Aggregator
தையிட்டி; மயிலிட்டி; கச்சதீவு ; செம்மணி - நிலாந்தன்
செம்மணியும் ஆன்மீகவாதி
செம்மணியும் ஆன்மீகவாதி
நாட்டை உலுக்கிய எல்ல விபத்து - ஒருவர் கைது!
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கான எச்சரிக்கை
மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கான எச்சரிக்கை
ஆபத்தான வகையில் மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நாளை முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரதியமைச்சர் வைத்தியர் பிரியந்த குணசேன தெரிவித்துள்ளார்.
பல்வேறு ஒலிகளுடன், பல வண்ணங்களில் நின்று நின்று ஔிரும் மின் விளக்குகளுடன் பயணிக்கும் வாகனங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தமது பேஸ்புக் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை எல்ல-வெல்லவாய வீதியின் 24வது மைல்கல் அருகே எதிரே வந்த சொகுசு ஜீப்பின் பின்புறத்தில் பேருந்து மோதி, வீதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு இரும்பு வேலியை உடைத்து சுமார் 1000 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
தங்காலை நகர சபையின் ஊழியர்களும் அவர்களது உறவினர்களும் பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
32 பேர் பயணித்த இந்த பேருந்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்களில் 13 பேர் இன்னும் பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
'கூலித் தொழிலாளி வீட்டிற்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம்' - அதிக கட்டணம் வந்தால் நிவாரணம் பெறுவது எப்படி?

பட மூலாதாரம்,Getty Images and UGC
கட்டுரை தகவல்
விஜயானந்த் ஆறுமுகம்
பிபிசி தமிழ்
7 செப்டெம்பர் 2025, 08:06 GMT
புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்
'வீட்டு மின்சார கட்டணமாக 1.61 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்' என்று செப்டம்பர் 3-ஆம் தேதி வந்த குறுந்தகவலால் திருநெல்வேலியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் குடும்பமே அதிர்ச்சிக்குள்ளானது.
'மனித தவறு காரணமாகவே அதீத மின் கட்டணம் பதிவாகிவிட்டது. தற்போது பிரச்னை சரிசெய்யப்பட்டுவிட்டது' என, நெல்லை மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
நெல்லை கூலித் தொழிலாளி வீட்டில் மின்சாரத்தை அளவிடுகையில் தவறு எவ்வாறு நடந்தது? இதுபோன்ற சிக்கல் வரும் போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் வீட்டுக்கு வரும் மின்சார கட்டணம் அசாதாரணமாக உங்களுக்குத் தோன்றினால் உடனே செய்ய வேண்டியது என்ன?
நெல்லை சம்பவம்
திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி மின்வாரிய கோட்டத்தின் கீழ் வரும் மருதகுளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஷெபா. கூலி தொழிலாளியான கணவர் மாரியப்பன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, 3 குழந்தைகளுடன் ஷெபா வசித்து வருகிறார். அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி மின்சார கட்டணம் தொடர்பாக குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.
அதில், 'மின் கட்டணமாக ஒரு கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 281 ரூபாய் செலுத்த வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷெபா, உறவினர்கள் மூலம் மூலக்கரைப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பட மூலாதாரம், AFP via Getty Images
மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, தொழில்நுட்ப கோளாறு மற்றும் மனித தவறு காரணமாக அதிகப்படியான மின்கட்டணம் வந்திருந்ததைக் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து, மின்அளவீட்டில் திருத்தம் செய்து மாரியப்பனின் வீட்டுக்கு மின் கட்டணமாக 494 ரூபாய் வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
"மாரியப்பன் இறந்துவிட்டதால் அவரது மனைவி தான் குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்தக் கட்டணத்தால் அவருக்கு மனஉளைச்சல் ஏற்பட்டது. மறுநாளே (செப்டம்பர் 4) பிரச்னை சரிசெய்யப்பட்டுவிட்டது" என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத மருதகுளம் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர்.
தவறு நேர்ந்தது எங்கே?
"மின் கட்டணமாக 1.61 கோடி ரூபாயைக் காட்டும் அளவுக்கு என்ன நடந்தது?" என திருநெல்வேலி மாவட்ட மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழ் கேட்டது.
பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அதிகாரி, "மின் கணக்கீட்டுக்கு ஊழியர் செல்லும்போது செல்போனில் லொகேஷனை ஆன் செய்ய வேண்டும். பிறகு மின்வாரியத்தின் பிரத்யேக செயலியில் நுகர்வோர் எண்ணைப் பதிவிட வேண்டும். அப்போது நுகர்வோரின் மின்பயன்பாட்டு விவரங்கள் காட்டப்படும்" எனக் கூறுகிறார்.
"மின் நுகர்வு அலகை (unit) செயலியில் பதிவிட வேண்டும். மாரியப்பனின் வீட்டு மின் கணக்கீட்டில் 1409.00 யூனிட் எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக இரண்டு பூஜ்ஜியங்களையும் சேர்த்து காட்டியதால் பிரச்னை ஏற்பட்டுவிட்டது" எனவும் அவர் தெரிவித்தார்.
இதனால் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் மின் யூனிட்டுகளை மாரியப்பன் குடும்பத்தினர் பயன்படுத்தியதாகக் காட்டப்பட்டு விட்டதாகக் கூறும் அதிகாரி, "மேற்பார்வை பொறியாளரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு தவறு சரிசெய்யப்பட்டுவிட்டது." எனவும் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
'பூட்டிய வீட்டுக்கு 7 லட்சம் கட்டணம்'
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் மலர் வியாபாரம் செய்து வரும் முருகேசனுக்கு கடந்த ஜனவரி மாதம் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. குல்லிசெட்டிபட்டி ஊராட்சிக்குட்பட்ட லட்சுமிபுரத்தில் இவருக்கு வீடு உள்ளது.
கடந்த சில மாதங்களாகப் பயன்படுத்தப்படாமல் இவரது வீடு பூட்டிக் கிடந்துள்ளது. உறவினர் ஒருவர் மட்டும் அவ்வப்போது பராமரிப்புக்கு சென்று வந்துள்ளார். ஆனால், கடந்த ஜனவரி மாதம் அவரது வீட்டுக்கு மின் கட்டணமாக 7 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது.
வழக்கமாக, தனது வீட்டுக்கு சராசரியாக 120 ரூபாய் வரை மின்கட்டணத்தை அவர் செலுத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக ராமராஜபுரம் மின் பகிர்மான கழகத்தில் புகார் மனு ஒன்றையும் முருகேசன் அளித்துள்ளார். அதிகாரிகள் நடத்திய ஆய்வில், அளவீடு செய்யும்போது கூடுதலாக 64 ஆயிரம் யூனிட் மின்சாரத்தை பயன்படுத்திவிட்டதாக தவறுதலாக சேர்த்துவிட்டது தெரியவந்துள்ளது.
மின்வாரிய தலைவர் கூறியது என்ன?
திருநெல்வேலி விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் பிபிசி தமிழ் பேசியது.
"நான்கு நாட்களுக்கு முன்பு இந்த விவகாரம் கவனத்துக்கு வந்தது. ஆய்வு செய்தபோது 494 ரூபாய் மட்டுமே மின் கட்டணம் எனத் தெரியவந்தது. வழக்கத்துக்கு மாறாக, அசாதாரணமாக மின்சார கட்டணம் வந்தால் அதை கணினி மென்பொருளில் இருந்து நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்" எனக் கூறுகிறார்.

பட மூலாதாரம், FB/Radhakrishnan
படக்குறிப்பு, மின்வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜெ.ராதாகிருஷ்ணன்
"ஆளே இல்லா வீடுகளில் தவறாக மின் கணக்கீடு செய்யப்பட்டதாக அறிய வந்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் அவர் தெரிவித்தார்.
"தமிழ்நாடு முழுவதும் 3.46 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதுபோன்ற பிரச்னைகள் வருவது என்பது மிகமிக அரிதானது. மின் கட்டணத்தில் வழக்கத்துக்கு மாறாக அதிக கட்டணம் வந்து அதற்குரிய காரணங்கள் இல்லாமல் இருந்தால் அவை நீக்கப்பட்டுவிடும்" எனவும் அவர் பதில் அளித்தார்.
'ஊழியர் பற்றாக்குறையே காரணம்'
ஊழியர் பற்றாக்குறை காரணமாகவே இதுபோன்ற தவறுகள் நடப்பதாகக் கூறுகிறார், மத்திய மின் ஊழியர் அமைப்பின் (சிஐடியு) பொதுச்செயலாளர் ஜெய்சங்கர்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மின்வாரியத்தில் சுமார் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட மின் கணக்கீட்டாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று மின் அளவீடு செய்வதில் சிக்கல் உள்ளது. அதன் காரணமாக மின் பயன்பாட்டை அளவிட பல இடங்களில் அவுட்சோர்ஸிங் முறை கடைபிடிக்கப்படுகிறது. " என்றார்.
ஊழியர் பற்றாக்குறை குறித்து தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "மின்வாரியத்தில் 400 பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1800 பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கணக்கீட்டாளர்களை நிரப்புமாறு கூறியுள்ளோம். படிப்படியாக ஆட்களை எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன" என்று பதில் அளித்தார்.
தவறு எவ்வாறு நடக்கிறது?
பிபிசி தமிழிடம் பேசிய திருநெல்வேலி மாவட்ட மின்வாரிய அதிகாரி, மின் கணக்கீடு எவ்வாறு செய்யப்படுகிறது என்று விளக்கம் அளித்தார்.
"முன்புபோல எதையும் அட்டையில் எழுதுவது இல்லை. நுகர்வோர் செல்போன் எண்ணை பதிவேற்றி வைத்திருப்பதால் நுகர்வோருக்கு குறுந்தகவல் சென்றுவிடுகிறது. அனைத்தும் ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.
மின் கணக்கீட்டுக்குச் செல்லும் ஊழியர், தனது செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மின்வாரிய செயலியைப் பயன்படுத்துகிறார். அப்போது ஏதாவது அழைப்பு வந்தால் கணக்கிடுவதில் சிரமம் ஏற்படுகிறது" என்றார் அவர்.

பட மூலாதாரம், UGC
படக்குறிப்பு, மத்திய மின் ஊழியர் அமைப்பின் (சிஐடியு) பொதுச்செயலாளர் ஜெய்சங்கர்.
"கணக்கீட்டுக்கு செல்லும் நபரின் செல்போன் முகப்பில் (screen) பழுது இருந்தாலும் தட்டச்சு செய்வதில் தவறு ஏற்படுகிறது" எனக் கூறிய அந்த அதிகாரி, "மாறாக, தனியாக சிம் கார்டு பொருத்தப்பட்ட செல்போன்களை பிரத்யேகமாக வழங்கினால் இதுபோன்ற தவறுகளைக் களைய முடியும்" என்றார்.
தீர்வு என்ன?
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நுகர்வோர் நலன் காக்கும் வகையில் சில சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி,
வழக்கத்துக்கு மாறாக அதிக கட்டணம் செலுத்த வேண்டும் எனத் தகவல் வந்தால் TANGEDCO என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில், நுகர்வோர் மின் இணைப்புக்கான 10 இலக்க எண்ணைப் பதிவிட வேண்டும்.
செயலியில் புகார் தெரிவிப்பதற்கு முன்பு கட்டண விவரம், நுகர்வோர் எண் ஆகியவற்றைத் தயாராக வைத்திருத்தல் அவசியம்.
மின்வாரியத்தின் 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை எண்ணான 1912 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
மின்தடை, மின் கட்டண பிரச்னை, மின் விபத்துகள் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு 'மின்னகம்' என்ற சேவை மையம் செயல்படுகிறது. இதற்கென பிரத்யேகமாக 94987 94987 என்ற குறைதீர் எண் உள்ளது.
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணிநேர சேவை மையமாக மின்னகம் செயல்படுகிறது.
மின்னகத்தில் மின்சாரம் சார்ந்த 37 விதமான புகார்களைப் பதிவு செய்யலாம் என, கடந்த ஜூன் மாதம் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னகத்தில் அளிக்கப்பட்ட 34,32,084 புகார்களில் 34,24,677 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாகவும், செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"மின் கட்டணத்தில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம்" எனக் கூறுகிறார், மத்திய மின் ஊழியர் அமைப்பின் பொதுச்செயலாளர் ஜெய்சங்கர்.
"ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நுகர்வோர் குறைதீர் கமிட்டி ஒன்று செயல்படுகிறது. அங்கு கட்டணம் தொடர்பாக புகார் கொடுத்தால் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பார்கள்" எனவும் அவர் தெரிவித்தார்.
"சில புகார்களில் கட்டணத்தின் அளவைப் பார்த்த உடனே தவறு நடந்திருப்பது தெரிந்துவிடும்" எனக் கூறும் ஜெய்சங்கர், "புகாரின் அடிப்படையில் அதனை கணினியில் சரிசெய்துவிடுகின்றனர். நேரடியாக மின்வாரியத்தின் உயர் அதிகாரிகளுக்கு இ-மெயில் மூலமும் புகார் அளிக்கலாம்" எனவும் அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
'கூலித் தொழிலாளி வீட்டிற்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம்' - அதிக கட்டணம் வந்தால் நிவாரணம் பெறுவது எப்படி?
கிருஷாந்தி நினைவேந்தல்
தம்பலகாமத்தில் பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் பலி!
தம்பலகாமத்தில் பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் பலி!
07 Sep, 2025 | 01:51 PM
![]()
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்பொத்தானை, 09ம் கொலனி, சதாம் நகர் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற திருவிழா ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு சனிக்கிழமை (06) இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த குடும்பஸ்தர் அதே பகுதியில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ஊர்வலத்தின் போது பட்டாசு கொளுத்திய நிலையில் ஒரு பட்டாசு வெடிக்காத நிலையில் உள்ளதை கண்டு அதனை காலால் தடவிய போது பட்டாசு வெடித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விரத உணவு முறையால் இதய நோய் மற்றும் பக்கவாதம் வரும் ஆபத்து அதிகமா?
விரத உணவு முறையால் இதய நோய் மற்றும் பக்கவாதம் வரும் ஆபத்து அதிகமா?

பட மூலாதாரம், The San Francisco Chronicle via Getty Images
படக்குறிப்பு, கோழி, காய்கறிகள் மற்றும் நட்ஸ் அடங்கிய உண்ணாவிரத உணவு.
கட்டுரை தகவல்
சௌதிக் பிஸ்வாஸ்
பிபிசி செய்தியாளர்
6 செப்டெம்பர் 2025
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
இந்த தசாப்தத்தில் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் எனப்படும் விரத உணவுமுறை டிரெண்டாக உள்ளது.
இந்த உணவுமுறை மூலம் கலோரிகளை கணக்கிட்டு சாப்பிடுவது அல்லது கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்ப்பது உள்ளிட்ட கடினமான எதையும் கடைபிடிக்காமல் ஒருவரின் உடல் எடையை குறைக்க முடியும் என நம்பப்படுகிறது. இந்த உணவுமுறையில் நீங்கள் எப்போது சாப்பிட வேண்டும் என்பதை மட்டுமே மாற்ற வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்பதை அல்ல.
தொழில்துறையில் செல்வாக்கு மிக்கவர்கள் இதை உறுதியாக நம்புகின்றனர், ஹாலிவுட் நட்சத்திரங்கள், இந்த உணவுமுறை தங்களுக்கு ஒழுங்கான உடலமைப்பை தருவதாக கூறுகின்றனர். பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சூனக் 36 மணிநேர விரதத்துடன் தன் வாரத்தை தொடங்குவது குறித்து ஒருமுறை பேசியிருந்தார்.
இந்த உணவுமுறைக்கு ஆதரவாகவே அறிவியல் இதுவரையிலும் இருந்துள்ளது. காலையில் முதல் உணவை தள்ளிப்போடுவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும், செல்களை சரிசெய்யும்,நீண்ட ஆயுளை கூட வழங்கும் என ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. எனினும், உணவை தவிர்ப்பது சிறந்த தீர்வு அல்ல என்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் என்பது குறுகிய நேர இடைவெளியில் மட்டும் உணவை உண்பது, பெரும்பாலும் இது எட்டு மணிநேரமாக உள்ளது, மீதமுள்ள 16 மணிநேரத்தில் எந்த உணவையும் உட்கொள்ளக் கூடாது. நேரத்தைக் கட்டுப்படுத்தி கடைபிடிக்கப்படும் 5:2 போன்ற மற்ற உணவுமுறைகளில் குறிப்பிட்ட சில நாட்களில் கலோரிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
தற்போது சமீபத்தில் வெளியான முதல் பெரியளவிலான ஆய்வு முடிவுகள், இந்த உணவு முறை குறித்து பல மோசமான ஆபத்துகள் குறித்த கவலையை எழுப்புகின்றன. வயது வந்த 19,000க்கும் மேற்பட்டோரிடம் மேற்கொண்ட இந்த ஆய்வில், அவர்களுள் எட்டு மணிநேர இடைவெளிக்கும் குறைவான நேரத்தில் மட்டுமே உணவுகளை உண்பவர்கள், 12-14 மணிநேர இடைவெளியில் உண்பவர்களைவிட இதய நோய்களால், குறிப்பாக இதய மற்றும் ரத்த நாள நோய்களால் இறக்கும் ஆபத்து 135% அதிகம் உள்ளதாக கூறுகிறது.
இந்த இதய நோய்கள் ஆபத்து ஒருவரின் உடல்நலன், வாழ்வியல் முறை மற்றும் முந்தைய மருத்துவ தகவல்களின் அடிப்படையிலேயே, ஆய்வில் பங்கேற்ற மற்றவர்களைவிட மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற இதயம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது.
பிற காரணங்களால் இறப்பதற்கும் இந்த உணவுமுறைக்குமான தொடர்பு வலுவானதாக இல்லை. நிலையற்றதாக உள்ளது. ஆனால், அதிக பரிசோதனைகளுக்கு பின்னரும் வயது, பாலினம், வாழ்வியல் முறையைக் கடந்தும் இதய நோய்களுக்கான ஆபத்து நீடிக்கிறது.
மற்ற வார்த்தைகளில் சொல்வதானால், இத்தகைய நேர கட்டுப்பாட்டு முறைக்கும் மற்ற காரணங்களால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் இடையேயான தொடர்பு வலுவற்றதாகவும் நிலையற்றதாகவும் இருப்பதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இதயநோய்களால் இறப்பதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்த ஆய்வு இறப்புக்கான காரணம் மற்றும் அதன் விளைவுக்கும் இடையேயான தொடர்பை நிரூபிக்கவில்லை. ஆனால், விரத முறையை கடைபிடிப்பது என்பது சிறந்த உடல்நலனுக்கான ஆபத்துகள் இல்லாத வழிமுறை என்ற கருத்துக்கு இந்த ஆய்வு முடிவுகள் சவால் விடுக்கின்றன.
ஆய்வாளர்கள் இதற்கென அமெரிக்காவை சேர்ந்த வயதுவந்தவர்கள் மத்தியில் எட்டு ஆண்டுகளாக ஆய்வு செய்துள்ளனர். அவர்களின் உணவுமுறையை புரிந்துகொள்ள இரண்டு வாரங்களில் ஏதேனும் இரு நாட்களுக்கு அவர்கள் உண்ட, அருந்திய எல்லாவற்றையும் நினைவுபடுத்தும்படி அறிவுறுத்தினர். இதன்மூலம், ஒருவரின் சராசரி உணவு நேரம் என்ன என்பதை கணக்கிட்டு, அதை அவர்களின் நீண்ட கால வழக்கமாக எடுத்துக்கொள்கின்றனர்.
எட்டு மணிநேரத்துக்குள் உணவுகளை உண்பவர்களுக்கு 12-14 மணிநேரத்துக்கு தங்கள் உணவுகளை பிரித்து உண்பவர்களைவிட இதய நோய்களால் இறக்கும் ஆபத்து அதிகம் இருப்பதாக, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதயநோய் ஆபத்து ஏன்?
பலவித சமூக பொருளாதார குழுக்களிடையே இந்த இதயநோய் ஆபத்து நிலையானதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர், மேலும், புகைபிடிப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் அல்லது ஏற்கெனவே இதய நோய் உள்ளவர்களிடையே இந்த ஆபத்து அதிகமாக உள்ளது, எனவே அவர்கள் குறுகிய நேர இடைவெளியில் உண்பதை நீண்ட காலத்துக்குக் கடைபிடிப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.
உணவுமுறையின் தரம், உணவுகள் மற்றும் எவ்வளவு தின்பண்டங்கள் உண்கிறோம், மற்ற வாழ்வியல் காரணங்களை மாற்றியும் இந்த தொடர்பு இருப்பதாக, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதயநோய்களால் இறப்பு அதிகரிப்பது மற்றும் ஒட்டுமொத்த இறப்புகள் அதிகரிக்காததை எப்படி புரிந்துகொள்வது என ஆய்வாளர்களிடம் எழுப்பினோம், இது உயிரியல் ரீதியிலானதா அல்லது இந்த தரவுகளில் பக்கச்சார்பு ஏதேனும் உள்ளதா என கேட்டோம்.
உணவுமுறை தான் நீரிழிவு மற்றும் இதயநோய் சம்பந்தமான நோய்களுக்கு முக்கியமான காரணியாக உள்ளது. எனவே, இதயநோய்களால் இறப்பு அதிகரிப்பதுடன் உள்ள தொடர்பு எதிர்பாராதது அல்ல என, திறன் வாய்ந்தவர்களால் மதிப்பீடு செய்யப்பட்ட (peer-reviewed) ஆய்வின் ஆய்வாசிரியர் விக்டர் வென்ஸ் ஸோங் கூறுகிறார். இந்த ஆய்வு, டயாபட்டீஸ் & மெட்டபாலிக் சிண்ட்ரோம்: க்ளீனிக்கல் ரிசர்ச் அண்ட் ரிவ்யூஸ் எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.
"எட்டு மணிநேரத்துக்கும் குறைவான நேரத்தில் உண்பது இதய நோயால் ஏற்படும் இறப்புகள் அதிகரிப்பதுடன் தொடர்புடையது என்பதுதான் இதில், எதிர்பாராத முடிவாக உள்ளது," என கூறுகிறார் பேராசிரியர் ஸோங். இவர், சீனாவில் உள்ள ஷாங்காய் ஜியாவ் டோங் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியில் தொற்றுநோயியல் நிபுணராக உள்ளார்.

பட மூலாதாரம், NurPhoto via Getty Images
படக்குறிப்பு, இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் இந்த தசாப்தத்தின் டிரெண்டிங் உணவுமுறையாக உள்ளது
ஓரிரு மாதங்கள் முதல் ஓராண்டு வரையிலான குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள், இத்தகைய விரத உணவுமுறைகள் இதயம் மற்றும் வளர்சிதை மாற்ற நலனை மேம்படுத்துகிறது என்ற நம்பிக்கைகளுக்கு சவால் விடுக்கிறது.
பலன்களும் குறைகளும்
அதே இதழில் முன்னணி உட்சுரப்பியல் நிபுணர் அனூப் மிஸ்ரா எழுதிய தலையங்கத்தில் இந்த உணவுமுறை தரும் நம்பிக்கைகள் மற்றும் ஆபத்துகளை சீர்துக்கி பார்க்கிறார்.
பல்வேறு சோதனைகள் மற்றும் ஆய்வுகள் இந்த உணவுமுறை உடல் எடை குறைதல், இன்சுலின் ஹார்மோனுக்கு உடல் எதிர்வினையாற்றும் விதம், ரத்த அழுத்தம் குறைதல் மற்றும் அழற்சிக்கு எதிரான பலன்கள் குறித்த சில ஆதாரங்களுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பு (கொலஸ்ட்ரால்) மற்றும் ட்ரைகிளிசரைடுகளை (lipid profiles) மேம்படுத்தும் என பரிந்துரைப்பதாக அவர் கூறுகிறார்.
மேலும், கலோரிகள் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல், கலாசார அல்லது மத ரீதியிலான விரத நடைமுறைகளுடன் எளிதாக பின்பற்றக்கூடிய இந்த உணவுமுறை ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதிலும் உதவலாம்.
"எனினும், ஊட்டச்சத்துக் குறைபாடு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பது, பசி அதிகரிப்பது, எரிச்சலூட்டும் தன்மை, தலைவலி மற்றும் நீண்ட காலத்துக்குப் பின் உணவுமுறையை கடைபிடிப்பது குறைந்துபோதல் போன்றவை அதன் குறைகளாக இருக்கின்றன," என பேராசிரியர் அனூப் மிஸ்ரா கூறுகிறார்.
"நீரிழிவு நோய் உள்ளவர்கள், சரியான கண்காணிப்பு இல்லாமல் விரதத்தைக் கடைபிடித்தால் ரத்த சர்க்கரை அளவு குறையும் ஆபத்து உள்ளது; மேலும் சாப்பிடக்கூடிய நேரத்தில் நொறுக்குத் தின்பண்டங்களை உண்பதையும் ஊக்குவிக்கிறது. அதிக வயதானவர்கள் அல்லது நாள்பட்ட நோய்களை உடையவர்கள், நீண்ட காலத்துக்கு இந்த உணவுமுறையை கடைபிடிக்கும்போது பலவீனத்தையோ அல்லது தசையிழப்பையோ ஏற்படுத்தும்."
இப்படி, இத்தகைய உணவு முறை ஆய்வுக்கு உட்படுவது இது முதன்முறையல்ல.
ஜாமா இண்டர்னல் மெடிசின் இதழில் 2020ல் பிரசுரமான மூன்று மாத கால ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு இந்த உணவுமுறையின் மூலம் சிறிதளவு எடையே குறைந்துள்ளது, அதில் அதிகமான அளவு தசையிழப்பின் மூலம் நிகழ்ந்திருக்கலாம்.
மற்றொரு ஆய்வில், இந்த உணவு முறையால் பலவீனம், பசி, நீரிழப்பு, தலைவலி மற்றும் கவனச்சிதறல் போன்றவை ஏற்படும் என குறிப்பிடுகிறது.
புதிய ஆய்வில், பேராசிரியர் அனூப் மிஸ்ரா கூறுகையில், மற்றொரு புதிய எச்சரிக்கையையும் சேர்க்கிறார், சில குழுக்களிடையே இதய நோய்கள் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறு அதிகரிப்பதாக அவர் கூறுகிறார்.
சமீபத்திய ஆய்வு முடிவுகளில் இருந்து அதன் விளைவுகளை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தான் அறிவுறுத்துவதாக பேராசிரியர் ஸோங் கூறுகிறார்.
இதய நோய் அல்லது நீரிழிவு நோய் உள்ளவர்கள் இத்தகைய எட்டு மணிநேரம் மட்டும் உணவு உண்ணுவது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் கூறுகிறார். தனிநபர்கள் தங்களின் ஆரோக்கியத்தின் அடிப்படையில் தங்களுக்கான உணவுமுறை குறித்த அறிவுரை பெற வேண்டிய தேவை குறித்து இந்த ஆய்வு முடிவுகள் குறிக்கின்றன.
"தற்போது உள்ள ஆதாரங்களின் அடிப்படையில், மக்கள் எந்த நேரத்தில் சாப்பிடுகின்றனர் என்பதைவிட, என்ன சாப்பிடுகின்றனர் என்பதில் கவனம் செலுத்துவதே முக்கியமானதாக தெரிகிறது. குறைந்தபட்சம், இதய நலனை மேம்படுத்துதல் அல்லது ஆயுட்காலத்தை நீட்டிக்கும் நோக்கத்துடன் நீண்ட காலத்துக்கு எட்டு மணிநேர உணவுமுறையை கடைபிடிப்பதை யோசிக்க வேண்டாம்."
இப்போதைக்கு, முக்கியமான செய்தி என்னவென்றால் விரதத்தை ஒட்டுமொத்தமாக தவிர்ப்பது அல்ல, அது தனிப்பட்ட ஒருவரின் ஆபத்துகளுடன் இணைப்பது தொடர்பானது. ஆபத்துகளுக்கான ஆதாரங்கள் தெளிவாகும் வரை, நேரத்தைவிட, என்ன உண்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவது நல்லது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடக மோசடிகள் – பொலிஸார் எச்சரிக்கை
வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடக மோசடிகள் – பொலிஸார் எச்சரிக்கை
Published By: Digital Desk 1
07 Sep, 2025 | 03:33 PM
![]()
வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களினூடாக மோசடிகளில் ஈடுபடுவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதுள்ளனர்.
வங்கியின் சார்பாக பரிசுகளை வழங்குவதாக பொய்யாகக் கூறும் மோசடி செய்தியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் செய்தி பொதுமக்களை ஏமாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மோசடியின் பகுதி என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடி தனிப்பட்ட தகவல்களைத் திருடவும், கையடக்கத் தொலைபேசியிலுள்ள மென்பொருளை சேதப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை தொடர்பாக தங்கள் அமைப்புக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழுவின் (SLCERT) தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.
கையடக்க தொலைபேசிகள் மூலம் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்கள் இதுபோன்ற மோசடி செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
"படைகளை அனுப்பினால் அழிப்போம்": ஐரோப்பிய நாடுகளை எச்சரிக்கும் புதின்
"படைகளை அனுப்பினால் அழிப்போம்": ஐரோப்பிய நாடுகளை எச்சரிக்கும் புதின்

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ரஷ்ய அதிகாரிகள் மேற்கத்திய படைகளை அழிக்கும் புதினின் அச்சுறுத்தலை வரவேற்றனர்.
கட்டுரை தகவல்
ஸ்டீவ் ரோசென்பெர்க்
பிபிசி ரஷ்யா
5 மணி நேரங்களுக்கு முன்னர்
சில சமயங்களில் வாய் வார்த்தை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. எதிர்வினைதான் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ரஷ்யாவின் தூரக்கிழக்கில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் பேசிய விளாடிமிர் புதின், "யுக்ரேனுக்கு அமைதி காக்கும் படையினரையும், வீரர்களை அனுப்புவது பற்றி யோசிக்கவே வேண்டாம்" என மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்தார்.
"அங்கு சில படைகள் தென்பட்டால் அதிலும் குறிப்பாக சண்டை நடந்துகொண்டிக்கும்போது தென்பட்டால், இவை அழிவுக்கான சரியான இலக்குகளாக இருக்கும்" என ரஷ்ய அதிபர் புதின் கூறினார்.
அதன்பிறகுதான் எதிர்வினை தொடர்ந்தது.
விளாடிவோஸ்டாக்கில் நடந்த பொருளாதார மன்றத்தில் பார்வையாளர்கள் கைதட்டல்களால் ஆரவாரம் செய்தனர். ரஷ்ய அதிகாரிகளும் வணிகத் தலைவர்களும் மேற்கத்திய படைகளை அழிக்கும் அச்சுறுத்தலை வரவேற்றனர்.
அந்த அரங்கத்தில் நடந்த காட்சியை பார்கையில் அந்த கைத்தட்டல் சற்று நடுங்க வைத்தது.
'விருப்பக் கூட்டணி' என்று அழைக்கப்படும் யுக்ரேனின் நட்பு நாடுகள், யுக்ரேனுக்கு போருக்குப் பிந்தைய பாதுகாப்புப் படையை உருவாக்குவதாக உறுதியளித்த மறுநாளே இது நடந்தது.
"யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியை சந்திக்க தயாராக இருக்கிறேன். ஆனால் அது ரஷ்யாவில் மட்டுமே" என ரஷ்ய அதிபர் புதின் கூறியதும் பார்வையாளர்கள் மீண்டும் கைதட்டினர்.
"இந்த சந்திப்புக்கான சிறந்த இடம் ரஷ்யா தலைநகரான மாஸ்கோதான்" என அவர் கூறினார்.
ரஷ்யாவிற்கு வெளியே புதினின் இந்த முன்மொழிவு பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. மாறாக அது நகைச்சுவையாக கருதப்பட்டு நிராகரிக்கப்பட்டது.
ஆனால் பல வழிகளில் யுக்ரேன் உடனான போர் மீதான புதினின் நிலைப்பாட்டை இது எடுத்துரைக்கிறது. "ஆம் எங்களுக்கு அமைதி வேண்டும். ஆனால் அது எங்கள் விதிகளுக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். இதை நீங்கள் நிராகரித்தால் பின் அமைதி இருக்காது" என்பதுதான் அது.
புதினின் இந்த சமரசமற்ற நிலைப்பாடு, பல்வேறு விஷயங்களுக்கு வழிவகுக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, புதின் சீனாவில் உலக தலைவர்களை சந்தித்து கைகுலுக்கிக்கொண்டார்.
முதலாவதாக, யுக்ரேனில் ரஷ்யப் படைகள் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருவதாக புதின் நம்புகிறார்.
2வது ராஜதந்திர வெற்றி. இந்த வாரத்தில் புதின் சீனாவில் உலக தலைவர்களை சந்தித்து கைகுலுக்கிக்கொண்டார். இவர்கள் புன்னகையுடன் உரையாடிக்கொண்டார்கள். சீனா, இந்தியா மற்றும் வட கொரியா உடன் ரஷ்யா நல்ல உறவுடன் இருக்கிறது என்பதை காண்பிப்பதே இதன் நோக்கமாகும்.
அதன்பிறகு அமெரிக்கா. கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதினை அலாஸ்காவில் நடைபெறும் உச்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார்.
யுக்ரேன் போரில் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் முயற்சியில் மேற்கு நாடுகள் தோல்வியடைந்துவிட்டன, என்பதற்கான ஆதாரமாக இந்த நிகழ்வை உள்நாட்டில் புதினின் ஆதரவாளர்கள் விவரித்தனர்.
முன்னதாக இந்த போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப், புதினுக்கு நிறைய எச்சரிக்கைகள் மற்றும் காலக்கெடுக்களை விதித்தார். ரஷ்யா அமைதியை நிலைநாட்டவில்லை என்றால் நிறைய தடைகள் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
ஆனால் டிரம்ப் அந்த எச்சரிக்கைகளை தொடரவில்லை. இதுவே ரஷ்யாவிற்கு நம்பிக்கை ஏற்படுத்த மற்றொரு காரணமாக அமைந்தது.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டிரம்பின் சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கான அழைப்பை புதின் நிராகரித்தார்.
டிரம்பின் அமைதியை நிலைநாட்டும் முயற்சியை புதின் பொதுமேடையிலேயே பாராட்டியுள்ளார். எனினும் அவர் டிரம்பின் சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கான அழைப்பை நிராகரித்தார். மேலும் யுக்ரேன் மீதான போரில் சமரசம் செய்வதற்கான எந்த முனைப்பையும் அவர் காட்டவில்லை.
அப்படியானால் இதில் அமைதிக்கான வாய்ப்பு எங்கே இருக்கிறது?
புதின் சமீபத்தில் தன்னால் பாதையின் முடிவில் வெளிச்சத்தை பார்க்க முடிவதாக குறிப்பிட்டார்.
அதாவது ரஷ்யா ஒருபுறமும் யுக்ரேன் மற்றும் ஐரோப்பா (ஓரளவுக்கு அமெரிக்காவும்) வெவ்வேறு பாதைகளில், வெவ்வேறு சாலைகளில், வெவ்வேறு நிலைப்பாடுகளுடன் இருப்பதாக தோன்றுகிறது.
யுக்ரேனும் ஐரோப்பாவும் பாதுகாப்பு உத்தரவாதத்துடன் சண்டையை நிறுத்துவதில் கவனம் செலுத்துகிறது. மேலும் போருக்கு பிந்தைய ஊடுருவலை எதிர்கொள்ளும் அளவிற்கு யுக்ரேனிய ராணுவம் பலமாக இருப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
சுரங்கத்தின் முடிவில் வெளிச்சத்தை பார்க்க முடிவதாக புதின் கூறியது, என்னைப் பொறுத்தவரை யுக்ரேனில் ரஷ்யாவின் வெற்றியைதான் அவர் குறிப்பிடுகிறார் என்கிறார் ரோசென்பெர்க். இன்னும் சொல்லப்போனால் ரஷ்யாவுக்கு சாதகமான புதிய உலகளாவிய கட்டமைப்பை உருவாக்குவதை அவர் குறிப்பிடுகிறார் என்றார்.
அமைதியை பொறுத்தவரை இந்த இருவேறு பாதைகளும் எங்கு, எப்போது ஒன்றிணையும் என்பது பற்றி சொல்ல முடியாது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு