நலமோடு நாம் வாழ

தோலை வெளுப்பாக்கும் சில க்ரீம்களால் சிறுநீரகக் கோளாறு: எச்சரிக்கும் மருத்துவர்கள்

3 hours 25 minutes ago
சிறுநீரக பாதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

சருமத்தை வெளுப்பாக்கும் சில க்ரீம்களில் அதீதமான அளவில் பாதரசம் இருப்பதால், அவை சிறுநீகர பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தற்போது வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது. எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது?

சருமத்தின் நிறத்தை வெளுப்பாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் சில க்ரீம்களில் பாதரசம் போன்ற நச்சு உலோகங்கள் இடம்பெற்றிருப்பது சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சிறுநீரகம் தொடர்பான ஆய்விதழான Kidney Internationalல் "NELL-1–associated membranous nephropathy linked to skin fairness cream use: insights from an Indian case series" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது.

இந்த ஆய்வுக் கட்டுரையை கேரளாவின் கோட்டக்கல்லில் உள்ள Aster MIMS மருத்துவமனையைச் சேர்ந்த ரஞ்சித் நாராயணன், சஜீஷ் சிவதாஸ் மற்றும் அனிலா ஆபிரகாம் குரியன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

 
சிறுநீரக பாதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சருமத்தின் நிறத்தை வெளுப்பாக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட சில க்ரீம்களில் இருந்த நச்சு உலோகமான பாதரசம், சிறுநீரகத்தில் Membranous Nephropathy என்ற பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட கிளீவ்லேண்ட் கிளினிக்கின் கூற்றுப்படி, சிறுநீரகங்களில் உள்ள வடிகட்டிகள், உங்கள் ரத்தத்தில் இருந்து கழிவுப்பொருட்களை சுத்தப்படுத்துகின்றன. Membranous Nephropathy, உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு இந்த சிறிய வடிகட்டிகளைத் தாக்குகிறது. இது சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும்.

சருமத்தின் நிறத்தை வெளுப்பாக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட சில க்ரீம்களில் இருந்த நச்சு உலோகமான பாதரசம், சிறுநீரகத்தில் Membranous Nephropathy என்ற பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த பாதிப்பு ஏற்படும்போது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு, glomeruli எனப்படும் சிறுநீகரங்களில் உள்ள வடிகட்டிகளைச் சேதப்படுத்துகிறது.

இதனால் அந்த வடிகட்டிகள் வீங்கத் துவங்கும். இதற்குப் பிறகு உடலின் ரத்தத்தை, இந்த வடிகட்டிகள் எந்த அளவுக்கு சுத்தம் செய்ய வேண்டுமோ அந்த அளவுக்கு சுத்தம் செய்யாது. இதனால், சிறுநீரில் புரதம் கசிய ஆரம்பிக்கும். இந்தப் பிரச்சனை தொடரும் பட்சத்தில், சிறுநீரகங்கள் முழுமையாக செயலிழக்கும் நிலையும் ஏற்படும்.

Membranous nephropathy என்பது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. அதில், Neural Epidermal Growth factor - like Protein (NELL - 1) என்பது ஒரு காரணி.

நாட்டு மருந்துகளை(Traditional Medicine) உட்கொள்வது, ஹெபடிடிஸ் - பி, சி பாதிப்பு ஆகியவற்றின் காரணமாக இந்த NELL - 1 ஏற்பட்டு சிறுநீரகங்களை பாதிக்கிறது. Membranous nephropathy பாதிப்பு ஏற்பட்டவர்களில் 1 முதல் 8 சதவீதம் பேருக்கு இந்த NELL - 1 காரணமாக பாதிப்பு ஏற்படுகிறது.

 
சிறுநீரக பாதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆங்கில நாளிதழ்  ஒன்றில் தோலை வெளுப்பாக்கும் க்ரீமை பயன்படுத்தியதால், 20 வயது மாணவி ஒருவரும் அவரது குடும்பத்தில் சிலரும் இதே போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்ட செய்தி வெளியானது.

இந்த ஆய்வு கோட்டக்கல்லில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஜூலை 2021லிருந்து செப்டம்பர் 2023வரை Membranous nephropathy பிரச்சனையுடன் வரும் நோயாளிகளை வைத்து மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வை மேற்கொள்ள ஒரு காரணம் இருந்தது. இந்த மருத்துவமனைக்கு Membranous nephropathy பாதிப்புடன் வந்தவர்களுக்கு சோதனை செய்தபோது, பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு NELL - 1ன் காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்ததாகச் சொல்லப்படுகிறது.

"அந்த மருத்துவமனையில் இருந்து ஒரு 14 வயதுப் பெண் Membranous nephropathy பாதிப்புடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருடைய ரத்தம், சிறுநீரைச் சோதித்ததில் பாதரசம் இருப்பது தெரிய வந்தது. பாதரசம் இடம்பெற்றிருக்கக்கூடிய மருந்துகள் எதையாவது அவர் சாப்பிட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் அது குறித்து விசாரித்தோம். ஆனால், அவர் அப்படி எந்த மருந்தையும் சாப்பிட்டதாகத் தெரியவில்லை. இந்த சிறுநீரகப் பிரச்னை வரக்கூடிய வேறு எந்தக் காரணிகளும் அவரிடம் இல்லை. இந்தப் பிரச்னைக்கான காரணம் தெரியாமல் சிகிச்சையைப் பெரிய அளவில் துவங்க வேண்டாம் எனக் கருதினோம்," என்கிறார் பிபிசியிடம் பேசிய இந்த ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் அனிலா ஆபிரகாம் குரியன்.

இந்தத் தருணத்தில்தான், மும்பையில் இருந்து வெளிவந்த ஆங்கில நாளிதழ் ஒன்றில் தோலை வெளுப்பாக்கும் க்ரீமை பயன்படுத்தியதால், 20 வயது மாணவி ஒருவரும் அவரது குடும்பத்தில் சிலரும் இதே போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்ட செய்தி வெளியானது. இதையடுத்து அந்த நோயாளியிடம், தோலை வெளுப்பாக்கும் க்ரீமைப் பயன்படுத்தியது குறித்துக் கேட்கப்பட்டது. அவர் அதை ஒப்புக்கொண்டார்.

 
சிறுநீரக பாதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்த ஆய்வில் இடம்பெற்ற முகப்பூச்சு க்ரீம்கள் அனைத்துமே உள்ளூர் பிராண்டுகளாக இருந்தன என்பதோடு, அந்த க்ரீம்களில் என்னென்ன வேதிப் பொருட்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற தகவல்களும் இல்லை.

இதற்குப் பிறகு கோட்டக்கல் மருத்துவமனையில் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பிற நோயாளிகளிடம் தோலை வெளுப்பாக்கும் க்ரீமைப் பயன்படுத்தினீர்களா எனக் கேட்கப்பட்டது. இந்த NELL 1 - MN நோயாளிகளில் 15 பேரில் 13 பேர் ஆண் - பெண் பேதமின்றி தோலை வெளுப்பாக்கும் க்ரீம்களை பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டனர். மீதமிருந்த இரண்டு பேரில் ஒருவருக்கு நாட்டு மருந்து (Traditional Medicine) சாப்பிடும் பழக்கம் இருந்தது.

இதற்குப் பிறகு இவர்களிடம் ரத்தத்தில் உலோகம் இருக்கிறதா என்ற சோதனை நடத்தப்பட்டது. 9 பேரின் ரத்தத்திலும் சிறுநீரிலும் பாதரசத்தின் அளவு மிக அதிகமாக இருந்தது. அந்த நோயாளிகள் எவ்வளவு நாள், எந்த க்ரீமை பயன்படுத்தியிருந்தார்கள் என்பதை வைத்து பாதரசத்தின் அளவு வேறுபட்டிருந்தது.

இதற்குப் பிறகு இவர்கள் பயன்படுத்திய தோலை வெளுப்பாக்கும் க்ரீம்கள் சென்னையில் உள்ள ஓர் ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவை அனைத்திலுமே பாதரசம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிகவும் அதிகமாக இருந்தது. 1 பிபிஎம் (Parts per million) மட்டுமே இருக்கலாம் என்ற நிலையில், 10,800 பிபிஎம் முதல் 21,900 பிபிஎம்வரை அந்த க்ரீம்களில் பாதரசம் இருந்தது.

இந்த முகப்பூச்சு க்ரீம்கள் அனைத்துமே உள்ளூர் பிராண்டுகளாக இருந்தன என்பதோடு, அந்த க்ரீம்களில் என்னென்ன வேதிப் பொருட்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற தகவல்களும் இல்லை.

இதற்குப் பிறகு, இந்த நோயாளிகளுக்கான சிகிச்சைகள் துவங்கப்பட்டன. சிறுநீரக நோயாளிகளுக்கு அளிக்கப்படும் முக்கிய சிகிச்சையான RAAS (renin-angiotensin-aldosterone system) சிகிச்சை துவங்கப்பட்டது. தோலை வெளுப்பாக்கும் க்ரீமை பயன்படுத்துவதை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. இவர்கள் இந்த க்ரீம்களை பயன்படுத்துவதை நிறுத்திய பிறகு, 6 மாதங்களில் இருந்து 12 மாதங்களில் இவர்களின் சிறுநீரகத்தின் நிலை முழுமையாக மேம்பட்டது.

 
சிறுநீரக பாதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,உலகம் முழுவதுமே சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீம்கள் மீது ஆர்வம் இருப்பதால் இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவில் சுகாதாரப் பிரச்னையாக உருவெடுக்கலாம் என எச்சரிக்கிறது இந்த ஆய்வு.
எதற்காக தோலை வெளுப்பாக்கும் க்ரீம்களில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது?

"பாதரசத்திற்கு தோலிற்கு நிறத்தை அளிக்கும் நிறமியான மெலனினை நீக்கும் தன்மை உண்டு. அதனால், பாதரசத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த க்ரீம்களைத் தொடர்ந்து பயன்படுத்தியிருந்தால், சிறுநீரகம் முழுமையாக சேதமடையக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கும்" என்கிறார் டாக்டர் அனிலா.

உலகம் முழுவதுமே சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீம்கள் மீது ஆர்வம் இருப்பதால் இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவில் சுகாதாரப் பிரச்னையாக உருவெடுக்கலாம் என எச்சரிக்கிறது இந்த ஆய்வு. தவிர, “இதுபோன்ற சிறுநீரக பிரச்னையுடன் வருபவர்கள் சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீமை பயன்படுத்தியிருக்கிறார்களா என்பது குறித்தும் கேட்டறிய வேண்டும் என்பதை இப்போதுதான் மருத்துவர்கள் உணர ஆரம்பித்திருப்பதால், பாதரசத்தைக் கொண்ட சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீம்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து பெரிய அளவில் செய்திகள் வெளியாவதில்லை” என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

"சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீம்கள் அவசியமா என்பதை யோசிக்க வேண்டும். தவிர, கண்காணிப்பு அமைப்புகளும் இதுபோன்ற க்ரீம்களின் உள்ளடக்கம் குறித்து ஆய்வுசெய்து கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டும்" என்கிறார் சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறையின் இயக்குநர் டாக்டர் என். கோபாலகிருஷ்ணன்.

இதில் இன்னொரு கேள்வியும் இருக்கிறது. இதுபோன்ற க்ரீம்களை பலரும் பயன்படுத்துகிறார்கள். இருந்தபோதும் எல்லோருக்கும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதில்லை ஏன்?

"ஆயிரக்கணக்கானவர்கள் பயன்படுத்தினாலும், நோய் ஏற்படுவதில் மரபணு, சூழல் போன்றவையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பலருக்கு ஏற்படுவதில்லை என்பதால், இதனால் பாதிப்பு இல்லை என விட்டுவிட முடியாது. புகைப் பிடிக்கும் எல்லோருக்கும் புற்றுநோய் வருவதில்லை. ஆனால், புகைப் பிடிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகம். அப்படித்தான் இதையும் பார்க்க வேண்டும்" என்கிறார் டாக்டர் என். கோபாலகிருஷ்ணன்.

 
சிறுநீரக பாதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தோலை வெண்மையாக்கும் அல்லது வெளுப்பாக்கும் கிரீம் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களில் பாதரசத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்திய உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
NELL - 1 எப்படி சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது?

NELL - 1 என்பது ஒரு antigen. அதாவது நோயெதிர்ப்புத் தன்மையைத் தூண்டக்கூடிய ஒரு மூலக்கூறு. இந்த மூலக்கூறு, anti-bodyஐ ஏற்படுத்தும். அவை, சிறுநீரகத்தின் வடிகட்டிகளில் சேர ஆரம்பிக்கும்போது, அந்த வடிகட்டிகள் பாதிப்படைய ஆரம்பிக்கும். பொதுவாக புற்றுநோய் இருப்பவர்களுக்கு இந்த antigen ஏற்படும். ஆனால், புற்றுநோய் இல்லாமல் இந்த antigen உருவாகி சிறுநீரகத்தைப் பாதிக்கிறதென்றால், அது ஏன் ஏற்படுகிறது என்பதை ஆராய வேண்டும். அப்போதுதான் அதைக் குணப்படுத்த முடியும் என்கிறார் கோபாலகிருஷ்ணன்.

இந்தியாவில், தோலை வெளுப்பாக்கும் க்ரீம்களின் தயாரிப்பு மதிப்பு சுமார் 0.45–0.53 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தோல் வெண்மையாக்கும் அல்லது வெளுப்பாக்கும் கிரீம் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களில் பாதரசத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்திய உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 மற்றும் 1945ஆம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விதிகளின் அடிப்படையில், இது தடை செய்யப்பட்டுள்ளது.

2017இல் இதில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டு, அழகு சாதன பொருட்களின் பயன்படுத்தப்படும் பாதரச வரம்பு 1 ppm ஆக மாற்றப்பட்டது.

மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 இன் கீழ் உள்ள ஒப்பனை விதிகள், 2020 இன் படி, பரிந்துரைக்கப்பட்ட பாதரச வரம்பு 1 பிபிஎம் ஆக இருக்க வேண்டும் என்றும், இது இறக்குமதி செய்யப்படும் அழகுசாதன பொருட்களுக்கும் பொருந்தும்.

https://www.bbc.com/tamil/articles/c4n1n9z9ypmo

50 வருடங்களுக்குள் 154 மில்லியன் உயிர்களை காப்பாற்றியுள்ள தடுப்பூசிகள்! வெளியாகியுள்ள தகவல்

5 days 23 hours ago

கடந்த அரை நூற்றாண்டிற்குள் தடுப்பூசிகளின் மூலம்154 மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக  உலக சுகாதார மற்றும் மருத்துவ ஆய்வாளர்கள் அடங்கிய சர்வதேச குழு தகவல் வெளியிட்டுள்ளது. 

த லென்செட் (The Lancet) எனப்படும் அறிக்கையில் இது தொடர்பில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

1974ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பால் தொடங்கப்பட்ட நோய்த்தடுப்புக்கான விரிவாக்கப்பட்ட திட்டத்தின் (EIP) விளைவுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இறப்பு விகிதம் 

இதற்கமைய, தடுப்பூசிகள் குறித்த ஆய்வுகளில் கடந்த 50 ஆண்டுகளுக்குள் சுமார் 154 மில்லியன் அளவிலான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

154-million-people-served-by-vaccine-in-50-years-

ஆய்வுக்குழுவின் அறிக்கையின்படி, தடுப்பூசிகளால் குழந்தைகளே அதிக நன்மையடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, பயன்பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கையில் 104 மில்லியன் குழந்தைகளே உள்ளதாக ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த தடுப்பூசி திட்டமானது குழந்தைகள் இறப்பு விகிதத்தில் 40 வீத வீழ்ச்சியினையும் ஏனையவர்களின் இறப்பு விகிதத்தில் 60 வீத வீழ்ச்சியையும் காட்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/154-million-people-served-by-vaccine-in-50-years-1715324039

உலகளவில் அதிகரிக்கும் ஆணுறுப்பு புற்றுநோய்; அறிகுறிகள் என்னென்ன? என்ன சிகிச்சை?

6 days 5 hours ago
ஆண்குறி புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

6 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரேசில் நாட்டை சேர்ந்த ஓய்வூதியதாரர் ஜோவாவ் (João - அவரது உண்மையான பெயர் அல்ல) , 2018 -ஆம் ஆண்டில், தனது ஆணுறுப்பில் மரு போன்று ஏதோ இருப்பதை கவனித்தார். என்னவென்று புரியாமல் மருத்துவ உதவியை நாடினார்.

"எனது ஆணுறுப்பில் மரு போன்று உருவாகி இருப்பது என்ன என்பதைக் கண்டறிய நான் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றேன். ஆனால் அனைத்து மருத்துவர்களும், அங்கு எனக்கு தடிமனான தோல் இருப்பதால் அப்படி இருக்கும், அல்லது சில மருந்துகளின் பக்க விளைவாக ஏற்பட்டிருக்கும் என சொன்னார்கள்," என்று 63 வயதான ஜோவாவ் நடந்ததை நினைவு கூர்ந்தார்.

மருந்துகள் உட்கொண்ட போதிலும் அந்த மருவின் வளர்ந்துகொண்டே இருந்தது. இது அவரது திருமண வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தத் துவங்கியது. ஜோவாவின் பாலியல் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜோவாவ் மறும் அவரது மனைவிக்கு இடையில் தாம்பத்யம் முற்றிலும் இல்லாமல் போனது.

"நாங்கள் கணவன் மனைவியாக இல்லாமல், உடன்பிறப்புகளைப் போல வாழத் தொடங்கினோம்," என்று ஜோவாவ் ஒப்புக்கொள்கிறார். ஆனால், தனக்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

 

ஐந்து ஆண்டுகளாக ஜோவாவ் மருந்துகளை பரிந்துரைக்கும் மருத்துவ நிபுணர்களிடம் முன்னும் பின்னுமாகச் சென்று புதிய பயாப்ஸிகளை செய்து கொண்டார். ஆனால் தன் பிரச்னை தீர்க்கப்படவில்லை என்று அவர் விவரித்தார்.

பின்னர், 2023-இல் ஒரு நோயறிதல் அறிக்கை வழங்கப்பட்டது. அதில் அவருக்கு 'ஆணுறுப்பு புற்றுநோய்' இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

"என் மனம் கனத்துப்போனது. எனது குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். என் ஆண்குறியின் ஒரு பகுதியை துண்டிக்க வேண்டியிருக்கும் என்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் தலை துண்டிக்கப்பட்டது போல் நான் உணர்ந்தேன். இந்த வகையான புற்றுநோயைப் பற்றி நீங்கள் யாரிடமும் பேச முடியாது. ஏனெனில் இது ஒரு 'ஜோக்' ஆக மாறக்கூடும்," என்கிறார் ஜோவாவ்.

ஆண்குறி புற்றுநோய் அரிதானது. ஆனால் உலகம் முழுவதும் இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதம் அதிகரித்து வருகின்றன. சமீபத்திய ஆய்வுகளின்படி, ஜோவாவின் சொந்த நாடான பிரேசிலில் தான் ஆண்குறி புற்று நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. அங்கு, 1 லட்சம் ஆண்களில், 2.1% பேருக்கு இந்தப் புற்றுநோய் உள்ளது.

 
ஆண்குறி புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சமீபத்திய ஆண்குறி புற்றுநோய் ஆராய்ச்சியின்படி, உலகம் முழுவதும் இதன் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
'அறுவை சிகிச்சைக்கு பயந்தேன்'

சமீபத்திய ஆய்வுகளின்படி, ஜோவாவின் சொந்த நாடான பிரேசிலில் தான் ஆண்குறி புற்று நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. அங்கு, 1 லட்சம் ஆண்களில், 2.1 பேருக்கு இந்தப் புற்றுநோய் உள்ளது.

2012 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் தங்கள் நாட்டில் 21,000 ஆண்குறி புற்றுநோயாளிகள் பதிவாகியுள்ளனர் என்று பிரேசிலின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. "இதன் விளைவாக 4,000-க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டன. கடந்த பத்தாண்டுகளில், 6,500-க்கும் மேற்பட்ட ஆண்குறி புற்றுநோயாளிகளுக்கு உறுப்பு நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது – இது சராசரியாக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை", என்று அந்த அறிக்கை கூறுகிறது.

பிரேசிலின் மிகவும் ஏழ்மையான மாநிலமான மரன்ஹாவாவ் (Maranhão), உலகளவில் அதிக ஆண்குறி புற்றுநோயாளிகளைக் கொண்டுள்ளது. அங்கு 1 லட்சம் ஆண்களில், 6.1 என்ற விகிதத்தில் நோயாளிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்குறி புற்றுநோய், ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, கதிரியக்க சிகிச்சை மற்றும் கீமோதெரபி போன்ற சிகிச்சைகள் மூலம் குணப்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், ஆண்குறியின் பாதிக்கப்பட்ட பகுதி அல்லது முழுவதுமாக அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டியிருக்கும். மேலும் ஆணுறுப்புக்கு அருகில் உள்ள விதைப்பைகள் போன்ற பிற பிறப்புறுப்பு உறுப்புகளையும் நீக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம், என்கின்றனர் மருத்துவர்கள்.

ஜோவாவுக்கு சென்ற ஜனவரி மாதம் ஆணுறுப்பின் ஒரு பகுதி நீக்கப்பட்டது.

"உறுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டது என் வாழ்வின் மிகவும் கடினமான நேரம். இது நமக்கு நடக்கும் என்று நான் நினைத்துப் பார்க்காத ஒன்று, ஆனால் நடந்துவிட்டது. சாதாரணமாக நண்பர்களிடம் இந்தச் சோகத்தை பகிர்ந்துவிட்டுக் கடந்து செல்ல முடியவில்லை,” என்று அவர் விவரிக்கிறார்.

"ஆரம்பத்தில் நான் அறுவை சிகிச்சைக்கு பயந்தேன். ஆனால் வேறு வழியில்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் வாரத்தில் மிகவும் சோகமாக இருந்தேன். ஆண்குறியின் ஒரு பகுதி துண்டிக்கப்படுவது பயங்கரமானது," என்று கூறினார் அவர்.

 
ஆண்குறி புற்றுநோய்

பட மூலாதாரம்,SBU

படக்குறிப்பு,பிரேசிலியன் 'சொசைட்டி ஆஃப் யூரோலஜியைச்' சேர்ந்த மொரிசியோ டெனர் கார்டிரோ, “சுகாதாரம் இல்லாததும் இந்த நோய் ஏற்படக் காரணமாக இருக்கலாம் என்கிறார்
ஆணுறுப்பை முழுவதும் நீக்க வேண்டுமா?

ஆண்குறி புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளாக கூறப்படுவன:

1) ஆணுறுப்பில் ஆறாத புண்கள் ஏற்படுவது

2) ஆணுறுப்பிலிருந்து கடுமையான நாற்றம் கொண்ட திரவம் வெளியேறுவது

சில நோயாளிகளுக்கு ஆண் உறுப்பு முற்றிலும் நீக்கப்படுகிறது. இது அவர்களின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றும்.

பிரேசிலின் முக்கியமான வணிக நகரமான சாவ் பாலோவில் உள்ள ஏ.சி. காமர்கோ புற்றுநோய் மையத்தின் சிறுநீரகவியல் துறை மருத்துவர் தியாகோ கேமலோ மௌராவோ இதுகுறித்துப் பேசுகையில், ஆண்குறியின் ஒரு பகுதி மட்டும் நீக்கப்பட்டால், அதன் வழியாக சிறுநீர் தொடர்ந்து வெளியேறும், என்றார். "ஆனால், முழு பாகமும் நீக்கப்படும் நிலையில், சிறுநீர்க்குழாய் துளை, விதைப்பை மற்றும் ஆசனவாய் இடையே உள்ள பகுதியான பெரினியத்திற்கு (perineum) மாற்றியமைக்கப்படும். இதனால் நோயாளி கழிவறையில் அமர்ந்த நிலையில் சிறுநீர் கழிக்க வேண்டி இருக்கும்," என்று விளக்கினார்.

நிபுணர்களின் கருத்துப்படி, "ஆண்குறி புற்றுநோய் உருவாக பல ஆபத்து காரணிகள் உள்ளன. பிமோசிஸ் (phimosis) என்று சொல்லப்படும் இறுக்கமான நுனித்தோல் இருப்பது, புகைபிடித்தல் ஆகியவற்றால் இந்த நோய் ஏற்படலாம்."

பிரேசிலியன் 'சொசைட்டி ஆஃப் யூரோலஜியைச்' சேர்ந்த மொரிசியோ டெனர் கார்டிரோ, “சுகாதாரம் இல்லாததும் இந்த நோய் ஏற்படக் காரணமாக இருக்கலாம். ஒரு ஆண் தன் ஆணுறுப்பின் நுனித்தோலை சரியாக சுத்தம் செய்யத் தவறினால், அதில் சுரக்கும் ஒருவித சுரப்பு அதிகரித்துத் தேங்கி, அது பாக்டீரியா தொற்றுக்கு வழிவகுக்கிறது. இது மீண்டும் மீண்டும் ஏற்பட்டால், அது புற்றுநோய் கட்டியாக மாறும் வாய்ப்புகளை அதிகரிக்கும்,” என்றார்.

கார்டிரோ மேலும் கூறுகையில், "மனித பாப்பிலோமா வைரஸின் (HPV) தாக்கம் தொடர்ந்து ஏற்பட்டாலும், வாய் மற்றும் ஆண்குறி உள்ளிட்ட புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும். HPV என்பது ஒரு வகை வைரஸ் குழுவிற்கு வழங்கப்படும் பொதுவான பெயர். HPV உயர் செயல்திறன் கொண்ட வைரஸ் ஆகும். எனவே அது தொடர்பான தொற்றுக்களைத் தடுக்கத் தடுப்பூசி அவசியம். ஆனால் பிரேசிலில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் விகிதங்கள் தேவையான அளவை விட குறைவாக இருக்கின்றன,” என்றார்.

கார்டிரோ மேலும் கூறுகையில், "பிரேசிலில், தடுப்பூசிகள் கிடைத்தாலும், HPV தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் விகிதம் குறைவாகவே உள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் விகிதம் பெண்களிடம் 57%, ஆண்களுக்கு 40%-ஐ விட குறைவு,” என்றார்.

பிரேசிலில் தடுப்பூசி பற்றிய தவறான தகவல்கள், அதன் செயல்திறன் பற்றிய சந்தேகங்கள் மற்றும் தடுப்பூசி பிரசாரங்களின் பற்றாக்குறை ஆகியவை இந்தப் பிரச்னைகளை தீவிரப்படுத்துவதாக அவர் கருதுகிறார்.

 
ஆண்குறி புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,'மனித பாப்பிலோமா வைரஸின் (HPV) தாக்கம் தொடர்ந்து ஏற்பட்டாலும், வாய் மற்றும் ஆணுறுப்பு உள்ளிட்ட புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்'
உலகம் முழுதும் அதிகரிக்கும் ஆணுறுப்புப் புற்றுநோய்

ஆனால், இந்த நிலை பிரேசிலில் மட்டுமில்லை. சமீபத்திய ஆண்குறி புற்றுநோய் ஆராய்ச்சியின்படி, உலகம் முழுவதும் இதன் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2022-ஆம் ஆண்டில், JMIR பொது சுகாதாரம் மற்றும் கண்காணிப்பு என்ற சஞ்சிகை, 43 நாடுகளின் சமீபத்தியத் தரவுகளை உள்ளடக்கிய பெரிய அளவிலான ஆய்வு முடிவுகளை வெளியிட்டது.

2008 மற்றும் 2012 ஆண்டுகளுக்கு இடையில் அதிக ஆண்குறி புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை உகாண்டாவில் இருந்தது (1 லட்சம் ஆண்களுக்கு 2.2 பேர்), அதைத் தொடர்ந்து பிரேசில் (1 லட்சம் ஆண்களுக்கு 2.1 பேற்) மற்றும் தாய்லாந்து (1 லட்சம் ஆண்களுக்கு 1.4 பேர்). குவைத்தில் மிகக் குறைவாக இருந்தது (1 லட்சம் ஆண்களுக்கு 0.1 பேர்).

"வளரும் நாடுகளில் ஆண்குறி புற்றுநோயின் பாதிப்பால் அதிக இறப்புகள் ஏற்படுகின்றன. என்றாலும், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது," என்பதை சீனாவின் சன் யாட்-சென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லீவென் ஃபூ மற்றும் தியான் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.

1979 மற்றும் 2009 ஆண்டுகளுக்கு இடையில் பிரிட்டனில் ஆண்குறி புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் (1 லட்சம் ஆண்களுக் 1.1-இலிருந்து 1.3 ஆக உயர்வு) , ஜெர்மனியில் 1961 மற்றும் 2012 ஆண்டுகளுக்கு இடையில் 50% அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன (1 லசட்சம் ஆண்களுக்கு 1.2-இலிருந்து 1.8 ஆக உயர்வு).

`குளோபல் கேன்சர் ரெஜிஸ்ட்ரி`யின் கணிப்பு எதிர்வரும் 2050-ஆம் ஆண்டில், ஆண்குறி புற்றுநோயாளிகளின் உலகளாவிய எண்ணிக்கை 77%-க்கும் அதிகமாக உயரும் என்று மதிப்பிடுகிறது. மேலும் இந்நோய் வயதான ஆண்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும், 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மருத்துவர் கார்டிரோ மேலும் கூறுகையில், ஆணுறுப்பு புற்றுநோய் என்பது ஒரு அரிதான நோயாகும், என்றார். "ஆனால் இது ஏற்படாமல் தடுப்பது சுலபம். ஆண்கள் (எல்லா வயதினரும்) தங்கள் ஆண் உறுப்பை சோப்பு மற்றும் தண்ணீரில் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். உடலுறவுக்குப் பிறகு கழுவுவது மிகவும் முக்கியம்," என்றார்.

"உடலுறவின் போது ஆணுறைகளைப் பயன்படுத்துதல் மற்றும் ஆணுறுப்பின் முன்தோல் தடிமனாக இருப்பின் அறுவை சிகிச்சை செய்து நீக்குதல் ஆகியவை ஆண்குறி புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும்,” என்றும் அவர் அறிவுறுத்தினார்.

ஜோவாவ் தற்போது தனது சமீபத்திய சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் முடிவுகள் வெளியாகும்.

"இந்தச் சோதனை, நான் குணமடைந்து விட்டேன் என்று கூறும் என்று நம்புகிறேன். என் ஆணுறுப்பில் பாதி நீக்கப்பட்டது வாழ்நாள் முழுவதும் வருத்தம் தரக்கூடியது எனினும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு வலி இன்றி நிம்மதியாக இருக்கிறேன்," என்கிறார் அவர்.

பிரிட்டனின் புற்றுநோய் ஆராய்ச்சி அறிக்கைகளின்படி, ஆண்குறி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்களில் 90%-க்கும் அதிகமானோருக்கு, அவர்களது உறுப்புக்கு அருகில் உள்ள நிணநீர் மண்டலங்களுக்குத் தொற்று பரவவில்லை எனில், அவர்கள் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேற்ட்ட காலம் பிரச்சனை இன்றி வாழ்கின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/ckr58d9k2m3o

உலக சினைப்பை புற்றுநோய் தினம்: அறிகுறிகள், கண்டறியும் வழிகள் மற்றும் சிகிச்சைகள் - நிபுணர் விளக்கம்

1 week 1 day ago
  • ஹேமா ராகேஷ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவில் சினைப்பை புற்றுநோய் என்பது பெரியளவில் பெண்கள் மத்தியில் கவனம் செலுத்தப்படாத ஒன்றாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், சினைப்பை புற்றுநோய் எப்படி உருவாகிறது, அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்களையும் பல்வேறு தகவல்களையும் பிபிசி தமிழ் நேயர்களிடம் பகிர்ந்து கொண்டார் புற்றுநோய் மருந்தியல் துறையின் மூத்த மருத்துவர் பிரசாத்.

சினைப்பை புற்றுநோய் வருவதற்கான காரணம் என்ன?

ஹார்மோன் குறைபாடு, மாதவிலக்கு சுழற்சியில் ஏற்படும் குறைபாடுகள், கருத்தரிக்காமல் இருக்கக்கூடிய சில சூழல்கள் மற்றும் பிரச்னைகள், குறிப்பாக மன அழுத்தம் மற்றும் ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படும் உடற்பருமன் போன்றவை சினைப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான மிக முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.

சினைப்பை புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சில நேரங்களில் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் அதிகப்படியாக சுரந்தாலும் பிரச்னைகள் ஏற்பட்டு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மேலும் பிரசவித்த பெண்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கவில்லை என்றாலும், பிரசவமே நடக்காத பெண்களுக்கும் குறிப்பிட்ட சதவீத அளவில் சினைப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இப்போது பல பெண்கள் அதிக அளவில் மது பழக்கத்தையும் புகைபிடிக்கும் பழக்கத்தையும் கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்துமே பெண்களுடைய ஹார்மோனில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கி அது மார்பகப் புற்றுநோய்க்கும் சினைப்பை புற்றுநோய்க்கும் வழி வகுக்குகிறது.

 
சினைப்பை புற்றுநோயை எப்படி கண்டறிவது?
சினைப்பை புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

துரதிர்ஷ்டவசமாக இப்போதைக்கு சினைப்பை புற்றுநோயின் ஆரம்பநிலையை உடனடியாக நாம் கண்டறிய இயலாது. ஏனென்றால் ஒரு சில பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில், வயிறு வலி குறைவான ரத்தப்போக்கு என ஒரு சில அறிகுறிகள் இருக்கலாம்.

ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இந்த அறிகுறிகள் இருப்பதால் அவற்றை சினைப்பை புற்றுநோய் என்று எடுத்துக்கொள்ள முடியாது. பிரிட்டனில் சினைப்பை புற்றுநோயைக் கண்டறிய இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

ஆனால் துரதிஷ்டவசமாக இந்த சினைப்பை புற்றுநோயின் ஆரம்ப நிலையை அவர்களால் ஸ்க்ரீனிங் (Screening) மூலம் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் சினைப்பை புற்றுநோயின் ஆரம்பக்கட்ட பரிசோதனை என்பது தோல்வியில் முடிந்துள்ளது. ஆனால் ஆரம்ப நிலையை வரும் முன் காப்போம் என்ற எண்ணத்தின் மூலம் நாம் தடுக்க முடியும்.

ஒரு குடும்பத்தில் இரண்டு தலைமுறைகளுக்கு உட்பட்டு பெண்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் அந்தக் குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களுக்கு ஹார்மோன் தொடர்பான பிரச்னைகளும் மரபணு காரணமாக ஏற்படக்கூடிய நோய்களும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

சினைப்பை புற்றுநோய்
படக்குறிப்பு,புற்றுநோய் மருந்தியல் துறையின் மூத்த மருத்துவர் பிரசாத்.

ஆகையால் இரண்டு தலைமுறைகளில் குடும்பத்தில் ஒரு பெண்ணின் அக்கா, தங்கை மற்றும் சித்தி பெண், பெரியம்மா பெண் போன்றவர்களுக்கு புற்றுநோய் இருந்ததாக நீங்கள் கண்டறிந்தால் 30 வயதுக்குப் பிறகு நீங்களும் உங்களுக்கான முழு உடல் பரிசோதனையை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

சினைப்பை புற்றுநோய் கண்டறியப்பட்டால் அதற்கு சிகிச்சை முறை இருக்கிறதா?

நிச்சயம் சிகிச்சைகள் இருக்கின்றன. சிகிச்சை என்பதைத் தாண்டி சினைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எந்த மரபணு மாற்றம் காரணமாக இந்த சினைப்பை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பதையும் இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக நாம் கண்டறிய முடியும்.

நாங்கள் மருத்துவத்துறையில் 'Molecular Studies' என்று சொல்லுவோம். இந்தியாவில் இருக்கக்கூடிய பல நகரங்களில் இந்த வசதிகள் வந்திருக்கின்றன. சினைப்பை புற்றுநோய் 2, 3 மற்றும் 4ஆம் கட்டத்தில் இருந்தாலும் அதை சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும்.

நோய் எந்தெந்த இடங்களில் பரவி இருக்கிறது என்பதை ஸ்கேன் மூலம் நம்மால் அறிந்துகொள்ள முடியும். இதற்கு இரண்டு சிகிச்சைகள் இருக்கின்றன, ஒன்று அறுவை சிகிச்சை மற்றொன்று கீமோதெரபி.

 
சினைப்பை புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இப்போது இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தின் மூலம் பக்க விளைவுகள் இல்லாத கீமோதெரபி சிகிச்சையையும் நாம் வழங்க முடியும்.

மேலும் இவைற்றையெல்லாம் தாண்டி டார்கெட் தெரபி (Target Therapy) என்ற ஒரு சிகிச்சை முறை இருக்கிறது. புற்றுநோய் கட்டி வளர்வதற்கு ரத்த நாளங்கள் தேவை. அதேபோல் புற்றுநோய் கட்டி இன்னொரு இடத்தில் பரவுவதற்கும் ரத்த நாளங்கள் தேவை. புற்றுநோய் கட்டி இருந்த இடத்தில் ரத்த நாளங்கள் வளராமல் இருப்பதற்கு டார்கெட் தெரபி சிகிச்சை இருக்கிறது. அதற்கான மருத்துவ வசதிகளும் இன்றைக்கு இந்தியாவில் இருக்கின்றன.

சினைப்பை புற்றுநோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

சினைப்பை புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு முதன்மையான தற்காப்பு, பெண்கள் தங்களுடைய உடல் நலனில் சிறந்த அக்கறையைச் செலுத்துவதுதான். நமக்குத்தான் திருமணம் ஆகிவிட்டதே, குழந்தை பிறந்துவிட்டதே, இனி என்ன என்று நினைக்காமல் எல்லா வயதிலும் பெண்கள் தினமும் உடற்பயிற்சி செய்து தங்களுடைய உடல் எடையை சீரான நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அதேபோல தங்களுடைய உடலில் இருக்கக்கூடிய ஹார்மோன் சமநிலை சரியாக இருக்க வேண்டுமெனில் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.

 
சினைப்பை புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதைவிட மிக முக்கியம் ஸ்கிரீனிங். 30 வயதைத் தாண்டிய பெண்கள் சினைப்பை புற்றுநோய் பரிசோதனையையும், 40 வயதைத் தாண்டிய பெண்கள் மார்பகப் புற்றுநோய் பரிசோதனையையும் சீரான இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் ஏற்கெனவே ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிந்தால் 30 வயதிற்குப் பிறகு பெண்கள் தங்களுடைய மகப்பேறு மருத்துவரை அணுகி டிரான்ஸ்வஜினல் ஸ்கேன் (Transvaginal Scan) என்ற பரிசோதனையை சீரான இடைவெளியில் மேற்கொண்டால் கருமுட்டையில் மற்றும் கர்ப்பப்பையில் ஏதாவது சிறிய மாற்றம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

டிரான்ஸ்வஜினல் ஸ்கேன் பரிசோதனை என்பது இரண்டு நிமிடங்களில் இருந்து ஐந்து நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு சிறிய பரிசோதனை.

மேலும் தங்களுடைய உடல் உழைப்புக்கு ஏற்ற சத்தான உணவுகளை உண்பது, ஹார்மோன் சமநிலையைப் பேணுவது, உயரத்திற்கு ஏற்ற எடையைப் பராமரிப்பது போன்றவற்றைச் சரியாகச் செய்தாலே எல்லா நோய்களில் இருந்தும் பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும்.

https://www.bbc.com/tamil/articles/c9wz28yl13do

கொவிஷீல்ட் தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட நிறுவனம் !

2 weeks 2 days ago
Covishield-2-750x375.jpg கொவிஷீல்ட் தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட நிறுவனம் !

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரொனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளும் தடுப்பூசியை கண்டுபிடிக்க முயற்சித்த நிலையில், ஒரு சில நாடுகள் அதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடித்தன.

இதில் பிரித்தானியாவைச் சேர்ந்த அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின.

இந்த தடுப்பூசி இந்தியாவில் கொவிஷீல்ட் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது.

இதற்கிடையே அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் தொடர்ந்திருந்தார்.

மேலும், அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் எதிராக நஷ்டஈடு கோரி சுமார் 51 வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், இவ்வழக்குகள் மீதான விசாரணைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் நீதிமன்றத்தில் அளித்த ஆவணத்தில், “தன் நிறுவனம் உருவாக்கிய கொவிஷீல்ட் கொவிட் தடுப்பூசி ஒரு அரிய பக்க விளைவை ஏற்படுத்தும்“ என ஒப்புக்கொண்டதாக த டெலிகிராப் (the telegraphஊடகம் தெரிவித்துள்ளது.

இரத்த உறைவு மற்றும் இரத்தில் காணப்படும் குருதிச் சிறு தட்டுக்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே நடக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1380347

இந்திய ஆண்களுக்கு ப்ராஸ்டேட் புற்றுநோய் அதிகரிப்பது ஏன்? கண்டறிவது எப்படி?

2 weeks 4 days ago
இந்திய ஆண்களுக்கு ப்ராஸ்டேட் புற்றுநோய் அதிகரிப்பது ஏன்? கண்டறிவது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுசீலா சிங்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

மருத்துவ ஆய்விதழான `லான்செட்` சமீபத்தில் வெளியிட்டிருந்த ஓர் அறிக்கைப்படி, உலகம் முழுவதும் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டில் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சமாக இருந்தது. இது 2040ஆம் ஆண்டில் 29 லட்சமாக அதிகரிக்கும் என்று லான்செட் அறிக்கை கூறுகிறது.

மொத்தம் 112 நாடுகளில் உள்ள ஆண்களுக்கு இது பொதுவான பிரச்னை என்றும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 15% பேர் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டில், உலகளவில் 3,75,000 ஆண்கள் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் இறந்தனர். எதிர்வரும் 2040ஆம் ஆண்டில் இந்த இறப்புகள் 85% அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

புற்றுநோயால் ஏற்படும் ஆண்கள் மத்தியில் ஏற்படும் இறப்புகளில் இது ஐந்தாவது பெரிய காரணமாக உள்ளது.

இந்தியாவில், புற்றுநோய் பாதிக்கப்பட்ட மக்களில் மொத்தம் 3% ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். மேலும் ஒவ்வோர் ஆண்டும் 33,000 முதல் 42,000 புதிதாக ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

 
இந்தியாவில் 30% அதிகரித்த ப்ராஸ்டேட் புற்றுநோய்
ப்ராஸ்டேட் புற்றுநோய்

பட மூலாதாரம்,RITU MARWA

படக்குறிப்பு,ரிது மர்வா மற்றும் ராஜேஷ் குமார்

லான்செட் அறிக்கையின்படி, ஒவ்வொரு 1 லட்சம் ஆண்களுக்கும் 4 முதல் 8 பேர் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் நகர்ப்புற மக்களில் ப்ரோஸ்டேட் புற்றுநோய் 75% முதல் 85% அதிகரித்துள்ள அதே வேளையில், தேசிய அளவில் புற்றுநோய் பாதிப்புகள் 30% அதிகரித்துள்ளது.

டெல்லியில் வசிக்கும் ராஜேஷ் குமாருக்கு 2022 அக்டோபரில் ப்ரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது.

அவரது மனைவி ரிது மர்வா பிபிசியிடம் ஒரு தொலைபேசி உரையாடலில், "என் கணவர் சிறுநீரை அடக்கி வைப்பதில் பிரச்னைகளை எதிர்கொண்டார். நாங்கள் ஒவ்வோர் ஆண்டும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வோம். இந்த பிரச்னைக்குப் பிறகு, எங்கள் குடும்ப மருத்துவர் அல்ட்ராசவுண்ட் செய்யச் சொன்னார்," என்றார்.

பரிசோதனையில் ராஜேஷ் குமாருக்கு ப்ரோஸ்டேட் பெரிதாகி இருப்பது தெரிய வந்ததால், மருத்துவர் அவரை ப்ரோஸ்டேட் ஸ்பெசிஃபிக் ஆன்டிஜென் அல்லது பி.எஸ்.ஏ பரிசோதனை செய்து கொள்ளச் சொன்னார்.

இதையடுத்து எம்.ஆர்.ஐ., பயாப்ஸி ஆகிய பரிசோதனைகள் செய்து பார்த்ததில் ராஜேஷ் குமாருக்கு இரண்டாம் நிலை ப்ரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது.

 
ப்ரோஸ்டேட் என்றால் என்ன?
ப்ராஸ்டேட் புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

`ப்ரோஸ்டேட்` ஆண் இனப்பெருக்க அமைப்பின் ஒரு பகுதி. இது சிறுநீர்ப்பைக்கு அடியில் அமைந்துள்ளது. இது ஒரு வால்நட் அளவில் இருந்தாலும் வயது ஆக ஆகப் பெரிதாகிறது.

ஆண்களுக்கு 45-50 வயதிற்குப் பிறகு ப்ரோஸ்டேட் தொடர்பான பிரச்னைகள் வந்தாலும், அவை அனைத்தும் புற்றுநோய் அல்ல என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், எல்லா ஆண்களும் இந்தச் சிக்கலை எதிர்கொள்வது இல்லை.

ப்ராஸ்டேட் உறுப்பின் அளவு அதிகரிக்கத் துவங்கும்போது மருத்துவர்கள் பி.எஸ்.ஏ சோதனையைப் பரிந்துரைக்கின்றனர். இந்த ஆய்வுக்குப் பிறகுதான், புற்றுநோய் சந்தேகம் இருந்தால் கூடுதல் பரிசோதனைகள் செய்யப்பட்டு, முடிவுகளின்படி சிகிச்சை துவங்கப்படுகிறது.

இந்த சிகிச்சை 68 வயதான ராஜேஷ் குமாருக்கும் தொடங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

 
ப்ரோஸ்டேட் புற்றுநோய் மெதுவாக வளரும்
ப்ராஸ்டேட் புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறையில் பேராசிரியராக இருந்த மருத்துவர் எஸ்.வி.எஸ்.தேவ் இதுபற்றிக் கூறுகையில், இந்த நோய் வயது அதிகரித்த பிறகு தோன்றும் என்றார். மேலும், இது உடலில் மெதுவாக வளரும் தன்மை கொண்டது என்றும் கூறினார்.

தைராய்டு புற்றுநோய் மற்றும் சில வகையான மார்பகப் புற்றுநோய்களும் உடலில் மெதுவாக வளரும் தன்மை கொண்டவை.

"இதற்கு முன்பு இந்தியாவில் ப்ராஸ்டேட் புற்றுநோய் பாதிப்புகள் குறைவாகவே இருந்தன. ஏனெனில் மக்களின் சராசரி ஆயுட்காலம் குறைவாக இருந்தது, அதாவது 60 வயது. ஆனால் இப்போது மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது," என்று அவர் கூறுகிறார்.

டெல்லியின் ஆர்ட்டெமிஸ் மருத்துவமனையில் சிறுநீரக மருத்துவத்தின் தலைமை மருத்துவராக இருக்கும் விக்ரம் பருவா கௌசிக், "மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்ததால், ப்ரோஸ்டேட் புற்றுநோயும் அதிகரிக்கத் துவங்கியது. ஆனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பதிவு செய்யப்படுவதைவிட அதிகமாக இருக்கலாம்," என்றார்.

ப்ராஸ்டேட் புற்றுநோய்

பட மூலாதாரம்,DR SVS DEO

படக்குறிப்பு,மருத்துவர் எஸ்.வி.எஸ்.தேவ்

இந்தியாவில் உள்ள புற்றுநோய் பதிவேட்டின்படி, கடந்த பத்து ஆண்டுகளில் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இந்த எண்ணிக்கை இரண்டு முதல் மூன்று மடங்கு குறைவாக இருப்பதாக மருத்துவர் எஸ்.வி.எஸ் தேவ் கூறுகிறார்.

இந்தப் புற்றுநோய் தரவு, புற்றுநோய் பதிவேட்டில் இருந்து கிடைப்பதாகவும் ஒவ்வொரு மருத்துவமனையில் இருந்தும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார். இத்தகைய சூழ்நிலையில், ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்றும் எச்சரிக்கிறார் அவர்.

இந்தப் புற்றுநோய்க்கான பரிசோதனைத் திட்டம் இல்லாததால் ப்ரோஸ்டேட் புற்றுநோயின் வழக்குகள் குறைவாக இருப்பதாகவும், ஆனால் மேற்கத்திய நாடுகளில் அதிக அளவு ப்ரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைகள் நடப்பதாகவும் அவர் கூறுகிறார்.

எவ்வாறாயினும், இதனால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையை மதிப்பிடுவது சவாலானது, ஏனெனில் இதன் காரணமாக ஏற்படும் இறப்புகள் குறைவாகவே பதிவு செய்யப்படுகின்றன.

 
இது ஒரு வாழ்க்கை முறை நோயா?
ப்ராஸ்டேட் புற்றுநோய்

பட மூலாதாரம்,DR PRADEEP BANSAL

படக்குறிப்பு,மருத்துவர் பிரதீப் பன்சல்

ஃபோர்டிஸ் மருத்துவமனையின் சிறுநீரகவியல், ரோபோடிக்ஸ் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சைத் துறையின் இயக்குநரான மருத்துவர் பிரதீப் பன்சல், ஆண்களின் வயது அதிகரிக்க அதிகரிக்கும்போது ப்ரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பிற்கான சாத்தியங்கள் அதிகரிப்பதாகக் கூறுகிறார். இதற்குக் காரணம் மரபணு என்றும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம் சைவ உணவு உண்பவர்களைவிட அசைவ உணவு உண்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கலாம் என்கிறார்.

ஆனால் சைவ உணவு மட்டுமே உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் வரவே வராது என்றும் கூற முடியாது, ஏனெனில் புற்றுநோய் வருவதற்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.

மேலை நாடுகளில் இந்தப் புற்றுநோய் அதிகமாகக் காணப்படுவது, ஏனென்றால் இது உணவுப் பழக்கம், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றுடன் தொடர்புடையது. இவை புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதாகக் கூறுகிறார் மருத்துவர் பன்சால்.

சமீபத்திய லான்செட் அறிக்கைப்படி, ப்ரோஸ்டேட் புற்றுநோய் தாமதமாகக் கண்டறியப்படுகிறது. மேலும் குறைந்த அல்லது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தாமதமான நோயறிதல் ஒரு பெரிய பிரச்னை.

 
ப்ராஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?
ப்ராஸ்டேட் புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒருவரது குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் இருந்தால், அந்த நபரை புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ப்ரோஸ்டேட் புற்றுநோய்க்குக் குறிப்பிட்ட அறிகுறிகள் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒருவரின் பி.எஸ்.ஏ அளவும் அந்த நபரின் வயதைப் பொறுத்தது. அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனத்தின்படி, எந்த பி.எஸ்.ஏ அளவும் சாதாரணமானது அல்லது அசாதாரணமானது அல்ல.

முன்பு 4ng/mL அல்லது அதற்கும் குறைவானது சாதாரணமாகக் கருதப்பட்டது. ஆனால் இதைவிடக் குறைவாக உள்ளவர்களுக்கு ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதையும், இதைவிட அதிகமாக அதாவது 10ng/mL வரை உள்ளவர்களுக்கு ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படாததையும் அவதானிக்க முடிந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, ஆரம்பத்தில் அறிகுறிகள் தெரியவில்லை என்றாலும் கீழ்கண்ட பிரச்னைகள் எழுந்தால் பி.எஸ்.ஏ பரிசோதனை செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது:

  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  • இரவில் சிறுநீர் மெதுவாக கழிவது
  • சிறுநீர் தானாக வெளியேறுதல்
  • சிறுநீரில் ரத்தப்போக்கு

புற்றுநோய் கண்டறியப்பட்டு, அது உடலில் பரவியிருந்தால், புற்றுநோய் எலும்புகளுக்குச் செல்கிறது, அதன் பிறகு கீழ்கண்ட பிரச்னைகள் ஏற்படலாம்:

  • முதுகு வலி
  • எலும்பு முறிவு
  • எலும்புகளில் வலி

இதுகுறித்து டாக்டர் பிரதீப் பன்சால் கூறும்போது, “புற்றுநோய் இளம் நோயாளிகளிடம் (வயது 60-75) கண்டறியப்படுகிறது, அது புரோஸ்டேட் சுரப்பியில் மட்டுமே இருந்தால், ரோபோடிக் அறுவை சிகிச்சையைப் பரிந்துரைக்கிறோம். இது அவர்களின் ஆயுளை 10-15 ஆண்டுகள் நீட்டிக்கிறது. ஆனால் அது எலும்புகளுக்குப் பரவினால் அது சிக்கலானது, மேலும் அதற்கான சிகிச்சை வேறு விதமானது," என்றார்.

 
இதற்கான சிகிச்சை என்ன?
ப்ராஸ்டேட் புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ப்ரோஸ்டேட் புற்றுநோயை ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம் என்றும், பெரும்பாலான ஆய்வகங்களில் இந்த வசதி இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ப்ரோஸ்டேட் உறுப்பு விரிவடைந்தால், இமேஜிங், அல்ட்ராசவுண்ட் மற்றும் எம்.ஆர்.ஐ ஆகியவையும் செய்யப்படுகின்றன.

ஆரம்பக் கட்டத்தில் நோயாளிக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்து அந்தப் பகுதி அகற்றப்படும் என்றும் ஆனால் புற்றுநோயின் நிலை தீவிரமடைந்தால் ஹார்மோன் சிகிச்சை அளிக்கப்பட்டு நோயாளியின் நிலையைப் பார்த்த பிறகு அடுத்தகட்ட சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவர் எஸ்.வி.எஸ் தேவ் கூறுகிறார்.

ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 15 ஆண்டுகள் வரை உயிர்வாழ முடியும், ஏனெனில் இது சிகிச்சை அளிக்கக்கூடிய புற்றுநோய். ராஜேஷ் குமார் அறுவை சிகிச்சை செய்து சகஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

 
இது மரபணு சார்ந்த நோயா?
ப்ராஸ்டேட் புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

புற்றுநோய் என்பது மரபணு சார்ந்த ஒரு நோய், அதாவது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் இருந்தால், உங்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அத்தகைய சூழ்நிலையில், எந்தவொரு குடும்பத்திலும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் அல்லது வேறு ஏதேனும் புற்றுநோய் இருந்தால், அவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

குடும்பத்தில் யாருக்காவது ப்ரோஸ்டேட் புற்றுநோய் இருந்தால், குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் 45 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் பி.எஸ்.ஏ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

பெண்கள் மார்பகப் புற்றுநோயைத் தாங்களே பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

 
வெளிநாட்டில் நிலைமை என்ன?
ப்ராஸ்டேட் புற்றுநோய்

பட மூலாதாரம்,DR VIKRAM BARUA KAUSHIK

படக்குறிப்பு,மருத்துவர் விக்ரம் பருவா கௌசிக்

லான்செட் அறிக்கையின்படி, 2020ஆம் ஆண்டிற்குப் பிறகு, கிழக்கு ஆசியா, தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகள் அதிகரிக்கும்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள பணக்காரர்கள் தற்போது தங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளனர் என்றும், அதன் நேர்மறையான விளைவைக் காண 10 ஆண்டுகள் ஆகும் என்றும் மருத்துவர் எஸ்.வி.எஸ் தேவ் கூறுகிறார்.

"கடந்த 80கள் மற்றும் 90களில், அந்த நாடுகளின் மக்கள் மலிவான நொறுக்குத் தீனிகளை அதிகம் உட்கொண்டார்கள்." மேலும், அதன் விளைவு இப்போது தெரிவதாகக் கூறுகிறார் அவர்.

மருத்துவர் விக்ரம் பருவா கௌசிக் கூறுகையில், அமெரிக்காவிலும் மற்ற வளர்ந்த நாடுகளிலும் அதிக அளவில் புற்றுநோய் பரிசோதனை இருப்பதாகவும், அதனால்தான் ப்ராஸ்டேட் புற்றுநோய் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகளவில் பதிவாகி இருப்பதாகவும், அவர் கூறுகிறார்.

ஆனால் இந்த மருத்துவர்கள் அனைவரும் இந்தப் புற்றுநோய்க்கான சிகிச்சை சாத்தியம் என்பதாலும் அதன் முன்னேற்றம் மெதுவாக இருப்பதாலும், நோயாளிகள் நீண்டநாள் வாழ்கின்றனர் என்றும் கூறுகிறார்கள்.

https://www.bbc.com/tamil/articles/cv2d07rdzq9o

இந்திய MDH& EVEREST பொதிகளை தவிருங்கள்.

2 weeks 6 days ago

MDH & EVERESTஎன்கிற இந்திய மிளகாய்த்தூள்,சரக்குத்தூள், மீன்கறி மசாலா,சாம்பார் மசாலா இப்படி பலதரப்பட்ட பொதிகளிலும் புற்று நோயை தூண்டக் கூடியதாக உள்ளதாக கூறி கொங்கொங் சிங்கப்பூரில் தடை செய்துள்ளனர்.

உங்கள் வீடுகளிலும் இந்த பெயர்கள் கொண்ட பொதிகள் இருந்தால் அவதானமாக செயற்படுங்கள்.

காணொளியைப் பாருங்கள் முடிவெடுங்கள்.

 

பிறந்தநாள் கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்தது ஏன்? செயற்கை இனிப்பூட்டிகளால் என்ன ஆபத்து?

2 weeks 6 days ago
பிறந்தநாள் கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்தது ஏன்? செயற்கை இனிப்பூட்டிகளால் என்ன ஆபத்து?

பட மூலாதாரம்,GETTY IMAGES

25 ஏப்ரல் 2024, 15:11 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சமீபத்தில் பாட்டியாலாவை சேர்ந்த 10 வயது சிறுமி தனது பிறந்தநாளில் ஆர்டர் செய்த கேக்கை சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சிறுமியின் குடும்பத்தினர் காவல்துறையில் கொடுத்த தகவலின் அடிப்படையில், `சம்பவத்தன்று, சிறுமியின் பிறந்தநாளையொட்டி உணவு விநியோக செயலி மூலம் கேக் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. கேக் வெட்டிக் கொண்டாடிய பின்னர், அனைவரும் அந்த கேக்கை சாப்பிட்டனர்.

கேக் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, குடும்பத்தில் இருந்த அனைவருக்கும் உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமானது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் பலனின்றி சிறுமி உயிரிழந்துவிட்டார்' எனத் தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, போலீசார் பேக்கரி உரிமையாளர் மற்றும் இது தொடர்பான பலர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் பஞ்சாப் சுகாதார அமைச்சர் டாக்டர். பல்பீர் சிங் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டார். பேக்கரியில் உள்ள கேக் மாதிரிகளை எடுத்து விசாரணை நடத்துமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

உயிரிழந்த சிறுமியின் பெயர் மான்வி, ஐந்தாம் வகுப்பு மாணவியான மான்விக்கு மார்ச் 24 அன்று பிறந்த நாள். ஆசையாக பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடிய மான்வி, கேக்கை சாப்பிட்ட சில மணிநேரங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டார். சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி மார்ச் 25ஆம் தேதி உயிரிழந்தார்.

 
கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு - ஏன்? செயற்கை இனிப்பூட்டிகளால் என்ன ஆபத்து?

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிறுமி மான்வி உயிரிழப்பதற்கு முந்தைய இரவு, மகிழ்ச்சியாக கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

பிபிசியிடம் பேசிய பாட்டியாலா மாவட்ட சுகாதார அதிகாரி விஜய் ஜிண்டால், அந்த பேக்கரியில் இருந்து சோதனைக்காக எடுத்து வரப்பட்ட நான்கு கேக்குகளில் இரண்டு கேக்குகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டது. கேக்கில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக 'சாக்கரின்' கலக்கப்பட்டுள்ளது.

'சாக்கரின் (செயற்கை இனிப்பூட்டி)' உண்ணக்கூடிய பொருள் என்றும் அது ஒரு வகையான செயற்கை இனிப்பூட்டி என்றும் அவர்கள் கூறுகிறார்கள். சிறுமி இறந்த சில நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 1ஆம் தேதி கேக் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, சிறுமி சாப்பிட்ட கேக், பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006இன் கீழ் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான காரணம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை. உள்ளுறுப்பு பகுப்பாய்வு (Viscera report) மற்றும் தடயவியல் அறிக்கைக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உணவு விநியோக செயலியான ஜொமேட்டோ வருத்தம் தெரிவித்துள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, இந்த வழக்கில் இதுவரை மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள, பேக்கரியில் இருந்து எடுக்கப்பட்ட கேக் மாதிரியில் கண்டறியப்பட்ட அந்த செயற்கை இனிப்பூட்டியான 'சாக்கரின்' என்னவென்று தெரிந்து கொள்வோமா?

 
செயற்கை இனிப்பூட்டி என்றால் என்ன? அது சர்க்கரையைவிட சிறந்ததா?
கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு - ஏன்? செயற்கை இனிப்பூட்டிகளால் என்ன ஆபத்து?

பட மூலாதாரம்,GETTY IMAGES

செயற்கை இனிப்பூட்டி அல்லது சர்க்கரை அல்லாத இனிப்பூட்டி என்பது செயற்கையான முறையில் அல்லது இயற்கைக்கு மாறான முறையில் தயாரிக்கப்படும் வேதிப்பொருள். இது உணவை இனிப்பாக்கும் தன்மையுடையது.

ஊட்டச்சத்து சர்க்கரை (Nutritional sugar), ரசாயன கலவை சர்க்கரை (Chemically synthesized sugar) என இரண்டு வகையான செயற்கை இனிப்பூட்டிகள் உள்ளன.

இவற்றுடன், இயற்கை சர்க்கரை என்று அழைக்கப்படும் ஸ்டீவியா சர்க்கரையும் பயன்பாட்டில் உள்ளது. இது ஸ்டீவியா என்று அழைக்கப்படும் தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

பிபிசி குட்ஃபுட்டில் வெளியான கட்டுரைப்படி, உடலின் சர்க்கரை அளவு மற்றும் கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதற்காக, சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்பூட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

சாக்கரின் என்றால் என்ன? அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

சாக்கரின் என்பது நீண்டகாலமாகப் பயன்பாட்டில் இருக்கும் ஒரு வகை செயற்கை இனிப்பூட்டி.

பிபிசி குட்ஃபுட் கட்டுரைப்படி, அஸ்பார்டேம், சுக்ரலோஸ் மற்றும் சாக்கரின் போன்ற செயற்கை சர்க்கரைகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படுகின்றன.

இவை ஊட்டச்சத்து அற்ற பொருட்கள் (non-nutritive) என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் அவற்றில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லை.

இது வழக்கமான சர்க்கரையைவிட மிகவும் இனிப்பாக இருக்கும். மேலும் குறைவான கலோரிகளை கொண்டுள்ளது.

 
செயற்கை இனிப்பூட்டிகள் விளைவிக்கும் ஆபத்துகள் என்ன?
கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு - ஏன்? செயற்கை இனிப்பூட்டிகளால் என்ன ஆபத்து?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மே 2023இல், உலக சுகாதார அமைப்பு (WHO) சாக்கரின், ஸ்டீவியா மற்றும் அஸ்பார்டேம் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தியது. அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் இந்த அறிவுரையை உலக சுகாதார அமைப்பு வழங்கியது.

இத்தகைய செயற்கை சர்க்கரைகள், டைப் 2 நீரிழிவு, இதய நோய், எடை அதிகரிப்பு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. உயிரிழக்கும் அபாயத்தைக்கூட ஏற்படுத்தும் என சான்றுகள் காட்டுகின்றன.

அமெரிக்க அரசாங்கத்தின் தேசிய மருத்துவ நூலகம் என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இது 1879ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் சாக்கரின் சர்க்கரையைவிட 300 மடங்கு இனிப்பானது.

அதே ஆய்வின்படி, சாக்கரின் குளிர்பானங்கள், வேகவைத்த உணவுகள் மற்றும் ஜாம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. சாக்கரின் சூடுபடுத்தினாலும் அதன் இனிப்புத் தன்மையை இழக்காது. சர்க்கரைக்கு மாற்றாக குறைந்த கலோரி உள்ளதால் இது பயன்பாட்டுக்கு வந்தது.

கால்சியம் சாக்கரின், பொட்டாசியம் சாக்கரின் மற்றும் அமில சாக்கரின் எனப் பல்வேறு வகைகளில் இது கிடைக்கிறது. இவற்றில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வகை சோடியம் சாக்கரின்தான்.

நைட்ரஸ் அமிலம், சல்பர் டை ஆக்சைடு, குளோரின், அம்மோனியாவுடன் மெத்தில் ஆந்த்ரானிலேட் கலக்கும்போது 'சாக்கரின்' என்ற கலவை உருவாகிறது.

 
நிபுணர்கள் சொல்வது என்ன?
கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு - ஏன்? செயற்கை இனிப்பூட்டிகளால் என்ன ஆபத்து?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் உணவுத் தொழில்நுட்பத் துறையின் தலைவர் டாக்டர் பல்விந்தர் சுச் கூறுகையில், சாக்கரின் அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது மற்றும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

இதற்கு அமெரிக்க தர நிர்ணய அரசு நிறுவனமான 'எஃப்டிஏ' (FDA) மற்றும் பிற நாடுகளின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சொல்கிறார்கள். சாதாரண சூழ்நிலையில் இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் இல்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இந்த இனிப்பூட்டி பொதுவாக பேக்கரிகளில் பயன்படுத்தப்படுகிறது.

இதைத் தொடர்ச்சியாக நீண்ட காலத்துக்கு உட்கொள்ளும்போது, நீரிழிவு அல்லது உடல் பருமன் போன்ற உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஜூலை 2023இல், உலக சுகாதார அமைப்பு, புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உணவு சேர்க்கைகளுக்கான உணவு மற்றும் வேளாண்மை அமைப்புக் குழு ஆகியவை செயற்கை இனிப்பூட்டியான அஸ்பார்டேமை 'புற்றுநோயை உண்டாக்கும்' பொருட்களின் பட்டியலில் சேர்த்தன.

பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி அறிக்கைப்படி, ஜூலை 2023இல் 'செயற்கை இனிப்பூட்டிகளுக்கு' இந்தியா தனது சொந்த தரநிலைகளை நிர்ணயிக்கும் என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cgxwngqjnv8o

சோலியஸ்: உங்கள் உடலின் இந்தப் பகுதி இரண்டாவது இதயம் என அழைக்கப்படுவது ஏன் தெரியுமா?

3 weeks 1 day ago
சோலியஸ் தசை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மனிதர்கள் நிற்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு இந்த சோலியஸ் தசை மிகவும் அவசியம். கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஃபேல் அபுசைப்
  • பதவி, பிபிசி உலக சேவை
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

பொதுவாக சோலியஸ் தசை (சோலியஸ் தசை - Soleus) குறித்து மக்களுக்கு அதிகம் தெரிவதில்லை. ஆனால் அதன் செயல்பாடுகள் சக்தி வாய்ந்தவை. நிற்கவும் நடக்கவும் உதவுவதை தாண்டி உடலின் பல்வேறு இயக்கங்களுக்கு சோலியஸ் துணைப்புரிகிறது.

காலின் கீழ் பகுதியில் அமைந்துள்ள சோலியஸ் தசை, கெண்டைக்கால் தசையின் (Calf) ஒரு பகுதியாகும். பன்முக இயக்கங்களை மேற்கொள்ளும் உறுப்புகளில் ஒன்றாகும், நாம் நிமிர்ந்து நிற்பதற்கு உதவுவது மட்டுமல்லாமல், இரத்த ஓட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இரண்டு முக்கியமான நரம்புகளைக் கொண்டுள்ளது. இந்த காரணத்திற்காக தான் வல்லுநர்கள் சோலியஸ் தசையை "இரண்டாம் இதயம்" என்று வரையறுத்துள்ளனர்.

பார்சிலோனா பல்கலைக்கழகத்தில் உள்ள விளையாட்டு மருத்துவப் பள்ளியில் நிபுணரான டாக்டர் கார்லஸ் பெட்ரெட், பிபிசி முண்டோவுக்கு அளித்த பேட்டியில், "சோலியஸ் தசையில் காணப்படும் ஆக்கக் கூறுகள் தான் அதன் சிறப்பம்சம்” என்கிறார்.

"சோலியஸ் தசை பிற தசைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பெரியது. அதிகளவிலான தசை நிறை (muscle mass) கொண்டுள்ளது. இணைப்பு திசுக்களாக இல்லாமல் முற்றிலும் தசை நார்களால் ஆனது" என்றும் அவர் விவரித்தார்.

 
சோலியஸ் தசை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கெண்டைக்காலில் அமைந்திருக்கும் சோலியஸ் தசை, நீங்கள் நிமிர்ந்து இருக்க உதவும் ஒரு கட்டமைப்பு தசையாகும்.
நிலைத்தன்மை

”நின்று கொண்டு செய்யும் செயல்பாடுகள், நடப்பது, ஓடுவது என எந்த ஒரு செயலுக்கும் சோலியஸ் தசை மிக அவசியம் ” என்று டெக்சாஸில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் மார்க் ஹாமில்டன் பிபிசி முண்டோவிடம் விளக்கினார்.

நம் உடலில் உள்ள தசைகள் ஒவ்வொன்றும் அதன் செயல்பாட்டை பொறுத்து, பல்வேறு தசை நார்களால் உருவாக்கப்பட்டிருக்கும்.

உதாரணமாக, உங்கள் முதுகு பகுதியில் அமைந்திருக்கும் தசைகள் உடலின் கட்டமைப்பைப் பராமரிக்கும் தசைகள் ஆகும். அது, உங்கள் முதுகுத் தண்டுவடத்தை நேராக வைத்திருக்க உதவும். எனவே, அந்த தசை மெதுவாக சுருங்கும் தசை நார்களை கொண்டிருக்கும் (slow-twitch fibers).

மேலும் இந்த தசைகள் திடீர் அசைவுகளை செய்ய உருவாக்கப்படவில்லை என்றாலும், நீண்ட நேர அசைவுகளுக்கு உதவும். நீண்ட தூரம் ஓடுவது, நடப்பது, நிற்பது, உட்காருவது உள்ளிட்ட நீண்ட நேர அசைவுகளுக்கு அனுமதிக்கிறது.

மறுபுறம், உங்கள் கைகள், கால்கள், தோள்பட்டைகள் ஆகியவற்றில் இருக்கும் தசைகள் வேகமாக சுருங்கும் தசை நார்களை (fast-acting fibers) கொண்டிருக்கின்றன, அதாவது, நம்மால் இயன்ற அதிக எண்ணிக்கையிலான இயக்கங்களை குறுகிய காலத்தில் மேற்கொள்ள ஏதுவாக தசைகள் வேகமாக சுருங்கி விரிந்து செயல்படும்.

கெண்டைக்காலில் அமைந்திருக்கும் சோலியஸ் தசை, நீங்கள் நிமிர்ந்து இருக்க உதவும் ஒரு கட்டமைப்பு தசையாகும். இது, மெதுவாக சுருங்கும் தசை நார்களின் (slow-twitch fibers) பெரிய கலவையைக் கொண்டுள்ளது. எனவே சோலியஸ் தசை, நீண்ட நேர இயக்கங்களை சோர்வடையாமல் செய்ய அதிக அளவு ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது.

கெண்டைக்கால் தசையான சோலியஸில் அதிக அளவிலான தசை நார்கள் உள்ளன. மேலும், அந்த தசை நார்களில் ஆற்றல் உருவாக்கத்திற்கு முக்கியமாக தேவைப்படும் மைட்டோகாண்ட்ரியா உள்ளது. அதிக எண்ணிக்கையிலான மைட்டோகாண்ட்ரியா இருப்பதால், நம் செயல்பாடுகள் மூலம் அதை தூண்டும் போது, அதிக அளவு ஆற்றலை உருவாக்கும்" என்று மருத்துவர் பெட்ரெட் விளக்குகிறார்.

இந்த தசை நார்களின் அடர்த்தி, உடல் எடையில் 1% மட்டுமே இருக்கும். ஆனால், உடலில் உள்ள பல உறுப்புகளை விட அதிக ஆற்றல் திறன் கொண்டதாக பார்க்கப்படுகிறது.

சோலியஸ் தசை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சோலியஸ் தசை இதயத்தின் செயல்பாட்டிற்கு முக்கிய உதவி செய்கிறது.
இதயத்திற்கு உதவும் சோலியஸ்

சோலியஸ் ஒரு முக்கிய செயல்பாட்டை கொண்டுள்ளது. உடல் முழுவதும் இரத்தத்தை பம்ப் செய்து எடுத்து செல்லும் பணியில் இதயத்திற்கு உதவுகிறது.

சோலியஸ் தசை இதயத்திற்கு எவ்வாறு உதவுகிறது என்பதை மருத்துவர். ஹாமில்டன் பிபிசி முண்டேவிடம் விளக்கினார்:

"சோலியஸ் தசையின் உடற்கூறியல் மற்ற தசைகளை காட்டிலும் வேறுபட்டது. உங்கள் கெண்டைக்காலில் சில பெரிய நரம்புகள் உள்ளன. நம் உடல் அமைப்பின்படி சோலியஸினுள் அந்த நரம்புகள் அமைந்திருப்பது ஒரு முக்கிய காரணத்திற்காக தான். அதாவது, புவியீர்ப்பு விசை உங்கள் கெண்டைக்கால்களிலும் கணுக்கால்களிலும், கால்களிலும் ரத்தத்தை தேங்கி நிற்க செய்கிறது . வயதானவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படலாம். உடல் இயக்கம் குறைந்த இளைஞர்களுக்கு கூட ஏற்படலாம்."

ஆனால் நம் இயற்கை புத்திசாலித்தனமாக, மனித உடல் அமைப்பில், இந்த நரம்புகளை சோலியஸினுள் வைத்துள்ளது. இதனால் தசைகள் சுருங்கும்போது அவை அழுத்தம் அடைகின்றன. தசைகள் அழுத்தம் அடையும் போது, அந்த நரம்புகள் ரத்தத்தால் நிரப்பப்பட்டு காலியாகி, மீண்டும் அந்த திரவத்தை இதயத்திற்குள் அனுப்புகின்றன."

அடிப்படையில், நீங்கள் நடக்கும்போது, உங்கள் ஒவ்வொரு அடியிலும் உங்கள் கால்களில் இருக்கும் இரத்தத்தை மீண்டும் இதயத்திற்குத் தள்ளுகிறீர்கள். இந்த அமைப்பில் பாதத்தில் இருக்கும் பல நரம்புகள் மற்றும் காஸ்ட்ரோக்னீமியஸ் தசைகளும் இணைந்து செயல்படும். இந்த செயல்பாட்டை 'பாப்லைட்டல் பம்ப்’ (popliteal pump) என்று அழைக்கப்படுகிறது.

சோலியஸ் தசை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நீங்கள் நடக்கும்போது, உங்கள் ஒவ்வொரு அடியிலும் உங்கள் கால்களில் இருக்கும் ரத்தத்தை மீண்டும் இதயத்திற்குத் தள்ளுகிறீர்கள்.
சிறந்த பராமரிப்பு

உடலில் உள்ள அனைத்து தசைகளையும் போலவே, சோலியஸ் தசைகளுக்கும் ஆரோக்கியமாக இருக்க இயக்கம் அவசியம். ஆனால் வேகமாக சுருங்கும் தசை நார்கள் போலல்லாமல் சோலியஸின் தசைகள் மெதுவாகவும் நிலையானதாகவும் இருக்க வேண்டும். எனவே வேகமான இயக்கங்களுக்கு உட்படுத்தாமல், நிலையான இயக்கங்களை மேற்கொள்வது நல்லது”

இதற்காக நடைப்பயிற்சி செய்வது சிறந்தது என்கிறார் மருத்துவர் பெட்ரெட்.

"கெண்டைக்காலில் இருக்கும் தசைகள் நிறைய வேலை செய்வதன் மூலம் பலப்படும், ஆரோக்கியமாக இருக்கும் என்பது பலரின் கருத்து. ஆனால் அது சற்று மிருதுவான ஒரு தசை, அதற்குத் தேவையானது நீடித்த செயல்பாடு தான், நாம் அதனை அதிகமான இயக்கங்களுக்கு ஆட்படுத்த கூடாது."

"சோலியஸுக்கு தேவைப்படுவது வெறுமனே மெதுவான இயக்கங்கள் மட்டும் தான். ஆனால் இயக்கங்கள் இன்றி நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது மாதிரியான வாழ்க்கை முறை சோலியஸ் தசைகளை மோசமாக பாதிக்கும். அதன் வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள். சோலியஸை பொறுத்தவரை, கடுமையான இயக்கங்களும் வேண்டாம். இயக்கங்களே இல்லாத வாழ்க்கை முறையும் வேண்டாம்"

இந்த விதி நம் அனைத்து தசைகளுக்கு பொருந்தும் பொற்கால விதியாகும், இது நமது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு இந்த விதி முக்கியம் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர்.

"மக்கள் பொதுவாக வயதான காலத்தில் நல்ல மன ஆரோக்கியத்துடன் இருப்பதை சிறந்த வாழ்க்கைத் தரமாக சொல்கிறார்கள். அது முற்றிலும் உண்மை. ஆனால் என்னை பொறுத்தவரையில் சிறந்த வாழ்க்கைத் தரத்தை தீர்மானிப்பது, நம் ஆரோக்கியமான தசைகள் தான்" என்று பெட்ரெட் மீண்டும் வலியுறுத்துகிறார்.

"அதாவது, தசைகள் தொடர்ந்து வேலை செய்வது உடலின் ஆரோக்கியமான பராமரிப்புக்கு அதிக அளவு நன்மைகளை வழங்குகிறது. நல்ல தசை செயல்பாடு மற்றும் நல்ல தசை நிறையை (Muscle tone) பராமரிப்பது முழு வளர்சிதை மாற்ற அமைப்பும் சிறப்பாக செயல்பட வைக்கிறது. இது நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. இதனால் மூளையும் சிறப்பாக செயல்படுகிறது, எனவே, டிமென்ஷியா அபாயமும் குறையும், அதாவது மன நலனுக்கு வழிவகுக்கும்"

https://www.bbc.com/tamil/articles/clkexdv0r2ro

மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?

3 weeks 3 days ago
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
மசாலா

பட மூலாதாரம்,GETTY IMAGES

7 மணி நேரங்களுக்கு முன்னர்

ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறை, இந்திய நிறுவனங்களான எம்டிஎச் (MDH) மற்றும் எவரெஸ்ட் ஆகியவற்றின் பேக் செய்யப்பட்ட சில மசாலாப் பொருட்களில் பூச்சிக்கொல்லியான எத்திலீன் ஆக்சைடு இருப்பதாகக் கூறி, அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதனுடன், அதன் கொள்முதல் மற்றும் விற்பனையை நிறுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலும் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவை சந்தையில் இருந்து திரும்பப் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறை, எம்.டி.எச்-இன் மெட்ராஸ் கறிப் பொடி, சாம்பார் மசாலா பொடி, மற்றும் கறிமசாலா பொடி ஆகியவற்றில் 'எத்திலீன் ஆக்சைடு' எனும் பூச்சிக்கொல்லி இருப்பதைக் கண்டறிந்துள்ளது. மேலும் அதைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு மையம், இந்த மசாலா பொருட்களின் விற்பனையை நிறுத்தியதற்கான காரணத்தை விளக்குகையில், “புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் எத்திலீன் ஆக்சைட் வேதிப்பொருளை குரூப் 1 கார்சினோஜென் என்ற பிரிவில் வைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

கார்சினோஜென்கள் என்பது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் பொருட்கள்.

 
மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பொருள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்ட மசாலாப் பொருட்கள்.
சிங்கப்பூரில் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவுக்கு தடை

ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்பு மையம் மூன்று சிறிய கடைகளில் இருந்து மசாலாப் பொருட்களின் மாதிரிகளை சேகரித்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஹாங்காங்கில் உணவில் எத்திலீன் ஆக்சைடு போன்ற பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு அதிகபட்சமாக 50 ஆயிரம் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அபராதத்துடன் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

இதற்கிடையில், எவரெஸ்டின் மீன் கறி மசாலாவில் எத்திலீன் ஆக்சைடு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அதை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு அந்நாட்டு உணவு நிறுவனத்திற்கு சிங்கப்பூர் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் இந்த மசாலாப் பொருட்களின் இறக்குமதியாளரான முத்தையா & சன்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்த தயாரிப்பை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவை பயன்படுத்த வேண்டாம் என சிங்கப்பூர் உணவு நிறுவனம் நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதன் முடிவுக்கு ஆதரவாக, சிங்கப்பூரின் உணவு நிறுவனம், ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்ட அதே அறிவுறுத்தல்களை மேற்கோளிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், எம்டிஎச் நிறுவனத்தின் மூன்று மசாலாக்கள் மற்றும் எவரெஸ்டின் மீன் கறி மசாலா ஆகியவை புற்றுநோயை உண்டாக்கும் கூறுகளைக் கொண்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.

 
மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பொருள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எவரெஸ்ட் நிறுவனம் சொன்னது என்ன?

சிறிய அளவிலான எத்திலீன் ஆக்சைடினால் உடனடி ஆபத்து இல்லை என்று சிங்கப்பூர் உணவு நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் நீண்டகால பயன்பாட்டுடன், இத்தகைய இரசாயனங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

செய்தி இணையதளமான வியானுக்கு (Wion) அளித்த பதிலில், தாங்கள் ஐம்பது வருடங்கள் பழமையான மற்றும் புகழ்பெற்ற ஒரு பிராண்ட் என்று எவரெஸ்ட் நிறுவனம் கூறியுள்ளது.

"எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் கடுமையான சோதனைக்குப் பின்னரே தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தூய்மை மற்றும் உணவு பாதுகாப்பு தரங்களை நாங்கள் கண்டிப்பாக பின்பற்றுகிறோம்.

எங்கள் தயாரிப்புகளுக்கு இந்திய ஸ்பைஸ் போர்டு (Indian Spice Board) மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) உட்பட அனைத்து ஏஜென்சிகளிடமிருந்தும் ஒப்புதல் முத்திரை உள்ளது.

ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் முன், எங்கள் தயாரிப்புகள் இந்திய ஸ்பைஸ் போர்டு மூலம் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. தற்போது அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்கிறோம். எங்கள் தரக்கட்டுப்பாட்டு குழு இந்த விஷயத்தை முழுமையாக ஆய்வு செய்யும்” என எவரெஸ்ட் நிறுவனம் கூறியது.

 
மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பொருள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எத்திலீன் ஆக்சைடு என்றால் என்ன?

எத்திலீன் ஆக்சைடு நிறமற்ற மற்றும் எரியக்கூடிய ஒரு வாயு. இது பொதுவாக விவசாயம், சுகாதாரம் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்களில் புகைபோக்கிகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் கருத்தடை மருந்துகள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.

எத்திலீன் ஆக்சைடு நுண்ணுயிர் மாசுபாட்டை அகற்றவும் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் மசாலா மற்றும் பிற உலர் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. உணவுகளை பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் எத்திலீன் ஆக்சைடு பயன்படுகிறது.

இருப்பினும், பல சுகாதார நிறுவனங்கள் இதை புற்றுநோய்க்கான காரணிகளின் (கார்சினோஜென்கள்) பிரிவில் வைத்துள்ளன. கார்சினோஜென்கள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடியவை.

எத்திலீன் ஆக்சைட்டின் ஆபத்தைக் கருத்தில் கொண்டு, பல நாடுகளின் உணவு கட்டுப்பாட்டாளர்கள் உணவுப் பொருட்களில் அதன் பயன்பாடு குறித்து கடுமையான விதிகளை உருவாக்கியுள்ளனர். இந்த நாடுகளில் எத்திலீன் ஆக்சைட்டின் அளவைக் கண்டறிய கடுமையான சட்டங்கள் உள்ளன.

அமெரிக்காவிலும் எழும் மசாலா பற்றிய கேள்விகள்

இந்திய மசாலாப் பொருட்கள் வெளிநாட்டு விதிமுறைகளில் சிக்கியதற்கு உதாரணமாக இதற்கு முன்பும் சில வழக்குகள் உள்ளன. 2023ஆம் ஆண்டில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையம் எவரெஸ்டின் சாம்பார் மசாலா மற்றும் கரம் மசாலாவை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டது.

இந்த மசாலாக்கள் சால்மோனெல்லா பாக்டீரியாவைக் கொண்டவை என்று கண்டறியப்பட்டது. இந்த பாக்டீரியா வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், தலைச்சுற்றல் அல்லது வாந்தியை ஏற்படுத்தும்.

சமீபத்தில், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள குழந்தை உணவு விற்பனை நிறுவனமான நெஸ்லேவின் தயாரிப்புகளில் அதிகப்படியான சர்க்கரை இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த தயாரிப்புகளில் உலகின் மிகப்பெரிய குழந்தை தானிய பிராண்டான செரிலாக்கும் (Cerelac) அடங்கும். குழந்தைகளுக்கு சர்க்கரை கொடுப்பது நல்லதல்ல.

சுவிஸ் நிறுவனமான பப்ளிக் ஐ இந்த அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை சர்வதேச குழந்தை உணவு நடவடிக்கை நெட்வொர்க்குடன் இணைத்து கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த தயாரிப்புகளை ஒரு பெல்ஜிய ஆய்வகத்தில் சோதனை செய்த பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/cd1d2gxelglo

'ஆரோக்கிய' பானங்களால் குழந்தைகளுக்கு என்ன ஆபத்து?

3 weeks 3 days ago
பூதாகரமாகும் போர்ன்விட்டா விவகாரம்: 'ஆரோக்கிய' பானங்களால் குழந்தைகளுக்கு என்ன ஆபத்து?
பூதாகரமாகும் போர்ன்விட்டா விவகாரம்: 'ஆரோக்கிய' பானங்களால் குழந்தைகளுக்கு என்ன ஆபத்து?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுசீலா சிங்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 21 ஏப்ரல் 2024, 03:42 GMT

மளிகைக் கடை, பல்பொருள் அங்காடி என எங்கு சென்றாலும் அலமாரிகளில் பல பானங்கள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் காண முடியும். மக்கள் இந்த பானங்களை பார்த்தவுடனேயே ஆரோக்கியமானது என எண்ணி வாங்கிச் செல்கின்றனர்.

உண்மையில் அவை ஆரோக்கியமானதா?

சமீபத்தில், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் மின்வணிக நிறுவனங்களுக்கு ஓர் ஆலோசனையை வெளியிட்டது. அதன் அறிவுறுத்தலின்படி, ”மின்வணிக தளங்கள் அல்லது இணையதளங்களில் போர்ன்விட்டா உட்பட சில பானங்கள் `ஆரோக்கிய பானங்கள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தனது விசாரணையில் `உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006 என்ற சட்டத்தின் படியும் (FSS Act 2006) `மொண்டலேஸ் இந்தியா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ தனியார் நிறுவனம் வழங்கிய விதிகளின்படியும் ஆரோக்கிய பானங்கள் என்பது வரையறுக்கப்படவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது.

எனவே, வணிக நிறுவனங்கள் தங்கள் இணையதளங்கள் உட்பட அனைத்து தளங்களில் இருந்தும் ஆரோக்கிய பானங்கள் என்ற பதாகையின் கீழ் இருந்து போர்ன்விட்டா உள்ளிட்ட பானங்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றன” என்றார்.

 
இந்த விவகாரம் தற்போது பூதாகரம் ஆனது ஏன்?
'ஆரோக்கிய பானங்கள்' உடல் நலத்திற்கு ஏற்றதா? இந்திய அரசின் அறிவுறுத்தல் என்ன?

பட மூலாதாரம்,GETTYIMAGES/DJAVAN RODREQUEZ

இதுகுறித்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனுங்கோ பிபிசியிடம் பேசுகையில், போர்ன்விட்டாவில் உள்ள சர்க்கரை, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாகக் கூறினார். ஆனால் "அது ஆரோக்கிய பானமாக விற்கப்படுவதாகவும் கடந்த ஆண்டு புகார் வந்தது. இந்த பானம் குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது."

இந்த விளம்பரம் குழந்தைகளின் நலன் கருதி வெளியிடப்பட்டது அல்ல, பெற்றோர்களைத் தவறாக வழிநடத்துகிறது எனக் கூறும் பிரியங்க் கனுங்கோ, "இதுபற்றி சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளிடம் தெரிவித்தோம், அதே வேளையில் போர்ன்விட்டா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினோம், அவர்கள் தங்களின் தயாரிப்பு ஆரோக்கிய பானம் அல்ல என்று ஒப்புக்கொண்டு எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தனர்.

அதன் பிறகுதான் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தைத் தொடர்பு கொண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006இல் `ஹெல்த் டிரிங்க்’ என்ற வகைப்பாடு இல்லை என்று தெரிவித்தோம்,’’ என விவரித்தார்.

அவரது கூற்றுப்படி, கலவை, குளிர்பானம், ஆற்றல் பானம் என எந்த வகையில் இருந்தாலும் எந்தவொரு உணவுப் பொருளையும் ஆரோக்கிய பானம் என்ற பெயரில் விற்க முடியாது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) என்பது குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டம் 2005இன் கீழ் நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.

இந்த விஷயம் தொடர்பாக மொண்டலேஸ் இந்தியா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் மின்னஞ்சல் வாயிலாக பிபிசி தொடர்பு கொண்டது. ஆனால் அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

 
விளம்பர உத்திகளைக் கையாளும் நிறுவனங்கள்
பூதாகரமாகும் போர்ன்விட்டா விவகாரம்: 'ஆரோக்கிய' பானங்களால் குழந்தைகளுக்கு என்ன ஆபத்து?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இது நிறுவனங்கள் மேற்கொள்ளும் விளம்பர உத்தி என்றும், ஆரோக்கிய பானம் என்று எதுவும் இல்லை என்றும் மும்பையில் உள்ள சர்க்கரை நோய் சிகிச்சை மையத்தின் மூத்த மருத்துவர் ராஜீவ் கோவில் கூறுகிறார்.

ஆரோக்கியம் என்ற பெயரில் விற்கப்படும் பல பானங்களை மின்வணிக தளங்களில் காணலாம். இதுபோன்ற பானங்கள் உடல் நலத்திற்கு எந்த விதத்திலும் பயனளிக்காது என மருத்துவர் ராஜீவ் கோவில் தெரிவித்துள்ளார்.

அவரைப் பொறுத்தவரை, தாதுக்கள், வைட்டமின்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் குறைந்த சர்க்கரை கொண்ட அத்தகைய பானங்களைத்தான் மக்கள் உட்கொள்ள வேண்டும் என்கிறார்.

ஆனால், குறைவான சர்க்கரை அளவு என்பதை நிர்ணயிப்பது எப்படி?

இது குறித்து டாக்டர் ராஜீவ் கோவில் விளக்கமளிக்கையில், ‘‘இந்தியாவில் 100 கிராம் அளவை வைத்துத்தான் உணவு லேபிளிங் செய்யப்படுகிறது. உதாரணமாக, ஒரு உணவுப் பொருள் 100 கிராம் என்றால் அதில் பத்து கிராமுக்கும் குறைவான அளவு சர்க்கரை இருக்க வேண்டும். ஐந்து கிராமுக்கு குறைவாக இருந்தால் அது குறைந்த சர்க்கரை அளவு எனப்படும்.

'ஆரோக்கிய பானங்கள்' உடல் நலத்திற்கு ஏற்றதா? இந்திய அரசின் அறிவுறுத்தல் என்ன?

பட மூலாதாரம்,GETTYIMAGES/JACK ANDERSEN

சர்க்கரை அளவு 0.5 ஆக இருந்தால் அதை `சுகர் ஃப்ரீ’ என்று சொல்லலாம். சர்க்கரையைத் தவிர, இந்த பானங்கள் அனைத்திலும் கார்ன் சிரப் போன்ற கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஐ) இணையதளத்திலும் இந்த ஆலோசனை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலின்படி, தனியுரிம உணவு உரிமம் பெற்ற உணவுப் பொருட்கள் பால் சார்ந்த பான கலவை, தானியம் சார்ந்த பான கலவை அல்லது மால்ட் சார்ந்த பானங்கள், ஆரோக்கிய பானங்கள், ஆற்றல் பானங்கள் ஆகிய வகைகளின் கீழ் விற்கப்படுவது தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தகைய சூழ்நிலையில், எஃப்.எஸ்.எஸ்- இன் கீழ் ஆற்றல் பானங்கள் என உரிமம் பெற்ற தயாரிப்புகளை மட்டுமே விற்க முடியும் மற்றும் எஃப்எஸ்எஸ் சட்டம் 2006இன் கீழ் ஆரோக்கிய பானம் என்பது வரையறுக்கப்படவில்லை.

இந்தக் கலவை அல்லது பானங்கள் குழந்தைக்கு அதிக சர்க்கரையை உட்செலுத்துவதாக பிரியங்க் கனுங்கோ கூறுகிறார். மேலும், இந்த பானங்கள் அருந்திய பின்னர் வேறு எந்த சர்க்கரை கொண்ட உணவையும் குழந்தைகள் உட்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் இந்தத் தகவலை தயாரிப்பு நிறுவனங்கள் தெரியப்படுத்துவதே இல்லை.

 
சராசரியாக எவ்வளவு சர்க்கரை உட்கொள்ள வேண்டும்?
பூதாகரமாகும் போர்ன்விட்டா விவகாரம்: 'ஆரோக்கிய' பானங்களால் குழந்தைகளுக்கு என்ன ஆபத்து?

பட மூலாதாரம்,GETTY IMAGES

``பல ஆண்டுகளாக ஆரோக்கிய பானங்கள் என்ற பெயரில் நம் மக்கள் மீது இந்தப் பொருட்கள் திணிக்கப்பட்டு, விளம்பரங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் மூலம் தவறாக வழிநடத்தப்படுகின்றன,’’ என்கிறார் டாக்டர் அருண் குப்தா.

குழந்தைகள் மருத்துவர் அருண் குப்தா, பொது நலனுக்கான ஊட்டச்சத்து ஆலோசனை (NAPI) என்ற சிந்தனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

அவர் பேசுகையில், “ஆரோக்கிய பானங்கள் வரையறுக்கப்படவில்லை என்று அரசு கூறுகிறது, ஆனால் இந்த விவகாரத்தில் அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆலோசனை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்?

ஆரோக்கியமான உணவு, பானம் எது என்பதற்கும் ஆரோக்கியமற்றவை எவை என்பதற்கும் தெளிவான வரையறை இருக்க வேண்டும்," என்றார்.

`கணிசமான அளவு சர்க்கரை கொண்ட இத்தகைய பானங்கள் சந்தையில் பல ரகங்களில் கிடைக்கின்றன’ என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

 
பூதாகரமாகும் போர்ன்விட்டா விவகாரம்: 'ஆரோக்கிய' பானங்களால் குழந்தைகளுக்கு என்ன ஆபத்து?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மருத்துவர் ராஜீவ் கோவில் மற்றும் மருத்துவர் அருண் குப்தா ஆகியோர் `புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவது போல, மக்கள் குறிப்பாக குழந்தைகள் சர்க்கரைக்கு அடிமையாகக்கூடும். ஏனெனில் இனிப்பு மகிழ்ச்சியான உணர்வைத் தரும்.

ஆனால் சர்க்கரையைப் பெற இத்தகைய பானங்களைப் பயன்படுத்தத் தொடங்கும்போது, அவர்களுக்கு உடல்நலப் பிரச்னைகள் வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. அவர்கள் தொற்றாத நோய்களால் பாதிக்கப்படக்கூடும்.

தொற்றாத நோய் என்பது எந்தவொரு நோய்த்தொற்றாலும் ஏற்படாத, ஆரோக்கியமற்ற நடத்தையால் ஏற்படும் நோய்.

இதுபோன்ற பல பிரச்னைகளை இந்த பானங்கள் ஏற்படுத்தலாம்.

  • உடல் எடை அதிகரிப்பு
  • உடல் பருமன்
  • சர்க்கரை நோய்

உதாரணமாக, பிஸ்கெட்டில் சர்க்கரை தவிர உப்பும் உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குளிர்பானம் அல்லது ஆற்றல் பானங்களில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளது. இந்தத் தயாரிப்புகள் அனைத்தும் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளின் கீழ் வருகின்றன.

சமீபத்தில், பிரிட்டிஷ் மருத்துவ ஆய்விதழின் (பிஎம்ஜே) ஓர் ஆய்வறிக்கையில், `இது ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் ஆயுட்காலத்தையும் குறைக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

பூதாகரமாகும் போர்ன்விட்டா விவகாரம்: 'ஆரோக்கிய' பானங்களால் குழந்தைகளுக்கு என்ன ஆபத்து?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மருத்துவர் அருண் குப்தா கூறுகையில், “உங்கள் தினசரி உணவில் தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவின் பங்கு 10 சதவீதத்திற்கு மேல் இருந்தால், அது சர்க்கரை நோய், புற்றுநோய், இதய நோய், உடலில் மனச்சோர்வு போன்ற நோய்களை உண்டாக்கும். தொற்றாத நோய்களை அதிகரிக்கும். உணவு அல்லது பானங்களில் எவ்வளவு சதவீதம் சர்க்கரை அல்லது உப்பு பயன்படுத்தப்படுகிறது என்பதை விளம்பரங்களில் குறிப்பிட வேண்டும்,’’ என்கிறார்.

மேலும் பேசிய அவர், ``குறைந்த சர்க்கரை அளவைக் கொண்ட பொருட்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதிக சர்க்கரை அளவு கொண்ட பொருட்கள் பற்றி எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை. இதுபோன்ற விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவது குறைக்கப்பட வேண்டும். இதனால், அத்தகைய பொருட்களை மக்கள் வாங்குவதைக் குறைக்க முடியும்,’’ என்கிறார்.

மருத்துவர் அருண் குப்தா மற்றும் மருத்துவர் ராஜீவ் கோவில், உணவுப் பொருள் மீது ஒட்டப்பட்டுள்ள லேபிள்களை படிக்கத் தெரியாததால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இதுபோன்ற சூழலில், "படிக்காதவர்களை மனதில் வைத்து, போக்குவரத்து வண்ணக் குறியீடு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதே நேரத்தில், அதிக சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு உள்ள பொருட்கள் குறித்து பெரிய எச்சரிக்கைகள் கொடுக்கப்பட வேண்டும்."

அத்தகைய பொருட்களின் "விலையை அதிகமாக வைத்திருக்க வேண்டும்." மேலும் "வரிகளும் அதிகமாக விதிக்கப்பட வேண்டும். இதனால் அதை வாங்குபவர்கள் மனதில் இதைப் பசிக்குச் சாப்பிட வாங்குகிறோமா அல்லது சுவைக்காக வாங்குகிறோமா என்ற கேள்வி எழும்."

https://www.bbc.com/tamil/articles/cjr7594qxrno

"சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"

3 weeks 5 days ago
"சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"
 
 
50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.
 
தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.
 
முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.
 
சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.
 
இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?
 
இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது.
.
இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.
 
ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.
 
அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. No photo description available. No photo description available. No photo description available. 
 
 
 

எலும்பு வலு இழப்பது ஏன்?

3 weeks 6 days ago

எலும்பு வலு இழப்பது ஏன்?

கு.கணேசன்

spacer.png

ம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும்.

இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது.

‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன?

நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும்.

பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’.

ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.    

 
காரணங்கள் என்னென்ன?

எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது. 

குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு. 

இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.

 

என்னென்ன தொல்லைகள்?

பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும்.

நோயைக் கண்டறிவது எப்படி?      

முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது.

இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள்.

இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும்.

இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம்.

யாருக்கு வாய்ப்பு அதிகம்?

உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர்.

கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

  • உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா?
  • லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா?
  • உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா?
  • உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா?
  • அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா?
  • அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா?
சிகிச்சை என்ன?

இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது.

முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது.

கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம். 

என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம்.

சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். 

தடுப்பது எப்படி?
  • இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள்.
  • யோகாசனங்களைச் செய்வதும் நல்லது.
  • புகைபிடிக்கக் கூடாது.
  • மது அருந்தக் கூடாது.
  • காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது.
  • எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும்.
  • 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
  • ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 
  • இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும்.

https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis

உங்கள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டும் முக்கிய அறிகுறிகள் என்னென்ன?

3 weeks 6 days ago
சிறுநீரக பாதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன.

மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது.

இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.

 
சிறுநீரகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ.
சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன?

உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம்.

ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது.

அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும்.

நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ.

அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

 
சிறுநீரகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும்.
நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease)

நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

அறிகுறிகள்

  • குமட்டல் மற்றும் வாந்தி
  • பசியின்மை
  • கால் மற்றும் கணுக்கால் வீக்கம்
  • மூச்சுத்திணறல்
  • தூங்குவதில் சிரமம்
  • அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்
 
சிறுநீரகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது.
சிறுநீரகத்தில் கல்

சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது.

அறிகுறிகள்

  • சிறுநீர் கழிக்கும் போது வலி
  • சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல்
  • சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல்
  • கல் உள்ள இடத்தில் வலி
 
நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy)
சிறுநீரகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

  • கால்கள் வீக்கம்
  • நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல்
  • உடல் சோர்வு
  • எடை குறைதல்
  • உடல் அரிப்பு
  • குமட்டல் மற்றும் வாந்தி
 
ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis)
சிறுநீரகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம்

சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது.

இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது.

அறிகுறிகள்

  • குமட்டல் மற்றும் வாந்தி
  • தலை சுற்றல்
  • உடல் மந்தம்
  • தலை வலி
  • கழுத்து வலி
 
சிறுநீர் பாதைத் தொற்று
சிறுநீரகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது.

இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம்.

அறிகுறிகள்

  • முதுகுப் பக்கத்தில் வலி
  • காய்ச்சல்
  • சிறுநீர் கழிக்கும்போது வலி
  • அடிவயிற்றில் வலி
  • சிறுநீரில் ரத்தம்
  • குமட்டல் மற்றும் வாந்தி
 
பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய்
சிறுநீரகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது.

பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும்.

அறிகுறிகள்

  • மேல்வயிற்றில் வலி
  • அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி
  • முதுகில் வலி
  • சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல்
  • சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்
 
ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy)
சிறுநீரகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது.

ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.

 
சிறுநீரகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும்
சிறுநீரக செயலிழப்பு

சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார்.

சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும்.

அறிகுறிகள்

  • பசியின்மை
  • வாந்தி
  • கடுமையான உடல் சோர்வு
  • உடல் வீக்கம்
  • தூக்கமின்மை
  • உப்பசம்

https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o

ரத்த அழுத்தத்தை பரிசோதிக்காமல் விட்டால் ஏற்படும் அறிகுறியே இல்லாத ஆபத்துகள்

1 month ago
ரத்த அழுத்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை.

தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர்.

ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.

 
உடல்நலம்: ரத்த அழுத்தத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டால் என்ன பிரச்னை ஏற்படும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது.

“முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர்.

மேலும், “பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை” என்கிறார் அவர்.

ரத்த அழுத்தம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

 
உடல்நலம்: ரத்த அழுத்தத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டால் என்ன பிரச்னை ஏற்படும்?
படக்குறிப்பு,சிறுவயதினருக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறார் மருத்துவர் எஸ். சந்திரசேகர்.
ரத்த அழுத்தம் எந்த அளவை எட்டினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்?

ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு

140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும்.

ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி?

மருத்துவர்கள் முன்பெல்லாம் பாதரசத்துடன் கூடிய ஸ்பிக்மோமேனோ மீட்டர் எனப்படும் ரத்த அழுத்தமானியை பயன்படுத்தினார்கள். இப்போது மின்னணு ரத்த அழுத்தக் கருவி வந்துவிட்டது. ரூ.2,500-3,000-ல் நல்ல கருவிகளை வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அந்த கருவியை கையில் எங்கு, எப்படி பொருத்த வேண்டும் என, செவிலியர் அல்லது மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவரிடம் நேரிலேயே சென்று செய்துபார்த்து தெரிந்துகொள்ள வேண்டும்.

ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் டீ, காபி அருந்தியிருக்கக் கூடாது. பொதுவாகவே மது, புகைப்பிடிப்பது நல்லதல்ல. குறிப்பாக, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் நிச்சயம் அவற்றை செய்திருக்கக் கூடாது. ரிலாக்ஸாக இருக்க வேண்டும். பின்பக்கம் சாய்ந்துகொள்ளக்கூடிய நாற்காலியில், நிச்சயம் கால்களை தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி வைத்துக்கொண்டோ, கால்மேல் கால் போட்டுக்கொண்டோ அமர்ந்திருக்கக் கூடாது.

ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் ஓரிரு முறை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வலது கை, இடது கை என மாற்றி பரிசோதித்து, அதன் சராசரியைக் கூட எடுத்துப் பார்க்கலாம்.

 
உடல்நலம்: ரத்த அழுத்தத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டால் என்ன பிரச்னை ஏற்படும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு.
எந்த நேரத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா?

ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது.

ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது.

ரத்த அழுத்தத்தை தினசரி பரிசோதிக்க வேண்டுமா?

தினசரி பரிசோதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.

உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம்.

ரத்த அழுத்தம் அதிகமாகும்போது இதய ரத்தக் குழாய்களின் சுற்றளவு குறைகிறது. இதய சுவர்கள் தடித்து வீங்கிவிடும். சுருங்கி விரிவது குறைந்துவிடும். எனவே, உயர் ரத்த அழுத்தம் நிறைய வழிகளில் இதயத்தைப் பாதிக்கும். இதய துடிப்புகள்கூட இதனால் அதிகமாகிவிடும்.

உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் என்னென்ன?

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. ‘எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்’ என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.

 
உடல்நலம்: ரத்த அழுத்தத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டால் என்ன பிரச்னை ஏற்படும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,"உயர் ரத்த அழுத்தத்தால் கண் பார்வை பிரச்னை கூட ஏற்படலாம்"
உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் எப்படி தடுக்கலாம்?

உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். ‘மெடிட்டரேனியன் டயட்’ எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை.

நடைபயிற்சி எல்லோராலும் செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. மூட்டு வியாதி, மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களை நீட்டி மடக்கி பயிற்சி (Stretching) செய்யலாம். தோட்ட வேலை, வீட்டு வேலைகளையே உடற்பயிற்சியாக செய்யலாம். ஒரேமாதிரியான உடற்பயிற்சிகளையே தினமும் செய்யாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒருவாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க இதய சங்கம் கூறும் வழிமுறை.

இவ்வளவு செய்தும் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றாலோ அல்லது இணை நோய்கள் இருந்தாலோ நிச்சயம் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம்.

உயர் ரத்த அழுத்தத்திற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? இதனை முற்றிலும் குணப்படுத்த முடியுமா?

பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

 
உடல்நலம்: ரத்த அழுத்தத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டால் என்ன பிரச்னை ஏற்படும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,உப்பு குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குறை ரத்த அழுத்தம் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம்.

என்ன சாப்பிடலாம்?

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த உணவியல் நிபுணர் புவனேஸ்வரி கூறினார்.

“உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும்.

அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது” என தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c51nd7ekv99o

'தோப்புக்கரணம் இப்ப 'சூப்பர் பிரெய்ன் யோகா'

1 month ago
'தோப்புக்கரணம் இப்ப 'சூப்பர் பிரெய்ன் யோகா'
 
 
பல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே, யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் ஒரு தோப்புக்கரணம் மூலம் அனுபவித்தவர்கள் எம் மூதாதையர்கள். இவர்கள் வழிபாட்டு முறைகளுடன் வாழ்வியல் முறைகளையும் கலந்து தோப்புக்கரணம் என்னும் ஒற்றைப் பயிற்சி ஒன்றை எதோ ஒரு கால கட்டத்தில் எமக்கு தந்துள்ளார்கள். இந்த தோப்புக்கரணம் பிள்ளையார் வழிபாட்டுடன் தொடர்பு படுத்தப்பட்டு அதற்கு ஒரு புராணக் கதையும் சொல்லப்படுகிறது. இங்கு வலது காதை இடது கையாளும், இடது காதை வலது கையாளும் பிடித்தபடி, பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி, உட்காந்து எழுவது ஒரு தோப்புக்கரணம் [உக்கி போடுதல்] ஆகும். தோர்பி என்றால் ‘இரண்டு கைகளினால்’ என்றும், ‘கர்ணம்’ என்றால் ‘காதைப் பிடித்துக் கொள்வது’ என்றும் பொருள் என சிலரும், தவறுக்காக வருந்தித் திருந்திச் செய்யும் செயல் தப்புக்கரணம் என்றும், அந்த தமிழ்ச் சொல் வழக்காற்றில் திரிந்து ‘தோப்புக் கரணம்’ என்றாயிற்று என்று சிலரும் விளக்கம் கொடுக்கின்றனர். இது தொடையை வலுவாக்கும் ஒரு உடற்பயிற்சி என்றும் கூறலாம்.
 
எது எப்படியாயினும் இந்த தோப்புக்கரண பழக்கம் ஒரு ஆயிரம் ஆண்டு அல்லது சற்று முன்னும் பின்னும் பழமை வாய்ந்தது என ஊகிக்கலாம், என் என்றால், இன்று பரவலாக உள்ள பிள்ளையார் வழிபாடு சங்ககாலத்தில் எந்த இலக்கியத்திலும் இல்லை. அதே போல, சங்கமருவிய கால ஐம்பெரும்காப்பியமான சிலம்பிலும் மணிமேகலையிலும் சீவகச் சிந்தாமணியிலும் கூட இல்லை. கிருஸ்துக்குப் பின் 4 ஆம்- 5ஆம் நூற்றாண்டிலேயே தான், குப்தா காலத்தில், பிள்ளையார் ஓர் அளவு அடையாளம் காணக்கூடிய அளவிற்கு வளர தொடங்கினார். பல்லவ மன்னரின் படைத் தளபதியான பரஞ்சோதி [இவரே பிற்காலத்தில் சிறுத்தொண்டராவார்], கி.பி. 7 ஆம் நூற்றாண்டில், வாதாபியில், போரில் வெற்றி பெற்றதன் நினைவாக அங்கிருந்து கணபதியை [பிள்ளையாரை] சோழநாட்டுக்கு எடுத்து வந்து, தமிழ் நாட்டிற்கு முறையாக அறிமுகப் படுத்தப்பட்டார். மேலும் பிள்ளையாரை முதன்முதலாக அறிமுகப்படுத்தும் இலக்கியங்கள் அப்பர், சம்பந்தர் திருமுறைகளே ஆகும், எனினும் பிள்ளையாரைப் பற்றி மிகக் குறைவான இடங்களிலேயே குறிப்பு காணக் கூடியதாக உள்ளது. அந்த குறிப்புகளிலும் கூட எங்கும் தோப்புக்கரணம் பற்றி எதுவும் காண முடியவில்லை.
 
இந்து தத்துவத்தில் வினைகளை வேரறுக்கும் கடவுளான பிள்ளையாரை வழிபடும் வழிபாட்டு முறையாக தோப்புக்கரணம் இருந்தாலும், இது ஒரு தண்டனை முறையாகும். பாடசாலைகளில் ஞாபக மறதியினால் நிகழும் சிறு குற்றங்களுக்கு தோப்புக்கரணம் தண்டனையாக வழங்கப்பட்டு வந்துள்ளது. அதைவிடவும் கிராமப் பஞ்சாயத்துக்களிலும் ஒரு தண்டனையாக தோப்புக் கரணம் இருந்துள்ளதும் குறிப்பிடத் தக்கது. இவைகள் எல்லாம் சில பல ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகள், எனினும் இன்று இவை அருகிவிட்டன. தோப்புக்கரணம், மூளைக்கும் நரம்பு மண்டலத்திற்கும் செல்லும் உயிர் சக்தியின் அளவை அதிகரிக்கிறது என்றும், மூளைக்கான அக்கு பஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுவதால், மூளையின் வேகம் அதிகரிக்கிறது என்றும் தொடர்ந்து செய்வதன் மூலம் கவனக் குறைவு நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. எனவே மனம் ஒருமுகப்பட்டு, ஞாபகசக்தி அதிகரித்து, படிப்பிலும் கவனம் கூடும் என்ற கருத்து பொதுவாக உள்ளது.
 
ஆனால் இன்று இந்த தோப்புக்கரணம், 'சூப்பர் பிரெய்ன் யோகா' என்ற பெயரில், அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? [is now being researched and enthusiastically promoted in the West as "Super Brain Yoga."] லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார் [Dr. Eric Robins, a medical doctor in Los Angeles, calls it "a fast, simple, drug-free method of increasing mental energy"]. மேலும் பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின், மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் அவர் உறுதிப்படுத்தி கூறுகிறார் [He speaks of one student who raised his grades from C's to A's in the space of one semester]. காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றது என்றும், அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாகவும், இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்றும் அவர் சொல்கிறார்.
 
தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ அரசாங்கத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன், புத்த மத குருவாக மாறிய பிறகு சீனாவுக்கு பயணம் செய்யும் பொழுது தமிழரின் தற்காப்புக் கலையையும் எடுத்து சென்று அங்கு அறிமுகப் படுத்தினார், ஆனால் இன்றோ நாம் தற்காப்பு கலையினை நினைக்கும் பொழுது அது சீனா அல்லது ஜப்பான் என்று கருதுகிறோம், அது போலத் தான் இந்த தோப்பு கரணமும் ஒரு காலத்தில் அமெரிக்காவினதாக மாறலாமோ என்று ஒரு ஐயப்பாடு என்னிடம் தோன்றுகிறது ?
 
எனவே இந்த எமது பழம் பழக்கமான தோப்புக்கரணத்தின் பெருமையை உணருங்கள், மற்றவர்கள் அதை சொந்தம் கொண்டாட முன்பு இது தமிழரின் பாரம்பரியம் என்பதை எடுத்து கூறுங்கள். இது வெறும் மதம் சார்ந்த வழிபாடோ, நம்பிக்கையோ மட்டும் அல்ல: மூளையின் செயல்திறனை மேம்படுத்தும் அற்புத ஆற்றல் கொண்டது என்று இன்று நாம் அறிவியல் அடிப்படையிலும் அறிகிறோம். எனவே தமிழர்கள் அறியாத தமிழனிடத்தில் உள்ள நல்ல பழக்கவழக்கம் இதுவாகிறது. 'சூப்பர் பிரெய்ன் யோகா' என்ற வடிவில் பிறருக்கு நம்மிடத்தில் உள்ளவற்றின் அருமை- பெருமை இன்று புரிகிறது. ஆனால் நாம் எதற்கெடுத்தாலும் மேற்குலகத்தை வாய்பிளந்து பார்க்கிறோம். எம்மிடம் உள்ள நல்ல பாரம்பரியங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் எமக்கு எனோ புரிவதில்லை? எனவே இனியாவது சிந்தியுங்கள், அறிய முயலுங்கள் !! இதனாலோ என்னவோ முன்பு பாடசாலைகளில் குழப்படி செய்யும் அல்லது பிந்தி வரும் அல்லது குறைந்த புள்ளி பெரும் மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்தார்களோ என இன்று அறிவியல் பூர்வமாக மீளாய்வு செய்ய என் மனம் ஏங்குகிறது ?
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. No photo description available. No photo description available.
 
 
 

பாலியல் வாழ்வை பாதிக்கும் மெனோபாஸ், ஆண்களுக்கு வரும் ஆண்ட்ரோபாஸ் - மருத்துவர்கள் கூறும் வழி

1 month ago
தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்குமா மெனோபாஸ், மருத்துவர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

“ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மூன்று கட்டங்கள் மிகவும் முக்கியமானவை, பருவமடையும்போது, கர்ப்பமாக இருக்கும்போது, மாதவிடாய் நின்று போகும்போது (மெனோபாஸ்). ஆனால் முதல் இரண்டு கட்டங்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், மெனோபாஸிற்கு கொடுக்கப்படுவதில்லை,” என்கிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா காமராஜ்.

மெனோபாஸ், மாதவிடாய் நின்றுபோதல் என்பது பெண்கள் உடலில் காலப்போக்கில் நிகழும் ஒன்று. பெரும்பாலான பெண்களுக்கு 45 முதல் 55 வயதிற்குள் இது நிகழ்கிறது. அப்போது அவர்களின் ஹார்மோன்களில் மாற்றம் நிகழ்வதுடன், அவற்றின் சுழற்சி முறையிலும் வேறுபாடு உண்டாகிறது. இவற்றுடன் எதிலும் நாட்டம் இல்லாதது, மூட்டு வலி, பிறப்புறுப்பில் வறட்சி உள்ளிட்ட பல பிரச்னைகளையும் பெண்கள் அனுபவிக்க நேரிடுகிறது.

ஆனால் இந்த மாதவிடாய் நின்று போதல் எந்த வயதில் நிகழ்கிறது, எந்த மாதிரியான அறிகுறிகளை உடலில் ஏற்படுத்துகிறது, அந்த அறிகுறிகளால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் பாதிப்புகள் என்ன, நமது அன்றாட வாழ்க்கையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பொறுத்து அதன் தீவிரம் மாறுபடுகிறது.

மெனோபாஸ் காலகட்டத்தில் தாம்பத்திய உறவில் நாட்டமின்மை இருக்கும் என்பது உண்மையா? அவ்வாறு உண்டாகும் நாட்டமின்மையைச் சரிசெய்ய மருத்துவர்களின் அறிவுரை என்ன?

பெண்களைப் போல் ஆண்களுக்கும் மெனோபாஸ் பிரச்னை உண்டா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை இங்கு பார்க்கலாம்.

 
மெனோபாஸ், பாலியல் நாட்டமின்மையை ஏற்படுத்துமா?
தாம்பத்திய வாழ்க்கையைப் பாதிக்குமா மெனோபாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கான முக்கிய ஹார்மோன் ஈஸ்ட்ரோஜென். அந்த ஹார்மோன் உடலில் குறையும்போது கருமுட்டைகள் உருவாவதும், அவை வெளியேறுவதும் குறைந்து, ஒருகட்டத்தில் நின்றுவிடும். தொடர்ந்து 12 மாதங்களுக்கு மேல் மாதவிடாய் ஏற்படாமல் இருந்தால் அதைத்தான் மெனோபாஸ் என்கிறோம்,” என்று விளக்கினார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா காமராஜ்.

தொடர்ந்து பேசிய அவர், “பெண்களின் உடலில் தலை முதல் கால் வரை, ஈஸ்ட்ரோஜெனின் தாக்கம் இருக்கிறது. அந்த ஹார்மோன் குறையும்போது மனநிலை, உடல்நிலை இரண்டும் பாதிக்கப்படும். மெனோபாஸ் தொடங்குவதற்கு முன்பும், அந்தக் கட்டத்திற்குப் பிறகும் இந்த பாதிப்புகள் இருக்கும்.

மனச் சோர்வு, தூக்கமின்மை, எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் மூட்டு மற்றும் முதுகு வலி, உடலில் திடீரென வெப்பம் அதிகரிப்பது, உடல் பருமன், முடி உதிர்வு எனப் பல பிரச்னைகள் ஏற்படும்.

இதன் தொடர்ச்சியாகத்தான் பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படும். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்தான், பெண்ணுறுப்பில் உள்ள திசுக்களைப் புதுப்பிக்கும். அந்த ஹார்மோன் குறையும்போது, பெண்ணுறுப்பு உலர்ந்துவிடும். இதனால் பிறப்புறுப்பில் அசௌகரியம், வலி ஏற்படும். மெனோபாஸ் கட்டத்திற்குப் பிறகு தாம்பத்திய வாழ்வில் பெண்களுக்கு ஆர்வம் குறைய இதுவும் ஒரு காரணம்,” என்கிறார் மருத்துவர் நிவேதிதா காமராஜ்.

தாம்பத்திய வாழ்க்கையைப் பாதிக்குமா மெனோபாஸ்

பட மூலாதாரம்,AAKASHFERTILITYCENTRE

படக்குறிப்பு,மகப்பேறு மருத்துவர் நிவேதிதா காமராஜ்

“ஈஸ்ட்ரோஜென் குறைவால் ஏற்படும் நேரடி விளைவுதான் பாலியல் ஆர்வம் குறைவது. என்னிடம் சிகிச்சைக்காக ஒரு பெண் வந்திருந்தார். அவருக்கு 49 வயதில் மெனோபாஸ் ஏற்பட்டது. அவர் என்னிடம் சிகிச்சைக்கு வருவதற்கு முன்பாக தீவிர மனச்சோர்வில் இருந்துள்ளார்.

பாலியல் ஆர்வம் குறைந்ததால் அவருக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது அவரது மனச் சோர்வை மேலும் அதிகப்படுத்தியது. தூக்கமின்மை பிரச்னையும் இருந்துள்ளது. இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் தற்கொலை எண்ணங்கள் அவருக்கு எழுந்துள்ளன.

அவரது நண்பர் ஒருவர் பரிந்துரைத்து என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். அவருக்கு ஹார்மோன் மாற்று தெரபியை தொடங்கினோம். ஈஸ்ட்ரோஜன் சுரப்புக்கு ஈடாக மருந்துகள் மூலம் தீவிரமான அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் முறைதான் ஹார்மோன் மாற்று தெரபி.

இப்போது சில கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகு அவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார். மெனோபாஸ் என்பதைப் பற்றிய புரிதல் பலருக்கும் இங்கு இல்லை. பாலியல் உறவில் நாட்டமின்மை முதல் மெனோபாஸ் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் கண்டிப்பாகச் சரிசெய்யலாம்.

வாழ்நாளில் மருத்துவரிடம் செல்லாமல் இருப்பதை இங்கு பலரும் ஒரு சாதனை என்று நினைக்கிறார்கள். மெனோபாஸ் சமயத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் உங்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டால் மருத்துவரை அணுகுவதில் எந்தத் தயக்கமும் வேண்டாம்,” என்று கூறுகிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா காமராஜ்.

 
இயற்கையாக எந்த வயது வரை பாலியல் ஆர்வம் இருக்கும்?
தாம்பத்திய வாழ்க்கையைப் பாதிக்குமா மெனோபாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“ஆண்களுக்கும் பெண்களுக்கும் 80 வயது வரைகூட பாலியல் ஆர்வம் இருக்கும். எனவே மெனோபாஸ் என்பதை தாம்பத்திய உறவில் விரிசல் ஏற்படுவதற்கு ஒரு காரணமாகப் பார்க்கக்கூடாது,” என்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

“ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறைவதால் ஏற்படும் உடல் மற்றும் மனநிலை மாற்றங்களால் பெண்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். மனமும் உடலும் ஆரோக்கியமாக இருந்தால் தானே தாம்பத்திய வாழ்வு சிறக்கும்.

அதோடு சேர்த்து பிறப்புறுப்பில் ஏற்படும் வறட்சி, உறவின்போது கடுமையான வலியை உண்டாக்கி, பாலியல் உறவு குறித்த ஒரு பயத்தை ஏற்படுத்திவிடும். மேலும் நம் நாட்டில் இருக்கும் ஒரு பொதுவான எண்ணம், பாலியல் உறவு என்பது தம்பதிகளுக்குள் ஒரு குறிப்பிட்ட வயது வரைதான் இருக்க வேண்டும், பின் பிள்ளைகளின் வாழ்க்கையைப் பார்க்க வேண்டும், ஆன்மீகத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள்.

இதெல்லாம் சேர்ந்துதான் 45 வயதிற்கு மேல் தம்பதிகளுக்குள் பாலியல் ஆர்வம் குறைந்துவிட்டால் அதை மிகச் சாதாரணமாகக் கடந்து விடுகிறார்கள்,” என்று கூறிய அவர் தொடர்ந்து பேசினார்.

தாம்பத்திய வாழ்க்கையைப் பாதிக்குமா மெனோபாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“மெனோபாஸ் சார்ந்த மாற்றங்களுக்கு இப்போது மருந்துகள், சிகிச்சைகள் வந்துவிட்டன. அதில் முக்கியமான சிகிச்சை ஹார்மோன் மாற்று தெரபி, எத்தனையோ பேர் அதை எடுத்துக்கொண்டு இயல்பான வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். இதை எடுத்துக்கொண்டாலே மெனோபாஸ் தொடர்பான பல பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும்.

பிறப்புறுப்பில் ஏற்படும் வறட்சிக்கு நிறைய லூப்ரிகண்ட்ஸ் (Lubricants) கிடைக்கின்றன. ஆணுறை நிறுவனங்கள்கூட இதற்கென பிரத்யேக ஆணுறைகளைத் தயாரிக்கின்றன. எலும்பு தேய்மானத்திற்கு மருந்துகளையும், ஆரோக்கியமான உணவுகளையும் பரிந்துரைக்கிறோம்.

எனவே ஒரு வயதிற்கு மேல் கணவன்- மனைவிக்குள் உடலுறவு என்பதே ஏதோ பெரிய குற்றம் என்ற பொதுப்புத்தியில் இருந்து விலகி, மெனோபாஸ் குறித்த பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுக வேண்டும்.

உடலுறவின் மீது ஆர்வம் இல்லை என்றால் ஏதோ பிரச்னை என்று அர்த்தம். உடலுறவு நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது,” என்கிறார் மருத்துவர் காமராஜ்.

 
`ஆண்களுக்கான மெனோபாஸ்'
தாம்பத்திய வாழ்க்கையைப் பாதிக்குமா மெனோபாஸ்
படக்குறிப்பு,பாலியல் மருத்துவர் காமராஜ்

“இந்த ஹார்மோன் பிரச்னைகள் ஆண்களையும் பாதிக்கும். இதை, ஆண்ட்ரோபாஸ் (Andropause) என்பார்கள், `ஆண்களுக்கான மெனோபாஸ்' என்றும் இதைச் சொல்லலாம்” என்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

“பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் போல ஆண்களின் உடலில் டெஸ்ட்டோஸ்டீரான் (Testosterone) என்ற ஹார்மோன் குறையும்போது இது ஏற்படும். ஞாபக மறதி, ஆணுறுப்பு எழுச்சியின்மை, தசைகளின் பலம் குறைவது, தூக்கமின்மை, மனச் சோர்வு, பாலியல் ஆர்வம் குறைவது, விந்து சீக்கிரமாக வெளியேறுவது போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

நாற்பது வயதுக்கு மேல் ஆகும்போது, இதையெல்லாம் பலரும் முதுமையின் அறிகுறிகளாகப் பார்ப்பார்கள். ஆனால் இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், ஆண்ட்ரோபாஸ் கட்டத்தில் இருக்கும் ஆண்கள் மருத்துவரை அணுகி, உடலில் ஹார்மோன்களை அதிகரிப்பதற்குத் தேவையான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டால் பாலியல் ஆர்வம் கூடுவது மட்டுமல்லாது, அவர்களது அன்றாட வாழ்க்கையும் மேம்படும்.

தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்குமா மெனோபாஸ், மருத்துவர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கணவன்- மனைவி, மெனோபாஸ் மற்றும் ஆண்ட்ரோபாஸ் கட்டத்தில் இருக்கும்போது மனம் விட்டுப் பேச வேண்டும். சரி நமக்கு வயதாகிவிட்டது, இதை ஏற்றுக்கொண்டு உடலுறவைத் தவிர்த்துவிடுவோம் என இருக்கக்கூடாது. ஏனென்றால் இந்த ஹார்மோன் பிரச்னைகள் உடல்நிலை சார்ந்தும், மனநிலை சார்ந்தும் பல விபரீத சிக்கல்களை ஏற்படுத்திவிடும். 40- 50 என்ற வயது சோர்ந்து, ஓய்வு எடுப்பதற்கான வயது அல்ல.

மெனோபாஸ்/ஆண்ட்ரோபாஸ் என்பதை பாலியல் வாழ்க்கையின் வீழ்ச்சியாகப் பார்க்கக்கூடாது. அறிகுறிகளைப் புரிந்துகொண்டு குறிப்பிட்ட சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு புதிய தாம்பத்திய வாழ்வைத் தொடங்குவதற்கான வாய்ப்பை அது வழங்குகிறது.

நல்ல மருத்துவ ஆலோசனையோடு உங்கள் உடலைச் சிறப்பாகக் கவனித்துக்கொண்டால், தாம்பத்திய வாழ்க்கைக்கு வயது ஒரு தடையே இல்லை,” என்று கூறுகிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cw0v5djxqgno

அறிகுறியே இல்லாமல் கண் பார்வையை நிரந்தரமாகப் பறிக்கும் நோய்

1 month ago
கண்

பட மூலாதாரம்,GETTY IMAGES

12 ஏப்ரல் 2024, 02:03 GMT
புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவின் கால்பங்கு மக்கள்தொகை கண்சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் குணப்படுத்தக்கூடிய, சரியே செய்ய முடியாத, தடுத்து நிறுத்தக் கூடிய வகையிலான வெவ்வேறு விதமான கண் சார்ந்த பாதிப்புகள் உள்ளன.

அதில் ஒன்றான கிளாக்கோமா சமீபத்தில் பலரையும் அச்சுறுத்தும் ஒரு பாதிப்பாக மாறியுள்ளது. காரணம் இது பல நேரங்களில் எந்த வித அறிகுறிகளும் இல்லாமல் தொடங்கி, ஒரு நபர் தனது கண்பார்வையை குறிப்பிட்ட அளவு இழந்த பிறகே தெரிய வருகிறது.

இதனால், இழந்த கண்பார்வையை மீட்க முடியாத நிலையும் உருவாகிறது. உண்மையில் இந்த நோயின் அறிகுறிகள் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே அதை எப்படி கண்டறிவது? அதற்கான சிகிச்சைகள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

கிளாக்கோமா என்றால் என்ன?

கிளாக்கோமா என்பது கண்களை பாதிக்கும் ஒரு நோய். கண்களை மூளையோடு இணைக்கும் நரம்புகளை இந்த நோய் பாதிக்கிறது.

பிரிட்டிஷ் பொது சுகாதார சேவையின் (NHS) கூற்றுப்படி, கண்களில் குவியும் இயல்புக்கு மாறான திரவம் அதன் மீது அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமின்றி நரம்புகளை சேதப்படுத்துகிறது.

கிளாக்கோமாவை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வை இழப்பு மற்றும் முழுமையான கண்பார்வை பறிபோவதற்கு வழிவகுக்கும்.

கிளாக்கோமா வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. இதில் 70 முதல் 80 வயதுடையவர்களுக்கு அபாயம் அதிகம்.

 
கிளாக்கோமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கிளாக்கோமா நோய் இரு கண்களையும் பாதித்தாலும், அவற்றில் ஒன்று கூடுதலாக பாதிக்கப்படலாம்.
கிளாக்கோமாவின் அறிகுறிகள் என்ன?

கிளாக்கோமா ஏற்படுகிற ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறிகளும் தெரிவதில்லை. இதனால் அதை பரிசோதனைகள் மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.

இது பல ஆண்டுகளாக படிப்படியாக அதிகரிக்கிறது. இதன் நீட்சியாக பார்வையையும் பாதிக்கிறது. இது மெதுவான விளைவுகளைக் கொண்டிருப்பதால், பலரும் தங்களது பார்வையில் எந்த விதமான மாற்றங்களையும் உணர்வதில்லை.

இது படிப்படியாக முன்னேறி குறிப்பிட்ட அளவு பார்வை பாதிக்கப்படும் போது பாதிக்கபட்டவர்களால் தங்களை சுற்றி எதையும் பார்க்க முடியாது. உடனடியாக சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் முழுமையாக பார்வை பறிபோகவும் வாய்ப்புள்ளது.

மங்கலான பார்வை மற்றும் பிரகாசமான விளக்குகளைச் சுற்றி வானவில் போன்ற வளையங்கள் தெரிவது போன்றவையும் கிளாக்கோமாவின் அறிகுறிகள் தான்.

இந்த நோய் இரு கண்களையும் பாதித்தாலும், அவற்றில் ஒன்று கூடுதலாக பாதிக்கப்படலாம்.

இதன் அறிகுறிகள் திடீரென்று தொடங்கும். அவற்றில் முக்கியமான மற்றும் பொதுவானவை..

  • கண்களில் கடுமையான வலி
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • கண்கள் சிவத்தல்
  • தலைவலி
  • கண்களைச் சுற்றி மென்மையாக மாறுதல்
  • ஒளியைச் சுற்றி வட்டங்கள் தெரிவது
  • மங்கலான தோற்றம்
 
கிளாக்கோமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கிளாக்கோமாவின் ஆரம்ப நிலையிலேயே அதை கண்டறிந்து சிகிச்சை அளித்து விட வேண்டும். இல்லையென்றால் படிப்படியாக அதிகரித்து முழுமையாக பார்வை இழக்கும் அபாயம் உள்ளது.
எப்போது சிகிச்சை பெற வேண்டும்?

இந்த குறைபாடு என்றில்லாமல், உங்கள் பார்வையில் எந்த விதமான குறைபாடு இருப்பதாக உங்களுக்கு சந்தேகம் வந்தாலும், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

கிளாக்கோமாவின் ஆரம்ப நிலையிலேயே அதை கண்டறிந்து சிகிச்சை அளித்து விட வேண்டும். இல்லையென்றால் படிப்படியாக அதிகரித்து முழுமையாக பார்வை இழக்கும் அபாயம் உள்ளது.

எனவே, மேற்காணும் ஏதேனும் அறிகுறிகளை உணர்ந்தாலே உடனடியாக மருத்துவமனைக்கு சென்று விட வேண்டும். இது ஒரு மருத்துவ அவசரநிலை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

கிளாக்கோமாவின் வகைகள்

கிளாக்கோமாவில் பல வகைகள் உள்ளது. ஆனால், இவற்றில் மிகவும் பொதுவான வகை ஓப்பன் ஆங்கில் கிளாக்கோமா (open angle glaucoma) ஆகும். இது பல ஆண்டுகளாக கண்ணுக்குள் இருந்து பொறுமையாக வளர்ச்சியடைகிறது.

அக்யூட் ஆங்கில் க்ளோஸர் கிளாக்கோமா (Acute Angle Closure Glaucoma) - இது மிகவும் அரிதானது. கண்ணுக்குள் திரவங்கள் பாயும் பாதை திடீரென தடைப்பட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, கண்ணில் அழுத்தம் அதிகரிக்கிறது. இது கிளாக்கோமாவுக்கு வழிவகுக்கிறது.

இரண்டாம் நிலை கிளாக்கோமா (Secondary Glaucoma) - கண் அழற்சி நோய் அல்லது யுவைடிஸ் போன்ற எந்த விதமான கண் நோய்களினாலும் இது ஏற்படலாம்.

கான்ஜெனிட்டல் கிளாக்கோமா(Congenital Glaucoma) - இந்த வகை மிகவும் அரிதாக இளம் வயதிலேயே ஏற்படக்கூடிய ஒன்று. இதில் கண்களை அமைப்பு வழக்கத்திற்கு மாறானதாக இருக்கும்.

 
கிளாக்கோமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,உங்கள் பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்களில் ஒருவருக்கு கிளாக்கோமா இருந்தால், உங்களுக்கும் அது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கிளாக்கோமா ஏற்பட காரணம் என்ன?

கிளாக்கோமா ஏற்பட பல காரணங்கள் உண்டு. கண்களில் காணப்படும் திரவம் அதன் பாதையில் சரியாக பயணிக்காத போது கிளாக்கோமா ஏற்படுகிறது. இது கண்ணில் எதிர்மறை அழுத்தத்தை உருவாக்குவதால், அது கண்களை மூளையுடன் இணைக்கும் பார்வை நரம்பை சேதப்படுத்துகிறது.

கிளாக்கோமா உருவாகும் அபாயம் பல காரணங்களால் அதிகரிக்கிறது.

வயது - வயது முதிர்வு கிளாக்கோமா ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

இனம் - ஆப்பிரிக்கர்கள், கரீபியர்கள் மற்றும் ஆசியர்களுக்கு கிளாக்கோமா ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. இவர்களில் 40 வயதை கடந்தவர்களுக்கு இந்த பிரச்னை ஏற்படுகிறது.

குடும்பம் - உங்கள் பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்களில் ஒருவருக்கு கிளாக்கோமா இருந்தால், உங்களுக்கும் அது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உடல்நலப் பிரச்சனைகள் - பார்வைக் குறைபாடுகள் அல்லது நீரிழிவு நோயாளிகளுக்கு கிளாக்கோமா ஏற்படும் அபாயம் உள்ளது.

கிளாக்கோமாவைத் தடுக்க முடியுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், தொடர் கண் பரிசோதனைகள் மூலம், கிளாக்கோமாவை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

கிளாக்கோமா பரிசோதனை

வழக்கமான தொடர் கண் பரிசோதனைகள் மூலம், அறிகுறிகள் ஏதும் தென்படாதபோதும் கூட இதைக் கண்டறிய முடியும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.

கிளாக்கோமாவை மிக வேகமான மற்றும் வலியற்ற பரிசோதனை மூலம் கண்டறியலாம். பரிசோதனையில் கிளாக்கோமா இருப்பது தெரியவந்தால், தாமதிக்காமல் கண் மருத்துவரை அணுக வேண்டும்.

 
கிளாக்கோமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சிகிச்சைகளின் மூலம் இழந்த பார்வையை மீட்டெடுக்க முடியாது. மாறாக, மீதம் உள்ள பார்வை இழக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
கிளாக்கோமாவிற்கான சிகிச்சை என்ன?

கிளாக்கோமாவால் ஒருவருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டால், அவர்களின் பார்வையை மீண்டும் கொண்டு வர முடியாது. பார்வை இழப்பு லேசானதாக இருந்தால், உடனடி சிகிச்சையின் மூலம் மேலும் பார்வையிழப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.

இதற்கான சிகிச்சை அந்த நபரை பாதித்துள்ள கிளாக்கோமாவின் வகையைப் பொறுத்தது. அதனடிப்படையில் கீழ்காணும் சிகிச்சைகள் வழங்கப்படலாம்.

சொட்டு மருந்து (Drops) - கண்களில் அழுத்தத்தை குறைக்கும்.

லேசர் சிகிச்சை - இந்த சிகிச்சை மூலம் கண்களில் உள்ள திரவம் பயணிக்கும் பாதையில் உள்ள அடைப்புகளை நீக்க முடியும். கண்களில் குறைந்த திரவ உற்பத்தியைக் கட்டுப்படுத்த லேசர் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.

அறுவைசிகிச்சை - இதில் கண்ணில் உள்ள திரவம் வெளியேறும் பாதை மாற்றியமைக்கப்படுகிறது.

இந்த சிகிச்சைகளின் மூலம் இழந்த பார்வையை மீட்டெடுக்க முடியாது. மாறாக, மீதம் உள்ள பார்வை இழக்காமல் பார்த்துக் கொள்ளலாம். குறிப்பாக சிகிச்சையின் போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், மருத்துவரிடம் தெரிவிக்கவும். அனைவரும் வழக்கமான தொடர் கண்பரிசோதனைகள் மூலம் இந்த நோய் இருந்தால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து விடலாம். அப்படி குடும்பத்தில் ஒருவருக்கு இருப்பது தெரிய வந்தாலும் கூட, பிற குடும்ப உறுப்பினர்களும் இந்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cjr7dwlrkwqo

பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவது ஏன்? எப்படிக் கட்டுப்படுத்துவது?

1 month ago
கேன்டிடியாசிஸ், பிறப்புறுப்பு அரிப்பு, மருத்துவம், நோய்த்தொற்று

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், கியூலியா கிராஞ்சி
  • பதவி, பிபிசி செய்திகள், பிரேசில்
  • 11 ஏப்ரல் 2024
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சிலருக்குப் பிறப்புறுப்புகளில் அரிப்பு ஏற்படும். பொதுவாக பெண்களுக்கு இது அதிகமாக ஏற்பட்டாலும், ஆண்களுக்கும் இது ஏற்படக்கூடும்.

இது கேன்டிடா அல்பிகான்ஸ் (Candida albicans) என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது. இதன் பெயர் கேன்டிடியாஸிஸ் (Candidiasis).

கேன்டிடா அல்பிகான்ஸ் பூஞ்சை, பொதுவாக மனித உடலில் வாழும் நுண்ணுயிரிகளோடு இணைந்து வாழும். இது உடலில் உள்ள ஆரோக்கியமான நுண்ணுயிரிகளில் ஒன்றாகும்.

ஆனால் இந்த உயிரினம் ‘சந்தர்ப்பவாதியாகக்’ கருதப்படுகிறது. அதாவது, தனக்கு நிலைமை சாதகமாக இருக்கும்போது அது தொற்றுநோய்களை ஏற்படுத்தும்.

ஏதாவது ஒரு காரணத்தால் இந்தப் பூஞ்சையின்களின் அளவு அதிகரிக்கும்போது, உடலில் உள்ள நுண்ணுயிரிகளின் சமநிலை சீர்குலைந்து கேன்டிடியாஸிஸ் தொற்று ஏற்படும்.

 
கேன்டிடியாசிஸ், பிறப்புறுப்பு அரிப்பு, மருத்துவம், நோய்த்தொற்று

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இது கேன்டிடா அல்பிகான்ஸ் (Candida albicans) என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது
ஆண்களுக்கு இந்தத் தொற்று ஏன் ஏற்படுகிறது?

பெண்களுக்கு இந்தப் பூஞ்சையின் அளவு அதிகரிப்பதற்கு சில பொதுவான காரணங்கள் உள்ளன.

மாதவிடாய் சுழற்சி, கருத்தரித்தல், கருத்தடை மாத்திரைகள் உபயோகித்தல், ஹார்மோன் மாற்று சிகிச்சை ஆகியவற்றின் போது ஏற்படும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் பெண்களின் பிறப்புறுப்பின் யோனி pH-ஐ பாதிக்கலாம். இது பூஞ்சையின் வளர்ச்சிக்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்குகிறது.

கூடுதலாக, பெண்களின் பிறபுறுப்பு ஈரப்பதத்துடனும் சூடாகவும் இருப்பதால், அதிலுள்ள நுண்ணுயிரிகளின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதுவும் கேன்டிடா பூஞ்சையின் அதிகப்படியான வளர்ச்சிக்கு சாதகமான சூழலை உருவாக்குகிறது.

ஆனால், ஆண்கள், தங்கள் பிறப்புறுப்பை நீண்ட நேரம் குளியல் உடைகள், டயப்பர்கள் போன்ற ஈரமான ஆடைகளால் மூடிவைத்திருந்தால் இந்தத் தொற்று ஏற்படுகிறது, என்கிறார் பிராசிலின் சிறுநீரியல் சங்கத்தின் நோய்த்தொற்றுத் துறை உறுப்பினர் பியான்கா மாசிடோ.

 
கேன்டிடியாசிஸ், பிறப்புறுப்பு அரிப்பு, மருத்துவம், நோய்த்தொற்று

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,முக்கியமாக கேன்டிடியாஸிஸ் பாலுறவு மூலம் பரவும் தொற்றாகக் (sexually transmitted infection) கருதப்படுவதில்லை.
பிறப்புறுப்பு அரிப்பு ஏற்படுவதன் காரணங்கள்

இந்தத் தொற்று ஏற்படுவதற்கு வேறு காரணங்களும் உள்ளன.

மாசிடோ பின்வருபவற்றைக் கூறுகிறார்:

ஆண்களுக்கு:

  • சரியான பிறப்புறுப்பு சுகாதாரம் இல்லாதது
  • ஆணுறுப்பின் நுனியில் அதிகப்படியான தோல் இருப்பது

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு:

  • நீரிழிவு நோய் (குளுக்கோஸ் அளவு அதிகமாக இருப்பின் பூஞ்சை அதிகமாக வளரும்)
  • அடிக்கடி ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்துதல் (இது கேன்டிடா பூஞ்சையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் பிற நல்ல நுண்ணுயிரிகளைக் கொல்லும்)
  • நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் நோய்கள். அத்துடன் கீமோதெரபி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போதைப்பொருள் பயன்பாடு போன்றவையும் நோய் எதிர்ப்புச் சக்தியைக்  குறைக்கும்

முக்கியமாக கேன்டிடியாஸிஸ் பாலியல் மூலம் பரவும் தொற்றாகக் (sexually transmitted infection) கருதப்படுவதில்லை. ஏனெனில் அது மேலே குறிப்பிட்ட காரணங்களால் ஏற்படுகிறது.

"இருந்தாலும், தொடர்ச்சியாக தோலோடு தோல் தொடர்புகொள்ளும்போது, குறிப்பாக நெருக்கமான சூழ்நிலைகளில், இந்தத் தொற்று ஏற்படலாம்," என்கிறார் மாசிடோ.

 
கேன்டிடியாசிஸ், பிறப்புறுப்பு அரிப்பு, மருத்துவம், நோய்த்தொற்று

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பெண்களின் பிறபுறுப்பு ஈரப்பதத்துடனும் சூடாகவும் இருப்பதால், அதிலுள்ள நுண்ணுயிரிகளின் சமநிலை பாதிக்கப்படுகிறது
இந்தத் தொற்றின் அறிகுறிகள் என்ன?

மாசிடோவின் கூற்றுப்படி கீழ்கண்டவை இந்தத் தொற்றின் அறிகுறிகள்.

பெண்களுக்கு:

  • பிறப்புறுப்பிலிருந்து பால் நிறத்தில், கெட்டியான ஒரு வகை வெள்ளை பொருள் வெளியேறும்.
  • சிறுநீர் கழிக்கும் போது பிறப்புறுப்பில் எரிச்சல் மற்றும் அசௌகரியம் ஏற்படும்
  • உடலுறவின் போது வலி ஏற்படலாம்

ஆண்களுக்கு:

  • ஆண்குறியில் சிறிய சிவப்பு புள்ளிகள், லேசான தடிப்பு மற்றும் புள்ளி வடிவ புண்கள்

மேலும் இரு பாலினரும் கடுமையான அரிப்பால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆண்களுக்கு ஏற்படும் தொற்றை எப்படிக் கண்டறிவது?

இந்தத் தொற்று பொதுவாக மருத்துவமனைகளில் கண்டறியப்படுகிறது. அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பரிசோதனைக்கான அவசியமின்றி, பார்வையின் மூலமே இந்தத் தொற்றைக் கண்டறிந்து விடுவார்கள்.

இருப்பினும், சந்தேகத்திற்கிடமான சந்தர்ப்பங்களில், அல்லது சிகிச்சையளிக்கக் கடினமாக இருக்கும் புண்கள் இருந்தால், நுண்ணுயிரிகளை ஆராய்தல் அல்லது பயாப்ஸி போன்ற சோதனைகள் செய்வதன்மூலம் இந்த நோய் கண்டறியப்படலாம்.

தொற்று ஏற்பட்ட பகுதிகளில் இருந்து தசை அல்லது திரவங்களைச் சேகரித்து அவற்றைச் சோதிப்பதன்மூலம் பூஞ்சைகளின் இருப்பைக் கண்டறியலாம், என்கிறார் பிராசிலில் உள்ள சான்டா பவுலா மருத்துவமனையின் சிறிநீரியல் நிபுணர் அலெக்ஸ் மெல்லர்.

“இருப்பினும், பொதுவாக, இந்தப் பரிசோதனைகளுக்கு அவசியமிருப்பதில்லை. சிகிச்சை உடனே தொடங்கப்படுகிறது," என்கிறார் அவர்.

 
கேன்டிடியாசிஸ், பிறப்புறுப்பு அரிப்பு, மருத்துவம், நோய்த்தொற்று

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அனைத்து வகையான கேன்டிடியாசிஸ் தொற்றுகளுக்கான சிகிச்சையிலும், பூஞ்சையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன
என்ன சிகிச்சை?

"கேன்டிடா அல்பிகான்ஸ் பூஞ்சை மிக வேகமாகப் பரவும். நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினமாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த நோய்த்தொற்று தானாகவே மறைந்துவிடும். இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் தானாகவே சரியாகிவிடும்," என்கிறார் அவர்.

ஆண்கள், சுகாதாரமாக இருப்பதுடன், கேன்டிடியாசிஸைக் குணப்படுத்த ஆயின்ட்மென்ட்கள் மற்றும் மாத்திரைகள் ஆகியவறைப் பயன்படுத்தப்படலாம், என்கிறார் அவர்.

ஆண்களுக்கான சிகிச்சை, பொதுவாக 3 முதல் 5 நாட்களுக்கு கிரீம்கள், மற்றும் மாத்திரைகளை உள்ளடக்கியது.

இந்தத் தொற்றினால் அரிதாகவே சிக்கல்கள் ஏற்படுகிறது என்கிறார் மெல்லர். ஆனால் விதிவிலக்கான சில சந்தர்ப்பங்களில் இத்தொற்று ஆண்களுக்கு இரண்டாம் நிலை முன்தோல் குறுக்கத்தை உருவாக்கலாம்.

தொற்றினால் ஏற்படும் வீக்கம் மற்றும் குணமடைவதில் உள்ள சிரமங்கள் முன்தோலின் நெகிழ்ச்சித்தன்மையைக் குறைக்கும் வகையில் காயத்தை ஏற்படுத்தும் போது இது நிகழ்கிறது, என்கிறார் அவர்.

 
கேன்டிடியாசிஸ், பிறப்புறுப்பு அரிப்பு, மருத்துவம், நோய்த்தொற்று

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கேன்டிடியாசிஸ் தோலில் சிவப்புப் புள்ளிகள், கடுமையான அரிப்பு, மற்றும் தோலை உரிதல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது
கேன்டிடியாசிஸின் பிற வகைகள்

பூஞ்சை வளர்வதற்குச் சாதகமான சூழ்நிலையைப் பொறுத்து, கேன்டிடியாஸிஸ் உடலின் மற்ற பகுதிகளிலும் ஏற்படலாம்.

வாய்:

கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளில், பொதுவாக வாயில் கேன்டிடியாசிஸ் ஏற்படும். இது ‘த்ரஷ்’ என்று அழைக்கப்படுகிறது. இது உதடுகள், வாய் மற்றும் தொண்டையில் ஏற்படுகிறது.

இது நாக்கில், கன்னங்களின் உட்புறத்தில், மற்றும் தொண்டையில் வெள்ளைப் புள்ளிகள் போல் தோன்றும். விழுங்கும்போது அசௌகரியம் மற்றும் எரியும் உணர்வை ஏற்படுத்தும்.

தோல்:

மேலும், உடலில் பொதுவாக ஈரமான, சூடான பகுதிகளான அக்குள், இடுப்பு மற்றும் மார்பகங்களின் கீழே கேன்டிடியாசிஸ் ஏற்படலாம்.

இது தோலில் சிவப்புப் புள்ளிகள், கடுமையான அரிப்பு, மற்றும் தோலை உரிதல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

குடல்:

ஆன்டிபயாடிக் மருந்துகளின் நீண்டகால பயன்பாடு, குடல் நுண்ணியிரிகளின் ஏற்றத்தாழ்வு, ஆகியவற்றின் காரணமாக உடலில் பூஞ்சைகள் பெருகும்போது, குடலிலும் கேன்டிடியாஸிஸ் ஏற்படலாம்.

இது வயிற்று வலி, வயிறு வீக்கம், வாயு, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், மற்றும் மலத்தில் சிறிய வெள்ளை எச்சம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

தீவிரமான கேன்டிடியாசிஸ்:

இது ‘சிஸ்டமிக் கேன்டிடியாசிஸ்’ எனப்படுகிறது. இது நோய்த்தொற்றின் மிகவும் தீவிரமான வடிவமாகும். இதில் பூஞ்சை ரத்த ஓட்டத்தின் மூலம் உடல் முழுவதும் பரவுகிறது.

சிகிச்சை அளிக்கப்படாத எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயாளிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், அல்லது நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளை உட்கொள்பவர்கள் போன்றவர்களை இது பொதுவாக பாதிக்கிறது.

இதன் அறிகுறிகள்: காய்ச்சல், குளிர், தசை மற்றும் மூட்டு வலி.

சரியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இது ஆபத்தான சிக்கல்களையும் ஏற்படுத்தும்.

அனைத்து வகையான கேன்டிடியாசிஸ் தொற்றுகளுக்கான சிகிச்சையிலும், பூஞ்சையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன -ஆயின்ட்மென்ட்கள், மாத்திரைகள், திரவங்கள் ஆகியவை. மிகவும் தீவிரமான சந்தர்ப்பங்களில் சிறப்பு மருத்துவச் சிகிச்சை தேவைப்படலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cmm3nr34lygo

Checked
Thu, 05/16/2024 - 14:54
நலமோடு நாம் வாழ Latest Topics
Subscribe to நலமோடு நாம் வாழ feed