Aggregator
பிரஜா சக்திக்கு எதிராக யாழில் ஆரம்பிக்கப்படவுள்ள கையெழுத்து போராட்டம் !
பிரஜா சக்திக்கு எதிராக யாழில் ஆரம்பிக்கப்படவுள்ள கையெழுத்து போராட்டம் !
17 Jan, 2026 | 10:56 AM
![]()
பிரஜா சக்தி என்பது ஜே.வி.பி. கட்சியை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதே தவிர அது மக்களுக்கான திட்டம் கிடையாது. பிரஜா சக்திக்கு எதிராக எமது மாநகர வட்டாரத்தில் இருந்து கையெழுத்து வேட்டையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளேன் என தமிழ் தேசிய கட்சியின் அமைப்பாளரும், யாழ். மாநகர சபை உறுப்பினருமான அ.நிசாந்தன் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (16) யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அங்கு மேலும் தெரியவருகையில்,
வறுமை ஒழிப்பு என்ற போர்வையில் பிரஜா சக்தி என்ற ஒரு திட்டத்தினை ஜேவிபி அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அந்தப் பிரஜா சக்தியில் தமது கட்சியின் நேரடி உறுப்பினர்களை அல்லது விசுவாசிகளை ஒவ்வொரு உள்ளுராட்சி மன்ற வட்டாரங்களிலும் நியமித்துள்ளார்கள்.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மாகாண சபை மற்றும் வேறு தேர்தல்களை இலக்காக கொண்டும், கட்சியை வளர்ப்பதை நோக்காகக் கொண்டும் இந்த பிரஜா சக்தி ஆரம்பிக்கப்பட்டது. ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவின் எண்ணக்கருவிலேயே இந்த பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது. ஆகையால் இந்தப் பிரஜா சக்தி திட்டத்தினை நான் வன்மையாக எதிர்க்கின்றேன்.
பிரஜா சக்தி என்பது இந்த அரசையும் தாண்டி ஒருபடி மேலே வந்துள்ளது. அரசாங்கத்தின் பிரதேச செயலகளின் கீழுள்ள கிராம சேவகர்களே இதுவரை அந்த கிராமத்தின் தேவைகளான வீடு, காணி, உணவுத் தேவை, வறுமை, வாழ்வாதாரம் போன்ற விடயங்களை அரசாங்கத்தின் உதவி மூலம் பெற்றுக் கொடுப்பார்கள். ஆனால் அதை மழுங்கடிக்கும் வகையில் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டுள்ளது.
என்.பி.பி என்பதை தாண்டி ஜேவிபியானது இன்று வடக்கு கிழக்கிலே மையம் கொண்டுள்ளது. ஜேவிபி தமது கட்டமைப்பை விரிவுபடுத்துவதன் அடிப்படையிலேயே இந்த பிரஜா சக்தி ஆரம்பிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளின் காலத்தில் சுனாமி ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்ய விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகாவும் இணைந்து ஒரு சுனாமி கட்டமைப்பை உருவாக்க பேச்சுவார்த்தைகளை நடாத்தி புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு தயாரானார்கள்.
இதன்போது இன்று ஆட்சி செய்கின்ற ஜேவிபியினர் அன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தனர். அதாவது, அரசாங்கமானது தடை செய்யப்பட்ட ஒரு அமைப்புடன் எந்த விதமான உடன்படிக்கையையும் மேற்கொள்ள முடியாது. அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய முடியாது என்று வழக்கு மூலம் சுனாமி கட்டமைப்பை தடுத்தார்கள்.
இன்று நான் கேட்கிறேன், பிரதேச செயலர் தலைமையிலான கட்டமைப்பின் கீழ் கிராம சேவகர்கள் இருக்கின்ற நிலையில், அரச கட்டமைப்புக்கு நிகரான இன்னுமொரு கட்டமைப்பான பிரஜா சக்தியை உருவாக்கி அரசாங்க கட்டமைப்பை மீறியிருக்கின்றார்கள்.
