Aggregator
போதைப்பொருள் கடத்திய மற்றுமொரு படகு கைப்பற்றல்!
20 Nov, 2025 | 11:12 AM
![]()
தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்திய மற்றுமொரு படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த படகில் இருந்த 6 இலங்கையர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 15 பொதிகள் படகிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை (20) காலை தங்காலை துறைமுகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்திய மற்றுமொரு படகு கைப்பற்றல்! | Virakesari.lk
வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு ரவிகரன் எடுத்துரைப்பு - விரைவில் முல்லைத்தீவுக்கு அனுர விஜயம்!
வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு ரவிகரன் எடுத்துரைப்பு - விரைவில் முல்லைத்தீவுக்கு அனுர விஜயம்!
வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்றொழிலாளர்களைச் நேரில் சந்தித்து கலந்துரையாடுமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில் ரவிகரனின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, விரைவில் முல்லைத்தீவிற்கு வருகைதந்து கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாகக் கேட்டறியவுள்ளதாகப் பதிலளித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று (19) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இது தொடர்பில் துரைராசா ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர், கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலான குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
அதற்கமைய தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, மாகாண சபைத் தேர்தல், வடகிழக்கில் உள்ள காணிப் பிரச்சினைகள், துயிலும் இல்லங்களை விடுவிப்புச் செய்தல், வட, கிழக்கில் அதிகரித்துள்ள படையினரின் பிரசன்னம், பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய புத்தர் சிலை விவகாரம், வடக்கு, கிழக்கில் உள்ள கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் பேசியிருந்தோம்.

அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் இடம்பெறும் அதிகரித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் மிக மோசமாக கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன்.
அதேவேளை வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய நான்கு மாவட்டங்கள் கடற்றொழிலுடன் தொடர்புடைய மாவட்டங்களாகக் காணப்படுகின்றன. இந்நிலையில் அங்கு அதிகளவில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெறுவதையும் அதனால் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளையும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தேன்.
அதேவேளை வட மாகாண கடற்றொழிலாளர் இணையம் பாராளுமன்றிற்கு வருகைதந்து பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து இந்த சட்டவிரோத கடற்றொழிலால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியைச் சந்திப்பது தொடர்பாக கோரிக்கை விடுத்த விடயத்தினையும் இதன்போது ஜனதிபதியிடம் தெரியப்படுத்தினேன்.
அத்தோடு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசம், சம்மேளனம், கடற்றொழிலாளர்கள் சங்கங்கள் உள்ளிட்ட தரப்பினரால் கடிதங்கள் மூலம் என்னிடம் கோரிக்கை விடுத்ததையும், அந்தக் கோரிக்கைக் கடிதங்களுடன் ஏற்கனவே என்னால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பிலும் நினைவுபடுத்தினேன்.
இவ்வாறாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் ஜனாதிபதியைச் சந்திக்க விரும்புகின்றனர் என்ற தகவலையும் தெரியப்படுத்தினேன்.
எனவே சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வட பகுதி மீனவர்களின் கோரிக்கைகளுக்கு அமைய, அவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அக்குறைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தேன். எமது கட்சியினரும் இதுதொடர்பில் பேசியிருந்தார்கள்.
இந்நிலையில் கூடிய விரைவில் தாம் முல்லைத்தீவிற்கு வருகைதந்து அந்த மீனவர்களுடன் நேரடியாக பேசுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறியிருந்தார்.
இதுதவிர வன இலாகா, வனஜீவராசிகள் ஆகிய திணைக்களங்கள் கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆக்கிரமித்த இடங்களைப் பற்றியும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் நூற்றுக்கும் மேற்பட்ட படையினரது முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன் என்றார்.
வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு ரவிகரன் எடுத்துரைப்பு - விரைவில் முல்லைத்தீவுக்கு அனுர விஜயம்! | Virakesari.lk
வட மாகாணத்தில் அதிகளவான சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
20 Nov, 2025 | 02:41 PM
![]()
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
நாளொன்றுக்கு சுமார் 25 சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகின்றன. வடக்கு மாகாணத்திலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நிதி கணினிக் குற்றங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு 24 குற்றங்கள் 2021 ஆம் ஆண்டு 577 குற்றங்கள், 2022 ஆம் ஆண்டு 654 குற்றங்கள், 2023 ஆம் ஆண்டு 472 குற்றங்கள், 2024ஆம் ஆண்டு 1,539 குற்றங்கள் பதிவாகியுள்ளன.
2025 ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சைபர் குற்றங்கள் தொடர்பாக 2,368 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. வடக்கு மாகாணத்தில் அதிகளவான குற்றங்கள் பதிவாகியுள்ளன.
அதேபோல், நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கணினி குற்ற விசாரணை உப பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார்.
வட மாகாணத்தில் அதிகளவான சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் | Virakesari.lk
வேலணை - சாட்டி கடற்கரையின் சவுக்கு மரங்களைப் பாதுகாக்க கோரிக்கை!
20 Nov, 2025 | 03:19 PM
![]()
வேலணை பிரதேச சபைக்குட்பட்ட சாட்டி கடற்கரையின் அழகு மிக்க "சவுக்கு" மரங்கள் பாதுகாக்கப்பட்டு அவை உரியமுறையில் பராமரிகப்பட வேண்டும் என சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம், கடற்கரையோரத்தில் குவிந்திருக்கு கழிவுகளை அகற்றி சுற்றுலா தளத்; அழகுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (20) காலை 10 மணிக்கு தவிசாளர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
வடபகுதியில் குறிப்பாக யாழ் மாவட்டத்தின் சுற்றுலா மையங்களில் முக்கிய இடமாக இந்த சாட்டிக் கடற்கரை இருக்கின்றது.
இக்கடற்கரையின் அழகு இந்த "சவுக்கு" மரங்கள்தான். ஆனால் அவற்றுள் சில மரங்கள் பாதுகாப்பற்று முறியும் நிலையிலும், மின்சார வடங்கள் செல்லும் மார்க்கத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் இருக்கின்றன.
இவற்றை உரிய முறையில் பராமரித்து சுற்றுலா தளத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது சபையின் பொறுப்பாகும்.
அதேபோன்று, இந்தப் பகுதியில் காணப்படும் கடற் சாதாளைகளும் அகற்றப்படுவது அவசியமாகும். அந்த வகையில் கரைசேர்ந்து கிடக்கும் சாதாளைகளை பசளைக்காக பெற்றுக்கொள்ள விரும்பும் நபர்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சபையில் முன்மொழிவாக வலியுறுத்தினார்.
குறித்த கோரிக்கை உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த சீரமைப்பை அடுத்த மாதம் மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் அறிவித்துள்ளார்.
அதேபோன்று சாதாளைகளையும் தேவையானோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வேலணை - சாட்டி கடற்கரையின் சவுக்கு மரங்களைப் பாதுகாக்க கோரிக்கை! | Virakesari.lk
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த சமஷ்டி தீர்வு பற்றிய கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சரிடம் முன்வைப்பு: தொல் திருமாவளவன்
20 Nov, 2025 | 04:05 PM
![]()
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த சமஷ்டி தீர்வு பற்றிய கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சரிடம் முன் வைக்கப்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் தெரிவித்தார்.
அவர் இன்று வியாழக்கிழமை (20) தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் என்னை சந்தித்தார்கள். இதன்போது அவர்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் ஒரு மனுவை முதல்வர் அவர்களிடம் முன் வைத்துள்ளோம்
இலங்கையின் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் புதிய அரசியலமைப்பு சட்டத்தை இலங்கை தேசத்திற்காக உருவாக்க உள்ளார். அந்த புதிய அரசியலமைப்பு சட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கும் வகையில் ஒரு கூட்டாட்சி நிர்வாக முறையை அரசமைப்பின் வழியாக கொண்டு வர வேண்டும் என்றும் அவ்வாறு கூட்டாட்சி சட்டத்தை அரசியலமைப்பில் இணைப்பதற்கு இந்திய அரசின் தலையீடு இன்றியமைபாததாகவுள்ளது.
இந்திய அரசை தலையிட வைக்க தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது தான் அவர்கள் முன்வைத்த கோரிக்கை.
அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து தமிழ்நாடு அரசு இந்திய அரசுக்கு ஈழத்தமிழர் நலன்களுக்காக புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் இறையாண்மையை நிலைநாட்டும் வகையில் தன்னாட்சி அதிகாரத்தை வழங்க ஆவண செய்ய வேண்டும். இதனை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்கிற கோரிக்கை மனுவை முதல்வர் இடத்தில் வழங்கினோம்.
அத்துடன் அது தொடர்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் முதல்வருக்கு எழுதிய கடிதத்தையும் அவரிடம் வழங்கினோம்.
இது முக்கியமான கால கட்டத்தில் நாம் விடும் கோரிக்கை. ஏற்கனவே இந்திய அரசு ராஜீவ்காந்தி காலத்தில் ஒரு ஓப்பந்தத்தை செய்துள்ளது. அந்த ஒப்பந்தத்தில் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தம் செய்யவில்லை.
13 வது திருத்தம் மாகாண சபைகளுக்கு எந்த அதிகாரமும் இல்லாத திருத்தம். எனவே 13 வது திருத்தம் எங்களுக்கு உடன்பாடில்லை என ஈழத்தமிழர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். சமஷ்டி ஆட்சிமுறையை கொண்டு வர வேண்டும் என்பது தான் அவர்களது கோரிக்கை. இதனை விளக்கி பேசி முதலமைச்சரிடம் மனு கொடுத்து இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரியுள்ளோம் எனத் தெரிவித்தார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த சமஷ்டி தீர்வு பற்றிய கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சரிடம் முன்வைப்பு: தொல் திருமாவளவன் | Virakesari.lk
நல்லூர் நினைவாலயம் நாளை அங்குரார்ப்பணம்
20 Nov, 2025 | 05:16 PM
![]()
தாய்மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் நாளை வெள்ளிக்கிழமை (21) மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படும் என ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
தாய்மண்ணுக்காக தம் உயிர்களை அர்ப்பணித்தவர்களுடன் மாமனிதர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் மற்றும் பல ஆவணப்படுத்தல்களையும் கொண்டு இந்த நல்லூர் நினைவாலயம் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
“தலைமுறைகள் கடந்து வாழும் மாவீரச் செல்வங்களின் நினைவாலயத்திற்கு உங்கள் இளைய தலைமுறையினரையும் அழைத்து வந்து வரலாற்றினைக் கடத்துங்கள். உங்கள் மனப்பதிவுகளைப் பதிந்துவிட்டுச் செல்லுங்கள்” என ஏற்பாட்டுக் குழு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.





யார் ஆட்சிக்கு வந்தாலும் பௌத்த சிங்களமயமாக்கல் தொடரும்! - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
யார் ஆட்சிக்கு வந்தாலும் பௌத்த சிங்களமயமாக்கல் தொடரும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்றைய தினம் (20) தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலையில் தமிழர் தாயகத்தில் கடற்கரைப் பிரதேசத்தில் சட்டத்திற்கு முரணாக புத்த பிக்குகளினால் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டிருக்கின்றது. அங்குள்ள தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பின் பின் சட்ட அனுமதியற்ற கட்டுமானம் என்று சொல்லி ஸ்ரீலங்கா பொலிஸாரினால் அப்புறப்படுத்தப்படுகின்றது. இதன் பிறகு பாராளுமன்றத்தில் அரசாங்கத்தால் புத்தர் சிலையின் பாதுகாப்பு காரணமாகத்தான் அப்புறப்படுத்தப்பட்டது மீண்டும் நிறுவப்படும் என்ற பின் மீண்டும் அதே இடத்தில் அரசாங்கத்தால் புத்தபிக்குகள் மற்றும் பொலிஸாருடன் இணைந்து அதே புத்தர் சிலை நிறுவப்படுகின்றது. மாற்றம் என்று சொல்லி இனவாதமற்ற புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாகும் என்று நம்பி வாக்கு செலுத்திய தமிழ் மக்கள் இன்று முழுவதுமாக அரசினால் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். இது இன்று நேற்றில்லை 76 வருடகாலமாக இந்த நாட்டில் இது தான் நடந்தேறியிருக்கின்றது.
சட்டமுரணாக தமிழர் தாயகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்ட பின் பாராளுமன்றத்தில் மீண்டும் நிறுவுவோம் என்று குறிப்பிட்டு மீள சிலையை மக்களின் எதிர்ப்புக்களை மீறி நிறுவியிருக்கும் செயல் எந்த அரசு அதிகாரத்திற்கு வந்தாலும் சிங்கள பேரினவாதப்போக்கு மாறாது என்பதையே உணர்த்துகின்றது.
புத்தர் சிலையின் பாதுகாப்பு கருதி அகற்றப்பட்டிருக்கின்றது என்று சொல்லுவது தொடர்ச்சியாக சிங்கள மக்களிடத்தில் தமிழர்களை தீயவர்களாக சித்தரிப்பதைத் தான் எடுத்துக்காட்டுகிறது.புத்தர் சிலையை வைத்தது யார்? அமைதியாக தங்கள் அன்றாட வாழ்க்கையை வாழும் தமிழ் மக்களை குழப்பியது யார்? புத்தர் சிலையை அகற்ற வந்த பொலிஸாரின் கன்னத்தில் அறைந்தது யார்? இவர்களுக்கு எதிராக எல்லாம் இந்த நாட்டில் சட்டம் செயற்படாதா? நாட்டின் ஆட்சியாளர்கள் மக்களுக்கான சேவையை ஆற்றுவதைக் காட்டிலும் புத்த பிக்குகளின் பேச்சை வேதவாக்காக கேட்டு நடப்பதையே இனப்பிரச்சினை தொடங்கிய காலகட்டத்திலிருந்து அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
ஏன் இனப்பிரச்சினையின் முக்கிய காரணமே சிங்கள பௌத்தமயமாக்கல் தான். யுத்தத்தின் ஆணிவேரும் இதுதான். தொடர்ச்சியாக தமிழர் நிலங்கள் புத்த வழிபாடு என்ற பெயரிலே பௌத்த சிங்களமயமாக்கப்பட்டுக்கொண்டே இருந்துவந்துள்ளது. சிங்கள குடியேற்றங்களால் தமிழர் குடியேற்றப் பரம்பல் மாற்றியமைக்கப்பட்டுக்கொண்டே இருந்து வந்துள்ளது.
வரலாற்றில் மகாவலி ஓயா மற்றும் கல் ஓயா குடியேற்றம் என்று தமிழர் நிலங்கள் முற்றுமுழுதாக பெயர் மாற்றம் பெற்று முழுவதுமாக மாறியிருக்கிறது. தொடர்ச்சியாக இன்று வரை தமிழர்களின் தொல்லியல் நிலங்களான குருந்தூர் மலை, வெடுக்குநாறிமலை, உகந்தை மலை என்று பல்வேறு இடங்களில் பௌத்த ஆக்கிரமிப்பு நடைபெறுகின்றது.
தையிட்டி, திரியாய் என்று தமிழர் நிலங்களும் இதில் இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றது. இதில் இருந்து தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒரு விடயம் தவறாமல் நடக்கும். அது சிங்கள பௌத்தமயமாக்கல். ஏன் என்றால் அது திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரல். தமிழ் மக்களின் இனப்பரம்பலை மாற்றுவதென்பது மாறி மாறிவரும் சிங்கள ஆட்சியாளர்களால் காலத்திற்கு காலம் நிகழ்ந்தேறிக்கொண்டே இருந்து வந்துள்ளது.
சிங்கள மக்கள் விளங்கிக்கொள்ளவேண்டிய விடயம் என்னவென்றால், தமிழ் மக்கள் சிங்கள மக்களின் வழிபாட்டிற்கு என்றுமே எதிரானவர்கள் இல்லை. நாங்கள் அனைத்து மதத்தையுமே சமமாக மதிப்பவர்கள். அனைத்து சமய வழிபாடுகளையும் மதித்து நடப்பவர்கள் அவமதிப்பது கிடையாது. ஆனால் வழிபாடு என்ற பெயரிலே திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்களால் தமிழருடைய நிலங்கள் பறிபோவதென்பதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றிற்கு பல்வேறு கட்டுக்கதைகள் கட்டப்பட்டு பௌத்த நிலமாக மாறுவதற்கு எதிரானவர்கள். தமிழருடைய பூர்விகம் கேள்விக் குறியாக்கப்படுவதற்கு எதிரானவர்கள். தமிழருடைய தொல்லியல் ரீதியான நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிரானவர்கள். தமிழர் குடியேற்றப்பரம்பல் மாற்றியமைக்கப்படுவதற்கு எதிரானவர்கள். தமிழர்களுடைய இனவிகிதத்தை திட்டமிட்டு மாற்றுவதற்கு எதிரானவர்கள். நாங்கள் ஏன் ஒற்றையாட்சி அரசியலைமைப்பை மறுக்கின்றோம் தெரியுமா? இதனால்தான். சிங்கள பௌத்த பேரினவாத்ததிற்கு அடிபணிந்து கிடப்பதனால்தான்.
இங்கே முதலில் சுற்றுலாத்தளமான கடற்கரையில் புத்தர் சிலையை அமைப்பதற்கான அனுமதி வழங்கியது யார்? பிரதேச சபையிடமிருந்தோ இல்லாவிட்டால் நகர சபையிடமிருந்தோ அனுமதிபெறப்பட்டதா? இல்லை. முற்றமுழுதாக புத்தபிக்குகளே இலங்கையின் நிரந்தர நிறைவேற்று ஐனாதிபதிகளாக இருந்து வந்துள்ளனர்.சுருக்கமாக சொல்லுவதென்றால் நாட்டின் அரச இயந்திரம் புத்த பிக்குகளுக்கு அடிபணிந்து இருக்கின்றது. முழு சட்டங்களையும் தங்கள் பக்கம் வளைக்கும் வலது சாரிகளின் பக்கம் அரசு முழுவதுமாக திரும்பி நிற்கின்றது.தாங்கள் இடது சாரிகள், கம்யூனிச சிந்தாந்தத்தை உள்வாங்கி கொண்டு செயற்படுவதாக தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் அரசு நாட்டில் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுபான்மையினரான தமிழ்மக்கள் பக்கம் ஏன் நிற்கவில்லை என்று ஒரு கேள்வி எழுகிறது. இன்னும் எவ்வளவு காலத்திற்கு நாங்கள் அடக்குமுறைகளையும் ஆக்கிரமிப்புக்களையும் தாங்கிக்கொள்ள முடியுமென்று தெரியவில்லை. இந்தப்பிரச்சினையில் ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது இலங்கையின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் செயல்.
இது ஏன் இவ்வளவு காலமும் பயங்கரவாத தடைச்சட்டமும் எடுக்கப்படவில்லை? அரசியல் கைதிகளும் முழுவதுமாக விடுதலை செய்யப்படவில்லை. இதில் அரசாங்கம் சார்பில் வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள்? தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக அரசியல் தீர்வுக்காக இது வரை வாய் திறந்திருக்கின்றார்களா?
ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் பின்னால் ஒரு அரசியல் அரங்கேற்றம் நிகழுவதாகவே நாங்கள் கணிக்கின்றோம்.
1. புத்தர் சிலையை வைத்துப்பார்த்து தமிழ் மக்கள் இன்னும் தமிழ் உணர்வுடன் தான் இருக்கின்றார்களா என்று பார்ப்பது.அவர்கள் எதிர்க்கிறார்கள் என்றவுடன் அகற்றுவது சிங்கள மக்களிடத்தில் செல்வாக்கு சரியுமென்ற பின் மீண்டும் நிறுவுவது.
2. அரசாங்கத்தை பலவீனப்படுத்துகின்ற எதிர்கட்சியின் திட்டமிடலாக இருக்கலாம்.ஒன்று தமிழ் மக்களிடத்தே பலவீனப்படுத்துவது அல்லது சிங்கள மக்களிடத்தே பலவீனப்படுத்துவது
3. இறுதியில் புற்றுக்குள்ளே இருந்து வெளியே வந்திருக்கும் பாம்புகளை ப்போல் சிலர் வெளியே வந்திருக்கின்றனர்.யாரென்று பார்த்தால் கடந்த ஐனாதிபதித்தேர்தலில் தற்போதைய எதிர்கட்சித்தலைவருக்கு ஆதரவளித்தவர்கள்,மாவீரர் தினத்தை யார் எடுத்து நடாத்துவது என்று தங்களுக்குள் சண்டையிட்டவர்கள்.நீங்கள் உங்களுக்குள் முழுவதுமாக ஒற்றுமை அடையாவிட்டால் எதையுமே சாதிக்க முடியாது.
இறுதியாக எந்தவொரு சிங்கள பேரினவாத அரசும் தமிழ்மக்களின் பக்கம் நீதியின் பக்கம் நின்றதில்லை.
மிகச்சிறந்த அரசியல் தெளிவு பெற்ற நேர்மையான இளைய தமிழத்தேசிய அரசியல் கலாச்சாரம் வடகிழக்கில் வரவேண்டும்.அப்போது தான் வெள்ளம் வரும் முன் அணை கட்ட முடியும். தமிழ்மக்களாக அனைவரும் உங்கள் சிந்தனைகளில் ஒன்றிணையுங்கள். நாங்கள் ஒன்றை நம்புகின்றோம்... தூய தமிழ் தேசியம் நிச்சயம் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.
யார் ஆட்சிக்கு வந்தாலும் பௌத்த சிங்களமயமாக்கல் தொடரும்! - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் | Virakesari.lk
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
சிரிக்கலாம் வாங்க
நாமலின் பட்டச் சான்றிதழ் தொடர்பில் கேள்வி!
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
பாம்பன் மீனவர் வலையில் 112 கிலோ எடையுடைய மஞ்சள் வால் கேரை மீன் சிக்கியது!
ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி
யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
நாட்டின் அனைத்துக் காணிகளையும் விரைவில் வரைபடமாக்க கவனம்
நாட்டின் அனைத்துக் காணிகளையும் விரைவில் வரைபடமாக்க கவனம்
Nov 20, 2025 - 02:26 PM
இலங்கையில் உள்ள அனைத்துக் காணிகளையும், சரியாக அளவீடு செய்து விரைவில் வரைபடமாக்கி முடிப்பதற்கு விவசாயம் மற்றும் வளங்களின் நிலைபேறான தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.
2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான பல அரச நிறுவனங்கள், திணைக்களங்கள், ஆணைக்குழுக்கள் மற்றும் சபைகளின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகளைப் பரிசீலிப்பதற்காக, கடந்த 17 ஆம் திகதி அந்தக் குழு அதன் தலைவர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.
இதன்போது இது குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் குழுவிற்கு விடயங்களை விளக்குகையில், தற்போது எதிர்வு கூறப்பட்டுள்ளதன் படி இலங்கையில் 16.5 மில்லியன் காணித் துண்டுகள் இருப்பதாகவும், அவற்றில் 2.5 மில்லியன் காணித் துண்டுகள் மட்டுமே இதுவரை அளவீடு செய்யப்பட்டு வரைபடமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அதற்கமைய, எஞ்சிய காணித் துண்டுகளை கூடிய விரைவில் அளவீடு செய்து வரைபடமாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய குழுவின் தலைவர், அதற்காக சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் குழுவிற்கு அழைத்து, எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து எதிர்காலத்தில் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
அத்துடன், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கைகளும் குழுவில் பரிசீலிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினால் சட்டரீதியான ஒப்பந்தங்களை மேற்கொள்ளாமல் காணிகளை குத்தகைக்கு வழங்கியதால் நிலவும் வரி/குத்தகை நிலுவைத் தொகைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
பாம்பன் மீனவர் வலையில் 112 கிலோ எடையுடைய மஞ்சள் வால் கேரை மீன் சிக்கியது!
20 Nov, 2025 | 03:59 PM
![]()
மன்னார் வளைகுடா கடற்பரப்புக்குள் மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் வலையில் 112 கிலோ நிறை கொண்ட மஞ்சள் வால் கேரை மீன் சிக்கியதால் பாம்பன் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட படகுகள், நூற்றுக்கணக்கான மீனவர்கள் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். பின்னர், மீனவர்கள் மீன்பிடித்துவிட்டு பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திற்குத் திரும்பினர்.
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் கடல் வழக்கத்திற்கு மாறாக சற்று சீற்றத்துடன் காணப்பட்டு வரும் நிலையில் கடல் நீரோட்டம் அதிகமாக இருந்ததனால் மீன் பிடித்துவிட்டு உடனடியாக மீனவர்கள் கரை திரும்பியிருந்தனர்.
கரை திரும்பிய மீனவர்கள் தங்களது வலையில் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும் நகரை, பாறை, நெத்திலி உள்ளிட்ட மீன்களும் அதேபோல் கிளாத்தி, சீலா, மாவுலா, கிளி, பாறை, முண்டகண்ணி பாறை, கட்டா, சூவாரை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் வரத்து எதிர்பார்த்த அளவை விட அதிகளவு இருந்ததாக மீனவர்கள் திருப்தியடைந்துள்ளனர்.
இந்நிலையில் பாம்பன் அந்தோனியார்புரம் பகுதியை சேர்ந்த கிளிண்டன் என்பவருக்கு சொந்தமான படகில் சுமார் 3 மீட்டர் நீளம் கொண்ட 115 கிலோ நிறை கொண்ட மஞ்சள் வால் கேரை மீன் என்றழைக்கப்படும் அம்பர்ஜாக் மீன் ஒன்று சிக்கியது.

பாம்பன் நாட்டுப்படகு மீனவர் வலையில் சிக்கிய 112 கிலோ எடை கொண்ட மஞ்சள் வால் கேரை மீனை கேரளா மீன் வியாபாரி ஒருவர் கிலோ ரூ.150 என ரூ.17 ஆயிரம் கொடுத்து பெற்றுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு மீன் 17 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானதில் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் இலங்கை பெறுமதி சுமார் 80 ஆயிரம் ஆகும்.
இதன்போது மீனை பெற்றுச் சென்ற கேரள வியாபாரி கூறுகையில், மஞ்சள் வால் கேரை மீனுக்கு கேரள மாநில அசைவ பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த மீனை அரை கிலோ, ஒரு கிலோ என வெட்டி எடை போட்டு 10 ஊர்களுக்கு பிரித்து அனுப்பி விற்பனை செய்துவிடுவேன் என்றார்.
வாள் பகுதியில் மஞ்சள் நிறத்தில் தட்டையான கத்தி போன்ற அமைப்பு காணப்படுகிறது. அவை வேகமாக இடப்பெயர உதவும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த வகை மீன்கள் அட்லாண்டிக், பசுபிக் மற்றும் இந்திய பெருங்கடலில் ஆழமான பகுதியில் வாழக்கூடியவை. இந்த மீன் வழக்கமாக 3 மீற்றர் நீளமும், அதிகபட்சம் 4.55 மீற்றர் நீளமும் மற்றும் 550 கிலோ எடை வரை வளரக்கூடியது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


