Aggregator
இலங்கையின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா ஹம்பாந்தோட்டையில் : 2027 இல் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க திட்டம்
இலங்கையின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா ஹம்பாந்தோட்டையில் : 2027 இல் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க திட்டம்
இலங்கையின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா ஹம்பாந்தோட்டையில் : 2027 இல் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க திட்டம்
Published By: Vishnu
19 Feb, 2026 | 04:52 AM
![]()
(க.சிவலிங்கமூர்த்தி)
இலங்கை மின்சார சபையின் வழிகாட்டலில் ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 150 மெகாவாட் கொள்ளளவு கொண்ட நாட்டின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்காவைப் பார்வையிடுவதற்கான விசேட ஊடக விஜயம் செவ்வாயக்கிழமை (17) நடைபெற்றது. இவ் கள விஜயத்தில் ஊடகவியலாளர் உள்ளடக்கிய குழு புதன்கிழமை (16) ஹம்பாந்தோட்டை கொன்னொருவ பிரதேசத்திற்கு இந்த கள விஜயத்தை மேற்கொண்டது.
இலங்கையின் எரிசக்தி வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கொன்னொருவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் நாட்டின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 150 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறனைக் கொண்ட இந்த பிரம்மாண்டத் திட்டம் 2027 ஆம் ஆண்டளவில் தனது முதலாவது மின்சாரப் பங்களிப்பை தேசிய மின்கட்டமைப்பிற்கு வழங்கத் தயாராகி வருவதாக சூரிய பூங்கா கட்டுமான பணிகளின் ஆலோசனை பொறியாளர் திலங்க பண்டார இந்தத் திட்டம் இலங்கையின் மீள்சுழற்சி எரிசக்தி இலக்குகளை அடைவதில் ஒரு பாரிய பாய்ச்சலாக அமையும் எனத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்;
சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் உருவாக்கப்படும் இத்திட்டம் முழுமையாக ஒரு தனியார் துறை முதலீட்டுத் திட்டமாகும். இதற்காக அரசாங்கத்திடமிருந்து எந்தவித நிதிச் செலவுகளும் கோரப்படவில்லை. விக்டோரியா மற்றும் மேல் கொத்மலை நீர்மின் நிலையங்களுக்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மீள்சுழற்சி எரிசக்தி திட்டமாக இது அமையவுள்ளது. இத்திட்டத்திற்காக சுமார் 450 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 150 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு இரண்டு வெவ்வேறு நிறுவனங்கள் முறையே 70 மெகாவாட் மற்றும் 80 மெகாவாட் என முதலீடுகளைப் பகிர்ந்துள்ளன.
இந்த சூரிய சக்தி பூங்காவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய கட்டமைப்பிற்கு கொண்டு செல்வதற்கான மின் கடத்தல் தொகுதிகளுக்கு சுமார் 16 மில்லியன் டாலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செலவை இலங்கை மின்சார சபை ஏற்காமல் முதலீட்டாளர்களே அத்தொகுதிகளை நிர்மாணித்து மின்சார சபையிடம் ஒப்படைக்க உள்ளமை ஒரு விசேட அம்சமாகும். தரைவழி சூரிய மின்சக்தித் தொழில்நுட்பத்தில் இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் ஆகச்சிறந்த நவீன முறைகள் இங்கு கையாளப்படுகின்றன.
நிலத்தை உச்ச அளவில் பயன்படுத்துவதற்காக, இத்திட்டத்தில் ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய திட்டங்களைப் போலன்றி இங்கு சூரிய மின்தகடுகள் தரையிலிருந்து சுமார் 5 அடி உயரத்தில் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் மின்தகடுகளுக்குக் கீழே உள்ள இடைவெளியில் காளான்கள் போன்ற குறைந்த சூரிய ஒளி தேவைப்படும் பயிர்களைப் பயிரிடும் விவசாயத் திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விவசாயத் துறை நிபுணர்களின் ஆலோசனைகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 750 முதல் 1000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆரம்பக் கட்டத்தில் 400 முதல் 500 பேர் வரை நேரடியாகப் பணியமர்த்தப்பட்டுள்ளதோடு பராமரிப்புப் பணிகளுக்காக நீண்ட கால அடிப்படையில் மேலும் பலர் உள்வாங்கப்பட உள்ளனர். மேலும் இப்பகுதியில் உள்ள யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்கும் வகையில் சூழல் நட்பு ரீதியான நில மேலாண்மை முறைகளும் இங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளன.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கொன்னொருவ பகுதியில் அமைந்துள்ள இந்த மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான நிலப்பரப்பில் உருவாகும் இத்திட்டம் வறட்சி காலங்களில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாட்டிற்கு ஒரு நிரந்தர தீர்வாக அமைவதுடன் நாட்டின் பகல் நேர மின் தேவையில் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
டெல்லி ஏஐ மாநாட்டின் தொடக்க நாள் 'குழப்பம்' - சர்வதேச ஊடகங்கள் விவாதிப்பது என்ன?
யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
தமிழனின் சிற்பக் கலை.
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00
நிழல் மாகாண சபை முறைமை செயற்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன்
நிழல் மாகாண சபை முறைமை செயற்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன்
நிழல் மாகாண சபை முறைமை செயற்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன்
Published By: Vishnu
19 Feb, 2026 | 04:21 AM
![]()
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
சட்டரீதியற்ற நிலையில் உள்ள நிழல் மாகாண சபையை இல்லாமல் செய்ய வேண்டும். இது நடைமுறைக்கு ஒவ்வாதது. நிழல் மாகாண சபை முறைமை செயற்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். இதனை நாங்கள் எதிர்க்கிறோம். ஜனநாயக ரீதியில் மாகாண சபைகள் தேர்தல் ஊடாக அரசியல் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது;
உணவுப் பொருட்கள் நிர்ணய விலைக்கு அமைய எங்கும் விற்பனை செய்யப்படுவதில்லை. அதிகாரிகள் இந்த விடயத்தில் கண்டும் காணாமலும் இருக்கின்றனர். இந்த உத்தியோகத்தர்கள் தொடர்பில் அரச அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். ஊழலுக்கு எதிராக இந்த அரசாங்கம் கவனம் செலுத்தும் நிலையில் மக்கள் நியாயமான விலையில் பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
புகையிரத போக்குவரத்து நிலையில்லாத நிலைமையே காணப்படுகின்றது. குறிப்பாக இரவு நேர மன்னார் புகையிரத போக்குவரத்து சேவைகள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
அரசாங்கம் மிக மோசமான விடயத்தை செய்ய முயற்சிக்கின்றது. மாகாண சபைகள் தேர்தலை நடத்தாமல், மாகாண சபை நிழல் அரசாங்கத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்கிறது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. மாகாண சபைகளின் அமைச்சுக்களை உருவாக்கி,ஆளுநர் தலைமையில் அதிகாரிகளை சந்தித்து அரசாங்கம் போன்று நடத்தும் வகையில் அரசியலமைப்பில் இல்லாத விடயத்தை செய்வதற்கு அரசாங்கம் செயற்படுத்த முயற்சிக்கிறது.
இந்த விடயத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். சட்டரீதியற்ற நிலையில் உள்ள நிழல் மாகாண சபையை இல்லாமல் செய்ய வேண்டும். இது நடைமுறைக்கு ஒவ்வாத முறையே. இதனை நாங்கள் எதிர்க்கின்றோம். இதனை நிறுத்தி மாகாண சபைகள் தேர்தல் ஊடாக அரசியல் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்கின்றோம் என்றார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் - பிமல் ரத்நாயக்க
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் - பிமல் ரத்நாயக்க
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் - பிமல் ரத்நாயக்க
18 Feb, 2026 | 07:05 PM
![]()
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
இராணுவத்தின் 20 பேருக்கு புகையிரத சேவை தொடர்பில் பயிற்சி வழங்குவதற்கு எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புகையிரத தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்தார்கள். அவசர நிலைமையின் போது பயன்படுத்துவதற்காகவே இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதை தவிர்த்து அவர்களை புகையிரத சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கல்ல, கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை இடம்பெறுகின்ற நிலையில் மாணவர்களை பயணமாக கொண்டு போராட்டத்தில் ஈடுவடுவதாக அறிவித்தார்கள். இவ்வாறானவர்கள் போக்குவரத்து துறையில் இருப்பதையிட்டு கவலையடைகிறேன். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் மீதான விவாதம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
புகையிரத தொழிற்சங்கத்தினர் நேற்று திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தார்கள். இந்த போராட்டம் பற்றி நாட்டு மக்களுக்கு உண்மையை குறிப்பிட வேண்டும். தித்வா புயல் தாக்கத்துக்கு முன்னர் புகையிரத சேவை நாடளாவிய ரீதியில் 1700 கிலோமீற்றர் தூரத்தை வரையறுத்ததாக காணப்பட்டது.
டித்வா புயல் தாக்கத்துக்கு பின்னர் 400 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கியதாக புகையிரத சேவை காணப்பட்டது. ஆனால் தற்போது புகையிரத சேவை 1200 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. முப்படையினரின் முழுமையான ஒத்துழைப்பால் சேதமடைந்த புகையிரத பாதைகள் மற்றும் புகையிரத பாலங்களை குறுகிய காலத்துக்குள் புனரமைக்க முடிந்தது.
புகையிரத திணைக்கள சேவையாளர்கள் மாத்திரம் புகையிரத பாதைகளை புனரமைக்கவில்லை. முப்படையினரின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் புகையிரத பாதைகளை மறுசீரமைக்க குறைந்தது ஒரு வருடமேனும் சென்றிருக்கும்.
இராணுவத்தின் 20 பேருக்கு புகையிரத சேவை தொடர்பில் பயிற்சி வழங்குவதற்கு எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புகையிரத தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்தார்கள். அவசர நிலைமையின் போது பயன்படுத்துவதற்காகவே இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதை தவிர்த்து அவர்களை புகையிரத சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கல்ல,
இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்தார்கள். கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சை இடம்பெறுகின்ற நிலையில் மாணவர்களை பயணமாக கொண்டு போராட்டத்தில் ஈடுவடுவதாக அறிவித்தார்கள்.இவ்வாறானவர்கள் போக்குவரத்து துறையில் இருப்பதையிட்டு கவலையடைகிறேன். மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் மன்னிப்பு கோருகிறேன் என்றார்.
இளையராஜாவுக்கு இடைக்கால தடை - டெல்லி உயர் நீதிமன்றம்
இளையராஜாவுக்கு இடைக்கால தடை - டெல்லி உயர் நீதிமன்றம்
'மடை திறந்து தாவும் நதியலை நான்' - இளையராஜாவுக்கு தடை விதிக்கப்பட்ட பாடல்களில் 15 பிரபல பாடல்கள் எவை?

பட மூலாதாரம்,X/ilaiyaraaja
கட்டுரை தகவல்
விஜயானந்த் ஆறுமுகம்
பிபிசி தமிழ்
18 பிப்ரவரி 2026
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
'சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ஒலிப்பதிவுகள் மற்றும் இசை படைப்புகளை (musical works) பயன்படுத்தவோ, உரிமை கோரவோ கூடாது' என இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிப்ரவரி 13-ஆம் தேதியன்று டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
'இளையராஜாவின் இசையில் வெளியான 134 படங்களுக்கு இது பொருந்தும்' எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவில் பட்டியலிடப்பட்டுள்ள படங்கள் என்னென்ன? அதில் பிரபல 15 பாடல்கள் எவை?
சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.
மனுவில், 'தங்கள் நிறுவனம் 1976 முதல் 2001-ஆம் ஆண்டு வரை படத்தின் தயாரிப்பாளர்களுடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது' எனக் கூறியுள்ளது.
இந்தப் படங்களின் ஒலிப்பதிவுகள், இசை படைப்புகளின் உரிமை தங்களிடம் உள்ளதாகவும் தங்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் சரிகம இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்களின் பதிப்புரிமை பெற்ற படைப்புகளை பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதாக மனுவில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

படக்குறிப்பு,டெல்லி உயர் நீதிமன்றம்
'தயாரிப்பாளரே முதல் உரிமையாளர்'
தங்களிடம் இளையராஜா இசையமைத்த 134 படங்களின் பாடல்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் உள்ளன என மனுவில் கூறியுள்ள சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம், 'கடந்த பிப்ரவரி மாதம் அமேசான் மியூசிக், ஐ டியூன்ஸ் மற்றும் ஜியோ சாவ்ன் ஆகிய தளங்களுக்கு பாடல் உரிமையை இளையராஜா வழங்கியுள்ளார்' என்கிறது.
'1957-ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தின்படி படத்துக்காக உருவாக்கப்படும் இசைக்கு அதன் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர்' என சரிகம இந்தியா லிமிடெட் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அந்தவகையில், பதிப்புரிமை பெற்ற படைப்புகளை மாற்றியமைக்கவும் மீண்டும் உருவாக்கவும் பொதுவில் அதனைப் பயன்படுத்தவும் தங்களுக்கே பிரத்யேக உரிமை உள்ளதாகவும் மனுவில் அந்நிறுவனம் கூறியது.
பதிப்புரிமை பெற்றுள்ள பாடல்களின் மீது சட்ட மீறல்களில் இளையராஜா தரப்பு ஈடுபட்டுள்ளதாகக் கூறி அதுதொடர்பான சில ஸ்க்ரீன் ஷாட்டுகளை சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் இணைத்துள்ளது.
அதில், 'கவிக்குயில்' படத்தில் இடம்பெற்ற 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' பாடல், பாரதி படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள், 'ஆகாய கங்கை' ஆகிய பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

பட மூலாதாரம்,Facebook/Ilaiyaraaja
'ஈடுசெய்ய இயலாத இழப்பு' - நீதிபதி
வழக்கின் மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கெடேலா, 'பட்டியலிடப்பட்டுள்ள திரைப்படங்களின் ஒரு பகுதியாக இருக்கும் ஒலிப்பதிவுகள், இசை ஆகியவற்றை பயன்படுத்துதல் அல்லது உரிமை கோரல்களை மேற்கொள்ளக் கூடாது' எனக் கூறி, இளையராஜா மற்றும் அவர் சார்ந்த நபர்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
'அவ்வாறு தடை விதிக்கப்படாமல் இருந்தால் சரிகம நிறுவனத்துக்கு ஈடுசெய்ய இயலாத இழப்பு ஏற்படும்' எனவும் உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
வழக்கில் இளையராஜா தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் நான்கு வாரங்களுக்குள் பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு கூறி வழக்கை ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.
இதுதொடர்பாக, இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரையிடம் பிபிசி தமிழ் பேசியது.
"தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விவரங்களைப் பார்த்த பிறகு பேசுகிறேன்" என்று அவர் பதில் அளித்தார்.

படக்குறிப்பு,சரவணன் அண்ணாதுரை
நீதிமன்ற உத்தரவில், இளையராஜாவின் இசையில் 1976-ஆம் ஆண்டு வெளியான 'பத்திரகாளி' படம் முதல் 2001-ஆம் ஆண்டு வெளியான 'உசிரே' என்ற கன்னட படம் வரையில் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.
'பாரதி கண்ணம்மா' படத்தின் கன்னட ரீமேக் ஆக 2001-ஆம் ஆண்டு 'உசிரே' படம் வெளியாகியிருந்தது.
தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இளையராஜா இசையமைத்துள்ள 134 படங்களின் பட்டியலை சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
2000-ஆம் ஆண்டில் ஞானராஜசேகரன் இயக்கத்தில் வெளியான 'பாரதி' படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கும் அந்நிறுவனம் உரிமை கோரியுள்ளது.
நீதிமன்றத்தில் சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் பட்டியலிட்டுள்ள இளையராஜா இசையமைத்த பாடல்களில் 15 பிரபல பாடல்கள் எவை?
'செந்தூரப்பூவே...செந்தூரப்பூவே...'

பட மூலாதாரம்,Youtube/Pyramid Glitz Music
படக்குறிப்பு,'செந்தூரப்பூவே' பாடலை எஸ்.ஜானகி பாடியிருந்தார்
1977-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் '16 வயதினிலே' படம் வெளியானது. நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தனிக்கவனம் பெற்றன. கங்கை அமரனின் வரிகளில் இடம்பெற்ற 'செந்தூரப்பூவே' பாடலை எஸ்.ஜானகி பாடியிருந்தார். 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக் குஞ்சு வந்ததென்ன' என்ற பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர்.
இதே படத்தில் இடம்பெற்ற 'செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா...' பாடலை மலேசியா வாசுதேவன், பி.சுசீலா ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர்.
