ஊர்ப்புதினம்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் NPP வசமானது

2 months 4 weeks ago

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் NPP வசமானது

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் 7 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். 

117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் 61 வாக்குகளை விராய் கெலி பல்தஸார் பெற்றுக்கொண்டதோடு, ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ரியா சாருக் 54 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். 

இன்றைய வாக்கெடுப்பில் மொத்தமாக 117 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 2 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத கொழும்பு மாநகர சபையின் கன்னிக் கூட்டம் உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இடம்பெற்றது. 

அதற்கமைய, நீண்ட நேர விவாதத்திற்கு பின்னர் இரகசிய வாக்கெடுப்பு மூலம் கொழும்பு மாநகர சபையின் மேயரை தெரிவு செய்வதாக சபையில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, பெரும்பான்மையினரின் தீர்மானத்திற்கு அமைய பிரதி மேயராக ஹேமந்த குமார தேர்ந்தெடுக்கப்பட்டார்.

https://adaderanatamil.lk/news/cmbyp0hs701wrqpbsfjoncu90

சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாகும் - ஜனாதிபதி

2 months 4 weeks ago

Published By: VISHNU

16 JUN, 2025 | 06:58 PM

image

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை நாட்டில் உருவாக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பொருளாதார வீழ்ச்சியின் போது ஒரு நாட்டின் சுயாட்சி மற்றும் இறையாண்மையைப் பேண முடியாது என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு தேசமாக சுயாட்சி மற்றும் இறையாண்மையை அடைவதே, இறுதி பெறுபேறாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதற்காக, மிகவும் கடினமான மற்றும் கைவிடாத முயற்சியில் தனது தலைமையிலான அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும், அரச அதிகாரிகள் மற்றும் பிரஜைகள் என அனைவரின் ஆதரவையும் இதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசா நாயக்க, திங்கட்கிழமை (16) முற்பகல் கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் நடைபெற்ற "இலங்கையின் மீட்சிக்கான பாதை: கடன் மற்றும் நிர்வாகம்" (Sri Lanka's Road to Recovery: Debt and Governance) என்ற கருத்தரங்கில் பிரதான உரை நிகழ்த்தும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் மேலோட்டமான பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாகியுள்ள போதிலும், அந்த நிலைமையை பலமாக நிலைநிறுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு புதிய பொருளாதார மறுசீரமைப்புகளும் மாற்றங்களும் அவசியம் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மிகக் குறுகிய காலத்தில் நாடு பல பொருளாதார வெற்றிகளைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி நாட்டை பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியாக வெற்றிபெறச் செய்வதே தனது நோக்கம் என்றும் தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் இலங்கையின் அனுபவங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், சர்வதேச நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் வசதி (ECF) வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவும் இந்த கருத்தரங்கு நடைபெற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.

இங்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை,

சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நாடாக, நமது நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மிக ஆழமான நெருக்கடியின் விளைவுகளை நாம் எதிர்கொண்டோம். அதன்போது நாம் தேர்ந்தெடுக்க இரண்டு பாதைகள் இருந்தன. பழைய தோல்வியுற்ற மற்றும் அழிவுகரமான பாதையில் தொடர்வதா, அல்லது நமது நாட்டை மீண்டும் வெற்றிபெறச் செய்ய புதிய பாதையைத் தேர்ந்தெடுப்பதா, என்ற இரண்டு விடயங்கள் நமது முன்னே இருந்தன.

இன்று, நாம் தேர்ந்தெடுத்த பாதை நாட்டிற்கு மிகப்பெரிய வெற்றியைக் கொண்டு வந்துள்ளது என்பதை நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்க முடியும். அதில், அரசியல் அதிகாரத்திற்கு ஒரு பொறுப்பும் கடமையும் உள்ளது. அதேபோல், மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு போன்ற அரச நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய பொறுப்பு இருந்தது.

மேலும், இந்த மறுசீரமைப்புகளின்போது,பாதிக்கப்பட்ட மக்களுக்கே இதில் மிகப்பெரிய பங்கு இருந்தது. அவர்கள் இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக பெரும் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் செய்தனர்.

இன்று, ஒரு நாடாக நாம் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளோம். கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்ய முடிந்தது, மேலும் குறிப்பிடத்தக்க காலத்திற்கு டொலரை நிலையாக பேண முடிந்தது. எதிர்பார்க்கப்படும் அரச வருமானத்தை ஈட்டவும், எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு கையிருப்புக்களை உருவாக்கவும் முடிந்தது. இவ்வாறு, மேலோட்டமாகப் பார்த்தால் பொருளாதாரக் காரணிகளில் மிகவும் வலுவான நிலைபேற்றுத் தன்மையை பார்க்க முடிகிறது. ஆனால் நெருக்கடியின் ஆழமான காயங்கள் இன்னும் ஆறவில்லை. உள்நாட்டில் நெருக்கடி இன்னும் நீங்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, மேலோட்டமாக ஸ்திரத்தன்மை இருந்தாலும், அந்த நிலைமையை ஸ்திரப்படுத்தவும், பொருளாதாரத்தை, அது இருக்கும் இடத்திலிருந்து உயர்த்தவும் புதிய மறுசீரமைப்புகளும் பொருளாதார கட்டமைப்பில் மாற்றங்களும் அவசியம் ஆகும். பல முக்கியமான காரணிகள் குறித்து நான் கவனம் செலுத்த விரும்புகிறேன்.

நமது நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்கவும், இந்த நெருக்கடியை வெற்றி கொள்ளவும் ஒரு வலுவான அரச சேவை அவசியம். ஆனால் அந்த அரச சேவைக்காக நாம் சுமக்கும் செலவு மிகப்பெரியது. இன்று, நாம் சுமக்கக்கூடாத ஒரு செலவைச் சுமக்கிறோம். எனவே, வலுவான அரச சேவையை உருவாக்குவதோடு, பிரஜைகளுக்கு மிகக் குறைந்த செலவில் அந்த சேவையை வழங்குவதே எங்கள் எதிர்பார்ப்பு. சில அரச நிறுவனங்கள் மூடப்பட வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம்.

அந்த அரச நிறுவனங்கள் அந்தக் கால சமூக-பொருளாதார சூழ்நிலையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகக் கட்டமைக்கப்பட்டன. இன்று, அந்தப் பொருளாதார மற்றும் சமூக நிலைமை மாறிவிட்டது. சில நிறுவனங்களின் இருப்பு கூட தேவையற்றுப்போய் விட்டது. எனவே, நாம் அதைச் செய்ய வேண்டும். மேலும், ஒரே செயல்பாட்டிற்கு பல அரச நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களை நாம் இணைக்க வேண்டும்.

மேலும், சில அரச நிறுவனங்களின் நோக்கமும் இலக்குகளும் மாற்றப்பட வேண்டும். எனவே, இந்த ஸ்திரத்தன்மையை முன்னோக்கி எடுத்துச் செல்ல, அரச கட்டமைப்பின் வலுவான மாற்றம் தேவை. அதை மிகவும் வலுவாக செயல்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நமது அரச பொறிமுறை முழுவதும் பரவலாக இருக்கும் செயற்திறனின்மை, குறிப்பாக ஊழல் மற்றும் இலஞ்சம் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும். அண்மைய கால செய்தி அறிக்கைகளைப் பார்க்கும்போது, நமது நாடு எங்கே இருக்கிறது என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம்.

பொலிஸாருக்குப் பயந்து பொலிஸ் மா அதிபர் ஒளிந்து கொண்டிருக்கிறார். சிறைச்சாலைகள் ஆணையாளர் சிறையில் அடைக்கப்படுகிறார். போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்படுகிறார்கள். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்படுகிறார்கள். அப்படியானால் நமது அரச கட்டமைப்பு எங்கே செல்கிறது? திறமையின்மை, இலஞ்சம் மற்றும் ஊழல் இந்த நெருக்கடிக்கு ஒரு பெரிய பாதையை உருவாக்கின.

இலஞ்சம் என்பது அந்த நேரத்தில் நடக்கும் ஒரு கொடுக்கல் வாங்கல் அல்ல. இலஞ்சம் மற்றும் ஊழல் அந்த குறிப்பிட்ட நேரத்தில் தேவையான திட்டங்களை செயல்படுத்தவில்லை. மறுபுறம், இலஞ்சம் மற்றும் ஊழல் நமக்கு தேவையற்ற திட்டங்களை செயல்படுத்தியது. அவை இன்றும் நமக்கு ஒரு சுமையாக மாறிவிட்டன. எனவே, இந்த சூழ்நிலையை விட்டு மீண்டு வர, அரச நிறுவனங்களை திறமையாக்குவதும், இலஞ்சம் மற்றும் ஊழலை தீர்க்கமாக தோற்கடிப்பதும் அவசியம். ஒரு நாடாக நாங்கள் அதற்கு உறுதிபூண்டுள்ளோம்.

நமது அரச நிறுவனங்கள் , குறிப்பாக பொருளாதாரம் தொடர்பான முக்கியமான பகுதிகளில், அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட அளவு கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். நமது வலுசக்தி சந்தை மற்றும் நிதிச் சந்தை மிகச் சிறிய சந்தைகள் ஆகும்.

எனவே, நம்மைப் போன்ற ஒரு நாட்டில், ஏகபோகத்தை உருவாக்கும் ஆபத்து உள்ளது. ஏகபோகத்தை உருவாக்கும் ஆபத்தை எதிர்கொள்ள, அரசாங்கம் சில பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட பங்கைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். இருப்பினும், அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு ஒரு சுமையாக இருக்கக்கூடாது.

குறிப்பாக மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்கள் பொருளாதாரத்துடனும் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையுடனும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்கள் மீது அரசாங்கம் சில கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். அந்த நிறுவனங்களை நடத்துவதில் பொதுமக்கள் சுமையைச் சுமக்கக்கூடாது. எனவே, உற்பத்திச் செலவுக்கு ஏற்ப விலைகள் சீர் செய்யப்பட வேண்டும். ஒரு யூனிட் மின்சாரத்தின் உற்பத்திச் செலவைப் பொறுத்து, ஒரு யூனிட் மின்சாரத்தின் விற்பனை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையை பாதுகாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

அதேபோன்று, உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதற்குத் தேவையான பொறிமுறைகளை வலுப்படுத்தவும் நாங்கள் தயாராக உள்ளோம். பிரஜைகள் அந்த சேவைகளின் செலவை செலுத்தி, அந்த சேவைகளைப் பெற வேண்டும். இருப்பினும், சில குறைந்த வருமானம் பெறுவோர் இருப்பதையும் நாங்கள் அறிவோம். பொருளாதார மறுசீரமைப்புகளின் பலன்கள் மக்களுக்கு கிடைக்கும் வரை காத்திருக்கச் சொல்ல நமக்கு உரிமை இல்லை. பலன்கள் அவர்களுக்கு செல்லும் வரை நாம் அந்த மக்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அதுதான் ஒரு நீதியான அரசின் பொறுப்பு. எந்த நேரத்திலும், பொருளாதார செயல்பாட்டில் ஈடுபடாத ஒரு பிரிவினர் சமூகத்தில் உள்ளனர்.

முதியோராக இருக்கலாம், ஊனமுற்றவர்களாக இருக்கலாம், அவர்கள் வளரும் சூழலைப் பொறுத்து பொருளாதாரத்தில் இணைய முடியாமல் போகலாம். இதன் காரணமாக, பொருளாதாரத்தில் தீவிரமாக ஈடுபடாத மற்றும் இணைக்க முடியாத ஒரு சமூகம் எப்போதும் இருந்துகொண்டு தான் இருக்கும்.

அந்த சமூகத்தைப் பாதுகாப்பது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு. அந்த சமூகத்தைப் பற்றி குறிப்பிடாமல் பொருளாதார வளர்ச்சியைப் பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. இது மனிதநேயம், நீதி மற்றும் நியாயம் பற்றிய கேள்வி. எனவே, இலக்கு வைக்கப்பட்ட சமூகத்திற்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கை எங்களிடம் உள்ளது. இது அரசியல்மயமாக்கப்பட்ட மானியத் திட்டம் அல்ல. அதை சமூக நீதி, சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்கான பொறுப்பு பற்றிய கேள்வியாகக் கருத நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் அனுபவத்தின்படி, நிவாரணத் திட்டங்கள் எப்போதும் அரசியல்மயமாக்கப்பட்ட திட்டங்களாக மாறிவிட்டன. அரசியலுக்காக சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை ஒருபோதும் செயல்படுத்த மாட்டோம் என்பதை நான் பொறுப்புடன் உங்களுக்குச் கூறுகிறேன்.

மறுபுறம், பல துறைகளில் நிலையான இலக்குகளை நாம் அடைந்துள்ளோம். ஆனால் இலக்குகளை விரைவாக அடைய வேண்டிய பல பகுதிகள் இன்னும் உள்ளன. முதலில், நாம் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்க வேண்டும். கடந்த பல தசாப்தங்களைப் பார்க்கும்போது, அந்த குறிப்பிட்ட தருணத்தில், உலகின் பொருளாதார இயல்புடன், பொருளாதார செயற்பாடுகளையும் நாம் பார்த்தால், போதுமான அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கத் தவறிய ஒரு நாடு நாம். எனவே, போதுமான அந்நிய நேரடி முதலீட்டை நாம் ஈர்க்க வேண்டும்.

ஆனால் அதை மீண்டும் கொண்டு வருவது ஒரு சவாலாகும். நாம் மிகவும் வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட இடத்தில் இல்லை. வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்திலிருந்து மீள்வதற்கு நாம் போராடும் இடத்தில் இருக்கிறோம். நமது நிதிச் சந்தைகள் மீதான நம்பிக்கை வீழ்ச்சி கண்டது. அன்றாடப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. டொலர் கையிருப்பு மிகக் குறைந்த அளவில் இருந்தது. அதிலிருந்து நாம் மீண்டு வருகிறோம்.

ஆனால், முதலீட்டை ஈர்க்க அது போதுமானதா? முதலீட்டிற்கு சில சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, முதலீட்டிற்கு கவர்ச்சிகரமான சூழலை உருவாக்குவதிலும் சில சலுகைகளை வழங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். இது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் நாங்கள் கலந்துரையாடி வருகிறோம்.

நமது நாட்டில் தேசிய பொருளாதாரத்தையும் தேசிய உற்பத்தியையும் எவ்வாறு மீட்டெடுப்பது? என்ற ஒரு கேள்வி உள்ளது. அண்மைய பொருளாதார வீழ்ச்சி காரணமாக, ஏராளமான சிறிய மற்றும் மத்திய தர தொழில் முயற்சிகள் வீழ்ச்சியடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களில் 90% க்கும் அதிகமானோர் தங்கள் நிர்வாகப் பிழைகள் அல்லது வணிகப் பிழைகள் காரணமாக பாதிக்கப்படவில்லை, மாறாக பொதுவான பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளை அவர்கள் அனுபவித்ததால் பாதிக்கப்பட்டனர். எனவே, அவற்றை மீட்டெடுக்க நாம் சில நிவாரணங்களை வழங்க வேண்டும். இந்த சூழ்நிலையிலிருந்து மேலும் ஒரு படி முன்னேற, நாம் இந்த பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

மூன்றாவதாக, பொருளாதார வளர்ச்சியும் பொருளாதார விரிவாக்கமும் நம் நாட்டில் முக்கியமானவை. கிராமப்புற மக்கள் பொருளாதாரத்திலிருந்து நீங்கியுள்ளனர். பொருளாதாரத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். தலைநகரில் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்த தரவுகளைப் பற்றி நாம் நிறைய பேசலாம். ஆனால் தரவுகளில் பிரதிபலிக்காத ஒரு உண்மை உள்ளது. பொருளாதார வளர்ச்சியின் காரணிகள் மக்களுக்கு நல்ல பலன்களைக் கொண்டுவர வேண்டுமென்றால், பொருளாதார விரிவாக்கம் அவசியம்.

எனவே, பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கும், தொலைதூர கிராமங்களின் பிரஜைகளை பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கும் தேவையான திட்டங்களையும் நடவடிக்கைகளையும் நாம் தொடங்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

எனவே, தற்போதைய பொருளாதார நிலைமையை உறுதிப்படுத்தி, இந்த நிலைமையை இன்னும் வலுப்படுத்தும் ஒரு பெரிய பணி நமக்கு உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆதரவிற்கும், ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் எமது மக்களின் பொறுத்துக்கொள்ளும் அர்ப்பணிப்புக்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நான் முன்பு கூறியது போல, சர்வதேச நாணய நிதியத்துடன் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் முன்னெடுக்கும் கடைசித் திட்டமாக இதை மாற்றுவதே எமது நோக்கம். அதற்கான எதிர்பார்ப்பு எங்களுக்கு உள்ளது. 2028 ஆம் ஆண்டுக்குள் எங்கள் கடன்களை திருப்பிச் செலுத்தத் தேவையான பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்கும் எதிர்பார்ப்பு எங்களுக்கு உள்ளது.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த இடத்தில் நாட்டின் இறையாண்மை நிலைத்திருக்காது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த இடத்தில் சுயாட்சி நிலைத்திருக்காது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நமது சுயாட்சியையும் இறையாண்மையையும் இழந்துவிட்டோம்.

எனவே, இதன் இறுதி விளைவாக, ஒரு தேசமாக நாம் சுயாட்சியையும் இறையாண்மையையும் பெற வேண்டும். அதற்காக ஒரு கடுமையான முயற்சி உள்ளது. விட்டுக்கொடுக்காத ஒரு முயற்சி உள்ளது.

அதற்காக நிறைவு செய்ய வேண்டிய ஒரு பணி உள்ளது. அந்தப் பணியை செய்வதற்கு அரசியல் அதிகாரமாக எமது பங்களிப்பும், அரச அதிகாரிகள் என்ற வகையில் உங்கள் பொறுப்பு மற்றும் பொதுமக்களாக உங்கள் ஆதரவையும் நான் எதிர்பார்க்கிறேன்.

https://www.virakesari.lk/article/217660

யாழ். மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

2 months 4 weeks ago

Published By: VISHNU

16 JUN, 2025 | 09:38 PM

image

போதியளவு எரிபொருள் வருகை தரவுள்ளதாகவும் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடிக்கின்றனர்.

இந்நிலையிலேயே யாழ். மாவட்ட அரச அதிபர் அவசர வேண்டுகோள் ஒன்றை ஊடகங்கள் வாயிலாக விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

யாழ். மாவட்டத்தில் திங்கட்கிழமை (16) எரிபொருளுக்காக ஒரு செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கியிருப்பதாக அறிந்தேன்.

இன்றையதினம் அநுராதபுரத்திலிருந்து 23 பௌசர்களில், ஒரு பௌரில் 6 ஆயிரத்து 63 லீற்றர் வீதம் ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 800 லீற்றர் பெற்றோல் யாழ். மாவட்டத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

குறித்த எரிபொருட்கள் யாழ். மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, நாளையும் இதே அளவான எரிபொருள் எடுத்துவரப்பட்டு யாழ். மாவட்டதிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இதேபோன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்ட காங்கேசன்துறை எரிபொருள் சேமிப்பு நிலையத்திற்கு தொடர்ச்சியாக எரிபொருள் எடுத்து வரப்பட்டு சேமிக்கப்பட்டு வருகின்றது.

ஆகவே யாழ். மாவட்ட மக்கள் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாமென வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இது தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய அலுவலகம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. ஆகவே மக்கள் செயற்கையான தட்டுப்பாட்டு நிலைவரத்தை ஏற்படுத்த வேண்டாமென பொதுமக்களை வினயமாக கேட்டுக்கொள்ளுகின்றேன்.

https://www.virakesari.lk/article/217666

பிரபாகரன் செய்யாததை ராஜபக்ஷர்கள் செய்தனர் - பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா

2 months 4 weeks ago

16 JUN, 2025 | 09:11 PM

image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என விளித்தமைக்காக ராஜபக்ஷர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் அவர்கள் சிறைச்சாலையில் என்னை எவ்வாறு உபசரித்தனர் என்பதை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. நேருக்கு நேர் போர் களத்தில் மோதிய தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கூட என் குடும்பத்தை பழிவாங்கவில்லை. ஆனால் ராஜபக்ஷர்கள் அதனை செய்தனர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

களுத்துறையில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடன் பெற்று அதனை மீள செலுத்தாமல் மோசடி செய்தமை தொடர்பில் பேசும் போது, ராஜபக்ஷர்களை நினைவு கூராவிட்டால் அது நாம் எமது பொறுப்பினை தட்டிக்கழிப்பதற்கு சமமாகும்.

மக்களுக்கு எவ்வித பயனும் அற்ற வேலைத்திட்டங்களுக்காக பாரிய தொகையில் கடன் பெற்று, அதனை மோசடி செய்துள்ளனர். இவ்வாறான மோசடிகளின் பலனாக 2022இல் எரிபொருள், எரிவாயு கப்பல்களுக்கு பணம் செலுத்த முடியாமல் அவை திரும்பிச் சென்றன.

அது மாத்திரமின்றி அத்தியாவசிய பொருட்களுக்காக மக்கள் வரிசைகளில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய துரதிஷ்டவசமான நிலைமையும் ஏற்பட்டது.

ஊழல், மோசடி நிறைந்த அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் தான் இந்த நிலைமை ஏற்பட்டது என மக்கள் நம்பினர்.

அது தான் உண்மை நிலைமை என்பதே எனது நம்பிக்கையுமாகும். இளம் தலைமுறையினர் இந்த யதார்த்தத்தை உணர்ந்து கொண்டுள்ளனர்.

எனவே முந்தைய கால கட்டத்திலிருந்த அரசியல்வாதிகள் தற்போது காலாவதியாகிவிட்டனர். எனவே இந்த அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.

இந்த அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைத்தால் முந்தைய ஊழல், மோசடி அரசியல்வாதிகள் அதனால் பலன் பெறுவார்கள்.

ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியடைந்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினாலும், முந்தைய ஆட்சியாளர்களுக்கு மீண்டுமொரு வாய்ப்பளிப்பார்கள் என்று நான் நம்பவில்லை.

கடந்த தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலுள்ள 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்த போதிலும், 5 இலட்சம் வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது.

சஜித் பிரேமதாசவின் வாக்குகளும் 50 சதவீதத்தால் குறைவடைந்தது. எவ்வாறிருப்பினும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஓரளவு வாக்குகளைப் பெற்றுள்ளதால் அதனை அடிப்படையாகக் கொண்டு பாரிய பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.

2 இலட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ள சஜித், அடுத்து தானே ஜனாதிபதி என எண்ணிக் கொண்டிருக்கின்றார். நாமலுக்கு 6 இலட்சம் வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளன.

தந்தையைப் போன்று மீண்டும் நாட்டை ஏமாற்றி பிளைக்க முடியும் என்று அவர் எண்ணிக் கொண்டிருக்கின்றார். எவ்வாறிருப்பினும் இவர்கள் இருவரிடமும் மக்கள் நாட்டை ஒப்படைப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

தற்போது இவர்களுக்கு இராணுவ வீரர்கள் மீது புது விதமான மரியாதை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என விளித்ததாக அதனை பெரும் குறையாகக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் நாம் அது குறித்து கவலை கொள்ளவில்லை. ராஜபக்ஷர்கள் தான் இராணுவத்தினரைக் கொண்டு இலாபம் தேட முற்படுகின்றனர்.

இராணுவத்திற்கு சிப்பாய்களே ஆட்சேர்க்கப்படுகின்றனர். இராணுவ வீரர்கள் அல்ல. எனவே அது வெட்கப்படக் கூடிய சொற் பிரயோகம் அல்ல.

இன்று இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என அழைத்தமைக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் ராஜபக்ஷர்கள், அன்று யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்தளபதியான என்னை சிறையிலடைத்து நன்கு உபசரித்தனர்.

என்னுடன் பணியாற்றிய இராணுவத்தில் முக்கிய பதவி நிலைகளை வகித்த 35 இராணுவ அதிகாரிகள் ஓய்வூதியம் இன்றி சேவையிலிருந்து நீக்கப்பட்டனர்.

சரத் பொன்சேக்காவை சிறையிலடைத்ததை தன்னால் அனுமதிக்க முடியாது என தற்போது நாமல் கூறுகின்றார். ஆனால் அதனை அவரது தந்தையும், சித்தப்பாவும் அனுமதித்தனர்.

எனது மகள்கள் இருவரும் அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது, அவர்கள் விமான நிலையத்தில் பல மணித்தியாலங்கள் தடுத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

பிரபாகரன் கூட இவ்வாறு எமது குடும்பங்கள் மீது தாக்குதல்களை நடத்தவில்லை. ஆனால் ராஜபக்ஷர்கள் எமது குடும்பத்தினரையும் பழிவாங்கினர் என்றார்.

https://www.virakesari.lk/article/217625

முதியோர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் முறையிட வாட்ஸ்அப் இலக்கம்!

2 months 4 weeks ago

16 JUN, 2025 | 04:58 PM

image

முதியோர்களுக்கு எதிராக இடம்பெறும் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் வாட்ஸ்அப் இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனவே முதியோர்களுக்கு எதிராக இடம்பெறும் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிட தேசிய முதியோர் செயலகத்தின் 0707 89 88 89 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தை பயன்படுத்த முடியும்.

இந்த வாட்ஸ்அப் இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூன் 15 அன்று அனுசரிக்கப்படும் உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/217645

அரசாங்கத்தின் முதன்மை நோக்கமானது மோசடி, ஊழலை ஒழித்தல் - கொரிய தூதுவரிடம் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் தெரிவிப்பு

2 months 4 weeks ago

Published By: DIGITAL DESK 2

16 JUN, 2025 | 03:49 PM

image

அரசாங்கத்தின் முதன்மை நோக்கமானது மோசடி மற்றும் ஊழலை ஒழித்தல் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷண சூரியப் பெரும தெரிவித்தார்.

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷண சூரியப் பெரும மற்றும் இலங்கைக்கான கொரிய தூதுவர் மியான் லீ ஆகியோருடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கைியலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை தூதருக்கு விளக்கிய அமைச்சர் சூரியப் பெரும மேலும் தெரிவிக்னையில்,

அரசாங்கத்தின் முதன்மை நோக்கமானது, மோசடி மற்றும் ஊழலை ஒழித்தல், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது ஆகும்.

அரசாங்கத்தின் முன்னுரிமை நடவடிக்கையாக, "தேசிய ஒற்றைச் சாளர அமைப்பை" (National Single Window) நிறுவுவது மிகவும் முக்கியமானது, அதாவது, நாட்டின் குடிமக்கள், வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும் என்றார்.

இந்தக் கூட்டத்தில், கொரியத் தூதுவர் லீ, கொரியக் கடன்கள் மற்றும் உதவிகளின் கீழ் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விளக்கினார். மேலும், அவற்றை விரைவாகச் செயல்படுத்துவதன் மூலம் இலங்கைப் பொருளாதாரம் அதிக பொருளாதார மற்றும் சமூக நன்மைகளை அடைய முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்தக் கலந்துரையாடலின் போது, கொரிய அரசாங்கம் இலங்கையர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளதாகவும், அதன் மூலம் வெளிநாட்டுப் பணம் அனுப்புதலை அதிகரிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் கொரிய தூதரகத்தின் துணைத் தலைவர் யூன்ஜி கான், (Eunji Kan) நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் சஞ்சீவ ஹேரத், மற்றும் பிரதிப்பணிப்பாளர் உதித பெர்னாண்டோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

01.jpeg

https://www.virakesari.lk/article/217627

ஜனாதிபதி நிதியமூடாக கிளிநொச்சியில் வட மாகாண மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு

2 months 4 weeks ago

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு நிகழ்வு

Published By: DIGITAL DESK 2

16 JUN, 2025 | 03:40 PM

image

2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு செய்துள்ளது.

அங்கு, 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 60 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு நிதி புலமைப்பரிசில் மற்றும் சான்றிதழ்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

2023/2024 பரீட்சைகள் தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட பெறுபேறுகளை கருத்தில் கொண்டு இந்த மாணவர்கள் தெரிவு, மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாகாண மட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்தின் முதல் நிகழ்ச்சித்திட்டமாக, 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, வட மாகாண மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு 2025 ஜூன் 22 ஆம் திகதி கிளிநொச்சியில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறு பாராட்டப்படவுள்ளனர்.

இதேவேளை, ஏனைய மாகாணங்களிலும் விரைவில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

https://www.virakesari.lk/article/217623

ஒருவாக்கு வித்தியாசத்தில் வவுனியா மாநகரசபையை கைப்பற்றியது சங்கு கூட்டணி!

2 months 4 weeks ago

ஒருவாக்கு வித்தியாசத்தில் வவுனியா மாநகரசபையை கைப்பற்றியது சங்கு கூட்டணி!

June 16, 2025 10:39 am

ஒருவாக்கு வித்தியாசத்தில் வவுனியா மாநகரசபையை கைப்பற்றியது சங்கு கூட்டணி!

வவுனியா மாநகரசபையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியை சேர்ந்த சுந்தரலிங்கம் காண்டீபன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த கூட்டை சேர்ந்த ஜனநாயக தேசிய கூட்டணி உறுப்பினர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதிமுதல்வராக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்

வவுனியா மாநகரசபைக்கான முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு வடக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி தலைமையில், வவுனியா மாநகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

இதன்போது முதல்வர் தெரிவு மற்றும் பிரதி முதல்வர் தெரிவுகள் பகிரங்க வாக்களிப்பின் மூலம் நடத்தப்பட்டது.

அந்தவகையில் சங்கு கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட சு.காண்டீபனுக்கு ஆதரவாக 11வாக்குகளும், தேசியமக்கள்சக்தி சார்பாக போட்டியிட்ட சிவசோதி சிவசங்கருக்கு 10 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இதனடிப்படையில் சங்கு கூட்டணியைச் சேர்ந்த சு.காண்டீபன் புதிய முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். இதனையடுத்து பிரதி முதல்வருக்கான தெரிவு இடம்பெற்றது.

பிரதி முதல்வராக ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்ட பரமேஸ்வரன் கார்த்தீபனுக்கு ஆதரவாக 11 வாக்குகளும், சுயேட்சைகுழுவை சேர்ந்த சிவசுப்பிரமணியம் பிரேமதாஸ் அவர்களுக்கு 10வாக்குகளும் ஆதரவாக அளிக்கப்பட்டது.

இதனையடுத்து ஜனநாயக தேசியகூட்டணியின் உறுப்பினர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதிமுதல்வராக தெரிவுசெய்யப்பட்டார்.

https://oruvan.com/the-sanku-alliance-captured-the-municipal-council-by-a-margin-of-one-vote/

முக்கிய வழக்குகளை கையில் எடுத்த அநுர – சிக்கவுள்ள இரு ராஜபக்சர்கள்..!

2 months 4 weeks ago

முக்கிய வழக்குகளை கையில் எடுத்த அநுர – சிக்கவுள்ள இரு ராஜபக்சர்கள்..!

namal-yosetha.webp

நாமல் ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோரிடம் குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பல வழக்குகள் தொடர்பில் விரைவில் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து குற்றப்பத்திரிகையை வெளியிடுவார்கள் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

நாட்டில் உள்ள பல விசாரணைகள் தொடர்பில் நீதவான் நீதிமன்றத்திற்கு ஏராளமான வழக்குகள் தொலைநகல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

அதன் பிறகு அந்த விடயங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.அதுதான் கடைசி படி. அதன் பிறகு நீதிமன்றத்திற்கு தண்டனை வழங்க அதிகாரம் உள்ளது.

அரச நிறுவனங்களின் முக்கியமான பங்கு, வழக்குகளை விசாரித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதாகும்.

இப்போது கெஹெலிய ரம்புக்வெல்ல, மேர்வின் சில்வாவின் விசாரணை முடிவுக்கு வருகிறது. குற்றப்பத்திரிகை மிக விரைவில் ஒப்படைக்கப்படும்.

இந்நிலையில் கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பாக நமாலுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது. யோசிதாவிடமும் குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பல வழக்குகள் தொடர்பில் விரைவில் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து குற்றப்பத்திரிகையை வெளியிடுவார்கள். அதன் பிறகு, நீதிமன்றத்திற்குச் செல்வதே பணி. என கூறியுள்ளார்.

https://akkinikkunchu.com/?p=329020

வலி. வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள்! - 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேற்றப்படவில்லை!

2 months 4 weeks ago

6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேற்றப்படவில்லை!

வலி. வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள்!

adminJune 16, 2025

vali-north.jpg?fit=1067%2C577&ssl=1

வலிகாமம் வடக்கில் இருந்து தாம் வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னமும் தம்மை தமது சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தவில்லை என அப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ளபோதும் எங்களின் காணிகள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இன்னமும் இராணுவத்தினரின் கட்டுபாட்டிலையே உள்ளது.

1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் ஆண்டு எமது சொந்த இடங்களில் இருந்து யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டோம்.

நாம் வெளியேறினதும், எமது பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயம் என இலங்கை இராணுவம் அறிவித்துக் கையகப்படுத்திக்கொண்டது.

அந்தப் பகுதியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட நாம் பல இடங்களில் குடியேறி உள்நாட்டுக்குள்ளையே அகதிகளாக வாழ்கின்றோம்.

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் எமது  காணிகள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

அந்தக் காணிகளை விடுவிக்கவேண்டும் என்றும் – இடம்பெயர்ந்த மக்களைச் சொந்த இடங்களில் மீள்குடியமர அனுமதிக்கவேண்டும் என்றும் பல ஆண்டுகளாகக் கோரிக்கைகளை விடுத்து வருகின்ற போதிலும், அவை இன்னமும் இராணுத்தால் விடுவிக்கப்படவில்லை.

இடையிடையே சில பிரதேசங்களில் மீள்குடியமர்வு அனுமதிக்கப்பட்டபோதும், இன்னமும் பெரும் நிலப்பரப்பு இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டு – வளம்மிக்க அந்தப் பிரதேசத்தின் பயன்கள் இராணுவத்தால் சுரண்டப்பட்டு வருகின்றது.

வலிகாமம் வடக்கில் இன்னமும் 2 ஆயிரத்து 700 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தப் பிரதேசத்தை பாதுகாப்பு என்ற போர்வையில் இராணுவத்தினர் கையகப்படுத்தியிருந்தாலும், அந்தப் பிரதேசத்தின் வளங்களைச் சுரண்டி வருமானம் ஈட்டுவதிலேயே இராணுவம் முனைப்பாக இருக்கின்றது.

தற்போது வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள  தமிழ் மக்களின் காணிகளில் 50 சதவீதமானவற்றில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளையும், பண்ணைகளை யும் முன்னெடுக்கின்றனர்.

10 சதவீதமான காணிகளில் மைதானங்கள், வர்த்தக நிலையங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் என்பன இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து பெறப்படும் விவசாய அறுவடையையும், அவற்றின் ஊடான வருமானத்தையும் இராணுவமே பெற்றுக்கொண்டுவருகின்றது.

அதேநேரம், ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் தையிட்டிப் பகுதியில் விடுவிக்கத் தயாராகவிருந்த பெண்கள் விடுதி ஒன்றில் தற்போது இராணுவத்தினால் வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில், இராணுவத்தினர் பிரதேச செயலகங்களிடமோ அல்லது உரிய அரச நிர்வாகங்களிலோ எந்தவித அனுமதியும் பெறாது கட்டுமானங்களையும், வர்த்தக நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்றனர்.

அதேபோன்று காங்கேசன்துறையில் தல்செவன விடுதியைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதி, அங்குள்ள சில வீதிகள் இன்னமும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.

விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மறைமுகமாக இராணுவத்தின் ஆளுகை தற்போதும் தொடர்கின்றது.

வலிகாமம் வடக்கைச் சொந்த இடமாகக் கொண்ட 6 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் தற்போதும் பல்வேறு  இடங்களில் இடர்பெயர்ந்து வாழ்கின்றனர்.

அவர்களின் விவசாய நிலங்கள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து பொருளாதார நெருக்கடிகளுடன் தங்களின் வாழ்க்கையைக் கொண்டு நகர்த்துகின்றனர்.

பாடசாலைகள், பாடசாலை மைதானங்கள், ஆலயங்கள், மயானங்கள் எனப் பலவும் இன்னமும் இராணுவத்தின் வசமே இருக்கின்றது.

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றோம் என தெரிவித்தனர்.

https://globaltamilnews.net/2025/216869/

வீதி விபத்துகளை தடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள் - பிரதமர்

3 months ago

15 JUN, 2025 | 12:25 PM

image

(நமது நிருபர்)

உயிர்களைப் பாதுகாப்பதை தமது பொறுப்பாக கருதி வீதி விபத்துகளைத் தடுப்பதற்குப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் சட்டங்களினால் மட்டுமன்றி சிறந்த தெளிவோடு அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம் மற்றும் இலங்கை பொலீஸ் இணைந்து '' Tack care '' வீதியைப் பாதுகாப்போம்' என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட வீதி விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றுமுன்தினம் கொழும்பு றோயல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை பொலீஸ் உத்தியோகத்தர்கள் வீதி விபத்துக்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை பாடசாலை மாணவர்களுக்கு நடத்தினர். இருபத்தைந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இருபத்தைந்து பாடசாலைகளுக்கு பாடசாலை வாகன ஒழுங்குபடுத்துனர்களுக்குத் தேவையான உபகரணங்களை விநியோகிக்கும் நிகழ்வும் பிரதமரின் தலைமையில் இதன்போது நடைபெற்றது.

அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய,

இந்தத் திட்டத்தை கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தால் மேற்கொள்ளப்படும் மற்றொரு முக்கியமான திட்டம் என்று குறிப்பிடலாம். வீதி விபத்துகள் இன்று நாட்டில் பெரும் பேரழிவாக மாறியுள்ளன.

இதில் கவலைதரும் விடயம் என்னவென்றால் எமக்கு தேவையும் அர்ப்பணிப்பும் இருந்தால் இவை அனைத்தும் தடுக்கப்படக்கூடியவை என்பதாகும்.

வீதி விபத்துகளால் தினமும் ஏழு பேர் இறக்கின்றனர். இந்த துயரத்தை நாம் நிறுத்த வேண்டும். வீதி விபத்துகளில் இறப்பவர்கள் ஊனமுற்றவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் அனைவரும் இந்த நாட்டின் குடிமக்களே.

ஒருவரின் தாய் தந்தை சகோதரன் சகோதரி அல்லது குழந்தை விபத்தில் சிக்கினால் அது அவர்கள் அனைவரையும் பாதிக்கிறது. இந்த விபத்து புள்ளிவிபரங்கள் வெறும் எண்ணிக்கைகள் அல்ல. அவை ஒரு பெரிய கதையை எமக்குச் சொல்கின்றன.

வீதி விபத்துகளைத் தடுப்பது என்பது சட்டத்தை கடைப்பிடிப்பது மட்டுமல்ல மற்றவர்களைப் பற்றி சிந்திக்கும் உயிர்களைப் பாதுகாப்பதை தனது பொறுப்பாகக் கருதும் இரக்கத்துடன் செயற்படும் ஒரு சமூகத்தை உருவாக்குவதும் அவசியம். அரசாங்கம் அத்தகைய அழகான நாட்டை உருவாக்கவே முயற்சிக்கிறது.

தண்டனைக்கு முன் கல்வி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன் முன்னுதாரணம். குற்றச்சாட்டுக்கு முன் கவனம் ஆகியவை அவசியம்.

பெற்றோர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். சாரதிகள் உயிர்களைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். போக்குவரத்து விதிகள் குறித்து பிள்ளைகளுக்கு தெளிவூட்டுவதைப் போன்றே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு பொலிஸார் மக்களுக்கு அதுபற்றி விளிப்புணர்வூட்ட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/217501

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கீடு மிகைப்படுத்தப்பட்டுள்ளது; வெரிட்டே ரிசேர்ச் ஆய்வில் வெளிக்கொணர்வு

3 months ago

Published By: VISHNU

15 JUN, 2025 | 05:56 PM

image

(எம்.வை.எம்.சியாம்)

இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கீடு சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலரினால் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வொன்றில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

சீன மக்கள் வங்கியுடன் (People’s Bank of China – PBoC) உள்ள 10 பில்லியன் (அ.டொலர் 1.4) பெறுமதியான நாணய பரிமாற்றத்தை ஒதுக்கீடாக கருதியமையால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக வெரிட்டே ரிசேர்ச் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட

ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தற்போது சர்வதேச அளவில் வெளிநாட்டு ஒதுக்கீடாக கருதப்பட வேண்டிய தரநிலையை பூர்த்தி செய்யவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள “Balance of Payments Manual, 6th edition” அறிக்கைக்கு அமைய வெளிநாட்டு சொத்து இருப்பானது திரவத்தன்மையை கொண்டிருக்க வேண்டும் அல்லது நிபந்தனையற்ற முறையில் உடனடியாகக் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

ஆனால் நாணய பரிமாற்றம் இதனை நிறைவேற்ற தவறியுள்ளது. ஏனெனில் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்டுபட்டு காணப்படுகின்றது. எதிர்காலத்தில் குறித்த நிபந்தனைகள் நீக்கப்படுவதற்கான சாத்தியமும் காணப்படுகின்றது. அந்த வகையில் வெளிநாட்டு ஒதுக்கீடாக அங்கீகரிக்கப்படாத சொத்துகளைச் சேர்ப்பதனால் இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கீடு மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகவே கருதப்படுகின்றது.

உதாரணமாக 2025 மே மாதத்தில் மத்திய வங்கி அறிவித்த உத்தியோகபூர்வ ஒதுக்கீடு 6.3 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. சர்வதேச தரநிலைக்கேற்ப கணக்கிட்டிருந்தால் இது சுமார் 4.9 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்திருக்க வேண்டும்.

மேலும் இந்த தவறான கணக்கீட்டைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் இரண்டு விதமான கணக்கீடுகளை (சீன மக்கள் வங்கி) சேர்த்ததும் சேர்க்காததும் பயன்படுத்தி ஒரு காலப்புள்ளியிலிருந்து மற்றொரு காலப்புள்ளிவரை வெளிநாட்டு ஒதுக்குகளின் அதிகரிப்பை ஒப்பிட்டு மதிப்பீடு செய்ய முயற்சித்துள்ளனர்.

இதனால் 2022 ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் வெளிநாட்டு ஒதுக்கங்களின் அதிகரிப்பு தொடர்பில் தவறான தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. சர்வதேச தரநிலைகளுடன் ஒத்துபோகும் பரிந்துரைக்கப்பட்ட அணுகுமுறை என்னவெனில் IMF தனது ஊழியர் அறிக்கைகளில் 'பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு ஒதுக்கம் ( (usable reserves)” )' எனக் குறிப்பிடும் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு ஒப்பீடு செய்வதே ஆகும். இதில் பரிமாற்ற ஒப்பந்தம் மற்றும் வெளிநாட்டு ஒதுக்க சொத்துகளுக்கான வரையறையை பூர்த்தி செய்யாத எந்தவொரு சொத்தும் உள்வாங்கப்படாது.

https://www.virakesari.lk/article/217549

தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தரப்புடன் அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும் - அமைச்சர் சந்திரசேகர்

3 months ago

15 JUN, 2025 | 12:59 PM

image

தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட துரோகியென முத்திரைக்குத்தப்பட்ட தரப்புடன், அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும். அப்படியான அரசியலை முன்னெடுக்கும் தரப்பின் முகத்திரை தற்போது கிழிந்துவிட்டது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ். சாவக்கச்சேரியில் சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

நாடு தழுவிய ரீதியில் உள்ளூராட்சி சபைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. வடக்கிலும் இதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது. தெற்கில் கடைபிடித்த அணுகுமுறையை இதுவிடயத்தில் நாம் வடகிழக்கில் கடைப்பிடிக்கவில்லை. இங்கு நடுநிலை வகித்தோம்.

நாம் வாக்கெடுப்பில் பங்கேற்றிருந்தால் இங்குள்ள தமிழ்க் கட்சிகளின் கனவு சிதைக்கப்படும். மனக்கோட்டை, மண்கோட்டையாக மாறிவிடும் என்பதை சொல்லி வைக்க விரும்புகின்றோம்.

இங்கு யார் ஆட்சி செய்தாலும் அந்த ஆட்சிக்கு நாம் உதவியாக இருப்போம். ஏனெனில் மக்களுக்கு சேவை செய்வதே எமது முதன்மை நோக்கமாகும்.

உள்ளூராட்சி சபைகள் ஊடாக மக்களுக்கு கிடைக்கப்பெறும் சேவைகள் சரியாக சென்றடைய வேண்டும். அதற்காக எமது உறுப்பினர்கள் தீவிரமாக செயற்படுவார்கள்.

அதேபோல ஊழல், மோசடிகள் இடம்பெறும் பட்சத்தில் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கும் எமது உறுப்பினர்கள் செயற்படுவார்கள். மக்களை ஏமாற்றும் அரசியலை நாம் முன்னெடுக்கவில்லை.

சாக்கடை அரசியல் செய்யவும் தயாரில்லை. அவ்வாறு செய்ய நினைத்திருந்தால் யாழ். மாநகரில் இன்று வேறொரு நபரே மேயராக வந்திருக்கக்கூடும்.

கடந்த காலங்கள் முழுவதும் தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட துரோகிகள் என முத்திரை குத்தப்பட்ட ராஜபக்சக்களுடன் நெருங்கி செயற்ப்பட்டவர் எனக் கூறப்பட்ட, மக்களுக்கு எதிராக அராஜாங்களை கட்டவிழ்த்துவிட்டவர் ஊடகவியலாளர்களைக் கொன்றவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் கூட்டு சேரும் நிலைமை காணப்படுகின்றது. இதனை மக்களும் இன்று புரிந்துகொண்டுள்ளனர்.

மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக அல்ல, தமது காவாலித்தனமான அரசியலை தக்கவைத்துக்கொள்வதற்காகவே இவர்கள் இவ்வாறு ஆசியமைக்கின்றனர்.

இப்படியானவர்கள்தான் தேசிய மக்கள் சக்தியை இனவாதகக் கட்சியெனவும், வாக்களிக்க வேண்டாம் எனவும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் அவர்கள் யாரென்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

அதேபோல தெற்கிலும் கூட்டுக்களவாணிகள் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கின்றனர். கடந்த காலங்களில் ஒருவரையொருவர் எப்படி விமர்சித்துக்கொண்டனர். ஆனால் வெட்கம் இல்லாமல் அதிகாரத்துக்காக - கொள்கை துறந்து கூட்டு சேர்கின்றனர் என்றார்.

https://www.virakesari.lk/article/217500

யாழில் வாள் வெட்டு - நால்வர் படுகாயம்

3 months ago

Published By: DIGITAL DESK 3

15 JUN, 2025 | 04:24 PM

image

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று சனிக்கிழமை (14) இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு குழுக்குளுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், அது மோதலாக மாறி வாள்வெட்டு நடைபெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த நால்வர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/217533

கடற்படை வசமுள்ள காணிகளை அளவிடும் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன்

3 months ago

கடற்படை வசமுள்ள காணிகளை அளவிடும் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன்

General15 June 2025

1749954880_2120384_hirunews.jpg

மன்னார் - பள்ளிமுனை பகுதியில், கடற்படையினரின் வசமுள்ள காணிகளை அளவிடும் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும் என, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

மன்னாரில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர், குறித்த காணிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் கடிதங்கள் அனுப்பியிருந்த போதிலும், தற்போது காணி அளவீடு தொடர்பான அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 

மக்களுக்கு இந்தக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும், அவற்றைக் கடற்படையினர் அபகரிக்கும் செயல்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாகவும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரப்படுவது தொடர்பில் குறித்த செய்தியாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதா? இல்லையா? என்பதைக் கட்சியே தீர்மானிக்கும் எனவும், மூன்றாம் தரப்பின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்பட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://hirunews.lk/tm/407181/the-process-of-measuring-lands-owned-by-the-navy-should-be-abandoned-selvam-adaikalanathan

கலாநிதி கீதா கோபிநாத் இன்று இலங்கை செல்கின்றாா்.

3 months ago

கலாநிதி கீதா கோபிநாத் இன்று இலங்கை செல்கின்றாா்.

adminJune 15, 2025

geetha.jpg?fit=600%2C400&ssl=1

சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் இன்று (15)  இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ  பயணமாக  இலங்கை செல்கின்றாா்.   அவா் தனது  பயணத்தின் போது, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, கடன் மற்றும் நிர்வாகம்” என்ற தலைப்பில் 2025 ஜூன் மாதம் 16 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ள மாநாட்டில்  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய சீர்திருத்தத் திட்டத்தின் முதல் பாதி நிறைவடைந்துள்ள நிலையில் நடைபெறவுள்ள  இந்த மாநாட்டில், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை அடைவதில் உள்ள அனுபவங்கள், கடன் மறுசீரமைப்பு மற்றும் நிர்வாகம் மற்றும்  எதிா்கொள்ளவுள்ள சவால்கள் குறித்து கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

https://globaltamilnews.net/2025/216841/

மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு வழங்காமல் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் அரசாங்கம் - சஜித் பிரேமதாச

3 months ago

Published By: DIGITAL DESK 2

14 JUN, 2025 | 07:58 PM

image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றன. இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும். மருந்து தட்டுப்பாட்டுக்கு ஒரு தீர்வை வழங்காமல், மக்களின் அடிப்படை உரிமையையும் மனித உரிமையையும் அரசாங்கம் மீறி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சுமத்தியுள்ளார்.

மருந்து தட்டுப்பாடு தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு எதிர்க்கட்சி தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

நாட்டில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றன. இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும். இலவச சுகாதாரம் என்பது மக்களின் மனித உரிமையாகும். இலவச சுகாதார கட்டமைப்பினுள் வினைதிறனான சேவைகளைப் பெறுவது நாட்டு மக்களுக்கு அடிப்படை உரிமையாக அமைந்து காணப்பட்டாலும், இத்தருணத்தில் நமது நாட்டின் சுகாதார கட்டமைப்பில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதே இதற்குக் காரணமாகும். புற்றுநோய் நோயாளிகள், இதய நோயாளிகள், உயர் இரத்த அழுத்த நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் மருந்துகளுக்கும், வலி நிவாரணிகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கும் கடுமையான தட்டுபாடு நிலவுகின்றன. கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் 180 க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு இவ்வாறு தட்டுப்பாடு நிலவுகிறது.

மருத்துவமனை கட்டமைப்பில் நிலவும் மருந்து தட்டுபாட்டுப் பிரச்சினைய பாராளுமன்றத்தில் நான் முன்வைத்தேன். இலவச சுகாதாரப் பராமரிப்பின் கீழ் அரச மருத்துவமனைகளுக்குச் சென்றாலும் நோயாளர்களுக்கு மருந்துகள் கிடைப்பதில்லை.

தனியார் மருத்துவ நிறுவனங்கள் மூலம் அதிக விலைக்கு மருந்துகளைப் பெற வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனை இலவச சுகாதார சேவையாக கருத முடியாது. மாறாக கட்டணம் செலுத்தும் சுகாதார சேவையாகவே காணப்படுகின்றன.

நமது நாட்டின் நலன்புரி பொருளாதாரம் மற்றும் நலன்புரி அரசில் இலவச சுகாதார சேவைகளை திறம்பட செயல்படுத்த அமைச்சர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஒட்டுமொத்த அரசாங்கமும் முழு மூச்சோடு பாடுபட வேண்டும்.

மருந்து தட்டுப்பாட்டுக்கு ஒரு தீர்வை வழங்காமல், மக்களின் இந்த அடிப்படை உரிமையையும் மனித உரிமையையும் அரசாங்கம் மீறி வருகின்றது. அரசாங்கம் எந்த தீர்வையும் வழங்காத ஒரு கொள்கையையே பின்பற்றி வருகிறது. இது குறித்து பாராளுமன்றத்தில் வினவப்பட்டாலும், அரசாங்க தரப்பில் இருந்து இதற்கு எந்த தீர்வுகளும் வழங்கப்படவில்லை.

மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ள இந்நேரத்தில், நாட்டு மக்களை உயிருடன் வைத்திருக்கத் தேவையான மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்.

பல ஆண்டுகளாக நடைமுறையில் காணப்படும் விலைமனு செயல்முறையை மட்டும் சுட்டிக்காட்டாமல், இந்த மருந்துப் பிரச்சினைக்கு அவசரத் தீர்வை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். மக்களின் உயிர்வாழ்வை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாக அமைந்து காணப்படுவதனால், மனித உயிர்களைக் கருத்தில் கொண்டு இந்த கடுமையான பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்குமாறு வலியுறுத்துகின்றோம்.

https://www.virakesari.lk/article/217453

அரசாங்கம் திட்டமிடுவதைப் போன்று என்னை ஒருபோதும் கைது செய்ய முடியாது; உதய கம்மன்பில

3 months ago

14 JUN, 2025 | 07:20 PM

image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி தனது ஜேர்மன் விஜயத்தின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் நெடியவன் என்பவரை சந்திக்கவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருப்பதாக நான் தெரிவித்திருந்தேன். அதனை அடிப்படையாக்க கொண்டு நான் இனவாதத்தை தூண்டுவதாகக் குறிப்பிட்டு என்னை கைது செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. சிறையிலடைப்பதாகக் கூறியோ சுட்டுக் கொல்வோம் எனக் கூறியோ என்னை அச்சுறுத்தி என் குரலை ஒடுக்க முடியாது என முன்னாள் அமைச்சரும் பிவிதுரு ஹெல உருமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

சனிக்கிழமை (14) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜே.வி.பி.யின் செயற்பாட்டாளர்களே என்னை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்தின் பல்வேறு தவறுகளை நான் ஆதாரத்துடன் நாட்டுக்கு வெளிப்படுத்துவதால் தான் என்னை கைது செய்வதற்கு தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நான் இனவாதத்தைத் தூண்ட முயற்சித்ததாகக் குறிப்பிட்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச சட்டத்தின் கீழ் என்னை கைது செய்ய அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.

இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் நீண்ட காலம் பிணை இன்றி என்னை விளக்கமறியலில் வைக்க முடியும் என்பதே அரசாங்கத்தின் திட்டமிடலாகும்.

அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவே எனக்கெதிராக இரு ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் என்னிடம் வாக்குமூலம் பெற்று அதன் பின்னர் கைது செய்வதே இதன் நோக்கமாகும்.

ஆனால் அரசாங்கத்தின் திட்டத்துக்கமைய என்னை கைது செய்ய முடியாது. காரணம் என் மீது அவ்வாறு எந்தக் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை.

நான் எந்த வகையில் இனவாதத்தை தூண்டியிருக்கின்றேன் என்பதை இவர்கள் முதலில் தெளிவுபடுத்த வேண்டும். கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்ததாக நான் கூறியதாகத் தெரிவித்தனர்.

ஆனால் இது தொடர்பில் சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அமில சஞ்சீவவினால் தான் முதன் முதலில் சந்தேகம் வெளியிடப்பட்டது.

ஜனாதிபதி தனது ஜேர்மன் விஜயத்தின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் நெடியவன் என்பவரை சந்திக்கவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருப்பதாக நான் தெரிவித்திருந்தேன்.

இதனை அடிப்படையாகக் கொண்டும் என்னை கைது செய்ய முடியுமா என்று கலந்தாலோசித்து வருகின்றனர். என்னை எவ்வாறு கைது செய்வது என்பது குறித்து சிந்திப்பதை விடுத்து, வெளியாகியுள்ள இந்த செய்திகள் குறித்து உண்மையை வெளிப்படு;த்துமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

எவ்வாறிருப்பினும் அரசாங்கம் திட்டமிடுவதைப் போன்று என்னை ஒருபோதும் கைது செய்ய முடியாது. நான் ஒரு சட்டத்தரணி என்பதால் மிகுந்த அவதானத்துடன் சொற்களை அல்லது வசனங்களைப் பிரயோகிப்பேன்.

பிள்ளையானைப் போன்று என்னையும் சட்டத்துக்கு விரோதமாக கைது செய்து, மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்துவதை தடுத்து வைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கக் கூடும்.

உதய கம்மன்பிலவை சிறையிலடைப்பதாவோ சுட்டுக் கொல்வதாகவோ கூறி மிரட்ட முடியாது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் தெளிவாகக் கூறிக் கொள்கின்றேன் என்றார்.

https://www.virakesari.lk/article/217474

பதவியில் உயிர்வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள்; காணாமல்போனோரின் உறவுகளின் சங்கம்

3 months ago

14 JUN, 2025 | 07:18 PM

image

தமிழ் அரசியல்வாதிகளின் ஒரே குறிக்கோள் பதவியில் உயிர்வாழ்வதே. அவர்கள் எந்த தொலைநோக்கு பார்வையையும் இல்லாதவர்கள் இதனால் நாங்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை என தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் சனிக்கிழமை (14) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

போரின் இறுதிக் கட்டத்தின் போதும் அதற்குப் பின்னரும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளின் தமிழ் தாய்மார்களான எங்கள் போராட்ட பயணம் 3036 வது நாளாக, தொடர்கிறது.

எங்கள் குழந்தைகளை கண்டுபிடிக்க வேண்டுமென்ற தவிப்போடு மட்டுமன்றி, இனப்படுகொலையிலிருந்து எதிர்காலத் தலைமுறையினரைப் பாதுகாக்கவும், தமிழர் இறையாண்மைக்கு சர்வதேச ஆதரவைக் கோரவும், அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒரு காலத்தில் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அழைப்பு விடுக்கிறோம்.

அரசியல் தீர்வு ஒன்றுதேவை என யுத்தத்தின் போது இலங்கை அரசுக்கும் அதன் பின்னணியில் இருந்த பங்களிப்பாளர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம், வாக்குறுதி அளித்தது. ஆனால் இன்று வரை எந்த தீர்வும் இல்லை. எங்கள் கண்ணீர் மட்டும் தொடர்கிறது.

இன்று, அமைதிக்கு பதிலாக, இலங்கையின் வடகிழக்கு இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. புலனாய்வு அமைப்புகள் பொதுமக்கள் வாழ்க்கையை ஆதிக்கம் செலுத்துகின்றன.

அதே நேரத்தில் அரசுடன் தொடர்புடைய போதைப்பொருள் வலையமைப்புகள் மற்றும் பாலியல் சுரண்டல் தமிழ் இளைஞர்களையும் பெண்களையும் அச்சுறுத்துகின்றன.

நாங்கள் தமிழ் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. அவர்களின் ஒரே குறிக்கோள் பதவியில் உயிர்வாழ்வது என்று தெரிகிறது. அவர்கள் எந்த தொலைநோக்கு பார்வையையும், தைரியத்தையும், சர்வதேச ஈடுபாட்டின் மூலம் இறையாண்மையைப் பெற்ற பிற ஒடுக்கப்பட்ட நாடுகளிடமிருந்து கற்றுக்கொள்ள எந்த முயற்சியையும் காட்டவில்லை.

அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுப்பேற்க வைக்கவோ அல்லது போருக்குப் பிறகு தமிழ் மக்கள் அனுபவித்த துரோகத்தை சர்வதேச சமூகத்திற்கு நினைவூட்டவோ தவறிவிட்டனர்.

எனவே தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஒவ்வொரு தமிழரும் எழுந்து சர்வதேச ஈடுபாட்டைக் கோர வேண்டும் என்றும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

தமிழர் இறையாண்மை மட்டுமே தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும், முழுக் குடிமக்களுக்கும் நிலையான அமைதியை கொண்டு வரும் என்றனர்.

IMG_20250614_124910.jpg

IMG_20250614_124502.jpg

IMG_20250614_124554.jpg

IMG_20250614_124813__1_.jpg

https://www.virakesari.lk/article/217475

மட்டக்களப்பில் யானை - மனித மோதலை குறைக்கும் முகமாக விழிப்புணர்வு வேலைத்திட்டம்

3 months ago

14 JUN, 2025 | 04:28 PM

image

மட்டக்களப்பில் யானை - மனித மோதலை குறைக்கும் முகமாக முதற்கட்ட விழிப்புணர்வு வேலைத்திட்டம் வெள்ளிக்கிழமை (13) மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தும்பாலஞ்சோலை கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இவ் விழிப்புணர்வு நிகழ்வு தும்பாலஞ்சோலை கிராமத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள சுற்றுவட்டார பொறுப்பதிகாரி நா. சுரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், செங்கலடி பிரதேச சபை ஊழியர்கள், வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் உள்ளிட்டோருடன் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

தும்பாலஞ்சோலை கிராமத்தில் யானைகள் அதிகம் வரும் காடுகளாக உள்ள வனாந்தர பகுதி சிரதானம் செய்யப்பட்டதுடன், அங்கு வீதிகளில் மின் விளக்குகளும் பொருத்தும் நடவடிக்கையும் இடம்பெற்றது.

இதேவேளை, குறித்த கிராமங்களில் வீடு வீடுடாகச் சென்று யானை வருவதை தடுக்கும் முகமாக மக்களுக்கான விழிப்புணர்வு செய்யப்பட்டதுடன் , துண்டுப்பிடசுரமும் வினியோகிக்கப்பட்டது.

0614__2__10_.jpg

0614__2__4_.jpg

0614__2__5___1_.jpg

0614__2__2_.jpg

https://www.virakesari.lk/article/217455

Checked
Tue, 09/16/2025 - 01:39
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr