1 month 2 weeks ago

படக்குறிப்பு, திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார்.
கட்டுரை தகவல்
தமிழ்நாட்டில் சமீபத்தில் சாதியின் பெயரில் நடைபெற்ற கொலை சம்பவங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இத்தகைய கொலைகளை தடுக்க வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியான திமுகவின் கூட்டணி கட்சிகள் கோரி வருகின்றன.
இதில் அரசு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. காவல்துறைக்கு அரசியல் அழுத்தம் இருக்கும், ஆனால் அவர்கள் அதைக் கடந்து செயல்பட வேண்டும் என்கிறார் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளரான எஸ்.கருணாநிதி.
அரசியல் கட்சிகளிலிருந்து அரசு நிர்வாகம் வரை அதன் செயல்பாடுகளில் சாதி என்பது ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறுகிறார் அரசியல் விமர்சகர் ராமு மணிவண்ணன்.
சாதியின் பெயரில் நடக்கும் கொலைகளுக்கு தனிச் சட்டம் தான் தீர்வாக இருக்க முடியும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அதே சமயம் தனிச்சட்டம் தேவையில்லை எனக் கூறுபவர்கள் காவல்துறை சுதந்திரமாக செயல்பட விட்டாலே போதுமானது என்கின்றனர்.
நீதிமன்ற விசாரணை
தமிழ்நாட்டின் இரு வேறு பகுதிகளில் சாதியின் பெயரால் பட்டியல் சாதியைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்குகள் இந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்தன.
திருநெல்வேலியில் நிகழ்ந்த கொலை தொடர்பான வழக்கு மதுரைக் கிளையிலும், கடலூரில் நிகழ்ந்த மற்றுமொரு கொலை தொடர்பான வழக்கு சென்னையிலும் விசாரணைக்கு வந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அவருடன் பழகி வந்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தும், தந்தை சிறப்பு சார்பு ஆய்வாளரான சரவணனும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை நீதிபதியின் மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தொடரப்பட்டிருந்தது. இந்த மனுவில் முறையாக விசாரணை நடத்த வேண்டுமென்றும் 8 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சிபிசிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பட மூலாதாரம், GETTY IMAGES
படக்குறிப்பு, சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)
அதே போல கடலூர் மாவட்டம் அரசகுழி கிராமத்தில் சாதியின் பெயரால் நிகழ்ந்த ஒரு கொலை தொடர்பான வழக்கின் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற வேண்டும் என கொலையுண்ட பட்டியல் பிரிவைச் சேர்ந்த பிகாம் மாணவரின் தந்தை கோரியிருந்தார். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"தமிழ்நாட்டில் பல ஆணவக் கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால் துர்திருஷ்டவசமாக இத்தகைய குற்றங்களுக்கு எந்த முற்றுப்புள்ளியும் இல்லை. ஆணவக் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அதன் பின் உள்ள உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படுவதில்லை" என நீதிபதி பி வேல்முருகன் தெரிவித்துள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், FACEBOOK/HARIPARANDHAMAN
படக்குறிப்பு, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்
பெரம்பலூரில் என்ன நடந்தது?
இந்தநிலையில் அரசுத் துறைகளில் சாதிய உணர்வுகள் அவ்வப்போது வெளிப்படுவதாக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கூறுகிறார். இதற்கு சமீபத்திய உதாரணமாக பெரம்பலூரில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தையும் மேற்கோள் காட்டுகிறார் அவர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் வேத மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலின் தேரை பட்டியல் சாதியினர் வசிக்கும் தெரு வழியே கொண்டு செல்வது தொடர்பாக பிரச்னை நிலவிய நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஜூன் 3ஆம் தேதி நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில், தேர் தங்கள் தெருவுக்குள் வர வேண்டியதில்லை என பட்டியல் சமுக மக்கள் சிலரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட வருவாய் அலுவலரை கண்டித்ததுடன், அமைதிப் பேச்சுவார்த்தை தீர்மானத்தையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. தேரை போலீஸ் பாதுகாப்புடன் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் தெருக்களுக்குள் மாவட்ட நிர்வாகம் எடுத்துச் செல்ல வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது ஒரு உதாரணம் தான் என்கிறார் அரிபரந்தாமன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இதுபோல பல சந்தர்ப்பங்களில் காவல்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள், உள்ளூர் அரசியல் போன்ற காரணங்களுக்காக பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதில்லை. தற்போது சமூக ஊடகங்களின் வீச்சு அதிகமாகிவிட்டதால் எந்த சிக்கலென்றாலும் உடனடியாக வெளிச்சத்திற்கு வந்துவிடுகிறது." எனத் தெரிவிக்கிறார்.
அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
திருநெல்வேலியில் கவினின் குடும்பத்தினரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆணவக் கொலைகள் தமிழ்நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் நீண்டகாலமாக ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் வேண்டும் என்று கோரி வருவதாகக் கூறிய அவர், "சாதியப் பெருமையால் நடத்தப்படும் மிருகத்தனமான சம்பவங்களை எந்த ஜனநாயக சக்திகளும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை ஒரு பாடமாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆணவக் கொலைகளைத் தடுக்க ஏற்கெனவே உள்ள சட்டங்களை திறம்பட அமல்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்த சட்டங்களை அமல்படுத்துவதில் ஏற்படுகிற தோல்விதான் இத்தகைய குற்றங்கள் தொடர காரணமாக அமைகின்றன என்றும் தெரிவித்தார்.