பிரஜா சக்தியை வடக்கு-கிழக்கில் நாங்கள் அனுமதிக்க முடியாது. இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் இது தொடர்பாக ஒரு தெளிவான அறிவிப்பை விடுத்து பிரஜா சக்திக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். உண்மையில் அது பாராட்டத்தக்க விடயம்.
பிரஜா சக்திக்கு எதிராக மாநகர சபைக்கு உட்பட்ட எனது வட்டாரத்திலிருந்து கையெழுத்து வேட்டையை ஆரம்பிக்க உள்ளேன். மேலும் இந்த கையெழுத்துப் போராட்டத்தை ஏனைய பிரதேச சபைகளுக்கும் கொண்டு செல்ல உள்ளேன். இதற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.
சுயநிர்ணய உரிமை அதாவது, தமிழர்களை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று நாங்கள் கூறி வருகின்றோம். இதற்காக நாங்கள் 75 வருடங்களாக ஆயுத ரீதியிலும், அகிம்சை ரீதியிலும் போராடி வருகின்றோம். இன்று ஆட்சியில் இருக்கும் ஜேவிபி கட்சியினர் இதனை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
மலையகத் தமிழ் மக்கள் புறக்கணிப்பு : நிவாரணம், மீள் கட்டுமானத்தில் முரண்பாடுகள் – உடனடி தீர்வுகளை முன்வைத்த மக்கள் போராட்ட முன்னணி ஜனாதிபதிக்கு கடிதம்
மலையகத் தமிழ் மக்கள் புறக்கணிப்பு : நிவாரணம், மீள் கட்டுமானத்தில் முரண்பாடுகள் – உடனடி தீர்வுகளை முன்வைத்த மக்கள் போராட்ட முன்னணி ஜனாதிபதிக்கு கடிதம்
மலையகத் தமிழ் மக்கள் புறக்கணிப்பு : நிவாரணம், மீள் கட்டுமானத்தில் முரண்பாடுகள் – உடனடி தீர்வுகளை முன்வைத்த மக்கள் போராட்ட முன்னணி ஜனாதிபதிக்கு கடிதம்
17 Jan, 2026 | 11:21 AM
![]()
டித்வா பேரிடருக்குப் பின்னர் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிவாரணம் மற்றும் மீள் கட்டுமானச் செயற்பாடுகளில் மலையகத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுகின்றனர் என மக்கள் போராட்ட முன்னணி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
2026 ஜனவரி 15 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களுக்கு உரிய நிவாரணங்கள் முறையாக கிடைக்கவில்லை எனவும், அரச இயந்திரத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக அவர்கள் மேலும் ஆபத்தான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுகள் வருமாறு:
பேரிடரில் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் தகவல்கள் மற்றும் தரவுகள் முறையாக பதிவுசெய்யப்படவில்லை.
தோட்டப் பகுதிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் நிவாரணப் பொருட்கள் சீரான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதில்லை.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படை வசதிகள், குறிப்பாக ஆண் – பெண் தேவைகள் உரிய முறையில் கவனிக்கப்படவில்லை.
அரசாங்கத்தின் நிவாரண திட்டங்கள், சுற்றுநிரூபங்கள் மற்றும் வழிகாட்டல்கள் தொடர்பான தகவல்கள் மக்களுக்கு அவர்களின் தாய் மொழியான தமிழில் சரியான நேரத்தில் வழங்கப்படவில்லை.
மலையகத் தோட்டப் பகுதிகளில் கடுமையாக சேதமடைந்த பாதைகள் மற்றும் நிலப்பரப்புகளின் மீள் கட்டுமானம் தொடர்பில் தெளிவான வேலைத்திட்டம் எதுவும் முன்வைக்கப்படவில்லை.
வீடுகள் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்துள்ள நிலையை மதிப்பிடுவதிலும், அரசாங்கம் அறிவித்துள்ள நிவாரணங்களை நடைமுறைப்படுத்துவதிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.
