வண்ணத் திரை

இளையராஜாவுக்கு இடைக்கால தடை - டெல்லி உயர் நீதிமன்றம்

3 days 21 hours ago

'மடை திறந்து தாவும் நதியலை நான்' - இளையராஜாவுக்கு தடை விதிக்கப்பட்ட பாடல்களில் 15 பிரபல பாடல்கள் எவை?

இளையராஜா

பட மூலாதாரம்,X/ilaiyaraaja

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 18 பிப்ரவரி 2026

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

'சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ஒலிப்பதிவுகள் மற்றும் இசை படைப்புகளை (musical works) பயன்படுத்தவோ, உரிமை கோரவோ கூடாது' என இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிப்ரவரி 13-ஆம் தேதியன்று டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

'இளையராஜாவின் இசையில் வெளியான 134 படங்களுக்கு இது பொருந்தும்' எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவில் பட்டியலிடப்பட்டுள்ள படங்கள் என்னென்ன? அதில் பிரபல 15 பாடல்கள் எவை?

சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.

மனுவில், 'தங்கள் நிறுவனம் 1976 முதல் 2001-ஆம் ஆண்டு வரை படத்தின் தயாரிப்பாளர்களுடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது' எனக் கூறியுள்ளது.

இந்தப் படங்களின் ஒலிப்பதிவுகள், இசை படைப்புகளின் உரிமை தங்களிடம் உள்ளதாகவும் தங்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் சரிகம இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்களின் பதிப்புரிமை பெற்ற படைப்புகளை பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதாக மனுவில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம்

படக்குறிப்பு,டெல்லி உயர் நீதிமன்றம்

'தயாரிப்பாளரே முதல் உரிமையாளர்'

தங்களிடம் இளையராஜா இசையமைத்த 134 படங்களின் பாடல்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் உள்ளன என மனுவில் கூறியுள்ள சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம், 'கடந்த பிப்ரவரி மாதம் அமேசான் மியூசிக், ஐ டியூன்ஸ் மற்றும் ஜியோ சாவ்ன் ஆகிய தளங்களுக்கு பாடல் உரிமையை இளையராஜா வழங்கியுள்ளார்' என்கிறது.

'1957-ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தின்படி படத்துக்காக உருவாக்கப்படும் இசைக்கு அதன் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர்' என சரிகம இந்தியா லிமிடெட் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

அந்தவகையில், பதிப்புரிமை பெற்ற படைப்புகளை மாற்றியமைக்கவும் மீண்டும் உருவாக்கவும் பொதுவில் அதனைப் பயன்படுத்தவும் தங்களுக்கே பிரத்யேக உரிமை உள்ளதாகவும் மனுவில் அந்நிறுவனம் கூறியது.

பதிப்புரிமை பெற்றுள்ள பாடல்களின் மீது சட்ட மீறல்களில் இளையராஜா தரப்பு ஈடுபட்டுள்ளதாகக் கூறி அதுதொடர்பான சில ஸ்க்ரீன் ஷாட்டுகளை சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் இணைத்துள்ளது.

அதில், 'கவிக்குயில்' படத்தில் இடம்பெற்ற 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' பாடல், பாரதி படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள், 'ஆகாய கங்கை' ஆகிய பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

இளையராஜா

பட மூலாதாரம்,Facebook/Ilaiyaraaja

'ஈடுசெய்ய இயலாத இழப்பு' - நீதிபதி

வழக்கின் மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கெடேலா, 'பட்டியலிடப்பட்டுள்ள திரைப்படங்களின் ஒரு பகுதியாக இருக்கும் ஒலிப்பதிவுகள், இசை ஆகியவற்றை பயன்படுத்துதல் அல்லது உரிமை கோரல்களை மேற்கொள்ளக் கூடாது' எனக் கூறி, இளையராஜா மற்றும் அவர் சார்ந்த நபர்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

'அவ்வாறு தடை விதிக்கப்படாமல் இருந்தால் சரிகம நிறுவனத்துக்கு ஈடுசெய்ய இயலாத இழப்பு ஏற்படும்' எனவும் உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வழக்கில் இளையராஜா தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் நான்கு வாரங்களுக்குள் பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு கூறி வழக்கை ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

இதுதொடர்பாக, இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரையிடம் பிபிசி தமிழ் பேசியது.

"தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விவரங்களைப் பார்த்த பிறகு பேசுகிறேன்" என்று அவர் பதில் அளித்தார்.

சரவணன் அண்ணாதுரை

படக்குறிப்பு,சரவணன் அண்ணாதுரை

நீதிமன்ற உத்தரவில், இளையராஜாவின் இசையில் 1976-ஆம் ஆண்டு வெளியான 'பத்திரகாளி' படம் முதல் 2001-ஆம் ஆண்டு வெளியான 'உசிரே' என்ற கன்னட படம் வரையில் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

'பாரதி கண்ணம்மா' படத்தின் கன்னட ரீமேக் ஆக 2001-ஆம் ஆண்டு 'உசிரே' படம் வெளியாகியிருந்தது.

தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இளையராஜா இசையமைத்துள்ள 134 படங்களின் பட்டியலை சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2000-ஆம் ஆண்டில் ஞானராஜசேகரன் இயக்கத்தில் வெளியான 'பாரதி' படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கும் அந்நிறுவனம் உரிமை கோரியுள்ளது.

நீதிமன்றத்தில் சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் பட்டியலிட்டுள்ள இளையராஜா இசையமைத்த பாடல்களில் 15 பிரபல பாடல்கள் எவை?

'செந்தூரப்பூவே...செந்தூரப்பூவே...'

'செந்தூரப்பூவே' பாடலை எஸ்.ஜானகி பாடியிருந்தார்

பட மூலாதாரம்,Youtube/Pyramid Glitz Music

படக்குறிப்பு,'செந்தூரப்பூவே' பாடலை எஸ்.ஜானகி பாடியிருந்தார்

1977-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் '16 வயதினிலே' படம் வெளியானது. நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தனிக்கவனம் பெற்றன. கங்கை அமரனின் வரிகளில் இடம்பெற்ற 'செந்தூரப்பூவே' பாடலை எஸ்.ஜானகி பாடியிருந்தார். 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக் குஞ்சு வந்ததென்ன' என்ற பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர்.

இதே படத்தில் இடம்பெற்ற 'செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா...' பாடலை மலேசியா வாசுதேவன், பி.சுசீலா ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர்.

'என் கண்மணி உன் காதலி...'

1978-ஆம் ஆண்டு தேவராஜ் - மோகன் இயக்கத்தில் 'சிட்டுக்குருவி' படம் வெளியானது. சிவக்குமார், சுமித்ரா ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் - பி.சுசீலா பாடிய 'என் கண்மணி உன் காதலி இளமாங்கனி... உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதே' என்ற பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

பேருந்து பயணத்தில் காதலனும் காதலியும் பாடுவதுபோல இந்தப் பாடலின் காட்சியமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது. இதே படத்தில் 'அடடடா மாமரக் கிளியே...உன்னை இன்னும் நான் மறக்கலியே' என்ற பாடலும் 'உன்ன நம்பி நெத்தியிலே... பொட்டு வச்சேன் மத்தியிலே' ஆகிய பாடல்கள் ரசிகர்களை ஈர்த்தன.

'கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ...'

கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ பாடலின் காட்சி

பட மூலாதாரம்,Youtube/GLV

படக்குறிப்பு,கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ பாடலின் காட்சி

1978-ஆம் ஆண்டு 'கிழக்கே போகும் ரயில்' வெளியானது. '16 வயதினிலே' படத்துக்குப் பிறகு பாரதிராஜா இயக்கிய இந்தப் படத்தில் சுதாகர், ராதிகா ஆகியோர் நடித்திருந்தனர்.

படத்தில் கண்ணதாசனின் வரிகளில் இடம்பெற்ற 'கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ...' பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர்.

இதே படத்தில் கங்கை அமரன் எழுதிய 'பூவரசம் பூ பூத்தாச்சு...' பாடல், ஜெயச்சந்திரனின் குரலில் இடம்பெற்ற 'மாஞ்சோலை கிளிதானா...மான்தானோ...வேப்பம்தோப்பு குயிலும் நீதானோ' ஆகிய பாடல்களை ரசிகர்கள் கொண்டாடினர்.

'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்...'

1978-ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கிய 'முள்ளும் மலரும்' படம், எழுத்தாளர் உமா சந்திரன் எழுதிய நாவலின் கதையை மையமாக வைத்து உருவாகியிருந்தது.

படத்தில் கண்ணதாசனின் வரிகளில் உருவான 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்...' பாடலை கே.ஜே.யேசுதாஸ் பாடியிருந்தார். இது ரசிகர்களின் விருப்பப் பாடலாக மாறியது.

அடுத்து, பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளில் இடம்பெற்ற 'அடி பெண்ணே...பொன்னூஞ்சல் ஆடும் இளமை...வண்ணங்கள் தோன்றும் இயற்கை' என்ற பாடலை ஜென்சி பாடியிருந்தார்.

இதே படத்தில் கங்கை அமரன் எழுதிய இரு பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. அவர் எழுதிய 'நித்தம் நித்தம் நெல்லு சோறு... நெய் மணக்கும் கத்திரிக்காய்... நேத்து வச்சு மீன் குழம்பு என்னை இழுக்குதய்யா' என்ற பாடலை வாணி ஜெயராம் பாடியிருந்தார்.

அடுத்து, 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்...' பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எல்.ஆர்.அஞ்சலியும் இணைந்து பாடியிருந்தனர்.

கங்கை அமரன்

பட மூலாதாரம்,x

படக்குறிப்பு,இளையராஜா இசையமைத்த பல பாடல்களுக்கு கங்கை அமரன் வரிகளை எழுதியுள்ளார்.

'ஆகாய கங்கை... பொன்தேன் மலர் சோலை'

1979-ஆம் ஆண்டு ஆர்.சி.சக்தி இயக்கத்தில் 'தர்மயுத்தம்' படம் வெளியானது. ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்திருந்த இந்தப் படத்தில் 'ஆகாய கங்கை பொன்தேன் மலர் சோலை...' என்ற பாடல் வரவேற்பைப் பெற்றது.

எம்.ஜி.வல்லபனின் வரிகளில் இடம்பெற்ற இந்தப் பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர். இதே படத்தில் இடம்பெற்ற 'ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு' பாடலும் ரசிகர்களை ஈர்த்தது.

கண்ணதாசனின் வரிகளில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடலை மலேசியா வாசுதேவன் பாடியிருந்தார்.

'ஆயிரம் மலர்களே... அமுத கீதம் பாடுங்கள்'

'ஆயிரம் மலர்களே பாடலின் காட்சி

பட மூலாதாரம்,Youtube/pyramid music

படக்குறிப்பு,ஆயிரம் மலர்களே பாடலின் காட்சி

1979-ஆம் ஆண்டு வெளிவந்த 'நிறம் மாறாத பூக்கள்' படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சுதாகர், ராதிகா, விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர்.

படத்தில் 'ஆயிரம் மலர்களே... மலருங்கள்... அமுதகீதம் பாடுங்கள்' என்ற பாடலை ஜென்சி, எஸ்.பி.சைலஜா, மலேசியா வாசுதேவன் ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். பாடலை பஞ்சு அருணாச்சலம் எழுதியிருந்தார்.

'மலர்களில் ஆடும் இளமை புதுமையே'

கமல்ஹாசன் ஸ்ரீதேவி நடிப்பில் 1979-ஆம் ஆண்டு 'கல்யாணராமன்' படம் வெளியானது. ஜி.என்.ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அதிக வரவேற்பைப் பெற்றன.

மலேசியா வாசுதேவன் பாடிய 'ஆஹா வந்துருச்சு....காதல் வந்துருச்சு... ஆசையில் ஓடிவந்தேன்' பாடல், 'காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்...' பாடலும் எஸ்.பி.சைலஜா பாடிய 'மலர்களில் ஆடும் இளமை புதுமையே.. மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே...' ஆகியவை கவனம் பெற்றன.

'உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்சு கிளி..'

1979-ஆம் ஆண்டு வெளியான 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' படத்தில் சிவகுமார், தீபா உன்னிமேரி உள்பட பலர் நடித்திருந்தனர்.

படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.பி.சைலஜாவும் இணைந்து பாடிய 'உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்சு கிளி...' பாடலும் 'மாமன் ஒருநாள் மல்லிகைப் பூ கொடுத்தான்...' என்ற பாடல்கள் ரசிகர்களை ஈர்த்தன.

'சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்...'

1980-ஆம் ஆண்டு வெளியான 'கல்லுக்குள் ஈரம்' படத்தை எஸ்.பி.நிவாஸ் இயக்கியிருந்தார். படத்தில் பாரதிராஜா, சுதாகர், அருணா ஆகியோர் நடித்திருந்தனர்.

கங்கை அமரனின் வரிகளில் இடம்பெற்ற 'சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்... இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்..' பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர்.

'பொதுவாக என் மனசு தங்கம்...'

பொதுவாக என் மனசு தங்கம் பாடலின் காட்சி

பட மூலாதாரம்,Youtube/AP international

படக்குறிப்பு,பொதுவாக என் மனசு தங்கம் பாடலின் காட்சி

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1980-ஆம் ஆண்டு 'முரட்டுக்காளை' படம் வெளியானது. ரஜினிகாந்த், ரதி அக்னிஹோத்ரி ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றளவும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளில் இடம்பெற்ற 'பொதுவாக என் மனசு தங்கம்... ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்...' பாடலை மலேசியா வாசுதேவன் பாடியிருந்தார்.

'எந்தப் பூவிலும் வாசம் உண்டு... எந்தப் பாட்டிலும் ராகம் உண்டு...' என்ற பாடலையும் பஞ்சு அருணாச்சலம் எழுதியிருந்தார். இந்தப் பாடலுக்கு எஸ்.ஜானகியின் குரல் தனி அழகைக் கொடுத்தது.

'மடை திறந்து தாவும் நதியலை நான்...'

பாரதிராஜா இயக்கத்தில் 1980-ஆம் ஆண்டு 'நிழல்கள்' படம் வெளியானது. இந்தப் படத்தில் சந்திரசேகர், ரோகிணி, ராஜசேகர் உள்பட பலர் நடித்திருந்தனர்.

படத்தில் வாலியின் வரிகளில் இடம்பெற்ற 'மடை திறந்து தாவும் நதியலை நான்... மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்...' பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்தார்.

கங்கை அமரனின் வரிகளில் இடம்பெற்ற 'பூங்கதவே தாழ் திறவாய்...' பாடலும் வைரமுத்து எழுதிய 'இது ஒரு பொன்மாலைப் பொழுது... வான மகள் நாணுகிறாள்..' ஆகிய பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

'சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்...'

1981-ஆம் ஆண்டு ஜி.என்.ரங்கநாதன் இயக்கத்தில் 'மீண்டும் கோகிலா ' படம் வெளியானது. கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் நடித்த இந்தப் படத்தில் 'சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி...' என்ற பாடலை கே.ஜே.யேசுதாசும் எஸ்.பி.சைலஜாவும் இணைந்து பாடியிருந்தனர்.

இதே படத்தில் இடம்பெற்ற 'ராதா.. ராதா.. நீ எங்கே.. கண்ணன் எங்கே... நான் அங்கே' என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரணியமும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர்.

'ராமனின் மோகனம்... ஜானகி மந்திரம்...'

ராமனின் மோகனம்... ஜானகி மந்திரம்

பட மூலாதாரம்,Youtube/ Bayshore Records

படக்குறிப்பு,ராமனின் மோகனம்... ஜானகி மந்திரம் பாடலின் காட்சி

1981-ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 'நெற்றிக்கண்' படம் வெளியானது. இந்தப் படத்தில் தந்தை - மகன் என இரு வேடங்களில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

படத்தில் கே.ஜே.யேசுதாஸ், ஜானகி ஆகியோர் இணைந்து பாடிய 'ராமனின் மோகனம்... ஜானகி மந்திரம்... ராமாயணம்...பாராயணம்... காதல் மங்கலம்' பாடலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய 'தீராத விளையாட்டு பிள்ளை... இவன் சிங்கார மன்மதன் தான் சந்தேகம் இல்லை..' பாடலும் வரவேற்பைப் பெற்றன.

இப்படத்தில் இடம்பெற்ற 'மாப்பிள்ளைக்கு மாமன் மனசு...' என்ற பாடலை மலேசியா வாசுதேவனும் பி.சுசீலாவும் இணைந்து பாடியிருந்தனர்.

'அந்தி மழைபொழிகிறது...'

1981-ஆம் ஆண்டு சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 'ராஜ பார்வை' படம் வெளியானது. இந்தப் படத்தில் கமல்ஹாசன், மாதவி ஆகியோர் நடித்திருந்தனர்.

படத்தில் வைரமுத்துவின் வரிகளில் இடம்பெற்ற 'அந்தி மழைபொழிகிறது... ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது' பாடல் அதிக கவனம் பெற்றது. இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர்.

'தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி..'

பாக்கியராஜ் இயக்கத்தில் 1982-ஆம் ஆண்டு 'தூறல் நின்னு போச்சு' படம் வெளியானது. இந்தப் படத்தில் பாக்கியராஜ், சுலோசனா, நம்பியார் உள்பட பலர் நடித்திருந்தனர்.

படத்தில் கே.ஜே.யேசுதாஸ் பாடிய 'ஏரிக்கரை பூங்காற்றே... நீ போற வழி தென்கிழக்கோ' பாடலை சிதம்பரநாதன் எழுதியிருந்தார்.

இதே படத்தில் வைரமுத்துவின் வரிகளில் 'தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ...' பாடலும் முத்துலிங்கம் வரிகளில் 'பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்' பாடலும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cm2xe7e812po

சிறை: 'அதிகார வர்க்கத்தின் மதம் மீதான அணுகுமுறை' - ஊடக விமர்சனம்

2 weeks ago

சிறை: 'அதிகார வர்க்கத்தின் மதம் மீதான அணுகுமுறை' - ஊடக விமர்சனம்

சிறை, திரைப்பட விமர்சனம், ஊடக விமர்சனம்

பட மூலாதாரம்,X/Vikram Prabhu

29 டிசம்பர் 2025

விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநரான சுரேஷ் ராஜகுமாரியின் இயக்கத்தில் 'சிறை' திரைப்படம் வெளியாகியிருக்கிறது. போலீஸ் டிராமா படங்களின் வரிசையில் அடுத்த படமாக சிறை வெளிவந்துள்ளது.

திரைப்படம் வெளியான சில நாட்களிலே சமூக ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்படுகிறது. படத்தின் சில காட்சிகளைப் பற்றி சமூக ஊடகங்களில் விமர்சனப்பூர்வமாகவும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

வேலூர் சிறையிலிருந்து ஒரு இஸ்லாமியக் கைதியை காவலர்கள் சிவகங்கை நீதிமன்றதுக்கு பேருந்தில் அழைத்துச் செல்கின்றனர். வழியில் கைதி காவலரின் துப்பாக்கியுடன் தப்பித்துவிடுகிறார்.

தப்பித்த கைதி பிடிபட்டரா, அவரின் பின்னணி என்ன, காவலர்களுக்கு என்ன நடந்தது ஆகியவை சஸ்பென்ஸ் நிறைந்த க்ரைம் திரில்லராக கூறப்பட்டுள்ளது.

விக்ரம் பிரபு, கதிரவன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை ஆனந்த தம்பிராஜா 'மரியம்' என்கிற சக காவலர் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

எல்.கே அக்‌ஷய் குமார், அப்துல் ரௌஃப் என்கிற கைதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கைதியின் காதலியான கலையரசி வேடத்தில் அனிஷ்மா நடித்திருக்கிறார். காதர் பாஷா என்கிற ஆய்வாளர் கதாபாத்திரத்தில் மூணார் ரமேஷ் நடித்துள்ளார்.

டாணாக்காரன் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இந்தப் படத்திற்கு கதை எழுதியுள்ளார். அவரும் இயக்குநரும் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர்.

இந்தப் படம் தொடர்பான விமர்சனங்கள் ஊடகங்களில் வந்திருக்கின்றன. முதன்மை கதாபாத்திரங்களைத் தாண்டி துணை கதாபாத்திரங்களும் படத்தின் தொழில்நுட்ப பங்களிப்பும் விமர்சனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி தனது முதல் திரைப்படத்திலேயே அழுத்தமான கதையுடனே வந்திருக்கிறார் என தினமணி திரை விமர்சனம் தெரிவிக்கிறது.

"அளவான நடிப்பில் அசத்தும் விக்ரம் பிரபு"

சிறை, திரைப்பட விமர்சனம், ஊடக விமர்சனம்

பட மூலாதாரம்,X/Vikram Prabhu

மேலும் தினமணி விமர்சனத்தில்,"இடைவேளை மற்றும் காதல் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கின்றன. வசனங்களிலும் மிகுந்த பொறுப்புடன் செயல்பட்டதால் சில வசனங்களும் தனித்தனியான கதைகளைச் சொல்கின்றன. முக்கியமாக, ஒரு குற்றவாளி இஸ்லாமியராக இருந்தால் அதிகார அமைப்பு அவரை எப்படி கையாள்கிறது என்பதை அழுத்தமாக ஒரே காட்சியில் சொல்லப்பட்டது மனதை தொந்தரவு செய்ய வைக்கிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பை பாராட்டியுள்ள தினத்தந்தி விமர்சனத்தில், "விக்ரம் பிரபு, நிஜமான போலீஸ்காரராகவே நெஞ்சில் பதிகிறார். மனசாட்சிக்கும், மனிதாபிமானத்துக்கும் இடையே சிக்கும் இடங்களில் இயல்பான நடிப்பாலும் அலங்கரிக்கிறார். இந்த புதிய விக்ரம் பிரபு இனியும் தொடரவேண்டும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறை போன்ற திரைப்படங்களின் வெற்றி, அதில் சிக்கியுள்ள மக்களைப் பற்றி நம்மை கவலைப்பட வைக்கிறதா என்பதைப் பொருத்து அமைகிறது எனக் கூறும் டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம், சிறை திரைப்படம் அதை விக்ரம் பிரபுவின் அளவான நடிப்பின் மூலம் செய்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளது.

கதாசிரியராக ஜொலிக்கும் இயக்குநர் தமிழ்

தமிழ் எழுதும் காவல்துறை சார்ந்த காட்சிகள் சில புதுமையான அனுபவங்களைத் தருகின்றன என தினமணி விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இப்படத்தின் கதையை டாணாக்காரன் இயக்குநர் தமிழ் எழுதியிருக்கிறார். இவர் காவல்துறையில் பணியாற்றியதால் அதில் கிடைத்த அனுபவங்கள், கடைநிலை காவலர்களின் பணிச்சூழல், அதிகார அமைப்பு செயல்படும் விதங்கள் குறித்து அறிந்து வைத்திருக்கிறார். முக்கியமாக, இந்தப் படத்தில் எஸ்கார்ட் காவலர்களின் பணிச்சூழல் எப்படி என பதிவாகியிருக்கிறது." என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட கைதி மற்றும் பாதுகாப்புக்குச் சென்ற காவலரின் விதி சிறப்பான த்ரில்லராக உருவாக்கப்பட்டு, மத வெறிக்கு எதிராக தீவிரமான நிலைப்பாட்டை எடுக்கிறது என தி இந்து விமர்சனம் கூறுகிறது.

"இத்தகைய சிறிய கதை களத்திலும் கதாசிரியர் தமிழ் மற்றும் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி மதவெறிக்கு எதிராக ஆழமான கருத்துக்களைத் தெரிவிக்க பல தருணங்களை வைத்துள்ளனர்," என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறை, திரைப்பட விமர்சனம், ஊடக விமர்சனம்

பட மூலாதாரம்,Seven Screen Studios

காவல்துறை நடைமுறை எந்த விதமான பிரமாண்டமும் இல்லாமல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது படத்திற்கு உதவி செய்கிறது என டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சனம் தெரிவிக்கிறது.

"தண்டனை கைதிகளை அழைத்துச் செல்வது, நீதிமன்ற விசாரணை, சார்புடன் செயல்படும் அதிகாரிகள் என எதுவுமே புதியவை கிடையாது. ஆனால் இவை அனைத்தையுமே தேவையான நேர்மையுடன் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி படத்தில் வழங்கியுள்ளார்," என அந்த விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுமுகங்களின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக தி இந்து விமர்சனம் கூறுகிறது.

"படத்தில் ஆச்சரியமாக அமைந்தது புதுமுகங்களான அக்‌ஷய் மற்றும் அனிஷ்மாவின் நடிப்பு தான். இதில் அனிஷ்மா குறைவான காட்சிகளே கிடைத்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அக்‌ஷயும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்," என தி இந்து விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஒளிப்பதிவு, படத்தொகுப்பு படத்தின் பலம்"

தொழில்நுட்ப ரீதியாகவும் அனைவரும் நல்ல பங்களிப்பைச் செய்திருக்கின்றனர் என தினமணியின் விமர்சனம் தெரிவிக்கிறது.

"இரவில் எடுக்கப்பட்ட காட்சிகளில் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது. முக்கியமாக, அப்துலுக்கும் கலையரசிக்குமான காதல் பாடலை எடுத்த விதம் அழகு."

"எடிட்டர் பிலோமின் ராஜ் தேர்ந்த கலைஞர் என்பதால் கதையை எவ்வளவு பரபரப்பாக்க வேண்டுமோ அவ்வளவு கட்ஸை வைத்திருக்கிறார். கிளைமேக்ஸ் நெருங்க, நெருங்க ஒருவித பதற்றம் ஆட்கொள்கிறது. இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு சிறப்பான ஜஸ்டிஸ் வழங்கியிருக்கிறார். பின்னணி இசைகள் ஒவ்வொன்றும் கதைச்சூழலுக்கு ஏற்ப அமைக்கபட்டிருந்தது." என தினமணி விமர்சனம் கூறுகிறது.