'என் கண்மணி உன் காதலி...'
1978-ஆம் ஆண்டு தேவராஜ் - மோகன் இயக்கத்தில் 'சிட்டுக்குருவி' படம் வெளியானது. சிவக்குமார், சுமித்ரா ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் - பி.சுசீலா பாடிய 'என் கண்மணி உன் காதலி இளமாங்கனி... உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதே' என்ற பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
பேருந்து பயணத்தில் காதலனும் காதலியும் பாடுவதுபோல இந்தப் பாடலின் காட்சியமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது. இதே படத்தில் 'அடடடா மாமரக் கிளியே...உன்னை இன்னும் நான் மறக்கலியே' என்ற பாடலும் 'உன்ன நம்பி நெத்தியிலே... பொட்டு வச்சேன் மத்தியிலே' ஆகிய பாடல்கள் ரசிகர்களை ஈர்த்தன.
'கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ...'

பட மூலாதாரம்,Youtube/GLV
படக்குறிப்பு,கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ பாடலின் காட்சி
1978-ஆம் ஆண்டு 'கிழக்கே போகும் ரயில்' வெளியானது. '16 வயதினிலே' படத்துக்குப் பிறகு பாரதிராஜா இயக்கிய இந்தப் படத்தில் சுதாகர், ராதிகா ஆகியோர் நடித்திருந்தனர்.
படத்தில் கண்ணதாசனின் வரிகளில் இடம்பெற்ற 'கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ...' பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர்.
இதே படத்தில் கங்கை அமரன் எழுதிய 'பூவரசம் பூ பூத்தாச்சு...' பாடல், ஜெயச்சந்திரனின் குரலில் இடம்பெற்ற 'மாஞ்சோலை கிளிதானா...மான்தானோ...வேப்பம்தோப்பு குயிலும் நீதானோ' ஆகிய பாடல்களை ரசிகர்கள் கொண்டாடினர்.
'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்...'
1978-ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கிய 'முள்ளும் மலரும்' படம், எழுத்தாளர் உமா சந்திரன் எழுதிய நாவலின் கதையை மையமாக வைத்து உருவாகியிருந்தது.
படத்தில் கண்ணதாசனின் வரிகளில் உருவான 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்...' பாடலை கே.ஜே.யேசுதாஸ் பாடியிருந்தார். இது ரசிகர்களின் விருப்பப் பாடலாக மாறியது.
அடுத்து, பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளில் இடம்பெற்ற 'அடி பெண்ணே...பொன்னூஞ்சல் ஆடும் இளமை...வண்ணங்கள் தோன்றும் இயற்கை' என்ற பாடலை ஜென்சி பாடியிருந்தார்.
இதே படத்தில் கங்கை அமரன் எழுதிய இரு பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. அவர் எழுதிய 'நித்தம் நித்தம் நெல்லு சோறு... நெய் மணக்கும் கத்திரிக்காய்... நேத்து வச்சு மீன் குழம்பு என்னை இழுக்குதய்யா' என்ற பாடலை வாணி ஜெயராம் பாடியிருந்தார்.
அடுத்து, 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்...' பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எல்.ஆர்.அஞ்சலியும் இணைந்து பாடியிருந்தனர்.

பட மூலாதாரம்,x
படக்குறிப்பு,இளையராஜா இசையமைத்த பல பாடல்களுக்கு கங்கை அமரன் வரிகளை எழுதியுள்ளார்.
'ஆகாய கங்கை... பொன்தேன் மலர் சோலை'
1979-ஆம் ஆண்டு ஆர்.சி.சக்தி இயக்கத்தில் 'தர்மயுத்தம்' படம் வெளியானது. ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்திருந்த இந்தப் படத்தில் 'ஆகாய கங்கை பொன்தேன் மலர் சோலை...' என்ற பாடல் வரவேற்பைப் பெற்றது.
எம்.ஜி.வல்லபனின் வரிகளில் இடம்பெற்ற இந்தப் பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர். இதே படத்தில் இடம்பெற்ற 'ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு' பாடலும் ரசிகர்களை ஈர்த்தது.
கண்ணதாசனின் வரிகளில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடலை மலேசியா வாசுதேவன் பாடியிருந்தார்.
'ஆயிரம் மலர்களே... அமுத கீதம் பாடுங்கள்'

பட மூலாதாரம்,Youtube/pyramid music
படக்குறிப்பு,ஆயிரம் மலர்களே பாடலின் காட்சி
1979-ஆம் ஆண்டு வெளிவந்த 'நிறம் மாறாத பூக்கள்' படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சுதாகர், ராதிகா, விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர்.
படத்தில் 'ஆயிரம் மலர்களே... மலருங்கள்... அமுதகீதம் பாடுங்கள்' என்ற பாடலை ஜென்சி, எஸ்.பி.சைலஜா, மலேசியா வாசுதேவன் ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். பாடலை பஞ்சு அருணாச்சலம் எழுதியிருந்தார்.
'மலர்களில் ஆடும் இளமை புதுமையே'
கமல்ஹாசன் ஸ்ரீதேவி நடிப்பில் 1979-ஆம் ஆண்டு 'கல்யாணராமன்' படம் வெளியானது. ஜி.என்.ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அதிக வரவேற்பைப் பெற்றன.
மலேசியா வாசுதேவன் பாடிய 'ஆஹா வந்துருச்சு....காதல் வந்துருச்சு... ஆசையில் ஓடிவந்தேன்' பாடல், 'காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்...' பாடலும் எஸ்.பி.சைலஜா பாடிய 'மலர்களில் ஆடும் இளமை புதுமையே.. மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே...' ஆகியவை கவனம் பெற்றன.
'உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்சு கிளி..'
1979-ஆம் ஆண்டு வெளியான 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' படத்தில் சிவகுமார், தீபா உன்னிமேரி உள்பட பலர் நடித்திருந்தனர்.
படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.பி.சைலஜாவும் இணைந்து பாடிய 'உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்சு கிளி...' பாடலும் 'மாமன் ஒருநாள் மல்லிகைப் பூ கொடுத்தான்...' என்ற பாடல்கள் ரசிகர்களை ஈர்த்தன.
'சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்...'
1980-ஆம் ஆண்டு வெளியான 'கல்லுக்குள் ஈரம்' படத்தை எஸ்.பி.நிவாஸ் இயக்கியிருந்தார். படத்தில் பாரதிராஜா, சுதாகர், அருணா ஆகியோர் நடித்திருந்தனர்.
கங்கை அமரனின் வரிகளில் இடம்பெற்ற 'சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்... இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்..' பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர்.
'பொதுவாக என் மனசு தங்கம்...'

பட மூலாதாரம்,Youtube/AP international
படக்குறிப்பு,பொதுவாக என் மனசு தங்கம் பாடலின் காட்சி
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1980-ஆம் ஆண்டு 'முரட்டுக்காளை' படம் வெளியானது. ரஜினிகாந்த், ரதி அக்னிஹோத்ரி ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றளவும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளில் இடம்பெற்ற 'பொதுவாக என் மனசு தங்கம்... ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்...' பாடலை மலேசியா வாசுதேவன் பாடியிருந்தார்.
'எந்தப் பூவிலும் வாசம் உண்டு... எந்தப் பாட்டிலும் ராகம் உண்டு...' என்ற பாடலையும் பஞ்சு அருணாச்சலம் எழுதியிருந்தார். இந்தப் பாடலுக்கு எஸ்.ஜானகியின் குரல் தனி அழகைக் கொடுத்தது.
'மடை திறந்து தாவும் நதியலை நான்...'
பாரதிராஜா இயக்கத்தில் 1980-ஆம் ஆண்டு 'நிழல்கள்' படம் வெளியானது. இந்தப் படத்தில் சந்திரசேகர், ரோகிணி, ராஜசேகர் உள்பட பலர் நடித்திருந்தனர்.
படத்தில் வாலியின் வரிகளில் இடம்பெற்ற 'மடை திறந்து தாவும் நதியலை நான்... மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்...' பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்தார்.
கங்கை அமரனின் வரிகளில் இடம்பெற்ற 'பூங்கதவே தாழ் திறவாய்...' பாடலும் வைரமுத்து எழுதிய 'இது ஒரு பொன்மாலைப் பொழுது... வான மகள் நாணுகிறாள்..' ஆகிய பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
'சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்...'
1981-ஆம் ஆண்டு ஜி.என்.ரங்கநாதன் இயக்கத்தில் 'மீண்டும் கோகிலா ' படம் வெளியானது. கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் நடித்த இந்தப் படத்தில் 'சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி...' என்ற பாடலை கே.ஜே.யேசுதாசும் எஸ்.பி.சைலஜாவும் இணைந்து பாடியிருந்தனர்.
இதே படத்தில் இடம்பெற்ற 'ராதா.. ராதா.. நீ எங்கே.. கண்ணன் எங்கே... நான் அங்கே' என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரணியமும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர்.
'ராமனின் மோகனம்... ஜானகி மந்திரம்...'

பட மூலாதாரம்,Youtube/ Bayshore Records
படக்குறிப்பு,ராமனின் மோகனம்... ஜானகி மந்திரம் பாடலின் காட்சி
1981-ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 'நெற்றிக்கண்' படம் வெளியானது. இந்தப் படத்தில் தந்தை - மகன் என இரு வேடங்களில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
படத்தில் கே.ஜே.யேசுதாஸ், ஜானகி ஆகியோர் இணைந்து பாடிய 'ராமனின் மோகனம்... ஜானகி மந்திரம்... ராமாயணம்...பாராயணம்... காதல் மங்கலம்' பாடலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய 'தீராத விளையாட்டு பிள்ளை... இவன் சிங்கார மன்மதன் தான் சந்தேகம் இல்லை..' பாடலும் வரவேற்பைப் பெற்றன.
இப்படத்தில் இடம்பெற்ற 'மாப்பிள்ளைக்கு மாமன் மனசு...' என்ற பாடலை மலேசியா வாசுதேவனும் பி.சுசீலாவும் இணைந்து பாடியிருந்தனர்.
'அந்தி மழைபொழிகிறது...'
1981-ஆம் ஆண்டு சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 'ராஜ பார்வை' படம் வெளியானது. இந்தப் படத்தில் கமல்ஹாசன், மாதவி ஆகியோர் நடித்திருந்தனர்.
படத்தில் வைரமுத்துவின் வரிகளில் இடம்பெற்ற 'அந்தி மழைபொழிகிறது... ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது' பாடல் அதிக கவனம் பெற்றது. இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியிருந்தனர்.
'தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி..'
பாக்கியராஜ் இயக்கத்தில் 1982-ஆம் ஆண்டு 'தூறல் நின்னு போச்சு' படம் வெளியானது. இந்தப் படத்தில் பாக்கியராஜ், சுலோசனா, நம்பியார் உள்பட பலர் நடித்திருந்தனர்.
படத்தில் கே.ஜே.யேசுதாஸ் பாடிய 'ஏரிக்கரை பூங்காற்றே... நீ போற வழி தென்கிழக்கோ' பாடலை சிதம்பரநாதன் எழுதியிருந்தார்.
இதே படத்தில் வைரமுத்துவின் வரிகளில் 'தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ...' பாடலும் முத்துலிங்கம் வரிகளில் 'பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்' பாடலும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
டெல்லியில் பூத்த இராஜதந்திர நட்பு: பாரத் மண்டபத்தில் ஜனாதிபதிக்கு விருந்து!
டெல்லியில் பூத்த இராஜதந்திர நட்பு: பாரத் மண்டபத்தில் ஜனாதிபதிக்கு விருந்து!
டெல்லியில் பூத்த இராஜதந்திர நட்பு: பாரத் மண்டபத்தில் ஜனாதிபதிக்கு விருந்து!
Feb 19, 2026 - 07:24 AM
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (18) இரவு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
"AI Impact Summit 2026" உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் வழங்கப்பட்ட விசேட இரவு விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
"AI Impact Summit 2026" உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (19) அந்த மாநாட்டில் உரையாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு இணங்க, இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கடந்த 17 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
செயற்கை நுண்ணறிவை (AI) மனித குலத்தின் நன்மைக்காகப் பொறுப்புடன் பயன்படுத்தும் நோக்கில், அரச தலைவர்கள் மற்றும் உலகின் தொழில்நுட்பத் துறையின் பிரதானிகளின் பங்கேற்புடன் புதுடெல்லியில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது.
ஐந்து நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் 45 இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.