Aggregator
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
ராமநாதபுரத்தில் மின்னல் தாக்கி சகோதரிகளான சிறுமிகள் பலி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
சிறு பொறிகள் - நிலாந்தன்
சிறு பொறிகள் - நிலாந்தன்
சிறு பொறிகள் - நிலாந்தன்
லட்சக்கணக்கானவர்கள் திரளும் நல்லூர்த் திருவிழாவின் ஒரு பகுதியாக “ஊருணி பாரம்பரிய ஆற்றுகைக் களம்” என்ற தலைப்பின் கீழ் ஒரு சிறு கலந்துரையாடல் களம் திறக்கப்பட்டது. ஊருணி என்பது திருக்குறளில் உள்ள ஒரு வார்த்தை. ஊரில் நீரை நுகரும் இடம் அவ்வாறு என்றழைக்கப்பட்டது. பத்தாம் திருவிழாவில் இருந்து தொடங்கி நல்லூர் வளாகத்துக்குள் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள புடவைக் கைத்தொழில் திணைக்கள வளாகத்தில் இக்கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. அங்கு நிலத்தடி நீரைப் பாதுகாப்பது தொடர்பான கண்காட்சியும் இடம்பெற்றது. பங்களிப்புடன் கூடிய ஆராய்ச்சிக்கூடாக வடக்கின் நீரைப் பாதுகாப்புக்கான அமைப்பும், வடக்கின் இளம் நீர் வாண்மையாளர்களும் இணைந்து முன்னெடுத்த மேற்படி கலந்துரையாடல்களில் வடக்கின் நிலத்தடி நீர் சார்ந்த விழிப்பை ஏற்படுத்தும் நோக்கிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. வடக்கின் இளம் நீர் வாண்மையாளர் அமைப்பு என்பது கடந்த ஐந்து வருடங்களாக இயங்கி வருகின்றது. பேராசிரியர் சிறீஸ்கந்தராஜாவின் தலைமையின் கீழ் இந்த அமைப்பு செயற்படுகின்றது.
நல்லூர்த் திருவிழா வளாகத்தில் இடம்பெறும் இச்சந்திப்புகள் மிகச் சிறியவை. திருவிழாவுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களோடு ஒப்பிடுகையில் இந்த சந்திப்புகளில் கலந்துகொள்பவர்கள் மிகச்சிறிய எண்ணிக்கைதான். ஆனால் அவர்கள் விவாதிக்கும் விடயங்கள் யாழ்ப்பாணத்தின் உயிர் நிலைகளோடு சம்பந்தப்பட்டவை. அவை ஜனரஞ்சகமானவையோ அல்லது பெருந்திரளைக் கவர்பவையோ அல்ல. ஆனால் முழுச்சமூகத்தினதும் உயர்நிலையான அம்சங்கள் தொடர்பான உரையாடல்கள். அவை சிறியவை. ஆனால் தொடர்ச்சியானவை. தொடர்ச்சியாக இருப்பதுதான் அவற்றின் பலம்.
மென்மையான நீர் ஒரு பாறையின் மீது தொடர்ச்சியாக ஓடும்போது அந்தப் பாறையில் ஒரு தடத்தை உருவாக்குகின்றது. பாறையோடு ஒப்பிடுகையில் நீர்த் தாரை மென்மையானது. ஆனால் அதன் பலம் தொடர்ச்சியாக ஓடுவதுதான். தொடர்ச்சிதான் அது மிக வலிமையான பாறையில் ஒரு தடத்தை உருவாக்க காரணம். அப்படித்தான் சிறிய,ஜனரஞ்சகமற்ற,பரபரப்பை,பிரபல்யத்தைத் தேடாத சிறிய முயற்சிகள் ஒரு சமூகத்தின் உயிர் நிலையான அம்சங்களில் தாக்கத்தைச் செலுத்துகின்றன.
இதுபோன்று சிறுசிறு சந்திப்புகள், ஆனால் தொடர்ச்சியானவை எல்லாச் சமூகங்களிலும் இடம்பெறுகின்றன. பண்பாட்டுச் செழிப்புமிக்க எல்லாச்சமுகங்களிலும் இதுபோன்ற சிறிய ஆனால் சீரியஸான உரையாடல் களங்கள் இருக்கும். இக்கட்டுரையானது யாழ்ப்பாணத்து அனுபவத்தைத்தான் இங்கு பகிர்கிறது.
யாழ்ப்பாணத்தில் மேற்கண்ட இளம் நீர் வாண்மையாளர்களைப் போல இலக்கியவாதிகள் ,துறைசார் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆங்காங்கே சிறிய அளவில் கூடி தமது துறைசார் விடயங்களை உரையாடும் பல்வேறு சந்திப்பிடங்கள் உண்டு.