சிறை, திரைப்பட விமர்சனம், ஊடக விமர்சனம்

பட மூலாதாரம்,X/Vikram Prabhu

"படத்தில் மேலோங்கும் டிராமாத்தனம்" - தடுமாறும் இடங்கள் எவை?

படத்தில் சில இடங்களில் டிராமாத்தனம் தெரிவதாகப் பரவலாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

"கலையரசி மற்றும் வில்லன் கதாபாத்திரத்தை பின் தொடரும்போது படத்தில் டிராமாத்தனம் மேலோங்குகிறது. ஆனால் படம் குறைவான நேரமே ஓடுவதால் இந்தக் காட்சிகள் நிலைக்கவில்லை." என தி இந்து விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிராமா என்பதைத் தாண்டி யதார்த்தத்தின் மீது படம் கவனம் செலுத்தினாலும் தேவைக்கும் அதிகமான இடங்களில் டிராமாத்தனம் எட்டிப் பார்க்கிறது என டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.

"அப்துலின் கதையைக் கூறும் ஃப்ளேஷ்பேக்கில் தான் படம் தடுமாறுகிறது. பெரும்பான்மை இந்து கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம் குடும்பம், வன்முறையாக மாறும் மத அடிப்படையிலான பாரபட்சம், மதுப்பழக்கம் கொண்ட வில்லன் கதாபாத்திரம் என அதிகமாக பழக்கப்பட்டதாகவே இருக்கிறது." என்றும் அந்த விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

"ஆனால் இந்த சறுக்கல்கள் அனைத்தும் விக்ரம் பிரபுவின் நடிப்பு மற்றும் படத்தில் நடைமுறை நேர்மறையால் மறைக்கப்படுகிறது"

"பரபரப்பான திரைக்கதை பலம். சில இடங்களில் காட்சிகளில் தொய்வு தென்படுகிறது, யூகிக்கவும் முடிகிறது. ஆங்காங்கே லாஜிக் மீறலை தவிர்த்திருக்கலாம்," என தினத்தந்தி விமர்சனம் தெரிவிக்கிறது.

கதையின் குறையைச் சுட்டிக்காட்டும் தினமணி விமர்சனத்தில், "அதேநேரம், சிறை தனித்துவமான கதையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இருந்தாலும் பாதியில் ஆரம்பித்தது போல் முதல் காட்சிகள் இருந்தது சிறிய குறை. விக்ரம் பிரபுவுக்கு இன்னும் அழுத்தமான காட்சிகளை வழங்கியிருந்தால் சிறைத்துறை சார்ந்த சில விஷயங்களைப் பதிவு செய்திருக்கலாம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cre3ev221ppo

அரசு திரைப்பட விருதுகள் சர்ச்சையாவது ஏன்?

2 weeks 3 days ago

'வெளியாகாத ரீமேக் படத்துக்கு விருதா?' அரசு திரைப்பட விருதுகள் சர்ச்சையாவது ஏன்?

பா ரஞ்சித்

பட மூலாதாரம்,FACEBOOK

கட்டுரை தகவல்

  • மீனாட்சி சுந்தரம்

  • பிபிசி தமிழுக்காக

  • 4 பிப்ரவரி 2026

தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்களுக்கு, சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு திரைப்பட விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

கடந்த அதிமுக ஆட்சியிலும் பல ஆண்டுகளாக விருதுகள் அறிவிக்கப்படவில்லை. திமுக ஆட்சி ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையிலும் விருதுகள் குறித்த அறிவிப்பு வராமல் இருந்தது.

இந்நிலையில், ஏழு ஆண்டுகளுக்கு, அதாவது 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரைக்குமான விருதுகள் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. அதேபோல், சின்னத்திரை விருதுகளும் அறிவிக்கப்பட்டன.

திரைப்படம், சின்னத்திரை சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டன

பிப்ரவரி 13ம் தேதி சென்னையில் நடக்கும் விழாவில் இந்த விருதுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்.

தமிழ்நாடு அரசின் விருது பெற உள்ளவர்கள், தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

அதேசமயம், இயக்குநர்-தயாரிப்பாளர் பா.ரஞ்சித் விருது அறிவிப்பு வந்த மறுநாள் வெளியிட்ட அறிக்கையில் ''தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா?" என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும், தான் இயக்கிய 'மிக மிக அவசரம்' படத்திற்கு விருது வழங்கப்படாததற்கு அதிருப்தி தெரிவித்தார்.

இயக்குனர் பா. ரஞ்சித்

படக்குறிப்பு,இயக்குநர் பா. ரஞ்சித்

சேரன் கூறியது என்ன?

இயக்குநரும், நடிகருமான சேரன் தனது எக்ஸ் தள பதிவில், ''பெண்களுக்கு இலவச பாஸ், திருமணத்திற்கு அரசு உதவி இதெல்லாம் செய்கிறது அரசு. பெரும் பணம் இல்லாத குடும்பங்களில் கடன் படாமல் சிக்கனமாக எப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும், வாழ்ககைக்கான சேமிப்பாக எப்படி அதை மாற்றலாம் என கருத்தோடு விளம்புநிலை மக்களுக்கான படமாக உருவாக்கப்பட்டிருந்த திருமணம் திரைப்படம் தேர்வு குழுவினரால் கண்டுகொள்ளப்படாமல் போனது அவர்களின் நுண்ணிய பார்வை அற்ற தன்மையை அல்லது தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கும் தன்மையை காட்டுகிறது." என தெரிவித்துள்ளார்.

நேர்மையான முறையில் பாரபட்சமின்றி யாரும் ஒதுக்கப்படாமல் விருதுகள் சென்றடைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

"அரசுகள் மாறலாம். அரசின் நிலைப்பாடு என்றும் பாரபட்சமாக இருக்க கூடாது'' என சேரன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், நடிகை லட்சுமிப்ரியா, "'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்', 'மண்டேலா' திரைப்படங்கள் தேசிய விருதுகளை வென்றன. ஆனால் மாநில விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. இதை நான் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். தயவுசெய்து விளக்குங்கள் '' என தெரிவித்துள்ளார்.

மண்டேலா  படம்

படக்குறிப்பு,மண்டேலா படம்

இந்த படத்துக்கு விருதா?

நடிகர்கள் விமல், ஸ்ரேயா நடிப்பில் உருவான 'சண்டக்காரி' என்கிற திரைப்படத்திற்கு 2020 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது சிறந்த திரைப்படம், சிறந்த பாடகர், சிறந்த கலை இயக்குநர் ஆகிய பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு திரைத்துறையினர், நடிகர், நடிகைகள் பலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

அதற்கு காரணம், சண்டக்காரி படம் மலையாளத்தில் உருவான, 'மை பாஸ்' என்கிற திரைப்படத்தின் ரீமேக் திரைப்படமாகும்.

சண்டக்காரி இன்னும் திரையரங்குகளிலோ, ஓடிடியிலோ வெளியாகவே இல்லை. அப்படி இருக்கும்போது, எப்படி அந்த படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரங்கள் ஆதங்கம்

மோனிகா

பட மூலாதாரம்,monicasiva_offl

படக்குறிப்பு,மோனிகா

அதுமட்டுமல்லாமல், கைதி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மோனிகாவும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்

"ஐந்து வயதிலிருந்தே நான் திரைப்படத் துறையில் நடித்து வருகிறேன். 2016 முதல் 2022 வரை, இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். அவற்றில் பல திரைப்படங்கள் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு, கொண்டாடப்பட்டன. சில திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்தாலும், நான் நடித்த பல கதாபாத்திரங்கள் நினைவில் நிற்கக்கூடியவையாக இருந்தன." என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும், சிறந்த குழந்தை நட்சத்திர விருதைப் பெற்றவர்கள், அங்கீகாரத்தை அளிக்கும் அளவுக்கான வேடத்தில் நடிக்கவில்லையோ என்ற கேள்வி எழுவதாக மோனிகா தெரிவித்துள்ளார்.

அஸ்வந்த்

பட மூலாதாரம்,ashwanth_ashokkumar

படக்குறிப்பு,அஸ்வந்த்

மற்றொரு குழந்தை நட்சத்திரமான அஸ்வந்த், "இந்த விருதில் நான் இருப்பேன் என்று நினைத்தேன். குறிப்பாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காவது கிடைக்கும் என்று நம்பினேன். அது கிடைக்கவில்லை. மை டியர் பூதம் படத்திற்காவது கிடைக்குமென மிகவும் எதிர்பார்த்தேன். அதுவும் இல்லை. தேர்வுக்குழுவினர் இம்மாதிரி படங்களை பார்க்கிறார்களா என்பதே சந்தேகமாக உள்ளது. ஒரு கலைஞன் நடிப்பது எதற்காக? அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் நடிப்பதே வீண்தானே?" எனக் கேட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட விருதுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தயாரிப்பாளர், இயக்குநர் சுரேஷ் காமாட்சி பிபிசியிடம் கூறுகையில், "திரைப்பட விருது குழுவின் நடுவர் தேர்வில் தவறு இருப்பதாக கருதுகிறேன். இனிமேல் விருது வழங்கும் போது இப்படி மொத்தமாக பல ஆண்டுகள் சேர்த்து வழங்காமல் ஒவ்வொரு ஆண்டுக்கும் உடனே வழங்க வேண்டும்" என்றார்.

"விருது பெறுபவர்களை உரிய முறையில் கௌரவப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். விருதுகள் விஷயத்தில் வெளிப்பட தன்மை தேவை. பெண் போலீசாரின் உடல் மன வலியை சொல்லும் 'மிக மிக அவசரம்' படத்துக்கு தமிழக அரசு விருது கிடைக்காதது வருத்தமே" என்கிறார் அவர்.

விருது அறிவிப்பு குறித்து நடிகர் எஸ்.வி.சேகரிடம் பிபிசி சார்பில் பேசினோம்.

"விருது கிடைத்தவர்கள் சந்தோசப்படுவதும். விருது கிடைக்காதவர்கள் வருத்தப்படுவதும் வழக்கமான ஒன்றுதான். இனி விருது கமிட்டியில் தகுதியானவர்களை நியமிக்க வேண்டும். எனக்கு சாதனையாளர் விருது கிடைத்து இருக்கிறது." என்றார்.

தேர்வு குழு கூறுவது என்ன?

சின்னத்திரை விருதுகள் தேர்வு குழு கமிட்டியில் இருந்த இயக்குநர் மங்கை அரிராஜன் பிபிசியிடம் கூறுகையில், " சினிமா சின்னத்திரை விருதுகளை தேர்ந்தெடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியின் ஏழு பேர் உறுப்பினர்கள். இந்த குழு ஒவ்வொரு ஆண்டும் வெளியான படங்களில் சிறந்த படங்களை முதல் சுற்றில் தேர்வு செய்யும். பின்னர் அடுத்தகட்ட தேர்வுக்கு பின் எது சிறந்த படம், சிறந்த நடிகர் என்பதை தலைவரான நீதிபதி முடிவு செய்வார். இதில் எந்த பாகுபாடும் கிடையாது எந்த சிபாரிசும் கிடையாது தேர்வுக்குழு செயல்பாடுகள் நம்பிக்கையானவை." என்றார்.

சில காரணங்கள், சில ஓட்டுகள் வித்தியாசத்தில் சில படங்கள் தேர்வாகியிருக்கலாம் என்றும் சில நல்ல படங்கள் விருதை தவறவிட்டு இருக்கலாம் என்றும் இது எல்லா போட்டிகளிலும் எல்லா விருது நிகழ்வுகளிலும் நடப்பது தான் என்றார் மங்கை அரிராஜன்.

விருது கமிட்டியில் இருந்த இளையபாரதி பிபிசி தமிழிடம், "விண்ணப்பித்தால் மட்டுமே விருது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வோம். பலர் விண்ணப்பிக்காமல் விருது ஏன் வரவில்லை என்கிறார்கள். சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மேற்கு தொடர்ச்சி மலை படங்கள் அப்படித்தான். நூற்றுக்கணக்கான படங்கள் வந்தன. இவ்வளவு படம் பார்த்து அரசியல் பாகுபாடுகள் இன்றி விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. சில படங்கள் நன்றாக இருந்தன. அதனால் சில முக்கியமான படங்கள் தவறிவிட்டன. இது அனைத்து விருது நிகழ்விலும் நடப்பதே. இதில் பாகுபாடு இல்லை" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3689lp9e3ro

'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி

1 month ago

'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி

'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசி பேட்டியில் கூறியது என்ன?

பட மூலாதாரம்,BBC Asian Network

5 மணி நேரங்களுக்கு முன்னர்

ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளில், நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஆஸ்கர், கிராமி, கோல்டன் குளோப் உள்படப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக அறியப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசிக்கு பேட்டியளித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகம் தமிழ் சமூகத்தை எப்படிப் பார்க்கிறது, திரையுலகில் பிளவுக் கருத்துகள் அதிகரித்து வருகின்றனவா, பாலிவுட் திரையுலகில் அவரது அனுபவங்கள் எனப் பல விஷயங்களை அவர் இந்த நேர்காணலில் பகிர்ந்துகொண்டார்.

ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசி ஆசிய நெட்வொர்க் எடுத்த நேர்காணலில் ஹரூண் ரஷீத்திடம் பேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் என்னென்ன? இங்கு விரிவாகக் காண்போம்.

'நானும் மனிதன்தானே!'

ஹரூண் ரஷீத்: உங்களுக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு இதே பர்மிங்ஹாம் சிம்ஃபனி அரங்கத்திற்குள் நுழைந்த ஏ.ஆர்.ரஹ்மானை நினைவுள்ளதா? அப்போது இருந்ததில் இருந்து உங்களில் இப்போது நடந்துள்ள மாற்றங்கள் என்ன?

ஏ.ஆர்.ரஹ்மான்: நான் மிகவும் பயந்து போயிருந்தேன். நான் சென்னையில் இருந்து வந்தவன். அங்கெல்லாம் ஆர்கெஸ்ட்ரா வேறுவிதமாக இருக்கும். இங்கு நடந்த விதம் எனக்கு வித்தியாசமாக இருந்தது.

ஹரூண் ரஷீத்: நீங்கள் பயந்தீர்கள் என்பதைக் கற்பனை செய்வதே கடினமாக உள்ளது. ஆஸ்கர் உள்பட எனக்குத் தெரிந்து கிட்டத்தட்ட அனைத்து விருதுகளையுமே வென்றுவிட்ட நீங்கள் ஓர் அரங்கத்திற்குள் நுழையும்போது பயந்ததாகச் சொல்வதைக் கற்பனைகூடச் செய்ய முடியவில்லை...

ஏ.ஆர்.ரஹ்மான்: நானும் மனிதன்தானே! நம்மைத் தயார்படுத்திக் கொள்வதுதான் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். எவ்வளவு தூரம் தயாராக இருக்கிறோமோ அவ்வளவு தூரம் நிலைமையை திறம்படக் கையாள்வோம். இருப்பினும் சில நேரங்களில் நாம் இதுவரை அறிந்திடாத ஓரிடத்திற்குள் நுழையும்போது பயம் வரவே செய்யும். ஆனால் அதையும் மீறி வாழ்க்கை செல்லத்தானே வேண்டும்.

'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசி பேட்டியில் கூறியது என்ன?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கோப்புப் படம்

'ரோஜா படத்துடன் திரைத்துறையை விட்டு விலக நினைத்தேன்'

ஹரூண் ரஷீத்: ரோஜா திரைப்படத்தின் இசை ஆல்பம் வெளியாவதற்கு முந்தைய நாள் எப்படி இருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அது வெளியான பிறகு நடந்த மாற்றம் என்ன?

ரஹ்மான்: ரோஜாவுக்கு இசையமைக்கும் போது மிகவும் ஏமாற்றமாக உணர்ந்தேன். இதை செய்து முடித்துவிட்டு, திரைத்துறையை விட்டு விலகி, என் சொந்த ஆல்பங்களை தயாரிக்க வேண்டுமென நினைத்தேன். ஆனால், நல்வாய்ப்பாக நான் நினைத்துக் கொண்டு இருந்ததற்கு மாறாக அனைத்தும் மாறின.

என் ஸ்டூடியோவில் இசையைப் போட்டுப் பார்க்கும்போது, அதிகபட்ச ஸ்பீக்கர்களில் நன்றாக இருக்கும். அதுவே திரைப்படத்தில் மோனோவில் கேட்கையில் அவ்வளவுதானா என்றிருக்கும். அதனால் நான் மீண்டும் படங்களுக்கு இசையமைக்கவே போவதில்லை என முடிவு செய்வேன். இசையின் தரம் குறைந்துவிடுவதாகக் கருதினேன். நான் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவருடன் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஆனால், எதுவும் மாறப் போவதில்லை என்ற எதிர்மறை சிந்தனை என்னைப் பீடித்திருந்தது.

பின்னர் அனைத்தும் மாறியது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் டால்பி, அட்மோஸ், டிஜிட்டல் எனப் பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அதிவேகமாக நடந்தன. அதன்பிறகு, சரி இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று அடுத்தடுத்து பணியாற்றிக் கொண்டே இருந்தேன். பின்னர் பத்து ஆண்டுகள் கழித்து, சரி திரைத்துறையை விட்டு விலக வேண்டுமென்ற முடிவைக் கைவிட்டுவிடுவோம் என்று முடிவு செய்தேன்.

'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசி பேட்டியில் கூறியது என்ன?

'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்'

ரஹ்மான்: உண்மையில், ரோஜா, பாம்பே, தில் சே (உயிரே) ஆகிய மூன்று படங்களுக்கும் இசையமைத்த நேரத்தில் நான் இந்தி திரையுலகில் ஒரு வெளியாள் போலத்தான் உணர்ந்து கொண்டிருந்தேன். தால் திரைப்படம்தான் அதை மாற்றியது.

ஹரூண் ரஷீத்: 1999இல் தால் வெளியாகும் வரை நீங்கள் பாலிவுட்டில் ஒரு வெளியாள் போலவே உணர்ந்ததாகக் கூறினீர்கள். ரோஜா 1992இல் வெளியானது என்றால் அடுத்த ஏழெட்டு ஆண்டுகளுக்கு, பாம்பே, தில் சே, ரங்கீலா, தால் எனப் பல படங்களுக்கு நாட்டிலேயே மிகவும் அற்புதமான இசையை நீங்கள் அளித்துக் கொண்டிருந்தீர்கள். அப்படியிருந்தும் உங்களை ஒரு வெளியாள் என்று விவரிக்கிறீர்கள் என்றால் நீங்கள் அவர்களில் ஒருவராக உணர்ந்ததே இல்லையா?

ரஹ்மான்: அதற்குக் காரணம் நான் இந்தி மொழி பேசியதே இல்லை என்பதுதான் என நினைக்கிறேன். குறிப்பாக ஒரு தமிழருக்கு இந்தி கற்றுக்கொள்வது மிகவும் சிரமமான காரியம். ஏனெனில், எங்களுக்கு தமிழ்ப் பற்று அபரிமிதமாக உள்ளது.

ஆனால், 'எனக்கு உன் இசை மிகவும் பிடித்துள்ளது. நீ இங்கு நீண்டநாள் நீடிக்க வேண்டுமென விரும்புகிறேன். அதற்கு நீ இந்தி மொழியைக் கற்க வேண்டும்' என்று சுபாஷ் காய் கூறினார். நானும் சரியெனக் கூறி, ஒரு படி மேலே சென்று உருது மொழியைக் கற்றுக்கொள்ள முடிவு செய்தேன். ஏனெனில், 60கள், 70களின் இந்தி இசைக்கு தாயாக இருப்பது உருதுதான்.

பின்னர் அதனுடன் ஒத்திருக்கக்கூடிய அரபி மொழியை படிக்கத் தொடங்கினேன். அதிலிருந்து பஞ்சாபி மொழி மீது ஆர்வம் கொண்டேன்.

'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசி பேட்டியில் கூறியது என்ன?

உயிரே படத்தில் கதாபாத்திரத்தையே மாற்றிய ஒரு பாடல்

ஹரூண் ரஷீத்: சமீபத்தில் அந்தந்த மொழிக்குரிய கலாசார பண்புகளுக்கு நீங்கள் உண்மையாக இருப்பதை மக்கள் எவ்வளவு தூரம் விரும்புகிறார்கள் என்பது குறித்த வீடியோக்களை நான் பார்த்தேன். குறிப்பாக, உயிரே திரைப்படத்தில் வரும் நெஞ்சினிலே பாடலில் மலையாள கலாசாரம் கலந்திருக்கும். அது தற்போது அதிகம் விவாதத்திற்கு உள்ளாகிறது. சமீபத்தில் வெளியான பரம் சுந்தரி திரைப்படத்தில் மலையாள சமூகம் காட்டப்பட்ட விதம் விமர்சிக்கப்படுகிறது. 1998இல் ஏ.ஆர்.ரஹ்மானால் கலாசாரத்தை துல்லியமாகக் காட்ட முடிந்தபோது, இப்போது ஏன் முடியவில்லை என்று கேட்கப்படுகிறது.

ரஹ்மான்: மக்கள் மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள். அவர்களால் முன்பைவிட இப்போது சிறப்பாகத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது.

ஹரூண் ரஷீத்: இருப்பினும் 1998இல் நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து சமூகங்களுக்கும் நியாயம் செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக இருந்தது?

ரஹ்மான்: அப்போது என்ன நடந்தது என்றால், மணிரத்னம் இந்த டியூனை எடுத்துக்கொண்டு, எனக்கு கல்யாண கனவு போன்ற ஒன்று வேண்டுமென்றார். சரி, எந்த மரபுப்படி அது இருக்க வேண்டுமென்று நான் கேட்டேன். அவர் என்னையே தேர்ந்தெடுக்கச் சொன்னார். நான் மலையாள முறையைத் தேர்வு செய்தேன். அவர் சரியெனக் கூறி, இரண்டாவது கதாநாயகியை ஒரு மலையாளியாகக் கதையில் மாற்றிவிட்டார்.

ஹரூண் ரஷீத்: அப்படியெனில், ப்ரீத்தி ஜிந்தாவின் பாத்திரம் மலையாளி கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டதே 'நெஞ்சினிலே' பாடலுக்காகத்தானா?

ரஹ்மான்: ஆமாம். அது எதுவாக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். அவர் அந்த டியூன் மிகவும் சுவாரஸ்யமானது எனக் கருதினார். இன்றும்கூட அந்தப் பாடலை, மலையாளம் புரியவில்லை என்றாலும், பலர் பாடுகிறார்கள்.

அதுமட்டுமின்றி நான் மற்றுமொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். அதுவரைக்கும் எந்தவொரு தென்னிந்திய இசையமைப்பாளரும் எல்லைகளைக் கடந்து இந்தி திரையுலகுக்குச் சென்று, அங்கு நிலைத்தது இல்லை. அது முற்றிலுமாகப் புதிய கலாசாரம். இளையராஜா இரண்டு படங்களைச் செய்திருந்தார்.

அப்படியிருந்த சூழலில் எல்லையைக் கடந்து சென்றது, பின்னர் அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டது என்பது ஒரு மிகப்பெரிய அனுபவம். இன்னமும் அது நிலைத்திருக்கிறது. அது மிகவும் அற்புதமானது, அதை கௌரவமாகக் கருதுகிறேன்.

காணொளிக் குறிப்பு

தமிழ் சமூகத்திற்கு எதிராக பாலிவுட்டில் பாகுபாடு நிலவுகிறதா?

ஹரூண் ரஷீத்: பாலிவுட்டில் தமிழ் சமூகத்திற்கு எதிராக இன்றும் நிறைய பாகுபாடு நிலவுவதை நான் பார்க்கிறேன். 90களில் அது எப்படி இருந்தது? நீங்கள் எப்போதாவது அதை எதிர்கொண்டீர்களா?

ஏ.ஆர்.ரஹ்மான்: நான் எதிர்கொள்ளாமல் இருந்திருக்கலாம். இந்த விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரிய வரவில்லை. ஒருவேளை கடவுள் இவற்றையெல்லாம் மறைத்திருக்கலாம். ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் இருக்கலாம். ஒருவேளை அதிகார மாற்றம் நடந்திருக்கலாம். முடிவெடுக்கும் அதிகாரம் படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் இப்போது இருக்கிறது.

இது ஒருவேளை ஒரு சமூகரீதியான விஷயமாகவும் இருந்திருக்கலாம். என் கண் முன்பாக நடக்கவில்லை. ஆனால் இது நடந்தது. 'அவர்கள் உங்களை ஒப்பந்தம் செய்தார்கள், ஆனால் மற்றொரு இசை நிறுவனம் சென்று அந்தப் படத்திற்கு நிதியுதவி செய்து, தங்கள் ஐந்து இசையமைப்பாளர்களைப் பயன்படுத்திக் கொண்டது' என்பன போன்ற கிசுகிசுக்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதைக் கேட்கும்போது, 'ஓ நல்லது, எனக்கு ஓய்வு கிடைத்தது. நான் என் குடும்பத்துடன் நிம்மதியாக நேரத்தைச் செலவழிப்பேன்' என்று நினைத்துக்கொள்வேன்.

ஹரூண் ரஷீத்: ஆனால், அதை அப்படி எடுத்துக்கொள்ள உங்களுக்கு மிகவும் நேர்மறையான மனநிலை இருக்க வேண்டும்.

