3 weeks ago
வெனிசுவேலா கடற்கரையில் எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா பட மூலாதாரம்,US Government கட்டுரை தகவல் கெய்லா எப்ஸ்டீன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்கப் படைகள் வெனிசுவேலா கடற்கரையோரத்தில் இருந்த ஒரு எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது நிக்கோலஸ் மதுரோ அரசுக்கு எதிராக அமெரிக்கா செலுத்தும் அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தும் நிகழ்வாகக் கருதப்படுகிறது. "நாங்கள் இப்போதுதான் வெனிசுவேலா கடற்கரையில் ஒரு டேங்கர் கப்பலைக் கைப்பற்றியுள்ளோம். இது ஒரு பெரிய டேங்கர், மிகப் மிகப் பெரியது, உண்மையில் இதுவரை கைப்பற்றப்பட்டவற்றிலேயே மிகப் பெரியது," என்று டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறினார். பறிமுதல் செய்யப்பட்ட கப்பலின் வீடியோவை வெளியிட்ட அமெரிக்க அட்டர்னி ஜெனரல், இந்தக் கப்பல், "வெனிசுவேலா மற்றும் இரானிலிருந்து தடைசெய்யப்பட்ட எண்ணெயை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட ஒரு கச்சா எண்ணெய் டேங்கர்." என்று விவரித்தார். இந்த நடவடிக்கையை உடனடியாக கண்டித்த வெனிசுவேலா, இதை "சர்வதேச கடற்கொள்ளை" என்று கூறியது. முன்னதாக, அதிபர் மதுரோ, வெனிசுவேலா ஒருபோதும் "எண்ணெய் காலனியாக" மாறாது என்று அறிவித்திருந்தார். வெனிசுவேலா அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்களை கடத்துவதாக டிரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டுகிறது. கூடவே, அதிபர் மதுரோவை தனிமைப்படுத்தும் முயற்சிகளைச் சமீப மாதங்களாகத் தீவிரப்படுத்தியுள்ளது. உலகிலேயே மிகப்பெரியதான எண்ணெய் இருப்புகளில் சிலவற்றைக் கொண்டுள்ள வெனிசுவேலா, அமெரிக்கா தனது வளங்களைத் திருட முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. கப்பல் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் வெளிவந்ததைத் தொடர்ந்து, குறுகிய கால விநியோகக் கவலைகளால் பிரெண்ட் க்ரூட் எண்ணெய் விலை புதன்கிழமையன்று சிறிது உயர்ந்தது. இந்த நடவடிக்கை கப்பல் நிறுவனங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதியை மேலும் பாதிக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்க சட்டம் ஒழுங்கு அமலாக்கத்துறைக்குத் தலைமைத் தாங்கும் அட்டர்னி ஜெனரல் பாம் போன்டீ, இந்த பறிமுதல் நடவடிக்கையை மத்திய புலனாய்வுப் பிரிவு, பாதுகாப்புத்துறை, உள்நாட்டு பாதுகாப்புத்துறை மற்றும் அமெரிக்க கடலோர பாதுகாப்பு படை ஒருங்கிணைத்ததாக தெரிவித்தார். "பல ஆண்டுகளாக, வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட சட்டவிரோத எண்ணெய் கப்பல் போக்குவரத்து வலையமைப்பில் ஈடுபட்டதற்காக, இந்த எண்ணெய் கப்பல் அமெரிக்காவால் தடைசெய்யப்பட்டுள்ளது," என்று நாட்டின் தலைமை வழக்கறிஞர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். போன்டீ வெளியிட்ட காட்சிகளில், ஒரு ராணுவ ஹெலிகாப்டர் ஒரு பெரிய கப்பலின் மேல் வட்டமிடுவதையும், கயிறுகள் மூலம் வீரர்கள் கப்பலின் தளத்தில் இறங்குவதும் காட்டப்பட்டது. துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய சீருடை அணிந்த வீரர்கள் கப்பலில் அசையும் காட்சிகளும் அதில் இடம்பெற்றிருந்தன. உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டில் இருந்து, இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்கள் ஏவப்பட்டதாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் சிபிஎஸ்ஸிடம் தெரிவித்தார். அந்த விமானம் தாங்கிக் கப்பல் கடந்த மாதம் கரீபியன் பகுதிக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையில் இரண்டு ஹெலிகாப்டர்கள், 10 கடலோர பாதுகாப்பு வீரர்கள், 10 கடற்படையினர் மற்றும் சிறப்பு படையினரும் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் இந்த நடவடிக்கையைக் குறித்து அறிந்திருந்தார், மேலும் டிரம்ப் நிர்வாகம் இது போன்ற கூடுதல் நடவடிக்கைகளைப் பரிசீலித்து வருவதாக ஒரு நம்பத்தகுந்த வட்டாரத்தின் மூலம் சிபிஎஸ்ஸுக்குத் தெரிய வந்தது. டேங்கரில் உள்ள எண்ணெயை அமெரிக்கா என்ன செய்யும் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, டிரம்ப், "அதை நாங்களே வைத்துக்கொள்வோம் என நினைக்கிறேன். எண்ணெயை நாங்கள் தான் வைத்துக்கொள்ளப் போகிறோம் எனக் கருதுகிறேன்," என்று கூறினார். கடல்சார் ஆபத்துகளை கண்காணிக்கும் வான்கார்ட் டெக் நிறுவனம், அந்தக் கப்பலை ஸ்கிப்பர் என்று அடையாளம் கண்டு, அது நீண்ட காலமாக தனது இருப்பிடத்தை "ஸ்பூஃபிங்" அதாவது, போலியான இருப்பிடத்தை ஒளிபரப்பி வந்திருக்கலாம் என நம்புவதாகத் தெரிவித்துள்ளது. ஹெஸ்புலா மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை-குட்ஸ் படைக்கு வருவாய் ஈட்டித் தரும் எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், அமெரிக்க கருவூலத் துறை 2022-ஆம் ஆண்டில் ஸ்கிப்பர் கப்பலுக்கு தடைவிதித்ததாக சிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிபிசி வெரிஃபை, இந்த டேங்கர் கப்பலை மரைன் டிராஃபிக்கில் கண்டுபிடித்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு அதன் நிலை கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டபோது அது கயானா நாட்டுக் கொடியின் கீழ் பயணித்துக் கொண்டிருந்ததைக் காட்டுகிறது. இருப்பினும், புதன்கிழமையன்று மாலை கயானாவின் கடல்சார் நிர்வாகத் துறை வெளியிட்ட அறிக்கை, ஸ்கிப்பர் "தவறாகக் கயானா கொடியைப் பறக்கவிட்டது, ஏனெனில் அது கயானாவில் பதிவு செய்யப்படவில்லை." என்று கூறியது. முன்னதாக புதன்கிழமையன்று ஒரு பேரணியில் பேசிய அதிபர் மதுரோ, வெனிசுவேலாவுடனான போரை எதிர்த்த அமெரிக்கர்களுக்கு ஒரு செய்தியை 1988-ஆம் ஆண்டு பிரபல பாடலின் வடிவில் வழங்கினார். மதுரோ ஸ்பானிஷ் மொழியில், "போருக்கு எதிரான அமெரிக்க குடிமக்களுக்கு, நான் ஒரு பிரபலமான பாடலின் மூலம் பதிலளிக்கிறேன், கவலைப்படாதீர்கள், மகிழ்ச்சியாக இருங்கள்." என்று கூறிவிட்டு, 1988ம் ஆண்டு பிரபல பாடலின் வரிகளைப் பாடினார். அப்போது, "போர் வேண்டாம், மகிழ்ச்சியாக இருங்கள். வேண்டாம், வேண்டாம் மோசமான போர் வேண்டாம், மகிழ்ச்சியாக இருங்கள்" எனும் வரிகளைக் குறிப்பிட்டார். இந்தப் பேரணிக்கு முன்பு டேங்கர் கைப்பற்றப்பட்டதைப் பற்றி மதுரோ அறிந்திருந்தாரா என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. சமீப நாட்களாக, அமெரிக்கா வெனிசுவேலாவின் வடக்கு எல்லையாக இருக்கும் கரீபியன் கடலில் தனது ராணுவ இருப்பை அதிகரித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஆயிரக்கணக்கான படையினரும் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டு (USS Gerald Ford) விமானந்தாங்கி கப்பலும் வெனிசுவேலாவுக்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று பிபிசி வெரிஃபை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, ஏதேனும் ஒரு வகையான ராணுவ நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஊகங்களைத் தூண்டியுள்ளது. செப்டம்பர் மாதம் முதல், அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தில் குறைந்தது 22 தாக்குதல்களை நடத்தியுள்ளது. டிரம்ப் நிர்வாகம் இந்த படகுகள் போதைப்பொருள் கடத்துவதாகக் கூறுகிறது. இந்தக் தாக்குதல்களில் குறைந்தது 80 பேர் இறந்துள்ளனர். (இந்த செய்திக்காக, பிரேசிலின் சா பாலோவில் இருந்து ஐயோன் வெல்ஸ் பங்களித்துள்ளார்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz68n2yln64o
3 weeks ago
சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 03 பகுதி: 03 - யாழ்ப்பாண நூலகத்தின் வழியாக ஒரு நடைப்பயணம்: மாலை கதிரவன் யாழ்ப்பாணத்தின் சிவப்பு ஓடுகள் வேயப்பட்ட தெருக்களில் மெதுவாக அமர்ந்திருந்தது. ஆரன் தங்கி இருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல், யாழ் நகர மையத்துக்குள் இருந்த காரணத்தால், அனலி தன் ஸ்கூட்டரில் அங்கு தனியாக வந்து, ஆரனும் அனலியும் யாழ்ப்பாண பொது நூலகத்தை நோக்கி நடந்தார்கள். அவள் இன்று யாழ் நகருக்குள் மட்டுமே நிற்பதாலும், வீட்டில் இருந்தே வருவதாலும், அக்காவின் மகளை கூட்டிவரவில்லை. நூலகத்தின் வெள்ளை குவிமாடங்கள் அறிவுக் கோயில் போல வானத்தில், பனைமரங்களுடன் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து நின்றது. ஆரன், அங்கு அருகில் வந்ததும், தன் நடையை கொஞ்சம் இடைநிறுத்தி விட்டு, அதன் பிரமாண்ட புது கட்டிடத்தையும் அழகையும் பார்த்தான். ஆரன்: “இந்த நூலகம் அனைத்து தமிழர்களின் பெருமை என்று என் இரண்டு பாட்டாவும் என்னிடம் அடிக்கடி கூறுவார்கள். அங்கு அரச சிங்கள காடையர்களாலும் அரச காவலர்களாலும் தொண்ணூறாயிரத்திற்கும் மேற்பட்ட அரிய புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள், பனை ஓலைகள் ... முற்றாக எரிக்கப்பட்டது, எங்கள் மக்களின் ஆன்மா எரிக்கப்பட்டது போல இல்லையா” என்று கேட்டதும் அனலியின் கண்கள் நினைவுகளால் மங்கின. அனலி: “ஆம். 1981 இல் அது எரிந்தபோது என் தாத்தாவும் அழுதார் என்றும், எங்கள் கடந்த காலம் சாம்பலாக மாறுவதைப் பார்ப்பது போல் இருந்தது என்றும், அவர் என்னிடம் கூறியது இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஆம், இத்தனை வருடங்களுக்குப் பிறகும், நாங்கள் இன்னும் அந்த காயத்தை சுமக்கிறோம்.” என்றாள். மேலும் யாழ் நூலகம் எரிந்தபொழுது அதன் தலைமை நூலகராக கடமையாற்றிய, திருமதி ரூபவதி நடராஜா எழுதிய 'யாழ்ப்பாணம் பொது நூலகம், அன்றும் இன்றும்' என்ற தமிழ் புத்தகம் மற்றும் சந்தரெசி சுதுதுங்க, இன்றைய சிங்கள இலக்கிய கவிஞர், எழுத்தாளர், தொல்லியல் ஆய்வாளர், சிங்களத்தில் எழுதிய “தீப்பற்றிய சிறகுகள்" என்ற கவிதை தொகுப்பு கட்டாயம் வாசிக்க வேண்டியவை என்றாள். யாழ் நூலகம் அரசகாவலர்களால் எரிந்தது புத்தர் பெருமானும் சேர்ந்து எரிந்தார் நூலகத்தின் முன்றலில் அவரின் சாம்பல் தொண்ணூறாயிரம் நூல்களின் சாம்பலுடன் கலந்து அறிவார்ந்த அற்புதங்கள் உறைந்த இடம் ஆயிரமாயிரம் நூல்கள் வாழ்ந்த இடம் இதயமற்ற அரசு நடத்திய கொடூரத்தில் ஈரமிழந்து வெம்மையில் வாடி வதங்கியது அவர்கள் இருவரும் புதுப்பிக்கப்பட்ட புனித மண்டபங்களுக்குள், தங்கள் காலணிகளை வெளியே கழட்டிவிட்டு, உள்ளே நுழைந்தனர். வெள்ளைச் சுவர்கள் மின்னின, அலமாரிகள் மீண்டும் புத்தகங்களால் நிரம்பியிருந்தன. ஆனாலும் ஆரன் ஒரு பேயைப் போல ஒரு அமைதி நீடித்ததை உணர்ந்தான். அவன் கிசுகிசுத்தான்: “இது மீண்டும் அழகாக இருக்கிறது, ஆனால் நீ உணர்கிறாயா ... இந்த அழகு எரிந்த அரிய புத்தகங்கள், ஏடுகள் இல்லாமல் முழுமையடையும் என்று?” அனலி: “ஏனென்றால் நினைவை முழுமையாக மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. எரிந்த பக்கங்கள் - சங்க இலக்கியப் பிரதிகள், ஓலை கையெழுத்துப் பிரதிகள் - அவை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது. இருப்பினும், அதை மீண்டும் கட்டியெழுப்புவது நமது எதிர்ப்பு. நாம் அழிக்கப்பட மாட்டோம் என்பதைக் எடுத்துக் காட்ட.” ஆரன், அங்கே அலமாரியில் இருந்த புத்தகங்களில் ஒன்றைத் தொட்டான். அது கனமாக இருப்பதாக உணர்ந்தான், அதன் எடையால் அல்ல, அது சுமந்து சென்ற வரலாற்றால். அவர்கள் நூலகத்தின் உள்ளே இன்னும் ஆழமாக நடந்து செல்லும் போது, ஆரன் மெதுவாக அனலியை நோக்கினான். “அனலி, நான் ஏன் உன்னுடன் இங்கு வர விரும்பினேன் தெரியுமா?” என்று கேட்டான். அனலி (மெல்லச் சிரித்தபடி): “நூலகத்தைப் பார்க்கத்தானே?” என்றாள். ஆரன்: “இல்லை. புத்தகங்களை மட்டுமல்ல, ஒரு மக்களின் ஆன்மாவையும் பார்க்கத்தான். அதை தன் இரத்தத்தில் உணரும் ஒருவருடன் நினைவுபடுத்திக் கொள்ளத்தான். இந்த நூலகம் மீண்டும் கட்டப்பட்டது, ஆனால் இன்னும் வடுக்களை சுமந்து கொண்டு இருந்தாலும் அது பலத்துடன் எழுந்து நிற்கிறது. இப்போது உன்னைப் பார்க்கும் போது, நீயே இந்த நூலகம் போல தோன்றுகிறாய், அதே பலத்தை உன்னிலும் நான் காண்கிறேன்” என்றான். அனலியின் கன்னங்கள் சிவந்து, அவள் தன் பார்வையைத் மறுபக்கம் திரும்பினாள். என்றாலும் அவள் கை அருணின் கையை இன்னும் இறுக்கமாக பிடித்தது. அந்த