நலமோடு நாம் வாழ

உயிரை பறிக்கும் பூஞ்சை நோய் மீண்டும் பரவல்

1 month 3 weeks ago
உயிரை பறிக்கும் பூஞ்சை நோய் மீண்டும் பரவல்

அமெரிக்காவில் மனிதர்களின் உயிரை பறிக்கும் ‛கேண்டிடா ஆரிஸ் எனும் பூஞ்சை தொற்று பரவ தொடங்கியுள்ளது.

இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் பூஞ்சை தொற்று பாதித்தால் என்ன நடக்கும் என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் அடுத்த 2 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவி மொத்தமாக மனிதர்களை முடக்கியது.

இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் அமெரிக்காவில் தற்போது ‛கேண்டிடா ஆரிஸ் எனும் பூஞ்சை தொற்று வேகமாக பரவ தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பூஞ்சை தொற்று என்பது மனிதர்களின் உயிரை பறிக்கும் திறனை அதிகம் கொண்டுள்ளதால் அமெரிக்க மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

அதாவது அமெரிக்காவின் வொஷிங்டனில் கடந்த மாதம் ஒருவருக்கு ‛கேண்டிடா ஆரிஸ் பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும்போதே சியாட்டில் 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தற்போது வரை 4 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் ‛கேண்டிடா ஆரிஸ் பாதிப்பு தற்போது குறைவாக இருந்தாலும் கூட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதற்கு அந்த பூஞ்சை தொற்றின் வீரியம் தான் காரணமாகும். அதாவது ‛கேண்டிடா ஆரிஸ் பூஞ்சை தொற்று என்பது வேகமாக பரவும் தன்மை கொண்டது.

மேலும் அதிக இறப்பு சதவீதத்தை கொண்டுள்ளதோடு, எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாதாம்.

இதனால் தான் சுகாதார நிபுணர்களும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.மேலும் இந்த பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டால் முதலில் அது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை தான் பாதிக்கும்.

மேலும் உணவு குழாய், சுவாச குழாய்களை தாக்கும். மேலும் இந்த பாதிப்பு ஏற்பட்டால் இரத்த ஓட்டம் பாதிப்பதோடு, காது உள்பட பிற உடல் பகுதிகளில் காயங்கள் ஏற்படுத்தும்.

மேலும் பாக்டீரியா தொற்று ஏற்படுவம் பிற அறிகுறிகளும் ஏற்படாலம். நோயின் வீரியம் அதிகரிக்க அதிகரிக்க அறிகுறியின் தாக்கமும் அதிகரிக்கும்.

மேலும் இந்த ‛கேண்டிடா ஆரிஸ் பூஞ்சை தொற்று கிருமி மனிதரின் தோலில் இருந்து கொண்டே இன்னொருவருக்கும் பரவும் தன்மை கொண்டது. இதன்மூலம் ஒருவர் பாதிப்புக்கு உள்ளாகாமலே மற்றவருக்கு நோய் கிருமியை அனுப்ப முடியும்.

மேலும் இந்த தொற்றால் பாதிக்கப்படும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். மேலும் அவர்கள் இருக்கும் அறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும்.

அவரை சந்திக்க செல்வோர் கவசஉடை அணிய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட நபரின் அறைக்கு சென்று வந்தால் கிருமிநாசினியிட்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

https://thinakkural.lk/article/290551

உங்க கிட்னியை புதுசா வைத்திருக்க இந்த பதிவை படிங்க..!

1 month 3 weeks ago

நம் உடலில் பெரும்பாலான கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்வது சிறுநீரகம்தான். இது பழுதாகிவிட்டால் கை, கால், முகம் மட்டுமல்லாமல் உள்ளுறுப்புகளான நுரையீரலை சுற்றி உள்ள சவ்வுகளில்  கழிவுகள் தேங்கத் துவங்கும். இதனால் நடக்க முடியாமல் போவதோடு மட்டுமல்லாமல் மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஏற்படும். இந்த சிறுநீரக பிரச்சனை சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ,உடல் பருமன் உள்ளவர்கள், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர் ஆகியோரை  எளிதில் தாக்கும். நோய் வந்த பிறகு என்ன செய்யலாம் என்று யோசிப்பதை விட அது வராமல் பாதுகாத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம், அந்த வகையில் என்று சிறுநீரகத்தை பலப்படுத்தக் கூடிய உணவுகளை பார்ப்போம்.

பூண்டு

தினமும் ஒரு பள்ளு  பூண்டை பச்சையாக சாப்பிட்டால் இதய நோய் வராமல் பாதுகாப்பதோடு கெட்ட கொழுப்பை கரைக்கும் ,சிறுநீரகக் குழாயில் ஏற்படும் தொற்றை குணப்படுத்தும்.

கொத்தமல்லி இலை

கொத்தமல்லியை கொதிக்க வைத்த தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஒரு டம்ளர் வீதம்  குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள டாக்சின்களை  வெளியேற்றி  கிட்னி ஆரோக்கியமாக இருக்கும். இதை வாரம் இரண்டு முறை செய்யலாம்.

திராட்சை

திராட்சையில் உள்ள விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் மாரடைப்பை தடுக்கும், சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதையும் தடுக்கும்.

இஞ்சி

இதில் உள்ள ஆன்டி  ஆக்சிடென்ட் சிறுநீர் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மேலும் இது ரத்தம் மற்றும் சிறுநீரகத்தை சுத்திகரிக்கிறது , நல்ல ஜீரண சக்தியையும் கொடுக்கும்.

முட்டைகோஸ்

இதில் உள்ள வளமான ஊட்டச்சத்துக்கள் சிறுநீரக ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவாகும். இதில் உள்ள பைட்டிக் ஆசிட் மற்றும் போலிக் ஆசிட் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும். விட்டமின் கே மற்றும் விட்டமின் பி6 ,நார்ச்சத்து போன்றவைகளும் உள்ளது, இது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும்.

மீன்கள்

மீன்களில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் அதிகம் உள்ளதால் சிறுநீரக நோய் வராமல் பாதுகாக்கும். சாலமன் மத்தி கானாங்கெளுத்தி சூரை மீன் போன்றவை மிக ஆரோக்கியமானது இதை வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிட்டு வரலாம்

வெங்காயம்

சின்ன வெங்காயத்தை அதிக அளவு நம் உணவில் எடுத்துக்கொண்டால் சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கலாம் மேலும் சிறுநீரகத்தை சுத்தமாகவும் வைத்துக்கொள்ளும். சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

உணவில் உப்பை குறைத்துக் கொண்டால் சிறுநீரகப் பிரச்சனை ஏற்படாது மேலும் அதிக ஆக்சிலேட்  நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் தக்காளியில் அதிக ஆக்சிலேட் உள்ளது எனவே குறைவாக பயன்படுத்துவது சிறந்தது.மண்ணிற்கு கீழ் விளையும் கீரை வகைகளை அதிகம் எடுத்து கொள்ள கூடாது ,அதற்கு பதில் கொடிவகை காய்கறிகளான அவரைக்காய் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்

ஆகவே இந்த உணவு முறைகளை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரக கோளாறு ஏற்படாமல் தப்பிக்கலாம். [எ]

 

https://newuthayan.com/article/உங்க_கிட்னியை_புதுசா_வைத்திருக்க_இந்த_பதிவை_படிங்க..!

   

கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் 'ஹெச்பிவி' தடுப்பூசி - யாருக்கெல்லாம் அவசியம்?

1 month 3 weeks ago
சீனாவில் உள்ள ஒரு மருத்துவர் கார்டசில் பெட்டியை கையில் வைத்திருக்கிறார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

உலகெங்கிலும் உள்ள பெண்களில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் நான்காவது பொதுவான புற்றுநோயாகும். இந்த நோயால், ஒவ்வொரு ஆண்டும் 3,00,000 க்கும் அதிகமானோர் இறக்கிறார்கள்.

ஹெச்பிவி தடுப்பூசியில் மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பை கிட்டத்தட்ட 90% குறைக்கும் என ஆராய்ச்சி கூறுகிறது.

ஹெச்பிவி என்றால் என்ன?

ஹெச்பிவி(human papillomavirus(HPV)) என்பது மிகவும் பொதுவான வைரஸ்களின் குழுப் பெயர்.

இங்கு 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான ஹெச்பிவி வைரஸ்கள் உள்ளன. இவற்றால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் பொதுவாக எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை. சில வைரஸ்கள் நம் உடலில் மருக்களை ஏற்படுத்தும். அவை நம் கை, கால், பிறப்புறுப்பு அல்லது வாயில் தோன்றலாம்.

இருப்பினும், பெரும்பாலான மக்கள், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உணர மாட்டார்கள். அவர்களின் உடல்கள் சிகிச்சையின்றியே வைரஸை அகற்றும்.

மறுபுறம், அதிக ஆபத்து உள்ள ஹெச்பிவி வைரஸ் வகைகள், அசாதாரண திசு வளர்ச்சியை ஏற்படுத்தும். இவை புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.

புற்றுநோயிலிருந்து ஹெச்பிவி தடுப்பூசி எவ்வாறு பாதுகாக்கிறது?

ஹெச்பிவி தடுப்பூசி ஒன்பது வகையான ஹெச்பிவி வைரஸ்களின் தொற்றில் இருந்து பாதுகாக்கிறது.

குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு ஹெச்பிவி தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பாதுகாக்கும் என ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால், அதற்கும் மேல் நீண்ட காலம் பாதுகாக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின்பாதிப்பை கிட்டத்தட்ட 90% குறைப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது.

ஹெச்பிவி தடுப்பூசி யாருக்கு?

ஹெச்பிவி தடுப்பூசியை பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஹெச்பிவி பாதிப்பிற்கு முன் எடுத்துக்கொண்டால் அது சிறப்பாகச் செயல்படும்.

ஏனெனில், தடுப்பூசிகளால் தற்காக்க மட்டுமே முடியும், அவை உடலில் பாதிப்பை ஏற்படுத்திய பின்னர், அவற்றை வெளியேற்ற முடியாது.

தடுப்பூசி ஒன்று அல்லது இரண்டு டோஸ்களாக கொடுக்கப்படலாம் என உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவுறுத்தியுள்ளது. குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இரண்டு அல்லது மூன்று டோஸ்களைப் பெற வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

யாருக்கு ஹெச்பிவி ஏற்படுகிறது ?

இவை எளிதில் பரவக் கூடியது. இது தோல் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.

பெரும்பாலான மக்கள் தங்களின் 25 வயதிற்குள்ளாகவே ஹெச்பிவி பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

பெரும்பாலான நேரங்களில் மக்கள் 18 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை பாதிக்கப்படுகின்றனர்.

இது பாலியல் ரீதியாக பரவும் நோய் அல்ல. இது பாலியல் திரவங்களாலும் பரவுவதில்லை.

ஆனால், இது தொடுதல் உள்ளிட்ட பாலியல் தொடர்புகளின் போது இது அடிக்கடி பரவுகிறது.

 
உலகம் முழுவதும் ஹெச்பிவி தடுப்பூசி எவ்வளவு பரவலாக உள்ளது?
ஹெச்பிவி தடுப்பூசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளில், 90% குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ளன.

இந்த நாடுகளில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயானது தீவிரமான அறிகுறிகள் தென்படும் வரை பெரும்பாலும் கண்டறியப்படுவதில்லை.

2030 ஆம் ஆண்டளவில் ஹெச்பிவி தடுப்பூசி 90% மக்களை சென்றடைவதன் மூலம் அடுத்த நூற்றாண்டுக்குள் இந்த நோயை மக்களிடமிருந்து அகற்றுவதை இலக்காகக் கொண்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

தற்போது, சுமார் 140 நாடுகள் ஹெச்பிவி தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளன.

ஹெச்பிவி தடுப்பூசி

சப்-சஹாரா ஆப்பிரிக்கா (24%), லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் (16%), கிழக்கு ஐரோப்பா (14%), மற்றும் தென்கிழக்கு ஆசியா (14%) ஆகிய நாடுகளில் பெண்களிடையே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரவலாக காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

ஆப்பிரிக்காவில் தடுப்பூசி தாெடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய நாடுகளில் முதல் நாடு ருவாண்டா ஆகும். இது 2011 இல் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதற்கும் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் பரிசோதனையை அறிமுகப்படுத்துவதற்கும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

முதல் ஆண்டில் இது தடுப்பூசிக்கு செலுத்துவதற்கு தகுதியான 10 பெண்களில் ஒன்பது பேரை சென்றடைந்தது. இதன் காரணமாக, மற்ற நாடுகளுக்கு இது ஒரு முன்மாதிரி என வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

தடுப்பூசி, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்புகளை குறைப்பதாகத் தோன்றினாலும், இது அனைத்து வகையான ஹெச்பிவி வைரஸ்களுக்கும் எதிராக பாதுகாப்பைத் தராது.

நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துவிட்டதாக நேற்று செய்தி பரவியது. இந்த நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/cn0njqnde39o

மதுவால் ஏற்படக்கூடிய உடல் மற்றும் மனரீதியான விளைவுகள்

1 month 3 weeks ago
பாதுகாப்பான மது குடிக்கும் அளவு என்ன? குடிப்பதை திடீரென நிறுத்தும்போது என்ன நடக்கும்?
ஆல்கஹால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மது அருந்துதல் உடலை என்ன செய்யும்?

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் பிப்ரவரி 1 முதல் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்ற தமிழக அரசின் சமீபத்திய அறிவிப்பு மதுபிரியர்கள் பலருக்கும் கவலை தரக்கூடியதாக அமைந்திருக்கலாம்.

ஆனால், அதே மதுவை இவ்வளவு விலைகொடுத்து வாங்கி அருந்துவதன் மூலம் வரக்கூடிய உடல் பாதகங்கள் அதை விட அதிர்ச்சி தரக்கூடியவை. எப்போதாவது மது அருந்தினாலும் சரி, அன்றாடம் மது அருந்தினாலும் சரி அது உடலின் முக்கிய பாகங்களை மோசமாக பாதிக்கும் என்ற மருத்துவர்களின் அறிவுரை இன்னும் அதிகமாகக் கவலைப்பட வேண்டிய அம்சம்.

அப்படி மதுவால் ஏற்படக்கூடிய உடல் மற்றும் மனரீதியான விளைவுகள், மதுக் குடிப்பதை திடீரென நிறுத்துவதால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.

 
ஆல்கஹால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

உடலின் உட்பகுதி

நாம் அருந்தும் மது எங்கு செல்கிறது?

பலரும் தாங்கள் அருந்தும் மது நேரடியாக வயிற்றுக்குள் சென்று அப்படியே சிறுநீர் வழியாக வெளியேறி விடுவதாகவே நினைத்து கொள்கின்றனர். ஆனால், போகிற வழியில் உள்ள உடல் பாகங்களை அது எந்தளவு பாதிக்கிறது என்பது குறித்து பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இதுகுறித்து தெரிந்து கொள்வதற்காக எம்ஜிஎம் ஹெல்த்கேரின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் தியாகராஜனிடம் பேசினோம். “மது எப்படி, எவ்வளவு, எத்தனை நாட்கள் அருந்தினாலும் கேடுதான். அதிலும் ஆண்களை விட பெண்கள் மிக எளிதில் மதுவால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது” என்கிறார் அவர்.

உடலுக்குள் ஆல்கஹாலின் பயணம் குறித்து விவரிக்கும் மருத்துவர் தியாகராஜன், “ஆல்கஹால் நேரடியாக வயிற்றைத் தாண்டி சிறுகுடல் பெருங்குடல் பகுதிகளுக்கு செல்கிறது. அங்கு ஆல்ஹகால் ஆல்டிகைடு என்ற சேர்மமாக உடைக்கப்படும்."

"வயிறு மற்றும் குடல் பகுதிகளில் உள்ள ரத்தம் அனைத்தும் கல்லீரல் வழியாக சென்றே உடலின் மற்ற பகுதிகளுக்கு செல்லும். அந்த சமயத்தில் உணவில் உள்ள உடலுக்கு தேவையான சத்துக்களை பிரித்து ரத்தம் வழியாக முழு உடலுக்கும், கழிவுகளை மலம் மற்றும் சிறுநீர் வழியாக வெளியேயும் அனுப்புவது கல்லீரலின் வேலை."

"இந்நிலையில் கல்லீரலுக்கு சேதத்தை உண்டாக்கும் ஹெபட்டோடாக்சிக் கூறான ஆல்டிகைடு ரத்தம் வழியாக கல்லீரலை அடைகிறது. எனவே மிக குறைவான நேரத்தில் அதிகமாக ஆல்கஹாலை அருந்தும்போது இந்த சேர்மம் அதிமாகி கல்லீரல் செயலிழப்பு வரை கொண்டு செல்லும்” என்கிறார் அவர்.

 
ஆல்கஹால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பெண்கள் மதுவால் எளிதில் கல்லீரல் சார் நோய்களுக்கு ஆளாவதாக கூறுகிறார் மருத்துவர்.

பெண்களுக்கு அதிக அபாயம் உண்டு

மது அருந்தும் நபர்கள் எந்த பாலினத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அது பாதகத்தை ஏற்படுத்தும். அதே பெண்கள் என்று வரும்போது அவர்களது மரபணு அமைப்பு காரணமாக ஆல்கஹாலால் எளிதில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகிறார் மருத்துவர் தியாகராஜன்.

இதுகுறித்து கூறும் அவர், “தொடர்ச்சியாக மது அருந்துவதால் கல்லீரலில் தீங்கு விளைவிக்கும் கூறுகள் அதிகமாகி லிவர் ஸ்காரிங் ஏற்படுகிறது. இது ஃபைரோசிஸ் நிலையை ஏற்படுத்தி விடும். இதோடு மற்ற சுற்றுசூழல் காரணங்களும் இணைந்து காலம் செல்ல செல்ல கல்லீரல் சிரோசிஸ் நிலையை அடைந்து விடும்” என்கிறார்.

ஆனால், நோயின் தீவிரம் தனிநபரின் மரபணுத்தன்மை மற்றும் மது அருந்தும் அளவு ஆகியவற்றை பொறுத்தே உடனடியாக அல்லது மெதுவாக அதிகரிக்கும். அதேசமயம், பெண்கள் மதுவால் எளிதில் கல்லீரல் சார் நோய்களுக்கு ஆளாவதாக கூறுகிறார் மருத்துவர்.

 
ஆல்கஹால்

பட மூலாதாரம்,THIAGARAJAN

படக்குறிப்பு,

மருத்துவர் தியாகராஜன்

மதுவால் உண்டாகும் கல்லீரல் நோய்கள்

ஆல்கஹாலால் பல விதமான கல்லீரல் சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன. கடந்த பத்தாண்டுகளாகவே இந்தியாவில் கல்லீரல் சார் நோய்கள் அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதிலும் 5இல் 1 இந்தியர் கல்லீரல் சார் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லீரல் சார்ந்த இறப்புகளும் அதிகரித்துள்ளன.

அப்படி ஆல்கஹாலால் கல்லீரலுக்கு ஏற்படும் முக்கிய பாதிப்புகளாக மருத்துவர் தியாகராஜன் தெரிவிப்பவை.,

நாள்பட்ட கல்லீரல் சிரோசிஸ் (Chronic Liver Cirrhosis)

இந்த நிலையானது பல ஆண்டுகளாக கல்லீரல் சேதமடைந்து கொஞ்சம் கொஞ்சமாக அழற்சி அதிகரித்து இறுதியில் கல்லீரல் செயலிழப்பு வரை ஏற்படுத்தும். இதன் அறிகுறிகளாக ஆற்றல் இழப்பு, தசை பலவீனம், நீர்கோர்த்தல், மஞ்சள்காமாலை உயர்தல், ரத்த வாந்தி ஆகியவற்றை குறிப்பிடுகிறார் மருத்துவர்.

அக்யூட் ஆல்கஹாலிக் ஹெபடைட்டிஸ் அல்லது அக்யூட் கல்லீரல் செயலிழப்பு

தொடர்ந்து பகல் இரவாக மது அருந்துதல், மோசமான உணவு பழக்கம் மற்றும் இதர காரணிகளோடு சேர்ந்து இந்த நிலைக்கு ஒருவர் தள்ளப்படலாம். இதில் கடுமையான மஞ்சள் காமாலை , ரத்தம் உறையாமல் போதல் மற்றும் தொடக்க நிலை கோமா கூட ஏற்படலாம்.

நாள்பட்ட கல்லீரல் நோய்

நீண்ட நாட்களாகவே கல்லீரல் குறிப்பிட்ட அளவு பாதிப்படைந்திருக்கும். இந்த நிலையில் குறைவாக அல்லது அதிகமாக என எப்படி மது அருந்தினாலும் திடீரென்று கல்லீரல் செயலிழந்து விடும் என்கிறார் மருத்துவர் தியாகராஜன்.

இந்த மூன்று நிலைக்குமே மருத்துவ ரீதியில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமென கூறும் அவர், நோயாளிகள் எந்த நிலையில் இருக்கிறார்களோ அதற்கேற்ற சிகிச்சைகள் உண்டு என்று கூறுகிறார்.

 
ஆல்கஹால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

“ஆல்கஹால் சார்ந்த கல்லீரல் கொழுப்பு, ஆல்கஹால் சாராத கல்லீரல் கொழுப்பு என இருவகை உண்டு”

ஃபேட்டி லிவருக்கும், ஆல்கஹாலுக்கும் என்ன தொடர்பு?

கடந்த ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டிருந்த ஆய்வு முடிவு ஒன்றில் 38% இந்தியர்களுக்கு ஆல்கஹால் சாராத கல்லீரல் கொழுப்பு (ஃபேட்டி லிவர்) இருப்பதாக தெரிவித்திருந்தது.

கல்லீரல் செல்களில் கொழுப்பு சேர்வது இயல்பான ஒன்று. ஆனால், அது 5% த்திற்கும் கீழ்தான் இருக்கும். இதே 20 - 25%க்கு மேல் செல்லும்போது அது கல்லீரலின் செயல்பாடுகளை பாதிக்கும். இதையே நாம் கல்லீரல் கொழுப்பு என்கிறோம்.

கல்லீரல் கொழுப்பை பொறுத்தவரை இரண்டு வகைகள் இருப்பதாக கூறுகிறார் மருத்துவர் தியாகராஜன். அதை விவரிக்கும் அவர், “ஆல்கஹால் சார்ந்த கல்லீரல் கொழுப்பு, ஆல்கஹால் சாராத கல்லீரல் கொழுப்பு என இருவகை உண்டு” என்கிறார்.

இந்த கல்லீரல் கொழுப்பு ஏற்பட அதிக காரணமாக வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள், மோசமான உணவு பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டும் அவர் ஆல்கஹால் சாராத கல்லீரல் கொழுப்பு நோய்களே அதிகம் ஏற்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.

 
ஆல்கஹால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஒரு நாளைக்கு பாதுகாப்பான ஆல்கஹால் அளவு என்பது 30மி.லி

ஒரு நாளைக்கு எவ்வளவு ஆல்கஹால் பாதுகாப்பானது?

என்னதான் மது அருந்தினாலும் அதில் தான் சுயகட்டுப்பாடு கொண்டுள்ளதாகவும், குறைவாகவே மது அருந்துவதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால், உண்மையில் பாதுகாப்பான மது அளவு ஒரு மூடி இருமல் மருந்து அளவு மட்டுமே.

“ஒரு நாளைக்கு பாதுகாப்பான ஆல்கஹால் அளவு என்பது 30மி.லி. இதை தினசரி அருந்தினாலும் பெரும்பாலும் தீங்கு ஏற்படாது. ஆனால், அதற்கு மரபணு ரீதியாகவே உங்கள் கல்லீரல் நலமாக இருக்க வேண்டும், வேறு எந்த பிரச்சனைகளாலும் பாதிப்பு இல்லாத கல்லீரலாக இருக்க வேண்டும்” என்கிறார் மருத்துவர்.

அதே சமயம் ஆல்கஹாலின் போதை தன்மையால் அப்படி சுயகட்டுப்பாடோடு பாதுகாப்பான அளவை மட்டுமே அருந்துவது சாத்தியமல்ல. நாளாக நாளாக அளவு அதிகரிக்குமே தவிர குறையாது. எனவே மதுப்பழக்கத்தையே மொத்தமாக தவிர்ப்பதே நல்லது என்கிறார் அவர்.

மதுப்பழக்கத்தை நிறுத்தினால் கல்லீரல் சரியாகி விடுமா?

சில நேரங்களில் நீண்ட காலம் மது அருந்துபவர்கள் கூட திடீரென முடிவு செய்து மதுப்பழக்கத்தை விட்டு விடுகிறார்கள். இதனால் தங்களது உடல் சீராகி விடும் என அவர்கள் நம்புகின்றனர்.

ஆனால், மதுப்பழக்கத்தை விட்டு பல ஆண்டுகள் ஆனவர்களுக்கு கூட கல்லீரல் நோய்கள் வரலாம் என்று கூறுகிறார் மருத்துவர்.

இதுகுறித்து விவரிக்கும் அவர், “ஆல்கஹாலால் கல்லீரல் கொழுப்பு அல்லது பைப்ரோசிஸ் நிலை ஏற்பட்டு தொடக்க நிலையில் இருக்கும்போது நீங்கள் மது அருந்துவதை விட்டுவிட்டால், மேலும் கல்லீரல் சேதமடையாமல் தடுக்கலாம். மருத்துவ உதவிகளோடு சில நாட்களில் மீண்டு வர முடியும்” என்கிறார்.

“ஆனால், அதுவே சிரோசிஸ் நிலைக்கு சென்று விட்டால் நீங்கள் முழுமையாக மதுபழக்கத்தை விட்டாலும் கல்லீரலால் மீண்டு வர முடியாது. அதற்கு மேலதிக சிகிச்சைகள் தேவை. ஆனால், கல்லீரலின் பாதிப்பு எந்த நிலையில் இருந்தாலும் முதலில் மது பழக்கத்தை விட்டால் மட்டுமே அது அடுத்தகட்டத்தை நோக்கி செல்லாது” என்கிறார் மருத்துவர் தியாகராஜன்.

 
ஆல்கஹால்

பட மூலாதாரம்,POORNA CHANDRIKA

படக்குறிப்பு,

கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் மருத்துவர் பூர்ண சந்திரிகா

மதுப்பழக்கத்தால் ஏற்படும் மனநல கோளாறுகள்

மது அருந்துவதால் பாதிக்கப்படும் மற்றுமொரு முக்கிய உறுப்பு மூளை. இதனால் மனரீதியான பல சிக்கல்களுக்கு மது குடிப்போர் ஆளாகின்றனர். இது குறித்து கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் மருத்துவர் பூர்ண சந்திரிகாவிடம் பேசினோம்.

மதுவின் அளவு மற்றும் அதை ஒருவரின் உடல் தாங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஒரு நபர் மதுவினால் பாதிக்கப்படும் தன்மையும், காலமும் தீர்மானிக்கப்படுகிறது என்று கூறும் மருத்துவர் பூர்ண சந்திரிகா முக்கியமான நான்கு மனநல பிரச்சனைகள் குறித்து கூறுகிறார்.

அதீத மதுவினால் வரும் சிக்கல்

சிலர் கொஞ்சம் மது அருந்தினால் கூட மோசமான வெறிபிடித்தவர்கள் போல் ஆகிவிடுவார்கள். பொருட்களை உடைப்பது, சண்டையிடுவது போன்றெல்லாம் செய்வார்கள். இதுதான் முதல்கட்டம் என்கிறார் அவர்.

மேலும் இதற்கு அடுத்த கட்டமாக டெலிரியம் ட்ரமன்ஸ் (Delirium Tremens) என்ற பிரச்னை ஏற்படும் என்கிறார். “இதில் அடிக்கடி பூச்சி ஊறுவது போல் இருக்கிறது என்பார்கள், என்னை போலீஸ் துரத்தி வருகிறது என்பார்கள். இந்த மனநல பிரச்னையில் தூக்கமின்மை, குழப்பம், மறதி, சோர்வு, காதில் குரல் கேப்பது ஆகிய அறிகுறிகள் இருக்கும்” என கூறுகிறார் மருத்துவர்.

 
ஆல்கஹால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நீண்டநாள் மதுப்பழக்கத்தை திடீரென்று விடும்போது மனரீதியான சில பாதிப்புகள் ஏற்படுகிறது.

மதுப்பழக்கத்தை விட்டதற்கு பிறகு என்ன நடக்கும்?

மதுப்பழக்கத்தினால் எவ்வளவு துன்பமோ, அதை விட்டொழிந்த பிறகும் கூட பெரும் சவால்களை சிலர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதையே Withdrawal Syndrome என்கிறோம். இதில் குழப்பம், பதற்றம், கைகால் உதறுதல், சோர்வு என நபருக்கேற்ற பிரச்னைகள் உண்டு.

ஆனால் அதை தாண்டி நீண்டநாள் மதுப்பழக்கத்தை திடீரென்று விடும்போது மனரீதியான சில பாதிப்புகள் ஏற்படுகிறது. அதுகுறித்து மருத்துவர் பூர்ண சந்திரிகா விளக்குகிறார்.

ஆல்கஹால் இண்ட்யூஸ்ட் ஹேலுசினேஷன் (Alcohol Induced Hallucinations)

“சிலர் குடியை நிறுத்தினாலும் கூட காதில் சலங்கை ஒலி கேட்பது, யாரோ கூப்பிடுவது போல் போன்ற பிரம்மை மட்டும் இருக்கும் அதற்கு பெயர் ஆல்கஹால் இண்ட்யூஸ்ட் ஹேலுசினேஷன்” என்று கூறும் அவர் இதிலேயே ‘லில்லிபுட் ஹேலுசினேஷன்’ என்ற காட்சி ஹேலுசினேஷன் பிரச்னைகளும் ஏற்படும் என்கிறார்.

ஆல்கஹால் இண்ட்யூஸ்ட் சைக்காட்ரிக் டிஸார்டர் (Alcohol Induced Psychiatric Disorder)

இந்த பிரச்னையில் , பல வருடங்களாக மது அருந்துபவர்களாக இருப்பார்கள். திடீரென்று ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்திற்காக அதை நிறுத்தியிருப்பார்கள். அவர்களுக்கு ஒரு மூன்று நாட்களிலேயே குழப்பம், கோவம், எதிரில் இருப்பவர் யார் என்று தெரியாமல் போவது போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்கிறார் மருத்துவர்.

வெர்னிக் என்செபலோபதி கொரஸ்காஃப்

இந்த மனரீதியான நோய்கள் நாள்பட்ட பிரச்னையாக மாறும்போது அடுத்தடுத்த கட்டமாக நரம்பு சார் பிரச்னைகளையும் தூண்டுகிறது. அதன் அடுத்த நிலை வெர்னிக் என்செபலோபதி கொரஸ்காஃப் (Wernicke encephalopathy and Korsakoff).

இதனால் மறதி ஏற்படும். ஆனால், அந்த நபர் மறதி இருப்பது போலவே காட்டிக்கொள்ள மாட்டார்கள். திடீரென்று ஒரு கேள்வி கேட்டால் பதில் தெரியவில்லை என்றாலும், அதை தெரியாது என்று சொல்லாமல் தோராயமான பதிலை சொல்வார்கள். இதெல்லாம் நரம்பியல் சார்ந்த மனநலப் பிரச்னைகள் என்று கூறுகிறார் மருத்துவர் பூர்ண சந்திரிகா.

இவை இல்லாமல் நரம்பு சம்பந்தமான வேறு பிரச்னைகளும் கூட ஏற்படும். அதில் மயோபதி, நியூரோபதி சார்ந்த பிரச்னைகளும் அடங்கும். இதனால் உட்கார்ந்து எழுந்திருக்க முடியாது, சில வேலைகளை செய்ய முடியாது. உடலில் ஊசி போல குத்துதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்கிறார் அவர்.

 
ஆல்கஹால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

"இதற்கு மருந்தியல் சிகிச்சையே தீர்வு"

மறுவாழ்வு மையங்கள் மூலம் பலன் கிடைக்கிறதா?

இப்போதெல்லாம் போதை ஒழிப்பு மையங்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்கான மறுவாழ்வு மையங்கள் அதிகரித்து விட்டன.

ஆனால், அது போன்ற பல இடங்களில் அடிக்கிறார்கள், அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறார்கள் என்று அடிக்கடி குற்றச்சாட்டு எழுவதும் உண்டு. இந்நிலையில் இது போன்ற மறுவாழ்வு மையங்கள் பயனளிக்குமா என்ற கேள்வியை மருத்துவர்களிடம் முன்வைத்தோம்.

இதற்கு பதிலளித்த மருத்துவர் தியாகராஜன், "சில நல்ல மையங்கள் இருந்தாலும், பல மறுவாழ்வு மையங்கள் முறைப்படுத்தப்படாமல் தான் இருக்கின்றன. அங்கு என்ன நடக்கிறது என்றே தெரிவதில்லை. எனவே மருத்துவ ரீதியிலான சிகிச்சை மட்டுமே இதற்க்கு தீர்வு. அதை தாண்டி அதில் முக்கியம் குறிப்பிட்ட நபரின் மனஉறுதி. இதில் கட்டாயப்படுத்தி ஒருவரை மாற்ற முடியாது” என்று கூறுகிறார்.

மாநில மனநல ஆணையத்தின் மூலம் உரிமம் வழங்கப்பட்டே பல மறுவாழ்வு மையங்கள் இயங்கி வருவதாக கூறும் மருத்துவர் பூர்ணசந்திரிகா, மக்கள் உரிமம் இல்லாத மையங்களை நம்ப வேண்டாம் என்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஏதாவது ஒரு மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ள நபரை வந்து குடும்பத்தினர் பார்க்க வேண்டாம், அவர் தனித்து இருக்கட்டும் என்று சொன்னால் அந்த இடங்களை நம்ப வேண்டாம். சொல்லப்போனால் தினசரி சென்று அவர்களை பார்ப்பதே, நமது குடும்பம் நம்முடன் இருக்கிறது என்ற உத்வேகத்தை கொடுக்கும். எனவே கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் மக்கள் மாநில மனநல ஆணையத்தில் புகார் தெரிவிக்கலாம்” என்று கூறியுள்ளார்.

 
ஆல்கஹால்

பட மூலாதாரம்,IMH / FACEBOOK

படக்குறிப்பு,

கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம் , சென்னை

அரசு வழங்கும் சிகிச்சைகள்

போதை ஒழிப்புக்கெனவே தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இதை விவரித்து பேசிய மருத்துவர் பூர்ண சந்திரிகா, “மதுபழக்கத்தை கைவிட மருந்தியல் சிகிச்சையே தீர்வு. அதற்கான அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுத்துள்ளதாக” தெரிவிக்கிறார்.

“இதற்கான சிகிச்சை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவ மனைகள், மருத்துவ கல்லூரி மனநல பிரிவுகள், மாவட்ட அரசு போதை ஒழிப்பு மையங்கள் என அனைத்து இடங்களிலும் வழங்கப்படுவதாக” கூறுகிறார் அவர்.

மேற்கூறிய இடங்களில் 21 நாள் முதல் 1 மாதம் வரை அல்லது 10 முதல் 15 நாட்கள் உட்பிரிவு நோயாளியாக வைத்து மருந்தியல் சிகிச்சைகள் வழங்கப்படும். மேலும், மருந்து சாராத சிகிச்சைகளான மனநல ஆலோசனை உள்ளிட்டவையும் வழங்கப்படும். இதன் மூலம் மதுப்பழக்கத்தில் இருந்து மக்களை விடுவிக்க அரசு முயற்சித்து எடுத்து வருகிறது என்கிறார் மருத்துவர் பூர்ணசந்திரிகா.

https://www.bbc.com/tamil/articles/cv20pzmeejlo

பித்தப்பை புற்றுநோய்

1 month 4 weeks ago
பித்தப்பை புற்றுநோய்: எந்தெந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யக்கூடாது? யாருக்கு வரும் வாய்ப்பு அதிகம்?
பித்தப்பை புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

பித்தப்பை புற்றுநோய் அரிதானது. ஆரம்பக் கட்டத்தில் பித்தப்பை புற்றுநோய் கண்டறியப்பட்டால், குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் பெரும்பாலான பித்தப்பை புற்றுநோய்கள் தாமதமான கட்டத்தில் கண்டறியப்படுகின்றன, அப்போது நோயை சமாளிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலேயே பித்தப்பை புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது. இதற்கான காரணம் என்ன?

பித்தப்பை புற்றுநோயின் அறிகுறிகள், சிகிச்சைகள் குறித்த தகவல்களை சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை பேராசிரியர் மருத்துவர் டி.சுரேஷ்குமார் மற்றும் ஐஐடி மெட்ராஸ் பகுதிநேர பேராசிரியரும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவருமான டி.ராஜ்குமார் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.

 
பித்தப்பை புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பித்தப்பை புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?

பித்தப்பை புற்றுநோய் என்பது பித்தைப்பையில் உருவாகும் செல்களின் வழக்கத்துக்கு மாறான வளர்ச்சியாகும்.

“எல்லாருக்கும் இல்லை என்றாலும், சிலருக்கு வயிற்று பகுதியில் வலி இருக்கும். வயிறு உப்பசம், போதிய செரிமானம் இருக்காது. சிலருக்கு, பித்தநீர் வெளியேறுவதை தடுக்கும் வகையில் ஏற்படும் obstructive jaundice ஏற்படலாம். இந்த வகையான மஞ்சள் காமாலை ஏற்பட்டால், பித்தப்பை புற்றுநோய்க்கான பரிசோதனை செய்யப்படும்” என்று பித்தப்பை புற்றுநோயின் முக்கிய அறிகுறைகளை விளக்குகிறார் புற்றுநோய் மருத்துவர் ராஜ்குமார்.

பித்தப்பை புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள்

  • வயிற்று வலி, குறிப்பாக வயிற்றின் மேல் வலது பகுதியில்
  • வயிற்று உப்பசம்
  • எடை குறைப்பதற்கான முயற்சிகள் எடுக்காமலே எடை குறைவது
  • மஞ்சள் காமாலை: தோல் மற்றும் கண்களின் வெள்ளை பகுதியில் மஞ்சள் நிறமாற்றம்
 
பித்தப்பை புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பித்தப்பையின் செயல்பாடுகள் என்ன?

பித்தப்பை என்பது நமது வயிற்றின் வலது பக்கத்தில், கல்லீரலுக்குக் கீழே உள்ள ஒரு சிறிய, பேரிக்காய் வடிவ உறுப்பு ஆகும். இது சுமார் 3 அங்குல நீளமுடையது. பித்தப்பை கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் செரிமான திரவமான பித்தத்தை சேமிக்கிறது. பித்தம் என்பது கல்லீரல் உற்பத்தி செய்யும் திரவமாகும். பித்தநீர் முக்கியமாக கொழுப்பு, பிலிரூபின் மற்றும் பித்த உப்புகளின் கலவையாகும்.

உணவில் உள்ள கொழுப்புகளை செரிமானம் செய்ய இந்த திரவம் உதவுகிறது.

பித்தப்பை சுமார் 50 மில்லி லிட்டர் பித்தத்தை சேமித்து வைக்கிறது. நமது சிறுகுடலில் கொழுப்புள்ள உணவு இருக்கும்போது, பித்தப்பை பித்தத்தை வெளியிடுகிறது. பித்த கொழுப்பை உடைத்து சிறிய துண்டுகளாக மாற்றுகிறது, இது சிறு குடலில் உள்ள கொழுப்பைக் கொண்ட உணவை உறிஞ்சுவதை எளிதாக்குகிறது. நாம் சாப்பிட்ட பிறகு, சுருங்கிய பலூன் போல, நமது பித்தப்பை காலியாக இருக்கும். அது மீண்டும் நிரப்பப்படுவதற்காக காத்திருக்கும்.

பித்தப்பை மற்ற செரிமான உறுப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. பித்த நாளங்கள் கல்லீரலில் இருந்து சிறுகுடலுக்கு பித்தத்தை கொண்டு செல்லும் குழாய் அமைப்பு.

 
பித்தப்பை புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பித்தப்பை புற்றுநோயை எளிதில் கண்டறிய முடியாததற்கு என்ன காரணம்?

பித்தப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள், இந்த நோய்க்கு மட்டுமல்லாமல், மற்ற செரிமான பிரச்சனைகளுக்கும் ஏற்படும் பொதுவான அறிகுறிகளாகும். இருப்பினும், இந்த அறிகுறிகள் நீடித்து நிலைத்திருந்தால் அல்லது மோசமடைந்தால், அவை புற்றுநோயாக இருக்க வாய்ப்புண்டு.

“பித்தைப்பை புற்றுநோயை பொதுவாக முற்றிய நிலையிலேயே கண்டறிய முடிகிறது. ஏனென்றால், ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளும் இருக்காது. அறிகுறிகள் தென்படும் போது, அது அருகில் உள்ள கல்லீரல், பித்தநீர் குழாய், நெரிகட்டு ஆகியவற்றில் பரவியிருக்கும். அப்போது தான் வயிற்று வலி அல்லது மஞ்சள் காமாலை ஏற்படும். வட மாநிலங்களில் மஞ்சள் காமாலை என்றாலே பித்தப்பை புற்றுநோய் என்று கருதப்படும்” என்கிறார் மருத்துவர் சுரேஷ் குமார்.

 
பித்தப்பை புற்றுநோய்

பட மூலாதாரம்,புற்றுநோய் மருத்துவர் சுரேஷ்குமார்

பித்தப்பை புற்றுநோய் ஏன் இந்தியாவின் வட மாநிலங்களில் அதிகமாக உள்ளது?

பித்தப்பை புற்றுநோய் இந்தியாவின் தென் மற்றும் மேற்கு மாநிலங்களில் அரிதானதாக இருக்கிறது. ஆனால் வட இந்தியாவில் அதிகமாக உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வுகளின் படி, வட இந்தியாவை விட தென் இந்தியாவில் பித்தப்பை புற்றுநோய் ஏற்படும் விகிதம் 10 மடங்கு குறைவாக உள்ளது. உதாரணமாக சென்னையில் ஒரு லட்சத்தில் 0.8 பெண்களுக்கு பித்தப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. ஆனால் டெல்லியில், ஒரு லட்சத்தில், 8.9 பெண்கள் பித்தப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. இது ஏன் என்று விளக்குகிறார் புற்றுநோய் மருத்துவர் டி ராஜ்குமார்.

“ சிந்து, கங்கை சமவெளி பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு பகுதியிலேயே பித்தப்பை புற்றுநோய் அதிகம் காணப்படுகிறது. இதற்கான காரணத்தை அறுதியிட்டு கூற முடியாது. அங்குள்ள நீர் மாசுபாடு காரணமா என்று ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. தரமான குடிநீர் இல்லாத பகுதிகளில் டைஃபாய்டு நோய் ஏற்படும். அந்த நோய்க்கு காரணமான பாக்டீரியா, சில நேரம் உடலில் தங்கி பித்தப்பைக்குள் நுழையவும் வாய்ப்பு இருக்கிறது” என்கின்றார்.

உலகில் தென் அமெரிக்காவில் சிலி நாட்டுக்கு அடுத்த படியாக இந்தியாவில் தான் பித்தப்பை புற்றுநோய் அதிகமாக உள்ளது. ஒரு லட்சம் பேரில் 10-12 பேருக்கு பித்தப்பை புற்றுநோய் கண்டறியப்படுகிறது என்று மேலும் கூறுகிறார்.

 
பித்தப்பை புற்றுநோய்

பட மூலாதாரம்,புற்றுநோய் மருத்துவர் ராஜ்குமார்

பித்தப்பை புற்றுநோய் யாருக்கெல்லாம் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு?

எடை கூடுதலாக இருப்பவர்கள், புகைப்பிடிப்பவர்களுக்கு பித்தப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். செரிமான பிரச்னைகள் உள்ளவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.

பொதுவாக நார்சத்து குறைவாக எடுத்துக் கொள்பவர்கள், மலச்சிக்கல் கொண்டவர்கள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவை உட்கொள்பவர்களுக்கு இந்த புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

பித்தப்பை கற்களுக்கும் பித்தப்பை புற்றுநோய்க்கும் தொடர்பு உள்ளதா?

பித்தப்பையில் கல் இருப்பவர்களுக்கு பித்தப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்கிறார் புற்றுநோய் மருத்துவர் ராஜ்குமார்.

“ஆனால், இந்தியாவில் பித்தப்பை கல் உருவாகும் நபர்களின் எண்ணிக்கை, பித்தப்பை புற்றுநோய் ஏற்படுபவர்களின் எண்ணிக்கையை விட மிக அதிகம். எனவே பித்தப்பை கல் இருப்பவர்கள் அனைவருக்கும் பித்தப்பை புற்றுநோய் ஏற்படும் என்று கூற முடியாது. எனினும், கல் இருப்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும், ஆண்களை விட பெண்களுக்கே பித்தப்பை புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது.” என்றார்.

 
பித்தப்பை புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெண்களுக்கே பித்தப்பை புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பது ஏன்?

“ஏனெனில் பெண்களுக்கு தான் பித்தப்பை கற்கள் அதிகமாக ஏற்படுகின்றன. எனவே பித்தப்பை புற்றுநோய் ஏற்படுவதும் ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக உள்ளது. பெண்களுக்கு ஏன் பித்தப்பை கற்கள் அதிகம் ஏற்படுகின்றன என்று உறுதியாக கூற முடியாது. எனினும் மாதவிடாய் முடிந்த காலத்தில் எடை கூடுதல், உணவுப்பழக்கம், உடல் பருமன் ஆகியவை காரணங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது” என்று விளக்குகிறார் மருத்துவர் சுரேஷ்குமார்.

பித்தப்பை புற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
பித்தப்பை புற்றுநோயை எப்படி கண்டறியலாம்?

“அல்ட்ரா சவுண்ட், எம் ஆர் ஐ மூலமே இதை கண்டறிய முடியும். அல்ட்ரா சவுண்ட் மூலம் பித்தப்பையில் ஏதோ மாற்றம் இருக்கிறது என தெரியும். எம் ஆர் ஐ செய்தால் என்ன பாதிப்பு என்பது தெரியும். அதை விட பெட் ஸ்கேன் செய்து மிக துல்லியமாக பாதிப்பின் தன்மை மற்றும் வீரியம் தெரியும்” என்கிறார் மருத்துவர் ராஜ்குமார்.

பித்தப்பை புற்றுநோய்க்கான சிகிச்சை என்ன?

பித்தப்பை புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடைய ஒரே தீர்வு பித்தப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது தான். ஆனால் அது எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் சாத்தியம் இல்லை என்கிறார் மருத்துவர் சுரேஷ் குமார்.

“ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோயிலிருந்து காப்பாற்ற முடியும். புற்றுநோய்க்கான சிகிச்சை என்பது புற்றுநோய் கண்டறியப்பட்ட இடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் சிலவற்றையும் முழுவதுமாக நீக்கிட வேண்டும். பித்தப்பையில் ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறிப்பட்டால், பித்தப்பை முழுவதுமாகவும் அதை சுற்றியுள்ள 2 செ.மீ அளவில் இருக்கும் திசுக்கள் எல்லாவற்றையும் நீக்கிட வேண்டும். எனவே பித்தப்பையை அகற்றும் போது அருகில் உள்ள கல்லீரலின் ஒரு பகுதியும் அகற்றப்படும்” என்கிறார்.

பித்தப்பை கல் இருப்பவர்கள் சிலருக்கு வலி இருக்கும், சிலருக்கு இருக்காது. அப்படி வலி இருந்தால், பித்தப்பையை முழுவதுமாக நீக்குவது புற்றுநோய் ஆபத்திலிருந்து தப்பிக்க வழி வகுக்கும் என்றும் கூறுகிறார்.

பித்தப்பை இல்லாமல் வாழ முடியுமா?

பித்தப்பை இல்லாமல் வாழ முடியும், ஆனால் அது செரிமான சிக்கல்களை ஏற்படுத்தும்.

“பித்தப்பை நீக்கம் செய்யப்பட்டால், கல்லீரல் உற்பத்தி செய்யும் பித்தம், பித்தப்பையில் சேமிக்கப்படாமல் நேரடியாக சிறுகுடலில் வெளியிடப்படுகிறது. இதன் விளைவாக, கொழுப்பை செரிமானம் செய்வதில் சில பிரச்னைகள் இருக்கலாம். எனினும் சில எளிய உணவு கட்டுப்பாடுகள் மூலம் சமாளிக்கக் கூடியது ஆகும். பித்தப்பையை நீக்கும் போது, கல்லீரலின் ஒரு பகுதியும் வெட்டி எடுக்கப்படும். அதன் காரணமாகவும் தினசரி வாழ்க்கையை மேற்கொள்ள எந்த தடையும் கிடையாது.” என்கிறார் மருத்துவர் சுரேஷ்குமார்.

https://www.bbc.com/tamil/articles/c0d71yd31k2o

36 மணி நேரம் விரதம் மேற்கொள்ளும் பிரித்தானிய பிரதமர் ரிஷி

1 month 4 weeks ago

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வாரத்துக்கு 36 மணி நேரம் கடுமையான விரதம் ஒன்றைக் கடைப்பிடிப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர் 

மேலும், திங்கட்கிழமை முழுவதும் எதுவும் சாப்பிடாமலும் வாரந்தோறும், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 5.00 மணி வரை அவர் விரதம் இருப்பதாகவும் நண்பர்கள் கூறியுள்ளனர்.

 

 

உடல் கட்டுக்கோப்பு

இந்நிலையில் ரிஷி சுனக் விரத காலத்தில் தண்ணீர் அல்லது பால் சேர்க்காத காபி மட்டுமே அருந்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ரிஷி ஒரு இந்து என்கிற முறையில் விரதம் இருக்கும் அதே நேரத்தில், அவரது விரதம் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு உதவுவதால் அவ்வப்போது அவர் விரதம் இருப்பதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

36 மணி நேரம் விரதம் மேற்கொள்ளும் பிரித்தானிய பிரதமர் ரிஷி | British Prime Minister Rishi Fasted For 36 Hours

2022 இல்,ஒரு நேர்காணலில்"நான் இடைப்பட்ட உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறேன், அதனால் பெரும்பாலான நாட்களில் என்னிடம் காலை உணவு எதுவும் இல்லை.” என ரிஷி சுனக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/british-prime-minister-rishi-fasted-for-36-hours-1706555343

சிப்ஸ், குளிர்பானம் போன்றவை போதும் என்ற உணர்வையே தராதது ஏன்? உடலுக்கு ஏன் தீங்கானவை?

1 month 4 weeks ago
மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளால் என்ன தீமை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுஷிலா சிங், ஆதர்ஷ் ரத்தோர்
  • பதவி, பிபிசி செய்தியாளர்கள்
  • 28 ஜனவரி 2024

நீங்கள் ரயில் பயணம் அல்லது சாலை வழியாக நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்கள் என்றால், பயணத்தின் நடுவில் கண்டிப்பாக ஏதாவது சாப்பிட தோன்றும். சில நேரம் பசிக்கிறது என்பதற்காக சாப்பிடலாம். சில நேரம் பொழுது போக வேண்டும் என்பதற்காகவும் சாப்பிடலாம். அப்போது, நாம் காய்கறி, சாதம் அல்லது சப்பாத்தி போன்றவற்றை சாப்பிட விரும்பமாட்டோம். சிப்ஸ், பிஸ்கட் மற்றும் குளிர் பானங்கள் போன்ற உணவுப் பொருட்களையே விரும்புவோம்.

பாரம்பரிய உணவு மற்றும் பானங்களுக்கு பதிலாக உண்ணப்படும் இந்த சுவையான உணவுகள் 'மிக பதப்படுத்தப்பட்ட உணவு' என்று அழைக்கப்படுகின்றன. அவற்றை அதிகபடியாக உட்கொண்டால், அவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இது மட்டுமல்லாமல், அவை சாப்பிட தூண்டும் வகையில், தயாரிக்கப்படுகின்றன. எனவே நாம் அவற்றுக்கு அடிமையாகி விடுகிறோம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சி கவுன்சில் (ICRIER) ஆகியவற்றின் சமீபத்திய அறிக்கை , இந்தியாவில் மிக பதப்படுத்தப்பட்ட உணவுக்கான சந்தை கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துள்ளது என்று கூறுகிறது.

மிக பதப்படுத்தப்பட்ட உணவு என்றால் என்ன?

மருத்துவர் குப்தா ஒரு குழந்தை மருத்துவர் மற்றும் பொது நலனுக்கான ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு மற்றும் முன்னெடுப்புகளை ஒருங்கிணைக்கும் NAPI என்ற சிந்தனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.

மிக பதப்படுத்தப்பட்ட உணவின் அர்த்தம், “எளிமையான வார்த்தைகளில், மிக பதப்படுத்தப்பட்ட உணவு என்பது உங்கள் சமையலறையில் நீங்கள் வழக்கமாக தயாரிக்க முடியாத உணவுப் பொருள். உதாரணமாக பாக்கெட்டில் வரும் சிப்ஸ், சாக்லேட், பிஸ்கட், ரொட்டி, பன் போன்றவை.” என்று விளக்குகிறார்.

"ஒவ்வொரு சமூகமும் அதன் சுவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப உணவைத் தயாரிக்கின்றன. இதை உணவு பதப்படுத்துதல் என்றும் கூறலாம். பாலில் இருந்து தயிர் தயாரித்தால், அது பதப்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு பெரிய தொழிற்சாலையில் பாலில் இருந்து தயிர் தயாரிக்கப்பட்டு, நிறம், சுவை, சர்க்கரை அல்லது சோள சிரப் சேர்த்து சுவையாக இருந்தால், அது மிக பதப்படுத்தப்பட்ட உணவாக இருக்கும்.

மிக பதப்படுத்தப்பட்ட உணவில் சேர்க்கப்படும் இந்த பொருட்கள் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்காது. நீங்கள் அவற்றை தொடர்ந்து சாப்பிடலாம், தொடர்ந்து விற்பனை செய்யலாம் மற்றும் அதிக லாபம் ஈட்டலாம். இத்தகைய சூழ்நிலையில், பெரிய தொழிற்சாலைகள் மட்டுமே அவற்றை தயார் செய்ய முடியும்.

மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளால் என்ன தீமை

பட மூலாதாரம்,மருத்துவர் அருண் குப்தா

 
இயற்கை பதப்படுத்திகள் தீங்கு விளைவிக்காது

மிக பதப்படுத்தப்பட்ட உணவு ‘காஸ்மெடிக்’ உணவு என்றும் அழைக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் தொழில்துறை நுட்பங்கள் மற்றும் செயல்முறைகளுடன் தயாரிக்கப்படுகின்ற

மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கான சில எடுத்துக்காட்டுகள்-

  • கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர் பானங்கள்
  • இனிப்பு, கொழுப்பு அல்லது உப்பு தின்பண்டங்கள், மிட்டாய்
  • மொத்தமாக தயாரிக்கப்பட்ட ரொட்டிகள், பிஸ்கட், பேஸ்ட்ரிகள், கேக்குகள்
  • இறைச்சி, சீஸ், பாஸ்தா, பீட்சா, பர்கர், ஹாட் டாக்
  • இன்ஸ்டன்ட் சூப், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், பேபி ஃபார்முலா

நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த உணவு பொருட்கள் அனைத்தும் தொழில்துறை செயல்முறையின் கீழ் சர்க்கரை, உப்பு, கொழுப்புகள் திரவ ரசாயனங்கள், கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அவை பொதுவாக நம் சமையலறையில் பயன்படுத்துவதில்லை.

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் முன்னாள் மூத்த விஞ்ஞானியும், ஹைதராபாத்தில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் விஞ்ஞானியுமான மருத்துவர் வி சுதர்ஷன் ராவ் கூறுகையில், நாகரிகம் தொடங்கிய போது பதப்படுத்தும் செயல்முறை தொடங்கியது என்கிறார்.

மேலும், “நீண்ட கால பயன்பாட்டிற்காக பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்றவற்றால் உணவை கெட்டுப் போகாமல் பாதுகாப்பதே இதன் முக்கிய செயல்பாடாகும். உணவில் இருந்து ஈரப்பதத்தை அகற்றினால், அதை பாதுகாக்க முடியும் என்பதை நம் முன்னோர்கள் கற்றுக்கொண்டனர். எனவே வெயிலில் உலர்ந்த உணவுகளை நீண்ட நேரம் பயன்படுத்தலாம் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.” என்று அவர் விளக்கினார்.

மருத்துவர் வி சுதர்ஷன் ராவ், “உப்பு, சர்க்கரை ஆகியவை பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டன, அவற்றை நீங்கள் பதப்படுத்திகள் என்று அழைக்கலாம். ஆனால் தற்போது புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளதால், இந்த செயல்முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன” என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள மாநகராட்சி சுகாதாரத் துறை பேராசிரியர் மருத்துவர் ஹர்ஷ் வர்தன், "ஊறுகாயை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இது அதிக உப்பு, சர்க்கரை, வினிகர் மற்றும் சிட்ரிக் அமிலத்தை கொண்டது. அவை இயற்கை பாதுகாப்புகளாக செயல்படுகின்றன. செயற்கை பாதுகாப்புகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றால், அவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) தரத்தின்படி பயன்படுத்தப்பட வேண்டும்” என்று கூறுகிறார்.

மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளால் என்ன தீமை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

பல வகையான நுண்ணுயிர் எதிர்ப்பிகள், ஆக்ஸிஜனேற்றிகள், அமிலங்கள் உள்ளிட்டவற்றில் உள்ள பதப்படுத்தும் தன்மையை ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பயன்படுத்த முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உணவுகளில் பாக்டீரியாவைத் தடுக்க ஆண்டிமைக்ரோபியல்கள் பயன்படுத்தப்படுகின்றன. உணவுப் பொருட்களில் மட்டுமல்ல, கிரீம்கள், ஷாம்புகள், சன்ஸ்கிரீன்கள் போன்ற அழகுசாதனப் பொருட்களிலும் அவை நீண்ட காலம் கெடாமல் இருப்பதற்கான செயல்முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் அவை தீங்கு விளைவிக்குமா? இந்த கேள்விக்கு பதிலளிக்கும் மருத்துவர் ஜெயேஷ் வகானி, "எந்தவொரு உணவுப் பொருளிலும் ப்ரிசர்வேடிஸ் எனும் பதப்படுத்திகள், பாதுகாப்பு தரங்களை மனதில் வைத்து பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அவை குறைந்த அளவு மட்டுமே தேவைப்படுகிறது, ஏனெனில் அதிகப்படியான பயன்பாட்டால் எந்த நன்மையும் இல்லை."

மருத்துவர் வி சுதர்ஷன் ராவ் கூறுகையில், “இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்.எஸ்.எஸ்.ஐ) உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் பதப்படுத்திகள் சோதித்து, அவற்றை 60-70 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட பிறகும், அவை உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுத்தாது என்று கண்டறியப்பட்டுள்ளது.” என்கிறார்.

 

நுகர்வோர் விழிப்புணர்வு அமைப்பான ‘நுகர்வோர் குரல்’ன் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிம் சன்யால் கூறுகையில், “உணவு மற்றும் பானங்கள் நீண்ட காலமாக கெட்டுப்போகாமல் தடுக்க வண்ணங்களைச் சேர்ப்பதன் மூலம் சுவையை அதிகரிக்கவும், உணவை கவர்ச்சிகரமானதாக மாற்றவும் பதப்படுத்திகள் பயன்படுத்தப்படுகின்றன” என்கிறார்.

இந்த பதப்படுத்திகள் பொதுவாக குறைந்த அளவிலேயே சேர்க்கப்படுகின்றன. ஆனால் மிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் கெட்டுப்போகாமல் தடுக்க பின்பற்றப்படும் முறைகள் அவற்றை மிகவும் தீங்கு விளைவிக்கும் உணவுகளாக மாற்றுகின்றன.

உணவுப் பொருட்களில் பதப்படுத்திகளின் பயன்பாட்டை தனிமையில் பார்க்க முடியாது. ஆனால் இது மிக பதப்படுத்தப்பட்ட உணவுடன் தொடர்புடையதாக பார்க்க வேண்டும் என்று மருத்துவர் ஆஷிம் சன்யால் விளக்குகிறார்.

இந்தியாவின் பதப்படுத்தப்பட்ட உணவுத் துறையின் மதிப்பு 500 பில்லியன் டாலர். காய்கறிகள், பருப்பு வகைகள் போன்றவற்றை தயாரிப்பதும் பதப்படுத்தப்பட்ட உணவு என்று அழைக்கப்படுகிறது, ஆனால் மிக பதப்படுத்தப்பட்ட உணவு என்பது தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் ஆய்வகத்தில் புதிய வடிவத்தில் தயாரிக்கப்படுகிறது என்று ஆஷிம் சன்யால் விளக்குகிறார். இதில் சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்புகள் போன்றவற்றுடன் கூடுதலாக நிறைய பதப்படுத்திகள் உள்ளன.

மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளால் என்ன தீமை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

"மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பதப்படுத்திகள் மற்றும் ரசாயனங்கள் நிறைந்துள்ளன என்றும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. அவற்றில் பதப்படுத்திகள் சேர்க்கப்படுகின்றன, இதனால் அவை நீண்ட காலம் பயன்படுத்தப்படலாம். அவற்றைப் பழக்கப்படுத்த சில சேர்க்கைகளும் சேர்க்கப்படுகின்றன.

உதாரணமாக, சிப்ஸ், குளிர் பானங்கள் அல்லது பிற உணவுப் பொருட்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு பழகிவிட்டன, மேலும் இந்த பழக்கத்தை வளர்ப்பதற்காக இது போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகின்றன” என்று ஆஷிம் சன்யால் கூறுகிறார்.

மேலும், "மிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் பல நோய்களுக்கு வேராக மாறியுள்ளன என்பதும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நாங்கள் விசாரித்தபோது, மிக பதப்படுத்தப்பட்ட உணவில் நிறைய பதப்படுத்திகள் மற்றும் பிற ரசாயனங்கள் இருப்பதைக் கண்டறிந்தோம்” என்கிறார்.

அதிக பிராசசிங்கில் ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படுகின்றன. இந்த உணவில் தரம் இல்லை. புகையிலை அல்லது சிகரெட்டுகளுக்கு அடிமையாவதைப் போலவே, அத்தகைய உணவுக்கு அடிமையாவதும் ஏற்படுகிறது.

மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் சிக்கல் என்னவென்றால், அவற்றை எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது நமக்குத் தெரியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 
மிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் போதும் என்று ஏன் தோன்றுவதில்லை?

மருத்துவர் அருண் குப்தா கூறுகையில், "உணவு உண்ணும் போது, நமது மூளை இப்போது வயிறு நிரம்பியுள்ளது என்ற சமிக்ஞையை நமக்கு வழங்குகிறது. ஆனால் மிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் நீங்கள் அவற்றை விரும்பி சாப்பிடும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. நீங்கள் அதை சாப்பிடும்போது, வயிறு நிரம்பிவிட்டது என்பதற்கான எந்த சமிக்ஞையும் மூளையில் இருந்து வராது, நீங்கள் அதை சாப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள்” என்கிறார்.

செயற்கை பதப்படுத்திகளை குறிப்பிட்ட அளவை விட அதிகமாகவும், நீண்ட காலமாகவும் பயன்படுத்தினால், உடலில் புற்றுநோயும் உருவாகலாம் என்று மருத்துவர் ஜெயேஷ் வகானி கூறுகிறார்.

தீங்கு விளைவிக்கும் உணவுகளின் ஆயுளை அதிகரிக்க பல முறை பதப்படுத்திகள் சேர்க்கப்படுகின்றன என்றும் மருத்துவர் அருண் குப்தா குறிப்பிடுகிறார்.

"அவற்றில் பதப்படுத்திகள் மற்றும் வண்ணமேற்றிகள் போன்ற ரசாயனங்கள் உள்ளன, அவை உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் அல்லது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். இது உடனடியாக தெரியாவிட்டாலும், நீண்ட காலத்தில் இது ஆபத்தானது” என்று எச்சரிக்கிறார்.

உலகளாவிய பட்டினி குறியீட்டின் 2023 அறிக்கையின்படி, 125 நாடுகளில் பசியைப் பொறுத்தவரை இந்தியா 111 வது இடத்தில் உள்ளது மற்றும் பசியுடன் போராடும் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடு.

நாடு ஊட்டச்சத்து குறைபாட்டின் சவாலை எதிர்கொண்டுள்ள அதே வேளையில், வளர்ந்து வரும் உடல் பருமன் பிரச்சினையையும் எதிர்கொள்கிறது

மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளால் என்ன தீமை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளும் உடல் பருமனை அதிகரிப்பதில் பங்கு வகிக்கின்றன.

மருத்துவர் அருண் குப்தா , "சில நேரங்களில் அவற்றை சாப்பிடலாம், ஆனால் நம் உணவில் பத்து சதவீதத்திற்கும் அதிகமாக உட்கொள்ளத் தொடங்கும் போது,

முதலில், எடை அதிகரிக்க தொடங்கும், பின்பு பல நோய்களுக்கு இதுவே காரணமாகும். இது நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயம் மற்றும் சிறுநீரக நோய்கள் மற்றும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

அதிக பதப்படுத்தப்பட்ட உணவின் பயன்பாடு மனச்சோர்வு மற்றும் பதட்டத்தையும் ஏற்படுத்தும் என்பதை சமீபத்திய ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. இது ஏன் என்ற , ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டிருப்பதாக மருத்துவர் அருண் குப்தா கூறுகிறார்.

பொதுவாக, எல்லா வயதினரும் வகுப்பினரும் மிக பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுவதைக் காணலாம். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை , குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளனர். ஏனெனில் குழந்தைகள் பொதுவாக இனிப்பான உணவுகளை விரும்புகிறார்கள். அவர்கள் சிப்ஸ், மிட்டாய், சாக்லேட், பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள் மற்றும் குளிர் பானங்கள் சாப்பிட விரும்புகிறார்கள்.

இது தொடர்பான பெரும்பாலான ஆராய்ச்சிகள் பெரியவர்கள் மீது செய்யப்பட்டிருந்தாலும், 2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சுமார் 50% குழந்தைகள் மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளால் பாதிக்கப்படுவதாகவும், அது அவர்களை உடல் பருமனை நோக்கித் தள்ளுகிறது என்றும் கூறுகிறது.

மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளால் என்ன தீமை

பட மூலாதாரம்,மருத்துவர் ஆஷிம் சன்யால்

 
உணவு லேபிளிங்கின் முக்கியத்துவம்

மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுபோன்ற உணவு அல்லது உணவுகளை வாரத்திற்கு நான்கு முறை சாப்பிட்டால், படிப்படியாக அதன் உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும் என்று ஆஷிம் சன்யால் விளக்குகிறார். அதேசமயம், உணவு பொருட்களின் மீது உள்ள உணவு லேபிள்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிறார்.

இது தவிர, இதுபோன்ற உணவுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், மூலப்பொருட்கள் குறித்த தகவல்களையும் வழங்க வேண்டும்.

“உணவு பொருட்களின் பாக்கெட்டில் முன் பக்கமாக இருக்கும் ஊட்டச்சத்து லேபிளிங்கை நாங்கள் வலியுறுத்துகிறோம். இதனால் சர்க்கரை அதிகம், அதிக உப்பு அல்லது கொழுப்பு அதிகமாக உள்ளதா என்பதை லேபிள் காட்டுகிறது. இந்த முக்கிய விஷயங்களை கவனித்தால், 80% பிரச்னை நிறுத்தப்படும். இப்போது இந்த தகவல்கள் அனைத்தும் லேபிளின் பின்புறத்தில் எழுதப்பட்டுள்ளன மற்றும் வாடிக்கையாளர்கள் கவனிக்காத அளவுக்கு சிறியதாக உள்ளது.

லத்தீன் அமெரிக்க நாடுகள் முன் பக்கம் லேபிள் ஒட்ட தொடங்கியுள்ளன, இது மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றியுள்ளது” என்பதை ஆஷிம் சன்யால் உதாரணமாகக் கூறுகிறார்.

அதே நேரத்தில், லேபிளிங்கில் தகவல் கொடுத்தால், அது விற்பனையை பாதிக்கும் என்ற விவாதமும் உள்ளது. இதற்குப் பதிலளித்த ஆஷிம் சன்யால், சிகரெட் மற்றும் புகையிலை மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அத்தகைய பொருட்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதா?

மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளால் என்ன தீமை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
அரசின் பங்கு என்ன?

இந்த விஷயத்தில் மிகப்பெரிய பங்கு அரசுக்கே உள்ளது என சுட்டிக்காட்டுகிறார் மருத்துவர் அருண் குப்தா கூறுகிறார்.

அவர் கூறுகையில், "அரசாங்கத்தின் பொறுப்பு மிகப்பெரியது. மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இது தவிர, இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது ஊடகங்கள், சமூகம் மற்றும் நிறுவனங்களின் கடமையாகும். பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பதை மக்கள் தங்கள் சொந்த விருப்பப்படி தேர்வு செய்கிறார்கள்.

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான குழந்தை உணவு விளம்பரங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதைப் போலவே, உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள பொருட்கள் குறித்து தவறான விளம்பரங்களும் தடை செய்யப்பட வேண்டும்” என்று மருத்துவர் அருண் குப்தா வேண்டுகோள் விடுக்கிறார்.

தீங்கு விளைவிக்கும் என்பதை மக்கள் அறிய வேண்டும். ஒருவேளை மக்கள் இன்னும் சாப்பிடலாம், ஆனால் இந்த விஷயங்களை குறைவாக சாப்பிட வேண்டும் என்பதை அவர்கள் அறிவார்கள்.

மருத்துவர் அருண் குப்தா, "இத்தகைய கொள்கைகள் தொழில்துறைக்கு ஒரு செய்தியை அனுப்புகின்றன, அவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவை தயாரித்து லாபம் ஈட்டினாலும், அதில் தவறில்லை. ஆனால் லாபம் சம்பாதிப்பதும், மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடுவதும் சரியல்ல.” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

https://www.bbc.com/tamil/articles/c72g41we0d5o

சுரைக்காயை சாதாரணமா நினைக்கிறோம்... இங்க பாருங்க அது செய்ற அற்புதத்தை

2 months ago

சுரைக்காயை சாதாரணமா நினைக்கிறோம்... இங்க பாருங்க அது செய்ற அற்புதத்தை

சுரைக்காய் போன்ற தண்ணீர் சத்து காய்கள் இந்த கோடைக்கு ஏற்றதாக இருப்பதோடு நமக்கு நிறைய நன்மைகளையும் ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. அந்த வகையில் சுரைக்காய் நமக்கு எந்த மாதிரியான நன்மைகளை வழங்கும் என்பதை கீழ்க்கண்டவாறு நாம் காண்போம்
amazing health benefits of super veggie bottle gourd
 
சுரைக்காயை சாதாரணமா நினைக்கிறோம்... இங்க பாருங்க அது செய்ற அற்புதத்தை...
 

நம் முன்னோர்கள் அதிகமாக பயன்படுத்திய காய்களுள் ஒன்று இந்த சுரைக்காய். பார்க்க பச்சையாக இருப்பதோடு சாப்பிட ருசியாகவும் இருப்பதால் மக்கள் தங்கள் சமையல்களில் இதை பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் தான் இதன் விளைச்சல் அதிகமாக இருக்கிறது. இதை நீங்கள் சாதாரண தண்ணிச் சத்து காய் என்று நினைத்து விடாதீர்கள். இதலிருக்கும் நன்மைகள் ஏராளம். சிறுநீரகக் கோளாறுகளில் இருந்து உடல் சூட்டு வரை தணிக்கும் இந்த காயை பற்றி இன்னும் ஏராளமாக அறிந்து கொள்வோம்.

 

ஊட்டச்சத்து அளவுகள்
ஊட்டச்சத்து அளவுகள்
 

சுரைக்காயில் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்கள் காணப்படுகின்றன. சுரைக்காயில் சுண்ணாம்பு சத்து, விட்டமின் சி, விட்டமின் கே, கால்சியம், நார்ச்சத்து, 92 %நீர்ச்சத்து, 0.2 %புரதம், 0.1% கொழுப்பு, 0.5% தாதுக்கள், 2.5 %கார்போஹைட்ரேட்டுகள் என அனைத்து வகையான சத்துக்கள் காணப்படுகின்றன.

நினைவாற்றல் அதிகரிப்பு
நினைவாற்றல் அதிகரிப்பு
 

இன்டர்நேஷனல் ரிசர்ச் ஜர்னல் ஆஃப் பார்மசியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி சுரைக்காயில் கோலனின் என்ற பொருள் உள்ளது. இது நமது நினைவாற்றலை மேம்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே நீங்கள் படிக்கும் மாணவராக இருந்தாலோ, வயதானவராக இருந்தாலோ அதிகளவு சுரைக்காயை உணவில் சேர்ப்பது உங்க ஞாபக சக்தியை அதிகரிக்கும். இதன் மூலம் வயதான காலத்தில் ஏற்படும் மறதி நோயான அல்சைமர் போன்ற நோய் வராமல் தடுக்க முடியும்.

இதய ஆரோக்கியம்
இதய ஆரோக்கியம்
 

சுரைக்காயில் உள்ள உயர்ந்த அளவு பொட்டாசியம் உங்க இதய ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும். இது உங்க உயர் இரத்த அழுத்தத்தை சீராக்குதல், உயர் கொழுப்பை குறைத்தல் போன்ற வேலைகளை செய்கிறது. இதன் மூலம் இதயத்திற்கு நட்பான காயாக இது அமைகிறது.

உடல் சூட்டை தணிக்கும் சுரைக்காய்
உடல் சூட்டை தணிக்கும் சுரைக்காய்
 

இந்த கோடை காலத்தில் உடல் சூடு அதிகமாக இருக்கும். மேலும் சரும சம்பந்தமான நோய்கள் வர அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதை தணிக்க சுரைக்காயை கூட்டு போட்டு சேர்த்து சாப்பிடுங்கள். உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவி செய்யும்.

உடல் எடையை குறைக்க உதவும்
உடல் எடையை குறைக்க உதவும்
 

சுரைக்காயில் எடை இழப்பை ஊக்குவிக்கும் பண்புகள் காணப்படுகின்றன. இதில் இருக்கும் அதிக அளவு நார்ச்சத்து உங்க செரிமானம் நடைபெற உதவியாக இருக்கும். கொஞ்சமாக சுரைக்காய் கூட்டு சாப்பிட்டால் கூட வயிறு நிரம்பிய தன்மையை ஏற்படுத்தும். தேவையற்ற பசி எடுக்காது, இதன் நீர்ச்சத்து உங்க உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவும், வளர்சிதை மாற்ற வேகத்தை அதிகரிக்கவும், முழு சக்தியுடன் செயல்படவும் உதவியாக இருக்கும்.

மூலநோயை போக்கும் சுரைக்காய்
மூலநோயை போக்கும் சுரைக்காய்
 

சுரைக்காயில் அதிகளவு நார்ச்சத்து காணப்படுகிறது. எனவே நமக்கு ஏற்படும் மலச்சிக்கல், குடலில் ஏற்படும் புண்கள், மூலநோய், வயிற்று பிரச்சனைகளை போக்க சுரைக்காய் பயன்படுகிறது.

மூல நோய்களில் பல வகையுண்டு. உள்மூலம், வெளி மூலம், ரத்த மூலம் என ஏராளமான வகைகள் உண்டு. அவற்றையெல்லாம் மிக எளிதாகக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது இந்த சுரைக்காய்.

நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க உதவும்
நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க உதவும்
 

பிப்ரவரி 2014 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி சுரைக்காயை உட்கொள்வது தமனிநோய்கள், கல்லீரல் பிரச்சனைகள், நீரிழிவு நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

 

https://tamil.samayam.com/lifestyle/health/amazing-health-benefits-of-super-veggie-bottle-gourd/articleshow/76065991.cms?story=7

 

50 வருடங்களுக்கு முன் பெற்ற மாற்று சிறுநீரகம் – 108 வயதிலும் ஆரோக்கியம்

2 months ago

வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள நகரம் ஹவுட்டன் லெ ஸ்ப்ரிங். ஹவுட்டனில் வசித்து வருபவர் சூ வெஸ்ட்ஹெட். அவருக்கு தற்போது 108 வயது ஆகிறது.

தனது 12-ஆவது வயதில் உடல்நலம் பிரச்சினையால் அவதிப்பட்ட வெஸ்ட்ஹெட்டிற்கு சிறுநீரக நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, 25 ஆவது வயதில் டயாலிசிஸ் செய்து கொள்ள தொடங்கினார்.

நீண்ட சிகிச்சைக்கு பிறகும் அவருக்கு நோய் தீரவில்லை.

1970களின் தொடக்கத்தில் வெஸ்ட்ஹெட்டிற்கு சிறுநீரகத்துறை சிகிச்சை நிபுணர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர்.

2-25.jpg

1973 இல் வெஸ்ட்ஹெட்டின் தாயார் ஆன் மெட்கால்ஃப் சிறுநீரகம் தர முன்வந்ததையடுத்து முறையான பரிசோதனைக்கு பின்னர் அறுவை சிகிச்சை நடந்து தாயாரின் சிறுநீரகம், வெஸ்ட்ஹெட்டிற்கு பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை ரோயல் விக்டோரியா மருத்துவமனையில் நடந்தது.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், அடுத்த 5 வருடங்களுக்கு கூட தான் உயிருடன் இருக்க முடியும் என வெஸ்ட்ஹெட் அப்போது நம்பவில்லை.

ஆனால், 50 வருடங்கள் கடந்தும், எந்தவிதமான சிறுநீரக சிக்கலும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார், வெஸ்ட்ஹெட்.

இந்த நிகழ்வு, தற்போது வெஸ்ட்ஹெட்டிற்கு உடல்நல மேற்பார்வையும் ஆலோசனையும் வழங்கி வரும் சண்டர்லேண்ட் ரோயல் மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது.

மிகவும் மகிழ்ச்சியுடன் அங்கு வந்திருந்த வெஸ்ட்ஹெட்டுடன் உரையாடிய அங்குள்ள மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவமனை பணியாளர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

https://thinakkural.lk/article/289077

ஆண்களைவிட பெண்கள் குறைவாக சர்க்கரை சாப்பிட வேண்டும் - ஏன் தெரியுமா?

2 months 1 week ago
சர்க்கரை நோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

உடல் பருமன், நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகளைக் குறைக்க சர்க்கரை சாப்பிடுவதில் கவனமாக இருக்கவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுசீலா சிங் மற்றும் பாயல் புயன்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 12 நிமிடங்களுக்கு முன்னர்

டெல்லியில் வசிக்கும் 15 வயது ரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கழுத்து, அக்குள் மற்றும் விரல் மூட்டுகளில் தோலில் கருமை நிற திட்டுக்கள் தோன்றும் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.

தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறச் சென்ற போது, அவர் ரியாவை உட்சுரப்பியல் நிபுணரிடம் (endocrinologist) சிகிச்சை பெறுமாறு பரிந்துரைத்தார்.

ரியாவை பரிசோதித்தபோது, காலை உணவுக்கு முன் அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு 115 ஆகவும், காலை உணவு சாப்பிட்ட பிறகு 180 ஆகவும் இருந்தது.

மருத்துவர்களின் கூற்றுப்படி, காலை உணவுக்கு முன் இரத்த சர்க்கரை 100 வரை இருக்கலாம் என்பதுடன் காலை உணவுக்குப் பிறகு 140 வரை இருப்பது சாதாரண அளவாகக் கருதப்படுகிறது.

ரியாவுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் சுரேந்திர குமார் கூறுகையில், "ரியா ஜங்க் ஃபுட் சாப்பிட்டு வந்தார். மேலும் அவரது குடும்பத்தில் சர்க்கரை நோய் இருந்த வரலாறும் இருந்தது. அவள் உடற்பயிற்சி கூட செய்யவில்லை. பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால், குழந்தைக்கு சர்க்கரை நோய் வர 50% வாய்ப்புள்ளது,” எனத்தெரிவித்தார்.

ரியாவுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கலிபோர்னியா பல்கலைகழகத்தின் குழந்தை மருத்துவ உட்சுரப்பியல் நிபுணரும், 'சுகர், தி பிட்டர் ட்ரூத்' (Sugar, the Bitter Truth) என்ற நூலின் ஆசிரியருமான, பிரபல அமெரிக்க மருத்துவரான ராபர்ட் லுஸ்டிக் கூறுகையில், பெரியவர்களிடம் மட்டுமே காணப்பட்ட இந்நோய் தற்போது குழந்தைகளிடமும் காணப்படுகிறது என்றார்.

 
சர்க்கரை மகிழ்ச்சியைப் பறிக்கும்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பெரியவர்களிடம் மட்டுமே காணப்பட்ட நீரிழிவு பிரச்னை சிறு வயதில் இருப்பவர்களையும் பாதிக்கிறது.

குழந்தைகளைப் பாதிக்கும் பெரியவர்களின் நோய்கள்

அவர் கூறும்போது, “இப்போது பெரியவர்களுக்கு ஏற்படும் அதே நோய்களால் குழந்தைகளும் பாதிக்கப்படுவதைக் காணமுடிகிறது. அவர்கள் 2 ஆம் வகை நீரிழிவு, கொழுப்புமிகு ஈரல் போன்ற பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர்.

அவரைப் பொறுத்தவரை, 1980-களில் இந்த நோய்கள் பெரியவர்களிடம் மட்டுமே காணப்பட்டன. கொழுப்புமிகு ஈரல் நோய் பொதுவாக மது அருந்துபவர்களுக்கு ஏற்படுகிறது.

ஆனால் இப்போது அமெரிக்காவில் 25% குழந்தைகளுக்கு கல்லீரலில் கொழுப்பு பிரச்சனை உள்ளது. குழந்தைகள் மது அருந்துவதில்லை என்ற உண்மையுடன் பொருத்திப் பார்த்தால் இது ஒரு வியப்பூட்டும் தகவலாக உள்ளது.

டாக்டர் ராபர்ட் லுஸ்டிக் இது குறித்துப் பேசியபோது, "முன்பெல்லாம் குழந்தைகளுக்கு இப்போது கிடைக்கும் சர்க்கரை சார்ந்த பொருட்களான மிட்டாய் மற்றும் சாக்லேட் போன்ற பொருட்கள் கிடைக்கவில்லை. இப்போது இதெலாம் எளிதாகக் கிடைக்கின்றன,” என்றார்.

 
சர்க்கரை மகிழ்ச்சியைப் பறிக்கும்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இனிப்புகளை சாப்பிடும் பழக்கம் அனைவரிடமும் ஒரு வழக்கமாக மாறிவிட்டது.

உடலுக்கு கார்போஹைட்ரேட் ஏன் தேவை?

உணவுப் பொருட்களில் மூன்று கூறுகள் உள்ளன - கார்போஹைட்ரேட்டுகள் (மாவுச்சத்து), கொழுப்புகள் மற்றும் புரதங்கள். மனித உடலுக்கு ஆற்றலுக்காக கார்போஹைட்ரேட்டுகள் தேவை.

இந்த கார்போஹைட்ரேட்டுகள் பல வகையான உணவுகளில் இயற்கையாகவே காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் பழங்களில் காணப்படுகின்றன. சர்க்கரை ஒரு கார்போஹைட்ரேட் ஆகும்.

சர்க்கரையைத் தவிர, அரிசி அல்லது மாவு போன்ற பிற எளிய கார்போஹைட்ரேட்டுகளும் நம் உடலுக்குள் நுழையும் போது, நமது குடல் அவற்றை உடைத்து அதிலிருந்து குளுக்கோஸை பிரித்தெடுக்கிறது.

இந்த குளுக்கோஸ் உடலில் எரிபொருளாக செயல்பட்டு இயக்கத்துக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது.

 
சர்க்கரை மகிழ்ச்சியைப் பறிக்கும்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சர்க்கரை சாப்பிடுவது ஒரு வகையில் மகிழ்ச்சியை தருகிறது என்கின்றனர் மருத்துவர்கள்

இன்சுலின் எதிர்ப்பைப் பற்றி விளக்கிய மும்பையைச் சேர்ந்த நீரிழிவு சிகிச்சை மையத்தின் டாக்டர் ராஜீவ் கோவில் மற்றும் டாக்டர் சுரேந்திர குமார் ஆகியோர், இன்சுலின் என்ற ஹார்மோன் நம் உடலில் ஒரு இயக்கியாக செயல்படுகிறது என்று கூறுகிறார்கள். இது சிறுநீரகம் மற்றும் இதயம் உள்ளிட்ட பிற உறுப்புகளின் செல்களுக்கு குளுக்கோஸை எடுத்துச் செல்கிறது.

இது குறித்து மேலும் விளக்கியவர்கள், "இன்சுலின் அளவு அதிகரிக்கும் போது அது வேலை செய்வதை நிறுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையில், குளுக்கோஸ் மற்ற வழிகள் மூலம் நுழைய முயற்சிக்கிறது, இது உயிரணுக்களில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையில், குளுக்கோஸ் கொழுப்பு வடிவில் உடலில் சேரத் தொடங்குகிறது, பின்னர் பிரச்சினைகள் தோன்றத் தொடங்குகின்றன,” என்றார்.

இதனால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து பல வகையான நோய்கள் உருவாகத் தொடங்குவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய்கள், புற்றுநோய் கூட ஏற்படும் அபாயம் உள்ளது.

 
சர்க்கரை மகிழ்ச்சியைப் பறிக்கும்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பழங்கள் மற்றும் காய்கறிகளில் நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றி உள்ளன

சர்க்கரை என்றால் என்ன?

சர் கங்காராம் மருத்துவமனையின் உட்சுரப்பியல் மற்றும் வளர்சிதை மாற்றப் பிரிவின் டாக்டர் சுரேந்திர குமார், சர்க்கரை பல வகைகள் இருப்பதாக விளக்குகிறார்.

சர்க்கரையைப் பற்றி அவர் பேசுகையில், அது கரும்பிலிருந்து பதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இதில் அதிகபட்ச கலோரி மற்றும் இனிப்பு உள்ளது. இது சுக்ரோஸ் என்றும் அழைக்கப்படுகிறது என்றார்.

சர்க்கரையின் மற்ற வகைகள் குளுக்கோஸ், லாக்டோஸ், சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் ஆகும்.

“பழங்களில் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் அதிகமாக உள்ளன,” என்கிறார் டாக்டர் சுரேந்திர குமார். பால் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்களில் லாக்டோஸ் காணப்படுகிறது. இதேபோல், தேன் மற்றும் பழங்களில் குளுக்கோஸ் காணப்படுகிறது. அது தீங்கு விளைவிப்பதில்லை.

அதே நேரத்தில், பதப்படுத்தப்பட்ட சர்க்கரை, அதாவது சுக்ரோஸ் சேர்க்கப்படும் பொருட்கள், அதிக அளவில் எடுத்துக் கொண்டால், அது தீங்கு விளைவிக்கும்.

 
சர்க்கரை மகிழ்ச்சியைப் பறிக்கும்.
எவ்வளவு நார்ச்சத்து இருக்க வேண்டும்?

இயற்கையான சர்க்கரை கொண்ட உணவுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஏனெனில் அவை நமக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. பழங்கள் மற்றும் காய்கறிகள் நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளைக் கொண்டிருக்கும் போது, பால் பொருட்களிலிருந்து புரதம் மற்றும் கால்சியம் ஆகியவற்றைப் பெறுகிறோம்.

டாக்டர் ராஜீவ் கோவில் பேசியபோது, “இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தாலும், மக்கள் 75% முதல் 80% வரை கார்போஹைட்ரேட் சாப்பிடுகிறார்கள். இந்த அளவுக்கு இதைச் சாப்பிடுவது உலகிலேயே அதிகமானது ஆகும். இங்குள்ள மக்களின் சர்க்கரை அளவும் அதிகமாக உள்ளது," என்கிறார்.

உதாரணத்திற்கு, தினை, சோளம் போன்ற தானியங்களைச் சாப்பிட்டால், அவற்றில் உள்ள சத்துக்கள் முறிக்கப்படுவது உடலில் மெதுவாக நிகழ்கிறது. இது சர்க்கரையை சரியாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உடலில் சர்க்கரை திடீரென அதிகரிக்காது. மாறாக, கோதுமையால் செய்யப்பட்ட மாவு அல்லது மைதா சாப்பிடும் போது அவற்றில் உள்ள சத்துக்கள் உடனடியாக உடைந்து சர்க்கரையாக மாறும், எனவே அவற்றை நாம் சாப்பிடக்கூடாது.

 
சர்க்கரை மகிழ்ச்சியைப் பறிக்கும்.

அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வதால் உடனடியாக உடலில் இன்சுலின் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இது பசியை அதிகரிக்கிறது என்பதுடன் அது ஒரு சுழற்சியாக மாறும். இதற்குப் பிறகு பல வகையான பிரச்சனைகள் எழுகின்றன.

டாக்டர் ராஜீவ் கோவில் மேலும் விளக்கிய போது, “மற்ற கார்போஹைட்ரேட்டுகளை விட சர்க்கரையை நேரடியாகச் சாப்பிடுவதால் உடலுக்கு அதிக கலோரிகள் உடனடியாக கிடைக்கும். இது நமக்கு ஆற்றலைத் தருவதோடு மகிழ்ச்சியையும் தருகிறது,” என்றார்.

 
சர்க்கரை மகிழ்ச்சியைப் பறிக்கும்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சிறுதானியங்களைச் சாப்பிடும் போது, அவற்றில் உள்ள கார்போஹைட்ரேட் மெதுவாக உறிஞ்சப்படுவதால் திடீரென ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிப்பதில்லை.

சர்க்கரை மகிழ்ச்சியைத் தரும்

மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் 'இனிமையான ஒன்று' என்று நினைப்பது இயல்பு. பூஜை அல்லது திருவிழா போன்றவற்றின் போது பெறப்படும் பிரசாதம் பெரும்பாலும் இனிப்பாக இருக்கும்.

சர்க்கரை நமது மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதை குளுக்கோஸ் வடிவில் எடுத்துக் கொண்டால், நமக்கு உடனடி ஆற்றல் கிடைப்பதோடு, மகிழ்ச்சியாகவும் உணர்கிறோம்.

இது குறித்து டாக்டர் ராஜீவ் கோவில் கூறுகையில், ''நமது மூளையின் 80% வேலை குளுக்கோஸைச் சார்ந்தது. உடலுக்கு குறைந்த அளவில் குளுக்கோஸ் கிடைக்கும் போது, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்," என்றார்.

அதே சமயம், “சர்க்கரை சாப்பிடுவதும் ஒருவித மகிழ்ச்சியைத் தருகிறது,” என்கிறார் டாக்டர் சுரேந்திர குமார். "நாம் அதைச் சாப்பிட்டு, அது நம் மூளையில் உறிஞ்சப்படும்போது, எண்டோர்பின் ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன. இவை நம்மை மகிழ்ச்சியாக உணரச் செய்கின்றன. ஆனால் நாம் இனிப்புகளை சீரற்ற முறையில் சாப்பிடத் தொடங்குகிறோம் என்று இது பொருட்படுத்தப்படுவதில்லை," என்றார்.

நாம் போதுமான உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி செய்யாதபோது சர்க்கரை அதிகமாக சாப்பிடுவதால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்றும் பின்னர் அது சிக்கல்களை உருவாக்கத் தொடங்குகிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

 
சர்க்கரை மகிழ்ச்சியைப் பறிக்கும்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பெண்கள் ஒரு நாளைக்கு 25 கிராம் அல்லது 100 கலோரிகளுக்கு மேல் சர்க்கரையை உட்கொள்ளக்கூடாது.

ஒருவர் எவ்வளவு இனிப்பு சாப்பிட வேண்டும்?

உலக உடல் பருமன் குறியீட்டின்படி, 2035-ஆம் ஆண்டில், உலகில் 51% அல்லது 400 கோடி பேர் அதிக உடல் எடையைக் கொண்டவர்களாக (அல்லது பருமனாக) இருப்பார்கள்.

அதே நேரத்தில், குழந்தைகளின் உடல் பருமன் விகிதம் இரண்டு மடங்கு அதிகமாக அதிகரிக்கும். உலகளாவிய ஒரு அறிக்கையின்படி, பெண் குழந்தைகளின் உடல் பருமன் விகிதம் ஆண்களை விட இரு மடங்கு அதிகமாக இருக்கும்.

இந்தியாவில், 2035-க்குள் 11% பெரியவர்கள் பருமனாக இருப்பார்கள், இதனால் பொருளாதாரத்திற்கு சுமார் 13,000 கோடி ரூபாய் செலவாகும்.

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் படி, ஒரு ஆண் ஒரு நாளைக்கு 36 கிராம் அல்லது 150 கலோரிகளுக்கு மேல் சர்க்கரையை உட்கொள்ளக்கூடாது.

அதே நேரத்தில், பெண்கள் 25 கிராம் அல்லது 100 கலோரிகளுக்கு மேல் சர்க்கரை எடுத்துக்கொள்ளக்கூடாது.

 
சர்க்கரை மகிழ்ச்சியைப் பறிக்கும்.

பொதுவாக வளர்ந்த நாடுகளில் சர்க்கரை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் டாக்டர் ராஜீவ் கோவில்.

1980-களின் நடுப்பகுதியில் அல்லது 1990-களில், எடை அதிகரிப்பு அல்லது நீரிழிவு பிரச்சினை பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் காணப்பட்டது என்று அவர் கூறுகிறார். ஏனென்றால், அவர்களுக்கு உணவு ஒரு ஆடம்பரமாக அல்லது இன்பமாக இருந்தது. ஆனால் இப்போது கடந்த 15 ஆண்டுகளாக, குழந்தைகளும் இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர், ஏனெனில் அவர்கள் பல உணவுப் பொருட்களை அதிக அளவில் உண்கிறார்கள்.

 
சர்க்கரை மகிழ்ச்சியைப் பறிக்கும்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

எதிர்காலத்தில் உடல் பருமன் மோசமான பிரச்னையாக மாறும் என உலகளாவிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

'சிக்கனமான மரபணு வகை' கருதுகோள்

தேசிய மருத்துவ நூலகத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, பல தசாப்தங்களுக்கு முன்னர் கொழுப்பைச் சேமிக்கக்கூடிய மரபணுக்கள் பொதுமக்களிடம் உருவாயின.

மனிதர்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் இருந்த நேரத்தில் இந்த மரபணுக்கள் மனித உடலில் வளர்ந்ததாக இரு மருத்துவர்களும் கூறுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், சிக்கனமான மரபணுக்கள் கொண்டவர்கள் கொழுப்பு வடிவில் உணவை சேமித்து வைத்தனர். வறட்சி மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டால், உடல் இந்த கொழுப்பை ஆற்றல் தேவைக்கு பயன்படுத்தலாம்.

வருடத்தில் ஆறு மாதங்கள் சாப்பிட்டுவிட்டு, மீதமுள்ள ஆறு மாதங்கள் எதுவும் சாப்பிடாமல் உயிர் வாழும் வட அமெரிக்க எலி இதற்கு சிறந்த உதாரணம் என்று டாக்டர் சுரேந்திர குமார் விளக்குகிறார்.

ஆனால், நமக்கு நன்மை செய்து வந்த இந்த மரபணுவின் செயல்பாடு, தற்போது பாதிப்பை ஏற்படுத்துவதாக இரு மருத்துவர்களும் கூறுகின்றனர். இப்போது மக்களுக்கு உணவு கிடைப்பது மட்டுமல்லாமல், சாப்பிடுவதற்கும் பல விருப்பங்களும், தேர்வுகளும் உள்ளன. இன்னும் இந்த மரபணு முன்பு போலவே கொழுப்பைச் சேமித்து வைக்கிறது. அதேசமயம் மக்கள் உண்ணும் உணவின் அளவோடு ஒப்பிடுகையில் அவர்கள் மிகக் குறைவான அளவுக்கு மட்டுமே உடல் செயல்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். குறைந்த அளவு உடற்பயிற்சியில் மட்டுமே அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

 
சர்க்கரை மகிழ்ச்சியைப் பறிக்கும்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மருத்துவர்களின் கூற்றுப்படி, அதிகப்படியான இனிப்புகளை சாப்பிடுவது உடல் பருமன் உள்பட மற்ற நோய்களை ஏற்படுத்தும்.

அதிக சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

அதிகப்படியான இனிப்புகளை சாப்பிடுவதால் உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதில் உடல் பருமன் பிரச்னை முதலாவதாக இடம்பெற்றுள்ளது. அதன் பிறகு உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு மற்றும் பிற இதய நோய்கள் போன்ற பிற சிக்கல்களும் எழுகின்றன.

ஆனால் அதிக சர்க்கரை சாப்பிடுவது உடல் பருமனுக்கு வழிவகுக்காது என்றும் மருத்துவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். அதே போல் பிற பிரச்சனைகளும் முன்னதாகவே எழலாம்.

உதாரணமாக, பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனையும் இருக்கலாம். அதே நேரத்தில் தோலில் கருமை அல்லது வேறு ஏதாவது நிறமி உருவாகலாம்.

 
சர்க்கரை மகிழ்ச்சியைப் பறிக்கும்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

செயற்கை சர்க்கரையை அதிக அளவு பயன்படுத்தினால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

சர்க்கரைக்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு

மருத்துவர்களின் கூற்றுப்படி, உடலில் அதிக அளவு இன்சுலின் இருப்பது புற்றுநோய்க்கான காரணங்களில் ஒன்றாக உள்ளது. ஆனால் புற்று நோயாளி இனிப்பு சாப்பிடக் கூடாதா?

புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள் சர்க்கரையைக் கைவிட வேண்டும் என்று எந்த வழிகாட்டுதலும் இல்லை என்று டாக்டர் ராஜீவ் கோவில் கூறுகிறார். ஆனால் உடலில் சர்க்கரை அதிகமாக இருந்தால் புற்றுநோய்க்கு சாதகமான சூழல் உருவாகும் என்பது உண்மைதான் என்கிறார்.

அவரைப் பொறுத்தவரை, புற்றுநோய் என்பது உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயுடன் தொடர்புடையது. ஏனெனில் இதுபோன்ற நோயாளிகளுக்கு புற்றுநோய் பாதிப்பு 20% அதிகம்.

புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தாலோ, குளுக்கோஸைத் தாங்க முடியாமல் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க ஆரம்பித்தாலோ, இனிப்பு சாப்பிடக் கூடாது என்கிறார் டாக்டர் சுரேந்திர குமார். ஆனால் அத்தகைய பிரச்சனை இல்லை என்றால் நோயாளி குறைந்த அளவில் இனிப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.

உதாரணமாக, "யாராவது ஐஸ்கிரீம் சாப்பிட விரும்பினால், அவர் முழு ஸ்கூப்பையும் ஒரே நேரத்தில் எடுக்கக்கூடாது. அவர் ஒரு நாளைக்கு வெவ்வேறு நேரங்களில் ஸ்கூப்பில் இருந்து ஒரு ஸ்பூன் ஐஸ்கிரீமை எடுத்து அதை சாப்பிட வேண்டும். ஒரு நீரிழிவு நோயாளியும் இப்படித் தான் ஐஸ் கிரீமைச் சாப்பிடவேண்டும்," அவர் விளக்கினார்.

இதற்கான காரணத்தை விளக்கும் டாக்டர் சுரேந்திர குமார், “புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் தினமும் வெவ்வேறு நேரங்களில் சிறிதளவு ஐஸ்கிரீம் சாப்பிட்டால், அவர்களது உடலில் இருக்கும் இன்சுலின் அதைத் தாங்கும். ஆனால், அதிக அளவு சர்க்கரை உடனடியாக உள்ளே நுழைந்தால் அதை இன்சுலின் கையாளமுடியாது," என்றார்.

செயற்கை அல்லது இயற்கை சர்க்கரை : எது சிறந்தது?

வெல்லம், ரொட்டி போன்ற பல பொருட்களில் சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது.

ஜாமில் பிரக்டோஸ் மட்டுமே உள்ளது. இயற்கையான இனிப்பு என்றால் அது தீங்கு விளைவிக்காது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் சர்க்கரையை தனித்தனியாக சேர்த்தால், அதை நீண்ட நேரம் உட்கொள்வது தீங்கு விளைவிக்கும்.

இதுபோன்ற உணவுகளை சாப்பிடுவதால் திருப்தி ஏற்படாது என்றும், மீண்டும் மீண்டும் சாப்பிட ஆசைப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். பின்னர் இது ஒரு சுழற்சியாக மாறும். அது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்குகிறது.

இயற்கை சர்க்கரை இல்லாத இனிப்புக்களை, அதாவது செயற்கை சர்க்கரை சேர்க்கப்படும் பொருட்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், சர்க்கரை இல்லாத உணவுகப் பொருட்களை ஏற்றுக்கொள்ளலாம்.

சைவம் மற்றும் அசைவ உணவுப் பொருட்களில் பச்சை மற்றும் சிவப்பு வட்டக் குறியீடுகள் உள்ளதைப் போலவே, நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பான உணவுப் பொருட்களையும் வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிர சுகாதார அமைச்சகத்திடம் பரிந்துரைத்ததாக டாக்டர் ராஜீவ் கோவில் கூறுகிறார்.

இந்திய மக்களிடையே உணவு லேபிள்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது மட்டுமின்றி, உடல்நலம் சார்ந்த அறிவும் அதாவது உடல்நலம் தொடர்பான அடிப்படை விஷயங்களைப் பற்றிய தகவல்களும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உணவுப் பொருட்களின் காலாவதி தேதியைப் பார்க்கிறார்கள். ஆனால் அந்த உணவுப் பொருளில் என்ன இருக்கிறது என்பதைப் படிப்பதில்லை. அதேசமயம் அதைத் தெரிந்துகொள்வது தான் மிகவும் முக்கியமானது.

https://www.bbc.com/tamil/articles/c72y2qnrjw7o

கணினியை அதிக நேரம் பயன்படுத்துபவர் நீங்கள் என்றால் இது உங்களுக்கானது!

2 months 2 weeks ago

தொலைபேசி மற்றும் கணினியை  பயன்படுத்துபவர்களின்  எண்ணிக்கை  நாளடைவில் அதிகரித்துச் செல்கிறது. தற்காலத்தில் கணினியை பயன்படுத்துவது முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. ஆனால், அதே நேரத்தில் கணினியில் இருந்து வெளிப்படும் கதிர்களிடமிருந்து கண்களைப் பாதுகாத்துக் கொள்வதும் மிக அவசியமே. தொடர்ச்சியாக கணினியை பயன்படுத்துவோர் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். அதில் முக்கியமாக பார்வைக் கோளாறுகள், தலைவலி, ஒளியை காணும்போது கண் கூசுதல், மந்தமான பார்வை,கண்வலி, கழுத்து மற்றும் பின் முதுகுவலி, நிறங்கள் மங்கலாக தெரிதல், கண் உலர்ந்து காணப்படுதல், மற்றும் கண் எரிச்சல் போன்றவை, கண்களுக்குரித்தான பிரச்சினைகள்.


மேற் குறிப்பிட்ட  பிரச்சினைகளுக்கு, ‘கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ என்று பெயர். கணினியைப் பயன்படுத்தும், 80 சதவீத பேருக்கு இந்த, ‘கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ வர வாய்ப்பு உள்ளது. சிறு வயதிலேயே கணினியை உபயோகிக்கும் குழந்தைகளுக்கு, கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுகிறது.
கணினியை, கண் பார்வையில் இருந்து, 20 முதல் 26 இன்சுகள் தள்ளியிருக்கும்படி, அமைத்துக்கொள்ள வேண்டும். கணினி இருக்கும் அறையில், வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்வதுடன், ‘பளீர்’ என்ற வெளிச்சமோ, மங்கலான வெளிச்சமோ இல்லாமல், மிதமான வெளிச்சமாக இருக்க வேண்டும்.
தொடர்ச்சியாக கணினியை பயன்படுத்தி, கண் சிமிட்டல் குறைந்து போனவர்கள், அடிக்கடி சிமிட்டலை தொடர வேண்டும். அதுமட்டுமின்றி கண்களை மூடி, வட்டச் சுழற்சி முறையில், ஒரு முறை சுழற்றி, மூச்சை ஆழமாக உள்ளிழுத்து, பின்னர் கண்களை திறந்து, மூச்சை மெதுவாக விட வேண்டும்.


* இவ்வாறு செய்து வருவதால், நாளடைவில் கணினி பயன்பாட்டாளர்கள் அனைவரும் கண் பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். (ஐ)

https://newuthayan.com/article/கணினியை_அதிக_நேரம்_பயன்படுத்துபவர்_நீங்கள்_என்றால்_இது_உங்களுக்கானது! 

சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!

2 months 2 weeks ago

கோவைக்காய் ஆதிகாலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. இது நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த கோவைக்காய் தீவிரமில்லாத சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தி நல்ல பலனை தரக்கூடியது.

இந்த கோவைக்காயை நாம் அன்றாட உணவுகளில் அதிகளவு சேர்த்து கொண்டால் நம் உடலுக்கு தேவையான அளவுக்கு ஆரோக்கியத்தை பெற முடிவதோடு, பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 30 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும். அதுமட்டுமின்றி  பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டால் வாய்ப்புண் ஆறிவிடும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம்.கோவைக்காய் பித்தம், இரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும். (ஐ) 

https://newuthayan.com/article/சர்க்கரைநோயின்_எதிரியாகும்_ கோவைக்காய்!

பனஞ்சீனியின் மருத்துவ பலன்கள்.

2 months 2 weeks ago

சீனியை விட பனஞ்சீனியும், தேனும் ஒருவகை இனிப்பு மருந்தாகும். வெள்ளை சீனியியை வெள்ளை நிறத்திற்கு கொண்டு வர பல கெமிக்கல்கள் பயன்படுத்துகின்றன. பனஞ்சீனி என்பது கரும்புச்சாறில் இருந்து வெல்லப்பாகை எடுத்து தயாரிக்கப்படும் சீனி ஆகும். பனஞ்சீனி இயற்கை நிறம் மற்றும் மணத்துடன் கிடைப்பதால் அதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கின்றன. அன்றாட வாழ்வில், பனஞ்சீனியை பயன்படுத்துவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

* பனஞ்சீனியில் விற்றமின்-பி6, நியாசின் மற்றும் பாந்தோதெனிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது சரும செல்களுக்கு புத்துணர்ச்சியூட்டவும், இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை உருவாக்கும்.

* பனஞ்சீனியால் சருமத்தை ஸ்க்ரப் செய்வதன்மூலம், இறந்த செல்கள் சரும துளைகளில் படிந்திருக்கும் அவற்றை நீக்கும். மேலும் அழுக்கு மற்றும் தூசுக்களை அகற்றி, பளபளப்பான சருமத்தைப் பெற உதவும்.

* பனஞ்சீனியில் குறைந்தளவு கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைக்க மற்றும் பராமரிக்க இது பெரிதளவில் உதவுகிறது. மேலும், இதில் பசியைக் கட்டுப்படுத்தும் திறன் இருப்பதால், எடையை குறைக்க உதவுகிறது.

* பனஞ்சீனியில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு மற்றும் வலிகளைப் போக்கவும், வயிற்றுப் பிடிப்புகளைப் போக்கவும், வலியைக் குறைக்கவும், பனஞ்சீனி பயன்படுகிறது.   (ஐ)  

 

https://newuthayan.com/article/நாட்டுச்_சர்க்கரையின்_மருத்துவ_பலன்கள். 

'மீன் எண்ணெய் மற்றும் அதன் நன்மைகள்..''

2 months 2 weeks ago

மீன் எண்ணெய் என்பது சால்மன், டுனா, கானாங்கெளுத்தி அல்லது ஹெர்ரிங் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களின் திசுக்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு துணைப் பொருளாகும். மீன் எண்ணெயில் இரண்டு குறிப்பிடத்தக்க ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த மீன் எண்ணெயின் பயன்கள் என்னவென்று தற்போது பார்க்கலாம்.

* கொழுப்பு மீன்களில் ஒமேகா-3 உடலிலுள்ள வீக்கத்தின் பல கூறுகளை ஓரளவு தடுக்கும். 

* மூளை மற்ற அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. 

* மீன் எண்ணெய் கூடுதல் மனச்சோர்வுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். 

* ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் பயன்பாடு அபாயகரமான மாரடைப்பு அபாயத்தை  9% குறைக்க உதவும்.

* எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது.

* அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

* தோல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

* கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. (ஐ)

https://newuthayan.com/article/'மீன்_எண்ணெய்_மற்றும்_அதன்_நன்மைகள்..''

ஆபத்து- இலங்கை மக்களுக்கு இது தொடர்ந்து நடக்கலாம்

2 months 3 weeks ago
drug%20allergy%20srilanka.png

என்னால் வெளிப்படையாக அனைத்துவிடயங்களையும் பேசமுடியாதுவிட்டாலும் உங்களுக்காக சில செய்திகள்

செய்தி 1)

பேராதனையில் 21 வயதான மாணவி ஒருவர் Ceftriaxone என்ற மருந்து ஏற்றப்பட்டபோது ஏற்பட்ட ஒவ்வாமையால் சிகிச்சைபலனின்றி இறந்தார். மருந்து மாறி ஏற்றப்பட்டுவிட்டது, தாதி தவறான மருந்தை ஏற்றிவிட்டார் என்ற வழமையான புராணங்களின் பின்னர் மருந்தால் ஏற்பட்ட ஒவ்வாமையென உறுதிப்படுத்தப்பட்டது.

hospital%20death%20srilanka.png

 

 

செய்தி 2)

அண்டி பயோட்டிக்ஸ் அலேர்ஜியினால் இதுவரை 15 மரணங்கள் ஏற்பட்டிருந்தாலும் 2 மரணங்களே பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

allergy%20reactions.png

 

 

செய்தி 3)

பல நோயாளர்களுக்கு அண்டிபயோட்டிக்கால் ஒவ்வாமை ஏற்படுவது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தரமற்ற மருந்துகளால்தான் ஒவ்வாமை ஏற்படுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது, மருந்துகளின் தரத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

drug%20allergy%20srilanka.png

 

செய்தி 4)

allergy.png

 

drug%20allergy%20srilanka%20india.jpg

 

செய்தி 5)

 தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம்குடும்பப்பெண்  ஒவ்வாமையால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணம்.  

இவருக்கு அண்டிபயோட்டிக்கால் ஒவ்வாமை ஏற்படவில்லை, சத்திக்கு வழங்கப்படும் மருந்தால் ஒவ்வாமை ஏற்பட்டிருக்கின்றது.

இந்த 5 செய்திகளாலும் உங்களுக்கு ஏதாவது விளங்குகின்றதா? எனக்கு எதுவும் விளங்கவில்லை

dora.jpg

 

 

ஓருவருக்கு ஒவ்வாமை எதனாலும் ஏற்படலாம், வைத்தியசாலையில் வழங்கப்படும் மருந்துகளில் அண்டிபயோட்டிக் எனப்படும் மருந்துந்துக்குத்தான் ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுவது வழக்கம், அப்படி ஒவ்வாமை ஏற்படும்போது அதற்குரிய வைத்தியத்தை உடனடியாக செய்வதன்மூலம் உயிரை பாதுகாத்துக்கொள்ளமுடியும். இவளவு நாட்களும் கதை இப்படித்தான் இருந்தது ஆனால் இப்போது அண்டிபயோட்டிக்கு மட்டுமல்ல சத்திக்கு வழங்கும் மருந்து வரை ஒவ்வாமை ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

 

Antibiotics ற்கு அலேர்ஜி வருவதை முன்கூட்டியே அறியமுடியுமா?

ஆம், பெனிசிலின் Penicillin போன்ற அண்டிபயோட்டிக்கை நோயாளி ஒருவருக்கு வழங்குவதற்கு முன்பாக அது நோயாளிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துமா என அறிவதற்காக ஒரு சோதனை செய்யப்படும் அதை Sensitive test என்று கூறுவார்கள்.

அண்டிபயோட்டிக்ஸ் மருந்துகள் பெருமளவில் கண்ணாடிப்போத்தல்களிலேயே வருகின்றன, இதை வயல் Vial என்று அழைப்பார்கள். இப்படி வயல்களில் அடைத்துவரும் மருந்து நோயாளிக்கு வழங்கப்படுவதற்கு முன் எப்படி தயாரிக்கப்படும் முறை கீழே காட்டப்பட்டிருக்கின்றது.

 

Ceftriaxone-Sodium-for-Injection-250-mg-Single-Dose-Vial--Apotex.webp

 

08-77_priprava_leciva_v_praskove_forme_3_vstriknuti_rediciho_roztoku_do_lahvicky_s_lecivem.jpg

 

08-78_priprava_leciva_v_praskove_forme_4_rozpusteni_praskoveho_leciva.jpg

 

08-79_priprava_leciva_v_praskove_forme_5_nasati_rozpusteneho_leciva_z_lahvicky.jpg

 

08-81_priprava_leciva_v_praskove_forme_7_lecivo_pripraveno_pro_intramuskularni_podani.jpg

 

நோயாளிக்கு இந்த அண்டிபயோட்டிக் மருந்தை வழங்கமுன்பாக கரைக்கப்பட்ட அண்டிபயோட்டிக்கில் சிறிய அளவை மட்டும் எடுத்து அதை 10 மடங்கிற்கு ஐதாக்கி, ஐதாக்கப்பட்ட மருந்தை நோயாளியின் தோலில் ஏற்றுவார்கள்.
 
Mantoux_tuberculin_skin_test.jpg
 
ஏற்றப்பட்டதும் வீங்கிப்போயிருக்கும் பகுதி பேனாவால் வட்டமிடப்பட்டு நேரம், திகதியிடப்படும், அடுத்த 20 நிமிடத்திற்குள் சாதாரணமாக இருக்கும் தோல் அடையாளமிடப்பட்ட கோட்டைத்தாண்டி சிவப்பு நிறமாகிச்சென்றால் அந்த நோயாளிக்கு குறிப்பிட்ட அண்டிபயோட்டிக்கிற்கு அலேர்ஜி என்பது உறுதிசெய்யப்படும்.
images.jpg
இந்தப்பரிசோதனை வழமையாக penicillin எனப்படும் அண்டிபயோட்டிக்கிற்கு மட்டும்தான் செய்யப்படுகிறது ஆனால் முதல்தடவை வழங்கப்படும்போது அனைத்து அண்டிபயோட்டிக் மருந்துகளுக்கும் இந்தப்பரிசோதனை செய்யப்படவேண்டும்.
அண்டிபயோட்டிக் மருந்துகளுக்கு மட்டும்தான் இந்தப்பரிசோதனைசெய்யப்படுகின்றது ஆனால் தற்போது எந்தமருந்துக்கு அலேர்ஜி வரும் என்பதை யாராலும் எதிர்வுகூறமுடியாத நிலையில் எதை வழங்குவதற்கு முன்பாகவும் இதை செய்யவேண்டுமா என்ற குழப்பத்தில்தான் அனைவரும் இருக்கின்றார்கள். காரணம் சத்திக்கு வழங்கப்படும் Antiemetic மருந்துகளுக்கே தற்போது ஒவ்வாமை வர ஆரம்பித்துள்ளது.
 
ஒவ்வாமை ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் என்ற முன்னைய பதிவின் லிங்க் இங்கே Click

https://www.manithanfacts.com/2024/01/drug antibiotic allergy .html

ஆபத்து!! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு பக்கவாதமாககூட இருக்கலாம்

2 months 3 weeks ago
%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.jpg

இன்று உலகில் அதிகளவில் ஏற்பட்டுவரும் மிகவும் அச்சுறுத்தக்கூடிய பிரதான தொற்றா நோய்களில் பக்கவாதமும் ஒன்றாகும்.  இன்று 6 பேரில் ஒருவர் பக்கவாத நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பக்கவாதம் வருமுன் காக்கப்பட வேண்டிய ஒரு பிரதான நோயாகும். இருந்த போதிலும் பக்கவாதம் பற்றிய போதிய விழிப்புணர்வு பொது மக்களிடம் மிகக் குறைவாகக் காணப்படல் ஒரு வருந்தக் கூடிய விடயமாகும். இது மிகவும் அச்சுறுத்தக் கூடியதும்இ உயிரிழப்பைத் தோற்றுவிக்கக் கூடியதுமான ஒரு தொற்றா நோயாகும்.  நவீன மருத்துவத்துறை எவ்வளவு சிறப்பாக முன்னேற்றமடைந்திருந்தாலும் நாளுக்கு நாள் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் நேயாயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே செல்கின்றது

3415635_050118-kgo-stroke-before-after-split-img.jpg

 

 

கடவுளுடைய அதிசயமான படைப்பிலே உருவான மனிதப் பிறவியில் மிகவும் பிரமிக்கக் கூடிய பல பிரமாண்டமான ஆற்றல்களை உள்ளடக்கியுள்ளதும் இ மிகவும் சிக்கலானதும் அதிக குருதிஇ நரம்பு விநியோகம் கொண்ட உறுப்பு மனித மூளையாகும். மனிதனில் அனைத்து விதமான செயல்பாடுகளையும் கட்டுப்படுகின்ற உயர் கட்டமைப்பு இ  தொழிற்பாட்டு மையமும் அதுவேயாகும். மனிதனின் ஒவ்வொரு தொழிற்பாடுகளும் மூளையின் குறித்த ஒரு பகுதியால் கட்டுப்படுத்தப்படும். மூளையானது உயர் ஒட்சிசன் தேவையுள்ள குருதிக் குழாய்களின் சிக்கலான வலைப்பின்னலால் உருவான அமைப்பாகும். அதே வேளை ஒட்சிசன் விநியோகம் தடைப்படும் போது முதலாவதாக இறக்கின்ற உறுப்பும் அதுவேயாகும்.

 

 

பக்க வாதம் அல்லது பாரிசவாதம் என்றால் என்ன????

 

மூளையின் குறித்த சில பாகங்கள் சடுதியாக செயலிழப்பதால் உடலின் சில பாகங்களை அசைக்க முடியாத நிலை உண்டாகின்றது. பொதுவாக மூளையின் வலது பகுதி உடலின் இடது பாகங்களையும் மூளையின் இடது பகுதி உடலின் வலது பாகங்களையும் கட்டுப்படுத்துகின்றது. மூளையின் குறித்த பகுதி செயலிழப்பதால் அப் பகுதியால் கட்டுப்படுத்தபடுகின்ற உடலின் குறித்த பாகம் செயலிழந்துவிடுகின்றது. மூளைக்கு குருதியை கொண்டு செல்கின்ற நாடிகளில் ஏற்படும் திடீர் அடைப்புக்களால் மூளைக்கான சீரான குருதி சுற்றோட்டம் பாதிக்கப்படும். தொடரும் இன் நிலையானது மூளையின் விரைவான செயலிழப்புக்கு வழிகோலும். இதனால் மூளையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட குறித்த பாகத்துக்கான நரம்பிணைப்பு துண்டிக்கப்படுவதால் அப் பாகம் செயலிழக்கின்றது. இந்நிலை பக்கவாதம் எனப்படும்.

 

இதன் விளைவாக உடலில் பின்வரும் மாற்றங்கள் நிகழும்

FINAL-STROKE-IMAGE-1200x610.png

 

 

•   சுய நினைவற்ற நிலை

 

•   புலனுணர்வுகள் உடலின் இயக்கம் என்பன பாதிக்கப்படும்

 

•   உடலின் ஒருபக்கம் செயலிழக்கும்

 

•   உடல் தசைகளுடைய அசைவு பாதிக்கப்படும்

 

•   உடல் பலவீனமடையும்

 

•   சுவாசிப்பதில் சிக்கல் நிலை தோன்றும்

 

•   மூட்டுகள் விறைப்புத்தன்மையாக மாறும்

 

•   முகம் மற்றும் வாய் சமச்சீரற்று காணப்படல் அல்லது வாய் சற்று கோணலாக மாறல்

 

•   வுழமையான பேச்சில் தெளிவின்மை

 

•   உணவை விழுங்குவதில் சிக்கல்

 

•   நினைவாற்றல் குறையும்

 

•   சடுதியான மயக்கம் கடும் தலைவலி ஏற்படும்

 

 

 

இன்று கீழ்வரும் காரணிகள் பக்கவாதத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கின்றது.

 

•   வயது- வயது அதிகரிக்கும் போது ஆண் பெண் இருபாலாருக்கும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்

 

•   இலிங்கம்-  ஆண்கள் பெண்களை விட அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்

 

•   மது அருந்துதல் புகைப்பிடித்தல் போன்ற பழக்கவழக்கங்கள் பக்கவாதம் ஏற்படுவதை பன் மடங்கு அதிகரிக்கும்

 

•   நீரழிவு நோய் ,உயர் குருதி அமுக்கம்,   மன அழுத்தம் போன்ற நிலைமைகளும் பக்கவாதத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கும்

 

•   போதிய அளவு உடற்பயிற்சியின்மையால் குருதி சுற்றோட்டம் பாதிக்கப்பட்டு காலபோக்கில் பக்கவாதத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கும்

 

•   முறையற்ற உணவு பழக்கங்கள் அதாவது நிரம்பிய கொழுப்பமிலங்கள் நிறைந்த உணவுகள் குருதி கலன்களில் கொலத்திரோல் படிவுகளை ஏற்படுத்துவதால் இது பக்கவாதத்திற்கு வழிகோலும்

 

•   பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும் நிறமுர்த்தங்களாலும் இவை ஏற்படுத்தப்படும்

 

•   அதிகளவில் கருத்தடை மாத்திரைகள் பாவித்தல் கொகையின் (ஊழஉயiநெ) பாவித்தல் அதிக உடற் பருமன் போன்ற பல காரணிகளும் பக்கவாதம் ஏற்படுவதில் செல்வாக்கு செலுத்துகின்றது.

 

 

பக்கவாதத்தில் பொதுவாக இரண்டு வகை உள்ளது

 

•   இஸ்கேமிக் (Ischemic stroke)

 

•   கீமோறேஜிக் (Hemorrhagic stroke)

types-of-stroke.jpeg

 

 

இஸ்கேமிக் (Ischemic stroke)

 

மூளைக்கு செல்லும் இரத்தகுழாய்களில் கொழுப்பு பைபிரின் நார்கள் கல்சியம் ஆகியன படிவதாலும்  இரத்தக்கட்டிகள் உறைவதாலும் கருதிக்குழாயின் பருமன் குறைவடைந்து மூளைக்கான குளுக்கோசு ஒட்சிசன் விநியோகம் தடைப்படுகிறது இதனால் மூளையின் கலங்;கள் காலப்போக்கில் இழக்கப்படுகின்றது.

 

கீமோறேஜிக் (Hemorrhagic stroke)

 

மூளையில் காணப்படுகின்ற சில குருதிக்குழாய்களின் சுவர் மென்மையடைந்து உயர் குருதி அமுக்கத்தின் காரணமாக ஏற்படுத்தப்படும் இரத்தக் கசிவினால் இந்நிலை உருவாகின்றது. சுpல வேளைகளில் குருதி மயிர்த்துளைக் குழாய் வெடிப்பினால் இது ஏற்படுகின்றது. இதற்கு தலையோட்டிலுள்ள அமுக்கமும் காரணமாகும்.

 

 

 

சில தடுப்பு முறைகள்

 

•   தினந்தோறும் ஒழுங்குமுறையான உடற்பயிற்சிகளை றே;கொள்ளுதல்.

 

•   ஆரோக்கியமான உணவுமுறைகளை கையாளுதல்

 

•   புகைத்தல்   மது அருந்துதல் போன்றவற்றை தவிர்த்தல்

 

•   நீரழிவு நோய் இதய நோய்களிலிருந்து விடுபடுதல்

 

 

 

பக்கவாத புனர்வாழ்வு சிகிச்சையில் இயன் மருத்துவர்களின் பங்களிப்பு

 

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களிற்கு புனர்வாழ்வளித்து வழமையான நிலைக்கு கொண்டு வருவதில் இயன் மருத்துவம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. பக்கவாதத்தினால் யாராவது பாதிக்கப்பட்டால் அருகிலுள்ள வைத்தியசாலையை உடனடியாக நாட வேண்டும். அதன் பின்னர் வைத்தியசாலையில் அந் நோயாளி உயிர் ஆபத்தை தாண்டிய பின்னர் இயன் மருத்துவ சிகிச்சைக்காக பொது வைத்திய நிபுணரால் சிபார்சு செய்யப்பட்டு இயன் மருத்துவ சிகிச்சை தொடங்கப்படும். இயன் மருத்துவர்களினால் தொடர்ச்சியான சரியான ஆலோசனைகளும் உடற்பயிற்சிகளும் வழங்கப்படும். பல்வேறு வகையான கையாளுதல் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு உரிய வேளையில் பொருத்தமான புனர்வாழ்வளித்து வழமை நிலைக்கு திரும்பும் இயன் மருத்துவ நுணுக்கங்கள் கையாளப்படும். இதன் மூலம் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் விரைவில் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடர்ச்சியாக பயிற்சி வழங்கப்பட்டு குணமடைய இயன் மருத்துவர்கள் துணை புரிவார்கள்.

 

pakkavatham.jpg

 

 

 

பக்கவாதம் என்பது வரும் முன் தடுக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகும். சரியான  உடற் பயிற்சியும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கமும் பக்கவாதம் வராமல் தடுக்க சிறந்த எளிய வழிகளாகும். ஆகையால் இதன் தோற்றத்துக்கு காரணமாகும் காரணிகளிலிருந்து முற்காப்பு எடுத்துக்கொள்வதுடன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு திறமையான இயன் மருத்துவரின் உதவியை நாடி தொடர்ச்சியான சிகிச்சைகளை பெறுவதன் மூலம் ஒரு முன்னேற்றகரமான நிலையை அடைய முடியும். எனவே பக்கவாதம் எனும் கொடிய நோயிலிருந்து எம்மையும் எம் அயலவர்களையும் பாதுகாத்து ஒரு ஆரோக்கியமான சமுகத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து பக்கவாதத்தை வராமல் விரட்டியடிப்போமாக..

 

 க.ஹரன்ராஜ்

இயன் மருத்துவர் (physiotherapist )

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை

 

https://www.manithanfacts.com/

சிறுநீரின் நிறத்தை வைத்தே சிறுநீரகத்தில் உள்ள பிரச்னையை தெரிந்து கொள்வது எப்படி?

2 months 3 weeks ago
சிறுநீர் - சிறுநீரகம் என்ன தொடர்பு?

பட மூலாதாரம்,GETTY IMAGES

1 ஜனவரி 2024, 04:34 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சிறுநீரகம் உடலின் ஒரு முக்கியமான உறுப்பு. சிறுநீரகம் மூலம் தான் நம் உடலில் திரவ கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு சுத்தமான ரத்தம் தொடர்ந்து பரவுகிறது. மேலும், உடலில் உள்ள அதிகப்படியான நீர், சிறுநீரகம் மூலம் வடிகட்டப்பட்டு அது சிறுநீர் வாயிலாக வெளியேற்றப்படுகிறது.

இந்தியாவில் தீவிர நோய்களால் இறப்பதற்கான முதல் பத்து காரணங்களில், பல்வேறு சிறுநீரக நோய்கள் ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றன.

“இந்தியா: தேசத்தின் ஆரோக்கியம்”-2017 எனும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி, இந்தியாவில் ஏற்படும் இறப்புகளுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் ஒன்பதாவது முக்கிய காரணமாகும். இந்நோய் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் வயது ஆகியவையாகும்.

’நேச்சர்’ இதழின் (Nature) பகுப்பாய்வின்படி, உலகில் 6.97 கோடி பேர் கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 1.15 கோடி பேர் இந்தியாவில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2010-13-இல், சிறுநீரக செயலிழப்பு 15-69 வயதுடையவர்களிடையே 2.9 சதவீத இறப்புகளுக்கு காரணமாகும். இது 2001-03-ஐ விட 50 சதவீதம் அதிகரித்துள்ளது. சிறுநீரக செயலிழப்பு இறப்புகளுக்கு நீரிழிவு நோய் மிக முக்கிய காரணமாக உள்ளது.

இந்தியாவில் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD-Chronic kidney disease) 8-17 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்களுள் சுமார் 10-20 சதவீதம் பேருக்கு சிறுநீரக செயலிழப்பு உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
சிறுநீரக நோய்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிறுநீரகத்திற்கும் சிறுநீருக்கும் என்ன தொடர்பு?

இந்த நோய்க்கான காரணங்களை ஆழமாகப் புரிந்துகொள்ள சிறுநீரக மருத்துவர் சித்தார்த் ஜெயினிடம் பேசினோம்.

சிறுநீருக்கும் சிறுநீரகத்துக்கும் உள்ள தொடர்பை அவர் விளக்குகிறார்.

"உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் வளர்சிதை மாற்ற பொருட்களை சிறுநீர் வாயிலாக சிறுநீரகம் நீக்குகிறது. சிறுநீரகத்தின் செயல்பாடு உடலில் இருந்து அதிகப்படியான வளர்சிதை மாற்ற கழிவுகளை அகற்றுவதாகும். சிறுநீரின் உதவியுடன் இதைச் செய்கிறது" என்றார்.

சிறுநீரகம் நமது உடலின் ஒரு வடிகட்டி அமைப்பு. சிறுநீரகங்கள் ரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்றி சிறுநீரை உற்பத்தி செய்கின்றன.

"சிறுநீரகத்தின் செயல்பாடு சிறுநீரின் உதவியுடன் உடலில் இருந்து அதிகப்படியான வளர்சிதை மாற்றக் கழிவுகளை அகற்றுவதாகும். உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் வளர்சிதை மாற்ற பொருட்களை சிறுநீரகம் நீக்குகிறது" என்று அவர் விளக்குகிறார்.

 
சிறுநீரக நோய்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்த புரதம் உடலில் இருந்து அசாதாரண அளவில் வெளியேற்றப்படும்போது, அது ஆபத்தானது.

புரோட்டினூரியா என்றால் என்ன?

புரோட்டினூரியா (சிறுநீரில் புரதத்தின் குறிப்பிடத்தக்க இருப்பு) பற்றி மருத்துவர் சித்தார்த் ஜெயின் விரிவாக விளக்குகிறார். “ஒவ்வொரு ஆரோக்கியமான மனித உடலும் சிறுநீரின் மூலம் சில அளவு புரதத்தை வெளியேற்றுகிறது. ஆனால், இந்த புரதம் உடலில் இருந்து அசாதாரண அளவில் வெளியேற்றப்படும்போது, அது ஆபத்தானது மற்றும் இந்த கசிவு புரோட்டினூரியா என்று அழைக்கப்படுகிறது" என்கிறார்.

"புரோட்டீனூரியா உற்பத்திக்கு மிகவும் பொதுவான காரணம் நீரிழிவு நோய். ஒருவருக்கு கட்டுப்பாடற்ற நீரிழிவு இருந்தால், அதிகப்படியான புரதம் சிறுநீரில் கசிகிறது" என்றார், மருத்துவர் சித்தார்த்.

"இதனால் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயின் முதல் அறிகுறி புரோட்டினூரியா ஆகும்" என்றார்.

புரோட்டினூரியாவின் பிற காரணங்கள் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிற நோய்கள்.

புரோட்டினூரியாவின் அறிகுறிகளைப் பற்றி பேசுகையில், "சிறுநீர் நுரையுடன் இருப்பதாக உணர்ந்தால், அது புரோட்டினூரியாவின் அறிகுறியாகும்."

புரோட்டினூரியாவின் மேம்பட்ட நிலைகளில், நோயாளிகள் கைகள் மற்றும் கால்களில் வீக்கம், சோர்வு, வயிற்று வலி அல்லது வயிற்று தொற்று ஆகியவற்றை அனுபவிக்கலாம். இந்த நோய்க்கான பிற காரணங்கள் ரத்த அழுத்தம் மற்றும் பிற சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஆகும்.

சிறுநீர் நிறம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சிறுநீரில் நீர், யூரியா மற்றும் உப்புகள் உள்ளன.

சிறுநீரின் நிறத்தை வைத்தே சிறுநீரகத்தில் உள்ள பிரச்னையை தெரிந்து கொள்வது எப்படி?

சிறுநீரில் நீர், யூரியா மற்றும் உப்புகள் உள்ளன. அதிகப்படியான அமினோ அமிலங்கள் உடைக்கப்படும்போது யூரியா கல்லீரலில் உற்பத்தியாகிறது. சிறுநீரின் மூலம் வெளியேற்றப்படும் முக்கிய கழிவுப்பொருள் யூரியாவாகும். ஏனெனில், அது சிறுநீரகத்தால் மீண்டும் உறிஞ்சப்படாது.

உங்கள் ரத்தத்தில் இருந்து வடிகட்டிய அதிகப்படியான நீர் மற்றும் கழிவுகள்தான் சிறுநீர் என, ’ஹார்வர்ட் ஹெல்த்’ கூறுகிறது. அதன் நிறம் பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர் பழுப்பு வரை இருக்கும். அதன் செறிவு, நீரில் உள்ள கழிவுகளின் அளவைப் பொறுத்தது. இது, நீங்கள் எவ்வளவு திரவத்தை உட்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

ஒரு நபர் தனது சிறுநீர் சிவப்பு, கருப்பு அல்லது பழுப்பு அல்லது வேறு ஏதேனும் நிறத்தில் இருப்பதாக உணர்ந்தால், அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர் சித்தார்த் மேலும் கூறுகிறார்.

மேலும், சிறுநீரின் அளவு, இயல்பை விட மிகக் குறைவாகவோ அல்லது இயல்பை விட அதிகமாகவோ, அல்லது ஒருவர் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்ல வேண்டியிருந்தாலோ அல்லது சிறுநீர் கழிக்கும்போது அதிக அழுத்தத்தை உணர்ந்தாலோ, கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ, சிறுநீரகப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

 
சிறுநீரக நோய்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சிறுநீரகங்கள் சிறுநீரை உற்பத்தி செய்து, நீர் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

சிறுநீரகத்தின் செயல்பாடு என்ன?

சிறுநீரகம் உடலின் இன்றியமையாத உறுப்பு. அதன் செயல்பாடுகள்:

  • உங்கள் உடலில் உள்ள கால்சியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
  • ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • உங்கள் ரத்தத்தில் பி.ஹெச். எனும் அமிலத்தன்மையை சமநிலையுடன் பராமரித்தல்.
  • உங்கள் உடலில் இருந்து நீரில் கரையும் கழிவுகளை நீக்குகிறது.

சிறுநீரின் வாயிலாக அதிகப்படியான நீர், உப்புகள் மற்றும் யூரியாவை நீக்குகிறது.

சிறுநீரக தமனி மூலம் ரத்தம் சிறுநீரகங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ரத்தம் உயர் அழுத்தத்தில் வடிகட்டப்படுகிறது மற்றும் சிறுநீரகமானது குளுக்கோஸ், உப்பு அயனிகள் மற்றும் நீர் போன்ற பயனுள்ள பொருட்களைத் தேர்ந்தெடுத்து மீண்டும் உறிஞ்சுகிறது. சுத்திகரிக்கப்பட்ட பிறகு, ரத்தம் சிறுநீரக நரம்பு வழியாக ரத்த ஓட்ட அமைப்புக்குத் திரும்புகிறது.

சிறுநீரகங்கள் சிறுநீரை உற்பத்தி செய்து, நீர் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. சிறுநீர்ப்பை சிறுநீரை உடலில் இருந்து வெளியேறும் வரை சேமிக்கிறது.

நீரிழிவு நோயின் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது மற்றும் உலகளவில் 41.5 மில்லியன் மக்களை இது பாதிக்கிறது. சிறுநீரக செயலிழப்புக்கு நீரிழிவு நோய் முக்கிய காரணமாக உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 40 சதவீதம் பேருக்கு இறுதியில் சிறுநீரக நோய் ஏற்படுகிறது.

 
சிறுநீரக நோய்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ரத்த நாள நோய்கள் பொதுவாக உங்கள் சிறுநீரகங்களுக்கு ஆபத்தானவை

தீவிர சிறுநீரக நோய்கள் என்ன?

நாட்பட்ட சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஆகும்.

ஒவ்வொரு சிறுநீரகமும் நெஃப்ரான்கள் எனப்படும் சுமார் ஒரு மில்லியன் சிறிய வடிகட்டி அலகுகளைக் கொண்டுள்ளது. நெஃப்ரான்களை காயப்படுத்தும் அல்லது பாதிக்கும் எந்த நோயும் சிறுநீரக நோயை ஏற்படுத்தும். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இரண்டும் நெஃப்ரானை பாதிக்கும்.

உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகங்கள், இதயம் மற்றும் மூளையில் உள்ள ரத்த நாளங்களையும் பாதிக்கும். சிறுநீரகங்கள் அதிக ரத்த நாளங்களை கொண்டவை. எனவே, ரத்த நாள நோய்கள் பொதுவாக உங்கள் சிறுநீரகங்களுக்கு ஆபத்தானவை.

நாள்பட்ட சிறுநீரக நோய், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது சிறுநீரகம் செயல்பாட்டை படிப்படியாக இழப்பதாகும். சிறுநீரகங்கள் ரத்தத்திலிருந்து கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவத்தை வடிகட்டுகின்றன. பின்னர் அவை சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றன. நாள்பட்ட சிறுநீரக நோய் ஒரு மேம்பட்ட நிலையை அடையும் போது, திரவம், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் கழிவுகள் ஆகியவை ஆபத்தான அளவுக்கு உடலில் சேரும்.

நாள்பட்ட சிறுநீரக நோயின் அறிகுறிகள் காலப்போக்கில் உருவாகின்றன. சிறுநீரக பாதிப்பு படிப்படியாக நிகழ்கிறது. குமட்டல், வாந்தி, பசியின்மை, சோர்வு மற்றும் பலவீனம், தூக்க பிரச்னைகள், சிறுநீரில் ஏற்படும் மாற்றங்கள், மனக் கூர்மை குறைதல், தசைப்பிடிப்பு மற்றும் கைகளின் வீக்கம் ஆகியவையும் அறிகுறிகளாகும். பாதங்கள் மற்றும் கணுக்கால் சுளுக்கு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவையும் இந்நோயுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம்.

நாள்பட்ட சிறுநீரக நோய் முற்றிலும் மீளமுடியாத நோயாகும். இது காலப்போக்கில் தீவிரமடையும். இதனால், சிறுநீரகம் அதன் செயல்பாடுகளை செய்ய முடியாத நிலை ஏற்படும்.

https://www.bbc.com/tamil/articles/c972d83qmgeo

மருந்து மாறி ஏற்றியதால் மாணவி மரணம் - ஒவ்வாமை Allergy

2 months 4 weeks ago
அலர்ஜி என்றால் என்ன? என்று முதலில் பார்த்துவிடுவோம். எமது உடலினுள் செல்லும் ஏதாவது ஒரு பொருளுக்கு அல்லது தொடுகையுறும் பொருளுக்கு எமது உடலால் காட்டப்படும் செயற்பாடுதான் இந்த ஒவ்வாமை. இந்த ஒவ்வாமை அதாவது அலெர்ஜி எதற்காகவேண்டுமானாலும் ஒருவருக்கு வரலாம் ஆனால் அது வரும்வரை அந்த நபருக்கு எனக்கு இது ஒவ்வாதபொருள் என்பது தெரியவராது.
19150.jpg
ஒருவருக்கு பூனையின் முடி, நாயின் முடி, மகரந்தமணிகள், தூசுக்கள், ஹெயார் டை என எதனாலும் இந்த ஒவ்வாமை வரலாம், சிலருக்கு நண்டுக்கறி அல்லது இறால் சாப்பிட்டால் கை,கால் தடித்து உதடுகள் வீங்கி மூச்செடுப்பதில் சிரமம் ஏற்படும் இதேபோல்தான் எதற்குவேண்டுமானாலும் ஒவ்வாமைவரலாம். இந்த ஒவ்வாமை வைத்தியசாலையில் எமக்கு ஏற்றப்படும் மருந்துகளாலும் வரலாம். வழக்கமாக நோய்க்கு ஏற்றப்படும் அண்டிபயோட்டிக்கிற்கு சிலருக்கு ஒவ்வாமை வரலாம் இவளவு ஏன் சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் பனடோலுக்குகூட சிலருக்கு அலர்ஜி ரியாக்ஸன் வரலாம்/ வந்திருக்கின்றது ஏன் எறும்புகடித்தால்கூட இது வரலாம்.
 
முந்தைய பதிவுக்கு இங்கே கிளிக்
 
 
 
அண்டிபயோட்டிக்கில் பல வகைகள் இருக்கின்றன. நோய்க்கிருமிகளின் வகைப்படுத்தல்களுக்கு ஏற்ப இந்த அண்டிப்யோட்டிக் மருந்துகள் வகைப்படுத்தப்படும். ஒருகிருமிக்கூட்டத்தை அழிப்பதற்கு  அதைத்தாக்கக்கூடிய அண்டிபயோட்டிக்கை கொடுத்தால் மட்டுமே அழிக்கமுடியும் அதைவிட்டு வேறு ஒன்றை நோயாளிக்குக்கொடுப்பதும் அதை நிலத்தில் ஊற்றுவதும் ஒன்றுதான்.
 
ஒவ்வாமையை கண்டறிவது எப்படி?
 
கடி/ சொறி ஏற்படுதல், கைகால்கள் தடிப்படைதல், உடலின் பகுதிகளில் சிவப்பு நிற தழும்புகாள் தோன்றும், மூச்செடுப்பதில் சிரமம் ஏற்படும், இதயத்துடிப்பு குறைவடையும், வயிற்றுவலி, சத்தி ஏற்படும், அதிக வியர்வை, பய உணர்வு ஏற்படும், உதடு மற்றும் நாக்கு வீக்கமடையும், வயிற்றோட்டம் ஏற்படலாம். 
aae4653ba48d841da08e0c0bfd54cb80ceb87120-1500x1500.webp

 
மருந்து ஏற்றப்பட்டதும் அல்லது ஏதாவது ஒரு பொருளை நீங்கள் கையாளும்போது மேலே கூறியவற்றுள் ஏதாவது ஒன்றோ அல்லது ஏனைய அறிகுறிகளோ தென்பட்டால் உங்களுக்கு அந்த மருந்துக்கோ அல்லது பொருள்ளுக்கோ ஒவ்வாமை  இருக்கின்றது என்று அர்த்தம்.
 
தோல் தடிப்படைதல்- Urticaria
 
Anaphylaxis-symptoms-causes-and-diagnosis-SS20-3-scaled-e1613485280155.webp
 
2668866.jpg

கண்மடல்கள் வீக்கமடைதல்- Angioedema
 
Angioedema2010.jpg
94454610-6cf3-47e6-8c7d-a3f410a0cc81.webp
 
 

 
மூச்செடுப்பதில் சிரமம்
Breathing_Artwork.jpg
உணவுக்கு ஏற்படும் ஒவ்வாமையால் ஏற்படும் கடிசொறியால் அவளவு பாதிப்பில்லை ஆனால் கண்மடல்கள் வீங்கி மூச்செடுப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாகவைத்தியசாலைக்கு செல்வது அவசியம், உணவு ஒவ்வாமைக்கும், மருந்துகளால் ஏற்ப்படும் ஒவ்வாமையாக இருந்தாலும் சரியான நேரத்திற்குள் மருத்துவசிகிச்சையை பெறாவிடில் நிமிடங்களில் மரணம் சம்பவிக்கலாம்.
 
ஒவ்வாமையால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மருத்துவமனையில் எவ்வாறு சிகிச்சை வழங்கப்படுகின்றது?
 
ஓவ்வாமைக்கு எவ்வாறு மருத்துவம் செய்யவேண்டுமென்றவரைபடம் கீழே காட்டப்பட்டுள்ளது.
ALS-Anaphylaxis-Algorithm.jpg

 

வைத்தியசாலைக்கு சென்றதும் அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு   நோயாளிக்கு உடனடியாக ஒக்சிசன் வழங்கப்படும். தீவிர ஒவ்வாமையில் குறட்டைச்சத்தம் போன்ற ஒலியை மயக்க நிலையில் இருக்கும் நோயாளி ஏற்படுத்திக்கொண்டிருப்பார், இவ்வாறான சந்தர்ப்பத்தில் வாய்வழியாக குழாயை பொருத்தி செயற்கைச்சுவாசத்தை ஏற்படுத்துவார்கள் ( Intubation). இதற்கான தேவையில்லாத சந்தர்ப்பத்தில் அதாவது நோயாளியின் தீவிரம் குறைவாக இருந்தால் ஒக்ஸிசஸ் மாஸ் பொருத்தப்படும் அதோடு Asthalin ஆவி பிடிக்கச்செய்வார்கள்.
Health-GettyImages-1447339217-58b61968b3f34eef94960bd892dd6499.jpg

 

 
 Adrenalin எனப்படும் மருந்து கையில் நேரடியாக ஏற்றப்படும் (IM Intra muscular ), கையில்Cannula ஏற்றப்பட்டு Hydrocortisone எனப்படும் மருந்து வழங்கப்படும். Chlorphenamine எனப்படும் பிரிட்டோன் கனுலா ஊடாக வழங்கப்படும். இவற்றை தனியே ஒரு வைத்தியரால் செய்யமுடியாது குறைந்தது 3 தாதியர்களாவது தேவை, ஒரே நேரத்தில் இவை அனைத்தும் மிகக்குற்கிய காலத்தில் செய்துமுடிக்கப்படவேண்டும்.
 
நோயாளியின் இரத்த அழுத்தம் உடனடியாக குறைவடையலாம். இதற்காக சேலையின் கனூலாஊடாக விரைவாக வழங்குவார்கள், விரைவாக வழங்கலை போலஸ் என்று அழைப்பார்கள். இதன் பின்னர் ECG எடுக்கப்படும், சிலருக்கு ஒவ்வாமையால் நெஞ்சுவலி கூட ஏற்படலாம்.
 
வெளி நாடுகளில்   Adrenalin pen (Epi pen) விற்பனையில் இருக்கின்றது. இப்படியான ஒவ்வாமைகள் ஏற்படும்போது பேனாபோல் இருக்கும் இதன் மூடியைக்கழற்றி நாமே நமது காலில் ஊசியைப்போட்டுக்கொள்ளமுடியும். ஒவ்வாமை ஏற்பட்டு அம்புலன்ஸ் வருவதற்குள் ஏற்படும் மரணத்தை இது கூடியவரையில் தடுக்க உதவுகின்றது. வெளி நாடுகளில் ஒவ்வாமை இருக்கும் சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் இதைப்பயன்படுத்துகின்றார்கள்.
 
AAI-EpiPen.jpg
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு நோயாளிக்கு ஏற்றப்படும் மருந்தால் ஒவ்வாமை ஏற்பட்டாலும் மேலே கூறிய அனைத்தையும் உடனே செய்வார்கள், செய்யவேண்டும்.
அப்படியானால் வைத்தியசாலையில் ஏற்றப்படும் மருந்தால் ஏற்படும் அலர்ஜியை முன்பே கண்டறியவழிகள் இருக்கின்றதா? அப்படியானால் ஏன் மரணங்கள் சம்பவிக்கின்றன?
 
அடுத்தபதிவில் பார்ப்போம்...
 
எனது இணையத்தள முகவரி
 
Checked
Thu, 03/28/2024 - 19:25
நலமோடு நாம் வாழ Latest Topics
Subscribe to நலமோடு நாம் வாழ feed