கட்டட ஆய்வுகள் முறையாக மேற்கொள்ளப்படாத நிலையில், பாதுகாப்பற்ற வீடுகளிலேயே மீண்டும் குடியேறுமாறு மக்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
அரச நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு இன்மையால், வாழ்வாதாரம், வீட்டு வசதி, கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை இழக்கும் அபாயம் மலையகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
முன்மொழிவுகள் : இதனுடன், மக்கள் போராட்ட முன்னணி பல முக்கிய யோசனைகளையும் முன்வைத்துள்ளது. அதன்படி,
மலையகத்தின் அனைத்து குடியிருப்பு பகுதிகளும் முழுமையான விஞ்ஞான ரீதியான நில ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் அறிக்கைகள் தமிழ் மொழியிலும் பொதுமக்கள் அணுகக்கூடிய வகையில் வெளியிடப்பட வேண்டும்.
இயற்கைப் பேரிடரால் முழுமையாக பாதிக்கப்பட்டு மீண்டும் குடியேற இயலாத தோட்டப் பகுதிகளில் வாழ்வோருக்கு, அரசாங்கம் அறிவித்துள்ள ரூ.50 இலட்சம் பெறுமதியான வீடு அல்லது காணி பெறுவதற்கான ரூ.50 இலட்சம் நிதி உள்ளிட்ட அனைத்து நிவாரணங்களும் எந்தவொரு பாகுபாடுமின்றி வழங்கப்பட வேண்டும்.
ஆபத்தான லயன் குடியிருப்புகள் மற்றும் தற்காலிக வீடுகளில் வாழ்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு, குடும்பத்துக்கு 20 பேர்ச் காணியுடன் நிலையான குடியிருப்பு வழங்கப்பட வேண்டும்.
தேவையான நிலப்பரப்புகளை அரசாங்கம் சட்டபூர்வமாக கையகப்படுத்தி, உறுதி பத்திரங்களுடன் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும், 1972 ஆம் ஆண்டு காணி சீர்திருத்தச் சட்டத்தின் 3B பிரிவின் அடிப்படையில், தனியாரிடமிருந்து கையகப்படுத்தப்படும் காணிகளில் ஏக்கரில் எட்டில் ஒரு பங்கு (20 பேர்ச்) மலையகத் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2018 ஆம் ஆண்டு மலையக புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்ட ஆய்வின் படி, தோட்டப் பகுதிகளில் ஒரு இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டேர் பயிரிடப்படாத நிலம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு, அனர்த்தங்களை கையாள விசேடமாக மலையக கிராமிய அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் ஒருங்கிணைப்பு சபை ஒன்றை நிறுவ வேண்டும் என்றும், புறக்கணிப்பு தொடர்பில் மக்கள் முறையிடக் கூடிய தனியான குறைகேள் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் மக்கள் போராட்ட முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கோரிக்கைகள் மீது ஜனாதிபதி உடனடி கவனம் செலுத்தி, மலையகத் தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் வயல் காவலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு பலி !
முல்லைத்தீவில் வயல் காவலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு பலி !
முல்லைத்தீவில் வயல் காவலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு பலி !
17 Jan, 2026 | 01:11 PM
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேறாங்கண்டல் பகுதியில் சனிக்கிழமை (17) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், வயல் காவலில் ஈடுபட்டிருந்த 19 வயது இளைஞன் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த 19 வயதுடையவர் ஆவார். வழமை போல விவசாய நிலத்தை பாதுகாக்கும் நோக்கில் வயல் காவலில் ஈடுபட்டிருந்த வேளையில், திடீரென காட்டு யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பல விதமான கஷ்டங்களும், இயற்கை அனர்த்தங்களும் சூழ்ந்த நிலையில் விவசாயத்தை நம்பி வாழும் இப்பகுதி மக்களிடையே, இச்சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை காட்டு யானை அச்சுறுத்தலால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால், நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுத்தர வேண்டுமென பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம்
2048 இலக்கை நோக்கிய இலங்கையின் கல்விப் பயணம்
2048 இலக்கை நோக்கிய இலங்கையின் கல்விப் பயணம்
2048 இலக்கை நோக்கிய இலங்கையின் கல்விப் பயணம்

விக்னேஸ்வரன் கோபிகா,
கல்வியில் சிறப்பு கற்கை
இலங்கையின் கல்வி வரலாற்றில் 1943ஆம் ஆண்டு சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முறைமை ஒரு புரட்சிகரமான மைல்கல்லாகும். எனினும், தசாப்தங்கள் கடந்த நிலையில், தற்போதைய பரீட்சை மையக் கல்வி முறைமை மாணவர்களின் படைப்பாற்றலை முடக்குவதாகவும், உலகளாவிய சவால்களுக்கு அவர்களை தயார்ப்படுத்தத் தவறுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில், 'தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பு 2023-2033' (NEPF) இன் கீழ் 2026ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள், இலங்கையின் கல்வி வரலாற்றில் இரண்டாவது பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகின்றன.
சீர்திருத்தத்தின் பின்னணியும் நோக்கமும் 2048 ஆம் ஆண்டில் இலங்கை ஒரு முழுமையான அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் என்ற தேசிய இலக்கை நோக்கியே இச்சீர்திருத்தங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தரம், சமத்துவம் மற்றும் சிறந்து விளங்குதல் ஆகிய மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்ட இத்திட்டம், வெறும் பாடத்திட்ட மாற்றம் மட்டுமல்லாது, ஒரு சமூக-பொருளாதார மறுசீரமைப்பாகும். 2026 ஜனவரி முதல் தரம் 1 மற்றும் தரம் 6 ஆகிய வகுப்புகளுக்கு முதற்கட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஐந்து பிரதான தூண்கள் புதிய மாற்றங்கள் ஐந்து முக்கிய பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன:
1. கலைத்திட்ட மறுசீரமைப்பு: பாடங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, 21ஆம் நூற்றாண்டின் திறன்களான டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் நிலைபேறான அபிவிருத்தி ஆகியவற்றை உள்ளடக்குதல்.
2. ஆசிரியர் பயிற்சி: புதிய கற்பித்தல் முறைகளுக்காக 10,000 முதன்மைப் பயிற்றுவிப்பாளர்கள் மூலம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல்.
3. உட்கட்டமைப்பு மேம்பாடு: பாடசாலைகளுக்கிடையிலான வள ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, வகுப்பறை மாணவர் எண்ணிக்கையை 35 ஆகக் குறைத்தல்.
4. மதிப்பீட்டு முறைகள்: பரீட்சை மைய முறையிலிருந்து விலகி, 'தொடர்ச்சியான மதிப்பீடு' (Continuous Assessment) மற்றும் GPA முறையை அறிமுகப்படுத்துதல்.
5. சமூக பங்களிப்பு: பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே புதிய முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
பாடசாலை நேர மாற்றமும் சவால்களும் செயற்பாடு சார்ந்த கற்றலுக்காகப் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2.00 மணி வரை நீடிக்க எடுக்கப்பட்ட முடிவு, ஆசிரியர் சங்கங்களின் எதிர்ப்பு மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் காரணமாகப் பல விவாதங்களை ஏற்படுத்தியது. இறுதியில், மாணவர் நலன் கருதி பாடசாலை நேரம் 1.30 மணி வரை எனத் தீர்மானிக்கப்பட்டது. இது மாணவர்களின் சோர்வைக் குறைக்கும் அதேவேளை, மேலதிக செயற்பாடுகளுக்கான நேரத்தையும் உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி மாற்றங்கள் ஆரம்பக் கல்வியில் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக 'செயற்பாட்டுப் புத்தகங்கள்' அறிமுகப்படுத்தப்படவுள்ளன. தரம் 6 முதல் 9 வரையிலான மாணவர்களுக்கு 'கடன்' (Credit) அடிப்படையிலான கற்றல் மற்றும் நிதிசார் கல்வியறிவு, தொழில்முனைவு போன்ற பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுவது ஒரு முக்கிய நகர்வாகும்.
தற்போதைய சாதாரண தரப் பரீட்சை முறையானது மாணவர்கள் ஒன்பது பாடங்களைக் கற்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது. இது மாணவர்களுக்குக் கடும் மன அழுத்தத்தையும், பாடசாலை நேரத்திற்கு அப்பால் மேலதிக வகுப்புக்களை (Tuition) நாடிச் செல்லும் சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.
இதைக் கருத்திற் கொண்டு 2029 இல் முதன்முறையாக நடத்தப்படவுள்ள புதிய சாதாரண தரப் பரீட்சையில் புரட்சிகரமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
1. பாடங்களின் எண்ணிக்கை குறைப்பு
புதிய முறைமையின் கீழ், ஒரு மாணவர் தோற்ற வேண்டிய பாடங்களின் எண்ணிக்கை 9 இலிருந்து 7 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களின் பாடச் சுமையைக் குறைப்பதோடு, அவர்கள் கற்கும் விடயங்களை ஆழமாகவும் செய்முறை ரீதியாகவும் உள்வாங்க வழிவகுக்கும்.
2. பாடக் கட்டமைப்பு (Core & Electives)
மாணவர்களின் அடிப்படை அறிவை உறுதி செய்யவும், அதேவேளை அவர்களின் தனிப்பட்ட ஆர்வத்தை ஊக்குவிக்கவும் பாடங்கள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
• கட்டாயப் பாடங்கள் (Common Core Curriculum - 5):
1. தாய்மொழி (சிங்களம் அல்லது தமிழ்)
2. ஆங்கில மொழி
3. கணிதம்
4. விஞ்ஞானம்
5. சமயமும் விழுமியக் கல்வியும்
• விருப்பப் பாடங்கள் (Elective Subjects - 2): மாணவர்கள் தங்களின் எதிர்கால இலக்குகளுக்கு ஏற்ப பின்வரும் தொகுதிகளில் இருந்து இரண்டு பாடங்களைத் தெரிவு செய்யலாம்:
* சமூக அறிவியல்: வரலாறு, புவியியல்.
* தொழில்நுட்பம்: தகவல் தொழில்நுட்பம் (ICT), விவசாயம், உணவுத் தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம்.
* கலை மற்றும் ஆரோக்கியம்: அழகியல் பாடங்கள் (சங்கீதம், நடனம், சித்திரம்), சுகாதாரம் மற்றும் உடற்கல்வி.
3. மதிப்பீட்டு முறையில் மாற்றம் (GPA அறிமுகம்)
இதுவே இந்தப் புதிய சீர்திருத்தத்தின் மிக முக்கியமான பகுதியாகும். இதுவரை நடைமுறையிலிருந்த ஏ (A), பி (B), சி (C), எஸ் (S), எஃப் (F) என்ற தரப்படுத்தல் முறை நீக்கப்பட்டு, தரப் புள்ளிச் சராசரி (GPA) முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
• தோல்வி (Fail) என்ற நிலை இல்லை: புதிய முறைமையின் கீழ் எந்தவொரு மாணவரும் 'தோல்வியடைந்தார்' எனக் கருதப்பட மாட்டார்கள்.
• தொடர்ச்சியான மதிப்பீடு (70:30 விகிதம்): இறுதிப் பரீட்சைக்கு மாத்திரம் 100% புள்ளிகளை வழங்காமல், 70% புள்ளிகள் இறுதிப் பரீட்சைக்கும், 30% புள்ளிகள் பாடசாலையில் நடத்தப்படும் 'தொடர்ச்சியான மதிப்பீடுகளுக்கும்' (Assignments, Projects, Attendance) வழங்கப்படும்.
• மன அழுத்தக் குறைப்பு: ஒரு மாணவர் ஒரு பாடத்தில் குறைவான புள்ளிகளைப் பெற்றாலும், அது அவருடைய ஒட்டுமொத்த GPA புள்ளிகளைப் பாதிக்காது என்பதோடு, அவர் அடுத்த கட்டத்திற்கு (உயர்தரம் அல்லது தொழிற்கல்வி) செல்வதற்குத் தடையாக இருக்காது.
உயர்தரம் மற்றும் திறனாய்வுத் தேர்வுகள் 2027 முதல் உயர்தரப் பிரிவில் 'இரட்டைப் பாதை' (Dual Pathway) முறை அறிமுகமாகிறது. பல்கலைக்கழகம் செல்ல விரும்புவோருக்கு 'கல்விப் பாதை'யும், விரைவாக வேலைவாய்ப்பைப் பெற விரும்புவோருக்கு 'திறன் பாதை'யும் (NVQ சான்றிதழுடன்) வழங்கப்படும். மேலும், தரம் 9 இல் அறிமுகப்படுத்தப்படவுள்ள 'உளவியல் தேர்வு' (Psychometric Test), மாணவர்கள் தங்களின் இயல்பான திறமைகளைக் கண்டறிந்து சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க உதவும்.
தொழில்நுட்பம் மற்றும் ஒழுக்க விழுமியங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கோடிங் (Coding) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், மாணவர்களின் ஆளுமையைச் செதுக்க 'ABCDE' (Attendance, Belongingness, Cleanliness, Discipline, English) என்ற புதிய கட்டமைப்பு முன்மொழியப்பட்டுள்ளது. இது கல்வியுடன் ஒழுக்கத்தையும் இணைக்கும் ஒரு முயற்சியாகும்.
வரப்பிரசாதமா அல்லது சுமையா? இப்புதிய சீர்திருத்தம் பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும், சில சவால்களையும் கொண்டுள்ளது:
• வரப்பிரசாதங்கள்: பரீட்சை பயம் குறைதல், தொழில்சார் திறன்கள் மேம்படுதல், பாடச் சுமை குறைதல் மற்றும் நெகிழ்வான கற்றல் சூழல்.
• சுமைகள்: கிராமப்புற பாடசாலைகளில் நிலவும் உட்கட்டமைப்பு மற்றும் இணைய வசதி குறைபாடுகள், ஆசிரியர்களுக்கான போதிய பயிற்சி கால அவகாசம் இல்லாமை மற்றும் தொகுதி நூல்களில் (Modules) காணப்படும் தொழில்நுட்பத் தவறுகள்.
2026 புதிய கல்விச் சீர்திருத்தம் என்பது ஒரு மாற்றத்தின் ஆரம்பமே. இது வெற்றியடைய வேண்டுமாயின், வளங்கள் சமமாகப் பகிரப்பட வேண்டும் மற்றும் ஆசிரியர்கள் இத்திட்டத்தின் உண்மையான பங்காளிகளாக மாற்றப்பட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு, மாணவர்களின் எதிர்காலத்தை மட்டும் கருத்திற்கொண்டு இதை நடைமுறைப்படுத்தினால், இது இலங்கையின் எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு மாபெரும் 'வரப்பிரசாதமாக' அமையும் என்பதில் ஐயமில்லை.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/2048-இலக்கை-நோக்கிய-இலங்கையின்-கல்விப்-பயணம்/91-371129
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை!
பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை!
பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை!
adminJanuary 16, 2026

இங்கிலாந்தின் லிவர்பூல் (Liverpool) நகரில், பிரிந்து வாழ்ந்த தனது மனைவியை மக்கள் நடமாட்டம் உள்ள கடையொன்றில் வைத்து இரக்கமற்ற முறையில் குத்திக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
47 வயதான நிமலராஜா மதியபரணம் என்பவரே இந்த அதிர்ச்சிகரமான குற்றத்தைச் செய்தவர். செஃப்டன் (Sefton) பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்த தனது மனைவி நிலானி நிமலராஜாவை (44), கடந்த ஜூன் 20 அன்று மதியபரணம் கத்தியால் தாக்கிப் படுகொலை செய்தார். நிலானி தனது மகள்களுடன் அந்தக் கடைக்கு மேல் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தார்.

“அம்மாதான் எனக்கு எல்லாமே. இந்தச் சம்பவத்தால் நான் என் அம்மா, அப்பா, வீடு என அனைத்தையும் இழந்துவிட்டேன். தந்தையர் குடும்பத்தைப் பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும், அதை அழிப்பவர்களாக இருக்கக் கூடாது. என் தந்தை எனக்குத் துரோகம் இழைத்துவிட்டார்.”
பாதிக்கப்பட்ட நிலானி, ஒரு கனிவான மற்றும் ஒழுக்கமான பெண்ணாக வாழ்ந்தவர் என்பதை நீதிபதி தனது தீர்ப்பில் பதிவு செய்தார்.
🚨 புதிய உலக ஒழுங்கிற்குத் தயாராகும் கனடா!
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / [பத்து பகுதிகள்]
கருத்து படங்கள்
கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்.
ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள்-பயணிகள் அவதி.
ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள்-பயணிகள் அவதி.

ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள்-பயணிகள் அவதி.
நேற்றைய தினம் ஐனாதிபதியின் யாழ்ப்பாணம் நிகழ்சிக்காக பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் பயன்படுத்தப்பட்டமையால் பயணிகள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர்.
பருத்திதுறையிலிருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து சேவகளும் காலை 10:00 மணியுடன் நிறுத்தப்பட்டிருந்தன.
இலங்கை போக்குவரத்து சபையின் பருத்திதுறை சாலை முகாமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதுபோது ஜனாதிபதியின் யாழ்ப்பாண நிகழ்சிக்காக தமது சாலை பேருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக்கவும் இதனால் காலை 10:00 மணியுடன் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டாதாக தெரிவித்தார்.
இதனால் பயணிகள் தமது பயணங்களை மேற்கொள்ள முடியாது பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர்.
இதேவேளை பருத்தித்துறையிலிருந்து வடமராட்சி கிழக்கு கோவில் வரை பிற்பகல் 6:15 மணிக்கு ஈடுபடும் சேவை சில மாதங்களாக பிற்பகல் 6:45 மணிக்கு பின்னரே இடம்பெறுகிறது. இதனால் வடமராட்சி கிழக்கு மக்கள் பிற்பகல் 12:30 மணிக்கு பின்னர் இரவு 6:45 மணிவரை காத்திருக்கின்றனர்.
தை பொங்கல் தினமும் பருத்தி துறை சாலை தனது சேவையையும் முழுமையாக நிறுத்திஇருந்தது.
குறித்த விடயங்கள் தொடர்பாக ஒருங்கிணைப்பு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் ஒருங்கிணைப்பு கூட்டங்களில் பல தடவைகள் சுட்டிக்காட்டியும் அவரால் எந்தவித நடப்படிக்கையும் எடுக்கப்பப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – யாழில். ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல் !
தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – யாழில். ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல் !

தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – யாழில். ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல் !
தையிட்டி விகாரைக்கு என அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை , காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்க வேண்டும் என நாக விகாரை மற்றும் நாக தீப விகாரை விகாரதிபதிகள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றைய தினம் நாக தீப மற்றும் நாக விகாரை ஆகியவற்றுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன் , விகாரதிபதிகளிடம் ஆசி பெற்று , கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இதன்போது, தையிட்டி விகாரை , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்திய நிர்மாணிக்கப்பட்டது.
அவ்விகாரையை சூழ பெருமளவான தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தபட்டுள்ளன.
அவற்றினை காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்க வேண்டும். என விகாரதிபதிகள் இருவரும் தனித்தனியே ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளை. யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி காணி விடுவிப்பு , தையிட்டி விகாரை விவகாரம் , பாதை விடுவிப்புக்கள் , தொடர்பில் முக்கிய அறிவிப்புக்களை வெளியிடுவார் என பலத்த எதிர்பார்ப்புக்கள் இருந்த போதிலும் , அவை தொடர்பில் ஜனாதிபதி எவ்வித கருத்துக்களையும் கூறாது சென்றமை காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது.