நலமோடு நாம் வாழ

இரத்தப் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த என் நண்பனின் கதை இது - கண்டிப்பாக வாசிக்கவும் - நிழலி

2 days 4 hours ago

நண்பர்களே,

2021 செப்டம்பர் மாதம் என் வாழ்க்கை ஒரு கணநேரத்தில் தகர்ந்து போனது. ஒரு வழக்கமான மருத்துவப் பரிசோதனையில் அன்று ஒரு பயங்கரமான நோயைக் கண்டறிவதாக மாறியது. Acute Lymphoblastic Leukaemia (ALL) எனும் இரத்த புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

மருத்துவராகிய நான் உண்மையை அறிந்திருந்தேன்: Donor (தானமளிப்பவர்) ஒருவரிடமிருந்து Stem cell transplant சிகிச்சை இல்லாமல் முழு குணமடைவது கடினம். என் சகோதரரும் குடும்பத்தினரும் உடனடியாக சோதனை செய்து கொண்டனர், ஆனால் யாரும் முழு பொருத்தமாக இல்லை.

அதிக அளவு chemotherapy மற்றும் radiotherapy சிகிச்சைகள் பழுதடைந்த என் bone marrow களை முற்றிலுமாக அழித்தே விடும். பிறகு Stem cell சிகிச்சை மூலமாக முழுமையாக குணமடைய முடியும். Stem cells (ஸ்டெம் செல்கள்) என்பது உடலின் “ஆரம்ப நிலை செல்கள்”. இவை எந்த விதமான செல்களாகவும் (ரத்த அணுக்கள், நோய் எதிர்ப்பு செல்கள், திசு செல்கள்…) மாறும் திறன் கொண்டவை.

பொருத்தமான donor ஒருவரிடமிருந்து என்னுடலில் பொருந்தத்தக்க Stem cells களிற்காக காத்திருந்த ஒவ்வொரு நாளும் மரணத்தின் விளிம்பை அண்மித்துக் கொண்டிருத்ததை நன்றாகவே உணர்ந்தேன்.

நம்பிக்கை உலகளாவிய தானமளிப்பவர் பட்டியல் (Donor registry) -களுக்கு திரும்பியது. பொதுவாக பொருத்தம் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களிடம் தான் கிடைக்கும்.

நான் ஒரு இலங்கைத் தமிழர். Donor registry-களில் எமது சமூகம் மிகக் குறைவாகவே பதிவு செய்திருக்கிறது. உலகெங்கிலும் உள்ள சிறுபான்மை இனத்தவருக்கும், பழங்குடி மக்களுக்கும் இதே கசப்பான உண்மை தான்: donor-கள் மிகக் குறைவு, விழிப்புணர்வு இல்லாததால் பல உயிர்கள் தவிக்கின்றன.

வாரங்கள் ஊர்ந்தன. பின்பு 2021 இறுதியில், ஒரு 100% பொருத்தம்! அமெரிக்காவில் வசிக்கும் ஒரு அந்நியப் பெண்மணி, பல வருடங்களுக்கு முன்பே registry-யில் பதிவு செய்திருந்தார். அவரது இரத்த HLA எனும் மரபணுக்கள் என்னுடையவற்றின் சரியான பிரதிபலிப்பு. எனது குடும்பத்திற்கு நிம்மதியையும் நம்பிக்கையையும் மீளவும் கொண்டு வந்தது.

தயக்கமின்றி அவர் ஒப்புக் கொண்டார்.

தானம் செய்வது? ரத்தம் கொடுப்பது போலத்தான் எளிமையானது. சில நாட்கள் ஊசி போட்டு stem cell-களை அதிகரித்து, பின்பு மருத்துவமனையில் ஒரு நாள் செலவழித்து இரத்தத்திலிருந்து எடுத்துக் கொள்வார்கள். பெரும்பாலான donor-கள் ஒன்று இரண்டு நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்கள் - சற்று சோர்வு மட்டுமே. ஆனால் இந்த தானம், நோயாளிக்கு அவர்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும்.

Registry-யில் சேர்வது மிக எளிமை: ஒரு கன்னத்துச் சோதனை (cheek swab), வாய் உட்புறக் கன்னத்தைத் துடைத்து DNA சேகரிக்கும் முறை மட்டுமே. பல வருடங்கள் அல்லது பல தசாப்தங்களுக்குப் பிறகு கூட நீங்கள் யாருக்காவது பொருத்தம் ஆகலாம். அப்போதுதான் உண்மையான உறுதிப்பாடு தேவைப்படும்.

மார்ச் 2022: நான்கு விலைமதிப்பற்ற பைகளில் அவரது stem cell-கள் என்னிடம் வந்து சேர்ந்தன. திரவ வடிவிலான புதிய உயிர். என் நரம்புகளில் செலுத்தப்பட்டு, மெதுவாக வேலை செய்ய ஆரம்பித்தன. குணமடைவது மிக மெதுவாக இருந்தது - தொற்று நோய்களும் பின்னடைவுகளும் நடந்தன.

இன்று 2025: நான் என் குடும்பத்திடமும், வேலையிடத்திலும், வாழ்க்கையிலும் மீண்டும் அடியெடுத்து வைத்தேன்.

என் donor-க்கு தைரியமும், நேரமும், இதயமும் தேவைப்பட்டது. ஆனால் எனது உயிரைக் காப்பாற்றிய அந்த உன்னத ஜீவன் யார்? விதிகள் காரணமாக பல வருடங்கள் அவர் அடையாளம் மறைக்கப்பட்டு வைத்திருக்கும்.

2025-ல் ஒஸ்ரேலியாவில் நடந்த ஒரு தொண்டு நிகழ்ச்சியில் திருப்பம்: ஒரு பெண்மணி என் நண்பரிடம் வந்து, “நான் பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் stem cell தானம் செய்தேன். எனது பெறுபவர் எனது வயதுடையவர், என் இனத்தைச் சேர்ந்தவர், ஒஸ்ரேலியாவில் வசிப்பவர் என்று மட்டும் கூறினார்கள். அவர் உயிருடன் இருக்கிறாரா என்றே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பேன்” என்றார்.

நண்பர் அதிர்ச்சி அடைந்தார். விவரங்கள் அனைத்தும் பொருந்தின. தேதிகள், இரத்த வகை, கால அட்டவணை - எல்லாம் பொருந்தியது! இருவரது சம்மதத்துடன் என் நண்பர் எங்களை இணைத்தார். அந்த பெண் 2008-ல் அவரது 4 வயது மருமகனுக்கு stem cell transplant தேவைப்பட்டபோது registry-யில் சேர்ந்திருந்தார். எல்லா முயற்சிகளையும் செய்தும், அந்தக் குழந்தை உயிர் பிழைக்கவில்லை. 14 வருடங்கள் கழித்து அழைப்பு வந்தது - வேறொருவருக்கு அவர் stem cells பொருத்தம்.

நாங்கள் சந்தித்தோம். அணைத்துக் கொண்டோம். கண்ணீர் வழிந்தது. எனக்கு உயிர் கொடுத்த கையை இறுதியாகப் பிடித்தேன். சகோதர-சகோதரி சந்திப்பது போல இருந்தது. தன்னலமற்ற தானம் காரணமாக பிறந்த, தற்செயலால் இணைந்த, அறிவியலால் உறுதிப்படுத்தப்பட்ட பிணைப்பு.

பிரியும்போது அவர் சொன்னது: “பின்னால் திரும்பிப் பார்க்காதே. மகிழ்ச்சியோடு எதிர்காலத்தை பார்.” ஒரு தாய் மகனிடம் சொல்வது போல இருந்தது.

இது என் வாழ்க்கையின் அதிசயம் மட்டுமல்ல - இது அனைவருக்கும் அழைப்பு.

ஒரு cheek swab-ஆல் அவர் என் உயிரைக் காப்பாற்றினார். நீங்களும் வேறொருவர் உயிர் காப்பாற்றுவீர்களா?

ஒரு கன்னத்துச் சோதனை மட்டுமே போதும் registry-யில் சேர. பல வருடங்கள் கழித்து கூட நீங்கள் யாருடைய உயிரையாவது காப்பாற்றலாம். Stem cell தானத்தில் இனப் பொருத்தம் அரிது. நம் விழிப்புணர்வே சக்தி.

யாரோ ஒரு நபர் வாழ்க்கை கதையில் நாயகி அல்லது நாயகனாகுங்கள். இன்றே பதிவு செய்யுங்கள்.

• US: nmdp.org

• Australia: stemcelldonors.org.au

• Canada: blood.ca/en/stemcells

• UK: blood.co.uk/stem-cell-donor-registry/

• France: dondemoelleosseuse.fr

• Germany: dkms.de

• Sri Lanka: praana.lk

• India: datri.org

இந்த கதை - என் தானமளிப்பவரின் மருமகனுக்கு சமர்ப்பணம். அந்தக் குழந்தை விட்டுச் சென்ற நினைவு - என்றென்றும் நம்பிக்கையாக வாழ்கிறது.

:J, Australia.

நீங்கள் 70 வயதுகளில் ஆரோக்கியமாக இருக்க 30 வயதுகளில் செய்ய வேண்டிய சிறிய மாற்றங்கள் என்ன?

3 days 14 hours ago

வாழ்க்கை, ஆரோக்கியம், மனித உடல், தூக்கம், அறிவியல்

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • டேவிட் காக்ஸ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

15 நிமிட விறுவிறுப்பான நடைப்பயிற்சி முதல், தினசரி முறையான தூக்கம் வரை - உங்கள் 30களில் சில பழக்கங்களைப் பின்பற்றுவது 70கள் வரை கூட உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

உங்கள் வாழ்க்கையில் எழுபதுகளை அடையும் போது, இளமைப் பருவத்துடன் ஒப்பிடுகையில், சற்றே பலவீனமாகவும், சோர்வாகவும், அறிவாற்றல் ரீதியாக பின்னடைவைச் சந்திக்கவும் வாய்ப்புள்ளது.

உங்களது தூக்கம் சார்ந்த வழக்கங்கள் மாறியிருக்கலாம், இதனால் காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பீர்கள், மாலையில் தூக்க கலக்கத்தை அதிகமாக உணருவீர்கள். மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், மக்கள்தொகை சராசரிகளின் அடிப்படையில், உங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு நாள்பட்ட நோயாவது இருக்கலாம்.

இருப்பினும், இது தவிர்க்க முடியாதது அல்ல என்பதில் ஆராய்ச்சியாளர்கள் முன்னெப்போதையும் விட உறுதியாக உள்ளனர்.

"இப்போது நம்மிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில், பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தினால், 90 அல்லது 95 வயது வரை நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என்பதை எதிர்பார்க்கலாம்," என்று கலிஃபோர்னியாவில் உள்ள 'பக் இன்ஸ்டிட்யூட் ஃபார் ரிசர்ச் ஆன் ஏஜிங்கின்' தலைவரும் தலைமை நிர்வாகியுமான எரிக் வெர்டின் கூறுகிறார்.

"ஆனால், பெரும்பாலான மக்கள் 65 அல்லது 70 வயது வரை நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து, பின்னர் நோய்வாய்ப்பட்டு, முதுமையின் அனைத்து சிரமங்களையும் அனுபவிக்கும் நிலை தற்போது உள்ளது, அதனுடன் ஒப்பிடுகையில் இந்த விஷயத்தில் நாம் செல்லவேண்டிய தூரம் அதிகம்".

மாற்றங்களை விரைவாகத் தொடங்குவது நல்லது

வாழ்க்கை, ஆரோக்கியம், மனித உடல், தூக்கம், அறிவியல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முதுமை தொடர்பான சிறிய மாற்றங்களை, உடல் முதன்முதலில் வெளிப்படுத்தத் தொடங்கும் ஒரு முக்கியமான கட்டமாக 30களை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

உடற்பயிற்சியை அதிகரிப்பது, நல்ல உணவுப் பழக்கம் கொண்டிருப்பது, மது அருந்துவதைக் குறைப்பது போன்ற நன்மை பயக்கும் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் எந்த வயதிலும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்று வெர்டின் கூறினாலும், அத்தகைய மாற்றத்தை விரைவாகத் தொடங்கினால் இன்னும் அதிக பலன்களைப் பெறலாம்.

முதுமை தொடர்பான சிறிய மாற்றங்களை, உடல் முதன்முதலில் வெளிப்படுத்தத் தொடங்கும் ஒரு முக்கியமான கட்டமாக உங்கள் 30களை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது, தசை நிறை மற்றும் வலிமை, எலும்பு அடர்த்தி அல்லது வளர்சிதை மாற்ற ஒழுங்குமுறை போன்ற பல உடலியல் அமைப்புகளில் ஏற்படும் மாற்றங்கள்.

"இந்த காலகட்டத்தில் நீண்டகால மீள்தன்மையை வளர்க்கும் நடத்தைகளை ஊக்குவிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இது வலியுறுத்துகிறது" என்கிறார் அமெரிக்காவின் மினசோட்டாவைச் சேர்ந்த 'மாயோ கிளினிக்கின்' கோகோட் மையத்தின் உடலியல் துறை பேராசிரியர் ஜுவோன் பாசோஸ்.

இதில் என்னென்ன சாத்தியம் என்பதைப் புரிந்துகொள்ள, முதுமை தொடர்பான செயல்முறையை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள், வழக்கமான போக்குகளைப் பின்பற்றாத மக்கள் மீது கவனம் செலுத்த விரும்புகிறார்கள். ஒரு உதாரணம், ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் அல்லது பிற விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்கும் 35 வயதுக்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள். அவர்களில் பலர் தங்களது 60கள் அல்லது அதற்குப் பிறகும் இதைத் தொடர்கிறார்கள்.

மான்செஸ்டர் பெருநகர பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம் தொடர்பான மூத்த விரிவுரையாளர் பால் மோர்கன், "இந்த விளையாட்டு வீரர்களில் பலர், முதுமையடைவது தொடர்பான விஷயத்தில், மற்றவர்களை விட மிகவும் மாறுபட்ட முறையைக் கொண்டுள்ளனர். இந்த முறை, இருதய செயல்பாடு மற்றும் தசை வலிமை மற்றும் செயல்பாட்டில் அதிக உச்சநிலையைத் தொடர்ந்து, தாமதமாக ஏற்படும் ஒரு வீழ்ச்சியால் வகைப்படுத்தப்படுகிறது." என்கிறார்.

இதன் விளைவாக, அவர்களில் பலர் முதுமை வாழ்க்கையில் இயக்கம் மற்றும் சுதந்திரத்தை இழப்பதை நீண்ட காலத்திற்கு தவிர்க்க முடிகிறது என்று அவர் கூறுகிறார்.

"வாழ்க்கையின் நடுப்பகுதிகளில், ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படும் இந்த கூடுதல் சக்தி அவர்களிடம் உள்ளது" என்று மோர்கன் கூறுகிறார்.

இது நாம் அனைவரும் கற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று. மோர்கனின் கூற்றுப்படி, ஆரோக்கியமான முறையில் முதுமையடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க, நமது 30களில், குறிப்பாக தசை வலிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் ஏரோபிக் திறன் (செயல்பாட்டின் போது உங்கள் உடல் பயன்படுத்தக்கூடிய அதிகபட்ச ஆக்ஸிஜன் அளவு) ஆகியவற்றின் அடிப்படையில், அதிகபட்ச அளவை அடைய முயற்சிக்க வேண்டும்.

விளையாட்டு ஒரு சிறந்த வழி

வாழ்க்கை, ஆரோக்கியம், மனித உடல், தூக்கம், அறிவியல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜப்பானிய ஆய்வு ஒன்று சைக்கிள் ஓட்டுதலின் நன்மைகளை எடுத்துக்காட்டுகிறது

70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிகப்பெரிய அபாயங்களில் ஒன்று தடுமாறி விழுவது. இது சுறுசுறுப்பு குறைவு மற்றும் மூட்டுகளில் இயக்கம் குறைவால் ஏற்படுகிறது. 'நடப்பதற்கு உதவும் உடலின் கீழ் அங்கங்களில் உள்ள தசைக் குழுக்கள் சுயமாக வாழ்வதற்கும், முதுமையில் ஆரோக்கியமாக இருப்பதற்கும் முக்கியம். அதனால் அவற்றில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்" என்று மோர்கன் கூறுகிறார்.

இதை அடைவதற்கு விளையாட்டு ஒரு சிறந்த வழியாகும். டென்னிஸ் அல்லது பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்பதற்கும், நீண்ட ஆயுளுக்கும் தொடர்பு உள்ளது என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

அதே சமயம், 2025ஆம் ஆண்டு ஜப்பானிய ஆய்வு ஒன்று சைக்கிள் ஓட்டுதலின் நன்மைகளை எடுத்துக்காட்டுகிறது, அதன்படி தொடர்ந்து சைக்கிள் ஓட்டும் முதியவர்களுக்கு நீண்டகால பராமரிப்பு தேவைப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு அல்லது முன்கூட்டியே இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

வாரத்திற்கு 75 நிமிடங்களுக்கு மேல் ஓடுவது முதுமை செயல்முறையின் சில அம்சங்களின் மீது தாக்கம் செலுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் உடலை உழைப்பின் உச்சநிலைக்குத் தள்ளுவது உண்மையில் முதுமையின் சில அம்சங்களை துரிதப்படுத்தக்கூடும் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன, ஆனால் இது இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளப்படவில்லை.

மறுபுறம், ஒரு ஆய்வு தினமும் குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் மிதமான அல்லது தீவிர உடற்பயிற்சி செய்வது மூளைக்கு வயதாவதை குறைக்க உதவும் என்று கூறுகிறது. அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவ உதவிப் பேராசிரியரான அதிதி குர்கரின் கூற்றுப்படி, "ஒப்பீட்டளவில் எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நாம் அனைவரும் ஆரோக்கியமாக முதுமையடைவதன் நன்மைகளைப் பெறலாம். சாப்பாட்டுக்குப் பிறகு 15 நிமிட விறுவிறுப்பான நடைப்பயிற்சி கூட அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும்".

30களில் நமது தசைகள் மற்றும் இருதய அமைப்பைப் பாதுகாத்து வலுப்படுத்துவது போல, நமது மூளைக்கும் அதையே செய்ய முடியும். வழக்கமான பரிசோதனைகள், முறையாக பல் துலக்குதல், புகைபிடிக்காமல் இருப்பது மற்றும் சர்க்கரை உணவுகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துதல் மூலம் நல்ல பல் ஆரோக்கியத்தைப் பேணுவது ஆச்சரியமான மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஈறுகளில் ஏற்படும் அழற்சி அதிகரிப்பால் உருவாகும் 'பீரியோடொண்டல் நோய்' என்ற ஈறு நோய்க்கு, வாழ்க்கையின் பிற்பகுதியில் அறிவாற்றல் குறைவதற்கான அபாயத்துடன் தொடர்புள்ளது என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மூளையில் நீண்டகால அழற்சியின் தாக்கத்தால் ஏற்படுகிறது என்று கருதப்படுகிறது.

தூக்கத்தின் முக்கியத்துவம்

வாழ்க்கை, ஆரோக்கியம், மனித உடல், தூக்கம், அறிவியல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தூக்கம் மனிதர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை பின்பற்றுவதற்கான ஆற்றலையும் உந்துதலையும் வழங்குகிறது.

30களில் இருந்தே மது அருந்துவதைக் குறைக்கத் தொடங்குவதும் சாத்தியமாகும். மது அருந்துவது உடலில் மரபணு வெளிப்பாட்டில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையது, இது முதுமையடைவதை துரிதப்படுத்துகிறது. மதுவும் தூக்கத்திற்கு ஒரு முக்கிய இடையூறாகும். வரவிருக்கும் காலங்களில் வயது தொடர்பான மூளைச் சுருக்கத்தைத் தவிர்ப்பதற்கும் டிமென்ஷியா அபாயத்தைக் குறைப்பதற்கும் நிலையான தூக்க முறைகள் முக்கியமாக இருப்பதாக வெர்டின் கூறுகிறார்.

இதில் நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்கச் சென்று எழுந்திருப்பதை உறுதிசெய்வதும் அடங்கும், இது தூக்க ஒழுங்குமுறை என்று அழைக்கப்படுகிறது. தூக்கம் மனிதர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை பின்பற்றுவதற்கான ஆற்றலையும் உந்துதலையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், மனித உடல் செல் மீளுருவாக்கத்தில் கவனம் செலுத்தவும் உதவுகிறது.

"ஒரு இரவு தூக்கம் இல்லாவிட்டாலும், உங்கள் வளர்சிதை மாற்ற செயல்முறை மாறுகிறது, மேலும் உங்கள் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் செய்ய வேண்டும் என்ற உங்கள் மன உறுதியும் போய்விடும்" என்று அவர் கூறுகிறார்.

வழக்கமான தூக்க முறையைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தின் காரணமாக, வெர்டின் இப்போது ஒவ்வொரு இரவும் அலாரம் கடிகாரத்தைப் பயன்படுத்துவதாகக் கூறுகிறார், ஆனால் தூக்கத்திலிருந்து எழுவதற்கு அல்ல, மாறாக தூங்கச் செல்ல நினைவூட்டுவதற்காக.

"இதற்குக் காரணம், நாம் சர்க்காடியன் உயிரினங்கள்," என்று அவர் கூறுகிறார்.

"மரபணு வெளிப்பாடு முதல் வளர்சிதை மாற்றம் வரை நமது முழு உயிரியலும் 24 மணி நேர சுழற்சியுடன் ஒத்திசைவில் உள்ளது. எனவே ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வது உங்கள் உடல் இவை அனைத்திற்கும் மிகவும் ஒத்திசைவாக இருக்க உதவுகிறது."

இருப்பினும், ஒரு நல்ல இரவு தூக்கம் எப்போதும் சாத்தியமில்லை என்பது இளம் குழந்தைகளை வளர்க்கும், 30களில் இருக்கும் பெற்றோருக்கு தெரியும்.

'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்'

வாழ்க்கை, ஆரோக்கியம், மனித உடல், தூக்கம், அறிவியல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'உண்ணாவிரதம் இருக்கும்போது, அது உங்கள் உடலை செரிமானத்தில் கவனம் செலுத்தாமல், சரிசெய்வதில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது'

இறுதியாக, உங்கள் 30கள் என்பது ஊட்டச்சத்தை இன்னும் கொஞ்சம் தீவிரமாக எடுத்துக்கொள்வதற்கான ஒரு உகந்த நேரமாக இருக்கலாம். நாம் செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்று, பகலில் உணவு சாப்பிடாமல் இருக்கும் நேரத்தை அதிகமாக உடலுக்கு கொடுப்பது. உதாரணமாக, 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்' (Intermittent Fasting) மூலம் இதைச் செய்யலாம்.

'இடைநிலை உண்ணாவிரதத்தை' ஆதரிப்பவர்கள் பலர் 16:8 பிரிவை பரிந்துரைக்கின்றனர், அதாவது நீங்கள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து உங்கள் உணவை எட்டு மணி நேரம் என்ற வரம்புக்குள் சுருக்குவது.

ஆனால், எளிதாக நிர்வகிக்கக்கூடிய 12:12 பிரிவின் மூலம் நாம் ஏராளமான நன்மைகளை அடைய முடியும் என வெர்டின் கூறுகிறார்.

"நீங்கள் உண்ணாவிரதம் இருக்கும்போது, அது உங்கள் உடலை செரிமானத்தில் கவனம் செலுத்தாமல், சரிசெய்வதில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது. நான் மக்களிடம் சொல்வது, நீங்கள் சாப்பிடும்போது, ஒன்றைக் கட்டமைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உண்ணாவிரதம் இருக்கும்போது, உடலைச் சரிசெய்கிறீர்கள்."

பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அதிக அளவு உணவு கரோட்டினாய்டுகளை (Carotenoids - சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கேரட் போன்ற காய்கறிகளிலும், மாம்பழம் மற்றும் அப்ரிகாட் போன்ற பழங்களிலும் காணப்படும் தாவர ரசாயனங்கள்) உட்கொள்பவர்கள் மெதுவாக முதுமையடைகிறார்கள் என்ற தனது ஆய்வு முடிவு மற்றும் பிற ஆய்வுகளை மேற்கோள் காட்டும் குர்கர், 'ஏனெனில் இந்த ரசாயனங்கள் நமது செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் எனப்படும் சேதத்திலிருந்து பாதுகாப்பதில் பங்கு வகிக்கக்கூடும்' என்கிறார்.

வாழ்க்கை, ஆரோக்கியம், மனித உடல், தூக்கம், அறிவியல்

பட மூலாதாரம், Getty Images

ஒட்டுமொத்தமாக, 30களில் நாம் எடுக்கும் முடிவுகள் நம் முதுமையை பாதிக்கின்றன என்பதை பாசோஸ் உறுதியாக நம்புகிறார். பல தசாப்தங்களாக அமெரிக்காவின் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கண்காணித்து வரும் பெரிய ஆய்வுகளை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

உதாரணமாக, ஃப்ரேமிங்ஹாம் இதய ஆய்வு மற்றும் செவிலியர் சுகாதார ஆய்வு போன்றவை, நடுத்தர வயதில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிக்கும் மக்கள், பல தசாப்தங்களுக்குப் பிறகும் கூட இருதய நோய், அறிவாற்றல் வீழ்ச்சி மற்றும் பலவீனம் ஆகியவற்றின் அபாயங்களைக் குறைவாகக் கொண்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றன.

"30களில் ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம், காலப்போக்கில் குவிந்து, 70களில் செயல்பாட்டு வீழ்ச்சிக்கு பங்களிக்கும் நுட்பமான மூலக்கூறு மற்றும் செல்லுலார் மாற்றங்களைத் தடுக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம்," என்கிறார் பாசோஸ். "இதைச் செய்வதன் மூலம் முதுமையைத் தடுக்க முடியும் என்று நான் நம்பவில்லை என்றாலும், அதன் பாதையை நிச்சயமாக மாற்ற முடியும்."

30களில் நல்ல ஆரோக்கியத்தோடு தான் நாம் இருக்கிறோம் என உங்களுக்குத் தோன்றலாம், ஆனால் முதுமை இறுதியில் நம் அனைவரையும் பாதிக்கிறது. நீங்கள் அதிகப்படியான மதுவைத் தவிர்த்து, உங்கள் பிற்கால வாழ்க்கையில் தொடர்ந்து விளையாடக்கூடிய ஒரு விளையாட்டைக் கண்டுபிடித்து, வழக்கமான தூக்க முறையைக் கடைபிடித்து, தொடர்ந்து சாப்பிடுவதிலிருந்து உங்கள் உடலுக்கு அதிக இடைவெளிகளைக் கொடுத்தால், வருங்காலங்களில் உங்கள் இதயம், தசைகள், மூட்டுகள் மற்றும் மூளை என அனைத்தும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0l7lj2pz0do

தினசரி காலையில் மலம் கழிக்க வேண்டுமா? மலச்சிக்கலுக்கான காரணங்களும் தீர்வும்

5 days 8 hours ago

உலக கழிவறை தினம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

19 நவம்பர் 2025, 01:45 GMT

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 19-ஆம் தேதி உலக கழிவறை தினம் கடைபிடிக்கப்படுறது.

ஐ.நாவால் 2013-ஆம் ஆண்டு முதல் இந்த தினம் அதிகாரப்பூர்வமாகக் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான மையக்கருவாக 'மாறி வரும் உலகில் தூய்மை' (Sanitation in a changing world) உள்ளது.

மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர், அதாவது சுமார் 340 கோடி பேர் சரியான சுகாதார வசதியற்ற சூழலில் வாழ்வதாக ஐநா கூறுகிறது.

கழிவறை வசதி இல்லாமல் இருப்பது, தூய்மையான கழிவறைகள் இல்லாததால் மலம் கழிப்பதை தவிர்ப்பது அல்லது தள்ளிப்போடுவது போன்ற காரணங்களால் மலச்சிக்கல் பிரச்னையை பலரும் எதிர்கொள்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மலச்சிக்கல் ஏற்படுத்தும் காரணிகள் அதனால் ஏற்படும் சுகாதாரப் பிரச்னைகள் பற்றி சென்னையைச் சேர்ந்த மூத்த இரைப்பை குடல் மருத்துவரான கயல்விழி ஜெயராமனிடம் பிபிசி தமிழ் பேசியது.

மலச்சிக்கல் என்பது வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்பினரையும் பாதிப்பதாகக் கூறுகிறார் கயல்விழி ஜெயராமன். பெரும்பாலும் தினசரி பழக்க வழக்கங்களால் தான் மலச்சிக்கல், சீரற்ற குடல் இயக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். தினசரி மலம் கழிப்பதன் அவசியம், மலச்சிக்கல் பிரச்னைக்கான காரணிகள், தீர்வுகள் பற்றி அவர் பகிர்ந்து கொண்ட விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தினசரி காலையில் மலம் கழிக்க வேண்டுமா?

உலக கழிவறை தினம், குடல் இயக்கம், மலச்சிக்கல்

பட மூலாதாரம், Getty Images

பொதுவாக குடல் இயக்கம் பற்றி தவறான புரிதல்கள் உள்ளன. தினசரி காலை மலம் கழித்தே ஆக வேண்டும் எனக் கற்பிக்கப்படுகிறது. ஆனால் அது அறிவியல் ரீதியாக சரியானது கிடையாது. ஒவ்வோர் உணவுக்குப் பிறகும் 20 நிமிடங்கள் கழித்து அதற்கான உணர்வுகள் ஏற்படும். பெரும்பாலும் அத்தகைய உணர்வு ஏற்படுகிற போது அடக்கி வைப்பதுதான் மலச்சிக்கல் பிரச்னையை ஏற்படுத்துகிறது.

மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படுகிற போதே கழிவறைக்குச் செல்ல வேண்டும். அதனை புறக்கணிக்கக் கூடாது. ஆனால் பயணங்களில் இருப்பவர்கள், வெளி வேலைக்குச் செல்பவர்கள், பணியிடங்களில் முறையான கழிவறை வசதி இல்லாதவர்கள், வீடுகளில் கழிவறை வசதி இல்லாதவர்கள் அவ்வாறு செய்ய முடியாமல் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

தூய்மையான சூழல் இல்லாதபோது மக்கள் அதனை தள்ளிப்போடுவது இயற்கையான சுழற்சியை பாதிக்கிறது. பெரும்பாலானோர் வீட்டுக்குச் சென்று பார்த்துக் கொள்ளலாம், அல்லது இரவு பார்த்துக் கொள்ளலாம் எனத் தவிர்க்கின்றனர். ஆனால் இது செரிமான அமைப்பை பாதிக்கும். மலம் கழிப்பதை முடிந்தவரை தவிர்க்கக் கூடாது. மலச்சிக்கலுடன் ஒப்பிடுகையில் சுகாதாரமற்ற கழிவறை பயன்படுத்துவதால் ஏற்படும் தொற்று பாதிப்பு என்பது மிக மிகக் குறைவு.

யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது?

உலக கழிவறை தினம், குடல் இயக்கம், மலச்சிக்கல்

பட மூலாதாரம், Getty Images

மலச்சிக்கல் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து வயதினருக்கும் வந்தாலும் பள்ளி செல்லும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதை காண முடிகிறது. குழந்தைகளுக்கு கழிவறை மற்றும் மலம் கழிக்கும் வழக்கத்தை முறையாக பின்பற்றுவது குறித்து சரியான பயிற்சி கொடுக்க வேண்டும். வேலை நேரம் மாறுவது, வாழ்க்கை முறை மாறுவது, சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துக் கொள்ளாதது போன்றவை மலச்சிக்கலை அதிகப்படுத்துகின்றன.

நீண்ட கால பாதிப்பு இருப்பவர்கள் அதனை புறக்கணிக்கக்கூடாது. மலச்சிக்கல் தொடர்வதால் மூல நோய், ரத்தக்கசிவு, வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

உணவுப் பழக்கம் காரணமா?

மாமிசம் போன்ற அதிக புரதச்சத்து உள்ள உணவுகள் சாப்பிடுகிறபோது மலச்சிக்கல் ஏற்படும். இருப்பினும் அது அச்சப்பட வேண்டிய விஷயம் இல்லை. அத்தகைய சூழலில் நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மலச்சிக்கல் பிரச்னையை தீர்ப்பதற்கான சில வழிகள்.

  • தினமும் குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்

  • 20 - 25 கிராம் நார்ச்சத்துள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்

  • துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்

  • அதிக புரதச்சத்துள்ள உணவு சாப்பிடும் போது அதற்கு நிகராக நார்ச்சத்துள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்

பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுமா என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதாகக் கூறும் மருத்துவர் கயல்விழி ஜெயராமன், "மலச்சிக்கல் வருவதால் மட்டும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதைப்பற்றி கூடுதல் விழிப்புணர்வு தேவை" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn4jed1p8mmo

தைராய்டு புற்றுநோய் விகிதம் மற்ற புற்றுநோய்களை விட வேகமாக அதிகரிப்பது ஏன்?

1 week ago

தைராய்டு புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி

  • 17 நவம்பர் 2025, 02:14 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

உலகின் சில பகுதிகளில் தைராய்டு புற்றுநோய் பாதிப்பு விகிதங்கள் அதிகரித்து வருகின்றன - மற்ற வகை புற்றுநோய்களை விட இது வேகமாக அதிகரிக்கிறதே, ஏன்?

தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் அமெரிக்காவில் வேறு எந்தப் புற்றுநோயை விடவும் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த மர்மமான உயர்வுக்குப் பின்னால் என்ன இருக்கிறது?

தைராய்டு சுரப்பி கழுத்தின் அடிப்பகுதியில், ஆடம்ஸ் ஆப்பிளுக்கு சற்று கீழே அமைந்துள்ளது. இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை மற்றும் எடை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை வெளியிடுவது இதன் வேலை. தைராய்டு சுரப்பியின் உள்ளே உள்ள செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளரவும் பிரியவும் தொடங்கி, ஒரு கட்டியை உருவாக்கும்போது தைராய்டு புற்றுநோய் ஏற்படுகிறது. இந்தச் சிதைந்த செல்கள் சுற்றியுள்ள திசுக்களை ஆக்கிரமித்து, உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும்.

பெரும்பாலான தைராய்டு புற்றுநோய்கள் குணப்படுத்தக் கூடியவை என்றாலும், இந்த நோயின் விகிதங்கள் வேகமாக அதிகரித்து வருவது குறித்துச் சுகாதார நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள். அமெரிக்காவின் புற்றுநோய் பற்றி தெரிவிக்கும் அமைப்பான 'கண்காணிப்பு, தொற்றுநோயியல் மற்றும் இறுதி முடிவுகள்' (Surveillance, Epidemiology, and End Results - Seer) தரவுத்தளத்தின்படி, அமெரிக்காவில் தைராய்டு புற்றுநோயின் நிகழ்வு விகிதம் 1980 மற்றும் 2016 க்கு இடையில் மூன்று மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இது ஆண்களில் 1 லட்சம் பேரில் 2.39 லிருந்து 7.54 பேருக்கும், பெண்களில் 1 லட்சம் பேரில் 6.15 லிருந்து 21.28 பேருக்கும் உயர்ந்துள்ளது.

"மருத்துவத் துறையில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், காலப்போக்கில் அதிகரித்து வரும் சில புற்றுநோய்களில் தைராய்டு புற்றுநோயும் ஒன்றாகும்," என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் (UCSF) உட்சுரப்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சான்சியானா ரோமன் கூறுகிறார்.

அப்படியானால், இந்த பாதிப்பு அதிகரிப்பதன் பின்னணியில் என்ன இருக்கிறது?

குழந்தைப் பருவத்தில் அதிக அளவில் கதிர்வீச்சுக்கு (ionising radiation) ஆளாவது தைராய்டு புற்றுநோயை ஏற்படுத்தும் என்று நீண்ட காலமாக அறியப்பட்டது. 1986 ஆம் ஆண்டில் செர்னோபில் அணு விபத்துக்குப் பிந்தைய ஆண்டுகளில், பெலாரஸ், யுக்ரேன் மற்றும் ரஷ்யாவில் குழந்தைகளிடையே இந்த நோயின் விகிதங்கள் வேகமாக உயர்ந்தன. ஜப்பானிய அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பியவர்களில், 1958 முதல் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 36% பேருக்கு குழந்தைப் பருவத்தில் கதிர்வீச்சுக்கு உள்ளானதால் ஏற்பட்டிருக்கலாம் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.

தைராய்டு புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மருத்துவ முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், தைராய்டு புற்றுநோய் எண்கள் அதிகரித்து வருகின்றன.

இருப்பினும் இத்தகைய உயர்வை விளக்கக்கூடிய வகையில் 80கள் அல்லது 90களில் அமெரிக்காவிலோ அல்லது வேறு இடங்களிலோ அணுசக்திப் பேரழிவுகள் எதுவும் இல்லை. ஆரம்பத்தில் நிபுணர்கள் குழப்பமடைந்தனர், இருப்பினும் இறுதியில் ஒரு விளக்கம் முன்வைக்கப்பட்டது - நோயறிதல் மேம்பட்டதுதான் இதற்குக் காரணமா?

1980களில், மருத்துவர்கள் முதன்முறையாக தைராய்டு அல்ட்ராசோனோகிராபியைப் (thyroid ultrasonography) பயன்படுத்தத் தொடங்கினர். இது ஒலி அலைகளைப் பயன்படுத்தி தைராய்டு சுரப்பியின் படங்களை உருவாக்கும் ஒரு இமேஜிங் நுட்பமாகும். முன்பு கண்டறிய முடியாத மிகச் சிறிய தைராய்டு புற்றுநோய்களை மருத்துவர்கள் கண்டறிய இந்த முறை உதவியது.

பின்னர் 1990களில், சந்தேகத்திற்கிடமான கட்டிகள் புற்றுநோயா என கண்டறிய மருத்துவர்கள் அந்த கட்டியிலிருந்து செல்களைச் சேகரிக்க தொடங்கினர். இது நுண் ஊசி ஆஸ்பிரேஷன் பயாப்ஸி (fine needle aspiration biopsy) என்று அழைக்கப்படும் நுட்பமாகும்.

"முன்பு, மருத்துவர்கள் கட்டிகளைத் கண்டறிய தைராய்டு சுரப்பியைத் தொட்டுப் பார்ப்பார்கள்," என்று அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் தொற்றுநோயியல் நிபுணர் காரி கிடாஹாரா கூறுகிறார்.

"ஆனால் அல்ட்ராசோனோகிராபி போன்ற நுட்பங்கள் மூலம், மருத்துவர்களால் சிறிய அளவிலான முடிச்சுகளைக் கண்டறிந்து, பின்னர் அவற்றிலிருந்து பயாப்ஸி எடுக்க முடிந்தது. இது சிறிய அளவிலான பாப்பிலரி தைராய்டு புற்றுநோய்களை அதிகமாகக் கண்டறிய வழிவகுத்தது, அவை முன்பு (உடலைத் தொட்டுச் சோதிக்கும் முறையால்) உணரப்படாது."

மற்ற ஆதாரங்களும் இந்த அதிகப்படியான நோயறிதல் (over-diagnosis) கோட்பாட்டிற்கு ஆதரவாக உள்ளன. உதாரணமாக, தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் அதிகமானாலும், தைராய்டு புற்றுநோயால் ஏற்படும் இறப்புகள் நிலையாக இருப்பது போல் தோன்றியது. இதற்கிடையில், தென் கொரியாவில் தேசிய தைராய்டு புற்றுநோய் பரிசோதனைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது பாதிப்பு அதிகமாக இருந்தது. திட்டம் குறைக்கப்பட்டபோது விகிதங்களும் மீண்டும் சரிந்தன.

கிடாஹாரா, "ஒட்டுமொத்தமாக இந்த மாதிரிகள் அதிகப்படியான நோயறிதலுடன் ஒத்துப்போகின்றன. அதாவது, கண்டறியப்படாமல் விடப்பட்டிருந்தால், அந்த நபர்களுக்கு அறிகுறிகளையோ அல்லது மரணத்தையோ ஒருபோதும் ஏற்படுத்தாத நோயை அதிகமாகக் கண்டறிதல் ஆகும்," என்று கூறுகிறார்.

தைராய்டு புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1986 ஆம் ஆண்டு செர்னோபில் அணுசக்திப் பேரழிவுக்குப் பிறகு யுக்ரேன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகளிடையே தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் கடுமையாக அதிகரித்தன.

சிறிய பாப்பிலரி தைராய்டு புற்றுநோய்கள் பொதுவாக வளரும் மற்றும் சிகிச்சைக்கு நன்றாக குணமாகும் என்று இப்போது நமக்குத் தெரியும். இவை அரிதாகவே அபாயகரமானவையாக இருக்கின்றன. மேலும், இதை முன்பே கணிக்கவும் முடியும். ஆனால் அந்தக் காலத்தில், இந்தப் புற்றுநோய்களை அதிகமாகக் கண்டறிவது பலருக்குத் தேவையற்ற மருத்துவச் சிகிச்சைகளுக்கு வழிவகுத்தது. இதில் தைராய்டு சுரப்பியை முழுவதுமாக அகற்றுவது, அதைத் தொடர்ந்து எஞ்சிய செல்களை அகற்ற கதிரியக்க அயோடின் சிகிச்சை ஆகியவை அடங்கும். அறுவைசிகிச்சை சில சமயங்களில் குரல் நாண் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும், அதே நேரத்தில் கதிரியக்க அயோடின் சிகிச்சையும் இரண்டாம் நிலை புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம்.

இதன் விளைவாக, அமெரிக்காவில் இப்போது வெகு தீவிர புற்றுநோய்களுக்கு மட்டுமே கதிரியக்க அயோடின் பயன்படுத்தப்படுவதுடன், பக்க விளைவுகளின் அபாயத்தைக் குறைக்க மருந்தின் அளவுகள் குறைக்கப்படுகின்றன. தைராய்டு சுரப்பியை முழுவதுமாக அகற்றுவதற்குப் பதிலாக, மருத்துவர்கள் பெரும்பாலும் அதை பகுதியளவு அகற்றுகிறார்கள் அல்லது 'கண்காணிப்பு' அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்கள்.

இதன் விளைவாக, கண்காணிப்பு, தொற்றுநோயியல் மற்றும் இறுதி முடிவுகளின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் அமெரிக்காவில் தைராய்டு புற்றுநோய் பாதிப்புகள் இப்போது நிலையானதாகிவிட்டன என்று கூறுகின்றன. உதாரணமாக, 2010 இல் 1 லட்சம் பேருக்குச் சராசரியாக 13.9 புதிய பாதிப்புகள் இருந்தன, அதே நேரத்தில் புள்ளிவிவரங்கள் கிடைத்த கடைசி ஆண்டான 2022 இல் 1 லட்சம் பேரில் 14.1 பாதிப்புகள் இருந்தன.

இருப்பினும், அதிகப்படியான நோயறிதல் மட்டுமே பாதிப்பு விகிதம் அதிகரிப்புக்கு முழுமையாக விளக்கமாக இருக்கமுடியாது என்று சில விஞ்ஞானிகள் கடந்த சில ஆண்டுகளாக வாதிடுகின்றனர்.

இத்தாலியில் உள்ள கட்டானியா பல்கலைக்கழகத்தின் உட்சுரப்பியல் துறைப் பேராசிரியரான ரிக்கார்டோ விக்னேரி ஒரு ஆய்வில், அதிகப்படியான நோயறிதல் மட்டுமே இந்த உயர்வுக்குக் காரணமாக இருந்தால், சிறந்த நோயறிதல் நடைமுறைகளைக் கொண்ட உயர் வருமான நாடுகளில் மட்டுமே தைராய்டு புற்றுநோய் பாதிப்புகள் அதிகமாக கண்டறியப்படும் என்று எதிர்பார்க்கலாம் என்று வாதிடுகிறார். இருப்பினும், நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் தைராய்டு புற்றுநோய் பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளதால், அது உண்மையல்ல என்கிறார் அவர்.

"வலுவான பரிசோதனை இல்லாத இடங்களிலும் கூட தைராய்டு புற்றுநோய் விகிதங்கள் அதிகரித்து வருகின்றன," என்று ரோமன் கூறுகிறார்.

"பெரிய மற்றும் மிகவும் முற்றிய கட்டிகளும் அடிக்கடி கண்டறியப்படுகின்றன. இது நோயறிதல் சார்பு மற்றும் நோய் பாதிப்பின் உண்மையான அதிகரிப்பு இரண்டின் கலவையையும் நாம் பார்க்கிறோம் என்பதைக் குறிக்கிறது."

தைராய்டு புற்றுநோய்கள் ஆரம்ப கட்டங்களில் அதிகமாகக் கண்டறியப்படுவதாலும் சிகிச்சையின் விளைவுகள் மேம்பட்டுள்ளதாலும், தைராய்டு புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கலாம் என்று விக்னேரி கூறுகிறார். இருப்பினும், இறப்பு விகிதம் 1 லட்சம் பேருக்கு சுமார் 0.5 ஆக நிலையானதாகவே உள்ளது, சில நாடுகளில் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதற்கான அறிகுறிகள் உள்ளன.

தைராய்டு புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சி.டி. ஸ்கேன்கள் போன்ற அதிக அளவிலான அயனியாக்கும் கதிர்வீச்சுடன் கூடிய நடைமுறைகளின் அதிகரிப்பு, பதிப்பு விகித உயர்வுக்குப் பங்களிக்கக்கூடும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

உதாரணமாக, ஒரு ஆய்வு கலிபோர்னியாவில் 2000 முதல் 2017 வரை கண்டறியப்பட்ட 69,000 க்கும் மேற்பட்ட தைராய்டு புற்றுநோயாளிகளை ஆய்வு செய்தது. ஆராய்ச்சியாளர்கள், கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதம் இரண்டும் காலப்போக்கில் அதிகரித்துள்ளதைக் கண்டறிந்தனர். அந்த அதிகரிப்பு கட்டியின் அளவு மற்றும் புற்றுநோயின் நிலையோடு தொடர்பில்லாமல் இருந்தது, இது மிகச் சிறிய கட்டிகளின் மேம்பட்ட நோயறிதலைத் தவிர வேறு ஏதோ ஒன்று நடந்திருக்க வேண்டும் என்று காட்டுகிறது.

2017 இல், கிடாஹாராவும் அவரது குழுவும் 1974-2013 க்கும் இடையில் கண்டறியப்பட்ட 77,000 க்கும் மேற்பட்ட தைராய்டு புற்றுநோயாளிகளின் மருத்துவப் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். பெரும்பாலான பாதிப்புகள் தைராய்டு சுரப்பியில் சிறிய பாப்பிலரி கட்டிகளால் ஏற்பட்டாலும், உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியிருந்த பரவும் (metastatic) பாப்பிலரி புற்றுநோய்களும் அதிகரித்திருப்பதைக் கண்டறிந்தனர். தைராய்டு புற்றுநோயால் ஏற்படும் இறப்புகள் அரிதானவை என்றாலும், இவை ஆண்டுக்கு 1.1% என்ற விகிதத்தில் அதிகரித்து வருவதையும் ஆய்வு காட்டியது.

கிடாஹாரா, "இந்த மிகவும் தீவிரமான கட்டிகளின் அதிகரிப்பைத் தூண்டக்கூடிய வேறு ஏதாவது ஒன்று இருக்கலாம் என்று காட்டுகிறது," என்கிறார்.

முக்கிய காரணம் என சந்தேகிக்கப்படுபவனவற்றில் உடல் பருமனும் ஒன்று, இது 1980 களில் இருந்து, குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிற வளர்ந்த நாடுகளில் அதிகரித்து வருகிறது. அதிக எடைக்கும் தைராய்டு புற்றுநோய் அபாயத்திற்கும் இடையே ஒரு இணைப்பு இருப்பதாக ஆரோக்கியமான மக்களுடன் தொடங்கி ஒரு நீண்ட கால அடிப்படையில் நடத்தப்படும் குழு ஆய்வுகள் காட்டுகின்றன. அதிக பிஎம்ஐ (BMI) கொண்ட நபர்கள் ஆரோக்கியமான பிஎம்ஐ கொண்ட நபர்களுடன் ஒப்பிடும்போது, அவர்களின் வாழ்நாளில் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கு 50% க்கும் அதிகமாக வாய்ப்புள்ளது.

அதிக பிஎம்ஐ தீவிரமான புற்றுநோய் கட்டி அம்சங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. உதாரணமாக, பாதிப்பு கண்டறியப்படும்போது பெரிய அளவில் இருப்பது அல்லது புற்றுநோய் எளிதில் பரவக்கூடிய ஒரு பிறழ்வைக் கொண்டிருப்பது.

"எங்கள் ஆராய்ச்சியில், அதிக பிஎம்ஐ, தைராய்டு புற்றுநோய் தொடர்பான மரணத்தின் அதிக அபாயத்துடன் தொடர்பு இருப்பதையும் கண்டோம்," என்று கிடாஹாரா கூறுகிறார். "எனவே இது வெறும் பாதிப்பு கண்டறிதல் சார்பு அல்ல என்பதற்கு இது ஒரு வலுவான ஆதாரமாக இருந்தது. அதிக பிஎம்ஐ கொண்டவர்கள் மருத்துவரிடம் சென்று தைராய்டைச் சோதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் அதிக தைராய்டு புற்றுநோய் அவர்களுக்கு இருக்கிறது என்று சொல்ல முடியாது. அதிக பிஎம்ஐ இருப்பது தைராய்டு புற்றுநோய் உருவாவது மற்றும் வளர்ச்சியுடன் அதிக தொடர்பு கொண்டிருப்பதற்கான ஆதாரம் இது."

இருப்பினும், உடல் பருமன் எப்படித் தைராய்டு புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. உடல் பருமன் கொண்டவர்களுக்குத் தைராய்டு செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அறியப்படுகிறது. உதாரணமாக, தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் தைராய்டு தூண்டுதல் ஹார்மோனின் (TSH) அதிக அளவு கொண்ட நபர்கள் அதிக பிஎம்ஐயையும் கொண்டிருக்கிறார்கள்.

"சாத்தியமான அடிப்படை வழிமுறைகளைப் பற்றி நாங்கள் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை, ஏனெனில் இது இன்னும் குறைவாக ஆய்வு செய்யப்பட்ட ஒரு பகுதி, ஆனால் இது பல காரணிகளால் இருக்கலாம்," என்று கிடாஹாரா கூறுகிறார்.

"உடல் பருமன் பல உடலியல் விளைவுகளைக் கொண்டுள்ளது, எனவே வீக்கம், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் தைராய்டு செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் தைராய்டு புற்றுநோயின் வளர்ச்சியைத் தூண்டுவதில் ஒரு பங்கைக் கொண்டிருக்கலாம்."

தைராய்டு புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தீயணைப்பு நுரை போன்ற பொதுவான பொருட்களில் காணப்படும் உட்சுரப்பிச் சீர்குலைக்கும் ரசாயனங்களும் (Endocrine-disrupting chemicals) தைராய்டு புற்றுநோய் அபாயத்தில் ஒரு விளைவைக் கொண்டிருக்கலாம்

பிற விஞ்ஞானிகள், சாதாரண வீட்டுப் பொருட்கள் மற்றும் கரிமப் பூச்சிக்கொல்லிகளில் காணப்படும் "உட்சுரப்பிச் சீர்குலைக்கும் ரசாயனங்கள்" (endocrine disrupting chemicals - EDCs) காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். இந்த ரசாயனங்கள் உடலின் ஹார்மோன்களைப் பிரதிபலிக்கவோ, தடுக்கவோ அல்லது அவற்றில் குறுக்கிடும் தன்மையுடையவையாகவோ இருக்கும். உதாரணமாக, பெர்ஃப்ளூரோஆக்டனோயிக் அமிலம் (PFOA) மற்றும் பெர்ஃப்ளூரோஆக்டேன்சல்பானிக் அமிலம் (PFOS) ஆகியவை இதில் அடங்கும். இவை சமையல் பாத்திரங்கள் மற்றும் காகித உணவுப் பொதிவு முதல் தனிநபர் பராமரிப்புப் பொருட்கள், தரைவிரிப்புகள் மற்றும் தீயணைக்கும் நுரை வரை பல பொருட்களில் காணப்படுகின்றன. இருப்பினும், இத்தகைய ரசாயனங்களைத் தைராய்டு புற்றுநோயுடன் இணைக்கும் சான்றுகள் கலவையாகவே உள்ளன.

பிற ஆய்வுகள், சுவடு கூறுகள் (trace elements) ஒரு பங்கைக் கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றன. சுவடு கூறுகள் என்பவை உயிரினங்களுக்கு மிகச் சிறிய அளவில் மட்டுமே தேவைப்படும் ரசாயனத் தனிமங்கள் ஆகும். இருப்பினும், அவை தைராய்டு செயல்பாட்டிற்கு முக்கியமானவை.

"தீவு நாடுகளில் தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் மிக அதிகமாக இருப்பதைக் காண்கிறோம்," என்று கிடாஹாரா கூறுகிறார்.

"எரிமலை வெடிப்புகள் தொடர்பான சுவடு கூறுகளைப் பற்றிய கருதுகோள்கள் உள்ளன. அதனால் துத்தநாகம் (zinc), காட்மியம் (cadmium), வனேடியம் (vanadium) போன்ற வேறு சில ரசாயனங்கள் இந்தச் சூழல்களில் அதிக தைராய்டு புற்றுநோய் விகிதங்களுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, ஆனால் நேரடித் தொடர்பை காட்டுவதற்கு நன்கு வடிவமைக்கப்பட்ட அதிக தொற்றுநோயியல் ஆய்வுகள் எதுவும் இல்லை."

இருப்பினும், நோயறிதலுக்கான மருத்துவ ஸ்கேன்களிலிருந்து வரும் கதிர்வீச்சும் மற்றொரு காரணமாக இருக்கலாம் என்று கிடாஹாரா நம்புகிறார். குறிப்பாக அமெரிக்காவில் 80களிலிருந்து சி.டி. (CT) மற்றும் எக்ஸ்ரே ஸ்கேன்கள் பயன்படுத்தப்படும் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது, இதில் குழந்தைகளுக்கு எடுக்கப்படும் சி.டி. ஸ்கேன்களும் அடங்கும். இந்த சி.டி. ஸ்கேன்கள் தைராய்டு சுரப்பிக்கு ஒப்பீட்டளவில் அதிக அளவிலான கதிர்வீச்சை அளிக்கின்றன.

ஜப்பானிய அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் மீதான ஆய்வுகள் போன்ற பிற ஆய்வுகளிலிருந்து கதிர்வீச்சுக்கும் தைராய்டு புற்றுநோய்க்கும் இடையிலான உறவைப் பற்றி நாம் அறிந்திருப்பதன் மூலம், அத்தகைய கதிர்வீச்சின் விளைவுகளை நாம் மாதிரிப்படுத்தலாம். உதாரணமாக, ஒரு சமீபத்திய ஆய்வு, இனிவரும் காலங்களில், ஆண்டுக்கு அமெரிக்காவில் சுமார் 3,500 தைராய்டு புற்றுநோய்கள் சி.டி. ஸ்கேன் விகிதங்களால் நேரடியாக ஏற்படக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது.

"இளம் தைராய்டு சுரப்பி, வயதானவர்களின் தைராய்டு சுரப்பியை விடக் கதிர்வீச்சு வெளிப்பாட்டின் விளைவுகளுக்கு அதிகம் பாதிக்கும் தன்மை கொண்டது," என்று கிடாஹாரா கூறுகிறார். "எனவே சி.டி. ஸ்கேன்களின் அதிகரித்து வரும் பயன்பாடு அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் உயர்வுக்குப் பகுதி பங்களிக்கக்கூடும் என்பது சாத்தியமே."

இந்த அனைத்துக் காரணிகளும் ஒன்றிணைந்த பங்கைக் கொண்டிருக்கவும் வாய்ப்புள்ளது.

"நாம் சுற்றுச்சூழல், வளர்சிதை மாற்றம், உணவு மற்றும் ஹார்மோன் தாக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய, அத்துடன் அடிப்படை மரபணு ஏற்புத்திறனுடன் தொடர்பு கொள்ளக்கூடிய பல காரணி நிகழ்வைப் பார்க்கிறோம்," என்று ரோமன் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckgzjx316dyo

உலகில் 60 லட்சம் பேரில் ஒருவருக்கு உள்ள 'தங்க' ரத்தத்தை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி

1 week 3 days ago

Rh null blood group

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, Rh பூஜ்ய வகை ரத்தம் உலகில் 50 பேருக்கு மட்டுமே இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

கட்டுரை தகவல்

  • ஜாஸ்மின் ஃபாக்ஸ் ஸ்கெல்லி

  • பிபிசி

  • 14 நவம்பர் 2025, 04:52 GMT

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

உலகில் 60 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே ஆர்.எச் பூஜ்ய (Rh null ) ரத்த வகை உள்ளது. இப்போது ஆராய்ச்சியாளர்கள் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் அதை ஓர் ஆய்வகத்தில் உருவாக்க முயற்சிக்கின்றனர். ரத்தமாற்று சிகிச்சை நவீன மருத்துவத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாம் எப்போதாவது காயமடைந்தாலோ, அல்லது பெரிய அறுவை சிகிச்சை தேவைப்பட்டாலோ, மற்றவர்களால் தானம் செய்யப்பட்ட ரத்தம் நம் உயிரைக் காப்பாற்றும். ஆனால் அரிய வகை ரத்தம் உள்ளவர்களுக்கு பொருந்தக்கூடிய தானம் செய்யப்பட்ட ரத்தத்தைக் கண்டுபிடிப்பது போராட்டமே.

இத்தகைய அரிதான ரத்த வகைகளில் ஒன்று - ஆர்.எச் பூஜ்ய ரத்த வகை - உலகில் இது வரை 50 பேருக்கு மட்டுமே இந்த ரத்த வகை இருப்பதாக அறியப்பட்டுள்ளது. அவர்கள் எப்போதாவது ஒரு விபத்தில் சிக்கினால், அந்த வகை ரத்தத்தை தானமாக பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே ஆர்.எச் பூஜ்யம் ரத்த வகை உள்ளவர்கள் தங்கள் சொந்த ரத்தத்தை நீண்ட கால சேமிப்புக்காக உறைய வைக்க வேண்டுமென ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

அரிதானது என்பதை தவிர இந்த ரத்த வகை மற்ற காரணங்களுக்காகவும் மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. இந்த ரத்த வகையின் பயன்பாட்டு நன்மைகள் காரணமாக மருத்துவ மற்றும் ஆராய்ச்சி சமூகத்திற்குள், இது சில நேரங்களில் "தங்க ரத்தம்" என்று குறிப்பிடப்படுகிறது. தானமாக பெறப்பட்ட ரத்தத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கட்டுப்படுத்தும் எதிர்ப்பு சக்தி சவால்களை கடந்து அனைவருக்குமான ரத்தம் செலுத்தும் வழிமுறைகளை ஆய்வாளர்கள் கண்டுபிடிக்க இது உதவக்கூடும்.

Rh null blood group

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த ஆண்டு வரை உலகம் முழுவதும் 47 ரத்த குழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ரத்தம் எப்படி வகைப்படுத்தப்படுகிறது?

நமது சிவப்பு ரத்த அணுக்களின் மேற்பரப்பில் குறிப்பிட்ட குறிப்பான்கள் இருப்பது அல்லது இல்லாமல் போவது ஆகியவற்றின் அடிப்படையிலேயே நம் உடலில் இருக்கும் ரத்தம் வகைப்படுத்தப்படுகிறது. ஆன்டிஜென்கள் எனப்படும் இந்த குறிப்பான்கள் புரதங்கள் அல்லது சர்க்கரைகளைக் கொண்டுள்ளன. அவை உயிரணு மேற்பரப்பில் இருந்து ஒட்டிக்கொள்கின்றன மற்றும் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் கண்டறியப்படலாம்.

"ரத்தத்தில் இருக்கும் ஆன்டிஜென்கள் அல்லாமல் வேறு ஆன்டிஜென்களைக் கொண்ட ரத்தத்தை உங்கள் உடலில் ஏற்றினால், அந்த ரத்தத்திற்கு எதிரான ஆன்டிபாடிகளை உங்கள் உடல் உருவாக்கி அதைத் தாக்கும்" என்று பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் உயிரணு உயிரியல் பேராசிரியர் ஆஷ் டோய் கூறுகிறார்.

"நீங்கள் மீண்டும் அந்த ரத்தத்தை உடலில் ஏற்றினால், அது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம்" என்கிறார் அவர்.

நோயெதிர்ப்பு சக்தியை தூண்டும் இரண்டு ரத்த வகை அமைப்புகள் ஏபிஓ (ABO) மற்றும் ரீசஸ் (ஆர்.எச் -Rh) ஆகும். ஏ ரத்த வகை உள்ள ஒருவருக்கு அவர்களின் சிவப்பு ரத்த அணுக்களின் மேற்பரப்பில் ஏ ஆன்டிஜென்கள் இருக்கும், அதே நேரத்தில் பி ரத்த வகை உள்ளவருக்கு பி ஆன்டிஜென்கள் இருக்கும். ஏபி ரத்த வகையில் ஏ மற்றும் பி ஆகிய இரண்டு ஆன்டிஜென்களுமே இருக்கும். ஓ ரத்த வகையில் அந்த இரண்டு ஆன்டிஜென்களுமே இருக்காது. இந்த ரத்த வகைகள் Rh பாசிடிவ் அல்லது Rh நெகடிவாக இருக்கலாம்.

ஓ நெகடிவ் ரத்தம் உள்ளவர்கள் பெரும்பாலும் அனைவருக்குமான நன்கொடையாளர்கள் என்று கூறப்படுகின்றனர். ஏனெனில் அவர்களின் ரத்தத்தில் ஏ, பி அல்லது ஆர்எச் இல்லை. இருப்பினும், இது ஒரு மிகைப்படுத்தியக் கூற்றே ஆகும்.

முதலாவதாக, அக்டோபர் 2024 நிலவரப்படி, மொத்தம் 47 ரத்த வகைகளும் 366 வெவ்வேறு ஆன்டிஜென்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் ஓ நெகடிவ் ரத்த வகையை தானமாக பெறும் ஒரு நபர் இன்னும் மற்ற ஆன்டிஜென்களுக்கு எதிர்வினையைக் கொண்டிருக்கலாம். இருப்பினும் சில ஆன்டிஜென்கள் மற்ற வகைகளை விட நோயெதிர்ப்பு சக்தியை அதிகம் தூண்டக்கூடும்.

இரண்டாவதாக, 50 க்கும் மேற்பட்ட Rh ஆன்டிஜென்கள் உள்ளன. மக்கள் Rh நெகடிவ் இருப்பதைப் பற்றி பேசும்போது அவர்கள் Rh (D) ஆன்டிஜெனைக் குறிப்பிடுகிறார்கள், ஆனால் அவர்களின் சிவப்பு ரத்த அணுக்களில் இன்னும் பிற Rh புரதங்கள் உள்ளன. இது சரியாக பொருந்தக்கூடிய ரத்த நன்கொடையாளரை கண்டுபிடிப்பதை சவாலாக்கி உள்ளது.

Rh null blood group

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, Rh பூஜ்ய வகை ரத்தம் அரிதானது மட்டுமல்ல, பயனுள்ளதும் கூட.

இருப்பினும், ஆர்.எச் பூஜ்ய (Rh null) ரத்தம் உள்ளவர்களுக்கு 50 Rh ஆன்டிஜென்களில் எதுவும் இல்லை. இந்த நபர்கள் வேறு எந்த ரத்த வகையையும் பெற முடியாது என்றாலும், அவர்களின் ரத்தம் பல Rh ரத்த வகைகளுடன் இணக்கமானது. இது ஓ வகையில் Rh null ரத்தத்தை மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக்குகிறது, ஏனெனில் ABO -ன் அனைத்து வகைகளையும் கொண்ட நபர்கள் உட்பட பெரும்பான்மையான மக்கள் அதைப் பெறலாம்.

ஒரு நோயாளியின் ரத்த வகை அறியப்படாத அவசர சூழலில், ஒவ்வாமை எதிர்வினையின் குறைந்த ஆபத்துடன் ஓ வகை Rh null ரத்தம் வழங்கப்படலாம். இந்த காரணத்திற்காக, உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் இந்த "தங்க ரத்தத்தை" உருவாக்கும் வழிகளைத் தேடுகிறார்கள்.

"Rh ஆன்டிஜென்கள் ஒரு பெரிய எதிர்வினையைத் தூண்டுகின்றன, எனவே உங்களிடம் Rh ஆன்டிஜென்கள் இல்லை என்றால், Rh அடிப்படையில் எதிர்வினையாற்ற எதுவும் இல்லை என்று அர்த்தம்" என்கிறார் பேராசிரியர் டோய். "நீங்கள் ஓ வகை Rh பூஜ்யமாக இருந்தால், அது மிகவும் உலகளாவியது. ஆனால் நீங்கள் இன்னும் கருத்தில் கொள்ள வேண்டிய பிற ரத்த குழுக்கள் உள்ளன" என்கிறார்.

Rh பூஜ்ய வகை ரத்தம் எப்படி உருவானது?

Rh தொடர்புடைய கிளைகோபுரோட்டீன் அல்லது ஆர்.எச்.ஏ.ஜி (RHAG) எனப்படும் சிவப்பு ரத்த அணுக்களில் முக்கிய பங்கு வகிக்கும் புரதத்தை பாதிக்கும் மரபணுப் பிறழ்வுகளால் ஆர்.எச் பூஜ்ய ரத்தம் ஏற்படுகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இந்த பிறழ்வுகள் இந்த புரதத்தின் வடிவத்தை சுருக்கவோ அல்லது மாற்றவோ செய்கிறது, இதனால் இது மற்ற Rh ஆன்டிஜென்களின் வெளிப்பாட்டை சீர்குலைக்கிறது.

2018ஆம் ஆண்டு ஆய்வில், பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் டோய் மற்றும் சக ஊழியர்கள் ஆய்வகத்தில் ஆர்.எச் பூஜ்ய ரத்தத்தை மீண்டும் உருவாக்கினர். அவ்வாறு செய்ய, அவர்கள் முதிர்ச்சியடையாத சிவப்பு ரத்த அணுக்களின் ஒரு செல் வரிசையை ( ஒரு ஆய்வகத்தில் வளர்ந்த உயிரணுக்களை) எடுத்துக் கொண்டனர்.

பெரும்பாலான ரத்தம் செலுத்த இணக்கமில்லாத சூழலை உருவாக்கும் ஐந்து ரத்த குழு அமைப்புகளின் ஆன்டிஜென்களுக்கான மரபணு குறியீட்டை நீக்க அவர்கள் மரபணு திருத்த நுட்பமான Crispr-Cas9 -ஐ பயன்படுத்தினர். இதில் ABO மற்றும் Rh ஆன்டிஜென்கள் மற்றும் கெல் (Kell), டஃபி (Duffy) மற்றும் ஜிபிபி (GPB) எனப்படும் பிற ஆன்டிஜென்கள் ஆகியவை அடங்கும்.

"நாங்கள் (இந்த) ஐந்தை நீக்கி விட்டால் , அது ஒரு இணக்கமான உயிரணுவை உருவாக்கும், ஏனென்றால் அவை ஐந்தும் மிகவும் சிக்கலான ரத்த குழுக்கள் ஆகும்" என்று பேராசிரியர் டோய் கூறுகிறார். இதன் விளைவாக ஏற்படும் ரத்த அணுக்கள் அனைத்து முக்கிய பொதுவான ரத்தக் குழுக்களுக்கும் இணக்கமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் Rh null , 40 லட்சத்தில் ஒருவருக்கு உள்ள பம்பாய் ஃபீனோடைப் போன்ற அரிய வகைகளைக் கொண்டவர்களுக்கும் இணக்கமாக இருக்கும். இந்த ரத்த வகை உள்ளவர்களுக்கு O, A, B அல்லது AB ரத்தம் கொடுக்க முடியாது. எவ்வாறாயினும், மரபணு திருத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது சர்ச்சைக்குரியதாகவும் உலகின் பல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டதும் ஆகும். அதாவது இந்த மிகவும் இணக்கமான வகை ரத்தம் மருத்துவ ரீதியாக கிடைப்பதற்கு சிறிது காலம் ஆகலாம். இது அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு பல சுற்று மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கிடையில், பேராசிரியர் டோய் ஸ்கார்லெட் தெரபியூட்டிக்ஸ் என்ற நிறுவனத்தை இணைந்து நிறுவியுள்ளார். இது Rh null உள்ளிட்ட அரிய ரத்த குழுக்களைக் கொண்டவர்களிடமிருந்து ரத்த தானம் பெற்று அதனை சேகரித்து வருகிறது. காலவரையின்றி சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்க ஆய்வகத்தில் வளர்க்கக்கூடிய உயிரணு வரிசைகளை உருவாக்க அந்த ரத்தத்தைப் பயன்படுத்த முடியும் என்று குழு நம்புகிறது. ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ரத்தம் அரிதான ரத்த வகை உடையவர்களின் அவசர கால தேவைக்காக சேமிப்பகத்தில் உறைய வைக்கப்படலாம்.

மரபணு திருத்த முறையைப் பயன்படுத்தாமல் ஆய்வகத்தில் அரிய ரத்தத்தின் வங்கிகளை உருவாக்க பேராசிரியர் டோய் விரும்புகிறார், இருப்பினும் மரபணு திருத்தம் எதிர்காலத்தில் ஒரு பங்கைக் கொண்டிருக்கக் கூடும்.

"மரபணு திருத்தம் இல்லாமல் எங்களால் அதைச் செய்ய முடிந்தால், அது பெரிய விஷயம். ஆனால் திருத்தம் செய்வதும் எங்களுக்கு உள்ள ஒரு வாய்ப்பு," என்று அவர் கூறுகிறார்.

"நாங்கள் செய்வதன் ஒரு பகுதி என்னவென்றால், அவர்களின் ஆன்டிஜென்கள் அனைத்தையும் பெரும்பாலான மக்களுக்கு முடிந்தவரை இணக்கமாக மாற்ற முயல்கிறோம். அதற்காக நன்கொடையாளர்களை கவனமாக தேர்வு செய்கிறோம். பின்னர் அனைவருக்கும் இணக்கமாக மாற்ற மரபணு திருத்தம் செய்ய வேண்டும்." என்கிறார்.

2021 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் மில்வாக்கியில் உள்ள வெர்சிட்டி ரத்த ஆராய்ச்சி நிறுவனத்தில் நோயெதிர்ப்பு நிபுணர் கிரிகோரி டெனோம் மற்றும் சக ஊழியர்கள், Crispr-Cas9 மரபணு திருத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, Rh null உள்ளிட்ட (தகவமைக்கப்பட்ட) அரிய ரத்த வகைகளை, ப்ளூரிபோடென்ட் ஸ்டெம் செல்களிலிருந்து (hiPSC) இருந்து உருவாக்கினர். இந்த ஸ்டெம் செல்கள் கரு ஸ்டெம் செல்களைப் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளன. சரியான சூழலை உருவாக்கினால் மனித உடலில் எந்த உயிரணுவாகவும் மாறும் திறனைக் கொண்டுள்ளன. மற்ற விஞ்ஞானிகள் மற்றொரு வகை ஸ்டெம் செல்களைப் பயன்படுத்துகின்றனர், அவை ரத்த அணுக்களாக மாறுவதற்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்த வகை ரத்தம் என்று இன்னும் தீர்மானிக்கவில்லை.

எடுத்துக்காட்டாக, கனடாவின் கியூபெக்கில் உள்ள லாவல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சமீபத்தில் ஏ பாசிடிவ் ரத்தம் கொண்ட நன்கொடையாளர்களிடமிருந்து ரத்த ஸ்டெம் செல்களை பிரித்தெடுத்தனர். பின்னர் அவர்கள் A மற்றும் Rh ஆன்டிஜென்களுக்கான மரபணுக்களின் குறியீட்டை நீக்க Crispr-Cas9 தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர். இது O Rh பூஜ்ய, முதிர்ச்சியடையாத சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்குகிறது. ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், சமீபத்தில் ஒரு Rh பூஜ்ய ரத்த நன்கொடையாளரிடமிருந்து ஸ்டெம் செல்களை எடுத்தனர்.

Crispr-Cas9 தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏ வகை ரத்தத்தை O வகை ரத்தமாக மாற்றினர். இத்தகைய முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், மக்களுக்கு பயன்படும் வகையில் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட செயற்கை ரத்தம் என்பதை அடைய நீண்ட காலமாகும். ஸ்டெம் செல்கள் முதிர்ந்த சிவப்பு ரத்த அணுக்களாக வளர வேண்டும் என்பது இதில் உள்ள முக்கிய சவாலாகும்.

உடலில், எலும்பு மஜ்ஜையில் உள்ள ஸ்டெம் செல்களில் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியாகின்றன. அவை எவ்வாறு உருவாக வேண்டும் என்பதை தீர்மானிக்க சிக்கலான சமிக்ஞைகள் உருவாகின்றன. இதை ஆய்வகத்தில் உருவாக்குவது கடினம்.

"Rh null அல்லது வேறு எந்த பூஜ்ய ரத்த வகையையும் உருவாக்கும்போது, சிவப்பு ரத்த அணுக்களின் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சிக்கு சிரமம் ஏற்படலாம் என்ற கூடுதல் சிக்கல் உள்ளது" என்று டெனோம் கூறுகிறார். அவர் இப்போது ரத்தமாற்று மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு சுகாதார நிறுவனமான கிரிஃ போல்ஸ் டயக்னாஸ்டிக் சொல்யூஷன்ஸில் மருத்துவ விவகார இயக்குநராக பணிபுரிகிறார். "குறிப்பிட்ட ரத்த வகை மரபணுக்களை உருவாக்குவதால் உயிரணு சவ்வு உடைந்து போகலாம் அல்லது சிவப்பு ரத்த அணுக்களை திறம்பட உற்பத்தி செய்வதில் இழப்பு ஏற்படலாம்."

Rh null blood group

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ரத்தம் நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருந்தாலும், நேரடியாக ஒருவரின் உடலிலிருந்து ரத்த தானம் பெறுவதே சிறந்தது.

RESTORE சோதனையை பேராசிரியர் டோய் இணைத் தலைமையேற்று வழிநடத்துகிறார். இது, நன்கொடையாக தரப்பட்ட ரத்த ஸ்டெம் செல்களிலிருந்து ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட சிவப்பு ரத்த அணுக்களை வழங்குவதன் பாதுகாப்பை சோதிக்கும் உலகின் முதல் மருத்துவ சோதனையாகும்.

இந்த சோதனையில் செயற்கை ரத்தம் எந்த வகையிலும் மரபணு திருத்தப்படவில்லை. ஆனால் விஞ்ஞானிகள் அதை மனிதர்களில் சோதிக்கத் தயாராக இருந்த கட்டத்திற்கு வர 10 வருட ஆராய்ச்சி தேவைப்பட்டது.

"இந்த நேரத்தில், ஒருவரின் கையில் இருந்து ரத்தத்தை நேரடியாக எடுப்பதே மிகவும் சிறந்தது மற்றும் செலவு குறைந்தது. எனவே எதிர்வரும் காலங்களில் ரத்த தானம் செய்பவர்களே தேவைப்படுவார்கள்" என்று பேராசிரியர் டோய் கூறுகிறார். "ஆனால் நன்கொடையாளர்கள் மிகக் குறைவாகவே இருக்கும் அரிய ரத்த வகைகளைக் கொண்டவர்களுக்கு, அவர்களுக்கு தேவைப்படும் ரத்தத்தை (ஆய்வகத்தில்) உருவாக்க முடிந்தால், அது மிகவும் சிறப்பாக இருக்கும்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c986vd30r1no

சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரிப்பு - அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும்

2 weeks ago

சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரிப்பு - யாருக்கெல்லாம் வரும்? அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும்

சிறுநீரக பாதிப்பு, லான்செட், இதய நோய், நாள்பட்ட சிறுநீரக நோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • மோகன்

  • பிபிசி தமிழ்

  • 10 நவம்பர் 2025, 02:22 GMT

இந்தியாவில் 13.8 கோடி பேருக்கு சிறுநீரக நோய் பாதிப்பு இருப்பதாக சமீபத்திய லான்செட் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது. உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் சிறுநீரக நோய் பாதிப்புகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகம் பதிவாகியுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990-ஆம் முதல் 2023 வரையிலான தரவுகள் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 2023-ஆம் ஆண்டு உலகளவில் 20 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 78.8 கோடி பேருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு இருந்தது. 20 வயதுக்கு மேலானவர்களில் 14% பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் மூன்று தசாப்தங்களில் உலகளவில் இந்த எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. (1990-இல் 37.8 கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்)

2023-ஆம் ஆண்டு 14.8 லட்சம் பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் அதிக மரணங்களை ஏற்படுத்திய நோய்களில் சிறுநீரக நோய் 9வது இடத்தில் உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது. சீனாவில் 1,53,000 பேரும் இந்தியாவில் 1,24,000 பேரும் சிறுநீரக நோயால் உயிரிழந்துள்ளதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

உலகில் அதிகபட்சமாக சீனாவில் 15.2 கோடி பேரும், அதற்கு அடுத்த இடத்தில் உள்ள இந்தியாவில் 13.8 கோடி பேரும் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதாரத்தில் முன்னேறிய, வளர்ந்த நாடுகளில் சிறுநீரக நோய் பாதிப்பு விகிதம் குறைவாக உள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் சிறுநீரக நோயால் இறப்பவர்களின் விகிதம் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறை முன்னாள் தலைவரும், தற்போதைய தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலருமான மருத்துவர் கோபாலகிருஷ்ணனிடம் பிபிசி தமிழ் பேசியது.

"சிறுநீரக செயலிழப்பு என்பது இரண்டு வழிகளில் நடைபெறுகிறது. ஒன்று திடீரென உடனே சிறுநீரகம் செயலிழப்பது, இரண்டாவது படிப்படியாக சிறுநீரகம் செயலிழப்பது. இதை தான் நாள்பட்ட சிறுநீரக நோய் என சொல்கிறோம். பெரும்பாலானவர்களுக்கு இந்த இரண்டாவது வகை பாதிப்பு தான் ஏற்படுகிறது." என்றார் அவர்.

சிறுநீரக பாதிப்பு, லான்செட், இதய நோய், நாள்பட்ட சிறுநீரக நோய்

படக்குறிப்பு, மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் கோபாலகிருஷ்ணன்

மாறி வருகின்ற வாழ்வியல் முறைகளால் சிறுநீரக நோய் வருவதாக அவர் குறிப்பிட்டார். "நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன், அதிக அளவில் கலோரிகளை உட்கொள்வது மற்றும் குறைந்த அளவிலான உடல் சார்ந்த வேலைகள் ஆகியன சிறுநீரக கோளாறு ஏற்பட காரணமாக அமைகின்றன." எனத் தெரிவித்தார்.

சிறுநீரக நோயின் அறிகுறிகளை பட்டியலிட்ட அவர், ஆட்களைப் பொருத்து அறிகுறிகள் வேறுபடலாம் என்றும் தெரிவித்தார்.

அறிகுறிகள் என்ன?

  • கால் மற்றும் தலை வீக்கம்

  • சிறுநீர் வெளியேற்றம் குறைவது

  • சோர்வு

  • பசி

  • வாந்தி

  • ரத்த சோகை

  • தூங்கும் முறை மாறுவது

தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டாலும் சிறுநீரக கோளாறு ஏற்படும் என்று அவர் கூறினார்.

யாரை அதிகம் பாதிக்கும்?

சிறுநீரக பாதிப்பு, லான்செட், இதய நோய், நாள்பட்ட சிறுநீரக நோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கட்டுமான பணியாளர்கள் (கோப்புப்படம்)

விவசாயம், கட்டுமானம் போன்ற திறந்தவெளியில் பணிபுரியும் முறைசாரா தொழிலாளர்கள் தான் இதனால் அதிகமாக பாதிக்கப்படுவதாக கோபாலகிருஷ்ணன் கூறினார்.

"வெப்ப அழுத்தம், நாள்பட்ட நீரிழப்பு, காற்று மாசுபாடு மற்றும் ரசாயனங்களை நுகர்வது போன்ற காரணங்களால் சிறுநீரக நோய் ஏற்படுகிறது. நீண்ட நேரம் திறந்தவெளியில் வேலை செய்பவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது நிழலில் இளைப்பாறுவதையும் சுத்தமான குடிநீர் எடுத்துக் கொள்வதையும் தவறாமல் செய்ய வேண்டும்," என்றார்.

இதய நோய்க்கும் சிறுநீரக நோய்க்கும் உள்ள தொடர்பு

இதய நோயால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு சிறுநீரகம் செயலிழந்து போவதும் முக்கிய காரணமாக உள்ளதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. நீரிழிவு நோயும் உடல் பருமனும் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு முக்கிய காரணிகளாக உள்ளன. சிறுநீரக பாதிப்பில் ஐந்து கட்டங்கள் இருக்கின்றன. பெரும்பாலானவர்கள் 1-3 கட்ட பாதிப்பிலே உள்ளனர்.

நாள்பட்ட சிறுநீரக நோயும் இதய நோயும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்கிறார் கோபாலகிருஷ்ணன். சிறுநீரக பாதிப்பு அதிகரிக்கையில் இதய நோய் ஆபத்தும் அதிகரிப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆய்வறிக்கையின் படி, வயது அதிகரிக்க அதிகரிக்க நோய் பாதிப்பும் கூடுகிறது. முதியவர்களிடம் மிகத் தீவிரமான கட்டம் காணப்படுகிறது. ஆனால் அதற்கு மாறாக வயது கூடக்கூட டயாலிசிஸ் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை என்பது குறைகிறது.

பரிசோதனை அவசியம்

சிறுநீரக பாதிப்பு, லான்செட், இதய நோய், நாள்பட்ட சிறுநீரக நோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரத்த பரிசோதனை (கோப்புப்படம்)

சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்களில் 30% பேருக்கு அது இருப்பதே தெரிவதில்லை என ஆய்வறிக்கை கூறுகிறது.

"காலநிலை மாற்றத்தால் சராசரி வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளால் சிறுநீரக நோய் ஏற்படும். உகந்த வெப்பநிலை இல்லாததால் சிறுநீரகத்தின் செயல் திறனும் நாளடைவில் குறையும்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஒவ்வொரு ஆண்டும் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, சிறுநீர் மற்றும் ரத்த பரிசோதனை மூலம் சிறுநீரக நோய் பாதிப்பை கண்டறிய முடியும். இதனை குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்." என்றார் கோபாலகிருஷ்ணன்.

சிகிச்சைகள் என்ன?

சிறுநீரக நோய்க்கு டயாலசிஸ் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என இரண்டு வாய்ப்புகள் உள்ளன.

டயாலிசிஸ் முறை செலவு அதிகம் என்றாலும் தற்போது பெரும்பாலான காப்பீடுகளின் கீழ் டயாலிசிஸ் சிகிச்சை கொண்டு வரப்பட்டுள்ளது, அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது.

யாரெல்லாம் சிறுநீரக தானம் செய்ய முடியும்?

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையைப் பொருத்தவரை, இரண்டு சூழல்களில் மட்டுமே ஒருவர் உறுப்பு தானம் செய்ய முடியும் என்கிறார் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலரான மருத்துவர் கோபாலகிருஷ்ணன்.

அவரது கூற்றுப்படி, ஒன்று சிறுநீரக தானம் செய்யும் நபர் நோயாளியின் குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது நோயாளிக்கு மிகவும் நெருக்கமானவராக இருப்பதோடு மட்டுமல்லாது அதனை நிரூபிக்கவும் வேண்டும். அப்போது தான் அவரது சிறுநீரக தானம் ஏற்றுக்கொள்ளப்படும்.

இவை போக யாரேனு மூளைச் சாவு அடைகின்ற சமயங்களில் அவர்களின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் உடல் உறுப்புகள் மாற்றுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்தப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டில் ட்ரான்ஸ்டான் என்கிற உறுப்பு மாற்று ஆணையம் உள்ளது.

தடுக்கும் வழிகள் என்ன?

சிறுநீரக பாதிப்பு, லான்செட், இதய நோய், நாள்பட்ட சிறுநீரக நோய்

பட மூலாதாரம், Getty Images

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான உணவு பழக்கம் போன்ற, சிறுநீரக நோய் வராமல் தடுப்பதற்கான வழிகளையும் அவர் குறிப்பிட்டார்.

  • தினசரி 45 நிமிட நடை பயிற்சி

  • உடல் பருமனை தவிர்ப்பது

  • குறைவான அளவில் உப்பு மற்றும் சோடியம் எடுத்துக் கொள்வது

  • பொட்டாசியம் அதிக அளவில் எடுத்துக் கொள்வது

  • தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது

  • அதிக அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்வது

  • புகையிலை நுகர்வை தவிர்ப்பது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn7epvpzd8lo

கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுமா?

2 weeks 4 days ago

கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுவது ஏன்? அறிகுறிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • க.சுபகுணம்

  • பிபிசி தமிழ்

  • 5 நவம்பர் 2025

கட்டு வரியன் பாம்புக்கு வட இந்தியாவின் சில கிராமங்களில் 'மூச்சை விழுங்கும் பாம்பு' என்ற பெயருண்டு. அதன் கடிக்கு ஆளான பலரும் உறக்கத்திலேயே இறந்துவிடுவதுதான் இப்படி அழைக்கப்படுவதற்குக் காரணம்.

அதேவேளையில், கட்டு வரியன் கடித்துவிட்டாலே மரணம்தான் என்று அச்சப்படத் தேவையில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில், புதுக்கோட்டையில் அந்தப் பாம்பிடம் கடிபட்ட ஆறு வயது சிறுமி ஒருவர் ஒரு வாரம் கொடுக்கப்பட்ட தொடர் சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்திருப்பது அதற்குச் சான்றாக விளங்குகிறது.

இருப்பினும், கட்டு வரியன் பாம்பு கடித்தால் பலரும் தூக்கத்திலேயே இறந்துவிடுவது ஏன்? அதன் நஞ்சு மனித உடலில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

இந்தத் தகவல்களை விரிவாகத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் பாம்புகள் மற்றும் அதன் நஞ்சு தொடர்பாக ஆராய்ந்து வரும் வல்லுநர்களைத் தொடர்புகொண்டது.

வயிற்று வலியில் துடித்த ஆறு வயது சிறுமி

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே அமைந்துள்ளது குலவைப்பட்டி கிராமம். அங்கு வாழும் பழனி, பாப்பாத்தி தம்பதியின் ஆறு வயது மகள் ஸ்ரீமதி, கடந்த அக்டோபர் 15-ஆம் தேதியன்று இரவு திடீர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டார்.

சிறுமிக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பற்றிய தெளிவான தகவல்கள் ஏதும் பெற்றோர்களுக்குத் தெரிந்திருக்காத நிலையில், வயிற்று வலியில் துடித்த மகளை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுவது ஏன்? அறிகுறிகள் என்ன?

பட மூலாதாரம், Dr A. Thanigaivel

இரு வேறு தனியார் மருத்துவமனைகளில் வெவ்வேறு சிகிச்சைகளைப் பெற்று, முன்னேற்றம் இல்லாத நிலையில், இரண்டு நாட்கள் கழித்தே சிறுமி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கண்களைத் திறக்க முடியாத நிலையில் சிறுமியைக் கொண்டு வந்ததாகவும் மிகத் தாமதமாக வந்ததால் சிகிச்சை அளிப்பதில் பல சிரமங்கள் இருந்ததாகவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார் குழந்தைகள் நல மருத்துவர் அரவிந்த்.

"சிறுமி கடும் வயிற்று வலியால் சிரமப்பட்டதாக பெற்றோர் தெரிவித்தனர். அதோடு, கண்களைத் திறக்க முடியாத நிலையில், இமைகளின் நரம்பு பாதிக்கப்பட்டு இருந்தது. அவர் சுவாசிக்கவும் சிரமப்பட்டார். இவையனைத்துமே கட்டு வரியன் பாம்பு கடித்தால் ஏற்படக்கூடிய அறிகுறிகள்.

இதை உணர்ந்தவுடன், உரிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு உறுதி செய்தோம். பின்னர் பாம்புக்கடிக்கு கொடுக்கப்படும் நஞ்சுமுறி மருந்தை சிறுமிக்கு கொடுத்து சிகிச்சையளிக்கத் தொடங்கினோம்," என்று தெரிவித்தார்.

கட்டு வரியன் கடித்தும் அதிக நேரம் உயிர் பிழைப்பது சாத்தியமா?

பாம்பு கடிக்கும்போது எந்த அளவிலான நஞ்சை மனித உடலுக்குள் செலுத்துகிறது என்பதைப் பொறுத்தே இது மாறுபடும் என்கிறார் யுனிவெர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் மூத்த விஞ்ஞானியுமான முனைவர் மனோஜ்.

"இந்தக் குழந்தையைப் பொறுத்தவரை எப்போது பாம்பு கடித்தது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் கடிக்கும்போது சிறிய அளவிலான நஞ்சை மட்டுமே பாம்பு சிறுமியின் உடலில் செலுத்தியிருக்கலாம். இது அனைவருக்கும் அமையாது, நல்வாய்ப்பாக இந்தச் சிறுமிக்கு அமைந்துவிட்டது," என்று தெரிவித்தார் அவர்.

கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுவது ஏன்? அறிகுறிகள் என்ன?

பட மூலாதாரம், Dr.M.P.Koteesvar

படக்குறிப்பு, யுனிவெர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் மூத்த விஞ்ஞானியுமான முனைவர் மனோஜ்

இதுபோல கட்டு வரியன் கடித்து ஒரு நாள், இரண்டு நாட்கள் கழித்தும்கூட சிகிச்சைக்காக மக்கள் மருத்துவமனையை நாடுவதைத் தனது அனுபவத்திலும் சில முறை கண்டிருப்பதாக முனைவர் மனோஜ் தெரிவித்தார்.

"இதற்குக் காரணம், நாகப் பாம்பு போல இதன் நஞ்சு உடலுக்குள் சென்றவுடன் வேலையைக் காட்டுவதில்லை. ஒருவேளை நஞ்சின் அளவு குறைவாக இருந்தால், அதன் வீரியம் தெரியத் தொடங்குவதற்குச் சில மணிநேரம் முதல் ஒரு நாள் வரைகூட ஆகலாம்.

உடல் தாங்கக்கூடிய சிறிய அளவிலான நஞ்சை மட்டுமே பாம்பு உட்செலுத்தியிருந்தாலும், அதன் அறிகுறிகளை ஒருவர் அனுபவிப்பார். அதில் மாற்றமில்லை. ஆனால் அதற்கு எடுக்கும் நேரம் அதிகம். ஒருவேளை இப்படிப்பட்ட சூழலை புதுக்கோட்டையில் பாதிக்கப்பட்ட சிறுமி எதிர்கொண்டிருக்க வாய்ப்புள்ளது." என்று அவர் விளக்கினார்.

நஞ்சின் அளவு குறைவாக இருந்தாலும், அதற்கான விளைவுகளை உடல் அனுபவிக்கவே செய்யும் என்பதைக் குறிப்பிட்ட அவர் அதற்கு சிகிச்சை அளிக்கும் வரை அந்த பாதிப்புகள் நீங்காது என்றார். அதுவே, இரண்டு நாட்களுக்கு மேல் பிழைத்திருக்க முடிந்தாலும், குழந்தை பல்வேறு பாதிப்புகளை அனுபவித்தமைக்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும் மனோஜ் குறிப்பிட்டார்.

இரவில் கடிக்கும் கட்டு வரியன் பாம்பு

கட்டு வரியன் கடித்த பிறகும் இரு நாட்களுக்கு மேல் உயிர் பிழைத்திருந்த சிறுமி, பின்னர் ஒரு வார சிகிச்சையைத் தொடர்ந்து முற்றிலுமாகக் குணமடைந்தார். இதுபோல, கடிபட்டதன் விளைவுகளை ஒருவர் அனுபவிக்கச் சிறிது நேரம் எடுக்கலாம் என்றார் மனோஜ்.

ஆனால், 'இந்தியாவில் நிகழும் பாம்புக்கடி மரணங்களில் கணிசமான இறப்புகளுக்கு கட்டு வரியனும் காரணமாக இருப்பது ஏன்?' என்ற கேள்வி எழுகிறது.

கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுவது ஏன்? அறிகுறிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

அதுகுறித்துக் கேட்டபோது, "பாம்பின் நஞ்சு குறைவான அளவில் செலுத்தப்பட்டால் மட்டுமே இப்படியான நல்வாய்ப்புகள் கிடைக்கும்" எனக் குறிப்பிட்ட அவர், மற்றபடி கட்டு வரியனின் நஞ்சு நுரையீரலில் வீக்கத்தை ஏற்படுத்துவதால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வதாகக் கூறினார்.

ஊர்வனவியலாளர் ரமேஸ்வரனின் கூற்றுப்படி, கட்டு வரியன் ஓர் இரவாடிப் பாம்பு, இரவில் அதிக சுறுசுறுப்புடன் இயங்கக்கூடியது. குறிப்பாக, நள்ளிரவில் மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் அது சுறுசுறுப்பாக இயங்கும்.

அதோடு, "வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவை காணப்படுகின்றன. இரவில் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும்போது வீடுகளுக்குள் வருவதால் மக்கள் எளிதில் கவனிப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு. அது மட்டுமின்றி, கட்டு வரியன்கள் பிற நச்சுப் பாம்புகளைப் போல சீண்டப்படும்போது சத்தமிடுவது, எச்சரிப்பது போன்ற செயல்களைச் செய்யாது. எனவே அதன் இருப்பு கவனிக்கப்படாமல் போக அதிக வாய்ப்புள்ளது.

அவை வருவதை, செல்வதைக்கூட யாரும் கவனித்துவிடாதபடி கூச்ச சுபாவம் மிகுந்த நடத்தைகளைக் கொண்டவை. இந்தக் காரணத்தால் கட்டு வரியன் இருப்பதையே பல நேரங்களில் மக்கள் கவனிக்கத் தவறும் சூழ்நிலை ஏற்படலாம்," என்று விவரித்தார் ரமேஸ்வரன்.

கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுவது ஏன்? அறிகுறிகள் என்ன?

படக்குறிப்பு, ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன்

கட்டு வரியனை பொறுத்தவரை, "மரக்கட்டை குவியல்கள், சிலிண்டர் சந்துகள் போன்ற மறைவிடங்களை அதிகம் நாடுகின்றன. மழை மற்றும் குளிர்காலங்களில் கதகதப்பான இடம் தேடி வீடுகளுக்குள் புகுவதும் நடக்கின்றன.

அதோடு, அதன் உடலமைப்பும் வீடுகளுக்குள் யார் கண்ணிலும் படாமல் எளிதில் வந்து செல்லும் சாதகத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. கூடுதலாக இரவு நேரத்தில் அதிகம் இயங்குகின்றன. இதுவே இரவில் கட்டு வரியனால் பாம்புக்கடி விபத்துகள் அதிகம் ஏற்படக் காரணம். எனவே அவை குறித்த எச்சரிக்கை உணர்வு மிக அதிகமாக இருக்க வேண்டியது அவசியம்," என்றார் ரமேஸ்வரன்.

உடலில் கட்டு வரியன் பாம்பு கடித்த இடத்தை கண்டுபிடிக்க முடியாதா?

நாகம், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் ஆகிய நச்சுப் பாம்புகளைப் பொறுத்தவரை கடித்த இடத்தில் அதைக் காட்டக்கூடிய காயங்கள் தென்படும். ஆனால் கட்டு வரியனில் அப்படி எதுவும் தெரியாது என்கிறார் முனைவர் மனோஜ்.

பொதுவாக பாம்பு கடித்துவிட்டால், கடித்த இடத்தில் கடுமையான வலி, நச்சுப் பற்கள் பதிவது, வீக்கமடைவது, சிவப்பு அல்லது கருமை நிறத்திற்கு மாறுவது, தீப்புண் போன்ற கொப்புளங்கள் வருவது எனப் பல்வேறு வடிவங்களிலான காயங்களைக் காண முடியும்.

ஆனால், "கட்டு வரியன் கடித்த இடத்தில் எவ்வித தடயங்களையும் காண முடியாது. இதனால், நோயாளி பாம்பு கடித்ததால் ஏற்பட்ட பாதிப்புகளைத்தான் அனுபவிக்கிறார் என்பதை உறுதி செய்வதே மருத்துவர்களுக்குப் பெரிய சவாலாக இருக்கும்," என்று மனோஜ் விளக்கினார்.

அவரது கூற்றுப்படி, நாகப் பாம்புகளின் நச்சுப் பற்கள் சராசரியாக 8 முதல் 10 மில்லிமீட்டர் வரை இருக்கும். "கண்ணாடி விரியனின் நச்சுப்பல் அதைவிடப் பெரியது, சுமார் ஒன்றரை இன்ச் வரைகூட இருக்கும். எனவே அவை கடித்த இடத்தை எளிதில் கண்டறிய முடியும்.

சுருட்டை விரியன் விஷயத்தில்கூட பற்கள் சிறிதாக இருந்தாலும் கடித்த இடத்தில் கொப்புளங்கள் போன்ற காயங்கள் ஏற்படும். அதை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் வெறும் 4 மில்லி மீட்டருக்கும் குறைவான அளவைக் கொண்ட நச்சுப் பற்களை உடைய கட்டு வரியன் கடித்த இடத்தில் இப்படி எவ்வித தடயமும் இருக்காது."

இதோடு, வழக்கமாக பாம்புக்கடியை உறுதி செய்யப் பயன்படுத்தப்படும் 20 நிமிட ரத்த உறைவு பரிசோதனையில்கூட, நாகம் மற்றும் கட்டு வரியனின் நஞ்சு ரத்தத்தில் இருப்பதைக் கண்டுபிடிப்பது சிரமம் எனவும் மனோஜ் தெரிவித்தார்.

இந்த சவால்கள், ஒருவர் உடல்நல பாதிப்புகளோடு மருத்துவமனைக்கு வரும்போது "உடலில் பாம்புக்கடி பாதிப்பு இருக்கிறதா என்பதை ஆராய்வதை சிக்கலாக்குகிறது."

அதனால், "நோயாளிக்கு இருக்கும் பாதிப்புகள் கட்டு வரியன் கடியின் அறிகுறிகளை ஒத்திருந்தால் உடனே தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து, உரிய பரிசோதனைகளைச் செய்த பிறகு சிகிச்சைகளைத் தொடங்க வேண்டும் என்பது நடைமுறை," என்று விளக்கினார் பாம்பின் நஞ்சு மற்றும் பாம்புக்கடி குறித்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆராய்ந்து வரும் முனைவர் மனோஜ்.

கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுவது ஏன்? அறிகுறிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

கட்டு வரியன் கடித்தால் தூக்கத்திலேயே இறந்துவிடுவார்களா?

இதுகுறித்து விளக்கிய ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன், "கட்டு வரியன் கடிப்பதாலேயே தூங்கும்போது இறப்பு நிகழ்வதாக அர்த்தமில்லை. அவை பல நேரங்களில் மனிதர்களை தூங்கும்போது கடித்துவிடுகிறது என்பதே அதற்குக் காரணம்," என்றார்.

குளிருக்கு கதகதப்பாக இருக்கும் வீடுகளுக்குள் புகுந்துவிடும் இவை சில நேரங்களில் மனிதர்களுக்கு நெருக்கமாகச் சுருண்டு படுத்திருப்பதாகவும், அப்போது எதேச்சையாக அவற்றை மனிதர்கள் அழுத்திவிட்டாலோ காயப்படுத்திவிட்டாலோ உடனே கடித்து விடுவதாகவும் முனைவர் மனோஜ் குறிப்பிட்டார்.

மறுபுறம், இதுபோன்ற சம்பவங்கள் பதிவாவதாக வாய்மொழித் தகவல்கள் வந்தாலும், கட்டு வரியன் மனிதர்களை இரவு நேரத்தில் நெருங்கி வருவது ஏன் என்பது குறித்துத் தெரிந்துகொள்ள விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார் ரமேஸ்வரன்.

கட்டு வரியன் பாம்பின் நஞ்சு நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது என்பதால், கடிபட்டவர்களுக்கு கடும் வயிற்று வலி, வாந்தி வருவதைப் போன்ற உணர்வு, கண்களைத் திறக்க முடியாமல் போவது, துர்நாற்றத்துடன் எச்சில் வடிதல், சுயநினைவை இழப்பது ஆகிய அறிகுறிகள் ஏற்படுவதாக மனோஜ் தெரிவித்தார்.

"நரம்பியல் மண்டலத்தை அதன் நஞ்சு தாக்குவதால், நுரையீரலில் வீக்கம் ஏற்படுகிறது, கண் இமைகளைத் திறக்க முடியாமல் கடிபட்டவர்கள் அரை மயக்க நிலைக்குச் செல்ல நேரிடுகிறது, சுயநினைவை இழக்கின்றனர். நுரையீரல் ஆக்சிஜனை உடல் முழுக்க கொண்டு செல்ல முடியாமல் போவதால் சுவாசிக்க முடியாமல் கடிபட்டவர்கள் உயிரிழக்கின்றனர்." என்று அறிகுறிகளை விளக்கினார் மனோஜ்.

இரவு நேரங்களில் தூங்கும்போது ஒருவேளை கடித்து, காலை வரை அதை யாரும் கவனிக்காத சூழல் நிலவினால் கடிபட்டவர் மரணிக்க அதிக வாய்ப்புள்ளது என்றவர், அதையே "இரவில் தூக்கத்திலேயே அதன் கடி மரணத்தை ஏற்படுத்துவதாக" கூறப்படுகிறது எனவும் விவரித்தார்.

இதனாலேயே அவற்றை வட இந்திய கிராமங்கள் பலவற்றில் "மூச்சை விழுங்கும் பாம்பு" என மக்கள் குறிப்பிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒருவரை கட்டு வரியன் கடித்து பல மணிநேரம் கழித்தும்கூட அறிகுறிகள் தெரியத் தொடங்கும் எனத் தெரிவித்த அவர், மிக முக்கியமாக நரம்பியல் செயல்பாடுகளை அதன் நஞ்சு தடை செய்வதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, சுவாசம் தடைபடுவதாகக் கூறினார்.

"அதற்கு வென்டிலேட்டர் உதவியுடன் நுரையீரலில் நேரடியாக ட்யூப் செலுத்தி செயற்கை சுவாசம் வழங்குவதன் மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்," என்று விளக்கினார் முனைவர் மனோஜ்.

அவரது கூற்றுப்படி, கட்டு வரியன் பாம்பின் நஞ்சு, நாகம் போன்ற பிற பாம்புகளின் நஞ்சைப் போல உடனடியாக பாதிப்புகளை ஏற்படுத்துவது குறைவுதான் என்றாலும், அவை கடித்துவிட்டதைக் கண்டுபிடிப்பதே கடினம் என்பதால், சவாலான பாம்புக்கடி சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

கூடுதல் தகவல்கள்: பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2em107e7rlo

வைட்டமின் பி12 குறைபாடு - எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?

3 weeks 5 days ago

வைட்டமின் பி12 குறைபாடு

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • சுர்பி குப்தா

  • பிபிசி செய்தியாளர்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

மே 2025-இல், ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் கார்டியோவாஸ்குலர் மெடிசின் இந்தியாவில் வைட்டமின் பி -12 குறைபாடு குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டது.

வைட்டமின் பி -12 குறைபாடு குறித்த பல ஆய்வு தரவுகள் இதில் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த பகுப்பாய்வில் சேர்க்கப்பட்ட 20 ஆய்வுகளில் மொத்தம் 18,750 பங்கேற்பாளர்கள் இருந்தனர்.

பங்கேற்பாளர்களில் 51 சதவீதம் பேருக்கு வைட்டமின் பி -12 குறைபாடு கண்டறியப்பட்டது. ஆய்வுக் கட்டுரையின்படி, ஆய்வில் பங்கேற்ற சைவ உணவு உண்பவர்களில் 65 சதவீதம் பேர் குறைபாடு கொண்டவர்களாக இருந்தனர்.

வைட்டமின் பி -12 என்றால் என்ன? அதன் குறைபாடு என்ன பிரச்னைகளை ஏற்படுத்தும்? அதை சரிசெய்ய என்ன செய்ய முடியும்?

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க, ஊட்டச்சத்து நிபுணர் தீப்தி கதுஜா மற்றும் டெல்லி டயட்ஸின் நிறுவனர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் அம்ரிதா மிஸ்ரா ஆகியோருடன் பேசினோம்.

வைட்டமின் பி 12 நமக்கு ஏன் தேவை?

பல உடல் செயல்முறைகளுக்கு வைட்டமின்கள் தேவைப்படுகின்றன. இரண்டு வகையான வைட்டமின்கள் உள்ளன. அவை

  • வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே போன்ற கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள்.

  • நீரில் கரையக்கூடிய வைட்டமின்களில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி -12 உள்ளிட்ட பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் அடங்கும்.

"வைட்டமின் பி -12 ஒரு நுண்ணூட்டச்சத்து ஆகும். இது சிறிய அளவில் தேவைப்பட்டாலும், இது நம் உடலில் முக்கியப் பங்கு வகிக்கிறது" என்றார் ஊட்டச்சத்து நிபுணர் தீப்தி கதுஜா.

வைட்டமின் பி -12 உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவுக்கும் அவசியம். தீப்தி கதுஜாவின் கூற்றுப்படி, உணவை ஆற்றலாக மாற்றுவது, புதிய மூலக்கூறுகள் உருவாக்குதல் உள்ளிட்ட உயிரணுக்களில் ஏற்படும் அத்தியாவசிய வேதியியல் எதிர்வினைகளில் வைட்டமின் பி -12 முக்கியப் பங்கு வகிக்கிறது.

நமது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கும் இது முக்கியமானது என்று அவர் கூறுகிறார். இது நமது ரத்த அணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது நமது நோயெதிர்ப்பு மண்டலத்திலும் தாக்கம் செலுத்துகிறது.

சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்க வைட்டமின் பி-12 அவசியம் என்று ஊட்டச்சத்து நிபுணர் அம்ரிதா மிஸ்ரா கூறுகிறார். இது உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல வேலை செய்கிறது.

வைட்டமின் பி12 குறைபாடு

பட மூலாதாரம், Getty Images

எந்த உணவுகளில் வைட்டமின் பி -12 உள்ளது?

வைட்டமின் பி -12 பிரதானமாக இறைச்சியில் காணப்படுகிறது. தாவர உணவுகள் செறிவூட்டப்படாவிட்டால் வைட்டமின் பி 12 கொண்டிருக்காது.

இறைச்சி, மீன், முட்டை, பால் மற்றும் பிற பால் பொருட்களில் வைட்டமின் பி -12 உள்ளது.

இது முட்டை, கோழி, சிவப்பு இறைச்சி, மீன், கடல் உணவு மற்றும் பால் மற்றும் பால் பொருட்களில் காணப்படுகிறது. சப்ளிமெண்ட்ஸும் கிடைக்கின்றன.

வைட்டமின் பி -12 மாத்திரைகள் மற்றும் ஊசி மருந்துகளும் கிடைக்கின்றன என்று அம்ரிதா மிஸ்ரா விளக்குகிறார். இருப்பினும், எந்தவொரு சப்ளிமெண்ட்ஸையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது முக்கியம்.

"வைட்டமின் பி -12 சப்ளிமெண்ட்ஸ் ஒரு மருத்துவரின் வழிகாட்டுதலின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட காலத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்." என்று தீப்தி கதுஜா கூறுகிறார்.

வைட்டமின் பி -12 குறைபாடு

மோசமான உணவுப் பழக்கம், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பால் பொருட்களை போதுமான அளவு உட்கொள்ளாதது ஆகியவை வைட்டமின் பி 12 குறைபாட்டிற்கு காரணம் என்று அம்ரிதா மிஸ்ரா கூறுகிறார்.

வைட்டமின் பி 12 கொண்ட உணவுகளை உட்கொள்பவர்களுக்கும் குறைபாடு ஏற்படலாம். காரணம் அவர்களின் உடலால் அதை கிரகித்துக் கொள்ள முடியாமல் இருக்கும். அதாவது, நீங்கள் பி12 கொண்ட உணவை உட்கொள்கிறீர்கள், ஆனால் அந்த உணவின் விளைவுகள் உங்கள் உடலில் தெரியவில்லை. இதன் பொருள் உங்கள் உடல் அதை சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பதே.

வைட்டமின் பி12 குறைபாடு

பட மூலாதாரம், Getty Images

உடலுக்கு வைட்டமின் பி -12 எவ்வாறு கிடைக்கிறது?

வைட்டமின் பி -12 நம் உடலில் எடுத்துக் கொள்ளப்படுவது ஒரு சிக்கலான செயல்முறையாகும். உணவில், வைட்டமின் பி -12 புரதங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின்படி (என்ஐஎச்), வைட்டமின் பி -12 உடலால் இரண்டு கட்டங்களில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. முதல் கட்டத்தில், வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் வைட்டமின் பி -12 ஐ உணவில் உள்ள புரதங்களிலிருந்து பிரிக்கிறது.

இரண்டாவது கட்டத்தில், புரதத்திலிருந்து பிரிக்கப்பட்ட வைட்டமின் பி -12 வயிற்றில் உற்பத்தி செய்யப்படும் ஒரு புரதத்துடன் பிணைக்கப்படுகிறது. இது உள்ளார்ந்த காரணி எனப்படுகிறது, பின்னர் உடலில் உறிஞ்சப்படுகிறது.

சப்ளிமெண்ட்ஸில் உள்ள வைட்டமின் பி -12 எந்த புரதத்திற்கும் பிணைக்கப்படவில்லை. எனவே அதனை உடல் உள்ளே எடுத்துக் கொள்ள முதல் கட்டம் தேவையில்லை. இருப்பினும், சப்ளிமெண்ட்ஸில் உள்ள வைட்டமின் பி -12 உடலில் உறிஞ்சப்படுவதற்கான உள்ளார்ந்த காரணியுடன் பிணைக்கப்பட வேண்டும்.

வைட்டமின் பி -12 உடலுக்குள் எடுத்துக் கொள்ளப்படும் செயல்முறையின் எந்தக் கட்டத்திலும் அது சரியாக நடக்கவில்லை என்றால், குறைபாடு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.

என்ஐஎச்-ன் படி, வைட்டமின் பி -12 குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள் போதுமான வைட்டமின் பி -12 பெறாதவர்கள் அல்லது உடல்கள் அதை சரியாக உறிஞ்சாதவர்களாக இருக்கலாம்.

உதாரணமாக

வயதானவர்கள்: வயதாகும்போது, பலரின் வயிற்றில் போதுமான ஹைட்ரோகுளோரிக் அமிலம் இருக்காது. இதனால் வைட்டமின் பி -12 ஐ உணவில் இருந்து உடல் எடுத்துக் கொள்வது கடினம். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வைட்டமின் பி -12 செறிவூட்டப்பட்ட உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்ஸ் தேவைப்படலாம்.

இரைப்பை அழற்சி உள்ளவர்கள்: இந்த தன்னுடல் தாக்க நோய் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் வயிற்றில் உள்ளார்ந்த காரணியின் உற்பத்தியில் குறைவை ஏற்படுத்துகிறது. இது வைட்டமின் பி -12 ஐ போதுமான அளவு உறிஞ்சுவதைத் தடுக்கிறது.

பெர்னிசியஸ் ரத்த சோகை உள்ளவர்கள்: இந்த நிலையில், உடல் உள்ளார்ந்த காரணியை உருவாக்காது. இது வைட்டமின் பி -12 ஐ உறிஞ்சுவதற்கு அவசியமானது. அத்தகையவர்களின் உடல் உணவு மற்றும் சப்ளிமெண்ட்ஸ் இரண்டிலிருந்தும் வைட்டமின் பி -12 ஐ எடுத்துக் கொள்ள முடியாது. அவர்களுக்கு மருத்துவர்கள் பொதுவாக வைட்டமின் பி -12 ஊசி மூலம் சிகிச்சையளிக்கிறார்கள்.

வயிறு அல்லது குடல் அறுவை சிகிச்சை செய்தவர்கள்: வயிற்றின் ஒரு பகுதியை அகற்றுவது போன்ற அறுவை சிகிச்சை உடலின் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் உள்ளார்ந்த காரணியின் உற்பத்தியைக் குறைக்கும். இதனால் வைட்டமின் பி -12 ஐ உறிஞ்சுவது கடினமாகும்.

சைவ உணவு உண்பவர்கள் மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பவர்கள், அசைவ உணவுகளை குறைவாக அல்லது சாப்பிடாதவர்கள் தங்கள் உணவில் இருந்து போதுமான வைட்டமின் பி -12 பெறாமல் போகலாம்.

வைட்டமின் பி12 குறைபாடு

பட மூலாதாரம், Getty Images

உடலில் வைட்டமின் பி -12 குறைபாட்டின் அறிகுறிகள் மற்றும் விளைவுகள்

வைட்டமின் பி -12 குறைபாட்டின் அறிகுறிகள் தோன்ற பல ஆண்டுகள் ஆகலாம்.

"வைட்டமின் பி -12 குறைபாடு உருவாக காலம் எடுக்கும். எனவே அதன் அறிகுறிகளும் படிப்படியாக தோன்றி காலப்போக்கில் மிகவும் கடுமையானதாகிவிடும்." என்று தீப்தி கதுஜா விளக்குகிறார்.

வைட்டமின் பி 12 குறைபாட்டின் அறிகுறிகள்-

  • உங்கள் கைகள் அல்லது கால்களில் விசித்திரமான, உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு

  • நடப்பதில் சிரமம் (சமநிலை பிரச்னைகள்)

  • பெர்னிசியஸ் ரத்த சோகை

  • நாக்கு வீக்கம்

  • சிந்திப்பதிலும் புரிந்துகொள்வதிலும் சிரமம் அல்லது ஞாபக மறதி

  • தளர்வு

  • சோர்வு

  • தோல் மஞ்சள் நிறமாதல்

  • மனநிலை மாற்றங்கள் அல்லது எரிச்சல்

  • செறிவு குறைதல்

ஒருவருக்கு வைட்டமின் பி -12 குறைபாடு இருக்கிறதா என்பதை வைட்டமின் பி -12 சோதனை மூலம் தீர்மானிக்க முடியும், இது ரத்த பரிசோதனையாகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c9v1dymwnkpo

புரோஸ்டேட் புற்றுநோய் (ஆண்) விரைவில் கண்டறிய இங்கிலாந்தில் புதிய நடவடிக்கை!

3 weeks 6 days ago

skynews-scan-mri_7064351.jpg?resize=750%

புரோஸ்டேட் புற்றுநோய் (ஆண்) விரைவில் கண்டறிய இங்கிலாந்தில் புதிய நடவடிக்கை!

எட்டு ஆண்களில் ஒருவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதாக இங்கிலாந்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் மொத்தம் 58,218 ஆண்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டகாக கண்டறியப்பட்டனர்.

இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 9% அதிகரிப்பு என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இங்கிலாந்தில் இந்த நோய் குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதாக சந்தேகிக்கும் ஆண்கள் ஒரு நாளுக்குள் நோயறிதலை மேற்கொள்ள இங்கிலாந்தில் புதிய சோதனை முறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதன்படி, MRI ஸ்கேன்களில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சில நிமிடங்களில் உடலில் இருக்கும் சிக்கலான படையணிகளைக் கண்டறிய கூடிய முறைகள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளன.

இதில் புற்றுநோய்க்கான அதிக ஆபத்து இருப்பதாக ஸ்கேன் முடிவு செய்தால், அது முன்னுரிமை மதிப்பாய்வுக்காக ஒரு கதிரியக்க நிபுணருக்கு அனுப்பப்படுவதுடன் அதே நாளில் நோயாளி செல் பரிசோதனைக்கு முன்பதிவு செய்யப்படுவார்.

இந்த தொழில்நுட்பம் ஆரம்பத்தில் 15 மருத்துவமனைகளில் சோதனை செய்யப்படும் என்றும், இந்த அணுகுமுறை ஆண்களின் நோய் குறித்த காத்திருப்பைக் குறைக்கும் என்றும் கூறுகிறது.

இந்நிலையில் தற்போது, புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதாக சந்தேகிக்கும் ஆண்கள் தங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் இந்த நோயறிதல் முறையினையும் செல் பரிசோதனையையும் மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2025/1451385

சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரை நோயை தடுக்க முடியுமா? - சர்க்கரைநோய் மருத்துவர் வி மோகன் விளக்கமளிக்கிறார்

1 month ago

Dr. V Mohan explains the causes of diabetes and how to prevent it, and what steps to follow to correct diabetes.

காணொளி கீழே👇
https://youtu.be/hhdAoFJHHmU?si=c9rwWFC_3KoPBI5z

பற்தூரிகைகளில் வாழும் 12 மில்லியன் நுண்ணுயிர்கள் - புரோபயாடிக் பற்பசையால் நன்மையா?!

1 month ago

டூத்பிரஷில் வாழும் 12 மில்லியன் நுண்ணுயிர்கள் - கடைசியாக எப்போது மாற்றினீர்கள்?

பாக்டீரியாக்கள், வாய்ப்புண், வைரஸ், பூஞ்சைக் காளன், பற்தூரிகை

பட மூலாதாரம், Getty Images

7 மணி நேரங்களுக்கு முன்னர்

நமது கழிப்பறைகளிலிருந்து வரும் பாக்டீரியாக்கள், வாய்ப்புண்களை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் பூஞ்சைக் காளான்களை உருவாவதற்கானவை. இவை நமது பற்தூரிகைகளில் (toothbrush) செழித்து வளரும். ஆனால் உங்கள் பற்தூரிகைகளை சுத்தமாக வைத்திருக்கவும் பல வழிகள் உள்ளன.

கிருமிகள் நிறைந்த மினியேச்சர் அமைப்பாக உங்கள் பற்தூரிகை மாறியிருக்கலாம். அதிலுள்ள தூரிகைகள் வறண்ட புதர் நிலம் போன்று மாறிவிடுகின்றன. இவை நாள்தோறும் தற்காலிகமாக தண்ணீரில் மூழ்கி, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஈரநிலமாக மாற்றப்படுகிறது. உயரமான பிளாஸ்டிக் தண்டுகளின் உச்சியில் இருக்கும் புதர்களுக்கு மத்தியில் லட்சக்கணக்கான உயிரினங்கள் செழித்து வளர்கின்றன.

பொதுவாக, உங்களுடைய பல் துலக்கும் கருவி நூற்றுக்கணக்கான வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 1 முதல் 12 மில்லியன் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளுக்கு தாயகமாக உள்ளது. அதே போல் அதில் எண்ணிலடங்கா வைரஸ்களும் உள்ளன. அவை உங்கள் டூத் பிரஷின் மேற்பரப்பில் உயிரியல் படலங்களை உருவாக்குகின்றன, அல்லது நாட்பட்ட பற்தூரிகைகளின் உடைந்த தண்டுகளுக்குள் ஊடுருவிச் செல்கின்றன.

நமது வாயிலிருந்து தினமும் வரும் நீர், உமிழ்நீர், தோல் செல்கள் மற்றும் உணவின் தடயங்கள் இந்த நுண்ணுயிரிகளுக்கு அவை செழித்து வளரத் தேவையான அனைத்தையும் அளிக்கின்றன . அவ்வப்போது, அருகிலுள்ள கழிப்பறையை சுத்தம் செய்யும் போது அல்லது ஜன்னலைத் திறக்கும்போது வரும் பிற நுண்ணுயிரிகள் அவற்றுடன் இணைந்துவிடுகின்றன.

நாளொன்றுக்கு இரு முறை பல் துலக்கும் நாம், நுண்ணுயிரிகள் நிறைந்த பற்தூரிகையால் பற்களை துலக்கும்போது, அவை நமது வாய்க்குள் செல்லும்.

எனவே, நமது பல் துலக்கும் கருவி எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதில் அதிக அக்கறை கொள்ள வேண்டும்.

நமது பற்தூரிகையில் என்ன வாழ்கிறது, அந்த நுண்ணுயிரிகள் என்ன ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன, மேலும் நமது பல் துலக்கும் கருவிகளை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கான பதிலை, பல் மருத்துவர்களையும் மருத்துவர்களையும் ஆராயத் தூண்டுகிறது.

பாக்டீரியாக்கள், வாய்ப்புண், வைரஸ், பூஞ்சைக் காளன், பற்தூரிகை

பட மூலாதாரம், Getty Images

நுண்ணுயிரிகள் எங்கிருந்து வருகின்றன?

"பற்தூரிகையில் உள்ள நுண்ணுயிரிகள் முதன்மையாக மூன்று மூலங்களிலிருந்து உருவாகின்றன" என்று ஜெர்மனியில் உள்ள ரைன்-வால் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியலாளர் மார்க்-கெவின் ஜின் கூறுகிறார், இவர் பற்தூரிகையில் உள்ள நுண்ணுயிரி மாசுபாட்டை ஆய்வு செய்துள்ளார். இவை பயனரின் வாய், அவர்களின் தோல் மற்றும் டூத் பிரஷ் வைக்கப்பட்டிருக்கும் சூழல்.

நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் டூத் பிரஷ்ஷில் மட்டுமல்ல, நாம் கடையில் இருந்து வாங்கும் புதிய டூத் பிரஷ்ஷிலும் நாம் அதை பயன்படுத்துவதற்கு முன்பே, அதில் பல்வேறு நுண்ணுயிரிகள் இருக்கலாம்.

உதாரணமாக, பிரேசிலில் உள்ள கடைகளில் பல்வேறு உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்பட்ட 40 புதிய டூத் பிரஷ்களை ஆய்வு செய்ததில், அவற்றில் பாதி ஏற்கனவே பல்வேறு பாக்டீரியாக்களால் மாசுபட்டிருப்பது கண்டறியப்பட்டது .

அதிர்ஷ்டவசமாக, நாம் பயன்படுத்தும் பற்தூரிகைகளில் காணப்படும் பெரும்பாலான நுண்ணுயிரிகள் அதிக பாதிப்பில்லாதவை. ஆச்சரியப்படும்விதமாக, நமது வாயிலியே பல நுண்ணுயிரிகள் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் நாம் பற்தூரிகையை வாய்க்குள் வைத்து பல்துலக்கும்போது, நுரோதியா டெனோகாரியோசா , ஸ்ட்ரெப்டோகாசியே மைடிஸ் மற்றும் ஆக்டினோமைசஸ் பாக்டீரியா போன்ற நமது வாய்க்குள் இருக்கும் நுண்ணுயிரிகளை டூத் பிரஷ்கள் நீக்குகின்றன.

இந்த நுண்ணுயிரிகளில் சில நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், பற்சிதைவை ஏற்படுத்தும் பிற நுண்ணுயிரிகளிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகின்றன. ஆனால் அவற்றிடையே நமக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளும் பதுங்கியிருக்கும்.

கழிப்பறை சுத்தம், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள்

பட மூலாதாரம், Getty Images

தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள்

"இவற்றில் மிக முக்கியமானவை ஸ்ட்ரெப்டோகாக்கி மற்றும் ஸ்டேஃபிளோகோகி, இவை பல் சிதைவை ஏற்படுத்துகின்றன," என பிரேசிலில் உள்ள சாவ் பாலோ பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவப் பேராசிரியர் வினிசியஸ் பெட்ராஸி கூறுகிறார். அவற்றில் சில, நமது ஈறுகளில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும், இது பீரியண்டால்ட் நோய் என்று அழைக்கப்படுகிறது .

பயன்படுத்தப்பட்ட பற்தூரிகைகளில் வாழும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வயிற்று தொற்று மற்றும் உணவு விஷத்துடன் (food poisoning) பொதுவாக தொடர்புடைய உயிரினங்களான எஸ்கெரிச்சியா கோலி, சூடோமோனாஸ் ஏருகினோசா மற்றும் என்டோரோபாக்டீரியா ஆகியவை பற்தூரிகைகளில் காணப்பட்டன.

இவற்றைத் தவிர, மருத்துவமனை நோய்த்தொற்றுகளுக்கு பொதுவான காரணமான கிளெப்சில்லா நிமோனியா மற்றும் கேண்டிடா ஈஸ்ட்கள் போன்ற நோய்க்கிருமிகள் இருப்பதையும் ஆய்வுகள் அடையாளம் கண்டுள்ளன.

இந்த நுண்ணுயிரிகள், நாம் பற்தூரிகைகளை சுத்தப்படுத்த பயன்படுத்தும் தண்ணீரில் இருந்தும், நம் கைகள் மற்றும் "சுற்றுச்சூழலின்" பிற பகுதிகளிலிருந்தும் வருகின்றன. இருப்பினும், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உருவாகும் சூழல் உங்கள் குளியலறையாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

குளியலறைகள் சூடான மற்றும் ஈரப்பதமான இடங்களாகும், அங்கு தொடர்ந்து ஏரோசோல்கள், பாக்டீரியா மற்றும் வைரஸ்களை காற்றில் கொண்டு செல்லக்கூடிய மெல்லிய நீர்த்துளிகள் வந்து சேர்கின்றன. இதனால் குளியலறைகளில் வைக்கப்படும் பல் துலக்கும் பொருட்கள் மாசுபடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று ஜின் கூறுகிறார்.

பொதுவாக நமது குளியலறைகளிலேயே கழிப்பறைகளையும் வைத்திருக்கிறோம். அந்த அறையில் தான், டூத் பிரஷ்களும் வைக்கிறோம். அதனால்தான் டூத் பிரஷ் குளியலறையில் இருக்கும்போது நுண்ணுயிரிகளால் நிரம்புகின்றன.

கழிப்பறை சுத்தம், பாக்டீரியாக்கள்

பட மூலாதாரம், Getty Images

கழிப்பறை சுத்தம்

கழிப்பறையை சுத்தம் செய்யும்(Flush) ஒவ்வொரு முறையும், அதைச் சுற்றியுள்ள காற்றில் 1.5 மீ (5 அடி) வரை சிறிய நீர்த்துளிகள் மற்றும் நுண்ணிய மலத்துகள்கள் தெறிக்கின்றன. இவற்றில் பாக்டீரியா மற்றும் தொற்று வைரஸ்கள் இருக்கலாம், அதாவது காய்ச்சல், கோவிட்-19 மற்றும் வயிற்றுப்போக்குக்கு காரணமாகும் நோரோவைரஸ் போன்றவை இருக்கும்.

பல் துலக்கும் பிரஷ்ஷை குளியலறையில் கழிப்பறைக்கு அருகில் வைத்திருந்தால், உங்கள் கழிப்பறையின் உள்ளடக்கங்கள் அதில் படிந்துவிடும், தொற்று நுண்ணுயிரிகள் நேரடியாக பிரஷ்ஷில் படியும் ஆபத்து அதிகம். இருப்பினும், கழிவறையை கழுவும்போதும், அதில் நீரூற்றும்போதும் கழிப்பறை இருக்கையை மூடுவது பலனளிக்கும்.

அதிலும், பிறருடன் பகிர்ந்துக் கொள்ளும் குளியலறைகளில், ஆபத்து ஒருவேளை அதிகமாக இருக்கலாம். பல்கலைக்கழகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பொது குளியலறைகளில் வைக்கப்படும் 60% பற்தூரிகைகளில் மலத்தில் காணப்படும் பாக்டீரியாக்கள் படிந்திருப்பதாகவும், ஒருவரின் பிரஷ்ஷில் உள்ள நுண்ணுயிரிகள் வேறொருவரிடமிருந்து வந்திருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

நிஜ உலக சூழல்களில் நுண்ணுயிரிகள் எவ்வாறு உயிர்வாழ்கின்றன என்பதைப் பற்றி ஆய்வு செய்யும் அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் பொறியியல் இணைப் பேராசிரியரான எரிகா ஹார்ட்மேன், கழிப்பறையில் உள்ள நுண்ணுயிரிகள், உண்மையில் மிகவும் கவலை தரக்கூடியவை அல்ல என்று கூறுகிறார்.

பொதுமக்கள் அனுப்பிய 34 பற்தூரிகைகளில், எதிர்பார்த்த அளவுக்கு மலம் தொடர்பான பாக்டீரியாக்கள் இருப்பதை அவரது குழுவினர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கண்டறிய முடியவில்லை. குடல் தொடர்பான நுண்ணுயிரிகளில் பல காற்றில் வெளிப்படும் போது நீண்ட காலம் உயிர்வாழாது என்பதைக் குறிக்கும் ஆராய்ச்சியை இல்லினாய்ஸில் சுட்டிக்காட்டுகிறார்.

"பெரும்பாலான மக்கள் தங்கள் பற்தூரிகைகளால் சுகாதார சீர்கேட்டை எதிர்கொள்வதாக நான் நினைக்கவில்லை," என்று அவர் கூறுகிறார்.

பற்தூரிகை, வைரஸ்கள்

பட மூலாதாரம், Getty Images

இருப்பினும், சில ஆராய்ச்சிகள், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா வைரஸ்கள் போன்ற வைரஸ்கள் பற்தூரிகையில் பல மணிநேரம் உயிர்வாழும், ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ்-1, சளி புண்களை ஏற்படுத்தும் வைரஸ்கள் 48 மணிநேரம் வரை கூட உயிர்வாழும் என்பதைக் காட்டுகின்றன. இது நோய்கள் பரவுவதற்கான சாத்தியத்தைக் காட்டுகிறது.

இந்தக் காரணத்திற்காகத் தான், பல் துலக்கும் பொருட்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என பொது சுகாதார ஆலோசனை கூறப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட டூத் பிரஷ்களை ஒன்றாக வைத்தால், அதிலும் குறிப்பாக நம்முடன் வசிக்காத நபர்களுடையவற்றுடன் சேர்த்து வைக்கக்கூடாது என்றும் பொது சுகாதார அமைப்புகள் எச்சரிக்கின்றன.

இருப்பினும், ஒரே வீட்டில் வசிப்பவர்களுக்கு இது பெரிய அளவு பிரச்னையை ஏற்படுத்தாது என்று ஹார்ட்மேன் கூறுகிறார். "ஒன்றாக வாழ்பவர்கள் அப்படி இல்லாதவர்களை விட தங்கள் வாயில் உள்ள நுண்ணுயிரிகளின் விகிதத்தை அதிகமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள்" என்று அவர் கூறுகிறார். "இதற்குக் காரணம், முத்தமிடுவது போன்ற நேரடி வழிகளைத் தவிர, டூத் பிரஷ்களை அருகில் வைப்பது போன்ற மறைமுக வழியாகவும் இருக்கலாம் என நினைக்கிறேன்." (நாய் உரிமையாளர்கள் பெரும்பாலும் தங்கள் செல்லப்பிராணிகளிடம் இருக்கும் நுண்ணுயிரிகளில் பலவற்றைப் பகிர்ந்து கொள்வார்கள் என்பது கவனிக்கத்தக்கது ).

உண்மையில், பற்தூரிகைகளில் காணப்படும் சில வைரஸ்கள் உண்மையில் நமக்கு சாதகமாக செயல்படக்கூடும் - ஹார்ட்மேனும் அவரது குழுவும் பற்தூரிகைகள் பாக்டீரியோபேஜ்கள் எனப்படும் வைரஸ்களின் செழிப்பான சமூகங்களைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தனர், அவை மனிதர்களை விட பாக்டீரியாக்களைப் பாதிக்கின்றன மற்றும் அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவும்.

பற்தூரிகை, வைரஸ்கள்

பட மூலாதாரம், Getty Images

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நோய்க்கிருமிகளால் ஏற்படும் ஆபத்து சிறியது என ஒப்புக்கொள்ளும் ஜின், நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமாக உள்ளவர்கள் தொற்றுநோய்களுக்கு ஆளாகிறார்கள். பல் துலக்கும் போது பாக்டீரியா டிஎன்ஏவை வரிசைப்படுத்திய பிற ஒத்த ஆய்வுகளுடன் ஜின்னின் ஆராய்ச்சி , இந்த பாக்டீரியாக்களில் குறைந்தபட்சம் சில நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எதிர்க்கும் மரபணுக்களைக் கொண்டுள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளன.

இதன் பொருள் அவை தொற்றுநோய்களை ஏற்படுத்தினால் அவற்றுக்கு சிகிச்சையளிப்பது கடினம். ஆனால் ஜின் தனது ஆய்வில் இந்த மரபணுக்கள் "ஒப்பீட்டளவில் குறைந்த மட்டங்களில்" இருந்தன, எனவே "பொது சுகாதாரக் கண்ணோட்டத்தில் மிதமான கவலையை" மட்டுமே முன்வைக்கின்றன என்று கூறுகிறார்.

இருப்பினும், இத்தாலியில் உள்ள மாணவர்களிடமிருந்து பல் துலக்கும் போது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அவை அனைத்தும் பல மருந்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பாக்டீரியாக்களைக் கொண்டிருந்தன என்பதைக் கண்டறிந்தது.

சில பல் துலக்கும் கருவிகளில் நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சைகள் சேர்க்கப்பட்டுள்ளன, அவை உங்கள் பற்தூரிகையில் வாழும் பாக்டீரியாக்களை கட்டுக்குள் வைத்திருப்பதாக கூறி சந்தைப்படுத்தப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான ஆய்வுகள் இந்த நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சைகளால், உங்கள் தூரிகையில் வாழும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ஓரளவே உதவுகின்றன என்றும், மேலும் நுண்ணுயிர் எதிர்ப்பு இனங்கள் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும் என்பதையும் காட்டுகின்றன .

உங்கள் டூத் பிரஷ்ஷைப் பயன்படுத்திய பிறகு அறை வெப்பநிலையில் நேரான நிலையில் காற்றில் உலர வைப்பதே அதில் வாழும் நுண்ணுயிரிகளைக் குறைப்பதற்கான ஒரு எளிய வழியாகும். இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா வைரஸ்கள் உட்பட பல வைரஸ்கள் , ஈரப்பதம் இல்லாமல் இருந்தால் உயிர்ப்புடன் இருக்காது. பற்சிதைவுக்கு முக்கிய பங்களிக்கும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் போன்ற பாக்டீரியாக்கள், பற்தூரிகைகளில் எட்டு மணி நேரம் வரை உயிர்வாழும், 12 மணி நேரத்தில் அவை இறக்கத் தொடங்குகின்றன.

பற்தூரிகையின் தூரிகைகள் உள்ளப் பகுதிகளை மூடவோ அல்லது மூடிய கொள்கலன்களில் சேமிக்கவோ கூடாது என்று அமெரிக்க பல் மருத்துவ சங்கம் மற்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் பரிந்துரைக்கின்றன. ஏனெனில் இது நுண்ணுயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

பாக்டீரியாக்கள், வாய்ப்புண், வைரஸ், பூஞ்சைக் காளன், பற்தூரிகை

பட மூலாதாரம், Getty Images

உங்கள் பற்தூரிகையை எவ்வாறு சுத்தம் செய்வது?

பல் துலக்கும் பொருட்களை கிருமி நீக்கம் செய்வதற்கு, புற ஊதா ஒளியைப் பயன்படுத்துவது முதல் டிஷ்வாஷர் அல்லது மைக்ரோவேவில் வைப்பது, ஹேர் ட்ரையர் மூலம் காய வைப்பது அல்லது ஒரு கிளாஸ் விஸ்கியில் ஊறவைப்பது ஆகியவை அடங்கும்.

மைக்ரோவேவ் பெரும்பாலும் மிகவும் பயனுள்ளதாகக் காணப்படுகிறது, இருப்பினும் உங்கள் பற்தூரிகை உருகவோ அல்லது சேதப்படுத்தவோ கூட வாய்ப்புள்ளது.

நீங்கள் பயன்படுத்தும் பற்பசையிலேயே நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருக்கலாம், அதுவே உங்கள் பற்தூரிகையில் வளரும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வேலைகளைச் செய்யலாம். தண்ணீரில் நன்றாகக் கழுவுவதும் சில பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவுகிறது, ஆனால் பல பாக்டீரியாக்கள் அதிலேயே இருக்கும்.

1% வினிகர் கலந்த கரைசலில் பற்தூரிகையை கழுவுவதை சில ஆராய்ச்சியாளர்கள் பாக்டீரியாவைக் குறைப்பதற்கான மிகச் சிறந்த வழியாக பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், நீங்கள் அடுத்த முறை அதைப் பயன்படுத்தும்போது வித்தியாசமாக இருக்கலாம். எனவே, பற்தூரிகையை கிருமி நாசினி மவுத்வாஷ் கரைசலில் ஐந்து முதல் 10 நிமிடங்கள் ஊறவைப்பதும் பயனுள்ளதாக இருக்கும்.

0.12% குளோரெக்சிடின் அல்லது 0.05% செட்டில்பிரிடினியம் குளோரைடு கொண்ட மவுத்வாஷ் கரைசலைக் கொண்டு தூரிகைகளை கிருமி நீக்கம் செய்யலாம் என பெட்ராஸி பரிந்துரைக்கிறார்.

இருப்பினும், சில ஆராய்ச்சியாளர்கள் வேறுபட்ட அணுகுமுறையாக பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்கும் பற்பசைகளை முன்வைக்கின்றனர்.

நீண்டகாலமாக பயன்படுத்தும் பழைய பற்தூரிகைகளில் பாக்டீரியாக்கள் வளர்வதற்குத் தேவையான திரவம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருக்கும். அமெரிக்க பல் சங்கம் போன்ற பல் சுகாதார அமைப்புகள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை டூத் பிரஷ்ஷை மாற்ற பரிந்துரைக்க இதுவும் ஒரு காரணம் ஆகும். பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இது பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. பல் துலக்குகளில் பாக்டீரியா சுமைகள் சுமார் 12 வார பயன்பாட்டிற்குப் பிறகு உச்சத்தை அடைகின்றன என்பதையும் ஜின்னின் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது .

இருப்பினும், ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் வேறுபட்ட அணுகுமுறையை நோக்கித் திரும்புகின்றனர் உண்மையில் பாக்டீரியா வளர்ச்சியை பற்பசைகள் மூலம் ஊக்குவிக்கலாம்.

வாய்வழி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று அறியப்படும் சில "நட்பு" பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் புரோபயாடிக் பற்பசைகளை பயன்படுத்தலாம்.

உதாரணமாக, ஸ்ட்ரெப்டோகாக்கஸ் சலிவாரிஸ் , தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அடக்கவும் , பிளேக்கை எதிர்த்துப் போராடவும் உதவுவதாக அறியப்படுகிறது. நியூசிலாந்தில் உள்ள ஒரு நிறுவனத்தால் இது பரிசோதிக்கப்பட்டு வருகிறது. மற்றொன்று, லிமோசிலாக்டோபாகிலஸ் ரியூட்டெரி, ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸுக்கு எதிராக வலுவாக போட்டியிடுகிறது, இது பற்சிதைவிலிருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது.

"புரோபயாடிக் பற்பசைகள் அல்லது பயோஆக்டிவ் ப்ரிஸ்டில் பொருட்கள் போன்றவை, பற்பசைகளில் ஆரோக்கியமான நுண்ணுயிர் சமநிலையை ஊக்குவிக்க புதுமையான வழிகளை வழங்கக்கூடும்" என்று ஜின் கூறுகிறார். ஆனால் இது தொடர்பாக இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என அவர் எச்சரிக்கிறார்.

உங்கள் குளியலறையில் உள்ள உங்கள் பற்தூரிகையை நீங்கள் கூர்ந்து கவனித்தால், இது அதை மாற்ற வேண்டிய நேரமா? என்பதைத் தெரிந்துக் கொள்வது அவசியம். அதை உங்கள் கழிப்பறைக்கு அருகில் இருந்து மேலும் அதிக தூரம் தள்ளி வைக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwypj7v4r9lo

மூளை ஆரோக்கியத்திற்கும் உடற்பயிற்சிக்கும் என்ன தொடர்பு? ஆய்வில் புதிய தகவல்

1 month ago

உடற்பயிற்சி மூலம் மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உடற்பயிற்சி மூலம் மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன.

கட்டுரை தகவல்

  • பாமினி முருகன்

  • பிபிசி தமிழ்

  • 21 அக்டோபர் 2025, 08:01 GMT

    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமல்ல, மூளையின் ஆரோக்கியத்தையும், செயல்திறனையும் சீராக்குவதில் கூட முக்கிய பங்கு வகிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் நினைவாற்றல், கூர்ந்து கவனித்தல் மற்றும் சிந்தனை திறன் போன்ற மூளையின் செயல்கள் மேம்படும் என்கின்றன அந்த ஆய்வுகள்.

உடற்பயிற்சி மூலம் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?

மூளை ஆரோக்கியம் என்றால் என்ன?

மூளை எவ்வாறு செயல்படுகிறது மற்றும் மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிக்கிறது என்பது பல காரணங்களை பொருத்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மூளை எவ்வாறு செயல்படுகிறது மற்றும் மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிக்கிறது என்பது பல காரணங்களை பொருத்தது.

மூளை ஆரோக்கியம் என்பது அறிவாற்றல், யோசிக்கும் திறன், உணர்ச்சி, நடத்தை, அசைவு போன்றவற்றில் உங்களின் மூளை எந்தளவிற்கு நன்றாக செயல்படுகிறது என்பதை குறிப்பதாகும் என உலக சுகாதார நிறுவனம் (WHO) குறிப்பிட்டுள்ளது.

இதுபற்றி வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், "மூளை ஆரோக்கியம் என்பது உங்களுக்கு ஏதேனும் நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வாழ்நாள் முழுவதும் உங்கள் முழு திறனையும் பயன்படுத்த இது உதவுகிறது." என தெரிவிக்கிறது.

"நமது மூளை எவ்வாறு செயல்படுகிறது மற்றும் மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிக்கிறது என்பது பல காரணங்களை பொருத்தது. உடல் ஆரோக்கியம், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழல், வாழ்நாள் முழுவதும் கற்றல், சமூக உறவுகள் போன்றவற்றை உள்ளடக்கியது" எனக் குறிப்பிட்டுள்ள உலக சுகாதார மையம், "இந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டங்களிலும் நமது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்" எனவும் தெரிவித்துள்ளது.

உடற்பயிற்சிக்கும் மூளை ஆரோக்கியத்திற்கும் என்ன தொடர்பு?

உடற்பயிற்சி, புதிய மூளை செல்கள் வளர உதவுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உடற்பயிற்சி, புதிய மூளை செல்கள் வளர உதவுகிறது.

உடற்பயிற்சி நேரடியாகவோ மறைமுகமாகவோ நினைவாற்றல் மற்றும் சிந்தனை மேம்பாட்டுக்கு உதவுவதாக ஹார்வர்ட் ஆய்வு தெரிவிக்கிறது.

அதில், "உடற்பயிற்சி மூளை செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ரசாயனங்களை வெளியிடுவதன் மூலமாகவும், புதிய மூளை செல்கள் வளர உதவுவதன் மூலமாகவும், மூளையில் புதிய ரத்த நாளங்களை உருவாக்குவதன் மூலமாகவும் மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி செய்யாதவர்களுடன் ஒப்பிடுகையில், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சிந்தனை மற்றும் நினைவாற்றலுக்கு உதவும் மூளைப் பகுதிகள் பெரிதாக இருப்பதாக பல ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

உடற்பயிற்சி நினைவாற்றலை மேம்படுத்த உதவும் என நரம்பியல் சிகிச்சை நிபுணர் பிரபாஷ் பிரபாகரன் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உடற்பயிற்சி நினைவாற்றலை மேம்படுத்த உதவும் என நரம்பியல் சிகிச்சை நிபுணர் பிரபாஷ் பிரபாகரன் கூறுகிறார்.

இதுபற்றி சென்னையில் தனியார் மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சை நிபுணராக பணிபுரியும் பிரபாஷ் பிரபாகரனிடம் கேட்டபோது, "பொதுவாக உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமல்ல, மூளைக்கும் ஆரோக்கியமானது" என்றார்.

"நமது நினைவாற்றலை மேம்படுத்துவதற்கும், மனநிலையை சீராக வைத்துக்கொள்வதற்கும், அறிவாற்றலை அதிகரிப்பதற்கும் உடற்பயிற்சி உதவும்." என்றார்.

இதுகுறித்து விரிவாக விளக்கிய அவர், "நமது மூளையில் ஃப்ரென்டல் லோப் (Frontal lobe), பரியேட்டல் லோப் (Parietal lobe), டெம்போரல் லோப் (Temporal lobe), ஆக்ஸிபிடல் லோப் (Occipital lobe) என 4 பிரிவுகள் உள்ளன. இதில் இந்த Frontal lobeதான் ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. இதுதான் நமது பாணி, நாம் சிந்திக்கும் முறை போன்றவற்றை தீர்மானிக்கும். அதனால் இந்த இடத்தை பயிற்சிகளால் மேம்படுத்துவதன் மூலம் பலன் கிடைக்கும்" என்றார்.

மூளை ஆரோக்கியத்திற்கு 2 விதமான பயிற்சிகளை பரிந்துரைப்பதாக மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன் கூறினார். ஒன்று மனம் சார்ந்த பயிற்சி, மற்றொன்று ஏரோபிக்ஸ் பயிற்சி ஆகும்.

மனம் சார்ந்த பயிற்சி

மூளை ஆரோக்கியத்திற்கு 2 விதமான பயிற்சிகள் உதவுகின்றன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மூளை ஆரோக்கியத்திற்கு 2 விதமான பயிற்சிகள் உதவுகின்றன.

இந்த பயிற்சிகள் நினைவாற்றல், ஒரு விஷயத்தில் கூர்மையாக கவனம் செலுத்துதல், ஒரு பிரச்னையை தீர்க்கும் திறன் போன்ற அறிவாற்றல் சார்ந்த செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது.

இதுபற்றி பேசிய மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன், "Fund of information அதாவது பொதுஅறிவு, தகவல்கள் என எந்தளவிற்கு அதிகமான தகவல்களை மூளைக்குள் செலுத்துகிறோமோ அந்தளவிற்கு அறிவாற்றல் தொடர்பான பிரச்னைகளில் இருந்து நம்மை நாம் பாதுகாக்க முடியும்" என்றார்.

இதுபற்றி அமெரிக்க சுகாதாரத்துறையின் ஒரு அங்கமான தேசிய சுகாதார நிறுவனத்திலும் (NIH) ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், "அதிகமாக தகவல்களை மூளைக்கு செலுத்துவதன் மூலம் வயதாவதால் ஏற்படும் பாதிப்பு மற்றும், டிமென்ஷியா போன்ற நோய்களை தடுக்க முடியும். வாழ்நாள் முழுவதும் அறிவைப் பெறுவதும், பல உணர்வுப்பூர்வமான செயல்களில் ஈடுபடுவதும் மூளையை பலப்படுத்துகிறது. இதனால் மூளையால் பிரச்னைகளை சிறப்பாக கையாள முடியும். மூளையின் செயல்பாடும் நீண்ட காலத்திற்கு சிறப்பாக இருக்கும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுடோகு, வார்த்தை விளையாட்டு போன்றவை மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுடோகு, வார்த்தை விளையாட்டு போன்றவை மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மனம் சார்ந்த பயிற்சிகளை மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன் பட்டியலிடுகிறார்.

  • வாசித்தல் - என்ன வாசிக்கிறோம் என்பதை விட தொடர்ந்து வாசிப்பதுதான் முக்கியம்

  • திறன் மேம்பாடு - இசை, நடனம் என புதிதாக ஏதாவது ஒரு திறனை கற்றுக்கொள்ளுதல், புதிய மொழிகளை கற்பதும் இதில் அடங்கும்

  • புதிர்கள் - சுடோகு, வார்த்தை விளையாட்டு, கணக்கிடுதல்.

இவை அனைத்தும் மூளை ஆரோக்கியத்திற்கு உதவும் என்று அறிவுறுத்துகிறார்.

ஏரோபிக்ஸ் பயிற்சி

மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் பகுதி.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் பகுதி.

உங்கள் இதயத் துடிப்பு மற்றும் சுவாசத்தை அதிகரிக்கும் வகையில் தொடர்ச்சியாக நீங்கள் செய்யும் எந்தவொரு உடல் அசைவு அல்லது செயல்பாடும் ஏரோபிக் உடற்பயிற்சி என்கிறார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன். அதன்படி,

  • தீவிர நடைபயிற்சி

  • ஓட்டம்

  • சைக்கிள் ஓட்டுவது

  • நீச்சல்

என இவை அனைத்தும் ஏரோபிக் உடற்பயிற்சியின் கீழ் வரும்.

பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் பகுதி விரிவடைகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஹிப்போகேம்பஸ் என்பது டெம்போரல் லோப்-ல் உள்ளது. இது மூளையின் நினைவாற்றல் மற்றும் கற்றலுக்கு உதவும் பகுதியாகும்.

ஏரோபிக் உடற்பயிற்சி மூளை வளர்ச்சிக்கும் உதவும் என மருத்துவர் பிரபாஷ்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஏரோபிக் உடற்பயிற்சி மூளை வளர்ச்சிக்கும் உதவும் என மருத்துவர் பிரபாஷ்.

இதுபற்றி பேசுகையில், "BDNF அதாவது Brain-derived neurotrophic factor என்ற புரதம் உள்ளது. இது வெளியாவதால் நியூரல் இணைப்பு (மூளையின் நரம்பு செல்களான நியூரான்களுக்கு இடையேயான இணைப்புகள், இவை சமிக்ஞைகளை கடத்துவதற்கான பாதைகளை உருவாக்குகின்றன) மேம்படும். நியூரானின் வளர்ச்சியை இது அதிகரிக்கும். இதுவும் நினைவாற்றல் மற்றும் கற்றலை மேம்படுத்த உதவும்" என்கிறார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன்.

"நியூரோகெமிக்கல் (Neurochemical) சமநிலையால்தான் மூளையில் தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. மூளையில் உள்ள நியூரோ கெமிக்கல்களை ஊக்கப்படுத்துவதற்கும் இது உதவும்" என்றார்.

'வாரத்திற்கு 150 நிமிட உடற்பயிற்சி அவசியம்'

வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடல் பயிற்சி செய்ய வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடல் பயிற்சி செய்ய வேண்டும்.

"மூளை ஆரோக்கியத்திற்கு பெரும்பாலான ஆய்வுகள் நடைபயிற்சி மற்றும் ஓட்டத்தைதான் பரிந்துரைக்கின்றன. நடைபயிற்சி, ஓட்டம், நீச்சல் என எதை செய்தாலும் ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்கள் என்ற கணக்கில் செய்ய வேண்டும். அதாவது இந்த 150 நிமிடங்களை தினசரி பிரித்து மேற்கொள்ள வேண்டும். தினமும் உடலுக்கு அசைவுகளை கொடுப்பது அவசியம்" என்றார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன்.

ஹார்வர்ட் ஆய்வில் வாரத்திற்கு 120 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. வாரத்தின் பெரும்பாலான நாட்களில் அரை மணி நேரம் அல்லது வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடலில் செயல்பாடுகள் அவசியம் என பரிந்துரைக்கப்படுகிறது.

மூளையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?

பிரச்னைகளை தீர்க்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் இதுபோன்ற பயிற்சிகள் முக்கியம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரச்னைகளை தீர்க்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் இதுபோன்ற பயிற்சிகள் முக்கியம்.

உடற்பயிற்சிகள் மூளைக்கு ஆரோக்கியத்தை அளித்து, அதன் செயல்பாடுகளை தூண்டுகிறது என்பது பல ஆய்வுகள் மூலமாகவும் நிரூபணமாகி உள்ளது.

லாங்கிடூடினல் ஏஜிங் ஸ்டடி இன் இந்தியா (LASI) 2024ஆம் ஆண்டு 31,464 முதியவர்களை வைத்து ஆய்வு மேற்கொண்டது.

இதில் அதிக உடல் அசைவுகளால் ஆண்கள் 0.98 புள்ளிகள் அதிக அறிவாற்றலும், பெண்கள் 1.32 புள்ளிகள் அதிக அறிவாற்றலும் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு விஷயத்தின் மீது கவனம் செலுத்துவதற்கும், பிரச்னைகளை தீர்க்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் இதுபோன்ற பயிற்சிகள் முக்கியம் என்கிறார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன்.

"அறிவாற்றல் தொடர்பான பிரச்னை (cognitive dissonance) இருப்பவர்களுக்கு பிரச்னைகளை தீர்க்கும் திறன் குறைவாக இருக்கும். உதாரணமாக சாதாரணமானவர்களிடம் வீடு பற்றி எரிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் எனக் கேட்டால், அவர்கள் நான் அங்கிருந்து ஓடுவேன், மற்றவர்களை காப்பாற்றுவேன் என பதில் சொல்லுவார்கள். ஆனால், இந்த பிரச்னை இருப்பவர்களால் இந்த பதிலை சொல்ல முடியாது. அதனால் இந்த உடல் பயிற்சிகள் அல்லது அசைவுகள் இவர்களின் இந்த பிரச்னையை குணப்படுத்த உதவும்" என்கிறார்.

அதுமட்டுமல்லாமல் உடற்பயிற்சிகள் கார்டிசால் எனப்படும் மன அழுத்த ஹார்மோனை குறைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cjw9lnzz8n1o

ஒரே ரத்த பரிசோதனை மூலம் 50 வகை புற்றுநோய்களை கண்டறியலாம் - புதிய ஆய்வில் தகவல்

1 month ago

புற்றுநோய், ரத்தப் பரிசோதனை, நோயறிதல், ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

கட்டுரை தகவல்

  • ஃபெர்குஸ் வால்ஷ்

  • ஆசிரியர், மருத்துவம்

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

புற்றுநோயின் ஐம்பதிற்கும் மேற்பட்ட வகைகளை கண்டறிய உதவும் அற்புதமான ரத்தப் பரிசோதனை ஒன்று, நோயறிதலை விரைவுபடுத்த உதவும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

வட அமெரிக்காவில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் முடிவு, இந்தப் பரிசோதனையால் பல வகையிலான புற்றுநோய்களை அடையாளம் காண முடிந்தது என்பதைக் காட்டுகிறது. புற்றுநோய் ஏற்படலாம் என கணிக்கப்பட்டவர்களுக்கு முக்கால்வாசிப் பேருக்கு எந்தவிதமான ஸ்கிரீனிங்கும் இல்லை.

பாதிக்கும் மேற்பட்ட புற்றுநோய்கள் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டன, அதாவது அவற்றுக்கான சிகிச்சை எளிதானவை மற்றும் குணப்படுத்தக்கூடியவை.

அமெரிக்காவின் கிரெயில் மருந்து நிறுவனம் கேலரி சோதனையை வடிவமைத்துள்ளது.

புற்றுநோய், ரத்தப் பரிசோதனை, நோயறிதல், ஆய்வு, டிஎன்ஏ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த 25,000 பேரிடம் ஒரு வருடத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், கிட்டத்தட்ட நூறில் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதாக தெரியவந்தது. 62% பேருக்கு பின்னர் புற்றுநோய் உறுதி செய்யப்பட்டது.

இந்த சோதனை, புற்றுநோய் பரிசோதனைக்கான அணுகுமுறையை "அடிப்படையில் இருந்தே மாற்றக்கூடும்" என தரவுகள் தெரிவிப்பதாக ஓரேகான் ஹெல்த் & சயின்ஸ் பல்கலைக்கழகத்தின் கதிர்வீச்சு மருத்துவத்தின் இணைப் பேராசிரியரான முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் நிமா நபவிசாதே கூறினார்.

பல வகையான புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவது, முழுமையாக குணப்படுத்தவோ அல்லது சிகிச்சையளிப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தவோ உதவும் என்று அவர் கூறுகிறார்.

இந்த பரிசோதனையில் எதிர்மறையான முடிவு வந்தவர்களில் 99%க்கும் அதிகமானவர்களுக்கு புற்றுநோய் இல்லை என்று இந்த சோதனை சரியாக கண்டறிந்தது.

மார்பகம், குடல் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் பரிசோதனையுடன் இந்த பரிசோதனையும் இணைந்தபோது, கண்டறியப்பட்ட புற்றுநோய் வகைகளின் எண்ணிக்கை ஏழு மடங்கு அதிகரித்தது.

அதிலும் கண்டறியப்பட்ட புற்றுநோய்களில் முக்கால்வாசி, கருப்பை, கல்லீரல், வயிறு, சிறுநீர்ப்பை மற்றும் கணையப் புற்றுநோய் போன்ற இதுவரை எந்தப் பரிசோதனை செயல் திட்டமும் இல்லாதவை என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசோதிக்கப்பட்டவர்களில் பத்தில் ஒன்பது பேருக்கு புற்றுநோயின் மூலத்தை இரத்தப் பரிசோதனை சரியாகக் கண்டறிந்தது.

இந்த முடிவுகள், புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதில் ரத்தப் பரிசோதனை முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது.

ஆனால், புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளை இந்த ரத்தப் பரிசோதனை குறைக்கிறதா என்பதைக் காட்ட கூடுதல் சான்றுகள் தேவை என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபடாத விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

லண்டனில் உள்ள தி இன்ஸ்டிடியூட் ஆஃப் கேன்சர் ரிசர்ச் நிறுவனத்தின் மருத்துவப் புற்றுநோய் மரபியல் பேராசிரியர் கிளேர் டர்ன்புல்லின் கருத்துப்படி, "கேலரியின் ஆரம்ப கட்ட நோய் கண்டறிதல், இறப்பு தொடர்பான விஷயத்தில் நேர்மறையாக உதவுகிறதா என்பதை நிறுவ, இறப்பை இறுதிப் புள்ளியாகக் கொண்ட ஆய்வுகளின் தரவு அவசியம்."

140,000 NHS நோயாளிகளை உள்ளடக்கிய மூன்று ஆண்டு சோதனையின் முடிவுகள், இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு வெளியிடப்படும்.

சோதனையின் முடிவுகள் சாதகமாக அமைந்தால், மேலும் பத்து லட்சம் பேருக்கு சோதனைகளை விரிவுபடுத்துவதாக தேசிய சுகாதார சேவை (NHS) முன்பு கூறியிருந்தது.

கிரெயிலின் பயோஃபார்மாவின் தலைவர் சர் ஹர்பால் குமார் இதனை "பரிசீலனைக்குரிய சிறப்பான முடிவுகள்" என்று அழைத்தார்.

பிபிசி ரேடியோ 4-இன் டுடே நிகழ்ச்சியில் பேசிய ஹர்பால் குமார், "புற்றுநோயால் ஏற்படும் பெருமளவிலான இறப்புக்குக் காரணம், புற்றுநோய்களை மிகவும் தாமதமாகக் கண்டுபிடிப்பது தான்" என்றார்.

பல புற்றுநோய்கள் "ஏற்கனவே மிகவும் முற்றிய நிலையில்" இருக்கும் போது கண்டறியப்படுகின்றன. எனவே, "மிகவும் பயனுள்ள மற்றும் குணப்படுத்தக் கூடிய சிகிச்சைகளைப் பயன்படுத்த நமக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, முன்கூட்டியே கண்டறிதலுக்கு மாறுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்" என்று விளக்கினார்.

"பிரிட்டன் தேசிய ஸ்கிரீனிங் கமிட்டி, ஆதாரங்களை மதிப்பாய்வு செய்வதிலும், இந்த சோதனைகளை தேசிய சுகாதார சேவை ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்பதை தீர்மானிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1j80w5g9xyo

பேரிச்சம்பழம் நல்லதா?கெட்டதா?

1 month ago

https://www.facebook.com/share/v/1DCBLvynAX/?mibextid=wwXIfr டாக்ரர் சுதன்சிவன் பேரிச்சம்பழம் பற்றி சொல்லும் போது நம்புவதா? விடுவதா? என்று முடிவு செய்ய முடியவில்லை.

கடந்த 10 வருடமாக தேநீருடன் சீனிக்கு பதிலாக பேரிச்சம்பழம் ஒன்று கடிப்பேன்.

இனிமேல் என்ன செய்வது?

இதயத் துடிப்பை சீராக்கும் பொட்டாசியம் - தினசரி வாழைப்பழம் சாப்பிட்டால் போதுமா?

1 month 1 week ago

பொட்டாசியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது

கட்டுரை தகவல்

  • ஆனந்த் மணி திரிபாதி

  • பிபிசி செய்தியாளர்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

பொட்டாசியம் என்ற உடனேயே, பெரும்பாலான மக்களுக்கு வாழைப்பழம் தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், ஒரு வாழைப்பழத்தால் மட்டும் உங்கள் உடலுக்குத் தேவையான பொட்டாசியத்தை வழங்க முடியாது.

பொட்டாசியம் என்றால் என்ன?

உடல் இயல்பாக செயல்படுவதற்கு தேவையான முக்கியமான கனிமம் பொட்டாசியம். இது, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.சிறுநீரகங்கள் அதிக சோடியத்தை வெளியேற்ற உதவுகிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது, செல்கள் சரியாக செயல்பட உதவுகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

"பொட்டாசியம் என்பது நுண்ணூட்டச்சத்து மிக்க கனிமம். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் இது, உடலில் இருந்து கழிவுகளை அகற்றவும் உதவுகிறது"என்று எஸ்ஏபி டயட் கிளினிக்கின் நிறுவனர் மற்றும் மூத்த ஆலோசகர் உணவியல் நிபுணர் டாக்டர் அதிதி சர்மா கூறுகிறார்.

  • பொட்டாசியம் உடலில் ஒரு எலக்ட்ரோலைட்டாக செயல்படுகிறது.

  • தசை செயல்பாட்டிற்கு உதவுகிறது.

  • இதயத்துடிப்பை ஒழுங்குபடுத்துகிறது.

  • நரம்புகள் சமிக்ஞைகளை சரியாக அனுப்ப உதவுகிறது.

"பொட்டாசியம் நமது உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்துகிறது. இது நமது உடலின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் ஒரு எலக்ட்ரோலைட். இது இதயம், மூளை மற்றும் உடலின் ஒவ்வொரு தசையையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது" என்று எய்ம்ஸின் முன்னாள் உணவியல் நிபுணரும், ஒன் டயட் டுடேவின் நிறுவனருமான மருத்துவர் அனு அகர்வால் கூறுகிறார்.

தசை செயல்பாட்டிற்கு பொட்டாசியம் மிக முக்கியமானது என்று அவர் விளக்குகிறார். இது தசைகள் சுருங்கவும் ஓய்வெடுக்கவும் உதவுகிறது. மேலும் , நமது உடலின் pH ஐ சமப்படுத்தவும் உடலில் இருந்து அதிகப்படியான சோடியத்தை அகற்றவும் உதவுகிறது.

பொட்டாசியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பொட்டாசியம் நமது உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

பொட்டாசியத்தின் தேவை

தினமும் சராசரியாக 3,500 மில்லிகிராம் பொட்டாசியத்தை உட்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறது உலக சுகாதார அமைப்பு. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தையும் குறைக்கிறது.

உணவில் இருந்து பொட்டாசியம் கிடைக்குமா?

ஆம், உணவில் போதுமான பழங்கள் மற்றும் காய்கறிகள் இருந்தால் பொட்டாசியம் எளிதில் கிடைக்கும்.

ஆனால் பிரச்னை என்னவென்றால், பெரும்பாலான மக்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் கூட பழங்கள் மற்றும் காய்கறிகளை சரியாக சாப்பிடுவதில்லை.

அவர்களின் கலோரிகளில் பாதிக்கும் மேற்பட்டவை பதப்படுத்தப்பட்ட உணவுகளிலிருந்து வருகின்றன.

பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, 10 சதவீத ஆண்களும் 24 சதவீத பெண்களும் தினசரி பொட்டாசியம் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை என அறியப்படுகிறது.

பொட்டாசியம் குறைபாட்டின் விளைவுகள் என்ன?

சில நேரங்களில் வாந்தி, வயிற்றுப்போக்கு, சில மருந்துகளின் பின்விளைவு அல்லது அதிகப்படியான மது அருந்துவதன் காரணமாக பொட்டாசியம் குறைபாடு ஏற்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பொட்டாசியம் குறைபாடு ஒழுங்கற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தும்.

பொதுவாக, பொட்டாசியம் குறைபாடு உணவுமுறையால் மட்டும் ஏற்படுவதில்லை.

சில நேரங்களில் வாந்தி, வயிற்றுப்போக்கு, சில மருந்துகளின் பின்விளைவு அல்லது அதிகப்படியான மது அருந்துவதன் காரணமாக ஏற்படுகிறது.

பொட்டாசியம் குறைபாடு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து, இதய நோய் அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கும்.

"பொட்டாசியம் குறைபாடு தசை பிடிப்பு மற்றும் பதற்றத்தை அதிகரிக்கிறது. உடல் சோர்வாகவே இருக்கும். இது மலச்சிக்கலையும் ஏற்படுத்துகிறது. மிக முக்கியமாக, பொட்டாசியம் குறைபாடு ஒழுங்கற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தும். அதேபோல் இது ரத்த அழுத்தத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்று மருத்துவர் அனு அகர்வால் கூறுகிறார்.

பொட்டாசியத்தின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன ?

பொதுவாக, சிறுநீரகங்கள் சிறுநீரின் வழியாக அதிகப்படியான பொட்டாசியத்தை அகற்றும், ஆனால் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த செயல்முறை சரியாக நடக்காது.

அது போன்ற சூழ்நிலையில், உடலில் பொட்டாசியம் சேரத் தொடங்குகிறது, இதன் காரணமாக இதயத் துடிப்பு சீரற்றதாகி, இதயம் செயலிழப்பதற்கான அபாயம் அதிகரிக்கிறது.

இதனால் தான், சிறுநீரக நோயாளிகள் பெரும்பாலும் பொட்டாசியம் குறைந்த உணவை உண்ணுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பொட்டாசியம் குறைபாடு, இதயம், நரம்புகள் மற்றும் தசைகளைப் பாதிக்கிறது, ஆனால் பொட்டாசியத்தின் அளவு அதிகரிப்பதும் ஆபத்தானது என்று விளக்குகிறார் மருத்துவர் அதிதி சர்மா.

பொட்டாசியத்தின் அளவு அதிகரித்தால் இதயம் செயலிழக்கலாம். எனவே, அதை அதிகமாக உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.

பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகள்

ஒரு வாழைப்பழம் உங்கள் தினசரி பொட்டாசியம் தேவையில் சுமார் 10% வழங்குகிறது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு வாழைப்பழம் உங்கள் தினசரி பொட்டாசியம் தேவையில் சுமார் 10% வழங்குகிறது, அதே நேரத்தில் ஒரு வேகவைத்த உருளைக்கிழங்கு 30% வரை வழங்குகிறது.

வாழைப்பழங்கள் பொட்டாசியத்தை வழங்குகின்றன, ஆனால் அவற்றை மிகச் சிறந்த அல்லது அதிக அளவில் பொட்டாசியம் தரும் உணவு என வகைப்படுத்த முடியாது.

ஒரு வாழைப்பழம், ஒரு நாளைக்கு தேவையான பொட்டாசியத்தில் சுமார் 10% மட்டுமே வழங்கும். ஆனால் ஒரு வேகவைத்த உருளைக்கிழங்கு 30% வரை வழங்கும் திறன் கொண்டது.

அதிகளவு பொட்டாசியம் உள்ள உணவுப் பொருட்கள்

  • உலர்ந்த பழங்கள்

  • பச்சை இலை காய்கறிகள்

  • நட்ஸ் மற்றும் விதைகள்

  • பால் மற்றும் தயிர்

  • பருப்பு வகைகள்

  • மீன்

பொட்டாசியம் சமநிலையை பராமரிக்க, முடிந்தவரை அதிக அளவிலான பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும் என்கிறார் மருத்துவர் அனு அகர்வால்.

பொட்டாசியம் தேங்காய் நீர், ஆரஞ்சு, வாழைப்பழம், பீட்ரூட் மற்றும் பச்சை இலை காய்கறிகளில் எளிதாகக் கிடைக்கிறது. இது பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகளிலும் காணப்படுகிறது.

சப்ளிமெண்ட்ஸ் மற்றும் பொட்டாசியம்

பெரும்பாலான மக்களுக்கு, 3,700 மி.கி அல்லது அதற்கும் குறைவான பொட்டாசியம் சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.

ஆனால் வயதானவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இவற்றை (உப்பு மாற்றுகள் உட்பட) எடுத்துக்கொள்ளக்கூடாது.

ஏனென்றால், அவர்களின் சிறுநீரகங்களால் அதிகப்படியான பொட்டாசியத்தை எளிதில் அகற்ற முடியாது.

மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரிடம் ஆலோசிக்காமல் அதிகப்படியான வைட்டமின் டி உட்கொள்வதைத் தவிர்க்குமாறு மருத்துவர் அதிதி சர்மா அறிவுறுத்துகிறார்.

ஒருவர் தினமும் பருவகால காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொண்டால், அவர்களுக்கு போதுமான அளவு வைட்டமின் டி கிடைக்கிறது.

எனவே கூடுதலாக சப்ளிமெண்ட்ஸ் எடுக்கவேண்டிய அவசியமில்லை.

பானங்களில் பொட்டாசியம் இருக்க வேண்டுமா ?

தக்காளி ஜூஸ் குடிக்கலாம், ஒரு கிளாஸ் தக்காளி ஜூஸில்  சுமார் 460 மி.கி பொட்டாசியம் உள்ளது.

படக்குறிப்பு, ஒரு கிளாஸ் தக்காளி சாற்றில் சுமார் 460 மி.கி பொட்டாசியம் உள்ளது.

வியர்வையின் மூலம் சிறிதளவு பொட்டாசியம் வெளியேறுகிறது. எனவே உடற்பயிற்சிக்குப் பிறகு அதை நிரப்ப வேண்டும். அதற்கு இயற்கையான வழிகளைப் பின்பற்றலாம்.

தக்காளி ஜூஸ் குடிக்கலாம், ஒரு கிளாஸ் தக்காளி ஜூஸில் சுமார் 460 மி.கி பொட்டாசியம் உள்ளது.

தோல் நீக்கப்பட்ட வேகவைத்த உருளைக்கிழங்கும் ஒரு நல்ல வழி. அவை பொட்டாசியத்தை வழங்குவது மட்டுமல்லாமல், அவற்றில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளும் ஆற்றலை மீட்டெடுக்கின்றன.

பொட்டாசியத்தை அதிகரிக்க எளிதான வழிகள்

  • தினமும் ஐந்து முறை பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள் (எ.கா., காலை உணவில் ஒரு பழம், மதிய உணவுடன் ஒரு பழம் மற்றும் ஒரு காய்கறி, இரவு உணவில் இரண்டு காய்கறிகள்).

  • தினமும் மூன்று பால் பொருட்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள் (பாலுடன் காபி, சாலட்டில் சீஸ் அல்லது தயிர்)

  • வாரம் ஒரு முறை பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் சாப்பிடுங்கள்.

  • சிற்றுண்டிகளுக்கு உலர்ந்த பழங்கள், கொட்டைகள் மற்றும் விதைகளைத் தேர்ந்தெடுக்கவும்.

  • மதிய உணவு அல்லது இரவு உணவோடு சாலட் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பச்சை காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம். அதில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cge5jjx5q3ro

சோறு, சப்பாத்தி; சர்க்கரை நோய் பாதிப்பு வராமல் இருக்க எதை சாப்பிட வேண்டும்?

1 month 1 week ago

குறைந்த புரதம் மற்றும் அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குறைந்த புரதம் மற்றும் அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

12 அக்டோபர் 2025, 01:34 GMT

புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியர்கள் தங்கள் தினசரி ஆற்றல் தேவைகளில் 62 சதவீதத்தை கார்போஹைட்ரேட் உணவுகளில் இருந்து பூர்த்தி செய்துகொள்வதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கூறுகிறது.

வளர்சிதை மாற்றம் தொடர்பான பிரச்னைகள் குறித்த ஆய்வுக்குப் பின் ICMR இதனை தெரிவித்துள்ளது.

இந்தியர்கள் பெரும்பாலும் தங்கள் ஆற்றலுக்காக சோறு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களைச் சார்ந்திருப்பதாக ஆய்வு கூறுகிறது.

உலகில் உள்ள நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட கால்வாசி பேர் இந்தியாவில் உள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மற்ற நாடுகளை விட அதிகமாகும்.

இந்தியர்கள் தங்கள் அன்றாட ஆற்றல் தேவைகளுக்காக உட்கொள்ளும் உணவில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாகவும், புரதம் குறைவாகவும் இருப்பதாக மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஐசிஎம்ஆர் இணைந்து நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்பவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பு 22% அதிகம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்பவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பு 22% அதிகம்

கார்போஹைட்ரேட்-க்கும் நீரிழிவு மற்றும் உடல் பருமனுக்கும் என்ன தொடர்பு?

குறைந்த கார்போஹைட்ரேட்டை உட்கொள்பவர்களை விட அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்ளும் நபர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 30 சதவீதம் அதிகமாக இருக்கலாம் என நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன.

இவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பு 22 சதவீதமும், தொப்பை போடுவதற்கான வாய்ப்பு 15 சதவீதமும் அதிகமாக உள்ளது.

மறுபுறம் கோதுமை, அரிசி அல்லது சோளம் போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்குப் பதிலாக பதிலாக முழு கோதுமை அல்லது சிறுதானிய மாவை பயன்படுத்தினாலும், டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் குறையாது என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கார்போஹைட்ரேட் பயன்பாடு அதிகமாக இருப்பதை ஆய்வின் சான்றுகள் எடுத்துரைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

"நாடு முழுவதும் உள்ள மக்களின் உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் அவர்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் ஆற்றலில் 62.3 சதவீதம் பங்களிக்கின்றன. பெரும்பாலான கார்போஹைட்ரேட்டுகள் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் அரைக்கப்பட்ட முழு தானியங்களில் இருந்து கிடைப்பவை" என்று இந்த ஆய்வின் ஆராச்சியாளர் குறிப்பிடுகிறார்.

"சுத்திகரிக்கப்பட்ட தானியங்களின் பங்கு 28.5 சதவீதமாகவும், முழு தானியங்களின் பங்கு 16.2 சதவீதமாகவும் உள்ளது. மொத்த கொழுப்பு 25.2 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. அதே நேரம் புரதச் சத்து வெறும் 12 சதவீதம் மட்டுமே."

நாட்டின் மக்கள் தொகையில் 27% பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாட்டின் மக்கள் தொகையில் 27% பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்வதை தடுப்பது எப்படி?

மக்களின் உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளின் அளவைக் குறைப்பதும், பால் மற்றும் தாவர அடிப்படையிலான உணவுகளை உட்கொள்வதை அதிகரிப்பதும் வளர்சிதை மாற்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் என ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் சுமார் 61 சதவீதம் பேர் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லை, அதாவது அவர்கள் எந்த வகையான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வதில்லை என்று ஐசிஎம்ஆர் குழு கண்டறிந்துள்ளது.

இதில் 43 சதவீதம் பேர் அதிக உடல் எடையும், 26 சதவீதம் பேர் உடல் பருமனும் கொண்டுள்ளனர்.

உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளை மேம்படுத்துவதால், டைப் 2 வகை நீரிழிவு நோயை 50 சதவீதம் வரை குறைக்கலாம் என முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன.

நாட்டின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கிற்கு அதிகமானவர்கள், அதாவது 27% பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக, கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 83 சதவீதம் பேர் குறைந்தது ஒரு வளர்சிதை மாற்ற நோய்க்கான அபாயத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பின்படி, ஒட்டு மொத்த நாட்டையும் விட கிழக்கு இந்திய மக்கள் நல்ல நிலையில் உள்ளனர்.

தினசரி ஆற்றல் தேவையில் 62% கார்போஹைட்ரேட் உணவுகளில் இருந்து கிடைக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தினசரி ஆற்றல் தேவையில் 62% கார்போஹைட்ரேட் உணவுகளில் இருந்து கிடைக்கிறது.

நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்திய உணவுப் பழக்கத்தில் அதிகளவிலான கார்போஹைட்ரேட்களை உட்கொள்வதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து நிபுணர்களிடம் கேட்டது பிபிசி.

"சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் எளிய கார்போஹைட்ரேட்டுகள் (சர்க்கரை) இரண்டும் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்பது உண்மை." என டெல்லியில் உள்ள மனித நடத்தை மற்றும் கூட்டு அறிவியல் நிறுவனத்தின் மூத்த உணவியல் நிபுணர் மருத்துவர் விபுதி ரஸ்தோகி கூறினார்.

"ஆனால் குறைந்த புரதம் மற்றும் அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்வது விரைவான பாதிப்பை ஏற்படுத்தும்," என்று அவர் கூறினார்.

"இந்திய உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன, அதனால்தான் இந்தியர்களிடையே நீரிழிவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான உடல்நலப் பிரச்னைகள் அதிகம் காணப்படுகின்றன." என்றார்.

"நீரிழிவு போன்ற பிரச்னைகளை தடுக்க, உணவில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், புரதம் அதிகமாகவும் இருக்க வேண்டும். உடல் அசைவுகளை அதிகரிப்பதும் முக்கியம்" என்று அறிவுரை கூறுகிறார்.

நீங்கள் சோறு எடுத்துக்கொண்டாலும் சரி, சப்பாத்தி எடுத்துக்கொண்டாலும் சரி, இரண்டிலும் கார்போஹைட்ரேட்கள் உள்ளன.

அதிகம் செறிவூட்டப்பட்ட அரிசியை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என மருத்துவர் அறிவுரை.

பட மூலாதாரம், Getty Images

சோற்றை விட சப்பாத்தி சிறந்ததா?

சோற்றை விட சப்பாத்தியில் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதாகவும், அதனால் சப்பாத்தி உடலுக்கு நல்லது என்று பொதுவாக நம்பப்படுகிறது.

"நீங்கள் அதிக நார்ச்சத்துள்ள சப்பாத்தியை சாப்பிட்டால் பரவாயில்லை, ஆனால் நீங்கள் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட மாவிலிருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தியை சாப்பிட்டால், அதுவும் அரிசியைப் போன்றதுதான். இதை சாப்பிட்ட பிறகும் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும்," என 'டயட்டிக்ஸ் ஃபார் நியூட்ரிஃபை டுடே'வின் தலைவரும் மும்பையைச் சேர்ந்த உணவியல் நிபுணருமான நஸ்னீன் ஹுசைன் கூறினார்.

அதிகம் செறிவூட்டப்பட்ட அரிசியை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, ஆனால் செறிவூட்டப்படாத சிறிய அரிசி இந்த விஷயத்தில் சிறந்தது என்றும் அவர் கூறுகிறார்.

நார்ச்சத்தை கவனத்தில் கொண்டு, மருத்துவர்கள் அல்லது உணவியல் நிபுணர்கள் பெரும்பாலும் பழுப்பு நிற அரிசி அல்லது செறிவூட்டப்படாத அரிசியை சாப்பிட அறிவுறுத்துகிறார்கள்.

சோற்றை இறைச்சி, முட்டை, பருப்பு, தயிர், காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவது மற்றொரு முக்கிய அறிவுரை ஆகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1mxmejj58vo

மனதின் நலன், மனிதகுலத்தின் நம்பிக்கை! : இன்று உலக மனநல தினம்

1 month 1 week ago

10 Oct, 2025 | 11:29 AM

image

இன்று (ஒக்டோபர் 10) உலக மனநல தினம்! 

லக மனிதகுலத்தின் முன்னேற்றத்தில் உடல் நலனுக்கு இணையான முக்கியத்துவம் பெற்றது மன நலம் / உள நலம் (Mental Health). ஒரு சமூகத்தின் நிலையான வளர்ச்சியும் ஒற்றுமையும் பொருளாதார முன்னேற்றமும் கல்வித் தரமும் குடும்ப பிணைப்பும் – இவை அனைத்தும் மனநலத்துடன் ஆழமாக பிணைந்திருக்கின்றன. ஆனால், நீண்ட காலமாக உலக மக்கள் மனநல பிரச்சினைகளை புறக்கணித்து வந்தனர். இதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர் 10ஆம் திகதி “உலக மனநல தினம் (World Mental Health Day)” அனுஷ்டிக்கப்படுகிறது.

இது, World Federation for Mental Health (WFMH) என்ற அமைப்பினால் 1992ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. அதன் பின்பு, உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் இதனை பரவலாக்கின. இன்று உலகெங்கும் 150க்கும் மேற்பட்ட நாடுகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ மையங்கள், அரசு மற்றும் சமூக அமைப்புகள் இந்நாளை மனநல விழிப்புணர்வுக்கான தளமாகக் கொண்டாடுகின்றன.

மனநலத்தின் உளவியல் (Psychological Significance)

மனநலத்தை உளவியல் (Psychology) அடிப்படையில் புரிந்துகொள்வது அவசியம். மனநலம் என்பது வெறும் மனநோய் இல்லாமையை மட்டும் குறிக்கவில்லை. அது ஒருவரின் அமைதி, சிந்தனை தெளிவு, உணர்ச்சி கட்டுப்பாடு, சமூக உறவுகளை பராமரிக்கும் திறன், சவால்களை எதிர்கொள்ளும் வலிமை ஆகிய அனைத்தையும் உள்ளடக்குகிறது.

Sigmund Freud தனது உளவியல் கோட்பாட்டில், மனம் மூன்று அடுக்குகளால் ஆனது. Id, Ego, Superego. இவற்றின் சமநிலையே மனநலத்தை தீர்மானிக்கிறது.

Carl Rogers “Person-Centered Therapy” மூலம் மனிதர்களின் உள்ளார்ந்த திறன்களை வளர்க்கும் சூழல் மனநலத்தை உறுதி செய்கிறது என்றார்.

Aaron Beck உருவாக்கிய Cognitive Behavioral Therapy (CBT), மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை குறைக்கும் முக்கிய சிகிச்சை முறையாக உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் உளவியல் துறையில் மனநலத்தின் முக்கியத்துவம் சிகிச்சை மட்டுமல்ல, வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் அறிவியல் என்பதும் தெளிவாகிறது.

உலக சுகாதார நிறுவனம் (WHO) வழங்கிய தரவுகளின்படி, உலக மக்கள் தொகையில் சுமார் 1 பில்லியன் பேர் மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மனச்சோர்வு (Depression) மற்றும் பதட்டக் கோளாறு (Anxiety Disorders) அதிகம் காணப்படுகிறது.

ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்கிறார் என்பதே WHOவின் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம்.

கொவிட்-19 பேரழிவுக்குப் பின், மனநல பிரச்சினைகள் 25% வரை அதிகரித்துள்ளன.

குறிப்பாக, இளம் வயதினரின் தற்கொலை விகிதம் உலகின் பல நாடுகளில் கவலைக்குரிய அளவில் உயர்ந்துள்ளது.

நமது நாட்டைப் பொருத்தமட்டில் ஐந்து பேரில் ஒருவருக்கு மனநோய் இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்கொலைகளில் 50% மன நோய்களால் ஏற்படுத்துவதாக தெரிய வருகிறது. உலகளாவிய ரீதியிலும் பெரும்பாலான இளைஞர்கள் மனச்சோர்வு எனப்படும் பாரியமான நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான பிரதான காரணங்களாக தொலைபேசி அடிமை மற்றும் இணைய அடிமைத்தனம், போதை அடிமை காணப்படுகின்றன.

இதனால், மனநல பிரச்சினைகள் ஒரு உலகளாவிய சவால் எனக் கருதப்படுகின்றன. அதே சமயம், மனநல சிகிச்சைக்கு செலவிடப்படும் நிதி உலகளவில் மருத்துவ செலவினங்களில் 2%க்கும் குறைவுதான். இது மிகப்பெரிய சமநிலையின்மையை காட்டுகிறது.

இலங்கையில் மனநலத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கடந்த இருபது ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து வந்தாலும், இன்னும் பல சவால்கள் உள்ளன.

சமூகக் களங்கம் ஸ்ரிக்மா (Stigma): மனநோயாளிகளைக் குறைத்து மதிக்கும் பார்வை இன்னும் நீங்கவில்லை.

போர் மற்றும் இயற்கை பேரழிவுகள்: உள்நாட்டுப் போர், 2004 சுனாமி, கொவிட் தொற்று மற்றும் அண்மைக்கால பொருளாதார நெருக்கடி ஆகியவை பல ஆயிரக்கணக்கான மக்களின் மனநலத்தை பாதித்துள்ளன.

சிறுவர் மற்றும் இளைஞர்கள்: கல்விச் சுமை, வேலைவாய்ப்பு பற்றாக்குறை, சமூக அழுத்தங்கள், போதைப்பொருள் அடிமை காரணமாக இளைஞர்களிடையே மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணங்கள் அதிகரித்துள்ளன.

சுகாதார வசதிகள்: இலங்கையில் 10 இலட்ச மக்களுக்கு சுமார் 0.3 %மனநல மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். WHO பரிந்துரைத்த அளவுக்கு இது மிகக் குறைவு. ஆனால், நேர்மறை மாற்றங்களும் உள்ளன.

இலங்கையில் National Mental Health Policy (2005–2015, தொடர்ந்து 2016–2025) நடைமுறையில் உள்ளது.

பல்வேறு பல்கலைக்கழகங்கள் உளவியல் படிப்புகளை வழங்குகின்றன.

சமூக மட்டத்தில் NGOகளும் Red Cross போன்ற அமைப்புகளும் மனநல விழிப்புணர்வை வளர்த்துக்கொண்டிருக்கின்றன.

ஆய்வுகள் மற்றும் தரவுகள் (Research & Statistics)

மனநல பிரச்சினைகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Lancet Psychiatry (2021) வெளியிட்ட ஆய்வின் படி, மனச்சோர்வு மற்றும் பதட்டம் உலகளவில் பெண்களிடம் ஆண்களை விட அதிகமாக உள்ளது.

Sri Lanka Journal of Psychiatry யில் வெளியான கட்டுரைகள், போருக்குப் பின் வடக்கிலும் கிழக்கிலும் PTSD (Post-Traumatic Stress Disorder) விகிதம் மிக உயர்ந்தது என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

University of Colombo மேற்கொண்ட ஆராய்ச்சியில், இலங்கை மாணவர்களில் 20% பேர் மனநல சவால்களை எதிர்கொள்வதாக தெரியவந்துள்ளது.

இந்த தரவுகள், மனநலம் என்பது தனிநபர் பிரச்சினை அல்ல; சமூக, பொருளாதார, கலாச்சார சவால் என்பதைக் காட்டுகின்றன.

 சமூக விளைவுகள் (Social Impact)

மனநல குறைபாடு ஏற்படுத்தும் சமூக விளைவுகள் மிகப் பரவலானவை:

1. குடும்ப உறவுகள் – மன அழுத்தம், வன்முறை, புரிதல் பற்றாக்குறை காரணமாக குடும்பங்கள் சிதறுகின்றன.

2. பொருளாதாரம் – உலகளவில் மனநல பிரச்சினைகளால் ஆண்டுதோறும் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் உற்பத்தித் திறன் இழப்பாகும்.

3. சமூக வன்முறை – மன அழுத்தம் மற்றும் போதைப்பழக்கம் சமூக குற்றச்செயல்களுக்கு வழிவகுக்கின்றன.

4. இளைஞர் எதிர்காலம் – கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பின்தங்குவதை மனநல குறைபாடுகள் அதிகரிக்கின்றன. 

படைப்பாற்றல் மற்றும் விழிப்புணர்வு (Creativity & Awareness)

மனநலத்தை மேம்படுத்துவதற்கான படைப்பாற்றல் முயற்சிகள் மிகவும் முக்கியம்.

கலை மற்றும் இசை சிகிச்சை (Art & Music Therapy) மன அழுத்தத்தை குறைத்து, உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவுகிறது.

சமூக நாடகங்கள்,வீதி நாடகங்கள், குறும்படங்கள், கவிதைகள் - பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாற்றல் முயற்சிகளாக் காணப்படுகின்றது. 

சமூக ஊடகங்கள் – இன்றைய தலைமுறைக்கு மனநல செய்திகள், சுய பராமரிப்பு குறிப்புகள், ஆன்லைன் ஆலோசனைகள் பரவுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சேர்க்கை நம் முன்னோர்கள் கூட மனநலத்தை மேம்படுத்துவதில் பங்களிக்கின்றவையும் குறிப்பிடத்தக்கது. 

தீர்வுகள் மற்றும் முன்னேற்ற வழிகள்

மனநல பிரச்சினைகளை சமாளிக்க தனிநபர், குடும்பம், சமூகம், அரசு, உலகளாவிய நிலை என அனைத்திலும் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை.

1. விழிப்புணர்வு – மனநோய்கள் குறித்து சமூகத்தில் உள்ள தவறான நம்பிக்கைகளை முறியடிக்க வேண்டும். இதற்கான உலர் கல்வி மற்றும் கழிவுபடுத்தல்கள் அவசியமாகின்றன. 

2. ஆலோசனை சேவைகள் – பள்ளிகள், கல்லூரிகள், வேலைத்தளங்களில் மனநல ஆலோசகர்கள் இருக்க வேண்டும். எங்க கருத்தரங்குகள் விழிப்புணர்வு செயற்பாடுகளை நடாத்தல் வேண்டும். 

3. சட்ட, கொள்கைகள் – மனநல பாதுகாப்பு சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

4. சமூக ஆதரவு – குடும்ப பாசம், நண்பர்களின் புரிதல், சமூகத்தின் ஒத்துழைப்பு – இவை மனநல சிகிச்சையை எளிதாக்கும்.

5. ஆராய்ச்சி – இலங்கையிலும் உலகளாவிய அளவிலும் மனநல ஆராய்ச்சிகளுக்கான நிதி மற்றும் கல்வி வளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.

உலக மனநல தினம் என்பது ஒரு நாளைய விழிப்புணர்வு மட்டுமல்ல. அது, ஒவ்வொரு நாளும் நம்மை நாமே பராமரிக்க வேண்டும், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடும் ஒரு உலகளாவிய இயக்கம். மனநலத்தை புறக்கணிப்பது மனித முன்னேற்றத்தையே புறக்கணிப்பதாகும்.

“உடல் நலம் போல் மன நலமும் – வாழ்வின் அடிப்படை உரிமை” என்பதைக் கொண்டே நாம் சிந்திக்க வேண்டும்.

இலங்கை முதல் உலகம் வரை, ஒவ்வொரு சமுதாயமும் மனநலத்தை முன்னுரிமைப்படுத்தும் நாள் தூரத்தில் இல்லை. மனித குலம் மன அமைதியுடன் வாழும் உலகம் தான் உண்மையான முன்னேற்றத்தின் அடையாளம்.

- நடராசா கோபிராம்,  

உளவியல் சிறப்புக் கலை மாணவன் 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

https://www.virakesari.lk/article/227388

'தூக்கமின்மை' பிரச்னை உங்களுக்கும் இருக்கிறதா? அறிகுறிகளும் தீர்வுகளும்

1 month 2 weeks ago

நடிகர் அஜித்தை பாதித்துள்ள 'தூக்கமின்மை' பிரச்னை உங்களுக்கும் இருக்கிறதா? அறிகுறிகளும் தீர்வுகளும்

நடிகர் அஜித்குமார், அஜித்குமார் ரேஸிங், தூக்கமின்மை, தூக்கமின்மை பிரச்னை

பட மூலாதாரம், X/Ajithkumar Racing

கட்டுரை தகவல்

  • மோகன்

  • பிபிசி தமிழ்

  • 8 அக்டோபர் 2025, 02:34 GMT

    புதுப்பிக்கப்பட்டது 8 அக்டோபர் 2025, 02:44 GMT

தூக்கம் தொடர்பாக நடிகர் அஜித்குமார் சமீபத்தில் தெரிவித்த கருத்து சமூக ஊடகங்களில் விவாதப்பொருளானது.

நடிகர் அஜித்குமார் தற்போது 'அஜித் குமார் ரேஸிங்' என்கிற பெயரில் கார் பந்தயப் போட்டிகளில் பங்கெடுத்து வருகிறார்.

சமீபத்தில் இந்தியா டூடே ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தனக்கு தூக்கமின்மை பிரச்னை இருப்பதாகத் தெரிவித்தார்.

தன்னால் அதிகபட்சமாக 4 மணி நேரம் தான் தொடர்ந்து தூங்க முடிவதாக தெரிவித்த அஜித் குமார், "எனக்கு திரைப்படங்கள், வெப் சீரிஸ் பார்ப்பதற்கு நேரம் இல்லை. நான் விமானத்தில் தான் உறங்குகிறேன். எனக்கு தூக்கம் சார்ந்த பிரச்னை இருக்கிறது. தூங்குவது எனக்கு கடினமாக உள்ளது." என்றும் அந்த நேர்காணலில் குறிப்பிட்டார்.

தூக்கம் வருவது எப்படி?

இதுகுறித்து ஓய்வு பெற்ற பொது சுகாதாரத் துறை இயக்குநரான குழந்தைசாமி பேசுகையில் "இது இன்சோம்னியா (Insomnia) என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் அரிதானது, இதனை சிகிச்சைகள் மூலம் சரி செய்துவிட முடியும். ஆனால் தூக்கமின்மை என்பது பெரும்பாலும் நமது செயல்களினால் உருவாவதே." என்றார்.

தூக்கப் பற்றாக்குறை அல்லது தூக்கமின்மை என்பது நீண்ட கால நோக்கில் ஆயுட்காலத்தை பாதிக்கும் என்கிறார் குழந்தைசாமி.

நம் உடல் சார்ந்த பல விஷயங்களை உயிரியல் கடிகாரம்தான் (circadian rhythm) தீர்மானிக்கிறது என்கிறார் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் புல்மனாலஜியின் இயக்குநரும் மூத்த நுரையீரல் நோய் மருத்துவருமான கௌசிக் முத்துராஜா.

இதுகுறித்து விவரித்த அவர், "நம் கண்கள் வழியாக ஒளி மூளைக்குச் செல்கிறது. வெளிச்சமாக இருந்தால் நமது மூளை இது விழித்திருக்க வேண்டிய நேரம் என உணர்ந்து கொள்ளும். அதேவேளையில் இருட்டாக இருந்தால் இது தூங்குவதற்கான நேரம் என உணர்ந்து கொண்டு மெலடோனின் என்கிற ஹார்மோனை சுரக்கச் செய்யும். இந்த ஹார்மோன் தான் தூக்கத்தை ஏற்படுத்துகிறது." என்றார்.

"59% இந்தியர்களுக்கு தூக்கமின்மை பிரச்னை"

நடிகர் அஜித்குமார், அஜித்குமார் ரேஸிங், தூக்கமின்மை, தூக்கமின்மை பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 59% இந்தியர்கள் 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே தடையற்ற தூக்கத்தை பெறுகின்றனர்.

2025-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 59% இந்தியர்களுக்கு 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே தடையில்லாத, நல்ல தூக்கம் கிடைப்பதாகத் தெரியவந்துள்ளது. லோகல்சர்கிள்ஸ் என்கிற நிறுவனம் இந்தியா முழுவதும் 348 மாவட்டங்களில் சுமார் 43,000 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது.

தூக்கப் பற்றாக்குறையை போக்க பவர் நேப்பிங் (குறுகிய நேர தூக்கம்), வார இறுதி நாட்களில் காலை தாமதமாக எழுந்திருப்பது, அல்லது மதியம் தூங்குவது போன்றவற்றை பலரும் கையாள்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

குறைவான தூக்கத்தால் பாதிக்கப்பட்ட 38% இந்தியர்கள் விடுமுறை நாட்கள் அல்லது வார இறுதி நாட்களில் அதனை சரி செய்து கொள்ள முடிவதில்லை எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஒரு வயது வந்த நபர் சராசரியாக 8 மணி நேரம் தூங்க வேண்டும். அதில் 6 மணி நேரமாவது இடையூறு இல்லாத தூக்கம் இருக்க வேண்டும். அது தான் ஆரோக்கியமானது. மனிதன் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூக்கத்தில் செலவிட வேண்டும். அது ஒரே நாளில் தான் இருக்க வேண்டும். தவணை முறையில் வார இறுதி நாட்கள் அல்லது விடுமுறை நாட்களில் கூடுதலாக தூங்குவது என்பது இதற்கு தீர்வாகாது." என்கிறார் குழந்தைசாமி.

தூக்கமின்மைக்கான அறிகுறிகள்

நடிகர் அஜித்குமார், அஜித்குமார் ரேஸிங், தூக்கமின்மை, தூக்கமின்மை பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு வயது வந்த நபர் சராசரியாக 8 மணி நேரம் தூங்க வேண்டும்

அமெரிக்க அரசின் தேசிய சுகாதார நிறுவனம் (என்.ஐ.ஹெச்) பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவை இருந்தால் தூக்கப் பற்றாக்குறை என்று வகைப்படுத்துகிறது.

அவை

  • போதிய தூக்கம் கிடைக்காமல் இருப்பது

  • தவறான நேரத்தில் தூங்கச் செல்வது

  • நன்றாக தூங்காதிருப்பது அல்லது உடலுக்குத் தேவையான தூக்கத்தின் அனைத்து கட்டங்களையும் அடையாமல் இருப்பது

  • ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரங்களில் தூக்கம் வருவது

  • போதிய நேரம் கிடைத்தாலும் ஆழ்ந்த தூக்கம் வராதிருப்பபது

தூக்கமின்மையின் பாதிப்பு குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்கள் இடையே வேறுபடுகிறது. தூக்கமின்மையால் பாதிக்கப்படும் குழந்தைகள் கவனம் செலுத்துவதில் பிரச்னைகளை எதிர்கொள்வார்கள் என என்.ஐ.ஹெச். கூறுகிறது.

"தூக்கம் என்பது நான்கு கட்டங்களாக நடக்கும். தூக்கத்தின் இந்த ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து செல்ல முடியாமல் நீண்ட காலமாக இருப்பது இதய நோய், எடை அதிகரிப்பு, டைப்-2 நீரிழிவு போன்ற பாதிப்புகளுடன் தொடர்புடையது," என லோகல் சர்க்கிள்ஸ் ஆய்வு கூறுகிறது.

தூக்கத்தைப் பாதிக்கும் காரணிகள்

என்.ஐ.ஹெச்-ன்படி தூக்கத்தைப் பாதிக்கும் காரணிகள் எவை?

  • வயது

  • தூங்கும் முறை

  • வளர்சிதை மாற்றம்

  • இரவு உணவு எடுத்துக் கொள்ளும் நேரம்

  • படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக திரை(கணினி, செல்போன்) பயன்பாடு

  • மது அருந்துவது

தூக்கமின்மையுடன் தொடர்புடைய நோய்களையும் என்.ஐ.ஹெச் பட்டியலிட்டுள்ளது. அவை

  • இதய நோய்

  • சிறுநீரக நோய்

  • உயர் ரத்த அழுத்தம்

  • நீரிழிவு நோய்

  • பக்கவாதம்

  • உடல் பருமன்

  • மன அழுத்தம்

உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது?

நடிகர் அஜித்குமார், அஜித்குமார் ரேஸிங், தூக்கமின்மை, தூக்கமின்மை பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெண்கள் மற்றும் முதியவர்களிடையே தூக்கமின்மை பிரச்னை அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் கடந்த 2012-ஆம் ஆண்டு தூக்கம் சார்ந்த சிக்கல்களை வளர்ந்து வரும் பொது சுகாதார பிரச்னை என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட 8 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 50 வயதுக்கு அதிகமான 43,935 பேர் கலந்து கொண்டனர். அதில் 16.6% பேர் தீவிரமான இரவு நேர தூக்கமின்மை பிரச்னைகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

அதில், பெண்கள் மற்றும் முதியவர்களிடையே தூக்கமின்மை பிரச்னை அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வயது வந்தவர்கள் அதிக அளவில் தூக்கமின்மை பிரச்னைகளை எதிர்கொள்வதாக அந்த ஆய்வு கூறுகிறது.

உடல் செயல்பாடு குறைவது, மன அழுத்தம் மற்றும் கவலை உணர்வு வலுவாக இருப்பதும் தூக்கமின்மைக்கு காரணிகளாகக் கூறப்பட்டுள்ளது.

தூக்கமின்மை யாரை, எவ்வாறு பாதிக்கும்?

நடிகர் அஜித்குமார், அஜித்குமார் ரேஸிங், தூக்கமின்மை, தூக்கமின்மை பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தூக்கமின்மையால் குழந்தைகளிடம் ஞாபக மறதி மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஏற்படுகிறது.

பெரும்பாலும் ஓட்டுநர்கள் அல்லது பயணத்தில் இருப்பவர்களுக்குத் தான் இந்த பாதிப்பு அதிகம் என்று குறிப்பிடுகிறார் குழந்தைசாமி.

"தூக்கம் இல்லையென்றால் மூளை சிறிது நேரம் தானாக செயலிழந்துவிடும். அது சில வினாடிகள் தான் என்றாலும் அதன் விளைவு மோசமானதாக இருக்கும். இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு போன்ற இதய நோய்களுக்கும் தூக்கமின்மை ஒரு முதன்மை காரணியாக உள்ளது." என்று அவர் தெரிவித்தார்.

வெவ்வேறு வயதினரை தூக்கமின்மை எவ்வாறு பாதிக்கிறது என்பது மருத்துவர் கௌசிக் முத்துராஜா பட்டியலிடுகிறார்.

குழந்தைகளிடையே ஏற்படும் பாதிப்புகள்?

  • கற்றல் குறைபாடு

  • ஞாபக மறதி

  • கல்வியில் ஈடுபாடு குறைவது

  • நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது

  • வளர்ச்சி ஹார்மோன் பாதிப்பு

நடுத்தர வயதினரிடையே ஏற்படும் பாதிப்புகள்?

  • மன அழுத்தம்

  • மனச்சோர்வு

  • ரத்த அழுத்தம்

  • சிந்திக்கும் திறன் குறைவது

  • வாகனம் ஓட்டுவதை சிரமமாக்குவது

முதியவர்களிடையே ஏற்படும் பாதிப்புகள்?

  • ஞாபக மறதி அதிகரிக்கும்

  • இரவு நேர தடுமாற்றங்கள் ஏற்படும்

  • இதயம் மற்றும் நரம்பியல் நோய் தாக்கும் சாத்தியம் அதிகரிக்கும்

தூக்கமின்மை பிரச்னைகளைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

புகைப் பழக்கத்தை கைவிடுவது, மாலை 5 மணிக்கு மேல் தேநீர், காபி பருகுவதை தவிர்ப்பது மற்றும் தூங்குவதற்கு குறைந்தபட்சம் 3 மணி நேரத்திற்கு முன்பாவது கணினி/செல்போன் திரைகளைப் பார்ப்பதை தவிர்ப்பது போன்ற பரிந்துரைகளை முன்வைக்கிறார் மருத்துவர் குழந்தைசாமி.

தூக்க ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான சில வழிகளை முன்வைக்கிறார் கௌசிக் முத்துராஜா.

  • தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, எழ வேண்டும், வார இறுதி நாட்களிலும் அதை கடைபிடிக்க வேண்டும்

  • தூக்கம் வந்தால் மட்டுமே படுக்கைக்குச் செல்ல வேண்டும்

  • தூங்க செல்லும் முன்பாக 10 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்

  • காலை, மதிய வேளைகளில் தூங்கக்கூடாது

  • 20 - 30 நிமிடங்கள் பவர் நாப் (குறுகிய நேர தூக்கம்) எடுக்கலாம்.

  • உடற்பயிற்சி தூக்கத்திற்கு உதவும். ஆனால் தூங்குவதற்கு 2, 3 மணி நேரத்திற்கு முன் உடற்பயிற்சி கூடாது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2knejj9p18o

கண்ணாடி பார்க்கும் போதே கழுத்து மூலம் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்வது எப்படி?

1 month 3 weeks ago

கழுத்து காட்டும் ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தடிமனான கழுத்து உடல்நலப் பிரச்னைக்கான அறிகுறியாக இருக்கலாம்.

கட்டுரை தகவல்

  • சந்தன் குமார் ஜஜ்வாரே

  • பிபிசி செய்தியாளர்

  • 29 செப்டெம்பர் 2025, 04:10 GMT

மக்கள் பெரும்பாலும் உடல் பருமனை அதிக எடை அல்லது தொப்பை கொழுப்புடன் தொடர்புபடுத்திக் கொள்கின்றனர். இதுபோன்ற உடல் பருமனால் பெரும்பாலானோர் பீதியடைந்து எடையைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் நமது உடல் ஆரோக்கியத்தைப் பற்றி உணர்த்தும் உடல் உறுப்புகளில் கழுத்தும் முக்கியமானதாகும். ஆனால் மக்கள் பொதுவாக இதில் கவனம் செலுத்துவதில்லை.

கழுத்துப் பகுதி முகத்திற்கு கீழ் இருப்பதாலும் எளிதில் பார்க்கக் கூடிய வகையில் இருப்பதாலும், கழுத்தில் கறை தென்பட்டாலோ, நிறம் மாறினாலோ பொரும்பாலானோர் அதை சரி செய்யவே முயற்சிக்கின்றனர்.

ஆனால் கழுத்துப்பகுதி வழக்கத்தை விட தடிமனாகவோ, ஒல்லியாகவோ இருந்தால் அது எதை உணர்த்துகிறது? இது குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?

அழகு மட்டுமல்ல, ஆரோக்கியமும் கூட..

கழுத்து காட்டும் ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆப்ரிக்க நாடுகளில், கழுத்தை மெல்லியதாக வைத்துக்கொள்ள வளையல்களை கழுத்தில் அணிந்துகொள்வார்கள்.

மெல்லிய கழுத்து என்பது எப்போதும் அழகுடன் தொடர்புடைய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இதை மெருகேற்றிக் காண்பிக்க பலரும் ஆபரணங்களை அணிவதுண்டு.

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தங்களின் கழுத்தை அழகாக காண்பித்துக்கொள்ள விரும்புகிறார்கள்.

ஒரு சில ஆப்ரிக்க நாடுகளில், கழுத்தை மெல்லியதாக வைத்துக்கொள்ள வளையங்களை கழுத்தில் அணிந்துகொள்வார்கள். இதனால் கழுத்து மெல்லியதாகவும் நீளமாகவும் இருக்கும் என நம்புகின்றனர்.

கழுத்தை வசீகரமாக மாற்ற மக்கள் உடற்பயிற்சி மையங்களை நாடி பிரத்யேக உடற்பயிற்சிகளையும் மேற்கொள்கின்றனர்.

உடற்பயிற்சி செய்வதால் உடல் மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்படும் மாற்றம் இயல்பானதுதான். ஆனால் நம் உடலை விட கழுத்துப்பகுதி மெல்லியதாகவோ, தடிமனாகவோ இருந்தால், அது பல்வேறு நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம்.

தடிமனான கழுத்து எதை உணர்த்துகிறது?

கழுத்து காட்டும் ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெண்களின் கழுத்துச் சுற்றளவு 33 முதல் 35 செ.மீ ஆக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

டெல்லியில் உள்ள தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் தலைவர் டாக்டர் சிவ் குமார் சரின் தனது 'On Your Body' என்ற புத்தகத்தில் இதுகுறித்து பேசியுள்ளார்.

"பொதுவாக பெண்களின் கழுத்துச் சுற்றளவு 33 முதல் 35 செ.மீ ஆகவும், ஆண்களுக்கு 37 முதல் 40 செ.மீ ஆகவும் இருக்க வேண்டும். இதைவிட கூடுதலாக இருந்தால் நோய் அறிகுறியாக இருக்கலாம்" என பிபிசியிடம் கூறினார்.

கழுத்தின் தடிமனை வைத்து நோய்களை கண்டறிவது தொடர்பாக நிறைய ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரைப்பை குடலியல் இணை பேராசிரியர் டாக்டர் ஷாலிமர் இதுகுறித்து பேசுகையில், "கழுத்துப் பகுதியில் கொழுப்பு சற்று அதிகமாக இருந்தாலோ அல்லது கழுத்து குட்டையாக இருந்தாலோ பெரும்பாலும் கல்லீரலில் கொழுப்பு அல்லது உடல்பருமன் போன்ற பிரச்னைகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம். சில சமயங்களில் இவர்கள் அதிகமாக குறட்டை விடுவார்கள்" என்றார்.

ஒருவரின் கழுத்து வழக்கத்தை விட தடிமனாக இருந்தால் அது வளர்சிதை மாற்ற நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையின் மூத்த ஆலோசகராகரான டாக்டர் மோஹ்சிம் வாலி கூறுகையில், "தடிமனான கழுத்து இருக்கும் நபர்களுக்கு அதிக கொழுப்பு, கல்லீரல் கொழுப்பு, நீரிழிவு நோய், அதிக ரத்தக்கொதிப்பு இருக்கலாம். இதற்கு தனி பரிசோதனைகள் தேவை" என்கிறார்.

தடிமனான கழுத்து உடல் பருமனுக்கான அறிகுறியாகவும் இருக்கக்கூடும்.

கழுத்து காட்டும் ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தடிமனான கழுத்து உடல் பருமனுக்கான அறிகுறியாகவும் இருக்கக் கூடும்.

"ஒரு பெண்ணின் கருப்பை வாய் தடிமனாக இருந்தால், அது பாலிசிஸ்டிக் கருப்பை (polycystic ovary) நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். கருப்பையில் கட்டிகள் உண்டாகலாம். இது தீவிர பிரச்னைக்கு வழிவகுக்கும். சீரற்ற மாதவிடாய் மற்றும் கருவுறுதலில் பிரச்னை போன்றவையும் இதில் அடங்கும்" என மோஹ்சிம் வாலி கூறுகிறார்.

சில நோய்களால் கழுத்து தடிமனாக இருப்பவர்களுக்கு கழுத்தின் பின்புறம் கருப்பாக மாறலாம். இந்தக் கருமையான கழுத்து என்பது சருமப் பிரச்னையை தாண்டி வேறு ஏதேனும் மருத்துவ பிரச்னைக்கான அறிகுறியாகக்கூட இருக்கலாம்.

புனேவில் உள்ள டி.ஒய். மருத்துவக் கல்லூரி பேராசிரியர் அமிதவ் பானர்ஜி இது குறித்து பேசுகையில், "ஒருவரின் கழுத்து வழக்கத்தை விட தடிமனாக இருந்தால், அவருக்கு உடல்நலப் பிரச்னை இருப்பதை குறிக்கும். குறிப்பாக அவர் உடல் பருமனை நோக்கிச் செல்கிறார் என அர்த்தம். உடல் பருமன் என்பது நிறைய நோய்களை உள்ளடக்கியுள்ளது." என்றார்.

"ஒரு பொதுவான கண்ணோட்டத்தில் இரண்டு பேரின் உடல் அமைப்பு ஒரே மாதிரியாகத் தெரிந்தால், அதாவது, எடை அடிப்படையில் இருவரும் ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும், அவர்களில் ஒருவரின் கழுத்து தடிமனாக இருந்தால், அவரது உடலில் அதிக கொழுப்பு உள்ளது என்றும், அவர் உடல் பருமனை நோக்கி நகர்கிறார் என்றும் அர்த்தம்." என்கிறார் அமிதவ் பானர்ஜி.

மெல்லிய கழுத்து உணர்த்துவது என்ன?

கழுத்து காட்டும் ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மெல்லிய கழுத்து தைராய்டு தொடர்பான நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

மெல்லிய கழுத்து பொதுவாக அழகுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால் இது தைராய்டு தொடர்பான நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

மெல்லிய கழுத்து உடையவர்களுக்கு பெரும்பாலும் கூடுதல் முதுகெலும்புகள் இருக்கும்.

முதுகு தண்டுவடத்தில் பொதுவாக ஒருவருக்கு 7 முதுகெலும்புகள் இருக்கும். சிலருக்கு இது 8 ஆக இருக்கும்.

அதாவது ஒருவருக்கு கையில் 5 விரல்களுக்கு பதில் 6 விரல்கள் இருக்கிறதல்லவா. அதுபோலதான் இதுவும்.

முதுகு தண்டுவடத்திற்கு முதுகெலும்புதான் முக்கியமாக உள்ளது. முதுகு தண்டுவடம் மற்றும் நரம்புகளுக்கு இதுதான் பாதுகாப்பு அளிக்கிறது.

"மெல்லிய கழுத்து பொதுவாக எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது. ஆனால் சில சூழல்களில் கூடுதலாக ஒரு முதுகெலும்பு தென்படும் போது (8 ஆக இருக்கும்போது) கைகளில் உணர்ச்சியற்ற தன்மை போன்ற பிரச்னைகள் இருக்கும்" என மருத்துவர் வாலி கூறுகிறார்.

கழுத்து காட்டும் ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரத்தசோகையால் கூட சிலரின் கழுத்து வழக்கத்தை விட மெல்லியதாக தென்படலாம்.

"சில சமயங்களில் ரத்த சோகையால் கூட (anemia) சிலரின் கழுத்து வழக்கத்தை விட மெல்லியதாக தென்படலாம். இவர்களுக்கு இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துகள் அளிக்கப்படுகின்றன. சில சமயங்களில் ரத்தத்தை மாற்ற வேண்டிய தேவையும் (blood transfusion) ஏற்படுகிறது" என்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் அடேரியா நிகர்சந்திரா.

சில சமயங்களில் இது மரபணு ரீதியாகவும் இருக்கலாம் என்றார் அவர். தந்தைக்கு நீளமான மற்றும் மெல்லிய கழுத்து இருந்தால், மகனுக்கும் அதேபோல இருக்கலாம்.

பெரும்பாலும் மெல்லிய கழுத்து உடையவர்களுக்கு பிரத்யேக பிசியோதெரபி சிகிச்சை வழங்க ஆலோசிக்கப்படுகிறது. அவர்கள் உடலில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவு மருந்துகள் மூலமாகவோ, மற்ற வழிகளிலோ சமன் செய்யப்படும். இதன்மூலம் அவர்களின் கழுத்து தசைகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

வழக்கத்தை விட தனது கழுத்து தடிமனாக இருப்பதைப் போல ஒருவர் கருதினால் உடனடியாக அவர்கள் தங்களின் உடல் எடையை கட்டுப்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பொதுவாக குழந்தைப்பேறுக்குப் பிறகு பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். அதனால் அவர்கள் தங்களின் உணவு முறையில் தனி கவனம் செலுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

உங்களின் உடல் அல்லது ஆரோக்கியம் ஆபத்தை நோக்கி செல்கிறதா என்பது தெரியவேண்டும் என்றால் எப்போதெல்லாம் கண்ணாடியில் முகம் பார்க்கிறீர்களோ, அப்போது உங்களின் கழுத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gw74wlew7o

Checked
Mon, 11/24/2025 - 20:01
நலமோடு நாம் வாழ Latest Topics
Subscribe to நலமோடு நாம் வாழ feed