Aggregator
தனித்து விடப்படும் முதியவர்கள் - நிலாந்தன்
தனித்து விடப்படும் முதியவர்கள் - நிலாந்தன்
புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் அண்மையில் ஊருக்கு வந்திருந்தார். அவருடைய ஊரில் அவருக்குத் தூரத்து உறவான ஒரு முதிய பெண் தனித்து வசிக்கிறார். பெரிய வீடு; வசதியான குடும்பம்; ஆனால் பிள்ளைகள் இல்லை. காசு உண்டு. ஆனால் பராமரிக்க ஆளில்லை. அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு படை முகாமில் இருப்பவர்கள் அவருக்குச் சாப்பாடு கொடுக்கிறார்கள். ஆனால் அவர் பல நாட்கள் குளித்திருக்கவில்லை என்றும் அவருடைய சுத்தம் சுகாதாரத்தைத் தொடர்ச்சியாகக் கவனிப்பதற்கு அங்கே ஆட்கள் இல்லையென்றும் நண்பர் சொன்னார். அப்படியென்றால் அவரை அழைத்துக் கொண்டு வந்து ஒன்றில் அரச முதியோர் இல்லத்தில் சேர்க்கலாம் அல்லது கட்டணத்தோடு முதியோரைப் பராமரிக்கும் இல்லங்களில் இணைக்கலாம்.போதியளவு பணம் இருந்தாலும் பராமரிக்க ஆளில்லாமல் தவிக்கும் முதியோரை கட்டணம் பெற்றுக்கொண்டு பராமரிக்கும் இல்லங்களில் சேர்க்கலாம். எனவே அந்த முதிய பெண்ணை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் இணைத்தால் என்ன என்று நண்பரிடம் கேட்டேன்.
அதற்கு நண்பர் சொன்னார்,”குறிப்பிட்ட மூதாட்டிக்கு 80 வயதுக்கு மேலாகிறது. இனி அவர் தனது வீட்டிலிருந்து வேரைப் பிடுங்கிக்கொண்டு வேறொரு இடத்துக்கு வரத் தயாராக இல்லை. எல்லாவிதமான அசௌகரியங்கள், பற்றாக்குறைகளோடும் தான் பிறந்து, வளர்ந்து, திருமணம்செய்து சந்தோஷமாக வாழ்ந்த அந்த வீட்டிலேயே இருந்து இறந்து போகத்தான் விரும்புவார் என்று தோன்றுகிறது. அவரை இந்த வயதில் வேரை அறுத்துக் வெளியே எடுப்பது சாத்தியமா?” என்று.
அது சாத்தியமா இல்லையா என்பதல்ல பிரச்சினை. அவருடைய “குவாலிட்டி ஒஃப் லைஃப் “- வாழ்க்கைத் தரம் உயர்வானதா? என்பதுதான் இங்கு பிரச்சனை. அவரைப் போன்ற பல முதியவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு வெளியே வரத் தயாராக இல்லை. தாங்கள் பிறந்து வளர்ந்த அந்த வீட்டுக்குள் எல்லா விதமான பற்றாக்குறைகளோடும் ஆபத்துக்குகளோடும் சீவிப்பதில் அவர்கள் மன நிறைவடைகிறார்கள். இங்கே அடிப்படைக் கேள்வி ஒன்று எழுதுகிறது.”குவாலிட்டி ஒஃப் லைஃப் ” என்பது மனதால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதா? அல்லது உடலால் நவீன மருத்துவத் தராதரங்களுக்கு ஏற்ப பராமரிக்கப்படுகிறவர்களாக இருப்பதா? எனக்குத் தெரிந்த பல முதியவர்கள் குறிப்பாக 80 வயதுக்கு மேலானவர்கள் தாம் பிறந்து வளர்ந்த வீட்டிலேயே இருந்து சாவதைத்தான் தமது வாழ்க்கை தரத்தில் உயர்ந்த நிலை என்று கருதுவதாகத் தெரிகிறது.
ஆனால் பராமரிப்பின்றி தனிமையில் உழல்வதை விடவும் முதியோர் இல்லங்களில் சக வயதினரோடு இருப்பது சந்தோஷமானது என்று கருதும் முதியோரும் உண்டு. ஓர் ஆசிரியை வெளிநாட்டுக்குப் போகும்போது தன் தகப்பனை அரசு முதியோர் இல்லத்தில் இணைத்துவிட்டுச் சென்றார். நாடு திரும்பியதும் தகப்பனை வீட்டுக்கு அழைத்து வரச் சென்ற போது தகப்பன் மறுத்துவிட்டார். இங்கே எனது வயதொத்தவர்களோடு சந்தோஷமாக இருக்கிறேன். இது எனக்கு விருப்பமாக இருக்கிறது. என்று கூறி அந்த முதியவர் அங்கேயே தங்கி விட்டார். ஆனால் இது மிகச் சிறிய தொகை.
பைபிளில் கூறப்படுவது போல “பிள்ளைகள் இருக்கவும் மலடுகளாய்போன பெற்றோரின்” தொகை அதிகமுடைய ஒரு சமூகம் இது. போர் பிள்ளைகளைத் தின்றுவிட்டது. புலப்பெயர்ச்சி பிள்ளைகளைப் பெற்றோரிடம் இருந்து பிரித்துவிட்டது. பெற்றோர் பிள்ளைகளுக்கு இறுதிக் கிரியைகளைச் செய்யும் ஒருகாலம் வந்தபோது பிள்ளைகள் தூர தேசத்திலாவது உயிர் பிழைத்திருக்கட்டும் என்று பெற்றோரே அனுப்பி வைத்தார்கள். எனவே முதியோர் தனித்துவிடப்படுதல் என்பது போரின் நேரடி விளைவுதான். தவிர குடும்பங்களில் விழுமியங்கள் சீரழிந்ததன் விளைவுந்தான்.
இங்கு மூன்று உதாரணங்களைக் கூறலாம். முதலாவது உதாரணம், வன்னியில் நடந்தது. அங்குள்ள முன்னணிப் பாடசாலை ஒன்றுக்கு பழைய மாணவர்கள் சிலர் இணைந்து ஒரு சிற்றுண்டிச் சாலையைக் கட்டிக் கொடுத்தார்கள். அந்த சிற்றுண்டிச் சாலையை தமது பள்ளிக் காலத்தில் தமது வகுப்பு தோழர்களாக இருந்து பின்னர் போரில் நாட்டுக்காக தங்கள் உயிரைக் கொடுத்த தியாகிகளுக்கு அர்ப்பணித்திருந்தார்கள். அப்பழைய மாணவர்களில் ஒருவர் என்னைச் சந்தித்தார். அவரிடம் நான் கேட்டேன்“அந்த சிற்றுண்டிச் சாலையைத் திறக்கும் வைபவத்திற்கு குறிப்பிட்ட தியாகிகளின் பெற்றோரை அழைத்தீர்களா?” என்று. அப்பொழுதுதான் ஒரு விடயம் தெரியவந்தது. அந்தத் தியாகிகளில் ஒருவருடைய பெற்றோர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது.
அந்தத் தியாகி ஒரு சிறந்த உதைப்பந்தாட்ட வீரர். அவரைத் தவிர ஏனைய சகோதரர்கள் ஏற்கனவே புலம்பெயர்ந்து விட்டார்கள். அவர்தான் பெற்றோருக்கு உதவியாக இருந்தார். கடைசிக் கட்டப் போரில் கட்டாய ஆட் சேர்ப்பின்போது அவர் போருக்குள் இணைக்கப்பட்டார். போர்க்களத்தில் உயர்நீத்தார். தாயும் போரில் கொல்லப்பட்டு விட்டார். தனித்து விடப்பட்ட தந்தையை புலம்பெயர்ந்து வாழும் ஒரு பிள்ளை உறவினர் ஒருவருக்கூடாக முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார். மேற்படி தகவல்களைச் சேகரித்த பழைய மாணவர்கள் அந்த முதியோர் இல்லத்துக்கு வந்துவிட்டார்கள். ஆனால் அவர் விடுமுறையில் சென்று விட்டதாக முதியோர் இல்லத்தில் கூறப்பட்டது. விசாரித்தபோது தெரிந்தது, வெளிநாட்டில் வாழும் ஒரு பிள்ளை தாயகத்துக்கு வந்திருந்தபடியால் தகப்பனைப் பார்ப்பதற்காக முதியோர் இல்லத்தில் இருந்து அவரை தான் இருக்கும் இடத்துக்கு எடுத்திருக்கிறார். பழைய மாணவர்களில் ஒருவர் அந்தப் பிள்ளையின் கைபேசி இலக்கத்தை எடுத்து அவரோடு கதைத்திருக்கிறார். அவரையும் முதியவரையும் சந்திப்பதற்காக வரப்போவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அதன்பின் அந்தப் பிள்ளை தொடர்பு எடுக்கவில்லை மட்டுமல்ல, தகப்பனைக் கொண்டுவந்து இல்லத்தில் சேர்த்துவிட்டு வெளிநாட்டுக்குப் போய் விட்டார்.
இரண்டாவது உதாரணம், ஒரு பேராசிரியர். பல மாதங்களுக்கு முன்பு அவர் இறந்தபொழுது அவருடைய உடலை யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு கொடுக்குமாறு கேட்டிருந்தார். அவரும் அவருடைய மனைவியும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில்தான் வசித்து வந்தார்கள். யாழ்ப்பாணத்தின் உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் பீடாதிபதியாக இருந்தவர் அவர்.
மூன்றாவது உதாரணம், ஓர் அரசியல் செயற்பாட்டாளர். ஈழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய மொழிபெயர்ப்பாளர்.நோர்வியின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளின்போது பெரும்பாலான எல்லாப் பேச்சுவார்த்தைகளிலும் அவருடைய முகம் உண்டு. அவருக்கு ஒரே பிள்ளை. அவரும் புலம்பெயர்ந்து விட்டார். 2009க்கு பின் அவரை தன்னுடன் வந்து இருக்குமாறு பிள்ளை அழைத்திருக்கிறார். ஆனால் இந்த முதியவர் தாயகத்தை விட்டு வெளியேபோக விரும்பவில்லை. எனவே அவருடைய பிள்ளை அவரை மாதாந்தம் பெருந்தொகை பணத்தை அறவிடும் தனியார் முதியோர் இல்லம் ஒன்றில் சேர்த்து விட்டார். அந்த மொழிபெயர்ப்பாளர் அந்த முதியோர் இல்லத்தில்தான் உயர்நீத்தார்.
நான்காவது உதாரணம்,சில மாதங்களுக்கு முன் நடந்தது. புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வசிக்கும் எனது நண்பர்,ஒர் அரசியற் செயற்பாட்டாளர், அண்மையில் தனது தகப்பனாரைப் பராமரிப்பதற்கு யாரையாவது ஒழுங்கு செய்ய முடியுமா என்று கேட்டார். இந்த விடயத்தில் முதியோர் இல்லத்துக்குப் போக விரும்பாத முதியவர்களைப் பராமரிப்பதற்கு ஊரில் யாராவது உதவியாளரைக் கண்டுபிடித்தால் அது நல்லது.
இரண்டாவது தெரிவு,மானிப்பாயில் உள்ள மருத்துவர் கிரீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் முதியோரைப் பராமரிப்பதற்கான ஒரு கட்டமைப்பு உண்டு. அங்கு பயிற்றப்பட்ட தாதியர்கள் உண்டு. அவர்களைச் சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்தலாம்.
மூன்றாவது தெரிவு,செக்யூரிட்டி நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டு வீட்டுக்கு ஒரு செக்யூரிட்டியை வேலைக்கு அமர்த்தலாம். இந்த ஏற்பாடு எல்லா முதியவர்களுக்கும் பொருந்தாது. தன்னுடைய அலுவல்களைத் தானே கவனிக்கக்கூடிய அளவுக்குத் தெம்பாக உள்ள முதியவர்களுக்குத்தான் பொருந்தும்.
நான்காவது ஏற்பாடு,வீட்டில் கண்காணிப்புக் கமராவைப் பொருத்துவது. இதுவும் தானாக இயங்கும் முதியவர்களுக்குத்தான் பொருந்தும். ஆனால் கமரா சரிவர இயங்கவில்லை என்றாலோ அல்லது கமராவின் கண்காணிப்பு வீச்சுக்கு வெளியே முதியவர் போய்விட்டாலோ அதன் பின் அவருடைய நடமாட்டங்களைக் கவனிக்க முடியாது. இதில் கமராவைத் தொடர்ச்சியாக அடிக்கடி பார்க்க வேண்டியிருக்கும். யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டில் அவ்வாறு கமரா பொருத்தப்பட்டிருந்தது. பிள்ளைகள் முதியோரின் நடமாட்டத்தைக் கமரா மூலம் கண்காணிக்க முடிந்தது. ஆனால் ஒருநாள் முதியவரைக் காணவில்லை. இரண்டாம் நாளும் காணவில்லை. பிள்ளைகள் அயலவர்களோடு தொடர்புகொண்ட பொழுது அயலவர்கள் வீட்டு வளவில் கமராவின் கண்காணிப்பு வீச்சுக்கு வெளியே முதியவர் விழுந்து கிடக்கக் கண்டுபிடித்தார்கள். ஆனால் கண்டுபிடித்தபொழுது முதியவருக்கு உயிர் இருக்கவில்லை. அவர் இறந்து இரண்டு நாட்களாகி விட்டது.
இந்த ஏற்பாடுகளில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்யும்படி எனது நண்பரிடம் சொன்னேன். தனித்து விடப்பட்ட முதியவர்களுக்காகக் காசு செலவழிக்கத் தயாராக இருப்பவர்களுக்குத்தான் இந்தத் தெரிவுகள். இல்லையென்றால் ஏதாவது முதியோர் இல்லத்துக்குத்தான் போக வேண்டும்.
Geriatrician என்று அழைக்கப்படுகின்ற முதியோர் துறைசார் மருத்துவர்கள் தமிழில் மிகக்குறைவு. அதுமட்டுமல்ல முதியோரைப் பராமரிப்பதற்கான பயிற்றப்பட்ட தாதியர்களும் தமிழ்பகுதிகளில் குறைவு. இக்கட்டுரையில் முன்பு குறிப்பிடப்பட்ட மானிப்பாய் கிரீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் முதியோர் பராமரிப்புக்கென்று பயிற்சிகளை வழங்கும்(Institute of Medical Sciences) “மருத்துவ விஞ்ஞான நிறுவனம்” என்ற நிறுவனம் உண்டு. 2013இலிருந்து முதியோரைப் பராமரிப்பதற்குரிய தொழில்சார் பயிற்சிகளை வழங்கிவருகிறது. இங்கு வழங்கப்படும் தொழில்சார் பயிற்சியானது இலங்கைத் தீவின் தேசிய தொழில்சார் தகமை மட்டத்தில் நான்காவது மட்டத்துக்குரியது. ஐந்தாவது தொழிற்சார் தகமை மட்டும்தான் டிப்ளமோ. அப்படிப் பார்த்தால் தமிழ்ப்பகுதிகளில் இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கும் முதியோரைப் பராமரிக்கும் தாதியர்கள் அனைவருமே குறைந்தபட்சம் டிப்ளோமா தரத்துக்குரிய தொழில் தகமையைக்கூட கொண்டிருக்கவில்லை.ஆனால் மேற்கத்திய நாடுகளில் அது நான்கு ஆண்டுகாலப் பட்டப்படிப்பாகவும் காணப்படுகிறது.
வடக்கில் மானிப்பாய் கிரீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் மட்டும்தான் அவ்வாறான கற்கை நெறி உண்டு. அதேசமயம் முதியோரியல் துறைக்குரிய மருத்துவ நிபுணர்களின் தொகையும் குறைவு.
ஆனால் தமிழர் தாயகத்தில் வடக்கில் மட்டும் 60வயது கடந்த முதியோர் மொத்தம் இரண்டு இலட்சத்து 29ஆயிரத்து867பேருக்கு மேல் உண்டு. இதில் யாழ்ப்பாணத்தில் மட்டும் ஒரு லட்சத்து 54ஆயிரத்து 626 முதியோர் உண்டு. வடக்கில் மட்டும் மொத்தம் 28 முதியோர் இல்லங்கள் உண்டு. இவற்றுள் ஆகப் பெரியது கைதடியில் உள்ள அரச முதியோர் இல்லந்தான். அங்கே 200க்கும் குறையாத முதியோர் உண்டு. அதாவது வடக்கில் மட்டும் மொத்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 20 விகிதம் முதியவர்கள்.
எனக்குத் தெரிந்து புலம் பெயர்ந்துபோன பிள்ளைகளில் ஒரு பகுதியினர் தமது முதிய பெற்றோரைப் பராமரிப்பதற்காக ஊரில் குறிப்பிட்ட காலத்துக்கு வந்து தங்கி நிற்கிறார்கள். அதிகம் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோருக்கு தொடர்ச்சியாக யாராவது ஒரு பிள்ளை வீட்டில் நிற்கின்றது. அது ஒரு கொடுப்பினை. ஆனால் எல்லாருக்கும் இல்லை.
எனவே தமிழ் மக்கள் இதுதொடர்பில் வேகமாக முடிவெடுக்க வேண்டும். தாயகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் புலம் பெயர்ந்த தமிழர்களும் சேர்ந்து இதுதொடர்பாக பொருத்தமான முடிவுகளை எடுக்கலாம். இதுவிடயத்தில் பின்வரும் விடயப்பரப்புகளின் மீது கவனத்தைக் குவிக்கவேண்டும். முதலாவதாக எத்தனை முதியவர்கள் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள் என்பது தொடர்பாக சரியான புள்ளி விபரங்களைச் சேகரிப்பது. இரண்டாவது, முதியோரை பராமரிப்பதற்கான நிறுவனங்களைக் கட்டியெழுப்புவது. மூன்றாவது,பராமரிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் கற்கை நெறிகளை குறைந்தபட்சம் தனியார் கல்விக் கட்டமைப்புகளுக்கு ஊடாகத் தொடங்குவது.இது ஒரு தேசியக் கடமை.
முதியோர் இல்லங்களைக் கட்டியெழுப்புவது என்பது தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் தேச நிர்மாணத்தின் ஒரு பகுதிதான். முதியோரைப் பராமரிப்பதற்கு மட்டுமல்ல கைவிடப்பட்ட முன்னாள் இயக்கத்தவர்கள், விதவைகள்,மாற்றுத் திறனாளிகள்,மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், போதைப்பொருள் பாவனையாளர்கள் போன்ற எல்லாத் தரப்பினரையும் பராமரிப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இவையாவும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான கட்டமைப்புகள்தான்.
இனப்பிரச்சனைக்குத் தீர்வு வரும்வரையிலும் இந்தக் கட்டமைப்புகளை ஒத்தி வைக்க முடியாது. பராமரிக்கப்பட வேண்டிய பிரிவினர் பராமரிக்கப்படாமல் அனாதைகளாக விடப்படுவது என்பது ஒரு தேசிய அவமானம். எனவே தேசத்தைக் கட்டியெழுப்புவதன் ஒரு பகுதியாக மேற்கண்ட நிறுவனங்களைக் கட்டியெழுப்ப வேண்டும். நான் இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கும்போது எங்கேயோ ஒரு தொலை கிராமத்தில் யாரோ ஒரு முதியவர் உதவிக்கு ஆளில்லாமல் இறந்து போயிருக்கலாம்.
ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் தொடர்
ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் தொடர்
ஆஸ்திரேலிய தொடரில் இந்தியாவின் வெற்றியைத் தீர்மானிக்கும் 5 விஷயங்கள்

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
கட்டுரை தகவல்
பிரதீப் கிருஷ்ணா
பிபிசி தமிழ்
18 அக்டோபர் 2025
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) பெர்த் நகரில் தொடங்குகிறது. 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதிய இவ்விரு அணிகளும் மறுபடியும் மோதுவதால் இத்தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
பொதுவாகவே ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடர்கள் சவால் நிறைந்தவையாக இருக்கும். ஆஸ்திரேலியாவின் பலமான வேகப்பந்துவீச்சு, அதிரடியான பேட்டர்கள், எப்போதும் இந்தியாவுக்கு பிரச்னையாக விளங்கும் டிராவிஸ் ஹெட் என இம்முறையும் இந்திய அணிக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. அவற்றை சமாளித்து இந்தியா இந்தத் தொடரை வெல்வதில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய 5 விஷயங்கள் என்னென்ன?
1. ரோஹித் மற்றும் கோலியின் கம்பேக்

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2025 ஐபிஎல் தொடரில் விளையாடிய கோலி மற்றும் ரோஹித் அதன்பிறகு எந்தத் தொடரிலும் பங்கேற்கவில்லை.
விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் மறுபடியும் இந்திய அணிக்கு திரும்பியிருப்பது இந்தத் தொடர் மீது வழக்கத்தை விட அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2025 ஐபிஎல் தொடரில் விளையாடிய அவர்கள், அதன்பிறகு எந்தத் தொடரிலும் பங்கேற்கவில்லை. அதனால் அவர்களை மறுபடியும் இந்திய ஜெர்ஸியில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
அதேசமயம் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய பந்துவீச்சை அவர்கள் மண்ணில் சமாளிக்க இந்த இரண்டு சீனியர் வீரர்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானதாக இருக்கும். பொதுவாகவே ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பேட்டர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். அப்படியிருக்கும்போது பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜாஷ் ஹேசல்வுட் அடங்கிய ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சு கூட்டணி மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
அந்த சவால்களை சமாளிக்க கோலி மற்றும் ரோஹித் இருவரின் அனுபவமும் முக்கியம். ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் 50+ சராசரியில் இருவரும் ஆடியிருக்கிறார்கள். அதை அவர்கள் தொடரும்பட்சத்தில் இந்திய அணிக்கு நல்ல தொடக்கங்கள் கிடைக்கும்.
அதேசமயம் கடைசியாக அவர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் ஆடிய 2024-25 பார்டர் கவாஸ்கர் டிராபியில் இருவரின் செயல்பாடும் எதிர்பார்த்த அளவு இருக்கவில்லை. கடைசி 4 போட்டிகளில் கோலி 85 ரன்கள் மட்டும் அடித்திருக்க, விளையாடிய 3 போட்டிகளிலும் சேர்த்து 31 ரன்கள் மட்டுமே எடுத்தார் ரோஹித். அந்த செயல்பாட்டை மறக்கடிக்கும் வகையில் கோலியும், ரோஹித்தும் விளையாடவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.
2. புதிய கேப்டன் ஷுப்மன் கில்

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோலி, ரோஹித் என இரண்டு முன்னாள் கேப்டன்களுக்குத் தலைமை தாங்கவேண்டிய பொறுப்பு கில்லுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்தத் தொடரில் முதல் முறையாக ஷுப்மன் கில் தலைமையில் ஓர் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி. 2027 உலகக் கோப்பையை நோக்கிய இந்தப் பயணத்தில் அவர் மீது நிச்சயம் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும்.
அதேசமயம் டெஸ்ட் கேப்டனாக அவரது பயணம் சிறப்பாகவே தொடங்கியிருக்கிறது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கில் தலைமையில் சமன் செய்த இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வென்றது. இந்த செயல்பாடுகள் அவருக்கு நம்பிக்கை தருவதாக இருக்கும்.
மறுபக்கம் கோலி, ரோஹித் என இரண்டு முன்னாள் கேப்டன்களுக்குத் தலைமை தாங்கவேண்டிய பொறுப்பும் கில்லுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஓர் இளம் கேப்டனுக்கு இது நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமையலாம். ஆனால், தான் இந்த வாய்ப்பை எதிர்பார்த்திருப்பதாக கூறியிருந்தார் கில்.
ஆஸ்திரேலியா போன்ற ஒரு பெரிய அணியை அவர்கள் மண்ணில் எதிர்கொள்வது சவாலாகவே இருக்கும். வீரர்களின் ஸ்லெட்ஜிங் மட்டுமல்லாமல், ரசிகர்களை சமாளிப்பதும்கூட ஒரு பெரிய சவால் தான். அதுபோன்ற தருணங்களில் கேப்டனாக கில் எடுக்கும் முடிவுகள் ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இத்தொடருக்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்த அக்ஷர் படேல், "ஷுப்மன் கில் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறார். அவர் நெருக்கடியை தனக்குள் எடுத்துக்கொள்ளவேயில்லை. ஒரு தலைவருக்கான மிக முக்கிய குணம் அது" என்று கூறியிருந்தார். அதை இந்தத் தொடர் முழுவதும் கில் வெளிப்படுத்துவது அவசியம்.
3. பும்ரா இல்லாத வேகப்பந்துவீச்சு குழு

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பும்ரா இல்லாதது இந்திய பந்துவீச்சுக்கு சற்று பின்னடைவாகத்தான் இருக்கும்.
வேலைப்பளுவை சரியாகக் கையாள்வதற்காக ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு இந்தத் தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முன்னணி பௌலரான பும்ரா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலுமே விளையாடியிருந்தார்.
2024-25 பார்டர் கவாஸ்கர் டிராபியின் தொடர் நாயகனான பும்ரா இல்லாதது இந்திய பந்துவீச்சுக்கு சற்று பின்னடைவாகத்தான் இருக்கும். அதனால் மற்ற வேகப்பந்துவீச்சாளர்கள் மீதான எதிர்பார்ப்பும் நெருக்கடியும் அதிகரிக்கும். அதிரடி காட்டும் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு எதிராக இந்த பௌலர்களுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது.
முகமது சிராஜ் நிறைய போட்டிகளில் விளையாடியிருப்பதால் அவர் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்குவார். அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா மூவரில் இருவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்பு அதிகம். அவர்களின் செயல்பாடுகள் கூர்ந்து கவனிக்கப்படும்.
குறிப்பாக ஹர்ஷித் ராணாவின் செயல்பாடுகள் மீது அனைவரின் கவனமும் இருக்கும். பயிற்சியாளர் கம்பீரின் தயவால் தான் அவர் எல்லா போட்டிகளிலும் ஆடுகிறார் என்று சமீபத்தில் பேசப்பட, அதை சில தினங்கள் முன் கடுமையாக விமர்சித்திருந்தார் கம்பீர். அப்படியிருக்கும்போது ஹர்ஷித் ராணாவின் ஒவ்வொரு அசைவுமே பேசுபொருளாக்கப்படும். இதுவும் அந்த இளம் வீரருக்குக் கூடுதல் நெருக்கடி கொடுப்பதாக அமையலாம்.
பிரசித், அர்ஷ்தீப் ஆகியோருக்கும் அணியில் நிரந்தர இடம் பிடிக்கவேண்டும் என்ற தேவை இருப்பதால், அதுவும் உளவியல் ரீதியாக அவர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தலாம்.
இந்த அனைத்து சவால்களையும் சமாளித்து இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஜொலிக்கவேண்டும்.
4. துணைக் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்தியாவுக்காக அதிக ரன்கள் (5 இன்னிங்ஸ்களில் 243) எடுத்திருந்தது ஷ்ரேயாஸ் தான்.
2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பாக ஷ்ரேயாஸ் ஐயரை வெளியேற்றுவது பற்றித்தான் டீம் மீட்டிங்கில் விவாதித்தோம் என்று கூறியிருந்தார் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ். அந்த அளவுக்கு அவரது விக்கெட் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அந்த இறுதிப் போட்டியில் அவர் டக் அவுட் ஆனதில் இருந்துதான் இந்தியா பின்னடைவை சந்திக்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டிகளில் சீரான செயல்பாட்டை அவர் கொடுத்துக்கொண்டிருப்பதும், எந்தவித பந்துவீச்சையும் அவர் நன்றாக எதிர்கொள்வதும் அதற்கான முக்கியக் காரணங்கள். கடைசியாக விளையாடிய சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்தியாவுக்காக அதிக ரன்கள் (5 இன்னிங்ஸ்களில் 243) எடுத்திருந்தது ஷ்ரேயாஸ் தான். அதனால் அவருக்கு ஆஸ்திரேலிய பௌலர்கள் சிறப்பு வியூகம் வகுப்பார்கள். அதனால் அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
இப்போது துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருக்கும் ஷ்ரேயாஸ் மிடில் ஆர்டரில் இந்தியாவுக்கு நல்ல பங்களிப்பைக் கொடுத்தால் அது ஆஸ்திரேலிய பௌலர்களுக்கு நிச்சயம் தலைவலியாக அமையும்.
5. நித்திஷ் குமார் ரெட்டியின் இன்னொரு அறிமுகம்

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தன் அறிமுக டெஸ்ட் தொடரில் இதே ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்டிருந்தார் நித்திஷ்.
மிகவும் முக்கியமான வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இடத்துக்கு நித்திஷ் ரெட்டியை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறது இந்திய அணி. ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயத்தால் அவதிப்படுவதால் நித்திஷை அனைத்து ஃபார்மட் வீரராக நிலைநிறுத்த விரும்புகிறார்கள். அதனால் இப்போது ஒருநாள் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
காரணம் 2023 உலகக் கோப்பையின் பிற்பகுதியில் ஹர்திக் இல்லாததால் அந்த ஒரு இடத்தை நிரப்ப சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி என இரண்டு வீரர்களை இந்தியா பயன்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படியொரு நிலை மறுபடியும் வராமல் இருக்க அதேபோல் இன்னொரு வீரரையும் வளர்த்தி வைத்திருப்பது அவசியமாகிறது.
இந்த வாய்ப்பை நித்திஷ் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது இந்திய அணிக்கும் மிகவும் அவசியம். அந்த வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இடம் சரியாக நிரப்பப்பட்டால் அணியின் காம்பினேஷனில் தேவையான மாற்றங்களை செய்ய கேப்டனுக்கு அது உதவியாக இருக்கும். ஒருவேளை அவர்கள் ஒரு கூடுதல் ஸ்பின்னரை பயன்படுத்தவும் அது உதவலாம். அதனால் அவரது அறிமுகம் மீதும் அதிக கவனம் இருக்கும்.
தன் அறிமுக டெஸ்ட் தொடரில் இதே ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்டிருந்தார் நித்திஷ். இப்போது ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், இந்த ஒருநாள் அறிமுகத்திலும் அவர் ஜொலித்தால் அது இந்திய அணிக்கு பெரும் பலமாக அமையும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
ஐநா தீர்மானமும் தமிழகமும்: தமிழகம் ; புது டில்லி ; ஜெனிவா - நிலாந்தன்
ஐநா தீர்மானமும் தமிழகமும்: தமிழகம் ; புது டில்லி ; ஜெனிவா - நிலாந்தன்
ஐநா தீர்மானமும் தமிழகமும்: தமிழகம் ; புது டில்லி ; ஜெனிவா - நிலாந்தன்
“சிறிலங்கா தொடர்பான ஐநா மனிதவுரிமை பேரவையின் 60/1 தீர்மானம் நீதியைப் பெற்றுத் தராது! தமிழர்கள் தம்மை ஒருங்கிணைத்துக் கொள்வதே முதல் பணி!’ இது ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையின் தலைப்பாகும். ஈழப் போராட்டத்திற்காகத் தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஈழ உணர்வாளர்கள் இணைந்து உருவாக்கிய கட்டமைப்பே ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பாகும். கடந்த 13ஆம் திகதி அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணி கையெழுத்திட்டு வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையின் ஒரு பகுதி கடைசியாக நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானம் தொடர்பாக பின்வருமாறு கூறுகிறது.
“இந்த தீர்மானம் முந்தைய தீர்மானங்களில் இருந்து ( 30/1 (2015), 46/1 (2021) 51/1 (2022), 57/1 (2024) ) ஒருபடி கீழே இறங்கிவிட்டது. இந்த தீர்மானத்தில் முதல் முறையாக “பன்னாட்டு” என்ற சொல் அடியோடு நீக்கப்பட்டுள்ளது. இது பன்னாட்டு உதவியுடனான பொறுப்புக்கூறல் பொறிமுறை என்ற பேரவையின் முந்தைய உறுதிப்பாட்டிலிருந்து பின்வாங்கியதைக் குறிப்பதாகும். 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீரமானம் பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான கலப்பு பொறிமுறை ஒன்றை முன்வைத்தது. ஆனால், பத்தாண்டுகள் கழித்து அதே பேரவையில் முந்தைய நிலைப்பாட்டை மறுத்து உள்நாட்டுப் புலனாய்வு என்று பேசுகிறது”
கடந்த 16 ஆண்டு கால ஜெனிவா மைய அல்லது மேற்கு நாடுகளை நோக்கிய ஈழத் தமிழ்த் தேசிய அரசியலின் தற்போதைய நிலை குறித்து தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு செயற்பாட்டாளர்களின் கருத்து அது.
தமிழகத்திலிருந்து வரும் கருத்துக்களுக்கு ஒரே சமயத்தில் இனப்பரிமாணமும் பிராந்தியப் பரிமாணமும் ராஜதந்திரப் பரிமாணமும் உண்டு. ஏனென்றால் இந்தியப் பேரரசின் அரசியல் தீர்மானங்களின் மீது தாக்கம் செலுத்தக்கூடிய ஒரே சாத்திய வெளி தமிழகம்தான். ஈழத்தமிழர்கள் நொதிக்கச் செய்ய வேண்டியது தமிழகத்தைத்தான். தமிழகத்தைத் தவிர்த்துவிட்டு ஈழத்தமிழர்கள் நீதிக்கான போராட்டத்தில் நிர்ணயகரமாக முன்னேற முடியாது.
ஈழத் தமிழர்களுக்காக இதுவரை தமிழகத்தில் 19பேர் தீக்குளித்திருக்கிறார்கள். ஈழத்தில் இடம்பெற்ற இனஅழிப்புக்கு எதிராக முதலாவது தீர்மானத்தை நிறைவேற்றியது தமிழகந்தான். உலகில் உள்ள ஆகப்பெரிய தமிழ் சட்ட மன்றம் அது. எட்டுக் கோடி மக்களைப் பிரதிநித்துவப்படுத்துவது. அங்கே நிறைவேற்றப்படட இனஅழிப்புக்கு எதிரான தீர்மானத்துக்கு அரசியல் மற்றும் ராஜதந்திர முக்கியத்துவம் உண்டு. அதுபோல முதலாவதாக இனஅழிப்பு நினைவுத் திடலை தஞ்சாவூரில் கட்டியெழுப்பியதும் தமிழகந்தான்.
ஆனால் கடந்த 16ஆண்டுகளாக தமிழகத்தின் பரந்தளவிலான கவனக் குவிப்புக்குள் ஈழத்தமிழர்கள் இல்லை. ஈழத் தமிழர் விவகாரம் தமிழகத்தில் நொதிப்பை,கொந்தளிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இல்லை.
செம்மணிப் புதைகுழி திறக்கப்பட்டிருந்த பின்னணிக்குள், கடந்த யூலை மாதம் 26 ஆம்திகதி நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் சுவாமி சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. கடந்த ஒகஸ்ற் 19ஆம் திகதி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஏற்பாட்டில் சென்னை,சுவாமி சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில்,”ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சாட்சியாக விளங்கும் செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி விசாரணை நடத்தக் கோரி ஐநா மன்றத்தை வலியுறுத்தியும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த கோரும் தீர்மானத்தை நிறைவேற்றி ஒன்றிய அரசிற்கு அனுப்பி ஒன்றிய அரசை வலியுறுத்தக் கோரியும்” கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இப்பேரணிகள் பற்றியும் அவற்றில் பேசப்பட்ட விடயங்கள் பற்றியும் ஈழத் தமிழர்களுடைய பிரதான ஊடகங்களில் பெரிய அளவுக்குக்குப் பேசப்படவில்லை.
திபெத்தியர்களின் சுதந்திரப் போராட்டத்தில் இதுவரையிலும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் திபெத்துக்காக தீக்குளித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே திபெத்தவர்கள்தான். பிற இனத்தவர்களோ பிற நாட்டவர்களோ கிடையாது. ஆனால் ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்காக இதுவரை தமிழகத்தில் 19 தியாகிகள் தீக்குளித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தமிழகத்தவர்கள். இவர்களில் யாருமே இந்தியப் பேரரசின் ராஜதந்திர இலக்குகளை முன்வைத்துத் தீக்குளிக்கவில்லை. திருகோணமலையில் உள்ள எண்ணைக் குதங்களைக் கேட்டோ,அல்லது பலாலி விமான நிலையத்தை விஸ்தரிக்க வேண்டும் என்று கேட்டோ, அல்லது காங்கேசன் துறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு பயணிகள் சேவையைத் தொடங்க வேண்டும் என்று கேட்டோ,அல்லது 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டோ அவர்கள் தீக்குளிக்கவில்லை. ஈழத் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும்;நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்டுத்தான் தீக்குளித்தார்கள்.
உலகிலேயே கடலால் பிரிக்கப்படும் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் கடலின் மறுபுறத்தில் இருக்கும் மக்களுக்காகத் தீக்குளித்தமை என்பது நவீன வரலாற்றில் முன்னெப்பொழுதும் இடம்பெற்றிராத ஓர் அரசியல் தோற்றப்பாடு. அந்த 19 தியாகிகளுக்காக ஈழத் தமிழர்கள் என்றென்றும் தமிழகத்துக்குத் தலை வணங்க வேண்டும். அரசியல்வாதிகள் தங்களுடைய கட்சி அரசியலைத்தான் செய்வார்கள். ஆனால் அந்த 19பேரும் அவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கட்சிமைய அரசியலுக்காகத் தீக்குளிக்கவில்லை.
நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பின் பிரச்சாரக் கூட்டங்களை படிப்படியாக ஒழுங்குப்படுத்தி வந்த ஒரு பின்னணிக்குள், ஈழத்தமிழர்களைப் பற்றியும் பேச வேண்டி வந்தது. ஈழத் தமிழ் அரசியலை அங்கே பேச வேண்டிய ஒர் அரசியல் தேவை இருப்பதைத்தான் அது காட்டுகின்றது. தமிழகத்தைத் தவிர்த்துவிட்டு ஈழத்தமிழர்கள் நீதிக்கான போராட்டத்தில் நிர்ணயகரமாக முன்னேற முடியாது.
நீதிக்கான போராட்டத்தில் இம்முறை ஜெனிவா தீர்மானமானது தமிழ் மக்களின் நோக்கு நிலையில் பின்னடைவுதான். ஆனால் அந்தப் பின்னடைவு கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தொடங்கிவிட்டது. அந்தத் தேர்தலில் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் அரசாங்கத்துக்கு வாக்களித்தார்கள். அரசாங்கத்திற்கு ஏழு ஆசனங்கள். தமிழ்த் தேசிய கட்சிகளில் பெரியது ஆகிய தமிழரசுக் கட்சிக்கும் ஏழு ஆசனங்கள். இதனால் அரசாங்கம் தமிழ் மக்கள் தனக்கு ஆணை வழங்கியிருப்பதாக உலகம் முழுவதும் கூறித் திரிகின்றது. எனவே ஐநாவில் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் பின்னடைவு கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்டுவிட்டது.
வாழ்வுரிமை இயக்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதுபோல ஐநாவின் முன்னய தீர்மானங்களில் இருந்தும் புதிய தீர்மானம் வழுக்கத் தொடங்கிவிட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்காவை பொறுப்பு கூற வைப்பதற்கான அலுவலகம் ஒன்று மனித உரிமைகள் பேரவையில் உருவாக்கப்பட்டது. இப்பொழுது நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய தீர்மானமானது அந்த அலுவலகத்தின் பணியை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கின்றது. அந்த அலுவலகமானது சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்குரியது. அது ஒரு பன்னாட்டு அலுவலகம். அதாவது சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் ஏற்பாடு ஏற்கனவே சர்வதேசப் பரிமாணத்தைப் பெற்றுவிட்டது. அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குள் வருவதற்கு இன்றுவரை விசா இல்லை. அனுர ஜனாதிபதியாக வந்த பின்னரும் விசா இல்லை. மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வந்து போன பின்னரும் விசா இல்லை.
இவ்வாறு ஏற்கனவே சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் விடயம் சர்வதேச மயப்பட்ட பின்னரும்,புதிய தீர்மானமானது உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை அமைத்துலக உதவிகளோடு பலப்படுத்த வேண்டும் என்று கூறுகின்றது. உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை பலப்படுத்துவதென்றால் பிறகு எதற்கு சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு பன்னாட்டுக் கட்டமைப்பு? சில சமயம் ஐநா கூறக்கூடும் அது ஒர் அழுத்தப் பிரயோக உத்தி என்று.அப்படிச் சொன்னாலும் ஒரு கேள்வி உண்டு.அது எதற்கான அழுத்தம்? இலங்கையைப் பொறுப்புக்கூற வைப்பதற்கான அழுத்தமா? அல்லது இலங்கை சீன விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக மாறுவதில் அதற்குள்ள வரையறைகளை உணர்த்துவதற்கான ஓர் அழுத்தமா?
எனவே ஐநா தீர்மானத்தில் இருந்து தமிழ்மக்கள் படிக்க வேண்டியது என்னவென்றால்,மேற்கத்திய நாடுகளை நோக்கிய ஈழத் தமிழ் அரசியலானது அதாவது குறிப்பாகச் சொன்னால் ஐநாவை நோக்கிய ஈழத் தமிழ் அரசியலானது புதிய மாற்றங்களையும் புதிய வியூகங்களையும் வேண்டி நிற்கிறது என்பதுதான்.
முதலில் ஈழத் தமிழர்கள் தங்களை ஒரு தேசமாகத் திரட்டிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ருசி கண்ட அரசாங்கம் இனி வரக்கூடிய தேர்தல்களிலும் தமிழ் மக்களின் ஆணையைப் பெற முயற்சிக்கும். எனவே முதலில் ஈழத் தமிழர்கள் தங்களை ஒரு தேசமாகத் திரட்டிக் கொள்ளவேண்டும். அதன்பின் உலகத்தில் தமக்கு ஆதரவான சக்திகளைத் திரட்டிக் கொள்ள வேண்டும். தங்களை ஒரு தேசமாகத் திரட்டிக் கொண்டால்தான் ஓர் அரசைப்போல சிந்திக்கலாம்;செயற்படலாம். இந்தக் கட்டுரை எந்த ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கையில் தொடங்கியதோ அதே அறிக்கையின் இறுதிப் பகுதியை இங்கு கூறி முடிக்கலாம்…
“தமிழ்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஈழ ஆதரவு ஆற்றல்கள் தத்தமது அரசுகளை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக திருப்புவதில் முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு அரசியல் வலுப்பெற்றால்தான் இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்றியமைக்க முடியும். இந்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாமல் மேற்குலக நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம் வந்துவிடப் போவதில்லை.
யாழ். போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவு – விசேட தபால் தலை வெளியீடு
யாழ். போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவு - விசேட தபால் தலை வெளியீடு
யாழ். போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவு - விசேட தபால் தலை வெளியீடு
யாழ். போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவு - விசேட தபால் தலை வெளியீடு
adminOctober 18, 2025

அந்நிகழ்வில் மதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவானந்தராசா , சி.சிறிதரன் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி , யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம. பிரதீபன் , வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ,வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, 1850ஆம் ஆண்டு “ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை” என்ற பெயரில், அந்த காலத்திய அரசாங்க அதிபர் மற்றும், அவருடைய நண்பர்களுடன் இணைந்து சிறிய அளவில் நிறுவப்பட்டது.
பின்னர், 1907ஆம் ஆண்டு, இவ்வைத்தியசாலைக்கு “யாழ்ப்பாணம் சிவில் வைத்தியசாலை” என்ற புதிய பெயர் வழங்கப்பட்டு, அதன் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டன. அதற்குப் பிறகு, 1956ஆம் ஆண்டு, இது “யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை” என மாற்றப்பட்டது.
1980ஆம் ஆண்டு, இவ்வைத்தியசாலை “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை” (Jaffna Teaching Hospital) என பெயர் மாற்றம் பெற்று, அன்றிலிருந்து அதே பெயரில் தொடர்ந்தும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், எதிர்காலத்தில் “தேசிய வைத்தியசாலை” (National Hospital) என்ற அடிப்படையில் இந்த வைத்தியசாலை உயர்த்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு சேவையை நினைவு கூர்ந்து, பல்வேறு விழாக்கள் மற்றும் நிகழ்வுகள் வைத்தியசாலையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பேரிச்சம்பழம் நல்லதா?கெட்டதா?
கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
சுவிற்சலாந்தின் நல்லிணக்க நகர்வுகள் – நிலாந்தன்.
சுவிற்சலாந்தின் நல்லிணக்க நகர்வுகள் – நிலாந்தன்.

சுவிற்சலாந்தின் நல்லிணக்க நகர்வுகள் – நிலாந்தன்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் சுவிற்சலாந்து ஆர்வத்தோடு காணப்படுவதாக தெரிகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளும் அரச பிரதிநிதிகளும் தீர்வு முயற்சிகள் தொடர்பாக உரையாடுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை சுவிற்சலாந்து ஏற்படுத்திக் கொடுத்தது. சுவிற்சலாந்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது துறைசார் நிபுணர்களும் அங்குள்ள தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வதற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்த சந்திப்பின் அடுத்த கட்டமாக கடந்த வாரம் கொழும்பில் உள்ள சுவிற்சலாந்து தூதுவரின் இடத்தில் காலை உணவோடு ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.இதில் அழைக்கப்பட்ட தமிழ் கட்சிகளின் தலைவர்கள் சிலர் கலந்து கொள்ளவில்லை.
சுவிற்சலாந்து ஏன் இந்த விடயத்தில் ஆர்வமாக காணப்படுகிறது? ஏற்கனவே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் சில இலங்கையில் உள்ள பௌத்த மகா சங்கங்களில் உள்ள ஒரு பிரிவினரோடு இணைந்து “இமாலய பிரகடனம்”என்ற ஒரு பிரகடனத்தை வெளியிட்டது நினைவில் இருக்கலாம். இந்த பிரகடனத்தின் பின்னணியில் சுவிற்சலாந்தே இருந்ததாக அவதானிப்புகள் உண்டு. கொழும்பில் உள்ள சுவிற்சலாந்து தூதரகத்தில் முன்பு பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராஜதந்திரி ஒருவர் இமாலய பிரகடனத்தை உருவாக்கும் முயற்சிகளில் பின் இருந்து உழைத்ததாக கருதப்படுகிறது.அதற்கு வேண்டிய நிதி அனுசரணையையும் சுவிற்சலாந்தே வழங்கியதாக ஊகிக்கப்பட்டது.
ஆனால் ஹிமாலிய பிரகடனம் தோற்றுவிட்டது. அதைத் தயாரித்த புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் அங்குள்ள தமிழர்களின் மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டு விட்டன. குறிப்பாக கனடாவில் அந்த பிரகடனத்துக்காக உழைத்த கனேடிய தமிழ் காங்கிரஸ் என்ற அமைப்புக்கு எதிராக அங்குள்ள ஏனைய எல்லாத் தமிழ் அமைப்புகளும் ஒன்று திரண்டன. இமாலய பிரகடனம் சொதப்பிய பின் சுவிற்சலாந்து மறுபடியும் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் மற்றொரு நகர்வை முன்னெடுக்கின்றது.
சுவிற்சலாந்துக்கும இலங்கைக்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் தொடங்கியதில் இருந்து வரும் ஆண்டுடன் எழுபதாவது ஆண்டு முடிவடைகிறது.அதையொட்டி இலங்கைத் தீவில் சமாதான முயற்சிகளில் ஈடுபட சுவிற்சலாந்து ஆர்வமாக இருப்பதாக உத்தியோகபூர்வமாக கூறப்படுகிறது.
ஆனால் அதுவல்லாத ராஜதந்திர இலக்குகள் அங்கே இருக்கலாம் என்று ஊகிக்க முடியும். சக்திமிக்க மேற்கு நாடுகளின் ஆலோசனைகள் இன்றி சுவிற்சலாந்து தன்னிச்சையாக இதுபோன்ற சமாதான முயற்சிகளில் இறங்காது. ஏனென்றால் இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவத்தைக் கருதிக் கூறின் இங்கு சமாதானத்தை ஏற்படுத்துவது என்பது நன்னோக்கத்தின் அடிப்படையில் மட்டும் இருக்க முடியாது.அதைவிட ஆழமான பொருளில் அங்கே சக்திமிக்க நாடுகளின் அரசியல், பொருளாதார,ராணுவ,ராஜதந்திர இலக்குகள் இருக்க முடியும்.
போரைப் போலவே சமாதானமும் ஓர் அரசியல் நடவடிக்கைதான்.போரைப் போலவே சமாதானத்திலும் ராஜதந்திர இலக்குகள் இருக்கும். சமாதானத்திலும் நிலையான நலன்கள் இருக்கும். சமாதான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்கள் தேவ தூதர்கள் அல்ல. அவர்கள் ராஜதந்திரிகள்தான்.அவர்கள் தந்திரமாகத்தான் நடப்பார்கள்.வெளிப்படையாக கதைக்க மாட்டார்கள். உள்நோக்கங்களை வெளிப்படுத்த மாட்டார்கள்.
கடந்த 16 ஆண்டுகளாக ஈழத் தமிழ் அரசியலானது பெரும் போக்காக ஐநா மைய அரசியலாகக் காணப்படுகிறது. ஆனால் அதிலும் இப்பொழுது ஈழத் தமிழர்களுக்கு சலிப்பும் வெறுப்பும் சந்தேகமும் ஏற்பட்டுவிட்டது.சில கிழமைகளுக்கு முன்பு செம்மணி வளைவில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளரூடைய அறிக்கை பாதிக்கப்பட்ட மக்களால் எரிக்கப்பட்டது. எந்த மனித உரிமைகள் ஆணையாளரை செம்மணி வளைவுக்கு வரக் கேட்டு ஒரு விளக்கை ஏற்றி மூன்று நாட்கள் அணியாமல் வைத்திருந்தார்களோ, அதே மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை அதே செம்மணி வளைவில் வைத்து எரிக்கும் ஒரு நிலைமை. அதாவது ஈழத் தமிழர்கள் ஐநா மைய அரசியலில் ஏமாற்றம் அடைய தொடங்கி விட்டார்கள் என்பதனை அது காட்டுகிறது.
இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள்தான், சுவிற்சலாந்தின் புதிய நகர்வுகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடங்கின. ஏற்கனவே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இமாலய பிரகடனத்தின் பின்னால் இருந்த அதே நாடு இப்பொழுது மீண்டும் இலங்கைத் தீவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.
சுவிற்சலாந்து உலகின் சமஸ்டி முன்னுதாரணங்களில் பிரதானமான ஒரு நாடாக கருதப்படுகிறது.எனவே அப்படிப்பட்ட ஒரு நாடு நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபடும் பொழுது அது மிக உயர்வான ஒரு சமஸ்டி தீர்வை ஆதரிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தைகளின்படி குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதம் சுவிற்சலாந்தில் நடந்த சந்திப்பின்போது அரச பிரதி கூறியவற்றின் அடிப்படையில் சிந்தித்தால்,”எக்கிய ராஜ்ய” என்று அழைக்கப்படுகின்ற யாப்பு உருவாக்கத்துக்கான இடைக்கால வரைபுதான் பேச்சுவார்த்தை மேசையில் இருப்பதாகத் தெரிகிறது.
சுவிற்சலாந்தில் நடந்த சந்திப்பில் கலந்து கொண்ட அரச பிரதிநிதி ஒரு விடயத்தை அழுத்தமாக தெரிவித்துள்ளார். இடைக்கால வரைபுக்கு தமிழ் மக்களின் ஆணையும் உண்டு என்பதேஅது.ஏனென்றால், நிலைமாறு கால நீதிச் செய்முறைகளின் கீழ் உருவாக்கப்பட்டதே புதிய யாப்புக்கான இடைக்கால வரைபு ஆகும்.
நிலைமாறு கால நீதி என்பது ரணில்-மைத்திரி அரசாங்கத்தோடு இணைந்து ஐநா முன்வைத்த ஒரு தீர்வு. நிலை மாறுகால நீதிச் செய்முறைகளின் கீழ் நாடாளுமன்றம் சாசனப் பேரவையாக மாற்றப்பட்டது. ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக வழிநடத்தல் குழுவும் ஏனைய உபகுழுக்களும் உருவாக்கப்பட்டன.இக்குழுக்களில் அப்பொழுது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கம் வகித்தார்கள்.ஜேவிபியும் அங்கம் வகித்தது.
அக்காலகட்டத்தில் சம்பந்தர் திரும்பத் திரும்ப ஒரு விடயத்தைக் கூறி வந்தார். அதற்கு முன் தயாரிக்கப்பட்ட எல்லா யாப்புக்களும் தமிழ் மக்களின் பங்களிப்பின்றி உருவாக்கப்பட்டவை. ஆனால் தமிழ் மக்களின் பங்களிப்போடு ஒரு புதிய யாப்பு உருவாக்கப்படுவது அதுதான் முதல் தடவை என்றும் அவர் சொன்னார். ஆனால் அந்த யாப்புருவாக்க முயற்சியைக் குழப்பியது சிங்களத் தரப்புதான்.குறிப்பாக நிலை மாறுகால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேன அதனை 2018ஆம் ஆண்டு ஒரு யாப்புச்சதி முயற்சியின் மூலம் தோற்கடித்தார்.
மைத்திரிபால சிறிசேன அந்த யாப்பு உருவாக்க முயற்சிகளின்போது தெரிவித்த ஒரு கருத்தை இப்பொழுது சுமந்திரன், கஜேந்திரக்குமாருக்கு பதில் அளிப்பதற்காகப் பயன்படுத்துகின்றார். அது என்னவென்றால், தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் பயமுறுத்தாத வார்த்தைகளை பயன்படுத்துவது என்ற முடிவின் அடிப்படையில்தான் எக்கிய ராஜ்ய என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்று. ஆனால் தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் பயமுறுத்தாத சொற்களைக் கொண்ட யாப்பை உருவாக்க வேண்டும் என்று கூறிய மைத்திரிபால சிறிசேனதான் அந்த யாப்பின் இடைக்கால வரைபை தோற்கடித்தார் என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும் .
அதுமட்டுமல்ல, யாப்புருவாக்க முயற்சிகள் தேங்கி நின்றபின் 2021 ஆம் ஆண்டு ஐநாவுக்கு ஒரு கூட்டு கடிதத்தை எழுதுவதற்காக தமிழ்க் கட்சிகள் வவுனியாவில் கூடியபொழுது, அதில் கலந்து கொண்ட சுமந்திரன் சொன்னார், 6 ஆண்டுகளாக ஒரு பரிசோதனை செய்தோம். அதில் தோற்று விட்டோம்… என்று. அங்கே அவர் குறிப்பிட்ட தோல்வியுற்ற பரிசோதனை எனப்படுவது நிலைமாறு கால நீதிதான். நிலைமாறு கால நீதியின் தமிழ்ப் பங்காளி அவர். யாப்புருவாக்க முயற்சியின் முன்னணித் தமிழ்ப் பங்காளியும் அவர். அப்படிப் பார்த்தால் ஓர் அடிப்படைக் கேள்வி இங்கே எழுகிறது. தோல்வியுற்ற பரிசோதனையின் விளைவாகக் கிடைத்த இடைக்கால வரைவு எப்படி வெற்றி பெற்ற ஒன்றாக இருக்க முடியும்?
நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகள் தோல்வியுற்றதற்கு அடிப்படைக் காரணம் மைத்திரியோ ரனிலோ அல்ல. அதைவிட ஆழமான ஒரு காரணம் உண்டு. என்னவென்றால், நாட்டில் நிலை மாற்றம் ஏற்படாமலேயே நிலை மாறு கால நீதியை ஸ்தாபிக்க முயன்றமைதான்.அதற்கு ஜநாவும் பொறுப்பு.நிலைமாற்றம் ஏற்படாத காரணத்தால்தான் மைத்திரி மகிந்தவிடம் அப்பம் சாப்பிட்டுவிட்டு நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட அந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சித்தார்.நிலைமாற்றம் ஏற்படாத காரணத்தால்தான் ஈஸ்டர் குண்டுகள் வெடித்தன. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக,நிலை மாற்றம் ஏற்படாத காரணத்தால்தான் எக்கிய ராஜ்ஜிய என்ற அந்த வார்த்தையையே பயன்படுத்த வேண்டி வந்தது. தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் மயக்கம் தரும் விதத்தில் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏன் வந்தது? வெளிப்படைத் தன்மை மிக்க ஒரு சமஸ்ரியை ஏன் தமிழ் மக்களுக்கு வாக்களிக்க முடியாமல் போனது? அதை நோக்கி ஏன் சிங்கள மக்களை, சிங்கள மக்களுடைய கூட்டு உளவியலைத் தயார்படுத்த முடியாமல் போனது? ஏனென்றால் அங்கே நிலை மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை என்பதால்தான்.
அதே இடைக்கல வரைவுதான் இப்பொழுது பேச்சுவார்த்தை மேசையில் வைக்கப்பட்டிருப்பதாக கஜேந்திரகுமார் குற்றம் சாட்டுகிறார்.அது ஒற்றை ஆட்சிப் பண்புமிக்கது என்றும் அவர் கூறுகிறார்.இந்த விடயத்தில் சுமந்திரன் சமூக வலைத்தளங்களில் கஜேந்திரக்குமாருக்கு பதில் கூறிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, அதுதொடர்பான பகிரங்க விவாதம் ஒன்றுக்குப் போக வேண்டும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணியும் இந்த விடயத்தை மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக விவாதித்துத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அது வெளிப்படைத் தன்மையுள்ள சமஸ்டி என்றால் ஏன் வெளிப்படையாக விவாதிக்க முடியாது? இல்லையென்றால் அதற்குள் ஏதோ கள்ளம் இருக்கிறது என்றுதானே பொருள்?
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறது. எனவே ஒரு தீர்வு முயற்சியை அவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த தேவையான அடிப்படைப் பலத்தைக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் தமிழ்த் தரப்பு ஒன்றாக நின்று அதை எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டு கஜேந்திரக்குமார் நாடாளுமன்றத்தில் உள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட உறுப்பினர்களை ஒன்றாகத் திரட்டும் ஒரு வேலையில் ஈடுபட்டார். ஆனால் அதற்குத் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி ஆதரவு தரவில்லை. அவர்கள் அதற்குத் தெரிவித்த அடிப்படைக் காரணம் என்னவென்றால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் தலைமைத்துவப் போட்டியைக் கையாண்டு கட்சியை உடைக்க முயற்சிக்கிறது,அதன்மூலம் கட்சியைத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறது என்பதுதான்.ஐநாவுக்குக் கடிதம் எழுதும் விடயத்திலும் அப்படிதான் தமிழரசுக்கட்சி கருதியது.
அரசாங்கம் ஒரு புதிய யாப்பை கொண்டுவரக்கூடிய பலத்தோடு காணப்படுவதாக ஐநாவும் மேற்கு நாடுகளும் நம்புகின்றன.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் தங்களுக்கு ஆணை வழங்கியிருப்பதாக அரசாங்கம் ஐநாவிலும் உலகின் எல்லாத் தலை நகரங்களிலும் பெருமையாக கூறிக்கொள்கிறது. அதுபோலவே யாப்புருவாக்கத்துக்கான இடைக்கால வரைபிலும் தமிழ் மக்களின் ஆணை ஏற்கனவே பெறப்பட்டு விட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக ஒரு புதிய யாப்பை உருவாக்கத் தேவையான மக்கள் அபிப்பிராயத்தைத் திரட்டும் பணிகள் ஏற்கனவே நிலைமாறு கால நீதிச் செய்முறைகளின் கீழ் 2015ல் தொடங்கி 18 வரையிலுமான காலப்பகுதிக்குள் செய்து முடிக்கப்பட்டுவிட்டன என்றும் அரசாங்கம் கூறுகிறது.அதாவது இதை மேலும் கூர்மையாகச் சொன்னால், புதிய யாப்புக்கான இடைக்கால வரைவுக்கு ஏற்கனவே தமிழ் மக்களின் ஆணை உண்டு இது முதலாவது. இரண்டாவது, அந்த இடைக்கால வரைபை அதன் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தத் தேவையான மக்கள் ஆணை இப்பொழுது தேசிய மக்கள் சக்திக்கு உண்டு. இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையிலும் அவர்கள் இடைக்கால வரைபை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தப் போகிறார்கள் என்று கஜேந்திரக்குமார் எச்சரிக்கின்றார்.
ஆனால் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி அதனை பொருட்படுத்துவதாக தெரியவில்லை.எக்கிய ராஜ்ஜிய சுமந்திரனின் உழைப்புத்தான்.எனவே சுமந்திரன் அணி அதை எதிர்க்குமா?
அது மட்டுமல்ல கஜேந்திரகுமாருடன் ஒர் ஆவணத்தை எழுதி அதில் கையெழுத்திட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அந்த விடயத்தில் வேறு விதமாகச் சிந்திப்பதாகத் தெரிகிறது. அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை வைக்கக் கூடும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். மாறாக ஒரு புதிய யாப்பை உருவாக்கும் அமில பரிசோதனையில் அவர்கள் இப்போதைக்கு இறங்க மாட்டார்கள் என்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுவதாகத் தெரிகிறது. எனவே ஒரு மாகாண சபைத் தேர்தலை நோக்கி அவர்கள் உழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.அதன் ஒரு கட்டமாக 13ஆவது திருத்தம் தொடர்பான கருத்தரங்குகளை ஈபிஆர்எல்எஃப் தொடர்ச்சியாக ஒழுங்குப்படுத்தி வருகின்றது. இக்கருத்தரங்குகளின் பின்னணியில் வரதராஜப் பெருமாள் இருக்கிறார் என்ற ஊகம் ஒன்று இருந்தது.அண்மை நாட்களில் வரதராஜப்பெருமாள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பகிரங்கமாக, வெளிப்படையாகக் காணப்படுகிறார். எனவே மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு இந்தியா அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியா மேற்படி கருத்தரங்குகள்?என்ற சந்தேகம் அதிகரிக்கின்றது.அண்மையில் ஐநா கூட்டத் தொடரில் இந்தியா 13ஆ வது திருத்தத்தைக் குறித்தும் மாகாண சபைத் தேர்தல்களைக் குறித்தும் குறிப்பிட்டிருந்தது. ஐ நா தீர்மானத்திலும் அவை உண்டு.
இப்படிப்பட்டதோர் பின்னணியில் மாகாண சபைத் தேர்தல் முதலில் வருமா? அல்லது யாப்புருவாக்க முயற்சிகள் முதலில் வருமா? என்ற கேள்விக்கு விடை முக்கியம்.
மாகாண சபைத் தேர்தல்கள் முதலில் நடக்குமாக இருந்தால், இப்போது இருக்கும் தமிழ்த் தேசியப் பேரவை என்ற கூட்டு பெரும்பாலும் உடைந்து விடும். சுமந்திரன் அணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை எப்படித் தனிமைப்படுத்துவது என்று சிந்தித்து புதிய கூட்டுக்களை உருவாக்கும்.ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வீட்டின் பக்கம் போனாலா அல்லது சைக்கிளின் பக்கம் போனாலா தமக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் என்றுதான் சிந்திக்கும்.தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாட்டைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு வழங்கிய ஆணையை எப்படிப் புதுப்பிப்பது என்று என்பிபி சிந்திக்கும். அவ்வாறு அவர்கள் தமிழ் மக்களின் ஆணையைப் புதுப்பித்துக் கொள்வார்களாக இருந்தால் யாப்புருவாக்க முயற்சிகளில் அரசாங்கத்தின் கை ஓங்கும். கஜேந்திரக்குமார் எச்சரிப்பது போல நடக்கும்.
மாறாக,யாப்புருவாக்க முயற்சிகள் முதலில் தொடங்கப்பட்டால், அங்கேயும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்படவில்லை என்றால் அதுவும் அரசாங்கத்துக்கு அனுகூலமாக அமையும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்ப்பை அரசாங்கம் பொருட்படுத்துமா இல்லையா என்பது தமிழ்மக்கள் அப்புதிய யாப்பருவாக்க முயற்சிகளுக்குக் காட்டப்போகும் எதிர்ப்பில்தான் தங்கியிருக்கும்.