நொடியில், நூலகத்தின் சுவர்கள் சாம்பலின் நினைவைக் கூறின, ஆனால் அந்த சாம்பலின் நடுவே ஒரு விதை முளைத்தது போல, ஆரனின் உள்ளத்தில் அனலி மலர்ந்தாள். “நீயே என் வேர்,” என்ற அவன் சொற்கள் பழைய ஓலைச் சுவடிகளின் சப்தத்தைப் போல அனலியின் உள்ளத்தில் ஒலித்தன. அந்த நொடியில்— மூடிய புத்தகங்கள் பிரார்த்தனையாய் திறந்தன, மறைந்த எழுத்துக்கள் ஆசீர்வாதமாக மாறின, நூலகத்தின் அமைதி இரு இதயங்களுக்கான தெய்வீகத் தாலாட்டானது. அவர்கள் ஒரு ஜன்னல் அருகே அமர்ந்தனர், சூரிய ஒளி உள்ளே ஊடுருவியது. பழைய காகிதத்தின் வாசனை அவர்களைச் சுற்றி மிதந்தது. அனலி: “ஆரன், புலம்பெயர்ந்தோர் (Diaspora) ஏன் திரும்பி வர வேண்டும் என்று உனக்குப் புரிகிறதா? எரிந்துபோன நூலில் சில பக்கங்கள், சில சொற்கள் அழிந்துபோயிருக்கும். அவற்றை நாம் மீண்டும் எழுதிக்கொள்ள முடியாது. ஆனாலும் மீதமுள்ள பக்கங்களின் வழியே அந்த நூல் இன்னும் வாழ்கிறது. அதுபோலவே, அழிந்தாலும், சிதைந்தாலும், ஒரு இனத்தின் வரலாறு, கலாசாரம், நினைவுகள் இன்னும் தொடர்கிறது. ஒவ்வொரு தலைமுறையினரும் (diaspora உட்பட) திரும்பி வருவதும், பேசுவதும், எழுதுவதும்—அந்தக் கதையைத் தொடரும் ஒரு முயற்சியே ஆகும். அதனால்த்தான் அவர்களின் ஒவ்வொரு வருகையும் மற்றும் நினைவுகளும் அழிந்த பக்கத்தின் பின் தொடரும் எழுத்தாகிறது" என்றாள். ஆரன்: “ஆம். அது உண்மையே, நாம் திரும்பி வராவிட்டால், கடைசிப் பக்கம் காலியாகவே இருக்கும். ஒருவேளை நம் காதல் கதை கூட, மீண்டும் எதையாவது எழுதுவதற்கான ஒரு வழியாக இருக்கலாம்?” என்றான். அவர்களின் இந்த புரிந்துணர்வுகளாலும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட மரியாதையாலும், நினைவுகளின் அலமாரிகளில், ஆரன் மற்றும் அனலியின் பிணைப்பு ஆழமடைந்தது. அது இரண்டு இதயங்களின் அன்பு மட்டுமல்ல, ஒரு மக்களின் அமைதியான சபதம்! நெருப்பிலும் கூட அறிவு நிலைத்திருக்கும். புலம்பெயர்ந்தாலும் கூட காதல் தன் தாய் மண்ணில் மலரும். 'சொற்கள் எரிந்தாலும், நூலின் சுவாசம் எரியாது பக்கங்கள் சிதைந்தாலும், கதை மறைவதில்லை நினைவின் சாம்பலில் இருந்து, புதிய வரிகள் பறவையாய் பறக்கும் ஒவ்வொரு தலைமுறையும், அழிந்த பக்கத்தின் பின் தொடரும் எழுத்தாக மாறும்' மறுநாள் காலை, ஆரன் மற்றும் அனலி யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தரோடை புத்த ஸ்தூபி தளத்தின் இடிபாடுகளுக்கு முன் நின்றனர். அங்கே பனை மரங்களால் சூழப்பட்ட சூரியனுக்குக் கீழே அவை வெள்ளை குவிமாடங்களாக மின்னின. இது கிட்டத்தட்ட கி.மு. 3ம் நூற்றாண்டு – கி.பி. 2ம் நூற்றாண்டு காலத்தில் பயன்பட்ட ஒரு பழமையான கல்லறை / மெகாலிதிக் தளம் [ancient burial site / megalithic site] ஆகும். அங்கு கண்டு எடுக்கப்பட பொருள் கலாச்சாரம் [material culture] - பானைகள், மணிகள் மற்றும் கல்வெட்டுகள்- pots, beads, and inscriptions - வலுவான தமிழ் தென்னிந்திய தொடர்புகளைக் காட்டுகிறது, இது 2000 ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் தமிழ் பேசும் மக்கள் இருந்ததை உறுதிப்படுத்துவதுடன், ஆரம்பகால தமிழர்களில் சிலர் பௌத்த மதத்தைப் பின்பற்றியதையும் கூறுகிறது என்று அனலி பெருமையுடன் விளக்கினார். “பாருங்கள், ஆரன் ... தமிழர்கள் ஒரு காலத்தில் எப்படி பௌத்த மதத்தில், கி.மு. 3ம் நூற்றாண்டு – கி.பி. 2ம் நூற்றாண்டு காலத்தில் இணக்கமாக வாழ்ந்தார்கள் என்பதைக் இது வெளிப்படையாக காட்டுகிறது. நமது நிலம் போர்களை மட்டுமல்ல, ஞானத்தையும் சுமந்தது. ஆனால் இன்று அது சிங்கள பௌத்தமாக, ஐந்தாம் ஆறாம் ஆண்டில், பாளியில் எழுதிய மகாவம்ச பௌத்தமாக, தமிழரை பிரிப்பதே, இன்றைய முக்கிய பிரச்சனை, ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், இந்த கால கட்டங்களில், கி.பி 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 8 ஆம் நூற்றாண்டு வரை சிங்களம், ப்ரோட்டோ-சிங்களமாக [Proto-Sinhala] மட்டுமே இருந்தது ” என்றாள். மேலும் எண்ணற்ற தொன்மையான தமிழர் வாழ்வியலை தன்னுள் அடக்கிக் கொண்டு இனவாத அடக்குமுறையில் வெளிப்படாமல் இராணுவ பிரசன்னத்தோடு இன்னும் இருக்கிறது. இது இன்று சிங்களத்திடம் மாட்டி அதன் பெயர் கதுருகொட என மாற்றியமைக்கப்பட்டது என்று அழுத்தமாக கூறியவள், தமிழர்வாழ்வியல் ஆய்வில் கீழடி ஆதிச்ச நல்லூர் போல ஆய்வு செய்யப்பட வேண்டிய பெரு நிலப்பகுதி ஆகும் என்றாள். ஆரன் அவள் சொல்லுவதை உன்னிப்பாக கேட்டான், ஆனால் அவன் கண்கள் கந்தரோடை இடிபாடுகளை விட அவள் மீது அதிகமாக பதிந்தன. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கற்கள் இன்னும் உயிர்வாழ முடியும் எனறால், ஒருவேளை காதல் கூட, அது உண்மையாக இருந்தால், பல நூற்றாண்டுகளாக, தாஜ்மகால் போல் வாழலாம் என்று அவன் சிந்தனை விசித்திரமாக விரிவடைந்தது. அனலி அவனது மௌனத்தை, எதோ சிந்தனையில் ஆழ்ந்திருப்பதை கவனித்தாள். உடனே, "நீ என்ன யோசிக்கிறாய்?" என்று ஆச்சரியமாக கேட்டாள். அவன் தயங்கினான், பின்னர் சிரித்தான். “ஒருவேளை ஒரு நாள், மக்கள் இந்தக் கற்களைப் பற்றி மட்டுமல்ல... நம்மைப் பற்றியும் பேசுவார்கள்.” என்றான். அங்கு காணப்பட்ட கல்லுக் கோபுரத்தை [ஸ்தூபங்களைப்] பார்ப்பது போல் நடித்து, அவள் மறு பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவள் வரலாற்றை கற்றுத்தருபவள் என்ற நிலையிலிருந்து, இப்போது வரலாறாக வாழ்கிறவள் என்ற உணர்வில், அவளின் கன்னம் வெட்கத்தால் சிவந்தது. “காலம் கடந்தும் நிற்கும் கோபுரம் போல, நம் காதலும் ஒருநாள் வரலாறாகிப் போகலாம்” என்று அவளின் இதயம் எழுதிக்கொண்டு இருந்தது. பின் அனலி மெதுவாக அவன் காதில், "ஆரன், அப்பா உன்னை நம்பி, என்னை அனுப்பினார் உனக்கு வரலாறு காட்டிட , கற்பிக்க ... ஆனால் நான் இப்ப என் இதயத்தையே கையளிக்கிறேன்.” என்றாள். " நானும் கூட என்னவாம், … நான் நிலத்தின் வேர் தேட வந்தேன், ஆனால் கண்ட வேர் ... ” அவன் அதற்கு மேல் சொல்லவில்லை. மௌனமாக அனலியை பார்த்துக்கொண்டு நின்றான். ஒருவேளை அனலியின் அப்பாக்கு கொடுத்த வாக்குறுதி தடுத்திருக்கலாம்? நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 04 தொடரும் துளி/DROP: 1936 [சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 03] https://www.facebook.com/groups/978753388866632/posts/32777130171935540/?
3 weeks 1 day ago
மலையக மக்களை வடகிழக்கில் குடியேற்றுவது — தீர்வா? அல்லது புதிய வறுமையின் தொடக்கமா? அறிவியல் + பொருளாதாரம் + மனித உரிமை அடிப்படையில் ஒரு உண்மையான ஆய்வு ❗“மலையகத்தில் நிலம் குறைவு… அப்படியானால் மக்களை வடகிழக்குக்கு மாற்றலாம்” — கேட்க சுலபமாகத் தோன்றும் இந்த யோசனை, Development Economics சொல்லும் மொழியில்— 👉 ஆபத்தான பாதை. ⸻ ⚠️ Rule #1: எளிய தீர்வு = பெரிய பிரச்சனை மலையக மக்களுக்கு வீடு, நிலம் கொடுக்க வேண்டுமே தவிர, அவர்களை தாய்மண்ணிலிருந்து பிடுங்கி வேறொரு தேசப் பகுதிய மாற்றுவது… 🔥 ஏழ்மையை குறைக்கும் தீர்வு அல்ல 🔥 “புதிய வறுமையை” உருவாக்கும் தீர்வு. ⸻ 1️⃣ Poor Economics என்னும் பொருளாதார நூல் சொல்லும் முக்கிய பாடம்: “சூழலை மட்டும் மாற்றினாலும் வாழ்க்கை மாறாது.” அதன் ஆசிரியர்கள் Abhijit Banerjee & Esther Duflo வின் கருத்து: “ஒரு சமூகத்தின் உள்ளூர் எதார்த்தங்களை புறக்கணித்து எடுத்த கொள்கைகள் பெரும்பாலும் தோல்வியடைகின்றன.” மலையக மக்களின் 5 முக்கிய வாழ்க்கைத் தளங்கள்: • சமூக மூலதனம் (support networks) • கலாச்சாரம் • வேலை அமைப்பு • ஊதிய சூழல் • பள்ளி & சுகாதார சேவைகள் 👉 இவை அனைத்தும் “வேரோடு இணைந்த வாழ்க்கை அமைப்பு”. இதனை துண்டித்து வடகிழக்கில் மாற்றுவது = ⚠️ சமூகச் சிதைவு + வறுமை வலுப்படுத்தல். ⸻ 2️⃣ அமர்த்தியா சென் — “வளர்ச்சி = திறன் விரிவடைதல்; இடமாற்றம் அல்ல.” நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் Amartya Sen தனது Capability Approach மூலம் சொல்லுவது: “ஒருவரின் வாழ்க்கைத் தேர்வுகள் அதிகரிக்க வேண்டும்; குறையக் கூடாது.” வடகிழக்கில் குடியேற்றினால்: • பழைய திறன்கள் அங்கு வேலை செய்யாது • மொழி–கலாச்சார தடைகள் உருவாகும் • சமூக ஆதரவு வலயம் முற்றிலும் உடையும் • பள்ளியில், குழந்தைகளுக்கு புதிய சிரமங்கள் • புதிய பொருளாதார அமைப்பில் தள்ளாடும் நிலை 👉 இவை அனைத்தும் Capability Loss = வளர்ச்சியல்ல = அதிகாரப்பறிப்பு. ⸻ 3️⃣ உலக வங்கி + IOM ஆய்வுகள்: இடமாற்றம் = “Manufactured Poverty” நகர்மயமாதல் & மறுவாழ்வு (Resettlement) ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட 6 பெரிய அபாயங்கள்: 1. வேலையிழப்பு 2. குடும்ப வருமான அதிர்ச்சி 3. அடையாள இழப்பு 4. மன உளைச்சல் 5. சமூக மோதல்கள் 6. பெண்கள் & குழந்தைகளுக்கு கூடும் பாதுகாப்பு அபாயங்கள் 🔥 இடமாற்றம் = “புதிய வறுமை” உருவாக்கும் மிக வேகமான பாதை. ⸻ 4️⃣ மலையகத்தின் பிரச்சனை “நிலம் இல்லை” அல்ல — “நில உரிமை அமைப்பு தவறானது.” உண்மையான பிரச்சனைகள்: • தோட்டக் கம்பனிகளின் நில ஏகபோகம் • வீட்டு உரிமை மறுப்பு • திட்டமிடல் தோல்வி • நகரமயமாதல் இல்லாமை • சுற்றுச்சூழல் சட்டங்கள் காகிதத்தில் மட்டுமே 👉 இடமாற்றம் என்பது, தங்கள் சமூகத்திற்குரிய உரிமையை வழங்கத் தவறிய அரசியல்வாதிகள் பூசி மெழுக முயலும் ‘ஏமாற்றுத் தீர்வு’. தலைவலிக்கு பாம் பூசும் தற்காலிக தீர்வு மாதிரி. ஆனால் உண்மை நோய் வேறு — அந்த தலைவலி, உள்ளே இருக்கும் புற்றுநோயின் அறிகுறி! ⸻ 5️⃣ 10 பெரிய அபாயங்கள் (Relocation = Risk Multiplier) 1. வாழ்வாதாரச் சிதைவு 2. வேலையின்மை 3. சமூக ஆதரவு முறிவு 4. மொழி–கலாச்சார மோதல் 5. பள்ளி இடைநிறுத்தம் 6. மனநல சீர்கேடு 7. பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு 8. குழந்தைகளுக்கு அடையாள நெருக்கடி 9. விவசாய/வேலை திறன் மோதல் 10. சமூகங்களுக்கு இடையிலான தீவிர பதற்றம் 👉 இவை அனைத்தும் சேர்ந்து “வறுமையை பல மடங்காக்கும் இயந்திரம்” போல செயல்படும். ⸻ 6️⃣ அப்படியானால் தீர்வு என்ன? (Sen + Poor Economics + Development Models) ✔ A. In-Situ Development (மக்கள் வாழும் இடத்திலேயே மேம்பாடு) • நில உரிமை வழங்கல் • அடுக்குமாடி குடியிருப்புகள் • சமூக வீட்டு திட்டங்கள் ✔ B. Capability Enhancement • நல்ல பள்ளி & சுகாதாரம் • பெண்கள் தொழில்முனைவு ஆதரவு • டிஜிட்டல் திறன் பயிற்சிகள் • மலைநாட்டு நகரமயமாதல் ✔ C. Climate-safe Housing + Urban Planning • மண்சரிவிலிருந்து பாதுகாப்பான “Safe Zones” • அறிவியல் அடிப்படையிலான நகர திட்டமிடல் ⸻ 🔥 இறுதி தீர்ப்பு ❌ மலையக மக்களை வடகிழக்கில் மாற்றுவது வளர்ச்சி அல்ல. ❌ அது வறுமையை குறைக்காது; பெருக்கும். ✔ உண்மையான வளர்ச்சி = மக்கள் வாழும் இடத்திலேயே அவர்களின் திறன்கள் மற்றும் தேர்வுகளை அதிகரிப்பது. 🌟 “வளர்ச்சி என்பது குடியேற்றம் அல்ல; திறன்களை விரிவாக்கும் சுதந்திரம்.” — Amartya Sen ⸻ 📚 மலையக மக்களை “இடமாற்றம் செய்வதே தீர்வு” என்று கூறும் அறிவாளிகள் குறைந்தபட்சம் கீழ்க்கண்ட நூல்களைப் படிக்க வேண்டும்: 1️⃣ Abhijit V. Banerjee & Esther Duflo – Poor Economics Banerjee, A. V., & Duflo, E. (2011). Poor Economics: A Radical Rethinking of the Way to Fight Global Poverty. PublicAffairs. 2️⃣ Amartya Sen – Development as Freedom Sen, A. (1999). Development as Freedom. Oxford University Press. 3️⃣ World Bank – Resettlement & Poverty Risks World Bank. (2001). Involuntary Resettlement Sourcebook: Planning and Implementation in Development Projects. World Bank Publications. 4️⃣ Michael M. Cernea – Impoverishment Risks & Reconstruction (IRR) Model Cernea, M. M. (1997). “The Risks and Reconstruction Model for Resettling Displaced Populations”. World Development, 25(10), 1569–1587. 5️⃣ CEPA Sri Lanka – Estate Sector Socioeconomic Study Gunetilleke, N., Kuruppu, G., & Goonasekera, S. (2010). The Estate Sector in Sri Lanka: A Socio-Economic Diagnostic. Centre for Poverty Analysis (CEPA). Sri Shakthi Sumanan https://tinyurl.com/mr4vrdy2