நலமோடு நாம் வாழ

'அழுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்'; ஆய்வுகள் சொல்வது என்ன?

1 day 4 hours ago

மனதில் இருக்கும் வருத்தம், துன்பம், மனச்சோர்வு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தம் ஒன்றாக அழுகை உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மனதில் இருக்கும் வருத்தம், துன்பம், மனச்சோர்வு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தம் ஒன்றாக அழுகை உள்ளது.

கட்டுரை தகவல்

  • பாமினி முருகன்

  • பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

தினமும் காலை தூக்கத்தில் இருந்து விழிக்கும்போது என்ன நினைப்பீர்கள்? இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமைய வேண்டும் என்றுதானே. ஆனால், அந்த நாள் அழுகையுடன் தொடங்கினால் எப்படி இருக்கும்?

மனித வாழ்க்கையில் சிரிப்பு எந்தளவுக்கு முக்கிய பங்கு வகிக்கிறதோ, அதே அளவிற்கு அழுகையும் முக்கிய பங்கு வகிக்கிறதுதானே. மனதில் இருக்கும் வருத்தம், துன்பம், மனச்சோர்வு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தம் ஒன்றாக அழுகை உள்ளது.

இது சோகமான நிகழ்வுகள், இழப்பு என பல்வேறு காரணங்களால் வெளிப்படும். சில சமயங்களில் காரணமே இன்றியும் இந்த உணர்வு வெளிப்படும். இன்னும் சொல்லப்போனால் நம் மனதில் இருக்கும் நெருடல்கள், பாரங்கள், குமுறல்களை பல சமயங்களில் கண்ணீர் மூலம் வெளியேற்றுகிறோம்.

சிரிப்பு நம்மை எந்தளவிற்கு உணர்வுப்பூர்வமாக்குகிறதோ அதே அளவிற்கு அழுகையும் நம்மை உணர்வுப்பூர்வமாக ஆக்குகிறது. இருப்பினும் இத்தகைய ஓர் உணர்வை நாம் ஏன் எதிர்மறையான உணர்வாக பார்க்கிறோம்? அழுவதால் நம் உடலுக்கும், மனதுக்கும் ஏற்படும் நன்மைகள் என்ன?

கண்ணீர் வெளிப்படுவதற்கான காரணம்:

அழுகை ஒரு வகையில் விளித்திரையை மேம்படுத்தி பார்க்கும் திறனை அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அழுகை ஒரு வகையில் விளித்திரையை மேம்படுத்தி பார்க்கும் திறனை அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது.

மனித பிறவிக்கு மட்டுமே தனித்துவமான உணர்வு சார்ந்த திரவமாக கண்ணீர் உற்பத்தி ஆகிறது என தேசிய சுகாதார நிறுவனத்தில் வெளியான (NIH) தி நியூராலஜி ஆஃப் ஹூமன் க்ரையிங் (The neurobiology of human crying) என்ற ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கண் மருத்துவ ஆய்வகத்தில் பணியாற்றிய ஆராய்ச்சியாளர் ஜே.எட்.டிஃபானி, கடந்த 2003ஆம் ஆண்டில் உடல்நலனிலும் நோயிலும் கண்ணீரின் பங்கு (Tears in health and disease) என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டார்.

"நாம் விழித்திருக்கும் சமயத்தில் கண்ணீர் சுரக்க உதவும் லேக்ரிமல் க்ளாண்ட் தொடர்ச்சியாக கண்ணீரை உற்பத்தி செய்துகொண்டிருக்கும். இது கண்ணின் ஓரங்களிலும், மேல் இமைக்குக் கீழும் இருக்கும். கண்ணை இமைக்கும்போது, கண்ணீரை மெல்லிய பாதுகாப்பு படலமாக கண்ணின் மேல் பரப்புகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

"கண் இமைகளில் உள்ள டார்சல் தகடுகளுக்குள் அமைந்துள்ள மெய்போமியன் சுரப்பிகளில் அழுத்தம் ஏற்படும்போது விளிம்பில் எண்ணெய் போன்ற திரவம் ஏற்படும். இது கண்ணீர் படலத்தின் நிலைத்தன்மைக்கு பங்களிக்கிறது. இதன் மூலம் வெளிப்படும் கண்ணீர் கார்னியா மற்றும் வெண்படலத்தின் செல்லுலார் மேற்பரப்புகளை சீராக்கும். இது விளித்திரையை மேம்படுத்தி நமது பார்க்கும் திறனை அதிகரிக்கிறது" என இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனிதர்கள் அழுவது ஏன்?

மனிதர்கள் அழுவது குறித்து 2 நேரெதிர் கருத்துகளை ஆராய்ச்சியாளர்கள் முன்வைப்பதாக தி நியூராலஜி ஆஃப் ஹூமன் க்ரையிங் ஆய்வறிக்கை மேற்கோள்காட்டுகிறது.

ஒன்று துயரத்தால் ஏற்படும் தூண்டுதலால் அழுவது. உதாரணமாக ஒருவர் அதீத சோகமாகவோ, கோபமாகவோ இருக்கும்போது இயற்கையான ஓர் உணர்வாக கண்ணீர் வெளிப்படுகிறது என்பதாகும்.

மற்றொன்று அழுகை ஒரு ஆறுதல் செயலாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக ஒருவர் நன்றாக அழுத பின்பு அவர் மிகவும் இலகுவாக உணர்கிறார். மனதின் பாரங்கள் குறைந்து நிதானமாகிறார் என்பது ஆகும்.

மனிதர்கள் அழுவதற்கு 2 கருத்துகளை ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மனிதர்கள் அழுவதற்கு 2 கருத்துகளை ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கின்றனர்.

'இங்கே அழலாம்'

பெரும்பாலும் பொதுஇடங்களில் நாம் அழுவதில்லை. தனி அறையிலோ, மறைவான பகுதிகளிலோ, ஆள் இல்லாத தனிமையான இடங்களில்தான் இந்த உணர்வை வெளிப்படுத்தி ஆசுவாசப்படுத்திக்கொள்வோம். ஏனென்றால் இதைவைத்து நம்மை யாரும் மதிப்பிட்டுவிடக்கூடாது என்பதே இதற்கு காரணம். ஆனால் அழுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, சுதந்திரமாக இந்த உணர்வை வெளிப்படுத்த இதற்கென்றே சில மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை சூரத் நகரில் 2017ஆம் ஆண்டு அழுகை கிளப் (Cry Club) ஒன்று தொடங்கப்பட்டது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த கிளப்பின் உறுப்பினர்கள் ஒன்றுகூடி அழுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அழுகை மன அழுத்தத்தை அகற்றி, மன ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்று இவர்கள் நம்புகின்றனர். இது பின் மும்பையிலும் விரிவுப்படுத்தப்பட்டது.

சமீபத்தில் கடந்த ஜூன் 15ஆம் தேதி மும்பையில் 'தி க்ரை கிளப்' எனப்படும் ஒருநாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'உங்களின் உணர்வுகளை அரணவணைத்துக் கொள்ளுங்கள்' என்ற வாசகத்துடன் இருந்தது.

இது வழக்கமான பார்டியோ, இசைநிகழ்ச்சியோ அல்ல. முன்பின் தெரியாதவர்கள் கூடி, அழுவதற்கு சுதந்தரமான ஒரு சூழலை கொண்ட இடம். 399 ரூபாய் நுழைவுக்கட்டணம் செலுத்தி உள்ளே சென்று உங்களின் மனக்குமுறல்களை கொட்டலாம்.

யாரும் உங்களை எடைபோட மாட்டார்கள். டிஷ்யூ பேப்பர், தேநீர் மற்றும் உங்களின் மனநிலைக்கு ஏற்ற இசையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேண்டுமென்றால் சாய்ந்து அழுவதற்கும், யாரையேனும் கட்டியணைத்து புலம்பி அழுவதற்குமான வசதியும் அங்கு இருந்தது.

இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கான நோக்கம் குறித்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த Small World என்ற நிறுவனத்திடம் கேட்டோம்.

இந்த நிகழ்ச்சிக்கான யோசனை எங்கிருந்து வந்தது எனக் கேட்டபோது, ருய்காட்சு (Ruikatsu) என்ற ஜப்பானிய பழக்கத்தில் இருந்து ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சவுரவ். ருய்காட்சு என்பது கண்ணீரை வெளியேற்றும் ஒரு ஜப்பானிய நடைமுறை ஆகும்.

சூரத்தில் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அழுகை மன்றம்.

பட மூலாதாரம், Healthy Crying Club Surat

படக்குறிப்பு, சூரத்தில் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அழுகை மன்றம்.

"மக்கள் தங்கள் உணர்ச்சிகளை சரிசெய்யவோ அல்லது பகுப்பாய்வு செய்யவோ வேண்டிய கட்டாயம் இல்லாமல், எவ்வித ஆலோசனைகளும் இல்லாமல், அவர்கள் எப்படி உணர்கிறார்களோ அதை அப்படியே வெளிப்படுத்த உதவுவதே எங்களின் நோக்கமாக இருந்தது" என்றார் சவுரவ்.

"அழுவது பலவீனமான அறிகுறி அல்ல என்பதை உணர்த்தவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவில் மக்கள் பெரும்பாலும் தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த பாதுகாப்பான இடங்கள் கிடைப்பதில்லை. இதில் பங்கேற்ற ஒரு விருந்தாளி, என்னை நானே கட்டியணைத்து, எதுவும் சரியாக நடக்காவிட்டாலும் பரவாயில்லை எனத் தேற்றிக்கொள்வது போன்ற உணர்வு ஏற்பட்டதாக விவரித்தார்" என சவுரவ் நம்மிடம் பகிர்ந்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிரித்தும், புலம்பியும், அழுதும் தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது வெளிப்படையாக அழுவது புத்துணர்சி அளித்ததாக ஒருவர் கூறினார்.

"ஒரு பாதுகாப்பான சூழலில் நாம் புரிந்துகொள்ளப்படுவது போன்ற ஓர் உணர்வு ஏற்படுவது மாதிரியான வாய்ப்பு கிடைப்பது அரிதானது" என பலரும் கருத்து தெரிவித்ததாக சவுரவ் கூறினார்.

உளவியல் ரீதியாக என்ன பலன்?

அழும்போது நாம் மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியும் என்கிறார் உளவியல் நிபுணர் அபிாஷா.

படக்குறிப்பு, அழும்போது நாம் மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியும் என்கிறார் உளவியல் நிபுணர் அபிலாஷா.

"அழும்போது நமது உடலின் நரம்பு மண்டலத்தை சீர்செய்து, நமது உணர்ச்சிகளை மீட்பதுதான் நரம்பியல் அமைப்பின் வேலை. நாம் அழும்போது ஆக்ஸிடோசின், எண்டோர்பின் ஹார்மோன்கள் வெளியேறும். இந்த ஹார்மோன்கள் நம் உடல் மற்றும் மனரீதியான வலிகளை குறைத்து, நம்மை ஆசுவாசப்படுத்தும் ஹார்மோன்கள் என்பதால் இவை வெளியேறியபின் நமக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்" என்கிறார் உளவியல் நிபுணர் அபிலாஷா.

மற்றொரு கோணத்தில் பார்க்கும்போது "அழும்போது நாம் மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியும். மற்றவர்கள் அழும்போது நமக்கு அக்கறை, இரக்கம் ஏற்படும். இந்த இரக்க குணம் சமூகத்திற்கே மிகவும் முக்கியமாக உள்ளது." என்கிறார்.

மேலும் பேசிய அவர், "அழுகை என்ற உணர்ச்சி நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் ஒன்று. உடலளவில் நமக்கு ஏற்படும் காயங்களை சரிசெய்ய மற்றவர்களின் உதவி தேவைப்படும். ஆனால் நமக்கு கஷ்டம் ஏற்படும்போது நம்மை நாமே தேற்றிக்கொள்வதுதான் இந்த அழுகை" என விளக்குகிறார்.

அடிக்கடி அழுதால் ஆபத்தா?

அதேசமயம் அதீத அழுகையும், மனஅழுத்தம், பயம் போன்ற பிரச்னைக்கான அறிகுறியாக பார்க்கப்படலாம் எனவும் எச்சரிக்கிறார். "ஒருவர் அதிகமாக அழுதுகொண்டே இருப்பது க்ரையிங் ஸ்பெல் (Crying Spell) எனப்படுகிறது. இது ஒருவரை பலவீனமடையச் செய்யும். ஒரு கட்டத்தில் ஏன் அழுகிறோம் என்பதே தெரியாமல் அழுகை ஒரு பழக்கமாக மாறிவிடக் கூடும்" எனக் கூறினார்.

"உணர்ச்சிகள் அடக்கப்படுவது போல தோன்றும்போது, மனதில் பாரம் ஏற்படும்போது அதை குறைப்பதற்கு அழுவது தவறில்லை. ஆனால், சிரிப்பு சிகிச்சை (laughter therapy) போல இதையும் ஒரு பழக்கமாக எடுத்துக்கொள்வது நல்லதல்ல. இதுவே மனஅழுத்தத்திற்கு வழிவகுக்கும்" எனக் கூறுகிறார்.

ஆண்களுக்கும் பொருந்துமா?

அழுவது ஆண்களுக்கான பண்பு இல்லை என நினைப்பது முட்டாள்தனம் என்கிறார் அபிலாஷா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அழுவது ஆண்களுக்கான பண்பு இல்லை என நினைப்பது முட்டாள்தனம் என்கிறார் அபிலாஷா

பெரும்பாலான ஆண்கள் அழுகை என்ற உணர்வை வெளிப்படுத்தாமல் இருப்பது குறித்து கேட்டபோது "காலம் காலமாக வீரத்திற்கு எதிர்ப்பதமாக அழுகை சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அழுகைக்கும் வீரத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. சங்க கால மன்னர்கள் கூட வலிமையானவர்கள்தான். ஆனால் உணர்ச்சிவசப்பட்டால் அவர்களும் அழுதுள்ளனர். இது அவர்களின் இரக்க குணத்தை தான் காட்டுகிறதே தவிர கோழைத்தனம் கிடையாது" என்கிறார்.

"இப்போது பெரும்பாலும் அனைவருக்கும் அதிக மனஉளைச்சல் ஏற்படுகிறது. தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு வலி ஏற்படும்போது அதை வெளிப்படுத்தாமலேயே இருந்தால் மாரடைப்பு வரை கொண்டு செல்லும் அபாயமும் உள்ளது" என எச்சரிக்கிறார்.

மேலும் "ஆண்கள் பலரும் அழக்கூடாது என நினைத்து மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இழப்போ, மனசோர்வோ, தாங்கிக்கொள்ள முடியாத பிரச்னைகளோ ஏற்படும்போது அழுவது தவறில்லை. மனிதர்கள் அனைவருக்கும் அழுகை வேண்டும் என்பதால்தான் நாம் அனைவருக்கும் பாலின வேறுபாடின்றி Tear Duct எனப்படும் கண்ணீர் சுரபி உள்ளது. அழுவது ஆண்களுக்கான பண்பு இல்லை என நினைப்பது முட்டாள்தனம்." எனவும் கூறினார்.

"அழும்போது நம் கண்களும் புத்துணர்ச்சி பெறுகிறது. உடலில் இருக்கும் தண்ணீர் கண் வழியே வெளியேறும்போது இந்த புத்துணர்ச்சி கிடைக்கிறது. அதனால் தேவைப்படும்போது அழுவது என்பது உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நல்லதே" என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c7v1zvpjndeo

தினமும் சிரமமின்றி மலம் கழிக்க நிபுணர் சொல்லும் 4 எளிய பரிந்துரை

5 days 4 hours ago

தினமும் சிரமமின்றி மலம் கழிக்க நிபுணர் சொல்லும் 4 எளிய பரிந்துரை

தினமும் சிரமமின்றி மலம் கழிக்க நிபுணர் சொல்லும் 4 எளிய பரிந்துரை

Getty Images

கட்டுரை தகவல்

  • ரஃபேல் அபுச்சைபே

  • பிபிசி நியூஸ் முண்டோ

    13 நிமிடங்களுக்கு முன்னர்

இரைப்பை குடல் மருத்துவர் ஜூலியானா சுவாரெஸ் சமூக ஊடகங்களில் பதிவிட ஆரம்பித்ததைத் தொடர்ந்து, ஓர் முக்கியமான பிரச்னையை கவனித்தார். அது, மக்கள் தங்களின் செரிமான அமைப்பின் செயல்பாடு குறித்து பேசுவதை அசௌகரியமாக உணர்கின்றனர்.

"அதை அவமானமாக நினைக்கின்றனர்; தங்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் குறித்து பேச தயங்குகின்றனர்," என அவர் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.

"இரைப்பை அழற்சி (gastritis), ஹெபடைடிஸ், கணைய அழற்சி (pancreatitis), ரிஃப்ளக்ஸ் (reflux) என பல பிரச்னைகள் குறித்தும் நான் பேசத் தொடங்கினேன். கேஸ்ட்ரோயென்ட்ராலஜிஸ்ட் (gastroenterologist) என்பதைக் கூட பலரால் சரியாக உச்சரிக்க முடியவில்லை."

"அப்போதுதான் நான் மலம் குறித்து பேச ஆரம்பித்தேன். மக்கள் அதுகுறித்து எளிதாக பிணைத்துக் கொள்ளும் விதமான தரவுகளை வழங்கினேன். மக்கள் என்னை 'டாக்டர் பூப்' (Dr. Poop) என அழைத்தனர்," என கொலம்பியாவை சேர்ந்த அந்த நிபுணர் விவரித்தார்.

குடல்நலம், உடல்நலம், மலம் கழிக்க உதவும் டிப்ஸ்

Dr. Juliana Suárez தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் செரிமான அமைப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் மருத்துவர் சுவாரெஸ்

அப்போதிலிருந்து, ஜூலியானா சுவாரெஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை (@ladoctorapopo) செரிமான அமைப்பு எப்படி செயல்படுகிறது என்பது குறித்தும் மலம் தொடர்பான முக்கியமான உரையாடல்களை நிகழ்த்தவும் பயன்படுத்திவருகிறார்.

"தி ஆர்ட் ஆஃப் பூப்பிங்: ஹெல்த்தி டைஜெஷன், எ ஹப்பி லைஃப்" ("The Art of Pooping: Healthy Digestion, a Happy Life) எனும் மின்னணு புத்தகத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

"நாம் குழந்தைகளாக இருந்தபோது மலம் குறித்த ஒவ்வாமை நமக்கு ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், இப்பொது வயதுவந்தவர்களாக நாம் அதுகுறித்து இயல்பாக பேசுவதற்கான வெளி இருக்கிறது."

தங்களின் செரிமான ஆரோக்கியம் தொடர்பாக மக்கள் செய்யும் முக்கிய தவறுகள் குறித்தும், எளிதாக மலம் கழிப்பதற்கான சில டிப்ஸ்கள் குறித்தும் அவர் பிபிசி முண்டோவிடம் பேசினார்.

1. அதிக உணவுகளை சேருங்கள்

குடல்நலம், உடல்நலம், மலம் கழிக்க உதவும் டிப்ஸ்

Dr. Juliana Suárez மருத்துவர் ஜூலியானா சுவாரெஸின் புத்தகம்

தொலைக்காட்சி, இதழ்கள், சமூக ஊடகங்கள் என பலவற்றிலும் பல "அதிசய டயட்கள்" குறித்து குறிப்பிடப்படுவதை நாம் கடந்துவருகிறோம். அவை, சில உணவுகளை நம் உணவுமுறையிலிருந்து நீக்குவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என உறுதி கூறுகின்றன.

ஆனால், ஜூலியானா சுவாரெஸ் இதற்கு எதிரான அறிவுரையை வழங்குகிறார்: "உணவு மட்டுமே பிரச்னை அல்ல, ஆனால் ஒவ்வொருவரின் உடலில் உள்ள நுண்ணுயிர்களும் முக்கியம் என நான் மக்களிடம் கூறுகிறேன்."

நமது செரிமான அமைப்பில் பல பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும் சூழல்தான் நுண்ணுயிர்களாகும், அவை நாம் உண்ணும் உணவை உடைக்க உதவுகின்றன. பலவித சூழலில் தான் நுண்ணுயிர்கள் செழித்து வாழும்.

சமூக ஊடகங்களில் "நேர்த்தியான உணவுமுறையை" கண்டறிவதில் பலருக்கும் தற்போது இருக்கும் பெரு விருப்பம், பலரையும் பலவித உணவுகளை தங்கள் உணவுமுறையிலிருந்து நீக்க வழிவகுக்கிறது என விளக்கும் அவர், இதனால் நுண்ணுயிர்கள் பலவீனமடைவதாக கூறுகிறார்.

"பருப்பு அல்லது க்ளூட்டன் (கோதுமை, சோளம் போன்ற உணவுகளில் உள்ள ஒட்டும் தன்மையுள்ள பொருள்) ஆகியவை இதற்கு காரணமல்ல. அவை தீயவை என்ற எண்ணம் உருவாகியுள்ளது. பூண்டும் காரணமல்ல, ஆனால் உணவுமுறையில் போதுமான நார்ச்சத்து உணவுகள் இல்லாதது, மன அழுத்தம், போதியளவு உடற்பயிற்சி செய்யாதது போன்றவற்றால் இந்த குடல் நுண்ணுயிர்கள் பாதிக்கப்படுகின்றன…"

குடல்நலம், உடல்நலம், மலம் கழிக்க உதவும் டிப்ஸ்

Getty Images இயற்கையான உணவுகளை சேர்த்துக்கொள்ளும்போது செரிமான அமைப்பு சிறப்பாக செயல்படும் என, மருத்துவர் சுவாரெஸ் கூறுகிறார்

"நீங்கள் மறுபடியும் தேவையானவற்றை உண்ண ஆரம்பிக்க வேண்டும் என்றே நான் அந்த புத்தகத்தில் கூறியுள்ளேன். ஆனால், உங்கள் நுண்ணுயிரிகளை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சரிசெய்ய முடியும்."

அனைத்து விதமான உணவுகளையும் உணவுமுறையில் சேர்ப்பதற்கு முன்பாக, சிறிது சிறிதாக இயற்கை உணவுகளை சேர்த்து பரிசோதிக்க வேண்டும் என அவர் பரிந்துரைக்கிறார்: "பால் சம்பந்தப்பட்ட உணவுகள், அதிக பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, நட்ஸ், விதைகள் உள்ளிட்டவற்றை சேர்க்க வேண்டும்."

2. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள், நேர்த்தியான உணவுமுறை மீது அதீத கவனம் வேண்டாம்

9dbea0e0-8e4c-11f0-9cf6-cbf3e73ce2b9.jpg

Getty Images நல்ல தூக்கமும் செரிமானத்துக்கு உதவும் என்கிறார் மருத்துவர் சுவாரெஸ்

உண்ணும் உணவை உடைப்பதுடன் இந்த நுண்ணுயிர்கள், நம் உடலில் நடக்கும் பலவித செயல்முறைகளை கட்டுப்படுத்துவதாக கூறுகிறார் ஜூலியானா சுவாரெஸ்.

அதாவது நம் மனநிலை முதல் நோயெதிர்ப்பு அமைப்பு வரை அவை கட்டுப்படுத்துகின்றன. எனவே, இந்த நுண்ணுயிர்கள் நம் நலனுக்கு அடிப்படையான அம்சமாக திகழ்வதாக அவர் தெரிவிக்கிறார்.

"வளர்சிதை மாற்ற ஆரோக்கியம், இதய நலன், ஹார்மோன் நலன், தோல் ஆரோக்கியம் ஆகியவற்றை இவை கட்டுப்படுத்துகின்றன. நுண்ணுயிர்கள் செழித்திருக்க நார்ச்சத்து உணவுகளை பிரதானமாக உண்ண வேண்டும், அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அல்ல," எனக் கூறுகிறார் அவர்.

மேலும், நுண்ணுயிர்கள் வாழும் சூழல், நம் வாழ்வின் பல காரணிகளுக்கு உணர்திறன் மிக்கவையாக உள்ளன. அதாவது மன அழுத்தம், நீண்ட காலமாக ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்துவது மற்றும் உடலுழைப்பு இல்லாத வாழ்வியல் முறை போன்றவை அவற்றை பாதிக்கின்றன.

"பலவித நுண்ணுயிர்களை கொண்டவர்கள்தான் வலுவான செரிமான அமைப்பை கொண்டிருக்கின்றனர், அவர்கள் பலவிதமான உணவுகளை உண்கின்றனர், நல்ல தூக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்."

எதை உண்ண வேண்டும், எதை உண்ண வேண்டாம் என்பதில் அதிகமாக கவனம் செலுத்துவது, அதுதொடர்பான பதற்றத்தை ஏற்படுத்தி, உணவை ரசித்து உண்ண முடியாதபடி செய்துவிடும் என ஜூலியானா சுவாரெஸ் நம்புகிறார்.

"இது நேர்த்தியான உணவுமுறையை பற்றியது அல்ல, சிறப்பானவற்றை தேர்ந்தெடுப்பதை பற்றியது, மேலும், எப்போதும் விதிவிலக்குகளுக்கு இடமிருக்க வேண்டும்."

தன்னிடம் வரும் நோயாளிகள் பலருக்கும் அவர்களின் குடல் நுண்ணுயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் எனக்கூறும் அவர், "அவர்கள் கேரட்டுடன் கோழி இறைச்சியை சாப்பிடுவார்கள், ஏனெனில் மற்றவையெல்லாம் ஆபத்தானவை என நினைப்பார்கள்." என்கிறார்.

"உணவின் காரணமாக அறிகுறிகள் ஏற்படும்போது, செரிமானம் கடினமாகிறது, அப்போதுதான் மக்கள் சமூக வலைதளங்கள், ஊடகங்களை நாடுகின்றனர், உணவை குறைகூறுகின்றனர். அது பதற்றத்தை ஏற்படுத்தி, அதிக உணவுகளை தங்கள் உணவுமுறையிலிருந்து நீக்குவதற்கு வழிவகுக்கிறது."

அதை அவர்கள் உணரும்போது, ஆரோக்கியமான நுண்ணுயிர்களுக்கு தேவையான பல உணவுகளை ஏற்கெனவே உணவுமுறையிலிருந்து நீக்கியிருப்பார்கள்.

3. உடனடியாக தொடங்குகள், எப்போதும் நிறுத்தாதீர்கள்

குடல்நலம், உடல்நலம், மலம் கழிக்க உதவும் டிப்ஸ்

Getty Images பொம்மை வடிவில் குழந்தைகளுக்கு காய்கறிகளை பழக்க வேண்டும் என, மருத்துவர் சுவாரெஸ் அறிவுறுத்துகிறார்

"இந்த பிரச்னைகளுள் பல குழந்தை பருவத்திலிருந்தே தொடங்குகின்றன," என மருத்துவர் சுவாரெஸ் கூறுகிறார்.

"குழந்தைகளின் வளர்ச்சியில் சில குறிப்பிட்ட தருணங்கள் உள்ளன, அதாவது மலம் கழிக்க பயிற்றுவிப்பது, இது கடும் அதிர்ச்சியை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்துபவையாக இருக்கும். அல்லது, குழந்தைகளின் உணவில் பழங்கள், காய்கறிகளை சேர்ப்பது, இதுவும் மிகவும் எளிதானது அல்ல."

மருத்துவர் சுவாரெஸ் கூற்றுப்படி, குழந்தை பருவத்திலிருந்தே அவர்களுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதற்கு பழக்க பெற்றோர்கள் பெரும்பாலும் தவறிவிடுகின்றனர். அவற்றை பொம்மை வடிவில் வழங்குவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும்.

"உதாரணமாக, அவகடோவை வைத்து பொம்மைக்கு மாஸ்க் செய்ய வேண்டும், அதை குழந்தைகள் உண்ணப் போவதில்லை, ஆனால் அதன்மூலம் குழந்தைக்கு அவகடோ குறித்து தெரியப்படுத்தி, விளையாடுவதன் மூலம், வளர்ந்தபிறகு தன்னுடைய உணவில் எளிதாக சேர்த்துக்கொள்ளலாம்."

புதிய வாசனை, சுவை, பலவித தன்மை (texture) கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வது மிகுந்த பலனளிக்கும்: வாழ்க்கையின் எந்த கட்டத்திலும் இதை செய்யலாம் எனக்கூறும் சுவாரெஸ், இது தனக்கே நிகழ்ந்திருப்பதாக கூறுகிறார்.

"எனக்கு கத்தரிக்காய் (eggplant) பிடிக்காது, ஆனால் இரு ஆண்டுகளுக்கு முன்புதான் அதனை சாப்பிட கற்றுக்கொண்டேன். எனக்கு அவகடோ எப்போதுமே பிடிக்காது. ஆனால், அதன் சுவைக்கு நீங்கள் பழகாவிட்டால், அது உங்கள் உணவிலிருந்து வெளியேறிவிடும்."

அவரின் கூற்றுப்படி, இத்தகைய புதிய உணவுகள் மூலம் குடல் நுண்ணுயிர்களை பழக்குவதன் வாயிலாக நம்முடைய சுவையையும் நாம் பயிற்றுவிக்கிறோம்.

"சுவை என்பது நுண்ணுயிர்களை பொறுத்து பெரிதும் கட்டுப்படுத்தப்படுவதால், அதற்கேற்ப மாறுபடுகிறது."

4. உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள்

குடல்நலம், உடல்நலம், மலம் கழிக்க உதவும் டிப்ஸ்

Getty Images

ஏராளமான தகவல்களை நம் விரல் நுணியில் வைத்திருந்தாலும், மக்கள் தங்களின் உடல்கள் குறித்து எவ்வளவு குறைவாக அறிந்துவைத்துள்ளனர் என்பதையும் பல விஷயங்களை கேட்பது குறித்து சங்கடமாக உணருவதையும் குறித்து தான் ஆச்சர்யப்படுவதாக மருத்துவர் சுவாரெஸ் கூறுகிறார்.

"சரியாக மலம் கழிக்காதவர்கள் தான் உடலை சுத்திகரிப்பது (cleanse) குறித்து கேட்கின்றனர். மனிதர்களாக நம் உடலில் பலவித வேலைகளை செய்யும் உறுப்புகள் உள்ளன; சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் உள்ளன, மேலும் கழிவுகளை கையாளும் பெருங்குடல் உள்ளது."

"அதுகுறித்து நாம் தெரிந்துவைத்திருந்தால், உடலை சுத்திகரிக்க வேண்டும் என நினைக்க மாட்டோம், மாறாக நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகளை அதிகமாக உட்கொள்வோம், உடற்பயிற்சி செய்வோம், நன்றாக உறங்குவோம், சரியான வழியில் மலம் கழிப்போம்."

உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள், தனக்கு என்ன தேவை என்று உங்கள் உடல் தான் முதலில் சொல்லும்.

"ஜிம் அல்லது வேலைக்கு செல்வதற்காக காலையில் சீக்கிரமாக எழும் பலர் காலை உணவை தவிர்ப்பதை பார்க்கிறோம், அதனால், காலையில் மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலும் பணியிடங்களில் தான் தோன்றும். ஆனால், "யாராவது முகம் சுளிப்பார்கள்" என நினைத்து அதனை அடக்கிவைப்பார்கள்."

"செரிமான அமைப்பு என்பது வாய் மற்றும் ஆசனவாயை இணைக்கும் மிக பிரத்யேகமான குழாய் என்பதை நாம் அறிந்துகொள்ளவில்லை. அதன் வழியாகத்தான் சத்துக்கள் உறிஞ்சப்படுகின்றன, கழிவுகள் உற்பத்தியாகின்றன. தினந்தோறும் கழிவுகளை வெளியேற்றாவிட்டால், மலம் கழிக்க போதிய நேரம் ஒதுக்கவில்லை என்றால், நீங்கள் பிரச்னைகளை சந்திக்க வேண்டிவரும்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c147nnmnxxpo

விரத உணவு முறையால் இதய நோய் மற்றும் பக்கவாதம் வரும் ஆபத்து அதிகமா?

1 week 1 day ago

இன்டமிட்டன்ட் ஃபாஸ்டிங்

பட மூலாதாரம், The San Francisco Chronicle via Getty Images

படக்குறிப்பு, கோழி, காய்கறிகள் மற்றும் நட்ஸ் அடங்கிய உண்ணாவிரத உணவு.

கட்டுரை தகவல்

  • சௌதிக் பிஸ்வாஸ்

  • பிபிசி செய்தியாளர்

  • 6 செப்டெம்பர் 2025

    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்த தசாப்தத்தில் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் எனப்படும் விரத உணவுமுறை டிரெண்டாக உள்ளது.

இந்த உணவுமுறை மூலம் கலோரிகளை கணக்கிட்டு சாப்பிடுவது அல்லது கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்ப்பது உள்ளிட்ட கடினமான எதையும் கடைபிடிக்காமல் ஒருவரின் உடல் எடையை குறைக்க முடியும் என நம்பப்படுகிறது. இந்த உணவுமுறையில் நீங்கள் எப்போது சாப்பிட வேண்டும் என்பதை மட்டுமே மாற்ற வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்பதை அல்ல.

தொழில்துறையில் செல்வாக்கு மிக்கவர்கள் இதை உறுதியாக நம்புகின்றனர், ஹாலிவுட் நட்சத்திரங்கள், இந்த உணவுமுறை தங்களுக்கு ஒழுங்கான உடலமைப்பை தருவதாக கூறுகின்றனர். பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சூனக் 36 மணிநேர விரதத்துடன் தன் வாரத்தை தொடங்குவது குறித்து ஒருமுறை பேசியிருந்தார்.

இந்த உணவுமுறைக்கு ஆதரவாகவே அறிவியல் இதுவரையிலும் இருந்துள்ளது. காலையில் முதல் உணவை தள்ளிப்போடுவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும், செல்களை சரிசெய்யும்,நீண்ட ஆயுளை கூட வழங்கும் என ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. எனினும், உணவை தவிர்ப்பது சிறந்த தீர்வு அல்ல என்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் என்பது குறுகிய நேர இடைவெளியில் மட்டும் உணவை உண்பது, பெரும்பாலும் இது எட்டு மணிநேரமாக உள்ளது, மீதமுள்ள 16 மணிநேரத்தில் எந்த உணவையும் உட்கொள்ளக் கூடாது. நேரத்தைக் கட்டுப்படுத்தி கடைபிடிக்கப்படும் 5:2 போன்ற மற்ற உணவுமுறைகளில் குறிப்பிட்ட சில நாட்களில் கலோரிகளை கட்டுப்படுத்த வேண்டும்.

தற்போது சமீபத்தில் வெளியான முதல் பெரியளவிலான ஆய்வு முடிவுகள், இந்த உணவு முறை குறித்து பல மோசமான ஆபத்துகள் குறித்த கவலையை எழுப்புகின்றன. வயது வந்த 19,000க்கும் மேற்பட்டோரிடம் மேற்கொண்ட இந்த ஆய்வில், அவர்களுள் எட்டு மணிநேர இடைவெளிக்கும் குறைவான நேரத்தில் மட்டுமே உணவுகளை உண்பவர்கள், 12-14 மணிநேர இடைவெளியில் உண்பவர்களைவிட இதய நோய்களால், குறிப்பாக இதய மற்றும் ரத்த நாள நோய்களால் இறக்கும் ஆபத்து 135% அதிகம் உள்ளதாக கூறுகிறது.

இந்த இதய நோய்கள் ஆபத்து ஒருவரின் உடல்நலன், வாழ்வியல் முறை மற்றும் முந்தைய மருத்துவ தகவல்களின் அடிப்படையிலேயே, ஆய்வில் பங்கேற்ற மற்றவர்களைவிட மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற இதயம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது.

பிற காரணங்களால் இறப்பதற்கும் இந்த உணவுமுறைக்குமான தொடர்பு வலுவானதாக இல்லை. நிலையற்றதாக உள்ளது. ஆனால், அதிக பரிசோதனைகளுக்கு பின்னரும் வயது, பாலினம், வாழ்வியல் முறையைக் கடந்தும் இதய நோய்களுக்கான ஆபத்து நீடிக்கிறது.

மற்ற வார்த்தைகளில் சொல்வதானால், இத்தகைய நேர கட்டுப்பாட்டு முறைக்கும் மற்ற காரணங்களால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் இடையேயான தொடர்பு வலுவற்றதாகவும் நிலையற்றதாகவும் இருப்பதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இதயநோய்களால் இறப்பதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது.

இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்

பட மூலாதாரம், Getty Images

இந்த ஆய்வு இறப்புக்கான காரணம் மற்றும் அதன் விளைவுக்கும் இடையேயான தொடர்பை நிரூபிக்கவில்லை. ஆனால், விரத முறையை கடைபிடிப்பது என்பது சிறந்த உடல்நலனுக்கான ஆபத்துகள் இல்லாத வழிமுறை என்ற கருத்துக்கு இந்த ஆய்வு முடிவுகள் சவால் விடுக்கின்றன.

ஆய்வாளர்கள் இதற்கென அமெரிக்காவை சேர்ந்த வயதுவந்தவர்கள் மத்தியில் எட்டு ஆண்டுகளாக ஆய்வு செய்துள்ளனர். அவர்களின் உணவுமுறையை புரிந்துகொள்ள இரண்டு வாரங்களில் ஏதேனும் இரு நாட்களுக்கு அவர்கள் உண்ட, அருந்திய எல்லாவற்றையும் நினைவுபடுத்தும்படி அறிவுறுத்தினர். இதன்மூலம், ஒருவரின் சராசரி உணவு நேரம் என்ன என்பதை கணக்கிட்டு, அதை அவர்களின் நீண்ட கால வழக்கமாக எடுத்துக்கொள்கின்றனர்.

எட்டு மணிநேரத்துக்குள் உணவுகளை உண்பவர்களுக்கு 12-14 மணிநேரத்துக்கு தங்கள் உணவுகளை பிரித்து உண்பவர்களைவிட இதய நோய்களால் இறக்கும் ஆபத்து அதிகம் இருப்பதாக, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதயநோய் ஆபத்து ஏன்?

பலவித சமூக பொருளாதார குழுக்களிடையே இந்த இதயநோய் ஆபத்து நிலையானதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர், மேலும், புகைபிடிப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் அல்லது ஏற்கெனவே இதய நோய் உள்ளவர்களிடையே இந்த ஆபத்து அதிகமாக உள்ளது, எனவே அவர்கள் குறுகிய நேர இடைவெளியில் உண்பதை நீண்ட காலத்துக்குக் கடைபிடிப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.

உணவுமுறையின் தரம், உணவுகள் மற்றும் எவ்வளவு தின்பண்டங்கள் உண்கிறோம், மற்ற வாழ்வியல் காரணங்களை மாற்றியும் இந்த தொடர்பு இருப்பதாக, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதயநோய்களால் இறப்பு அதிகரிப்பது மற்றும் ஒட்டுமொத்த இறப்புகள் அதிகரிக்காததை எப்படி புரிந்துகொள்வது என ஆய்வாளர்களிடம் எழுப்பினோம், இது உயிரியல் ரீதியிலானதா அல்லது இந்த தரவுகளில் பக்கச்சார்பு ஏதேனும் உள்ளதா என கேட்டோம்.

உணவுமுறை தான் நீரிழிவு மற்றும் இதயநோய் சம்பந்தமான நோய்களுக்கு முக்கியமான காரணியாக உள்ளது. எனவே, இதயநோய்களால் இறப்பு அதிகரிப்பதுடன் உள்ள தொடர்பு எதிர்பாராதது அல்ல என, திறன் வாய்ந்தவர்களால் மதிப்பீடு செய்யப்பட்ட (peer-reviewed) ஆய்வின் ஆய்வாசிரியர் விக்டர் வென்ஸ் ஸோங் கூறுகிறார். இந்த ஆய்வு, டயாபட்டீஸ் & மெட்டபாலிக் சிண்ட்ரோம்: க்ளீனிக்கல் ரிசர்ச் அண்ட் ரிவ்யூஸ் எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

"எட்டு மணிநேரத்துக்கும் குறைவான நேரத்தில் உண்பது இதய நோயால் ஏற்படும் இறப்புகள் அதிகரிப்பதுடன் தொடர்புடையது என்பதுதான் இதில், எதிர்பாராத முடிவாக உள்ளது," என கூறுகிறார் பேராசிரியர் ஸோங். இவர், சீனாவில் உள்ள ஷாங்காய் ஜியாவ் டோங் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியில் தொற்றுநோயியல் நிபுணராக உள்ளார்.

இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

படக்குறிப்பு, இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் இந்த தசாப்தத்தின் டிரெண்டிங் உணவுமுறையாக உள்ளது

ஓரிரு மாதங்கள் முதல் ஓராண்டு வரையிலான குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள், இத்தகைய விரத உணவுமுறைகள் இதயம் மற்றும் வளர்சிதை மாற்ற நலனை மேம்படுத்துகிறது என்ற நம்பிக்கைகளுக்கு சவால் விடுக்கிறது.

பலன்களும் குறைகளும்

அதே இதழில் முன்னணி உட்சுரப்பியல் நிபுணர் அனூப் மிஸ்ரா எழுதிய தலையங்கத்தில் இந்த உணவுமுறை தரும் நம்பிக்கைகள் மற்றும் ஆபத்துகளை சீர்துக்கி பார்க்கிறார்.

பல்வேறு சோதனைகள் மற்றும் ஆய்வுகள் இந்த உணவுமுறை உடல் எடை குறைதல், இன்சுலின் ஹார்மோனுக்கு உடல் எதிர்வினையாற்றும் விதம், ரத்த அழுத்தம் குறைதல் மற்றும் அழற்சிக்கு எதிரான பலன்கள் குறித்த சில ஆதாரங்களுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பு (கொலஸ்ட்ரால்) மற்றும் ட்ரைகிளிசரைடுகளை (lipid profiles) மேம்படுத்தும் என பரிந்துரைப்பதாக அவர் கூறுகிறார்.

மேலும், கலோரிகள் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல், கலாசார அல்லது மத ரீதியிலான விரத நடைமுறைகளுடன் எளிதாக பின்பற்றக்கூடிய இந்த உணவுமுறை ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதிலும் உதவலாம்.

"எனினும், ஊட்டச்சத்துக் குறைபாடு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பது, பசி அதிகரிப்பது, எரிச்சலூட்டும் தன்மை, தலைவலி மற்றும் நீண்ட காலத்துக்குப் பின் உணவுமுறையை கடைபிடிப்பது குறைந்துபோதல் போன்றவை அதன் குறைகளாக இருக்கின்றன," என பேராசிரியர் அனூப் மிஸ்ரா கூறுகிறார்.

"நீரிழிவு நோய் உள்ளவர்கள், சரியான கண்காணிப்பு இல்லாமல் விரதத்தைக் கடைபிடித்தால் ரத்த சர்க்கரை அளவு குறையும் ஆபத்து உள்ளது; மேலும் சாப்பிடக்கூடிய நேரத்தில் நொறுக்குத் தின்பண்டங்களை உண்பதையும் ஊக்குவிக்கிறது. அதிக வயதானவர்கள் அல்லது நாள்பட்ட நோய்களை உடையவர்கள், நீண்ட காலத்துக்கு இந்த உணவுமுறையை கடைபிடிக்கும்போது பலவீனத்தையோ அல்லது தசையிழப்பையோ ஏற்படுத்தும்."

இப்படி, இத்தகைய உணவு முறை ஆய்வுக்கு உட்படுவது இது முதன்முறையல்ல.

ஜாமா இண்டர்னல் மெடிசின் இதழில் 2020ல் பிரசுரமான மூன்று மாத கால ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு இந்த உணவுமுறையின் மூலம் சிறிதளவு எடையே குறைந்துள்ளது, அதில் அதிகமான அளவு தசையிழப்பின் மூலம் நிகழ்ந்திருக்கலாம்.

மற்றொரு ஆய்வில், இந்த உணவு முறையால் பலவீனம், பசி, நீரிழப்பு, தலைவலி மற்றும் கவனச்சிதறல் போன்றவை ஏற்படும் என குறிப்பிடுகிறது.

புதிய ஆய்வில், பேராசிரியர் அனூப் மிஸ்ரா கூறுகையில், மற்றொரு புதிய எச்சரிக்கையையும் சேர்க்கிறார், சில குழுக்களிடையே இதய நோய்கள் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறு அதிகரிப்பதாக அவர் கூறுகிறார்.

சமீபத்திய ஆய்வு முடிவுகளில் இருந்து அதன் விளைவுகளை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தான் அறிவுறுத்துவதாக பேராசிரியர் ஸோங் கூறுகிறார்.

இதய நோய் அல்லது நீரிழிவு நோய் உள்ளவர்கள் இத்தகைய எட்டு மணிநேரம் மட்டும் உணவு உண்ணுவது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் கூறுகிறார். தனிநபர்கள் தங்களின் ஆரோக்கியத்தின் அடிப்படையில் தங்களுக்கான உணவுமுறை குறித்த அறிவுரை பெற வேண்டிய தேவை குறித்து இந்த ஆய்வு முடிவுகள் குறிக்கின்றன.

"தற்போது உள்ள ஆதாரங்களின் அடிப்படையில், மக்கள் எந்த நேரத்தில் சாப்பிடுகின்றனர் என்பதைவிட, என்ன சாப்பிடுகின்றனர் என்பதில் கவனம் செலுத்துவதே முக்கியமானதாக தெரிகிறது. குறைந்தபட்சம், இதய நலனை மேம்படுத்துதல் அல்லது ஆயுட்காலத்தை நீட்டிக்கும் நோக்கத்துடன் நீண்ட காலத்துக்கு எட்டு மணிநேர உணவுமுறையை கடைபிடிப்பதை யோசிக்க வேண்டாம்."

இப்போதைக்கு, முக்கியமான செய்தி என்னவென்றால் விரதத்தை ஒட்டுமொத்தமாக தவிர்ப்பது அல்ல, அது தனிப்பட்ட ஒருவரின் ஆபத்துகளுடன் இணைப்பது தொடர்பானது. ஆபத்துகளுக்கான ஆதாரங்கள் தெளிவாகும் வரை, நேரத்தைவிட, என்ன உண்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவது நல்லது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp8z36n3mgvo

மருந்துகள் மீது உணவு ஏற்படுத்தும் விளைவுகள்

1 week 3 days ago

மாதுளைச் சாற்றுக்குப் பின் வயாகரா சாப்பிட்டவர் பட்ட பாடு: மருந்துகள் மீது உணவு ஏற்படுத்தும் விளைவுகள்

உணவு - மருந்து, உணவு, பானங்கள், மூலிகைகள், மனித உடல், ஆரோக்கியம்

பட மூலாதாரம், Serenity Strull/ BBC

கட்டுரை தகவல்

  • சோபியா குவாக்லியா

  • 5 செப்டெம்பர் 2025, 04:03 GMT

மருந்துகளின் செயல் முறையில் நாம் சாப்பிடும் உணவு சில நேரங்களில் தலையிடலாம். இதுகுறித்து விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விளைவை நேர்மறையாக பயன்படுத்தி மருந்துகளின் செயல்பாட்டை மேம்படுத்தும் இந்த ஆய்வுகள் நடக்கின்றன.

ஐந்து மணி நேரமாக நீடித்த ஆணுறுப்பு விரைப்புத் தன்மை, அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் பிரச்னையாக இருந்திருக்கும். அவரை சோதித்த மருத்துவர்கள் முதலில் குழப்பமடைந்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு வந்த 46 வயது ஆண் ஒருவருக்கு ஏற்பட்ட பிரச்னை மருத்துவ பணியாளர்களை திகைக்க வைத்தது.

அவர் தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளும் முன், விரைப்பு தன்மையை அதிகரிக்க (erectile dysfunction) பொதுவாக வயாகரா என்று அழைக்கப்படும் சில்டெனஃபில் என்ற மருந்தை பரிந்துரைக்கப்பட்ட அளவுக்குள் உட்கொண்டார்.

விசாரணையில், அந்த நபர் முன்னதாக அதிகளவு மாதுளை பழச்சாறு குடித்திருந்தது தெரியவந்தது. மருத்துவர்கள் எதிர்விளைவை தடுக்கும் ஊசியை கொடுத்து, இனி மாதுளை ஜூஸை தவிர்க்குமாறு அறிவுறுத்தினர்.

அந்த நபர் குடித்த மாதுளை பழச்சாறு, வயாகரா மாத்திரையின் செயல்பாட்டை அதிகரித்து விட்டதாக மருத்துவர்கள் முடிவுக்கு வந்தனர்.

உணவு - மருந்து இடையிலான தொடர்புகள்

இந்தச் சம்பவம், நாம் சாப்பிடும் உணவுகள் எதிர்பாராத முறையில் மருந்துகளுடன் வினைபுரியக் கூடும் என்பதற்கான ஒர் எடுத்துக்காட்டு.

உணவு மருந்துகளுடன் சேர்ந்து ஏற்படுத்திய பல விசித்திரமான, சில நேரங்களில் கவலைக்கிடமான பக்கவிளைவுகளை மருத்துவ இதழ்கள் பதிவு செய்துள்ளன.

இப்போது உணவு, பானங்கள், மூலிகைகள் மனித உடலின் உள்ளே செலுத்தப்படும் மருந்துகளுடன் எவ்வாறு வினைபுரிகின்றன என்பதைக் அறியும் ஆராய்ச்சிகள் அதிகரித்து வருகின்றன.

உணவு - மருந்து, உணவு, பானங்கள், மூலிகைகள், மனித உடல், ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மருந்துடன் பம்பளிமாஸ் பழம் அல்லது பழச்சாறை எடுத்துக்கொள்ளும் போது, மருந்தின் செயல்திறன் பல நேரங்களில் அதிகரித்த சம்பவங்கள் நடந்துள்ளன.

உதாரணமாக, சாத்துக்குடி பழத்தை ஒத்திருக்கும் பம்பளிமாஸ்(Grapefruit) என்று அழைக்கப்படும் பழம் இது போன்ற விளைவுகளை பல தருணங்களில் ஏற்படுத்தி இருக்கிறது. மருந்துடன் இந்த பழம் அல்லது பழச்சாறை எடுத்துக்கொள்ளும் போது, மருந்தின் செயல்திறன் பல நேரங்களில் அதிகரித்த சம்பவங்கள் நடந்துள்ளன.

ஒரு சில நபர்களுக்கு எதிர்மறை பக்கவிளைவுகளை ஏற்படுத்தி, நஞ்சாகவும் இது மாறியிருக்கிறது. மறுபுறம் நார்ச்சத்து மிகுந்த உணவுகள், மருந்தின் செயல்பாட்டையும் குறைத்துள்ளன.

மருந்துகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவை பல தசாப்தங்களுக்கு மேல் ஆராய்ச்சி மற்றும் சோதனைகளை கடந்து வருகின்றன. ஆயினும் சந்தையில் ஆயிரக்கணக்கான மருந்துகளும், அவற்றுடன் சேர்ந்து சேர்ந்து எதிர்வினையை ஏற்படுத்த வாய்ப்புள்ள கோடிக்கணக்கான உணவு கலவைகளும் உள்ளன.

பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சைக்கு பெரிய அச்சுறுத்தலாக இத்தகைய மருந்து - உணவு கலவைகள் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

பரிசோதனைகள் மற்றும் வரம்புகள்

நிபுணர்கள் இப்போது இந்த தொடர்புகளை முறையாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் சிலர் இந்த வினையினால் மருந்துகள் தனித்து செயல்படுவதை விடச் சிறப்பாக செயல்படுவதாக நம்பிக்கை வைத்துள்ளனர்.

"பெரும்பாலான மருந்துகள் உணவால் பாதிக்கப்படுவதில்லை," என்கிறார் கலிபோர்னியாவைச் சேர்ந்த மருந்தியல் பேராசிரியர் பேட்ரிக் சான். "சில குறிப்பிட்ட மருந்துகள் மட்டுமே உணவால் பாதிக்கப்படுகின்றன, அவற்றை நாம் கவனிக்க வேண்டும்."

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) மற்றும் ஐரோப்பிய மருந்து நிறுவனம் (EMA) ஆகிய இரண்டும் மருந்துகளில் உணவினால் ஏற்படும் தாக்கத்தை சோதிக்கின்றன. அதிக கொழுப்பு மற்றும் கலோரி கொண்ட உணவை எடுத்துக் கொண்ட நபர்களிடமும், எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் இருக்கும் நபர்களிடமும் இந்த சோதனைகள் எடுக்கப்பட்டுகின்றன. அதில் வெற்றியடையும் மருந்துகளை மட்டுமே இவை பரிந்துரைக்கின்றன.

ஆனால் அனைத்து விதமான உணவு கலவைகளுடன் மருந்துகளை சோதிப்பது சாத்தியமற்றது. மனித உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறை (மெட்டபாலிஸம்) சிக்கலானது எனக் கூறும் செர்பியாவின் நியூட்ரிஷன் மற்றும் மெட்டபாலிசம் ஆராய்ச்சி மையத்தில் (Nutrition and Metabolism Center of Research Excellence) பணிபுரியும் ஆராய்ச்சியாளர் ஜெலேனா மிலேஷெவிச், "இது ஒரு சிறிய தொழிற்சாலை மாதிரி. அதற்கு பல உள்ளீடுகளும், பல வெளியீடுகளும் உண்டு," என்று விவரிக்கிறார்.

உடலின் நடக்கும் வேதியியல் வினைகளின் பலனாக உணவும், மருந்தும் ஒன்றாக கலந்துவிட்டால், "அதனை பிரித்து காட்டுவது மிகவும் கடினம்," என்று கூறுகிறார் மிலேஷெவிச். வைட்டமின் டி மருந்துகளின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

உணவு நாம் எடுக்கும் மருந்துகளை இரண்டு விதமாக பாதிக்க முடியும்: அது மருந்தின் மூலப்பொருட்களுடன் தொடர்பு கொள்ளலாம் அல்லது நமது உடல் மருந்துக்கு எப்படி எதிர்வினையாற்றும் என்பதை மாற்றக்கூடும்.

பிரபலமான உதாரணங்கள்

உணவு - மருந்து, உணவு, பானங்கள், மூலிகைகள், மனித உடல், ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வயகரா மாத்திரை எடுத்த பிறகு மாதுளை ஜூஸை தவிர்ப்பது நல்லது.

1980களிலிருந்தே சில உணவு–மருந்து கலவைகள் குறித்து தெரியவந்துள்ளது.

அதில் மிகவும் அறியப்பட்ட எடுத்துக்காட்டு பம்பளிமாஸ் மற்றும் அதன் பழச்சாறு. இது கொழுப்பை குறைக்க பயன்படும் statin மருந்து, உயர் ரத்த அழுத்த மருந்தான nifedipine, felodipine ஆகியவற்றுடன் அதிகளவில் வினைபுரிகின்றன..

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு உடலில் பொருத்தப்பட்ட புதிய உறுப்புகளை நோய் எதிர்ப்பு அமைப்பு ஏற்க மறுக்கும் போது வழங்கப்படும் cyclosporine போன்ற மருந்தும் பம்பளிமாஸ் உடன் வினையாற்றுகிறது.

சில மலேரியா எதிர்ப்பு மருந்துகள் (artemether, praziquantel) மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை (saquinavir) உட்கொள்ளும் போதும் இந்த பழத்தினால் ரத்த ஓட்டத்தில் தாக்கம் ஏற்படுகிறது.

வயாகரா என்று பரவலாக அழைக்கப்படும் சில்டெனஃபில் மருந்துடன் சேரும் போது இந்த பழச்சாறு உடலில் நச்சுத்தன்மையை உருவாக்கிறது.

குருதிநெல்லி பழத்தினால் ஏற்படும் விளைவுகள்

அதேபோல் கிரான்பெரி என்று அழைக்கப்படும் குருதிநெல்லி பழச்சாறு, ரத்த உறைதலை சீராக்கும் warfarin உடன் சேரும் போது உடலில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.

தினமும் கிரான்பெரி ஜூஸ் குடித்தவர்கள் அல்லது கிரான்பெரி சாஸ் உடன் உணவை எடுத்துக் கொண்ட நபருக்கு warfarin மருந்து எடுத்துக் கொண்ட பிறகு ரத்த உறைதலைத் தடுக்கும் அதன் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால் மருத்துவ சோதனைகள், மதிப்பீடுகள் இந்த ஜூஸை எவ்வளவு குடித்தால் இத்தகை நேர்மறை விளைவுகள் உடலில் ஏற்படும் என்பதை விளக்கும் வகையில் முழுமையாக ஆய்வு ஏதுமில்லை. இதுகுறித்து அதிகமாக பகிரப்படும் ஓர் ஆய்வறிக்கையும், கிரான்பெரி ஜூஸ் தயாரிப்பாளரால் நிதியளிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது.

warfarin மருந்து உட்கொள்ளும் நூற்றுக்கணக்கானவர்களை வைத்து கிரான்பெரி ஜூஸ் தொடர்பான இத்தகைய ஆய்வுகள் முறையாக செய்யப்பட வேண்டும், என்கிறார் மெக்மாஸ்டர் பல்கலைக்கழக மருந்தியல் துறை இயக்குநரான ஆன்னே ஹால்ப்ரூக்.

2011-இல், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், warfarin மருந்து வழிகாட்டுதல்களில் இருந்து கிரான்பெரி எச்சரிக்கையை நீக்கியது. ஆனால் இங்கிலாந்தின் NHS, நோயாளிகள் warfarin எடுத்துக்கொள்ளும் போது கிரான்பெரி ஜூஸ் குடிக்க வேண்டாம் என்று இன்றும் எச்சரிக்கிறது.

உணவு - மருந்து, உணவு, பானங்கள், மூலிகைகள், மனித உடல், ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாம் சாப்பிடும் உணவுகள் எதிர்பாராத முறையில் மருந்துகளுடன் வினைபுரியக் கூடும்.

மூலிகை மருந்துகள்

2017-இல், டா கிராசா காம்போஸ் இன்னொரு விசித்திரமான சம்பவத்தை கண்டறிந்தார். மூட்டு வாதநோய்க்காக மருந்து எடுத்திருந்த நோயாளி, கைகளில் வலி மற்றும் ரத்த சோகை பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் ஆர்டிச்சோக் எனப்படும் மூலிகை செடியில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட திரவத்தை குடித்திருந்தார். அது மூட்டுவாத நோய்க்காக பயன்படும் colchicine என்ற மருந்துடன் வினையாற்றி அவரது கல்லீரிலில் நச்சுச் தன்மையை சேர்த்தது. அவரது ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான மருந்துடனும் அந்த உணவு வினையாற்றியது.

"இது மிகவும் மோசமாக இருந்தது. ஆரம்பத்தில் அவருக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை தேவைப்படும் என்று நினைத்தோம். ஆனால் அவர் தானாகவே முழுமையாக குணமடைந்தார்," என்கிறார் காம்போஸ்.

ஆர்டிச்சோக் போன்ற மூலிகை பானங்கள் பாரம்பரிய மருத்துவங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்கிறார் காம்போஸ்.

அதேபோல், மஞ்சள் மற்றும் chlorella algae மூலம் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து பானங்கள், புற்றுநோய் மருந்துகளுடன் தொடர்பு கொண்டு, கல்லீரலில் கடுமையான நச்சுத்தன்மையை ஏற்படுத்தியதாகக் காம்போஸ் ஆய்வு செய்துள்ளார்.

ரத்த உறைதலை தடுக்கும் மருந்து மற்றும் நீரிழிவு மருந்துகளின் விளைவுகளை அதிகரிக்க மஞ்சள் பரவலாக பயன்படுகிறது.

St John's Wort என்ற மலர் சாறு, மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு மருந்துகள் சில புற்றுநோய் மருந்துகளுடன் தொடர்பு கொள்கிறது.

பால், தயிரால் என்ன பாதிப்பு?

உணவு - மருந்து, உணவு, பானங்கள், மூலிகைகள், மனித உடல், ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

பால், தயிர், சீஸ் போன்றவை, சில ஆன்டிபயாட்டிக் மருந்துகள் (ciprofloxacin, norfloxacin) குடலால் உறிஞ்சப்படுவதை மாற்றுகின்றன,

இதை ஆராய்ச்சியாளர்கள் 'cheese effect' என்று அழைக்கிறார்கள். நார்ச்சத்து அதிகம் உள்ள முழு தானிய உணவுகளும் இதேபோல் செயல்படுகின்றன. பால் பொருட்களின் மூலக்கூறுகள், மருந்து மூலக்கூறுகளை குடலில் "அணைத்துக் கொள்வதால்" அவை ரத்தத்தில் நுழையாமல் தடுக்கின்றன என்று பேட்ரிக் சான் கூறுகிறார்.

"மருந்து உங்கள் ரத்தத்தில் கூட சேராது, ஏனெனில் குடலில் பால் பொருட்கள் மருந்துகளுடன் இணைவதால், அவை குடலில் சிக்கிக் கொள்கின்றன," என்கிறார் சான்.

இதற்கான தீர்வு எளிது எனக்கூறும் பேட்ரிக் சான், நோயாளிகள் மருந்து எடுத்துக்கொள்வதற்கு முன் அல்லது பின் இரண்டு முதல் நான்கு மணி நேரத்திற்குள் பால் சார்ந்த பொருட்களை தவிர்க்க வேண்டும்.

"பால், சீஸ் என அனைத்தையும் சாப்பிடலாம். ஆனால் மருந்துடன் ஒரே நேரத்தில் எடுக்க வேண்டாம்," என்று அவர் கூறுகிறார்.

சிகிச்சைக்கு எப்படி உதவுகின்றன?

இந்த தொடர்புகள் சற்று பயமுறுத்துவதாகத் தோன்றினாலும், எல்லாமே எதிர்மறையாக இல்லை.

சில ஆராய்ச்சியாளர்கள், உணவு–மருந்து தொடர்புகளை பயன்படுத்தி சிகிச்சையின் விளைவுகளை மேம்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள். உதாரணமாக, சில புற்றுநோய் மருத்துவர்கள், உணவு குறிப்பிட்ட மருந்துகளுடன் தொடர்பு கொண்டு சிகிச்சையை வலுப்படுத்துகின்றனவா என்று ஆராய்கிறார்கள்.

"மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இறைச்சி மற்றும் சமைக்காத காய்கறிகளை சாப்பிட்டு வந்தனர். அது உணவுக்குப் பின் குளுக்கோஸ் விரைவாக அதிகரிக்க வைக்காது," என்கிறார் ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல் உயிரியல் விஞ்ஞானி லூயிஸ் கான்ட்லி.

"அப்போது மரணத்திற்கு காரணமாக புற்றுநோய் அரிதான ஒன்றாகவே இருந்திருக்கும். கடந்த ஐம்பது ஆண்டுகளில் புற்றுநோய் அதிகரித்திருப்பது, விரைவாகக் கரையக்கூடிய கார்போஹைட்ரேட் உணவின் அதிகரிப்புடன் தொடர்புடையது," என அவர் கூறுகிறார்.

2018-இல் எலிகளுக்கு கீட்டோஜெனிக் டயட் (குறைந்த கார்போ, அதிக இறைச்சி மற்றும் காய்கறி) கொடுத்து நடத்திய கான்ட்லியின் பரிசோதனைகள், புற்றுநோய் மருந்துகள் டயட் எடுத்த எலிகளில் அதிக விளைவுடன் செயல்பட்டதை காட்டின.

இதன் அடிப்படையில், அவர் தொடங்கிய Faeth Therapeutics நிறுவனம், மனிதர்களிடையே சோதனை செய்கிறது. இதனை அவர் "மரபணுவை அடிப்படையாகக் கொண்ட புற்றுநோய் அறிவியலை மறுபரிசீலனை செய்வது" என்று அழைக்கிறார்.

நியூயார்க் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மையமும், கருப்பை புற்றுநோய் கொண்ட பெண்களிடம் இதேபோல் சோதனைகள் நடத்துகிறது.

ஆனால் உணவு–மருந்து இடையேயான தொடர்புகளின் எண்ணிக்கை மில்லியன்கணக்கில் உள்ள நிலையில் இதை ஆய்வு செய்வது சவாலானது.

அதனால், மிலேஷெவிச் கணினி உயிரியலாளர்களுடன் சேர்ந்து, அறிவியல் இதழ்களில் கிடைக்கும் உணவு–மருந்து தொடர்பான தரவுகளை ஒருங்கிணைத்து, ஒரு புதிய தரவுத்தளத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்.

"இது எளிதாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் அது அப்படியில்லை," என்கிறார் ஸ்பெயின் IMDEA Food Institute-இன் கணினி உயிரியலாளர் என்ரிக் காரிலோ டி சான்டா.

சில தரவுத்தளங்கள் மட்டுமே கிடைத்தன, ஆனால் அவை ஒத்துப்போகவில்லை. இறுதியில், கோடிக்கணக்கான உணவு–மருந்து தொடர்புகளை ஒருங்கிணைத்து, மருத்துவர்கள் பயன்படுத்தக்கூடிய புதிய தளத்தை உருவாக்கினர்.

இது இன்னும் சிக்கலானது, முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. ஆனால் எதிர்காலத்தில், மருத்துவர்கள் மருந்து சிகிச்சையுடன் பொருந்தும் உணவு திட்டத்தை பரிந்துரைக்கக்கூடும். அதுவரை, வயாகரா மாத்திரை எடுத்த பிறகு மாதுளை ஜூஸை தவிர்ப்பது நல்லது.

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுத் தகவல்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. உங்கள் தனிப்பட்ட மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் மருத்துவ ஆலோசனைகளுக்கான மாற்றாக இவற்றை கருதக்கூடாது. இந்தத் தளத்தின் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பயனர் மேற்கொள்ளும் எந்தவொரு சிகிச்சைக்கும் பொறுப்பேற்காது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வெளிப்புற இணையதளங்களின் உள்ளடக்கங்களுக்கும் பிபிசி பொறுப்பல்ல; அவற்றில் பரிந்துரைக்கப்பட்ட அல்லது குறிப்பிடப்பட்ட எந்தவொரு வணிகப் பொருள் அல்லது சேவையையும் பிபிசி ஆதரிக்கவில்லை. உங்கள் உடல்நலனைப் பற்றிய எவ்விதக் கவலையாயினும், எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gzlyzq1p3o

கண்கள் திடீரென இருட்டாகிறதா? மூளை பக்கவாதம் வரும் ஆபத்தை உணர்த்தும் 6 அறிகுறிகள்

1 week 5 days ago

மூளை பக்கவாதம், 6 அறிகுறிகள்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, எம்ஆர்ஐ பரிசோதனையை ஆய்வு செய்யும் ஒரு மருத்துவர் (சித்தரிப்புப் படம்)

கட்டுரை தகவல்

  • சந்தன் குமார் ஜஜ்வாரே

  • பிபிசி செய்தியாளர்

  • 3 செப்டெம்பர் 2025, 05:39 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

முழு உடலையும் கட்டுப்படுத்துவதால் மூளை, மனித உடலின் மிக முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது.

உடலின் ஒவ்வோர் உறுப்பில் இருந்தும் மூளைக்கு சமிக்ஞைகள் செல்கின்றன. பின்னர் மூளை தேவைக்கேற்ப செயல்பட அந்த உறுப்புக்குக் கட்டளையிடுகிறது.

ஆனால், உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும் போது, அதை மருத்துவர்கள் மூளை பக்கவாதம் என்று அழைக்கின்றனர்.

மூளை பக்கவாதம் உடலின் ஒரு பகுதியுடன் அல்லது பல பகுதிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

உடலின் ஏதேனும் ஓர் உறுப்பு அல்லது பகுதியில் இருந்து மூளைக்கு சமிக்ஞைகள் செல்லவில்லை என்றால், அந்தப் பகுதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு முடங்கிவிடும்.

ஒரு நபருக்கு மூளை பக்கவாதம் ஏற்படும் ஆபத்து இருந்தால், அதன் அறிகுறிகளை எவ்வாறு அடையாளம் காணலாம்? அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

மூளை பக்கவாதம், 6 அறிகுறிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மூளை பக்கவாத அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்

மூளை பக்கவாதத்தின் 6 அறிகுறிகள்

மூளை பக்கவாதம் திடீரென ஏற்படும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், ஓர் ஆரோக்கியமான நபர் எதிர்காலத்தில் மூளை பக்கவாதம் ஏற்படும் ஆபத்தில் இருக்கிறாரா இல்லையா என்பதைச் சில ஆரம்ப அறிகுறிகளில் இருந்து அறிய முடியும்.

பொதுவாக மருத்துவர்கள் இதை **பிஇஎஃப்ஏஎஸ்டி (BEFAST) என்று அழைக்கின்றனர்:

  • (B)பி – (பேலன்ஸ்) சமநிலை: ஆரோக்கியமாகத் தோன்றும் ஒரு நபரின் சமநிலை திடீரென பாதிக்கப்பட்டு, பின்னர் சிறிது நேரத்தில் சரியாகி விடுதல்.

  • (E)இ – கண்கள் (Eyes): திடீரென கண்களுக்கு முன்பாகத் திரை விழுந்ததைப் போல் இருட்டாகி, பின்னர் சாதாரணமாகத் தோன்றுதல்.

  • (F)எஃப் – முகம் (Face): பேசும்போது திடீரென ஒருவரின் முகம் கோணி, உடனடியாகச் சரியாகிவிடுதல்.

  • (A)ஏ – கைகள் (Arms): கை திடீரென கட்டுப்பாடற்று இருந்து, பின்னர் சரியாகிவிடுதல்.

  • (S)எஸ் – பேச்சு (Speech): திடீரென பேச்சு நின்று, சிறிது நேரம் பேச முடியாமல் இருத்தல்.

  • (T)டி – நேரம் (Time): இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டு, சிறிது நேரத்தில் சரியாகிவிட்டாலும், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

ஏனெனில், இந்த அறிகுறிகள் மூளைக்கு ரத்தம் செல்வதில் தடை இருப்பதைக் குறிக்கின்றன. இது எதிர்காலத்தில் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

"இத்தகைய அறிகுறிகளுக்குப் பின்னால் வேறு ஏதேனும் நோய்களும் இருக்கலாம். ஆனால், ஒரு நபர் முழுமையாக ஆரோக்கியமாக இருந்தால், இந்த அறிகுறிகள் எதிர்காலத்தில் மூளை பக்கவாதம் ஏற்படும் ஆபத்துள்ளதைக் குறிக்கின்றன. மேலும், இது உடனடியாகச் சரியாகவில்லை என்றால், அந்த நபருக்கு மூளை பக்கவாதம் ஏற்பட்டுவிட்டது என்று பொருள்," என டெல்லியின் பிஎல் கபூர் மேக்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் பிரதீக் கிஷோர் கூறுகிறார்.

மூளை பக்கவாதம், 6 அறிகுறிகள்

பட மூலாதாரம், Getty Images

மூளை பக்கவாத அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

ஒரு நபருக்கு சமநிலை பாதிப்பு, திடீரென பார்வை இழப்பு, பேசுவதில் சிரமம், கைகால்கள் செயல்படாமை அல்லது முகம் கோணுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டு, அவை உடனடியாகச் சரியாகவில்லை என்றால் அது மூளை பக்கவாதத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

இத்தகைய சூழலில், நேரத்தை வீணாக்காமல் உடனடியாக மருத்துவரிடம் செல்வது அவசியம்.

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) நரம்பியல் துறையின் டாக்டர் மஞ்சரி திரிபாதி, "மூளை பக்கவாதம் ஏற்பட்டால், முதல் நான்கரை மணி நேரத்திற்குள் சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டியது மிகவும் முக்கியம். இது தமனியில் அடைப்பு ஏற்படுவதாலோ அல்லது தமனி வெடிப்பதாலோ நிகழ்கிறது, இதனால் மூளைக்கு ரத்தம் செல்ல முடியாது" என்று கூறுகிறார்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, மூளை பக்கவாதம் ஏற்பட்டால் இந்த முதல் நான்கரை மணி நேரம் 'கோல்டன் பீரியட்' என்று அழைக்கப்படுகிறது.

இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், ஆறு முதல் எட்டு மணிநேரத்திற்குள் சிகிச்சை தொடங்கினாலும், நோயாளி மீண்டு வருவது சாத்தியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

"தமனியில் ரத்த உறைவு இருந்தால், ரத்த உறைவு கரைப்பான் ஊசி மூலம் அதைக் கரைக்க முயற்சி எடுக்கப்படுகிறது. சில நேரங்களில், தேவைப்பட்டால் மற்றும் சாத்தியமாக இருந்தால், த்ரோம்பெக்டமி (ஒரு வகை அறுவை சிகிச்சை) மூலம் உறைந்த ரத்தம் அகற்றப்படுகிறது," என மருத்துவர் மஞ்சரி திரிபாதி கூறுகிறார்.

மூளை பக்கவாதம், 6 அறிகுறிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கட்டுப்படுத்தப்படாத மற்றும் அதிக ரத்த அழுத்தம் மூளை பக்கவாத ஆபத்தை அதிகரிக்கிறது

"அறுவை சிகிச்சை மூலம் உறைந்த ரத்தத்தை அகற்ற முடியும். ஆனால் இதற்கு வரம்புகள் உள்ளன. பெரிய தமனியில் ரத்தம் உறைந்திருந்தால் இது சாத்தியம். மூளை பக்கவாதம் ஏற்பட்ட நிலையில், நோயாளியை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது முக்கியம்," என மெட்ரோ குழும மருத்துவமனைகளின் மூத்த ஆலோசகர் நரம்பியல் நிபுணர் டாக்டர் சோனியா லால் குப்தா கூறுகிறார்.

மூளை பக்கவாதம் ஏற்பட்ட நோயாளி மீட்கப்படுவது, அதாவது மீண்டும் ஆரோக்கியமடைவது சாத்தியம்தான். ஆனால் இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

சிறந்த சிகிச்சையை அளிக்க சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ போன்ற பரிசோதனைகள் மூலம் மூளை பக்கவாதத்தின் தன்மை மற்றும் தீவிரத்தன்மை கண்டுபிடிக்கப்படுகிறது.

பல நேரங்களில் மக்கள் மூளை பக்கவாத விவகாரத்தில் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால் நோயாளி முழுமையாகக் குணமடைவது கடினமாகிறது.

"மூளை பக்கவாதம் அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காப்பாற்றுவதில் முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியம். இந்தக் காலகட்டத்தில் பிசியோதெரபி மூலமும் பயனடையலாம்," என மருத்துவர் சோனியா லால் குப்தா கூறுகிறார்.

இத்தகைய நோயாளிகளுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகும் முன்னேற்றம் காணப்படுகிறது, ஆனால் அதன் வேகம் மிகவும் மெதுவாக இருக்கும்.

மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள்

மூளை பக்கவாதம் எந்த வயதினருக்கும் ஏற்படலாம் என்றாலும் சிலருக்கு இதற்கான ஆபத்து அதிகம்.

கட்டுப்படுத்தப்படாத மற்றும் தொடர்ந்து நீடிக்கும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால், புகைப் பிடித்தல், மது அருந்துதல், உடல் பருமன் ஆகியவை இதன் முக்கியக் காரணங்கள்.

சில நேரங்களில் இளைஞர்களுக்கு மரபணு காரணங்களால் ரத்தம் கெட்டியாகி, மூளை பக்கவாத ஆபத்து அதிகரிக்கிறது.

"இது பொதுவாக முதியவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது, ஆனால் மோசமான வாழ்க்கை முறை, ஜிம்மில் உடற்பயிற்சியின் போது ஏற்படும் காயங்கள் மற்றும் கழுத்தில் மசாஜ் செய்வதாலும் மக்கள் மூளை ரத்தக்கசிவுக்கு ஆளாகலாம்" என எய்ம்ஸ் மருத்துவர் மஞ்சரி திரிபாதி கூறுகிறார்.

குளிர்காலத்தில் மூளை பக்கவாத பாதிப்புகள் அதிகமாகக் காணப்படுகிறது.

குளிர்காலத்தில் மக்கள் பொதுவாக அதிக கொழுப்பு உணவுகளை உண்கின்றனர் என்பதால் இந்தியா போன்ற நாடுகளில் உணவு பழக்க வழக்கங்கள் இதற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது

இந்தப் பருவத்தில் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் முக்கியமாகிறது.

"பொதுவாக 60-65 வயதுடைய முதியவர்களுக்கு மூளை பக்கவாத ஆபத்து அதிகம். ஆனால் சமீப காலங்களில் எங்களிடம் வரும் 40-45% மூளை பக்கவாத நோயாளிகளின் வயது 50ஐ விட குறைவாக உள்ளது," என டெல்லி பிஎல் கபூர் மேக்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் பிரதீக் கிஷோர் கூறுகிறார்.

இதற்கு மோசமான வாழ்க்கை முறை மற்றும் மது அல்லது சிகரெட் புகைப்பது போன்ற பழக்கங்களைக் காரணமாகக் கருதுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckgdgllmprjo

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கும் தாய்க்கும் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? A-Z தகவல்கள்

3 weeks 3 days ago

தாய்ப்பால், தாய்ப்பால் வாரம்

பட மூலாதாரம், GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • அன்பு வாகினி

  • பிபிசி தமிழுக்காக

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

மனித வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம் கருத்தரிப்பிலிருந்து இரண்டு வயது வரையிலான முதல் 1000 நாட்கள். இந்த காலகட்டத்தில் குழந்தையின் உடல், மன, உணர்வுபூர்வமான வளர்ச்சி வேகமாக நிகழ்கிறது. இந்த நாட்களில் சரியான ஊட்டச்சத்து கிடைப்பது குழந்தையின் வாழ்நாள் ஆரோக்கியம், அறிவுத்திறன், உற்பத்தித்திறனை தீர்மானிக்கிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO), யுனிசெஃப், சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்கள் பலவும் இந்த காலகட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.

ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கருப்பொருள் 'தாய்ப்பால் கொடுப்பதை முன்னுரிமைப்படுத்துங்கள், நிலையான ஆதரவு அமைப்புகளை உருவாக்குங்கள்'. உலகளவில் 44% குழந்தைகளுக்கு மட்டுமே 6 மாதங்கள் தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது என்கிறது உலக சுகாதார மையம். இந்தியாவில் இது 64% ஆக உள்ளதாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (NFHS 5) கூறுகிறது. ஆண்டுதோறும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிர்கள், தாய்ப்பால் ஊட்டத்தால் மட்டுமே காப்பாற்றப்படுகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

முதல் 1000 நாட்களின் முக்கியத்துவம், தாய்ப்பாலின் பங்கு, ஊட்டச்சத்து தேவைகள், தாய்ப்பால் இல்லாத நிலையில் ஏற்படும் பாதிப்புகள், இந்தியாவில் தாய்ப்பால் ஊட்டுதலின் நிலை, சமூக-பொருளாதார தாக்கங்கள், தேவையான கொள்கை மாற்றங்கள் பற்றி விரிவாகக் காணலாம்.

முதல் 1000 நாட்கள் ஏன் முக்கியமானது?

1. உடல் - மூளை வளர்ச்சி

கர்ப்ப காலத்தில் குழந்தையின் மூளை, இதயம், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகள் உருவாகின்றன. பிறந்த பிறகு முதல் 2 வயது வரை, எலும்புகள், தசைகள், உள் உறுப்புகள் விரைவாக வளர்ச்சி அடைகின்றன. மூளையின் 80% இரண்டு வயதுக்குள் முழுமையாக வளர்ச்சி அடைகிறது. DHA (ஓமேகா-3), இரும்பு, அயோடின், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மூளை செல்களை வலுப்படுத்துகின்றன. ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தால், வளர்ச்சி குன்றிய நிலை (Stunting), ஐ.க்யு. (IQ) குறைவு, கற்றல் திறன் பாதிப்பு ஏற்படும்.

2. நோய் எதிர்ப்பு சக்தி

தாய்ப்பாலில் இம்யூனோகுளோபுலின் IgA, லாக்டோஃபெரின் போன்ற நோயெதிர்ப்புப் பொருட்கள் உள்ளன. இவை குழந்தையை வயிற்றுப்போக்கு, நிமோனியா, அலர்ஜி போன்ற பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது.

தாய்ப்பால், தாய்ப்பால் வாரம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலகத் தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது

3. எதிர்கால ஆரோக்கிய குறைபாடுகள்

முதல் 1000 நாட்களில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், பிற்காலத்தில் உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் போன்றவை எளிதாக வருவதற்கு சாத்தியம் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தாய்ப்பால் ஏன் குழந்தைக்குப் பொன்னான உணவு?

(1) தாய்ப்பாலின் ஊட்டச்சத்து மதிப்பு

தாய்ப்பாலில் புரதங்கள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள், நோய் எதிர்ப்புப் பொருட்கள், ஹார்மோன்கள் போன்றவை உள்ளன.

கொலோஸ்ட்ரம் (சீம்பால் அல்லது முதல் பால்) பிறந்த முதல் 2-3 நாட்களில் வெளியாகும் மஞ்சள் நிறமான பால். இதை இயற்கையான தடுப்பூசி என்று அழைக்கிறார்கள். IgA, லாக்டோஃபெரின், வைட்டமின் A நிறைந்தது. DHA (மூளை வளர்ச்சிக்கு), லாக்டோஸ் (ஆற்றல் தரும்), ஓலிகோசாக்ரைடுகள் (oligosaccharides) (குடல் நோய்க்கிருமிகளை ஒழிக்கும்) இதில் அதிகமாக உள்ளது.

(2) தாய்ப்பால் ஊட்டுதலின் நன்மைகள்

(i) குழந்தைக்கான நன்மைகள்

நோய்த்தடுப்பு:

வயிற்றுப்போக்கு, நிமோனியா, காது தொற்றுகள், திடீர் குழந்தை மரணம் போன்றவற்றைத் தடுக்க உதவுகிறது.

தாய்ப்பால், தாய்ப்பால் வாரம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, தாயுடன் உள்ள உடல் தொடர்பு, கண்காணிப்பு குழந்தையின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மூளை வளர்ச்சி:

DHA மற்றும் ARA கொழுப்பு அமிலங்கள் மூளை செல்களை வலுப்படுத்துகின்றன. தாய்ப்பால் குடித்த குழந்தைகளின் ஐ.க்யு. 5-7 புள்ளிகள் அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

உணர்ச்சிப் பிணைப்பு:

தாயுடன் உள்ள உடல் தொடர்பு, கண்காணிப்பு குழந்தையின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

(ii) தாய்க்கான நன்மைகள்

புற்றுநோய் குறைப்பு:

மார்பகப் புற்றுநோய் 28%, சூலகப் புற்றுநோய் (ovarian cancer) 21% குறைகிறது என்று ஆராய்ச்சி குறிப்புகள் தெரிவிக்கின்றன.

உடல் எடை குறைதல்:

தாய்ப்பால் கொடுப்பதால் 500 கலோரிகள் ஒரு நாளில் செலவிடப்படுவதால், தாயின் உடல் எடை கூடாமல் பாதுகாக்கப்படுகிறது.

மகப்பேறு மன அழுத்தம் குறைப்பு:

ஆக்சிடோசின் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் தாய்மார்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

தாய்ப்பால், தாய்ப்பால் வாரம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, தாய்மார்களுக்கான மகப்பேறு விடுப்பு ஒரு குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி, அறிவாற்றல் முன்னேற்றத்துக்கு முக்கியமானது

தாய்ப்பால் இல்லாமல் ஒரு குழந்தை வளர முடியுமா?

தாய்ப்பால் இல்லாமல் ஒரு குழந்தை வளர்வது நடைமுறையில் சாத்தியமே. ஆனால், உலக சுகாதார நிறுவனம் (WHO), யுனிசெஃப், பல சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களின் ஆய்வுகள் தாய்ப்பால் இல்லாத வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் (Victora et al., 2016; World Bank, 2020) ஏற்படுவதை தெளிவாக நிரூபிக்கின்றன. 2023இல் ஜர்னல் ஆஃப் பீடியாட்ரிக்ஸில் வெளியான ஒரு மெட்டா-அனாலிசிஸ் ஆய்வின்படி, தாய்ப்பால் பெறாத குழந்தைகளில் நிமோனியா, வயிற்றுப்போக்கு நோய்களின் விகிதம் 50% அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், தாய்ப்பாலில் உள்ள IgA, லாக்டோஃபெரின், லைசோசைம் போன்ற சிறப்பு புரதங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துவதே (Ballard & Morrow, 2013; Chowdhury et al., 2015).

மூளை வளர்ச்சியின் அடிப்படையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் 10 வருட ஆய்வு ஒன்று தாய்ப்பால் குடித்த குழந்தைகளின் மூளையில் சுமார் 20-30% அதிக நரம்பியல் இணைப்புகள் உள்ளதை கண்டறிந்துள்ளது (Isaacs et al., 2010. இந்த வித்தியாசத்துக்கு தாய்ப்பாலில் அதிக அளவில் காணப்படும் டோகோசா ஹெக்சானோயிக் அமிலம் (DHA) (Ballard & Morrow, 2013) முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது. 2022இல் நேச்சர் நியூரோசயின்ஸில் வெளியான ஆய்வு தாய்ப்பால் குடித்த குழந்தைகள் பள்ளியில் 12% சிறந்த செயல்திறன் கொண்டிருப்பதை நிரூபித்துள்ளது. நீண்ட கால ஆரோக்கியத் தாக்கங்களில், லான்செட் ஜர்னலின் 2021ஆம் ஆண்டு ஆய்வு தாய்ப்பால் இல்லாமல் வளர்ந்த குழந்தைகளின் பிற்காலத்தில் டைப்-2 நீரிழிவு வருவதற்கான சாத்தியம் 35% (Victora et al., 2016)அதிகமாக இருப்பதை கண்டறிந்தது.

தாய்ப்பாலின் சமூக - பொருளாதார முக்கியத்துவம் குறித்து உலக வங்கியின் 2020 அறிக்கை குறிப்பிடுகையில், தாய்ப்பால் கொடுக்கப்படும் குழந்தைகள் வளர்ந்த பின் சராசரியாக 20% அதிக வருமானம் ஈட்டுவதாக கணக்கிட்டுள்ளது. இந்த வித்தியாசத்துக்கு மேம்பட்ட அறிவுத் திறன், குறைந்த நோய் தாக்க நாட்கள் முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன (Victora et al., 2015; World Bank, 2020).

எப்போது தாய்ப்பால் கொடுக்கக் கூடாது?

தாய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானது எனினும், சில சூழ்நிலைகளில் தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது நல்லது. தாய்க்கு ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ், HTLV-1 புற்றுநோய்கள், நரம்பு மண்டல பிரச்னைகள் போன்ற நோய்கள் இருந்தால், அவற்றை குழந்தைக்கு பரப்பும் அபாயம் இருப்பதால் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது.

குழந்தை கேலக்டோசீமியா (Galactosemia) போன்ற மரபணுக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தால், பாலில் உள்ள சர்க்கரையை ஜீரணிக்க முடியாமல் போகும். மேலும், புற்றுநோய் சிகிச்சை (Chemotherapy), கதிரியக்க மருந்துகள் (Radioactive drugs) அல்லது சில தீவிர மருந்துகளைத் தாய் எடுத்துக்கொண்டால், அவை பாலில் கலந்து குழந்தையை பாதிக்கலாம்.

அதிகப்படியான மது அல்லது போதைப்பொருள் பயன்பாடு, சிகரெட் புகைப்பது போன்றவை பாலின் தரத்தை பாதிக்கின்றன. குழந்தைக்கு கடுமையான இரைப்பை குடல் நோய் (NEC) இருந்தாலும் தாய்ப்பால் தவிர்க்கப்படலாம். இத்தகைய சூழ்நிலைகளில், மருத்துவரின் ஆலோசனைப்படி மாற்று ஊட்டமுறைகளை பின்பற்றுவது நல்லது.

தாய்ப்பால், தாய்ப்பால் வாரம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, தாய்ப்பால் சேமிப்பை சரியாக புரிந்துகொண்டு பயன்படுத்தினால், தாய்மார்களின் வாழ்க்கை மிகவும் எளிதாகும்.

தாய்ப்பால் சேமிப்பு முறைகள் - முக்கியத்துவம்

தாய்ப்பால் சேமிப்பு என்பது ஒரு அறிவியல்பூர்வ முறை. இதை சரியாக புரிந்துகொண்டு பயன்படுத்தினால், தாய்மார்களின் வாழ்க்கை மிகவும் எளிதாகும். பணிபுரியும் தாய்மார்கள், படிப்பில் ஈடுபட்டுள்ள தாய்மார்கள் அல்லது வேறு காரணங்களால் குழந்தைக்கு நேரடியாகப் பாலூட்ட முடியாத நேரங்களில், இந்த முறை பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது.

தாய்ப்பாலை சரியான முறையில் சேமிப்பதன் மூலம், குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் நேரத்தில் குழந்தைக்கு பால் கொடுக்க முடியாவிட்டாலும், முன்பே பாலை எடுத்து பிரிட்ஜ் அல்லது பிரீஸரில் சேமித்து வைக்கலாம். இந்த முறை மூலம், தாய்மார்கள் தங்கள் வேலை, குழந்தை பராமரிப்பையும் சமநிலைப்படுத்த முடிகிறது. பால் சேமிக்கும்போது குளிர்சாதன பெட்டியில் (4°C) 4 நாட்கள் வரை அல்லது ஐஸ் பாக்கெட் உள்ள கூலர் பையில் பாதுகாப்பாக வைக்கலாம். நீண்ட காலத்துக்கு பிரீஸரில் (-18°C) 6 மாதங்கள்வரை சேமிக்கலாம்.

தாய்ப்பால் வணிகமயமாக்கல்

தாய்ப்பாலின் வணிகமயமாக்கல் என்பது சமீபத்தில் உலகளவில் வளர்ந்துவரும் ஒரு தீவிர பிரச்னை. தாய்ப்பால் எடுத்து சேமிப்பது ஒரு பயனுள்ள முறையாக இருந்தாலும், இதன் வணிகரீதியான பயன்பாடு பல சவால்களை உருவாக்கியுள்ளது. இணையதள சந்தை, தாய்ப்பால் வங்கிகள் மூலம் இந்த தாய்ப்பால் விற்பனை செய்யப்படுகிறது. இது தூய்மை, பாதுகாப்பு, நெறிமுறை சார்ந்த கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக, ஏழைத் தாய்மார்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக பாலை விற்கும்போது அவர்கள் சுரண்டப்படும் அபாயம் உள்ளது.

உலக சுகாதார நிறுவனப் பரிந்துரைப்படி மருத்துவமனை, பால் வங்கிகள் மூலம் முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகள், அவசர தேவை உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே தாய்ப்பால் பெறப்பட்டு வழங்கப்பட வேண்டும். இது ஒரு சமூகப் பொறுப்பாக கருதப்படுகிறது. இந்த வணிகமயமாக்கல் முயற்சிகள் தாய்ப்பாலின் தரம், பரிமாற்றத்தின் பாதுகாப்பு, தாய்மார்களின் உரிமைகள் குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதற்குக் கடுமையான சட்டரீதியான கட்டுப்பாடுகள், நெறிமுறை வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன.

மகப்பேறு விடுப்பு, குழந்தையின் வளர்ச்சியில் அதன் தாக்கம்

தாய்மார்களுக்கான மகப்பேறு விடுப்பு (Maternity Leave) ஒரு குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி, அறிவாற்றல் முன்னேற்றத்துக்கு முக்கியமானது. முறைசார்ந்த, முறைசாரா துறைகளில் இந்த விடுப்பின் மூலம் கிடைக்கும் தன்மை, அளவு குழந்தையின் வளர்ச்சி மீது நேரடியாக தாக்கம் செலுத்துகிறது.

இந்தியாவில், அரசு/தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தாய்மார்களுக்கு 26 வாரங்கள் (6 மாதங்கள்) ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு (Maternity Benefit Act 2017) வழங்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனப் பரிந்துரைப்படி, குழந்தைக்கு முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே தரப்பட வேண்டும். இந்த காலத்துக்கு விடுப்பு கிடைப்பது இதை உறுதி செய்கிறது.

முறைசாரா துறையில் (விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள்) பணிபுரியும் பெண்களுக்கு ஊதிய விடுப்பு கிடைப்பதில்லை. பெரும்பாலான ஏழைத் தாய்மார்கள் பிறந்த 2-3 மாதங்களுக்குள் வேலைக்குத் திரும்ப வேண்டியுள்ளது. இதனால் தாய்ப்பால் ஊட்டுதல் குறைகிறது. இது குழந்தையிடம் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு வழிவகுக்கிறது.

முறைசாரா வேலையில் ஈடுபட்டுள்ள தாய்மார்களின் குழந்தைகள் முதல் 1000 நாட்களில் சரியான ஊட்டச்சத்து- பாதுகாப்பைப் பெற, குழந்தைப் பராமரிப்பு மையங்கள் ஒரு அவசியத் தீர்வாகும். இது தாய்ப்பால் ஊட்டுதலை ஊக்குவிக்கும், குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைக்கும், தாய்மார்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கவும் உதவும். எனவே, இந்த மையங்களை அரசு கொள்கைகள், சமூக நலத் திட்டங்களின் மூலம் உறுதிப்படுத்துவது அவசியம்.

தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்க பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்:

·தாய்மார்களுக்கு கூடுதல் ஊதிய விடுமுறை (குறைந்தது 26 வாரங்கள்).

·பணியிடங்களில் பால் ஊட்டும் வசதிகள் (குழந்தை பராமரிப்பு அறை, பால் ஊட்டும் இடைவேளை).

·ASHA தொழிலாளர்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம்.

·ஃபார்முலா பால் விளம்பரங்களை கட்டுப்படுத்துதல்.

·பால் வங்கிகளை அதிகரித்தல்

தாயின் ஆரோக்கியம், சமூக ஆதரவு

தாய்ப்பால் ஊட்டுவதை பாதிக்கும் காரணிகள் பல உள்ளன. தாயின் ஊட்டச்சத்து நிலை, மன ஆரோக்கியம், குடும்ப ஆதரவு, பொருளாதார நிலை ஆகியவை முக்கியமானவை. ரத்தசோகை உள்ள தாய்மார்களுக்கு பால் குறைவாக இருக்கும். பிரசவத்துக்கு பிந்தைய மன அழுத்தம் தாய்ப்பால் ஊட்டுதலை பாதிக்கும். கணவர், குடும்பத்தினரின் ஆதரவு இருந்தால், தாய்ப்பால் ஊட்டுதல் எளிதாகிறது. ஏழைத் தாய்மார்கள் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால், அவர்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவது கடினமாக உள்ளது.

தாய்ப்பால் ஊட்டுதல் என்பது தனிப்பட்ட தேர்வு மட்டுமல்ல, அது பொது சுகாதாரத் தேவை. தாய்ப்பால் ஊட்டுதலை நாடு ஊக்குவிக்க தேசிய அளவில் கொள்கைகளை வலுப்படுத்த வேண்டும். சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும். சமூக கற்பிதங்களைக் களைய வேண்டும். முதல் 1000 நாட்களில் முதலீடு செய்வது ஆரோக்கியமான, புத்திசாலியான, உற்பத்தி திறன் மிக்க தலைமுறைக்கு வழிவகுக்கும். குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம், அறிவுத் திறனுக்கு தாய்ப்பால் முக்கியமானது. எனவே, ஒவ்வொரு தாயும் தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்கான சரியான வழிகளை அறிந்துகொள்ள வேண்டும். அரசு, சமூகம், குடும்பம் அனைவரும் இதில் பங்கு வகிக்க வேண்டும்.

- கட்டுரையாளர் உணவுத் தொழில்நுட்ப வல்லுநராக இருக்கிறார். இதில் பேசப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் அவரது சொந்தக் கருத்துகளே.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gmvdlr225o

தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டால், எவ்வாறு முதலுதவி செய்யவேண்டும்?

3 weeks 4 days ago

தொண்டையில் மாத்திரை சிக்கியதால் உயிரிழந்த 4 வயது சிறுவன் - கவனமாக இருப்பது எப்படி?

மாத்திரைகள், உடல்நலம், குழந்தைகள், மருத்துவம், தமிழ்நாடு

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • சிராஜ்

  • பிபிசி தமிழ்

  • 21 ஆகஸ்ட் 2025, 02:41 GMT

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், காய்ச்சலுக்கு பரிந்துரைக்கப்பட்ட மாத்திரையை விழுங்கிய நான்கு வயது சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி அருகே உள்ள பி.ஆர். பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் நான்கு வயது மகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) காலை, காய்ச்சல் காரணமாக திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மருத்துவர் சிறுவனுக்கு சில மாத்திரைகளை பரிந்துரைத்துள்ளார். அன்று இரவு அந்த மாத்திரைகளை மகனுக்கு வழங்கியதாக பெற்றோர் கூறுகின்றனர். அதை விழுங்கும்போது, மாத்திரை தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

ஆனால், மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிறு குழந்தைகளுக்கு மாத்திரைகள் கொடுக்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்? பெரியவர்களுக்கும் இதுபோல நடக்க வாய்ப்புள்ளதா?

குழந்தைகளுக்கு மாத்திரைகளை கொடுக்கலாமா?

மாத்திரைகள், உடல்நலம், குழந்தைகள், மருத்துவம், தமிழ்நாடு

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, 'குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படும் மாத்திரைகள் பெரும்பாலும் எளிதில் நீரில் கரையக்கூடியவையே'

"5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் அவர்கள் கைக்கு எளிதில் கிடைக்கக்கூடிய சிறிய பொருள்கள் மூச்சுத் திணறலை ஏற்படுத்தலாம். அவை தொண்டையில் சிக்கி காற்றுப்பாதையை அடைக்கும்போது, நுரையீரல் மற்றும் மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வதைத் தடுக்கலாம். மூளைக்கு 4 நிமிடங்களுக்கு மேல் ஆக்ஸிஜன் செல்லாமல் இருக்கும்போது, அது மூளை பாதிப்பு அல்லது மரணத்திற்கு கூட வழிவகுக்கும்." என 'அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்' தெரிவிக்கிறது.

ஆனால், "மாத்திரைகளை முழுங்குவது சிறு குழந்தைகளுக்கு மட்டுமல்ல, (சில) பெரியவர்களுக்கும் கூட எளிதானது அல்ல. மாத்திரைகளை முழுங்குவது, மூன்றில் ஒருவருக்கு வாந்தி, குமட்டல் உணர்வு அல்லது மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது." என ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி தெரிவிக்கிறது.

இதுகுறித்துப் பேசிய ஈரோட்டைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் அருண்குமார், "பொதுவாகவே 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாத்திரைகளை அப்படியே கொடுப்பதைத் தவிர்க்கலாம். தண்ணீரில் பொடித்துக் கொடுப்பது சிறந்தது. குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படும் மாத்திரைகள் பெரும்பாலும் எளிதில் நீரில் கரையக்கூடியவையே" என்கிறார்.

மாத்திரைகள், உடல்நலம், குழந்தைகள், மருத்துவம், தமிழ்நாடு

படக்குறிப்பு, சிறு குழந்தைகளுக்கு மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுவது வழக்கமானது தான் என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

பொதுவாக வாயில் சிறிதளவு தண்ணீரை வைத்துக்கொண்டு, பின்னர் மாத்திரையை வாயில்போட்டு விழுங்குவது சிறந்தது எனக் கூறும் அவர், "ஆனால், குழந்தைகளை அவ்வாறு செய்யவைப்பது சுலபமல்ல என்பதால், பொடித்துக்கொடுப்பது நல்லது." என்கிறார்.

சில மருந்துகள் மாத்திரை வடிவங்களில் மட்டுமே இருக்கும், சிரப் வடிவில் கூட கிடைக்காது என்பதால், சிறு குழந்தைகளுக்கு மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுவது வழக்கமானது தான் என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

"குழந்தைகளுக்கு அதைக் கொடுப்பது தொடர்பான அறிவுறுத்தல்களையும் மருத்துவர்கள் வழங்குவர். ஆனால் இறுதியாக, பெற்றோர் தான் குழந்தைகளுக்கு மாத்திரைகள் கொடுப்பதில் மிகக்கவனமாக இருக்கவேண்டும்." என்றும் அவர் கூறுகிறார்.

குழந்தைகளில் மூச்சுத் திணறல் தொடர்பான இறப்பு அபாயத்தைக் குறைக்க, மாத்திரைகளை நசுக்கி தண்ணீருடன் கொடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனமும் (WHO) பரிந்துரைக்கிறது.

பெரியவர்களும் கவனமாக இருக்க வேண்டுமா?

மாத்திரைகள், உடல்நலம், குழந்தைகள், மருத்துவம், தமிழ்நாடு

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, மாத்திரைகளை அப்படியே விழுங்கவேண்டுமென எந்தக் கட்டாயமும் இல்லை என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

'மாத்திரைகளை விழுங்குவது என்பது பெரியவர்களுக்கு குறிப்பாக 65 வயதிற்கு மேற்பட்டோருக்கு மிகவும் கடினமானது. வயது மூப்பின் காரணமாக அவர்கள் அதிக மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால், மாத்திரைகளை விழுங்குவது மூலம் மூச்சுத்திணறல் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம்' என்று ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் கட்டுரை தெரிவிக்கிறது.

குமட்டல், வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகளால், அவர்கள் ஒருகட்டத்தில் மாத்திரைகளை உட்கொள்வதையே தவிர்ப்பதாகவும், இதனால் அவர்களது உடல்நிலை மேலும் மோசமாக மாறுகிறது என்றும் அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.

மாத்திரையின் வடிவம், அளவு, அமைப்பு அல்லது சுவை கூட அதை விழுங்குவதில் சிரமங்களைத் தூண்டக்கூடும் என்றும், உதாரணத்திற்கு 19.5 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களால் எடுத்துக்கொள்ளப்படும் நீரிழிவு நோய்க்கான மிகவும் பொதுவான மருந்தான மெட்ஃபோர்மின் போன்றவை அளவில் பெரிதாக இருப்பதும் ஒரு முக்கியப் பிரச்னை என அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

"முதியோர்களுக்கு மாத்திரை கொடுக்கும்போதும் கவனமாக இருக்கவேண்டும். அவர்களுக்கும் நீரில் கரைத்துக் கொடுப்பது நல்லது. மாத்திரையை விழுங்கியே ஆக வேண்டும் என எந்தக் கட்டாயமும் இல்லை. கேப்சியூல் வடிவில் இருந்தாலும் பிரித்து, நீரில் கரைத்துக் கொடுக்கலாம்." என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்?

மாத்திரைகள், உடல்நலம், குழந்தைகள், மருத்துவம், தமிழ்நாடு

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, 1974இல் இந்த ஹெய்ம்லிச் மனேவர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

"குழந்தைகள், பெரியவர்கள் என தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டால், ஹெய்ம்லிச் மனேவர் என்ற முதலுதவி முறையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

பொதுவாக ஒருவருக்கு தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டால், உடனே முதுகில் தட்டுவது என்பது பலரும் செய்யக்கூடிய ஒன்று. ஆனால், அது பெரிதாக பலனளிக்கக்கூடிய ஒரு முறை அல்ல என்பது மட்டுமல்லாமல், தொண்டையில் சிக்கியுள்ள பொருள் மேலும் கீழே செல்லவும் வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த ஹெய்ம்லிச் மனேவர் (Heimlich maneuver) முறை பரிந்துரைக்கப்படுகிறது என ஒரு ஆய்வு கூறுகிறது.

குறிப்பாக, 1960களில் அமெரிக்காவில், உணவு, பொம்மைகள் மற்றும் பிற பொருட்களால் மூச்சுத்திணறல் ஏற்படுவது என்பது தற்செயலான மரணங்களுக்கு ஆறாவது முக்கிய காரணமாக இருந்தது. அதன் பிறகு, 1974இல் இந்த ஹெய்ம்லிச் மனேவர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், ஒருவயதுக்குட்பட்ட குழந்தைகள், மூச்சுத்திணறலால் சுயநினைவு இழந்தவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இது பரிந்துரைக்கப்படுவதில்லை.

மாத்திரைகள், உடல்நலம், குழந்தைகள், மருத்துவம், தமிழ்நாடு

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, மாத்திரையின் வடிவம், அளவு, அமைப்பு அல்லது சுவை கூட அதை விழுங்குவதில் சிரமங்களைத் தூண்டக்கூடும்.

மூச்சுத்திணறல் அல்லது தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கிக்கொண்டதற்கான அறிகுறிகள் தெரிந்தால், அதாவது தொண்டையில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு, பேச, இரும அல்லது மூச்சுவிட முடியாத நிலையில் ஒருவர் இருந்தால், உடனடியாக இந்த ஹெய்ம்லிச் மனேவர் முதலுதவியை செய்ய வேண்டும்.

"பாதிக்கப்பட்ட நபருக்குப் பின்னால் நின்றுகொண்டு, உங்கள் இரு கைகளை அவர்களின் இடுப்பைச் சுற்றி இறுக்கமாக கட்டிக்கொள்ளுங்கள். வயிற்றில் விரைவாகவும், வலுவாகவும் மேல்நோக்கி 5 அல்லது 6 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். இதை முயற்சி செய்தும் தொண்டையில் சிக்கியிருக்கும் பொருள் வெளியேறவில்லை என்றால், உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும்" என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

ஒருவயதிற்குட்பட்ட குழந்தை என்றால், தங்களது தொடையின் மீது வயிறு இருப்பது போல குழந்தையை படுக்க வைத்து முதுகில் தட்ட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

"பல பள்ளிக்கூடங்களில் இந்த முதலுதவி முறையைக் கற்றுக்கொடுக்கிறார்கள். அதை பொதுமக்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். அது ஒரு எளிய முறை தான்." என்கிறார் அருண்குமார்.

'மாத்திரைகளை கட்டாயப்படுத்திக் கொடுக்கவே கூடாது'

மாத்திரைகள், உடல்நலம், குழந்தைகள், மருத்துவம், தமிழ்நாடு

படக்குறிப்பு, மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து குழந்தையின் மூக்கைப் பொத்தியவாறு வாயில் ஊற்றுவது ஆபத்தானது என்கிறார் ரேவதி.

"பொடித்து கொடுக்கிறோமோ அல்லது உடைத்துக் கொடுக்கிறோமோ, ஆனால் ஒருபோதும் குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக மாத்திரைகளை கொடுக்கக் கூடாது. அதனால் குழந்தைகள் பீதியடைவார்கள், அது மூச்சுத்திணறலுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்" என்கிறார் மருத்துவர் ரேவதி. இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை நலப் பிரிவின் மூத்த ஆலோசகராக உள்ளார்.

குழந்தைகளை ஆசுவாசப்படுத்தி கொடுக்க வேண்டும், அதை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும் என அறிவுறுத்தும் அவர், "சிலர் மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து குழந்தையின் மூக்கைப் பொத்தியவாறு வாயில் ஊற்றுகிறார்கள். அது மிகவும் தவறு மற்றும் ஆபத்தானது." என்கிறார்.

சிறு குழந்தைகளின் மூச்சுக்குழாய் அமைப்பு மிகவும் குறுகலாக இருப்பதால் மாத்திரைகள் தொண்டையில் சிக்கும் வாய்ப்பு அதிகம் என அவர் கூறுகிறார்.

"6 வயதுக்குட்பட்ட குழந்தை என்றால் நிச்சயமாக தண்ணீரில் கரைத்துக் கொடுங்கள். 6 முதல் 10 வயது என்றால், உடைத்தோ அல்லது ஒரு ஸ்பூன் தயிருடன் கொடுக்கலாம் அல்லது மெல்லக்கூடிய மாத்திரைகளை (Chewable tablet) பரிந்துரைப்பது சிறந்தது. 10 வயதிற்கு மேல் மாத்திரைகளை அப்படியே விழுங்கச் சொல்லலாம், ஆனாலும் கவனம் தேவை" என்கிறார் மருத்துவர் ரேவதி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2x4z4e74vo

முடியிலிருந்து தயாரிக்கப்படும் பற்பசை : உங்கள் பற்களை பாதுகாக்க உதவுமா?

3 weeks 5 days ago

பல் சிகிச்சை, டூத் பேஸ்ட், முடி, மனித முடி, தலைமுடி

பட மூலாதாரம், KING’S COLLEGE LONDON

படக்குறிப்பு, இந்த தொழில்நுட்பம் இரண்டு ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும் என மருத்துவர் ஷெரிஃப் எல்ஷர்காவி நம்புகிறார்.

கட்டுரை தகவல்

  • ஹேரி லோவ்

  • பிபிசி நியூஸ்

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

உங்கள் முடியிலிருந்து தயாரிக்கப்படும் டூத்பேஸ்ட் (பற்பசை) பாதிக்கப்பட்ட உங்களின் பற்களை சரிசெய்து பாதுகாக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

முடி, தோல் மற்றும் கம்பளியில் காணப்படும் புரதமான கெரடினால் பல் எனாமலை சரி செய்து பல் சொத்தையாவதை முன்கூட்டியே தடுக்க முடியும் என லண்டன் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கெரடின் என்பது எச்சிலில் உள்ள தாதுக்களுடன் தொடர்பு கொள்ளும்போது இயற்கையான எனாமல் அமைப்பு மட்டும் செயல்பாட்டை ஒத்த பாதுகாப்பு பூச்சு ஒன்றை தயாரிக்கிறது என இவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

"கெரட்டின் என்பது தற்போதைய பல் சிகிச்சைகளுக்கு ஒரு நல்ல மாற்றை வழங்குகிறது" என்கிறார் கிங்ஸ் கல்லூரியின் முனைவர் ஆய்வாளரும் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியருமான சாரா காமியா.

பல் சிகிச்சை, டூத் பேஸ்ட், முடி, மனித முடி, தலைமுடி

பட மூலாதாரம், KING’S COLLEGE LONDON

படக்குறிப்பு, அமிலத்தன்மை கொண்ட உணவு மற்றும் பானங்களால் பற்கள் சொத்தை ஆகலாம்.

"இந்த தொழில்நுட்பம் உயிரியல் மற்றும் பல் மருத்துவத்துக்கு இடையேயான இடைவெளியை சுருக்கி இயற்கையான நடைமுறையை பிரதிபலிக்கும் சுழலுக்கு உகந்த மாற்றை வழங்குகிறது" என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "இது உயிரியல் கழிவு பொருட்களான முடி மற்றும் தோலிலிருந்து சூழலுக்கு உகந்த முறையில் நிலையாக பெறப்படுகிறது. அதோடு இவை பல் மறுசீரமைப்பில் பயன்படுத்தப்படும் நச்சுத்தன்மை கொண்ட பாரம்பரிய பிளாஸ்டிக் ரெசின்களுக்கான தேவையை தவிர்க்கிறது." என்றார்.

அட்வான்ஸ்ட் ஹெல்த்கேட் மெட்டீரியல்ஸில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் விஞ்ஞானிகள் கம்பளியிலிருந்து கெரடினை எடுத்துள்ளனர்.

பல் சிகிச்சை, டூத் பேஸ்ட், முடி, மனித முடி, தலைமுடி

படக்குறிப்பு, முடியிலிருந்து பெறப்படும் கெரடின் மூலம் பல் எனாமலை சரி செய்யும் டூத் பேஸ்டை உருவாக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்

கெரடினை பற்களில் தேய்கின்றபோது எச்சிலில் உள்ள தாதுக்களில் தொடர்பு ஏற்படுவதன் மூலம் இயற்கை எனாமலின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை பிரதிபலிக்கிற மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட, படிகம் வடிவிலான சாரம் போன்ற அமைப்பை உருவாக்குகிறது.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, காலப்போக்கில் இதன் மீது கால்சியம் மற்றும் பாஸ்பேட் ஐயன்கள் தொடர்ந்து படிந்து பற்களைச் சுற்றி எனாமல் பூச்சு போன்ற பாதுகாப்பு அமைப்பு உருவாவதற்கு வழிவகுக்கிறது.

அமிலத்தன்மை கொண்ட உணவுகள் மற்றும் பானங்கள், மோசமான வாய் சுகாதாரம் மற்றும் வயதாவது என அனைத்துமே எனாமல் அரித்து பற்சிதைவுக்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் பல் வலி ஏற்பட்டு ஒருவர் பல்லை இழக்க நேரிடுகிறது.

பல் சிகிச்சை, டூத் பேஸ்ட், முடி, மனித முடி, தலைமுடி

பட மூலாதாரம், KING'S COLLEGE LONDON

படக்குறிப்பு, இந்த ஆய்வு முனைவர் மாணவர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது

"எலும்பு மற்றும் முடி போல எனாமல் மறு உற்பத்தி செய்துகொள்ளாது. ஒருமுறை இழந்தால் அதன் பிறகு மீண்டும் பெற முடியாது" என்கிறார் மூத்த ஆசிரியரும் கிங்ஸ் கல்லூரியில் ப்ராஸ்தோடாண்டிக்ஸ் துறையின் ஆலோசகருமான ஷெரிஃப் எல்ஷர்காவி

"நாம் ஒரு சுவாரஸ்யமான யுகத்தில் நுழைகிறோம். இங்கு உயிரி தொழில்நுட்பம் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்லாது உடலின் சொந்த பொருட்களை பயன்படுத்தி உயிரியல் செயல்பாடுகளை மீட்டெடுக்கிறது"

"மேலும் வளர்ச்சி மற்றும் சரியான துறைசார் கூட்டணி மூலம் கூடிய விரையில் நாம் முடிவெட்டுவது போன்ற எளிய விஷயத்திலிருந்து வலுவான, ஆரோக்கியமான புன்னகைகளைப் பார்க்க முடியும்" எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0mlg893y18o

சிறுநீரில் நுரை வருகிறதா? சிறுநீரக பாதிப்பை உணர்த்தும் 5 அறிகுறிகள்

4 weeks ago

சிறுநீரகங்கள், மனித உடல், ரத்த அழுத்தம், நீரிழிவு, மருத்துவம்

பட மூலாதாரம், GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • தீபக் மண்டல்

  • பிபிசி செய்தியாளர்

  • 18 ஆகஸ்ட் 2025, 02:39 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சிறுநீரகங்கள் நம் உடலில் ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளைச் செய்கின்றன. அவை உடலில் இருந்து கழிவுப்பொருட்களை அகற்றுகின்றன. திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கின்றன.

அவை ரத்த அழுத்தத்தைக் கண்காணித்து, ரத்த சிவப்பணுக்களை உருவாக்கவும் உதவுகின்றன. ஆனால் மக்கள் பெரும்பாலும் சிறுநீரக செயலிழப்பின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளைப் புறக்கணிக்கிறார்கள்.

இந்த அறிகுறிகள் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால், சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கான சிகிச்சையையும் சீக்கிரமாகவே தொடங்கலாம்.

நாம் பெரும்பாலும் கவனம் செலுத்தாத அந்த ஐந்து அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். இவை சிறுநீரக நோய் அல்லது சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.

1. சிறுநீர் அடிக்கடி கழித்தல்

சிறுநீரகங்கள், மனித உடல், ரத்த அழுத்தம், நீரிழிவு, மருத்துவம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, சிறுநீர் அடிக்கடி கழிப்பது சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது சிறுநீரக செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம். இது பாலியூரியா என்று அழைக்கப்படுகிறது.

சிறுநீரகம் சேதமடைந்தால், தேவையானதை விட குறைவான சிறுநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும்பாலும், சிறுநீரில் நுரை வருவது இதன் அறிகுறியாகக் கூறப்படுகிறது.

"ஆனால் இது கட்டாயமில்லை, பிற நோய்களாலும் சிறுநீரில் நுரை வரலாம்" என்கிறார் சர் கங்காரம் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர், மருத்துவர் மொஹ்சின் வாலி.

2. உடலில் வீக்கம்

கண்கள் மற்றும் கால்களில் வீக்கம் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம். கணுக்காலில் வீக்கம் இருந்தால், அதைப் புறக்கணிக்கக் கூடாது. இது சிறுநீரக நோயைக் குறிக்கிறது.

மணிப்பால் மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவர் கரிமா அகர்வால், "கால்கள் வீங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கண்கள், முகம் மற்றும் பாதங்களில் வீக்கம் சிறுநீரக நோயைக் குறிக்கிறது" என்று கூறுகிறார்.

3. ரத்த அழுத்தம்

சிறுநீரகங்கள், மனித உடல், ரத்த அழுத்தம், நீரிழிவு, மருத்துவம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகங்களைப் பாதிக்கிறது.

நிபுணர்களின் கூற்றுப்படி, "ரத்த அழுத்தம் என்பது இருமுனைக் கத்தி போல. உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகங்களைப் பாதிக்கிறது."

சிறுநீரக செயலிழப்பு காரணமாக ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. எனவே, ரத்த அழுத்தம் குறித்து ஒருவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

"பல நேரங்களில் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படாமல், பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் அளவு அதிகரிக்கப்படுகிறது. இதுவும் சிறுநீரக நோயின் அறிகுறியாகும்" என்று மருத்துவர் கரிமா அகர்வால் கூறுகிறார்.

4. நீரிழிவு நோய்

நீரிழிவு நோயால் சிறுநீரகங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

சிறுநீரக நோயாளிகளில் 80 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் கரிமா அகர்வால் கூறுகிறார்.

நீரிழிவு நோயாளிகளில் 30 முதல் 40 சதவீதம் பேருக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக நோய் உருவாகத் தொடங்கினால், அவர்களின் ரத்த சர்க்கரை அளவும் குறைகிறது.

உடலில் பல வருடங்களாக சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் காரணமாக சிறுநீரக நோய் உருவாகத் தொடங்குகிறது.

5. சோர்வு, அரிப்பு மற்றும் குமட்டல்

சிறுநீரகங்கள், மனித உடல், ரத்த அழுத்தம், நீரிழிவு, மருத்துவம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, சிறுநீரக நோயால் உடலில் பாஸ்பரஸ் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் உடலில் அரிப்பு ஏற்படுகிறது.

சோர்வு, உடலில் அரிப்பு மற்றும் குமட்டல் ஆகியவை சிறுநீரக நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

நிபுணர்களின் கூற்றுப்படி, உடலில் பாஸ்பரஸ் இல்லாததால் அரிப்பு ஏற்படுகிறது. சிறுநீரக நோய் உடலில் பாஸ்பரஸ் குறைபாட்டை ஏற்படுத்துகிறது.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு குமட்டல் ஏற்படத் தொடங்குகிறது. அவர்களுக்கு சாப்பிடுவதில் விருப்பம் இருக்காது.

சிறுநீரக நோயைத் தடுப்பதில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிகவும் உதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வழக்கமான உடற்பயிற்சி, போதுமான அளவு தண்ணீர் குடித்தல், உப்பு மற்றும் சர்க்கரையை குறைவாகப் பயன்படுத்துதல் ஆகியவை சிறுநீரக நோயைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

சிறுநீரக நோய் வராமல் தடுக்க 7 வழிமுறைகளை மருத்துவர் மொஹ்சின் வாலி மற்றும் மருத்துவர் கரிமா அகர்வால் இருவரும் பிபிசியிடம் தெரிவித்தனர்.

1. போதுமான தண்ணீர் குடிக்கவும்

சிறுநீரகங்கள், மனித உடல், ரத்த அழுத்தம், நீரிழிவு, மருத்துவம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.

சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தில் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. போதுமான அளவு தண்ணீர் குடிக்கும்போது, சிறுநீரகங்கள் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் கூறுகளை வெளியேற்ற போதுமான சிறுநீரை உற்பத்தி செய்கின்றன.

மேலும், சிறுநீரக கற்கள் மற்றும் தொற்றுகள் ஏற்படும் அபாயம் குறைகிறது. நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்தால், உங்கள் சிறுநீர் தெளிவாகவோ அல்லது வெளிர் மஞ்சள் நிறமாகவோ இருக்கும்.

பொதுவாக ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர் கரிமா அகர்வால் கூறுகிறார்.

2. உப்பு குறைவாக எடுத்துக்கொள்ளுங்கள்

அதிகப்படியான உப்பு சிறுநீரகங்களுக்கு நல்லதல்ல, ஏனெனில் அது ரத்த அழுத்தத்தை அதிகரித்து சிறுநீரகங்களை சேதப்படுத்துகிறது.

ஊறுகாய், அப்பளம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்.

நூடுல்ஸ் போன்ற உணவுகளில் அதிக உப்பு உள்ளது. அவற்றைத் தவிர்க்கவும்.

3. பாறை உப்பைத் தவிர்க்கவும்

சிறுநீரகங்கள், மனித உடல், ரத்த அழுத்தம், நீரிழிவு, மருத்துவம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, பாறை உப்பு சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

இப்போதெல்லாம் பாறை உப்பை (Rock Salt) உட்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது. ஆனால் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் பாறை உப்பை உட்கொள்ளக்கூடாது.

"சாதாரண உப்பை விட பாறை உப்பு ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பொதுவாக நம்பப்படுகிறது. அதில் பொட்டாசியம் குறைவாகவும் சோடியம் அதிகமாகவும் உள்ளது." என்கிறார் மருத்துவர் மொஹ்சின் வாலி.

4. சர்க்கரையை குறைக்கவும்

சிறுநீரக நோய்களைத் தவிர்க்க விரும்பினால், இனிப்புகளைக் குறைவாகச் சாப்பிடுங்கள்.

சர்க்கரை சாப்பிடாமல் இருப்பது நல்லது. கேக், பிஸ்கட், பேஸ்ட்ரி மற்றும் கோலா போன்றவற்றில் பதப்படுத்தப்பட்ட சர்க்கரை உள்ளது.

சர்க்கரை உடல் பருமனை அதிகரித்து சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

5. எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள்

சிறுநீரகங்கள், மனித உடல், ரத்த அழுத்தம், நீரிழிவு, மருத்துவம்

பட மூலாதாரம், DISNEY VIA GETTY IMAGES

படக்குறிப்பு, சிறுநீரக நோயைத் தவிர்க்க விரும்பினால், உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் எடையைக் கட்டுப்படுத்துங்கள்.

பருமனான நபர்களுக்கு சிறுநீரக நோய் வருவதற்கான ஆபத்து அதிகம் இருப்பதால், அவர்கள் எடையைக் குறைக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

உங்கள் உடல் நிறை குறியீட்டெண் (BMI) குறைவாக இருக்க வேண்டும். அது 24க்கும் குறைவாக இருந்தால், அது மிகவும் நல்லது.

லேசான உடற்பயிற்சி செய்யுங்கள். இது மிகவும் முக்கியம். இது உடலின் வளர்சிதை மாற்றத்தை நன்றாக வைத்திருக்கும். இது நன்றாக இருந்தால், 50 வயதை எட்டும்போது, நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் குறையும்.

6. சமச்சீரான உணவை உண்ணுங்கள்

பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த உணவை உண்ணுங்கள். புரோபயாடிக் உணவுகள் ஆரோக்கியத்திற்கு நல்லது. அவற்றுக்கு முன்னுரிமை கொடுங்கள். வறுத்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

போதுமான அளவு தண்ணீர் உட்கொள்ளுதல்ல், சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவை சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

7. உங்கள் மருத்துவரிடம் கேட்காமல் மருந்து எடுத்துக்கொள்ளாதீர்கள்

சிறுநீரகங்கள், மனித உடல், ரத்த அழுத்தம், நீரிழிவு, மருத்துவம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்து எடுத்துக்கொள்ளாதீர்கள்.

"மக்கள் பலரும் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் மருந்தகங்களில் இருந்து மருந்துகளை வாங்கி உட்கொள்கிறார்கள். பலர் வலி நிவாரணிகளை தாங்களாகவே எடுத்துக்கொள்கிறார்கள்" என்று மருத்துவர் கரிமா அகர்வால் கூறுகிறார்.

"முதியோர்கள் பெரும்பாலும் உடல் வலி மற்றும் மூட்டுவலிக்கு (ஆர்த்ரிட்டீஸ்) வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்கிறார்கள். சில மருந்துகளில் கன உலோகக் கூறுகள் மற்றும் ஸ்டீராய்டுகள் இருக்கலாம். இது சிறுநீரகங்களை சேதப்படுத்தும்." என்று கூறுகிறார் கரிமா அகர்வால்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c776kr5v6v2o

மாம்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட உகந்த பழமா? ஆய்வில் தெரியவந்த அறிவியல் உண்மை

4 weeks 1 day ago

1,000க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் பயிரிடப்படுகின்றன.

பட மூலாதாரம், MANSI THAPLIYAL

படக்குறிப்பு, இந்தியாவில் 1,000க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் பயிரிடப்படுகின்றன.

கட்டுரை தகவல்

  • சௌதிக் பிஸ்வாஸ்

  • பிபிசி செய்திகள்

  • 17 ஆகஸ்ட் 2025, 03:35 GMT

    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவை உலுக்கும் கோடைகாலத்தில், மும்பையைச் சேர்ந்த முன்னணி நீரிழிவு நிபுணர் ராகுல் பாக்ஸியிடம் நோயாளிகள் அடிக்கடி கேட்கும் கேள்வி, "மாம்பழம் சாப்பிடலாமா?" என்பது தான்.

"மாம்பழம் அதன் இனிப்பு சுவையாலும், பலவித வகைகளாலும் இந்தியாவின் கோடைகாலத்தில் முக்கியமான பழமாக இருக்கிறது. மக்கள் ஏன் அதை விரும்பிச் சாப்பிட விரும்புகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடியும் ," என்கிறார் ராகுல் பாக்ஸி.

ஆனால், இந்த எளிய கேள்வி பல தவறான எண்ணங்களை உள்ளடக்கியது. சிலர் மாம்பழத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என நினைக்கிறார்கள். மறுபுறம், சிலர் "அதிகமாக மாம்பழம் சாப்பிட்டால் நீரிழிவு குணமாகிவிடும்" என்று நம்புகிறார்கள்.

ஆனால், இந்த இரண்டு எண்ணங்களுக்கு இடையிலும் வேறொரு உண்மை உள்ளது. அதேபோல் இந்தக் குழப்பமும் கோடைகாலத்துடன் முடிவதில்லை.

"மாம்பழப் பருவம் முடிந்த பிறகு, பல நோயாளிகள் மீண்டும் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அவர்களின் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். சில சமயங்களில், இதற்குக் காரணம் மாம்பழத்தை அதிகமாகச் சாப்பிட்டதுதான்," என்கிறார் மருத்துவர் ராகுல் பாக்ஸி.

இந்தத் தொடர்ச்சியான குழப்பம், நீரிழிவு நோயாளிகளை "பழங்களின் ராஜா" என்று அழைக்கப்படும் மாம்பழத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வைத்துள்ளது. ஆனால், புதிய ஆராய்ச்சிகள் மாம்பழம் தவறான பழமல்ல என்று கூறுகின்றன.

இந்தியாவில் நடந்த இரண்டு புதிய மருத்துவ ஆய்வுகள், பழைய உணவு நம்பிக்கைகளை மாற்றியுள்ளன. ரொட்டி போன்ற கார்போஹைட்ரேட்டுகளுக்குப் பதிலாக, குறைவாகவும் கட்டுப்பாட்டுடனும் மாம்பழம் சாப்பிடுவது, டைப்-2 நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவையும், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம் என்று கூறுகின்றன.

கணையம் இன்சுலினை குறைவாகவோ அல்லது உற்பத்தி செய்யாமலோ இருக்கும்போது டைப்-1 நீரிழிவு நோய் ஏற்படுகிறது, அதே நேரத்தில் டைப்-2 நீரிழிவு நோயில், உடல் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாமல் எதிர்க்கிறது.

சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு (IDF) கூற்றின்படி, உலகளவில் 90% க்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு டைப்- 2 நீரிழிவு நோய் உள்ளது. இது உலகில் நோய்களால் ஏற்படும் பாதிப்புகளில் எட்டாவது முக்கிய காரணமாக உள்ளது.

2050ஆம் ஆண்டுக்குள் இது இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு காரணங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அதிக உடல் எடை, வயது, இனம் மற்றும் குடும்பத்தில் நீரிழிவு வரலாறு ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.

உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுவதன்படி, இந்தியாவில் சுமார் 7.7 கோடி பேருக்கு டைப்-2 நீரிழிவு நோய் உள்ளது. கிட்டத்தட்ட 2.5 கோடி பேர் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளனர்.

மாம்பழத் திருவிழாக்கள்

பட மூலாதாரம், HINDUSTAN TIMES VIA GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய நகரங்களில் மாம்பழத் திருவிழாக்கள் தொடங்கப்பட்டு, அதன் கலாசார முக்கியத்துவத்தைக் கொண்டாடுகின்றனர்.

ஆனால் இத்தகு சவால்களுக்கு மத்தியிலும், புதிய ஆய்வுகள் மாம்பழ பிரியர்களுக்கு ஆச்சரியமான நம்பிக்கையை அளிக்கின்றன.

கிளினிகல் நியூட்ரிஷன் என்ற ஐரோப்பிய இதழில் இதுதொடர்பான ஆய்வுக் கட்டுரை ஒன்று விரைவில் வெளியாகிறது. 95 பேரை உள்ளடக்கிய அந்த ஆய்வில் இந்தியாவின் பிரபலமான மாம்பழ வகைகளான சஃபேடா, டாஷேரி, மற்றும் லாங்ரா ஆகியவை வெள்ளை ரொட்டியை விட குறைந்த அல்லது அதனை ஒத்த ரத்த சர்க்கரை உயர்வை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டது.

(ரத்த சர்க்கரை உயர்வு என்பது, ஒரு உணவைச் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை எவ்வளவு வேகமாக, எந்த அளவில் உயர்கிறது என்பதைக் குறிக்கிறது.)

டைப்- 2 நீரிழிவு நோயாளிகளையும், நீரிழிவு இல்லாதவர்களையும் மூன்று நாட்கள் தொடர்ந்து கண்காணித்த போது, நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிட்ட பிறகு, உணவுக்குப் பிந்தைய ரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்கள் மிகவும் குறைவாக இருந்தன. இந்தக் குறைவான ஏற்ற இறக்கங்கள், நீண்ட காலத்திற்கு உடலுக்கு நன்மை தரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

"மாம்பழம் அனைவராலும் விரும்பப்படும் பழம், ஆனால் இது ரத்த சர்க்கரையையும் உடல் எடையையும் அதிகரிக்கும் என்று பலர் தவறாக நினைக்கிறார்கள்," என்கிறார் இரண்டு ஆய்வுகளிலும் பிரதானமாக அங்கம் வகித்த மருத்துவர் சுகந்தா கெஹர்.

"பரிந்துரைக்கப்பட்ட உணவு முறைகளுக்குள், மாம்பழம் சாப்பிடுவது ரத்த சர்க்கரைக்கு தீங்கு விளைவிப்பதில்லை, மாறாக நன்மையைத் தரலாம் என்று இந்த ஆய்வுகள் காட்டுகின்றன," என்று அவர் கூறுகிறார்.

டெல்லியில் உள்ள ஃபோர்டிஸ் சி-டிஓசி மருத்துவமனையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட எட்டு வார ஆய்வு, இந்தக் கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வு, நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் என்ற இதழில் வெளியாகியுள்ளது.

டைப்- 2 நீரிழிவு உள்ள 35 பேர் , தங்கள் காலை உணவில் ரொட்டிக்குப் பதிலாக 250 கிராம் மாம்பழம் சாப்பிட்டனர். இதன் விளைவாக, சாப்பிடுவதற்கு முன்பான அவர்களின் ரத்த சர்க்கரை, HbA1c (சராசரி இரத்த சர்க்கரை அளவைக் காட்டும் பரிசோதனை), இன்சுலின் எதிர்ப்பு, உடல் எடை, இடுப்பு அளவு, மற்றும் HDL (நல்ல) கொழுப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டனர். இவை நீரிழிவு கட்டுப்பாடு மற்றும் உடல் ஆரோக்கியத்தின் முக்கிய அறிகுறிகளாக உள்ளன.

"காலை உணவில் ரொட்டி போன்ற கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக சிறிய அளவு மாம்பழம் சாப்பிடுவதன் நன்மைகளை முதல் முறையாக இரண்டு விரிவான ஆய்வுகளில் நிரூபித்தோம். மாம்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற தவறான கருத்துகளுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்தோம்," என்கிறார் ஆய்வின் மூத்த ஆசிரியரும் தலைவருமான பேராசிரியர் அனூப் மிஸ்ரா.

"ஆனால், மிதமாக சாப்பிடுவதும், மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பதும் முக்கியம். மாறாக, எவ்வளவு வேண்டுமானாலும் மாம்பழம் சாப்பிடலாம் என்று அர்த்தம் அல்ல" என்று அவர் எச்சரிக்கிறார்.

“ஆனால், மிதமாக சாப்பிடுவதும், மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பதும் முக்கியம். மாறாக, எவ்வளவு வேண்டுமானாலும் மாம்பழம் சாப்பிடலாம் என்று அர்த்தம் அல்ல ” என்று அவர் எச்சரிக்கிறார்.

பட மூலாதாரம், BLOOMBERG VIA GETTY IMAGES

படக்குறிப்பு, இந்தியாவில் 77 மில்லியன் நபர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மாம்பழத்தை மிதமாக சாப்பிடுவது என்றால் என்ன என்று பேராசிரியர் அனூப் மிஸ்ராவிடம் கேட்டேன்.

"ஒரு நாளைக்கு உங்கள் கலோரி எல்லை 1,600 ஆக இருந்தால், மாம்பழத்தின் கலோரிகள் அதற்குள் அடங்க வேண்டும், கூடுதலாக இருக்கக் கூடாது. 250 கிராம் மாம்பழம், அதாவது ஒரு சிறிய பழம் சுமார் 180 கலோரிகளைக் கொண்டது. ஆய்வில் கூறியபடி, அதேபோன்ற முடிவுகளைப் பெற, ரொட்டி போன்ற கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக மாம்பழத்தை உண்ண வேண்டும்," என்று அவர் என்னிடம் விளக்கினார்.

மருத்துவர் பாக்ஸியும் தனது நோயாளிகளுக்கும் இதே போன்ற அறிவுரையைச் சொல்வதாகக் கூறுகிறார்.

"ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தால், என் நோயாளிகளை குறைந்த அளவு மாம்பழம் (அதாவது 15 கிராம் கார்போஹைட்ரேட் தரும் அளவு) , நாளொன்றுக்கு ஒரு முறையோ இரண்டு முறையோ பாதி பழத்தை சாப்பிட ஊக்குவிக்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.

அளவைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியம். மாம்பழத்தை இனிப்பாக அல்லாமல், உணவுக்கு இடையில் சாப்பிட வேண்டும். புரதம் அல்லது நார்ச்சத்து மிக்க உணவுகளுடன், அதனை சேர்த்து சாப்பிடுங்கள். மாம்பழத்தை ரொட்டி, சாறு அல்லது மில்க் ஷேக் போன்ற சர்க்கரை உணவுகளுடன் கலந்து சாப்பிடுவதைத் தவிருங்கள் என்று மருத்துவர் பாக்ஸி தனது நோயாளிகளுக்கு அறிவுறுத்துகிறார்.

மாம்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, இந்தியர்களுடைய வாழ்விலும் பெரிய இடத்தைப் பிடித்துள்ளது. இது கலாசார, சமூக, மற்றும் ராஜ தந்திர ரீதியில் முக்கியத்துவம் கொண்ட ஒரு பழம்.

"மாம்பழ ராஜ தந்திரம்" என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் பிரபலமான சொல். கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாம்பழப் பெட்டிகள் அரசியல் ஒப்பந்தங்களை எளிதாக்கலாம், கூட்டணிகளை வலுப்படுத்தலாம், அல்லது பதற்றமான பேச்சுவார்த்தைகளை சுமூகமாக்கலாம்.

2007 ஆம் ஆண்டு நடந்த ஒரு விழாவின் போது, முன்னாள் இந்தியத் தூதர் ரோனன் சென்

பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, 2007 ஆம் ஆண்டு நடந்த ஒரு விழாவின் போது, முன்னாள் இந்தியத் தூதர் ரோனன் சென், அப்போதைய அமெரிக்க வேளாண் செயலாளர் மைக் ஜோஹன்ஸுக்கு இந்திய மாம்பழங்களின் கூடையை வழங்குகிறார்.

இந்திய நகரங்களில் மாம்பழத் திருவிழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு , இந்தப் பழத்தின் கலாசார மற்றும் பொருளாதார முக்கியத்துவம் கொண்டாடப்படுகிறது. இந்தப் பழம் விரும்பப்படும் உணவாகவும், சக்தி வாய்ந்த சமூக மதிப்பைக் காட்டுவதாகவும் உள்ளது.

"பெரும்பாலான இந்தியர்களுக்கு மாம்பழத்தின் மீது தனிப்பட்ட விருப்பம் உள்ளது. தங்கள் ஊரின் மாம்பழம் தான் சிறந்தது என்று பலர் வாதிடுவார்கள்" என்கிறார் டெல்லியைச் சேர்ந்த வரலாற்றாசிரியரும் சமையல் நிபுணருமான புஷ்பேஷ் பந்த்.

"நல்ல மாம்பழங்கள் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல. அவை நகைகளைப் போன்ற அழகும் மதிப்பும் கொண்டவை. "சிறந்த மாம்பழங்கள், அதிக பணம் கொடுக்கத் தயாராக இருப்பவர்களிடம் சென்று சேர்கின்றன" என்று Mangifera indica: A Biography of the Mango என்ற புத்தகத்தில், இந்தப் பழத்தையும் அதன் ரசிகர்களையும் பற்றி விரிவாக எழுதியுள்ளார் சோபன் ஜோஷி.

இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் பயிரிடப்படுகின்றன. இந்தியாவின் மாம்பழங்கள் பிராந்தியத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன என்று ஜோஷி குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு வகைகளான லாங்ரா, டாஷேரி, சௌசா, மற்றும் ஹிம்சாகர் ஆகியவை மிகவும் இனிப்பாக உள்ளன, அதே நேரத்தில் தெற்கு வகைகள் மென்மையான இனிப்பு-புளிப்பு சுவையைத் தருகின்றன. மேற்கு இந்தியாவின் அல்போன்சா மாம்பழம், சர்க்கரை மற்றும் அமிலத்தின் தனித்துவமான சமநிலையால் தனித்துவமான சுவையைப் பெறுகிறது.

இந்தியர்களின் வாழ்க்கையில் மாம்பழம் மிகவும் முக்கியமானது. ஒரு ஆண்டின் தொடக்கமே பல இடங்களில் மாம்பழம் பூக்கும் காலத்துடன் ஆரம்பிக்கிறது. கவிஞர் காலிப் மாம்பழத்தை "மூடிய தேன் குவளை" என்று அழைத்தார். அதன் வசீகரத்தைக் கொண்டாடி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன.

மாம்பழம் ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தருகிறது, மறு பக்கம் அடையாளமாக விளங்குகிறது. எப்போதும் மக்களை மகிழ்விக்கும் பழம், தற்போது ஆச்சர்யமளிக்கும் விதமாக அறிவியலின் ஆதரவையும் பெற்றுள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c70x9x80pd2o

"கல்லீரலில் ஒரு குழந்தை இருக்கிறது" - அதிர்ச்சியூட்டும் பெண்ணின் கர்ப்பம்

1 month ago

கல்லீரலில் 3 மாத கரு வளர்ந்ததால் இந்த பெண்ணுக்கு என்ன நடந்தது?

சர்வேஷ், கல்லீரலில் 3 மாத கரு, இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்

பட மூலாதாரம், PRABHAT KUMAR/BBC

படக்குறிப்பு, உலகிலேயே மிகவும் அரிதான கர்ப்பம் இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்.

கட்டுரை தகவல்

  • பிரேர்னா

  • பிபிசி செய்தியாளர்

  • 12 ஆகஸ்ட் 2025, 09:30 GMT

    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

மேற்கு உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு பெண்ணின் கர்ப்பம் குறித்த செய்தி சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்தத் தகவல் மிகவும் வித்தியாசமானது, ஏனென்றால் அந்தப் பெண்ணின் கருப்பையில் இல்லாமல், கல்லீரலில் கரு வளர்ச்சியடைந்தது.

புலந்த்சாஹர் மாவட்டத்திலுள்ள தஸ்துரா கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான சர்வேஷ், தற்போது பல முக்கிய மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இது எப்படி நடந்தது? சர்வேஷ் இப்போது எப்படி இருக்கிறார்? சாதாரண மக்கள் மட்டுமல்ல, நிபுணர்களும் இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.

இந்த கேள்விகளுக்குப் பதில் தேடி, நானும் தஸ்துரா கிராமத்துக்குச் சென்றேன்.

நாங்கள் சர்வேஷின் வீட்டை அடைந்தபோது, அவர் ஒரு கட்டிலில் படுத்திருந்தார். அவரது வயிற்றில் அகலமான பெல்ட் ஒன்று கட்டப்பட்டிருந்தது, அதனால் அவர் திரும்புவதற்கு கூட சிரமப்பட்டார் .

வயிற்றின் மேல் வலது பக்கத்தில் இருபத்தி ஒரு தையல்கள் இருப்பதாக கூறிய அவர், கனமான எதையும் தூக்குவதைத் தவிர்க்கவும், மிகவும் லேசான உணவை உண்ணவும், நன்றாக ஓய்வு எடுக்கவும் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளதாக என்னிடம் தெரிவித்தார்.

கட்டிலில் அமர்வதில் இருந்து குளியலறைக்குச் சென்று திரும்ப, உடை மாற்றுவது வரை சர்வேஷ் தனது கணவர் பரம்வீரின் உதவியை நாட வேண்டியுள்ளது.

மூன்று மாதங்கள் எங்கள் குடும்பத்திற்கு ஒரு புதிராகவே இருந்தன என்று கூறுகிறார்கள் சர்வேஷும் அவரது கணவர் பரம்வீரும்.

சர்வேஷ், கல்லீரலில் 3 மாத கரு, இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்

பட மூலாதாரம், PRABHAT KUMAR/BBC

படக்குறிப்பு, விரைவில் அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவர் அறிவுறுத்தினார் என்று கூறுகிறார் சர்வேஷின் கணவர் பர்வமீர்.

"எனக்கு நிறைய வாந்தி வந்தது. நான் எப்போதும் சோர்வாகவும் வலியுடனும் இருந்தேன். எனக்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தது" என்று சர்வேஷ் பிபிசியிடம் கூறினார்.

அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கிய போது, மருத்துவர் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யச் சொன்னதாக அவர் கூறுகிறார். ஆனால் அல்ட்ராசவுண்ட் ரிப்போர்ட்டிலும் எதுவும் தெரியவில்லை, வயிற்று தொற்றுக்கு மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டார் சர்வேஷ்.

ஆனால் ஒரு மாதம் மருந்துகள் எடுத்துக்கொண்ட பிறகும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அவர் மீண்டும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுக்கச் சென்றுள்ளார்.

அப்போது, மிகவும் அரிதான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. மருத்துவர்களுக்குக் கூட, நம்புவதற்கு கடினமான செய்தியாக அது இருந்தது.

"உங்கள் கல்லீரலில் ஒரு குழந்தை இருக்கிறது"

சர்வேஷ், கல்லீரலில் 3 மாத கரு, இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்

பட மூலாதாரம், PRABHAT KUMAR/BBC

படக்குறிப்பு, கதிரியக்க நிபுணர் மருத்துவர் கே.கே. குப்தா, தனது இருபது வருட வாழ்க்கையில் இப்படி ஒன்றை பார்த்ததில்லை என்று கூறுகிறார்.

அல்ட்ராசவுண்ட் செய்த மருத்துவர் சானியா ஜெஹ்ரா, சர்வேஷின் கல்லீரலில் ஒரு குழந்தை இருப்பதாகக் கூறினார். இது சர்வேஷுக்கும் அவரது கணவர் பரம்வீருக்கும் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தகவலை உறுதிப்படுத்த, புலந்த்சாஹரிலிருந்து மீரட்டுக்குச் சென்று மீண்டும் அல்ட்ராசவுண்ட் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து கொண்டார் சர்வேஷ்.

அங்கு கிடைத்த அறிக்கையும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.

சர்வேஷின் மாதவிடாய் சுழற்சி, எப்போதும் போல சாதாரணமாக இருந்ததால், இந்தத் தகவலை நம்புவது அவருக்கு கடினமாக இருந்தது.

எம்ஆர்ஐ ஸ்கேன் செய்த கதிரியக்க நிபுணர் மருத்துவர் கே.கே. குப்தா, தனது 20 ஆண்டுகால வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு சம்பவத்தைப் பார்த்ததில்லை என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு, அவர் அந்த மருத்துவ அறிக்கையை பலமுறை படித்து, மாதவிடாய் சாதாரணமாக இருக்கிறதா இல்லையா என்பதை சர்வேஷிடம் அவர் திரும்பத் திரும்பக் கேட்டுள்ளார்.

"அந்தப் பெண்ணுக்கு கல்லீரலின் வலது புறம் 12 வார கரு இருந்தது, அதில் இதயத் துடிப்பும் தெளிவாகத் தெரிந்தது. இந்த நிலை 'இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்' என்று அழைக்கப்படுகிறது.

இது மிகவும் அரிதானது.

இதுபோன்ற சூழ்நிலையில், பெண்களுக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்படுகிறது, இதனை அவர்கள் சாதாரண மாதவிடாய் என்று கருதுகிறார்கள். இவ்வகையான கர்ப்பத்தைக் கண்டறிய நேரம் எடுக்கும்" என்று அவர் கூறுகிறார்.

"அறுவை சிகிச்சை தவிர வேறு வழியில்லை"

சர்வேஷ், கல்லீரலில் 3 மாத கரு, இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்

பட மூலாதாரம், PRABHAT KUMAR/BBC

படக்குறிப்பு, சர்வேஷின் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் குழுவில் மருத்துவர் பருல் தஹியாவும் இருந்தார்.

கரு பெரிதாக இருந்தால், கல்லீரல் வெடிக்கும் அபாயம் இருப்பதாக அந்த தம்பதியரிடம் மருத்துவர் கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில், குழந்தையோ அல்லது தாயோ உயிர் பிழைக்க மாட்டார்கள். எனவே, அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை.

புலந்த்ஷாஹரில் உள்ள எந்த மருத்துவரும் சர்வேஷுக்கு மருத்துவம் அளிக்க தயாராக இல்லை என்று பரம்வீர் கூறுகிறார். அதன் பிறகு அவர் மீரட்டுக்குச் சென்றுள்ளார், ஆனால் அங்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

இது ஒரு கடினமான நிகழ்வு என்றும், தாய் மற்றும் குழந்தையின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர். அதேபோல் அனைவரும் அவரை டெல்லிக்குச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

"நாங்கள் ஏழைகள், டெல்லிக்குச் சென்று அங்குள்ள செலவுகளைச் சமாளிக்க எங்களுக்கு வசதி இல்லை. பல முறை யோசித்த பிறகு, இங்கேயே சிகிச்சை பெறுவது என்று முடிவு செய்தோம்" என்று சர்வேஷ் கூறினார்.

இறுதியாக, மீரட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு சர்வேஷுக்கு அறுவை சிகிச்சை செய்ய ஒப்புக்கொண்டது.

சர்வேஷ், கல்லீரலில் 3 மாத கரு, இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்

பட மூலாதாரம், PRABHAT KUMAR/BBC

படக்குறிப்பு, சர்வேஷின் கணவர் பரம்வீர் பிபிசி குழுவிடம் மருத்துவ அறிக்கைகளைக் காட்டுகிறார்.

"நோயாளி என்னிடம் வந்தபோது, மூன்று மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். அவர் அல்ட்ராசோனோ மற்றும் எம்ஆர்ஐ பரிசோதனை முடிவுகளை கொண்டு வந்திருந்தார். அதில் இது 'ஹெபடிக் எக்டோபிக்' கர்ப்பம். (அதாவது கல்லீரலில் கரு வளர்ந்துள்ள நிலை) என்பது தெளிவாக தெரிந்தது.

இதுகுறித்து மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சுனில் கன்வாலுடன் பேசினோம். ஏனெனில் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உங்களுக்கு ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் தேவை. அவரும் ஒப்புக்கொண்டார், அதன் பிறகு நோயாளி அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்" என மருத்துவக் குழுவில் இடம் பெற்றிருந்த மருத்துவர் பருல் தஹியா கூறினார்.

இந்த அறுவை சிகிச்சை ஒன்றரை மணி நேரம் நீடித்தது எனக் கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

அறுவை சிகிச்சையின் காணொளியையும் கருவின் படங்களையும் மருத்துவர் கே.கே. குப்தா பிபிசிக்குக் காட்டினார்.

'இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்' என்றால் என்ன?

பொதுவாக ஒரு பெண்ணின் கருப்பையில் இருந்து வெளியாகும் கருமுட்டை, விந்தணுவுடன் இணைந்தால், அப்பெண் கர்ப்பமாகிறார்.

இந்த கருவுற்ற முட்டை ஃபெலோபியன் குழாய் வழியாக கருப்பையை நோக்கி நகர்கிறது, பின்னர் கருப்பையிலேயே கரு வளர்கிறது.

சில சந்தர்ப்பங்களில், கருவுற்ற முட்டை கருப்பையை அடைவதற்குப் பதிலாக, ஃபெலோபியன் குழாயிலேயே இருக்கும் அல்லது வேறு சில உறுப்பின் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டிருக்கும் என்று பிஎச்யு மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் மருத்துவர் மம்தா கூறுகிறார்.

"உதாரணமாக, சர்வேஷ் விஷயத்தில் கரு கல்லீரலில் சிக்கிக் கொண்டது. கல்லீரலுக்கு நன்றாக ரத்த ஓட்டம் இருப்பதால், ஆரம்ப நாட்களில் கரு வளர 'வளமான இடமாக' அது செயல்படுகிறது. ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்தான சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது, அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை," என்றார் மம்தா.

இந்தியாவில் இதுவரை எத்தனை பேர் இந்தச் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்?

சர்வேஷ், கல்லீரலில் 3 மாத கரு, இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்

படக்குறிப்பு, இதனைப் புரிந்துகொள்ள, பாட்னா எய்ம்ஸில் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறைப் பேராசிரியர் மருத்துவர் மோனிகா அனந்திடம் பேசினோம்.

உலகம் முழுவதும், சராசரியாக 1% பேருக்கு மட்டுமே இதுபோன்ற 'உள்-கல்லீரல்' கர்ப்பம் ஏற்படுகிறது. இந்த வகை கர்ப்பத்தில், கரு கருப்பையில் இருக்காது என்கிறார் மருத்துவர் மோனிகா.

"ஒரு மதிப்பீட்டின்படி, 70 முதல் 80 லட்சம் கர்ப்பங்களில் ஒன்று 'உள் கல்லீரல்' கர்ப்பமாக இருக்கலாம்" எனத் தெரியவருகிறது, என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன்பு, உலகம் முழுவதும் 45 இன்ட்ராஹெபடிக் கர்ப்பங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 3 கர்ப்பங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை மருத்துவர் மோனிகா குறிப்பிட்டார்.

முதல் சம்பவம் 2012 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங்கே மருத்துவக் கல்லூரியில் பதிவாகியது.

பின்னர் 2022 ஆம் ஆண்டில், மூன்றாவது சம்பவம் கோவா மருத்துவக் கல்லூரியிலும் , 2023 ஆம் ஆண்டில் பாட்னா எய்ம்ஸிலும் கண்டறியப்பட்டது.

பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் பதிவான கல்லீரலில் கரு வளர்ந்த பெண்ணுக்கு மருத்துவர் மோனிகா ஆனந்த் மற்றும் அவரது குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

அவரது குழுவினர் மருந்தின் (மெத்தோட்ரெக்ஸேட்) உதவியுடன் பெண்ணுக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் ஒரு வருடம் முழுவதும் நோயாளியை தொடர்ந்து கண்காணித்தனர்.

பின்னர், மருத்துவர் மோனிகா அந்த அரிதான நிகழ்வை ஆவணப்படுத்தினார்.

இது இந்தியாவின் மூன்றாவது இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பமாக பப்மெட் (PubMed) இல் வெளியிடப்பட்டது . அமெரிக்காவின் முன்னணி மருத்துவ ஆராய்ச்சி தரவுத்தளம் தான் பப்மெட் .

மருத்துவர் பருல் தஹியா மற்றும் மருத்துவர் கே.கே. குப்தா ஆகியோர் தங்கள் குழுவும் சர்வேஷ் விஷயத்தை ஆவணப்படுத்தத் தொடங்கியுள்ளதாகக் கூறுகிறார்கள்.

விரைவில் அது முடிக்கப்பட்டு ஒரு நம்பிக்கைக்குரிய மருத்துவ இதழில் வெளியிட அனுப்பப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c87eyxwwv7lo

வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வதைத் தடுக்க 5 எளிய வழிகள்

1 month ago

பெல்லி ஃபேட்டை குறைக்க 5 எளிய வழிகள், உடல் பருமன்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, வயிற்றில் சேரும் அதிகப்படியான கொழுப்பு நீரிழிவு மற்றும் இதய நோய்களை ஏற்படுத்தும்.

கட்டுரை தகவல்

  • சுமீரன் ப்ரீத் கவுர்

  • பிபிசி செய்தியாளர்

  • 11 ஆகஸ்ட் 2025, 01:35 GMT

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

பலரும் தங்கள் வயிற்றுப் பகுதியை குறைக்க உடற்பயிற்சிக் கூடங்களை நாடுகின்றனர். ஆனால், சிலரோ அதற்கு பெரிதும் கவனம் செலுத்துவதில்லை.

வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு பெல்லி ஃபேட் டம்மி ஃபேட், பீர் ஃபேட் என்றும் அழைக்கப்படுகிறது. தங்களின் உருவம் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து கவனம் கொள்ளும் இளைஞர்கள் இதுகுறித்து கவலை கொள்கின்றனர்.

வயிற்றுப்பகுதியில் அதிகரிக்கும் கொழுப்பின் காரணமாக, தங்களுக்கு விருப்பத்துக்கேற்ற, சௌகரியமான உடைகளை அவர்களால் அணிய முடிவதில்லை.

உங்கள் விருப்பத்துக்கேற்ப ஆடைகளை அணிவதுடன் மட்டும் இந்த பிரச்னை முடிவதில்லை. வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பால் உங்கள் ஆரோக்கியத்துக்கு ஆபத்து ஏற்படும் என்பது நிரூபணமாகியுள்ளது.

வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிப்பது மற்றும் கொலஸ்ட்ரால் சம்பந்தமான பிரச்னைகள் உட்பட பல தீவிரமான உடல்நல பிரச்னைகள் ஏற்படும்.

இந்த நோய்கள் வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பால் ஏற்படுகின்றன.

மேலும் இதனால் டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்களுக்கான ஆபத்துகளும் அதிகரிக்கின்றன.

பெல்லி ஃபேட்டை குறைக்க 5 எளிய வழிகள், உடல் பருமன்

பட மூலாதாரம், GETTY IMAGES

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளியான ஆய்வு ஒன்று, சைடோகைன் (cytokine) எனப்படும் ஒருவகை புரதம் வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பால் அதிகமாக உற்பத்தியாகிறது. இதனால் உடலில் வீக்கம் (inflammation) உருவாகும்.

வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பால் ஆஞ்சியோடென்சின் (angiotensin) எனப்படும் புரதமும் உற்பத்தியாகிறது. இதனால், ரத்த நாளங்கள் சுருங்குதல், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படுகின்றன.

இதனால், டிமென்ஷியா (மறதி நோய்), ஆஸ்துமா மற்றும் சிலவகை புற்றுநோய்களுக்கான ஆபத்துகளும் அதிகரிக்கின்றன.

டெல்லியில் உள்ள ஃபோர்ட்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையின் மூத்த இதயவியல் மருத்துவர் ஷிவ் குமார் சௌத்ரி கூறுகையில், உடலின் மற்ற பாகங்களில் சேரும் கொழுப்பை விட, வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு மிகவும் ஆபத்தானது என்கிறார்.

மேலும் அவர், "வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பில் இருந்து செல்கள் உடையும் போதோ அல்லது சிதையும்போது, அதிலிருந்து பலவிதமான நச்சுக்கூறுகள் வெளியாகின்றன. இந்த கூறுகள், இதய ரத்த நாளங்களில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், இதய நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. உடலில் இன்சுலின் எதிர்ப்பையும் (insulin resistance) அதிகரிக்கிறது. இதன்காரணமாக, நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்தும் அதிகரிக்கிறது" என்று விளக்குகிறார்.

பெல்லி ஃபேட்டை குறைக்க 5 எளிய வழிகள், உடல் பருமன்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பால் உயர் ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.

நிபுணர்களின் கூற்றுப்படி, வயிற்றுப்பகுதியில் கொழுப்பு அதிகரிப்பதற்கு மரபியல் ரீதியான விஷயங்கள், ஹார்மோன் மாற்றங்கள், வயது, அதிக உடல் எடை மற்றும் மெனோபாஸ் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன.

சமநிலையற்ற வாழ்வியல் முறை, சரிவிகித உணவு முறையை கடைபிடிக்காதது போன்றவையும் இதற்கான காரணங்களாக உள்ளன.

சரிவிகித உணவு முறையை கடைபிடித்தல், தினசரி உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலம் வயிற்றுப்பகுதி கொழுப்பை குறைக்க முடியும் என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வயிற்றுப்பகுதி கொழுப்பை குறைக்க, சில விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம்.

பெல்லி ஃபேட்டை குறைக்க 5 எளிய வழிகள், உடல் பருமன்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேருவதைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி அவசியம்.

1. இரவு உணவுக்கும் தூங்கும் நேரத்துக்குமான வித்தியாசம்

தூங்குவதற்கு இரண்டு - மூன்று மணிநேரத்துக்கு முன்பாக எதையும் சாப்பிடக் கூடாது. நாள் முழுவதும் நீங்கள் சாப்பிடும் உணவின் கலோரிகளை, அன்றைய நாளில் நீங்கள் செய்யும் வேலைகளுக்கான ஆற்றலாக பயன்படுத்துகிறது.

ஆனால், இரவில் நீங்கள் உண்ணும் உணவு அவ்வாறு பயன்படுத்த முடியாது.

எனவே, அது கொழுப்பாக சேர்ந்து, உடல் எடை அதிகரிக்கும்.

2. சரிவிகித உணவை உண்ணுங்கள்

உணவில் நீங்கள் அதிகமான நார்ச்சத்து கொண்ட உணவுகளை எடுக்கும் போது, நீண்ட நேரத்துக்கு நீங்கள் பசியாக உணர மாட்டீர்கள்.

உணவில் நார்ச்சத்து இருந்தால், உணவு வயிற்றுப்பகுதியிலிருந்து குடலுக்கு நகரும் வேகம் குறையும்.

இதனால் நீண்ட நேரத்துக்கு வயிறு நிரம்பிய உணர்வுடனேயே நீங்கள் இருப்பீர்கள்.

பெல்லி ஃபேட்டை குறைக்க 5 எளிய வழிகள், உடல் பருமன்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, அதிக நார்ச்சத்து உணவுகளை உட்கொள்வதன் மூலம், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, குறைவாகவும் சாப்பிடுவீர்கள். இது உடல் பருமன் அபாயத்தைக் குறைக்கிறது.

உணவில் புரதச்சத்தை சேருங்கள். புரதமும் வயிற்றை நீண்ட நேரத்துக்கு நிரப்பும், இதனால் மீண்டும் மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை குறையும்.

பசியை தூண்டும் கரெலின் (ghrelin) ஹார்மோன்அளவை இது குறைத்து, மீண்டும் உண்ண வேண்டும் என்ற எண்ணத்தைக் குறைக்கும்.

புரதம் உடலின் தசைகளுக்கு வலுவூட்டுகிறது. வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, கலோரிகளை எரிக்கும் திறனையும் அதிகரிக்கிறது.

புரதம் நிறைந்த முட்டை, பருப்பு, பால், சீஸ், தயிர், மீன், கோழி இறைச்சி மற்றும் சோயா போன்றவற்றை தினசரி உங்கள் உணவில் சேர்க்க வேண்டும்.

3. மிகவும் பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை தவிருங்கள்

கொஞ்சம் கூட நார்ச்சத்து இல்லாத மைதா பிரெட், சிப்ஸ் மற்றும் கிராக்கர்ஸ் போன்றவை எளிதிலேயே செரிமானமாகிவிடும், இதனால் உங்களின் ரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கும்.

இவ்வளவு வேகமாக ரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும்போது, பசி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உடல் எடை, டைப் 2 நீரிழிவு நோய் போன்றவற்றுக்கான ஆபத்தும் அதிகமாகிறது.

பெல்லி ஃபேட்டை குறைக்க 5 எளிய வழிகள், உடல் பருமன்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, கேக்குகள், குக்கீகள் (பிஸ்கெட்) மற்றும் பேஸ்ட்ரிகள் போன்ற மிகவும் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை தவிர்க்குமாறு நிபுணர்கள் கூறுகிறார்கள். இவை வயிற்றுப்பகுதியில் கொழுப்பு சேருவதை மிக விரைவாக அதிகரிக்கும்.

எனவே, இவற்றுக்கு பதிலாக முழுமையான தானிய பிரெட், வறுத்த தின்பண்டங்கள், பழங்கள் மற்றும் நட்ஸ் போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம்.

சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகமான உணவுகளை தவிர்க்க வேண்டும். மது அருந்துதல், புகைப்பிடித்தலை குறைக்க வேண்டும்.

4. போதுமான உறக்கம்

போதுமான தூக்கம் இல்லாதபோது, பசி ஹார்மோனில் விளைவுகளை ஏற்படுத்தி அதிகமாக சாப்பிட வேண்டும் என்று தோன்றும்.

லாஸ் ஏஞ்சலஸில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்களின் படி, வயிற்றுப்பகுதியில் உற்பத்தியாகும், பசி உணர்வை அதிகரிக்கும் க்ரெலின் என்கிற ஹார்மோன், போதிய தூக்கமின்மையால் அதிகரிக்கிறது.

மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்றும் அதை சரிசெய்ய வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மன அழுத்தம் ஏற்படும்போது ரத்தத்தில் மன அழுத்த ஹார்மோனான கார்ட்டிசால் (cortisol) எனும் ஹார்மோன் உற்பத்தியாகும்.

இதுதவிர, நாம் மன அழுத்தத்தில் இருக்கும் போது உணவில் அதிக கவனம் செலுத்தாமல், நம்மை அதிலிருந்து மடைமாற்றும் எல்லாவித உணவுகளையும் சாப்பிடும் அளவுக்கு சென்றுவிடுவோம்.

5. உடற்பயிற்சியின் அவசியம்

உடற்பயிற்சிகள் மற்றும் ஏதாவது பயிற்சிகளின் மூலம் ஆக்டிவாக இருப்பதன் மூலம் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இது, குறிப்பாக வயிற்றுப்பகுதி கொழுப்பை குறைக்க உதவுகிறது.

தினமும் வேகமான நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அல்லது யோகா போன்றவற்றை மேற்கொள்ளும்போது அவை கொழுப்பை குறைப்பதோடு மட்டும் அல்லாமல், வளர்சிதை மாற்றத்தையும் வேகப்படுத்துகிறது.

உடற்பயிற்சி செய்வது தசைகளுக்கு வலுவூட்டுகிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். வயிற்றுப்பகுதியில் சேரும் கொழுப்பை குறைப்பது நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கான ஆபத்துகளை குறைக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx277kp52rdo

வாயை திறந்தபடி தூங்குவது நோயின் அறிகுறியா? மருத்துவரை அணுகுவது எப்போது?

1 month ago

நன்றாக தூங்கத் தொடங்கிவிட்டால், நம்மால் பல விஷயங்களைப் பற்றி கவனிக்க முடியாது.

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, பலரும் தூங்கும்போது வாயைத் திறந்து கொண்டு தூங்கும் பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள்.

கட்டுரை தகவல்

  • சந்தன் குமார் ஜஜ்வாரே

  • பிபிசி செய்தியாளர்

  • 10 ஆகஸ்ட் 2025, 02:29 GMT

    புதுப்பிக்கப்பட்டது 10 ஆகஸ்ட் 2025, 05:47 GMT

ஒவ்வொருவரும் தூங்கும் போது தனித்தனியான பழக்கவழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள்.

சிலர் தடிமனான தலையணையை வைத்து தூங்குவார்கள். சிலர் மெல்லிய தலையணையில் தூங்க விரும்புவார்கள்.

வானிலை எப்படியிருந்தாலும், சிலரால் போர்வை இல்லாமல் தூங்க முடியாது. சிலருக்கு அப்படி தூங்க பிடிக்காது.

ஆனால் நன்றாக தூங்கத் தொடங்கிவிட்டால், நம்மால் பல விஷயங்களைக் கவனிக்க முடியாது.

அதில் ஒன்று தான் வாயைத் திறந்து கொண்டு தூங்குவது.

தூங்கும் போது உங்கள் வாய் திறந்தே இருக்கிறதா? யாராவது உங்களிடம், 'நீ தூங்கும்போது வாயைத் திறந்து வைத்திருப்பாய்' என்று சொன்னதுண்டா?

அப்படியானால், தூக்கத்தில் வாயைத் திறந்து வைத்திருப்பதற்கு காரணம் என்ன? அது எதைக் குறிக்கிறது? இது ஏதேனும் உடல்நல அபாயங்களையும் சுட்டிக்காட்டுகிறதா? என்பதைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

தூக்கத்தின் போது வாயைத் திறந்துகொண்டே தூங்குதல்

பல குழந்தைகள் தூங்கும்போது வாயைத் திறந்து வைத்திருப்பார்கள்.

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, பொதுவாக பல குழந்தைகள் தூங்கும்போது வாயைத் திறந்து வைத்திருப்பார்கள், இதற்குப் பின்னால் ஒரு சிறப்பு காரணம் இருக்கிறது (குறியீட்டு படம்)

பல நேரங்களில், கடினமான வேலைகளைச் செய்யும்போது, மக்களுக்கு அதிக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதற்காக, அவர்கள் மூக்கு மட்டுமல்லாமல் வாய் வழியாகவும் சுவாசிக்கிறார்கள்.

ஓடும்போது அல்லது கால்பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுபடும்போது, மக்கள் வாய் வழியாக மூச்சு வாங்குவதைக் காணலாம்.

ஆனால், பொதுவாக தூங்கும்போது, நம் கண்களைப் போலவே வாயும் மூடியிருக்கும்.

தூக்கத்தில், நாம் மூக்கு வழியாக சுவாசிக்கிறோம். நிம்மதியான நிலையில் இருப்பதால், வேகமாக சுவாசிக்க வேண்டிய தேவை இருப்பதில்லை.

ஆனால் தூங்கும்போது பலருடைய வாய் திறந்தே இருக்கும். அப்போது, அவர்கள் வாய் வழியாக சுவாசிக்கிறார்கள்.

இதற்கான காரணத்தை அறிய, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (AIIMS) நுரையீரல், தீவிர சிகிச்சை மற்றும் தூக்க மருத்துவத் துறையின் மருத்துவர் விஜய் ஹட்டாவிடம் பேசினோம்.

"வாயைத் திறந்து கொண்டே தூங்குவது மிகவும் பொதுவானது. பலரும் இப்படித்தான் தூங்குகிறார்கள். வாயைத் திறந்து கொண்டே தூங்குவது எந்த நோயின் அறிகுறியும் இல்லை" என்று விளக்கிய மருத்துவர் விஜய் ஹட்டா,

"மூக்கில் ஏதேனும் பிரச்னை இருந்தாலோ அல்லது மூக்கு அடைத்திருந்தாலோ, மக்கள் வாய் வழியாக சுவாசிக்கிறார்கள்"என்று கூறினார்.

மூக்கு அடைப்புக்கு ஒரு பொதுவான காரணம் கடுமையான சளி. ஆனால், சில சமயங்களில் டான்சில் பெரிதாவதால் மூக்கு அடைப்பு ஏற்படுகிறது. இது குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படுகிறது.

குழந்தைகளுக்கு அடினாய்டுகள் அல்லது டான்சில் பெரியதாக இருக்கும், இவை தொற்றுநோயை எதிர்த்து போராட உதவுகின்றன.

இதனால் மூக்கில் லேசான அடைப்பு ஏற்படுகிறது. அதனால்தான் பல குழந்தைகள் வாயைத் திறந்து கொண்டே தூங்குகிறார்கள்.

வயது ஏற ஏற, டான்சில் சிறிதாகி, இந்தப் பழக்கம் மெல்ல மறைந்துவிடும்.

எப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

மூக்கில் லேசான அடைப்பு ஏற்படுகிறது. அதனால்தான் பல குழந்தைகள் வாயைத் திறந்து கொண்டே  தூங்குகிறார்கள்.

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, நாம் தூங்கும் போது நிம்மதியான நிலையில் இருக்கிறோம், எனவே பொதுவாக வாய் வழியாக சுவாசிக்க வேண்டிய அவசியமில்லை (குறியீட்டு படம்)

செப்டம் குருத்தெலும்பு, நாசி செப்டமின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. இது நாசி செப்டம் குருத்தெலும்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாசி செப்டம் நாசி குழியை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது.

"செப்டம் குருத்தெலும்பு இயற்கையாகவே சற்று வளைந்திருக்கும், முற்றிலும் நேராக இருக்காது. ஆனால், அது அதிகமாக வளைந்தால், மூக்கின் ஒரு பகுதி அடைபடுகிறது. இதனால், விலகிய நாசி செப்டத்தின் (DNS) காரணமாக, மக்கள் வாய் வழியாகவும் சுவாசிக்கத் தொடங்குகிறார்கள்" என மருத்துவர் விஜய் ஹட்டா கூறுகிறார்.

இந்தப் பிரச்னை தீவிரமானால், செப்டோபிளாஸ்டி எனும் அறுவை சிகிச்சை மூலம் இதை சரிசெய்ய முடியும்.

ஆனால், தூங்கும்போது வாயைத் திறந்து வைத்திருந்தால் சுவாசம் உரத்த சத்தமாக இருந்தாலோ அல்லது குறட்டை விடுவதாக இருந்தாலோ, உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

எப்போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்?

தூங்கும்போது வாயைத் திறந்து வைத்திருந்தால்,, சுவாசம் உரத்த சத்தமாக இருந்தாலோ அல்லது குறட்டை விடுவதாக இருந்தாலோ, உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, வாயைத் திறந்து கொண்டே சுவாசிப்பது வாய் சுகாதாரத்தைப் பாதிக்கிறது (மாதிரி படம்)

"வாய் வழியாக சுவாசிப்பது வாயில் வறட்சியை ஏற்படுத்தும். இது வாய் சுகாதாரத்தைப் பாதிக்கலாம்" எனக் கூறுகிறார் டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையின் நுரையீரல், தீவிர சிகிச்சை மற்றும் தூக்க மருத்துவத் துறையின் தலைவர் மருத்துவர் ரோஹித் குமார்.

ஒருவர் வாயைத் திறந்து கொண்டு தூங்கினால் அல்லது வாய் வழியாக சுவாசித்தால், அந்த நேரத்தில் குறட்டை சத்தம் கேட்டால், அது வேறு ஏதேனும் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதுபோன்ற சூழ்நிலையில், அதற்கான காரணத்தைக் கண்டறிய ஒரு மருத்துவரைத் தொடர்புகொள்வது நல்லது.

"ஒருவருக்கு இருமல், சளி அல்லது வேறு எந்தப் பிரச்னையும் இல்லாமல் வாய் திறந்து தூங்கினால், முதலில் காது, மூக்கு, தொண்டை (ENT) பரிசோதனை செய்ய வேண்டும். அதன் பிறகு தான் மேற்கொண்டு பரிசோதனைகள் செய்ய முடியும்"என்று மருத்துவர் ரோஹித் குமார் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj4wey0j1xro

எடையைக் குறைக்க ஜூஸ் மட்டுமே குடித்தவர் மரணம் - உணவுக் கட்டுப்பாட்டில் செய்யக் கூடாத தவறுகள்

1 month 1 week ago

உடற்பயிற்சி, உணவுப்பழக்கம், உடல்நலம், டயட்

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • மோகன்

  • பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த 17 வயதான சக்தீஸ்வரன் என்கிற இளைஞர் கடந்த மே 24 ஆம் தேதி அவரது வீட்டில் இருந்தபோது திடீரென மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

12ஆம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர காத்திருந்த சக்தீஸ்வரன் உடற்பயிற்சியிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.

அவரின் இறப்பு தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சக்தீஸ்வரன் கடந்த சில மாதங்களாக இணையத்தில் அறிமுகமான சில திரவ உணவுமுறையைப் (டயட்) பின்பற்றி வந்ததாக அவர்களின் பெற்றோர் கூறியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, உடல்நலன் சார்ந்த காரணங்களுக்கான உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றுபவர்கள் முறையான ஆலோசனை பெற்று பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உடற்பயிற்சி, உணவுப்பழக்கம், உடல்நலம், டயட்

படக்குறிப்பு, சக்தீஸ்வரன்

இளைஞர்களிடையே டயட் என்பதைப் பற்றிய தவறான புரிதல் இருப்பதாகக் கூறுகிறார் மூத்த உணவியல் நிபுணரான ரேஷ்மா அலீம். ஒரு மாதத்தில் குறைந்தது 10 பேராவது தவறான டயட் முறையால் ஏற்பட்ட சிக்கல்களுக்கான தன்னிடம் சிகிச்சைக்கு வருவதாக அவர் தெரிவித்தார்.

"டயட் என்பது உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதோ அல்லது குறைவாக உணவுகளை எடுப்பதோ அல்ல. முறையான டயட் என்றால் சரியான அளவில் உணவுகளை எடுத்துக் கொள்வது" எனத் தெரிவித்தார் ரேஷ்மா.

உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் குறிப்பாக உணவுமுறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் உடற்பயிற்சி நிபுணரான சுஜாதா.

மருத்துவ சிக்கல்கள் உள்ளவர்களுக்கு சரியாக பின்பற்றப்படாத உணவு முறையால் கூடுதல் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார் இதயநோய் நிபுணரான அசோக் குமார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நிலையான உணவுமுறை தான் ஆரோக்கியமான இயக்கத்திற்கு உகந்தது. கலோரிகள் உட்கொள்வதை நாம் நிறுத்தினால் அது ஆபத்தானது. ஏனென்றால் உடலுக்குத் தேவையான கலோரிகள் உணவு மூலம் உள் எடுப்பது குறைகிறபோது உடலில் கல்லீரல் மற்றும் தசைகளில் உள்ள கலோரிகள் செரிமானம் ஆகத் துவங்கும்."

"கார்போஹைட்ரேட்ஸ், கலோரிகள், நுண் ஊட்டச்சத்துக்கள் என அனைத்துமே சரியான அளவுகளில் கிடைக்க வேண்டும். இவைகளில் சமநிலை குறைகிறபோது தசைகள் உடைய ஆரம்பிக்கின்றன. நல்ல கொழுப்பும் சரியான அளவில் உடலில் இருக்க வேண்டும். எடை குறைக்க உடற்பயிற்சி செய்கிறபோது தசையும் குறையும்."

"இதய தசைகள் குறைகிறபோது உடலுக்கு ரத்தம் செலுத்தப்படுவது குறையும். இதனால் இதய பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். ஒருவருக்கு ஏற்கெனவே மருத்துவ சிக்கல்கள் (pre-existing conditions) இருந்தால் அவை மேலும் மோசமாக்கும்." என்றார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் (ஐசிஎம்ஆர்) இயங்கும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் இந்தியர்களுக்கு எவ்வளவு ஆற்றல் தேவை என்பதை வகைப்படுத்தி பரிந்துரைக்கிறது.

அதன்படி, ஆண்களில் உடல் சார்ந்த வேலைகள் (Sedentary work) அதிகம் செய்யாத பெரிய நபர்களுக்கு நாளொன்றுக்கு 2,110 கிலோ கலோரி தேவைப்படுகிறது. அதுவே, ஓரளவிற்கு உடல் சார்ந்த வேலைகள் (Moderate work) உள்ள ஆண்களுக்கு நாளொன்றுக்கு 2,710 கிலோ கலோரி தேவைப்படுகிறது. கடினமான உடல் சார்ந்த வேலைகள் (Heavy work) செய்பவர்களுக்கு நாளொன்றுக்கு 3,470 கிலோ கலோரி தேவைப்படுகிறது.

இதே பெண்களில் பெரியவர்களுக்கு முறையே 1,160, 2,130, 2,720 கிலோ கலோரி என இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அனைத்து விதமான சத்துக்களும் அடங்கியிருக்க வேண்டும் என்கிறார் ரேஷ்மா. "உடலுக்கு தேவைப்படும் சத்துகள் கார்போஹைட்ரேட், பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், நட்ஸ் வகைகள், புரத உணவான முட்டை அல்லது மாமிசங்கள் போன்ற பல உள்ளன. இவற்றை திரவ உணவுகளால் மட்டும் வழங்க முடியாது" என்றார்.

உடற்பயிற்சி, உணவுப்பழக்கம், உடல்நலம், டயட்

படக்குறிப்பு, மருத்துவ வட்டாரங்களில் இணையத்தைப் பார்த்து பின்பற்றும் உணவுப் பழக்கத்தை Fad diet என்று அழைக்கப்படுகிறது.

"பழங்களை திரவ உணவாக உட்கொள்கிற போது அதில் உள்ள நார்ச் சத்துகளும் கழிந்துவிடும். ஆகவே இதனை ஃப்ரூட் டயட் எனச் சொல்ல முடியாது. ஜூஸ் டயட் என்று தான் கூற வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

ஐசிஎம்ஆர் பரிந்துரைக்கும் அளவு

  • காய்கறிகள்: 400 கிராம்

  • பழங்கள்: 100 கிராம்

  • பருப்பு வகைகள், முட்டை அல்லது மாமிசம் - 85 கிராம்

  • நட்ஸ் மற்றும் விதைகள் - 35 கிராம்

  • கொழுப்பு மற்றும் எண்ணெய் - 27 கிராம்

  • தானியங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் - 250 கிராம்

சராசரியாக பரிந்துரைக்கப்பட்ட உணவு உட்கொள்ளும் அளவு இது. உடற்பயிற்சியில் ஈடுபடுவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்குப் பொருத்து இவை மாறுபடும் என்று தெரிவித்தார் ரேஷ்மி.

இதற்கு ஒரு உதாரணத்தை முன்வைத்த சுஜாதா, தீவிர உடற்பயிற்சியில் ஈடுபவர்களுக்கு புரதச்சத்து அதிகமாக தேவைப்படும் என்பதால் அவர்களுக்கு உணவுமுறையில் புரதங்கள் கூடுதலாக பரிந்துரைக்கப்படும் என்றார்.

மருத்துவ வட்டாரங்களில் இணையத்தைப் பார்த்து பின்பற்றும் உணவுப் பழக்கத்தை ஃபேடு டயட் (Fad diet) என்று அழைக்கப்படுகிறது.

"இரண்டு நாட்கள் திரவ ஆதாரங்களை எடுத்துக் கொண்டால் எடை சற்று குறையவே செய்யும். ஆனால் அதனால் வேறு சில சிக்கல்களும் வரும்" எனக் கூறினார் ரேஷ்மி

தொடர்ந்து விவரித்த அவர், "ஒருவரின் ஆரோக்கியமான உடல் இயக்கத்திற்கு திட உணவும், திரவ உணவு என இரண்டுமே அவசியம். திரவ உணவை மட்டுமே எடுத்துக் கொண்டால் மூளை சார்ந்த, உடல் சார்ந்த எந்த வேலைகளையும் செய்வது கடினமாக இருக்கும். திட உணவுகளை ஒருவர் எடுத்துக் கொள்ளவில்லையென்றால் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் தசையின் அளவு குறைந்துவிடும். உடலுக்கு தேவையான வைட்டமின் சி அல்லது பொட்டாசியம் போன்ற சத்துகள் கிடைக்காமல் போய்விடும்." என்று தெரிவித்தார்.

டயட் மேற்கொள்ள நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி, உணவுப்பழக்கம், உடல்நலம், டயட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒருவரின் உடல்நிலையைப் பொருத்து தான் அவருக்கான உணவுமுறையைப் பரிந்துரைக்க முடியும் என்கிறார் ரேஷ்மா.

ஒருவரின் உடல்நிலையைப் பொருத்து தான் அவருக்கான உணவுமுறையைப் பரிந்துரைக்க முடியும் என்கிறார் ரேஷ்மா.

"ஒருவரின் ரத்தப் பரிசோதனை, கொழுப்பு அளவு, நுரையீரல், சிறுநீரகத்தின் நிலை, அவருக்கு ஏற்கெனவே உள்ள மருத்துவ சிக்கல்கள், குடும்பத்தில் மரபணு ரீதியாக உள்ள சிக்கல்கள் போன்றவற்றை அறிந்த பிறகே அவருக்கான உணவு முறையைப் பரிந்துரைக்க முடியும்." என்றார்

ஒருவர் தனது உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள விரும்பினால் அதற்கு முறையாக பயிற்சி பெற்றவர்கள் மூலம் அறிவுரை பெறுவது தான் சிறந்தது என்றும் தெரிவித்தார்.

"மனித உடல் அமைப்பிலே திட உணவுகள் உட்கொள்வது என்பது அடிப்படையானது. திட உணவுகள் இல்லையென்றால் உடல் செரிமானம் மேற்கொள்ளாது. இதனால் உடல் திசுக்களையே செரிமானம் செய்யத் தொடங்குகிறது. அப்போது தான் குடலழற்சி போன்ற சிக்கல்கள் எழத் தொடங்குகின்றன." என்றார் அவர்.

உடற்பயிற்சி செய்பவர்கள் எவ்வாறு டயட் பின்பற்றலாம்?

பரிந்துரை இல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ளாததைப் போல டயட்டையும் முறையான பரிந்துரை இல்லாமல் பின்பற்றக்கூடாது என்கிறார் சுஜாதா.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சமூக ஊடகங்களைப் பார்த்து உணவு பழக்கங்கள், உணவு முறைகளை மாற்றிக் கொள்வது மிகவும் சிக்கலாக உள்ளது. தற்போது பலரும் இருவேளை உணவு, ஒருவேளை உணவு எனப் பின்பற்றுகிறார்கள். இதனால் பல சிக்கல்கள் எழுகின்றன. இதனுடன் சேர்ந்து தீவிர உடற்பயிற்சியும் மேற்கொள்ளும்போது சிக்கல்கள் அதிகமாகின்றன." என்று தெரிவித்தார்

தசை அளவு குறைவதன் ஆபத்தை சுட்டிக்காட்டி பேசிய அவர், "எடையை குறைக்க உணவு உட்கொள்ளும் பழக்கத்தை மாற்றினால் உடலில் தசையின் மற்றும் கொழுப்பின் அளவும் பெருமளிவு குறைகிறது. இதில் இதய தசை குறைவது தான் மிகவும் ஆபத்தானது. அப்போது தான் இதய நோய் வருவதற்கான சிக்கல்களும் அதிகரிக்கின்றன." என்றார்.

உடற்பயிற்சி, உணவுப்பழக்கம், உடல்நலம், டயட்

படக்குறிப்பு, டயட் மட்டுமல்ல ஒருவரின் உடற்பயிற்சியும் அவரின் வயது, எடை உடல்நிலை, அவரின் உடல் ஆரோக்கியம் எனப் பலவற்றைப் பொருத்து தான் பரிந்துரைக்கப்படுகிறது

டயட் மட்டுமல்ல ஒருவரின் உடற்பயிற்சியும் அவரின் வயது, எடை உடல்நிலை, அவரின் உடல் ஆரோக்கியம் எனப் பலவற்றைப் பொருத்து தான் பரிந்துரைக்கப்படுகிறது என்று கூறியவர், "மனிதர்களின் உடல் பரவலாக மூன்று வகைகளின் கீழ் அடங்கும். மெலிதான உடல்வாகு உடையவர்கள், சிலருக்கு உடலிலே கொழுப்பு இருக்கும், சிலருக்கு தசை அளவு கூடுதலாக இருக்கும். மரபணு ரீதியாக இதய நோய் வருகிறது என்றால் அவருக்கு கார்டியோ சார்ந்து தீவிர உடற்பயிற்சி வழங்க முடியாது. ஒருவரின் முழுமையான உடல்நிலை, அவருக்கு ஏற்கெனவே உள்ள பிரச்னைகள், குடும்பத்தில் பரம்பரை ரீதியாக உள்ள சிக்கல்களைப் பொருத்து தான் தகுந்த உடற்பயிற்சி பரிந்துரைக்கப்படும்." என்று தெரிவித்தார்.

ஒருவர் எதிர்கொள்ளும் அழுத்தமும் உடற்பயிற்சியை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக விவரித்தவர், "ஒருவருக்கு என்ன மாதிரியான மன அழுத்தம் உள்ளது, அவரின் வேலை அழுத்தம் என்ன மாதிரி உள்ளது, எந்த அளவிற்கு ஆழமான உறக்கம் அவருக்கு கிடைக்கிறது, அவரின் தனிப்பட்ட மனநிலை, சமூக வட்டம் எப்படிப்பட்டதாக உள்ளது என அனைத்துமே இதில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கின்றன" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cr5rmmq7j5mo

வைட்டமின் டி அதிகரிக்க வெயிலில் நிற்க வேண்டிய சிறந்த 3 மணி நேரம்

1 month 2 weeks ago

சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி பெற சரியான நேரம் காலையா மாலையா?

பட மூலாதாரம், GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • ஆ. நந்தகுமார்

  • பிபிசி தமிழ்

  • 30 ஜூலை 2025

சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளரான வாசுகிக்கு அடிக்கடி தசை வலியும் சோர்வும் இருந்துகொண்டே இருந்துள்ளது.

''பணி அழுத்தம் அல்லது போதிய தூக்கம் இல்லாதது இதற்கான காரணமாக இருக்கலாம் என நினைத்தேன்'' என்கிறார் அவர்.

பல மாத போராட்டத்துக்குப் பிறகு மருத்துவரிடம் செல்ல முடிவெடுத்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ரத்தப் பரிசோதனையில் அவரது வைட்டமின் டி அளவு ஆபத்துக்குரிய வகையில் குறைவாக இருந்தது தெரியவந்தது.

உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பொது சுகாதார இதழில், 'இந்தியாவின் தலைநகர் டெல்லியின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் வைட்டமின் டி குறைபாட்டின் பரவல் மற்றும் காரணிகள்' என்ற தலைப்பில் ஓர் ஆய்வு கட்டுரை வெளியானது.

அதன்படி, நகர்ப்புறத்தில் வசிப்பவர்களில் 70% பேருக்குக் கடுமையான வைட்டமின் டி குறைபாடு இருப்பதாகவும், அதேசமயம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் சுமார் 20% பேருக்குக் கடுமையான வைட்டமின் டி குறைபாடு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி பெற சரியான நேரம் காலையா மாலையா?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, சோர்வு, மூட்டு வலி, கால்களில் வீக்கம், நீண்ட நேரம் நிற்பதில் சிரமம், தசை பலவீனம், மன அழுத்தம் ஆகியவை வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளாகும். (சித்தரிப்புப்படம்)

இந்த ஆய்வில் டெல்லி என்சிஆர் எனப்படும் தலைநகரப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த நகர்ப்புற மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

ரத்தத்தில் 10 நானோ கிராமுக்கும் குறைவாக வைட்டமின் டி இருந்தால் அது தீவிர குறைபாடாகக் கருதப்படும். இந்த ஆய்வில் பங்கேற்ற நகர்ப்புறத்தை சேர்ந்தவர்களின் சராசரி வைட்டமின் டி அளவு 7.7  நானோகிராமாக உள்ளது.

கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களின் சராசரி வைட்டமின் டி அளவு 16.2 நானோ கிராமாக உள்ளது. ரத்தத்தில் 30 நானோ கிராமுக்கு மேல் வைட்டமின் டி இருப்பதுதான் போதுமான அளவாகக் கருதப்படும் நிலையில், கிராமப்புறத்தில் இருப்பவர்களும் இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்கவில்லை என்றாலும் கடுமையான குறைபாடு என்ற நிலை சற்று குறைவாகவே இருக்கிறது.

வைட்டமின் டி பற்றாக்குறையால் ஆண்களை விடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் இதழில் வெளியான ஆய்வு கூறுகிறது.

சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி பெற சரியான நேரம் காலையா மாலையா?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, வைட்டமின் டி பெறுவது தான் இலக்கு என்றால் கண்ணாடி ஜன்னலுக்கு அருகில் இருந்து சூரிய ஒளியை பெற வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் என்ன நிலவரம்?

சென்னையை சேர்ந்த கர்ப்பிணிகள் மத்தியில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் 62% பெண்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது தெரியவந்தது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பிரஸ்ஸில் வெளியான, 'பல்வேறு வகையான குளுக்கோஸ் சகிப்புத்தன்மை கொண்ட நகர்ப்புற தென்னிந்தியர்களில் வைட்டமின் டி குறைபாடு' என்ற ஆய்வில் சென்னையை சேர்ந்த பலர் பங்கேற்றுள்ளனர்.

ஆய்வில் பங்கேற்ற 66% பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது தெரியவந்தது. பங்கேற்பாளர்களுக்கு நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை அல்லது வகை 2 நீரிழிவு நோய் இருந்தாலும் சரி, வைட்டமின் டி குறைபாடு பரவலாக இருந்தது எனவும் ஆண்களை விடப் பெண்களுக்கு வைட்டமின் டி அளவு குறைவாக இருந்தது எனவும் கூறுகிறது இந்த ஆய்வு.

அத்துடன் பஞ்சாப், திருப்பதி, புனே, அமராவதி போன்ற பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளும் கிராமப்புறத்தை விட நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கு அதிகளவில் வைட்டமின் டி பற்றாக்குறை இருப்பதைக் காட்டின.

சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி பெற சரியான நேரம் காலையா மாலையா?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, வைட்டமின் டி குறைபாடு கரணமாக இளம் வயதிலேயே டிமென்ஷியா ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறுகிறது ஓர் ஆய்வு

காரணம் என்ன?

வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து இயற்கையாகப் பெறக்கூடியது. இந்திய வட மாநிலங்களில் சில மாதங்களைத் தவிர பெரும்பாலான மாதங்களில் சூரிய ஒளி நன்றாகக் கிடைக்கும் அதே சமயம் சென்னை போன்ற வெப்ப மண்டல நகர்புறபகுதியில் ஆண்டு முழுக்க சூரிய ஒளி கிடைத்தாலும் நகர்புற மக்களுக்கு அதிகளவில் வைட்டமின் டி குறைபாடு இருப்பதற்கான காரணம் என்ன?

வைட்டமின் டி சூரிய ஒளி மற்றும் உணவு மூலம் மனித உடலுக்கு வருவதாகச் சென்னையைச் சேர்ந்த தோல் மருத்துவர் தட்சிணாமூர்த்தி கூறுகிறார்.

''உடலுக்குத் தேவையான பெரும்பாலான வைட்டமின் டி சூரிய ஒளி மூலம் வருகிறது. மனித தோலின் மேல் பகுதி இயற்கையாகவே 7-டிஹைட்ரோகொலஸ்ட்ரால் (7-dehydrocholesterol) என்ற மூலக்கூறை உற்பத்தி செய்யும். சூரிய ஒளியின் புறஊதா கதிர் தோலில் பட்டவுடன் அந்த மூலக்கூறு வைட்டமின் டி3 ஆக மாறும். பின்னர் கல்லீரலும், சிறுநீரகமும் அதை வைட்டமின் டி ஆக மாற்றி உடலுக்கு அனுப்பும்'' என்கிறார் அவர்.

''நவீனமயமாக்கல் மற்றும் மாறிவரும் வேலை கலாசாரம் காரணமாக வீட்டிற்குள் செலவிடும் நேரமும், அலுவலகத்தில் செலவிடும் நேரமும் அதிகரித்துள்ளது. வெளியில் சென்றாலும் ஆடையால் உடலை முழுமையாக மறைத்துக் கொள்ளும் வழக்கம் அதிகமாக உள்ளதால், உடலில் சூரிய ஒளி படுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துவிடுகிறது'' என்கிறார் புதுவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பொது மருத்துவர் பீட்டர்.

சில நிமிடங்கள் வெளியே இருப்பதன் மூலம் போதுமான சூரிய ஒளி கிடைக்கும் என்று மக்கள் கருதுகிறார்கள். ஆனால் மாசுபாடு, உடைகள் மற்றும் கண்ணாடி ஜன்னல் தடுப்பு போன்றவை உங்கள் உடல் சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி பெறுவதைத் தடுக்கின்றன என்கிறார் பீட்டர்.

சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி பெற சரியான நேரம் காலையா மாலையா?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, வைட்டமின் டி பற்றாக்குறை ஆபத்தால் ஆண்களை விடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் இதழில் வெளியான ஆய்வு கூறுகிறது.

எவ்வளவு நேர சூரிய ஒளி தேவை?

ஒரு இந்திய ஆண், போதிய அளவாக நிர்ணயிக்கப்பட்ட 30 நானோ கிராம் வைட்டமின் டி-ஐ பெற தினமும் 2 மணி நேரத்துக்கு மேலாக முகம், கைகள், முன்கைகள் மீது சூரிய ஒளி படும் விதமாக நடக்க வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு. குறைந்தபட்சம் 20 நானோ கிராம் வைட்டமின் டி-ஐ பெற தினமும் 1 மணி நேரம் வெளியில் நடக்க வேண்டும் எனவும், காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடக்க சிறந்த நேரம் எனவும் இந்த ஆய்வு கூறுகிறது

வைட்டமின் டி பெறுவது தான் இலக்கு என்றால் கண்ணாடி ஜன்னலுக்கு அருகில் இருந்து சூரிய ஒளியை பெற வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

''சூரிய ஒளியின் UVB கதிர்கள்தான் வைட்டமின் டி உருவாக உதவும். இந்த கதிர்கள் வழக்கமாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நன்றாக கிடைக்கும். அதிகாலையிலும் மாலையிலும் சூரிய ஒளியில் UVA கதிர்கள் இருக்கும். இது வைட்டமின் டி உருவாக உதவாது. அதிகாலையில் சூரியன் பளிச்சென்று தோன்றினாலும் அதில் நீங்கள் நின்றால் அதிக பலனில்லை'' என்கிறார் மருத்துவர் தட்சணாமூர்த்தி.

இதற்கான அறிவியல் காரணம் என்னவென்றால், பூமியின் வளிமண்டலம் சூரியன் கீழ்வானில் இருக்கும்போது UVB கதிர்களை தடுத்துவிடுகிறது. அதாவது, அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சூரியன் மிகவும் குறைந்த (45 டிகிரிக்கு குறைவாக) கோணத்தில் இருப்பதால் UVB கதிர்கள் பெரும்பாலும் பூமியை அடையவே முடியாமல் தடுக்கப்படுகின்றன.

வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள்

சோர்வு, மூட்டு வலி, கால்களில் வீக்கம், நீண்ட நேரம் நிற்பதில் சிரமம், தசை பலவீனம், மன அழுத்தம் ஆகியவை வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளாகும்.

''பரபரப்பான வாழ்க்கையால் இந்தியர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, வைட்டமின் டி குறைபாடு உடலின் அனைத்து பாகங்களையும் படிப்படியாக பலவீனப்படுத்துகிறது, இதன் காரணமாக வயதான காலத்தில் எலும்புகள், தசைகள் மற்றும் மூட்டுகளில் அதிக வலி ஏற்படுகிறது.'' என்கிறார் மருத்துவர் பீட்டர்.

வைட்டமின் டி குறைபாடு காரணமாக இளம் வயதிலேயே டிமென்ஷியா ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறுகிறது ஓர் ய்வு

சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி பெற சரியான நேரம் காலையா மாலையா?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, வைட்டமின் டி சூரிய ஒளி மற்றும் உணவு மூலம் மனித உடலுக்கு வருகிறது

சமாளிப்பது எப்படி?

வாசுகி போன்ற பெரும்பாலான நகர்ப்புறவாசிகளுக்குத் தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான நேரத்தில் குறைந்தது 1 மணி நேரம் நடைப்பயிற்சி செய்வது என்பது சாத்தியமற்றது.

''உணவு மூலம் வைட்டமின் டி குறைபாட்டைச் சமாளிப்பது சற்று கடினம். முட்டை, மீன், பால், வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட உணவு போன்றவை உதவக்கூடும்.'' என்கிறார் மருத்துவர் பீட்டர்.

வைட்டமின் டி குறைபாட்டை குணப்படுத்த சில சப்ளிமெண்ட்களும் பயனுள்ளதாக இருக்கும் என மருத்துவர் கூறுகிறார்.

''என்னதான் பல சப்ளிமெண்ட்கள் கிடைத்தாலும் நேரம் கிடைக்கும்போது வெயிலில் நிற்பது போன்ற எளிமையான, செலவில்லாத மருந்துதான் சிறந்தது என தோன்றுகிறது'' என்கிறார் வாசுகி.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly4ny450vpo

தினசரி 7,000 அடி நடந்தால் புற்றுநோய், இதய நோய் அபாயம் குறையும் - புதிய ஆய்வில் தகவல்

1 month 2 weeks ago

நடை பயிற்சி, 7,000 அடிகள்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • ஜோஷ் எல்ஜின்

  • பிபிசி செய்திகள்

  • 26 ஜூலை 2025, 08:00 GMT

    புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

மூளை சக்தியை அதிகரிக்கவும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கவும், ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடப்பது போதுமானதாக இருக்கும் என்று ஒரு முக்கிய ஆய்வு கூறுகிறது.

10,000 அடிகள் நடக்க வேண்டும் என்பது பொதுவாக அடைய வேண்டிய இலக்காக கருதப்படுகிறது. ஆனால், அதைவிட எளிதாக அடையக் கூடிய, யதார்த்தமான இலக்காக இது இருக்கலாம்.

லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியான ஒரு புதிய ஆய்வறிக்கை, புற்றுநோய், டிமென்ஷியா மற்றும் இதய நோய் போன்ற உடல்நலப் பிரச்னைகளின் அபாயம் குறைவதற்கும், இந்த எண்ணிக்கைக்கும் தொடர்புள்ளது என கண்டறிந்துள்ளது.

மக்கள் தங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக, தினசரி எத்தனை அடிகள் நடக்கிறோம் என்பதை கண்காணிக்க, இந்த ஆராய்ச்சி முடிவுகள் ஊக்குவிக்கக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

"ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும்" என்ற கருத்து நம்மிடம் உள்ளது, ஆனால் அது ஆதாரங்களை அடிப்டையாகக் கொண்டது அல்ல" என்கிறார் முன்னணி ஆராய்ச்சியாளர் மெலடி டிங்.

10,000 அடிகள் என்ற எண்ணிக்கை, 1960-களில் ஜப்பானில் நடந்த ஒரு விளம்பர நிகழ்ச்சியில் முதன்முறையாக அறிமுகமானது.

1964 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக, "10,000 அடி மீட்டர்" என்று பொருள்படும் 'மான்போ-கீ' என்ற பெடோமீட்டர் பிராண்ட் அறிமுகமானது.

ஆனால், அதற்காக உருவாக்கப்பட்ட இந்த எண்ணிக்கை, "அந்தச் சூழலிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு", அதிகாரப்பூர்வமற்ற வழிகாட்டுதலாக, இன்றும் பல உடற்பயிற்சி சாதனங்களாலும், செயலிகளாலும் பரிந்துரைக்கப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர் மெலடி டிங் கூறுகிறார்.

10,000 படிகள் என்பது பொதுவாக அடைய வேண்டிய இலக்காக கருதப்படுகிறது.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தங்களது கண்டுபிடிப்புகள் எதிர்கால பொது சுகாதார நெறிமுறைகளை வடிவமைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியான ஒரு முக்கிய ஆய்வில், உலகெங்கிலும் உள்ள 160,000 க்கும் மேற்பட்டவர்களின் உடல்நலம் மற்றும் செயல்பாடு குறித்த முந்தைய ஆய்வுகள் மற்றும் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

ஒரு நாளைக்கு 2,000 அடிகள் நடப்பவர்களுடன் ஒப்பிடும் போது, 7,000 அடிகள் நடப்பவர்களுக்கு கீழ்க்கண்ட ஆபத்துகள் குறைவாக இருப்பது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

  • இதய நோய் - 25% குறைவு

  • புற்றுநோய் - 6% குறைவு

  • டிமென்ஷியா - 38% குறைவு

  • மன அழுத்தம் - 22% குறைவு

ஆனால், சில நோய்களைக் குறித்த புள்ளிவிவரங்கள், குறைந்த எண்ணிக்கையிலான ஆய்வுகளிலிருந்து பெறப்பட்டவை என்பதால், அவை மற்றவற்றை விட குறைவான துல்லியத்துடன் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், வெறும் 2,000 அடிகள் நடப்பது என்ற மிகக் குறைந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு சுமார் 4,000 அடிகள் நடப்பது என்ற மிதமான எண்ணிக்கை சிறந்த உடல்நலத்துக்குப் பங்களிக்கிறது என்று அந்த மதிப்பாய்வு குறிப்பிடுகிறது.

பெரும்பாலான உடல்நலக் குறைபாடுகளுக்கு, 7,000 அடிகள் வரை நடந்தாலே போதுமான நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால் அதைவிட அதிக அடிகள் நடந்தால் இதய ஆரோக்கியத்திற்கு கூடுதல் நன்மை கிடைக்கிறது.

வெறும் 2,000 அடிகள் நடப்பது என்ற மிகக் குறைந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு சுமார் 4,000 அடிகள் நடப்பது என்ற மிதமான எண்ணிக்கை சிறந்த உடல்நலத்துக்குப் பங்களிக்கிறது என்று அந்த மதிப்பாய்வு குறிப்பிடுகிறது.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, உடற்பயிற்சி சாதனங்களில் தினசரி எத்தனை அடிகள் நடந்திருக்கிறோம் என்பதை எண்ணுவது ஒரு பிரபலமான பொழுதுபோக்காக மாறிவிட்டது.

உடற்பயிற்சி செய்வதற்கான பெரும்பாலான நெறிமுறைகள், எத்தனை அடிகள் நடக்க வேண்டும் என்ற எண்ணிக்கையை விட உடற்பயிற்சி செய்வதற்கு செலவிடும் நேரத்தை மையமாகக் கொண்டுள்ளன.

உதாரணமாக, 18 வயதுக்கு மேற்பட்டோர் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் பயிற்சியோ அல்லது 75 நிமிடங்கள் தீவிரமான ஏரோபிக் பயிற்சியோ செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இந்த அறிவுரையை மக்கள் புரிந்துகொள்வது சில நேரங்களில் கடினமாக இருக்கலாம், ஆனால் தற்போதைய நெறிமுறைகள் ஒரு முக்கியமான நோக்கத்திற்கு உதவுகின்றன என்று கூறுகிறார் டிங் .

"நீச்சல் பயிற்சியில் ஈடுபடுதல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது உடல் குறைபாடுகளின் காரணமாக நடக்க முடியாதவர்கள் உள்ளனர்," என்றும் அவர் விளக்குகிறார்.

ஆனால், மக்கள் எத்தனை அடிகள் நடக்க வேண்டும் என்பதற்கான பரிந்துரையை, ஒரு "கூடுதல்" தகவலாக சேர்க்கலாம் என்றும், இது மக்கள் "நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படுவது குறித்து சிந்திக்க உதவும்" என்றும் அவர் கூறுகிறார்.

லண்டனின் புருனல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, செடன்டரி பிஹேவியர் மற்றும் சுகாதார நிபுணரான மருத்துவர் டேனியல் பெய்லி, "ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடப்பது அவசியம்" என்ற கருத்து, ஆதாரமற்ற 'கட்டுக்கதை' என்ற கருத்தை இந்த ஆய்வு முன்வைக்கிறது என்று கூறுகிறார்.

சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்பது பொருத்தமான இலக்காக இருந்தாலும், மற்றவர்களுக்கு 5,000 முதல் 7,000 அடிகள் நடப்பது, "மிகவும் யதார்த்தமான மற்றும் அடையக் கூடிய இலக்காக" இருக்கலாம் என்று அவர் விளக்குகிறார்.

போர்ட்ஸ்மவுத் பல்கலைக் கழகத்தின் மருத்துவ உடற்பயிற்சி உடலியல் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் ஆண்ட்ரூ ஸ்காட், நடப்பதற்கு எண்ணிக்கை முக்கியமல்ல என்று கூறுகிறார்.

"அதிகமாக நடப்பது எப்போதும் நல்லது" என்று கூறும் அவர், செயல்பாடு குறைவாக இருக்கும் நாட்களில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும் என்று மக்கள் அதிகமாக கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cr797rrjm3eo

எம்ஆர்ஐ ஸ்கேனின் போது பாதுகாப்பாக இருப்பது எப்படி? - மருத்துவர்களின் ஆலோசனை

1 month 3 weeks ago

எம்ஆர்ஐ ஸ்கேன், மருத்துவம், உடல்நலம், ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • சிராஜ்

  • பிபிசி தமிழ்

  • 52 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்காவில் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்த நபர், கருவியின் காந்த புலத்தால் இழுக்கப்பட்டு உயிரிழந்தார். உடற்பயிற்சிக்கான 9 கிலோ சங்கிலியுடன் இந்த அறைக்குள் அவர் நுழைந்ததால் எந்திரத்தின் காந்தப்புலம் அவரை இழுத்ததாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பது குறித்து பல சந்தேகங்களை உங்களுக்கு எழுப்பியிருக்கலாம். முதல்முறையாக மருத்துவமனைகளில் எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன் எடுத்துக்கொள்ள செல்லும் பலருக்கும், ஒருவித தயக்கம் இருக்கலாம். இதற்கு முதன்மையான காரணமாக இருப்பது, எம்ஆர்ஐ ஸ்கேன் கருவியின் வடிவமைப்பு.

எம்ஆர்ஐ ஸ்கேனர் என்பது சக்திவாய்ந்த காந்தங்களைக் கொண்ட ஒரு பெரிய குழாய் போன்ற அமைப்பாகும். ஸ்கேன் செய்யும்போது, அந்த குழாய் அமைப்பின் உள்ளே ஒருவர் அனுப்பப்படுவார். அப்போது மின்காந்த

எம்ஆர்ஐ ஸ்கேன் பாதுகாப்பானது மற்றும் மருத்துவ ரீதியாக மிகவும் உதவிகரமானது என்றே பெரும்பாலான மருத்துவ அமைப்புகளின் ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.

எம்ஆர்ஐ ஸ்கேன் என்றால் என்ன? யாருக்கெல்லாம் இதனை பரிந்துரைப்பதில் கட்டுப்பாடுகள் உள்ளன? எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? இந்த கேள்விகளுக்கான பதில்களை கட்டுரையில் பார்க்கலாம்.

எம்ஆர்ஐ ஸ்கேன் என்றால் என்ன?

எம்ஆர்ஐ ஸ்கேன், மருத்துவம், உடல்நலம், ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எம்ஆர்ஐ ஸ்கேன் ஒரு வலியில்லா செயல்முறையாகும்.

எம்ஆர்ஐ (Magnetic Resonance Imaging) என்பது உடலின் உள்ளுறுப்புகள், மென்மையான திசுக்கள், எலும்புகள் மற்றும் பிற உள் கட்டமைப்புகளின் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை உருவாக்கப் பயன்படும் ஒரு மருத்துவ தொழில்நுட்பம் ஆகும்.

எக்ஸ்-கதிர்கள் அல்லது சிடி ஸ்கேன்களைப் போல, எம்ஆர்ஐ கதிர்வீச்சைப் பயன்படுத்துவதில்லை. மாறாக, வலுவான காந்தப்புலங்கள் மற்றும் ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

  • மூளை மற்றும் முதுகுத் தண்டு

  • எலும்புகள் மற்றும் மூட்டுகள்

  • மார்பகங்கள்

  • இதயம் மற்றும் ரத்த நாளங்கள்

  • கல்லீரல், கருப்பை அல்லது புரோஸ்டேட் சுரப்பி போன்ற உள்ளுறுப்புகள் என உடலின் பல்வேறு பகுதிகளை பரிசோதிக்க எம்ஆர்ஐ ஸ்கேன் பயன்படுகிறது.

இந்த ஸ்கேனின் முடிவுகள் உடலின் நிலையைக் கண்டறியவும், சிகிச்சைகளைத் திட்டமிடவும், முந்தைய சிகிச்சை எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பதை மதிப்பிடவும் உதவும் என பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தெரிவிக்கிறது.

எம்ஆர்ஐ ஸ்கேன் செயல்முறையின்போது என்ன நடக்கும்?

எம்ஆர்ஐ ஸ்கேன், மருத்துவம், உடல்நலம், ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எம்ஆர்ஐ ஸ்கேனர் ஒரு நிபுணத்துவம் பெற்ற ரேடியோகிராஃபரால் இயக்கப்படுகிறது.

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் கட்டுரையின்படி, எம்ஆர்ஐ ஸ்கேனர் கருவி என்பது சக்திவாய்ந்த காந்தங்களைக் கொண்ட, இரு முனைகளிலும் திறந்திருக்கும் ஒரு பெரிய குழாய் போன்ற அமைப்பாகும்.

எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும்போது, ஸ்கேனர் கருவியுடன் பொருத்தப்பட்ட ஒரு தட்டையான படுக்கையில் நீங்கள் படுக்க வேண்டும். பின்னர் அந்த படுக்கை கருவிக்குள் நகர்த்தப்படும்.

உங்கள் உடலின் எந்தப் பகுதியை ஸ்கேன் செய்யப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து, தலை அல்லது கால் முதலில் என ஸ்கேனருக்குள் நகர்த்தப்படுவீர்கள். எம்ஆர்ஐ ஸ்கேனர் ஒரு நிபுணத்துவம் பெற்ற ரேடியோகிராஃபரால் இயக்கப்படுகிறது.

சில சமயங்களில், ஸ்கேன் செய்யப்படும் உடல் பகுதியின் மேல், அதாவது தலை அல்லது மார்பு போன்றவற்றின் மேல் ஒரு ஃபிரேம் வைக்கப்படலாம். இந்த ஃபிரேம்-இல் ஸ்கேன் செய்யும் போது உங்கள் உடலால் அனுப்பப்படும் சிக்னல்களைப் பெறுவதற்கான ரிசீவர்கள் இருக்கும். சிறந்த, தரமான எம்ஆர்ஐ படத்தை உருவாக்க இது உதவும்.

ஸ்கேன் செய்யப்படும் பகுதியின் அளவு மற்றும் எத்தனை படங்கள் எடுக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து, ஸ்கேன் 15 முதல் 90 நிமிடங்கள் வரை நீடிக்கும். இதுவொரு வலியில்லா செயல்முறையாகும். எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும்போது முடிந்தவரை அசையாமல் இருப்பது மிகவும் முக்கியம்.

எம்ஆர்ஐ ஸ்கேன், மருத்துவம், உடல்நலம், ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எக்ஸ்-கதிர்கள் அல்லது சிடி ஸ்கேன்களைப் போல, எம்ஆர்ஐ அயனியாக்கும் கதிர்வீச்சைப் பயன்படுத்துவதில்லை.

எம்ஆர்ஐ ஸ்கேனரை இயக்க ஒரு கணினி பயன்படுத்தப்படுகிறது. இது ஸ்கேனரால் உருவாக்கப்படும் காந்தப்புலத்திலிருந்து விலகி இருக்கும் வகையில் வேறு அறையில் வைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து ரேடியோகிராஃபர் அந்தக் கணினியை இயக்குவார்.

"ரேடியோகிராஃபர் வழங்கக்கூடிய வழிகாட்டுதல்களையும், எம்ஆர்ஐ தொடர்பான விதிகளையும் முறையாக பின்பற்றினால் எம்ஆர்ஐ ஸ்கேன் ஒரு சிறந்த மருத்துவ தொழில்நுட்பமாகும்" என்கிறார் மருத்துவர் விஸ்வநாத். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறையில் மூத்த ஆலோசகராகப் பணிபுரிகிறார்.

"எம்ஆர்ஐ ஸ்கேன் செயல்முறையின்போது குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் ஒருவர் உங்களுடன் இருக்க அனுமதிக்கப்படலாம். குழந்தைகள் என்றால், பெற்றோர்களில் ஒருவர் குழந்தையுடன் இருக்கலாம். ஆனால், அவர்களுக்கும் நோயாளிக்கான அனைத்து விதிகளும் பொருந்தும்" என்கிறார் அவர்.

எம்ஆர்ஐ அறைக்குள் நுழைவதற்கு முன், உங்களிடம் பல்வேறு கேள்விகள், ஒரு சிறப்பு ஸ்கிரீனிங் படிவத்தைப் பயன்படுத்தி கேட்கப்படும். உங்கள் உடலில் 'பேஸ்மேக்கர்' போன்ற கருவிகள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதை அந்த படிவம் மூலம் தெரிவிக்க வேண்டும்.

எந்தெந்த பொருட்களை அகற்ற வேண்டும்?

எம்ஆர்ஐ ஸ்கேன், மருத்துவம், உடல்நலம், ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எம்ஆர்ஐ ஸ்கேன் செயல்முறைக்கு முன் காது கேளாமைக்கான வெளிப்புற கருவிகள் போன்றவற்றை நிச்சயம் அகற்ற வேண்டும்.

அடுத்து, உங்களிடமுள்ள அனைத்து உலோகப் பொருட்களையும், உலோக நகைகளையும் அகற்றுமாறு அறிவுறுத்தப்படும். உங்களுடன் எம்ஆர்ஐ அறையில் இருக்கப்போகும் நபரும் அனைத்து விதமான உலோகப் பொருட்களையும் அகற்றிவிட வேண்டும், ஸ்கிரீனிங் படிவத்தையும் பூர்த்தி செய்யவேண்டும்.

"காரணம், எம்ஆர்ஐ கருவி சக்திவாய்ந்த காந்தங்களைப் பயன்படுத்துகிறது. உங்கள் உடலில் உலோகம் இருந்து, அது காந்தத்தால் ஈர்க்கப்பட்டால், பெரும் ஆபத்திற்கு வழிவகுக்கும். எனவே உடலில் ஏதேனும் உலோகம் அல்லது மின்னனுக் கருவிகள் இருந்தால் நிச்சயம் தெரியப்படுத்த வேண்டும்." என்கிறார் மருத்துவர் விஸ்வநாத்.

  • பர்ஸ், பணப்பை, கிரெடிட் கார்டுகள், காந்தப் பட்டைகள் கொண்ட அட்டைகள்

  • செல்போன்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்கள் போன்ற மின்னணு சாதனங்கள்

  • காது கேளாமைக்கான வெளிப்புற கருவிகள்

  • உலோக நகைகள் மற்றும் கடிகாரங்கள்

  • பேனாக்கள், சாவிகள், நாணயங்கள்

  • ஹேர்பின்கள், ஹேர் கிளிப்புகள் மற்றும் சில ஹேர் ஆயின்மென்ட்கள்

  • ஷூக்கள், பெல்ட் கொக்கிகள், பாதுகாப்பு பின்கள்

  • உலோகப் பொருள் கொண்ட எந்தவொரு ஆடை போன்ற வெளிப்புற பொருட்களை எம்ஆர்ஐ அறைக்கு நிச்சயம் கொண்டு செல்லக்கூடாது என 'ரேடியாலஜிஇன்ஃபோ' இணையதளம் எச்சரிக்கிறது.

"சுத்தத் தங்கம் காந்தத்தால் ஈர்க்கப்படாது, ஆனால் தங்க நகைகள் உலோகங்கள் கலந்திருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அதை நாங்கள் அனுமதிப்பதில்லை. ஒருவரின் உடலுக்கு ஆபத்து என்பதோடு மட்டுமல்லாது உலோகப் பொருட்கள் எம்ஆர்ஐ படங்களை சிதைத்துவிடும்." எனக் கூறுகிறார்.

பொதுவாக எம்ஆர்ஐ பரிசோதனை செய்வதற்கு முன், மருத்துவமனை நிர்வாகத்தால் 'மெட்டல் டிடக்டர்' போன்ற சாதனம் கொண்டு ஒருவர் சோதிக்கப்படுவார் என்கிறார் விஸ்வநாத்.

உடலுக்குள் பொருத்தப்பட்ட கருவிகள் குறித்த எச்சரிக்கை

எம்ஆர்ஐ ஸ்கேன், மருத்துவம், உடல்நலம், ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 'பேஸ்மேக்கர் போன்ற சாதனங்கள் இப்போது நவீன தொழில்நுட்பம் கொண்டு எம்ஆர்ஐ மூலம் பாதிக்கப்படாத வகையில் தயாரிக்கப்படுகின்றன'

"ஒருவரின் உடலுக்குள் இருக்கும் உலோக அல்லது மின்னணு கருவி (இம்பிளான்ட்), எம்ஆர்ஐ மூலம் பாதிக்கப்படாது (MRI Compatible) என சான்று பெற்றது என்றால் அவர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதில் பிரச்னையில்லை" என்கிறார் விஸ்வநாத்.

இத்தகைய இம்பிளான்ட் சாதனங்கள் அல்லது உடலுக்குள் இருக்கும் உலோகங்களுக்கு உதாரணமாக பின்வருபவற்றை குறிப்பிடுகிறது அமெரிக்காவின் 'மாயோ கிளினிக்' மருத்துவ அமைப்பு.

  • பேஸ்மேக்கர்- ஒழுங்கற்ற இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய மின் சாதனம்.

  • செயற்கை இதய வால்வுகள்.

  • இதய டிஃபிபிரிலேட்டர்.

  • மருந்து உட்செலுத்துதல் பம்புகள்.

  • நரம்பு தூண்டுதலுக்கான கருவிகள்.

  • உலோக கிளிப்புகள்.

  • அறுவை சிகிச்சையின்போது பொருத்தப்படும் உலோக பின், ஸ்க்ரூ, பிளேட், ஸ்டென்ட் அல்லது ஸ்டேபிள்ஸ்.

  • கோக்லியர் இம்பிளான்ட்ஸ் (காது கேளாமை போன்ற பிரச்னைக்கு)

  • தோட்டா அல்லது வேறு எந்த வகையான உலோகத் துண்டு.

  • கருப்பையக சாதனம்.

தொடர்ந்து பேசிய மருத்துவர் விஸ்வநாத். "கர்ப்பிணிப் பெண்களுக்கும் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் காந்தப் புலன்கள் மற்றும் ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுவதால், சிடி ஸ்கேன் போல கதிர்வீச்சு அபாயம் இல்லை என்பதால் பாதுகாப்பானது தான்" என்கிறார்.

பிற சவால்கள் என்ன?

எம்ஆர்ஐ ஸ்கேன், மருத்துவம், உடல்நலம், ஆரோக்கியம்

படக்குறிப்பு, கிளாஸ்ட்ரோபோபியா உடையவர்களுக்கு எம்ஆர்ஐ செயல்முறை சற்று சிக்கலானதாக இருக்கும் என்கிறார் மருத்துவர் விஸ்வநாத்.

ஆனால், கிளாஸ்ட்ரோபோபியா எனப்படும் குறுகிய அல்லது மூடப்பட்ட இடங்களில் தனியாக இருப்பது தொடர்பான அச்சம் கொண்டவர்களுக்கு எம்ஆர்ஐ செயல்முறை சற்று சிக்கலானதாக இருக்கும் என்றும் விஸ்வநாத் குறிப்பிடுகிறார்.

"எம்ஆர்ஐ செயல்முறை பெரும்பாலும் 30 நிமிடங்களுக்கும் அதிகமாக இருக்கும் என்பதால், கிளாஸ்ட்ரோபோபியா கொண்டவர்களுக்கு அப்படியே அசையாமல் படுத்திருப்பது ஒரு பதற்றத்தை ஏற்படுத்தும். அதைத் தணிக்க அவர்களுடன் உறவினர் அல்லது நண்பர் இருக்கலாம்" என்கிறார் அவர்.

ஸ்கேனர் கருவிக்குள் கால்கள் முதலில் செல்வது பதற்றத்தைக் குறைக்க உதவலாம், ஆனால் அது எப்போதும் சாத்தியமில்லை என பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் கட்டுரை தெரிவிக்கிறது.

சில எம்ஆர்ஐ ஸ்கேன்களில் கான்ட்ராஸ்ட் ஏஜென்ட் எனப்படும் பொருளும் ஒருவரது உடலுக்குள் செலுத்தப்படும். இது உடலின் சில திசுக்கள் மற்றும் ரத்த நாளங்களை இன்னும் தெளிவாகவும் விரிவாகவும் காண்பிக்கும்.

சில நேரங்களில் இந்த கான்ட்ராஸ்ட் ஏஜென்ட்கள்,

  • காய்ச்சல், சோர்வு

  • தோல் வெடிப்பு

  • தலைவலி

  • தலைச்சுற்றல்,

போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், ஆனால் இந்த பக்க விளைவுகள் பொதுவாக லேசானவை மற்றும் நீண்ட காலம் நீடிக்காது என்றும் தேசிய சுகாதார சேவையின் கட்டுரை தெரிவிக்கிறது.

அதேநேரம், கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கான்ட்ராஸ்ட் ஏஜென்ட் திசு மற்றும் உறுப்பு சேதத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என்பதால், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் 'கான்ட்ராஸ்ட் ஏஜென்ட்' குறித்து மருத்துவரிடம் முன்பே கலந்தாலோசிப்பது சிறந்தது என்றும் அந்தக் கட்டுரை பரிந்துரைக்கிறது.

"எம்ஆர்ஐ ஸ்கேன்களின் போது பயன்படுத்தப்படும் காந்தப்புலங்கள் மற்றும் ரேடியோ அலைகள் மனித உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆபத்து இருப்பதாகக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை, எனவே எம்ஆர்ஐ ஸ்கேன்கள் பாதுகாப்பான மருத்துவ நடைமுறைகளில் ஒன்றாகும். அதைக் குறித்து அச்சம், பதற்றம் கொள்ள தேவையில்லை" என்கிறார் மருத்துவர் விஸ்வநாத்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cz09kxzyl39o

டெட்டானஸ் தடுப்பூசி

1 month 3 weeks ago

519175913_24463025363353976_208348608358

டெட்டானஸ் அறிகுறிகள் தோன்றியவுடனே தீவிர சிகிச்சைப் பிரிவு இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் அட்மிஷன் செய்யப்பட வேண்டும்.

உடனடியாக டெட்டானஸ் தடுப்பூசி அதனுடன் டெட்டானஸ் இம்யூனோகுளோபுளின் எனும் உடனடி முறிவு மருந்து ஆகியவை வழங்கப்படும்.

செயற்கை சுவாசக்கருவியில் பொருத்துதல். நீண்ட நாட்கள் செயற்கை சுவாசம் தேவைப்படும் தன்மை.

தசை இறுக்கத்தை சரிசெய்யும் தளர்வு மருந்துகள் என மூன்று முதல் நான்கு வாரங்கள் கடுமையான போராட்டம் நடக்கும்.

தற்போதைய சூழ்நிலையில் செயற்கை சுவாச கருவிகள், தசை தளர்த்தி மருந்துகள் டெட்டானஸ் இம்யூனோகுளோபுளின் இருப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளதால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

எனினும், எளிதான தடுப்பூசியால் தடுக்க முடிந்த ஒரு நோய் குறித்து விழிப்புணர்வு பெறாமல் இருப்பது தவறு.

தங்களது குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த பின்

ஆறாவது வாரம்

பத்தாவது வாரம்

பதினான்காம் வாரம்

அதற்குப் பிறகு 16 முதல் 24 மாதங்கள்

அதற்குப் பின் ஐந்து முதல் ஆறு வயதுக்குள்

அதற்குப் பின் பத்து வயதிலும்

பதினாறு வயதிலும் டெட்டானஸ் தடுப்பூசியை வழங்குவதை உறுதி செய்யவும்.

காயம் சிறிதோ பெரிதோ உடனடியாக டெட்டானஸ் தடுப்பூசி பெறுவதை வழக்கமாகக் கொள்ளவும்.

ஏற்கனவே டிடி ஊசியை ஐந்து வருடங்களுக்குள் போட்டிருந்தால் தேவையில்லை. எப்போது போட்டோம் என்று சந்தேகம் இருப்பின் காயத்துக்கு பின்பு டிடி தடுப்பூசி பெறுவது நல்லது. அதனால் எந்த பாதகமும் இல்லை.

டெட்டானஸ் ஏற்பட்டு மரணமடைந்த சிலருக்கு காயமுற்ற பின் டிடி ஊசி போடப்பட்டும் டெட்டானஸ் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணம்,

ஏற்கனவே முறையான பூஸ்டர் தடுப்பூசிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் பெறாமல் விட்டு, காயம் ஏற்பட்ட பின் தடுப்பூசி போட்டாலும்

அதற்குரிய எதிர்ப்பு சக்தி போதுமான அளவு வெளிப்படாமல் போவதால் டெட்டானஸ் கிருமி வென்று விடுகிறது.

சமீபத்தில் டெட்டானஸ் ஏற்பட்டு இறந்த அஞ்செட்டி கிராம சிறுவனுக்கும் அவனுக்கு காயம் ஏற்பட்ட பின் உடனடியாக டிடி ஊசி போடப்பட்டது. ஆயினும் அவனுக்கு டெட்டானஸ் நோய் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு தயவு கூர்ந்து நமது பிள்ளைகளுக்கு அவர்கள் பிறந்த முதல் வருட தடுப்பூசிகளை சிறப்பாக சரியாக வழங்கும் நாம்..

அவர்களின் ஐந்தாவது வயது (DT) , பத்தாவது வயது, பதினாறாம் வயது அதற்குப் பிறகு பத்து வருடம் ஒருமுறை டெட்டானஸ் தடுப்பூசிகளையும் சரியாக வழங்கிடுவோம் என்று உறுதி ஏற்போம்

டெட்டானஸை முற்றிலுமாக ஒழிப்போம்

நன்றி

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர்

சிவகங்கை

https://www.facebook.com/100002195571900/posts/24463025596687286/?rdid=9R4LokMDKkQyVDfQ#

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்! ஆரோக்கியம் அனுபவியுங்கள்.......!

2 months ago

#சுகர்னு docter கிட்ட போறாங்க ..
அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார்.
#ஒரு_வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார்.
😂#மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார்.
மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு இன்சுலின் போட சொல்றார்.
🧔#அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்றார்.
அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார்.
அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான்.
காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது.
இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை.
1.
தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல.
2.
மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு அவன் யோசிக்கல.
3.
ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை.
4.
வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்.
TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை. அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் சிந்திக்கிறதும் இல்லை.
வீட்டுல இருக்கிற வெந்தயத்தை , காய்கறிகள் வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான்.
பாடையில போகற வரைக்கும்
அக்கு பிரஷர், இயற்கை மருத்துவம், சித்தா, யோகா இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம, தன்னோடு மேலும் நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான்.
👆👆👆இந்த பதிவு நகைசுவையாகவும் , யதார்த்தமான உண்மையை வெளிப்படுத்தியதால் பதிவிடுகிறேன்.
மனம் கெட்டால் உடல் கெடும், உடல் கெட்டால் மனம் கெடும்.
அதனால் மனதுக்கும், உடலுக்குமான,
முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்..
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்

################### ###############

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்.
தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!
அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.❗
1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.
2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.
3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.
4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.
5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.
6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.
7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.
அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.
8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.
9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.
10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.
11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.
12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.
வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.
13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.
கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.
அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.
எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.
உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.
வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. ☘
உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.
குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.
வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.
இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.
பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?
இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.
இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.
கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?
மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!
இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!
இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!
இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!
மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!
உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!
ஆரோக்கியம் அனுபவியுங்கள்.......!

- இணையத்தில் படித்தது. -

Checked
Mon, 09/15/2025 - 19:37
நலமோடு நாம் வாழ Latest Topics
Subscribe to நலமோடு நாம் வாழ feed