Aggregator
புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றச்சாட்டு: 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை!
புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றச்சாட்டு: 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை!
July 25, 2025
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த உத்தரவை நேற்று (24) கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
2017 முதல் 2020 வரை யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் பருத்தித்துறை பகுதிகளில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கவும் 2018 முதல் 2020 வரை ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் சேகரித்ததற்கும் 16 தமிழ் இளைஞர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இது தொடர்பாக, சட்ட மா அதிபர் அவர்களுக்கெதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (24) இந்த வழக்கு விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது.
பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள், குற்றச்சாட்டுகள் யாழ்ப்பாணம் பிராந்தியத்தில் நிகழ்ந்தவையென்பதால், கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் இல்லை என அவர்களின் வாதத்தை ஏற்ற நீதிபதி மகேஷ் வீரமன், குற்றச்சாட்டுகள் இருந்த போதும், நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்கு உட்படாத நிலையில் வழக்கை தொடர முடியாதென்று தெரிவித்துள்ளார்.
எனவே, குற்றச்சாட்டுகளிலிருந்து அந்த 16 இளைஞர்களையும் முற்றிலும் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
வெருகல் பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை; வெற்றுக் காணிகள் விடுவிக்கப்படும்
வெருகல் பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை; வெற்றுக் காணிகள் விடுவிக்கப்படும்
வெருகல் பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை; வெற்றுக் காணிகள் விடுவிக்கப்படும்
Published By: VISHNU
25 JUL, 2025 | 04:21 AM
வெருகல் வட்டவன் பகுதியில் விவசாயிகளின் நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொல்லியல் சின்னம் பாதுகாக்கப்படும் எனவும், கல்லடியில் வெற்றுக் காணிகளாக இருக்கின்ற பகுதி எல்லைக் கற்கள் அகற்றப்பட்டு விடுவிக்கப்படும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளரினால் பிரதேச பிரதி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெருகல் பிரதேசத்தின் வட்டவன் மற்றும் கல்லடி பகுதிகளில் தொல்பொருளியல் திணைக்களத்தினால் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை வியாழக்கிழமை (24) முன்னெடுக்கப்பட்டிருந்து. இது தொடர்பான கள விஜயத்தின் பின்னர் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2025.07.17 அன்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழு கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமைய இன்றைய தினம் (24) பிரதேச சபை தவிசாளர் சே.கருணாநிதி, பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ், உதவி பிரதேச செயலாளர் திருமதி. துசிதீபா, தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் டபில்யூ.யு.எஸ்.பெரேரா, பிரதேச சபை செயலாளர் சாந்தகுமார், குடியேற்ற உத்தியோகத்தர் ந.கஜகோகுலன், உதவி வன ஜீவராசிகள் உத்தியோகத்தர் பி.ஜெகதீஸ்வரன், அடைவு வன நிலதாரி எம்.பி.எம்.அசாருதின், தொல்பொருள் திணைக்கள வலய உத்தியோகத்தர் ஜி.கிரிஷாந்த், கிராம அலுவலர் சாள்ஸ் அன்ரனி, கிராம அலுவலர் திருமதி ஜீவராணி ஆகியோர் குறித்த கள விஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
பிரதேச செயலாளரினால் குறித்த களவிஜயம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக பிரதேச அபிவிருத்திக் குழு தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தொல்பொருளியல் இடமான வட்டவன் பகுதியில் பிரதான வீதிக்கு சுமார் ஒரு கிலோமீட்டரில் பாலக்காட்டு பகுதியில் உள்ளோக்கி செல்லும்போது மலைத்துடர் காணப்படுகின்றது இம்மலை தொடரில் அண்ணளவாக 12 இடங்களில் தொல்பொருள் அடையாளங்களான புராதன எழுத்துக்களும், குகைகளும் காணப்படுபட்டதை அவதானிக்க முடிந்தது எனவும், தொல்பொருள் அடையாளப்படுத்தப்பட்ட மலைத் தொடரை சுற்றியுள்ள எல்லைப் பிரதேசங்களில் தொல்லியல் அடையாளங்களை பாதுகாக்கும் அதேவேளை நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது தொல்லியல் திணைக்கள மாவட்ட உதவி பணிப்பாளரினால் குறித்த கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் 2025.08.14ஆம் திகதி நடைபெற இருக்கின்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு முன்னதாக விசேட தொழிற்ப குழுவினர் இவ்விடத்திற்கு அழைக்கப்பட்டு அடையாளப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது பிரதேச மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரியப்படுத்தப்பட்டதுடன் உத்தேசமாக மலை உச்சியில் இருந்து அண்ணளவாக 50 மீட்டர் பகுதி சுற்றளவு உடைய இடங்களையே தொல்லியல்துறை ஒதுக்கமாக எல்லைப் படுத்துவதாக தெரியப்படுத்தப்பட்டதுடன் அதற்கு அப்பால் உள்ள பிரதேசத்தில் மக்கள் வழமை போன்று நெற்செய்கையில் ஈடுபட முடியும் என தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று கல்லடி பகுதியில் பாசன பப்பத விகாரையை சூழ தொல்பொருள் திணைக்களத்தினால் எல்லை கற்கள் இடப்பட்டு காணப்படுகின்றது. இப்பகுதியில் பயிர்ச்செய்கை பண்ணப்படும் காணிகளும் சிறிய பற்றை காடுகளும் காணப்படுகின்றது இதில் வேளாண்மை மற்றும் மேட்டுநில பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுவரும் காணியானது சுமார் 15 தொடக்கம் 20 ஏக்கர் வரையும் காணப்படுகின்றது. தொல்பொருள் திணைக்கள எல்லைக்குள் ஒருவருக்கு காணி அளிப்பு பத்திரமும் ஒரு நபருக்கு காணி அனுமதி பத்திரமும் காணப்படுவதாக குறித்த கிராம அலுவலரினால் தெரியப்படுத்தப்பட்டது.
இப்பிரதேசத்தில் பற்றை காடுகளாக காணப்படுகின்ற தொல்பொருளியல் திணைக்களம் எல்லை கற்கள் காணப்படும் பகுதிகள் தொல்பொருளியல் தடயங்கள் காணப்படுவதால் அப்பகுதியை விடுவிக்க முடியாது என்றும் அப்பகுதிக்கு அப்பால் வெற்று காணிகளாக காணப்படுகின்றதும் எல்லை கற்கள் இடப்பட்டுள்ள காணிகளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத் தீர்மானத்தினை பெற்று தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியை பெற்று தற்போது இடப்பட்டுள்ள எல்லை கற்களை பிடுங்கி குறித்த பகுதியை விடுவிக்க ஆவண செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கின்றது பிரான்ஸ் - அடுத்தமாதம் அறிவிப்பு
23ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான உத்தியோகபூர்வ சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது
23ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான உத்தியோகபூர்வ சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது
விந்தைமிகு தருணத்தில் உத்தியோகபூர்வ க்ளாஸ்கோ 2026 சின்னம் ஃபின்னி அறிமுகப்படுத்தப்பட்டது
24 JUL, 2025 | 05:00 PM
(நெவில் அன்தனி)
ஐக்கிய இராச்சியத்தின் க்ளோஸ்கோவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள 23ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான உத்தியோகபூர்வ ஃபின்னி சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2026 ஜூலை 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவின் 23ஆவது அத்தியாயம் க்ளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழா என அழைக்கப்படுகிறது.
இந்த விழா ஆரம்பமாவதற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது விசேட அம்சமாகும்.
