தனக்குள்ளேயே சுருங்கி கருந்துளையாக உருவெடுக்கிறது. அதீத ஈர்ப்பு விசை காரணமாக, ஒளியைக்கூட அவை விழுங்கிவிடும். எனவே, கருந்துளைகள் கண்ணுக்குத் தெரியவில்லை.

பொதுவாக, பெரிய நட்சத்திரங்களின் வாழ்நாள் முடியும்போது அவற்றில் இருந்து கருந்துளைகள் உருவாகின்றன.

கருந்துளைகளின் விடுபடு திசைவேகம் (Escape Velocity), ஒளியின் வேகத்தைவிட சற்று அதிகம் என்பதால், அவற்றிடம் இருந்து ஒளி உள்பட எதுவுமே தப்ப முடியாது. எனவே, கருந்துளைகளை நேரடியாகப் பார்க்க முடியாது.

ஆனால், கருந்துளையால் விழுங்கப்படும் வான்பொருட்கள் மிகவும் சூடாகி, எக்ஸ்ரே கதிர்களை வெளியிடுகின்றன. அந்தக் கதிர்களை தனித்துவமான விண்வெளித் தொலைநோக்கிகள் மூலமாகக் காண முடியும்.

கருந்துளையில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை அவதானிப்பதன் மூலம் அதன் அருகிலுள்ள நட்சத்திரங்கள் மற்றும் பிற வான் பொருட்களில் அது ஏற்படுத்தும் பாதிப்புகளை அறிய விஞ்ஞானிகள் முயல்கின்றனர்.

கருந்துளைகளை நேரடியாகப் பார்க்க முடியாது. ஆனால், அவை விழுங்கும் வான் பொருட்கள் வெப்பமடைந்து, எக்ஸ் கதிர்களை வெளியிடும். அந்தக் கதிர்களை தனித்துவமான விண்வெளித் தொலைநோக்கிகள் மூலமாகக் காண முடியும்.

அத்தகைய ஆய்வு ஒன்றை, GRS 1915+105 கருந்துளையில் ஆஸ்ட்ரோசாட் விண்வெளித் தொலைநோக்கி மூலமாக இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் கருந்துளை சூரியனைவிட 12 மடங்கு அதிக நிறை கொண்டது. அதன் சுழற்சி வேகமும் சூரியனைவிடப் பல மடங்கு அதிகம். அதை ஆய்வு செய்து வந்த இந்திய விஞ்ஞானிகள், அதன் இயக்கத்தைப் புரிந்துகொள்ள உதவும் 'சமிக்ஞைகளை' பதிவு செய்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பு, கருந்துளை ஆய்வில் மிக முக்கியமானது என்றும், அவற்றின் செயல்பாடுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள இது உதவும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

GRS 1915+105 கருந்துளையில் விஞ்ஞானிகள் கண்டது என்ன?

GRS 1915+105 கருந்துளையில் இருந்து வெளிப்படும் எக்ஸ்-ரே ஒளி சில நூறு நொடிகளுக்கு ஒருமுறை, பிரகாசமாக, மங்கலாக என மாறிக்கொண்டே இருந்தது. ஒளி பிரகாசமாக இருக்கும்போது அதில் ஒரு நொடிக்கு 70 மினுமினுப்புகள் உருவாவதும், மங்கும்போது அது மறைவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

GRS 1915+105 கருந்துளையை ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கி பல ஆண்டுகளாகக் கண்காணித்து வருகிறது.

கருந்துளைகளை நம்மால் நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும், அவை வான்பொருட்களை விழுங்கும்போது உருவாகும் எக்ஸ் கதிர்கள் மூலம் அவற்றை அவதானிக்க முடியும் என்று முன்னமே பார்த்தோம்.

அந்த எக்ஸ் கதிர்களில் ஏற்படும் மாற்றங்களை ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கி மூலம் இந்திய விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் முடிவில் கருந்துளையில் இருந்து வெளிப்படும் எக்ஸ்-ரே ஒளி சிறிது நேரத்திற்குப் பிரகாசமாக, சிறிது நேரத்திற்கு மங்கலாக என மாறிக்கொண்டே இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மாற்றம் ஒவ்வொரு சில நூறு நொடிகளுக்கும் நடப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

மேலும், எக்ஸ்-ரே ஒளி பிரகாசமாக இருக்கும்போது மினுமினுப்புகள் உருவாவதும், மங்கலாக இருக்கும்போது மறைவதும் இந்த ஆய்வில் அவதானிக்கப்பட்டது. அது மட்டுமின்றி, ஒரு நொடிக்கு சுமார் 70 முறை என்ற அளவுக்கு அதிவேகமாக மின்னுவதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இவற்றை கருந்துளையின் உள்ளே என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும் 'சமிக்ஞைகள்' என்று விஞ்ஞானிகள் விவரித்துள்ளனர்.

கருந்துளையின் எக்ஸ்-ரே ஒளி மின்னுவது ஏன்?

கருந்துளையைச் சுற்றி கொரோனா எனப்படும் வெப்பம் மற்றும் ஆற்றல் மிக்க வாயு மேகம் உள்ளது. அதுவே, எக்ஸ்-ரே ஒளியில் உருவாகும் மினுமினுப்புக்கு காரணம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

GRS 1915+105 கருந்துளையில் இருந்து வெளியாகும் எக்ஸ்-ரே ஒளி இவ்வாறு அதிவேகமாக மின்னுவது ஏன்?

கருந்துளையைச் சுற்றி கொரோனா எனப்படும் மிகவும் வெப்பமான, ஆற்றல் மிக்க வாயு மேகம் இருக்கிறது. அதுவே, அதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த ஆய்வின்படி, "கருந்துளை பிரகாசமான கட்டத்தில் இருக்கும்போது, கொரோனா படலம் சிறியதாக, அதீத வெப்பத்துடன் இருக்கும். அதுதான், எக்ஸ்-ரே ஒளியில் அதிவேக மினுமினுப்புகளை உருவாக்குகிறது.

இதற்கு மாறாக, எக்ஸ்-ரே ஒளி மங்கலாக இருந்த நேரத்தில், கொரோனா படலம் விரிவடைந்து, குளிர்ச்சியடைகிறது. ஆகையால், மினுமினுப்புகள் ஏற்படுவதில்லை."

GRS 1915+105 கருந்துளையின் எக்ஸ்-ரே ஒளி மங்கும்போது கொரோனா படலம் விரிவடைந்து, குளிர்ந்துள்ளது.  அதற்கு மாறாக, ஒளி பிரகாசமாக இருக்கையில், கொரோனா படலம் சிறிதாக, அதீத வெப்பத்துடன் இருந்தது. அதுவே மினுமினுப்புகள் உருவாகக் காரணம் என்று இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பு கருந்துளைக்கு அருகில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது. ஒளியைக்கூட விட்டுவைக்காத கருந்துளையின் இயக்கம் மற்றும் அது தனது சுற்றுப்புறத்துடன் எவ்வாறு செயலாற்றுகிறது என்பதை இது காட்டுகிறது.

"இது, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றம். அதோடு, மனித இனம் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்வதில் இந்திய விஞ்ஞானிகளுக்கு இருக்கும் முக்கியமான பங்கையும் இந்தக் கண்டுபிடிப்பு உணர்த்துகிறது" என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆஸ்ட்ரோசாட் என்பது என்ன?

ஆஸ்ட்ரோசாட் என்பது இந்தியாவின் முதல் விண்வெளித் தொலைநோக்கி. இது, கருந்துளைகள், நட்சத்திரங்கள் போன்ற வான் பொருட்களை ஆய்வு செய்வதற்காக 2015ஆம் ஆண்டு இஸ்ரோ ஏவியது.

ஆஸ்ட்ரோசாட் என்பது இந்தியாவின் முதல் விண்வெளித் தொலைநோக்கி. இது நட்சத்திரங்கள், கருந்துளைகள், விண்மீன் திரள்கள் போன்ற வான்பொருட்களை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டது.

இது இஸ்ரோவால், கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கியின் எடை சுமார் 1,515 கிலோ. அது பூமியில் இருந்து சுமார் 650கி.மீ. உயரத்தில் நிலைகொண்டு சுற்றி வருகிறது.

ஒரே நேரத்தில் புறஊதாக் கதிர், எக்ஸ்-கதிர், காமா கதிர் எனப் பல வடிவங்களில் விண்வெளியைக் கவனிக்க முடியும் என்பது ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கியின் தனிச்சிறப்பு.

இந்தக் கதிர்களை வெறும் கண்களால் காண இயலாது என்றாலும், அவை பிரபஞ்சத்தின் இயக்கம் குறித்த பல முக்கியமான தகவல்களைக் கொண்டுள்ளன.

விண்வெளியில் காணப்படும் வான் பொருட்களைப் படம் பிடிக்கவும், அவற்றின் பிரகாசம் மற்றும் நிறத்தில் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களை ஆராயவும் உதவக் கூடிய ஐந்து கருவிகள் ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கியில் இருக்கின்றன.

அவற்றின் உதவியுடன், பிரபஞ்சத்தின் தொலைதூரப் பகுதிகளை அவதானித்து, நட்சத்திரங்களின் பிறப்பு, இறப்பு மற்றும் அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பன பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள இந்திய விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c05ej664er5o

நாசா – இஸ்ரோ கூட்டுத்திட்டம் நிசார் விண்வெளியில் என்ன செய்யப் போகிறது? 5 கேள்வி – பதில்கள்!

1 month 3 weeks ago

நிசார்: நாசா, இஸ்ரோவின் கூட்டுத் திட்டம் விண்வெளியில் என்ன செய்யப் போகிறது? 5 கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH

படக்குறிப்பு, நாசா, இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாகும் நிசார் செயற்கைக்கோள் ஜூலை 30க்குள் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுரை தகவல்

  • க.சுபகுணம்

  • பிபிசி தமிழ்

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இணைந்து முன்னெடுக்கும் கூட்டுத் திட்டமான நிசார் (NISAR) செயற்கைக்கோள் ஜூலை 30-ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாசா – இஸ்ரோ செயற்கைத் துளை ரேடார் (NASA-ISRO Synthetic Aperture Radar) என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள், எல்-பேண்ட், எஸ்-பேண்ட் ரேடார் அமைப்புகளைப் பயன்படுத்தும் முதல் செயற்கைக்கோள். இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படும்.

நிசார் திட்டம், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் விண்வெளி ஒத்துழைப்பில் ஒரு முக்கியமான படி என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோதி தெரிவித்தனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஏவப்படும் செயற்கைக்கோள், விண்வெளியில் இருந்து பூமியில் மாறி வரும் நிலைமைகளைப் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும். இது காடுகள், பனிக்கட்டிகள், பனிப்பாறைகள், பூமியின் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள், கண்டத்தட்டுகளின் நகர்வுகள் ஆகியவற்றைக் கண்காணிக்கும்.

இந்தச் செயற்கைக்கோள் சேகரிக்கும் தரவுகள் இயற்கைப் பேரிடர்களுக்கு எதிர்வினையாற்றுவது, உள்கட்டமைப்பைச் சரிபார்ப்பது, விவசாயிகளுக்கு உதவுவது எனப் பலவிதங்களில் பயன்படும் என்றும் நேற்று வெளியான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசா, இஸ்ரோவின் கூட்டுத்திட்டமான இந்த நிசாரின் முக்கியத்துவம் என்ன? அதன்மூலம் இரு நாடுகளும் சாதிக்கப் போவது என்ன?

இந்தத் திட்டம் பற்றிய ஐந்து முக்கிய கேள்விகளையும் அவற்றுக்கான பதில்களையும் இங்கு காண்போம்.

1. நிசார் திட்டத்தின் நோக்கம் என்ன? எப்படிப் பயனளிக்கும்?

நிசார்: நாசா, இஸ்ரோவின் கூட்டுத் திட்டம் விண்வெளியில் என்ன செய்யப் போகிறது? 5 கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு, நிசார் திட்டத்தின் கீழ் ஏவப்படும் செயற்கைக்கோள், பூமியின் தெளிவான ஒளிப்படங்களைப் பதிவு செய்யும்.

நாசாவும் இஸ்ரோவும், நிசாரை ஏவிய பிறகு, அது பூமியை மிகவும் விரிவாக, தெளிவாகப் படம் பிடிக்கும். அவற்றால் ஒரு அங்குல நிலத்தில் நிகழும் சிறிய அசைவுகளைக்கூட மிகத் துல்லியமாகக் காட்ட முடியும். அதாவது, ஒரு நிலத்தின் சிறு பகுதியளவு சில சென்டிமீட்டர் அளவுக்கு மூழ்கினாலும் அல்லது இடம் மாறினாலும், அந்த மாற்றத்தைக் கண்டறிய இதனால் முடியும்.

நிசார் செயற்கைக்கோள் 12 நாட்களுக்கு ஒருமுறை பூமியின் மேற்பரப்பை முழுவதுமாக ஸ்கேன் செய்யும். அதன்மூலம் கிடைக்கும் ஒளிப்படங்கள் மூலம்,

  • நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கு முன்னரும் பின்னரும் நிலப்பரப்பில் நடக்கும் மாற்றங்களைப் பார்க்க முடியும்

  • பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகளில் மெதுவாக நிகழும் நகர்வுகளைக் காணலாம்

  • காடு உருவாக்கம் அல்லது காடழிப்பு என காடுகளில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்க இயலும்

  • வளர்ச்சித் திட்டங்கள் போன்ற காடுகளில் ஏற்படும் மாற்றங்களையும் கண்காணிக்க முடியும்

நிசார் திட்டத்தில் பயன்படுத்தப்படும் செயற்கைத் துளை ரேடார் (SAR) எனப்படும் சிறப்பு தொழில்நுட்பம்தான் இந்தத் துல்லியமான படங்களைப் பெற உதவுகிறது.

2. செயற்கைத் துளை ரேடார் (SAR) என்றால் என்ன?

நிசார்: நாசா, இஸ்ரோவின் கூட்டுத் திட்டம் விண்வெளியில் என்ன செய்யப் போகிறது? 5 கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு, நிசார் செயற்கைக்கோளில் உள்ள ஆன்டனா 12 மீட்டர் நீளமுடையது.

செயற்கைத் துளை ரேடார் அல்லது SAR என்பது ஆற்றல் சிக்னல்களை பூமியின் மேற்பரப்பை நோக்கி அனுப்பி, அவை மோதிய பிறகு அவற்றில் எவ்வளவு ஆற்றல் திரும்புகிறது என்பதை அளவிடுவதன் மூலம் தரவுகளைச் சேகரிக்கும் ஒரு செயல்முறை.

வழக்கமான ரேடாரை போலவே, SAR மைக்ரோவேவ் சிக்னல்களை அனுப்பி, அவை மீண்டும் எதிரொலிப்பதைப் பதிவு செய்கிறது. ஆனால் இந்த செயற்கைக்கோள் நகரும்போது பல அளவீடுகளை எடுத்து மேம்பட்ட கணினி செயலாக்கத்தைப் பயன்படுத்தி அவற்றை இணைக்கிறது. இதுதான் இறுதி படங்களை மிகவும் தெளிவாக்குகிறது.

இந்த தொழில்நுட்பம் இல்லாமல் அதே அளவுக்குத் தெளிவான ஒளிப்படங்களைப் பெறுவதற்கு, ஒரு செயற்கைக்கோளுக்கு 19 கிலோமீட்டர் அகலமுள்ள ரேடார் ஆன்டனா தேவைப்படும். நிசார் செயற்கைக்கோளின் ஆன்டனா சுமார் 12 மீட்டர் அகலம் கொண்டது. அதாவது ஒரு பேருந்து அளவுக்கு நீளமானது.

ஆனால், இந்த செயற்கைக்கோள் மூலம் 10 மீட்டர் வரை சிறிய பகுதிகளைக்கூட மிகத் தெளிவாகவும், கூர்மையாகவும் படம் பிடிக்க முடியும். அதோடு, அந்தச் சிறிய நிலப்பகுதியில் நிகழும் சில சென்டிமீட்டர் அளவிலான மாற்றங்களைக்கூட இந்தத் தொழில்நுட்பத்தில் துல்லியமாக அடையாளம் காண முடியும்.

இதுகுறித்துப் பேசியுள்ள நாசாவின் முன்னாள் நிபுணர் சார்லஸ் எலாச்சி, "பூமியின் மாற்றங்களை மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் காண SAR உதவுகிறது. பூமி எவ்வாறு செயல்படுகிறது, காலப்போக்கில் எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றி விஞ்ஞானிகள் அதிகம் தெரிந்துகொள்ள நிசார் உதவும்," என்று தெரிவித்துள்ளார்.

3. செயற்கைத் துளை ரேடார் எவ்வாறு செயல்படும்?

நிசார்: நாசா, இஸ்ரோவின் கூட்டுத் திட்டம் விண்வெளியில் என்ன செய்யப் போகிறது? 5 கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH

படக்குறிப்பு, பூமியின் ஒளிப்படங்களை துல்லியமாகப் பதிவு செய்வதற்காக விஞ்ஞானிகள் சாமர்த்தியமான ஒரு தீர்வை கண்டுபிடித்தனர்.

சூரிய ஒளியைச் சார்ந்து செயல்படும் வழக்கமான கேமராக்களை போலன்றி, இது அதன் சொந்த சிக்னல்களை அனுப்பிப் படம் பிடிக்கிறது. இந்த சிக்னல்கள் மலைகள், காடுகள் அல்லது ஈரமான மண்பரப்பு ஆகியவற்றில் மோதிய பிறகு, மீண்டும் சென்சாரை நோக்கிப் பிரதிபலிக்கிறது.

இந்தப் பிரதிபலிப்பு, தெளிவான படங்களை எடுப்பதற்கு உதவுகிறது. SAR-ஐ அண்டார்டிகாவின் பனிப்பாறைகள், எண்ணெய்க் கசிவுகள், ஈரநிலங்கள் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்யப் பயன்படுத்தலாம்.

இதன்மூலம் கிடைக்கும் ஒளிப்படத்தின் தரம், அதிலுள்ள ஆன்டனா எவ்வளவு பெரிதாக உள்ளது என்பதைப் பொறுத்தது. ஆன்டனா பெரிதாக இருந்தால் படம் தெளிவாக இருக்கும். ஆனால், ஒரு செயற்கைக்கோளில் 4 கி.மீ நீளம்கொண்ட ஒரு பிரமாண்ட ஆன்டனாவை வைப்பது சாத்தியமில்லை.

எனவே, விஞ்ஞானிகள் இதற்கு சாமர்த்தியமான ஒரு தீர்வைக் கண்டுபிடித்தனர். ஒரு பிரமாண்ட ஆன்டனாவுக்கு பதிலாக சிறிய ஆன்டனாவையே பயன்படுத்தி, செயற்கைக்கோள் நகரும்போது அதிக அளவிலான அளவீடுகளைப் பதிவு செய்கிறார்கள். பின்னர் அந்த அளவீடுகளை மொத்தமாக இணைத்து ஒரு பிரமாண்ட ஆன்டனாவில் இருந்து கிடைத்தது போலச் செய்கிறார்கள். இதுவே, இந்தச் செயல்முறை 'செயற்கை' துளை ரேடார் என அழைக்கப்படுவதற்குக் காரணம்.

இதன்மூலம், இந்தச் செயற்கைக்கோள் பல சிறிய அளவீடுகளைப் பயன்படுத்தி, ஒரு பெரிய கட்டமைப்பின் தேவையின்றியே, அதில் கிடைக்கக்கூடிய தெளிவான, உயர்தர ஒளிப்படங்களை எடுக்கிறது.

4. நாசா, இஸ்ரோவின் கூட்டுத் திட்டம் விவசாயத்திற்கு எப்படி உதவும்?

நிசார்: நாசா, இஸ்ரோவின் கூட்டுத் திட்டம் விண்வெளியில் என்ன செய்யப் போகிறது? 5 கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மண்ணின் ஈரப்பதம், பயிர்களின் ஆரோக்கியம் போன்ற தகவல்களை நிசார் செயற்கைக்கோள் மூலம் பெறுவது, விவசாயிகள் திட்டமிட்டுப் பயிரிடுவதற்கு உதவிகரமாக இருக்கும்.

இந்த செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்படும் துல்லியமான படங்கள், உலகெங்கும் உள்ள விவசாயிகளுக்கு உதவும் என்று நாசா குறிப்பிட்டுள்ளது. அதாவது, பயிர்களின் வளர்ச்சி, தாவரங்களின் ஆரோக்கியம், மண்ணின் ஈரப்பதம் போன்ற முக்கியமான தகவல்களை வழங்கும்.

இந்தத் தகவல்கள் விவசாயிகளுக்குப் பயிர்களை நடவு செய்வது, தண்ணீர்ப் பாய்ச்சுவது, அறுவடை செய்வது ஆகியவற்றுக்குச் சரியான காலகட்டத்தைப் புரிந்துகொள்ள உதவும். இது நேரத்தை மிச்சப்படுத்தவும், தண்ணீரைச் சிறப்பாகப் பயன்படுத்தவும் உதவுவதோடு, காலநிலை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்து செயல்படவும் வழிவகுக்கும்.

"விவசாயத்தில் சரியான திட்டமிடல் முக்கியம். நடவு, பாசனம் என அனைத்திற்குமே சிறந்த நேரம் என்பதை அறிந்திருக்க வேண்டும். அதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள இந்த செயற்கைக்கோள் உதவிகரமாக இருக்கும்," என்று கூறியுள்ளார் நிசார் திட்டத்தில் பணியாற்றும் விஞ்ஞானி நரேந்திர தாஸ்.

நிசார் செயற்கைக்கோளில், பயிர்கள் மற்றும் மண்ணின் தன்மையை ஆராய ஒரு சிறப்பு ரேடார் பயன்படுத்தப்படுகிறது. அதன்மூலம், மண்ணிலும் தாவரங்களிலும் எவ்வளவு தண்ணீர் உள்ளது, பயிர்களின் ஆரோக்கியம் ஆகியவற்றைச் சொல்ல முடியும்.

இதன் மூலம் விவசாயிகள் தங்கள் பயிர்களில் வாரந்தோறும் நிகழும் மாற்றங்களைப் பார்க்கலாம். பயிர்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதைத் துல்லியமாகத் தெரிந்து கொள்வதன் மூலம் அரசுகள் அதிக நன்மை பயக்கும் விவசாயக் கொள்கைகளை வகுக்கலாம்.

எடுத்துக்காட்டாக, இதில் கிடைக்கும் தரவுகளைப் பயன்படுத்தி, நெல் எப்போது நடப்பட்டது, செடிகள் எவ்வளவு உயரமாக உள்ளன, அவை பூக்கின்றனவா என்பனவற்றை அறிய முடியும். இதில் நெல் வயல்களின் ஈரப்பதம் எவ்வளவு என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். அதன் மூலம், வயல் நிலம் வறண்டிருப்பதாகத் தோன்றினால் அல்லது பயிர்கள் ஆரோக்கியமற்று தோற்றமளித்தால், விவசாயிகள் தங்கள் அணுகுமுறையை விரைவாக மாற்றிக்கொள்ள முடியும்.

5. நிசார் திட்டத்தில் நாசா, இஸ்ரோவின் பங்கு என்ன?

நிசார் திட்டம் தொடர்பாக இஸ்ரோ, நாசா இடையே 2014 செப்டம்பர் 30ஆம் தேதி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. 2024இல் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் செயற்கைக்கோள் உருவாக்கத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அது நடக்காமல் போனது.

கடந்த டிசம்பர் 2024இல் இந்திய அரசு வெளியிட்ட அறிக்கைப்படி, 12 மீட்டர் நீளமுள்ள ஆன்டனாவில் சில முன்னேற்றங்களைச் செய்வதற்காக நாசா வல்லுநர்கள் அதைக் கடந்த அக்டோபரில் அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்றனர்.

நிசார்: நாசா, இஸ்ரோவின் கூட்டுத் திட்டம் விண்வெளியில் என்ன செய்யப் போகிறது? 5 கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதோடு, செயற்கைக்கோளின் சில பாகங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி, ஒரு எல் பேண்ட் சிந்தெடிக் அபெர்ட்சர் ரேடார், ஒரு ஜிபிஎஸ் ரிசீவர், அறிவியல் தகவல்களுக்கான ஒரு தொடர்பு அமைப்பு, அதிக திறன் கொண்ட சாலிட்-ஸ்டேட் ரெக்கார்டர் (இது தான் செயற்கைக்கோளின் ஹார்ட் டிரைவ்) மற்றும் ஒரு பேலோட் டேட்டா சப் சிஸ்டம் ஆகியவற்றை நாசா வழங்கியுள்ளது.

மறுபுறம், இந்தச் செயற்கைக்கோளில் எல் பேண்ட் எஸ்.ஏ.ஆர் மற்றும் எஸ் பேண்ட் எஸ்.ஏ.ஆர் என்கிற இரண்டு ரேடார் கருவிகள் இடம்பெற்றிருக்கும். இந்தக் கருவிகளை இஸ்ரோ தயாரித்துள்ளது. இந்தச் செயற்கைக்கோளை ஏவுவதற்கான அமைப்பு மற்றும் இதர விஷயங்களை இஸ்ரோ பராமரித்து வருகிறது.

நிசார், ஜூலை 30ஆம் தேதி விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பப்படும்.

இந்த செயற்கைக்கோளின் மையப்பகுதி 5.5 மீட்டர் நீளமுடையது. இதில், 12 மீட்டர் நீளமுள்ள ரேடார் ஆன்டனா பொருத்தப்பட்டுள்ளது. அதோடு, 5.5 மீட்டர் நீளத்திற்கு இரண்டு சூரிய மின்தகடுகள் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ளன.

மூன்று ஆண்டுகள் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள நிசார் திட்டத்தில், நாசா 1.1589 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. இஸ்ரோ இந்தத் திட்டத்தில் 91.167 மில்லியன் டாலர் (ரூ.7.88 பில்லியன்) முதலீடு செய்துள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg12vxd5lyo

மூன்று பேரின் மரபணுவில் பிறக்கும் குழந்தைகள் - ஆபத்தான நோயை தவிர்க்கும் அற்புதம்

1 month 4 weeks ago

மூன்று பேரின் மரபணுவில் பிறக்கும் குழந்தைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • ஜேம்ஸ் கல்லாகர்

  • சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

மூன்று பேரின் மரபணு கூறுகளை பயன்படுத்தி பிரிட்டனில் எட்டு குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், இந்த முறை மிகவும் மோசமான மற்றும் ஆபத்தான உடல்நல பாதிப்புகளை தவிர்க்க உதவும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பிரிட்டன் விஞ்ஞானிகளால் முன்னோடியாகக் கொண்டுவரப்பட்ட இந்த முறையில், ஒரு தாய் மற்றும் தந்தையிடமிருந்து பெறப்பட்ட கருமுட்டை மற்றும் விந்தணுவுடன், மற்றொரு பெண்ணிடம் இருந்து தானமாக பெறப்பட்ட இரண்டாவது கருமுட்டையை இணைக்கின்றனர்.

இந்த நுட்பம் ஒரு தசாப்த காலமாக பிரிட்டனில் சட்டப்பூர்வமாக இருந்தபோதிலும், குணப்படுத்த முடியாத மைட்டோகாண்ட்ரியல் நோய் பாதிப்பு இல்லாமல் குழந்தைகள் பிறக்க இந்த முறை உதவும் என்பதற்கான முதல் ஆதாரம் தற்போது கிடைத்துள்ளது.

மைட்டோகாண்ட்ரியல் நோய் நிலைமைகள் பொதுவாக தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவுகின்றன. இதனால் உடலில் சக்தி இல்லாமல் போகும்.

இந்த நோய் கடுமையான இயலாமைக்கு வழிவகுக்கும். சில குழந்தைகள் பிறந்த சில நாட்களுக்குள் இறந்துவிடும்.

தம்பதிகளுக்கு முதலில் பிறந்த குழந்தைகள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது தாய் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் அடுத்தக் குழந்தைக்கு ஆபத்து இருக்கும் என்பதை தம்பதிகள் அறிவார்கள்.

குழந்தைகள், மைட்டோகாண்ட்ரியாக்கள், டி.என்.ஏ, கருமுட்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

மூன்று-நபர் நுட்பத்தின் (three-person technique) மூலம் பிறக்கும் குழந்தைகள் தங்களுடைய அசல் பெற்றோரிடமிருந்து தங்கள் டிஎன்ஏவின் பெரும்பகுதியையும் அவர்களின் மரபணு வரைபடத்தையும் (genetic blueprint) பெற்றாலும், இரண்டாவது பெண்ணிடமிருந்து ஒரு சிறிய அளவிலான (சுமார் 0.1% மட்டுமே) மரபணுவைப் பெறுகிறார்கள்.இந்த மாற்றம் பல தலைமுறைகளை கடந்து செல்லும்.

இந்த செயல்முறையின் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட குடும்பங்கள், தங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக இந்த விஷயத்தை பகிரங்கமாகப் பேசவில்லை.

ஆனால் மூன்று நபர் நுட்பத்தின் மூலம் குழந்தைகள் பிறக்கச் செய்த நடைமுறைகளை மேற்கொண்ட நியூகேஸில் கருவுறுதல் மையம் மூலம் தங்களின் அடையாளங்களை வெளிப்படுத்தாமல் இந்த நுட்பத்தின் மூலம் குழந்தைகள் பிறந்ததை மட்டும் அறிவித்தனர்.

'நன்றியுணர்வால் நெகிழ்கிறோம்'

குழந்தைகள், மைட்டோகாண்ட்ரியாக்கள், டி.என்.ஏ, கருமுட்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியான இரண்டு அறிக்கைகள், நியூகேஸில் கருவுறுதல் மையத்தில் 22 குடும்பங்கள் இந்த கருவுறுதல் செயல்முறையை மேற்கொண்டதாக கூறுகின்றன.

"பல வருட நிச்சயமற்ற தன்மைக்குப் பிறகு இந்த சிகிச்சை எங்களுக்கு நம்பிக்கையைத் தந்தது. புதிய நுட்பம் எங்களுக்கு குழந்தையைக் கொடுத்தது," என்று ஒரு பெண் குழந்தையின் தாய் கூறினார்.

"வாழ்க்கையில் அனைத்து சாத்தியக்கூறுக்களும் இருக்கின்றன என்பதை இப்போது உணர்கிறோம், நன்றியுணர்வால் நெகிழ்ந்து போய் இருக்கிறோம்" என்று அந்தத் தாய் கூறினார்.

இந்த நுட்பம் மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்த ஒரு தாய், "இந்த நம்பமுடியாத முன்னேற்றத்திற்கும் எங்களுக்குக் கிடைத்த ஆதரவிற்கும் நன்றி. எங்கள் சிறிய குடும்பம் தற்போது முழுமையடைந்துள்ளது" என்று கூறினார்

"மைட்டோகாண்ட்ரியல் நோயினால் ஏற்பட்ட மனச்சுமை நீங்கிவிட்டது. தற்போது, நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் ஆழ்ந்த நன்றியுணர்வால் மனம் நிரம்பியுள்ளது."

மைட்டோகாண்ட்ரியா என்பது நமது ஒவ்வொரு செல்லிலும் உள்ள சிறிய கட்டமைப்புகள் ஆகும். நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை பயன்படுத்தி நாம் சாப்பிடும் உணவை எரிசக்தியாக மாற்றுவதற்கு இவை உதவுகின்றன.

மைட்டோகாண்ட்ரியா குறைபாடு ஏற்பட்டால், இதயத்தைத் துடிக்க வைக்க உடலுக்குப் போதுமான சக்தி கிடைக்காது. மேலும், மூளை பாதிப்பு, வலிப்பு, பார்வை இழப்பு, தசை பலவீனம், உறுப்பு செயலிழப்பு என பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம்.

பிறக்கும் குழந்தைகளில் ஐந்தாயிரத்தில் சுமார் ஒரு குழந்தை மைட்டோகாண்ட்ரியல் நோயுடன் பிறக்கிறது. நியூகேஸிலில் உள்ள நிபுணர் குழு, ஆண்டுதோறும் மூன்று நபர் முறை மூலம் 20 முதல் 30 குழந்தைகள் பிறக்க வேண்டிய தேவை இருக்கும் என எதிர்பார்க்கிறது.

தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் பல இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் வேதனையை பெற்றோர்களில் பலர் எதிர்கொண்டுள்ளனர்.

மைட்டோகாண்ட்ரியா என்பது, தாயிடமிருந்து குழந்தைக்கு மட்டுமே பரவுகிறது. எனவே இந்த நவீன கருவுறுதல் நுட்பம், பெற்றோர் மற்றும் ஆரோக்கியமான மைட்டோகாண்ட்ரியாவை தானம் செய்யும் ஒரு பெண் என மொத்தம் மூன்று பேரை பயன்படுத்துகிறது.

இந்த முறை, ஒரு தசாப்தத்திற்கும் முன்னர் நியூகேஸில் பல்கலைக்கழகம் மற்றும் நியூகேஸில் அபான் டைன் ஹாஸ்பிடல்ஸ் என்.எச்.எஸ் ஃபவுண்டேசன் டிரஸ்ட்டால் உருவாக்கப்பட்டது.

கருவுறுதல் செயல்முறையை மேற்கொண்ட 22 குடும்பங்கள்

குழந்தைகள், மைட்டோகாண்ட்ரியாக்கள், டி.என்.ஏ, கருமுட்டை

பட மூலாதாரம்,BBC/JOSH ELGIN

படக்குறிப்பு, கேட் கிட்டோ (வலது) தனது மகள் லில்லி மற்றும் செல்லப்பிராணி மோன்டியுடன்

தாய் மற்றும் தானம் செய்பவரின் கருமுட்டைகள், தந்தையின் விந்தணுக்களுடன் ஆய்வகத்தில் கருத்தரிக்கப்படுகின்றன.

விந்து மற்றும் முட்டையிலிருந்து வரும் டிஎன்ஏ, புரோ-நியூக்ளியஸ் எனப்படும் ஒரு ஜோடி அமைப்புகளை உருவாக்கும் வரை கருக்கள் உருவாகின்றன. இவை, முடி நிறம் மற்றும் உயரம் என மனித உடலை உருவாக்குவதற்கான வரைபடங்களைக் கொண்டுள்ளன.

இரண்டு கருக்களிலிருந்தும் சார்பு கருக்கள் அகற்றப்பட்டு, ஆரோக்கியமான மைட்டோகாண்ட்ரியாவால் நிரம்பிய கருவுக்குள் பெற்றோரின் டிஎன்ஏ வைக்கப்படுகிறது.

இதன் விளைவாக, பிறக்கும் குழந்தை பெற்றோருடன் மரபணு ரீதியாக தொடர்புடையதாகவும் இருக்கும், அதே நேரத்தில் மைட்டோகாண்ட்ரியல் நோயிலிருந்து விடுபடவும் முடியும்.

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியான இரண்டு அறிக்கைகள், நியூகேஸில் கருவுறுதல் மையத்தில் 22 குடும்பங்கள் இந்த கருவுறுதல் செயல்முறையை மேற்கொண்டதாக கூறுகின்றன.

இந்த செயல்முறையில் நான்கு ஆண் குழந்தைகளும் நான்கு பெண் குழந்தைகளும் பிறந்தன, அதில் ஒரு இரட்டைக் குழந்தையும் அடங்கும், மேலும் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறார்.

"நீண்ட காத்திருப்பு மற்றும் பின்விளைவுகள் குறித்த பயத்திற்குப் பிறகு இந்தக் குழந்தைகளின் பெற்றோரின் முகங்களில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் காண முடிகிறது. இந்தக் குழந்தைகள் ஆரோக்கியமாக சாதாரணமான குழந்தைகளாக வளர்வதைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது" என்று அரிய மைட்டோகாண்ட்ரியல் கோளாறுகளுக்கான NHS (தேசிய சுகாதார சேவை) உயர் சிறப்பு சேவையின் இயக்குனர், பேராசிரியர் பாபி மெக்ஃபார்லேண்ட் பிபிசியிடம் தெரிவித்தார்.

அனைத்து குழந்தைகளும் மைட்டோகாண்ட்ரியல் நோயின்றி பிறந்து, எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி மைல்கற்களை எட்டின.

குழந்தைகள், மைட்டோகாண்ட்ரியாக்கள், டி.என்.ஏ, கருமுட்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நுண்ணோக்கி மூலம் எடுக்கப்பட்ட மைட்டோகாண்ட்ரியனின் படம் - ஒரு கருவுற்ற முட்டையில் அரை மில்லியன் வரை இருக்கும்.

ஒரு குழந்தைக்கு வலிப்பு நோய் இருந்தது, அது தானாகவே சரியாகிவிட்டது, ஒரு குழந்தைக்கு அசாதாரண இதயத் துடிப்பு உள்ளது. அதற்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த குழந்தைகளின் உடல்நலக் குறைவுகள், குறைபாடுள்ள மைட்டோகாண்ட்ரியாவுடன் தொடர்புடையதாக கருதப்படவில்லை.

இது செயற்கை கருத்தரிப்பின் அறியப்பட்ட அபாயங்களின் ஒரு பகுதியா, மூன்று நபர் முறை கருவுறுதல் நுட்பத்தினால் ஏற்பட்ட குறிப்பிட்ட பிரச்னையா அல்லது இந்த நுட்பத்தின் மூலம் பிறக்கும் அனைத்து குழந்தைகளின் ஆரோக்கியமும் தீவிரமாக கண்காணிக்கப்படுவதால் மட்டுமே கண்டறியப்பட்ட ஒன்றா என்பது தெரியவில்லை.

குறைபாடுள்ள மைட்டோகாண்ட்ரியா ஆரோக்கியமான கருவிற்குள் மாற்றப்படுமா, அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது இந்த அணுகுமுறை தொடர்பான மற்றொரு முக்கிய கேள்வியாக இருக்கிறது.

ஐந்து நிகழ்வுகளில் நோயுற்ற மைட்டோகாண்ட்ரியா கண்டறிய முடியாததாக இருந்ததாக முடிவுகள் காட்டுகின்றன. மற்ற மூன்றில், ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளில் 5% முதல் 20% வரை மைட்டோகாண்ட்ரியா குறைபாடு காணப்பட்டது.

இந்த அளவானது, நோயை உண்டாக்கும் என்று கருதப்படும் 80% அளவை விட மிகக் குறைவு. இது ஏன் ஏற்பட்டது, அதைத் தடுக்க முடியுமா என்பதைப் புரிந்துகொள்ள மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படும்.

நியூகேஸில் பல்கலைக்கழகம் மற்றும் மோனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மேரி ஹெர்பர்ட் "கண்டுபிடிப்புகள் நம்பிக்கைக்கு அடித்தளம் அமைக்கின்றன. இருப்பினும், மைட்டோகாண்ட்ரியல் நன்கொடை தொழில்நுட்பங்களின் வரம்புகளை நன்கு புரிந்துகொள்ள ஆராய்ச்சிகள் மேலும் தேவை. இது, சிகிச்சை விளைவுகளை மேலும் மேம்படுத்த அவசியமாக இருக்கும்." என்கிறார்.

இந்த முன்னேற்றம் கேட் என்ற பெண்ணின் குடும்பத்திற்கு நம்பிக்கையைத் தருகிறது. கேட்டின் இளைய மகள் பாப்பிக்கு (14) இந்த நோய் உள்ளது. அவளுடைய மூத்த மகள் லில்லி (16) அதை தன் குழந்தைகளுக்கும் கடத்தக்கூடும்.

சக்கர நாற்காலியில் இருக்கும் பாப்பியால் பேசமுடியாது, குழாய் வழியாகவே உணவு வழங்கப்படுகிறது.

"இந்த நோய் பாப்பியின் வாழ்க்கையை பெருமளவில் பாதித்துள்ளது," என்று கேட் கூறுகிறார்.

பல தசாப்தங்களாக முயற்சி செய்தும், மைட்டோகாண்ட்ரியல் நோய்க்கு இன்னும் சிகிச்சை இல்லை, ஆனால் அது பரவுவதைத் தடுக்கும் வாய்ப்பு இருப்பதால் லில்லியின் கவலை குறைகிறது.

"என்னைப் போன்ற எதிர்கால சந்ததியினர், அல்லது என் குழந்தைகள், அல்லது உறவினர்கள் போன்றவர்கள் சாதாரண வாழ்க்கையைப் பற்றி நினைத்துப் பார்க்கமுடியும்," என்று லில்லி கூறுகிறார்.

'இதை பிரிட்டன் மட்டுமே செய்ய முடியும்'

மூன்று நபர் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் அறிவியலை உருவாக்கிய பிரிட்டன், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்குப் பிறகு, அவற்றை உருவாக்க அனுமதிக்கும் சட்டங்களை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடாக மாறியது.

மைட்டோகாண்ட்ரியாக்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்தும் அவற்றின் சொந்த டிஎன்ஏவும் அவற்றிடம் இருப்பதால் சர்ச்சை எழுந்தது.

இதன் பொருள், குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து டி.என்.ஏவைப் பெறுகின்றனர். அதேபோல கருமுட்டை தானம் செய்த பெண்ணிடமிருந்து சுமார் 0.1% டி.என்.ஏவைப் பெறுகின்றனர்.

இந்த நுட்பத்தின் மூலம் பிறக்கும் பெண்கள், இதை தங்களுக்குப் பிறக்கும் சொந்தக் குழந்தைகளுக்குக் கடத்துவார்கள், எனவே இது மனித மரபணு மரபின் நிரந்தர மாற்றமாகும்.

இந்த தொழில்நுட்பம் விவாதிக்கப்பட்டபோது, இது சிலருக்கு அதீதமான படியாக தோன்றியது, இது மரபணு மாற்றப்பட்ட "வடிவமைப்பாளர்" குழந்தைகளை பிறக்கச் செய்வதற்கு கதவுகளைத் திறக்கும் என்ற அச்சத்தையும் எழுப்பியது.

நியூகேஸில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சர் டக் டர்ன்புல் "உலகில் இங்கு மட்டும்தான் இப்படி நடந்திருக்கும் என நினைக்கிறேன், நாம் இருக்கும் இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல முதல்-தர அறிவியல் இருந்தது, மருத்துவ சிகிச்சைக்கு அதை நகர்த்தவும் அனுமதிக்கவும் சட்டம் இருந்தது. இப்போது மைட்டோகாண்ட்ரியல் நோயிலிருந்து விடுபட்ட எட்டு குழந்தைகளைப் பெற்றுள்ளோம், என்ன ஒரு அற்புதமான முடிவு!"என்றார்

லில்லி அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் லிஸ் கர்டிஸ் கூறுகையில், "பல வருட காத்திருப்புக்குப் பிறகு, இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன என்பது நமக்குத் தெரியும். இந்தக் குழந்தைகள் அனைவருக்கும் மிட்டோவின் அறிகுறிகள் எதுவும் இல்லை."

"பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு, இந்த மரபுவழி நிலையின் சுழற்சியை உடைப்பதற்கான முதல் உண்மையான நம்பிக்கைக்கீற்று இதுவாகும்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c77vgjl0p4ro

5.3 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விலை போன `விண்வீழ்கல்‘

1 month 4 weeks ago

66f78fcc7f98c96f442f7fb86aea82d8eae21c69

5.3 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விலை போன `விண்வீழ்கல்‘

செவ்வாய்க் கோளைச் சேர்ந்த 24.5 கிலோகிராம் எடையுடைய அரிய விண்வீழ்கலொன்று  5.3 மில்லியன் அமெரிக்க டொலருக்கு Sotheby’s நிறுவனம் நடத்திய ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஏலம் சுமார் 15 நிமிடங்கள் நீடித்துள்ளது எனவும், அதில்  நிகழ்நிலை மூலமாக பலர் பங்கேற்றிருந்தனர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘NWA 16788’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த  விண்வீழ்கல்லானது 2023ஆம் ஆண்டு சஹாரா பாலைவனத்தில் உள்ள நைஜர் நாட்டின் அகாடெஸ் பகுதியில்  கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன் குறித்த விண்வீழ் செவ்வாய்க் கோளிலிருந்து பிரிந்த மிகப்பெரிய துண்டு என்றும் உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து Sotheby’s நிறுவனத்தின் துணைத்தலைவர் கெசேண்ட்ரா ஹெட்டன் கருத்துத் தெரிவிக்கையில் ” இந்த அரிய விண்வீழ்கல் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது எனவும்,  அது பெருங்கடலுக்குப் பதிலாக பாலைவனத்தில் விழுந்தது மிகப் பெரிய அதிசயம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1439682

சூரிய குடும்பத்தைவிட பல கோடி ஆண்டுகள் பழமையான வால் நட்சத்திரம் கண்டுபிடிப்பு

1 month 4 weeks ago

3I/Atlas - மிக பழமையான வால்மீன்

பட மூலாதாரம்,ESO/O. HAINAUT

படக்குறிப்பு, 3I/Atlas என்பது இதுவரை காணப்படாத மிகப் பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கட்டுரை தகவல்

  • ஜார்ஜினா ரென்னார்ட்

  • அறிவியல் & காலநிலை செய்தியாளர்

  • 17 ஜூலை 2025, 11:40 GMT

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த வாரம் வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மர்மமான வால்மீன், இதுவரை காணப்பட்ட மிகப் பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

3I/Atlas என்று பெயரிடப்பட்ட இது, நமது சொந்த சூரிய குடும்பத்தைவிட மூன்று பில்லியன் ஆண்டுகள் (300 கோடி ஆண்டுகள்) பழமையானதாக இருக்கலாம் என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகக் குழு தெரிவிக்கிறது.

நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால் இருந்து வரும் ஒரு பொருளை விஞ்ஞானிகள் கண்டறிவது மூன்றாவது முறை. டர்ஹாமில் நடைபெற்ற பிரிட்டனின் ராயல் வானியல் சங்கத்தின் தேசிய கூட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று இந்த முதல்கட்ட கண்டுபிடிப்புகள் விளக்கப்பட்டன.

"நாங்கள் அனைவரும் 3I/Atlas வால்மீன் பற்றி அறிந்ததில் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்" என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக வானியலாளர் மேத்யூ ஹாப்கின்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

"நான் எனது முனைவர் பட்டத்தை முடித்துவிட்டேன், அதில் நான்கு ஆண்டுகள் விண்மீன்களுக்கு இடையிலான பொருட்களைக் கணித்து ஆய்வு செய்தேன். இறுதியாக, எனது ஆய்வுகளில் முதல் முறையாக ஒரு வான்பொருளைக் கண்டுபிடித்தோம்," என்று அவர் கூறினார்.

3I/Atlas எனும் பொருளின் வேகத்தை ஆய்வு செய்த மேத்யூ ஹாப்கின்ஸ், இது ஏழு பில்லியன் ஆண்டுகளுக்கு (700 கோடி ஆண்டுகள்) மேல் பழமையானதாக இருக்கலாம் என்கிறார்.

மேலும், இதுவரை காணப்பட்ட வால்மீன்களுக்கு இடையிலான பொருட்களில் இது மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். 3I/Atlas, ஜூலை 1, 2025 அன்று சிலியில் உள்ள அட்லஸ் சர்வே தொலைநோக்கி மூலம் முதலில் காணப்பட்டது. அப்போது அது சூரியனில் இருந்து 670 மில்லியன் கி.மீ. தொலைவில் இருந்தது.

இப்போது, மிகப்பெரிய தொலைநோக்கிகள் மூலம் மட்டுமே பார்க்க முடியும் இந்த வான்பொருள், தனது மண்டலத்தில் உள்ள சூரியனிடம் இருந்து, பூமியில் இருந்து வியாழன் கோள் அமைந்திருக்கக்கூடிய தூரத்தில் அமைந்துள்ளது. அந்த வால்மீன் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, உலகெங்கிலும் உள்ள வானியலாளர்கள் அதன் பாதையைக் கண்டறியவும், அதைப் பற்றிய கூடுதல் தகவல்களைச் சேகரிக்கவும் முயன்று வருகின்றனர்.

அது பால்வீதி மண்டலத்தின்(Milky way galaxy) "தடிமனான வட்டில்" (thick disk) இருந்து வந்திருக்கலாம் என்கிறார் ஹாப்கின்ஸ். இந்தத் தடிமனான வட்டு என்பது, பெரும்பாலான நட்சத்திரங்கள் உள்ள பகுதியில் மேலும் கீழுமாகச் சுற்றி வரும் ஆதிகால நட்சத்திரங்களைக் குறிக்கிறது.

3I/Atlas - மிக பழமையான வால்மீன்

பட மூலாதாரம்,MATTHEW HOPKINS

படக்குறிப்பு, 3I/Atlas-ன் மதிப்பிடப்பட்ட சுற்றுப்பாதைகள் சிவப்பு நிறத்திலும், சூரியனின் சுற்றுப்பாதைகள் மஞ்சள் நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன.

பால்வீதியை மேலிருந்து பார்க்கும்போது, 3I/Atlas நமது சூரிய மண்டலத்தைச் சுற்றி எவ்வாறு பயணிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். 3I/Atlas-ன் மதிப்பிடப்பட்ட சுற்றுப்பாதைகள் சிவப்பு நிறத்திலும், நமது சூரியனின் சுற்றுப்பாதைகள் மஞ்சள் நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன.

3I/Atlas ஒரு பழைய நட்சத்திரத்தைச் சுற்றி உருவாகியிருக்கலாம் என்பதால், இது பெரும்பாலும் உறைந்த நீரால் ஆனது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த ஆண்டு இறுதியில் இது அதன் சூரியனை நெருங்கும்போது, சூரிய ஆற்றல் இதன் மேற்பரப்பை வெப்பமாக்கி, நீராவியையும் தூசியையும் வெளிப்படுத்தலாம். இதனால் ஒரு ஒளிரும் வால் உருவாக வாய்ப்பு உள்ளது.

ஹாப்கின்ஸ் உருவாக்கிய மாதிரியைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளை மேற்கொண்டனர்.

"இது நாம் இதுவரை நெருக்கமாகப் பார்க்காத விண்மீன் மண்டலப் பகுதியில் இருந்து வந்த பொருள்," என்கிறார் ஆய்வின் இணை ஆசிரியர் பேராசிரியர் கிறிஸ் லிண்டாட்.

"இந்த வால் நட்சத்திரம் சூரிய குடும்பத்தைவிட பழமையானதாக இருப்பதற்கும், விண்மீன்களுக்கு இடையிலான விண்வெளியில் பயணித்து வருவதற்கும் மூன்றில் இரண்டு பங்கு வாய்ப்புள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

விண்மீன்களுக்கு இடையிலான பொருட்கள், நட்சத்திரங்கள் உருவாகும்போது அவற்றைச் சுற்றி உருவாகின்றன என்று விளக்கும் ஹாப்கின்ஸ், "அவற்றின் தாய் நட்சத்திரங்களுடனான இந்தத் தொடர்பு, பால்வீதியின் நட்சத்திரக் கூட்டத்தை ஆராய உதவுகிறது" என்று கூறுகிறார்.

இந்த ஆண்டு இறுதியில், 3I/Atlas தொடக்கநிலை தொலைநோக்கிகளால் பூமியில் இருந்து தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3I/அட்லஸ் தோன்றுவதற்கு முன், வேறு இரண்டு விண்மீன் பொருட்கள் மட்டுமே காணப்பட்டன. அவை 2017இல் கண்டறியப்பட்ட 1I/'ஓமுவாமுவா மற்றும் 2019இல் கண்டறியப்பட்ட 2I/போரிசோவ் என்று அழைக்கப்படுகின்றன.

உலகெங்கிலும் உள்ள வானியலாளர்கள், சிலியில் வேரா சி. ரூபின் என்று அழைக்கப்படும் ஒரு புதிய, சக்தி வாய்ந்த தொலைநோக்கியைப் பயன்படுத்தத் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதியில் தெற்கு இரவு வானத்தை முழுமையாக ஆய்வு செய்யத் தொடங்கும்போது, விண்மீன்களுக்கு இடையிலான 5 முதல் 50 புதிய பொருட்களைக் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg57lr4v82o

விண்வெளி சென்ற சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்!

2 months ago

iss073e0249461large.jpg?resize=750%2C375

விண்வெளி சென்ற சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்!

விண்வெளி மையத்திலிருந்து பூமி திரும்புவதற்காக டிராகன் விண்கலத்துக்குள் சுபான்ஷு சுக்லா உடன் ஏனைய 3 விண்வெளி வீரர்களும் நுழைந்தனர்.

இன்று மாலை 4.35 மணிக்கு விண்கலம் பூமியை நோக்கிய தனது 24 மணி நேர பயணத்தை தொடங்குகிறது.

அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின், டிராகன் விண்கலம் வாயிலாக, அக்சியம் மிஷன் 4 திட்டத்தில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் கடந்த ஜூன் 25ம் திகதி விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.

இவர்கள் அங்கு பல்வேறு முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்திய விண்வெளி வீரர் சுக்லா, தனது விண்வெளி பயணத்தின் இறுதிக் கட்டத்தில், ஒரு விவசாயியாக மாறினார்.

இந்நிலையில் இன்று ( ஜூலை 14) பூமிக்கு திரும்புகின்றனர்.

இன்று மாலை 4.15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்கலம் தனியாக பிரிக்கப்பட்டு மாலை 4.35 மணிக்கு பூமியை நோக்கிய விண்கலத்தின் பயணம் தொடங்கியுள்ளது.

டிராகன் விண்கலம், 24 மணி நேர பயணத்திற்கு பின்னர், நாளை மதியம் 3 மணிக்கு பூமி வந்தடையும்.

வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில், விண்கலத்தை பாதுகாப்பாக தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக அமெரிக்க கடற்படையும் தயார் நிலையில் உள்ளது.

இந்திய விண்வெளி வீரர் சுக்லாவை வரவேற்க அவரது பெற்றோர் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

https://athavannews.com/2025/1439126

பூமியின் சுழற்சி வேகம் குறையும் போக்கு மாறி, கடந்த 20 ஆண்டுகளில் வேகமெடுத்து சுழல்வது ஏன்?

2 months ago

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்

  • பிபிசி தமிழுக்காக

  • 12 ஜூலை 2025, 08:41 GMT

    புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

2025 ஜூலை 9-ஆம் தேதி, பூமி வழக்கத்தைவிட 1.38 மில்லி விநாடிகள் வேகமாக சுழன்றது. இதனால், 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் ஒரு முழு சுழற்சியை முடித்தது. இது வரலாற்றில் பதிவான மிகக் குறுகிய நாட்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

பன்னாட்டு பூமி சுழற்சி & குறிப்பு முறைமை சேவை (IERS) விஞ்ஞானிகள் மேலும் அடுத்தடுத்து குறுகிய நாட்களை எதிர்பார்க்கிறார்கள். ஜூலை 23 மற்றும் ஆகஸ்ட் 6, 2025- ஆகிய நாட்களில் ஒரு நாளின் நீளம் முறையே 1.388 மில்லி விநாடிகள் மற்றும் 1.4545 மில்லி விநாடிகள் குறைவாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு மில்லி விநாடி என்பது ஒரு விநாடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரம் ஆகும். இது கண் சிமிட்டும் நேரத்தைவிட (சுமார் 100 மில்லி விநாடிகள்) கணிசமாகக் குறைவு.

'ஒரு நாள்' என்றால் என்ன?

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஒரு மில்லி விநாடி என்பது ஒரு விநாடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரம் ஆகும்.

நாம் பொதுவாக ஒரு நாளை 24 மணி நேரம் - அதாவது பூமி தன்னைத்தானே சுழல எடுக்கும் காலம் எனக் கருதுகிறோம். ஆனால் இது முழுமையான உண்மை அல்ல. வெகு தொலைவில் உள்ள விண்மீனின் கிரகம் ஒன்று 360 டிகிரி சுழன்ற பின்னர் அதே வான் நிலைக்கு திரும்ப சுமார் 23 மணி 56 நிமிடங்கள் 4 வினாடிகள் ஆகும். இந்த கால அளவு 'நட்சத்திர நாள்' (Sidereal Day) என அழைக்கப்படுகிறது, இது நமது வழக்கமான 24 மணி நேரம் கொண்ட நாளை விட 4 நிமிடங்கள் குறைவாக உள்ளது.

சூரியனின் நிலையை அடிப்படையாகக் கொண்டு (ஒரு மதியம் முதல் அடுத்த மதியம் வரை) நாம் நாளின் நீளத்தை அளந்தால், இந்த 'சூரிய நாள்' (Solar Day) வருடம் முழுவதும் மாறிக்கொண்டே இருக்கும்.

பூமி சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றுவதால், சூரியனுக்கு அருகில் இருக்கும் ஜனவரி மாதத்தில் வேகமாகவும், சூரியனிடமிருந்து தொலைவில் இருக்கும் ஜூலை மாதத்தில் மெதுவாகவும் நகர்கிறது. மேலும் பூமியின் சாய்ந்த அச்சும் சூரிய நாளின் நீளத்தை பாதிக்கிறது.

இதன் விளைவாக, உண்மையான சூரிய நாள் டிசம்பர் இறுதியில் 24 மணி 30 வினாடிகள் வரை நீளமாகவும், செப்டம்பர் நடுப்பகுதியில் 23 மணி 59 நிமிடங்கள் 38 வினாடிகள் எனக் குறுகியும் இருக்கும்.

நடைமுறை நேரக் கணக்கீட்டிற்காக, இந்த எல்லா மாறுபாடுகளின் சராசரியான 'சராசரி சூரிய நாளை' (Mean Solar Day) பயன்படுத்துகிறோம். இதுவே 24 மணி நேரம் (அல்லது 86,400 வினாடிகள்) என நாம் வரையறை செய்கிறோம். இதுவே நமது நாள்தோறும் பயன்படுத்தும் நேர அமைப்பின் அடிப்படையாகும். இதன் தொடர்ச்சியாகக் கடிகாரம் சரியாக 86,400 வினாடிகளைக் கடக்கும்போது ஒரு நாள் முடிந்துவிட்டது எனக் கருதுகிறோம்.

இதன் பொருள், 9 ஜூலை 2025 அன்று உண்மையான நாளின் நீளம் 23 மணி 59 நிமிடங்கள் 59.9985793 வினாடிகள் அல்லது 86,399.9986154 வினாடிகள் மட்டுமே இருந்தது; கடிகார நாளின் நீளமான 86,400 வினாடிகள் (24 மணி நேரம்) அல்ல.

அறிவியல் பார்வையில் நாளின் நீட்சி

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நாளின் நீட்சி நேர்மறை மதிப்பைக் கொண்டிருக்கும் போது, பூமியின் சுழற்சி மெதுவாகிறது.

அன்றாட பேச்சுவார்த்தைகளில் "நாளின் நீட்சி" என்று குறிப்பிடும் போது, சூரியன் உதயமாகி அஸ்தமிக்கும் பகல் நேரம் அல்லது நமது கடிகாரங்களில் காணப்படும் 24 மணி நேரம் என புரிந்துக்கொள்கிறோம்.

ஆனால் பூமியின் சுழற்சியை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளுக்கு இது நமது கிரகம் வழக்கத்தைவிட வேகமாக அல்லது மெதுவாக சுழல்வதை அளவிடும் ஒரு அலகு வரையறையாகும்.

பன்னாட்டு பூமி சுழற்சி மற்றும் குறிப்பு முறைமை சேவை (IERS) வெரி லாங் பேஸ்லைன் இன்டர்ஃபெரோமெட்ரி (VLBI) ரேடியோ தொலைநோக்கிகளை பயன்படுத்தி தொலைதூர ரேடியோ மூலங்களான குவாசர்களைக் கண்காணிக்கிறது.

இந்த ரேடியோ மூலங்கள் வானத்தில் அதே துல்லியமான நிலைக்குத் திரும்புவதற்கான நேரத்தை அவர்கள் மிகத் துல்லியமாக அளக்கின்றனர். இதிலிருந்து பூமியின் மெய்யான சுழற்சி வேகம் கணக்கிடப்படுகிறது. இந்த அளவீடு யுனிவர்சல் டைம் (UT1) எனப்படும்.

விஞ்ஞானிகள் இந்த உண்மையான அளவீட்டை (UT1) நாம் நேரக் கணக்கீட்டில் பயன்படுத்தும் கடிகார நாளின் நீட்சியான 86,400 வினாடி நீண்ட சராசரி நாளுடன் ஒப்பிடுகின்றனர். இவ்விரண்டுக்கும் இடையிலான வேறுபாடு, மில்லி வினாடிகளில் அளவிடப்படும் போது, அதைத்தான் விஞ்ஞானிகள் "நாளின் நீட்சி" (LOD) என்று அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடுகின்றனர்.

நாளின் நீட்சி நேர்மறை மதிப்பைக் கொண்டிருக்கும் போது, பூமியின் சுழற்சி மெதுவாகிறது; ஒரு நாளின் நீட்சி கூடுகிறது என்பது பொருள். அதே போல எதிர்மறை மதிப்பு காணப்படும்போது, அது வேகமாக சுழல்கிறது, நாளின் நீட்சி குறைந்து விட்டது என்று பொருள்.

காலத்தைக் கணிக்கும் புதைபடிவங்கள்

இன்றைய வானியலாளர்கள் பூமியின் சுழற்சி மாறுபாடுகளைக் கண்டறிய தொலைதூர குவாசர்களைப் பயன்படுத்தினால், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் சுழற்சியைப் கண்டுபிடிக்க புதைபடிவ மரங்களையும் பவளப்பாறைகளையும் தொல்லுயிரி வல்லுநர்கள் பயன்படுத்துகின்றனர்.

மரங்களின் அடிமரத்தில் ஆண்டுதோறும் வளரும் வருடாந்திர வளையம் போலவே, ருகோஸ் (rugose) மற்றும் ஸ்க்ளராக்டினியன் (scleractinian) போன்ற பவளங்கள் தங்கள் கால்சியம் கார்பனேட் கூடுகளில் தினசரி மற்றும் வருடாந்திர வளையங்களை உருவாக்குகின்றன. இவற்றில் தினசரி வளையங்கள் இரவு-பகல் சூரிய ஒளிச் சுழற்சியின் மாறுபாடுகளால் உருவாகின்றன.

அதேநேரம், தடித்த வருடாந்திர வளையங்கள் பருவமாற்றங்களைக் காட்டுகின்றன. இந்தத் தினசரி வளையங்களை எண் தொகை செய்து ஆராய்ச்சியாளர்கள் பூமி ஒரு வருடத்தில் எத்தனை சுழற்சிகளை முடித்தது என்பதைக் கணக்கிடுகின்றனர்.

உதாரணமாக, மத்திய டெவோனியன் காலத்திய (சுமார் 385 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) பவளப் புதைபடிவங்கள் வருடத்திற்கு 400 தினசரி வளையங்களைக் கொண்டுள்ளன. இதன் பொருள் அக்காலத்தில் பூமி வருடத்திற்கு 400 முறை சுழன்றுள்ளது.

இதைவிட இளைய கார்பனிஃபெரஸ் காலத்திய (சுமார் 330 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) பவளங்களில் வருடத்திற்கு 390 வளையங்கள் மட்டுமே காணப்படுகின்றன. அதாவது அன்று ஒரு வருடம் என்பது 390 நாட்கள். இது காலப்போக்கில் பூமியின் சுழற்சி வேகம் மெதுவாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று பூமி சுமார் 365.25 நாட்களில் சூரியனை சுற்றி வருகிறது.

பூமியின் மாறும் சுழற்சியை வெளிப்படுத்தும் புராதன பதிவுகள்

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பாபிலோனிய களிமண் பலகை ஒன்று கிமு 136-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி பாபிலோனில் நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தை விவரிக்கிறது.

வரலாற்றாசிரியர்களும் இந்த ஆராய்ச்சிப் பயணத்தில் இணைந்துள்ளனர். கிமு 8-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு நடந்த சூரிய, சந்திர கிரகணங்களின் வரலாற்று பதிவுகளை ஆய்வு செய்து அந்த கால பூமியின் சுழல் வேகத்தை கணக்கிட முனைந்துள்ளனர்.

எடுத்துக்காட்டாக, பாபிலோனிய களிமண் பலகை ஒன்று கிமு 136-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி பாபிலோனில் நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தை விவரிக்கிறது. நவீன கணினி மாதிரிகள் மூலம், ஆராய்ச்சியாளர்கள் இந்த கிரகணத்தின் சரியான பாதையை மீண்டும் உருவாக்க முடிந்தது. எந்த வேகத்தில் பூமி சுழன்றால் பதிவுகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி பாபிலோனிலிருந்து கிரகணம் புலப்பட்டிருக்கும் என கணினி மாதிரி கொண்டு ஆய்வு செய்தனர்.

இதன் வழியே அன்று பூமி தன்னைத்தானே சுழல எடுத்துக் கொண்ட நேரத்தை கணக்கிட முடிந்துள்ளது. இதுபோன்ற வரலாற்று ஆய்வுகளிலிருந்து இந்த வரலாற்றுக் காலப்பகுதியில் நாளின் நீட்சி (LOD) ஒரு நூற்றாண்டுக்கு சுமார் 1.74 முதல் 1.8 மில்லி வினாடிகள் வரை அதிகமாக இருந்துள்ளது என்பதாகும். அதாவது பூமி சுழலும் வேகம் குறைந்துள்ளது; நாளின் நீட்சி அதிகரித்துள்ளது.

நாளின் நீட்சி அதிகரித்து வருகிறது

மத்திய டெவோனியன் காலத்தில் (சுமார் 385 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு), ஒரு நாள் வெறும் 22 மணி நேரம் (78,891 வினாடிகள்) மட்டுமே நீண்டிருந்தது. டைனோசர்கள் வாழ்ந்த காலத்திற்குள் (50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு), இது 23 மணி நேரமாக நீளமடைந்தது.

சீன எழுத்தர்கள் விலங்கு எலும்புகளில் பொறித்த வானியல் குறிப்புகள் மற்றும் கிரகண பதிவுகளை ஆய்வு செய்த விஞ்நானிகள், கிமு 1200-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இன்றைய நாட்கள் 0.047 வினாடிகள் நீளமாகியுள்ளன எனக் கணக்கிட்டுள்ளனர்.

இன்னும் 200 மில்லியன் ஆண்டுகள் கழித்து, ஒரு நாள் 25 மணி நேரம் வரை நீளக்கூடும் என விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். பூமியின் சுழற்சி நிலவின் ஈர்ப்பு விசை (tidal forces) மற்றும் பிற காரணிகளால் படிப்படியாக மெதுவாகிக் கொண்டிருக்கிறது என்பதே இந்த ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மை.

பூமியின் மாறும் சுழற்சியும் நேரத்தைச் சரிகட்டும் முறைகளும்

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 1955இல் பிரிட்டனில் உருவாக்கப்பட்ட அணு கடிகாரம்

1960களில் உருவாக்கப்பட்ட நவீன அணு கடிகாரங்கள், நமது கிரகம் துல்லியமான நிலை வேகத்தில் சுழலவில்லை என்பதை வெளிப்படுத்தின. விஞ்ஞானிகள் தொலைதூர ரேடியோ சிக்னல்களைக் கண்காணிக்கும் போது, பூமியின் சுழற்சி வேகம் நாளுக்கு நாள் சிறிது மாறுபடுவதை கண்டறிந்தனர்.

பொதுவாக ஒரு நாளில், அதாவது 86,400 வினாடிகளில் ஒன்று அல்லது இரண்டு மில்லிவினாடிகள் வரை மட்டுமே மாறுபடுகின்றன என்றாலும், நமது கிரகம் சில நேரங்களில் எதிர்பாராத வகையில் வேகமாகவோ அல்லது மெதுவாகவோ சுழல்கிறது என்பதும் வெளிப்பட்டுள்ளது.

நாளின் நீட்சி (LOD) என அளக்கப்படும் இந்தச் சிறிய தினசரி மாறுபாடுகள் முக்கியமற்றதாகத் தோன்றலாம். ஆனால் சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல ஆண்டுக்கணக்காகக் கூட்டிப்பார்க்கும்போது, இந்த வேறுபாடு கணிசமாக கூடிக்கொண்டே போகின்றது.

சூரியனைச் சுற்றி பூமியின் 365.2422 நாள் சுற்றுப்பாதையுடன் நமது 365 நாள் காலண்டரை சீரமைக்க ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒரு நாளை (லீப் டே) சேர்க்கிறோம். அதேபோல், இந்த சுழற்சி மாறுபாடுகளுக்கான திருத்தமும் தேவைப்படுகிறது. இங்குதான் 'லீப் செகண்ட்' (தாவல் வினாடி) பங்களிக்கிறது.

1972ல் அறிமுகப்படுத்தப்பட்ட லீப் செகண்ட்கள், நமது அதிநவீன அணு கடிகாரங்களை பூமியின் உண்மையான சுழற்சியுடன் ஒத்திசைக்க உதவுகின்றன. பூமியின் சுழற்சி மெதுவாகும் போது, நாள் நீட்சி கூடும்போது நாம் நேர்மறை லீப் செகண்ட் சேர்க்கிறோம். வேகமானால் (இது இதுவரை நடக்கவில்லை), எதிர்மறை லீப் செகண்ட் நீக்க வேண்டியிருக்கும்.

இதுவரை செய்யப்பட்ட 27 சரிசெய்தல்களும் நேர்மறை வகையைச் சேர்ந்தவையே. 2016ல் இடம்பெற்ற கடைசி சரிசெய்தல், சமீபத்திய சில தசாப்தங்களில் நமது கிரகம் சுழலும் வேகம் படிப்படியாக மெதுவாகி வருவதைக் காட்டுகிறது.

பூமியின் சுழற்சி ஏன் ஒழுங்கற்று தள்ளாடுகிறது?

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பூமி சுழலும் வேகம் படிப்படியாக குறைந்து தேய்ந்து, நாளின் நீட்சி கூடுதலடைந்து கொண்டே வருகின்றது.

பல மில்லியன் ஆண்டுகளாக, நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் சுழற்சியை மெதுவாக்கி வருகிறது. இந்தத் தொடர்ச்சியான இழுபறி, பூமியின் சுழற்சி ஆற்றலை நிலவுக்கு மாற்றுகிறது.

இதன் விளைவாக, பூமி சுழல் வேகம் படிப்படியாக குறைந்து தேய்ந்து, நாளின் நீட்சி அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதேநேரம், நிலவு வருடத்திற்கு சுமார் 3.8 செ.மீ தொலைவில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வே கடந்த 30-40 ஆண்டுகளில் லீப் செகண்ட்களை (தாவல் வினாடிகள்) சேர்த்துக் கொண்டே வர வேண்டிய காரணமாக அமைந்துள்ளது.

ஆனால் பூமியின் தினசரி சுழற்சி மாறுபாடுகளுக்கு என்ன காரணம்?

விஞ்ஞானிகள் இரண்டு முக்கிய காரணிகளைச் சுட்டிக்காட்டுகின்றனர்: வானியல் மற்றும் புவியியல் காரணிகள். நிலவு பூமியை ஒரு எளிய வட்டத்தில் சுற்றுவதில்லை; அதன் பாதை சாய்ந்தும் தடுமாறியும் உள்ளது.

நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதை காலப்போக்கில் மாறுகிறது. அதன் ஈர்ப்பு விளைவுகள், அது பூமியின் பூமத்திய ரேகையின் வடக்கில் அல்லது தெற்கில் இருக்கும்போது மாறுபடுகின்றன.

ஜூலை 9, 23 மற்றும் ஆகஸ்ட் 6, 2025 அன்று நிகழும் "லூனார் ஸ்டாண்ட்ஸ்டில்" போன்ற சிறப்பு நிகழ்வுகளின் போது, நிலவு பூமத்திய ரேகையிலிருந்து அதன் அதிகபட்ச தொலைவில் (ஒரு துருவத்தை நோக்கி) இருக்கும் போது, பூமியின் சுழற்சிக்கு ஒரு கூடுதல் "தள்ளுதலை" அளிக்கிறது. வியாழன் போன்ற தொலைதூர கிரகங்களும் சிறிய ஈர்ப்பு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பூமியின் நிறை அமைப்பு மாறும்போது எல்லாம் பூமியின் சுழல்வேகம் மாறுபடும்.

பூமியும் ஒரு நிலையான மேடை அல்ல. 2004 சுமத்ரா பூகம்பம் போன்ற பெரும் பூகம்பங்கள், பூமியின் நிறை மறுபகிர்வு மூலம் அதன் சுழற்சியை மாற்றியமைக்கின்றன. அந்தப் பூகம்பம், பூமியின் நிறையை உள்நோக்கி மாற்றியதன் விளைவாக, நாட்களை 2.68 மைக்ரோவினாடிகள் குறைத்தது.

ஒரு சுழலும் அலுவலக நாற்காலியை கொள்வோம்: அதில் அமர்ந்து சுழலும்போது உங்கள் கைகளை உடலுக்கு அருகில் கொண்டு வரும்போது மேலும் வேகமாகச் சுழல்கிறீர்கள்; கைகளை விரிக்கும்போது மெதுவாகிறீர்கள். இதே போல பூமியின் நிறை அமைப்பு மாறும்போது பூமியின் சுழல் வேகமும் மாறுபடும்.

பூகம்பங்கள், காற்று அல்லது கடல் நீரோட்டங்கள் மூலம் பூமியின் நிறை மறுபகிர்வு ஏற்படும்போது, பூமியும் இதேபோல் செயல்படுகிறது. வளிமண்டலமும் அதன் பங்கை வகிக்கிறது. பருவக்காற்றுகள் மற்றும் எல் நினோ போன்ற காலநிலை முறைகள், மலைகள் மற்றும் கடல்களுக்கு எதிராக மோதி, பூமியின் சுழற்சியில் கண்ணுக்குத் தெரியாத வேகத்தடை அல்லது வேகமுடுக்கிகளாகச் செயல்படுகின்றன.

கடல் நீரோட்டங்கள் கூட, பெரும் நீர்ப்பகுதிகளை நகர்த்துவதன் மூலம் நமது கிரகத்தின் சுழற்சி விகிதத்தை மாற்றுகின்றன. இந்த அனைத்து சக்திகளும் சேர்ந்து, ஒவ்வொரு நாளையும் முந்தைய நாளிலிருந்து சற்று வித்தியாசமாக்குகின்றன.

நம் அன்றாட வாழ்வில் எவ்வாறு எதிரொலிக்கும்?

மனிதர்களுக்கு ஒரு மில்லிவிநாடி என்பது பொருட்டே அல்ல; கண் சிமிட்டக் கூட சுமார் 100 மில்லிவினாடிகள் தேவை.

ஜூலை 9 ஆம் தேதி, பூமியின் சுழற்சி வழக்கத்தைவிட 1.38 மில்லிவினாடிகள் குறைவாக இருந்தபோது, நமது நாள் 23 மணி 59 நிமிடங்கள் மற்றும் 59.9985793 வினாடிகள் நீளமாக இருந்தது. இது மிகச் சிறிய மாற்றமாகத் தோன்றலாம்; இதை ஏன் பொருட்படுத்த வேண்டும்?

நவீன உயர் தொழில்நுட்ப உலகில், இந்தச் சிறிய நேரப் பகுதிகள் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன. வெறும் 1.38 மில்லிவிநாடிகளில், பூமத்திய ரேகையில் பூமி சுமார் 62.66 சென்டிமீட்டர் சுழல்கிறது. ஏவுகணை வழிகாட்டி அமைப்புகள் அல்லது விண்கலங்களின் இணைப்புக்கு, நானோ வினாடி அளவிலான துல்லியம் கூட மிக முக்கியமானது - இல்லையெனில் இலக்குகள் தவறவிடப்படும் மற்றும் பணிகள் தோல்வியடையும்.

நாம் தினசரி பயன்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கு இந்தத் துல்லியம் இன்னும் முக்கியமானது. ஜிபிஎஸ் செயற்கைக்கோள்களில் உள்ள அணு கடிகாரங்கள் நானோவினாடி (வினாடியின் பில்லியனில் ஒரு பகுதி) துல்லியத்தில் இருக்க வேண்டும், ஏனெனில் ஒரு மைக்ரோவினாடி பிழை கூட உங்கள் இருப்பிடத்தை 300 மீட்டர் வரை தவறாகக் காட்டலாம். ஒரு மில்லிவினாடி பிழை நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் வரை வழிநடத்தல் அமைப்புகளை தவறாக வழிநடத்தும்.

டிஜிட்டல் உலகில், மில்லிவினாடி துல்லிய கணிப்பு மிகமிக அவசியம். கணினி வலையமைப்புகள் செயல்திறனைக் கண்காணிக்கவும் சிக்கல்களைத் தீர்க்கவும் மில்லிவினாடி நேர முத்திரைகளைப் பயன்படுத்துகின்றன.

இணைய வங்கியியல் அமைப்புகள் மோசடியைத் தடுக்க ஒரு மைக்ரோவினாடி வரை பரிவர்த்தனைகளைப் பதிவு செய்கின்றன. ஆகவே, பூமியின் சுழற்சியில் மைக்ரோவிநாடிகள் அளவுக்கு ஏற்படும் சிறு மாறுபாடுகள் கூட நம் அன்றாட வாழ்க்கையில் எதிரொலிக்கக் கூடும். வானியலில் கூட, மில்லிவினாடி துடிப்புகளின் (pulsars) ஆய்வுக்குச் சரியான நேர அளவீடுகள் தேவைப்படுகின்றன.

நேரத்தின் அரசியல்

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 1999இல் நடந்த கார்கில் போர்

பல ஆண்டுகளாக, இந்தியா தன் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் தேவைகளுக்காக (ஏவுகணை வழிகாட்டுதல் போன்றவை) அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் புவிசார் வழிகாட்டி அமைப்புகளை (ஜிபிஎஸ் போன்ற) முறைமைகளை நம்பியிருந்தது. கார்கில் போரின்போது ஒரு வல்லரசு நாடு துல்லிய சேவைகளைத் திடீரென மறுத்ததால், இந்தச் சார்பு ஆபத்தானது என்பது தெளிவானது.

இந்தக் கடினமான பாடம் இந்தியாவை தனது சொந்த செயற்கைக்கோள் வழிகாட்டி முறைமையான IRNSS (இந்தியப் பிராந்திய வழிகாட்டி செயற்கைக்கோள் முறைமை) என முன்னர் அழைக்கப்பட்ட நாவிக்-ஐ (NavIC - Navigation with Indian Constellation) உருவாக்கத் தூண்டியது.

ஆனால் தற்சார்பு வழிகாட்டி முறைமையை உருவாக்குவது தனிச் சவால்களைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு செயற்கைக்கோளிலும் மிகத் துல்லியமான அணு கடிகாரங்கள் தேவைப்பட்டன.

ஆரம்பத்தில், இஸ்ரோ மேற்கு நாடுகளிலிருந்து அணு கடிகாரங்களை இறக்குமதி செய்தது. ஆனால் பல செயற்கைக்கோள்களில் இவை தோல்வியடைந்தன. இது வேண்டுமென்றே செய்யப்பட்ட சதியெனச் சிலர் கூறுகின்றனர். இந்தத் தோல்வி இந்தியாவின் விண்வெளித் திட்டத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

தன்னிறைவு அடைய உறுதி பூண்ட இஸ்ரோ, அணு கடிகாரங்களை இந்தியாவிலேயே உருவாக்கும் சவாலை ஏற்றது. ஆமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் சென்டர் தலைமையில் நாட்டின் ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிய விஞ்ஞானிகள், சொந்தமாக ருபிடியம் அணு கடிகாரங்களை வெற்றிகரமாக உருவாக்கினர்.

முதல் "மேட் இன் இந்தியா" அணு கடிகாரம் 2023 மே மாதம் ஏவப்பட்ட 10வது நாவிக் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டது. அதன் பின்னர், புதிய என்விஎஸ் தொடர் நாவிக் செயற்கைக்கோள்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த அணு கடிகாரங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன.

விரைவில், இந்திய கணினிகள், மடிக்கணினிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள் மற்றும் தொலைபேசிகள், வெளிநாட்டு வழிகாட்டி மற்றும் நேர சேவைகளை நம்பாமல், இந்தச் சொந்த அணு கடிகாரங்களைப் பயன்படுத்தி தங்கள் நேரத்தை ஒத்திசைக்க்கும் அமைப்பு உருவாகும் காலம் வெகுதொலைவில் இல்லை.

பூமியின் சுழற்சி மர்மம்

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த இரு தசாப்தங்களில் திடீர் என வழமைக்கு மாறாக பூமி வேகமெடுத்து சுழல்கிறது.

பல மில்லியன் ஆண்டுகளாக, பூமியின் சுழற்சி படிப்படியாக மெதுவாகிக் கொண்டிருந்தது, இதன் விளைவாக நமது நாட்கள் நீளமாயின. ஆனால் சமீபத்தில் ஒரு விசித்திரமான நிகழ்வு நடந்து வருகிறது. 2020 முதல், பன்னாட்டு பூமி சுழற்சி மற்றும் குறிப்பு முறைமை சேவை (IERS) விஞ்ஞானிகள் நமது கிரகம் வேகமெடுத்து சுழல்வதை கவனித்துள்ளனர்.

உண்மையில், 1960களில் அணு கடிகாரங்கள் நேரத்தை அளவிடத் தொடங்கியதிலிருந்து, 2020 ஆம் ஆண்டு வரலாற்றில் மிகக் குறுகிய 28 நாட்களைப் பதிவு செய்துள்ளது.

இந்த எதிர்பாராத வேகமயக்கம் மிகவும் குறிப்பிடத்தக்கது. கடந்த 27 முறைகளில் செய்ததுபோல் லீப் செகண்ட் சேர்ப்பதற்குப் பதிலாக, முதல் முறையாக ஒரு வினாடியை கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

ஆனால், பூமி ஏன் திடீரென வேகப்படுகிறது? விஞ்ஞானிகள் நமது கிரகத்தின் உருகிய இரும்பு-நிக்கல் கோர் (மையம்) பகுதியில் நிறை மறுபகிர்வு ஏற்பட்டு, சுழற்சியைப் பாதிக்கிறது எனச் சந்தேகிக்கின்றனர். எனினும், நமது உலகம் ஏன் வேகமாகச் சுழல்கிறது என்பதை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை.

கடந்த இரு தசாப்தங்களில் திடீர் என வழமைக்கு மாறாக பூமி ஏன் வேகமெடுத்து சுழல்கிறது என்பது இன்னமும் மர்மம் தான்.

(கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cm208zp2dg7o

சூரிய மண்டலத்தின் நீண்டகால மர்மத்தை தீர்க்க முயலும் உலகின் சக்தி வாய்ந்த தொலைநோக்கி

2 months 1 week ago

ரூபின் ஆய்வகம் மற்றும் ரூபின் துணை தொலைநோக்கி

பட மூலாதாரம்,RUBINOBS

படக்குறிப்பு, சிலியில் உள்ள செரோ பச்சனில் அமைந்துள்ள ரூபின் ஆய்வகம் மற்றும் ரூபின் துணைத் தொலைநோக்கி

கட்டுரை தகவல்

  • ஐயோன் வெல்ஸ்

  • தென் அமெரிக்க செய்தியாளர்

  • ஜார்ஜினா ரானார்ட்

  • அறிவியல் செய்தியாளர்

  • 3 ஜூலை 2025

சிலியில் உள்ள ஒரு சக்தி வாய்ந்த புதிய தொலைநோக்கியில் பதிவு செய்யப்பட்ட முதல் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் புதிய தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் ஆழமான இருண்ட பகுதியை, இதற்கு முன் வேறு எந்தத் தொலைநோக்கியும் வெளிப்படுத்தாத முறையில் உற்றுநோக்கும் திறனைக் கொண்டுள்ளது.

அந்தத் தொலைநோக்கி பதிவு செய்த ஒரு படத்தில், பூமியில் இருந்து 9,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரம் உருவாகும் பகுதியில், பரந்து விரிந்த வண்ணமயமான வாயு மற்றும் தூசு மேகங்கள் சுழல்கின்றன.

உலகின் அதிசக்தி வாய்ந்த டிஜிட்டல் கேமராவை வேரா சி ரூபின் ஆய்வகம் கொண்டுள்ளது. அது, பிரபஞ்சத்தைப் பற்றிய நமது புரிதலை மாற்றுவதாக உறுதியளிக்கிறது.

நமது சூரிய மண்டலத்தில் ஒன்பதாவது கோள் இருந்தால், இந்தத் தொலைநோக்கி அதைத் தனது முதல் ஆண்டிலேயே கண்டுபிடிக்கும் என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.

வேரா ரூபின் தொலைநோக்கி

பட மூலாதாரம்,NSF-DOE VERA C. RUBIN OBSERVATORY

படக்குறிப்பு, வேரா ரூபின் தொலைநோக்கி எடுத்த முதல் படம் டிரிஃபிட் மற்றும் லகூன் நெபுலாக்களை நுணுக்கமான விவரங்களுடன் காட்டுகிறது.

இந்தத் தொலைநோக்கி பூமிக்கு அருகிலுள்ள ஆபத்தான சிறுகோள்களை கண்டறிந்து, பால்வீதியை வரைபடமாக்கும். மேலும், நமது பிரபஞ்சத்தின் பெரும்பகுதியை உருவாக்கும் மர்மமான இருண்ட பொருள் (டார்க் மேட்டர்) குறித்த முக்கியக் கேள்விகளுக்கு பதிலளிக்கும்.

இந்தத் தொலைநோக்கி 10 மணிநேரத்தில் 2,104 புதிய சிறுகோள்களையும், பூமிக்கு அருகில் உள்ள ஏழு விண்வெளி பொருட்களையும் கண்டறிந்ததாக, திங்கள் கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ரூபின் ஆய்வகம் தெரிவித்தது.

மற்ற அனைத்து விண்வெளி ஆய்வுகளும், பூமியில் இருந்து செய்யப்படும் ஆய்வுகளும் கூட்டாக ஓர் ஆண்டில் சுமார் 20,000 சிறுகோள்களைக் கண்டுபிடிக்கின்றன.

வேரா சி ரூபின் ஆய்வகம் தெற்குப் பகுதியின் இரவு வானத்தைத் தொடர்ந்து புகைப்படம் எடுப்பதற்கான 10 ஆண்டுக்கால பணியைத் தொடங்கி இருப்பதால், வானியலில் இதுவொரு வரலாற்றுத் தருணமாகக் கருதப்படுகிறது.

"நான் தனிப்பட்ட முறையில் இந்தக் குறிக்கோளை அடைய சுமார் 25 ஆண்டுகள் உழைத்திருக்கிறேன். பல வருடங்களாக இந்த அற்புதமான தளத்தை உருவாக்கி, இதுபோன்ற ஆய்வைச் செய்ய வேண்டும் என்று விரும்பினோம்," என்கிறார் ஸ்காட்லாந்தின் ராயல் வானியலாளர் அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் கேத்தரின் ஹேமன்ஸ்.

இந்த ஆய்வில் பிரிட்டன் முக்கியப் பங்காளியாக உள்ளது. தொலைநோக்கி விண்வெளியைப் படம்பிடிக்கும்போது, அதில் கிடைக்கும் மிகவும் விரிவான புகைப்படங்களை ஆராய பிரிட்டனில் தரவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

வேரா ரூபின் நமது சூரிய மண்டலத்தில் அறியப்பட்ட பொருட்களின் எண்ணிக்கையை பத்து மடங்கு அதிகரிக்கக்கூடும்.

ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டம்.

பட மூலாதாரம்,NSF-DOE VERA C. RUBIN OBSERVATORY

படக்குறிப்பு, பால்வீதியைவிட சுமார் 100 பில்லியன் மடங்கு பெரிய நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள சுழல் நட்சத்திரக் கூட்டங்கள் உள்பட ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டம்

அந்தத் தொலைநோக்கி பதிவு செய்த படங்கள் வெளியிடப்படுவதற்கு முன்பு பிபிசி வேரா ரூபின் ஆய்வகத்தைப் பார்வையிட்டது. சிலியின் ஆண்டிஸ் மலைத்தொடரில், செரோ பச்சோன் என்ற மலையில் இந்த ஆய்வகம் அமைந்துள்ளது. அங்கு, விண்வெளி ஆய்வுக்காக தனியார் நிலத்தில் பல ஆய்வகங்கள் உள்ளன.

அந்த ஆய்வகம் மிக உயரமான வறண்ட சூழலில், மிகவும் இருட்டான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நட்சத்திரங்களைப் பார்க்க இதுவொரு சரியான இடமாக உள்ளது.

இந்த ஆய்வில், இருளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். இரவில் காற்று வீசும் சாலையில் பேருந்து செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்தத் தொலைநோக்கி அமைந்துள்ள இடத்தில், முழு வெளிச்சம் கொடுக்கும் ஹெட்லைட்களை பயன்படுத்தக் கூடாது.

ஆய்வகத்தின் உட்புறமும் இதேபோன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இரவு வானத்தை நோக்கித் திறக்கும் தொலைநோக்கியின் குவிமாடம் முற்றிலும் இருட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு தனி பொறியியல் குழு பணியாற்றுகிறது. வானியல் ஆய்வுக்குத் தடையாக இருக்கக்கூடிய எல்ஈடி விளக்குகள் மற்றும் பிற வெளிச்சங்களை அணைக்க அந்தக் குழு உதவுகிறது.

தொலைநோக்கியின் மூலம் ஆய்வு செய்ய, நட்சத்திரங்களின் ஒளியே "போதுமானதாக" இருக்கிறது என்று திட்டத்தை மேற்பார்வையிடும் விஞ்ஞானி எலானா அர்பாக் கூறுகிறார்.

பிரபஞ்சத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்வதே இந்த வானியல் ஆய்வகத்தின் முக்கியக் குறிக்கோள்களில் ஒன்று என்று கூறும் அவர், அதற்காக, "பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த மங்கலான விண்மீன் திரள்கள் அல்லது சூப்பர்நோவா வெடிப்புகளைப் பார்க்கும் திறனை வளர்க்க வேண்டும்" என்று குறிப்பிடுகிறார்.

"எனவே, நமக்கு மிகவும் கூர்மையான படங்கள் தேவை," என்கிறார் அர்பாக். ஆய்வகத்தின் ஒவ்வொரு வடிவமைப்பும் மிகுந்த துல்லியத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

வேரா ரூபின் ஆய்வகத்தின் 3,200 மெகாபிக்சல் கேமரா.

பட மூலாதாரம்,SLAC NATIONAL ACCELERATOR LABORATORY

படக்குறிப்பு, வேரா ரூபின் ஆய்வகத்தின் 3,200 மெகாபிக்சல் கேமரா, அமெரிக்க எரிசக்தி துறையின் SLAC தேசிய ஆக்ஸலரேட்டர் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டது.

இந்தத் தொலைநோக்கி, அதன் சிறப்பு வாய்ந்த மூன்று-கண்ணாடி வடிவமைப்பின் மூலம் செயல்படுகிறது. இரவு வானத்தில் இருந்து தொலைநோக்கிக்குள் வரும் ஒளி முதலில் 8.4 மீ விட்டமுள்ள முதன்மைக் கண்ணாடியில் விழுகிறது. பின்னர் 3.4 மீ விட்டமுள்ள இரண்டாம் நிலை கண்ணாடியில் பிரதிபலிக்கிறது. அதன் பிறகு, 4.8 மீ விட்டமுள்ள மூன்றாவது கண்ணாடியில் பிரதிபலிக்கப்பட்டு, அந்த ஒளி கேமராவுக்குள் செல்கிறது.

அந்த கண்ணாடிகளைச் சரியான நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒரு துளி தூசிகூட படத்தின் தரத்தை மாற்றிவிடும். இந்தத் தொலைநோக்கியின் அதிக பிரதிபலிக்கும் திறனும், அதனுடைய வேகமும், அதிக அளவிலான ஒளியைப் பிடிக்க உதவுகிறது. இது "மிகவும் தொலைவில் உள்ள பொருட்களைப் பார்க்க முக்கியமானது" என்று ஆய்வகத்தின் தீவிர ஒளியியல் நிபுணரான கில்லெம் மெகியாஸ் கூறுகிறார்.

வானியலில், வெகுதொலைவில் உள்ளன என்பதற்கான அர்த்தம், அவை பிரபஞ்சத்தின் முந்தைய காலங்களைச் சார்ந்தவை என்பதாகும். விண்வெளி மற்றும் நேரத்தின் மரபு ஆய்வின் (Legacy Survey of Space and Time) ஒரு பகுதியாக, இந்தத் தொலைநோக்கியின் கேமரா ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும், பத்து ஆண்டுகள் தொடர்ந்து இரவு வானத்தைப் படம் பிடிக்கும். 1.65 மீ x 3மீ அளவுடைய இந்த கேமரா 2,800 கிலோ எடையுடன், பரந்த பார்வையை வழங்குகிறது.

நகரும் குவிமாடமும் தொலைநோக்கியின் ஏற்றமும் விரைவாக இடமாற்றம் செய்யும் திறன் கொண்டவை என்பதால், இந்த கேமரா இரவில் சுமார் 8 முதல் 12 மணிநேரம் வரை, தோராயமாக ஒவ்வொரு 40 விநாடிகளுக்கும் ஒரு படத்தைப் பதிவு செய்யும்.

டெலஸ்கோப் மவுண்ட் அசெம்பிளி

பட மூலாதாரம்,RUBINOBS

படக்குறிப்பு, கேமராவின் மிகப்பெரிய கண்ணாடிகள், விண்வெளியில் வேகமாக நகரும் பொருட்களில் இருந்து வெளிவரும் மிக மெல்லிய ஒளி மற்றும் சிதைவுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து அவற்றைக் கண்காணிக்க உதவுகின்றன

இந்த கேமரா 3,200 மெகாபிக்சல்களை கொண்டுள்ளது (ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட் ஃபோனின் கேமராவைவிட 67 மடங்கு அதிகம்). அதாவது, ஒரு புகைப்படத்தை முழுமையாகக் காண, 400 அல்ட்ரா HD டிவி திரைகள் தேவைப்படும்.

"முதல் புகைப்படம் எடுக்கப்பட்டபோது, அது ஒரு மறக்க முடியாத சிறப்புத் தருணமாக இருந்தது" என்று பகிர்ந்துகொண்டார் மெகியாஸ்.

"இந்தத் திட்டத்தில் நான் முதன்முதலில் பணியாற்றத் தொடங்கியபோது, 1996 முதல் இதில் பணியாற்றி வந்த ஒருவரைச் சந்தித்தேன். நான் 1997இல் பிறந்தவன். இதைப் பார்த்தபோது, இது ஒரு தலைமுறை வானியலாளர்கள் அர்ப்பணிப்புடன் செய்த முயற்சி என்பதை உணர முடிந்தது" என்றும் அவர் கூறினார்.

ஓர் இரவில் சுமார் 10 மில்லியன் தரவுகள் பதிவு செய்யப்படும் நிலையில், உலகமெங்கும் உள்ள நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் அந்தத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ய வேண்டியிருக்கும்.

"தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் இந்த அம்சம் தான் உண்மையில் புதியதும் தனித்துவமானதும். இது நாம் இதுவரை கற்பனைகூட செய்யாத விஷயங்களை நமக்குக் காண்பிக்கும் ஆற்றலை இது கொண்டுள்ளது" என்று பேராசிரியர் ஹேமன்ஸ் விளக்குகிறார்.

ஆனால், பூமிக்கு அருகில் திடீரென வரும் ஆபத்தான விண்வெளி பொருட்களை, குறிப்பாக YR4 போன்ற சிறுகோள்களைக் கண்டறிந்து எச்சரிக்கையூட்டுவதன் மூலம் நம்மைப் பாதுகாக்கவும் இது உதவக்கூடும். YR4 சிறுகோள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பூமியைத் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் ஒரு கட்டத்தில் கவலை தெரிவித்தனர்.

கேமராவின் மிகப்பெரிய கண்ணாடிகள், விண்வெளியில் வேகமாக நகரும் பொருட்களில் இருந்து வெளிவரும் மிக மெல்லிய ஒளி மற்றும் சிதைவுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து அவற்றைக் கண்காணிக்க உதவுகின்றன.

"இதுவொரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நமது விண்மீனை ஆய்வு செய்ய இதுவரை கிடைத்ததிலேயே இது மிகப்பெரிய தரவுத் தொகுப்பாக இருக்கும். இது பல ஆண்டுகளுக்குப் பிறகும் நமது ஆராய்ச்சிகளை முன்னேற்றும் சக்தியாக இருக்கும்" என்கிறார் டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலிஸ் டீசன்.

பால்வீதியில் உள்ள நட்சத்திரங்களின் எல்லைகளைப் பகுப்பாய்வு செய்ய, அவர் அந்தப் படங்களைப் பெறுவார். தற்போது கிடைக்கும் பெரும்பாலான தரவுகள் சுமார் 1,63,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளவற்றை மட்டுமே காட்டுகின்றன. ஆனால், வேரா ரூபின் தொலைநோக்கியின் உதவியுடன், விஞ்ஞானிகள் 12 லட்சம் ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள பொருட்களையும் காண முடியும்.

பால்வீதியின் நட்சத்திர ஒளிவட்டம் (stellar halo), அதாவது காலப்போக்கில் அழிக்கப்பட்ட நட்சத்திரங்களின் தொகுப்பையும், இன்னும் உயிருடன் இருப்பினும் மிக மங்கலாகவும், கண்டுபிடிக்க கடினமாகவும் இருக்கும் சிறிய விண்மீன் திரள்களையும் காண முடியும் என பேராசிரியர் டீசன் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இவற்றோடு, நமது சூரிய மண்டலத்தில் ஒன்பதாவது கோள் இருக்கிறதா என்ற நீண்டகால மர்மத்துக்கு விடை காணும் அளவுக்கு வேரா ரூபின் தொலைநோக்கி சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என்பது வியக்கத்தக்கது.

அது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தைவிட 700 மடங்கு தொலைவில் இருக்கக்கூடும். இது, பூமியில் இருந்து ஆய்வு செய்யப் பயன்படும் மற்ற தொலைநோக்கிகளால் அடைய முடியாத அளவுக்கு அப்பாற்பட்ட தொலைவு.

"இந்தப் புதிய அழகான ஆய்வகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள நமக்கு நீண்ட காலம் தேவைப்படும். ஆனால் அதற்காக நான் முழுமையாகத் தயாராக இருக்கிறேன்" என்கிறார் பேராசிரியர் ஹேமன்ஸ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cjd2ej1g275o

மனிதர்களையே செயற்கையாக உருவாக்க உதவுமா விஞ்ஞானிகளின் புதிய டி.என்.ஏ ஆய்வு?

2 months 2 weeks ago

மனித டிஎன்ஏ,  அறிவியல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மனித டிஎன்ஏவின் பகுதிகளை புதிதாக ஆதியில் இருந்து உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்

கட்டுரை தகவல்

  • பல்லப் கோஷ்

  • அறிவியல் செய்தியாளர்

  • க்விண்டாஃப் ஹ்யூக்ஸ்

  • அறிவியல் ஒளிப்பதிவாளர்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

மனித உடலின் கட்டுமானத் தொகுதிகளான டிஎன்ஏவை புதிதாக உருவாக்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற ஒரு திட்டம் உலகிலேயே முதன்முறையாக தொடங்கப்படுவதாக நம்பப்படுகிறது.

எதிர்கால சந்ததியினரை தங்கள் விருப்பம் போல வடிவமைத்துவிடலாம் மற்றும் எதிர்பாராத மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்ற கவலைகள் காரணமாக டிஎன்ஏ ஆராய்ச்சிகள் இதுவரை தடைசெய்யப்பட்டிருந்தன.

ஆனால் தற்போது உலகின் மிகப்பெரிய மருத்துவ தொண்டு நிறுவனமான வெல்கம் டிரஸ்ட், இந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கான ஆரம்பத் தொகையாக 10 மில்லியன் யூரோ வழங்கியுள்ளது. பல குணப்படுத்த முடியாத நோய்களுக்கான சிகிச்சைகளை விரைவுபடுத்துவதன் மூலம் செயற்கை டிஎன்ஏ, தீமைகளைவிட நன்மைகளையே அதிகமாகச் செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக வெல்கம் டிரஸ்ட் கூறுகிறது.

இந்தத் திட்டத்தில் முக்கிய உறுப்பினரும், கேம்பிரிட்ஜில் உள்ள எம்.ஆர்.சி மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் ஜூலியன் சேல், இந்த ஆராய்ச்சியானது உயிரியலில் அடுத்த மிகப் பெரிய முன்னெடுப்பு என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

"வானமே எல்லை. முதியவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் சிகிச்சைகள் தேவை. வயதாகும்போது நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமான முதுமைக்கு வழிவகுக்கும் சிகிச்சைகளை நாம் தேடுகிறோம்."

"அதற்கு செயற்கை டிஎன்ஏவை பயன்படுத்தலாம், சேதமடைந்த உறுப்புகளை மீண்டும் உயிர்ப்பிக்கலாம். எடுத்துக்காட்டாக கல்லீரல், இதயம், நோய் எதிர்ப்பு மண்டலம் உள்பட, நோய் எதிர்ப்பு செல்களை உருவாக்க செயற்கை டிஎன்ஏவை பயன்படுத்த முடியும்," என்று அவர் கூறினார்.

மனித மரபணுவை செயற்கையாக உருவாக்கும் முயற்சி

ஆனால், மேம்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட மனிதர்களை உருவாக்க முயலும் நேர்மையற்ற ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த ஆராய்ச்சி உதவி செய்துவிடும் என்பதே இந்தத் திட்டத்தை விமர்சிப்பவர்களின் கவலையாக இருக்கிறது.

Beyond GM என்ற பிரசாரக் குழுவின் இயக்குநர் டாக்டர் பாட் தாமஸின் கருத்துப்படி, "விஞ்ஞானிகள் அனைவருமே நல்லதுதான் செய்வார்கள் என்று நம்ப வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். ஆனால் தீமைக்கும், போருக்கும்கூட அறிவியலைப் பயன்படுத்த முடியும்."

மனித டிஎன்ஏவில் உள்ள மூலக்கூறுகளை வரைபடமாக்கிய மனித மரபணு திட்டம் நிறைவடைந்த 25வது ஆண்டு விழாவில் இந்தத் திட்டம் தொடர்பான தகவல்கள் பிபிசிக்கு வழங்கப்பட்டன. இந்தத் திட்டத்திற்கு வெல்கம் டிரஸ்ட் பெருமளவில் நிதியுதவி அளித்துள்ளது.

நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் டிஎன்ஏ எனப்படும் ஒரு மூலக்கூறு உள்ளது. அதில் மரபணு தகவல்கள் இடம் பெற்றிருக்கும். ஏ, ஜி, சி, டி எனக் குறிப்பிடப்படும் நான்கு மிகச் சிறிய தொகுதிகளில் இருந்து டிஎன்ஏ கட்டமைக்கப்படுகிறது. அவை பல்வேறு சேர்க்கைகளில் மீண்டும் மீண்டும் உருவாக்கப்படுகின்றன.

உடல் ரீதியாக நாம் யார் என்பதை உருவாக்கும் அனைத்து மரபணு தகவல்களையும் டிஎன்ஏ கொண்டுள்ளது என்பது ஆச்சரியமளிக்கும் அறிவியல் உண்மை.

விஞ்ஞானிகள் அனைத்து மனித மரபணுக்களையும் ஒரு பார் குறியீடு போலப் படிக்க, மனித ஜீனோம் திட்டம் உதவியது. செயற்கை மனித ஜீனோம் திட்டம் என்று அழைக்கப்படும் புதிய திட்டம், இதை மிகப் பெரிய அளவில் முன்னோக்கி எடுத்துச் செல்லும். இது, டிஎன்ஏவின் மூலக்கூறுகளை ஆய்வாளர்கள் படிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, மூலக்கூறின் பகுதிகளை, (ஒருவேளை அனைத்தையும்) புதிதாக உருவாக்க அனுமதிக்கும்.

மனித டிஎன்ஏ-வை புதிதாக உருவாக்கும் விஞ்ஞானிகளின் நோக்கம் என்ன?

மனித டிஎன்ஏ, விஞ்ஞானிகள்

பட மூலாதாரம்,BBC NEWS

படக்குறிப்பு, மனித டிஎன்ஏவின் பெரிய பகுதிகளை உருவாக்குவதற்கான கருவிகளை விஞ்ஞானிகள் உருவாக்கத் தொடங்குவார்கள்

மனித டிஎன்ஏவின் பெரிய தொகுதிகளை உருவாக்குவதற்கான வழிகளை உருவாக்குவதே விஞ்ஞானிகளின் முதல் நோக்கம். அவை செயற்கையாக மனித குரோமோசோமை உருவாக்கும் வரை இது தொடரும். டிஎன்ஏவின் தொகுதிகள், நமது வளர்ச்சி, பழுது மற்றும் பராமரிப்பை நிர்வகிக்கும் மரபணுக்களைக் கொண்டுள்ளன.

பின்னர் இவற்றை ஆய்வு செய்து பரிசோதித்து, மரபணுக்கள் மற்றும் டிஎன்ஏக்கள் நம் உடல்களை எவ்வாறு ஒழுங்குபடுத்துகின்றன என்பதைப் பற்றி மேலும் அறியலாம்.

"மரபணுக்கள் தவறாகச் செல்லும்போது பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. எனவே ஆய்வுகள், நோய்களுக்குத் தேவையான மேம்பட்ட சிகிச்சைகளை வழங்க வழிவகுக்கும்" என்று கூறுகிறார், மனித மரபணுவின் மிகப்பெரிய விகிதத்தை வரிசைப்படுத்திய வெல்கம் சாங்கர் நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் மேத்யூ ஹர்ல்ஸ் கூறுகிறார்.

"புதிதாக டிஎன்ஏவை உருவாக்குவது என்பது டிஎன்ஏ எவ்வாறு செயல்படுகிறது என்பதைச் சோதிக்கவும் புதிய கோட்பாடுகளைச் சோதிக்கவும் அனுமதிக்கிறது. ஏனெனில் தற்போது வாழும் அமைப்புகளில் ஏற்கெனவே இருக்கும் டிஎன்ஏவில், புதிய டிஎன்ஏவை மாற்றுவதன் மூலம் மட்டுமே நாம் அதைச் செய்ய முடியும்."

செயற்கை மனிதர்கள் உருவாக்கப்பட்டால்...

மனித டிஎன்ஏ, இயந்திரங்கள்

பட மூலாதாரம்,BBC NEWS

படக்குறிப்பு, மனித டிஎன்ஏவை படிக்கப் பயன்படுத்தப்படும் இந்த இயந்திரங்கள் விரைவில் டிஎன்ஏவின் பகுதிகளை எழுதவும் பயன்படுத்தப்படலாம்

இந்தத் திட்டத்தின் பணிகள் சோதனைக் குழாய்கள் மற்றும் கருவிகளுடன் மட்டுமே இருக்கும். செயற்கை உயிர்களை உருவாக்கும் எந்த முயற்சியும் இந்தத் திட்டத்தில் இருக்காது. ஆனால் இந்தத் தொழில்நுட்பம் ஆராய்ச்சியாளர்களுக்கு மனித வாழ்க்கை அமைப்புகள் மீது இதுவரை இருந்திராத கட்டுப்பாட்டை வழங்கும்.

இந்தத் திட்டம் மருத்துவ ரீதியிலான நன்மைகளை இலக்கு வைத்து செய்யப்பட்டாலும், நேர்மையற்ற விஞ்ஞானிகள் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வழிமுறைகள் எதுவும் இல்லை.

உதாரணமாக, உயிரியல் ஆயுதங்கள், மேம்பட்ட மனிதர்கள் அல்லது மனித டிஎன்ஏ கொண்ட உயிரினங்களை உருவாக்க முயற்சி செய்யலாம் என்று மரபணு விஞ்ஞானி பேராசிரியர் பில் எர்ன்ஷா கவலை தெரிவிக்கிறார்.

இவர், செயற்கை மனித குரோமோசோம்களை உருவாக்குவதற்கான செயல்முறை ஒன்றை வடிவமைத்தவர். அதோடு, எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பிரபல மரபணு விஞ்ஞானி ஆவார்.

"பூதம் பாட்டிலுக்கு வெளியே வந்துவிட்டது," என்று அவர் இதுகுறித்து பிபிசியிடம் விவரித்தார். மேலும், "இப்போது நமக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கலாம், ஆனால் பொருத்தமான இயந்திரங்களை அணுகக்கூடிய ஓர் அமைப்பு இதைச் செய்ய முடிவு செய்தால், அதைத் தடுக்க முடியாது என்றே நான் கருதுகிறேன்" என்றார்.

ஆராய்ச்சிகள் மூலம் உருவாக்கப்படும் சிகிச்சைகளுக்கான மருந்துகளை உருவாக்கும் சுகாதார நிறுவனங்களால் தொழில்நுட்பம், வணிகமயமாக்கப்படும் என்பது குறித்து டாக்டர் பாட் தாமஸ் கவலைப்படுகிறார்.

"செயற்கை உடல் பாகங்களையோ அல்லது செயற்கை மனிதர்களையோ நம்மால் உருவாக்க முடிந்தால், அவை யாருக்குச் சொந்தமானவை. இந்தப் படைப்புகளில் இருந்து வரும் தரவுகள் யாருடையது?" என்று அவர் கேள்விகளை எழுப்புகிறார்.

தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் சாத்தியங்களைக் கருத்தில் கொண்டு, அவர்கள் ஏன் இந்த ஆராய்ச்சிக்கு நிதியளிக்கிறார்கள் என்பதுதான் தற்போது வெல்கம் நிறுவனத்திடம் கேட்கப்படும் கேள்வி. இந்த முடிவு இலகுவாக எடுக்கப்படவில்லை என்று நிதியுதவி அளித்த வெல்கம் நிறுவனத்தின் டாக்டர் டாம் காலின்ஸ் கூறினார்.

"இதற்கு நிதியளிக்காவிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வியை எங்களிடம் நாங்களே கேட்டுக்கொண்டோம்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

"இந்தத் தொழில்நுட்பம் கண்டிப்பாக ஒரு நாள் உருவாக்கப்பட உள்ளது. எனவே இப்போதே அதைச் செய்வதில் தவறேதும் இல்லை. குறைந்தபட்சம் பொறுப்பான முறையில் அதைச் செய்ய முயல்கிறோம். அத்துடன், நெறிமுறை மற்றும் தார்மீக கேள்விகளை முடிந்தவரை வெளிப்படையாக எதிர்கொள்ள முயல்கிறோம்."

ஒரு பிரத்யேக சமூக அறிவியல் திட்டமும், இந்தத் திட்டத்தின் அறிவியல் வளர்ச்சியுடன் இணைந்து இயங்கும். கென்ட் பல்கலைக்கழகத்தின் சமூகவியலாளர் பேராசிரியர் ஜாய் ஜாங் தலைமையில் இந்த சமூக அறிவியல் திட்டம் நடைபெறும்.

"செயற்கை மனித மரபணு திட்டம் தொடர்பாக, நிபுணர்கள், சமூக விஞ்ஞானிகள் மற்றும் குறிப்பாக பொது மக்களின் கருத்துகளை அவர்கள் தொழில்நுட்பத்துடன் எவ்வாறு தொடர்புபடுத்துகிறார்கள், அது அவர்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பது பற்றியும், முக்கியமாக அவர்களுக்கு எழும் கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்தும் நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gdm68j4gdo

கொடிய டைரனோசர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த புதிய வகை விலங்கு கண்டுபிடிப்பு

2 months 3 weeks ago

டைனோசர்கள், புதிய வகை கண்டுபிடிப்பு, டைரசோசர்கள்

பட மூலாதாரம்,JULIUS CSOTONYI

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விக்டோரியா கில்

  • பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ்

  • 18 ஜூன் 2025, 03:12 GMT

மங்கோலிய அருங்காட்சியகத்தின் சேகரிப்பில், ஒரு புதிய வகை டைனோசர்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவை டைரனோசர்களின் (Tyrannosaurs) பரிணாம வரலாற்றை 'மாற்றி எழுதக்கூடியவை' என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஆராய்ச்சியாளர்கள், 86 மில்லியன் ஆண்டுகள் பழமையான இரண்டு எலும்புக்கூடுகளை பகுப்பாய்வு செய்தனர். அவை, டைரனோசர்களின் நெருங்கிய மூதாதையராகக் கருதப்படும் ஒரு உயிரினத்திலிருந்து வந்தவை என்ற தீர்மானத்துக்கு அவர்கள் வந்தனர். இது டி ரெக்ஸ் (T rex) எனும் பிரபல விலங்கையும் உள்ளடக்கிய ஒரு குழுவாகும்.

ஆராய்ச்சியாளர்கள் இந்த இனத்துக்கு கான்கூலூ மங்கோலியென்சிஸ் என்று பெயரிட்டனர், அதாவது மங்கோலியாவின் டிராகன் இளவரசன்.

நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, டைனோசர்களின் அழிவு காலம் வரை, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவை அச்சுறுத்திய சக்தி வாய்ந்த வேட்டை விலங்குகளாக டைரனோசர்கள் எவ்வாறு பரிணமித்தன என்பது பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது.

டைனோசர்கள், புதிய வகை கண்டுபிடிப்பு, டைரசோசர்கள்

பட மூலாதாரம்,DARLA ZELENITSKY

படக்குறிப்பு, புகைப்படத்தில் உள்ளது போன்ற டி-ரெக்ஸின் அழகான, முழுமையான படிமங்கள் நம்மிடம் உள்ளன. ஆனால், இதன் மூதாதையர்கள் மர்மம் நிறைந்தவர்களாகவே உள்ளனர்.

"'பிரின்ஸ்' என்பது இது ஒரு ஆரம்பகால, சிறிய டைரனோசராய்டு என்பதைக் குறிக்கிறது," என்று கனடாவின் கால்கரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லுயிரியல் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் டார்லா ஜெலெனிட்ஸ்கி விளக்கினார். டைரனோசராய்டுகள் என்பது இரண்டு கால்களில் நடந்த மாமிச உண்ணி டைனோசர்களின் 'சூப்பர் ஃபேமிலி' வகையாகும்.

முதலில் தோன்றிய டைரனோசராய்டுகள் சிறியவையாக இருந்தன. பேராசிரியர் ஜெலெனிட்ஸ்கியுடன் இந்த ஆராய்ச்சியை வழிநடத்திய பிஹெச்டி மாணவர் ஜாரெட் வோரிஸ் பின்வருமாறு விளக்கினார்.

"இவை சிறிய, ஆனால் வேகமாக வேட்டையாடும் விலங்குகள். உணவுச் சங்கிலியின் முதன்மை வேட்டை விலங்குகளாக இருந்த பெரும் டைனோசர்களின் நிழலில் இவை வாழ்ந்தன."

டைனோசர்கள், புதிய வகை கண்டுபிடிப்பு, டைரசோசர்கள்

பட மூலாதாரம்,MASATO HATTORI

படக்குறிப்பு, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட டைரனோசரஸ் மூதாதையரான கான்கூலூ மங்கோலியென்சிஸை ஒரு கலைஞர் வரைந்துள்ளார்.

ஜுராசிக் காலத்தில் சுற்றித் திரிந்த சிறிய வேட்டை விலங்குகள் என்பதிலிருந்து, டி ரெக்ஸ் உள்ளிட்ட வலிமைமிக்க ராட்சத விலங்குகள் என மாறியது வரை 'கான்கூலூ' - ஒரு பரிணாம மாற்றத்தைக் குறிக்கிறது.

"இது சுமார் 750 கிலோ எடையுள்ளதாக இருந்திருக்கும், அதே நேரத்தில் ஒரு பெரிய டி ரெக்ஸ் அதை விட எட்டு மடங்கு எடையுள்ளதாக இருந்திருக்கலாம். எனவே, இது முந்தைய மூதாதையர்களுக்கும் வலிமைமிக்க டைரனோசர்களுக்கும் இடையிலான ஒரு இடைநிலை புதைபடிவம்" என்று பேராசிரியர் ஜெலெனிட்ஸ்கி கூறுகிறார்.

"இது டைரனோசர்களின் பேரின வரிசையைத் (Family Tree) திருத்தவும் டைரனோசர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி நமக்கு இதுவரை தெரிந்ததை மாற்றி எழுதவும் உதவியது," என்று அவர் கூறினார்.

டைனோசர்கள், புதிய வகை கண்டுபிடிப்பு, டைரசோசர்கள்

பட மூலாதாரம்,RILEY BRANDT/UNIVERSITY OF CALGARY

படக்குறிப்பு, முனைவர் பட்ட மாணவர்களான ஜாரெட் வொரிஸ் மற்றும் டார்லா ஜெலெனிட்ஸ்கி டைரனோசர்களின் படிமத்தை ஆய்வு செய்கின்றனர்.

இந்தப் புதிய இனம், டைரனோசர்களின் கொடுங்கோன்மைக்கு முக்கியமான பண்புகளாக இருந்தவற்றின் ஆரம்பகால பரிணாமக் கட்டங்களையும் எடுத்துரைக்கிறது. உதாரணத்துக்கு, வலுவான தாடையைக் கொண்ட மண்டை ஓடு கட்டமைப்பு.

"அதன் மூக்கு எலும்பில் சில விஷயங்களை கவனிக்க முடிகிறது. அவை பிற்காலத்தில் டைரனோசர்களுக்கு அவற்றின் இரையைக் கடிக்கக் கூடிய அதீத சக்தியைக் கொடுத்தன" என்று ஜாரெட் வோரிஸ் கூறுகிறார்.

இத்தகைய சக்தி வாய்ந்த தாடைகளின் பரிணாம வளர்ச்சி தான், பெரிய இரைகளின் மீது பாய்ந்து, அதன் எலும்பைக் கூட கடிக்கும் சக்தியை டி ரெக்ஸ் விலங்குகளுக்கு அளித்தது.

இந்த ஆராய்ச்சியில், குழு ஆய்வு செய்த இரண்டு (பகுதியளவிலான) எலும்புக்கூடுகள் முதன்முதலில் 1970களின் முற்பகுதியில் மங்கோலியாவில் கண்டுபிடிக்கப்பட்டன. அவை ஆரம்பத்தில் 'அலெக்ட்ரோசொரஸ்' என்று அழைக்கப்படும் ஒரு இனத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்பட்டன. ஆனால், வோரிஸ் அவற்றை ஆய்வு செய்தபோது, அதன் தனித்துவமான டைரனோசொரஸ் தொடர்பான அம்சங்களை அவர் அடையாளம் கண்டார்.

"அவரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது எனக்கு நினைவிருக்கிறது. 'அதில் இதுவொரு புதிய இனம் என நினைக்கிறேன்' என வோரிஸ் கூறியிருந்தார்" என்று பேராசிரியர் ஜெலெனிட்ஸ்கி நினைவு கூர்ந்தார்.

அந்த காலத்தில் சைபீரியா மற்றும் அலாஸ்காவை இணைத்திருந்த தரைப்பகுதி வழியாக வட அமெரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையே இந்த டைனோசர்களால் இடம்பெயர முடிந்தது. அது புதிய வாழ்விடங்களைக் கண்டுபிடித்து, ஆக்கிரமிப்பதில் அவற்றுக்கு உதவியது.

"கண்டங்களுக்கு இடையேயான இத்தகைய பயணங்கள், லட்சக்கணக்கான ஆண்டுகளில் பல்வேறு டைரனோசர் குழுக்களின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது." என வோரிஸ் விளக்கினார்.

"கொடும் ஆட்சி புரிந்த அரசர்களாக மாறுவதற்கு முன்பு, 'டைரனோசர்கள்' இளவரசர்களாக இருந்தனர் என்பதை இந்தக் கண்டுபிடிப்பு நமக்குக் காட்டுகிறது" என்று பேராசிரியர் ஜெலெனிட்ஸ்கி கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly8wzwqxl4o

விமான விபத்தில் தந்தையை பறிகொடுத்த மகனின் அசாதாரண கண்டுபிடிப்பு 'கருப்புப் பெட்டி'

3 months ago

விமானங்கள், கருப்புப் பெட்டி, வரலாறு, விமானப் போக்குவரத்து

பட மூலாதாரம்,WARREN FAMILY COLLECTION

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு விமான விபத்தில் ஹூபர்ட் வாரன் (இடது) இறந்தார்.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரெபேக்கா சீல்ஸ்

  • பதவி, பிபிசி நியூஸ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

1934ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை, மிஸ் ஹோபார்ட் என்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்தது.

அதில் பயணித்த 8 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என அனைவரும் உயிரிழந்தனர். டாஸ்மேனியாவிற்கும் ஆஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதிக்கும் இடையில் அமைந்துள்ள பாஸ் நீரிணை பகுதியில் அந்த விமானம் விழுந்ததாக நம்பப்படுகிறது.

விமானத்தின் சிதைவுகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அந்த விமானத்தில் இருந்தவர்களில் ஒருவர் 33 வயதான ஆங்கிலிகன் மிஷனரி ரெவரெண்ட் ஹூபர்ட் வாரன். அவர் சிட்னியின் என்ஃபீல்டில் உள்ள தனது புதிய திருச்சபைக்குச் சென்று கொண்டிருந்தார். அவரது மனைவி எல்லி மற்றும் 4 குழந்தைகள் அவருடன் பயணிக்கவில்லை.

தனது எட்டு வயது மகன் டேவிட்டிற்கு, ஹூபர்ட் கடைசியாக ஒரு பரிசு அளித்திருந்தார். அது ஒரு கிரிஸ்டல் வானொலிப் பெட்டி, அதை அந்தச் சிறுவன் மிகவும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருந்தார்.

டாஸ்மேனியாவில் உள்ள லான்செஸ்டன் ஆண்கள் பள்ளியில் தங்கியிருந்த டேவிட் வாரன், வகுப்புகளுக்குப் பிறகு அந்த வானொலியை ஆய்வு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். வானொலி மூலம் கிரிக்கெட் போட்டிகளைக் கேட்க நண்பர்களிடம் ஒரு பைசா என கட்டணம் வசூலித்தார். சில வருடங்களுக்குள் தான் சொந்தமாக தயாரித்த சிறு வானொலிகளை ஒவ்வொன்றும் ஐந்து ஷில்லிங் என்ற விலையில் விற்றார்.

டேவிட் ஒரு துடிப்பான இளைஞனாகவும் அற்புதமான பேச்சாளராகவும் இருந்தார். ஆழ்ந்த மதப்பற்று கொண்ட அவரது குடும்பத்தினர், அவர் ஒரு சுவிசேஷப் பிரசாரகர் ஆக வேண்டும் என்று கனவு கண்டனர்.

ஆனால் அது நடக்கவில்லை. தந்தை ரெவ் ஹூபர்ட் அளித்த அந்தப் பரிசு, டேவிட்டிற்கு அறிவியல் மீது பெரும் காதல் ஏற்பட வழிவகுத்தது.

வருங்காலத்தில் பல உயிர்களைக் காப்பாற்றுவதில் அந்தக் காதல் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தது.

ஏஆர்எல் ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணி

விமானங்கள், கருப்புப் பெட்டி, வரலாறு, விமானப் போக்குவரத்து

பட மூலாதாரம்,WARREN FAMILY COLLECTION

படக்குறிப்பு, டேவிட் பள்ளி மாணவனாக இருந்தபோது, மின்னணு சாதனங்களால் ஈர்க்கப்பட்டு, சொந்தமாக வானொலி பெட்டிகளை உருவாக்கக் கற்றுக்கொண்டார்.

டேவிட் வாரன் தனது இருபதுகளின் நடுப்பகுதியில், சிட்னி பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பு, மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் கல்வியில் டிப்ளமோ மற்றும் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் வேதியியலில் முனைவர் பட்டம் ஆகிய படிப்புகளை முடித்தார்.

அவரது நிபுணத்துவம் ராக்கெட் அறிவியல். எனவே அவர் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத் துறையின் ஒரு அங்கமான விமான ஆராய்ச்சி ஆய்வகங்களில் (ARL- ஏஆர்எல்) ஆராய்ச்சியாளராகப் பணியாற்றச் சென்றார். அத்துறை விமானங்களில் கவனம் செலுத்தியது.

ஏஆர்எல் துறை 1953ஆம் ஆண்டில், ஒரு முக்கியமான மர்மத்தைத் தீர்க்க முயற்சிக்கும் ஒரு நிபுணர் குழுவிடம் டேவிட்டை அனுப்பிவைத்தது.

உலகின் முதல் வணிக ஜெட் விமானமும் புதிய ஜெட் யுகத்தின் பெரும் நம்பிக்கையுமான, பிரிட்டிஷ் டி ஹாவிலேண்ட் காமெட் (de Havilland Comet) விமானம் ஏன் தொடர்ந்து விபத்துகளை சந்தித்தது? என்பதே அந்த மர்மம்.

அதற்கு காரணம் எரிபொருள் டேங்காக இருக்கலாம் என்று டேவிட் நினைத்தார். ஆனால் பல்வேறு சாத்தியமான காரணங்கள் இருந்தன.

இருப்பினும், மனித உடல்கள் மற்றும் விமான பாகங்கள் தவிர ஆதாரம் என வேறு எதுவும் இந்த விபத்துகளில் இருந்து கிடைக்கவில்லை.

"விமானியின் தவறுகளா, ஊழியர்களுக்கான பயிற்சி போதவில்லையா, விமானத்தின் வால் பகுதி உடைந்ததா என எனக்குத் தெரியாத பிற விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்," என்று டாக்டர் டேவிட் வாரன் 50 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை நினைவு கூர்ந்தார்.

"ஒரு வாரத்திற்கு முன்பாக தான், இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய முதல் வர்த்தக கண்காட்சி சிட்னியில் நடைபெற்றது. அதில் நான் பார்த்த ஒரு பொருளைப் பற்றி அந்த கூட்டத்தில் யோசித்துக் கொண்டிருந்தேன். அதுதான் - முதல் பாக்கெட் ரெக்கார்டர் (Pocket recorder) என்று கூறப்படும் மினிஃபோன். ஒரு ஜெர்மன் சாதனம். அதற்கு முன்பு அது போன்ற ஒரு சாதனம் இருந்ததில்லை."

விமானங்கள், கருப்புப் பெட்டி, வரலாறு, விமானப் போக்குவரத்து

பட மூலாதாரம்,DEFENCE SCIENCE AND TECHNOLOGY, AUSTRALIA

படக்குறிப்பு, 1958 ஆம் ஆண்டு ஏஆர்எல் அமைப்பில் டேவிட்

வணிகர்களுக்கான ஒரு 'டிக்டேஷன்' இயந்திரமாக மினிஃபோன் சந்தைப்படுத்தப்பட்டது. இந்த இயந்திரம் மூலம் ஒருவர் தனது பேச்சை அல்லது தகவலை எங்கிருந்து வேண்டுமானாலும் பதிவு செய்யலாம், பின்னர் அவர்களின் உதவியாளர்களால் அது தட்டச்சு செய்யப்படும்.

ஸ்விங் இசை ரசிகரான டேவிட், ஜாஸ் இசைக்கலைஞர் வூடி ஹெர்மனின் இசையைப் பதிவு செய்ய ஒரு மினிஃபோன் கிடைத்தால் போதுமென விரும்பினார்.

இருப்பினும், அவரது சக விஞ்ஞானிகளில் ஒருவர், கடைசியாக விபத்துக்குள்ளான காமெட் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறிய போது, அவருக்கு ஒரு யோசனை எழுந்தது.

ஒரு ரெக்கார்டர் விமானத்தில் இருந்து, அது தீ விபத்தில் இருந்து தப்பித்திருக்க வாய்ப்புகள் இல்லை. ஆனால் வானத்தில் பறக்கும் ஒவ்வொரு விமானத்தின் காக்பிட்டிலும் ஒரு மினி ரெக்கார்டர் இருந்தால்?

அது சாத்தியம் என்றால், விபத்து குறித்து புலனாய்வு செய்பவர்கள் மீண்டும் ஒருபோதும் இவ்வளவு குழப்பமடைய மாட்டார்கள். ஏனென்றால் விபத்து நடந்த தருணம் வரை பதிவான அவர்களிடம் ஆடியோ இருக்கும். குறைந்தபட்சம், விமானிகள் என்ன சொன்னார்கள், என்ன கேட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

அந்த யோசனை அவரை மிகவும் கவர்ந்தது. ஏஆர்எல்-க்கு திரும்பியதும், அதைப் பற்றி தனது மேலதிகாரியிடம் சொல்ல விரைந்தார்.

ஆனால், மேலதிகாரி அவரது உற்சாகத்தைப் புரிந்து கொள்ளவில்லை. "இது வேதியியலோ அல்லது எரிபொருட்களோ சம்பந்தப்பட்டதல்ல. நீங்கள் ஒரு வேதியியலாளர். எனவே இந்தப் பிரச்னையை கருவிகள் குழு கையாளட்டும்" என்று தன்னிடம் கூறப்பட்டதாக டாக்டர் டேவிட் வாரன் சொல்கிறார்.

'இதை வெளியே பேசினால், வேலை பறிக்கப்படும்'

விமானங்கள், கருப்புப் பெட்டி, வரலாறு, விமானப் போக்குவரத்து

பட மூலாதாரம்,WARREN FAMILY COLLECTION

படக்குறிப்பு, டேவிட், அவரது மனைவி ரூத் மற்றும் அவர்களது நான்கு குழந்தைகள் (1958)

காக்பிட் ரெக்கார்டர் குறித்த தனது யோசனை சிறப்பானது தான் என்று டேவிட் அறிந்திருந்தார். ஆனால் அதிகாரப்பூர்வ ஆதரவு இல்லாமல், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அந்த யோசனையை மனதில் இருந்து அகற்றவும் முடியவில்லை.

அவரது மேலதிகாரி பதவி உயர்வு பெற்று சென்றபிறகு, டேவிட் மீண்டும் தனது யோசனையை முன்வைத்தார். அவரது புதிய மேலதிகாரியும், ஏஆர்எல்-இன் தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் லாரி கூம்ப்ஸும் இதில் ஆர்வம் காட்டினர். அவர்கள் அவரை அதில் தொடர்ந்து பணியாற்றுமாறு வற்புறுத்தினர் - ஆனால் ரகசியமாக.

இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முயற்சியோ அல்லது போரில் வெற்றிபெற உதவக்கூடிய ஒரு ஆயுதமோ இல்லை என்பதால், அதற்கென ஆய்வக நேரத்தையோ பணத்தையோ ஒதுக்க முடியாது.

"இந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் யாரிடமாவது பேசுவதைக் கண்டால், நான் உங்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டியிருக்கும்" என்று தலைமை கண்காணிப்பாளர் தன்னை எச்சரித்ததாக டாக்டர் டேவிட் வாரன் கூறினார்.

மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு இளைஞனுக்கு அது சற்று கவலைக்குரியதாகவே இருந்தது.

ஆனால் அவரது மேலதிகாரியின் ஆதரவுடன், புதிய டிக்டேஷன் ரெக்கார்டர்களில் ஒன்றை மறைமுகமாக வாங்கி, அதை 'ஆய்வகத்திற்குத் தேவையான ஒரு கருவி' என்ற பட்டியலில் சேர்த்தார் டேவிட்.

அதன் பிறகு உற்சாகமடைந்த டாக்டர் டேவிட் வாரன், "விமான விபத்துகள் பற்றிய விசாரணைக்கு உதவும் ஒரு சாதனம்" என்ற தலைப்பிட்ட ஒரு அறிக்கையில் தனது யோசனையை எழுதி, அதைத் துறை முழுவதும் அனுப்பினார்.

விமானிகள் சங்கம் அதற்கு கோபத்துடன் பதிலளித்தது, அந்த ரெக்கார்டரை ஒரு உளவு பார்க்கும் சாதனம் என்று முத்திரை குத்தியது. "இந்த உளவு சாதனம் பொருத்திக் கொண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து எந்த விமானமும் புறப்படாது" என்றும் வலியுறுத்தியது.

ஆஸ்திரேலிய சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் இந்த சாதனத்திற்கு 'உடனடி முக்கியத்துவம் இல்லை' என்று அறிவித்தனர். இத்தகைய யோசனை 'விளக்கங்களை விட அதிக அவதூறுகளுக்கே வழிவகுக்கும்' என்று விமானப்படை அஞ்சியது.

அனைத்து முயற்சிகளையும் நிறுத்தி விடலாமா என்ற எண்ணம் டாக்டர் வாரனுக்கு எழுந்தது.

டேவிட்டின் பிடிவாத குணம்

விமானங்கள், கருப்புப் பெட்டி, வரலாறு, விமானப் போக்குவரத்து

பட மூலாதாரம்,AFP/GETTYIMAGES

படக்குறிப்பு, கருப்புப் பெட்டி என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் அது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

இருப்பினும், டாக்டர் டேவிட் வாரனின் மூத்த மகனான பீட்டரின் கூற்றுப்படி, "டேவிட் பிடிவாத குணம் கொண்டவர். அவரின் சுதந்திர மனப்பான்மை, அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் ஆதிக்கம் செலுத்தியது".

அந்த குணம் தான் டேவிட் வாரனை தொடர்ந்து முயற்சி செய்ய வைத்தது. தனது கேரேஜுக்கு சென்ற டேவிட், தனது 20 வருட பழைய வானொலி பாகங்களை ஒன்று சேர்த்தார். தன் மீதான விமர்சனங்கள், கேலிகள் மற்றும் சந்தேகத்தைப் போக்க ஒரே வழி, ஒரு வலிமையான முன்மாதிரி சாதனத்தை உருவாக்குவதுதான் என்று அவர் முடிவு செய்தார்.

அதுதான் உலகின் முதல் விமான ரெக்கார்டர் அல்லது கருப்புப் பெட்டி.

ஒரு சிறிய விமான ரெக்கார்டர் உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட பிறகு, 1958ஆம் ஆண்டில், ஒருநாள் ஏஆர்எல் ஆய்வகத்திற்கு எதிர்பாராத ஒரு விருந்தினர் வந்தார். தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் கூம்பஸ், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நண்பருக்கு ஆய்வகத்தைச் சுற்றிக் காட்டிக் கொண்டிருந்தார்.

"டேவிட், நீ என்ன செய்கிறாய் என்பதை என் நண்பரிடம் சொல்" என கூம்பஸ் கூறினார்.

அதைத் தொடர்ந்து டாக்டர் டேவிட் வாரன் விளக்கினார்.

தான் உருவாக்கிய உலகின் முதல் முன்மாதிரி விமான ரெக்கார்டர் கொண்டு, நான்கு மணிநேர விமானிகளின் உரையாடல்கள் மற்றும் கருவிகளின் தரவுகளை சேமிக்க முடியும் என்றும், அதற்கு எஃகு கம்பியைப் பயன்படுத்துவதாகவும் டேவிட் கூறினார்.

இது பழைய பதிவுகளை தானாகவே அழித்துவிடும் என்பதால், இந்த ரெக்கார்டர் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடியதாக இருந்தது என்பதையும் அவர் விளக்கினார்.

அந்த நண்பருக்கோ பெரும் ஆச்சரியம்.

"கூம்ப்ஸ் இதுவோரு நல்ல யோசனை. இந்த பையனை அடுத்த கூரியரில் லண்டனுக்கு அனுப்பு. இதை லண்டனில் உள்ளவர்களுக்கு காண்பிப்போம்." என்றார் அவர்.

இங்கு அவர் குறிப்பிட்ட கூரியர் என்பது, பிரிட்டனுக்கு வழக்கமாக பறந்துகொண்டிருந்த 'ஹேஸ்டிங்ஸ் போக்குவரத்து விமானம்'. ஆனால் அதில் ஒரு டிக்கெட்டை பெற வேண்டும் என்றால், மிகவும் சக்தி வாய்ந்த ஒருவரை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட விமானத்தின் டிக்கெட்டுகளை தன் இஷ்டத்திற்கு வழங்கும் இந்த மனிதர் யார் என்று டாக்டர் வாரன் யோசித்தார்.

அதற்கு பதில், ராபர்ட் ஹார்டிங்ஹாம் (பின்னர் சர் ராபர்ட்), பிரிட்டிஷ் விமானப் பதிவு வாரியத்தின் செயலாளர் மற்றும் பிரிட்டனின் ராயல் ஏர் ஃபோர்ஸின் முன்னாள் ஏர் வைஸ்-மார்ஷல்.

பிரிட்டனுக்கு ரகசிய பயணம்

விமானங்கள், கருப்புப் பெட்டி, வரலாறு, விமானப் போக்குவரத்து

பட மூலாதாரம்,FAIRFAX MEDIA VIA GETTY IMAGES

படக்குறிப்பு, ஒரு மினிஃபோனுடன் டேவிட் வாரன் (2002)

டேவிட்டின் வார்த்தைகளில், "ராபர்ட் ஒரு ஹீரோ. அவர் கூம்ப்ஸின் நண்பர். அவர் ஒரு இடத்தைக் கொடுத்தால், நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்கள்."

சில வாரங்களுக்குப் பிறகு, டாக்டர் வாரன், பிரிட்டன் செல்லும் விமானத்தில் ஏறினார். ஆனால், அவர் உண்மையில் என்ன செய்யப்போகிறார் என்பதை ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறையிடம் சொல்லக் கூடாது என்ற கடுமையான உத்தரவுகளுடன் அவர் பயணித்தார்.

நம்பமுடியாத ஒரு முரண்பாடாக, அந்த விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் பயணத்தபோது அதன் ஒரு இயந்திரம் செயலிழந்தது.

டாக்டர் வாரன் நினைவு கூர்ந்தார்: "விமானத்தில் இருந்தவர்களிடம் 'அன்பர்களே, நாம் ஒரு இயந்திரத்தை இழந்துவிட்டோம் - யாராவது திரும்பிச் செல்ல விரும்புகிறீர்களா?' எனக் கேட்டேன். ஆனால் துனீசியாவில் சுமார் 45 டிகிரி வெப்பநிலை நிலவியது என்பதால், அந்த நரகத்திற்குத் நாங்கள் திரும்பிச் செல்ல விரும்பவில்லை."

தொடர்ந்து விமானத்தை இலக்கை நோக்கி இயக்கினால் தப்பித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள்.

தடுமாறிக் கொண்டிருந்த அந்த விமானத்தில் தான் இறந்தாலும் பரவாயில்லை, ஆனால் தன்னை கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக மீதமுள்ள விமானப் பயணத்தை ரெக்கார்டரில் பதிவு செய்தார் டேவிட்.

"ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு எதுவும் நடக்கவில்லை. நாங்கள் பாதுகாப்பாக தரையிறங்கிவிட்டோம்." என்றார் டேவிட்.

பிரிட்டனில், 'ஏஆர்எல் விமான நினைவக அமைப்பு' என்ற பெயரில் ராயல் ஏரோநாட்டிக்கல் எஸ்டாப்ளிஷ்மென்ட் மற்றும் சில வணிக கருவிகள் தயாரிப்பாளர்களுக்கு தனது கண்டுபிடிப்பை முன்வைத்தார்.

பிரிட்டிஷ்காரர்கள் இதை விரும்பினர். பிபிசி இதை ஆய்வு செய்யும் வகையில் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளை நடத்தியது. பிரிட்டிஷ் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் சிவில் விமானங்களில் இந்த சாதனத்தை கட்டாயமாக்கும் பணியைத் தொடங்கியது.

மிடில்செக்ஸ் நிறுவனமான 'எஸ் டேவல் அண்ட் சன்ஸ்', உற்பத்தி உரிமைகள் குறித்து ஏஆர்எல் அமைப்பை அணுகி, உற்பத்தியைத் தொடங்கியது.

இந்தக் கருவி 'கருப்புப் பெட்டி' என்று அழைக்கப்பட்டாலும், விபத்துக்குப் பிறகு அவற்றைக் கண்டுபிடிப்பது எளிதாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவை ஆரஞ்சு நிறத்தில் உருவாக்கப்பட்டன. இன்றும் அவை அப்படியே இருக்கின்றன.

'கருப்புப் பெட்டி'

விமானங்கள், கருப்புப் பெட்டி, வரலாறு, விமானப் போக்குவரத்து

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, டேவிட் வாரனின் இறுதிச் சடங்கு

1958ஆம் ஆண்டு தனது தந்தை டேவிட் வாரன் பிபிசிக்கு அளித்த பேட்டியிலிருந்து 'கருப்புப் பெட்டி' என்ற இந்தப் பெயர் தோன்றியதாக பீட்டர் வாரன் நம்புகிறார்.

"ஒரு பத்திரிகையாளர் இதை 'கருப்புப் பெட்டி' என்று குறிப்பிட்டார். இது மின்னணு பொறியியலில் இருந்து வந்த ஒரு பொதுவான சொல், அந்தப் பெயர் அப்படியே ஒட்டிக்கொண்டது."

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் 1960 ஆம் ஆண்டு ஏற்பட்ட விவரிக்க முடியாத ஒரு விமான விபத்தில் 29 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, விமான காக்பிட் குரல் பதிவுகளை கட்டாயமாக்கிய முதல் நாடாக ஆஸ்திரேலியா ஆனது. நீதித்துறை விசாரணையின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வந்தது. அது சட்டமாக மாற மேலும் மூன்று ஆண்டுகள் ஆயின.

இன்று, கருப்புப் பெட்டிகள் நெருப்பு மற்றும் கடல் நீரால் பாதிக்கப்படாத வகையில், எஃகு கவசத்தால் மூடப்பட்டு உருவாக்கப்படுகின்றன. அவை ஒவ்வொரு வணிக விமானத்திலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

விபத்தைச் சந்தித்த விமானங்களின் இறுதித் தருணங்களில் இருந்து கிடைத்த தரவுகள் மூலம் பல குறைபாடுகள் அம்பலப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய கண்டுபிடிப்புகள் வந்தன. இந்த கருப்புப் பேட்டி மூலம் எத்தனை பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்பதைச் சொல்ல முடியாது.

'நான் மிகவும் அதிர்ஷ்டசாலி'

விமானங்கள், கருப்புப் பெட்டி, வரலாறு, விமானப் போக்குவரத்து

பட மூலாதாரம்,FAIRFAX MEDIA VIA GETTY IMAGES

டேவிட் வாரன் 1983இல் ஓய்வு பெறும் வரை ஏஆர்எல் அமைப்பில் பணியாற்றினார், அதன் முதன்மை ஆராய்ச்சி விஞ்ஞானியானார். அவர் ஜூலை 19, 2010 அன்று தனது 85 வயதில் இறந்தார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக, கருப்புப் பெட்டி தொடர்பான அவரது முன்னோடிப் பணி கிட்டத்தட்ட அங்கீகரிக்கப்படாமல் போனது. இறுதியாக 1999ஆம் ஆண்டில், அவருக்கு 'ஆஸ்திரேலிய எரிசக்தி நிறுவன பதக்கம்' வழங்கப்பட்டது, பின்னர் 2002 ஆம் ஆண்டில் விமானத் துறைக்கு அவர் செய்த சேவைக்காக 'ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா' (AO) அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அவர் அங்கீகரிக்கப்படுவதற்கு ஏன் இவ்வளவு காலம் எடுத்தது என்று கேட்டபோது, அவரது மகள் ஜென்னி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "மந்தநிலைதான் அவரது எதிரி. அவர் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட விஞ்ஞானி, நுட்பமாக ஆய்வு செய்யும் மனதைக் கொண்டவர், விஷயங்கள் எப்படி வெளிப்படும் என்பதை அவரால் முன்னரே கற்பனை செய்ய முடிந்தது."

"அவர் 1958ஆம் ஆண்டிலேயே, 'இந்த சாதனம் இதைச் சாத்தியமாக்கும்' என்று சொல்லிக் கொண்டிருந்தார்."

ஆனால், "நல்ல கண்டுபிடிப்புகள் எல்லாம் பிரிட்டன், ஜெர்மனி அல்லது அமெரிக்கா ஆகிய நாடுகளில் தான் கண்டுபிடிக்கப்படும், வேறு இடங்களில் இருந்து வராது என்ற 1950களின் காலனித்துவ மனநிலை தான் அதற்கு காரணம்" என பீட்டர் வாரன் குற்றம் சாட்டுகிறார்.

ஏஆர்எல்-இன் பணியைச் சுற்றியுள்ள வரலாற்று ரகசியம், இப்போது பரவலாகப் புரிந்து கொள்ளப்படுகிறது, இது மற்றொரு சாத்தியமான காரணியாகும்.

2008ஆம் ஆண்டு, குவான்டஸ் நிறுவனம் ஒரு ஏர்பஸ் A380 விமானத்திற்கு டாக்டர் டேவிட் வாரன் பெயரைச் சூட்டியது.

ஆனால் 'கருப்புப் பெட்டி' தொடர்பான ராயல்டியாக ஒரு ரூபாய் கூட டாக்டர் டேவிட் வாரனுக்கு கிடைக்கவில்லை.

இது குறித்து எப்போதாவது டேவிட் வாரன் வருத்தப்பட்டது உண்டா என்ற கேள்விக்கு பதிலளித்த பீட்டர், "ஆம், நான் செய்த வேலைக்கான பலன்கள் அரசுக்கு கிடைத்தது. அதே நேரம், தோல்வியில் முடிந்த எனது பல முயற்சிகளுக்கு அவர்கள் என்னிடம் பணம் கேட்கவில்லை அல்லவா?" என டேவிட் வாரன் கூறியதாகச் சொல்கிறார்.

விமானத்தில் பயணிக்கும் போது உங்கள் தந்தையைப் பற்றி எப்போதாவது நினைத்து பார்ப்பது உண்டா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜென்னி மற்றும் பீட்டர், "ஒவ்வொரு முறையும்" என்றார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c201xd2573no

Checked
Mon, 09/15/2025 - 22:38
அறிவியல் தொழில்நுட்பம் Latest Topics
Subscribe to அறிவியல் தொழில்நுட்பம் feed