வண்ணத் திரை

ஸ்வர்ணலதாவின் 10 சிறந்த பாடல்கள் - பட்டியலிட்ட பி.எச்.அப்துல் ஹமீத்

3 days 20 hours ago

ரங்கீலா படத்தில் வெளியான பாடல்களில் ஹய் ராமா பாடல் மிகவும் வரவேற்பை பெற்றது.

ENS ரங்கீலா படத்தில் வெளியான பாடல்களில் ஹய் ராமா பாடல் மிகவும் வரவேற்பை பெற்றது.

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • 11 செப்டெம்பர் 2025

தமிழ் சினிமா மாத்திரமன்றி தெலுங்கு, கன்னடம், உருது, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி வரவேற்பை பெற்றவர் ஸ்வர்ணலதா.

கேரளாவின் பாலக்காடு பகுதியில் 1973ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி ஸ்வர்ணலதா பிறந்தார்.

ஸ்வர்ணலதாவின் தந்தை பிரபல இசை கலைஞர் என்ற ரீதியில், ஸ்வர்ணலதாவிற்கும் இசை மீது அபூர்வ ஆர்வம் சிறு வயதிலிருந்தே ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், எம்.எஸ்.விஸ்வநாதனின் ஊடாக திரை இசைத்துறைக்குள் ஸ்வர்ணலதாகால் தடம் பதித்தார்.

பிரபல பின்னணி பாடகி ஸ்வர்ணலதாவின் நினைவு தினத்தை (செப்டம்பர் 12) ஒட்டி, தனக்கு பிடித்த 10 ஸ்வர்ணலதா பாடல்களை இலங்கையை சேர்ந்த மூத்த மற்றும் புகழ்வாய்ந்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் பிபிசி தமிழுக்கு பட்டியலிட்டார். இதில் அவர் எழுதிய பாடலும் இடம்பெற்றுள்ளது.

1. போறாளே பொன்னுத் தாயி

ஏ.ஆர்.ரகுமானின் இசையில், வைரமுத்துவின் வரிகளில் உருவான பாடல்.

Rajshri Tamil ஏ.ஆர்.ரகுமானின் இசையில், வைரமுத்துவின் வரிகளில் உருவான பாடல்.

1994-ஆம் ஆண்டு வெளியான கருத்தம்மா படத்தில் இந்த பாடல் வெளியாகியிருந்தது.

ஏ.ஆர்.ரகுமானின் இசையில், வைரமுத்துவின் வரிகளில் உருவான இந்த பாடலை, ஸ்வர்ணலதா பாடியிருந்தார்.

இந்த பாடலை பாடியமைக்காக ஸ்வர்ணலதாவிற்கு 1994-ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் சிறந்த பின்னணி பாடகிக்கான தமிழக அரசு விருதும், இந்தியாவின் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதும் கிடைக்கப் பெற்றது.

இந்த பாடல் அன்று முதல் இன்று வரை பலரது பாடல்கள் விருப்ப பட்டியலில் உள்ளமை விசேட அம்சமாகும்.

2. மாலையில் யாரோ

பானுப்பிரியாவின் காட்சிகளுக்கு ஸ்வர்ணலதாவின் குரல் பொருந்திப் போயிருந்தது.

Ayngaran பானுப்பிரியாவின் காட்சிகளுக்கு ஸ்வர்ணலதாவின் குரல் பொருந்திப் போயிருந்தது.

1990-ஆம் ஆண்டு வெளியான சத்ரியன் திரைப்படத்தில் ''மாலையில் யாரோ'' பாடலும் பலரது விருப்பத்திற்குரிய பாடலாக அமைந்துள்ளது.

வாலியின் வரிகளில், இளையராஜாவின் இசையில் உருவான இந்த பாடலை, ஸ்வர்ணலதா பாடியிருந்தார்.

திரையில் பானுப்பிரியாவின் காட்சிகளில் இந்த பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலுக்கு, காட்சிகளை விடவும், ஸ்வர்ணலதாவின் மெல்லிய குரலே உயிரை வழங்கியிருந்தது.

3. ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்

2010ம் ஆண்டு செப். 12ம் தேதி ஸ்வர்ணலதா காலமானார்.

FB/KSChithra 2010-ஆம் ஆண்டு செப். 12-ஆம் தேதி ஸ்வர்ணலதா காலமானார்(வலம்).

ஊரெல்லாம் உன் பாட்டு திரைப்படத்தில் வெளியான பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.

கே.ஜே.யேசுதாஸின் குரலில் தனியாக இந்த பாடல் வெளியாகியிருந்ததுடன், ஸ்வர்ணலதாவின் குரலில் வேறொரு பாடல் தனியாக உருவாக்கப்பட்டிருந்தது.

வாலியின் வரிகளில் எழுதப்பட்ட இந்த பாடலுக்கு, இளையராஜா இசை அமைத்திருந்தார்.

ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் பாடல், அந்த காலப் பகுதியில் ரசிகர்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்ற பாடலாக அமைந்திருந்தது.

4. என்னுள்ளே என்னுள்ளே

என்னுள்ளே என்னுள்ளே பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

Sun Music என்னுள்ளே என்னுள்ளே பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

ரஜினிகாந்த், பிரியா ராமன் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் வள்ளி.

1993-ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது.

என்னுள்ளே என்னுள்ளே பாடலுக்கான வரிகள் வாலி எழுதியிருந்ததுடன், இளையராஜா இசையமைத்திருந்தார்.

ஸ்வர்ணலதாவின் குரலில் ஒலித்த இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் இன்று வரை வரவேற்பு காணப்படுகின்றது.

5. ஹய் ராமா

1995ம் ஆண்டு வெளிவந்த படமே ரங்கீலா.

இந்த படத்திற்கான இசையை ஏ.ஆர்.ரகுமான் வழங்கியிருந்தார்.

ரங்கீலா திரைப்படத்தில் வெளியான பாடல்களில் ஹய் ராமா பாடல் மிகவும் வரவேற்பை பெற்றிருந்தது.

ஹரிஹரன் மற்றும் ஸ்வர்ணலதா ஆகியோர் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.

ஸ்வர்ணலதாவின் பாடல்கள் வரிசையில் இந்த பாடலுக்கும் இன்று வரை முக்கிய இடம் இருக்கின்றது என்பதே உண்மை.

6. பூங்காற்றிலே

'உயிரே' படத்தில் ஏ.ஆ.ரஹ்மான் இசையில் உருவான பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடல்.

Track Musics India 'உயிரே' படத்தில் ஏ.ஆ.ரஹ்மான் இசையில் உருவான பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடல்.

உயிரே திரைப்படம், சினிமா ரசிகர்கள் மத்தியில் இன்றும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக இருக்கின்றது.

இந்த திரைப்படத்தில் வெளியான பாடல்கள் வரிசையில் பூங்காற்றிலே பாடல் மிக மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது.

உன்னிமேனன் மற்றும் ஸ்வர்ணலதா ஆகியோரின் குரல்களில் பதிவு செய்யப்பட்ட இந்த பாடலுக்கான வரிகளை வைரமுத்து எழுதியிருந்தார்.

பாடலுக்கான இசை ஏ.ஆர்.ரகுமான் வழங்கியிருந்தார்.

மணிரத்னத்தின் இயக்கத்தின் 1998-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், இன்றும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது.

7. காதல் எனும் தேர்வெழுதி

காதலன் தினம் படத்தின் பாடல்களுக்குமான வரிகளை வாலி எழுதியிருந்தார்.

API Tamil Songs காதலன் தினம் படத்தின் பாடல்களுக்குமான வரிகளை வாலி எழுதியிருந்தார்.

காதலர் தினம் திரைப்படம் 1999-ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.

அறிமுக கதாநாயகன் குணால் மற்றும் சோனாலி பிந்த்ரே ஆகியோரின் நடிப்பில், கதிரின் இயக்கத்தில் இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது.

இந்த திரைப்படத்தில் 7 பாடல்கள் இடம்பிடித்திருந்த நிலையில், அனைத்து பாடல்களுக்கும் சிறந்த வரவேற்பு கிடைத்திருந்தது.

அனைத்து பாடல்களுக்குமான வரிகளை வாலி எழுதியிருந்ததுடன், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் வெளியான ''காதல் எனும் தேர்வெழுதி'' பாடல் இன்றும் இளைஞர் யுவதிகளின் உதடுகளில் முனுமுனுக்கும் பாடலாக அமைந்துள்ளது.

இந்த பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலுக்கு ஈடாக ஸ்வர்ணலதாவின் குரலும் அமைந்திருந்த அதேவேளை, இந்த பாடலின் காட்சிகளுக்கு அந்த குரல்கள் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தது என்பது மிகையாகாது.

8. திருமண மலர்கள்

27b4e4d0-8f1f-11f0-9cf6-cbf3e73ce2b9.png

Star Hits ஜோதிகாவின் காட்சிகளுக்கு ஸ்வர்ணலதா தனது மெல்லிய குரலில் உயிர் கொடுத்திருந்தார்.

அஜித் மற்றும் ஜோதிகா ஆகியோரின் நடிப்பில் 2001-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே பூவெல்லாம் உன் வாசம்.

குடும்ப நண்பர்கள் எப்படி காதல்களாக மாறி இணைகின்றார்கள் என்பதே இந்த திரைப்படத்தின் கதையாக அமைந்திருந்தது.

இந்த திரைப்படத்தில் 6 பாடல்கள் இடம்பிடித்திருந்ததுடன், அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருந்தார்.

பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் ஸ்வர்ணலதாவின் குரலில் ஒலிபதிவு செய்யப்பட்ட ஒரேயொரு பாடலாக திருமண மலர்கள் தருவாயா பாடல் அமைந்துள்ளது.

ஜோதிகாவின் காட்சிகளுக்கு, ஸ்வர்ணலதாவின் குரல் அவ்வாறே இணைந்ததாக காணப்படுவதுடன், அந்த காட்சிகளுக்கு ஸ்வர்ணலதா தனது மெல்லிய குரலில் உயிர் கொடுத்திருந்தார்.

9. மயிலிறகே மயிலிறகே

2002- ஆம் ஆண்டு வெளியான திரைப்படமே தென்காசி பட்டணம்.

இந்த திரைப்படத்தில் மயிலிறகே மயிலிறகே பாடலை, மனோ மற்றும் ஸ்வர்ணலதா ஆகியோர் இணைந்து பாடியிருப்பார்கள்.

இந்த பாடலுக்கு பீட்டர்ஸ் இசையமைத்திருந்ததுடன்,பாடலுக்கான வரவேற்பு இன்று வரை அவ்வாறே காணப்படுகின்றது.

10. சிஞ்ஞோரே சிஞ்ஞோரே

'சிஞ்ஞோரே சிஞ்ஞோரே' பாடலை, மூத்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத்தே எழுதியுள்ளார்.

API Tamil Songs 'சிஞ்ஞோரே சிஞ்ஞோரே' பாடலை, மூத்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத்தே எழுதியுள்ளார்.

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம், இலங்கை போர் களத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு திரைப்படமாக காணப்படுகின்றது.

மணிரத்னத்தின் இயக்கத்தில் மாதவன், சிம்ரன், பிரகாஷ்ராஜ் ஆகியோரின் நடிப்பில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு, 2002-ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.

இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

அனைத்து பாடல்களும் வரவேற்பை பெற்றிருந்த போதிலும், பி.எச்.அப்துல் ஹமீத்திற்கு இந்த பாடல் அவரது வாழ்க்கையில் மிக மிக முக்கியமான பாடலாக விளங்குகின்றது. காரணம் அவரே இப்பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார்.

தமிழ் வரிகளுடன், சிங்கள வரிகள் அடங்களாக எழுதப்பட்ட இந்த பாடலை, ஸ்வர்ணலதாவின் குரலிலும் கேட்கும் போது, அனைவருக்குமே ஆச்சரியம் தருகின்றது.

95bec460-8f23-11f0-8111-31005f7c48fd.jpg

பி.எச்.அப்துல் ஹமீத் எழுதிய சிஞ்ஞோரே சிஞ்ஞோரே பாடலுக்கு ஸ்வர்ணலதா குரல் கொடுத்திருந்தார்

ஸ்வர்ணலதா உலகை விட்டு விடை பெற்று 15 வருடங்கள்

இந்திய சினிமாத்துறையில் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற ஸ்வர்ணலதா, 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி தனது 37வது வயதில் காலமானார்.

நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

1987-ஆம் ஆண்டு இசை ரசிகர்களுக்கு தனது குரலில் விருந்து வழங்கிய ஸ்வர்ணலதாவின் குரல் 2010-ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டாலும், அந்த குரலின் பதிவுகள் என்றென்றும் ரசிகர்களின் காதுகளில் ஓயாது ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c07vkydy3jyo

விமர்சனம் : மதராஸி!

1 week 1 day ago

விமர்சனம் : மதராஸி!

7 Sep 2025, 11:07 AM

madharasi-1.jpg

சிவகார்த்திகேயன் – முருகதாஸ் ‘காம்பினேஷன்’ திருப்தியளிக்கிறதா?

முதல் படமான ‘தீனா’வில் தொடங்கி ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’, ‘ஏழாம் அறிவு’ என்று வித்தியாசமான ‘ஆக்‌ஷன்’ படங்களைத் தந்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இடையே ‘கத்தி’, ‘சர்கார்’ என்று ‘ப்ளாக்பஸ்டர்’கள் தந்தாலும் ‘ஸ்பைடர்’, ‘தர்பார்’ படங்களில் சரிவைச் சந்தித்தார். சமீபத்தில் இந்தியில் சல்மான்கானை நாயகனாகக் கொண்டு இவர் தந்த ‘சிக்கந்தர்’ பெருந்தோல்விக்கு உள்ளானது.

இந்த நிலையில் தற்போது தியேட்டர்களில் ‘மதராஸி’ வெளியாகியிருக்கிறது. இதில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இவர்களது காம்பினேஷன் எதிர்பார்ப்பை உருவாக்கினாலும், அது மிகப்பெரியதாக மாறவில்லை. அது ஏன்?

தியேட்டரில் ‘மதராஸி’ தரும் திரையனுபவம் அந்த கேள்வியைத் தவிடுபொடியாக்கியிருக்கிறதா?

’ஆபத்பாந்தவன்’ பார்முலா!

மிகப்பிரமாண்டமாகத் தயாரிக்கப்படுகிற ‘ஆக்‌ஷன்’ படங்களின் கதை என்னவாக இருக்கும்?

மக்களை ஆபத்திற்கு உள்ளாக்குகிற வகையில் சில பிரச்சனைகளை வில்லன்கள் இழுத்துக் கொண்டுவருவார்கள். அதனைச் சமாளிக்க முடியாமல் எல்லோரும் திணறும் நேரத்தில், அந்த களத்திற்குள் ஹீரோ வருவார். வில்லனை நேருக்கு நேராக எதிர்கொண்டு வெல்வார். அவரே எல்லோரையும் காக்கிற ‘ஆபத்பாந்தவன்’ என்பதைப் பாதிப்படத்திலேயே உணர்த்திவிடுவதே இப்படிப்பட்ட படங்களின் சிறப்பு. நட்சத்திர நடிகர்களின் ரசிகர்களும் அதனையே விரும்புவார்கள் என்பதே திரையுலகின் நம்பிக்கை.

image-122-1024x538.png

கிட்டத்தட்ட அதனைப் பிரதிபலித்திருக்கிறது ‘மதராஸி’ கதை.

பெருமளவில் துப்பாக்கிகளைச் சுமந்துகொண்டு சில ட்ரக்குகள் தமிழ்நாட்டு எல்லைக்குள் புகுகின்றன. அதனை முன்னரே அறிந்து தடுக்க முயற்சிக்கின்றனர் என்.ஐ.ஏ. அதிகாரிகள். அவர்களாலும் எதுவும் செய்ய இயலவில்லை.

அந்த நிகழ்வில் காயம்பட்ட என்.ஐ.ஏ குழு அதிகாரியின் முன்னே சம்பந்தமில்லாமல் ஆஜராகிறார் ஒரு இளைஞன். காதலி தன்னைவிட்டுச் சென்றுவிட்டார் எனத் தற்கொலை செய்யத் துடிப்பவர் அந்த நபர். அவரது இருப்பு அந்த அதிகாரியை எரிச்சலுக்கு உள்ளாக்குகிறது.

இந்த நிலையில், அந்த கும்பல் எங்கிருக்கிறது என்ற விவரம் தெரிய வருகிறது. அந்த இடத்தைச் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்துவது அபாயகரமானது என்பதை அறிந்தவுடன், ‘தற்கொலைப்படை நடவடிக்கை’ போன்ற ஒன்றைச் செய்யலாம் என்று திட்டமிடுகிறார் அந்த அதிகாரி.

அதற்காக, அதிகாரப்பூர்வமற்ற முறையில் அந்த இளைஞனை இந்த பிரச்சனைக்குள் தள்ளுகிறார்.

அந்த இளைஞரும் அந்த துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்ட ஒரு ஆலைக்குள் நுழைகிறார். இந்த நேரத்தில், அந்த இளைஞரைத் தேடி அவரது காதலியும் என்.ஐ.ஏ. அலுவலம் வருகிறார்.

ஆலைக்குள் சென்ற இளைஞர் அந்த இடத்தைத் தகர்க்க முற்படுகையில், அந்த கும்பலின் தலைவர் அவர் கையில் சிக்குகிறார்.

அதனை அவர் அந்த அதிகாரியிடம் தெரிவிக்கிறார். அதேநேரத்தில், அந்த கும்பலைச் சேர்ந்த இன்னொருவரிடமும் அத்தகவலைத் தெரிவிக்கிற கட்டாயம் உருவாகிறது.

அப்போது, ‘அந்த கும்பலின் தலைவனைச் சுட்டுவிடு’ என்கிறார் அந்த அதிகாரி. ‘அப்படிச் சுட்டால் உன்னைச் சார்ந்தவர்களை துவம்சம் செய்துவிடுவேன்’ என்கிறார் எதிர்முனையில் இருக்கிற அந்த கும்பலைச் சேர்ந்தவர்.

அவர்கள் சொன்னதைக் கேட்டபிறகு, அந்த இளைஞர் என்ன செய்தார்? அந்த இளைஞனின் காதலி ஏன் அவரை விட்டுச் சென்றார்? முடிவில், ‘துப்பாக்கி’ பிரச்சனை என்னவானது என்று சொல்கிறது ’மதராஸி’யின் மீதி.

ஆக்‌ஷன் படங்களுக்கான சிக்கல்!

குறிப்பிட்ட காலகட்டத்தில் சில ‘ஆக்‌ஷன்’ படங்கள் பெரிய வெற்றியைப் பெறும். ஆனால், ’அதே பார்முலா’வில் உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிற சில படங்கள் சில காலம் கழித்து வெளியாகித் தோல்வியைத் தழுவும். எம்ஜிஆர், சிவாஜி காலம் தொட்டு இப்போதுவரை தொடர்கிறது அந்த சிக்கல்.

ஏ.ஆர்.முருகதாஸும் அப்படியொரு சிக்கலைச் சமீப ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகிறார்.

‘கஜினி’ சூர்யா போல, ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன் பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார். அதனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா, இல்லையா என்பதே இப்படத்தின் ப்ளஸ் அல்லது மைனஸாக இருக்கும்.

’மதராஸி’ திரைக்கதையில் இரண்டு, மூன்று முக்கியத் திருப்பங்கள் இருக்கின்றன.

வில்லன்களின் உலகத்திற்குள் நாயக பாத்திரம் காலடி எடுத்து வைப்பது அதிலொன்று. அதற்கான விதையாக, ‘பிளாஷ்பேக்’கள் இதில் இருக்கின்றன. நாயகியின் இருப்பும் அதையொட்டி கதையில் நியாயப்படுத்தப்படுகிறது.

இடைவேளையை ஒட்டி, அந்த வில்லன்களோடு நாயகனுக்கு நேரடியாக மோதல் ஏற்படுவது இன்னொரு திருப்பம்.

