
பட மூலாதாரம், Getty Images
24 நவம்பர் 2025, 01:51 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா இன்று (நவ. 24) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவர் கூறிய தகவல்கள்:
அந்தமான் கடல் பகுதி
நவ.23 அன்று மலாக்கா நீரிணை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று, 24ம் தேதி மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா நீரிணை பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெறக்கூடும். மேலும், அதே திசையில் நகர்ந்து அதற்கு அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்
நவ.23 அன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (நவ. 25) குமரிக்கடல் மற்றும் இலங்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு உண்டு. அதன்பிறகு அது வலுவடையும் வாய்ப்பும் உள்ளது.
அரபிக்கடல் பகுதிகள்
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் அதே பகுதிகளில் நிலவுகிறது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
"இந்த மூன்று சுழற்சிகளும் ஒன்றோடொன்று இணைந்து தொடர்புகொண்டிருப்பதால் வெவ்வேறு விஷயங்கள் நடைபெறுகின்றன. இதனால் குமரிக்கடல் பகுதியில் நிலவும் சுழற்சியும் மலாக்கா, மலேசியாவில் நிலவும் சுழற்சியும் இணைந்து ஒன்றாக நகர்வதற்கும் வாய்ப்புண்டு. வரும் நாட்களில் தான் அதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்." என்றார் அமுதா.
மேலும், அவர் "கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக இருந்தது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. 4 இடங்களில் அதி கனமழையும், 15 இடங்களில் கனமழையும் 76 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது." என்றார்.
மேலும் அடுத்துவரும் நாட்களுக்கான வானிலை முன்னெச்சரிக்கையையும் அவர் வெளியிட்டார். அதன்படி,
நாளை 8 மணி வரை: தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, இரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 25: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.
நவம்பர் 26: தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 27 : தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 28: ஏற்கெனவே உள்ள சுழற்சிகளின் நகர்வை கண்காணித்து இந்த எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. எனவே, இது மாறலாம். ஏற்கெனவே உள்ள சுழற்சிகளின்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 29: மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
நவ. 30 திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், "ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப வேண்டும்.
தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள், கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகள், தென் வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்றிலிருந்து நவ. 29ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்." என்றார் அமுதா.
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (24.11.2025) காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.
''இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக் கூடும். இது தொடர்ந்து அதே திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரங்களில் புயலாக வலுப்பெறக்கூடும்'' என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை
இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் நாளையும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இன்றும் நாளையும் இந்தப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு தென் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ராமநாதபுரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.
மேலும், மழை எச்சரிக்கை காரணமாக கள்ளக்குறிச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி
இதற்கிடையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 25ம் தேதி வாக்கில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை - தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லையில் கனமழை
நெல்லை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் தாமிரபரணி நதியில் வெள்ளம் அதிகரித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை நீடித்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து 25 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் நெல்லை வந்தடைந்தனர்.
குற்றாலம் அருவி
தென்காசி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றால அருவிகளில் 4-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் பேருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cjrj39j49wlo