நலமோடு நாம் வாழ

குறட்டை விடுவதால் உங்கள் குடும்பத்துக்கு என்ன ஆபத்து? எப்படி தடுக்கலாம்?

3 days 18 hours ago
குறட்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

குறட்டை பழக்கம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சனீத் பெரேரா
  • பதவி, பிபிசி உலக சேவை
  • 15 மார்ச் 2024, 02:45 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

குறட்டை விடும் பழக்கம் குறட்டை விடுபவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் குறட்டை அவர்களின் இணையர் மற்றும் உறவை பாதிக்கும், இதில் உடல் உறவு உட்பட தாம்பத்யம் தொடர்பான விஷயமும் அடக்கம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"என் கணவர் சத்தமாக குறட்டை விடுவதைப் பற்றி நான் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் சொல்லி கேலி செய்தேன், ஆனால் மனதளவில் ஆழமாக அது என்னைத் பாதித்தது. இதைப் பற்றி என் கணவருடன் பேசினால் அவர் மனம் புண்படுவார் என்று நான் கவலைப்பட்டேன்" என்று சிங்கப்பூரைச் சேர்ந்த 45 வயதான அருணிகா செல்வம் கூறுகிறார்.

குறட்டை என்பது சகஜமான ஒன்று என்று அருணிகா எண்ணினார். ஆனால் அது அவரின் கணவருக்கும் தாம்பத்திய உறவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.

"அவர் இரவில் தூக்கத்தின் நடுவே பலமுறை எழுந்திருக்க ஆரம்பித்தார். காலையில் எரிச்சல் உணர்வோடு இருப்பார்," என்று அருணிகா பிபிசியிடம் தெரிவித்தார்.

கணவரின் குறட்டை சத்தத்தால் அருணிகாவால் ஆழ்ந்து உறங்க முடியவில்லை. ஓய்வின்மை மற்றும் தூக்கமின்மை காரணமாக வேலையில் அவரின் செயல்திறன் பாதிக்கப்பட்டது.

இணையர் குறட்டை விடுவதை கண்டு கொள்ளாமல் விடுவது பொதுவாக பல வீடுகளில் நிகழும். ஆனால் குறட்டை பிரச்சனை, இணையருடனான உறவு மற்றும் இருவரின் ஆரோக்கியத்திலும் கடுமையான விளைவை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

 
குறட்டை
படக்குறிப்பு,

தூக்கத்தின் போது காற்றோட்டம் தடைபட்டு, சுவாசம் நின்று மீண்டும் தொடங்கும்

தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் (sleep apnoea) என்றால் என்ன?

பொதுவாக சத்தமாக குறட்டை விடுவது, தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் (OSA) எனப்படும் தூக்கக் கோளாறுடன் தொடர்புடையதாக இருக்கும், இந்த நிலையில் தூக்கத்தின் போது காற்றோட்டம் தடைப்பட்டு, சுவாசம் நின்று மீண்டும் தொடங்கும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த கோளாறு தொண்டையின் சுவர்களை தளர்வடையச் செய்து, சுருங்கச் செய்து, சாதாரண சுவாசத்தை குறுக்கிட்டு, ஆக்ஸிஜன் குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது.

இங்கிலாந்தின் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவ ஆலோசகர், சுவாச நிபுணர் டாக்டர் ராமமூர்த்தி சத்தியமூர்த்தியின் கூற்றுப்படி, தூக்கத்தில் மூச்சுத்திணறல் அறிகுறிகள் லேசான நிலை தொடங்கி கடுமையான நிலை வரை ஏற்படும். ஆனால் பாதிக்கப்பட்ட நபரை இந்த பிரச்னை படிப்படியாக மோசமான நிலைக்கு தள்ளும்.

மேலும் சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால், குறட்டை விடுபவர் மற்றும் அவர்களது இணையரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அது பாதிக்கும், தம்பதிகளின் உடல் உறவையும் பாதிக்கும் என்று அவர் எச்சரிக்கிறார்.

 
தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலின் அறிகுறிகள் என்ன?

ஒருவர் தூங்கும்போதுதான் இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன, அவை பின்வருவனவற்றை உள்ளடக்கியது:

  • உரத்த சத்தத்துடன் குறட்டை
  • சுவாசம் தடைப்பட்டு மீண்டும் தொடங்குவது
  • மூச்சுத்திணறல், குறட்டை அல்லது மூச்சுத் திணறல் போன்ற சத்தங்கள் எழுப்புவது
  • தூக்கத்தின் நடுவே அடிக்கடி எழுந்திருத்தல்

பாதிக்கப்பட்டவர்களுக்கு பகல் நேரத்திலும் சில அறிகுறிகள் ஏற்படும், அவை:

  • தூங்கி எழுந்ததும் தலைவலி
  • மிகவும் சோர்வாக உணர்வது
  • கவனச் சிதறல்
  • மோசமான நினைவாற்றல்
  • மனச்சோர்வு, எரிச்சல் அல்லது மனநிலையின் பிற மாற்றங்கள்
  • மோசமான ஒருங்கிணைப்பு திறன்
  • உடலுறவில் நாட்டமின்மை
 
குறட்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மூச்சுத்திணறலின் போது ரத்த ஆக்ஸிஜன் அளவுகளில் ஏற்படும் திடீர் வீழ்ச்சி ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்

குறட்டையால் பிற உடல்நலப் பிரச்னைகள்

கூடுதலாக, தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத் திணறல் (obstructive sleep apnoea) பாதிப்பு மற்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

மூச்சுத்திணறலின் போது ரத்த ஆக்ஸிஜன் அளவுகளில் ஏற்படும் திடீர் வீழ்ச்சி ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர், மேலும் இது பல்வேறு மருத்துவ சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

சில ஆய்வுகள் ஓஎஸ்ஏ (obstructive sleep apnoea) இதய செயலிழப்பு அபாயத்தை 140% அதிகரிக்கும், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 60% மற்றும் கரோனரி இதய நோய் அபாயத்தை 30% அதிகரிக்கும் என்று கூறுகின்றன.

தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவது உடலுறவையும் பாதிக்கலாம் என தூக்க சிகிச்சை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

சில தம்பதிகள் தங்கள் துணையின் குறட்டையை நகைச்சுவையாக அணுகினாலும், அது அவர்களின் தாம்பத்திய உறவை பாதிக்கும் என்று டாக்டர் சத்தியமூர்த்தி எச்சரிக்கிறார்.

"வழக்கமாக என்னிடம் வரும் நோயாளிகளில் 90% பேர், இணையரை தன் குறட்டை பழக்கம் பெரிதும் பாதித்ததால் தான் சிகிச்சை மேற்கொள்ளும் முடிவை எடுக்கின்றனர். நாளடைவில் தம்பதி தனியாக தூங்க முடிவெடுப்பர், மேலும் இந்த பிரிவு `தூக்க விவாகரத்து’ என்னும் நிலையை உருவாக்கும்." என்று அவர் பிபிசியிடம் குறிப்பிட்டார்.

“இது ஒரு மோசமான விஷயம் அல்ல’’ என்று குறிப்பிடும் அமெரிக்காவைச் சேர்ந்த உறவு சிகிச்சை நிபுணர் சாரா நாசர்சாதே, ``குறட்டை பழக்கம் இருந்தாலும், இல்லையென்றாலும், தம்பதிகள் சில சமயங்களில் தனித்தனியாக தூங்க வேண்டும்’’ என்று பரிந்துரைக்கிறார். ’’ஆழ்ந்த இரவு தூக்கத்துடன் நம் நாளைத் தொடங்குவது தம்பதிகளுக்கு ஆரோக்கியமான உறவை வளர்க்கும்’’ என்றும் அவர் பிபிசியிடம் கூறினார், இருப்பினும் வீட்டில் ஒரு கூடுதல் படுக்கையறை இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

ஆனால் சில தம்பதிகளுக்கு, 'தூக்க விவாகரத்து' என்பது நிரந்தரமான பிரிவினைக்கான முதல் படியாக இருக்கும்.

 
குறட்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

குறட்டை விடுவதை இயல்பான ஒன்று என பலரும் நம்புகின்றனர்.

குறட்டையால் சிங்கப்பூர் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை

அருணிகா செல்வம், உலகிலேயே அதிக தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட மிகவும் வளர்ந்த நாடான சிங்கப்பூரில் வசிக்கிறார். இருப்பினும் தன் வீட்டில் இணையர் உடன் இருக்கும் அறையை தவிர வேறு இடத்தில் தூங்குவது அவருக்கு சாத்தியமில்லை.

"சிங்கப்பூரில் வாழ்க்கைச் செலவு அதிகமாக இருப்பதால் கூடுதல் வருமானம் ஈட்ட, எங்கள் விருந்தினர் அறையை வாடகைக்கு விட வேண்டியிருந்தது" என்று திருமணமாகி 15 வருடங்கள் கடந்து ஒரு குழந்தையின் தாயாக இருக்கும் அருணிகா தன் நிலையை விவரித்தார்.

எண்ணற்ற தூக்கமில்லாத இரவுகளைக் கடந்த பிறகு , இதற்கு மேல் முடியாது என்ற நிலையில் அருணிகா தன் கணவரிடம் அவரின் குறட்டை பிரச்சனை பற்றி பேசினார். அவரின் கணவர் குறட்டை விடுவது இயல்பானது என்று நம்புவதால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கத் தயங்கினார்.

மேலும் அவரது தந்தை மற்றும் தாத்தா இருவரும் குறட்டை விடும் பழக்கம் உடையவர் என்பதால் இது பெரிய பிரச்னையில்லை என அவர் நம்பினார்.

சத்தமாக குறட்டை விடுவது ஆண்மையின் ஒரு அங்கமாகவே பலர் கருதுகின்றனர். குறிப்பாக சில ஆசிய கலாச்சாரங்களில், குறட்டை விடுவது சாதரண விஷயம் என்றே நம்புகின்றனர்’’ என்று அருணிகா மேலும் கூறினார்.

குறட்டையால் ஏற்படும் தூக்கமின்மை மனச் சமநிலையை குலைக்கும். இதனால் ஏற்படும் மன உளைச்சல் தேவையற்ற வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கும்.

சாரா நாசர்சாதே கூறுகையில், "இதுபோன்ற சூழ்நிலைகளில், குறட்டை விடும் இணையரிடம் சரியான நேரத்தில், நுட்பமான முறையில் இந்த விஷயத்தை புரிய வைக்க வேண்டும். இந்தப் பிரச்சனையை பற்றி பேச சரியான தருணத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.’’

"உடலுறவு கொண்ட பிறகு, நல்ல மனநிலையில் இருக்கும் போது இதைப் பற்றி பேச முயற்சிக்கலாம்" என்று நாசர்சாதே கூறினார். இவர் “லவ் பை டிசைன் - 6 இன்க்ரீடியன்ட்ஸ் டு பில்ட் லைஃப் டைம் ஆஃப் லவ்’’ என்னும் புத்தகத்தின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக உளவியல் நிபுணரான இவர் இதுகுறித்து கூறுகையில், "குறட்டை விடுபவர் அந்த நிலையை எண்ணி வெட்கப்படுகிறார்’’ என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியம்.’’ என்றார்.

 
குறட்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

குறட்டையால் திருமண உறவு கூட முடிவுக்கு வரலாம்

குறட்டையால் தீவிரமான பாதிப்புகள்

பிரிட்டிஷ் குறட்டை மற்றும் தூக்கநிலை மூச்சுத்திணறல் சங்கத்தின் கூற்றுப்படி, பிரிட்டனில் சுமார் 15 மில்லியன் குறட்டை பாதிப்பு கொண்டவர்கள் உள்ளனர். மேலும் இது நாட்டில் 30 மில்லியன் மக்களை பாதிக்கிறது - கிட்டத்தட்ட மக்கள்தொகையில் பாதி என்றே சொல்லலாம்.

"குறட்டை பழக்கம் உடையவர்களில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன’’ என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால் குறட்டை விடுபவர் யாராக இருந்தாலும், அந்தப் பழக்கம் ஆழமான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் விவாகரத்துக்கான பொதுவான காரணங்களில் ஒன்று `குறட்டை’ என்று சில செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன, இருப்பினும் இந்த கூற்றை நிரூபிக்க போதுமான தரவுகள் இல்லை.

குறட்டை பழக்கம் திருமண உறவில் ஆழமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பிரிட்டனைச் சேர்ந்த குடும்பநல வழக்கறிஞரான ரீட்டா குப்தா, தனது நிறுவனம் குறட்டையுடன் தொடர்புடைய பல விவாகரத்து வழக்குகளை கையாண்டதாகக் கூறினார்.

"திருமண பந்தத்தில் ஏற்படும் மகிழ்ச்சியின்மைக்கு இது நிச்சயமாக ஒரு காரணமாக இருக்கும். அவர் குறட்டை விடுவதால் நாங்கள் பல ஆண்டுகளாக தனித்தனி அறைகளில் தான் தூங்குகிறோம், நாங்கள் ஏற்கெனவே பிரிந்துதான் வாழ்கிறோம்’, என்று நிறைய பேர் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்," என்றும் அவர் பிபிசியிடம் கூறினார்.

“இதுபோன்ற விவாகரத்து வழக்குகளில் பொதுவான பிரச்சினை என்னவெனில், மருத்துவ சிகிச்சைகளை புறக்கணிப்பது, இந்த சிக்கலை திறம்பட சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காதது தான்’’ என்று குடும்பநல வழக்கறிஞர் மேலும் கூறினார்.

"உதாரணமாக, ஒரு ஆணுக்கு எதிரான வழக்கில், அவருடைய மனைவி, 'என் கணவர் ஏற்கனவே மோசமாக குறட்டை விடுகிறார். இது என் தூக்கத்தை மோசமாக பாதிக்கிறது. ஆனால், அவர் அதை நிவர்த்தி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்று கூறுகிறார்.

 
குறட்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

CPAP சாதனம் தூக்கத்தின் போது ஏற்படும் சுவாசக் கோளாறைத் தடுக்க உதவுகிறது.

குறட்டை அல்லது தூக்கநிலை மூச்சுத்திணறல் பிரச்னையை தீர்க்க நீங்கள் என்ன செய்யலாம்?

தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலுக்கான சிகிச்சைகள் வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்றுவதை உள்ளடக்கியது.

  • உடல் எடைக் குறைப்பு
  • புகைபிடிப்பதை நிறுத்துதல்
  • மது அருந்துவதை கட்டுப்படுத்துதல்

இருப்பினும், பலருக்கு, CPAP என்னும் காற்றுப்பாதை அழுத்த சாதனத்தைப் பயன்படுத்துவது அவசியமாகிறது. இந்த சாதனம், நீங்கள் தூங்கும் போது உங்கள் வாய் அல்லது மூக்கில் அணியும் முக கவசத்தினுள் காற்றை மெதுவாக உட்செலுத்துகிறது.

இந்த CPAP சாதனம் தூக்கத்தின் போது ஏற்படும் சுவாசக் கோளாறைத் தடுக்க உதவுகிறது.

மருத்துவர் ராமமூர்த்தி சத்தியமூர்த்தி கூறுகையில், “குறட்டை விடுபவர் மற்றும் அவரின் இணையர் ஆகிய இருவரின் ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை அளிப்பது முக்கியம். இது அவர்களை மருத்துவ ஆலோசனையைப் பெற ஊக்குவிக்கும்” என்கிறார்.

"குறட்டை பிரச்னைக்கு மருத்துவ ஆலோசனைப் பெறுவது, திருமண உறவுக்கு மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் நாளடைவில் குறட்டையால் ஏற்படும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை எடுக்கும் செலவும் குறையும். எனவே, இது முழு குடும்பத்திற்கும் ஒட்டுமொத்த நன்மை தரும்" என்று அவர் கூறினார்.

 
குறட்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

குறட்டை பிரச்னையை தீர்ப்பதில் உலக அளவில் பல காரணிகள் தடையாக உள்ளன.

பொருளாதார, சமூகத் தடைகள்

குறட்டை பிரச்னைக்கான அணுகுமுறைகள் உலகளாவிய மற்றும் தனி நபர் சார்ந்து மாறுபடலாம். பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார காரணிகள் மற்றும் பாலினம் மற்றும் பாலுணர்வால் கூட பாதிக்கப்படலாம்.

இலங்கையின் கொழும்பில் ஹோட்டல் வரவேற்பாளராகப் பணிபுரியும் 40 வயது தன்பால் ஈர்ப்பாளரான சமன் (அவரது உண்மையான பெயர் அல்ல), அவரது பாலினத்தை குடும்பத்தினரிடம் இருந்து ரகசியமாக வைத்துள்ளார். அவரது காதலர் தனது வீட்டில் உள்ள கூடுதல் அறையில் வாடகைக்கு வசிக்கும் நண்பர் என்று குடும்பத்தினரை நம்ப வைத்திருக்கிறார்.

"எனது இணையர் சத்தமாக குறட்டை விடுபவர், அவரின் குறட்டை சத்தத்தால் என்னால் தூங்க முடியவில்லை. என் அம்மா என்னைச் சந்திக்க வரும் போது மட்டும்தான் எனக்கு நன்றாகத் தூக்கம் வரும்" என்று சமன் பிபிசியிடம் கூறினார்.

"என் அம்மா வரும்போது, என் இணையர் விருப்பத்துடன் என் அம்மாவுக்கு அந்த கூடுதல் அறை வழங்கப்படும், எனவே என் இணையர் சோபாவில் தூங்கி என் அம்மாவுக்கு சந்தேகம் வராத வண்ணம் பார்த்துக் கொள்வார். அந்த நாட்களில் மட்டும் நான் நன்றாக தூங்குவேன்" என்று அவர் குறிப்பிட்டார்.

"எனது காதலர் தன்னை பெண்பால் குணங்கள் கொண்ட தன்பால் ஈர்ப்பாளராக கருதுகிறார், ஆனால் குறட்டை விடுவது நமது கலாச்சாரத்தில் ஆண்மைக்குரியதாகவே கருதப்படுகிறது. இந்த விஷயத்தைப் பற்றி விவாதிப்பது அவரை காயப்படுத்தி என்னை விட்டு அவர் விலகி செல்ல வழிவகுக்கும் என்று நான் அஞ்சுகிறேன்" என்றும் குறிப்பிட்டார்.

ஒருபுறம் குறட்டை பிரச்சனையை காதலனிடம் விவாதிக்க சமன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டிருக்கையில், மறுபுறம், அருணிகா ஒருவழியாக தன் கணவரிடம் மருத்துவரை அணுகுமாறு வற்புறுத்தத் தொடங்கினார். அதன் விளைவாக அருணிகாவின் கணவருக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் இருப்பது கண்டறியப்பட்டது.

உடல் எடையை குறைக்கும் நோக்கத்தில் உடற்பயிற்சிகள் மேற்கொண்டு தனது கணவர் ஏற்கெனவே பிரச்சனைகளுக்கான தீர்வை நோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டதாக அருணிகா மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/articles/cz9zwk1v395o

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று உலக தூக்க தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக சிறுநீரக தினம்: உங்கள் சிறுநீர் எந்த நிறத்தில் இருப்பது ஆபத்தின் அறிகுறி?

4 days 17 hours ago
சிறுநீரகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

உங்கள் சிறுநீரின் நிறத்தைக் கொண்டே சிக்கலை அறிய முடியும்

1 ஜனவரி 2024
புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

சிறுநீரகம் உடலின் ஒரு முக்கியமான உறுப்பு. சிறுநீரகம் மூலம் தான் நம் உடலில் திரவ கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு சுத்தமான ரத்தம் தொடர்ந்து பரவுகிறது. மேலும், உடலில் உள்ள அதிகப்படியான நீர், சிறுநீரகம் மூலம் வடிகட்டப்பட்டு அது சிறுநீர் வாயிலாக வெளியேற்றப்படுகிறது.

இந்தியாவில் தீவிர நோய்களால் இறப்பதற்கான முதல் பத்து காரணங்களில், பல்வேறு சிறுநீரக நோய்கள் ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றன.

“இந்தியா: தேசத்தின் ஆரோக்கியம்”-2017 எனும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி, இந்தியாவில் ஏற்படும் இறப்புகளுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் ஒன்பதாவது முக்கிய காரணமாகும். இந்நோய் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் வயது ஆகியவையாகும்.

’நேச்சர்’ இதழின் (Nature) பகுப்பாய்வின்படி, உலகில் 6.97 கோடி பேர் கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 1.15 கோடி பேர் இந்தியாவில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2010-13-இல், சிறுநீரக செயலிழப்பு 15-69 வயதுடையவர்களிடையே 2.9 சதவீத இறப்புகளுக்கு காரணமாகும். இது 2001-03-ஐ விட 50 சதவீதம் அதிகரித்துள்ளது. சிறுநீரக செயலிழப்பு இறப்புகளுக்கு நீரிழிவு நோய் மிக முக்கிய காரணமாக உள்ளது.

இந்தியாவில் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD-Chronic kidney disease) 8-17 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்களுள் சுமார் 10-20 சதவீதம் பேருக்கு சிறுநீரக செயலிழப்பு உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
சிறுநீரக நோய்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிறுநீரகத்திற்கும் சிறுநீருக்கும் என்ன தொடர்பு?

இந்த நோய்க்கான காரணங்களை ஆழமாகப் புரிந்துகொள்ள சிறுநீரக மருத்துவர் சித்தார்த் ஜெயினிடம் பேசினோம்.

சிறுநீருக்கும் சிறுநீரகத்துக்கும் உள்ள தொடர்பை அவர் விளக்குகிறார்.

"உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் வளர்சிதை மாற்ற பொருட்களை சிறுநீர் வாயிலாக சிறுநீரகம் நீக்குகிறது. சிறுநீரகத்தின் செயல்பாடு உடலில் இருந்து அதிகப்படியான வளர்சிதை மாற்ற கழிவுகளை அகற்றுவதாகும். சிறுநீரின் உதவியுடன் இதைச் செய்கிறது" என்றார்.

சிறுநீரகம் நமது உடலின் ஒரு வடிகட்டி அமைப்பு. சிறுநீரகங்கள் ரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்றி சிறுநீரை உற்பத்தி செய்கின்றன.

"சிறுநீரகத்தின் செயல்பாடு சிறுநீரின் உதவியுடன் உடலில் இருந்து அதிகப்படியான வளர்சிதை மாற்றக் கழிவுகளை அகற்றுவதாகும். உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் வளர்சிதை மாற்ற பொருட்களை சிறுநீரகம் நீக்குகிறது" என்று அவர் விளக்குகிறார்.

 
சிறுநீரக நோய்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்த புரதம் உடலில் இருந்து அசாதாரண அளவில் வெளியேற்றப்படும்போது, அது ஆபத்தானது.

புரோட்டினூரியா என்றால் என்ன?

புரோட்டினூரியா (சிறுநீரில் புரதத்தின் குறிப்பிடத்தக்க இருப்பு) பற்றி மருத்துவர் சித்தார்த் ஜெயின் விரிவாக விளக்குகிறார். “ஒவ்வொரு ஆரோக்கியமான மனித உடலும் சிறுநீரின் மூலம் சில அளவு புரதத்தை வெளியேற்றுகிறது. ஆனால், இந்த புரதம் உடலில் இருந்து அசாதாரண அளவில் வெளியேற்றப்படும்போது, அது ஆபத்தானது மற்றும் இந்த கசிவு புரோட்டினூரியா என்று அழைக்கப்படுகிறது" என்கிறார்.

