Aggregator
ரணில் எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்தக்கூடிய வல்லமையைப் பெற்றுவிட்டாரா?
ரணில் எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்தக்கூடிய வல்லமையைப் பெற்றுவிட்டாரா?
on September 1, 2025
Photo, Social Media
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் அரசியல் வரலாற்றில் பல முதலாவது ‘சாதனைகளுக்கு’ சொந்தக்காரர். இந்த நாட்டின் மிகவும் பழைமை வாய்ந்த அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக விக்கிரமசிங்கவை போன்று வேறு எந்த அரசியல் தலைவரும் நீண்டகாலம் பதவி வகித்ததில்லை. மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தனது கட்சியின் தலைவராக இருந்து வரும் அவரே மிகவும் நீண்டகாலம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த அரசியல் தலைவர்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்றத்தில் தேர்தல் மூலமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவான முதல் அரசியல் தலைவர் விக்கிரமசிங்கவே. இறுதியில் அவரே அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முதலாவது முன்னாள் ஜனாதிபதி என்ற அவப்பெயரையும் தனது சுமார் அரை நூற்றாண்டுகால அரசியல் வாழ்வின் அந்திமக் காலத்தில் சம்பாதிக்க வேண்டியதாகப் போய்விட்டது.
ஜனாதிபதியாக இருந்த வேளையில் 2023ஆம் ஆண்டு செப்டெம்பரில் ஜி 77 நாடுகளின் உச்சி மகாநாட்டில் பங்குபற்றுவதற்காக கியூபாவுக்கும் அடுத்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78ஆவது வருடாந்த கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்காவுக்கும் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்ட விக்கிரமசிங்க நாடு திரும்பும் வழியில் லண்டனில் தனிப்பட்ட தேவைக்காக தங்கிநின்ற இரு நாட்கள் தனக்கும் தனது குழுவினருக்குமான செலவுகளுக்கு அரச பணத்தைப் பயன்படுத்தியதன் மூலம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து விட்டார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டாகும்.
முன்னாள் ஜனாதிபதியின் மனைவியான பேராசிரியை மைத்ரி. விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பல்கலைக்கழகம் ஒன்று கௌரவப் பேராசிரியை பட்டம் வழங்கிக் கௌரவித்த வைபவத்தில் பங்கு பற்றுவதற்காகவே அவர் லண்டனுக்குச் சென்றார். பேராசிரியை மைத்ரி தனக்குரிய கௌரவத்தைப் பெறுவதற்காக தனது சொந்தப் பணத்திலேயே ஐக்கிய இராச்சியத்துக்கு சென்றிருந்தார். அமெரிக்க விஜயத்தை முடித்துக் கொண்டு லண்டனுக்குச் சென்று தங்கியிருந்த போது விக்கரமசிங்க தனது அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கான செலவினங்களுக்கு 16.6 மில்லியன் ரூபா அரச பணத்தை செலவிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.
இலங்கை பொலிஸின் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் அழைப்பின் பேரில் ஆகஸ்ட் 22ஆம் திகதி தனது வாக்குமூலத்தை வழங்குவதற்கு அதன் தலைமையகத்துக்குச் சென்ற விக்கிரமசிங்கவை நீண்டநேரம் விசாரணை செய்த பிறகு பொலிஸார் கைதுசெய்து கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். ‘நாடக பாணியிலான’ நிகழ்வுகளுக்குப் பிறகு அன்றையதினம் இரவு 10 மணிக்குப் பிறகு அவரை ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
கைவிலங்கிடப்பட்ட நிலையில் சிறைச்சாலை வாகனத்தில் கூட்டிச் செல்லப்பட்ட விக்கிரமசிங்கவின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததை அடுத்து அவர் முதலில் வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலையிலும் பிறகு கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவரால் ஆகஸ்ட் 26ஆம் திகதி நீதிமன்றத்திற்கு செல்லமுடியவில்லை. இணையவழியின் மூலமாக நீதிமன்றத்தில் தனது பிரசன்னத்தை உறுதிசெய்த முன்னாள் ஜனாதிபதியின் உடல் நிலையைக் கருத்தில்கொண்டு கோட்டை மாஜிஸ்திரேட் அவரை தலா ஐந்து மில்லியன் ரூபா மூன்று ஆளுறுதிப் பிணையில் விடுதலை செய்தார்.
ஒருவாரகாலம் தேசிய வைத்தியசாலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் இருதய நோய் மற்றும் நீரிழிவு உட்பட பல பாரதூரமான நோய்களுக்காக விசேட வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்ற பிறகு ஆகஸ்ட் 29 வெள்ளிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி வீடு திரும்பினார். வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதற்கு விக்கிரமசிங்க விரும்பினால் அரசாங்கம் அதற்கு அனுமதிக்குமா என்று தெரியவில்லை. முன்னாள் ஜனாதிபதி வெளிநாட்டுக்குச் செல்லாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்யுமாறு சட்டமா அதிபரின் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
மீண்டும் விக்கிரமசிங்கவின் வழக்கு அக்டோபர் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படும். அவரின் கதியை இனிமேல் நீதிமன்றமே தீர்மானிக்கும் என்பதால் இதற்கு மேல் நாம் அதைப்பற்றி எதையும் கூறுவது நீதித்துறையை அவமதிப்பதாக அமைந்து விடும். அரச பணத்தை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டதற்குப் பிறகு அந்த விவகாரம் முற்றிலும் சட்டப் பிரச்சினையாக மாறிவிட்டாலும் கூட, அது அரசியல் அரங்கில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்திருக்கிறது.
விக்கிரமசிங்கவை கடந்த காலத்தில் மிகவும் கடுமையாக விமர்சித்த அரசியல்வாதிகளும் கூட அணிதிரண்டு அவருக்கு தங்களது ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் வெளிக்காட்டினர். பெரும்பாலும் சகல எதிர்க்கட்சிகளின் தலைவர்களுமே செய்தியாளர்கள் மகாநாடுகளைக் கூட்டி விக்கிரமசிங்கவை நியாயப்படுத்தியதுடன் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ வாழ்வையும் தனிப்பட்ட வாழ்வையும் வேறுபடுத்திப்பார்க்கக் கூடாது என்றும் கூறினர். மேலும், விக்கிரமசிங்க மீதான சட்ட நடவடிக்கையை அவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் என்றே வர்ணிக்கிறார்கள்.
விக்கிரமசிங்கவுக்கு எதிரான நடவடிக்கையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் மீதான பெரும் தாக்குதல் என்று கண்டனம் செய்த அதேவேளை, முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ விக்கிரமசிங்கவின் கைதை அரசியல் பழிவாங்கல் என்று வர்ணித்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கட்டமைத்து வருகின்ற அரசியலமைப்பு ரீதியான சர்வாதிகாரத்தை தோற்கடிப்பதற்கு கட்சி வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். கோட்டபாய ராஜபக்ஷ மாத்திரமே இந்த விவகாரத்தில் பகிரங்கமாக கருத்து எதையும் வெளியிடாமல் இருந்துவரும் முன்னாள் ஜனாதிபதியாவார்.
விக்கிரமசிங்க விவகாரம் ஒரு ஜனாதிபதியின் தனிப்பட்ட விஜயங்களையும் உத்தியோகபூர்வ விஜயங்களையும் வேறுபடுத்திப் பார்க்க முடியுமா என்ற விவாதம் ஒன்றையும் மூளவைத்திருக்கிறது. அவ்வாறு வேறுபடுத்திப்பார்க்க முடியாது என்று விக்கிரமசிங்க கூறியதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
தேசிய மக்கள் சக்தி/ ஜே.வி.பியின் நிகழ்ச்சிகளுக்கும் அநுராதபுரத்தில் தனது குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதற்கும் செல்லும் போது ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க பாதுகாப்புப் பிரிவினர் இல்லாமல் தனது சொந்த வாகனத்தையா பயன்படுத்துகிறார் என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின.
இதற்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஜனாதிபதி தனிப்பட்ட தேவைகளுக்காக, குறிப்பாக சுகவீனமுற்றிருக்கும் தனது தாயாரைப் பார்வையிடுவதற்காக நாட்டுக்குள் பயணங்களைச் செய்வதையும் முன்னாள் ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு விமானங்களில் செல்வதையும் ஒருபோதும் ஒப்பிட முடியாது என்று குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகள் முடியுமானால் திசாநாயக்கவின் உள்நாட்டுப் பயணங்கள் தொடர்பில் நீதிமன்றத்தை நாடட்டும் பார்க்கலாம் என்று ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சவால் விட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.
தற்போதைய இலங்கை அரசியல் தலைவர்களில் விக்கிரமசிங்கவே சர்வதேச மட்டத்தில் செல்வாக்கும் மதிப்பும் கொண்டவராகக் கருதப்படுவதால் அவருக்கு எதிரான நடவடிக்கைகளை குறிப்பாக, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் கண்டனம் செய்யும் என்றும் அவரை உடனடியாகவே விடுவிக்க வேண்டும் என்று அரசாங்கத்துக்கு நெருக்குதல்களைக் கொடுக்கும் என்றும் பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. அவ்வாறு எதுவுமே நடைபெற்றதாகத் தெரியவில்லை. இலங்கையின் நிகழ்வுப் போக்குகளை அந்த நாடுகள் அவதானித்துக் கொண்டிருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வெளிநாடுகளில் இருந்து அவருக்கு சார்பாக பகிரங்கமாக கருத்து வெளியிட்டவர்கள் என்றால் இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூரும் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் நோர்வேயின் எரிக் சொல்ஹெய்முமேயாவர். விக்கிரமசிங்க பாரதூரமான குற்றச் செயல் எதையும் செய்யவில்லை என்று கூறிய அவர்கள் இருவரும் அவரை உனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தினார்கள்.
முன்னாள் ஜனாதிபதியின் கைது தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்கள் உட்பட சர்வதேச சமூகத்திடமிருந்து நெருக்குதல்கள் வந்ததா என்று அமைச்சரவை செய்தியாளர்கள் மகாநாட்டில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்திடம் கேட்கப்பட்டபோது அதற்குப் பதிலளித்த அவர், எந்தவொரு வெளிநாட்டு இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர அமைப்போ எந்தக் கருத்தையும் கூறவில்லை என்றும் சில தனிப்பட்டவர்கள் வெளிநாடுகளில் இருந்து வெளியிட்ட கருத்துக்கள் முக்கியத்துவமற்றவை என்றும் குறிப்பிட்டார். கடந்த காலத்தில் தற்போது இலங்கையில் சட்டத்தின் ஆட்சி சமத்துவமான முறையிலும் நேர்மையாகவும் பிரயோகிக்கப்படுகிறது என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதியின் கைதுக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து கொழும்பில் உள்ள பல்வேறு வெளிநாட்டு தூதரகங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவர்கள் விளக்கிக் கூறியதாகவும் கைது தொடர்பில் மேலதிக விபரங்களை குறிப்பிட்ட சில சர்வதேச அமைப்புக்கள் அவர்களிடம் கோரியதாகவும் கட்சி வட்டாரங்கள் அறிவித்தன.
விக்கிரமசிங்க விவகாரம் தற்போது சிதறிப்போயிருக்கும் எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்தி அரசாங்கத்துக்கு பெரிய சவாலைத் தோற்றுவிக்கக்கூடிய சாத்தியத்தை எதிர்பார்ப்பதற்கில்லை. முன்னாள் ஜனாதிபதியின் கைதுக்கு உடனடியாக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் காணப்பட்ட ஆரவாரம் தற்போது தணிந்து போயிருப்பதாகவே தோன்றுகிறது. எதிர்க்கட்சிகளின் பரந்தளவிலான கூட்டணியொன்றை அமைப்பதற்கு அவற்றை வழிநடத்தக்கூடிய அரசியல் செல்வாக்கும் வல்லமையும் கொண்ட ஏற்புடைய தலைவர் ஒருவர் அவர்கள் மத்தியில் இல்லை. அதேவேளை, கடந்த வாரத்தைய சம்பவங்களுக்குப் பிறகு எதிரணி அரசியல் கட்சிகளை ஐக்கியப்படுத்தக்கூடிய ஒரு வலிமையான அரசியல் காரணியாக விக்கிரமசிங்க மாறியிருக்கிறாரா என்பதும் முக்கியமான ஒரு கேள்வி.
இன்றைய எதிர்க்கட்சி அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் அவர்களது கடந்தகால முறைகேடான செயற்பாடுகளுக்காக அரசாங்கத்தினால் எளிதாக இலக்கு வைக்கப்படக்கூடிவர்களாக இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் தங்கள் மீது சட்ட நடவடிக்கைகளை எடுப்பதில் அரசாங்கம் நாட்டம் காட்டாமல் இருப்பதை உறுதிசெய்யக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்காகவே ஐக்கியப்படுவது குறித்தும் மக்களை அணிதிரட்டுவது குறித்தும் அவர்கள் பேசுகிறார்கள். அத்தகைய அணுகுமுறை மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான சாத்தியம் குறித்து வலுவான சந்தேகம் எழுகிறது.
அதேவேளை, கடந்த வருடத்தைய தேசிய தேர்தல்களின்போது நாட்டு மக்களுக்கு அளித்த பெருவாரியான வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முக்கியமான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திருப்புவதற்காக முன்னைய ஆட்சியாளர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் அக்கறை காட்டுகிறது என்ற விமர்சனமும் இருக்கிறது. விக்கிரமசிங்கவை விடவும் கூடுதலான அளவுக்கு செல்வாக்குடைய பலம்பொருந்திய அரசியல் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளில் இறங்குவதற்கு முன்னதாக மக்களின் உணர்வுகளை நாடிபிடித்துப் பார்க்கும் ஒரு நடவடிக்கையே அவரின் கைது என்றும் ஊகிக்கப்படுகிறது.
அரசியல் பழிவாங்கலில் இறங்கியிருப்பதாக அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் எச்சரிக்கைளை தாங்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்று காட்டும் வகையில் நடந்துகொள்ளும் அரசாங்கத் தலைவர்கள் ஊழல்தனமான அரசியல்வாதிகளுக்கு எதிராக மேற்கொண்டு எடுக்கப்போகும் நடவடிக்கைகளைப் பற்றி அறிவிப்புகளைச் செய்கிறார்கள். விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நீதிமன்ற வளாகத்துக்கு ஆர்ப்பாட்டக்காரர்களை அணிதிரட்டிக்கொண்டு வந்தவர்களை அடையாளம் காணும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ்மா அதிபர் கூறியிருக்கிறார்.
சகல குடிமக்களுக்கும் சமத்துவமான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய ஜனாதிபதி திசாநாயக்க ஏற்கனவே எடுக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் மீள்பரிசீலனை செய்யப்படமாட்டாது என்று கூறியிருக்கிறார். அரச பணத்தை தவறாகப் பயன்படுத்தியவர்களிடம் இருந்து அது திரும்பப் பெறப்படும் என்றும் ஊழலுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் பொறுப்பானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கொழும்பில் கடந்தவாரம் நிகழ்வொன்றில் கூறினார். செப்டெம்பரில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டதும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான வீடுகள் திரும்பப் பெறப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்திருக்கிறார்.
அதேவேளை, விக்கிரமசிங்கவைப் போன்று மற்றைய முன்னாள் ஜனாதிபதிகளும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் அவை குறித்து விசாரணை செய்யப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. சட்டம் சகலருக்கும் சமமான முறையில் பிரயோகிக்கப்படும் என்று கூறிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால எவரிடமிருந்தாவது முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் மற்றைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று ஊடகங்களுக்கு கடந்த வாரம் கூறினார்.
விக்கிரமசிங்க விவகாரத்தில் முக்கியமான ஒரு அம்சத்தை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அவர் இலங்கையின் பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவர். அவரது கைதும் நீதிமன்றத்தில் அவர் பல மணி நேரமாக அனுபவிக்க வேண்டியிருந்த அசௌகரியங்களும் கொழும்பு உயர் வர்க்கத்தவர்களுக்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜனாதிபதி திசாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக, ஜே.வி.பியின் தலைவர்களின் எளிமையான குடும்பப் பின்னணிகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது விக்கிரமசிங்கவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒரு வர்க்க வன்மம் வெளிக்காட்டப்பட்டதாகவும் விமர்சனங்கள் உண்டு.
விக்கிரமசிங்கவின் அரசியலையும் எதையுமே மெத்தனமாக நோக்கும் அவரது சுபாவத்தையும் விரும்பாதவர்கள் பலர் கூட அவர் கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலை வாகனத்தில் கூட்டிச் செல்லப்பட்டதனால் கடுமையான அதிருப்தியடைந்திருக்கிறார்கள் என்பது தெளிவானது. அத்துடன், மனைவியின் பட்டமளிப்பு வைபவத்தில் பங்கேற்பதற்காக (இலங்கையில் இடம்பெற்ற நிதி தொடர்பான பாரிய ஊழல் நடவடிக்கைளுடன் ஒப்பிடும்போது) ஒரு சிறிய தொகையான 16.6 மில்லியன் ரூபாவை பயன்படுத்தியதை பாரதூரமான பிரச்சினையாக ஊதிப்பெருப்பித்து அவரை கைதுசெய்திருக்க வேண்டியதில்லை என்ற ஒரு அபிப்பிராயமும் பல மட்டங்களில் இருக்கிறது.
வழமையாக விக்கிரமசிங்கவை மிகவும் கடுமையாக விமர்சித்து வருபவரான முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜெயதிலக கடந்த வாரம் எழுதிய கட்டுரை ஒன்றில் ஜனாதிபதி திசாநாயக்கவின் நிருவாகத்தின் உண்மையான முகம் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்தை பொறுத்தவரை, சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட ஒருவராக முன்னாள் ஜனாதிபதியைக் கருதவில்லை என்று கூறியிருக்கும் தயான், விக்கிரமசிங்க தனது குடும்பத்தவர்களிடம் அல்லது நண்பர்களிடம் கேட்டிருந்தால் ஒரு நிமிடத்தில் பெற்றிருக்கக்கூடிய 16.6 மில்லியன் ரூபாவை அரச நிதியில் இருந்து அவர் கையாடியிருப்பார் என்று நம்பினால் தனது விவேகத்தையே நிந்தனை செய்வதாக அமையும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சட்டபூர்வத் தன்மைக்கும் நியாயப்பாடான தன்மைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் விளங்கிக்கொள்வது சாத்தியமில்லை என்றும் ஒப்பீட்டளவில் வலுவில்லாத ஒரு பிரச்சினைக்காக விக்கிரமசிங்கவை கைதுசெய்து அசௌகரியத்தை கொடுத்ததன் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமூக நீதியில் அதற்கு இருக்கும் பற்றுறுதியை அல்ல, அதன் தலைமைத்துவத்தின் கீழ்த்தரமான சிந்தனையையும் மட்டுமீறிய தவறான உணர்ச்சியார்வத்தையும் வெளிக்காட்டியிருக்கிறது என்றும் தயான் மேலும் கூறியிருக்கிறார்.
இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றுமில்லாத பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தபோது ஆட்சிப் பொறுப்பை அரசியல் தைரியத்துடன் ஏற்றுக்கொண்டு மீட்சிக்கு வழிகாட்டிய ஒரு தலைவரை கைதுசெய்து அவமதித்திருக்கக் கூடாது என்றும் ஒரு பிரிவினர் கவலைப்படுகிறார்கள். 2022 ஜூலையில் வெறுமனே 50 மில்லியன்
டொலர்களாக இருந்த வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு 2025 செப்டெம்பரில் 6 பில்லியன் டொலர்களாக உயரக்கூடியதாக நாட்டின் பொருளாதாரத்தை மீடடெடுத்த தலைவர் 53,000 டொலர்களுக்கு (16.6 மில்லியன் ரூபா)வுக்கு பெறுமதி இல்லாதவரா என்று சில தினங்களுக்கு முன்னர் ஒரு அரசியல் பத்தியாளர் தர்மாவேசத்துடன் கேள்வியெழுப்பியிருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து வெளியேறியபோது விக்கிரமசிங்க தனது கையில் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் போறிஸ் ஜோன்சனின் “கட்டவிழ்த்துவிடப்பட்டது ” (Unleashed) என்ற தலைப்பிலான சுயசரிதை நூலை கையில் வைத்திருந்தார். தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்தபோது அதை அவர் வாசித்திருக்கிறார் போன்று தெரிகிறது. அதன் மூலமாக ஏதாவது அரசியல் செய்தியை நாட்டுக்கு அல்லது அரசாங்கத்துக்கு சொல்வதற்கு அவர் நோக்கம் கொண்டிருந்தாரோ தெரியவில்லை.
போறிஸ் ஜோன்சனின் நூல் பற்றிய தகவல்களை அறியும் ஆவலில் கூகிளில் தேடுதல் நடத்தியபோது அது பற்றி லண்டன் கார்டியன் பத்திரிகையின் இணையாசிரியர் மார்டின் கெற்றில் கடந்த வருட பிற்பகுதியில் எழுதிய விமர்சனத்தை காண நேர்ந்தது. “போறிஸ் ஜோன்சனின் நூல் – ஒரு கோமாளியின் வரலாற்றுக் குறிப்புகள் ” (Unleashed by Boris Johnson review – memoirs of a clown) என்று அதற்கு தலைப்பிடப்பட்டிருந்தது.
வீரகத்தி தனபாலசிங்கம்
வடக்கு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி
வடக்கு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி
வடக்கு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி
வடக்கிற்கு மீளவும் உயிர்கொடுத்து மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, வடக்கிற்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க எதிர்காலத்தில் தொழில்துறை வலயங்கள் உட்பட பல அபிவிருத்தித் திட்டங்களை எதிர்காலத்தில் செயல்படுத்தப் போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உலக தெங்கு தினத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் நடைபெற்ற வடக்கு தெங்கு முக்கோண ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,
புதுக்குடியிருப்பு பகுதி கடந்த காலங்களில் பாரிய யுத்தத்தை சந்தித்த ஒரு பகுதி என்பதை நாங்கள் அறிவோம். அந்த மோதல்கள் காரணமாக, இந்தப் பகுதி மக்கள் அனைத்தையும் இழந்துள்ளனர்.
கடந்த தேர்தலின் போது இந்தப் பகுதி மக்களை நான் சந்தித்தேன். இந்த அழிவுற்ற பகுதிக்கும் மக்களுக்கும் நாம் மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும்.
குறிப்பாக கடந்த தேர்தல்களின் போது, இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வலுவான அடியை எடுத்து வைத்தனர்.
எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒரு அடி எடுத்து வைத்த மக்களை வெற்றியின் பக்கம் இட்டுச் செல்வதே எங்கள் எதிர்பார்ப்பாகும். அதற்காக, நாங்கள் பல துறைகளில் பணிகளைத் ஆரம்பித்துள்ளோம்.
முதலில், இந்த மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். காணி உரிமைகள், மொழி உரிமைகள் மற்றும் கலாசார உரிமைகள், அத்துடன் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை ஆகியவற்றை அவர்களின் அடிப்படை உரிமைகளாக நாங்கள் பார்க்கிறோம்.
அந்த உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் பல நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம். அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
ஒரு அரசாங்கமாக, அவர்கள் இழந்த பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் வலுவான பொருளாதாரத்தை உருவாக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
அதற்காக நாங்கள் ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, வடக்கிலும் தெற்கிலும் அதிகாரத்தைப் பெறுவதற்கான பிரதான கருவியாக இனவாதம் மாறியது. அந்த நிலைமையை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்நாட்டு மக்கள் தோற்கடித்தனர்.
மீண்டும் இந்த நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்க மாட்டோம். இந்த இனவாத அரசியலை நிராகரிக்க வேண்டும். ஒற்றுமையை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் குறிக்கோள் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனம் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படும் : பெல்ஜியம் அறிவிப்பு
பாலஸ்தீனம் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படும் : பெல்ஜியம் அறிவிப்பு
பாலஸ்தீனம் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படும் : பெல்ஜியம் அறிவிப்பு
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது.
“ஐக்கிய நாட்டுக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை பெல்ஜியம் ஒரு நாடாக அடையாளப்படுத்தப்படும். அத்துடன் இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு எதிராகக் கடுமையான தடைகள் விதிக்கப்படும்,” என்று பெல்ஜிய வெளியுறவு அமைச்சர் மெக்ஸிம் பிரிவோட் அறிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பாஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கப்போவதாகப் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் கடந்த ஜுலை மாதம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் பெல்ஜியம் உட்பட பல நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல்கொடுக்க தொடங்கியுள்ளன.
நியூயார்க்கில் எதிர்வரும் 9ஆம் திகதி ஆரம்பமாகும் ஐ.நா. கூட்டத் தொடர் 23ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது.
பாலஸ்தீனத்தை நாடாகக் கருதும்படி பிற மேற்கத்திய நாடுகளும் அழைப்பு விடுத்துள்ளன.
காஸாவில் அதிகரிக்கும் மனிதநேய நெருக்கடியை அடிப்படையாகக் கொண்டு அந்தத் தீர்மானம் எடுக்கப்படுவதாகத் பிரிவோட் கூறியுள்ளார்.
இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீனர்களில் அதிகமானோரை ஒரு முறைக்கு மேல் வீடுகளை விட்டு வெளியேறும் சூழலுக்குத் தள்ளியிருப்பதாலும் ஐ.நா. அங்குப் பஞ்சத்தை அறிவித்திருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரிவோட் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துலக சட்டத்தை மீறும் விதத்தில் இஸ்ரேல் வன்முறையாக நடந்துகொண்டதால் இஸ்ரேலிய அரசாங்கம், ஹமாஸ் பயங்கரவாதிகள் ஆகியோர்மீதான நெருக்கடியை அதிகரிக்க பெல்ஜியம் உறுதியான தீர்மானத்தை எடுக்கவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேலிய மக்களைத் தண்டிப்பதற்காக அல்ல, மாறாக அதன் அரசாங்கம் அனைத்துலக, மனிதநேய சட்டங்களை மதித்து நடப்பதை உறுதிசெய்து காஸாவின் நிலையை மாற்றும் நோக்கில் பெல்ஜியம் அத்தகைய தீர்மானங்களை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளது.
சீனாவில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு
சீனாவில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு
சீனாவில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு
03 Sep, 2025 | 11:24 AM
சீனாவில் இரண்டாம் உலகப்போர் வெற்றி மற்றும் ஜப்பான் சரணடைந்ததன் 80-ஆண்டு நிறைவையொட்டி பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
பீஜிங் நகரில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பை சீன ஜனாதிபதி ஜின்பிங்குடன், ரஷ்ய ஜனாதிபதி புட்டின், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உட்பட பலநாட்டு தலைவர்கள் பார்வையிட்டனர்.
இந்த அணிவகுப்பில் அதிநவீன போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணைகள், புதிய நீர்மூழ்கி ட்ரோன்கள் உட்பட சீனாவின் இராணுவ வலிமையை உலகிற்கு பறைசாற்றும் ஆயுதங்களும் இராணுவ தளவாடங்களும் இடம்பெற்றிருந்தன.
நெடுந்தீவு – கச்சத்தீவு ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டு திட்டம் ஆராயப்படுகின்றது ; அமைச்சர் சந்திரசேகர்
நெடுந்தீவு – கச்சத்தீவு ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டு திட்டம் ஆராயப்படுகின்றது ; அமைச்சர் சந்திரசேகர்
நெடுந்தீவு – கச்சத்தீவு ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டு திட்டம் ஆராயப்படுகின்றது ; அமைச்சர் சந்திரசேகர்
03 Sep, 2025 | 11:00 AM
நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவை ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயப்படுகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடன் இணைந்து கச்சத்தீவுக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் எமது மீனவ சொந்தங்களின் பாதுகாப்பு, அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு திட்டங்கள் பற்றி கடற்படையினரிடம் கேட்டறிந்தோம்.
அதேபோல சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்குரிய பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுவருகின்றன.
அந்தவகையில் நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவை ஒன்றிணைத்த வகையில் சுற்றுலா திட்டமொன்றை மேற்கொள்வதற்குரிய சாத்தியப்பாடு பற்றியும் கேட்டறியப்பட்டது.
நெடுந்தீவுக்கு தற்போது சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில் அதனை கச்சத்தீவுவரை மேம்படுத்துவதற்குரிய திட்டம் உள்ளது என்றார்.
ரோம் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட வேண்டுமென வலியுறுத்தல்
ரோம் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட வேண்டுமென வலியுறுத்தல்
ரோம் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட வேண்டுமென வலியுறுத்தல்
03 September 2025
எதிர்வரும் 08 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமை தொடர்பான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இராணுவம் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள, இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, உண்மை மற்றும் நீதியை எடுத்துக்காட்டுவதற்கு புதிய அரசாங்கத்திற்கு சிறந்த வாய்ப்பொன்று கிட்டியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடைத்துள்ள மக்கள் ஆணையின் பிரகாரம், புதிய அரசாங்கத்திற்கு இது வரலாற்றுச் சந்தர்ப்பமாக அமையும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தக் காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் அவசியம் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்குத் தேவையான இறுக்கமான பொறிமுறைகள் அவசியம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் பொறிமுறைகளை உறுதிப்படுத்துவதோடு, நீதிமன்றக் கட்டமைப்பினூடாக பாதுகாப்புத் துறைக்கான மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையை குறித்த அறிக்கையூடாக வரவேற்கப்பட்டுள்ளதுடன், அந்த நிறுவனத்தின் செயற்பாடுகளை சர்வதேச கண்காணிப்பின் கீழ் மேற்பார்வை செய்ய வேண்டும் எனவும் ஐ.நா அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தனது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ரோம் உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
https://hirunews.lk/tm/418056/insisting-that-sri-lanka-sign-the-rome-statute
செம்மணி வழக்கை சிறப்பாகக் கையாண்ட நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!
செம்மணி வழக்கை சிறப்பாகக் கையாண்ட நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!
செம்மணி வழக்கை சிறப்பாகக் கையாண்ட நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!
அரியாலை - செம்மணிப் புதைகுழி வழக்கை, மிகச் சிறப்பான முறையில் கையாண்டு வந்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேல்நீதிமன்ற நீதிபதிகளாக சில நீதிபதிகள் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவராகவே, நீதிபதி ஆனந்தராஜாவுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பதவி உயர்வுக்கான அனுபவத்தையும், தகுதியையும் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா நீண்ட காலத்துக்கு முன்னரே பெற்றிருந்த போதிலும், தற்போது திடீரென இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால், நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்குகளை இனிவரும் நாள்களில் கையாள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கில், கிட்டத்தட்ட 50 வீதத்துக்கும் மேற்பட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. பணிகள் இவ்வாறு வேகமாக நிறைவடைவதற்கு நீதிபதி ஆனந்தராஜா காட் டிய அக்கறையும், அவருடைய அர்ப்பணிப்பான செயற்பாடுகளுமே காரணம் என்று துறைசார் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இவ்வாறான நிலையிலேயே, அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டு, செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கை அவர் கையாள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அகழ்வுப் பணிகளை சம்பிரதாயபூர்வமாக மேற்பார்வை செய்யாமல், சான்றுப் பொருள்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளையும் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னெடுத்திருந்தார். அகழ்வுப் பணிகளின் கால அளவை நீடிப்பது தொடர்பில் காத்திரமான உத்தரவுகளை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரே மேடையில் மோதி, ஷீ ஜின்பிங், புதின் - டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?
மார்ச் 2026க்குள் மருத்துவமனைகள் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று பிரான்ஸ் கூறுகிறது
மார்ச் 2026க்குள் மருத்துவமனைகள் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று பிரான்ஸ் கூறுகிறது
மார்ச் 2026க்குள் மருத்துவமனைகள் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று பிரான்ஸ் கூறுகிறது
ஃபரா மோக்ரானி • புதுப்பிக்கப்பட்டது: 27 ஆகஸ்ட் 2025 • 21:23 • 2 நிமிடங்கள் படிக்கப்பட்டது
பிரான்ஸ் மருத்துவமனை தயார்நிலை: மார்ச் 2026 க்குள் ஏற்படக்கூடிய பெருமளவிலான உயிரிழப்புகளுக்கு பிராந்திய மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும் என்று கசிந்த சுகாதார அமைச்சகக் குறிப்பு வலியுறுத்துகிறது, இதில் துறைமுகங்கள்/விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள மையங்கள் மற்றும் கூடுதல் அதிர்ச்சி/PTSD பயிற்சி ஆகியவை அடங்கும். நன்றி: DBrownPhotos, Shutterstock
பிரான்சின் சுகாதார அமைச்சகம், மார்ச் 2026 க்குள் முழு தயார்நிலையுடன், ஐரோப்பாவில் ஒரு 'பெரிய இராணுவ ஈடுபாட்டிற்கு' தயாராகுமாறு நாட்டின் மருத்துவமனைகளை அமைதியாகக் கேட்டுக் கொண்டுள்ளது.
Le Canard Enchaîné ஆல் வெளிப்படுத்தப்பட்ட இந்த அறிவுறுத்தல், பிராந்திய சுகாதார நிறுவனங்களுக்கு (ARS) அனுப்பப்பட்டுள்ளது, மேலும் பிரான்ஸ் ஒரு பெரிய அளவிலான மோதலில் பின்புற தளமாக மாறினால் அந்த அமைப்பு எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதை வரைகிறது.
கடிதம் என்ன கேட்கிறது: மையங்கள், பயிற்சி மற்றும் மனிதவளம்
ஜூலை 18, 2025 தேதியிட்ட ஆவணத்தின்படி, குறுகிய அறிவிப்பில், பிரெஞ்சு மற்றும் நட்பு நாடுகளின் காயமடைந்த துருப்புக்களை அதிக எண்ணிக்கையில் வரவேற்க மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும் என்றும், வாரக்கணக்கில் அல்லது மாதங்களுக்கு கூட அவ்வாறு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஓட்டத்தை விரைவுபடுத்த, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு அருகில் மருத்துவ நிலை மையங்களை அமைக்க அமைச்சகம் முன்மொழிகிறது, இதனால் நோயாளிகள் நிலைப்படுத்தப்பட்டு விரைவாக தங்கள் சொந்த நாடுகளுக்கு மாற்றப்பட முடியும்.
யூரோ வாராந்திர செய்திகளில் அதிகம் படிக்கப்பட்டவை
மார்ச் 2026க்குள் மருத்துவமனைகள் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று பிரான்ஸ் கூறுகிறது
'எல்லாவற்றையும் தடுப்போம்': செப்டம்பர் 10 ஆம் தேதி பொது முடக்கத்திற்கு பிரான்ஸ் தயாராகிறது.
செப்டம்பர் 18–19 அன்று பிரான்ஸ் ATC வேலைநிறுத்தம்: உங்கள் விமானம் வெற்றி பெறுமா?
தெளிவான பயிற்சி உந்துதலும் உள்ளது. 'போர்க்காலக் கட்டுப்பாடுகள்' குறித்து ஊழியர்களுக்கு விளக்கப்பட வேண்டும் - பற்றாக்குறையான பொருட்கள், தேவையில் திடீர் அதிகரிப்பு மற்றும் தளவாடங்கள் சீர்குலைந்தன என்று கருதுங்கள் - மேலும் அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தம் மற்றும் சிக்கலான காயங்களுக்கான மறுவாழ்வு மருந்து உள்ளிட்ட அதிர்ச்சி பராமரிப்பு குறித்து புதுப்பிக்கப்பட வேண்டும். இணையாக, முன்னணி-வரிசை திறனை வலுப்படுத்த, அமைப்பு முழுவதும் உள்ள மருத்துவர்கள் இராணுவ சுகாதார சேவையில் (Service de santé des armées) சேர ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
பெருமளவிலான உயிரிழப்புத் திட்டம்: திட்டமிடப்பட்ட எண்கள் மற்றும் மறுமொழி காலவரிசை
திட்டமிடல் அனுமானங்கள் கவலையளிக்கின்றன. Le Canard அறிக்கை செய்த வழிகாட்டுதலின்படி , ஒரு நெருக்கடி எவ்வாறு வெளிப்படுகிறது என்பதைப் பொறுத்து, 10 முதல் 180 நாட்கள் வரை மருத்துவமனைகள் 10,000 முதல் 50,000 வரை காயமடைந்த பணியாளர்களை உள்வாங்க முடியும். அத்தகைய எண்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்று அர்த்தமல்ல; அவர்கள் வந்தால் அமைப்பு சமாளிக்க முடியும் என்பதாகும்.
மருத்துவமனை மேலாளர்களுக்கான மொழிபெயர்ப்பு: படுக்கைகளை விரைவாக விடுவித்தல், வரவேற்பு மற்றும் சிகிச்சை முறையை ஒத்திகை பார்த்தல், எந்தெந்த வார்டுகள் அதிர்ச்சிக்கு ஆளாகக்கூடும் என்பதை அறிந்து கொள்ளுதல், மற்றும் படுக்கையிலிருந்து விமான சாய்வுப் பாதை வரை வெளியேற்றும் பாதைகளை வரைபடமாக்குதல். இந்தக் கடிதம் நீண்ட தூரப் பயணத்தின் மனிதப் பக்கத்தையும் தொடுகிறது - பல மாத அழுத்தத்தைத் தாங்கக்கூடிய பணியாளர்கள் பணியமர்த்தல் மற்றும் அட்ரினலினில் வாழும் குழுக்களுக்கு உளவியல் ஆதரவு.
'பீதி அடைய வேண்டாம், விவேகத்துடன் இருங்கள்' என்று அரசாங்கம் கூறுகிறது.
BFMTV இல் கசிவு குறித்து கேட்டதற்கு , சுகாதார அமைச்சர் கேத்தரின் வௌட்ரின் கடிதப் பரிமாற்றத்தை மறுக்கவில்லை. அவரது நிலைப்பாடு அமைதியாக இருந்தது: “மருத்துவமனைகள் எப்போதும் தயாராகி வருகின்றன - தொற்றுநோய்களுக்கு, திடீர் அலைகளுக்கு. ஒரு நாடு நெருக்கடிகளையும் அவற்றின் விளைவுகளையும் எதிர்பார்ப்பது இயல்பானது.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது தற்செயல் திட்டமிடல், போரின் முன்னறிவிப்பு அல்ல.
அப்படியிருந்தும், இந்தக் குறிப்பின் நேரமும் எளிய மொழியும் பொதுவாக நெருக்கடிகளுக்கு எதிராக மீள்தன்மையை உருவாக்குவதற்கான பரந்த ஐரோப்பிய உந்துதலுடன் பொருந்துகின்றன. சைபர் சம்பவங்கள் முதல் மின்தடை மற்றும் தீவிர வானிலை வரை அனைத்திற்கும் அரசாங்கங்கள் புதுப்பித்த தற்செயல் திட்டங்களைத் தீட்டி வருகின்றன, மேலும் குறுகிய கால இடையூறுகளைத் தவிர்க்க அடிப்படை அவசர கருவிகளை - தண்ணீர், பேட்டரிகள், மருந்துகள் மற்றும் முக்கிய ஆவணங்களை - ஒன்று சேர்க்குமாறு ஐரோப்பிய ஆணையம் வீடுகளை வலியுறுத்தியுள்ளது. பிரான்சைப் பொறுத்தவரை, அதன் சுகாதார சேவைக்கான செய்தி எளிமையானதாகவும் அப்பட்டமாகவும் உள்ளது: அதிக தீவிரம் கொண்ட மோதலின் பின்னணியாக செயல்படத் தயாராக இருங்கள் - விரைவில் தயாராகுங்கள்.


வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் – 11 பேர் உயிரிழப்பு
வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் – 11 பேர் உயிரிழப்பு
வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் – 11 பேர் உயிரிழப்பு.
வெனிசுலா கடற்கரையை அண்டிய கடற்பரப்பில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கப்பல் மீது அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் ஜனாதிபதியாக நிக்கோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக பதவி வகித்து வருகிறார்.
அவர், உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக செயல்படுவதாகவும், போதைப்பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்களை விநியோகம் செய்வதாகவும் கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் வெனிசுலா கடற்கரையில் ஒரு கப்பலின் மீது அமெரிக்கப் படைகள் இராணுவத் தாக்குதல் நடத்தியதில், 11 பேர் கொல்லப்பட்டனர்.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுடன் தொடர்புடைய போதைப்பொருள் பயங்கரவாதிகள், சர்வதேச கடல் வழியாக அமெரிக்காவை நோக்கிப் போதைப்பொருட்களை கொண்டு சென்றபோது அவர்களைக் குறிவைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வெனிசுலா ஜனாதிபதி மதுரோவுடன் தொடர்புடைய போதைப்பொருள் பயங்கரவாதிகள் சர்வதேச கடல் வழியாக அமெரிக்காவை நோக்கி போதைப்பொருட்களை கொண்டு சென்றபோது, அவர்களை குறிவைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.