உதாரணமாக, அண்மையில் நடந்த யாழ்ப்பாணத்தின் இரண்டாவது சர்வதேச புத்தகச் சந்தையின் பின்ணியைக் குறிப்பிடலாம். யாழ் வர்த்தக தொழிற்துறை மன்றத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட இப்புத்தகத் திருவிழாவை முன்னின்று ஒழுங்கமைத்தவர் வசீகரன். ”எங்கட புத்தகங்கள்” என்ற பெயரில் ஒரு இடையூடாட்டக் களத்தை அவர் வைத்திருக்கிறார். யாழ்ப்பாணம் கந்தர்மடம்,அம்மன் வீதியில் ஒரு சிறிய வீட்டில் எங்கட புத்தகம் இயங்குகிறது. உள்ளூர் வெளியீட்டாளர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த அமைப்பானது புத்தக வெளியீடுகளையும் சிறிய சிறிய இலக்கிய கலந்துரையாடல்களையும் ஒழுங்கமைத்து வருகிறது. யாழ்ப்பாணத் திரைப்படக் கழகம் இப்பொழுது அதன் திரைப்படங்களை இங்கேதான் திரையிட்டு வருகின்றது.
எங்கட புத்தகங்கள் அமைப்பின் சந்திப்புகள் அநேகமாக சிறியவை. ஆனால் தொடர்ச்சியானவை பெரும்பாலும் ஒரே முகங்கள்தான் அங்கே காணப்படுவதுண்டு.
துறைசார்ந்த விடயங்களில் சீரியசாக சிந்திப்பவர்கள் ஆழமாக உரையாடுபவர்கள் எப்பொழுதும் சிறிய அளவினராகத்தான் இருப்பார்கள். சீரியஸானதற்கும் ஜனரஞ்சகமானதுக்கும் இடையிலான இடைவெளி தமிழில் மட்டுமல்ல உலகின் பல சமூகங்களிலும் ஆழமானது. குறிப்பாக காணொளிகளின் காலத்தில் சீரியஸுக்கும் ஜனரஞ்சகத்துக்கும் இடையிலான இடைவெளி என்பது பாரதூரமான விதங்களில் அகன்றுவிட்டது, ஆழமாகிவிட்டது.
ஆனாலும் சீரியஸான விடயங்களை உரையாடுபவர்கள் சிறிய தொகையினர் எல்லா சமூகங்களிலும் எப்பொழுதும் கூடிக் கதைத்துக் கொண்டே இருப்பார்கள்.எங்கட புத்தகங்களைப் போலவே மற்றொரு அமைப்பு யாழ்ப்பாண திரைப்படக் கழகம் ஆகும். இது தொடர்ச்சியாக இயங்கி வரும் ஒரமைப்பு. மூத்த இலக்கியச் செயற்பாட்டாளராகிய யேசுராசா இந்த அமைப்பை இயக்கி வருகிறார். அண்மையில் சிறிய அளவில் சர்வதேச திரைப்பட விழா ஒன்றையும் அவர் ஒழுங்குபடுத்தியிருந்தார். வணிக நோக்கிலான திரைப்படங்களுக்கும் அப்பால் சீரியஸான கலைப் பெறுமதி கூடிய திரைப்படங்களை யாழ் திரைப்படக் கழகம் தொடர்ச்சியாக திரையிட்டு வருகிறது. படத்துக்குப் பின் அங்கே கலந்துரையாடல்களும் நடக்கும்.
அதுபோல மற்றொரு அமைப்பு அது யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து சற்று விலகி அமைந்திருப்பது. “தேசிய கலை இலக்கியப் பேரவை”. இதற்கும் நீண்ட தொடர்ச்சி உண்டு. சிறிய எண்ணிக்கையானவர்கள் ஒரு வீட்டில் கூடி, அரசியல் சமூகச் செயற்பாட்டாளர்களை அழைத்துக் கலந்துரையாடுகிறார்கள்.
மற்றொரு அமைப்பு யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் பழம் ரோட்டில் அமைந்திருக்கிறது. கலாநிதி சிதம்பரநாதனால் நிர்வாகிக்கப்படும் “பண்பாட்டு மறுமலர்ச்சிக் கூடம்” இதுவும் ஜனரஞ்சகமான ஒரமைப்பு அல்ல. ஆனால் சிறிய மற்றும் தொடர்ச்சியான சந்திப்புகளை, கலந்துரையாடல்களை ஒழுங்குபடுத்தும் ஓரமைப்பு.
இதுபோன்று யாழ் நகரை அண்டிய கோவில் வீதியில் அமைந்திருக்கும் “சமகால கலை மற்றும் கட்டிடக்கலைவடிவமைப்புக்கான ஆவணக் காப்பகத்தைக் குறிப்பிடலாம். இது துறைசார்ந்த நிபுணர்களையும் தமது துறைகளில் பிரகாசிப்பவர்களையும் அழைத்து உரையாடும் ஒரு களம். இதை உள்ளூர் ஆளுமைகளும் கலந்து கொள்வார்கள் வெளிநாட்டவர்களும் வருவார்கள். அந்த அடிப்படையில் இந்த அமைப்பு உள்ளூர் பரிமாணத்தையும் அனைத்துலகப் பரிமாணத்தையும் கொண்டது.
Sri Lanka Archive of Contemporary Art, Architecture & Design
யாழ்ப்பாணம் நகரத்துக்கு வெளியே சற்று தொலைவில் சுழிபுரத்தில் ஓர் அமைப்பு உண்டு. “சத்தியமனை”. அரசியல் சமூகச் செயற்பாட்டாளர் ஆகிய சுப்பிரமணியத்தின் நினைவாக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு நினைவு நூலகம். இங்கேயும் சிறிய ஆனால் தொடர்ச்சியான சந்திப்புகள் அடிக்கடி இடம்பெறும். நகர்ப்புறங்களில் இருந்து விலகி ஒரு கிராமப்புறத்தில் சுழிபுரத்தில் அமைந்திருப்பது அதற்குள்ள மற்றொரு சிறப்பு.
இதுபோலவே அரங்கச் செயற்பாட்டாளர் தேவானந்தாவின் “செயற் திறன் அரங்கு” என்ற அமைப்பும் தொடர்ச்சியாக இயங்கி வருகிறது. எங்கட புத்தகம் போல நம்மவர் முற்றம் என்று ஒரு அமைப்பும் செயற்படுகின்றது. அதுவும் கலை இலக்கிய அறிவியல் விவாதங்களை ஏற்பாடு செய்கின்றது.
அண்மை ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் பிரசுரித்து வரும் “எழுநா” என்ற அமைப்பு திருநெல்வேலியில் ராமநாதன் வீதியில் இயங்கி வருகின்றது. ஈழக் கற்கைகள் சார்ந்த ஆய்வு நிறுவனம் இது.
இவை சில உதாரணங்கள். தமிழ் பகுதிகளில் இயங்கும் எல்லா அமைப்புக்களையும் இக்கட்டுரை குறிப்பிடுகிறது என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. எனக்குத் தெரியாமலே பல்வேறு சந்திப்புகள் இடம்பெற முடியும். இப்பொழுது மட்டுமல்ல போர்க்காலங்களிலும் போர் கருக்கட்டிய காலங்களிலும் அதற்கு முன்னரும் பல தலைமுறைகளாக இதுபோன்ற சந்திப்புகள் இடம்பெற்று வந்திருக்கின்றன. பண்பாட்டுச் செழிப்புமிக்க ஒரு சமூகத்தில் இதுபோன்ற சந்திப்பிடங்களே சமூக நொதியங்கள்.
போர்க் காலத்தில் மார்க் மாஸ்டரின் வீடு ஒரு தொகுதி ஓவியர்களின் சந்திப்பிடமாக இருந்தது. அச்சிறிய வீட்டின் சிறிய முன் விறாந்தையில் சந்தித்த பலர் பின்னாளில் துறை சார்ந்து மேலுயர்ந்தார்கள்.
மற்றொரு வீடு சிரித்திரன் ஆசிரியர் சுந்தருடையது. “மில்க்வைற்” கனகராசா போன்றவர்கள் அங்கு வருவார்கள். சுந்தரைப் பார்ப்பதற்குத் தொடர்ச்சியாக பல துறைகளைச் சேர்ந்தவர்களும் வருவார்கள்.
நாடகத்துறையில் குழந்தை .ம.சண்முகலிங்கம், சிதம்பரநாதன் போன்றவர்களின் வீடுகளும் அவ்வாறான சந்திப்பிடங்களாக இருந்தன. சண்முகலிங்கம் மாஸ்ரரின் கல்வியியல் அரங்குகளில் நடித்த, சண்முகலிங்கத்தின் வீட்டில் அடிக்கடி சந்தித்த பலர் பின்னாளில் துறை சார்ந்து மேலெழுந்தார்கள்.
ஊர்காவல்துறை கரம்பனைச்சேர்ந்தவர் சபாரட்ணம் மாஸ்ரர். இடப்பெயர்வின் பின் யாழ்ப்பாணத்தில் அவர் வசித்த பொழுது அவரை அடிக்கடி சந்தித்த ஒரு இளைய தலைமுறை இருந்தது.
மற்றது குகமூர்த்தியின் வீடு அல்லது ஏ.ஜே.கனகரட்ணா இருந்த வீடு. குகமூர்த்தி ஜனவசியம் மிக்க ஆள். இடது பாரம்பரியத்தில் வந்தவர். அதேசமயம் தமிழ்த் தேசியவாதிகளோடும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் வேலை செய்தவர். போர்க்காலத்தில் கொழும்பில் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர். ஏஜேயைத் தேடி வெவ்வேறு அரசியல் நம்பிக்கைகளைக் கொண்டவர்கள் வருவார்கள். இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் வருவார்கள். இயக்கங்களில் இருந்து விலகியவர்களும் வருவார்கள். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதித் தலைவர் மாத்தையாகவும் வருவார். பின்னாளில் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பைச் செய்தவர்களில் ஒருவராகிய ராஜன் கூலும் வருவார். தமிழ்த் தேசிய அரசியலின் பல்வகைமையைப் பிரதிபலித்த ஒரு வீடு அது.
மற்றொரு வீடு நாவலர் வீதியில் அமைந்திருந்த ராஜசிங்கம் மாஸ்டர் வீடு. இயக்கங்கள் வளர்ச்சி அடையத் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இயக்கங்களுக்கு எதிரான விமர்சனங்கள் மேலெழுந்த காலகட்டம் வரையிலுமான கலந்துரையாடல் களமாக அந்த வீடு இருந்திருக்கிறது.
மற்றொன்று மு.திருநாவுக்கரசு இருந்த வீடு. சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள் அவருடைய வீட்டுக்குப் போவார்கள். இரவு பகலாக இருந்து கதைப்பார்கள். ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் அரசியல் உரையாடல்கள் அதிகம் நிகழ்ந்த வீடுகளில் அதுவும் ஒன்று.
அப்படித்தான் மற்றொரு பொது இடம், யாழ்.மறைக்கல்வி நிலையம். 2009க்குப் பின்னரான அதிகளவு அரசியல் சந்திப்புகள், கலந்துரையாடல்கள் நிகழ்ந்த இடங்களில் அது முக்கியமானது.
மேற்கண்டவை சில உதாரணங்கள். ஈழத் தமிழ்ச் சமூகத்தைச் செதுக்கிய, தீர்மானித்த பலரைச் செதுக்கிய,உருத் திரட்டிய களங்கள் அவை. ஒருவகையில் பின்னாளில் மேலெழுந்த பல போக்குகள் கருகட்டிய இடங்கள் அவை. எதிர்காலத்தை நொதிக்க வைத்த சமூக நொதிப்பிடங்கள் அவை.
போர்க்காலத்தில் பாதுகாப்பற்ற வீடுகளின்,சிறிய அல்லது பெரிய முன் விறாந்தைகளில்,ஒரு குவளை பால் இல்லாத வெறுந் தேனீரோடு உரையாடப்பட்ட பல விடியங்கள்தான் பின்னாளில் சமூகத்தின் உயிர்நிலையான விடயங்களைத் தீர்மானித்தன.
இந்து சமயத்தில் சத்சங்கம் என்று கூறுவார்கள்.ஒரே ஆன்மீக நம்பிக்கையைக் கொன்றவர்கள் ஓரிடத்தில் கூடி கலெக்ரிவ்வாகப் பிரார்த்திப்பார்கள், தியானம் செய்வார்கள்.அந்தக் கலெக்ரிவிற்றிக்கு-கூடுகி செயற்பாட்டுக்கு ஒரு சக்தி உண்டு.அது தனித்தனிச் சக்திகளை ஒன்றாகக் கூட்டித் திரட்டும். திரட்டப்பட்ட கூட்டுச்சக்தி மகத்தான ஆக்க சக்தியாக மாறும்.
இவ்வாறு சிறு சந்திப்பிடங்கள் அல்லது சமூக நொதிப்பிடங்கள் போன்றன பின்வரப் போகும் சமூக ஓட்டங்களைத் தீர்மானிக்கின்றன. பரபரப்பின்றி, பிரசித்தமின்றி,சிறியதாக, சீரியஸானதாக, ஆனால் தொடர்ச்சியானவைகளாக இருப்பவை.உண்மையும் அர்ப்பணிப்பும் தொடர்ச்சியும்தான் அவற்றுடைய பலம்.
அந்த சிறிய பொறிகள்தான் பிற்காலங்களில் பெரும் சுவாலையாக வளர்கின்றன.நோபல் பரிசை வென்ற மானுடவியலாளராகிய மாக்ரட் மீட் அம்மையார் கூறுவது போல “உலகை மாற்றுவதற்கான அர்ப்பணிப்புள்ள ஒரு சிறிய குழுவின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். உண்மையில், அதுதான் இதுவரை நடந்திருக்கும் ஒரே விடயம்.”
நல்லூர் ஆலயத்திற்கான மணல் தொடர்பான தீர்மானங்கள் வருத்தத்துக்குரியன – வடக்கு ஆளுநர் கவலை!
நல்லூர் ஆலயத்திற்கான மணல் தொடர்பான தீர்மானங்கள் வருத்தத்துக்குரியன – வடக்கு ஆளுநர் கவலை!
நல்லூர் ஆலயத்திற்கான மணல் தொடர்பான தீர்மானங்கள் வருத்தத்துக்குரியன – வடக்கு ஆளுநர் கவலை!
adminAugust 24, 2025

எந்தவொரு விடயம் அழிக்கப்படுகின்றதோ அல்லது கால ஓட்டத்தில் மறைந்து செல்கின்றதோ அதைத்தக்க வைப்பதற்கும் அடுத்த சந்ததிக்கு ஒப்படைப்பதற்காகவும் தான் தினங்கள், அமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன. அதைப்போலத்தான் நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் அமைப்பையும் நான் பார்க்கின்றேன். காலத்துக்கு தேவையான அமைப்பு. பொருத்தமான இடத்திலிருந்து பொருத்தமானவர்களால் தொடக்கப்பட்டு நடைபோடுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் அமைப்பின் பரிசளிப்பு நிகழ்வும் ஆண்டு விழாவும், நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (23.08.25) அமைப்பின் இணைத்தலைவரும் முன்னாள் பிரதம செயலருமான இ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பண்பாட்டு கலைக்கூடலின் மாணவர்களால் பண்ணிசை, கோலாட்டம் என்பன நடத்தப்பட்டன.
அத்துடன் யாழ்ப்பாணம், வலிகாமம் வலயப் பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
அத்துடன், முனைவர் திருநாவுக்கரசு கமலநாதனின் ‘பொழிலும் பொலிவும்’ நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. காலைக்கதிர் பத்திரிகைக்கு செல்வழி நயனம் விருதும் நிகழ்வில் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ஆளுநர் உரையாற்றுகையில்,
ஆன்மீகத்தில் ஈடுபாடு குறைந்து செல்வது மாத்திரமல்லாது ஆன்மீகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது கூட குறைந்துள்ளது. ஆன்மீகம் வாழ்வியலுக்குத் தேவை. இன்று நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடம் செய்துள்ள பணி பாராட்டுக்குரியது.
5 ஆண்டுகளாக அவர்கள் இதைச் செய்து வருகின்றார்கள். இளம் பிள்ளைகளை இதில் அதிகளவு ஈடுபடுத்தி ஊக்கப்படுத்தியிருக்கின்றார்கள்.
நல்லூர் ஆலயத்திற்கான மணல் தொடர்பான தீர்மானங்கள் வருத்தத்துக்குரியன. யாழ்ப்பாணத்தின் அடையாளமாக நல்லூர் கந்தசுவாமி கோயிலே உலகம் எங்கு அடையாளப்படுத்தப்படுகின்றது. நாங்கள் யாழ்ப்பாண மண்ணிலே பிறந்தோம் என்று பெருமை கொள்ளுவதற்கும் அந்த நல்லூரே காரணமாக இருக்கின்றது.
இன்று சைவத்துக்கும், தமிழுக்கும் பல தரப்புக்களாலும் உள்ளக, வெளியக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. அந்த அழுத்தங்களிலிருந்து சைவத்தையும், தமிழையும் பாதுகாத்துக் கொள்வதற்கு இவ்வாறான அமைப்புக்கள் காலத்தின் தேவையாக சேவையாற்றுகின்றன, என ஆளுநர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் சா.சுதர்சன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் இ.த.ஜெயசீலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நாங்கள் எங்கள் கலாசாரம், அடிப்படை விழுமியங்களை கைவிடக்கூடாது.
பிரதேச, மாவட்ட, மாகாண கலாசார விழாக்கள் பல கலைஞர்களுக்கான மேடை வாய்ப்புக்களை வழங்குகின்றன. இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுவதற்கு தொடர்ந்து ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதுடன் அதிகளவு கலைஞர்களை குறிப்பாக இளம் கலைஞர்களை மேடையேற்றவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வலி. மேற்கு பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடத்திய பண்பாட்டு பெருவிழா அராலி இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
அராலி வடக்கு முருகமூர்த்தி ஆலயத்திலிருந்து விருந்தினர்கள் கலாசார நடனங்களுடன் விழா நடைபெற்ற மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரால் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த கலைஞர்கள் 5 பேருக்கு காலைவாரிதி விருதும் வழங்கப்பட்டது.
அங்கு உரையாற்றிய ஆளுநர்,
சிறுவர்களாக நாங்கள் இருந்த காலத்தில் பல்வேறு கலை நிகழ்வுகள் பல்வேறு இடங்களில் நடைபெறும். இன்று அவ்வாறு நடைபெறுவதைக் காண்பது அரிதாக உள்ளது. நாங்கள் எங்கள் கலாசாரம், அடிப்படை விழுமியங்களை கைவிடக்கூடாது. அடுத்த தலைமுறைக்கு அதை நாம் எடுத்துச் செல்லவேண்டும். எங்களுக்குரிய தனித்துவமான அம்சங்களை ஊடுகடத்த வேண்டும்.
இந்தப் பண்பாட்டு விழா ஊர் மக்களின் பங்கேற்புடன் நடைபெறுகின்றது. அதிகளவு மக்கள் ஆதரவளித்திருக்கின்றார்கள். நாங்கள் கலாசார ஊர்த்திப் பவனியுடன் அழைத்து வருகின்றபோது ஊர்மக்கள் அபரிதமான ஆதரவு வழங்கியதை நேரில் காணக்கூடியதாக இருந்தது. அவ்வாறுதான் விழாக்கள் நடத்தப்படவேண்டும்.
கலை, விளையாட்டு இரண்டிலும் இளம் சந்ததியின் பங்கேற்பை ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் கவனங்கள் சிதறவிடாது பார்த்துக்கொள்ளவேண்டும். எங்களால் முடிந்தவரையில் இதை நாம் செய்துகொள்வோம் என ஆளுநர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், வலி. மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் ச.ஜயந்தன் சிறப்பு விருந்தினராகவும், யாழ். மாவட்டச் செயலக சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் வி.சுகுணாலினி, அராலி இந்துக் கல்லூரி அதிபர் ந.சிவானந்தராஜா மற்றும் சிற்பக் கலைஞர் தி.விஜயசிறி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இரசித்த.... புகைப்படங்கள்.
உலகத் தமிழர்களின் முதலாவது தமிழ் நாளேடு: உதயதாரகை | 1841
கருத்து படங்கள்
ரணில் ஓர் ஒத்திகையா? நிலாந்தன்.
ரணில் ஓர் ஒத்திகையா? நிலாந்தன்.
ரணில் ஓர் ஒத்திகையா? நிலாந்தன்.
2015ல் ஆட்சி மாற்றம் நிகழ்த்த காலகட்டத்தில் ஒரு தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் ஸ்கண்டிநேவிய நாடு ஒன்றில் இருந்து பிரான்ஸுக்கு வந்திருந்தார்.அங்கே முன்பு இலங்கைத்தீவின் சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட ஸ்கண்டிநேவிய ராஜதந்திரி ஒருவரைக் கண்டு கதைத்திருக்கிறார்.”ஆட்சி மாற்றம் நடந்து விட்டது இப்பொழுது நாமல் ராஜபக்சவை தூக்கி விட்டார்கள் பொறுத்திருந்து பாருங்கள் அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தூக்குப்படப் போகிறார்கள்” என்ற பொருள்பட அந்த ராஜதந்திரி இவருக்குச் சொன்னாராம்.
ஆனால் அந்த ராஜதந்திரி எதிர்பார்த்ததுபோல அல்லது மேற்கு நாடுகள் எதிர்பார்த்ததுபோல ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய எல்லாரையுமே தூக்கவில்லை. நாமலைக்கூட கனகாலம் சிறையில் வைத்திருக்கவில்லை. ராஜபக்சக்களை ரணில் பாதுகாத்தது இதுதான் முதல் தடவை அல்ல. அதுபோல ராஜபக்சக்களும் ரணிலைப் பாதுகாத்த சந்தர்ப்பங்கள் உண்டு. சிங்கள உயர் குழாமானது ஆட்சியைப் பிடிப்பதற்காக அரசியலில் பகைவர்போல நடந்து கொள்ளும். ஆனால் ஆபத்து என்று வரும் பொழுது ஒரு உயர் குழாத்தினர் இன்னொரு உயர் குழாத்தினரைப் பாதுகாத்து, ஒரே வர்க்கமாக ஒன்று திரண்டு விடுவார்கள்.நல்லாட்சி அரசாங்கத்தின் போது இதுதான் நடந்தது.
ஆனால் இப்பொழுது ரணில் கைது செய்யப்பட்டிருக்கிறார். சிங்கள உயர் குழாத்தைப் பிரதிபலிக்காத அனுரகுமார ஜனாதிபதியாக இருக்கும் ஒரு காலத்தில் இலங்கைத் தீவில் நவீன வரலாற்றில் ஒரு முன்னாள் ஜனாதிபதி முதன்முதலாகக் கைது செய்யப்பட்டு இருக்கிறார். “தம்புத்தேகமவில் இருத்து வந்த நாட்டுக்காட்டான் கொழும்பு செவின் ரோயல் மனிதனை சிறைக்கு அனுப்பித் தவறிழைத்ததாகவும் அதற்கான தக்க பதிலை வெகு சீக்கிரத்தில் பெறுவார் என்றும்’ கூறுகின்றார்கள்” என்று இஷார.எம்.ஜெயசேன எழுதியுள்ளார்.
ரணில் கைது செய்யப்பட்டது பெரும்பாலான எதிர்க்கட்சி பிரமுகர்கள் அவரைச் சென்று பார்த்தார்கள். அவருடைய கட்சியில் இருந்து உடைத்துக் கொண்டு வெளியேறிய சஜித்தும் போய்ப் பார்த்தார். தமிழ் சிங்கள அரசியல்வாதிகளும் அவரோடு நின்றார்கள். சிங்கள உயர் குழாம் தங்களில் ஒருவருக்கு ஆபத்து என்றதும் ஒன்று சேரக் காண்கிறோம். “ரணிலுக்கு ஆதரவு வழங்க நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்திருந்த நாமல், மைத்த்ரீ ரிஷாட், ஜீவன், ட்விட்டரில் ஆதரவு வழங்கிய சஜித், பாராளுமன்றத்தில் “little courtesy” கேட்ட ஹக்கீம், வெள்ளிக்கிழமை கைது செய்ததை “ill-advised” என்ற சுமந்திரன் உட்பட அனைவரும் காட்ட முயன்றது இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் ஒன்று என்பதைத்தான்.”என்று இஷார.எம்.ஜெயசேன மேலும் கூறுகிறார்.
அனுர,ரணிலைக் கைது செய்ததன்மூலம் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்திருக்கிறாரா அல்லது எதிர்க்கட்சிகளை உஷாரடைய வைத்திருக்கிறாரா ?
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இதுவரையிலும் 63 பேர்களை ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்திருக்கிறது.அந்த 63 பேர்களுக்குள்ளும் அரசியல்வாதிகள்.உயர் அதிகாரிகள்,படைத்துறையைச் சேர்ந்தவர்கள் போன்ற அனைவரும் அடங்குவர். இவ்வாறான கைது நடவடிக்கைகளின் மூலம் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான அரசியல்வாதிகளும் மேட்டுக்குடியினரும் படைப்பிரதானிகளும் ஒன்று திரளப் போகிறார்கள். அதாவது சிறீலங்காவை இதுவரை காலமும் ஆண்டு வந்த மேட்டுக்குடியினர் -பவர் எலீற்ஸ்- இனி ஒன்றுதிரளுவார்கள். இதனால் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான சவால்கள் மேலும் அதிகரிக்கும்.
அதேசமயம் தமிழ் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் இந்தக் கைது நடவடிக்கை ஐநாவிலும் உலகப்பொது மன்றங்களிலும் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்?
ரணில் கைது செய்யப்பட்டிருக்கும் நேரம் எது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.அடுத்த ஜெனிவா கூட்டத்தினருக்கு நாடு தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் ரணில் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கனவே ஒரு கடற்படைப் பிரதானியும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவை யாவும் இலங்கைத் தீவின் நீதி பாரபட்சமற்றது, நம்பகத்தன்மை மிக்கது என்ற ஒரு தோற்றத்தைக் கட்டி எழுப்புவதற்கு அரசாங்கத்திற்கு உதவக்கூடும். ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் உள்நாட்டு நீதியை வெளிநாட்டு உதவிகளின் மூலம் பலப்படுத்த வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கும் ஓர் அனைத்துலக பின்னணியில், இலங்கைத் தீவின் உள்நாட்டு நீதி பரிபாலனக் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை உயர்த்துவதற்கு இந்தக் கைது அனுராவுக்கு உதவும்.
கைது செய்யப்பட்டிருப்பவர் யார் என்று பார்த்தால், பெரும்பாலான மேற்கு நாடுகளின் செல்ல பிள்ளை. சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் மத்தியில் ஒரு லிபரலாகப் பார்க்கப்படுகிறவர். தமிழ் மக்கள் அவரை நரி என்று கூறலாம். அல்லது லிபரல் முகமூடி அணிந்த இனவாதி என்றும் கூறலாம்.ஆனால் மேற்கு நாடுகள் அவரை லிபரல் என்றுதான் கருதுகின்றன.மேற்கு நாடுகளுக்கு அதிகம் விருப்பமான ஒரு தலைவர் அவர்.நவீன ஸ்ரீலங்காவில் இதுவரை ஸ்ரீலங்காவை ஆண்ட சிங்களபௌத்த கட்சிகளைச் சேர்ந்த அநேகமானவர்கள் சிங்கள பௌத்த பாரம்பரிய உடைகளுடன்தான் காணப்படுவார்கள்.ஆனால் ரணில் விக்ரமசிங்க என்றைக்குமே அவ்வாறு வேட்டியும் நஷனலுமாக காணப்பட்டதில்லை. அவர் எப்பொழுதுமே மேற்கத்திய உடுப்புகளோடுதான் காணப்படுவார் . அந்த அளவுக்கு அவர் மேற்கத்தியப் பண்பாட்டின் வாரிசு.
அது மட்டுமல்ல, ஐநா மனித உரிமைகள் பேரவையில் முதன் முதலாக 2015 ஆம் ஆண்டு,செப்டம்பர் மாதம்,இலங்கை அரசாங்கம் ஐநாவின் தீர்மானம் ஒன்றுக்கு இணை அனுசரணை வழங்கியது.அது ரணில் ஆட்சியில் இருந்தபடியால்தான் நடந்தது.எனவே ஐநாவைப் பொறுத்தவரையிலும்கூட ரணில் விருப்பத்துக்குரிய ஒரு தலைவர்.இலங்கைத் தீவில் நிலைமாறு கால நீதிக்கான ஐநாவின் தீர்மானத்தை நிறைவேற்றிய பெற்றோரில் ரணிலும் ஒருவர். ஆனால் அவர், தான் பெற்ற பிள்ளைக்கு உண்மையாக இருக்கவில்லை.அதனால் தான் 2018 ஆம் ஆண்டு சுமந்திரன் கூறுவதுபோல அது ஒரு தோல்வியுற்ற பரிசோதனையாக முடிவடைந்தது.ஆனாலும் ஐநா போன்ற அனைத்துலக நிறுவனங்களைப் பொறுத்தவரை ரணில் கெட்டிக்காரர்;சந்திரசாலி;எல்லாப் பேரரசுகளிலும் சம தூரத்தில் வைக்கக் கூடியவர்.என்றாலும் செல்லப் பிள்ளை.
இப்படி மேற்கத்திய நாடுகளின் விருப்பத்துக்குரிய ஒரு தலைவராகக் காணப்படும் ஒருவரை ஒருவரை அனுர தூக்கியிருக்கிறார். இதன்மூலம் மேற்கு நாடுகளுக்கும் ஐநாவுக்கும் அவர் எதைச் சொல்ல முற்படுகிறார்?
இந்த இடத்தில் ராஜபக்சக்களைத் தூக்கி இருந்தால் என்ன நடந்திருக்கும்? உள்நாட்டில் அவர்களுடைய ஆதரவாளர்கள் கொதித்து எழுந்திருப்பார்கள். ஆனால் அணிலுக்காக அவருடைய ஆதரவாளர்கள் அந்த அளவுக்குக் கொதித்து எழவில்லை.மகிந்த குடும்பத்தவர்களைத் தூக்கினால் உள்நாட்டில் குழப்பம் ஏற்படலாம்.ஆனால் ரணிலைத் தூக்கினால் ஒப்பீட்டளவில் குறைந்த குழப்பமே ஏற்படும் என்று நன்கு கணித்து ரணில் தூக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு மேற்கத்திய ராஜதந்திரிகள் மத்தியிலும் ஐநா போன்ற உலகப் பொது நிறுவனங்கள் மத்தியிலும் மதிக்கப்படுகின்ற ஒரு தலைவரைத் தூக்கி அதன் மூலம் இலங்கைத் தீவின் உள்நாட்டு நீதிப் பொறிமுறையின் நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்கு அனுர அரசாங்கம் முயற்சிக்கின்றதா?
இதில் ஒரு வர்க்கப் பரிமாணம் உண்டு. அதேசமயம் இருவருமே “அரகலய”வின் விளைவுகள்தான். அரகலயவின் முதல் கனிகளைப் புசித்தவர் ரணில். அரகலயவின் விளைவாக ராஜபக்சக்கள் ஓடி ஒழிய வேண்டி வந்தபொழுது அவர்கள் ரணிலை ஒரு கவசமாக முன்னே நிறுத்தினார்கள்.ரணிலும் தனது வர்க்கத்தைப் பாதுகாத்து,அரகலயவை நசக்கினார்.அதேசமயம் அதன் விளைவாக ஜனாதிபதியாக வந்தார்.
அதன்பின் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.ஆனால் அரகலயவின் கனிகளை தேர்தல் மொழியில் நன்கு மொழி பெயர்த்த ஜேவிபி அரகலயவின் அடுத்த கட்டக் கனிகளை தனக்காக்கிக் கொண்டது. இப்பொழுது அரகலயவை நசுக்கிய ஒருவரை,தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை “எல் போர்ட் அரசாங்கம்” என்று இகழ்ந்த ஒருவரைத் தூக்கியதன் மூலம் ஜேவிபி தன்னுடைய கணக்கு ஒன்றைத் தீர்த்திருக்கிறது.
சிங்கள மக்களைப் பொறுத்தவரை இது மாற்றம்தான். சந்தேகமே இல்லை. அனுர இந்த விடயத்தில் ரிஸ்க் எடுக்கிறார் என்பது உண்மை. இதன் விளைவாக ஒன்று திரளப் போகும் சிங்கள பவர் எலீட்ஸ்-சக்தி மிக்க உயர் குழாம் அனுர வைச் சூழ்ந்து நின்று தாக்கும். அதைத் தேசிய மக்கள் சக்தி எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம்.சிலவேளை தொடர்ச்சியாக இதுபோன்ற கைது நடவடிக்கைகளின்மூலம் அனுர தன்னைப் பலப்படுத்திக் கொள்ளவும் கூடும். அல்லது கவிழவும் கூடும்.