"புரோட்டீனூரியா உற்பத்திக்கு மிகவும் பொதுவான காரணம் நீரிழிவு நோய். ஒருவருக்கு கட்டுப்பாடற்ற நீரிழிவு இருந்தால், அதிகப்படியான புரதம் சிறுநீரில் கசிகிறது" என்றார், மருத்துவர் சித்தார்த்.

"இதனால் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயின் முதல் அறிகுறி புரோட்டினூரியா ஆகும்" என்றார்.

புரோட்டினூரியாவின் பிற காரணங்கள் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிற நோய்கள்.

புரோட்டினூரியாவின் அறிகுறிகளைப் பற்றி பேசுகையில், "சிறுநீர் நுரையுடன் இருப்பதாக உணர்ந்தால், அது புரோட்டினூரியாவின் அறிகுறியாகும்."

புரோட்டினூரியாவின் மேம்பட்ட நிலைகளில், நோயாளிகள் கைகள் மற்றும் கால்களில் வீக்கம், சோர்வு, வயிற்று வலி அல்லது வயிற்று தொற்று ஆகியவற்றை அனுபவிக்கலாம். இந்த நோய்க்கான பிற காரணங்கள் ரத்த அழுத்தம் மற்றும் பிற சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஆகும்.

சிறுநீர் நிறம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சிறுநீரில் நீர், யூரியா மற்றும் உப்புகள் உள்ளன.

சிறுநீரின் நிறத்தை வைத்தே சிறுநீரகத்தில் உள்ள பிரச்னையை தெரிந்து கொள்வது எப்படி?

சிறுநீரில் நீர், யூரியா மற்றும் உப்புகள் உள்ளன. அதிகப்படியான அமினோ அமிலங்கள் உடைக்கப்படும்போது யூரியா கல்லீரலில் உற்பத்தியாகிறது. சிறுநீரின் மூலம் வெளியேற்றப்படும் முக்கிய கழிவுப்பொருள் யூரியாவாகும். ஏனெனில், அது சிறுநீரகத்தால் மீண்டும் உறிஞ்சப்படாது.

உங்கள் ரத்தத்தில் இருந்து வடிகட்டிய அதிகப்படியான நீர் மற்றும் கழிவுகள்தான் சிறுநீர் என, ’ஹார்வர்ட் ஹெல்த்’ கூறுகிறது. அதன் நிறம் பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர் பழுப்பு வரை இருக்கும். அதன் செறிவு, நீரில் உள்ள கழிவுகளின் அளவைப் பொறுத்தது. இது, நீங்கள் எவ்வளவு திரவத்தை உட்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

ஒரு நபர் தனது சிறுநீர் சிவப்பு, கருப்பு அல்லது பழுப்பு அல்லது வேறு ஏதேனும் நிறத்தில் இருப்பதாக உணர்ந்தால், அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர் சித்தார்த் மேலும் கூறுகிறார்.

மேலும், சிறுநீரின் அளவு, இயல்பை விட மிகக் குறைவாகவோ அல்லது இயல்பை விட அதிகமாகவோ, அல்லது ஒருவர் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்ல வேண்டியிருந்தாலோ அல்லது சிறுநீர் கழிக்கும்போது அதிக அழுத்தத்தை உணர்ந்தாலோ, கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ, சிறுநீரகப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

 
சிறுநீரக நோய்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சிறுநீரகங்கள் சிறுநீரை உற்பத்தி செய்து, நீர் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

சிறுநீரகத்தின் செயல்பாடு என்ன?

சிறுநீரகம் உடலின் இன்றியமையாத உறுப்பு. அதன் செயல்பாடுகள்:

  • உங்கள் உடலில் உள்ள கால்சியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
  • ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • உங்கள் ரத்தத்தில் பி.ஹெச். எனும் அமிலத்தன்மையை சமநிலையுடன் பராமரித்தல்.
  • உங்கள் உடலில் இருந்து நீரில் கரையும் கழிவுகளை நீக்குகிறது.

சிறுநீரின் வாயிலாக அதிகப்படியான நீர், உப்புகள் மற்றும் யூரியாவை நீக்குகிறது.

சிறுநீரக தமனி மூலம் ரத்தம் சிறுநீரகங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ரத்தம் உயர் அழுத்தத்தில் வடிகட்டப்படுகிறது மற்றும் சிறுநீரகமானது குளுக்கோஸ், உப்பு அயனிகள் மற்றும் நீர் போன்ற பயனுள்ள பொருட்களைத் தேர்ந்தெடுத்து மீண்டும் உறிஞ்சுகிறது. சுத்திகரிக்கப்பட்ட பிறகு, ரத்தம் சிறுநீரக நரம்பு வழியாக ரத்த ஓட்ட அமைப்புக்குத் திரும்புகிறது.

சிறுநீரகங்கள் சிறுநீரை உற்பத்தி செய்து, நீர் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. சிறுநீர்ப்பை சிறுநீரை உடலில் இருந்து வெளியேறும் வரை சேமிக்கிறது.

நீரிழிவு நோயின் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது மற்றும் உலகளவில் 41.5 மில்லியன் மக்களை இது பாதிக்கிறது. சிறுநீரக செயலிழப்புக்கு நீரிழிவு நோய் முக்கிய காரணமாக உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 40 சதவீதம் பேருக்கு இறுதியில் சிறுநீரக நோய் ஏற்படுகிறது.

 
சிறுநீரக நோய்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ரத்த நாள நோய்கள் பொதுவாக உங்கள் சிறுநீரகங்களுக்கு ஆபத்தானவை

தீவிர சிறுநீரக நோய்கள் என்ன?

நாட்பட்ட சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஆகும்.

ஒவ்வொரு சிறுநீரகமும் நெஃப்ரான்கள் எனப்படும் சுமார் ஒரு மில்லியன் சிறிய வடிகட்டி அலகுகளைக் கொண்டுள்ளது. நெஃப்ரான்களை காயப்படுத்தும் அல்லது பாதிக்கும் எந்த நோயும் சிறுநீரக நோயை ஏற்படுத்தும். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இரண்டும் நெஃப்ரானை பாதிக்கும்.

உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகங்கள், இதயம் மற்றும் மூளையில் உள்ள ரத்த நாளங்களையும் பாதிக்கும். சிறுநீரகங்கள் அதிக ரத்த நாளங்களை கொண்டவை. எனவே, ரத்த நாள நோய்கள் பொதுவாக உங்கள் சிறுநீரகங்களுக்கு ஆபத்தானவை.

நாள்பட்ட சிறுநீரக நோய், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது சிறுநீரகம் செயல்பாட்டை படிப்படியாக இழப்பதாகும். சிறுநீரகங்கள் ரத்தத்திலிருந்து கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவத்தை வடிகட்டுகின்றன. பின்னர் அவை சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றன. நாள்பட்ட சிறுநீரக நோய் ஒரு மேம்பட்ட நிலையை அடையும் போது, திரவம், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் கழிவுகள் ஆகியவை ஆபத்தான அளவுக்கு உடலில் சேரும்.

நாள்பட்ட சிறுநீரக நோயின் அறிகுறிகள் காலப்போக்கில் உருவாகின்றன. சிறுநீரக பாதிப்பு படிப்படியாக நிகழ்கிறது. குமட்டல், வாந்தி, பசியின்மை, சோர்வு மற்றும் பலவீனம், தூக்க பிரச்னைகள், சிறுநீரில் ஏற்படும் மாற்றங்கள், மனக் கூர்மை குறைதல், தசைப்பிடிப்பு மற்றும் கைகளின் வீக்கம் ஆகியவையும் அறிகுறிகளாகும். பாதங்கள் மற்றும் கணுக்கால் சுளுக்கு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவையும் இந்நோயுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம்.

நாள்பட்ட சிறுநீரக நோய் முற்றிலும் மீளமுடியாத நோயாகும். இது காலப்போக்கில் தீவிரமடையும். இதனால், சிறுநீரகம் அதன் செயல்பாடுகளை செய்ய முடியாத நிலை ஏற்படும்.

https://www.bbc.com/tamil/articles/c972d83qmgeo

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை அன்று இந்த உலக சிறுநீரக தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியர்களின் 'கத்தி விழுங்கும் கலை' மருத்துவத்துறையை மாற்றி அமைத்தது எப்படி?

1 week 1 day ago
இந்தியர்களின் கத்தியை விழுங்கும் கலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், வக்கார் முஸ்தபா
  • பதவி, பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்
  • 10 மார்ச் 2024, 11:27 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

19-ஆம் நூற்றாண்டில் நடந்த ஒரு சம்பவம்.

ஒரு நபர் தன் தொண்டைக்குள் லாவகமாகச் செலுத்திகொண்ட கத்தி சில நிமிடங்களில் மீண்டும் வெளியே வந்தது.

டாக்டர் அடோல்ஃப் குஸ்மால் ஒரு மாலை வேளையில் ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் தெருக்களில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த காட்சியைக் கண்டார்.

ஒரு நபர் கத்தியை விழுங்குவதைக் கண்டு டாக்டர் குஸ்மால் அதிர்ச்சியடைந்தார். "இந்த அணுகுமுறையை மனித உடலுக்குள் செய்யப்படும் பரிசோதனைகளுக்காக பயன்படுத்த முடியுமா?" என்ற கேள்வி அப்போது அவரது மனதில் எழுந்ததாக ராபர்ட் யங்சன் தனது 'தி மெடிக்கல் மேவரிக்ஸ்' (The Medical Mavericks) புத்தகத்தில் கூறுகிறார்.

வாள் அல்லது கத்தியை விழுங்குவது ஒரு பழங்காலத் திறமை என்றும் இந்தக் கலை சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தொடங்கியது என்றும் ஆராய்ச்சியாளர்கள் லாங் மற்றும் பைன் கூறுகின்றனர்.

 
இந்தியர்களின் கத்தியை விழுங்கும் கலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு வந்த கலை

19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெளியான ஒரு பத்திரிகை கட்டுரையில் "வாளை விழுங்கும் கலை இந்தியாவிலிருந்து பிரிட்டனை அடைந்தபோது இந்தச் செயல் நம்பமுடியாத ஒன்றாகக் பார்க்கப்பட்டது" யில் கூறப்பட்டுள்ளது.

1813-ஆம் ஆண்டில் லண்டனில் வசித்த இந்திய கழைக்கூத்தாட்டக் கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட 'வாளை விழுங்கும்' சாகசங்கள், யாரும் செய்ய முடியாத ஒரு புதிய மற்றும் வியக்கத்தக்க சாதனை என விளம்பரப்படுத்தப்பட்டன.

இதேபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலும் சுற்றுப்பயணம் செய்துள்ளனர். வாளை விழுங்கும் புதுமையான செயல் மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது என 'தி டைம்ஸ்' பத்திரிகை கூறுகிறது.

இந்திய மேஜிக் நிபுணர்கள் வாள் விழுங்கும் நிகழ்ச்சியால் லண்டன் நகரத்தை திகைக்க வைத்தனர். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், இந்தக் கலை ஐரோப்பா உட்பட உலகம் முழுவதும் பரவியது.

 
நோய் கண்டறிய பயன்பட்ட வாள் விழுங்கும் கலை
இந்தியர்களின் கத்தியை விழுங்கும் கலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

"டாக்டர் குஸ்மால், வாள் விழுங்கும் கலையை அறிந்த 'அயர்ன் ஹென்றி' (இரும்பு ஹென்றி) என்பவரது உதவியுடன், நோய் ஆய்வுகளுக்காக உணவுக்குழாய் வழியாக உடலில் ஆழமாகச் செல்லக்கூடிய வகையில் ஒரு சாதனத்தை உருவாக்கினார்," என ஆராய்ச்சியாளர்கள் லாங் மற்றும் பைன் கூறினார்கள். 1868-இல் 'அயர்ன் ஹென்றி'க்கு எண்டோஸ்கோபி செய்யப்பட்டது என்று எழுதுகிறார் எலிசா பெர்மன்.

“டாக்டர் குஸ்மாலால் ஒரு நோயாளியின் உணவுக்குழாயில் இருந்த புற்றுநோய் கட்டியை சரியாக பார்க்க முடியவில்லை. எனவே அயன் ஹென்றி உதவியுடன் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 47 செ.மீ. நீளமுள்ள ஒரு குழாயை விழுங்கினார் அயன் ஹென்றி. கண்ணாடி மற்றும் எண்ணெய் விளக்கின் உதவியுடன், வயிற்றில் உள்ள உணவுக்குழாயை குஸ்மாலால் தெளிவாக பார்க்க முடிந்தது," என எலிசா கூறுகிறார்.

அதேசமயம், வாளை விழுங்குவது ஒரு ஆபத்தான வித்தையாகும். அது மரணத்திற்கு கூட வழிவகுக்கும். பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கத்திகளை விழுங்குபவர்களுக்கு குடலில் இரத்தப்போக்கு மற்றும் உணவுக்குழாயில் கடுமையான காயங்கள் ஏற்படுகின்றன என தெரியவந்தது.

மருத்துவ பரிசோதனைகளில் வாள் விழுங்குபவர்கள் மிக முக்கிய பங்கு வகித்தனர். ஆனால் இது மிகவும் ஆபத்தானது. யாரேனும் இதை சுயமாக முயற்சி செய்தால் உயிருக்கு ஆபத்தானதாக மாறிவிடும்.

1897-இல் ஸ்டீவன்ஸ் என்ற ஸ்காட்டிஷ் மருத்துவர், வாளை விழுங்கும் வித்தை அறிந்த ஒரு நபரின் உதவியோடு தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொண்டார் என ஆல்பர்ட் ஹாப்கின்ஸ் கூறுகிறார்.

'எலக்ட்ரோ கார்டியோகிராம்' என்ற சொல் பெரும்பாலும் மருத்துவர்களுக்குத் தெரியும். அந்த நேரத்தில் அவர்களில் பெரும்பாலோர் அதை 'ஈசிஜி' என்று புரிந்து கொண்டனர். 1906ஆம் ஆண்டில், எம்.கிராமர் என்ற ஜெர்மன் மருத்துவர் இதய செயல்பாட்டைப் பதிவுசெய்ய வாள் விழுங்குபவரின் உணவுக்குழாயில் மின்முனையைச் செலுத்தி பரிசோதனை செய்தார்.

 
'வாள் விழுங்குவதால் எண்டோஸ்கோபி எளிதாக உள்ளது'

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் டாக்டர். ஷரோன் கேப்லான். 2007ஆம் ஆண்டில் கடுமையான தொண்டைக் காயங்கள் உள்ள நோயாளிகளுக்கு உதவ வாள் விழுங்குதலை சிகிச்சை முறையில் பயன்படுத்தலாமா என்பதை முடிவுசெய்ய வாள் விழுங்கும் கலைஞரான ஆண்ட்ரூஸுடன் இணைந்து பணியாற்றினார்.

வாள் விழுங்கும் கலைஞரான டோட் ராபின்ஸ், "எண்டோஸ்கோபி தனக்கு மிகவும் எளிதானது" என்கிறார். அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் வாள் விழுங்கும் கலையின் வரலாறு குறித்து விரிவுரை நடத்தினார் ராபின்ஸ். அவரை பத்திரிகையாளர் ஒலிவியா பி.வாக்ஸ்மேன் பேட்டி கண்டார்.

"எனக்கு எண்டோஸ்கோபி செய்ய வேண்டியிருந்தது. குழாயைச் செருகுவதற்கு முன்பு நோயாளிகள் பொதுவாக மயக்கமடைந்துவிடுவார்கள். ஆனால் என்னால் ஒரு கத்தியை விழுங்க முடியும் என்பதால், மருத்துவர் கொடுத்த எண்டோஸ்கோபி எளிதாக இருந்தது" என்று ராபின்ஸ் கூறினார்.

ஆனால் இப்போது இந்தக் கலை அழிவின் விளிம்பில் உள்ளது. வாள் விழுங்குபவர்களின் சர்வதேச சங்கத்தின் கூற்றுப்படி, இப்போது சில டஜன் வாள் விழுங்குபவர்கள் மட்டுமே உள்ளனர்.

சர்வதேச வாள் விழுங்குவோர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது.

"அறிவியல் மற்றும் மருத்துவத்திற்கு வாள் விழுங்குவோரின் பங்களிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இந்த பழமையான கலை தினத்தை கொண்டாடுவதன் நோக்கம்," என்று வாள் விழுங்குவோர் சங்கம் கூறுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cnl7d54ed0jo

இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துமா? இதன் பக்கவிளைவுகள் என்ன?

1 week 2 days ago
இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

உடல் எடையை குறைப்பதற்காக பல்வேறு புதிய 'டயட்' திட்டங்கள் அவ்வப்போது டிரெண்டாகும். பெரும்பாலானோர் அந்த 'டயட்' திட்டங்களை பின்பற்றி உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவர். அப்படி, பேலியோ, கீட்டோ என பல்வேறு 'டயட்டுகள்' உள்ளன. அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக உடல் எடை குறைப்பு முயற்சியில் பெரும்பாலானோர் பின்பற்றும் டயட் திட்டமாக இருக்கிறது 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்' (Intermittent Fasting) எனப்படும் 'இடைநிலை உண்ணாவிரதம்'. இதுவொரு வகை விரத முறையே.

பொதுவாக நாம் ஒருநாள் முழுதும் காலையிலிருந்து இரவு வரை 3-4 முறை உணவு எடுத்துக்கொள்வது வழக்கம்.

இதில், குறைவான கால இடைவெளியில் உணவை உட்கொண்டுவிட்டு, அதைத்தொடர்ந்து அதிகமான நேரம் விரதமிருப்பதே இந்த 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்'. 8 மணிநேரம் உணவு - 16 மணிநேரம் விரதம் (16:8) என்ற முறையை பெரும்பாலானோர் கடைபிடிக்கின்றனர். தங்களின் வசதிக்கேற்ப இந்த நேரம் 14:10, 12:12, 18:6 என நேர இடைவெளிகளை மாற்றிக்கொள்கின்றனர்.

இப்படி அதிக நேரம் சாப்பிடாமல் விரதம் இருப்பது நல்லதா? இதனால் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா? இந்த விரதமுறையை யாரெல்லாம் கடைபிடிக்கக் கூடாது?

இதுகுறித்த கேள்விகளுக்கு பிபிசியிடம் பதிலளித்தார் ஈரோட்டை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரும் யூடியூபில் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் தொடர்பான காணொளிகளைப் பதிவிட்டு வருபவருமான அருண்குமார்.

இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்: இந்த விரத முறையை எல்லோரும் கடைபிடிக்கலாமா? பக்க விளைவுகள் ஏற்படுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

உடல் எடையை குறைப்பதில் 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்' உதவுமா?

உடல் எடையை குறைக்க சமவிகித உணவை மூன்று வேளையும் உண்கிறோம் என எடுத்துக்கொண்டால், அப்போது இன்சுலின் அதிகமாகிக் கொண்டே இருக்கும். நாம் குறைவாக சாப்பிட வேண்டும் என நினைத்தாலும் உணவு மீதான ‘கிரேவிங்’ இருந்துகொண்டே இருக்கும். ஒருநாளைக்கு 1,200 கலோரிகள் கணக்கிட்டு உண்ணலாம் என நினைத்தாலும் அதில் தோல்வியடைவதற்கான காரணம் இதுதான்.

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் கலோரி பற்றாக்குறையை ஏற்படுத்த வேண்டும். உடல் எடை அதிகமாவதற்கு முக்கியமான ஹார்மோன் இன்சுலின். எவையெல்லாம் இன்சுலினை அதிகரிக்கிறதோ, அவை உடல் எடையையும் அதிகரிக்கும். இன்சுலினை எவையெல்லாம் குறைக்கிறதோ, அவை உடல் எடையை குறைக்கும். இதனால் நாம் இன்சுலினுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். இதுதான் அடிப்படை. இதற்கு கார்போஹைட்ரேட் உணவுகளை குறைக்க வேண்டும். மாறாக, புரோட்டீன், கொழுப்பு, காய்கறியை அதிகமாக எடுத்தால் இன்சுலின் கட்டுப்பாட்டுடன் இருக்கும். உடல் எடை குறையும். ‘கிரேவிங்’ குறையும்.

இந்த அடிப்படையில்தான் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்கும் வேலை செய்கிறது. ஒருநாளைக்கு மூன்று வேளை உணவு, நான்கு வேளை 'ஸ்நாக்ஸ்' எடுக்கும்போது இன்சுலின் அதிகரிப்பதால், விரதத்தில் இருக்கும்போது இன்சுலின் கட்டுப்படும். எட்டு அல்லது பத்து மணிநேரம் மட்டுமே நீங்கள் உணவு எடுத்துக்கொண்டு, 14 அல்லது 16 மணிநேரம் உண்ணாவிரதம் இருக்கும்போது, அந்த 16 மணிநேரம் உங்கள் இன்சுலின் அளவு அதிகரிக்காமல் இருக்கிறது. அப்போது உடலில் கொழுப்பு சேராது.

உணவு எடுத்துக்கொள்ளும் நேரத்திலும் ஆரோக்கியமான உணவுகளையே எடுத்துக்கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் குறைந்த அளவில் எடுத்துக்கொண்டு, புரதம், ஆரோக்கியமான கொழுப்பு உணவுகள், காய்கறிகளை எடுத்துக்கொண்டால் பசியை நன்றாக கட்டுப்படுத்த முடியும். இன்சுலின் கட்டுக்குள் கொண்டு வரும்போது உடல் எடை குறையும், என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

 
இந்த முறையை கடைபிடிக்கும் முன் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமா?
இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்: இந்த விரத முறையை எல்லோரும் கடைபிடிக்கலாமா? பக்க விளைவுகள் ஏற்படுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

உடல் எடையைக் குறைப்பதற்காக எந்தவொரு உணவுத்திட்டத்தையும் எடுப்பதற்கு முன் ஒவ்வொருவரின் உடல் வளர்சிதை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள சில அடிப்படையான ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம்.

ரத்தப் பரிசோதனை எடுத்துப் பார்த்தால்தான் நீரிழிவு நோய் இருக்கிறதா, யூரிக் அமிலம் அதிகமாக இருக்கிறதா என்பது தெரியவரும். அதற்கேற்றவாறு நாம் டயட்டை எடுத்துக்கொள்வது அவசியம், என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

18 மணிநேரம் விரதம் இருந்தால் உடல் எடை வேகமாக குறையுமா?

16:8, 14:10, 12:12 என எந்த நேர இடைவெளியை எடுத்துக்கொண்டாலும் முடிவுகள் ஒன்றாகத்தான் இருக்கும். இந்த விரத முறையில் சாப்பிடும் நேரத்தில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம். நீங்கள் ஆறு மணிநேரம் மட்டுமே சாப்பிட்டாலும், அதில், நொறுக்குத் தீனிகள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட கெடுதல் விளைவிக்கும் உணவுகளை சாப்பிட்டால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

இதனை பின்பற்ற நினைப்பவர்கள், தங்களின் சௌகரியங்களுக்கு ஏற்ப கால இடைவெளியில் ஆரம்பிக்கலாம். எடுத்ததும் 16:8 இடைவெளியை பின்பற்ற முடிந்தாலும் அதனை கடைபிடிக்கலாம். ஒன்றும் பிரச்னை வராது, என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

 
யாரெல்லாம் இதனை தவிர்க்க வேண்டும்?
இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்: இந்த விரத முறையை எல்லோரும் கடைபிடிக்கலாமா? பக்க விளைவுகள் ஏற்படுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் முறையைப் பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்துகிறோம். இதை அவர்களின் உடல் ஏற்காவிட்டால், பிரச்னைகள் அதிகரிக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு, ஏற்கனவே அவர்களின் உடல் பல மாற்றங்களுக்குள் சென்றிருக்கும். அதனுடன் இதையும் சேர்க்க வேண்டாம் என நினைக்கிறோம்.

குழந்தைகளால் விரதத்தைத் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால் அவர்களும் இம்முறையை தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறோம்.

நீரிழிவு அதிகமாக உள்ளவர்கள், மருந்துகளை எடுத்துக்கொண்டிருக்கும் அதே சமயம் விரத முறையை கடைபிடித்தால், சர்க்கரை அளவு வெகுவாக குறையும். அதேபோன்று பல்வேறு பிரச்னைகளுக்காக மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும், என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

நீரிழிவு நோயை இந்த முறையால் கட்டுப்படுத்த முடியுமா?

கார்போஹைட்ரேட்டை குறைப்பதனால் மட்டுமே நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும். இந்த விரத முறை நீரிழிவு நோயின் ஆரம்பத்தில் உள்ளவர்கள் அதனை அந்நோயிலிருந்து விடுபடுவதில் உதவிபுரியும்.

ஆனால் நாள்பட்ட நீரிழிவு நோயை இதனால் குணப்படுத்த முடியாது, என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

இந்த முறையால் ஏதேனும் பிரச்னைகள் ஏற்படுமா?

ஓரிரண்டு வாரங்கள் சில விளைவுகள் இருக்கும். சிலருக்கு மயக்கம் ஏற்படலாம், நெஞ்சு எரிச்சல் ஏற்படலாம். சிலரால் விரதம் இருக்க முடியாது. அவர்கள் 1-2 வாரங்கள் கடந்தும் பிரச்னை தொடர்ந்தால், இதிலிருந்து வெளியேறலாம், அல்லது சாப்பிடும் நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இது பெரிய விஷயமல்ல. விரத நேரத்தில் தண்ணீரோ, சூப்போ அருந்துவதன் மூலம் இதனை தவிர்க்கலாம், என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

 
ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுமா?
இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்: இந்த விரத முறையை எல்லோரும் கடைபிடிக்கலாமா? பக்க விளைவுகள் ஏற்படுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தக் கேள்விக்கு பதிலளித்தார், ஊட்டச்சத்து நிபுணர் தரணி கிருஷ்ணன். சில வழிமுறைகளைப் பின்பற்றி இம்முறையில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதையோ, தசை இழப்பையோ தவிர்க்கலாம் என்றார் அவர்.

காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. காலை முதல் மாலை வரைதான் இம்முறையை பின்பற்ற வேண்டும். காலை உணவைத் தவிர்த்துவிட்டு எடுத்ததும் மதிய உணவுக்குள் செல்லக் கூடாது. உணவைத் தவிர்க்க வேண்டும் என்றே, பலர் அதிக நேரம் தூங்கிவிட்டு, மதியம் எழுந்து உண்கின்றனர். இது தவறு.

இரண்டு வேளை முழு உணவு, ஒரு வேளை ஸ்நாக்ஸ் எடுக்க வேண்டும். இருவேளை உணவிலும் நிச்சயம் புரோட்டீன் இருக்க வேண்டும். அப்போதுதான் உடலுக்குத் தேவையான புரதம் கிடைக்கும். சிறிதளவு கார்போஹைட்ரோட் எடுக்கலாம். ஒரு கப் சாதம் அல்லது சப்பாத்தி அல்லது தோசை எடுக்கலாம். இன்னொரு கப்பில் பருப்பு, முட்டை, மீன், இறைச்சி எடுக்க வேண்டும். அதற்கு இரு மடங்கு காய்கறிகள் எடுக்க வேண்டும்.

காபி அல்லது டீ, சுண்டல் ஆகியவற்றை ஸ்நாக்ஸ் ஆக எடுக்கலாம்.

உடற்பயிற்சி செய்து தசை இழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தோல் தளர்ந்து வயதானவர் போன்ற தோற்றம் ஏற்படும்.

இந்த முறையை தவறாக பின்பற்றினாலோ என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டாலோ எதிர்பார்க்கும் விளைவுகள் இருக்காது, ஆபத்தில்தான் முடியும்.

நெஞ்செரிச்சல் இருப்பவர்கள் இதனை பின்பற்றக் கூடாது. சிஜிஎம் மூலம் சர்க்கரை அளவை கண்காணித்துதான் பின்பற்ற வேண்டும். சர்க்கரை அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள், மருத்துவர்கள் மற்றும் சத்துணவு நிபுணர் இருவரையும் ஆலோசித்துத்தான் நிச்சயம் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மிகவும் வயதானவர்களுக்கு செரிமான பிரச்னைகள் ஏற்கனவே இருக்கும். அவர்களும் இதனை எடுக்கக் கூடாது, என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தரணி கிருஷ்ணன்.

https://www.bbc.com/tamil/articles/c9945q5w5p8o

பால் குடிப்பது நல்லதா? யாரெல்லாம் பால் குடிக்கக் கூடாது?

1 week 5 days ago
பால், மனித உடலுக்கு ஏற்ற பானமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 6 மார்ச் 2024, 02:40 GMT
    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

'எங்கள் நிறுவனத்தின் பிஸ்கட்டில் அதிக பால் உள்ளது, எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பை பாலில் கலந்து குடித்தால் உங்கள் பிள்ளைகள் பல சாதனைகளைப் புரிவார்கள்' போன்ற பால் தொடர்பான பல விதமான விளம்பரங்களை பல வருடங்களாக தொலைக்காட்சியில் பார்த்திருப்போம்.

உலகிலேயே அதிகமாக பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா தான். 2022-23ஆம் ஆண்டில் இந்திய நாட்டின் மொத்த பால் உற்பத்தி 230.58 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

மாட்டுப்பால் என்பது மனித உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான, ஆரோக்கியமான ஒரு பானம் என்ற கருத்து இந்திய சமூகத்தில் பரவலாக உள்ளது. இரவில் ஒரு கிளாஸ் பால் குடித்துவிட்டு தூங்குவதை பலர் ஒரு தினசரி பழக்கமாக கடைபிடிக்கின்றனர்.

ஒரு குறிப்பிட்ட குழந்தைப் பருவத்தைக் கடந்த பிறகு, மனிதனைத் தவிர வேறு எந்த மிருகமும் வாழ்நாள் முழுவதும் பால் குடிப்பதில்லை, குறிப்பாக வேறு மிருகத்தின் பாலை.

பால் என்பது தினமும், எல்லோரும் குடிக்கக்கூடிய ஒரு பானம் தானா? அதிலுள்ள சத்துக்கள் என்ன? தினசரி எவ்வளவு பால் எடுத்துக்கொள்ளலாம்? யாரெல்லாம் பால் குடிக்கக்கூடாது? போன்ற பல கேள்விகளுக்கான பதிலே இந்தக் கட்டுரை.

 
பால், மனித உடலுக்கு ஏற்ற பானமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அசைவம் சாப்பிடுவோருக்கு பால் அவசியமா?

பால் என்பது கால்சியம், புரதம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்த ஒரு பானம் தான், ஆனால் அசைவ உணவை போதுமான அளவு எடுத்துக் கொள்பவர்களுக்கு பாலை உணவில் சேர்த்துக் கொள்ளாவிட்டாலும் எந்த பிரச்னையும் ஏற்படாது என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமார்.

"புதிய கற்காலத்தின் போது மனிதர்களுக்கு பல விதமான சத்துக் குறைபாடுகள் இருந்தன. எனவே அதை பூர்த்தி செய்ய, கால்நடைகளை அதிகம் வளர்த்து, கிடைக்கும் பாலை தினமும் அருந்தும் வழக்கம் தோன்றியது. அந்த காலத்தில் விவசாய பொருட்களை மட்டுமே நம்பி இருக்க முடியாத நிலை இருந்ததால் தோன்றிய இந்த பழக்கம், 10,000 வருடங்களாக சமூகத்தில் தொடர்கிறது. இப்போது நமது டயட்டை சரியாக திட்டமிட்டால், பால் அவசியமில்லை" என்கிறார் மருத்துவர் அருண் குமார்.

"சைவ உணவுகளை மட்டுமே உண்பவர்கள் கண்டிப்பாக பால் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பிட்ட அளவு உள்ளது. எல்லோருக்கும் பால் ஒத்துக்கொள்ளுமா என்று கேட்டால், இல்லை. காரணம் பாலில் லாக்டோஸ் எனும் சர்க்கரை உள்ளது. அதை ஜீரணிக்க நமது குடலில் லாக்டேஸ் எனும் என்சைம் இருக்க வேண்டும். இந்த என்சைம் இல்லையென்றால் பல உடல்நலக் கோளாறுகள் உண்டாகும்" என்கிறார் மருத்துவர்.

 
பால், மனித உடலுக்கு ஏற்ற பானமா

பட மூலாதாரம்,DOCTORARUNKUMAR/FACEBOOK

படக்குறிப்பு,

குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமார்

பாலில் உள்ள சத்துக்கள் என்ன?

"பொதுவாக பால் என்றாலே அதிகமாக எடுத்துக்கொள்ளப்படுவது பசும்பால் தான். அதற்கடுத்து எருமைப் பால். கலோரிகளைப் பொறுத்தவரை நூறு கிராம் பசும்பாலில் 67 கலோரிகள் உள்ளது, ஆனால் எருமைப் பாலில் 117 கலோரிகள் உள்ளது. இதனால் தான் எருமைப் பால் தொடர்ந்து குடித்தால் உடல் எடை கூடுகிறது" என்கிறார் மருத்துவர் அருண் குமார்.

"நூறு கிராம் பசும்பாலில் கால்சியம் சத்து 120 என்ற அளவிலும், எருமைப் பாலில் 210 என்ற அளவிலும் உள்ளது. புரதங்களைப் பொறுத்தவரை பசும்பாலில் 3.2 என்ற அளவிலும், எருமைப் பாலில் 4.3 என்ற அளவிலும் உள்ளது. ஆனால் இது கேசின் புரதம், அதாவது இவ்வகை புரதங்கள் ஜீரணத்திற்கு உகந்தவை அல்ல. இதனால் தான் நமது குடலில் லாக்டேஸ் என்சைம் இல்லையென்றால் பல உடல்நலப் பிரச்னைகள் உண்டாகும் என முன்னர் கூறியிருந்தேன்.

அதே போல கொழுப்பைப் பொறுத்தவரை பசும்பாலில் 4.1, எருமைப் பாலில் 6.5. எனவே எருமைப்பாலில் தான் சத்துக்கள் அதிகமாக உள்ளன" என்கிறார் மருத்துவர்.

பால், மனித உடலுக்கு ஏற்ற பானமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இயற்கையாக பால் என்பது பெரியவர்கள் குடிக்கக்கூடிய பானமாக இருந்ததில்லை என்கிறார் மருத்துவர் அருண் குமார்.

யாரெல்லாம் பால் குடிக்கக்கூடாது?

தொடக்கத்தில் இந்த லாக்டேஸ் என்சைம் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளிடம் மட்டுமே இருந்ததாகவும், ஆனால் மனிதனின் தினசரி பால் அருந்தும் பழக்கத்தால் காலப்போக்கில் மனித உடல் தன்னை மாற்றிக்கொண்டது எனவும், எனவே இயற்கையாக பால் என்பது பெரியவர்கள் குடிக்கக்கூடிய பானமாக இருந்ததில்லை என்கிறார் மருத்துவர் அருண் குமார்.

"பால் என்பது அஜீரணக் கோளாறுகளுடன் நேரடி தொடர்புடையது. சிலர் மிகவும் சாதாரணமாக தினமும் ஒரு லிட்டர் பால் வரை குடிப்பார்கள். ஆனால் லாக்டோஸ் அலர்ஜி இருப்பவர்களுக்கு அரை கிளாஸ் பால் குடித்தால் கூட வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் பிற வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். இவர்கள் பாலை தவிர்க்க வேண்டும்." என்கிறார் மருத்துவர்.

"மாட்டுப்பாலில் அதிகளவு சத்துக்கள் உள்ளதால் இதை குழந்தைகளுக்கு கொடுப்பதால் எடை கூடும் தான், ஆனால் அதை மட்டுமே கொடுப்பது நல்லதல்ல. சில குழந்தைகள் மாட்டுப்பாலை குடித்துவிட்டால் வேறு உணவுகளை தவிர்த்து விடுவார்கள். அது ஆபத்தானது, ஏனென்றால் மாட்டுப்பாலில் இரும்பு சத்து மிகவும் குறைவாக உள்ளது."

"ஒரு குழந்தை 13 லிட்டர் பால் குடித்தால் தான் ஒரு நாளுக்கு தேவையான இரும்பு சத்தைப் பெற முடியும். அவ்வளவு பால் குடிப்பது சாத்தியமில்லை. அது மட்டுமில்லாது பாலில் இருக்கும் அதிகப்படியான கால்சியம் கிடைக்கும் சிறிதளவு இரும்பு சத்தையும் பாதியாக குறைத்து விடும். எனவே ரத்தசோகை ஏற்படும்" எனக் கூறுகிறார் மருத்துவர் அருண் குமார்.

"ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தவிர சிறந்த உணவு வேறு எதுவும் இல்லை. ஆனால் சில குழந்தைகளுக்கு நான்கு மாதத்தில் கூட மாட்டுப்பால் கொடுக்கிறார்கள். இதனால் புரதம் சார்ந்த அலர்ஜி ஏற்பட்டு, வயிற்றில் இரத்தக் கசிவு ஏற்படும் வாய்ப்பு கூட உள்ளது. நீர்சத்து குறைபாடு முதல் சிக்கல்கள் உண்டாக வாய்ப்புள்ளது. 2 வயதுக்கு மேல் தான் மாட்டுப்பாலை நன்றாக ஜீரணிக்கும் சக்தி அவர்களுக்கு வரும்" என்கிறார் மருத்துவர் அருண் குமார்.

 
பால், மனித உடலுக்கு ஏற்ற பானமா
படக்குறிப்பு,

ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்

தினசரி எவ்வளவு பால் குடிக்கலாம்?

சில ஆண்டுகளுக்கு முன்பு 'கிரிக்கெட் வீரர் தோனிக்கு மிகவும் பிடித்த பானம் பால். தினமும் நான்கு லிட்டர் பசும்பால் குடிப்பதால் தான் அவரால் எளிதாக ஹெலிகாப்டர் ஷாட்களை அடிக்க முடிகிறது' என்ற செய்தி இணையத்தில் பரவியது. இதற்கு ஒரு பேட்டியில் பதிலளித்த தோனி, தான் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பால் வரை மட்டுமே எடுத்துக்கொள்வதாக கூறியிருந்தார்.

"தோனியைப் போல அனைவராலும் 1 லிட்டர் பாலை தினசரி எடுத்துக்கொள்ள முடியாது. அவர் செய்யும் உடற்பயிற்சிக்கு அது சரியாக இருக்கலாம். சராசரி மனிதர்களுக்கு அது ஆரோக்கியமானது அல்ல, ஆனால் 400 மில்லி வரையிலான பால் அல்லது 400 கிராம் தயிர் நிச்சயமாக எடுத்துக்கொள்ளலாம்" என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.

"இப்போது பல குடும்பங்களில் வாரத்தில் இரண்டு அல்லது ஒரு நாள் மட்டும் தான் அசைவ உணவு எடுத்துக்கொள்கிறார்கள். எனவே அவர்களுக்கு தினமும் பால் எடுத்துக்கொள்வது நல்லது தான். ஆனால் முதியவர்களுக்கு பால் தொடர்பான அஜீரணக் கோளாறுகள் இருந்தால், மோராக 400 மில்லி வரை எடுத்துக்கொள்ளலாம்." என்கிறார் அவர்.

பால், மனித உடலுக்கு ஏற்ற பானமா

பட மூலாதாரம்,SARAVANAKUMARM/FACEBOOK

படக்குறிப்பு,

ஹோமியோபதி மருத்துவர் சரவண குமார்.

பாலுடன் சர்க்கரை சேர்த்து குடிக்கலாமா?

"காலையில் 200 மில்லி, இரவில் 200 மில்லி என ஒரு நாளுக்கு 400 மில்லி வரை பாலை எடுத்துக்கொள்வது பாதுகாப்பான அளவு. ஆனால் பாலில் சர்க்கரை கலந்து குடிப்பதை தவிர்க்க வேண்டும். பாலில் ஏற்கனவே போதுமான அளவு கலோரிகள் உள்ளதால், தொடர்ந்து பல வருடங்களுக்கு பாலில் சர்க்கரை சேர்த்து குடிப்பது உடலுக்கு ஆபத்தாக மாறிவிடும்" என எச்சரிக்கிறார் ஹோமியோபதி மருத்துவர் சரவண குமார்.

"உதாரணமாக ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்து இருவேளை பால் குடிக்கிறோம் என்றால், ஒரு நாளுக்கு 40 கிராம் சர்க்கரை. அதுவே ஒரு மாதத்திற்கு என கணக்கு போட்டால் பாலுடன் மட்டுமே ஒரு கிலோவுக்கு அதிகமான சர்க்கரையை நாம் உட்கொள்கிறோம். குழந்தை பருவத்திலிருந்தே இதை செய்கிறோம் என்றால் சற்று யோசித்து பாருங்கள். எனவே சர்க்கரை இல்லாமல் பால் குடிப்பது ஒரு நல்ல வழியாக இருக்கும்"

"அல்சர், லாக்டோஸ் அலர்ஜி இருந்தால் கண்டிப்பாக பாலை தவிர்க்க வேண்டும். அஜீரணக் கோளாறுகள் இருந்தால் பால் அருந்தக் கூடாது. கால்சியம் சத்து பெறுவதற்கு பால் தவிர்த்து பார்த்தால், அசைவம் உண்பவராக இருந்தால் ஆட்டுக் கால் சூப், முட்டையின் வெள்ளைக் கரு, ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். நெய், வெண்ணெய், நிலக்கடலை, கீரைகள் ஆகியவையும் கால்சியம் நிறைந்த உணவுகள்" என்று கூறுகிறார் ஹோமியோபதி மருத்துவர் சரவண குமார்.

 
பால், மனித உடலுக்கு ஏற்ற பானமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏ1 அல்லது ஏ2 பால், எது சிறந்தது?

நாட்டு ரக மாடுகளின் ஏ2 ரக பால் புரதம் நிறைந்தது என்றும் ஏ1 ரகம் சார்ந்த வெளிநாட்டு மாடுகளின் பாலை தொடர்ந்து பருகி வந்தால் சர்க்கரை நோய் உட்பட பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்ற கருத்து உண்மையா என மருத்துவர் அருண்குமாரிடம் கேட்டோம்.

"இது தொடர்பான ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடந்துள்ளன. பாலில் உள்ள சில புரத அமைப்புகளில் வேறுபாடுகள் இருக்கிறது, ஆனால் ஏ1 பால் உடலுக்கு நல்லதல்ல என்பதற்கு எந்த வலுவான ஆதாரமும் இல்லை. நம் நாட்டு மாடுகளில் 98% ஏ2 ரக பாலை தரக்கூடியவை தான். எருமைப் பால் என்பது 100% ஏ2 தான். வெளிநாட்டு மாட்டினமான ஜெர்சி மாடுகள் கூட ஏ2 பாலை தான் கொடுக்கின்றன. சில வெளிநாட்டு இனங்கள் மட்டுமே ஏ1 ரக பாலைக் கொடுக்கின்றன." என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணனிடம் கேட்ட போது, "ஏ1 பாலா, ஏ2 பாலா என ஆராய்ச்சியெல்லாம் செய்யத் தேவையில்லை. கடைகளில் அல்லது பண்ணைகளில் கிடைக்கும் பாலை நன்கு காய்ச்சி குடித்தாலே போதும்" என்று கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cn3mg8rkxypo

குழந்தைகளின் வயிற்றுக்குள் குடற்புழுக்கள் வருவது எப்படி? அவற்றை எவ்வாறு நீக்க வேண்டும்?

2 weeks 1 day ago
குடற்புழு வருவது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஓம்கார் கர்ம்பேல்கர்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 3 மார்ச் 2024

குடற்புழுக்கள் ஒரு பெரிய பிரச்னை. அசுத்தமான உணவு மற்றும் தண்ணீர் மற்றும் பிற காரணங்களால் புழுக்கள் உடலில் நுழையலாம்.

மலத்தில் நீண்ட புழுக்கள் இருப்பது, வயிற்று வலி மற்றும் ஆசன வாயில் அரிப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளை ஆய்வு செய்த பிறகு நோய் கண்டறிதல் செய்யப்படுகிறது.

வயிற்றில் காணப்படும் இந்த புழுக்கள் இரைப்பை புழுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. வட்டப்புழுக்கள், தட்டைப்புழுக்கள் மற்றும் நாடாப்புழுக்கள் ஆகியவை இதில் அடங்கும்.

இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டுள்ளன. நமது ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைச் சுழற்சிகளில் அவற்றின் விளைவுகள் மாறுபடும்.

சாட்டைப்புழுக்கள் மற்றும் கொக்கிப்புழுக்கள் மண்ணின் வழியாக வயிற்றுக்குள் நுழைகின்றன.

புழுக்கள் எவ்வாறு பரவுகின்றன?
புழுக்கள் எவ்வாறு பரவுகின்றன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

புழு நோய்த்தொற்றுகள் பெரும்பாலும் கைகளை சரியாகக் கழுவாததால் ஏற்படுகின்றன.

புழுக்களின் முட்டைகள் மண்ணுடன் தொடர்பு கொள்வது, அசுத்தமான உணவு மற்றும் பானங்களை உட்கொள்வது புழுக்கள் வயிற்றுக்குள் நுழைவதற்கு வழிவகுக்கும்.

மோசமான கழிவுநீர் மேலாண்மை மற்றும் சுகாதாரமற்ற கழிப்பறைகள் உள்ள பகுதிகளிலும் இந்த தொற்று பரவுகிறது. வேக வைக்கப்படாத இறைச்சி மற்றும் புழுக்கள் உள்ள மீன்களை சாப்பிடுவதும் இந்த பிரச்னையை ஏற்படுத்தும். சில சமயங்களில் செல்லப் பிராணிகளுக்கு கூட தொற்று ஏற்படலாம்.

நூற்புழு தொற்று பல குழந்தைகளில் காணப்படுகிறது. நீளமான கயிறு போல் தோற்றமளிக்கும் இந்தப் புழுக்களின் முட்டைகள் வயிற்றில் நுழையும்போது பிரச்னை ஆரம்பமாகிறது. பின்னர் அவை ஆசன வாயில் முட்டைகளை இடுகின்றன.

இந்த முட்டைகளை ஆடை, பொம்மைகள், பல் துலக்குதல், சமையலறை, குளியலறை தரை, படுக்கையறை, உணவு ஆகியவற்றில் பரப்பலாம்.

இந்த பொருள்கள் மற்றும் மேற்பரப்புகளைத் தொட்ட பிறகு, அதே கையை வாயில் வைப்பது உடலுக்குள் நுழையலாம். வட்டப்புழுக்களின் முட்டைகள் சுமார் இரண்டு வாரங்கள் உயிர் வாழும்.

வயிற்றை அடைந்த பிறகு, முட்டைகள் லார்வாக்களாக உருவாகின்றன. ஓரிரு மாதங்களில் அவை நீண்ட கிருமிகளாக மாறிவிடும்.

 
புழுக்களை அழிக்க என்ன செய்ய வேண்டும்?
புழுக்களை அழிக்க என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, குழந்தைகள் மீண்டும் அத்தகைய மேற்பரப்பைத் தொட்டால் மீண்டும் தொற்று ஏற்படலாம்.

எனவே, குழந்தைகள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். கைகளை கழுவுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

புழுக்களை அழிக்க இதை செய்ய வேண்டும்

  • அனைவரும் கைகளை கழுவ வேண்டும், நகங்களை வெட்ட வேண்டும்.
  • சாப்பிடுவதற்கு முன், கழிப்பறைக்குச் சென்ற பிறகு, குழந்தைகளின் நாப்கின்களை மாற்றிய பின் கைகளைக் கழுவ வேண்டும்.
  • குழந்தைகள் அடிக்கடி கைகளை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தினமும் குளிக்க வேண்டும்.
  • துலக்குவதற்கு முன்னும் பின்னும் டூத் பிரஷ்களைக் கழுவவும்.
  • துண்டுகள் மற்றும் படுக்கை விரிப்புகளை சூடான நீரில் கழுவவும். பொம்மைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
  • சமையலறை மற்றும் குளியலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
 
குடற்புழு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இப்போது இந்தப் புழுக்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவைகள் அமைப்பு (என்.எச்.எஸ்.) இதற்கென சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

  • எதையும் சாப்பிடும் முன் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். மலம் கழித்த பின் கைகளை சோப்பினால் கழுவ வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட அல்லது பாட்டில் தண்ணீரைக் குடிக்க முயற்சி செய்யுங்கள்.
  • காய்கறிகள் மற்றும் பழங்களை நன்கு கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசிகள் போட வேண்டும். அவற்றின் கழிவுகளை விரைவில் அகற்ற வேண்டும்.
  • நாய், பூனை கழிவுகளுக்கு அருகில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது. தொற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள சுகாதாரமற்ற இடங்களில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்குவதைத் தவிர்க்கவும்.
  • அசுத்தமான இடங்களில் வெறுங்காலுடன் நடக்கக் கூடாது.
 
வயிற்றுப் புழுக்களை எவ்வாறு கண்டறிவது?
  • வயிற்றில் புழுக்கள் நுழைந்த பிறகு சில அறிகுறிகள் தோன்றும்.
  • வயிற்று வலி, குமட்டல், வாந்தி.
  • பெரும்பாலானவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. சிலர் மலச்சிக்கலால் அவதிப்படுவார்கள்.
  • பசியின்மை மற்றும் எடை இழப்பு போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.
  • பலவீனமாகி கடுமையான சோர்வை அனுபவிக்கிறார்கள்.
  • ஆசன வாயில் அரிப்பு மற்றும் தூக்கமின்மை. பெரியவர்களுக்கு வயிற்று வாயு. சில நோயாளிகள் இரத்த சோகைக்கு ஆளாகிறார்கள்.
டாக்டர் ரோஹித்

பட மூலாதாரம்,RK

வயிற்றுக் கிருமிகளை ஏன் அகற்ற வேண்டும்?

நம் உடலில் உள்ள பல்வேறு வகையான கிருமிகள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளைக் காட்டுகின்றன. பல வகையான பிரச்னைகள் சிரமத்திற்கு வழிவகுக்கும்.

இரத்த சோகை குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கிறது. ஊட்டச்சத்து குறைபாட்டின் அபாயத்துடன் கூடுதலாக, அவை உறுப்பு சேதத்தை ஏற்படுத்தும்.

இவற்றை தவிர்க்க உலக சுகாதார நிறுவனம் அடிக்கடி குடற்புழு நீக்கம் செய்ய பரிந்துரைக்கிறது.

டோம்பிவிலியில் உள்ள மதுசூதன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சுகாதார இயக்குநர் டாக்டர் ரோஹித் காகு, இந்த கிருமிகளை எப்படி அகற்றுவது என்று பிபிசியிடம் விளக்கினார்.

வயிற்றில் உள்ள கிருமிகளை அகற்ற, 12-23 மாத குழந்தைகளுக்கும், ஒன்று முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கும், 5-12 வயதுடைய ஆண் மற்றும் பெண்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை தடுப்பு கீமோதெரபி கொடுக்க வேண்டும்.

 
கிருமிகளை எவ்வாறு அகற்றுவது?

கிருமிகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல நோய்களை உண்டாக்குவதாக டாக்டர் ரோஹித் கூறினார்.

“ஆகவே ஆண்டுக்கு இருமுறை மருத்துவரின் ஆலோசனைப்படி பூச்சி விரட்டி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இந்த செயல்முறை இரண்டு வயது முதல் தொடங்கலாம். இந்த செயல்பாட்டில், உடலில் உள்ள ஒட்டுண்ணி வெளியேறுகிறது" என்று ரோஹித் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/c0jxz44p0jpo

மதுப்பழக்கம்: இளம் வயதிலேயே மது அருந்துவதால் ஏற்படும் அபாயகரமான பாதிப்புகள்

2 weeks 1 day ago
மதுப்பழக்கம்: இளம் வயதில் மது அருந்துவதால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நான் பல்கலைக்கழக படிப்புக்காக வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முந்தைய நாள் எனக்கு 18 வயதானது. பிரிட்டனில் மது வாங்குவதற்கான வயது வரம்பை நான் அப்போது கடந்திருந்தேன். எனது புதிய வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் நான் சென்றபோது, வாரத்திற்கு எத்தனை யூனிட் மது அருந்துவீர்கள் எனக் கேட்டார். பிரிட்டனில் 1.5 யூனிட் என்பது, தோராயமாக ஒரு சிறிய கோப்பை அளவிலான ஒயினுக்கு சமம். நான் தோராயமாக “ஏழு” என பதிலளித்தேன்.

"இந்த எண்ணிக்கை இனியும் உயரும்” என சிரிப்புடன் பதிலளித்தார். அதிக மது அருந்துவது, ஆயுட்காலம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும். ஆனால் 30, 40 அல்லது 50 வயதுடைய ஒருவருடன் ஒப்பிடும்போது எனது இளமை கூடுதல் ஆபத்துகளைக் கொண்டுவரும் என்று நான் கருதவில்லை. எல்லா பெரியவர்களுக்கும் மதுவால் ஏற்படும் ஆபத்துகள் ஒரே மாதிரியாக இருக்குமா?

மதுபானம் இளம் பருவத்தினரின் மூளையை எப்படி பாதிக்கும் என்பது குறித்து எனக்கு இப்போது தெரிந்த விஷயங்களை முன்கூட்டியே நான் அறிந்திருந்தால், நான் சற்று எச்சரிக்கையாக இருந்திருப்பேன். இளம் வயதில் மது அருந்துவது நமது அறிவாற்றல் வளர்ச்சியில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்.

இளைஞர்களிடையே மதுவின் தாக்கம் பற்றி ஆராய்ச்சியாளர்களிடம் பேசுகையில், அதுகுறித்து எனக்குத் தெரியவந்த தகவல்கள் என்னை ஆச்சரியப்படுத்தியது. பிரிட்டன் அல்லது அமெரிக்காவைவிட ஐரோப்பியர்கள் ஆரோக்கியமான மதுப்பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

மேலும் இளைஞர்களை வீட்டில் உணவுடன் மது அருந்த அனுமதிப்பது அவர்களுக்கு பொறுப்புடன் மது அருந்த கற்பிக்கிறது. ஆனால், மதுவின் தாக்கம் ஏற்படுத்தும் பிரச்னைகள் குறித்து அறிந்துகொள்வது, தங்கள் வீட்டில் மதுவை எவ்வாறு கையாள்வது என்பதைப் பெற்றோர்கள் தீர்மானிக்க உதவலாம்.

 
மூளையை சென்றடையும் ஆல்கஹால்
உடல்நலம்: இளம் வயதிலேயே மது அருந்துவதால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?

பட மூலாதாரம்,JAVIER HIRSCHFELD/BBC/GETTY IMAGES

ஆல்கஹால் ஒரு நச்சு. கல்லீரல் நோய் மற்றும் பல வகையான புற்றுநோய்கள் இதனால் ஏற்படுகின்றன. "மது அருந்தும்போது, ஆரோக்கியத்தைப் பாதிக்காத பாதுகாப்பான அளவு என்று எதுவும் இல்லை" என உலக சுகாதார மையம் கூறுகிறது.

மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுப்படுத்த பல நாடுகளில் சில வரம்புகள் உள்ளன. அமெரிக்காவில் ஆண்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு பானங்களுக்கு மேல் இல்லை என்றும், பெண்களுக்கு ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பானங்கள் இல்லை என்றும் வரையறுக்கப்படுகிறது. பல நாடுகளும் இதேபோன்ற வழிகாட்டுதலை வழங்குகின்றன.

பீர் மற்றும் ஒயின் பொதுவாக பாதுகாப்பான பானங்களாகக் கருதப்பட்டாலும், அமெரிக்க வழிகாட்டுதலின்படி, பானத்தின் வகையைக் காட்டிலும் அதில் உள்ள ஆல்கஹால் அளவுதான் பிரச்னை. "12-அவுன்ஸ் பீரில், ஐந்து-அவுன்ஸ் அளவு கோப்பை ஒயின் அல்லது 1.5-அவுன்ஸ் மதுபானத்தில் இருக்கும் ஆல்கஹால் இருக்கிறது." பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில், மது வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது 18. அமெரிக்காவில் 21 வயது.

எவ்வாறாயினும், இளம் வயதினருக்கு மதுபானம் மிகவும் ஆபத்தானது என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இளம்பருவத்தினர் 21 வயது வரை தங்கள் வயது உயரத்தை எட்ட மாட்டார்கள், மேலும் அவர்கள் செங்குத்தாக வளர்வதை நிறுத்திய பின்னரும்கூட, 30 அல்லது 40 வயதையொட்டியவர்களின் உடலமைப்பை அடைந்திருக்க மாட்டார்கள்.

"ஒரு கோப்பை மது அருந்துவதால், பெரியவர்களைவிட இளைஞர்களுக்கு ரத்தத்தில் அதிகளவு ஆல்கஹால் சேர்கிறது" என்று மாஸ்ட்ரிச் பல்கலைக் கழகத்தின் முதுகலை ஆராய்ச்சியாளரும் மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயதை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்பவருமான ரூட் ரூட்பீன் கூறுகிறார்.

இளம் பருவத்தினரின் ஒல்லியான தேகமும் இதற்கு ஒரு காரணம். நீங்கள் மது அருந்தும்போது, அது உங்கள் ரத்த ஓட்டத்தில் நுழைந்து உங்கள் உடலில் பரவுகிறது. ஐந்து நிமிடங்களுக்குள் அது உங்கள் மூளையை அடைந்து, பொதுவாக உங்கள் மூளையை தீங்கு விளைவிக்கும் பொருட்களில் இருந்து பாதுகாக்கும் தடையை எளிதில் கடந்துவிடும்.

"இளைஞர்கள் மது அருந்தும்போது அதன் பெரும்பகுதி அவர்களின் மூளையைச் சென்றடைகிறது. இது, இளைஞர்கள் ஆல்கஹால் நச்சுத்தன்மையைப் பெறுவதற்கான மற்றொரு காரணம்" என்று ரூட்பீன் கூறுகிறார்.

 
'மோசமான நடத்தைக்கு வழிவகுக்கும்'
உடல்நலம்: இளம் வயதிலேயே மது அருந்துவதால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?

பட மூலாதாரம்,JAVIER HIRSCHFELD/BBC/GETTY IMAGES

மண்டை ஓட்டில் ஏற்படும் மாற்றங்களையும் கவனிக்க வேண்டும். கடந்த காலத்தில், நமது பதின்பருவத்தில் நரம்பு வளர்ச்சி நின்றுவிடும் என்று கருதப்பட்டது. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சியின்படி, இளம்பருவ மூளையானது ஒரு சிக்கலான மறுபின்னலுக்கு உட்படுகிறது, அது குறைந்தது 25 வயது வரை முடிவடையாது.

ஒரு செல் மற்றொன்றுடன் தொடர்புகொள்ள அனுமதிக்கும் ஒத்திசைவுகளை மூளை கத்தரிக்கும்போது "கிரே மேட்டர்" எனப்படும் சாம்பல் நிற திசுக்களைக் குறைப்பது, ஆல்கஹாலின் மிக முக்கியமான விளைவுகளுள் ஒன்று என அவர் கூறுகிறார்.

மூளையில் நடத்தை மற்றும் உணர்வுகளுடன் தொடர்புடைய லிம்பிக் அமைப்பு முதலில் முதிர்ச்சியடைகிறது. நெற்றிக்குப் பின்னால் அமைந்துள்ள ப்ரீஃப்ரன்டல் கோர்டெக்ஸ் எனப்படும் முன்புறணி வளரும் வேகம் மெதுவாக இருக்கும். இந்தப் பகுதி, உணர்ச்சிக் கட்டுப்பாடு, முடிவெடுத்தல் மற்றும் சுய கட்டுப்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடையது.

இந்த இரண்டு பிராந்தியங்களின் வளர்ச்சியின் ஒப்பீடு, இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் ஏன் பெரியவர்களைவிட அதிக ஆபத்தைச் சந்திக்கிறார்கள் என்பதை விளக்கலாம். குறிப்பாக, உற்சாகமான பதின்ம வயதினருக்கு, ஆல்கஹால் மோசமான நடத்தை மற்றும் குற்றத்தின் சுழற்சியை உருவாக்கும் .

"அதாவது, அதிக மனக்கிளர்ச்சி கொண்ட இளம் பருவத்தினர் அதிகமாகக் குடிக்க முனைகிறார்கள், பின்னர் குடிப்பது மேலதிக மனக் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது," என்கிறார், சௌத் கரோலினா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் உளவியலாளர் லிண்ட்சே ஸ்குக்லியா.

இளம்பருவத்தினரின் மதுப்பழக்கம் நீண்டகால வளர்ச்சியை பாதிக்கலாம். பல ஆய்வுகள், ஆரம்பக்கால மதுப்பழக்கம் சாம்பல் நிற திசுக்கள் மிக விரைவாகக் குறைவதுடன் தொடர்புடையது என்று சுட்டிக்காட்டுகின்றன. அதே நேரத்தில் வெள்ளை நிற திசுக்களின் வளர்ச்சியும் தடைபடுகிறது," என்கிறார் அவர்.

அறிவாற்றல் சோதனைகளில் விளைவுகள் உடனடியாகத் தெரிவதில்லை; இளம் பருவத்தினரின் மூளையில், சிக்கலைத் தீர்ப்பதற்குப் பொறுப்பான பகுதிகள் பற்றாக்குறையை ஈடுசெய்யச் சிறிது கடினமாக உழைக்கலாம். இருப்பினும் இது என்றென்றும் நீடிக்காது. "பல வருட மதுப்பழக்கத்திற்குப் பிறகு, மூளையில் குறைவான செயல்பாடு மற்றும் மோசமான செயல்திறன் ஆகியவற்றைக் காண்கிறோம்," என்கிறார் ஸ்குக்லியா.

ஆரம்பக்கால மதுப்பழக்கம் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். மேலும் எதிர்கால வாழ்க்கையில் மதுவைத் தவறாகப் பயன்படுத்துவதன் அபாயத்தை அதிகரிக்கிறது. குடும்பத்தில் ஏற்கெனவே மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு இது அதிகளவில் ஏற்படுகிறது.

 
ஐரோப்பிய மதுப்பழக்கம் ஆரோக்கியமானதா?
உடல்நலம்: இளம் வயதிலேயே மது அருந்துவதால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?

பட மூலாதாரம்,JAVIER HIRSCHFELD/BBC/GETTY IMAGE

இந்தக் கண்டுபிடிப்புகள் ஓர் இளம் பருவத்தினரின் தேர்வுகளை எவ்வாறு பாதிக்கலாம்? எப்படி, எப்போது வீட்டில் குடிக்க அனுமதிக்க வேண்டும் என்பது பற்றிய பெற்றோரின் முடிவு என்னவாக இருக்க வேண்டும்?

"முடிந்தவரை மதுப்பழக்கத்தைத் தொடங்கும் வயதைத் தாமதமாக்க வேண்டும். ஏனெனில் உங்கள் மூளை பதின்பருவத்தில் இன்னும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. மதுப்பழக்கத்தை தொடங்குவதற்கு முன் உங்கள் மூளை முடிந்தளவு ஆரோக்கியமாக இருக்கட்டும்," என்கிறார் அவர்.

இந்த அறிவுரை சட்டத்தில் இணைக்கப்பட வேண்டுமா என்பது வேறு விஷயம். மது அருந்துதல் பற்றிப் பொது வெளிகளில் தாம் பேசும்போது, "ஐரோப்பிய மதுப்பழக்க மாதிரி" குறித்துக் கேள்வி எழுப்பப்படுவதாக ஸ்குக்லியா கூறுகிறார். பிரான்ஸ் போன்ற சில நாடுகளில், சிறார்களுக்கு ஒரு கிளாஸ் ஒயின் அல்லது பீர், குடும்ப உணவுடன் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

ஐரோப்பாவிற்கு வெளியேயும்கூட, கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் மதுவை மெதுவாக அறிமுகப்படுத்துவது இளைஞர்களுக்குப் பாதுகாப்பாக மது அருந்த கற்றுக் கொடுக்கிறது என்றும், பிற்காலத்தில் அதிகமாக மது அருந்துவதைக் குறைக்கிறது என்றும் பல பெற்றோர்கள் நம்புகிறார்கள்.

இதுவொரு கட்டுக்கதை. "ஆல்கஹாலை பயன்படுத்துவதில் பெற்றோர்கள் எவ்வளவு அதிகமாக அனுமதிக்கிறார்களோ, அந்த அளவுக்கு ஒரு சிறார் பிற்காலத்தில் மதுவால் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும் என்று ஆராய்ச்சிகள் சுட்டிக் காட்டுகின்றனர்" என்கிறார் ஸ்குக்லியா. "இளமைப் பருவத்தில் மது அருந்துவது தொடர்பான கடுமையான விதிகளைப் பெற்றோர்கள் விதிப்பது மதுபழக்கம் மற்றும் அதுதொடர்பான ஆபத்தான நடத்தைகளுடன் பெருமளவில் தொடர்புடையது," என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

ஆஸ்திரியாவில் உள்ள ஜோஹன்னஸ் கெப்லர் பல்கலைக்கழக லின்ஸில் அலெக்சாண்டர் அஹம்மர் மேற்கொண்ட ஆய்வைக் கவனியுங்கள். அங்கு 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் சட்டப்பூர்வமாக பீர் அல்லது ஒயின் வாங்கலாம். கடுமையான சட்டங்கள் மது அருந்துவதற்கான விருப்பத்தை மட்டுமே அதிகப்படுத்தினால், அமெரிக்காவைவிட ஆஸ்திரியா ஆரோக்கியமான மதுப்பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். அங்கு மது அருந்துவதற்கான குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயது 21. ஆனால் இது விஷயமல்ல.

உடல்நலம்: இளம் வயதிலேயே மது அருந்துவதால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?

பட மூலாதாரம்,JAVIER HIRSCHFELD/BBC/GETTY IMAGES

இரு நாடுகளிலும் ஒருவர் குறைந்தபட்ச வயதைக் கடந்த பிறகு அதிகமாக மது அருந்துகின்றனர். "ஆனால் இந்த எண்ணிக்கை, அமெரிக்காவில் 21 வயதில் இருந்ததைவிட ஆஸ்திரியாவில் 16 வயதில் 25% அதிகமாக இருந்தது," என்று அலெக்சாண்டர் அஹம்மர் கூறுகிறார்.

அமெரிக்கர்கள் மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயது சற்று அதிகமாக இருப்பது, மதுபானங்களை வாங்க அனுமதிக்கப்படும்போது மிகவும் பொறுப்பான நடத்தையை ஊக்குவித்ததாகத் தோன்றியது.

"ஆல்கஹால் சட்டப்பூர்வமாக மாறும்போது, பதின்வயதினர் முன்பைவிட மிகவும் குறைவான அபாயத்திற்கு ஆளாகின்றனர்," என்று அஹம்மர் கூறுகிறார். 16 வயதில், அத்தகைய தவறான பாதுகாப்பு உணர்வு ஆபத்தானதாக இருக்கலாம், அதேநேரம் 21 வயதில், அதிக முதிர்ச்சியடைந்த மூளை மதுபானத்தைக் கையாளுவதற்கு ஓரளவு சிறப்பாக மாறியுள்ளது.

ஐரோப்பிய மதுப்பழக்கம் ஆரோக்கியமானது என்பது முற்றிலும் உண்மையில்லை. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஐரோப்பிய பிராந்தியத்தில் ஆல்கஹால் காரணமாக ஏற்படும் புற்றுநோய்களில் மிதமான ஆல்கஹால் உட்கொள்வதால் ஏற்படுகிறது என்று தரவு சுட்டிக்காட்டுகிறது.

அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில், அரசாங்கங்கள் சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயதை 25 அல்லது அதற்கு மேல் அமைக்க வேண்டுமா? தனிப்பட்ட சுதந்திரம் பற்றிய மக்களின் கருத்துகளுக்கு எதிராக பொது சுகாதார நலன்கள் சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதால், இது அவ்வளவு எளிதல்ல என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

"ஒரு கட்டத்தில் மக்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்க வேண்டும்" என அஹம்மர் ஒப்புக்கொள்கிறார்.

இளம் பருவத்தினருக்கு மதுவின் அபாயங்கள் மற்றும் மதுவால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சிறந்த கல்வியை வழங்கலாம் என்று, ஹாமில்டனில் உள்ள மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் போதைக்கு அடிமையாதல் குறித்து ஆய்வு செய்து வரும் ஜேம்ஸ் மெக்கிலாப் பரிந்துரைக்கிறார்.

நீண்ட கால உடல்நல அபாயங்களை அறிந்திருந்தும், இன்றும் நான் மது அருந்துகிறேன். ஆனால் சுற்று கூடுதலாக மதுபானங்களை வாங்குவதற்கு முன் நான் இரண்டு முறை யோசிக்க இவை வழிவகுக்கலாம்.

*டேவிட் ராப்சன் விருது பெற்ற அறிவியல் எழுத்தாளர். அவரது அடுத்த புத்தகம் `தி லாஸ் ஆஃப் கனெக்‌ஷன்: தி டிரான்ஸ்ஃபர்மேட்டிவ் சயின்ஸ் ஆப் பீயிங் (The Laws of Connection: The Transformative Science of Being Social), ஜூன் 2024இல் கனோகேட் (பிரிட்டன்) மற்றும் பெகாசஸ் புக்ஸ் (அமெரிக்கா&கனடா) ஆகியவற்றால் வெளியிடப்படும்.

https://www.bbc.com/tamil/articles/cndj3xd229yo

பள்ளி மாணவர், இளைஞர்களுக்கு முதுகுவலி வருவது ஏன்?

2 weeks 4 days ago
பள்ளி மாணவர், இளைஞர்களுக்கு முதுகுவலி வருவது ஏன்? மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?
முதுகு வலி வருவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் உடல் சார்ந்து அதிக பிரச்னைகளை கூறுவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஒருகாலத்தில் முதுமையின் ஒரு அங்கமாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த முதுகுவலி, மூட்டு வலியெல்லாம் இப்போது பள்ளி குழந்தைகளுக்கே ஏற்படுவதையும் நாம் பார்க்கிறோம்.

இதற்கு வாழ்க்கை முறை மாற்றம், உணவுமுறை, மரபணு சார்ந்த பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 20 முதல் 30 வயதுள்ள இளைஞர்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் கூட முதுகு வலி ஏற்படுவதற்கான உண்மை காரணங்கள் என்ன? அதை எப்படி வருமுன் காப்பது என்பதை பார்க்கலாம்.

முதுகுவலி

பட மூலாதாரம்,VIJAYARAGHAVAN G

படக்குறிப்பு,

முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் விஜயராகவன்

முதுகு வலியோடு வளரும் தலைமுறை

பொதுவாகவே வளரிளம் பருவம் என்பது உடலுறுப்புகள் அனைத்தும் வலுவான அமைப்பை பெறுவதற்கான காலம் என்று கூறப்படுகிறது. அதிலும் பதின்ம வயது காலகட்டம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால், வளரிளம் முன் பருவமான 9 வயதில் இருந்தே பலருக்கும் முதுகு வலி போன்ற பிரச்னைகள் ஏற்படுவதை பார்க்க முடிகிறது.

அதிலும் 20 வயது முதல் 30 வயது வரை இருக்கும் பெரும்பாலான இளைஞர்கள், குறிப்பாக அதிகம் உடல்சார் வேலையில் ஈடுபடாமல், மூளைசார் பணியில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்கு இந்த பிரச்னை அதிகம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசுவதற்காக எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் விஜயராகவன் அவர்களை அணுகினோம். அவர் கூறும் தகவல்கள் சில உங்களுக்கு அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தை அளிக்கலாம்.

 
முதுகுவலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

“முதுகுவலி வருவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன"

முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

தற்போது பலருக்கும் ஏற்படும் முதுகுவலியை “மெக்கானிக்கல் பேக் பெயின்” என்று குறிப்பிடும் அவர், இவர்களில் 80% பேருக்கு பரிசோதனை செய்து பார்த்தால் எந்த பிரச்னையும் இருக்காது என்கிறார்.

இதுகுறித்து விவரிக்கையில், “ முதுகுவலி வருவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று அவர்களது வாழ்க்கை முறை. நீண்ட நேரம் எந்த வித உடல்ரீதியான செயல்பாடுகளும் இல்லாமல், அமர்ந்து கொண்டே இருப்பது. இரண்டாவது, அவர்கள் அமர்ந்திருக்கும் நிலை தவறாக இருக்கலாம்” என்கிறார்.

“இதில் வெகுசிலருக்கே டிஸ்க் சார்ந்த காரணங்கள் இருக்கும். டிஸ்க் என்பது முதுகெலும்புகளுக்கு இடையில் இருக்கும் சவ்வு அமைப்பு. பொதுவாக கீழ் முதுகின் வேலையே மேலே இருக்கும் உடலை தாங்குவதுதான். இதற்கு எலும்பு, தசை, மூட்டு ஆகியவை இணைந்து பணியாற்றும். ஆனால், நீண்ட நேரம் அமர்ந்தே இருக்கும்போது இவை எதுவுமே பணியாற்றாமல், ஒட்டுமொத்த சுமையும் ஜவ்வுகளின் மீது போடப்படுவதால், அது கிழிதல் அல்லது பலவீனமடைதல் போன்ற பிரச்னைகளை சந்திக்கிறது. இதனால் கூட 15% பேருக்கு முதுகுவலி ஏற்படுகிறது.”

 
முதுகுவலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

வாகனம் ஓட்டுபவர்களுக்கும், வெவ்வேறு பணி செய்பவர்களுக்கும் வழிமுறைகள் உள்ளன. அதைப் பின்பற்றினால் மட்டுமே ஆரோக்கியமாக முதுகை பராமரிக்க முடியும்.

எப்படி அமர வேண்டும்?

மருத்துவர் கூற்றுபடி, இயற்கையாகவே உங்களது முதுகுத்தண்டில் கழுத்துப்பகுதி, நடுமுதுகு, கீழ்முதுகு என வளைவுகள் உள்ளன. நீங்கள் சரியாக அமராத போது அவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை தவிர்க்க கீழ் உள்ள வழிமுறைகளை அடிப்படையாக பின்பற்ற வேண்டும்.

  • லேப்டாப் போன்ற கணினி முன் பணியாற்றுபவர்கள் திரையில் தெரியும் முதல் வரிக்கு நேராக உங்கள் கண்கள் இருக்குமாறு அமர வேண்டும்.
  • நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது உங்களது கீழ் முதுகு நாற்காலியை தொட்டவாறு அமர வேண்டும். நாற்காலிக்கும், முதுகுக்கும் இடையில் இடைவெளி இருக்க கூடாது.
  • உங்களது தொடைப்பகுதி தரைக்கு இணையாக இருக்க வேண்டும்.
  • உங்களது முட்டி பகுதியில் இருந்து கால் வரை இருக்கும் தொலைவே, உங்கள் இருக்கைக்கும் தரைக்கும் இருக்க வேண்டும்.
  • இருக்கையில் அமரும்போது கைகளை விரித்த நிலையில் அமராமல், உடலோடு ஒட்டியவாறு அமர்ந்திருக்க வேண்டும்.
  • கீபோர்டு பயன்படுத்தும்போது மணிக்கட்டு, முன் கை உள்ளிட்ட மூன்றும் ஒரே வரிசையில் இருக்க வேண்டும்.

இதேபோல் வாகனம் ஓட்டுபவர்களுக்கும், வெவ்வேறு பணி செய்பவர்களுக்கும் வழிமுறைகள் உள்ளன. அதைப் பின்பற்றினால் மட்டுமே முதுகை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.

 
முதுகுவலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

“பள்ளி மாணவர்கள் சுமந்து செல்லும் புத்தகப்பையின் எடையும் அவர்களுக்கு முதுவலியை ஏற்படுத்தலாம்”

மாணவர்களுக்கு அதிகம் முதுகுவலி ஏற்படுவது ஏன்?

தற்போதைய காலகட்டத்தில் பெரியவர்கள், இளைஞர்களை தாண்டி பள்ளி முதல் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கும் அதிகம் முதுவலி ஏற்படுவதை பார்க்க முடிகிறது. இதற்கான காரணம் என்ற கேள்வியை மருத்துவர் விஜயராகவனிடம் முன்வைத்தோம்.

இதற்கு பதிலளித்த அவர், “இதுவும் உடல்சார் செயல்பாடுகளோடு தொடர்புடையது தான். இப்போதெல்லாம் மாணவர்கள் பெரிதும் விளையாடுவதில்லை. அதிகம் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இதனால், அவர்களின் உடல்சார் செயல்பாடு குறைகிறது. எனவே அவர்களது உடல்சார் செயல்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும்” என்கிறார்.

மேலும், “பள்ளி மாணவர்கள் சுமந்து செல்லும் புத்தகப் பையின் எடையும் அவர்களுக்கு முதுவலியை ஏற்படுத்தலாம்” என்கிறார் மருத்துவர் விஜயராகவன். இது மட்டுமில்லாமல் நோயெதிர்ப்பு குறைந்த குழந்தைகளுக்கும் இந்த பிரச்னை வருகிறது.

இந்தியாவில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் எவ்வளவு எடையுள்ள புத்தகப் பையை சுமந்து வர வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன. 2020 பரிந்துரைக்கப்பட்ட அந்த விதியின்படி, ஒரு மாணவர் தன்னுடைய எடையில் 10 சதவீத எடை கொண்ட புத்தகப்பையை மட்டுமே எடுத்து செல்ல வேண்டும்.

இதை குறிப்பிட்டு பேசிய மருத்துவர் புத்தகப் பையை எப்படி அணிந்து செல்ல வேண்டும் என்பதற்கே வழிமுறைகள் உள்ளதாக கூறுகிறார்.

மாணவர்களின் வலியை எப்படி குறைப்பது?
  • புத்தகப் பையை இரண்டு பக்கமும் மாட்ட வேண்டும்.
  • பையின் மேல்பகுதி உங்கள் தோள்பட்டைக்கு இணையாக இருக்க வேண்டும். சில பைகளில் இடுப்பில் கட்டிக்கொள்ளுமாறும் வசதி இருக்கும். அதையும் பயன்படுத்தினால் நல்லது.
  • பைக்கும், முதுகுக்கும் இடையில் இடைவெளி இருக்கக்கூடாது.
  • அதிக எடையுள்ள புத்தகத்தை முதுகை ஒட்டியவாறும் குறைந்த எடையுள்ள புத்தகங்களை அடுத்தடுத்த வரிசையிலும் அடுக்க வேண்டும்.
 
முதுகுவலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

“தசைகள் பலவீனமடைந்து சரியாக வேலை செய்யாதபோது பெல்ட்டை நாம் பயன்படுத்துகிறோம்."

முதுகு வலிக்கு பெல்ட் போடுவது உதவுமா?

பெரும்பாலும் முதுகுவலி அல்லது கழுத்தில் வலி ஏற்படும் பலர் பெல்ட் போன்ற ஒன்றை அணிந்திருப்பதை பலரும் பார்த்திருப்போம். அதை கட்டிக்கொண்டு அவர்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பார்கள். அது உண்மையில் பலனளிக்கிறதா? அதன் பணி என்ன? என்பது குறித்து மருத்துவர் விஜயராகவனிடம் கேட்டோம்.

அதற்கு பதிலளித்த அவர், “தசைகள் பலவீனமடைந்து சரியாக வேலை செய்யாத போது பெல்ட்டை நாம் பயன்படுத்துகிறோம். அந்த சமயத்தில் தசை செய்ய வேண்டிய வேலையை பெல்ட் செய்யும். ஆனால், அதை தொடர்ந்து பயன்படுத்த தொடங்கிவிட்டால் தசை மீண்டும் வலுவடையாது. வலி குறைவு ஏற்பட்டவுடன் பெல்ட்டை நீக்கிவிட்டு, மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகள் மற்றும் உடற்பயிற்சிகளை எடுத்துக்கொண்டால் மட்டுமே தசை வலுப்பெற்று மீண்டும் அதன் பணியை செய்ய தொடங்கும்” என்கிறார்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

சிலர் சாதாரண முதுகுவலி வந்துவிட்டாலே பயந்து போய் எம்ஆர்ஐ ஸ்கேன் வரை எடுத்துவிடுகிறார்கள். அதை பார்த்து மேலும் பயந்து ஏதாவது ஒரு மருத்துவ மையத்திற்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். இறுதியில் அது பலனளிக்கவில்லை என்றால் ஏமாந்தும் போகிறார்கள்.

ஆனால், அப்படி எல்லா நேரத்திலும் மருத்துவரை அணுக தேவையில்லை என்கிறார் விஜயராகவன். மேலும், தேவையில்லாமல் ஸ்கேன் எடுத்தல், மருத்துவ ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்வதும் கூடாது என்கிறார் அவர்.

அப்படியென்றால் எந்த நிலையில் மருத்துவரை அணுக வேண்டும் என்ற கேட்டபோது கீழுள்ள சில அறிகுறிகளை குறிப்பிடுகிறார் மருத்துவர்.

  • முதுகுவலி தொடங்கி நீண்ட நாட்களாக நீங்காமல் இருந்தால் மருத்துவரை அணுகலாம்.
  • முதுவலியாக தொடங்கி பின்னர் அந்த வலி காலுக்கும் பரவுகிறது, கால் மரத்து போகிறது என்றால் மருத்துவரை அணுகலாம்.
  • முதுவலியோடு எடை இழப்பு, பசியின்மை, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகலாம்.

இதைத் தாண்டி தீவிரமான அறிகுறிகளோ அல்லது வித்தியாசமான உணர்வுகளோ ஏற்பட்டாலும் கூட நீங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

 
முதுகுவலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

“சாதாரண முதுகுவலிக்கு பிசியோதெரபிஸ்ட் மூலம் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்."

எந்த மருத்துவரை அணுக வேண்டும்?

தீராத முதுகுவலியையும் தீர்ப்போம் என்று பல விளம்பரங்களையும் கூட நம்மால் சமீபத்தில் அதிகம் பார்க்க முடிகிறது. இது போன்ற சூழலில் முதுகுவலி வந்தால் எந்த மருத்துவரை அணுகுவது என்று கேட்டோம்.

அதற்கு பதிலளித்த மருத்துவர், “சாதாரண முதுகுவலிக்கு பிசியோதெரபிஸ்ட் மூலம் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இதே பிரச்னை நாள்பட்டதாகவும், தீவிரமாகவும் இருந்தால் ஆர்த்தோ மருத்துவர் அல்லது எழும்பியல் நிபுணரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்” என்கிறார்.

தீர்வு என்ன?

முதுகுவலி ஏற்படும் 80% பேருக்கு பெரும்பாலும் அவர்கள் வாழும் சூழல் மற்றும் அவர்களது வாழ்க்கை முறையே காரணமாக அமைகிறது. இது போன்ற சூழலில் முதுகுவலியை வருமுன் காப்பது எப்படி?

மருத்துவர் விஜயராகவன் கூற்றுப்படி,

  • மேற்சொன்ன அமரும் முறை, தினசரி செயல்பாடுகள் ஆகியவற்றை ஒழுங்கமைத்து கொள்ள வேண்டும்.
  • அமர்ந்தே பணியாற்றுபவர்கள் ஒவ்வொரு 20-30 நிமிடத்திற்கும் ஒருமுறை 10 நொடிகள் எழுந்து உடலை தளர்த்த வேண்டும்.
  • உங்களது பணி சூழலியலை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து கொள்ள வேண்டும்.

https://www.bbc.com/tamil/articles/cv28g097750o

சுன்னத் அறுவை சிகிச்சையின் போது 10 வயது சிறுவன் மரணம் - மயக்க மருந்து காரணமா?

3 weeks 3 days ago
ஆணுறுப்பு முன்தோல் நீக்க அறுவை சிகிச்சையின்போது 10 வயது சிறுவன் மரணம் - மயக்க மருந்து காரணமா?

பட மூலாதாரம்,FAKHRUL ALAM

கட்டுரை தகவல்
  • எழுதியவர், தாரிக் ஸமன் ஷமல்
  • பதவி, பிபிசி பங்களா சேவை
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில், பத்து வயது சிறுவன் ஒருவன், ஆணுறுப்பின் முன்தோல் நீக்கும் அறுவை சிகிச்சையின் போது (சுன்னத்) உயிரிழந்தார்.

அஹ்னாஃப் தஹ்மீத் என்ற அச்சிறுவன் செவ்வாய்க்கிழமை இரவு அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தங்களின் அனுமதியைப் பெறாமலேயே 'முழு மயக்க மருந்து' கொடுத்த காரணத்திலேயே அச்சிறுவன் உயிரிழந்ததாக சிறுவனின் குடும்பத்தார் குற்றம்சாட்டுகின்றனர்.

ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, வங்கதேசத்தில், அயன் அகமது என்ற சிறுவனும் இதேபோன்று ஆணுறுப்பு அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்தார். அப்போதும் இதே குற்றச்சாட்டை அச்சிறுவனின் குடும்பத்தார் எழுப்பினர்.

வங்கதேசத்தில் கடந்த பல பத்தாண்டுகளாக, முடிதிருத்துவோர் மயக்க மருந்து இல்லாமல் இந்த அறுவை சிகிச்சையை செய்து வருகின்றனர். ஆனால் சமீப காலமாக, மருத்துவர்களால் இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் பழக்கம் அதிகரித்துள்ளது.

ஆனால், இந்த அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்து எவ்வளவு முக்கியம்? அதில் என்ன ஆபத்து இருக்கிறது?

டாக்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் மயக்கவியல் நிபுணரான டாக்டர் ஷா ஆலம், குழந்தைகளுக்கு பாதுகாப்பான முறையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு மயக்க மருந்து தேவை என்று பிபிசி வங்க மொழிச் சேவையிடம் கூறினார்.

"ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இச்சம்பவத்தில் மயக்க மருந்து தேவைப்பட்டதா என்பதை தீர்மானிக்க வேண்டும்," என்று டாக்டர் ஆலம் கூறுகிறார்.

முறையான உடல் பரிசோதனை செய்யாமல் தவறான நேரத்தில் தவறான மயக்க மருந்து கொடுத்தால் நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர் ஷா ஆலம் தெரிவித்துள்ளார்.

 
அஹ்னாஃப் குடும்பத்தினரின் குற்றச்சாட்டு
ஆணுறுப்பு முன்தோல் நீக்க அறுவை சிகிச்சையின்போது 10 வயது சிறுவன் மரணம் - மயக்க மருந்து காரணமா?

பட மூலாதாரம்,FAKHRUL ALAM

படக்குறிப்பு,

தன் மகனுடன் ஃபக்ருல் ஆலம்

பத்து வயது அஹ்னாஃப் தஹ்மித், டாக்காவின் மாலி பாக் சௌதரி படாவில் உள்ள ஜே.எஸ். நோயறிதல் மற்றும் மருத்துவப் பரிசோதனை மையத்திற்கு அறுவை சிகிச்சைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 20) இரவு 8 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டதாக குழந்தையின் தந்தை ஃபக்ருல் ஆலம் பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார்.

அறுவை சிகிச்சை 8:30 மணிக்கு முடிவடைந்தது, ஆனால் ஒரு மணி நேரம் ஆகியும் சிறுவனுக்கு சுயநினைவு திரும்பவில்லை. இதனால் ஃபக்ருல் ஆலம் கோபமடைந்தார்.

அவர் பிபிசி வங்க மொழிச் சேவையிடம், “எனது மகனுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று நான் மீண்டும் மீண்டும் கேட்டேன். ஆனால் எனக்கு எந்த உறுதியான பதிலும் கொடுக்கப்படவில்லை. சிறிது நேரத்தில் சுயநினைவு திரும்பும் என்று கூறினார்கள்,” என்றார்.

பத்து மணியளவில் மகனின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக ஆலமிடம் கூறப்பட்டது.

சிறுவனை உடனடியாக மற்றொரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ஐ.சி.யூ) அழைத்துச் செல்ல வேண்டும் என்று குடும்பத்தினரிடம் கூறப்பட்டது. எனெனில் அந்த மருத்துவ மையத்தில் ஐ.சி.யூ இல்லை.

இதைத்தொடர்ந்து, சிறுவனை ஐ.சி.யூ-வுக்கு அழைத்துச் செல்ல அருகிலுள்ள தனியார் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டனர். இரவு 10:30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வந்தது. ஆனால் அதற்குள் அஹ்னாஃப் இறந்துவிட்டார்.

ஃபக்ருல் ஆலம் தனது மகனுக்கு அனுமதியின்றி 'முழு மயக்க மருந்து' கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார்.

அவர் கூறுகையில், “சில நாட்களுக்கு முன்பு ஒரு சிறுவன் 'முற்றிலும் மயக்கமடைந்து' இறந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். அதனால்தான், என் மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, என் மகனுக்கு 'முழு மயக்க மருந்து' கொடுக்க வேண்டாம் என்று மருத்துவரிடம் சொன்னேன்,” என்றார்.

 
'என் மகனை கொன்றுவிட்டனர்'
ஆணுறுப்பு முன்தோல் நீக்க அறுவை சிகிச்சையின்போது 10 வயது சிறுவன் மரணம் - மயக்க மருந்து காரணமா?

பட மூலாதாரம்,FAKHRUL ALAM

படக்குறிப்பு,

அஹ்னாஃப் தஹ்மித் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.

இச்சம்பவத்திற்குப் பிறகு, சிறுவனின் குடும்பத்தார் செவ்வாய்க்கிழமை இரவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர், அதில் மருத்துவமனை உரிமையாளர் மற்றும் பணியில் உள்ள மருத்துவர் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஃபக்ருல் ஆலம் கூறுகையில், “என் மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்,” என்றார்.

அஹ்னாஃப் தஹ்மித் டாக்காவில் உள்ள மோதி ஜீல் ஐடியல் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.

அஹ்னாஃப்பின் குடும்பம் முன்பு டென்மார்க்கில் வசித்து வந்தது. அஹ்னாஃப் அங்குதான் பிறந்தார். தொழிலதிபர் ஃபக்ருல் ஆலம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் 2017-இல் வங்கதேசம் திரும்பினார்.

 
மயக்க மருந்து எப்போது ஆபத்தானது?
ஆணுறுப்பு முன்தோல் நீக்க அறுவை சிகிச்சையின்போது 10 வயது சிறுவன் மரணம் - மயக்க மருந்து காரணமா?
படக்குறிப்பு,

மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வாகம், பதிவு செய்யாமலேயே இந்த ஆபத்தான கட்டுமானக் கட்டடத்தில் சுகாதார சேவைகளை அளித்து வந்தனர்.

ஒரு காலத்தில் மயக்கமருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், இப்போது அந்த நிலை மாறிவிட்டது.

நவீன மருத்துவ முறையில், மனித உடலில் சிறிய அல்லது பெரிய அறுவை சிகிச்சை செய்யும் முன் மருத்துவர்கள் மயக்க மருந்து கொடுக்கிறார்கள்.

மயக்க மருந்து உடல் அல்லது அதன் ஒரு பகுதியை மரத்துப்போகச் செய்கிறது. எனவே அறுவை சிகிச்சையின் போது நோயாளி எந்த வலியையும் உணர்வதிவில்லை.

டாக்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் மயக்கவியல் நிபுணரான ஷா ஆலம், பிபிசி பங்களாவிடம், "இதை எந்த பிரச்னையும் இல்லாமல் செய்ய முடியும்,” என்று கூறினார்.

ஷா ஆலம் கூறுகையில், “மயக்க மருந்துகளில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக, உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சிறிய அறுவை சிகிச்சை செய்யும்போது, அந்த பகுதி மட்டுமே மரத்துப்போகும். இது 'லோக்கல் அனஸ்தீசியா’ என்று அழைக்கப்படுகிறது” என்றார்.

பெரிய அறுவை சிகிச்சைக்கு முன், உடல் முழுவதும் மரத்துப் போவதற்கு மயக்க மருந்து செலுத்தப்படும் என்று கூறினார். இந்த நிலையில் நோயாளி ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு மீண்டும் எழுந்திருப்பார்.

யாருக்கும் மயக்க மருந்து கொடுப்பதற்கு முன், அவரது ரத்தம், இதயத் துடிப்பு உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றிய தகவல்களைப் பெற பல பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்கிறார் ஷா ஆலம்.

எந்த வகையான மயக்க மருந்து இதற்கு பாதுகாப்பானது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது.

இதுதவிர காய்ச்சல், சளி, இருமல், சுவாசிப்பதில் சிரமம், இதய நோய் உள்ளவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்கக் கூடாது என, டாக்டர் ஷா ஆலம் அறிவுறுத்தினார்.

இதுபோன்ற சமயங்களில் மயக்க மருந்து கொடுப்பது பாதுகாப்பானது அல்ல என்றார். அவரைப் பொறுத்தவரை, அத்தகைய சூழ்நிலை இருந்தால், ஒரு சிறப்பு மருத்துவரின் கருத்துடன் நோய் குணமடைந்தபின் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பிறகு அறுவை சிகிச்சை செய்யலாம்.

 
ஆணுறுப்பின் முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை என்றால் என்ன?
ஆணுறுப்பு முன்தோல் நீக்க அறுவை சிகிச்சையின்போது 10 வயது சிறுவன் மரணம் - மயக்க மருந்து காரணமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆணுறுப்பின் முன்தோலை நீக்கும் சிகிச்சை மத மரபுகளுக்கு முன்பே இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தோல் மென்மையானது மற்றும் அதன் உட்பரப்பு மேலும் மென்மையானது.

அமெரிக்காவைச் சேர்ந்த சிறுநீரக மருத்துவர் அன்னா மரியா பிபிசியுடன் பேசுகையில், இந்த மென்மையான தோலின் செயல்பாடு, ஆணுறுப்பின் நுனிப்பகுதியைப் மூடுகிறது என்று விளக்குகிறார்.

ஆணுறுப்பின் நுனிப்பகுதி மிகவும் உணர்திறன் வாய்ந்ததாக இருப்பதால், இந்த தோல் சில பாதுகாப்பு செயல்பாட்டைக் கொண்டிருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஆரம்ப நாட்களில், காற்று பட்டாலோ, அல்லது துணி பட்டால் கூட வலி ஏற்படுவதற்கு இதுவே காரணம். ஆனால் காலப்போக்கில், இந்தப் பகுதி சற்றுக் கடினமாகி, அதன் உணர்திறனை இழக்கிறது.

இந்த அறுவை சிகிச்சை பொதுவாக இரண்டு வழிகளில் செய்யப்படுகிறது. பாரம்பரிய முறையில் அதாவது மென்மையான தோலை கூர்மையான சவரக்கத்தி அல்லது பிளேடால் வெட்டுவதன் மூலம் செய்யப்படுகிறது. இரண்டாவது முறை 'ஸ்டேப்பிள் கன்’ எனப்படும் கருவியால் செய்யப்படுகிறது. கொஞ்சம் வளர்ந்த சிறுவர்கள், வயதான ஆண்களுக்கு ‘லோக்கல் அனஸ்தீசியா’ மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. இதனால் அதிக வலி இருக்காது.

 
இந்த அறுவை சிகிச்சையை எப்போது செய்ய வேண்டும்?
ஆணுறுப்பு முன்தோல் நீக்க அறுவை சிகிச்சையின்போது 10 வயது சிறுவன் மரணம் - மயக்க மருந்து காரணமா?

பட மூலாதாரம்,REUTERS

மதக் காரணங்களை விட்டுவிட்டு, ஆரோக்கியக் கண்ணோட்டத்தில் மட்டுமே பேசினால், இந்தக் கேள்விக்கு பல பதில்கள் உள்ளன.

ஒருபுறம், அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் பெரும்பாலும் குழந்தை பிறந்தவுடன் இந்த அறுவை சிகிச்சை செய்வது நல்லது என்று கருதுகின்றனர்.

அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் படி, இந்த அறுவை சிகிச்சை, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், ஆண்குறி புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் உள்ளிட்ட பல பால்வினை நோய்களைத் தடுக்க உதவுகிறது.

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்வதால் ஏற்படும் சிக்கல்கள் வயதான காலத்தில் ஏற்படும் சிக்கல்களை விட மிகக் குறைவு என அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் கூறுகிறது.

எந்த வயதில் இந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை மருத்துவர்களின் ஆலோசனையுடன் பெற்றோர்கள் முடிவு செய்ய வேண்டும் என்பது இந்த அமைப்பின் கருத்து.

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை. எனவே, புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்று அரச மருத்துவ சங்கம் ஒரு மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளது. அந்த அமைப்பின் கூற்றுப்படி, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்கு உறுதியான மருத்துவக் காரணம் இருக்கும் போது மட்டுமே செய்யப்பட வேண்டும்.

பரவலான கருத்துக்கு மாறாக, இந்த அறுவை சிகிச்சை மருத்துவ மற்றும் உளவியல் சிக்கல்களின் அபாயத்தைக் கொண்டுள்ளது என்று இந்த அமைப்பு கூறுகிறது. இதில் ரத்தப்போக்கு, தொற்று மற்றும் சிறுநீர் பாதை சுருங்குதல் மற்றும் பீதி தாக்குதல்கள் ஆகியவை அடங்கும்.

https://www.bbc.com/tamil/articles/c0xl3901vqgo

ரோடமைன் பி நச்சுப் பொருள், நீங்கள் விரும்பி சாப்பிடும் வேறு எந்தெந்த பண்டங்களில் இருக்கிறது தெரியுமா?

3 weeks 5 days ago
பஞ்சு மிட்டாயில் உள்ள நச்சுப் பொருள், நீங்கள் விரும்பி சாப்பிடும் வேறு எந்தெந்த பண்டங்களில் இருக்கிறது தெரியுமா?
ரோடமைன் பி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பஞ்சு மிட்டாயில் கண்டறியப்பட்டுள்ள ரோடமைன் பி என்பது என்ன? அது வேறு எந்தெந்த உணவுப் பொருட்களில் உள்ளது?

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 21 பிப்ரவரி 2024, 02:45 GMT
    புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர்

சமீபத்தில் சிறார்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ரோடமைன் பி எனும் நச்சுப் பொருள் கலந்திருப்பது உணவு பாதுகாப்புத் துறை நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.

அதனால் 90ஸ் கிட்ஸ்களின் பிடித்தமான இனிப்பு வகைகளின் ஒன்றான இளஞ்சிவப்பு நிறத்தில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய் தற்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களை சோதித்து பார்த்தபோது, அவற்றிலும் ரோடமைன் பி இருப்பது தெரியவந்ததால், அங்கும் பஞ்சு மிட்டாய் விற்பது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

பஞ்சு மிட்டாயில் கண்டறியப்பட்டுள்ள ரோடமைன் பி என்பது என்ன? அது வேறு எந்தெந்த உணவுப் பொருட்களில் உள்ளது? இதனை உட்கொள்வதால் என்ன பாதிப்பு?

பஞ்சு மிட்டாய்- ரோடமைன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பஞ்சு மிட்டாய் விற்பது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது

ரோடமைன் பி என்பது என்ன?

ரோடமைன் பி என்பது ஒரு செயற்கை சாயம் ஆகும். இது பளிச் என்ற சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தை கொடுக்கக்கூடியதாகும். இந்த வேதியியல் நிறமி, தண்ணீரில் கலக்கக்கூடியத் தன்மை அதிகம் கொண்டதாலும், குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடியது என்பதாலும், ஜவுளித்துறை, காகிதத் துறை, தோல் துறைகளில் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது.

ரோடமைன் பி- யில் உள்ள வேதிப் பொருட்கள் மக்கும் தன்மையற்றவை ஆகும். வெப்பம், வெளிச்சம் ஆகியவற்றை தாங்கக் கூடியவை.

ரோடமைன் பி
படக்குறிப்பு,

ரோடமைன் பி-யை உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது

ரோடமைன் பி தடை செய்யப்பட்டதா?

ரோடமைன் பி, ஜவுளி, தோல் உள்ளிட்ட துறைகளில் நிறமியாக பயன்படுத்துவதற்கு அனுமதி உண்டு. ஆனால் உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களில் செயற்கையாக நிறம் கொடுக்கும் பொருட்கள் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதே. ஆனால், எந்தெந்த பொருட்களை பயன்படுத்தலாம், எவ்வளவு பயன்படுத்தலாம் என்ற வழிகாட்டுதல்களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வகுத்துள்ளது.

ரோடமைன் பி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், அதை உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்துள்ளது. உணவுப் பொருட்கள் தயாரிப்பதில், பதப்படுத்துவதில், விநியோகிப்பதில் ரோடமைன் பி பயன்படுத்துவோர் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு சட்டம் (2006)-ன் படி தண்டிக்கப்படுவர்.

 
பஞ்சு மிட்டாய்- ரோடமைன்
ரோடமைன் பி எந்தெந்த உணவுப் பொருட்களில் கலக்கப்படுகிறது?

சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களை தரக்கூடிய ரோடமைன் பி, அந்த நிறத்தில் உள்ள உணவுப் பொருட்களிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் மற்றொரு உணவுப் பொருளான ரோஸ் மில்க்-ல் ரோடமைன் பி கலக்கப்படுகிறது என்று சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தெரிவிக்கிறார்.

பிபிசி தமிழிடம் அவர் பேசும் போது, "பஞ்சு மிட்டாயில் கண்டறியப்பட்ட ரோடமைன் பி, ரோஸ்மில்க், கொட்டைப் பாக்கு, சிவப்பு முள்ளங்கி ஆகியவற்றிலும் சேர்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் மில்க் பேடா என்ற இனிப்பு வகையின் மீது தூவப்படும் இளஞ்சிவப்பு துகள்களிலும் உள்ளது" என்கிறார்.

"உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்படும் நிறமிகள் உள்ளன. உதாரணமாக சிவப்பு நிறத்துக்கு அலூரா ரெட், பச்சை நிறத்துக்கு ஆப்பிள் கிரீன். அவையும் குறிப்பிட்ட அளவு மட்டுமே உணவுப் பொருளில் இருக்க வேண்டும். ஆனால், இந்த ரோடமைன் பி எந்த உணவுப் பொருளிலும் துளி அளவும் இருப்பதற்கு அனுமதி இல்லை" என்று அவர் மேலும் எடுத்துரைத்தார்.

சர்க்கரை வள்ளி கிழங்கின் மேற்பரப்பில் சிவப்பு நிறம் கூடுதலாக வெளிப்படுவதற்கு ரோடமைன் பி பயன்படுத்தப்படுகிறது. அதே போன்று, மிளகாய் பொடி, கேழ்வரகு, சாஸ் வகைகளிலும் சிவப்பு நிறம் பெறுவதற்காக சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகிறது.

 
பஞ்சு மிட்டாய்- ரோடமைன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் ரோஸ் மில்க்கில் ரோடமைன் பி கலக்கப்படுகிறது

ரோடமைன் பி இருப்பதை நுகர்வோர் கண்டறிய முடியுமா ?

ரோடமைன் பி கலக்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களையும் நுகர்வோர் பார்த்த உடனேயே ரோடமைன் பி இருக்கிறதா இல்லையா என கண்டறிய முடியாது. எனினும், சில உணவுப் பொருட்களில் ரோடமைன் பி உள்ளதா என கண்டறிய வீட்டிலேயே செய்யக் கூடிய சில எளிய சோதனைகள் உள்ளன.

ரோடமைன் பி தண்ணீரிலும் எண்ணெயிலும் எளிதில் கலக்கக்கூடியதாகும். இந்த தன்மையை கொண்டு ரோடமைன் பி இருப்பதை கண்டறியும் வழிமுறைகளை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வழங்கியுள்ளது.

உதாரணமாக சர்க்கரைவள்ளி கிழங்கின் மேற்பரப்பில் உள்ள சிவப்பு நிறத்தை வீட்டிலேயே சோதித்து பார்க்கலாம். சிறிதளவு பஞ்சை தண்ணீர் அல்லது எண்ணெயில் நனைத்துக் கொள்ள வேண்டும்.

அதை கிழங்கின் மேற்பரப்பில் லேசாக தடவிப் பார்க்கும் போது, அந்த பஞ்சு இளஞ்சிவப்பு நிறமாக மாறினால் அதில் ரோடமைன் பி கலக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். பஞ்சு நிறம் மாறாமல் வெள்ளையாகவே இருந்தால் ரோடமைன் பி கலக்கவில்லை என்று தெரிந்து கொள்ளலாம். இதே போன்ற பரிசோதனை மூலம், கேழ்வரகில் ரோடமைன் பி கலந்திருப்பதையும் கண்டறிய முடியும்.

ரோடமைன் பி மற்றும் இது போன்ற தடை செய்யப்பட்ட வேறு வேதிப் பொருட்கள் உணவுப் பொருளில் இருப்பதை எப்படி கண்டறிய வேண்டும் என்று விளக்கும் வீடியோக்களை இந்திய அரசின், https://www.youtube.com/@fssai_india என்ற தளத்தில் காணலாம்.

 
பஞ்சு மிட்டாய்- ரோடமைன்

பட மூலாதாரம்,FSSAI

படக்குறிப்பு,

சர்க்கரைவள்ளி கிழங்கின் மேற்பரப்பில் உள்ள சிவப்பு நிறத்தை வீட்டிலேயே சோதித்து பார்க்கலாம்

பஞ்சு மிட்டாயில் ரோடமைன் பி கலந்திருப்பதை நுகர்வோர் கண்டறிய முடியுமா?

பஞ்சு மிட்டாயில் ரோடமைன் பி கலந்திருக்கிறதா இல்லையா என்பதை நுகர்வோர் உறுதி செய்ய முடியாது. அந்த மாதிரிகளை உணவு பாதுகாப்பு ஆய்வகத்தில் சோதித்த பிறகே, ரோடமைன் பி உள்ளதா என்று உறுதி செய்ய முடியும்.

சமீபத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள், ஆய்வக பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அவை பாதுகாப்பற்றவை என்று உணவுப் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

"ஒரு உணவுப் பொருளில் தடை செய்யப்பட்ட நிறமி இருக்கிறதா இல்லையா என்று குறிப்பிட்டு ஒருவரால் பார்த்த உடனே துல்லியமாக சொல்ல முடியாது. ஆனால் மக்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகள், சாக்லேட், கேக் என எதுவாக இருந்தாலும் உங்கள் கண்களை கவரும் வண்ணம் பளிச்சென்று உணவுப் பொருட்கள் இருந்தால் அவற்றை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இயற்கையான நிறங்கள் பளீரென்று இருக்காது" என்கிறார் சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி சதீஷ் குமார்.

சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி சதீஷ் குமார்
படக்குறிப்பு,

இயற்கையான நிறங்கள் பளீரென்று இருக்காது என்கிறார் சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி சதீஷ் குமார்

ரோடமைன் பி ஏன் தடை செய்யப்படுகிறது?

ரோடமைன் பி புற்றுநோய் மற்றும் மரபணு பிறழ்வு ஏற்படுத்தக்கூடியது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. தோல் வியாதிகள், சுவாச பாதிப்புகள், கல்லீரல் மற்றும் சிறுநீரக சிதைவுகளை ஏற்படுத்தக் கூடும். எனவே மனித உட்கொள்ளுதலுக்கு தகுதி அற்றது என்பதால், ரோடமைன் பி உணவுப் பொருட்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் ரோடமைன் பி சுற்றுச்சூழலையும் நிலத்தடி நீரையும் பாதிக்கிறது.

ரோடமைன் பி-யினால் புற்றுநோய் ஏற்படுமா?

ரோடமைன் பி உட்கொள்வதால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என்று சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருந்தியல் துறைத் தலைவர் எஸ். சந்திரசேகர் தெரிவிக்கிறார்.

“ரோடமைன் பி தொடர்ந்து உட்கொண்டால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ரோடமைன் பி-க்கும் கல்லீரல் பாதிப்புக்கும் உள்ள தொடர்பு பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டதே” என்றார்.

 
பஞ்சு மிட்டாய்- ரோடமைன்

பட மூலாதாரம்,மருத்துவர் சந்திரசேகர்

படக்குறிப்பு,

ரோடமைன் பி தொடர்ந்து உட்கொண்டால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு என்கிறார் ஸ்டான்லி மருத்துவமனை மருந்தியல் துறைத் தலைவர் எஸ். சந்திரசேகர்

ரோடமைன் பி-யினால் எந்தெந்த உறுப்புகள் பாதிக்கப்படும் ?

ரோடமைன் பி உட்கொள்வதால், கல்லீரல் தவிர நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. அதன் காரணமாக, சிறு மூளை செயல்பாடுகளில் தடை ஏற்படும். மேலும் நரம்பு தளர்ச்சி, முதுகு தண்டுவட பாதிப்பு ஆகியவையும் ஏற்படும் என்று மருத்துவர் சந்திரசேகர் குறிப்பிடுகிறார்.

ரோடமைன் பி ஒரு முறை உட்கொண்டாலே பாதிப்பு ஏற்படுமா?

பொதுவாக ஒரு பொருளை ஒரு முறை உட்கொள்வதாலேயே தீவிர பாதிப்புகள் உடனே ஏற்படாது. எந்த பொருளாக இருந்தாலும் அதை தொடர்ந்து உட்கொள்ளும் போது தான் அதிக பாதிப்பு ஏற்படும்.

ஆனால், “சில நேரங்களில் ஒரு முறை உட்கொண்டாலே உடலில் தீவிர நச்சுத்தன்மை ஏற்படக்கூடும். ஒவ்வொருவரின் உடல் எதிர்ப்பு சக்தி பொருத்தும், உணவுப் பொருளில் எவ்வளவுன் ரோடமைன் கலக்கப்படுகிறது என்பதை பொருத்தும் இது ஏற்படும். அப்படி தீவிர நச்சுத்தன்மை உடனடியாக ஏற்பட்டால் அது மூளையை பாதிக்கும்” என்று பிபிசியிடம் பேசிய போது விளக்கினார் மருத்துவர் சந்திரசேகர்.

https://www.bbc.com/tamil/articles/ce7lkdkwzd3o

கொவிட் தடுப்பூசிகள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

3 weeks 5 days ago
192762-fake-vaccination-700x375.webp கொவிட் தடுப்பூசிகள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

பைசர் (Pfizer), மொடர்னா (Moderna) மற்றும் அஸ்ட்ராஜெனிகா கொவிட் -19 (AstraZeneca Covid-19) தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு இதயம், மூளை மற்றும் இரத்தம் உறைதலில் அரிதான பக்க விளைவு ஏற்பட்டுள்ளமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவான குளோபல் வாக்சின் டேட்டா நெட்வொர்க் நடத்திய ஆய்விலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 99 மில்லியன் மக்களிடம் குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பைசர், மோர்டானா மற்றும் அஸ்ட்ராஜெனெகா கொவிட் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட மக்களிடம்  13 வகையான நோய்கள் இனம்காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1370662

திடீர் மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? சிபிஆர் சிகிச்சை கொடுப்பது எப்படி?

4 weeks ago
சிபிஆர் சிகிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சிபிஆர் முதலுதவி சிகிச்சை

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பைசல் டிட்டுமீர்
  • பதவி, பிபிசி நியூஸ், பங்களா, டாக்கா
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

சமீப காலமாகவே சிறு வயதுக்காரர்கள் கூட மாரடைப்பால் இறந்து விட்டார்கள் என்ற செய்தியை அடிக்கடி கேட்கிறோம். பலரும் இதய நோயால் பாதிக்க பட்டவர்களாக இருப்பதை கூட நம்மால் பார்க்க முடிகிறது.

இது போன்ற சூழலில் பல நேரங்களில் மாரடைப்பு ஏற்படும் நபர்களுக்கு முதலுதவி கிடைக்காமல் போவதும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது. உலக அளவில் சிபிஆர் என்று அழைக்கப்படும் முதலுதவி சிகிச்சை மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதன் மூலம் உயிர் பிழைத்தவர்கள் பலர் என்றும் நிரூபணமாகியுள்ளது. அப்படி ஆபத்து நேரத்தில் உயிர்காக்கும் இந்த சிபிஆர் என்றால் என்ன? யாருக்கெல்லாம் அதை கொடுக்கலாம்? அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

 
சிபிஆர் சிகிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக சிபிஆர் சிகிச்சை வழங்கப்படுகிறது

சிபிஆர் என்றால் என்ன?

சிபிஆர் என்பது விரிவாக கார்டியோபல்மனரி ரீசசிடேஷன் (Cardiopulmonary Resuscitation) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக இது வழங்கப்படுகிறது.

இந்த சிகிச்சையை ஒரு நபர் மயக்கமடையும்போது அல்லது மூச்சுவிடுவதில் சிரமம், மூச்சு நின்று போகும் போது கொடுக்கலாம்.

ஒருவருக்கு இந்த சிகிச்சையை கொடுப்பதன் மூலம் அவரது நுரையீரலுக்கு ஆக்சிஜன் செல்லும். அந்த ஆக்சிஜன் ரத்தம் மூலம் ஒட்டுமொத்த உடலுக்கும் பயணிக்கும்.

இது தற்காலிகமாக அந்த நபருக்கு சுவாசிப்பதற்கு உதவலாம். உலக அளவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த முதலுதவி சிகிச்சை வழங்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மாரடைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும்போது அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்துவிட்டு, உடனடியாக சிபிஆர் சிகிச்சை வழங்க வேண்டும்

எப்போது இந்த சிகிச்சை வழங்க வேண்டும்?

பெரும்பாலும் சினிமாக்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் மாரடைப்பு ஏற்பட்ட நபரின் மார்பில் ஒருவர் கை வைத்து அழுத்துவதையும், வாயோடு வாய் வைத்து மூச்சு வழங்குவதையும் பார்த்திருப்போம். இதன் மூலம் குறிப்பிட்ட நபர் சுயநினைவுக்கு வருவது போல் அதில் காட்டியிருப்பார்கள்.

திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் இந்த சிகிச்சை பலரது உயிர்காப்பானாக பயன்படுகிறது. ஆனால், முறையான பயிற்சியோ அல்லது வழிகாட்டுதல்களோ இல்லாமல் இதை செய்யக்கூடாது.

பிரிட்டிஷ் இதய அமைப்பின் இணையதளத்தின்படி, ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும்போது அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்துவிட்டு, உடனடியாக சிபிஆர் சிகிச்சை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை, ஒரு நபர் மயக்கமடைந்து அவரால் இயல்பாக சுவாசிக்க முடியாத நிலைக்கு செல்லும் போது, உடனடியாக அவசர ஊர்திக்கு அழைப்பு கொடுத்துவிட்டு, சிபிஆர் சிகிச்சை கொடுக்க வேண்டும் என்கிறது.

இதற்கான பயிற்சியை செஞ்சிலுவைச் சங்கம் உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களுக்கு அளித்து வருகிறது. மேலும் சுகாதார துறையை சேர்ந்த அனைவருக்கும் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.

 
சிபிஆர் சிகிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சிபிஆர் கொடுப்பதன் மூலம் குறிப்பிட்ட நபரின் உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

மாரடைப்பு ஏற்படும் போது என்ன ஆகிறது?

மாரடைப்பு ஏற்பட்டு இதயம் வேலை செய்வதை நிறுத்தும் போது அல்லது இதயத் துடிப்பு சீரற்றதாக ஆகும் போது, மூளை மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு இரத்தம் இயல்பாக பாய்வதில்லை. இதனால் மூளை செயல்பாடு பாதிக்கிறது.

இது சில நேரங்களில் மரணத்திற்கும் வழிவகுக்கிறது. ஆனால், சிபிஆர் கொடுப்பதன் மூலம் குறிப்பிட்ட நபரின் உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

வங்கதேசத்தின் தேசிய இருதய நிறுவனத்தின் நிபுணரான மருத்துவர். அஷ்ரஃப் உர் ரஹ்மான் தமால் இதுகுறித்து கூறுகையில், "இதய நோயாளிகள் மட்டுமின்றி இதய நோய் இல்லாதவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படலாம். ஒருவர் பலத்த காயம் அடைந்து அவருக்கு இதயம் நின்று போனால், அப்போது அவருக்கு சிபிஆர் சிகிச்சை கொடுப்பதன் மூலம், அவர் பிழைப்பதற்கான நேரத்தை அதிகப்படுத்தலாம்” என்கிறார்.

மேலும், இதயம் நின்று போகும் போது நமக்கு குறுகிய நேரமே இருக்கும். அதாவது 5 முதல் 7 நிமிடங்களே இருக்கும். எனவே உடனே சிபிஆர் சிகிச்சையை தொடங்குவது அவசியம் என்கிறார் அவர்.

சிபிஆர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பாதிக்கப்பட்ட நபருக்கு எங்காவது ரத்தம் கசிகிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்

சிபிஆர் கொடுப்பதற்கான 7 படிநிலைகள்

செஞ்சிலுவை சங்கம் சிபிஆர் சிகிச்சையை ஏழு படிநிலைகளாக வடிவமைத்துள்ளது.

முதலில் நீங்கள் இருக்கும் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். சில சமயம் வெள்ளம் அல்லது நெருப்பு சூழ்ந்த பகுதிகளில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக அந்த பகுதியில் இருந்து சம்மந்தப்பட்ட நபரை வெளியே கொண்டு வர வேண்டும்.

தேவைப்பட்டால் பிபிஇ கிட் (PPE kit) அல்லது அதற்கு இணையான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும்.

இரண்டாவது கட்டத்தில் பாதிக்கப்பட்ட நபரை தொடுதல் அல்லது பேரை சொல்லி அழைத்தல் மூலம் அவரது நிலை என்ன என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும். மேலும், அவருக்கு எங்காவது ரத்தம் கசிகிறதா என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவது கட்டத்தில், அந்த நபர் சுயநினைவற்று பதில் ஏதும் இல்லாமல் இருந்தால் அல்லது நாடித்துடிப்பு இல்லாமல் இருந்தால் உடனடியாக அவசர ஊர்திக்கு அழைக்கவும்.

 
சிபிஆர் சிகிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஒரே சுற்றில் 30 முறை அழுத்திய பிறகு சிறு இடைவெளி விட வேண்டும்.

நான்காவது கட்டத்தில் , அந்த நபரை கைகள் தோள்பட்டைக்கு முன்னுள்ளவாறு தரை அல்லது படுக்கையில் கிடத்தி, அவருக்கு அருகில் அமர வேண்டும்.

ஐந்தாவது கட்டத்தில், சிபிஆர் சிகிச்சையை தொடங்க வேண்டும். அதற்கு முதலில் உங்களது இரண்டு கைகளையும் அவரது மார்பில் வைக்க வேண்டும். ஒரு கையை மற்றொரு கையின் மீது வைத்து விரல்கள் உள்ளங்கையை அழுத்தியவாறு வைத்திருக்க வேண்டும். அழுத்தம் குறைந்தது 2 அங்குலமாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் கையை முழுவதுமாக மேலே உயர்த்தி அழுத்த வேண்டும். அந்த சமயத்தில் மார்பு இயல்பு நிலைக்கு திரும்பும். நிமிடத்திற்கு 100 அல்லது 120 அழுத்தம் என்ற வேகத்தில் அழுத்த வேண்டும். ஒரே சுற்றில் 30 முறை அழுத்திய பிறகு சிறு இடைவெளி விட வேண்டும்.

ஆறாவதுக கட்டத்தில், அவரது வாயோடு வாய்வைத்து சுவாசத்தை உள்ளே செலுத்த வேண்டும். இதற்கு, அந்த நபரின் தலையை நேராக வைக்கவும். அவரது மூக்கை பிடித்து கொண்டு உங்களது மூச்சை நன்றாக உள்ளிழுத்து அவரது வாய்வழியாக உள்ளே முழுமையாக செலுத்த வேண்டும்.

இது ஒரு வினாடிக்கு நடக்கும். பின் மார்பு விரிகிறதா என்று பார்க்க வேண்டும். அடுத்து சுவாசத்தை உள்ளிழுப்பதற்கு முன்பு, நன்கு வெளியே விட்டுக்கொள்ளவும்.

அதே சமயம் முதல் முறையிலேயே மார்பு விரியவில்லை அல்லது மேலே எழும்பவில்லை என்றால், அவரது கண்கள் மற்றும் வாயை திறந்து பார்த்து ஏதாவது அடைப்பு உள்ளதா என்பதை சோதனை செய்ய வேண்டும்.

ஏழாவது கட்டத்தில், மார்பில் ஒரு சுற்றில் 30 முறை அழுத்தம் , இரண்டு முறை சுவாசம் கொடுத்தல் ஆகியவற்றை செய்ய வேண்டும். ஆனால் மார்பை ஒவ்வொருமுறை அழுத்தும்போதும் அது 10 நொடிகளுக்கு மேல் தொடராமல் இருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். அவசர ஊர்தியோ அல்லது உதவியோ வரும்வரை சிபிஆர் சிகிச்சையை தொடர வேண்டும்.

 
சிபிஆர் சிகிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இதயம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ள குழந்தைகளுக்கு சிபிஆர் சிகிச்சை வழங்கப்படும்.

குழந்தைகளுக்கான சிபிஆர் சிகிச்சை

சில நேரங்களில் குழந்தைகளுக்கும் சிபிஆர் சிகிச்சை தேவைப்படும். இது இதயம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

குழந்தைகளுக்கு சிபிஆர் சிகிச்சை வழங்கும்போது சில விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை கூறுகிறது.

முதலில் ஒரு கையை குழந்தையின் தலையில் வைத்து பின்னாலிருந்து உயர்த்தவும். வாய் மற்றும் மூக்கிற்குள் ஏதாவது சிக்கிக்கொண்டிருந்தால் வெளியே எடுக்க வேண்டும்.

அதன் பிறகு குழந்தையின் மூக்கை பிடித்துக் கொண்டு அதன் வாய் வழியாக சுவாசம் கொடுக்க வேண்டும். அதே சமயம் மார்பு மேல் எழும்புகிறதா இல்லையா என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு உள்ளங்கையை குழந்தையின் மார்பில் வைத்து இரண்டு அங்குல அளவில் அழுத்தம் தரவேண்டும். உங்களால் ஒரு கையால் செய்யமுடியவில்லை என்றால், இரண்டு கைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுவே குழந்தை ஒரு வயதுக்கும் குறைவாக இருந்தால் இரண்டு கைகளுக்கு பதில், இரண்டு விரல்களை மட்டும் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இதில் ஒன்றரை அங்குலம் என்ற அளவில் மட்டுமே அழுத்தம் தரப்பட வேண்டும்.

மேலும், 30-30 சுவாசம் என்ற கணக்கில் இருமுறை வாய்வழியாக ஒரு நிமிடத்திற்கு 100 முதல் 120 வாசம் என்ற அளவில் சிகிச்சை கொடுக்கலாம். அவசர ஊர்தி வரும் வரை சிபிஆர் சிகிச்சையை தொடர வேண்டும்.

https://www.bbc.com/tamil/articles/cgl4p8epx8mo

தூக்க விவாகரத்து! 'ஸ்லீப் டைவர்ஸ்'

1 month ago
துணையுடன் தூங்குவதைத் தவிர்க்கும் இளைய தலைமுறை - நன்மைகள் கிடைக்குமா?
'ஸ்லீப் டிவோர்ஸ்'

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஃபெர்னாண்டா பால்
  • பதவி, பிபிசி நியூஸ் வேர்ல்டு
  • 34 நிமிடங்களுக்கு முன்னர்

கோவிட் தொற்றுநோய்க்கு பிறகு இந்த பிரச்னை தொடங்கியது. ஒரு கட்டத்திற்கு மேல் கணவரின் குறட்டையை சிசிலியாவால் தாங்க முடியவில்லை. அவர் தூங்க முடியாமல் தவித்தார்.

எவ்வளவோ முயற்சிகள் எடுத்துப் பார்த்தும், கணவரின் குறட்டையை அவரால் நிறுத்த முடியவில்லை.

35 வயதான சிசிலியாவால் இதை மேலும் தாங்க முடியவில்லை. எனவே கணவன் மனைவி இருவரும் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். இனி ஒரே அறையில் ஒன்றாக தூங்க முடியாது என்ற முடிவு.

"என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. நாள் முழுவதும் சோர்வாக உணர்கிறேன். ஓரிரு இரவுகள் அதைப் பொறுத்துக் கொள்ளலாம், ஆனால் தொடர்ந்து அவ்வாறு தூக்கமில்லாமல் வாழ முடியாது" என்று பிபிசியிடம் கூறினார் சிசிலியா. இவர் லண்டனில் வசித்து வருகிறார்.

"இது சற்று கடினமான முடிவு தான், மனதளவில் மிகவும் கஷ்டமாக தான் உள்ளது. ஆனால் இப்படி செய்தால் தான் தூங்க முடியும் என்பதால், இந்த முடிவை எடுத்தோம்" என்கிறார் சிசிலியா.

 

சிசிலியா மற்றும் அவரது 43 வயது கணவர், 'ஸ்லீப் டிவோர்ஸ்' என்ற முறையைப் பின்பற்றுகிறார்கள். அதாவது கணவன், மனைவி தனித்தனி அறையில் தூங்கும் வழக்கம்.

"பொதுவாக 'ஸ்லீப் டைவர்ஸ்' என்பது தற்காலிமாக தான் கணவன் மனைவி இடையே கடைபிடிக்கப்படும். ஆனால் தனியாக தூங்குவதன் மூலம் நன்றாக தூங்க முடியும் என்பதை தம்பதியினர் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர்" என்கிறார் அமெரிக்காவில் உள்ள மெக்லீன் மருத்துவமனையின் மனநல மருத்துவர் ஸ்டெபானி கோலியர்.

“முக்கிய காரணம் உடல்நலம் தான். பொதுவாக குறட்டை விடும் ஒரு நபர், தூக்கத்திலிருந்து அடிக்கடி எழுவார் அல்லது பலமுறை கழிப்பறையைப் பயன்படுத்துவார். மேலும் அவர்கள் தூக்கத்தில் அடிக்கடி புரள்வார்கள், இது பக்கத்தில் படுத்திருக்கும் நபரை மிகவும் தொந்தரவு செய்கிறது" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

"'ஸ்லீப் டிவோர்ஸ்' என்ற இந்த டிரெண்ட் இப்போது வேகமாக பரவி வருகிறது" என்கிறார் ஸ்டெபானி கோலியர்.

'ஸ்லீப் டிவோர்ஸ்'

பட மூலாதாரம்,GETTY IMAGES

இளம் தலைமுறையினர் விரும்பும் 'ஸ்லீப் டிவோர்ஸ்'

கடந்த ஆண்டின் இறுதியில், பிரபல அமெரிக்க நடிகை கேமரூன் தியாஸ், தானும் தன் கணவரும் ஒரே அறையில் தூங்குவதில்லை என்று ஒரு போட்காஸ்டில் பேசியிருந்தார்.

மேலும் கணவன் மனைவி தனித்தனி அறைகளில் தூங்குவதை ஒரு சாதாரண விஷயமாக பார்க்க வேண்டுமென கூறியிருந்தார்.

அவரது கருத்துக்கு சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான எதிர்வினைகள் வந்தது. சர்வதேச ஊடகங்கள் பல்வேறு கட்டுரைகள் எழுதவும் அது வழிவகுத்தது. ஆனால் இது நடிகை கேமரூனின் கருத்து மட்டுமல்ல, பலர் இவ்வாறு கூறியிருக்கிறார்கள்.

தி அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஸ்லீப் மெடிசின் (ஏஏஎஸ்எம்) 2023ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி, மூன்றில் ஒரு தம்பதியினர், எப்போதாவது அல்லது தொடர்ந்து தனித்தனி அறைகளில் தூங்குவது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதாகக் கூறியிருக்கிறார்கள்.

'மில்லினியல்கள்' எனப்படும் புதிய தலைமுறையினர் மத்தியில் (தற்போது தோராயமாக 28 மற்றும் 42 வயதுக்கு இடைப்பட்ட தலைமுறையினர்) 'ஸ்லீப் டிவோர்ஸ்' போக்கு அதிகமாக உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதில் 43% பேர், தங்கள் துணையுடன் அல்லாமல் தனி அறையில் தூங்குவதாக கூறியுள்ளனர்.

மற்ற தலைமுறைகளைப் பொறுத்தவரை, தலைமுறை Xஇல் (1965 மற்றும் 1980க்கு இடையில் பிறந்தவர்கள்) 33% இதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். தலைமுறை Zஇல் (1997 மற்றும் 2012க்கு இடையில் பிறந்தவர்கள்) 28% இதற்கு ஆதரவாக உள்ளார்கள். இறுதியாக பேபி பூமர்ஸ் எனப்படும் தலைமுறையினர் (1946 மற்றும் 1964க்கு இடையில் பிறந்தவர்கள்) 22% 'ஸ்லீப் டிவோர்ஸ்' முறைக்கு ஆதரவாக உள்ளார்கள்.

"குறிப்பாக இளைய தலைமுறையினர் ஏன் அவ்வாறு செய்கிறார்கள், இதற்கு என்ன காரணம் என சரியாக சொல்ல முடியவில்லை. கணவன் மனைவி தனித்தனியாக தூங்குவது ஒரு வகையான கலாச்சார மாற்றம். ஆனால் இளம் தலைமுறையினர் நினைப்பது என்னவென்றால் 'நான் நன்றாக தூங்கினால், நாள் முழுவதும் நன்றாக உணர்கிறேன். எனவே இதில் என்ன தவறு?" என்கிறார் மனநல மருத்துவர் ஸ்டெபானி கோலியர்.

'ஸ்லீப் டிவோர்ஸ்'

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கடந்த காலங்களில் தம்பதிகள் தனித்தனி அறைகளில் தூங்குவது வழக்கம் என்று வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

வரலாற்றில் கணவன் மனைவி தனித்தனி அறையில் தூங்குவது புதிதல்ல.

கணவன் மனைவி 'ஒரே படுக்கையில்', ஒரு அறையில் தூங்குவது என்பது ஒரு நவீன கருத்தியல் என சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். தொழில்துறை புரட்சியின் காரணமாக அது அதிகரித்தது என்றும், அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் வாழும்போது, இட நெருக்கடி காரணமாக இந்த முறை வந்தது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

விக்டோரியா காலத்திற்கு முன்பாகவே திருமணமான தம்பதிகள் தனித்தனியாக தூங்குவது பொதுவான ஒன்றாக இருந்துள்ளது.

"மேலும் பணக்கார வர்க்கத்தினரிடையே, அது மிகவும் பொதுவானதாக இருந்தது. சமூகத்தின் உயர் வகுப்பினர் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவும் இது உதவுகிறது" என சிலியின் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியின் சோம்னாலஜிஸ்ட் (தூக்க அறிவியல் நிபுணர்) பாப்லோ ப்ரோக்மேன் கூறுகிறார்.

 
'ஸ்லீப் டிவோர்ஸ்'

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நன்றாக தூங்குவது ஒரு 'ஆரோக்கியமான' உறவைப் பேணவும் உதவும் என மனநல மருத்துவர் உறுதியளிக்கிறார்.

தம்பதியினர் தனித்தனியாக தூங்குவது நன்மைகள் என்ன?

தனித்தனி அறைகளில் தூங்க முடிவு செய்யும் தம்பதிகளுக்கு பல நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

"முக்கிய நன்மை என்னவென்றால், தொடர்ச்சியாக ஆழ்ந்த உறக்கத்தை அவர்களால் பெற முடியும். மேலும் நல்ல தூக்கம் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் அவசியம்” என்கிறார் மருத்துவர் ஸ்டெபானி கோலியர்.

தொடர்ந்து பேசிய கோலியர், “ஒருவரால் தூங்க முடியாவிட்டால், அது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் செயல்பாடு வரை அனைத்தையும் பாதிக்கிறது. கூடுதலாக, நீங்கள் அடிக்கடி கோபப்படுவீர்கள், எளிதில் பொறுமையை இழப்பீர்கள். இது ஒரு வகையான மனச்சோர்வை கூட உருவாக்கலாம்” என்று கூறுகிறார்.

நன்றாக தூங்குவது ஒரு 'ஆரோக்கியமான' உறவைப் பேணவும் உதவும் என மனநல மருத்துவர் உறுதியளிக்கிறார்.

"தம்பதியினர், நன்றாக ஓய்வெடுக்காதபோது, அவர்களுக்குள் அதிகமாக விவாதங்கள் ஏற்படலாம், அதிகமாக எரிச்சல் அடைவார்கள் மற்றும் அவர்களுக்குள் இருக்கும் புரிதலை இழக்க நேரிடும்" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

நுரையீரல் நிபுணர் மற்றும் ஏஏஎஸ்எம் செய்தித் தொடர்பாளர் சீமா கோஸ்லா, மேலே உள்ள கருத்துடன் உடன்படுகிறார்.

 
தூக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தனித்தனி அறைகளில் தூங்க முடிவு செய்யும் தம்பதிகளுக்கு பல நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

"மோசமான தூக்கம் ஒருவரின் மனநிலையை மோசமாக்கும் மற்றும் தூக்கமின்மை உள்ளவர்கள் தங்கள் துணையுடன் வாதிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தூக்கத்தை கெடுக்கும் நபர் மீது அவர்களுக்கு சில மனக்கசப்புகள் இருக்கலாம், இது உறவுகளை எதிர்மறையாக பாதிக்கும்" என்று ஏஏஎஸ்எம் தனது 'ஸ்லீப் டிவோர்ஸ்' குறித்த தனது ஆய்வைத் தொடங்கியபோது அவர் குறிப்பிட்டிருந்தார்.

"ஒரு நல்ல இரவு தூக்கம், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி ஆகிய இரண்டிற்கும் முக்கியமானது, எனவே சில தம்பதிகள் தங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்காக தனியாக தூங்குவதைத் தேர்ந்தெடுப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை," என்று அவர் மேலும் கூறினார்.

சிசிலியாவைப் பொறுத்தவரை, கணவரிடமிருந்து விலகி வேறு அறையில் தூங்குவது அவருடைய வாழ்க்கையை மாற்றியுள்ளது.

"நன்றாக தூங்குவது, படுக்கையில் அதிக இடம் இருப்பது, யாருக்கும் இடையூறு விளைவிக்காமல் புரண்டு படுப்பது என இது மிகவும் வசதியாக உள்ளது” என்று அவர் கூறுகிறார்.

“மேலும், உங்கள் துணை தூங்கி எழும் நேரத்தில் நீங்களும் எழுந்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் விரும்பும் போது அல்லது தேவைப்படும் போது தூக்கத்திலிருந்து எழ முடியும்" என்கிறார் சிசிலியா.

 
'ஸ்லீப் டிவோர்ஸ்'

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இதற்கிடையில் 'ஸ்லீப் டைவர்ஸ்' என்பது எல்லா தம்பதியினருக்கும் வேலை செய்யக்கூடிய ஒன்றல்ல என்று உறுதியாக கூறுகிறார் தூக்க அறிவியல் நிபுணர்

தனித்தனி அறையில் தூங்குவதில் உள்ள தீமைகள் என்ன?

இருப்பினும், இந்த முடிவு சில எதிர்மறை அம்சங்களையும் கொண்டு வரலாம். பல தம்பதிகள், தங்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை இழப்பதைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

"எனது துணையுடனான உறவில், ஏதோ ஒன்று மாறிவிட்டது என்று நான் நினைக்கிறேன்," என்று சிசிலியா ஒப்புக்கொள்கிறார்.

"கணவன்- மனைவி உறவு, நெருக்கம் பாதிக்கப்படுகிறது. ஆனால் அது அவ்வளவு தீவிரமானது அல்ல. நன்மைகள் தான் அதிகம் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.

முழுநேர வேலை செய்யும் பலருக்கு, தங்கள் துணையுடன் இணையும் தருணம் என்பது அவர்கள் தூங்கச் செல்லும் நேரமாகத் தான் இருக்கும் என்று மருத்துவர் ஸ்டீபனி கோலியர் விளக்குகிறார்.

"எனவே, கணவன் மனைவி ஒன்றாக செலவழிக்கும் நேரத்தை அதிகப்படுத்துவதே இதற்கான தீர்வுகளில் ஒன்றாகும்" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இதற்கிடையில் 'ஸ்லீப் டைவர்ஸ்' என்பது எல்லா தம்பதியினருக்கும் வேலை செய்யக்கூடிய ஒன்றல்ல என்று உறுதியாக கூறுகிறார் தூக்க அறிவியல் நிபுணர் பாப்லோ ப்ரோக்மேன்.

 
குறட்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ஜோடியாக தூங்குவதால் சில உயிரியல் நன்மைகள் உள்ளன. பலருக்கு, கனவில் ஒரு இணைப்பு உருவாகிறது. இது மனித இனத்தின் பழமையான ஒரு இணைப்பு. உதாரணமாக, ஒரு தாய்க்கும் அவளுடைய குழந்தைக்கும், பொதுவாக தாய்ப்பால் கொடுக்கும் போது இந்த பிணைப்பு உருவாகிறது. இதனால் இருவரும் ஒரே சமயத்தில் ஓய்வெடுக்கும் வகையில் ஒரே மாதிரியான தூக்க சுழற்சிகளைக் கொண்டிருப்பார்கள்" என்கிறார் பாப்லோ ப்ரோக்மேன்.

"பல வருடங்களாக ஒன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் தம்பதிகள், மனதளவில் நல்ல இணைப்பில் இருந்தால் நல்ல அமைதியான ஆழமான உறக்கத்தைப் பெறுகிறார்கள் என்பதைக் காட்டும் ஆய்வுகள் உள்ளன. இதன் மூலம் உங்களின் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறீர்கள்,” என்கிறார் சோம்னாலஜிஸ்ட் பாப்லோ.

மொத்தத்தில் ஒரு ஜோடி 'ஸ்லீப் டிவோர்ஸ்' முறையை பின்பற்ற முடிவு செய்தால், கவனத்தில் கொள்ள வேண்டிய சில பரிந்துரைகள் உள்ளன என நிபுணர்கள் கூறுகின்றனர்.

“ஒருவர் இந்த முறையை விரும்பி, மற்றவர் விரும்பாதபோது இது வேலை செய்யாது, ஏனெனில் அது மேலும் வெறுப்புக்கு வழிவகுக்கும்” என்கிறார் ஸ்டெபானி கோலியர்.

"சிலர் தனியாக தூங்க விரும்புவதில்லை, அது அவர்களை மனதளவில் மோசமாக உணர வைக்கிறது. இது போன்ற நிலையில் கணவன் மனைவி இருவரும் சரிசமமாக பேசி ஒரு முடிவை எடுக்க வேண்டும்" என ப்ரோக்மேன் ஒப்புக்கொள்கிறார்.

“பிரச்னை உள்ளவருக்கு, அதாவது குறட்டை, தூக்கத்தில் நடப்பது அல்லது தூக்கத்திலிருந்து அடிக்கடி எழுவது என எதுவாக இருந்தாலும், அது அவரது துணைக்கு கஷ்டமாக இருக்கலாம். இதைப் பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள், பொதுவாக பல ஆண்களே தனியாகத் தூங்க தயங்குவார்கள்’’ என்கிறார் ப்ரோக்மேன்.

இருப்பினும், அதிகரிக்கும் 'ஸ்லீப் டைவர்ஸ்' போக்கு, ஒரு நல்ல இரவு தூக்கத்திற்காக, எதுவும் செய்யலாம் என்பதை நிரூபிப்பதாகத் தெரிகிறது.

'ஸ்லீப் டிவோர்ஸ்'
படக்குறிப்பு,

மருத்துவர் எஸ்.ஜெயராமன்

'குறட்டை ஒரு நோயின் அறிகுறி'

பலர் தன் துணையிடமிருந்து விலகி தனியாக உறங்க விரும்புவதற்கு முக்கிய காரணம் குறட்டை தான் என்கிறார் நுரையீரலியல் நிபுணர், மருத்துவர் எஸ்.ஜெயராமன்.

"பெரும்பாலும் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக குறட்டை ஏற்படுகிறது, அதாவது ஸ்லீப் அப்னியா அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல் என்ற நோயின் அறிகுறியே குறட்டை. ஒருவர் குறட்டை விட்டால், அசந்து தூங்குகிறார் போல, தூங்கட்டும் என நினைப்போம். ஆனால் குறட்டை என்பது ஒரு நோயின் அறிகுறி. வயதானவர்களுக்கு குறட்டையின் மூலமாக மரணம் கூட நிகழலாம்" என எச்சரிக்கிறார் மருத்துவர் எஸ்.ஜெயராமன்.

"பெரும்பாலும் ஆண்களுக்கே இந்த குறட்டை பிரச்னை உள்ளது. கணவன் குறட்டை விடுவதால், அருகே இருக்கும் மனைவி தூக்கத்தை இழப்பார். இது மனச்சோர்வை உண்டாக்கும். இதனால் தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படலாம். வெளிநாடுகளில் இதனால் விவாகரத்து வரை செல்கிறார்கள். நம் ஊரில் பலர் பொறுத்துக் கொள்கிறார்கள். எனவே குறட்டை ஒரு தீவிரமான பிரச்னை என்பதை முதலில் உணர வேண்டும்"

"என்னிடம் குறட்டைக்கான சிகிச்சைக்கு வந்த ஒரு நபரின் மனைவி, 'என் கணவர் அடிக்கடி மூச்சு விட முடியாமல், தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்கிறார்' என்றார். இவ்வாறு தூக்கத்தில் மூச்சு விட முடியாமல் முழிப்பது மாரடைப்பு வருவதற்கான அறிகுறி. தொடர்ச்சியாக குறட்டை பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு இது நிகழும், முக்கியமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு" என்கிறார் மருத்துவர் எஸ்.ஜெயராமன்.

"இளம் வயதினருக்கு குறட்டை பிரச்னை என்றால் எளிதில் குணப்படுத்தலாம். முதலில் அவர்களது தூக்க சுழற்சியை ஆய்வு செய்வோம். பின்னர் அதைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும். உடல் எடையைக் குறைத்தல், தொண்டையில் வளர்ந்துள்ள சதையை லேசர் மூலம் அகற்றுதல், தைராய்டு பிரச்னை இருந்தால் அதற்கான தீர்வு என நிறைய வழிகள் உள்ளன.

ஆனால், 20% பேருக்கு தான் குறுகிய காலத்தில் தீர்வு கிடைக்கும், 80% பேருக்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும்" என்று கூறினார் நுரையீரலியல் நிபுணர், மருத்துவர் எஸ்.ஜெயராமன்.

(இந்தக் கட்டுரையில் பிபிசி தமிழுக்காக கூடுதலாக சில தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன)

https://www.bbc.com/tamil/articles/c4nw0lrw000o

உடல்நலம்: பாக்கெட் உணவு வாங்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்கள்

1 month 1 week ago
உடல்நலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சர்வப்பிரியா சங்வான்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

எந்தவொரு வாடிக்கையாளரும் உணவுப் பொருட்களை வாங்க 6-10 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் அதன் காலாவதி தேதி மற்றும் விலையை மட்டுமே பார்க்கின்றனர்.

ஆனால், உணவுப் பொருள் பாக்கெட்டுகளின் பின்புறத்தில் நிறைய முக்கியமான தகவல்கள் உள்ளன. அதைப் படிக்கத் தெரிந்தால் அந்த பாக்கெட்டை, அந்த உணவுப்பொருளை நீங்கள் வாங்கவே மாட்டீர்கள்.

ஆனால், குறிப்பிட்ட உணவுப்பொருள் உடல்நலத்திற்கு நல்லதா அல்லது கெட்டதா என்பதை அறிய முடியாத வகையிலும் வாடிக்கையாளர்களுக்குப் புரியாத வகையிலும் இந்தத் தகவல்கள் எழுதப்பட்டுள்ளன. பாக்கெட்டில் உள்ள ஊட்டச்சத்து குறித்த தகவல்களைப் பார்த்தே உள்ளே இருக்கும் உணவின் தரத்தை மதிப்பிட கற்றுக் கொள்ளலாம்.

எந்தவொரு உணவுப் பொருளையும் வாங்குவதற்கான அடிப்படை என்னவென்றால், அதில் சில அளவு வைட்டமின்களும் தாதுக்களும் இருக்க வேண்டும். மேலும், அதன் அளவும் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்காத வகையில் இருக்க வேண்டும்.

முதலில், இந்தியாவில் செய்யப்படும் உணவு லேபிளிங் ஓர் ஆரோக்கியமான நபரின் உணவின் அளவு 2,000 கிலோ கலோரிகள் என்று கருதி செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதைத் தரமாகக் கருதி, ஒவ்வொரு உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளிலும் பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்துகளின் அளவுகள் (RDA -Recommended Dietary Allowance) நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

 
பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்துகளின் அளவுகள்
உடல்நலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பொதுவாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) இந்தியாவில் உணவு லேபிளிங் தேவைகளை அமைப்பதற்குப் பொறுப்பாகிறது. இந்த அமைப்பு லேபிளிங் விதிகளை முடிவு செய்து மேற்பார்வை செய்கிறது.

பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து அளவுகள் என்பது, அறிவியல் தகவல்களின் அடிப்படையில், ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு இந்த அளவு ஊட்டச்சத்து போதுமானது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தீர்மானித்துள்ளது.

FSSAI வழிகாட்டுதல்களின்படி, கார்போஹைட்ரேட்டுகளின் பரிந்துரைக்கப்பட்ட அளவு ஒரு நாளைக்கு 130 கிராம். பதப்படுத்தப்பட்ட வேர்க் கடலையின் 30 கிராம் பாக்கெட்டை நீங்கள் சாப்பிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன் லேபிளின்படி, அதில் 24 சதவீதம் கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே, இது பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்துகளின் அளவில் தோராயமாக 18 சதவீதம்.

அதாவது, பதப்படுத்தப்பட்ட வேர்க்கடலை பாக்கெட்டுகளில் இருந்து 18 சதவீதம் கார்போஹைட்ரேட் கிடைத்துள்ளது. நீங்கள் 100 கிராம் பதப்படுத்தப்பட்ட வேர்க்கடலை சாப்பிட்டால், அன்றைய கார்போஹைட்ரேட்டில் 80 சதவிகிதம் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால், நாள் முழுவதும் கார்போஹைட்ரேட் உள்ள மற்ற பொருட்களைச் சாப்பிட்டால், கண்டிப்பாக அன்றைய கார்போஹைட்ரேட் வரம்பை மீறுவீர்கள்.

பரிமாறும் அளவு: பாக்கெட்டின் பின்புறத்தில் 'சர்விங் சைஸ்' (serving size) லேபிளை காணலாம். மற்ற அனைத்துத் தகவல்களும் இந்த `சர்விங் சைஸ்` அளவை அடிப்படையாகக் கொண்டது. பல பாக்கெட்டுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட `சர்விங் சைஸ்` உள்ளன.

இந்தியாவில், உணவு பாக்கெட் லேபிள்களில் ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் 100 கிராம் அளவுக்குத்தான் ஊட்டச்சத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. நீங்கள் 100 கிராமுக்கு மேல் அதைச் சாப்பிட்டால், குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு ஏற்ப அந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலில் சேரும்.

இந்த உணவில் என்ன கூறுகள் உள்ளனவோ, அவை இறங்கு வரிசையில் லேபிளில் பதிவு செய்யப்படுகின்றன. அதாவது, எந்த ஊட்டச்சத்து அதிக அளவில் உள்ளதோ அது முதலில் வரும், எது குறைவாக உள்ளதோ அது கடைசியாக வரும்.

 
என்னென்ன ஊட்டச்சத்துகள்?
உணவு மற்றும் உடல்நலன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அனைத்து உணவு பாக்கெட்டுகளிலும் அதிலுள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் அவற்றின் அளவுகள் பற்றிய தகவல்களை வழங்குவது அவசியம்.

நீங்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய நான்கு கூறுகள் உள்ளன. மொத்த கொழுப்பு, நிறைவுற்ற கொழுப்பு, உப்பு/சோடியம் மற்றும் சர்க்கரை. இந்தக் கூறுகள் அனைத்தும் உங்கள் எடை மற்றும் ரத்த அழுத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும். இது இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

 
சர்க்கரை
உடல்நலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்க்கரையை நீங்கள் எந்தப் பெயரில் அழைத்தாலும் அதில் கார்போஹைட்ரேட்டை தவிர வேறு எந்த சத்தும் இல்லை. அதிக சர்க்கரையை உட்கொள்வது உங்கள் கலோரிகளை நிரப்புகிறது. அதன் விளைவாக நீங்கள் பசி உணர்வை இழப்பதால் ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. இதனால், ரத்தத்தின் சர்க்கரை அளவை சரியாகப் பராமரிக்கும் உடலின் திறனும் பாதிக்கப்படுகிறது.

அதிக சர்க்கரை, தேன், வெல்லம், கார்ன் சிரப், கார்ன் சர்க்கரை, பிரக்டோஸ் உள்ள உணவுகளில் கவனமாக இருங்கள். பிரௌன் சுகர், கரும்பு சர்க்கரை, கார்ன் ஸ்வீட்னர், டெக்ஸ்ட்ரோஸ், மால்டோஸ், பழச்சாறு செறிவு மற்றும் குளுக்கோஸ் ஆகியவையும் சர்க்கரை வகைகள்தான். இவை எதுவும் ஆரோக்கியமான சர்க்கரைகள் அல்ல.

ஒரு ஜூஸ் பாக்கெட்டை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு லிட்டர் ஜூஸ் பாக்கெட் என்றாலும், அதன் லேபிளில் உள்ள தகவல்கள் வெறும் 100 மி.லி.க்கு மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். 100 மி.லி. ஜூஸ் குடித்தால், அதில் கிடைக்கும் மொத்த சர்க்கரை 12.6 கிராம்.

இதில், தனித்தனியாகச் சேர்க்கப்படும் சர்க்கரை 8.3 கிராம், இது உங்கள் உடலுக்குத் தேவையில்லை. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒரு ஆரோக்கியமான நபர் ஒரு நாளைக்கு 25 கிராமுக்கு மேல் சர்க்கரையை உட்கொள்ளக்கூடாது. இது தோராயமாக 6 டீஸ்பூன் சர்க்கரைக்கு சமம்.

ஒரு சிறிய டம்ளர் ஜூஸில் இருந்து தினசரி சர்க்கரையில் பாதியைப் பெறுவதைக் கற்பனை செய்து பாருங்கள். அதேநேரத்தில், இந்த ஜூஸ் பாக்கெட்டில் 18 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது. வைட்டமின் சி ஒரு நாளைக்கு 40 மில்லிகிராம் தேவை. எனவே, வைட்டமின் சி காரணமாக நீங்கள் சர்க்கரை அதிகம் உள்ள ஜூஸை குடித்தால், உங்கள் உடலுக்கு அதிக தீங்கு ஏற்படும்.

உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள புள்ளி விவரங்களை FSSAI பின்பற்றுவது அவசியமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து அளவுகள் வேறுபட்டதாக இருக்கலாம். ஓர் ஆரோக்கியமான நபருக்கு தினசரி உணவில் தேவைப்படும் சராசரி ஊட்டச்சத்து அளவு ஆர்.டி.ஏ எனப்படும். இந்தியாவில், இது தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் கூட்டாகச் செய்யப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, FSSAI சர்க்கரை சேர்க்கும் வரம்பை 50 கிராமாக வைத்துள்ளது. இது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த வரம்பைவிட இருமடங்கு அதிகம்.

 
உப்பு
உடல்நலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உயர் ரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்க உதவும் குறைந்த அளவு சோடியம் உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும். வழக்கமாக நாம் எடுத்துக்கொள்ளும் பல உணவுப் பொருட்களில் உப்பு சேர்க்கப்படுகிறது. உப்பு இருக்காது என நீங்கள் நினைக்கும் கேக்குகள், ரொட்டிகள், பிஸ்கட்கள் உள்ளிட்ட பல உணவுகளில் உப்பு இருக்கிறது.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர் ஒருவர் ஒரு நாளைக்கு 5-6 கிராமுக்கு மேல் உப்பை உட்கொள்ளக்கூடாது. இது தோராயமாக ஒரு தேக்கரண்டிக்குச் சமம்.

சில பொருட்களின் லேபிள்களில் உப்புக்குப் பதிலாக சோடியம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்படி இருந்தால் சோடியத்தின் அளவை 2.5-ஆல் பெருக்கி உப்பின் அளவை அறியலாம். சோடியத்தின் அளவு ஒரு நாளைக்கு 2300 மி.கி அல்லது 2.3 கிராமுக்குக் குறைவாக இருக்க வேண்டும்.

உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய அறிக்கை இந்தியாவில் 18 கோடியே 80 லட்சம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாகக் காட்டுகிறது. ஆனால், 37 சதவீதம் பேர் மட்டுமே அதைப் பற்றி அறிய முடிகிறது. இதில், 30 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 
கொழுப்பு
உடல்நலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உணவுப் பாக்கெட்டுகளில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு, நிறைவுறா கொழுப்பின் அளவைப் பாருங்கள். ஆரோக்கியமான உணவுக்கு, நிறைவுற்ற கொழுப்பைக் குறைக்க வேண்டும். அதேநேரம், நிறைவுறா கொழுப்பை முற்றிலும் தவிர்க்கவும்.

வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவை நிறைவுற்ற கொழுப்புகள். ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற நிறைவுறா கொழுப்புகள்.

உதாரணமாக, 100 கிராம் பாக்கெட் சிப்ஸில் 555 கிலோ கலோரிகள், 51 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 35 கிராம் கொழுப்பு உள்ளது. நீங்கள் நாள் முழுவதும் 2,000 கிலோ கலோரி உணவை எடுத்துக் கொண்டால், அதில் 20-35 சதவீதம் கொழுப்பு மட்டுமே இருக்க வேண்டும். அதாவது, 44-78 கிராம் கொழுப்பு. இப்போது பாருங்கள், ஒரு பாக்கெட் சிப்ஸில் 555 கிலோ கலோரி மற்றும் 35 கிராம் கொழுப்பும் கிடைக்கிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால், பல நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. 13 வகையான புற்றுநோய், நீரிழிவு நோய், இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் அதிக கொழுப்பு, மரணத்துக்குக்கூட காரணமாகிறது. கடந்த ஆண்டு உடல் பருமன் காரணமாக உலகம் முழுவதும் 28 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

 
நார்ச்சத்து
உடல்நலம்: பாக்கெட் உணவுகளில் நீங்கள் அவசியம் கவனிக்க வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு சர்விங்குக்கு 5 கிராம் நார்ச்சத்து உள்ள உணவுகளை உண்ணுங்கள்.

FSSAI ஊட்டச்சத்து தொடர்பான சில நிபந்தனைகள் மற்றும் விதிகளை வரையறுத்துள்ளது.

உதாரணமாக, 100 கிராம் தயாரிப்பில் உள்ள நார்ச்சத்து 6 கிராமுக்கு மேல், அதாவது 6 சதவீதத்திற்கு மேல் இருந்தால் மட்டுமே, உணவுப் பொருளில் நார்ச்சத்து அதிகம் உள்ளதாகக் கூற முடியும்.

எனவே, நீங்கள் உணவு பாக்கெட்டை வாங்கச் செல்லும் போதெல்லாம், அதன் லேபிளைப் படிக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள். இதன் மூலம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நீங்கள் சரியான உணவுத் தேர்வை நீங்கள் செய்யலாம்.

https://www.bbc.com/tamil/articles/cz9m0q4953ro

புலிகளும் கூட்டமைப்பினருமே இலங்கையை நாசமாக்கினர்

1 month 1 week ago

கூறுகிறார் மஹிந்த அமரவீர! 

புலிகளுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த நாட்டை நாசமாக்கியது. அதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது என்று கூறியுள்ளார் அமைச்சர் மஹிந்த அமரவீர.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நாட்டை ஆளாவிட்டாலும் நாட்டை நாசமாக்கிய ஒரு கட்சியாகும். தற்போது ஜனநாயகப் போர்வையைப் போர்த்துக் கொண்டு வந்திருந்தாலும் படுகொலைகளுடன் தொடர்புடைய ஒரு கட்சியாகும்.

புலிகளுடன் இணைந்து நாட்டில் பேரழிவுகளை ஏற்படுத்தினார்கள். இது இரகசியம் அல்ல. ரில்லியன் கணக்கான சொத்துகள் அழிக்கப்பட்டன.
நாட்டின் பொருளாதாரம் பின்னோக்கி இழுக்கப்பட்டது. அதை மறந்துவிடக் கூடாது. ஜே.வி.பி.யும் அவ்வாறு தான். இப்போது நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைகின்றனர். அதைப் போன்று நாட்டை மீட்கவும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (ஏ) 

https://newuthayan.com/article/புலிகளும்_கூட்டமைப்பினருமே_இலங்கையை_நாசமாக்கினர்.

 

இந்த சங்கியை என்ன செய்வது , நாசமாக்கிய பிக்கு மார்களை விடுத்து .

உயிரை பறிக்கும் பூஞ்சை நோய் மீண்டும் பரவல்

1 month 1 week ago
உயிரை பறிக்கும் பூஞ்சை நோய் மீண்டும் பரவல்

அமெரிக்காவில் மனிதர்களின் உயிரை பறிக்கும் ‛கேண்டிடா ஆரிஸ் எனும் பூஞ்சை தொற்று பரவ தொடங்கியுள்ளது.

இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் பூஞ்சை தொற்று பாதித்தால் என்ன நடக்கும் என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் அடுத்த 2 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவி மொத்தமாக மனிதர்களை முடக்கியது.

இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் அமெரிக்காவில் தற்போது ‛கேண்டிடா ஆரிஸ் எனும் பூஞ்சை தொற்று வேகமாக பரவ தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பூஞ்சை தொற்று என்பது மனிதர்களின் உயிரை பறிக்கும் திறனை அதிகம் கொண்டுள்ளதால் அமெரிக்க மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

அதாவது அமெரிக்காவின் வொஷிங்டனில் கடந்த மாதம் ஒருவருக்கு ‛கேண்டிடா ஆரிஸ் பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும்போதே சியாட்டில் 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தற்போது வரை 4 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் ‛கேண்டிடா ஆரிஸ் பாதிப்பு தற்போது குறைவாக இருந்தாலும் கூட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதற்கு அந்த பூஞ்சை தொற்றின் வீரியம் தான் காரணமாகும். அதாவது ‛கேண்டிடா ஆரிஸ் பூஞ்சை தொற்று என்பது வேகமாக பரவும் தன்மை கொண்டது.

மேலும் அதிக இறப்பு சதவீதத்தை கொண்டுள்ளதோடு, எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாதாம்.

இதனால் தான் சுகாதார நிபுணர்களும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.மேலும் இந்த பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டால் முதலில் அது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை தான் பாதிக்கும்.

மேலும் உணவு குழாய், சுவாச குழாய்களை தாக்கும். மேலும் இந்த பாதிப்பு ஏற்பட்டால் இரத்த ஓட்டம் பாதிப்பதோடு, காது உள்பட பிற உடல் பகுதிகளில் காயங்கள் ஏற்படுத்தும்.

மேலும் பாக்டீரியா தொற்று ஏற்படுவம் பிற அறிகுறிகளும் ஏற்படாலம். நோயின் வீரியம் அதிகரிக்க அதிகரிக்க அறிகுறியின் தாக்கமும் அதிகரிக்கும்.

மேலும் இந்த ‛கேண்டிடா ஆரிஸ் பூஞ்சை தொற்று கிருமி மனிதரின் தோலில் இருந்து கொண்டே இன்னொருவருக்கும் பரவும் தன்மை கொண்டது. இதன்மூலம் ஒருவர் பாதிப்புக்கு உள்ளாகாமலே மற்றவருக்கு நோய் கிருமியை அனுப்ப முடியும்.

மேலும் இந்த தொற்றால் பாதிக்கப்படும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். மேலும் அவர்கள் இருக்கும் அறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும்.

அவரை சந்திக்க செல்வோர் கவசஉடை அணிய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட நபரின் அறைக்கு சென்று வந்தால் கிருமிநாசினியிட்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

https://thinakkural.lk/article/290551

உங்க கிட்னியை புதுசா வைத்திருக்க இந்த பதிவை படிங்க..!

1 month 1 week ago

நம் உடலில் பெரும்பாலான கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்வது சிறுநீரகம்தான். இது பழுதாகிவிட்டால் கை, கால், முகம் மட்டுமல்லாமல் உள்ளுறுப்புகளான நுரையீரலை சுற்றி உள்ள சவ்வுகளில்  கழிவுகள் தேங்கத் துவங்கும். இதனால் நடக்க முடியாமல் போவதோடு மட்டுமல்லாமல் மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஏற்படும். இந்த சிறுநீரக பிரச்சனை சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ,உடல் பருமன் உள்ளவர்கள், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர் ஆகியோரை  எளிதில் தாக்கும். நோய் வந்த பிறகு என்ன செய்யலாம் என்று யோசிப்பதை விட அது வராமல் பாதுகாத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம், அந்த வகையில் என்று சிறுநீரகத்தை பலப்படுத்தக் கூடிய உணவுகளை பார்ப்போம்.

பூண்டு

தினமும் ஒரு பள்ளு  பூண்டை பச்சையாக சாப்பிட்டால் இதய நோய் வராமல் பாதுகாப்பதோடு கெட்ட கொழுப்பை கரைக்கும் ,சிறுநீரகக் குழாயில் ஏற்படும் தொற்றை குணப்படுத்தும்.

கொத்தமல்லி இலை

கொத்தமல்லியை கொதிக்க வைத்த தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஒரு டம்ளர் வீதம்  குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள டாக்சின்களை  வெளியேற்றி  கிட்னி ஆரோக்கியமாக இருக்கும். இதை வாரம் இரண்டு முறை செய்யலாம்.

திராட்சை

திராட்சையில் உள்ள விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் மாரடைப்பை தடுக்கும், சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதையும் தடுக்கும்.

இஞ்சி

இதில் உள்ள ஆன்டி  ஆக்சிடென்ட் சிறுநீர் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மேலும் இது ரத்தம் மற்றும் சிறுநீரகத்தை சுத்திகரிக்கிறது , நல்ல ஜீரண சக்தியையும் கொடுக்கும்.

முட்டைகோஸ்

இதில் உள்ள வளமான ஊட்டச்சத்துக்கள் சிறுநீரக ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவாகும். இதில் உள்ள பைட்டிக் ஆசிட் மற்றும் போலிக் ஆசிட் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும். விட்டமின் கே மற்றும் விட்டமின் பி6 ,நார்ச்சத்து போன்றவைகளும் உள்ளது, இது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும்.

மீன்கள்

மீன்களில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் அதிகம் உள்ளதால் சிறுநீரக நோய் வராமல் பாதுகாக்கும். சாலமன் மத்தி கானாங்கெளுத்தி சூரை மீன் போன்றவை மிக ஆரோக்கியமானது இதை வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிட்டு வரலாம்

வெங்காயம்

சின்ன வெங்காயத்தை அதிக அளவு நம் உணவில் எடுத்துக்கொண்டால் சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கலாம் மேலும் சிறுநீரகத்தை சுத்தமாகவும் வைத்துக்கொள்ளும். சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

உணவில் உப்பை குறைத்துக் கொண்டால் சிறுநீரகப் பிரச்சனை ஏற்படாது மேலும் அதிக ஆக்சிலேட்  நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் தக்காளியில் அதிக ஆக்சிலேட் உள்ளது எனவே குறைவாக பயன்படுத்துவது சிறந்தது.மண்ணிற்கு கீழ் விளையும் கீரை வகைகளை அதிகம் எடுத்து கொள்ள கூடாது ,அதற்கு பதில் கொடிவகை காய்கறிகளான அவரைக்காய் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்

ஆகவே இந்த உணவு முறைகளை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரக கோளாறு ஏற்படாமல் தப்பிக்கலாம். [எ]

 

https://newuthayan.com/article/உங்க_கிட்னியை_புதுசா_வைத்திருக்க_இந்த_பதிவை_படிங்க..!

   

Checked
Tue, 03/19/2024 - 05:42
நலமோடு நாம் வாழ Latest Topics
Subscribe to நலமோடு நாம் வாழ feed