ஊர்ப்புதினம்

தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடு இலங்கை - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

3 months 1 week ago
09 FEB, 2024 | 12:49 PM
image

கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரச பொது நிதிக் குழு மற்றும் வெரிட்டே ரிசேர்ச் (Verité Research) நிறுவனம் பகுப்பாய்வின் பிரகாரம், தெற்காசியாவிலேயே நமது நாடுதான் அதிக மின்சாரக் கட்டணத்தை அறவிடுகிறது.

தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், நமது நாட்டில் 3 மடங்கு அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இலங்கையில் 100 மின்சார அலகுகளுக்கு மாதத்துக்கு 5280 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தெற்காசியாவின் ஏனைய நாடுகளில் 2078 ரூபாயே வசூலிக்கப்படுகிறது.

200 அலகுகளுக்கு எமது நாட்டில் 12960 ரூபாய் வசூலிக்கப்படுவதோடு தெற்காசியாவின் ஏனைய நாடுகளில் 4609 ரூபாவே வசூலிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே, இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனென்றால், ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நுகர்வோர் மட்டுமின்றி, தொழில்முனைவோருக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சலுகை வழங்குங்கள். வாக்குகளை இலக்காகக் கொண்டு மின் கட்டணத்தை 4 சதவீதமாக குறைத்த விடயத்தில் திருப்திபட முடியாது.

மக்கள் உணர்ந்துகொள்ளும் விதமாக கட்டணக் குறைப்பை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/175965

யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக கிருஷ்னேந்திரன்!

3 months 1 week ago
09 FEB, 2024 | 12:33 PM
image

யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளராக ச.கிருஷ்னேந்திரன் இன்று (09) தனது கடமைகளை பொறுப்பேற்றார். 

இதுவரை காலமும் யாழ். மாநகர சபை ஆணையாளராக பணியாற்றிய இ.த.ஜெயசீலன்  பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமையாற்றிய ச.கிருஷ்னேந்திரன் யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/175963

குடா நாட்டுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் - வடக்கு ஆளுநரிடம் நெதர்லாந்தின் துணைத்தூதுவர் தெரிவிப்பு

3 months 1 week ago
09 FEB, 2024 | 10:35 AM
image

நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் இவன் ருட்ஜென்ஸ் (Iwan Rutjens), வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை நேற்று (08) சந்தித்து கலந்துரையாடினார். 

யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநர் துணைத்தூதுவருக்கு தெளிவுபடுத்தினார். 

அவ்விடயங்களை கேட்டறிந்த இவன் ருட்ஜென்ஸ் குடா நாட்டுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் என கூறியுள்ளார். 

அத்துடன் முதலீட்டுத் திட்டங்களை ஊக்குவித்து வட மாகாண அபிவிருத்திக்குத் தேவையான பங்களிப்பை வழங்கவும் தயாராக உள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.

download__2_.jpg

https://www.virakesari.lk/article/175942

யாழ். மாவட்ட செயலாளர் - புதிய மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சந்திப்பு

3 months 1 week ago
யாழ். மாவட்ட செயலாளர் - மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சந்திப்பு 
09 FEB, 2024 | 11:04 AM
image
 

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை நேற்று (08) சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தல், போதைப்பொருள் பாவனை, சட்டம் ஒழுங்கு என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனும் இணைந்துகொண்டார்.

download.jpg

download__1_.jpg

https://www.virakesari.lk/article/175947

தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை புறக்கணிக்கும் ரணில்: சுமந்திரன் பகிரங்கம்

3 months 1 week ago
தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை புறக்கணிக்கும் ரணில்: சுமந்திரன் பகிரங்கம் 7-9.jpg

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க வழங்கும் வாக்குறுதிகள், மக்களை ஏமாற்றும் வகையில் அமைந்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இனப்பிரச்சனைக்கான தீர்வை முழுமையாக நிராகரித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் தனது கொள்கை பிரகடனத்தை முன்வைத்ததாக, இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய போது சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொள்கை பிரகடன உரை மீதான ஆர்வம் காரணமாக சிறிலங்கா நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணிலின் நடவடிக்கை

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறுகையில், “சிறிலங்காவின் அதிபராக பதவியேற்றதில் இருந்து நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க ரணில் விக்ரமசிங்க பல தடவைகள் நடவடிக்கை எடுத்தார்.

இதற்கான காரணம் என்னவென்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன், கொள்கை பிரகடனத்தின் மீதான பற்றால் அவர் நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைக்கிறார்.

இதுவரை அவர் கூற வேண்டுமென நினைத்த அனைத்தையும் கொள்கை பிரகடனத்துக்குள் உள்ளடக்கியுள்ளார்.

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பொது மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர், எனினும் சிறிலங்காவின் அதிபராக தான் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளமை குறித்து அவர் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அதிபர் தேர்தல்

இந்த வார்த்தைகளில் உண்மை இல்லை. ரணில் விக்ரமசிங்கவின் திறமை காரணமாக தற்போது நாட்டின் நிலை ஓரளவு மேம்பட்டுள்ளதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு நாம் அவரை பாராட்ட வேண்டும்.

தற்போதைய சிறிலங்கா அதிபரின் முயற்சியால் எமக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்ள முடியுமாகியுள்ளது.

எனினும், குறித்த நடவடிக்கை எம்மை மேலும் கடனாளியாக்கும், இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும், இந்த ஆண்டை தேர்தல்களுக்கான ஆண்டு என ரணில் விக்ரமசிங்க பிரகடனப்படுத்தியுள்ளார்.

தேர்தல்களுக்கான திகதியையும் அவரே அறிவிக்கும் நிலையில் இந்த பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக நாடு. சட்டம் மற்றும் அரசியலமைப்புக்கு அமைய தேர்தல் நடைபெறும் திகதிகள் அறிவிக்கப்பட வேண்டும்.

எனினும், ரணில் விக்ரமசிங்க அதிபர் தேர்தலை முதலில் நடத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

https://akkinikkunchu.com/?p=268076

ஜனாதிபதி தேர்தலை ஒரு வருட காலத்துக்கு பிற்போட அரசாங்கம் முயற்சி - கிரியெல்ல

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3    08 FEB, 2024 | 04:37 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தில் ஜனாதிபதி தேர்தல் பற்றி குறிப்பிடப்படவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்யும் யோசனையை முன்வைத்து, ஜனாதிபதி தேர்தலை ஒருவருட காலத்துக்கு பிற்போட அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

ஜனநாயகத்துக்கு எதிராக செயற்பட்டு விட்டு, பாராளுமன்றத்துக்குள் வந்து எதிர்க்கட்சிகளிடம் ஒத்துழைப்பு கோருவதற்கு வெட்கமில்லையா என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் ஆற்றிய  சிம்மாசன பிரசங்கத்தை செவிமெடுத்து, வாத பிரதிவாதங்களை முன்வைத்தோம்.ஆனால் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கொள்கை பிரகடனத்தை நாங்கள் புறக்கணித்தோம். ஜனநாயகத்துக்கு எதிரான ஜனாதிபதியின் செயற்பாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 30 ஆம் திகதி கொழும்பில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இந்த போராட்டத்தின் மீது அரசாங்கம் வன்மையான முறையில்  தாக்குதல்களை மேற்கொண்டது. எதிர்க்கட்சித் தலைவர் மீதும் தாக்குதல்கள்  மேற்கொள்ளப்பட்டன. வரலாற்றில் இவ்வாறான நிலை ஒருபோதும் இடம்பெறவில்லை.

ஜனநாயக போராட்டத்தின் மீது தாக்குதல்கள் மேற்கொண்டு விட்டு, பாராளுமன்றத்துக்குள் வந்து 'எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் ' என  ஜனாதிபதி உரை நிகழ்த்துவதற்கு வெட்கமில்லையா?

நாட்டு மக்களை வஞ்சிக்கும் வகையில் 40 இற்கும் அதிகமான வரிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. காலனித்துவ ஆட்சியின் போது  அமுல்படுத்தப்பட்ட சரீர வரிகள் ஊடாக எதிர்வரும் காலங்களில் அமுல்படுத்தப்படலாம். தொழில் இல்லாத இளைஞர்கள் கூட வருமான வரி இலக்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுவது நகைப்புக்குரியது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால்  2022.04.12 ஆம் திகதிக்கு பின்னர் ஒரு சதம் கூட வெளிநாட்டு கடன்கள் செலுத்தப்படவில்லை. ஜனாதிபதியின் கொள்கை உரையில் ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசப்படவில்லை. அரசியலமைப்புக்கு அமைய இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலுக்கு அச்சமடைந்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை ஒரு வருட காலத்துக்கு பிற்போடுவதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்யும் யோசனையை முன்வைத்து ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டை நிச்சயம் தோற்கடிப்போம்.

எதிர்க்கட்சிகளின் ஆதரவை ஜனாதிபதி கோருகிறார். இவர்களுக்கு ஆதரவு வழங்கினால் எமக்கும் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்படும்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களுக்கு சர்வதேசம் ஆதரவு வழங்காது. ஆகவே அட்டை பூச்சிப் போல் ஒட்டிக் கொண்டு இருக்காமல் தேர்தலை நடத்துங்கள். தமக்கான அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்துக் கொள்வார்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/175884

சாந்தனுக்கான கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

3 months 1 week ago

Published By: VISHNU   08 FEB, 2024 | 09:35 PM

image
 

சாந்தனை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, அவருக்குரிய கடவுச்சீட்டு தேவைப்பட்ட நிலையில், இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களின் அமைவாக அவருக்குரிய கடவுச்சீட்டு (Passport) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறைக்குச் சாந்தனுடைய கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சால்  அறியத்தரப்பட்டுள்ளது.

இதன்படி, சாந்தன் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் வருநாட்களில் இந்திய அரசு தரப்பினால் மேற்கொள்ளப்படவுள்ளது.

https://www.virakesari.lk/article/175928

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் யானைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

3 months 1 week ago
08 FEB, 2024 | 08:22 PM
image

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் காட்டு யானைகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கிராம மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மந்துவில், மல்லிகைத்தீவு போன்ற கிராமங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக விவசாய காணி, வயல்காணி, தோட்ட காணிகளுக்குள் கூட்டமாக புகுந்த யானைகள், அப்பிரதேச மக்களின் வாழ்வாதாரமாக உள்ள நெல், தென்னம்பிள்ளை, பயிற்றை, வெண்டி, கச்சான் முதலான பயிர்களை மிதித்து நாசமாக்கியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய இந்த மக்கள் தமது வாழ்வாதாரத்துக்காக விவசாயம் மற்றும் தோட்டச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த கிராமத்தில் யானையின் தாக்குதல் அதிகரித்திருப்பதனால் தமது வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கும் பிரதேச மக்கள், கிராமத்துக்குள் யானைகள் வருவதை தடுக்க பாதுகாப்பு வேலிகள் அமைத்துத் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

IMG_20240208_15380069.jpg

IMG_20240208_15351604.jpg

IMG_20240208_15354944.jpg

IMG_20240208_15355706.jpg

IMG_20240208_15360596.jpg

IMG_20240208_15365093.jpg

IMG_20240208_15372377.jpg

IMG_20240208_15375472.jpg

IMG_20240208_15371839.jpg

https://www.virakesari.lk/article/175914

யாழ். சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்காக காணி சுவீகரிப்பு : எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானம்

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3   08 FEB, 2024 | 05:27 PM

image

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கு 500 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுக்க பல்வேறு தரப்புக்களும் தீர்மானித்துள்ளன. 

வலி.வடக்கு பிரதேசத்தில் இன்னமும் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல் உயர் பாதுகாப்பு  வலயமாக காணப்படும் நிலையில், காணிகளை விடுவிக்குமாறு, காணி உரிமையாளர்களால் பல வருடங்களாக கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருவதுடன், காணி விடுவிப்பு போராட்டங்களையும் பல்வேறு தடவைகள் முன்னெடுத்துள்ளனர். 

இந்நிலையில், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கு என 500 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

அதில், விடுவிக்கப்பட்டு மக்கள் மீள் குடியேறிய காணிகளையும் சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

குரும்பசிட்டி , கட்டுவான் மற்றும் குப்பிளான் வடக்கு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள காணிகளும் சுவீகரிக்கப்படவுள்ளன. அதில் மக்கள் மீள் குடியேறியுள்ள காணிகளும் உள்ளடங்கியுள்ளன என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பில், அந்த கிராம அமைப்புக்கள் அண்மையில் கூடி ஆராய்ந்து, தமது காணிகளை சுவீகரிக்கும் திட்டங்களை முன்னெடுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என முதல் கட்டமாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ்.மாவட்ட செயலர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுப்பது என தீர்மானித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/175905

இலங்கை: 'போரின்போது காணாமல் ஆக்கப்பட்ட தமிழருக்கு ராணுவமே பொறுப்பு' - நீதிமன்றம் உத்தரவு

3 months 1 week ago
காணாமல் ஆக்கப்பட்ட தமிழருக்கான பொறுப்பை ராணுவம் ஏற்க வேண்டும் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு
படக்குறிப்பு,

யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் (கோப்புப்படம்)

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட கந்தசாமி இளரங்கனுக்கான பொறுப்பை இலங்கை ராணுவம் ஏற்க வேண்டும் என வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் புதன்கிழமை (பிப். 07) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாக மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.

நடந்தது என்ன?

கந்தசாமி இளரங்கன் என்ற 28 வயதான இளைஞன் ஒருவன், 2006ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி காணாமல் போனதாக அவரது தாய் முறைப்பாடு செய்துள்ளார். வாகன ஓட்டுநரான கந்தசாமி இளரங்கன் ஓமந்தை வழியாக கொழும்பு நோக்கிப் பயணித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான முக்கிய சோதனைச் சாவடியாக ஓமந்தை சோதனைச் சாவடி அந்தக் காலப் பகுதியில் காணப்பட்டது.

பெரும்பாலான தமிழர்கள் ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்தே காணாமல் ஆக்கப்பட்டதாக இன்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், கந்தசாமி இளரங்கன் பயணி ஒருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விடுவதற்காக வேன் ஒன்றை ஓமந்தை சோதனைச் சாவடி வழியாகச் செலுத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை தந்த நிலையில், கந்தசாமி இளரங்கன், அவருடன் பயணித்த பயணி ஆகியோரை ராணுவம் இடைமறித்து சோதனை செய்துள்ளதாக மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் தெரிவித்தார்.

 
காணாமல் ஆக்கப்பட்ட தமிழருக்கான பொறுப்பை ராணுவம் ஏற்க வேண்டும் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

பட மூலாதாரம்,KOGULAN

படக்குறிப்பு,

மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல்

''ஓமந்தை சோதனைச் சாவடியில் ராணுவம் சோதனை செய்ததன் பின்னர், அவர் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடையாது. அவர் அந்த வழியாகப் பயணித்தமைக்கான ராணுவப் பதிவு, பதிவுப் புத்தகத்தில் காணப்படுகின்றது. ஆனால், அவர் இத்தனை மணிக்கு வந்தார் என்பது தொடர்பான பதிவு உள்ளது. ஆனால், போனமைக்கான பதிவு இல்லை," என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாக மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

கடும் கட்டுப்பாடுகள் நிலவிய காலப் பகுதி என்பதால், கந்தசாமி இளரங்கனின் தாயாருக்கு உடனடியாக, அவரது மகனைத் தேட முடியாத நிலைமை அன்று காணப்பட்டுள்ளது.

அதன் பின்னரான காலத்தில் தனது மகன் தொடர்பில் போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பிடம் ஆராய்ந்துள்ளதுடன், தனது மகன் தொடர்பான எந்தவித தகவல்களையும் அவரால் அப்போது பெற்றுக்கொள்ள முடியவில்லை.

அதையடுத்து, கந்தசாமி இளரங்கனின் தாயார், ஐ.சி.ஆர்.சி, மனித உரிமைகள் ஆணைக்குழு, போலீஸ் உயர் அதிகாரிகள் என சம்பந்தப்பட்ட தரப்பிடம் முறைப்பாடுகளைச் செய்த போதிலும், தனது மகன் தொடர்பான தகவல்களை தாயினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்த நிலையிலேயே, கந்தசாமி இளரங்கனின் தாய், வவுனியா மேல் நீதிமன்றத்தில் 200ஆம் ஆண்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளதாக, மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் குறிப்பிடுகின்றார்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக இலங்கை ராணுவ தளபதி, ராணுவத்தின் 211ஆம் படையணியின் கட்டளை தளபதி உள்ளிட்ட மூவர் பெயரிடப்பட்டுள்ளனர்.

''இலங்கை ராணுவத்தால் இந்த மனு மீது ஆட்சேபனை செய்யப்பட்டுள்ளது. அவர் வந்தது உண்மைதான். ஆனால், அப்போதே அவர் சென்றுவிட்டார்," என இலங்கை ராணுவம் ஆட்சேபனை செய்ததாக மூத்த சட்டத்தரணி கூறுகின்றார்.

 
காணாமல் ஆக்கப்பட்ட தமிழருக்கான பொறுப்பை ராணுவம் ஏற்க வேண்டும் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

பட மூலாதாரம்,KOGULAN

இவ்வாறான நிலையில், இறுதிக்கட்ட யுத்தம் வலுப்பெற்ற காலகட்டத்தில் மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளானதுடன், நீதிமன்ற நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

அதன் பின்னர், யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, கந்தசாமி இளரங்கனின் தாய், 2013ஆம் ஆண்டு இந்த வழக்கை மீள தொடர்வதற்கு மேல் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளார்.

இதன் பின்னரான காலத்தில் இந்த வழக்கு தொடர்ந்து நடத்தப்பட்டு வந்ததுடன், மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் உள்ளிட்ட சந்தேக நபர்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.

''கந்தசாமி இளரங்கன் வந்தது உண்மை. ஆனால், அவர் சென்றுவிட்டார்" என பிரதிவாதிகள் சாட்சியமளித்த பின்னணியில், அதை கந்தசாமி இளரங்கனின் தாய் நீதிமன்றத்தில் நிராகரித்துள்ளார்.

''அவர் ராணுவத்திடம் இருந்து சென்றிருந்தால், எனக்கு அறிவித்திருப்பார். அவர் அந்த இடத்திலேயே காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்," என தாய் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அத்துடன், கந்தசாமி இளரங்கனுடன் வேனில் பயணித்ததாகக் கூறப்படும் இளைஞனான உமாதரன் தொடர்பான தகவல்களும் இல்லை எனக் கூறிய மூத்த சட்டத்தரணி, அவர் தொடர்பில் யாரும் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்யவில்லை எனக் குறிப்பிட்டார்.

இவ்வாறான விடயங்களை ஆராய்ந்ததை அடுத்தே, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் முக்கிய தீர்ப்பொன்றை நேற்று வழங்கியுள்ளார்.

 
தீர்ப்பில் என்ன கூறப்பட்டுள்ளது?
காணாமல் ஆக்கப்பட்ட தமிழருக்கான பொறுப்பை ராணுவம் ஏற்க வேண்டும் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு
படக்குறிப்பு,

காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடித்துத் தரக்கோரி உறவினர்கள் போராட்டம் (கோப்புப்படம்)

''மனுதாரர் அளித்த சாட்சியங்களிலும், ஏனைய சாட்சியங்களிலும் இருந்து கந்தசாமி இளரங்கன் அந்த இடத்திற்குப் போயிருக்கிறார். ஆனால், அவர் திரும்பி வரவில்லை. இவர் முற்று முழுதாக ஸ்ரீலங்கா ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்துள்ளார்.

கடைசியாக அவர் ராணுவத்தின் பொறுப்பிலேயே இருந்துள்ளார். எனவே, ராணுவமே பதிலளிக்க வேண்டும். அவர்களே பொறுப்பேற்க வேண்டும்," என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பிலான மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

சர்வதேச சட்டங்கள், இலங்கை நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள், வெளிநாட்டு நீதிமன்ற தீர்ப்புகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சட்டங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தே இந்தச் சம்பவத்திற்கு இலங்கை ராணுவம் பொறுப்பேற்க வேண்டும் என்ற தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார் என அவர் குறிப்பிடுகின்றார்.

நீதிபதி ராணுவத்திற்கு விடுத்த உத்தரவு

எதிர்வரும் ஜுன் 3ஆம் தேதி அல்லது அதற்கு முன்னரான ஒரு தேதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட கந்தசாமி இளரங்கனை, உயிருடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன், இலங்கை ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அது தவறும் பட்சத்தில், இலங்கை ராணுவம் கந்தசாமி இளரங்கனை வலிந்து காணாமல் ஆக்கியதாக தீர்மானித்து, அதற்கு நட்டஈடாக மனுதாரருக்கு மூன்று பிரதிவாதிகளும் கூட்டாக ஒரு மில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இப்படியான தீர்ப்புகள் இதற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ளதா?

''சிங்கள பகுதிகளில் இவ்வாறான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழர் பகுதியில் இதுவே முதல் முறை. ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் தண்டனை கொடுப்பதற்கான அதிகாரம் கிடையாது.

ஏனென்றால், இது சிவில் வழக்கு. நஷ்ட ஈடு மட்டும்தான் கொடுக்கச் சொல்லலாம்," என மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் குறிப்பிட்டார்.

 
இலங்கை ராணுவத்தின் பதில்
காணாமல் ஆக்கப்பட்ட தமிழருக்கான பொறுப்பை ராணுவம் ஏற்க வேண்டும் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

பட மூலாதாரம்,SRI LANKA ARMY

படக்குறிப்பு,

இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத்

இந்தத் தீர்ப்பு தொடர்பில் இலங்கை ராணுவத்தின் சட்டப்பிரிவு சார்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ராணுவம், பிபிசி தமிழுக்கு தெரிவித்தது.

''இந்த வழக்கில் காணாமல் போன நபர் இருப்பாராயின், எதிர்வரும் ஜூன் 3ஆம் தேதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் கூறியுள்ளது.

அவ்வாறு இல்லையென்றால், மனுதாரருக்கு ஜூன் 3ஆம் தேதி ஆகும்போது ஒரு மில்லியன் ரூபா செலுத்துமாறு நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எமது சட்டப் பிரிவு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. இந்த விடயம் தொடர்பில் இதற்கு மேல் தாம் கூறுவது சிரமமான விடயமாகும்," என, இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் பிபிசி தமிழுக்கு கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cn0nqgrgxwvo

யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!

3 months 1 week ago
IMG-20240208-WA0044-750x375.jpg யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று நண்பகல் புகழ்பெற்ற தென்னிந்தியக் கலைஞனர்களான  சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா , நந்தினி, மகா லட்சுமி ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த கலைஞர்களுக்கு  யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை 09ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்ச்சி  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG-20240208-WA0047-600x284.jpg

IMG-20240208-WA0049-600x338.jpg

https://athavannews.com/2024/1368978

மூன்று முக்கிய கொடுப்பனவுகளை அரசாங்கம் அதிகரித்தது

3 months 1 week ago

சிரேஷ்ட பிரஜைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சிறுநீரக நோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை 7,500 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், சிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்கப்படும் 2,000 ரூபா உதவித்தொகை 3,000 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுகள் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வகைகளுக்குள் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரிப் பலன்களைப் பெறுபவர்கள் ஏப்ரல் 01, 2024 முதல் அதிகரிப்பைப் பெறுவார்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/291071

ஜனாதிபதி அவுஸ்திரேலியா பயணம்

3 months 1 week ago

Published By: VISHNU   08 FEB, 2024 | 02:02 AM

image
 

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பெப்ரவரி 9ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பிரதான உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்திய மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயத்தில் இணைந்துள்ள ஜனாதிபதி, இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் அங்கு ஆராயவுள்ளார்.

https://www.virakesari.lk/article/175852

தமிழர்களின் பிரச்சினையை விடவும், சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை அளிக்கிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதங்கம்

3 months 1 week ago

Published By: VISHNU   08 FEB, 2024 | 12:04 AM

image

ஆர்.ராம்

தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினை அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக சீனாவுடனான போட்டியினால் அதனைக் கையாள்வதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்கின்றன என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான வில்லி நிக்கில், டிபோத் ரொஸ், ஜம்மி ரஸ்கின், டெனி கே.டேவிஸ் ஆகியோருடன் சந்திப்புக்களை நடத்துள்ளார். 

இந்தச் சந்திப்பு தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கையின் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தும் தீர்மானம் 427 காங்கிரஸ் சபையில் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில் தமிழர்கள் மீது கரிசனைகளைக் கொண்டுள்ள அவர்களுடனான சந்திப்பில் தமிழர்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் எடுத்துரைத்தோம். 

விசேடமாக ராஜபக்ஷக்களின் காலத்தில் தமிழ் மக்கள் மீதும், தமிழர் தேசத்தின் மீதும் கடுமையான திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி முன்னெடுக்கப்படுகின்றது. 

இந்தத் தருணத்தில் தமிழர்களின் தேசத்தினை மிக வேகமாக இல்லாதொழிக்கின்ற செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  பௌத்த மயமாக்கல், அபிவிருத்தியின் பெயரில் தமிழர்களின் நிலங்களைப் பறித்து சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுதல், தமிழர்களின் பூர்வீக நிலங்களிலிருந்து தமிழர்களை பாரிய அபிவிருத்தியின் பெயரால் வெளியேற்றுதல், அடிப்படை உரிமைகளான பேச்சு சுதந்திரம், நினைவுகூருகின்ற சுதந்திரம், கருத்து வெளியிடுகின்ற சுதந்திரம் ஆகிய ஜனநாயக விரோதமான செயற்பாடுகளைத் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுத்தல், உள்ளிட்ட செயற்பாடுகளே தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றன.  

அதேநேரம், உள்நாட்டில் பூகோள போட்டித்தன்மை காணப்படுகின்றது. விசேடமாகச் சீனாவுடன் மேற்குலக நாடுகள் போட்டிப்போடுகின்ற தன்மைகள் காணப்படுகின்றன. தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுப்பதற்குப் பதிலாக அரசாங்கம் சீனாவுடனான விடயங்களைக் கட்டப்படுத்தும் செயற்பாடுகளையே மேற்கத்தேய நாடுகள் முன்னெடுத்து வருகின்றன. 

தற்போது இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள. இதனால் அதற்கு பாரிய நிதி உதவிகள் தேவையாக உள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தினை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குல நாடுகள், இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்குச் சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வொன்றை வழங்குவதற்கும், பொறுப்புக்கூறலைச் செய்வதற்காகச் சர்வதேச குற்றவியல் விசாரணையொன்றை முன்னெடுப்பதற்கும் தங்களுடைய அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளேன்.

அத்தோடு. தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிப்பதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவதோடு, பொறுப்புக்கூறலுக்காவும், இனப்பிரச்சினை தீர்வுக்காகவும் தீர்மானங்களைத் தொடர்ச்சியாக அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளேன் என்றார்.

https://www.virakesari.lk/article/175846

அயோத்தி இராமர் கோயிலுக்கு செல்லும் நாமல்!

3 months 1 week ago

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அயோத்தி இராமர் கோயிலுக்கு விஜயமொன்றை முன்னெடுக்கவுள்ளார்.

புதுடெல்லிக்கு 02 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவர் அயோத்தி இராமர் கோயிலுக்கு முன்னெடுக்கவுள்ளார்.

இந்தநிலையில், நாளை மாலை அயோத்தி இராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், புதுடெல்லியில் தங்கியிருக்கும் காலத்தில் நாமல் ராஜபக்ஷ பல்வேறு உயரதிகாரிகளை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/291042

ரணில் மூளைச்சலவை செய்ததால் தான் அனுரகுமர இந்தியா சென்றுள்ளார் - அமைச்சர் நிமால்

3 months 1 week ago

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தேசிய மக்கள் சக்தியை மூளைச்சலவை செய்துள்ளார் அதன் காரணமாகவே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க இந்திய தலைவர்களை சந்திக்க சென்றுள்ளார் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஆதிக்கம் குறித்து உரையாற்றிய தேசியமக்கள் சக்தியின் தலைவர்கள் இதன் காரணமாகவே இந்தியா சென்றுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பழைய ஆடைகளை அணிந்தவர்கள் கோட் அணிகின்றனர் இது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்  இது ரணில் விக்கிரமசிங்க மூளைச்சலவை செய்ததால் ஏற்பட்ட மாற்றம் எனவும் அர் தெரிவித்துள்ளார்.

அதானி குழுமத்துடன் இணைந்து செயற்படுவதற்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் எவ்வாறு அரசாங்கத்தை விமர்சித்தார்கள் என்பது எங்களிற்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/175894

1,200 போதைமாத்திரைகளுடன் பெண் உட்பட இருவர் கைது

3 months 1 week ago

விற்பனை செய்ய வைத்திருந்ததாக கூறப்படும்  1,200 போதை மாத்திரைகளுடன் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்  மன்னார் ,  நானாட்டான் பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணும் 45 வயதுடைய ஆணுமாவர்.

சந்தேக நபர்கள் மன்னார் , சிலாவத்துறை , நானாட்டான் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் குற்றப் புலனாய்வு பிரிவினர் மற்றும் கடற்படை அதிகாரிகளால் சிலாவத்துறை , நானாட்டான்  பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை  நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் சந்தேக  நபர்களிடமிருந்து 1,200 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளுடன் சிலாவத்துறை பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/175891

இந்து சமுத்திர மாநாட்டில் "நிரந்தரமான மற்றும் நிலையான இந்து சமுத்திரத்தை நோக்கி" என்ற தொனிப்பொருளில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி

3 months 1 week ago

7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்க அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள "நிரந்தரமான மற்றும் நிலையான இந்து சமுத்திரத்தை நோக்கி" என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த ஆண்டு மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதான உரை நிகழ்த்த உள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை (08) அதிகாலை அவுஸ்திரேலியா பயணமானார்.

இந்தியா மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில்  பங்கேற்பதற்காக ஜனாதிபதி சென்றுள்ளதோடு, ஏழாவது இந்து சமுத்திர  மாநாடு பெப்ரவரி  மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறுகிறது.

இந்து சமுத்திரத்தை அண்மித்த நாடுகள் மற்றும் இந்து சமுத்திரத்தை அதிகமாகப் பயன்படுத்தும்  ஏனைய நாடுகளைப் பாதிக்கும் பொதுவான அபிலாஷைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில்  ஆராய்வதற்காக இந்து சமுத்திர மாநாடு 2016 இல்  ஆரம்பிக்கப்பட்டது.

"நிரந்தரமான மற்றும் நிலையான இந்து சமுத்திரத்தை நோக்கி" என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த ஆண்டு மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதான உரை நிகழ்த்த உள்ளார்.

இம்முறை மாநாட்டில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் 40 நாடுகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பங்கேற்புடன்  வரைபடம் ஒன்றும்  தயாரிக்கப்படும். மாநாட்டுடன் இணைந்ததாக இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தும் பல உயர்மட்ட கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் இணைந்து கொள்ளவுள்ளதோடு, “எங்கள் நீல எதிர்காலம் : இந்து சமுத்திர வளங்களின் இருப்பைப் பாதுகாப்பதற்கு பிராந்திய தீவு நாடுகளுடன் இணைந்து செயற்படுவதெப்படி?” என்ற தலைப்பில் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றவுள்ளார்.

7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டை இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது. சிங்கப்பூர்  எஸ்.ராஜரத்தினம் சர்வதேச கல்வி நிலையம் மற்றும் அவுஸ்திரேலியாவின் பெர்த்-அமெரிக்கா ஆசியா மையம் ஆகியவை இதற்கு பங்களிக்கின்றன.

2ஆவது இந்து சமுத்திர மாநாடு 2017ஆம் ஆண்டு அப்போதைய பிரதமரும், ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இலங்கையில் நடைபெற்றது நினைவூட்டத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/175864

'எக்கோ' நிபுணர்கள் இன்மையால் பாதிப்பு

3 months 1 week ago

கிளிநொச்சி மருத்துவமனையில் 'எக்கோ' நிபு ணர் இல்லாமையால் நோயாளர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
அவசர நிலைமைகளில் நோயாளர்களை யாழ்ப்பாணம் அல்லது வவுனியா மருத்துவமனைக்கு 'எக்கோ' பரிசோதனைக்காகக் கொண்டு செல்ல வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

மன்னார் மாவட்ட மருத்துவமனையிலிருந்து கிளிநொச்சி மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்ட 'எக்கோ' நிபுணர், மருத்துவமனைக்கு வருகை தராமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

https://newuthayan.com/article/'எக்கோ'_நிபுணர்கள்_இன்மையால்_பாதிப்பு

வனவள பணிமனை பிடியிலுள்ள காணியை விடுவிக்க கோறி மன்னார் இசைமாலைத்தாழ்வு மக்கள் போராட்டம்.

3 months 1 week ago

வனவளப்பணிமனை பிடியிலுள்ள காணியை விடுவித்துத் தாருங்கள்
மன்னார் இசைமாலைத்தாழ்வு மக்கள் போராட்டம்

'நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வனவளப்பணிமனையின் கட்டுப் பாட்டிலுள்ள 46 ஏக்கர் காணியை விடுவித்து காணி அற்றோருக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மன்னார் இசைமாலைத் தாழ்வு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நானாட்டானில் கடந்த புதன் கிழமை இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
"இசைமாலைத்தாழ்வு கிராமத்துக்குட்பட்ட 113 குடும்பங்கள் குடியிருப்பதற்கு காணியின்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றன. ஒரு வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட குடும்பங்களாக வசித்து வருகின்றோம். எனவே மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனைக் கவனத்திற்கொண்டு வனவளப்பணிமனையின் பிடியிலுள்ள காணியை, எம்மைப் போன்ற காணியற்றோருக்குப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.(ப)

 

https://newuthayan.com/article/வனவளத்திணைக்கள_பிடியிலுள்ள_காணியை_விடுவிக்க_கோறி_மன்னார்_இசைமாலைத்தாழ்வு_மக்கள்_போராட்டம்.

Checked
Sun, 05/19/2024 - 00:35
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr