2 months 1 week ago
https://www.vikatan.com/government-and-politics/governance/special-story-about-tiruppuvanam-ajithkumar-lockup-death31 கொடூரங்கள்! - முதல்வர் கையில்தான் இருக்கிறதா காவல்துறை! எஸ்.மகேஷ்ந.பொன்குமரகுருபரன் 7 Min Read “கடந்த நான்கு ஆண்டுகளில், 31 காவல் மரணங்கள் நடந்திருக்கின்றன. 2021-ம் ஆண்டில் 4 பேரும், 2022-ம் ஆண்டில் 11 பேரும், 2023-ல் ஒருவரும், 2024-ல் 10 பேரும், 2025-ம் ஆண்டில் இதுவரை 5 பேர் என மொத்தம் 31 பேர் காவல் நிலையங்களிலும் சிறைகளிலும் உயிரிழந்திருக்கிறார்கள். Published:Today at 1 AMUpdated:Today at 1 AM ஸ்டாலின் Join Our Channel 67Comments Share 31 கொடூரங்கள்! - முதல்வர் கையில்தான் இருக்கிறதா காவல்துறை! Listen to Vikatan stories on our AI-assisted audio player “உடலில் ஒரு இடம்கூட விடாமல் அடித்திருக்கின்றனர். வாயில் மிளகாய்ப்பொடி தூவியிருக்கின்றனர். வெறித்தனமாகத் தாக்கியுள்ளனர். ஒருவரைக் கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள்கூட இந்த அளவுக்குக் கொடூரமாகத் தாக்கியிருக்க மாட்டார்கள். காயங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. மாநில அரசே, தன் குடிமகனைக் கொலைசெய்திருக்கிறது...” - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சமீபத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கில், ஆதங்கத்தோடு சொன்ன வார்த்தைகள்தான் இவை! போலீஸ் அத்துமீறல்களால், வன்முறைகளால் மரணங்கள் ஏற்படுவது இது முதன்முறையல்ல. அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடிவரும் எதிர்க்கட்சிகள், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றன. ‘மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களிலோ, 31 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. ‘யாருக்கும் கட்டுப்படாத காவலர்கள், ஒழுங்கீனம் பெருகிப்போன காவல்துறைக் கட்டமைப்பு, அடியாட்களாக மாறிப்போன தனிப்படை, அவர்களைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாத உயரதிகாரிகள்’ எனக் காவல்துறை மீது தொடர்ந்து பொதுமக்களால், மனித உரிமை அமைப்புகளால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வளவு நடந்தும், காவல்துறையில் எந்த மாற்றமும் நிகழாதிருப்பதால், ‘தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா..?’ என்கிற சந்தேகக் கேள்வியை எழுப்புகிறார்கள் எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும், மனித உரிமை ஆர்வலர்களும். அஜித்குமாரின் மரணத்தில் என்ன நடந்தது... காவல் மரணங்கள் ஏன் தொடர்ந்து நிகழ்கின்றன... காவல்துறையைக் கட்டுப்படுத்த ஏன் தவறுகிறார் முதல்வர்..? இந்தக் கேள்விகளுக்கு விடைதேடிக் களமிறங்கினோம். அஜித்குமார் “நான் திருடவே இல்லை சார்..!” சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்திலுள்ள பத்ரகாளியம்மன் கோயிலில், தற்காலிகக் காவல் ஊழியராகப் பணிபுரிந்துவந்தவர் அஜித்குமார். கடந்த ஜூன் 27-ம் தேதி, கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நிகிதா என்ற பெண், காரில் வைத்திருந்த தன் அம்மா சிவகாமியின் ஒன்பதரை பவுன் நகைகளையும் 2,600 ரூபாய் பணத்தையும் காணவில்லை’ என்றும், காரின் சாவியை அஜித்குமாரிடம்தான் கொடுத்ததாகவும்’ திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்தச் சமயத்தில் நகையைப் பறிகொடுத்ததற்கு வெறும் சி.எஸ்.ஆர் மட்டுமே போடப்பட்டிருந்தது. எஃப்.ஐ.ஆர் போடப்படவில்லை. அடுத்த ஒரு சில மணி நேரத்தில் நடந்ததுதான், ஒரு பெரும் கொடூரத்துக்கே தொடக்கப்புள்ளியாக இருந்திருக்கிறது. மடப்புரம் சுற்றுவட்டாரப் பொதுமக்களும், மனசாட்சியுள்ள காவலர்கள் சிலரும் அன்றைய தினம் நடந்த நிகழ்வுகளைக் கண்ணீருடன் பகிர்ந்துகொண்டார்கள். “தான் எதிர்பார்த்ததுபோல தன் புகார்மீது திருப்புவனம் காவல்துறையினர் ‘அதிரடியாக’ எதுவும் செய்யவில்லை என்றதும், யாரோ ஒரு சீனியர் அதிகாரிக்கு போனில் தகவல் தெரிவித்திருக்கிறார் நிகிதா. அந்த சீனியர் அதிகாரி கொடுத்த உத்தரவில் வியர்த்துப்போன மானாமதுரை டி.எஸ்.பி-யாக இருந்த சண்முகசுந்தரம், உடனடியாகத் தன்னுடைய தனிப்படை போலீஸாரை விசாரணைக்கு அனுப்பியிருக்கிறார். தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் பிரதாப் விடுப்பு என்பதால், ஏட்டு கண்ணன் தலைமையில் காவலர்கள் பிரபு, ராஜா, சங்கர மணிகண்டன், ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய ஆறு பேரும் ஜூன் 27-ம் தேதி, இரவு 8:30 மணிக்கே அஜித்குமாரிடம் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். விசாரணை என்றால், வாயால் அல்ல. ஒரு தோப்புக்கு அஜித்குமாரை அழைத்துச் சென்ற தனிப்படை, அவரை அடித்து உதைத்திருக்கிறது. திருடிய நகையை ஒப்படைக்கச் சொல்லி கொடுமைப்படுத்தியிருக்கிறது. ‘நான் திருடவே இல்லை சார்...’ என அஜித்குமார் எவ்வளவோ கதறியும் விடாத காவலர்கள், அன்றைய தினம் அவரோடு தொடர்பிலிருந்த தினகரன், அருண், லோகேஸ்வரன் எனப் பலரையும் தூக்கிக்கொண்டு வந்து கண்டபடி அடித்திருக்கிறார்கள். அஜித்குமாரின் வீட்டை எந்தவித வாரன்ட்டும் இல்லாமல் சோதனை செய்தவர்கள், அவருடைய தம்பி நவீன்குமாரையும் அழைத்துவந்து அடித்திருக்கிறார்கள். ஒரு விடுதிக்குப் பின்புறம், பேருந்து டெப்போவுக்கு அருகில், ஆற்றோரமிருக்கும் ஒத்தையடிப் பாதையில் எனப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அடித்திருக்கிறது தனிப்படை. அதற்குள் விடிந்துவிட்டது. அஜித்குமார் மீது தாக்குதல் அடித்தே கொல்லப்பட்ட அஜித்குமார்... தாண்டவமாடிய ‘சைக்கோ’ தனிப்படை! பல மணி நேரம் அடித்தும், யாருக்குமே நகை பற்றிய தகவல் தெரியவில்லை என்றதும், காவலர்கள் ‘சைக்கோ’போல மாறத் தொடங்கியிருக்கிறார்கள். மற்றவர்களை அனுப்பிவிட்டு, அஜித்குமாரிடம் மட்டும் தொடர்ந்து விசாரித்திருக்கின்றனர். ஒருகட்டத்தில் காவலர்களின் அடியைத் தாங்கிக்கொள்ள முடியாத அஜித்குமார், ‘மடப்புரம் காளி கோயிலுக்குப் பின்புறம் இருக்குற மாட்டுக் கொட்டகையில நகை இருக்கு சார்...’ என்றிருக்கிறார். கோயிலுக்கு அருகில் சென்றுவிட்டால், ஊர் மக்கள் எப்படியும் தன்னைக் காப்பாற்றிவிடுவார்கள் என நம்பி அப்படிச் சொல்லியிருக்கிறார். ஆனால், அங்கு வந்து தேடியவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றதும் ஆத்திரமாகி, பி.வி.சி பைப்பை எடுத்து அஜித்குமாரைச் சகட்டுமேனிக்குத் தாக்கியிருக்கிறார்கள். அஜித்குமார் அழுது புரண்டும் ‘சைக்கோ’ காவலர்கள் அவரை விடவில்லை. அஜித்குமாரின் அலறல் சத்தம், சுற்றியிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் பலரையும் குலைநடுங்கச் செய்திருக்கிறது. எட்டிப்பார்க்கப் போனவர்களையும் மிரட்டி விரட்டியிருக்கிறது தனிப்படை. தண்ணீர் கேட்ட அஜித்குமாருக்கு, மிளகாய்ப்பொடியை வாயில் போட்டு தண்ணீரை ஊற்றியிருக்கிறார்கள். தொடர்ந்து தனிப்படை காட்டிய மிருகத்தனத்தால், மாலை 6 மணிக்கு மேல் நிலைகுலைந்துபோன அஜித்குமார், மாட்டுக் கொட்டகையிலேயே சரிந்து விழுந்திருக்கிறார். சிறுநீருடன் ரத்தமும் மலமும் வெளியேறி யிருக்கின்றன. அப்போதுதான் அடிப்பதை நிறுத்தியிருக்கிறார்கள். திடீரென நிசப்தமானவுடன், ஓடிப்போன பொதுமக்கள் அஜித்குமாரை ஆட்டோவில் தூக்கிப்போட்டு கிளினிக்குக்குக் கொண்டு செல்ல, உடன் தனிப்படையும் சென்றிருக்கிறது. ஆனால், ஆட்டோவிலேயே அஜித்குமாரின் உயிர் பிரிந்துவிட்டது. சிறிது நேரத்தில், போலீஸ் தாக்குதலில் அஜித்குமார் இறந்துவிட்ட தகவல் கசிய, மடப்புரம் வியாபாரிகளும் பொதுமக்களும் கொதித்துப் போய்விட்டார்கள். உடனே, கோயிலைச் சுற்றி யிருந்த அத்தனை கடைகளும் அடைக்கப்பட்டன. திருப்புவனம் காவல் நிலையம் முன்பாக பொது மக்கள் கூடிவிட்டனர். அப்போது, சிவகங்கை அரசு மருத்துவமனையில் அஜித்குமாரின் உடலை வைத்திருந்தால் பிரச்னை பெரிதாகும் எனக் கருதி, மதுரை இராசாசி அரசு மருத்து வமனைக்கு உடலைக் கொண்டுபோய்விட்டது தனிப்படை. ஸ்டாலின் சென்னையிலிருந்து வந்த உத்தரவு ஆளாய் பறந்த அரசு இயந்திரம்! போலீஸ் அராஜகத்தில் ஓர் உயிர் பலியானது எவ்வளவு கொடூரமானதோ, அதைவிடக் கொடூரமானது இந்த விவகாரத்தை மூடி மறைக்க ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தி.மு.க-வும் செய்த அடாவடிகள். 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றே அஜித்குமாரின் உடலைப் பிரேத பரிசோதனை செய்து எரித்துவிட, படாத பாடுபட்டது காவல்துறை. ‘விடிந்தால் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் முறையிடப்படும். பல கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டி வரும். அதற்குள்ளாக உடலை எரித்துவிடுங்கள்...’ என்று சென்னையிலிருந்து பறந்துவந்த உத்தரவை நிறைவேற்ற, ஆளாய் பறந்தது அரசு இயந்திரம். அஜித்குமாரின் குடும்பத்தினரிடம், தி.மு.க-வின் சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறனும், அவரின் அடிப்பொடிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களோடு சேர்ந்து டி.எஸ்.பி சண்முகசுந்தரமும் கடுமையாக அழுத்தம் கொடுத்திருக்கிறார். அந்தக் குடும்பம் கடுமையாக மிரட்டப்பட்டிருக்கிறது. அதற்குள்ளாக, எதிர்க்கட்சிகள் அனைத்தும் அஜித்குமாரின் காவல் கொலையைக் கண்டித்துவிட்டன. விவகாரமும் பெரிதாகிக்கொண்டே போனது. அஜித்குமாரின் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள், ரொம்பவும் ஜாக்கிரதையாக உடலிலிருந்த 44 காயங்களையும் ஆவணப்படுத்தி விட்டனர். இரவு 10 மணிக்கெல்லாம் உடலை திருப்புவனத்துக்குக் கொண்டுவந்து, கையோடு இருந்து உடல் எரிந்த பிறகுதான் கிளம்பியது போலீஸ்” என்று நடந்த சம்பவங்களை விரிவாகச் சொன்னார்கள். பிரஷர் கொடுத்த சீனியர் அதிகாரி யார்? இந்தக் காவல் கொலை குறித்த செய்திகள் அனைத்தும் இப்போது வெட்டவெளிக்கு வந்துவிட்டன. இதில், காவல்துறையின் அலட்சியம், அதிகாரம், அத்துமீறல், திமிர், வன்முறை குறித்து ஏகப்பட்ட கேள்விகள் எழுகின்றன. ‘போலீஸ் தாக்குதலில் மகன் கொல்லப்பட்டதாக’ அஜித்குமாரின் தாயார் மாலதி அளித்த புகாரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாத காவல்துறை, கொலை செய்த தனிப்படைக்குத் தலைமை தாங்கிய காவலர் கண்ணன் அளித்த புகாரை மட்டும் பதிவுசெய்தது ஏன்... விசாரணையின்போது தப்பியோடப் பார்த்தார். தவறி விழுந்தவருக்கு வலிப்பு வந்துவிட்டது; அதில் இறந்துவிட்டார்’ எனக் கூசாமல் எப்படிப் பொய் சொன்னது போலீஸ்... நிகிதாவின் புகார் உண்மையானதா என்பதை விசாரிக்காமல், அவர் புகாரில் எஃப்.ஐ.ஆரும் போடாமல், அவசர அவசரமாகத் தனிப்படை விசாரிக்கச் சென்றது ஏன்... அவர்களுக்கு பிரஷர் கொடுத்த சீனியர் அதிகாரி யார்... அஜித்குமார் மீது குற்றப் பின்னணியோ, ஆதாரமோ இல்லாத நிலையில், இவ்வளவு கொடூரமாக அவரைத் தாக்கும் துணிச்சல் போலீஸுக்கு எப்படி வந்தது... இன்னும் கேள்விகள் வரிசைகட்டுகின்றன. ஆனால், யாரிடமும் பதில்தான் இல்லை. “அரசு, தன் குடிமகனைக் கொலை செய்திருக்கிறது!” அஜித்குமாரின் மரணம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு, கடந்த ஜூலை 1-ம் தேதி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியா கிளீட் ஆகியோரின் அமர்வில், அஜித்குமாருக்கு நடந்த போலீஸ் சித்ரவதைகள் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்படவும், கொதித்தெழுந்துவிட்டனர் நீதிபதிகள். குறிப்பாக, தமிழக அரசையும் காவல்துறையையும் விளாசியெடுத்துவிட்டார் நீதிபதி சுப்பிரமணியம். “தனிப்படை போலீஸாருக்கு ஆர்டர் போட்டது யார்..?” என்ற கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்ட நீதிபதி சுப்பிரமணியம், அரசு, தன் குடிமகனையே கொலை செய்திருக்கிறது” எனக் கொதித்தார். பதற்றமான அரசுத் தரப்பு, காவலர்கள் சஸ்பெண்ட் விவரங்களைக் குறிப்பிட்டதோடு, “சி.பி.ஐ விசாரணைக்கும் நாங்கள் தயார்” என்றது. ஆனாலும் சாந்தமடையாத நீதிபதி, “இதைச் சாதாரண கொலை வழக்குப்போல விசாரிக்க முடியாது. மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷிடம் வழக்கின் விசாரணையை ஒப்படைக்கிறோம். அஜித்குமார் காவல் மரணம் குறித்து அவர் உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும். ஜூலை 8-ல் அவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, தன்னுடைய விசாரணையைத் தொடங்கியிருக்கிறார் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ். இதற்கிடையே, அஜித்குமார் காவல் மரண வழக்கை, சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றியிருக்கிறது தமிழக அரசு. 31 கொடூரங்கள்... எண்ணிக்கையற்ற வன்முறைகள்! அஜித்குமாரின் காவல் மரணம் குறித்து, ‘மக்கள் கண்காணிப்பக’த்தின் இயக்குநர் ஹென்றி திபேனிடம் பேசினோம். “கடந்த நான்கு ஆண்டுகளில், 31 காவல் மரணங்கள் நடந்திருக்கின்றன. 2021-ம் ஆண்டில் 4 பேரும், 2022-ம் ஆண்டில் 11 பேரும், 2023-ல் ஒருவரும், 2024-ல் 10 பேரும், 2025-ம் ஆண்டில் இதுவரை 5 பேர் என மொத்தம் 31 பேர் காவல் நிலையங்களிலும் சிறைகளிலும் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், இந்த உயிரிழப்புகளை தமிழக காவல்துறையும் சிறைத்துறையும் ஒப்புக்கொள்வதில்லை. நாங்கள் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் விசாரித்துத்தான் இந்தப் புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறோம். ‘31 மரணங்கள்’ என்று சொல்வதைவிட, அவற்றை ‘31 கொடூரங்கள்’ என்றுதான் சொல்ல வேண்டும். காவல் மரணங்களின் எண்ணிக்கை இவ்வளவு என்றால், காவல்துறையால் கை கால்கள் உடைக்கப்பட்டவர்கள்...கண்கள், பற்களை இழந்தவர்கள்... உடல்நலம், மனநலம் குன்றியவர்களின் பட்டியலை எடுக்க முற்பட்டால், அதைக் கணக்கிட பல ஆண்டுகள் ஆகும். இந்திய சட்டப்படி, ‘டார்ச்சர்’ என்கிற செயலுக்குத் தண்டனை வழங்க, சட்டப் பிரிவுகள் இல்லை. அதனால்தான், காவல்துறையினரின் டார்ச்சரால் உயிரிழப்புகள் நடந்தால், அவை `கொலை’ என்கிற சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகின்றன. ‘லாக்கப் டெத்’ தொடர்பாகப் பதிவுசெய்யப்படும் வழக்குகளின் விசாரணை இழுத்தடிக்கப் படுகின்றன. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கை விசாரித்த நீதிபதிகளில் மூன்று பேர் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இதுவரை 252 நாள்கள் மட்டுமே விசாரணை நடந்திருக்கிறது. இவ்வாறு விசாரணை இழுத்தடிக்கப்படுவதால்தான், நீதி கிடைக்க, காலதாமதம் ஆகிறது. அஜித்குமாரின் மரணத்தில் அதிக அளவு அக்கறை காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல் நிலைய சித்ரவதைகளைத் தடுப்பது தொடர்பாகப் புதிய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும், மாநில உரிமை ஆணையத்துக்கும் வரும் வழக்குகளின் விசாரணையையும் அரசு துரிதப்படுத்த வேண்டும்” என்றார். ஸ்டாலின் கிடப்பில் 14,000 வழக்குகள்... சிக்காத உயரதிகாரிகள்! ‘காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்க’த்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதத்திடம் பேசினோம். “ஏப்ரல் 18, 2022-ல், சென்னை தலைமைச் செயலகக் காவல் நிலையத்தில் விக்னேஷ் என்பவர் ‘லாக்கப் டெத்’தில் உயிரிழந்தார். அந்தக் காவல் மரணத்தைத் தவறான தகவலுடன் சட்டமன்றத்தில் பதிவுசெய்தார் முதல்வர் ஸ்டாலின். அடுத்த நாளே, மாற்றிப் பேசினார். அப்போதே, தனக்குத் தவறான தகவலை அளித்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுத்திருந்தால், இப்படியான கொடூரங்கள் தொடர்ந்திருக்காது. ஏப்ரல் 2024-ல் மட்டுமே நான்கு மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மனித உரிமைகள் குறித்தான விழிப்புணர்வுப் பயிற்சிகள் காவலர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. `கஸ்டடி டெத்’களுக்குக் காரணமாக இருக்கும் உயரதிகாரிகள் எந்தச் சம்பவத்திலும் சிக்குவதில்லை. அப்படியே சிக்கினாலும் அவர்கள் காப்பாற்றப்பட்டுவிடுகின்றனர். உதாரணமாக, விசாரணைக்கு வந்தவர்களின் பற்களைப் பிடுங்கிய குற்றச்சாட்டில் ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர்சீங் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. ஆனாலும், அவருக்குப் பணி ஒதுக்கப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரத்தில் ம.தி.மு.க நிர்வாகி வளையாபதி தொடர்புடைய வழக்கில், மாநில மனித உரிமை ஆணையமே ஏ.எஸ்.பி உதயகுமாருக்கு எதிராக உத்தரவிட்டது. அதன் பின்னரும், கொங்கு மண்டலத்தில் அவருக்குப் பணி ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில், மாநில மனித உரிமை ஆணையத்தில் 14,000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளன. ‘கஸ்டடி மரணங்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை இருக்கும்’ என்ற பயம் இருந்தால் மட்டுமே, காவலர்களுக்கு அச்சம் வரும். இது போன்ற குற்றங்களும் நடக்காது” என்றார். தி.மு.க ஆட்சியில் நடந்த காவல் சித்ரவதைகள்..! கடந்த நான்கு ஆண்டுக்கால தி.மு.க ஆட்சியில், 24 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகச் சொல்கின்றன எதிர்க்கட்சிகள். ‘31 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன’ என அடித்துச் சொல்கிறார் வழக்கறிஞர் ஹென்றி திபேன். ஆனால், காவல்துறை தரப்பிலிருந்து முதல்வருக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில், ‘2021-ல் இரண்டு மரணங்களும், 2022-ல் ஒரு மரணமும், 2023, 2024 ஆண்டுகளில் எந்த மரணமும் நிகழவில்லை. 2025-ல் இப்போதுதான் அஜித்குமார் மரணம் நிகழ்ந்திருக்கிறது’ எனக் கூறியிருக்கிறார்கள். முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்த்தால் பரவாயில்லை, பூசணிக்காய்த் தோட்டத்தையே சோற்றில் மறைக்கப் பார்க்கிறது காவல்துறை. திருட்டு வழக்கின் விசாரணைக்காக அழைத்துச் சென்று, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் இடது காலை இரும்பு ராடால் அடித்து உடைத்தது ஊட்டி ஊரகக் காவல்துறை. மணல் கடத்தலைத் தடுக்க முற்பட்ட இளைஞர் விஜய்யை, கண்மூடித்தனமாகத் தாக்கிய புகாரில் சிக்கினார் வேலூர் மாவட்டம், விருத்தம்பட்டு காவல் நிலைய எஸ்.ஐ ஆதர்ஷ். புதுக்கோட்டை பெரியார் நகரில், போதை ஊசி பயன்படுத்தியதாக விக்னேஷ்வரன் என்ற இளைஞரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸார், பிணமாகத்தான் அவரை திருப்பிக் கொடுத்தனர்.கோவை சரவணம்பட்டியில், ஜெயக்குமார் என்பவரை நான்கு நாள்கள் சட்டவிரோத கஸ்டடியில் வைத்து போலீஸார் தாக்கியதில், ஜெயக்குமாரின் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. புகாரளித்தும், தாக்கிய போலீஸார்மீது எந்த நடவடிக்கையும் இல்லை. திருப்பூர் மாவட்டம், சேமலைக்கவுண்டம் பாளையத்தில், ஒரு கொலை வழக்கில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஹரிதாஸ் என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற அவிநாசி காவல் ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை, ஹரிதாஸை மூன்று நாள்கள் காவல் நிலையத்தில் வைத்துத் தாக்கினார். அதில் அவருக்கு உடல்நலம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இவையெல்லாம், கடந்த நான்கு ஆண்டு தி.மு.க ஆட்சியில் நடந்த கொடூரங்களின் மீச்சிறு துளிதான். பெரிய லிஸ்ட் நம்மிடமிருக்கிறது. ஹென்றி திபேன், ஆசீர்வாதம் முதல்வர் கையில்தான் இருக்கிறதா காவல்துறை? இந்தப் பிரச்னைகள் குறித்து நம்மிடம் பேசிய சீனியர் அதிகாரிகள் சிலர், “முதல்வருக்குச் சரியான தகவல்களை உயரதிகாரிகள் தெரியப்படுத்துவதில்லை. ‘சரியான தகவல்களைத் தராத அதிகாரிகளை முதல்வர் ஏன் முக்கியப் பொறுப்பில் வைத்திருக்கிறார்... முதல்வர் கையில்தான் காவல்துறை இருக்கிறதா..?’ என்கிற கேள்விகள் எழத்தான் செய்கின்றன. ஏனென்றால், துறையில் சில குறிப்பிட்ட அதிகாரிகள் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது. சிலருக்கு அளவற்ற அதிகாரம் தரப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட சமூகம், மாவட்ட அரசியல், கட்சிப் புள்ளிகளின் தொடர்புகள்; உறவுகள் எனக் காவல்துறைக்குள் முதல்வருக்குத் தெரியாத தனி ராஜாங்கமே நடக்கிறது. இதையெல்லாம் முதல்வர் கவனிப்பதே இல்லை. அஜித்குமாரின் மரணம் தந்த அதிர்வே அடங்காத நிலையில், பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் நடத்திய போராட்டத்தில், ‘மரியாதையா போயிடுங்க, இல்லைன்னா வேற மாதிரி ஆகிடும்’ என ஓப்பன் மைக்கில் மிரட்டுகிறார் விருதுநகர் மாவட்ட எஸ்.பி கண்ணன். ராஜேஸ் தாஸ் விவகாரத்தில், ஒரு பெண் எஸ்.பி-யை மிரட்டி சஸ்பெண்டான கண்ணன், தற்போது பொதுமக்களை மிரட்டுகிறார். இந்த அளவுக்கு, அவருக்கு அதிகாரமும் தைரியமும் அளித்தது யார்..? தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய சைலேஷ் குமாருக்கு, பதவி உயர்வு வழங்க தன்னிடம் கோப்பு வந்தபோதே, அதை வீசி எறிந்திருக்க வேண்டும் முதல்வர். அந்தக் கோப்பை தயாரித்தவர்கள் அனைவரையும் பந்தாடியிருக்க வேண்டும். அதைச் செய்யாததன் விளைவு, காவல்துறையின் ராஜ்ஜியமாக தி.மு.க அரசாங்கம் மாறிப்போய்விட்டது. இனியும் முதல்வர் சுதாரிக்கவில்லை என்றால், ஆட்சிக்கு அவப்பெயர் கூடிக்கொண்டே தான் போகும்” என்றனர். காவல்துறை அதிகாரிகள், தன் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டிருப்பதை இப்போதாவது முதல்வர் உணர்ந்தாரா எனத் தெரியவில்லை. அஜித்குமாரின் தம்பிக்குக் கொடுக்கப்பட்ட ஆவின் வேலையும், அவர் அம்மாவுக்கு அளித்த இலவச வீட்டுமனைப் பட்டாவும் ஆட்சியின் பெயரைக் காப்பாற்றிவிடும் என நம்பிக்கொண்டிருக்கிறார் முதல்வர். ஆனால் மக்கள், காவல்துறையின் அராஜகத்தால் வெகுண்டு போயிருக்கிறார்கள். ‘முதல்வர் கையில்தான் இருக்கிறதா காவல்துறை?’ எனக் கேட்கிறார்கள். அவர்களின் கோபமும், விமர்சனமும், வெறுப்பும் சரியான சமயத்தில்... இந்த ஆட்சிமீதும், முதல்வர் மீதும்தான் வெளிப்படும் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது!
2 months 1 week ago
சாத்தான்... நான் கொண்டு வந்த பொருட்கள்.... மிளகாய்த்தூள், அரிசி மா, ஓடியல்மா, புழுக்கொடியல், பினாட்டு, வடகம், மோர்மிளகாய், மாசிக் கருவாடு, பாரைக் கருவாடு, இறால் கருவாடு, கட்டா சம்பல், இறால் சம்பல், பயத்தம் பணியாரம், பருத்துறை வடை, மிக்சர், காராசேவ், மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ், பொரித்த கடலை, மில்க் ரொபி, கோகனட் ரொபி, கல்பணிஸ், எள்ளுருண்டை, பொரித்த கடலை, தொதல், மஸ்கற், குளுக்கோரச, தோடம்பழ இனிப்பு, பல்லி முட்டை இனிப்பு, இராசவள்ளிக் கிழங்கு, கரணை கிழங்கு, முருங்கக் காய், தாமரை கிழங்கு, கோகிலா தண்டு, லாவுளு பழம், ரம்புட்டான், மங்குஸ்தான், கருவேப்பிலை, திருநெல்வேலி சந்தையில் வாங்கிய சின்ன வெங்காயம் போன்றவையுடன் சில பருத்தி உடைகள் மட்டுமே. 😂