ஏ.ஆர்.ரஹ்மான்: ஏனெனில், வேலையைத் தேடி நான் செல்வதில்லை. வேலை என்னைத் தேடி வரவேண்டுமென விரும்புகிறேன். நான் செய்யும் வேலை, அதிலுள்ள நேர்மை ஆகியவற்றின் மூலம் எனக்கு எல்லாம் கிடைக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அதைத் தேடிச் செல்வதில்லை. நான் எதையாவது தேடிச் செல்லும்போது அது துரதிர்ஷ்டமாக அமைவதாக உணர்கிறேன். நான் எதற்குத் தகுதியானவனோ அதைக் கடவுளிடம் இருந்து பெறுகிறேன்.

'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசி பேட்டியில் கூறியது என்ன?

பட மூலாதாரம்,BBC Asian Network

சாவா திரைப்படம் பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டதா?

ஹரூண் ரஷீத்: நீங்கள் நாளுக்கு நாள் மென்மேலும் பிளவுகளை எதிர்கொள்ளும் சூழலில் பணியாற்றுகிறீர்கள்...

ரஹ்மான்: அதனால்தான், கடவுள் நம்மைப் போன்றவர்களுக்கு அதிக சக்தியைக் கொடுக்கிறார் என்று நான் நினைக்கிறேன், அதனால் நாம் சொற்களாலும், செயல்களாலும், கலையாலும் தீமையை நன்மையின் மூலம் மாற்ற முடியும்.

ஹரூண் ரஷீத்: ஆனால் இதன் காரணமாக நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள் குறித்து அதிக விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளதா? ஏனெனில், பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் ஒரு படத்திற்கு உங்கள் இசையை வழங்கும்போது, அந்தப் படத்திற்கு எந்த எதிர்மறைத் தாக்கமும் இல்லை அல்லது எந்தத் தீய நோக்கமும் இல்லை என்பதை ஓரளவுக்கு உறுதியாகத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்று ஒரு படத்தின் நோக்கம் என்ன என்பதை அறிவது மிகவும் கடினமாக உள்ளது.

ரஹ்மான்: அது மிகவும் உண்மை. மேலும் சில படங்கள் தவறான நோக்கத்துடனேயே உருவாக்கப்படுகின்றன. அந்தப் படங்களைத் தவிர்க்க முயல்கிறேன்.

ஹரூண் ரஷீத்: ஆனால், 'சாவா' படத்தின் இசையைப் பற்றி நீங்கள் மிகவும் பெருமைப்படுவதாகக் கூறியுள்ளீர்கள். அது உண்மையிலேயே ஒரு நல்ல இசை. இருப்பினும் அதுவொரு பிளவுபடுத்தும் படம்?

ஏ.ஆர். ரஹ்மான்: ஆமாம்.

ஹரூண் ரஷீத்: நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன். உங்களிடம் நான் மிகவும் நேர்மையாகச் சொல்கிறேன்.

ஏ.ஆர். ரஹ்மான்: அது பிளவுபடுத்தும் படம்தான். அது பிளவுபடுத்தும் தன்மையை வைத்துப் பணம் சம்பாதித்ததாக நான் நினைக்கிறேன். ஆனால் அதன் மையக்கருத்தாக வீரம் இருந்ததாகக் கருதுகிறேன். ஏனென்றால், இயக்குநரிடம் நான், 'இந்தப் படத்திற்கு நான் ஏன் தேவை?' என்று கேட்டபோது, 'இந்தப் படத்திற்கு நீங்கள் மட்டும்தான் தேவை' என்று கூறினார்.

'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசி பேட்டியில் கூறியது என்ன?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கோப்புப் படம்

மேலும் அதன் முடிவும் ரசிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் நிச்சயமாக, மக்கள் அதைவிட புத்திசாலிகள் என்று நினைக்கிறேன். மக்கள் திரைப்படங்களால் பாதிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறீர்களா? அவர்களுக்கு உள்மனசாட்சி என்ற ஒன்று உள்ளது. எது உண்மை, எது திரிக்கப்பட்டது என்பதை அதனால் அறிய முடியும்.

ஹரூண் ரஷீத்: வரலாற்றுத் திரைப்படங்கள் உருவாக்கப்படுவது பிரச்னையல்ல. அவை உருவாக்கப்படுவது உண்மையில் ஓர் அற்புதமான விஷயம். அது வரலாற்றைக் கொண்டாடுகிறது. அது கதாநாயகர்களைக் கொண்டாடுகிறது. அந்தப் படங்களுக்குள் இருக்கும் சில குறிப்பிட்ட காட்சிகள்தான் சிக்கலானவையாக இருக்கக்கூடும், இல்லையா?

ஏ.ஆர். ரஹ்மான்: சாவா மிகவும் கொண்டாடப்படும் கதாபாத்திரங்களில் ஒன்று. அது ஒவ்வொரு மராட்டியரின் ரத்தம் போன்றது. படம் முடிந்ததும், பெண்கள் அந்த அழகான கவிதைகளைச் சொல்வதைப் பார்க்கிறோம். அதைப் பார்க்க மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. அந்தப் படத்திற்கு இசையமைத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

ஹரூண் ரஷீத்: இது மாதிரியான படங்களில் எனக்கு இருக்கும் பிரச்னை என்னவென்றால், திரையில் ஒவ்வொரு முறை ஒரு எதிர்மறை விஷயம் நடக்கும்போதும், கதாபாத்திரம் 'சுப்ஹானல்லாஹ், மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்' போன்றவை வருகின்றன. இந்தப் படத்தில் மட்டும் சொல்லவில்லை; பிற படங்களிலும் இப்படியெல்லாம் காட்டப்படுகின்றன.

ரஹ்மான்: ஆம், ஆனால் எனக்கு மக்கள் மீது மிகப்பெரிய மரியாதை உள்ளது. இத்தகைய தவறான தகவல்களால் ஈர்க்கப்படுவதற்கு அவர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை. எனக்கு மனிதத்தின் மீது அபார நம்பிக்கை உள்ளது.

ஹரூண் ரஷீத்: ஆனால், இத்தகைய விஷயங்கள் நீங்கள் மேலும் கவனமாக இருக்க வேண்டியிருப்பதைக் காட்டுகிறதா?

ரஹ்மான்: ஆம். அதோடு மக்கள் மிகவும் புத்திசாலிகள் என்று நினைக்கிறேன். மக்களுக்கு இதயம் இருக்கிறது, அன்பு இருக்கிறது, இரக்கம் இருக்கிறது. தினசரி காலையில் எழுந்து 'இன்று எத்தனை பேரை நான் வெறுக்கப் போகிறேன்' என்று கருதுவோமா? இல்லை. அது உங்கள் இதயத்தில் இருக்கும் அமிலத்தைப் போன்றது. அது இதயத்தையே அழித்துவிடும்.

'பிராமணப் பள்ளியில் படித்தேன்'

ஹரூண் ரஷீத்: சமீபத்தில் நீங்கள் ராமாயணம் படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மத ரீதியான நூல் ஒன்று திரைப்படமாக வடிவம் எடுக்கிறது. ஆனால் நீங்கள் நன்கு அறியப்பட்ட ஒரு முஸ்லிம். அப்படியிருக்க இந்தப் படத்தில் உங்கள் பங்கு இருப்பதை விரும்பாதவர்களும் இருக்கலாம். இது ஏதாவது வகையில் உங்களை பாதித்துள்ளதா?

ரஹ்மான்: நான் படித்தது ஒரு பிராமணப் பள்ளியில். அங்கு ஒவ்வோர் ஆண்டும் ராமாயணம், மகாபாரதம் இருக்கும். எனவே எனக்கு முழு கதையும் நன்கு தெரியும்.

மேலும், அந்தக் கதை நற்பண்பு, உயர்ந்த லட்சியங்கள் போன்ற விஷயங்கள் பற்றியது. மக்கள் பல விதமாக வாதிடலாம், ஆனால் அந்த நல்ல விஷயங்கள் அனைத்தையும் நான் மதிக்கிறேன். கற்றுக்கொள்ள வேண்டிய எந்தவொரு நல்ல விஷயத்தையும் விட்டுவிடக் கூடாது என்கிறார் நபிகளார். அறிவு என்பது மிகவும் மதிப்புமிக்க ஒன்று.

அதை நீங்கள் எல்லாவற்றில் இருந்தும், அன்றாட வாழ்க்கையில் இருந்தும், ஒரு யாசகனிடம் இருந்து அரசன் வரை, எதிர்மறை செயல்களில் இருந்து நேர்மறை செயல்கள் வரை அனைத்திலும் கற்றுக்கொள்ளலாம். அறிவு என்பது எல்லா இடங்களிலும் கற்றுக்கொள்ள வேண்டிய விலைமதிப்பற்ற ஒன்று.

அதனால், 'நான் எதையும் கற்றுக்கொள்ள விரும்பவில்லை' என்றோ, 'இங்கிருந்து நான் நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை' என்றோ ஒருவரால் ஒதுக்கிவிட முடியாது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c9vxdzkmpk2o

Music for Meals: சமூக சேவைக்கு நிதி திரட்ட இசை நிகழ்ச்சி; இளையராஜாவிற்குக் குவியும் பாராட்டுகள்!

1 month 1 week ago

இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாகவும், சமூக சேவைக்காக நிதி திரட்டும் நோக்கத்துடனும் 'Music for Meals' என்ற தலைப்பில் நேற்று (ஜன.11) பெங்களூருவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வயது, மொழி என எந்த வேறுபாடும் இன்றி, அனைவரையும் இளையராஜாவின் இசை ஒன்றிணைத்திருக்கிறது.

இளையராஜாவின் பிரபலமான பாடல்கள், காலத்தை வென்ற மெலடிகள் ரசிர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றன.

மேடையில் ஒலித்த ஒவ்வொரு பாடலும் ரசிகர்களைக் கடந்த கால நினைவுகளுக்குள் அழைத்துச் சென்றன.

குறிப்பாக புகழ்பெற்ற அக்ஷய பாத்ரா அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் வகையில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது.

இளையராஜா

இளையராஜா

படித்துக் கொண்டிருக்கும் ஏழைக் குழந்தையருக்கு தினசரி சாப்பாடு வழங்கும் இந்த அமைப்புக்காக இசை மூலம் ஆதரவு திரட்டிய இளையராஜாவின் முயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

பெங்களூரு; இசைநிகழ்ச்சி மூலம் அறக்கட்டளைக்கு நிதி திரட்டிய இளையராஜா | Ilaiyaraja Raises Funds for a Charity Foundation Through a Music Concert

பராசக்தி விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது?

1 month 1 week ago

பராசக்தி விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது?

பராசக்தி திரைப்படம் எப்படி இருக்கிறது - ஊடக விமர்சனம்

பட மூலாதாரம்,Dawn Pictures

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து சுதா கொங்கரா இயக்கியுள்ள பராசக்தி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. பராசக்தி திரைப்படத்திற்கு நேற்றுதான் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் யு/ஏ சான்று வழங்கப்பட்டது.

அதனுடன் படத்தில் 25 மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதும் முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரையின் வசனம் நீக்கப்பட்டிருப்பதும் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளானது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமின்றி ரவி மோகன், அதர்வா, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் கதை என்ன?

புறநானூறு என்கிற மாணவர் சங்கத்தின் தலைவரான செழியன் (சிவகார்த்திகேயன்) தீவிரமாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது காவல்துறை அதிகாரியாக இருக்கும் திரு (ஜெயம் ரவி) போராடும் மாணவர் குழுவை எதிர்கொள்கிறார்.

அப்போது பெரிய இழப்பைச் சந்திக்கும் சிவகார்த்திகேயன் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் இருந்து விலகுகிறார். சில ஆண்டுகள் உருண்டோடுகின்றன. தற்போது சிவகார்த்திகேயன் மத்திய அரசு பணியில் உள்ளார். அவரது சகோதரர் சின்னா (அதர்வா) தற்போது இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனால் சகோதரர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்படுகிறது. கதாநாயகியான ஶ்ரீலீலா, ரத்னமாலா என்கிற வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பராசக்தி திரைப்படம் அரசியல் வரலாறு, நாடகத்தன்மை ஆகிய இரண்டும் கலந்த கலவையாக அமைந்துள்ளதாக தி இந்து விமர்சனம் தெரிவிக்கிறது.

"பராசக்தி திரைப்படம், பிழைகள் இல்லாமல் இல்லை. ஆனால் வரலாற்றில் முக்கியமான ஓர் அத்தியாயத்தை காட்சிப்படுத்துவதற்கான சக்திவாய்ந்த முயற்சி. படத்தின் அரசியல் வெளிப்படையாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது" என டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் கதை, நடிகர்களின் நடிப்பு என்பதையும் தாண்டி இசை மற்றும் இதர தொழில்நுட்ப அம்சங்களும் வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளன.

"பராசக்தி திரைப்படம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது இன்றைய சினிமா ரசிகர்களுக்கு பொழுதுபோக்காக அமைவதற்குத் தேவைப்படும் சரியான அம்சங்களையும் கொண்டுள்ளது," என தி இந்து விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராசக்தி திரைப்படம் எப்படி இருக்கிறது - ஊடக விமர்சனம்

பட மூலாதாரம்,Red Giant Movies/X

'கவனிக்க வைக்கும் சிவகார்த்திகேயன்'

சிவகார்த்திகேயனின் நடிப்பை வெகுவாகப் பாராட்டியுள்ள தினத்தந்தி விமர்சனம், "புரட்சி ஒரு பக்கம், எதார்த்தம் மறுபக்கம் என இருவேறு பரிமாணங்களில் சிவகார்த்திகேயன் கலக்கியுள்ளார். இதுவரை காதல், காமெடியில் கலக்கி வந்த சிவகார்த்திகேயன் முதல் முறையாக புரட்சி, போராட்டம் என்ற பாதையில் பயணித்திருக்கிறார். சாட்டையடி வசனங்களைப் பேசி கவனிக்க வைக்கிறார்" எனத் தெரிவிக்கிறது.

"நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நல்ல திரைப்படம். முதல்முறையாக அரசியல் பின்னணி கொண்ட திரைப்படத்தில், மொழிப்பற்றுமிக்க கதாபாத்திரத்தில் ஏமாற்றமில்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நடிகர் ரவி மோகன் முழுமையான வில்லனாகவே தெரிகிறார்" என்று தினமணி தனது விமர்சனத்தில் குறிப்பட்டுள்ளது.

'சுதா கொங்கரா வீணடிக்கவில்லை'

தனது பிற படங்களுடன் ஒப்பிடும்போது கருத்தியல் ரீதியாக அழுத்தமான விஷயத்தை சுதா கொங்கரா பராசக்தியில் தொட்டிருப்பதாகக் கூறும் தினமணி விமர்சனம், "இந்த வரலாற்றுச் சம்பவத்தைக் கையிலெடுத்தவர் அதை வீணடிக்கவில்லை. 1965இல் பொள்ளாச்சியில் மொழித் திணிப்புக்கு எதிராகப் போராடியவர்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஆவணமாக்கியது முக்கியமானது" எனத் தெரிவிக்கிறது.

சுதா கொங்கராவின் இயக்கத்தை டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனமும் வெகுவாகப் பாராட்டியிருக்கிறது.

"பல்லாண்டுக்கால போராட்டங்களை மூன்று மணிநேரத்திற்கு உள்ளாகச் சொல்வதோடு வலுவான கதாபாத்திரங்களைக் கொண்ட சுவாரஸ்யமான படம் ஒன்றைத் தயாரிப்பது எளிதல்ல. ஆனால் சுதா கொங்கரா அதை வெற்றிகரமாகச் செய்துள்ளார்.

பராசக்தி திரைப்படம் எப்படி இருக்கிறது - ஊடக விமர்சனம்

பட மூலாதாரம்,Dawn Pictures

பாராட்டப்படும் ரவி மோகனின் நடிப்பு

இந்தப் போராட்டங்கள் மற்றும் அதற்கான காரணங்களைப் பற்றி அறியாதவர்களுக்கும் புரியும்படியாக கதையைச் சொல்வதோடு அதன் தீவிரத்தன்மையை உறுதி செய்வதிலும் சுதா கொங்கரா வெற்றி பெற்றிருக்கிறார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவி மோகனின் நடிப்பு பாராட்டப்படும் அதே சூழலில் அவரது கதாபாத்திர அமைப்பு மீது சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

"காவல்துறை அதிகாரியான திருவின் வழிமுறைகள் பற்றி அதிகம் கூறப்பட்டு இருந்தாலும் அவர் ஏன் அவ்வாறு செய்கிறார் என்பது பற்றிய தெளிவில்லை" என தி இந்து விமர்சித்துள்ளது.

"தமிழுக்கு ஆதரவான மாணவர்கள் மீது அவருக்கு அவ்வளவு வெறுப்பு ஏன் வந்தது, ஒரு பின்கதை அல்லது ஃப்ளாஷ்பேக் இருந்தால் உதவியாக இருந்திருக்கும். ஆனால் இந்தக் குறையும் சுதா மற்றும் அர்ஜுன் நடேசனின் வலுவான எழுத்தால் சரி செய்யப்படுகிறது. திரு கதாபாத்திரம் பேசும் வசனங்களும் தரமாக இருக்கின்றன" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவுக்கு மிரட்டலான வில்லன் தயார் என ரவி மோகனின் நடிப்பைக் குறிப்பிட்டு தினத்தந்தியும் பாராட்டியுள்ளது.

"ஹீரோவாக பார்த்து பழக்கப்பட்ட ரவி மோகன், முதல் முறையாக வில்லனாக வெளுத்துக் கட்டியுள்ளார். பார்வையிலேயே கொலை வெறியைக் காட்டுகிறார். தமிழ் சினிமாவுக்கு மிரட்டலான வில்லன் தயார். புரட்சிப் புயலாக அதர்வா கலக்குகிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் சிறப்பு சேர்க்கிறார்."

பராசக்தி திரைப்படம் எப்படி இருக்கிறது - ஊடக விமர்சனம்

பட மூலாதாரம்,Red Giant Movies/X

காதல் காட்சிகள் கதையைச் சிதைக்கின்றனவா?

செழியன், ரத்னமாலா இடையிலான காதல் காட்சிகள் சூரரைப் போற்று படத்தில் வரும் சூர்யா-அபர்ணா பாலமுரளியை நினைவூட்டுவதாகக் கூறும் தி இந்து விமர்சனம், "ஆனால் அதைக் கடந்தும் ஶ்ரீலீலாவுக்கு தன்னை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒரு கதாநாயகி மற்றும் மூன்று கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் இருப்பது இயக்குநருக்கு மிகப்பெரிய வெற்றி" எனத் தெரிவிக்கிறது.

மறுபுறம், முதல் பாகத்தில் இடம்பெற்ற சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா காதல் காட்சிகள் கதையைச் சிதைப்பது போல் இருப்பதாக தினமணி விமர்சித்துள்ளது.

அதுகுறித்துத் தனது விமர்சனத்தில், "அங்கு சில நிமிடங்களை நீக்கியிருக்கலாம். மேலும், தமிழ் மொழிக்கான கதையில் கூடுதலாக தெலுங்கும் இணைந்துகொண்டது கொஞ்சம் நெருடல். மதுரை போன்ற காந்தியவாதிகள் சூழ்ந்த ஊரில், அகிம்சை வழிப் போராட்டத்தையும் காட்சிப்படுத்தி இருக்கலாம். இந்தி பிரசார சபா காட்டப்பட்ட அளவுக்கு ஏன் மதுரை தமிழ்ச் சங்கம் காட்டப்படவில்லை? திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்திருந்தால் கூடுதல் பரபரப்பைக் கொடுத்திருக்கலாம்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, படத்தின் நீளம் சற்று குறைவாக இருந்திருந்தால் அது மேலும் பலன் அளித்திருக்கும் என டைம்ஸ் ஆப் இந்தியா விமர்சனம் கூறுகிறது.

"கடினமான ஒரு கதைக் களத்தில், சகோதரர்கள் இடையே பந்தம், கதாநாயகன் - கதாநாயகி இடையிலான உறவு போன்ற மனிதர்கள் இடையிலான பிணைப்பு படத்தை உணர்வுபூர்வமானதாக ஆக்குகிறது. ஆனால் சில இடங்களில் அவை மையக்கருவில் இருந்து விலகியும் செல்கின்றன," என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

படத்தின் இசை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றிக் குறிப்பிடும் தினத்தந்தி விமர்சனம், "ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு 1960 காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ஜிவி பிரகாஷின் இசை படத்திற்குப் பலம் சேர்த்துள்ளது. பரபரப்பான காட்சிகள் படத்திற்கு பலம். லாஜிக் மீறல்கள் ஆங்காங்கே இருந்தாலும், வலுவான திரைக்கதை அதை மறக்கடிக்கச் செய்கிறது" என்கிறது.

துணை கதாபாத்திரங்கள் அழுத்தமாக இல்லை என தினமணி விமர்சித்துள்ளது. "முதல்வராக நடித்தவருக்குப் பதில் வேறு நல்ல நடிகரைப் பயன்படுத்தி இருக்கலாம். பிரபல நடிகர்களான ராணா டக்குபதி, ஃபாசில் ஜோசஃப் கதாபாத்திரங்களும் அழுத்தமாக இல்லை. கேமியோ அளவில் நின்றுவிட்டன."

நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து எழுதியுள்ள தினமணி விமர்சனத்தில், "பல இடங்களில் தணிக்கை வாரியம் மியூட் செய்யச் சொன்னதற்கு இணங்க தயாரிப்பு நிறுவனம் தடையும் செய்திருக்கிறது. ஆனாலும், என்ன சொல்ல வந்தார்கள் என்பது புரியும் வகையிலேயே இருப்பதால் அவை பெரிதாக பாதிப்பைத் தரவில்லை. நீக்கச் சொன்ன காட்சிகள் இடம்பெற்றிருந்தால் இந்தப் படம் இன்னும் அழுத்தமானதாக இருந்திருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1m7epxn4ejo

Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை

1 month 2 weeks ago

Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை

Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை

செ.ஞானபிரகாஷ்

Updated on: 

06 Jan 2026, 9:50 am

கேரள - கர்நாடக எல்லையை ஒட்டிய மலை எஸ்டேட் உச்சியில் வசிக்கிறார் மலாத்தி (பியானா மொமின் ) என்ற மலேசிய பெண். அவரது கணவர் சவுரப் சச்தேவா (குரியச்சன்).

மலாத்தியை தனியாக அங்கு விட்டுவிட்டு எப்போதாவது வந்து பார்த்து செல்லும் ரகம் இவர். ஊருக்குள் அவரை பற்றி பெண்பித்தர், கொலைக்கு அஞ்சாதவர் என்ற விமர்சனமும் உள்ளது. இதனால் மலாத்திக்கு துணையாக பியூஷ் (சந்தீப் ப்ரதீப்) என்ற இளைஞனை குரியச்சன் வேலைக்கு வைத்துள்ளார்.

அந்தக் காட்டுக்கு மோகன் போத்தன் ( வினித்) ஒரு நாயுடன் வருகிறார். மலாத்தியையும், அவரது கணவர் குரியச்சனையும் விசாரித்து விட்டு, கூடாரம் அமைத்து தங்கியுள்ளார். வினித் இறக்க, அதன் பின் நடக்கும் சம்பவங்களும், ஒவ்வொன்றாக அவிழும் முடிச்சுகளுமே ‘எகோ’ (Eko) திரைக்கதை.

ஏற்கெனவே பிரபலமான ‘கிஷ்கிந்தா காண்டம்’ படத்தை இயக்கிய தின்ஜித் அய்யதன் இப்படத்தில் உச்சம் தொட்டுள்ளார். அவரது திரை எழுத்தாளரும், ஒளிப்பதிவாளருமான பாகுல் ரமேஷ் கூட்டணி இம்முறையும் காட்சியமைப்புகளில் கட்டிபோட்டுள்ளனர்.

கிஷ்கிந்தாவில் குரங்குகளை வைத்து மிரட்டியவர்கள், ‘எகோ’வில் நாய்களை வைத்து நம்மை பயத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்கிறார்கள்.

அரிதான நாய்களை இனப்பெருக்கம் செய்ய வைத்து, அவற்றை விற்கும் குரியச்சன், மலேசியாவிலிருந்து மலாத்தியை கேரளத்துக்கு அழைத்து வந்தது எப்படி என்பது வித்தியாசமான ஃப்ளாஷ்பேக்.

உண்மை ஒன்றுதான். ஆனால், ஒவ்வொருவரின் கோணமும் வெவ்வேறானது. அந்த ஃப்ளாஷ்பேக் குரியச்சன் பார்வையில் ஒரு கருத்தும், குரியச்சன் நண்பர் வினித் விவரிக்கும்போது வேறு மாதிரியாகவும் வெளியாகிறது.

‘ஃபேலிமி’ படத்தில் சாதுவாக தோன்றிய சந்தீப், ‘ஆலப்பூலா ஜிம்கானா’, ‘படக்கலம்’ படங்களுக்கு பிறகு நிறைவான, ஆக்ரோஷமான நடிப்பை இப்படத்திலும் உறுதி செய்கிறார்.

நாய்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவும் இப்படத்தின் அடிப்படை. மனிதர்கள் நாய்களையும், உறவுகளையும் பாதுகாப்பு என்ற பெயரில் கட்டுப்படுத்தி அடிமையாக வைத்திருப்பதுதான் அடிநாதம். பாதுகாப்பாக இருப்பதாக உணர வைத்து, அடிமையாக வைத்திருப்பதையும் காட்சியாக விவரிப்பது சிலிர்ப்பு.

“நில நாய்களுக்கு எப்போதும் ஒரே முதலாளிதான்” என்பதை சுற்றிதான் வருகிறது க்ளைமாக்ஸ். மனிதன் தன் விருப்பத்துக்காக யாரையும் பாதுகாப்பு உணர்வு தந்து கட்டுபடுத்தி அடிமையாக்கி முதலாளியாக வலம் வருவதை உணர்ந்தோரும், மற்றவர்களை அடிமையாக்க தவறுவதில்லை.

உணர்வுபூர்வமாகவும், காட்சி வழியாகவும் பேசும் தவற விடக்கூடாத இந்தத் திரைப்படம். நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழிலும் காணக் கிடைக்கிறது.


https://youtu.be/Bw6H-Ir1YJs?si=R6SNBW022EWYLiAE

Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை

திட்டமிட்ட சதியை ஒன்றினைந்து எதிர்ப்போம்..

1 month 2 weeks ago

ஈழத்தமிழர்கள் போராட்ட வரலாறு தமிழ்நாட்டில் பேசுபொருள் ஆக்கப்படக்குடாது என்று திட்டமிட்டு தமிழர்கள் தம் வரலாறு இருக்ககூடாது என்று திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யும் அதிகாரத்தில் இருக்கும் ஒரு கூட்டத்தால் திரையரங்குகள் வழங்கப்படாமல் திட்டமிட்டு புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ள சல்லியர்கள் திரைப்படத்தை உலகெல்லாம் பரந்து வாழும் இந்திய, ஈழத்தமிழர்கள் மற்றும் உலகத்தமிழர்கள் ஒன்றிணைந்து வெற்றிபெறச்செய்து நம்சக்தியை காட்டுவோம்.. இதற்கு நாம் கொடுக்கும் ஆதரவுதான் இனிமேல் இன்னுமொருவர் எமது வரலாற்றையும் தமிழர்கள் வாழ்வியலையும் பேசும்படங்களையும் எடுக்க வரும்பொழுது நம்பிக்கையையும் ஊக்கத்தைய்யும் துணிவையும் தரும்..

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பகிர்ந்துள்ள ottp தாலத்தில் சென்று பார்த்து எம் ஆதரவை கொடுப்போம்.. தமிழரை, தமிழை பேசுபவர்களை வளர்த்துவிடுவோம்..

விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்!

1 month 2 weeks ago

சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்!

1 Jan 2026, 8:53 PM

IMG-20260101-WA0028.jpg

மூன்றாம் உலகப் போர் எப்போது வரும் எப்போது வரும் என்று இன்னும் முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் மூன்றாம் உலகப் போர் வந்து நடந்து முடிந்து பதினாறு வருடம் ஆகி விட்டது. அந்தப் போரில்தான் ஈழம் அழிக்கப்பட்டது.

தமிழினத்துக்கு எதிராக திராவிடம், தேசியம், கம்யூனிசம் எல்லாம் கரம் கோர்த்தன. அண்டை மாநில அரசியல்கள் வஞ்சகம் செய்தன. வட இந்தியா தமிழனை விட சிங்களனே தனக்கு சொந்தம் என்று, இறையாண்மை இல்லாத குறையாண்மையோடு செயல்பட்டது.

இந்தியாவும் பாகிஸ்தானும், இந்தியாவும் சீனாவும் எதிரி நாடுகள். ஆனால் ஈழத்தை அழிக்கும் விஷயத்தில் இவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று ‘தொடுப்பு’ நாடுகளாக மாறி ஈழத்தை அழித்தன.

ஐ நா சபையிலும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத் துறை செயலர் பதவிகளிலும் , இலங்கை ராணுவ ஆலோசனை பதவிகளிலும் மலையாளிகள் உட்கார்ந்து , ஒரு பக்கம் தமிழ் நாட்டில் மாய்மாலம் செய்து பிழைத்துக் கொண்டே . தமிழினத்துக்கு எதிராக அவிழ்த்துப் போட்டார்கள்.

ஏகாதிபத்தியத்துக்கு எதிராக எப்போதும் இருப்போம் என்று வரலாற்றுப் புத்தகங்களை வழித்து நக்கிக் கொண்டிருக்கும் கியூபா, இலங்கைக்கு உதவி செய்ததன் மூலம் நியாயம் துறந்து அம்மணமாக நின்றது .

பிரபாகரன் முன்பு பிச்சைக்காரன் ஆனான் பிடல் காஸ்ட்ரோ.

இத்தனை ஈன தேசங்கள், ஈனப் பிறவிகள் தமிழினத்தின் மானத்தோடு விளையாடிய அதுதான் மூன்றாம் உலகப்போர்.

இனி ஒரு போர் வந்தால் அது நான்காம் உலகப் போர்.

உலகமே எதிர்த்து நின்றாலும் அஞ்சாமல் மானத்தோடு மனசாட்சியோடு போர் அறத்தோடு களமாடி தோற்றாலும், வரலாற்றில் வென்று, அந்த அநியாயத்துக்கு துணை போன தேசங்கள் ஒவ்வொன்றும் தனக்கு முகத்தில் தாங்களே காறி உமிழ்ந்து கொள்ளும் நிலைமையை உருவாக்கி வரலாற்றில் நிலைத்தது விடுதலைப் புலிகள் அமைப்பு.

குறைகளே இல்லாத அமைப்பு அல்ல அது.

ஆனால் அதை விட சிறப்பான ஓர் இனப் போராளிகள் குழுவை இந்த உலகம் கண்டதில்லை. இனி காணப் போவதும் இல்லை. தனது படையில் இருந்த கடைசி வீரனின் உயிரும் தனது மனைவி மகன்களின் உயிரும் ஒன்று என்று எண்ணிய ஒரு போராளி (வஞ்சகர்கள் பார்வையில் தீவிரவாதி; பயங்கரவாதி) இந்த உலகத்தில் இருந்தான் என்ற உண்மையை, இனி நீங்கள் கற்பனையில் சொன்னாலும் இந்த உலகம் நம்பாது. லாஜிக்கா இல்லையே என்று சொல்லி விட்டு நகர்ந்து விடும்.

ஒரு நாடே ஓர் பெரும்பான்மை இனமே, சுற்றி வளைத்து நிராயுதபாணிகளை ஆயுதத்தால் கொன்று பெண்களை எல்லாம் சீரழித்து அழிக்கும் வன்முறையில் வெறியாட்டம் ஆடிய நிலையில்,

அண்டை நாடுகள் எல்லாம் வக்கிரத்தோடு வேடிக்கை பார்த்த சூழலில்,

புலிகள் படையில் காயம்பட்ட போராளிகளை மீட்டு, எந்த வசதிகளும் இல்லாத நிலையில்,

தரையில் தோண்டப்பட்டு உருவாக்கப்பட்ட – பங்கர்கள் எனும் – அடிப்படை வசதிகள் கூட இல்லாத, சிறிய, மண் சுரங்க அறைகளில்,

உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடும் அந்த போராளிகளை மீட்க, உயிரைப் பணயம் வைத்து, பசி பட்டினி கிடந்து, குடும்பத்தை இழந்து வாழ்வை இழந்து, போராளிகளைக் காப்பாற்றிய,

விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் பணி எப்படிப்பட்டது என்பதை சொல்லும் படம் இது.

ஆம். விடுதலைப் புலிகள் அமைப்பின் மருத்துவ அணியின் பெயர் சல்லியர்கள்.

சிங்கள மிருகங்களால் அம்மா, அப்பா, உறவுகள், காதல், பாசம் வீடு, வாசல், சொத்து சுகம் இழந்து, எங்கெங்கோ போய் ஒரு வழியாக மருத்துவம் படித்து… அயல்நாட்டுக்கு போய் மருத்துவம் பார்த்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்ற சூழலில் அதை விட்டு விட்டு…

தாய் மண்ணை மீட்கும் போராளிகளைக் காப்பற்ற ஈழம் வந்து…. ஒவ்வொரு நொடியும் மரணத்தை எதிர்பார்த்து வாழ்ந்து…

தங்கள் மேல் அதிக ஆத்திரத்தோடு குறி வைக்கும் சிங்களப் படையினரை சமாளித்து, பணியாற்றிய மாவீர மருத்துவர்கள் இந்த சல்லியர்கள்.

எத்தனை சிலுவைகளைப் போட்டாலும் இந்த சல்லியர்கள் சுமந்த சிலுவைகளை செஞ்சிலுவைச் சங்கம் கூட சுமந்தது இல்லை.

எனினும் ஒருவன் அடிபட்டு உயிருக்கு ஆபத்து என்று வந்தால் அவன் யாராக இருந்தாலும் ஒரு மருத்துவர் என்ன செய்ய வேண்டும்? அதில் இந்த சல்லியர்கள் எவ்வளவு தெய்வத்தன்மையோடு இருந்தார்கள்…

அதன் விளைவு என்ன? என்பதே இந்தப் படம்.

இன உணர்வு இல்லாவிட்டாலும் கூட, மனசாட்சி உள்ள, சாப்பாட்டில் கிரிஸ்டல் சேர்த்துக் கொள்கிற எல்லோரும் கூட, இந்த படத்தைப் பார்த்தால் நெகிழ்ந்து போவார்கள். அப்படி ஒரு கதை. அப்படி ஒரு களம்.

ஓர் இயக்குனராக மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார் கிட்டு. தன்னை மேதகு முதல் பாகத்திலேயே நிரூபித்தவர் அவர்.

கதை நிகழும் பின்புலம், லொகேஷன்கள், ஷாட்கள், ஃபிரேம்கள், படத்துக்கு அவர் கொடுத்து இருக்கும் டோன் எல்லாம் அபாரம். நடிக நடிகையர் தேர்வு, அவர்களுக்கான கெட்டப் எல்லாம் அபாரம்.

சின்னச் சின்ன நடிகையர்களைக் கூட பொருத்தமாக தேர்ந்தெடுத்து சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.

ஒரு போராளியின் உயிரைக் காப்பாற்ற, ஒரு சல்லியர் மருத்துவர் ரத்தம் கொடுத்து விட்டு பட்டினியோடு அந்தப் போராளிக்கு, அறுவை சிகிச்சை செய்யும் பணியில், அந்த குண்டுக் காயம் பட்ட இடத்தைச் சுற்றி அந்த மருத்துவர் ஆட்காட்டி விரலால் அழுத்திச் சுழற்ற, அதே நேரம் சிங்கள ராணுவ முகாம் அதிகாரி ஒருவர், தான் சுகமாக அருந்தும் கோப்பைக்குள் விரலை விட்டு ஆள்காட்டி விரலால் சுழற்றும் காட்சியை, டிரான்சிஷன் செய்து ஒப்புமைப்படுத்திக் காட்டும் இடம், இயக்குனருக்கு மகுடம்.

ரிக்ஷாக்காரன் படத்தில் ”அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்…” பாட்டில் எம் ஜி ஆர் பாதிக்கப்பட்ட குழந்தையின் புன் சிரிப்பை ரசித்துக் கொண்டிருக்க, அயோக்கியக் கூட்டம் ஆடிப் பாடிக் குடித்துக் கொண்டு ஆபாச நடனம் பார்த்துக் கொண்டு ஆணவச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கும். அதற்கு இணையான காட்சி, சல்லியர்கள் படத்தில் வரும் இந்தக் காட்சி.

சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு ஒரு படிம ஓவியம் போல படத்துக்கு உயிர் கூட்டுகிறது. கென் மற்றும் ஈஸ்வரின் இசை, இளங்கோவனின் படத் தொகுப்பு இரண்டும் நேர்த்தியான பங்களிப்பை செய்துள்ளன.

முஜிபுர் ரஹ்மானின் கலை இயக்கம், பூங்குயில் கிட்டுவின் ஆடை வடிவமைப்பு இரண்டுக்கும் நூற்றுக்கு நூறு மார்க். சிகையலங்காரமும் சிறப்பு. சற்றே துருத்திக் கொண்டு தெரிந்தாலும் அப்துலின் மேக்கப்பும் பல இடங்களில் அசத்துகிறது.

நாயகியாக பெண் மருத்துவராக நடித்திருக்கும் சத்யா தேவியிடம் எல்லோரும் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும்.கேட்காமல் விட்டு விடாதீர்கள்.

“உண்மையை சொல்லுங்கள். நீங்கள் விடுதலைப் புலிகள் படையில் எத்தனை நாள் பயிற்சி எடுத்தீர்கள். எத்தனை நாள் சல்லியர்கள் அமைப்பில் பணியாற்றினீர்கள். இல்லவே இல்லை என்று எல்லாம் பொய் சொல்லக் கூடாது”

அப்படி ஒரு அட்டகாசமான நடிப்பு.. இல்லை இல்லை.. இருத்தல்.. இல்லை இல்லை அதுவாகவே ஆதல்.

அற்புதம் சத்ய தேவி. வாழ்க. வளர்க,

சக மருத்துவராக வரும் மகேந்திரனும் அப்படியே சிறப்பாக நடித்துள்ளார்.

படமாக்கல் அளவுக்கு திரைக்கதை பலமாக இல்லை.

சல்லியர்கள் வாழ்வு, இலங்கை ராணுவத்தின் கொடுமைகள், போராளிகளின் தனிப்பட்ட வாழ்வு இழப்புகள் இவற்றில் எதற்கு முதன்மை முக்கியத்துவம் கொடுத்து, எதை எந்த அளவில் சொல்வது என்பதில் தெளிவின்மை காரணமாக, ஒன்றை இடித்துக் கொண்டு வந்து இன்னொரு விஷயம் நிற்கிறது.

அதேபோல இந்தப் படத்தில் முக்கியமாக வலியுறுத்தப்படும் விஷயம் சிங்கள ராணுவத்தில் யாருக்கு நடக்கிறது என்ற விஷயத்தைக் கூட இன்னும் தீவிரமாக யோசித்து இருக்கலாம்.

அப்படி சொன்னால் அதில் தவறும் இருக்காது.

சிங்கள அரசியல் தலைவர் ஒருவரின் மகன் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க யாழ்ப்பாணம் வருகிறான். ”சுட்டு விடுவோமா?” என்று கேட்கப்பட்ட போது,” நல்ல விசயத்துக்கு வருகிறான். இப்போது சுட்டால், நாம் விளையாட்டுக்கு எதிரான இயக்கம் என்று ஆகிவிடும். வேண்டாம் “என்றார் பிரபாகரன்.

ஆனால் அவன்தான் பிரபாகரன் இறந்த பிறகு யாழ்ப்பாணம் முழுக்க சாராயக் கடைகளைத் திறந்து போதை ஆற்றை ஓட விட்டான்.

எனவே அந்த சிங்கள கதாபாத்திரம் எது என்பதில் இன்னும் இறங்கி அடித்திருக்கலாம்.

அதே போல ரத்தம் சேகரிக்கப்பட்டு இருக்கும் பைகளை, சிங்கள ராணுவ அதிகாரி காலால் மிதித்து உடைப்பதை பெண் மருத்துவர் நேரில் பார்க்கவில்லை. ஆனால் அவர் யோசிக்கும் போது,அந்தக் காட்சி அவருக்கு விஷுவலாக வருகிறது. அது பொருத்தமாக இல்லையே.

‘இல்லை இல்லை.. நடந்த விஷயத்தை அவர் இமாஜினேஷன் செய்கிறார்..’ என்று ஒரு வாதத்துக்கு எடுத்துக் கொண்டால் கூட, நடந்த சம்பவத்தில் மருத்துவர் இமாஜின் செய்து பார்க்க, அம்மா அப்பா கொல்லப்படுவது முதல் இதை விட முக்கிய சம்பவங்கள் அந்தக் காட்சியிலேயே இருக்கு, எனவே அப்போதும் பொருத்தமாக இல்லை.

இப்படி சில குறைகள் இருந்தாலும், எடுத்துக் கொண்ட கதை, சூழல், படமாக்கல், நடிப்பு, கருத்தியல், போன்ற வகைகளில் உயர்ந்து நிற்கிறது படம்.

ஒவ்வொருவரும் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம்

சல்லியர்கள்.. கண்ணீரும் ரத்தமும்..

மகுடம் சூடும் கலைஞர்கள் சத்ய தேவி, கிட்டு.

https://minnambalam.com/salliyargal-tamil-film-review-2026/

'ரிலீஸ் அதிகம், வெற்றி குறைவு': 2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமா பற்றிய ஒரு மீள் பார்வை

1 month 3 weeks ago

'ரிலீஸ் அதிகம், வெற்றி குறைவு': 2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமா பற்றிய ஒரு மீள் பார்வை

டியூட்

பட மூலாதாரம்,PradeepRanganathan/Facebook

படக்குறிப்பு,டியூட்

கட்டுரை தகவல்

  • மீனாட்சி சுந்தரம்

  • பிபிசி தமிழுக்காக

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

2025-ஆம் ஆண்டு தமிழில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 285 திரைப்படங்கள் வெளியாயின. பல ஆண்டுகள் தேங்கியிருந்த படங்களும் இந்த ஆண்டு வெளியாயின. சிறிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, தயாரிப்பாளர்கள் காட்டிய ஆர்வம், சிறிய படங்களை ரிலீஸ் செய்ய திரையரங்குகள் கிடைத்தது என்பன போன்ற பலவும் இதற்கு காரணமாக அமைந்தது என்று திரைத்துறையினர் கூறினர்.

2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு எப்படி இருந்தது?

வசூல் ரீதியில் வெற்றி பெற்ற படங்கள்

தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவல்களின்படி பின்வரும் திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக பார்க்கப்படுகின்றன.

  • மதகஜராஜா

  • கூலி

  • டூரிஸ்ட் ஃபேமிலி

  • குட் பேட் அக்லி

  • ஆண்பாவம் பொல்லாதது

  • பறந்துபோ

  • டிராகன்

  • டியூட்

  • மாமன்

  • குடும்பஸ்தன்

  • தலைவன் தலைவி

  • பைசன்

  • மிடில்கிளாஸ்

  • மர்மர்

  • 3 பிஹெச்கே

திரையரங்குகளில் சில படங்கள் மட்டுமே வெற்றிகரமாக ஓடின. பல படங்கள் ஓடிடி, மற்ற மொழிகள், சாட்டிலைட் உரிமம் போன்றவற்றால் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படங்களாக அமைந்தன.

எதிர்பார்த்த வெற்றியை தராத படங்கள்

இந்த ஆண்டு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாதவை என்று திரைத்துறையினர் குறிப்பிட்ட திரைப்படங்கள்.

  • தக் லைஃப்

  • வீரதீர சூரன்

  • விடாமுயற்சி

  • கிஸ்

  • மாஸ்க்

  • ரெட்ரோ

  • குபேரா

  • இட்லிக்கடை

  • மதராசி

  • காதலிக்க நேரமில்லை

  • நேசிப்பாயா

  • ஏஸ்

  • அகஸ்தியா

  • கேங்கர்ஸ்

  • மாரீசன்

  • படைத்தலைவன்

  • கொம்புசீவி

  • ஃபீனிக்ஸ்

  • தேசிங்குராஜா 2

  • பிளாக்மெயில்

  • பாம்

  • டீசல்

  • காந்தா

  • கும்கி 2

தக்லைஃப்

பட மூலாதாரம்,@MadrasTalkies_

படக்குறிப்பு,தக்லைஃப்

வரவேற்பு பெற்ற சிறிய பட்ஜெட் படங்கள்

சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி, மணிகண்டனின் குடும்பஸ்தன், சூரியின் மாமன், சரத்குமார்-சித்தார்த் நடித்த 3 பிஹெச்கே, விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன், ரியோவின் ஆண்பாவம் பொல்லாதது, விக்ரம் பிரபு நடித்த சிறை ஆகிய படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

வணிக ரீதியாக ஹிட் ஆகாவிட்டாலும் லிஜோமோல் நடித்த காதல் என்பது பொதுவுடமை, புதுமுகங்களின் மாயகூத்து, டேனியல் பாலாஜியின் பிபி 180, காந்தி கண்ணாடி, அதர்ஸ், வெள்ளக்குதிர, ஒண்டிமுனியும் நல்லபாடனும், அங்கம்மாள், ஹவுஸ்மேட்ஸ், பாலாவின் வணங்கான், எமகாதகி, வேம்பு, லெவன், லவ் மேரேஜ், டிஎன்ஏ, மார்கன், கெவி, வானரன், பேட் கேர்ள், தண்டகாரண்யம், ஆரோமலே, மெட்ராஸ் மேட்னி, ஓஹோ எந்தன் பேபி, பெருசு, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ஆர்யன், லவ் மேரேஜ் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டன.

டூரிஸ்ட் ஃபேமிலி

பட மூலாதாரம்,X/@MillionOffl

படக்குறிப்பு,டூரிஸ்ட் ஃபேமிலி

பிரதீப் ரங்கநாதன், சாய் அபயங்கர்

2025-ஆம் ஆண்டில் பிரதீப் ரங்கநாதன் டிராகன், டியூட் என 2 வெற்றி படங்களை கொடுத்தார்.

இசைத்துறையை பொறுத்தவரையில் சாய் அபயங்கர் வரவை திரைத்துறையினர் குறிப்பிட்டு சொல்கிறார்கள். அவரது இசையில் வெளியான டியூட் படத்தில் பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.

இந்த ஆண்டின் புதுமுக இயக்குநர்களில் அபிஷன் ஜீவிந்த் (டூரிஸ்ட் ஃபேமிலி), ராஜேஸ்வர் காளிசாமி (குடும்பஸ்தன்), கீர்த்தீஸ்வரன் (டியூட்), கலையரசன் தங்கவேல் (ஆண்பாவம் பொல்லாதது), மிடில் கிளாஸ் (கிஷோர் முத்துராமலிங்கம்), சுரேஷ் ராஜகுமாரி (சிறை) ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

பிரதீப் ரங்கநாதன்

பட மூலாதாரம்,AGS Productions

படக்குறிப்பு,டிராகன்

'சினிமா வியாபாரமே மாறி விட்டது'

2025 தமிழ் சினிமா குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், ''சினிமா வியாபாரமே இப்போது மாறி விட்டது. ஓடிடி மூலமாக 38 சதவிகித வருமானம், திரையரங்கம் மூலமாக 21 சதவிகித வருமானம், சாட்டிலைட் 12%, ஆடியோ 5% மற்றும் பிற வருமானம் என நிலைமை மாறியுள்ளது. சிறிய பட்ஜெட், நடுத்தர பட்ஜெட் படங்கள் இந்த ஆண்டு அதிகம் வெற்றி பெற்றுள்ளன. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெரிய படங்கள் இந்த ஆண்டு ஓடாதது மைனஸ்." என்றார்.

டூரிஸ்ட் ஃபேமிலி, தலைவன் தலைவி, 3 பிஹெச்கே, மாமன், குடும்பஸ்தன் உள்ளிட்ட குடும்ப படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

குடும்பஸ்தன்

பட மூலாதாரம்,@Manikabali87

படக்குறிப்பு,குடும்பஸ்தன்

'1,163 தியேட்டர்கள் இருக்கிறது, ஆனாலும்'

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் திருச்சி ஸ்ரீதர் பேசுகையில், ''2025-ஆம் ஆண்டு 285 படங்கள் வந்துள்ளதாக கணக்கு சொல்கிறார்கள். அதில், மதகஜராஜா, குடும்பஸ்தன், குட் பேட் அக்லி, மாமன், டியூட், டிராகன், பைசன், தலைவன் தலைவி, காந்தாரா சாப்டர் 1 போன்ற சில படங்களே திரையரங்க உரிமையாளர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தன." என்றார்.

பெரிய நடிகர்கள் படங்களை விட, நல்ல கதைதான் ஜெயிக்கும் என்பதை 2025-ஆம் ஆண்டு நிரூபித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

"தமிழகத்தில் இப்போது 1,163 திரையரங்குகள் இருக்கின்றன. பழைய திரையரங்குகள் மூடப்படும் அதேநேரத்தில் புதுப்பொலிவுடன், நவீன தொழில்நுட்பத்துடன் பல திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. ஆனாலும், வெற்றி படங்களின் எண்ணிக்கை குறைவு" என்றார் அவர்.

இயக்குநர் பாண்டிராஜ் கருத்து

தலைவன் தலைவி

பட மூலாதாரம்,Sathyajothi films

இந்த ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றாக கூறப்படும் 'தலைவன் தலைவி' படத்தின் இயக்குநரானபாண்டிராஜிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர் கூறுகையில் ''இந்த ஆண்டு வெற்றி படங்களின் பட்டியலில் தலைவன் தலைவி தவறாமல் இடம்பெறுகிறது. இந்த படத்தின் வெற்றிக்கு மக்கள் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து படம் பார்த்ததுதான் காரணம்." என்றார்.

'சத்தம் அதிகம்' என சில விமர்சனங்கள் வந்தாலும் கணவன், மனைவி, மாமனார், நாத்தனார், கொழுந்தன், அப்பா, அம்மா என திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்ட பல 'உறவுகளை' படம் பார்த்தவர்கள் தங்கள் வாழ்க்கையுடன் இணைத்து பார்த்தனர் என்றார் அவர்.

"எப்போதுமே உணர்வுப்பூர்வமாக, குடும்ப கதைகளை சொல்லும் படங்கள் தோற்பதில்லை. ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரைலர் வரும்போதே இந்த படத்தை திரையரங்கில் பார்க்கலாம், இந்த படத்தை ஓடிடியில் பார்க்கலாம் என பார்வையாளர்கள் முடிவு செய்துவிடுகிறார்கள். திரையரங்க அனுபவத்தைப் பெறவே சில படங்களை மக்கள் திரையரங்குகளில் பார்க்கின்றனர். சில படங்கள் ஓடிடி-யில் பெரிய ஹிட் ஆகும். அதுவும் வெற்றி படம்தான். சினிமா இன்று மாறிவிட்டது.'' என்றார் இயக்குநர் பாண்டிராஜ்.

'பல படங்களின் தலைப்பு கூட மனதில் பதியவில்லை'

திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேசுகையில், ''இந்த ஆண்டு 25 படங்கள் மட்டுமே தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என 3 தரப்புக்கும் லாபம் கொடுத்தன. 60 படங்கள் தப்பிவிட்டன. அதாவது, இந்த படங்கள் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை. மீதமுள்ள 200 படங்கள் ஏமாற்றம் தந்தவை. தக்லைஃப், இட்லி கடை, விடாமுயற்சி, ரெட்ரோ போன்ற பெரிய படங்கள் இழப்பை ஏற்படுத்தின. இந்த ஆண்டு வெளியான பல திரைப்படங்களின் தலைப்பு திரைத்துறையினர் மற்றும் ஊடகத்துறையினரின் மனதில் கூட பதியவில்லை" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx232zp8pjvo

Avatar: Fire and Ash விமர்சனம் - திரை பிரம்மாண்டமும் தீர்ந்து போன சரக்கும்!

2 months ago

Avatar: Fire and Ash விமர்சனம் - திரை பிரம்மாண்டமும் தீர்ந்து போன சரக்கும்!


ஜேம்ஸ் கேமரூன் என்றாலே பிரம்மாண்டம் தான் நம் நினைவுக்கு வரும். 2009-ம் ஆண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ‘அவதார்’ படம் வெளியாகி கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு அதன் அடுத்தடுத்த பாகங்கள் குறித்த அறிவிப்பை கேமரூன் வெளியிட்டிருந்தார். அதன்படி கடந்த ’அவதார் 2’ கடந்த 2022-ல் வெளியானது. தற்போது அதன் மூன்றாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

முதல் இரண்டு பாகங்களில் காடு மற்றும் கடலை மையக் கருவாகக் கொண்டு பண்டோரா உலகத்தை வடிவமைத்த கேமரூன், மூன்றாவது பாகத்தில் நெருப்பை மையப்படுத்தி திரைக்கதையை எழுதியுள்ளார். ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்) மற்றும் நெய்த்திரி (ஜோ சால்டனா) தங்களின் குடும்பத்தையும், பண்டோராவையும் பாதுகாக்கப் போராடும் அதே பழைய கதைதான் இதிலும் தொடர்கிறது.

ஆனால், இம்முறை பண்டோராவில் இருக்கும் அனைத்து நாவிகளும் நல்லவர்கள் அல்ல என்பதையும், அவர்களுக்குள்ளும் வன்முறை மற்றும் பொறாமை இருக்கிறது என்பதும் இதில் காட்டப்படுகிறது. மனிதர்களுக்கும் ஜேக் சல்லி கூட்டத்துக்கும் இடையிலான யுத்தத்தில் இம்முறை பண்டோராவின் 'சாம்பல் மக்கள்' எனப்படும் வராங் இனத்தைச் சேர்ந்த தீய நாவிகளும் இணைந்து கொள்கின்றனர். இவர்களிடமிருந்து பண்டோராவை ஜேக் சல்லி கூட்டம் காப்பாற்றியதா என்பதே ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் கதை.

வழக்கம்போலவே இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய பலமும் அதன் தொழில்நுட்பம்தான். முந்தைய பாகங்களில் பச்சை (காடு) மற்றும் நீல (கடல்) நிறங்கள் பிரதானமாக இருந்தன. ஆனால் இதில் நெருப்பு மற்றும் சாம்பல் சார்ந்த செந்நிறம் மற்றும் சாம்பல் நிறங்கள் திரையை ஆக்கிரமிக்கின்றன. ஒவ்வொரு பிரேமும் ஒரு ஓவியம் போலச் செதுக்கப்பட்டுள்ளது. முக்கியமான கதாபாத்திரங்களின் முகபாவனைகள் அவ்வளவு தத்ரூபமாக உள்ளன. நிச்சயம் இப்படம் விஎஃப்எக்ஸ் துறையில் ஒரு புதிய மைல்கல். நல்ல ஒலி, ஒளி தரம் கொண்ட பெரிய திரையில் 3டியில் பார்ப்பது ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை தரும்.

தொழில்நுட்ப பிரம்மாண்டங்கள் ஒருபக்கம் இருந்தாலும், கதையும் திரைக்கதையும் பார்க்கும்போது பெரும் ஏமாற்றத்தைத் தருகின்றன. பல காட்சிகள் தேவையே இல்லாமல் இழுக்கப்படுகின்றன. குறிப்பாக, புதிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் காட்சிகள் மிக நீளமாக உள்ளன. கிட்டத்தட்ட முதல் ஒரு மணி நேரத்துக்கு படம் நகரவே இல்லை என்பதுதான் உண்மை.

"காட்டைக் காப்பாற்ற வேண்டும், தீயவர்களிடமிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும்" என்ற அதே ஒற்றை வரிக்கதை தான். குறைந்தபட்சம் திரைக்கதையிலாவது புதிதாக ஏதாவது செய்திருக்கலாம். படத்தின் நீளம் மிகப்பெரிய பலவீனம். மூன்று மணி நேரம், தொய்வான திரைக்கதையால் 30 மணி நேரம் போல தோன்றுகிறது. சரக்கு தீர்ந்து போனதைப் போல காட்சி அமைப்புகளில் எந்தவித புத்திசாலித்தனத்தையும் கேமரூன் இடம்பெறச் செய்யவில்லை.

hindutamil-prod%2F2025-12-19%2F1e5isibl%

ஜேக் சல்லி மற்றும் நெய்த்திரி கதாபாத்திரங்களில் எந்தப் பெரிய மாற்றமும் இல்லை. முதல் பாகத்திலும் இரண்டாம் பாகத்திலும் உணர்வுபூர்வமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், இதில் ஆக்‌ஷன் மற்றும் கிராபிக்ஸ் மீது காட்டிய அக்கறையை, கேமரூன் கதையின் ஆன்மாவில் காட்டவில்லை. எந்த காட்சியும் மனதைத் தொடும்படி இல்லை. ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் என்பதால் ஆக்‌ஷன் காட்சிகளும் கடும் குழப்பம் ஏற்படுவதையும் தவிர்க்க இயலவில்லை.

சைமன் ஃப்ரான்லென் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளை பின்னணி இசை தாங்கிப் பிடிக்கிறது. போர்க்களக் காட்சிகளில் இசை வேகம் கூட்டினாலும், முதல் பாகத்தில் மறைந்த ஜேம்ஸ் ஹார்னரின் மனதைத் தொடும் மெல்லிசை இதில் மிஸ்ஸிங் என்றே சொல்ல வேண்டும்.

2009-ஆம் ஆண்டு புதுமையான சிந்தனை, விறுவிறுப்பான திரைக்கதையுடன் ‘அவதார்’ என்ற அற்புதத்துடன் வந்த ஜேம்ஸ் கேமரூனிடம் இருந்து இப்படியொரு சலிப்பான படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ‘டெர்மினேட்டர்’, ‘டைட்டானிக்’, ‘ஏலியன்ஸ்’ என்று ரசிகர்களுக்கு திகட்டாத புதுமைகளை தந்த கேமரூன், ‘அவதார்’ என்ற மாய வளையத்திலிருந்து வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டுவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

'அவதார்: ஃபையர் அண்ட் ஆஷ்' கண்களுக்குப் பெரும் விருந்து என்பது நிச்சயம். தொழில்நுட்பமும், கிராபிக்ஸ் மாயாஜாலங்களும் மட்டுமே எனக்கு போதும் என்று நினைப்பவர்களை இந்தப் படம் ‘ஓரளவு’ கவரும். ஆனால், ஒரு நல்ல கதையையும், விறுவிறுப்பான திரைக்கதையையும் எதிர்பார்ப்பவர்களுக்கு இது பெருத்த ஏமாற்றமே. அழகான ஃப்ரேம்கள், பிரம்மாண்ட காட்சியமைப்புகள் என பார்த்து பார்த்து செதுக்கியும் ஒரு உயிரற்ற ஓவியமாக பரிதாபமாக நிற்கிறது இந்த ‘அவதார்:ஃபயர் அண்ட் ஆஷ்’

Avatar: Fire and Ash விமர்சனம் - திரை பிரம்மாண்டமும் தீர்ந்து போன சரக்கும்!

அசாத்தியமான சாதனையாளர் : ஹாலிவுட் சண்டை கலைஞர் கிட்டி ஓ'நீல்

2 months 1 week ago

'மரண ஆபத்து, வேடிக்கை தான்' : ஹாலிவுட் பெண் சண்டை கலைஞர் கிட்டி ஓ'நீல்

கிட்டி ஓ'நீல்

பட மூலாதாரம்,UPI/Bettmann Archive/Getty Images

கட்டுரை தகவல்

  • ஹிஸ்டரி'ஸ் டஃபஸ்ட் ஹீரோஸ்

  • பிபிசி ரேடியோ 4

  • 13 டிசம்பர் 2025

அமெரிக்காவின் வெறிச்சோடிய பாலைவனத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் காது கேளாத ஓ'நீல் எனும் பெண் சண்டை கலைஞரால் உண்மையில் என்ன செய்ய முடியும் என்பதை உலகுக்கு உறுதியாக காட்டியது.

அவர் காது கேளாதவர் என்பது அவருக்கு தடையாக இருக்கும் என்ற தவறான கருத்துகளை முறியடித்ததோடு, பெண்களிடையே ரேஸிங் காரை அதிவேகமாக ஓட்டுவதில் மஞ்சள் நிற உடை அணிந்த அந்த சிறிய உருவம் துணிச்சலுடன் சவால் விடுத்து முந்தைய சாதனைகளை முறியடித்தது.

ஆனால், இது அசாத்தியமான சாகசங்களை மேற்கொள்ள தூண்டுதலாக அமைந்த ஓ'நீலின் தைரியம் மற்றும் தாங்குதிறனை விவரிக்கும் மற்றுமொரு அத்தியாயம்தான்.

ஹாலிவுட்டில் 1970களின் வாழ்நாள் சாதனையாளராக திகழ்ந்த ஓ'நீல் பல்வேறு முந்தைய சாதனைகளை முறியடித்த பெண் சண்டைப் பயிற்சி கலைஞராக இருந்தார். மேலும், இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொள்வதன் மூலம் காது கேளாத ஒருவரால் என்ன செய்ய முடியும் என்ற மற்றவர்களின் கற்பிதங்களை தன்னுடைய குழந்தை பருவத்தில் முறியடித்தார்.

காது கேட்க முடியாதவராக இருந்தபோதிலும், ஓ'நீல் சாகசங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதிலும் வேகம் மீதான தன் ஆர்வத்தை வெற்றிகரமான தொழிலாகவும் மாற்றுவதில் உறுதியானவராக இருந்தார். அக்காலகட்டத்தில், தொலைக்காட்சி திரைகளில் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தக்கூடிய ஆபத்தான சாகசங்களை நிகழ்த்திய மிகச் சில பெண்களில் இவரும் ஒருவர்.

மேலும் ஸ்டண்ட்ஸ் அன்லிமிடெட் எனும் ஹாலிவுட்டில் மிக சவாலான சண்டை காட்சிகள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்கும் குழுவில் இணைந்த முதல் பெண்ணும் இவரே. ஓ'நீலின் வாழ்க்கை குறித்து படம் ஒன்றும் வெளிவந்திருக்கிறது, மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. தவிர, அவருடைய சண்டைக் கலையை பிரதிபலிக்கும் வகையிலான பொம்மைகளும் உள்ளன.

கிட்டி ஓ'நீல்

பட மூலாதாரம்,Tom Nebbia / Getty Images

படக்குறிப்பு,தரையிலிருந்து 54 மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் ஹெலிகாப்டரிலுருந்து ஏர்பேகில் (airbag - காற்று நிரப்பப்பட்ட ஒரு மெத்தை போன்றது) குதிக்கத் தயாராகும் கிட்டி ஓ'நீல். அந்த ஏர்பேக் அந்த உயரத்திலிருந்து ஒரு தபால் தலை அளவிலேயே இருந்ததாக அவர் கூறினார்.

காது கேட்காது; ஆனாலும் தோல்வி இல்லை

டெக்சாஸில் 1946ம் ஆண்டில் கார்பஸ் க்ரிஸ்டியில் பிறந்தார் ஓ'நீல். ஐந்து மாத குழந்தையாக இருந்தபோது அவரின் உடல்நிலை மோசமானது, ஆபத்தான அளவில் உடலின் வெப்பநிலை உயர்ந்தது. அவருடைய அம்மா அவரின் உடலை சுற்றி ஐஸ் கட்டிகளை வைத்தார், அது அவருடைய உயிரை காப்பாற்றியது, ஆனால், கிட்டி வளரவளர அவர் பேச தொடங்கவே இல்லை, அப்போதுதான், அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காது கேட்கும் திறனை இழந்துவிட்டதை அவரின் பெற்றோர் அறிந்தனர்.

அவருடைய அம்மா பேட்சி ஓ'நீல் தன் மகளுக்கு சைகை மொழியை கற்பிக்க மறுத்துவிட்டார், அக்காலக்கட்டத்தில் அது சந்தேகத்துடனேயே பார்க்கப்பட்டது. ஆனால், தன் மகள் மற்றவர்களுடன் குறைவாக பார்க்கப்படக் கூடாது, அவர் பேச்சு மற்றும் தொடர்பியலை கற்க வேண்டும் என்பதில் பேட்சி ஓ'நீல் பிடிவாதமாக இருந்தார். எனவே, பேட்சி தன் மகளுக்கு வழக்கத்திற்கு மாறான உதட்டசைவுகளை கொண்டு என்ன சொல்கின்றனர் என்பதை புரிந்துகொள்ளும் லிப்-ரீடிங்கை கற்றுக்கொடுத்தார்.

கிட்டி ஓ'நீல்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,வொண்டர் வுமன் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குறிப்பிட்ட நடிகர்களுக்கு பதிலாக சண்டை காட்சிகளை நிகழ்த்துபவராக இருந்தார், ஹோட்டல் ஒன்றிலிருந்து குதிக்கும் அவரின் சண்டைக் காட்சிகளுள் ஒன்று.

"அவருடைய அம்மா கிட்டியின் கைகளை பிடித்து அவற்றை அவருடைய குரல் வளையின் மீது வைப்பார்," என்கிறார், ஓ'நீலின் மிக நெருங்கிய நண்பரும் சண்டைப் பயிற்சி கலைஞருமான கய் மைக்கேல்சன். "பின்னர், வார்த்தைகளை மிகவும் சத்தமாக, மெதுவாக திரும்பத் திரும்ப கூறுவார்."

பள்ளியில் கிட்டி கேலி செய்யப்பட்டபோது, அவர் கடுமையாக எதிர்த்து சண்டையிடுமாறு அவரின் தாயார் கூறுவார். பேட்சியின் திறன்களை அப்படியே கிட்டி செய்தார்.

"ஒவ்வொரு வார்த்தைகளின் அதிர்வுகளில் ஏற்படும் நுட்பமான மாற்றங்கள் மூலம் கிட்டி செல்லோ மற்றும் பியானோ வாசிக்கக் கற்றுக்கொள்வதில் ஈடுபட வைத்தார் அவரின் அம்மா," என்கிறார் தற்போது விளையாட்டு இணையதளமான ESPN-யின் துணை ஆசிரியரான எரிக்கா குட்மேன்-ஹூகே.

காரில் ரேடியோவில் ஒலிபரப்பாகும் பாடல்களை அதன் அதிர்வுகளை வைத்தே கிட்டி அடையாளம் காண்பார் என மைக்கேல்சன் நினைவுகூர்கிறார். தான் பீட்டிள்ஸ் இசைக்குழுவின் ரசிகர் என்றும், அக்குழுவின் இசை ஒலிபரப்பாகும்போது கிட்டி கூறியிருக்கிறார்.

லிண்டா  கார்ட்டர்

பட மூலாதாரம்,CBS via Getty Images

படக்குறிப்பு,1970களில் ஒளிபரப்பான பெரும் வெற்றியடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியான வொண்டர் வுமனில் (Wonder Woman) நடித்த லிண்டா கார்ட்டரின் சண்டை காட்சிகளில் கிட்டி பதிலியாக(Dupe) நடித்தார்.

சண்டைப் பயிற்சியில் ஆரம்ப வாழ்க்கை

கிட்டிக்கு 11 வயது இருக்கும்போது விமான விபத்து ஒன்றில் அவருடைய தந்தை இறந்துவிட்டார், ஆனால் அவரின் லான்மோவரில் (lawnmower - தோட்டத்தில் உள்ள புல்லை வெட்டிவிடப் பயன்படுத்தப்படும் ஓர் வாகனம் போன்றது) குழந்தையாக வேகமாக பயணித்த சிலிர்ப்பனுபவத்தை அவர் மறக்கவேயில்லை.

வளர்ந்தபின்பு, அவர் டைவிங் போட்டிகளில் சிறந்து விளங்கினார்.

ஆனால், 1964ம் ஆண்டில் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் சோதனைகளுக்கு சிறிது காலத்திற்கு முன்பு, அவரின் மணிக்கட்டு உடைந்துபோனது, மேலும் அவருக்கு முதுகெலும்பு மூளைக்காய்ச்சலும் (spinal meningitis) ஏற்பட்டது.

அதிலிருந்து குணமான பின்பு, அந்த விளையாட்டுக்கான ஆர்வத்தை தான் இழந்துவிட்டதாக அவருக்கு தோன்றியது.

தன் 16 வயதில் அம்மாவின் காரை ஓட்டத் தொடங்கிய உடனேயே, ஓ'நீல் ஸ்கைடைவிங், அதன்பின் வாட்டர்ஸ்கையிங் உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டினார், பெண்களிடையே அதுவரையிலான சாதனை வேகத்தை அவர் முறியடித்தார், மேலும் நாடுகளுக்கு இடையேயான கடினமான மற்றும் ஆபத்தான மோட்டார்பைக் போட்டிகளில் பங்கேற்றார், எல்லாவற்றிலும் ஒருபோதும் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை.

அவற்றிலிருந்த மரண ஆபத்து, வேடிக்கையின் ஒருபகுதியாக பார்க்கப்பட்டது.

ஒரு மோசமான விபத்தில் ஓ'நீல் மோட்டார் பைக்கின் கட்டுப்பாட்டை இழந்து, மோதி விபத்துக்குள்ளானார்.

இந்த விபத்தில் அவரின் ஒரு கை சக்கரத்தின் ஆரங்களில் சிக்கிக்கொண்டது, இதில் அவர் தன் ஒரு விரலை இழந்தார். இதைத் தாண்டியும் ஓ'நீல் தொடர்ந்து முன்னேறிச் செல்ல விரும்பியதாகவும், அவர் தன் கையுறையை அணிந்துகொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிள் மீது ஏறியதாகவும் அவரின் நண்பர்கள் நினைவுகூர்கின்றனர். இறுதியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு சமாதானம் செய்தனர்.

கிட்டி ஓ'நீல்

பட மூலாதாரம்,UPI/Bettmann Archive/Getty Images

படக்குறிப்பு,நெருப்பு தொடர்பான சண்டை காட்சிகள் உட்பட தான் செய்த சண்டைக் காட்சிகளில் 'எந்தவொரு பயத்தையும்' வெளிக்காட்டாதவர் ஓ'நீல் என அவரின் நண்பர்கள் கூறுகின்றனர்.

மற்றொரு சண்டைப் பயிற்சி கலைஞரான டஃபி ஹேம்பிள்டன் அந்த சமயத்தில் கிட்டியை மருத்துவமனைக்கு மட்டும் அழைத்துச் செல்லவில்லை, மாறாக கிட்டியின் வாழ்க்கையையே வேறு திசைக்குக் கொண்டு சென்றார். கிட்டியிடம் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான சண்டைக் காட்சிகள் தொடர்பாக கூறினார். அது தனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என ஓ'நீல் முடிவெடுத்தார்.

ஹேம்பிள்டன் ஓ'நீலின் முன்னாள் கணவர் ஆவார். பின்னர் ஓ'நீல் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.

தன்னுடைய விருப்ப புத்தகங்களான நார்மன் வின்சென்ட் பீலே எழுதிய தி பவர் ஆஃப் பாசிட்டிவ் திங்கிங் மற்றும் பைபிளுடன் ஆபத்துகளை எதிர்கொள்ள தயாராகி படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்தார். 1970களின் ஆரம்பத்தில் 'விக்' அணிந்த ஆண்கள் சண்டைக் காட்சிகளில் ஈடுபடுவது மிகவும் சாதாரணமானது, ஆனால் அந்த உலகம் மாற ஆரம்பித்தது.

காது கேளாமல் இருப்பது தடையாக இருக்கும் எனவும் அவர் "பெயரளவில்" மட்டுமே இத்துறையில் இருக்க முடியும் என்றும் மற்றவர்கள் கூறுவதை ஓ'நீல் கேட்க மறுத்தது அவருக்கு உதவியாக இருந்தது.

அதற்கு மாறாக, காது கேளாமல் இருப்பது அசாத்திய சக்தி என்றும் திரைப்பட துறை தன்னை சுற்றி சுழலும் போதும், தன் பணியின் மீது முற்றிலும் கவனமாக இருக்க முடியும் என்றும் ஓ'நீல் கூறினார்.

பிரபலமான சண்டைக் காட்சிகள்

வொண்டர் வுமன் தொலைக்காட்சி தொடர்களில் நடிகை லிண்டா கார்ட்டருடன் ஓ'நீல் தொடர்ந்து பணியாற்றியது மிகவும் பிரபலமாக இருந்தது, மேலும் அந்த நிகழ்ச்சிக்காக அதிகளவிலான சண்டைக் காட்சிகளை அவர் செய்தார். இதில் அவரின் தனித்துவமான உடையை அணிந்துகொண்டு ஹெலிகாப்டரிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் காட்சியும் அடங்கும்.

அதன் ஒரு இறுதிக்காட்சியில் கலிஃபோர்னியாவின் ஹோட்டல் ஒன்றிலிருந்து 120 அடியிலிருந்து குதித்தார். துல்லியமான கவனம் மற்றும் தைரியத்தைக் கோரும் இந்த சாகசம், ஓர் சாதனை வெற்றியாகும். அதுவொரு முக்கிய தருணமாக அமைந்தது. "ஆம், அவர் பெண்மையை பிரதிநிதித்துவப்படுத்தினார்... ஆனால், பெண் சக்தி என நாம் கருதுவதையும் அவர் பெண்மையுடன் இணைத்தார்," என குட்மேன்-ஹூகே கூறினார்.

பீப்பிள் (People) இதழுக்கு அச்சமயத்தில் பேட்டியளித்த ஓ'நீல், "நான் ஆண்களுடன் போட்டியிட முயற்சிக்கவில்லை. என்னால் செய்ய முடிந்ததை நான் செய்ய முயற்சிக்கிறேன்." என்றார்.

கிட்டி ஓ'நீல்

பட மூலாதாரம்,Glen Martin/The Denver Post via Getty Images

படக்குறிப்பு,முன்னாள் கணவர் ஹேம்பிள்டனுடன் கிட்டி ஓ'நீல், வங்கி அதிகாரியான ஹேம்பிள்டன் பின் சண்டைப் பயிற்சி கலைஞரானார்.

அதில் எதையும் ஓ'நீல் குறைவாகச் செய்யவில்லை.

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக உடலில் தீயைப் பற்றவைத்துக்கொண்டு உயரத்திலிருந்து குதித்து மற்றொரு சாதனையை முறியடித்தார். மேலும், ஜெட் மூலம் இயங்கும் படகை மணிக்கு 443 கி.மீ வேகத்தில் இயக்கினார்.

"நான் அவருடன் நடக்கும்போது கூட அவர் என்னைவிட 10 அடிகள் முன்னே இருப்பார்," என மைக்கேல்சன் கூறுகிறார். அவர் தொடர்ந்து எல்லைகளை தாண்டிச் சென்று, வேகமாக செல்ல விரும்பினார் என தெரிகிறது.

பின்னர், அவர் தன்னுடைய அனைத்து லட்சியங்களையும் நிறைவேற்றுவதற்கான ஓரிடத்தைக் கண்டறிந்தார்.

எஸ்எம்ஐ மோட்டிவேட்டர் எனும் சோதனை முயற்சியிலான காரை இயக்க அவர் 1976ம் ஆண்டு அழைக்கப்பட்டார். ஹைட்ரஜன் பெராக்சைடு எஞ்சினால் இயக்கப்படும் அந்த கார், 48,000 குதிரைத்திறனை உற்பத்தி செய்யக்கூடியது. ஓ'நீல் காரை மணிக்கு 1,207 கிமீ (750 மைல்) வேகத்தில் இயக்கி, ஒலியின் வேகத்தை முறியடிக்க விரும்பினார்.

ஆனால், அதன் ஒருங்கிணைப்பாளர்களுடனான ஒப்பந்தத்தின்படி, ஓ'நீல் பெண்களின் முந்தைய சாதனை வேகமான மணிக்கு 483 கி.மீ என்ற வேகத்தை முறியடிக்க முயற்சிக்கலாம் என கூறப்பட்டது.

தனது சிறிய உடலில் மஞ்சள்நிற உடையை அணிந்துகொண்டார். அலுமினிய சக்கரங்கள் கொண்ட, ஊசி வடிவிலான காரை எடுத்துக்கொண்டு, அமெரிக்காவின் ஒரேகானில் உள்ள ஆல்வோர்ட் பாலைவனத்தில் மணிக்கு 988 கிமீ வேகத்தில் இயக்கி பெண்கள் மத்தியில் முந்தைய சாதனைகளை முறியடித்தார்.

கிட்டி ஓ'நீல்

பட மூலாதாரம்,Glen Martin/The Denver Post via Getty Images

படக்குறிப்பு,தன் வாழ்நாள் முழுவதும் எல்லைகளை கடந்து, கற்பிதங்களை பொய்யாக்கி பல சாதனைகளை புரிந்தார்.

அடுத்ததாக அவர் ஆண்களின் சாதனை வேகத்தை முறியடிக்க விரும்பினார், ஆனால் ஒரு பெண் அப்படி செய்வது ஏற்றதல்ல எனக்கூறி, சில ஸ்பான்சர்கள் அதைத் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது,

அதுகுறித்து அவர்கள் கருத்து கூற மறுத்துவிட்டனர், ஆனால் ஓ'நீலின் நெருங்கிய நண்பர்கள் கூறுகையில், வரலாறு முழுவதும் பெண்கள் எவ்வாறு பின்தங்கியிருந்தனர் என்பதைக் காட்டும் தருணமாக ஓ'நீல் அந்த தருணத்தை மனதளவில் குறித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

மைக்கேல்சன் உடனேயே ஓ'நீலுக்கு இழுவை பந்தயத்தில் மற்றொரு வாய்ப்பை வழங்கினார். அதைத்தொடர்ந்து, நீரில் வேகப்படகை இயக்குவதிலும் அவர் முந்தைய சாதனைகளை முறியடித்தார்.

"எந்த பயமும் இல்லாத ஒருவரை என் வாழ்க்கையில் இதற்கு முன்பு சந்தித்ததே இல்லை. ஓ'நீலுக்கு எந்த பயமும் இல்லை, என்றாலும் அது நல்ல விஷயம் அல்ல," என்கிறார் மைக்கேல்சன்.

எப்போதாவது மெதுவாக இயங்கியுள்ளாரா?

சாதனைகளை முறியடிப்பது, பல திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றிய பின்பு, தெற்கு டகோட்டாவில் உள்ள சிறு நகரத்தில் ஓய்வு வாழ்க்கையை கழித்தார்.

என்றாலும், வேகம் மீதான தன் காதலை அவர் இழக்கவே இல்லை எனக்கூறும் மைக்கேல்சன், பல ஆண்டுகள் கழித்தும்கூட ஒரு காரை உருவாக்குவதற்கான ஆர்வத்தை தொலைபேசி வாயிலாக அவர் வெளிப்படுத்தியதாக கூறுகிறார்.

72 வயதில் ஓ'நீல் உயிரிழந்தார். தரையில் பந்தய காரை வேகமாக இயக்குவதில் பெண்களில் இவரின் சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. "உண்மையிலேயே அவர் தான் வொண்டர் வுமன்," என்கிறார் மைக்கேல்சன்.

பிபிசி ரேடியோ 4-ல் வெளியான கிட்டி ஓ'நீல்: ஹாலிவுட்'ஸ் ரியல் வொண்டர் வுமன் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c364977lzzpo

'இல்லாத பூவை வைத்து முதல் பாடல்' - கங்கை அமரனின் கவனிக்க வைத்த 10 பாடல்கள்

2 months 2 weeks ago

'இல்லாத பூவை வைத்து முதல் பாடல்' - கங்கை அமரனின் கவனிக்க வைத்த 10 பாடல்கள்

கங்கை அமரன்

பட மூலாதாரம்,x

3 மணி நேரங்களுக்கு முன்னர்

இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட திரைக்கலைஞர் கங்கை அமரன் இன்று (டிச. 08) தனது 78வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பாவலர் சகோதரர்களில் கடைக்குட்டி கங்கை அமரன். தனது அண்ணன்களுடன் பல மேடைக்கச்சேரிகளில் பங்கேற்று இசையை கற்றவர். அண்ணன்களை குருநாதர்களாக நினைத்து, சினிமாவில் அடியெடுத்து வைத்தவர். அவர் எழுதிய 10 பிரபல பாடல்கள் இங்கே.

1. செந்துாரப்பூவே...

'16 வயதினிலே' படத்தில் இடம்பெற்ற செந்துாரப்பூவே என தொடங்கும் பாடலை முதலில் எழுதினார் கங்கை அமரன். பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்த இந்த படம் 1977ல் ரிலீஸ் ஆனது.

முதன்முதலில் எழுதிய பாடலே நல்ல ஹிட் ஆனது. எஸ். ஜானகி குரலில், 'செந்தூர பூவே செந்தூர பூவே…ஜில்லென்ற காற்றே…' என தொடங்கும் அந்த பாடல் சூப்பர் ஹிட்டானது. இளையராஜாவின் இசை, ஸ்ரீதேவியின் நடிப்பு, ஒளிப்பதிவாளர் நிவாஸ், இயக்குனர் பாரதிராஜா என பல விஷயங்களும் அந்த பாடலில் சிறப்பாக அமைந்திருக்கும்.

செந்துாரப்பூவே பாடலை பாடிய எஸ்.ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது. அந்த பாடலுக்கு அபிநயம் பிடித்து ஆடிய, ஸ்ரீதேவி பிற்காலத்தில் இந்திய சினிமாவில் புகழ்மிக்க நடிகையானார். 16வயதினிலே படம் பாரதிராஜா, ரஜினிகாந்த் போன்றவர்களை அடையாளம் காண்பித்தது.

"உண்மையில் செந்துாரப்பூ என ஒன்று உலகில் கிடையாது. கற்பனைக்காக நான் எழுதினேன்" என்று பிற்காலத்தில் பேட்டிகளில் கங்கை அமரன் கூறியிருந்தார். அந்த செந்துாரப்பூ சினிமாவிலும் பின்னர் புகழ் அடைந்தது. இந்த பெயரில் ஒரு படமே வந்தது. அந்த பூ பெயரில் பல பாடல்கள் வந்தன. 'செந்தூரப்பூவே' எனும் பெயரில் தொலைக்காட்சி தொடரும் எடுக்கப்பட்டது.

கங்கை அமரனின் கவனிக்க வைத்த 10 பாடல்கள்

பட மூலாதாரம்,gangaiamaren

2. பூவரசம் பூ பூத்தாச்சு

கங்கை அமரனின் அடுத்த பாடலும் ஒரு பூவை பற்றி அமைந்தது ஆச்சர்யம். மீண்டும் பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜா இசையில் கிழக்கே போகும் ரயில் படத்துக்காக 'பூவரசம் பூ பூத்தாச்சு' பாடல்.

ரயிலையும், பூவையும் இணைத்து ஒரு பெண்ணின் மன ஓட்டத்தை சொல்லும் துள்ளல் பாடலாக எழுதினார் கங்கை அமரன். அந்த பாடலையும் எஸ்.ஜானகி பாடினார். ராதிகாவின் குறும்புத்தனமான நடிப்பு பாடலுக்கு சிறப்பை சேர்த்தது. 1978ம் ஆண்டில் இந்த படம் வெளியானது. அக்காலகட்டத்தில், இந்த பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் சென்றடைந்தது.

3. புத்தம் புது காலை

அடுத்ததாக, இளையராஜா, பாரதிராஜா, கங்கை அமரன் , எஸ்.ஜானகி கூட்டணியில் வெற்றி பெற்ற இன்னொரு பாடல் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் இடம் பெற்ற புத்தம் புது காலை. அந்த பாடல் சூப்பர் ஹிட். ஆனால் படத்தில் இடம்பெறவில்லை. ஆடியோவில் மட்டுமே இருந்தது. ஆனாலும் அந்த பாடலுக்கு பல ஆண்டுகள் கழித்து விஷூவலாக இடம் பெறுகிற வாய்ப்பு கிடைத்தது. மேகா என்ற படத்தில் அந்த பாடலை பயன்படுத்தினார் இளையராஜா. திருமண வீடு பின்னணியில் ஒலிப்பதாக வரும் அந்த பாடலில் நடிகை சிருஷ்டி டாங்கே நடித்திருந்தார்.

கங்கை அமரன், இளையராஜா

பட மூலாதாரம்,gangaiamaren/Instagram

படக்குறிப்பு,இளையராஜாவுடன் கங்கை அமரன்

4. ஆசையை காத்துல துாதுவிட்டு

கங்கை அமரன் எழுதிய மற்றொரு புகழ்பெற்ற பாடல் ஜானி படத்தில் இடம்பெறும் 'ஆசையை காத்துல துாதுவிட்டு' . 1980ல் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த இந்த படத்துக்கும் இளையராஜாதான் இசை. அண்ணன் கூட்டணியில் மீண்டும் ஒரு ஹிட் பாடலை கொடுத்தார் கங்கை அமரன். எஸ்.பி. ஷைலஜா பாடிய அந்த பாடல் இன்றும் ஒலிக்கிறது.

5. சின்ன மணி குயிலே

அம்மன் கோயில் கிழக்காலே படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட். அந்த பாடல்களுக்காகவே படம் ஓடியது. இளையராஜாவின் பாடல் மெட்டுக்களுக்காகவே அந்த படத்தை ஆர். சுந்தர்ராஜன் எடுத்ததாக சொல்வார்கள். அந்த படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியவர் கங்கை அமரன்தான். அதில் இடம் பெற்ற சின்ன மணி குயிலே, நம்ம கடை வீதி, பூவ எடுத்து, உன் பார்வையில், ஒரு மூணு முடிச்சாலே, காலை நேர பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.

அம்மன் கோவில் கிழக்காலே

பட மூலாதாரம்,Youtube

6. நித்தம் நித்தம் நெல்லு சோறு

மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் பாடலை அண்ணன் இசையில் எழுதினார் கங்கை அமரன். ரஜினிக்கு பிடித்த பாடல்களில் அதுவும் ஒன்று. இதே படத்தில் இடம்பெற்ற நித்தம் நித்தம் நெல்லு சோறு இன்றைக்கும் பிரபலமாக உள்ளது. அந்த பாடலையும் எழுதியவர் கங்கை அமரன்தான். அந்த பாடலுக்கு ஷோபா - ரஜினியின் பாவனைகள் கூடுதல் பலமாக அமைந்தது. இந்த பாடலை மறைந்த வாணி ஜெயராம் பாடினார்.

7. பூங்கதவே தாள் திறவாய்

நிழல்கள் படத்தில் வரும் பாடல் 'பூங்கதவே தாள் திறவாய் பூவாய் பெண் பாவாய்' இந்த பாடலை எழுதியதும் கங்கை அமரன்தான். இந்த பாடலை தீபன் சக்ரவர்த்தியும், உமா ரமணனும் பாடியிருப்பார்கள்.

8. என் இனிய பொன் நிலாவே

மூடு பனி படத்தில் வரும் 'என் இனிய பொன் நிலாவே' பாடலுக்கு தமிழ் சினிமாவில் மெலோடிகளில் தனியிடம் உண்டு. 1980ம் ஆண்டில் பிரதாப் போத்தன், ஷோபா நடித்த இந்த படத்தை பாலு மகேந்திரா இயக்கியிருந்தார். பின்னாளில் தன்னுடைய வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனன், நடிகர் சூர்யா ரயிலில் 'என் இனிய பொன் நிலாவே' பாடலை பாடுவதாக அமைத்திருப்பார்.

9. என் ஜோடி மஞ்சக்குருவி

விக்ரம் படத்தில் இடம்பிடித்த என் ஜோடி மஞ்ச குருவி பாடலையும் கங்கை அமரன் தான் எழுதினார். அந்த பாடல் தமிழகத்தின் பல்வேறு சந்தோஷ நிகழ்வுகளில் இன்றும் பாடப்படுகிறது. இப்போது கூட பைட்கிளப் படத்தில் அந்த பாடலை பயன்படுத்தி இருந்தார்கள். அப்போதே அர்த்தம் தெரியாத பல வார்த்தைகளை அழகாக பயன்படுத்தியிருந்தார் கங்கை அமரன்.

10. விளையாடு மங்காத்தா

மங்காத்தா படத்தில் தனது மகன் வெங்கட் பிரபு இயக்கத்தில், இளையராஜா மகன் யுவன் சங்கர் ராஜா இசையில் விளையாடு மங்காத்தா பாடலை கங்கை அமரன் எழுதினார். அந்த பாடலில் கங்கை அமரனின் மற்றொரு மகனான பிரேம்ஜியும் பாடி இருந்தார். அஜித் ரசிகர்களுக்கு அது விருப்பமான ஹிட் பாடலாக இன்றும் இருக்கிறது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx25nk4yg50o

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்!

2 months 2 weeks ago

New-Project-53.jpg?resize=750%2C375&ssl=

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்!

தமிழ் சினிமாவின் மூத்த திரைப்பட தயாரிப்பாளரும், சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஏவிஎம் கலையரங்கின் தலைவருமான எம்.சரவணன், தனது 86 ஆவது வயதில் காலமானார்.

அவரது மறைவு குறித்த செய்தி திரைப்படத் துறையினர், ரசிகர்கள் மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Image

தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் பிரபல இயக்குனர்-தயாரிப்பாளர் ஏ.வி. மெய்யப்பனின் மகனாவார் சரவணன்.

நாட்டின் மிகப் பழமையான கலையரங்குகளில் ஒன்றான பிரபலமான ஏ.வி.எம் ஸ்டுடியோவை அவர் நிறுவினார். 

இன்று வரை சென்னையில் இது ஒரு அடையாளமாக இது உள்ளது.

சரவணன் தனது தந்தை விட்டுச் சென்ற செழுமையான சினிமா பாரம்பரியத்தை எடுத்துக்கொள்வதில் மிகவும் பிரபலமானவர். 

இந் நிலையில் அவரது மறைவு, நவீன தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சியிலிருந்து பிரிக்க முடியாத ஒரு மனிதரின் பெயரை திரைப்பட உலகம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

சரவணன் இன்று (04) காலை வயது மூப்பு தொடர்பான உடல்நலக்குறைவால்  காலமானார். 

அவரது உடல் சென்னையில் உள்ள ஏவிஎம் கலையரங்கின் மூன்றாவது மாடியில் இன்று பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும். 

இந்த ஸ்டுடியோ – ஒரு நிறுவனமாக – அவரது தலைமையால் வடிவமைக்கப்பட்ட எண்ணற்ற தயாரிப்புகளின் தாயகமாக இருந்து வருகிறது.

1939 ஆம் ஆண்டு பிறந்த சரவணன், தனது தந்தை ஏ.வி. மெய்யப்பனிடமிருந்து ஏ.வி.எம். தயாரிப்பின்  பொறுப்பைப் பெற்று, சினிமா உலகில் விரைவாக அடியெடுத்து வைத்தார். 

தனது சகோதரர் எம். பாலசுப்பிரமணியனுடன் சேர்ந்து, 1950களின் பிற்பகுதியில் கலையரங்கை வழிநடத்தத் தொடங்கினார்.

அந்தக் காலத்தின் மறக்கமுடியாத சில படங்களை மேற்பார்வையிட்டார்.

சரவணனின் பணி பல தசாப்தங்கள், வகைகள் மற்றும் தலைமுறைகளைக் கடந்து பரவியுள்ளது. 

அவரது நீண்ட தொழில் வாழ்க்கையில், சரவணன் பல காலகட்டங்களில் பல மைல்கல் படங்களை தாயரித்துள்ளார்.

அவற்றில் நானும் ஒரு பென் (1963), சம்சாரம் அது மின்சாராம் (1986), மின்சார கனவு (1997), சிவாஜி (2007), வேட்டைக்காரன் (2009), மற்றும் அயன் (2009) சூப்பர்ஹிட் திரைப்படங்களை நாம் பெயரிட்டுக் கொண்டே போகலாம்.

https://athavannews.com/2025/1455129

இளையராஜா அளவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் போன்றோருக்கு காப்புரிமை பிரச்னை வராதது ஏன்?

2 months 3 weeks ago

ட்யூட் சர்ச்சை: இளையராஜா அளவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் போன்றோருக்கு காப்புரிமை பிரச்னை வராதது ஏன்?

ட்யூட் திரைப்படத்தில் ஒரு காட்சி

பட மூலாதாரம்,Mythri Movie Makers

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

'ட்யூட்' திரைப்படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 28) இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'பாடல்களை நீக்குவதற்கு ஒன்பது வாரம் அவகாசம் வேண்டும்' என்று படக்குழு முன்வைத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார். இளையராஜா பாடல்களில் காப்புரிமை சர்ச்சை தொடர்வதன் பின்னணி என்ன?

ஆந்திராவை சேர்ந்த 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 'ட்யூட்' படம் வெளியானது. பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள இந்தப் படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் இரண்டு பாடல்கள் படக் குழுவால் பயன்படுத்தப்பட்டன.

'ட்யூட்' படம் குறித்த சர்ச்சை என்ன?

'ட்யூட்' படத்தில், 'புது நெல்லு புது நாத்து' படத்தில் இடம்பெற்ற 'கருத்த மச்சான்' பாடல், ரஜினி நடித்த 'பணக்காரன்' படத்தில் இடம்பெற்ற 'நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்' ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தனர்.

சோனி நிறுவனத்திற்கு எதிராக இளையராஜா தொடர்ந்த வழக்கின் விசாரணை கடந்த அக்டோபர் 22ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது.

அப்போது, 'தனது பாடல்களைப் பயன்படுத்துவதற்கு ட்யூட் படக்குழு அனுமதி பெறவில்லை' என இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, 'அது தொடர்பாக தனியாக வழக்குத் தொடரலாம்' என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து, 'ட்யூட்' படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களையும் பயன்படுத்த தடை விதித்துப் பாடல்களை நீக்குவதற்கு உத்தரவிடுமாறு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

நவம்பர் 26ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பதிப்புரிமை சட்டத்தை மீறும் வகையில் தனது பாடல்களை படக் குழு பயன்படுத்தியுள்ளதாக, இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது.

ட்யூட் திரைப்படத்தில் ஒரு காட்சி

பட மூலாதாரம்,@Keerthiswaran_

படக்குறிப்பு,இளையராஜாவின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அவரது பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது

'இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு?'

படக் குழு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், "இளையராஜாவின் பாடல்களுக்கான உரிமையை எக்கோ நிறுவனம் பெற்றிருந்தது. எக்கோவிடம் இருந்து சோனி நிறுவனம் வாங்கியது. நாங்கள் சோனி நிறுவனத்திடம் அனுமதியைப் பெற்று பாடல்களைப் பயன்படுத்தினோம்" எனக் கூறினார்.

ஆனால், "பாடல்களின் உரிமை தன்னிடம் உள்ளது. தனது பாடல்களை எக்கோ நிறுவனம் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று இளையராஜா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்போது பேசிய நீதிபதி செந்தில்குமார், "30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாடல்களைத் தற்போதும் மக்கள் ரசித்துக் கேட்கின்றனர். இதனால் இளையராஜா எந்த வகையில் பாதிப்படைகிறார்?" எனக் கேள்வி எழுப்பினார்.

"திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் படம் வெளியான பிறகு அமைதியாக இருந்துவிட்டு தற்போது வழக்கு தொடர்வது ஏன்?" எனவும் கேட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

வெள்ளிக்கிழமையன்று வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.செந்தில்குமார், "இளையராஜாவின் பாடல்களை உருமாற்றி பயன்படுத்தியதற்கு முகாந்திரம் உள்ளது. அவரது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

மேலும், 'ட்யூட்' திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, பாடல்களை நீக்குவதற்கு ஒன்பது வார காலம் அவகாசம் தருமாறு படக்குழு கோரியது. ஆனால் நீதிபதி அனுமதியளிக்க மறுத்துவிட்டார்.

சிக்கலை சந்தித்த 'குட் பேட் அக்லி'

முன்னதாக, அஜித்குமார் நடித்த 'குட் பேட் அக்லி' படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. இந்தப் படத்திலும் தனது 3 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்திவிட்டதாக இளையராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்தப் படத்தில், 'இளமை இதோ...இதோ', 'என் ஜோடி மஞ்சக் குருவி', 'ஒத்த ரூபாயும் தாரேன்' ஆகிய பாடல்களை படக்குழு பயன்படுத்தி இருந்தது. இந்தப் பாடல்களை சோனி நிறுவனத்திடம் இருந்து விலைக்கு வாங்கிப் பயன்படுத்தியதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் படக்குழு தெரிவித்தது.

வழக்கின் தீர்ப்பில், 'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான பாடல்களைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

'குட் பேட் அக்லி' படத்தில் இருந்து பாடல்களை நீக்கியதால் பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தெரிவித்தது.

இளையராஜா

பட மூலாதாரம்,Getty Images

காப்புரிமை பிரச்னை - எஸ்.பி.பி சொன்னது என்ன?

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் ஒன்றை இளையராஜா அனுப்பினார்.

'தன் இசையமைப்பில் உருவான பாடல்களை முன் அனுமதியின்றி மேடைகளில் பாடக்கூடாது' என அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக இளையராஜா தரப்பில் அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால், சமூக வலைதளப் பதிவு ஒன்றில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இதைத் தெரிவித்திருந்தார்.

'முன் அனுமதியில்லாமல் இளையராஜா இசையமைத்த பாடல்களை மேடையில் பாடுவது பதிப்புரிமை சட்டத்தை மீறும் செயல். அதற்காக பெருமளவில் அபராதமும் சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரிடும்' என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

அதோடு, "இளையராஜா தவிர, வேறு இசையமைப்பாளர்களின் இசையிலும் நான் பாடியுள்ளேன். அந்தப் பாடல்களை வரும் கச்சேரிகளில் பாடுவேன்" என்று அவர் கூறியிருந்தார்.

"சட்டம் பற்றிய அறியாமை காரணமாக இளையராஜா இசையமைத்த பாடல்களைப் பாடினேன். இனி சட்டத்தை மதித்து அதை ஏற்கப் போகிறேன். அதேநேரம் இதுதொடர்பாக எவ்வித கருத்துகளையும் விவாதங்களையும் எவரும் மேற்கொள்ள வேண்டாம்" எனவும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, திரைப் பயணத்தில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் இண்டஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து 'எஸ்பிபி 50' என்ற பெயரில் உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் இசைக் கச்சேரியை எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடத்தினார்.

'இந்த நிகழ்ச்சிகளில் தான் இசையமைத்த பாடல்களைப் பாடக்கூடாது' என எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.பி.சரண், பாடகி சித்ரா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கு இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால், அடுத்த ஆண்டு (2018 செப்டம்பர் மாதம்) எஸ்.பி. பாலசுப்ரமணியம் அளித்த பேட்டி ஒன்றில், "என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தாலும் இளையராஜா இசையமைத்த பாடல்களை மேடையில் பாடவுள்ளேன்," எனத் தெரிவித்தார்.

"தனது எந்தப் பாடலுக்கு உரிமை உள்ளது என்பதை இளையராஜா கூற வேண்டும். அப்போது இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்" எனவும் அவர் கூறியிருந்தார்.

கடந்த 2019 ஜூன் மாதம் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து பிரச்னை முடிவுக்கு வந்தது.

இளையராஜா காப்புரிமை சர்ச்சை

பட மூலாதாரம்,Getty Images

சிக்கலை சந்தித்த 'ராத்திரி சிவராத்திரி'

"கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து காப்புரிமை தொடர்பாக வழக்கு தொடுத்து வருகிறோம்" எனக் கூறுகிறார், இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன்.

"முன்னதாக, காப்புரிமை தொடர்பாக எக்கோ மற்றும் இண்ட்ரிகோ (INDRECO) நிறுவனங்களிடமும் பிரச்னை ஏற்பட்டது. அந்த வழக்குகள் எல்லாம் தற்போது மேல்முறையீட்டில் உள்ளன" எனவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

அவரது கூற்றுப்படி, "பல்வேறு இசை நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்தது போலவே திரைப்படங்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தில் தனது பாடலைப் பயன்படுத்தியது தொடர்பாகவும் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்."

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'மைக்கேல் மதன காமராசன்' படத்தில் 'ராத்திரி சிவராத்திரி' என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. இந்தப் பாடலை 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தில் அனுமதியின்றி வனிதா விஜயகுமார் பயன்படுத்தியதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

கடந்த ஜூலை மாதம் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தயாரிப்பில் இந்தப் படம் வெளியானது.

'படத்தில் இருந்து பாடலை நீக்க வேண்டும். இல்லையென்றால் நஷ்ட ஈடு கேட்கப்படும்' என மனுவில் கூறப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'சோனி நிறுவனத்திடம் முறையாக அனுமதி பெற்று பாடலைப் பயன்படுத்தினோம்' என, வனிதா விஜயகுமாரின் வழக்கறிஞர் ஸ்ரீதர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஒரு படத்தில் இருந்து பாடலை மட்டும் எடுப்பது என்பது இசைப் பணி என்ற அடிப்படையில் காப்புரிமை சட்டத்தில் வருவதாகக் கூறும் இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன், "கேசட்டுகளை வெளியிடும் உரிமையை எக்கோவுக்கு இளையராஜா வழங்கியிருந்தார். அவர்கள் அதை வேறு வகையில் பயன்படுத்தியதால் எக்கோ மீது வழக்கு தொடரப்பட்டது" எனக் கூறினார்.

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மஞ்சுமல் பாய்ஸ் திரைப்பட போஸ்டர்

பட மூலாதாரம்,instagram

படக்குறிப்பு,இளையராஜாவின் அனுமதியின்றி பாடலைப் பயன்படுத்தியதாக மஞ்சுமல் பாய்ஸ் படக் குழுவுக்கு இளையராஜாவின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்

'மஞ்சுமல் பாய்ஸ்' படக் குழுவுக்கு நோட்டீஸ்

கடந்த 2024ஆம் ஆண்டு கேரளாவில் வெளியான 'மஞ்சுமல் பாய்ஸ்' படம், தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 2008ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டது.

கேரளாவை சேர்ந்த நண்பர்கள் சிலர், கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்றனர். அப்போது, 'குணா குகை வரை சென்று பார்க்கலாம்' என்ற முயற்சியில் அப்பகுதிக்குச் செல்கின்றனர். அப்போது குகையில் இருந்த குழிக்குள் விழுந்த ஒருவரை எவ்வாறு மீட்டனர் என்பதே கதை.

அதில் 1991ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'குணா' படத்தில் இடம் பெற்றிருந்த 'கண்மணி அன்போடு' பாடலை படக் குழு பயன்படுத்தியிருந்தது.

இளையராஜாவின் அனுமதியின்றி பாடலைப் பயன்படுத்தியதாகக் கூறி மஞ்சுமல் பாய்ஸ் படக் குழுவுக்கு இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

'பதிப்புரிமை சட்டப்படி பாடலை உருவாக்கியவரே அந்தப் பாடலுக்கு முழு உரிமையாளர் என்பதால் முறையாக அனுமதியைப் பெற்று பாடலைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்' என அந்த நோட்டீஸில் கூறப்பட்டது.

"மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்கு நோட்டீஸ் மட்டும் அனுப்பியுள்ளோம். மிஸ்டர் அண்ட் மிஸஸ், குட் பேட் அக்லி, ட்யூட் ஆகிய படங்களில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது" என பிபிசி தமிழிடம் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.

இளையராஜா பாடல் காப்புரிமை சர்ச்சை

பட மூலாதாரம்,Facebook

படக்குறிப்பு,இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன்

காப்புரிமை சர்ச்சை தொடங்கிய பின்னணி

தமிழ் சினிமாவில் 1976ஆம் ஆண்டு தனது இசைப் பயணத்தை இளையராஜா தொடங்கினார். தற்போது வரை இந்திய மொழிகளில் சுமார் 7,000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.

தான் இசையமைத்த பாடல்களை உரிய அனுமதியில்லாமல் அகி, எக்கோ ஆகிய இசை நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதால் அவற்றுக்குத் தடை விதிக்குமாறு 2018ஆம் ஆண்டு இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

வழக்கில், "படத் தயாரிப்பாளரிடம் உரிமம் பெற்ற இசை நிறுவனங்கள் பாடல்களைப் பயன்படுத்த தடை இல்லை" எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்தார். வழக்கின் முடிவில், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து இசை நிறுவனங்கள் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருவதாக, பிபிசி தமிழிடம் இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஏன் வழக்கு தொடர்வதில்லை?

இந்திய இசையமைப்பாளர்களின் பாடல்களுக்கு காப்புரிமை மற்றும் உரிய இழப்பீட்டை பெற்றுத் தரும் வகையில் இந்தியன் பர்ஃபாமிங் ரைட்ஸ் சொசைட்டி (IPRS) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.

அரசின் அங்கீகாரத்துடன் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, சட்டபூர்வமாக இசையைப் பயன்படுத்துவதற்கு பதிப்புரிமை சங்கமாக இசையமைப்பாளர்களுக்கு உதவி வருவதாக அதன் இணையதளத்தில் கூறியுள்ளது.

தாங்கள் உருவாக்கும் இசைக்கு நியாயமான ஊதியத்தை இசையமைப்பாளர்கள் பெறுவதை தாங்கள் உறுதி செய்வதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த அமைப்பில் இருந்து வெளியேறுவதாக இளையராஜா அறிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், "எனது அனைத்துப் பாடல்களின் உரிமையையும் நான் வைத்திருக்கிறேன். ஐபிஆர்எஸ் அமைப்பில் நான் உறுப்பினராக இல்லை என்பதால் எனது பாடல்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பெறும் காப்புரிமைத் தொகை சினி இசைக் கலைஞர்கள் சங்கத்திற்குச் செல்லும்" எனக் கூறியிருந்தார்.

சினிமா விமர்சகர் ஆர்.எஸ்.அந்தணன்

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,இந்தியன் பர்ஃபாமிங் ரைட்ஸ் சொசைட்டியில் இருந்து இளையராஜா வெளியேறியதால், அவர் தனியே வழக்கு தொடுக்கும் சூழல் ஏற்பட்டது என்கிறார் சினிமா விமர்சகர் ஆர்.எஸ்.அந்தணன்

"ஐ.பி.ஆர்.எஸ் அமைப்பில் இருந்து இளையராஜா வெளியேறிய பிறகே காப்புரிமை தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன" என்கிறார், சினிமா விமர்சகரும் மூத்த பத்திரிகையாளருமான ஆர்.எஸ்.அந்தணன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட இசையமைப்பாளர்கள் பலரும் ஐபிஆர்எஸ் அமைப்பில் உள்ளனர். உலகில் எங்கு பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் அதைக் கண்டறிவதற்கான மென்பொருளை இந்த அமைப்பு வைத்துள்ளது" எனக் கூறுகிறார்.

"இசையைப் பயன்படுத்தும் நபர்களிடம் இருந்து அதற்கான ராயல்டி பணத்தைப் பெற்றுக் கொண்டு அதை இசையமைப்பாளர்களுக்கு அந்த அமைப்பு வழங்கி வருகிறது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அமைப்பில் இருந்து இளையராஜா வெளியேறியதால், தனது பாடல்களைப் பயன்படுத்துகிறவர்கள் மீது அவர் தனியே வழக்கு தொடுக்கும் சூழல் ஏற்பட்டதாகவும் கூறுகிறார் ஆர்.எஸ்.அந்தணன்.

"தனது பாடல்களுக்கு காப்புரிமை கோரி இளையராஜா வழக்கு தொடுத்து வருகிறார். ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருக்கு ஐபிஆர்எஸ் அமைப்பே சட்டரீதியாக இழப்பீட்டைப் பெற்றுத் தருகிறது. இதனால் அவர்களின் பெயர்கள் நேரடியாக வெளியில் தெரிவதில்லை" எனவும் ஆர்.எஸ்.அந்தணன் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c20kggpenm8o

'தி சைக்கிளிஸ்ட்' இயக்குனர் மஹ்சன் மக்மல்பஃப் - ஒளிப்பதிவாளர் செழியன்

3 months 1 week ago

தமிழக இயக்குனர்களுக்கு செருப்படி

நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும்  உண்டாவுவதாக.

நான் பிளாக் ஆரம்பித்த போது, என்னுடய தளத்தில் யாருடைய படைப்பினையும் களவாண்டு, பசை செய்து வெளியிட விரும்பவில்லை. அதே போல சினிமா சம்பந்தமான விசயங்களையும் வெளியிட விருப்பமில்லை. ஹிட்டுக்காக, பிட்டு படம் ஓட்டவேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டதில்லை. ஆனால் இந்த நோக்கத்தினை, சற்று தளர்த்தி சினிமா சம்பந்தமான, ஆனந்த விகடனில் பிரசுகமான ஒரு விசயத்தினை எனது பிளாக்கில் வெளியிட முடிவெடுத்தேன். அது.....

'தி சைக்கிளிஸ்ட்' இயக்குனர் மஹ்சன் மக்மல்பஃப் - ஒளிப்பதிவாளர் செழியன்

வாழ்க்கையில் ஒரு முறையாவது சந்தித்துவிட வேண்டும் என்று விரும்புபவர்களின் மனப்பட்டியல் நம் எல்லோரிடமும் இருக்கிறது. அதில் எத்தனை பேரை நம்மால் சந்திக்க முடிகிறது? எனது பட்டியலில் சிலர் கடல் கடந்து தொலைவில் இருக்கிறார்கள். சிலர் காலம் கடந்து நினைவில் இருக்கிறார்கள். சார்லி சாப்ளினையும் தார்க்கோவ்ஸ்கியையும் நேரில் சந்திக்கும் ஆசை இருக்கிறது. இந்த வரிசையில் இயக்குநர் தியோ ஆஞ்சலோபோலஸைச் சந்திக்க வேண்டும் என்கிற ஐந்து வருடக் கனவும் இந்த ஜனவரி மாதத்தின் விபத்தில் முடிந்தது. இந்த ஏமாற்றங்களுக்கு நடுவில், இளையராஜா, ஜெயகாந்தன், லா.ச.ரா., பாலுமகேந்திரா, மகேந்திரன் எனத் தொட ரும் இனிய சந்திப்புகளும் இருக்கின்றன. அந்த வரிசையில் என் மனப் பட்டியலில் இருந்த இன்னொரு மனிதரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பெயர் மஹ்சன் மக்மல்பஃப் (Mohsen Makmaulbuf). 

01.bmp

மக்மல்பஃப், இரானிய சினிமாவின் பிதாமகன்களில் ஒருவர். கலகக்காரர். 1960-களில் இரானில் நடந்த அரசியல் சூழலில் மன்னர் ஷா க்கு எதிராகத் தனது கிராமத்தில் கெரில்லாப் படையைத் தொடங்கியவர். பலால் ஹபாஷி எனப்படும் அந்த இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட இவர், தனது 17-வது வயதில் ஒரு போலீஸைத் தாக்கியதற்காகத் துப்பாக்கியால் சுடப்பட்டு, கைது செய்யப்பட்டார். நான்கு வருட சிறைவாசத்தில் இலக்கியம் மீதான ஆர்வம் ஏற்பட்டு, பிறகு அந்த ஆர்வம் சினிமா மீது திரும்பியது. அந்த வயதில் மக்மல்பஃப் பாட்டி வீட்டில் வளர்ந்தார். சினிமாவை சாத்தான் என்றும் ஹராம் என்றும் நம்பிய இஸ்லாமியக் குடும்பத்தில் வளர்ந்து, 24 வயது வரை சினிமாவே பார்க்காத அவர், இன்று உலகம் போற்றும் திரைப்பட இயக்குநர் ஆனார்.

இரானில் திரைப்படப் பள்ளியைத் தொடங்கினார். இவரது மனைவி மெர்ஷியா, மகள்கள் சமீரா, ஹானா மூவரும் இயக்குநர்கள். மகன் மெய்சம் ஒளிப்பதிவாளர். உலகத் திரைப்பட விழாக்களில் இந்தக் குடும்பம் வாங்கிய சர்வதேச விருதுகளின் எண்ணிக்கை 89. அரசுக்கு எதிராகப் படம் எடுத்ததால், இரானில் இருந்து குடும்பத்தோடு நாடு கடத்தப்பட்ட இவர், தனது அடுத்த படத்தைப் பிரதி எடுக்கும் வேலைகளுக்காக சென்னை வந்திருந்தார். அவரைச் சந்திக்க அந்த மதியப் பொழுதில் நான் பிரசாத் லேப்பில் இருக்கும் திரையரங்கின் வாசலில் காத்துக்கொண்டு இருந்தேன்.

வெள்ளை நிற அம்பாஸடர் கார் வந்து நிற்க... அதில் இருந்து மக்மல்பஃப் இறங்கினார். வெள்ளை நிறக் கதர் ஆடையில் கால்சட்டையும் மேலாடையும் அணிந்திருந்தார். ஒட்டக் கத்தரித்த தலைமுடியுடன் எளிய விவசாயிபோல உறுதியான உடல் அமைப்புடன் இருந்தார். அவருடன் ஒரு பெண்ணும் இறங்கினார்.

அவரைப் பார்த்ததும் வணக்கம் சொல்லி நெருங்கினேன். வணக்கம் சொல்லி புன்னகையுடன் அருகில் வந்தார். அவரிடம் விகடன் பிரசுரமான எனது 'உலக சினிமா’ நூலைக் கொடுத்து, அவரது 'தி சைக்கிளிஸ்ட்’ (The cyclist) படம் குறித்து அதில் எழுதி யிருப்பதைச் சொன்னேன். ஆர்வமாக அதில் இருக்கும் சர்வதேச இயக்குநர்களின் குறிப்புகளையும் படங்களையும் பார்த்துக்கொண்டே வந்த அவர், 'தி சைக்கிளிஸ்ட்’ படம் இருக்கும் பக்கம் வந்ததும் புன்னகை மலர என்னை நிமிர்ந்து பார்த்தார். அருகில் இருக்கும் பெண்ணிடம் அந்தப் பக்கத்தைக் காட்டினார். மேலும், பக்கங்களைத் திருப்ப... அந்த நூலிலேயே அவரது மனைவி மெர்ஷியாவின் 'தி டே ஐ பிகேம் எ உமன்’ (The day i became a woman) படமும் இருந்தது. இருவர் முகங்களிலும் புன்னகை மலர... ''இது மெர்ஷியா'' என்று அருகில் இருந்த பெண்ணை அறிமுகம் செய்துவைத்தார். தெரியாத மொழியில் இருவரின் படங்களும் இருப்பது அவர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கலாம். புத்தகத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே இருந்தார்.

''நான் ஒளிப்பதிவாளராக இருக்கிறேன்!'' என்றதும் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார். மெர்ஷியா மொழி தெரியாத பாவனை முகத்தில் இருக்க... புன்னகையுடன் தலையசைத்தார்.

02.JPG

படத்தின் பிரதி தயாராக இருப்பதாக அழைப்பு வந்தது. வாருங்கள் என்று படம் பார்க்க என்னை யும் அழைத்தார். 'தி மேன் ஹூ கேம் வித் தி ஸ்நோ’ (The man who came with the snow) என்ற அவரது படம் திரையில் ஓடத் தொடங்கியது. அவர் முன் இருக்கையில் இருக்க... நான் பின்னால் இருந்தேன். படத்தில் சப்-டைட்டில் இல்லாததால், ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் திரும்பி என்னிடம் விளக்கம் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரது ஆங்கிலம் தெளிவாக, நிதானமாக இருந்தது. படம் முடிந்து வெளியில் வந்ததும் படத்தின் வண்ணம் குறித்தும் தரம் குறித்தும் என்னிடம் பேசினார். தான் நாடு கடத்தப்பட்டதால் இந்தப் படத்தை கஜகஸ்தானில் எடுத்ததாகவும் பிரதி எடுக்க இந்தியா வந்ததாகவும் சொன்னார். சில நிமிடங்களில் அவர் விடைபெறுவதாகச் சொல்ல... ''திரும்பவும் உங்களைச் சந்திக்க வேண்டுமே'' என்றேன். ''நாளை அறைக்கு வாருங்கள்'' என்றார். ஒரு சர்வதேச இயக்குநர் அவ்வளவு எளிமையாகவும் அன்பாகவும் இருந்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

மறு நாள் காலை 10 மணிக்கு வடபழனி கமலா தியேட்டரை ஒட்டிய சந்தில் இருக்கும் அந்த எளிய விருந்தினர் விடுதியின் கதவைத் தட்டினேன். நண்பர்கள் அருள் எழிலனும் எழுத்தாளர் விஸ்வாமித்திரனும் உடன் இருந்தார்கள். கதவு திறக்க, நேற்று பார்த்த அதே கதர் உடையில் மக்மல்பஃப் இருந்தார். புன்னகையுடன் வரவேற்று அங்கு இருந்த இருக்கைகளில் அமரச் சொன்னார். சில நிமிடங்களில் மெர்ஷியா அதே புன்னகையுடன் உலர்ந்த பழங்களை யும் ஸ்டிக்கர் ஒட்டிய ஆரஞ்சுப் பழங்களை யும் கொண்டுவந்தார். மக்மல்பஃப் மெர்ஷியாவையும் அங்கேயே அமரச் சொன்னார்.

நானும் விஸ்வாமித்திரனும் எழிலும் பேசத் தொடங்க... அங்கிருந்த ஆரஞ்சுப் பழங்களை உரித்து எங்களுக்குத் தந்துகொண்டே... மக்மல்பஃப் தனது வாழ்க்கை மற்றும் சினிமா குறித்து இயல்பாகப் பேசத் தொடங்கினார். உரையாடல் அவரது திரைப்படப் பள்ளி குறித்து திரும்பியது.

''என் மகள் சமீராவுக்கு எட்டு வயது இருக்கும்போது நான் படம் பிடிக்கும் இடத்துக்கு வருவாள். என் கால்களைச் சுற்றிக்கொண்டே திரிவாள். ஒருநாள் பள்ளியில் இருந்து வந்த அவள், 'அப்பா! எனக்கு பள்ளிக்குப் போகவே பிடிக்கவில்லை’ என்றாள். எனக்கும் இரானின் பாடத்திட்டம் மேல் உடன்பாடு இல்லை என்பதால், அன்றே அவளைப் பள்ளியில் இருந்து நிறுத்தி என்னுடன் வைத்துக்கொண்டேன். அவளுக்கு சினிமா பிடித்திருந்ததால் அதனை நான் கற்றுக்கொடுத்தேன்!''

''உங்கள் திரைப்படப் பள்ளியில் அப்படி என்ன கற்றுக்கொடுத்தீர்கள்... அதன் பாடத்திட்டம் என்ன?'' என்று கேட்டேன். ''பாடத்திட்டம் என்று எதுவும் கிடையாது. எனது பள்ளி சமீரா, ஹானா மற்றும் மெர்ஷியாவுக்காக உருவானதுதான். இங்கு இருக்கும் திரைப்படக் கல்லூரிகளில் பாடத்திட்டம் என்று என்ன வைத்திருக்கிறார்கள்? உலகின் சிறந்த படங்களைப் பார்க்கச் சொல்கிறார்கள். உதாரணத்துக்கு, 'சிட்டிசன் கேன்’ என்றால், அந்தப் படத்தைப் போட்டு, அதை எப்படி எடுத்தார்கள், அதன் நுட்பங்கள் என்ன என்று கற்றுத்தருகிறார்கள். அது ஆர்சன் வெல்ஸின் சினிமா. அதன் நுட்பம் என்பது அவர் சார்ந்த கலாசாரம், அரசியல் மேலும் அவர் வளர்ந்த விதத்தைப் பொறுத்து இருக்கிறது. அதை நாம் தெரிந்துகொள்ள லாம். ஆனால், பின்பற்ற வேண்டும்என்பது அவசியம் இல்லையே? இப்போது இருக்கிற கல்லூரிகள் பணம் சம்பாதிப்பதற்காக சினிமாவை ஒரு தொழிலாகக் கற்றுக் கொடுக்கின்றன. அரசுப் பணியாளர்போல ஒரு சினிமாக்காரரை உருவாக்குகின்றன. என் வேலை அதுவல்ல!''

03.JPG

''பிறகு எப்படித்தான் கற்றுக்கொடுப்பீர்கள்?''

''தினமும் 50 கி.மீ. சைக்கிள் ஓட்ட வேண்டும். இரண்டு மணி நேரம் நீச்சல் அடிக்க வேண்டும். இதெல்லாம் எதற்கு என்று நீங்கள் கேட்கலாம். ஒரு சினிமா படைப்பாளிக்கு முதலில் உடல் உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில், எங்கள் நாட்டில் படம் எடுப்பது பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வகையான போர் முறை. நான் 'கந்தகார்’ எடுத்தபோது, நாங்கள் படம் எடுத்த இடத்தில் இருந்து 10 மீட்டர் தொலைவில் குண்டு வெடித்தது. கேமரா, தொழில் நுட்பச் சாதனங்கள் எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு ஓடினோம். அந்த உடல் உறுதி ஒரு திரைப்படப் படைப்பாளிக்கு அவசியம். எந்த நாடாக இருந்தாலும் படம் எடுப்பவர் உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில், உங்கள் பலம்... பலவீனம் இரண்டும் உங்கள் படைப்பில் வெளிப்படும்... இல்லையா'' என்று சிரித்தார்.

''எங்கள் திரைப்படப் பள்ளியில் இலக்கியம் படிக்க வேண்டும். ஒரு கவிஞரின் கவிதையை எடுத்துக்கொண்டு ஒரு வாரம் முழுக்க அவரது கவிதைகளை மட்டுமே படிப்போம். வாசிக்கச் சொல்வோம். அதுபற்றிக் கலந்து பேசுவோம். விவாதிப்போம். பிறகு, படம் பார்ப்போம். ஓவியங் கள் பார்ப்போம். ஒரு வாரம் முழுக்க ஒரே படம். ஒரே இயக்குநரின் படம். திரும்பத் திரும்பப் பார்ப்போம். விவாதிப்போம். இதுதான் எனது பாடத்திட்டம்.

இந்தச் சூழலில் வளர்கிற சமீரா, 17 வயதில் ஒரு படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறாள். ஒருநாள் தொலைக்காட்சி செய்தி பார்க்கிறாள். ஒரு அப்பா தனது மகள்கள் இருவரையும் பல வருடங்கள் வெளி உலகமே தெரியாமல் அடைத்துவைத்திருக்கிறார் என்ற செய்தி அவளைப் பாதிக்கிறது. 'இதைப் படமாக எடுக்கலாமா?’ என்று கேட்கிறாள். 'எடு’ என்கிறேன். அவளே கேமராவை எடுத்துக்கொண்டு அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து, பதினோரு நாளில் 'ஆப்பிள்’ படத்தை எடுக்கிறாள். அப்போது சமீராவுக்கு 19 வயது. இப்படித் தன்னைச் சுற்றி நடக்கிற விஷயங்களைக் கவனிப்பவர்களாக, அதனைத் திரைப்படமாக மாற்ற முடிகிறவர்களாக எனது பயிற்சி அவர்களை உருவாக்குகிறது. இதுதான் நீங்கள் கேட்கிற பாடத்திட்டம்!'' என்று சிரிக்கிறார்.

04.JPG

''உங்கள் படங்கள் அனைத்திலும் தொழில்முறை அல்லாத சாதாரண மனிதர் களையே நடிக்கவைக்கிறீர்கள். அவர்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?''

''என்னிடம் வாய்ப்பு கேட்டு வருபவர் களை அல்லது நான் நடிகர்களாகத் தேர்ந்து எடுக்கிறவர்களைப் பிச்சை எடுக்கத் தெருவுக்கு அனுப்புவேன். யார் அதிகமாகப் பிச்சை எடுத்துவருகிறார்களோ அவர்தான் நடிகர். எந்தக் கூச்சமும் இல்லாமல் மக்களிடம் சென்று தன்னை ஒரு பிச்சைக்காரராக நம்பவைக்க முடிகிறது என்றால், அவர்தானே சிறந்த நடிகர்!''

''நடிகர்களுக்கான ஊதியம் என்று என்ன தருவீர்கள்?'' என்று நான் கேட்டதும், உடனே ''இங்கு புகழ்மிக்க நடிகருக்கு எவ்வளவு ஊதியம் கொடுக்கிறீர்கள்?'' என்று கேட்டார். நான் சொன்னதும் அவர் அதை அமெரிக்க டாலர் மதிப்பில் மாற்றிப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ''ஏன் நடிகருக்கு இவ்வளவு தருகிறீர்கள்?'' அவரது ஆச்சர்யம் அடங்கவில்லை. பிறகு, இயக்குநரில் தொடங்கி ஒவ்வொருவருக்கும் எவ்வளவு ஊதியம் என்று கேட்டார். அவருக்குத் தொடர்ந்த அதிர்ச்சிகள் காத்திருந்தன. ''சரி... உங்கள் படங்களின் பட்ஜெட் என்ன?'' என்று கேட்டார்.  ''அதுவும் சில கோடிகள்... வருடத்துக்கு இதுபோல தமிழில் மட்டும் 150 படங்கள் எடுக்கிறோம்!'' என்று சொன்னதும் கன்னத்தில் கைவைத்துவிட்டார்.

''சரி... உங்கள் படப்பிடிப்புத் தளத்தில் எத்தனை பேர் இருப்பீர்கள்?'' என்று கேட்டார். ''குறைந்தது 100 பேர்!'' என்று சொன்னேன்.  

''100 பேரை வைத்துக்கொண்டு எப்படிப் படம் எடுக்க முடியும்? உதாரணத்துக்கு, வறுமையைப் பற்றிய படம் எடுக்கிறீர்கள் என்றால், ஷாட் முடிந்தததும் 100 பேர் அதே இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பீர்களா? எங்கள் படங்களின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? உங்கள் ரூபாய் மதிப்பில் வெறும் 15 லட்சம். அதற்கு மேல் நாங்கள் எந்தப் படமும் எடுத்தது இல்லை.

எனது படப்பிடிப்பில் நான், டிரைவர், சமையற்காரர், நடிகர் எல்லாம் சேர்த்து படப்பிடிப்புக் குழு மொத்தமே 8 பேர்தான் இருப்போம்!'' என்று சொல்லிச் சிரித்தார். ''இயக்குநரே க்ளாப் அடிக்க வேண்டும். ஒலிப்பதிவு செய்ய வேண்டும். ஒளிப்பதிவாளர் தனக்கான எல்லா வேலைகளையும் தானே செய்துகொள்ள வேண்டும். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குக் கிளம்பும்போது, நாங்களே எல்லாவற்றையும் தூக்கிச்செல்வோம். நாங்கள் அனைவரும் ஒரு காரில்தான் பயணம் செய்வோம். அந்த ஒரு கார்தான் எங்கள் படப்பிடிப்புக் குழு. எங்களது நடிகருக்கு ஊதியம் எவ்வளவு தெரியுமா? பணமாக ஒன்றும் இல்லை. நான் எனது 'சைக்கிளிஸ்ட்’ படத்தில் நடித்தவருக்கு ஒரு சிறிய வீடு கட்டிக்கொடுத்தேன். அதுதான் எங்களால் கொடுக்க முடிந்த ஊதியம்.

05.JPG

நீங்கள் சொல்வதை எல்லாம் பார்த்தால், சினிமா இங்கு மிகவும் கெட்டுப்போன நிலையில் இருக்கிறது. ஒரு தொழிலாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும், நிறையப் பணம் முதலீடு செய்யப்படுகிறது என்றால், அதைவைத்து லாபம் பார்க்கவே எல்லோரும் நினைப்பார்கள். நல்ல படம் எடுக்க யார் நினைப்பார்கள்? செலவைக் குறைக்க வேண்டும்.

என் மகள் ஹானா, 'புத்தா கொலாப்ஸ்டு அவுட் ஆஃப் ஷேம்’ (Buddha Collapsed Out of Shame) என்றொரு படம் எடுத்தாள். இது வீடுகளில் நாம் பயன்படுத்தும் கையளவு டிஜிட்டல் கேமராவினால் எடுக்கப்பட்டது. செலவு உங்கள் பணத்தில் வெறும் 8 லட்ச ரூபாய். திரைப்பட விழாக்களின் மூலம் அது ஈட்டிய பணம் 15 லட்சம். அதுதான் அடுத்த படத்துக்கான மூலதனம்.

இந்தியாவில் கதைக்கா பஞ்சம்? சாலையில்தான் எத்தனை கதைகள்? நேற்று நானும் மெர்ஷியாவும் லேப்பில் இருந்து வரும்போது ஒரு கடையில் நின்றோம். அந்தக் கடையில் நான் ஒரு பழச்சாறு வாங்கிக் குடிக்க முயன்றபோது, என் கால்களை யாரோ சுரண்டினார்கள். திரும்பிப் பார்த்தேன். அழுக்கான ஒரு சிறுவன் நின்றுகொண்டு இருந்தான். அவன் என்னைப் பார்த்து, என் கையில் இருந்த பழச்சாறைக் கேட்டான். நானும் மறுக்காமல் அவனிடம் கொடுத்துவிட்டு, அவன் என்ன செய்கிறான் என்று கவனித்தேன். அது வரைக்கும் அவன் செய்ததில் எதுவும் இல்லை. அதற்கு மேல் அவன் செய்ததுதான் எனக்குத் தீராத ஆச்சர்யமாக இருந்தது.

என்னிடம் இருந்த பழச்சாறுக் குவளையை வாங்கியதும் அவன் உடனே குடிக்கவில்லை. அதை எடுத்துக்கொண்டு நடந்து சென்றான். அவனது உடைகள் அவ்வளவு அழுக்காக இருந்தன. என்றாலும், சாலையைக் கடந்த அவன் அங்கு இருந்த திண்டில் ஒரு செய்தித்தாளை விரித்து உட்கார்ந்தான். அதில் ஒரு ராஜாவைப்போல கால் மேல் கால் போட்டு உட்கார்ந்துகொண்டு, போகும் வரும் வாகனங்களையும் மனிதர்களையும் ஏளனமாகப் பார்த்துக்கொண்டே அந்த பழச்சாறைப் பருகினான். நான் அசந்துவிட்டேன். அந்தச் சிறுவனைப் பின்தொடருங்கள். அங்கு ஒரு கதை நிச்சய மாக இருக்கிறது. அதுதான் சினிமா.

உலகில் எங்கும் இல்லாத அளவுக்குத் தணிக்கை விதிகள் இருந்தபோதும் இரானிய சினிமா ஒளிர்கிறது என்றால், அதன் காரணம் என்ன? அதில் குழந்தைகளும் சிறுவர்களும் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள்தானே நமது உண்மையான ஆன்மா. இதுபோன்ற மனிதர்களைப் படம் எடுங்கள். வருடத்துக்குத் தமிழில் மட்டும் 150 படங்கள் எடுக்கிறீர்கள். இந்தியாவில் மொத்தம் எத்தனை படங்கள் இருக்கும்? 100 கோடிப் பேருக்கும் அதிகமாக இருக்கிற இந்தியாவில், சிறந்த இயக்குநர்கள் எத்தனை பேர்? ஒரு 10 பேரைச் சொல்ல முடியுமா? இந்தியா சினிமாவில் கடக்க வேண்டிய தூரம் வெகு தொலைவில் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்!''

''ஒரு நல்ல சினிமா எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டோம்.


''மக்களைப் பேசுகிற எந்தப் படமும் நல்ல படம்தான். சமீரா எடுத்த 'ஆப்பிள்’ சர்வதேச அளவில் எல்லா விருதுகளையும் குவித்தது. அத்துடன் நிற்காமல் சமீரா அந்தச் சிறுமிகளுக்கு அந்த வீட்டின் மேலேயே ஒரு மாடியைக் கட்டிக்கொடுத் தாள். ஆனால், அந்தக் குழந்தைகளை அவர்களின் தகப்பன் திரும்பவும் பூட்டி வைத்தான். சமீரா அந்தக் குழந்தைகளுக் காகத் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறாள். திரைப்படம் என்பது சில விருதுகளோடு முடிந்துபோகிற ஒன்று அல்ல. அது காலம் காலமாக மக்களின் நினைவுகளிலும் வாழ்க்கையோடும் இணைந்திருக்க வேண்டும். அப்படியான சினிமா இயக்கத்தை தமிழில் நீங்கள் தொடங்குங்கள்'' என்று எங்கள் மூவரையும் பார்த்துச் சொன்னார்.

விருதுகள் பற்றிப் பேச்சு வந்தது. ''விருதுகள் பெறுகிற மகிழ்ச்சி ஒரு நிமிடம்தான். பிறகு, அது மறந்துவிடும். ஆப்கனில் யுத்தம் நடந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தார்கள். அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. ஏனெனில், இரானின் சட்டப்படி அகதிகள் கல்வி கற்க முடியாது. நான் ஏதாவது செய்ய வேண்டுமே என்று அவர்களைப் பற்றி ஓர் ஆவணப்படம் எடுத்து அரசுக்கு அனுப்பினேன். அவர்கள் அதைப் பார்த்ததும் சட்டத்தைத் தளர்த்தி அத்தனை குழந்தை களையும் பள்ளியில் சேர்த்துக்கொண்டார் கள். ஒரு சின்ன டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்ட படத்துக்குக் கிடைத்த மரியாதை இது. சமூகத்தில் சினிமாவின் பங்கு என்ன என்று கேட்டால், இதுதான் என்று நான் சொல்வேன். மற்றபடி இந்த விருதுகளை நான் அதிகம் பொருட்படுத் துவது இல்லை. இப்போது எப்படிப் படம் எடுத்தால் விருதுகள் கிடைக்கும் என்று தெரிந்துவைத்துக்கொண்டு படம் எடுக் கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் அது  சினிமாவே அல்ல. நான் மக்களோடு இருக்கிறேன். அவர்களுக்கான சினிமாவையே நான் உருவாக்க விரும்புகிறேன்!''

வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம். புகைப்படங்கள் எடுத்தோம். இடையிடையே மெர்ஷியா பதப்படுத்தப்பட்ட பழச்சாறைக் கொண்டுவந்து தந்து அதே மாறாத புன்னகையுடன் அமர்ந்திருந்தார். மக்மல்பஃப் சில விஷயங்களை குர்தீஷ் மொழியில் கேட்டபோது மெர்ஷியா சொன்ன பதில்களை எங்களிடம் ஆங்கிலத்தில் பகிர்ந்துகொண்டார். நாங்கள் விடைபெறும் நேரம் வந்தபோது எங்களுக் கான உபசரிப்பு குறித்து போதிய கவனிப் பினைச் செய்ய முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். அவர் நாளையும் இருக்கிற செய்தியைச் சொல்லி, முடிந்தால் நாளையும் சந்திக்கலாம் என்று சொன்னார்.

மறுநாள் இயக்குநர் பாலாஜி சக்திவேலை அழைத்துச் சென்றேன். உடன் விஸ்வாமித்திரனும் இருந்தார். அழைப்பு மணி அடித்ததும் மக்மல்பஃப் அதே வெள்ளை கதர் உடையில் கதவைத் திறந்தார். பாலாஜி சக்திவேல் அவருக்கு சால்வை அணிவித்து வணங்கினார்.

மக்மல்பஃப் நெகிழ்ந்துபோய் அவர் அணிவித்த சால்வையுடன் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தார். தங்கள் உடைமைகளைத் தவறவிட்டதால் இந்த கதர் உடையை இரவுகளில் துவைத்துப்போட்டு மூன்று நாட்களாக ஒரே உடையை அணிந்திருப்பதைப் புன்னகையுடன் சொன்னார்.

''தமிழ்ப் படம் எதுவும் பார்த்திருக்கிறீர்களா?''

''ஒன்றுகூடப்  பார்த்ததில்லை. ஆனால் பார்க்க விரும்புகிறேன். இந்திப் படங்கள் போல உங்கள் படங்களிலும் நடனமும் பாட்டும் இருக்குமா?'' என்று கேட்டுப் புன்னகைத்தார். ''இந்தியப் படங்களில் நான் பார்த்த ஒரே படம் 'பதேர் பாஞ்சாலி’. மனம் சோர்வடையும்போது ரேயின் 'பதேர் பாஞ்சாலி’, ஃபெலினியின் 'லாஸ்ட்ரடா’ இரண்டு படங்களையும் பார்ப்பேன்'' என்று சொன்னார். நேற்று பர்மா பஜார் போகும்போது அவரது படங்கள், மெர்ஷியாவின் படங்கள் உள்ளிட்ட உலகப் படங்களின் குறுந்தகடு கள் குறைந்த விலையில் கிடைப்பது குறித்து ஆச்சர்யமாகச் சொன்னார்.

''என்னைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று என்னிடமே பிரதி இல்லை. ஆனால், உங்கள் ஊரில் கிடைக்கிறது. இரண்டு பிரதிகள் வாங்கினேன்!'' என்று சொல்லி அதில் ஒரு பிரதியை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். நாளை அதிகாலை விமானம் என்பதால் இன்று மாலை படப் பிரதிகளைப் பெற்றுக்கொண்டு கிளம்ப வேண்டும் என்று சொன்னார். வாய்ப்பு இருந்தால் திரும்பவும் விரைவில் இந்தியா வருவதாகவும் தமிழில் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு படம் எடுக்கலாம் என்றும் சொன்னார்.

விடைபெறும் தருணம். எல்லோரும் இணைந்து நிழற்படம் எடுக்க வேண்டும் என்பதால், கேமராவை மேசையில் சாயாமல் வைத்து, அதன் தானியங்கியை இயக்கி ஓடிவந்து அவர்களுடன் நின்று கொண்டேன். ர்ஞ்ஞென்று சத்தம் கேட்க... நாங்கள் அனைவரும் மேசையில் இருக்கும் கேமராவைப் பார்த்து நின்றிருந்த கணம் அற்புதமானது. விடைபெற்று வெளியில் வந்தோம். அந்த எளிமையும் கனிவும் வழிகாட்டுதலும் முழுப் பயணத்துக்குமான ஒரு சுடரைக் கையில் தந்ததுபோல் இருந்தது.

இடுகையிட்டது யாஸிர் அசனப்பா.

இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

4 கருத்துகள்:

  1. blank.gif

    Kumaran3 ஏப்ரல், 2012 அன்று 7:53 AM

    என்னை ஆழமாக சிந்திக்க வைக்க மெய்சிலிர்க்க வைத்துவிட்டது தங்களது பகிர்வு..ஒரு உலகத்தர கலைஞனை பற்றியும் உண்மையான சினிமா மீதான அவரது பார்வையையும் தெரிந்துக்கொள்ள வழிவகுத்தது..தங்களை எத்தனை பாராட்டியும் தகும்.மிக்க நன்றி சகோ.

    பதிலளி

    பதில்கள்

    1. *

      யாஸிர் அசனப்பா.3 ஏப்ரல், 2012 அன்று 3:57 PM

      @குமரன்,

      மறுமொழியிட்டமைக்கு மிக்க நன்றி. நடிகனாக வேண்டும் என்றால் பிச்சை எடுத்துக் கொண்டுவர வேண்டும் என்று ஒரு இயக்குனர், நம் தமிழ் சினிமாவில் வந்தால் எந்த நடிகரின் மகனும், இயக்குனரின் மகனும், தயாரிப்பாளரின் மகனும் சினிமாவிற்கு வந்திருக்க முடியாது.

      அது மாதிரியான ஒரு இயக்குனருக்காக காத்திருக்கும் ஒரு சினிமா ரசிகன்.

    2. பதிலளி

  2. blogger_logo_round_35.png

    aravintraj3 ஏப்ரல், 2012 அன்று 10:28 AM

    இந்த பதிவினை நமது தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். பொறியியல் கல்லுரிகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் போன்றவை எப்படி வணிகமயமாகி விட்டதோ அதைவிட அதிகமாக நமது திரைப்படத்துறை வணிகமயமாகியுள்ளதை இப்பதிவை படித்தபோது தான் புரிகிறது. இவரை போன்றவர்களைத் தான் திரைப்பட கலைஞர்கள் என கூற வேண்டும். நம் கோலிவுட், பாலிவுட் அனைத்தும் கூத்தாடிகள் என்று தான் கூற வேண்டும்.

    பதிலளி

    பதில்கள்

    1. *

      யாஸிர் அசனப்பா.3 ஏப்ரல், 2012 அன்று 3:59 PM

      @ அரவிந்த் ராஜ்,

      மறுமொழியிட்டமைக்கு நன்றி,

      கோடி, கோடியாக பணம் சொரிக்கும் நடிகர்களுக்கு மத்தியில், என் நடிகனுக்கு நான் ஒரு சிறியதாக வீடு கட்டிக் கொடுத்தேன், அது தான் நான் அவனுக்கு கொடுத்த ஊதியம் என்று சொல்லும் இந்த இயக்குனர் எனக்கு வித்தியாசமாக தெரிகின்றார்.

https://civilyasir.blogspot.com/2012/04/blog-post.html

தோட்டா தரணிக்கு செவாலியர் விருது அறிவிப்பு.

3 months 1 week ago

16-11-2025-11-11-17-43-06.jpg

தோட்டா தரணிக்கு செவாலியர் விருது அறிவிப்பு.

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியர்’ விருது உலகின் பல பகுதிகளில் கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விலங்கும் கலைஞர்களை கௌரவப்படுத்தும் விதமாக பிரான்ஸ் அரசாங்கம் கொடுத்து வருகிறது. 1957ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கி வரும் இவ்விருதை தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு 1995ஆம் ஆண்டும் கமல்ஹாசனுக்கு 2016ஆம் ஆண்டும் வழங்கப்பட்டது. 

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்பட கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13ஆம் தேதி சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியெரி மாத்தோ, இந்த விருதை தோட்டா தரணிக்கு வழங்குகிறார். அதே வளாகத்தில் கடந்த சில நாள்களாக தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது. 

இந்திய சினிமாவில் புகழ்பெற்ற கலை இயக்குநராக வலம் வருபவர் தோட்டா தரணி. இந்தியாவை தாண்டி ஹாலிவுட் படங்களிலும் பணியாற்றியுள்ளார். தமிழில் இவர் பணியாற்றிய நாயகன், இந்தியன், தளபதி, சந்திரமுகி, சிவாஜி, தசாவதாரம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களின் கலை அமைப்புகள் தத்ரூபமாகவும் பிரம்மாண்டமாகவும் இடம்பெற்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. நாயகன் மற்றும் இந்தியன் படத்திற்காக தேசிய விருதை இவர் வென்றிருந்தார். மேலும் இவரது பணியை கௌரவித்து 2001 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் இந்திய அரசு கொடுத்தது. 

https://www.nakkheeran.in/cinema/thotta-tharani-to-get-chevalier-award-10648012

அபிநய் திங்கட்கிழமையன்று உயிரிழந்தார்

3 months 1 week ago

அபிநய்: தனுசுடன் ஒரே படத்தில் அறிமுகமானவர் அதன் பிறகு என்ன ஆனார்?

அபினய், நடிகர், துள்ளுவதோ இளமை

பட மூலாதாரம், @abikinger/Instagram

10 நவம்பர் 2025

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் அபிநய், சென்னையில் இன்று காலமானார். கல்லீரல் நோயால் அவதிப்பட்டுவந்த அவர், திங்கட்கிழமையன்று அதிகாலை காலமானார்.

செல்வராகவன் திரைக்கதையில் கஸ்தூரிராஜா இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'துள்ளுவதோ இளமை'.

2002-ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படம்தான் அவருக்கு முதல் படம். அந்தத் திரைப்படம் சில விமர்சனங்களைச் சந்தித்தாலும், மிகவும் கவனிக்கப்பட்ட படமாக அமைந்தது. தனுஷ் உட்பட அதில் நடித்திருந்த பலரும் வெகுவாக கவனிக்கப்பட்டார்கள்.

நாயகி ஷெரினுக்கு அதுதான் முதல் தமிழ் படம். தனுஷைப்போல, அபிநய்-க்கும் அதுதான் முதல் படம். விஷ்ணு என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார் அவர். துள்ளுவதோ இளமை படத்திற்குக் கிடைத்த வெற்றி, செல்வராகவன், தனுஷ், ஷெரின், அபிநய் ஆகியோருக்கு தமிழ்த் திரையுலகின் வாசலைத் திறந்துவிட்டது.

பல மலையாளத் திரைப்படங்களில் நடித்திருந்த டி.பி. ராதாமணியின் மகன்தான் அபிநய். 'துள்ளுவதோ இளமை' இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்றாலும் இவர் நடித்து அடுத்தடுத்து வெளியான 'ஜங்க்ஷன்', 'சிங்காரச் சென்னை', 'பொன்மேகலை' ஆகிய திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை.

இதற்குப் பிறகு 'சொல்லச் சொல்ல இனிக்கும்', 'பாலைவனச் சோலை' போன்ற படங்களில் சிறிய சிறிய பாத்திரங்களில் நடிக்கத் துவங்கினார் அபிநய். 'கையெட்டும் தூரத்', 'சித்ரகூடம்', 'வைரஸ்' போன்ற மலையாளத் திரைப்படங்களிலும் நடித்தார்.

ஆனால், தொடர்ந்து குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இதற்கிடையில் துபையில் சில ஆண்டுகள் பணியாற்றினார். இதற்குப் பின் சில விளம்பரப் படங்களில் நடித்தார் அபிநய். குறிப்பாக, ஒரு தேநீர் விளம்பரத்தில் அவருக்கு நல்ல கவனம் கிடைத்தது.

அபினய், நடிகர், துள்ளுவதோ இளமை

பட மூலாதாரம், @abikinger/Instagram

இதற்கிடையில் பின்னணிக் குரல் கொடுக்கும் கலைஞராக, பையா, துப்பாக்கி, காக்கா முட்டை போன்ற படங்களிலும் பணியாற்றினார். 'துப்பாக்கி'யில் வில்லனாக நடித்த 'வித்யூத் ஜம்வாலுக்கு குரல் கொடுத்திருந்தார்.

அதில் "I dont know who you are, where you are, Once I get to you, I will kill you" வசனமும் அதற்கு விஜய் சொல்லும் பதிலான, 'I'm waiting' என்ற வசனமும் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில், அவரது தாயாருக்கு ஏற்பட்ட புற்றுநோய், அதற்கான சிகிச்சைகள் ஆகியவை தன்னை கடுமையாக பாதித்ததாக பேட்டிகளில் தெரிவித்தார் அபிநய். கோவிட் பரவலுக்கு சில நாட்களுக்கு முன்பாக அவரது தாயார் மறைந்தார்.

அதற்குப் பிறகு தீவிர மன அழுத்தத்திற்கு உள்ளானார் அபிநய். இதற்குப் பிறகு வாய்ப்புகளில் கவனம் செலுத்தாதது போன்ற காரணங்களால் பொருளாதார ரீதியாக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டார் அவர்.

அடுத்த சில ஆண்டுகளில் அவரது கல்லீரல் செயலிழந்தது. இதனால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறிய நிலையில், கல்லீரலுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நடிகர் கேபிஒய் பாலா உள்ளிட்டோர் அவருக்கு நிதி உதவி செய்தனர். ஆனால், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்துவந்த நிலையில், திங்கட்கிழமையன்று அவர் உயிரிழந்தார். இதற்குப் பிறகு அவரது உறவினர்கள் யாரும் வரவில்லையென அவரது வீட்டிற்கு வந்த திரையுலகினர் கூறினர்.

ஆனால், விரைவிலேயே அவரது தந்தை வழி உறவினர் ஒருவரும் தாய் வழி உறவினர் ஒருவரும் வந்திருந்து அவரது இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.

அபிநய் சமீபத்தில் 'கேம் ஆஃப் லோன்ஸ்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியான பிறகு தனக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார் அவர்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg4p7y0dkqo

கௌரி கிஷன் விவகாரம்: ``நடிகர், இயக்குநரின் மௌனமும் வன்முறைதான்" - இயக்குநர் பிரேம் குமார்

3 months 2 weeks ago

தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கௌரி கிஷன். அதன்பிறகு ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ எனத் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கதாநாயகி மற்றும் துணை நடிகையாக நடித்து வருகிறார் கௌரி கிஷன்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘LIK’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது புது கதாநாயகனுடன் ‘OTHERS’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் தியேட்டர்களில் இன்று வெளியாகியிருக்கிறது.

96 நடிகை கெளரி கிஷன்

96 நடிகை கெளரி கிஷன்

இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நவ 6 அன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஹீரோவிடம் "கெளரி கிஷனின் வெயிட் (எடை) என்ன?" என்று கேள்வி கேட்டது தொடர்பாக விவாதம் தொடங்கியது.

அப்போது நடிகை கௌரி கிஷன், ``இந்தப் படத்துக்கும் அந்தக் கேள்விக்கும் என்ன தொடர்பு? என்னோட வெயிட் பற்றி தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பது தப்பு. நான் 20 கிலோ இருப்பேன், 80 கிலோகூட இருப்பேன், அதைப் பற்றி நீங்க எப்படி கேட்கலாம்.

அதுவும் ஹீரோகிட்ட என்னோட வெயிட் என்னனு கேட்குறீங்க. என்னோட வெய்ட் தெரிஞ்சுகிட்டு என்ன செய்யப் போறீங்க?. இது முழுக்க முழுக்க பாடி ஷேமிங்.

ஆண் நடிகர்களைப் பார்த்து பத்திரிகையாளர்கள் யாரும் இப்படி கேள்விகள் கேட்பதில்லை. நடிகைகளிடம் மட்டும் இப்படியான தனிப்பட்ட, உடல் சார்ந்த கேள்விகளை கேட்பது ஏன்?

இதையெல்லாம் இயல்பாக நார்மலைஸ் செய்ய முயற்சிக்கிறார்கள். இந்த அரங்கத்தில் இத்தனை பேர் இருக்கிறீர்கள், யாரும் அவர் கேள்வி கேட்டது தவறு என்று கண்டிக்கவில்லை.

கௌரி கிஷன்

கௌரி கிஷன்

இங்கு என்னைத் தவிர ஒரு பெண்கூட இல்லை. நான் தனியாக நின்று இதுபோன்ற கேள்விகளையும், அவரது வாக்குவாதங்களையும் எதிர்கொள்கிறேன்,” என்று ஆதங்கத்துடன் பேசினார்.

இந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளானது. பலரும் நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவாகப் பேசிவருகின்றனர்.

அதைத் தொடர்ந்து 96, மெய்யழகன் போன்ற படங்களில் இயக்குநர் பிரேம்குமார் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

அவரின் பதிவில், ``நடிகை கௌரி கிஷன் மீது ஏவப்பட்ட வன்மமும் வக்கிரமும் நிறைந்த கேள்விக்கு அவர் கொடுத்த சாட்டையடி பதில் சரியே. ஒரு பெண்ணாக தன்னந்தனியாக தன் தரப்பு நியாயத்தை தைரியமாக நிலைநாட்டியது பாராட்டுக்கு உரியது.

OTHERS திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவரின் வக்கிரமான பேச்சை அங்கிருந்த மற்ற யாரும் தடுக்கவில்லை. மாறாக அதற்கு கௌரி பதில் தரும்போது, கூட்டமாக கூச்சலிட்டு தடுத்தது கோழைத்தனமான இழிசெயல். செயல்தான் நம் தகுதியை நிர்ணயிக்கும்.

அதர்ஸ் பட ஹீரோ ஆதித்யா மாதவன்

அதர்ஸ் பட ஹீரோ ஆதித்யா மாதவன்

இந்தச் செயலை செய்தவர்களை நான் பத்திரிகையாளர்களாகவே கருதமாட்டேன். வக்கிரமாக கேள்வி கேட்கும் நீங்களும் இனி கேள்விக்கு உட்படுத்தப்படுவீர்கள். அதனால் அதற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற ஆணவம் வேண்டாம்.

எல்லோரைப் போல நீங்களும் உங்கள் வருமானத்துக்கு ஒரு தொழில்தான் செய்கிறீர்கள். சினிமாவுக்கு இலவச சேவை ஒன்றும் செய்யவில்லை. அது தேவையும் இல்லை.

இனியாவது ஒரு பெண்ணிடம் என்ன பேச வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை உண்மையான அறம் சார்ந்த பத்திரிக்கையாளர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்.

தங்கள் திரைப்படத்தில் நடித்த ஒரு பெண்ணை சூழ்ந்துகொண்டு அத்தனை பேர் வார்த்தை வன்முறையில் ஈடுபடும்போது, அருகிலேயே செயலற்று அமர்ந்திருந்த இயக்குநர் மற்றும் கதாநாயகனின் மௌனம் அதைவிட பெரிய வன்முறை.

ஒருவேளை எதிர்த்துப் பேசினால் உங்கள் படத்துக்கான ஆதரவு கிடைக்காமல் போய்விடும் என்று நினைத்திருந்தால், அதைவிட ஒரு தவறான முடிவு வேறில்லை. மாறாக உங்கள் கதாநாயகிக்காக நீங்கள் குரல் கொடுத்திருந்தால் உங்கள் மீதும் உங்கள் திரைப்படத்தின் மீதும் மரியாதை கூடியிருக்கும்.

இயக்குநர் பிரேம் குமார்

இயக்குநர் பிரேம் குமார்

இந்த இழிசெயலை அறம் சார்ந்த நடுநிலை பத்திரிகையாளர்கள் கருத்தில்கொண்டு கண்டிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அறிக்கை வெளியிட்ட சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு நன்றி!

இனிவரும் காலங்களில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு, எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அறம் சார்ந்த நடுநிலை பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், Youtubers மட்டும் வரக்கூடிய முறை மற்றும் நிலை வரவேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Gouri Kishan: ``செயல்தான் நம் தகுதியை நிர்ணயிக்கும்" - இயக்குநர் பிரேம் குமார் | Gauri Kishan: ``Action determines our worth'' - Director Prem Kumar

Checked
Mon, 02/23/2026 - 01:26
வண்ணத் திரை Latest Topics
Subscribe to வண்ணத் திரை feed