Aggregator
வன்னியில் விசேட தேவையுள்ள மாணவர்களுடைய குறைபாடுகள் தீர்க்கப்படவேண்டும் - ரவிகரன்
வன்னியில் விசேட தேவையுள்ள மாணவர்களுடைய குறைபாடுகள் தீர்க்கப்படவேண்டும் - ரவிகரன்
விசேட கல்வியில் காணப்படும் குறைபாடுகள் தீர்க்கப்படவேண்டும் - ரவிகரன்
21 AUG, 2025 | 02:40 PM
வன்னி பிராந்தியத்தில் விசேட கல்விப் பரப்பில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது விசேட கல்விப்பரப்பில் பல்வேறு குறைபாடுகள், பற்றாக்குறைகள் காணப்படுகின்ற நிலையிலும் முல்லைத்தீவு வள்ளிபுனம் இனியவாழ்வு இல்லத்தில் கல்வி கற்ற மாணவன் ஜெயபாலன் பூந்தமிழ் உயர்தரத்தில் கலைப்பிரிவில் தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தோற்றியுள்ளதை சுட்டிக்காட்டிய ரவிகரன், இவ்வாறு ஏனைய விசேட தேவையுள்ள மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆறாவது குழுக் கூட்டம் பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று புதன்கிழமை (20) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நான் வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன். அந்த வகையில் விசேட கல்வி தேவையுடைய மாணவர்கள் எமது வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களிலும் உள்ளனர்.
குறிப்பாக முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 53 விசேட கல்வி தேவையுடைய மாணவர்கள் காணப்படுகின்றனர். அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் வலயம் மற்றும் வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் அதிகளவான விசேட கல்வித் தேவையுள்ள மாணவர்கள் காணப்படுகின்றனர்.
யுத்த காலப் பகுதியிலிருந்து முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள விசேட கல்வித்தேவையுடைய மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுவருவதாகவே உணர்கின்றோம்.
தற்போதும் விசேட கல்வி மாணவர்களுக்கான தேவைப்பாடுகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை.
குறிப்பாக முல்லைத்தீவு கல்வி வலயத்தில் விசேட கல்வி போதிப்பதற்கு 27 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். எனினும் 13 விசேட கல்வி ஆசிரியர்களை கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேநிலை தான் வன்னியின் ஏனைய பாகங்களிலுள்ள கல்வி வலயங்களிலும் காணப்படுகின்றது. இலங்கை பூராகவும் இக்குறைபாடுகள் இருப்பதையும் அறியக்கூடியதாக உள்ளது. எனவே இத்தகைய குறைபாடுகள் தீர்க்கப்படவேண்டும்.
அந்த வகையில் விசேட கல்வி ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்கப்படவேண்டும். விசேட கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். விசேட கல்விக்கான பௌதீக வளங்களும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவேண்டும். விசேட கல்விக்கான வகுப்பறைகள் உறுதிசெய்யப்படவேண்டும்.
விசேட கல்விக்கு அனைத்து மாவட்டங்களுக்கும் சமத்துவ அடிப்படையிலான வளப்பங்கீடும், சமத்துவ அடிப்படையிலான வசதிவாய்ப்புக்களும் ஏற்படுத்தப்படவேண்டும்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள இனிய வாழ்வு இல்லத்தில் கல்வி கற்ற விசேட தேவையுடைய மாணவனான ஜெபாலன் பூந்தமிழ் என்ற மாணவன் உயர்தரத்தில் கலைப்பிரிவில் தோற்றி பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ளார்.
கல்வி கற்பதற்கு பல்வேறு பற்றாக்குறைகள் காணப்பட்டபோதும், வசதிவாய்ப்புக்கள் முறையாக ஏற்படுத்திக் கொடுக்கப்படாத நிலையிலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்படும் அளவிலே அந்த மாணவன் சிறப்பாகச் செயற்பட்டுள்ளார். ஆசிரியர்களும் மிகச் சிறப்பான முறையில் கற்பித்தால் செயற்பாட்டினை முன்னெடுத்ததாலேயே இந்த விடயம் சாத்தியமாகியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் அந்த ஆசிரியர்களுக்கு எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இவ்வாறு ஏனைய விசேட தேவையுடைய மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படவேண்டும். எனவே விசேட கல்விக்கான வசதி வாய்ப்புக்களையும், முறையான வளப்பங்கீடுகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
நாட்டில் பதிவாகும் மரணங்களில் 80 வீதமானவற்றுக்கு தொற்றா நோய்களே காரணம் - இலங்கை மருத்துவ சங்கம்
நாட்டில் பதிவாகும் மரணங்களில் 80 வீதமானவற்றுக்கு தொற்றா நோய்களே காரணம் - இலங்கை மருத்துவ சங்கம்
21 AUG, 2025 | 12:40 PM
(எம்.மனோசித்ரா)
நாட்டில் பதிவாகும் மரணங்களில் 80 சதவீதமானவை தொற்றா நோய்களாலேயே இடம்பெறுபவையாகும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு நாட்டில் மூத்த பிரஜைகள் வருடத்துக்கு 25 – 30 கிலோ சீனி அடங்கிய உணவுகளை உட்கொள்வதாகவும் மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் கொண்டவர்களின் முதல் ஆரம்பத்தை அவதானிக்கும்போது அவர்கள் எடை குறைந்தவர்களாக உள்ளனர். பெரும்பாலானவர்கள் வசதி குறைந்தவர்களாக உள்ளனர்.
இலங்கை மத்திய பொருளாதாரம் கொண்ட நாடாகும். இந்த நாட்டில் தான் இவ்வாறான நிலைமை காணப்படுகிறது. வறுமை நிலையிலுள்ள நாட்டு மக்கள் எவ்வாறான உணவுகளை உட்கொள்கின்றனர்? அவர்கள் அதிகளவு சீனி மற்றும் உப்பு கொண்ட உணவுகளையே உட்கொள்கின்றனர்.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் குறிப்பாக மேல் மாகாணத்தில் ஐவரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் காணப்படுகிறது.
நாட்டில் பதிவாகும் மரணங்களில் 80 சதவீதமானவற்றுக்கு தொற்றா நோய்கள் மற்றும் அதனையொட்டிய நோய்களே பிரதான காரணியாக உள்ளன. இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, பக்கவாதம் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு பிரதான மூலக் காரணி சீனியாகும். குறிப்பாக மது பாவனை பழக்கமுடையவர்களே இதில் பெரும்பாலானவர்களாக உள்ளனர்.
எவ்வாறிருப்பினும் தற்போது சிறிதளவும் மதுப் பழக்கம் அற்றவர்களிலும் இவ்வாறான நோய் நிலைமைகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதிகளவு சீனி எடுத்துக்கொள்வது இதயத்தில் கொழுப்பு படிவதற்கு காரணமாக அமைகிறது.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் மூத்த பிரஜைகள் வருடத்துக்கு 25 – 30 கிலோ சீனியை எடுத்துக்கொள்கின்றனர். உலகில் அதிகளவில் சீனி பயன்படுத்தும் நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குகிறது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என மருத்துவ சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
உயிர்கள் வாழ இன்னொரு இடம்? - பூமிக்கு அருகே வாயு கோளத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்
பட மூலாதாரம், NASA, ESA, CSA, STSCI, R. HURT (CALTECH/IPAC)
படக்குறிப்பு, ஆல்ஃபா சென்டாரி ஏ-வைச் சுற்றி வரும் ஒரு வாயு கோளின் மாதிரி படம். வலது மற்றும் இடது புறம் உள்ள இரு பிரகாசமான நட்சத்திரங்களின் மத்தியில் புள்ளியாக உள்ள சிறிய ஒளி தான் நமது சூரியன்
கட்டுரை தகவல்
ஜார்ஜினா ரன்னார்ட்
அறிவியல் செய்தியாளர்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
நமது சூரிய மண்டலத்திற்கு அருகிலுள்ள நட்சத்திர அமைப்பில் ஒரு பிரம்மாண்ட வாயு கோள் இருப்பதற்கான வலுவான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நான்கரை ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த உயிரற்ற கோள், வானியல் அடிப்படையில் பூமிக்கு நெருக்கத்தில் உள்ள அண்டை கோளாக இருக்கும் என்பதுடன் உயிரைத் தாங்கக்கூடிய நிலவுகளைக் கொண்டிருக்கலாம்.
இந்த அறிகுறிகள், ஆல்ஃபா சென்டாரி நட்சத்திர அமைப்பில், சக்திவாய்ந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டன.
இந்த சாத்தியமான கோள் கடந்த ஆண்டு (2024 ஆகஸ்ட்) கண்டறியப்பட்டது, ஆனால் அதன் பின்னர் பார்வையிட்டபோது அது மறைந்துவிட்டது. இந்தக் கோள் நிச்சயமாக இருப்பதை உறுதிபடுத்த வானியலாளர்கள் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
சூரிய குடும்பத்தைச் சேராத இந்தக் கோளின் நட்சத்திரத்திற்கும் நமது சூரியனுக்கும் ஒற்றுமைகள் இருப்பதால், இந்த கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.
"நான்கு ஆண்டுகள் என்பது நீண்ட தூரம், ஆனால் பால்வெளி அளவில் இது மிக அருகில் உள்ளது - இது நமது அண்டைப் பகுதியில் உள்ளது," என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் விண்வெளி கருவிகள் இணைப் பேராசிரியர் டாக்டர் கார்லி ஹோவெட் கூறினார்.
பட மூலாதாரம், GETTY IMAGES
படக்குறிப்பு, வியாழனின் நிலவான யூரோப்பாவின் சித்தரிப்புப்படம், இதன் கடல் பகுதியில் உயிரின் அறிகுறிகள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்
மேலும் அவர், "இது சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி உள்ளது, அதே வெப்பநிலையும் பிரகாசமும் கொண்டது. வாழக்கூடிய உலகங்களைப் பற்றி நாம் சிந்திக்க விரும்பினால் இது மிகவும் முக்கியமானது," என்று தெரிவித்தார்.
இந்தக் கோள், நமது சூரிய மண்டலத்தின் வாயு கோள்களான சனி மற்றும் வியாழனைப் போன்று இருக்கும், மேலும் அடர்த்தியான வாயு மேகத்தால் சூழப்பட்டிருக்கும்.
அதாவது, இந்தக் கோளில் உயிர்கள் இருக்க முடியாது. ஆனால் அதைச் சுற்றி வரும் நிலவுகள் உயிர்கள் வாழக்கூடியவையாக இருக்கலாம்.
நமது சூரிய மண்டலத்தில் உள்ள வியாழன் மற்றும் பிற கோள்களில் பனியால் ஆன நிலவுகள் உள்ளன, அவை உயிரைத் தாங்கக்கூடியவை என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்த சாத்தியத்தை தற்போது யூரோப்பா கிளிப்பர் மற்றும் ஜூஸ் என்கிற விண்வெளி ஆய்வு திட்டங்களின் மூலம் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த கோள்கள் நமது சூரியனிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. ஆனால், இந்த "புதிய" கோள் ஒப்பீட்டளவில் அதன் நட்சத்திரத்திற்கு அருகில் உள்ளது.
பட மூலாதாரம், GETTY IMAGES
படக்குறிப்பு, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (கோப்புப்படம்)
தொலைதூரப் பொருட்களை புகைப்படம் எடுப்பதற்கு தற்போது விஞ்ஞானிகள் வசம் இருக்கும் கருவியான ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் நேரடி படமாக்கல் மூலம் இந்த அறிகுறிகள் கண்டறியப்பட்டன.
"இந்த நட்சத்திரங்கள் மிகவும் பிரகாசமாகவும், அருகிலும் வானத்தில் வேகமாக நகரக்கூடியவையாகவும் இருப்பதால், உலகின் மிக சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தினாலும் இந்த அவதானிப்புகளை மேற்கொள்வது மிகவும் சவாலானது," என்று நாசாவின் ஜெட் ப்ரொபல்ஷன் ஆய்வகத்தைச் சேர்ந்தவரும் இந்த புதிய கண்டுபிடிப்புகளின் இணை ஆசிரியருமான சார்லஸ் பைச்மேன் கூறினார்.
இந்த நட்சத்திரங்கள் பெருமளவு பிரகாசமான ஒளியை உருவாக்குகின்றன, இது அருகிலுள்ள பொருட்களை மறைக்கக்கூடும்.
அதனால் தான் இந்தக் கோள் 2024 ஆகஸ்டில் ஒரு முறை கண்டறியப்பட்ட பிறகு மீண்டும் தேடியபோது மறைந்துவிட்டதாகத் தோன்றியிருக்கலாம்.
"ஒருவேளை அந்த கோள் நட்சத்திரத்தின் பின்னால் இருந்திருக்கலாம் அல்லது பார்க்க முடியாத அளவுக்கு அருகில் இருந்திருக்கலாம். இதற்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை," என்று டாக்டர் ஹோவெட் கூறினார்.
வானியலாளர்கள் இப்போது இந்தக் கோளை பற்றிய புதிய அறிகுறிகளைத் தேடுவார்கள். இதற்கு, 2027இல் செயல்பாட்டிற்கு வரவிருக்கும் புதிய நாசா தொலைநோக்கியான கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கியை பயன்படுத்த முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் எதிர்கால ஆய்வுகள், ஸ்பெக்ட்ரல் இமேஜிங் என்கிற முறை மூலம் இந்த கோள் எதனால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி நமக்கு தெரிவிக்க முடியும்.
இது, கோளின் தோற்றம் மற்றும் அதைச் சுற்றி வரும் நிலவுகளின் வாழக்கூடிய தன்மை பற்றி மிகவும் விரிவான தகவல்களை வழங்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
உயிர்கள் வாழ இன்னொரு இடம்? - பூமிக்கு அருகே வாயு கோளத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்
அமெரிக்காவின் பிரபல நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ காலமானார்
அமெரிக்காவின் பிரபல நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ காலமானார்
21 AUG, 2025 | 10:57 AM
அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ (Frank Caprio) நேற்று புதன்கிழமை (20) காலமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ தனது 88 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
இவர் நீண்ட நாட்களாக கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் காலமாகியுள்ளார்.
நீதிமன்றத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ, தனது நற்குணங்களால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்த்தால்: தனிநபர்களின் தோல்வியும், சமூகங்களின் வெற்றியும்!
தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..?
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா!
மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான திட்டத்தை முறைப்படுத்த ஜனாதிபதி நிதியத்தின் ஆதரவு
மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான திட்டத்தை முறைப்படுத்த ஜனாதிபதி நிதியத்தின் ஆதரவு
Published By: VISHNU
21 AUG, 2025 | 08:08 PM
மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான முறையான வழிமுறையை தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலக அதிகாரிகளுக்கு இடையே வியாழக்கிழமை (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்துதல் மற்றும் முறையாக வழங்குதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்துடன் இணைந்து திட்டங்களை செயல்படுத்துதல் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவிகளை அதிகரிப்பது, அவர்களை வலுவூட்டுவதற்குத் தேவையான உபகரணங்களை வழங்குதல், அந்தக் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளின் கல்வியைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க உதவி வழங்குதல், மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு கல்விக்கான உதவிகளை வழங்குதல் போன்றவற்றை ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கவும் தற்பொழுது வழங்கப்படும் சேவைகளை மேலும் செயற்திறனுடன் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் ஜயமாலி.சி. விக்ரமாரச்சி மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.