3 months ago
இரானை நிலைகுலையச் செய்த தாக்குதல் ஒரு தொடக்கமே - இஸ்ரேலின் இறுதித் திட்டமும் அதீத ஆபத்தும் கட்டுரை தகவல் எழுதியவர், ஃப்ராங்க் கார்ட்னர் பதவி, பாதுகாப்புத்துறை செய்தியாளர் 14 ஜூன் 2025, 07:36 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆபரேஷன் ரைஸிங் லையன் என்ற பெயரில் இரான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல் முன் எப்போதும் இல்லாத வகையில் இருக்கிறது. கடந்த ஆண்டு இரண்டு தரப்பிலும் நடைபெற்ற ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் உட்பட முன்பு எப்போதும் இல்லாத வகையில் மிகவும் விரிவுபடுத்தப்பட்ட, ஒரு லட்சியத்துடன் நடத்தப்படும் தாக்குதலாக இருக்கிறது. 1980-88 காலங்களில் நடைபெற்ற இரான் - இராக் போருக்குப் பிறகு இரான் மீதான மிகப்பெரிய தாக்குதலாக இது உள்ளது. விடிவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதல்கள் இரானின் அணுசக்தி மையங்களை மட்டும் இலக்காக கொண்டிருக்கவில்லை. இரானின் வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தளங்கள் போன்றவற்றையும் இலக்காக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது இரான் பதில் தாக்குதல் நடத்துவதற்கான திறனை கணிசமாக குறைக்கிறது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டிற்காக பணியாற்றும் நபர்களின் குழு களத்தில் இந்த தாக்குதலில் முக்கிய அங்கம் வகித்துள்ளது. இந்த குழுவே ராணுவத் தலைவர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகளின் துல்லியமான இடத்தை கண்டறிய உதவியதாக தெரிவிக்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரான் இந்த தாக்குதலில் தன்னுடைய ஆறு ஆராய்ச்சியாளர்களை இழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு: இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்ப்படையின் (IRGC) தலைவர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்லாமிய புரட்சியின் பாதுகாவலர்களாக கருதப்பட்டவர்களில் ஒருவரான இவர் 1979-ஆம் ஆண்டு இரானின் ஷா ஆட்சிக்கு முடிவு கொண்டு வந்தவர்களில் முக்கியமான நபர் ஆவார். அவர் மட்டுமின்றி ஆயுதப்படைகளின் தலைவர், ஐ.ஆர்.ஜி.சியின் விமானப்படைத் தலைவர் ஆகியோரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இரான் இந்த தாக்குதலில் தன்னுடைய 6 அணு விஞ்ஞானிகளை இழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இரானின் பாதுகாப்பு அமைப்பின் மையத்திற்குள் வெற்றிகரமாக ஊடுருவி, யாரும் அங்கு பாதுகாப்புடன் இல்லை என்பதை உணர்த்தியுள்ளது மொசாட். இரானின் அரசு தொலைக்காட்சி, இந்த தாக்குதலில் இதுவரை 78 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. குழந்தைகள் உட்பட சாதாரண குடிமக்களும் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது. (இது கொல்லப்பட்டவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை இல்லை. பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்யப்படவில்லை). இந்த தாக்குதலின் ஒரு பகுதியாக, இரானுக்குள் இருந்தே மொசாட் அமைப்பு டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலின் முதன்மை இலக்குகள் நடான்ஸில் அமைந்திருக்கும் அணு செறிவூட்டும் மையமும், ஐ.ஆர்.ஜி.சிக்கு சொந்தமான தளங்களும் தான். இப்படியான சூழலை இஸ்ரேல் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இந்த தாக்குதல்களால் இரான் அதிர்ச்சி அடைந்துள்ளது. இது முதல் அலை மட்டுமே. இஸ்ரேலின் தாக்குதல் பட்டியலில் மேலும் பல சாத்தியமான இலக்குகள் உள்ளன. சில எளிதில் அடைய முடியாததாகவும் அதேநேரத்தில் நிலத்திற்கு அடியில் உள்ள தளங்களும் இந்த இலக்குப் பட்டியலில் இருக்கின்றன. இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தக் காரணம் என்ன? அதை ஏன் இப்போது நடத்துகிறது? இரானின் அணுசக்தி திட்டத்திற்கு முடிவு இஸ்ரேலும் சில மேற்கத்திய நாடுகளும், இரான் ரகசியமாக அணு ஆயுத உற்பத்தியில் முன்னேறிச் செல்வதாக சந்தேகித்தன. அணு ஆயுத உற்பத்தியில் இருந்து பின் வாங்குவதற்கு இடமே அளிக்காத 'பிரேக்அவுட் கேபபிலிட்டி' என்ற கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இரான் தொடர்ச்சியாக மறுத்து வந்தது. மக்களின் தேவையை பூர்த்தி செய்யவே அணுசக்தி திட்டத்தை மட்டுமே, ரஷ்யாவின் உதவியோடு உருவாக்கி வருவதாகவும், அது அமைதிக்கான நோக்கங்களை மட்டுமே கொண்டுள்ளது என்றும் தெரிவித்தது. பத்தாண்டுகளுக்கும் மேலாக இரானின் இந்த முயற்சியை பல்வேறு வடிவங்களில் தாமதமாக்க இஸ்ரேல் முயற்சி செய்து வந்தது. அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டது. இரான் ஆராய்ச்சியாளர்கள் சிலர் மர்மமான முறையில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டனர். 2020-ஆம் ஆண்டு டெஹ்ரானில் சாலை ஒன்றில்அணுசக்தி திட்டத்தின் தலைவராக பணியாற்றிய பிரிகேடியர் ஜெனரல் ஃபக்ரிஸாதே கொல்லப்பட்டார். ரிமோட் மூலமாக இயக்கப்படும் மெஷின் துப்பாக்கி மூலம் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானின் ஆயுதப்படையின் தலைவர் முகமது பகேரி (இடது) உள்ளிட்டோர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர் முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சைபர் பிரிவு அதிகாரிகள் 'ஸ்டக்ஸ்னெட்' என்ற கணினி வைரஸை, இரானின் அணு ஆய்வுக் கூடத்தின் 'சென்ட்ரிஃபூயூஜஸில்' வெற்றிகரமாக செலுத்தியது. இது அந்த கருவியை கட்டுப்பாடு இல்லாமல் சுழற்றியது. இந்த வாரம் ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை (IAEA), இரான் அதனுடைய அணு ஆயுத பரவல் தடை உத்தரவாதத்தை( non-proliferation obligations) மீறுவதாகக் கண்டறிந்தது. இந்த விவகாரத்தை ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்புவதாகவும் எச்சரித்தது. 60% வரை செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (HEU) அளவுக்கு அதிகமாக இரான் சேமித்து வைக்கிறது. இதனால் இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ளன. மக்கள் பயன்பாட்டுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் அணுசக்தியை உற்பத்தி செய்வதற்கு தேவையான அளவைக் காட்டிலும் யுரேனியம் அதிகமாக செறிவூட்டப்பட்டுள்ளது. அணு குண்டை தயாரிப்பதற்கு தேவையான செறிவுக்கு மிக அருகில் யூரேனியம் செறிவூட்டப்பட்டு இரானில் சேமிக்கப்படுகிறது. இரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இது 2015-ஆம் ஆண்டு ஒபாமா ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால் அடுத்து பதவிக்கு வந்த டொனால்ட் டிரம்பால் அது 'உலகில் மிகவும் மோசமான ஒப்பந்தம்' என்ற விமர்சனத்தைப் பெற்றது. அந்த திட்டத்தில் இருந்து அமெரிக்காவை அவர் விலக்கிக் கொண்டார். அதற்கு அடுத்த ஆண்டில் இருந்து, அந்த ஒப்பந்த விதிமுறைகளுக்கு ஏற்றபடி இரான் நடக்கவில்லை. இரானைத் தவிர்த்து வேறு யாரும் அந்த நாடு அணு குண்டை வைத்திருப்பதை விரும்பவில்லை. 9.5 மில்லியன் மக்கள் தொகைக் கொண்ட, நகர்ப்புறங்களில் மக்கள் அடர்த்தியாக இருக்கும், ஒரு சிறிய நாடான இஸ்ரேல், அணு ஆயுதம் கொண்ட இரானை ஒரு அச்சுறுத்தலாக கருதுகிறது. இரானின் மூத்த தலைவர்கள் பலரும் இஸ்ரேல் அரசை அழிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த பல அறிக்கைகளை இஸ்ரேல் சுட்டிக்காட்டுகிறது. சௌதி அரேபியா, ஜோர்டான், மற்றும் பல வளைகுடா அரபு நாடுகள் இரானின் புரட்சிகர இஸ்லாமிய குடியரசு குறித்து அதிக அக்கறை செலுத்தவில்லை. ஆனால் இரான் என்ற ஒரு அண்டை நாட்டுடன் அவர்கள் வாழ பழகிக் கொண்டனர். தற்போது அவர்களின் எல்லை வரை பிரச்னை பரவி வருவது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கு நேரம் மிகவும் முக்கியமானது. இரானின் கூட்டாளிகளை லெபனான், சிரியா மற்றும் காஸாவில் தோற்கடித்துவிட்டதால் இரான் ஏற்கனவே பலவீனம் அடைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் போது இரானின் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் பலவீனம் அடைந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தாக்குதலின் ஒரு பகுதியாக மொசாட் இரானுக்குள் இருந்தே டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது இஸ்ரேலின் திட்டம் என்ன? ஆபரேஷன் ரைஸிங் லையன் மூலமாக, பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான ஆராய்ச்சிகளில் பின்னடைவை ஏற்படுத்த இஸ்ரேல் விரும்புகிறது. முழுமையாக இதனை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறது. இது இரானின் தலைமையை மேலும் வலுவிழக்கச் செய்து, ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் என்று இஸ்ரேல் ராணுவம், அரசியல் மற்றும் உளவுத்துறை வட்டாரங்கள் நம்புகின்றன. இதன் மூலமாக இந்த பிராந்தியத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தாத தீங்கற்ற ஆட்சி அமையும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை, ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள இரானுக்கு இரண்டாவது வாய்ப்பு இருந்ததாகக் கூறினார். இந்த ஞாயிறன்று மஸ்கட்டில் அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே அணுசக்தி திட்டம் தொடர்பாக ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இந்த பேச்சுவார்த்தை மூலமாக எந்த விதமான பலனுள்ள முடிவுகளும் கிடைக்கும் என்று இஸ்ரேல் நம்பவில்லை. யுக்ரேன் விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற பிம்பத்தை உருவாக்கியதாக ரஷ்யா மீது குற்றச்சாட்டு உண்டு. தற்போது இரானும் அதையே செய்வதாக இஸ்ரேல் நம்புகிறது. இரானின் சந்தேகத்திற்குரிய அணு ஆயுத திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர இருக்கும் சிறந்த மற்றும் இறுதியான வாய்ப்பு இது என்று இஸ்ரேல் நம்புகிறது. "இரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை உறுதி செய்ய டிரம்பிற்கு இருக்கும் வாய்ப்புகளை முறியடிக்கும் வகையில், இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் இரான் மீது தாக்குதலை நடத்தியுள்ளது," என்று எலி கெரன்மாயே தெரிவித்தார். அவர் வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஐரோப்பிய கவுன்சிலில் (ECFR) மூத்த கொள்கை ஆராய்ச்சியாளராக உள்ளார். "இஸ்ரேல் தாக்குல் நடத்த தேர்ந்தெடுத்த நேரமும், அதன் தன்மையும் பேச்சுவார்த்தைகளை முற்றிலுமாகத் தடம் புரளச் செய்யும் நோக்கம் கொண்டவை என்பது தெளிவாகிறது." இந்த தாக்குதலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இரானிடம் அமெரிக்கா கூறி வருகிறது. ஆனால் பதில் தாக்குதலுக்காக இரான், அந்த பிராந்தியத்தில் உள்ள ஏதேனும் அமெரிக்க தளத்தின் மீது நேரடியாகவோ அல்லது அதன் கூட்டாளிகள் மூலமாகவோ தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் நடைபெறும் மற்றொரு மோதலில் அமெரிக்காவை இழுக்கும் அபாயம் ஏற்படும். இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி, இந்த தாக்குதலுக்கு கடுமையான எதிர்வினை இருக்கும் என்று கூறியுள்ளார். உண்மையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் இரான் மிகவும் வலுவிழந்துள்ளது. பதில் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன. அணு ஆயுதப் போட்டி இங்கே மேலும் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது. இஸ்ரேலின் இந்த செயல்பாடு, அணு ஆயுத போட்டியைத் தூண்டலாம். இரானின் பாதுகாப்புக் கட்டமைப்பில் இருக்கும் தீவிர எண்ணங்களைக் கொண்ட தலைவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வாதத்தை முன்வைக்கின்றனர். அதாவது எதிர்வரும் காலங்களில் இஸ்ரேல் அல்லது அமெரிக்கா நடத்தும் தாக்குதல்களை தடுக்க அணுகுண்டு வைத்திருப்பதே சரியானது என்று அவர்கள் வாதிடுகின்றனர். லிபியா மற்றும் வட கொரியத் தலைவர்களுக்கு நேரிட்ட மாறுபட்ட நிகழ்வுகளை மதிப்பிட்டு இம்முடிவை அவர்கள் எடுத்திருப்பார்கள். லிபியாவின் கர்னல் கடாஃபி 2003-ஆம் ஆண்டு பாரிய அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை தயாரிப்பதற்கான திட்டத்தை கைவிட்டார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு கால்வாய் ஒன்றில் இறந்த நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகளின் வான்வழி தாக்குதலின் உதவியோடு நடைபெற்ற அரபு எழுச்சியின் முடிவில் கடாஃபி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். இதற்கு முரணாக, வலிமையான அணு ஆயுதங்களை உருவாக்கவும், கண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை உருவாக்கவும் வசதியாக வட கொரியா அனைத்து சர்வதேச தடைகளையும் மீறியது. எந்த ஒரு சாத்தியமான தாக்குதலையும் அந்த நாட்டின் மீது நடத்துவதற்கு முன்பு ஒரு முறைக்கு இரு முறை யோசிக்க வைக்கும் சூழலை வடகொரியா உருவாக்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமையன்று, ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள இரானுக்கு இரண்டாவது வாய்ப்பு இருந்ததாகக் கூறுகிறார் இஸ்ரேலின் தாக்குதலால் எத்தகைய இழப்பை சந்தித்தாலும், இரான் அரசு வீழாமல் தப்பித்தால் அணு ஆயுதங்களை உருவாக்குவதை தீவிரப்படுத்தும். அணு குண்டு சோதனை நடத்தவும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கு முன்பும் பல தடைகளை இரான் மீறி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது நிகழும் பட்சத்தில் மத்திய கிழக்கில் அணு ஆயுதங்களுக்கான போட்டியை இது உருவாக்கும். சௌதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து போன்ற நாடுகளும் தங்களுக்கும் அணு ஆயுதம் தேவை என்ற முடிவை எடுக்கக் கூடும். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd901z2ynv1o
3 months ago
Published By: VISHNU
13 JUN, 2025 | 12:04 AM

(நெவில் அன்தனி)
தியகம, விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (12) ஆரம்பமான கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் முதலாம் நாளான வியாழக்கிழமை (12) 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய யாழ். வீராங்கனைகள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து வரலாற்றுச் சாதனை படைத்தனர்.

அத்துடன் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் வரலாற்றி; இரத்தினபுரி, கல்லேல்ல கலைமகள் தமிழ் வித்தியாலயத்திற்கு முதல் தடவையாக பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது.
அதேவேளை, முதல் நாளன்று 3 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டது.
கோலூன்றிப் பாய்தலில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி வீராங்கனை ஜெயரூபன் ரூபிக்கா 2.60 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தையும் இதே பாடசாலையைச் சேர்ந்த குகராஜ் வைஷ்ணவி 2.50 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் கோலூன்றிப் பாய்தலில் இப் பாடசாலை வென்றெடுத்த முதலாவது பதக்கங்கள் இவை ஆகும்.
இந்த நிகழ்ச்சியில் அளவெட்டி அருணோதயா கல்லூரி வீராங்கனை பி. சண்முகப்பிரியா 2.40 மீற்றர் உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரத்தினபுரி, கல்லேல்ல கலைமகள் தமிழ் வித்தியாலய வீராங்கனை சசிகுமார் நிரோஷா வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
5000 மீற்றர் ஓட்டப் போட்டியை அவர் 19 நிமிடங்கள், 54.18 செக்கன்களில் ஓடி முடித்து 3ஆம் இடத்தைப் பெற்றார்.
இந்த பாடசாலை சார்பாக கனஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் பதக்கம் வென்ற முதலாவது மாணவி என்ற பெருமையை நிரோஷா பெற்று வரலாறு படைத்தார்.
பூவரசங்குளம் மகா வித்தியாலய வீரருக்கு தங்கம்
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா, பூவரசங்குளம் மகா வித்தியாலய வீரர் பாங்கோ விகிர்தன் (8:37.20) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இதே போட்டியில் திகனை, ரஜவெல்லை இந்து தேசிய பாடசாலை வீரர் பி. ஆர். விதூஷன் (8:43.70) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி வீரர் எஸ். டிரேஷ்மன் (32.41 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி வீரர் வை. துலஸ்திகன் (13.78 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரி வீரர் ஏ. கௌசிகள் 4.00 மீற்றர் உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கம் பெற்றார்.
ஐந்து புதிய சாதனைகள்
போட்டியின் முதலாம் நாளன்று 5 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டது.
18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் ஹொறணை, தக்சிலா மத்திய கல்லூரி வீராங்கனை ஷலோமி ஜயகொடி, சம்மட்டியை 40.81 மீற்றர் தூரத்திற்கு எறிந்து புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் கொழும்பு விசாகா வித்தியாலய வீராங்கனை தெவ்மினி கருணாதிலக்க (12.68 மீற்றர்) புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் இரத்தினபுரி ஜனாதிபதி கல்லூரி வீராங்கனை மிஹின்சா தெவ்மினி அபேரத்ன (1.74 மீற்றர்) புதிய சாதனை நிலைநாட்டினார்.
16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை வீராங்கனை டிலினி ராஜபக்ஸ (5.96 மீற்றர்) புதிய சாதனை நிலைநாட்டினார்.
16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் ஹொரணை தக்சிலா மத்திய கல்லூரி வீரர் எஸ். எம். கருணாரட்ன (40.68 மீற்றர்) புதிய சாதனை நிலைநாட்டினார்.
https://www.virakesari.lk/article/217305
3 months ago
ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டது – அதில் என்னென்ன தகவல்கள் இருக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES 12 ஜூன் 2025 புதுப்பிக்கப்பட்டது 13 ஜூன் 2025 (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 242 பேரில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. உயிர் பிழைத்த அந்த நபர் பிரிட்டிஷ் குடிமகன் என்றும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நேசத்திற்குரியவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே எங்களது இப்போதைய இலக்கு என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. விபத்து குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட அந்த ஏர் இந்தியா விமானம் அருகில் இருந்த மருத்துவர்கள் விடுதியில் மோதியதாக ஆமதாபாத்தில் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரி ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். "ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா AI 171 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களுக்குப் பிறகு மதியம் 1:38 மணிக்கு குடியிருப்புப் பகுதியில் (மேகானி நகர்) மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் 10 விமானப் பணியாளர்கள், 2 விமானிகள் உள்பட 242 பேர் இருந்தனர்" என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது என்று இந்திய விமான போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை தனது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் பதிவிட்ட ராம் மோகன் நாயுடு "விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) அகமதாபாத்தில் விபத்து நடந்த இடத்திலிருந்து 28 மணி நேரத்திற்குள் விமானத் தரவுப் பதிவை (கருப்புப் பெட்டி) மீட்டெடுத்துள்ளது. இது விசாரணையில் ஒரு முக்கியமான அங்கமாக இருக்கும். விபத்து குறித்த விசாரணை நடத்துவதில் இது பெரிதும் உதவும்" என்று தெரிவித்துள்ளார் கடந்த சில மணிநேரத்தில், ராய்ட்டர்ஸ், ஏஎஃப்பி உள்ளிட்ட செய்தி முகமைகள் ஒரு கருப்புப் பெட்டி மீட்கப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு முகமைகளும் காவல்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி வருகின்றன. விமானங்கள் வழக்கமாக இரண்டு கருப்புப் பெட்டிகளை - சிறிய ஆனால் கடினமான மின்னணுத் தரவு ரெக்கார்டர்களை - கொண்டு செல்கின்றன. ஒன்று விமானி அறையிலிருந்து வரும் ஒலியைப் பதிவு செய்கிறது. இதனால் விமானிகள் என்ன சொல்கிறார்கள் என்பதையும், ஏதேனும் அசாதாரண சத்தங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றையும் புலனாய்வாளர்களால் கேட்க முடியும். மற்றொன்று உயரம் மற்றும் வேகம் போன்ற விமானத் தரவுகளைப் பதிவு செய்கிறது. போயிங் 787 பயன்பாட்டை ஏர் இந்தியா நிறுத்தப் போகிறதா? சில இந்திய ஊடகங்களில், அரசாங்கம் அனைத்து போயிங் 787 விமானங்களின் பயன்பாட்டையும் நிறுத்தக்கூடும் என்ற செய்திகள் வந்தன. அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், அது உண்மையல்ல என்று கூறியுள்ளது. அப்போது, "இந்தச் செய்தி உண்மையல்ல. குறைந்தபட்சம் இப்போதைக்கு அதைப் பற்றி ஆலோசிக்கவில்லை," என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. உயிர் பிழைத்த நபர் கூறியது என்ன? விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் அந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் 11A இருக்கையில் பயணம் செய்தவர் என்று ஆமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் கூறியதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும், உயிர் பிழைத்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் ஜி.எஸ். மாலிக் கூறியுள்ளார். விமான நிறுவன அதிகாரிகள் முன்னர் பகிர்ந்த விமானம் குறித்த அறிக்கைப்படி, 11A இருக்கையில் இருந்த பயணி விஸ்வாஷ் குமார் ரமேஷ் என்றும், அவர் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்றும் தெரிகிறது. "விமானம் புறப்பட்ட 30 விநாடிகளுக்குப் பிறகு, ஒரு பெரிய சத்தம் கேட்டது, பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது. எல்லாம் மிக விரைவாக நடந்தது" என விஸ்வாஷ் கூறியதாக சில இந்திய செய்தி முகமைகள் தெரிவிக்கின்றன. விபத்தில் பலியான 15 வயது சிறுவன் – குடும்பத்தினர் பிபிசியிடம் கூறியது என்ன? ஆமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் கொண்டு வந்த மருத்துவமனையில், மிகவும் துயரமான சில கதைகளைக் கேட்க முடிகிறது. விபத்துக்குள்ளான விமானம் விழுந்த கட்டடத்தில் வசித்து வந்த ஆகாஷ் என்ற 15 வயது சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவமனையில் கேள்விப்பட்டோம். அந்தச் சிறுவன் கட்டடத்தில் உள்ள உணவகத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்தார் அந்த உணவகத்தில் ஆகாஷின் அம்மா சீதாபென்னும் பணிபுரிந்து வந்தார். விபத்து நிகழ்ந்ததும், தனது மகனைக் காப்பாற்ற அவர் உள்ளே சென்றபோது அவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன. சீதாபென் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆகாஷின் அண்ணா கல்பேஷை சந்தித்தோம், அவர் மிகவும் சோகமாக இருந்தார். தனது தம்பி மற்றும் தாய் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து அவர் அழுது கொண்டிருந்தார். விபத்து நடந்த இடத்திற்கு அருகில்தான் ஆகாஷின் தந்தையும் இருந்திருக்கிறார். திடீரென ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், உடனே அவர் அங்கு சென்றதாகவும் கூறினார். அருகில் சென்றபோது, எல்லா இடங்களில் இருந்தும் புகை வெளியேறிக் கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார். அவர் அங்கு சென்றபோது, அவரது மனைவி சீதாபென் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தார், தனது மகன் உயிர் பிழைக்கவில்லை என்ற தகவல் அவருக்குக் கிடைத்தது. பணி ஓய்வுக்குச் சில மாதங்களே இருந்த நிலையில் பலியான மூத்த விமானி படக்குறிப்பு, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அனுபவமுள்ள ஏர் இந்தியா விமானி கேப்டன் சுமீத் சபர்வால் இந்த விபத்தில் இறந்தவர்களில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அனுபவமுள்ள ஏர் இந்தியா விமானியான கேப்டன் சுமீத் சபர்வாலும் ஒருவர். அவர் 8,200 மணிநேரத்திற்கும் மேல் விமானப் பயண அனுபவம் கொண்டவர். அத்துடன் விமானத்தில் மூத்த குழு உறுப்பினராக கேப்டன் சபர்வால் இருந்தார். அவர் ஒரு லைன் பயிற்சி கேப்டன் ஆவார். இது விமானக் குழுவினருக்கு வழிகாட்டும் பொறுப்பு. இந்தப் பணி மிகவும் அனுபவம் வாய்ந்த விமானிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது. அறுபது வயதான விமானி ஓய்வு பெறுவதற்குச் சில மாதங்களே இருந்த நிலையில், இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பின் முன்னாள் அதிகாரியான தனது 82 வயது தந்தையுடன் அதிக நேரம் செலவிடத் திட்டமிட்டிருந்தார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. "அவர் மிகவும் அமைதியான நபர். அவர் அடிக்கடி சீருடையில் வந்து செல்வதைப் பார்த்துள்ளோம். ஆனால், மிகவும் அமைதியானவராக இருந்தார்" என்று மும்பையில் உள்ள சபர்வாலின் அண்டை வீட்டுக்காரர் கூறியதாக அந்த நாளிதழ் செய்தி கூறுகிறது. துணை விமானி, முதல் அதிகாரி கிளைவ் குந்தர், சுமார் 1,000 மணிநேரம் விமானப் பயண அனுபவத்தைக் கொண்டிருந்தார். மேலும், விபத்துக்குள்ளான ட்ரீம்லைனரை இயக்க சான்றிதழ் பெற்றவராகவும் இருந்தார். விமான விபத்தில் இறந்த 4 வயது பெண் குழந்தை பட மூலாதாரம்,FAMILY HANDOUT இங்கிலாந்தின் குளூசெஸ்டர்ஷையர் பகுதியை சேர்ந்த அகீல் நானாபாவா மற்றும் ஹன்னா வோராஜி, தங்களது நான்கு வயது மகள் சாராவுடன் விமான விபத்தில் இறந்தனர். இந்த குடும்பத்தின் சார்பாகப் பேசிய இமாம் அப்துல்லா, தாங்கள் இன்னும் அதிர்ச்சியில் இருப்பதாகவும், வியாழக்கிழமை அகமதாபாத்தில் நடந்தவற்றை புரிந்துக்கொள்ள முயல்வதாகவும் கூறினார். "இந்த இளம் குடும்பம் நம்பமுடியாத அளவிற்கு நெருக்கமாக இருந்தது - அர்ப்பணிப்புள்ள பெற்றோர் மற்றும் அவர்களின் அழகான இளம் மகள்," என்று அவர் கூறுகிறார். "அவர்கள் இரக்கமுள்ள, சுறுசுறுப்பான சமூக உறுப்பினர்கள், அவர்கள் எங்கள் உள்ளூர் இஸ்லாமிய பள்ளியிலும் பல்வேறு உள்ளூர் திட்டங்களிலும் தொடர்ந்து தன்னார்வத் தொண்டு செய்தனர். அவர்கள் பரவலாக நேசிக்கப்பட்டனர் மற்றும் ஆழமாக மதிக்கப்பட்டனர். அவரது அமைதியான தாராள மனப்பான்மை, அவரது அரவணைப்பு மற்றும் கருணை மற்றும் அவர்களின் மகளின் பிரகாசமான, மகிழ்ச்சியான மனப்பான்மை அவர்களை அறிந்த அனைவருக்கும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அவள் பள்ளியில் சூரிய ஒளியின் கதிர், அவர்கள் எங்கள் வாழ்க்கையில் பலத்தின் தூணாக இருந்தனர்" என்று அவர் கூறுகிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் பதிவில், "ஆமதாபாத்தில் நடந்த சோகம் அதிர்ச்சி மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் இதயத்தை உடைக்கிறது. இந்தச் சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் பாதிக்கப்பட்ட அனைவருடனும் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பாடுபடும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தேன்" என்று கூறியுள்ளார். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த விமானம் பிரிட்டன் நேரப்படி மாலை 6:25 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10:55) தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்ததாக கேட்விக் விமான நிலையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கேட்விக் விமான நிலைய நிர்வாகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்படும்போது விபத்துக்குள்ளான AI171 விமானம், மாலை 6:25 மணிக்கு லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியிருந்தது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது. ஷார்ட் வீடியோ Play video, "விமானத்தில் 242 பேர் இருந்ததாக ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறுகிறது.", கால அளவு 0,46 00:46 காணொளிக் குறிப்பு,விமானத்தில் 242 பேர் இருந்ததாக ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன? ஏர் இந்தியா விமானம், விமான நிலையத்தின் அருகே இருந்த மருத்துவர்கள் விடுதியின் மீது மோதியதைத் தொடர்ந்து, சுமார் 50 முதல் 60 மருத்துவ மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு (FAIMA) தெரிவித்துள்ளது. ஐந்து மாணவர்களைக் காணவில்லை என்றும், குறைந்தது இரண்டு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் FAIMA சங்கம் கூறுகிறது. சில மருத்துவர்களின் உறவினர்களையும் காணவில்லை. அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பின் கூற்றுப்படி, விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் உயிரிழந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஏ.எஃப்.பி மற்றும் ஏபி செய்தி முகமைகளின் தகவல்படி, விமான விபத்தில் யாரும் உயிர் பிழைத்ததாகத் தெரியவில்லை என்று ஆமதாபாத் காவல்துறைத் தலைவர் கூறியுள்ளார். பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் கூறியது என்ன? இந்த விமான விபத்திற்கு பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் இரங்கல் தெரிவித்துள்ளார். "பிரிட்டன் நாட்டினர் பலரை ஏற்றிக் கொண்டு லண்டனுக்கு சென்ற விமானம், இந்திய நகரமான ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளானது தொடர்பான துயரக் காட்சிகள் பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன. அங்குள்ள நிலைமை குறித்து நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன். இந்தத் துயரமான நேரத்தில், பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார். விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பிரிட்டன் நாட்டினர் 53 பேர் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளன. விமான நிலைய பகுதிக்கு வெளியே புகை காணப்பட்டதாகவும், அதன் பிறகு மொத்த குழுவினரும் விசாரணைக்காக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் ஆமதாபாத் விமான நிலையத்தின் 1வது முனையத்தின் மேலாளர் பிபிசி ஹிந்தியிடம் கூறினார். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்றும், மேலும் தகவல்களை வழங்க 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்ணையும் அமைத்துள்ளதாகவும் ஏர் இந்தியா கூறியுள்ளது. படக்குறிப்பு,ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளான இடத்தைக் குறிக்கும் வரைபடம் "விமானம் விபத்துக்குள்ளான பிறகு தீப்பிடித்தது. தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன," என்று தீயணைப்பு அதிகாரி ஜெயேஷ் காடியா தெரிவித்தார். விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் அமைப்பான 'ஃபிளைட் ரேடார் 24', "ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. அந்த விமானம் புறப்பட்ட சில விநாடிகளுக்குப் பிறகு எங்களுக்கு கடைசி சிக்னல் கிடைத்தது," என்று சமூக ஊடக தளமான எக்ஸில் பதிவிட்டுள்ளது. தரையில் இருந்து 425 அடி உயரத்தில், புறப்பட்ட ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் விமானம் சிக்னலை இழந்ததாக ஃப்ளைட் ரேடார் 24 தெரிவித்துள்ளது. ஃபிளைட் ரேடார் 24-இன் கூற்றுப்படி, விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ஆகும். இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தப்பிய நபர் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ரமிலா தனது மகன் மருத்துவர்கள் விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து வெளியே குதித்து தப்பியதாகக் கூறுகிறார். அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு வெளியே பதட்டமான உறவினர்களிடமிருந்து இப்போது எங்களுக்குத் தகவல் வரத் தொடங்கியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் இருக்கும் பூனம் படேல், தனது மைத்துனி லண்டன் செல்லும் விமானத்தில் இருந்ததாக ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகிறார். "ஒரு மணி நேரத்திற்குள், விமானம் விபத்துக்குள்ளானதாக எனக்கு செய்தி கிடைத்தது. அதனால் நான் இங்கு வந்தேன்," என்று அவர் கூறுகிறார். விமானம் விபத்துக்குள்ளானபோது, தனது மகன் மதிய உணவு இடைவேளைக்காக மருத்துவர்களின் விடுதிக்குச் சென்றிருந்ததாக ரமிலா கூறுகிறார். அவர் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து காயமடைந்ததாகவும், ஆனால் அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார். குஜராத் முதலமைச்சர் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஏஎன்ஐ செய்தி முகமையின் கூற்றுப்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர், மாநில உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை ஆணையரிடம் பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என அவர் உறுதியளித்துள்ளார். ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்து சம்பவத்திற்கு குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ள அவர், "ஆமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவமான ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அறிந்து நான் வருத்தமடைந்தேன். உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காயமடைந்த பயணிகளுக்கு உடனடி சிகிச்சைக்கான ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்," என்று கூறியுள்ளார். மேலும், "காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காகக் கொண்டு செல்ல பிரத்யேக அவசரக்கால வழித்தடங்களை ஏற்பாடு செய்வதற்கும், முன்னுரிமையின் அடிப்படையில் மருத்துவமனையில் அனைத்து சிகிச்சை ஏற்பாடுகளையும் உறுதி செய்வதற்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன" என்றும் அவர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,BBC/TEJAS VAIDYA ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். "விமான நிலையம் தற்போது செயல்படவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன" என்று அவர் கூறியுள்ளார். விமானம் விபத்துக்குள்ளானபோது வானிலை தெளிவாக இருந்ததாக விமானப் பாதுகாப்பு நிபுணர் மார்கோ சான் கூறுகிறார். METAR என அழைக்கப்படும் விமான வானிலை முன்னறிவிப்பின்படி, அந்தப் பகுதியில் மேற்பரப்பு காற்று குறைவாகவும், தெரிவுநிலை (Visiblity) ஆறு கிலோமீட்டர் தூரம் என்ற அளவிலும் இருந்தது. "அப்போது குறிப்பிடத்தக்க அளவில் மேகங்கள் இருந்ததாகவோ அல்லது மோசமான வானிலை நிகழ்வுகள் எதுவும் நிலவியதாகவோ எதுவும் பதிவாகவில்லை. அதீத காற்று, புயல் அல்லது இத்தகைய விபத்திற்குக் காரணமாக இருக்கக்கூடிய பிற பாதகமான நிலைமைகள் குறித்த அறிகுறிகள் ஏதும் இல்லை" என்று சான் கூறுகிறார். சிக்கலில் போயிங் நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த விபத்தில்தான் போயிங் 787 விமானம் முதல் முறையாக விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த மாடல் விமானம் 14 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஆறு வாரங்களுக்கு முன்புதான் விமானத் தயாரிப்பு நிறுவனம், டிரீம்லைனர் என்று அழைக்கப்படும் இந்த மாடல் ஒரு பில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்று ஒரு மைல்கல்லை எட்டியதாகத் தெரிவித்தது. அந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், 1,175க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்ட உலகளாவிய 787 விமானக் குழு, 30 மில்லியனுக்கும் அதிகமான விமான நேரங்களை உள்ளடக்கிய கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் விமானங்களை இயக்கியுள்ளதாக நிறுவனம் கூறியது. இந்த விபத்து, அதன் 737 திட்டங்களுடன், ஆபத்தான விபத்துகள் உள்படப் பல்வேறு சிக்கல்களைச் சமாளிக்கப் போராடி வரும் போயிங் நிறுவனத்திற்கு ஒரு பெரிய அடியாக விழுந்துள்ளது. தனது பணியில் ஓர் ஆண்டு நிறைவைக் குறிக்கவுள்ள தலைமை நிர்வாக அதிகாரி கெல்லி ஆர்ட்பெக்கிற்கு இது மற்றொரு சோதனையாக இருக்கும். அமெரிக்க விமானத் தயாரிப்பாளரான இந்த நிறுவனத்தின் எதிர்காலம் குறித்துக் கேள்விகளை எழுப்பும் பல்வேறு பிரச்னைகளைத் தீர்த்து வைக்க அவர் இந்தப் பணியில் அமர்த்தப்பட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு – டாடா குழுமம் Play video, "ஏர் இந்தியா விமான விபத்து: புறப்பட்ட ஒரே நிமிடத்தில் விழுந்து நொறுங்கியது எப்படி?", கால அளவு 4,50 04:50 காணொளிக் குறிப்பு, ஏர் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரான டாடா குழுமம், இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ஒரு கோடி ரூபாய் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளைக் கவனித்துக் கொள்வதோடு, பாதிக்கப்பட்ட மருத்துவ விடுதியை மீண்டும் கட்டுவதற்கும் ஆதரவளிப்பதாக டாடா குழுமம் கூறியுள்ளது. "இந்த நேரத்தில் நாங்கள் உணரும் துயரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது" என்று டாடா குழுமம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன், இந்த விபத்திற்குத் தனது "ஆழ்ந்த வருத்தத்தை" வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், "இந்த நிகழ்வு தொடர்பான எங்கள் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்திக் கொள்கிறேன். ஏர் இந்தியாவில் உள்ள அனைவருக்குமே இதுவொரு கடினமான நாள். இப்போது எங்கள் முயற்சிகள் அனைத்தும், எங்கள் பயணிகள், பணியாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களின் தேவைகள் மீது கவனம் செலுத்துவதில் மட்டுமே உள்ளது," என்றும் அவர் கூறியுள்ளார். ஏர் இந்தியா அவசர உதவி எண் ஏர் இந்தியா நிறுவனம், பயணிகள் தொடர்பான பிரத்யேக அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது. மேலும் தகவல் பெற விரும்பும் இந்திய குடும்பங்கள் 1800 5691 444 என்ற எண்ணை அழைக்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn4qe1dz38no