Aggregator
தேங்காய்க்கு... ஏன் Coconut என்று பெயர் வந்தது தெரியுமா?
தையிட்டி; மயிலிட்டி; கச்சதீவு ; செம்மணி - நிலாந்தன்
தையிட்டி; மயிலிட்டி; கச்சதீவு ; செம்மணி - நிலாந்தன்
தையிட்டி; மயிலிட்டி; கச்சதீவு ; செம்மணி - நிலாந்தன்
“நாங்கள் கேட்டது சர்வதேச விசாரணையை. அனுர தருவது சர்வதேச விளையாட்டு மைதானத்தை”. என்று முகநூலில் ஒரு பதிவு காணப்பட்டது. தமிழ் மக்கள் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் அரசாங்கமோ “இதோ உங்களுக்கு விளையாட்டு மைதானம்; இதோ உங்களுக்கு மயிலிட்டித் துறைமுகம்; இதோ உங்களுக்கு வட்டுவாகல் பாலம்” என்றிவ்வாறாக அபிவிருத்தித் திட்டங்களை முன்வைக்கின்றது.
அனுர அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட்டு இந்த மாதத்தோடு ஒராண்டு முடிகிறது. பதவியேற்ற ஓராண்டு காலப் பகுதிக்குள் வடக்கிற்கு அதிக தடவைகள் வருகை தந்த ஒரே ஜனாதிபதியாக அவர் காணப்படுகிறார். கடந்த கிழமை அவர் வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களையும் தொடக்கி வைத்துள்ளார். இடையில் ஒரு சாகசப் பயணமாக கச்சதீவுக்கும் போய் வந்திருக்கிறார்.
கடந்த ஓராண்டு கால பகுதிக்குள் வடபகுதிக்கு மட்டும் 1250 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் முல்லைத்தீவில் வைத்துச் சொன்னார். கடந்த கிழமை வடக்கில் அவர் மண்டை தீவில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கான அடிககல்லை நாட்டினார். மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திக்கான வேலைகளையும் தொடக்கி வைத்தார். யாழ்.நூலகத்தை டிஜிட்டல் தளத்தில் நுகர்வதற்குரிய வேலைகளையும் தொடக்கி வைத்தார். யாழ்ப்பாணத்தில் ஒரு கடவுச்சீட்டு அலுவலகத்தையும் திறந்து வைத்தார். வன்னியில் தெங்கு முக்கோணத் திட்டம் ஒன்றை தொடக்கி வைத்தார். வவுனியாவில் 7 ஆண்டுகளுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த மத்திய பொருளாதாரம் மையத்தைத் திறந்து வைத்தார். முல்லைத்தீவில் வட்டுவாகல் பாலத்தைப் புதிதாகக் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.”உங்களுக்கு ஒரு சக்தி வாய்ந்த பொருளாதாரத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு. அந்தப் பொறுப்பை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று முல்லைத்தீவில் வைத்து அனுர கூறினார்.
அபிவிருத்தி வேண்டும். அதில் சந்தேகமில்லை. போரால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி மக்கள் தொடர்ந்து அந்த பாதிப்பில் இருந்து விடுபடாதவர்களாக காணப்படுகிறார்கள். அவர்கள் தங்களைப் பொருளாதார ரீதியாக பலப்படுத்த வேண்டும். எனவே அபிவிருத்தி வேண்டும்.
ஆனால் தமிழ் மக்கள் போராடியது அபிவிருத்திக்காக அல்ல. அபிவிருத்தி செய்வதற்கான கூட்டு உரிமைகளுக்காகத்தான். அபிவிருத்தி என்பது ஒரு சமூகம் அதன் நோக்கு நிலையில் இருந்து செய்ய வேண்டியது. அது அதன் நோக்கு நிலையிலிருந்து அபிவிருத்தியைத் திட்டமிடுவதற்கு அவசியமான கூட்டு உரிமைகளைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் தனது கடலின் மீதும், துறைமுகங்களின் மீதும்,காட்டின் மீதும்,நிலத்தின் மீதும் அதன் வளங்களின் மீதும் அதிகாரத்தைக் கொண்டிராத ஒரு மக்கள் கூட்டமானது தனக்குரிய அபிவிருத்தியைத் தானே திட்டமிட முடியாது.
அபிவிருத்தி செய்வதற்கான கூட்டு உரிமைகளை உறுதிப்படுத்தாமல் அபிவிருத்தியை முன்னெடுப்பது என்பது இனப்பிரச்சினையை ஒரு பொருளாதாரப் பிரச்சினையாக வியாக்கியானப்படுத்தும் ஓர் உத்திதான்.
எதை அபிவிருத்தி செய்வது? எப்பொழுது செய்வது? எப்படிச் செய்வது? யாரிடம் உதவி எடுப்பது? போன்ற எல்லாவற்றையும் திட்டமிடுவதற்கும் செயற்படுத்துவதற்கும் தமிழ் மக்களுக்கு உரிய கூட்டுஉரிமைகள் வேண்டும். அந்தக் கூட்டு உரிமைகள் அதாவது அரசியல் உரிமைகளைக் கேட்டுத்தான் தமிழ் மக்கள் போராடினார்கள்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு வரும் வரையிலும் அதாவது தமிழ் மக்களின் கூட்டு உரிமைகள் உறுதி செய்யப்படும் வரையிலும் அபிவிருத்தியைச் செய்யாமல் இருக்க முடியாது என்பதனை கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் தமிழ்மக்கள் தமது கூட்டுரிமைக்கான கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் தமிழ் மக்களிடம் எப்பொழுதும் இருக்கும்.
அனுர அவருடைய யாழ்ப்பாண விஜயத்தின்போது தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு தெரியாமல் தனது நண்பர் ஒருவரின் வீட்டில், தட்டாதெருவில் தங்கியிருக்கிறார். இதற்கு முதல் முறை யாழ்ப்பாணம் வந்த பொழுது அவர் குருநகர் மத்தியூஸ் வீதியில் உள்ள க்யூடெக் அலுவலகத்திற்கு சற்று நேரே உள்ள ஒரு நண்பரின் வீட்டில்தான் இளைப்பாறிக் ,குளித்து உடைமாற்றிக் கொண்டு சாப்பிட்டார். கடந்த கிழமை புதுக்குடியிருப்புக்குச் சென்ற போது அங்கே தன்னுடைய கட்சிக்காக உழைக்கும் ஒருவருடைய வீட்டில் மதிய உணவை எடுத்தபின் அந்த வீட்டுக் குழந்தையைத் தூக்கிவைத்துக் கொண்டு ஒரு படம் எடுத்துக் கொண்டார். பொதுவாக வடக்குக்கு வரும் ஜனாதிபதிகள் இங்குள்ள உயர்தர விடுதிகளில்தான் தங்குவார்கள். பாதுகாப்பு ஒரு காரணமாகக் கூறப்படும். ஆனால் அனுர தன் பழைய நண்பர்களைத் தேடிச் சென்று அவர்களுடைய வீடுகளில் தங்குகிறார்; உணவருந்துகிறார்; குளித்து உடுப்பு மாற்றிக் கொள்கிறார். சிங்கள மக்கள் மத்தியில் அவர் ஒரு எளிமையான, எளிதில் கிடைக்கக்கூடிய தலைவர் என்ற அபிப்பிராயம் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டு விட்டது. தமிழ் மக்கள் மத்தியிலும் அப்படி ஒரு பிம்பத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கிறார்.
அவர் எந்தப் பிம்பத்தை கட்டியெழுப்பினாலும் இறுதியாக நிலைக்கப் போகும் பிம்பம் எது என்பதை இனப்பிரச்சினைக்கான அவருடைய தீர்வு எது என்பதுதான் தீர்மானிக்கப் போகிறது.
தேசிய மக்கள் சக்தி,தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனை அதன் தேர்தல் பிரச்சாரங்களிலும் அதன் தேர்தல் அறிக்கையிலும் காண முடிந்தது. தமிழ் மக்களை ஒரு தேசிய இனமென்று ஏற்றுக்கொண்டால்தான் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அவர்கள் தங்களைத் தாங்களே அபிவிருத்தி செய்யத் தேவையான கூட்டு உரிமைகளை ஏற்றுக்கொள்ளலாம்.
உதாரணமாக மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட விரிவாக்கம். மயிலிட்டித் துறைமுகம் எனப்படுவது ஒரு காலம் இலங்கைத்தீவின் முன்னணி கடல் வாணிபத் துறைமுகமாக விளங்கியது. தமிழ் மக்கள் நீண்ட கடல் எல்லையைக் கொண்டவர்கள். போருக்கு முன்பு தீவின் மொத்தக் கடலுணவில் கிட்டத்தட்ட 40 விகிதம் வடக்கிலிருந்தே கிடைத்தது. வடக்கில் மயிலிட்டிதான் முன்னணித் துறைமுகமாகக் காணப்பட்டது. போரில் அது உயர் பாதுகாப்பு வலையத்துக்குள் விழுங்கப்பட்டது. விளைவாக மயிலிட்டி அதன் சோபையை, பொலிவை இழந்து விட்டது. அதன் மக்கள் இடம்பெயர்ந்து, புலம்பெயர்ந்து மெலிந்து போய்விட்டார்கள். தொடர்ச்சியான இடப்பெயர்களால் ஒரு தலைமுறை அதன் பாரம்பரிய தொழில் தொடர்ச்சியை,தொழில் திறன்களின் தொடர்ச்சியை இழந்து வருகிறது. இப்படிப்பட்டதோர் பின்னணியில் மயிலிட்டி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்தியை ஜனாதிபதி தொடக்கி வைத்திருக்கிறார்.
.ஆனால் மயிலிட்டி அமைந்திருக்கும் அதே பிரதேசத்தில் சில கிலோமீட்டர் தொலைவில்தான் தையிட்டி அமைந்திருக்கிறது. அங்கு கட்டப்பட்டிருக்கும் ஒரு விகாரையானது சிங்கள பௌத்த மயமாக்கலின்,நிலப் பறிப்பின் ஆகப்பிந்திய குறியீடாக நிற்கிறது. தையிட்டி விகாராதிபதி மயிலிட்டியில் நடந்த வைபவத்துக்கு வருவாராக இருந்தால் அது ஒரு விவகாரமாக மாறும் என்று கருதியதனால் அந்த வைபவத்துக்கு எந்த மதத் தலைவர்களும் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் மண்டைதீவில் வைத்து அனுர தையிட்டி விகாரதிபதியிடம் ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
மயிலிட்டியில் அபிவிருத்தி;தையட்டியில் நிலப்பறிப்பும் சிங்கள பௌத்தமயமாக்கலும். இது தற்செயலான முரண்பாடு அல்ல. இவை இரண்டுமே ஒரே நோக்கத்தை கொண்ட அரசு இயந்திரத்தின் இரு வேறு செயற்பாடுகள்தான். ஒன்று வெளிப்படையாக ஆக்கிரமிப்பைச் செய்கின்றது. தமிழ் மக்களுக்கு அவர்களுடைய நிலத்தின் மீதும் கடலின் மீதும் உரிமை இல்லை என்பதனை அது நிரூபிக்கின்றது. இன்னொன்று தமிழ் மக்களை அபிவிருத்திக்குள் கரைத்து விட முயற்சிக்கின்றது. அதனால்தான் திரும்பத்திரும்பக் கூறவேண்டியிருக்கிறது,தமிழ் மக்கள் கேட்பது அபிவிருத்தியை அல்ல.அபிவிருத்தி செய்வதற்கான கூட்டு உரிமைகளை என்று.
கடந்த வாரம் அனுர யாழ்ப்பாணத்தில் நின்ற அன்று செம்மணியில் ஏழு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. செம்மணிப் புதைகுழியை உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்கான ஒரு களமாக அரசாங்கம் கையாண்டு வருகிறது. புதுக்குடியிருப்பில் அனுர ஒரு சிறு பிள்ளையைத் தூக்கி வைத்துக்கொண்டு படம் எடுத்திருக்கிறார். அதுபோல ஒரு சிறு பிள்ளையை அணைத்தபடி செம்மணியில் ஒரு தாய் புதைக்கப்பட்டார். அந்தத் தாய்க்கும் குழந்தைக்கும் நீதி கிடைத்தால்தான் புதுக்குடியிருப்பில் அனுர எடுத்த படத்துக்கு ஒரு வரலாற்றுப் பெறுமதியிருக்கும். இல்லையென்றால் அது வரலாற்றின் குப்பை கூடைக்குள் எறியப்பட்டுவிடும். ஏனென்றால் “வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி” என்று மார்க்சிஸ்டுக்கள் கூறுவார்கள்.
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகுவதாக அறிவிப்பு
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகுவதாக அறிவிப்பு
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகுவதாக அறிவிப்பு
07 Sep, 2025 | 04:05 PM
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் லிபரல் ஜனநாயக கட்சியின் பிளவை தடுக்கும் நோக்கில் தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
68 வயதான ஷிகெரு இஷிபா, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜப்பான் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். எல்டிபி கட்சியின் தலைவர் பொறுப்பிலும் அவர் உள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் ஜப்பான் பாராளுமன்றத்தின் மேலவையில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது.
அவரது எல்டிபி கட்சி மற்றும் அதன் கூட்டணி மேலவையில் பெருபான்மையை பெறவில்லை. முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற ஜப்பான் தேர்தலில் மக்களவையில் அவரது எல்டிபி கூட்டணி பெரும்பான்மை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலக வேண்டுமென அவரது கட்சியின் உறுப்பினர்கள் வற்புறுத்தி வந்தனர்.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நடந்த கூட்டத்தில் அவருக்கு எதிராக கருத்து எழுந்தது. இருப்பினும் ஜப்பானுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி, அதனால் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலை உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பதவி விலக அவர் மறுத்து விட்டார்.
இந்த சூழலில் ஜப்பான் நாடாளுமன்ற மேலவையில் 141 என இருந்த எல்டிபி கூட்டணியின் எண்ணிக்கையை 122 ஆக குறைந்தது. மேலவையில் மொத்த எண்ணிக்கை 248. பெரும்பான்மையை நிரூபிக்க 3 ஆசனங்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் அதில் தோல்வி கண்டுள்ளது எல்டிபி கூட்டணி. இந்த நிலையில் தான் பிரதமர் பொறுப்பில் இருந்து விலக ஷிகெரு இஷிபா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் பெண் ஒருவர் உள்துறைச் செயலாளராக நியமனம்
பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் பெண் ஒருவர் உள்துறைச் செயலாளராக நியமனம்
பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் பெண் ஒருவர் உள்துறைச் செயலாளராக நியமனம்
07 Sep, 2025 | 03:51 PM
பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு முஸ்லிம் பெண் உள்துறைச் செயலாளராகப் பதவி ஏற்றுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஷபானா மஹ்மூத் இந்த முக்கியப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தின் மூலம், பிரிட்டனின் உள்நாட்டுப் பாதுகாப்பு, குடியேற்றக் கொள்கைகள் மற்றும் காவல் துறையின் மிக முக்கியமான துறைகளை ஷபானா மேற்பார்வையிடுவார்.
பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்தின் பர்மிங்காமுக்குக் குடிபெயர்ந்த பெற்றோருக்கு 1980 இல் பிறந்த ஷபானா, புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று சிறிது காலம் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார்.
2010 இல், பர்மிங்காம் லேடிவுட் தொகுதியிலிருந்து தொழிலாளர் கட்சியின் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நுழைந்த முதல் முஸ்லிம் பெண் எம்.பி.க்களில் ஒருவரானார்.
கட்சியில் பல முக்கிய நிழல் பதவிகளை வகித்த ஷபானா, 2024 தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, நீதித்துறை செயலாளராகவும், லார்ட் சான்சலராகவும் நியமிக்கப்பட்டார். தற்போது, உள்துறைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
கூட்டாட்சி அரசியல் முறைமை பற்றி இலங்கை அரசியல்வாதிகளுக்குத் தெளிவூட்டல் : சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை
கூட்டாட்சி அரசியல் முறைமை பற்றி இலங்கை அரசியல்வாதிகளுக்குத் தெளிவூட்டல் : சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை
கூட்டாட்சி அரசியல் முறைமை பற்றி இலங்கை அரசியல்வாதிகளுக்குத் தெளிவூட்டல் : சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை
07 Sep, 2025 | 11:11 AM
(நா.தனுஜா)
இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் 13 பேரை சுவிட்ஸர்லாந்துக்கு அழைத்துச்சென்று, அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி விளக்கமளிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கும் அந்நாட்டு அரசாங்கம், அரசியல் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு உத்தேசித்திருக்கும் இலங்கைக்கு இந்நகர்வு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுடன் இலங்கைக்கும் சுவிட்ஸர்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 70 வருடங்கள் நிறைவடைகின்றன. அதனை முன்னிட்டு இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் மேற்படி செயலமர்வை ஏற்பாடு செய்துள்ளது.
இம்மாதம் 14 - 21 ஆம் திகதி வரை சுவிட்ஸர்லாந்தில் நடைபெறவுள்ள இச்செயலமர்வில் பங்கேற்பதற்கு இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு அந்நாட்டின் வெளிவிவகாரங்களுக்கான கூட்டாட்சித் திணைக்களத்தின் சமாதானம் மற்றும் மனித உரிமைகள் பிரிவின் செயலாளரால் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து அக்கட்சிகளால் உறுதிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் கிராமிய அபிவிருத்தி, சமூகப்பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சரும் இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவருமான கலாநிதி உபாலி பன்னிலகே, தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலஃப்பர், பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்ததின் செயலாளர் சந்திம ஹெட்டியாராச்சி, பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளருமான கலாநிதி நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான நிலாந்தி கொட்டஹச்சி மற்றும் சமன்மலி குணசிங்க ஆகியோரும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவலவும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கமும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரளவும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனும், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் டபிள்யூ.ரி.சி.பத்மா மஞ்சுளவும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான கபிலன் சுந்தரமூர்த்தியும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
சுவிட்ஸர்லாந்தில் 8 நாட்கள் நடைபெறவுள்ள இச்செயலமர்வின்போது சுவிட்ஸர்லாந்தின் அரசியல் முறைமை மற்றும் இருதரப்பு உறவுகள், சுவிட்ஸர்லாந்தின் கூட்டாட்சி முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்ளல் ஆகிய தலைப்புக்களில் இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்படவிருப்பதுடன் முக்கிய கட்டமைப்புக்களுக்கான கள விஜயங்கள் மற்றும் உயர்மட்ட சந்திப்புக்கள் என்பனவும் இடம்பெறவுள்ளன.
இச்செயலமர்வானது சுவிட்ஸர்லாந்தின் அரசியல் முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும், ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்குமான வாய்ப்பை இலங்கை அரசியல்வாதிகளுக்கு வழங்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிரி வோல்ற், இலங்கை அரசியல் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு உத்தேசித்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் சுவிஸ் அரசியல் முறைமையின் முக்கிய கூறுகளை உள்வாங்குவதற்கும், பல்லின மற்றும் பன்மொழி சமூகங்களுக்கு மத்தியில் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவது குறித்து அறிந்துகொள்வதற்கும் இது உதவும் எனத் தெரிவித்துள்ளார்.
மேய்ச்சல் நிலத்தை பெற்றுத்தர துரித நடவடிக்கை வேண்டும்
மேய்ச்சல் நிலத்தை பெற்றுத்தர துரித நடவடிக்கை வேண்டும்
மேய்ச்சல் நிலத்தை பெற்றுத்தர துரித நடவடிக்கை வேண்டும்
தங்களின் போராட்டம் இரண்டு வருடங்கள் கடக்கவுள்ள போதிலும் தமக்கான தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை என மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நில பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் நேற்று (6) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டத்தின் இரண்டு வருடம் எதிர்வரும் 15ஆம் திகதியுடன் பூர்த்தியடைகின்றது.
எனினும் இந்த அறவழிப் போராட்டத்தில் அடைந்த நன்மைகள் குறைவு. மேய்ச்சல் தரைக்காக. ஒதுக்கப்பட்ட 3025 ஹெக்டயர் நிலப்பரப்பு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. பின்னர் 3000 ஏக்கர் தருவோம் என கூறப்பட்ட போதிலும் இன்னமும் அதற்கான எந்த பதிவும் இடம்பெறவில்லை.
இந்த இரண்டு வருடத்திற்கான பூர்த்தியை முன்னிட்டு எங்களுடைய போராட்டம் அரசாங்கத்திற்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கும் என நினைக்கின்றோம்
கால்நடைகளினால் நாங்கள் மட்டும் பயனடையவில்லை. அரசாங்கத்திற்கும் இதனால் வருமானம் வருகிறது.
எனவே கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-
விஜித ஹேரத் ஜெனிவாவுக்கு பயணமானார்
விஜித ஹேரத் ஜெனிவாவுக்கு பயணமானார்
விஜித ஹேரத் ஜெனிவாவுக்கு பயணமானார்
வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) காலை 06.45 மணியளவில் ஜெனீவாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
நாளை (08) ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 வது அமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜெனீவாவில் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் அமைச்சர் விஜித ஹேரத் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையேயான விசேட சந்திப்பொன்றும் இதன்போது நடைபெற உள்ளது.
வோல்கர் டர்க்கின் இலங்கை விஜயத்திற்குப் பிறகும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கழித்தும் நடைபெறும் இந்த மாநாட்டில், மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக புதிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்களை முன்வைக்க முடியும்.
இந்த ஆண்டு மனித உரிமைகள் கூட்டத் தொடரில் அமைச்சர் விஜித ஹேரத்துடன், வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் பணிப்பாளர் நாயகம் தயானி மெண்டிஸும் பங்கேற்கவுள்ளார்.
உக்ரேன் மீது 800 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா
உக்ரேன் மீது 800 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா
உக்ரேன் மீது 800 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா
உக்ரேன் - ரஷ்யா மோதல் தொடங்கியதில் இருந்தே இதுதான் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் என்று கூறப்படுகிறது. இத்தாக்குதலில் உக்ரேன் அரசு தலைமை அலுவலக கட்டிடத்தின் மேல்தள பகுதியில் தீப்பிடித்து, புகை எழுந்தது. இதை சர்வதேச ஊடகவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். 800 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. இந்த தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) நடந்துள்ளது.
இதுநாள் வரையில் கீவ் நகரில் அரசு கட்டிடங்கள் மீதான தாக்குதலை ரஷ்யா தவிர்த்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை (07) அன்று ரஷ்யாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் கீவ் நகரில் ஒரு வயது குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தாக்குதலில் கர்ப்பிணி உட்பட 11 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரேன் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதை கீவ் நகரின் நிர்வாக தலைவரும் உறுதி செய்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று சேதமடைந்துள்ளது. அதில் உள்ள மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
கடந்த இரண்டு வார காலத்தில் உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்ட மிக தீவிர ட்ரோன் தாக்குதலில் இது இரண்டாவதாக அமைந்துள்ளது. தீ பற்றிய அரசு தலைமையக அலுவலக கட்டிடத்தில் உக்ரேன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வசிப்பதாக தகவல்.
இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யாவில் உள்ள பிரையன்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள எரிசக்தி உள்கட்டமைப்பை சிதைக்கும் வகையில் எண்ணெய் குழாய் வழிதடத்தை ட்ரோன் மூலம் உக்ரேன் தாக்கியது. இதை உக்ரைனின் ட்ரோன் படை தளபதி ராபர்ட் ப்ரோவ்டி உறுதி செய்துள்ளார்.
அண்மையில் உக்ரேன் நாட்டின் மிகப் பெரிய போர்க்கப்பலை, ட்ரோன் மூலம் ரஷ்யா தகர்த்தது. இதில் உக்ரேன் வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த 2022-ல் தொடங்கிய ரஷ்யா - உக்ரேன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முயற்சி எடுத்தார். ஆனால், ரஷ்ய ஜனாதிபதி புட்டின், உக்ரேன் மீதான தாக்குதலை இன்னும் நிறுத்தவில்லை. இந்த சூழலில் உக்ரேன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை தொடர்கிறது.
https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/உக்ரேன்-மீது-800-ட்ரோன்களை-ஏவிய-ரஷ்யா/50-364136