பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய இயக்கம் – சுற்றறிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
14 Nov, 2025 | 04:59 PM
![]()
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய இயக்கம் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் கொண்டுள்ள பொறுப்புகள் ,சேவைகளை ஒரு கட்சியின் அரசியல் பிரிவினருக்கு மாற்றுவதற்கான நுட்பமான நிகழ்ச்சித்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன் ,இதுவரை பரவலாக்கப்பட்ட முறையில் செயல்பட்ட மாகாண சபைகள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள், பிரஜா அபிவிருத்தி சபையின் செயற்பாட்டுக்கு அடிபணியச் செய்யும் ஏற்பாடுகளை உள்ளடக்கியுள்ளதாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிகள் கடும் விசனம் வெளியிட்டுள்ளதுடன் இதனை உடனடியாக வாபஸ் பெறுமாறும் வலியுறுத்தியுள்ளன.
இது தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை (14) பாராளுமன்ற குழு அறையில் கலந்துரையாடி வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய இயக்கத்தை செயற்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.
பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய இயக்கம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை ஆழமாக ஆராயும்போது அதில் எழும் பல பிரச்சினைகளை அடையாளம் காண முடியும்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் முயற்சிக்கப்படுவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ்மட்ட கட்சி பொறிமுறைக்கு அதிகாரபூர்வ அங்கீகாரத்தை வழங்குவதாகும்.
அதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் கொண்டுள்ள பொறுப்புகள் மற்றும் சேவைகளை ஒரு கட்சியின் அரசியல் பிரிவினருக்கு மாற்றுவதற்கான நுட்பமான நிகழ்ச்சித்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில் பிரஜா அபிவிருத்தி சபையை நிறுவுவது தொடர்பாக வழங்கப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆராயும்போது அதை தெளிவாக அடையாளம் காண முடியும். "பிரஜா அபிவிருத்தி சபையின் தலைவர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அல்லது அவரால் நியமிக்கப்படும் பிரதிநிதியாக இருக்க வேண்டும்." பிரஜா அபிவிருத்தி சபையின் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவதும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவிற்காக நியமிக்கப்பட்ட ஒரு ஏற்பாட்டாளர் மூலமாகும். இந்த ஏற்பாட்டாளர் மற்றும் நியமிக்கப்படும் பிரதிநிதிகள் அனைவரும் கீழ்மட்ட மக்கள் விடுதலை முன்னணி செயற்பாட்டாளர்களாக இருப்பதை தடுக்க முடியாது.
அந்த சுற்றறிக்கையின் 5ஆவது பந்தியில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தொடர்பாக முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மிகவும் கடுமையானவை. அதன்படி தற்போது செயற்படுத்தப்படும் ஒருங்கிணைப்புக் குழு பொறிமுறை மறுசீரமைக்கப்படும், மேலும் அந்தக் குழுக்கள் பிரஜா சக்தி தேசிய இயக்கத்தில் செயற்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தெளிவாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் மூலம் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகளின் பொறுப்புகளை, பொறுப்புக்கூறலை பொதுமக்கள் பிரதிநிதிகளிடமிருந்து பறிப்பதாகும்.
அந்த சுற்றறிக்கையின் 6ஆவது பந்தியில் அமைச்சுகள் மற்றும் மாகாண சபைகளுக்கு வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை திட்டங்களுக்கு ஒதுக்குவது மற்றும் முன்மொழிவதற்கான முக்கிய அங்கமாக பிரஜா சக்தி குழு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையின் 7ஆவது பந்தியின் 7.4, 7.5 மற்றும் 7.6 பிரிவுகளின்படி பிரஜா சக்தி குழுவால் செயற்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட பணிகளை கருத்தில் கொள்ளும்போது, மக்கள் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகள் இனி பிரஜா அபிவிருத்தி செயல்முறையில் பொறுப்பு வாய்ந்த நபர்களாக இல்லாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த பிரிவின்படி வறுமை ஒழிப்புக்கான திட்டங்களை திட்டமிடல், செயல்படுத்தல் மற்றும் மேற்பார்வை ஆகியவை பிரஜா சக்தி குழுவிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
அதேபோல் நலன்புரி திட்டங்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அதிகாரமளித்தல் திட்டங்களை செயற்படுத்துதல் மற்றும் மக்களுக்கு பொறுப்புடைய நிறுவன கட்டமைப்பை ஏற்படுத்துதல் ஆகியவை பிரஜா சக்தி குழுவிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
மேலும் திட்டங்களை செயற்படுத்துவதற்கு அனைத்து அமைச்சுகள், மாகாண சபைகள், அரசாங்க நிறுவனங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் அதற்கு தேவையான வகையில் அமைச்சுகள், மாகாண சபைகள் மற்றும் அரசாங்க நிறுவனங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் அதற்கு தேவையான வகையில் அரசாங்க திணைக்களங்கள், நிறுவனங்கள் மற்றும் மாகாண தலைவர்கள் குழுக்களை அழைப்பதற்கும் பிரஜா சக்தி செயற்பாட்டுக் குழுவிற்கு வாய்ப்பு உள்ளது.
இதுவரை பரவலாக்கப்பட்ட முறையில் செயல்பட்ட மாகாண சபைகள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள், பிரஜா அபிவிருத்தி சபையின் செயற்பாட்டுக்கு அடிபணியச் செய்யும் ஏற்பாடுகளை வழங்கியுள்ள சுற்றறிக்கையின் 10வது பிரிவில் காட்டப்பட்டுள்ளது பிரஜா அபிவிருத்தி சபைகள் பிரிவுகள் மட்டத்தில் தரவு மற்றும் தகவல் முறைமையைத் தயாரித்து அதை இற்றைவரைப்படுத்தி பராமரித்தல் செய்யப்பட வேண்டும், அதன் மூலம் பிரிவின் பொருளாதார, சமூக, ஒழுக்க நெறிமுறை, சுற்றாடல் பிரச்சினைகளை அடையாளம் காண வேண்டும். பொருத்தமான திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் அடையாளம் காணல் மற்றும் ஒருங்கிணைந்த கிராம அபிவிருத்தி திட்டத்தை தயாரித்தல் பிரஜா அபிவிருத்தி சபையால் செய்யப்பட வேண்டும்.
இது மிகவும் கடுமையான நிலைமை. அரசியலமைப்பின் மூலம் நிறுவப்பட்ட அரசியலமைப்புரீதியான பொது பிரதிநிதித்துவ சபைகள் மற்றும் நியதிச்சட்ட அரசாங்க சேவைகளை அடக்கி, ஒரு அரசியல் கட்சியால் உருவாக்கப்படும் பொறிமுறைக்கு நாட்டின் அபிவிருத்தியை அடிபணியச் செய்வது ஒருதலைப்பட்ச அரசியல் ஆட்சிக்கு அடித்தளம் அமைக்கும் முயற்சியாகும். இது பலகட்சி சனநாயகத்திற்கு எதிரான மரண அடியாகும்.
பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய இயக்கம் தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் மேலோட்டமான பகுப்பாய்வை அல்ல, அடிமட்டத்தில் உள்ள அபாயத்தை நாம் அடையாளம் காண வேண்டும். எனவே, இந்த சுற்றறிக்கை மற்றும் நிகழ்ச்சித்திட்டம் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர்.