இவையிரண்டும் ‘முருகதாஸின் வெற்றிகரமான ஆக்‌ஷன் பட’ அனுபவத்தைத் தருகின்றன.

இப்படத்தின் பின்பாதியிலும் சில திருப்பங்கள் இருக்கின்றன. அவை ‘க்ளிஷே’க்களாக தெரிகின்றன.

மற்றபடி, ஒரு வழக்கமான ஆக்‌ஷன் படத்திற்கான உள்ளடக்கத்தை கொண்டிருக்கிறது ‘மதராஸி’.

அதற்கு சுதீப் இளமோனின் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு, அருண் வெஞ்சாரமூடுவின் தயாரிப்பு வடிவமைப்பு, அனிருத்தின் பின்னணி இசை ஆகியன துணை நிற்கின்றன.

அனிருத் இசையில் ‘சலம்பல’, ‘தங்கப்பூவே’ பாடல்கள் ஓகே ரகம். ஆனால், ‘தூள் கிளப்பும்’ ரகத்தில் இந்த படத்தில் ஒரு பாடல் கூட இல்லை என்பது குறையே.

விஎஃப்எக்ஸ், டிஐ உள்ளிட்ட பல நுட்பங்கள் இதில் சிறப்புற அமைந்திருக்கின்றன.

கமர்ஷியல் படங்களில் நாயக பாத்திரம் என்றால் ‘கெத்தாக’ இருக்க வேண்டுமென்று நம்புவதில், அதனை மிகத்தீவிரமாகக் கடைபிடிப்பதில் சில நடிகர்கள் உறுதியாக இருந்து வருகின்றனர்.

மிகச்சில நாயகர்கள் அந்த எல்லைக்கோட்டில் இருந்து அவ்வப்போது விலகி நிற்பார்கள். அப்படியொரு பாத்திர வார்ப்பினை இதில் முயற்சித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

என்ன, குழந்தைகளும் ரசிக்கிற அவரது படத்தில் ‘நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்’ என்று அடிக்கடி வசனம் பேசுவதைத்தான் ஏற்க முடியவில்லை. அந்த இடங்களைக் கொஞ்சம் சரிப்படுத்தியிருக்கலாம்.

image-121-1024x576.png

நாயகி ருக்மிணி வசந்த் அழகாகத் திரையில் காட்டப்பட்டிருக்கிறார். ஆனாலும், ‘ரொம்ப மெச்சூர்டு’ என்ற எண்ணம் அடிக்கடி தலைதூக்குகிறது.

ஒரு காட்சியில் ‘இப்பதான் நல்ல வொய்ப் மெட்டீரியலா ஆயிருக்கே’ என்று சிவகார்த்திகேயன் வசனம் பேசுவார். அது போன்ற இடங்களைத் தவிர்த்துப் பார்த்தால், இந்த படத்திற்கு இவர் தேவையில்லைதான்.

வில்லனாக இதில் வித்யுத் ஜாம்வால், சபீர் கல்லாரக்கல் தோன்றியிருக்கின்றனர். இருவருக்குமே தனித்தனியாகச் சண்டைக்காட்சிகள் இருக்கின்றன. இருவருமே அதில் கலக்கியிருக்கின்றனர். ஆனாலும், பல படிகள் முன்னே நிற்கிறார் வித்யுத். நாயகனாகத் தொடங்கிவிட்டார் என்பதற்காகவே, அவருக்காகப் பிரத்யேகமாகச் சில ‘பில்டப்’களை இதில் சேர்த்திருக்கிறார் இயக்குனர்.

இந்த படத்தில் பிஜு மேனன், விக்ராந்த் முக்கியப் பாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர். அவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டபோதும், அது திரைக்கதையில் அடிக்கோடிடும் வகையில் அமையவில்லை.

இவர்களோடு தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், லிவிங்ஸ்டன் உட்படச் சிலர் ஓரிரு காட்சிகளில் தலைகாட்டியிருக்கின்றனர். வினோதினி வைத்தியநாதன், சந்தானபாரதி போன்றவர்களும் அதில் அடக்கம்.

இன்னும் சித்தார்த் சங்கர், ரிஷி ரித்விக் உட்படச் சிலர் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு நடுவே விமலா ராமன் போன்ற சிலரும் ‘ஒப்புக்கு சப்பாணியாக’ச் சில ஷாட்களில் தலைகாட்டியிருக்கின்றனர்.

மேற்சொன்னவற்றில் இருந்து இப்படத்தில் நாயகி தவிர்த்து பெண் பாத்திரங்களுக்கான முக்கியத்துவம் குறைவு என்பது புரிந்துவிடும்.

தற்போது இப்படம் பற்றிய பார்வையாளர்களின் கருத்துகள் கலவையாக உள்ளன.

இப்படம் இதற்கு முன் வந்த ஏ.ஆர்.முருகதாஸின் படங்களை நினைவூட்டுகிற வகையில் உள்ளது. அதேநேரத்தில், சமீபத்திய ட்ரெண்டுக்கு ஏற்றவாறு ‘மதராஸி’ உள்ளதா என்ற கேள்வி அவ்விஷயத்தைப் பின்னுக்குத் தள்ளுகிறது. மேற்சொன்ன இரண்டும் ஒன்றிணைகிறபோது சில முரண்கள் எழும். அவை இப்படத்திற்கான பலவீனங்கள்.

லாஜிக் மீறல்கள் என்று பார்த்தால் ‘மதராஸி’யில் கணிசமாகச் சிலவற்றை நம்மால் கண்டறிய முடியும்.  

அதேநேரத்தில் சமீபகாலமாகத் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான ‘பெரிய நாயகர்களின்’ ஆக்‌ஷன் படங்களை ஒப்பிடுகையில் இப்படத்தின் கதை சொல்லலும் காட்சியாக்கமும் நம்மை பெரிதாக அயர்ச்சியுற வைக்காது. இது தமிழைவிடத் தெலுங்கில் பெரிய வரவேற்பைப் பெறவும் வாய்ப்புள்ளது.

image-120-1024x683.png

ஒருவேளை மேற்சொன்னது நிகழாவிட்டால், இப்படத்தை ஓடிடியிலோ, தொலைக்காட்சிகளிலோ காணும்போது ‘இந்த படம் நல்லாத்தானே இருக்கு’ என்று அதே ரசிகர்கள் சொல்லலாம். அதற்கான வாய்ப்புகளையும் கொண்டிருக்கிறது ‘மதராஸி’.

மற்றபடி, ஏ.ஆர்.முருகதாஸ் உடன் சிவகார்த்திகேயன் கூட்டணி சேர்ந்துவிட்டால் அற்புதமான ’கமர்ஷியல் பட அனுபவம்’ கிடைக்கும் என்று அவர்களது ரசிகர்கள் நம்பினாற் போன்றதொரு விஷயத்தை ‘மதராஸி’ நிகழ்த்தவில்லை..!

https://minnambalam.com/sivakarthikeyan-madharasi-movie-review/

விமர்சனம் : காந்தி கண்ணாடி

1 week 2 days ago

விமர்சனம் : காந்தி கண்ணாடி

6 Sep 2025, 12:51 PM

Gandhi Kannadi Movie Review 2025

ஹீரோவாக ஜெயித்தாரா கேபிஒய் பாலா?

டைட்டிலை பார்த்தவுடனேயே ‘இதென்ன இப்படியிருக்கு’ என்றே பெரும்பாலும் எண்ணத் தோன்றும். கூடவே, இந்த டைட்டிலை வைத்துக்கொண்டு கதையில் என்ன சொல்லிவிட முடியும் என்ற எண்ணமும் எழும். ஆனால், அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதையே தங்களது பலமாக எண்ணிக் களமிறங்கியிருக்கிறது ‘காந்தி கண்ணாடி’ படக்குழு.

ரணம் பட இயக்குனர் ஷெரீஃப் இயக்கியுள்ள இப்படத்தில் ‘கலக்கப் போவது யாரு’ பாலா நாயகனாக நடித்திருக்கிறார். ‘ஃபால்’, ‘நவம்பர் ஸ்டோரி’ ‘ட்ரிபிள்ஸ்’ வெப்சீரிஸ்களில் நடித்த நமீதா கிருஷ்ணமூர்த்தி இதில் நாயகி. இவர்களோடு பாலாஜி சக்திவேல் – அர்ச்சனா இருவரும் ஜோடியாக இதில் தோன்றியிருக்கின்றனர். விவேக் – மெர்வின் இணை இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறது.

சரி, ‘காந்தி கண்ணாடி’ தியேட்டரில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு உள்ளதா?

Gandhi Kannadi Movie Review 2025

‘நெகிழ்ச்சி’ தருணங்கள்!

ஒரு ‘ஈவெண்ட் மேனேஜ்மெண்ட்’ நிறுவனமொன்றை நடத்தி வருகிறார் கதிர் (கேபிஒய் பாலா). அவரது காதலி கீதா (நமீதா கிருஷ்ணமூர்த்தி) அதனை நிர்வகித்து வருகிறார். நண்பர்கள் சிலர் (மதன், ஜீவா சுப்பிரமணியன்) அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

பணம் மட்டுமே பிரதானம் என்றிருக்கும் கதிர், தங்களது பணியாளர் வராவிட்டால் அந்த வேலையைத் தானே செய்யக் கூடியவர். அதற்கான சம்பளத்தை எடுத்துக்கொள்ளக் கூடியவர்.

அப்படிப்பட்டவர் ‘அறுபதாம் கல்யாணம் செய்ய வேண்டும்’ என்று தன்னைத் தேடி வரும் காந்தியைக் (பாலாஜி சக்திவேல்) காண்கிறார். மனைவி கண்ணம்மாவின் (அர்ச்சனா) ஏக்கம் அது என்பதை உணர்ந்து, அதனைச் செயல்படுத்தத் துணிகிறார். தனது சம்பளம், சேமிப்பு ஆகியவற்றைத் தாண்டி ஒரு பெரிய தொகையில் அந்த நிகழ்வை நடத்த ஆசைப்படுகிறார்.

காந்தி ஒரு பெரிய ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர். கோயம்புத்தூர் வட்டாரத்தில் வாழ்ந்து வரும் அவர் சிறு வயதில் நடனமாடும் கண்ணம்மாவை விரும்புகிறார். இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொண்டு இனிமையாக வாழ முடியாது என்பதை உணர்ந்து, இருவரும் சென்னைக்கு வந்துவிடுகின்றனர்.

அப்போது முதல் கண்ணம்மாவின் வார்த்தைகள் எதையும் காந்தி மீறியதில்லை. முதல்முறையாக, அவரது வார்த்தையை மீறித் தனது ஜமீன் குடும்பத்து சொத்துக்களை விற்றாவது இந்த அறுபதாம் கல்யாணத்தை நடத்திவிட வேண்டுமென்று நினைக்கிறார். அதற்கேற்ப, அவர் கைவசம் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் வரை கிடைக்கிறது.

அதனைக் கொண்டு எளிதாகத் தனது கண்ணம்மாவின் ஆசையைத் தீர்க்கலாம் என்று நினைக்கிறார் காந்தி. அந்த நேரத்தில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவிக்கிறது மத்திய அரசு.

அதன்பிறகு தனது கையில் இருக்கும் லட்சக்கணக்கான பணத்தை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் தவிக்கிறார் காந்தி. அவரிடம் வாங்கிய பணத்தைக் கொண்டு எதுவும் செய்ய முடியாது என்று கதிரும் கைவிரிக்கிறார்.

அதன்பிறகு என்ன ஆனது? காந்திக்கு கதிர் உதவிகள் செய்தாரா என்று பதிலளிக்கிறது இப்படத்தின் மீதி.

ஆசிரமம் ஒன்றை நடத்தி வரும் கதிர், அங்கிருந்த காந்தி காணாமல் போனதை அறிந்ததும் துணுக்குறுவதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது. அதுவே ‘பிளாஷ்பேக்’குகள் நிறைந்த இப்படத்தைச் சலிப்பில்லாமல் பார்க்க வைக்கிறது.

அது மட்டுமல்லாமல், இந்தக் கதையில் சாதாரண ரசிகர்கள் நெகிழ்ச்சியுறும்விதமாகச் சில தருணங்கள் உள்ளன. பண மதிப்பிழப்பு காலகட்டத்தில் வங்கி வாசலில் மக்கள் காத்துக் கிடப்பது போன்றவை அப்படிப்பட்டவை.

கூடவே, ‘அதான் நீ இருக்கியே’, ‘தயிர்சாதம் சூப்பர்’ என்று பாலாஜி சக்திவேல் பேசுகிற வசனங்கள் தொடக்கத்தில் செயற்கைத்தனமாகவும், பிறகு நம்மை நெகிழவைக்கும் விதமாகவும் உள்ளன.

‘பொண்டாட்டி செஞ்சதை சாப்பிட்டு, அது நல்லாயிருக்குன்னு சொல்ல முடியலைன்னா, நீங்கள்லாம் என்ன …க்கு கல்யாணம் பண்றீங்க’ என்று அவர் வசனம் பேசுகிற இடத்தில் தியேட்டரே ஆர்ப்பரிக்கிறது.

அந்த வகையில் முதல் பாதி இளைய தலைமுறைக்கானதாகவும் இரண்டாம் பாதி வயதானவர்களுக்காகவும் அமைந்திருப்பதே இப்படத்தின் சிறப்பு.

Gandhi Kannadi Movie Review 2025

திருப்தி கிடைத்ததா?

இடைவேளை வரை ஆங்காங்கே கிச்சுகிச்சு மூட்டியவாறு நகர்கிறது திரைக்கதை. அதன்பிறகு அதில் நிறையவே தொய்வு ஏற்படுகிறது.

ஒருகட்டத்தில் ‘இவ்ளோ கஷ்டப்பட்டு குறிப்பிட்ட தேதிக்குள்ள இந்த அறுபதாம் கல்யாணத்தை நடத்தனுமா’ என்று எண்ணும் அளவுக்குக் காட்சிகள் ‘சோக கீதம்’ வாசிக்கின்றன.

’முனுக்கென்றால் கோபம் வந்துவிடும்’ என்பது போலச் சட்டென்று கண்ணீரை உதிர்க்கக்கூடியவர்கள் தேம்பி அழும் அளவுக்கு இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் இருக்கின்றன.

அக்காட்சிகளில் தெரிகிறது இயக்குனர் ஷெரீஃபின் வித்தை.

இப்படத்தில் திருவிழா காட்சிகள் ஆங்காங்கே வருகின்றன. அவற்றில் மட்டும் கொஞ்சம் பிரமாண்டம் தெரிகிறது. மற்றபடி இது சுமார் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது.

முடிந்தவரை அந்த எண்ணம் வராத அளவுக்குக் காட்சியாக்கத்தைச் சிறப்பாக மேற்கொண்டிருக்கிறது ஒளிப்பதிவாளர் பாலாஜி கே ராஜா, படத்தொகுப்பாளர் சிவாநந்தீஸ்வரன், தயாரிப்பு வடிவமைப்பாளர் மணிமொழியான் ராமதுரை கூட்டணி.

ஒப்பனை, ஒலி வடிவமைப்பு, டிஐ போன்ற அம்சங்கள் காட்சிகளைச் செறிவாக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன. திரையில் கமர்ஷியல் சினிமாவுக்கான ‘ஜிகினாத்தனம்’ தென்பட்டுவிடக் கூடாது என்று மெனக்கெட்டிருப்பது அருமை.

அந்த வகையில் காட்சியாக்கத்தில் யதார்த்தம் நிறைந்திருக்கிறது.

அதனைத் தாண்டி, திரையில் தெரியும் பிம்பங்களின் வழியே வெளிப்படும் உணர்வுகளை நமக்குள் கடத்த தூண்டுகோலாய் இருக்கிறது விவேக் – மெர்வினின் பின்னணி இசை.

‘திமிருக்காரி’ பாடல் ‘காந்தி கண்ணாடி’யின் அடையாளமாக உள்ளது. இது போக ‘புல்லட் வண்டி’, ‘ஹிந்தி நஹி மாலும்’ பாடல்களும் கேட்டவுடன் பிடிக்கும்விதமாக உள்ளன.

அனைத்தையும் தாண்டி கிளைமேக்ஸ் பகுதியில் யுவன் சங்கர் ராஜா குரலில் ஒலிக்கிற ‘மெலடி மெட்டு’ நம் மனதைப் பிசையும்விதமாக உள்ளது.

அதுவரை இப்படத்துடன் ஒன்றாதவர்கள் கூட, அந்த இடத்தில் இக்கதையோடு தம்மைப் பிணைத்துக் கொள்வார்கள் என்பதே நிஜம்.

‘காந்தி கண்ணாடி’ கதையில் முதன்மையாக வரும் நான்கு பாத்திரங்களின் பின்னணி ‘விலாவாரியாக’ விளக்கப்படவில்லை. போலவே, இதர பாத்திரங்களும் காட்சிகளில் வருகின்றன, போகின்றன. அவற்றின் பின்னணியைக் கொஞ்சம் விளக்கியிருந்தால் இன்னும் முழுமையானதாகத் திரையனுபவம் மாறியிருக்கும்.

ஆனால், அந்த குறையை மறக்கடிக்கும்விதமாக இதில் நடிகர்களின் ‘பெர்பார்மன்ஸ்’ உள்ளது.

அந்த வகையில் நாயகன் நாயகியை விட நம்மை வசீகரிப்பது பாலாஜி சக்திவேல் – அர்ச்சனா ஜோடி தான். அவர்களைப் புகழ்வது கடல் நீரில் பெருமழை பெய்வதைப் போலானது என்பதால் அடுத்திருப்பவர்களை உற்றுநோக்கலாம்.

பாலாவுக்கு இது நாயகனாக முதல் படம். அதனை உணர்ந்து சிரத்தை காண்பித்திருக்கிறார். தனது உடல் திரையில் கம்பீரமாகத் தெரிய மெனக்கெட்டிருப்பவர், முக பாவனைகளுக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் தந்திருக்கலாம்.

அது மட்டுமல்லாமல், முதல் பாதியில் அவர் கருமியாகவும் சுயநலமானவராகவும் இருப்பது தெளிவாகச் சித்தரிக்கப்படாதது ஒரு குறையே.

Gandhi Kannadi Movie Review 2025

மற்றபடி, தன்னைக் கொண்டாடுகிற ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் அளவுக்கு இப்படத்தைத் தந்திருக்கிறார். அதிகமாக ‘காமெடி கவுண்டர்கள்’ அடிக்காமல் அடக்கி வாசித்திருக்கிறார்.

நாயகி நமீதா கிருஷ்ணமூர்த்தி அழகாக இருக்கிறார். தனக்கு ‘ஸ்கோப்’ இருக்கிற இடங்களில் அழகாக நடித்திருக்கிறார். ஆனாலும், அது போதுமானதாக இல்லை.

ஒருவேளை நாயகன் நாயகி இருவருக்குமே அதிகளவில் ‘குளோஸ் அப்’ ஷாட்கள் வைக்காதது இயக்குனரின் குறையா என்றும் தெரியவில்லை.

இவர்கள் தவிர்த்து ஜீவா சுப்பிரமணியன், மதன் மற்றும் பண மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்களாக நடித்தவர்கள் என்று சிலர் வந்து போயிருக்கின்றனர்.

அமுதவாணன், நிகிலா சங்கர் ஜோடிக்குத் திரைக்கதையில் உரிய இடம் தரப்படவில்லை.

பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் மனோஜ் பிரபு – ஆராத்யா ஜோடி சட்டென்று மனதில் பதிகிறது. அதே நேரத்தில், அவர்கள் ஊரை விட்டு வெளியேறுவதற்கான காரண காரியங்கள் இன்னும் தெளிவாகத் திரையில் சொல்லப்பட்டிருக்கலாம் என்றெண்ணுவதையும் தவிர்க்க முடியவில்லை.

இந்த படத்தின் முடிவு சில ரசிகர்களுக்குத் திருப்தியைத் தராமல் போகலாம்; இவ்வளவு சோக முடிவு தேவையா என்ற கேள்வியை எழுப்பலாம். ‘இயக்குனர் என்ன சொல்ல வருகிறார்’ என்றும் தோன்றலாம்.

அனைத்தையும் தாண்டி சில மனிதர்கள், அவர்களது வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்கள் என்ற வகையில் நமக்கு இன்னொரு உலகத்தைக் காட்டுகிறது ‘காந்தி கண்ணாடி’. பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லாமல் தியேட்டருக்குள் நுழைந்தால் இப்படம் ஓரளவுக்கு ஆச்சர்யத்தையும் நெகிழ்ச்சியையும் தரக்கூடும்.

https://minnambalam.com/gandhi-kannadi-movie-review-2025/

The Shawshank Redemption

1 week 2 days ago

மேலை நாட்டிற்கு வந்த ஆரம்பத்தில் இருந்த குறைவான நேரத்தில் சிறந்த படங்களை பார்க்கும் நோக்கில் வேலையில் ஒரு வேலை நண்பரிடம் சிறந்த படம் ஏதாவது கூறுங்கள் என கூறிய போது அவர் கூறிய திரைப்படம் இந்த திரைப்படம்.

முதல் தடவை இந்த திரைப்படத்தினை பார்த்தபோது அது எனது எதிர்பார்ப்பினை எட்டியிருக்கவில்ல்லை என்பதுதான் உண்மை, ஆனால் பின்னர் ஒரு தடவை தொலைக்காட்சியில் பார்த்தபொது அது ஈர்த்தது, பல தடவை வேலை இடைவேளைகளில் இந்த திரைப்படத்துணுக்குகளை இன்றுவரை பார்ப்பதுண்டு அவ்வாறு இந்த திரைப்படம் பாதிப்பினை ஏற்படுத்தும் படம்.

பொதுவாக ஒரு தடவை பார்த்த படத்தினை திரும்ப பார்க்கும் பொறுமை இருப்பதில்லை ஆனால் இந்த திரைப்படம் எனதளவில் ஒரு வித்தியாசமான படம்.

இந்த திரைப்படத்தின் கரு நம்பிக்கை ( அவ்வாறாக நான் உனருகிறேன்) என்பதனை ஒரு சிறந்த திரைக்கதையினூடாக பல சிறந்த கருத்துக்களை உள்ளடக்கியதாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது, இந்த திரைப்படம் பெரிதாக பேசப்படவில்லை என கருதுகிறேன் ஆனால் நிச்சயம் இந்த திரைப்படம் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த அனுபவத்தினை வழங்கும்.

அண்மையில் யுரியூப்பில் இந்த திரைப்படத்தில் உள்ள ஒரு காணொளி துணுக்கு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இணைத்திருந்தார்கள் அதனை இணைத்துள்ளேன், 3 தடவைகள் ரெட் தனது பரோலிற்கான நேர்முகத்தேர்வு காட்சி (10 வருட இடைவெளி கொண்ட காட்சி முதல் நேர்முகத்தேர்வில் இருந்து 3 ஆவது நேர் முக தேர்விற்க்டையில் 30 வருடங்கள்) இடம்பெறும் அதில் அந்த பாத்திரத்தில் நடித்த நடிகர் காட்டிய இளவயது குரல் முதுமைக்குரல் என வேறுபடுத்திக்காட்டுவார், அதே போல் இந்த மொழி மாற்றத்தில் எம் எஸ் பாஸ்கர் அதே வேறுபாட்டை காட்டுகிறார்.

“திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா” கவிஞர் பூவை செங்குட்டுவன் மறைவு!

1 week 2 days ago

“திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா” கவிஞர் பூவை செங்குட்டுவன் மறைவு!

large_saetfgarhyju-214794.png

கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியரான பூவை செங்குட்டுவன் (90) இன்று மாலை சென்னை பெரம்பூரில் காலமானார். வயது மூப்பே அவரது மரணக்காரணமாகக் கூறப்படுகிறது.

செங்குட்டுவன் தமிழ் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர். 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 4,000-க்கும் அதிகமான சுயாதீனப் பாடல்களையும், 5,000 பக்திப் பாடல்களையும் இயற்றி தனது கவிதை ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். அவரது வரிகளில் இலக்கிய நயமும், ஆன்மீக உணர்வும், பொதுமக்களின் வாழ்வியல் மொழியும் கலந்து காணப்பட்டதால் பரவலான வரவேற்பைப் பெற்றது.

அவரது படைப்புகளில் சில பாடல்கள் காலத்தால் அழியாத புகழை பெற்றன. “நான் உங்கள் வீட்டுப் பிள்ளை”, “தாயிற்சிறந்த கோவிலுமில்லை”, “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா”, “இறைவன் படைத்த உலகை” போன்ற பாடல்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிந்தவை. இன்றும் அவை பக்தி நிகழ்ச்சிகளிலும் இசை நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கின்றன.

திரைப்படத் துறையில் மட்டுமல்லாமல், பக்திப் பாடல்கள் மற்றும் சுயாதீன இசைத் துறைகளிலும் அவர் பங்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தம் படைப்புகளில் எளிமையான சொற்களையும், நுண்ணிய உணர்ச்சியையும் கலந்து அனைவரும் ரசிக்கக்கூடிய வகையில் அமைத்தது அவரது வித்தியாசமான பலம்.

செங்குட்டுவனின் மறைவு தமிழ்ச் சங்கீத உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். பல்வேறு இசைக்கலைஞர்களும், பாடகர்களும், ரசிகர்களும் அவரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

https://www.seithipunal.com/tamilnadu/poets-poovai-senkuttuvan-passed-away

மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்காக சூப்பர் சிங்கரில் நடந்த ஸ்பெஷல் எபிசோட்.

1 week 4 days ago

சூப்பர் சிங்கர்

சூப்பர் சிங்கர், பாடல் திறமையுள்ள கலைஞர்களுக்கு தங்களது திறமையை வெளிக்காட்டும் மேடையாக உள்ளது.

பெரியவர்கள், சிறியவர்கள் என மாறி மாறி எபிசோடுகள் ஒளிபரப்பாகும், இந்த நிகழ்ச்சிக்கும் மக்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

அவ்வப்போது புதிய கான்செப்டுடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள், ஆனால் சமீபத்தில் தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் 11வது சீசனின் கான்செப்ட் மொத்தமாக மாற்றப்பட்டது.

4 குரூப், அதற்கு 4 நடுவர்கள் என வித்தியாசமான கான்செப்ட், நிகழ்ச்சி தொடங்கியது முதல் ஹிட்டாக தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்காக சூப்பர் சிங்கரில் நடந்த ஸ்பெஷல் எபிசோட் | Super Singer Season 11 6Th 7Th September 2025

ஸ்பெஷல் எபிசோட்

இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு சூப்பர் எபிசோட் இடம்பெற உள்ளது. அதாவது மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் அவர்களின் நினைவாக இந்த வார எபிசோட் அமைந்துள்ளது.

இந்த ஸ்பெஷல் நிகழ்ச்சியில் வெற்றிமாறன், சீமான் போன்ற கலைஞர்கள் சிறப்பு விருந்தினர்களாக வந்துள்ளனர்.

Cineulagam
No image previewபாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்காக சூப்பர் சிங்கரில் நட...
Super Singer Season 11 | 6th & 7th September 2025 - Promo 1

கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த் நடித்த பிரமாண்ட காட்சிகளை நீக்கியது ஏன்? இயக்குநர் செல்வமணி பேட்டி

3 weeks ago

விஜயகாந்த், கேப்டன் பிரபாகரன், செல்வமணி, விஜயகாந்த் பிறந்தநாள்

பட மூலாதாரம், I.V CINE PRODUCTIONS

படக்குறிப்பு, இந்தத் திரைப்படமே, விஜயகாந்துக்கு கேப்டன் என்கிற அடைமொழி நிரந்தரமாக அமையக் காரணம்.

கட்டுரை தகவல்

  • கார்த்திக் கிருஷ்ணா

  • பிபிசி தமிழுக்காக

  • 25 ஆகஸ்ட் 2025, 06:12 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாளை(ஆகஸ்ட் 25) முன்னிட்டு அவரது 100வது திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்', 4கே தரத்தில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படமே, விஜயகாந்துக்கு கேப்டன் என்கிற அடைமொழி நிரந்தரமாக அமையக் காரணம்.

1990ஆம் ஆண்டு, விஜயகாந்தை நாயகனாக வைத்து, 'புலன் விசாரணை' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆர்.கே.செல்வமணி. அந்தத் திரைப்படத்தில் 'ஆட்டோ' சங்கர் என்கிற உண்மை கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, வில்லன் கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தார் செல்வமணி.

அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது. 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படத்தில், 'சந்தனக் கடத்தல்' வீரப்பன் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வில்லன் கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தார்.

விஜயகாந்தின் நீண்ட் நாள் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் தயாரிப்பில் உருவான 'கேப்டன் பிரபாகரன்' 1991ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மன்சூர் அலிகான் பிரதான வில்லனாக நடித்த முதல் திரைப்படம் இது. அவருக்கும் இப்படம் மிகப்பெரியத் திருப்புமுனையாக அமைந்தது.

ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள், நூற்றுக்கணக்கான குதிரைகள் என மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பு, ஓடும் ரயிலில் நடக்கும் சண்டைக் காட்சி, கவுரவ வேடத்தில் சரத்குமார், முக்கியக் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன், இளையராஜாவின் பின்னணி இசை, ஆட்டமா தேரோட்டமா பாடல் என இத்திரைப்படத்தின் ஒவ்வொரு அம்சமும் பாராட்டைப் பெற்றது.

தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான ஆக்‌ஷன் திரைப்படமாக இன்றளவிலும் பேசப்படும் 'கேப்டன் பிரபாகரன்' குறித்து சில பிரத்யேகத் தகவல்களைத் தெரிந்து கொள்ள, படத்தின் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியிடம், பிபிசி தமிழ் சார்பாகப் பேசினோம். மறுவெளியீடுக்கு கிடைத்திருக்கும் சிறப்பான வரவேற்பு தந்த மகிழ்ச்சியில் 'கேப்டன் பிரபாகரன்' குறித்த பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி.

தயாரிப்பாளர் ராவுத்தருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதா?

விஜயகாந்த், கேப்டன் பிரபாகரன், செல்வமணி, விஜயகாந்த் பிறந்தநாள்

பட மூலாதாரம், FACEBOOK/VIJAYAKANT

இவ்வளவு வருடங்கள் கழித்தும் இந்தத் திரைப்படம் மக்களால் கொண்டாடப்படுகிறது என்பது ஒரு படைப்பாளியாக எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த வெற்றிக்கு, தயாரிப்பாளர் ராவுத்தரும், நாயகன் விஜயகாந்தும், எனக்குக் கொடுத்த ஒத்துழைப்புதான் காரணம். ஆனால் ஆரம்பத்தில் எனக்கும் தயாரிப்பாளருக்கும் சிறிய கருத்து வேறுபாடு இருந்தது

படத்தின் வேலைகள் ஆரம்பமானவுடன், எனக்கு மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை, படப்பிடிப்புக்கான இடங்களை இறுதி செய்ய அவகாசம் வேண்டும் எனக் கேட்டேன். அதற்கே இவ்வளவு நாட்களா என்று கேட்டார் தயாரிப்பாளர். வீரப்பன் தொடர்பான தகவல்களை சேகரிக்கவும், படப்பிடிப்புக்குச் சரியான இடங்களைப் பார்க்கவும் இந்தக் கால நேரம் தேவை என்றேன். ஒப்புக் கொண்டார். ஒரு புதிய ஜீப் வாங்கிக் கொடுத்தார். அதன் ஓட்டுநர், என் உதவியாளர், ஒரு புகைப்படக் கலைஞர் என நான்கு பேரும் புறப்பட்டுச் சென்றோம். மனம் போன போக்கில், தென்னிந்தியாவில் இருக்கும் அத்தனை வனப் பகுதிகளிலும் சுற்றித் திரிந்தோம். நாங்கள் செல்லாத பாதையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்தது அந்தப் பயணம். சில இடங்களுக்கு நடந்தும் சென்றோம்.

'எமரால்ட் ஃபாரஸ்ட்' என்ற ஆங்கில திரைப்படத்தை, அமேசான் காடுகளில் படம் பிடித்திருப்பார்கள். அடர்த்தியான வனப் பகுதி, ஒரு மரத்தின் அடிப்பகுதியே 2 மீட்டர் அளவு இருக்கும் இடங்களிலெல்லாம் காட்சிகள் அமைந்திருந்தன. அந்தத் திரைப்படம் தந்த தாக்கத்தில் தான், அதைப் போலவே ஒரு இடத்தை நான் தேடிக் கொண்டே இருந்தேன். அப்போதுதான் கேரளாவில் சாலக்குடிக்கு மேல் ஒரு இடம், அதிரப்பள்ளி, இடுக்கி பகுதிக்குக் கீழே ஒரு ஊர் எனப் பல இடங்களைக் கண்டறிந்தேன். அந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்த முதலில் தயாரிப்பாளர் சரி என்று சொன்னார்.

விஜயகாந்த், கேப்டன் பிரபாகரன், செல்வமணி, விஜயகாந்த் பிறந்தநாள்

பட மூலாதாரம், FACEBOOK/VIJAYAKANT

ஆனால் அங்கு முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது, தொடர்ந்து சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டன. படக்குழுவைச் சேர்ந்த பணியாளர்கள் சிலர் இறந்து போனார்கள், வண்டி விபத்தில் ஒருவர் இறந்து போனார், குதிரை ஒன்று இறந்து போனது. இதெல்லாம் நல்ல சகுனங்கள் அல்ல என்று ராவுத்தர் நம்பினார். அவருடன் இருப்பவர்களும் அதை ஆமோதிக்க உடனே படப்பிடிப்பை நிறுத்தச் சொன்னார். விஜயகாந்த், நாம் சென்னைக்கு சென்ற பிறகு அவரைப் பார்த்து சம்மதிக்க வைப்போம் என்று சொன்னதால், அனைவரும் புறப்பட்டோம். சென்னையில் சில காட்சிகளின் படப்பிடிப்பை நடத்தினோம்.

ஆனால் விஜயகாந்த் எவ்வளவு சொல்லியும் ராவுத்தர், மீண்டும் கேரளாவுக்கு செல்ல முடியாது என்று மறுத்துவிட்டார். அது திரைப்படத்துக்கு மிக முக்கியமான இடம் என்று சொல்லியும் அவர் சம்மதிக்கவில்லை. அதனால் முண்டந்துறை பகுதியில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்து, அங்கு சென்றோம். என் அதிர்ஷ்டம், அங்கு ஓயாமல் அடைமழை பெய்து கொண்டிருந்தது. மழை நின்றாலும் படப்பிடிப்பு நடத்த முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கியிருந்தது. படப்பிடிப்பு நிற்கவே கூடாது என்று நினைப்பார் விஜயகாந்த். எனவே அவரிடம் மெதுவாகச் சென்று, மீண்டும் கேரளா செல்லலாம் என்றேன். அவரும், இப்போது தயாரிப்பாளரிடம் சொல்லிக் கொள்ள வேண்டாம், நாம் சென்றுவிடுவோம் என்று கூறவே, எல்லோரும் மீண்டும் கேரளா சென்றோம்.

தன் பேச்சை மீறி விஜயகாந்திடம் பேசிவிட்டு இப்படி நடந்ததால் ராவுத்தருக்கு என் மேல் சிறிய வருத்தம். சில நாட்கள் என்னோட பேசாமல் கூட இருந்தார். ஆனால் அந்த மன வருத்தம் எல்லாம் பிரசவ வலி போல தான். எங்கள் படைப்பு சிறப்பாக வர வேண்டும் என்பதற்காகவே. எனவே இந்தப் பிரச்னையை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

100வது திரைப்படம் ஓடாது என்ற சினிமா சென்டிமென்ட் பற்றி...

விஜயகாந்த், கேப்டன் பிரபாகரன், செல்வமணி, விஜயகாந்த் பிறந்தநாள்

பட மூலாதாரம், I.V CINE PRODUCTIONS

படக்குறிப்பு, ஆனால் விஜயகாந்த் எவ்வளவு சொல்லியும் ராவுத்தர், மீண்டும் கேரளாவுக்கு செல்ல முடியாது என்று மறுத்துவிட்டார்.

அன்றைய காலகட்டத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 'ஸ்ரீ ராகவேந்திரா', கமல்ஹாசனின் 'ராஜ பார்வை' என அப்போது முன்னணியில் இருந்த இரண்டு நடிகர்களின் 100வது திரைப்படங்களே ஓடவில்லை. இதனால் கேப்டனின் 100வது படமான 'கேப்டன் பிரபாகரன்' மீதும் ஒரு வகையில் அந்த அழுத்தம் இருந்தது.

ஒரு இயக்குநரின் முதல் படம் ஹிட் ஆனால் 2வது படம் ஓடாது என்கிற ஒரு நம்பிக்கையும் துறையில் இருந்தது. இரண்டும் சேர்ந்து எனக்கு லேசான அச்சத்தைத் தந்தன. ஆனால் 'புலன் விசாரணை'யின் வெற்றியால், தயாரிப்பு தரப்பு, படக்குழு என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தது. அந்த நம்பிக்கை, என் அச்சத்தைப் போக்கியது. படமும் வெற்றி பெற்றது.

ராசியில்லாத நடிகையை நடிக்க வைக்கலாமா?

படத்தின் நடிகர்கள் தேர்வு என்று வரும்போது பெரும்பாலும் ஆண் நடிகர்களே இருந்தனர். ஒரு பெண் கதாபாத்திரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து முக்கியமான பெண் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கினேன். அதில் நடிக்க யார் வந்தாலும் முக்கியமான நிபந்தனை, 90 நாட்கள் படப்பிடிப்பு முடியும் வரை அங்கேயே இருக்க வேண்டும் என்பதே. ஆரம்பத்தில் சரண்யா (பொன்வண்னன்) அவர்களை ஒப்பந்தம் செய்தோம். இரண்டு நாட்கள் அவரை வைத்து படப்பிடிப்பும் நடந்தது. அவருக்கு அந்தச் சூழல் அவ்வளவு சவுகரியமாக இல்லை, மேலும் ஒரு உடை அணிவது தொடர்பாக அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு.

ஒரு நாள் வயிறு வலி என்று கிளம்பிச் சென்றவர், மீண்டும் வரவே இல்லை. அவருக்கு மாற்றாக யாரை நடிக்க வைப்பது என்று யோசிக்கும் போது ரம்யா கிருஷ்ணனின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. அப்போது ஒரு தெலுங்கு தயாரிப்பாளர், ரம்யா கிருஷ்ணன் ராசியில்லாத நடிகை. அவர் நடித்தால் படம் ஓடாது. ஏற்னவே 100வது படம் என்கிற சென்டிமென்ட் வேறு உங்களுக்கு இருக்கிறது. எனவே அவர் வேண்டாம் என்று உறுதியாகச் சொன்னார். இதனால் எங்கள் தரப்பிலும் ரம்யா கிருஷ்ணன் வேண்டாம் என்று முதலில் கூறிவிட்டனர்.

ஆனால் எங்களுக்கோ உடனே படப்பிடிப்பில் நடிக்க ஒரு நடிகை வேண்டும், அதுவும் தொடர்ச்சியாக சில மாதங்களுக்கு. இதனால் வேறு வழியே இல்லாமல் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்தோம். அன்றைய சூழலில் ரம்யா கிருஷ்ணனுக்கு நடிக்க அந்தப் படம் தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் என்னைப் பொருத்தவரை, எங்கள் திரைப்படத்தின் வெற்றிக்கு அவரும் மிக முக்கியமான காரணமாக இருந்தார்.

விஜயகாந்த், கேப்டன் பிரபாகரன், செல்வமணி, விஜயகாந்த் பிறந்தநாள்

பட மூலாதாரம், I.V CINE PRODUCTIONS

நாயகன் 35 நிமிடங்கள் வரை கதைக்குள் வராதது பற்றி...

விஜயகாந்தின் அறிமுகமே படம் ஆரம்பித்த 34-35வது நிமிடத்தில் தான் வரும். அது எனக்குச் சவாலாகத் தான் இருந்தது. ஏனென்றால் 100வது படம் என்பதால், ஆரம்பத்திலேயே அவரது ரசிகர்களுக்காகச் சில விஷயங்களைச் செய்யலாம் என்று நினைத்திருந்தார்கள். ஆனால் முதலில் நாங்கள் ஒரு பிரதி தயார் செய்திருந்தோம். அதன்படி, 50வது நிமிடத்தில் தான் நாயகன் கதாபாத்திரம் வருவார். சரத்குமார் கதாபாத்திரம் வனத்துறை அதிகாரியாக இருந்தாலும், வனவிலங்கு புகைப்படக் கலையிலும் ஆர்வமாக இருப்பார். அவர் காடுகளைச் சுற்றும்போது ஒரு அழகானப் பழங்குடியினப் பெண்ணைச் சந்திப்பார். அவரைப் பின் தொடர்ந்து பல புகைப்படங்கள் எடுத்து, நட்பாகி, இருவரும் காதலிப்பார்கள்.

இதனிடையே வில்லன் கதாபாத்திரத்தை அவர் தேடுவதும் இருக்கும். இதன் பின் வில்லனிடம் சரத்குமார் கதாபாத்திரம் சிக்குவது, இறப்பது, அவர் குடும்பம் சென்னை வருவது, விஜயகாந்தை சந்திப்பது எனக் கதை தொடரும். ஆனால் இந்த முதல் பிரதியின் நீளம் 23,500 அடி. அதாவது ஏறக்குறைய 4 மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடக் கூடியது. இரண்டரை மணி நேரத்துக்கு மேல் திரைப்படம் இருக்கவே கூடாது என ராவுத்தர் கண்டிப்பாகக் கூறிவிட்டார். எனவே பல காட்சிகளை நீக்கி, தற்போது இருக்கும் நீளத்துக்கு படம் தொகுக்கப்பட்டது.

இதில் 35வது நிமிடத்தில் விஜயகாந்த் கதாபாத்திரத்தின் அறிமுகம் நடக்கும். இதற்கு முன்னால் 'பாசமுள்ள பாண்டியரே...' பாடல் வரும்போது, படத்தின் டைட்டில் வரும்போது, சரத்குமாருக்கு ஆபத்து ஏற்படும்போது என 3 இடங்களில் நாயகன் வந்துவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் வர மாட்டார்.

இதற்குப் பிறகு நாயகனுக்கு சரியான அறிமுகக் காட்சி இல்லையென்றால் கண்டிப்பாக அது எனக்கு வினையாக முடியும். என்னால் திரையரங்குக்குள் நுழையவே முடியாது. ரசிகர்கள் விட மாட்டார்கள். ஆனால் நான் வைத்திருந்த காவல் நிலையும் தொடர்பான காட்சிகளும், நாயகனின் அறிமுகமும் நல்ல வரவேற்பைப் பெற்றன. முதல் பாதியில் 5-6 காட்சிகளே விஜயகாந்த் வந்தாலும், படத்தின் பிரம்மாண்டம் அதையெல்லாம் மறக்கடிக்க வைத்தது.

படத்தில் 7,000 அடி நீக்கப்பட்டது பற்றி...

23,500அடி திரைப்படத்தைக் குறைத்தோம் என்று குறிப்பிட்டேன் இல்லையா. இதில் சில முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகளும் நீக்கப்பட்டன. விஜயகாந்த் கேப்டனாக இருக்க, அவர் தலைமையில் சில கமாண்டோக்களுடன், வில்லனை பிடிக்க காட்டுப் பகுதிக்கு வருவார்கள். வில்லனுக்கு தெரியாமல் வேறு வழியில் சுற்றி வந்து தாக்குவார்கள் என்பது போலவே கதை அமைத்திருந்தேன். இதில் கார் துரத்தல், 2-3 சண்டைக் காட்சிகள், வன விலங்கை இவர்கள் எதிர்கொள்வது எனக் கிட்டத்தட்ட 7,000 அடிக்கு பலவிதமான ஆக்‌ஷன் காட்சிகளைப் படம்பிடித்து வைத்திருந்தேன்.

அந்த பிரமாண்டமான காட்சிகளே தனியாக ஒரு படம் போல இருக்கும். அதையெல்லாம் நீக்க வேண்டிய கட்டாயம் வரும்போது, இந்தக் காட்சிகளையெல்லாம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், அடுத்த திரைப்படத்தில் உதவும், நான் இயக்கவில்லை என்றால் கூட உங்களின் அடுத்த தயாரிப்பில் பயன்படுத்துங்கள், என் பெயர் கூட போட வேண்டாம் என்றெல்லாம் தயாரிப்பாளரிடம் கூறினேன். ஆனால் அதன் மதிப்பு தெரியாமல், பாதுகாக்காமல் விட்டுவிட்டனர். இன்று இருந்தாலும் அதன் மதிப்பு பல கோடிகளுக்கு சமம் என்பேன். ஏனென்றால் அப்போதே கோடிகளில் செலவு செய்து தான் எடுத்திருந்தோம்.

விஜயகாந்த் கொடுத்த ஊக்கம் பற்றி...

விஜயகாந்த், கேப்டன் பிரபாகரன், செல்வமணி, விஜயகாந்த் பிறந்தநாள்

பட மூலாதாரம், I.V CINE PRODUCTIONS

படக்குறிப்பு, விஜயகாந்துடன் இணைந்த இந்த இரண்டாவது படத்திலும் அவருக்கென தனியாக டூயட் பாடல் கிடையாது, காதல் காட்சிகள் கிடையாது

அப்போது திருமணமாகி, குழந்தை இருக்கும் நாயகன் கதாபாத்திரம் என்பது அரிது. ஆனால் விஜயகாந்த் அந்த விஷயத்திலும் தயங்கவில்லை. ''புலன் விசாரணை' திரைப்படத்தில், வயது வந்த பெண்ணுக்கு அப்பாவாக நடித்திருப்பார். இது குறித்து சிலர் விமர்சனம் பேச, அப்போதே தயாரிப்பாளர், இந்தக் கதாபாத்திரத்தை தங்கையாக மாற்றலாமா என்று கேட்டார். ஆனால் விஜயகாந்த், அது வழக்கமானதாக இருக்கும், இதுவே கதைக்கு ஏற்றவாரு உணர்ச்சிகரமாக இருக்கும். மற்ற திரைப்படங்களில் இரண்டு நாயகிகள், பாடல்கள் எல்லாம் இருக்கும்போது, இந்தத் திரைப்படத்தில் இப்படியே இருக்கட்டும் என்றார்.

அவருடன் இணைந்த இந்த இரண்டாவது படத்திலும் அவருக்கென தனியாக டூயட் பாடல் கிடையாது, காதல் காட்சிகள் கிடையாது, வழக்கமான நாயகியாக அல்லாமல், நாயகனின் மனைவி கதாபாத்திரம் தான் என ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன். அவரும் எதுவும் ஆட்சேபிக்கவில்லை.

படப்பிடிப்பில் தொடர்ந்த ஆபத்துகள்...

நான் ஏற்கனவே சொன்ன விபத்துகள் அல்லாமல், இந்தப் படப்பிடிப்பு முடியும் வரை பல்வேறு விதமான ஆபத்துகளை எங்களில் பலர் சந்தித்தோம். உயிருக்கே ஆபத்தான சூழல்களையும் எதிர்கொண்டோம். காட்டுக்குள் நடந்த படப்பிடிப்பின் போது கேப்டன் விஜயகாந்த் 2-3 முறை மரணத்தின் வாயிலுக்குச் சென்று வந்தார்.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, திடீரென அணை திறக்கப்பட்டது. அது எங்களுக்குத் தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாக நீரின் நிறம் மாறியது. ஒருவர் தூரத்திலிருந்து நீண்ட நேரம் கத்திக் கொண்டிருந்தார். அவர் படப்பிடிப்பைப் பார்த்துக் கத்துகிறார் என்று நினைத்தோம். ஆனால் அவர் அவசரஅவசரமாக எங்களிடம் ஓடி வந்து, அணை திறக்கப்பட்டுள்ளது. உடனே புறப்படுங்கள் என்று எச்சரித்தார்.

விஜயகாந்த், கேப்டன் பிரபாகரன், செல்வமணி, விஜயகாந்த் பிறந்தநாள்

பட மூலாதாரம், I.V CINE PRODUCTIONS

படக்குறிப்பு, முதல் நாள் திரையரங்கில் அந்தக் காட்சிக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து அனைவரும் மிரண்டுவிட்டோம்.

கிரேனிலிருந்து கேமராவை இறக்குவதற்கு சில நிமிடங்களுக்குள் இடுப்பளவு தண்ணீர் வேகமாக எங்களைச் சூழந்தது. வேகமாகக் கேமராவை கிரேனிலிருந்து பிரித்து எடுத்துக் கொண்டு ஓடினோம்.

ஆனால் அந்த நீரின் வேகத்தில் கிரேன் சில கிலோமீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டது. அது வெறும் நீர்ப்பகுதி அல்ல. பல பாறைகள் நிறைந்த வழி. அடித்துச் செல்லப்பட்ட கிரேன், பாறைகளில் மோதி, வளைந்த நிலையில்தான் எங்களுக்குக் கிடைத்தது.

நாங்கள் யாராவது மாட்டியிருந்தால் உயிருக்கே ஆபத்தாக மாறியிருக்கும். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியே தெரியாத அளவுக்கு மேலும், கீழும் சம நிலை ஆகும் அளவுக்கு தண்ணீர் அளவு இருந்தது.

கடைசி நீதிமன்றக் காட்சியை நீக்கத் தயாராக இருந்தோம்

படத்தின் இறுதிக் காட்சியைப் படம்பிடிக்கும் போது எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. இந்த காலகட்டத்தில், 'பராசக்தி' படத்தில் வருவதைப் போல ஒரு நீளமான நீதிமன்றக் காட்சியை ரசிகர்கள் ஏற்பார்களா என்று யோசித்தேன். வில்லனை நாயகன் கைது செய்ததும் கதை முடிந்தது போல ஆகிவிடுமே, அதன் பிறகு 2000 அடி நீளக் காட்சிகளை ரசிகர்கள் பார்ப்பார்களா என்கிற சந்தேகம் இருந்தது.

நாம் இதை தனி ரீலாக எடுத்து வைப்போம். மொத்தமாகப் பார்க்கும்போது, இந்த நீதிமன்றக் காட்சிகள் தேவையில்லை என்று தோன்றினால், அப்படியே நீக்கிவிடலாம். நீங்கள் வில்லனை தோற்கடிக்கும் இடத்திலேயே படம் முடிந்தது போன்ற உணர்வு கிடைக்கும். அங்கே முடித்துவிடலாம் என்று விஜயகாந்திடம் கூறினேன். முதல் பிரதியைப் பார்க்கும் போது கூட சந்தேகம் தொடர்ந்தது.

ஆனால் முதல் நாள் திரையரங்கில் அந்தக் காட்சிக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து அனைவரும் மிரண்டுவிட்டோம். ஒவ்வொரு வசனமும் அனல் தெறித்தது. வீரப்பனைத் தாண்டி சமூகத்தில் எவ்வளவு குற்றவாளிகள் உள்ளனர் என்பது எனது சிறிய ஆய்வில் தெரிய வந்தது.

விஜயகாந்த், கேப்டன் பிரபாகரன், செல்வமணி, விஜயகாந்த் பிறந்தநாள்

பட மூலாதாரம், I.V CINE PRODUCTIONS

படக்குறிப்பு, இன்றைக்கு இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்றாலும் ஒரு விஜயகாந்த், ஒரு ராவுத்தர் இல்லையென்றால் முடியாது.

பல அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு இதில் தொடர்பு உண்டு என்பதை என்னிடம் பலர் அப்போது தெரிவித்தனர். அவற்றையெல்லாம் வெளிப்படையாக வெளியே பேச முடியாத நிலை. வசனமாக வைத்திருந்தேன். எதிர்காலத்தில் வீரப்பனைப் பிடித்தாலும் உயிருடன் பிடிக்க மாட்டார்கள் என்று நான் யூகித்தேன். பல ஆண்டுகள் கழித்து அதுதான் நடந்தது.

எங்களது ஒட்டுமொத்த படக்குழுவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தந்த கடின உழைப்பு, ஈடுபாடு ஆகியவைதான் படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தன. அதுதான் இன்றும் 'கேப்டன் பிரபாகரன்' கொண்டாடப்படுவதன் காரணமும் கூட.

இன்றைக்கு இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்றாலும் ஒரு விஜயகாந்த், ஒரு ராவுத்தர் இல்லையென்றால் முடியாது. பலர் எங்களைப் பார்த்து சந்தேகப்படும் போது கூட விஜயகாந்த அவர்கள் ஒரு வார்த்தை எங்களைக் கேள்வி கேட்டதில்லை. ராவுத்தரும், 'விஜயகாந்த் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார், கவலை வேண்டாம்' என்று உறுதுணையாக நின்றார். அவர்கள் இருவருக்கும் என்றென்றும் நான் கடமைபட்டவனாக இருப்பேன்".

இவ்வாறு உணர்ச்சிபொங்க பேசி முடித்தார் ஆர்.கே.செல்வமணி

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2eny4yy9d3o

'இலங்கைத் தமிழர் என்றாலே ஈழத்தமிழர் மட்டும்தானா?' - இந்திய திரைப்படங்களால் என்ன சர்ச்சை?

4 weeks 2 days ago

இந்தியத் திரைப்படங்களில் ஈழத்தமிழர் சித்தரிப்பு

படக்குறிப்பு, இந்தியத் திரைப்படங்களில் ஈழத்தமிழர்கள் குறித்த சித்தரிப்புகள் அவ்வபோது சர்ச்சையாகி வருகின்றன.

கட்டுரை தகவல்

  • சிராஜ்

  • பிபிசி தமிழ்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • 16 ஆகஸ்ட் 2025, 08:00 GMT

    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'கிங்டம்' எனும் தெலுங்கு திரைப்படத்தில், இலங்கை தமிழர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாட்டில் சர்ச்சை எழுந்தது.

'கிங்டம்' திரைப்படத்தின் பிரதான வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் 'முருகன்'. இலங்கையின் ஒரு தீவையும் அதில் வாழும் பழங்குடி மக்களையும் கட்டுப்படுத்தும் ஒரு தமிழ் குடும்பத்தின் வாரிசாக இந்த 'முருகன்' கதாபாத்திரம் இருக்கும்.

இந்த பழங்குடி மக்கள் 1920இல் இந்தியாவிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) குடிபெயர்ந்து இலங்கை வந்தவர்கள் என்று காட்டப்படும். மிகவும் கொடூரமான வில்லனாக சித்தரிக்கப்படும் இந்த முருகனைக் கொன்று, தன் பழங்குடி மக்களை கதாநாயகன் எப்படி மீட்கிறான் என்பதே கிங்டம் படத்தின் கதை.

'கிங்டம்' திரைப்படம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து அதன் தயாரிப்பு நிறுவனம், "தமிழ் மக்களின் உணர்வுகள் ஏதேனும் புண்பட்டு இருந்தால் மிகவும் வருந்துகிறோம்" என்று அறிக்கை வெளியிட்டது.

இந்தியத் திரைப்படங்களில் இலங்கைத் தமிழர்கள் குறித்த சித்தரிப்புகள் சர்ச்சையாவது இது முதல்முறையல்ல.

இந்தியத் திரைப்படங்களில் ஈழத்தமிழர் சித்தரிப்பு

பட மூலாதாரம், YOUTUBE

படக்குறிப்பு, ஜாட் திரைப்படத்தின் வில்லன் முத்துவேல் கரிகாலனாக பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா நடித்திருந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'ஜாட்' எனும் பாலிவுட் திரைப்படத்திலும் வில்லன் இலங்கை தமிழராக சித்தரிக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்தது.

'ஜாட்' திரைப்படத்தின்படி, "இலங்கையைச் சேர்ந்த முத்துவேல் கரிகாலன் 'ஜாஃப்னா டைகர் ஃபோர்ஸ் என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர், சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபர்'. 2009 ஈழப்போருக்குப் பிறகு தனக்கு கிடைத்த பெரும் அளவிலான தங்கத்தோடு இந்தியா சென்று, ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு கிராமத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவனை வீழ்த்தி, அந்த கிராம மக்களை ஒரு இந்திய ராணுவ வீரர் எப்படி மீட்கிறார்" என்பதே கதை.

"தமிழ் திரைப்படங்களில் கூட இலங்கைத் தமிழர் குறித்து முறையான சித்தரிப்புகள் இல்லை, பின்னர் எப்படி பிறமொழி இயக்குநர்களிடம் அதை எதிர்பார்க்க முடியும்" என்கிறார் எழுத்தாளர், தமிழ் திரைப்பட வரலாற்றாய்வாளர் தியடோர் பாஸ்கர்.

"இலங்கை தமிழர்கள் என்றாலே, ஈழத் தமிழர்கள் மட்டும் தான் என்று திரைப்படத் துறையினர் மட்டுமின்றி, சாமானிய மக்கள் கூட நினைக்கின்றனர். மலையகத் தமிழர்கள் போல, அங்கு வேறு சில பிரிவுகள் இருக்கின்றன. தமிழில் 2002இல் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் கூட ஈழத்தமிழர் வாழ்க்கையை சரியாகச் சித்தரிக்காமல், விடுதலைப் புலிகளோடு தொடர்புபடுத்தியே அவர்களை சித்தரித்தது. இனிவரும் படங்களிலாவது ஈழப்போர், விடுதலைப் புலிகள் போன்ற விஷயங்களைக் கடந்து அவர்களை நாம் அணுக வேண்டும்." என்கிறார் தியடோர் பாஸ்கர்.

இந்தியத் திரைப்படங்களில் ஈழத்தமிழர் சித்தரிப்பு

பட மூலாதாரம், YOUTUBE

படக்குறிப்பு, 'ஈழம்' குறித்த சித்தரிப்புக்காக கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் எழுந்தன.

இலங்கைத் தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள்?

இலங்கை மலையகத் தமிழரும், சில இந்திய திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவருமான நாராயணன் ரொஹான், ''போர் நடைபெற்ற காலத்திலிருந்து இன்று வரை ஈழத் தமிழர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்னைகளை, இந்திய சினிமாவிலுள்ளவர்கள் நேரடியாகப் பார்த்ததில்லை. செய்திகளில் பார்க்கும், படிக்கும் அல்லது யாராவது சொல்கின்ற விஷயங்களை வைத்துக் கொண்டு இப்படி தான் ஈழத் தமிழர்கள் இருப்பார்கள் என்ற எண்ணம் அவர்கள் மனதில் உள்ளது." என்கிறார் நாராயணன்.

"முக்கியமான விஷயம் என்னவென்றால், ஈழத் தமிழர்களை பரிதாபமாக சித்தரிப்பது தான். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை, அடக்குமுறையிலேயே இன்றும் அவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்ற எண்ணத்திலேயே பார்க்கின்றார்கள். போர் முடிவடைந்த பின்னர் ஈழத் தமிழர்கள் ஓரளவு நல்ல நிலைமையில் வாழ்ந்து வருகின்றார்கள்.'' என அவர் கூறுகிறார்.

இலங்கையின் உள்நாட்டுப் போர் 2009இல் முடிவுக்கு வந்தது என்பதைக் கருத்தில் கொண்டு, ஈழத்தமிழர்கள் குறித்த இந்திய திரைப்படங்களை 2009க்கு முன்/பின் என பிரித்துப் பார்க்கலாம். 2009க்கு முன்பு வரை தமிழில் தான் ஈழம் குறித்த படங்கள் ஒப்பீட்டளவில் அதிகம். புன்னகை மன்னன் (1986), உனக்காகப் பிறந்தேன் (1992), தெனாலி (2000), நந்தா (2001), கன்னத்தில் முத்தமிட்டால் (2002), ஆணிவேர் (2006), ராமேஸ்வரம் (2007) ஆகிய திரைப்படங்களில் ஈழத்தமிழர்கள் பிரதான கதாபாத்திரங்களில் இடம்பெற்றிருந்தனர்.

குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம், 6 தேசிய விருதுகளை வென்றது. ஆனால், ஈழத்தமிழர்கள் குறித்த சித்தரிப்புக்காக மட்டுமல்லாமல், ஈழப்போர் மற்றும் விடுதலை புலிகள் இயக்கம் குறித்த காட்சிகளுக்காகவும் இப்படத்திற்கு எதிர்ப்புகள் எழுந்தன.

2009க்கு முன் வெளியான 'தி டெர்ரரிஸ்ட்', 'காற்றுக்கென்ன வேலி', 'குற்றப்பத்திரிக்கை' போன்ற தமிழ் திரைப்படங்களும், 'சயனைடு', 'மிஷன் 90 டேஸ்' போன்ற பிற இந்திய மொழி திரைப்படங்களும் விடுதலைப் புலிகள் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை குறித்துப் பேசின.

"கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் ஈழத்தமிழர்கள் குறித்த கதை என்று சொல்லிவிட்டு, மலைகளையும், அருவிகளையும் கொண்ட ஒரு நிலப்பரப்பை காண்பித்தார்கள். யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதிகளில் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறேன். அதுபோன்ற ஒரு நிலப்பரப்பே அங்கு கிடையாது." என்கிறார் 'ஆணிவேர்' (2006) திரைப்படத்தின் இயக்குநர் ஜான் மகேந்திரன்.

"ஆணிவேர் திரைப்படம் ஈழத்தில் எடுக்கப்பட்டது. படத்தில் நடித்தவர்கள் கூட அங்கு வசித்தவர்களே. அதனால் தான் ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சமூகங்களிடம் அது நல்ல வரவேற்பைப் பெற்றது."

"ஈழத்தமிழர்கள் தொடர்புடைய படம் என்றால் கண்டிப்பாக இலங்கைக்குச் சென்று பார்த்துவிட்டு வர வேண்டும் என்று அவசியமில்லை, ஆனால் குறைந்தபட்சம் இணையத்திலாவது அடிப்படை ஆராய்ச்சிகளை செய்துகொள்ள வேண்டும் அல்லவா?" என்று ஜான் மகேந்திரன் கேள்வியெழுப்புகிறார்.

'கிங்டம்' படம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

"தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. இந்தக் கதை முற்றிலும் கற்பனையானது மற்றும் படத்தின் 'பொறுப்புத் துறப்பு பகுதியில்' இது குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால், அந்த சம்பவத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். படத்தை ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்." என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியத் திரைப்படங்களில் ஈழத்தமிழர் சித்தரிப்பு

பட மூலாதாரம், JOHN MAHENDRAN

படக்குறிப்பு, 'ஆணிவேர் திரைப்படம் ஈழத்தில் எடுக்கப்பட்டது. படத்தில் நடித்தவர்கள் கூட அங்கு வசித்தவர்களே' என்கிறார் திரைப்படத்தின் இயக்குநர் ஜான் மகேந்திரன்

இலங்கை உள்நாட்டு போருக்குப் பிறகு வெளியான இந்தியத் திரைப்படங்கள்

2009க்குப் பிறகு வெளியான சில திரைப்படங்கள் ஈழப்போரின் தாக்கம் குறித்தும், ஈழத்தமிழர்களுக்கு அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் பேசின. உதாரணமாக, ஆண்டவன் கட்டளை (2016), ஜகமே தந்திரம் (2021) போன்ற திரைப்படங்களைச் சொல்லலாம்.

இந்த காலக்கட்டத்தில், ராஜீவ் காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட மெட்ராஸ் கஃபே திரைப்படம் (2013) மற்றும் 2021இல் வெளியான ஃபேமிலி மேன் இணையத் தொடரின் இரண்டாம் பாகத்திற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்தது. ஆனால், இவை விடுதலைப் புலிகள் குறித்த சித்தரிப்புக்காக சர்ச்சைகளை எதிர்கொண்டன.

மெட்ராஸ் கஃபே திரைப்பட சர்ச்சையின் போது பிபிசியிடம் பேசிய அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரும், கதாநாயகனுமான ஜான் ஆபிரகாம், "இது தமிழர்களுக்கு ஆதரவான படம் என்று நான் நம்புகிறேன், யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவதற்காக அல்லது சர்ச்சையை ஏற்படுத்தி விளம்பரம் பெறுவதற்காக படத்தை உருவாக்கவில்லை," என்று தெரிவித்திருந்தார்.

இந்தியத் திரைப்படங்களில் ஈழத்தமிழர் சித்தரிப்பு

பட மூலாதாரம், YOUTUBE

படக்குறிப்பு, 'மெட்ராஸ் கஃபே தமிழர்களுக்கு ஆதரவான படம்' என தான் நம்புவதாக, படத்தின் தயாரிப்பாளர், கதாநாயகன் ஜான் ஆபிரகாம் கூறியிருந்தார்.

'ஈழத் தமிழர்களை சித்தரிக்கும் விதம் கவலையளிக்கிறது'

"இலங்கை குறித்து இதுவரை வெளியான இந்தியத் திரைப்படங்களில் இருக்கும் ஒற்றுமை என்பது இவை ஈழத்தமிழர்கள் அல்லது ஈழம் குறித்து மட்டுமே பேசுகின்றன. இலங்கை தமிழர்கள் என்றாலே, ஈழத் தமிழர்கள் மட்டும் தான் என்ற பிம்பம் இந்தியாவில் இருக்கிறது" என்று கூறுகிறார் நாராயணன் ரொஹான்.

''ஈழத் தமிழர்கள் வேறு, மலையகத் தமிழர்கள் வேறு. அதுமட்டுமின்றி, நிறைய வகையான தமிழ் உச்சரிப்புகளை பேசக்கூடிய தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதும் இந்தியாவிலுள்ள பலருக்கு தெரியாது. இலங்கை என்றாலே யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தப்படும் தமிழ் உச்சரிப்பை தான் பேசுவோம் என்ற பிம்பமும் உள்ளது." என்கிறார்.

இந்திய சினிமாக்களில் ஈழத் தமிழர்களை சித்தரிக்கும் விதம் பெரும் கவலையளிப்பதாக ஈழ எழுத்தாளர் தீபச் செல்வன் கூறுகிறார்.

''ஈழத் தமிழர்களை மோசமாக சித்தரிக்கின்ற, வன்முறை ஈடுபாடு கொண்டவர்களைப் போன்று சித்தரிக்கின்ற விதமாக இந்தியாவில் சில படங்கள் எடுக்கப்படுகின்றன. விடுதலைப் புலி ஆதரவாளர்களாக இந்திய சினிமாக்களில் ஈழத் தமிழர்கள் காட்டப்படுகிறார்கள். அதேசமயம், விடுதலைப் புலிகளை தவறான விதத்தில் சித்தரிக்கும் வகையிலும் அந்த படங்கள் அமைந்திருக்கும். அப்படியிருக்க, அது அடுத்த தலைமுறையைப் பாதிக்கிறது. திரைப்படங்களில் விடுதலைப் புலிகளை பற்றி பேச வேண்டிய தேவை தற்போது கிடையாது" என்று கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், ''அந்த அமைப்பு 2009ஆம் ஆண்டுடன் மௌனிக்கப்பட்ட அமைப்பாக காணப்படுகின்றது. இன்று இருக்கக் கூடியவர்கள் சாதாரணமான மக்கள். அந்த இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தவர்கள் கூட சாமானிய வாழ்க்கைக்கு திரும்பிவிட்டார்கள். மீண்டும் அந்த காலக்கட்டத்திற்கு போய் அவர்களை பிழையாக காட்ட வேண்டிய தேவை இல்லை." என்று கூறுகிறார்.

"தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட பிரச்னைகள், பொருளாதார நெருடிக்கடி சார்ந்த பிரச்னைகள், உலக நாடுகளை நோக்கி தமிழர்கள் பயணிக்க கூடிய கதைகள் எல்லாம் இருக்கின்றது. இப்படியான கதைகளை பற்றி எல்லாம் பேசலாம். பழைய விடயங்களை தேடி, அவற்றைப் பிழையாக சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இன்றைய தலைமுறை, இப்படியான திரைப்படங்களை விரும்புவதில்லை, அது அவர்கள் மீதான எதிர்மறையான பிம்பத்திற்கு வழிவகுக்கிறது.'' என தீபச் செல்வன் கூறுகின்றார்.

இந்திய இயக்குநர்கள் முறையான ஆராய்ச்சிக்குப் பிறகு, இலங்கையின் உண்மை வரலாறு மற்றும் தற்போதைய நிலவரம் அறிந்து திரைப்படங்கள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறார் தீபச் செல்வன்.

இலங்கையில் இந்தியத் திரைப்படங்களின் படப்பிடிப்பு

இந்தியத் திரைப்படங்களில் ஈழத்தமிழர் சித்தரிப்பு

படக்குறிப்பு, இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதத் மாதிஉல்வௌ

இலங்கையில் இந்திய திரைப்படங்களுக்கான படப்பிடிப்புகளை நிர்வகித்து வரும் நிறுவனமான என்.ஈ ப்ரொடக்ஷ்ன் நிறுவனத்தின் தலைவர் ஷியா உல் ஹசன், "கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலிருந்தே ஈழத்தமிழர்கள் குறித்த தவறான சித்தரிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. இங்கு படமாக்கப்படுகின்ற திரைப்படங்களுக்கான திரைக்கதை, திரைப்பட கூட்டுதாபனத்திற்கு வழங்கப்பட்டு, அதன் அனுமதி கிடைத்தால் தான் படப்பிடிப்பு நடத்தமுடியும். அதையும் மீறி, இலங்கையில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படங்களிலும் இது நடக்கிறது என்றால் அது கவலைக்குரிய விடயம் தான்." என்கிறார்.

இலங்கையில் படமாக்கப்பட்ட 'கிங்டம்' திரைப்படமும் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருப்பதைக் குறிப்பிட்டு பேசிய அவர், "மொழி, கலாசாரம் என பல வகையிலும் ஈழத்தமிழர் குறித்த சித்தரிப்புகள் தெளிவாக இல்லை. ஈழத்தமிழர்களை குற்றவாளிகள் போல சித்தரிப்பது போல ஒருபுறம் என்றால், அவர்கள் அனைவருமே சாப்பாட்டுக்கு கூட வழியில்லாதவர்கள் என சித்தரிப்பதும் நடக்கிறது. புலம்பெயர் தமிழர்களை கவர்வதற்கான ஒரு வியாபார தந்திரமாக இது உள்ளது." என்கிறார்.

இலங்கையில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்த வேண்டுமென்றால், அந்த திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனங்கள் உள்ளிட்டவற்றை 'இலங்கை திரைப்பட கூட்டுதாபனத்திற்கு' சமர்ப்பித்து, அதற்கான கட்டணங்களை செலுத்தி, அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இலங்கையில் உள்ளது.

இதுகுறித்துப் பேசிய இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதத் மாதிஉல்வௌ, ''இப்போதைக்கு எங்கள் குழுவில் தமிழர்கள் இல்லை. தமிழ் பேசக் கூடிய ஒருவரையேனும் எமது தயாரிப்பு குழுவில் இணைத்துக்கொள்ள நான் முயற்சி செய்து வருகின்றேன். அதிகாரிகளின் பற்றாக்குறையுடனேயே நாங்கள் செயல்பட்டு வருகின்றோம். இத்தகைய சர்ச்சைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்" என குறிப்பிடுகின்றார்.

இலங்கைத் தமிழ் தொடர்பான சர்ச்சை

இந்தியத் திரைப்படங்களில் ஈழத்தமிழர் சித்தரிப்பு

பட மூலாதாரம், @MILLIONOFFL

படக்குறிப்பு, 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரங்கள் பேசிய 'இலங்கைத் தமிழ்' குறித்து சில விமர்சனங்கள் எழுந்தன.

ஈழத் தமிழர்கள் குறித்த இந்தியத் திரைப்படங்கள் பெரும்பாலும் சர்ச்சைகளையே எதிர்கொண்டுள்ளன, அதில் ஒன்று படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பேசும் 'இலங்கைத் தமிழ்' தொடர்பான சர்ச்சை. சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்திற்கு கூட இத்தகைய விமர்சனம் எழுந்தது.

இதில் விதிவிலக்கு என்பது நடிகர் கமல்ஹாசனின் 'தெனாலி' (2000) திரைப்படம். இதில் கமல் பேசிய யாழ்ப்பாணம் தமிழ் பலரால் பாராட்டப்பட்டது. காரணம், இந்தத் திரைப்படத்திற்காக கமலுக்கு மொழிப் பயிற்சி அளித்தவர் இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அப்துல் ஹமீத், "யாழ்ப்பாணத்தின் மொழி வழக்கு, யாழ்ப்பாணத்திலேயே மாறி வந்துள்ளது. நிறைய தென்னிந்திய தமிழ் சொற்கள் எல்லாம் தமிழ் திரைப்படங்களின் ஊடாகவும், தமிழ் தொலைக்காட்சிகளின் ஊடாகவும் எங்களுடைய மொழி வழக்கில் கலந்துள்ளன. யாழ் மொழி வழக்கு என்ற தனித்துவமான மொழி வழக்கு இப்போது இல்லை." என்றார்.

இந்தியத் திரைப்படங்களில் ஈழத்தமிழர் சித்தரிப்பு

பட மூலாதாரம், B.H.ABDUL HAMEED/FACEBOOK

படக்குறிப்பு, 'தெனாலி' திரைப்படத்திற்காக கமலுக்கு மொழிப் பயிற்சி அளித்தவர் இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத்.

"தெனாலி படத்தில் கமல் பேசிய யாழ்ப்பாணம் தமிழ், முழுமையானது அல்ல. உதாரணத்திற்கு, 'நீங்கள் சத்தி எடுக்கேக்க' என்று ஒரு வசனம் வைக்கவேண்டும். அப்படி சொல்லும் போது சத்தி என்பதை 'சத்தியம்' என்று நினைத்தார்கள். அப்போது அந்த சொல்லை தமிழுக்கேற்ப 'வாந்தி' என்று மாற்றினோம். இப்படி, ஆங்காங்கே தமிழ்நாட்டு மக்களுக்கு புரிகின்ற விதத்தில், ஓரளவு ஓசை நயம் மாத்திரம் இருந்தால் போதும் என்று முடிவுசெய்து வசனங்கள் எழுதப்பட்டன." என்று கூறுகிறார்.

"ஒரு திரைப்படம் புலம்பெயர் தமிழர் வசிக்கும் நாடுகளில் மட்டும் வெற்றிப் பெறுவதால் லாபம் கிடைக்காது. முக்கியமாக இந்தியாவில் படம் ஓட வேண்டும். அதற்காக தான் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் வசனங்கள் எழுதப்படுகின்றன. இதில் தவறொன்றும் இல்லை, மக்களுக்கு கதை புரிவது தான் முக்கியம்." என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8ry3dl8jeyo

ரஜினியின் உழைப்பு இளைஞர்களுக்கான வாழ்வியல் பாடம் - ‘கூலி’க்கு சீமான் வாழ்த்து!

1 month ago

ரஜினியின் உழைப்பு இளைஞர்களுக்கான வாழ்வியல் பாடம் - ‘கூலி’க்கு சீமான் வாழ்த்து!

1373178.jpg

சென்னை: சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ரஜினிகாந்தின் புகழ் வாழ்வும், பெற்ற பெருவெற்றிகளும் என்றும் வழிகாட்டும் வாழ்வியல் பாடங்களாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்த் திரையுலகின் தன்னிகரில்லா உச்ச நட்சத்திரமாக, தனிப்பெரும் ஆளுமையாகத் திகழும் ரஜினிகாந்த் தம்முடைய திரைவாழ்வின் பொன்விழா ஆண்டினை காண்பது மிகுந்த மனமகிழ்வை தருகின்றது.நீண்ட நெடிய தம் கலைப்பயணத்தில் இரண்டு தலைமுறை இளையோர், பெண்கள், குழந்தைகள், முதியோர் என அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் திரைக்கலைஞராக திகழ்ந்து, தொடர்ந்து 50 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக ஒளிர்வது இந்தியப் பெருநாட்டில் இதுவரை எவரும் நிகழ்த்திடாத ஈடு இணையற்ற தனிமனித பெருஞ்சாதனையாகும்.

இந்தியப் பெருநாட்டைக் கடந்து, உலகம் முழுக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களால் ரசித்து கொண்டாடப்படும் அவருடைய நடிப்புத்திறன் வியந்து போற்றத்தக்கதாகும்.

1975 ஆம் ஆண்டு நடிகராக தனது கலைப்பயணத்தை தொடங்கியபோது இருந்த ஆர்வமும், வேகமும், தேடலும் கொண்டு துடிப்புடன் நடித்து, ஏற்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தாரோ, இன்றளவும் சற்றும் குறைவின்றி உழைப்பினைச் செலுத்தும் அவருடைய அர்ப்பணிப்புதான், அவரின் திரைப்படங்கள் ஒவ்வொன்றையும் இமாலய வெற்றிகள் பெறச் செய்தன. சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு அவருடைய புகழ் வாழ்வும், பெற்ற பெருவெற்றிகளும் என்றும் வழிகாட்டும் வாழ்வியல் பாடங்களாகும்.

எந்நிலை உயர்ந்தாலும் தன்னிலை மாறாது இனிமையாகவும், எளிமையாகவும் பழகும் ஆகச்சிறந்த மானுடப் பண்பினை இயல்பிலேயே கொண்ட தமிழ்த்திரையின் உச்சநட்சத்திரம் ரஜினிகாந்த், என்னுடைய நெஞ்சம் நிறைந்த பொன்விழா ஆண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

ரஜினிகாந்த், இன்னும் பற்பல ஆண்டுகள் தம் இனிய கலைப்பயணத்தைத் தொடர வேண்டுமென்ற எம் பெருவிருப்பத்தைத் தெரிவிப்பதோடு, 'கூலி' திரைப்படம் மாபெரும் வெற்றிப்படைப்பாக அமைய என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்' எனத் தெரிவித்துள்ளார்

ரஜினியின் உழைப்பு இளைஞர்களுக்கான வாழ்வியல் பாடம் - ‘கூலி’க்கு சீமான் வாழ்த்து! | Rajinikanth hard work is a life lesson for the youth Seeman congratulates to coolie - hindutamil.in

‘கூலி’ விமர்சனம்

1 month ago

‘கூலி’ விமர்சனம்: ரஜினி - லோகி கூட்டணியின் ‘ஆவரேஜ்’ ட்ரீட்மென்ட் எப்படி?

1373059.jpg

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான முதல் நாளில் இருந்தே ‘கூலி’ படத்துக்கான ஹைப் மிகப் பெரிய அளவில் உருவாகிவிட்டது. காரணம், தமிழின் தற்கால இயக்குநர்களில் ஒருவராக லோகேஷ் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டதுதான். அவருடன் ரஜினி என்கிற ஒரு மிகப் பெரிய பிராண்ட் இணையும்போது படம் குறித்த எதிர்பார்ப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக எக்கச்சக்கமாக எகிறிவிட்டிருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை ‘கூலி’ திரைப்படம் நிறைவேற்றியதா என்று பார்க்கலாம்.

சென்னையில் மேன்ஷன் ஒன்றை நடத்தி வருபவர் தேவா (ரஜினிகாந்த்). தனது இளவயது நண்பர் ராஜசேகர் (சத்யராஜ்) திடீரென மரணம் அடைந்ததை அடுத்து, அவருடைய இறுதிச் சடங்குக்கு வரும் தேவாவை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார் ராஜசேகரின் மூத்த மகள் ப்ரீத்தி (ஸ்ருதிஹாசன்).

தனது நண்பனின் சாவுக்கு உண்மையான காரணம் என்ன என்பதை துப்பறியத் தொடங்கும் தேவாவுக்கு மிகப் பெரிய கடத்தல் கும்பலின் தலைவனான சைமன் (நாகர்ஜுனா) பற்றியும், அவரது வலது கரமாக செயல்படும் தயாளன் (சவுபின் சாஹிர்) பற்றியும் தெரியவருகிறது. இவர்களுக்கும் ராஜசேகருக்கும் என்ன தொடர்பு? தேவா, ராஜசேகரின் பின்னணி என்ன என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘கூலி’ திரைக்கதை.

ADVERTISEMENT

HinduTamil12thAugustHinduTamil12thAugust

’மாநகரம்’ தொடங்கி ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என தனக்கென ஒரு பாணி, விறுவிறுப்பான திரைக்கதை உத்தி மூலம் இந்தியாவின் ‘மோஸ்ட் வான்ட்டட்’ இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கும் லோகேஷ் கனகராஜ், இந்தியாவின் நம்பர் ஒன் சினிமா நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினியை இயக்கும் வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டாரா என்று கேட்டால், ‘இல்லை’ என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

லோகேஷ் இயக்கத்தில் வெளியானதிலேயே ‘லியோ’ தான் சுமாரான படம் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் தற்போது ‘வீக்’ ஆன திரைக்கதையின் மூலம் லோகேஷின் மிக ஆவரேஜான படம் என்ற பெருமையை ‘கூலி’ தட்டிச் சென்றுள்ளது.

வழக்கமான ரஜினி படங்களுக்கே உரிய ‘மாஸ்’ இன்ட்ரோ காட்சி, சத்யராஜின் மரணம், அதற்கான காரணங்களை ரஜினி தேடத் தொடங்குவது என பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைப்பதுடன் தொடங்கும் படம், அடுத்தடுத்த காட்சிகளிலேயே சரியத் தொடங்கி விடுகிறது. அதற்கு காரணம் எந்த ஒரு கதாபாத்திரத்துக்கும், காட்சிகளுக்கும் வலுவான பின்னணி இல்லாததுதான். ஸ்ருதிஹாசன் தொடங்கி சத்யராஜ், நாகர்ஜுனா, ரச்சிதா ராம் என ஏராளமாக கேரக்டர்கள் திரையில் உலவினாலும் இவர்கள் யாருடைய கதாபாத்திரமும் அழுத்தமாக எழுதப்படவில்லை.

படம் முழுக்க ரஜினி, சவுபின் இருவருடைய ஆதிக்கம்தான். தனது அட்டகாசமான திரை ஆளுமையால் ரஜினிகாந்த், நட்சத்திர நெரிசல் மிகுந்த படத்தில் வழக்கம் போல ஜொலிக்கிறார். ரஜினியின் சின்னச் சின்ன மேனரிசங்கள் கூட ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. படத்தில் ஆங்காங்கே வரும் ‘ரஜினி ஸ்பெஷல்’ தருணங்கள் படத்தின் நகர்வுக்கு வலுவூட்டுகின்றன.

சவுபினுக்கு முழுநீள நெகட்டிவ் கதாபாத்திரம். படம் முழுக்க தனது குரூரத் தன்மை கொண்ட கதாபாத்திரத்துக்கு சிறப்பான முறையில் நியாயம் செய்திருக்கிறார். மற்றபடி நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோருக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். சில காட்சிகளே வந்தாலும் உபேந்திரா வரும் இடங்கள் மாஸ். ஆமீர்கான் கதாபத்திரம் ரோலக்ஸின் இன்னொரு வடிவம். சிறிய வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்.

லோகேஷின் படங்களில் தொடக்கம் முதல் வரும் ஒரு டம்மி கதாபாத்திரம் திடீரென ஆக்ரோஷம் கொண்டு எழுந்து நிற்கும். உதாரணமாக ‘விக்ரம்’ படத்தில் வரும் ஏஜென்ட் டீனா கதாபாத்திரம். அப்படி இதிலும் லோகேஷ் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அது பெரியளவில் கைகொடுக்கவில்லை. இணையத்தில் பெரும் வைரலான ‘மோனிகா’ பாடல் பொருந்தாத இடத்தில் வருகிறது. ஆனால் அதில் பூஜா ஹெக்டேவின் நடனம் சிறப்பு.

அனிருத்தின் பின்னணி இசை ‘மாஸ்’ காட்சிகளில் மட்டும் கைகொடுத்திருக்கிறது. ஆனால் மற்ற இடங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லை. பாடல்கள் ஏற்கெனவே ஹிட். ‘அரங்கம் அதிரட்டுமே’ பாடல் வரும் காட்சியில் அரங்கம் அதிர்கிறது.

80களின் ரஜினியை ரசித்தவர்களுக்கு படத்தில் சிறப்பான ட்ரீட் உள்ளது. நேர்த்தியான முறையில் டீ-ஏஜிங் செய்த தொழில்நுட்பக் குழுவினருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். லோகேஷ் படங்களில் டிரேட்மார்க் ஆக வரும் பழைய பாடல் இதில் சுத்தமாக எடுபடவில்லை.

படத்தின் முதல் பாதியிலேயே ரஜினி யார், அவரது நோக்கம்தான் என்ன என்பதை முழுமையாக வெளிப்படுத்தி, இரண்டாம் பாதியில் கேள்விகளுக்கான முடிச்சுகள் அவிழும்படி செய்திருக்கலாம். கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் காட்சியில் தான் பார்வையாளர்களுக்கு முழு உண்மையும் தெரியவருகிறது. கடைசி அரை மணி நேரம் ஆமீர்கான், ரஜினி இடையிலான காட்சிகளும், அந்த ஃப்ளாஷ்பேக்கும் படமாக்கப்பட்ட விதம் சிறப்பு. ஆனால், படத்தின் நீளம் காரணமாக கிட்டத்தட்ட அந்தக் காட்சி வரும்போதே பார்வையாளர்கள் சலிப்படைந்து விடுகின்றனர்.

மொத்தத்தில் எடுத்துக் கொண்ட கதைக்களம் சிறப்பாக இருந்தாலும், அது சொல்லப்பட்ட விதத்தில் எதிர்பார்த்த சுவாரஸ்யம் இல்லாததால் ‘ஆவரேஜ்’ ஆன படம் என்ற அளவிலேயே நின்றுவிடுகிறது ‘கூலி’. ரஜினியின் சின்ன சின்ன மேனரிசங்களும், சவுபினின் வில்லத்தனமுமே பல இடங்களில் படத்தை காப்பாற்றுகின்றன.

‘கூலி’ விமர்சனம்: ரஜினி - லோகி கூட்டணியின் ‘ஆவரேஜ்’ ட்ரீட்மென்ட் எப்படி? | Coolie Movie Review - hindutamil.in

கிங்டம் விமர்சனம்: விஜய் தேவரகொண்டா இலங்கை தீவில் மறைந்த உண்மையை கண்டுபிடித்தாரா?

1 month 2 weeks ago

KINGDOM MOVIE REVIEW

பட மூலாதாரம்,X/@THEDEVERAKONDA

5 மணி நேரங்களுக்கு முன்னர்

கிங்டம் படம் விஜய் தேவரகொண்டா நடிப்பில், கவுதம் தின்னனூர் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. கவுதம் தின்னனூர் கிரிக்கெட்டை மையமாக கொண்டு தெலுங்கில் வெளியான ஜெர்சி என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானார்.

விஜய் தேவரகொண்டா கல்கி படத்தில் கேமியோ பாத்திரத்தில் தோன்றிய பிறகு, வெளியாகியிருக்கும் அடுத்த படம் இது. இந்தப் படம் தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது.

ஒரு போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் சூரி (விஜய் தேவரகொண்டா) சிறு வயதில் வீட்டை விட்டு ஓடி போன தனது அண்ணன் சிவாவை ( சத்யதேவ்) தேடி செல்கிறார்.

அவரது அண்ணன் இலங்கையில் பழங்குடியினரின் தீவில் வாழ்ந்து வருகிறார். அந்த தீவில் சூரி ஒரு அண்டர்கவர் ஆபரேஷனுக்கு செல்ல தயாராகிறார். அந்த தீவில் உள்ளவர்களை வைத்து நடைபெறும் கடத்தல் தொழிலை எப்படி ஒழிக்கிறார், தன் அண்ணனை கண்டுபிடிக்கிறாரா என்பதுதான் படத்தின் சாராம்சம்.

KINGDOM MOVIE REVIEW

பட மூலாதாரம்,X@THEDEVERAKONDA

'சிறப்பாக நடித்துள்ள விஜய் தேவரகொண்டா'

தி இந்து தமிழ் நாளிதழ் வெளியிட்டுள்ள திரைப்பட விமர்சனத்தில் "முதல் பாதியில் கதையை நன்கு 'செட்' செய்தத்தில் இயக்குநர் கவுதம் தின்னனூர் கவனிக்க வைக்கிறார். அதீத ஹீரோயிசங்கள் பெரியளவில் எதுவுமின்றி ஓரளவு நம்பகத்தன்மைகளை காட்சிகளில் இடம்பெறச் செய்தது ரசிக்க வைக்கிறது. ஆனால், படத்தின் பிரச்னையே இரண்டாம் பாதியில்தான் தொடங்குகிறது. முதல் பாதியில் எந்த தொய்வுகளும் இன்றி நேர்கோட்டில் சென்று கொண்டிருந்த திரைக்கதை, இரண்டாம் பாதியில் தடுமாறத் தொடங்கிவிடுகிறது" என்று குறிப்பிடுகிறது.

விஜய் தேவரகொண்டாவுக்கு நடிகராக முக்கியமான படம் இது என்று குறிப்பிடும் தி இந்து தமிழ், " போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்து பின்னர் இலங்கைக்கு சென்ற பின் அவருள் ஏற்படும் மாற்றம் என தன்னுடைய கதாபாத்திரத்துக்காக அதீத உழைப்பை கொட்டி நடித்திருக்கிறார். அவருடைய அண்ணனாக வரும் சத்யதேவும் நிறைவான நடிப்பு." என்று குறிப்பிடுகிறது.

படத்தின் உண்மையான ஹீரோக்கள் இசையமைப்பாளர் அனிருத்தும், ஒளிப்பதிவாளர்கள் கிரிஷ் கங்காதரன், ஜோமோன் டி.ஜான் ஆகியோரும்தான் என்றும் குறிப்பாக படத்தின் தொடக்கத்தில் வரும் பிரிட்டிஷ் காலத்து காட்சியில் ஒளிப்பதிவு, பின்னணி இசை இரண்டும் அட்டகாசம் என்றும் தி இந்து தமிழ் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவு, இசைக்கு குவியும் பாராட்டு

தினமணி நாளிதழ் வெளியிட்டுள்ள விமர்சனத்தில், "கதாநாயகிக்கு கொடுக்கப்பட்ட நேரமும் குறைவு, முக்கியத்துவமும் குறைவு! ஆனால் வந்த நேரத்தில் கதை கேட்கும் இடங்களை நிரப்பியிருக்கிறார். அடுத்ததாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐய்யப்பா பி. சர்மா, பி.எஸ். அவினாஷ் உள்ளிட்ட அனைவருமே தேவையான நடிப்பைக் கொடுத்துள்ளனர். வில்லனாக வலம் வந்த வெங்கிடேஷ் வி.பி. மிகக் கொடூர வில்லனாக மிரட்டுகிறார். சில முகம் தெரிந்த நடிகர்கள் வந்தாலும், பலர் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாதவர்கள்தான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வேறு சில ஊடக விமர்சனங்களில் குறிப்பிட்டிருப்பது போலவே, தினமணியிலும் படத்தின் இரண்டாம் பாதி தொய்வாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

"முதல்பாதியில் ஒரு 30 நிமிடம் விறுவிறுப்பாகவும், கதைக்கு நேர்மையான நடிப்பு மற்றும் திரைக்கதையாலும் படம் நல்ல தளத்தை ஏற்படுத்திக்கொடுக்கிறது. ஒளிப்பதிவாளர்கள் கிரிஷ் கங்காதரன், ஜோமோன் டி ஜான் இருவரும் நல்ல வேலைபாட்டைக் கொடுத்துள்ளனர். சில காட்சிகளில் 'கொஞ்சம் நல்லா இருந்துருக்கலாம்' எனத் தோன்றினாலும், சண்டைக் காட்சிகள் அனைத்திலும் சிறப்பான வேலையைச் செய்துள்ளனர். சண்டைக்காட்சிகளையும் மிக நன்றாகவே உருவாக்கியுள்ளனர்" என்று தினமணி விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

KINGDOM MOVIE REVIEW

'இரண்டாம் பாதி தள்ளாடுகிறது'

தி இந்து ஆங்கில நாளிதழ், "எரிந்த சிவப்பு, பழுப்பு மற்றும் கருப்பு நிறங்கள் நிறைந்த நீரஜா கோணாவின் ஆடை வடிவமைப்பு, கதையின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது. அனிருத் ரவிச்சந்தரின் இசை அதன் பங்கை வகிக்கிறது, தேவைப்படும்போது படத்தை முன்னெடுத்துச் செல்கிறது. மௌனம் தேவைப்படும் இடங்களில் அதையும் அனுமதிக்கிறது. படத்தின் பெரும்பாலான நேரத்தில் விஜய் தேவரகொண்டா பேசுவதில்லை, எனினும் இதுவரை இல்லாத அளவிலான சிறப்பான நடிப்பை தந்துள்ளார். காட்டில் துரத்தி செல்லும் ஒரு காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரர் கதாபாத்திரமான ஷிவா, ஹீரோவாக சிறப்பாக காட்டுவதற்காக எழுதப்படாமல், அர்த்தமுள்ளதாக எழுதப்பட்டுள்ளது" என்று படத்தைப் பற்றி வெளியிட்டுள்ள விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், "இரண்டாம் பாதியில் படம் சற்று தள்ளாடுகிறது. சண்டைக் காட்சிகள் மேலும் வன்முறையாகவும், அடுத்த என்ன நடக்கும் என்று கணிக்கக் கூடியதாகவும் அமைகின்றன. க்ளைமாக்ஸ் காட்சிகள் அவசரமாக நடைபெறுவதாக தோன்றுகிறது. முந்தைய காட்சிகளில் மௌனமே பலமாக இருந்த நிலையில், இறுதியில் வாய்ஸ் ஓவரை அதிகமாக பயன்படுத்தியுள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

KINGDOM MOVIE REVIEW

பட மூலாதாரம்,X/@THEDEVERAKONDA

தி டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள படத்தின் விமர்சனத்தில், " இடம் பெயர்த்தப்பட்ட மக்கள் தங்கள் மூதாதையரின் ஞானம் கொண்ட ஒருவர் வந்து தங்களை ஒரு நாள் விடுவிப்பார் என்ற நம்பிக்கையை" வலியுறுத்துகிறது இந்தப் படம் என்று கூறுகிறது.

"சூரி கதாபத்திரத்தில் நடித்துள்ள விஜய் தேவரகொண்டா துயரத்தையும் பதில் கிடைக்காத கேள்விகளின் பாரத்தையும் ஏந்திக் கொண்டு சிறப்பாக நடித்துள்ளார். தனது சகோதரராக நடித்துள்ள சத்யதேவ் உடன் அவர் நடித்த காட்சிகள் படத்தின் சிறந்த காட்சிகள் ஆகும்" என்றும் அந்த விமர்சனம் குறிப்பிடுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn43xplrz9ko

மாரீசன் விமர்சனம்: மீண்டும் இணைந்த வடிவேலு, ஃபகத் ஃபாசில் - படம் எப்படி இருக்கிறது?

1 month 3 weeks ago

மாரீசன், விமர்சனம், தமிழ், கோலிவுட் '

பட மூலாதாரம்,@SUPERGOODFILMS_

4 மணி நேரங்களுக்கு முன்னர்

சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவான மாரீசன் திரைப்படம் இன்று (ஜூலை 25) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வடிவேலு, ஃபகத் ஃபாசில், கோவை சரளா, லிவிங்ஸ்டன், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

'மாமன்னன்' படத்தில் எதிரும் புதிருமான கதாபாத்திரங்களில் நடித்திருந்த வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில், இந்தப் படத்தில் இணக்கமாக இருப்பது போன்ற காட்சிகளைக் கண்ட ரசிகர்களுக்கு படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

இருவரும் தங்களுக்குக் கிடைக்கும் கதாபாத்திரங்களை கச்சிதமாக கையாளக் கூடியவர்கள் என்பதும் எதிர்பார்ப்புக்கான மற்றொரு காரணம்.

இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள மாரீசன் திரைப்படம் அதைப் பூர்த்தி செய்துள்ளதா? ஊடக விமர்சனங்கள் சொல்வது என்ன?

மாரீசன் திரைப்படத்தின் கதை என்ன?

படத்தின் கதை கன்னியாகுமரியில் தொடங்குகிறது. பிரபல திருடன் தயா (ஃபகத் ஃபாசில்) கண்ணில் சிக்குவதை எல்லாம் கொள்ளையடிக்கிறார்.

ஒரு நாள் ஒரு வீட்டிற்கு கொள்ளையடிக்கச் சென்றபோது கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த வேலாயுதத்தை (வடிவேலு) சந்திக்கிறார். தன்னை விடுவித்தால் பணம் தருவதாகக் கூறுகிறார் வேலாயுதம்.

வேலாயுதத்தை விடுவித்த பிறகு, அவர் ஞாபக மறதி நோயால் (Alzheimer) பாதிக்கப்பட்டு இருப்பதையும், அவரது வங்கிக் கணக்கில் 25 லட்சம் ரூபாய் பணம் இருப்பதையும் தயா தெரிந்துகொள்கிறார்.

அதைத் திருடுவதற்குத் திட்டமிட்டு, வேலாயுதத்திற்கு உதவுவது போல முன்வரும் தயா, தனது இருசக்கர வாகனத்திலேயே திருவண்ணாமலைக்கு அழைத்துச் செல்கிறார்.

இவர்களுடைய பயணத்தின்போது என்ன நடந்தது, இறுதியாக தயா பணத்தை திருடினாரா என்பதுதான் படத்தின் மீதி கதை.

மாரீசன் திரைப்படம் எப்படி இருக்கிறது?

மாரீசன், விமர்சனம், தமிழ், கோலிவுட் '

பட மூலாதாரம்,@SUPERGOODFILMS_

"இயக்குநர் சுதிஷ் சங்கருக்கு காட்சிகளை எப்படி எடுக்க வேண்டும், கதாபாத்திரங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்கிற சினிமா உத்தி நன்றாகத் தெரிந்திருப்பதால் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை படம் எங்குமே சலிப்பின்றிச் செல்கிறது" என தினமணி தனது விமர்சனத்தில் பாராட்டியுள்ளது.

"ஏற்கெனவே பல படங்களில் அலசியிருந்தாலும், முக்கியமான சமூகப் பிரச்னையை புதிய பாணியில் சொல்லி கவனம் இயக்குநர் ஈர்த்துள்ளார்" எனவும் அந்த விமர்சனம் புகழாரம் சூட்டியுள்ளது.

ஆனால், "படத்தின் ப்ரோமோவை பார்த்துவிட்டு, இது 'மெய்யழகன்' படத்தைப் போல இருவருக்கு இடையே நடப்பவை குறித்த கதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. முதல் பாதியில் அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தபோதிலும், இரண்டாம் பாதி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை," என தி இந்து ஆங்கில நாளிதழ் விமர்சித்துள்ளது.

இந்தியா டுடே விமர்சனத்தின்படி, காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ள மாரீசன், நிச்சயம் சிரிக்க வைக்கும். அதோடு, "படத்தில் இருக்கையின் நுனியில் அமர வைக்கும் அளவுக்கு சுவாரஸ்யங்களும் இருக்கின்றன."

வடிவேலு, ஃபகத் ஃபாசில் நடிப்பு எப்படி?

மாரீசன், விமர்சனம், தமிழ், கோலிவுட் '

பட மூலாதாரம்,@SUPERGOODFILMS_

"இந்திய அளவில் சிறந்த நடிகர்களாக விளங்கும் வடிவேலுவும், ஃபகத் ஃபாசிலும் இப்படத்தில் வழக்கமான தங்கள் பாணிகளைக் கடந்து கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளனர். தொண்டி முதலும் த்ரிக்ஷாஷியும், வேட்டையன் ஆகிய படங்களில் ஃபகத் திருடனாக நடித்திருந்தாலும் இதில் அந்தச் சாயல் எதுவுமே இல்லாமல் திருடனாக நடித்திருக்கிறார். அந்த வித்தியாசம்தான் ஃபகத் ஃபாசில்" என தினமணி தனது விமர்சனத்தில் பாராட்டியுள்ளது.

தி இந்து நாளிதழும் "மாமன்னன் படத்தில் இந்தக் கூட்டணி தொடங்கியது. இவர்களை திரையில் பார்ப்பது மனதிற்கு இதமாக உள்ளது. இந்தக் கூட்டணியை நிறைய படங்களில் இணைந்து பார்க்க மக்கள் விரும்புவார்கள்" என்று கூறியுள்ளது.

"மாமன்னன் படத்திற்குப் பிறகு இந்தப் படத்திலும் தனது நகைச்சுவை கதாபாத்திரத்தைப் புறந்தள்ளிவிட்டு இதுபோன்ற ஆழமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள வடிவேலுவை பாராட்டியாக வேண்டும்" என டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

"ஃபகத் ஃபாசில் எப்போதும் போலத் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்" என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா பாராட்டியுள்ளது.

"நீண்ட நாட்களுக்குப் பின் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையுடன் காட்சிகளைப் பார்க்க உயிர்ப்பாக இருந்தது. முதல் பாதியில் ஃபகத், வடிவேலு இடையிலான நகைச்சுவைக் காட்சிகளுக்கு பின்னணி இசை கச்சிதமாகப் பொருந்தியிருந்தது" என தினமணி பாராட்டியுள்ளது.

மாரீசன் திரைப்படத்தின் குறைகள் என்ன?

மாரீசன், விமர்சனம், தமிழ், கோலிவுட் '

பட மூலாதாரம்,@SUPERGOODFILMS_

"முதல் பாகம் மற்றும் இடைவெளியில் எகிறிய எதிர்ப்பார்ப்புகள் மெல்ல மெல்லக் குறைவது போல் இரண்டாம் பாகம் அமைந்துவிட்டது. படத்தின் 'ஒன்லைன்' சரியாகக் கையாளப்படவில்லை. ஒரு கட்டத்தில் படம் கொலைகளை நியாயப்படுத்துவது சரியாக இல்லை" என்று தினமணி விமர்சித்துள்ளது.

அதே போல, "ஃப்ளாஷ்பேக் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம். முன்னணி கதாபாத்திரங்கள் தவிர பிற கதாபாத்திரங்கள் பெரியளவில் கையாளப்படவில்லை" எனக் கூறுகிறது தி இந்து விமர்சனம்.

மேலும், "கிளைமேக்ஸ் காட்சி வரை உடைக்கப்படாத ரகசியம் படத்தின் பலம். ஆனால், சில காட்சிகளை எளிதில் ஊகிக்க முடிவது பலவீனம்" எனவும் விமர்சிக்கிறது.

தினமணி விமர்சனத்தின்படி, "மொத்தத்தில் மாரீசன் திரைப்படத்தை எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றமின்றி பார்க்கலாம்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg5gpxk3myo

கார் சாகச காட்சியில் விபத்து: தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு பாதுகாப்பு இல்லையா?

1 month 4 weeks ago

ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ், கோலிவுட், சினிமா உலகம், பா. ரஞ்சித், பொழுதுபோக்கு

பட மூலாதாரம்,@BEEMJI/X

படக்குறிப்பு, உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ்

கட்டுரை தகவல்

  • கார்த்திக் கிருஷ்ணா

  • பிபிசி தமிழுக்காக

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

நாகப்பட்டினத்தில் ஜூலை 13, 2025 அன்று, அனுபவமிக்க ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் (எஸ்.எம். ராஜு) ஒரு ஆபத்தான கார் சாகசக் காட்சியின் போது உயிரிழந்தார்.

திரை மறைவு நாயகர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள், சமீபத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படப்பிடிப்பில் நடந்த துயரச் சம்பவத்தால் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இல்லை என இந்தச் சம்பவம் குறித்து அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷ் குப்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆனால், சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது போதிய பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுவதாக சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா கூறுகிறார்.

திரைப்படங்கள் என்கிற மாயாஜால உலகின் முகவரியாக இருப்பவர்கள் நடிகர்கள். குறிப்பாக ரசிகர்கள் எப்போதும் புகழ் வெளிச்சத்தில் நிறுத்தி மகிழ்வது, கதாநாயகர்களையும் கதாநாயகிகளையும்தான்.

ஆனால், திரைக்குப் பின்னால் ஆயிரக்கணக்கான கலைஞர்களின், பணியாளர்களின் உழைப்பும் சேர்ந்தே ஒரு திரைப்படம் உருவாகிறது.

இதில், வியக்கவைக்கும் சாகசங்களை திரையில் உருவாக்கும் ஸ்டண்ட் கலைஞர்கள், ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஈடற்ற மதிப்பை சேர்க்கின்றனர். ஆனால் மற்றவர்களைப் போலவே இவர்களின் பங்களிப்பும் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படுவதில்லை.

ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ், கோலிவுட், சினிமா உலகம், பா. ரஞ்சித், பொழுதுபோக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, திரைப்படக் குழுவினர் (சித்தரிப்புக் காட்சி)

இயக்குநர் ரஞ்சித் இரங்கல்

ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் இறந்த சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் இயக்குநர் ரஞ்சித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

"மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம். அவரின் மனைவி, குழந்தைகள்,குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது. செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு தன் நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குனர்களை பெருமைப்படுத்திய கலைஞர் அவர். எங்கள் ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றென்றும் அவருக்கு சமர்ப்பணம்" என்று ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிட்ட கார் சாகசக் காட்சியை எடுக்கும் முன்பு, எப்போதும் செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள் என எல்லாம் இருந்தன என்று குறிப்பிட்டுள்ள ரஞ்சித், அந்த நாள் மோகன் ராஜ் உயிரழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

மோகன்ராஜ் இறப்புக்கு நடிகர்கள் பாபி சிம்ஹா, ப்ரித்விராஜ், விஷால், நடிகை துஷாரா, இயக்குநர்கள் மாரி செல்வராஜ், வெங்கட்பிரபு உள்ளிட்டோர் அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளனர்.

நடிகர்கள் ஆர்யா, கலையரசன் உட்பட வேட்டுவம் திரைப்படக் குழுவினர் பலரும், மோகன்ராஜின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

"எக்ஸ் தளத்தில் பதிவு போடுவதோடு மட்டுமல்ல, மோகன்ராஜின் குடும்பத்துக்காக நான் ஆதரவாக இருப்பேன். அவர் திரைத்துறைக்கு ஆற்றிய பங்கை மனதில் வைத்து, நானும் திரைத்துறையைச் சேர்ந்தவன் என்கிற முறையில், அவர்களுக்கு ஆதரவளிப்பது எனது கடமை" என்று பகிர்ந்துள்ளார் நடிகர் விஷால்.

52 வயதான மோகன்ராஜ், மங்காத்தா, சிங்கம், வேலாயுதம், பிரியாணி, லூசிஃபர், துணிவு எனப் பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில், மிகப்பெரிய சூப்பர்ஹிட் திரைப்படங்களில் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றியவர்.

கிட்டத்தட்ட தனது அத்தனை படங்களிலும் மோகன்ராஜின் பங்கு இருந்திருக்கிறது என இயக்குநர் வெங்கட் பிரபு தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கார் சாகசக் காட்சி என்றாலே அதற்கு சண்டைப்பயிற்சி இயக்குநர்களின் முதல் விருப்பம் மோகன்ராஜாகத்தான் இருந்திருக்கிறார்.

பல நூறு முறை, பல ஆபத்தான சண்டைக் காட்சிகளில் பங்கேற்று பாதுகாப்பான கலைஞர் என்று பெயரெடுத்துள்ளார் மோகன்ராஜ்.

ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ், கோலிவுட், சினிமா உலகம், பா. ரஞ்சித், பொழுதுபோக்கு

பட மூலாதாரம்,@BEEMJI/X

ஸ்டண்ட் கலைஞர்கள் கூறுவது என்ன?

மோகன்ராஜ் பற்றியும், படப்பிடிப்புகளில் சண்டைக் காட்சிகளுக்கான பாதுகாப்பு பற்றியும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி சண்டைப் பயிற்சி இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் ஸ்டண்ட் சில்வா பிபிசி தமிழிடம் பேசியபோது, "எனது பல வெற்றிப் படங்களின் சண்டைக் காட்சிகளில் முக்கியப் பங்கு வகித்தவர் மோகன்ராஜ். அவரது இறப்பு மிகவும் துரதிஷ்டவசமானது.''என்றார்

''அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் அவர் செய்த சாகசக் காட்சிகள் எல்லாம் இப்போது நினைத்தாலும் பயத்தைத் தரும். ஒருவர் இப்படியான கார் சாகசக் காட்சியை செய்யப் போகிறார் எனும்போது, அதிக பதற்றம், பயம், எங்களைப் போன்ற சண்டைப் பயிற்சி இயக்குநர்களுக்குத்தான் இருக்கும். ஏனென்றால் எங்களுக்காக, எங்கள் சார்பாகத்தான் அவர் இதைச் செய்யப் போகிறார்.

வினோதய சித்தம் என்கிற திரைப்படத்தில் உயரத்திலிருந்து மோகன்ராஜ் கீழே விழும்போது அவரது ஹெல்மெட் விலகிவிட்டது. நானும் நடிகர் சமுத்திரகனியும் பதறியடித்து அவரிடம் சென்றோம். அவர் எதுவும் ஆகவில்லை என்று பதற்றமின்றி எழுந்து வந்தார்.'' என்கிறார் ஸ்டண்ட் சில்வா.

''வேட்டுவம் திரைப்படத்தில் விபத்து ஏற்பட்டது ஒரு மணல் வெளியில், அவர் எளிதாக செய்து முடிக்கும் ஒரு சாகச் காட்சி இது. உடற்கூறாய்வு அறிக்கையில் அவருக்கு அடிபடவில்லை, எங்கும் ரத்தக் கசிவு இல்லை என்று தெரியவந்துள்ளது. அப்படி இருக்கையில் அவர் உயிர் பிரிந்திருக்கிறது என்பது மிகப்பெரிய துரதிர்ஷ்டமே. சென்ற வாரம் என்னுடன் அமர்ந்து சாப்பிட்டவர், இப்போது உயிரோடு இல்லை என்பதை நம்ப முடியவில்லை" என்கிறார் சில்வா.

ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ், கோலிவுட், சினிமா உலகம், பா. ரஞ்சித், பொழுதுபோக்கு

பட மூலாதாரம்,STUNT SILVA/FACEBOOK

படக்குறிப்பு, படப்பிடிப்புத் தளத்தில் ஸ்டண்ட் சில்வா

பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி உள்ளன?

தற்போது சண்டைக் காட்சிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எழுப்பப்பட்டு வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், "சமூக ஊடகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விமர்சிப்பவர்கள் திரைத் துறையின் உண்மையான நிலவரம் என்னவென்று தெரியாமல் பொதுவாகப் பேசுகிறார்கள். எல்லா விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டே சண்டைக் காட்சிகள் படம்பிடிக்கப்படுகின்றன. 25 வருடங்களுக்கு முன் வேண்டுமானால் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அப்படி இல்லை.'' என்கிறார் ஸ்டண்ட் சில்வா

''ஹாலிவுட்டுக்கு நிகரான பாதுகாப்பு ஏற்பாடுகள் நமது ஊரிலும் உள்ளன. ஹாலிவுட்டைச் சேர்ந்த பல சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் நம் திரைப்படங்களில் பணியாற்றுக்கின்றனர்.

ஹாலிவுட்டில் கூட இது போல மிக அரிதாக விபத்துகள் நடந்துள்ளன. எனவே ஒரு சண்டைக் காட்சிக்கான படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் அத்தனையும் செய்யப்படும். எங்கள் சங்கத்தில் 750 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை என்பது மிக மிகக் குறைவு. எனவே ஒரு சம்பவத்தை வைத்து பொதுவாக குற்றம்சாட்டக் கூடாது" என்று கூறுகிறார் சில்வா.

சண்டைப் பயிற்சி கலைஞர்களுக்கான மருத்துவ உதவி, மருத்துவ காப்பீடு குறித்தும் சரியான புரிதல் இல்லை என்கிறார் சில்வா.

"ஒரு காலத்தில் சண்டைப் பயிற்சி கலைஞர்களுக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட விஷயங்களும் கிடையாது. ஆனால் நடிகர் சூர்யாவின் முன்னெடுப்பினால் எங்களுக்கு தற்போது காப்பீடும் உள்ளது. பல வருடங்கள் சூர்யாவே எங்களுக்கான காப்பீடு செலவை பார்த்துக் கொண்டார்.

அவருக்கு மிகப்பெரிய நன்றியைக் கூற வேண்டும். இந்தப் பாதையைப் போட்டுக் கொடுத்தவர் அவர்தான். தற்போது எங்கள் சங்கமே காப்பீடுக்கான செலவை செய்து வருகிறது. மற்றவர்களுக்கான ப்ரீமியம் தொகையை விட எங்களுக்கான தொகை சற்று அதிகமாக இருக்கும். அவ்வளவே. பாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு தொடர்ந்து நடிகர் அக்‌ஷய் குமார் காப்பீடு உள்ளிட்ட உதவிகளைச் செய்து வருகிறார்.'' என்கிறார் அவர்.

''மோகன்ராஜ் குடும்பத்துக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் எங்கள் சங்கம் செய்யும். சங்கத்தில் உறுப்பினராவதே அதற்காகத்தானே''.

இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷ் குப்தா

பட மூலாதாரம்,PTI

படக்குறிப்பு, இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷ் குப்தா

எழும் கண்டனக் குரல்கள்

சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்புக்கு தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து எப்படியான ஆதரவு கிடைக்கிறது என்பது பற்றி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபுவிடம் பேசியபோது, "பொதுவாக பெரிய சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்புக்குத்தான் செலவு அதிகம். ஆனால் தயாரிப்பாளர்கள் யாரும் அதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதில்லை.

தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்துக்கும் செலவு செய்கிறோம். இப்போதெல்லாம் ஒரு சண்டைக் காட்சியின் படப்பிடிப்பில் ஆம்புலன்ஸ், மருத்துவர்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஒருவகையில் கட்டாயமாக்கப்பட்டுவிட்டன. மேலும் பெரிய பொருட்செலவில் தயாராகும் திரைப்படங்களுக்கு காப்பீடும் செய்யப்படுகின்றன" என்று கூறினார்.

மோகன்ராஜ் இறப்பு தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் தரப்பு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷ் குப்தா, இந்தச் சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "உலக சினிமா அனுபவத்தை தர வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் பாதுகாப்பு அம்சங்களைக் கூட அவர்களால் சிறப்பாக கொண்டு வர இயலவில்லை," என்று குற்றம் சாட்டினார்.

ஏஐ போன்ற வசதிகள் வந்து, ஸ்டண்ட் கலைஞர்களுக்கான தேவையும், ஆபத்தும் குறையும் வரை நாங்கள் இப்படிக் களத்தில் இறங்கி பணியாற்றித் தானே ஆகவேண்டும் என்கிறார் சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா.

விரைவில் அதுவும் சாத்தியப்பட வேண்டும் என்றே திரைப்பட ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3vdyzy0e3do

தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவால் காலமானார்

1 month 4 weeks ago

Published By: VISHNU

17 JUL, 2025 | 08:11 PM

image

தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காத காரணத்தால், வியாழக்கிழமை (ஜூலை 17) மதியம் அவர் உயிரிழந்தார்.

வேலு பிரபாகரன் 1980 ஆம் ஆண்டு வெளியான 'இவர்கள் வித்தியாசமானவர்கள்' என்ற படத்தின் மூலம், ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வேலு பிரபாகரன். 

தொடர்ந்து, 1989 ஆம் ஆண்டு வெளியான நாளைய மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம், இயக்குநராக அவதாரம் எடுத்தார். அதைத்தொடர்ந்து, நெப்போலியன், சத்தியராஜ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களை வைத்த படங்களை இயக்கியுள்ளார்.

மேலும், வேலு பிரபாகரனின் காதல் கதை, ஒரு இயக்குனரின் காதல் டைரி, பீட்ஸா 3 என 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக, கடந்த மே மாதம் வெளியான கஜானா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

முன்னதாக, தமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் என கருதப்படும் ஜெயதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

அதை தொடர்ந்து, தனது 60 வயதில், வேலு பிரபாகரனின் காதல் கதை படத்தில் தன்னுடன் நடித்த ஷிர்லே தாஸ் என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு, திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/220264 

நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் - தமிழ், தெலுங்கு திரையுலகில் சாதித்தது என்ன?

2 months ago

கோட்டா சீனிவாச ராவ், முக்கிய செய்திகள், சினிமா செய்திகள்

பட மூலாதாரம்,ANI

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்.

வயோதீகம் காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்ட கோட்டா சீனிவாச ராவ், ஹைதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் இன்று (ஜூலை 13) அதிகாலை காலமானார்.

வில்லன், குணச்சித்திர நடிகர் என எத்தகைய கதாபாத்திரத்தையும் ஏற்று அதற்கு தக்க வகையில் நடிக்கும் திறமை உடையவர் என்று திரையுலக பிரபலங்கள் தங்களின் அஞ்சலி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

கோட்டா சீனிவாச ராவ் நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்டவர். நாற்பதாண்டு கால திரையுலக வாழ்வில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

தமிழில் பெயர் வாங்கிக் கொடுத்த 'பெருமாள் பிச்சை'

கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'சாமி'. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் 'பெருமாள் பிச்சை' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். அவருக்கு தமிழில் இதுதான் முதல் படம்.

தொடர்ந்து அவர் தமிழில், 'குத்து', 'ஜோர்', 'ஏய்', 'திருப்பாச்சி', 'பரமசிவன்', 'சத்யம்', 'கோ', 'சாமி 2', 'காத்தாடி' என பல படங்களில் நடித்து தனது வில்லத்தனத்தால் பாராட்டப்பட்டவர் கோட்டா சீனிவாச ராவ். கார்த்தி - சந்தானத்துடன் இணைந்து 'அழகுராஜா' என்ற திரைப்படத்தில் நகைச்சுவையிலும் அவர் கலக்கியிருப்பார்.

வில்லன் கதாபாத்திரங்களில் அசத்திய சீனிவாச ராவ்

இளம் வயதில் அவருக்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்தது. பின்னாட்களில், நாடக கலையால் ஈர்க்கப்பட்ட அவர் திரையுலகிற்கு வந்தார்.

குணசித்திர வேடங்களில் மட்டுமில்லாமல் வில்லன் கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தவர் அவர். கிராமப் புறத்தில் வாழும் நபர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திய அவர், நவ நாகரிக கதாபாத்திரத்திற்கு ஏற்றபடியும் நடிப்பில் அசத்தினார்.

தெலுங்கில் கிருஷ்ணா, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், நாகர்ஜுனா போன்ற பிரபலங்களில் அவர் நடித்துள்ளார். தமிழில் விக்ரம், விஜய், சிலம்பரசன் ஆகியோரின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கன்னடம், மலையாளம், இந்தி மொழித் திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

'ஆஹா! நா பெல்லண்டா' என்ற படத்தில் பிசினாரி என்ற கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு பல பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. வெங்கடேஷ் நடிப்பில் வெளியான கணேஷ் திரைப்படத்தில் அரசியல் தலைவராக நடித்திருக்கும் அவர் தெலுங்கானாவுக்கே உரித்தான தெலுங்கு பேச்சுவழக்கில் மிரட்டியிருப்பார்.

நகைச்சுவை உணர்வுக்காக நன்கு அறியப்பட்டவர் அவர்.

கோட்டா சீனிவாச ராவ், முக்கிய செய்திகள், சினிமா செய்திகள்

பட மூலாதாரம்,UGC

அரசியல்வாதியாகவும் சீனிவாச ராவ்

நடிப்பில் மட்டுமின்றி அவர் அரசியலிலும் ஆர்வம் செலுத்தினார். விஜயவாடா கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1999-ஆம் ஆண்டு அவர் பாஜக சார்பில் அந்த தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிப்புத் திறமைக்காக பல விருதுகளையும் அவர் வென்றுள்ளார். நந்தி, சைமா உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற அவருக்கு 2015-ஆம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது வழங்கி கௌரவித்தது இந்திய அரசு.

திரையுலகினர் இரங்கல்

கோட்டா சீனிவாச ராவின் திறமையான நடிப்பு குறித்து பல நேரங்களில் நடிகர்களும் இயக்குநர்களும் புகழ்வது உண்டு. மூன்று நாட்களுக்கு முன்பு ஜூலை 10 அன்று, கோட்டா சீனிவாச ராவின் பிறந்த நாளை ஒட்டி இயக்குநர் திரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் "நடிகர்கள் உங்களை சிரிக்க வைக்கலாம். சிலர் உங்களை அழ வைக்கலாம். ஆனால் கோட்டாவால் மட்டுமே உங்களை சிரிக்க வைக்கவும், அழ வைக்கவும், அச்சப்படுத்தவும் முடியும்," என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

கோட்டா சீனிவாச ராவ் மறைவுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cjrl90q802zo

பறந்து போ விமர்சனம்: மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்கு... நம்மையும் பறக்க அழைக்கும் ராமின் உலகம்!

2 months 1 week ago

சென்னையில் மளிகை அங்காடி தொடங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு ஓடிக்கொண்டிருக்கும் கோகுலை (சிவா), மாத இஎம்ஐ-க்களும் துரத்திக்கொண்டிருக்கின்றன.

அவரின் மனைவியான குளோரி (கிரேஸி ஆண்டனி) தன் சேலை விற்பனை தொழிலால் ஓரளவிற்குக் குடும்பப் பணப் பிரச்னையைச் சமாளிக்கிறார்.

பெற்றோரின் இந்த இயந்திரத்தனமான பொருளாதார ஓட்டத்தால், அவர்களின் ஒரே மகனான அன்பு (மிதுல் ரயான்) பகல் வேளையில் பூட்டிய வீட்டிற்குள் தனிமையில் ஆன்லைன் க்ளாஸ்களோடு பொழுதைக் கழிக்கிறார்.

Parandhu Po review | பறந்து போ விமர்சனம்

Parandhu Po review | பறந்து போ விமர்சனம்

இந்தத் தனிமையால், பெற்றோரின் மீது பிடிப்பின்மையும், குழந்தைப் பருவத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையும் அன்புக்கு வருகின்றன.

இந்நிலையில், அலுவல் நிமித்தமாக குளோரி கோவை செல்ல, எதிர்பாராத தருணத்தில், கோகுலும் அன்பும் ஒரு சின்ன பைக் ரைடுக்குக் கிளம்புகிறார்கள்.

இந்தப் பயணத்தில் பெற்றோருக்குள்ளும், அன்புக்குள்ளும் நிகழும் நேர்மறை மாற்றங்களே ராம் இயக்கியிருக்கும் 'பறந்து போ'.

தன் வழக்கமான அப்பாவித்தனமான மேனரிஸத்தோடும், ஒன் லைன் கவுன்ட்டர் காமெடிகளோடும் உலாவும் சிவா, ஆங்காங்கே வரும் உணர்வுபூர்வமான தருணங்களையும் முதிர்ச்சியுடன் அணுகி, தன் கதாபாத்திரத்தை அழுத்தமாகப் பதிய வைக்கிறார்.

சிவாவின் கவுன்ட்டர்களைக் கதையிலிருந்து விலக வைக்காத வகையில், நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர்.

மகன் மீதான பாசம், கணவன் மீதான காதல், பொருளாதாரம் கொடுக்கும் அழுத்தம், தங்கை மீதான ஏக்கம் என உணர்வுகளின் வெளியில் பறக்கும் குளோரி கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார் கிரேஸ் ஆண்டனி. இறுதிக்காட்சியில் லூட்டியடித்து சிரிப்பலைகளையும் அள்ளுகிறார்.

Parandhu Po review | பறந்து போ விமர்சனம்

Parandhu Po review | பறந்து போ விமர்சனம்

சிறிது மீறினாலும், ஓவர்டோஸ் மோடுக்குப் போய்விடும் அன்பு கதாபாத்திற்குத் தேவையான கச்சிதமான நடிப்பை மிதுல் ரயானிடமிருந்து வாங்கியிருக்கிறார் இயக்குநர். நகைச்சுவை தாண்டி, எமோஷனல் காட்சிகளிலும் நம் அன்பைப் பெறுகிறார் இந்த அன்பு!

அஞ்சலி, அஜு வர்கீஸ் ஆகியோர் குறைந்த திரை நேரத்திலும் கவனிக்க வைக்கிறார்கள். விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

பயணங்களில் நிலவியலையும், எமோஷனல் தருணங்களில் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பீல் குட் மீட்டரிலிருந்து விலகாமல் நேர்த்தியாகக் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம்.

இதற்கு மதி வி.எஸ்-ஸின் படத்தொகுப்பும் தேவையான பங்களிப்பைத் தந்திருக்கிறது. ஆங்காங்கே வரும் 'டிரோன் ஷாட்'களும் இந்தப் பறத்தலுக்குச் சிறகை வீசியிருக்கின்றன.

சந்தோஷ் தயாநிதி இசையில் மதன் கார்க்கி வரிகளில் குழந்தைகளின் உலகத்தையும், அவர்களின் பார்வையையும் பேசும் பாடல்கள் குழந்தைகளின் மொழியிலேயே படம் நெடுகிலும் திரைக்கதையோடு பிணைந்து, கதைக்கருவிற்குக் கைகொடுத்திருக்கின்றன.

இப்பாடல்களுக்கு இடையில் ஆங்காங்கே தென்படும் மேகக்கூட்டம் போல் வரும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையில் குறையில்லை.

Parandhu Po review | பறந்து போ விமர்சனம்

Parandhu Po review | பறந்து போ விமர்சனம்

சமகால குழந்தைகளின் உலகம், அவர்களுக்குள் இருக்கும் சிக்கல்கள், அவற்றைப் பெற்றோர்கள் அணுகும் முறையிலிருக்கும் சிக்கல்கள் போன்றவற்றை எமோஷனலாகவும், காமெடியாகவும் பேசியபடி தொடங்குகிறது திரைக்கதை.

அச்சிக்கல்களுக்கான தீர்வுகளைச் சின்ன சின்ன துணை கதாபாத்திரங்கள், கிளைக்கதைகளின் உதவியோடு விவாதிக்கிறது திரைக்கதை.

பரபரப்பு, திருப்பங்கள் இல்லாமல், நேர்க்கோட்டில் நிதானமாகப் பயணிக்கும் திரைக்கதை, காமெடி, எமோஷன் என மாறி, மாறி வந்தாலும் அழுத்தமாகவே நகர்கிறது.சிறுவனின் சேட்டைகள், அதனால் அல்லாடும் தந்தை எனக் காட்சிகள் வரிசைக்கட்டுகின்றன. இவற்றில், சிறுவனின் சேட்டைகளில் அதீத தன்மை எட்டிப்பார்க்காத வகையில், நியாயமான காரணங்களும் அக்காட்சிகளினூடே இடம்பெற்றிருக்கின்றன.

இயக்குநர் ராமின் 'அன்பு சூழ்' உலகமும், மனிதர்களும் திகட்டாத வகையில் கச்சிதமான அளவில் 'நின்றுவிடுவது' படத்திற்குப் பலம்.

கோகுலின் தந்தை, கோகுல், அன்பு என மூன்று தலைமுறையினருக்குள் நடக்கும் உரையாடல் காட்சி கலகலப்பு!

காக்ரோச் எனத் தன்னை அறிமுக செய்துகொள்ளும் குட்டிக் குழந்தையிடமிருந்து பெறப்பட்ட நடிப்பில் க்யூட்னஸ் ஓவர் லோடட்!

தண்ணீர் கேன்கள் இருக்கும் கைப்பையை வைத்துக்கொண்டு, அதைத் திறந்துகூடப் பார்க்காமல், தாகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் சிவா, ஆண்களின் அவசரகதி உலகைப் பிரதிபலிக்கிறார்.

Parandhu Po review | பறந்து போ விமர்சனம்

Parandhu Po review | பறந்து போ விமர்சனம்

அதே சமயம், சில காட்சிகளில் எதார்த்தத்தை மீறும் வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். இறுதிக்காட்சியானது அதன் சுவாரஸ்ய எல்லையை மீறி, மலை ஏறிக்கொண்டே போவது அயற்சியை வர வைக்கிறது.

இறுதிக்காட்சியில் ஈழைநோய் உள்ள குளோரியிடம், இன்ஹேலரைத் தூக்கிப் போடச் சொன்னதைத் தவிர்த்திருக்கலாம். கிராம வாழ்க்கையைப் புனிதப்படுத்துவது போல நீட்டி முழக்கினாலும், இறுதியில் அதையும் விமர்சனத்திற்குள்ளாக்கியது சிறப்பு!

நவீன பொருளாதார சூழலும், நகரமயமாக்கலும் தரும் அதீத அழுத்தங்களால் பெற்றோர் மீது திணிக்கப்படும் சுமைகள்... அதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படும் குழந்தைகள் என்ற பிரச்னையை பீல் குட் படமாக உரையாடி, நம்மையும் குழந்தைகளின் உலகில் பறக்கவிட்டிருக்கிறது இந்த 'பறந்து போ'.

Parandhu Po review; பறந்து போ விமர்சனம்; மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் ராம்; பறந்து போ எப்படி இருக்கு?

3 BHK விமர்சனம்: சரத்குமார், சித்தார்த் ஆதிக்கத்தில் மிடில் கிளாஸ் வாழ்வியல் அனுபவம் எப்படி?

2 months 1 week ago

1368096.jpg

சொந்த வீடு என்பது மிடில் கிளாஸ் மனிதர்களின் கனவு. அந்த கனவை நனவாக்க பலரும் கடன் வாங்கி, வாழ்நாள் முழுக்க உழைத்து ஓடாய் தேய்கின்றனர். எல்லா தரப்பு மக்களுடனும் எளிதாய் ‘கனெக்ட்’ ஆகும் ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்ட இயக்குநர் ஸ்ரீகணேஷ் அதை உணர்வுபூர்வமாக ஆடியன்ஸுக்கு சொன்னாரா என்பதை பார்க்கலாம்.

மனைவி, இரண்டு குழந்தைகள் அடங்கிய ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் தலைவர் வாசுதேவன் (சரத்குமார்). ஃபேக்டரி ஒன்றில் அக்கவுன்டன்ட்டாக வேலை பார்ப்பவர் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சொந்த வீடு வாங்குவதற்காக சேமிக்கிறார். தொடர்ந்து வாடகை வீடுகளாக மாறிக் கொண்டிருக்கும் அந்தக் குடும்பமே சொந்த வீடு கனவில் இருக்கிறது.

மனைவி சாந்தி (தேவயாணி) முறுக்கு சுட்டு கணவனுக்கு உதவுகிறார். தொடர்ந்து தோல்விகளை மட்டுமே பார்த்து வரும் மகன் பிரபு (சித்தார்த்) கல்லூரி முடிந்து ஓர் ஆலையில் வேலைக்கு செல்கிறார். அண்ணனை பெரிய பள்ளி, கல்லூரியில் படிக்க வைப்பதற்காக அரசு பள்ளியில் படிக்கும் மகள் ஆர்த்தி (மீதா ரகுநாத்). இப்படி வாழ்நாள் முழுக்க ‘அட்ஜஸ்ட்’ செய்து வாழும் இந்த குடும்பத்தின் சொந்த வீடு கனவு நனவானதா என்பதே ‘3பிஹெச்கே’ படத்தின் திரைக்கதை.

‘8 தோட்டாக்கள்’ மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீகணேஷின் மூன்றாவது படம். மிக எளிமையான ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதை முடிந்தவரை அலுப்பு தட்டாமல் பல இடங்களில் நெகிழ வைத்தும், சுவாரஸ்யத்துடனும் தந்திருக்கிறார். படத்தின் முதல் காட்சியிலேயே தேவையற்ற அறிமுகங்கள் இன்றி கார்த்தியின் வாய்ஸ் ஓவரில் ‘சிம்பிள்’ ஆக கதைக்குள் நுழைந்த விதம் சிறப்பு. அடுத்த காட்சிகளில் கதையின் முக்கிய நோக்கம், கதாபாத்திரங்களின் தன்மைகள் ஆகியவை ஆடியன்ஸின் மனதில் பதிந்து விடுகிறது. இதுவே படத்துடன் மிக இலகுவாக ஒன்றவைத்து விடுகிறது.

லேசாக பிசகினாலும் சீரியல் போல ஆகிவிடக் கூடிய கதைக்களத்தில் கடைசி வரை நெளியவிடாமல் வைத்திருப்பது நடிகர்களின் நடிப்பு. படத்தின் ஹீரோ சந்தேகமே இன்றி சரத்குமார்தான். ஒரு மிடில் கிளாஸ் குடும்பத் தலைவனாக மிக இயல்பான நடிப்பு. சொந்த வீடு கனவை எப்போதும் சுமந்து திரியும்போதும், தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ள முதலில் தயங்கி, பின்னர் காலத்தின் கட்டாயத்தால் வேறு வழியின்றி மாற்றத்துக்கு தயாராகும் காட்சிகளில் மனதை கவர்ந்து விடுகிறார்.

17516041881138.jpg

முதல் முழுக்க சரத்குமார் ஆதிக்கம் என்றால் இரண்டாம் பாதி முழுக்க சித்தார்த்துக்காகவே எழுதப்பட்டிருக்கிறது. அவரும் தன் கதாபாத்திரத்தின் கனத்தை உணர்ந்து பொறுப்புடன் நடித்திருக்கிறார். பள்ளி மாணவனாக வரும் காட்சிகளில் எல்லாம் உடலை குறுக்கி நம்பகத்தன்மையை கூட்டியிருக்கிறார். ஒவ்வொரு பருவத்திலும் அவரது முகத்திலும், நடிப்பிலும் காட்டும் வெரைட்டி ரசிக்க வைக்கிறது.

’குட் நைட்’ படத்துக்குப் பிறகு மீதா ரகுநாத்துக்கு இது முக்கியமான கதாபாத்திரம். அண்ணனுக்காக தன்னுடைய தேவைகளை குறைத்து கொள்ளும் இடங்களில் நடிப்பில் மிளிர்கிறார். கன்னடத்தில் ‘சப்த சாகரடாச்சே எல்லோ சைடு பி’ படத்தில் நடித்த சைத்ரா மற்றொரு ஆச்சர்யம். சில காட்சிகளே வந்தாலும் நடிப்பில் உள்ளத்தை கொள்ளை கொள்கிறார். படத்தில் தேவயாணி கதாபாத்திரம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. வெறுமனே கணவருக்கு ஆறுதல் சொல்ல மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

படத்தின் இன்னொரு பலம் அம்ரித் ராம்நாத்தின் பின்னணி இசை. நெகிழ வைக்கும் காட்சிகளுக்கு அவரது இசை பெரிதும் கைகொடுத்திருக்கிறது. பாடல்களில் ‘கனவெல்லாம்’, ‘துள்ளும் நெஞ்சம்’ பாடல்கள் சிறப்பு. தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜித்தின் ஸ்டானிஸ்லாஸின் ஒளிப்பதிவு நேர்த்தி.

மிடில் கிளாஸ் குடும்பத்தினர் அனைவருக்குமே சொந்த வீடு கனவு இருக்கும்தான். ஆனால் அதற்காக சொந்த வீடு இல்லையென்றால் வாழவே முடியாது என்பதைப் போல குடும்பத்தில் உள்ள அனைவரும் அழுது வடிந்துகொண்டே இருப்பது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. ஒரு காட்சியில் தன் தம்பி சுப்பு பஞ்சுவிடம் சென்று வீடு வாங்க கடன் கேட்கிறார் சரத்குமார். அப்போது ஓர் இடத்தில் சொந்த வீடு தான் மரியாதை என்று ஒரு வசனம் வருகிறது. கடன் வாங்கி சொந்த வீடு வாங்குவதில் அப்படி என்ன மரியாதை?

அதே போல தன்னுடைய கனவை எந்நேரமும் தன் மகன் சித்தார்த் மீது திணித்துக் கொண்டே இருக்கிறார் சரத்குமார். இரண்டாம் பாதியில் அதை அவர் உணர்வதை போன்ற காட்சிகளை இன்னும் பார்வையாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சொல்லி இருக்கலாம். பெற்றோரின் வற்புறுத்தலால் தனக்கு விருப்பமில்லாத துறையை தேர்வு செய்து படித்து, அந்த துறையிலேயே வேலைக்கு செல்லும் சித்தார்த் ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் உதறிவிட்டு வீட்டிலேயே தனக்கு பிடித்த துறையை படித்து வேலைக்கு செல்வதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். அந்த காட்சிகளில் எந்தவொரு அழுத்தமும் இல்லை. க்ளைமாக்ஸ் காட்சி இழுத்துக் கொண்டே போவதைப் போன்ற உணர்வை தவிர்த்திருக்கலாம்.

மேற்சொன்ன சில குறைகளை தாண்டி எந்தவித மேற்பூச்சுகளும் இல்லாமல் மிடில் கிளாஸ் குடும்பங்கள் படும் சிரமங்களை, கனவை நிறைவேற்ற சந்திக்கும் போராட்டங்களை நெகிழ்ச்சியுடன் காட்சிப்படுத்திய விதத்தில் இந்த ‘3பிஹெச்கே’வை வரவேற்கலாம்.

3 BHK விமர்சனம்: சரத்குமார், சித்தார்த் ஆதிக்கத்தில் மிடில் கிளாஸ் வாழ்வியல் அனுபவம் எப்படி? | 3BHK Movie review - hindutamil.in

ஆஸ்கர் குழுவில் இணைய கமலுக்கு அழைப்பு… ஸ்டாலின் வாழ்த்து!

2 months 2 weeks ago

ஆஸ்கர் குழுவில் இணைய கமலுக்கு அழைப்பு… ஸ்டாலின் வாழ்த்து!

28 Jun 2025, 8:00 AM

Kamal Haasan invited

2026-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது மார்ச் 15-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தைச் சேர்ந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் உள்ளிட்ட 543 கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருதுக்கான அகாடமி வாக்களிப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விழாவில் இருந்து கமல்ஹாசனுக்கு அழைப்பு வந்ததற்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

“உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள்.

மொழி – தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது. இன்னும் பல தேடி வரும் உயரம் தங்களுடையது” என்று தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை, “தமிழின் கலைப் பெருமை. இந்தியாவின் சினிமா பாரம்பரியம். உலக மேடையில் மீண்டும் ஒளி வீசியுள்ளார் கமல்ஹாசன். ஆஸ்கர் விழாவில் இருந்து வந்த இந்த பெருமைமிக்க அழைப்பு, தமிழர் திறமையின் சான்றாகும். அவரின் சாதனைக்கு என் மனமுழுவதும் நெகிழும் வாழ்த்துகள்” என்று பாராட்டியுள்ளார்.

https://minnambalam.com/kamal-haasan-invited-to-join-oscars-committee/#google_vignette

Checked
Tue, 09/16/2025 - 01:39
வண்ணத் திரை Latest Topics
Subscribe to வண்ணத் திரை feed