கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை"
கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 01 விடுமுறை நாட்களில் தாத்தாவும், பேரனும் ஒன்றாக பொழுதைக் கழிப்பது உண்மையில் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். அதற்காக நான் மூத்த மகளிடம் விடுதலைக்கு வருவது வழக்கம். ஒன்றாக விளையாடுவது, கதை சொல்வது மற்றும் பல சின்ன சின்ன செயல்களில் பேரப்பிள்ளைகளுடன் ஈடுபடுவேன். என் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகப் படிப்பு இலங்கை என்பதால், இங்கு பாடமுறை வித்தியாசம் என்பதால், அதை பெற்றோர்களே பார்த்துக்கொள்வார்கள் அப்படி ஒரு விடுமுறையில், கனடா, ஒட்டாவாவில் ஒரு சூடான ஆகஸ்ட் முன் இரவுப் பொழுது, மகளுக்கும் பேரனுக்கும் பெரிய வாக்குவாதம் வந்து விட்டது. மகள் தொலைபேசியில் முக்கிய வேலை விடயமாக கதைக்கும் பொழுது, பேரன் பெரிய சத்தம் போடும் ஒரு விளையாட்டு சிங்கத்தை, தாயின் பக்கத்தில் இருந்து விளையாடிக் கொண்டு இருந்தான். மகள் கொஞ்சம் தள்ளிப்போய் விளையாடு என்று பலமுறை சொல்லிப் பார்த்தாள். பேரன் 'இசை' கேட்பதாக இல்லை. கோபம் கொண்ட மகள், அதை இழுத்துப்பறித்துச் சென்று எங்கோ ஒளித்துவைத்தாள். ஆனால் பேரன் இன்னும் பெரிதாக சத்தம் போட்டு அழுது புரண்டான். உடனே நான் ஓடிச் சென்று அவனைத் தூக்கி கண்ணீரைத் துடைத்து, கொஞ்சம் ஆறுதல் படுத்தினேன். சும்மா அவனுக்காக எனது மகளைக் கடிந்தேன். அதனால் கொஞ்சம் அழுகையை நிறுத்திய இசை, 'தாத்தா, அம்மாவை ஹெல் [நரகம் Hell] இல் கொண்டு போய் போடுங்க என்று பிடிவாதமாக நின்றான். ஒருவாறு அவனுக்கு பிடித்தமான சில சிற்றுண்டிகளைக் கொடுத்து சமாதானம் ஆக்க முயற்சித்தேன். பின் ஆசைவார்த்தை கூறி, அவனை என் அறைக்குள் தூக்கிச் சென்று, சாய்வு நாற்காலியில், என் மடியில் இருத்தி, அவனுக்கு பிடித்த பெப்பா பன்றி [peppa pig] கதை விடியோவை சத்தம் இல்லாமல் போட்டேன். பின் கொஞ்ச நேரத்தால் அவனுக்கு பிடித்த "தாலாட்டு" ஒன்று மெதுவாகப் பாடினேன். "சின்ன பூவே சிங்காரப் பூவே சிஞ்சிதம் காதில் தேனாய் விழ சித்திரம் பேசும் கண்ணும் ஓய சிந்தை நிறுத்தி இமைகள் மூடாயோ?" "வடந்தை உன்னை தழுவாது இருக்க வண்ண மலர்களால் தூளி கட்டி வஞ்சகர் கண் படாது இருக்க வட்ட பொட்டிட்டு விழிகள் மூடாயோ ?" "பச்சை இலுப்பை அளவாய் வெட்டி பவளக்கால் தொட்டில் அழகாய் கட்டி படுக்க இதமாய் கம்பளி விரித்து பல்லாண்டு வாழ்வாய் நீ உறங்காயோ ?" "யாழ் எடுத்து ராவணன் மீட்க யாவரும் ஒன்றுகூடிக் கானம் கேட்க யானை துதிக்கையால் ஏணை ஆட்ட யாழ் மொழியானே கண் உறங்காயோ?" இசை பின் மடியை விட்டு இறங்கி, ஆனால், சாய்வு நாற்காலியிலேயே அருகில் இருந்து தாலாட்டை ரசித்துக்க்கொண்டு இருந்தான். அவனுக்கு இப்ப நான்கு அகவை. முந்தைய நாள், என் அறையில் அவன் விட்டுச்சென்ற பொம்மை ரயில்களால் அறை நிறைந்திருந்தது. ஆனால் இருள் வானத்தில் பரவியபோது, ஏதோ ஒரு மாயாஜாலம் கிளர்ந்தெழுந்தது. நான் சோர்வாலும், இன்று நேரத்துடன் இரவு உணவு எடுத்து, பசி நீங்கியதால் நாற்காலியில் தாராளமாக இளைப்பாறிக்கொண்டு இருந்தேன். இசை அந்த ரயில்களை பொறுக்கி எடுத்து, அதை விளையாடிக்கொண்டு, அமைதியாக படுத்துக்கொண்டு இருந்தான். திடீரென ஒரு தங்க ஒளி எங்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டது. நிலவொளியின் இறகுகளுடன் கூடிய அன்னப்பறவைகளால் இழுக்கப்பட்ட, மேகங்களின் தேர் வானத்திலிருந்து இறங்கியது. ஒரு மென்மையான குரல் எதிரொலித்தது, "வாங்க 'கந்தையா தில்லை', வாங்க 'இசை', வேறு எதிலும் இல்லாத ஒரு கோடை விடுமுறை உங்களுக்கு காத்திருக்கிறது." என்று மெதுவாகக் கூறியது. வரம் கொடுக்கும் தேவதைகள் வந்த போது குழப்பினேன் வந்த போது அவசரப்பட்டு வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்! கரம் பிடிக்க ஆசைகொண்டு கள்ளமாக அவளைத் தொட்டேன் கருத்த விழிகளால் சுட்டுஎரித்து பருத்த மார்பாள் பறந்துசென்றாள்! நான் அண்மையில் எழுதிய பாடல் வரிகளை முணுமுணுத்துக்கொண்டு , அவசரம் அவசரமாக, ஒரு அகல விளிம்பு கொண்ட தொப்பி (குல்லாய்) ஒன்றை எடுத்து, தலையில் அணிந்து, கண்ணாடியை பார்த்து அதைச் சரிபண்ணிவிட்டு, பேரனின் ஒன்று இரண்டு விளையாட்டு பொம்மைகளையும் எடுத்துக் கொண்டு சில வினாடியில் அதில் இருவரும் ஏறினோம். என்ன வேகம்! ஒரு நொடியில், அவை நட்சத்திரங்களைத் தாண்டி பறந்து கொண்டிருந்தன. சப்தரிசி மண்டலத்தின் ஒரு பகுதியான விண்மீன் குழுவான, வசிட்டரும் அருந்ததியும் (Mizar and Alcor) என் கண்ணில் தென்பட்டது. புராதன காலத்தில் பூமியில் வாழ்ந்ததாக கூறப்படும் மிகச் சிறந்த பிரம்மரிசிகள் (முனிவர்கள்) ஏழு பேரும் (சப்த ஏழு) வானில் நட்சத்திரங்களாக ஒளி வீசினார்கள். அவர்களின் அருகில் தான் இந்த இருவரையும் கண்டேன். அவர்கள் எப்போதும் அங்கே, இத்தனை ஆண்டுகள் ஆகியும் இணைந்து இருப்பதைக் கண்டு ஆச்சரியப் பட்டேன். கொஞ்சம் அருந்ததியுடன், 'ஏன் என் திருமணத்தின் போது, உன்னைக் காணமுடியவில்லை என்று கேட்ப்போம் எனறால்', அது முடியவில்லை!. எமது வானூர்த்தி வேகமாகப் பறந்துவிட்டது! பிரகாசிக்கும் ஒரு தலையுடன் துடைப்பம் போல ஒரு நீண்ட வாலுமாக வானில் வலம் வரும், கண்ணுக்கு விருந்தளிக்கும் சில வால் நட்சத்திரங்கள்களைத் தாண்டி சென்றோம். இசை அவ்வாற்றின் ஒன்றின் வாலை சிறிது நேரம் பிடித்து விளையாடினான். ஆனால் அது நழுவிப் போய்விட்டது. நாம் தரையிறங்கியபோது, அங்கு எல்லாம் மின்னும் ஒளியால் பிரகாசித்துக் கொண்டு இருந்தது. பூக்கும் தாமரைகளின் தோட்டங்கள், தேன் மற்றும் பால் ஆறுகள், மூடுபனி போல மிதந்து வரும் காதுக்கினிய சங்கீதம் எம்மை வரவேற்றது. அந்த விண்ணுலகத்தில், நாம் எம் பாதங்களை தரையில் வைக்கும் பொழுது, என் வாய் என்னை அறியாமலே; மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி மலையரையன் பொற்பாவை சிறுவனையும் தேறேன் எண்ணிலி உண் பெருவயிறன் கணபதி ஒன்று அறியான் எம்பெருமான் இது தகவோ இயம்பி அருள் செய்யீர் திண்ணென என்னுடல் விருத்தி தாரீரே ஆகில் திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக் கண்ணறையன் கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா கடல் நாகைக் காரோணம் மேவி இருந்தீரே என்ற தேவாரத்தை தானாகப் பாடியது. கணவனின் கருத்துக்கு எதிராக செயல்படாத மனைவி உமையம்மை, சிறுவன் குமரன், உண்பதே தனது பிரதான வேலையாக கொண்டுள்ள கணபதி இவர்கள் வேண்டாம். விண்ணும் மண்ணும் ஆட்சி செய்து அனைத்து செல்வங்களும் உடையவராக விளங்கும் பெருமானே நீயே வேண்டும் என்று நான் பாட, அதற்கு ஏற்றவாறு இசை, தாளம் போட்டு ஆடி ஆடி வந்தான். அவனின் ஆட்டம், சிவபெருமானை வாசலுக்கே கொண்டு வந்தது. அவரது இமயமலை முடியில் இருந்து கங்கை பாய்ந்தது, அவரது கண்கள் அமைதியாலும் சக்தியாலும் பிரகாசித்தன. அவருக்கு அருகில் பார்வதி தேவி, அரவணைப்பு, அன்பு மற்றும் தாய்மை பாசத்தால் பிரகாசித்தார். அவர்களிடமிருந்து வெகு தொலைவில், ஒரு பெரிய போதி மரத்தின் நிழலில், கௌதம புத்தர் அமைதியாகவும் புன்னகையுடனும் அமர்ந்திருந்தார். கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் பாகம் 02 தொடரும் துளி/DROP: 1832 [கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/30751677411147503/?