ஆணவக்கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வலியுறுத்துவோம் என சிபிஎம் கட்சியைச் சேர்ந்த கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
மேலும் அவர், "சட்டமன்றத்தில் இது தொடர்பாக பேசிய போது தனிச்சட்டம் தேவையில்லை என முதலமைச்சர் தெரிவித்தார். இதன் தீவிரத்தன்மையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். அதேசமயம் இதுதொடர்பான தீவிர விழிப்புணர்வும் காவல்துறைக்கும் கூட தேவைப்படுகிறது. அரசு நிர்வாகச் சீர்திருத்தங்களைச் செய்ய முன்வர வேண்டும்" எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், FACEBOOK/NAAGAI MALI
படக்குறிப்பு, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி
பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கண்ணகி - பட்டியல் சாதியைச் சேர்ந்த முருகேசன் கொலை வழக்கை நடத்திய வழக்கறிஞர் ரத்தினம், சமூகத்தில் ஆதிக்க சாதி உணர்வு குறையவில்லை என்கிறார். கண்ணகி முருகேசன் வழக்கில் நடந்த ஒரு நிகழ்வையும் அவர் மேற்கோள் காட்டுகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சாதிய அமைப்புகளால் பாதிக்கப்படும் குடும்பங்கள் மிரட்டப்படுகின்றன அல்லது விலை பேசப்படுகின்றன. சாட்சியங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் போதுமானதாக இல்லை. கண்ணகி முருகேசன் வழக்கை கூட சிபிஐ தான் விசாரித்தது. சில அமைப்புகளின் அழுத்தத்தால் முருகேசனின் நெருங்கிய ஒரு உறவினரே சாட்சியத்தை மாற்றிக் கூறினார். ஒரு சாட்சியம் மாறினால் கூட அது வழக்கின் விசாரணையை கடுமையாகப் பாதிக்கும்." என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்பு சாதி அடிப்படையிலானது என்கிறார் அரசியல் விமர்சகரும் ஓய்வுபெற்ற அரசியல் அறிவியல் துறை பேராசிரியருமான ராமு மணிவண்ணன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தேர்தலில் தொடங்கி நிர்வாகம் வரை இங்கு பல விஷயங்கள் சாதி அடிப்படையிலான வாங்கு வங்கி அரசியலால் தீர்மானிக்கப்படுகின்றன. யார் ஆட்சியில் இருந்தாலும் நிலைமை இவ்வாறுதான் இருக்கும்." என்றார்.
சாதியின் பெயரால் நடக்கும் கொலைக்கு என தனிப் பிரிவுகள் உண்டா?
கௌரவம் என்ற பெயரில் சாதிக்காக நடக்கும் கொலை வழக்குகளுக்கு என்று தனிப் பிரிவுகள் எதுவும் இல்லை என்கிறார் வழக்கறிஞர் ரத்தினம்.
பாதிக்கப்பட்டவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகள் கூடுதலாக சேர்க்கப்படும் எனத் தெரிவித்தார்.
காவல்துறைக்கு அரசியல் அழுத்தம் இருப்பது உண்மை தான் என்கிறார் ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளரான கருணாநிதி.
தற்போது காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து விட்டது என்று அவர் தெரிவிக்கிறார், "இதற்கு முக்கியமான காரணம் காவல்துறைக்கு உள்ள பணி அழுத்தம் தான். பெரும்பாலான காவலர்கள் அவர்களின் நிலைய எல்லைக்குள் வேலை செய்வதே குறைந்துபோனது. இதனால் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகமாகிவிட்டது" என்கிறார்.
"ஆணவக்கொலை வழக்குகளில் அரசியல்வாதிகளிடமிருந்தும் எதிர் தரப்பினரிடம் இருந்தும் அழுத்தம் வரும். ஆனால் அது சம்மந்தப்பட்ட அதிகாரிகளைப் பொருத்தது. அவர்கள் அதற்கு கட்டுப்பட வேண்டியதில்லை. ஆனால் எல்லோராலும் அதைச் செய்ய முடிவதில்லை. அதனால் தான் போலீஸ் விசாரிக்கக்கூடாது எனக் கூறுகிறார்கள். ஆனால் சிபிசிஐடி என்பது காவல்துறையின் ஒரு பிரிவு தான். அவர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் வேலை செய்யவிட்டாலே போதுமானது" எனத் தெரிவித்தார்.
தனிச்சட்டம் தீர்வாக அமையுமா?

பட மூலாதாரம், GETTY IMAGES
சாதியின் பெயரால் நடக்கும் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை என்கிறார் பேராசிரியர் ராமு மணிவண்ணன். ஆனால் அதற்கான அவசியம் இல்லை என்கிறார் வழக்கறிஞர் ரத்தினம்.
சமூகத்தில் ஆதிக்க உணர்வுகளைக் கட்டுப்படுத்த சட்டங்கள் உதவும் என்கிறார் ராமு மணிவண்ணன். இது தொடர்பாக மேலும் விவரித்தவர், "நகர்ப்புறங்களை விட கிராமங்களில் சாதிய இறுக்கம் அதிகமாக இருக்கும். காவல்துறையும் சமூகத்தில் ஒரு அங்கமாகத் தான் உள்ளனர். எனவே அவர்களிடமும் அதன் தாக்கம் இல்லாமல் இருக்காது. தற்போது அனைத்து கொலை வழக்குகளைப் போலதான் ஒரு ஆணவக் கொலை வழக்கும் நடத்தப்படுகிறது." என்றார்.
''ஒரு குற்றத்திற்கு என தனிச்சட்டம் வருகிறபோது அவை கூடுதல் கவனம் பெறும். இது பொதுமக்களுக்கானது மட்டுமல்ல. காவல்துறையும் நீதித்துறையும் கூட அந்த வழக்குகளை மேலும் சுதந்திரமாக கையாளத் தொடங்கும். தண்டனை ஒன்று மட்டுமே நம்மிடம் உள்ள ஒரே தடுப்பு. சட்டத்தின் கை இல்லாமல் அதைச் செய்ய முடியாது" எனத் தெரிவித்தார்.
ஏற்கெனவே உள்ள சட்டப்பிரிவுகளை வலுவாக்குவதே போதுமானது எனத் தெரிவிக்கிறார் ரத்தினம். "புதிய சட்டம் கொண்டு வந்தாலும் அதைச் செயல்படுத்துவது இதே காவல்துறையும் நிர்வாக அமைப்பும் தான். இதே அமைப்பு தான் சில வழக்குகளில் தண்டனை பெற்றும் கொடுத்துள்ளது. எனவே ஏற்கெனவே உள்ள தண்டனைச் சட்டங்களில் சில பிரிவுகளைச் சேர்த்துவதே போதுமானதாக இருக்கும். கூடுதலாக எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உள்ளதைப் போல சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக மாவட்ட அளவில் குழுக்களை உருவாக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே திமுகவின் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்), மற்றும் விடுதலை சிறுத்தைகள் (விசிக) கட்சிகளின் தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று அவருடைய இல்லத்தில் சந்தித்தனர்.
சாதியின் பெயரால் நடக்கும் கொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுவது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சட்டத்தை தேர்தலுக்கு முன்பாக கொண்டு வர வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் கூறியதாக விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கும் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், சிபிஎம் செயலாளர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/crlzdx924lno
1 month 2 weeks ago
Published By: NANTHINI 06 AUG, 2025 | 07:44 PM வரலாற்றில் இன்று : ஒரு நாளேடு உதயமான கதை! (மா.உஷாநந்தினி) வரலாற்றில் இன்று, அதிசிறப்பான ஒரு நாள். ஒரு தமிழ்ப் பத்திரிகைப் பரம்பரையின் முதல் தலைமுறை, முதல் முறையாகக் கண்டு, கைகளில் தாங்கி, முகர்ந்து, அறிவாலும் உணர்வுகளாலும் அனுபவித்துக் கொண்டாடிய, ஒரு நாளேட்டின் உதயம், இதே புதன்கிழமையில், இதே திகதியில், 95 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. “இலங்கைவாழ் தமிழ் மக்கள் பேராவலோடு எதிர்நோக்கியிருந்த சீரிய, தேசீய, செந்தமிழ்த் தேன்பிலிற்றும், தினசரி ‘வீரகேசரி’ என்ற இன்னுரைக் களஞ்சியம் வெளிவந்துவிட்டது!” என்ற பேரறிவிப்போடு, 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி நிகழ்ந்த, அந்த அற்புதமான, அதி உன்னதமான தொடக்கத்தையும், இன்றைய தினம், 95ஆவது அகவையை நிறைவு செய்து, 96ஆவது அகவையில் தடம் பதித்திருக்கும் ‘வீரகேசரி’யையும், சிரேஷ்ட மற்றும் புதிய தலைமுறை ஊழியர்கள், வாசகர்கள் என அனைவரும் ஆத்மார்த்தமாக மகிழ்ந்து வரவேற்கின்றனர் என்பதை இக்கணம் உணர முடிகிறது. துணிவும் கம்பீரமும் அறிவொளியும் நடுநிலையும் பொருந்திய ‘வீரகேசரி’யானது மிக விரைவில், நூற்றாண்டு பயணச் சாதனையை அடையப்போகும் நன்னாளுக்காக நம்பிக்கையோடு காத்திருக்கும், இத்தமிழ் ஊடகத்தை அடையாளமாகக் கொண்டு இயங்கி வரும் ஸ்தாபனமான எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் ஊழியர்களின் உழைப்பும் நலன் விரும்பிகளின் ஆலோசனைகளும் ஆதரவும் வாசகப் பெருமக்கள் அளிக்கும் வரவேற்பும் அன்பும் அளவிட முடியாதது. இப்பத்திரிகையின் மீது வாசகர்கள் சில விமர்சனங்கள், மாற்றுக் கருத்துக்களைக் கொண்டுள்ள போதிலும், “வாசிக்க ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை வீரகேசரியுடன் இருக்கிறேன்...” என்று சொல்பவர்களையும் பார்த்திருக்கிறேன்... “காலையில் முதல் வேலையாக, வீரகேசரியை வாங்கி முழுதாய் வாசித்துவிட்டுத்தான் மறுவேலை!” என்று உரிமை பாராட்டுபவர்களையும் சந்தித்திருக்கிறேன். பேருந்தின் ஜன்னலோரம் உட்கார்ந்து, ஒரு முதியவர், வீரகேசரியை விரித்து, பின்பு, தான் வாசிக்கவேண்டிய ஒரு சிறு பகுதியை மட்டுமே, காகிதமும் கசங்காமல், கைக்கும் நோகாமல் நேர்த்தியாக, இரண்டு மூன்று மடிப்பாக மடித்து, வாசிக்கின்ற அழகையும் பார்த்திருக்கிறேன். நாளேடுகளை ஓர் எளிய வாசகன் கையாளும் விதம் அத்தனை அழகு! ஒரு பத்திரிகையின் ஆணிவேரும் வாசகன்தான். அதன் இருப்பைத் தீர்மானிப்பவனும் வாசகன்தான். அந்த வகையில், வாசகர்களின் உற்சாகமும் ஒத்துழைப்பும் அவர்களது அறிவுத் தேடலுமே, ‘வீரகேசரி’ என்ற நாமம் தரித்த இந்தப் பாரம்பரிய ஊடகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. 'தரமான வழியில் தெளிவான தகவல்’ என்ற மகுட வாசகத்துக்கு இணங்க, தரமான உள்ளடக்கங்களும், தெளிவான அறிக்கையிடலும் அறம் பிறழாத அணுகுமுறைகளும் விசாலமான கருத்துச் செறிவும் அறிவார்ந்த கருத்தாடல்களும் ஆச்சரியமூட்டும் கருத்துக்கணிப்புகளும் வீரகேசரிக்கு தனித்துப் பெருமை சேர்க்கின்றன. உள்ளூர், உள்நாட்டு விவகாரங்களில் மட்டுமல்ல, சர்வதேசமெங்கும் தொலைநோக்குப் பார்வையை செலுத்தி, உலகில், எங்கோ ஒரு புள்ளியில் நிகழும் சிறு சம்பவமாயினும், உலகளாவிய பிரச்சினைகளாயினும் பாரதூரமான விவகாரங்களாயினும், அவற்றையும் பொதுவெளிக்குக் கொண்டு வருகிறது. பல்வேறு சமூகத்தினர் இணைந்து வாழும் இந்நாட்டில், அந்தந்த சமூகத்தவர்களின் வளமான வாழ்க்கைக்காகவும், பொருளாதார எழுச்சிக்காகவும் மக்களது வாழ்வியல் மேம்பாட்டுக்காகவும் சமூக அபிவிருத்தி நலன்களுக்காகவும் கொண்டுவரப்பட்ட சில திட்டங்கள் கூட, ஒரு தமிழ்ப் பத்திரிகை என்ற வகையில், வீரகேசரி தலையிட்டு வெற்றிகரமாக செயற்படுத்த துணை புரிந்ததற்கு, கடந்த கால வரலாறுகள் சான்றுகளாகின்றன. அத்தோடல்லாமல், வீதி அபிவிருத்தி என்ற பெயரில் இடம்பெறும் மோசடிகள், பின்தங்கிய கிராமங்களில் காணப்படும் பிரச்சினைகள், சரிவர பராமரிக்கப்படாத பாடசாலைகளின் நிலைமைகள், கல்வியில் பின்நிற்கும் மாணவர்களின் எதிர்காலம் குறித்த கரிசனை, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், பால்புதுமையினருக்கு எதிரான கடும்போக்குத்தனம், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களின் அவல நிலை, போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமுதாய சீர்கேட்டுத்தனங்களை சுட்டிக்காட்டியும், கண்டித்தும் கரிசனையோடு குரல் கொடுத்து வருகிறது. பத்திரிகைத்தர்மம் காப்பதில் காலங்காலமாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில், இடையூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் வீரகேசரி முகங்கொடுத்து வருகிறபோதிலும், நேர்மையான செய்தியிடலின் ஊடாக துணிவோடு நீதியை சுட்டிக்காட்டவோ, பொதுமக்களின் பிரச்சினைகளையும் அவலங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டவோ, அவற்றுக்கான தீர்வுகளை நாடவோ வீரகேசரி பின்நிற்பதில்லை. உள்நாட்டு யுத்த சூழ்நிலைகள், இனக் கலவரங்கள், வன்செயல்கள், சமூக சீர்கேடுகள், கல்வி மற்றும் கலாசார முரண்பாடுகள், பாதாள உலகக் கும்பல்களின் அராஜகங்கள், அரசியல் குழப்பங்கள், சில அரசியல்வாதிகளின் இடையூறுகள், ஊடக அடக்குமுறைகளையும் தொடர்ந்து வீரகேசரி சந்தித்திருக்கிறது. அதைவிடவும் நாட்டில் அதிகப்படியாக தலைவிரித்தாடிய இனக் கலவரங்களால் தமிழர்கள் சந்தித்த இடப்பெயர்வுகள், போராட்டங்கள், பத்திரிகை நிறுவன ஊழியர் பற்றாக்குறை, உற்பத்திக்கான வசதி வளம் குன்றியமை, சுனாமி ஆழிப் பேரலை அனர்த்தம், கொரோனோ நோய்த்தொற்றுப் பரவல், பொருளாதார நெருக்கடி, அரசியல் குளறுபடிகள், போராட்ட நிலைமைகள், உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறைகள், அனைத்துக்கும் மேலாக, அச்சுப் பணியை கொண்டுசெல்வதில் பெருந்தடையாய் உருவெடுத்த காகிதப் பற்றாக்குறை, ஊழியர்களின் பணி இடைநிறுத்தம் முதலான பாரிய வீழ்ச்சிகளையும் மேடு பள்ளங்களையும் கையறு நிலையையும் இப்பத்திரிகை நிறுவனம் கடுமையாக எதிர்த்துப் போராடியிருக்கிறது. எனினும், எத்தனைத் தடைகள் வந்துபோனபோதிலும், ஊழியர்களது தளராத உழைப்பும், வாசகர்கள் இப்பத்திரிகையின் மீது கொண்ட நம்பிக்கையுமே வீரகேசரியை மீண்டும் மீண்டும் தூக்கி நிறுத்தியிருக்கிறது என்றே சொல்லவேண்டும். வீரகேசரி உருவான கதை ‘வீரகேசரி’யின் வெற்றிப் பயணத்தை இன்று நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த நாளேடு ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, இன்று வரை, இந்த ஒன்பது தசாப்தங்களுக்கும் மேலான பயணம், அத்தனை எளிதானதல்ல. தமிழ்ப் பேசும் மக்களுக்காக, ஒரு தமிழ் தேசிய நாளேடு தோன்றிய காலமும் பொற்காலமன்று, அது, 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலம். இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முந்தைய அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த தமிழ் மக்களைப் பற்றி நாம் சற்றே சிந்தித்தாக வேண்டும். அன்றைய தமிழ் மக்களின் மனநிலையும் வாழ்க்கை முறையும் பெரிதும் வேறு. அவர்கள் வெகுளித்தனமானவர்கள். வெளியுலகம் அறியாதவர்கள். நாட்டு நடப்போ உலக நிலைவரமோ தெரியாதவர்களாகத்தான் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். காரணம், நாட்டிலும் உலகிலும் நடக்கும் விடயங்களை அன்றைய தமிழ் மக்களுக்கு அறியத்தர, ஒரு தமிழ் ஊடகம் அப்போது நம் நாட்டில் இருக்கவில்லை. அந்த காலகட்டத்தில் ‘கொழும்பு ஜேர்னல்’ என்றொரு ஆங்கிலப் பத்திரிகையும், ‘லங்கா லோக்கய’ என்ற சிங்கள பத்திரிகையும் ‘உதய தாரகை’ என்றொரு தமிழ்ப் பத்திரிகையும் வெளிவந்துகொண்டிருந்தன. இவற்றில் ‘கொழும்பு ஜேர்னல்’, 1832இல் வெளியான முதல் ஆங்கிலப் பத்திரிகையாகவும், ‘லங்கா லோக்கய’, 1860இல் காலியில் வெளியான முதல் சிங்கள பத்திரிகையாகவும், ‘உதய தாரகை’, 1841இல் யாழ்ப்பாணத்தில் வெளியான முதல் தமிழ்ப் பத்திரிகையாகவும் அறிமுகமாயின. அப்போது ‘உதய தாரகை’ தமிழ்ப் பத்திரிகை வெளிவந்தபோதும், அது, யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுமே விற்பனையாகி வந்தது. இதனால், யாழ்ப்பாண மாவட்ட தமிழ் மக்களைத் தவிர, வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மக்களால் அந்தப் பத்திரிகையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை இருந்தது. அவ்வாறான ஒரு சூழ்நிலையில், இலங்கைவாழ் இந்தியத் தமிழரான திரு. பெ.பெரி. சுப்பிரமணியம் செட்டியார் அவர்கள், நாடெங்கும் உள்ள அனைத்து தமிழ்ப் பேசும் மக்களும் வாசித்து, உலக நடப்புகளை அறிந்து, பயன் பெறும் வகையில், ஒரு தமிழ்ப் பத்திரிகையை தேசிய அளவில் உருவாக்க வேண்டும் எனக் கருதினார். அது மட்டுமன்றி, அக்காலகட்டத்தில், நாட்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைக் கூட தமிழ் மக்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. 1927ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து மகாத்மா காந்தி இலங்கைக்கு வருகை தந்தபோது, அவரது இலங்கை விஜயம் பற்றியோ அதன் நோக்கம் பற்றியோ, மக்களுக்காக காந்தி ஆற்றிய உரையோ கருத்துக்களோ எதுவுமே தமிழ் மக்களை போய்ச் சேரவில்லை. இதுபோன்ற முக்கியமான வரலாற்று நிகழ்வுகள், சம்பவங்கள், நாட்டு நிலவரம் குறித்து தமிழ் மக்களுக்கு அறியத்தருவதற்கென ஒரு தமிழ்ப் பத்திரிகை இல்லையே என்ற தவிப்பும் ஏக்கமும் சுப்பிரமணியம் செட்டியார் அவர்களுக்கு நிச்சயம் ஏற்பட்டிருக்கும். தவிர, மலையக மக்கள் மீதும் கரிசனை கொண்ட சுப்பிரமணியம் செட்டியார் அவர்கள், அந்த மக்களின் பிரச்சினைகளும் தேவைகளும் வெளியுலகுக்குத் தெரியவரவேண்டும் எனில், அதற்காகவேனும் ஒரு தமிழ்ப் பத்திரிகை கட்டாயம் தேவை என்று சிந்தித்தார். காலச் சூழ்நிலைகளையும் தேவைகளையும் கருத்திற்கொண்டு, தமிழ்ப் பேசும் மக்களின் குரலாக ‘வீரகேசரி’ என்கிற ஒரு தேசிய தமிழ்ப் பத்திரிகையை உருவாக்கினார். கேசரி என்றால் சிங்கம். சுப்பிரமணியம் செட்டியாரின் துணிவு மிகு பிரவேசமாக ‘வீரகேசரி’ வெளியாவதை எடுத்துக்காட்டும் விதமாக, பெயருக்குத் தகுந்தாற்போல் வாளேந்திய இரண்டு சிங்கங்களின் உருவங்கள் வீரகேசரி இலச்சினையில் வரையப்பட்டன. 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி புதன்கிழமை வீரகேசரியின் முதல் நாளிதழ் 8 பக்கங்களை உள்ளடக்கி வெளியானது. அந்த முதல் நாளேட்டின் விலை வெறும் 5 சதமே என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அன்றைய வீரகேசரி காரியாலயம் கொழும்பு - மருதானையில் அமைந்திருந்தது. அதன் பின்னர், கொட்டாஞ்சேனைக்கு மாற்றப்பட்டு, சிறிது காலத்தின் பின், தற்போதைய அமைவிடமான கொழும்பு - கிராண்ட்பாஸ் பிரதேசத்துக்கு மாற்றப்பட்டு, இன்று வரை நிலைபெற்றிருக்கிறது. ‘வீரகேசரி’ ஆசிரியர்களும் முகாமைத்துவப் பணிப்பாளர்களும் வீரகேசரியின் ஸ்தாபகரும் அதன் ஆசிரியருமான திரு. பெ.பெரி.சுப்பிரமணியம் செட்டியாரைத் தொடர்ந்து, திரு. எச். நெல்லையா, திரு. வ.ராமசாமி, திரு. கே.பி.ஹரன், திரு. கே.வி.எஸ்.வாஸ், திரு. கே.சிவப்பிரகாசம், திரு. ஆ.சிவனேசச்செல்வன், திரு. எஸ்.நடராசா, திரு. ஆர்.பிரபாகன் ஆகியோர் ஆசிரியர்களாக பணிபுரிந்துள்ளனர். இவர்களின் வரிசையில், தற்போது திரு. எஸ்.ஸ்ரீகஜன் பிரதம ஆசிரியராகக் கடமையாற்றி வருகிறார். வீரகேசரி ஸ்தாபனமானது, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிட்டெட் என மாற்றப்பட்ட பின்னர், இந்த ஸ்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்களாக திரு.டி.பி.கேசவன் கடமையாற்றினார். அவரையடுத்து, திரு. ஹரோல்ட் பீரிஸ், திரு. ஆர்.ஏ.நடேசன், திரு. எஸ்.கிருஷ்ணமூர்த்தி, திரு. ஏ.வை.எஸ்.ஞானம், திரு. எம்.ஜி.வென்சஸ்லாஸ் ஆகியோர் பதவி வகித்தனர். அவர்களை அடுத்து, தற்போது, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிட்டெட் ஸ்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக திரு. குமார் நடேசன் வழிநடத்தி வருகிறார். நாளேட்டுக்கு நிகரான சஞ்சிகைகள் வீரகேசரி இதழுக்கு நிகராக, ஆரம்ப காலங்களில் நாளேட்டுடன் இணைந்து வெளியான சஞ்சிகைகளும் விசேட பக்கங்களும் கூட பெரிதளவில் வாசகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றன. அந்த வகையில், 1960களில் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ‘தோட்ட மஞ்சரி’, ‘குறிஞ்சி மலர்’ போன்றன பெரிதளவில் பேசப்பட்டன. அத்துடன் அதே ஆண்டில் வெளியான ‘மித்திரன்’ மாலை தினசரி, ‘ஜோதி’ குடும்ப வார சஞ்சிகை, பின் ‘மித்திரன் வாரமலர்’ ஆகியவை வாசகர்களை அதிகமாக ஈர்த்தன. அதன் பின், மெட்ரோ நியூஸ், விடிவெள்ளி, சுகவாழ்வு, கலைக்கேசரி, ஜோதிட கேசரி, ஜீனியஸ், தமிழ் டைம்ஸ், சூரியகாந்தி, நாணயம், சுட்டி கேசரி, ஜூனியர் கேசரி, மாலை எக்ஸ்பிரஸ், Weekend Express என மேலும் சில வெளியீடுகள் வரத் தொடங்கின. எனினும், 2020ஆம் ஆண்டு கொரோனோ நோய்த்தொற்றுப் பரவலின் தாக்கம் காரணமாக நாடு முடக்கப்பட்டமை, பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஆகிய காரணங்களால் அனேகமான இணை வெளியீடுகள் நிறுத்தப்பட்டன. தற்போது ‘வீரகேசரி நாளிதழ்’, ‘வீரகேசரி வாரஇதழ்’ மற்றும் ‘விடிவெள்ளி’ ஆகிய பத்திரிகைகள் மட்டுமே வெளிவருவதோடு, இம்மூன்று பத்திரிகைகளுடன் சேர்ந்து மித்திரன் வாரமலரும் மின்னிதழாக (E-Paper) வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது. சில முக்கிய வரலாற்றுப் பதிவுகள் வீரகேசரி உருவான நாள் முதல் இன்று வரை, உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் இடம்பெற்றுள்ள பல்வேறு முக்கிய வரலாற்று நிகழ்வுகளை பத்திரிகைகளில் செய்திகளாக, ஆசிரியர் தலையங்கங்களாக, கட்டுரைகளாக, ஆக்கங்களாக, பத்திகளாக பதிவு செய்துள்ளன. அவற்றில் சில நிகழ்வுகளை நோக்குவோமாயின், 'சங்கநாதத்துடன் இலங்கை சுதந்தரோதயம்' (1948.2.4) 'இந்தியா பூரண சுதந்திர குடியரசாகிறது' (1950.1.26) 'நீச்சல் வீரர் நவரத்தினசாமி வல்வெட்டித்துறையில் இருந்து பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து தமிழகம் கோடிக்கரையை அடைந்து சாதனை' (1954) போன்றவற்றை குறிப்பிடலாம். இவற்றோடு, தனிச்சிங்கள சட்டம் (1956), பண்டா - செல்வா ஒப்பந்தம் (1957), இன வன்முறை சம்பவங்கள் (1958), ஸ்ரீ குழப்பம், முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க படுகொலை - வழக்கு (1959), தமிழரசுக் கட்சியின் வடக்கு கிழக்கு சத்தியாக்கிரகம் (1961), சீன கம்யூனிஸ்ட் கட்சி யாழ். மே தின ஊர்வலம் மீது பொலிஸார் தாக்குதல், அமெரிக்க தூதுவர் மீது முட்டை வீச்சு (1965), ஜே.வி.பி. ஆயுதப் போராட்டம், யாழ். நூலக எரிப்பு (1981) முதலானவற்றை பதிவிட்டுள்ளன. மேலும், பரிசுத்த பாப்பரசர் சின்னப்பர் மறைவு, தந்தை செல்வா மறைவு, சீன மக்கள் குடியரசு தலைவர் மாவோ சே துங் மறைவு, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான விடயம், இந்திய அரசியல் தலைவர் காமராஜர் மறைவு, கிழக்கு பாகிஸ்தானை பங்களாதேஷ் என இந்தியா அங்கீகரித்தமை, மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் இலங்கை விஜயம் போன்றனவும் அடங்குகின்றன. பின்வந்த நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இன ரீதியான போராட்டம் முடிவுற்றமை, அரசியல் கட்சிகளிடையே முறுகல் நிலை, குருந்தூர் மலை விவகாரம், கொரோனா பெருந்தொற்றுப் பரவல் - நாடு முடக்கப்பட்டமை, அரசியல் கட்சிகளிடையே மோதல், பொருளாதார நெருக்கடி, அரகலய மக்கள் போராட்டம், பாப்பரசர் பிரான்ஸிஸின் மறைவு, 2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவாகி பதவியேற்றமை, ஜே.வி.பி. ஆட்சியில் புதிய அரசாங்கம், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்.... போன்ற காத்திரமான செய்திகளாயினும், அவற்றை மிகைப்படுத்தல் இன்றி, நடுநிலையுடன் அறிக்கையிடுவதிலும் பிரசுரிப்பதிலும் வீரகேசரி அவதானமாக செயற்படுகிறது. இணைய, டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி அன்று, எழுத்துக்கள் காகிதங்களில் அச்சேற்றப்பட்டு, அச்சு ஊடகமாக உருப்பெற்ற வீரகேசரி, இன்று, இணையமேறி, டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளின் ஊடாக, பல்வேறு நவீனங்களைத் தாங்கி, பரிணாமம் அடைந்து, உரு மாறி, இன்றைய காலச் சூழ்நிலைக்கு ஏற்ப, பொதுமக்களை எளிய முறையில் அணுகும் இலத்திரனியல் ஊடகமாகவும் மிளிர்கிறது. அவ்வாறே செய்திகள், கட்டுரைகள், நேர்காணல்கள், விளம்பரங்கள், ஏனைய அறிவித்தல்களை தாங்கியவாறு வீரகேசரி நாளிதழ் மற்றும் வார இதழ் வெளிவருவதோடு, நாளேட்டின் உள்ளடக்கங்கள் இணையத்தில் கட்டமைக்கப்பட்டு, வீரகேசரி இணையத்தள செய்திச் சேவையும் தனித்துவமாக இயங்கி வருகிறது. 2002ஆம் ஆண்டு இலங்கையில் முதல் தமிழ் செய்தி இணையத்தளமாக virakesari.lk உருவாக்கப்பட்டது. இதழியலை இலத்திரனியலோடு இணைக்கும் அடுத்தகட்ட முயற்சியாக 2005இல் வீரகேசரி மின்னிதழாக (E-paper) பதிவாகத் தொடங்கியது. வீரகேசரி வெறுமனே பத்திரிகைகளாக மாத்திரம் கைகளில் தவழ்ந்த காலம் போய், இன்று எண்ணும சஞ்சிகைகளாகவும் இணையத்தில் உலா வருவதைக் காண்கிறபோது, நாளுக்கு நாள் வீரகேசரி அதன் இருப்பை புதுப்பித்துக்கொள்கிற விதம் ஆச்சரியம்தான். அவ்வாறே, இணையத்தின் மூலம் பத்திரிகையை பல தளங்களிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு எடுத்துச் சென்ற வீரகேசரி இணையத்தளமானது, 2010ஆம் ஆண்டில் “இலங்கையின் அபிமான தமிழ் இணையத்தளமாக” bestweb.lkஆல் தெரிவுசெய்யப்பட்டது. அத்துடன், நமது செய்திகள், நேர்காணல்கள், அரசியல் மற்றும் சமூகம் சார் கருத்துக்கணிப்புகள், பொருளாதார நிலவரம், குற்றச் சம்பவங்கள், வரலாற்று ஆவணப் பதிவுகள், விளையாட்டு, சினிமா சுவாரஸ்யங்கள், கலை, கலாசார நிகழ்வுகள், சமையல் குறிப்புகள், மருத்துவம், மங்கையருக்கான அம்சங்கள் போன்றவை ஒளிஃ ஒலி வடிவ இணைப்புப் பெற்று, காணொளிகளாக உருவாக்கப்பட்டு, வீரகேசரி என்ற ஒற்றைக் குடையின் கீழ் இணையவெளியில் பதிவிடப்பட்டு, அவை யூடியூப், முகநூல், எக்ஸ் தளம், வட்ஸ்அப் முதலிய சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு, வாசகர்களின் காட்சிக்கெளியனாகவும் தோன்றுவது, வீரகேசரியின் மற்றுமொரு வளர்ச்சி. ‘வீரகேசரி’ பற்றி திரு. பெ.பெரி. சுப்பிரமணியம் செட்டியார் அவர்களின் நினைவுப் பதிவு ‘வீரகேசரி’யின் முதலாவது நாளிதழில், அதன் ஆசிரியரான திரு. பெ.பெரி. சுப்பிரமணியம் செட்டியார் அவர்கள், தனது ஆசிரியத் தலையங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தன்னால் இயன்ற அளவு பொது ஜனங்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்ற அவாவினால் தூண்டப்பட்டே வீரகேசரி தோன்றுகிறான். அசாதாரண காரியங்களைச் செய்து முடிக்கும் திறன் பெற்றவனென அவன் வீறு பேசுத் தயாராயில்லை. நியாய வரம்பை எட்டுணையும் மீறாமல், நடுநிலைமையிலிருந்து, உலகத்தின் முன்னேற்றத்திற்கான இயக்கங்களையும் பிரச்சினைகளையும் பரிவுடன் ஆராய்ந்து, பொதுஜன அபிப்பிராயத்தை நல்ல முறையில் உருவகப்படுத்த வேண்டியதையே வீரகேசரி தன்னுடைய முதற்கடனாகக் கொண்டுள்ளான். இராஜீய, சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை வீரகேசரி அவ்வப்போது ஆராய்வதிலிருந்து இவ்வுண்மையை நண்பர்கள் அறிந்துகொள்ளட்டும். தாராள சிந்தனையும், பரந்த நோக்கும், சமரஸ உணர்ச்சியும் பெற்ற வீரகேசரி, சமயச் சண்டைகளில், சாதிச் சமர்களில், வீண்கிளர்ச்சிகளில், கலந்துகொள்ள மாட்டான். நியாயமே அவன் வீற்றிருக்கும் பீடம், அவனது அபிப்பிராயங்கள் நீதியையே அடிப்படையாகப் பெற்றிருக்கும். பொதுஜனங்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் தளராத ஊக்கமும், சலியாத உழைப்பும் அசைக்க முடியாத உறுதியும் காட்டி நமது கேசரி திகழ்வான்........................................................ மிகப் பெரிய பொறுப்பைத் தாங்கிக்கொண்டு, உயர்ந்த நோக்கங்களுடன் வெளிவரும் வீரகேசரி, தமிழ் மக்களின் ஆதரவையும், அன்பையும் நாடுகிறான்.” வீரகேசரி பத்திரிகையை ஆரம்பித்ததன் பின்னணியில் உள்ள தனது நோக்கத்தை இவ்வாறு அவர் வெளிப்படுத்தியிருந்தார். பத்து வருடங்களுக்குப் பின்... 1940 ‘வீரகேசரி’யில் சுப்பிரமணியம் செட்டியார்... அதன் பிறகு, பத்து ஆண்டுகள் கழித்து, வீரகேசரியின் பத்தாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வெளியான வீரகேசரி நாளிதழின் 6ஆம் பக்கத்தில், சுப்பிரமணியம் செட்டியார் எழுதிய “வீரகேசரியின் வளர்ச்சி வரலாறு” என்கிற கட்டுரைத் தொடர்ச்சியைக் காணக் கிடைத்தது. அதில் அவர், “பத்து வருடங்களுக்கு முன்னர் விளையாட்டாக நான் இந்த 'வீரகேசரி’யை ஆரம்பித்தேன். அது இன்று மிகப் பெரிய அமைப்பாகவும், மதிக்கமுடியாத மாணிக்கமாகவும், ஒப்புயர்வற்ற தொண்டனாகவும் ஓங்கி வளர்ந்துவிட்டது. மனித வாழ்க்கை நிலையில்லாதது. இன்னும் சில வருடங்களோ, பல வருடங்களோ நான் இந்த ‘வீரகேசரி’யை நடத்திக்கொண்டு போகமுடியும். அதற்குப் பின்னர் ‘வீரகேசரி’யின் நிலை என்ன? ‘வீரகேசரி’யின் தொண்டும், ‘வீரகேசரி’யும் இலங்கையில் சாசுவதமாக இருக்க வேண்டும்” என்று கேசரி மீதான தனது அபிலாசையினை வெளிப்படுத்தியிருந்தார். அன்று, அவர் எண்ணியது, விரும்பியது, எதிர்பார்த்தது இன்று பல மடங்கு நிறைவேறியிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டாக முன்னகர்ந்து, 96ஆவது அகவையை எட்டியுள்ள ‘வீரகேசரி’ விரைவில் நூறு ஆண்டுகளைத் தொட்டு, இலங்கையின் தமிழ் நாளேடுகளில் நூற்றாண்டு நாயகனாக சாதனை படைக்கும் நாளை நோக்கி நாமும் கம்பீரமாக, சந்தோஷமாக பயணிப்போம்....! வீரகேசரியின் நெஞ்சார்ந்த நன்றிகள் அனைவருக்கும் உரித்தாகட்டும்! https://www.virakesari.lk/article/221915