தூய்மை, அப்பாவித்தனம், ஆண்மை மற்றும் சக்தியைப் பிரதிபலிக்கும் பெருமைமிகு க்ளாஸ்வேஜியன் யுனிகோன் ஃபின்னி என அழைக்கப்படும் இந்த சின்னம், ஜூலை 23ஆம் திகதி விடியற்காலை வேளையில் க்ளைட்சைட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஃபின்னிஸ்டன் பாரத்தூக்கியின் அருகில் வைத்து அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த விந்தையான சின்னம், கிளாஸ்கோ முழுவதும் உள்ள பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 24 பாடசாலைகள் கல்வி பயிலும் 76 பிள்ளைகளின் கற்பனையால் உருவாக்கப்பட்டது. அவர்கள் சின்னம் தயாரிப்பாளர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
மிக உயரமான பாரத்தூக்கியில் சின்னம் தொங்கவிடப்பட்டதன் மூலம் க்ளாஸ்கோ பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான இறங்குமுக கணிப்பை கொண்டாடும் நாளாக ஜூலை 23ஆம் திகதி அமைந்தது.
இதன் போது பொதுநலவாய விழா 10,000 மீற்றர் ஓட்ட சம்பியன் ஈலிஷ் மெக்கோல்கன், ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும் கிளாஸ்கோ 2014 பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஸ்கொட்லாந்து அணியின் கொடியை ஏந்தியவருமான ஈலித் டொய்ல், ஸ்காட்லாந்து கூடைப்பந்தாட்ட வீரர் கீரன் அச்சாரா, ஜூடோ பதக்கம் வென்ற சாரா அட்லிங்டன் மற்றும் காமன்வெல்த் பாரா பௌல்ஸில் தங்கப் பதக்கம் வென்ற போலின் வில்சன் உள்ளிட்ட ஸ்காட்லாந்து விளையாட்டு வீர, வீராங்கனைகள் ஃபின்னியாக காட்சிக்கொடுத்த நபரை சந்தித்தனர்.
ஸ்காட்லாந்தின் பிரதி முதலாவது அமைச்சர் ஜோன் ஸ்வின்னி, கிளாஸ்கோவின் பிரபு புரோவோஸ்ட் ஜெக்குலின் மெக்லெரன் ஆகியோருக்கும் சின்னத்தை தயாரித்தவர்களுக்கும் ஃபின்னி அறிமுகப்படுத்தப்பட்டார்.
அறிமுக விழாவுடன் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில்,
'அடுத்த கொடை காலத்தில் கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஒரு சிரிப்பு, ஒரு அலை, ஒருவேளை ஒரு சிறு நடனம் கூட இருக்கும். உணர்ச்சிகளை உற்சாகமாக மாற்றவும், ஆரவாரங்களைத் தூண்டவும், கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு ஆரம்பமானவுடன் ஒவ்வொரு தருணத்தையும் ஏதோ ஒரு விந்தையாக மாற்ற உதவவும் நான் இங்கே இருக்கிறேன்' ஃபின்னி சார்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
2026 ஜூலை மாதம் தொடக்க விழாவிற்கு முன்னதாக, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் சமூக கொண்டாட்டங்களில் பங்கேற்கும் ஒரு பரபரப்பான அட்டவணையை ஃபின்னியாக காட்சி கொடுக்கும் நபர் ஆரம்பித்துள்ளார்.
WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்
WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்
WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்
WWE மல்யுத்த உலகில் முக்கிய வீரராகத் திகழ்ந்த ஹல்க் ஹோகன் (Hulk Hogan), உண்மையான பெயர் டெர்ரி ஜீன் பொல்லியா (Terry Gene Bollea), 71 வயதில் மாரடைப்பு (cardiac arrest) காரணமாக அமெரிக்காவில் காலமானார்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலம், கிளியர்வாட்டரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (24) அதிகாலை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹல்க் ஹோகன் 1980களில் WWF (இப்போது WWE) இல் தனது "ஹல்கமேனியா" (Hulkamania) பாத்திரத்தின் மூலம் மல்யுத்த உலகை புரட்சிகரமாக மாற்றினார். ஆறு முறை WWE உலக சாம்பியனாகவும், ஆறு முறை WCW உலக ஹெவிவெயிட் சாம்பியனாகவும், மற்றும் ஒரு முறை IWGP ஹெவிவெயிட் சாம்பியனாகவும் இருந்தவர். 1996 இல் "Hollywood Hulk Hogan" என்ற வில்லன் பாத்திரத்தில் New World Order (nWo) குழுவை வழிநடத்தி மல்யுத்த உலகில் புதிய பரிமாணத்தை உருவாக்கினார். அவர் 2005 மற்றும் 2020 (nWo உறுப்பினராக) ஆகிய ஆண்டுகளில் WWE Hall of Fame இல் இடம்பெற்றார்.
மல்யுத்தத்திற்கு வெளியே, ஹோகன் ‘ராக்கி III’ (1982), ‘நோ ஹோல்ட்ஸ் பார்ட்’ (1989) போன்ற திரைப்படங்களில் நடித்தார் மற்றும் ‘Hogan Knows Best’ என்ற ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றினார். அவரது கவர்ச்சியான ஆளுமை மற்றும் மல்யுத்த நிகழ்ச்சிகள் மூலம் மல்யுத்தத்தை குடும்ப பொழுதுபோக்காக மாற்றினார்.
கடந்த 10 ஆண்டுகளில், ஹோகன் 25-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை (முதுகு, முழங்கால், இடுப்பு, தோள்பட்டை) மேற்கொண்டிருந்தார். மே 2025 இல் அவர் கழுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டு மீண்டு வருவதாக அவரது மனைவி ஸ்கை டெய்லி (Sky Daily) தெரிவித்திருந்தார். ஜூன் 2025 இல், அவர் கோமாவில் இருப்பதாகவும், மரணத்தின் விளிம்பில் இருப்பதாகவும் பரவிய வதந்திகளை அவரது மனைவி மறுத்திருந்தார்.
2015 இல், இனவெறி பேச்சு சர்ச்சையில் சிக்கியதால், WWE அவரை தற்காலிகமாக நீக்கியது, ஆனால் 2018 இல் மீண்டும் Hall of Fame இல் இணைத்தது. 2024 இல், அவரது Real American Beer விளம்பர நிகழ்ச்சியில் முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து மன்னிப்பு கேட்டார்.
'பேபிடால் ஆர்ச்சி': பாலியல் உள்ளடக்கத்துக்காக திருடப்பட்ட இந்திய பெண்ணின் முகம் - என்ன நடந்தது?
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் இல்லை
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் இல்லை
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் இல்லை
முருகானந்தன் தவம்
இலங்கை வரலாற்றில் 1983 ஜூலை 23ஆம் திகதி தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட நாள்.
இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் சிங்களவர்களுடன் தமிழர்கள் இணைந்து வாழ்ந்த பகுதிகள் எங்கும் ஓடிய தமிழர்களின் குருதியும் பறிக்கப்பட்ட உயிர்களும் கொளுந்து விட்டெறிந்த தமிழர் சொத்துக்களும், இதயங்களை உறைய வைத்த கொடூர தாக்குதல்களும் உயிருடன் கொளுத்தப்பட்டவர்களின் கதறலும், காடைக் கும்பல்களால் கூட்டாக வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட தமிழ் பெண்களின் அபயக் குரல்களும் இலங்கை தலைநகர் வீதிகளை நிறைத்த அந்த நாளை எப்படி மறக்க முடியும்?
வருடத்தின் 12 மாதங்களில் ‘கறுப்பு ஜூலை’யாக தமிழர் குருதி குடித்த மாதமாகத் தமிழர் மனங்களில் ஆழமாகவும் ஆறாத ரணமாகவும் பதிந்துவிட்ட அந்த தமிழினப் படுகொலை நடந்து ஜூலை 23ஆம் திகதியுடன் 42 ஆண்டுகள் ஆகிவிட்டன.
வாகனங்களில் சென்ற தமிழர்களை வழிமறித்து உயிரோடு எரித்துக் கொன்று நடனமாடிய சம்பவங்கள், வாக்காளர் பட்டியலை வைத்துத் தமிழர்களை அடையாளம் கண்டு வீடுகளிலிருந்து இழுத்தெறிந்து வெட்டித் துண்டாடிய காட்சிகள், பெற்றோருக்கு முன்பாக மகள்களும் கணவர்களுக்கு முன்பாக மனைவிகளும் சகோதரர்களுக்கு முன்பாக சகோதரிகளும் சிங்களக் கும்பல்களினால் நிர்வாணமாக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்ட,
வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரங்களும் கடைகளில் தமிழனின் கறி கிடைக்கும் என பலகையில் எழுதி வைத்து எக்காளமிட்ட கோரங்களும் இன்று நினைத்தாலும் உடல் நடுங்க வைத்து விடும். தமிழ் மக்களுக்கு எதிராக 1956, 1958, 1977, 1981 ஆகிய ஆண்டுகளில் பேரினவாதிகளினதும், பேரின ஆட்சியாளர்களினதும் ஆசிர் வாதத்துடன் முன்னெடுக்கப்பட்ட இனக் கலவர வன்முறைச் சம்பவங்களின் போக்கில், அடுத்த கட்டமாகவே, 1983 கறுப்பு ஜூலை இனக்கலவர படுகொலைகள்
அரங்கேற்றப்பட்டன.
1983 ஜூலை 23, 24, 25, 26 ஆகிய தினங்களில் திட்டமிட்டு தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ‘ஜூலைக் கலவரம்’ எனப்படும் தமிழினப்படுகொலை இலங்கைத் தமிழர்களின் மனங்களில் ஆறாத ரணமாக, தீராத வலியாகக் கனன்று கொண்டிருக்கின்றது.
இந்த ஜூலைக் கலவரம் நடந்தேறி 42 வருடங்கள் கடந்து விட்டாலும் அது தமிழரின் மனத்தோடு ஆழமாகப் பதிந்து விட்டது. ஒவ்வொரு வருடமும் வரும்போதும் ஜூலை என்றதுமே தமிழரின் மனங்களில் 83இன் தமிழர்களின் இரத்தக் கறைபடிந்த கறுப்பு ஜூலை நினைவிற்கு வந்து கலங்க வைப்பதைத் தவிர்க்க முடியாது.
ஜனநாயகத்தின் அடிப்படையில், இனங்களுக்கிடையில் வேறுபாட்டை நோக்காத நேர்மையான சிங்களவர்களின் மனசாட்சிகளை இருளாக்கிய அந்த ‘ஜூலைக் கலவரம்’ எனப்படும் தமிழினப்படுகொலையே 30 வருட யுத்தத்துக்கு வழிகோலி இலட்சக்கணக்கான உயிர்களைப் பலியெடுத்ததுடன், உடைமைகளை அழித்து இலட்சக்கணக்கான தமிழர்களை அகதிகளாக்கி, சிங்களவர், தமிழர்களை இன்றுவரை பரம எதிரிகளாகவும் இணக்கப்பாட்டுக்கு வர முடியாதவர்களாகவும் வைத்திருக்கின்றது.
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக தலைநகர் கொழும்பில் வாழ்ந்த தமிழர்களுக்கு எதிராக இந்த தமிழினப்படுகொலை அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டது.
தமிழ் மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் பல சூறையாடப்பட்டு, கொழும்பு நகரின் அனைத்து தெருக்களிலும் இயங்கிய தமிழ் வர்த்தகர்களின் வியாபார நிலையங்கள், தமிழர்களின் வீடுகள் மற்றும் வாழ்விடங்கள், வாகனங்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டன .
வீதியில் சென்றோர், வீடுகளில் இருந்தோர், வயோதிபர், பெண்கள், சிறுவர்கள், நடுத்தர வயதினர் என பாகுபாடின்றி ஆயிரக்கணக்கானோர் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டனர்.
தீயிட்டு எரிக்கப்பட்டனர். தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட சிங்களக் காடைக்கூட்டத்துக்கு சட்ட ரீதியான முகமூடியையும் இராணுவ, பொலிஸ் ஒத்துழைப்பையும் வழங்கும் பொருட்டு அவசரக்கால சட்டம் பயன்படுத்தப்பட்டது.
அது மட்டுமன்றி, கொலை செய்யப்பட்டவர்களை மரண அல்லது நீதி விசாரணை இல்லாமல் தகனம் செய்ய பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அதிகாரத்தை வழங்கும் சட்டங்கள் அமுல் செய்யப்பட்டன.
தமிழினப் படுகொலைகளைத் தலைநகரில் ஆரம்பிப்பதற்கென முன்கூட்டியே தயார் செய்யப்பட்டது. இதற்காகவே யாழ்., திருநெல்வேலியில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் கொழும்பு கனத்தையில் தகனம் செய்யப்படுமென அரசு அறிவித்தது. அது சிங்களக் காடையர்கள் தமிழினப் படுகொலைக்காக அணிதிரள விடுக்கப்பட்ட அரசின் ஒரு உத்தியோகபூர்வ அழைப்பாகவே இருந்தது.
ஜூலை 23ஆம் திகதியில் இருந்து காடையர் கும்பல்களும் அவர்களுடன் இணைந்து தமிழினப் படுகொலைகளில் ஈடுபட்ட பொலிஸாரும் இராணுவமும் ஒன்றரை நாட்கள் சுதந்திரமாகத் தமிழர்களைத் தேடித் தேடிக் கொல்லவும் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்யவும், தமிழர் சொத்துக்களை அடியோடு அழிக்கவும் இடமளித்ததன் பின்னர், ஜூலை 25ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கே ஜனாதிபதி கொழும்பில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
ஏனைய மாவட்டங்களுக்கும் செல்லுபடியான விதத்தில் அன்று மாலை 6 மணிக்கே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது .
முதலில் கொழும்பிலும் பின்னர் மேல் மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம், சிங்களக் காடையர்கள் மாகாணங்களுக்குள் ஊடுருவி தமது படுகொலைகளை முன்னெடுக்க வழங்கப்பட்ட ஒரு அரச ஆணையாகவே இருந்தது.
ஜூலை 26ஆம் திகதி கண்டி, நுவரேலியா, திருகோணமலை, குருநாகல், இரத்தினபுரி, பலாங்கொடை முதலான பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக தமது காடைத்தனங்களை அரங்கேற்றினர். திருகோணமலை சந்தை தரைமட்டமாக்கப்பட்டது.
சிங்களவர்களின் அரக்கத்தனம் முதலில் கொழும்பை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டாலும், அதன் பின்னர். ஏனைய நகரங்கள், மத்திய மலைநாட்டுப் பகுதியில் என தொடர்ந்து ஏழு நாட்களாக அரங்கேற்றப்பட்டன.
அது மட்டுமன்றி, கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழர்கள் பொலிஸார், சிறைக் காவலர்களின் ஒத்துழைப்புடன் சிங்களக் கைதிகள் , காடையர்களினால் கண்கள் தோண்டப்பட்டும் கொடூர சித்திரவதைகள் செய்யப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த தமிழினப்படுகொலையால் தலைநகரில் உள்ள பாடசாலைகள், கோவில்கள் தமிழ் அகதிகளால் நிரம்பி வழிந்தன. ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கப்பலேற்றி ‘’உங்கள் நாட்டுக்கு செல்லுங்கள்’’ என கூறி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில், பெரும்பாலான தமிழர்கள் நாட்டை விட்டும் வெளியேறினர்.
ஜூலை 23இல் ஆரம்பித்த தமிழினப்படுகொலை மாதத்தின் இறுதி வரை நீண்டு சென்றது. 83 கலவரம் என்ற பெயரில் நடந்த தமிழினப் படுகொலையில் 3,000 பேர் வரையானோர் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும், பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழர்களின் வாழ்விடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன எனவும், கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன எனவும் தரவுகள் கூறுகின்றன.
தமிழர்களை அழிக்க வெறியோடு ஒரு கூட்டம் விரட்டினாலும், அதே சிங்கள இனத்தைச் சார்ந்த மனிதாபிமானம் உள்ளவர்களினால் துணிவோடு பல தமிழர்கள் காப்பாற்றப்பட்டமையும் பல சிங்களக் குடும்பங்கள் தமது வீடுகளில் தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவியமையும் இன்றும் தமிழர்களால் நன்றியுடன் நோக்கப்படுகின்றது.
இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், இராணுவத்தினர் உயிரிழந்தமைக்கும் அளிக்கப்பட்ட முக்கியத்துவம், பொதுமக்கள் பாதிக்கப்பட்ட சமபவங்களுக்கு அளிக்கப்படவில்லை. அந்த சம்பவங்கள் பற்றிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தன.
அதனால் ஊடகங்களின் ஊடாக உண்மை நிலைமையை உடனுக்குடன் அறிய முடியா சூழல் ஏற்பட்டிருந்தத்து. அப்போது கொழும்பில் இருந்த வெளிநாட்டு செய்தியாளர்கள் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டார்கள்.
அவர்கள் தங்களுடைய ஹோட்டல் அறைகளில் இருந்து வெளியில் வருவதற்கும் சில நாட்கள் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்ட வெளிநாட்டுச் செய்தியாளர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர் .
இந்த 1983 ஜூலை கலவரம் என்ற பெயரில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழினப்படுகொலையே பல வரலாறுகளை எழுதியது. பல வரலாறுகளை மாற்றியது. தமிழர்களின் ஆயுதப் போராட்டம் விடுதலைப்புலிகள் தலைமையில் தீவிரம் அடைவதற்கு ஜூலைக் கலவரம் பிரதான காரணமாக அமைந்தது.
தமிழர்கள், பெரும்பான்மையினமான சிங்களவர்கள் மேல், சிங்கள ஆட்சியாளர்கள் மேல் நம்பிக்கையிழந்தனர். இந்த நாட்டிலே சிங்களவர்-தமிழர்கள் ஒன்றாக இணைந்து வாழ முடியாது என்கின்ற நிலைமையை ஜூலைக் கலவரம் ஏற்படுத்தியது. அந்த நிலைதான் இன்றுவரை தொடர்கின்றது.
கறுப்பு ஜூலையின் பின்னர் தேசிய பிரச்சினை என்பது இலங்கை அரசியலில் ஏனைய விடயங்களை விட பிரதான பிரச்சினையாகப் பார்க்கப்பட்டது. 42 வருடங்களுக்கு முன்னர் அப்போதைய அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்காதது போலவே இலங்கையின் தேசியப் பிரச்சினையாக மாறிய தமிழ்மக்களின் பிரச்சினைக்கும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. கிடைக்கும் வாய்ப்புக்களும் இல்லை.
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கின்றது பிரான்ஸ் - அடுத்தமாதம் அறிவிப்பு
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கின்றது பிரான்ஸ் - அடுத்தமாதம் அறிவிப்பு
25 JUL, 2025 | 10:18 AM
பாலஸ்தீன தேசத்தை பிரான்ஸ் அங்கீகரிக்கவுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் நியுயோர்க்கில் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் இந்த விடயம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை: புட்டு புட்டு வைத்தார் ஜனாதிபதி
98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை: புட்டு புட்டு வைத்தார் ஜனாதிபதி
98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை: புட்டு புட்டு வைத்தார் ஜனாதிபதி
பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாடசாலைகளின் தற்போதைய நிலவரம் தொடர்பில் புள்ளி விபரங்களுடன் புட்டு புட்டு வைத்தார்.
98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை. 115 பாடசாலைகளில் 10 மாணவர்களுக்கு குறைவு, 20 மாணவர்களுக்கு குறைவான பாடசாலை 406 உள்ளன. 30 மாணவர்களுக்கு குறைவான பாடசாலை 752 உம் உள்ளன.
அத்துடன், 40 மாணவர்களுக்கு குறைவான உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 1141 என்னும், 50 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளின் எண்ணிக்கை 1506 ஆகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டின் மொத்த பாடசாலைகளின் 15 சதவீதமான பாடசாலைகளில் 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ளனர். 100 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் 3144 உள்ளன.
குச்சவெளியில் 2 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்களும் பண்டாரவளையில் 3 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களும் திருகோணமலையில் 4 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்களும் உள்ளனர்.
சில பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை முழுமையாக மூட வேண்டும். சில பாடசாலைகளை இணைக்கவேண்டும். இன்னும் சில பிரதேசங்களில் புதிதாக பாடசாலைகளை உருவாக்க வேண்டும் என்றார்.
யாழ். பல்கலைக்கழக முன்புற நடைபாதை வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை!
யாழ். பல்கலைக்கழக முன்புற நடைபாதை வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை!
யாழ். பல்கலைக்கழக முன்புற நடைபாதை வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்புறமாகவுள்ள நடைபாதையில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை நல்லூர் பிரதேச சபை மேற்கொண்டுள்ளது.
மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் தற்காலிக வியாபார நிலையங்களை அகற்றும் செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
குறித்த நடைபாதையில் வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி புதன்கிழமைக்கு முன்னர் அகற்றுமாறும், அதனை மீறி வியாபாரங்களில் ஈடுபடுகின்றவர்களின் அத்தனை வியாபார நிலையப் பொருட்களும் ஜூலை 30 ஆம் திகதி சபையினால் கையகப்படுத்தப்படும்.
அத்துடன் நடைபாதையில் வாகனங்கள் நிறுவத்துவதும் முற்றாக தடை செய்யப்படுகின்றது. குறித்த அறிவித்தலினை மீறி வாகனங்களை நிறுத்துவோர் மீது போக்குவரத்துப் பொலிசார் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளது.
https://newuthayan.com/article/யாழ்._பல்கலைக்கழக_முன்புற_நடைபாதை_வியாபார_நிலையங்களை_அகற்ற_நடவடிக்கை!
யாழ்.புதிய பேருந்து நிலையத்திலிருந்தே இ.போ.ச., தனியார்; நெடுந்தூர சேவை - ஓகஸ்ட் முதல் நடைமுறை
யாழ்.புதிய பேருந்து நிலையத்திலிருந்தே இ.போ.ச., தனியார்; நெடுந்தூர சேவை - ஓகஸ்ட் முதல் நடைமுறை
யாழ்.புதிய பேருந்து நிலையத்திலிருந்தே இ.போ.ச., தனியார்; நெடுந்தூர சேவை - ஓகஸ்ட் முதல் நடைமுறை
எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து இலங்கைப் போக்குவரத்துசபை மற்றும் தனியாரின் நெடுந்தூர சேவைகள் நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்தும், இலங்கைப் போக்குவரத்துசபை மற்றும் தனியாரின் உள்ளூர் சேவைகள் தற்போது இலங்கைப் போக்குவரத்துசபை செயற்படும் மத்தியபேருந்து நிலையத்திலிருந்தும் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடக்குமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
நெடுந்தூரப் பேருந்து நிலையத்தைச் செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன். நெடுந் தூரப் பேருந்து நிலையத்திலிருந்து தனியாரும், இலங்கைப் போக்குவரத்து சபையினரும் இணைந்த நேர அட்டவணையில் செயற்படுவது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் நெடுந்தூர தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தால் மாகாண மேல் நீதிமன்றத்தில், வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கும். இலங்கைப் போக்குவரத்துச்சபைக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், பேருந்து சேவைகள் மக்களின் நன்மைக்காகத்தான் செயற்படுத்தப்படுகின்றன. எனவே மக்கள் நலனை முன்னிறுத்தியே தீர்மானங்கள் எடுக்கப்படவேண்டும். நெடுந்தூரப் பேருந்து நிலையத்துக்குச் செல்வதால் மக்களுக்குத்தான் பல்வேறுவகைகளிலும் நன்மை. அதேநேரம், இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் சில குறைபாடுகளைச் சொல்கின்றனர். எனவே, இந்தத் திட்டத்தை செயற்படுத்தும்போது ஏற்படுகின்ற குறைகளைத் தொடர்ச்சியாக நிவர்த்தி செய்து இதனை நகர்த்துவோம் -என்றார்.