Aggregator

தமிழ் அரசியல் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் கொலை

2 months ago
இந்தக் கதையில் வரும் ஒரு பாத்திரமான சேனாதி அண்ணன் வலுசுழியன் பாருங்கோ! கதிரைக்காக கடைசிவரை வாய்திறக்கவே இல்லை!

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

2 months ago
போராடிய ஜடேஜா: லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவை வீழ்த்திய ஸ்டோக்ஸின் அஸ்திரங்கள் எவை? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் தினேஷ் குமார். எஸ் கிரிக்கெட் விமர்சகர் 4 நிமிடங்களுக்கு முன்னர் லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து தொடரில் 2–1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் ஆட்டங்களில் ஒன்றான இதில் கடைசி நாளில் என்ன நடந்தது? கடைசி நாளில் லார்ட்ஸ் மைதானத்தில் இலக்கை விரட்டுவது என்பது பேட்டர்களுக்கு எப்போதுமே கொடுங்கனவு. தொடரில் 2–1 என்று முன்னிலை பெறுவதற்கு இந்தியாவுக்கு 135 ரன்கள் தேவை, இங்கிலாந்துக்கு 6 விக்கெட்கள் தேவை என்கிற நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கியது. நேற்று ஓவரின் மீதமுள்ள இரண்டு பந்துகளை வீசி முடிந்த ஸ்டோக்ஸ், பிறகு வோக்ஸ் கையில் பந்தைக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், யாரையும் நம்பத் தயாராக இல்லாத ஸ்டோக்ஸ், ஆர்ச்சருடன் சேர்ந்து ராகுல் – பந்த் இணைக்கு எதிராக மூர்க்கத்துடன் பந்துவீசினார். 4.5 ஆண்டுகளுக்கு பிறகு மறுவருகை நிகழ்த்திய ஆர்ச்சர், தன்னுடைய மிகச் சிறந்த பந்துவீச்சை இன்று வெளிக்காட்டினார். மணிக்கு 89.6 மைல் வேகத்தில் அரவுண்ட் த விக்கெட்டில் இருந்து ஆர்ச்சர் வீசிய பந்தில் பந்த் போல்டானார். உள்ளே வரும் என்று நம்பி பந்த் தவறான லைனில் விளையாடி பரிதாபமாக ஸ்டம்புகளை பறிகொடுத்தார். உண்மையில், அது ஒரு அட்டகாசமான லெங்ந்தில் வீசப்பட்ட பந்து. முன்னே வருவதற்கும் வழியில்லை; பின்னங்காலுக்கு நகர்ந்து ஆடுவதற்கும் வழியில்லை. இரண்டும் கெட்டான் லெங்ந்த் (Corridor of uncertainty) என்பார்களே அப்படி ஒரு லைன் அண்ட் லெங்த். பந்த் நடையை கட்டினாலும், கேஎல் ராகுல் இன்னும் இருக்கிறாரே என்கிற ஆசுவாசம் சில நிமிடங்களுக்கு கூட நீடிக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES அடுத்தடுத்து விக்கெட் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் நம்பமுடியாத ஒரு பந்தை வீசி, ராகுலின் கால்காப்பை தாக்கி, LBW ஆக்கினார். கற்பனைக்கும் எட்டாத பந்து என்றே அதை சொல்ல வேண்டும். நான்காவது, ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் பயணிக்க தொடங்கிய பந்து, கடைசி நொடியில் அசாதாரணமாக உள்ளே திரும்பும் என ராகுல் நிச்சயம் நம்பியிருக்கமாட்டார். முதல் இன்னிங்சை போலவே பந்த் முதலில் பெவிலியனுக்கு திரும்ப அவருக்கு துணையாக ராகுலும் பின்னே சென்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES கைகொடுத்த பும்ரா கடந்த இன்னிங்சில் நன்றாக தற்காப்பு ஆடியதால், நிதிஷுக்கு முன்பாக சுந்தர் அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால், ஆர்ச்சர் தன் சொந்த பந்துவீச்சில் கிடைத்த கடினமான கேட்ச் வாய்ப்பை விக்கெட்டாக மாற்றி சுந்தரை உடனே வெளியேற்றினார். . இந்தநிலையில் ஜடேஜாவும் நிதிஷும் ஆர்ச்சர்–ஸ்டோக்ஸ் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு பர்சன்டேஜ் கிரிக்கெட் விளையாடினர். முதல் நாளில் ரன் ஓடமுடியாமல் சிரமப்பட்ட ஸ்டோக்ஸ், தொடர்ச்சியாக 1 மணி நேரத்துக்கு மேல் பந்துவீசி தன் உறுதியையும் கிரிக்கெட் மீதான காதலையும் வெளிப்படுத்தினார். ஜடேஜாவும் நிதிஷும் ஓவர் பின் ஓவராக தாக்குப்பிடித்து விளையாடியதை பொறுத்துக்கொள்ள முடியாத இங்கிலாந்து அணியினர், அவர்களை சூழ்ந்து கொண்டு வசைபாடத் தொடங்கினர். பட மூலாதாரம்,GETTY IMAGES மதிய உணவு இடைவேளைக்கு 10 நிமிடங்களுக்கு குறைவாகவே இருந்தபோது, அதுவரை நன்றாக விளையாடிக் கொண்டிருந்த நிதிஷ் ரெட்டி, வோக்ஸ் பந்தில் அவுட்சைட் எட்ஜ் ஆகி ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். இந்த தொடரில் உணவு இடைவேளைக்கு அரை மணி நேரம் முன்பாக இந்திய அணி இதுவரை 10 முறை விக்கெட்டை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு, இந்திய அணி எளிதில் இங்கிலாந்திடம் சரணடையும் என்றே கருதப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜடேஜாவுக்கு தோள் கொடுத்தார் பும்ரா. அவ்வப்போது கடைசிக்கட்ட பேட்டருக்கே உரித்தான சில ஷாட்களை முயற்சித்தாலும், முழு கவனத்தையும் கொடுத்து விளையாடினார். கில் உள்பட இந்தியாவின் டாப் ஆர்டர் பொறுப்பில்லாமல் விக்கெட்டை பறிகொடுத்த நிலையில், பும்ராவின் போராட்டம் சற்று ஆறுதலாக அமைந்தது. நேரம் செல்ல செல்ல ரன் சிறுக சிறுக சேர்ந்துகொண்டே வந்தது. நீண்ட நேரமாக தடுப்பாட்டமாடிய ஜடேஜா, வோக்ஸ் பந்தில் டீப் மிட்விக்கெட்டில் ஒரு சிக்சர் விளாசி, ஆட்டத்துக்கு சுறுசுறுப்பை கொண்டுவந்தார். பும்ராவை எப்படியாவது விக்கெட் எடுத்துவிட ஸ்டோக்ஸ் தன்னால் முடிந்த அத்தனை பொறிகளையும் வைத்து பார்த்தார். பும்ரா அவசரப்படும் போதெல்லாம் அருகில் வந்து அறிவுரை சொல்லி ஜடேஜா வழிநடத்தினார். பும்ராவை தூக்குவதுதான் ஒரே வழி என்பதை உணர்ந்த ஸ்டோக்ஸ், பீல்டர்களை முழுவதுமாக பரப்பி வைத்து, ஜடேஜாவுக்கு எதிராக களத்தடுப்பை அமைத்தார். ஒன்று ரிஸ்க் எடுத்து பெரிய ஷாட்டுக்கு செல்ல வேண்டும். இல்லை, ஒற்றை ரன் ஓடி பும்ராவுக்கு ஸ்ட்ரைக் கொடுக்க வேண்டும். இரண்டில் எது நடந்தாலும் அது இங்கிலாந்துக்கு லாபம் என்பது ஸ்டோக்ஸ் கணக்கு. பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசியில் விருந்து 53 பந்துகள் தாக்குப்பிடித்த பும்ரா, ஸ்டோக்ஸ் வீசிய பவுன்சர் பந்தை ஒற்றைக் காலைத் தூக்கி pull ஷாட் அடிக்கப் போய் உள்வட்டத்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவருடைய விக்கெட்டுடன் இந்தியாவின் கடைசி நம்பிக்கையும் முடிவுக்கு வந்தது. தவறான ஷாட் விளையாடி பும்ரா பெவிலியன் திரும்பும் போது, ஜடேஜாவின் முகத்தில் ஆயிரம் சோக ரேகைகள். பந்து தேய்ந்து பஞ்சு போல மாறியிருந்ததால் பெரிய ஷாட் அடிக்க ஜடேஜா எடுத்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு ஒரே காரணம் பென் ஸ்டோக்ஸ்தான். களத்தில் வீரர்கள் சோர்ந்து போகும் போதெல்லாம் நம்பிக்கை வார்த்தைகள் கூறி, அவர்களை உற்சாகப்படுத்தினார். பந்துவீச்சில் அவர் காட்டிய உத்வேகம், பிற வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் பரவியதை பார்க்க முடிந்தது. நவீன கிரிக்கெட்டின் இரு உச்சபட்ச ஆல்ரவுண்டர்களான ஸ்டோக்ஸ், ஜடேஜா இருவரின் போராட்டம், பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது. ஸ்டோக்ஸ் பந்தில் ஸ்லிப் தலைகளின் மேல் ஒரு பவுண்டரியை சீவிவிட்டு அரைசதத்தை எட்டினார் ஜடேஜா. 9 விக்கெட்டுகள் விழுந்துவிட்டது, ஆட்டம் முடிந்தது என நினைக்கும் போது, சிராஜ் தன் பங்குக்கு 30 பந்துகள் பிடித்து இங்கிலாந்து அணியினர் வயிற்றில் புளியை கரைத்தார். ஜடேஜாவும் சிராஜும் எதிர்கொண்ட ஒவ்வொரு பந்தும் ஒரு ஈவன்டாக மாறி, ரசிகர்களுக்கு விருந்தளித்தது. ஆர்ச்சர், ஸ்டோக்ஸ், கார்ஸ் போன்றவர்களின் பந்துவீச்சில் எல்லாம் அவுட்டாகாத சிராஜ், கடைசியில் முழு உடற்தகுதி இல்லாமல் பந்துவீசிய பஷீர் பந்தில் போல்ட் ஆனார். ஆட்டமிழந்த பிறகு சிராஜ் சோகமே உருவாக அமர்ந்திருந்ததும் அவருக்கு இங்கிலாந்து வீரர்கள் ஆறுதல் சொன்னதும் 2005 எட்ஜ்பாஸ்டன் டெஸ்டை நினைவூட்டியது. தோல்வியின் விரக்தியில் இருந்த பிரெட் லீயை ஃபிளின்டாஃப் ஆற்றுப்படுத்தும் காட்சி மனதில் வந்துபோனது. இந்தியா தோற்றாலும் இந்திய வீரர்கள் காட்டிய போராட்ட குணம், நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. ஆகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடியும் ஜடேஜா வெற்றியுடன் ஆட்டத்தை முடிக்க முடியாதது துரதிர்ஷ்டம். முதல் நாளில் இருந்தே சரிக்கு சமமாக சென்று கொண்டிருந்த டெஸ்ட், ஒரு பரபரப்பான முடிவுடன் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது. https://www.bbc.com/tamil/articles/c23g2penpg9o

ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்

2 months ago
உக்ரைன் தலைநகரில் ரஸ்ய உளவாளிகள் இருவர் சுட்டுக்கொலை 14 JUL, 2025 | 01:28 PM உக்ரைன் தலைநகரில் ரஸ்யாவின் இரண்டு உளவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனின் புலனாய்வு பிரிவை சேர்ந்த முக்கிய அதிகாரி கொல்லப்பட்டதை தொடர்ந்தே ரஸ்யாவின் உளவாளிகள் என கருதப்படும் ஆணும் பெண்ணும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனின் புலளாய்வு பிரிவை சேர்ந்த முக்கிய அதிகாரியான இவான் வொரொனிச் கையடக்க துப்பாக்கி மூலம் பத்தாம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு காரணமான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்த இருவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் தலைநகரில் மறைந்திருந்த இருவரும் மோதல் ஒன்றின் போது கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனின் எஸ்பியு பாதுகாப்பு சேவையை சேர்ந்தவர்கள் இவர்களை கைதுசெய்ய முயன்றவேளை இடம்பெற்ற மோதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரகசிய விசாரணைகள் எதிர் உளவுத்துறை நடவடிக்கைகளின் விளைவாக எதிரிகளின் குகை கண்டுபிடிக்கப்பட்டது. உக்ரைனின் பாதுகாப்பு சேவையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அவர்களை கைதுசெய்யமுயன்றவேளை அவர்கள் அதனை எதிர்த்தனர், இதன் காரணமாக துப்பாக்கிமோதல் இடம்பெற்றது, வில்லன்கள் அழிக்கப்பட்டனர், உக்ரைனில் மரணம் மாத்திரமே சாத்தியம் என எதிரிக்கு எச்சரிக்க விரும்புகின்றேன் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட உக்ரைன் அதிகாரியை கண்காணிக்குமாறும் அவரின் நாளாந்த நடவடிக்கையை கண்காணிக்குமாறும் கொல்லப்பட்ட இருவருக்கும் அவர்களை வழிநடத்துபவர் உத்தரவிட்டிருந்தார். பின்னர் சைலன்சர் பொருத்தப்பட்ட கைத்துப்பாக்கியை பயன்படுத்தி கொலை செய்தனர் என உக்ரைன் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/219960

சாட்ஜிபிடி ஒவ்வொரு பதிலுக்கும் இவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறதா?

2 months ago
பட மூலாதாரம்,@GOOGLE படக்குறிப்பு, அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள கூகுள் போன்ற பல நிறுவனங்களின் தரவு மையங்கள், குளிரூட்டும் அமைப்புகளில் இருந்து தண்ணீரை ஆவியாக்குகின்றன. கட்டுரை தகவல் சாரா இப்ராஹிம் பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) பயன்பாடு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தத் தொழில்நுட்பத்துக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. குளிரூட்டுவதற்கும், அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் தண்ணீர் அவசியமாகிறது. உலகில் பாதி மக்கள் ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். பருவநிலை மாற்றமும், வளர்ந்து வரும் தேவையும் இந்தப் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. இந்நிலையில், ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்தால், தண்ணீர் பற்றாக்குறை இன்னும் அதிகரிக்குமா? ஏஐ எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறது? சாட்ஜிபிடியிடம் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு ஒரு டீஸ்பூன் தண்ணீரில் 15-ல் ஒரு பகுதி பயன்படுகிறது என்கிறார் ஓபன்ஏஐயின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன். ஆனால், கலிஃபோர்னியா மற்றும் டெக்சாஸைச் சேர்ந்த அமெரிக்க கல்வியாளர்களின் ஆய்வு, வேறு கருத்தைக் முன்வைக்கிறது. GPT-3 மாதிரியில் 10 முதல் 50 பதில்களுக்கு அரை லிட்டர் தண்ணீர் (அதாவது, ஒரு பதிலுக்கு 2 முதல் 10 டீஸ்பூன் தண்ணீர்) பயன்படுவதாக அவர்கள் கண்டறிந்தனர். கேள்வியின் வகை, பதிலின் நீளம், பதில் செயலாக்கப்படும் இடம் மற்றும் கணக்கீட்டில் கருத்தில் கொள்ளப்படும் காரணிகளைப் பொறுத்து தண்ணீர் பயன்பாட்டின் அளவு மாறுபடுகிறது. 10-50 கேள்விகளுக்கு 500 மில்லி தண்ணீர் தேவைப்படுவதாக அமெரிக்க கல்வியாளர்களின் மதிப்பீடு செய்துள்ளனர். இது நிலக்கரி, எரிவாயு அல்லது அணுமின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்காகப் பயன்படும் தண்ணீரையும் உள்ளடக்கியது. ஆனால், சாம் ஆல்ட்மேனின் கணக்கு இதை உள்ளடக்காமல் இருக்கலாம். பிபிசி கேட்டபோது, ஓபன்ஏஐ தனது கணக்கீடுகளின் விவரங்களை அளிக்கவில்லை. இருப்பினும் தண்ணீர் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் (100 கோடி) கேள்விகளுக்கு சாட்ஜிபிடி பதிலளிக்கிறது. இது பல ஏஐ (செயற்கை நுண்ணறிவு) புரோகிராம்களில் ஒன்று மட்டுமே எனக் கூறுகிறது ஓபன்ஏஐ. 2027 ஆம் ஆண்டுக்குள், ஏஐ தொழில்துறை ஒவ்வொரு ஆண்டும் டென்மார்க் முழுவதும் பயன்படுத்தும் தண்ணீரை விட 4 முதல் 6 மடங்கு அதிக தண்ணீரை பயன்படுத்தும் என்று அமெரிக்க ஆய்வு ஒன்று மதிப்பிடுகிறது. "நாம் எவ்வளவு அதிகமாக ஏஐ உபயோகிக்கிறோமோ , அவ்வளவு தண்ணீரை நாம் பயன்படுத்துகிறோம்," என்று அந்த ஆய்வு ஆசிரியர்களில் ஒருவரான கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஷோலி ரென் கூறுகிறார். ஏஐ தண்ணீரை எவ்வாறு பயன்படுத்துகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஏஐ (செயற்கை நுண்ணறிவு) பயன்பாடு, குறிப்பாக படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவது, மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான தேவையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்னஞ்சல் எழுதுவது, கட்டுரைகள் எழுதுதல் அல்லது டீப்ஃபேக் வீடியோக்கள் உருவாக்குதல் போன்ற ஆன்லைன் செயல்பாடுகள், தரவு மையங்கள் எனப்படும் பெரிய கட்டடங்களில் உள்ள கணினி சேவையகங்களால் செயலாக்கப்படுகின்றன. இந்த தரவு மையங்கள் சில நேரங்களில் பல கால்பந்து மைதானங்களைப் போன்று, பெரிய அளவில் கட்டப்படுகின்றன. கணினிகள் வழியாக மின்சாரம் பாய்வதால் இந்த அமைப்புகள் சூடாகின்றன. இவற்றை குளிர்விக்க, பொதுவாக சுத்தமான நன்னீர் பயன்படுத்தப்படுகிறது. குளிரூட்டல் முறைகள் வேறுபடுகின்றன, ஆனால் சில முறைகள் பயன்படுத்தும் தண்ணீரில் 80% வரை வளிமண்டலத்தில் ஆவியாகிவிடுகிறது. ஷாப்பிங் அல்லது இணையத்தில் தேடுதல் போன்ற வழக்கமான ஆன்லைன் செயல்பாடுகளை விட, ஏஐ பணிகளுக்கு, குறிப்பாக படங்கள் அல்லது வீடியோக்களை உருவாக்குவது போன்ற சிக்கலான செயல்பாடுகளுக்கு, அதிக கணினி சக்தி தேவை. எனவே, இவை மிக அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. சர்வதேச எரிசக்தி ஏஜென்சி (IEA) மதிப்பீட்டின்படி, சாட்ஜிபிடியிடம் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு, கூகுளிடம் கேட்கப்படும் கேள்வியை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த வித்தியாசத்தை துல்லியமாக அளவிடுவது கடினம். அதிக மின்சார பயன்பாடு அதிக வெப்பத்தை உருவாக்குகிறது. இதனால், கணினிகளை குளிர்விக்க அதிக அளவு குளிர்ச்சி தேவைப்படுகிறது. ஏஐ க்கான நீர் பயன்பாடு எவ்வளவு வேகமாக அதிகரித்து வருகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தரவு மையங்களில் ஆன்லைன் செயல்பாட்டைச் செயல்படுத்தப் பயன்படுத்தப்படும் கணினி சேவையகங்களின் நீண்ட அடுக்குகள் உள்ளன. பெரிய ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஏஐ செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவை தனியாக வெளியிடவில்லை. ஆனால், அவற்றின் மொத்த தண்ணீர் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கூகுள், மெட்டா, மற்றும் மைக்ரோசாப்ட் (ஓபன் ஏஐயில் முக்கிய முதலீட்டாளர்) ஆகியவற்றின் சுற்றுச்சூழல் அறிக்கைகளின்படி, 2020 முதல் அவற்றின் தண்ணீர் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கூகுளின் தண்ணீர் பயன்பாடு இந்த காலத்தில் கிட்டத்தட்ட இரு மடங்காகிவிட்டது. அமேசான் வெப் சர்வீஸ் (AWS) இதுவரை தண்ணீர் பயன்பாட்டு புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை. ஏஐக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், 2030 ஆம் ஆண்டளவில் தரவு மையங்களின் நீர் பயன்பாடு கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என்று சர்வதேச எரிசக்தி ஏஜென்சி (IEA) கணித்துள்ளது. இதில் மின்சார உற்பத்திக்கும், கணினி சிப்கள் தயாரிப்பதற்கும் பயன்படும் தண்ணீரும் அடங்கும். 2024 இல் அதன் தரவு மையங்கள் 37 பில்லியன் லிட்டர் தண்ணீரை நீர் ஆதாரங்களில் இருந்து எடுத்தன. இதில் 29 பில்லியன் லிட்டர் தண்ணீர் "நுகரப்பட்டது", அதாவது பெரும்பாலும் ஆவியாகிவிட்டது என கூகுள் கூறுகிறது. இந்த அதிகமான அளவா என்றால்? அது எதனோடு ஒப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தது. இந்த அளவு தண்ணீரால், ஐ.நா. பரிந்துரைப்படி, 1.6 மில்லியன் மக்களுக்கு ஒரு நாளைக்கு 50 லிட்டர் என்ற குறைந்தபட்ச தேவையை ஒரு வருடத்திற்கு வழங்க முடியும். அல்லது, கூகுள் கூறுவதன்படி, தென்மேற்கு அமெரிக்காவில் 51 கோல்ஃப் மைதானங்களுக்கு ஒரு வருடத்திற்கு நீர்ப்பாசனம் செய்யலாம். வறண்ட பகுதிகளில் தரவு மையங்களை ஏன் உருவாக்க வேண்டும்? சமீப ஆண்டுகளில், ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, மற்றும் அமெரிக்காவின் அரிசோனா போன்ற வறட்சி பாதிப்பு உள்ள பகுதிகளில் தரவு மையங்களுக்கு எதிரான உள்ளூர் எதிர்ப்பு, தலைப்பு செய்தியாகியுள்ளது. ஸ்பெயினில், தரவு மையங்களின் விரிவாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக, 'யுவர் கிளவுட் இஸ் ட்ரையிங் அப் மை ரிவர்' என்ற சுற்றுச்சூழல் குழு உருவாக்கப்பட்டது. சிலி மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு, தண்ணீர் பயன்பாடு குறித்த பொதுமக்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, கூகுள் தனது தரவு மையத் திட்டங்களை இடைநிறுத்தியோ அல்லது மாற்றியோ உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிலியில், கூகுளின் புதிய தரவு மையம் அதிக தண்ணீரைப் பயன்படுத்தும் என்று அஞ்சி, சுற்றுச்சூழல் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்தன. என்டிடி டேட்டா நிறுவனம், உலகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட தரவு மையங்களை இயக்குகிறது. வெப்பமான, வறண்ட பகுதிகளில் தரவு மையங்களை அமைப்பதற்கு "ஆர்வம் அதிகரித்து வருவதாக" அதன் தலைமை நிர்வாகி அபிஜித் துபே கூறுகிறார். நிலம் கிடைப்பது, மின் உள்கட்டமைப்பு, சூரிய மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மற்றும் சாதகமான விதிமுறைகள் ஆகியவை இந்தப் பகுதிகளை ஈர்க்கக்கூடியதாக மாற்றுகின்றன என்று அவர் விளக்குகிறார். ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது, அரிப்பு (கொரோஷன்) ஏற்படுகிறது. மேலும், கட்டடங்களை குளிர்விக்க அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. இதனால், வறண்ட பகுதிகள் தரவு மையங்களுக்கு சிறந்த இடங்களாகக் கருதப்படுகின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். கூகுள், மைக்ரோசாப்ட், மற்றும் மெட்டா ஆகியவை தங்கள் சுற்றுச்சூழல் அறிக்கைகளில், வறண்ட பகுதிகளில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றன. அந்த நிறுவனங்களின் சமீபத்திய சுற்றுச்சூழல் அறிக்கைகளின்படி, கூகுள் பயன்படுத்தும் தண்ணீரில் 14%, "அதிக" தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளிலிருந்தும், மற்றொரு 14% "நடுத்தர" பற்றாக்குறை உள்ள பகுதிகளிலிருந்தும் எடுக்கப்படுகிறது. மைக்ரோசாப்டின் 46% தண்ணீர், "தண்ணீர் அழுத்தம் உள்ள பகுதிகளிலிருந்து" எடுக்கப்படுகிறது. மெட்டாவின் 26% தண்ணீர் "அதிக" அல்லது "மிக அதிக தண்ணீர் அழுத்தம்" உள்ள பகுதிகளிலிருந்து எடுக்கப்படுகிறது என்றும் அந்த நிறுவனங்கள் வெளியிட அறிக்கைகளின் படி அறியமுடிகிறது. அமேசான் வெப் சர்வீஸ் (AWS) தண்ணீர் பயன்பாடு குறித்து எந்த புள்ளிவிவரமும் வெளியிடவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2024-ல் ஸ்பெயினில் ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக, பார்சிலோனாவிற்கு அருகிலுள்ள ஒரு நீர்த்தேக்கம் கிட்டத்தட்ட காலியாகிவிட்டது. இதனால், நீர் பயன்பாடு குறித்து மக்கள் மத்தியில் அதிக கவலை உருவாகியுள்ளது. குளிரூட்டக்குவதற்கு வேறு வழிகள் உள்ளதா? உலர் அல்லது காற்றால் குளிரூட்டும் முறைகளைப் பயன்படுத்த முடியும், ஆனால் இவை நீர் குளிரூட்டல் முறைகளை விட அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன என பேராசிரியர் ரென் கூறுகிறார். மைக்ரோசாப்ட், மெட்டா, மற்றும் அமேசான் ஆகியவை closed loop குளிரூட்டல் அமைப்புகளை உருவாக்கி வருவதாகக் கூறுகின்றன. இவற்றில், நீர் அல்லது வேறு திரவம் ஆவியாகவோ அல்லது மாற்றப்படவோ தேவையில்லாமல், கணினி உள்ளேயே சுழற்சி செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் வறண்ட பகுதிகளில் இத்தகைய மூடிய வளைய அமைப்புகள் பரவலாகத் தேவைப்படும் என்று துபே கருதுகிறார். ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு தேவைப்படும் அந்த தொழில்துறை "இன்னும் ஆரம்ப கட்டத்தில்" தான் உள்ளது என்றும் அவர் கூறுகிறார். ஜெர்மனி, பின்லாந்து, மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில், தரவு மையங்களில் இருந்து வெப்பத்தை மீட்டெடுத்து உள்ளூர் வீடுகளுக்கு பயன்படுத்தும் திட்டங்கள் இயங்குகின்றன அல்லது திட்டமிடப்பட்டுள்ளன. தரவு மையங்களை குளிர்விக்க, நிறுவனங்கள் பொதுவாக சுத்தமான நன்னீரை (குடிநீர் போன்றவை) பயன்படுத்த விரும்புகின்றன. இது பாக்டீரியா வளர்ச்சி, குழாய் அடைப்பு, மற்றும் அரிப்பு ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், சில நிறுவனங்கள் கடல் நீர் அல்லது தொழிற்சாலை கழிவுநீர் போன்ற குடிநீருக்கு தகுதியற்ற நீர் ஆதாரங்களையும் அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்குமா ? ஏஐ தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உதவவும் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, சக்திவாய்ந்த கிரீன்ஹவுஸ் வாயுவான மீத்தேன் கசிவைக் கண்டறிய ஏஐ உதவுகிறது. எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில் போக்குவரத்தை மறுவழிப்படுத்தவும் ஏஐ பயன்படுகிறது. ஏஐயால் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு கல்வி, சுகாதாரம், மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் "அளப்பரிய மாற்றத்தை" ஏற்படுத்த முடியும் என்று யுனிசெஃப் (ஐநா குழந்தைகள் நிறுவனம்) புத்தாக்க அலுவலகத்தின் உலகளாவிய இயக்குநர் தாமஸ் டேவின் கூறுகிறார். பட மூலாதாரம்,META படக்குறிப்பு, சில தரவு மையங்கள் வறண்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன, ஆனால் நிறுவனங்கள் தண்ணீரை திறம்பட பயன்படுத்தவும், விநியோகங்களை நிரப்ப உதவுவதாகவும் கூறுகின்றன. ஏஐ (செயற்கை நுண்ணறிவு) நிறுவனங்கள் "மிகவும் சக்திவாய்ந்த மாதிரிகளை உருவாக்குவதற்கு பதிலாக", "திறமையான மற்றும் வெளிப்படையான" முறைகளை நோக்கி போட்டியிட வேண்டும் என தாமஸ் டேவின் கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், நிறுவனங்கள் தங்கள் ஏஐ மாதிரிகளை ஓப்பன் சோர்ஸ் ஆக்க வேண்டும். அதாவது, அனைவரும் இந்த மாதிரிகளை பயன்படுத்தவும், மாற்றியமைக்கவும் முடியும் வகையில் உருவாக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இது பயிற்சி செயல்முறையில் பயன்படும் அதிக மின்சாரம் மற்றும் தண்ணீரின் தேவையைக் குறைக்கும் என்கிறார் டேவின். இந்த செயல்முறையில், பெரிய அளவு தரவு உள்ளீடு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் பதில்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், லோரெனா ஜாமே-பலாசி எனும் ஒரு சுயாதீன ஆய்வாளர் மற்றும் எத்திக்கல் டெக் சொசைட்டியின் நிறுவனர், வேறொரு கருத்தை முன்வைக்கிறார். பல ஐரோப்பிய அரசுகள், ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் ஐநா அமைப்புகளுக்கு ஆலோசனை வழங்கிய அவர், ஏஐயின் அதிக வளர்ச்சியை சுற்றுச்சூழலுக்கு நிலையானதாக (sustainable) ஆக்குவதற்கு "எந்த வழியும் இல்லை" என்று கூறுகிறார். "நாம் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தை திறமையாக செய்ய முடியும். ஆனால், அதை மிகவும் திறமையாக்குவது, அதிக பயன்பாட்டை உருவாக்கும்." "நீண்ட காலத்தில், பெரிய மற்றும் வேகமான ஏஐ அமைப்புகளை உருவாக்கும் இந்த போட்டியைத் தொடர, நம்மிடம் போதுமான மூலப்பொருட்கள் இல்லை" என்றும் அவர் கூறுகிறார். தொழில்நுட்ப நிறுவனங்கள் என்ன சொல்கின்றன? கூகுள், மைக்ரோசாப்ட், ஏடபிள்யூஎஸ் (Amazon Web Services), மற்றும் மெட்டா ஆகியவை, உள்ளூர் நிலைமைகளைப் பொறுத்து குளிரூட்டல் தொழில்நுட்பங்களை கவனமாகத் தேர்ந்தெடுப்பதாகக் கூறுகின்றன. இந்நிறுவனங்கள் அனைத்தும் 2030-க்குள் "வாட்டர் பாசிட்டிவ்" (water positive) ஆக இருக்க இலக்குகளை நிர்ணயித்துள்ளன. அதாவது இதன் பொருள் என்னவென்றால் , தங்கள் செயல்பாடுகளில், எடுக்கும் தண்ணீரை விட அதிக தண்ணீரை சுற்றுச்சூழலுக்கு திருப்பி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதற்காக, அவர்கள், காடுகள் மற்றும் ஈரநிலங்களை மீட்டெடுக்கும் திட்டங்களுக்கு நிதியளிக்கின்றனர். நீர் கசிவுகளைக் கண்டறிய உதவுகின்றனர். நீர்ப்பாசனத்தை மேம்படுத்தும் திட்டங்களை ஆதரிக்கின்றனர். ஏடபிள்யூஎஸ் , தனது இலக்கை 41% அடைந்துள்ளதாகக் கூறுகிறது. மைக்ரோசாப்ட் இந்த இலக்கை "நோக்கி முன்னேறி வருவதாகக்" கூறுகிறது. கூகுள் மற்றும் மெட்டாவின் புள்ளிவிவரங்கள், அவர்கள் திருப்பி நிரப்பும் தண்ணீரின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றன. ஆனால், யுனிசெஃப்பைச் சேர்ந்த தாமஸ் டேவின், இந்த இலக்குகளை அடைய இன்னும் "நீண்ட தூரம் செல்லவேண்டும் " எனக் கூறுகிறார். நீர் மற்றும் ஆற்றல் திறனை மேம்படுத்த "கடினமாக உழைப்பதாக" ஓபன் ஏஐ கூறுகிறது. மேலும், "கணினி ஆற்றலை சிறப்பாகப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்" என்று வலியுறுத்துகிறது. ஆனால், தண்ணீர் பயன்பாடு குறித்து ஒரே மாதிரியான, தரப்படுத்தப்பட்ட அறிக்கைகள் தேவை. "நாம் அதனை அளவிட முடியாவிட்டால், நிர்வகிக்க முடியாது."என்கிறார் பேராசிரியர் ஷோலி ரென் . - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdjxpg7x22lo

தமிழ் அரசியல் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் கொலை

2 months ago
14 JUL, 2025 | 03:59 PM டி.பி.எஸ். ஜெயராஜ் இலங்கையில் முக்கியமான அரசியல் தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட முதல் சம்பவம் 1959 செப்டெம்பரில் இடம்பெற்றது. பதவியில் இருந்த பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க, தல்துவ சோமராம தேரோ என்ற பௌத்த பிக்குவினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது நாடு அதிர்ச்சியில் உறைந்தது. அதையடுத்து வந்த வருடங்களில் இனப்பிளவின் இருமருங்கிலும் மேலும் பல அரசியல் படுகொலைகள் இடம்பெற்றதை காணக்கூடியதாக இருந்தது. தமிழீழ விடுதலை புலிகள் உட்பட பல்வேறு தமிழப் போராளிக் குழுக்களினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரசியல் வன்முறை, ஜனதா விமுக்தி பெரமுனவின் ( ஜே.வி.பி.) வன்முறை மற்றும் அரசினாலும் அதன் அமைப்புக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட எதிர் வன்முறைகளில் பல வருடங்களாக பெரும் எண்ணிக்கையான அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் அரசியல் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் 1989 ஜூலை 13 ஆம் திகதி கொல்லப்பட்ட சம்பவம் இலங்கையின் அரசியல் படுகொலைகளின் வரலாற்றில் முக்கியமான ஒரு அத்தியாயமாகும். யாழ்ப்பாணத்தில் பண்ணாகத்தைச் சேர்ந்தவரான அமிர்தலிங்கம் 1927 ஆகஸ்ட் 26 ஆம் திகதி பிறந்தார். ஈழத்துக்காந்தி என்று அறியப்பட்ட -- பெருமதிப்புக்குரிய தமிழ்த் தலைவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் பிரதம ' தளபதியாக ' பல வருடங்கள் செயற்பட்ட அமிர்தலிங்கம் மக்கள் வசீகரமும் ஆற்றலும் கொண்ட ஒரு அரசியல்வாதியாவார். சட்டத்தரணியான அமிர்தலிங்கம் 1956 ஆம் ஆண்டு தொடக்கம் 1970 ஆம் ஆண்டு வரை இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் 1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1973 ஆம் ஆண்டுவரை தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் காங்கேசன்துறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர். 1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1983 ஆம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவராகவும் பதிவி வகித்த அவர், 1989 ஆம் ஆண்டில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். இந்திய இராணுவம் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவும் 1987 ஜூலை 29 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திட்ட இந்திய -- இலங்கை சமாதான உடன்படிக்கையை தொடர்ந்து இந்திய அமைதிகாக்கும் படை என்று அறியப்பட்ட இந்திய இராணுவம் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டது. இந்திய இராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் விரைவாகவே போர் மூண்டது. அதேவேளை, இலங்கையில் இந்திய இராணுவத்தின் பிரசன்னத்தை சிங்களவர்களில் பலரும் கூட வெறுத்தார்கள். இந்திய இராணுவத்தின் பிரசன்னத்தை எதிர்த்து ஜே.வி.பி.யும் வன்முறைப் போராட்டத்தை தொடங்கியது. முன்னர் பிரதமராக இருந்த ரணசிங்க பிரேமதாச ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கு பிறகு 1988 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜனாதிபதியாக வந்தார். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்துவது என்பது பிரேமதாசவின் முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து பிரேமதாச வழக்கத்துக்கு மாறான ஒரு நடவடிக்கையை எடுத்தார். வேறுபட்ட காரணங்களுக்காக என்றாலும், ஜனாதிபதி பிரேமதாசவும் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்று விரும்பியதனால் அவர்கள் இருவரினதும் நலன்கள் சங்கமித்தன. ஆனால், இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் வரை, இலங்கையில் இந்திய இராணுவம் தொடர்ந்தும் நிலகொண்டிருக்க வேண்டும் என்று தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் போன்ற பல தமிழர்கள் விரும்பினர். அந்த சமாதான உடன்படிக்கைதான் மாகாணசபைகள் அமைக்கப்படுவதற்கு வழிவகுத்தது. இந்திய இராணுவம் திருப்பியனுப்பப்பட வேண்டும் என்று பிரேமதாச அரசாங்கமும் விடுதலை புலிகளும் விரும்பிய அதேவேளை, அமிர்தலிங்கம் அதை எதிர்த்தார். அந்த கட்டத்தில் இந்திய இராணுவம் திருப்பியனுப்பப்படக் கூடாது என்று 1989 ஜூனில் அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் கடுமையாக வாதிட்டார். அமிர்தலிங்கத்தின் அரசியல் நம்பகத்தன்மை மற்றும் மதிப்பின் விளைவாக அகிம்சைவழி அரசியல் தலைவரான அவரின் அபிப்பிராயத்துக்கு சர்வதேச மட்டத்தில் செல்வாக்கு இருந்தது. துரோகிப் பட்டம் தமிழ் இளைஞர்கள் அமிர்தலிங்கத்தை மாபெரும் தலைவராக மதித்துப் போற்றிய காலம் ஒன்று இருந்தது. 1976 ஆம் ஆண்டில் தமிழீழம் என்று அழைக்கப்பட்ட தனிநாடு ஒன்றுக்கான கோரிக்கையை பிரசாரப்படுத்துவதில் அவர் தலைமைப் பாத்திரத்தைை வகித்தார். ஆனால், பிறகு அமிர்தலிங்கம் தமிழீழக் கோரிக்கையை தணித்து ஐக்கியப்பட்ட ஆனால், ஒற்றையாட்சி அல்லாத இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வு ஏற்பாட்டில் நாட்டம் காட்டினார். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை புலிகளும் அவர்களது ஆதரவாளர்களும் அமிரை துரோகி என்று அழைத்தனர். இந்திய இராணுவம் தொடர்பான அவரின் நிலைப்பாடு காரணமாக அமிர்தலிங்கம் மீதான விடுதலை புலிகளின் பகைமை மேலும் அதிகரித்தது. இத்தகைய ஒரு பின்புலத்திலேயே, 36 வருடங்களுக்கு முன்னர் அமிர்தலிங்கம் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கொலை நடந்த நேரத்தில் நான் கனடாவில் இருந்தேன். ஆனால், காலஞ்சென்ற எம். சிவசிதம்பரம், கலாநிதி நீலன் திருச்செல்வம், திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம், திருமதி சரோஜினி யோகேஸ்வரன், மருத்துவர் பகீரதன் அமிர்தலிங்கம், வீரசிங்கம் ஆனந்தசங்கரி, பி. சூசைதாசன் மற்றும் சோமசுந்தரம் (மாவை ) சேனாதிராஜா போன்ற தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியுடன் தொடர்புடைய பலருடன் வெவ்வேறு நேரங்களில் அந்த சம்பவம் குறித்து நான் பேசினேன். அவர்களுடனான சம்பாஷணைகள், நேர்காணல்கள் மற்றும் ஊடகச்செய்திகளை அடிப்படையாக வைத்து அமிர்தலிங்கத்தின் கொலை தொடர்பாக ஏற்கெனவே நான் விரிவாக எழுதியிருந்தேன். ஜூலை 13 ஆம் திகதி (கடந்த ஞாயிற்றுக்கிழமை) அமிர்தலிங்கத்தின் 36 வது நினைவுதினம் வந்துபோனதால் எனது முன்னைய எழுத்துக்களின் உதவியுடன் அவரின் கொலைச் சம்பவத்தை மீட்டுப்பார்க்கிறேன். 342/ 2 புல்லேர்ஸ் வீதி அமிர்தலிங்கமும் அவரது மனைவி மங்கையர்க்கரசியும் பௌத்தாலோக மாவத்தை / புல்லேர்ஸ் வீதியில் 342/2 ஆம் இலக்க இல்லத்தில் வசித்துவந்தனர். ஆடை உற்பத்தி தொழில்துறையில் ஈடுபட்ட மன்னாரைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானது அந்த வீடு. அமிர்தலிங்கத்தையும் மனைவியையும் தவிர, தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் எம்.சிவசிதம்பரம், முன்னாள் யாழ்ப்பாண தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வி. யோகேஸ்வரன், அவரது மனைவி சரோஜினி, தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் இளைஞர் பிரிவின் தலைவரான மாவை சேனாதிராஜா ஆகியோரும் அந்த வீட்டில் ஒன்றாக தங்கியிருந்தனர். காமினி திசாநாயக்க அமைச்சராக இருந்தபோது தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தலைவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தார். மகாவலி அமைச்சைச் சேர்ந்த சில பொலிஸ் அதிகாரிகள் அந்த தலைவர்களின் பாதுகாப்புக்காக பணிக்கமர்த்தப்பட்டனர். அதேவேளை, விடுதலை புலிகள் முன்னாள் யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுடன் தொடர்புகளை ஏற்படுத்தத் தொடங்கினர். தமிழர்களின் ஐக்கியம் குறித்து ஆராய்வதற்காக அமிர்தலிங்கத்துடன் சந்திப்பு ஒன்றுக்கு யோகேஸ்வரன் ஏற்பாடு செய்யவேண்டும் என்று விடுதலை புலிகள் விரும்பினர். அது தொடர்பாக யோகேஸ்வரன் அமிர்தலிங்கத்துடனும் சிவசிதம்பரத்துடனும் பேசி சந்திப்புக்கான அவர்களின் சம்மதத்தை பெற்றுக் கொண்டார். விக்னா என்ற அலோசியஸ், அறிவு என்ற சிவகுமார் ஆகிய இரு விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களே யோகேஸ்வரனுடன் தொடர்பில் இருந்தவர்கள். அமிர்தலிங்கம் தங்கியிருந்த புல்லேர்ஸ் வீதி வீட்டிலேயே சந்திப்பை நடத்தலாம் என்று யோகேஸ்வரன் புலிகளுக்கு அறிவித்தார். அலோசியஸ் 1989 ஜுலை 13 ஆம் திகதி காலை 10 மணியளவில் யோகேஸ்வரனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட அலோசியஸ் புல்லேர்ஸ் வீதி வீட்டில் சந்திப்பை நடத்துவதற்கான யோசனைக்கு தங்களின் இணக்கத்தை தெரிவித்தார். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அது குறித்து அமிர்தலிங்கத்துக்கும் சிவசிதம்பரத்துக்கும் யோகேஸ்வரன் அறிவித்தார். ஆனால், கொழும்பில் இருந்த அன்றைய இந்திய உயர்ஸ்தானிகர் லெக்கான் லால் மெஹ்ரோத்ரா தாஜ்சமுத்ரா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்துபசாரத்தில் இரு தலைவர்களும் கலந்துகொள்ள வேண்டியிருந்தது ஒரு தடையாக இருந்தது. மாலை 6 மணிக்கு விடுதலை புலிகளைச் சந்திப்பதற்கு தயாராயிருக்குமாறும் அதற்கு பிறகு இந்திய தூதுவரின் இரவு விருந்துபசாரத்துக்கு செல்லுமாறும இரு தலைவர்களையும் யோகேஸ்வரன் வேண்டிக்கொண்டார். அதற்கு அவர்கள் இருவரும் இணங்கிக் கொண்டார்கள். அலோசியஸிடமிருந்து மாலை 4 மணியளவில் யோகேஸ்வரனுக்கு இரண்டாவது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அலோசியஸும் விடுதலை புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் யோகி என்ற நரேந்திரனும் சந்திப்பில் கலந்துகொள்ளும் சாத்தியம் இருந்தது. முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை போன்று மாலை 6 மணிக்கு அல்ல, மாலை 6.30 மணிக்கும் 7 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே விடுதலை புலிகள் சந்திப்புக்கு வருவார்கள் என்று அலோசியஸ் அறிவித்தார். யோகேஸ்வரன் அலோசியஸ் ஒரு வேண்டுகோளையும் விடுத்தார். தங்களிடம் ஆயுதங்கள் இருக்கிறதா இல்லையா என்று பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்வது யோகியின் தரத்தில் உள்ள ஒரு தலைவரை அவமதிப்பதாக அமையும் என்பதால் அவ்வாறு சோதனை எதையும் செய்யக்கூடாது என்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூறிவைக்குமாறு யோகேஸ்வரனிடம் அலோசியஸ் கேட்டுக் கொண்டார். பேச்சுக்களில் யோகி பங்கேற்கும் சாத்தியம் குறித்து யோகேஸ்வரனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் உடனடியாக பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த சப் - இன்ஸ்பெக்டர் தம்பிராஜா கந்தசாமியிடம் பேச்சுக்களில் பங்கேற்கவிருக்கும் விடுதலை புலிகள் குழுவினரை அவமதிப்பதாக அமையும் என்பதால் அவர்களை சோதனை செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தினார். "இந்த பயல்களை நம்பமுடியாது சேர்" என்று கூறி கந்தசாமி ஆட்சேபித்தார். விபரீதமாக எதுவும் நடக்காது என்று அவரிடம் யோகேஸ்வரன் உறுதியளித்தார். விடுதலை புலிகளின் மூத்த தலைவர் ஒருவர் பேச்சுக்களில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் அவமதிக்கப்படுவதாக உணரக்கூடாது என்றும் யோகேஸ்வரன் கூறினார். "அவர்கள் எங்களது விருந்தினர்கள் என்பதால் அவர்களை மிகுந்த மரியாதையுடன் நாம் நடத்தவேண்டும். அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தால் எதிர்காலத்தில் எம்மிடம் அவர்கள் வரமாட்டார்கள். எமது பேச்சுக்கள் முறிவடைந்துவிடும்" என்று யோகேஸ் கூறினார். கந்தசாமி தயக்கத்துடன் இணக்கி தனக்கு கீழ் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதன் பிரகாரம் அறிவுறுத்தினார். யோகேஸ்வரனும் மனைவி சரோஜினியும் சிவசிதம்பரத்துடன் சேர்ந்து வீட்டின் மேல்மாடியில் தங்கியிருந்த அதேவேளை, அமிர்தலிங்கமும் மனைவியும் மாவை சேனாதிராஜாவும் கீழ்த்தளத்தில் குடியிருந்தனர். விக்னா, விசு, அறிவு மூன்று விடுதலை புலிகளும் வந்து சேர்ந்தபோது மாலை 6.40 மணி. எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, யோகியை அங்கு காணவில்லை. விசு என்ற இராசையா அரவிந்தராஜா, விக்னா என்ற பீட்டர் லியோன் அலோசியஸ், அறிவு என்ற சிவகுமார் -- இவர்கள் மூவருமே வந்திருந்தனர். வாசலில் காவல் கடமையில் இருந்த சத்தியமூர்த்தி என்ற பொலிஸ் அதிகாரி மூவரையும் சோதனை எதுவுமின்றி உள்ளே அனுமதித்தார். சத்தியமூர்த்தி கந்தசாமிக்கு அறிவித்தபோது கந்தசாமி அவர்கள் மூவரையும் யோகேஸ்வரனை சந்திக்க மேல்மாடிக்கு அனுப்புமாறு கூறினார். விசுவும் அலோசியஸும் மேலே சென்ற அதேவேளை, அறிவு மாடிப்படிகளின் அடியில் நின்றுகொண்டார். மேல்மாடியில் யோகேஸ்வரனும் மனைவியும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். விடுதலை புலிகள் வந்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டதும் படிகளில் அரைவழியில் இறங்கிவந்து யோகேஸ்வரன் விசுவையும் அலோசியஸையும் சந்தித்தார். யோகி வரவில்லை என்று ஏமாற்றமடைந்தாலும் யோகேஸ்வரன் விசுவை அன்புடன் வரவேற்றார். அவர்கள் அமர்ந்திருந்து பேசினர். சரோஜினி சிற்றுண்டிகள் தயாரிப்பதற்கு சென்றார். கீழ்த்தளத்தில் இன்னொரு அறையில் சிவசதம்பரம், மாவை சேனாதிராஜா மற்றும் மங்கையர்க்கரசி சகிதம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அமிர்தலிங்கத்துக்கு ராஜு என்ற வேலைக்காரப் பையன் மூலமாக யோகேஸ்வரன் குறிப்பொன்றை அனுப்பினார். இந்திய தூதுவரின் விருந்துபசாரத்துக்கு செலாவதற்காக நன்றாக உடுத்து தயாராகியிருந்த அமிரும் சிவாவும் மேல்மாடிக்கு சென்ற அதேவேளை, மங்கையர்க்கரசியும் சேனாதிராஜாவும் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். அமிரும் சிவாவும் அறைக்குள் பிவேசித்ததும் விசுவும் அலோசியஸும் எழுந்து நின்று வரவேற்றனர். ஒருவரின் தோழில் தட்டிய அமிர்தலிங்கம் அவர்கள் இருவருக்கும் இடையில் பிரம்புக்கதிரை ஒன்றில் அமர்ந்தார்.சிவசிதம்பரம் சற்று தள்ளி அமர்ந்தார். யோகேஸ்வரன் சிற்றுண்டிகள் தயாரித்துக் கொண்டிருந்த சரோஜினிக்கு உதவுவதற்காக எழுந்து சென்றார். சரோஜினி தக்காளி சாண்ட்விச்களையும் பிஸ்கட்களையும் கொண்டுவந்தார். என்ன குடிக்க விரும்புகிறீர்கள் என்று விசுவையும் அலோசியஸையும் சரோஜினி கேட்டார். மென்பானம் அருந்துவதற்கு இரு புலிகளும் விரும்பினர். அமிர்தலிங்கம் தேனீரை விரும்பினார். சிவாவும் யோகேஸும் எதையும் குடிக்க விரும்பவில்லை. சரோஜினி இரு பழரச பானங்களையும் ஒரு தேனீரையும் கொண்டு வந்தார். அதற்கு பிறகு அவர் தனது அறைக்கு சென்றுவிட்டார். சுமுகமான சம்பாஷணை யோகேஸ்வரன் அறிமுகம் செய்துவைத்த பிறகு இரு விடுதலை புலிகளும் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தலைவர்களை சந்திப்பது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று கூறினர். அதே உணர்வுகளையே அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் பதிலுக்கு வெளிப்படுத்தினர். தமிழப் போராளிகளின் அர்ப்பணிப்பையும் தியாகங்களையும் தாங்கள் பெரிதும் மதித்து பாராட்டுவதாக தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் இரு தலைவர்களும் கூறினர். சகல தமிழ்க்குழுக்களும் ஒன்றுபட்டு பொதுவான அணுகுமுறை ஒன்றை வகுக்கவேண்டியது இப்போது அவசியம் என்றும் அல்லாவிட்டால் இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையின் மூலமாகக் கிடைத்த விளைவுகள் பயனற்றுப்போய்விடும் என்றும் அவர்கள் கூறினர். எந்தவொரு அரசியல் ஏற்பாட்டிலும் விடுதலை புலிகளுக்கு பெருமைக்குரிய இடம் வழங்கப்படும் என்று அமிர்தலிங்கம் உறுதியளித்தார் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களை விடுதலை புலிகளின் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவதாக விசு கூறினார். விடுதலை புலிகளின் உயர்பீடம் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்து இந்த விடயங்களை ஆராய்வதற்கு அக்கறையாக இருக்கிறது என்றும் அவர் கூறினார். கொழும்பில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியைச் சந்தித்து மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு விடுதலை புலிகளின் மூத்த தலைவர்கள் தயாராயிருப்பார்கள் என்றும் விசு குறிப்பிட்டார். இரு தரப்புகளுக்கும் இடையிலான சம்பாஷணை மிகவும் சுமுகமானதாக அமைந்தது. பெரும்பாலான கருத்துப்பரிமாறல்கள் அமிர் -- சிவா இரட்டையர்களுக்கும் விசுவுக்கும் இடையிலானதாக இருந்த அதேவேளை, யோகேஸ்வரனும் அலோசியஸும் பொதுவில் அமைதியாக இருந்தனர். ஒரு கட்டத்தில் அமிர்தலிங்கம் விடுதலை புலிகள் ஆயுதப்போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு திரும்புவதற்கான நேரம் வந்துவிட்டது என்று நல்லெண்ணத்துடன் கூறினார். "உங்களைப் போன்ற இளைஞர்கள் எல்லோருக்கும் ஜனநாயகம் பழைய பாணியிலானதாக தோன்றக்கூடும். ஆனால், உங்களுக்கு பழையவர்கள் கூறுகின்றவற்றையும் அமைதியாகக் கேளுங்கள்" என்று சிவசிதம்பரம் கூறினார். மேல்மாடியில் பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் தொடர்ந்துகொண்டிருந்த அதேவேளை, கீழ் மாடியில் ஏதோ பரபரப்பு காணப்பட்டது. கீழே காத்துக்கொண்டிருந்த அறிவு என்ற சிவகுமார் மாலை 7மணிக்கு பிறகு குழப்படையத் தொடங்கி விட்டார். அவர் தனது கைக்கடிகாரத்தை பார்த்தவாறு அமைதியிழந்தவராக மேல்மாடியை நோக்கி அடிக்கடி நோக்கிக் கொண்டிருந்தார். நிசங்க திப்பொட்டுமுனுவ கடமையில் இருந்த பொலிஸ்காரர்களில் ஒருவருக்கு சிவகுமாரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரின் பெயர் நிசங்க திப்பொட்டுமுனுவ. அவரின் சொந்த இடம் கேகாலை மாவட்டத்தில் ஹெட்டிமுல்லவில் உள்ள அக்கிரியாகல என்ற கிராமமாகும். நிசங்க மகாவலி அமைச்சில் இருந்தே அமிர்தலிங்கத்தின் பாதுகாப்பு கடமைக்காக அனுப்பப்பட்டவர். நிசங்கவும் சத்தியமூர்த்தியும் சிவகுமாரை பலவந்தமாக சோதனை நடத்தி கிரனேட் ஒன்றும் துப்பாக்கி ரவைகளும் அவரிடம் இருந்ததைக் கண்டுபிடித்தனர். அது குறித்து தம்பிராஜா கந்தசாமிக்கு அறிவிக்கப்பட்டது. சிவகுமாரை சத்தியமூர்த்தியின் காவலில் வைத்த பிறகு கந்தசாமியும் நிசங்கவும் அமைதியாக மேல்மாடிக்குச் சென்றனர். கந்தசாமி மாடிப்படிகளின் உச்சியில் நிற்க நிசங்க பல்கணிக்கு சென்று பிரதான அறைக்குள் இருந்தவர்கள் தன்னை பார்க்கமுடியாதவாறு நி்ன்றுகொண்டார். நடைபெற்றுக் கொண்டிருந்த பேச்சுவார்த்தையை குழப்புவதற்கு இருவரும் விரும்பவில்லை. ஆனால், சிவகுமாரிடமிருந்து கிரனேட்டும் துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டதால் உஷார் நிலையில் தயாராயிருந்தனர். அறைக்குள்ளே தோழமை உணர்வு தொடர்ந்து நிலவியது. அதற்கு பிறகு நடந்தது இது தான். நீங்கள் தான் உண்மையான அரக்கர்கள் அப்போது இரவு 7.20 மணி. விசு தனது பானத்தைக் குடித்து முடித்தபிறகு வெற்றுக் கிளாஸை மேசையில் வைப்பதற்காக எழுந்தார். பிறகு உடனே திரும்பி அமிர்தலிங்கத்தை பார்த்து "எல்லோரும் புலிகளைத்தான் அரக்கர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் நீங்கள் எல்லோரும்தான் அரக்கர்கள்" என்று அவர் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் மூன்று தலைவர்களும் விசு ஏதோ பகிடி விடுவதாக நினைத்துக் கொண்டனர். யோகேஸ்வரன் பலத்த சத்தத்துடன் சிரிக்க அமிரும் சிவாவும புனமுறுவல் பூத்தனர். அப்போது விசு தனது துப்பாக்கியை எடுத்து அமிர்தலிங்கத்தை நோக்கிச் சுடத் தொடங்கினார். யோகேஸ்வரன் சத்தமிட்டவாறு தனது கதிரையில் இருந்து எழுந்தார். அப்போது அலோசியஸ் தனது துப்பாக்கியால் யோகேஸ்வரனை நோக்கிச் சுட்டார். சற்று தள்ளி அமர்ந்திருந்த சிவசிதம்பரம் அதிர்ச்சியடைந்தவராக எழுந்து " வேண்டாம், வேண்டாம் " என்று தமிழில் கத்தினார். அப்போது விசு சிவாவின வலது தோளில் சுட்டார். துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கேட்டு அறையின் உள்ளே பார்த்த நிசங்க ஜன்னல் கண்ணாடிகளின் ஊடாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். அவர் விசுவையும் அலோசியஸையும் சுட்டுக் காயப்படுத்தினார். அப்போது இருவரும் அறையை விட்டு வெளியே ஓடினர். சூட்டுச் சத்தங்களைக் கேட்ட கந்தசாமியும் அவர்கள் இருவரையும் நோக்கி சுட்டுக்கொண்டு ஓடிவந்தார். காயமடைந்த விசுவும் அலோசியஸும் திருப்பிச் சுட்டுக் கொண்டு படிகளின் வழியாக கீழே ஓடுவதற்கு முயற்சித்தனர். ஆனால், நிசங்க தன்னிடமிருந்த இரண்டாவது துப்பாக்கியால் இருவரையும் நோக்கி தொடர்ந்து சுட்டுக் கொண்டேயிருந்தார். இருவரும் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கேட்டதும் சத்தியமூர்த்தி சிவகுமாரைப் பிடித்தவாறு மல்லுக் கட்டிக்கொண்டிருந்தார். சத்தியமூர்த்தியிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட சிவகுமார் ஏற்கெனவே தன்னிடமிருந்து கைப்பற்றப்பட்ட கிரனேட்டை எடுக்க முயற்சித்தார். அதை அவர் எடுத்து வெடிக்க வைக்க முன்னதாக நிசங்க படிகளில் இருந்து கீழே ஓடிவந்து அவரைச் சுட்டுக் காயப்படுத்தினரார். அப்போது சிவகுமார் ஓட முயற்சிக்கவே நிசங்க மீண்டும் அவரை நோக்கச்சுட்டுக் கீழே கொண்டுவந்தார். மூன்று கொலையாளிகளுமே சம்பவ இடத்தில் நிசங்கவினால் கொல்லப்பட்டனர். நிசங்கவின் சூடுகளினாலேயே விடுதலை புலிகள் இறந்தார்கள் என்றபோதிலும், மற்றையவர்களும் கூட அவர்கள் மீது தாக்குதல்களை நடத்தினார்கள். சப் - இன்ஸ்பெக்டர் கந்தசாமி அலோசியஸை சுட்டுக் காயப்படுத்திய அதேவேளை, கான்ஸ்டபிள் லக்ஸ்மனின் துப்பாக்கிப் பிரயோகத்தில் விசுவும் அறிவும் காயமடைந்தனர். இரு அதிகாரிகளும் தமிழர்கள் என்பதால் அவர்களது குடும்பங்களை விடுதலை புலிகள் பழிவாங்காமல் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாக அவர்கள் நடத்திய தாக்குதல் விபரங்கள் பத்திரிகைகளில் அப்போது வெளியிடப்படவில்லை. இரண்டாவது துப்பாக்கி துப்பாக்கிச் சண்டையில் நிசங்கவுக்கு பெரிதும் உதவியது அவரிடமிருந்த இரண்டாவது துப்பாக்கியேயாகும். குறிப்பாக, அறிவு முதலில் சுடப்பட்டபோது அவர் தனது கையில் கிரனேட்டை வைத்திருந்தார். அதனால் புலிகளை வெற்றிகொள்வதற்கு நிசங்கவிடமிருந்த இரண்டாவது துப்பாக்கி கைகொடுத்தது. அதற்கு காரணம் அமிர்தலிங்கத்தின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் இருந்த இன்னொரு பொலிஸ்காரர் அன்றையதினம் விடுமுறையில் சென்றிருந்ததேயாகும். சில்வா என்ற அந்த பொலிஸ்காரர் நிசங்கவிடம் தனது ஆயுதத்தை ஒப்படைத்திருந்தார். அதனால் புலிகள் மீது இரு துப்பாக்கிகளினால் நிசங்கவினால் தாக்குதல் நடத்தக் கூடியதாக இருந்தது. மகாவலி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த நிசங்கவும் சில்வாவும் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளாக அமிர்தலிங்கத்தின் பாதுகாப்புக்காக காமினி திசாநாயக்கவினால் தனிப்பட்ட முறையில் கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர். " பாஸ்ராட்ஸ், பாஸ்ராட்ஸ்" துப்பாக்கிச் சூட்டு சத்தங்களை கேட்டு மங்கையர்க்கரசி, சரோஜினி, மாவை சேனாதிராஜா ஆகியோர் பின்புறமாக இருந்த படிகளின் வழியாக மேல்மாடிக்கு ஓடிச் சென்றனர். அமிர்தலிங்கம் இரத்தம் வடிந்தோடிய நிலையில் அசைவின்றி தனது கதிரையில் கிடந்தார். அவர் இறந்துவிட்டார் எனப்தை அறியாத மங்கையர்க்கரசி அவரின் தலையின் பின்புறத்தில் தலையணை ஒன்றை வைத்து அவரை தாங்கிப்பிடித்தார். நிலத்தில் இரத்த வெள்ளத்தில் இறந்துகொண்டிருந்த யோகேஸ்வரன் " பாஸ்ராட்ஸ், பாஸ்ராட்ஸ் " என்று ஆங்கிலத்தில் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அவரின் அருகில் மனைவி சரோஜினி முழந்தாளிட்டு நின்றுகொண்டிருந்தார். சிவசிதம்பரம் பேசமுடியாதவராக சுவரில் சாய்ந்து கிடந்தார். சுடப்பட்ட தலைவர்கள் அம்புலன்ஸ்களில் வைத்தியசாலைக்கு விரையப்பட்டனர். அமிர்தலிங்கத்தின் உடலை பரிசோதனை செய்த கொழும்பு சட்டமருத்துவ அதிகாரி டாக்டர் எம்.எஸ். எல். சல்காது தலையிலும் நெஞ்சிலும் ஏற்பட்ட காயங்களினால் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தார். யோகேஸ்வரனின் உடலைப் பரிசோதித்த பிரதி மருத்துவ அதிகாரி இதயத்திலும் ஈரலிலும் ஏற்பட்ட காயங்களினால் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தார். விடுதலை புலிகளின் " மறுப்பு " கொலையாளிகள் மீதான மரணவிசாரணை ஜூலை 21 ஆம் திகதி நடைத்தப்பட்டது. அவர்களின் சடலங்களை பொறுப்பேற்பதற்கு எவரும் உரிமைகோரி வரவில்லை என்பதால் கணிசமான நாட்களுக்கு பிறகு அவை அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டன. தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தலைவர்களின் கொலைக்கு தாங்கள் பொறுப்பில்லை என்று கூறிய விடுதலை புலிகள் இயக்கம் அந்த மறுப்பை தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தது. ஆனால், ஆனந்தபுரத்தில் ஒரு போலி இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டதாக செய்திகள் வந்தன. கொலைகளுக்கு விடுதலை புலிகளே பொறுப்பு என்பதே தமிழ்ச் சமூகத்தில் கதையாக இருந்தது. கொலையாளிகள் மூவரும் உயிருடன் தப்பிச் சென்றிருந்தால் கொலைகளுக்கு பொறுப்பு என்ற குற்றஞ்சாட்டப்படுவதில் இருந்து விடுதலை புலிகள் இயக்கம் தப்பியிருக்கக்கூடும். அன்றைய பிரேமதாச அரசாங்கமும் கொலைகளுக்கு விடுதலை புலிகள் பொறுப்பு இல்லை என்று காட்டுவதற்கு சகல பிரயத்தனங்களையும் எடுத்திருக்கவும் கூடும். குற்றப்பொறுப்பு ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) அல்லது புதுடில்லிக்கு சார்பான தமிழ்க்குழு ஒன்றின் மீது சுமத்தப்பட்டிருக்கவும் கூடும். அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருந்த பேச்சுவார்த்தைகளை குழப்புவதற்கான ஒரு சதிமுயற்சியாகவே தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று கதை கட்டிவிடப்பட்டிருக்கவும் கூடும். ஆனால், அத்தகைய சூழ்நிலைக்கு வாய்ப்பு இல்லாமல் பே்ய்விட்டது. ஏனென்றால் மூன்று விடுதலை புலிகளும் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதுடன அவர்களின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்பட்டும் இருந்தன. இந்த சோகமிகுந்த சம்பவத்தில் ' ஹீரோ ' மூன்று கொலையாளிகளையும் சுட்டுக்கொன்ற சிங்கள பொலிஸ்காரர் நிசங்க திப்பொட்டுமுனுவவேயாவார். ஒரு கொலை முயற்சியில் சம்பந்தப்பட்ட சகல விடுதலை புலிகள் இயக்கத்தின் கொலையாளிகளும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட முதலாவது சம்பவமும் ஒரேயொரு சம்பவமும் இதுவேயாகும். சிவசிதம்பரம் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி அல்லது இலங்கை தமிழரசு கட்சி பல வருடங்களுக்கு முன்னர் முயற்சி எடுத்திருந்தால் அமிர்தலிங்கம் கொலை பற்றி விரிவான முறையில் உண்மையை வெளிக்கொணரக்கூடியதாக இருந்திருக்கும். கொலைகளை நேரில் கண்ட ஒரேயொரு சாட்சியான முருகேசு சிவசிதம்பரம் சம்பவம் தொடர்பான விடயங்கள் குறித்து வெளிப்படையாக பேசாமல் மௌனம் காத்தார். அவ்வாறு அவர் செய்ததை அன்று நிலவிய சூழ்நிலைகளின் பின்புலத்தில் விளங்கிக்கொள்ள முடிந்தது. ஆனால், என்ன நடந்தது என்பதை குறிப்பிட்ட ஒரு சிலருக்கு சிவசிதம்பரம் தனிப்பட்ட முறையில் விரிவான முறையில் கூறினார். "சிவா ஐயா" உண்மையாக என்ன நடந்தது என்பதை ஒரு தொலைபேசி சம்பாஷணையில் என்னிடம் முழு விபரமாகக் கூறினார். அவரது நினைவுத் திறனுக்காக நான் பாராட்டியபோது "அன்றைய தினம் நடந்ததை எவ்வாறு தம்பி என்னால் மறக்கமுடியும்? " என்று கூறினார். அவருக்கும் எனக்கும் இடையிலான அந்த தொலைபேசி சம்பாஷணை கொலைச்சம்பவம் இடம்பெற்று சில வருடங்களுக்கு பிறகு நடந்தது. அன்று எனக்கு கூறியவற்றை பிரசுரிக்கக்கூடாது என்று சிவா ஐயா என்னிடம் உறுதி வாங்கினார். "நான் செத்தபிறகு நீங்கள் எழுதலாம்" என்று அவர் கூறினார். 2002 ஜூனில் சிவா ஐயா இறந்தார். மங்கையர்க்கரசி அமிர்தலிங்கத்துடனும் சரோஜினி யோகேஸ்வரனுடனும் கொலைச்சம்பவங்கள் குறித்து அவர்களின் நினைவுகள் பற்றி நான் பேசினேன். 1998 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாநகர மேயராக தெரிவான திருமதி யோகேஸ்வரனும் விடுதலை புலிகளினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என்பது இன்னொரு சோகக்கதை. திருமதி அமிர்தலிங்கம் 2016 ஆம் ஆண்டில் லண்டனில் அமைதியாக மரணத்தை தழுவினார். சிறிமாவோ கவலை இதுதான் யோகேஸ்வரனுடன் சேர்த்து முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் விடுதலை புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட துன்பியல் கதை. அன்றைய எதிச்க்கட்சி தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு தமிழ்த் தலைவர்களின் கொலை குறித்து லசந்த விக்கிரமதுங்க அறிவித்தபோது அவர் "யார் இதைச் செய்தது?" என்று பதறிக்கொண்டு கேட்டார். விடுதலை புலிகள் தான் செய்தார்கள் என்று லசந்த கூறியபோது நிம்மதிப் பெருமூச்சுவிட்ட திருமதி பண்டாரநாயக்க "அவர்களை சிங்களவர் ஒருவர் கொலை செய்வில்லை என்பது எனக்கு மகிழ்ச்சி" பதிலளித்தார். அமிர்தலிங்கத்தின் அரசியலை சிங்களவர்களில் பலர் வெறுத்திருக்கலாம். ஆனால், அவர்கள் அவரைக் கொலை செய்யவில்லை. அமிர்தலிங்கத்தை முன்னர் தங்களது ஹீரோவாக கருதிய தமிழ் இளைஞர்களே கொலை செய்தார்கள். https://www.virakesari.lk/article/219983

தமிழ் அரசியல் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் கொலை

2 months ago

14 JUL, 2025 | 03:59 PM

image

டி.பி.எஸ். ஜெயராஜ்

இலங்கையில் முக்கியமான அரசியல் தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட முதல் சம்பவம் 1959 செப்டெம்பரில்  இடம்பெற்றது. பதவியில் இருந்த பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க, தல்துவ சோமராம தேரோ என்ற பௌத்த பிக்குவினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது நாடு அதிர்ச்சியில் உறைந்தது. அதையடுத்து வந்த வருடங்களில் இனப்பிளவின் இருமருங்கிலும் மேலும் பல அரசியல் படுகொலைகள் இடம்பெற்றதை காணக்கூடியதாக இருந்தது. தமிழீழ விடுதலை புலிகள் உட்பட பல்வேறு தமிழப் போராளிக் குழுக்களினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரசியல் வன்முறை, ஜனதா விமுக்தி பெரமுனவின்  ( ஜே.வி.பி.) வன்முறை மற்றும் அரசினாலும் அதன் அமைப்புக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட எதிர் வன்முறைகளில் பல வருடங்களாக பெரும் எண்ணிக்கையான அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 

தமிழ் அரசியல் தலைவர்  அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் 1989 ஜூலை 13 ஆம் திகதி கொல்லப்பட்ட சம்பவம்  இலங்கையின்  அரசியல் படுகொலைகளின் வரலாற்றில் முக்கியமான ஒரு அத்தியாயமாகும். யாழ்ப்பாணத்தில் பண்ணாகத்தைச் சேர்ந்தவரான அமிர்தலிங்கம் 1927 ஆகஸ்ட் 26 ஆம் திகதி பிறந்தார். ஈழத்துக்காந்தி என்று அறியப்பட்ட -- பெருமதிப்புக்குரிய தமிழ்த் தலைவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் பிரதம ' தளபதியாக ' பல வருடங்கள் செயற்பட்ட அமிர்தலிங்கம்  மக்கள் வசீகரமும் ஆற்றலும் கொண்ட ஒரு அரசியல்வாதியாவார். 

சட்டத்தரணியான அமிர்தலிங்கம் 1956 ஆம் ஆண்டு தொடக்கம் 1970 ஆம் ஆண்டு வரை இலங்கை தமிழரசு கட்சியின்  வட்டுக்கோட்டை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் 1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1973 ஆம் ஆண்டுவரை தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் காங்கேசன்துறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர். 1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1983 ஆம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவராகவும் பதிவி வகித்த அவர், 1989  ஆம் ஆண்டில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

இந்திய இராணுவம் 

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவும் 1987 ஜூலை 29 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திட்ட  இந்திய -- இலங்கை சமாதான உடன்படிக்கையை தொடர்ந்து இந்திய அமைதிகாக்கும் படை என்று அறியப்பட்ட இந்திய இராணுவம் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டது. இந்திய இராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் விரைவாகவே போர் மூண்டது. அதேவேளை, இலங்கையில் இந்திய இராணுவத்தின் பிரசன்னத்தை சிங்களவர்களில் பலரும் கூட வெறுத்தார்கள். இந்திய இராணுவத்தின் பிரசன்னத்தை எதிர்த்து ஜே.வி.பி.யும் வன்முறைப் போராட்டத்தை தொடங்கியது. 

முன்னர் பிரதமராக இருந்த ரணசிங்க பிரேமதாச ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கு பிறகு 1988 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜனாதிபதியாக வந்தார். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்துவது என்பது பிரேமதாசவின் முக்கியமான  தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து பிரேமதாச வழக்கத்துக்கு மாறான ஒரு நடவடிக்கையை எடுத்தார். வேறுபட்ட காரணங்களுக்காக என்றாலும், ஜனாதிபதி பிரேமதாசவும் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்று விரும்பியதனால் அவர்கள் இருவரினதும் நலன்கள் சங்கமித்தன. 

ஆனால், இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகள்  நடைமுறைப்படுத்தப்படும் வரை, இலங்கையில் இந்திய இராணுவம் தொடர்ந்தும் நிலகொண்டிருக்க வேண்டும் என்று தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் போன்ற பல தமிழர்கள் விரும்பினர். அந்த சமாதான உடன்படிக்கைதான் மாகாணசபைகள் அமைக்கப்படுவதற்கு வழிவகுத்தது.

இந்திய இராணுவம் திருப்பியனுப்பப்பட வேண்டும் என்று பிரேமதாச அரசாங்கமும் விடுதலை புலிகளும் விரும்பிய அதேவேளை,  அமிர்தலிங்கம் அதை எதிர்த்தார். அந்த கட்டத்தில் இந்திய இராணுவம் திருப்பியனுப்பப்படக் கூடாது என்று 1989 ஜூனில் அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் கடுமையாக வாதிட்டார். அமிர்தலிங்கத்தின் அரசியல் நம்பகத்தன்மை மற்றும் மதிப்பின் விளைவாக அகிம்சைவழி அரசியல் தலைவரான அவரின் அபிப்பிராயத்துக்கு சர்வதேச மட்டத்தில் செல்வாக்கு இருந்தது. 

WhatsApp_Image_2025-07-14_at_12.32.25_PM

துரோகிப் பட்டம் 

தமிழ் இளைஞர்கள் அமிர்தலிங்கத்தை மாபெரும் தலைவராக மதித்துப் போற்றிய காலம் ஒன்று இருந்தது. 1976 ஆம் ஆண்டில் தமிழீழம் என்று அழைக்கப்பட்ட தனிநாடு ஒன்றுக்கான கோரிக்கையை பிரசாரப்படுத்துவதில் அவர் தலைமைப் பாத்திரத்தைை வகித்தார். ஆனால், பிறகு அமிர்தலிங்கம் தமிழீழக் கோரிக்கையை தணித்து ஐக்கியப்பட்ட ஆனால், ஒற்றையாட்சி அல்லாத இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வு ஏற்பாட்டில் நாட்டம் காட்டினார். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை புலிகளும் அவர்களது ஆதரவாளர்களும் அமிரை துரோகி என்று அழைத்தனர். இந்திய இராணுவம் தொடர்பான அவரின் நிலைப்பாடு காரணமாக அமிர்தலிங்கம் மீதான  விடுதலை புலிகளின் பகைமை மேலும் அதிகரித்தது.

இத்தகைய ஒரு பின்புலத்திலேயே, 36 வருடங்களுக்கு முன்னர் அமிர்தலிங்கம் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கொலை நடந்த நேரத்தில் நான் கனடாவில் இருந்தேன். ஆனால், காலஞ்சென்ற எம். சிவசிதம்பரம், கலாநிதி நீலன் திருச்செல்வம், திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம், திருமதி சரோஜினி யோகேஸ்வரன், மருத்துவர் பகீரதன் அமிர்தலிங்கம், வீரசிங்கம் ஆனந்தசங்கரி, பி. சூசைதாசன் மற்றும் சோமசுந்தரம் (மாவை ) சேனாதிராஜா  போன்ற தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியுடன் தொடர்புடைய பலருடன் வெவ்வேறு நேரங்களில் அந்த சம்பவம் குறித்து நான் பேசினேன். அவர்களுடனான  சம்பாஷணைகள், நேர்காணல்கள் மற்றும் ஊடகச்செய்திகளை அடிப்படையாக வைத்து அமிர்தலிங்கத்தின் கொலை தொடர்பாக ஏற்கெனவே நான் விரிவாக எழுதியிருந்தேன்.

ஜூலை 13 ஆம் திகதி (கடந்த ஞாயிற்றுக்கிழமை)  அமிர்தலிங்கத்தின் 36 வது நினைவுதினம் வந்துபோனதால் எனது முன்னைய எழுத்துக்களின் உதவியுடன் அவரின் கொலைச் சம்பவத்தை மீட்டுப்பார்க்கிறேன்.

342/ 2 புல்லேர்ஸ் வீதி 

அமிர்தலிங்கமும் அவரது மனைவி மங்கையர்க்கரசியும் பௌத்தாலோக மாவத்தை / புல்லேர்ஸ் வீதியில் 342/2  ஆம் இலக்க இல்லத்தில் வசித்துவந்தனர். ஆடை உற்பத்தி தொழில்துறையில் ஈடுபட்ட மன்னாரைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானது அந்த வீடு. அமிர்தலிங்கத்தையும் மனைவியையும் தவிர, தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் எம்.சிவசிதம்பரம், முன்னாள் யாழ்ப்பாண தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வி. யோகேஸ்வரன், அவரது மனைவி சரோஜினி, தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் இளைஞர் பிரிவின் தலைவரான மாவை சேனாதிராஜா ஆகியோரும் அந்த வீட்டில் ஒன்றாக தங்கியிருந்தனர்.

காமினி திசாநாயக்க அமைச்சராக இருந்தபோது தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தலைவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தார். மகாவலி அமைச்சைச் சேர்ந்த சில பொலிஸ் அதிகாரிகள் அந்த தலைவர்களின் பாதுகாப்புக்காக பணிக்கமர்த்தப்பட்டனர்.

அதேவேளை, விடுதலை புலிகள் முன்னாள் யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுடன் தொடர்புகளை ஏற்படுத்தத் தொடங்கினர். தமிழர்களின் ஐக்கியம் குறித்து ஆராய்வதற்காக அமிர்தலிங்கத்துடன் சந்திப்பு ஒன்றுக்கு யோகேஸ்வரன் ஏற்பாடு செய்யவேண்டும் என்று விடுதலை புலிகள் விரும்பினர். அது தொடர்பாக யோகேஸ்வரன் அமிர்தலிங்கத்துடனும் சிவசிதம்பரத்துடனும் பேசி  சந்திப்புக்கான அவர்களின் சம்மதத்தை பெற்றுக் கொண்டார். விக்னா என்ற அலோசியஸ், அறிவு என்ற சிவகுமார் ஆகிய இரு விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களே யோகேஸ்வரனுடன் தொடர்பில் இருந்தவர்கள். அமிர்தலிங்கம் தங்கியிருந்த புல்லேர்ஸ் வீதி வீட்டிலேயே சந்திப்பை நடத்தலாம் என்று யோகேஸ்வரன் புலிகளுக்கு அறிவித்தார்.

WhatsApp_Image_2025-07-14_at_12.32.24_PM

அலோசியஸ்

1989 ஜுலை 13  ஆம் திகதி காலை 10 மணியளவில் யோகேஸ்வரனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட அலோசியஸ் புல்லேர்ஸ் வீதி வீட்டில் சந்திப்பை நடத்துவதற்கான யோசனைக்கு தங்களின் இணக்கத்தை தெரிவித்தார். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அது குறித்து அமிர்தலிங்கத்துக்கும் சிவசிதம்பரத்துக்கும் யோகேஸ்வரன் அறிவித்தார்.

ஆனால், கொழும்பில் இருந்த அன்றைய இந்திய உயர்ஸ்தானிகர் லெக்கான் லால் மெஹ்ரோத்ரா தாஜ்சமுத்ரா  ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்துபசாரத்தில் இரு தலைவர்களும் கலந்துகொள்ள வேண்டியிருந்தது ஒரு தடையாக இருந்தது. மாலை 6 மணிக்கு விடுதலை புலிகளைச் சந்திப்பதற்கு தயாராயிருக்குமாறும் அதற்கு பிறகு இந்திய தூதுவரின் இரவு விருந்துபசாரத்துக்கு செல்லுமாறும  இரு தலைவர்களையும் யோகேஸ்வரன் வேண்டிக்கொண்டார். அதற்கு அவர்கள் இருவரும் இணங்கிக் கொண்டார்கள்.

அலோசியஸிடமிருந்து மாலை 4 மணியளவில் யோகேஸ்வரனுக்கு இரண்டாவது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அலோசியஸும் விடுதலை புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் யோகி என்ற நரேந்திரனும் சந்திப்பில் கலந்துகொள்ளும் சாத்தியம் இருந்தது. முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை போன்று மாலை 6 மணிக்கு அல்ல, மாலை 6.30 மணிக்கும் 7 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே விடுதலை புலிகள் சந்திப்புக்கு வருவார்கள் என்று அலோசியஸ் அறிவித்தார்.

யோகேஸ்வரன் 

அலோசியஸ் ஒரு வேண்டுகோளையும் விடுத்தார். தங்களிடம் ஆயுதங்கள் இருக்கிறதா இல்லையா என்று பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்வது யோகியின் தரத்தில் உள்ள ஒரு தலைவரை அவமதிப்பதாக அமையும் என்பதால் அவ்வாறு சோதனை எதையும் செய்யக்கூடாது என்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூறிவைக்குமாறு யோகேஸ்வரனிடம் அலோசியஸ் கேட்டுக் கொண்டார்.  பேச்சுக்களில் யோகி பங்கேற்கும் சாத்தியம் குறித்து யோகேஸ்வரனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவர் உடனடியாக  பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த சப் - இன்ஸ்பெக்டர் தம்பிராஜா கந்தசாமியிடம் பேச்சுக்களில் பங்கேற்கவிருக்கும் விடுதலை புலிகள் குழுவினரை அவமதிப்பதாக அமையும் என்பதால் அவர்களை சோதனை செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தினார். "இந்த பயல்களை நம்பமுடியாது சேர்" என்று  கூறி கந்தசாமி ஆட்சேபித்தார். விபரீதமாக எதுவும் நடக்காது என்று அவரிடம் யோகேஸ்வரன் உறுதியளித்தார்.

விடுதலை புலிகளின் மூத்த தலைவர் ஒருவர் பேச்சுக்களில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் அவமதிக்கப்படுவதாக உணரக்கூடாது என்றும் யோகேஸ்வரன் கூறினார். "அவர்கள் எங்களது விருந்தினர்கள் என்பதால் அவர்களை மிகுந்த மரியாதையுடன் நாம் நடத்தவேண்டும். அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தால் எதிர்காலத்தில் எம்மிடம் அவர்கள் வரமாட்டார்கள். எமது பேச்சுக்கள்  முறிவடைந்துவிடும்" என்று யோகேஸ் கூறினார். கந்தசாமி தயக்கத்துடன் இணக்கி தனக்கு கீழ் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதன் பிரகாரம் அறிவுறுத்தினார்.

யோகேஸ்வரனும் மனைவி சரோஜினியும் சிவசிதம்பரத்துடன் சேர்ந்து வீட்டின் மேல்மாடியில் தங்கியிருந்த அதேவேளை, அமிர்தலிங்கமும் மனைவியும் மாவை சேனாதிராஜாவும் கீழ்த்தளத்தில் குடியிருந்தனர். 

விக்னா, விசு, அறிவு 

மூன்று விடுதலை புலிகளும் வந்து சேர்ந்தபோது  மாலை 6.40 மணி. எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, யோகியை அங்கு காணவில்லை. விசு என்ற இராசையா அரவிந்தராஜா, விக்னா என்ற பீட்டர் லியோன் அலோசியஸ், அறிவு என்ற சிவகுமார் -- இவர்கள் மூவருமே வந்திருந்தனர். வாசலில் காவல் கடமையில் இருந்த சத்தியமூர்த்தி என்ற பொலிஸ் அதிகாரி மூவரையும் சோதனை எதுவுமின்றி உள்ளே அனுமதித்தார்.

சத்தியமூர்த்தி கந்தசாமிக்கு அறிவித்தபோது கந்தசாமி அவர்கள் மூவரையும் யோகேஸ்வரனை சந்திக்க மேல்மாடிக்கு அனுப்புமாறு கூறினார்.  விசுவும் அலோசியஸும் மேலே சென்ற அதேவேளை, அறிவு மாடிப்படிகளின் அடியில் நின்றுகொண்டார்.

மேல்மாடியில் யோகேஸ்வரனும் மனைவியும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர்.  விடுதலை புலிகள் வந்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டதும் படிகளில் அரைவழியில் இறங்கிவந்து யோகேஸ்வரன் விசுவையும் அலோசியஸையும் சந்தித்தார். யோகி வரவில்லை என்று ஏமாற்றமடைந்தாலும் யோகேஸ்வரன் விசுவை அன்புடன் வரவேற்றார். 

அவர்கள் அமர்ந்திருந்து பேசினர். சரோஜினி சிற்றுண்டிகள் தயாரிப்பதற்கு சென்றார். கீழ்த்தளத்தில் இன்னொரு அறையில் சிவசதம்பரம், மாவை சேனாதிராஜா மற்றும் மங்கையர்க்கரசி சகிதம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அமிர்தலிங்கத்துக்கு ராஜு என்ற வேலைக்காரப் பையன் மூலமாக யோகேஸ்வரன் குறிப்பொன்றை அனுப்பினார். இந்திய தூதுவரின் விருந்துபசாரத்துக்கு செலாவதற்காக நன்றாக உடுத்து தயாராகியிருந்த அமிரும் சிவாவும் மேல்மாடிக்கு சென்ற அதேவேளை, மங்கையர்க்கரசியும் சேனாதிராஜாவும் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர்.

அமிரும் சிவாவும் அறைக்குள் பிவேசித்ததும் விசுவும் அலோசியஸும் எழுந்து நின்று வரவேற்றனர். ஒருவரின் தோழில் தட்டிய அமிர்தலிங்கம் அவர்கள் இருவருக்கும் இடையில் பிரம்புக்கதிரை ஒன்றில் அமர்ந்தார்.சிவசிதம்பரம் சற்று தள்ளி அமர்ந்தார்.

யோகேஸ்வரன் சிற்றுண்டிகள் தயாரித்துக் கொண்டிருந்த சரோஜினிக்கு  உதவுவதற்காக எழுந்து சென்றார். சரோஜினி தக்காளி சாண்ட்விச்களையும் பிஸ்கட்களையும் கொண்டுவந்தார். என்ன குடிக்க விரும்புகிறீர்கள் என்று விசுவையும் அலோசியஸையும் சரோஜினி கேட்டார். மென்பானம் அருந்துவதற்கு  இரு புலிகளும்  விரும்பினர். அமிர்தலிங்கம் தேனீரை விரும்பினார். சிவாவும் யோகேஸும் எதையும் குடிக்க விரும்பவில்லை. சரோஜினி இரு பழரச பானங்களையும் ஒரு தேனீரையும் கொண்டு வந்தார். அதற்கு பிறகு அவர் தனது அறைக்கு சென்றுவிட்டார்.

WhatsApp_Image_2025-07-14_at_12.32.25_PM

சுமுகமான சம்பாஷணை 

யோகேஸ்வரன் அறிமுகம் செய்துவைத்த பிறகு இரு விடுதலை புலிகளும் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தலைவர்களை  சந்திப்பது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று கூறினர். அதே உணர்வுகளையே அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் பதிலுக்கு வெளிப்படுத்தினர். தமிழப் போராளிகளின் அர்ப்பணிப்பையும் தியாகங்களையும் தாங்கள் பெரிதும் மதித்து பாராட்டுவதாக தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் இரு தலைவர்களும் கூறினர். 

சகல தமிழ்க்குழுக்களும் ஒன்றுபட்டு பொதுவான அணுகுமுறை ஒன்றை வகுக்கவேண்டியது இப்போது அவசியம் என்றும் அல்லாவிட்டால் இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையின் மூலமாகக் கிடைத்த விளைவுகள் பயனற்றுப்போய்விடும் என்றும் அவர்கள் கூறினர். எந்தவொரு அரசியல் ஏற்பாட்டிலும் விடுதலை புலிகளுக்கு பெருமைக்குரிய இடம் வழங்கப்படும் என்று அமிர்தலிங்கம் உறுதியளித்தார் 

வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களை விடுதலை புலிகளின் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவதாக விசு கூறினார். விடுதலை புலிகளின் உயர்பீடம் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்து இந்த விடயங்களை ஆராய்வதற்கு அக்கறையாக இருக்கிறது என்றும் அவர் கூறினார். கொழும்பில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியைச் சந்தித்து மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு விடுதலை புலிகளின் மூத்த தலைவர்கள் தயாராயிருப்பார்கள்  என்றும் விசு குறிப்பிட்டார். இரு தரப்புகளுக்கும் இடையிலான சம்பாஷணை மிகவும் சுமுகமானதாக அமைந்தது. பெரும்பாலான கருத்துப்பரிமாறல்கள் அமிர் -- சிவா இரட்டையர்களுக்கும் விசுவுக்கும் இடையிலானதாக இருந்த அதேவேளை, யோகேஸ்வரனும் அலோசியஸும் பொதுவில் அமைதியாக இருந்தனர்.

ஒரு கட்டத்தில் அமிர்தலிங்கம் விடுதலை புலிகள் ஆயுதப்போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு திரும்புவதற்கான நேரம் வந்துவிட்டது என்று நல்லெண்ணத்துடன் கூறினார். "உங்களைப் போன்ற இளைஞர்கள் எல்லோருக்கும் ஜனநாயகம் பழைய பாணியிலானதாக தோன்றக்கூடும். ஆனால், உங்களுக்கு பழையவர்கள் கூறுகின்றவற்றையும் அமைதியாகக் கேளுங்கள்" என்று சிவசிதம்பரம் கூறினார்.

மேல்மாடியில் பேச்சுவார்த்தை  சுமுகமான முறையில் தொடர்ந்துகொண்டிருந்த அதேவேளை, கீழ் மாடியில் ஏதோ பரபரப்பு காணப்பட்டது. கீழே காத்துக்கொண்டிருந்த அறிவு என்ற சிவகுமார் மாலை  7மணிக்கு பிறகு குழப்படையத் தொடங்கி விட்டார். அவர் தனது கைக்கடிகாரத்தை பார்த்தவாறு அமைதியிழந்தவராக மேல்மாடியை நோக்கி அடிக்கடி நோக்கிக் கொண்டிருந்தார்.

நிசங்க திப்பொட்டுமுனுவ 

கடமையில் இருந்த பொலிஸ்காரர்களில்  ஒருவருக்கு சிவகுமாரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரின் பெயர் நிசங்க திப்பொட்டுமுனுவ. அவரின் சொந்த இடம் கேகாலை மாவட்டத்தில் ஹெட்டிமுல்லவில் உள்ள அக்கிரியாகல என்ற கிராமமாகும். நிசங்க மகாவலி அமைச்சில் இருந்தே அமிர்தலிங்கத்தின் பாதுகாப்பு கடமைக்காக அனுப்பப்பட்டவர்.

நிசங்கவும் சத்தியமூர்த்தியும் சிவகுமாரை பலவந்தமாக சோதனை நடத்தி கிரனேட் ஒன்றும்  துப்பாக்கி ரவைகளும்  அவரிடம் இருந்ததைக் கண்டுபிடித்தனர். அது குறித்து தம்பிராஜா கந்தசாமிக்கு அறிவிக்கப்பட்டது. சிவகுமாரை சத்தியமூர்த்தியின் காவலில் வைத்த பிறகு  கந்தசாமியும் நிசங்கவும் அமைதியாக மேல்மாடிக்குச் சென்றனர்.

கந்தசாமி மாடிப்படிகளின் உச்சியில் நிற்க நிசங்க பல்கணிக்கு சென்று பிரதான அறைக்குள் இருந்தவர்கள் தன்னை பார்க்கமுடியாதவாறு நி்ன்றுகொண்டார். நடைபெற்றுக் கொண்டிருந்த பேச்சுவார்த்தையை குழப்புவதற்கு இருவரும் விரும்பவில்லை. ஆனால், சிவகுமாரிடமிருந்து கிரனேட்டும் துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டதால் உஷார் நிலையில் தயாராயிருந்தனர். அறைக்குள்ளே தோழமை  உணர்வு தொடர்ந்து நிலவியது. அதற்கு பிறகு நடந்தது இது தான்.

நீங்கள் தான் உண்மையான அரக்கர்கள்

அப்போது இரவு 7.20 மணி. விசு தனது பானத்தைக் குடித்து முடித்தபிறகு வெற்றுக் கிளாஸை மேசையில் வைப்பதற்காக எழுந்தார். பிறகு உடனே திரும்பி அமிர்தலிங்கத்தை பார்த்து "எல்லோரும் புலிகளைத்தான் அரக்கர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் நீங்கள் எல்லோரும்தான் அரக்கர்கள்" என்று அவர் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் மூன்று தலைவர்களும் விசு ஏதோ பகிடி விடுவதாக நினைத்துக் கொண்டனர்.

யோகேஸ்வரன் பலத்த சத்தத்துடன் சிரிக்க அமிரும் சிவாவும  புனமுறுவல் பூத்தனர். அப்போது விசு தனது துப்பாக்கியை எடுத்து அமிர்தலிங்கத்தை நோக்கிச் சுடத் தொடங்கினார். யோகேஸ்வரன் சத்தமிட்டவாறு தனது கதிரையில் இருந்து எழுந்தார். அப்போது அலோசியஸ் தனது துப்பாக்கியால் யோகேஸ்வரனை நோக்கிச் சுட்டார். சற்று தள்ளி அமர்ந்திருந்த சிவசிதம்பரம் அதிர்ச்சியடைந்தவராக எழுந்து " வேண்டாம், வேண்டாம் " என்று தமிழில் கத்தினார். அப்போது விசு சிவாவின  வலது தோளில் சுட்டார்.

துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கேட்டு  அறையின் உள்ளே பார்த்த நிசங்க ஜன்னல் கண்ணாடிகளின் ஊடாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். அவர் விசுவையும் அலோசியஸையும் சுட்டுக் காயப்படுத்தினார். அப்போது  இருவரும் அறையை விட்டு வெளியே ஓடினர். சூட்டுச் சத்தங்களைக் கேட்ட கந்தசாமியும் அவர்கள் இருவரையும் நோக்கி சுட்டுக்கொண்டு ஓடிவந்தார். காயமடைந்த விசுவும் அலோசியஸும் திருப்பிச் சுட்டுக் கொண்டு படிகளின் வழியாக கீழே ஓடுவதற்கு முயற்சித்தனர். ஆனால், நிசங்க தன்னிடமிருந்த இரண்டாவது துப்பாக்கியால் இருவரையும் நோக்கி தொடர்ந்து சுட்டுக் கொண்டேயிருந்தார். இருவரும் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கேட்டதும் சத்தியமூர்த்தி சிவகுமாரைப் பிடித்தவாறு  மல்லுக் கட்டிக்கொண்டிருந்தார். 

சத்தியமூர்த்தியிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட சிவகுமார்  ஏற்கெனவே தன்னிடமிருந்து கைப்பற்றப்பட்ட கிரனேட்டை எடுக்க முயற்சித்தார். அதை அவர் எடுத்து வெடிக்க வைக்க முன்னதாக நிசங்க படிகளில் இருந்து கீழே ஓடிவந்து அவரைச் சுட்டுக் காயப்படுத்தினரார். அப்போது சிவகுமார் ஓட முயற்சிக்கவே நிசங்க மீண்டும் அவரை நோக்கச்சுட்டுக் கீழே கொண்டுவந்தார். மூன்று கொலையாளிகளுமே சம்பவ இடத்தில் நிசங்கவினால் கொல்லப்பட்டனர்.

நிசங்கவின் சூடுகளினாலேயே விடுதலை புலிகள் இறந்தார்கள் என்றபோதிலும், மற்றையவர்களும்  கூட அவர்கள்  மீது தாக்குதல்களை நடத்தினார்கள். சப் - இன்ஸ்பெக்டர் கந்தசாமி அலோசியஸை சுட்டுக் காயப்படுத்திய அதேவேளை, கான்ஸ்டபிள் லக்ஸ்மனின் துப்பாக்கிப் பிரயோகத்தில்  விசுவும்  அறிவும் காயமடைந்தனர்.  இரு அதிகாரிகளும் தமிழர்கள் என்பதால் அவர்களது குடும்பங்களை  விடுதலை புலிகள்  பழிவாங்காமல் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாக அவர்கள் நடத்திய தாக்குதல் விபரங்கள் பத்திரிகைகளில் அப்போது வெளியிடப்படவில்லை. 

இரண்டாவது துப்பாக்கி 

துப்பாக்கிச் சண்டையில் நிசங்கவுக்கு பெரிதும் உதவியது அவரிடமிருந்த இரண்டாவது துப்பாக்கியேயாகும். குறிப்பாக, அறிவு முதலில் சுடப்பட்டபோது அவர் தனது கையில் கிரனேட்டை வைத்திருந்தார். அதனால் புலிகளை வெற்றிகொள்வதற்கு நிசங்கவிடமிருந்த இரண்டாவது துப்பாக்கி கைகொடுத்தது. அதற்கு காரணம் அமிர்தலிங்கத்தின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் இருந்த இன்னொரு பொலிஸ்காரர் அன்றையதினம் விடுமுறையில் சென்றிருந்ததேயாகும். சில்வா என்ற அந்த பொலிஸ்காரர் நிசங்கவிடம் தனது ஆயுதத்தை ஒப்படைத்திருந்தார். அதனால் புலிகள் மீது இரு துப்பாக்கிகளினால் நிசங்கவினால் தாக்குதல் நடத்தக் கூடியதாக இருந்தது. மகாவலி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த நிசங்கவும் சில்வாவும் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளாக அமிர்தலிங்கத்தின் பாதுகாப்புக்காக காமினி திசாநாயக்கவினால் தனிப்பட்ட முறையில்  கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர். 

" பாஸ்ராட்ஸ், பாஸ்ராட்ஸ்" 

துப்பாக்கிச் சூட்டு சத்தங்களை கேட்டு மங்கையர்க்கரசி, சரோஜினி, மாவை சேனாதிராஜா ஆகியோர் பின்புறமாக இருந்த படிகளின் வழியாக மேல்மாடிக்கு ஓடிச் சென்றனர். அமிர்தலிங்கம் இரத்தம் வடிந்தோடிய நிலையில் அசைவின்றி தனது கதிரையில் கிடந்தார். அவர் இறந்துவிட்டார் எனப்தை அறியாத மங்கையர்க்கரசி அவரின் தலையின் பின்புறத்தில் தலையணை ஒன்றை வைத்து அவரை தாங்கிப்பிடித்தார். நிலத்தில் இரத்த வெள்ளத்தில் இறந்துகொண்டிருந்த யோகேஸ்வரன் " பாஸ்ராட்ஸ், பாஸ்ராட்ஸ் " என்று  ஆங்கிலத்தில் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அவரின் அருகில் மனைவி சரோஜினி முழந்தாளிட்டு நின்றுகொண்டிருந்தார். சிவசிதம்பரம் பேசமுடியாதவராக சுவரில் சாய்ந்து கிடந்தார்.  சுடப்பட்ட தலைவர்கள்  அம்புலன்ஸ்களில் வைத்தியசாலைக்கு விரையப்பட்டனர்.

அமிர்தலிங்கத்தின் உடலை பரிசோதனை செய்த கொழும்பு சட்டமருத்துவ அதிகாரி  டாக்டர் எம்.எஸ். எல். சல்காது தலையிலும் நெஞ்சிலும் ஏற்பட்ட காயங்களினால் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தார். யோகேஸ்வரனின் உடலைப் பரிசோதித்த பிரதி மருத்துவ அதிகாரி இதயத்திலும் ஈரலிலும் ஏற்பட்ட காயங்களினால் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தார்.

விடுதலை புலிகளின் " மறுப்பு " 

கொலையாளிகள் மீதான  மரணவிசாரணை ஜூலை 21 ஆம் திகதி நடைத்தப்பட்டது. அவர்களின் சடலங்களை பொறுப்பேற்பதற்கு எவரும் உரிமைகோரி வரவில்லை என்பதால் கணிசமான நாட்களுக்கு பிறகு அவை அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டன. தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தலைவர்களின் கொலைக்கு தாங்கள் பொறுப்பில்லை என்று கூறிய விடுதலை புலிகள்  இயக்கம் அந்த மறுப்பை தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தது. ஆனால், ஆனந்தபுரத்தில் ஒரு போலி இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டதாக செய்திகள் வந்தன. கொலைகளுக்கு விடுதலை புலிகளே பொறுப்பு என்பதே தமிழ்ச் சமூகத்தில் கதையாக இருந்தது.

கொலையாளிகள் மூவரும் உயிருடன் தப்பிச் சென்றிருந்தால் கொலைகளுக்கு பொறுப்பு என்ற குற்றஞ்சாட்டப்படுவதில் இருந்து விடுதலை புலிகள் இயக்கம் தப்பியிருக்கக்கூடும். அன்றைய பிரேமதாச அரசாங்கமும் கொலைகளுக்கு விடுதலை புலிகள் பொறுப்பு இல்லை என்று காட்டுவதற்கு சகல பிரயத்தனங்களையும்  எடுத்திருக்கவும் கூடும். குற்றப்பொறுப்பு ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) அல்லது புதுடில்லிக்கு சார்பான தமிழ்க்குழு ஒன்றின் மீது சுமத்தப்பட்டிருக்கவும் கூடும். 

அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருந்த பேச்சுவார்த்தைகளை குழப்புவதற்கான  ஒரு சதிமுயற்சியாகவே தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று கதை கட்டிவிடப்பட்டிருக்கவும் கூடும்.  ஆனால், அத்தகைய சூழ்நிலைக்கு வாய்ப்பு இல்லாமல் பே்ய்விட்டது. ஏனென்றால் மூன்று விடுதலை புலிகளும் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதுடன  அவர்களின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்பட்டும் இருந்தன. 

இந்த சோகமிகுந்த  சம்பவத்தில் ' ஹீரோ ' மூன்று கொலையாளிகளையும் சுட்டுக்கொன்ற சிங்கள பொலிஸ்காரர் நிசங்க திப்பொட்டுமுனுவவேயாவார். ஒரு கொலை முயற்சியில் சம்பந்தப்பட்ட சகல விடுதலை புலிகள் இயக்கத்தின் கொலையாளிகளும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட முதலாவது சம்பவமும் ஒரேயொரு சம்பவமும் இதுவேயாகும்.

சிவசிதம்பரம் 

தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி அல்லது இலங்கை தமிழரசு கட்சி பல வருடங்களுக்கு முன்னர்  முயற்சி எடுத்திருந்தால் அமிர்தலிங்கம் கொலை பற்றி விரிவான முறையில் உண்மையை வெளிக்கொணரக்கூடியதாக இருந்திருக்கும். கொலைகளை நேரில் கண்ட ஒரேயொரு சாட்சியான முருகேசு சிவசிதம்பரம் சம்பவம் தொடர்பான விடயங்கள் குறித்து வெளிப்படையாக பேசாமல் மௌனம் காத்தார்.  அவ்வாறு அவர் செய்ததை அன்று நிலவிய சூழ்நிலைகளின் பின்புலத்தில் விளங்கிக்கொள்ள முடிந்தது. ஆனால், என்ன நடந்தது என்பதை குறிப்பிட்ட ஒரு சிலருக்கு சிவசிதம்பரம் தனிப்பட்ட முறையில் விரிவான  முறையில் கூறினார்.

"சிவா ஐயா"   உண்மையாக என்ன நடந்தது என்பதை ஒரு தொலைபேசி சம்பாஷணையில் என்னிடம்  முழு விபரமாகக் கூறினார். அவரது நினைவுத் திறனுக்காக நான் பாராட்டியபோது "அன்றைய தினம் நடந்ததை எவ்வாறு தம்பி என்னால் மறக்கமுடியும்? " என்று கூறினார்.

அவருக்கும் எனக்கும் இடையிலான அந்த தொலைபேசி சம்பாஷணை கொலைச்சம்பவம் இடம்பெற்று சில வருடங்களுக்கு பிறகு நடந்தது. அன்று எனக்கு கூறியவற்றை பிரசுரிக்கக்கூடாது என்று சிவா ஐயா என்னிடம் உறுதி வாங்கினார்.  "நான் செத்தபிறகு நீங்கள் எழுதலாம்" என்று அவர் கூறினார்.  2002 ஜூனில் சிவா ஐயா இறந்தார்.  மங்கையர்க்கரசி அமிர்தலிங்கத்துடனும் சரோஜினி யோகேஸ்வரனுடனும் கொலைச்சம்பவங்கள் குறித்து அவர்களின் நினைவுகள் பற்றி நான் பேசினேன். 1998 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாநகர மேயராக தெரிவான திருமதி யோகேஸ்வரனும் விடுதலை புலிகளினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என்பது இன்னொரு சோகக்கதை. திருமதி அமிர்தலிங்கம் 2016 ஆம் ஆண்டில் லண்டனில்  அமைதியாக மரணத்தை தழுவினார். 

சிறிமாவோ கவலை 

இதுதான் யோகேஸ்வரனுடன் சேர்த்து  முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் விடுதலை புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட துன்பியல் கதை. அன்றைய எதிச்க்கட்சி தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு தமிழ்த் தலைவர்களின் கொலை குறித்து லசந்த விக்கிரமதுங்க அறிவித்தபோது அவர் "யார் இதைச் செய்தது?"  என்று பதறிக்கொண்டு கேட்டார். விடுதலை புலிகள் தான் செய்தார்கள் என்று லசந்த கூறியபோது நிம்மதிப் பெருமூச்சுவிட்ட திருமதி பண்டாரநாயக்க "அவர்களை சிங்களவர் ஒருவர் கொலை செய்வில்லை என்பது எனக்கு மகிழ்ச்சி" பதிலளித்தார்.

அமிர்தலிங்கத்தின் அரசியலை சிங்களவர்களில் பலர் வெறுத்திருக்கலாம். ஆனால், அவர்கள் அவரைக் கொலை செய்யவில்லை. அமிர்தலிங்கத்தை முன்னர் தங்களது ஹீரோவாக கருதிய தமிழ் இளைஞர்களே கொலை செய்தார்கள்.

https://www.virakesari.lk/article/219983

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 months ago
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம் சலனங்கள் அதில் இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை ஆண் : என் வாழ்க்கை திறந்த ஏடு அது ஆசை கிளியின் கூடு என் வாழ்க்கை திறந்த ஏடு அது ஆசை கிளியின் கூடு ஆண் : பல காதல் கவிதை பாடி பரிமாறும் உண்மைகள் கோடி ஆண் : இது போன்ற ஜோடி இல்லை இது போன்ற ஜோடி இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை ஆண் : என் மாடம் முழுதும் விளக்கு ஒரு நாளும் இல்லை இருட்டு என் மாடம் முழுதும் விளக்கு ஒரு நாளும் இல்லை இருட்டு ஆண் : என் உள்ளம் போட்ட கணக்கு ஒரு போதும் இல்லை வழக்கு ஆண் : இது போன்ற ஜோடி இல்லை இது போன்ற ஜோடி இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை ஆண் : தைமாத மேக நடனம் என் தேவி காதல் நளினம் தைமாத மேக நடனம் என் தேவி காதல் நளினம் ஆண் : இந்த காதல் ராணி மனது அது காலம்தோறும் எனது ஆண் : இதில் மூடும் திரைகள் இல்லை இதில் மூடும் திரைகள் இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை ........ ! --- சம்சாரம் என்பது வீணை ---

ஹமாஸ் மிக மோசமான இழப்புகளை எதிர்கொண்டாலும் - தோற்கடிக்கப்படவில்லை - சிஎன்என்

2 months ago
பெருமளவு உறுப்பினர்களை இழந்துள்ள ஹமாசின் புதிய தந்திரோபாயம் - இஸ்ரேலிய படையினரை உயிருடன் பிடிப்பது - கார்டியன் Published By: RAJEEBAN 13 JUL, 2025 | 01:14 PM Jason Burke in Jerusalem காசாவில் உள்ள இஸ்ரேலிய படையினருக்கு எதிரான தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் ஹமாஸ் அமைப்பு புதிய இலக்கொன்றினை அடிப்படையாக கொண்டு செயற்பட தொடங்கியுள்ளது - இஸ்ரேலிய இராணுவீரர்களை பிடிப்பதே அந்த இலக்கு. கடந்த வாரம் காசாவின் தென்பகுதியில் ஹான் யூனிசில் ஹமாஸ் இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவரை உயிருடன் கைதுசெய்ய முயன்றவேளை அவர் கொல்லப்பட்டார். ஏப்பிரஹாம் ஏசுலாயின் (25) உடலை கொண்டு செல்வதற்கு ஹமாஸ் உறுப்பினர்கள் முயன்றனர் எனினும் இஸ்ரேலிய படையினரின் தாக்குதல் காரணமாக அந்த முயற்சியை கைவிட்டனர். போர்நிறுத்தம் தொடர்பான மறைமுக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் இவ்வேளையில் இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவரை பிடித்துவைத்திருப்பது அல்லது அவர்களின் உடல்களை வைத்திருப்பது பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் செல்வாக்கு செலுத்தும் நிலையை ஏற்படுத்தும் என மேலும் இஸ்ரேலில் பொதுமக்கள் கருத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும். இஸ்ரேலிய இராணுவீரரை உயிருடன் பிடிக்கும் அல்லது அவரின் சடலத்தை கைப்பற்றும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. ஆனால் இஸ்ரேலிய இராணுவவீரர்களை பணயக்கைதிகயாக பிடிக்கும் அவர்களின் உடல்களை கைப்பற்றும் முயற்சிகளை ஹமாஸ் அமைப்பு தீவிரப்படுத்தும் என டெல்அவி பல்கலைகழகத்தில் உள்ள பாலஸ்தீன கற்கைகளிற்கான பிரிவின் மைக்கல் மில்ஸ்டெய்ன் தெரிவிக்கின்றார். 2023ம் ஆண்டு 7 ம்திகதி பணயக்கைதிகளாக பிடித்தவர்களில் இன்னமும் 50 பேரை ஹமாஸ் தன்வசம் வைத்துள்ளது. இவர்களில் 28 பேரின் விடுதலை குறித்து பேச்சுவார்த்தைகளில் ஆராயப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யுத்தநிறுத்தத்திற்காக பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்யலாம். அதேவேளை அந்த அமைப்பு இஸ்ரேலிய இராணுவவீரர்களை உயிருடன் பிடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என தெரிவிக்கும் ரமல்லாவை சேர்ந்த அரசியல் ஆய்வாளர், இதன் மூலம் எந்த உடன்படிக்கையும் மோதலிற்கு நிரந்தர முடிவை கொண்டுவரப்போவதில்லை என்பதை தெரிவிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார். வெற்றிகரமான தாக்குதல்களை பிரச்சாரத்திற்காக பயன்படுத்துவதில் ஹமாஸ் அமைப்பு தனது திறமையை நிரூபித்துள்ளது. அதன் ஊடகங்கள்ள் கடந்த வார கடத்தல் முயற்சியின் வீடியோவை ஒளிபரப்பின. பிற படங்கள் இஸ்ரேலிய கவச வாகனங்கள் மற்றும் புல்டோசர்களை போராளிகள் தாக்குவதைக் காட்டின. ஹமாஸின் மூலோபாயங்களை நன்கு அறிந்த கத்தாரை தளமாகக் கொண்ட பாலஸ்தீன ஆய்வாளர் கூறினார்: "இது பேச்சுவார்த்தைகளில்இது பேச்சுவார்த்தைகளில் விளையாடுவதற்கு ஹமாசிற்கு ஒரு துரும்பினை வழங்குகின்றது - இது உளவியல் போரின் முக்கிய பகுதியாகும். ஹமாஸ் போராளிகளை ஊக்குவித்து காசாவில் உள்ள இஸ்ரேலிய வீரர்களையும் இஸ்ரேலில் உள்ள பொதுமக்களையும் மனச்சோர்வடையச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது." ஹமாஸின் இராணுவ வலிமை எவ்வாறு குறைந்துள்ளது என்பதை இஸ்ரேலிய அதிகாரிகள் பலமுறை விவரித்துள்ளனர். மேலும் அதன் இராணுவபிரிவு பெரும இழப்பை சந்தித்துள்ளது என்பது குறித்து இராணுவ ஆய்வாளர்களிற்கு எந்த சந்தேகமும் இல்லை.. போரின் தொடக்கத்தில் சுமார் 30000 போராளிகள் காணப்பட்டனர். அவர்களில் 23000 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐடிஎஃப் ஆதாரங்களை வழங்காமல் கூறுகிறது. ஹமாஸின் தலைமைத்துவ இழப்புகள் தெளிவாக உள்ளன. 2023 இல் செயலில் இருந்த பெரும்பாலான மூத்த மற்றும் நடுத்தர தளபதிகள் இப்போது இறந்துவிட்டனர். கத்தாரை தளமாகக் கொண்ட ஆய்வாளர் ஹமாஸ் காசாவில் "சில நூறு உறுப்பினர்களை மட்டுமே நிறுத்தக்கூடும். ஆனால் இது அதன் மூலோபாய நோக்கங்களுக்கு போதுமானது என்று கூறினார். ஹமாஸிடம் இங்கே ஒரு சில மறைவிடங்கள் மாத்திரமே உள்ளன, ஆனால் அவர்கள் தங்கள் வளங்களை மிகவும் கவனமாகவும் துல்லியமாகவும் பயன்படுத்துகிறார்கள்" என்று அவர் கூறினர். 21 மாத மோதலின் போது ஹமாஸ் ஒரு "இராணுவ மாற்றத்தை" ஏற்படுத்தியுள்ளது ஒரு அரை-மரபுப் படையிலிருந்து கொரில்லாப் போருக்கு ஏற்ற ஒன்றாக மாறியுள்ளது என்றும் அதன் புதிய உத்தி காசாவில் ஏற்பட்ட பேரழிவிற்கு ஏற்றவாறு சிறப்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் இராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர். இஸ்ரேலிய தாக்குதலில் 57000 பேர் கொல்லப்பட்டனர் பெரும்பாலும் பொதுமக்கள் மற்றும் பரந்த பகுதிகள் இடிபாடுகளாக மாறியுள்ளன. கடந்த வாரம் நடந்த ஒரு பதுங்கியிருந்து தாக்குதல் ஐந்து வீரர்களைக் கொன்றது மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர். பெய்ட் ஹனூன் ஒரு காலத்தில் காசாவின் வடக்கே செழிப்பான நகரமாக இருந்தது. இஸ்ரேலிய தாக்குதல்களால் நொறுக்கப்பட்ட கற்கள் மற்றும் முறுக்கப்பட்ட உலோகமாக மாற்றப்பட்டது. ஹமாஸின் சில விரிவான சுரங்கப்பாதை வலையமைப்பு இன்னும் அப்படியே உள்ளது. இது இஸ்ரேலின் வான் சக்தி மற்றும் கண்காணிப்பு திறன்களிலிருந்து தப்பிக்கும் வழியை வழங்குகிறது. முன்னாள் ஐ.டி.எஃப் (இஸ்ரேலிய இராணுவம்) இராணுவ வரலாற்றாசிரியரும் அந்தக் குழுவின் நிபுணருமான கை அவியாட் கூறினார்: "இது ஐ.டி.எஃப்-க்கு மிகவும் சிக்கலான போர்க்களம். ஹமாஸ் அனைத்து இடிபாடுகளையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. அவர்கள் கொரில்லாப் போரில் நிபுணர்கள் மற்றும் 20 ஆண்டுகளாக இஸ்ரேலுடன் சண்டையிட்டு வருகின்றனர் காசாவில் உள்ள இராணுவத் தலைவர்களுக்கும் கத்தார் மற்றும் இஸ்தான்புல்லில் உள்ள ஹமாஸின் அரசியல் தலைமைக்கும் இடையேயான தொடர்புகள் திறந்தே இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர். போர் தொடங்கியதிலிருந்து அப்போதைய தலைவர் இஸ்மாயில் ஹனியே உட்பட இரண்டு குறிப்பிடத்தக்க அரசியல் தலைவர்கள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர். இஸ்லாமிய உலகின் பெரும்பகுதியிலும் பிற இடங்களிலும் உள்ள தூதர்கள் அதிகாரிகள் ரகசிய செயல்பாட்டாளர்கள் மற்றும் அனுதாபிகளின் குழுவின் வலையமைப்பும் பெரும்பாலும் அப்படியே உள்ளது மற்றும் அமைப்புக்காக நிதி திரட்டி வருகிறது. 2007 முதல் காசாவை ஹமாஸ் ஆட்சி செய்து வந்தது. அதன் அதிகாரிகள் இன்னும் பெயரளவிற்கு அமைச்சகங்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பலவற்றை நடத்துகிறார்கள். இருப்பினும் குற்றவியல் கும்பல்கள் சமூகத் தலைவர்களின் கூட்டணிகள் மற்றும் இஸ்ரேலால் ஆதரிக்கப்படும் புதிய போராளிகள் உள்ளிட்ட பிற ர் அதன் மீதமுள்ள அதிகாரத்திற்கு எதிராக போட்டியிடுவதால் பிரதேசத்தின் மீதான அதன் பிடி நழுவி வருகிறது. ஹமாஸ் அதிகாரிகளும் பாதுகாப்புப் பணியாளர்களும் ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட குறைவாகவே இருப்பதாக பிரதேசத்தில் உள்ள உதவிப் பணியாளர்கள் கூறுகின்றனர். இந்தப் பிரதேசத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய சமீபத்திய சுற்று போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மாதம் பத்து ஐ.டி.எஃப் வீரர்களும் ஜூலையில் 20 வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர். “இஸ்ரேலின் அதிகாரத்தில் சில வரம்புகளை விதிக்கும் மற்றும் உலகம் முழுவதும் பொதுமக்களின் கருத்தை ஓரளவு பாதிக்கும் ஒரு வகையான போர் நிறுத்தப் போரை நாங்கள் இப்போது காண்கிறோம்” என்று ஹமாயேல் கூறினார். ஹமாஸ் யுத்தநிறுத்ததிற்கு தயாராக உள்ளது, ஆனால் அந்த அமைப்பு ஏற்றுக்கொள்ள முடியாததை ஏற்றுக்கொள்ள தயாராகயில்லை. நாங்கள் இங்கு இஸ்ரேலில் ஹமாஸிற்கு எதிராக மேலும் மேலும் கடும் அழுத்தங்களை கொடுத்தால் அவர்கள் இறுதியில் விட்டுக்கொடுப்பார்கள் என்ற கருத்தில் அடிப்படையில் செயற்படுகின்றோம். ஆனால் நாங்கள் எவ்வளவு அழுத்தங்களை கொடுத்துவிட்டோம், ஆனால் அவர்களின் தலைவர்களை அழித்துவிட்டோம், காசாவை அழித்துவிட்டோம், ஆனால் ஹமாசின் அடிப்படை மனோபாவத்தையும் வேண்டுகோள்களையும் எங்களால் (இஸ்ரேலால்) மாற்ற முடியவில்லை என மில்ஸ்டெய்ன் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/219863

ஆக்ஸியம் 4: 41 ஆண்டுகள் கழித்து விண்வெளிக்கு செல்லும் 2வது இந்தியர் அங்கு என்ன செய்வார்?

2 months ago
பூமி திரும்பும் சுபான்ஷு சுக்லா: Ax-4 விண்கலனின் 24 மணி நேர பயணத்தில் என்ன நடக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் த வி வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழுக்காக 14 ஜூலை 2025, 12:15 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோர் சென்ற Ax-4 க்ரூ டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விடுபட்டு பூமிக்கு திரும்புகிறது. கமாண்டர் பெக்கி விட்சன், பைலட் சுபான்ஷு சுக்லா, மற்றும் திட்ட நிபுணர்கள் ஸ்லாவோஷ் உஸ்னான்ஸ்கி-விஸ்னியெவ்ஸ்கி மற்றும் டிபர் காபு ஆகியோரை உள்ளடக்கிய, ஆக்சியம் மிஷன் 4 (Ax-4) குழு, ஜூன் 25, 2025 அன்று IST 12:01 மணிக்கு கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. அடுத்த 28 மணி நேர சுற்றுப்பாதை கட்டத்திற்குப் பிறகு இந்திய நேரப்படி (IST) ஜூன் 26 மாலை 4:30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்துடன் (ISS) வெற்றிகரமாக இணைந்தது. அதன் பின்னர் குழுப் பயணிகள் தங்கள் பணியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினர். பட மூலாதாரம்,INTERNATIONAL SPACE STATION படக்குறிப்பு, Ax-4 க்ரூ டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விடுபடும் தருணம் விண்வெளியில் வாழ்வதற்கு தகவமைத்தல் புதிய ஊருக்கு வீடு மாறி சென்றால் அங்கே நமக்கு பழக்கம் அடைய சில நாட்கள் ஆகும். அதுபோல விண்வெளிக்கு செல்லும்போது அங்கே உள்ள எடையற்ற நிலையில் இயங்க, தகவமைத்து கொள்ளச் சற்று காலம் எடுக்கும். பயணத்தின் இரண்டாம் நாளில், சுபான்ஷு சுக்லா மற்றும் குழு உறுப்பினர்கள் பூமியின் ஈர்ப்பு இல்லாத புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை பழக்கிக் கொண்டனர். அவர்கள் தங்கள் தூங்கும் இடங்களை அமைத்தனர். ISS-ல் ஏற்கனவே இருந்த எக்ஸ்பெடிஷன் 73 குழுவுடன் பணி ஒப்படைப்பு செயல்பாடுகளை மேற்கொண்டனர். எடுத்து சென்ற முக்கிய சரக்குகளை விண்கலத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு எடுத்து வந்தனர். மேலும் அவசரகால நடைமுறைகளைக் கற்றுக்கொண்டனர். மூன்றாம் நாளில், அவர்கள் முழுமையாக ISS குழுவுடன் ஒருங்கிணைந்தனர். அவசரகால பயிற்சிகளை மேற்கொண்டனர், முக்கியமான விஞ்ஞான உபகரணங்களையும் பாதுகாப்பு சாதனங்களையும் ஆய்வு மேடையில் பொருத்தினர். நிலையத்தின் நடத்தை விதிகளைக் கற்றனர். சுபான்ஷு சுக்லா அடுத்து வரும் நாட்களில் மேற்கொள்ள இருக்கும் ஆராய்ச்சி சோதனைகளுக்குத் தேவையான உபகரணங்களை தயார் செய்வதில் முனைப்பு காட்டினர். உயிரியல் மாதிரிகளை சோதனை மேடைகளில் பொருத்தி சரிபார்த்தார். பட மூலாதாரம்,WWW.AXIOMSPACE.COM படக்குறிப்பு, பயணத்தின் இரண்டாம் நாளில், சுபான்ஷு சுக்லா மற்றும் குழு உறுப்பினர்கள் பூமியின் ஈர்ப்பு இல்லாத புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை பழக்கிக் கொண்டனர் முக்கிய சோதனைகளின் தொடக்கம் நான்காம் நாள் சுபான்ஷு சுக்லாவுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அவர் லைஃப் சயின்ஸஸ் கிளவ்பாக்ஸ் எனப்படும் உயிரியல் ஆய்வு மேடை அமைப்பில் மயோஜெனிசிஸ் சோதனையை மேற்கொண்டு, நீண்டகால விண்வெளிப் பயணங்களால் ஏற்படும் தசை சீரழிவு பற்றி ஆய்வு செய்தார். மேலும், செரிப்ரல் ஹீமோடைனமிக்ஸ் ஆய்வில் பங்கேற்று, அல்ட்ராசவுண்ட் மூலம் பூமியின் ஈர்ப்பு இல்லாத நிலையில் மூளை இரத்த ஓட்டத்தை ஆய்வு செய்தார். சுபான்ஷு பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடி உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. ஐந்தாம் நாளில், சுபான்ஷு எதிர்கால ஆழ்விண்வெளிப் பயணங்களுக்கான நிலையான உணவு மூலங்களை ஆராயும் மைக்ரோ ஆல்கே மாதிரிகளை ஆய்வு மேடையில் வைத்து ஆய்வை துவங்கின்னர். இந்த ஆய்வு, இஸ்ரோ (ISRO), சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் உயிரிதொழில்நுட்ப மையம் (ஐ.சி.ஜி.இ.பி), தேசிய தாவர மரபணு ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐஜிபிஆர்) ஆகியவற்றின் உதவியுடன் நடத்தப்பட்டது. எடையற்ற நிலையில் வளரும் உணவாக உட்கொள்ளக்கூடிய மூன்று வகை மைக்ரோ ஆல்கே இனங்களின் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் மற்றும் மரபணுச் செயல்பாட்டை உற்றுநோக்கி பதிவு செய்து அதனைப் பூமியில் உள்ள மாதிரிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வதே இந்தத் திட்டம். வளர்ஊட்டம் அளித்து, நுண்ணுயிர் மாதிரிகளை வளர்த்து அதன் வளர்ச்சியை படமெடுத்து, டிரான்ஸ்கிரிப்டோமிக்ஸ், புரோட்டியோமிக்ஸ் மற்றும் வளர்சிதை மாற்றங்கள் உள்ளிட்ட முக்கிய உயிரியல் அளவுருக்களை பதிவு செய்வது தான் சுபான்ஷு சுக்கலாவின் பணி. சுபான்ஷு சுக்லா உட்பட விண்வெளி நிலையத்தில் இருந்த எல்லா குழு உறுப்பினர்களும் நியூரோ மோஷன் VR எனும் ஆய்வு திட்டத்திலும் பங்கெடுத்தனர். எடையற்ற நிலையில் உடலியக்கத்தில் நரம்பு, நமது நிலை குறித்த மூளை அறியும் திறன் எப்படி மாறுபடுகிறது என்பதை ஆய்வு செய்வது இதன் நோக்கம். மேலும் மற்றொரு முக்கிய ஆய்வான விண்வெளியில் இருதய நலத்தை கண்காணிக்கும் டெலிமெட்ரிக் ஹெல்த் AI, திட்டத்திலும் குழுவினர் பங்குகொண்டனர். பட மூலாதாரம்,WWW.AXIOMSPACE.COM படக்குறிப்பு, ஆய்வுக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைக்கும் டிபர் காபு மற்றும் டக்கியா ஒனுஷி விண்வெளியில் தசை செல்களின் ஆறாம் நாளில், சுபான்ஷு மயோஜெனிசிஸ் சோதனையில் தனது பணியைத் தொடர்ந்தார். எடையற்ற நிலையில் தசை செல்களின் நடத்தையை ஆய்வு செய்தார். இந்தியாவின் 'இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்டெம் செல் சயின்ஸ் அண்ட் ரிஜெனரேடிவ் மெடிசின் (InStem)' முன்மொழியப்பட்ட இந்த ஆய்வு, ISS-ன் லைஃப் சயின்ஸஸ் கிளவ்பாக்ஸில் 3D திசு சில்லுகளைப் பயன்படுத்தி, விண்வெளியின் எடையற்ற நிலையில் தசை ஸ்டெம் செல்களின் நடத்தை மாற்றங்களை ஆராய்ந்து பதிவு செய்தார். விண்வெளியில் வளர்ந்த மாதிரிகளை பூமியில் வளர்ந்தவற்றுடன் ஒப்பிட்டு, தசை உருவாக்கத்தில் ஈர்ப்பு விசையின் தாக்கத்தை தனிமைப்படுத்தி காண இந்த ஆய்வு வழி செய்யும். இந்த ஆய்வின் முடிவுகள் இரட்டை நன்மைகளை வழங்கும்: எதிர்காலத்தில் நிலவு-செவ்வாய் நீண்டகால பயணங்களில் விண்வெளி வீரர்களின் தசைகளைப் பாதுகாக்கும் முறைகளை உருவாக்குதலில் நமக்கு வழிகாட்டும். மேலும் பூமியில் தசை சீரழிவு நோய்களுக்கான சிகிச்சைகளில் முன்னேற்றம் காணவும் உதவும். ஃபோட்டான் கிராவ் மூளை-கணினி இடைமுக பரிசோதனையிலும் குழுவினர் பங்கு கொண்டனர். இது விண்கல இயக்க கருவிகளுடன் தங்களது மூளை செயல்பாடு மூலம் கட்டுப்படுத்தும் முன்னணி தொழில்நுட்ப ஆய்வு. நரம்பியல் நோய்களுக்கு புதுவித சிகிச்சையை உருவாக்கவும் இந்த ஆய்வு உதவும். சயனோபாக்டீரியா வளர்ச்சி ஏழாம் நாளில், சுபான்ஷு இஸ்ரோவின் சயனோபாக்டீரியா வளர்ச்சியை ஆவணப்படுத்தினார். குழுவினர் வோயேஜர் டிஸ்ப்ளேஸ் எனும் ஆய்வு திட்டத்திலும் பங்கேற்றனர். கண் இயக்கம் மற்றும் பார்வை ஒருங்கிணைப்பபை எடையற்ற விண்வெளி நிலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்யும். எட்டாம் நாள் பல ஆராய்ச்சி செயல்பாடுகளால் நிரம்பியிருந்தது. சுபான்ஷு மயோஜெனிசிஸ் ஆய்வுக்கான தசை செல் வளர்ச்சியை தொடர்ந்தார். மேலும் டார்டிகிரேட்ஸ் நுண்ணுயிரி சோதனையைத் தொடங்கினார். இது நுண்ணிய உயிரினங்கள் விண்வெளியில் எவ்வாறு உயிர் வாழ்கின்றன என்பதை ஆராய்கிறது. ஐஐஎஸ்சி பெங்களூர் வடிவமைத்த இந்த சோதனையில் டார்டிகிரேட்ஸ் அல்லது நீர் கரடிகள் என்று அழைக்கப்படும் சிறிய அரை மில்லி மீட்டர் நீளமே உடைய உயிரினங்கள் எப்படி வளர்கின்றன என்பதை ஆய்வு செய்வார்கள். இந்த வகை நுண்ணுயிரிகள் வெப்பம், கடும் குளிர், கடல்கள் மற்றும் எரிமலைகள் போன்ற தீங்கான சூழல்களில் கூட உயிர்வாழும் திறன் கொண்டவை. விண்வெளிப் பயணத்திற்கு முன், அவை உறக்க நிலையில் வைக்கப்பட்டன. இந்த உறக்க நிலையில் உணவு தேவையில்லாமல் வளர்சிதை மாற்றம் இல்லாமல் இருந்தன. ISS-ல், சுபான்ஷு சுக்லா நீரைப்பயன்படுத்தி அவற்றை எடையற்ற நிலையில் மீண்டும் உயிர்ப்பித்தார். AXIOM-4 திரும்பியவுடன், விண்வெளியில் வளர்ந்த மாதிரிகள் பூமியை அடையும். இவற்றை இந்திய விஞ்ஞானிகள் பூமியில் வளர்ந்த நுண்ணுயிரிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வார்கள். விண்வெளி உடை தயாரிப்பில் பயன்படுத்த, நிலையான வெப்பநிலையை பராமரிக்க உதவும் வகையான புதிய பொருட்களை சோதிக்க குழுவினர் உதவினர். மேலும் வாய்ஸ் இன் ஸ்பேஸ் எனும் ஆய்வு திட்டத்திலும் பங்கு கொண்டனர். எடையற்ற விண்வெளி நிலையில் நமது குரலில் எவ்வித மாற்றம் ஏற்படுகிறது என்பதை இது ஆய்வு செய்யும். பட மூலாதாரம்,WWW.AXIOMSPACE.COM படக்குறிப்பு, AXIOM-4 திரும்பியவுடன், விண்வெளியில் வளர்ந்த மாதிரிகள் பூமியை அடையும். இவற்றை இந்திய விஞ்ஞானிகள் பூமியில் வளர்ந்த நுண்ணுயிரிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வார்கள் விண்வெளி விடுமுறை பரபரப்பான ஒருவாரம் நீண்ட பணிகளுக்கு பிறகு ஒன்பதாம் நாள் விண்வெளிக்குழுவினர்களுக்கு விடுமுறையாக அமைந்தது. சுபான்ஷு மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் இந்த நேரத்தை ஓய்வெடுக்க, தங்கள் குடும்பங்களுடன் பேச பயன்படுத்திக்கொண்டனர். விடுமுறைக்கு பிறகு, பத்தாம் நாளில், சுபான்ஷு மயோஜெனிசிஸ், மைக்ரோ ஆல்கே ஆய்வு போன்ற ஆய்வை தொடர்ந்தார். இந்த ஆய்வுகளில் வளர்ந்த தசை செல்கள் நுண்ணுயிர்கள் போன்றவற்றின் மாதிரிகளை சேகரித்து பதம் செய்து வைத்தார். வோயேஜர் டிஸ்ப்ளேஸ் போன்ற ஆய்வுகளும் தொடர்ந்தன. பதினொன்றாம் நாள் தாவரவியலில் கவனம் சென்றது. சுபான்ஷு ஸ்ப்ரௌட்ஸ்- முளைவிடுதல்- சோதனையை துவக்கினர். இந்திய விவசாய மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இஸ்ரோவுடன் இணைந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எடையற்ற நிலையில் முளைக்கும் தாவரங்களின் மரபணு மாற்றங்களை ஆய்வு செய்தார். பூமியிலிருந்து எடுத்து சென்ற விதைகளுக்கு நீர்ப்பாசனம் செய்தார். வேர்/தண்டு வளர்ச்சி மாறுபாடுகளை ஆவணப்படுத்தினார். விண்வெளியில் முளைத்த தாவரங்களின் மாதிரிகள் -80°C-ல் சேமிக்கப்பட்டன. எதிர்காலத்தில் விண்வெளி நிலையத்தில் இவ்வாறு முளைவிட செய்து தாவர உணவுகளை பெறுவதற்கு இந்த ஆய்வு உதவும். மேலும் தாவரங்களின் வளர்ச்சியில் ஈர்ப்பு விசையின் பங்கு குறித்து அறியவும் உதவும் பன்னிரண்டாம் நாளில், சுபான்ஷு மயோஜெனிசிஸ் ஆய்வின் செல்லுலார் மாதிரிகளை சேகரித்து சேதாரம் இல்லாமல் பூமிக்கு திரும்ப எடுத்துவர பதனம் செய்தார். மேலும் டெலிமெட்ரிக் ஹெல்த் AI திட்ட ஆய்விலும் பங்கு கொண்டார். 13-வது நாளில், சயனோபாக்டீரியா மாதிரிகளை பூமிக்கு திரும்ப எடுத்துவர பதனம் செய்து பத்திரப்படுத்தினார். மேலும் வோயேஜர் டிஸ்ப்ளேஸ் ஆய்வின் பகுதியாக எடையற்ற நிலையில் கண் இயக்கத்தை ஆய்வு செய்ய உதவினார். 14-ஆம் நாளில், விண்வெளியில் முளைவிட்ட தாவரங்கள் உட்பட அனைத்து உயரி ஆய்வுகளின் மாதிரிகளை -80°C உறைவிப்பானில் பதனம் செய்து பத்திரப்படுத்தினார். பதினைந்தாம் நாளில் குழு பூமியை சுமார் 230 முறை சுற்றி வந்தது. ஏற்கனவே துவங்கிய ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டார். 16-ஆம் நாளில், சுபான்ஷு மைக்ரோ ஆல்கே ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அதே நேரத்தில், குழு வோயேஜர் டிஸ்ப்ளேஸ் ஆய்வில் பங்கு கொண்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எடையற்ற நிலையில் முளைக்கும் தாவரங்களின் மரபணு மாற்றங்களை ஆய்வு செய்தார் சுபான்ஷு சுக்லா (சித்தரிப்புப் படம்) பூமி திரும்புவதற்கான ஆயத்தம் பதினேழாம் நாளில், மைக்ரோ ஆல்கே கலாச்சாரங்களை சென்ட்ரிஃப்யூஜ் செய்து பூமிக்கு பாதுகாப்பாக திரும்புவதற்கு உறைபனியில் வைத்தனர். வாய்ஸ் இன் ஸ்பேஸ் ஆய்விலும், அக்வயர்ட் ஈக்விவலன்ஸ் டெஸ்ட் எனும் ஆய்விலும் பங்களிப்பு செய்தார். பதினெட்டாம் நாளில், குழுவினர் தொடர்ந்த இரத்த குளோக்ஸ் அளவு பதிவு செய்தல் ஆய்வில் பங்கு கொண்டனர். விண்வெளியில் பல நாட்கள் வாழ்ந்த சூழலில் ரத்த சர்க்கரை அளவு எப்படி மாறுபடுகிறது என்பதை இந்த உடலியல் ஆய்வு பதிவு செய்தது. பத்தொன்பதாம் நாள் புறப்படுவதற்கான தயாரிப்புகளில் கழிந்தது. சுபான்ஷு மற்றும் குழு முளைத்த விதைகள் மற்றும் ஆல்கே 'கல்ச்சர்' உள்ளிட்ட சோதனை மாதிரிகளை பேக் செய்தனர். அவர்கள் ISS குழுவுடன் விடைபெறும் விழாவில் பங்கேற்றனர். இருபதாம் நாளில், Ax-4குழுவினர் மறுபடி க்ரூ டிராகன் விண்கலத்துக்கு வந்தனர். விண்கல கதவுகள் -ஹேச்சுகளை மூடினர். ISS-லிருந்து விடுபட தயார் செய்து கொண்டனர். இவ்வாறு அவர்களின் 20-நாள் பணி முடிவுக்கு வந்தது. ISS-லிருந்து விடுபடுதல், தரையிறக்கம் மற்றும் மீட்பு Ax-4 க்ரூ டிராகன் விண்கலம் தரையிறக்கத்திற்கு சுமார் 22-24 மணி நேரத்திற்கு முன்பு ISS-லிருந்து விடுபடும். பிரிந்த பிறகு, மெல்ல மெல்ல சுற்றுப்பாதை தாழ்வு எரிப்புகளை செயல்படுத்தி அதன் சுற்றுப்பாதையை படிப்படியாக தாழ்த்தும். கணக்கிடப்பட்ட தரையிறக்கத்திற்கு 30-60 நிமிடங்களுக்கு முன்பு டி-ஆர்பிட் எரிப்பு மூலம் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும். இந்த சமயத்தில் உராய்வு காரணமாக, விண்கலத்தைச் சுற்றியுள்ள வெப்பநிலை 1,900°C வரை உயரும். சிறப்பாக தயாரிக்கப்பட்ட வெப்ப கேடயம் இந்தக் கட்டத்தில் குழுவைப் பாதுகாக்கும். வளிமண்டலத்தில் நுழைந்த பிறகு, 5.5 கிமீ உயரத்தில் பாராசூட்கள் விரிக்கப்படும், கலிபோர்னியா கடற்கரையில் பாதுகாப்பாக நீரிறக்கம் ஆகும். சுற்றுப்பாதை நிலைமைகளைப் பொறுத்து இந்த முழு செயல்முறை 20 முதல் 24 மணி நேரம் எடுக்கும். மீட்பு குழுக்கள் நீரிறக்கம் ஆவதற்கு 30 நிமிடங்களுக்குள் கேப்சூலை அணுகி பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்வார்கள். தீ விபத்து போன்ற எந்த ஆபத்தும் இல்லை என்று உறுதி செய்தபின்னர், தரையிறங்கி கடலில் மிதக்கும் விண்கலத்தை கிரேன் கொண்டு கப்பல் தளத்துக்கு உயர்த்துவார்கள். இதன் பின்னர் கதவு திறக்கப்பட்டு குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவார்கள். இரண்டு வாரங்கள் ஈர்ப்பு இல்லாத நிலையில் இருந்த பிறகு, விண்வெளி வீரர்கள் பூமியின் ஈர்ப்பு விளைவுகளுக்கு ஏற்பத் தங்களை சரிசெய்ய உதவி தேவைப்படலாம். எனவே அவர்களை முதலில் ஸ்ட்ரெச்சர் அல்லது சக்கர நாற்காலியில் வைத்து தான் அழைத்து செல்வார்கள். விண்வெளி வீரர்களை மருத்துவ குழுக்கள் ஆரம்பகட்ட உடல் சோதனை செய்வார்கள். உணவு, நீர் முதலிய வழங்குவார்கள். 20-25 மணிநேர பயணத்துக்கு பிறகு விண்கலத்திலிருந்து வெளிவருவதால் உடல் சுத்தம் செய்வார்கள். கப்பல் கரையை அடைந்ததும், மேலும் விரிவான மருத்துவ பரிசோதனை மேற்க்கொள்ளப்படும். தரையிறங்கிய சில மணி நேரத்துக்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும். புதிய ஆரோக்கிய கவலைகள் எழாவிட்டால், நீண்ட கால தனிமைப்படுத்தல் தேவையில்லை. தரையிறக்கத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, சுபான்ஷு சுக்லா இந்தியா திரும்புவதாக எதிர்பார்க்கப்படுகிறது. (கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cedgpnvp8pyo

எதிர்நீச்சல் போட்டு அல்காரஸை வெற்றிகொண்டு சின்னர் முதல் தடவையாக விம்பிள்டன் பட்டத்தை சுவீகரித்தார்

2 months ago
Published By: DIGITAL DESK 2 14 JUL, 2025 | 12:46 PM (நெவில் அன்தனி) விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சீமான்களுக்கான (Gentlemen) ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் யனிக் சின்னர் முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சூடினார். இதன் மூலம் இந்த வருட விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சீமான்கள் மற்றும் சீமாட்டிகளுக்கான ஒற்றையர் பிரிவுகளில் புதிய இருவருர் சம்பியன்களாகி இருப்பது விசேட அம்சமாகும். சனிக்கிழமை (12) நடைபெற்ற சீமாட்டிகளுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 2 நேர் செட்களில் வெற்றிகொண்டு சம்பியனானார். சீமான்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் ஸ்பானிய வீரர் கார்லோஸ் அல்காரஸிடம் கடும் சவாலை எதிர்கொண்ட ஸ்பானிய வீரர் யனிக் சின்னர் எதிர்நீச்சல் போட்டு 3 - 1 என்ற செட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பினானார். ஒரு மாத்திற்கு முன்னர் நடைபெற்ற பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்காரஸிடம் அடைந்த தோல்வியை விம்பிள்டனில் ஈட்டிய வெற்றி மூலம் யனிக் சின்னர் நிவர்த்தி செய்துகொண்டார். லண்டனில் அமைந்துள்ள ஆல் இங்லண்ட் டென்னிஸ் கழக புற்தரையில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதலாவது செட்டில் 6 - 4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் கார்லோஸ் அல்காரஸ் வெற்றிபெற்றார். இதன் காரணமாக அல்காரஸ் அடுத்தடுத்து இரண்டு க்ராண்ட் ஸ்லாம் சம்பியன்களை வென்றெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால், அடுத்த மூன்று செட்களிலும் 6 - 4, 6 - 4, 6 - 4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற யனிக் சின்னர் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். https://www.virakesari.lk/article/219949

எதிர்நீச்சல் போட்டு அல்காரஸை வெற்றிகொண்டு சின்னர் முதல் தடவையாக விம்பிள்டன் பட்டத்தை சுவீகரித்தார்

2 months ago

Published By: DIGITAL DESK 2

14 JUL, 2025 | 12:46 PM

image

(நெவில் அன்தனி)

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சீமான்களுக்கான (Gentlemen) ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் யனிக் சின்னர் முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சூடினார்.

இதன் மூலம் இந்த வருட விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சீமான்கள் மற்றும் சீமாட்டிகளுக்கான ஒற்றையர் பிரிவுகளில் புதிய இருவருர் சம்பியன்களாகி இருப்பது விசேட அம்சமாகும்.

சனிக்கிழமை (12) நடைபெற்ற சீமாட்டிகளுக்கான   ஒற்றையர்    இறுதிப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 2 நேர் செட்களில் வெற்றிகொண்டு சம்பியனானார்.

சீமான்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் ஸ்பானிய வீரர் கார்லோஸ் அல்காரஸிடம் கடும் சவாலை எதிர்கொண்ட ஸ்பானிய வீரர் யனிக் சின்னர் எதிர்நீச்சல் போட்டு 3 - 1 என்ற செட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பினானார்.

ஒரு மாத்திற்கு முன்னர் நடைபெற்ற பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்காரஸிடம் அடைந்த தோல்வியை விம்பிள்டனில் ஈட்டிய வெற்றி மூலம் யனிக் சின்னர் நிவர்த்தி செய்துகொண்டார்.

லண்டனில் அமைந்துள்ள ஆல் இங்லண்ட் டென்னிஸ் கழக புற்தரையில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதலாவது செட்டில் 6 - 4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் கார்லோஸ் அல்காரஸ் வெற்றிபெற்றார்.

இதன் காரணமாக அல்காரஸ் அடுத்தடுத்து இரண்டு க்ராண்ட் ஸ்லாம் சம்பியன்களை வென்றெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

ஆனால், அடுத்த மூன்று செட்களிலும் 6 - 4, 6 - 4, 6 - 4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற யனிக் சின்னர் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.

sinner_hugs_alcaras.png

https://www.virakesari.lk/article/219949

நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!

2 months ago
கேல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த கைது செய்யப்பட்டதாக தகவலில்லை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் 14 JUL, 2025 | 06:31 PM (எம்.வை.எம்.சியாம்) பல்வேறு திட்டமிட்டக் குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் கேல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த உள்ளிட்ட சிலர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக இதுவரை இராஜதந்திர ரீதியிலான எந்தவித தகவல்களும் பாதுகாப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெறவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதயகுமார வுட்லர் தெரிவித்தார். ஏற்கனவே மலோசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட 26 சந்தேக நபர்கள் தொடர்பில் ஆராய பொலிஸ் குழுக்கள் மலோசியா மற்றும் தாய்லாந்துக்கு சென்றுள்ளதாக தெரிவித்த அவர் குறித்த பெயர் பட்டியலில் கேல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என குறிப்பிட்டார். சஞ்சீவ குமார சமர ரத்ன என்னும் கனேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடையவர் என குற்றஞ்சாட்டப்பட்டு சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மனுதின பத்மசிரி பெரேரா என்னும் கேல்பத்தர பத்மே கமாண்டோ சலிந்த உள்ளிட்ட சிலர் அண்மையில் மலேசியாவில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தன. இந்த விடயம் தொடர்பில் திங்கட்கிழமை (14) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக்கூறப்படும் குற்றச்செயல்கள் தொடர்பில் தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் திட்டமிட்டக் குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் இலங்கைச் சேர்ந்த இருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் கடந்த 11 ஆம் திகதி மலேசிய பாதுகாப்பு பிரிவினரால் குற்றப்புலனாய்வுத்திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கமைய அவர்களில் 20 வயதுடைய ஒருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மலோசியாவின் குடிவரவு குடியகல்வு சட்டத்துக்கு ஏற்ப சந்தேகநபரை நாட்டுக்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் 29 பேருடைய பெயர் பட்டியலை மலேசியா பொலிஸார் எமக்கு அனுப்பியுள்ளனர். இவர்கள் ஏதேனும் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளார்களா என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம், அரச புலனாய்வு பிரிவு மற்றும் குற்றச் செயல்களை பதிவு செய்யும் பிரிவு ஆகியன விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. இதன் ஊடாக கிடைக்கப்பெறும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் இரு விசாரணை குழுக்கள் மலேசியா மற்றும் தாய்லாந்துக்கு அனுப்பட்டுள்ளன. இந்த நாட்களில் பல்வேறு திட்டமிட்டக் குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் கேல்பத்தர பத்மே மற்றும் கமென்டோ சலிந்த உள்ளிட்ட சிலர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. எனினும் சர்வதேச பொலிஸார் இவ்விடயம் தொடர்பான எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களையும் வழங்கவில்லை என்றார். https://www.virakesari.lk/article/220003