Aggregator
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நானுஓயாவில் பாடசாலை மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிறை: 'அதிகார வர்க்கத்தின் மதம் மீதான அணுகுமுறை' - ஊடக விமர்சனம்
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
சமையல் எரிவாயுக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்குமாறு வலியுறுத்து - நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு
சமையல் எரிவாயுக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்குமாறு வலியுறுத்து - நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு
சமையல் எரிவாயுக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்குமாறு வலியுறுத்து - நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு
08 Feb, 2026 | 11:02 AM
![]()
(இராஜதுரை ஹஷான்)
லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இதற்கமைய 12.5 கிலோகிராம் லாப் சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரும்பியதை போன்று தீர்வை வரியை அதிகரிப்பதை போன்று லாப் நிறுவனம் விலைகளை அதிகரித்துக் கொள்கிறது.
நுகர்வோர் அதிகார சபை உறக்கத்தில் உள்ளதா என்று கேள்வியெழுப்பிய நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே கேள்வியெழுப்பி, சமையல் எரிவாயு சிலிண்டருக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
லாப் நிறுவனம் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய 12.5 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விற்பனை விலை 4330ரூபாவாகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1742 ரூபாவாகவும் காணப்படுகிறது.
இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் பொது மக்கள் கடும் விசனம் வெளிப்படுத்தியுள்ளனர். நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பிள் தலைவர் ரஞ்சித் விதானகே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தான் விரும்பிய வகையில் ஏனைய நாடுகளுக்கு தீர்வை வரியை அதிகரிப்பதை போன்று லாப் நிறுவனம் தனது விருப்பத்துக்கு அமைய சிலிண்டரின் விலையை அதிகரித்துக் கொள்கிறது.
எரிவாயு உட்பட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை வர்த்தகர்களும், விற்பனையாளர்களும் தீர்மானித்துக் கொள்கிறார்கள். அவர்களே விலைகளை அதிகரித்துக்கொள்கிறார்கள்.நுகர்வோர் அதிகார சபை உறக்கத்தில் உள்ளதா என்று கேட்கிறோம். ஆகவே நுகர்வோருக்கு சாதகமான வகையில் எரிவாயு சிலிண்டருக்கு கட்டுப்பாட்டு விலையை தீர்மானிக்க வேண்டும் என்றார்.
இதற்கமை லிட்ரோ நிறுவனம் கடந்த மூன்று மாதகாலமாக விலைகளை திருத்தம் செய்யவில்லை. 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 3690 ரூபாவுக்கும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1482 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை உயர்வடைந்துள்ள நிலையில் தேசிய மட்டத்தில் விற்பனை விலையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.இருப்பினும் நாட்டின் மற்றும் நிறுவன கட்டமைப்பின் நிதி நிலைமை காரணிகள் ஊடாக சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யப்பட்டு, கடந்த மூன்று மாதகாலமாக விலையில் மாற்றம் ஏற்படுத்தவில்லை என்று லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பொய்யுரை - சுப.சோமசுந்தரம்
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு
ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு
Feb 8, 2026 - 12:27 PM
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக, ஓராண்டு காலத்திற்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 59 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதியத்திற்கு 5,277 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. கடந்த 2024 ஆம் ஆண்டில் 3,313 விண்ணப்பங்களும், 2023 ஆம் ஆண்டில் 3,456 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன. இதன்படி, 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் 1,964 மேலதிக விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. விண்ணப்பதாரர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு ஏற்கனவே மருத்துவ உதவிகள் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டில், வடக்கு மாகாணத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் 253 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் 135 சதவீதத்தாலும், மத்திய மாகாணத்தில் 116 சதவீதத்தாலும், ஊவா மாகாணத்தில் 108 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது.
47 வருடங்களாக கொழும்பிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ளும் நடைமுறை 2025 பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டத்தின் வெற்றியினைத் தொடர்ந்து, ஏனைய சேவைகளும் பரவலாக்கப்பட்டுள்ளன. இதன்படி, வறுமை ஒழிப்பு மானியங்கள், கல்விப் புலமைப்பரிசில்கள், விசேட தேவையுடையோருக்கான உதவிகள், யானைத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்கள் மற்றும் அவசர அனர்த்த உதவிகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் பொதுமக்கள் இப்போது தமது பிரதேச செயலகங்கள் ஊடாக இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
சிறை: 'அதிகார வர்க்கத்தின் மதம் மீதான அணுகுமுறை' - ஊடக விமர்சனம்
சிறை: 'அதிகார வர்க்கத்தின் மதம் மீதான அணுகுமுறை' - ஊடக விமர்சனம்

பட மூலாதாரம்,X/Vikram Prabhu
29 டிசம்பர் 2025
விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநரான சுரேஷ் ராஜகுமாரியின் இயக்கத்தில் 'சிறை' திரைப்படம் வெளியாகியிருக்கிறது. போலீஸ் டிராமா படங்களின் வரிசையில் அடுத்த படமாக சிறை வெளிவந்துள்ளது.
திரைப்படம் வெளியான சில நாட்களிலே சமூக ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்படுகிறது. படத்தின் சில காட்சிகளைப் பற்றி சமூக ஊடகங்களில் விமர்சனப்பூர்வமாகவும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
வேலூர் சிறையிலிருந்து ஒரு இஸ்லாமியக் கைதியை காவலர்கள் சிவகங்கை நீதிமன்றதுக்கு பேருந்தில் அழைத்துச் செல்கின்றனர். வழியில் கைதி காவலரின் துப்பாக்கியுடன் தப்பித்துவிடுகிறார்.
தப்பித்த கைதி பிடிபட்டரா, அவரின் பின்னணி என்ன, காவலர்களுக்கு என்ன நடந்தது ஆகியவை சஸ்பென்ஸ் நிறைந்த க்ரைம் திரில்லராக கூறப்பட்டுள்ளது.
விக்ரம் பிரபு, கதிரவன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை ஆனந்த தம்பிராஜா 'மரியம்' என்கிற சக காவலர் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
எல்.கே அக்ஷய் குமார், அப்துல் ரௌஃப் என்கிற கைதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கைதியின் காதலியான கலையரசி வேடத்தில் அனிஷ்மா நடித்திருக்கிறார். காதர் பாஷா என்கிற ஆய்வாளர் கதாபாத்திரத்தில் மூணார் ரமேஷ் நடித்துள்ளார்.
டாணாக்காரன் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இந்தப் படத்திற்கு கதை எழுதியுள்ளார். அவரும் இயக்குநரும் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர்.
இந்தப் படம் தொடர்பான விமர்சனங்கள் ஊடகங்களில் வந்திருக்கின்றன. முதன்மை கதாபாத்திரங்களைத் தாண்டி துணை கதாபாத்திரங்களும் படத்தின் தொழில்நுட்ப பங்களிப்பும் விமர்சனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி தனது முதல் திரைப்படத்திலேயே அழுத்தமான கதையுடனே வந்திருக்கிறார் என தினமணி திரை விமர்சனம் தெரிவிக்கிறது.
"அளவான நடிப்பில் அசத்தும் விக்ரம் பிரபு"

பட மூலாதாரம்,X/Vikram Prabhu
மேலும் தினமணி விமர்சனத்தில்,"இடைவேளை மற்றும் காதல் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கின்றன. வசனங்களிலும் மிகுந்த பொறுப்புடன் செயல்பட்டதால் சில வசனங்களும் தனித்தனியான கதைகளைச் சொல்கின்றன. முக்கியமாக, ஒரு குற்றவாளி இஸ்லாமியராக இருந்தால் அதிகார அமைப்பு அவரை எப்படி கையாள்கிறது என்பதை அழுத்தமாக ஒரே காட்சியில் சொல்லப்பட்டது மனதை தொந்தரவு செய்ய வைக்கிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பை பாராட்டியுள்ள தினத்தந்தி விமர்சனத்தில், "விக்ரம் பிரபு, நிஜமான போலீஸ்காரராகவே நெஞ்சில் பதிகிறார். மனசாட்சிக்கும், மனிதாபிமானத்துக்கும் இடையே சிக்கும் இடங்களில் இயல்பான நடிப்பாலும் அலங்கரிக்கிறார். இந்த புதிய விக்ரம் பிரபு இனியும் தொடரவேண்டும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறை போன்ற திரைப்படங்களின் வெற்றி, அதில் சிக்கியுள்ள மக்களைப் பற்றி நம்மை கவலைப்பட வைக்கிறதா என்பதைப் பொருத்து அமைகிறது எனக் கூறும் டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம், சிறை திரைப்படம் அதை விக்ரம் பிரபுவின் அளவான நடிப்பின் மூலம் செய்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளது.
கதாசிரியராக ஜொலிக்கும் இயக்குநர் தமிழ்
தமிழ் எழுதும் காவல்துறை சார்ந்த காட்சிகள் சில புதுமையான அனுபவங்களைத் தருகின்றன என தினமணி விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இப்படத்தின் கதையை டாணாக்காரன் இயக்குநர் தமிழ் எழுதியிருக்கிறார். இவர் காவல்துறையில் பணியாற்றியதால் அதில் கிடைத்த அனுபவங்கள், கடைநிலை காவலர்களின் பணிச்சூழல், அதிகார அமைப்பு செயல்படும் விதங்கள் குறித்து அறிந்து வைத்திருக்கிறார். முக்கியமாக, இந்தப் படத்தில் எஸ்கார்ட் காவலர்களின் பணிச்சூழல் எப்படி என பதிவாகியிருக்கிறது." என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட கைதி மற்றும் பாதுகாப்புக்குச் சென்ற காவலரின் விதி சிறப்பான த்ரில்லராக உருவாக்கப்பட்டு, மத வெறிக்கு எதிராக தீவிரமான நிலைப்பாட்டை எடுக்கிறது என தி இந்து விமர்சனம் கூறுகிறது.
"இத்தகைய சிறிய கதை களத்திலும் கதாசிரியர் தமிழ் மற்றும் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி மதவெறிக்கு எதிராக ஆழமான கருத்துக்களைத் தெரிவிக்க பல தருணங்களை வைத்துள்ளனர்," என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம்,Seven Screen Studios
காவல்துறை நடைமுறை எந்த விதமான பிரமாண்டமும் இல்லாமல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது படத்திற்கு உதவி செய்கிறது என டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சனம் தெரிவிக்கிறது.
"தண்டனை கைதிகளை அழைத்துச் செல்வது, நீதிமன்ற விசாரணை, சார்புடன் செயல்படும் அதிகாரிகள் என எதுவுமே புதியவை கிடையாது. ஆனால் இவை அனைத்தையுமே தேவையான நேர்மையுடன் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி படத்தில் வழங்கியுள்ளார்," என அந்த விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுமுகங்களின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக தி இந்து விமர்சனம் கூறுகிறது.
"படத்தில் ஆச்சரியமாக அமைந்தது புதுமுகங்களான அக்ஷய் மற்றும் அனிஷ்மாவின் நடிப்பு தான். இதில் அனிஷ்மா குறைவான காட்சிகளே கிடைத்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அக்ஷயும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்," என தி இந்து விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஒளிப்பதிவு, படத்தொகுப்பு படத்தின் பலம்"
தொழில்நுட்ப ரீதியாகவும் அனைவரும் நல்ல பங்களிப்பைச் செய்திருக்கின்றனர் என தினமணியின் விமர்சனம் தெரிவிக்கிறது.
"இரவில் எடுக்கப்பட்ட காட்சிகளில் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது. முக்கியமாக, அப்துலுக்கும் கலையரசிக்குமான காதல் பாடலை எடுத்த விதம் அழகு."
"எடிட்டர் பிலோமின் ராஜ் தேர்ந்த கலைஞர் என்பதால் கதையை எவ்வளவு பரபரப்பாக்க வேண்டுமோ அவ்வளவு கட்ஸை வைத்திருக்கிறார். கிளைமேக்ஸ் நெருங்க, நெருங்க ஒருவித பதற்றம் ஆட்கொள்கிறது. இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு சிறப்பான ஜஸ்டிஸ் வழங்கியிருக்கிறார். பின்னணி இசைகள் ஒவ்வொன்றும் கதைச்சூழலுக்கு ஏற்ப அமைக்கபட்டிருந்தது." என தினமணி விமர்சனம் கூறுகிறது.

பட மூலாதாரம்,X/Vikram Prabhu
"படத்தில் மேலோங்கும் டிராமாத்தனம்" - தடுமாறும் இடங்கள் எவை?
படத்தில் சில இடங்களில் டிராமாத்தனம் தெரிவதாகப் பரவலாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
"கலையரசி மற்றும் வில்லன் கதாபாத்திரத்தை பின் தொடரும்போது படத்தில் டிராமாத்தனம் மேலோங்குகிறது. ஆனால் படம் குறைவான நேரமே ஓடுவதால் இந்தக் காட்சிகள் நிலைக்கவில்லை." என தி இந்து விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிராமா என்பதைத் தாண்டி யதார்த்தத்தின் மீது படம் கவனம் செலுத்தினாலும் தேவைக்கும் அதிகமான இடங்களில் டிராமாத்தனம் எட்டிப் பார்க்கிறது என டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.
"அப்துலின் கதையைக் கூறும் ஃப்ளேஷ்பேக்கில் தான் படம் தடுமாறுகிறது. பெரும்பான்மை இந்து கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம் குடும்பம், வன்முறையாக மாறும் மத அடிப்படையிலான பாரபட்சம், மதுப்பழக்கம் கொண்ட வில்லன் கதாபாத்திரம் என அதிகமாக பழக்கப்பட்டதாகவே இருக்கிறது." என்றும் அந்த விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
"ஆனால் இந்த சறுக்கல்கள் அனைத்தும் விக்ரம் பிரபுவின் நடிப்பு மற்றும் படத்தில் நடைமுறை நேர்மறையால் மறைக்கப்படுகிறது"
"பரபரப்பான திரைக்கதை பலம். சில இடங்களில் காட்சிகளில் தொய்வு தென்படுகிறது, யூகிக்கவும் முடிகிறது. ஆங்காங்கே லாஜிக் மீறலை தவிர்த்திருக்கலாம்," என தினத்தந்தி விமர்சனம் தெரிவிக்கிறது.
கதையின் குறையைச் சுட்டிக்காட்டும் தினமணி விமர்சனத்தில், "அதேநேரம், சிறை தனித்துவமான கதையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இருந்தாலும் பாதியில் ஆரம்பித்தது போல் முதல் காட்சிகள் இருந்தது சிறிய குறை. விக்ரம் பிரபுவுக்கு இன்னும் அழுத்தமான காட்சிகளை வழங்கியிருந்தால் சிறைத்துறை சார்ந்த சில விஷயங்களைப் பதிவு செய்திருக்கலாம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
நஞ்சுக் கொடியில் பிளாஸ்டிக் துகள் - உயர் நீதிமன்றம் தானாக விசாரணை
தாயின் நஞ்சுக் கொடியில் பிளாஸ்டிக் துகள் - பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் காரணமா?

பட மூலாதாரம்,Getty Images
கட்டுரை தகவல்
விஜயானந்த் ஆறுமுகம்
பிபிசி தமிழ்
7 பிப்ரவரி 2026
பாலித்தீன் உறைகளில் அடைத்து விற்கப்படும் உப்பு, சர்க்கரை மற்றும் குடிநீர் பாட்டில்களில் நுண் நெகிழி என அழைக்கப்படும் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எதிர்கால சந்ததியினருக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்த நீதிபதிகள், அவற்றில் எச்சரிக்கை வாசகங்களைப் பொறிப்பதற்கு அறிவுறுத்துமாறு மத்திய அரசுக்கு வெள்ளிக்கிழமையன்று உத்தரவிட்டனர்.
முன்னதாக, தாயின் நஞ்சுக் கொடியில் (Placenta) மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் பரவியிருப்பது தொடர்பான தனியார் கல்லூரியின் ஆய்வு அறிக்கையை தானாக முன்வந்த விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், வழக்கில் மத்திய, மாநில அரசுகளை எதிர் மனுதாரர்களாக சேர்த்திருந்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்ரவர்த்தி அமர்வு விசாரித்து வருகிறது. இந்த அமர்வு, கோவை பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஒன்றை தானாக முன்வந்து விசாரித்தது.
'அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம்'
அந்த ஆய்வில், பிளாஸ்டிக் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பிஸ்பினால் ஏ (BPA) வகை ரசாயனம், பிறந்த குழந்தையின் நஞ்சுக் கொடியில் கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.
நாளமில்லா சுரப்பிகளை சீர்குலைக்கும் தன்மைவாய்ந்த பிஸ்பினால் ஏ வகை ரசாயனம், பல்வேறு சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆய்வில் பங்கேற்ற கர்ப்பிணிப் பெண்களின் ஒப்புதலுடன் அவர்களின் நஞ்சுக் கொடியில் இருந்து ரத்த மாதிரிகளை மருத்துவக் குழு சேகரித்துள்ளது.
'இவற்றில் பிபிஏ (Bisphenol A) அளவானது ஒரு கிலோ எடைக்கு 0.43 மைக்ரோகிராம் முதல் 1.1578 மைக்ரோகிராம் வரை இருந்தது கண்டறியப்பட்டது. இவை பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தன' என அந்த ஆய்வு கூறுகிறது.
தமிழ்நாடு அரசு சொன்னது என்ன?
பிஎஸ்ஜி மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையை அடுத்து நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வு, 'தாயின் நஞ்சுக் கொடியைக் கூட பிளாஸ்டிக் துகள்களால் மாசுபடுத்த முடியும் என்றால் இதற்கு தகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' எனக் கூறினர்.
'இதுதொடர்பாக விரிவாக ஆராய வேண்டும்' எனக் கூறி மத்திய, மாநில அரசின் சுகாதாரத் துறைகளை வழக்கில் எதிர் மனுதாரர்களாக நீதிபதிகள் சேர்த்தனர்.
மீண்டும் இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, இதுதொடர்பாக விரிவான ஆய்வு நடத்துமாறு சென்னை ஐ.ஐ.டியை உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த தகவலை அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் கடிதம் மூலம் தமக்குத் தெரிவித்ததாகவும் நீதிமன்றத்தில் அவர் கூறினார். 'இந்த விவகாரத்தை தீவிரமாக ஆராய வேண்டும்' எனக் கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,மைக்ரோ பிளாஸ்டிக் (கோப்புப் படம்)
ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் (European Food Safety Authority - EFSA) 'மனித உடலின் ஒரு கிலோ உடல் எடைக்கு 0.2 நானோ கிராம் (ng) அளவுக்கு பிஸ்பினால் ஏ இருக்கலாம்' என வரையறுத்துள்ளதாகக் கூறுகிறார் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியான பார்த்திபன்.
வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 6) சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வி.சந்திரசேகரன், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
பிளாஸ்டிக் குடுவைகள் மற்றும் பாலித்தீன் உறைகளில் மைக்ரோ பிளாஸ்டிக்கின் இருப்பு மற்றும் அதன் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
மத்திய சுகாதார அமைச்சகம் கூறியது என்ன?
மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் வகைகளை வளர்ந்து வரும் மாசுகளாகவும் உணவுப் பொருள்களில் அவற்றின் பரவலை அறிந்து கொள்வது தொடர்பான திட்டத்தை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தொடங்கியுள்ளதாகவும் வழக்கறிஞர் வி.சந்திரசேகரன் தெரிவித்தார்.
லக்னௌவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR), கொச்சியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் கீழ் இயங்கும் மீன் தொழில்நுட்பத்திற்கான மத்திய கல்விநிறுவனம் (ICAR- CIFT), மற்றும் பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம் (BITS Pilani) ஆகியவற்றுடன் இணைந்து இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
'உணவுப் பொருள்களில் மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக்குகளை அடையாளம் காணவும் அவற்றின் அளவைத் தீர்மானிக்கவும் பகுப்பாய்வு முறைகளை உருவாக்கி சரிபார்ப்பது இதன் முக்கிய நோக்கமாக உள்ளது' என, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
உப்பில் அதிக மைக்ரோ பிளாஸ்டிக்

பட மூலாதாரம்,Getty Images
பிளாஸ்டிக் குடுவைகளில் அடைக்கப்பட்ட தண்ணீர், பொட்டலங்களில் அடைக்கப்பட்டுள்ள பானங்கள், உலர்ந்த மீன்கள், மீன் உணவு ஆகியவற்றில் மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடைபெற்று வருவதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
'இதன் முதற்கட்ட ஆய்வுகளில் அயோடின் கலந்த உப்பில் அதிக எண்ணிக்கையிலும் கருப்பு உப்பு மற்றும் பாறை உப்பு ஆகியவற்றில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது' எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்த அறிக்கையில், 'இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், சண்டிகர், அரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் குடிநீர் பாட்டில்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது' என்கிறது.
இதுதொடர்பாக விவாதிப்பதற்கு கூட்டுக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், குடிநீர் பாட்டில்களில் எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்யுமாறு உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையைத் தள்ளிவைத்தனர்.
'நஞ்சுக் கொடியில் பரவிய பிளாஸ்டிக் துகள்கள்'

பட மூலாதாரம்,Facebook/Sudha Ramalingam
படக்குறிப்பு,மருத்துவர் சுதா ராமலிங்கம்.
தாயின் நஞ்சுக் கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் பாதிப்பு இருப்பது குறித்த ஆய்வை கோவை கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருந்தது.
"நாங்கள் நடத்திய தொடக்கநிலை ஆய்வு முடிவுகளை ஊடகங்கள் வெளியிட்டன. இதனை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்," என்கிறார் மருத்துவர் சுதா ராமலிங்கம்.
இவர் கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சமூக மருத்துவத் துறையின் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கடந்து ஆறு மாதங்களுக்கும் மேலாக இதுதொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறோம். சிறு வயதிலேயே உடல் பருமனுடன் வளரும் குழந்தைகள், சர்க்கரை குறைபாடு, புற்றுநோய் என பல்வேறு நோய்கள் வரத் தொடங்கிவிட்டன." என்கிறார்.
'கருவிலேயே தீர்மானிக்கப்படும் நோய்கள்'
நோய்கள் பெருகிக் கொண்டிருப்பதற்கு அடிப்படையாக கருவில் குழந்தை உள்ளபோதே சில வகை வியாதிகளுக்கான தன்மை வெளிப்படுவதாக, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர் சுதா ராமலிங்கம் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, மருத்துவரீதியாக இதனை 'டோஹாட்' (Developmental Origin Of Health And Disease - dohad) என்கின்றனர். கருவில் உள்ளபோதே, 'என்ன வியாதி வரும்' என்பதை செல்களின் நடத்தைகள் தீர்மானிப்பதாகவும் அவர் கூறுகிறார்.
"உணவு முறை காரணமாக தாயின் உடலில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அது கருவில் உள்ள குழந்தைக்குச் சென்றால் அதனால் உடல் பருமன், சர்க்கரை குறைபாடு வருமா எனக் கண்டறியும் ஆர்வம் எங்களுக்கு ஏற்பட்டது," என்கிறார் மருத்துவர் சுதா ராமலிங்கம்.
மனித உடலில் உள்ள நாளமில்லாத சுரப்பிகளை (endocrine system) சீர்க்குலைக்கும் வேலையை பிஸ்பினால் ஏ வகை ரசாயனம் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
400 கர்ப்பிணிகளிடம் ஆய்வு

பட மூலாதாரம்,Facebook/Parthiban
கடந்த ஆறு மாதங்களாக சுமார் நானூறுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளின் நஞ்சுக் கொடிகளை (placenta) மருத்துவர் சுதா ராமலிங்கம் தலைமையிலான குழு சேகரித்துள்ளது. இந்த நஞ்சுக் கொடிகள், பிரசவத்துக்குப் பிறகு வெளியில் தூக்கி எறியப்படுகின்றன.
"அதில் உள்ள ரத்த மாதிரிகள் பெற்றோரின் ஒப்புதலுடன் சேகரிக்கப்பட்டன. இதுதொடர்பாக, நெறிமுறைக் குழு (Ethics commitee) ஒப்புதல், பணிபுரியும் நிறுவனத்தின் ஒப்புதல் ஆகியவை பெறப்பட்டன," என்கிறார், மருத்துவர் சுதா ராமலிங்கம்.
முதல்கட்ட ஆய்வு முடிவில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட சற்று அதிகமாக நுண் நெகிழி துகள்கள் இருப்பதைக் கண்டறிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
"மைக்ரோ பிளாஸ்டிக் என்பது பலவகையான தன்மைகளைக் கொண்ட ரசாயனமாக உள்ளது. அதில் பிஸ்பினால் ஏ வகை ரசாயனத்தை மட்டும் கவனித்தோம். மற்ற துகள்களின் வடிவங்களைக் கண்டறிய மேம்பட்ட ஆய்வக வசதி தேவைப்படுகிறது. அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன," என்கிறார் மருத்துவர் சுதா ராமலிங்கம்.
பாதிப்பைக் கொடுக்கும் தேநீர், சாம்பார் பைகள்

பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,உணவுப் பொருட்கள் பேக்கேஜிங் (கோப்புப் படம்)
பால், தேநீர், சாம்பார் ஆகியவற்றை கட்டிக் கொடுப்பதற்கு ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் பிளாடிக் உறைகள் மூலம் மனித உடலில் மைக்ரோ பிளாஸ்டிக் நுழைய வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார், மருத்துவர் சுதா ராமலிங்கம்.
"இவை நாளமில்லா சுரப்பிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. " என்கிறார் அவர்.
தொடர்ந்து அவர் பேசும்போது, "தாயின் கருவில் உள்ள குழந்தைக்கு மனநலரீதியான பாதிப்புகள், இதயநோய், சர்க்கரை குறைபாடுகள் போன்றவற்றை உருவாக்கும் ஆபத்துடைய ரசாயனங்களாக இவை உள்ளன." என அவர் தெரிவித்தார்.
பேப்பர் குடுவைகள், ஒருமுறை பயன்படுத்தும் டீ தூள் பைகள் (Tea bags) ஆகியவற்றிலும் மைக்ரோ பிளாஸ்டிக் உள்ளதாகக் கூறும் அவர், "சூடாக தேநீர் குடிக்கும்போது மைக்ரோ பிளாஸ்டிக் உருகி வயிற்றுக்குள் செல்கின்றன. இதுபோன்ற பொருட்களைத் தவிர்க்க வேண்டும்." என்கிறார்.
வெளியில் உள்ள புகையை சுவாசிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் மனித உடலில் இயல்பாகவே ரசாயனங்கள் உள்ளதாகக் கூறும் அவர், "ஆனால், அது தாயின் நஞ்சுக் கொடி வரையிலும் சென்று சேர்ந்திருப்பது தான் அதிர்ச்சியூட்டுகிறது" எனக் கூறுகிறார்.
"பிஸ்பினால் ஏ வகை ரசாயனம் போல தாலேட்ஸ் (Pthalates) வகை ரசாயனம் உள்ளது. மனிதர்களைச் சுற்றியே இவை உள்ளன. ஓட்டலில் ஊற்றிக் கொடுக்கும் சாம்பார், பிளாஸ்டிக் குடுவைகள் எனப் பலவற்றில் இவை உள்ளன." என்கிறார் அவர்.
'முன்கூட்டிய பிரசவ பாதிப்பு'

பட மூலாதாரம்,Facebook/Perumal pillai
படக்குறிப்பு,மருத்துவர் பெருமாள் பிள்ளை
பிளாஸ்டிக் துகள்கள், நஞ்சுக் கொடியைக் கடந்து கருவை அடைவதாகக் கூறுகிறார், திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நலத்துறையின் இணைப் பேராசிரியரும் மருத்துவருமான பெருமாள் பிள்ளை.
கர்ப்பகால நீரிழிவு போன்ற நீண்டகால வளர்சிதை மாற்றங்களுக்கு இவை வழிவகுப்பதாகக் கூறும் மருத்துவர் பெருமாள் பிள்ளை, "தாயின் நஞ்சுக் கொடியில் பி.வி.சி, பாலிமர் போன்ற மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் சில ஆய்வுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன" எனக் கூறுகிறார்.
இதுதொடர்பாக ஏராளமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களால் ஏற்படும் ஆபத்துகளை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
தென்கொரியாவில் குடிநீர் குடுவைகள், பால் பாட்டில் ஆகியவற்றில் பிஸ்பினால் ஏ வகை ரசாயனத்தைக் கண்டறியப்பட்டதாகக் கூறுகிறார், தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி பார்த்திபன்.
"அங்கு மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக பரிசோதனையில் இதன் பாதிப்பு அதிகரித்திருப்பதைக் கண்டறிந்தனர்" எனக் கூறுகிறார்.
தவிர்ப்பதற்கான வழிகள் என்ன?
தொடர்ந்து பிளாஸ்டிக் குடுவையைப் பயன்படுத்தும்போது மைக்ரோ பிளாஸ்டிக் தாக்கம் அதிகரிக்கும் என கூறும், மருத்துவர் சுதா ராமலிங்கம் மனித உடலுக்குள் மைக்ரோ பிளாஸ்டிக் செல்வதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை பட்டியலிட்டார்.
பிளாஸ்டிக் குடுவைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
இரும்பு குடுவைகள் பாதுகாப்பானவை
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
ஒருமுறை பயன்படுத்தப்படும் தேநீர் கோப்பைகளைத் தவிர்க்க வேண்டும்
சூடான சாம்பார், தேநீர் போன்றவற்றை பாலித்தீன் பைகளில் வாங்கக் கூடாது.
"தற்போது இடைக்கால ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளோம். விரைவில் விரிவான அறிக்கை வெளியிடப்பட உள்ளது. மைக்ரோ பிளாஸ்டிக் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளுமாறு சென்னை ஐஐடியிடம் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அவை வெளிவரும்போது மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படும்," என்கிறார், மருத்துவர் சுதா ராமலிங்கம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு