Aggregator
போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் - பொலிஸ்
போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் - பொலிஸ்
Published By: Digital Desk 1
04 Oct, 2025 | 10:02 AM
![]()
நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பரவல் குறித்து பொலிஸாருக்கு நேரடி தகவல்களை வழங்குவதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாகாணங்களுக்கும் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர்களின் தொலைபேசி இலக்கங்கள் முன்னதாக, ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன.
சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர்களின் கீழ் உள்ள மாவட்ட பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் கண்காணிப்பாளர்களின் தொலைபேசி இலக்கங்களும் நேற்று வெள்ளிக்கிழமை (03) வெளியிடப்பட்டுள்ளன.
அவற்றிற்கு தொடர்பினை ஏற்படுத்தி, போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வழங்கலாம் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதில் பொதுமக்களின் ஆதரவு பெரிதும் பாராட்டப்படுவதாகவும், பொதுமக்களால் வழங்கப்படும் தகவல்களின் ரகசியத்தன்மையைப் பாதுகாக்க இலங்கை பொலிஸ் பாடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.virakesari.lk/article/226852
Telephone Index
கரூர் மரணங்கள்: "விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை; ஆதவ் மீது நடவடிக்கை எடுங்கள்" - உயர் நீதிமன்றம்
கரூர் மரணங்கள்: "விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை; ஆதவ் மீது நடவடிக்கை எடுங்கள்" - உயர் நீதிமன்றம்
பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!
யாழில் மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி!
நாம் செல்போன்களை அடிக்கடி மாற்றுவது ஏன்? ஒரு விரிவான அலசல்
நாம் செல்போன்களை அடிக்கடி மாற்றுவது ஏன்? ஒரு விரிவான அலசல்

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
கட்டுரை தகவல்
பரத் ஷர்மா
பிபிசி செய்தியாளர்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
'ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இந்த மொபைலை வாங்கினேன், இப்போது ஹேங் ஆகத் டொடங்கிவிட்டது.'
'கேலரி நிரம்பிவிட்டது, இந்த போனில் ஸ்டோரேஜில் பிரச்னை உள்ளது.'
'என்ன செய்வது என தெரியவில்லை, பழுதுநீக்கம் செய்ய வேண்டுமா?'
'இப்போது தள்ளுபடியில் மொபைல் கிடைக்கிறது, புதிதாக ஒன்றை வாங்கிவிடு.'
'இந்த பழைய மொபைலை என்ன செய்வது?'
'பாட்டிக்கு கொடுத்துவிடு அல்லது புதிய மொபைல் வாங்கும்போது கொடுத்துவிட்டால் எக்சேஞ்ச் ஆஃபரில் குறைந்த விலையிலேயே மொபைல் வாங்கிவிடலாம்.'
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் இருவரிடையே நடந்த இந்த உரையாடல், இந்தியாவில் மொபைல் போன் சந்தை குறித்த வெவ்வேறு சித்திரங்களை உணர்த்துகிறது.
ஆனால், இது எப்போதும் இப்படி இருந்ததில்லை.
ஜூஐ 31, 1995. இந்தியாவில் முதன்முறையாக மொபைல் போன் அழைப்பு ஒலி கேட்ட நாள் இது.
அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சர் சுக் ராம் மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதி பாசு இடையிலான முதல் மொபைல் அழைப்புக்கும் தற்போது 85.5% இந்திய குடும்பங்களில் குறைந்தது ஒருவராவது மொபைல் போன் வைத்துள்ளதற்கும் இடையில், இந்த சாதனம் இந்தியாவில் நீண்ட பயணத்தை சந்தித்துள்ளது.
இந்த சாதனம் பேசுவதற்கு மட்டும் இப்போது பயன்படவில்லை. பலருக்கும் அது வங்கி சேவை, கேமரா, விளையாட்டு, வீடியோ அழைப்பு, வகுப்பறை மற்றும் தொலைக்காட்சியாகவும் உள்ளது.
உலகளவில் மொபைல் போன் உற்பத்தி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது, 300 தொழிற்சாலைகள் மொபைல் போன்களை உற்பத்தி செய்கின்றன என அரசு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 33 கோடி போன்கள் உற்பத்தியாகின்றன, இதில் இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. தற்போது, இந்தியாவில் சுமார் 100 கோடி மொபைல் போன்கள் பயன்பாட்டில் உள்ளன.
உலகளவில் மூன்றாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா தற்போது உள்ளது.
மலிவு விலை போன்கள் மற்றும் விலை அதிகமான பிரீமியம் போன்கள் வரை சந்தையில் விற்பனையாகின்றன.
மொபைல் போன் மலிவாகிவிட்டதா?

பட மூலாதாரம், Getty Images
வாடிக்கையாளர்கள் ஏன் தங்கள் மொபைல் போன்களை அடிக்கடி மாற்றுகின்றனர் என்ற கேள்வி மனதில் எழுகிறது.
மொபைல் போன்களின் விலை மலிவாகிவிட்டதா?
மொபைல் போன்கள் நீடித்து உழைக்கக் கூடியதாக இல்லையா? பழைய மாடல் போன்களை போன்று வலுவானதாக இல்லையா?
சாஃப்ட்வேர் அப்டேட்டுகள் மற்றும் ஹார்டுவேர் மாற்றம் ஆகியவற்றால் மொபைல் போன்களை மாற்றுவது அவசியமாகிறதா?
வாடிக்கையாளரின் மனநிலை முற்றிலும் மாறிவிட்டதா?
அல்லது இந்த அனைத்து விஷயங்களுமே உண்மையா?
தொழில்நுட்ப நிபுணர் முகமது ஃபைசல் அலி கவுசா, இதை பெரிய மாற்றத்துடன் தொடர்புபடுத்துகிறார். அவர் கூறுகையில், "எலெக்ட்ரானிக் பொருட்கள் மீதான வாடிக்கையாளர்களின் நடத்தை குறிப்பிடத்தக்க அளவு மாறியுள்ளது. முன்பு, தந்தையோ அல்லது சில சமயங்களில் தாத்தாவோ தொலைக்காட்சியை வாங்குவர், அதையே மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகள் உபயோகிப்பார்கள். ஆனால், இப்போது ஒவ்வொரு தலைமுறைக்கும் பல தொலைக்காட்சிகள் உள்ளன. இது ஒரு தலைமுறை மாற்றம், அவர்களால் அதனை வாங்கவும் முடிகிறது" என்றார்.
மொபைல் போன்களை அடிக்கடி ஏன் மாற்றுகிறோம்?

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, செல்லுலார் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், மொபைல் போன்களை மாற்றுவதற்கான ஒரு முக்கிய காரணமாகும்.
இதுகுறித்து கவுசா கூறுகையில், "ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரையில், அதன் தொழில்நுட்பம் தொடர்ந்து மாறிவருகிறது. 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி ஆகியவை உள்ளன, இன்னும் சில ஆண்டுகளில் 6ஜி வந்துவிடும். இதுதான் மொபைல் போன்களை மாற்றுவதற்கான முக்கிய காரணமாக உள்ளது. போனில் ஏதேனும் பிரச்னை இருக்கும், பேட்டரி சார்ஜ் சரியாக இருக்காது. இத்தகைய காரணங்களால் வாடிக்கையாளர்கள் மொபைல்களை மாற்ற வேண்டும் என கருதுகின்றனர்." என்றார்.
ஆனால், ஏன் இந்த பிரச்னை ஏற்படுகிறது? மொபைல் போன் பயன்பாடு மிக அதிகமாவதால், அது விரைவிலேயே செயலிழந்துவிடுகிறதா?
கவுன்ட்டர்பாயின்ட் ரிசர்ச் எனும் உலகளாவிய தொழில்நுட்ப சந்தை ஆய்வு நிறுவனத்தின் ஆய்வு இயக்குநர் தருண் பதக் இதை சுட்டிக்காட்டுகிறார். அவர் கூறுகையில், "முன்பு, நாம் போனை பேசுவதற்கும் ஒருசில கேம்கள் விளையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தினோம், சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணிநேரம் மட்டுமே பயன்படுத்தினோம். ஆனால், இப்போது, இந்தியாவில் சராசரியாக மொபைல் போன் உபயோகிக்கும் நேரம் ஆறு முதல் ஆறரை மணிநேரமாக உள்ளது, அதாவது மும்மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது ஒருநாளில் கால்வாசி நேரத்தை மக்கள் போன்களில் செலவழிக்கின்றனர். அதனால், பல ஆபத்துகளுக்கும் அவர்கள் ஆட்படுகின்றனர்," என்றார்.
கவுசா கூறுகையில், "ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து பயன்பாட்டிலேயே உள்ளன. எப்போதும் அவை உங்கள் கைகளிலேயே உள்ளதால், அவை கீழே விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன, இதனால் அவை சேதமாகின்றன. போனை உபயோகிக்கும்போது 19-20 நொடிகள் தாமதமானால் கூட, அதுகுறித்து புகார் கூறுகின்றனர்." என்றார்.
2017ம் ஆண்டில், உலகளவில் 140-150 கோடி போன்கள் விற்பனையாகி, ஸ்மார்ட்போன் சந்தை விரிவடைந்தது. அது பின்னர் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இப்போது, உலகளவில் 120 கோடி ஸ்மார்ட்போன்கள் என்ற அளவில் உள்ளது.
தருண் பதக் பிபிசியிடம் கூறுகையில், "மக்கள் அதிகளவில் போனை பயன்படுத்துகின்றனர் என அர்த்தம். " என்றார்.
எனினும், வாடிக்கையாளர்கள் மொபைல் போன்களை மாற்றுவதற்கு பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து மதிப்பீடு செய்பவரும், சிஎன்பிசி-டிவி18 தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஷிபானி கரத் கூறுகையில், சாஃப்ட்வேர் அப்டேட், பேட்டரி செயலிழப்பு மற்றும் ஹார்டுவேர் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் மொபைல் போன்கள் "பயனற்றதாகி” விடுகின்றன என்கிறார். ”ஆப்கள் மற்றும் செயல்பாட்டு அமைப்புகளுக்கு நாளடைவில் அதிக ஆற்றலும், ஸ்டோரேஜும் தேவைப்படுகின்றன, எனவே பழைய மொபைல் போன்கள் நீடித்து உழைப்பதில்லை" என்றார்.
ஷிபானியின் கூற்றுப்படி, பழைய மொபைலுக்கு புதிய மொபைலை வாங்குவது அல்லது புதிதாக மொபைல் வாங்குவது என்பது முற்றிலும் இயல்பானது அல்ல, நீண்ட ஆயுளை விட புதிய நவீன வடிவமைப்பை நுகர்வோர் விரும்புவதும் காரணமாகும்.
வாஷிங் மெஷின் அல்லது மைக்ரோவேவ் போன்றவை பத்தாண்டுகளுக்கு ஒருமுறையே வாங்கப்படுகின்றன, மாறாக, மொபைல் போன் தயாரிப்பு என்பது லாபத்தைத் தொடர்ந்து பெறும் சாதனமாக உள்ளது.
"மொபைல் போன்கள் தொடர்ந்து வேலை செய்தாலும், அப்டேட் நின்றுவிட்டால் அவை பயனற்றதாகிவிடுகின்றன," என ஷிபானி பிபிசியிடம் கூறினார். "சில நிறுவனங்கள் ஆறு ஆண்டுகளுக்கு சாஃப்ட்வேர் அப்டேட் மற்றும் பாதுகாப்பு இணைப்புகளை வழங்குகின்றன, ஆனால் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவானது. பலரும் தங்கள் போன்களை 3-5 ஆண்டுகளுக்கு வைத்துக்கொள்கின்றனர். ஆனால், முன்பு போன்களை வாங்குவது செலவுகரமானதாக கருதப்பட்டது, இப்போது அப்படியல்ல."
ஷிபானி கருத்துடன் தருண் பதக்கும் ஒப்புக்கொள்வதாக தெரிகிறது. அவர் கூறுகையில், "ஒரு விஷயம் உண்மை: பேட்டரிகளைப் போன்று போனும் நிறைய மாறிவிட்டது. வேகமாக சார்ஜ் ஏற்றும் வசதிகள் வந்துவிட்டன. பேட்டரியை சார்ஜ் செய்யும் சுழற்சிகள் மாறிவிட்டன. பேட்டரி செயல்பாடு 3-4 ஆண்டுகளில் குறைந்துவிடும். சில நிறுவனங்கள் மட்டுமே 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு சாஃப்ட்வேர் அல்லது பாதுகாப்பு அப்டேட்டுகளை வழங்கும். போன்களின் ஸ்டோரேஜ் தீர்ந்துபோகும் அளவுக்கு அவற்றில் தரவுகள் உள்ளன." என்றார்.
மொபைல் போன்களை சரிசெய்வது ஏன் அதிக செலவு பிடிக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மொபைலை நீடித்து உழைக்கச் செய்வதற்காக, அது ஒற்றை உடலமைப்பைக் கொண்டதாக மாற்றப்படுகிறது, இதன் காரணமாக அதன் பழுதுபார்ப்பு கடினமாகி வருகிறது.
போன் பழுதானால், அதை அந்நிறுவனத்திற்கு சென்று சரிசெய்ய நினைத்தால், அதன் விலையை கேட்கும்போது புதிய போனே வாங்கிவிடலாம் என்று தோன்றுவதாக பலரும் சொல்கின்றனர், இது உண்மையா?
ஷிபானி இந்த கேள்விக்கு பதிலளிக்கையில், "போனின் உடைந்த திரையை மாற்றுவதற்கான செலவு, புதிய போனின் விலையில் பாதி இருக்கிறது, அதனால் புதிய மொபைல் ஏன் வாங்கக்கூடாது என வாடிக்கையாளர் நினைக்கிறார். ஆனால், மொபைல் நிறுவனம் கூறும் விலையை விட 10% குறைவான விலையில் சரிசெய்யும் கடைகள் இந்தியாவில் உள்ளன. ஆனால், ஒரு மொபைலுக்கு 1,50,000 ரூபாய் செலவிடுபவர்கள், அதை அம்மாதிரியான கடைகளுக்கு எடுத்துச் செல்ல மாட்டார்கள். " என்றார்.
மொபைல் பாகங்களின் அதிக விலையை தருண் பதக் சுட்டிக்காட்டுகிறார். அவர் கூறுகையில், "மொபைல் பழுதுநீக்கம் செய்வது ஏன் செலவுகரமானது? ஏனெனில், செமிகண்டக்டர் (semiconductors) விலை அதிகமாக உள்ளது. முன்பு மொபைல் போன்கள் எல்சிடி திரைகளுடன் இருந்தன, இப்போது 60-70% போன்கள் OLED திரைகளுடன் உள்ளன, அவை அதிக விலை கொண்டவை. மொபைல் போன் பாகங்கள் விலை மிகவும் அதிகம். பிராஸசர்கள் மற்றும் கேமராக்களுக்கும் இதே நிலைதான். செலவை பொறுத்து பார்க்கையில், இந்த போக்கு அதிகரித்து வருகிறது." என்றார்.
எனினும் சில கட்டுப்பாடுகளும் இருப்பதாக பதக் கூறுகிறார். ”போன் ஹார்டுவேர்களில் புதுமையை புகுத்துவது மட்டுப்படுத்தப்பட்டது. கேமராக்களிலும் இதே நிலைதான். அளவு மற்றும் வடிவமைப்பு என சில மாற்றங்களே உள்ளன.”
போனை நீடித்து உழைக்கும் வகையில் மாற்றும்போது, அதை சரிசெய்வது மிகவும் கடினமாகிறது.
அவர் கூறுகையில், "மக்கள் முன்பு போன்களை எளிதில் கழற்றி, அதன் பேட்டரிகளை அகற்றுவார்கள். ஆனால், இப்போது அப்படியல்ல. பாகங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டதாக உள்ளன. மொபைல் போன்கள் நீடித்து உழைப்பது மற்றும் பழுதுநீக்கம் செய்வது இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். பாகங்களை பொறுத்து அதன் ஆயுட்காலத்தை நிறுவனங்கள் குறைப்பதாக கூறுவது தவறானது" என்றார்.
கவுசா இதனை லேப்டாப் உதாரணத்துடன் விளக்குகிறார். லேப்டாப்களில் முன்பு எளிதில் அகற்றக்கூடிய வகையிலான RAM மற்றும் ஸ்டோரேஜ் இருந்தன.
RAM மற்றும் ஹார்ட் டிரைவ் ஆகியவை பழுதடைந்தாலும் அவற்றை தனியே மாற்ற முடியும், இப்போது மதர்போர்டுடன் இணைக்கப்பட்டதாகவே அவை வருகின்றன.
ஒன்று பழுதானால், மொத்த அமைப்பையும் மாற்ற வேண்டிவரும். வடிவமைப்பை பொறுத்து, பழுது நீக்கத்தைவிட மொத்தமாக மாற்றுவதை நோக்கி வாடிக்கையாளர்கள் நகர்கின்றனர்.
பழைய மொபைல் போன் சந்தையின் வளர்ச்சி

பட மூலாதாரம், Getty Images
மக்களின் பழக்கங்கள் மாறிவிட்டதாகவும், மொபைல் போன்களை அடிக்கடி மாற்றுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இது உண்மை, ஆனால் ஒரு போனின் ஆயுட்காலம் குறைந்துவிட்டதாக அர்த்தம் இல்லை.
தருண் பதக் கூறுகையில், "மக்கள் இப்போது பழைய போன்களை வாங்குகின்றனர், அதற்கான சந்தையும் வேகமாக வளர்ந்துவருகிறது. அதை பயன்படுத்திய பின் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கின்றனர், அல்லது விற்றுவிடுகின்றனர், அல்லது மாற்றிவிடுகின்றனர். இது போனின் ஆயுட்காலத்தை அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில், போன் முதலில் வாங்கியவரிடத்தில் இருக்கும், பின்னர் அந்த பழைய போனை வாங்கியவர்கள் இரண்டு ஆண்டுகள் உபயோகிப்பார். மக்களின் நடத்தை மாறியுள்ளது, ஆனால் போன்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது." என்றார்.
5ஜி நெட்வொர்க் வந்தவுடன், இந்தியாவில் பழைய மொபைல்களுக்கான சந்தை திடீரென அதிகரித்தது, அந்த வளர்ச்சி இன்றும் தொடர்கிறது.
சிசிஎஸ் இன்சைட்ஸ் நிறுவனத்தின் ஏக்தா மிட்டல் எழுதுகையில், "உலகளவில் பழைய மொபைல் போன்களுக்கான மூன்றாவது பெரிய சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. சீனாவும் அமெரிக்காவுமே இதில் இந்தியாவைவிட முன்னணியில் உள்ளன. 2024ம் ஆண்டில் 10% என்ற அளவில் இதன் வளர்ச்சி விகிதம் இருந்தது. புதிய போன்களை வாங்குவது இந்தாண்டு குறைந்தாலும் பழைய போன்களின் விற்பனை சந்தை நன்றாகவே உள்ளது" என்கிறார்.
கவுசா கூறுகையில், போனை பழுதுநீக்கம் செய்வது செலவுகரமானது என்றாலும், இந்த போக்கை வாடிக்கையாளர் நடத்தையுடன் அவர் தொடர்புப்படுத்துகிறார்.
விற்பனை எனும் பெயரில் ஒவ்வொரு சில மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்கு வரும் புதிய மொபைல் போன்கள், தொழில்நுட்ப அளவில் மாற்றங்களுடன் வருகின்றனவா?
ஷிபானி பதிலளிக்கையில், "கேமரா டிஸ்பிளே, ஏஐ வசதிகள், பேட்டரி திறன் ஆகியவற்றில் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உள்ளன, ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகமாகும் போன் மாடல்கள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றத்தை உணர்த்துவதாக இல்லை." என்கிறார்.
தருண் பதக் கூறுகையில், "பட்டன் முதல் தொடுதிரை வரையிலான மாற்றங்களை பெரிய மாற்றங்களாக மொபைல் போன் உலகில் கருதலாம். ஆனால், தொழில்நுட்பம் மாறுவதில்லை, மாறாக வடிவமைப்பு மட்டுமே மாறுகிறது. போன்கள் மெல்லியதாகவும், கையடக்கமாகவும், வண்ணமயமாகவும் மடிக்கக்கூடியதாகவும் மாறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் போனின் கேமராவை பார்க்கையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான போனின் கேமராவும் இப்போதுள்ள கேமராக்களுக்கு இணையாக போட்டியிட முடியும். சாஃப்ட்வேரை பொறுத்தவரையில் இப்போது ஏ.ஐ. வசதி வந்துள்ளதை மாற்றம் எனலாம், யு.ஐ. (user interface) அளவிலும் சில மாற்றங்கள் வந்துள்ளன" என்றார்.
இந்த கட்டுரை ஆரம்பிக்கப்பட்ட இடத்திற்கு செல்லலாம். கவுன்ட்டர்பாயின்ட் இந்தியாவில் வெளியான ஸ்மார்ட்போன் நீடிப்புதன்மை குறித்த ஆய்வில், "79% பயனர்கள் மொபைல்கள் நீடித்திருக்கும் தன்மை மிகவும் முக்கியம் என கூறியுள்ளனர். அதிகம் சூடாகுதல் (41%), பேட்டரி குறைந்துபோதல் (32%) மற்றும் தற்செயலாக சேதமடைதல் (32%) ஆகியவற்றை முக்கிய குறைகளாக கருதுகின்றனர். மேலும், மூன்றில் ஒருவர் ஸ்மார்ட்போன் பழுதுநீக்கம் செய்வதற்கு ரூ. 5,000க்கும் அதிகமாக செலவிடுகிறார். தங்களுடைய போன்கள் செயலிழக்கும்போது தங்களின் தனிப்பட்ட தரவுகள் குறித்து 89% பேர் கவலைகொள்கின்றனர், தங்களின் குடும்பப் புகைப்படங்கள், வங்கி தகவல்களை இழந்துவிடுவோமோ என அவர்கள் நினைக்கின்றனர்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
கொஞ்சம் ரசிக்க
சிரிக்கலாம் வாங்க
மன்னாரில் பொலிஸ் காவலில் நபரொருவர் உயிரிழப்பு
கோமட் (Comet) பிரவுசர், பெர்ப்ளெக்சிட்டி (Perplexity AI) 31 வயது இந்தியாவின் புதிய இளம் பில்லியனர்
இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் போட்டிகள்
இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் போட்டிகள்
இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி - பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் ஜொலித்த ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, முதல் இன்னிங்ஸில் 104 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் எடுத்த ஜடேஜா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஆமதாபாத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
ஆமதாபாத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 2) தொடங்கியது.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் சிராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் 0 - 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோஸ்டன் சேஸ்
இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக, ஜான் கேம்பல் மற்றும் டேகனரின் சந்தர்பால் களமிறங்கினர்.
சந்தர்பால் 3வது ஓவரில், ரன்கள் ஏதும் எடுக்காமல் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக 6வது ஓவரில், 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஜான் கேம்பல், பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு சீரான இடைவெளியில், விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. கேப்டன் ரோஸ்டனும் 24 ரன்கள் மட்டுமே எடுத்து, சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். 44.1 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.
இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சு, வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களைத் திணறடித்தது.
குறிப்பாக, முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் யாருமே 50 பந்துகளுக்கு மேல் எதிர்கொள்ளவில்லை. ஜஸ்டின் கிரீவ்ஸ் மட்டுமே 32 ரன்கள் எடுத்திருந்தார், மற்ற அனைத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் 30 ரன்களை தாண்டவில்லை.
இந்திய அணியில், முகமது சிராஜ் 14 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து, 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் எடுத்திருந்தனர்.
இந்தியாவின் முதல் இன்னிங்ஸ்

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியாவில் நடக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் ராகுல் சதமடிப்பது இது இரண்டாவது முறை.
இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
சிறப்பான முறையில் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிய இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தது. பின்னர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சீல்ஸ் பந்தில், 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார் ஜெய்ஸ்வால்.
அதன்பிறகு களமிறங்கிய சாய் சுதர்சன், 7 ரன்கள் மட்டுமே எடுத்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம், சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் சதத்தை பூர்த்தி செய்தார். இந்தியாவில் நடக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் ராகுல் சதமடிப்பது இது இரண்டாவது முறை. இதற்கு முன்னர், 2016இல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அவர் 199 ரன்கள் எடுத்திருந்தார்.
197 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து, வாரிக்கன் பந்தில் ஆட்டமிழந்தார் கே.எல்.ராகுல்.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, துருவ் ஜூரெல் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார்.
ராகுல் மட்டுமல்லாது, துருவ் ஜூரெல் (125 ரன்கள்), ரவீந்திர ஜடேஜா (104 ரன்கள்) ஆகியோரும் சதமடித்தனர். குறிப்பாக துருவ் ஜூரெல் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 128 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்தநிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது.
ஜடேஜா 104 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சில் ரோஸ்டன் சேஸ் இரண்டு விக்கெட்டுகளையும், ஜேடன் சீல்ஸ், ஜோமல் வாரிக்கன், காரி பியர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்திய அணியின் வெற்றி

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
286 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
100 ரன்களைக் கடப்பதற்கு முன்பாகவே 8 விக்கெட்டுகளை இழந்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இறுதியில், 45.1 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் அலிக் அதனேஸ் மட்டுமே 38 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற அனைவருமே 30 ரன்களுக்கும் குறைவாகவே எடுத்திருந்தனர். இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் சிராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் 104 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் எடுத்த ஜடேஜா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வெஸ்ட் இண்டீஸ் அணி
இந்த வெற்றியின் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய கடைசி 5 டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணியிடம் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளில் எதுவும் மூன்றாம் நாளைத் தாண்டி நீடிக்கவில்லை.
அதேபோல, 2002க்குப் பிறகு இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடப்பு டெஸ்ட் தொடரின் 2வது போட்டி அக்டோபர் 10 - 14 தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கருத்து படங்கள்
கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.
கரூர் நெரிசலில் 11 குழந்தைகளை பறிகொடுத்த குடும்பங்கள் இப்போது என்ன சொல்கின்றன?

படக்குறிப்பு, விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 குழந்தைகள்
கட்டுரை தகவல்
முரளிதரன் காசிவிஸ்வநாதன்
பிபிசி தமிழ்
5 மணி நேரங்களுக்கு முன்னர்
(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரிப்புகள் சங்கடம் தரலாம்)
செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய ரோட் ஷோவை ஒட்டி ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 11 பேர் குழந்தைகள்.
இம்மாதிரியான ஒரு நெரிசல் மிகுந்த கூட்டத்திற்கு குழந்தைகள் எதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்? குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள்?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஒவ்வொரு மாவட்டத்திலும் தனது தொண்டர்கள் மத்தியில் பேசிவந்தார். பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பேருந்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட இடத்திற்கு இதற்காக வரும் விஜய், அந்த வாகனத்தில் இருந்தபடி மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
முதலில் திருச்சியிலும் பிறகு நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல், கரூர் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல்லில் பிற்பகலில் தனது நிகழ்ச்சியை முடித்துக் கொண்டுவந்த விஜய், அன்று மாலை 7 மணியளவில் கரூருக்கு வந்துசேர்ந்தார். ஆனால், இந்த கரூர் கூட்டத்தில், விஜய் வரும்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர் குழந்தைகள் என்பதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

படக்குறிப்பு, ஒன்றே முக்கால் வயதே ஆன குழந்தை துருவிஷ்ணு கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தது.
அழக்கூட முடியாத மாற்றுத்திறனாளி தாய்
இவ்வளவு நெரிசல் மிகுந்த, ஒரு அரசியல் கூட்டத்திற்கு எப்படி குழந்தைகள் சென்றனர், எதற்காகச் சென்றனர்? இந்தக் கேள்விகளுக்கு பதிலைத் தெரிந்துகொள்ள இந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் பிபிசி நேரில் சந்தித்தது. நொறுங்கிப்போன மனதோடு பெற்றோரும் உறவினர்களும் குழந்தைகள் சென்ற பின்னணியை விவரித்தனர்.
திங்கட்கிழமை. கரூர் நெரிசல் சம்பவம் நடந்த மூன்றாவது நாள். அந்த நிகழ்வு நடந்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் இருக்கிறது வடிவேல் நகர். அந்தப் பகுதிக்குள் நுழையும்போதே, ஒரு மூதாட்டியின் கதறல் காதில் விழுகிறது. ஒன்றே முக்கால் வயதேயான பேரன் துருவிஷ்ணுவை இழந்த துக்கத்தில் மூன்றாவது நாளாக கதறி அழுதுகொண்டிருந்தார் அவர். அந்த வீட்டின் வாசலில் குற்ற உணர்வே வடிவெடுத்ததைப்போல அமர்ந்திருக்கிறார் லல்லி. குழந்தையின் அத்தையான இவருடன்தான் அந்தக் கூட்டத்திற்கு துருவிஷ்ணு சென்றிருந்தான்.
"நான்தான் கூட்டிட்டு போய் வாரிக் கொடுத்துட்டேன்.. நான்தான் கூட்டிட்டுப்போய் வாரிக் கொடுத்துட்டேன்" என்று கதறிக் கொண்டிந்தார் லல்லி. சனிக்கிழமையன்று விஜய் வேலுசாமிபுரத்திற்கு வருகிறார் என்றவுடன் அவரைப் பார்க்க விரும்பினார் லல்லி. ஆகவே தனது குழந்தைகள் மதுமிதா, பரத், தனது சகோதரர் விமலின் குழந்தை துருவிஷ்ணு, தனது கணவர் ஆகியோருடன் சென்றார் லல்லி.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கரூர் நிகழ்வில் உயிரிழந்த 41 பேரில் 11 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள்.
"அவனுக்கு விஜய்னா ரொம்ப பிடிக்கும். விஜய் பாட்டைக் கேட்டாலே ஓடிவந்து டான்ஸ் ஆடுவான். என்னை மாதிரியே என் தம்பி பையனும் விஜய் ரசிகனா இருக்கிறானேனு, அவங்க அப்பாகிட்ட சொல்லிட்டு தூக்கிட்டு போனேன். ஐந்து மணிக்கு போனதிலிருந்து தலையில துண்டு கட்டி போட்டோவெல்லாம் எடுத்தான். அப்பவே கூட்டம் இருந்தது. விஜய் வந்த பிறகு மேலே ஏறினார். எல்லோரும் கத்தினார்கள். நான் அவனுக்கு விஜய்யைக் காட்டினேன். டக்குனு கரண்ட் ஆஃப். ஜெனரேட்டர் உடனே போட்டுட்டாங்க. அதுக்குள்ள இப்படி ஒரு நிலவரத்தைக் கொடுக்கும்னு யாரும் நினைச்சுப்பார்க்கல. எனக்கு முன்னாடி இருந்த இருசக்கர வாகனம் கீழே விழுந்துவிட்டது. நானும் விழுந்துட்டேன். எனக்கு மேல் எத்தனை பேர் விழுந்தாங்கன்னு தெரியலை. ஏன்டா இந்தக் கூட்டத்துக்கு வந்தோம்னு ஒரு செகண்ட் யோசிச்சேன். நாமதான் வந்தோம், குழந்தையை ஏன் கூட்டிவந்தோம் என யோசித்தேன். என் அருகில் இருந்த ஒரு பெண், குழந்தையைக் கொடுக்கும்படி சொன்னார். அவர் இடுப்பில் குழந்தையைத் தூக்கிக்கொண்டார். அப்போதெல்லாம் குழந்தை நன்றாக இருந்தான்" என அந்தத் தருணத்தை நினைவுகூர்கிறார் லல்லி. ஆனால், பிறகு தன் சகோதரரின் குழந்தையை அவரால் அரசு மருத்துவமனையில் சடலமாகத்தான் பார்க்க முடிந்தது.
குழந்தையின் தாய் மாதேஸ்வரி காது கேட்காத, பேச முடியாத மாற்றுத்திறனாளி. அவரால் குழந்தை இறந்த சோகத்தைச் சொல்லி அழக்கூட முடியவில்லை. "இவ்வளவு துயரத்திலும் எங்களைப் பற்றி சமூக வலைதளங்களில் மிக மோசமாக எழுதுவது பெரும் வேதனையளிக்கிறது" என்கிறார் குழந்தையின் தந்தையான விமல்.
"உண்மைக்கு தொடர்பே இல்லாத வகையில் எழுதுகிறார்கள். குழந்தையை இழந்த குடும்பம் என்ற ஒரு சிறு கரிசனம்கூட அவர்களிடம் இல்லை. நான் குழந்தையை இழந்தது ஒருபுறமிருந்தாலும் வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சியில்தான் வாழப் போகிறாள் என் சகோதரி. எப்படி இந்தத் துயரிலிருந்து மீளப்போகிறோம் எனத் தெரியவில்லை" என்கிறார் விமல்.

படக்குறிப்பு, சிறுமிகள் சாய் ஜீவா (இடது) மற்றும் சாய் லக்ஷணா (வலது)
சாய் ஜீவா - சாய் லக்ஷணா
இந்தத் துயர நிகழ்வில், ஒரே கிராமத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்திருக்கிறார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்திருக்கிறார்கள். அப்படி ஒரு துயரைச் சந்தித்த குடும்பம்தான் ஹேமலதா - ஆனந்தஜோதியின் குடும்பம்.
இவர்கள் தங்கள் குழந்தைகள் இருவருடன் இந்தக் கூட்டத்திற்கு வந்தனர். கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் ஹேமலதா, குழந்தைகள் சாய் லக்ஷணா, சாய் ஜீவா என மூன்று பேர் உயிரிழந்துவிட்டனர். இதில் சாய் லக்ஷணாவுக்கு எட்டு வயது. சாய் ஜீவாவுக்கு நான்கு வயது. ஆனந்தஜோதியும் அவரது குடும்பத்தினரும் இந்த நிகழ்வைப் பற்றி ஊடகங்களிடம் பேசவே விரும்பவில்லை.
"ஊடகங்களிடம் நாங்கள் சொல்வது ஒன்றாக இருக்கிறது, ஆனால், வெளியாவது வேறாக இருக்கிறது" என மனமுடைந்து பேசுகிறார்கள் அவர்கள்.
'ஒரே இடத்தில் 11 பேர் பலி'

படக்குறிப்பு, 13 வயது சனுஜ் தனது சித்தியுடன் கூட்டத்திற்குச் சென்றுள்ளார்.
கரூர் அரசு மருத்துவமனையை ஒட்டியுள்ள காந்தி கிராமம் பாரதியார் தெருவைச் சேர்ந்த சனூஜுக்கு 13 வயதுதான். எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். சனூஜ் தனது சித்தி வைசூர்யா உள்ளிட்ட மூன்று பேருடன் விஜய்யைப் பார்க்கச் சென்றார்.
"நண்பகல் 12 மணிக்கே கிளம்பிவிட்டோம். டான்ஸ் எல்லாம் ஆடினோம். அங்கே ஒரு மளிகைக்கடை இருந்தது. அதன் அருகில் நின்றுகொண்டிருந்தோம். விஜய் வண்டி உள்ளே வந்தபோது பெரிய நெரிசல் ஏற்பட்டது. மல்லாந்து விழுந்துவிட்டோம். என்னுடன் இருந்த குழந்தைகளில் ஒரு குழந்தை ஷட்டரில் ஏறிவிட்டது.
இன்னொரு பிள்ளையை கொடுக்க முடியவில்லை. அந்த இடத்தில் முதலில் இருவர் விழுந்தனர். அதற்குப் பிறகு பையன் (சனுஜ்) விழுந்தான். அதுக்கு மேல் இரண்டு பேர் விழுந்தார்கள். அதற்கு மேல் அடுக்கடுக்காக விழுந்தார்கள். அரை மணி நேரம் கழித்துத்தான் பிள்ளையைத் தூக்க முடிந்தது. அப்பவே இறந்துவிட்டான். அந்த இடத்தில் மட்டும் 11 பேர் இறந்துவிட்டார்கள்" என்கிறார் வைசூர்யா. சனுஜின் தாயார் திருவளர்செல்வியால் பேசவே முடியவில்லை.
இந்த நிகழ்வில் வைசூர்யாவுக்கும் லல்லிக்கும் ஒரே நிலைதான். அதாவது, தன் உடன் பிறந்தவர்களின் குழந்தையை கூட்டத்திற்குக் கூட்டிவந்து பறிகொடுத்தவர்கள். இதன் காரணமாகவே கடுமையான குற்றஉணர்ச்சியில் ஆழ்ந்திருப்பவர்கள்.

படக்குறிப்பு, ஒரே குடும்பத்தை சேர்ந்த பழனியம்மாளும் (இடது), கோகிலாவும் (வலது) இறந்துவிட்டனர்.
'விஜயை பார்க்கவே இல்லை'
விஜயைப் பார்க்கச் சென்றவர்கள் தங்களுடன் குழந்தைகளையும் கூட்டிச் சென்றது குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு எதற்காக குழந்தைகளை அழைத்துச் செல்கிறார்கள் என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது. ஆனால், குழந்தைகளுடன் சென்றவர்களில் பலர் விஜயின் ரோட் ஷோ நடந்த வேலுசாமிபுரம் அல்லது அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள்.
வேறு சிலர், சில கிலோ மீட்டர் தூரத்தில் வசிப்பவர்கள். அவர்கள் தங்கள் பகுதியில் இவ்வளவு பெரிய நிகழ்வு நடப்பது குறித்து தொடர்ந்து ஊடகங்கள் செய்திகளை வழங்கிவரும் நிலையில், அதனை தவறவிட விரும்பாமலேயே இந்தக் கூட்டத்திற்கு வந்தவர்கள். அவர்களில் ஒருவர்தான் செல்வராணி.

பட மூலாதாரம், Getty Images
செல்வராணியும் அவரது கணவர் பெருமாளும் வேலுசாமிபுரத்தை ஒட்டியுள்ள கோதூர் பகுதியில் வசித்து வருபவர்கள். இந்தத் தம்பதிக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் என நான்கு குழந்தைகள். தங்கள் பகுதிக்கு விஜய் வருவதைக் கேள்விப்பட்டவுடன் செல்வராணி அனைவருடனும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றார்.
அந்த நெரிசலில் சிக்கி அவருடைய 14 வயது மகள் கோகிலாவும் 11 வயது மகள் பழனியம்மாளும் இறந்துவிட்டனர். காயங்களுடன் உயர் பிழைத்திருக்கிறார் செல்வராணி. உயிரிழந்த தங்கள் இரு குழந்தைகளின் சடலங்களையும் சொந்த ஊரான புங்கம்பட்டியில் அடக்கம் செய்துவிட்டு, மீளாத் துயரில் ஆழ்ந்திருக்கிறது இந்தக் குடும்பம். உயிரிழந்த இரு குழந்தைகளும் விஜயின் தீவிர ரசிகர்கள்.
"விஜய் இந்தப் பகுதிக்கு வருகிறார் என செய்தி வந்ததிலிருந்தே அங்கு போயாக வேண்டுமென குழந்தைகள் அடம்பிடித்தார்கள். அவர் வரும் இடம் தூரமாக இருந்தால் போக முடியாது என்றேன். ஆனால், அருகிலிருக்கும் வேலுசாமிபுரத்திற்கு வருகிறார் என்றவுடன், அது வீட்டிற்குப் பக்கம்தான் என்பதால் கண்டிப்பாக போகவேண்டும் என்றார்கள்.
எவ்வளவோ சொன்னேன். கேட்கவில்லை. போயே ஆகனும் என்றார்கள். கடைசியில கூட்டிட்டு போய் பறிகொடுத்ததுதான் மிச்சம். விஜய் வண்டி வந்ததுதான் தெரியும். நாங்கள் அவரைப் பார்க்கவேயில்லை. அவர் பேசியதையும் கேட்கவில்லை. கால் மணி நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்தது.
என் கணவர் போக வேண்டாம் என்றுதான் சொன்னார். இவர்களுடைய பிடிவாதத்தால்தான் கூட்டிப்போனேன். கூட்டிப்போகமால் இருந்திருந்தால் என் பிள்ளைகள் எங்கேயும் போயிருக்காது. அங்கே போயிருக்கவே கூடாது. போகாமல் இருந்திருந்தால் இந்நேரம் விளையாடிக் கொண்டிருந்திருப்பார்கள்" என்கிறார் செல்வராணி.

படக்குறிப்பு, 7 வயதான க்ருத்திக் ஆதவ்
ஒரே கிராமத்தில் மொத்தம் ஐந்து பேர்
கரூரின் ஐந்து ரோடு பகுதியைச் சேர்ந்த சரவணன் வெல்டராக வேலைபார்த்து வருகிறார். அவர்களுடைய மகன் 7 வயதேயான க்ருத்திக் ஆதவும் மனைவி சந்திரகலாவும் கூட்டத்திற்குச் சென்றனர்.
நெரிசலில் சிக்கி க்ருத்திக் ஆதவ் அங்கேயே உயிரிழந்துவிட, படுகாயமடைந்து மீண்டிருக்கிறார் சந்திரகலா. திரும்பத் திரும்ப இதைப் பற்றிப் பேசி ஓய்ந்துபோன சரவணனும் அவரது குடும்பத்தினரும் இது குறித்து பேசவே விரும்பவில்லை.
இந்த நெரிசல் மரண சம்பவத்தில் பெரும் இழப்பைச் சந்தித்த பகுதி என்றால் அது ஏமூர் கிராமம்தான். ஒரே கிராமத்தில் மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்திருக்கின்றனர். இவர்களில் இரண்டு பேர் குழந்தைகள். வேலுசாமிபுரத்திற்கு விஜய் வருவதைக் கேள்விப்பட்டவுடன் ஏமூரில் இருந்த பலர் ஒன்று சேர்ந்து ஒரு வாகனத்தை அமர்த்தி விஜயைப் பார்க்கச் சென்றிருக்கின்றனர்.

படக்குறிப்பு, எட்டாண்டுகள் கழித்துப் பிறந்த தரணிகா உயிரிழந்தார்.
அந்த கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் டாஸ்மாக்கில் கண்காணிப்பாளராக இருக்கிறார். இவருடைய மனைவி ப்ரியதர்ஷினி.
இந்தத் தம்பதிக்கு திருமணமாகி, எட்டாண்டுகள் கழித்துப் பிறந்தவர் தரணிகா. ஒரே மகள். 13 வயதான தரணிகா 9ஆம் வகுப்பு படித்துவந்தார்.
சனிக்கிழமையன்று சக்திவேல் வேலைக்குச் சென்றுவிட்டார். ப்ரியதர்ஷிணியும் மகள் தரணிகாவும் ஏமூரைச் சேர்ந்த மற்றவர்களுடன் இணைந்து விஜயைப் பார்க்கச் சென்றனர்.
மாலை ஐந்து மணியளவிலேயே அங்கு கூட்டம் அதிகரித்ததை தொலைக்காட்சிகளில் பார்த்த சக்திவேல், மனைவியைத் தொடர்புகொள்ள முயற்சித்திருக்கிறார்.
விஜய் வரவிருந்த பகுதியில் கூட்டம் வெகுவாக இருந்ததால் அவரால் ப்ரியதர்ஷினியுடன் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்த நேரத்தில் ப்ரியதர்ஷினி தாங்கள் விஜயைப் பார்த்துவிட்டு வருவதாகவும் சக்திவேலை வீட்டிற்குச் சென்று சாப்பிடும்படியும் ஒரு பதில் குரல் பதிவை அனுப்பியிருக்கிறார்.
அதனைக் கேட்ட சக்திவேல் கூட்டம் அதிகமாக இருப்பதால் அந்த இடத்திலிருந்து புறப்படும்படி குரல் பதிவு ஒன்றை அனுப்பினார். அந்த குரல் பதிவை ப்ரியதர்ஷினி கேட்கவேயில்லை. அதற்குள் ப்ரியதர்ஷினியும் குழந்தை தரணிகாவும் நெரிசலில் சிக்கி இறந்துவிட்டனர்.
ஏற்கெனவே மூன்றாண்டுகளுக்கு முன்பாக ஒரு மகள் இறந்த நிலையில், தரணிகா மீது உயிரையே வைத்திருந்தார் சக்திவேல். "இப்போது என் குடும்பமே அழிந்துவிட்டது. நான் யாரைக் குறைசொல்வது?" என தழுதழுக்கிறார் சக்திவேல்.

படக்குறிப்பு, பொறியியல் கல்லூரி மாணவர் கிஷோர் (இடது), தனது தாயுடன் சென்றபோது உயிரிழந்த பத்து வயது சிறுவன் ப்ரித்திக் (வலது)
'விஜயின் வாகனத்தை நெருங்கிச் சென்றார்'
அதே கிராமத்தைச் சேர்ந்த பத்து வயது ப்ரித்திக்கும் தனது தாயுடன் சென்றபோது உயிரிழந்திருக்கிறான். குழந்தையுடன் தனியாக வசித்துவந்த அவனுடைய தாயார் தற்போது இருந்த ஒரு பிடிமானத்தையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார். இவர்களைச் சந்தித்த போது, காட்சிகளைப் பதிவு செய்ய அனுமதித்தாலும் பேச விரும்பவில்லை.
குழந்தைகள் மட்டுமல்லாமல் சுயமாக சென்ற பதின்பருவத்தினரும் தங்கள் உயிரை விலையாகக் கொடுத்துள்ளனர்.
காந்திகிராமம் வடக்குப் பகுதியைச் சேர்ந்த கிஷோர், ஒரு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்தார். கிஷோருக்கு சிறு வயது முதலே விஜய் மீது பெரும் விருப்பம் உண்டு. தீவிரமான விஜய் ரசிகர் அவர்.
தனது அபிமானத்திற்குரிய விஜய் கரூருக்கு வருவதைக் கேள்விப்பட்டதும் அவரும் அவருடைய பெரியம்மா மகன் மிதில் பாலாஜியும் வேறு சில நண்பர்களும் வேலுசாமிபுரத்திற்குச் சென்றனர்.
விஜய் வரும்போது ஏகப்பட்ட நெரிசல் ஏற்பட, அவருடைய அண்ணன், கூட்டத்திலிருந்து விலகிச் சென்றுவிட முடிவெடுத்தார். ஆனால், கிஷோர் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. தொடர்ந்து முன்னேறி விஜயின் வாகனத்தை நெருங்கிச் சென்றார். பிறகு அவருடைய அண்ணனால் கிஷோரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
"ஏழு மணியளவில் விஜய் வந்தார். அவரைப் பார்த்தவுடன் நாங்கள் வெளியே வந்துவிட்டோம். அவன் வெளியே வராமல் உள்ளே சென்று மாட்டிக்கொண்டான். என்னால் மூச்சுவிட முடியவில்லை. எட்டரை மணிவரை வராததால் அவனுக்கு போன் செய்தோம். போன் ரீச்சாகவில்லை. பிறகு ஊரிலிருந்து ஒரு அக்கா போன் செய்து, ஆஸ்பத்திரிக்குச் சென்று பார்க்கச் சொன்னார். சென்று பார்த்தால் கிஷோர் மார்ச்சுவரியில் இருந்தான். என் கூடவே வந்திருந்தால் இப்போது உயிரோடு இருந்திருப்பான்" என அழுகிறார் மிதில் பாலாஜி.

படக்குறிப்பு, 15 வயது ஸ்ரீநாத் மிகத் தீவிரமான விஜய் ரசிகர்.
'200 ரூபாயுடன் சென்றவர் வீடு திரும்பவில்லை'
மேட்டூரைச் சொந்த ஊராகக் கொண்ட 15 வயது ஸ்ரீநாத்தின் குடும்பம் கரூரில் வசித்துவந்தனர். ஸ்ரீநாத் மிகத் தீவிரமான விஜய் ரசிகர். சனிக்கிழமையன்று காலையில் தானே காலை உணவைச் செய்து சாப்பிட்டுவிட்டு, தாய் கொடுத்த 200 ரூபாயுடன் விஜயைப் பார்க்க புறப்பட்டார் ஸ்ரீநாத். ஆனால், மாலையில் வீடுதிரும்பவில்லை.
"அந்த சமயத்தில்தான் அவனுடைய டியூஷன் டீச்சர் போன் செய்து ஸ்ரீ எங்கே என்று கேட்டார். எதற்காகக் கேட்கிறீர்கள் என்றேன். விஜயின் கூட்டத்தில் மயங்கி விழுந்த ஒரு பையனைப் பார்க்கும்போது ஸ்ரீ மாதிரியே இருக்கிறது, எனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றார். அவர் சொன்ன வண்ணத்தில்தான் ஸ்ரீ கால்சட்டை அணிந்திருந்தான். இருந்தாலும் என்னால் நம்ப முடியவில்லை. ஆனால், விரைவிலேயே எங்களுக்குத் தெரிந்த ஒரு போலீஸ்காரர், செய்தியைச் சொல்லிவிட்டார். இப்ப வரைக்கும் எங்கே போனான், விஜயைப் பார்த்தானா, பார்க்கவில்லையா என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை. அன்று காலையில் அவ்வளவு சந்தோஷமாக இருந்தான். எத்தனை மணிக்கு இப்படி ஆச்சுன்னு தெரியவில்லை" என்கிறார் ஸ்ரீநாத்தின் தாயார் கோமதி.

இதற்கு முந்தைய சம்பவங்கள்
தமிழ்நாட்டின் சமீப கால வரலாற்றில் இதற்கு முன்பாக இவ்வளவு பெரிய அளவில் இரண்டு முறை நெரிசல் மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 1992ல் கும்பகோணம் மகாமகத்தில் ஏற்பட்ட நெரிசலில் சுமார் 50 பேர் வரை உயிரிழந்தனர்.
அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதாவும் அவருடைய தோழி வி.கே. சசிகலாவும் மகாமக குளத்தில் நீராட வந்ததே இந்த நெரிசலுக்குக் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது.
இதற்குப் பிறகு, 2005ஆம் ஆண்டு டிசம்பரில் கனமழையை அடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருந்தது. அதற்கான டோக்கன் டிசம்பர் 18ஆம் தேதி காலை வழங்கப்படும் என செய்திகள் பரவிய நிலையில், அந்த டோக்கனைப் பெற மக்கள் முண்டியடித்ததில் 42 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 25 பேர் பெண்கள்.
இந்த இரு நிகழ்வுகளிலும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் குழந்தைகள் சிக்கவில்லை.
கரூர் நிகழ்வில் உயிரிழந்த 41 பேரில் 11 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள். குழந்தைகளை இழந்த குடும்பத்தினரில் ஒரு சிலர் நடுத்தர வர்க்கத்தினர் என்றாலும் பெரும்பாலானவர்கள் பொருளாதார ரீதியில் மிகமிக சாதாரண நிலையில் இருப்பவர்கள். குடும்பத் தலைவர்கள் சாதாரண ஒரு வேலையைச் செய்து குடும்பத்தை பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.
உயிரிழந்த குழந்தைகளில் சிலர் பெற்றோருடன் சென்றவர்கள். சில குழந்தைகள் தங்கள் உறவினர்களுடன் சென்றிருக்கிறார்கள். குழந்தைகள் உயிரிழந்துவிட, பெற்றோரும் அழைத்துச் சென்ற உறவினர்களும் மீள முடியாத குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்தக் கூட்டங்களுக்கு குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டனர்?
விஜயைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையைத் தவிர வேறு காரணங்கள் ஏதும் இல்லை. "வீட்டிற்கு பக்கத்திலேயே விஜய் வந்தா யாருதான் போகமாட்டாங்க? டிவியிலேயே பார்ப்பவரை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைச்சா, யாருதான் தவறவிடுவாங்க.. அதுதான் நான் செய்த தப்பு. என் தம்பி குழந்தையை தூக்கிட்டு போனது தப்புதான். அப்ப ஒரு செகண்ட் யோசிச்சிருக்கலாம்" என்கிறார் சகோதரனின் ஒன்றரை வயது குழந்தையை பறிகொடுத்த லல்லி.
இந்தத் தருணத்தில் குழந்தைகளை இழந்தவர்கள் பெரும்பாலும் யாரையும் குறைசொல்லும் நிலையில் இல்லை. வாழ்நாள் முழுவதும் மீள முடியாத இந்தத் துயரத்தை எப்படிக் கடப்பது என்பதே அவர்களது மனதை இப்போது அரித்துக் கொண்டிருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு