ஊர்ப்புதினம்

மஹவ – அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு இந்தியாவின் முதல் தவணை!

3 months ago

New-Project-5.jpg?resize=750%2C375&ssl=1

மஹவ – அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு இந்தியாவின் முதல் தவணை!

மஹவ – அநுராதபுரம் ரயில் பதையில் மேம்பட்ட சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்பு நிறுவுவதற்கான முதல் தவணையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தத் தவணைத் தொகை சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும் (770 மில்லியன் ரூபா).

இந்த திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் 14.89 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக வழங்க முன்மொழிந்திருந்தாலும், 2024 டிசம்பரில் இலங்கை ஜனாதிபதியின் இந்தியாவிற்கு அரச முறைப் பயணத்தின்போது இது மானியமாக மாற்றப்பட்டது.

இது இந்திய பொதுத்துறை நிறுவனமான இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

தண்டவாளங்களில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் ரயில் செல்லும் வகையில் வடக்குப் பதை இதன் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மேம்பட்ட சமிக்ஞை அமைப்பு பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, ரயில் சேவைகளின் அதிர்வெண் மற்றும் செயல்திறனையும் அதிகரிக்கும்.

இலங்கையில் பல ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு இந்தியா ஆதரவளித்துள்ளது.

இலங்கையின் ரயில்வே துறைக்கு இந்தியாவின் ஒட்டுமொத்த நிதி உதவி சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

https://athavannews.com/2025/1441417

கிளிநொச்சியில் புலிகளின் ஆயுதங்களை தேடி மேற்கொள்ளப்பட்ட அகழ்வு இடைநிறுத்தம்!

3 months ago

Published By: DIGITAL DESK 2

31 JUL, 2025 | 04:13 PM

image

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியானது எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி - தர்மபுரம்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவு ஏ-35 பிரதான வீதியின் அருகே தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதம் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக பொலிஸார்  வியாழக்கிழமை (31) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமீல்  முன்னிலையில் அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸார், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்ட போது எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் குறித்த அகழ்வுப்பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

WhatsApp_Image_2025-07-31_at_15.53.20_21WhatsApp_Image_2025-07-31_at_15.53.21_9e

https://www.virakesari.lk/article/221464

கிணறு வெட்டும் தேவை உள்ளவர்கள் யாரோ விளையாட்டு காட்டிட்டாங்க!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் விடுதலை கோரிக்கை ; நீதி அமைச்சருடன் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் நேரடி சந்திப்பு

3 months ago

Published By: DIGITAL DESK 2

31 JUL, 2025 | 04:19 PM

image

ஜேவிபியினருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது போன்று தமிழ் அரசியல் கைதிகளையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு நீதி அமைச்சரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தை தான் காதுகளால் கேட்கவில்லை, இதயத்தால் கேட்பதாகவும் தெரிவித்த நீதி அமைச்சர் சட்ட கட்டமைப்பிற்குள் இருந்து இந்த பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில், நீதி அமைச்சருடனான சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு நீதி அமைச்சின் அலுவலகத்தில், நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் பிரதிநிதிகள், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் குடும்ப உறுப்பினர்களுடன் சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பில், 15 முதல் 30 வருடங்கள் ஸ்ரீலங்கா சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்கள் உறவினர்களின் நீண்டகால சிறைவாசம் காரணமாக  தாங்கள் எதிர்கொண்ட உளவியல், சமூக மற்றும் பொருளாதார சவால்களை கண்ணீருடன் எடுத்துரைத்தனர். தங்களின் அன்புக்குரியவர்களை விரைவாக விடுதலை செய்யுமாறு அமைச்சரிடம் கூட்டாக கோரிக்கை விடுத்தனர்.

இலங்கையின் இன முரண்பாடுகளால் உருவான போரின் விளைவுகளான தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில், மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண்பது அவசியமாகும்.

கடந்த காலத்தில், இலங்கை - இந்திய ஒப்பந்தம், விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுக்கள், ஜே.வி.பி.க்கு பொது மன்னிப்பு, மற்றும் போருக்கு பின்னர் 12,000 விடுதலைப் புலிகள் விடுவிக்கப்பட்டமை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டது . 

இந்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, பல வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளில் விடுதலையினை மனிதாபிமான ரீதியில் முன்னெடுக்குமாறு குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை முன்வைத்தது.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் ஊடாக கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

நீதி அமைச்சர் ஹர்ஷ நானயக்கார கோரிக்கைகளை, தான் "காதுகளால் கேட்கவில்லை, இதயத்தால் கேட்கிறேன்" என்று குறிப்பிட்டு,  சட்ட கட்டமைப்பிற்குள் இருந்து இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

அரசியல் கைதிகளின் பொது மன்னிப்பு சார்ந்த விடயங்கள் ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் வருகின்றமையால், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று தொடர்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பானது கடந்த ஜனவரி 2025 முதல் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனான எழுத்துமூல கோரிக்கைக்கு அமைவாக இடம்பெற்றது என்றார்.

https://www.virakesari.lk/article/221462

வட மாகாண உற்பத்திப் பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகள் உருவாக்கப்படவேண்டும் - ஆளுநர் வேதநாயகன்

3 months ago

31 JUL, 2025 | 01:00 PM

image

ஏற்றுமதியை அதிகரிக்காமல் வருமானத்தை உயர்த்த முடியாது ஏற்றுமதியை அதிகரிக்கவேண்டுமானால், வடக்கு மாகாணத்தின் மிகச்சிறந்த வளமாக உள்ள விவசாயம் மற்றும் கடற்றொழிலின் உற்பத்திப் பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகள் உருவாக்கப்படவேண்டும். தொழிற்சாலைகள் உருவாக்கப்படுவதன் ஊடாக எமது வேலைவாய்ப்பு பிரச்சினையையும் தீர்க்கக் கூடியதாக இருக்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். 

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சங்கம், றொட்டரி – யாழ்ப்பாணத்துடன் இணைந்து வட மாகாணத்தில் ஏற்றுமதிக்குத் தயாரான உற்பத்தியாளர்களை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அரியாலை விருந்தினர் விடுதியில்  புதன்கிழமை (30)  காலை  நடைபெற்றது.

இந்த நிகழ்வில்  கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

எமது பிராந்தியத்தின் ஏற்றுமதி சுற்றுச்சூழலை வலுப்படுத்த ஒரு பகிரப்பட்ட தொலைநோக்கு பார்வையுடன் ஒன்றிணைந்த இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சங்கம், யாழ்ப்பாண மேலாளர்கள் மன்றம், வடக்கு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

வட மாகாணம், மனிதத் திறமை, விவசாய பன்முகத்தன்மை, பாரம்பரிய கைவினைத்திறன் மற்றும் வளர்ந்து வரும் தொழில்முனைவோர் தளத்தால் நிறைந்துள்ளது.

இருப்பினும், சந்தை அணுகல், தரச் சான்றிதழ் மற்றும் சிறு உற்பத்தியாளர்களை வெற்றிகரமான ஏற்றுமதியாளர்களாக மாற்றக்கூடிய வெளிப்பாடு ஆகியவற்றில் நாங்கள் நீண்ட காலமாக சவால்களை எதிர்கொண்டுள்ளோம்.

இந்த முயற்சி ஒரு மாற்றத்தக்க வாய்ப்பைக் குறிக்கிறது. இந்த வியாபாரத்திலிருந்து வியாபாரம் (Business 2 Business (B2B) மூலம் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், ஆதரவு நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குநர்களை ஒன்றிணைப்பதன் மூலம், நாங்கள் பின்வரும் அடிப்படைகளை அமைத்துக்கொடுக்க முயல்கின்றோம். 

நேரடி வணிக இணைப்புகள், அறிவுப் பகிர்வு மற்றும் நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஏற்றுமதி - தயார்நிலை ஆதரவு.

இத்தகைய இலக்கு தலையீடுகள் தற்போதுள்ள இடைவெளிகளைக் குறைக்கும் மற்றும் வடக்கில் உற்பத்தியாளர்கள் சர்வதேச தரங்களை பூர்த்தி செய்ய, செயற்பாடுகளை அதிகரிக்க மற்றும் அவர்களின் சந்தைகளை பல்வகைப்படுத்த உதவும்.

இது பொருட்களை ஏற்றுமதி செய்வது மட்டுமல்ல - இது மீண்டும் கட்டியெழுப்பவும் செழிக்கவும் உறுதிபூண்டுள்ள ஒரு பிராந்தியத்திலிருந்து நம்பிக்கை, புதுமை மற்றும் மீள்தன்மையை ஏற்றுமதி செய்வது பற்றியதாகவும் அமைகின்றது.

விவசாய வணிகம் முதல் கடல்வளம் வரை, பாரம்பரிய கைவினைப்பொருட்கள் முதல் தொழில்நுட்ப சேவைகள் வரை, நமது உள்ளூர் தொழில்களின் வலிமையை பயன்படுத்திக்கொள்ளுமாறு வருகைதரும் அனைத்து ஏற்றுமதியாளர்களையும் முதலீட்டாளர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் வழிகாட்டுதல், நிபுணத்துவம் மற்றும் தொடர்பாடல்கள் மூலம், வடக்கில் ஒரு துடிப்பான ஏற்றுமதி சமூகத்தை உருவாக்க முடியும்.

இந்தச் செயற்பாட்டுக்கு எமது மாகாணசபை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என உறுதிப்பட இங்கு நான் தெரிவிக்கின்றேன். தடைகளை நீக்கவும், உள்கட்டமைப்பை வழங்கவும், ஒரு உகந்த கொள்கை சூழலை உருவாக்கவும் தேசிய ஏற்றுமதியாளர் சங்கம்,  மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் நாங்கள் கைகோர்த்து செயற்படுவோம்.

நிகழ்வின் ஆரம்பத்தைத் தொடர்ந்து ஏற்றுமதியாளர்களுக்கான நூல் ஒன்றும் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், தேசிய ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் றொட்டரி கழகத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஆளுநரும் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

IMG-20250730-WA0016.jpg

IMG-20250730-WA0019.jpg

https://www.virakesari.lk/article/221441

கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைக்க முயற்சி ?

3 months ago

கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைக்க முயற்சி ?

adminJuly 31, 2025

1000974727.jpg?fit=1170%2C627&ssl=1

யாழ்ப்பாணம் கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்ற நாட தயாராக இருப்பதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் திராகராஜா பிரகாஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, நேற்றைய தினம் புதன்கிழமை (30.07.25) தவிசாளர் திராகராஜா பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில்  கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் தொடர்பில் உறுப்பினர்கள் பிரஸ்தாபித்திருந்தனர்.

அதன் பின்னர் தவிசாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

யாழ்.வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கந்தரோடை பகுதியில் அமைந்திருக்கும் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான இடத்தில் பௌத்த மக்கள் தொடர்ச்சியாக பார்வையிடுவதற்காக வந்து கொண்டிருக்கிறார்கள்.

குறித்த பகுதியில் பிக்கு ஒருவர் காணி ஒன்றை கொள்வனவு செய்து பௌத்த மத்திய நிலையம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக பொதுமக்களிடமிருந்து நிதி வசூலிப்பு செய்கின்ற ஒரு பெயர் பலகையும் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது.

சட்டவிரோத கட்டடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் முதற்கட்டமாக அவருக்கு அறிவித்தல்  வழங்கப்பட்டிருக்கின்றது, குறித்த பகுதியில் கட்டிட நிர்மாணத்தை நிறுத்துமாறு என்னால் பிரசுரம் ஒட்ப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக அங்கு வரும் மக்களுக்கு தமிழ் பௌத்தம் இருந்த வரலாற்றை அத்தோடு இந்துமத, சைவமத வரலாற்றை மறைக்கும் முகமாக அங்கே வருகின்ற கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது.

இது ஒரு தவறான செயல் இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அந்த இடத்தில்  தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான பகுதிகளில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று  அகழ்வாராய்ச்சியை செய்து வருகின்றது. அருகில் இருக்கும் காணிகளில் இந்த அகழ்வாராட்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அண்மையில் நான் அறிந்தேதேன் ஆய்வுகளின் போது மூன்று அடி உயரமான ஒரு கிருஷ்ணர் சிலை அங்கே கிடைக்கப் பெற்றிருக்கின்றது. அதனை மூடி மறைத்து குறித்த பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ளாமல் வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்த பௌத்த மயமாக்கல் என்பது எங்களுடைய பிரதேசத்தில் அதாவது தயிட்டியை போல், மீண்டும் கந்தரோடையிலும் தொல்லியல் திணைக்களத்தின் அனுசரணையுடன் தற்போதைய அரசாங்கமும் பௌத்த மாயமாக்கலை எமது பிரதேசத்தில் அமூல்ப்படுத்த நினைக்கின்றது.

இந்த நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம் என தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2025/218594/

இலஞ்சம் கோரல் சம்பவங்களில் 34 நபர்கள் க‍ைது!

3 months ago

New-Project-399.jpg?resize=750%2C375&ssl

இலஞ்சம் கோரல் சம்பவங்களில் 34 நபர்கள் க‍ைது!

இந்த ஆண்டின் (2025) முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் 2025 ஜனவரி 01 முதல் ஜூன் 30 வரை 3,022 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது.

அந்தக் காலகட்டத்தில், 54 சோதனைகள் நடத்தப்பட்டன.

இதன் விளைவாக 34 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களில் இலங்கை காவல்துறையைச் சேர்ந்த பத்து அதிகாரிகளும், நீதி அமைச்சின் ஐந்து அதிகாரிகளும் சுகாதார அமைச்சின் இரண்டு அதிகாரிகளும் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) இரண்டு அதிகாரிகள் அடங்குவதாகுவர்.

இதற்கு மேலதிகமாக ஆறு பொதுமக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காலக் கட்டத்தில் இலஞ்சம் கோரல் சம்பவங்கள் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 60 சந்தேக நபர்களுக்கு எதிராக 50 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் ஆறு வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 273 இலஞ்சம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் CIABOC தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், 2025 ஜனவரி 01 முதல் ஜூலை 29, வரை மொத்தம் 122,913 நபர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு கூறியுள்ளது.

அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் காலகட்டத்தில், அதிகாரிகள் 928,787 கிலோ கிராம் ஹெராயின், 1,396,709 கிலோ கிராம் ஐஸ், 11,192,823 கிலோ கிராம் கஞ்சா, 27,836 கிலோ கிராம் கொக்கெய்ன் மற்றும் 381,428 கிலோ கிராம் ஹாஷிஷ் போதைப்பொருள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

இதற்கிடையில், ஜூலை 29 அன்று இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படை (STF) மற்றும் முப்படையினரால் நாடு முழுவதும் ஒரு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மொத்தம் 6,695 பணியாளர்கள் இந்த நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 10,128 வாகனங்கள் மற்றும் 7,734 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டன.

சோதனையின் போது, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 948 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இந்தக் குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 13 பேரும் கைது செய்யப்பட்டனர்.

மேலதிமாக இந்த நடவடிக்கைகளின் போது மூன்று சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

https://athavannews.com/2025/1441291

சந்தேக நபர் தப்பியோட்டம்; பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

3 months ago

New-Project-398.jpg?resize=750%2C375&ssl

சந்தேக நபர் தப்பியோட்டம்; பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தின் இரண்டு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஒரு சார்ஜென்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிளை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

பொலிஸ் நிலையத்தில் இருந்த சந்தேக நபர், நேற்று (30) கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியதாகவும், அறையின் கதவு திறக்கப்பட்டபோது பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேக நபர் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், அண்மையில் பாணந்துறை பகுதியில் நடந்த பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும் அவர் தொடர்புடையவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தில் விடயத்திற்கு பொறுப்பாக செயற்பட்ட அதிகாரியும், சம்பவத்தின் போது பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பாக இருந்த அதிகாரியும் இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தலைமறைவான சந்தேக நபரைக் கைது செய்ய சிறப்பு பொலிஸ் குழு ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

https://athavannews.com/2025/1441288

லலித் குகன் காணாமலாக்கப்பட்ட வழக்கு - யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது - கோட்டாபய தெரிவிப்பு

3 months ago

30 JUL, 2025 | 03:31 PM

image

லலித் என அழைக்கப்படும் லலித் வீரராஜ் மற்றும் குகன் என அழைக்கப்படும் குகன் முருகானந்தன் 2011 இல் காணாமல்போனமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் செல்ல தயாரில்லை என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு உச்சநீதிமன்றத்திற்கு தனது சட்டத்தரணி மூலம் தெரிவித்துள்ளார்.

கோட்டாபாய ராஜபக்ச வாக்குமூலம் வழங்க தயாராகயிருக்கின்றார் என தெரிவித்துள்ள அவரது சட்டத்தரணி ரொமேஸ் டி  சில்வா அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் செல்வதற்கு தயாரில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தனது கட்சிக்காரர் கொழும்பு உட்பட நாட்டின் ஏனைய எந்த பகுதியிலும் சாட்சியமளிக்க தயார் என ரொமேஸ் டி சில்வா தெரிவித்துள்ளார்.

காணாமல்போன செயற்பாட்டாளர்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளை கோட்டாபயவின்  சட்டத்தரணி இதனை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை சட்டத்தரணி நுவான் போபகே பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

ஆட்கொணர்வு மனு தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச ஆஜராகவேண்டும் என யாழ்ப்பாண நீதிமன்றம் 2019 ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை இரத்து செய்த முன்னைய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வழக்கு தாக்கல் செய்திருந்தன.

https://www.virakesari.lk/article/221374

யாழ். நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டோரது வழக்கு : தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு!

3 months ago

30 JUL, 2025 | 11:21 AM

image

யாழ். நாவற்குழி பகுதியில் கடந்த 1996 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் நடைபெற்ற பகுதியானது சாவகச்சேரி நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் உட்படுவதால் குறித்த வழக்கு சாவச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் குறித்த வழக்கானது தீர்ப்புக்காக இன்றையதினம் திகதியிடப்பட்டது. இருப்பினும் நீதிவான் இன்றையதினம் விடுமுறையில் இருந்த காரணத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி குறித்த வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டுள்ளது.

20250730_095319.jpg

20250730_095308.jpg

20250730_095316.jpg

https://www.virakesari.lk/article/221344

யாழ். போதனா வைத்தியசாலை தற்போது சகல பிரிவுகளையும் கொண்டு இயங்குகிறது - பணிப்பாளர் சத்தியமூர்த்தி

3 months ago

30 JUL, 2025 | 03:50 PM

image

வடக்கில் யாழ். போதனா வைத்தியசாலை தற்போது சகல பிரிவுகளையும் கொண்டு இயங்குகின்றது. இருப்பினும் வைத்தியசாலையின் மேலும் கட்டட வசதிகளும் உபகரண மற்றும் ஆளணி வசதிகளும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ விடுதிகளுக்காக இரண்டு கட்டில்களும் சில உபகரணங்களும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்திருந்த அன்பரினால்  வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது. 

போதனா வைத்தியசாலையில் சில விடுதிகள் அண்மையில் திறக்கப்பட்டதும் மற்றும் இவ்வாறு புதிய உபகரணங்கள் வழங்கப்படுவதும் வைத்திய சேவையை மேலும் வலுப்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/221375

உலகின் மிகவும் அழகான தீவாக இலங்கை தேர்வு!

3 months ago

New-Project-381.jpg?resize=750%2C375&ssl

உலகின் மிகவும் அழகான தீவாக இலங்கை தேர்வு!

உலகளாவிய பயண தளமான ‘Big 7 Travel’ தொகுத்த உலகின் 50 சிறந்த தீவுகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, இலங்கை உலகின் மிக அழகான தீவாக முடிசூட்டப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் பிரெஞ்சு பாலினேசியாவின் மோரியா, ஈக்வடாரில் உள்ள கலபகோஸ் தீவுகள் மற்றும் சீஷெல்ஸ் போன்ற பிரபலமான தீவுகளை முந்தி முதலிடத்துக்கு வந்துள்ளது.

Big 7 Travel தகவலின்படி, இலங்கை அதன் வளமான கலாச்சார பாரம்பரியம், மாறுபட்ட நிலப்பரப்புகள் மற்றும் அழகிய கடற்கரைகள் ஆகியவற்றின் கலவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தீவு தேசத்தின் தனித்துவமான வனவிலங்குகள், பழங்கால கோயில்கள், பசுமையான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சுறுசுறுப்பான உள்ளூர் சுற்றுலா பகுதிகளுக்காக இந்தப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுலாத் துறை அதன் நிலையான மீட்சி மற்றும் மாற்றத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த உலகளாவிய அங்கீகாரம் மேலும் அதனை முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1441145

யாழில் 6 பிரதேச செயலகங்களில் நிர்வாக உத்தியோகத்தர் இல்லை - ஒருவர் மட்டும் 14 வருடங்களாக ஒரே பிரதேச செயலகத்தில்!

3 months ago

Published By: VISHNU

29 JUL, 2025 | 10:47 PM

image

யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களில் 9 பிரதேச செயலகங்களில் மட்டும் நிரந்தர நிர்வாக உத்தியோத்தர் (AO) காணப்படுகின்ற நிலையில் ஏனைய 6 பிரதேச செயலகங்களிலும் நிரந்த உத்தியோகத்தர் இன்றி பதில் கடமை உத்தியோகத்தர்களே கடமையில் உள்ளமை தகவல் அறியும் சட்ட மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

யாழ். மாவட்டத்தில் உள்ள பிரதேச செயல்களான யாழ்ப்பாணம், நல்லூர், சங்கானை, உடுவில், சாவகச்சேரி, கரவெட்டி, பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி ஆகிய பிரதேச செயலகங்களில் கடமையில் உள்ள நிர்வாக உத்தியோத்தர்கள் அனேகமாக 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்றவர்களாக காணப்படுகின்றனர்.

இந்நிலையில் கோப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றம் நிர்வாக உத்தியோத்தர் மட்டும் 2011 இருந்து இன்று வரை  இடமாற்றம் ஏதும் இன்றி கோப்பாய் பிரதேச செயலகத்தில் 14 வருடங்களாக தொடர்ந்து கடமையில் உள்ளார்.

ஏனைய பிரதேச செயலகங்களான வேலனை, நெடுந்தீவு ஊர்காவற்துறை, காரைநகர், தெல்லிப்பழை மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களில் நிர்வாக உத்தியோத்தர் நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/221319

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

3 months ago

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்.

அன்பார்ந்த தமிழீழ மக்களே!  

சிறிலங்காப் பேரினவாத அரசு தமிழீழ மண்ணையும் மக்களையும் அடக்குமுறைக்குள்ளாக்கி, தமிழின அழிப்பைத் தொடர்ந்தமையால், அதற்கெதிராக வீறுகொண்டெழுந்த எரிமலை வெடிப்பே தமிழீழ விடுதலைப்போராட்டமாகும். உலகின் அசைவியக்கத்தில் சுயமாக உருவாகிய எதனையும் எவரும் அழித்ததாக வரலாறுகள் கிடையாது. ஒரு இனத்தின் விடுதலைக்காக ஆயிரம் ஆண்டுகள் தன்னுள்ளே அடக்கி வைத்திருந்த பேராண்மையை, தமிழன்னை ஓரிடத்தில் இறக்கினாள். தமிழ்த்தாயின் ஆற்றல்கள் அத்தனையையும் தன்னுள்ளே உள்வாங்கிய தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், இயல்பாகவே உருவாகிய தலைவர்! இவர், உருவாக்கப்பட்டவர் அல்ல! தமிழினத்தின் வழிகாட்டியும் தமிழீழக் கோட்பாட்டின் சிந்தனைச் சிற்பியும் இவரே. இந்த ஒப்புவமையற்ற எமது தேசியத்தலைவரை வீரச்சாவு என அறிவித்து, விளக்கேற்றி, தமிழீழக் கோட்பாட்டிற்குச் சாவுமணி அடிக்கவேண்டுமென்ற அறிவிப்பின் ஊடாக, தமிழீழ விடுதலையை நோக்கித் தமிழர்களை  வழிநடாத்தும் தன்னிகரில்லாத் தலைமையை, தமிழினம் இழந்துவிட்டது என தமிழ்மக்களின் ஆழ்மனங்களில் பேரிடியாக இறக்கி, அவர்களின் உளவுரணைச் சிதைத்தழிக்க வேண்டுமென்பதே எதிரிகளின் திட்டமாகும். இதற்குச் செயல்வடிவம் கொடுக்கச் சில குழுக்கள் களமிறக்கப்பட்டு, மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி, எதிரிகளின் நிகழ்ச்சிநிரலை முன்னெடுப்பதற்கான நாளாக ஆகஸ்து 2 இனை, தெரிவுசெய்து அறிவிப்புச்செய்துள்ளனர்.  

தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களினால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்இ உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை சிறிலங்காவும் எம்மை அழிக்க நினைக்கும் வல்லரசுகளும் பலவிதமானப் புலனாய்வுச்சதிவலைப்பின்னல்களை உருவாக்கியே வந்திருக்கிறார்கள். ஆனால், தேசியத்தலைவரின் தீர்க்கதரிசனத்தின் முன்னே அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. துரோகத்தனங்கள் யாவும் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டன. எமது தலைமையின் நிதானமான துணிச்சலான போராட்ட நகர்வுகள், எதிரிகளையும் துரோகிகளையும் ஏகாதிபத்தியவாதிகளையும் திக்கித் திணறவைத்திருந்தன. 2009 மே 18 உடன், விடுதலைப்புலிகளின் சரித்திரம் முடிந்துவிட்டது என சிறிலங்காவும் பிராந்திய வல்லரசும் ஏகாதிபத்தியமும் பகற்கனவுகள் கண்டன. ஆனால், முள்ளிவாய்க்கால் ஆயுத மெளனிப்பிற்குப் பின்னரும் தமிழீழம் என்ற கோட்பாட்டை இவர்களால் சிதைக்க முடியவில்லை. தொடர்ந்தும், தமிழர்கள் எவ்வாறு பலமாக ஒருங்கிணைந்து போராடுகிறார்கள், இவர்களின் பலம் எது எனப் பகுப்பாய்வு செய்தபோது, மேதகு வே.பிரபாகரன் என்னும் ஒற்றைச் சொல்தான் தமிழர்களின் மாபெரும் உந்துசக்தி என இவர்கள் உணர்ந்துகொள்கிறார்கள். எனவே, தமிழீழம் என்ற கோட்பாட்டைச் சிதைத்து அழிக்கவேண்டுமாயின்இ எங்கள் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் என்னும் தமிழீழ விடுதலைக்கவசத்தை முதலில் அழிக்கவேண்டும். மேதகு வே.பிரபாகரன் என்னும் மாபெரும் பலம், மக்கள் மனதிலிருந்து அகற்றப்பட்டால், தமிழீழம் என்னும் இலக்கு நோக்கிய பயணம் தகர்ந்துவிடும். இதுவே, தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அழிக்க அவர்கள் தீட்டிய திட்டமாகும். இதன்படியே, கடந்த மூன்று ஆண்டுகளாக எதிரும்புதிருமாக இரு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன.  

• ஒன்று தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கின்றார். 

• இரண்டாவது, அவர் 2009 மே 17, 18,19 ஆகிய நாட்களில் வீரச்சாவடைந்துவிட்டார் என்ற அறிவித்தல்கள் வெளியிடப்படுகின்றன.  

இதில் வேதனையான விடயம் என்னவென்றால், யாரை எதிர்த்து நாம் போரிட்டோமோ, அந்த சிங்கள இராணுவத்தளபதிகளை மேற்கோள்காட்டி, இன அழிப்புக் குற்றவாளிகளின் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு, எமது தேசியத்தலைவருக்கு "விளக்கேற்றி", வீரவணக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. அதில், மே 17, 18, 19 என தெளிவில்லாமல் சிறு குழுக்களால் வீரச்சாவு நாட்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், ஆகஸ்து 2ம் நாள்தான் வணக்க நிகழ்வு என அறிவித்துள்ளார்கள். ஆனால், சிங்கள இராணுவத்தளபதி கமால் குணரட்ணவின் " Road to nanthikkadal " என்னும் நூலினை ஆதாரமாக வைத்து, மே 18 என முடிவு எடுத்துள்ளனர். இதற்கு, தேசியத்தலைவர் உயிரோடு இருக்கிறார் என்னும் பொய்ப்பரப்புரையை நிறுத்த வேண்டுமாயின் வீரவணக்க நிகழ்வைச் செய்தேயாக வேண்டுமெனவும் இதன் ஏற்பாட்டாளர்கள் நியாயப்படுத்துவதானது அர்த்தமற்றதாகும். 

அன்பிற்குரிய தமிழீழ மக்களே! இரு குழல் துப்பாக்கியின் இலக்கு ஒன்றுதான்.  

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைதான், 2009 மே 18 ஆயுத மெளனிப்பிற்குப் பின்னரும் தமிழீழத் தாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தை வழிநடாத்துகின்றது, என்பதை எதிரிகள் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளார்கள். எனவே, தமிழர்களின் மனங்களிலிருந்து, அந்த வாழும் தமிழீழ விடுதலைச் சித்தாந்தத்தைத் துடைத்து அழிக்கவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு, தேசியத்தலைவர் இருக்கிறார், அவர் இல்லை என்ற இரண்டு நாசகார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. "விழிப்பே விடுதலையின் முதற்படி" என்னும் தேசியத்தலைவரின் சிந்தனையின் வழியில், தமிழினம் இவ்விரு சவால்களையும் எதிர்கொண்டு, மாவீரர்களின் சக்தியின் துணைகொண்டு மீண்டுவரும். எமது தேசியத்தலைவரின் சிந்தனையானது எமைத்தொடர்ந்தும் வழிநடத்தும். எனவே, தமிழின விடுதலைச் சிந்தனையினைக் குழிதோண்டிப் புதைக்கநினைக்கும் நாசகாரச் சக்திகளினால், ஆகஸ்து 2ஆம் நாளில் சுவிற்சர்லாந்தில் திட்டமிடப்பட்டுள்ள "விளக்கேற்றல்" நிகழ்வினை உறுதியோடு புறக்கணிப்போம்.  

பேரன்புமிக்க எமது மக்களே!  

காலத்திற்குக் காலம் எதிரிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படும் பொய்ப்பரப்புரைகளை, நாம் கண்டறிந்துஇ முறியடித்து வருகின்றோம். எனவே, தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்படும் உண்மைக்குப் புறம்பான கதையாடல்களைப் புறந்தள்ளி, விழிப்புடன் இருக்குமாறு அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.  

தமிழீழத் தேசியத்தலைவர் என்னும் பேராளுமைச் சிந்தனையின் வழிகாட்டலில், தமிழீழ விடுதலையை நோக்கித் தொடர்ந்தும் பயணிப்போம். அது, எந்நிலையிலும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களில் அகப்படமாட்டாது. எனவே, தமிழினத்தை அழிப்பதற்கான எதிரிகளின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுக்காமல், மாவீரர்கள் காட்டிய வழித்தடத்தில்,  தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் ஒளிரும் சிந்தனைப் பாதையில் உறுதியுடன் வழிநடந்து, தமிழீழ விடுதலை நோக்கித் தொடர்ந்தும் போராடுவோமென உறுதியெடுத்துக் கொள்வோமாக!  

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

அனைத்துலகத் தொடர்பகம், 

தமிழீழ விடுதலைப் புலிகள்.  

QZF2VYGIZIKwofduS3De.jpg

zdA38VbXnVSaC1FvLqM4.jpg


https://www.thaarakam.com/news/f0f42314-88cc-4b93-946b-a623da5dec8a

பொரளை பகுதியில் விபத்தை ஏற்படுத்திய கனரக வாகன சாரதிக்கு விளக்கமறியல்!

3 months ago

New-Project-1-22.jpg?resize=600%2C300&ss

பொரளை பகுதியில் விபத்தை ஏற்படுத்திய கனரக வாகன சாரதிக்கு விளக்கமறியல்!

பொரளை பகுதியில் நேற்று (28) இடம்பெற்ற விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கனரக வாகன சாரதியை எதிர்வரும் ஒகஸ்ட் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, வாகன உரிமையாளரை 500,000 ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.

பொரளை பொலிஸார் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நேற்று காலை பொரளை, மயான சந்தியில் கனரக வாகனம் ஒன்று பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7பேர் காயமடைந்ததுடன் ஒருவர் உயிரிழந்தார்.

இதேவேளை, விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் லொறியின் சாரதி கஞ்சா உட்கொண்டிருப்பதும் நேற்றைய சோதனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

https://athavannews.com/2025/1441081

#################### #########################

455a4baa-a7b8-4164-9e9e-cd2a783b95e0.jpg

பொரளை கோர விபத்து – கஞ்சா பாவனையில் கிரேன் சாரதி!

பொரளை, கனத்தை சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் லொறியின் சாரதி கஞ்சா உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது இது தெரியவந்தது.

பொரளை கனத்த சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த ஏழு பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போதே உயிரிழந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனா தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் இருவர் பெண்கள் என்றும், மீதமுள்ள ஐந்து பேர் ஆண்கள் என்றும் மருத்துவர் கூறினார்.

இன்று காலை, ராஜகிரியவிலிருந்து பௌத்தலோக மாவத்தை நோக்கிச் சென்ற கிரேன் லொறி ஒன்று, கனத்தை சுற்றுவட்டத்தில் உள்ள போக்குவரத்து சமிக்ஞைகளுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 கார்களுடன் மோதி விபத்தினை ஏற்படுத்தியது.

விபத்தில் உயிரிழந்தவர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்துக்கு காரணமான கிரேன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கிரேன் பிரேக்குகள் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறெனினும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Gw6tGFnacAAU8ok?format=jpg&name=medium Gw6tGf5awAAeLhy?format=jpg&name=medium

Gw6tGcbacAAOM6z?format=jpg&name=medium

https://athavannews.com/2025/1440915

புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைபில் மட்டுமீறிய அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்காதீர் - அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தல்

3 months ago

புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைபில் மட்டுமீறிய அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்காதீர் - அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தல்

30 JUL, 2025 | 02:10 AM

image

(நா.தனுஜா)

புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் நீதிமன்றத்தின் அல்லது பாராளுமன்றத்தின் அனுமதியின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல், சில இடங்களை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக வரையறுத்து மக்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்தல் போன்ற அறிவிப்புக்களை வெளியிடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படக்கூடாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா முகவரகத்தின் உறுப்பினருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் புதியதொரு பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைபைத் தயாரிப்பதற்கு அவசியமான பரிந்துரைகளை முன்வைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு அண்மையில் வேண்டுகோள்விடுத்திருந்தது. அதற்கமைய அம்பிகா சற்குணநாதனால் நீதியமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் அடங்கிய கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

பயங்கரவாதம் எனும் பதத்துக்கான வரைவிலக்கணம்

சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டத்தின் 9 ஆவது பிரிவானது குறித்தவொரு நபரைக் கைதுசெய்வதற்கோ அல்லது தடுத்துவைப்பதற்கோ சட்டத்தின் ஊடாக வரையறுக்கப்பட்ட நியாயமான காரணம் இருக்கவேண்டும் எனவும், அவ்வரையறையானது மிகத்தெளிவாக போதிய விளக்கத்தைத் தரக்கூடியவகையில் அமையவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றது.

குறித்தவொரு குற்றத்துக்கு பரந்துபட்ட அல்லது தன்னிச்சையான வரைவிலக்கணம் வழங்கப்படுவதையும், அதன் தன்னிச்சையான பிரயோகத்தைத் தடுப்பதுமே இதன் பிரதான நோக்கமாகும். எனவே உயிரிழப்பையோ அல்லது படுகாயத்தையோ ஏற்படுத்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், அரச பயங்கரவாதத்தைத் தூண்டுதல், குறித்தவொரு சமூகப்பிரிவினரை ஒடுக்குதல் அல்லது அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுமாறு அரசாங்கத்தையோ அல்லது சர்வதேச அமைப்பொன்றையோ கட்டாயப்படுத்தல் ஆகிய நோக்கங்களுடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், சர்வதேச பிரகடனங்களில் பயங்கரவாதம் எனும் பதத்துக்கு வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணத்துக்கு உட்பட்ட நடவடிக்கைகள் ஆகிய மூன்று விடயங்களும் 'பயங்கரவாதம்' என்ற சொல்லுக்கான வரைவிலக்கணத்தில் நிச்சயமாக உள்வாங்கப்படவேண்டும். அத்தோடு அவ்வரைவிலக்கணமானது குறிப்பானதாகவும், உரிய சட்டக்கோட்பாடுகளுக்கு உட்பட்டதாகவும் அமையவேண்டும்.

அதேவேளை இவ்வரைவிலக்கணம் 'தேசிய, இன மற்றும் மத வெறுப்புணர்வு' அல்லது 'ஒடுக்குமுறை வன்முறை' அல்லது 'அத்தியாவசிய சேவை வழங்கலுக்கான இடையூறு' போன்ற பரந்துபட்ட விளக்கத்தை உள்ளடக்கியிருக்கக்கூடாது. முன்னைய அரசாங்கங்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைபுகளில் இவ்வாறான பதங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன. இவை கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை முடக்குவதற்கும், தொழிற்சங்க நடவடிக்கை போன்ற சட்ட ரீதியான சிவில் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கும் பயன்படுத்தப்படக்கூடும்.

சட்ட அமுலாக்கத்தில் இராணுவமயமாக்கல்

பயங்கரவாதக்குற்றங்களுக்காக நபர்களைக் கைதுசெய்வதற்கோ அல்லது குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கோ இராணுவத்தினருக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான சரத்துக்கள் புதிய வரைபில் உள்வாங்கப்படக்கூடாது.

பொலிஸ் காவல்

கைதுசெய்யப்பட்டு பொலிஸ்காவலின்கீழ் வைக்கப்பட்டிருக்கும் நபர், கைதுசெய்யப்பட்டு 48 மணிநேரத்துக்குள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவேண்டும்.

சட்ட உதவி மற்றும் குடும்பத்தாருடனான தொடர்பாடல்

பயங்கரவாதக்குற்றத்துக்காக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் நபரின் சட்ட உதவியை நாடுவதற்கான உரிமை கட்டாயம் உறுதிசெய்யப்படவேண்டும். ஏனெனில் கைதுசெய்யப்பட்ட நபரின் அறியாமையைப் பயன்படுத்தி, அவரிடம் சட்டத்துக்கு முரணான வகையில் பொய்யான வாக்குமூலத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு.

அத்தோடு கைதுசெய்யப்பட்ட நபர் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புகொள்வதற்கும், குடும்பத்தினர் தமது உறவினர் எங்கு தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார் என்பது பற்றி அறிந்துகொள்வதற்கும் இடமளிக்கப்படவேண்டும்.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவரை பார்வையிடல்

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நபரை குறைந்தபட்சம் வாரத்துக்கு ஒருமுறையேனும் முன்கூட்டிய அறிவிப்பின்றி நீதிவான் சென்று பார்வையிடல் மற்றும் கண்காணித்தல் எனும் சரத்தின் செயற்திறனை வலுப்படுத்தக்கூடிய விடயங்கள் புதிதாக உருவாக்கப்படக்கூடிய சட்டத்தில் உள்வாங்கப்படவேண்டும்.

ஜனாதிபதிக்கான மட்டுமீறிய அதிகாரங்கள்

புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைபில் நீதிமன்ற அல்லது பாராளுமன்றத்தின் அனுமதியின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல், சில இடங்களை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக வரையறுத்து மக்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்தல் போன்ற அறிவிப்புக்களை வெளியிடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படக்கூடாது

https://www.virakesari.lk/article/221322

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும் - அருட்தந்தை மா.சத்திவேல்

3 months ago

Published By: VISHNU

29 JUL, 2025 | 06:23 PM

image

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களும் நலமே வாழ வேண்டும் என்பதோடு; இயற்கையும் சுற்றுச்சூழலும் தன் நிலை கெடாத வகையில் மனிதன் வாழ வேண்டும் என்பதே அனைத்து சமயங்களில் போதனையாகும். அதனை காக்கவே புத்தரும், இயேசுவும் நீதி வாழ்வுக்கான அறைகூவல் விடுத்தனர். வலுவான மக்கள் சக்தியையும் உருவாக்கினர்.

ஆனால் அவர்கள் பெயரால் இன்று கட்டியெழுப்பப்பட்டுள்ள சமய நிறுவனங்கள் தான் நிலை பிறழ்ந்து இனவாத நோக்கில் இலங்கையில் செயல்படுவது சமய தர்மத்தையும், நீதியையும், உண்மையும் சமூக புதைகுழிகளுக்குள் தள்ளுவதாகவே தோன்றுகின்றது.

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். இதுவரை நூற்றுக்கதிகமான மனித எச்சங்கள் முழுமையாகவும் பகுதி பகுதியாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள், சிறுவர்கள் உட்பட ஆண்கள்,பெண்கள் என பலருடையதாக சந்தேகிக்கப்படும் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு விசேடமாக குழந்தைகள் பாவிக்கும் பால் போத்தல், பாடசாலை சிறுவர்களின் புத்தகப் பை, உடைகள் உட்பட பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது.

கிரிசாந்தி குமாரசாமி கொலை வழக்கில் சாட்சியான சோம ரத்தின ராஜபக்சரின் கூற்றின்படி பல நூறு பேர் அநியாயமாக கொல்லப்பட்டு குழிகளுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அல்லது உயிரோடு குழிகளுக்குள் தள்ளி கொன்று மண்ணில் மறைத்துள்ளனர்.

இதற்கு நீதி கேட்டு வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல தலைநகரான கொழும்பிலும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. அல்ஜாஸீரா போன்ற சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்த நிலையில் தெற்கின் பிரதான சிங்கள ஊடகங்கள் இவ்விடயம் தொடர்பில் பேசாதிருப்பது இனவாத நோக்கில் என்பது நாம் அறிந்ததே.பட்டலந்த விடயம் அல்ஜசீரா ஊடகத்தில் வெளி கொண்டு வந்த போது இவ் ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் செம்மணி விடயத்தில் மௌனம் காப்பது; கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதாலும் கொலையாளிகள் சிங்கள படையினர் என்பதாலுமே.

ஆனால் சமய அறம் காக்க உருவாக்கப்பட்ட அமைப்புகளும் நிறுவனங்களும் அதன் தலைமைத்துவங்களும் அமைதி காப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நடைபெற்ற இனப்படுகொலை யுத்தத்துக்கும் படைவீரர்களுக்கும், ஆயுதங்களுக்கும் ஆசி வழங்கிய சமய தலைமை தலைமைகளிடமிருந்து நாம் நீதியை எதிர்பார்க முடியாது.

உயிர்ப்பு தின குண்டு வெடிப்புக்கும், அதில் கொல்லப்பட்டோருக்கும் நீதி கேட்டு ஜெனிவா வரை சென்றவரும் இது தொடர்பில் ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கின்ற வருமான கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் அவர்கள் ஒரு பால் திருமணம் மனித உரிமை சார்ந்தது அல்ல.

அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. சமயத்திற்கு எதிரானது என எதிர்ப்பு குரல் எழுப்பி உள்ளார்.ஆனால் இனப்படுகொலையின் அடையாளமான செம்மணி தொடர்பில் வாய் திறக்காத உள்ளமை கத்தோலிக்க திருச்சபையின் பிளவுபட்ட தன்மையையும் இனவாதத்தையுமே வெளிப்படுத்துகின்றது. அதன் அடையாளமாகவே கொழும்பு பேராயர் காட்சி தருகின்றார். இதற்கு எதிராக கத்தோலிக்க திருச்சபையின் நீதியின் மக்கள் குரல் கொடுக்க வேண்டும். அதுவே இறை நீதியாகும்.

அதுமட்டுமல்ல கொழும்பை தலைமையகமாக கொண்ட ஏனைய கிறிஸ்தவ அமைப்புகளும் அதன் நிறுவனங்களும் அதன் தலைமைகளும் இனப்படுகொலை தொடர்பில் கருத்து கூறாதிருப்பது இனவாத தற்காப்பு நிலையே.

இன, மத, பிரதேச வாதத்தை பாதுகாத்து முதலாளித்துவத்திற்கு பணி புரியும் சமய தலைமைகளும் அவர்களின் தலைமையில் இயங்கும் சமய நிறுவனங்களும் சமூகத்திற்கு சாபமே. சாதனை நீதியின் மக்கள் இதற்கு எதிராக எழும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஒடுக்கப்பட்டோருக்கான நீதிக்கான மக்கள் எழுச்சி இறை நீதி சமயங்களின் வாழ்விடம்.

https://www.virakesari.lk/article/221307

வன்முறைகளை எதிர்கொள்ளும் பெண்கள், சிறுவர்களுக்காக நுவரெலியாவில் பாதுகாப்பு இல்லம் திறந்து வைப்பு

3 months ago

29 JUL, 2025 | 04:13 PM

image

தற்போது நாட்டில் அதிகரிக்கும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு தற்காலிக பாதுகாப்பை வழங்குவதற்கு நுவரெலியாவில் தற்காலிக பாதுகாப்பு இல்லம் ஒன்றினை, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் திறந்துவைத்தார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (29) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், 

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் 10 மாவட்டங்களில் பாதுகாப்பு இல்லங்கள் இயக்கப்படுகின்றன. 11ஆவது மாவட்டமாக, நுவரெலியாவில் பாதுகாப்பு இல்லம் திறக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் வாழ்கிற பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் இந்த இல்லம் முக்கியமாக தேவைப்படும். காரணம், வீட்டில் ஆண்கள் அல்லது வீட்டுத் தலைவர்களின்  மதுபாவனை அல்லது போதைப்பொருள் பாவனையினால் விளையும் வன்முறையினால் பெண்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்த வண்ணமுள்ளது.

அதற்கான சிறந்த தீர்வாகவே இந்த பாதுகாப்பு இல்லங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவப்பட்டு வருகின்றன. இது ஒவ்வொரு பிரதேசங்களில் உள்ள பொலிஸாரின் உதவியுடன் இயங்கி வருகிறது.

இந்த பாதுகாப்பு இல்லத்தினை நம்பி வருபவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கி, வைத்திய வழிகாட்டல் மற்றும் ஆலோசனை, உளநல ஆலோசனை வழங்கி, மருத்துவம் பெற்றுக்கொள்ளும் வசதிகளும் உள்ளது.

இதனால் வாழும் வாழ்க்கையில் ஏதும் பிரச்சினை ஏற்படும்போது உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணங்களைத் தவிர்த்து, பெண்கள் தமது பாதுகாப்புக்காக இந்த இல்லங்களுக்கு வருகைதந்து, தங்களுடைய வாழ்க்கையை வாழ்வதற்கானதாக இந்த இல்லங்கள் அமையும்.

மேலும், இல்லங்களுக்கு வருகை தருபவர்களுக்கு ஒரு குறுகிய காலத்தில் அவர்களுக்கான வீடுகளிலோ அல்லது சமூகத்திலோ ஏற்படும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டு, அதற்கான சட்ட நடவடிக்கையும் இல்லத்தின் ஊடாக எடுக்கப்படும். அதன் பின்னர் அவர்கள் சமூகத்தில்  ஆரோக்கியமான பிரஜையாக வாழலாம் என  சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராச்சி, நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக செயற்பாட்டு மையத்தின் அலுவலகர்கள், ஏனைய  உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

தற்போது திறந்துவைக்கப்பட்ட தற்காலிக பெண்களுக்கான பாதுகாப்பு இல்லத்தையும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து இயக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/221287

லலித், குகன் யார் என்பது இந்த அரசாங்கத்திற்கு நன்கு தெரியும்; - லலித்தின் தந்தை

3 months ago

லலித் குகன் யார் என்பது இந்த அரசாங்கத்திற்கு நன்கு தெரியும் ; இவர்களாவது நீதியை பெற்றுதருவார்கள் என நம்புகின்றேன் - லலித்தின் தந்தை

Published By: RAJEEBAN

29 JUL, 2025 | 03:55 PM

image

லலித் குகன் யார் என்பது இந்த அரசாங்கத்திற்கு நன்கு தெரியும் என தெரிவித்துள்ள  லலித்தின்  தந்தை ஆறுமுகம் வீரராஜா லலித் குகனிற்கும் காணாமல்போன ஆயிரக்கணக்கானவர்களிற்கும் இந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-

எனது மகன் காணாமல்போய் 14 வருடங்களாகின்றன, முறைப்பாடொன்றை செய்வதற்காக சிஐடி அலுவலகத்திற்கு சென்றோம்.

இதிலாவது நல்லது கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். நாளைமறுதினம் வழக்கு உள்ளது வழக்கில் நல்ல முடிவு கிடைக்கும் என்றே எதிர்பார்க்கின்றோம்.

லலித் குகன் மாத்திரமல்ல பதினைந்து இருபதினாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல்போயுள்ளனர். அவர்களின் குடும்பத்தவர்கள் பரிதவிக்கின்றனர்.

அவங்களிற்கும் ஒரு நீதி கிடைக்கவேண்டும், எங்களிற்கும் நீதி கிடைக்கவேண்டும்.

லலித் குகன் யார் என்பது இந்த அரசாங்கத்திற்கு நன்றாக தெரியும், இந்த அரசாங்கத்திலாவது நீதி கிடைக்கவேண்டும். எனது பிள்ளைக்கும் ஏனையவர்களிற்கும் நீதி கிடைக்குமாக இருந்தால் நான் இந்த அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பேன்.

https://www.virakesari.lk/article/221282

நல்லூர் ஆலய வளாகத்துக்குள் அத்துமீறி உள்நுழைந்த இராணுவத்தினரால் மக்கள் பதற்றம்!

3 months ago

29 JUL, 2025 | 11:35 AM

image

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் இராணுவத்தினர் அத்துமீறி உள்நுழைந்ததால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத் திருவிழா இன்றைய தினம் (29) காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இதன்போது நல்லூர் ஆலய முன்வாயிலில் திடீரென இராணுவ வாகனம் ஒன்று உள்நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நல்லூர் திருவிழா காலத்தில் அந்தப் பகுதியில் ஆலய வளாகத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் வாகனத்தை தவிர வேறு எந்த வாகனத்துக்கும் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை. அத்துடன் பாதணிகளுடன் எவரும் ஆலய வளாகத்துக்குள் செல்வதற்கும் அனுமதி இல்லை.

இந்நிலையில், பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் இராணுவத்தினரின் வாகனம் அத்துமீறி உள்நுழைந்தமை, உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

அத்துடன் இராணுவத்தின் அத்துமீறல் இன்னமும் தொடர்கிறதா என பெருமளவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

கடந்த ஆண்டு திருவிழாவின்போதும் பௌத்த பிக்கு ஒருவர் வாகனத்தில் நல்லூர் வளாகத்திற்குள் சென்று அநாகரிகமான முறையில் நடந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

IMG_8921_6_.jpg

IMG_8921_1_.jpg

k.jpg

https://www.virakesari.lk/article/221249

பாதுகாப்பு பிரதியமைச்சராக இராணுவ அதிகாரி பதவிவகிப்பதால் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணைகளின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பு - அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ

3 months ago

Published By: RAJEEBAN

29 JUL, 2025 | 11:21 AM

image

பாதுகாப்பு பிரதியமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர பதவிவகிப்பது 2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து முன்னெடுக்கப்படும்  விசாரணைகளின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பை  ஏற்படுத்தக்கூடும் என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் அரசாங்கம் பொருத்தமான தீர்மானமொன்றை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் இராணுவ அதிகாரி பாதுகாப்பு பிரதியமைச்சராக பதவிவகிப்பது விசாரணைகளிற்கு பாதிப்பை  ஏற்படுத்தலாம் என கத்தோலிக்க திருச்சபையும் கருதுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

'இங்கு ஒரு பிரச்சினை இருப்பதாக நாங்களும் கருதுகின்றோம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை அவரது அமைச்சு கையாளவில்லை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் பொலிஸாரும் சிஐடியினருமே விசாரணைகளை கையாள்கின்றனர் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ ஆனால் அவர் பிரதியமைச்சராக பதவி வகிக்கின்றார், இதனால் விசாரரணைகள் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதியும் அரசாங்கமும் கவனம் செலுத்தவேண்டும், உரிய தீர்மானத்தை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் பிரதியமைச்சராக பதவி வகிப்பதால் மக்கள் இயல்பாகவே விசாரணைகள் மீது அவர் செல்வாக்கு செலுத்தலாம் என கருதுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக விசாரணைகளின் நம்பகதன்மை குறித்த கேள்வி எழும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களிற்கு தொடர்பிருப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதிபாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ கிழக்கு மாகாணத்தின் கட்டளை தளபதியாக பணியாற்றியவேளை ஜயசேகரவிற்கு இது குறித்து தெரிந்திருந்ததா என கேள்வி எழுப்பியுள்ளார்.

கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக அவருக்கு சில தகவல்கள் கிடைத்திருந்ததா? இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் அவர் சிஐடியினருக்கு வாக்குமூலம் தெரிவித்தது  எனக்கு நினைவில் இருக்கின்றது. இதனை அடிப்படையாக வைத்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும், விசாரணைகளிற்கு பின்னரே அவருக்கு தொடர்புள்ளதா இல்லையா என்பது தெரியவரும் என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ  தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/221248

Checked
Sat, 11/01/2025 - 17:30
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr